Blog

  • இந்த வார வல்லமையாளர்!

    செப்டெம்பர் 22, 2014

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு  பேராசிரியர் செ. இரா. செல்வக்குமார் அவர்கள்

     

    selvakumar2

     

    தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் பாடங்களை விரைவில் தமிழ் விக்கிபீடியா வழியாக தமிழர்கள் யாவரும் பெற்று பயன்பெறும் வகையில் இடம்பெற முயன்று வருகிறார்  கனடாவைச் சேர்ந்த பேராசிரியர் செ. இரா. செல்வக்குமார் (C.R.Selvakumar) அவர்கள். சென்ற புதனன்று (செப்டெம்பர் 17, 2014) சென்னையில் நடந்த, பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சார்ந்த அறிஞர்கள் பலர் பங்கு பெற்ற பயிலரங்கில்  சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, விக்கிபீடியா என்பது கலைக்களஞ்சியம் மட்டுமல்ல, தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கான தொழில்நுட்பம்.  அதனை முழுமையாகப் பயன்படுத்த வேண்டியுள்ளது என்று கூறி இத்திட்டத்தின் இன்றியமையாமையை வலியுறுத்தியுள்ளார்.  கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் விக்கிப்பீடியா நிர்வாகிகளுள் ஒருவராக அயராது செயலாற்றித்  தமிழை இணைய உலகத்திற்கு கொண்டுவரும் நோக்கத்தில் இப்பணியைச் செய்து வரும் பேராசிரியர் செல்வக்குமார் அவர்கள் இவ்வாரத்தின் வல்லமையாளராக வல்லமை இதழ் குழுவினரால் பாராட்டப்படுகிறார்.

    வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்து கொண்டே அலுவலகப் பணிகளைச் செய்யலாம்,  இருந்த இடத்தில் இருந்து கொண்டே அயல்நாட்டிலும் வேலை பார்க்கலாம் என்ற வசதி சென்ற நூற்றாண்டின் முற்பகுதிகளில் அறிவியல் கதைகளில் மட்டும்தான் கற்பனையில் எழுத முடிந்திருக்கும். தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக மிகவும் குறுகிவிட்ட இன்றைய உலக அரங்கு, இந்த நூற்றாண்டில் மொழிகளின் வளர்ச்சிக்கு மற்றொரு சவாலை வைத்திருக்கிறது.   உலகப் பொதுமொழியாகப் பல்கிப் பரவிவிட்ட ஆங்கிலம் இணையத்தில் செயலாற்றுவதற்கு இன்றியமையாத மொழியாக மாறிய நிலையினால் இக்கால இளைஞர்கள்,  நடப்புலகின் நிலையை அனுசரித்து ஆங்கிலவழியில் செல்லும் நிர்பந்தத்தில் உள்ளனர்.

    தேவையானால் ஆங்கிலம் பயன்படுத்திவந்த சென்ற தலைமுறையினர் போல அல்லாது, சமூகவலைத்தளம் மூலம் உலக நட்புகளுடன் உறவாடுவதில்  குறுக்கிடும் மொழி என்ற தடையைக் களைய  வேண்டிய இன்றியமையாத்  தேவையினால் இளைய சமுதாயத்தினரின் வாழ்வில் ஆங்கிலம் பின்னிப்பிணைந்துள்ள காலமிது.   இத்தகையப் போட்டியில் பல உலக மொழிகளும்  வளரும் களம் இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் மாறிவிட்டிருக்கிறது.

    இந்தச் சூழ்நிலையில், உலக  மொழிகள் யாவும் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு   ஈடுகொடுத்து தகவல்களை மொழியாக்கம் செய்து வழங்கவும்; இதுவரைப் பயன்பாட்டில் இருந்து வந்த மொழித் தரவுகளை எண்ணிம வடிவில் மாற்றி உடனே தேடி அடையும் வண்ணம் சேமித்து வைத்து வழங்க வேண்டிய நெருக்கடியான நிலையை… அதையும் குறுகிய காலத்தில் தங்கள் மொழி மக்களுக்கு வழங்க வேண்டியக் கட்டாயத்தில் உள்ளனர்.  முன்னேற்றத்தை நோக்கி மாறிக்கொண்டே வரும் தொழில் நுட்பக்கருவிகளைக்   கையாளும் தொழில் வல்லுனர்கள்  தமிழுக்குக் கிடைத்திருப்பதும், அவர்கள் இப்பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு  தமிழ் வளர்ச்சிக்குப்  பணி செய்வதும் பாராட்டப்பட வேண்டிய செயல்கள்.  கடந்த 20 ஆண்டுகளில் தமிழ் மொழியைக் கணிம உலகின் எண்ணிம வடிவங்களில் முன்னெடுத்துச் செல்ல முயலும் நிறுவனங்களும், அரசு சாரா அமைப்புகளின் ஆக்கப்பூர்வமான செயல்களும், தனிமனிதர்களின் தன்னார்வ முயற்சிகளும்  அளவிலடங்காது.  அத்தகையப் பணியில்  தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்  பேராசிரியர் செல்வக்குமார் அவர்கள்.

    தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து படித்து,  இப்பொழுது கனடா நாட்டின் வாட்டர்லூ பல்கலைக்கழகத்தின் பொறியியல் பேராசிரியராகப் பணிபுரியும்  செல்வக்குமார்  மின் மற்றும் கணினி இயல் துறையில் வல்லுநர்.  குறைகடத்திகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.  அத்துடன் நிறுத்திவிடாமல் தமிழ் விக்கிப்பீடியாவில் இதுவரை 800க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியும், இருபதாயிரம் தொகுப்புளும் செய்திருக்கிறார். தமிழகராதியான  தமிழ் விக்சனரியிலும் பல்லாயிரக்கணக்கான சொற்கள் சேர பல வழிகளிலும் உதவி உள்ளார். தமிழ் விக்கிப்பீடியாவில் அதிகம் பங்களித்த முதல் ஐவர் வரிசையிலும் இடம் பிடித்து இருக்கிறார். தமிழில் கலைச்சொற்கள் ஆக்குவதிலும் அறிவியல் பயன்முக அறிவியல் படைப்புகள் செய்வதிலும் ஆர்வம் மிகக் கொண்டவர் இவர்.

     

    selvakumar3“தமிழ் விக்கிப்பீடியா என்பது உலகளாவிய தமிழர்கள் சேர்ந்து அவரவர்களுக்கு கிடைக்கும் நேரத்தைப் பொறுத்து தமிழில் எல்லா வகையான செய்திகளையும் கருத்துகளையும் மிகவும் சுருக்கமாகவோ, விரிவாகவோ எழுதி வளர்க்கக்கூடிய ஓர் அருமையான தொழில்நுட்பத்திட்டம், அறிவுத்தொகுப்பாக்கம். விக்கி என்பது முதலில் ஒரு தொழில்நுட்பம் என்பதனையும் கருத்தில் கொள்ள வேண்டும். கூட்டாகப் பலரும் ஒருங்கிணைந்து கூட்டாக்கம் செய்யச் சிறந்த ஒரு நுட்பம். “

    ….

    “அனைவரும் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தினாலும், பலர் தாங்களும் பங்கேற்று தரவுகள் வழங்கலாம் என்பதை உணர்வதில்லை.  உணர்ந்தவர்களும் அவ்வாறு பங்களிப்பதால் தங்களுக்கு என்ன பயன் என்று எண்ணுகிறார்கள்.  குழுவாகப் பணிபுரிவதும், ஒருவருக்கொருவர் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு உறவாடுவதும், புதிய தொழில் நுட்பத்தைத் தெரிந்து கொள்வதும், மேலும் பல அறிந்துகொள்வதும் பலனாகக் கிடைக்கிறதே, அது சிறந்த பயனல்லவா?” என்று கேள்வி எழுப்புகிறார் செல்வக்குமார்.

    தமிழ்க் கணிமை வரலாற்றில் திசுக்கி (TSCII) உருவாக்கத்தில் பங்கு கொண்டதுடன், தொடர்ந்து ஒருங்குறி நிறுவனத்தில் உறுப்பினராக இருந்து கணித்தமிழுக்கு அரிய பணிகள் ஆற்றிவருகின்றார். பல புகழ்பெற்ற பேராசிரியர்களும் தமிழ் ஆர்வலர்களும் பங்கு கொள்ளும் “தமிழ்மன்றம்” என்னும் கூகுள் குழுமம் ஒன்றை நடத்தி வருகின்றார். மின்னூலாக்கம் வகையிலும் முன்னோடியாக, மதுரைத்திட்டத்திற்கும் முன்னரே நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தை முதன்முதலாக மின்வடிவில் வெளியிடும் பணியில் அக்குழுவில் ஒருவராகப் பங்களித்துள்ளார். ஃபேஸ்புக் சமூக வலைதளத்தை தமிழில் வெளியிடும் வகையிலும் பெரும்பங்கு அளித்துள்ளார்.

