Blog

  • சமணர் கல்வெட்டுகள்

    சமணர் கல்வெட்டுகள்

    சேசாத்திரி ஸ்ரீதரன்

    இந்திய மதங்கள் யாவும் தந்திர யோகத்தை அடிப்டையாகக் கொண்டவையே. ஆசீவகம், புத்தம், சமணம், சீக்கியம் ஆகிய மதங்கள் தந்திர யோகிகளால் தோற்றுவிக்கப் பட்டவையே. தந்திர யோகத்தை மேற்கொண்ட வேத வேள்வியரே பின்னாளில் பிராமணர் எனப்பட்டனர். பிராமணர் தோற்றுவித்தது தான் இந்த பிச்சை எடுத்து வாழும் துறவு வாழ்க்கை முறை. பிராமணரிடம் இருந்து தான் இந்த பிச்சைத் துறவு நெறியை ஆசீவக, சமண, புத்த நெறிகள் ஏற்றுக்கொண்டன. தந்திர யோகம் தனிமனித ஒழுக்கத்தை பெரிதும்  வற்புறுத்துகிறது. பிரம்மச்சரியம், கள் உண்ணாமை, புலால் மறுப்பு ஆகியன தந்திர யோகத்தின் அடிப்படை ஒழுக்கமாகும். 2,600 ஆண்டுகள் முன்பு சமணம் வட இந்தியாவில் தோன்றியது என்ற போதும் இம்மதம் வணிகரிடையே மிகுந்த செல்வாக்கு பெற்றதால் தென்னகத்தில் மௌரியர் ஆட்சிக்கு முன்பேயே பரவியிருந்தது என்பதற்கு “யாற்றூர் செங்காயபனுக்கு தாவனூர் பின்அன் கூற்றன் அறுத்த அதிட்டானம் ” என்ற புகளூர் தமிழி கல்வெட்டே சான்றாகின்றது. வணிகப் படைகளின் எண்ணிக்கை குறைந்ததால் தமிழ் வேந்தர் ஆட்சி வீழ்ந்த பின் தமிழகத்தில் சமணம் சரிந்து மறைவுற்று இன்று சிறு வடிவாக மட்டுமே காணப்படுகிறது. கல்விப் புலத்திலும் இலக்கியப் புலத்திலும் சமணம் தமிழகத்தில் பெருந் தொண்டாற்றியதற்கு கல்வெட்டுச் சான்றுகளும் இலக்கியச் சான்றுகளும் உள்ளன. ஆனால் தமிழகத்தில் புத்த மதத்திற்கு அரச ஆதரவோ வணிகர் ஆதரவோ பெரிதாகக் கிட்டாததால் தமிழகத்தில் அதன் பரவல் மிக குறைவாகவே இருந்தது. எனவே சமணம் போல் அல்லாமல் அரிதாகவே புத்த மதக் கல்வெட்டுகள் தமிழகத்தில் காணப்படுகின்றன. எனினும் வரலாற்றைத் தவறான போக்கில் நடத்தும் வகையில் இலக்கியம் குறிப்பிடும் “முக்கோல் பகவர்” என்பது புத்த மதத் துறவிகளைத் தான் குறிப்பதாக தமிழில் குறு நூலே வெளியிட்டுள்ளனர். ஏதோ புத்தம் தமிழகத்தில் எல்லா இடத்திலும் பரவலாகப் பரவி இருந்தது போலவும் பின்னர் புத்த மக்களை ஊருக்கு வெளியே துரத்தி ஒதுக்கியது போலவும் காட்ட முயல்கின்றனர். மதமே இல்லாத போது எப்படி ஊருக்கு வெளியே துரத்தி இருக்க முடியும்? புத்தத் துறவு நெறிப்படி ஒருவர் தாமே சமைத்த உணவை உட்கொள்ளக் கூடாது பிறர் சமைத்த உணவைத் தான் பிச்சை எடுத்து உண்ண வேண்டும் என்பதே. பின் எப்படி “முக்கோல் பகவர்” என்பதை புத்த துறவி என்று கொள்ள முடியும். இதற்கு முரணாக முதுமையில் யோக தந்திரத்தைப் பின்பற்றி வாழ்ந்த அந்தணர் / பிராமணர் அரிசி, பருப்பு, காய் போன்றவற்றைப் பிச்சையாகப் பெற்று தாமே சமைத்து உண்டனர். இதனால் வெங்காயம், பூண்டு போன்ற துறவுக்கு ஒவ்வாத பொருளை தவிர்க்க இயலும். புத்த துறவிகள் பிறர் சமையலில் வெங்காயம், பூண்டு இவற்றை தவிர்க்க முடியாது. எனவே முக்கோல் பகவர் என்பது பிராமணரைக் குறிப்பதே. இங்கு கீழே சில சமணக் கல்வெட்டுகள் விளக்கப்பட்டுள்ள்ளன. ஈற்றாக ஒரு புத்தக் கல்வெட்டும்  விளக்கப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் வட்டம் ஆலந்தூரில் உள்ள சிவசுப்ரமணிய சுவாமி கோவில் நுழைவாயிலில் உள்ள 3 வரி கற்பலகைக் கல்வெட்டு

    1. ஸ்ரீ கோவிசைய கம்ப விக்கிரம வர்மற்கு யாண்டைந்தாவதின் சித்திரை முதலாகப் புலியூர்க் கோட்டத்து மாங்காடு நாட்டு மாங்காட்டு திருவராந்தானத்துக்கு [ஆர்க்]  
    2. காட்டுக் கூற்றத்து பரிபண்டத்துறை பரிசை கிழார் அமர்நிலையார் மகளார் இப்பள்ளி உடைய அநந்தவீரக் குரவர் மாணாக்கியார் கு _ _ _ அடிகள் திருவமுதுக்கு வைத்த நெல்லறுபதின் 
    3. [குறுணி] முந்நாழி நெல்லால் விக்கட்டுவோமானோம். அவிச்சொரியுந்தால் முப்பதின் பலத்தாவிட்டார். இதுக்கு முட்டாமைச் _ _ _ _  

    அராந்தானம் – சமண பள்ளி, அருகன் (ஸ்)தானம்; பரிபண்டத்துறை – வரிக் கருவூலம்; பரிசை – காவல்; திருவமுது – படையல், நைவேத்தியம்; விக்கட்டு – பகுத்து; நாழி – காற்படி; அவிச்சொரி – சோறு வைத்தல்; பலம் – 35 கிராம் நிறை; முட்டாமை – நில்லாமை

    விளக்கம் : இக்கல்வெட்டு கம்ப விக்கிரம பல்லவனுக்கு 5 ஆம் ஆட்சி ஆண்டு 874 இல் வெட்டப்பட்டது. சித்திரை மாத தொடக்கம் முதலே புலியூர் கோட்டத்தில் அடங்கிய மாங்காடு நாட்டின் மாங்காட்டு ஊரில் அமைந்த அருகன் கோவிலுக்கு  தஞ்சையின் கண்டியூருக்கு அருகே அமைந்த ஆர்க்காட்டு கூற்றத்தின் வரிக் கருவூலக் காவல் தலைவர் அமர்நிலையாரின் மகளும் இந்த சமண கோவிலின் அனந்தவீரக் குரவரின் மாணவியுமான கு_ _ _ அடிகள் கோவில் திருவமுத்துக்கு கொடுத்த நெல் அறுபது குறுணியை மூன்று காற்படியாகப் பிரித்து சோறு வடிக்கையில் முப்பது பலமாக அளவிட்டு வடிக்கச் சொன்னார். இது இடைநில்லாமல் பார்த்துக் கொள்வோம் என்று உறுதி கூறினர் கோவிலார்.

    புலியூர் என்பது இன்று சென்னைக் கோடம்பாக்கத்தின் ஒரு பகுதியாக உள்ளது. இன்றைய மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் அருகில் இந்த சமண பள்ளி இருந்திருக்கலாம். தஞ்சை ஆர்க்காட்டை சேர்ந்த கருவூலக் காவல்தலைவர் மகள் பெயர் சிதைந்துள்ளது. அடிகள் என்பது துறவாட்டி என்று பொருள்படுகிறது. இவள் தஞ்சை சோழ நாட்டில் இருந்து பல்லவரின் தொண்டை நாட்டில் அமைந்த மாங்காட்டிற்கு வந்து அனந்தவீரரிடம் சமண சித்தாந்தத்தை கற்றுள்ளாள். பின் அங்கேயே துறவாட்டியாகி கோவிலின் அன்றாட படையலுக்கு 60 குறுணி நெல் வழங்கியுள்ளாள் என்பதும் அதன் அன்றாட படையல் அளவு 30 பலம் என்பதும் வட்டியாக கணக்கிடப்பட்டதாகத் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. இல்லாவிடில் இடைநில்லாமல் என்ற சொற் பயன்பாடு இங்கு பொருள் தராது. இந்த மாங்காட்டுக் கல்வெட்டு சமண கோவில் சிதிலமடைந்த பின் பிற்காலத்தில் அங்கிருந்து கொண்டு வரப்பட்டு ஆலந்தூர் சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் அடிக் கல்லாக இடப்பட்டுள்ளது.

    பார்வை நூல்: கல்வெட்டு காலாண்டு இதழ் 63, சூலை 2004, பக். 7

    விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டாரத்தில் உள்ள பந்தல்குடி கிராமத்தில் திர்த்தங்கரர் சிற்ப பீடத்தின் மீது பொறிக்கப்பட்டுள்ள 6 வரிக் கல்வெட்டு

    1. ஸ்ரீ இராசராச தேவர்க்கு யாண்டு இருபத்திரண்டாவது வெண்பு னாட்டு நா
    2. லூ ரவிசேரி பள்ளிக்கு இவ்வூர் மாறஞ்சடையன் மகன் சங்கையன் ம
    3. கன் சங்கையஞ் சடையன் மகள் சடைய நற்சக்கி(யை) இந்நாட்டு “வெண்புரை திணை
    4.  வழுவிலி மகன் வழுவிலி சாத்தன்” பெற்ற சடைய நற்சக்கி மகன் சாத்
    5. தம் புகழ் மகன் புகழ் சடையேன் எம் மூத்தப்பன் வழுவிலி சாத்த
    6. னையும் எம் மூத்தம்மை சடையன் நற் சக்கியையுஞ் சாத்தி இட்ட கற்திருமேனி  

    திணை – ஒழுக்கம், நெறி, நோன்பு, விரதம்; வழுவிலி – பிழறாத; வெண்புரை – வெள்ளைப்பிறை, மூத்தப்பன் – கொள்ளுப் பாட்டன்

    விளக்கம் : முதலாம் இராசராசனின் 22 ஆம் ஆட்சி ஆண்டு கி.பி. 1007 இல் வெண்பு நாட்டில் அடங்கிய நாலூ ரவிசேரியில் உள்ள சமண பள்ளிக்கு இந்த ஊரில் வாழும் மாறஞ்சடையன் மகன் சடைய சங்கனுடைய மகன் சங்கை சடையனான பேரனின் மகள் சடைய நற்சக்கியை மணந்த இந்த நாட்டின் வெள்ளைப்பிறை நோன்பு பிறழாதவன் என்பதைக் குறிக்க “வெண்புரை திணை வழுவிலி எனப்படுவானின் மகன் வழுவிலி சாத்தன் பெற்றெடுத்த சடைய நற்சக்கியின் மகன் சாத்தன்புகழ் என்பானின் மகன் புகழ்சடையன்  எனும் நான் எமது கொள்ளுத் தாத்தா வழுவிலி சாத்தனையும் அவர் மனைவியான எமது கொள்ளுப் பாட்டி  நற்சக்கியையும் நினைவில் இருத்தி இந்த தீர்த்தங்கரர் சிலையை வடிப்பித்து நிறுத்தினேன் என்கிறான்.

    இதில் கொள்ளுப்பேரன் புகழ் சடையன் தனக்கு முன்பு வாழ்ந்த மூன்று தலைமுறையை குறிப்பிடும் முன் தன் கொள்ளுப் பாட்டிக்கு முற்பட்ட புகழ்மிக்க மூன்று தலைமுறையை குறிப்பிடுகிறான். கொள்ளுப் பாட்டியின் வம்சம் பாண்டியர் வழிவந்தாற்  போலத் தெரிகிறது. ஆக இக்கல்வெட்டில் ஏழு தலைமுறைப் பெயர்கள் குறிக்கப்படுகின்றன. Chaumasi chaudas – ஆடிப் பௌர்ணமி முதல் கார்த்திகை பௌர்ணமி வரை கடைபிடிக்கப்படும் நான்கு மாத விரத காலம் (சாதுர்மாஸ்ய விரதம்) சமணரும் சிறப்பானது. இதைத்தான் இக்கல்வெட்டு “வெண்புரை விரதம் பிறழாத” என்று குறிக்கிறதோ? தெரியவில்லை.

    பார்வை நூல்: கல்வெட்டு காலாண்டு இதழ் 96, 2015, பக். 3

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம் வேடல் ஆண்டார்மடம் 21 வரிக்கல்வெட்டு

    1.   ஸ்வஸ்திஸ்ரீ கோவிராச கேசரி பர்ம[ர்]க்கு யாண்டு பதிநாலாவது சி 
    2.  ங்கபுர நாட்டுக் கீழ்வழி விடால் மாதேவி ஆராந்தி மங்கல 
    3.    முடைய குணகீர்த்தி படாரார்வழி  மாணாக்கியார் கனகவீர[க்  கு]ரத்தி 
    4.   யாரையும் மவர்வழி மாணாக்கியாரையும் தாபிஸி[க]ள் நாநூற்றுவர்க்கும் 
    5. கொள்ளாதமையில் இக்[கோயி]ற் பிள்ளைகளைந் நூற்றுவர்க்கும் வழி இலாருங் 
    6.   காத்தூட்டுவோமானோம். எங்களு[டை]ய ஸ்வரக்ஷை. இது இரஷிப்பாரடி நி[லை எ]ங்கள் 
    7. [த]லைமேலன மாதேவி அராந்[தி] மங்கலமுடைய  [கன]கவீரக் குரத்தியார்  
    8. த் தங்க _ _ ர் மகளாதனமையில் _ _  _ 
    9.  முக்கியருமிது [கா]ப்பர் அவர்கள் ஸ்வரக்ஷை. இதனை இரக்ஷிப்பார 
    10.  டிநி[லை] என் தலைமேலன  
    11.   _ _ _ டறுங்  காழாறு[ம்] மு  
    12. தலாகிய மாதேவி ஆ 
    13.  ராந்தி மங்கலமுடைய 
    14.  கநக வீரக் குரத்தியார் தங் 
    15. கள் மகளாராதிநமையில்  
    16.  இதுவெல்லாந் தங்  
    17. கள் காவல். இதனை தீங்  
    18. கு நினைத்தாந் கங்கை இடைக் குமரி இடை
    19.  எழு நூற்று காதமுஞ்ச செய்த பாவ  
    20. ங் கொள்வார். காவலனுக்கு [பிழை]த்தா 
    21. ராவார்  

    கொள்ளா – ஏற்காதமை, ஒவ்வாமை; படாரர் – துறவி, கோயில் அதிகாரி;-   குரத்தி – ஆசிரியை ; தாபிசி – தவசிகள்; ஊட்டு – சோறளி; காழார் – யானைப்படை வீரர்; பிழைத்தார் – குற்றம் செய்தவர்.

    விளக்கம் : முதலாம் ஆதித்த சோழனின் 14 ஆம் ஆட்சி ஆண்டு 885 இல் விடால் எனப்பட்ட இன்றைய வேடலில் வெட்டப்பட்ட கல்வெட்டு இது. சிங்கபுரநாட்டின் கிழக்கு வழியில் அமைந்த விடால் ஊரான ஆராந்த மங்கலமுடைய சமண பள்ளித் துறவி குணகீர்த்தியிடம் பாடம் பயின்ற மாணாக்கியான கனகவீர குரத்தி என்ற ஆசிரியையும் அவரிடம் பாடம் பயிலும் மாணவிகளையும் தவமியற்றும் துறவியர் 400 பேருக்கும் ஒவ்வாமையால் இந்த சமண பள்ளியில் பயிலும் அந்த பெண் பிள்ளைகள் ஐநூற்றுவரையும் அங்கிருந்து வெளியேற்றி விடுகின்றனர். அதனால் போக்கிடம் இன்றி தவித்த இவர்களுக்கு இடமளித்து சோறு கொடுத்தோம் என்கின்றனர் இந்த ஊரார். இது நாங்கள் தரும் பாதுகாப்பு என்கின்றனர். இதை காப்பவர் பாதம் எமது தலைமேல் ஏற்போம் என்றும் மாதேவி ஆராந்தி மங்கலமுடைய சமண பள்ளியின் கனகவீரக் குரத்தியார் தமது மகளானபடியால் _ _ _ ஊர் முக்கியரும் இதை காக்க வேண்டும் என்கின்றனர். இது அவர்களின் நற்காப்பு ஆகும் என்கின்றனர். இதனைக் காப்பவரின் அடிப்பாதம் எனது தலைமேல் இடக் கடவது _ _ _ , யானைப்படை வீரர் முதலாகிய ஆராந்த மங்கலம் வாழ்வோர்க்கு சொல்வது யாதெனில் கனகவீரக் குரத்தியார் உமக்கு மகளென ஆவதால் இது உமது காவலாகும். இதற்கு கேடு நினைப்பார் கங்கைக்கும் குமரிக்கும் இடையே 700 காத நிலப்பரப்பில் வாழ்வார் செய்யும் பாவங்களை அடைவர். அரசனுக்கு குற்றம் இழைத்தவராவார்.

    இதில் 500 மாணாக்கியர் என்பது துறவிகள் அல்லாத வெவ்வேறு சமூக பிரிவில் அடங்கிய மாணவியர் என்று கொள்ளலாம். குரத்தியரில் மணவாழ்வு கொண்டோரும் துறவாட்டியாக இருப்பாரும் உண்டு என்பதற்கு கழுமலைக் கல்வெட்டு எண்: 336 “இவன் மணவாட்டி சேந்தன் குரத்தி (ஏற்படுத்திய) திருமேனி”  என்பது ஓர் அரிய சான்று ஆகும். இந்த மாணவிகளின் வாழ்க்கை நெறி தம் துறவு நெறிக்கு ஏற்புடையதல்ல என்பதால் 400 துறவிகள் இவர்களைச் சமணப் பள்ளியில் இருந்து வெளியேற்றி விட்டனர் போலும். ஊராரிடம் தஞ்சம் புகுந்த இவர்களுக்கு ஊரார் அடைக்கலம் அளித்தனர் என்றே கொள்ளலாம். மேலும் இந்த மாணவிகள் அண்டை அயல் கிராமங்களில் வாழ்பவராக இருத்தல் வேண்டும். இல்லாவிடில் இத்தனை பேருக்கும் கிராமத்தாரால் அன்றாடம் சோறிட முடியாது. இது பெண் கல்வி அந்நாளில் மக்களால் ஊக்குவிக்கப்பட்டதற்கு அடையாளம். பெண்கள் வேதம் கற்கலாகாது என்று தான் சொல்லப்பட்டதே ஒழிய உலகியல் கல்வி கற்க தடை ஏதும் இருந்தது இல்லை என்பதால் மத வேற்றுமை பாராமல் பெண்கள் சமண பள்ளிகளில் சேர்ந்து கல்வி கற்றுள்ளனர். எனவே பண்டு சமூகத்தில் பெண் கல்வி சமணத்தால் ஓரளவு ஊக்குவிக்கப்பட்டு பரவியிருந்தது என்பது தெரிகிறது. ஆனால் தென்னிந்திய சமூக நிலையை தமது நாட் குறிப்பில் எழுதிய ஆங்கிலேயர் நடன மகளிரான தேவரடியாரைத் தவிர்த்து பிற பெண்கள் எவரும் கல்வி கற்கவில்லை என்ற குறிப்பு இசுலாமிய படையெடுப்பிற்கு பின் வந்த ஆட்சியாளரின் தவறான முடிவினால் பெண் கல்வி தடைபட்டிருக்க வேண்டும் என்றே எண்ண முடிகிறது. அரசியல் மேடையிலும் எழுதிலும் சொல்வது போல பெண் கல்வித் தடைக்கு இந்து மதமோ பிராமணரோ காரணம் அல்ல என்பதற்கு இக்கல்வெட்டு முகாமையான சான்றாகின்றது.

    பார்வை நூல்: தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 3 ல் பகுதி 3 & 4 பக். 224 – 225

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை வட்டம் மதுரை – திண்டுக்கல் சாலையில் அமைந்த ஊர் வடுக்கப்பட்டி 17 வரிக் கல்வெட்டு.

    1.  ஸ்வஸ்திஸ்ரீ பாகனூர்க் கூற்ற 
    2. த்து மானசித்தநல்லூராயின மா  
    3. லைக் குளத்து தான சாலையும் குளமும் அத்தா 
    4. ணிகள் பேராயி(ன)மை(யி)லி வ்வூர்க்கு மி 
    5. வ்வறத்துக்கு தீயார் நமக்குப் பகைவ்வரா(ய்) 
    6. யுங் கூலிச் சேவகரொருவர் நிற்கிலு மிவ் 
    7. வறத்துக்கு வருங் குற்றங் காப்பதாகவும் 
    8. பெருநிரவி யிரு நங்கைய் வாசனை கொள்ள 
    9. எல்க்கை வாசனை கொண்டு கல்லு நாட்டி 
    10. நப் பெருவாரியன் வேம்பன் வயிரி 
    11. (யும் தி)கையாயிரத்து அறுகை வாணிகன் 
    12. (மாணிக்) கூ(த்தனுமெ) திகைவாரியன் யிர 
    13. சாழனும் திகை வாரியன் கட்டாணை ராமனும் 
    14. ஆச்சவீர அத்தாணிகள் முனிவர் சி 
    15.  ம்புளு கலிக்கோட்டை விடங்கனும் 
    16.  அவர்கள் இது காளிப் 
    17. பேடு 

    வாசனை – நல்ஆதரவு, அருள்; அத்தாணி – அரச ஆதரவு பெற்ற வணிகர் குழு; அறுகை – அறுந்த கை; வாரியன் – மேற்பார்வையாளன்; பேடு – அச்சம்

    விளக்கம் : இது 11 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு. பாகனூர் கூற்றத்தில் அடங்கிய மானசித்த நல்லூர் என்னும் மாலைக்குளத்தின் தானசாலையையும் அதன் நீர் வழங்கும் குளத்தையும் அத்தாணிகள் என்ற வணிகக் குழுவினரின் தம் பெயரை வைத்து, இந்த ஊருக்கும் இந்த அறத்திற்கும் கேடு செய்பவர் நமக்கும் பகைவராக கருதப்படுவார் என்று அறிவிக்கின்றனர். கூலிச் சேவகர் ஒருவர் நிலையாக நின்று இந்த அறச்சாலையில் ஏற்படும் குற்றத்தை தடுத்துக் காக்க ஏற்படுத்தப்பட்டார். பெருநிரவி எனும் வணிகர் கூட்டத்தின் இரண்டு பெண் தெய்வங்கள் (அம்மன்) நல்ஆதரவும் அருளும் கொண்டும் எல்லை தெய்வத்தின் (அம்மன்) நல்ஆதரவும் அருளும் கொண்டும் எல்லைக் கல் நாட்டியோர் பெரிய மேற்பார்வையாளன் வேம்பன் வயிரியும், திசைஆயிரத்து அறுபட்ட கை உடைய வாணியன் மாணிக்க கூத்தனும், திசைஆயிரத்து மேற்பார்வையாளன் வீர சோழனும், திசை ஆயிரத்து மேற் பார்வையாளன் கட்டாணை இராமனும், திசை ஆயிரத்து வீரர்கள் அரச ஆதரவு வணிகரான அத்தாணிகள், சமண முனிவர் சிம்புளுவின் ஆதரவு பெற்ற கலிக்கோட்டை விடங்கனும் ஆவர் என்று ஆறு வணிகரின் பெயர்கள் குறிக்கப்படுகின்றன. அவர்களுடைய அச்சம் தரும் காளியும் காவலுக்கு நிறுத்தப்பட்டது.

    சமணரில் பெரும்பாலார் வணிகர் என்பதற்கு வணிகரின் இந்த சமணக் கொடையே சான்று. தமிழ் வேந்தராட்சி நீங்கி அயலவர் ஆட்சியில் தமிழ் வணிகர் கீழ்நிலை எய்தியதால் வணிகர் ஆதரவு குன்றி சமண சமயம் தமிழகத்தில் ஒழிந்தது.

    பார்வை நூல்: பாண்டிய நாட்டில் சமணம் பக். 446

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டம் ஆலத்தூர் யாளிக் கல் 8 வரி வட்டெழுத்துக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ சிந்தரையன் மகளார் நம்
    2. பிராட்டியார் வானவன் மாதே
    3. வியார் சிற்றாச்சர் வடிக்க மணவா
    4. ட்டி _ _ _ ந்து தவப்பட்டு ஆலந்தூர
    5. டிகள் பள்ளி ஆளாநின்ற காலத்து வீர சங்
    6. காதப் பெரும்பள்ளி என்று பெருமாநடிக
    7. ள் நாமத்திலே உள்ளோசஞ்யுஞ் செயிவித்து பு
    8. துக்குவித்தார்   

    சிற்றாச்சர் – சின்னம்மை, சித்தி; தவப்பட்டு – தவமியற்றி; பெருமானடிகள் – வேந்தன்; சஞ்யு –  ஒலிக்கும் மணி

    விளக்கம் : இக்கல்வெட்டு கொடும்பாளூர் இளவரசியும் முதலாம் இராசராசனின் பட்டத்து அரசியுமான வானவன் மாதேவியை குறிப்பதால் இது 10 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு எனத் தெரிகிறது. சிந்தரையன் மகளும் இளவரசியும் ஆன, வேந்தன் இராசராச சோழனின் பட்டத்து அரசி வானவன் மாதேவிக்கு சித்தியுமான வடிக்க மணவாட்டி இங்கு வந்து தவம் செய்த சமண பள்ளியை, ஆலந்தூர் அடிகள் இந்த சமண பள்ளியின் அதிகாரியாக இருக்கின்ற போது இச் சமண பள்ளியைப் புதுப்பித்து மனவெழுச்சி தரும் ஒரு மணியும் செய்வித்து அதற்கு வீர சங்காதப் பெரும் பள்ளி என்று தன் கணவனான வேந்தனின் (கொங்கு சோழன் வீரசோழ பராந்தகன்) பெயரை சூட்டுவித்தாள். இதன் மூலம் கொங்கு சோழருக்கும் தஞ்சை சோழருக்கும் உள்ள உறவு வெளிப்படுகிறது.

    சிந்து தேச அரசன் தெற்கே யாத்திரை வந்த போதோ அல்லது வடிக்க மணவாட்டியின் பாட்டன் வீட்டார் வடக்கே யாத்திரை சென்ற போதோ வானவன் மாதேவியின் பாட்டியை மணந்துள்ளான் என்று கொள்ளலாம். இதன் மூலம் வானவன் மாதேவியின் பாட்டன் சிந்து தேச அரசன் என்று தெரிகிறது. அரச குடும்பத்தவர் இப்படி இனம், மொழி, பண்பாடு கடந்து இன்னொரு அரச குடும்பத்துடன் உறவு கொள்வது ஒன்றும் புதிதல்ல. ஆனால் இதில் வேடிக்கை என்ன என்றால் இந்த தமிழக அரச குடும்பத்தவர் ஆரிய வெண் தோலும் குருதியும் உள்ளவர் என்ற போதும் இந்த நிலவுடைமை ஆண்ட பரம்பரை மார்தட்டிகளை மட்டும் ஏனோ ஆரியர் என்று அடையாளப் படுத்தாமல் ஏமாளியான கருத்த பார்ப்பானை மட்டும் ஆரியனாக அடையாளப்படுத்துவதானது தமிழரை முட்டாள் ஆக்கும் உத்தி ஆகும். தமிழர் தான் இந்த முட்டாள் தனத்தை உதறித் தள்ள வேண்டும். இக்கல்வெட்டால் இராசராசன் வேந்தனாக பட்டம் சூட்டப்படும் முன்பே அவன் பட்டத்து அரசி வானவன் மாதேவி இங்கு சிறப்பு அடையாளமாக குறிக்கப்படுகிறாள் என்றால் இராசராசன் புகழ் வேந்தனாகும் முன்பே தென்னகத்தில் விரிந்து பரவி இருந்தது என்று தானே பொருள்?

    பார்வை நூல்: கொங்கு நாட்டுச் சமணக் கல்வெட்டுகள், புலவர் செ இராசு, பக். 253

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டம் ஆலத்தூர் சமண பள்ளி முன் மண்டப நிலையில் உள்ள 9 வரி வட்டெழுத்துக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்தி  ஸ்ரீ கோநாட்டானேன் வீ
    2. ரசோழப் பெருமானடிகளுக்குத் திரு
    3. வெழுத்திட்டுச் செல்லாநின்ற யாண்டு முப்
    4. பத்தேழாவது ஆனித் திங்கள் முதல் _ _ 
    5. ஆலந்தூர் வீரசங்காதப் பெரும்பள்ளியில் 
    6. இவ்வருக தேவர் _ _ _ வயிற்று 
    7. நிலன் _ _ நாலெல்லை ஆக 
    8.  _ _ _ _ _ 
    9. வழி ஏழச்சம் ஒழியாமல் அறுவான்.

    செல்லாநின்ற – நடப்பாண்டு, current year; பெருமானடிகள் – வேந்தர்; திருவெழுத்திட்டு – முடிசூடி; வயிற்று – உணவு; ஏழு அச்சம் – ஏழு தலைமுறை; ஒழியாமல் – தங்காமல்

    விளக்கம் : கொங்கு சோழன் வீரசோழ பராந்தகனுக்கு  முடிசூட்டி 37 ஆம் ஆண்டு (கிபி 979) ஆகையால் ஆனி  மாதம் முதலாக ஆலந்தூரில் உள்ள வீரசங்காதப்  பெரும்பள்ளியாம் இந்த சமண கோவில் அருகருக்கு அன்றாடம் அமுதூட்ட  கோநாட்டவனால் நிலக்கொடை வழங்கப்பட்டு அதன் நான்கு எல்லையாக கை _ _ _ _ _ _ என்று எல்லை குறிப்பிட்ட இடம் சிதைந்து விட்டது. இந்த ஏற்பாட்டை அழிப்பவன் வழியினர் ஏழு தலைமுறைக்கு தங்காமல் அழிந்து போவான். ஒரு தலைமுறை அழிந்தாலே அடுத்த தலைமுறை தொடராது பின் எப்படி ஏழு தலைமுறை செல்லுமோ? புரியவில்லை.

    இதற்கு மேலுள்ள வடிக்க மணவாட்டி கல்வெட்டின் காலத்தை கணிக்க இக்கல்வெட்டு பெரிதும் உதவுகிறது. இக்கல்வெட்டில் அவள் குறிப்பிடும் வீரசங்காதப் பெரும்புள்ளி என்ற பெயர் இடம் பெறுவதால் 979 க்கு முன் அக்கல்வெட்டு வெட்டப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது. 980 தோடு வீரசோழன் பராந்தகன் ஆட்சி முடிந்து விடுவதால் இவனது உடல்நலம் தேற வேண்டி நோன்பு இருந்து இக்கோவிலை புதுப்பித்துள்ளாள் வடிக்க மணவாட்டி என்று கொள்ள முடிகிறது.

    பார்வை நூல்: கொங்கு நாட்டுச் சமணக் கல்வெட்டுகள், புலவர் செ இராசு, பக். 253

    திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் ஐவர்மலை (ஐயம் பாளையம்) குகைத்தளத்தின் மேல் உள்ள 7 வரி வட்டெழுத்துக் கல்வெட்டு

    1. சகரையாண்டு எழுநூற்றுத் தொண்ணூற்றிரண்டு
    2. போந்தன. வரகுணற்கு யாண்டு எட்டு. குணவீரக் கு
    3. ரவடிகள் மாணாக்கர் காழத்து சாந்திவீரக் 
    4. குரவர், திருவயிரை பாரீஸ்வ படாரரையு மியக்
    5. கி அவ்வைகளையும் புதுக்கி இரண்டுக்கு முட்
    6. டாவவியு மோரடிகளுக்கு சோறாக அமைந்தன 
    7. பொன் ஐந்நூற்றைந்து காணம் 

    அவ்வு – கூடும் இடம், assembly hall; போந்தன – போயின; காழத்து – மியான்மர் நாட்டு; முட்டாவ – முடிதல்; அவி – அவை, மாண்டபம்; ஓராடி – சேர்ந்து உழைப்பவர், உழைப்பாளர்.

    விளக்கம் : சக ஆண்டு 870 கழிய இரண்டாம் வரகுணவர்மப் பாண்டியனுக்கு 8 ஆம் ஆட்சி ஆண்டில் 870 இல் குணவீரக் குவரடிகளின் மாணவரான மியான்மர் நாட்டைச் சேர்ந்த சாந்திவீரக் குரவரையும் திருவயிரையின் பாரீஸ்வ கோயில் அதிகாரியையும் இணைத்து இயக்கி இங்கத்து பழுதுபட்ட கூடங்களை புதுப்பித்து அவை இரண்டையும் கட்டி முடிக்கவும் கூடம் கட்டும் உழைப்பாளிகளுக்கு சோறிடவும் மொத்தம்  505 காணம் பொன் முதலிடப்பட்டது என்று கணக்கு காட்டப்பட்டுள்ளது.

    சமண அற நூல்களைக் கற்க பர்மாவில் இருந்தும் மாணவர் தமிழகம் வந்தது இதன் மூலம் தெரிகின்றது. கல்வெட்டில் வரகுண பாண்டியன் ஆட்சி ஆண்டும் சக ஆண்டும் ஒருங்கே குறிக்கப்பட்டது காலக் கணிப்பிற்கு பெரிதும் உதவுகின்றது. பாண்டியர் ஆட்சி கொங்கில் சில காலம் இருந்துள்ளதால் கொங்கில் அது சமண பரவலுக்கு [பெரிதும் ஆதரவாயிற்று என்று கொள்ளலாம்.

    பார்வை நூல்: கொங்கு நாட்டுச் சமணக் கல்வெட்டுகள், புலவர் செ இராசு, பக். 253

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம் சாத்தமங்கலம் ஊரில் சந்திரசுவாமி கோயில் அருகே உள்ள பெருமாள் பாறை என்னும் இடத்தில் உள்ள 8 வரிக்  கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ கம்ப பன்மற்கு யாண்
    2. டாறாவது காடகதிரையர் ம
    3. ணவாட்டி மாதவி யித்திருக்கோ
    4. யில் புதுக்கி முகமண்டக மெ
    5. டுப்பித்து பாழி புதுக்கி யக்
    6. கா படாரி திருக்கோயில் லெடு
    7. ப்பித்து இப்பள்ளிக்கு கிட்ட 
    8. பெரு மணி ஒன்று ஊட்டு(வி)த்தாள் 

    பாழி – சமண முனிவர் தங்கும் இடம்; படாரி – அம்மன்; கிட்ட – செம்பு; ஊட்டு – விருந்து

    விளக்கம் : பல்லவன் கம்ப வர்மனின் 6 ஆவது ஆட்சி ஆண்டு 875 இல் காடகதிரையர் என்ற வணிகருக்கு மனைவியான மாதவி என்பவள் இந்த சமணத் திருக்கோவிலை புதுப்பித்து அதில் முக மண்டபம் கட்டியும், சமண முனிவர் தங்கும் இடத்தைப்  புதுப்பித்தும், யக்ஷிக்கு புதிதாக ஒரு கோயில் கட்டியும், இந்த சமண கோவிலுக்கு செம்பினால் ஆன பெரிய மணி ஒன்றைக் கட்டியும் மக்களுக்கு விருந்து கொடுத்தாள்.

    காடகதிரையர் என்ற சொல் இவர் காட்டுவழியில் வரித் தண்டல் உரிமை பெற்ற வணிகப் படைத்தலைவர் என்று விளங்குகிறது. திருவண்ணாமலை மாவட்டம் சிறந்த சமணர் ஊர்களை கொண்ட மாவட்டம் என்பதற்கு இங்கு அமைந்த சமண தளங்களே சான்று. இதற்கு இந்த மாவட்டம் அதிகமாக சமணத்தை பின்பற்றிய கங்கர், நுளம்பர், வாணர் படையெடுப்பிற்கு ஆட்பட்டதே காரணம் எனலாம்.

