Blog

  • பட்டினத்தடிகளின் பாடல்கள் – 12ம் பகுதி

    தஞ்​சை ​வெ. ​கோபாலன்

    நெஞ்சோடு புலம்பல் 
    (இதில் ஒவ்வொரு பாடலின் நிறைவிலும் தன் நெஞ்சை விளித்துச் சொல்லும் பாங்கில் ‘நெஞ்சே’ என்று முடித்திருப்பார்)

    மண்காட்டிப் பொன்காட்டி மாய இருள்காட்டிச்
    செங்காட்டில் ஆடுகின்ற தேசிகனைப் போற்றாமல்
    கண்காட்டும் வேசியர்தம் கண் வலையில் சிக்கிமிக
    அங்காடி நாய்போல் அலைந்தனையே நெஞ்சமே. 1.

    ஏ மனமே! திருச்செங்காட்டில் திருநடனம் புரிகின்ற எம்பெருமான் நடராசனை வணங்கித் தொழாமல், மண்ணாசையையும், பொன்னாசையையும் காட்டி சபலத்தை உண்டு பண்ணி இருளில் ஆழ்த்திவிட்டு, அதோடு நில்லாமல் கண்ணால் ஜாடைகாட்டி மயக்கும் வேசியர்தம் வலையில் சிக்கிக் கொண்டு, கடைவீதியில் கிடைக்கும் உணவுக்காக அலைகின்ற நாயைப் போல அலைகின்றாயே!

    புட்பாசன அணையில் பொற்பட்டு மெத்தையின் மேல்
    ஒப்பா அணிந்த பணியோடாணி நீங்காமல்
    இப்பாய்க் கிடத்தி இயமனுயிர் கொள்ளு முன்னே
    *முப்பாழைப் போற்றி முயங்கிலையே நெஞ்சமே. 2.

    ஏ மனமே! பட்டு மெத்தையின் மேல், மலர்களைப் பரப்பி, சர்வாலங்கார பூஷிதையாகக் கிடந்த அழகு கெடாதபடி பின்னர் மரணப் படுக்கையில் கிடந்து காலன் வந்து உயிரைப் பறித்துச் செல்வதற்கு முன்பாக மூவகை பாழுக்குக் காரணமாயிருந்து ஆட்டுவிக்கும் அந்த பரமன் திருவடியை நினைக்க முயற்சி செய்யவில்லையே. (*முப்பாழ் என்பதை ஜீவப்பாழ், சிவப்பாழ், பரப்பாழ் என்பர்; அவை ஆத்ம தத்துவம், வித்யா தத்துவம், சிவதத்துவம் என்பதாகும். ஜீவப்பாழ் என்பது “நான்” எனும் ஜீவனைப் பற்றிய அறிவு, பரப்பாழ் என்பது வித்யா தத்துவம் எனவும், சிவப்பாழ் என்பதை ‘சிவம்’ என்பதன் உண்மை அறிவு என்பதையும் பெரியோர் குறிப்பிடுவர்)

    முப்பாழும் பாழாய் முதற்பாழ் வெறும் பாழாய்
    அப்பாழுக்கு அப்பால் நின்று ஆடும் அதைப் போற்றாமல்
    இப்பாழாம் வாழ்வை நம்பி ஏற்றவர்க்கு ஒன்றீயாமல்
    துப்பாழாய் வந்த வினை சூழ்ந்தனையே நெஞ்சமே. 3.

    ஏ மனமே! பொய்யான, கனவு போன்ற இந்த வாழ்வை நிலையென்று எண்ணி, மூவகையான பாழுக்கு அப்பால் உள்ள முதற்பாழ் எனப்படும் பரவேளி தத்துவத்தை, அந்தப் பரவெளியாம் ஆகாயத்தில் திருத் தாண்டவம் புரியும் சிவபெருமானைப் போற்றித் துதிக்காமலும், இல்லையென்று வரும் வறியவர்கு எதையும் வழங்காமலும், நீ செய்த வினைப்படி வெறும் பாழான வாழ்க்கையை வாழ்ந்தாயே, அப்படி வாழ்ந்ததால் தீவினை சூழப்பெற்றாயே.

    அன்னம் பகிர்ந்து இங்கு அலைந்தோர்க்கு உதவி செயுஞ்
    சென்மம் எடுத்தும் சிவன் அருளைப் போற்றாமல்
    பொன்னும் அனையும் எழிற் பூவையரும் வாழ்வு நிலை
    இன்னும் சதமாக எண்ணினையே நெஞ்சமே. 4.

    ஏ மனமே! பசி என்று உணவுக்கு ஏங்கி அலைந்தவர்களுக்கு வயிறார உண்ண அன்னம் அளித்து உதவி எதையும் செய்யாமல், பிறவி எடுத்ததே பரம்ப்பிரம்மத்தை வணங்குவதற்கு எனும் அறிவு இல்லாமல் சிவனை வழிபட்டு அவன் அருளைத் தேடாமல், இந்தப் புவியில் பொன்னும், பொருளும், இன்பம் தரும் அழகிய பூவையரும்தான் கதி என்று வாழ்ந்தனையே நெஞ்சமே.

    முற்றொடர்பில் செய்த முறைமையால் வந்த செல்வம்
    இற்றைநாள் போற்றோம் என்றெண்ணாது பாழ் மனமே
    அற்றவர்க்கும் ஈயாமல் அரன் பூசை ஓராமல்
    கற்றவர்க்கும் ஈயாமல் கண்மறந்து விட்டனையே. 5.

    பாழாய்ப் போன என் மனமே! முந்தைய பிறவிகளில் செய்த புண்ணியங்களினால் இப்பிறவியில் அரிய பல செல்வங்களை இறைவனது கருணையினால் பெற்றிருக்கிறோம் எனும் உண்மையை உணராமல், செல்வம் அற்றவர்க்கும், ஏழை எளியவர்க்கும் எதையும் கொடுக்காமலும், கல்வி கற்ற மேலோர்களுக்குக் கொடுத்து அவர்தம் ஆசியைப் பெறாமலும், ஆணவத்தினால் கண்மூடி இருந்தாயே.

    மாணிக்கம் முத்து வயிரப் பணி பூண்டு
    ஆணிப் பொன் சிங்காதனத்தில் இருந்தாலும்
    காணித் துடலை நமன் கட்டியே கைப்பிடித்தால்
    காணிப் பொன்கூட வரக் காண்கிலமே நெஞ்சமே. 6.

    ஏ மனமே! நவரத்தினங்களால் ஆன ஆபரணங்களை அணிந்து கொண்டு, பொன்னாலும் மணியாலும் இழைக்கப்பட்ட நவரத்தின சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தாலும், இந்த உடலை காலன் நன்கு கட்டி கைபிடித்துத் தூக்கிச் செல்கையில் நீ சேர்த்து வைத்து அனுபவித்த ஒரு சிறிதளவு பொன்கூட உன் பின்னால் வரக் காணோமே.

    கற்கட்டு மோதிர நற்கடுக்கன் அரைஞாண் பூண்டு
    திக்கு எட்டும் போற்றத் திசைக் கொருத்தரானாலும்
    பற்கிட்ட எமன் உயிர் பந்தாடும் வேளையிலே
    கைச்சட்டம் கூடவரக் காண்கிலமே நெஞ்சமே. 7.

    நவரத்தினக் கற்களால் இழைக்கப்பட்ட தங்க மோதிரமென்ன, ஜொலிக்கின்ற காதில் அணியும் கடுக்கன் என்ன, அரையில் அணியும் தங்க அரைஞாண் என்ன இவைகளையெல்லாம் பார்த்து எட்டு திசைகளிலும் இருப்போர் எல்லாம் பார்த்து ஒகோவென்று புகழ்ந்தால் என்ன, பற்கள் கிட்டி மரணப் படுக்கையில் கிடக்கையில் காலன் வந்து உயிரைப் பந்தாடுவது போல எடுத்துக் கொண்டு போகும்போது, ஒரு சிறு ஓலைகூட உன்கூட வரக்காணோமே நெஞ்சே, என்ன செய்வது.

    முன்னை நீ செய்த தவம், முப்பாலும் சேருமன்றிப்
    பொன்னும் பணி திகழும் பூவையும் அங்கே வருமோ
    தன்னைச் சதமாகச் சற்குருவைப் போற்றாமல்
    கண்ணற்ற அந்தகன் போல் காட்சி அற்றாய் நெஞ்சமே. 8.

    ஏ மனமே! முன் பிறவிகளில் நீ செய்த பாவ புண்ணியங்கள்தான் இந்தப் பிறவியிலும் உனக்கு வந்து உறுமே அன்றி, பளபளக்கும் பொன்னும், ஆபரணாதிகளை அணிந்து கொண்டு அழகொழுக நிற்கும் பூவையரும், உன்கூட வந்து நிற்பரோ? இவ்வுடலையும், இந்த வாழ்வையும் சதமென்றெண்ணிக் கொண்டு சற்குரு நாதராம் பரம்பொருளை நாடாமல் கண் இல்லாத குருடனைப் போல் எதையும் காணாமல் நின்றாயே.

    பையரவம் பூண்ட பரமர் திருப் பொற்றாளைத்
    துய்யமலர் பறித்துத் தொழுது வணங்காமல்
    கையில் அணி வளையும் காலில் இடும் பாடகமும்
    மெய் என்று இறுமாந்தி விட்டனையே நெஞ்சமே. 9.

    ஏ மனமே! தனது ஜடாமுடியில் படமெடுத்தாடும் நாகப்பாம்பை ஆபரணமாகக் கொண்ட பரமன் சிவபெருமானுடையத் தாமரைப் பாதங்களைப் பணிந்து வணங்காமல், கையில் அணிகின்ற தங்கக் காப்பையும், காலில் அணிகின்ற பாடகத்தையும் நிரந்தரம் என்று எண்ணி மனம் இறுமாந்து இருந்தனையே.

    மாதுக்கொரு பாகம் வைத்த அரன் பொற்றாளைப்
    போதுக்கொரு போதும் போற்றி வருந்தாமல்
    வாதுக்குத் தேடி இந்த மண்ணில் புதைத்து வைத்தே
    ஏதுக்குப் போகநீ எண்ணினையே நெஞ்சமே. 10.

    ஏ நெஞ்சே! உமையொரு பாகனாம் சிவபெருமானுடைய திருத்தாமரைத் தாளினை மனதில் பதித்து பொழுதெல்லாம் அவனைப் போற்றி வழிபடாமல், ஊரெல்லாம் ஓடியாடி தேடிய செல்வத்தைப் பிறருக்கும் தராமல் உலோபியாய் வாழ்ந்து மண்ணில் புதைத்துவைத்தாயே, என்ன நினைத்து, இவைகளெல்லாம் உன்னோடு வருமென்றெண்ணியோ, பிறர்க்கு உதவாமல் இப்படி புதைத்து வைத்து என்ன கண்டாய்.

    (இன்னும் வரும்)

    Share
  • கந்த சஷ்டி!

     

    சு. கோபாலன்

    034

    சூரபத்மன் எனும் கொடிய அசுரனை வதம் செய்து உலகைக் காக்க

    ஆறுமுகன் ஆறுனாட்கள் அவனுடன் சமர்செய்து ஆறாம் நாள்(சஷ்டி)

    தருவாகி நின்ற அசுரனை தன் கூரிய வேலால் இரண்டாய்ப் பிளந்து

    ஒருபாதி சேவலாய் மறுபாதி மயிலாய் அசுரனை மாற்றி அமைத்து

    கருணை மிகு கந்தன் சேவலைக் கொடியாய் மயிலை வாகனமாய் ஏற்று

    அருளைப் பொழிந்து உலகைக் காத்தானே திருச்செந்தூர் திருத்தலத்திலே!
    இந்திரன் மகிழ்ந்து மகள் தெய்வானையை ஏழாம்நாளன்று முருகனுக்கு003

    மந்திரம் வேதங்கள் முழங்க திருப்பரங்கிரியில் மணம் செய்வித்தானே!
    கந்தனுக்கு உகந்த கந்த சஷ்டி புனித நாளில்…………

    கந்தனைக் குறித்து

    சிந்தனை செய்திடு

    ‘எந்தனைக் கா’வென

    வந்தனை புரிந்திடு

    உந்தனைக் காக்க

    வந்துனை அடைவான்!

     

    சு.கோபாலன்

    படங்களுக்கு நன்றி:

    http://www.kaumaram.com/gallery/003.html

    Share
  • வாழ்க்கை நலம் – 34

    குன்றக்குடி அடிகள்

    34. பொறுமை ஆக்கம் தரும்!

     

    நிலம் கொத்துதல், உழுதல், தோண்டுதல் ஆகிய செயல்களின் வழி, துன்புறுத்துப்படுவது. உலகில் மாந்தர் வாழ்வியலுக்குரிய செயற்பாடு. ஆனால், நிலம் கொத்தப்பட்டும், வெட்டப்பட்டும் துன்புறுத்தப் படுவதனால்தான் நிலம், நிலத்தின் தன்மையை இழக்காமல் பாதுகாத்துக் கொள்கிறது.

    கொத்தி உழப்பெறாத நிலம் மண் அரிப்பு நோய்க்கு இரையாகும். அது மட்டுமின்றி நிலம் உழப்பெற்றாலே வான் மழையின் நீரை வாங்கித் தன் மடியில் வைத்துக் கொள்ளும் ஆற்றலைப் பெறுகிறது; பசுமைப் புரட்சி செய்யும் ஆற்றலைப் பெறுகிறது.

    உலகுயிர்க்கெல்லாம் உணவு அளித்துக் காப்பாற்றும் வேள்வியை நிலம் செய்ய முடிகிறது. நிலம் தன்னை அகழ்ந்து தரும் துன்பத்தினையே தனக்கு ஆக்கமாக மாற்றிக் கொள்கிறது; உழுவாரையும் வாழ்விக்கிறது. நிலத்தின் பொறுமை, ஆக்கமாகிறது; உயிர்க்குலத்தின் வாழ்வாகிறது.

    மனிதனும் பொறுத்தாற்றும் பண்பு காத்தல் வேண்டும். பொறுத்தாற்றுவோரை அறியாதார் கோழை என்று ஏளனம் செய்வர். அதனால் என்ன? தீமை வராது; நன்மையே பெருகி வளரும்! கூளம் குப்பைதான் தீக்கு ஆக்கம்  – தீமையுடையார் தான் தீமைக்கு ஆக்கம்.  பொறையுடையோர் முன் தீமை அழியும். நம்மில் வலியோர் தூற்றினால் பொறுத்துக் கொள்வது போலவே நம்மில் கீழோர் தூற்றினாலும் பொறுத்துக் கொள்வதே உண்மையான பொறையுடைமை; பொறுத்தாற்றும் பண்பு.

    பிரார்த்தனைக்கு ஈடானது பொறுத்தாற்றும் பண்பு. எல்லை கடந்த நிலையில் நமக்குப் பிறர் இன்னாதான செய்யும் பொழுது காட்டப்படுவதே பொறுத்தாற்றும் பண்பு  – ஏன்? பொறுத்தாற்றும் நெறியின் வழி விதியைக் கூட வெல்லலாம். தீமைக்கும் தீவினைக்கும் வாயில் சினமே!

    சினம் தவிர்த்துப் பொறுமை மேற்கொண்டொழுகின் தீயவினையும் அதாவது போகூழையும் ஆகூழாக மாற்றலாம். பொறுத்தாற்றும் பண்பு வெற்றிகளைத் தரும். நிலத்தினைப் பார்ப்போம். நிலத்தின் பொறுத்தாற்றும் பண்பை நமது அணியாக ஏற்போம்! நமக்கு இன்னாதான செய்வோரையும் ஏற்போம்! நமக்கு இன்னாதன செய்வோரையும் ஏற்போம்! வாழ்விப்போம்!

    அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
    இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

    – திருக்குறள்

     

     

     

     
    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

     

     

     

     

     

     

    Share
  • குரங்குமனம்

    பிச்சினிக்காடு இளங்கோ

    அன்று…

    இரங்கற்பா படித்து

    இதயத்தைப்பிழிந்து

    கண்ணீர் கசியவைத்தேன்

    வாழ்த்த அழைத்தபோதும்

    வளமானச்சொற்களால் வாழ்த்தி

    வாழ்த்திடப்பெற்றேன்

    கலந்துரையாடும்போதும்

    கரைந்துரையாடி

    கவனிக்கப்பெற்றேன்

    முடிந்ததைச்செய்யும்போதும்

    முழுமையாய்ச்செய்தேன்

    என

    முன்னுரை கிடைக்கப்பெற்றேன்

    ஆசையே இல்லா

    புத்தரைப்போல பேசி

    அனைவராலும் கவரப்பெற்றேன்

    பெண்களோடும் அப்படித்தான்

    பெருமைப்பட நடந்துகொண்டேன்

    பெருமைப்பட நடத்தப்பெற்றேன்

    எல்லா இடத்திலும்

    எனக்குப்பேர் என்றாலும்

    எல்லார் இதயத்திலும்

    என்பேர் நின்றாலும்

    குரங்கு மனசுமட்டும்

    குறைபடவைக்கிறது என்னை

    (09.09.2013 அன்று விநாயகசதூர்த்தி. மகன் கலைக்கோவனின் நண்பன் ரவியின் மனைவி மைதிலிக்கு கேகே மருத்துவமனையில் பெண்குழந்தை பிறந்தது.

    67 எண் பேருந்தில் சுவாசுகாங்கிலிருந்து புறப்படும்போது படித்த கதை திரு எம்.சேகர் எழுதிய ‘முகம் தெரியாத மனம்’ படித்துக்கொண்டிருந்தேன். முடிவு கவர்ந்தது. முடிவில் எழுதிய கவிதையே இது பிற்பகல் 3-30 க்கும் 4-30க்கும் இடையில் நிகழ்ந்தது.

    Share
  • சீதாயணம் – [5] படக்கதை

    image

    அன்புள்ள நண்பர்களே,

    “சீதாயணம்” என்னும் எனது நாடகத்தைத் தமிழ்கூறும் வலை உலகம் படித்தறிந்திடச் சமர்ப்பணம் செய்கிறேன். முக்கியமாக இந்த நாடகத்தில் வரும் இராமன், இராவணன், அனுமான், சுக்ரீவன் போன்ற அனைவரும் மனிதராகக் காட்டப் படுகிறார்கள். இராம பிரானைத் தேவ அவதாரமாகக் கருதும் அன்பர்கள் என்னை மன்னிக்க வேண்டும். வால்மீகி முனிவருக்கு ஆசிரமத்தில் தன் முழுத் துன்பக் கதையைச் சொல்லி, பிள்ளைகளை இழந்து, கணவனால் புறக்கணிக்கப்பட்டு இறுதியில் தன் உயிரையும் போக்கிக் கொண்ட சீதாவின் பரிதாப நிகழ்ச்சி இது.

    அன்புடன்,
    ஜெயபாரதன், கனடா

    +++++++++++++

    [சென்ற வாரத் தொடர்ச்சி]

    நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா

    வடிவமைப்பு : வையவன்

    ஓவியம் : ஓவித்தமிழ்

     

    Scene -8

    Scene -9

    [தொடரும்]

    +++++++++++++++

    தகவல்

    1. Bharathiya Vidhya Bhavan Ramayana By C. Rajagopalachari [1958]

    2. Valmiki ’s Ramayana, Dreamland Publications, By: Ved Prakash [2001] and Picture Credit    to Kishan Lal Verma

    3.  Mahabharatha By: Rosetta William [2000]

    4. The Wonder that was India By: A.L. Basham [1959]

    5. The Ramayana & The Mahabharata  By: Romesh C. Dutt  [1969]

    6.  Ramayana [Torchlight Publishing] By: Krishna Dharma  [2004]

    **************

    S. Jayabarathan [jayabarathans@gmail.com ] (October 2, 2013)  [R-2]

    http://jayabarathan.wordpress.com/

     

    Share
  • கம்பனில் அழகியல்

    மு​னைவர் மு.பழனியப்பன்

    பதினேழாம் நூற்றாண்டு முதல் இருபதாம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவில் அழகியல் திறனாய்வு பெருவளர்ச்சியுடன் திகழ்ந்தது.  நவீனத்துவ திறனாய்வுகளில் அழகியல் திறனாய்வு முன்னணி வகித்தது, ஜெர்மன், இங்கிலாந்து ஆகிய நாடுகளின் அழகியல் திறனாய்வாளர்கள் அழகுணர்வு என்பதே படைப்பின் நோக்கமும் அடிப்படையும் என்று கருதினர். இமானுவல் கான்ட், ஆஸ்கர் வொயில்டு, ஐhன் ரஸ்கின் போன்றோர் அழகியல் சார்ந்து இயங்கிய மேலைநாட்டுத் திறனாய்வாளர்கள் ஆவர்.

    பழங்காலத்திலேயே எகிப்து, இந்தியா, ரோம், சீனா போன்ற பல நாடுகளில் அழகுணர்வு என்பது தனித்துவம் மிக்கக் கலைக்கூறாக மக்களால் விரும்பப்பட்டுள்ளது. கட்டிடம், ஓவியம், நாட்டியம் போன்றவற்றில் அழகுணர்வைத் தனித்துவமான நிலையில் அந்நாட்டு மக்கள் வெளிப்படுத்தி வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இலக்கியப் படைப்பாளர்களும் அழகுணர்வு வயப்பட்டுப் படைப்புகளைப் படைத்தளித்துள்ளனர்.

    குறிப்பாக இந்தியாவில் எழுந்த ரசக் கோட்பாடு, நாட்டிய சாஸ்திரம் போன்றன அழகியல் தன்மை உடையனவாகும். தமிழில் தொல்காப்பியத்தில் இடம்பெறும் உவம இயல், செய்யுளியல், மெய்ப்பாட்டியல் போன்றன முழுக்க முழுக்க அழகியல் சார்ந்தன. தொடர்ந்து வந்த தமிழ் இலக்கியங்களில் அழகுணர்வு என்பது போற்றப்பட்டு வந்துள்ளது.

    ~~அழகியல் திறனாய்வு என்பது இலக்கியத்தை அழகுடையது, அழகற்றது – சுவையுடையது, சுவையற்றது – என்று உணர்த்துவது,  இலக்கியப்படைப்பின் தனித்த பாணி, நாகரீகம், வடிவழகு ஆகியன குறித்து அறிவது, மனிதர்களின் நம்பிக்கை, மகிழ்வு துயரம் ஆகியன எவ்வாறு ஒரு படைப்பில் வெளிப்பட்டுள்ளது என்பதைக் காட்டுவது  மனித வாழ்க்கை என்பது அதிக அளவிலான அழகியல் கூறுகளைக் கொண்டது என்பதால் அழகியல் ஆய்விற்கு வளமான வாய்ப்புகள் அமைகின்றன.

    அழகியல் ஆய்வு என்பது படைப்புகளை ஆராய்ந்து ஒற்றை வரியில் இது அழகானது, இது அழகற்றது என்று சொல்லிவிடுவதல்ல. ஒரு படைப்பின் முழுமையை அறிந்து, அப்படைப்பின் படைப்புத் தன்மையில் உள்ள கலைத்துவத்தை வெளிப்படுத்துவது, ஏன் படைப்பின் சில பகுதிகள் அழகாக உள்ளன, ஏன் சில பகுதிகள் அழகுணர்வற்று உள்ளன என்று உணர்த்துவது, இவற்றோடு படைப்பினுள் பயன்படுத்தப்பட்டுள்ள வலிமையான, மென்மையான கலாச்சாரக் கூறுகளை உற்று நோக்குவது என்ற நிலையில் பல கோணங்களை உடையதாக உள்ளது. பின்வரும் நோக்கங்களை உடையதாகவும் இவ்வாய்வு அமைகின்றது.

    •    படைப்புக்கான பின்புலத்தினை அறிவது.
    •    இலக்கியப் படைப்பாக்க முயற்சியில் எவ்வகை படைப்புச் செயல்பாடு நிகழ்ந்துள்ளது என்று கண்டறிதல்;
    •    அழகியல் உணர்வினை ஊட்டக் கூடிய உத்திமுறைகள் எவ்வாறு கையாளப்பெற்றுள்ளன என அறிவது.
    •    படைப்பினுள் பொதிந்து வைக்கப் பெற்றுள்ள சமுதாய மதிப்புகள், நம்பிக்கைகள், விருப்பங்கள், தேவைகள் முதலானவற்றை அறிதல்
    •    படைப்;பினோடு தொடர்புடைய பிற கொள்கைகள், மரபுகள் போன்றவற்றை உணர்தல்
    •    படைப்பினால்  ஏற்படும் பயனை உணர்த்தல்

    போன்ற நோக்கங்களை உடையதாக அழகியல் ஆய்வு அமைகின்றது.

    ~~உருவமே முதன்மையானது. அதுவே இலக்கியத்திற்குக் கலையழகைத் தரக்கூடியது என்பதும், இலக்கியத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதைவிட எப்படிச் சொல்லப்பெற்றிருக்கிறது என்பதே பார்க்கப் பட வேண்டும் என்பதும் அழகியல் திறனாய்வின் அடிப்படையாகும். தோற்றத்தின் திரட்சியும், நளினமும் லயமும், முதலில் ரசிக்கப்பட வேண்டும். அதன இனிமையே ஒரு சுகானுபவம் என்று ரசனையை முதன்மைப் படுத்துகிறது இத்திறனாய்வு. பெரும்பாலும் மனப்பதிவு முறையிலேயே இது கூறப்படுகிறது. முக்கியமாக சொல்லிலும் ஓசையிலும் காணக் கூடிய ஒருவித ஒழுங்கமைவு,தொனி, பொருட்சுழற்சி, உணர்ச்சி வடிவங்கள், உவம, உருவகங்கள், ஆர்வத் தூண்டல்கள் முதலியவற்றை ரசனைக்குரிய பகுதிகளாக இது விளக்கவும் வருணிக்கவும் செய்கின்றது,  என்று அழகியல் திறனாய்விற்கு விளக்கம் அளிக்கிறார் தி.சு. நடராஜன்.

    “அழகியல் திறனாய்வு என்பது ரசனை முறைத் திறனாய்வாக தமிழ்த்திறனாய்வுப் போக்கில் நிகழ்த்தப் பெற்று வந்துள்ளது. கம்பராமாணயம் பற்றிய ரசனை முறைத்திறனாய்வுகள் தமிழில் குறிக்கத்தக்க இடம்பெறுவனவாகும். ரசிகமணி டி.கே.சி, கல்கி, ராஜாஜி, அ. சீனிவாச ராகவன், தொ. மு. பாஸ்கர தொண்டைமான், வித்வான் ல. சண்முகசுந்தரம், அ.ச. ஞானசம்பந்தம் போன்ற அறிஞர்களின் பெரும் பட்டியல் கம்பராமாயணம் பற்றிய ரசனைமுறைத் திறனாய்வுக்கு உள்ளது. ~~இலக்கிய ரசனைக்குக் கவிதையே இவர்களுக்கு உகந்ததாக இருந்தது. எளிமை,தாளம், லயம், உணர்வு, சொல் இவற்றிற்கெல்லாம் கவிதையே இடம் தருவதாக இவர்களுக்குப்பட்டது. அதிலேயே லயித்துப் போய்ப் பொருள் விளக்கம் (முக்கியமாக பொழிப்புரை) தருவது இவர்கள் வழக்கம்” என்று ரசனை முறைத் திறனாய்வாளர்கள் பற்றிய மதிப்புரையை வழங்குகிறார் தி.சு நடராஜன்.

    ~~கம்பராமாயணத்தில் உள்ள ரசனைச் சுவை மிகவும் உயர்ந்தது. ரஸிகருடைய அறிவுக்கு அது அமுதமாக நிற்கின்றது. கம்பராமாயணத்தின் ரசனைச் சுவையை உணராமல் மற்ற சுகங்களை மாத்திரம் உணருகிறவர்கள் அதன் சுவையில் செம்பாதிக்கு மேல் இழந்துவிடுகிறார்கள்,  என்ற அமைப்பில் ரசனைமுறைத் திறனாய்வுகள் கம்பராமாயணத்திற்கு அமைந்தன.

    ஓர் இலக்கியத்தை ரசிப்பது என்ற நிலையில் இருந்துச் சற்று மேம்பட்டது அழகியல் திறனாய்வு. ரசனை முறைத் திறனாய்வு என்பது பாராட்டு முறைத் திறனாய்வு வயப்பட்டதாக அமைந்துவிட அதிலிருந்து வேறுபட்டு அமைவது அழகியல் திறனாய்வாகின்றது. கம்பராமாயணம் காப்பியப் படைப்புகளில் மிக முக்கியமானது. அதன் அளவாலும், கவிவளத்தாலும் நிலையான இடத்தைத் தமிழ்க்காப்பியப் பகுதியில் பெற்றிருக்கிறது. குறிப்பாக இதனுள் இடம்பெறும் சுந்தரகாண்டம் என்பது அழகியல் சார்ந்த பல கருத்துகளைக் கொண்டமைகின்றது.

    நவீனத்துவ ஆய்வுகள் வாசகனுக்கு முக்கிய இடம் தருகின்றன. வாசகர்களால் சுந்தரகாண்டம் அதிகம் படிக்கப்படுவதாக இன்றளவும் உள்ளது. இதற்கு சமய நம்பிக்கை ஒரு காரணமாக அமைகிறது என்பது ஒருபுறம். என்றாலும் சுந்தர காண்டம் என்பது மற்ற இராமயணப் பகுதிகளைக் காட்டிலும் மக்கள் மத்தியில் குறிக்கத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது. உரைநடைவடிவம், அல்லது சுருங்கிய கவிதைவடிவம், கம்பர் தந்த சுந்தரகாண்டம், வால்மீகி தந்த சுந்தர காண்டம் என்று பற்பல நிலைகளில் மக்களிடம் சுந்தரகாண்டம் சென்று சேர்ந்துள்ளது. இதற்கு மிக முக்கியமான காரணம் அழகியல் உணர்வு சார்ந்த பின்புலத்துடன் சுந்தர காண்டம் படைக்கப்பட்டிருப்பது ஆகும்.

    ~~கம்பன் பாடிய ஆறு காண்டங்களுக்குள்ளும் காவியத்துள் ஒரு காவியம் என்றே போற்றப்பெறுவது ஐந்தாவது காண்டமான சுந்தர காணடம் ஓர் அனுபவச் சுரங்கம். அள்ள அள்ளக் குறையாத பெருநிதியம். அறிதொறும் அறியாமை கண்டாற்போல அனுபவ எல்லை விரிந்து கொண்டே செல்லும்,  என்ற நிலையில் சிறப்பு வாய்ந்தது சுந்தரகாண்டம்.

    ~~சுந்தரம் என்பது உலக நூன்முறையால் இக்காப்பிய நாயகியாகிய சீதாபிராட்டியின் திருமேனியழகினையும், குணநலன்களையும் உணர்த்தி நின்றது. இக்காவிய நாயகனான இராமபிரானுடைய திருமேனியழகினையும் ஆன்ம குணங்களையும் உணர்த்தி நின்றது எனலும் ஆகும். அன்றியும் காவிய நாயகனான இராமபிரானது பணிமேற்கொண்டு கடத்தற்கரிய கடலையும் தாவிக் கடந்து புகற்கரிய பகைப்புலமாகிய இலங்கை நகரிற்புக்கு தேடிப் பிராட்டியைக் கணட தன மேலும் செயற்கருஞ்செயல் பல செய்து வென்றியோடு மீண்ட தலையாய தூதனான அநுமனுடைய அறிவும் ஆற்றலும் முயற்சியும் ஊக்கமும் எண்ணித் துணியும் திறமும் உரையாடற்றிறமும்; பிறகுண நலங்களும் ஆகிய பெருமையினை உணர்த்தி நின்றது எனினும அமையும்||  என்று இதற்கு சுந்தர காண்டத்திற்குப் பெயர்க்காரணம் சுட்டப் படுகிறது.