    மலேசியா வாழ் தமிழர்,  திருத்தமிழ் ஊழியன் சுப.நற்குணன் அவர்கள் “தமிழ்க்கணிமைத் துறையில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவர்களில்  ஒருவர் மதிப்புமிகு பேராசிரியர் செ.இரா.செல்வக்குமார். தமிழ் விக்கிப்பீடியாவைச் செழிக்கச் செய்த – செழுமை செய்துகொண்டிருக்கும் முன்னோடிகளில் இவருக்கு என்றுமே சிறப்பிடம் உண்டு. தமிழ்க்கூறு நல்லுலகம் காலத்திற்கும் நன்றியோடு நினைத்துப்பார்க்க வேண்டிய அளவுக்கு மிகப்பெரும் பங்களிப்பைத் தமிழுக்கு வழங்கியிருக்கும் கொடையாளர் இவர் எனில் மிகையன்று,” என்று இவரது தமிழ்க்கணிமைத் துறை பங்களிப்பைப் பாராட்டுகிறார்.

    தன்னார்வப் பணியாக தமிழ்க்கணிமைத் துறையில் பங்களிப்பைச்  செய்து வரும் இவருடைய முயற்சிக்காக பேராசிரியர் செ.இரா.செல்வக்குமார் அவர்களை இவ்வாரத்தின் வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமை குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

     

     

     

     

    தொடர்புத் தகவல்:
    C.R. Selva (Selvakumar)
    Faculty of Engineering, E&CE Department
    University of Waterloo
    200 University Avenue West
    Waterloo, Ontario, Canada N2L 3G1

    Email:- selvakumar@uwaterloo.ca
    Phone:- (519) 888-4567 ext.3978
    Linkedin :- http://ca.linkedin.com/pub/c-r-selvakumar/1b/a54/15
    Google + :- https://plus.google.com/111751091024415944844/
    தமிழ் விக்கிப்பீடியாவில் செல்வா: http://ta.wikipedia.org/s/1lo

    வலைப்பக்கங்கள்:
    https://ece.uwaterloo.ca/~selvakum/
    https://ece.uwaterloo.ca/~selvakum/biop.html
    https://uwaterloo.ca/electrical-computer-engineering/people-profiles/chettypalayam-selva-selvakumar

    வலைபதிவுகள்:
    தமிழ் விக்கிப்பீடியா குறித்த வலைப்பதிவு: http://tamilwikipedia.blogspot.com/
    தமிழ்வெளி: http://tamilveli.blogspot.com/

     

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

     
    Share
  • நான் அறிந்த சிலம்பு – 136

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 03: புறஞ்சேரி இறுத்த காதை

    இரவில் வழி செல்லுதல் நன்றுஎன்று கோவலன் கவுந்தியடிகளிடம் கூறுதல்

    முன்னர்க்கூறிய கொற்றவையணிந்த
    வேட்டுவக்கோலம் நீங்கி
    வரிக்கூத்துகளும் முடிந்தபின்,                        kovalan and others
    கோவலன் அறத்தின்வழி நிற்கின்ற
    கவுந்தியடிகளின் திருவடிகள் வணங்கி,

    “அடிகளே!
    மென்மையான கண்ணகி
    கடுமையான சூரியனின் வெப்பக் கதிர்களைப்
    பொறுத்துக் கொண்டு
    பகல்பொழுதில் நடந்து வர இயலாதவள்.

    பரல்கற்களையுடைய இக்காட்டு வழியில்
    அவளுடைய சீறடிகள் படிந்து நடப்பதும் இயலாது.
    அவளுடைய கால்களிலும் கொப்புளம் ஏற்பட்டுள்ளது.

    இப்பாண்டிய நாடுதன்னில்
    எதிர்ப்பட்டதையெல்லாம் தாக்கும் கரடியும்
    கொடும் புற்றுகளைத் தோண்டுவதில்லை;
    ஒளிபொருந்திய கோடுகளையுடைய புலிகளும்
    மான் இனத்தோடு பகை கொள்வதில்லை.

    பாம்பும் சூர் எனும் தெய்வமும்
    இரைதேடும் முதலையும் இடியும்
    தம்மைச் சார்ந்தவர்க்கு
    எந்தத் துன்பமும் செய்வதில்லை.

    இவ்வளவு சிறப்புகளும் உடைய
    செங்கோல் பாண்டியர் ஆட்சியதன் புகழ்
    எல்லாத் திசைகளிலும் பரவிநிற்பது
    மிகவும் பெருமை வாய்ந்ததன்றோ?