    பார்வை நூல்: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் தொகுதி 13, அதில் திருவண்ணாமலை மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி 2, பக். 104 த நா தொ து வெளியீடு.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் கழுகுமலைப் பேரூராட்சி கழுகுமலை வேட்டுவன் கோவில் 7 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்ரீ திரும[லை]க்  
    2. குறத்திகள் 
    3. மாணாக்கன் ஏ
    4. னாதி குத்த
    5. னஞ் சாத்திச்  
    6. செய்வித்த ப
    7. டிமம் 

    ஏனாதி – வில்வீரர் படைத்தலைவன்; படிமம் – கற்சிலை; குரத்தி – ஆசிரியை

    விளக்கம் : திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டத்தில் உள்ள திருமலையின் சமண பள்ளியைச் சேர்ந்த ஆசிரியைகளிடம் பாடம் பயின்ற மாணாக்கன் ஏனாதி குப்தன் என்பவன் தன் முன்னோரை நினைந்து செய்வித்த தீர்த்தங்கரர் சிற்பம் இது.

    இவனது ஊர் திருமலை என்று கொள்ளும்படியாக இவன் இளவயதில் இங்கத்து ஆசிரியைகளிடம் பாடம் பெற்றுள்ளான். ஆசிரியைகள் ஆண் மாணவருக்கும் பாடம் புகட்டியுள்ளனர் என்பது இதனால் தெரிகிறது. இவனது இயற்பெயர் குறிக்கப்படவில்லை. குப்தன் என்பது வணிகருக்குள்ள வர்ணப் பட்டம் ஆகும். அதன் தமிழ் வடிவம் தான் குத்தன். அதே நேரம் இவன் விற்படைத் தலைவனாகவும் இருந்துள்ளான் என்பது ஏனாதி பட்டத்தால் விளங்குகிறது. இக்கல்வெட்டு சமணத்திற்கு வணிகரே ஆதரவளித்தனர் என்பதற்கு பெருஞ் சான்றாகிறது. ஏனெனில் மகாவீரரும் இதே வணிகர் குலத்தில் பிறந்த படைக் குடும்பத்தவர் என்பதே ஆகும். சமணத்தின் விரிந்த பரவல் சாதி உணர்வாலேயே ஏற்பட்டது. வணிகர் பலர் சமணத்தைக்  கைவிட்டதால் பிற்காலத்தில் சமணம் தமிழகத்தில் வீழ்ந்தது.

    பார்வை நூல்: தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 5 பக் 129 எண்:370

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் கழுகுமலைப் பேரூராட்சி கழுகுமலை வேட்டுவன் கோவில் 7 வரிக் கல்வெட்டு.

    1.  ஸ்ரீ திருநேற்சுறத்து அரைம
    2. லை ஆழ்வாற்குத் திருப்ப
    3. ணி செய்கிற பட்டன் சுந்தர
    4. னான நேற்சுறநாட்டுப் பெ
    5. ருங் கொல்லனுக்கு கரு
    6. ஞ்செய் கால் சந்த்ராதித்த[வல்]
    7. நிற்கச் சேத்து      

    அரை – நடு; ஆழ்வார் – தீர்த்தங்கரர்; கருஞ்செய் – குடைந்து செய்த; கால் – அடிப்பாகம், basement; சேத்து – செய்தான்

    விளக்கம் : திருநேர்சுரம் என்ற கழுகுமலையின் நடுமலையில் தீர்த்தங்கரருக்கு பூசை செய்யும் சமண பிராமணன் சந்திர சூரியர் நிலைக்கும் காலம் வரையில் நிலைக்கும்படியாக சுந்தரன் என்ற பெயருடைய நேற்சுரநாட்டின் பெருங் கொல்லனிடம் (சிற்பி) கருங்கல்லைக் குடைந்து அடித்தளம் செதுக்கச் செய்தான்.

    காலம் குறிப்பிடாத கழுமலைச் சமணக் குடைவறைக் கோவில் கல்வெட்டுகளிலேயே இது பழமையானதாக இருக்கலாம். ஏனெனில் இது அடித்தளம் அமைத்ததை பற்றிக் குறிக்கிறது. ஒரு கோவிலுக்கு அடித்தளமே முதலாகும். பிற பின்னர் தான் ஏற்படும்.

    பார்வை நூல்: தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 5 பக் 127 எண்: 357

    வேலூர் மாவட்டம் வேலூர் வட்டம் சின்னபாலம் பாக்கம் சரக்குமலை உச்சியின் குகை மேற்கூரையில் செவ்வகக் கட்டத்தில் வெட்டியுள்ள 6 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்திஸ்ரீ கோவிசைய நிருபதுங்கு 
    2. ற்கு யாண்டு பத்தொன்பதாவது பெ
    3. ரிய பெண்ணாகடத்து ஸிம்ஹ நந்தி படாரர்
    4. க்கு பங்கள நாடுடையார் கொடுக்கர் வீரத்
    5. தொழிலர் பேராற் பங்கள நாடுடையார்த் த
    6. (ள)கள் சிறிய நங்கையார் செய்வித்த ஸ்ரீ கோயில்  

    கொடுக்கன் – மகன்; வீரத்தொழிலர் – சத்திரியர்; நங்கை – அம்மையார்; தளகள் – தளவாட வீரர்கள்

    விளக்கம் : பல்லவன் நிருபதுங்க வர்மனின் 19 ஆம்  ஆட்சி ஆண்டு 888 இல் பெரிய பெண்ணாகடத்தின் சமண கோயில் அதிகாரி சிம்மநந்திக்கு பங்காளநாடு ஆளும் அரையன் மகனும் சத்திரியரும் ஆனவர் பெயரால் பங்கள நாட்டின் படை தளத் தலைவர் நினைவில் சிறிய அன்னை கட்டுவித்த திருக்கோவில் இது. இந்த பெண்ணாகடம் சித்தூர் அருகில் இருந்திருக்கலாம்.

    பார்வை நூல்: ஆவணம் இதழ் 7, 1996, பக். 17-18

    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் திருமலையில் சுவரோவியம் தீட்டிய குகைக்கு இடப்புற முல்லா பாறையில் வெட்டி உள்ள 8 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ கச்சியும் தஞ்சையங்கொண்ட ஸ்ரீ கன்
    2. னர தேவர்க்கு யாண்டு பத்தொன்பதாவது 
    3. கன்னரதேவ ப்ரித்வி கங்கரயர் தேவியார் கங்க மாதேவி 
    4. யார் கன்மி பொக்கிலிரு பிரிதியங்கரையர் மண
    5. வாட்டியார் பெற்றாள் நங்கையார் வை
    6. காவூர்த் திருமலை யக்ஷ படாரர்க்
    7. குத் துஞ்சா விளக்கொன்று சந்தி
    8. ராதித்தருள்ளவளவும் வைத்தார். 

    பொக்கு – கருவூலம்; கன்மி – அனுக்கர், attendar;

    விளக்கம் : காஞ்சியையும் தஞ்சையையும் கைப்பற்றிய இராட்டிரகூட வேந்தன் மூன்றாம் கிருஷ்ணனான கன்னரதேவனின் 19 ஆம் ஆட்சி ஆண்டு 953 இல் திருவண்ணாமலையை ஆண்டு கொண்டிருந்த மன்னர் கன்னரதேவ (கிருஷ்ணதேவ) பிரிதிவி கங்கரையரின் பட்டத்து அரசியான கங்க மாதேவியாரின் சார்பாக அவளது அனுக்கியான கருவூலக் காப்பாளராக இருக்கும் பிரிதியங்கரையருடைய மனைவியான பெற்றாள் நங்கை என்பவள் இந்த வைகாவூரில் உள்ள திருமலை யக்ஷ படாரர் சிலை முன்பாக அணையா விளக்கு ஒன்றை சந்திர சூரியர் உள்ள காலத்தளவும் எரியும்படி வைத்தாள்.

    இராட்டிரகூடன் கன்னரதேவனின் மேலாண்மையை ஏற்றதால் திருவண்ணாமலை மன்னன் பிரிதிவி கங்கரையன் தன் பெயர் முன்பாக கிருஷ்ணன் என்ற வேந்தன் பெயரை இணைத்துக் கொண்டான் என்று தெரிகிறது. அரசியின் அனுக்கி பிரிதியங்கரையன் மனைவி என்பதில் இருந்து இருவரும் ஏதோ வகையில் உறவினர் என்று புரிந்து கொள்ள முடிகிறது. அதனால் தான் பிரிதியங்கரயன் கருவூலக் காப்பாளனாக இருக்க முடிந்தது. முக்கிய பதவிகளில் அரச குடும்பத்தவரே அந்நாளில் அமர்த்தப்பட்டனர் என்பதற்கு இது சான்றாகிறது.

    பார்வை நூல்: தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 23, எண் 65, பக். 41

    திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் திருமூர்த்திமலை பாறையில் உள்ள 12 வரிக் கல்வெட்டு

    1.  பரிதாபி வருடம் கார்த்திகை மாதம் 1 தி இம்முப்பட்டத்துக் கணக்காண்ட
    2. எத்துலப்ப னாயக்கரவர்கள் நாளையில் போட்ட கல்வெட்டு. அமணே சுர சுவாமியுட 
    3. பூமி அமண சமுத்திரஞ் சீர்மையில் யாதாமொருத்தன் துரைத்தனத்துக்கு வந்தா 
    4.  லும் அவருட பெண்பிள்ளை கலியாணஞ் செய்தால் அந்தப் பிள்ளைக்கு 
    5.  நால் பொன்னுக்குள்ளாக கடமை போதவும் மாடுகள் சீதனங்குடுக்கவும் யிந்த தலத்துக் 
    6. கு முறையாருக்குப் பிள்ளை குடுத்துத் தலத்திலேயும் யிருந்தால் நாலுபேர் துரைமக்கள் வைத் 
    7.  த மானியம் விட்டு நடப்பிக்கவும், இதுக்கு மிகை யாதாமொருவன் பிள்ளைப் பிரியத்துக்கு எத்தா 
    8. யுடமை போட்டாலுங் கோபாதமத்தனை பூமி சீதனங் குடுத்தாலுமவன் கங்கைக் கரையிலே 
    9. காராம் பசுவை கொண்ண தோஷத்திலே போவான். அதிகாரத்தில் சிறிது திரவியமெச்சாக
    10.  ச் சம்பாதிச்ச பாகத்திலேயுங் கூட அ_ _ செய்து தானதர்மஞ் செய்து தீர்க்கமா 
    11. ய் நடந்துகொண்டவனுக்குக் காசியில் தீர்த்தமாடின பலன் உண்டு. யி_ _  ப்படி மே 
    12. னி கண்டிருந்து மீதி நடப்பிக்க இராமே _ _ த்தமனுக்கு 

    பட்டம் – நாற்றங்கால் பகுதி, ஆட்சி; கணக்கு – ஒழுங்கு சீல ஏற்பாடு, system; கடமை – மாப்பிள்ளை வீட்டார் மணப் பெண் வீட்டாருக்கு கொடுக்கும் வரதட்சணை; நாளை – வரும் காலம்; சீர்மை – நாட்டுப்பகுதி; துரை – வரி அதிகாரி; முறையார் – உறவினர், சொந்தம்

    விளக்கம் : இது பரிதாபி ஆண்டு கார்த்திகை மாதம் 1 நாள் 1792 இல் வெட்டப்பட்ட கல்வெட்டு. எத்துலப்ப நாயக்கர் என்ற பெயர் இவரை தெலுங்கர் என்று சுட்டுகிறது. இவர் தளி பாளையக்காரர் குடும்பத்தவர் ஆவார். இந்த மூன்று பாசன நிலப்பகுதியின் ஒழுக்க சீலத்தை ஆள்கின்ற எத்துலப்ப நாயக்கர் எதிர்காலத்தில் நடந்துகொள்ள வேண்டி நிறுத்திய ஒழுக்கக் கல்வெட்டு. இது அமணேசுவர சுவாமியின் (அருகன்) நிலப்பகுதி எனவே இங்கு அநியாயம் நடக்கக் கூடாது. இந்த அமணசமுத்திர நாட்டுப் பகுதியில் எவரேனும் ஒருவன் வரி அதிகாரி பதவிக்கு வந்தால் அவருடைய பெண் பிள்ளைக்குக் கலியாணம் செய்யும் போது மாப்பிளை வீட்டாரிடம் அந்த பெண்ணுக்கு நான்கு பொன்னுக்கும் குறைவாகத் தான் வரசட்சணை வாங்க வேண்டும். பெண் வீட்டாருக்கு மாடுகளையும் சீதனமாகக் கொடுக்கலாம். இந்த தலத்திலேயே வாழும் உறவினருக்குப் வரி அதிகாரி பெண் கொடுத்து அவர்கள் இந்த தலத்திலேயே வாழ்ந்தால் நான்கு பேருக்கு வரி அதிகாரியின் ஆள்கள் மானியம் கொடுத்து நடந்துகொள்ள வேண்டும். இதற்கு மேலாக எவரேனும் ஒருவன் பெண் பிள்ளையை மணம் செய்து கொடுத்துப் பிரிவதற்கு எவ்வளவு வரதட்சணை போட்டாலும் இதாவது, பசுவின் குளம்படி அளவு நிலத்தைக் கூட வரதட்சணையாக பெற்றாலும் கங்கைக் கரையில் காராம் பசுவைக் கொன்ற பாவத்தை கொள்வான். அதிகாரத்தில் சற்றே கூடுதலாக பொருள் அதிகமாக சம்பாதித்தாலும் அந்த அதிக உபரி பணத்தை தான தர்மம் செய்து நேரிய வழியில் நடந்து கொண்டவனுக்கு காசியில் குளித்த பயன் உண்டாகும். இப்படியாக மேற்படி உள்ளபடி நடக்கச் செய்வது இராமே _ _ த்தமனுக்கு கடமை ஆகிறது.

    வேலூர் விரிஞ்சிபுரத்து படைவீட்டு பிராமணர்கள் பெண் வீட்டாருக்கு கன்யாசுல்கம் என்ற வரதட்சணை கொடுக்க முடியாமல் தம் மகனுக்கு திருமணம் நடத்த முடியாமல் துன்புற்ற போது அதற்கு எதிராக ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதே போன்றே இந்த அமணசமுத்திரத்தில் வரி அதிகாரிகள் வீட்டில் பெண் எடுத்தவர்கள் வரதட்சணை கொடுமைக்கு ஆளாகி எத்துலப்ப நாயக்கரிடம் முறையிட அந்த வரதட்சணைக் கொடுமைக்கு அவர் வரம்பிட்டுப் பிறப்பித்த ஆணைக் கல்வெட்டே இது. எத்துலப்பர் ஒரு உண்மையான ஆட்சியாளராக தகுந்த நடவடிக்கை எடுத்துள்ளார் என்று தான் கூற வேண்டும். உள்நாட்டு ஆட்சி நீங்குவதற்கு முன் உள்நாட்டு ஆட்சியாளரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு என்ற வகையில் இது சிறப்பானது. 1801 க்கு பின் ஆங்கிலேயர் இவருள்ளிட்ட சில பாளையக்காரர் பாளையங்களை ஒழித்து தமது பிரிட்டிசு ஆட்சியை முழுமையாகத் தமிழகத்தில் நிறுவினர் என்று ஆவணச் சான்றுகள் தெரிவிக்கின்றன.

    பார்வை நூல்: கொங்கு நாட்டுச் சமணக் கல்வெட்டுகள், புலவர் செ இராசு, பக். 260

    கோயம்பத்தூர் மாவட்டம் அவிநாசி வட்டம் ஆலத்தூர் சமணப் பள்ளி கருவறை நிலைக்காலில் உள்ள 12 வரி தமிழ் எழுத்துக் கல்வெட்டு

    1. பொங்கல் 
    2. லூர் வண்ணா 
    3. ன் நீலஞ் 
    4. செல்லன் 
    5. மணவாட்டி 
    6. காவஞ் சாத்தி 
    7. யையும் ம
    8. கள் செல்ல ப 
    9. ணத்தியை 
    10. யும் சாத்தி 
    11. நாட்டுவித்த 
    12. ல் நிலை  

    சாத்தி – நினைவில் கொண்டு பெயரிட்டு

    விளக்கம் : இதன் காலம் குறிக்கப்படவில்லை எனினும் தமிழ் எழுத்தில் உள்ளதால் சோழர் ஆட்சி ஏற்பட்ட காலத்தது என்று கொள்ளலாம். இது வணிகர் அல்லதா எளியோர் சமணத்தை பின்பற்றியதற்கு அடையாளமாக உள்ள கல்வெட்டு. பொங்கலூரில் வாழும் வண்ணான் நீலன் செல்லன் என்பவன் இறந்த தன் மனைவி காவன் சாத்தியையும் மகள் செல்லப் பணத்தியையும் நினைவில் வைத்து நிறுத்திய கல் வாயில் நிலை என்று உள்ளது.

    வணிகரின் வீரதாவளத்தில் துணி துவைத்திருந்தால் அந்த சமண வணிகரின் தொடர்பால் வண்ணார் சமண சமயத்தை தழுவி இருக்கலாம் என்பதில் வியப்பு ஒன்றும் இல்லை.

    பார்வை நூல்: கொங்கு நாட்டுச் சமணக் கல்வெட்டுகள், புலவர் செ இராசு, பக். 256

    திருச்சி மாவட்டம் பொன்மலை கீழ்க்குறிச்சி பௌத்தப்பள்ளி கல்வெட்டு

    ஸ்வஸ்திஸ்ரீ வீரத்தாவளத்தில் பௌத்தப் பள்ளிக்கு இந்த செந்தாமரைக் கண்ணநல்லூர் முதலடங்க இறையிலியான பள்ளிச் சந்தம். 

    வீரதாவளம் – வணிகப்படை வீரர் ஓய்வாக தங்கும் ஊர்; பள்ளிச் சந்தம் – பௌத்தப் பள்ளிக்கு வழங்கும் கொடை

    விளக்கம் : இந்த கல்வெட்டு அருகே 11 ஆம் நூற்றாண்டு புத்தர் சிற்பம் ஒன்று பத்மாசனத்தில் அமர்ந்து தியான நிலையில் தலை இழந்து காணப்படுகிறது. வணிகரின் படை ஆள்கள் ஓய்விற்கு தங்கும் இடமான இந்த செந்தாமரைக் கண்ணநல்லூர் என்னும் கீழ்க்குறிச்சியில் அமைந்த பௌத்த பள்ளிக்கு இவ்வூரின் பொருள் வரியையும் சேர்த்து இறையிலியாக பள்ளிக்கொடை வழங்கினர் வணிகர் என்கிறது இக் கல்வெட்டு.

    இக்கல்வெட்டின் மூலம் தென்னகத்தில் காலூன்றாத புத்த மதம் வணிகரின் ஆதரவால் சில இடங்களில் தலை தூக்கி நின்றது என்பது விளங்குகிறது. இது ஒரு அரிதான புத்த மதக் கல்வெட்டு. சில வட நாட்டு வணிகரோ அல்லது ஈழ வணிகரோ இங்கு வந்து தங்குவதால் அவரோடு நல்லுறவு பேணும் எண்ணத்தில் இங்கு புத்தர் கோவிலை வணிகர் கட்டி இருக்கலாம்.

    பார்வை நூல்: கல்வெட்டு காலாண்டு இதழ் 57, 2002, பக். 15

    Share
  • (Peer Reviewed) நச்சினார்க்கினியரின் உரைமரபுகள்

    (Peer Reviewed) நச்சினார்க்கினியரின் உரைமரபுகள்

    டாக்டர். வே. விக்னேசு,
    தமிழ்  உதவிப்பேராசிரியர்,
    பூ. சா. கோ. கலை அறிவியல் கல்லூரி,
    கோயம்புத்தூர்641014.
    vignesh@psgcas.ac.in

    தோற்றுவாய்:

    தமிழ்த்திருநாட்டிற்கு வற்றாத வளனாய்க் குன்றாத மணி விளக்காய் வாய்ந்தொளிர்வது தொல்காப்பியம் என்னும் முழுமுதல் இலக்கணப் பெருநூலாம். இந்நூல்  பல்லாயிரம் யாண்டுகட்கு முன்னர் தமிழகத்தில் தோன்றி, யாண்டு பலகடந்தும் வேரூன்றி நிற்பதற்குக் காரணம் உரையாசிரியப்பெருமக்களின் உரைகள் என்னும் கவசத்தால் வழிவழியாகப் போற்றிப் பாதுகாக்கபட்டமையேயாம். இங்ஙனம் அமைந்த தொல்காப்பிய உரைகளுள் உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியரின்  உரைப்போக்கையும் உரைமரபுகளையும் இக்கட்டுரை சுருங்க விளக்க முற்படுகின்றது.

    தொல்காப்பிய உரையாசிரியர்கள் :

    தொன்மைத் தமிழிலக்கண நூலான தொல்காப்பியத்திற்குக் கிட்டிய பழையவுரைகளுள் இளம்பூரணருரையே பழமையானது; நூல் முழுமைக்கும் கிடைத்துளது. நச்சினார்க்கினியருரை எழுத்து, சொல், பொருளில் முன்னுள்ள அகத்திணை, புறத்திணை, களவு, கற்பு, பொருள் என்னும் ஐந்தியல்களுக்கு மட்டுமே கிடைத்துளது. எஞ்சிய பொருட் பகுதியாகிய மெய்ப்பாடு, உவமம், செய்யுள், மரபு என்னும் நான்கியல்கட்குப் பேராசிரியருரையே கிடைத்துளது. மற்றைய பகுதிகட்குப் பேராசிரியருரை கிடைத்திலது. அன்றியும், நச்சினார்க்கினியருரையும், பேராசிரியருரையும் இயைந்து ஒருவருரையாகத் தொல்காப்பியப் பொருளதிகாரம் முழுமைக்கும் அமைந்துள்ளது. அங்ஙனமே, நடுநின்ற சொல்லதிகாரத்திற்கு முன் சுட்டிய அறுவருரைகள் கிடைத்துள.

    தமிழிலக்கிய இலக்கணங்களுள் உரை பலவாக வாய்க்கப்பெற்ற நூல்களுள் தொல்காப்பியமும் ஒன்றாம். தொல்காப்பியரின் உளக்கிடக்கையை உணர்ந்து உலகிற்குணர்த்தச் சான்றோர் பெருமக்கள் பலரும் காலந்தோறும் முயன்றதன் விளைவே தொல்காப்பியத்தின் உரைப்பெருக்கத்திற்குக் காரணமாம். இவ்வகையில், ’தொல்காப்பியமும் சங்க நூல்களும் கி.பி. நான்காம் நூற்றாண்டுக்குப் பின் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தால் கல்வியுலகிற் பரவாதிருந்தன’ என்றும், ’கி.பி. 11-ஆம் நூற்றாண்டுக்குப் பின் தொல்காப்பிய இயக்கமும் சங்கவிலக்கிய மறுமலர்ச்சியும் தோன்றின’ என்றும் உரைக்கும் வ. சுப. மாணிக்கனார், தொல்காப்பிய இயக்கம் பற்றியும், தொல்காப்பியக் கல்வி பரவியமை பற்றியும் கூறும் கருத்துக்கள் இவண் நோக்கத்தக்கனவாம். அவர் கூறுமாறு:

    இவ்வியக்கத்தின் தலைவர் இளம்பூரணர்; உரையாசிரியர் என்ற கீர்த்தியைத் தமக்கே உரிமை கொண்டவர். நேராப் புகழ்மைப் பேராசிரியரும், ஆனாப் பெருமைச் சேனாவரையரும், மெய்யுரை கண்ட தெய்வச்சிலையாரும், உச்சிமேற்புலவர் நச்சினார்க்கினியரும், சொல்லுரைகண்ட கல்லாடனாரும் இவ்வியக்கத்தின் படையாளர்கள். இப்பேரியக்கம் மூன்று நான்கு நூற்றாண்டுகள் தொல்காப்பியக் கல்வியைக் கற்றாரிடைப் பரப்பியது (தொல்காப்பியக்கடல், ப. 264) என்பது அவர் கருத்தாம்.

    இன்னவகையில், தொல்காப்பிய நிலைபேற்றுக்கும், தொல்காப்பியக் கல்வி பரவலுக்கும் உரையாசிரியர்களின் உரைகளும் அன்னோர் மேற்கொண்ட உரைமுறைகளும் பெருங்காரணமாம்.

    நச்சினார்க்கினியர்:

    தமிழிலக்கிய, இலக்கண நூல்களுக்கு உரையெழுதிய உரையாசிரியர்களுள் மேலோங்கி நிற்பவர் நச்சினார்க்கினியராவர்.

    பாரத்தொல் காப்பியமும் பத்துப்பாட் டுங்கலியும்
    ஆரக் குறுந்தொகையுள் ஐந்நான்கும் – சாரத்
    திருத்தகு மாமுனிசெய் சீந்தா மணியும்
    விருத்திநச்சி னார்க்கினிய மே.

    எனவரும் பழம்பாடலானது இவர் உரைகண்ட நூல்களைக் குறிப்பிடுகின்றது. இவற்றுள், குறுந்தொகையுரை கிடைத்திலது.

    தொல்காப்பியம் முழுமைக்கும் இவர் காண்டிகையுரை எழுதியுள்ளாராயினும், பொருளதிகாரத்தின், மெய்ப்பாட்டியல், உவமவியல், மரபியல் என்ற இயல்களுக்கு இவர் வரைந்த உரை கிடைத்திலது. தொல்காப்பியம், கலித்தொகை, பத்துப்பாட்டு, சீவகசிந்தாமணி என்பவற்றிற்கு இவர் வரைந்த உரைகள் சிறப்பிற்குரியன.

    இவரின் புலமையை வியந்து “உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர்” என்று இலக்கணக்கொத்து ஆசிரியரும், அமிழ்தினும் இனிய தமிழ்மடவரல் செய் அருந்தவத்தின் பெரும்பயனாக அவதரித்து அருளியவர்” என்று உ.வே. சாமிநாதையரும், பன்னூலறிந்த செந்நெறிப்புலவர்” என்று அரசஞ்சண்முகனாரும் “செந்தமிழ் மாமுகில் வள்ளல்” என்று மறைமலையடிகளாரும் புகழ்ந்துரைக்கின்றனர். அன்றியும், தமிழில் நல்ல புலமை அடைய விரும்புவர்கள் நச்சினார்க்கினியருடைய உரைகளில் தோய்ந்தாலன்றிப் புலமை நிரம்பாது என்று கூறுகின்ற அளவிற்கு உரையாசிரியர்களுள் தலைநின்ற சிறப்புக்குரியவர் நச்சினார்க்கினியர்” (தொல். சொல். உரைக்கொத்து- ப.109) என்று பண்டித வித்துவான். தி.வே.கோபாலையரவர்கள் உவந்து போற்றுதலும் ஈண்டுச் சுட்டத்தக்கதாம்.

    பாற்கடற் போல பரந்த நன்னெறி…” எனத்தொடங்கும் உரைச் சிறப்புப்பாயிர அகவற்பா, நச்சினார்க்கினியரின் பெருமைகளைப் பறைசாற்றுகிறது. இப்பாயிரத்தால் இவர்தம் வரலாற்றையும் ஒருவாற்றான் அறியவியலுகிறது.

    காலமும் சமயமும் :

    பதினான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த இவர், மதுரையில் அந்தணர் குலத்தில் பாரத்துவாச கோத்திரத்தில் பிறந்தவர் என்றும், போதகாசிரியராக வாழ்ந்தவர் என்றும், தூய ஞானம் நிறைந்த சிவச்சுடர் என்றும் பாயிரம் இவரைப் போற்றுகிறது.

    இவரின் பெயர் சிவபெருமானின் திருப்பெயர்களுள் ஒன்றாம். இவர் சிவபெருமானையே பரம்பொருளாக வழிபட்ட சைவசமயத்தினரென்பது இவரின் பெயராலும் இவர் தம் உரையில் திருவாசகம், திருக்கோவையார் இன்னோரன்ன நூல்களிலிலிருந்து மேற்கோள்களை எடுத்துக்காட்டி இருத்தலானும் அறியவியலுகின்றது. அங்ஙனமே, திருமுருகாற்றுப்படையின் அடிகளைப் பலவிடங்களில் இவர் எடுத்துக்காட்டுவதிலிருந்து அந்நூலில் இவர்க்குள்ள ஈடுபாடு பெரிதெனத் தெரிகிறது.

    இவர் சிவநேயச் செல்வராயினும் பிற சமயங்களையும் போற்றும் சமயப்பொறை யுடையராகவே இவர் விளங்கியமை தொல். சிறப்புப்பாயிரவுரை, மொழிமரபு – 13, அகத்திணையியல்- 32, புறத்திணையியல் – 21 என்றின்னவற்றிற்குரிய இவருரையான் புலனாகின்றது.

    பல்துறைப் புலமை :

    தமிழ் மொழியில் உள்ள பல்வகை நூல்களிலும் மிகுந்த பாண்டித்தியம் உடையவர் இவர். வடமொழியில் காவிய நாடக அலங்காரங்களுக்கு உரைகண்ட திரு. மல்லிநாதசூரி என்னும் புலவரைப் போல் தமிழ்மொழிக்கு வாய்த்தவர் இவர் என்று ஆன்றோர்கள் போற்றுவர்.

    தொல்காப்பியவுரை முதலியவற்றில் வேதம், வேதாங்கம் முதலிய பல நூல்களிலிருந்தும் அவற்றின் உரைகளிலிருந்தும் பற்பல அரிய விஷயங்களை ஆங்காங்கு எடுத்துக்காட்டி நன்கு விளக்கிப் போகின்றமையாலும் பிறவாற்றாலும் இவரை வடமொழியிற் பலவகையான கலைகளிலும் மிக்க பயிற்சியுள்ளவரென்று சொல்லுதற்கிடமுண்டு” (சீவகசிந்தாமணி- ப. 33) என்று புகழ்வர் உ.வே. சாமிநாதையரவர்கள்.

    பன்னூற் பயிற்சியோடு பல்வேறு கலைகளையும் கற்றுத்தேர்ந்தவர் இவர். இசை, நாடகம், தத்துவம், வானியல், சோதிடம், மருத்துவம், கட்டடக்கலை முதலான கலைகளில் மிகுதிறம் கொண்டவர் என்பதை இவரின் உரைக் குறிப்புக்களிலிருந்து அறியவியலுகிறது.

    தமிழ்மொழிப் பற்று :

    இவரின் தமிழ்மொழிப் பற்றினை வெளிப்படுத்தும் இடங்களாக,

    அகரம் முதல் ஆரியத்திற்கும் ஒக்குமேனும் ஈண்டுத் தமிழெழுத்தே கூறுகின்றார்” “இவை தமிழெழுத்து என்பது அறிவித்தற்குப் பின்னர் வைத்தார்” (நூ.1)

    தமிழ்ச் சொல்லெல்லாம் ஒருதலையாகப் பொருளுணர்த்தும்” (பெய.1)

    காலம் உலகம் என்பன வடசொல் அன்று” (கிளவி. 58)

    என்றின்னவற்றைக் காட்டலாம்.

    உரைப்போக்கு :

    நச்சினார்க்கினியருரை தெளிவும், விளக்கமும், புலமைநலனும் உடையதாம். சொற்செறிவும் பொருட்செறிவும் மிக்கதும், இலக்கிய இலக்கணத் தோய்வுடையதுமாம்.

    இவர்தம் தொல்காப்பிய உரையைப் பொதுவகையில் நோக்குழி, இவருரையமைப்பு, பாயிரவுரை, அதிகாரவுரை, இயல் உரை, நூற்பா உரை என்னும் நான்கு பகுதிகளை உடையதாக அமைந்துள்ளது.

    மேற்கோளாக எடுத்துக்காட்டும் நூலின் பெயரையும், நூலாசிரியர் பெயரையும் இவர் பெரும்பாலும் குறிப்பிடுவதில்லை.

    இவர் சிலவிடங்களில் செய்யுட்களை உரைநடையாக எழுதிச்செல்வதுண்டு. உரை வகுக்குங்கால், இவர் முன்னோர்தம் உரைநெறிகளைப் பின்பற்றிடினும்,   நூற்பா கிடந்தாங்கே ஆற்றொழுக்காகப் பொருள் விரித்தலின்றிக் கொண்டுகூட்டிப் பல்வேறிடங்களில் பொருள் கூறியுள்ளார். இதுபற்றி, மறைமலையடிகளார், வ.சுப. மாணிக்கனார், க. வெள்ளைவாரணனார் போன்ற பேராசிரியர்கள் தம் நூல்களில் இவரைக் கடிந்துரைத்துள்ளனர்.

    எழுத்ததிகார உரையமைப்பு :

    நச்சினார்க்கினியரின் எழுத்ததிகாரவுரை பாயிர உரை, அதிகார உரை, இயல் உரை, நூற்பா உரை என நான்கு பகுதிகளை உடையது.

    பாயிர உரையைப் பொதுப்பாயிரம், சிறப்புப்பாயிரம் என இரு வகையாகப் பிரித்துக்கொண்டு உரை செய்திருக்கின்றார் நச்சினார்க்கினியர். பாயிர உரை இளம்பூரணருரையை ஏற்றதாகும். அதில் இளம்பூரணரின் பெயரை மனமுவந்து குறிப்பிடுகின்றார். பொதுவகையில் இப்பாயிர உரை இவரின் உவமை நலத்தைச் சாற்றுவதாக அமைகின்றது.

    பாயிர உரையினையடுத்து அதிகார உரை அமைகிறது. அதிகார உரையும் தனித்துக் கூறப்படவில்லை. முதல் நூற்பாவினை யடுத்தே கூறப்பட்டுள்ளது. இவ்வதிகாரம் என்ன பெயர்த்தோவெனின்” என வினாவெழுப்பி அதிகாரத்தில் கூறப்படும் கருத்துக்களைத் தொகுத்து முன்னுரையாகக் கூறுகின்றார்.

    எழுத்ததிகார  நூற்பாவுரை கருத்து, பொருள், காட்டு, விளக்கம் என அமைகின்றது, ஆயின், இந்த அமைப்பும் அனைத்து நூற்பாக்களிலும் பின்பற்றப்படவில்லை.

    சில நூற்பாக்களில் கருத்துரையையடுத்து, விளக்கவுரையும் அதனையடுத்து எடுத்துக்காட்டும் என முன்னும் பின்னுமாக மாறி அமைந்திருக்கின்றன.

    மொழிமரபு 31-ஆம் நூற்பாவுரையில் பொருளுரை முதலிலும், அடுத்துக் கருத்துரையும், அதனையடுத்து எடுத்துக்காட்டும், இறுதியாக விளக்கவுரையும் என்ற  நிலையில் உரையமைப்பு உள்ளது. பொதுவாகக் கருத்துரை தொடக்கமாக அமைவதுண்டு. ஆயின், இந்நூற்பாவில் அம்முறை மாறியுள்ளது.

    பெரும்பான்மையாக “இது” அல்லது “இஃது” எனத் தொடங்கி உணர்த்துதல் “நுதலிற்று”  என ஈற்றில் முடித்துக் கருத்துரை கூறுவார். ஆயினும் சில இடங்களில், ‘உணர்த்துகின்றது’, ‘கூறுகின்றது’. ‘கொள்கின்றது’, ‘என்கின்றது’, ‘விளக்குகின்றது’, ‘அகற்றியது’ என்றும் ஈற்றில் முடித்தலும் உண்டு. நூற்பாவில் “இதன் பொருள்” எனக் குறியிட்டுப் பதவுரையாக எழுதுகின்றார்.

    பொதுவகையில் நோக்கின். இவரின் எழுத்ததிகார உரையமைப்பானது இளம்பூரணரின் எழுத்ததிகார வுரையமைப்பினை ஒட்டியே செல்கின்றது என்ற அளவில் நிறுத்தி, இனி இவரின் சொல்லதிகார உரையமைப்பினை ஆய்வோம்.

    சொல்லதிகார உரையமைப்பு :

    சொல்லதிகார நச்சினார்க்கினியருரை அதிகாரவிளக்கம், இயல்விளக்கம், கருத்துரை, பொருளுரை, எடுத்துக்காட்டு, விளக்கம் என்னும் அமைப்பினைக் கொண்டது.

    இளம்பூரணர், சேனாவரையர் இவ்விருவரும் சொல்லதிகார உரையில் அதிகார விளக்கத்தைக் கிளவியாக்கத்தின் முதல் நூற்பாவினை அடுத்துக்கூறியதனைப் போன்றே இவரும் கூறியுள்ளார். இவ்வதிகாரம் என்ன பெயர்த்தோ எனின்” என வினவி அதிகார விளக்கம் தருகின்றார். அதிகார விளக்கத்தில் ஒன்பது இயல்களின் கருத்துக்களையும் தொகுப்புரையாகத் தந்துள்ளார். இயல் பற்றிய விளக்கத்தினை இயலின் முதல் நூற்பாவினை அடுத்து வழங்கியுள்ளார். முதல் இயலுக்குரிய இயல் விளக்கத்தினை மட்டும் அதிகார உரையுனை அடுத்து அமைத்துள்ளார்.