    மேற்காட்டிய கருத்துகள் வழியாக சுந்தர காண்டம் அழகியல் சார்ந்தமைவது என்பது தெற்றெனத் தெரிகின்றது. கம்பராமாயணத்தில் சுந்தர காண்டத்தை மட்டும் இக்கட்டுரை அழகியல் நோக்கில் அணுகுகின்றது.

    இராமனின் அழகு, சீதையின் அழகு ஆகியன அனுமனால் எடுத்துரைக்கப்படுவதாகக் கம்பர் படைத்துள்ளார். இராமனின் அழகையும், சீதையின் அழகையும் இருபது, இருபது பாடல்களில் வடித்துள்ளார் கம்பர். ஆனால் இவ்விரு அழகுகள் சொல்லப்படும் முறை வேறு வேறு அழகுகளை உடையதாக உள்ளன.

    அனுமன் காட்டும் இராமனின் அழகு

    hanuman-rama
    அசோக வனத்தில் இருக்கும் சீதாபிராட்டி அனுமனை இராமதூதன் எனத் தெளிந்தபின் அவனிடம்

    ~~ அய்ய! சொல்! அனையன் மேனி எப்படித்து அறிவி || என்று கேட்கிறாள்.

    இதற்கு அனுமன் இராம அழகை ~~அடி முதல் முடி ஈறாக|| அறிவுறச் சொல்லத் தொடங்கினான்.

    இராம அழகு
    ~~படியெடுத்து உரைத்துக் காட்டும் படித்து அன்று: படிவம்,பண்பின்
    முடிவுள உவமைக்கு எல்லாம் இலக்கணம் உரைக்கின் முந்தா||
    என்று படி எடுக்கமுடியாத அளவிற்குப் பெருமையும், உவகைளால் எட்டமுடியாத அழகும் கொண்டு இருப்பதாக அனுமன் கருதுகின்றான். இராமபிரானின் உருவ நலனைப் பின்வரும் நிலையில் அனுமன் எடுத்துக்காட்டுகின்றான்.

    திருவடிகள்
    சேயிதழ் தாமரை போன்றன என்றால் தாமரை மலரும் குவியும். ஆனால் திருவடிகள் மலர்ந்தே இருக்கும். பவழத்தை உவமை காட்டினால் பவழம் இராமபிரானின் கால்களின் சிவப்பிற்குப் பொருந்தாமல் குவளை மலர்போல பொலிவழியும்.

    திருவடி விரல்கள்
    இராமபிரானின் கால் விரல்களுக்குக் கற்பக மரத்தின் மொட்டுகள் ஒக்கும் என்றாலும், பவழத்தின் இளங்கொடி ஒக்கும் என்றாலும் அவை ஒரு புறம் அழகற்றுக் கிடக்கும்;. சூரியனின் இளங்கதிர்; போன்று இராமபிரானின் கால்விரல்கள் ஒளிபெற்றுத் திகழ்ந்தன என்றால் அது சரியாகும்.

    திருவடி விரல்களின் நகங்களின் அழகு
    திருவடியின் விரல்களில் உள்ள நகங்கள் பிறைச்சந்திரனைப் போன்றன என்றால் திங்கள் பத்து என்ற எண்ணிக்கையில் இல்லை. விரல்;கள் வயிரம் போன்றன என்றால் அவற்றில் திரட்சி இல்லை. எனவே விரல் நகங்களுக்கு உவமை கூற இயலாது.

    திருவடிகளின் செய்கை
    நிலவுலகையே அளந்து, கடந்து நிற்கும் திருவடிகள் நிலத்;தில் வந்து பொருந்தின, காட்டில் நடந்தன என்றால் அவற்றின் எளிமை பாராட்டத்தக்கது. இராமன் உலகினைக் கடந்து நிற்பவன் என்று ஞானநூல்கள் உரைக்கின்றன. அவன் நிலஉலகில நடந்தான் என்றால் அந்த நூல்கள் சொன்ன கருத்துகள் முரண்பாடுகள் உடையதாகும். ஞான நூல்களால் உணரப்படாத திருவடிகளின் பெருமையை உரைத்துவிட முடியுமா?

    இறையடியார்கள் இறைவின் பாதங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பர். இறைவன் பாதங்களை அடையும் சரணாகதி நிலையே உயிரை உய்விக்க வல்லது என்ற நிலையில்; இங்கு அனுமன் உயிர்களுக்கு இறைவனின் பாதச் சிறப்பினை எடுத்துரைப்பதாக சுந்தரகாண்டம் படைக்கப்பெற்றுள்ளது.

    கணைக்கால்
    கணைக்கால் அம்பறாத்தூணியை ஒத்திருந்தது என்று சொல்லாம் என்றால் தன்னை அடைந்தவரைக் காக்கும் சிறப்புடையது இறைவனின் கால்கள். அக்கால்களுக்கு அழிக்கத் துணைபுரியும் அம்புகள் வைக்கும் புட்டியை உவமை காட்டுவது பொருத்தமாக இருக்காது.

    தொடைகள்
    இராமபிரானின் தொடைகள் கருடனின் பிடரியை, மதயானையின் துதிக்கையை ஒத்திருந்தன என்று சொன்னால் அவை நாணம் அடையும். அந்த அளவிற்கு அழகு வாய்ந்தனவாக தொடைகள் அமைந்திருந்தன.

    திருவுந்தி
    வலப்புறமாகச் சுழித்து ஓடும் கங்கையாற்றின் நீர்ச்சுழலை ஒத்து அமைவது திருவுந்தி என்று சொன்னால் அதுவும் பொருந்தாது. மகிழம்ப+வை ஒத்தது என்று சொன்னாலும் அது பொருந்தாது.

    திருமார்பு
    மரகத மலை குறுகும்படியாக அகன்ற மார்பு இராமனுடையது. அதில் நீங்காமல் உறையும் திருமகள் பெற்ற செல்வமே உயர்ந்த செல்வம். இதனில் சீதாபிராட்டி இராமனின் நெஞ்சத்தில் நீங்காமல் இருக்கிறாள் என்ற குறிப்பும் உள்ளது.

    கைத்தலங்கள்
    இராமனின் கரங்கள் தாமரை போன்று காணப்படுவதால் அக்கரங்களைச் சுற்றிலும் வண்டுகள் மொய்த்துக் கொண்டே இருக்கும் பெருமை மிக்கது. அக்கரங்களுக்கு ஐராவத யானையின் துதிக்கையை உவமை காட்டினால் ஓரளவிற்குப் பொருந்தும்.

    கைத்தல நகங்கள்
    இராமனின் கை சூரியனைக் கண்டால் மலரும் தாமரையை அழகில் ஒத்தன. அவை வச்சிர யாக்கை உடைய இரணியனைப் பிளந்த செயல் உண்மையானதுதானா என்று அதன் மென்மைத்தன்மை குறித்து ஐயப்படுவார்கள் ஆனால் அவர்கள் நகங்களைப் பார்த்தால் அச்செயல்; உண்மைதான் என்று காட்டும் அளவிற்கு வலிமையைக் காட்டி நிற்கும்.

    திருப்புயங்கள்
    புயங்களுக்கு மலையை உவமை காட்டலாம் என்றால் பொருந்தாது. ஏனெனில் இராமனின் தோள்கள் போல் மலைகள் திரட்சியும் ஒளியும் உடையன அல்ல. திருமகள் மலையில் சேர்ந்திருப்பதில்லை. மலையில் வில்லின் நாண் புரளாது. இராமனின் தோள்கள் போல மலைகள் புகழ்பெற்றன அல்ல.

    திருமிடறு
    இராமனின் கழுத்துக்கு பாக்கு மரத்தையும், உப்புக்கடலில் கிடக்கின்ற சங்கையும் உவமை காட்டலாம் என்றால் அது பொருந்தாது. திருமாலின் இடது கரத்தில் உள்ள பாஞ்சசனியம் என்ற சங்கு ஒருவழியில் உவமையாகலாம்.

    திருமுகம்
    இராமபிரானின் திருமுகம் சந்திரன் போன்றது என்று சொன்னால் அது தேய்வும் வளர்வும் இல்லாத நிறைத்தன்மை உடையது. எனவே அது பொருந்தாது. அவரின் முகத்திற்கு தாமரையை உவமை காட்டினால் கண்களுக்கு எதனைக் காட்டுவது.

    திருவாய்
    தாமரை மலர்போன்றது திருவாய் என்றால் தாமரை அது கேட்டு நாணும். பவழம் திருவாய்க்கு உவமையாகும் என்றால் அது வெண்ணகை புரியாது. இனிய சொற்களைப் பேசாது.

    பற்கள்
    இராமனின் பற்களுக்கு முத்து, நிலவு, அமுதம், முல்லை, மயிலிறகின் அடிக்குருத்து, புன்னைமொட்டு, அறம் என்னும் வித்திலிருந்து கிளைத்த முளை ஆகிய யாவும் பொருந்துமா? அறங்கள் முப்பத்திரண்டு. அதுபோன்று பற்களும் முப்பத்திரண்டு என்று குறித்திருப்பது இங்குக் கருதத்தக்கது.

    திருமூக்கு
    இந்திர நீலக்கல்லில் எழுந்த ஒளி, மரகதமணியின் ஒளித்திரட்சி ஆகியன இராமபிரானின் மூக்கிற்கு ஒப்புகையாகும் என்றால் அது பொருந்தாது. இந்திரகோபப்பச்சியைக் கவ்வ வரும் பச்சோந்தியும் மூக்கிற்கு உவமையாக அமையாது.

    திருப்புருவங்கள்
    இராமனின் புருவங்கள் கரன் முதலான அரக்கர்களைக் கண்டதும் வளைந்தன. இதன் காரணமாக வில்லும் வளைந்தது. அரக்கர்கள் அழிந்தனர். இனி அரக்கர் குலம் அழந்தது என்ற வாழ்த்தொலி கேட்டது. அந்த வளைந்த வில் போன்றது இராமபிரானின்; புருவங்கள். இங்கு இராமபிரான் அரக்கர்களை அழிக்க வருவார் என்ற செய்தியும் இணைத்துச் சீதாபிராட்டிக்கு உணர்த்தப்பட்டு ஆறுதல் அளிப்பதாக இப்பகுதி அமைகிறது.

    திருநெற்றி
    எட்டாம் நாள் சந்திரன் வளர்தல், தேய்தல் இல்லாமல், நாள்தோறும் தோன்றல் மறைதல் இல்லாமல், இராகு என்ற கோளால் விழுங்கப்படாமல் இருந்தால், களங்கமே இல்லாமல் இருந்தால் இருளின் அழகான நிழலில் பல காலம் இருந்தால் இராமபிரானின் நெற்றிக்கு உவமையாக அமையலாம்.

    திருக்குழல்
    நீண்டு, திரண்டு, பளபளப்புடன், கருத்து, நீலமணியின் நிறத்தைப்பெற்று, முறுக்குண்டு, பின்னே தாழ்ந்து, நுனி சுருண்டு, தெய்வத்தன்மை பொருந்திய இயற்கைமனத்துடன் திகழ்ந்த இராமபிரானின் திருமுடி சடையாக மாறிவிட்டது. இதனை மழை என்று உவகை காட்டுதல் பொருந்தாது.

    நடை
    அரசு ஏற்கத் துணிந்த நாளினும், ஆட்சிச் செல்வம் கிடைக்காமல் துன்பம் நிறைந்த காட்டில் வாழும் நாளிலும் தன்தன்மை மாறாத நடையை உடையவர் இராமபிரான். இவரின் நடை காளையிடத்தில் உள்ளது என்று சொன்னால் மதயானை வருந்தும்.

    இவ்வாறு இராமபிரானின் அழகை    அடிமுதல் முடிவரை சீதாபிராட்டியிடம் அனுமன் எடுத்துரைக்கிறான். மேற்கண்டவற்றில் இருந்து ஒட்டுமொத்தமாகப் பெறப்படும் செய்தி உவகைளுக்கு அப்பாற்பட்ட வடிவழகு உடையவன் இராமன் அல்லது இறைவன் என்பதை உணரமுடிகின்றது.

    மேலும் சங்கப்பாடல்களிலும், காப்பியங்களிலும் பெண்களின் அழகு கேசாதிபாதமாகச் சுட்டப்பெறும். பெண்களின் அழகை வருணிக்க உவமைகள் பலவற்றைப் புலவர்கள் புனைந்தேத்துவர். ஆனால் கம்பர் இராமன் என்ற ஆண்மகனை அழகின் உயர்நிலையில் படைக்கின்றார். இது மிகப்பெரிய வேறுபாடாக கருதத்தக்கது.  ஒரு ஆண்மகன் மற்றொரு ஆண்மகனின் உருவ அழகை வருணிக்கும் நிலைப்பாட்டில் கம்பரின் அழகியல் உணர்வு இங்குச் செயல்பட்டுள்ளது. அனுமனைச் சற்று மறந்து அந்த இடத்தில் கம்பனை அமரவைத்து இராம அழகைத் தரிசித்தால் அது வாசகனுக்கு இன்னும் அழகுணர்வினைக் கூட்டும். கம்பர் கொண்டுள்ள இராமபக்தியை விளக்கும். இராம அழகில் உவரு நலன் காட்டப்பெறுவதைவிட இராமனின் வீரம், வலிமை, எளிமை, புகழ் ஆகியன எடுத்துரைக்கப்பெற்றுள்ளன என்பது கவனிக்கத்தக்கது.

    இதே கம்பர் அனுமன் சீதையின் அழகை இராமனிடம் கூறும்போது கையாளும் அழகுணர்வு முற்றிலும் வேறுபட்டு அமைகின்றது.    சீதையைக் கண்ட அனுமன்,  சீதாபிராட்டியின் நிலையையும் அவளின் இருப்பையும் காட்டுவதாக இருபதுபாடல்களைப் படைத்துள்ளார் கம்பர். இப்பாடல்களில் சொல்லடுக்குகளையும், சொல் விளையாட்டுகளையும் கம்பர் உத்திகளாகப் பயன்படுத்தி அழகுணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இவ்வழகு வெளி;ப்பாட்டில் வருணனைகளோ, உவமைகளோ, கேசாதிபாதமோ, பாதாதி கேசமோ இடம்பெறவில்லை. ஆனால் படிக்கும் வாசகன் இராமனின் அழகைக் கூறும் பாடல்களை விட சீதையின் அழகு கூறப்படும் பாடல்களை அதிகம் படித்து இன்புறுகின்றான். இதற்கு உரிய காரணங்கள் ஆராயப்படவேண்டியதாகும்.

    சீதையின் அழகை குடும்பப் பெருமையில் இருந்து கூறத் தொடங்குகிறான் அனுமன். அதிலிருந்து தொடங்கி இராவணன் சிறையில் சீதாபிராட்டியைத் தான் கண்டதுவரை எடுத்துரைக்கின்றான். அனுமனின் இக்கருத்து வெளிப்பாட்டில் கதைக்கோப்பு இடையீடுயின்றி வளர்த்துச் செல்லப்பெற்றுள்ளது.

    குடும்பப் பெருமை
    சீதாபிராட்டி இராமபிரானுக்கு ஏற்ற மனைவியாகவும், தசரத மன்னனுக்கு ஏற்ற மருமகளாகவும்,  மதிலை ஜனக மன்னனின் புதல்வியாகவும் உரிமை, வாய்மை, தகைமை ஆகிய பண்புகளுக்கு இலக்கணமாக விளங்குகிறாள்.

    பொறுமை
    பொன் அலது இல்லை பொன்னை ஒப்ப எனப் பொறையில்; நின்றாள்
    தன் அலது இல்லைத் தன்னை ஒப்பு எனத்தனக்கு வந்த
    நின் அலது இல்லை நின்னை ஒப்பு என நினக்கு நேர்ந்தாள்
    எனஅலது இல்லை என்னை ஒப்புஎன எனக்கும் ஈந்தாள் (1306)
    என்ற இப்பாடலில் சீதை பொன் போன்று பொறுமையுடன் இருந்தாள் என்ற பண்பு எடுத்துரைக்கப்படுகிறது. இப்பாடலில் அலது, இல்லை, ஒப்பு, என ஆகிய சொற்கள் அடிதோறும் பயின்று வந்து சொல்லழகு செய்கின்றன.

