Blog

  • பெரிய புராணம் எனும் பேரமுதம்  – பகுதி 19

     

    63 நாயன்மார்கள் வரலாறு – 18. சண்டேசுவர நாயனார்

     “அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக்கு அடியேன்” என்று திருத்தொண்டத் தொகையில் சுந்தரமூர்த்தி நாயனார் போற்றிப் புகழ்ந்துள்ள சண்டேசுவர நாயனார் திருச்சேய்ஞலூர் எனும் சோழ வளநாட்டில் மணியாற்றங்கரையில் உள்ள ஒரு புகழ்பெற்ற திருத்தலத்தில் அவதரித்தவர். இவ்வூரில் எச்சதத்தன் என்ற ஓர் அந்தணன் வாழ்ந்தான். பவித்திரை என்பவள் அவனுடைய இல்லத்தரசி. இவர்களுக்கு விசார சர்மா எனும் திருமகன் பிறந்தார். விசார சர்மா தமது இளம் பிராயமான ஐந்து அகவையிலேயே வேத ஆகமங்களின் உட்பொருள்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொள்ள ஆரம்பித்தார். சிவபெருமானே முழுமுதற்கடவுள் என்ற தீவிர எண்ணம், அவர் உள்ளத்தில் இருந்த சிவாகம உணர்வை வெளிப்படுத்தியது. ஏழு வயதில் அவருக்கு குல மரபின்படி உபநயனம் நடந்தது. வேதம் ஓதும் பயிற்சியில் ஈடுபட்டவருக்கு, ஆசிரியர் வேதத்தின் பொருளை கற்பிக்கும் முன்னரே இவருக்கு நன்கு விளங்கியது.

    ஒரு நாள் விசார சர்மா தன் உடன் பயிலும் வேதம் ஓதும் மாணவருடன் விளையாடச் சென்றார். அப்போது பசுங்கன்றை ஈன்ற பசு ஒன்று ஆயனை முட்டியது. சினம் கொண்ட அந்த ஆயன் அதனை தடி கொண்டு அடித்தான். அதனைக் கண்ட விசார சர்மா அவனைக் கடிந்து கொண்டு மேலும் அந்த பசுவை அடிக்கா வண்ணம் தடுத்து நிறுத்தினார். உலகில் வாழும் உயிர்களில் மேன்மையுடையது பசுக்கள். எம்பெருமானும், எம்பிராட்டியாரும் உலா வரும் விடைத்தேவரின் குலமான பசுவை கருணையே இல்லாமல் அடிக்கின்றாயே என்று கூறி, இனி தாமே பசுவை மேய்க்கச் செல்வதாகவும் கூறிவிட்டார். அதன்படியே காலையிலேயே பசுக்கூட்டங்களை அழைத்து வந்து மேயச் செய்து பின் அவற்றை நிழலில் ஓய்வு கொள்ளச் செய்து, நீர் பருக வைத்து மிக்க அன்போடு நடத்தினார். மாலை மாடுகளை அவரவர் இல்லத்தில் கொண்டு சேர்த்துவிடுவார். பசுக்களை அன்புடனும், ஆதரவுடனும் பேணிக்காத்ததால் பசுக்கள் முன்னைவிட அதிகமாகப் பால் கரந்ததும் அனைவருக்கும் பெருமகிழ்ச்சியளித்தது. விசார சர்மா உள்ளத்திலோ தானே சுரந்திருக்கும் பசுவின் மடியிலிருந்து கொட்டும் பாலை சிவபெருமானுக்கு அபிசேகம் செய்து சிவபூசை செய்ய வேண்டும் என்றும் எண்ணம் தோன்றியது. மணியாற்றங்கரையில் வெண்மணலால் சிவலிங்கம் அமைத்தவர், ஆத்தி மர மலர்களையும், தளிர்களையும் சேகரித்து, பாலினால் சிவபெருமானுக்கு திருமுழுக்காட்டி , மலர்களால் அர்ச்சித்து வழிபட்டார்.

    இதனைக் கண்ட ஒருவன் ஊருக்குச் சென்று பசுவின் சொந்தக்காரர்களிடம் விசார சர்மா பாலை வீணாக்கித் தரையில் கொட்டுவதாகப் பழி கூறினான். அவர்களும் பால் வீணாவதாக நினைத்து, விசார சர்மாவின் தந்தையான எச்சதத்தனிடம் மகனை கண்டிக்கும்படி அறிவுறுத்தினார். எச்சதத்தனும் தன் மகன் செய்த தவறுக்கு மன்னிப்பு வேண்டி தன் மகனைத் தண்டிப்பதாகக் கூறினார்.

    மறுநாள் மாடு மேய்க்கச் சென்ற விசார சர்மா அறியாதவாறு எச்சதத்தன் அவரைப் பின்தொடர்ந்தார். விசார சர்மாவும் வழக்கம் போல மணியாற்றில் நீராடி சிவலிங்கத் திருமேனிக்கு மலர்களைத் தொடுத்து மாலையாகக் கட்டி குடங்களில் பாலை கொண்டு வந்து சிவபூசையைத் தொடங்கினார். மகனின் வழிபாட்டு முறையைக் கவனித்துக் கொண்டிருந்த ஊரார் சொன்னது சரியே எனத்தோன்ற, கோபங்கொண்டு, தன் கையிலுள்ள கோலால் விசாரசருமரை அடித்தார்.  அவர் ஆத்மார்த்தமாக சிவபூசையில் ஈடுபட்டிருந்ததால், எச்சதத்தன் அடித்ததைக் கூட உணரவில்லை.  ஆனால் எச்சதத்தனோ சிவனுக்காக கறந்து வைத்திருந்த பாலை தன் காலால் எட்டி உதைத்ததால் அபிசேகப் பால் முழுவதும் சிந்தியது. அதனைக் கண்டதும் விசார சர்மாவும் தன்னிலை உணர்வு வந்து, சிவபூசைக்கு ஊறு விளைய வைத்ததால் தன்னருகில் இருந்த கழியை எடுத்து எச்சதத்தனின் கால்களை நோக்கி வீசினார்.  அந்தக் கழியானது மழுவாக மாறி எச்சதத்தனின் இரண்டு கால்களையும் வெட்டியது. எச்சத த்தன்அவ்விடத்திலேயே உயிரிழந்தார்.

    ஆனாலும் நடந்தது எதையும் அறியாமல் மீண்டும் சிவலிங்கத்தைப் பூசிப்பதில் கவனம் செலுத்தினார் விசார சர்மா. பக்தியில் கட்டுண்ட சிவபெருமான் உமையோடு விடைமீது தோன்றி, எம்மீது கொண்டிருந்த பக்தியால் தந்தையையே வெட்டிச் சாய்த்த உமக்கு இனி நானே தந்தை என்று அணைத்துத் தடவி உச்சி மோர்ந்தார். இனிமேல் நாம் உண்பனவும் உடுப்பனவும் அனைத்திற்கும் உரியவனாகும் சண்டீசன் எனும் பதத்தை அளித்து தன்னுடைய திருமுடியில் இருந்த கொன்றை மாலையை விசாரசருமருக்கு அணிவித்தார். கால்களை இழந்த எச்சதத்தன் இறையருளால் சிவலோகத்தை அடைந்தார்.

    இறைவனின் அருள்வாக்கின்படி, இன்றும் இறைவனுக்கு படைக்கப்படும் பொருட்களை சண்டேசுவரருக்கு படைத்து வழிபடுகின்றனர் பக்தர்கள். சிவபக்தியால் தந்தையையும் கொல்லத் துணிந்த சண்டேசுவரருக்கு ஈசனே தந்தையானார் என்பதும், ஒவ்வொரு சிவன் கோயிலிலும் சண்டேசுவரருக்கு தனி இடம் அளிக்கப்பட்டிருக்கின்றது.

    .

    சண்டேசுர நாயனார் புராணம் சொல்லும் கருத்து

     

    செம்மை வெண்ணீற்று ஒருமையினார்

      இரண்டு பிறப்பின் சிறப்பினார்

    மும்மைத் தழலோம்பிய நெறியார் நான்கு

      வேதம் முறை பயின்றார்

    தம்மை ஐந்து புலனும் பின்

      செல்லும் தகையார் அறுதொழிலின்

    மெய்ம்மை ஒழுக்கம் ஏழு உலகும்

      போற்றும் மறையோர் விளங்குவது.

    பண்ணின் பயனாம் நல் இசையும்

      பாலின் பயனாம் இன் சுவையும்

    கண்ணின் பயனாம் பெருகு ஒளியும்

      கருத்தின் பயனாம் எழுத்து ஐந்தும்

    விண்ணின் பயனாம் பொழி மழையும்

      வேதப் பயனாம் சைவமும் போல்

    மண்ணின் பயனாம் அப்பதியின் வளத்தின்

      பெருமை வரம்பு உடைத்தோ.

    சண்டேசுவர நாயனார் அவதரித்த சேய்ஞலூர் எனும் ஊரின் பெருமையைப் பற்றி பேசும் சேக்கிழார் பெருமான் இவ்வூரில் சிறப்புற்று விளங்கிய அந்தணர்கள் திருநீறு பூசி சிவநெறியில் நிற்கும் தன்மையர். இப்பிறப்பிலே ஞானக்கண் திறக்கப் பெற்று இருபிறப்பாளர் என்று அழைக்கப்படும் தன்மையர். முப்போதும் எரிவோம்பும் பெற்றியர். சுகேத பத்தியம், ஆசுவணீயம், தட்சிணாக்கிளி என்பனவாகிய மூன்று வேள்விகளையும் செய்பவர்கள். நான்கு வேதங்களையும் முறையாகப் பயின்றவர்கள். நாம் ஐந்து புலன்களின் வழிச்செல்கின்றோம். அவ்வூர் பெருமக்கள் தங்கள் கருத்தின் வழிப்புலன்களைச் செலுத்துவோர். ஐம்புலனும் அகத்து ஒடுக்கும் அருட்செல்வர். வேதங்களைத் தானம், ஈதல், ஏற்றல் என்ற அறுவகைத் தொழிலில் முனைவோர், சத்திய வாழ்விலும், ஒழுக்க நெறியிலும், ஏழு உலகங்களும் போற்றும் மிகச் சிறந்த அந்தணர் வாழும் ஊர் என்று சேக்கிழார் பெருமான் எண் அலங்கார வகையில் அருமையாகப் பாடியுள்ளார்.

    பண்ணின் பயனாம் நல் இசையும்

      பாலின் பயனாம் இன் சுவையும்

    கண்ணின் பயனாம் பெருகு ஒளியும்

      கருத்தின் பயனாம் எழுத்து ஐந்தும்

    விண்ணின் பயனாம் பொழி மழையும்

      வேதப் பயனாம் சைவமும் போல்

    மண்ணின் பயனாம் அப்பதியின் வளத்தின்

      பெருமை வரம்பு உடைத்தோ. 

    சோழர்கள் மரபில் முடிசூட்டிக் கொள்வதற்குரிய புனித தலங்களில் சேய்ஞலூரும் ஒன்றாகும். பண்ணின் பயன் நல்லிசை. பாலுக்குப் பயன் இன்சுவை. கண்ணுக்குப் பயன் கண்ணொளி. கற்ற நூல்களின் கருத்து ஐந்தெழுத்து. வானுக்குச் சிறப்பு மழை பொழிவது. வேதத்திற்குப் பயன் சைவம். மண்ணிற்குச் சிறப்பு சேய்ஞலூர் என்கிறார்.

    சூரபத்மன் முதலான அரக்கர்களை ஒடுக்கித் தேவர்களின் துன்பத்தை நீக்கும் பொருட்டு, கயிலை மால்வரையிலிருந்து புறப்பட்டு தெற்கு வந்து இறங்கிய முருகப்பெருமான் மண்ணியாற்றின் தென்கரையில் வந்து இறங்கிய முருகப்பெருமான் விச்வதர்மனால் ஒரு திருநகரை உண்டாக்கினார். அங்கு சிவலிங்கம் அமைத்து சிவபூசை செய்தார். அதனாலேயே இவ்வூர் சேய்ஞலூர் என்று அழைக்கப்பட்டது என்கிறார் ஈரோடு தங்க விசுவநாதன் அவர்கள்.

    திருஆப்பாடி பாலுகந்தீசுவரர் கோயிலில் எல்லா சிவாலயங்களிலும் இருப்பதைப் போல வடக்குப் பிரகாரத்தில் தெற்கு நோக்கிய சண்டேசுவரர் சந்நிதி உள்ளது. இதைத் தவிர கருவறையின் முன்னுள்ள அர்த்த மண்டபத்தில் சண்டேசுவரர் அமர்ந்து ஆத்திமர நிழலில் தனிக் கோயிலில் எழுந்தருளியுள்ளார். இக்கோயிலில் இரண்டு சண்டேசுவரர் திருவுருவங்கள் இருப்பது சிறப்பாகும்.

    திருச்சிற்றம்பலம்

     

     

    Share
  • சுயநலத்துடன் பழகிய நண்பன்!! (நீதி கதை)

    ஏ. எஸ். கோவிந்த ராஜன்

    ஒரு ஊரில் மோகன், சூர்யா என்ற இரு நெருங்கிய நண்பர்கள் இருந்தனர். மோகன் எந்தவொரு எதிர்பார்ப்பும், சுயநலமின்மையும் இல்லாதவர். ஆனால், சூர்யா கொஞ்சம் சுயநலம் உள்ளவர். மோகன் இதை அறியாமல் சூர்யாவை முழுவதுமாக நம்பினார். சூர்யா அடிக்கடி மோகனிடம் ஐம்பது, நூறு என்று கடன் வாங்குவார். ஆனால், திருப்பித் தராமல் காலம் கடத்துவார்.

    மோகனின் மனைவி, ஏன் உங்கள் நண்பர் கேட்கும் போதெல்லாம் கடன் கொடுக்கிறீர்கள். அவரோ திருப்பித் தருவதில்லை. நாம் என்ன வசதியாகவா இருக்கிறோம்? நாமும் கஷ்டத்தில் தானே இருக்கிறோம். நான் இப்படிச் சொல்வதால் உங்கள் நண்பரை குறை சொல்வதாய் நினைக்க வேண்டாம் என்பாள். மோகன் அதை கண்டுகொள்ள மாட்டார். மோகன் மனைவியும் அதற்கு மேல் எதுவும் பேச மாட்டாள்.

    வழக்கம்போல் ஒருமுறை சூர்யா, மோகனிடம் ஆயிரம் ரூபாய் கடன் கேட்டார். மோகனிடம் அவ்வளவு பணம் இல்லை. தன்னிடம் பணம் இல்லையென்று கூற முடியாமல் இருந்தார். மோகன் தன் மனைவியிடம் கூறியபோது அவள், நம்மிடம் ஆயிரம் ரூபாய் இல்லை என்று உங்கள் நண்பரிடம் கூறிவிடலாம் என்றாள்.

    உடனே மோகன், அப்படி எல்லாம் கூற முடியாது என்றான். பின் தன் நண்பனுக்காக வீட்டிலிருந்த உடைந்துபோன தங்க மோதிரம் ஒன்றை அடகு வைத்து ஆயிரம் ரூபாயை வாங்கி நண்பன் சூர்யாவிடம் கொடுத்தார். மோதிரத்தை அடகு வைக்க இருவருமே சென்றனர். இதனால் மோகனுக்கும் அவன் மனைவிக்கும் சண்டையே வந்துவிட்டது.

    பல மாதங்களாகியும் சூர்யா மோகனிடம் வாங்கிய பணத்தை திருப்பித் தரவில்லை. மோகனும் அவனிடம் கேட்கவில்லை.

    மோகனின் மனைவி, பணத்தை திருப்பி கேட்காவிட்டால் தன் தாய் வீட்டுக்குப் போய்விடுவதாக பயமுறுத்தியதால், மிகவும் பணிவாகவே தன் நண்பனிடம் பணம் பற்றிக் கேட்டார். கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டதும் சூர்யாவிற்கு கோபம் வந்துவிட்டது. ஆனால், கோபத்தை வெளிக்காட்டாமல் பணத்தை திருப்பித் தருவதாகக் கூறினார். அப்போது சூர்யாவிடம் பணம் இருந்தது. ஆனால், பணத்தை திருப்பித் தர மனம் வரவில்லை.

    ஒருநாள் இருவரும் இரவு படம் பார்த்துவிட்டு நடந்து வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் வந்த பாதையில் ஆள் நடமாட்டமே இல்லை. திடீரென ஒரு திருடன் அவர்கள் எதிரே வந்து கத்தியைக் காட்டி கையில் உள்ள பணத்தை தரும்படி கூறினான்.

    மோகனிடம் பத்து ரூபாய் மட்டுமே இருந்தது. ஆனால் சூர்யாவிடம் ஆயிரம் ரூபாய் இருந்தது. உடனே சூர்யா தனது பாக்கெட்டிலிருந்து ஆயிரம் ரூபாயை எடுத்து உனக்குக் கொடுக்க வேண்டிய ஆயிரம் ரூபாயை வாங்கிக்கொள் என்றார். உனக்குக் கொடுக்கவேண்டிய கடனை இப்போதே அடைத்துவிட்டேன் என்று கூறி அப்பணத்தை மோகனின் கைகளில் வலுக்கட்டாயமாக கொடுத்துவிட்டார். திருடனும் மோகனின் கையிலிருந்து பணத்தைப் பிடிங்கிக் கொண்டு ஓடிவிட்டான்.

    நல்ல வேலையாக நான் பிழைத்தேன். எப்படியும் திருடன் நம்மிடமிருந்து ஆயிரம் ரூபாயைப் பறித்துச் சென்றிருப்பான். நமக்கு நஷ்டமாகியிருக்கும். நல்லவேளை பணத்தை மோகனிடம் கொடுத்ததால் நமது கடனும் தீர்ந்தது என்று நிம்மதியாக இருந்தான். மோகனின் பணம்தானே திருடுப்போனது. நமக்கொன்றும் நஷ்டமில்லையே. தான் நன்றாக சிந்தித்து செயல்பட்டோம் என தன்னைத்தானே புகழ்ந்து கொண்டார், சூர்யா.

    அப்போது தான் மோகன், சூர்யாவின் மோசமான எண்ணத்தை புரிந்து கொண்டார். அச்சமயம் தன் மனைவி கூறிய சொற்கள் எல்லாம் நினைவுக்கு வந்தது. நீயெல்லாம் ஒரு நண்பனா? உன்னைப் பற்றி இப்பொழுது நன்றாக புரிந்து கொண்டேன். உன்னைப் போல் ஒரு சுயநலமான நண்பன் இனி எனக்குத் தேவை இல்லை. ஆயிரம் ரூபாயை இழந்ததன் மூலம் எனக்கு நல்ல பாடம் கிடைத்தது. இனி உன் பொய்யான நட்பு எனக்குத் தேவையில்லை என்று சொல்லி வேகமாக வீடு வந்து சேர்ந்தார், மோகன்.

    நீதி : யார் நல்லவர் என்பதை நமது கடினமான சூழ்நிலையில் தான் புரிந்துக்கொள்ள முடியும்.

    Share
  • பாரதி பாட்டை பக்குவப் படுத்துவோம்!

