Blog

  • ஜாகிர் உசேன்!

    ஜாகிர் உசேன்!

    பக்க வாத்தியத்தை முக்கிய வாத்தியமாய் முழங்கிய
    பக்கா வாத்தியக்காரன்!

    தபலாவின் மையத்தில் மட்டுமா நீ வாசித்தாய்?
    தபலாவையே மையத்தில் வைத்து வாசித்தாய்!

    இசை காதுகளுக்கானது என்பர்
    உனது இசையோ
    கண்களுக்கும் ஆனது

    தபலாவில்
    உன் விரல்கள் ஆடும் நடனம்
    ஒரு பேரருவியின் முத்தம்!

    அதிலிருந்து பெருகும் இசை
    ஒரு ஜீவ நதியாய் ஓடிக்கொண்டே இருக்கும்!

    – அண்ணாகண்ணன்

    #zakir #zakirhussain

    Share
  • சச்சி – 84  | மறவன்புலவு க. சச்சிதானந்தன் நீடூழி வாழ்க!

    சச்சி – 84 | மறவன்புலவு க. சச்சிதானந்தன் நீடூழி வாழ்க!

    அண்ணாகண்ணன்

    உலகத் தமிழர், தமிழறிஞர், பதிப்பகச் செம்மல், திருமுறைச் செல்வர், அன்பிற் சிறந்த சான்றோர் மறவன்புலவு க. சச்சிதானந்தன், கார்த்திகை மாதம், மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர். நட்சத்திரப்படி அவருக்கு, 15.12.2024 அன்று 84ஆவது பிறந்த நாள்.

    நுண்மாண் நுழைபுலம் மிக்க ஈழத் தமிழறிஞர்; ஐ.நா. உணவு – வேளாண் கழக முன்னாள் ஆலோசகர்; இலங்கையில் சிவசேனை அமைப்பை நிறுவியவர்; காந்தளகம் பதிப்பகத் தலைவர்; தனித்துவம் மிக்க தமிழ்நூல்.காம், தேவாரம்.ஆர்க் தளங்களின் நிறுவனர் – வழிகாட்டி – காப்பாளர்; தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்குத் தமிழக அரசு ரூ.100 கோடி ஒதுக்கிட முக்கிய காரணர்களுள் ஒருவர்… எனப் பற்பல பெருமைகளுக்கு உரியவர், நம் சச்சிதானந்தன்.

    ஆஸ்திரேலியாவில் பொங்கல் திருநாள் அன்று சச்சியை உரையாற்ற அழைத்தார்கள். புலம்பெயர் இளையோர் நிறைந்த அந்த அவையில் இவர் ஆற்றிய உரையின் தலைப்பு: The Photosynthesis Day என்பதாகும். இத்தகைய அறிவியல் கண்ணோட்டம் கொண்டவர், இவர்.

    ஒளி அச்சுக் கோப்பு, நிலவரை என்ற கலைச் சொற்களைப் புதிய பொருளுடன் அறிமுகப்படுத்தியவர்; 60 நாடுகளுக்கும் மேல் பயணித்தவர்; இலங்கை அரசியல் நிகழ்வுகளின் நோக்கர்; சேது சமுத்திரத் திட்டம் என்கிற தமிழன் கால்வாய்த் திட்டத்தைப் பல முனைகளுக்கும் எடுத்துச் சென்ற கடலியல் வல்லுநர்; தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்துத் தொடங்குவதற்கு அடிகோலியவர்.

    தமிழில் காசோலைகளை எழுதி, அதை ஏற்காத வங்கிகளுடன் சட்டப்பூர்வ – தனி நபர்ப் போராட்டங்களை நடத்தியவர். தமிழால் அனைத்தும் முடியும் என்பதை நிலைநாட்டும் வண்ணம் செயலாற்றி வருகிறார். தமிழையும் சைவத்தையும் தம் இரு கண்களாகக் கொண்டவர்.

    எதையும் அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகுவதில் இவர், சிறந்த முன்மாதிரி. புதிய சிந்தனைகள், ஆக்கப்பூர்வ செயல்திட்டங்கள், பொருள் செறிந்த நுணுக்கமான மொழி நடை… ஆகியவற்றுடன் மகத்தான ஆளுமையாக நம் முன் நிற்கிறார். செய்யும் அனைத்தையும் செவ்வனே செய்யும் ஐயாவின் ஆற்றலைத் தமிழுலகம் இன்னும் சிறப்பாகப் பயன்படுத்த வேண்டும்,

    தமிழுக்காக அளப்பரிய தொண்டாற்றும் சச்சி ஐயா, நீடூழி வாழ்க!

    Share
  • புஷ்பா – லக்கி பாஸ்கர் – மட்கா

    புஷ்பா – லக்கி பாஸ்கர் – மட்கா

    அண்ணாகண்ணன்

    புஷ்பா படத்தில் நாயகன், செம்மரங்களை வெட்டிக் கடத்திக் கோடிகளைக் குவிக்கிறான். மட்கா படத்தில் நாயகன், சூதாட்டத்தின் மூலம் பெரும் பணம் குவித்து, துபாய்க்குத் தப்பிச் செல்கிறான். லக்கி பாஸ்கரில் நாயகன், பங்குச் சந்தையில் பணம் குவித்து, அமெரிக்காவில் செட்டில் ஆகிறான்.

    இவை மூன்றும் தெலுங்குப் படங்கள். ஒரே காலத்தில் வெளிவந்தவை. இவற்றில் குற்றவாளிகளே நாயகர்கள். குற்றங்களில் படிப்படியாக முன்னேறி, கோடிகளைக் குவிக்கிறார்கள். தந்திரமாகத் தப்பிச் செல்கிறார்கள். இவர்களுடன் ஒத்துழைத்தவர்களும் பணம் குவிக்கிறார்கள். எதிர்த்தவர்கள் அழிக்கப்படுகிறார்கள். குறுக்குவழியில் வேகமாக ஜெயிக்கலாம். தண்டனையிலிருந்து தப்பித்தும் விடலாம் என அழுத்தமாகக் காட்டப்பட்டுள்ளது.

    இவை இந்திய மொழிகள் பலவற்றில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளன. கோடிக்கணக்கானவர்கள் பார்த்துள்ளார்கள். இவற்றைப் பார்ப்பவர்கள் மனத்தில் இவை என்ன சிந்தனையை விதைக்கும்?

    #pushpa #pushpa2 #luckybaskhar #matka

    Share
  • குறளின் கதிர்களாய்…(510)

    குறளின் கதிர்களாய்…(510)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(510)

    பழிமலைந் தெய்திய வாக்கத்திற் சான்றோர்
    கழிநல் குரவே தலை.

    – திருக்குறள் – 657 (வினைத் தூய்மை)

    புதுக் கவிதையில்…

    பழியைத் தந்திடும்
    இழிதொழில் செய்து
    ஈட்டும் செல்வத்தைவிட,
    தீவினை ஏதும் செய்யாமல்
    வினைத் தூய்மையுடன்
    செயல்பட்டுச்
    சான்றோர் பெற்றிடும்
    வறுமை
    மிக உயர்ந்ததே…!

    குறும்பாவில்…

    இழிதொழில் செய்து பழியுடன்
    ஈட்டும் செல்வத்தைவிட சான்றோர் நல்வினையாற்றி
    பெற்றிடும் வறுமை உயர்ந்ததே…!

    மரபுக் கவிதையில்…

    நீங்காப் பழியைச் சுமந்தேதான்
    நீசச் செயல்கள் செய்வதனால்
    ஓங்கிச் சேரும் செல்வத்தால்
    ஒருவன் வாழ்வில் ஈட்டுகின்ற
    வீங்கும் ஆக்க மதனைவிட
    வினையின் தூய்மை யதனாலே
    வாங்கும் வறுமை சான்றோர்க்கு
    வாய்க்கும் உயர்வே ஆகிடுமே…!

    லிமரைக்கூ…

    தீயன தீராப்பழியைத் தாங்கி
    செய்வதால்வரும் செல்வத்தைவிட நற்செயல்தரும் வறுமையால்
    சான்றோரின் புகழ்வளரும் ஓங்கி…!