    கருத்துரை வழங்குங்கால், எழுத்ததிகாரத்தில் கூறியாங்கே, ‘இது’ அல்லது ‘இஃது’ எனத் தொடங்கிக் கருத்துரை கூறுகின்றார். ஆயினும், நுதலிற்று”  என ஈற்றில் எங்கும் முடித்தாரில்லை. ‘பகுக்கின்றது’, ‘அமைக்கின்றது’, ‘ஆராய்கின்றது’, ‘கூறுகின்றது’, ‘முடிக்கின்றது’ முதலிய சொற்களைக் கொண்டே முடிக்கின்றார்.

    சில இடங்களில் தொடர்புடைய நூற்பாவாக இருப்பின்,  ‘இதுவும் அது’ என்று மட்டுமே குறியிட்டு, அந்நூற்பாவிற்குக் கருத்துரை வழங்காது விடுதலுமுண்டு.

    நூற்பா உரையினையடுத்து எடுத்துக்காட்டும் அதனையடுத்து மேற்கோள் விளக்கமும் காணப்படுகின்றது. ஆயினும், இவ்வமைப்பு முறையே சொல்லதிகார அனைத்து இயல்களிலும் உள்ளதா எனில், ஒரோவிடங்களில் இவ்வமைப்பு முறை முறையாகப் பின்பற்றப்படவில்லை.

    இனி, பொருளதிகார நச்சினார்க்கினியர் உரையமைப்பு பற்றிய ஆய்வினைத் தொடர்வாம்.

    பொருளதிகார உரையமைப்பு :

    பொருளதிகார நச்சினார்க்கினியருரை அதிகார முன்னுரை, இயல் விளக்கம்,  நூற்பா உரை என்ற மூன்று பகுதிகளை உடையதாக அமைகின்றது.

    எழுத்து, சொல் அதிகாரங்களைப் போன்றே பொருளதிகாரத்திற்கும் அதிகார முன்னுரையினைத் தனித்துக் கூறவில்லை. முதல் நூற்பாவினை அடுத்துக் கூறுகின்றார். எழுத்து, சொல் அதிகாரங்களுக்கு அதிகார முன்னுரை கூறுங்கால், இவ்வதிகாரம் என்ன பெயர்த்தோ எனின்” என்று வினா எழுப்பிக் கூறிய இவர், இவ்வதிகாரத்தில் அங்ஙனம் கூறவில்லை.

    நூற்பாவிற்குரிய உரையானது கருத்துரை, பதவுரை, எடுத்துக்காட்டு, விளக்கவுரை, மேற்கோள்களைப் பொருத்திக் காட்டுதல் என்னும் முறையில் அமைந்து செல்கின்றது. ஆயினும், இவ்வமைப்பு முறையே அதிகாரம் முழுவதும் பின்பற்றப்படவில்லை சில இடங்களில் மாறுவதுமுண்டு. களவியலுக்கு இவர் வரைந்துள்ள இயல் விளக்கம் குறிப்பிடத்தக்கது.

    கருத்துரையானது ‘இது’ அல்லது ‘இஃது’ எனத் தொடங்கி ‘உணர்த்துதல் நுதலிற்று’ என ஈற்றில் முடித்து அமைகிறது.

    இவ்வகையில் பொருளதிகார உரையமைப்பானது ஏனைய உரையமைப்பினின்றும் வேறுபட்டு நிற்கிறது.

    சிறப்பு உரைநெறி :

    அதிகார இயைபு, இயல் இயைபு, நூற்பா இயைபு ஆகியன கூறல். வினாவிடை நெறி,  நூற்பாவை நிலைப்படுத்தல், மிகையினாலும் இலேசினாலும் சொல், சொற்றொடர்களை நிலைப்படுத்தல், நூற்பாவின் இன்றியமையாமையை உறுதிப்படுத்தல், இலக்கணக்குறிப்பு, இலக்கணமுடிபு கூறுதல் இன்னோரன்னவை இவரின் சிறப்பான உரை நெறிகளாகச் சுட்டத்தக்கனவாம்.

    மாணாக்கருக்கு உய்த்துணர வைத்தல் :

    மாணாக்கருக்கு ஆராய்ச்சியறிவு மிகுதலுக்காக அவர்கள் தம் அறிவைச் செலுத்த வாய்ப்பளித்தல் இளம்பூரணர், சேனாவரையர் ஆகியோர் இயல்பாம். இதனை, மாணாக்கர்க்கு உணர்வு பெருகல் வேண்டி வெளிப்படக் கூறாது உய்த்துணர வைத்தல் அவர்க்கியல்பு” (சொல்.சேனா.நூ.1) எனச் சேனாவரையர் கூறுமாற்றானும், அவ்விருவர் உரைகளானும் அறியவியலுகிறது. ஆயின், நச்சினார்க்கினியரோ, ‘மாணாக்கருக்கு உய்த்துணர்வு இன்று’ என்னும் கருத்தினர். இதனை, மாணாக்கர்க்கு உய்த்துணரும் உணர்வு இன்று” (சொல்.நச்சி.நூ.203) என இவர் கூறியவதனால் அறியவியலும். இதுபற்றியே இவர் எதனையும் விளக்கியே கூறுவார் என்பது ஈண்டுச் சுட்டத்தக்கதாம்.

    சிறப்பாக உரை வரையும் நூற்பாக்கள் :

    பல்லாற்றானும் சிறப்புடையது இவருரை என்பதை எடுத்துக்காட்டுதற்குப் பல இடங்களைச் சான்றாகக் கூற இயலும். ஆயினும், சுருக்கங்கருதி இவர் சிறப்பாக உரை வரையும் நூற்பா எண்களை மட்டும் ஈண்டுக் குறிப்பிடுவாம்.

    அவை : எழுத்ததிகாரம் – மொழி.13, 18, புணர்.38,17 சொல்லதிகாரம் – நூ. 37, 50, 51, 71, 83, 95, 113, 171, 222, 360, 399, 400, 410, 441 பொருளதிகாரம் – அகத்.5,6,8 புறத்.17, களவு.1 முதலியனவாம்.

    சொற்பொருள் விளக்கம் :

    இவர் நல்கும் சொற்பொருள் விளக்கங்கள் பன்முறையும் படித்தின்புறத்தக்கன. சான்றுக்காகச் சிலவற்றை எடுத்துக்காட்டுதும்.

    குடிமை ஆண்மை இளமை…” எனவரும் சொல்லதிகார நூற்பாவிற்கு உரைகூறும் இவர் “குடிமையாவது குடிப்பிறப்பிற்கு ஏற்ற ஒழுக்கம்”, “ஆண்மையாவது ஆளுந்தன்மை”, “இளமையாவது காமச் செவ்வி நிகழ்வதோர் காலம்”, “வன்மையாவது ஒரு தொழிலை வல்லுதல்”, “பெண்ணையாவது கட்புலன் ஆயதோர் அமைதித் தன்மை” என்றெல்லாம் வனப்புற விளக்குகின்றார்.

    ‘அகம்’ என்பதற்கு இவர் கூறும் விளக்கம் அறிந்து போற்றத்தக்கது. அவ்விளக்கம் வருமாறு:

    ஒத்த அன்பான் ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்துப் பிறந்த பேரின்பம், அக்கூட்டத்தின் பின்னர் அவ்விருவரும் ஒருவருக்கொருவர் தத்தமக்குப் புலனாக இவ்வாறிருந்தது எனக் கூறப்பட முடியாததாய், யாண்டும் உள்ளத்து உணர்வே நுகர்ந்து இன்பம் உறுவதோர் பொருளாதலின் அதனை அகம் என்றார்”

    என்பது இவரின் நயமான விளக்கம்.

    மறுப்பு நலன் :

    தமக்கு முன்னுள்ள உரையாசிரியர்களின் கருத்துக்கள் ஏற்புடையதாயின், மனமுவந்து குறிப்பிடும் நச்சினார்க்கினியர், தன் கருத்துக்கு ஒவ்வாத கருத்துக்களாயின் மறுத்துச் செல்கின்றார்.

    அவ்வாறு மறுக்கின்ற பொழுது “பொருள் கூறினாரால் உரையாசிரியர் எனின் கூறியது கூறல் ஆம். ஆகலின் அது பொருந்தாது”, “என்றாரால் உரையாசிரியர் எனின் பொருந்தாமை யுணர்க”, “ஈண்டுச் சேனாவரையர் கூறிய பொருட்கு விடையின்மை உணர்க” என்பது போன்று இளம்பூரணர், சேனாவரையர் இருவர் பெயர்களையும் குறிப்பிட்டு மறுத்தலும், மாறுகொளக் கூறல் என்னும் குற்றம் தங்கும்”, “வடசொல்லென மறுக்க”, “ஆசிரியர்க்குக் கருத்தன்மை உணர்க”, “ஆசிரியர்க்கு அங்ஙனம் பொருள் கூறுதல் கருத்தன்மை அறிக”, “அவ்வாறு கூறுதல் பொருளன்மை உணர்க” என்றெல்லாம் அவர்களுடைய பெயர்களைக் குறிப்பிடாமலேயே மறுத்தலும் உண்டு.

    இன்னும் சிலவிடங்களில் இளம்பூரணருரையைச் சேனாவரையர் மறுக்கினும், இவர் இளம்பூரணருரையையே தழுவி, சேனாவரையரின்  மறுப்பிற்கு மறுப்பு வழங்காமலும், தாம் ஏற்றுக்கொண்ட இளம்பூரணர் கருத்துக்கள் ஏற்புடையன என்பதற்குக் காரணம் காட்டாமல் போதலும் உண்டு. இன்னும் பல இடங்களில் இளம்பூரணர், சேனாவரையர் ஆகியோர் கூறாத உரைகளை வகுத்தலும் உண்டு.

    பேராசிரியர் உரையைப் பெரும்பாலும் ஏற்று உரையெழுதும் இவர், செய்யுளியலில் சில இடங்களில் அவருரையை மறுத்துச் செல்கின்றார்.

    இவ்வகையில், நன்மை கண்டவிடத்து ஏற்றுப் போற்றலும், பிழை கண்டவிடத்துக் கடிந்து ஒதுக்கலும் இவரின் மறுப்புநலனாம்.

    முடிபுகள் :

    இதுகாறுங் கூறியவற்றைத் தொகுத்து நோக்கின்,

    • தொல்காப்பிய நிலைபேற்றுக்கும், தொல்காப்பியக் கல்வி பரவலுக்கும் உரையாசிரியர்களின் உரைகளும் அன்னோர் மேற்கொண்ட உரைமுறைகளும் பெருங்காரணமாம்.
    • அவ்வுரையாசிரியப் பெருமக்களுள் நச்சினார்க்கினியரின் உரைப்போக்கும் அவர் கொண்ட உரைமரபுகளும் தனிச்சிறப்புடையனவாய் இலங்குகின்றன.
    • ஆசிரியர் தொல்காப்பியனாரின் உளக்கிடக்கைப் பலவிடங்களில் இவருரைப்பகுதிகளான் இனிது விளங்குகின்றமையே இவருரைத் திறனின் சால்பினைக் காட்டவல்லதாம்
    • அன்றியும், தொல்காப்பியம் முழுமைக்கும் இவர் காண்டிகையுரை எழுதியுள்ளாராயினும், பொருளதிகாரத்தின், மெய்ப்பாட்டியல், உவமவியல், மரபியல் என்னும் இயல்களுக்கு இவருரைதானும் கிட்டாமற் போயினமை தொல்காப்பிய ஆய்வுலகிற்குப் பேரிழப்பேயாம்.

    என்பன இக்கட்டுரையின் முடிபுகளாம்.

    துணை நின்ற நூல்கள் :

    தொல்காப்பியம், எழுத்ததிகாரம், இளம்பூரணருரை,  (ஞா. தேவநேயப்பாவாணர்  விளக்கவுரையுடன்)  சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1955.

    தொல்காப்பியம், எழுத்ததிகாரம், இளம்பூரணருரை,  (அடிகளாசிரியர் பதிப்பு)      காவேரி கலர் அச்சகம், கும்பகோணம், 1969

    தொல்காப்பியம், எழுத்ததிகாரம், இளம்பூரணருரை,  (கு. சுந்தரமூர்த்தியவர்கள் விளக்கவுரையுடன்)  அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 1969.

    தொல்காப்பியம், சொல்லதிகாரம், இளம்பூரணருரை, (கு. சுந்தரமூர்த்தியவர்கள் விளக்கவுரையுடன்) சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.- 1973.

    தொல்காப்பியம், சொல்லதிகாரம், சேனாவரையருரை, (ஞா. தேவநேயப்பாவாணர் மற்றும் ஆ. பூவராகம்பிள்ளை விளக்கவுரையுடன்)  சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. – 1970.

    தொல்காப்பியம், சொல்லதிகாரம், சேனாவரையருரை, (கு. சுந்தரமூர்த்தியவர்கள் விளக்கவுரையுடன்)  அண்ணாமலைப் பல்கலைக்கழகம  – 1981.

    தொல்காப்பியம், சொல்லதிகாரம், சேனாவரையருரை, சி. கணேசையர் பதிப்பு, வடஇலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம், சுன்னாகம், இலங்கை, 1978.

    தொல்காப்பியம், சொல்லதிகாரம், நச்சினார்க்கினியருரை,(கு. சுந்தரமூர்த்தியவர்கள் விளக்கவுரையுடன்) சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.- 1962.

    தொல்காப்பியம், சொல்லதிகாரம், நச்சினார்க்கினியருரை, இராமகோவிந்தசாமிப் பிள்ளை பதிப்பு,  சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர், 1997.

    தொல்காப்பியம், சொல்லதிகாரம், நச்சினார்க்கினியருரை,  (கு. சுந்தரமூர்த்தியவர்கள் விளக்கவுரையுடன்)  சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. – 1962.

    தொல்காப்பியம், சொல்லதிகாரம், தெய்வச்சிலையாருரை,  கரந்தைத் தமிழ்ச்சங்கப் பதிப்பின் நிழற்படப் பதிப்பு,  தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 2010.

    தொல்காப்பியம், சொல்லதிகாரம்,  தெய்வச்சிலையாருரை, (கு. சுந்தரமூர்த்தியவர்கள் விளக்கவுரையுடன்)  சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, – 1963.

    தொல்காப்பியம், சொல்லதிகாரம், கல்லாடனார் விருத்தியுரையும் பழையவுரையும், (கு. சுந்தரமூர்த்தியவர்கள் விளக்கவுரையுடன்)  சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, – 1964.

    தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பு, பி.சா. சுப்பிரமணிய சாத்திரியார்,                                  38, பாண்டியன் சந்து, தெப்பக்குளம், திருச்சி.  முதற்பதிப்பு – 1930

    தொல்காப்பியம், பொருளதிகாரம், இளம்பூரணருரை, (கு. சுந்தரமூர்த்தியவர்கள் விளக்கவுரையுடன்)  சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.- 1969.

    தொல்காப்பியம், பொருளதிகாரம்,  பின்னான்கியல்கள் -பேராசிரியருரை,                   (கு. சுந்தரமூர்த்தியவர்கள் விளக்கவுரையுடன்) அண்ணாமலைப் பல்கலைக்கழகம் – 1985.

    தொல்காப்பியம், பொருளதிகாரம்,  முன்னைந்தியல்கள் – நச்சினார்க்கினியருரை,சி. கணேசையர் பதிப்பு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. 2007

    தொல்காப்பியம், பொருளதிகாரம்,  பின்னான்கியல்கள் -பேராசிரியருரை, சி. கணேசையர் பதிப்பு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. 2007

    தொல்காப்பியம்- உரைவளம், ஆ.சிவலிங்கனார், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை

    தொல்காப்பியம் – கிளவியாக்கம் – உரைக்கொத்து, தி.வே.கோபாலையர், சரசுவதிமகால் நூலகம் (2007) தொல்காப்பியம் – எழுத்து, சொல், பொருள்

    தொல்காப்பியம், ஆராய்ச்சிக் காண்டிகையுரை, பாவலரேறு. ச. பாலசுந்தரனார்- தாமரை வெளியீட்டகம், தஞ்சை,

    தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நுன்மரபும் மொழிமரபும் மாணிக்கவுரை, வ.சுப. மாணிக்கனார்,  தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் (1989).

    மாணிக்கனார், வ,சுப. – தொல்காப்பியக்கடல், தொல்காப்பியத்திறன் மணிவாசகர் பதிப்பகம், சென்னை.


    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    ‘நச்சினார்க்கினியரின் உரைமரபுகள்” என்னுந் தலைப்பில் அமைந்த இக்கட்டுரையைப் பலமுறை பயின்று கட்டுரையின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி ‘வல்லமை’ முன்மதிப்பீட்டு விதிகளை முழுமையாகக் கருத்திற் கொண்டு செய்யப்படும் மதிப்பீடும் பரிந்துரையும்.

    v தமிழ்த்துறையினராலும் தமிழ் அறிஞர்களாலும் திட்டமிட்டு மறைக்கப்பட்டு அல்லது காண மறுக்குந்துறை உரையாசிரியர் கண்ட ‘உரைத்துறை’யாகும். அவ்வுலகத்தின் முடிசூடா மன்னராகிய நச்சினார்க்கினியரைத் தற்கால பேராசிரிய இளைஞர் ஒருவர் அறிமுகம் செய்திருப்பதே பெரிதும் போற்றுதற்கு உரியதாகும்.

    v  நச்சினார்க்கினியரின் உரைப்போக்குகள் பற்றிய சில எடுத்துக்காட்டுகளைக் கட்டுரையாசிரியர் தந்திருக்கிறார். அவை நச்சினார்க்கினியரின் உரைப் பேருருவைக் காட்டப் போதுமானதாக அமைந்திருக்கின்றனவா என்பது சிந்திக்க வேண்டியதிருக்கிறது.

    v “சேனாவரையரோடு மாறுபட்டு இளம்பூரணரை வழிமொழியும் நச்சர், அதற்கான காரணத்தைச் சொல்லாமல் போய்விடுகிறார்” என்பது கட்டுரையில் ஒரு நுண்ணியம்.

    v நச்சினார்க்கினியரின் உரைமரபுகள் எனப் பொதுவான தலைப்பிட்டுத் தொல்காப்பிய உரைகளை மட்டும் கட்டுரைப் பொருளாகக் கொண்டிருப்பது கட்டுரையின் அளவு கருதித் தவிர்க்க இயலாது எனினும் “நச்சினார்க்கினியரின் உரைமரபுகள் (தொல்காப்பியம்)” எனத் தலைப்பிட்டிருக்கலாம்.

    v  கட்டுரையின் முதல் நான்கு துணைத்தலைப்புக்கள் நச்சினார்ககினியரை அறிமுகம் செய்திருக்கின்றன. இதனைத் தவிர்த்து அவருடைய உரையாழத்துக்கான சான்றுகளைக் கூடுதலாகக் காட்டியிருக்கலாம்.

    v  கட்டுரைகளில் காட்டப்படுபவை நச்சினார்க்கினியத்தில் கண்ட முத்துகள் எனச் சொலல முடியாவிட்டாலும் அவை சிப்பிகள் அல்ல என்று துணிந்து கூறலாம்.

    “‘உரையாசிரியர் காலம்’ என்னும் தமிழின் வல்லாண்மைப் பகுதியின்  தனிப்பெரும் தலைவனாக வலம் வந்த மாபெரும் புலமைத் தேக்கம் நச்சினார்க்கினியரை அறிமுகம் செய்துள்ள வகையில் இந்தக் கட்டுரை ஆய்வுக் கூறுகளைக் கொண்டிலது எனினும் ஒரு பொதுக் கட்டுரையாகக் கருதி, வல்லமையில் வெளியிடுகிறோம்”

    Share
  • செவ்வாய் தோஷம் (சிறுகதை)

    செவ்வாய் தோஷம் (சிறுகதை)

    ஜெ. ஜெயகுமார்
    சென்னை

    சென்னையிலிருந்து உற்சாகமாகப் புறப்படத்தயாராயிருந்த சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் படபடப்புடன் ஏறி ஏ.சி. மூன்றடுக்கு கோச்சில் இட்லி, சட்னி, தயிர் சாதம் சகிதம் ஒரே ஒரு  “பேக் பேக்”குடன் முரளியும் ரமாவும் அமர்ந்தனர்.

    அவர்கள் மாயவரம் என்கிற மயிலாடுதுறை சென்று அங்கிருந்து அருகிலுள்ள திருக்கடையூர் சென்று அடுத்த  மாதம் நடைபெறவிருக்கும் தங்கள் “சஷ்டி அப்த பூர்த்தி” என்கிற அறுபதாம் கல்யாணத்திற்கான ஏற்பாடுகளை முன்னேற்பாடாக செய்ய  ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று காலை சோழன் எக்ஸ்பிரஸில் சென்று அதே இரவில் உழவன் எக்ஸ்பிரஸில் சென்னை திரும்ப முன்பதிவு செய்திருந்தனர்.

    எழும்பூரில், அருகில் உள்ள பிளாட்பாரத்தில், தஞ்சாவூரிலிருந்து இரவெல்லாம் கண் விழித்து அர்த்த ராத்திரியில் ஊர் ஊராக சுற்றிவிட்டு அலுத்து களைத்து நின்றிருந்தது “உழவன் எக்ஸ்பிரஸ்”..

    “நாளை காலை நாம் இந்த ரயிலில்தான் சென்னை திரும்புவோம்” என்று மனைவி ரமாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார் முரளி. அந்த ரயிலிலிருந்து முரளியும் ரமாவும் இறங்கி சென்று விட்டனர் என்பதை அறியாது!

    சோழன் சோழ நாட்டிற்கு செல்ல சைரன் ஊதியவண்ணம் கிளம்பினான். வழியில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல் மருவத்தூர் என்றெல்லாம் நின்று நின்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு போய்க்கொண்டிருந்தான்.

    வழியெங்கும் வித விதமான மனிதர்கள் வித விதமான சிறுவர் சிறுமியருடன் வித விதமான பைகளை எடுத்துக்கொண்டு ஆரவாரத்துடன் தட்டுத்தடுமாறி அவரவர் இருக்கைகளில் அவசரம் அவசரமாக அமர்ந்துகொண்டு “அப்பாடா” என்று ஆனந்தப்பட்டுக்கொண்டிருந்தனர்.

    சற்று நேரத்தில் டிக்கட் பரிசோதகர் வந்தார். முன்பெல்லாம் அவர் ஒரு பெரிய கிளிப் வைத்த கனரக அட்டையில் பயணிகள் சார்ட்களை வைத்துக்கொண்டு, கறுப்புக்கோட் அணிந்து கொண்டு தொந்தி, புட்டிக்கண்ணாடி யுடன் அனைவரது டிக்கட்களையும் “செக்” செய்து “டிக்” அடித்துவிட்டு ஒரு முறை அனைவரையும் அவரவர் அவரவர் வயதுப்பிரகாரம் இருக்கிறார்களா என்று அனுமானித்துக்கொண்டு அங்கிருந்து அடுத்த கம்பார்ட்மெண்ட் செல்வார்.

    நாமும் ரயில் ஏறுவதற்கு முன்பு கோச்சில் வெளியே ஒட்டப்பட்டிருக்கும் சார்ட்டில் நம் பெயரும் இருக்கிறதா என்று பார்த்து விட்டு, இருந்தால்,” ஐ. ஏ. எஸ்.” பாஸ் செய்த நிம்மதி உணர்வுடன் உள்ளே  ஏறி அமர்வோம்.

    இப்போதெல்லாம் காலம் மாறிப்போச்சு. பல வருடங்கள் வெளிநாடுகளில் வாழ்ந்து விட்டதால் இது ஒரு இன்ப அதிர்ச்சி முரளி தம்பதிக்கு.

    சற்று இளைஞராக வெள்ளை பாண்ட், வெள்ளை ஷர்ட்டில் ட்ரிம்மாக கையில் ஏதோ” ஐ. பேட் “போல வைத்துக்கொண்டு, ரமா முரளி  என்று பெயர் சொன்னவுடன் சம்மதத்துடன் நகர்ந்து விட்டார் அங்கிருந்து, ஆதார் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் என்ற எந்த தரவுகளையும்  கேட்காமலேயே!

    பள்ளிக்கூடத்தில் மாவட்டக்கல்வி அதிகாரி வகுப்பு வாரியாக இன்ஸ்பெக்ஷன் முடித்து விட்டு, அடுத்த வகுப்புக்கு செல்லும்போது “அப்பாடா! போய்ட்டார்”! என்று மாணவர்கள் நிம்மதி பெருமூச்சு விடுவதுபோல, டிக்கட் பரிசோதகர் அந்தப்பக்கம் சென்றவுடன் அவரவர் தம் குழந்தைகளுக்கு சாப்பிடுவதற்கு ஏதோ கொடுத்துவிட்டு தத்தம் மொபைல் குழந்தைகளுடன் “ஆளுக்கு பதினைந்து லட்சம் போடப்பட்டுவிட்டதா” போன்ற விஷயங்களை எதிர்பார்த்து போன்களை தடவத்தொடங்கினர்.

    இதுவே முப்பது, நாற்பது வருடங்கள் முன்பு என்றால், வெளியே பார்க்கவேண்டிய ஊர்கள், மரம், செடி, கொடிகள், ஏரிகளையெல்லாம் பார்த்துக்கொண்டே, பக்கத்து சீட்டில் உள்ள மனிதர்களோடு பேச்சுக்கொடுத்து, உறவாடி, அவர்களின் பத்திரிக்கைகள், வாரஇதழ்களை கேட்டு வாங்கி  படித்துக் கொண்டு , கொண்டு வந்த உணவு வகைகளை அவர்களுடன் பகிர்ந்து கொண்டு, இறங்கும் இடங்கள் வரும்போது ரயில் சினேகிதர்களாக இறங்கி மறைவர். சில நேரங்களில் நல்ல வரன், நல்ல வேலை வாய்ப்புகள் அமைவதுமுண்டு.

    இப்போதெல்லாம் அருகிலுள்ளவர் ஏதோ ஒரு பிஸ்கட் பாக்கெட்டை பிரித்தாலே “மயக்க பிஸ்கட்” டாக இருக்குமோ என்று பயந்து அனைவரும் அந்தப்பக்கம் திருப்பியமர்ந்து கொண்டு விடுகின்றனர்.

    ரமாவிற்கு செவ்வாய்க்கிழமை என்றால் ஆகாது. செவ்வாய் “வெறும் வாய்” என்பாள். முரளி சேல்ஸ் & மார்கெட்டிங் துறையில் பணி  புரிந்ததால் தன் அனுபவத்தில் செவ்வாய் “வருவாய்” என்ற புரிதல்.

    ரமாவிற்கு செவ்வாயன்று ஏதேனும் துளி அசம்பாவிதம் நடந்தாலே “எனக்கு அப்பவே தெரியும்” “ஏன்னா! இன்னிக்கு செவ்வாய்” என்று குறைப்பட்டுக்கொள்வாள்.

    “ஒரு மனிதன் எண்பது வயது வரை வாழ்கிறான் என்றால் ஏறத்தாழ நாலாயிரம் செவ்வாய்க்கிழமைகளை அவன் வாழ வேண்டியிருக்கும்; அத்தனை செவ்வாயும் அபசகுனம் என்று சொல்ல முடியாது” என்று மனைவியை ஆற்றுப்படுத்துவார்.

    இருந்தாலும் ரமா மனதில் ஏதோ உறுத்திக்கொண்டேயிருந்தது.

    அப்பர் பெர்த்தில் அமர்ந்துகொண்டு விடாமல் வீடியோ கேம்ஸ் விளையாடும் மாணவன், அதைப்பெருமிதத்துடன் பார்த்துக்கொண்டிருந்த அவன் பெற்றோர், “மசாலாவடை, பஜ்ஜி, கொய்யாப்பழம்,” என்று எதையெல்லாமோ விற்றுக்கொண்டு ஏ. சி. கம்பார்ட்மெண்ட் என்ற முக்கியத்துவமே இல்லாமல் அங்கும் இங்கும் அலைமோதி தலையில், இடுப்பில் சுமந்த கூடையுடன் விற்பனை செய்யும் ஏழை விற்பனை மகளிர் ;

    வடை, பஜ்ஜி எல்லாம் எந்த எண்ணெயில் பண்ணினார்களோ, கொய்யாப்பழத்தை அலம்பாமலேயே எல்லோரும் சாப்பிடுகிறார்கள் என்று கவலைப்பட்டாள் ரமா, சிறு வயதில் அவளே இதையெல்லாம் அப்போது இப்படித்தான்  சாப்பிட்டிருக்கிறாள் என்பதை மறந்து!

    “இவர்கள் எல்லாம் எப்படி வீட்டை விட்டு ரயிலில் வெகுதூரம் டிக்கட் இல்லாமல் சென்று விற்பனை முடிந்து எந்த ரயிலில் திரும்பவும் ஊர் திரும்புவர்” என்று ரமா யோசனை செய்து கொண்டிருக்கும்போதே அவர்கள் கிராஸிங்கில் நின்று கொண்டிருந்த எதிர் ரயிலில் ஏறி மீண்டும் அங்கும் விற்பனை செய்து கொண்டே சொந்த ஊர் அடைந்து காணாமலானார்கள். “இன்க்ரீடிப்பிள் இந்தியா”  என்று ரமா மனதுக்குள்  உச்சரித்துக்கொண்டாள்.

    மயிலாடுதுறை சென்று ஒரு காரில் திருக்கடையூர் சென்று அறுபதாம் கல்யாணத்திற்கு வரக்கூடிய விருந்தினருக்கு தேவையான ஹோட்டல் ரூம்கள், அவர்கள் சாப்பாடு, போன்றவற்றை பேசி  முடித்துக்கொண்டு புரோகிதர் ஆபிஸ் சென்றனர்.

    வழக்கம்போல எங்கும் ரமாதான் அனைத்தையும் முன்னெடுத்து உரையாடினாள். ரமா ஒரு ஆல்பா பெண்மணி என்பதால் முரளிக்கு அவ்வளவாக வேலையில்லை. போதாக்குறைக்கு அவருக்கு காது கேட்கும் திறன் மிகவும் குறைவு.

    ரமா புரோகிதரிடம் அனைத்தும் பேசிகொண்டிருக்கும் போது அந்த ஆபீஸ் சுவரில் கடவுள் மறுப்பு திராவிட தலைவரின் பீமரத சாந்திக்கு (எழுபதாவது பிறந்த நாள்) அவரது துணைவியார் வந்து கலந்து கொண்ட வைபவத்தை அங்கிருந்த போட்டோ மூலமாக அவதானித்துக்கொண்டிருந்தார் முரளி.

    அனைத்தையும் நல்லபடியாக செய்துவிட்டு  ஒரு காரில்  மீண்டும் மயிலாடுதுறை திரும்பியபோது இரவு மணி பதினொன்று ஆகிவிட்டது. இன்னும் ஓரிரு மணி நேரத்தில் உழவன் எக்ஸ்பிரஸ் வரும்;

    ஏறிப்படுத்தால் ஏ. சி. சுகத்தில் ஜாம் ஜாமென்று தூங்கி காலை ஏழு மணி அளவில் எழும்பூரில் இறங்கலாம் என்று இருவரும் நிம்மதியுடன் “வெய்ட்டிங் ஹாலில்” அமர்ந்து மொபைல் போனில் யதேச்சையாக ரிட்டன் டிக்கட் ரிஸர்வேஷன் தரவுகளைப்பார்த்தபோது இடி தாக்கியது போல அப்படியே உறைந்து அமர்ந்தாள் ரமா.

    மனைவியின் திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம் என்று புருவத்தை உயர்த்தி முரளி வினவ, ரமா தன் செல்பேசியை முரளியிடம் கொடுத்து சென்னை செல்லும் டிக்கட் விபரங்களை பார்க்கும்படி சைகை செய்தாள்.

    முரளியும் டிக்கட் விபரங்களை பார்த்துவிட்டு சரியாகத்தான் இருக்கிறதே என்பதுபோல் மனைவியைப்பார்த்தார்.  திக்பிரமையிலிருந்து மீண்ட ரமா, ரயில் பயணத்தேதியை பார்க்கும்படி தழுதழுத்த குரலில் முரளியிடம் உளறினாள். முரளியும் மீண்டும் ரயில் நம்பர், கோச் நம்பர், பெர்த் எல்லாம் சரியாகத்தானே இருக்கிறது என்று சந்தேகமாக பதிலளித்தார்.

    “தேதியைப்பாருங்க” என்று தடுமாறினாள் மனைவி. தேதியைப்பார்த்து விட்டு “இன்று இருபத்தி ஐந்தாம் தேதி, கரெக்ட்தானே? என்று வினவினார்.

    ரமா குழறிய குரலில் “அதுதான் தப்பு!” “இன்று இருபத்தி ஐந்தாம் தேதி காலை சோழனின் கிளம்பி எல்லா வேலையையும் முடித்துவிட்டு இப்ப ஊர் திரும்ப இருக்கிறோம்! ஆனால் ராத்திரி பன்னிரெண்டு மணிக்குப்பின்னால் இருபத்தி ஆறாம் தேதி  பிறந்து விடுமே?

    “இருபத்தி  ஆறாம் தேதி என்றுதானே நாம் ரிசர்வ் செய்திருக்கவேண்டும்! நம் டிக்கட் 25 என்று இருக்கிறது! நம் டிரெயின் நேற்று இரவே இங்கு வந்து இன்று காலை சென்னை போய்ச்சேர்ந்து விட்டது”!

    “இன்று காலை நாம் சோழனில் கிளம்பும்போது பக்கத்து பிளாட்பாரத்தில் உழவன் நின்றுகொண்டிருந்ததை பார்த்தோமல்லவா? அப்போதிருந்தே என் மனசு சரியில்லை! எங்கோ ஏதோ தப்புன்னு மனசு தத்தளித்தது  “என்று விரக்தியுடன் முடித்தாள்  ரமா.

    இப்பொழுது முரளிக்கு ஷாக்! வெளிநாடுகள் செல்லும்போதெல்லாம் இரவு 12 மணிக்குமேல் அடுத்த நாள் பிறந்து விடும் என்பதை ஒன்றுக்கு இரண்டு  முறை உறுதிப்படுத்திக்கொண்டு பிளைட்  ரிஸர்வேஷன் செய்யும் நாம் உள்ளூர்  ரயில் பதிவு விஷயத்தில் கோட்டை விட்டு விட்டோமே என்று அதிர்ச்சியடைந்தார் முரளி.

    இத்தனைக்கும்  ரமாதான் “சோழன்”, “உழவன்” என்று பல ரயில்களைப் பார்த்துப் பார்த்து டிக்கட் பதிவு பண்ணினாள். முரளியும் அனைத்தையும் மேம்போக்காக பார்த்து விட்டு “சரியாக இருக்கிறது” என்று சொன்னவுடன் அவள் வங்கிக்கார்டில் பணம் செலுத்தி டிக்கட் பதிவை உறுதிப்படுத்தி க்கொண்டாள்.

    தவறு என்பது இருவர் மீதுமே!

    ரமா டென்ஷன் குரலில் “இதற்குத்தான் நான் செவ்வாய்க்கிழமையன்று இது போன்ற முக்கியமான விஷயங்களை செய்வதில்லை” என்று விரக்தியுடன் அலுத்துக்கொண்டாள். முரளிக்கு ஒரு நிமிஷம் என்ன சொல்வது, என்ன செய்வது என்றே புரியவில்லை.

    வீட்டு காரியங்களாகட்டும், இந்தியாவில் ஆபீஸ் செக்ரேட்டரி பணியாகட்டும், முரளி வெளிநாட்டில் பணி புரிந்துகொண்டிருந்தபோது, ஒற்றை மனுஷியாக மகன் இன்ஜினியரிங் அட்மிஷன், அவன் ஆஸ்திரேலியா மேல்படிப்பு, அவனுக்கு வரன் தேடும் படலம், பின்னர் திருமண ஏற்பாடுகள், பின்னர் மெல்பெர்னில் பேரன் பிரசவம் என்று சிங்கக்குட்டியாக அனைத்தையும் தனி ஒருத்தியாக சாதித்திருக்கிறாள். ரமா ஒன் உமன் ஆர்மி!

    முரளி வெளிநாட்டிலிருந்து மாதாமாதம் பணம் அனுப்பி, வருடத்திற்கு ஒரு முறை ஒரு மாதம் தேனிலவு போன்ற விடுமுறையில் இந்தியா வந்து திரும்புவதோடு சரி!

    இருந்தாலும் “மென் ஆர் ப்ரம் மார்ஸ், விமன் ஆர் ப்ரம் வீனஸ் ” (Men are from  Mars, Women are from Venus) என்பதுபோல, செவ்வாய்க்கிழமை என்றாலே சற்று டென்ஷன்தான் அவளுக்கு!