    எனவே
    கண்ணகியால் பொறுத்துக்கொள்ளமுடியாத
    துன்பங்கள் நிறைந்த
    இப்பகல் பொழுதை விட்டுவிட்டு,
    பல உயிர்களையும் இனிதாய்க் காக்கின்ற
    நிலவதன் ஒளியில் இரவுப்பொழுதில்
    இந்நெடிய வழியில் செல்வதில்
    துன்பம் ஒன்றும் இருக்காது”
    எனக் கோவலன் கூற
    கவுந்தியடிகளும் அதற்கு உடன்பட்டார்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 1 – 13
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram7.html

    படத்துக்கு நன்றி:
    http://www.tamilvu.org/courses/degree/p202/p2023/html/p2023l21.htm

    Share
  • காற்று வாங்கப் போனேன் (43)

    கே.ரவி

    ‘கடவுள் உண்டா, இருந்தால் காட்டு’ என்று வெறிகொண்டு அலைந்த நரேந்திரனையும் நான் பார்த்ததில்லை. அவனுக்குத் தொடுகுறி மூலமாக அநுபூதி தந்து, அவனை விவேகானந்தன் ஆக்கிய காளி கோயில் பூசாரியையும் நான் பார்த்ததில்லை. ஆனால், பராசக்தியைப் பார்ப்பதொன்றே தன் வாழ்வின் லட்சியம் என்று சொல்லி, மற்ற எல்லாவற்றையும் அலட்சியமாகப் பார்த்த ஒருவனை, ஏறக்குறைய நரேந்திரன் போலக் காட்சி தந்த ஒரு நண்பனை, நான் கண்டு வியந்தேன். அவனும் டாக்டர் நித்யானந்தத்தின் சீடனாக வந்தடைந்தான். ‘உனக்கு என்ன வேண்டும்?’ என்று டாக்டர் கேட்ட போதெல்லாம், “பராசக்தியைப் பார்க்க வேண்டும்” என்பதைத் தவிர வேறெந்த பதிலும் சொல்ல மறுத்த அவனுடைய வீராப்பில் ஒரு லட்சிய வெறி இருந்தது. பல மாதங்கள் ஆகியும், வேறேதாவது கேளப்பா என்று அவனிடம் டாக்டர் சொல்லியும் மறுத்துக் கொக்குக்கு ஒன்றே மதி என்பது போல் பராசக்தி தரிசன வேட்கை தவிர வேறெதுவும் கேட்காமல், அதிகம் பேசாமல், டாக்டரையே தினமும் பார்த்து வந்தான்.

    ஒருநாள், மந்தைவெளி தெருவில் நாங்கள் வசித்த போது, வேர்க்க, விறுவிறுக்க என் வீட்டுக்கு ஓடி வந்தானாம். ஷோபனா மட்டுமே வீட்டில் இருந்தாள். அப்போது அவன் சொன்னது, நடந்தது எல்லாவற்றையும் தான் எழுதிய ‘கேடலிஸ்ட்’ (Catalyst) என்ற ஆங்கிலப் புத்தகத்தில் ஷோபனா எழுதியுள்ளாள். அந்த நண்பன், அவன்தான் இன்றைய திராவிட மாயை சுப்பு, அவனும் என் காதுபடப் பலமுறை இந்த நிகழ்ச்சியைச் சொல்லியிருக்கிறான். அந்த நிகழ்ச்சியை இங்கே விவரிக்கிறேன்:

    asமிகுந்த பரப்போடு காணப்பட்ட சுப்பு, “ஷோபனா, அந்த ஆளைப் பற்றி எச்சரிக்கவே இங்கே வந்தேன்” என்றானாம். “பராசக்தியைக் காண வேண்டும்” என்று அவன் விடாமல் செய்த நச்சரிப்புத் தாங்காமல், அதற்கு முந்தின நாள் பகல் வேளையில், டாக்டர் அவனைத் திருவொற்றியூர் கடற்கரையில் இருந்த (இப்போது இல்லை!) ஒரு பழைய, பாதி இடிந்த, மிகச்சிறிய கோயிலுக்கு அழைத்துச் சென்றாராம். அங்கு ஒரு பராசக்தி சிலை மட்டுமே இருந்ததாம். அழுக்கான கந்தல் ஆடை அணிந்த ஒருவன் அங்கே இருந்தானாம். அவன் குடித்து விட்டு உளறிக் கொண்டிருந்தானாம். அவன் தன்னை டாக்டரின் சீடன் என்று வேறு சொல்லிக் கொண்டானாம். டாக்டருக்கும் அவனை நன்றாகத் தெரிந்திருந்தது. “அம்மாவை ஒழுங்கா பாத்துக்க மாட்டே?” என்று டாக்டர் அவனைக் கண்டித்துவிட்டுக் கொஞ்சம் எண்ணை கொண்டுவரச் சொன்னாராம். சிலைக்கு எண்ணையூற்றித் தேய்த்து விட்டுத் திரும்பி சுப்புவைப் பார்த்தாராம். அவன் குனிந்து, கண்ணை மூடிக் கொண்டிருந்தானாம். அந்தக் குடிகாரன் கெட்ட, கெட்ட வார்த்தைகளில் ஏதேதோ உளறிக் கொண்டிருந்தானாம். நடுநடுவே பராசக்தியை வேறு திட்டிக் கொண்டிருந்தானாம். சுப்புவுக்கு அங்கே இருக்கவே பிடிக்கவில்லை. அப்போது டாக்டர் சுப்புவிடம், “ம், நிமுந்து பாரு. கண்ணத்தொற!” என்று அதட்டினாராம். சுப்பு நிமிரவும் இல்லை, கண்ணைத் திறக்கவும் இல்லை. மீண்டும் டாக்டர் அதே சொல்ல, சுப்புவும் அப்படியே குனிந்தபடிக் கண்மூடியபடியே இருந்தானாம். குடிகாரன், உளறலின் உச்சக் கட்டத்தில் கூவிக் கொண்டிருந்தான்: “அவளப் பாக்கறது அவ்வளவு லேசுப்பட்ட காரியமா? பாத்துடுவியா? (கெட்ட வார்த்தைகள் …..) அவ அதுக்கெல்லாம் மசிய மாட்டா…..”