    பாரதி பாட்டை பக்குவப் படுத்துவோம்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    புரட்சிக்கும் பாரதி புதுமைக்கும் பாரதி
    அயர்ச்சியை நாளும் அகற்றினான் பாரதி
    துணிவுக்கும் பாரதி துடிப்புக் பாரதி
    பணிவுக்கும் பாடினான் பக்திக்கும் பாடினான்

    தமிழன்னை ஈன்ற தவப்புதல்வன் பாரதி
    தமிழதனை அமுதமாய் கண்டவன் பாரதி
    தமிழொன்றே பெருமை எனவுரைத்தான் பாரதி
    தலைநிமிர வாழப் பலவுரைத்தான் பாரதி

    பன்மொழிகள் கற்றான் பற்றினான் தமிழை
    பக்தியை மனத்தில் இருத்தினான் பாரதி
    கடவுளை நம்பினான் கண்ணியம் காத்தான்
    கடமையைச் செய்யென கட்டளை இட்டான்

    வேதம் படித்தான் புராணம் படித்தான்
    வேண்டாக் கருத்தை விலக்கியே நின்றான்
    பாதகம் கடிந்தான் பக்குவம் உரைத்தான்
    பார்க்கும் அனைத்திலும் பரம்பொருள் கண்டான்

    நாத்திகம் பேசிடும் ஆத்தீகன் பாரதி
    வேண்டா அனைத்தையும் விலக்கிடச் சொன்னான்
    கடவுளை வெறுத்திடச் சொல்லவும் இல்லை
    கள்ளம் போக்கிடல் கட்டாயம் என்றான்

    கண்ணனைப் பாடினான் சக்தியைப் பாடினான்
    கீதையை மனத்தில் இருத்தியே வாழ்ந்தான்
    பாரத தேசத்தைப் பராசக்தி என்றான்
    மண்ணினைத் தெய்வமாய் மனமதில் கொண்டான்

    பாரதி சிந்தனை பரந்தது விரிந்தது
    பாப்பாவைப் பாடுவான் பரமனைப் பாடுவான்
    ஏய்த்திடு மாந்தரை இகழ்ந்துமே பாடுவான்
    எவருக்கும் அஞ்சா பாடினான் பாரதி

    வள்ளுவன் கம்பனை மனமதில் இருத்தினான்
    இளங்கோக் கவிஞனை ஏந்தியே நின்றான்
    தெள்ளிய திருமுறை உள்ளத்தி லிருத்தினான்
    திருமால் அடியார் பாடலும் விரும்பினான்

    வேதிய குலத்தில் பிறந்தவன் பாரதி
    வேதம் நன்றாய்க் கற்றவன் பாரதி
    சாதியை எதிர்த்து சன்னதம் கொண்டு
    சமத்துவம் பேசி நின்றவன் பாரதி

    பாட்டில் புரட்சி செய்தவன் பாரதி
    ஏட்டில் புரட்சியை காட்டியே நின்றவன்
    நாட்டில் புரட்சிக்கு வித்தினை விதைத்தவன்
    நற்றமிழ் கவிஞனாய் ஒளிர்கிறான் பாரதி

    அஞ்சா நெஞ்சனாய் பாரதி வாழ்ந்தான்
    அவனிடம் சரஸ்வதி ஐக்கிய மாகினாள்
    அன்னைத் தமிழில் கவிமழை பொழிந்தான்
    அனைத்தும் தமிழின் பொக்கிஷம் ஆனது

    பாஞ்சாலி சபதம் வியந்திட வைக்கும்
    கீதையின் சிந்தனை உயர்ந்திடு படைப்பே
    குயிலின் பாட்டு பாரதி தத்துவம்
    ஆத்தி சூடியோ அவனது வித்துவம்

    பாப்பாப் பாட்டு எத்தனை அறிவுரை
    கேட்கக் கேட்க கருத்துகள் விரிந்திடும்
    பாரதி வரமாய் தமிழுக்கு வாய்த்தான்
    பாரதி பாட்டை பக்குவப் படுத்துவோம்!

    Share
  • எழுவதே இயல்பு

    எழுவதே இயல்பு

    திரிவேணி சுப்ரமணியம்
    கோயம்புத்தூர்

    எல்லாம் முடிந்ததாய்
    ஆங்காரமாய் எழும்
    மனதின் பேரிரைச்சல்
    தாளாமல் கண்களை மூடுகிறேன்.
    நெருப்புக் குழம்பில் வீழும்
    நீர்த் துளிகளாய்
    மனதில் வழிகிறது கண்ணீர்.
    அழுகையின் முடிவில்
    சுயம் எழுந்து
    முழங்குகிறது கம்பீரமாய்.
    வாழ்வதை விட வலுவாய்
    எழுவது இயல்பாகிறது!!

    Share
  • பல்லழகன் – பகுதி 11

    திவாகர்

    “ஆமாண்டா.. ஆமா.. என் பொண்டாட்டி பிரியாவைத்தான் சொல்லறேன். அவர்கிட்ட அவ ஏற்கனவே ஏமாந்து போனவ. அப்படி ஏமாந்தவ இவரைக் கோர்ட்ல இழுப்பேன்.. கேஸ் போடுவேன் இல்லேன்னா தற்கொலை பண்ணிண்டு இவரை மாட்டிவிடுவேன்னு பயமுறுத்தியவுடனே அவளை சமாதானப்படுத்த எனக்கு அவளைக் கல்யாணம் பண்ணி வெச்சாரு.. அது கூட சாதாரண ரிஜிஸ்டர் கல்யாணம்தான். நம்ம உறவுக்காரங்களைக் கூட கூப்பிடலேன்னு உனக்குத் தெரியுமே. நீ வைசாக்ல இருந்தே.. அப்போதான்  உங்க பெரியப்பா உனக்கு ஃபோன் பண்ணி இந்த மாதிரி ‘முரளி அவனே ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிண்டு வந்து என் முன்னாடி நிக்கிறாண்டா.. வேற என்ன பண்ண முடியும்.. ஆசீர்வாதம் பண்ணேண்டா’ன்னு என் முன்னாடியே பேசினவரு. சரி, நான் எதுக்காக ஒத்துண்டேன்னா சிம்பிள்.. அவர் எங்கிட்டே உண்மையைச் சொன்னார்.. அவர் சொன்னவிதம் அவருக்குச் சாதகமா சொன்னார். பிரியாவை பெரியப்பா ‘ரஞ்சிதா’ன்னு கூப்பிடுவார். அதாவது இந்த ரஞ்சிதா’ங்கிற பொண்ணுகிட்ட ஏதோ ஒருதடவை தான் மயங்கிட்டுப் போய் அவளோடு இருந்ததாகவும் ஆனா அவ அதைப் பயன்படுத்திக் கல்யாணம் செய்ய இவரை வற்புறுத்துவதாவும் அப்படி இல்லைன்னா தற்கொலை பண்ணிண்டு அதுக்குக் காரணம் இவருதான்னு எழுதிடுவேன்னு பயமுறுத்தினா.. ஆனா நான் கல்யாணம்லாம் பண்ணிக்க முடியாதுடா முரளி.. நீ எனக்கு உதவி பண்ணனும். எனக்குப் பதிலா நீ அவளுக்கு தாலி கட்டு. ரிஜிஸ்டர் பண்ணிக்கோ. ரெண்டு வருஷமானா நீ அவளை விவாகரத்து பண்ணிடலாம். நான் ரஞ்சிதாகிட்டே பேசறேன். இது சும்மா ஒரு  ஸ்டாப்-கேப்  அரேஞ்ச்மென்ட்தான். அதுவும் ரஞ்சிதாவுக்கு திருப்திகரமா இருக்கும்னுதான். இதுக்கு நான் உதவி பண்ணினா தான் சுயமா சம்பாதிச்ச சொத்துல  பாதியும் பத்து லட்சம் கேஷும் உடனடியா தர்றதா சொன்னாருடா. அப்போ எனக்கு பணம் ரொம்ப அவசரம்னதாலே அதுவும் பேருக்குதான் நான் ஹஸ்பண்ட் அத்தோட இது டெம்போரரி அர்ரேஞ்ச்மென்ட்கிறதாலே பத்து லட்ச ரூபாய் கேஷ் வாங்கிண்டு இந்த ஏற்பாட்டுக்கு ஒத்துக்கினேண்டா..”

    “அடச்சீ.. இது மானங்கெட்ட வாழ்க்கைன்னு உனக்குத் தெரியலியாடா?”

    “தெரியும்டா.. ஆனா ஒரு டிராமா ஆடற மாதிரி கேட்டது என்னை வளர்த்த மாமாடா. எனக்கும் அப்போதைய அவசர தேவை பணம்டா.. இது ஏதோ ஒரு ஸ்டாப் கேப் ஏற்பாடுதானே.. ஆனா இந்த கல்யாணத்துக்கப்பறம் ரஞ்சிதா முழுசா மாறிட்டாடா.. அவ ஒரிஜினல் பேரு பிரியா.. மாமாதான் ரஞ்சிதான்னு புதுசா மாத்தினாராம் ஆனா இனிமே தான் பிரியாமுரளின்னுதான் அவ பேருன்னு சொன்னா. ‘இனிமே உங்களோடதான் என் வாழ்க்கை. தயை செஞ்சு உங்க மாமாவோட சம்பந்தம் இனிமே நமக்குத் தேவையில்லே.. நடந்தது நடந்து போச்சு, விவாகரத்து பண்ணி மறுவிவாகம் பண்ணினா மாதிரி நான் நினைச்சுக்கறேன்.  இனிமே நான் உங்களோட உறுதியான உண்மையான மனைவி நான். இதை உங்க மாமாகிட்டே என் முடிவாச் சொல்லிடுங்க ஆனா அவர் சுலபத்துல ஒப்புக்க மாட்டார்.. அவரு ஒரு மாதிரியான  பொம்பளை பைத்தியம்.. நானே அவர் என்னை விட்டுப் போயிடணும்னு நினைச்சுதான் தற்கொலை அது இதுன்னு சொல்லி பயமுறுத்தப் பார்த்தேன். ஆனா அந்த ஆள் பயப்படலே. நானும் இனிமே ஏன் பயப்படணும்? நாம் கலியாணமான தம்பதிங்க.. நம்ம வாழ்க்கையை நாம அனுபவிப்போம்’ அப்படின்னு  சொல்லிட்டா. போகப் போக நாங்க ரெண்டு பேரும் ஒத்தரை ஒத்தர் புரிஞ்சுண்டு வாழ ஆரம்பிக்கறச்சே மாமா நடுவுல வந்தாருடா.. ‘முரளி, இப்படியெல்லாம் என்னைத் தவிக்க வெக்கலாமா? உன் வீட்டுக்கு அழைச்சுண்டு போடா.. ரஞ்சிதா மேல நான் உயிரையே வெச்சுருக்கே’ன்னு எங்கிட்டே நச்சரிக்க ஆரம்பிச்சாரு. மாமாகிட்ட நான் சொல்லிட்டேன். எப்படியோ கல்யாணம்னு முடிஞ்சுபோச்சுன்னு நானும் அவளும் இப்போதான் நிம்மதியா புருஷன் பொண்டாட்டியா வாழ ஆரம்பிச்சிருக்கோம். நீங்க தயைசெய்து தலையிடாதீங்க மாமா’ன்னு சொல்லிட்டேன்.”

    திடீரென கோம்டி குறுக்கிட்டாள்.

    “அது சரி மிஸ்டர் முரளி, உங்க மனைவி பேரு ஒரிஜினலா ரஞ்சிதா இல்லையா அப்போ?.. அவங்க சிதம்பரத்துல கீழவீதில இருந்தாங்களா..”

    “அது பழைய கதை.. என் மனைவியோட பிறந்த ஊர் சிதம்பரம். அவளோட அம்மா அங்கேதான் இருக்கா. ஆமாம். கீழவீதிதான். ஆனா என் மனைவி பேரே பிரியாதான். சர்டிஃபிகேட் எல்லாம் பிரியாதான். ஏன் மேரேஜ் சர்டிஃபிகேட் கூட பிரியா’ன்னுதான் கையெழுத்துப் போட்டா.. மேரேஜ் சமயத்துல நான் இதைப் பெரிசா கண்டுக்கலே.. மாமா பேச்சைக் கேட்டு முதல்ல இதுல நான் சம்பந்தமே இல்லாத மாதிரி இருந்தேன். ஆனா மாமா கூப்பிடற அந்த ரஞ்சிதா இல்லே இப்போ. பிரியாமுரளியா என்னோட அன்பா குடுத்தனம் பண்றா.. இப்போ அவளுக்கும் அவ குடும்பத்துக்கும் கூட எந்த சம்பந்தமுமில்லே..”

    “சரி, இப்போ பொன்னம்மா கதைக்குப் போவோமா.. அந்த சித்ரா பௌர்ணமி ராத்திரி விஷயத்துக்கு போகலாமா..?”

    கோம்டி கேட்டதும் தலையாட்டினான். அவன் நினைவு அந்த நாள் இரவுக்குப் போனது.

    சித்ரா பௌர்ணமி, முரளியின் வீடு.. இரவு ஆரம்பித்த நேரம். கையில் ஒரு பெரிய காரியருடன் உள்ளே நுழைகிறார் கந்தசாமி.

    “முரளி.. முரளிக் கண்ணா.. என்னடா நீ கூப்பிடாமயே நான் வந்திருக்கேன் அப்படின்னு பார்க்கிறயாடா? பரவாயில்லே.. நீ கூப்பிடாட்டி என்னடா.. நீ யாரு? உன்னை வளர்த்து ஆளாக்கினவனே நான்தானேடா.. வா இன்னிக்கு இங்கதான் நான் சாப்பிடப் போறேன். பொன்னம்மாவை ஹெல்ப்க்கு வரச் சொல்லி இருக்கேன். இப்போ வந்துடுவா”

    பிரியா வருகிறாள்.

    “மாமா.. இங்க ஏன் வந்தீங்க? உங்களை வரவேண்டாம்னு இவர்கிட்டே சொல்லி அனுப்பியிருந்தேனே.. தயை செய்து முதல்ல வெளியே போங்க..”

    “முரளி என்னடா இது என் ரஞ்சிதாவா இப்படியெல்லாம் பேசறா? மாமா’ன்னு கூப்பிடறா.. நான் வெளியே போகணுமாம் என்னடா இது புதுசா இருக்கு? “

    பிரியா சப்தமிடுகிறாள்.

    “இல்லே.. நான் இப்போ அந்த ரஞ்சிதா இல்லே.. அவ செத்துப் போயாச்சு.. நான் பிரியா.. பிரியாமுரளி.. நீங்க வெளியே போய்தான் ஆகணும். இல்லே போலீஸைக் கூப்பிடுவேன்.”

    சிரித்தார் கந்தசாமி.

    “இதோ பாரு ரஞ்சிதா! போலீசு.. அது இது எல்லாம் எங்கிட்டே எதுக்கு பூச்சாண்டி காமிக்கறே.. நம்ம முரளி நாமெல்லாம் இப்போ சேர்ந்து சாப்பிட்டதுக்கப்பறம் அவன் என் வீட்டுக்குப் படுக்கப் போயிடுவான். எனக்கு  மத்தியானம்தான் இன்னிக்கு சித்ரா பௌர்ணமின்னு ஞாபகம் வந்துச்சு.  ரெண்டாம் வருஷம் நம்ம சித்ரா பௌர்ணமி வைபவத்தை சிதம்பரத்துல உங்க அம்மா வீட்ல கொண்டாடினோமே.. எல்லாம் மறந்துட்டியா.. நான் அந்த இன்பமான இரவை மறக்கலே.. மறக்கவும் முடியாது. உங்கம்மாதான் எல்லா ஏற்பாடும் உங்க வீட்டு மொட்டை மாடில கச்சிதமா பண்ணினாளே.. உனக்குத் தெரியுமா உங்கம்மாவுக்கு சமீபத்துல கூட அஞ்சு லட்ச ரூபாய் பணம் கொடுத்தேன். எல்லாம் யாருக்காக? என் ரஞ்சிதாவுக்காகத்தான்.”

    பிரியா கத்தினாள்.

    “முரளி.. முதல்ல உங்க மாமாவை நீங்க வெளியே துரத்துங்க.. இதோ பாருங்க மிஸ்டர் கந்தசாமி.. எனக்கும் எங்கம்மாவுக்கும் உறவு எப்பவோ அறுந்து போச்சு. அதேமாதிரி  இனிமே எனக்கும் உங்களுக்கும் எந்த உறவுமில்லே.. நான் உங்க வளர்ப்பு முரளியோட அன்பு மனைவியா வாழ்ந்துட்டிருக்கேன்.. தயை செய்து எங்க குடும்ப வாழ்க்கையைக் கெடுக்காதீங்க..”

    “ஆமாம் மாமா.. நான் ஏற்கனவே நிறைய தடவை உங்களுக்குச் சொன்னதுதான். இப்போ பிரியா என்னோட பொண்டாட்டி. தாலி கட்டியிருக்கேன் நான். அவளைப் பாதுகாக்கவேண்டியது என் பொறுப்பு. எங்களுக்கு நீங்கதான் கலியாணம் செஞ்சு வெச்சிங்க. தயை செய்து பழசையெல்லாம் மறந்து எங்களுக்கு ஆசீர்வாதம் கொடுத்து எங்களை வாழவிடுங்க.”

    “மடையா! இவ உன் பிரியா இல்லே.. என்னோட ரஞ்சிதா.. நான் கல்யாணம் பண்ணிக்க வேண்டியவ. ஏன் அவளே என்னைக் கல்யாணம் பண்ணிக்கத்தானே சொன்னவ.. இல்லேன்னு சொல்லச் சொல்லு.. முரளி.. நீ குழந்தை.. உனக்கு ஒண்ணும் தெரியாது.. இதோ பார். இது ஒரு காண்ட்ராக்டு, இதுல நீ அந்த காண்டிராக்டர்.. உனக்குப் பணம் கொடுத்தாச்சு. உன் வேலை என்னவோ அதை செஞ்சுருக்கே.. அவ்வளவுதான்.. நீ நகரு சொல்லறேன்!” கந்தசாமி அவளருகே சென்று அவள் கன்னத்தைப் பிடித்தார். அவளோ அவரைப் பிடித்துப் பின்னால் தள்ள அவர் பின்வாங்கினார்.

    அப்போதுதான் பொன்னம்மா கதவைத் தட்டி உள்ளே நுழைந்தாள். அவள் அங்கு நடந்த விஷயங்கள் புரியாததால் அங்குள்ள டைனிங்க் டேபிளில் இருந்த கேரியரை ஒவ்வொரு கப்பாக எடுத்து வைத்துவிட்டு பிரியாவைக் கேட்டாள்.

    “பிளேட்லாம் எடுத்து வையுங்கம்மா.. எங்க வெச்சிருக்கற சொல்லு. நான் கொண்டாறேன்”, என்று சமையலறை பக்கம் சென்றாள். அவளோடு வந்த பிரியாவும் அங்கே வந்து அழுதாள். அவள் கண்ணீர் பெருக நின்ற நிலை பொன்னம்மாவுக்கு இரக்கம் தந்தது.