    கிராமிய பாணியில்…

    செம்மயா இருக்கணும் செம்மயா இருக்கணும்
    செய்யிற செயலு
    வாழ்கயில செம்மயா இருக்கணும்..

    பழிபாவம் தருற
    கேடான செயலச் செய்து
    சேக்கிற செல்வத்தவிட
    ஒருத்தருக்கும் கேடு தராத
    நல்லதச் செய்றதல
    நல்லவங்களுக்கு வருற
    வறுமயும் ஒசத்திதான்..

    அதால
    செம்மயா இருக்கணும் செம்மயா இருக்கணும்
    செய்யிற செயலு
    வாழ்கயில செம்மயா இருக்கணும்…!

    Share
  • காரன் / காரி வேர்ச்சொல்

    காரன் / காரி வேர்ச்சொல்

    அண்ணாகண்ணன்
    புல்வந்தி என்ற மராத்தித் திரைப்படத்தைப் பார்த்தேன். படத்தைப் பற்றிப் பிறகு எழுதுகிறேன். இதில் கலைஞர் என்பதைக் கலாகார் என அழைக்கிறார்கள். இதில் கலை என்பதை நாம் நன்கறிவோம். இதன் இரண்டாம் பகுதியான கார் என்பதை ஆராய்ந்தேன்.
    வடமொழியிலும் இந்தியிலும் கார் என்பது, ஒன்றைச் செய்பவரைக் குறிக்கிறது. கலை செய்பவர், கலாகார். இப்படியே சித்திரக்கார், சங்கீத்கார், சில்ப்கார், நாடக்கார், கிரந்த்கார், இதிஹாஸ்கார் எனப் பெருவழக்காக உள்ளது. இந்தக் கார் என்பது பாலி, பெர்சியன், உருது, மராத்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு எனப் பல மொழிகளிலும் பயன்பாட்டில் இருக்கிறது.
    தமிழில் உள்ள வேலைக்காரன், வேலைக்காரி, கரகாட்டக்காரன், ஆட்டக்காரி, வண்டிக்காரன், பாட்டுக்காரன், கொள்ளைக்காரன், சூனியக்காரி, ஆட்டோக்காரன், மேளக்காரன்… என ஒரு வேலையைச் செய்பவர்களைக் காரன் / காரி என அழைக்கிறோம். இதே போல் வீட்டுக்காரன், வீட்டுக்காரி, மூளைக்காரன், பொய்க்காரி, பூக்காரி, சொந்தக்காரன், சொந்தக்காரி என ஒன்றை உடையவர்களையும் இவ்வாறு அழைக்கிறோம். மேலும், இந்திக்காரன், சிந்திக்காரி, மதுரைக்காரன் என ஒரு மொழியை, இடத்தை, நாட்டைச் சேர்ந்தவர்களையும் இவ்வாறு அழைக்கிறோம்.
    இவற்றைத் தூய தமிழ் என யாரும் நினைத்துக்கொள்ள வேண்டாம். இந்தக் கார், காரா (சம்ஸ்காரா), காரம் (உபகாரம்), காரன், காரமு போன்றவை பல மொழிகளிலும் நிறைந்துள்ளன. ஒரு மொழி தெரியாமலே அதைப் புரிந்துகொள்ள முடிகிறது என்பது இந்த வேர்ச்சொற்களின் முதல் ஆதாயம்.
    Share
  • The other side of Luz is sad soaked and dark

    The other side of Luz is sad soaked and dark

    Baskar Seshadri

    What a transformation is this? Decades back this luz junction was a free place with no traffic and was not dense. Even there were no shops on the pavements and it was even free to walk on the pavement close to Nehru News Mart. This was a Major Bus Route even those days with many routes plied through this Junction on all the four sides. interestingly the idea of One-way traffic did not catch up those days. Later when the commercial market developed in a bigger way this area had become congested in spite of the fact that the roads were too wider on all the sides. Most of the Prominent points vanished in late eighties which Includes Parthaas. Sawaan Restaurant, Shanthi VIhar, an elite club with bar, Ganapathi Medicals, and recently Bombay Halwa House few Years. Who can forget the mail van of Postal department that reaches Luz Amrutanjan at seven thirty sharp in the evening? Who can forget the crowded matinee Shows of Kamadhenu, Hot chai of Select and Chilled Juice of Himalayas?

    Now the whole of Luz had changed totally in all aspects and after the roads are shut the area is now totally under the control of CMRL.

    Two days ago, when i had been there i had a chat with Field staff of Metro Rail who told that the old Roundata Point and Police cabin area will be the Luz Metro Station. Three years or slightly more the reality will be happened. This station in its full form may be ready in 2028.

    But for all these many residents, Commercial establishments in and around this area have lost their Livelihood Luz. How can this sufferings be compensated to all those. The other side of Luz is Dark and sad soaked.

    Share
  • இலங்கை அரச சாகித்திய இலக்கிய விருது பெற்ற அபராஜிதன் நாவல்

    இலங்கை அரச சாகித்திய இலக்கிய விருது பெற்ற அபராஜிதன் நாவல்

    2024 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் உயரிய இலக்கிய விருதான ‘இலங்கை அரச சாகித்திய இலக்கிய விருது’ விழா 27.11.2024 அன்று கொழும்பு, அலரி மாளிகையில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. அதில் 2023 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் மொழிபெயர்ப்பு நாவல்களில் சிறந்த மொழிபெயர்ப்பு நாவலுக்கான ‘இலங்கை அரச சாகித்திய இலக்கிய விருது’ எம். ரிஷான் ஷெரீப் மொழிபெயர்ப்பில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட ‘அபராஜிதன்’ நாவலுக்கு வழங்கப்பட்டது.

    அத்தோடு திராவிடியன் ஸ்டாக் பதிப்பகம் வெளியிட்ட மொழிபெயர்ப்பு சிறுகதைகளின் தொகுப்பான ‘அரேபியப் பெண்களின் கதைகள்’ மற்றும் எதிர் வெளியீடு பதிப்பகம் வெளியிட்ட மொழிபெயர்ப்பு சுயசரிதை நூலான ‘ஊழின் அடிமையாக வேட்கை தணிக்கும் பெண்ணின் கதை’ ஆகிய எம். ரிஷான் ஷெரீப்பின் ஏனைய இரண்டு நூல்களும் வெவ்வேறு பிரிவுகளில் சாகித்திய விருதுக்கான இறுதிச் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

    Share
  • சிலப்பதிகாரம் காட்டிநிற்கும் புரட்சிச் சிந்தனைகள்

    சிலப்பதிகாரம் காட்டிநிற்கும் புரட்சிச் சிந்தனைகள்

    மகாதேவஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    சிலம்பின் சிறப்பு

    சிலப்பதிகாரத்தை ஏன் படிக்க வேண்டும்? சிலப்பதிகாரத்தில் அப்படி என்னதான் பொதிந்து கிடக்கிறது! சிலப்பதிகாரத்தைவிட வேறு காப்பியங்கள் தமிழில் சிறந்து விளங்கவில்லையா? என்றெல்லாம் எம க்குமுன்னே பல ஐயங்கள் வந்து நிற்கும். சிலப்பதிகாரத்தைப் பற்றிய சிறப்பும் அதன் சிந்தனைகருத் துக்களும் சரியான முறையில் எம்மிடம் புகுந்துவிடுமானால் இப்படியான ஐயம் எழுவதற்கே இடமில் லாமல் போய்விடும் என்பது எனது மனக்கருத்தாகும். தமிழில் வந்த முதல்காப்பியமாக சிலப்பதிகாரமே விளங்குகிறது.

    இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ்,  மூன்றையும் கொண்ட முதல் தமிழ் காப்பியம் என்னும் பெருமையையும் கொண்டு நிற்கிறது. சேர, சோழ, பாண்டிய, நாடுகளான முத்தமிழ் நாட்டினையும் முழுமைபெறச் செய்த காப்பியமாகவும் அமைந்திருக்கிறது.இலக்கிய உன்னதத்தை வெளிப்படுத்தும் காப்பியமாகவும் இருக்கிறது.