    அச்சம் என்பதையே அதுவரை அறிந்திராத சுப்புவின் மனத்தில் அச்சம் சூழ்ந்து கொண்டது. பீதி என்று கூடச் சொல்லலாம். தான் அமர்ந்திருந்த தரை அப்படியே பிளந்து, நழுவுவதைப் போல் அவன் உணர்ந்தான். இதுவரை தான் அறிந்திராத இன்னொரு பரிமாணத்துக்குள் யாரோ தன்னை இழுத்துச் செல்வது போல் …… “சரி, சரி போய் வெளியே சற்றுக் காற்று வாங்க நடந்து விட்டு வந்து பார்” என்று டாக்டர் சொன்னதும் தப்பித்தேன், பிழைத்தேன் என்று அங்கிருந்து புறப்பட்டு ஓடிச் சென்று பேருந்தில் ஏறி வீட்டுக்குப் போய்விட்டான் சுப்பு.

    மறுநாள் என் வீட்டுக்கு வந்து ஷோபனாவிடம் நடந்ததைச் சொல்லி டாக்டர் பற்றி அவளை எச்சரித்து விட்டுப் போய் விட்டான். பிறகு, சில நாட்கள் கழித்து எப்படியோ மீண்டும் டாக்டரின் இணைபிரியாத சீடனாக அவனே ஐக்கியமான கதையும், மேலும் சில ஆண்டுகள் கழித்து மறுபடியும் டாக்டரின் வட்டத்தில் இருந்து பிரிந்துவிட்ட கதையும் இங்கே, இந்தச் சூழலில் விவரிக்கத் தேவையில்லை.

    யாரை அல்லது எதைப் பார்க்க வேண்டும் என்பதே ஒரே லட்சியமாக சுப்பு கொண்டிருந்தானோ, அவளை, அதை அவனால் பார்க்க முடியவில்லை.

    பராசக்தி என்பது கோடானு கோடி அண்டங்களை உள்ளடக்கி இன்னும், இன்னும் விரிந்து கொண்டே இருக்கும் ஒட்டு மொத்த பிரபஞ்ச சக்தி. அதன் வீரியத்தை எப்படிக் கணக்கிட முடியும்? கோடானு கோடி சூரியக் கோளங்களையும் ஒளி மங்கச் செய்யும் ஜ்வாலை அது. அதை எப்படிப் புறக்கண்ணால் பார்க்க முடியும்? ஶ்ரீ கிருஷ்ணன் காட்டிய விஸ்வரூப தரிசனத்தை அர்ஜுனனால் முழுதாகப் பார்க்க முடிந்திருக்குமா? இந்தப் புவிமிசை நின்று கொண்டே பூமிப் பந்தின் முழுத் தோற்றத்தை ஒருவனால் நேரில் காண முடியுமா? பூமிப்பந்தில் இருந்து மேலெழும்பி வெகுதூரம் பறந்து சென்றால், பூமியின் முழுத்தோற்றத்தைப் பார்க்க முடியும். ஆனால் முழுமையாகப் பிரபஞ்சத்தையே காண வேண்டுமென்றால், பிரபஞ்சத்தை விட்டு வெளியே போக வேறு இடம் ஏது? ‘கண்ணத் தொறந்து நிமுந்து பாருப்பா’ என்ற டாக்டர் சொன்ன போது சுப்பு நிமிர்ந்து, கண்ணைத் திறந்திருந்தால் என்ன பார்த்திருப்பான்? யாருக்குத் தெரியும்?