    குலப்பெருமை
    சீதை இராமனின் குலப்பெருமைக் காத்து நிற்கிறாள். தன் குலத்தையும் சிறப்புறச் செய்தாள். இராவணனின் குலத்தைக் கூற்றுவனுக்குக் கொடுத்தாள். தேவர்கள் குலமும் இதனால் வாழ்ந்தது. வானவர் குலத்தையும் வாழ வைத்தாள். இப்பாடலில் குலம் என்ற சொல் அடிதோறும் வந்து இனிமை கூட்டியுள்ளது.

    இற்பிறப்பு, இரும்பொறை, கற்பு
    வில்லை உடைய இராமபிரானே, இலங்கையில் சீதை என்ற பெண்ணைக் காணவில்லை. உயர்குடிபிறப்பு, பொறுமை, கற்பு என்ற மூன்றும் களிநடம் புரியக் கண்டேன் என்று அனுமன் கூறுவதாக கம்பர் படைக்கின்றார்.  அனுமன் பெண் என்னும் நோக்கில் சீதையைக் காணவில்லை என்பதற்கு இப்பாடல் மிக முக்கியமான சான்று. உயர்ந்த ஒழுக்க சீலர் ஒருவரைக் கண்ட காட்சியாக சீதாபிராட்டியைக் கண்டுள்ளான் அனுமன்.

    கண்ணிலும் கருத்திலும் எண்ணத்திலும் இராமன்
    சீதா பிராட்டியின் கண்ணிலும், கருத்திலும், சொல்லிலும், அவள் மார்பகத்திலும் இராமபிரான் இருப்பதைக் கண்டேன் என்று அனுமன் குறிக்கின்ற இப்பாடலில் உளை, நீ ஆகிய சொற்கள் திரும்பத் திரும்ப வந்துப் பாடலுக்கு அழகு சேர்க்கின்றன.

    சீதையின் இருப்பிடம்
    இலங்கையில் காலை, மாலை எனப் பகுத்தறிய முடியாத ஒளிமிக்கக் கற்பகச் சோலையில் தம்பி இலக்குவன் புல்கொண்டு அமைத்த பர்ணசாலையில் தவம் செய்த தவம் ஆம் தையலாக சீதை வீற்றிருந்தாள் என்று சீதை இருந்த இருப்பிடத்தை அனுமன் காட்டுகின்றான். இப்பாடலில் இடம்பெற்று தவம்செய்த தவமாம் தையல் என்ற சொல்சேர்க்கை அழகுமிக்கது.

    இராவணன் பெற்ற சாபம்
    சீதையை மண்ணொடும் கொண்டு போனான் இராவணன் என்று அனுமன் குறிப்பிடுகின்றான். இந்தப் பகுதி தமிழ் மரபினைப்பின்பற்றியதாகும். வடமொழியில் பற்றி இழுத்துச் செல்லப்பெற்றாள் சீதை. ஆனால் இங்கு இம்முறை மாற்றப்பெற்றுள்ளது. அதற்குத் துணையாக கம்பர் ஒரு நிகழ்வையும் இதனோடு இணைத்துச்சொல்லுகிறார். பிரம்மன் இராவணனுக்கு விரும்பாத ஒரு பெண்ணைத் தீண்டினால் எண்ணிலாத கூறுகளாய் உடல சிதறி இறப்பாய் என்று ஒரு சாபம் இட்டுள்ளார். அதனால் சீதையின் மேனியைத் தீண்டாமல் மண்ணோடும் பெயர்த்து எடுத்துக்கொண்டு இராவணன் சென்றதாக கம்பர் படைக்கின்றார். தமிழ்மரபினை காக்கும் அழகியல் இங்குச் செயல்பட்டுள்ளது.

    சீதையை தீண்டாத இராவணன்
    இராவணன் சீதையைத் தீண்டவில்லை என்பதற்கு பிரம்மன் படைத்த அண்டம் வெடிபடவில்லை என்பதாலும், ஆதிசேடனின் ஆயிரந் தலை பெற்ற படங்கள் கிழிந்து போகவில்லை என்பதாலும், கடல் கரையைக் கடக்கவில்லை என்பதாலும், சூரிய சந்திரர்கள் கீழேவிழவில்லை என்பதாலும் இராம பிரானே நீவீர் அறிந்து கொள்ளலாம் என்று அனுமன் இராமனிடம் கூறுகின்றான். இப்பாடலில் இலது, இல என்ற இன்மைக் குறிப்புகள் இடம்பெற்றுப் பாடலைச் சிறக்கச் செய்கின்றன.

    தேவர் வியக்கும் கற்பு
    சீதாபிராட்டியின் கற்பின் சிறப்பினால் தேவர்களின் தேவியரும் கற்பினால் பெருமை பெற்றனர். சிவபெருமான் இடப்பாகத்தில் இருந்த பார்வதி கற்பின் திண்மையால் சிவன் தலையில் இருக்கலானாள். திருமாலின் மார்பில் இருந்த திருமகளும் அவரின் தலைமீது இருக்கலானாள். சோகத்தாள், பாகத்தாள், மகுடத்தாள், பதுமத்தாள், ஆகத்தாள் என்ற சொற்கள் இங்கு ஒத்த ஒலிக்குறிப்பினைத் தருவதாக உள்ளது.

    சீதையைத் தேடிக் கண்டறிந்த முறை
    இலங்கை முழுவதும் தேடிப்பார்த்து, இராவணனின் இருக்கையிலும் தேடிப்பார்த்து,  அசோக வனத்தில் கண்ணின் நீர்க்கடலின் இடையே தேவமகள் போன்ற  சீதையைக் கண்டேன்; என்று அனுமன் சீதையைக் கண்டறிந்த செய்தியைக் குறிப்பிடுகிறான். கண்ணின் நீர்க்கடலில் கண்டேன் என்ற தொடர் அழகுமிக்கது.

    அரக்கியர் நடுவே சீதாபிராட்டி
    பேய் போன்ற அரக்கியர் பாதுகாவலுக்கு இடையில் இராமபிரானே உன் மேல் கொண்ட அன்பின் காரணமாக அச்சத்தைப் போக்;கி இரக்கம் என்ற பண்பு பெண் வடிவம் பெற்றால் எப்படி இருக்;குமோ அப்படி அந்தச் சிறையில்  சீதாபிராட்டி இருந்தாள். நின்பால் நேயமே அச்சம் நீக்க இரக்கம் என்ற ஒன்று தானே ஏந்திழை வடிவம் எய்தி தருக்கு உயர் சிறை உற்றன்ன தகையள் அத்தமியள்|| என்ற அடிகள் அழகியல் வயப்பட்டன.

    இதன்பின் இராவணன் வந்து சீதாபிராட்டியைப் பணிந்தது, இரந்தது, அவள் கடுஞ்சொல் சொன்னது, பின் அரக்கியர்களைப் புத்தி கூறச் சொன்னது, அரக்கியர் உறங்கியது, பிராட்டி தற்கொலை புரிந்து கொள்ளச் சென்றது, தடுத்து அனுமன் இராம நாமம் சொன்னது போன்ற செய்திகள் விரிகின்றன.

    இதன்பின் மோதிரத்தைச் சீதாபிராட்டியிடம் அனுமன் தருகின்றான். அப்போது அம்மோதிரத்தைச் சீதாபிராட்டி அணைக்க அது உருகியதாம்.  மோதிரம் பட்ட மகிழ்ச்சியால் ஏற்பட்ட குளிர்வால் அம்மோதிரம் உடன் குளிர்ந்து தன் நிலை பெற்றது என்று கம்பர் காட்டுகின்றார்.

    அனுமன் சொல்லிய இப்பகுதிகளில்  சீதா பிராட்டியின் உருவ நலன் எடுத்துரைக்கப்படவில்லை. சீதாபிராட்டியின் புறஅழகினைக் கடந்து அக அழகினை அனுமன் கண்டு உரைப்பதாக இப்பாடல்கள் பாடப்பெற்றுள்ளன. மேலும் ~~கண்டனென் கற்பினுக்கு அணியைக் கண்களால்|| என்ற தொடர் அனுமனின் நிலைப்பாட்டை எடுத்துரைப்பதாக உள்ளது.

    இராமனின் அழகை அடி முதல் முடி வரை உவமைகளால் அழகுபட புனைந்த கம்பரால் ஏன் சீதையின் அழகு அவ்வாறு சொல்லப்படவில்லை என்பது இங்கு எண்ணத்தக்கது. மேலும் தமிழ் இலக்கியங்களில் பெண் பாத்திரப்படைப்புகள் உருவ அழகிற்கு முக்கியத்துவம் தந்து அவற்றைப் பல பட விரித்துரைக்கும். இப்படி ஒரு வாய்ப்பு வந்தபோதும் அதனை மறுத்து சீதாபிராட்டியை ஒழுக்க சீலர் ஒருவரைப் பாராட்டும்படியாகக் காட்சிப்படுத்தியிருப்பதற்கான காரணம் என்ன என்று எண்ண வேண்டியுள்ளது.

    அனுமன் என்ற ஆண்மகன், திருமணமாகாதவன், தொண்டன் தான் வணங்கும் தெய்வமாக விளங்கும் இராமனின் துணையைக் காணுகையில் அவன் உள்ளத்தில் ஏற்படும் மரியாதை உணர்ச்சி இங்குக் கம்பரால் வெளிப்படுத்தப்பெற்றுள்ளது. ஆண் மற்றொருவரின் மனைவியாக விளங்கும் பெண்ணைக் காட்சிப்படுத்துகையில் இத்தகைய மதிப்பு மிக்க தன்மை வரவேண்டும் என்று கற்போருக்குக் கம்பன் உணர்த்துகிறான். சாதாரண ஆண்மகன் பார்க்கும் சாதாரணப் பார்வையில் இருந்துக் காப்பிய மாந்தர்களை வேறுபடுத்திப் பண்பாடு மிக்க உயர் பாத்திரங்களாக படைக்கக் கம்பர் உறுதி கொண்டுள்ளார். இதைக் கற்கும் அனைவர் உள்ளத்திலும் மற்றவர் மனைவி என்றால் அவளின் அழகு தெரியாமல் அவளின் கற்புத் திறம் தெரியவேண்டும் என்று கம்பர் எண்ணியுள்ளார்.

    உவமைகள் வாயிலாக இராம அழகை வெளிப்படுத்த விழைந்த கம்பன் சொல்லடுக்கு, சொல்லழகுகளைக் கொண்டு சீதையின் அழகினை விவரித்திருப்பதற்குக் கம்பருக்குள் உள்ள உயர்பண்பாடு காரணம் என்பதைச் சுந்தர காண்ட அழகுகள்; எடுத்துரைக்கின்றன. அழகு வெறும் உருவ அழகு மட்டும் சாரந்தது அல்ல என்பதை விளக்குவதாகவும் உள்ளது.

    இராமன் கேட்கிறான், இராமனை வணங்குபவர்கள் கேட்கிறார்கள் என்ற எண்ணத்தில் சீதாபிராட்டியின் அழகு  மிகுந்த கவனத்துடன் கற்பினை முன்னிறுத்தி கம்பரால் எடுத்துரைக்கப்பெறுகிறது. ஆணை அழகுபட வருணித்தல், பெண்ணை அவளின் குணங்களின் வழியாக அடையாளம் காட்டுதல் என்ற நாகரீக மரபு இந்தச் சுந்தரகாண்டத்திற்குள் இடம்பெற்றுள்ளது, பிறன் மனை நயத்தல் தவறு என்ற அடிப்படை கோட்பாட்டில் சற்றும் விலாகமல் அனுமன் இங்குக் கம்பன் வாயிலாகச் செயல்பட்டுள்ளான்.

    இராம அழகைக் கம்பன் பாட உவமைகள் கைகொடுத்தன. சீதை அழகைப் பாட சொற்சேர்க்கைகள் கைகொடுத்துள்ளன. கற்பவர்களுக்கு உவமை அழகைவிட சொல்லழகுகள் சுகம் தருகின்;றன என்பதை சீதாபிராட்டியின் நிலையைக் கூறும் பாடல்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதன் வாயிலாக உணரமுடிகின்றது.

    கவிஞன் தன் ஒவ்வொரு பாடலையும் வாசகர் மனதில் இடம்பிடிக்க ஏற்றவகையில் அமைக்கவேண்டும் என்ற பேராவல் கொண்டுப் படைக்கின்றான். கவிச்சக்கரவர்த்தி தன் ஒவ்வொரு பாடலையும் மக்கள் மனதில் இருத்த பற்பல உத்திகளைக் கையாளுகின்றார். சீதையின் அழகினை, இராமனின் அழகினை வாசகர்கள் தமக்குள் ஏற்க இத்தகைய உத்திகளைக் கையாண்டுள்ளார்.

    ஒட்டு மொத்தத்தில் அழகு என்பது மற்றவர் பார்வையில் உருவம் சார்ந்து அமைவதல்ல. மனநலன், குணநலன், ஒழுக்க நலன் சார்ந்து அமைவது. மதிப்புகளின் அடிப்படையில் அழகு வரையறுக்கத்தக்கது என்பதை சுந்தரகாண்டம் எடுத்துக் காட்டுகின்றது.

    பயன் கொண்ட நூல்கள்
    அண்ணாமலைப் பல்கலைக்கழகம், கம்பராமாயணம்,சுந்தர காண்டம், (இருபகுதிகள்), இரண்டாம் பதிப்பு 2010
    நடராஜன். தி.சு., திறனாய்வுக் கலை, என்சிபிஎச், ஏழாம் பதிப்பு 2010
    பழனியப்பன், பழ., சுந்தரகாண்டம் புதிய பார்வை, வானதிபதிப்பகம், 2008
    கம்பமலர், அகில இலங்கைக் கம்பன் கழகம், 15 ஆம் ஆண்டுமலர், 1995
    ஜெயராசா.சபா.கலாநிதி,, அழகியல், அம்மா வெளியீடு, இணுவில், மருதனா மடம், இலங்கை, 1989

    படத்திற்கு நன்றி: http://www.starsai.com/lord-hanuman-garudalwar-murugan-temple/

    Share
  • இனியவள்

    “இனியவள்” என்னும் இந்தப் பாடலை எழுதியிருக்கும் வல்லமையாளர் ஷைலஜா, சிறந்த எழுத்தாளர் மட்டுமல்ல, அருமையான கவிதாயினியும்கூட!

    சில ஆண்டுகளுக்கு முன்பு, இணையத்தில் ஒரு போட்டிக்காக இந்தப் பாடலை எழுதிய அவர், அதற்கு இசையமைக்க என்னிடம் கேட்டுக் கொண்டார். போட்டி முடிவுநாள் வந்துவிட்டதால், அன்றே அமர்ந்து இசையமைத்துப் பாடிக் கொடுத்தேன். அன்று தொண்டை சரியாக இல்லாததால் குரல் அவ்வளவாக எடுக்கவில்லை. ஆனால் மறுபடியும் பாடிப் பதிவு செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதை மனதில் வைத்துக் கொண்டு பாட்டைக் கேளுங்கள்!

    அன்புடன்,
    ஆர்.எஸ்.மணி
    (கேம்ப்ரிட்ஜ், ஆன்டேரியோ, கனடா)

    யூட்யூப் தொடர்பு:
    http://youtu.be/NSGWL0u2UjY

    இனியவள்

    பாடல்: ஷைலஜா

    இசை, குரல்: ஆர்.எஸ்.மணி (கனடா)

    ——————————————————————

     

    தேன்சிந்தும் பூமுடித்து

    தேவதைப்போல் வந்தவளே

    வான்கொட்டும் மழைபோலே

    வார்த்தைகளில் நனைப்பவளே

    ஏனென்று கேட்காமல்

    என்னோடு வந்துவிடு

    நான்மட்டும் படிப்பதற்கு

    நயனத்தில் கதையெழுது

     

    கணைதொடுக்கும் கண்ணாலே

    காதல்போர் புரிபவளே

    துணையாக நான்வந்தால்

    துவண்டுநடை பயில்பவளே

    இணையுனக்கு யாருமில்லா

    ஈடில்லாப் பேரழகே

    அணையுடைத்துப் பெருகுமுன்னே

    ஆசைதனைத் தீர்த்திடவா

     

    தீட்டுகின்ற ஓவியமாய்

    தித்தித்து இருப்பவளே

    பாட்டுக்குள் கற்பனையாய்

    படிந்தே கிடப்பவளே

    கூட்டுக்குள் குடியேறி

    குயிலெனவே இசைத்திடுவாய்

    வாட்டும் என்தனிமைக்கு

    விருந்தாக வாகண்ணே

                                       (தேன்சிந்தும்)

     

    —————————————————————————-

    Share
  • Agnisaakshi!