    “எதுக்கும்மா அழறே.. வாம்மா.. நான் உனக்கு ஹெல்ப் பண்ணறேன்.. ஐய்ய அழுவாதேம்மா..” குரலைக் கேட்டு முரளி உள்ளே வந்தான். பிரியாவிடம் அமைதியாகப் பேசினான்.

    “அழாதே பிரியா.. வா.. சாப்பிடலாம்..பொன்னம்மா பறிமாறுவா..” என்றவன் அவள் காதருகே வந்தவன் மெல்லப் பேசினான். “நான் சாப்பிட்டவுடனே அவரை அனுப்பிச்சுடறேன்.. நீ பயப்படாம வா..”

    மூவரும் டைனிங்க் டேபிளில் சாப்பிடுகையில் மெதுவாக ஆனால் சர்வ சாதாரணமாகப் பேசினார் கந்தசாமி.

    “முரளி! நாம சாப்பிட்டதும் என்ன பண்றே? பொன்னம்மாகிட்டே பாத்திரம் கொடுத்தனுப்பாதே.. அவளையும் சாப்பிடச் சொல்லிட்டு நீ என்ன பண்றேன்னா கீழே என் காரை எடுத்துண்டு நம்ம வீட்டுக்குப் போயிட்டு ஜாலியா படுத்துத் தூங்கு. நான் ராத்திரி இங்க இருக்கேன். காலைல நீ வரச்சே சீக்கிரம் வந்துட்டியானா ரெண்டு பேரும் சேர்ந்து வாக்கிங்க் போகலாம். ஏன் வேணுமின்னா ரஞ்சிதா கூட நம்ம கூட ஜாயின் பண்ணலாம். என்ன ரஞ்சிதா கண்ணு.. உனக்கும் ஓகேயா?”

    பிரியா திடீரென பாதிச் சாப்பாட்டில் எழுந்தாள். கந்தசாமியை ஒரு முறை முறைத்துவிட்டுச் சென்றாள்.

    சாப்பிட்டதும் பொன்னம்மாள் சொல்லிக்கொண்டு வெளியே கிளம்பினாள்.  கூடவே வெளியே வந்த பிரியா, பொன்னம்மாளை கையைப் பிடித்து நிறுத்தினாள்.

    “தயவு செய்து என்னை விட்டுட்டு போகாதே பொன்னம்மா. நீயும் என்னோட இங்க தங்கு பொன்னம்மா ப்ளீஸ்..”

    “ஐய்யய்யோ என்னம்மா நான் எப்படி உங்க கூட தங்கறது?.”

    “இல்லே பொன்னம்மா.. என்னை இப்போ நீதான் இந்த வெறிபிடிச்சவங்கிட்டேயிருந்து காப்பாத்தணும். தயவு செஞ்சி நீ இங்க ஒரு ராத்திரி என்னோட படுத்துக்கோ.. நாளைக்கு நான் எங்க ஊருக்குப் போயிடறேன்.”

    பொன்னம்மா காலைப் பிடித்து அழுதாள் பிரியா. அவளுக்கு ஏதோ புரிந்தது.

    “ஏம்மா ஒரு காரியம் பண்றியா?”

    “எதை நீ சொன்னாலும் கேக்கறேன். இன்னிக்கு ஒரு ராத்திரி உதவி பண்ணு பொன்னம்மா?”

    “நீ கீழ மயக்கம் போட்ட மாதிரி விழு”

    பிரியா உடனே “அம்மா’ எனச் சொல்லிக்கொண்டே கீழே விழுந்தாள். உடனே பொன்னம்மா கூவ ஆரம்பித்து விட்டாள். ‘ஐய்யோ இந்தப் பொண்ணு கீழ வியுந்துடுச்சே.. என்று கத்தினாள். உடனே முரளி வெளியே வந்தான். அவளைத் தாங்கிக் கொண்டே அவள் தலை அவன் தோள் மேல் சாய மெல்ல சாலைக்கு வந்து பொன்னம்மாவையும் அவளையும் சேர்த்து ஆட்டோவில் பக்கத்திலிருக்கும் ஆஸ்பத்திரிக்கு போகச் சொன்னான், அவளும் அப்படியே செய்ய ஆட்டோ வேகமாகப் போனவுடன் மேலே வந்தான்.

    மறுபடியும் கல்யாண் வீடு.

    முரளி சொன்ன அத்தனையும் கல்யாணும் கோம்டியும் கேட்டார்கள். கோம்டி புன்னகைத்தாள்.

    “உங்க நிலைமை எனக்குப் புரியுது மிஸ்டர் முரளி. இப்போ வரைக்கும் நீங்க சொன்னதை வெச்சுப் பார்க்கிறபோது பாசவலையில சிக்கித் தவிச்சு வேற வழியில்லாம ஒருவிதமான விசித்திர வாழ்க்கையை அனுபவிச்சிருக்கீங்க.. சரி அதுக்கப்பறம் அன்னிக்கு ராத்திரி ஏன் நீங்க யாரும் பிரியாவைப் பார்க்க ஹாஸ்பிடல் போகலே.. பிரியாவுக்கு ஒரு ஆபத்துன்னா நீங்க ஓடிப்போயிருக்கணுமே.”

    “சரிதான் ஆனா பிரியாவை தூக்கிண்டு போகறச்சேயே அவன் காதுல ஒரு வார்த்தை முனகினா.. அவ சொன்னபடி செஞ்சதினாலே நான் போகலே.”

    மறுபடியும் முரளி பழைய இடத்துக்கு தன் நினைவுகளைக் கொண்டு போனான்.

    முரளி வீட்டின் வாசலறை.

    பிரியாவைக் கஷ்டப்பட்டு தோளில் சாய்த்தபோது அவன் காதருகே மெல்ல முனகினாள்.

    “இன்னிக்கு எப்படியாவது ஹாஸ்பிடல்ல நான் படுத்துண்டு நாளைக்கு வரேன். நீங்க அந்தாளை ஏதாவது சொல்லித் துரத்தி விட்டாதான் என் மூஞ்சில மறுபடி முழிக்கமுடியும்.. அவ்வளவுதான் சொல்லிட்டேன்.”

    அவன் தலைய ஆட்டிக்கொண்டே அவளையும் பொன்னம்மாவையும் ஆட்டோவில் ஏற்றிவிட்டு வீட்டுக்குள் வந்தான். அங்கே குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்த கந்தசாமி உறுமினார்.

    “என்ன நாடகம்டா இது.. என்னாச்சு அவளுக்கு.. ம்.. நீ கூட நம்மளோட டேர்ம்ஸ் அண்ட் கண்டிஷனை மறந்துட்டியா.. நானும் போனா போறதுன்னு இவ்வளோ நாள் பொறுத்துண்டிருந்தேன்.. ஏண்டா மடையா.. என் வீக்னெஸ் எல்லாம் சொல்லித்தாண்டா உனக்குக் கல்யாணம் பண்ணேன். உனக்கு அதுக்காக பணமும் கொடுத்தேன், பத்து லட்ச ரூபாய்டா.. சுளையா கேஷாக் கொடுத்தேனேடா.. நீ என்னடான்னா பேரை மாத்திட்டேன் ஊரை மாத்திட்டேன், வாழ்க்கை சுகமா போறது.. அப்படியே விடுங்கன்னு கெஞ்சறே.. நோ நோ.. நீ இந்த பொம்பளைக்கு மயங்கிட்டியா சொல்லுடா.. எனக்குத் தெரிஞ்சாகணும்.”

    முரளி கொஞ்சம் மௌனம் சாதித்து விட்டுப் பேசினான்.

    தொடரும்

    Share
  • சிந்தித்து நாமும் தெளிவடைதல் எக்காலம்!

    சிந்தித்து நாமும் தெளிவடைதல் எக்காலம்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    ஓடும் வரை ஓட வேண்டும்
    உழைக்கும் வரை உழைக்க வேண்டும்
    வாடி நிற்போர் நிலை கண்டால்
    மனம் உவந்து வழங்க வேண்டும்

    மண் வாழப் பொருள் வேண்டும்
    மகிழ்ச்சி பொங்கப் பொருள் வேண்டும்
    கண் துஞ்சா உழைத்த பொருள்
    கை இருக்க அறம் வேண்டும்

    மற்றவர் வதையாக வந்திட்ட  எப்பொருளும்
    எத்தனை இருந்தாலும் இன்பமாய் ஆகாது
    கண்ணீரும் ரத்தமும் கலந்திட்ட  பொருளாலே
    களிப்புற்று நின்றிட்டால் கருணையே அழித்துவிடும்

    மாடிமனை கோடிபணம் வாய்ப்பார்கள் மகிழ்வார்கள்
    தேடியோடி சேர்த்ததெலாம் திசைமாறாப் போகுமுன்னர்
    வீடுதோறும் வாசற்படி விட்டகன்று போவதில்லை
    கேடுகெட்ட செயலென்றும் கிட்டவிடா மனநிறைவை

    மனம் வருந்தா உழைத்த பொருள்
    மன நிறைவை உவந் தளிக்கும்
    மனம் வருந்த குவிந்த பொருள்
    வாழ் வெல்லாம் பெருந் துயரே

    ஏழைகள் அழுதால் எல்லாமே அழிந்திடுமே
    ஏழைகள் அழுதகண்ணீர் கூர்வாளை ஒக்குமே
    ஏழைகளை வதைக்காமல் இரக்கத்தை இழக்காமல்
    வருகின்ற அத்தனையும் வளமாகத் தானிருக்கும்

    அடித்துக் குவிக்கும் பொரு ளெல்லாம்
    எடுக்க எடுக்க பெருந் துயரே
    அடுத்தவ ரழுகையில் வந்த பொருள்
    கெடுக்கு மென்பதை மனம் எடுப்போம்

    உடம்பினை விட்டு உயிர் போனால்
    தேடிய அனைத்தும்  கூட  வருமா
    செல்வாக் கிழந்து செருக் கிழந்து
    செல்லாக் காசாய் சிதை செல்வாய்

    தேடிய பொருள்கள் உனைப் பார்க்கா
    திரண்ட உறவுகள் கூட வரார்
    உந்தன் இருப்பிடம் மயானம் ஆகி
    ஒன்றுமே இல்லா நீ செல்வாய்

    சிந்தித்து நாமும் தெளிவடைதல் எக்காலம்
    தொந்தி சரியுமுன்னே தூய்மையுறல் எக்காலம்
    பொருளாலே அருளிழக்கும் போக்கினை மாற்றாமல்
    பொழுதினைப் பொருள்தேட செலவிடுதல் முறையாமோ !

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம்  – பகுதி 18

     

    63 நாயன்மார்கள் வரலாறு – 17. திருநாளைப்போவார் நாயனார்

    நாவார் புகழ்த்தில்லை யம்பலத் தானருள் பெற்றுநாளைப்

    போவா னவனாம் புறத்திருத் தொண்டன்றன் புன்புலைபோய்

    மூவா யிரவர்கை கூப்ப முனியா யவன்பதி தான்

    மாவார் பொழிறிக ழாதனூ ரென்பரிம் மண்டலத்தே

     

        நன்மைதிகழ் மேற்கானாட் டாத னூர்வாழ

            நந்தனார் புறத்தொண்டர் நாளைப் போகப்

        பொன்மலிதென் புலியூர்க்கென் றுரைப்பார் புன்கூர்ப்

            பொய்கையமைத் தடலேறு பிரிய நோக்கி

        வன்மதில்சூழ் தில்லையிறை யருளால் வாய்ந்த

            வண்டழலி னிடைமூழ்கி மறையோர் போற்ற

        மின்மலிசெஞ் சடைமுனியா யெழுந்து நாதன்

            விளங்குநடந் தொழமன்றுண் மேவி னாரே.

    சுந்தரமூர்த்தி நாயனார் திருத்தொண்ட தொகையில் செம்மையே திருநாளைப் போவாருக்கும் அடியேன் என்று போற்றும் நந்தனார், சோழமண்டலத்தில், கொள்ளிட நதியின் அருகிலுள்ள மேற்காநாட்டில், நீர்வளமும், நிலவளமும் மிக்கதாய் விளங்கிய ஆதனூர் என்ற சிற்றூரில் புலையர் குலத்தில் அவதரித்தவர்.

    பகர்ந்துலகு சீர் போற்றும்

      பழைய வளம் பதியாகும்

    திகழ்ந்த புனற் கொள்ளிடம் பொன்

      செழுமணிகள் திரைக் கரத்தால்

    முகந்து தர இரு மருங்கும்

      முளரி மலர்க் கையேற்கும்

    அகல் பணை நீர் நன்னாட்டு

      மேற்காநாட்டு ஆதனூர்

    வயல் வளம் நிறைந்த இவ்வூரில் வானுயர்ந்த மாட மாளிகைகள் நிறைந்தும், செல்வத் திருமகளின் பேராசிகளினால் கொழிக்கும் பேறு பெற்ற மக்கள் வாழும் ஊர் என்று போற்றிப் புகழ்கிறார் சேக்கிழார் பெருமான்.

    வயல் வளமும் செயல் படு

      பைந் துடவையிடை வருவளமும்

    வியலிடம் எங்கணும் நிறைய

      மிக்க பெரும் திருவினவாம்

    புயலடையும் மாடங்கள் பொலிவு

      எய்த மலியுடைத்தாய்

    அயலிடை வேறு அடி நெருங்கக்

      குடி நெருங்கி உளது அவ்வூர்.

    நந்தனார் பிறந்த ஆதனூர் எனும் அவ்வூரின் செல்வச் செழிப்பை மட்டுமல்லாமல், அவ்வூரின் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் இடங்களான புயல் தங்கும் இடங்களும் நல்கிய குடிசைகளையும், புலைப்பாடியின் அழகினையும்  காட்சிப்படுத்திச் சமுதாய வேறுபாடுகளை மன வேதனையுடன் சுட்டிக் காட்டுவதையும் காணலாம்.

    இத்தகைய சேரிப்பகுதிகளின் புலையர்களின் ஊர்த்தலைமையாக பதவியேற்று ஒப்பற்ற தலைவராக வாழ்ந்தவர். உலகியல்பின்படி இல்லாமல் சிவன்பால் அதீத பக்தி கொண்ட செம்மையான சிந்தை கொண்டவர். சிவபெருமானின் மீது சிறுவயது முதலே மாறாத பக்தி கொண்டு திகழ்ந்தவர், சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் கோயிலுக்குத் தம்மால் இயன்ற அளவு அருந்தொண்டு ஆற்றி வந்தார். இறைவனின் கோவில்களுக்கு நேரடியாகச் சென்று சிவதொண்டு புரிய முடியாதபோது தம்முடைய இயற்தொழிலொடு இணைந்த சிவதொண்டினை செய்து வந்தார். கூலி வேலை செய்தும், முரசுகளுக்கு தோல் தைத்து கொடுத்தும் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு, சிவபெருமானுடைய கோயில்களுக்கு பயன்படுத்தும் பேரிகைகளுக்காக போர்வைத்தோல், விசிவார், ஆராதனைப் பொருளான கோரோசனை போன்ற நறுமணப் பொருள்களை இறைவனுக்காகக் கொடுப்பதற்காக, நந்தனார் ஒவ்வொரு நாளும் கோயில்களை நோக்கிச் செல்வார். கோயில் வாயிலில் நின்று, தாம் கொணர்ந்த பொருட்களைக் கொடுத்துவிட்டு, அங்கு நின்றபடியே கோயிலைப் பார்த்து ஆடிப் பாடி மகிழ்வார். கோயிலையும், கோபுரத்தையும் தரிசித்து இன்பமுறுவது அவருக்கு மகிழ்ச்சி.

    நந்தனாருக்கு மயிலாடுதுறை அருகே உள்ள திருப்புன்கூரில் உள்ள சிவலோகநாதரைத் தரிசித்து, தம்மால் இயன்ற அளவு திருப்பணிகள் செய்து மகிழ வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டது. பாடல் பெற்ற தலமான திருப்புன்கூர், வைத்தீசுவரன் கோயில் என வழங்கு புள்ளிருக்கு வேளூர்க்கு 2 மைல் தொலைவில் அமைந்துள்ள திருத்தலம். புன்கு எனும் புங்க மரத்தை தலவிருட்சமாகக் கொண்ட தலம் என்பதால் இது புன்கூர் எனப் பெயர் பெற்றது. நந்தனார் இக்கோயிலை அடைந்தவுடன் அன்பின் மேலீட்டால் உள்ளம் உருகி, ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்தோட திருக்கோயிலைச் சுற்றிச் சுற்றி வலம் வந்து ஆடிப்பாடி கோயில் முன் நின்றார்.

    அப்போது சிவலோகநாதரின் முன்னால் இருந்த பெரிய நந்தி சிவலோகநாதரைப் பார்க்க முடியாமல் மறைத்துக் கொண்டு இருந்தது. நந்தனார் தாம் தேடி வந்த சிவபெருமானின் தரிசனம் கிடைக்காமல் போய்விடுமோ என்று கண் கலங்கி வேதனையுடன் நின்றார். பின்னர் வாசலிலிருந்து திருப்புன்கூர் ஈசனை நினைத்து மனமுருகிப் பாடினார். மனம் கனிந்த சிவபெருமான் நந்தனார் மீது இரக்கம் கொண்டு சற்று வலதுபுறம் விலகி இருக்குமாறு நந்திதேவருக்கு ஆணையிட்டார். இறைவனின் ஆணைப்படி நந்திதேவர் விலகியதும் நந்தனாருக்கு சிவலோகநாதரின் தரிசனம் அற்புதமாகக் கிடைத்தது. இன்றும் நந்தி இத்தலத்தில் விலகியிருப்பதைக் காணலாம். சிவலோக நாதரைப் ஆடிப் பாடி ஆனந்தக் கூத்தாடியவர், திருக்கோயிலை பன்முறை வலம் வந்தார். பின்னர் அவ்வூரைச் சுற்றி வருகையில் ஒரு பள்ளம் இருப்பதைக் கண்டார். பள்ளத்தைப் பார்த்ததும் நந்தனார் ஊற்றுக்கேற்ற பள்ளமான அவ்விடத்தைச் சீராக வெட்டிக் குளமாக்கத் தீர்மானித்தார். இரவென்றும் பகலென்றும் பாராமல் சிவநாமத்தைச் சிந்தையிலேகொண்டு தம்முடைய உடல் வலிமையால் அவ்விடத்தில் குளத்தை வெட்டி முடித்த பின்புதான் மன நிறைவோடு ஆதனூருக்கு திரும்பினார்.

    இவ்வாறு பல தலங்களுக்குச் சென்று, தொண்டு புரிந்து வந்த நந்தனாருக்குத் தில்லை சிதம்பர நடராசரைத் தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் தோன்றியது. ஆனால் மிகப்பெரிய கோயிலான அதில் வெளியில் இருந்து ஆடலரசனை தரிசிக்க முடியாது என நினைந்து வருந்தினார். ஆனாலும் இரவும், பகலுமாக தில்லை நாதரையே எண்ணி எண்ணி வேதனைப்பட்டுக் கொண்டிருந்தார். இருந்தாலும் ‘நாளைப் போவேன்’ என்று துணிவார். ஆனால் பொழுது புலர்ந்ததும், அக்கால கட்டுப்பாட்டினை நினைந்து புறப்படாமல் நின்று விடுவார். மறுபடியும் அவரது உள்ளம் உந்த, ‘நாளைக்குப் போகலாம்’ என்று ஆறுதல் அடைவார். மீண்டும் ஆவல் எழும் போதெல்லாம் “நாளைப் போவேன்” என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொள்வார். இவ்வாறு நாளைப் போவேன், நாளைப் போவேன் என்று ஒவ்வொரு நாளாகக் கழித்துக் கொண்டிருந்தார். இதனால் எல்லோரும் நந்தனாரை திருநாளைப் போவார் என்று அழைத்தனர்.