    அன்று பயணப்பதிவு செய்யும்போது, “இன்று செவ்வாக்கிழமை, வேண்டாம், நாளை புக் பண்ணலாம் ” என்று அவள் சொன்னதை மீறி அவளை வற்புறுத்தி ரிசர்வ் செய்ததை நினைத்து இப்போது வருத்தப்பட்டார் முரளி.

    வெளிநாடுகளிலும், வெளி மாநிலங்களிலும், பயணம் செய்யும்போது இது போன்ற தடாலடி அனுபவங்கள் நிறையப்பெற்றிருந்ததால், முரளி உடனடியாக ரெகவரி ஆகி செல்பேசி மூலம் இன்னும் சிலமணிநேரங்களில் வரவிருக்கின்ற , திங்கள்கிழமை மட்டும் ஓடும் அயோத்தியா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸில் நல்ல வேளையாக அதே  மூன்றடுக்கு  ஏ. சி.  யில் இடம் கிடைத்து வங்கி கார்டில் பணம் அனுப்பி டிக்கட் பெற்றபிறகுதான் ஏதோ அவள் மனசு கொஞ்சம்  ஆறுதல் அடைந்தது.

    இருந்தாலும், வழியெல்லாம், அனாவசியமாக ஆயிரத்தி ஐநூறு ரூபாய் வீணாகிவிட்டதே என்ற கவலை அவள் முகத்தில்.

    சில நேரங்களில் சில தவறுகள்! அந்தகாயம்  ஆற சென்னை வாழ்க்கையில் இன்னும்சில மாதங்களாகும்.

    ஓலா, ஊபர்  போன்ற   டாக்ஸிகளில்  செல்லாமல்   ஆட்டோவில்  சென்றும் இன்னும் சில  விஷயங்களில்  சிக்கனமாக  இருந்தும் அந்த உழவன் எக்ஸ்பிரஸ் ஆயிரத்து ஐநூறு ரூபாயை மீட்க முடிவு செய்தாள் ரமா.

    Share
  • கற்பகதரு என்னும் அற்புதம் – அங்கம் – 8

    கற்பகதரு என்னும் அற்புதம் – அங்கம் – 8

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    அசல்பிரதிஅச்சடியோலைஇசையோலைஇணக்கோலைஏடகம்ஏட்டுப்பொறிஒற்றுதல்ஓலைத்தூக்குஓலைநாயகம்ஓலைபோக்குதல்ஓலைப் பாசுரம்ஓலை வாரிகணக்கோலைகம்பை, கம்பை கட்டுதல்காணாட்டு  குறிப்போலைசட்டோலை,  சந்திரகம்,  சரவை,  சரசுவதி  பண்டாரம் சிக்குப்பலகைநீட்டு, நெட்டோலை, பையோலைபொறியொற்றோலைமுறிப்பத்திரம்வெள்ளேடுவெள்ளோலைஎன்று – இங்கே சொல்லப்பட்ட அத்தனையும் கற்பகதருவாம் பனையுடன் இணைந்தே இருக்கின்றன என்பது கருத்திருத்த வேண்டியதே. பனைக்கும் இங்கே காட்டப்பட்ட சொற்களுக்கும் என்ன தொடர்பு என்று எண் ணத் தோன்றுகிறதல்லவா! அத்தனையும் பனையின் ஓலையால் வந்த சொற்களேயாகும்.

    ஓலையினால் உருவான ஏடு பற்றிப் பார்த்தோம். அந்த ஏட்டுக்கும் இந்தச் சொற்களுக்கும் மிகவும் நெருக்கம் என்றுதான் சொல்லுதல் வேண்டும். அசல், பிரதிஎன்றால் ஓலையில் எழுதப்பட்ட முதற் பிரதியாகிறது. அச்சடி ஓலை என்பது முத்திரை இடப்பட்ட ஓலையினைக் குறிப்பதாகும். இசையோலை எனும் பொழுது ஒப்பந்த ஓலையும், இணக்கோலை எனும் பொழுது உடன் படிக்கை ஓலையும் என்னும் கருத்தும் வந்து நிற்கிறது. ஏடகம் என்றால் பனை என்றும்பலகை என்றும் கருத்தாய் அமைகிறது. ஏட்டுப் பொறி என்றால் ஓலையில் பதிக்கும் முத்திரைக்குப் பெயராகும். ஒற்றுதல் என்பதற்கும் ஓலையில் முத்திரை இடல் என்பதும் கருத்தாய் அமைகிறது.

    சீட்டுக் கவி எழுதிக் கொடுப்பதை  ஓலைத் தூக்கு என்று அழைத்தனர். தலைமை அமைச்சராக இருப்பவரை ஓலை நாயகம் என்றும்,  ஓலையில் செய்தி அனுப்புதலை ஓலை போக்குதல் என்றும் சொன்னதாக அறிய முடிகிறது. கடிதச் செய்திகளை அனுப்பியதை ஓலைப்பாசுரம் என்று கூறினார்கள். பொருத்தமாய் ஓலைகளைத் தேர்ந்தெடுத்து அதனை வாருவதற்கு பயன்படுத்தும் கருவியான கத்திக்கு ஓலை வாரி என்று பெயரிட்டழைத்தார்கள்.

    கணக்குகளை எழுதி வைத்த ஏடுகளை கணக்கோலை என்றார்கள். ஒலையினால் ஆகிய ஏட்டுச் சுவடிகளின் சட்டங்களுக்கு கம்பை என்றும்சுவடிகளைக் கட்டுவதை கம்பை கட்டுதல் என்றும் அழைத்திருக்கிறார்கள். ஏட்டுக்கு ஏற்ப ஓலைகளை நறுக்கி எடுப்பதை காணாட்டு என்றும் கணக்குகள் எழுதப்பட்ட ஓலையினை குறிப்போலை என்றும் அழைத்திருக்கிறார்கள்.

    சட்டோலை என்றால் சட்டம் எழுதுவதற்கு பயன்பட்ட ஓலையாகும். எழுதிய ஓலையினை வைப்பதற்கு பயன்படுத்திய ஓலையின் உறை ச்சுருளை சந்திரகம் என்னும் பெயரால் அழைத்திருக்கிறார்கள். எழுதப்பட்ட ஓலைச்சுவடிகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் இடத்துக்கு சரசுவதி பண்டாரம் என்று பெயரிட்டமை சிறப்பாய் இருக்கிறதல்லவா! எழுதிய ஓலைச் சுவடிகளைப் படிப்பது தானே முக்கியம். படிப்பதற்கு ஏடுகளை வைக்க ஒரு பலகையினைப் பயன்படுத்தியதை அறிய முடிகிறது. அப்படி அமைந்த அந்தப் பல கையைத்தான்  சிக்குப்பலகை என்று பெயரிட்டிருக்கிறார்கள்.

    திருமுக ஓலையினை நீட்டு என்று அழைத்தார்கள். நெட்டோலை என்றும் திருமுகத்துக்கு இன்னுமொரு பெயரினையும் கொடுத்திருக்கிறார்கள். பச்சை ஓலையினை பையோலை என்றும்முத்திரை ஓலையினை பொறி யொற்றோலை என்றும் அழைத்திருக்கிறார்கள். ஒலையில் எழுதப்பட்ட பத்திரத்தை முறிப்பத்திரம் என்றார்கள். எழுதாமல் இருக்கும் ஓலையினாலான ஏடுகளை  வெள்ளேடு என்றும் வெள்ளோலை என்றும் பெயரிட்டு அழைத்தார்கள் என்று அறியக் கூடியதாக இருக்கிறது.

    பனை ஓலையினால் ஆகிய ஏடுகளைக் குறிக்க இன்னும் பல சொற்களை எங்கள் முன்னோர்கள் தங்கள் வசம் வைத்திருந்தார்கள். அவை பற்றி தனி நூலே எழுதிவிடலாம். அசைஇணாட்டு,  இருவிள,  ஊக ஆதாரப்படிஊகமூலப்படிஏடுதிருப்புதல்ஓலைதீட்டுதல்ஓலையாள்கணக்காயர்கதம்பை, கரம்கை முறிகோணோலை, சுகஸ்தலிகிதம்திருக்கைக் கோட்டிஇப்படி எண்ணில்லாச் சொற்களைப் பெயராக்கி கற்பகதருவாம் பனையின் ஓலையினை அதனால் ஆகிய ஏட்டினை கண்டு மகிழ்ந்து பயனடைந்தி ருக்கிறார்கள் எங்களின் முன்னோர்கள். அதுமட்டுமல்ல இப்படியும் பனை ஓலையினால் ஆகிய ஏட்டினை அழைத்து மகிழலாம் என்பதற்கும் பல அருஞ் சொற்களை ஆக்கி அளித்திருக்கிறார்கள் என்னும் பொழுது எங்கள் முன்னோர்களின் ஆற்ற லை ஆளுமையை வியக்காமல் இருந்திட முடியுமா!

    எண்ணக் கருத்துகளைச் சுமந்து எங்களுக்கு அளித்த பெருமை ஏட் டுச் சுவடிகளுக்கே உரியது என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை எனலாம். இன்று நாங்கள் நூல்களாய் கைகளில் வைத்து பயன் அடை யும் மூலத்தை அளித்தன ஏடுகள் அல்லவா! அரிய பெரிய பொக்கிஷங்களை யெல்லாம் அழியாமல் காத்த எங்கள் முன்னோரின் தொழில் நுட்ப ஆற்றலையும் வியக்காமல் இருக்கவே முடியாதும் இருக்கிறது அல்லவா! அத்தனை கருவூலங்களையும் அடக்குவதற்கு கைகொடுத்தது கற்பகதருவாம் பனையின் ஓலைகள் என்னும் பொழுது  – பனை எங்களின் உறவாகி எங்களுடன் இரண்டற இணைந்து விடுகிறது அல்லவா!

    பனையின் ஓலையினாலான ஏடுகள் என்றவுடன் எங்களுக்கு முன்னால் வந்து நிற்பவை சாதாரண ஏடுகளே. அதாவது நீளமாக ஒரு குறி ப்பிட்ட அளவில் வெட்டப்பட்ட நறுக்குகளாகவே அவைகள் இருக்கும். அவற்றையே நாம் கண்டிருப்போம். ஆனால் ஏட்டுச் சுவடிகள் பல வடிவங்களில் இருப்பதை நம்மில் எத்தனைபேர் அறிவோம். சிறியபெரியசுவடிகள்பம்பரச்சுவடிகள்அது மாத்திரமல்ல சிவலிங் கத்தின் வடிவத்திலும் ஏட்டுச் சுவடிகள் அமைந்திருக்கின்றன. திருமுருகாற்றுப்படை என்பது முருகப் பெருமான் பெருமை கூறும் நூலாகும்.. முருகனை அடை  வதற்கு வழிகாட்டும் அதாவது ஆற்றுப்படுத்தும் நூல் என்பது அதன் அர்த்தமாகும். இந்த நூல் வட்டவடிவான மிகச்சிறிய ஓலையில் எழுதப்பட்டிருக்கிறது. இதனை பம்பரச் சுவடி என்றார்கள். எட்டு சென்டி மீற்றர் நீளமும்முக்கால் சென்டி மீற்றர் அகலமும் கொண்ட சுவடிகள் சிறிய சுவடிகள் என்று அழைக்கப்பட்டன.  ஐம்பது சென்டி மீற்றர் நீளமும் நான்கு சென்டி மீற்றர் அகலமும் உடைய சுவடிகளை பெரிய சுவடிகள் என்று அழைத்தார்கள்   அச்சடித்த நூல்களுக்கு அப்பாவும்அம்மாவுமே எங்களின் பனை ஓலை தந்த ஏடுகளேயாகும். அச்சடித்த நூல்களை வரி சையாய் அடுக்கி வைத்து அனைவருமே பயன் அடையும் வண்ணம் செய்வதற்கு பெரிய அளவில் நூலகங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் பழந்தமிழ் ஏட்டுச் சுவடிகளையும் நூலகத்தில் பாதுகாத்து பயனடையச் செய்திருப்பதையும் அறிந்திருப்பது அவசியம் அல்லவா! சுவடிகளைத் தேடி எடுத்து ஏறக் குறைய எழுபது ஆயிரம் சுவடிகளை – அச்சடித்த நூல்களை அலுமாரிகளில் அடுக்கி வைத்திருப்பது போல இந்த நூலகத்தில் அடுக்கிப் பாதுகாப்புடன் பயன்படுத்தும் வகையில் வைத்திருக்கிறார்கள். சென்னையில் அமைந்திருக்கும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அமைந்திருக்கும் கீழ்த்திசை சுவடிகள் நூலகம்தான் இந்த அரிய பணியினைச் செய்திருக்கிறது. ஓலைச் சுவடிகளை ஆராய்கின்ற ஆய்வறிஞர்களுக்கு அந்த நூலகம் பெருங் கொடையாய்வரப்பிரசாதமாய் அமைந்திருக்கிறது எனலாம். நூலகம் என்னும் நிறுவனம் பதினாறாயிரத்து ஐஞ்ஞூறு ஏட்டுச் சுவடிகளைத் தேடி எடுத்துப் பாதுகாத்து வைத்துப் பேணி வருகிறது என்பதும் கருத்திருத்த வேண்டியதேயாகும்.

    ஓலைச் சுவடிகளின் அருமை தெரியாதவர்கள் அவற்றை அடுப்பு எரிக்கவும் பயன்படுத்தியிருக்கிறார்கள். சிலர் ஓலைச் சுவடிகளை ஓடுகின்ற நீர் நிலைகளிலும் விட்டிருக்கிறார்கள். சிலர் தம்வசம் இருந்த ஏட்டுச்சுவடிகளைப் பிரித்துப் பார்க்காமலுங்கூட இருந்திருக்கிறார்கள். சம்பந்தப் பெருமான் காலத்தில் அனல் வாதம்புனல் வாதம் என்னும் போட்டியில் முக்கியம் பெற்றது ஓலைச்சுவடிகளே. மணிவாசகர் திரு வாசகத்தை ஓலையில் எழுதி இறைவன் சன்னிதியில் வைக்க அடுத்த நாள் அந்த ஓலை திருத்த மாய் வந்ததாயும் புராணம் செப்புகிறது. “பாவை பாடிய வாயால் ஒரு கோவை பாடுக” என்று இறைவன் பணித்ததாயும் அதற்கு ஒப்ப மணிவாசகரும் திருக்கோவையாரைப் பாடினார் என்றும் அறிகின்றோம். பாவையும் கோவையும் ஓலையில்த்தான் எழுதப்பட்டன என்பதும் மனமிருத்த வேண்டியதே.

    ஏடுகளைத் தேடி ஊர் ஊராய் அலைந்து திரிந்தவர்தான் எங்கள் தமிழ்த் தாத்தா உ.வே.சா அவர்கள். அவர் பசியும் பாராதுஉடற் களைப்பும் பாராது பழந்தமிழ் ஓலைச் சுவடிகளைத் தேடுவதையே குறிக் கோளாய்க் கொண்டு வாழ்ந்தார் என்பதை யாவரும் அறிவார்கள். அவர் ஓலைச் சுவடிகளைத் தேடிப் போகும் வேளை தாம் கண்டு அனுபவித்த விஷயங்களை மனம் நொந்து எழுதியதையும் நாம் பார்க்கின்றோம்,   வீட்டில் பழைய ஓலைச் சுவடிகள் இருந்தால் பெருந்தோஷம் என்று எண்ணி அவற்றை நெருப்பில் இட்டும்  நீரில் இட்டும் பலர் செய்ததைக் கண்ணாரக் கண்டு கண்ணீர் விட்டு வேதனை அடைந்ததாகவும் தமிழ்த் தாத்தாவின் சரித்திரம் எங்களுக்கு சொல்லுகிறது. என்றாலும் அவர்களிடம் கெஞ்சி மன்றாடி பல ஓலைச் சுவடிகளை எடுத்துவந்தார் என்பதையும் அறியமுடிகிறது. சரயான முறையில் பேணிப் பாதுகாக்கப்படாத படியால் எங்களின் பக்திப் பனுவல்களான திருமுறைகள் பல – பூட்டிய அறைக்குள் கறையான்களுக்கு உணவாகிப் போனதையும் மனத்திருத்தல் வேண்டும்சரியான.  முறையில் அந்த ஓலைச் சுவடிகள் காக்கப்பட்டிருந்தால் இன்னும் எத்தனையே அரிய திருமுறைப் பாடல்களை நாம் கண்டு பயன் பெற்றிருந்திருப்போம். ஓலை தந்து அதனை ஏடாக்கி எழுதிட வைத்திட்ட பனைகூட இப்படியான செயல்களைக் கண்டு கண்ணீர் வடித்திருக்கும் என்றுதான் எண்ண வேண்டும் அல்லவா! தானமாய் தன்னுடைய ஓலைகளைக் கொடுத்து – உங்கள் சிந்தனைகளை மனத்திலே வைக்காமல் வருங்கால சந்ததியினருக்கும் வழங்குங்கள். அப்படி வழங்குவதற்கு நான் என்றும் துணையாக இருப்பேன் என்று கை கொடுத்தது பனை அல்லவா! அந்தப் பனை – பொறுப்பில்லா மனி தர்களின் செயலினைப் பார்த்து எப்படி யெல்லாம் கலங்கி இருக்கும் ! கலங்கினாலும்கவலைப் பட்டாலும் தன்னால் எவ்வளவு கொடுக்க முடியுமோஎவ்வளவு உதவிட முடியுமோ அவ்வளவையும் கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறது. நாங்களோ மரம் என்று பனையினைப் பார்த்து சொல்லி விட்டு “உணர்வில்லா” மனிதர்களாகவே உலவுகிறோம்.

    எழுத்தோலைச் சுவடிசெய்யக்
    குருத்தோலை தந்திடுவேன்
    ஏடாக நானெழுந்து
    எல்லோர்க்கும் உதவிடுவேன்
    மனமிருக்கும் கருத்துக்கள்
    மற்றவர்க்குக் கொடுப்பதற்கு
    பக்குவமாய் ஓலைதந்து
    பாரெல்லாம் வளர்ந்திடுவேன்
    எத்திசையில் இருப்பார்க்கும்             
    இயன்றவரை உதவிடுவேன்              
    எனைப்பார்த்து நீங்களுமே            
    இயன்றவரை உதவிட்டால்           
    நலமுடனே எல்லாரும்             
    நன்றாக வாழ்ந்திடலாம்

    Share
  • குறளின் கதிர்களாய்…(487)

    குறளின் கதிர்களாய்…(487)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(487)

    அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
    புன்மையாற் காணப் படும்.

           –திருக்குறள் – 185 (புறங்கூறாமை)

    புதுக் கவிதையில்…

    அறத்தை நல்லதென
    அறிந்து போற்றும் நெஞ்சமிலா
    ஒருவனை
    அவன் புறம்பேசும்
    இழிசெயலைக் கொண்டே
    கண்டுகொள்ளலாம்…!

    குறும்பாவில்…

    அறம் நல்லதெனப் போற்றும்
    நெஞ்சமிலாத் தன்மை, ஒருவன் பிறர்பற்றிப்
    புறங்கூறும் இழிசெயலால் வெளிப்பட்டிடும்…!

    மரபுக் கவிதையில்…

    நல்ல அறத்தை நல்லதென
         நன்றாய் அறிந்தே போற்றவல்ல
    நல்ல நெஞ்சம் இல்லாமல்
         நாட்டில் வாழும் ஒருவனது
    பொல்லாக் குணத்தை அறிந்திடவே
         போதும் அவனின் இழிசெயலாம்
    தொல்லை யான புறங்கூற்றால்
      தொடரும் இடர்தான் மற்றவர்க்கே…!

    லிமரைக்கூ…

    நல்லறம் கண்டு போற்றும்
    நெஞ்சிலா ஒருவனைப் புறங்கூறும் இழிசெயலால்
    இனம்கண்டு உலகம் தூற்றும்…!

    கிராமிய பாணியில்…

    சொல்லாத சொல்லாத
    பெறரக்கெடுத்துப் பொறஞ்சொல்லாத,
    பொல்லாத வேலயான
    பொறஞ்சொல்லாத..

    நல்ல கொணமான
    நல்லறத்தப் பாராட்டுற
    நல்ல நெஞ்சம் இல்லாத
    ஒருத்தனோட பொல்லாக் கொணத்த
    கண்டறிய அவன்
    பெறரக் கெடுத்துச் சொல்லுற
    கீழ்த்தரமான பொறஞ்சொல்லு
    ஒண்ணே போதுமே..

    அதால
    சொல்லாத சொல்லாத
    பெறரக்கெடுத்துப் பொறஞ்சொல்லாத,
    பொல்லாத வேலயான
    பொறஞ்சொல்லாத…!

    Share
  • சிவனைக் குறிக்கும் சிறந்திடு விரதம்!

    சிவனைக் குறிக்கும் சிறந்திடு விரதம்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    ஆஸ்திரேலியா

    ஆடும் அரவும் அழகுடை நிலவும்
    ஓடும் நதியும் உயர்சடை வைத்தான்
    காடுடை சுடலைப் பொடியினை எடுத்து
    தோடுடை செவியன் சுந்தரம் ஆக்கினான்

    அடியார் அழைத்தால் அங்கே நிற்பான்
    அன்பே அவனின் அகமா யிருக்கும்
    ஆசை யடங்கினால் அருகே அணைவான்
    மாசை அகற்றும் மாணிக்கம் ஆவான்

    ஆலம் வந்தால் அதையும் ஏற்பான்
    ஆழ அன்பை அணைத்தே நிற்பான்
    சீலம் உடையார் சிந்தை வருவான்
    சிவனே என்றால் சிறப்பும் தருவான்

    கால காலனைக் காலால் உதைத்தான்
    கருத்துடைப் பக்தனை மீட்டான் கருணையால்
    பாலன் அழுதான் பாலும் கொடுத்தான்
    பக்தர் துடித்தால் பதறுவான் பரமன்

    ஆதியும் இல்லான் அந்தமும் இல்லான்
    அவனின் முன்னே ஆணவமும் எழுந்தது
    பிரமன் தானே பெரியவன் என்றான்
    திருமால் மறுத்துத் தானே என்றான்

    ஆணவம் அடக்க அரனும் எண்ணினான்
    அவர்களின் முன்னே ஜோதியைக் காட்டினான்
    ஜோதியின் முடியை ஜோதியின் அடியைக்
    காணுவார் பெரியர் ஒலித்தது பேரொலி

    ஒலியைக் கேட்டவர் ஒளியைத் தேடினார்
    அடியையும் காணா முடியையும் காணா
    அவரவர் தேடியே அலைந்துமே நிற்க
    ஆனந்த ஜோதி அரனாய் ஒளிர்ந்தது

    பிரமன் திருமால் பெம்மானைப் போற்றினர்
    மருளுடை எண்ணம் மறைந்தே போனது
    அருளுடன் சிவனும் அணைத்தே நின்றான்
    ஆணவம் பொடிப்பொடி ஆகியே நின்றது

    பெருமான் சிவனைப் பேணியே நிற்க
    உருகியே அடியார் விரதம் இருப்பார்
    சிவனைக் குறிக்கச் சிறந்திடு விரதமாய்
    அமையும் விரதம் சிவராத்திரி ஆகும்

    அடியை முடியைத் தேடிய சம்பவம்
    சிவனின் ராத்திரி செப்பியே நிற்கும்
    ஆணவம் போக்கிடும் அற்புத விரமாய்
    சினார் ராத்திரி சிறப்புடன் திகழும்

    விஞ்ஞான உண்மைகள் நிறைந்ததே விரதம்
    மெய்ப்பொருள் அதனுடன் இணைவதே தத்துவம்
    ஆன்மீகம் அறிவியல் அமைவதே சமயம்
    அனைவரும் அகத்தில் இருத்துதல் அவசியம்

    பசித்தும் விழித்தும் இருப்பது விரதம்
    பசித்து விழித்து இருப்பது பக்குவம்
    பசித்தும் விழித்தும் பக்குவம் மிகுந்தால்
    பரமனைப் பார்க்கும் பதவியும் கிடைக்கும்

    உண்மைகள் என்றும் உயிர்ப்புடன் இருக்கும்
    உண்மைகள் என்றுமே உறங்கிட மாட்டா
    உயர்வுடை உண்மைகள் இறைவனே ஆகும்
    உணர்வெலாம் இறையினை இருத்தியே வைப்போம்

    Share
  • ஜனங்கள் வம்சங்கள் மொழிகள்

    ஜனங்கள் வம்சங்கள் மொழிகள்

    முனைவர்.நா.தீபா சரவணன்
    உதவிப்பேராசிரியர்
    குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை.

    ஏதோ பெயர் எழுதப்பட்ட பட்டணம். பனிக்காலப் படலங்கள். என்னுடைய பழையகம்பளி குளிரைத் தாங்க போதுமானதாக இருக்கவில்லை. வெயிலோ வெளிரிய ஒரு பிரகாசமாய் இருந்தது.

    எதிரிலிருந்து  மக்கள், கூட்டமாக வருவதை நான் பார்த்தேன். கூட்டத்தின் மௌனம் என்னை ஆச்சரியப்படுத்தியது. நான் வெளியில் இறங்கி  நின்றேன்.

    நாலு பேர் சேர்ந்து சுமக்கக் கூடிய மூன்று சின்னச்சின்ன சவப்பெட்டிகள் எனக்கு முன்பு மெதுவாக நகர்ந்தன.

    சவப்பெட்டிகளுக்கு வெண்மை நிறம். மேல் பாகத்தில் சிலுவைச் சின்னங்கள். சவப்பெட்டிகளுக்குப் பின்னால் நடப்பவர்கள் சிலர் அமைதியாக அழுதுகொண்டு வந்தார்கள். அனைவரும் கடந்து சென்ற பிறகு நான் வெளியில் நடுவில் சென்று நின்று இறுதி யாத்திரைக்கு நேராகப்  பார்த்தேன். மூன்று குழந்தைகள் இறந்திருக்கின்றனர் என்பதல்லாமல் எனக்கு ஒன்றும் புரியவில்லை.

    ‘மரணத்தின் சாவி யாருடைய கையில்?’

    ஒரு பெருமூச்சுவிட்டபடி நான் பயணத்தைத் தொடர சிந்தித்துக் கொண்டிருந்தபோதுதான் தளர்வோடு வருகின்ற  ஊனமுற்ற ஒரு வயதானவர் என் கண்களில் பட்டார்.  நிறம் மங்கியதும் பல இடங்களில் கிழிந்ததுமாக இருந்தது அவர் அணிந்திருந்த கோட்டும்,  கழுத்தில் சுற்றப்பட்ட மப்ளரும், தலையில் தொப்பியும் மிகப் பழையதாக இருந்தது. தொப்பியினால் மறைக்கப்படாமல் தலையின் இருபக்கங்களிலும் நரைத்த முடிகள் எழுந்து நின்றன.

    ‘அவங்க ரொம்ப தூரம் போயிட்டாங்களா ‘ தளர்ந்த ஒரு பார்வையுடன் கிதைத்துக்கொண்டு அவர் கேட்டார்.

    இறுதி ஊர்வலம் ஒரு வளைவு திரும்பி மரங்களுக்கு அப்புறம் மறைந்திருந்தது.

    ‘இதோ அங்கதான் போயிருப்பாங்க. மரக்கூட்டங்களுக்கு நேராக கைநீட்டி நான் கூறினேன்.

    மரங்களுக்குமேல் ஒளி கிரணங்களைப் பரப்புகின்ற வானம் மேகமாய் காட்சி அளித்தது.

    அவர் மறுபடியும் இழுத்து இழுத்து நடக்கத் தொடங்கினார்.

    ‘நில்லுங்க. யாரு செத்தாங்கணு எங்கிட்ட தயவுசெய்து சொல்லுங்க நான் ஆவலோடு கேட்டேன்.’

    அவர் நின்றார் .

    ‘நீங்க பாக்கலையா ?’

    ‘பார்த்தே. ஆனா என்ன நடந்துச்சுன்னு எனக்கு புடிபடல’

    திடீரென்று அவருடைய முகபாவம் மாறியது.

    ‘எங்களோட மூணு குழந்தைங்களையும் அவங்க கொண்ணுட்டாங்க’ அவர் தடுமாற்றத்துடன் கூறினார்.

    ‘யாரு……..? ஓர் அடி முன்னால வெச்சே

    ‘அப்போ உங்களுக்கு ஒண்ணும் தெரியாது ….இல்லையா?’

    ‘நான் கொஞ்ச நேரம் முன்னாடிதா இந்த மக்கள் கூட்டத்தில வந்தே.’

    ‘நீங்க யாரு’ அவர் என்னை  மேலும் கீழும் பார்த்தார்.

    நான்  தயங்கினேன். உடனே கூறுவதற்கான தெளிவானதொரு பதில் எங்கிட்ட இல்ல. அப்படி நிற்கும்போது என் காதுகளில் கடல் ஆரவாரித்தது. பிறகு  பாலைவனத்தில் காற்று வீசி அடிக்கின்ற சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் மலைவாசிகளான செந்நாய்கள் ஊளை இடுவது கேட்டது.

    ‘உம் பார்த்தா நீயும் எங்க வம்சத்தில் பட்டவன்தானு  தோணுது.’ வயதானவர் கூறினார்.

    ‘அவருடைய வம்சம் என்னவென்று நான் விசாரிக்கல. அவரு அத விளக்கவும் தயாரா இல்ல.’

    ‘தூங்கிகிட்டு இருந்த நம்மளோட மூணு குழந்தைங்களை அவனுக பெட்ரோல்  குண்டெறிந்து  கொன்றது, தீயில் வெந்து எரிந்து  குழந்தைங்க மூணுபேரும் சவப்பெட்டில தூங்கிடுவாங்கன்னு அவங்க நினைக்க வேண்டாம். பெட்ரோல் குண்டு நம்மகிட்டயும் இருக்கே. அவங்க பக்கம் குழந்தைங்களும்.’

    உணர்ச்சிவசப்பட்டதால் அவரின் முகம் இறுகியது.

    மூச்சு வாங்கிக்கொண்டு கழுத்தில் சொடுக்கு எடுத்தார். எனக்கு எதுவும் கேட்கவோ சொல்லவோ இடம் தராமல் அவர் முன்னோக்கி நடந்தார்.

    நான் கருணையோடு செய்வதறியாமல் அசைவின்றி அவரைப் பார்த்தேன். ஓரங்களில் மரங்கள் சலனமின்றி நின்றன, மரத்துண்டுகளில் கூர்மையான மஞ்சள் துண்டுகள்.

    வயதானவர் தளர்ச்சியோடு   நடந்தார். நான் அதுக்குமேல அங்க நிக்கல. பாதையில் பலத்தக் காற்று வீசியது. இடையிடையே என் பார்வை வானத்தின் தூய்மையில்  நீண்டு சென்றது. பாதையோரங்களில் தானாக வளர்ந்த செடிகள் சின்னச்சின்ன நீல வர்ணப் பூக்களுடன் நின்று கொண்டிருந்தன. அவைக் காற்றில் மெல்ல அசைந்தன. வழியில் உளளச் சின்ன வண்ணத்துப்பூச்சிகள் சில செடிகளை வலம் வைத்துப் பறந்து கொண்டிருந்தன.

    காது உள்ளவன் கேட்கிறான். நான் ஆர்வத்தோடு திரும்பிப்பார்த்தேன். எனக்குப் பின்னால் வேற்று மொழியின் சத்தம் கேட்டது.  பாரம்பரிய உடையணிந்து நான்கு புரோகிதர்களின் தலைமையில் ஏதோ காரியத்தை சொல்லி சக்தமான எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டு பெண்களும் குழந்தைகளும் உட்பட நிறைய பேர் வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவரும் மிகவும் கோபத்துடன் காணப்பட்டனர். புரோகிதர் ஒருவருடைய கழுத்தின் நரம்புகள் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்ற பயத்தை ஏற்படுத்தியது. உயர் இரத்த அழுத்தம் காரணமாக இருக்கலாம். அவருடைய முகம் சிவந்தும், கண்கள் முன்னுக்குத்தள்ளியும் இருந்தன.

    பாதை இழந்தவனாக நான் ஒதுங்கி நிற்க, கோபத்தோடு வந்தக் கூட்டம், கடந்து சென்றது. ஆரவாரம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தது. பிறகு கேட்காமலானது.

    ‘ஹா நீ என்ன இங்கே இருக்கிறே குந்தம் விழுங்கின மாதிரி கரகரத்த ஒரு சத்தம் என் காதுகளில் விழுந்தன.

    திரும்பிப் பார்த்தபோது நான் என்னவென்று தெரியாமல் திகைத்தேன்.கைலி  மடக்கிக் கட்டி, கையில் ஒரு பீடியுடன் ஒருவன் எனக்கு நேராக நொண்டிநொண்டி வந்தான். அவரையே தான் நான் கல்லறைக்குப் போறவழில பார்த்தேன். ஒரு சந்தேகமும் இல்லை. அவரேதான். ஆனால் தோற்றமும் மொழியும் முற்றிலும் வேறு. சட்டையின் மேல் பாகத்தில் இரண்டு பட்டன்கள் போடாததால் அவருடைய பரந்த மார்பு, நிறைந்த ரோமங்களோடு வெளியில் தெரிந்தது.

    ‘தேவாலயத்திற்கு  எதிர்ப்பு அறிவிக்கப் போறத நீ பாக்கலையா? உன்னுடைய இரத்தம் கொதிக்கலையா? இல்ல நீ எங்கக் கூட்டத்தச் சேர்ந்தவன் தானே அவர் என்னை முழுசாக அளந்தார்.

    மீண்டும் நான் அவரின் முன்பு தயங்கி நின்றேன்.  மீண்டும் என் காதுகளில் கடல் ஆர்ப்பரிக்கவும், காற்று வீசவும். செந்நாய்கள் ஊளையிடவும் செய்தன.

    ‘சீக்கிரமா போகணும் இல்லைனா  அவனுக தேவாலயத்தில் புகுந்திடுவாங்க. நிறைய போலீஸ்காரங்கள இறக்கி இருக்காங்கன்னு செய்தி. இறக்கட்டும் எத்தன போலீஸ்காரங்க இருந்தாலும் அந்தக் கழுதைகளை இன்னைக்கு தேவாலயத்திற்குள்ள ஏற விடமாட்டோம். அது நிச்சயம்.’ அவர் ஆவேசத்துடன் கூறினார்.

    பீடியில் தீ அணைந்திருந்தது. அவர் சட்டை பாக்கெட்டில் இருந்து தீப்பெட்டி வெளியில் எடுத்தார்.

    ‘போக விடணுமா?’

    ‘வேண்டாம்’ நான் கூறினேன்.

    உதடுகளைக் குவித்து முகத்தை ஏதோ ஒரு வார்த்தைக் கூறுவது போலாக்கி அவர் பீடி பத்த வைத்தார் .அவருடைய மூக்கு துவாரங்கள் இரண்டும் சிம்னிக் குழாய்களாக மாறி கடும் மணத்தைக் காற்றில் கலரச்செய்தது. கஞ்சா……

    திடீர்னு நான் அதிர்ச்சியானேன்.  நான் ஆச்சர்யத்தோடு வயதானவரின் முகத்தைப் பார்த்தேன். அவருடையக் கண்களில் பிரகாசம் பரவியிருந்தது.

    ‘வெடிவைக்கத் தொடங்கிட்டாங்க.  இனி நல்லா இருக்கும். நான் வீட்டுக்குப் போறேன்.’ அவர் திரும்பி நடந்தார்.

    நொண்டியாக இருந்தாலும் நம்ப முடியாத வேகத்தில் அவர் பாதுகாப்பான தூரத்திற்கு அகன்றார்.

    நான் இறந்தவனைப் போல நின்றேன்.

    Share
  • வாசம் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

    மூல நூலாசிரியர்: சி.வி.பாலகிருஷ்ணன்
    மொழி : மலையாளம்
    தமிழில்: முனைவர்.நா.தீபா சரவணன்

    முனைவர்.நா.தீபா சரவணன்
    உதவிப்பேராசிரியர்
    குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை

    பரந்துநீண்ட வழியோரங்களில் கறுப்புநிறக் கொம்புகளும், கரும்பச்சை இலைகளும், மண்ணிற்கு மேல் நிறைய வேர்களுமாக பல வருடம் பழமையான  ஒரு பைன் மரம். அதற்குக்கீழ்  சென்று நின்றால் அதிசயமான ஏதோ ஒன்று நம்மை வந்து தொடுவது போலத் தோன்றும். பழைய கதைகளில் வருகின்ற கைகள் விரித்து  நிற்கின்ற ஒரு பூதத்தை  இரவு நேரங்களில் அது நினைவுபடுத்தும். நிசப்தமான இரவுகளில் ஒவ்வொரு  பைன் மரங்களின்  இலைகள் கொழிந்து விழும்போதும் பெரிய ஒரு முழக்கத்தைக் கேட்கலாம்.