    Agnisaakshi

    He had kept his appointment to meet me at the beach…. My friend Srinivasarangan was a punctual man…..

    It was two years since I had seen him. He was thinner and visibly paler, certainly not the ebullient man in his bell bottoms he was when we were together at the Presidency, and surely a far cry from the rosy cheeked young chubby lad he was during his school days. It was neither day nor night. The sun had gone down and stars had come out and darkness was swathing in a stride much like the grief of his heart. I wasn’t sure how to start.

    “Ranga, I want to talk to you about something”

    “Sure, go ahead”

    “Will you mind if it’s personal, Ranga?” – I was unusually held-back with my best friend in being out-spoken.

    “You can say anything, you’re my best friend.”…. “And now, what more do I have to hide as personal?” – he added with a look towards the blue lined horizon beyond the sea.

    “We’ll talk sitting on this beach…..” he said. We walked a few yards to a spot at the foot of a tree. We sank down on the soft sand of the beach. The same beach that saw us run in fun and frolic, hand in hand as children – little boys who knew nothing about life’s travails; The same beach that saw us play beach cricket with tennis balls as college kids;

    His now dried sea of sorrow reflecting in his voice cut through my heart.

    “Ranga, you must marry again.”- I said, in my own blunt way, and paused.

    There was his usual silence, and after a calm survey, he smiled. “And why must I?” asked he.

    I had my answers ready – “You are still young, and you are not a father yet – why would you want to waste your life in Padma’s memory? I respect your love for her, but you had only been married for 2 years”.

    He smiled. “Did Amma ask you to talk to me?” –  He knew. The old lady had tried to get her son out of Padma’s memory for two years but received no response from him who slowly became a sober introvert, who’d not entertain any topic of him marrying again. Out of desperation she had called me and asked if I could talk to her son, in my capacity as his best friend.

    “Well….” I started to speak, but his hand on my hand stopped me in my tracks. “I know you and I know her…..I am sure she would have”.

    “…..…….” – There was silence in the air.

    By now, the moon had come out….. It was a Poornima….. I thought for a second that the moon was more like a white swan that came swimming out of the black ocean, above our heads….. I wondered what was going on in Rangan’s mind…… His gaze was fixed on the moon…….

    “Do you see that moon?” – he asked…..

    “Ya… beautiful, isn’t it?” – I replied.

    “It is…… It’s good you brought the topic up. I had to open my heart to someone, my friend. And none better than you…….” – he paused;

    “Hmmm…..”

    “Do you know, this moon has borne witness to my times with Padma here, on this very spot below this tree? This spot to me, is sacrosanct…… Every Poornima…. I and Padma would come here… to this very beach… this very spot…. We used to pack our dinner and come here”……..

    “Hmmm….” – I did not want to interrupt him…… After a pause he continued……

    “On our first day here, I wrote a shlokham for her, comparing her lovely turmeric tinged face with the rising yellowy poorna-chandhran. I don’t mind repeating to you”…. He recited the verse.

    “You are quite a poet, aren’t you?” – I tried to infuse some cheer. He gave a wry smile and nodded it off… “What’s the point?”…..

    “She was the best person in my life, you know? She took care of every single detail for me. She knew I liked my potatoes fried to crispness, with some extra chilly in it, and that’s the way it was done. She knew I was allergic to pea-nuts, and it was banished from the limits of the household. My wake up alarm in the morning, for those 2 years were her keerthanams and varnams, one raaga for each day, and my lullabies were her neelaambary and yadhukulakambodhi …. Despite my protests, she washed my clothes by hand. Do you know? I have bought a fresh set of clothes to be used after she left this world. I have preserved every cloth she washed with her hand. I did not want to dirty them…. They bear her finger prints and I don’t want her finger prints to be washed off…. her unwashed saree wraps my pillow now….. and her scent wraps my heart“

    Another pause…… I could see in the moonlight, his eyes were moist….. his gaze was fixed on the moon…… he went on…..

    “Her lap was my pillow… her eyes were my mirror….. she loved me….. ever since the day she stepped into my home….. what had I done for her to deserve such unconditional love? She kept awake till I came home, and shared her food with me… I came home early to make sure she ate in time….. at times, she fed me… and I used to playfully suck on her fingers as she fed me… Though we could never conceive, I could see a mother’s love in her eyes… That was enough for us….. we were each-others’ child…..”

    He was now breathing faster….. his voice betrayed a silent sob……

    “She loved me….. I loved her….. unconditionally. She cared for my happiness unconditionally….. do you know what she said when kissing me good night, the night before we got her admitted?”

    “…….”

    “She said if she died, she’d be with me in spirit. She said in her next birth, she would want to be my wife. I said in our next birth I want to be her wife, and she must be my husband…. I could repay her kindness in some way….. And she asked me to remarry if she died. I broke down and refused…… She knew I would say no…. she knew my love for her”

    Rangan was now in tears….. I could do nothing about it…. I was trying not to cry myself.

    “You say it’s JUST 2 years…… I remember every single day of those 2 years. Every single minute…. She lives, my friend…. She lives now in me….. Do you think loyalty is just physical? When we tied the knot we circum-ambulated the fire 7 times….. I promised her that I’d be faithful to her in thought, word and deed. And faith to me, is not just physical. Her physical frame is no more, but her soul lives in my heart. And till God lets me meet her in the other world, I shall wait. That’s my respect for my sweetheart….. I am waiting to be united with her, again…… because, this bond is eternal…..  It was sealed with fire as witness…. Agnisaakshi……. No other woman shall ever have me…..”

    I could not help my tears….. Ironically, he had to cheer me up…..!

    “It’s time…. Let’s go home… Amma will be waiting. You must have dinner at my home today….”

    We got up and started……..

    I did not know what I’d tell his mother…..

    I just wished, Padma heard his words…. Or perhaps, she lived in his heart and knew…….. Perhaps, she heard….. perhaps she rose  with the moon every poornima, and came eagerly to see her husband sitting under the very same tree to that sacrosanct spot……. She’d know he’d come there… It was agnisaakshi……..

    Share
  • கடவுளான பாட்டி !

     

    தேவா

     

    என் பாட்டி சொல்லும் கதைதான்

    என் இரவு நேர தூக்க மாத்திரைகள் ,

    காலையில் என்னை எழுப்புவது என் பாட்டிதான் – அன்று

    ஏனோ மாலை வரை அவள் எழவில்லை ,

    மாலை அணிந்து அவள் படுத்துக் கிடந்தாள் – தலை மாட்டில் விளக்கு ,

    எங்கும் மவுனம்

    அதைக் கலைத்த சில அழுகைகள் ,

    அதையும் தாண்டி தாரை தப்பட்டைகள் ,

    அவளை நாலு பேர் தூக்கிச் சென்றனர் , முன்னால் என் தந்தை ,

    தீச்சடியுடன் ,

    ‘அம்மா ,பட்டியை எங்க கூட்டிட்டுப் போறாங்கம்மா ? – .நான் ,

    ‘பாட்டி சாமி ஆயிட்டா, அதான் கோவிலுக்கு எடுத்துட்டுப் போறாங்க – அம்மா.

    ‘அம்மா பாட்டிய நிப்பாட்டும்மா இரவு பாதிகதையை சொல்லிட்டு

    மீதி கதையை,சொல்லாம போறாங்கம்மா – நானும் அழுதேன்.

    ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டார் ,மீள்வதுண்டோ?

    எனக்கு தெரியாமல் போனது.

    ஒருநாள் கோவிலுக்கு சென்றோம்

    என் கண்கள் எதையோ தேடியது ; என் தாய் அதைக் கண்டு ,

    ‘என்ன தேடுகிறாய் என்றாள்’?

    ‘சாமியை தேடுகிறேன்’ என்றேன்.

    ‘அதோ உள்ளே இருக்கிறது சாமி ’, உள்ளே இருக்கும் சிலையைக்

    காட்டினாள்.

    அந்த சாமி ,இல்லம்மா ,

    நம்ம பாட்டி சாமி ஆகிட்டாள்னு சொன்னாயே

    அவளைத்தான் ,தேடிக்கிட்டு இருக்கேன்.

    என் தந்தையின் கண்களில் ,கண்ணீர்.

     

    Share
  • இந்த வார வல்லமையாளர்

    வெ. திவாகர்

    ஆதிசிவன் பெற்று விட்டான்-என்னை
    ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
    வேதியன் கண்டு மகிழ்ந்தே-நிறை
    மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்.

    இது தமிழின் தோற்றத்தைப் பற்றிய பாரதியின் பாட்டு. மகாகவி சுப்பிரமணிய பாரதி முக்காலமும் உணர்ந்த ஒரு சித்தன் என்பதில் அடியேனுக்கு அழிக்கவொண்ணாத எண்ணம் உண்டு. அவன் சொல்படிதான் இப்போதும் தமிழ் எனும் மொழியை உணர்கிறேன். எதிர்காலத்திலும் இந்த எண்ணம் மாறாது. இந்த எண்ணத்துக்கு பாரதிக்கு முன்னமேயே இன்னொன்று ஒரு விதையை என் மூளைக்குள் போட்டுவிட்டது.

    சின்ன வயதில் அகத்தியர் என்றொரு படம் பார்த்தேன். அப்போது எனக்கு அது நல்லதொரு படமாகவும் சில நல்ல பாடங்களும் கற்றுத் தந்தது என்பதையும் நான் சொல்லித்தான் ஆகவேண்டும். அகத்தியரின் புராணக் கதையை விடுங்கள். அவர்தான் தமிழைச் செம்மைப்படுத்தியவர் என்பதை அப்படம், சில காட்சிகள் மூலம் நமக்கு உணர்த்தும். அப்போது அந்தப் படத்தில் அகத்தியருக்குத் தொல்காப்பியர் என்றொரு சீடர் இருந்ததாகவும் அவர் மூலம் தமிழில் இலக்கணம் வகுத்ததாகவும் கூறுவர்.

    இந்தத் தொல்காப்பியம் பற்றிப் பள்ளியில் சரிவரப் படிக்க முடியாத சூழ்நிலை. இதனால் பள்ளியில் தமிழ் சரியாக எனக்குக் கற்பிக்கப்படவில்லை என்று நான் சொல்ல முடியாவிட்டாலும் அந்தக் காலக் கட்டத்தில் தமிழ் இலக்கணம் சரியாக எனக்கு ஏறவில்லை என்று சொல்லலாம். தொல்காப்பியம் மட்டுமல்ல, சங்கப் பாடல்கள், காப்பியங்கள் இவை எல்லாமே காலத்தின் போக்கில் கற்றுக் கொண்டவை. இதை ஏன் சொல்கின்றேன் என்றால் இந்தக் காலத்தில் தமிழ்ப் பள்ளியளவில் கூட கற்றுத் தரமுடியாத சூழ்நிலையில் நம் மொழி இருக்க, அந்த மொழியைச் சான்றோர்கள் மூலம் எப்படிக் கற்றுத் தெளிவது என மாபெரும் கேள்வி நம் முன் எழுவது கூட இயற்கைதான். இதனால் மொழியளவில் நம் பிள்ளைகள் வாழ்க்கை போகிற போக்கிலேயே சந்தர்ப்பம் நேரிடும்போதெல்லாம் அதைப் பயன்படுத்திக் கற்றுத் தெளிய வேண்டிய கட்டாய நிலை உள்ளது. ஆனால் இவர்களுக்கு நல்லாசிரியர் வேண்டும், விவரமான தெளிவான தமிழில் அதே சமயம் எளிமையாகக் கற்றுத் தர முடிகின்ற தமிழாசிரியர்கள் வேண்டும். பள்ளி – கல்லூரி நிலை வேறு, பள்ளி நிலையைத் தாண்டிய வாழ்க்கை நிலை வேறல்லவா?

    இது போன்ற சமயங்களில்தான் பேராசிரியர் பாண்டியராஜன் போன்றோரின் உதவி கிடைக்கின்றது என்பது மிக மகிழ்ச்சியான செய்தியாகும். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பணிபுரிந்தவர், தற்சமயம் எளிய விதத்தில் சங்கத் தமிழுக்கும் தொல்காப்பியத்துக்கும் விரிவுரையாகத் தந்து உதவி வருகிறார். இரண்டு நாட்கள் முன்பு தொல்காப்பியத்துக்கான விரிவுரையைத் தந்துள்ளார். படித்துப் பயனுற வேண்டியதாகும். https://www.dropbox.com/s/ve5q488dy5yaizx/THOLCON-1B.doc இதோ ஒரு சின்ன தொல்காப்பிய விளக்கம் – உங்களுக்காக அவர் தொகுப்பிலிருந்து யூனிகோட்’இல் மாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது.

    வழக்காறு-1
    ஒவ்வொரு சொல்லுக்குமுரிய நிகழ்விடங்களின் எண்ணிக்கை அச் சொல்லை அடுத்து அடைப்புக் குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன் கீழ், அச் சொல்லுக்குரிய நிகழ்விடங்கள் வரிசையாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அச் சொல் வரும் அடி முழுமையாகக் கொடுக்கப்படும். அதனை அடித்து அந்த அடி இடம்பெறும் அதிகாரம் (எழுத். (எழுத்து), சொல், பொருள்) கொடுக்கப்படும். அதனை அடுத்து அந்த அதிகாரத்தில் அச் சொல் இடம்பெறும் இயலின் சுருக்கப்பெயர் கொடுக்கப்படும். அதனை அடுத்து அந்த இயலில் அச் சொல் இடம்பெறும் நூற்பா எண் கொடுக்கப்படும்.

    வழக்காறு-2
    ஒரு சொல் ஓர் அடியின் இறுதியில் அமைந்தால், அதன் நிகழ்விடத்துடன் அடுத்த அடியும் கொடுக்கப்படும். ஆனால், அச்சொல், ஒரு நூற்பாவின் இறுதி அடியில் இருந்தால் அடுத்த அடி கொடுக்கப்படமாட்டாது.
    எ.காட்டு
    எச்சத்து (3)
    சாவ என்னும் செய என் எச்சத்து – எழுத். உயி.மயங்:7/1
    இறுதி வகரம் கெடுதலும் உரித்தே – எழுத் 7/2
    செய்து என் எச்சத்து இறந்த காலம் – சொல். வினை:42/1
    பிரிவின் எச்சத்து புலம்பிய இருவரை – பொருள். கற்:5/37
    எச்சத்து என்ற சொல் அடி இறுதியில் வந்துள்ளதால், அடுத்த அடியும் கொடுக்கப்பட்டிருப்பதைக் காண்க.
    கிழவோள் செப்பல் கிளவது என்ப – பொருள். கற்:6/43
    இதில் ‘என்ப’ எனும் சொல் அடியின் இறுதிச் சொல்லாயினும், அது அந்த நூற்பாவின் இறுதி அடியாக இருப்பதால் அடுத்த அடி கொடுக்கப்படவில்லை.

    இலக்கணம் படிப்பது என்பது (என்னைப் போல உள்ள) சாதாரணமானவர்களுக்குக் கஷ்டம்தான். ஆனால் சரியான வகையில் சொல்லிக் கொடுக்கும் படிப்பு கிடைப்பது அரிது. அப்படி கிடைக்கும்போது அதைப் பயன்படுத்திக் கொள்வோம். பேராசிரியர் பாண்டியராஜா அவர்களை இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுத்து மகிழ்கிறோம். அவருடைய தமிழ்ச் சேவைகளுக்கு நம் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

    கடைசி பாரா: ஶ்ரீரங்கம் மோகனரங்கனின் தீபாவளி ‘சரவெடி’

    என்ன தேடுகிறாய்?
    பட்டாசுப் பொட்டலமா? பைத்தியமே!
    புத்தகத்தைத் தேடிப் படி.
    படித்ததை நட்புடனே சொல்.
    ஆகாத அஞ்ஞான கொல்லிருளுக்கே
    அது ஒன்றே அணுகுண்டாகும்.