    தில்லை செல்லாவிட்டால் தம் வாழ்நாள் வீண் என்ற எண்ணம் நந்தனாருக்கு ஏற்பட, ஒருநாள் துணிவு கொண்ட நெஞ்சத்தோடு தில்லைக்குப் புறப்பட்டார். தில்லையை அடைந்தவர், கோவிலின் மதிற்சுவர் அருகே வேத ஒலியும், வேள்விப் புகையும் வருவதை உணர்ந்தார். கோவிலுக்குள் சென்று இறைவனின் திருநடனத்தைக் காண்பதற்குத் தமக்கு தகுதி இல்லையே என்று மனமுருகியவர் மதி‌லை வணங்கி, இரவும் பகலும் திருமதி‌‌லையே வலம் வந்துகொண்டிருந்தார். சோர்வு மிகுதியால் கோவிலின் அருகே படுத்து உறங்கிவிட்டார்.
    அப்போது நந்தனாரின் கனவில் தோன்றிய நடராசர், நந்தனே உன் விருப்பப்படி உமக்கு அமைக்கப்பட்ட செந்தீயில் மூழ்கி எழுந்து முப்புரிநூலோடு நம் காட்சி காண வருவாய் என அருள் செய்தார். அதே சமயத்தில் அங்குள்ள தில்லைவாழ் அந்தணர்கள் கனவிலே தோன்றி என்னை வழிபட்டு மகிழும் நந்தனார் “மதிலின் புறத்தே படுத்திருக்கிறான்” நீவிர் அவனை அழைத்து வந்து தீயிடை மூழ்கச் செய்து என் சந்நிதிக்கு அழைத்து வாருங்கள் என்று ஆணையிட்டார்.
    துயிலெழுந்த நந்தனார் இறைவனின் அருளை எண்ணி வியந்தவர் ஆனந்தக் கூத்தாடினார். மறுநாள் தில்லைவாழ் அந்தணர்கள் மகிழ்ச்சியோடு எழுந்து நடராசப் பெருமான் பணித்தபடி மதிலின் புறத்தே இருந்த நந்தனாரைக் கண்டு “அம்பலத்தரசன் ஆணையை நிறைவேற்ற நாங்கள் வந்துள்ளோம்” பெருமான் பணித்ததற்கு ஏற்ப நீங்கள் மூழ்கி எழுவதற்காக தீ மூட்டித்தருகிறோம். நீங்கள் “நெருப்பிடை மூழ்கி எழுக” என்று வேண்டிக் கொண்டனர். “இறைவனின் ஆணைப்படி நடக்கட்டும்” என்று நந்தனார் கூறினார்.

    அந்தணர்கள் திருமதிலின் தெற்கு வாயிலுக்கு புறத்தே நெருப்பை மூட்டி அதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.  மூட்டிய தீயினை வலம் வந்து நடராசப் பெருமானை சிந்தையில் நிறுத்தி தீயினுள் மூழ்கி எழுந்த நந்தனார் உருத்திராட்சமாலையும், முப்புரி நூலும் தரித்த தேகப்பொலிவுடன் திருவெண்ணீறு அணிந்து மாமுனிவர் கோலத்துடன் தீயிலிருந்து வெளிப்பட்டார். நந்தனார் இறைவன் ஆணை வழி உருவாக்கப்பட்ட செந்தீயில் மூழ்கி எழுந்தபோது நந்தனார் பிரம்மனைப்போல் எழுந்தார் என்றார் சேக்கிழார். தில்லைவாழ் அந்தணர்கள் நந்தனாரின் அருள் வடிவத்தைக் கண்டு, அகமகிழ்ந்து அவரை வாழ்த்தி வணங்கினர். வானவர் மலர் மாரி பொழிந்தனர். சிவகணங்கள் வேதம் முழங்கினர். நான் மறைகள் ஒலித்தன. தில்லைவாழ் அந்தணர்கள் உடன் சென்றார் திருநாளைப் போவார் நாயனார். தம்மை கனவில் அழைத்த கூத்த பெருமான் சந்நிதியை நோக்கிச் சென்றார். பெருமானார் நடமாடும் மன்றுள் சென்றார். யாரும் நந்தனாரைக் காணமுடியவில்லை. கூத்த பெருமானின் மலரடிகளில் உறையும் பேரின்ப வாழ்வைப் பெற்றார்.

    தில்லை வாழ் அந்தணரும் உடன்

      செல்லச் சென்று எய்தி

    கொல்லை மான் மறிக் கரத்தார்

      கோபுரத்தைத் தொழுது இறைஞ்சி

    ஒல்லை போய் உட்புகுந்தார் உலகு

      உய்ய நடம் ஆடும்

    எல்லையினைத் தலைப்பட்டார்

      யாவர் களும் கண்டிலரால்.

     

    திருநாளைப்போவார் நாயனார் புராணம் சொல்லும் கருத்து

    பிறந்த குலத்திற்கும், இறை அன்பிற்கும் தொடர்பில்லை என்று நிரூபித்தவர் திருநாளைப் போவார் நாயனார்.

    ஐயரே அம்பலவர் அருளால்

      இப் பொழுது அணைந்தோம்

    வெய்ய அழல் அமைத்து உமக்குத்

      தர வேண்டி என விளம்ப

    நையும் மனத் திருத் தொண்டர்

      நான் உய்ந்தேன் எனத் தொழுதார்

    தெய்வ மறை முனிவர்களும் தீ

      அமைத்த படி மொழிந்தார்

    ஐயர் என்பது பிறப்பு வழி வருவதல்ல. வாழ்வில் உயரிய செந்நெறியால் பெறுவது என்பதே நம் தமிழர்களின் கொள்கை. ஒரு புறம் மாட மாளிகையையும், பிறிதொருபுறம் குடிசைகளும் இருப்பதனை சமுதாய வேறுபாடுகளாகக் காட்சிப்படுத்துகிறார் சேக்கிழார் பெருமான். 12-ம் நூற்றாண்டில் வரலாற்றுத் தகவலாகப் பதிவு செய்யப்படும், ஊர் எல்லையில் வயற்காட்டினை ஒட்டி அமைந்த சேரிக்குடில்களைப் பற்றி எடுத்துக்காட்டுகிறார். மிகப்பழமையான வீட்டின் கூரைகளின் மீது கரைக் கொடிகள் படர்ந்திருக்கும். கோழிக் குஞ்சுகளும், நாய்க்குட்டிகளும் வலம் வந்து கொண்டிருக்கும். கரிய நிறமுடைய சிறுவர்கள் தங்கள் இடுப்பில் இரும்பினாலான அரைஞாணைக் கட்டிக்கொண்டுள்ளனராம்.  இத்தகைய சேரி வாழ்க்கை முறையை இன்றும் காண முடிவதும் வேதனைக்குரிய செய்தியாகும்.

    அன்றைய சமுதாய அமைப்பின் காரணமாக மிகச்சிறந்த சிவபக்தரான நந்தனார் கோயிலுக்குள் செல்ல முடியவில்லை. வெளியே நின்று அழுது தொழுது இசையால் பாடிப் பெருமான் காட்சி கிடைக்கவில்லையே என சிந்தை நொந்த சமுதாயக் கொடுமையை விளங்கச் செய்கிறார். சேக்கிழார் பெருமான் ஐயர் என்ற சொல்லாட்சியை, தாழ்த்தப்பட்டவர்களாகத் தீண்டத்தகாதவர்களாக மக்கள் நினைத்தவர்களையே ஐயரே என அழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் பிறப்புவழி ஐயர்களாகக் கருதப்பட்டவர்களைக் கொண்டே அழைக்க வந்தார். பிறப்பு வழி அந்தணர்களாக யாரையும் ஐயரே என்று விளக்கவில்லை.

    திருநாளைப்போவார், தனது சாதியின் காரணமாக சமூகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும், இறைவனின் தாமரைப் பாதங்களில் மகிழ்ந்த ஒரு சிறந்த பக்தர். கோயில்களுக்கு வெளியே எங்கு கண்டாலும் நின்று, பாடுவார், பாடுவார், ஆடுவார், எங்கும் நிறைந்திருக்கும் அந்த மகிமையில் மகிழ்ச்சி அடைவார். ஆனந்தத்தினால் ஆடல் பாடல்கள் புண்ணியம் என்பது,

    நிருத்த மெந்தைமுன் யாவர் நிகழ்த்தினும்

     விரித்த பானு வயுதம் விரிகதிர் 

    பொருந்து தேரிற் புலவ ரரம்பையர்  

    கருத்தி னாடகங் காண்பர் சிவபுரி.

    நாயன்மார்களில் பண்ணார்ந்த இன்தமிழால் இசைத்தொண்டு செய்தவர்கள், திருநாளைப்போவார், ஆனாயர், திருநீலகண்ட யாழ்ப்பாணர், பரமனையே பாடுவார் ஆகிய நால்வர் ஆவர்.

    திருச்சிற்றம்பலம்.

     

     

     

    Share
  • சேலத்தில் தீபத் தூண்

    சேலத்தில் தீபத் தூண்

    அண்ணாகண்ணன்

    சேலம், கரிய பெருமாள் மலையின் உச்சியில் உள்ள கரிய பெருமாள் கோவிலுக்கு இன்று சென்றேன். பெருமாள் சந்நதிக்கு நேர் எதிரே தீபத் தூண் இருந்தது. அதன் உச்சியில் தீபம் ஏற்றுவதற்கான கிண்ணம் பொருத்தப்பட்டிருந்தது. தீபம் ஏற்ற, பக்கவாட்டில் ஏணிப் படியும் இருந்தது. நெடுங்காலமாகத் தீபம் ஏற்றியதன் அடையாளமாக, எண்ணெய்க் கறைகளும் இருந்தன.

    திருப்பரங்குன்றத்தில் இருப்பது எல்லைக்கல் என்போர், இதைக் கவனிக்க வேண்டும். அதே போன்ற தூண், அதே வடிவத்தில், உயரத்தில் பல இடங்களில் அமைந்துள்ளது. இந்தத் தூண், மலை உச்சியில் ஒரே இடத்தில் தான் அமைந்துள்ளது. எல்லை நெடுகிலும் இந்தக் கல்லை நடவில்லை. முக்கியமாக, சேலத்தில் அது தீபத் தூணாகவே பயன்பாட்டில் இருக்கிறது. திக்கெட்டும் காண, திரியில் தீபம் ஏற்றுங்கள். வரலாற்றைத் திரிக்காதீர்கள்.

    Share
  • தனிச்சிறப்பு..!! (நீதி கதை)

    ஏ. எஸ். கோவிந்த ராஜன்

    ஒரு அடர்ந்த காட்டில் நிறைய பழம், செடி, கொடி வகைகள் இருந்தன. அக்காட்டில் வளரும் அனைத்து பழங்களும் வருடத்திற்கு ஒருமுறை தனது நண்பர்களை சந்திப்பதற்காக மாநாடு ஒன்றை ஏற்படுத்திக்கொள்வதை வழக்கமாக வைத்திருந்தன.

    அந்த வகையில் அனைத்து பழங்களும் சேர்ந்து அந்த ஆண்டின் கடைசியில் மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்தன. தன் நண்பர்களை சந்திப்பதற்கு ஆர்வமாக அனைத்து பழங்களும் தயாராகிச் சென்றன.

    பின் அக்கூட்டத்தில் தலைமையேற்று பேசிய வாழைப்பழம், உலகில் உள்ள பழங்களில் எந்தப் பழம் அதிகச் சுவையுடையது மற்றும் எது சிறப்புடையது? என்ற கேள்வியைக் கேட்டவாறே தன் உரையை முடித்துக் கொண்டு அனைவரையும் மகிழ்ச்சியாக இருக்கும்படி கூறியது.

    பின்னர் ஆப்பிள், தன்னை உட்கொள்பவர்களுக்கு நோய் வராமல் தடுக்கும் எதிர்ப்புத்திறன் என்னிடம் உள்ளது என்று கூறியது. உடனே, மாதுளம்பழம் தன்னை உட்கொள்பவர்களுக்கு தோல் புற்றுநோய் வளர்ச்சியைத் தடுக்கும் திறனும், குடற்புண் வருவதை தடுக்கும் சக்தியும் உள்ளது என தன்னைத்தானே பெருமைப்படுத்தி பேசியது.

    பின்னர், கொய்யாப்பழம் தன்னை சாப்பிடுபவர்களுக்கு முகத்திற்கு பொலிவையும், அழகையும் தருவேன் எனவும், மேலும் மிக எளிதில் மது போதை பழக்கத்தில் இருந்து விடுதலை பெற முடியும் என்றது. பிறகு, அன்னாசிப்பழம் தன்னை உட்கொண்டால் ஜீரண சக்தியை நன்கு தூண்டக்கூடிய திறன் என்னிடமே உள்ளது என்றது. இவ்வாறு அனைத்து பழங்களும் தன்னைத்தானே உயர்த்தி பேசியது.

    ஆனால், திராட்சைப்பழம் மட்டும் எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தது. அனைத்துப் பழங்களும் திராட்சைப் பழத்தை வியப்பாக பார்த்துக் கொண்டிருந்தது. திராட்சைப்பழம் ஏதாவது பேசும் என்று எதிர்பார்த்தன. ஆனால், திராட்சைப்பழமோ எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தது.

    திராட்சை அமைதியாக இருந்ததைப் பார்த்த மற்ற பழங்கள் அதைப் பார்த்து இழிவாக நினைத்து சிரித்தது. அச்சமயம் பலாப்பழம் ஒன்று உருண்டு வந்து திராட்சையின் அருகில் நின்றது.

    பலாப்பழம், திராட்சைப் பழத்தை பார்த்து அன்புடன் திராட்சையே! நீ ஏன் மௌனமாக இருக்கிறாய்? என்று கேட்டது. ஆனால், திராட்சை எதுவும் பேசாமலே இருந்தது.

    திராட்சையே உன்னைப் பற்றி எனக்கு தெரியும். உலகில் உள்ள அனைத்து பழங்களிலும் சிறப்புப்பெற்றவன், நன்மையைச் செய்பவன், நலம் அளிப்பவன், சுவை நிரம்பியவன் நீதான் என்று! ஆனால், அதைத்தவிர ஒரு சிறப்புத் தகுதி உன்னிடம் உண்டு. அதை நீயே கூற வேண்டும். அப்போது தான் மற்றப் பழங்களுக்கும் உன் தகுதி பற்றி தெரியும் என்று கூறியது.

    பின்னர், திராட்சைப்பழம் அமைதியாக மற்ற பழங்களைப் பார்த்து, நீங்கள் எல்லோருமே தனித்தனியாகவே வருகிறீர்கள். தனித்தனியாகவே விற்பனை செய்யப்படுகிறீர்கள். ஆனால், நாங்கள் அப்படியல்ல. நாங்களோ, ஒரு கூட்டமாகவும், ஒற்றுமையாகவும், கொத்தாகவும் வளர்கிறோம். நாங்கள் ஒருவர் வளர்வதற்கு இடம் தருகிறோம். விட்டுக்கொடுக்கும் எண்ணத்துடன் வாழ்கிறோம். விற்பனைக்குப் போகும்போதும் நாங்கள் ஒன்றாகவே செல்கிறோம். தனியாக நாங்கள் விலை போவதில்லை.

    எங்களைச் அரைத்து சாறாக்கி குடிக்கும்போது ஒன்றாகவே அழிந்து போகிறோம். வாழும்போதும், வளரும்போதும், ஏன் மரணத்திலும் கூட நாங்கள் இணைபிரியாமல் இருக்கிறோம் என்று கூறியது. அதனால்தான் நாங்கள் சிறந்தவர்கள் என்ற அங்கீகாரத்தை அடைந்திருக்கிறோம். வேறு எதுவுமில்லை என்றது.

    அப்பொழுது தான் மற்ற பழங்கள் திராட்சையை பற்றி நன்கு தெரிந்துக்கொண்டது. தாங்கள் சிரித்ததற்கு திராட்சையிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டது.

    நீதி : ஒற்றுமையாக இருப்பதே தனிச்சிறப்பு. மற்றவர்களை காட்டிலும் நாம் தனிச்சிறப்புடன் இருக்க வேண்டுமானால் திராட்சையை போல் ஒன்றுப்பட்டு இருக்க வேண்டும்.

    Share
  • தெள்ளத் தெளிந்தால் தெரிவான் இறைவன் !

    தெள்ளத் தெளிந்தால் தெரிவான் இறைவன் !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    மாரியும் தெய்வம் மேரியும் தெய்வம்
    அரியும் தெய்வம் அரனும் தெய்வம்
    அல்லாவும் தெய்வம் அனைத்தும் தெய்வம்
    என்று எண்ணினால் எங்கும் நிறைவே

    அன்பே உருவாய் ஆனதே தெய்வம்
    அன்பே சிவமென அறிந்தோர் அறிவார்
    அன்பை விட்டால் தெய்வம் இல்லை
    அன்பே தெய்வம் அன்பே அனைத்தும்

    சமயம் பேசி சன்னதம் கொள்ளும்
    மனித மனங்கள் மாறிட வேண்டும்
    உருவம் இல்லா இறையை மக்கள்
    உருவம் கொடுத்து உணர்வை இழக்கிறார்

    ஆதியும் அந்தமும் இல்லா இறைவன்
    சோதியாய் சுடராய் இருப்பவன் இறைவன்
    பேதமே இல்லா பெரியவன் இறைவன்
    பெரும் பொருளாகியே இருக்கிறான் இறைவன்

    நீதியே இறைவன் நேர்மையே இறைவன்
    சாதிக்குள் இறைவன் சங்கமம் ஆகான்
    பேதிக்கும் வேளை பேணிட வருவான்
    பின்னம் இலாதான் பேரின்ப பெட்டகம்

    அழுதால் வருவான் தொழுதால் வருவான்
    அழுக்குடன் இருந்தால் அகிற்றிட வருவான்
    தன்னலம் கருதா உள்ளம் தெரிந்து
    தானே அவர்க்கு வழித்துணை யாவான்

    மண்ணிலும் இருப்பான் விண்ணிலும் இருப்பான்
    மரஞ்செடி கொடி அனைத்தும் இருப்பான்
    தேனாய் இருப்பான் சுவையாய் இருப்பான்
    தெரிவார் கண்ணுக்குத் தரிசனம் ஆவான்

    உயிராய் இருப்பான் உணர்வாய் இருப்பான்
    உள்ளக் கமலம் அமர்வான் இறைவன்
    கள்ளம் அகன்றால் மெள்ள வருவான்
    தெள்ளத் தெளிந்தால் தெரிவான் இறைவன் !