    தமிழர்களின் பன்முகப்பட்ட சமூகப் பண்பாட்டினைக்  காட்டி நிற்கும் காப்பியமாகவும் திகழ்கிறது. வாழ்வியல் நெறிகள், வழிபாட்டு முறைகள், கலைகள், அரசுமுறைகள், நீதி நிர்வாகம், பெண்களின் சமுதாய நிலை, என்று பலவற்றைக் காட்டி நிற்கும் காப்பியமாக சிலப்பதிகாரம் திகழ்கிறது எனலாம். இக்காப்பியத்தை புரட்சிக் காப்பியம், குடிமக்கள் காப்பியம், சமுதாயக் காப்பியம், வரலாற்றுக் காப்பியம், தேசியக் காப்பியம், நாடகம் காப்பியம் என்றெல்லாம் பன்முகப் பார்வையில் நின்றும் பாராட்டப்படும் நிலையும் காணப்படுகிறது. இதனால் காலத்தை வென்று நிற்கும் காப்பியமாக சிலப்பதிகாரம் இருக்கி றது என்பது மறுத்துவிட முடியாத உண்மையெனலாம்.

    இதனால் அன்றோ தேசியக்கவி பாரதி “நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம்” என்று விதந்தோதி நின்றார் போலும்! பாரதியின் வாக்கு எத்தனை வலிமையும் பெறுமதியுமானது என்பதிலிருந்தே சிலப்பின் சிறப்புப் புலனாகி நிற்கிறதல்லவா! சிலப்பதிகாரம் தமிழ் தேசியக் காப்பி யம். சிலப்பதிகாரம் தமிழின் சொத்தாக நிற்கும் காப்பியம். சிலம்பைப் படித்தால் சிந்தனை வளரும்! சிலம்பை நினைத்தால் பெருமிதம் நிலைக்கும்!

    சிலம்பின்  புதுப்பாதை

    நாட்டையோ, சாதியையோ, சமயத்தையோ, சிக்கலுக்குள் புகாவண்ணம்  நடுநிலையினைப்  பேணி க்காத்து உண்மை ஒளி விளங்கும் வகையில் சிலம்பு மலர்ந்திருக்கிறது. வேற்றுமை பாராட்டும் பாங் கினை சிலம்பு தவிர்த்தே நிற்கிறது எனலாம். சாதிகளுக்கிடையே வேறுபாடுகள் காணாது ஒத்தும் உறழ்ந்தும் செல்ல வேண்டும் என்பது சிலம்பின் புதுப்பாதை எனலாம். கவுந்தி அடிகள் சாதியையோ குலத்தையோ பாராதவராக சிலம்பில் வருகிறார். இதுவும் சிலம்பின் புதுப்பாதையினையே காட்டுகிறது. காவியங்களின் தலைவனாக பெரும்பாலும் சிலம்பின் காலத்து உலக காவியங்களில் அரசர்களே வந்திருந்த வேளை – அரசர்க்கு அடுத்த நிலையில் இருந்த வணிக குலத்தை சேர்ந்தவரை காவியத்தலை மைக்கு காட்டியதும் சிலம்பின் புதுப்பாதை எனலாம். மூன்றாம் வருணமாகக் கொள்ளப்படும் வணிக குலத்து பெண்ணான கண்ணகியை தெய்வமாக்கி எல்லா வருணத்தாருமே வணங்கும் நிலையினை சிலம்பு உருவாக்கி நிற்பதும் சிலம்பின் புதுப்பாதை என்று எண்ண முடிகிறது அல்லவா! பத்தினித் தெய்வமாக கண்ணகியை வழிபடும் நிலையினை உருவாக்கியமை சங்ககால இலக்கிய மரபில்வந்த கொற்றவை வழிபாட்டின் தொடர்ச்சியே எனலாம். இதனை நோக்கும் பொழுது  கண்ணகியை தேசிய அளவில் தெய்வமாக உருவாக்கும் புதுப்பாதை சிலம்பினால் வருகிறது என்றே எண்ண முடிகிறது. சேர சோழ பாண்டிய நாடுகளுடன் நின்றுவிடாது இலங்கையிலும் இடம்பெறும் நிலைக்கு தேசிய நிலையா க்கிய புதுமை சிலம்பின் புதுமை என்றுதானே பார்க்க முடியும்.  சுவாமி விபுலானநந்த அடிகளாரின் யாழ் நூல் தோற்றத்துக்கு பாதை அமைத்ததும் சிலம்பன்றோ! தமிழிசை இயக்கும் உருவாவதற்கு பாதை வகுத்ததும் சிலம்பேயாகும்.

    சிலம்புக்கு முற்பட்ட காலத்துப் புலவர்கள் கையாளாத  பல புதிய கவிதை வடிவங்களை சிலம்பில் இடம்பெறச் செய்து இளங்கோ புதுப்பாதையை வருங்காலத்து காட்டி நிற்கிறார். அகவலும் வெண்பாவுமே மிகுதியாகக் காணப்பட்டது பழைய இலக்கியத்தில் எனலாம். பிற்காலத்தில் தாழிசை, துறை , விருத்தம் என்னும் பெயரில் செய்யுள் இனங்கள் வளர்ந்ததைக் காண்கிறோம். இவ்வாறான புதிய வடிவங்கள் வருவதற்கு வழிகாட்டிய பெருமையும் சிலம்புக்கே உரித்தாகிவிடுகிறது எனலாம். அக்காலத்தில் வழக்கிலிருந்த நாட்டுப் பாடல்களை உள்வாங்கியே கானல்வரிப் பாடல்களும், ஆய்ச்சியர் குரவைப் பாடல்களும் சிலம்பில் வரப்பண்ணியதும் இளங்கோவின் புதுப்பாதைதனையே காட்டுகிறது என்றும் கொள்ள முடிகிறது. அக்கால நாட்டுப் பாடல்களை மனமிருத்தி அதனூடாகப் பெற்றவற்றை புதிய செய்யுள் வடிவங்கள் ஆக்குவதற்கு முயன்று அதனை காப்பியத்திலும் இடம்பெறும் வண்ணம் செய்தமை நல்லவொரு புதுப்பாதை என்றே எண்ண முடிகிறது எனலாம். இதன் மூலம் தமிழ் இலக்கியத்துக்கு இளங்கோ அடிகள் செய்திருக்கும் தொண்டு மிகவும் பெறுமதி மிக்கதென்றே கொள்ளல் வேண்டும்.

    சங்கால இலக்கிய மரபில் காதலும் வீரமும் அறமும் காட்டப்பட்டிருந்தாலும் கதையாக தொடராக இலக்கியத்தில் இடம்பெறவில்லை என்றே கொள்ள முடிகிறது. சங்ககாலத்தை அண்டிய காலத்தில் முதன் முதலாக  ஒரு தொடராக ஒரு கதையினை வெளியிட்டு அதில் காதல், வீரம், அறம், அத்தனையும் காட்டி தமிழ் இலக்கியத்துக்கே புதுப்பாதை காட்டிய வகையிலும் சிலம்பினை காட்டி நிற்கிறார் இளங்கோ அடிகள் என்பதை எவருமே மறுத்துவிட முடியாது என்பது உண்மை எனலாம். தமிழ் இலக்கியத்துக்கே சிலம்பு  புதுப்பாதையாக அமைந்தமையால் பின்னர் காப்பியங்கள் பல வரவும் வாய்த்தது என்பதும் மனங்கொள்ளத்தக்கதெனலாம். பின்னர் வந்த காப்பியங்கள் வழிநூல் வழிவந்து நூலாகி நிற்கின்றன. ஆனால் வழி நூல்கள் எதுவும் இன்றி தானே மூலநூலாய் தமிழ் இலக்கியப் பாதையில் புதுப்பாதை காட்டி அதன்வழி வந்தபெருமையினை சிலம்பதிகாரம் ஒன்றே பெற்று கொள்கிறது என்பதே சிலம்பின் சிறப்பும் பெருமையும் என்பதில் எள்ளளவும் எந்தவித ஐயமும் இல்லை என்பதையே காட்டி நிற்கிறது எனலாம்.