    Share
  • சிந்தாமணிக் கடலில் ஒரு சிறு பயணம்!

    மேகலா இராமமூர்த்தி

    ஐம்பெருங்காப்பியங்களில் கதை அடிப்படையில் காலத்தால் மூத்ததும் காப்பியத்திற்கான இலக்கணங்கள் அனைத்தும் ஒருங்கே அமையப் பெற்றதுமான தலைசிறந்த நூல் ‘சீவக சிந்தாமணி’ ஆகும். சத்திர சூடாமணி, கத்திய சிந்தாமணி ஆகிய வடமொழி நூல்களைத் தழுவி இக்காப்பியத்தைச் சமண முனிவரான திருத்தக்க தேவர் தமிழில் இயற்றியுள்ளார். ’சிந்தாமணி’ என்பதற்கு நெஞ்சில் பொதிந்துவைத்துக் காக்கவேண்டிய தேவருலக மணி என்று பொருள் கூறுவர்; அது கற்பகத்தரு மற்றும் காமதேனு போன்று கேட்டதைத் தரும் இயல்புடையதாகும். அதனால்தான் சீவகனுடைய கதையைக் கூறும் சிந்தாமணி போன்ற காப்பியம் என்னும் பொருளில் இந்நூலுக்குச் சீவக சிந்தாமணி எனப் பெயரிட்டார் இக்காப்பிய ஆசிரியர் என்கின்றனர் தமிழ்ச் சான்றோர்.  இந்நூலின் சிறப்பை நோக்கும்போது இப்பெயர் இதற்கு நூற்றுக்கு நூறு பொருத்தமே என்பதில் சற்றும் ஐயமில்லை.

    இக்காப்பியத்தின் தலைவனாகிய ’சீவகனுக்கு’ அவனுடைய தாயாகிய ‘விசயை’ முதன் முதலாக இட்டு விளித்த பெயர் ’சிந்தாமணி’ என்பதே ஆகும். ’சீவகன்’ என்னும் பெயர்  பின்னர் வானொலியாகத் (அசரீரி) தோன்றிய ‘சீவ’ என்னும் வாழ்த்துச்சொல் கேட்டு ’கந்துக்கடன்’ என்னும் வணிகன் (சீவகனின் வளர்ப்புத் தந்தை) இட்ட பெயரே என்பது இக்காப்பியம் கூறும் செய்தியாகும்.

    மனித வாழ்வின் பண்பாகவும், பயனாகவும் கருதப்படும் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு உறுதிப் பொருள்களையும் இச்சிந்தாமணிக் காப்பியம் இனிதே எடுத்துரைப்பதனால் இதனை ’முடிபொருள் தொடர்நிலைச் செய்யுள்’ என்றும் கூறுவர்.

    சிந்தாமணியை ’விருத்தப்பா’ என்னும் யாப்புநடையில் திருத்தக்க தேவர் அழகுற அமைத்துள்ளார். இவ்விருத்தப்பா சிறந்த ஓசைநயமும், சொல்லழகும் உடையது. செய்யுள் இயற்றுவதிலே ’விருத்தம்’ என்னும் ஓர் புதிய பாதையை முதன்முதலில் இலக்கிய உலகுக்கு அறிமுகப்படுத்திய பெருமை திருத்தக்க தேவரையே சாரும். அதற்குப்பின் வந்த இலக்கியங்கள் தேவரின் பாணியையே (பெரும்பாலும்) பின்பற்றி அதில் வெற்றியும் கண்டன எனலாம்.

    இவ்விருத்தப்பாவை தேவருக்குப் பிறகு பெரிய அளவில் பிரபலப்படுத்தியவர் கம்பரே ஆவார்; அவருடைய கம்பராமாயணம் முழுவதும் விருத்தப்பாவில் படைக்கப்பட்டு இன்றளவும் பெரும் பாராட்டையும், வரவேற்பையும் தமிழ்கூறு நல்லுலகில் பெற்றிருப்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. கம்பருக்கு ‘inspiration’ திருத்தக்க தேவரே என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை அல்லவா? ‘சிந்தாமணிக் கடலில் சிறிது முகந்துகொண்டேன்’ என்று கம்பநாடனே கூறியுள்ளதாக ஒரு செவிவழிச் செய்திகூட உண்டு.

    இனி, சீவக சிந்தாமணிக் காப்பியம் குறித்துச் சில செய்திகள் நம் சிந்தனைக்கு…

    சிந்தாமணியில் நாமகள் இலம்பகம் தொடங்கி முத்தி இலம்பகம் ஈறாக மொத்தம் 13 இலம்பகங்கள் உள்ளன. இலம்பகம் என்பது அத்தியாயம் என்பதுபோல் காப்பியத்தின் உட்பிரிவைக் குறிப்பதாகும்; இந்நூலில் மொத்தம் 3145 பாடல்கள் உள்ளன.

    காப்பியத்தின் முதல் பகுதியாக வருவது ’நாமகள் இலம்பகம்’. இவ்விலம்பகத்தில் ’ஏமாங்கதம்’ என்றழைக்கப்படும் நாட்டின் இயற்கை வளமும், அந்நாட்டை ஆண்ட மன்னன் சச்சந்தன் (சீவகனின் தந்தை), விசயை (சீவகனின் தாய்) ஆகியோரின் வாழ்வில் நிகழ்ந்த பல்வேறு சம்பவங்களும் அழகிய பாடல்கள் வடிவிலே விளக்கப்பட்டுள்ளன.

    அரசனாகிய சச்சந்தன் அவனுடைய அமைச்சனான கெடுமதி படைத்த கட்டியங்காரனால் அநியாயமாகக் கொல்லப்பட்டது; கருவுற்றிருந்த அரசமாதேவி ’விசயை’ மயிற்பொறி எனும் வானஊர்தி ஒன்றில் பறந்து சென்று அரண்மனையில் பிறக்கவேண்டிய அரசிளங்குமரனான சீவகனைச் சுடுகாட்டில் ஈன்றது; பின்பு கந்துக்கடன் என்ற வணிகன் குழந்தை சீவகனைப் பத்திரமாக எடுத்துச்செல்வதைக் கண்டபின் அவள் துறவறம் பூண்டது எனப் பல துன்பியல் நிகழ்வுகளை வரிசையாகப் பட்டியலிட்டு அவலச்சுவையை நாம் முற்றாகச் சுவைக்குமாறு செய்துவிடுகின்றது இந்நாமகள் இலம்பகம். எனினும் இதில் இடம்பெற்றுள்ள ஏமாங்கத நாட்டின் இயற்கை வளம் கூறும் பாடல்கள் தேனில் தோய்த்தெடுத்த பலாச்சுளைகளாக இனிக்கவே செய்கின்றன; அவற்றிலிருந்து ஒன்று நாம் சுவைக்க:

    காய்மாண்ட தெங்கின் பழம்வீழக் கமுகின் நெற்றிப்
    பூமாண்ட தீந்தேன் தொடைகீறி  வருக்கை போழ்ந்து
    தேமாங் கனிசி தறிவாழைப் பழங்கள் சிந்தும்
    ஏமாங் கதமென்று இசையால்திசை போயது உண்டே.” (நாமகள் இல: பாடல்: 31)

    நன்றாகக் காய்த்த தென்னைநெற்றானது (தேங்காய்) தான் கீழே வீழும்போது கமுகின் உச்சியிலுள்ள தேன்போலும் இனிய நீரையுடைய குலையைக் கீறி, பலாப் பழங்களைப் பிளந்து பின்னர்த் தேமாங்கனிகளைச் சிதறச்செய்து, வாழைப் பழங்களையும் சிந்தச் செய்யும் வளம்பொருந்திய நாடு ஏமாங்கதம் என்று இந்நாட்டின் வளம் சுவைபடக் கூறப்பட்டுள்ளது எண்ணி எண்ணி இன்புறத்தக்கது.

    நாமகள் இலம்பகத்தை அடுத்து வரும் இலம்பகங்களில் காந்தருவதத்தை, குணமாலை, பதுமை, கேமசரி, கனகமாலை, விமலை, சுரமஞ்சரி, இலக்கணை ஆகிய எட்டுப் பெண்களைத் தன் பல்வேறு திறமைகளைச் சிறப்பாக வெளிப்படுத்திக் காப்பிய நாயகன் சீவகன் மணம் செய்துகொள்வது விரிவாகப் பேசப்படுகின்றது. இத்தனைத் திருமணங்களை நாயகன் (அலுக்காமல்!) செய்துகொள்வதாலேயே இந்நூலுக்கு ‘மணநூல்’ என்ற சிறப்புப்பெயரும் உண்டு. பின்னர்த் தன்னருமைத் தந்தையைக் கொன்று ஏமாங்கத நாட்டைக் கைப்பற்றிய கொடுங்கோலனான கட்டியங்காரனைத் தன் தாய்மாமன் கோவிந்தனின் துணையோடு போரில் வீழ்த்தித் தன் நாட்டை மீண்டும் கைப்பற்றுகின்றான் சீவகன்; நாட்டின் மன்னனாகி நல்லாட்சி புரிகின்றான். நன்மக்கட்பேறு வாய்க்கப் பெறுகின்றான்.

    image descriptionஇக்காப்பியத்தைப் படிப்போர்க்கு ’ஒரு சமணத் துறவி அறக்கருத்துக்களையும், துறவுநெறியையும் வலியுறுத்திக் காப்பியம் படைப்பதை விடுத்துக் ‘காமச்சுவை’ மிகுந்த ஓர் காப்பியத்தை இயற்றுவானேன்?’ என்ற ஐயம்கூட எழலாம். தேவர் இக்காப்பியத்தை இயற்றியதற்கான காரணமாகச் சொல்லப்படுவது….ஒரு சமயம் திருத்தக்க தேவரிடம் மற்ற புலவர்கள், ’துறவியான உம்மால் துறவறக் கருத்துக்களை மட்டுமே பாட இயலும்; அகப்பொருள்சார் பாடல்களைப் பாட இயலாது’ என்று இகழ்ந்துகூற அதனைப் பொய்யாக்கவே அவர் ‘அகப்பொருள்’ செய்திகள் செறிந்த இக்காப்பியத்தைப் படைத்தார் என்று கூறுகின்றனர் அறிஞர் பெருமக்கள். கவிஞர் என்றானபின் காதலைப் பாடவேண்டிய கட்டாயம் காவியுடை தரித்தவர்க்கும் வந்துவிடுகின்றது பாருங்கள்!

    சிந்தாமணியின் கதைப்போக்கினைக் கூர்ந்து நோக்கும்போது அஃது திருமால் அவதாரக் கதைகளில் ஒன்றான கண்ணன் கதையையே பெரிதும் ஒத்திருப்பதை நம்மால் உணரமுடிகின்றது. கண்ணன் ஆயர்பாடியில் கோபியர்களுடன் ’இராச லீலைகள்’ பல நிகழ்த்தினான்; போர் செய்தான்; அரசாட்சி செய்தான்; அன்பர்களுக்கும், நண்பர்களுக்கும் உதவினான்; மன்னுயிர் ஓம்பினான். இத்தனைத் தொழில்களும் செய்துகொண்டே அவன் உலகப் பற்றின்றி மெய்வாழ்க்கை நடத்திக் காட்டினான். அதுபோலவே இக்காப்பியத் தலைவன் சீவகனும் பல மகளிரை மணக்கின்றான்; போர் செய்கின்றான்; அரசாளுகின்றான்; மக்களைத் தீங்கின்றிக் காக்கின்றான். இத்துணைச் செயல்களுக்கு மத்தியிலும் அவன் வாழ்வின் நிலையாமையை நன்குணர்ந்தவனாய் ’படநாகம் எப்படித் தன் தோலை உரிக்குமோ’ அதுபோல் உலகப்பற்றை உரித்துவிட்டுத் தன் மனைவியர் எண்மருடனும் துறவு பூணுவதாகவும், தவமியற்றி வீடுபேற்றை அடைவதாகவுமே காப்பியத்தை முடித்துள்ளார் ஆசிரியர்.

    இக்காப்பியத்தின் இறுதிப் பகுதியாகிய ’முத்தி இலம்பகம்’ பல அரிய அறக்கருத்துக்களை, வாழ்வியல் உண்மைகளை எடுத்தியம்பி மனித மனத்தை பக்குவப்படுத்துகின்றது. ஒழுக்கம் என்பதற்கு விளக்கம் கூறும் ஓர் இனிய பாடல்..

    உள்பொருள் இதுவென வுணர்தல் ஞானமாம்
    தெள்ளிதின் அப்பொருள் தெளிதல் காட்சியாம்
    விள்ளற இருமையும் விளங்கத் தன்னுளே
    ஒள்ளிதின் தரித்தலை யொழுக்கம் என்பவே.” (முத்தி இல: பாடல்: 2845)

    உண்மைப் பொருள் எதுவென உணர்தலே ஞானம் எனப்படும். அப்பொருளின் தன்மை இது எனத் தெளிந்திடுதல் காட்சியாகும்; அத்தகைய ஞானத்தையும், தெளிந்த காட்சியையும் ஒருவன் தன் மனத்திலே சிறப்புற நிலைபெறச் செய்வதே ஒழுக்கம் ஆகும் என்கிறார் திருத்தக்க தேவர். ஞானம், காட்சி, ஒழுக்கம் இம்மூன்றினையும் மும்மணிகள் (இரத்தினத்திரயம்) என்பர் சமணர்கள். இப்பாடலின் கருத்தை நோக்கும்போது,

    எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு. (குறள்: 355) 

    பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்

    மருளானாம் மாணாப் பிறப்பு. (குறள்: 351)

     

    என்ற இரு குறள்கள் நம் நினைவுக்கு வருகின்றன அல்லவா?

    இவ்வினிய தமிழ்க் காப்பியத்தைக் கற்று அதன் சுவையில் மனத்தைப் பறிகொடுத்த வெளிநாட்டுத் தமிழறிஞர் ஜி.யு. போப் அவர்கள் கிரேக்க மொழியின் மாகாவியங்களான ‘இலியட், ஒடிசி’ ஆகியவற்றிற்கு இணையானது இச்சிந்தாமணிக் காப்பியம் என்று புகழாரம் சூட்டியுள்ளார். ’தேம்பாவணி’ என்னும் தீந்தமிழ்க் காவியம் படைத்த வீரமாமுனிவர், இக்காப்பிய ஆசிரியர் திருத்தக்க தேவர் ’தமிழ்க் கவிஞருள் சிற்றரசர்’ என்று வியந்து பாராட்டியுள்ளார். தொல்காப்பியத்திற்கும், பத்துப்பாட்டிற்கும் அற்புதமான உரை வரைந்தவரும், தமிழ்ச் சான்றோரால் ’உச்சிமேல் வைத்துப் போற்றப்படுபவருமான’ பெரும்புலவர் நச்சினார்க்கினியர் இந்நூலுக்கு அழகிய உரை எழுதிச் சிறப்பித்துள்ளார். இவ்வாறு எண்ணரும் சிறப்புக்களைத் தன்னகத்தே கொண்டொளிரும் ஒப்பற்ற காப்பியமாம் சீவக சிந்தாமணியை நாமும் படித்தின்புறுவோமே!

    படத்திற்கு நன்றி: https://www.nhm.in/shop/978-81-8493-465-6.html

    Share
  • சிங்கப்பூர் மலேசியத்தந்தை தமிழவேள் கோ .சாரங்கபாணி

    நூலாய்வு !