    Share
  • உயர்வுடைக் கார்த்திகைத் தீபத் திருநாள்

    உயர்வுடைக் கார்த்திகைத் தீபத் திருநாள்

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    கார்த்திகை தீபம் கதைகளைக் கொண்டது
    கதைகளைக் கதையாய் எடுத்திடல் வேண்டாம்
    கற்கண்டை மருந்தில் சேர்ப்பது போன்று
    தத்துவம் விளக்கிடக் கதைகளைப் பகிர்ந்தார்

    விளக்கு என்றால் விளக்கம் தருவது
    வெளிச்சம் வந்தால் விளங்கிடும் அனைத்தும்
    விளக்கை ஏற்றுதல் வெற்றியைக் கொடுக்கும்
    விளக்கை ஏற்றுவார் அனைத்தையும் காணுவார்

    கல்வியும் வேண்டும் செல்வமும் வேண்டும்
    இரண்டும் இணைந்தால் இன்பமே ஆகும்
    இணையும் வேளை இறுமாப்பு வந்தால்
    இரண்டின் பயனும் இல்லாமற் போகும்

    சரஸ்வதி நாயகன் பிரம்மா ஆவான்
    லக்குமி நாயகன் திருமால் ஆவான்
    கல்வியை செல்வத்தை வழங்கும் வல்லமை
    பெற்றவர் இருவர் மோதினார் முறுகினார்

    ஆணவம் கொண்ட  மாலும் அயனும்
    ஆண்டவன் தாமென நின்றிடு வேளை
    அவர்களின் நடுவே பேரொளி ஒன்று
    ஜோதிப் பிளம்பாய் ஜொலித்துமே நின்றது

    ஜோதியைக் கண்டவர் பீதியில் நின்றனர்
    அசரீரி ஒலித்தது அடிமுடி காணுங்கள்
    கண்டால் கடவுள் கண்டவர் வென்றார்
    இருவரும் தேடினார் எதையுமே காணா

    ஆணவம் அவர்களை அடிதொழ வைத்தது
    ஒளி வடிவாக இறைவன் தோன்றினார்
    ஒளி வடிவாக வந்த நன்நாள்தான்
    உயர்வுடைக்  கார்த்திகைத் தீபத் திருநாள்

    கந்தனின் தோற்றமும் ஒளியுடன் இணைந்தது
    கனற் பொறியாகியே கந்தனும் தோன்றினான்
    எந்தையாம் இறைவன் ஜோதியாய் எழுந்தார்
    எழிலுடன் குமரனும் ஒளியென ஜொலித்தார்

    கந்தனின் கோவிலில்  கார்த்திகை தீபம்
    விஷ்ணு கோவிலில் விஷ்ணுக்குத் தீபம்
    சிவனார் கோவில் ஏனைய கோவில்
    அனைத்தும் ஒளிர்வது சர்வாலய  தீபம்

    வீட்டிலும் தீபம் வெளியிலும் தீபம்
    பார்க்கும் இடமெலாம் பரந்திடும் ஒளியே
    ஒளியெனும் வெள்ளம் பரவியே நிற்கும்
    உள்ளம் இறையின் எண்ணமே பரவும்

    ஒளியாய் இறையைக் கண்டிடும் தத்துவம்
    உயவுடைத் தத்துவம் உண்மைத் தத்துவம்
    ஆதலால் அனைவரும் அனுதினம் தீபத்தை
    வீட்டிலே ஏற்றி போற்றியே நிற்பார்

    விளக்கை ஏற்றியே அனைத்தும் தொடங்குவோம்
    விளக்கு ஏற்றினால் மங்கலம் என்போம்
    மங்கலம் வழங்கிடும் வரமே விளக்கு
    விளக்கின் ஒளியில் தெரிவான் இறைவன்

    ஒளிவளர் விளக்கு இறைவனே ஆவார்
    உயர்வுடை தத்துவம் இறைவனே ஆவார்
    கார்த்திகை விளக்கு கசடினை அகற்றும்
    கடவுளை நினைந்து ஏற்றுவோம் விளக்கை !

    Share
  • பல்லழகன் – பகுதி 10

    திவாகர்

     

    “சார்.. நீங்க ‘பை’ன்னு சொன்னா போதும்.. எதுக்கு சிரிக்கணும்.. வாயை மூடிண்டு எப்படிப் பேசறதுங்கிறதை நீங்க பழகணும்..”

     

    ஸீரியஸாகப் பேசிவிட்டு அவள் நடந்து போகிறாள். அவன் தன்னைத் தானேக் கேட்டுக்கொள்கிறான். ‘வாயை மூடிண்டு பேசணுமா..? ம்ம்.. என் பல்லைக் கண்டா நிறைய பேருக்குப் பொறாமை’.. என்று சமாதானம் சொல்லிக்கொண்டே வண்டியைக் கிளப்புகிறான்.

     

    அதே சமயம் அனாதை ஆசிரமத்திலிருந்து சுந்தர் கிளம்பிச் செல்வதைப் பார்த்த ரவி ஆசிரமத்துக்குள் நுழைகிறான். அங்கே அந்த வயதானவர் இவனைப் பார்த்து உள்ளேக் கூப்பிட்டு உட்கார வைக்கிறார். ரவி சுற்றுமுற்றும் பார்க்கிறான். பிறகு அவரிடம் சாதாரணமாகப் பேசுகிறான்.

     

    ‘நான் இங்க டொனேஷன் விஷயமா விசாரிக்க வந்தேன். இதெல்லாம் இங்க யார் பாக்கறது? நீங்கதானா.. இல்லே வேற யாராவது டீல் பண்ணுவாங்களா.. பணமெல்லாம் கொடுத்தா இந்தக் குழந்தைகளுக்கு எப்படி செலவழியும்னு அதாவது சரியா அவங்களுக்குப் போகுமா.. ஏதாவது அக்கௌன்ட் கொடுப்பீங்களா?’

     

    ‘ஐய்யோ.. என்ன இப்படி கேட்டுட்டிங்க.. நாங்க இப்படி டொனேஷன் பணத்தைச் சரியா செலவழிக்கறதுக்கு ரொம்ப நியாயமா நடவடிக்கை எடுப்போம் சார்.. கணக்கு வழக்கெல்லாம் ரொம்ப ஒழுங்கா இருக்கும். எங்க ஆசிரமத்துக்கு எல்லா இடத்துலயும் நல்ல மரியாதை இருக்கு.’

     

    ‘அப்படியா..’ ரவி அவரைப் பார்த்து கேட்டவன்.. நீங்களே இதையெல்லாம் கவனிக்கிறீங்களா?’

     

    ‘இல்லே சார்.. இதுக்கெல்லாம் ஒரு ஆள் போட்டுருக்கோம்.. அவர் பேரு சுந்தர். இப்போதான் வெளியே போனார்.. கொஞ்சம் முன்னாடி வந்திருந்தீங்கன்ன அவரைப் பார்த்திருக்கலாம்.. கொஞ்சம் இருங்க.. அவருக்கு ஃபோன் பண்றேன்.. அவர் உடனே வந்துடுவாரு.. இப்பதானே போனாரு.. ‘ என்று கைபேசியை எடுத்தார்.

     

    ரவி அமைதிப்படுத்தினான். ‘இருக்கட்டும் சார்.. நான் விசாரிக்கதான் வந்தேன். நான் டொனேஷன் வாங்கித் தர்ரேன். ஆனா அது சரியா போகறதா தெரியணும் இல்லையா.. இந்த ஆசிரமம் பத்திச் சொல்லுங்க..’

     

    ‘இது ஆந்திரக்காரங்க குடும்பத்தோட தயவுல போகறது சார். இப்போ பதினைஞ்சு சின்னப் பொண்ணுங்க இருக்காங்க.. அவங்க அத்தனை பேரும் அனாதைப் பசங்கதான். வேற புதுசா ஒண்ணுமில்லேங்க..

     

    இப்போ வெளியே போனவர்தாம் எல்லாம் பாத்துக்கிறாரா?

     

    ;இல்லே சார்.. சொன்னேனே.. அவர் பேர் சுந்தர், இங்கே அக்கௌன்ட் ஒண்ணுதான் பாக்கறார். மிச்ச வேலை எல்லாம் நான் பாத்துக்கறேன். உங்களுக்கு என்ன வேணும்? என்ன பதில் வேணும்னாலும் நான் சொல்லறேன் சார்.’

     

    ‘அதுக்கு முன்னாடி உங்க இன்மேட்ஸ்லாம் அதாவது இங்க உள்ளவங்களை நான் பாக்கலாமா?’

     

    அதே நாள் மாலை நேரம் கல்யாணியின் வீடு.

    முரளி வந்திருக்கிறான். அதே சமயம் கோம்டியும் உள்ளே வருகிறாள்.  ஒருவருக்கொருவரை அறிமுகம் செய்து வைக்கிறான் கல்யாண். கோம்டி அவனைக் கூர்ந்து பார்க்கிறாள்.

     

    “உங்களை இந்த வீட்டு வாசல்ல ஒரு தடவை பார்த்திருக்கேன். இப்ப ஞாபகம் வரீங்க.. ஒரு மாசம் முன்னாடி ஆட்டோ டிரைவர்கிட்டே சண்டை போட்டீங்க.. அவன் திட்ட நீங்க திருப்பித் திட்ட கொஞ்சம் கும்பல் வந்ததும் ரெண்டு பேரும் சண்டை போடாம போயிட்டீங்க.. ரைட்டா?”

     

    “நல்ல ஞாபகசக்தி உங்களுக்கு.. ஆமாம்.. கும்பல் கூடாம இருந்ததுன்னா நாலு சாத்து சாத்தியிருப்பேன்.”

     

    “முரளி இங்கே டெய்லி வருவாரோ?” கல்யாணைப் பார்த்துக் கேட்டாள்.

     

    முரளியே சொன்னான். “டெய்லி இல்லைன்னாலும் ரெண்டு நாளைக்கு ஒருதடவையாவது ராத்திரி நேரத்துல ஒரு ரெண்டு மணி நேரம் மாமா கூட இருந்துட்டு சாப்பிட்டு போவேன்”.

     

    “சாப்பாடுன்னா எடுப்புச் சாப்பாடுதான் இல்லையா.. பொன்னம்மாவோட டெய்லி வேலை இது. சமயத்துல பொன்னம்மா கூட சமைச்சுப் போடுவா இல்லையா?”

     

    “அதுவும் சரிதான்.”

     

    “உங்களுக்குக் கல்யாணம் ஆகிடுச்சு இல்லையா.. உங்க மனைவியோட வருவீங்களா இல்ல தனியா வருவீங்களா மிஸ்டர் முரளி..”

     

    முரளி ஆச்சரியமாகப் பார்த்தான் அவளை.

    “என்னங்க நீங்க வந்ததும் வராததுமா கோர்ட்ல வக்கீல் மாதிரி கேள்வி கேக்கறீங்க?”

     

    “ஸாரி,, உங்களுக்குத் தெரியாதா? மிஸ்டர் கல்யாண் என்னை அவரோட பிரைவேட் இன்வெஸ்டிகேடிவ் ஏஜெண்டா நியமிச்சிருக்கார்.. ஏன் கல்யாண்.. சொல்லலியா இன்னும் மிஸ்டர் முரளிகிட்டே?”

     

    “யெஸ் முரளி.. போலீஸ் ரொம்ப மெதுவா இன்வெஸ்டிகேட் பண்ணுது. கொஞ்சம் நாமும் நம்மளால முடிஞ்ச அளவு உதவி பண்ணலாமேன்னு பிரைவேட் இன்வெஸ்டிகேடிவ் ஏஜெண்ட் அதுவும் போலீஸ் ஒப்புதலோடதான் ஏற்பாடு பண்ணியிருக்கேன். இவங்க எதிர் வீட்டிலேயே இருந்து செய்யறதுன்னாலே எனக்கும் கொஞ்சம் சௌகரியமா இருக்கு.”

     

    “ஓ.. அதுவும் ஒருவிதத்துல நல்லதுதான். சீக்கிரம் இந்த கேஸ் முடியணும்.. ரொம்பவும் எதிர்பார்க்காத துரதிருஷ்ட நிகழ்ச்சி இது. நீங்க கேட்காமயே ஒரு விஷயம் சொல்லறேன். எனக்கு ஆறு வயசு.. இதோ இவனுக்கு மூணு வயசு. இவனோட அப்பாவும் அம்மாவும் ஒரே நாள்ல அசம்பாவிதமா இறந்துட்டாங்க.. எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. எங்கம்மா  ஒரே கதறல். ரொம்ப நாள் அழுதாங்க.. இவனைக் காமிச்சு ‘அடேய் முரளி இனிமே வாழ்க்கைல இவனைப் பாத்துக்கவேண்டிய பொறுப்பு வந்துடுத்துடா.. அவனை நல்லா பார்த்துக்கோடா’ன்னு சொல்லிச் சொல்லி அழுதாங்க. இவனோட பெரியப்பாவை நான் அப்போலேர்ந்தே மாமா’ன்னு கூப்பிட்டுப் பழக்கம். என் சின்ன சித்தி பிள்ளை சுந்தரும் அப்பப்ப எங்கள்ட்ட ரொம்ப நெருக்கமா இருப்பான். மாமாவும் ரொம்ப ஃபீல் ஆயி யார்கிட்டயும் பேசாம ரொம்ப நாள் அப்படியே இருந்தாரு. இவனைப் பார்த்தா அவருக்கும் அழுகை வரும். இப்படி எமோஷனலாவே இத்தனை வருஷமா நாங்க வளர்ந்தோம். இப்படியே போகிற வாழ்க்கைல இப்போ அந்த அன்பு மாமாவும் போயிட்டாருன்னா எங்களுக்கு எப்படி இருக்கும்? அதுவும் இந்த மாதிரி சாவு ஏன் வரணும்? புரியலே..”

     

    “புரியுது” கோம்டி அவனைப் பார்த்தாள். எந்த உணர்ச்சியும் காட்டவில்லை அவள். “இவர் பெரியப்பாவோட ரொம்ப நெருக்கமா நீங்க இருந்தது அவரோட தனிமையான வாழ்க்கைல அவருக்கு அதிர்ஷ்டம் இல்லையா..?”

     

    “அதுவும் உண்மைதான்” முரளி ஒப்புக்கொண்டான்.

     

    “அதேபோல உங்களுக்கும் ரொம்ப ஆதரவா எப்பவுமே இருந்தார் இல்லையா”

     

    “ரொம்ப கரெக்ட்ங்க”.

     

    “உங்க வீட்டுக்கு சமீபத்துல அவர் எப்போ வந்தார் மிஸ்டர் முரளி.”

     

    “இல்லங்க.. அவர் யார் வீட்டுக்கும் போகமாட்டார். என்னவோ தெரியலே.. அவர் அப்படியே பழகிட்டார்”.

     

    “நீங்க ரொம்ப நெருக்கங்கிறச்சே நீங்க எப்பவாவது ‘வாங்க மாமா என் வீட்டுக்கு’ன்னு அழைச்சிருக்கீங்களா?”

     

    முரளி விழித்தான். என்ன சொல்வதென்பது தெரியவில்லை என்பது போல கல்யாணைப் பார்த்தான். கல்யாண் உதவிக்கு வந்தான்.

     

    “அது வேற ஒண்ணும் இல்லே கோம்டி.. அவனுக்கு ரொம்ப மரியாதை பெரியப்பா மேலே. அவருக்குத் தெரியும் எப்ப வரணும்னு விட்டிருக்கலாம்! அப்படித்தானே முரளி?”

     

    “ஆமாண்டா.. அதுதான் சரியான பதில் கூட. நான் அவரை எதிர்த்துக் கூட பேசினதில்லே. அவர் சொல்லற வேலையெல்லாம் செய்யறது.. அவ்வளவுதான்”.

     

    முரளியை மறுபடியும் முதலில் கேட்ட கேள்வியை ஞாபகப்படுத்தினாள். “நான் முதல்ல ஒரு கேள்வி கேட்டேனே.. நீங்க எப்பவாவது உங்க மனைவியையும் கூட அழைத்து வருவதுண்டா? அல்மோஸ்ட் டெய்லி வரீங்க இல்லையா.. உங்க மனைவி எப்பவாவதும் ஒரு தடவையாவது கூட வந்தாங்களா..  ஜஸ்ட் கேக்கறேன்.. உங்களுக்கு இஷ்டமில்லைன்னா பதில் சொல்லவேணாம்.”

     

    “இல்லை.. மனைவி வரமாட்டா. முதல் காரணம் நான் ஆஃபீஸ்லேர்ந்து போகற வழியிலே கிண்டி இருக்கறதுனாலே நேரா இங்கதான் வருவேன். ரெண்டாவது காரணம் மூணு வருஷமாவே.. இப்படி பெரியப்பாவை பாக்கறதுங்கிறது அப்படியே பழகிப் போச்சு.. ஜஸ்ட் லைக் தட்.”

     

    “இல்லை.. நான் ஏன் கேட்டேன்னா ஒவ்வொரு தடவை பெரியப்பாவைப் பாக்க வரச்சே நீங்க எடுப்புச் சாப்பாடை பங்கு போட்டு சாப்பிடுவீங்க இல்லையா.. வீட்டுக்குப் போனா மனைவியும் எதிர்பார்ப்பாங்க உங்களோடு சாப்பிடணும்னு.. ஆனா நீங்க சாப்பிடறதில்லே.. இல்லையா.. உங்க மனைவிக்கு அதுவும் ‘ஒரு வருஷம் புதுசு’ மனைவிக்கு வருத்தம் இருக்குமே..”

     

    “என்னங்க நீங்க என் பெர்சனல் விஷயம்லாம் கேட்டுண்டு.. இதுக்கெல்லாம் நான் பதில் சொல்ல விரும்பலே..”

     

    என்று சொன்ன முரளி கொஞ்சம் கண்ணைத் துடைத்தபடி இருந்தான். கல்யாணிடம் முறையிட்டான், “அடேய்! போலிஸ் கூட இப்படியெல்லாம் கேட்டதில்லே.. இவங்க சொந்த விஷயம்லாம் கேட்கலாமாடா.. இதோ பார்.. என் மேலே ஏதாவது சந்தேகம் இருந்தா டைரக்டா சொல்லுடா.. நான் ஒண்ணும் தப்பா நினைக்கமாட்டேன். ஆனா இவங்க மூலமா இதெல்லாம் கேக்க வைக்காதே.”

     

    “முரளி.. என்னடா நீயே இப்படில்லாம் சொல்லலாமா.. இதோ பார். இதையெல்லாம் ஏன் உங்கிட்டே கோம்டி கேக்கறாங்க தெரியுமா.. உன் மேல யாருக்கும் சந்தேகம் வரக்கூடாதுன்னுதான், நீ ரொம்ப எமோஷனல்.. ஆனா அந்த எமோஷன் உணர்ச்சி உன்னை ஆபத்துல மாட்டக்கூடாதுன்னுதான் இத்தனை கேள்வியும்.. உனக்கொரு விஷயம் சொல்லறேன்.. என்னைக் கூட இப்படியெல்லாம் பெர்சனல் விஷயம்லாம் கேட்டாங்க.. நான் அசராம பதில் சொன்னேன். ஏன்னா இது கொலை வழக்குடா.. உண்மையான கொலைகாரனை விட்டுட்டு உன்னை மாதிரியான அப்பாவியை போலீஸ் மாட்டிவிடுமேன்னு ஒரு அக்கறைதான்.. நீ எமோஷனல் ஆகாம பதில் சொல்லுடா..”