    இலட்சுமிக்குட்டி பைன் மரத்திற்குக் கீழே, முகத்தைத் தொங்கபோட்டுக்கொண்டு உட்காந்திருந்தாள். எண்ணெய் பசையில்லாத பறந்து கிடந்த முடி, கெட்டியான பருத்தித் துணியில் பாவாடையும் ஜாக்கெட்டும். கை மணிக்கெட்டுகளில் ஒவ்வொரு கறுப்பு வளையல் கழுத்தில் எப்போதோ மந்திரித்துக் கட்டிய கறுப்பு நிறக்கயிறு.

    வழியில் நின்று கொண்டிருந்த  இலட்சுமிக்குட்டிக்கு நேராக பெருங்காற்று தூசிகள் கிளப்பிக்கொண்டு வீசின. தூசி வலைக்குள் அகப்பட்ட அவள் விடாமல் இருமினாள்.

    சில நேரங்களில் கரியிலைகளோடு மேற்குக்காற்றும் வீசியது.  இலைகள் மட்டுமல்ல தொட்டாச்சிணுங்கி பூக்களும், எருக்கஞ்செடி பூக்களும் மேற்குக் காற்றில் கலந்திருக்கும். அவையில் சில இலட்சுமிக்குட்டியின்  ஆடையிலும், செம்பட்டை முடிகளிலும் ஒட்டிப் பிடித்திருக்கும். அவள் அசையவில்லை. சில வேளைகளில் அவள் மீது பைன் மரத்தின் இலைகள் கொழிந்து விழும்.

    குயவர்களின் குடிசைகள் அங்கிருந்து வெகு தொலைவிலில்லை. குடிசைகளுக்கிடையில் சக்கரங்கள், வெயிலில் காய்வதற்காக வைக்கப்பட்ட மண்பானைகள், சேற்றின் சின்ன சின்ன கூமாரங்கள். அதற்குப்பின்னால்  நதிவரை சதுப்பு வயல்கள். இலட்சுமிக்குட்டி சதுப்பு வயல்களில் நண்டும், மீனும் தேடி அலைவதுண்டு. எப்போதும் தனியாக காக்கைகளுடனும், நாரைகளுடனும், பருந்துகளுடனும் பேசிக்கொண்டு அவள் நடப்பாள்.  ஆற்று வழியாக சங்குகளை நுரைத்து நகர்கின்ற படகுகளுக்கு நேராக அவள் சத்தமிடுவாள். நதியோரங்களில் வளர்ந்த புதர்களிலிருந்து பூக்களைப் பறித்து முடிக்குள் திருகுவாள். அப்படி அலைந்து திரியக்கூடாதுனு  பாத்திரங்களை எடுத்திட்டுக் கிளம்பும்போதெல்லாம் அம்மாளு அவகிட்ட சொல்லுவாள்.

    “ நான் எங்கேயும் போக மாட்டே’ சாணிபோட்டு மெழுகப்பட்டத் திண்ணையிலிருந்து அவள் சொல்லுவா.

    அம்மாளு பக்கத்து குடிசையில் பாட்டியம்மாகிட்ட அவமேல எப்பவுமே  ஒரு கவனம் வேணும்னு சொல்லிட்டே இருப்பா.  பத்து, பதினேழு வயசானாலும் புத்தி சுவாதீனம் குறைவு. பாட்டிம்மா தன்னோட ரெண்டு கண்களும்   அவ மேல தா இருக்கும்னு  உறுதியளிப்பா.  ஆனா பாட்டிம்மாவுக்கு தூரப்பார்வை மிகக்குறைவு. அதோடு எப்பப் பார்த்தாலும் தூங்கிட்டுதா இருப்பாங்க.

    பாட்டிம்மாவெ  எப்படி தன் வசப்படுத்தணும்னு  இலட்சுமிக்குட்டிக்கு நல்லாத் தெரியும். நண்டு சுட்டுக்கொடுத்தா போதும்.

    தீக்கனலில் போட்டு நண்டு சுட்டெடுக்கற வாசம் கேட்டா பாட்டிம்மாவுக்கு பொறுமை இருக்காது. தொண்ணூறு வயசு முடிஞ்சுது இப்போதும் நண்டு மேலயும் மீன்மேலயும் உள்ள விருப்பம் தீரவே இல்ல.

    சுட்டெடுக்கப்பட்ட நண்டின் ஓடுகளை அடர்த்தியெடுக்கும்போது போது, பாட்டிம்மாவுக்கு பழைய நாட்கள் ஞாபகத்துக்கு வரும். சதுப்பு நிலங்களிலும், ஆற்றோரங்களிலும் அலைந்து திரிந்து பாட்டியம்மாவும் நிறைய நண்டுகளை பிடித்ததுண்டு. ஒரு தடவ பெரிய ஒரு நண்டு கைத்தலத்தில் இறுக்கின வலி தொண்ணூறு வயசாகியும் போகல. நண்டு ஓட்டையிட்ட கைத்தலத்தை நீட்டிப்பிடித்துக் கொண்டு,  சதுப்பு வயல்கள் தாண்டி குடிசைக்கு கொடுங்காற்றின்  வேகத்திற்கு ஓடி வந்தாள். நினைத்துப்பார்த்தா சிரிக்காம இருக்க முடியாது அந்த நண்டோட ருசியோ அதுவும் இப்போ வர மறக்க முடியாது அடிக்கடி இலட்சுமி தா அத ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தாள்.

    அம்மாளுக்கும் பொக்கனுக்கும் லட்சுமி ஒரே மகளல்ல. அவளுக்குக் கீழே அஞ்சு பேரு. மூணு பேரு பக்கத்துல இருக்குற எல்.பி ஸ்கூலுக்கு போறாங்க. ரெண்டு பேரு ஹைஸ்கூலுக்கும். அவங்கெல்லாம் காலையில போனா சாயங்காலந்தா திரும்ப வருவாங்க. அவங்க போறதுக்கு முன்னாடியே அப்பாவும், அம்மாவும் தூக்குப்போசி எடுத்துட்டு போயிடுவாங்க. தினமும் சந்தையும் இருக்கு.

    இலட்சுமிக்குட்டி அவங்ககூட போகமாட்டா அவளுக்கு விருப்பம் சதுப்பு வெளிகளில சுற்றி நடப்பதில்தான்  மூளை வளர்ச்சி அடையாத பொண்ணு. அப்படி நடக்கலாமா? மூள வளர்ச்சி அடையலேன்னாலும் பதிமூணு வயசில் அவள் ருதுவாகியிருந்தாள்.

    ‘ருதுவானப் பெண் அவள்’ அம்மாளு , பொக்கங்கிட்ட அடிக்கடி சொல்லுவா.

    அவன் ஆற்றோரத்திற்குப் போய் கல்யாணியின் காய்ச்சின சாராயம் குடித்துவிட்டு வந்த நேரம் என்றால் அது கேட்டா போதும் கோபம் வரும்.

    ‘நீதானே பெத்த?’

    மூளை வளர்ச்சி இல்லாத ஒரு மகளை பெத்ததுக்கு அவன் அம்மாளுவுக்கு ஒருபோதும் மன்னிப்பு அளிக்கத் தயாராகவில்லை

    ‘நான் பெத்ததா?  அது சரி அப்போ உங்களுக்கு இதுல பங்கில்லையா?’

    அம்மாளு எதிர்த்து கூறுவாள்,

    ‘பங்கு……….. த்தூ……..’

    அம்மாளு ஆவேசமாக நெருங்குவா அடுப்படில இருக்கற  நேரம்பார்த்து கலகம் தொடங்கினாங்கன்னா கையில ஒரு விறகு கொள்ளியோ, கரண்டியோ இருக்கும்.

    “ம்ஹூம் என்ன?’

    ‘பல தடவ சொன்ன விஷயந்தான்’

    இலட்சுமிக்குட்டி அவனோடதல்ல.’

    ‘வேற யாரோடது?’

    அது அவனுக்குத் தெரியாது சந்தைக்கும், திருவிழாவுக்கும் போறவதானே அம்மாளு. பல ஆம்பளகளோட அவ பழகுவதுண்டு.

    ‘சொல்லு யாருடையது?’

    ‘அது உனக்குத் தானே தெரியும்.’

    ‘என்னோட நீலிபகவதி தாயே’

    உள்ளம் கலங்கியுள்ள அந்த பேரொலியில் குயவக் குடிசைகள் அலறும். ஆனா பொக்கனுக்கு ஒரு அசைவும் இருக்காது.

    ‘நீலியார் பகவதி உண்மை அறியாதவள் அல்லவே.!’ பூசப்படாத மண் சுவரில் சாய்ந்து உட்கார்ந்து அவன் புகை விடுவான். மாரிலடித்து அழுகின்ற அம்மாளுவை ஆறுதல்படுத்த  பக்கத்து வீட்டுப் பெண்கள் அதற்குள் பாய்ந்து வந்திருப்பார்கள். பாட்டிம்மா பக்கத்துக் குடிசையில முன்னாடி உட்காந்து பொக்கனை சத்தமாக குத்தம் சொல்லிக் கொண்டிருப்பா.

    என்ன பார்க்கிறோம் என்ன கேட்கிறோம் என்று உணராமலே இலட்சுமிக்குட்டி.

    அவ தலைல களிமண்ணுனு பொக்கன் சொல்லுவா.

    ‘எடுத்து சட்டியும் பானையும் செஞ்சுக்கோ’ பாட்டிம்மா நல்ல சூடான பதிலடி கொடுப்பா.

    ‘நேத்தும் நண்டோ மீனோ கொண்டு வந்திருப்பா’

    ‘போடா ஒனக்குத் தெரியாது. அவ புத்திசாலி பொண்ணுதா’

    ‘ம்ஹும்’

    ‘அஞ்சாம் வகுப்பு வர படிச்சவதானே அவ’

    ‘பள்ளிக்கூடத்துக்கு  அனுப்பற வேலய நா செஞ்சிட்டே அவ ஏதாவது படிச்சாளா?’

    ‘ரெண்டாங்கிளாஸ்ல படிச்ச பாட்டு அவ நேத்துக்கூட எங்கிட்ட பாடி காமிச்சா என்ன ஒரு ஞாபக சக்தி.’

    சேற்று வயல்களில் நண்டும் மீனும் நீந்தற சத்தம் அப்போது பொக்கனுக்குக் கேட்க முடிந்தது. இலட்சுமிக்குட்டி அப்போதுவரை ஒரு துண்டு  கிள்ளித் திங்க கூட அவ அப்பாவுக்குக் கொண்டு வந்ததில்ல. அந்த அழுத்தம் அவருக்குள்ளும் இருந்தது. எதுக்குக் கொண்டு வரணும்? அப்பா அல்லவே!’ வேண்டாம் எனக்கொன்னும் கேட்க வேண்டா நான்தா அவளோட அப்பா அல்லவே.  அவன் மரணித்த நிர்விகார எண்ணங்களுக்குள் கடந்து போவான். மெதுமெதுவாக இருள் வந்து குயவர் குடிசைகளை மூடும். புணருகின்றவர்களின் முக்கல், முனகல்  தவிர வேறொன்றும் கேட்பதற்கில்லை. அப்படி  ஓர் இரவு விடிந்தபோது இலட்சுமிக்குட்டி மாசமாய் இருப்பது அம்மாளுவுக்குத் தெரிய வந்தது. இலட்சுமிக்குட்டிப் பாயில் படுத்திருந்தாள். அவளுடைய அடி வயிறு கனமானதாக இருந்ததை அம்மாளு அறிந்து கொண்டாள். சந்தேகம் தீர்க்க அம்மாளு அவளுடைய அடிவயிற்றில் தொட்டுப் பார்த்தாள். அடுத்த நொடி நீலியார்பகவதி அம்மாளை சத்தமாகக் கூப்பிட்டு விட்டாள். நாக தேவதைகளை அழைத்தாள். குயவக்குடிசைகள் பதைபதைத்து உணர்ந்தன.

    அதற்குள் அம்மாளு இலட்சுமிக்குட்டியை வாசலுக்கு இழுத்துத் தள்ளியிருந்தாள்.

    “எனக்குத் தெரியாது………. எனக்குத் தெரி   யாது’ இலட்சுமிக்குட்டி அழுது கொண்டு சொன்னாள்.

    ‘பொழுது விடியல. அதுக்கு முன்னாடியே தொடங்கியாச்சு.’ பாட்டிம்மா, தடி கையில் எடுப்பதற்கு முன்பாக அம்மாளுவைப் புலம்பினாள். ‘இப்படி இருப்பாங்களா ஒரு அம்மா, இந்தப் பொண்ணையும் அவ வயித்துல சுமந்தவ தானே!, நொந்து பெத்தவ தானே!,  முலையூட்டினவதானே!,  அப்படி பலதையும் புலம்பிக் கொண்டு பாட்டிம்மா தடி ஊன்றிக்கொண்டு வெளியில் இறங்கினாள்.

    பொக்கணும், அம்மாளுவும்  பேய் பிடிச்சவங்க மாதிரி   ஆடித் தள்ளனாங்க இலட்சுமிக்குட்டி தரையில் கிடந்துத் துடித்தாள்.

    ஓடிவந்த குயவர் பொக்கனப்பிடித்துத் தள்ள முயற்சித்தார்கள். குயத்திகள் அம்மாளுவையும் தள்ளினார்கள். பாட்டிம்மா குனிந்து உட்கார்ந்து  இலட்சுமிக்குட்டியைத் தன்னோடு சேர்த்து அணைத்தாள்.

    ‘கொஞ்சம் அடங்கு அவ செத்துருவா”

    ‘சாகட்டும்’

    ‘வேண்டாம் இப்படி ஒரு மூதேவிய இங்கே’

    ‘என்ன தப்பு செய்தா இவ?’

    ‘அவளோட வயித்துலப் பாருங்க.’

    பார்வைக் குறைபாடுடையக் கண்களால் பாட்டிம்மா இலட்சுமிக்குட்டியைப் பார்த்தாள். நடுங்குகின்ற வலது கை அவளுடைய வயிற்றின்  மேல் பாகமாய் நகர்ந்தது. வயிறு கனமுடையாதத்தான் இருக்கிறது என்று பாட்டிம்மாவுக்கும் தோன்றியது.

    “மகளே எங்கிட்ட சொல்லு யாரு? பாட்டிம்மா கேட்டாள்

    ‘நெசமாவே எனக்குத் தெரியாது பாட்டி……….மா’

    விதும்புதலுக்கிடையில் இலட்சுமிக்குட்டி சொன்னாள்.

    பாட்டிம்மாவுக்கும் கோபம் வந்தது.

    ‘அப்புறம் உனக்குத் தெரியாமலா?. உனக்குத் தெரியாமத்தா ஒரு ஆம்பள உன் மேல படுப்பானா?”

    இலட்சுமிக்குட்டி குழம்பினா.  பாட்டிம்மா அவளோட ரெண்டு தோள்களையும்  பிடித்தாள்.

    ‘அவ ஒங்கிட்ட சொல்லி இருப்பா யார்கிட்டயும் சொல்லக் கூடாதுன்னு, சொன்னா கொன்னுடுவேன்னு இல்லயா?’

    ‘இல்ல’

    ‘பணம் கொடுத்தானா ஒனக்கு?’

    ‘இல்ல’

    ‘ எப்படி இருப்பா அவ ‘

    இலட்சுமிக்குட்டியோட நினைவுக்கு ஒரு வாசம் அப்போதுதான் கடந்து வந்தது. ஒரு தேகத்தின் வாசம். அது அந்த நிமிடமே கொடூரமானது. இலட்சுமிக்குட்டி அந்த வாசத்தை உட்கொள்ள மூக்குகளை விரித்துக்கொண்டு அங்கும் இங்கும் முகத்தை நீட்டினாள்.

    ‘என்னடி புள்ள பாட்டிம்மா அவளுடைய செய்கைகளைப் பார்த்துட்டு அதிர்ச்சிக்கு ஆளானாள்.

    ‘ஒரு வாசம்…………….’ அவள் சொன்னாள்.

    தன்னுடைய திடுக்கத்தை சுற்றிலும் வேடிக்கைப்பார்த்து நிற்கின்றவர்களுக்கு நேராகப் பார்த்தாள்.  அம்மாளு சாப வார்த்தைகளுடன் இலட்சுமிக்குட்டியைப் பிடித்து உயர்த்தினாள்.  அவள் நகர்ந்தாள். கருநொச்சிகளுக்கிடையிலிருந்து அம்மாளு அவளை உதறித் தள்ளினாள்.

    ‘போ எங்கேயாவது போ…….. நாசமாப் போனவளே இலட்சுமிக்குட்டி குப்புற அடிச்சு விழுந்தாள். அம்மாளு  அழுது கொண்டே பின்னாடி நகர்ந்தாள். இலட்சுமிக்குட்டி மெதுவாக எழுந்தாள். வேறு யாரும் அங்கு செல்லவில்லை. பாட்டிம்மாவும் அசையவில்லை.

    ‘அந்த வாசம்……… எனக்கு நல்ல உறுதியாத்தெரியும்.  பைன்மரங்களுக்குக் கீழே நடக்கும்போது இலட்சுமிக்குட்டி தனக்குத்தானே புலம்பினாள்.

    பைன்மரத்திலிருந்து இலைகள் கொழிந்து விழுந்தன. அகன்ற பாதை வழியாக ஒருவன் நடந்து வந்தான்.

    இலட்சுமிக்குட்டி சிரமத்தோடு எழுந்து அவனுக்கு நேராக நடந்தாள். அவள் தன்னுடைய தேகத்தை முகர்ந்த போது அவனுடைய முகம் வெளிரியது.

    Share
  • வாயல் முறுவல்!

    வாயல் முறுவல்!

    -மேகலா இராமமூர்த்தி

    நமக்குச் சிரிப்பே வரவில்லையென்றாலும்கூடச் சிரித்தாக வேண்டிய சூழல் சில நேரங்களில் ஏற்பட்டுவிடும். நமக்குப் பிடிக்காதவர்களைக் காணும்போது, நம் துன்பத்தைப் பிறரறியாமல் மறைத்துக்கொள்ள முற்படும்போது, நமக்கு வேண்டியவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்துசெல்ல விழையும்போது என இந்தப் பொய்ச்சிரிப்பை உதிர்க்கவேண்டிய சூழல்களுக்கு நம் வாழ்வில் பஞ்சமில்லை. இந்தப் பொய்ச்சிரிப்புக்கு – போலிப்புன்னகைக்குத் தமிழிலக்கியம் அழகானதொரு பெயரைச் சூட்டியிருக்கின்றது; அதுதான் ’வாயல் முறுவல்.’

    இங்கே ’வாய்’ என்பது நாம் சாப்பிடப் பயன்படுத்தும் உறுப்பை (mouth) குறிக்கவில்லை. ’வாய்’ என்ற சொல்லுக்கு ’உறுப்பு’ என்பதல்லாமல், ’உண்மை’ (truth) என்ற பொருளும் உண்டு. வாய்மை என்ற பெயர்ச்சொல்லே ’வாய்’ என்ற வேர்ச்சொல்லிருந்து தோன்றியதுதான். அதனால்தான் வாயல் (வாய் + அல்) முறுவல் என்பது உண்மையற்ற போலிப்புன்னகை எனும் பொருளைக் குறித்தது.

    இனி, வாயல் முறுவல் எனும் சொல் நம் இலக்கியங்களில் கையாளப்பட்டுள்ள இரண்டு சூழல்களைக் காண்போம்.

    முதலாவதாக நாம் காணவிருப்பது வாயல் முறுவல் சிந்திய அகநானூற்றுப் பெண்ணொருத்தியை. அவள் ஏன் வாயல் முறுவல் சிந்தினாள்? பிறகு என்ன நடந்தது? என்பவற்றை அறிந்துகொள்வோம், வாருங்கள்!

    தலைவன், தலைவி, மழலை மிழற்றும் இளம்புதல்வன் என மூவர் கொண்ட அன்பான குடும்பமது. விருந்தினரைப் பேணுவது, சுற்றத்தினரைப் போற்றுவது, வறியவர்க்கு உதவுவது என்று பயனுள்ள வகையில் தமது பொருள்களைப் செலவழித்துவந்தனர் தலைவனும் தலைவியும். ஒருகட்டத்தில் இனி மீண்டும் பொருள்தேடி வந்தால்தான் மற்றவரைப் பேணமுடியும் என்ற நிலை ஏற்படவே பொருள்தேட வெளியூர்க்குச் செல்ல விழைந்தான் தலைவன். ஆனால், தன்மீது அளவுகடந்த அன்பும் அக்கறையும் கொண்ட தலைவியிடம் அதனைச் சொல்வதற்குத் தயங்கினான். காரணம், அவன் பொருள் தேடுவதற்காக நெடும்பயணம் மேற்கொள்ளவிருந்த வழி, கொடிய பாலைவழி; அவ்வழியில் பதுங்கியிருக்கும் ஆறலை கள்வர், அவ்வழி வருவோர் போவோரையெல்லாம் கொன்று அவர்தம் உடைமைகளைப் பறித்துக்கொள்ளும் இயல்புடையோர்; இதனைத் தலைவி அறிந்திருந்தாள்; அதனால் அந்த ஆபத்தான வழியில் தான் பயணம் மேற்கொள்ள அவள் உடன்படமாட்டாள் என்ற எண்ணந்தான் தலைவனைத் தயங்கவைத்தது.

    சில நாட்களாகத் தலைவனின் முகத்தில் கலக்கமும் குழப்பமும் தெரிவதைத் தலைவி கவனித்தாள்; அதுபற்றி அறிய, ”ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறீர்கள்? என்னிடம் எதையோ மறைப்பதுபோல் தெரிகிறதே? என்று தலைவனைக் கேட்டாள்; இனியும் தன் உள்ளத்தில் உள்ளதை அவளிடம் மறைப்பது முறையில்லை என்று கருதிய தலைவன், ”கண்ணே! நம் சுற்றத்தையும் நம்மை நாடிவரும் விருந்தையும் நன்முறையில் புரப்பது நம் கடனல்லவா? அதற்குத் தேவையான பொருளைத் தேடச்செல்வது குறித்துச் சிந்திக்கின்றேன்” என்றான்.

    அதைக்கேட்ட தலைவி வருத்தமுற்றாள். ”அன்பரே! சுற்றமும் விருந்தும் புரக்கப்பட வேண்டியவையே; அதற்காக என்னைப் பிரிந்து, காய்ந்த ஓமை மரங்களையுடையதும், நெல்லியினது பளிங்குபோன்ற காய்கள், உயர்ந்த பெரிய பாறைகளில் சிறுவர்கள் விளையாடுவதற்குச் சேர்த்து வைத்திருக்கும் வட்டுக்களைப்போல உதிர்ந்து கிடப்பதும், ஞாயிற்றின் கதிர்கள் காயும் பக்க மலைகளில், பகுத்துவைத்தது போலிருக்கும் கூரிய கற்கள் வழிச்செல்வாரின் விரல்நுனியைச் சிதைப்பதுமான காட்டுவழியைக் கடந்துசெல்ல எண்ணுவீராயின் அஃது அறமன்று! நாம் எளிய வாழ்க்கை வாழ்வோம்; நம்மால் இயன்ற அளவிற்குப் பிறர்க்கு உதவுவோம்” என்றாள் அவனிடம்.

    ”சரி”யென்றான் தலைவன். ஆனால், தன் சுற்றத்தார் வறுமையில் வாடுவதைக் கண்ட அவன் மனம் மீண்டும் நெகிழத்தொடங்கியது. ”மனைவியின் பேச்சைக் கேட்டுக்கொண்டு வீட்டிலேயே உட்கார்ந்திருந்தால் பிறர் துன்பத்தைக் களையமுடியாது; அவ்வாறிருப்பது என் ஆண்மைக்கு அழகா? வினைதானே ஆடவர்க்கு உயிர்?” என்று சிந்திக்கலானான்.

    ”பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை; உதவி வேண்டிவந்தோர்க்கு உதவும் வாய்ப்பும் இல்லை” என்பதை உணர்ந்த தலைவன் தலைவியிடம், “கண்மணி கலங்காதே! நான் தேவையான பொருளைத் தேடிக்கொண்டு விரைந்து மீண்டுவிடுவேன்; நீ நம் புதல்வனோடு சிறிதுகாலம் பொறுத்திரு!” என்றான். அவன் மனவுறுதி அறிந்த தலைவியும் அதற்குச் ”சரி”யென்று சம்மதித்தாள்.

    பயணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினான் தலைவன். புறப்படும் நாளும் வந்தது. புறப்படுவதற்குமுன் தலைவியிடம் விடைபெறுவதற்காக அவளை அன்போடு அழைத்தான்; அவளோ அவன் அன்பை ஏற்றுக்கொள்ளாதவள்போல் மாறுபட்ட முகத்தோடு, தயங்கித் தயங்கி நிலத்தில் அழுந்த அடிவைத்து மெல்ல நடந்து அவனருகே வந்தாள்; அவன் அழைப்புக்கு மறுமொழி ஒன்றும் சொல்லவில்லை. ”சில நாட்களுக்கு முன்பே நான் பயணப்படப்போவதை இவளிடம் தெரிவித்து அதற்குச் சம்மதமும் பெற்றபின்பு, இன்று ஏன் இவள் இவ்வாறு நடந்துகொள்கின்றாள்?” என்று திகைத்தபடி தலைவன் அவளைப் பார்த்தபோது, தன்னுடைய கூரிய பற்கள் வெளிப்படுமாறு உண்மையில்லாப் புன்னகை (வாயல் முறுவல்) ஒன்றை உதிர்த்தாள் தலைவி. அவள் தன் மனத்தில் கருதியதைத் தலைவன் உணருவதற்கு முன்பே சித்திரப்பாவைபோல் நின்று, முகத்தால் ஒரு குறிப்புக் காட்டினாள். ”என்னைப் பிரிந்து செல்லாதீர்கள்; அஃது அறமன்று” என்று தன்னிடம் அவள் முன்பு சொன்னதையே அவளுடைய முகக்குறிப்பு மீண்டும் உணர்த்துவதாகத் தலைவனுக்குத் தோன்றியது.

    (தலைவனருகே நின்றிருந்த) தலைவியின் கண்களில் அப்போது நீர் துளிர்க்கவே, அதனை மறைக்கும் வகையில் சிறிதே தலைகவிழ்ந்தாள்; தன் மார்பில் ஒடுங்கியிருந்த புதல்வனைக் கொஞ்சுவதுபோல் அவன் தலையிலிருந்த செங்கழுநீர் மாலையை மோந்தாள்; மோந்த அளவில் அவள் மூச்சின் வெப்பத்தால் செந்நிறமான அம்மலர் தன்னிறமிழந்தது; அதனைக் கண்டான் தலைவன். ”அடடா! நான் அருகிலிருக்கும்போதே இத்தனை மனத்துயர் அடைந்து அதை மறைக்க முற்படுகின்றாளே, நான் பிரிந்துசென்றால் இவள் என்ன ஆவாள்? பிழைத்திருக்க மாட்டாளே!” என்று சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தான். அதுதான் தன் பயணத்தை நிறுத்துவது எனும் முடிவு.

    தலைவியின் கோணத்திலிருந்து இதனைப் பார்க்கும்போது, அவள் ஏற்கனவே தலைவனின் பயணத்திற்கு இசைவு தெரிவித்துவிட்டபடியால் அதனைத் தடுத்து நிறுத்துவது அவள் நோக்கமன்று; எனினும், அவனைப் பிரிந்துவாழும் துயர வாழ்க்கை; அவன் பயணப்படப்போகும் ஆபத்தான பாலைவழி; இப்போது செல்பவன் எப்போது திரும்புவானோ எனும் ஐயம்… இவ்வாறு ஆயிரம் எண்ணங்களும் கவலைகளும் அவள் மனத்தில் சூறாவளியெனச் சுழன்றடித்ததால் தன் உணர்ச்சிகளை மறைக்க அவள் எவ்வளவோ முயன்றும் முடியாமல் அது கண்ணீராகவும் வெப்பப் பெருமூச்சாகவும் வெளிப்பட்டுப் புதல்வனின் தலையிலிருந்த பூவை வாடச்செய்து, அவள் மனநிலையைத் தலைவனுக்குணர்த்தி அவனது பயணத்தையும் தடைப்படுத்திவிட்டது.

    தலைவன் தலைவி இல்லத்தில் நடந்த இந்நிகழ்வை, அவர்களின் உளநிலைகள் துல்லியமாய் வெளிப்படும் வகையில் காட்சிப்படுத்தி, தலைவனின் பெருந்தன்மையை எண்ணி நாம் உருகவும், தலைவியின் அவலநிலையை நினைத்து நாம் மறுகவும் வைத்துவிடுகின்றார் அரச புலவரும், பாலைத்திணை பாடுவதில் வல்லவருமான பாலை பாடிய பெருங்கடுங்கோ. அவரின் எழுத்தாணி தீட்டிய இனிய அப்பாடலை இனிக் காண்போம்.

    அளிநிலை பொறாஅது அமரிய முகத்தள்
    விளிநிலை கொள்ளாள் தமியள் மென்மெல
    நலமிகு சேவடி நிலம்வடுக் கொளாஅக்
    குறுக வந்துதன் கூரெயிறு தோன்ற
    வறிதகத் தெழுந்த வாயல் முறுவலள்
    கண்ணியது உணரா அளவை ஒண்ணுதல்
    வினைதலைப் படுதல் செல்லா நினைவுடன்
    முளிந்த ஓமை முதையலங் காட்டுப்
    பளிங்கத் தன்ன பல்காய் நெல்லி

    மோட்டிரும் பாறை ஈட்டுவட் டேய்ப்ப
    உதிர்வன படூஉம் கதிர்தெறு கவாஅன்
    மாய்த்தபோல மழுகுநுனை தோற்றிப்
    பாத்தி யன்ன குடுமிக் கூர்ங்கல்
    விரல்நுதி சிதைக்கும் நிரைநிலை அதர
    பரல்முரம் பாகிய பயமில் கானம்
    இறப்ப எண்ணுதி ராயின் அறத்தாறு
    அன்றென மொழிந்த தொன்றுபடு கிளவி
    அன்ன வாக என்னுநள் போல
    முன்னம் காட்டி முகத்தின் உரையா
    ஓவச் செய்தியின் ஒன்றுநினைந் தொற்றி
    பாவை மாய்த்த பனிநீர் நோக்கமொடு
    ஆகத் தொடுக்கிய புதல்வன் புன்தலைத்
    தூநீர் பயந்த துணையமை பிணையல்
    மோயினள் உயிர்த்த காலை மாமலர்
    மணியுரு இழந்த அணியழி தோற்றம்
    கண்டே கடிந்தனம் செலவே ஒண்தொடி
    உழையம் ஆகவும் இனைவோள்
    பிழையலள் மாதோ பிரிதும்நாம் எனினே.
    (அகம்: 5 – பாலை பாடிய பெருங்கடுங்கோ)


    வாயல் முறுவல் எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ள மற்றொரு சூழலை அடுத்துக் காண்போம்.

    இங்கேயும் பெண்ணொருத்தி வாயல் முறுவல் சிந்துகின்றாள். எப்போது? தன்னைப் பிரிந்துசென்ற கணவனை எண்ணிக் கலங்கியிருந்த வேளையில் தன்னைக் காணவந்த மாமன் மாமியிடத்து. பின்னர்க் கணவனோடு மீண்டும் இணைந்த சூழலில் அந்நிகழ்வு குறித்து அவளே அவனிடம் விளக்கவும் செய்கின்றாள். அவள் வாய்மொழியை நாமும் அருகிருந்து கேட்போம். அதற்கு முன்பாக அப்பெண் யாரென்பதை நாம் அறியவேண்டாமா? அவள் வேறு யாருமல்லள்! ”கற்புக் கடம்பூண்ட தெய்வம்” என்று கவுந்தியடிகள் எனும் சமணப் பெண்துறவியால் பாராட்டப்பெற்ற கண்ணகியே அப்பெண். 

    பொருள்தேடும் பொருட்டுப் புகாரைவிட்டு மதுரைக்குச் சென்றான் கோவலன் கண்ணகியையும் உடனழைத்துக்கொண்டு. அங்கே அவர்கள் மாதரி எனும் இடைக்குல முதுமகள் தந்த மனையில் தங்கினர். நீண்ட காலத்திற்குப் பிறகு தன் கையால் சமைத்து அருமைக் கணவனுக்கு அமுதுபடைத்தாள் பாவை கண்ணகி. அவளின் அடக்கத்தையும் பண்பையும் கண்டு உள்ளம் உருகிய கோவலன், அவளை அருகழைத்துத் தான்செய்த தவறுகளுக்காக அவளிடம் வருந்தி மன்னிப்புக் கேட்டான். அதுவரை அவனைக் கண்டித்து ஏதும் பேசாத கண்ணகி அப்போது முதன்முறையாக அவனுடைய பிழைகளைச் சுட்டிக்காட்டும் வகையில்,

    ”ஐய! நீர் சான்றோர் போற்றாத ஒழுக்கத்தைப் புரிந்ததனால் அறவோர்க்கு உணவளித்தல், செந்தண்மை பூண்ட அந்தணரை ஓம்புதல், துறவிகளை எதிர்கொண்டழைத்துப் போற்றுதல், பண்டைக் காலந்தொட்டு இல்லறத்தார்க்குரிய கடமையாகச் சொல்லப்பட்ட விருந்தினரைப் பேணுதல் முதலிய செயல்களையெல்லாம் யான் செய்ய இயலாமல் போய்விட்டது. அப்போது, என்னைக் காணத் தங்களுடைய பெருமைக்குரிய அன்னையும், பெரும் புகழுக்குரிய தந்தையும் வந்தனர்; என்னோடு நீங்களில்லாததால் ஏற்பட்ட வெறுப்பு நீங்கியவளாக இருந்த என்னை அன்புமொழிகளால் அவர்கள் பாராட்ட, என் மனத்துன்பமும் மெய்வருத்தமும் புலப்படும் வகையில் நான் செய்த பொய்ந்நகைக்கு (வாயல் முறுவல்) அவர்கள் வருந்தினர்” என்றாள்.

    ”அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஓம்பலும்
    துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
    விருந்தெதிர் கோடலும் இழந்த என்னைநும்
    பெருமகள் தன்னொடும் பெரும்பெயர்த் தலைத்தாள்
    மன்பெருஞ் சிறப்பின் மாநிதிக் கிழவன்
    முந்தை நில்லா முனிவிகந் தனனா
    அற்புளம் சிறந்தாங்கு அருண்மொழி அளைஇ
    எற்பா ராட்ட யானகத்து ஒளித்த
    நோயும் துன்பமும் நொடிவது போலுமென்
    வாயல் முறுவற்கவர் உள்ளகம் வருந்தப்
    போற்றா ஒழுக்கம் புரிந்தீர்…”
    (சிலப்: கொலைக்களக் காதை – 71-81)

    ஈண்டு, அகநானூற்றுத் தலைவி, தலைவனுக்குப் பயணவழியில் நேரிடக்கூடிய துன்பங்களுக்காக முன்கூட்டியே அஞ்சி, அவன் பயணத்தைத் தொடங்க நினைத்து அவளிடம் விடை வேண்டியபோது வாயல் முறுவல் புரிந்தாள்; சிலப்பதிகாரத் தலைவியான கண்ணகியோ, தலைவன் (கோவலன்) தன்னைப் பிரிந்ததால் ஏற்பட்ட மனவருத்தத்தை மாமன் மாமியிடம் மறைத்திடும் பொருட்டு வாயல் முறுவல் புரிந்தாள் என்று அறிகின்றோம்.

    பொய்ச்சிரிப்பு, போலிப்புன்னகை எனும் சொற்களைக் காட்டிலும், அதனை எதிர்மறை வாய்பாட்டில் உணர்த்தும், ’வாயல் முறுவல்’ எனும் சொல் நம் தமிழரின் நனிநாகரிகத்தை – நயத்தகு பண்பாட்டைத் தெற்றெனப் புலப்படுத்துகின்றது. இச்சொல்லின் பயன்பாட்டினை நாம் நன்கு புரிந்துகொள்ளும் வகையில் தம் பாட்டில் கையாண்டிருக்கும் பெரும்புலமையோர்க்கு நம் பாராட்டு உரித்தாகட்டும்.

    *****

    கட்டுரைக்கு உதவியவை:

    1.அகநானூறு – நாவலர் திரு. ந.மு. வேங்கடசாமி நாட்டார், கரந்தைக் கவியரசு ரா. வேங்கடாசலம் பிள்ளை இவர்களால் எழுதப்பட்ட பதவுரை விளக்கவுரையுடன் பாகனேரி வெ பெரி பழ மு காசிவிசுவநாதன் செட்டியாரால் வெளியிடப்பட்டது.