    தர்க்க ரீதியாக மெய்யியல் பாடத்தில் படித்து நான் குழம்பிக் கொண்டிருந்த சில உண்மைகளை அனுபவ ரீதியாக விளங்கிக் கொள்ள இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் எனக்கு உதவின. விட்ஜன்ஸ்டைன் என்ற ஆஸ்டிரிய நாட்டு தத்துவ ஆய்வாளர் பற்றி நான் முன்பே குறிப்பிட்டேன் இல்லையா? அவருடைய கருத்துப் பள்ளி ‘வியன்னா வட்டம்’ (the vienna circle) என்றே பிற்பாடு பெயர் பெற்றது. மோரிட்ஜ் ஷ்லிக், ருடால்ஃப் கார்னாப் போன்ற தத்துவப் பேராசிரியர்களின் குழுவால் வளர்க்கப் பட்ட வியன்னா வட்டத்தின் பாதிப்பில் “தர்க்க உடன்பாட்டியல்” (Logical Positivism) என்ற இன்னொரு கருத்துப் பள்ளி இருபதாம் நூற்றாண்டின் மையப் பகுதியில் வளர்ந்தது. அந்தப் பள்ளியைச் சார்ந்த கில்பர்ட் ரைல், ஏ.ஜே.அயர் போன்ற தர்க்க நிபுணர்கள் ஒரு கருத்தை முன்மொழிந்தனர். பராசக்தியைப் பார்க்க வேண்டும் என்ற சுப்புவின் ஆசையோடு தொடர்புடைய அந்தக் கருத்தோட்டத்தைப் பொருத்தம் கருதி நான் இங்கே விவரிக்க வேண்டியுள்ளது. முடிந்தவரை எளிமையாகச் சொல்ல முயற்சி செய்கிறேன். சற்று என்னோடு ஒரு தர்க்க ரீதியான பயணம் மேற்கொள்ள உங்கள் மனத்தைத் தயார் செய்து கொள்ளுங்கள்.

    கில்பர்ட் ரைல் என்ற பேராசிரியர் “மனம் என்ற கருத்தீடு” (The Concept of Mind) என்ற தம்முடைய நூலில் “கேட்டகரிas1 மிஸ்டேக்” (Category Mistake) என்ற ஒரு கருத்தீடு பற்றிக் குறிப்பிடுகிறார். ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தைக் காண வரும் ஒரு நபர், அங்குள்ள வகுப்பறைகள் கொண்ட கட்டிடங்கள், நூலகம், விளையாட்டு மைதானம் எல்லாவற்றையும் பார்த்துவிட்டு, “அது சரி, பல்கலைக் கழகம் எங்கே?” என்று கேட்டாராம். இதைத்தான் ‘கேட்டகிரி மிஸ்டேக்’ என்று ரைல் சொல்கிறார். வகுப்பறைகள், நூலகம், சோதனைக் கூடம் போலவே பல்கலைக் கழகம் என ஒன்று தனியாகக் காட்சிதர வேண்டும் என்று அந்த நபர் தப்பிதமாக நினைத்துக் கொண்டார். அதைத்தான் ரைல் ‘கேட்டகிரி மிஸ்டேக்’ என்று குறிப்பிடுகிறார். தமிழில் அந்தக் கருத்தை, “வகுப்புத் தப்பிதம்” அல்லது “முறைமாற்றுத் தப்பிதம்” என்று சொல்லலாமா? அந்தத் தப்பில் ஓர் கள்ளம் கபடமற்ற அறியாமை கலந்திருப்பதால், அதை இதம் செய்யவே தப்பிதம் என்ற சொல் பயன்படுகிறது.

    கால்பந்தாட்டத்தில் சில விதமான ஆட்டங்கள் “ஃபவுல்” (foul) எனப்படும். அதாவது, தப்பாட்டம் எனப்படும். ஆனால் கால்பந்தாட்டமே ஃபவுலா இல்லையா, தப்பாட்டமா இல்லையா என்ற கேள்வி கேட்கலாமா? அப்படிக் கேட்பதே “வகுப்புத் தப்பிதம்”. சரி, இன்னும் எளிமையாக, வாழ்க்கையிலிருந்து ஓர் உதாரணம் தருகிறேன்.