    சிங்கப்பூர் மலேசியத்தந்தை தமிழவேள் கோ .சாரங்கபாணி

    வில்லவன் கோதை

    நூலாசிரியன் ஜே மு சாலி

    வெளியீடு
    இலக்கியவீதி
    52 சௌந்தர்யா குடியிருப்பு- அண்ணா நகர் மேற்கு சென்னை 600101
    விலை ரூ 200

    sali 02

    சிங்கப்பூர் – மலேசியத் தந்தை தமிழவேள் கோ சாரங்கபாணி என்றொரு நூலை சென்னை இலக்கியவீதி சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது. ஐம்பதுகளில் பிரபலமான சிறுவர் இதழ் கண்ணன் கண்டெடுத்த ஜெ மு சாலியை அறுபதுகளில் சாரங்கபாணியின் சிங்கப்பூர் தமிழ் முரசு தத்தெடுத்துக்கொண்டது.எவர்க்கும் கிடைப்பதற்கறிய எழுத்துலக வாய்ப்பு சாலிக்கு கிடைத்தது .தொள்ளாயிரத்து முப்பத்தைந்தில் துவங்கப்பட்ட தமிழ் முரசில் முப்பது வருடங்களுக்குப்பிறகு இணைந்த ஜே மு சாலியை தமிழ்முரசு ஒரு பத்திரிக்கையாளனாக்கிற்று.

    அவர் எழுதிய இந்த நூல் நாடுகடந்து சிதறிக்கிடந்த ஒரு இனத்தை கோ .சாரங்கபாணி என்ற தனிமனிதன் செப்பனிட்ட சீர்திருத்த வரலாற்றை விரிவாக பேசுகிறது.

    தமிழவேள் கோ சாரங்கபாணி என்ற இந்த மனிதர் யார்

    தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கிழவர்களைக்கேட்டால் ஜெமினிகணேசனுடன் மிசியம்மாவில் நடித்த நகைச்சுவை நடிகர் சாரங்கபாணியை சுட்டிக்காட்டுவர். இன்றைய இளைய தலைமுறையோ அனேகமாக தோளை உயர்த்தி உதட்டைப்பிதுக்கக்கூடும்.

    ஊடகங்களின் எழுச்சிக்குபிறகு நிலவரம் சற்றே மாறியிருக்கிறது. தமிழர்கள் இந்தியாவைத்தாண்டி பல்வேறு தகவல்களை இப்போ தெல்லாம் அறிந்திருக்கிறார்கள் இதற்கு இந்தியாவின் கதவுகள் இப்போது திறந்திருப்பது ஒரு காரணமாக இருக்கக்கூடும். .அதேசமயம் இங்கிருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள் கோட்டையிலிருந்து கோடம்பாக்கம்வரை ஒவ்வொருகணமும் நம்மை கூர்ந்து கவனித்துத்தான் வந்திருக்கிறார்கள் அதற்கு பெற்றதாய் நாட்டின் பெரும்பிணைப்பாய்கூட இருக்கலாம்.

    சிங்கப்பூரும் மலேசியாவும் ஒன்றுபட்டு ஆங்கில ஆதிக்கத்துக்கு அடிபணிந்திருந்த நேரம். வெள்ளையர் மலாய்காரர் சீனர் யூரேஷியர் ஆகிய கலப்பினத்தாரிடையே தமிழர்கள் சிக்குண்டிருந்த சமயம்.

    தமிழ் நாட்டில் திருவாரூரில் பிறந்த விஜயபுரம் கோ சாரங்கபாணி தனது இருபத்தியோராவது வயதில் பிழைப்பைத்தேடி சிங்கப்பூர் வருகிறார் அப்போதெல்லாம் தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரையோரம் இருந்தவர்களுக்கு அக்கரை புல்வெளிகளாக காணப்பட்டது சிங்கப்பூரும் மலேசியாவுந்தான்.

    கூலிக்கு ஒரு கடையில் கணக்கு எழுத ஆரம்பித்த சாரங்கபாணி எழுத்துலகில் ஈர்க்கப்பட்டு காலப்போக்கில் முன்னேற்றம் வார இதழில் இணைகிறார்.

    அடுத்தடுத்து தமிழ் ஆங்கில ஏடுகளை துவக்கி துவண்டுகிடக்கும் தமிழற்காக தமிழ் முரசொலிக்கிறார்.

    ‘’ பத்திரிக்கை துவங்கி பெரும் பணம் திரட்டுவது எம் நோக்கமல்ல. உலகச்செய்திகளை உடனுக்குடன் தமிழர்கள் அறிந்து கொள்ளச்செய்வது முதல் நோக்கம். வேலையற்று இருக்கும் ஒருசில தமிழற்காவது வேலை கொடுப்பது இரண்டாவது நோக்கம். ஒருவர் வெளியீடு ஒன்றுக்கு 200 தமிழ் முரசு பிரதிகள் விற்றால் அவருக்கு மாதம் 12 வெள்ளி லாபம் கிடைக்கும் ஏறக்குறைய இவ்வளவுதான்ஒரு முனிசிபல் தொழிலாளின் சம்பளமும் ‘’ என்று தமிழ்முரசின் தோற்றத்தை மாதம் மும்முறையாக வந்த முதல் ஏட்டில் சாரங்கபாணி பேசுகிறார்

    சாரங்கபாணியின் சமூக சீர்திருத்தம் அன்னியமண்ணில் சொந்த மக்களிடையே உருவெடுக்கிறது..

    இந்திய தேச விடுதலை வேள்வியை தூண்டிவிட பாரதியாரின் எழுத்து பயன்பட்டது. உறக்கத்திலிருந்த தமிழினத்தை தட்டி எழுப்பிட தந்தை பெரியாரின் குடியரசு துணைநின்றது..

    சிங்கப்பூர் மலேசியத்தீவுகளில் சொல்லொண்ணா துயருடன் சிதறிக்கிடந்த தமிழ் சமுதாயத்தை உசுப்பிவிட சாரங்கபாணியின் தமிழ் முரசு துணைநின்றது. ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக தன் எழுத்தாலும் பேச்சாலும் தமிழர்களை திரட்டி மொழிக்கும் மக்களுக்கும் அன்னியமண்ணில் கிடைப்பதற்கறிய அங்கீகாரம் பெற்றுத்தருகிறார் சாரங்கபாணி.

    இங்கேயே பிறந்து இங்கேயே வளர்ந்து இங்கேயே வாழ்ந்துவரும் முஸ்லீம் பெருமக்களிற் ஒருசிலர் இன்றும் பாக்கிஸ்தான் கனவுகளில் மிதப்பதை கண்டிருக்கலாம்.

    அதற்கு மாறாக சிங்கப்பூர் எனது தேசம் சிங்கப்பூர் அரசு எங்கள் அரசு புலம் பெயர்ந்தவர்களானாலும் நாங்கள் சிங்கப்பூர்கள் எங்களுக்கான உரிமைகளை எங்கள் அரசிடமிருந்தே பெருவோம் என்ற வழியில் செயல்பட்டவர் சாரங்கபாணி. சாதியற்ற தமிழற்கு ஆண்டுதோரும் தைத்திருநாளை ஏற்படுத்தி தமிழர்களை தலை நிமிரச் செய்தவர் தமிழவேள் சாரங்கபாணி. இவர் நடத்திய ஒவ்வொரு தமிழ் இன விழாக்களிலும் பிரதமரையும் மந்திரிகளையும் இழுத்துக்கொண்டது இவரது வெற்றிக்கான யுக்தி. தந்தை பெரியாரின் அடியொற்றி அண்ணாவைப்போல் ஆட்சியாளரை அரவணைத்து மக்களுக்கும் மொழிக்குமான காரியங்களை சாதித்துக்கொண்டவர் இந்த தமிழவேள்

    256 பக்கங்களில் அரிய நிழற்படங்களுடன் எழுதப்பட்ட இந்த நூல் ஒரு தகவல் களஞ்சியம் என்று சொல்லாம். சாலியால் எழுதப்பட்டது என்பதைக்காட்டிலும் சாலியால் பல்வேறுதகவல்களை மாலையாக தொடுக்கப்பட்டது என்பதே பொறுத்தமாக இருக்கும்

    இது சாரங்கபாணி என்ற தனிமனிதரின் சுய வரலாறல்ல.

    சாரங்கபாணி கப்பலேறி சிங்கப்பூர் வந்தார். கடையில் சம்பளத்துக்கு கணக்கெழுதிய சாரங்கபாணி காலப்போக்கில் பத்திரிக்கை தொழிலில் நுழைந்தார். ஒரு சீன மாதை காதலித்து மணந்தார்.ஆறுமக்களைப் பெற்ற.சாரங்கபாணிக்குப்பிறகு அவர் துவக்கிய தமிழ் முரசை அவர் துணைவியார் தொடர்கிறார்

    இந்த நூலில் சாரங்கபாணியின் சுய வரலாறு இவ்ளவுதான்

    மூடப்பழக்க வழக்கங்களில் சிக்கி தீவு முழுதும் சிதறிக்கிடந்த தமிழினத்தை மற்ற இனத்தவர்களுக்கிணையாக மாற்றியமைக்க தினம் தினம் அவர் எடுத்த சிரத்தை இந்த புத்தகத்தின் பெரும்பகுதியில் இடம் பிடித்திருக்கிறது. வெள்ளையர் ,மலாய்காரர் ,சீனர் ,யூரேஷியர் என்ற நான்கு வகை இனமக்களைக்கொண்ட ஒரு சமூகத்தில் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்துக்கும் உரிய அங்கீகாரத்தை ஆட்சியாளர்களோடு இணக்கமாக பயணித்து பெற்றுத்தந்த்தை இந்த நூல் பெருமளவில் விவரிக்கிறது.

    சாரங்கபாணி ஒரு நாத்தீகர் இல்லையென்றாலும் கோவில் குளங்களை சுற்றுபவரும் அல்ல. மொழி இனம் பண்பாடு இவையனைத்திலும் தந்தை பெரியாரின் கருத்துகளையே எதிரொலித்தார்..புலம் பெயர்ந்த தமிழற்கு ஆட்சியாளருடன் இணக்கமாக இருந்து குடியுரிமை பெற்றது, தமிழுக்கு கல்விக்கூடங்களிலும் ஆட்சியிலும் சமமான அங்கீகாரத்தை பெற்றது இவரது சாதனைகள்.தந்தை பெரியாரைப்போல் சரங்கபாணி தமிழர் வாழ்வில் நுழையாத இடமே இல்லை.சாரங்கபாணியின் சாதனைகளையும் பெற்ற வெற்றிகளையும் பேசுகிற இந்த புத்தகம் அதற்கான ஆவணங்களாக நாற்பதாண்டு தமிழ்முரசு தலையங்க எழுத்துகளையே சாட்சியாக்கியிருக்கிறது. இந்த சாதனை சரித்திரத்தில் அவருக்கு தோள்கொடுத்த பல்வேறு பிமுகர்களின் வாக்குமூலங்கள் கூட ஆவணமாகியிருக்கிறது.சாரங்கபாணியின் தமிழ்முரசு தலையங்கங்கள் பிரமிக்கத்தக்கவை. இன்றைய கல்விக்கூடங்களில் இடம் பெறவேண்டியவை. எளிய நடையில் ஏரளமான தகவல்களுடன் எழுதப்பட்ட இந்தநூல் முக்கியமாக படிப்பதற்கு நாவலைப்போன்று சுவாரஸ்யமானது.

    உலகளாவிய பொருளாதாரத்துக்கும் கலாச்சாரத்துக்கும் வழியேற்பட்டிருக்கும் இந்த காலங்களில் நம் பக்கத்து தேசங்களான சிங்கப்பூர் மலேசியாவின் கடந்த கால நிகழ்வுகளை நாம் அறிந்திருப்பது நல்லது. அதற்கு சாலியின் நூல் துணை நிற்கும்.

    Share
  • பட்டினத்தடிகளின் பாடல்கள் – 11ம் பகுதி

    தஞ்​சை ​வெ. ​கோபாலன்

    (அவருடைய அன்னை மறைந்தபோது அவருக்கு ஈமச்சடங்கு செய்தபோது பாடியவை.)

    ஐயிரண்டு திங்களா அங்கமெலாம் நொந்து பெற்றுப்
    பையலென்ற போதே பரிந்தெடுத்துச் – செய்ய இரு
    கைப்புறத்தில் ஏந்தி கனகமுலை தந்தாளை
    எப்பிறப்பிற் காண்பேன் இனி. 1.

    பத்து மாதங்கள் சுமந்து, அங்கம் தளர்ந்து வருந்திப் பெற்று, ஆண் குழந்தை என்றுணர்ந்து தன் உடல் நோவெல்லாம் மறைந்து மனம் களிப்புற்று, குழந்தையைத் தன்னிரு கரங்களில் ஏந்தித் தாய்ப்பால் அளித்து என்னைப் போற்றி வளர்த்த அந்தத் தாயை இனி நான் எந்தப் பிறவியில் மீண்டும் காண்பேன்.

    முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாட்சுமந்தே
    அந்தி பகலாய்ச் சிவனை ஆதரித்துத் – தொந்தி
    சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
    எரியத் தழம் மூட்டுவேன். 2.

    தனக்கொரு மகவு வேண்டுமென்று பலகாலம் தவமாய்த் தவமிருந்து முன்னூறு நாட்கள் வயிற்றில் சுமந்து, அந்தி, பகலென்று பாராமல் சிவபெருமானை வழிபட்டு, வயிறு முட்டக் குழந்தையைச் சுமந்து பெற்ற தாய்க்கோ நான் அவள் உடலை தீக்கு இரையாக்குவேன்.

    வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
    கட்டிலிலும் வைத்து என்னைக் காதலித்து – முட்டச்
    சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ
    விறகிலிட்டுத் தீ மூட்டுவேன். 3.

    தூளியிலும், மரத் தொட்டிலிலும், தன் மார்பின் மேலும், தோள்மீதும், கட்டிலிலும் வைத்து என்னை அன்பு செலுத்தி பறவைகள் தன் குஞ்சுகளைத் சிறகுவிரித்துக் காப்பதுபோல் காப்பாற்றி என்னைச் சீராட்டிய அன்னையை விறகுகளை அடுக்கி எப்படி நான் தீ மூட்டுவேன்.

    நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை
    தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே – அந்திபகல்
    கையிலே கொண்டென்னைக் காப்பாற்றும் தாய்தனக்கோ
    மெய்யிலே தீ மூட்டுவேன். 4.

    உடல் வருந்தி என்னைச் சுமந்து பெற்று, என் உடல் வருந்தாமல் என்னைத் தன் கரங்களிலே ஏந்தித் தாய்ப்பால் அருந்தக் கொடுத்து வளர்த்தெடுத்து, காலை மாலை பாராமல் எப்போதும் என்னைக் கீழே விடாமல் கைகளிலே வைத்துக் காப்பாற்றிய என் தாய்க்கோ உடலில் தீ மூட்டுவேன்.

    அரிசியோ நான் இடுவேன் ஆத்தாள் தனக்கு
    வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் – உருசியுள்ள
    தேனே அமிழ்தமே செல்வத் திரவியமே
    மானே என அழைத்த வாய்க்கு. 5.

    என்னை இனிய தேனே, அமிழ்தே, செல்வமே, திரவியமே, மானே என்று அனை அன்போடு அழைத்த அன்னைக்குப் பெருமைகள் செய்யாமல் அவள் வாய்க்கு நானே வாய்க்கரிசி போடுவதோ.

    அள்ளி இடுவது அரிசியோ தாய் தலைமேல்
    கொள்ளி தனை வைப்பேனோ கூசாமல் – மெள்ள
    முகம்மேல் முகம் வைத்து முத்தாடி என்றன்
    மகனே என அழைத்த வாய்க்கு. 6.

    சின்னக் குழந்தையாய்த் தரையில் படுத்து கைகால்களை நான் அசைத்து விளையாடியபோது என்னை மெள்ள எடுத்து முகத்தின் மேல் தன் முகம் வைத்து முத்தம் கொடுத்து, என் அருமை மகனே என அழைத்தத் தாயின் வாயில் நான் இப்போது அரிசியிட்டுத் தலைமேல் கொள்ளியையும் வைப்பது எங்ஙனமோ.

    முன்னையிட்ட தீ முப்புரத்திலே
    பின்னையிட்ட தீ தென்னிலங்கையில்
    அன்னையிட்ட தீ அடிவயிற்றிலே
    யானுமிட்ட தீ மூள்க மூள்கவே. 7.