    2.சிலப்பதிகார மூலமும் பெருமழைப்புலவர் பொ.வே. சோமசுந்தரனார் உரையும்.

    Share
  • தூங்குதலை கல்வெட்டு

    தூங்குதலை கல்வெட்டு

    சேசாத்திரி ஸ்ரீதரன்

    உடலில் உயிர் என்னும் இயக்கம் இருந்தால் தான் இந்த உலகில் ஒருவருடைய பெயர், அறிவு, சொத்து, சொந்தம், அதிகாரம் எல்லாம் அவருக்கு உரியதாக இருக்கும். அந்த விலை மதிக்க முடியாத உயிர் ஒட்டியிருந்த கூட்டை விட்டுப் போனால் உடலோடு எல்லாம் போய்விடும். உலகுடனான அவரது உடம்பியல் தொடர்பு (physical relationship) முற்றாக அற்றுப் போகும். அத்தகு உயிரை சிலர் தாமே தம் விருப்பில் தமது தலைவன் உடல்நலம் தேற வேண்டியும், தலைவனுக்கு போரில் வெற்றி கிட்ட வேண்டியும், மேற்கொள்ளப்பட்ட  ஒரு செயலில் தடை நீங்கி அச்செயல் நல்லமுறையில் நடந்தேறவும் தெய்வத்திடம் நோந்து வேண்டிக் கொண்டு அந்த வேண்டுதல் நிறைவேறுகையில் தம் தலையை வெட்டி தம் நோற்றலை நிறைவேற்றினர். இதற்கு தூங்கு தலை, நவகண்டம் என்று பெயர். தலையை வெட்டும் போது சிலருக்கு உடனே உயிர் போகும் அப்போது தலை உடலோடு ஒட்டித் தொங்கிக் கொண்டிருக்கும் என்பதை வைத்து இப்படி அழைத்திருக்கலாம். இத்தகு தலை அறுப்பு காளி, துர்க்கை கோவில் முன்பாகவே பெரும்பாலும் நடந்தன. இப்படி தலையை அறுத்துக் கொண்டு உயிர் துறப்பவர் செயலை மெச்சி அவரது குடும்பத்திற்கு போரில் இறக்கும் வீரருக்கு ஒப்பாகக் கருதி நெய்த்தோர்பட்டி நிலம் தானமாக வழங்கப்பட்டது. போரில் இறப்பதும் தலைவன் நலம், வெற்றி வேண்டி உயிர் பலி கொடுப்பதும் ஒன்று தான் என்ற கருத்து நிலவியதால் இந்த உயிர் பலி மேற்கொள்ளப்பட்டு இருக்கலாம். இப்படி இறந்தோர் பெரும்பாலும் கீழ்நிலைப் படைவீரர் அல்லது எளியோர் என்பதை கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. நெல்லூர் மாவட்டம் கூடூர் வட்டம் மல்லாம் கிராமத்தில் கம்ப வர்மனுடைய 20 ஆம் ஆட்சி ஆண்டில் 883 இல் ஒக்கொண்ட நாகன் ஒக்க திந்தன் என்ற பறை அடிப்பவன் நவகண்டமாக தன் தலையை அறுத்து துர்க்கைக்கு படையலிட்டான். அவன் குடும்பத்தவருக்கு ஊரார் தொறுப்பட்டி கொடுத்தார்கள். 10 ஆம் நூற்றாண்டில் விருதுநகர் துலுக்கர்பட்டி அருகில் உள்ள மன்னார்கோட்டை சிவன் கோயிலில் உள்ள கல்வெட்டு தன் தலைவன் தன்மசெட்டி நலம் பெற வேண்டி கோன் என்பவன் நோன்பு நோற்று தன் தலையை அரிந்து கொண்டு உயிர் பலி கொடுத்தான் என்கிறது.

    யோக சித்தர்கள் தமது யோக வலிமையால் உடலை ஒன்பது கூராகப் பிய்த்து மரத்தில் தொங்கவிடுவது, அங்கும் இங்கும் சிதற விட்டிருப்பது போன்ற யோகப் பயிற்சியில் ஈடுபட்டு பின் பிய்த்த உடலை தம் யோக வலிமையால் ஒன்று சேர்ப்பர். இது தான் உண்மையான நவ கண்டம். ஆனால் வீரர் நோன்பிருந்து தலை அரிந்து பலியிடல் அதனினும் மாறுபட்டது. ஆயினும் பொருத்தமின்றி அதையும் நவகண்டம் என்றே குறிப்பிட்டனர். பெண்கள் இவ்வாறு தலை அறுத்து வேண்டுதல் நிறைவேற்றியதாக சிற்பமோ அல்லது கல்வெட்டோ இல்லை. இது ஆடவர் மட்டுமே மேற்கொண்ட சடங்காகத் தெரிகிறது. தமிழகத்தில் பல தலைவெட்டுச் சிற்பங்கள் கல்வெட்டு ஏதும் இன்றி சிற்பமாக மட்டுமே உள்ளன. மிகச் சில சிற்பங்களில் மட்டுமே கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கீழே அந்த கல்வெட்டுகள் விளக்கப்பட்டுள்ளன.

    விழுப்புரம் மாவட்டம் திருக்கோயிலூர் வட்டம் பெண்ணையாற்றின் வடபுறம் அரக்கண்ட நல்லூர் ஒப்பிலாமணி ஈசுவரர் கோயில் நாட்டிய மண்டபத்தில் பொறிக்கப்பட்டுள்ள 12 வரிக் கல்வெட்டு
    1. கோமாற பன்மர் திருபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ சுந்தர 
    2. பாண்டிய தேவர்க்கு யாண்டு பத்தாவது இந்தத் திருமண்டப
    3. ம் தட்டோடு இட்ட இதுக்கு இவ்வாண்டை திருவைகாசித் திருநாளில் 
    4. இவூர் தேவரடியாரில் பொந்நாண்டை மகன் இளவெண் 
    5. மதிசூடினான் தலைஅரிந்து கொள்ளுகெயில் இவனுக்கு உதிரப்பட்
    6. டியாக எல்லைக் காலில் தென்னகோன் தரங்குழி குரம்பில் 
    7. சண்டேசுர நாயனார்கு கொடுத்தருளின குழி ஐநூறும், இப்பற்றில்
    8.  நாட்டவர் இவூரில் குடிப்பற்றில் குடுத்த குழி ஐநூறும் ஆககுழி ஆயிர
    9. மும் சந்திராதித்தவரை இவன் வழி உள்ளவர் அனுபவித்துக்  
    10. கொள்ளக் கடவார்கள். பன்மாகேசுரலக்சை. 
    11. இதுக்கு இலங்கணம் சொன்னவன்
    12.  தாய்க்குத் தானே மணவாளன். 

    தட்டோடு – இடிந்ததால், அழிந்து சேதமாதல்; குரம்பு – வரப்பு, எல்லை, அணை; காலில் – காட்டில், வயலில்; உத்திரப்பட்டி – உயிர் பலிக்கு ஈடாக கொடுக்கும் நிலம்; பன் மாகேசுவரர் – சிவனடியார் கூட்டம்; இலங்கனம் – இடர் 

    விளக்கம் : சட வர்ம சுந்தர பாண்டியனின் 10 ஆவது ஆட்சி ஆண்டில் 1260 இல் இந்த ஆடல் திருமண்டபம் கட்டுகையில் ஒரு பகுதி இடிந்து சேதமானது. அதை மீண்டும் உண்டாக்க இந்த ஆண்டு வைகாசி நன்னாளில் இந்த ஊர் தேவரடியாள் பொந்நாண்டையின் மகன் இள வெண்மதிசூடி என்பவன் தடையேதும் இன்றி மண்டபப் பணி முடிவடைய வேண்டிக் கொண்டு தன் தலையை அறுத்து உயிர் பாலி கொடுத்தான். இதற்கு உதிரப்பட்டியாக எல்லைக் காட்டில் தென்னகோன் பண்பட்ட விளைநில வரப்பில் சண்டேசுவர நாயனாருக்கு நன்கொடையாக வந்த ஐநூறு குழி நிலமும் இந்த பற்றில் வாழும் சித்திரமேழி நாட்டவர் இவ்வூரில் குடியிருப்பு நிலத்தில் கொடுத்த ஐநூறு குழி நிலமும் ஆக மொத்தம் ஆயிரம் குழி நிலம் சந்திர சூரியன் நிலைக்கின்ற காலம் வரை இவன் வழிவந்தோர் அனுபவித்துக் கொள்ளட்டும் என்று நிலதானம் வழங்கினர். இதை சிவனடியார்க் கூட்டம் காப்பதாக. இதை இடராக்கி குறை கூறுபவன் தன் தாய்க்கு தானே கணவன் ஆனவன்.

    கோவில் தேரடியார்கள் மற்றவர் போலவே மணந்து பிள்ளை பெற்று குடும்பம் கொண்டிருந்தனர் என்பதை இக்கல்வெட்டால் அறிய முடிகிறது. 12 ஆம் நூற்றாண்டு முதல் கல்வெட்டின் இறுதியில் இவ்வாறு கொச்சையாகத்  திட்டும் வழக்கம் பதிவேறியது.    

    பார்வை நூல்: கல்வெட்டுக் கலை, பக் 139, பொ இராசேந்திரன் & சொ சாந்தலிங்கம்

    வேலூர் மாவட்டம் வாலாசாப்பேட்டை வட்டம் திருமலைச்சேரி பொன்னியம்மன் கோயில் எதிரில் உள்ள 5 வரிக் கல்வெட்டு

    1. தூங்குதலை குடு
    2. த்தாந் வீரசோழ
    3. னை கல் செய்வி
    4. த்தார் நல்லூர் நம்
    5. பி 

    தூங்குதலை – தொங்குகின்ற தலை என்ற தலைவெட்டு நேர்த்திக் கடன் 

    விளக்கம் : வேந்தன் பெயரோ காலக் குறிப்போ இல்லாத கல்வெட்டு. வீரசோழன் என்ற வீரன் தன் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் தன் தலையை வெட்டி வைத்தான். அவன் நினைவைப் போற்றும் வண்ணம் இக்கல் நட்டுவித்தன் நல்லூர் நம்பி என்ற தலைவன்.

    பார்வை நூல்: ஆவணம் 24, 2013, பக். 53

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டம் திருவாலங்காடு இரயில் நிலையம் அருகில் உள்ள பாகசாலை மூலஸ்தான ஈசுவரர் கோயில் கற்பலகையில் உள்ள 13 வரிக் கல்வெட்டு

    1.  யாண்டு இருபத்தேழாவது க
    2. ந்நர தேவற்கு பாசாலி கிழவ[ந்)
    3. நாகன் சேந்தமானுக் கு
    4. ன்றில்
    5.  _ _ _ வென்று பிடாரிக்கு இவர் பி[ள்]
    6. ளை கையிலாந் மகந் சரதேவன் தலை 
    7. த[ந்]தான். இவனுக்கு அர்ச்சனா போக
    8. மாக மு
    9. ற்குண்டில் ஆட்புளிக் கழுவலின் கீழை குண்
    10. டில் நிலம் அரைக்கால் இவ்வரைக்
    11. கால்
    12.  நிலம்
    13.  இதுவே.    

    கிழவன் – ஊர்த்தலைவன்; மகன் – கீழ் நிலைப்  போர் வீரன், soldier; அர்ச்சனா போகம் – கோயில் பூசை செலவிற்கு விடும் நிலம்; கழுவில் – மழைநீர் வடிந்தோடும் நிலம்; குண்டில் – சிறு வயல் 

    விளக்கம் : இராட்டிரகூடன் மூன்றாம் கிருஷ்ணனின் 27 ஆம் ஆட்சி ஆண்டில், கி.பி. 966 இல் இன்றைய பாகசாலையான அன்றைய பாசாலியின் ஊர்க் கிழவன் நாகன் சேந்தமான் குன்றில் நடந்த போரில் வென்றதால் தன் வேண்டுதலை நிறைவேற்ற இவரது பிள்ளை கயிலானின் படைஆள் சரதேவன் என்பவன் துர்க்கைக்கு தன் தலையை வெட்டி பலி கொடுத்தான். இவன் சார்பாக அம்மனுக்கு பூசை நடத்தும் செலவிற்கு முற்குண்டில் ஆட்புளி மழைநீர் வடிநிலத்தின் கிழக்கு சிறு வயலில் உள்ள நிலத்தில் அரைக்கால் அளவு ஒதுக்கப்பட்டது. இந்த அரைக்கால் நிலம் இதுவென்று கல்வெட்டு உள்ள நிலத்தை குறிக்கிறது.  

    பார்வை நூல்: ஆவணம் 15, 2004, பக். 14

    அரியலூர் மாவட்டம் பெரிய திருக்கோணம் மகாமண்டப வடக்குச்சுவர் படிக்கையில் உள்ள 4 வரிக்  கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ திருபவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ ராஜேந்திர சோழதேவற்கு யாண்டு 18 வது மேஷ நாயற்று அபரபக்ஷத்து துவாதஸியும் புதன் கிழமையும் பெற்ற சதையத்து நாள் விக்கிரம சோழ வளநாட்டு மண்ணை கொண்ட சோழ வளநாட்டு மதுராந்தகபுரத்து நகரத்தோம். எம்மூர் உடையார் ஸ்ரீ 
    2. மதுராந்தக ஈஸ்வரமுடையார்க்கு இறையிலி செய்து குடுத்த பரிசாவது இந்நாயனார் சித்திரைத் திருநாள் திருவெழுச்சியும் உய்யவாடுவர் எழுந்தளிப் புறப்பட்டருளினவாறே இக்கோயிற் தேவரடியாரில் ஆவுடை நாச்சி மகன் பஞ்சணேசுவரன் தலை அரிந்து கொள்கையில் இவனும் இக்கோயில் தானத்தாரும் இ _ _ _ யக் கூனை 
    3. திரு _ _ _ நாயனார் ஸந்தி அமுது செய்தருளவும் என்று இவர்கள் கையில் கொள்கையில் நாம் இசைந்து நம்மூர் மூன்றாங் கட்டளை இராஜராஜ வதிக்கு கிழக்கு சோழகேரளன் வாய்காலுக்கு வடக்கு மூன்றாங் கண்ணாற்று மூன்றாஞ் சதிரத்து தெற்கடைய நிலம் 5 வில் கிழக்கடையவும் 15 மை 
    4. _ _  _ _ _ இந்நாயனார்க்கு முன்னாள் திருநாமத்து இறுப்புக் காணியாக குடுத்த நிலம் வ ப மி இந்நிலம் ஆறுமாக்காணியும் (பஞ்சோபாதியும்) _ _ _ _ த்துக்கு இந்நாள் முதல் ஸந்த்ராதித்தவற் இறையிலி செய்து குடுத்தோம் மதுராந்தகபுரத்து நகரத்தோம். 

    பரிசு – ஏற்பாடு; திருவெழுச்சி – திருவிழா; உய்யவாடுவார் ( உய்ய + ஆடுவார்) – காலைத்தூக்கி ஆடும் இறைவன்; வதி – வடிகால்; கண்ணாறு – பாசன வாய்க்கால்; சதிரம் – நான்கு சமபக்கம் கொண்ட நிலம்; இறுப்பு – செலுத்துகை, ஆவண ஓலை;

    விளக்கம் : மூன்றாம் இராசேந்திரச் சோழனின் 18 ஆவது ஆட்சி ஆண்டு கி.பி. 1264 இல் மேழ ராசியான தேய்பிறை 12 ஆம் நாள் புதன் கிழமை அன்று சதய நட்சத்திரம் கூடிய நாளில் விக்கிரம சோழ வளநாட்டு மண்ணைக் கொண்ட சோழ வளநாட்டு மதுராந்தகபுரத்து நகரத்தவர் சொல்வது. “எமது ஊர் ஈசர் மதுராந்தக ஈசுவரருக்கு இறையிலி நன்கொடை ஏற்பாடு செய்து கொடுத்தது யாதெனில் இந்த இறைவர் சித்திரைத் திருநாள் திருவிழாவில் உய்ய ஆடுவார் எழுந்தருளி உலா புறப்பட்டபடி இருக்கையில் இக்கோவிலின் தேவரடியார் ஆவுடை நாச்சியின் மகன் பஞ்சணேசுவரன்தன் தலை வெட்டி பலி கொடுத்ததனால் இவனும்  இக்கோவில் பொறுப்பாளரும் இறையிலியாகத் திருமதுராந்தக ஈசுவரர் சந்தி அமுது செய்தருள்வதற்காக இவர்கள் கையில் வாங்கிக்கொள்ளும் போது நகரத்தவர் நாம் விரும்பி நம்மூரில் மூன்றாம் கட்டளையில் அமைந்த இராஜராஜ வடிகாலுக்கு கிழக்கே சோழகேரளன் வாய்க்காலுக்கு வடக்கில் மூன்றாம் பாசன வாய்க்காலுக்கு மூன்றாம் சதிரத்தில் இருந்து தெற்கே செல்ல நிலம் 5க்கு கிழக்கை அடைந்ததும் 15 _ _ _  இந்த இறைவற்கு முன்னாளிலே ஆவண ஓலைக் காணியாக கொடுத்த நிலம் _ _ இந்த நிலம் ஆறு மாக்காணியும் _ _ _ இந்நாள் முதலாக சந்திராதித்த காலம் வரை இறையிலியாக செய்து கொடுத்தோம் இந்த மதுராந்தகபுரத்து நகரத்தார். கல்வெட்டு ஆங்காங்கே சிதைந்துள்ளதால் நிலம் குறித்து தெளிவாகச் செய்தியை அறிய முடியவில்லை.

    பார்வை நூல்: அரியலூர் மாவட்டக் கல்வெட்டுக்கள், செப்பேடுகள், தொகுதி I, பக் 242 ஆசிரியர்: இல. தியாகராஜன்
    சிவகங்கை மாவட்டம் காளையார் கோயில் வட்டம்  மல்லல் சிதைந்த நவகண்ட கல்வெட்டு

    1.  ஸ்வஸ்தி ஸ்ரீ கொலோத்து 
    2. ங்க சோழ தேவர்க்கு யா 
    3. ண்டு 11 ஆவது வடிந் 
    4. _ உதாரனான கொலோத் 
    5. துங்க சோழ மூவரைய 
    6. னுக்கு வியாதி தொற்ற 
    7. _ தூங்குதலை நோத்த  
    8. _ தூங்குதலை குடுத் _ 
    9. _ அம்பலக் கூத்த _ 
    10. _ சாத்தி குடுத்த ந
    11. _ _ _ து குழிச் செய்ய _ _ _     

    சாத்தி – நினைந்து; நோத்த – நோன்பு மேற்கொண்ட

    விளக்கம் : முதல் குலோத்துங்க சோழனின் 11 ஆம் ஆட்சி ஆண்டு 1081 இல் தரும சிந்தனை உள்ள குலோத்துங்க சோழ மூவரையன் என்ற தலைவன் நோயில் வீழ்ந்தான். அவன் குணமானால் தன் தலையை வெட்டி உயிர் பலி தருவதாக வேண்டிக் கொண்டான் அவனது ஏவலன் அம்பலக் கூத்தன். அவ்வண்ணமே நோய் தீர்ந்ததால் தன் தலையை வெட்டிக் கொடுத்த அவனது நினைவைப் போற்றி அவன் குடும்பத்தவருக்கு நத்தப்பட்டி நிலம் தரப்பட்டது. எவ்வளவு குழி என்று அறிய முடியாத படி கல்வெட்டு சிதைத்து விட்டது.

    பார்வை நூல்: திரு சரவண மணியன் வலைப் பதிவு

    வேலூர் மாவட்டம் வாலாசாப்பேட்டை வட்டம் சோளிங்கர் அருகே உள்ள மோட்டூர் கிராமம் திருவாத்தம்மன் கோவிலுக்கு எதிரே நட்டுள்ள பலகைக் கல்லில் உள்ள 5 வரிக் கல்வெட்டு

    1. தொண்டைமான் 
    2. மகன் கங்கவிக்
    3. கரன் _ _ _  க்காவளோ
    4. ன் தலை யரிந்தா
    5. ன் 

    மகன் – கீழ்நிலைப் படை வீரன் 

    விளக்கம் : 12-13 நூற்றாண்டு கல்வெட்டு. ஆசனமிட்டு அமர்ந்து தலையில் கொண்டையுடன் உள்ள வீரன் தன் கழுத்திற்கு நேரே இரு கைகளால் கத்தியை பிடித்து கத்தியால் கழுத்தை அழுத்துவது போல சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. தொண்டைமானிடம் கீழ்நிலைப் போர் வீரனாக இருந்த கங்கவிக்கரன்  என்னும் காவலோன் தலையை அறுத்துக் கொண்டான் என்று உள்ளது. இவன் தொண்டைமானுக்காக உயிர் பலி கொடுத்துள்ளான் என்று தெரிகிறது.

    பார்வை நூல்: ஆவணம் 24, 2013, பக். 57

    வேலூர் மாவட்டம் வாலாசாப்பேட்டை வட்டம் சோளிங்கர் அருகே உள்ள மோட்டூர் கிராமம் திருவாத்தம்மன் கோவிலுக்கு எதிரே நட்டுள்ள பலகைக் கல்லில் உள்ள 2 வரிக் கல்வெட்டு

    1. பரி விருதுக்காற 
    2. ன் கணவதி 

    பரி – குதிரை, பற்று; விருது – நோன்பு, வீரன்; 

    விளக்கம் : மேலுள்ள சிற்பத்திற்கு அருகே உள்ள இன்னொரு தலைவெட்டு கல்வெட்டுச் சிற்பம். பற்றினால் நோன்பு நோற்றவன் அல்லது குதிரை வீரன் கணபதி என்பவன் இரு கைகளால் கத்தியை பிடித்து கழுத்தில் கத்தியை வைத்து தலையை அறுத்துக் கொள்வது போல சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இந்த வீரன் விரும்பி நோன்பு நோற்று தலை அரிந்து கொண்டுள்ளான். யார் பொருட்டு என்ற குறிப்பு இல்லை.  

    பார்வை நூல்: ஆவணம் 24, 2013, பக். 58

    சிவகங்கை மாவட்டம் திருபுவனம் வட்டம் மடப்புரம் கிராமம் அடைக்கலம் காத்த ஐயனார் கோவில் காளியம்மன் கோவில். இதில் ஐயனார் கோவில் வாயில் இருபுறமும் கல்வெட்டு காணப்படுகின்றன.

    வலப்புறம் இரண்டு வரிக் கல்வெட்டு

    1. தூங்குதலை  குடுத்தான் 
    2. சித்திர சரிதன் 

    விளக்கம் : 10 ஆம் நூற்றாண்டு தமிழ் எழுத்து கல்வெட்டு. வீரன் ஒருவன் இடது காலை மண்டியிட்டு வலது முழங் காலைத் தரையில் வைத்து இடக் கையால் தன் குடுமியை பிடித்து வலக் கையில் பிடித்துள்ள கத்தியால் தன் தலையை கொய்வதாக சிற்பம் உள்ளது. இதில் சித்திர சரிதன் தன் தலையை அரிந்து தன்னை பலி கொடுத்தான். காரணம் எதற்கு என்ற குறிப்பு இல்லை.

    இடப்புறம் இரு வரிக் கல்வெட்டு
    1. தூங்கு தலை குடுத்தான் _ _ _ 
    2. வல்லபன் 
    விளக்கம் : 8 ஆம் நூற்றாண்டு வட்டெழுத்துக் கல்வெட்டு. வீரன் ஒருவன் வலது காலை மண்டியிட்டு இடது முழங் காலை தரையில் வைத்து இடக் கையால் தன் குடுமியை பிடித்து வலக் கையில் பிடித்துள்ள கத்தியால் தன் தலையை கொய்வதாக சிற்பம் வடிக்கப் பட்டுள்ளது. வல்லபன் என்பவன் தன் தலையை தானே கொய்து தன்னை பலி கொடுத்துள்ளான். எதற்காக தலை அரிந்தான் என்று குறிப்பிடவில்லை.
    பார்வை நூல்: கல்வெட்டு காலாண்டு இதழ் 21, 1984, பக். 1 – 3, த நா தொ து வெளியீடு

     

    Share
  • தீர்ப்பு, ஆணைக் கல்வெட்டுகள்

    தீர்ப்பு, ஆணைக் கல்வெட்டுகள்

    சேசாத்திரி ஸ்ரீதரன்

    சட்டம் இன்று போல அன்றும் வலியோர் பக்கமே சாய்வதாக இருந்துள்ளது. வேந்தர், மன்னர் நேரடியாக தலையிட்டால் மட்டுமே தீர்ப்பு நேரியதாக இருந்தது. அக்காலத்தே நாடு முழுமைக்கும் ஒரே சட்டம் (codified) என்று எங்குமே இருந்ததில்லை. மேல் சாதி, படைச் சாதி என்றால் தண்டனையில் விலக்குகள் இருந்தன. ஆட் கொலைக்கு ஏதேனும் ஒரு கோவிலில் சந்தி விளக்கு அல்லது நந்தா விளக்கு ஏற்றினால் போதும் என்பதே தண்டனையாக இருந்தது. ஆண் கொல்லப்பட்டால் செல்வர் ஏற்றும் நுந்தா விளக்கு அதுவே பெண் கொல்லப்பட்டால் எளியோர் ஏற்றும் சந்தி விளக்கு என்று ஆண் கொலையை விட பெண் கொலைக்கு குறைந்த தண்டனையாக இருந்தது. இரண்டாம் குலோத்துங்க சோழனின் மூன்றாம் ஆட்சி ஆண்டில் வாணகோப்பாடி நாட்டில் கீழ்க் கொன்றை நாட்டு பள்ளிச்சேரி முடியனூரில் வாழும் அடியநம்பி கோவலராயன் என்ற படைத் தலைவன் (பேரையன்) எய்த அம்பு குறி தவறி தன்னோடு உடன் வந்த வெள்ளாளன் குன்றன் சீருடையானைத் தைத்துக் கொல்ல அதற்கு நீதி வேண்டி பார்க்கவ கோத்திர மலையமார் போலவே தாமும் தமிழகத்தின் 79 நாட்டினரைச் சங்கமாகக் கொண்ட சித்திரமேழி பெரியநாடு என்ற சாதி அமைப்பு கோவலராயனைப் பழி சுமத்தி வற்புறுத்தியதன் காரணமாக கொலைக்குத்  தண்டனையாக இரண்டு நுந்தா விளக்கு எரிக்க 64 பசுக்களை கோவிலுக்கு விட்டான் கோவலராயன்.

    ஒரு ஊரில் உள்ளோர் தமக்கு இவ்வாறான சட்டம் வேண்டும் என்று கோரி அதை அணையாக கிழாரிடம்  இருந்தோ அல்லது  அரையரிடம் இருந்தோ ஒப்புதல் பெற்று வந்தனர். அந்த சட்டம் அந்த ஊர் அளவே செல்லுபடியாக இருந்தது. அது பிற இடங்களுக்கு பொருந்தாது. அக்காலத்தே தலை கொய்யும் தண்டனை, கசையடி தண்டனை, தண்டத் தொகை கட்டும் தண்டனை பற்றிய பதிவுகள் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. பிராமண ஊர்ச் சபைகள் ஆணை பிறப்பிக்கும் அளவிற்கு தனி அதிகாரம் பெற்றிருந்தன என்பதற்கு குடவோலைக் கல்வெட்டுகள் சான்றாக உள்ளன. அவற்றுள் சில கீழே விளக்கப்பட்டுள்ளன.

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் பெண்ணேஸ்வரம் மடம் ஈசுவரன் கோவில் தெற்கு திருச்சுற்று பீடத்தில் உள்ள 8 வரிக் கல்வெட்டு

    1. ஸ்ரீ மத் _ _ ஸ்வக்ர  _ _ த்தி போ[சள] ஸ்ரீ  வீரராமநாத தேவரீஸர்க்கு யாண்டு நாற்பத்தொன்றாவது உடையார்  பெண்ணையாண்டார் மட
    2. த்திலும் பெண்ணை நாயனார் தேவதானமான [ஊ]ர்களிலும் ஒரு அதிகாரியாதல், கணக்கர் காரியஞ் செய்வார்களாதல், கூசராதல் ஆரேனு
    3. மொருவர் வந்துவிட்டது விடாம[ல்] சோறு வேண்டுதல் மற்றேதேனுமொரு நலிவுகள் செய்குதல் செய்யாதாருண்டாகில் தாங்களே அவர்களைத் தலை
    4. யை அறுத்துவிடவும். அப்படி செய்திலர்களாதல் தங்கள் தலைகளோடே போகுமென்னும்படி றேயப்புத்த பண்ணி, இதுவே சாதன
    5. மாகக் [கொ]ண்டு ஆங்கு வந்து நலிந்தவர்களைத் தாங்களே ஆஞை பண்ணிக்கொள்ளவும். சீ காரியமாகத் 
    6. தாங்க _ _ த _ _ போதும் போன அமுதுபடிக் குடலாக ஸர்வ மாணியமாகக் குடுத்தோம் அனைத்தாயமும் வி 
    7. ட்டுக் கு _ _. கூசர் உள்ளிட்டார் பையூரிலே இருக்கவும் சொன்னோம். இப்படி_ _ தே இதுக்கு வில
    8. ங்கனம் பன்னினவன் கெங்கைக் கரையில் குராற் பசுவைக் கொன்றான் பாவத்தைக் கொள்வான்     

    கூசர் – இராக் காவல் கூக்குரல் இடுவோர்; நலிவு – குற்றம், தீமை, இழிவு; றேயப் புத்தம் – கடும் எச்சரிக்கை; விலங்கனம் – சிக்கல், இடக்கு; ஆஞை – ஆணை

    விளக்கம் : போசள வீரராமனாதனின் 41 ஆம் ஆட்சி ஆண்டு கி.பி. 1295 ஆம் ஆண்டு கல்வெட்டு. பெண்ணேசுவரம் மடம் ஈசுவரன் கோவிலிலும் அதன் தேவதான ஊர்களிலும் அதிகாரியாகவோ கணக்கராகவோ இராக்காவல் கூவுநராகவோ இருப்பவர் யாரகிலும் சரி ஊரில் எவரேனும் ஒருவர் வந்து தொடர்ந்து விடாமல் சோறு போடக் கேட்டாலோ அல்லது ஏதேனும் கேடு செய்தாலோ அப்படி கேடு செய்தவரை நீங்களே தலையை அறுத்துக் கொன்று விடுங்கள். அப்படி நீங்கள் செய்யாதவராய் இருந்தால் உமது தலையும் சேர்த்தே கொய்யப்படும் என்று கடுமையாக எச்சரிதோம். இந்த சட்ட ஆவணத்தையே கையேடாகக் கொண்டு அங்கு வந்த கேடர்களை ஆணையிட்டு கொல்க. கோவில் செயற்பாட்டிற்காக போனக அமுதுபடிக்கு மூலமாக இருக்க முழு மானியமாக எல்லா வரிகளையும் விட்டுக் கொடுத்தோம். இராக்காவல் கூச்சலிடுவோர் உட்பட அரச பணியாளர்கள் யாவரும் பையூரிலேயே இருக்க வேண்டும். அதன் எல்லை தாண்டி உள்ளே வர வேண்டாம். இப்படி செய்யாமல் இதற்கு இழிவு உண்டாக்குபவர் கங்கைக் கரையில் குறால் பசுவை கொன்றவன் அடையும் பாவத்தை அடைவார்.

    இது வீர இராமநாதன் அரச பணியாளருக்கு நேரடியாக வழங்கிய ஆணையாகத் தெரிகிறது. பையூரிலேயே தங்க வேண்டும் என்றால் ஊரில் தல யாத்திரை வருவோரை எப்படிக் கண்காணிக்க முடியும்? இவருள் எவரேனும் சோறு வேண்டினாலோ, திருடு, கொலை, கற்பழிப்பு செயலில் ஈடுபட்டாலோ எப்படிப் பிடிக்க முடியும்? இதனால் வேந்தன் இராமநாதனுக்கு அரச பணியாளர் நடத்தையில் ஐயம் இருப்பது போலல்லவா இந்த ஆணை உள்ளது. எனினும் இது ஊரார் வேண்டுதலால் இப்படி ஒரு ஆணை வெளியிடப்பட்டிருக்கலாம்.

    பார்வை நூல்: கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வெட்டுகள்  பக். 101 & 102 ஆசிரியர்: தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு

    ஈரோடு மாவட்டம் ஈரோடு வட்டம் சாத்தம்பூர் வல்லாள ஈசுவரன் கோயில் அம்மன் சன்னதி நிலைக் கல்லில் பொறிக்கப்பட்ட 13 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ நன்மங்கலஞ் சிறக்க ஸ்ரீ 
    2. குலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு 
    3. 9 வது பூந்துறை நாட்டோம். சாத்தனூர்க் 
    4. கெங்களில் அமைவு குடுத்த பரிசாவது 
    5. “எங்களஞ் சாத்தனூரோ டொத்த வூராவ
    6. தாகவும் எங்களொ பாதி சாரிகையும் 
    7. மற்றும் பெறுநவ பெறுவராகவும் 
    8. இவர்களை அழிபிழை அநியாயஞ் செய்தாரை 
    9. வெட்டுதல் குத்துதல் செய்தால் அவனுக்குத் 
    10. தண்டந் தலைவிலை யில்லையாக”. இப்படிக் கமைந் 
    11. திக் கல் வெட்டிக் கொடுத்தோம் நாட்டோஞ்.
    12. சாத்தனூர்க்குளே யழிவு செய்தவன் தன் 
    13. வழியே ழெச்சம்  அறுவான்.        

    அமைவு – இருப்பிடம்; பரிசாவது – சலுகை, உரிமை; பாதிசாரிகை – பாதி வரிசை; அழிபிழை – குலைத்து கேடு செய்தல்; எச்சம் – தலைமுறை, பிள்ளை.

    விளக்கம் : ஸ்வஸ்த்தி ஸ்ரீ என்பதன் தமிழ் இணையான நன்மங்கலம் சிறக்க என்பதையும் இங்கே குறித்து கல்வெட்டு தொடங்குகிறது. ஏன் இப்படி இரட்டை குறிப்பு தமிழருக்கு? இது அன்று தொட்டு இன்று வரை தொடரும் பிழையாக தமிழரிடம் உள்ளது. முதற் குலோத்துங்க சோழனின் 9 ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 1079) பூந்துறை நாட்டவரான எங்களுக்கு சாத்தனூரில் இருக்க அனுமதி கொடுத்ததால் அதற்கு பகரமாக நாங்கள் கொடுத்த சலுகை, உரிமை யாதெனில், எங்களுக்கு சாத்தனூர் எமது ஊரோடு ஒத்த ஊர் போல  ஆவதால் எங்களோடு பாதிவரிசையும் அதோடு வேறு என்ன நாங்கள் பெற்றாலும் அதை சாத்தனூராரும்  பெறுவதாகவும், இவருக்குள்ளேயே இவர்களுக்கு குலைவு கேடு, அநியாயம் செய்தாரை வெட்டியும் குத்தியும் கொன்றால் அவருக்கு தலை கொய்யும் தண்டனையை நாம் தரமாட்டோம். இப்படியாக அமைதி உடன்பாட்டுக் கல் வெட்டுவித்தோம் பூந்துறை நாட்டோம். சாத்தனூருள் அழிவை ஏற்படுத்தியவன் தனக்கு பின் ஏழு தலைமுறை இல்லாது ஒழிவானாக.

    பூந்துறை நாட்டவர் சாத்தனூராரிடம் புகலிடம் கேட்ட போது தம் ஊர் மக்கள் யாரையும் பூந்துறையார் கொல்லக் கூடாது என்று முன் நிபந்தனை வைத்திருக்கலாம் அதனால் இந்த அமைதி உடன்பாட்டை சாத்தனூராருக்கு பூந்துறைக் குடியேறிகள் தந்துள்ளனர் எனத் தெரிகிறது.

    பார்வை நூல்: தேனோலை 1976 பக். 15 ஆசிரியர்: கொடுமுடி சண்முகம்

    காஞ்சிபுரம் மாவட்டம் வாலாசாபாத்து வட்டம் தென்னேரி சிவன்கோயில் கருவறை தென் சுவர் 7 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ சாலைகலமறுத்த கோவிராஜராஜ கேஸரி பந்மற்க்கி  யாண்டு 11 ஆவது நாள் 220
    2. ஊற்றுக் காட்டுக் கோட்டத்து ஸ்ரீ உத்தம சோழ சதுர் வேதி மங்கலத்து பெருங்குறி ஸபையோம் 
    3. செய்த விவஸ்தையாவது நம்மூரில் ப்ரமஸ்வங் கொண்டாரும் மேல்படு 
    4. குற்றமுடையாரும் நம்மூர் வாரியஞ் செய்யவும் ஸபா மாற்றஞ் சொல்லவும் 
    5. பெறாதாராகவும் இக்குற்றங்களுடையார் வாரியஞ் செய்தாரும் ஸபா மாற்றஞ் சொன்னாரும் 
    6. கணக்கர் இருபாடு காட்டினாரும் திருவாணை மறுத்தார்படும் தண்டப்படுவாராக இப்பரிசு வ்யவஸ்தை 
    7. செய்தோம் பெருங்குறி ஸபையோம். பணியால் திருவிதண்ணகர் ஆசாரியன் என் எழுத்து.       