    வானம் இருண்டு காணப்பட்ட ஒரு பகல் வேளையில், அன்று புயல் வரப்போகிறது என்று தன் பாட்டி சொன்னதைக் கேட்ட ஒரு நாலைந்து வயதுப் பெண் குழந்தை, மழைச் சாரலையும் பொருட்படுத்தாமல், வீதியைப் பார்த்துக் கொண்டே நீண்ட நேரம் வெளியே அமர்ந்து கொண்டிருந்தாளாம். அதைப் பார்த்துவிட்டு, அவளுடைய அம்மம்மா, பாட்டியை அந்தக் குழந்தை அப்படித்தான் அழைப்பாள், ‘உள்ளே வா’ என்று சத்தம் போட்டாளாம். குழந்தையோ, எப்படியும் புயலைப் பார்த்துவிட்டுத்தான் உள்ளே போக வேண்டும் என்று நினைத்திருந்தாளாம். “புயல் வந்து போய் விட்டது” என்று கேட்டதும் அவளுக்கு ஏமாற்றம் ஆகிவிட்டதாம். அந்தச் சின்னக் குழந்தை ‘புயல்’ என்பது முயல் போல ஒரு சிறிய மிருகம் என்று நினைத்து அதைப் பார்க்கக் காத்திருந்ததாம். அந்தக் குழந்தை வேறு யாருமில்லை, ஐந்தாறு வயதில் ஷோபனாதான். அவள் இந்தக் கதையைப் பலமுறை சொல்லக் கேட்டுள்ளேன். என்ன ஒரு கள்ளம் கபடமற்ற தவறு பார்த்தீர்களா? முயல் போலப் புயல் வரும் என்பது ஒரு வகுப்புத் தப்பிதம்தானே!

    இந்த உலகத்தில் ஒரு ரூபாய் நோட்டைப் பார்த்து இது நிஜமா என்று கேட்டால், அந்த நோட்டு செல்லுபடியாகும் நோட்டா, இல்லை கள்ள நோட்டா என்று பொருள் படும். அதே போல், ஒரு பூனை வடிவைப் பார்த்து இது நிஜமான பூனையா என்று கேட்டால், அது உயிருள்ள பூனையா, இல்லை பூனை பொம்மையா என்று அர்த்தம். கண்ணுக்கு நீர்த்தடாகம் போல் தெரியும் ஒன்றை நிஜமா என்று கேட்டால், அது கானல் நீரா இல்லை குளமா என்று புரிந்து கொள்ளலாம். ஆனால், இந்த உலகமே நிஜமா என்ற கேள்வியை எப்படிப் புரிந்து கொள்ள முடியும்? நிஜமான உலகம் எது என்பதும், அதன் பொய்த்தோற்றம் எது என்பதும், ஆகிய இரண்டும் தெரிந்திருந்தால்தான் அந்தக் கேள்விக்கு அர்த்தம் புரியும். இதுதான் “வகுப்புத் தப்பிதம்” என்பது.

    ஏலகிரி மலையைக் காட்டிலும் நீலகிரி மலை உயர்ந்தது என்று சொல்லலாம். சரி, நீலகிரியைக் காட்டிலும் அடக்கம் உயர்ந்ததா என்ற கேள்விக்கு அர்த்தம் உண்டா? அது வகுப்புத் தப்பிதம் இல்லையா? அடக்கத்துக்கு உருவமே கிடையாதே, அதன் உயரத்தை எப்படி அளந்தறிவது?

    இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சுருக்கம், சுருக்கமாக 1330 பாக்கள் எழுதி வைத்த தாடிக்காரக் கிழவருக்கு என்ன தெரியும்? அவர் ரைலைப் படித்திருக்க வாய்ப்பில்லையே. அதனால்தான் தப்பிதமாகச் சொல்லி வைத்தார்:

    நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்

    மலையினும் மாணப் பெரிது

    அடக்கம் உடையவரின் தோற்றம் திருவள்ளுவரின் மனக்கண்ணுக்குத் தெரிந்தது பற்றியும், அது மலையைக் காட்டிலும் உயரமாக அவருக்குத் தோற்றம் தந்தது பற்றியும் நாம் கில்பர்ட் ரயிலிடம் விவாதிக்கத் தேவையில்லை.

    இதையாவது அடக்கமுடையவனின் தோற்றம் என்று கொள்ளலாம். இன்னொன்று சொல்கிறாரே:

    காலத்தினால் செய்த உதவி சிறிதெனினும்

    ஞாலத்தின் மாணப் பெரிது

    அதாவது, உதவி என்பது அகில உலகத்தையும் விட மிகப் பெரிது என்று சொல்கிறாரே! உதவிக்கு உருவம் ஏது? அப்பா, இந்தக் கவிஞர்களின் பார்வையே தனி! அவர்களை வைத்துக் கொண்டு அறிவு சார்ந்த விஷயங்களை ஆராய முடியாது. இதை நன்கறிந்த ப்லேட்டோ (Plato) என்ற க்ரேக்க தத்துவ ஞானி, தான் கனவு கண்ட இலட்சியக் குடியரசில் இருந்து கவிஞர்களை நாடு கடத்திவிட வேண்டும் என்று எழுதி விட்டான்.