    அறநூல் என்று சிறப்பிக்கும் நூல்களும் ஏனைய நூல்களும் ஆரம்பிக்கும் வேளை கடவுள் துதியினைப் பாடியே  தொடங்கும் மரபே காணப்பட்ட வேளை அவற்றை யெல்லாம் கருத்தில் கொள்ளாமல் இயற்கையினைப் பாடியே சிலம்பினை தொடக்கி காவிய மரபில் புதுப்பாதையக் காட்டி நிற்கிறார் இளங்கோ அடிகள் எனலாம். இப்பாதை தமிழ் இலக்கியத்தில் முற்றிலும் மாறுபட்ட வேறுபட்ட புதுப்பாதை என்று அறிஞர்களே வியந்து நிற்கிறார்கள்.

         திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
    ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
    மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்

    என்று இயற்கையினையே பாடி அதனையே மங்கல வாழ்த்தாக்கி சிலம்பினை ஆரம்பிக்கின்றார் இளங்கோ அடிகள். இஃது முற்றிலும் வித்தியாசமான புதுப்பாதை அல்லவா! பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்திருப்பதுதான் இறையாகும். ஆகவே அந்த இறையினை இயற்கையில் கண்டு தனது காவியத்தை புதுப்பாதையில் தொடக்கியமை இளங்கோவின் மதி நுட்பத்தை புலப்படுத்தி நிற்கிற தல்லவா!

    சிலம்பின் புரட்சி

    அவதாரங்களையும் அரசர்களையும் ஆளும் வர்க்கத்தையும் கதைக்கு தலைமைதாங்கும் வண்ணமே காப்பியங்கள் வந்திருக்கின்றன. சாதாரண குடிமக்கள் தலைமை என்பது நினைத்துமே பார்க்கமுடியா மரபில் அதனை உடைத்து அவதாரமோ உயர்நிலையோ அல்லாத அதுவும் ஒரு சாதாரண குடிமகளை கதைக்கு தலைமைதாங்க வைத்து மாபெரும் காப்பியத்தை வடிவமைத்த இளங்கோ அடிகளாரின் புரட்சியானது தமிழ் இலக்கியத்தில் நடந்த மிகப்பெரிய புரட்சி என்றே கூறலாம்.

    காப்பியத்தின் பெயரே புரட்சியாகவே மலர்கிறது. கதையின் நாயகியின் பெயராலோ அல்லது நாயகன் பெயராலோ அமையாது ஒரு அணியின் பெயரால் அமையப்பெற்றிருப்பது அடிகளாரின் மற்றொரு புரட்சியாகி நிற்கிறது. காப்பியத்தின் நாயகியான கண்ணகி கற்புத் தெய்வமாகப் படைக்கப்பட்டிருக்கிறாள். அந்தத் தெய்வத்தின் திருவடியைக் காண்பதுதான் மிகமிக பொருத்தமாகும். “கண்ணகி காப்பியம்” என்று பெயரிட்டால் அவளது திருமேனிதான் நினைவில் வந்து நிற்கும் என்னும் அச்ச உணர்வினால்  அவள் திருவடியை அலங்கரிக்கும் அணியான சிலம்பின் பெயரை வைத்து அவளின் திருவடி ஒன்றே எல்லோர் நெஞ்சிலும் பதியவேண்டும் என்ற புரட்சிகரமான சிந்தனையினாலேதான் இளங்கோ வடிகள் “சிலப்பதிகாரம்” என்னும் பெயரையே சூட்டி இருக்கிறார். இது காப்பிய வரலாற்றில் எண்ணியே பார்க்கமுடியாப் புரட்சி என்று அறிஞர்கள் விதந்து நிற்கிறார்கள்.

    மக்களின் உள்ளங்களை அறிந்தவர் இளங்கோவடிகள். இவருக்கு முன் இருந்த புலவர்கள் வழியில் செல்லாது அவர்கள் தொடாதவற்றை அவர்களால் புறக்கணிப்புக்கு உள்ளாக்கப்பட்ட ஆடல் பாடல் களை ஆசையுடன் நோக்கினார். மக்களின் வாழ்வில் பாடப்பட்ட படல்களைப் பற்றியோ அவர்களின் கூத்து வடிவங்களையோ சங்கநூல்களில் கண்டறிய முடியாதிருக்கிறது. ஆனால் இளங்கோவடிகள் அந்தப் பாடல்களின் உரிமையானவர்களின் கலைகளை மதித்தார். அவற்றுக்கு எழுத்து வடிவம் கொடுத்து தனது காப்பியத்தில் இடம்பெறுமாறு செய்தார்.

    கதையில் எங்கெல்லாம் வைக்கமுடியுமோ அங்கெல்லாம் இப்பாடல்கள் வைத்து அழகு படுத்தினார். கடற்கரையில் செம்படவர் பாடும் பாடும் காதல் பாடல்கள், காவிரியாற்றினைப்பற்றி மக்கள் பாடி வந்த பாடல்கள், வேடர்கள் காளியை வழிபட்டுப் பாடும் பாடல்கள், குரவைப் பாடல்கள், திருமாலை, முருகனை, வழிபாடாற்றும் பாடல்கள், அம்மானைப் பாடல்கள், நெல்குற்றும் பாடல்கள், ஊஞ்சலாடு ம்போது பாடும் பாடல்கள், எல்லாவற்றையும் உள்வாங்கி அதன்வழியிலே செய்யுள்களை யாத்து அந் தநாட்டு மக்களே வாயாலே பாடப்படுவதாக காப்பியத்தில் அமைத்து காவிய வரலாற்றில் புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறார் இளங்கோவடிகள் எனலாம். இப்புரட்சியால் பழங்கால நாட்டுப்புற வடிவங்களை நாம் இன்று கண்டுகொள்ளுவதற்கு சிலம்புதான் ஆதாரவிளங்கின்றது எனலாம்.

    மூன்று நாடு, மூன்று அரசர், மூன்று கருத்து , மூன்று காண்டம், மூன்று தமிழ், என்று காட்டிய இளங்கோவடிகள் மூன்று பெண்களைக் காட்டி பண்டையகால கற்பொழுக்கத்தை சிலம்பில் காட்டி யமையும் அவரின் ஒரு புரட்சி என்றே கொள்ளமுடிகிறது.

         ” வாயிலோயே வாயிலோயே
    அறிவு அறை போகிய பொறியறு நெஞ்சத்து
    இறைமுறை பிழைத்தோன் வாயிலோயே ”  என்றும்

          “தேரா மன்னா செப்புவது உடையேன்”  என்றும்

    கண்ணகி என்னும் பெண்ணை துணிவுடன் பேசவைத்து  ஒரு நாட்டின் அரசனையே  எதிர்கொள்ளும் புரட்சியை இளங்கோவடிகள் சிலம்பில் காட்டி நிற்கிறார். பாண்டிய மன்னனிடம் நீதிகேட்டு மன்ன னையே குற்றவாளியாக்கி அதனால் மன்னனும் இறந்து வீழ அதனைப்பார்த்த அரசியும் அவ்விடத்தே உயிர் துறந்து தனது கற்பின் திண்மையைக் காட்டி விடுகிறாள். இதைப்பார்த்த கண்ணகி பாண்டியன் தேவியின் கற்புக்கு தனது கற்பு குறைந்தது அன்று எனக்காட்டும் முகமாக

       “பட்டாங்கு யானும்ஓர் பத்தினியே ஆமாகில்”

    என்று கண்ணகியை உச்சத்துக்கு கொண்டுபோய் மதுரையை எரிப்பதற்கு ஆணையிடுவது கூட இளங்கோவின் நல்லதோர் உத்தியும் ஒரு புரட்சிச் சிந்தனை எனலலாம். கற்புடை பெண்கள் “பெய் என்றால் மழையும் பெய்யும்” என்னும் வள்ளுவத்தின் சிந்தனை இங்கு கண்ணகியின் வாயிலிருந்து வருகின்ற “எரி”  என்னும் சொல்லுக்கு வலுவூட்டி நிற்கிறது என்பதும் நோக்கத்தக்கதே.

    பாடியதில் புரட்சி. பாத்திரங்கள் படைத்ததில் புரட்சி. கருத்துக்களை முன் கொண்டுவந்து வைத்ததில் புரட்சி. தொடங்கியதில் புரட்சி. குழந்தை இல்லாக் காப்பியமாக சிலம்பினைச் செய்ததும் பெரும் புரட்சி என்றே எடுத்துக் கொள்ள வேண்டியும் இருக்கிறது. இவ்வாறு சிலம்பு முழுவதுமே இளங்கோவடிகளின் புரட்சிச் சிந்தனைகளே நிறைந்து பொலிவினை வழங்கி சிலம்பினை உயர்வாக்கி இருக்கிறது எனலாம்.