    முற்காலத்தில் சிவபெருமான் இட்ட தீ திரிபுரங்களையும் எரித்தது; பின்னர் அனுமன் இட்ட தீ தென் இலங்கையைச் சுட்டெரித்தது; என் உடலில் தாய் வைத்த உயிர்த்தீ இப்போது பற்றி எரிகிறது; நான் இப்போது அவள் உடலுக்கு இடும் தீயும் பற்றி எரியட்டும்.

    வேகுதே தீ அதனில் வெந்து பொடி சாம்பல்
    ஆகுதே பாவியேன் ஐயகோ – மாகக்
    குருவி பறவாமல் கோடாட்டி என்னைக்
    கருதி வளர்ந்தெடுத்த கை. 8.

    வெட்ட வெளியில் என்னை எடுத்துச் சென்றால் வானில் பறக்கும் பறவை தோஷம் எனக்குப் பட்டுவிடும் என்று எச்சரிக்கையோடு என்னை எடுத்து வளர்ந்த அன்னையின் இரு கரங்களும் தீயினால் பற்றி எரிகிறதே, பொடிப்பொடியாய் சாம்பலாய் ஆகின்றதே, அந்தோ என் செய்வேன்.

    வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில்
    வந்தாளோ என்னை மறந்தாளோ – சந்ததமும்
    உன்னையே நோக்கி உகந்து வரங்கிடந்து என்
    தன்னையே ஈன்றெடுத்த தாய். 9.

    திரு அண்ணாமலையில் ஜோதி ஸ்வரூபனாய் எழுந்தருளியிருக்கும் பரஞ்சோதிச் சுடரே! சதாகாலமும் உன்னையே எண்ணி பூசித்து வணங்கி வரம்பெற்று என்னை இப்பூவுலகில் மகவாகப் பெற்ற என் அன்னை தீயினில் வெந்தாளோ, வெந்து உந்தன் திருவடிகளை அடைந்தாளோ, என்னையும் தன் மகவு என்பதை மறந்தாளோ.

    வீற்றிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்
    நேற்று இருந்தாள் இன்று வெந்து நீறானாள் – பால் தெளிக்க
    எல்லீரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல்
    எல்லாம் சிவமயமே யாம். 10.

    உயிரோடும் உயிர்ப்போடும் ஜீவகளையோடும் இருந்தாள் என் தாய், வீதிகளில் சென்று உலாவித் தன் வேலைகளைச் செய்தாள், நேற்று இருந்தாள், இன்றோ தீயில் வெந்து சாம்பரானாள். ஆகையால் அவளுக்குப் பால் தெளிக்க எல்லோரும் வாருங்கள், என்ன ஏது என்று எண்ணி வருந்தாதீர்கள், உலகமே சிவமயம், அவனன்றி ஓரணுவும் அசையாது.

    (இன்னும் வரும்)

    Share
  • வார ராசி பலன் 04.11.13-10.11.13

    காயத்ரி பாலசுப்ரமணியன்
    மேஷம்:  மாணவர்கள் தெளிவான சிந்தனை, தீர்க்கமான செயல்பாடு-இரண்டையும் மேற்கொள்வதன் மூலம் உயர்வான நிலைக்கு செல்லலாம். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் அவசரப் போக்கிற்கு இடம் தராமல் இருந்தால், புதிய சிக்கல்கள் உருவாகா மலிருக்கும். இந்த வாரம் பணியாளர்களிடையே அதிருப்தியான சூழல் நிலவும். எனவே பொறுப்பில் இருப்பவர்கள் எதிலும் கவனமாய் இருப்பது அவசியம். சுய தொழில் புரிபவ ர்கள் கேட்டிருந்த கடன் உதவி, சிறிது மந்த கதியில் உங்கள் இடம் தேடி வரலாம். பெண்கள் கவனிக்காமல் விட்ட ஆரோக்கிய நலிவு, பணியில் சில தடைகளை ஏற்படு த்தக் கூடும்.
    ரிஷபம்: மாணவர்கள் தங்கள் திறமை மேல் நம்பிக்கை வைத்து செயலாற்றினால் வெற்றி என்னும் இலக்கை அடைவது என்பது உறுதியாகும். வியாபாரிகள் தொழிலுக்கு முன்னுரிமை தந்தாலும், குடும்பத்தை கவனிப்பதில் குறை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். மன நிம்மதியோடு வேலைகளில் ஈடுபடலாம். இல்லத்தில் இனிமை தவழ பெண்கள் தேவையில்லாத இடங்களிலும், நேரங்களிலும் உங்கள் விறுப்பு, வெறுப்புகளை வெளியே கொட்டாதீர்கள். இந்த வாரம் பூர்வீகச் சொத்து சம்பந்தமாகவும் மற்றும் வழக்குகள் தொடர்பாகவும் பணம் தண்ணீராய் செலவழிந்தாலும் கிடைக்கும் பலன் சொற்பமே.
    மிதுனம்: பணியில் இருப்பவர்கள் முக்கிய பொறுப்புள்ளவரின் நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்து கொள்வதன் மூலம் அவர்களின் நன்மதிப்போடு வேண்டிய சலுகைகளையும் பெறலாம்.பொது வாழ்வில் இருப்பவர்கள் தங்களுக்கு உதவும் நல்ல இதயங்களை புண்படுத்தாமல் இதமாக நடப்பது புத்திசாலித் தனம். வியாபாரிகள் கணக்கு வழக்குகளை அலசிப் பார்த்து நிறை குறைகளை குறித்து, அதன்படி செயலாற்றினால், பணம் ,லாபம் இரண்டும் முடங்காமலிருக்கும். இந்த வாரம் தாய் வழி சொந்தங்களின் வழி ஆதரவால், தடைப்பட்ட காரியங்கள் தாமதமின்றி நல்ல விதமாக நடக்கும்.
    கடகம்: கலைஞர்களுக்கு இந்த வாரம் பயணங்கள் அதிகரிக்கும். வாய்ப்பிருப்பதால், ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம். பெண்கள் தினசரி வேலைகளைத் தள்ளிப் போடாமல் செயல்படுங்கள் . ஓய்வுக்கும் மகிழ்ச்சிக்கும் உரிய நேரத்தை ஒதுக்க முடியும். பணியில் இருப்பவர்கள் சச்சரவு கை ஓங்கும் நேரங்களில் மௌனத்தை மேற்கொண்டால், அல்லல்கள் அருகே வராது. பங்குச் சந்தை மற்றும் புதிய முதலீடுகளில் அகலக் கால் வைப்பதைத் தவிர்த்து விடும் வியாபாரிகளுக்கு லாபம் சீராக வந்து கொண்டிருக்கும். மாணவர்களும், கலைஞர்களும் பேச்சைக் குறைத்து, செயலில் தீவிரம் காட்டும் அளவிற்கு ஏற்ப முன்னேற்றம் இருக்கும்.
    சிம்மம்: பெற்றோர்கள் பிள்ளைகளின் பிரச்னைகளைக் கையாளும் போது பதற்றமின்றி செயல்பட்டால் பாதி பிரச்னைகள் குறையும். பெண்கள் எதிர்பார்த்ததை விட செலவுகள் சிலசமயம் கை மீறி செல்லும். வசதி வாய்ப்புகளுடன் உங்கள் கௌரவமும் உயருவதால், கலைஞர்கள் புத்துணர்ச்சியுடன் வலம் வருவார்கள். ஆரோக்கியம் பொலிவுடன் விளங்க, முதியவர்கள் உணவுக் கட்டுப்பாட்டைக் கடை பிடிப்பது நல்லது. இக்கட்டான சூழ்நிலைகளையும் தாண்டி முன்னேற முடியும் என்ற எண்ணமே பொது வாழ்வில் இருப்பவர் களை முன்னேற்றத்தை நோக்கி உந்தித் தள்ளும். மாணவர்கள் வதந்திகளை நம்பி முடிவெடுக்காதீர்கள்.
    கன்னி:கலைஞர்கள் பணியாளர்கள் முன் சொந்த விஷ்யங்களை அலசுவதை விட்டு விடுங்கள். வீண் வதந்திகள் வளராது. வாங்கிய கடன் ஓரளவு அடைவதால், பெண்கள் மகிழ்ச்சியுடன் திகழ்வார்கள். பிறர் உங்களை தூண்டிவிட்டாலும், மாணவர்கள் நேர்மையான வழியிலேயே சென்றால், உங்கள் நற்பெயர் என்றும் நிலைத்திருக்கும். பணியில் இருப்பவர்கள் உங்களின் சிரமங்களை, தகுந்த நேரத்தில் எடுத்துச் சொன்னால், தீர்வுகள் கிடைப்பது எளிதாக இருக்கும். கர்ப்பிணிப் பெண்கள் ஆரோக்கிய பராமரிப்பிற்கு வேண்டிய மருந்துகளை தவறாது உண்டு வந்தால், பிறக்கின்ற குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.
    துலாம்: சொந்த பந்தங்களின் வரவு மகிழ்ச்சிக்கு இந்த வாரம் அடித்தளமாய் அமையும். பொது வாழ்வில் இருப்பவர்கள் பேச்சில் கடுமை கூடாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.தள்ளிப் போடப்பட்டிருந்த காரியங்கள் உடன் முடியும். கலைஞர் களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புக்களை நல்லதை சிலர் தடுக்க முயல்வார்கள். எனவே திறமையோடு புத்திசாலித் தனத்தையும் இணைத்துக் கொள்வது நல்லது. பெண்கள் மூத்தவரிடம் இணக்கமாக நடந்து கொள்ளுங்கள். குடும்பப் பிரச்னைகளைத் தீர்க்க நீங்கள் முயற்சிகளுக்கு ஆதரவாய் இருப்பார்கள். வியாபாரிகளுக்கு லாபம் வரும் வழிகள் மேலும் உயரும்.
    விருச்சிகம்: இந்த வாரம் வியாபாரிகளின் முன்னேற்றத்தில் இருந்த தேக்க நிலை மாறி பரபரப்புடன் செயல்படுவார்கள்.உறவுகளின் மீது பெண்கள் வீண் சந்தேகங்களை வளர்த்துக் கொண்டு அவதிப் பட வேண்டாம். கலைஞர்கள் வேண்டிய உழைப்பை நல்கினால், இது வரை எட்டாக் கனியாய் இருந்தவாய்ப்புக்கள் உங்கள் கரங்களுக்கு வந்து சேரும். உபத்திரவம் தந்தவர்கள், விலகி விடுவதால் பொது வாழ்வில் இருப்பவர்களின் செயலாற்றல் மேலும் சிறப்பாக இருக்கும். பணி புரியும் இடங்களில் வீண் பகை வளராதிருக்க, உங்கள் கோபத்தை கட்டுக்குள் வைத்து உரையாடுங்கள்.
    தனுசு: பெண்கள் இந்த வாரம் செலவுக் கடிவாளத்தை சற்று இறுக்கினால், பணமுடை, மன உளைச்சல் இரண்டும் ஏற்படாது. எதிரிகள் வியாபாரிகளின் முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்டை போடும் வாய்ப்பு உண்டு.கூட்டாக செயல்படும் போது மாணவர்கள் காட்டும் சொல்சிக்கனம் பிரச்னைகளை பெரிதாகாமல் தடுக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் தவறான வழிகாட்டலுக்கு தலையசைக்காமல் இருந்தால், நிலையான நன்மைகள் உங்களை நெருங்கி வரும். முதியோர்களுக்கு பல் சம்பந்தமான உபாதைகள் தோன்றி மறையும். எனவே குளிர்ச்சியான உணவுகளைத் தவிர்ப்பது அவசியம்.
    மகரம்: சுய தொழில் புரிபவர்கள் ஏனோதானோவென்று செயல்படாமல், சீராகத் திட்டமிடுங்கள். காரிய பலிதம் கட்டாயம் உண்டு. வியாபாரிகள் ,சரக்கு போக்கு வரத்தில் உள்ள ஓட்டைகளை அடைத்தால், வீண் விரையத்தைத் தவிர்க்கலாம். சக கலைஞர்களிடையே, கருத்து வேறுபாடு தோன்றும் வாய்ப்பிருப்பதால், பிறருக்கு ஆலோசனை வழங்குமுன் ஒரு முறைக்கு இரு முறை யோசிப்பது அவசியம். பெண்கள் பணம் செலவழிப்பதில் கணக்காய் இருப்பதன் மூலம் கடன் தொல்லை ஏறாமல் பார்த்துக் கொள்ளலாம். இனிமையான வாக்கு மூலம் மாணவர்கள் இரட்டிப்பான நன்மை பெறலாம்.
    கும்பம்: பெண்கள் பதற்றத்திற்கு இடம் தராமல், பணிவான முறையில் உரையாடினால், குடும்பத்தில் அமைதி நிலவும். கலைஞர்கள் தீய சகவாசம், வேளை தவறிய உணவு, வீண் செலவு, ஆகிய அனைத்தையும் தவிர்த்து சீரான வழியில் சென்றால், சிக்கல்கள் ஏதும் உருவாகாது. மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வந்தால், நல்ல பெயரும்,நல்ல மதிப்பெண்ணும் கட்டாயம் கிடைக்கும்.வியாபாரிகள் மற்றவர்களை நம்பி வேலைகளை ஒப்படைத்து விட்டு அல்லல் படாதீர்கள். தன் கையே தனக்கு உதவி என்று பணி புரிந்தால், பணிகளும், வர வேண்டிய பண வரவும் தேங்காது.
    மீனம்: இது நாள் வரை உங்களோடு இருந்த பிள்ளைகள் படிப்பு, பணி போன்றவற்றிற்காக, வேறிடம் செல்ல நேரிடும். வியாபாரிகள் புதிய ஒப்பந்தங்களை பெறவும், தக்கவைத்துக் கொள்ளவும், தீவிரமாக உழைப்பார்கள். நீண்ட நாள் நட்பில் இருந்த விரிசல் விலகுவதால் உங்கள் நட்பு வட்டத்தில் மீண்டும் மகிழ்ச்சி மலரும். இந்த வாரம் அநாவசிய செலவுகளுக்காக கடன் படும் நிலை வராதவாறு, மாணவர்கள் விழிப்புடனிருப்பது அவசியம். கலைஞர்கள் மற்றவர்களுடன் பழகும் போது விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கை கைக்கொண்டால், விரும்பியவளமான வாழ்க்கை உங்கள் வசமாகும்.

    Share
  • தீபங்கள் ஒளிரட்டும்

     
    தீபத்தின் ஒளி கண்டுbuss
    தீமைகள் விலகட்டும்
    தித்திக்கும் இன்பங்கள்
    திக்கெட்டும் எட்டட்டும்

    ஆசைகள் வழி ஓடி
    ஆபத்தைத் தேடிடாமல்
    அமைதி வழி கண்டு
    அகிலம் சிறக்கட்டும்

    சீரிய சிந்தனைகள்
    சிறப்பாக ஓங்கட்டும்
    சிந்தித்து செயலாற்றி
    சீலமாய் வாழட்டும்

    ஆறுதல் தனைத் தேடி
    ஆழகாக இல்லந்தோறும்
    ஆனந்தத் தீபங்கள்
    அணையாமல் ஒளிரட்டும்

    வேதத்தின் வழி தன்னில்
    விவேகத்தின் துணையுடன்
    வாழும் வகைகள் எல்லாம்
    வையத்தில் செழிக்கட்டும்

    நேற்றைகளின் அனுபவங்கள்
    இன்றைகளின் வழியாக
    நாளைகளின் விடிவை நோக்கி
    நானிலமே ஒளிரட்டும்

    நாளெல்லாம் உழைத்து விட்டு
    நலிவொன்றே பரிசாக
    நடமாடும் உழைப்பாளர்
    நன்மைக்காய் தீபங்கள் ஒளிரட்டும்

    அன்பினிய உள்ளங்கள் அனைத்திற்கும்
    அன்புடன் கூடிய என் வாழ்த்துக்கள்
    அனைத்து வளங்களும் பெற்று வாழ
    ஆயிரம் கோடி தீபாவளி வாழ்த்துக்கள்

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share