     

    “ஸோ.. இவங்க என் பெர்சனல் விஷயம் கேட்டாங்கன்னா கூட என்னைக் காப்பாத்தத்தான்னு சொல்லறே.. ஓகேடா.. “மிஸ் கோம்டி.. இங்க பாருங்க.. என் மனைவிக்கு நான் எங்க மாமாவோட பிரியமா இருக்கறது ஆரம்பத்துலேர்ந்து பிடிக்கலே. எதுக்குன்னு கேட்டா என்ன சொல்ல முடியும். மாமியார் மருமகள் எதிரிங்க மாதிரி.. மாமனார் மருமகள்’ன்னு கூட வெச்சுக்கலாம்.”

     

    “வெரிகுட் மிஸ்டர் முரளி.. மாமனார் உங்க மனைவி மேலே மதிப்பு வெச்சுருக்காரா இல்லே அவரும் உங்க மனைவியை எதிரியாப் பார்த்தாரா?

     

    “அப்படில்லாம் பொய் சொல்லக்கூடாதுங்க.. அவர் ஒருவார்த்தை சொல்லமாட்டார்.”

     

    “அப்போ உங்க மனைவி மேலேதான் தப்பு இல்லையா? அவங்கதான் இவரை தப்பா புரிஞ்சுண்டாங்க இல்லையா? நான் அவங்ககிட்ட இதைப் பத்தி பேசலாமா உங்க அனுமதியோடதான்.”

     

    “கோம்டி மேடம் இது பிள்ளையார் பிடிக்க குரங்கா முடியுது. என் பொண்டாட்டியோட விசாரணைக்கெல்லாம் நான் ஒப்புக்கமாட்டேன், ஆமாண்டா கல்யாண் ஐ வில் நாட் அக்செப்ட். ஏன்னா நிச்சயம் எங்க குடும்ப விரிசல்லதான் முடியும். பிரியாவுக்கு கோபம் வந்தா அவ ராட்சஸியா மாறிடுவா”

     

    “ஓ.. ஒருவேளை அப்படி ராட்சஸியா மாறவிடக் கூடாதேங்கிற நல்ல எண்ணத்துலதான் நீங்க உங்க மாமாவை உங்க வீட்டுக்குக் கூப்பிட்டதில்லே.. இல்லையா சார்?”

     

    “நீங்க என்னதான் சொல்ல வர்றிங்க?”

     

    “ஆறு மாசம் முன்னாடி ஒரு சித்ரா பௌர்ணமி நாள்ல இங்க பொன்னம்மா அதான் இந்த வீட்டு வேலைக்காரி மூலமா சித்ரான்னங்கள் பலவகைப்பட்ட ருசியில் செஞ்சிண்டு அதை எடுத்துண்டு உங்க வீட்டுக்கு உங்க மாமா கார்ல வந்தாரு.. அப்போ உங்க வீடு பக்கத்துத் தெருவுலதான் இருந்தது. அதனால பொன்னம்மாவையும் அங்க பாத்திரம் கழுவணும்னு சொல்லி நடந்து வரச் சொன்னாருங்கறதாலே அவளும் கொஞ்சம் லேட்டா வந்தா. அப்போ உங்க மனைவி அழுதுண்டே கிச்சன் உள்ளே இருந்தாங்க.. நீங்க சமாதானப்படுத்தி ஹால் உள்ளே அழைச்சுண்டு போனீங்க.. எல்லோரும் சேர்ந்து சாப்பிட்டீங்க.  பொன்னம்மா எல்லா பாத்திரத்தையும் கழுவிட்டு தான் போகலாமா’ன்னு உங்க மாமாவைக் கேட்டுட்டு வெளியே போனா. அப்போ பிரியாவும் வெளியே வந்து அவளைத் தடுத்து நிறுத்தி வெளியேயே ‘பொன்னம்மா என்னையும் அழைச்சுண்டு போ.. இல்லைன்னா நீயும் இங்க நைட்டெல்லாம் இருந்துடணும்’னு அவ காலப் பிடிச்சுக் கெஞ்சினாங்க உங்க மனைவி.. பொன்னம்மாவுக்கு என்ன செய்யறதுன்னுத் தெரியலே.. அவ என்ன பண்ணாள்னா உங்க பொண்டாட்டியை கீழே மயக்கமா விழச் சொல்லியிருக்கா.. அந்தம்மா விழுந்தவுடனே குய்யோ முய்யோன்னு சப்தம் கூட்டி ஆஸ்பத்திரிக்கு அழைச்சிண்டு போய் உங்க மனைவிக்கு குளுகோஸ் ஏத்தி அடுத்த நாள் காலைல ஜாக்கிரதையா அழைச்சுட்டு வந்தா. இதுல வேடிக்கை என்னன்னா தன் பொண்டாட்டியைப் பாக்கறதுக்கு ஆஸ்பத்திரிக்கு முரளியோ இல்லே மாமாவோ போகவே இல்லை. அடுத்த வாரமே நீங்க உங்க வீட்டையே இங்க கிண்டியிலிருந்து கொஞ்சதூரம் தள்ளி அதாவது நங்க நல்லூர் பக்கம் மாத்திட்டீங்க.. மிஸ்டர் முரளி.. நான் சொன்னது இப்போ எல்லாம் உண்மைதானே.. இதோ பாருங்க.. பொய் பேசாம நிஜத்தைச் சொல்லுங்க.. அது உங்களைக் காப்பாத்தும்.. இல்லைனா அனாவசியமா உங்க பொண்டாட்டியை போலீஸ் அழைச்சுட்டுப் போய் கேள்வி கேட்கும். அந்தம்மா உண்மையத்தான் சொல்லும். சாட்சிக்கு பொன்னம்மாவும் இருக்கா இல்லையா.. அதனால பயப்படமாட்டாங்க.. இப்போ மாமா வேற உயிரோட இல்லை. சொல்லுங்க மிஸ்டர் முரளி!”

     

    கல்யாண் அவளைப் பார்த்துக்கொண்டே வியப்பின் உச்சத்தில் சென்றான் என்றால் முரளி அழ ஆரம்பித்து விட்டான்.

     

    “கல்யாண்.. நம்ம குடும்ப மானம் போகணும்னு நீ டிசைட் பண்ணிட்டே போலிருக்கு!” என்று சொல்லி விட்டு ஓவென அழுதான். ஆனால் கல்யாண் முகத்தில் எந்தவித உணர்ச்சியும் இல்லை. ஒரே வார்த்தைதான் சொன்னான்.

     

    “நமக்குத் தேவை இப்போ எமோஷனல் இல்லை.. உண்மை.. உண்மையைச் சொல்லு. இல்லைனா என்ன நடந்ததுன்னு என்னாலே உன் பொண்டாட்டியிடம் பயமுறுத்திக் கேட்டு பதில் வாங்கமுடியும்.”

     

    “இல்லே என்னால எந்தப் பதிலயும் தரமுடியாது. ஐ டிக்ளைன் டு ஆன்ஸ்வர். நீ என்ன வேணும்னாலும் நினைச்சுக்கோ.”

     

    “இங்க நடந்தது ஒரு கொலை மிஸ்டர் முரளி..  எனக்குக் கொஞ்சம் விவரம்தான் கிடைச்சுது. ஆனா இந்த விஷயம்லாம் போலீஸுக்கு வெல்லம் மாதிரி. போலீஸ்க்காரங்க துருவித் துருவி அவங்க பாணில கேட்டு, உங்களைத் துன்புறுத்தி இருட்டு ரூம்ல  வெச்சு உங்களை விசாரிச்சாங்கன்னா அப்போ எல்லா விடைகளும் டக் டக்னு சொல்லிடுவீங்க.. இது போலீஸ்கிட்ட போகறதா இல்லே நம்மோடேயே இருந்து சால்வ் பண்ணப் பாக்கலாமா?” கோம்டி அவனைப் பயமுறுத்தினாள்.

     

    “அப்படின்னா போலீஸ் வரைக்கும் போகாது.. இல்லையா?”

     

    கல்யாண் பட்டும் படாமல் சொன்னான். “சொல்லு முரளி.. நீ சொல்றதப் பொறுத்து எல்லாமே இருக்கு.”

     

    கல்யாணிடம் நெருங்கி வந்தான் முரளி. அவன் கைகளைப் பிடித்துக்கொண்டான். அவன் குரலில் துயரம் அதிகம் இருந்தது.

     

    “கல்யாண்.. நீ நினைக்கிற மாதிரி அவ்வளோ நல்லவரில்லே மாமா.. ஐ மீன் உங்க பெரியப்பா. அவருக்குக் கல்யாணம் ஆகலேயே தவிர அவர் இப்போவரைக்கும் பல பொண்ணுங்க வாழ்க்கைல மோசடி பண்ணி ஏமாத்தி இருக்கார். அதுல ஒருத்திதான் என் பொண்டாட்டி.”

     

    “என்னடா சொல்லறே?” கல்யாண் அதிர்ந்து போனான். முரளி தன் தலையில் கைவைத்துக்கொண்டே சோகமாக சொன்னான்.

    தொடரும்

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி 17

     

    63 நாயன்மார்களின் வரலாறு  – 16.  உருத்திர பசுபதி நாயனார்

    பங்கமில்வண் புகழ்நிலவு தலையூர் வாழும்

        பசுபதியா ரெனுமறையோர் பணிந்து செந்தே

    னங்கமல மடுவினிடை யல்லு மெல்லு

        மகலாதே யாகளமா யமர்ந்து நின்று

    திங்கள்வளர் சடைமுடியா னடிகள் போற்றித்

        திருவெழுத்து முருத்திரமுந் திகழ வோதி

    மங்கையிட முடையபிரா னருளான் மேலை

        வானவர்க டொழுமுலகின் மன்னி னாரே.

     

    சோழ வளநாட்டில் உள்ள திருத்தலையூர் எனும் ஊரில் அந்தணர் குடியில் பிறந்தவர் பசுபதி எனும் சிவனடியார். அனுதினமும் தாமரைத் தடாகத்தில், கழுத்தளவு நீரில் நின்றுகொண்டு, இரு கைகளையும் உச்சிமேல் குவித்துக் கொண்டு இரவும் பகலும் முறை வழுவாது உருத்திர பாராயணம் செய்து வந்தவர். வேதம் எனும் அறிவு நூல், வட மொழியில் உள்ள, ரிக், யஜூர், சாமம், அதர்வணம் எனும் நான்கு வேதங்களை உள்ளடக்கியதாகும். அதர்வணம் என்பது மற்ற மூன்று வேதங்களின் தொகுப்பாகும். இந்த மூன்று வேதங்களின் நடுவனவாய் இருப்பது யஜுர் வேதம். ஏழு காண்டங்களை உடைய இந்த யஜூர் வேதத்தின் மையத்தில் உள்ள காண்டத்துள் பதினொரு அனுவாகங்களை உடையது திருஉருத்திரம் என்பது. 101 வரிகளை உடைய இதில் 51வது வரியில், ‘சிவாய’, ‘சிவதராய’ என்ற திரு ஐந்தெழுத்து குறிப்பிடப்பட்டுள்ளது சிறப்பாகும். சிவ பஞ்சாட்சரம் வேதத்தின் இதயம் எனப்படுகிறது. வேதத்தின் கண்மணி ஐந்தெழுத்து என்பதாம். அவ்உருத்திரத்தை பிரார்த்தனை செய்து வந்ததால் இந்நாயனார் உருத்திர பசுபதி நாயனார் ஆனார். பின்னாட்களில் இந்த உருத்திரமும் வேதத்தில் சேர்க்கப்பட்டது.

    மறையின் பயனாக உருத்திர மந்திரம் திகழ்வதைச்  சேக்கிழார் பெருமான்,

    அரு மறைப் பயன் ஆகிய உருத்திரம் அதனை

    வரு முறைப் பெரும் பகலும் எல்லியும் வழுவாமே  திருமலர்

    பொகுட்டிருந்தவன் அனையவர் சில நாள்

    ஒருமை உய்த்திட உமை இடம் மகிழ்ந்தவர் உவந்தார்.

    என்றார். அன்போடும், மகிழ்வோடும் உருத்திர பாராயணம் செய்து சிவபெருமானின் திருவடியைச் சென்று அடைந்தார் உருத்திர பசுபதி நாயனார். சேக்கிழார் பெருமான், அருந்தவப் பயனான வேத பாராயணம் செய்வோருக்கு பக்தியும் ஈடுபாடும் மிகமிக அவசியம் என்பதை,

    தூய அன்பொடு தொடர்பினில் இடையறாச் சுருதி  நேய நெஞ்சினராகி அத்தொழில் தலை நின்றார்”

    என்று மொழிகிறார். அந்த வேத மந்திரத்தை நியதியுடன் ஓதிய நிலையோடு பெருமானது “ஆடு சேவடி அருகுற அணைந்தனர்”  என்கிறார் தெய்வச் சேக்கிழார் பெருமான்.

    “உமை இடம் மகிழ்ந்தவர் உவந்தார்” என்று சேக்கிழார் மகிழ்கிறார்.

     

    உருத்திர பசுபதி நாயனார் புராணம் சொல்லும் கருத்து

    “உருத்திர பசுபதிக்கும் அடியேன்” என்று சுந்தரமூர்த்தி நாயனாரால் சிறப்பிக்கப் பெற்றவர் இந்நாயனார் பெருமான். இந்நாயனார் அவதரித்த தலையூர் என்ற பெயரில் இரண்டு இடங்கள் உள்ளன. மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியிலுள்ள கொல்லுமாங்குடி என்ற ஊரிலிருந்து காரைக்கால் செல்லும் பாதையில் ஒன்றும், முசிறி வட்டத்தில் ஒன்றும் என இரு இடங்கள் இவ்வாறு உள்ளன. இவ்விரு இடங்களிலும் உள்ள சிவாலயங்களில்  உருத்திர பசுபதி நாயனாரது மூர்த்தம் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    அன்றாட வாழ்வில் அறிந்தும், அறியாமலும் செய்யும் பாவங்களுக்குப் பரிகாரமாகச் சொல்லப்படுவது உருத்திர மந்திரம் என்பர் பெரியர். அதனைச் செய்வோரும் செய்விப்போரும் அனைத்துப் பாவங்களும் நீங்கப் பெறுவர். அதுமட்டுமின்றி பிணிகளிலிருந்து விடுபட்டும், நீண்ட ஆயுளைப் பெறுவார். மக்கட் செல்வமும் பெறுவர் என்பது போன்று அளவிட முடியாததாகப் பயன்களைப் பெறுவர் என்று சொல்லப்பட்டிருக்கின்றது. தம்மைச் சேர்ந்தவர்களையும் தண்டிக்காமல் பிழை பொறுக்குமாறு வேண்டுதலை அளிக்கிறது.

    புரட்டாசி மாத அசுவினி நன்னாளில், உருத்திர பசுபதி நாயனார் சிவபெருமானது திருப்பாத கமலங்களை அடைந்ததை முன்னிட்டு அந்நாளில்  அவரது குருபூசை  பலதலங்களில் நடைபெறுகின்றன.

    தமிழ் வேதமாகிய தேவாரத்தின் திருத்தாண்டகத்தில்,

    இருநிலனாய்த் தீயாகி நீருமாகி யியமான னாயெறியுங் காற்று மாகி 

    யருநிலைய திங்களாய் ஞாயி றாகி யாகாச மாயட்ட மூர்த்தி யாகிப் 

    பெருநலமுங் குற்றமும் பெண்ணு மாணும் பிறருருவுந் தம் முருவுந் தாமே யாகி 

    நெருநலையா யின்றாகி நாளை யாகி நிமிர்புன் சடையடிக ணின்றவாறே

    என்பதைக் காணலாம்.

    திருச்சிற்றம்பலம்

     

     

     

    Share
  • ஆனைக்குழந்தை! (சிறுகதை)

    மாலுமி

    வாடிக்கையாக வரும் நபர்களிடையே இன்று வக்கீல் சண்முகசுந்தரத்திடம் வந்தவர்கள் சற்றே வித்தியாசமாக இருந்தார்கள். மூக்கு கண்​ணாடியை இடது கை ஆட்காட்டி விரலால் தள்ளிவிட்டவாறு மறுபடியும் கேட்டார்.

    “இந்த பெயருக்கு தான் மாத்தணுமா?”

    வந்திருந்த இளைஞனும் அவனுடைய வயதான தாயும் ஒருசேர தலைசைத்தார்கள் “ஆமாங்க ஐயா, இல்லைன்னா அது சாமி குத்தம் ஆயிடும்”.

    “இந்த பெயர் மாத்தினதுக்கு அப்புறம் கண்ணாலம், காட்சி, படிப்பு, பேங்க், வேலை செய்கிற இடம், நல்லது, கெட்டதுன்னு எல்லா இடத்திலும் இந்த பேர்தான் இருக்கும்… பரவாயில்லையா, ஏம்பா தம்பி நீ ஒண்ணுமே சொல்லாமல் நிக்கிறியே?”.

    “அம்மா சொல்றதுதாங்க. அதுக்குத்தானே அவ்வளவு தொலைவில் இருந்து வந்திருக்கோம்”.

    “எதுக்கும் இன்னொரு வாட்டி ரெண்டு பேரும் பேசிப்புட்டு ஒரு அரை மணி கழிச்சு வாங்க”.

    “அரை மணி, ஒரு மணி எல்லாம் வேண்டாங்க அம்மா சொல்லி புட்டாங்க. எனக்கும் சம்மதம் தான், அதுக்கு என்ன வேலை செய்யணுமோ, நீங்க ஆரம்பிங்க”.

    “சரிப்பா … நீ இங்க வந்து உட்காரு இந்த சேர்ல. ஊரு, பேரு, அட்ரஸ், சாட்சியெல்லாம் கொண்டு வந்து இருக்கியா?”.

    “இருக்குங்க சார்”, சொல்லிவிட்டு கையில் இருந்த சற்றே அழுக்கான மஞ்சள் பையில் இருந்து ரேஷன் கார்டு மற்றும் ஆதார் அட்டை போன்றவற்றை எடுத்து வக்கீலிடம் நீட்டினான்.

    “அம்மா உங்க கிட்ட ஒண்ணு கேட்டா கோவிச்சுக்க மாட்டீங்களே?”.

    “கேளுங்க சாமி …”.

    “இந்த பேர் மாத்தணும்னு ஏன் வந்தீங்க? அப்படி இந்த பேர்ல என்னதான் இருக்கு?”. கேள்வி சுலபமாக இருந்தாலும் பதில் சொல்வதற்கு பல வருட கதைகளை கூற வேண்டிய கட்டாயம் வந்தது அம்மாவுக்கும், மகனுக்கும். அதை நாமும் தான்

    கேட்போமே.