    பெருங்குறி – பிராமண ஊர் சபை கூட்ட உறுபினர்கள்; விவஸ்தை – ஏற்பாடு; ஸ்வங் – கேலி, ஏளனம், போலி; இருபாடு – இருவேறு வகை; பரிசு – வகை, விவரம் திருவாணை – அரசாணை

    விளக்கம் : இராசராசனின் 11 ஆவது ஆட்சி ஆண்டில் கி.பி 996, 220 ஆம் நாளில் ஊற்றுக்காட்டின் உத்தம சோழ சதுர்வேதி மங்கலத்தின் பிராமண ஊர் சபைக் கூட்ட உறுப்பினர் செய்த ஏற்பாடு என்னவெனில் “நம்மூரில் பிராமண கேலி புரிவாரும் அதிகுற்றம் புரிந்தவரும் இனி நம்மூர் வாரிய உறுப்பினராக இருந்து செயல் மேற்கொள்ள முடியாது, சபைக்கு மாற்று கருத்து (ஆலோசனை) சொல்லவும் முடியாது. இக் குற்றங்களுடன் வாரியப் பணி செய்தவரும் சபைக்கு மாற்று கருத்து சொன்னவரும் கணக்கு புத்தகத்தில் இருவேறாக பொய்க் கணக்கு எழுதியவர்களும் இனி அரசாணையை மீறியவர் படும் தண்டனையை அனுபவிக்க நேரிடும் வகையில் ஏற்பாடு செய்தோம் பிராமண ஊர் சபை உறுப்பினர்களோம். பணிக் கடமையால் இதை கல்லில் எழுதினேன் திருவிதண்  நகர் ஆசாரி.

    இதன் மூலம் பிராமணருள் குற்றம் புரிவோர் உண்டு என்று தெரிகிறது. அதை தக்க முறையில் தடுக்க ஊர் சபையோர் மேற்கொண்ட நடவடிக்கை வரவேற்க தக்கது. குற்றவாளி பிராமணரே ஆனாலும் பிராமணரே அந்த குற்றத்தை தட்டிக் கேட்டு கல்வெட்டி தடை  செய்துள்ளனர்.

    பார்வை நூல்: ஆவணம் 25, 2014 பக். 31

    தஞ்சாவூர் மாவட்டம் மாயவரம் வட்டம் கீழையூர் வேதபுரீஸ்வரர் கோயில் கருவறை தெற்கு சுவர் 3 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் மதுரையும் யீழமும் பாண்டியனை முடித்தலையும் கொண்டருளின ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு 20 தாவது வரை திருநாமத்துக் காணியாகக் கொண்ட கொல்லை நிலங்களுக்கும் விளை நிலங்களுக்கும்  தானம் பெற்ற நிலங்களுக்கும்  ப்ரமாணப்படிக்கு கல்வெட்டு [1] இத்தேவற்கு ஏழாவது இஷப நாயற்று  பூர்வபக்ஷத்து சப்த திதியும் செவ்வாய்க் கிழமையும் பெற்ற ஆயில்லிய நாள் வீர ராஜேசந்திர வளநாட்டுத் திருவழந்தூர் நாட்டு ப்ரஹ்ம தேசம் திருவழந்தூர் சபைக்கு சமைஞ்ச ஊர் வாரியம் மண்டையந் பொந்மலை ஆயனும் யவறுன் சற்வதேவன் திருவரங்கமுடையானும் இவ்விருவோம் சபை விலைப் பிரமாணம் ப்ரஸாதஞ் செய்தருளின திருமுகப்படி இவ்வூர் ஏழாவது தரமிடுகிற இடத்து, இவ்வூரில் திம்பாக இருப்பன திரண்டு எற்றச் சுருக்கம் பண்ணி கடமையும் இறாதே இராக் களவிலே வீடுகள் சுட்டும் மஹாயேச்வர வதிஷ்ணமாகச் சில வார்த்தைகளும் சொல்லி இவூர்த் திருக்கதவுடை ஆழ்வார் திருநாள் எழுந்தருளுகிற இடத்து முன்பிலாண்டுகள் செய்து வாராதிருக்கச்சிலே பச்சைக் குருதையாகச்  செய்து திருமங்கை ஆழ்வாரை ஏற்றியும் திருவாய்மொழி  பாடுவாரிலே ஒருவன் மேழியாகச் செய்து கழுத்திலே இட்டு வொள்ளானரைத் திரட்டி மணக்கேடுகளாய் யிருப்பன செய்தார்கள்ளென்றும் மாணக்கயன் நமக்குச் சொன்னவாறே இவ்வூர் கோயில் னுதாரங்களிலும் இப்படி செய்தாரை இருபதிநாயிரம் காசு தென்டமாகக் கொள்ளவும்.  இக்காசு ஒடுக்காதார் ருண்டாகில் இவர்கள் காணியை அசல்பிளந்து சபை விலையாக விற்றுக் காசு ஒடுக்கவும் இப்படி செய்யுமிடத்து நம் செய்தார் உண்டாகில் ப்ராஹ்மணரைச் சுடும்படி _ _ 
    2. கடவதாகவும் இது  சுட்டித் தண்டாளருக்கு பிழையாக கடவுதல்லாதுதாகவும் சொன்னோ. மிவ்வூர்ப் ப்ராஹ்மணரிலும் வெள்ளாளரிலும் கோயில் அனுதாரங்களிலும் மனைக் கேடுகளாகச் செய்தாரைத் தெண்டமாகக் கொள்ளச் சொன்னாக் காசு இருபதினாயிரம் விசையபாலன் நிச்சயித்தபடியே தண்டிவரக் காட்டி வாணாதராயன் அடைப்பான் தண்டலிலே ஒடுக்கப் பண்ணுவதென்று ப்ரஸாதம் செய்தருளின திருமுகம் வந்தமையில் இவ்வூர் கவுணியன் ஸ்ரீ கபாடன் ஸ்ரீ கிருஷ்ணனுடன் பெரியாண்டானும் கலக்கம் பண்ணியும் இராக் களவில் ப்ராஹ்மணந் அரிநாராயணன் அகம் வெந்த யிதுக்குப் பாடிகாப்பரும் சபையாரும் அகத்த பேரில் உள்ளூர் பட்ட பேராகையாலும் இவர்களை உடையார்  விசையபாலரும் சபையாரும் தெண்டமாகக் கொள்ள நிச்சையித்த கவுணியன் ஸ்ரீ கபாடன் ஸ்ரீ கிருஷ்ணனைக் கொள்ள நிச்சையித்த காசு அறுநூறும் ஸ்ரீ கபாடன் பெரியாண்டானைக்  கொள்ள நிச்சையித்த காசு நானூறும் ஆக காசு ஆயிரத்துக்கு வாரம் பின்வாசி, தரவு கூலி, திருமுகச் சம்படம், சிதார்ப்படி, எற்றிக்காசு ஆயிரத்து அறுபதும் இவர்கள் முன்நிந்று  ஒடுக்காமையாலும் இன் நிலத்துக்கு அசலானவர்களை தாங்களும் குறைவராயிருக்கையாலும் மாற்றுக் கொள்வாரிலாமையில் ப்ரஸாதஞ் செய்தருளின திருமுகப்படி காசு ஒடுக்க வேண்டுவதாய் உடையார் திருமடமுடையார் கோயில் ஆதி சண்டேசுரப் பொருளாக இக்கோயில் மாயேசுரக் கண்காணி செய்வார்களுக்கும் சிரிகாரியம் செய்வார்களுக்கும் தேவகன்மி கோயிற் கணக்கனுக்கும் தேவர் குடிமை நாமத்தால் _ _ _ யால் வந்த கடமையும் இறுத்து குடிமையுஞ் செய்யக் கடவதாக விற்று திரிபுவன தேவிவதிக்கு மேற்கு இராஜேந்திர சோழ வாக்காலுக்கு தெற்கு மூன்றாங் கண்ணுற்று மூன்றாஞ் சதிரத்தும் நாலாஞ் சதிரத்தும் ஸபை விலையாக விற்கிற புந்சைத் தோட்டத்துக்கு கீழ்ப்பாற்கெல்லை யழுந்தூர் வாய்க்காலுக்கு மேற்கும் இவ்வாற் _ _ _ க் கதவன் அழகிய மணவாள குளமும் கரைக்குங் _ _ _ 
    3. னும் ஸ்ரீ கபாடன் பெரியாண்டானும் உள்ளிட்டார் விளை நிலத்துக்கு தெற்குமாக இசைந்த பெருநான்கெல்லை உள்நடுவுபட்ட புன்செய்குழி  950 த்துச் சின்நம் இக்குழி தொளாயிரத்து ஐய்ம்பத்துச் சின்னமும் ஸபை விலையாக விலை மதித்த காசு 1060 இக்காசு ஆயிரத்து அறுபது ஆவணக்களிலேயே காட்டெற்றிக் கைச்செலவறக் கொண்டு விற்று ஸபை விலை ப்ரமாணம் பண்ணிக் குடுத்தோம்             

    திருநாமத்துக்காணி – இறைவன் பெயரில் கொடையாக தந்த நிலம்;  ப்ரமாணப்படி – ஆவணப்படி; பிரசாதம் –  அரசன் அறிவுறுத்தல்; திருமுகப்படி – அரசானை ஓலைப்படி; திம்பாக – திமிராக; எற்ற சுருக்கம் – உதைத்து சிறுமைப்படுத்தி; களவு – கலகம், புறம்பான செயல், unlawful act; ஒள்ளான் – மறைந்து இருப்பவன்; மாணக்கயன் – மாணவர் தலைவன்; நுதாரம் – நீராடும் துறை; அசல்பிளந்து – விற்றுமாற்றி, transfer; நம் செய் – பூசை செய்; சுடு – துன்புறுத்து, அழி; தண்டாளர் – தண்டிப்போர்; அனுதாரம் – பொறுப்பு; அடைப்பான் தண்டல் – கட்டணச் சாவடி, கருவூலம், pay counter; தரம் – மேல்மதிப்பு; சிதார்படி – சீலைக்காசு; தரவு கூலி – அளப்போன் கூலி; ஏற்றிக்காசு – அடித்தல் காசு; குடிமை – உழுகுடி வரி; வதி – வடிகால்; சின்னம் – துண்டு நிலம், piece of land;

    விளக்கம் : மூன்றாம் குலோத்துங்கனின் 20 ஆம் ஆட்சி ஆண்டில் 1198 இல் 20 ஆம் ஆண்டு வரை இறைவன் பெயரில் இருந்த கொல்லை நிலங்கள், விளை நிலங்கள், தான நிலங்கள் ஆவணப்படி இருந்த நிலங்கள் குலோத்துங்கனுக்கு 20 ஆம் ஆண்டு ஏழாம் நாள் இடப ராசி பூர்வ பட்சத்து 7 ஆம் நாள் செவ்வாய்க் கிழமை ஆயில்ய நட்சத்திரம் கூடிய நாளில் வீர ராசேந்திர வளநாட்டுத் திருவழந்தூர் நாட்டின் பிரம்மதேசமான திருவழந்தூர் சபைக்கு அமைந்த ஊர் வாரியத்தார் மண்டையன் பொன்மலை ஆயன், யவறுன் சர்வதேவன் திருவரங்கமுடையான் ஆகிய நாம் இருவரும் ஊர் சபை விலை ஆவணமாக அறிவுறுத்திய ஆணைப்படி இவ்வூரில் ஏழாவது தரத்தில் (நிலப் பிரிவில்) இருக்கின்ற இடத்தில் இவ்வூரில் திமிராக இருக்கின்ற அணி சேர்ந்து கொண்டு உதைத்து சிறுமைப்படுத்தி வரியும் செலுத்தாமல், இரவுக் கலவரத்தில் வீடுகளை எரித்து, மகேஸ்வரரை நிந்திக்கும் வகையில் சில சொற்களை பேசி, இவ்வூரின் திருக்கதவுடை ஆழ்வார் எழுத்தருளுகிற இடத்தில் முன்னை ஆண்டுகள் செய்து வாராதிருக்கையில் இப்போது பச்சைக் குதிரையாக செய்து திருமங்கை ஆழ்வாரை அதில் ஏற்றியும்; திருவாய்மொழி பாடுவோரில் ஒருவன் கலப்பை செய்து தோளில் வைத்து வரும் வேளையில் மறைந்து இருப்பவரை ஒன்று திரட்டி மனக்கேடுகள் செய்தனர் என்று மாணக்கர் தலைவன் நம்மிடம் சொன்னபடியே இவ்வூரின் கோயில் நீராடு துறைகளிலும் இவ்வாறே செய்தவரிடம் இருபதினாயிரம் காசு தண்டத் தொகையாகக் கொள்க. இந்த தண்டத்  தொகையை கட்டாதவர் இருப்பின் இவர்களது விளை நிலத்தை அண்டையாரிடம் விற்று சபை தீர்மானித்த விலையை கட்டுக. இவ்வாறு செய்கின்ற போது அவருள் பூசை செய்யும் பிராமணர் இருந்தால் அந்த பிராமணரை துன்புறுத்தம் மட்டும் செய்யட்டும் அவர் நிலத்தை விற்க வேண்டாம். இதை கருத்தாக குறிப்பிட்டு தண்டாளர் (punisher) இதில் பிழை ஏதும் செய்யாதிருக்க சொன்னோம். இவ்வூர் பிராமணரில் வெள்ளாளரில் கோயில் பொறுப்புள்ளோரின் வீடுகளுக்கு தீ வைத்து கேடு உண்டாக்கினவரையும் தண்டம் கட்டக் சொன்ன காசு இருபதினாயிரத்தை அரசர் விசைய பாலன் தீர்மானித்தபடியே தண்டத் தொகையை திரட்டி வாணாதராயனின் கட்டணக் கருவூலத்தில் கட்டிவிடுவதென்று ஊர்சபை அறிவுறுத்திய ஆணை வந்தபோது இவ்வூர் கவுண்டின்ய கோத்திரத்தான்  ஸ்ரீ கபாடன் ஸ்ரீ கிருஷ்ணனுடன் வெள்ளாளன் பெரியாண்டானும் சேர்ந்து கொண்டு கலவரத்தில் ஈடுபட்டு இரவுக் கலவரத்தில் பிராமணர் அரிநாராயணனின் வீட்டை  தீயில் கொளுத்திய வினைக்கு பாடிகாப்பாளரும் சபையோரும் பொறுப்பு கூற வேண்டிய நிலையில் உள்ளூர் தொடர்பானது என்பதாலும் இவர்களிடம் அரசர் விசையபாலரும் சபையோரும் தண்டத் தொகையாக பெறத் தீர்மானித்த  காசு கவுணியன் ஸ்ரீ கபாடன் ஸ்ரீ கிருஷ்ணனிடம் பெறத் தீர்மானித்த காசு அறுநூறும், ஸ்ரீ கபாடன் பெரியாண்டானிடம் பெற நினைத்த காசு நானூறும் ஆக காசு ஆயிரத்தையும் வாரம் பின்வாசி, அளப்போன் கூலி, திருமுகச் சம்படம் (ஆணை ஓலைக் கட்டணம்), சீலைக் காசு, அடித்தல் காசு என சேர்த்து ஆயிரத்து அறுபதும் இவர்கள் முன்வந்து செலுத்தாமையால் இவர் நிலங்களுக்கு பக்கத்தில் இருப்போர் குறைவாய் இருப்பதாலும் இந்நிலங்களை தம் பெயருக்கு மாற்று கொள்ளவர் இல்லாததாலும் அரசர் அறிவுறுத்திய ஆணையின்படி 20,000 காசு கட்ட வேண்டியுள்ளதால் இறைவன் திருமடமுடையர் கோவில் ஆதிசண்டேசுவரர்க்கு பொருளாக வரும் வரி, இக்கோயில் மாயேசுவர கண்காணி செய்பவர்களுக்கும், கோயில் பணி செய்பவர்களுக்கும், தெய்வப்பணி செய்பவர்களுக்கும், கோயில் கணக்கனுக்கும் கொடுக்கின்ற இறைவனுக்கு உழுகுடி வரிப் பெயரால் வரும் காசு, _ _ _  வந்த  கடமை வரியையும் எடுத்துக் கருவூலத்தில் செலுத்தினோம். குடிகள் மீது வரி திரட்டிக் கொள்ளலாம் என்று விற்ற நிலம் திரிபுவன தேவி வடிகாலுக்கு மேற்கிலும் இராசேந்திர சோழ வாய்க்காலுக்கு தெற்கிலும் மூன்றாங்கண் ஊற்று மூன்றாம் சதிரத்தும் நாலாம் சதிரத்தும் ஊர் சபை விலையாக புஞ்சை தோட்டத்திற்கு கீழ்ப்பகுதி எல்லை அழுந்தூர் வாய்க்காலுக்கு மேற்கிலும் தென் பக்க எல்லை இப்படியாக _ _ _ க்கதவன் அழகிய மணவாள குளமும் கரைக்குங் _ _ _ னும் ஸ்ரீ கபாடன், பெரியாண்டானும் உள்ளிட்டார் விளை நிலத்திற்கு தெற்கில் அமைந்த பெரிய நான்கு எல்லைகுள் நடுவுபட்ட புஞ்செய் குழி 950 த்துச் சின்னம் (குழி தொள்ளாயிரத்து ஐம்பத்து சின்னத்தையும்) ஊர் சபை விலையாக விலை நிர்ணயித்த 1060 காசை அடைக்க ஆவணங்களில் காட்டி எற்றி, எங்களுக்கு கைச் செலவு ஏதும் ஏற்படாமல் விற்று சபையின் தண்ட விலைக்கு ஆவணம் செய்தளித்தோம் என்கின்றனர் ஊர் வாரியத்தார் இருவரும்.

    இக்கல்வெட்டு மூலம் குற்றவாளிகள் தண்டம் கட்டாவிடில் அவரது நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலத்தில் விடப்படும் என்று தெரிகிறது. நிலம் ஏலம் போகவில்லை என்றாலும் தண்டத் தொகையை கட்டியாக வேண்டிய பொறுப்பால் வருங்காலத்தில் குடிகள் மீது வரியை திரட்டிக் கொள்ளலாம் என்று தீர்மானித்து தற்காலிகமாக கோவிலுக்கு வந்த வருவாயை கொண்டு தண்டத் தொகையை கட்டியுள்ளனர். இது ஏற்புடையது அல்ல. நிலத்தை விற்க முடியாத தமது இயலாமையை அரசருக்கு தெரிவித்து அங்கிருந்து வரும் அறிவுரைப்படி நடந்திருக்க வேண்டும். வீணே ஊழியர் சம்பளத்தை எடுத்துக் கட்டி மக்கள் மேல் இன்னும் வரி விதிப்பது மக்களுக்குத் தான் வரிச் சுமையை அதிகரிக்கும். இப்படி ஊர் சபை நடந்தால் விரைந்து திவாலாகிவிடும். எனினும் கல்வெட்டில் சில இடங்களில் சிதைந்து உள்ளதால் உறுதியான கருத்தை கூற முடியவில்லை.

    பார்வை நூல்: ஆவணம் 21, 2010 பக். 35

    அரியலூர் மாவட்டம் திருமானூர் வட்டம் காண்டராதித்தத்தில் உள்ள சொக்கநாதர் கோயில் கருவறை தென் சுவரில் உள்ள 23 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ பூமேவுவளர் திருப்பொன் மாது புணர நாமேவு கலைமகள் பெரிதும் சிறப்ப விசைய மாமகள் வெல்புயத் திருப்ப இசையுஞ் செ
    2. ல்வி எண்டிசை வளர நிருபர் வந்திறைஞ்ச நீணில மடந்தையைத் திருமணம் புணர்ந்து திருவளர் திருமாமணி முடி கவித்தென மணிமுடிசூடி மல்லை ஞாலத்துப் பல்லுயிர்க் கெல்லாம் எல்லையில் இன்பம் இயல்பினில் எய்த வெண்குடை நிழற்ற செங்கோ
    3. லோச்சி  வாழி பல்லூழி வாழி நடப்பச் செம்பொன் வீர ஸிங்ஹாதனத்துப் புவந முழுதுடையாளொ
    4. டும் வீற்றிருந்தருளிய  கோவி ராஜகேசரிப் பந்மராந திரிபுவந சக்கரவத்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்கு  யாண்
    5. டு 11 ஆவது வடகரைப் புவநமுழுதுடை வளநாட்டு பொய்கை நாட்டு ப்ரஹ்மதேயம் ஸ்ரீ கண்டராதித்தச் சது
    6. வேதி மங்கலத்து உடையார்  சிவலோகமுடையார் இந்நாடு மணற்குடி நாட்டு கிரந்தங்குடி இருக்கும் வெள்
    7. ளாளந் மாங்குடையாந் நெய்யாடியேந் தியாகஸமித்ரத் தெரிந்த வில்லி(களில்) சொற் மணவாளந் மணவாட்டியைச் சில எற்றாந் சூழ்ச்சிப் புகுந்த
    8.  இடத்து இவள் மேல் லேவ எந் கைப்பட்டு இவளுக்கு மரணம் உண்டாச்சு. உண்டானயிடத்து 
    9. உடையார் காங்கையராயர் பட்டகளை வைச்சுக் கொடி (கூடி) இருந்து வினவி இவன் வெள்ளாளந் ஆதலா(ல்) இவந்னுக்கு வதை இல்லை என்
    10. று பட்டன் விதிக்கவும் இந்நியாயத்தில் உள்ளாக ஸமாதாநத்தால்லு
    11. ம் இத்தேவர் கோயிலில் வைக்க கடவதாந சந்தி விளக்கு 1. இ வி
    12. ளக்கு ஒந்றுக்கும் விட்ட பசு நாலும் இக்கோயிலில் காணி உடை
    13. ய சிவபிராமணந் காச்சபந் திருச்சிற்றம்பல உடையாந் பசி தா
    14. ங்கி கைக்கொண்ட பசு இரண்டும் இக்குடி தழுவக் குழைந்தாந் திருச்சிற்ற
    15. ம்பலம் உடையான் கைக்கொண்ட பசு விரண்டும் ஆக பசு நாலும் கை 
    16. கொண்டு இச்சந்தி விளக்கு னாலுமாக. இவ்வூர் ஸ்ரீ  இந்திராவதாரச் சேரி மணலூர் பாரதாயந்
    17. ஆளவந்தாந் _ _ _ கண்டாந் ப்ராஹ்மணி இச்சேரி புள்ளமங்கலத்து சாவாந்தி 
    18. வெண்காடு தேவந் சிவலோகத்து நாயக நம்பி மகள் அருந்தவஞ் செய்தாள் பக்கலும் இக்
    19. காசு கொண்டு உப(ய)மாக சம்மதித்து எரிக்க கடவோமாக ஸந்தி விளக்கு ஒந்றும் இத்
    20. திருவிளக்கு இரண்டும் யாவர் ஜீவம் சந்திராதித்தவர் எரிக்க கடவோமாக சம்மதித்து இக்கல்லி
    21.  ல் இத்தேவர் கோயிலில் வெட்டி கல்வெட்டிவித்து கொண்டோம் இ(கோயில்க் குச்சியும் அலகும்) கொண்டு படி கட
    22. புக்காக எரிக்க கடவாராக இ வுபயம் கொண்டோம். இக்காசவந் திருச்சிற்றம்பல முடையாந் பசிதாங்கியேந். இவை எழுதிய
    23. படி இவை தழுவக் குழைந்த இசாந திருச்சிற்றம்பல முடையாநேந் இது எந் எழுத்து. இப்படிக்கு இவை பந்மாகேஸ்வர ரக்ஷை. 

    எற்றாந் சூழ்ச்சி – அடித்து துணி துவைக்கும் வண்ணார் சூழ்ந்த இடம்; ஏவ – மறைந்து பாய; உடையார் – சிற்றரசர்; பட்டர்கள் – சாஸ்திர பண்டிதர்; வதை – கசையடி; சமாதானம் – அமைதி, சாந்தி    

    விளக்கம் : இரண்டாம் குலோத்துங்க சோழனின் மெய்க்கீர்த்தியோடு இக்கல்வெட்டு தொடங்குகிறது. இதில் 3 மூவர் ஏற்றிய 3 சந்தி விளக்கு பற்றிய செய்தி உள்ளது. முதல் சந்தி விளக்கு “குலோத்துங்கனின் 11 ஆம் ஆட்சி ஆண்டில் கி.பி 1144 இல் வடகரைப் புவனமுழுதுடை வளநாட்டு பொய்கை நாட்டு பிரம்மதேசம் ஸ்ரீ  கண்டராதித்த சதுர்வேதி மங்கல இறைவன் சிவலோகமுடையார் கோயில் கொண்ட இந்நாட்டு மணற்குடி நாட்டு கிரந்தங்குடியில் வாழும் வெள்ளாளன் மாங்குடையான் நெய்யாடியான நான் தியாகசமுத்திரத்து வாழும் தெரிந்தெடுத்த வில்லாளியான சொல் மணவாளன் மனைவியை சில அடித்து துணி துவைக்கும் வண்ணார் சூழ்ந்த இடத்திற்கு போன போது கொடிகளில் உலர்த்திய துணிகளின்  மறைவில் இருந்து கொண்டு இவளைக் கட்டி அணைக்க  இவள் மேல் பாயும் போது என் கை பட்டு இவள் அந்த இடத்திலேயே இறந்து போனாள். இறப்பு உண்டான இடத்தின் ஆட்சியாளர் காங்கையராயர் சாஸ்திர பண்டிதர்களை கலந்து பேசி என்ன தண்டனை தரலாம் என்று வினாவிய போது இவன் வெள்ளாளன் (பிள்ளைமார்) என்பதால் இவனுக்கு கசையடி தண்டனை ஏதும் இல்லை என்று சாஸ்திர பண்டிதன் கூற இந்த வழக்கின் தீர்ப்பாக அமைதி ஏற்படுத்தும் வண்ணம் இந்த இறைவன் கோயிலில் ஒரு சந்தி விளக்கு ஏற்றினால் போதும் இந்த விளக்கு அன்றாடம் எரிவதற்குத் தேவையான நெய்க்கு நாலு பசுவை தானம் அளிக்க வேண்டும் என்றனர். அதில் இரண்டு பசுவை இந்த கோவிலில் பணிபுரியும் காணி உரிமை உள்ள சிவபிராமணன் காசியபன் திருச்சிற்றம்பல உடையான் பசிதாங்கியிடமும் இன்னொரு சிவபிராமணன் தழுவக் குழைந்தான் திருச்சிற்றம்பலம் உடையானிடம் மற்ற இரண்டு பசுவும் தரப்பட்டன”. மேலும், இந்த ஊர் இந்திராவதாரச் சேரி மணலூர் பாரதாயன் (பாரத்துவாஜ கோத்திரத்தான்) ஆளவந்தான் _ _  கண்டான் மனைவியிடமும் இந்த சேரியின் புள்ளமங்கலத்து சாவாந்தி (சாவு + அந்தி = சாவந்தி > சவுண்டி) வெண்காடு தேவன் சிவலோகத்து நாயக நம்பியின் மகள் அருந்தவஞ் செய்தாள் சார்பாகவும் காசு பெற்று அதற்கு உபயமாக விளக்கு ஏற்றக் கடவோம் என்று ஒரு சந்தி விளக்கும் ஆக இத் திருவிளக்கு இரண்டும் சந்திராதித்தவர் உள்ள வரை செல்வதாக ஒப்புக் கொண்டு இந்த கல்லில் இந்த இறைவர் கோயிலில் எழுதி கல்வெட்டினோம் இக்கோயிலில் குச்சிச்சியும் அலகும் கொண்டு கருவறை புகும் வண்ணம் படிக் கடப்பில் எரிப்போம் என்று இந்த உபயம் பெற்றுக் கொண்டோம் என்று காசபன் திருச்சிற்றம்பல முடையான் பசிதங்கி சொல்கிறான். இவற்றில் எழுதிய படியே தழுவக் குழைந்தான் ஈசான திருச்சிற்றம்பல முடையான் நடப்பதாக உறுதி கூறுகிறான். இது என் எழுத்து. இப்படிக்கு இவை பன்மாகேசுவரர் பாதுகாப்பதாக.

    பண்டு தனியே செல்லும் பெண்களுக்கு பொது வெளியில் பாதுகாப்பு குறைவு என்பதை இக்கல்வெட்டால் அறிய முடிகிறது. தண்டனை என்று வந்தால் சாதிக்கு ஒரு நீதி என்ற முறையே பண்டு நிலவியது என்று தெரிகிறது. கோவிலில் விளக்கு ஏற்றுவதால் குற்றவாளி திருந்தப் போவதில்லை. அதற்கு மாறாக நான்கு அறநூல்களைப் படித்து பாட்டாக ஒப்பிக்க வேண்டும், அதை விளக்க வேண்டும் என்ற தண்டனை குற்றவாளியின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த சிந்தனை அந்நாளில் யாருக்கும் தோன்றவில்லை போலும்.

    பார்வை நூல்: அரியலூர் மாவட்டக் கல்வெட்டுக்கள், செப்பேடுகள் தொகுதி I,பக். 114-115 இல. தியாகராஜன்

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வாலிகண்டபுரம் திருவாலீசுவரர் கோயில் 4 வரிக் கல்வெட்டு

    1. கோவி ராசகேசரி பன்மற்கி யாண்டு 8 வது வன்னாட்டு வாலிகண்டபுரத்து திருவாலீஸ்வரத்து மாதேவற்க்கு வன்னாட்டுத் திசையாயிரத்தைஞ்ஞூ ற்றுவரோம் கற்கார்டூ
    2. ர் இருக்கும் வளஞ்சியன் ஐயாற்றிகளைக் கிலாச்ச வனமாம்பாடியுடைய வடுகன் சடையனைப் படக் குத்தி பட்ட பலமண்டல வீர வளஞ்சியரைக் சாத்
    3. திய் வைத்த நொந்தா விளக்கு இரண்டு. இவ்விளக்கு இரண்டினால் _ _ _ இப்பொன் பதின்ஐங் கழஞ்சினால் பலிசை நிசதம் நெயெண்ணை  அட்டக் கடவது உரி நாராயத்தா
    4. ல். இவ்விளக்கிரண்டினால் பொன்  மணிக்கிராமத்தார் வசமும் சேனையார் வசமும் சந்திராதித்தவல். இது பந்மாஹேஸ்வர ரக்ஷை. 

    கிலாச்ச – கலவரம், மோதல், clash என்ற ஆங்கில சொல்லுக்கு ஊற்று இச்சொல்; பட – விழ, சாக; பட்ட – வீரச்சாவடைந்த; பலிசை – வட்டி; நிசதம் – ஏற்பாடு; அட்டு – ஊற்று; நாராயம் – அளவுப் படி,     

    விளக்கம் : இது 10 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு. வேந்தன் யார் என்று தெளிவாக அறிய முடியவில்லை. ஆனால் அவனது 8 ஆவது ஆட்சி ஆண்டில் வன்னாட்டு வாலிகண்டபுரத்து வாலீசுவரர் கோயில் இறைவருக்கு வன்னாட்டின் திசையாயிரத்து ஐந்நூற்றுவ வணிகக் குழுவினர் கற்காட்டூரில் வாழும் வளஞ்சியன் ஐயாற்றிகள் தன்னை வலுச் சண்டைக்கு இழுத்த வனமாம்பாடியைச் சேர்ந்த வடுகன் சடையனை செத்து விழுமாறு குத்தினான். அதன் பொருட்டும் இன்னும் பல மண்டலங்களில் வீரசாவடைந்த வளைஞ்சியரை நினைவில் நினைந்தும் இரண்டு நுந்தா விளக்கு வைக்க முடிவு செய்தனர். இந்த இரண்டு விளக்கிற்கு தேவைப்படும் நெய்க்கு உரி அளவுப்படியால் நெய் ஊற்ற பதினைங்கழஞ்சு பொன் கொடுத்து அதை வட்டிக்கு விட்டு அதில் வரும் வருவாயில் இருந்து நெய் ஊற்றம் ஏற்பாட்டை செய்தனர். இதற்கு பொன் மணிக்கிராம வணிகரும் சேனை வணிகரும் பொறுப்பாக இருந்து சந்திர சூரியர் உள்ள காலம் வரை தடையின்றி இது செல்வதைக் கவனிக்க வேண்டும். இதை கோயில் பன்மாகேசுவரர் காக்க வேண்டும் என்று கல்வெட்டியுள்ளனர்.

    வணிகர் குழு இங்கு தன் செல்வாக்கை செலுத்தி ஐயாற்றிகள் தண்டனை ஏதும் பெறாமல் நுந்தா விளக்கு ஏற்ற ஏற்பாடு செய்துவிட்டது என்று தான் கூற வேண்டும். ஐயாற்றி என்பது இயற்பெயர் அல்ல. அது தலைமை ஏற்று வழி நடத்துவோனைக் குறிக்கிறது.