    எங்களின் சொத்து 

    முத்தமிழும் விரைவிவர எங்களின் தமிழ் சொத்தாக விளங்குவது சிலப்பதிகாரம். கோவலன் ஒரு கோ – அல்லன். அவன் ஒருசாதாரண குடிமகன். கண்ணகியும் கோ- மகள் அல்ல. அவளும் குடிமகளே. குடிமகனையும் குடிமகளையும் சிலப்பின் தலைவன் தலைவியாக்கி முடிமக்கள் காப்பியம் அல்ல குடிமக்கள் காப்பியம் என்று தமிழில் சிலம்பதிகாரம் அமையப் பெற்றிருப்பதே எங்களுக்கு பெரும் பெருமையல்லவா? இதனை எங்கள் சொத்து என்பது மிக மிக பெருமிதமும் அல்லவா! கம்பனையும் வள் ளுவனையும் வியந்த பாரதி நிறைவில் “இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததி ல்லை”  என்று வியந்து நிற்பதும் எமது தமிழுக்கு வாய்த்த பெருமை அல்லவா!தேசிய ஒற்றுமைக்கு சிலப்பதிகாரம் வழிவகுதிருப்பதும் எங்கள் மொழிக்கு வாய்த்த பெருமை அல்லவா? அரசியல் பிழை த்தால் அறம் நிச்சயம் பதில் தந்தே தீரும். கற்பு  என்பது சமூகத்தின் கட்டாயம். கற்புடன் வாழும் பெண்கள் போற்றப்படுவர். அவர்கள் வணங்கும் நிலையிலும் உயருவார்கள் என்பதை எல்லாம் சொல்லி நிற்கும் சிலம்பு எங்கள் மொழியின் பெருஞ் சொத்து அல்லவா! நீதி தவறினால் உயிர்வாழ்தல் கூடாது என்பது எப்பொழுதும் எல்லா நாட்டுக்கும் பொதுவன்றோ! அதைக்காட்டி நிற்கும் சிலம்பு எமக்கு வாய்த்த பெரும் சொத்தல்லவா!

    பரிவும் இடுக்கணும், பாங்குற, நீங்குமின்;
    தெய்வம் தெளிமின்; தெளிந்தோர்ப் பேணுமின்
    பொய் உரை அஞ்சுமின்; புறஞ்சொல் போற்றுமின்;
    ஊன் ஊண் துறமின்; உயிர்க்கொலை நீங்குமின்;
    தானம் செய்ம்மின்; தவம் பல தாங்குமின்;
    செய்ந்நன்றி கொல்லன்மின்; தீ நட்பு இகழ்மின்;
    பொய்க் கரி போகல்மின்; பொருள்-மொழி நீங்கல்மின்;
    அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின்;
    பிறவோர் அவைக்களம் பிழைத்துப் பெயர்மின்;
    பிறர் மனை அஞ்சுமின்; பிழை உயிர் ஓம்புமின்;
    அற மனை காமின்; அல்லவை கடிமின்;
    கள்ளும், களவும், காமமும், பொய்யும்,
    வெள்ளைக் கோட்டியும், விரகினில், ஒழிமின்
    இளமையும், செல்வமும், யாக்கையும், நிலையா
    உள நாள் வரையாது ஒல்லுவது ஒழியாது;
    செல்லும் தேஎத்துக்கு உறு துணை தேடுமின்-
    மல்லல் மா ஞாலத்து வாழ்வீர் ஈங்கு-என்

    என்று பண்பாட்டின் பல பண்பட்ட தன்மைகளையெல்லாம் எடுத்துரைத்து அறத்தையும் நீதியையும் அனைவரது அகங்களிலும் அமர்ந்துவிடும் வண்ணம் இலக்கியச் சுவையினை அதனூடாக ஊட்டி எமக்கு எமது மொழியில் வாய்த்திருக்கும் மிகப்பெரிய சொத்தாக இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம்  விளங்குகிறது. தமிழுக்குக் கிடைத்த சிலம்பதிகாரம் எனும் சொத்தினை கண்ணுங்கருத்துமாய் காப்பதும் அதன் பெருமகளை உண்மைகளை எடுத்து விளக்குவதும் அதனை உலகெங்கும் பரப்புவதும் ஒவ் வொரு தமிழரதும் தலையாய பொறுப்பாகும்.

    Share
  • குறளின் கதிர்களாய்…(509)

    குறளின் கதிர்களாய்…(509)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(509)

    பழுதெண்ணும் மந்திரியிற் பக்கத்துள் தெவ்வோ
    ரெழுபது கோடி தலை.

    – திருக்குறள் – 639 (அமைச்சு)

    புதுக் கவிதையில்…

    அருகில் இருந்தே
    அரசனுக்குத்
    தவறான வழிகளைக் காட்டி
    அவன் பெயருக்குப்
    பழுதுண்டாக்க எண்ணும்
    அமைச்சனை விட
    எழுபது கோடிப்
    பகைவர்
    பக்கத்தில் இருந்தாலும்,
    அவர்கள்
    நல்லவராவரே…!

    குறும்பாவில்…

    அருகிருந்து தவவறான வழிகாட்டி
    அரசர் புகழைக் கெடுக்கும் அமைச்சனைவிட
    எழுபதுகோடிப் பகைவர் மேலே…!

    மரபுக் கவிதையில்…

    அருகே யிருந்தே அல்வழியை
    அரசர் தமக்கே உரைத்தவர்தம்
    பெருமை தனையே கெடுக்கின்ற
    பேதை அமைச்சன் தனைவிடவும்
    வருத்தும் கோடி எழுபதாக
    வந்தே எதிர்க்கும் வயவரெலாம்
    உருவில் பகைவர் தானெனினும்
    உண்மை நெறியில் உயர்ந்தோரே…!

    லிமரைக்கூ…

    பழிவர அரசர் பாலே
    வழிகாட்டிப் பக்கமிருக்கும் தீயமைச்சனைவிடப் பகைவர்
    எழுபது கோடியும் மேலே…!

    கிராமிய பாணியில்…

    இருக்கணும் இருக்கணும்
    நல்லவனா இருக்கணும்,
    ராசாவுக்கு மந்திரி
    ரெம்ப நல்லவனா இருக்கணும்..

    ராசாவோட
    பக்கத்தில இருந்துக்கிட்டே
    அவரோட பேருக்குப
    பழுது வாறமாதிரி
    வழிகாட்டுற
    கேடுகெட்ட மந்திரியவெடவும்,
    எதுத்து நிக்கிற
    எழுவது கோடிப் பகயாளியும்
    எவ்வுளவோ ஒசத்திதான்..

    அதால
    இருக்கணும் இருக்கணும்
    நல்லவனா இருக்கணும்,
    ராசாவுக்கு மந்திரி
    ரெம்ப நல்லவனா இருக்கணும்…!

    Share
  • Annakannan Ideas 58 – Split & Connect Wiring

    Annakannan Ideas 58 – Split & Connect Wiring

    The Jhansi hospital fire incident due to a short circuit has claimed the lives of 10 infants. World over, one of the main reasons for fire accidents is short circuits. How to prevent such incidents in future?

    I like to restructure the wiring style; instead of lengthy wiring, we can make multiple parts & unite them with junction points every 10 meter. The whole wiring unit should be monitored at a central dashboard in the building / premise / campus. The electricity flow, load, pressure, leakage, wire quality… etc should be monitored by the system. Nearby temperature, humidity, wind flow of the wire can also be monitored.

    If we find any abnormal thing in the electric flow, any spark or more heat in any wire, the system should automatically stop electricity to the particular point & isolate it from other junctions. It will stop spreading the fire; save lives & assets. It should also alert the nearby electricity management team & building owner. If we isolate that point, remaining rooms / areas can get electricity. After solving the issue, we can allow electricity in the wire.

    This Split & Connect method can be used in every electrical equipment like fridge, TV, AC, Washing machine, hospital machines, industrial machines. If any issue in any equipment, the electricity should be stopped automatically, along with surrounding 10 meters of junction points. This will stop further damage to the equipment also. We can also use this method in electric cars & two wheelers, in case of any fire.