    *****                 *****                 *****                 *****                 *****                 *****

    பொதுவாகவே ஆனை குட்டி பிறந்து பயிற்சிக்குப் போகும் பருவத்திலேயே இந்த குட்டி திருக்காவூர் கோயிலுக்குத்தான் என்பது முடிவாகி இருந்தது. அவ்வளவு பெரிய உருவத்தை ஒரு சின்னஞ்சிறு சங்கிலியில் கட்டி மனிதன் இடும் ஆணைக்கு எல்லாம் மண்டியிட செய்வது அவ்வளவு சுலபம் இல்லை. தாயிடமிருந்து பிரித்துக் கொண்டு வந்து, சோறு தண்ணி இல்லாமல் பட்டிக்குள் ஆடு, மாடு போல அடைத்து ஒரு துண்டு கரும்புக்கும், ஒரு சொட்டு தண்ணீருக்கும், ஒரு கவளச்சோற்றுக்கும், கும்கியின் வலுக்கட்டாய வழிகாட்டலும் மற்றும் அவள் வாங்கிய அடிகளும் கொஞ்ச நஞ்சமல்ல. கடைசியில் விஜயகுமார் பாகனாகியபின்தான் அவளுக்கு புரிய வைத்து, மேலும் பயிற்சிகள் எல்லாம் கொடுத்தார்கள். அப்போதிலிருந்தே இருவரும் இணைபிரியா தோழர்கள் தான்.

    பயிற்சியின்போதே அவளுக்கு தெய்வானை என்ற நாமகரணமும் செய்யப்பட்டது. தெய்வானைக்கு இப்போது கோயிலில் நின்று கொண்டிருக்கும்போது கூட அதையெல்லாம் நினைத்தாலே உடம்பு நடுங்குகிறது. ‘காட்டு ராஜா போன்ற உருவம், புராணத்தில் ஐராவதம் என்ற பெயர் பெற்ற உருவம், ஆதி முதல்வனாய் இருக்கும் விநாயகப் பெருமானின் உருவம் என்று இன்னும் எத்தனை எத்தனையோ … இப்படி இருந்தும் நமது வாழ்க்கை ஒரு சுதந்திரம் இன்றி உள்ளது? என்ன செய்வது? முன் ஜென்மத்தின் பலன் போல. ஒரே ஒரு நிம்மதி என்னவென்றால் தினசரி ஆண்டவனை சுமந்து செல்லும் பாக்கியமும், அவனை முதலாக தரிசிக்கும் பாக்கியமும் கிடைத்துள்ளது’. கோயில் வெளிப்பிரகாரத்தில் தெய்வானை நடந்து கொண்டே நினைவுகளை அசை போட்டாள். ஒரு சில சமயம் குருவாயூரில் தனது நண்பர்களுக்கு வருடம் ஒருமுறை நடக்கும் ‘கட்டி அடிக்கல்’ என்ற நிகழ்வை நினைத்தாலே குலையே நடுங்குகிறது. நாலைந்து பேர் கழிகளோடு வந்து யானைகளை நீண்ட நேரம் அடிப்பார்கள். அது கிட்டத்தட்ட முடியாத நிலைக்குப் போய் கீழே விழுந்து, ‘என்னை விட்டுவிடு’ என்று கெஞ்ச கூட திராணியற்று உயிர் போகும் வலியில் மயங்கி கிடக்கும்.

    ‘உன்னை விட நான் தான் பெரியவன் … நான் சொல்வதை கேட்டு நட’ என்று மனிதர்கள் யானைக்கு கூறும் நிகழ்வாகத்தான் அவளால் இதை நினைவு கூற முடிகிறது. பாகன் விஜயகுமாரிடம் சிறிது நாட்களிலேயே தெய்வானை ஒட்டிக்கொண்டு விட்டாள். கோயிலுக்கு வரும் மக்களுக்கு ஆசி செய்வது, கடவுளை சுமந்து ஊர்வலம் வருவது இவைகளுக்காகவே பிரதானமாக இருந்தாள். மற்ற நேரமெல்லாம் பாகனோடு விளையாட்டு தான். அவளை விட்டு அவனும் ஒரு நாள் கூட வெளியில் போனதில்லை. ஏதோ ஒரு அவசர விஷயமாக, ஒரு அரை நாள் வெளியில் போனதற்கே தெய்வயானை காலையிலிருந்து விரதம். கடைசியில் தகவல் போய், மதியத்திற்கு மேல் பாகன் விஜயகுமார் வந்து நாலு கவளங்கள் கொடுத்த பின்னர்தான் சாப்பிடவே ஆரம்பித்தாள். அவனைத் தவிர வேறு யாரும் அருகில் வந்து தொடுவதும் பிடிக்காது. அமைச்சர்கள், அறங்காவலர்கள் இன்ன பிற வி.ஐ.பிக்கள் வரும்போதெல்லாம் பாவம் கூடுதல் ஜாக்கிரதையோடு இருப்பான். விஜயகுமாரின் தம்பி சுந்தரேசன் என்கிற சுந்தரம் ஒருவனை மட்டும்தான் தெய்வானை அரை மனதோடு ஏற்றுக் கொண்டாள். அதுவும் பாகன் விஜயகுமார் பக்கத்தில் அல்லது கூப்பிடு தூரத்தில் இருக்க வேண்டும். சுந்தரம் என்னதான் மரக்கிளைகள், தழைகள் போட்டாலும் அவ்வப்போது திரும்பித்திரும்பி விஜயகுமார் எங்கிருக்கிறான் என்பதை நோட்டம் விட்டுக்கொண்டுதான் இருப்பாள். காலம் இப்படியே போய்க் கொண்டிருக்க ஒருநாள் …

    *****                 *****                 *****                 *****                 *****                 *****

    தூரத்தில் பாகன் விஜயகுமார் தனது தோழன் கிரிராஜோடு காலை பணிக்காக வந்து கொண்டிருந்தான். அருகிலே வந்ததும் தெய்வானை அழகை பார்த்து தன்னை இழந்து நின்றான். வாழ்க்கையில் ஒரு சில விஷயங்கள் என்றுமே சலிப்பதில்லை. இவற்றில் யானை, ரயில், ஆகாயவிமானம் போன்றவை அடக்கம்.

    “விஜய், யானை கூட சேர்ந்து ஒரு போட்டோ எடுக்கலாமா?”.     சாதாரணமாகவே யானையின் அருகிலே யாரையும் செல்லவோ போட்டோ எடுக்கவோ அனுமதிப்பதில்லை தெய்வானை பயப்பட்டு விடக்கூடாது என்பதற்காக.

    “வேண்டாம்” என்று கூறி முடிப்பதற்கு முன்னரே, அவன் தோழன் கிரிராஜ் யானையை நெருங்கி இருந்தான். புதிய மனிதனின் அருகாமை தெய்வானைக்கு சற்று கோபத்தை வரவழைத்தது. வால் நீண்டு குச்சி போல ஆயிற்று கோபத்தை காண்பிக்க. இவற்றையெல்லாம் கவனித்த பாகன் விஜய்,

    “கிரிராஜ் வேண்டாம், வேண்டாம். தயவு செய்து ஆனைகிட்ட இருந்து விலகி செல்லப்பா” என்றவாறு யானையிடம் ஓட ஆரம்பித்தான். தூரம் என்னவோ ஒரு சில அடிகள்தான்.

    “ஒரே ஒரு போட்டோ மட்டும்” என்றவாறு கிரிராஜ் சட்டென்று மொபைல் போனை எடுத்து செல்பி எடுத்துக் கொள்ள தெய்வானை மேல் சாய்ந்தவாறு போஸ் கொடுத்து போட்டோ எடுக்கும் பணியில் மும்முரமானான். போனை கண்டது தான் தாமதம், பயத்தினால் தெய்வானை படபடக்க, பாகன் விஜயகுமார் அவளை நெருங்க, எல்லாமே ஒரே நொடிப் பொழுதில் … நடக்கக்கூடாத ஒன்று அந்த ஒரு நொடி பொழுதில் நடந்து விட்டது. ஆம், பயத்திலும் கோபத்திலும் சிறுபிள்ளை போல் செய்வதறியாது கிரிராஜை தும்பிக்கையில் தூக்கி தரையில் அடித்திருந்தாள். அடுத்த நொடி அங்கே உதவுவதற்கு ஓடி வந்த பாகன் விஜயகுமாருக்கும் இதே கதி தான். பயத்திலும், கோபத்திலும் ஆறறிவுடைய மனிதர்களாகிய நாமே என்னென்னவோ செய்யும்போது, தெய்வானை என்னவெல்லாமோ செய்து இருந்தாள். நேரமாக ஆக விஷயம் காட்டுத்தீ போல பரவியது. மக்கள் கூட்டம் அலைமோத ஆரம்பித்தது. தெய்வானைக்கு எதுவும் புரிந்தபாடு இல்லை. தற்போது சாந்தமாகிவிட்டாள். கீழே இறந்து கிடந்த பாகன் விஜயகுமாரை படுத்திருக்கிறான் என்று நினைத்தாள் போல. மெதுவாக தும்பிக்கையால் தொட்டுத்தொட்டு எழுப்புகிறாள். கண்ணீர் வடிக்கிறாள். எஜமான் எழுவான் என்ற நம்பிக்கையிலே வெகுநேரமாக அவனை எழுப்புகிறாள். அவன் எழ மாட்டான், திரும்ப வரமாட்டான் என்பது அவளுக்கு புரியவில்லை. சுற்றி இருந்த மக்கள் கண்களில் எல்லாம் இந்த பாச போராட்டம் கண்டு கண்ணீர்.

    ஊன், உறக்கம் இன்றி சில நாட்கள். மேற்கூறிய சம்பவம் நடந்தது நமது தமிழகத்தையே உலுக்கிவிட்டது. தெரியாமல் தவறு செய்த சிறுபிள்ளை போலத்தான் தெய்வானை முகமும் இருந்தது. ஆனாலும், அடுத்து வந்த நாட்கள் அந்த காலத்து பயிற்சியின் நினைவுகளை மனதில் கொண்டு வந்தது. கூடுதல் சங்கிலிகள், குறுகிய கொட்டடி போன்ற இடத்தில் அடைப்பு, எப்போதுமே வயிறு பசிக்கும் அளவிற்கு அளவில் குறைந்த உணவு, குறைந்த அளவு குடிநீர், ஜீவன் வற்றிப்போக வைக்கும் நாட்களாக இருந்தன. யாரும் அவள் அருகில் போவதில்லை. ஓரிரு மிருக வைத்தியர்கள் தவிர. இலை, தழையெல்லாம் தூரத்திலிருந்து வீசப்படுகின்றன. ‘நான் என்ன தப்பு செய்தேன்? என்னை தாக்கி ஏதோ செய்து விடுவான் என்ற பயத்திலும் கோபத்திலும் தானே இப்படி செய்தேன்? என் எஜமான் பாகன் விஜயகுமார் கடந்த சில நாட்களாக தூங்குகிறான். எப்போதுதான் எழுந்து என்னிடம் வந்து விளையாடுவான்? பேசுவான்?’ அவளது எண்ணங்களை புரிந்து கொள்ள யாரும் இல்லை. கோயில் அலுவலகத்தில் அடிக்கடி மீட்டிங் நடந்தது. அடுத்த பாகன் யார்? என்று முடிவு செய்யப்பட்டது. இப்போது இருக்கும் சூழ்நிலையில் வெளியில் இருந்து ஆளை கூட்டி வருவதை காட்டிலும், சுந்தரத்தையே அடுத்த பாகனாக நியமிக்க ஆணையும் வந்தது.

    முதலில் சுந்தரத்திற்கும் மனசுக்குள்ளே தித்,திக்கென்றுதான் இருந்தது. அவனை தெய்வானை ஏற்கனவே பார்த்திருப்பதால் வேலையும் சுளுவாக முடிந்தது. பாகன் விஜயகுமார் கூடிய விரைவிலே வருவான் என்று நினைத்தாள்போல. நாளாக, நாளாக அவன் இல்லை என்பதும் புதிய பாகன் வந்துவிட்டான் என்பது புரிந்தும் புரியாதது போலிருந்தது. வீம்பு செய்யாமல் சுந்தரம் சொல்வதை கேட்டுக் கொண்டு இருந்தாள். சுந்தரத்தின் அம்மா ஒரு நாள் நான்கு கட்டுகள் கரும்பு வாங்கி வந்திருந்தாள். கற்பூரம் பற்ற வைத்து கும்பிட்டு விட்டு ‘பெரியவன காவு வாங்கிட்ட … சின்னவனை உங்கிட்ட ஒப்படைக்கிறேன். அவனை நீ தான் காப்பாத்தணும் சாமி’ என்று கண்ணீர் மல்க நெடுஞ்சாண் கிடையாக கீழே விழுந்து நமஸ்கரித்து விட்டு சென்றாள். அவள் சொன்னதெல்லாம் என்னவென்று புரியாவிட்டாலும் அதைக் கேட்க கேட்க தெய்வானைக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது போல. தும்பிக்கையால் சுந்தரத்தை அணைத்துக் கொண்டாள்.

    ஒரு வாரங்களில் பல்வேறு மருத்துவ சோதனைகள், பயிற்சிகள் அவ்வப்போது அங்குசம் என்று கொஞ்சம், கொஞ்சமாக சகஜ நிலைக்கு திரும்பியது. சுந்தரத்தின் தாயார் அவ்வப்போது வந்து கும்பிடு போட்டுவிட்டு ‘சாமி … நல்லபடியா காப்பாத்துப்பா, என் மகனுக்கு மொட்டை போட்டு பெயரை மாத்திக்கிறேன்’ என்று கும்பிடு போடுவாள். சில வருடங்களில், தெய்வயானையை ஆனைமலை முகாமுக்கு அனுப்ப சொல்லி ஆணை வந்தது. அதன்படி சுந்தரமும், அவன் அம்மாவும் ஆனைமலை காப்பகம்வரை சென்று வழி அனுப்பி விட்டு வந்தார்கள். அதன் பிறகும் மாதத்திற்கு ஒருமுறை தெய்வானையை பார்க்கப் போனார்கள். அவர்களை கண்டவுடன் ஓடி வந்து தும்பிக்கையால் சுந்தரத்தை கட்டிக்கொள்வாள். இருவருடன் விளையாடுவாள். திரும்பிச் செல்லும்போது சிறுபிள்ளை போல கண்ணீர் விட ஆரம்பித்து விடுவாள்.

    “இது தான் சார் எங்க கதை. இப்ப கூட இரண்டு நாள் முன்னால பார்த்துட்டு வந்தோம். நல்லா இருக்கா” என்றான் சுந்தரம்.

    “அதான் காப்பகத்தில் விட்டாச்சே, பிறகு என்னத்துக்கு போறீங்க?” வக்கீலின் கேள்வி சுந்தரத்தின் தாயாருக்கு அதீத கோபத்தை ஏற்படுத்தி இருக்கும் போல.

    “என்ன சார் சொல்றீங்க? அது என் பொண்ணு மாதிரி. எவ்வளவு பாசமா இருக்கும் தெரியுமா? மனுசன எல்லாம் விட நூறு மடங்கு பாசம் ஜாஸ்தி சார். நடந்தது நடந்து போச்சு, நம்ம விதி. உங்க பையனே வெளியூர் ஹாஸ்டல்ல, ஸ்கூல்ல இல்ல உங்க பொண்ணு கட்டி கொடுத்த இடத்துல பாக்குறதுக்கு போவீங்களா? மாட்டீங்களா?” இழப்புக்கு பின்னுமான அவர்களின் பாசம் நமது புரிதலுக்கும் மேலே இருந்தது.

    “கட்டாயம் போவேன்”.

    “வக்கீல் சார் நீங்க எதனால போறீங்க பார்க்கிறதுக்கு?”.

    “நம்ம குழந்தைங்கங்கிற பாசம் தான்”.

    “அதே மாதிரிதான இதுவும் புரியுதா சார்”.

    மறுபேச்சின்றி வக்கீல் சண்முகசுந்தரம், சுந்தரத்தின் பெயர் மாற்றத்திற்கு தேவையான ஆவணங்களை சரிபார்த்துக் கொண்டிருந்தார். அவனது தாயார் தெய்வானை சுந்தரத்தோடு இணங்கி அவனை ஒன்றும் செய்யாமல் இருந்தால் சுந்தரத்துக்கு மொட்டை போட்டு அவன் பெயரை மாற்றுவதாக கோவிலில் வேண்டியிருந்தார். அதன் நிமித்தமாகவே அவர்கள் இருவரும் இப்போது இங்கே.

    “சரி சுந்தரம், டாக்குமெண்ட்ஸ் எல்லாம் ரெடி பண்ணிட்டேன். எந்த பெயருக்கு மாத்தணும் ?”.

    “தெய்வானை … தெய்வானை சுந்தரேசன்!”.

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 312

    இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 312

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    நானிங்கு நலமே ! தங்களிடம் நாடுவதும் அதுவே !

    கடந்த மாத முக்கிய நிகழ்வுகளை ஒரு புலம்பெயர் தமிக்ஷனின் பார்வையில் சிறிதாய் அலசுகிறேன்.

    லண்டன் மற்றும் இங்கிலாந்து அரசியல் நகர்வுகள்

    ஆட்டம் பட்ஜெட் 2025 தொடங்கியாச்சு …..

    புதிய வரி உயர்வுகள், சமூகச் செலவு மாற்றங்கள்

    நவம்பர் 26 அன்று களத்தில் வந்த ஆட்டம் பட்ஜெட், 2029–30/2030–31க்குள் சுமார் £26–£26.6 பில்லியன் வரி உயர்வுகளைத் திட்டமிடுகிறது இங்கிலாந்து அரசு .

    சொல்வாரா ? மாட்டாரா ? என்று பல ஊகங்களை உலுப்பிக் கொண்டிருந்தோர் முன்னால் பட்ஜெட்டை தூக்கி பட்டென போட்டுடைத்தார் நம்ப நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ்.

    இது உள்நாட்டு வருவாய் பங்கு (tax take) ஐ 2030/31ல் GDP இன் 38% வரை கொண்டுசெல்லும் என்று ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ் லைப்ரரி சுருக்கம் குறிப்பிடுகிறது.

    குடும்ப நல கொள்கை:
    இதுவரை நடைமுறையில் இருந்த இரண்டாவது குழந்தை வரம்பை (two-child limit) நீக்குவதால் 4.5 லட்சம் குழந்தைகள் வறுமையிலிருந்து மீளலாம்.

    லண்டனில் மட்டும் சுமார் 70,000 வீடுகள் இந்நிபந்தனையின் பாதிப்பில் இருந்ததால் நகரத்திற்கு இது தனிப்பட்ட தாக்கத்தை உண்டு பண்ணும்.

    பணவீக்க/கடன் பாதை:
    வரிக்கணகின் பொறுப்பினை கண்காணிக்கும் ஆபிஸ் – OBR கணிப்பு பட்ஜெட் நடவடிக்கைகள் அடுத்த வருட பணவீக்கத்தை 0.4 சதவீதப் புள்ளி அளவு குறைக்கும் என்று கூறியது.

    உள்நாட்டு கடன் பாதையை 4.5% இலிருந்து 1.9% வரை இறக்க இலக்கிடப்பட்டுள்ளது.