    பார்வை நூல்: பெரம்பலூர் மாவட்டக் கல்வெட்டுக்கள், செப்பேடுகள், பக். 213 ஆசிரியர்: இல. தியாகராஜன்

    கடலூர் மாவட்டம் கடலூர் வட்டம் திருப்பாதிரிப்புலியூர் பாடலீசுவரர் கோயில் முதல் திருச்சுற்றில் உள்ள முற்றத்தின் அடித் தளத்தில் உள்ள 7 வரிக் கல்வெட்டு

    1. உடையார் திருபாதிரிப்புலியூருடைய நாயனார் கோயில் தேவகன்மி, கோயில் கணக்கர்க்கு சிறுமுறி திருப்பாதிரிப் புலியூர் நத்தமும் விளை நிலமும் புன்செய் நிலமும் இவ்வூர் பிடாகைகளில் திருநாமத்துக் காணியாக அனுபவித்துப் போதுகையில் பெருமாள் விக்கிரம பாண்டிய தேவற்கு மூன்றாவது நாளில் விக்கிரம பாண்டியக் காலிங்கராயர் இக்கோயிலிலே சுப்பிரம(ண்)ணியப் பிள்ளையாரை ஏறியருளப் பண்ணி  இப்பிள்ளையார்க்கு இரண்டு மா நிலம் சண்டேசுரப் பெருவிலை கொண்டு கல்லும் வெட்டின அளவிலே இவ்வூரிலே இருக்கும் பிராமணர் இவ்வூர் எங்கள் ப்ரம்மக்ஷேத்ரம் என்றும் சண்டேசுரப் பெருவிலை  கொள்ளக் கடவதல்ல என்றும், எங்கள் காணி என்று அனுசயம் பண்ணினபடியாலே மாஹேஸ்வரர் திருக்கூட்டமாக இருந்து ஒரு திருமேனி  தீயிலும் விழுந்தபடியாலே பெருமாள் திருமுன்பே 
    2. கேழ்வியாய் [பி]ள்ளை பல்லவராயரையும் பிள்ளை அழகிய மணவாளப் பெருமாளையும் நீங்கள் நாட்டிலே போன அளவிலே இவ்வூர் மருங்கு சூழ்ந்த இடத்து நாட்டாரை அழைத்துக் கேட்டுக் காணி உடைய இவர்களுக்கு விடுவித்துக் குடுப்பதென்று திருவாய்மொழிந் தருளினபடியாலே நாலாவது ஐப்பசி மாதம் ஐஞ்சாந் தியதி சோழகுல வல்லிநல்லூர் அம்பலத்திலே எங்களையும் கூடக் கொண்டு கேட்ட இடத்துப் பிராமணரை உங்கள் காணியானபடிக்குச் சாதனங் காட்டுங்கோ ளென்று சொன்ன இடத்து இந்தப் பிராமணர்  ப்ரம்ம க்ஷேத்ரம் என்று சொல்லுகையாலே உங்கள் ப்ரம்ம க்ஷேத்ரமாகில்  நீங்கள் உழுது இறுக்கை இன்றியே வெள்ளாழர், அளவர், பள்ளிகள், பரம்பர் உட்பட உழுது இறுத்து ஆண்டு மாறி இவர்கள் உடனுங்கூடக் கரைஇட்டு உழுது போந்தபடியாலே காணி ஆ
    3. ட்சி அல்ல என்றும் அனுபோகத்தால் சொல்ல ஒண்ணா தென்றும் நீங்கள் இன்னாள் வரையாக இத்திருக் கோயிலிலே காணிநில முதலாகத் திருநாமத்துக்காணியாக நீங்கள் குடுத்துக் கல்வெட்டிக் கிடப்பதுண்டோ என்று கேட்ட இடத்து இப்படிக்கு ஒரு மூலம் எங்களால் காட்ட ஒண்ணா தென்றும் தன்னில்தான் விற்றும் ஒற்றி வைய்த்தும் போதுவோ மென்றும் இவர்கள் சில சாதனங் காட்டின இடத்து உங்களில் நீங்கள் ஒற்றி வைய்த்தும் விற்றும் செய்தவை ஒன்றல்ல என்றும் இவர்களைக் கேட்(ட்)டு விட்டுக் கோயில் தானத்தாரை அழைத்து  திருநாமத்துக் காணியானபடிக்குச் சாதனங் காட்டுங்கோள் என்று கேட்ட இடத்து இக்காணி என்று சொல்லுகிற பிராமணர் ஆண்டுதோறும் திருநாமத்துக் காணி பேசி நிலக் கூலிக்கும் விதை முதலுக்கும் எதிரடை ஓலை காட்டினபடியாலும் கோப்பெருஞ்சிங்கர் நாளிலும் 
    4. நிலக்கூலி தண்டிப் போந்த படிக்குக் கோயில் பரிமாற்றங் காட்டின படியாலும் பெருமாள் விக்கிர ம பாண்டிய தேவர் இத்திருப்பாதிரிப் புலியூர்  உடலடங்க இறையிலியாக ஐஞ்சாவது நாளில் எழுதின திருமுகத்திலே திருநாமத்துக் காணி படத் திருமுகம் எழுதித் திருவெழுத்துச் சாத்தின இத்திருமுகங் கொண்டு திருவீதி வலமாக இப்பிராமணர் உடனுங்கூட அலங்கரித்துக் கல்லும் வெட்டி இன்னாள் வரையும் அனுபவித்துப் போந்து இருக்க இப்பொழுது சொல்லக் கடவதல்ல  என்று முத[லி]களு[ம்] அருளச்செய்து நாங்களும் சொல்லிவிட்டது “இது திருநாமத்துக் காணி என்னும்படி கேட்டு அற்றுவிட்டபடிக்கு இத்திருக்கோயிலிலே கல்லுவெட்டிக் கொள்வது. இப்படிக்கு இவை திருபுவன மாதேவிச் சறுப்பேதி மங்கலத்துச் சாத்த மங்கலத்துக் குலசேகரப் ப்ரம்ம ராயன் எழுத்து. இப்படிக்கு இவை திட்டைச்சேரி சுந்தரபாண்டியப் ப்ரம்ம 
    5. ராயன் எழுத்து. இப்படி _ _ _     
    6. இப்படிக்கு இவை னந்தி  _ _ _ 
    7. இப்படிக்கு இவை பல்ல_ _ _ _          

    பெருமாள் – வேந்தர்; பிடாகை – உட்கிடையூர், backyard hamlet; உடையார் – சிற்றரசர்; மாகேசுவரர் – திருமேனி – தெய்வச்சிலை; திருவாய்மொழி – ஆணை இசைவு; சாதனம் (சாசனம்) – ஆவணம்; இறுக்கை – செல்லுதல், நடத்தல்; கரை – வரப்பு  

    விளக்கம் : 13 ஆம் நூற்றாண்டு இறுதியில் அல்லது 14 ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் வீர பாண்டியனுக்கு முன் வட தமிழகத்தை ஆண்ட பராக்கிரம பாண்டியன் ஆட்சியில் நிகழ்ந்த நிகழ்வு. திருப்பாதிரிப்  புலியூர் இறைவன் கோவியில் இறை பணியாளர்களுக்கும் கோவில் கணக்கருக்கும் வந்த சிறு முறி (ஓலை). திருப்பாதிரி புலியூர் விளையா நத்த நிலமும், விளைநிலமும், புஞ்சைநிலமும் அதே போல் உட்கிடை ஊர்களில் (பிடாகை)  விளையா  நிலமும், விளைநிலமும், புஞ்சைநிலமும் இறைவன் பெயரில் உரிமையாக (திருநாமத்து காணி) வந்து அனுபவித்து கொண்டிருக்கும் வேளையில் வேந்தர்  விக்கிரமபாண்டிய தேவர்க்கு பட்டம் ஏற்ற மூன்றாவது நாளில் சிற்றரசர் விக்கிரமபாண்டிய காளிங்கராயர் இக்கோவிலில் சுப்பிரமணிய பிள்ளையாரை எழுந்தருளச் செய்து இந்த பிள்ளைக்கு இரண்டு மா அளவு நிலத்தை சண்டேசுவரப் பெரு விலையாக வாங்கி கல்வெட்டு பொறித்த போது இவ்வூரில் வாழும் பிராமணர் இவ்வூர் எமது பிரம்ம சேத்திரம் (பிராமணர் ஊர்) எனவே சண்டேசுவர பெருவிலை வாங்கக் கூடாது இது எமக்கான உரிமை நிலம் என்று தொல்லை செய்த  வேளையில்; அப்போது மாகேசுவரர் (சிவனடியார்கள்) திருக்கூட்டமாக இருந்த நேரத்தில்  ஒரு சாமி சிலை தீயில் விழுந்ததால் அதை அரசர் காலிங்கராயர் திருமுன்பாகச் சொல்ல அவர் பிள்ளை பல்லவராயரையும், பிள்ளை அழகிய மணவாள பெருமாளையும் நீங்கள் நாட்டிலே , ஊரிலே சென்று இந்த ஊரை சூழ்ந்த ஊராரை விசாரித்து காணியுடைய பிராமணர்களுக்கு நிலத்தை விடுவித்து கொடுக்க ஆணைக்கு இசைந்ததால் முடிசூட்டிய  நாலாம் நாளில் ஐப்பசி மாதம் ஐந்தாம் தேதி அன்று சோழகுலவல்லி நல்லூர் நீதிமன்றம் அல்லது கோவிலில் எங்களையும் (பிராமணரையும்) கூட அழைத்து சென்று கேட்ட நேரத்தில் பிராமணர்களே  உங்கள் காணி என்பதற்கு ஆவணங்களை காட்டுங்கள் என்று சொன்ன போது இந்த பிராமணர் இது பிரம்ம சேத்திரம் என்று சொல்லும் போதும் இது உங்கள் பிரம்ம சேத்திரம் என்றால் இதில் நீங்கள் உழாமல் வெள்ளாளர், அளவர், பள்ளிகள், பரம்பர் உட்பட்டோர் உழுது ஆண்டுகள் பல கடந்து இவர்கள் அந் நிலத்திற்கு வரப்பும் அமைத்து உழுது காலம் போனதால் இது உமது நில உரிமை அல்ல, எனவே  அனுபோகத்தால் (by possession) உமது நிலம் என  சொல்ல முடியாது என்று சொல்லி  நீங்கள் இதுநாள்வரை இக்கோவிலில் காணி நிலமாக பெற்ற  இறைவன் பெயரில் நிலங்களாக கொடுத்த கல்வெட்டி ஏதேனும் இருக்கிறதா என்று கேட்ட போது இப்படி ஒரு மூல ஆவணம் எம்மால் காட்ட இயலாது அவரவர் விருப்பப்படி விற்றும் ஒத்தி (அடமானம்) வைத்தும்  போவோமென்று இவர்கள் சில ஆவணம் காட்டிய போது நீங்கள் உங்களுக்குள்ளேயே ஒத்தியும் விற்றும் செய்தவை ஒன்றல்ல என்றும் இவர்களிடம் சொல்லிய  போது கோவில் நிருவாகிகளை அழைத்து இது  திருநாமத்து காணி என்பதற்கு ஆவணம் காட்டுங்கள் என்று கேட்டபோது இக்காணி எமது என்று சொல்லுகிற இப்பிராமணர்  ஆண்டுதோறும் திருநாமத்து காணி  என்று சொல்லி நிலக் கூலிக்கும் விதை முதலுக்கும் எதிரடை (சான்றாக) ஓலை காட்டியதால் காடவப் பல்லவ வேந்தன் கோப்பெருஞ்சிங்கன் காலம் முதலே நிலக்கூலி வாங்கியதற்கு கோவில் பரிமாற்றங்களைக்  (transaction) காட்டியதால் வேந்தர் விக்கிரம பாண்டியத்  தேவர் திருப்பாதிரிப்புலியூர் மூல நிலமும் அடங்க இறையிலியாக தான் முடிசூடிய ஐந்தாவது நாளில் எழுதிய திருமுகத்தில் (அரசாணையில்) இது இறைவன் நிலம் என்று தெளிவாக ஆணையிட்டு கையெழுத்து இட்ட படியால் இத்திருவெழுத்தை இப்பிராமணர் வீதிவலமாக எடுத்துச்சென்று கல்லு வெட்டிக் கொண்டனர். இதை இதுநாள் வரை நீங்கள் அனுபவித்து கொண்டு இருக்க அதை இனி மீண்டும் சொல்லத் தேவை இல்லை என்று முதலிகளும் ஒப்புதல் அளித்து நாங்களும் சொன்னது என்ன என்றால் “இது திருநாமத்துக்காணி  எனும்படி சொல்லக் கேட்டு எமக்கு முழுவதும் கைவந்தபடியாலே ( அற்றுவிட்டபடியாலே > அத்துபடி)  இத்திருக்கோவிலில் அதை கல்வெட்டிக் கொள்ளலாம் என்று ஒப்புதல் அளித்தோம். இப்படிக்கு திருபுவன மாதேவி சருப்பேதி மங்கலத்துச்   சாத்த மங்கலத்துக்  குலசேகர பிரம்மராயன் எழுத்து. இவை திட்டைச்சேரி சுந்தர பாண்டிய பிரம்மராயன் எழுத்து. இப்படிக்கு இவை நந்தி (வர்மன் எழுத்து). இப்படிக்கு இவை பல்ல(வராயன் எழுத்து)

    வேந்தர் வெள்ளாளர், பரம்பர், பள்ளி ஆகியோரை tenants under tenants/ sub tenants என்று கருதியதால் பிராமணரே உண்மையான வாடகையாளர் என்று கூறிவிடுகிறார். அதற்கு பிராமணர் கோப்பெருஞ்சிங்கன் காலம் முதலே கட்டிய நில வாடகை விதை முதல் ஆவணங்களை ஏற்றுக்கொள்கிறார்.

    பார்வை நூல்: தென்னிந்திய கல்வெட்டுக்கள் தொகுதி 7 எண்: 759 பக். 385

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் திருவிடைமருதூர் கல்வெட்டு

    சுபமஸ்து ஸ்வஸ்தி ஸ்ரீமந் மஹா மண்டலேஸ்வர சதுசமுத்திராதிபதி  ஸ்ரீமந் சதாசிவ தேவ மஹாராயர் பிருதுவிராச்சியம் பண்ணியருளா நின்ற சகாத்தம் 1466 ன் மேற்செல்லா நின்ற குரோதி சம்வத்ஸரத்து மீன ஞாயற்றுப் பூருவ பட்சத்து உத்துவாநத் துவாதசியும் சோமவாரமும் பெட்ரா உத்திரட்டாதி நட்சத்திரத்து நாள் வீரப் பிரதாப ஸ்ரீமது மஹா மண்டலேஸ்வர இராமராஜ விட்டல தேவ மகா இராஜர். சோழ மண்டலத்து காவேரி தீரத்து தென்கால் உய்யக்கொண்டசோழ வளநாட்டுத் திரைமூர் நாட்டுத் திருவிடைமருதூர். திருவிடை மருதூருடைய தம்பிரானாற்க்கு தற்மசிலா சாஸனம் பண்ணிக் குடித்தபடி மருதப்பர் திருநாமத்துக் காணியாய் பூறுவம் நடந்த புத்துஆற்றுக்கு வடக்கு ஆவணமும், சிற்றாடியும் இந்த இரண்டு கிறாமமும் பூறுவம்  கோயிற்பற்றாக  நடக்கயிலே அன்னாளிலே பண்டாரா வாடைக்காரர் கட்டிக் கொண்டு பண்டாரவாடை ஆகப் போகையில் இப்பொழுது இது காரியமாக திருவிடை மருதூருடைய தம்பிரானார் திருக்கோயில் தேவகன்மிகளில் திருச்சிற்றம்பல பட்டர் மங்காமந் காத்தார் இன்னயினார் கோயிற் பற்று என்று நமக்கு விண்ணப்பம் செய்து நாம் திருவடி பேரிலே தண்டு வந்த பொழுது  நம்முடனே கூட தெற்கு அனந்தசயனம் வடக்கு முதுகல்லு ஸஹிதமாகத் தண்டுப் பண்ணி பூறுவம் கோயிற்பற்று என்று பலகாலும் நமக்கு விண்ணப்பம் செய்து நாமும் அந்தக் கிறாமங்களிலே மருதப்பர் முத்திரை எல்லைக் கல்லு நிற்கிறது உண்டோ என்று நம்முடைய முத்திரை வாங்கி, இலிங்கயர் மனுஷரையும் தூளி நயினாரையும் நாம் முதுகல்லிலே இருந்து திருச்சிற்றம்பல பட்டர் சொன்னாப் போல எல்லைக் கல்லு நிற்கிறதோ என்று பார்க அனுப்பி வரக்காட்டி விசாரித்து பூருவம் கோயிற்பற்று என்கிறதுக்கு இரண்டு ஊரிலும் கல்லு நிற்குது என்று பார்த்து வந்து நமக்கு விண்ணப்பம் செய்கையில் நாமும் அந்தப் படிக்கு இராயஸமும் வாங்கிக் குடுத்து சங்கிரம புண்ணிய காலத்திலே திருச்சிற்றம்பல பட்டர் கையிலே உதகம் பணிக்கு குடுத்து  நம்முட இராயஸமும் _ _ __.  

    தர்ம சிலா சாசனம் – நீதி நிலைநிறுத்தும் கல்வெட்டு; பண்டாரவாடைக்காரர் – வரி தண்டும் கருவூல அதிகாரி; தண்டு – படை,  வருத்தம்; இலிங்கயர் – குறி செதுக்குவோர்; தூளி – குதிரை; இராயசம் – அரசாணை;

    விளக்கம்: இக்கல்வெட்டில் இடம்பெறும் இராமராச விட்டல தேவ மகாராயர் கிருஷ்ணதேவராயரின் மருமகனாவார். இவர் சதாசிவராயர் இளமையிலேயே வேந்தராக முடிசூட்டிக் கொண்ட காரணத்தால் அவரது மேற்பார்வையாளராக இருந்து பின்புலத்தில் இருந்தபடி உண்மையாகவே இவரே ஆட்சி செலுத்தியவர் என்பதால் மகாமண்டலேசுவர தேவ மகாராயர் என்று கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறார். கி.பி. 1565 இல் தக்காண சுல்தான்களோடு நடந்த தலைக்கோட்டைப் போரில் இவரது தலை கொய்யப்பட்டு வைக்கோல் அடைத்துக் காட்சிப்படுத்தப்பட்டது.

    மலபார், கொங்கணம், சோழமண்டலம், உத்கலம் என்ற நான்கு கடற்கரைக்கும் அதிபதியாக சதாசிவ தேவராயர் மண்ணுலகு ஆண்டு அருளுகின்ற சக ஆண்டு 1466 (கி.பி.1544) குரோதி ஆண்டில் மீன ராசி முற்பகுதியில் கார்த்திகை மாத சுக்லபட்ச துவாதசியான   (உத்துவான துவாதசி) திங்கட்கிழமை உத்திரட்டாதி நட்சத்திரம் கூட நாளில் வீரபிராதப மகா மண்டலேசுவரர் இராமராச வித்தல தேவ பேரரசர் சோழமண்டலத்த்தில் அடங்கிய காவேரிக்கரை தென்கரையில் அமைந்த உய்யக்கொண்ட சோழ வளநாட்டு திரைமூர் நாட்டுத் திருவிடைமருதூர். இந்த திருவிடைமருதூருடைய இறைவர்க்கு நீதி நிலைநிறுத்தும் கல்வெட்டு செய்து கொடுத்தது யாதெனில், இறைவன் மருதப்பர் பெயர்க் காணியாக முன்னொரு காலம் புத்து ஆற்றுக்கு வடக்கில் ஆவணம், சிற்றாடி ஆகிய இரு கிராமமும் கோயில் உரிமை நிலமாக இருந்த நிலையில் அக்காலத்தே கருவூல அதிகாரி அவற்றில் இடம் கட்டிக்கொண்டு அவருக்குரியதாக ஆக்கிக் கொண்டார். இப்பொழுது இதன் தொடர்பில் திருவிடைமருதூருடைய இறைவன் கோயில் இறைப்  பணியாளர்களில் ஒருவரான திருச்சிற்றம்பல பட்டர் மங்காமன் காத்தார் இவை இக்கோயில் இறைவன் உரிமை நிலம் என்று என்னிடம் முறைப்பாடு செய்தார். நான் திருவடிகள் நாடான திருவனந்தபுரம் மேல் படைநடத்தி வந்த போது என்னுடனே கூட தெற்கில் உள்ள பத்மநாப சுவாமி கோயில் அனந்தபுரத்தில் இருந்து வடக்கே முதுகல் (குல்பர்கா) வரை தம்மை வருத்திக் கொண்டு  கூடவே வந்து முன்னொரு போது இவை கோயில் உரிமை நிலம் என்று என்னிடம் பலமுறை வேண்டீடு செய்தார். நானும் அந்த கிராமங்களில் மருதீசர் முத்திரை பொறித்த எல்லைக் கல் நிறுத்தப்பட்டுள்ளனவா என்று என்னுடைய முத்திரை பெறும் அதிகாரி, குறி செதுக்குவோர் ஆகியோரையும் குதிரைப்படை தலைவனையும் நான் முதுகல்லில் இருந்தபோது சிற்றம்பல பட்டர் சொன்ன ஊர்களில் எல்லைக் கல் நிறுத்தப்பட்டுள்ளதா என்று பார்த்து வரச்சொல்லி அனுப்பி விசாரித்ததில் முன்னம் அவை கோயில் நிலம் என்பதற்கு சான்றாக இரு ஊர்களிலும் கல் நிறுத்தப்பட்டுள்ளது என்று பார்த்து வந்து எனக்கு வேண்டுகோள் வைத்தமையில் நானும் அதன்படி அரசாணையும் வாங்கிக் கொடுத்தேன். போர் நடக்கும் புண்ணிய காலத்திலே திருச்சிற்றம்பல பட்டர் கைகளில் நீரட்டி என்னுடைய ஆணையையும் கொடுத்தேன் என்ற மட்டில் கல்வெட்டு சிதைந்துள்ளது.

    பண்டாரவாடைக்காரர் யார் என்ற பெயர்க் குறிப்பு கல்வெட்டில் இல்லை. இது போல அரசு அதிகாரிகள் பல ஊர்களில் நடந்து கொள்ள வாய்ப்புள்ளது. ஏதோ சிற்றம்பல பட்டரின் விடாமுயற்சி கோயில் நிலம் மீண்டும் கோவிலுக்கே மீண்டது.

    பார்வை நூல்: தொல்லியல் புதையல், பக். 54 – 55 ஆசிரியர்: நடன. காசிநாதன் & திருவிடைமருதூர் கல்வெட்டுகள், 1960 பக். 25 – 29, வெளியீடு:ஸ்ரீ மகாலிங்க சுவாமி தேவஸ்தானம்.

    Share
  • குறளின் கதிர்களாய்…(486)

    குறளின் கதிர்களாய்…(486)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(486)

    அழுக்காற்றி னல்லவை செய்யா ரிழுக்காற்றி
    னேதம் படுபாக் கறிந்து.

           –திருக்குறள் – 164 (அழுக்காறாமை)

    புதுக் கவிதையில்…

    அடுத்தவர் மீது
    அழுக்காறு கொள்வதால்
    தமக்கு
    இம்மை மறுமை
    இரண்டிலும்
    இன்னலே வரும் என்பதை
    நன்கறிந்த சான்றோர்,
    பொறாமை காரணமாக
    அறமல்லாத் தீயவற்றை
    அடுத்தவர்க்குச் செய்யார்…!

    குறும்பாவில்…

    பிறர்மீது பொறாமை கொண்டால்
    பெருந்துன்பம் தமக்கு வருமென்பதறிந்த சான்றோர்
    பொறாமையுடன் பிறர்க்குத் தீங்குசெய்யார்…!

    மரபுக் கவிதையில்…

    பிறரின் மீது பொறாமையாலே
         பெரிய துன்பம் தமக்குவரும்,
    மறவா திதனைச் சான்றோரும்
         மற்றோர் மீதே அழுக்காறாய்
    அறத்தை மறந்த தீச்செயலால்
         அடுத்தோர் துன்பம் அடைந்திடவே
    மறந்தும் பிறர்குத் தீங்குசெயும்
        மடமை தன்னைச் செய்யாரே…!

    லிமரைக்கூ…

    பொறாமை பிறரின் மீது,                 
    பெருந்துன்பம் தமக்கென அறிந்த சான்றோர்
    செய்யார் பிறர்க்குத் தீது…!

    கிராமிய பாணியில்…

    வேண்டாம் வேண்டாம்
    ஒருநாளும் வேண்டாம்
    உருப்படாத பொறாம கொணம்,
    அறவே வேண்டாம்
    அடுத்தவங்க மேல பொறாம..

    மத்தவங்க மேல பொறாமகொண்டா
    மாறாத துன்பம்
    தனக்குத்தான் வருமுண்ணு
    நல்லாத் தெரிஞ்ச
    பெரியவுங்க பொறாமயால
    அடுத்தவங்களுக்குக்
    கேடு எதயும்
    ஒருநாளும் செய்யமாட்டாங்க..

    அதால
    வேண்டாம் வேண்டாம்
    ஒருநாளும் வேண்டாம்
    உருப்படாத பொறாம கொணம்,
    அறவே வேண்டாம்
    அடுத்தவங்க மேல பொறாம…!

    Share
  • A Salute to Mr. Shanmugayya

    A Salute to Mr. Shanmugayya

    Baskar Seshadri

    It was dark. Shanmugayya noticed a lorry accident near the railway track in Tenkasi and sensed something would go wrong if the train passes the track.

    He immediately rushed to his wife and both together raised voice against the oncoming train. And to be in safe side he used his torch and showed it to the engine driver making him to realise the danger.

    The rail was stopped and a major accident was averted.

    Shanmugayya 60 did not bother about his age and took all the efforts to take the terrain and made it to the track to make this feat.

    Loco pilot of the rail was too happy to be part of this Incident.

    Tamilnadu Government had announced a reward of Rs Five Lakhs to the couple.

    What a Great and marvellous Work he had done with his wife? Salutes to this Couple.

    Share
  • மலபாரில் சிக்கார் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

    மலபாரில் சிக்கார் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

    மூல நூலாசிரியர்: சி.வி.பாலகிருஷ்ணன்
    மொழி : மலையாளம்
    தமிழில்: முனைவர்.நா.தீபா சரவணன்
    உதவிப்பேராசிரியர்
    குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை.

    யாரைக் கொல்லலாமென்று ஆலோசித்து இருட்டைப்பார்த்துக் கொண்டிருந்தபோது ஒரு துர்மந்திரவாதியின் ஜல பாத்திரத்தில் தெளிவது போல அவர்களுக்கு ஒரு முகம் தெளிவானது. கல்லொடைக்கும் சாத்துவின்  இருளான முகமே அது. எப்போதும் போல ஒரு பாட்டில் கள்ளு குடித்துவிட்டு கள்ளின் நிறமுடைய ஸ்வட்டரைக் கையிலேந்திக்கொண்டு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருக்கும் சாத்துவுக்காக காத்துக்கொண்டு அவர்கள் பதுங்கி நின்றார்கள். ஆனால் சற்று நேரமாகியும் சாத்து அது வழியாக வரவில்லை. அவர்கள் அசௌகர்யத்துடன் காணப்பட்டனர்.

    ‘சாத்தண்ணன் முன்னாடியே போயிருப்பாரு’ பவித்ரன் சொன்னான்.

    முதல் நாள் அவரு 7:00 மணிக்குத்தான் போனாரு என்பதை சிவதாசன் நினைவூட்டினான்.

    ‘இன்னக்கி ஒரு வேள வேலைக்குப் போய் இருக்க மாட்டாரு. நமக்கு வீட்டுக்குப் போலாம் நந்தன் கத்தியால கழுத்தை சொரிவதற்கிடையில் சொன்னான்.

    ‘வேலைக்குப் போலன்னாலும் சாத்துஅண்ணன் சாயங்காலம் கள்ளுக்கடைக்குப் போகாம இருக்க மாட்டாரு.’ சுதாகரன் கூறினார்.

    “ஆமா. அது சரிதான் சாத்துஅண்ணனுக்கு தினமும் கள்ளு குடிக்காம இருக்க முடியாது’. கர்ணன் சிரித்தான்.

    இருந்தாலும் நாம  வீட்டுக்குப் போய் கேட்கலாம். அங்கேயா இருந்தா  சீக்கிரமா காரியம் சாதகமாகும். நந்தன் சொன்னான்.

    அதுக்கும் யாரும் ஒத்து வரல அவங்க கல்லொடைப்பவரான சாத்துவோட வீட்டை இலட்சியமாக்கி நடந்தனர். கார்த்திகை மாத இரவு குளிரத் தொடங்கி இருந்தது.

    கல்லொடைப்பவரான சாத்துவின் மூத்தமகள், வனஜாவின் அஞ்சு வயசான மகனுக்கு வெளியில் சின்னதா ஒரு சீமெண்ணெய் விளக்கிற்குப் பக்கத்தில் உட்கார்ந்து மாதுவம்மா கதை சொல்லிக் கொண்டிருந்தாள். மாதுவம்மா சாத்துவோட அம்மா. வயசு எண்பதை நெருங்கி இருந்தது.

    ‘சாத்து அண்ணா இல்லயா?” வெளியில் இருந்து ஒரு கேள்வி எழுந்தது.

    மாதுவம்மா கதையை நிறுத்தினாள்.

    ‘யாரது?” மாதுவம்மா கேட்டாள்.

    இருட்டுல வெளில யாருன்னு மாதுவம்மாவுக்குத் தெரியல.

    சாத்துண்ணாகிட்ட ஒரு வேலை சொல்லணும். தான் யார் என்பதை வெளிப்படுத்தாமல் பவித்ரன் கூறினான்.

    ‘சாத்து  ஆஸ்பத்திரிக்குப் போயிருக்கா. மாதவிக்கு உடம்பு சரியில்ல.’ ஆஸ்பத்திரியில இன்னைக்கு அட்மிட் ஆக்கியிருக்கு. ஆப்ரேஷன் தேவப்படும்னு  சொல்லி இருக்காங்க.’ மாதுவம்மா கூறினாள்.

    பவித்ரன் திரும்பினான்

    ‘யாரு வந்து கேட்டாங்கனு சொல்லணும்? மாதுவம்மா சத்தமாகக் கேட்டாள்.

    நான் பார்த்துக்கிறேன். பவித்ரன் இருள் வழியாக நடந்து அகன்றான்.

    மாதுவம்மா தான் கூறிக்கொண்டிருந்த கதைக்குத்திரும்பினாள். பவித்ரன் மற்றவர்களிடத்துச் சென்றான். சாத்து சற்று தூரமாக உள்ள ஆஸ்பத்திரியில் தனது மனைவி மாதவி காபியில் ரொட்டித் துண்டு முக்கி உண்பதை பார்த்துக்கொண்டு பக்கத்தில் இருந்தான்.

    ‘இனி இப்போ என்ன செய்யறது.’ கர்ணன் இருட்டில் நடக்கும் போது தனக்குத்தானே பேசினான்.

    ‘சாத்துஅண்ணாவோட மகளோட மகனிருக்கானே அங்கே…….. அங்கே போய் அவனைக் கொன்றாலோ?’ சுதாகரன் கேட்டான்.

    ‘அவ சின்னப் பையனாச்சே’ நந்தன் சொன்னான்.

    அவனோட அப்பாவ  கிடைச்சாலும் போதும். சிவதாசன் சொன்னான்.

    சனிக்கிழமை ராத்திரில   கொஞ்சம் இங்க வாங்க. கர்ணன் சொன்னான்.

    யாரை கொல்லலாம்னு அவங்க மறுபடியும் வட்டமாக உட்கார்ந்து யோசிச்சிட்டிருக்கும்போது ஒரு டார்ச் வெளிச்சம் அவர்களுக்கு நேராக வந்தது. டவுனில் கண்ணாடி மாத்தி வாங்கப் போன நாணு மாஸ்டர் ஊருக்குத் திரும்பி வந்துட்டார். வலது கையில் டார்ச் லைட்,  இடது கையில  ஒரு பை.

    கண்ணாசுபத்திரிக்குப் போயி பரிசோதிச்சு புதிய கண்ணாடியும் வாங்கிட்டு பஸ்ஸ்டாண்டுக்கு நடக்கும்போது அதுக்குப் பக்கத்தில ஒருபக்கம் வெங்காயமும் உருளைக்கிழங்கும் மலிவு விலைக்கு விக்க வெச்சிருக்கறத  அவரு பார்த்தாரு. ரெண்டையும் ஒவ்வொரு கிலோ வாங்கினார்.

    நம்மூரு விலையோட ஒப்பிட்டுப் பார்த்தா ஏழு ரூபாய் லாபம். ரெயில்வே ஓவர்பிரிட்ஜ் ஏறும்போது எதிர்பாராமல் பழைய தோழி ஒருவரை சந்தித்தார். பல வருடங்களுக்கு அப்புறம் உள்ள சந்திப்பு அதோடு அவர் மிக சந்தோஷவான் ஆனார்.

    பஸ் ஸ்டாண்டில் பேக்கரிக்கு முன்பாக நிக்கும்போது அவருக்கு சின்ன மகளின்  நினைவு வந்தது. அவளுக்காக  அவர் ஒரு கிண்ணப்பத்தை வாங்கினார்.

    பஸ்ஸ விட்டிறங்கி பையை தூக்கிக்கொண்டு வீட்டைப் பார்த்து நடந்தார்.

    “யாரது அங்கே? அவர் டார்ச் அடித்துக்கொண்டு கேட்டார்.

    நாணுமாஸ்டர் என்று பவித்ரனோடச் சத்தம் கேட்டு உணர்ந்தான்.

    ‘நான் தான் சாரே பவித்ரன்.’ அவன் சொன்னான்.

    ‘நீ என்ன இங்கே இருட்டில அவர் கேட்டார்.

    ‘சும்மாதா உட்கார்ந்திட்டு இருக்கே’ அவன் சொன்னான்.

    ஓர் இளைஞன் இருட்டுல சும்மா இருக்கிறது அவ்வளவு நல்ல காரியம் இல்லை என்று சிந்தனையுடன் அவன் நடக்கத் தொடங்கிய போது அவருக்கு வேறு ஒரு யோசனையும் தோன்றியது.

    ‘நீ எம்ப்ளாய்மென்ட் எக்ஸ்சேஞ்சுக்கு போனியா?” அவர் கேட்டார்.

    ‘இல்ல’ அவன் சொன்னான்

    ‘அது சரி உங்க அப்பாகிட்ட நேத்து கூட சொல்லிருந்தேனே’ அவர் குரல் உயர்த்தினார்.

    அவருக்கு அவன் மேல கோபம் வந்தது இந்தக் காலத்தில் ஒரு வேலை கிடைக்கிறது கொஞ்சம் கஷ்டமானதுனு தெரியாமல் இல்லை. இருந்தாலும் நம்ம பக்கமிருந்து ஒரு முயற்சி வேண்டாமா? பாறக்கண்டியில் வேலுவோட மகன் பவித்திரனுக்கு வேலைய வெச்சு நீட்டிட்டு ஒரு அரசு பிரதிநிதியும் இங்கே வர மாட்டாங்களே?’

    நாளைக்காவது போய் எம்ப்ளாய்மென்ட் எக்ஸ்சேஞ்சில் ஒரு ரெஜிஸ்டர் செய்யணும்னு பவித்ரங்கிட்ட கண்டிப்போடு சொன்னதுக்கப்புறம் நாணு மாஸ்டர் தனக்கு நேராக உள்ள வழியைப்பார்த்து நடந்தார். இருட்டு வழியாக அவருடைய டார்ச்சின் வெளிச்சம் வயல்வெளிகளில் நகர்ந்தது

    ‘நமக்கு அவனெத் தூக்கனாலோ.?’ கர்ணன் ஆவேசத்தோடு மத்தவங்ககிட்டக் கேட்டான்.

    வேண்டா சாரே பவித்ரன் திடிர்னு சொன்னான்.

    ‘சாரே யுதிர்ஷ்டரும், அர்ஜுனரும், பீமரும், துரோணாச்சாரியார் கிட்ட போர் செய்யலாமா?’ குருவை கொன்றோம் என்ற வருத்தத்திற்கு அவசியமில்லை என்றுதானே துரோணர் யுத்தத்திற்கு முன்பு தன்னை வந்து பார்த்த யுதிர்ஷ்டங்கிட்ட  சொன்னாரு. கர்ணன் எதையோ எண்ணிக்கொண்டு சுற்றிலும் உள்ளவரைப் பார்த்தார். இருட்டில் யாரோட முகமும் தெளிவாகத் தெரியவில்லை.

    ‘அது சரிதா நந்தன் சொன்னான். அவன் தன்னுடைய கத்தியை மீண்டும் விரித்தான். அதன் வாய்ப்பக்கம் மின்னியது.

    முதல் குத்து ஒன்னோடதா  இருக்கட்டும் கர்ணன் பவித்ரங்கிட்ட சொன்னான்.

    கையும் காலும் வெட்டிக்கொத்தி தனித்தனியாக்கணும்.சிவதாசன் கூறினான்.

    ‘தலையெ வெட்டி மதில்சுவரு மேல வைக்கலாம்’ சுதாகரன் சொன்னான்

    அவர்கள் மொத்தமாக வயல் வரம்பில் நகருகின்ற டார்ச் வெளிச்சத்திற்கு நேராகப் பார்வையை செலுத்திக்கொண்டு வேகமாக நடந்தனர்.

    வரம்பில் விட்டில் பூச்சிகளின் இரைச்சல் ஓயவில்லை. இருபக்க  வயல்களிலுமிருந்து சாணியினுடையவும், சேற்றினுடையவும் நாற்றம் மிகுந்தது. நாணு மாஸ்டர் அதை கனிசமாக ஏற்றார். ஒரு விட்டில் பூச்சி குறும்பு காட்டும் விதம் அவருடைய இடதுகாலில் இடறியது.  புதிய கண்ணாடி அணிந்ததிலும், மலிவு விலைக்கு வெங்காயமும், உருளைக்கிழங்கும் வாங்க முடிந்ததிலும், பழைய ஒரு தோழியை பல வருடங்களுக்குப் பிறகு எதார்த்தமாகக் காண முடிந்ததிலும், ஒரு விட்டில் பூச்சியின் ஸ்பரிசம் ஏற்றதிலும் உள்ள மனமகிழ்ச்சியோடு அவர் நடந்தார்.

    Share
  • A young CEO & Co-founder of Cloobot Techlabs

    A young CEO & Co-founder of Cloobot Techlabs

    Seshadri Baskar

    Its matter of pride moment for Tejasvin Srinivasan, alumni of IIT Madras. He is proud that he will be showcasing his Cloobot Techlabs in Umagine in Trade Centre, Nandambakkam This Friday and Saturday

    Tejasvin Srinivasan, resident of Ramaniyam Mangalaa, Srinivasan Street, Mandaveli is the CEO and Co-founder of Cloobot Techlabs, an AI-Tech startup. He did his BTech and MTech from IIT Madras.

    Chennai based AI-Tech Startup, Cloobot Techlabs Unveils Cloobot X: A Revolutionary No-Code Workflow Builder Accelerating Enterprise Application Development.

    Cloobot Techlabs Private Limited proudly announces the launch of Cloobot X, an innovative no-code workflow builder that empowers Citizen Developers to Create Custom Applications 10X Faster with simple prompts.

    Debuting at the “Umagine Chennai Summit” on February 23-24, 2024, Cloobot X will revolutionize enterprise IT projects with a paradigm shift in software development.

    “We’re democratizing software development,” says Tejasvin Srinivasan, CEO & Co-Founder of Cloobot Techlabs, emphasizing Cloobot X’s unique way of leveraging LLMs.

    Cloobot X offers these following value propositions to their Enterprise customers. Tejasvin is a boy of Passion and has a fire in the belly .

    Tejasvin 29  may be contacted at 7337733793. He had done Mandaveli Proud.

    Share