    What do you think?

    Share
  • குறளின் கதிர்களாய்…(508)

    குறளின் கதிர்களாய்…(508)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(508)

    அடுக்கி வரினு மழிவிலா னுற்ற
    விடுக்க ணிடுக்கண் படும்.

    – திருக்குறள் – 625 (இடுக்கண் அழியாமை)

    புதுக் கவிதையில்…

    அடுக்கடுக்காய்த் துன்பம்
    அடுத்தடுத்து வந்தபோதும்,
    அதற்காக
    அச்சம் சிறிதும்
    அடையாத ஒருவனை
    அடுத்துவந்த துன்பம்
    துன்புற்றே பட்டழியும்…!

    குறும்பாவில்…

    அடுத்தடுத்துத் துன்பம் வந்தபோதும்
    அதற்காகச் சிறிதும் கலங்காதவன் பெற்ற
    துன்பமது துன்புற்றே அழிந்திடும்…!

    மரபுக் கவிதையில்…

    அடுக்காய்த் துன்பம் வாழ்வினிலே
    அடுக்கி வந்தே அமுக்கிடினும்
    நடுங்கிப் பயத்தில் நலிவுறாமல்
    நல்ல முறையில் வாழ்கின்ற
    மிடுக்கா யுள்ள ஒருவன்தன்
    மீது மோதும் துன்பமதும்
    கெடுக்க வியலா நிலையெய்திக்
    கெட்டே அழிந்து போய்விடுமே…!

    லிமரைக்கூ…

    துன்பம் வரினும் அடுக்கி,
    அதற்குச் சிறிதும் அஞ்சிடான் முன்னே
    அத்துன்பமே வீழ்ந்தழியும் தடுக்கி…!

    கிராமிய பாணியில்…

    தொயரப்படாத தொயரப்படாத,
    தொயரப்படாத வாழ்க்கயில
    துன்பம் வந்தா தொயரப்படாத..

    அடுக்கடுக்காத் துன்பம்
    அடுத்தடுத்து வந்தாலும்,
    அதப்பாத்து
    கொஞ்சமும் பயப்படதவங்கிட்ட
    வந்த துன்பமும்
    துன்பப்பட்டே
    அழிஞ்சி ஒழிஞ்சி போவுமே..

    அதால
    தொயரப்படாத தொயரப்படாத,
    தொயரப்படாத வாழ்க்கயில
    துன்பம் வந்தா தொயரப்படாத…!

    Share
  • நந்தன் திரை விமர்சனம்

    நந்தன் திரை விமர்சனம்

    அண்ணாகண்ணன்

    நந்தன் திரைப்படத்தை அமேசான் பிரைமில் பார்த்தேன். வணங்கான்குடி என்ற ஊராட்சியின் தலைவர் பதவியை மேல்சாதித் தலைவர் ஒருவரே மீண்டும் மீண்டும் வகிக்கிறார். அந்தத் தொகுதியை ரிசர்வ் தொகுதியாக அறிவித்த பிறகு, தாழ்த்தப்பட்ட ஒருவரே அந்தப் பதவியை வகிக்க முடியும் என்ற நிலை உருவாகிறது. தன் தீவிர விசுவாசியை அந்தப் பதவியில் நிறுத்தி ஜெயிக்க வைக்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதைத் திரைப்படம் துணிவாக முன்வைக்கிறது.

    தாழ்த்தப்பட்ட மக்கள் படும் அவலங்களை, அவர்கள் சந்திக்கும் கொடுமைகளை, தனித் தனிச் சுடுகாடு இருப்பதை, அடிமைகளாக நடத்தப்படுவதை நெஞ்சை அறுக்கும் வகையில் காட்டியிருக்கிறார்கள். இன்னும் இப்படியெல்லாம் நடக்கிறதா எனக் கேட்பவர்களின் கையைப் பிடித்துக் கூட்டிச் சென்று காட்டத் தயார் என அவர் திரையில் காட்டியது, வலிமையான வாக்கியம்.

    திரைப்படம் முடிந்த பிறகு, ஊராட்சித் தலைவர்கள் பலரும் திரையில் தோன்றி, தங்கள் அனுபவத்தைச் சொல்வது, அழுத்தமாக உள்ளது. இந்தப் படத்தின் எழுத்து, இயக்கம், தயாரிப்பு ஆகிய பொறுப்புகளை ஏற்று வெளிக்கொணர்ந்த இரா.சரவணன், பெரும் பாராட்டு உரியவர்.

    காலத்துக்கும் நீங்க எங்க காலுக்குக் கீழ தான்டா என்ற ஆதிக்கவாதிகளின் குரல் ஒலிக்கும்போது, (தாழ்த்தப்பட்ட) நாயகர்களின் செருப்பின் அடிப்பாகம், திரை முழுவதும் வருமாறு காட்டியிருப்பது, இயக்குநரின் முத்திரை.

    அதிகாரத்துக்கு வா. அதுதான் அனைத்துப் பிரச்சினைகளுக்குமான தீர்வு என்று சொன்னார் அண்ணல் அம்பேத்கர். அதிகாரத்துக்கு வந்தாலும் இங்கே பல பேரால நிமிரக் கூட முடியலை.

    இது, படத்தில் இடம்பெறும் ஒரு வசனம். இதுவே படத்தின் சாரமாகவும் இருக்கிறது.

    ஆதிக்க சாதித் தலைவராக நடித்துள்ள பாலாஜி சக்திவேலும் அவரது விசுவாசியாக அம்பேத்குமார் என்ற பாத்திரத்தில் நடித்துள்ள சசிகுமாரும் வட்டார வளர்ச்சி அலுவலராக நடித்துள்ள சமுத்திரக்கனியும் தத்ரூபமாக நடித்துள்ளார்கள்.

    சசிகுமாரை நிர்வாணப்படுத்தி, அடித்து உதைத்துவிட்டு வரும் பாலாஜி சக்திவேலை அவர் அம்மா ஒரு கேள்வி கேட்கிறார். அவன் பலத்துக்கு உன்னை அடிக்கிறதுக்கு என்னேரம் ஆகும்? என்ற அவரது கேள்வி, முக்கியமானது. உடல் வலிமையை முன்னிறுத்தி, வன்முறையைத் தூண்டும் வகையில் படத்தைக் கொண்டு செல்லாமல், ஜனநாயக ரீதியில் படத்தை நகர்த்திய இயக்குநருக்குப் பாராட்டுகள். மகாத்மா காந்தி, இந்த வழிமுறையையே பின்பற்றினார்.

    அரசியல் அதிகாரத்தை வென்றெடுப்பதையே மிகப் பெரிய இலக்காகக் கட்டமைக்கிறார்கள். அதுவே எல்லாச் சிக்கல்களுக்கும் தீர்வு என்பது எத்தகைய மாயை என்பதையும் படத்தில் காட்டுகிறார்கள். அப்படியானால் எது தீர்வு என்பதை இன்னும் வெளிப்படையாக, தெளிவாக, அழுத்தமாகச் சொல்ல வேண்டும்.

    ஊரை விட்டு விரட்டப்பட்ட பிறகு, மகனுடைய கேள்விக்கு, சசிகுமாரின் மனைவி பதில் சொல்கிறார். நமக்குன்னு ஒரு வீடு இருந்திருந்தா யார் நம்மைத் துரத்தியிருக்க முடியும்? ஒரு குழி இடத்தைச் சம்பாரிக்கலேன்னா இப்படி ஊர் ஊரா ஓடிக்கிட்டே தான் இருக்கணும்.

    நிலத்துக்கு, வீட்டுக்குச் சொந்தக்காரர்களாக ஆனால், நம்மைத் துரத்த முடியாது என்பது ஒரு தெளிவான செய்தி. தாழ்த்தப்பட்டவர்கள், பொருளாதார வலிமை அடைந்து, நில உரிமை பெற வேண்டும். அத்துடன், கூட்டாக நின்று அரசியல் வலிமை பெற வேண்டும்.