    இங்கிலாந்து அரசின் திறைசேரி வெளியிட்ட அதிகாரப்பூர்வ பட்ஜெட் அறிக்கை ஆழமான அத்திவாரமும், பாதுகாப்பான அடித்தளமும் கொள ஆவணமாக மன்றத்தில் வைக்கப்பட்டது.

    இதனால் ஏற்பட்ட அரசியல் அதிர்வுகள்.
    வரிக்கணகின் பொறுப்பினை கண்காணிக்கும் ஆபிஸ் – OBR அமைப்பு தவறுதலாக இந்த்ஜ வரிக்கணக்கை நிதியமைச்சர் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்னால் இணையத்தளத்தில் வெளியிட்டுவிட்டது.

    போச்சுடா ?

    கிடைச்சிது அவல் எதிர்க்கட்சிக்கு , மென்று துப்பி விட்டார்கள் போங்கள்…..

    இக்கசிவு, எதிர்க்கட்சி விமர்சனங்களை அள்ளி வீசியது.

    பட்ஜெட் அறிக்கை நேரத்திற்கு முன்னதாக OBR வலைத்தளத்தில் ‘அப்ஸ்ட்ரீம்’ கசிவு—இது வினாடிகளில் அகற்றப்பட்டாலும், கன்சர்வேடிவ் எதிர்க்கட்சி விசாரணை கோரி அரசாங்கத்தைச் சிக்கலில் இட்டது.

    £26 பில்லியன் வரி உயர்வுகள் வளர்ச்சியைத் தடுக்கும் என்ற சந்தை/ஆராய்ச்சி விமர்சனங்கள் குவிந்தன.

    இது ஏற்கனவே உயர்ந்த வரிசுமைக்கு மேலே “வாளி வரி” நீர்தாங்காமல் இருக்கலாம் என்ற நிதி-சந்தை மதிப்பீடுகள் கூறப்பட்டன.

    இத்துடன் ‘பட்ஜெட் துளை’ உரையாடலில் அரசுக்கு எதிராக தவறான படிப்பினை உருவாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    வரி உயர்வுகள், இரு பிள்ளை வரி நீக்கம், மின்சார வாகன வரிகள் உள்ளிட்ட தலைப்புகள் பத்திரிகைகளை அலங்கரித்தன.

    அரசியல் பதற்றத்திலும் சந்தைகள் அமைதியாக இருந்தபோதும் நீண்டகால விளைவுகள் குறித்து பெருமளவு கேள்விகள் எழுந்தன.

    எதிர்க்கட்சியான
    கன்சர்வேடிவ் கட்சியின் நிலைப்பாடு

    பட்ஜெட் கசிவு மீதான கோபம் சுழன்றாடியது.

    பட்ஜெட் அறிவிப்புக்கு முன் OBR சுருக்கம் ஆன்லைனில் கசிந்ததால்,  சந்தை-செயல்முறைக் கடுமை, நிர்வாக பொறுப்பின்மை ஆகிய கோணங்களில் கன்சர்வேடிவ் கட்சி விசாரணை கோரியும், ‘வரி வெள்ளம்’ அரசின் வழிகாட்டுதலை சாடியும் எச்சரிக்கை மொழியில் பதிலளித்தது.

    ‘வரி உயர்வினால் வளர்ச்சி பாதிப்பு’ என்ற எதிர்கட்சி வாதம், பணவீக்க-வட்டி-வேலைவாய்ப்பு சூழலில் குடும்பங்களும் தொழில்களும் சிரமப்படுவார்கள் என்பதைக் கொண்டே, பட்ஜெட்டின் ‘சமநிலை’ மற்றும் ‘திட்டவட்டம்’ குறித்த கேள்விகளை நீடிக்கிறது.

    கியர் ஸ்டாமர் தற்போது தனது தலைமையின் மீது எழுந்துள்ள சவால்கள், கட்சிக்குள் உள்ள எதிர்ப்புகள், மற்றும் பொதுமக்கள் நம்பிக்கை குறைவு ஆகியவற்றை எதிர்கொள்கிறார்.

    அவர் அடுத்த தேர்தலுக்கு லேபர் கட்சியை வழிநடத்துவேன் என்று உறுதியளித்தாலும், கட்சியின் உள்ளும் வெளியும் சந்தேகங்கள் அதிகரித்துள்ளன.

    கியர் ஸ்டாமர் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகள்

    1. தலைமை சவால்கள் மற்றும் கட்சிக்குள் எதிர்ப்பு
    இரண்டு லேபர் எம்.பிக்கள் வெளிப்படையாகவே ஸ்டாமர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரியுள்ளனர்.

    ஹெல்த் செக்ரட்டரி வெஸ் ஸ்ட்ரீட்டிங் தலைமையைப் பிடிக்க முயற்சிக்கிறார் என்ற வதந்திகள், கட்சிக்குள் ஒரு கருத்து உருவாகியுள்ளது.

    பட்ஜெட் தோல்வி அல்லது உள்ளூர் தேர்தல் தோல்வி ஏற்பட்டால், தலைமைக் போட்டி விரைவில் எழலாம்.

    2. பொது நம்பிக்கை குறைவு
    சமீபத்திய கருத்துக் கணிப்பில், லேபர் வாக்காளர்களில் மூன்றில் ஒருவரே ஸ்டாமர் அடுத்த தேர்தலை வழிநடத்த வேண்டும் என்று நம்புகின்றனர்.

    இது அவரது தலைமையின் மீது பொதுமக்கள் நம்பிக்கை குறைவாக இருப்பதை வெளிப்படுத்துகிறது.

    3. கொள்கை சிக்கல்கள்
    ஒரண்டு குழந்தைகளுக்கு மேல் வாழ்வாதார உதவிகள் இல்லை எனும் சட்டம்  நீக்கப்பட்டதை, சிலர் “தலைமை சவாலைத் தவிர்க்கும் அரசியல் யுக்தி” என்று விமர்சித்தனர்.

    ஸ்டாமர் இதை “குழந்தை வறுமையை குறைக்கும் நீண்டகால இலக்கு” என விளக்கினாலும், கட்சிக்குள் சந்தேகங்கள் நீடிக்கின்றன.

    4. புதிய சமூக விவாதங்கள்
    ஆண்கள் மற்றும் சிறுவர்களின் பிரச்சனைகளைப் பற்றி தேசிய உச்சி மாநாடு நடத்துவதாக ஸ்டாமர் அறிவித்துள்ளார்.

    இது சமூகக் கொள்கை பரிமாணத்தில் அவரது தலைமையை வலுப்படுத்தும் முயற்சியாகக் கருதப்படுகிறது.

    சுருக்கமாக
    கியர் ஸ்டாமர் மூன்று தளங்களில் சவால்களை எதிர்கொள்கிறார்.

    1. கட்சிக்குள் தலைமைக் போட்டி – வெஸ் ஸ்ட்ரீட்டிங் போன்றோர் மீது எழுந்த வதந்திகள்.

    2. பொது நம்பிக்கை குறைவு  வாக்காளர்களின் ஆதரவு குறைந்திருப்பது.

    3. கொள்கை விமர்சனங்கள்

    அவர் “அடுத்த தேர்தலை நான் வழிநடத்துவேன்” என்று உறுதியளித்தாலும், கட்சிக்குள் உள்ள குழப்பம் மற்றும் வெளிப்புற நம்பிக்கை குறைவு அவரது தலைமையை சோதிக்கிறது.

    இங்கிலாந்து நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் தற்போது பட்ஜெட் தொடர்பான “கருப்பு துளை” (black hole) எண்கள், வரி உயர்வுகள், மற்றும் பொதுமக்களை தவறாக வழிநடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் காரணமாக கடுமையான அரசியல் அழுத்தத்தை எதிர்கொள்கிறார்.

    ரேச்சல் ரீவ்ஸ் எதிர்கொள்ளும் முக்கிய அரசியல் சிக்கல்கள்

    1. ரீவ்ஸ் பட்ஜெட்டுக்கு முன், நாட்டின் நிதியில் £30 பில்லியன் “கருப்பு துளை” இருப்பதாக எச்சரித்தார்.

    ஆனால் OBR (Office for Budget Responsibility) வெளியிட்ட தரவுகள், உண்மையில் அந்த குறைவு £2.5 பில்லியன் மட்டுமே எனக் காட்டின.

    இதனால் அவர் பொதுமக்களை தவறாக வழிநடத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    2. வரி உயர்வுகள்
    பட்ஜெட்டில் £26 பில்லியன் வரி உயர்வுகள் அறிவிக்கப்பட்டன.

    இது பொதுமக்கள் மற்றும் தொழில்கள் மீது கூடுதல் சுமை ஏற்படுத்தும் என்று எதிர்க்கட்சிகள் சாடுகின்றன.

    கன்சர்வேடிவ் தலைவர்கள், “ரீவ்ஸ் பொய் கூறி வரி உயர்வுகளை நியாயப்படுத்தினார்” என்று நேரடியாகக் குற்றம் சாட்டினர்.

    3.  OBR (Office for Budget Responsibility)     கசிவு மற்றும் நம்பிக்கை பிரச்சனை
    பட்ஜெட் முன் OBR ஆவணங்கள் கசிய, அரசாங்கத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளானது.

    ரீவ்ஸ் மீது “தகவலை மறைத்தார்” என்ற குற்றச்சாட்டுகள், அவரது நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மை குறித்த சந்தேகங்களை அதிகரித்தன.

    4. கட்சிக்குள் அழுத்தம்
    லேபர் கட்சியின் சிலர், “பொது நம்பிக்கை குறைந்தால், அடுத்த தேர்தலுக்கு முன் ரீவ்ஸ் பதவி விலக வேண்டும்” என்ற கருத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

    ஆனால் ரீவ்ஸ், “நான் அடுத்த தேர்தலிலும் நிதியமைச்சராக இருப்பேன்” என்று உறுதியளித்துள்ளார்.

    5. அல்ஜசீரா குறிப்பிட்டது போல, ரீவ்ஸ் மூன்று சிக்கல்களை ஒரே நேரத்தில் சமாளிக்க வேண்டிய நிலை
    1. நிதி நிலையை சீர்செய்தல்
    2. வரி/செலவுக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றுதல்
    3. பொதுமக்களின் அதிருப்தியை சமாளித்தல்

    ரேச்சல் ரீவ்ஸ் தற்போது நம்பகத்தன்மை, வரி உயர்வு, மற்றும் கட்சிக்குள் அழுத்தம் ஆகிய மூன்று தளங்களில் கடுமையான அரசியல் சிக்கல்களை எதிர்கொள்கிறார்.

    அவர் தன்னம்பிக்கையுடன் பதவி தொடருவேன் என்று கூறினாலும், OBR தரவுகள் மற்றும் “பொய்” குற்றச்சாட்டுகள் அவரது அரசியல் எதிர்காலத்தை சோதிக்கின்றன.

    ரீபோர்ம் கட்சி, நைஜல் ஃபராஜ்,50 ஆண்டுகளுக்கு முன்நிற்ப ‘இனவாத’ குற்றச்சாட்டுகள் முன்னிலை பெற்றன.

    குற்றச்சாட்டுகளின் விளக்கம்: டல்விச் கல்லூரி (1970களில்) காலத்து சக மாணவர்களிடமிருந்து—‘ஹிட்லர் சரி’, ‘Gas them’ போன்ற வன்மக் கருத்துகள், ‘பாகிஸ்தான்’, ‘வோக்கள்’ போன்ற இழிவுரை—என கார்டியன்-ஆலோசனையை மேற்கோளிட்டு பல ஊடகங்கள் தகவலிட்டன.

    பராஜ் ‘intent’ இல்லாத பள்ளிக் குழந்தை ‘விளையாட்டுத் திடல் பரிகாசம் ’ என மறுத்தும், நேர்காணல்களில் விறுவிறுப்பான பதில்களை வழங்கினார்.

    அரசியல் தாக்கம் என்ன ?

    ரீபோர்ம் கட்சியின் ஆதரவு சரிவு , யூ கவ் எனும்  கருத்து கணிப்பு நிறுவனம்(23–24 நவம்பர்) கணக்கில்  ரீபோர்ம் கட்சி 25% என்றாலும், ஏப்ரல் 25க்கு பின்னர் தாழ்ந்த அளவாகப் பதிவானது என்று கூறுகிறது.

    தொடர்ந்த சர்ச்சைகள் கட்சிக்கு பெரும் அழுத்தம் கொடுத்துள்ளன.

    சர்வதேச அளவில் ட்ரம்ப் முன்மொழிந்த உக்ரேன்–ரஸ்யா போர் நிறுத்தத் திட்டம் முன்னிலைப் படுத்தப்படுகிறது.

    -உக்ரேனின் இராணுவத்தை 600,000 பேருக்கு வரையறுத்தல், NATOவில் சேர தடை, கிரிமியா/டொன்பாஸ் ‘de facto’ ரஸ்யா ஆட்சியை அங்கீகரிப்பது போன்ற தீவிர நிபந்தனைகள் முன் வைக்கப் பட்டுள்ளன.

    அமெரிக்க நிர்வாகம் உருவாக்கிய 28-புள்ளி வரைவு பல ஊடகங்கள் வெளியிட்ட டிராஃப்ட் நகல்கள் வழியாக வெளிப்பட்டன.

    ஐரோப்பிய எதிர்வினை எப்படி ?

    யூரோப், உக்ரேன் அதிகாரிகள்—‘புடின் விருப்பப்பட்டியல்’ போன்றதென கடுமையாக மறுத்து, கீவ்/ஐரோப்பா இணக்கம் இல்லாமல் திட்டம் தோல்வியடையும் என எச்சரித்தனர்.

    தூதரணி நகர்வு நடைபெறுகிறது.

    அமெரிக்க ‘என்வாய்’ ஸ்டீவ் விட்காஃப் மாஸ்கோ, ஆமி செயலாளர் டான் ட்ரிஸ்கல் கீவ்—‘சில மின்சிறு புள்ளிகள்’ மட்டும் மீதி என ட்ரம்ப் கூறியபோது, கையொப்பத்திற்கு முன் ‘இறுதி நிலை’ பேச்சுவார்த்தை முயற்சிகள் நடந்தன.

    உக்ரேன் பக்கம் ‘சில விவரங்கள்’ மட்டும் என்று கூறியதாக தனிநபர் வட்டாரங்கள் சுட்டின.

    வாஷிங்டன் துப்பாக்கிச் சூட்டினால் பரபரப்பு.

    விளைவாகஅமெரிக்க குடியேற்றக் கொள்கை மாற்றங்கள்

    சம்பவம் மற்றும் சந்தேக நபர் என்ன?

    வெள்ளை மாளிகை அருகே நேஷனல் காட் உறுப்பினர்கள் மீது நடந்த சூட்டில் ஒரு உறுப்பினர் உயிரிழப்பு, மற்றொருவர் தீவிர நிலையில்; 29 வயது ஆப்கானிய நாட்டு நபர் ரஹ்மானுல்லா லகான்வால் குற்றச்சாட்டில் கைதானார்.

    CIA உடன் கடந்தகாலத் தொடர்புகள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்த நிலையிலும், ஊக்கக் காரணம் குறித்து விசாரணை நீடிப்பு.

    இதனைத் தொடர்ந்து—அமெரிக்க நிர்வாகம் ‘அனைத்து’ அகதி நிலை கோரும் தீர்மானங்களை இடைநிறுத்தியது.

    ஆப்கானியப் பாஸ்போர்ட் கொண்டவர்களுக்கு விசா வழங்கல்

    USCIS பாதுகாப்பு/வெட்டிங் மறாய்வு வரை காலவரையின்றி நிறுத்தம் அறிவிப்பு.

    ஆப்கான் குடியிருப்பாளர் பதில் என்ன ?

    ‘ஒரு நபரின் குற்றச் செயலைக் களமாகக் கொண்டு முழு சமுதாயத்தைத் தண்டிக்க வேண்டாம்’—ஆப்கான் சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகள் நிர்வாகத்தைக் கேட்டுக்கொண்டன.

    – அரசியல் விதைச்சொற்கள்: ட்ரம்பின் ‘மூன்றாம் உலக நாடுகள்’ குடியேற்றம்/அசைலம் மீது கடுமையான மொழிகள், நிரந்தரத் தடைகள் குறித்த உரைகள்—மீடியா சந்திப்புகளில் மோதல்கள், நிருபர்களிடம் விரக்தி—அனைத்தும் விவாதம், சட்டஅங்கீகாரம் ஆகிய தளங்களில் சிக்கல்களை எழுப்பின.

    சிறீலங்காவில் சுழல்காற்று ‘Ditwah’—வரலாறு காணாத பெருநாசம்

    அழிவின் அளவு,டிட்வா சுழல்காற்றின் பின்னர், இருபதாண்டுகளில் இல்லாத வெள்ள, மண்சரிவு—UN/OCHA கணிப்பில் 10 லட்சம் பேரளவில்  பாதிப்பு.

    212 உயிரிழப்பு, 218 காணாமல் போனோர்; 51,000 குடும்பங்களிலிருந்து 1,80,000 பேர் 1,094 பாதுகாப்பு முகாம்களில்.

    அரசு தீவிர அவசரநிலையை அறிவித்தது.

    சில நாட்களில் பல்வேறு நிறுவனங்களின் கணக்கெடுப்புகள் அதிகரித்த மரண எண்ணிக்கையைத் தந்தன.

    123, 334 என உயர்ந்த ஓட்டத்தில்; மையப் பகுதிகளில் மண்சரிவு, கொழும்பு சுற்றுவட்டாரங்களில் பள்ளப்பகுதி வெள்ளம் பெரும் சேதம்.

    ‘நாட்டின் மிகப்பெரிய இயற்கை பேரிடர்’ என உரையாற்றிய அதிபர் அனுரா குமார திசாநாயக்கே மறுசீரமைப்பு திடல், குடிமக்களின் துணிச்சல் என்பதை வலியுறுத்தினார்.

    பொது கட்டமைப்பு சேதத்தால் 25 நவம்பர்–25 டிசம்பர் காலத்தில் காலாவதி ஓட்டுநர் உரிமங்களுக்கு ‘ஒரு மாத’ சிறப்பு காலம் அறிவிப்பு.

    நவம்பர் மாதம் வரி-வளர்ச்சி சமநிலை, சுதந்திரம் பாதுகாப்பு என்ற மோதிர விசைகள், நினைவுகளின் மண்ணில் மீளெழும் பழைய குற்றச்சாட்டுகள், உலகப் போரில் ‘சமாதானம்’ என்ற பெயரில் பேரரசுக் நகர்வுகள், இயற்கை நெருக்கடியில் மனித உறுதியின் ஒளி இவை அனைத்தும் ஒன்றே மாதத்தில் நம் ஜனநாயக நரம்புகளையும், மனித அக்கறையையும் சோதித்தன.

    இந்தக் கட்டுரையின் எண்ணங்கள் உங்கள் சிந்தனையைத் தூண்டட்டும்.

    உங்கள் நகரத்தின் நுனியில், உலகத்தின் இதயத்தில், மனிதப் பொறுப்பும் கருணையும் ஒன்றாகவே நடக்க வேண்டும்.

    Share