    ஆனால், எதிர்த்துக் கேள்வி கேட்பவனை லாரியை ஏற்றிக் கொல்லும்போது என்ன செய்வது? சமூக மதிப்பைப் பெறுவதற்கு என்ன செய்வது? உரிமை மறுக்கப்படும்போது என்ன செய்வது? அச்சுறுத்தப்படும்போது என்ன செய்வது? ஏமாற்றப்படும்போது என்ன செய்வது? ஒரே சமுதாய மக்களிடம் பிளவு ஏற்படுத்தி, அவர்களின் வாக்கு வலிமையைப் பிரிக்கும்போது என்ன செய்வது? யாரின் பின்னால் அணி திரள்வது? எந்தக் கூட்டணியில் நிற்பது? எந்தக் கோரிக்கைகளை முன்வைப்பது? யார் நமக்கு நன்மை செய்வார்? இந்தக் கேள்விகள் ஓயப் போவதில்லை. நம் தேடலும் தான்.

    Share
  • கவிப்பேரரசு வைரமுத்து இப்படி எழுதலாமா?

    கவிப்பேரரசு வைரமுத்து இப்படி எழுதலாமா?

    அண்ணாகண்ணன்

    அண்ணாமலை படத்தில், வைரமுத்து எழுதிய ‘வந்தேன்டா பால்காரன், பசு மாட்டைப் பத்திப் பாடப் போறேன்’ என்ற பாடலை நேற்று வானொலியில் ஒலிபரப்பினார்கள்.

    புல்லு கொடுத்தா
    பாலு கொடுக்கும் உன்னால
    முடியாது தம்பி

    இது என்ன வகையான ஒப்பீடு? பசு என்பது பெண். எனவே பால் கொடுக்கிறது. ஆனால், உன்னால முடியாது தம்பி என ஆணிடம் எதற்குச் சொல்கிறார்? காளை மாடு கூடத்தான் புல்லு சாப்பிட்டுப் பால் கொடுக்காது. மனிதரிலும் பிள்ளை பெற்ற பெண், பால் கொடுக்கக் கூடியவர்தான். புல் போன்று சில கீரைகளை, ஏன் அருகல்புல் சாற்றைக் குடித்துக்கூட அவரால் பால் கொடுக்க முடியும். எதற்காக ஏடாகூடமாக ஒப்பிட்டிருக்கிறார்?

    சாணம் விழுந்தா உரம் பாரு
    எருவை எரிச்சா திருநீறு
    உனக்கு என்ன வரலாறு
    உண்மை சொன்னா தகராறு

    சாணம் மட்டுமில்லை, மனித மலமும் உரம் தான். அதைக் கொண்டு மின்சாரமே தயாரிக்கிறார்கள். மாட்டைப் புகழ்வதற்காக, மனிதனைத் தாழ்த்தலாமா? மனிதனின் எழுச்சிமிகு முன்னேற்றத்தை அவனது வரலாற்றைப் படித்தாலே புரியுமே.

    அட மீன் செத்தா கருவாடு
    நீ செத்தா வெறும்கூடு
    கண்ணதாசன் சொன்னதுங்க
    பசு இருந்தாலும் பாலாகும்
    செத்தாலும் தோலாகும்
    நான் கண்டு சொன்னதுங்க

    மீன் செத்தா கருவாடு. ஆனால், மனிதன் செத்தால் வெறும்கூடு இல்லை. மனித உடலின் ஒவ்வொரு பகுதியும் உரம் தான். மேலும் மனிதன் இறந்தால் அவனது உறுப்புகள் பலவற்றைத் தானமாக அளிக்க முடியும். மேலும் மருத்துவ ஆராய்ச்சிக்காக, அவன் உடலையே தானமாக வழங்க முடியும். கண்ணதாசன் இதைப் புரிந்துகொண்டாரா தெரியவில்லை.

    பசு இருந்தாலும் பாலாகும் செத்தாலும் தோலாகும் என்பதில் என்ன பெருமை? மிகவும் பொருள்வயமான கண்ணோட்டம் இது. யானை இருந்தாலும் இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள். ஆட்டுக்கும் இவ்வாறு பயன் இருக்கும். மனிதன் இறந்தாலும் வேறு வகையில் இத்தகைய பயன் உண்டு. அதனால் தான் அநாதைப் பிணங்களையும் திருடும் கூட்டம் இருக்கிறது.

    அண்ணல் காந்தி குடிச்சதெல்லாம்
    ஆயுள் வளர்க்கும் ஆட்டுப் பாலுங்க
    அண்ணாமலை நான் குடுப்பதெல்லாம்
    அன்பு வளர்க்கும் மாட்டுப் பாலுங்க

    ஆட்டுப்பால் ஆயுள் வளர்க்கிறது, மாட்டுப்பால் அன்பு வளர்க்கிறது என்கிறார். ஏன், ஆட்டுப்பால் அன்பு வளர்க்காதா? மாட்டுப்பால் ஆயுள் வளர்க்காதா? இதே பாடலில், அட பாதி புள்ள பொறக்குதப்பா பசும்பால தாய் பாலா நம்பி என்று வருகிறது. பச்சிளங்குழந்தைக்குத் தாய்ப்பாலே முதன்மை என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்கள். தாய்ப்பால் சுரக்காத நிலையிலேயே செறிவூட்டிய பால்மாவும் பசும்பாலும் கொடுக்கிறார்கள். மிகக் குறைந்த அளவிலேயே இது நிகழ்கிறது. குழந்தை பிறந்து 6 மாதம் முதல் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகே பசும்பால். முதல் ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பாலே ஆதாரம். எனவே பாதி குழந்தைகள், பசும்பாலை நம்பிப் பிறப்பதாகச் சொல்வதும் சரியில்லை. ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகே பசும்பாலை நாடுகிறார்கள்.

    பசுவைத் தெய்வமாக வணங்குவது, தமிழர் வழக்கம். கோமாதா என்றே அழைப்பார்கள். பசுவின் உடலில் தெய்வங்களும் தேவர்களும் வாழ்வதாகக் கருதுவோர் உண்டு. இவற்றை எல்லாம் தவிர்த்தாலும் பசு தன் கன்றுக்காகச் சுரக்கும் பாலையே மனிதனும் கறந்து குடிக்கிறான். எனவே, பசுவும் நம் தாய், நாமெல்லாம் அதன் கன்றுகளே என்றாவது சொல்லியிருக்கலாம்.

    பால்காரர் தான் வளர்க்கும் மாடுகளைப் பற்றிப் பெருமையாகச் சொல்ல, வேறு ஏதும் இல்லையா? அதன் பால், சாணம், திருநீறு, செத்த பிறகு தோல் – இந்தப் பயன்களைத் தான் வைரமுத்து மீண்டும் மீண்டும் சொல்கிறார். இது வியாபாரியின் கண்ணோட்டம். கன்றுக்காக இரங்கி, தன் இரத்தத்தைப் பாலாக்கி அருளும் பசு, வெறும் வியாபாரப் பொருளாகி நிற்கிறது. வியாபாரிகள் இப்படி எழுதலாம். கவிப்பேரரசு வைரமுத்து இப்படி எழுதலாமா?

    Share
  • எட்டுக்குள்ள உலகம் இல்லை, வைரமுத்து!

    எட்டுக்குள்ள உலகம் இல்லை, வைரமுத்து!

    அண்ணாகண்ணன்

    பாட்ஷா படத்தில் வைரமுத்து எழுதிய ரா ரா ரா ராமையா என்ற பாடலை வானொலியில் ஒலிபரப்பினார்கள். அதில், எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா, நான் புட்டுப் புட்டு வைக்கப் போறேன் பாரையா என்று தொடங்கி, இப்படி வளர்ந்தது.

    முதல் எட்டில் ஆடாதது விளையாட்டல்ல
    நீ ரெண்டாம் எட்டில் கல்லாதது கல்வியுமல்ல
    மூன்றாம் எட்டில் செய்யாதது திருமணமல்ல
    நீ நாலாம் எட்டில் பெறாதது குழந்தையுமல்ல
    ஐந்தாம் எட்டில் சேர்க்காதது செல்வமுமல்ல
    நீ ஆறாம் எட்டில் சுற்றாதது உலகமுமல்ல
    ஏழாம் எட்டில் காணாதது ஓய்வுமில்லை
    நீ எட்டாம் எட்டுக்கு மேல இருந்தா நிம்மதியில்லை

    எட்டு எட்டா மனுஷ வாழ்வை பிரிச்சுக்கோ
    நீ எந்த எட்டில் இப்ப இருக்க நெனச்சுக்கோ

    இதைக் கேட்டதும் காலத்திற்கு ஒவ்வாத ஒரு பாடல் (outdated) என்றே முதலில் தோன்றியது.

    இந்தப் பாடலை எழுதிய வைரமுத்துக்கு இப்போது 71 வயது. இசையமைத்த தேவாவுக்கு 73 வயது. பாடிய எஸ்.பி.பி. 2020இல் மறைந்தபோது அவருக்கு 74 வயது. நடித்த ரஜினிக்கு இப்போது 73 வயது. இவர்கள் அனைவரும் 64 வயது கடந்தவர்கள். ரஜினி இப்போதும் நாயகனாக நடித்து வருகிறார்.

    முதல் எட்டில் ஆடாதது விளையாட்டல்ல என்பது எவ்வளவு தவறானது என்பதை லப்பர் பந்து படமே சொல்லிவிடும்.

    ரெண்டாம் எட்டில் கல்லாதது கல்வியுமல்ல என்பது என்ன கணக்கு? 16 வயதில் பதினொன்றாம் வகுப்பே முடித்திருப்பார்கள். இதன் பிறகே கல்லூரிப் படிப்பு, மேற்படிப்பு, ஆராய்ச்சிப் படிப்பு. இவற்றைக் கருத்திலேயே கொள்ளாமல், 16 வயதிற்குள் கல்லாதது கல்வியுமல்ல என எப்படிச் சொல்ல முடியும்?

    மூன்றாம் எட்டில் செய்யாதது திருமணமல்ல என்பதும் இக்காலத்துக்குப் பொருந்தாது. இந்த 24 வயது கடந்து, இன்னும் சரியான வேலை கிடைக்காமல், வரன் கிடைக்காமல், 30, 40, 50 வயது கடந்தும் திருமணம் ஆகாமல் இருப்போர் பல இலட்சம் பேர். இந்த 24க்குப் பிறகு திருமணம் செய்தவர்கள், இன்னும் காத்திருப்பவர்கள் இந்த வரிகளைக் கேட்கும்போது எத்தகைய எரிச்சலுக்கும் வேதனைக்கும் உள்ளாவார்கள் என்பதை வைரமுத்து உணரவே இல்லையா?

    நாலாம் எட்டில் பெறாதது குழந்தையுமல்ல என்பதும் சரியில்லை. முந்தைய வரியில் பார்த்தது போல், திருமணமே தள்ளிப் போகும் போது, பிள்ளைப் பேறும் தள்ளிப் போவது இயல்பே. இதற்கு வேறு பல காரணிகளும் உண்டு. பெருகி வரும் கருவாக்க மருத்துவமனைகளும் இதை உணர்த்துகின்றன. இவை எல்லாவற்றையும் விட, 32 வயதுக்குப் பிறகும் பிள்ளை பெறாதவர்களைக் குற்ற உணர்விலும் தவிப்பிலும் இந்த வரி தள்ளும் என்பதை வைரமுத்து ஏன் உணரவில்லை?

    ஐந்தாம் எட்டில் சேர்க்காதது செல்வமுமல்ல என்பது இன்று எத்தனைப் பேருக்குப் பொருந்தும்? சரியான வேலை கிடைக்காமல், விலைவாசி பன்மடங்கு உயர்ந்துள்ள நிலையில், குடும்பத் தேவைகளை நிறைவேற்ற ஒவ்வொரு நாளும் போராடும் கோடிக்கணக்கானோரைப் பார்த்தே இதைச் சொல்கிறார். 40 வயதுக்குள் எல்லாச் செல்வங்களையும் சேர்க்க வேண்டும் என்று. இதைக் கபிலன் வைரமுத்து சொல்ல முடியுமா? வங்கிக் கடன், வங்கியல்லாத கடன் என்று வாங்கி, ஆயுள் முழுக்கக் கடனைத் துரத்தும் நண்பர்கள், இதைக் கனவிலேனும் காண முடியுமா என்பது ஐயமே.

    ஆறாம் எட்டில் சுற்றாதது உலகமுமல்ல என்பது எத்தனைப் பேருக்கு வாய்க்கும்? 48 வயதுக்குள் உலகம் சுற்ற முடியுமா? ஒருநாள் வேலைக்குச் செல்லவில்லை என்றால் அன்றைக்கு வருமானம் இருக்காது என்ற நிலையில் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமையிலும் உழைப்பவர்கள் இருக்கிறார்கள். சற்றே கூடுதலாகத் தூங்கவோ, ஓய்வெடுக்கவோ முடியாதவர்கள் இருக்கிறார்கள். பிள்ளைகளைப் படிக்க வைக்க, நல்ல நிலைக்குக் கொண்டு வர, தங்கள் ஆசைகளைத் தியாகம் செய்தவர்கள் ஏராளம். இந்நிலையில் உல்லாசமாக உலகம் சுற்ற, வைரமுத்துவாக, ரஜினியாக எல்லோரும் பிறக்க முடியாதே.

    ஏழாம் எட்டில் காணாதது ஓய்வுமில்லை என்பது யாருக்கு? 54 வயதில் ஓய்வு பெறலாம் என்பதும் கனவே. அரசுப் பணியில் இருப்பவர்களுக்கே 58 வயது, 60 வயது ஓய்வு பெறும் வயதாக இருக்கிறது. முன்கூட்டியே விருப்ப ஓய்வு பெற்றுச் சிலர் வரலாம். தனியார் துறையில் உடல் ஒத்துழைக்கும் வரை உழைக்கலாம். முறைசாராப் பணியாளர்கள் அனைவருக்கும் ஆயுளின் கடைசி நாள் வரைக்கும் ஓய்வே கிடையாது. எல்லாக் கடமைகளையும் முன்னரே முடித்தால் தானே நாம் விரும்பும் வகையில் ஓய்வு பெற முடியும்? இதற்கான வாய்ப்பு, எல்லோருக்கும் ஒரே மாதிரியாகவா கிடைக்கிறது? பிறகு, விதிகளை மட்டும் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக ஏன் வைக்க வேண்டும்? இதில் பொது விதிகளைக் கட்டமைப்பது, கோடிக் கணக்கானவருக்கு மன அழுத்தத்தையும் தோல்வி மனப்பான்மையையும் உண்டாக்கும். எழுத்தாளர்களும் கவிஞர்களும் நம் எழுத்தின் தாக்கம் எத்தகையதாக இருக்கும் எனப் பல கோணங்களில் கவனித்து எழுத வேண்டும். ஊக்கம் ஊட்ட வேண்டிய பாடல், துக்கம் ஊட்டுவது, நவீன வாழ்வின் அவலம்.

    Share
  • கருணையாய் நிற்கும் தெய்வம்  !

    கருணையாய் நிற்கும் தெய்வம்  !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண் … ஆஸ்திரேலியா

    வேலினைக் கையில் ஏந்தி
    வெற்றியைத் தந்த கந்தன்
    மூலமாய் நின்ற மூர்த்தி
    பொறியிலே வந்த கந்தன்
    கார்த்திகைப் பெண்கள் ஏந்த
    கந்தனாய் ஆன தெய்வம்
    கலியுகம் காக்க என்றும்
    கருணையாய் நிற்கும் தெய்வம்  !

    ஆணவம் அழித்த கந்தன்
    அகவிருள் அகற்றும் கந்தன்
    பேணிடும் அடியார்க் கெல்லாம்
    பேரருள் ஈயும் கந்தன்
    நாமெலாம் விரும்பி நிற்கும்
    நல்லையில் உறையும் கந்தன்
    சேவடி தொழுது நின்றால்
    தெரிசனம் தருவான் கந்தன் !

    சூரரை வதைத்த கந்தன்
    சூழ்ச்சியை அறுக்கும் கந்தன்
    மாயிருள் மாயை போக
    வந்தனன் ஒளியாய் கந்தன்
    ஆழமாம் பிறவி நோயை
    அகற்றிட மருந்தாய் நிற்கும்
    வேலுடை கந்தன் பாதம்
    பற்றுவார் வீடு காண்பார் !

    Share