    பராசக்தி என்பது பிரபஞ்சத்தின் மூல சக்தி; அதன் ஒட்டு மொத்த சக்தியும் அதுவே. எப்படி வித்தே விருட்சத்தின் மூலமோ, வித்துக்குள் விருட்சம் அடக்கமோ அது போல. இந்த பிரபஞ்சத்தின் காரண மூலமான சக்தியே இந்த பிரபஞ்சத்தின் ஒட்டு மொத்தமான சக்தியாகவும் இருக்கிறது என்பதைப் பகுத்தறிவு ரீதியாக விளக்கிச் சொல்வதில் சிக்கல்தான் ஏற்படும். ஆனால், அதை அனுபவமாக்கப் பராசக்தியே குருநாதன் மூலம் தயாரான போது, அச்சத்தால் அந்த வாய்ப்பை ஒருவன் இழக்க நேரிட்டதைத்தான் மேலே சொன்னேன்.

    பிறகு ஷோபனாவிடம் டாக்டர் சொன்னாராம்: “பராசக்தி தரிசனம் எல்லாருக்கும் கிடைக்காது. சுப்புவுக்கு அந்தத் தரிசனத்தைத் தரச்சொல்லி எல்லாரும் பரிந்துரைத்தார்கள். அதனால்தான் அந்த வாய்ப்பை அவனுக்கு ஏற்படுத்திக் கொடுத்தேன். அவன் அதைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.”

    அந்த ‘எல்லாரும்’ யார், யார்? மஹரிஷிகளா, தெய்வங்களா? முப்பத்து முக்கோடிப் தேவர்களா? யாருக்குத் தெரியும்?

    1990-ஆம் ஆண்டு, ஒருநாள், நண்பர்களும் நானும் டாக்டரைச் சூழ்ந்து கொண்டு அமர்ந்திருந்தோம். திடீரென்று டாக்டர் என் மடியில் தலைசாய்த்துப் படுத்துக் கொண்டு, ” பாடுப்பா” என்றார். எப்படிப் பாட முடியும் என்பதையே ஒரு பாட்டாகப் பாடினேன்:

    வான்மதியைத் தூங்க வைக்கச் சின்னமலர் பாடுவதா
    சூரியனைத் தூங்க வைக்கத் தீபமெழுந் தாடுவதா
    நானிசைக்கும் பாட்டினிலே நீயுறங்கப் போவதில்லை
    என்னுயிரைக் கண்மணியில் வைத்திருக்கும் மன்னவனே

    தேன்பொழியத் தேன்பொழிய வண்டுறங்கிப் போவதுண்டா
    தென்றலுக்குத் தோள்கொடுத்து மாமலை துயில்வதுண்டா
    எ ன்மடியில் நீயுறங்க விண்ணுமண்ணும் சேர்ந்துறங்கும்
    மண்டலங்கள் நம்மருகில் செண்டுகளைப் போலிறங்கும்
    என்னுயிரைக் கண்மணியில் வைத்திருக்கும் மன்னவனே

    வானமழை பொழிந்தவுடன் சின்னவிதை கண்விழிக்கும்
    சின்னவிதை கண்விழித்தால் ஆலமரம் நிழல்விரிக்கும்
    ஆலமரத் தின்நிழலில் ஆவினங்கள் படுத்திருக்கும்
    ஆவினங்கள் கண்வளர நீலக்குயில் பண்ணிசைக்கு ம்
    என்னுயிரைக் கண்மணியில் வைத்திருக்கும் மன்னவனே

    புயல் வருகிறதா என்று காத்திருந்து பார்ப்போமே!

    (தொடரும்)

    Share
  • முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 22

    மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா

    வசனம், வடிவமைப்பு : வையவன்

    ஓவியர் : தமிழ்

    Mukkonakkilikal - 85Mukkonakkilikal - 86Mukkonakkilikal - 87Mukkonakkilikal - 88

    தொடரும்…

    Share
  • மையேந்தும் விழியாட மலரேந்தும் குழலாட …

    — காவிரிமைந்தன்.

    Capture

    பரிமாறும் நேரத்தில் பசியாறினேன்…

    மையேந்தும் விழியாட மலரேந்தும் குழலாட …

    “பூஜைக்கு வந்த மலர்” திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலிது! பி.பி.ஸ்ரீநிவாஸ்- பி.சுசீலா குரல்கள் இழைந்து தரும் விருந்து!  இதயமலர்கள் இரண்டு இணைந்து திரையில் தோன்ற இசையின் கோலம் புல்லாங்குழலில் புறப்பட்டு வருகிறது.

    ஆண்மையும் பெண்மையும் சந்திக்கும் அந்தப்புரமென்றும், தனிமையில் இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமாகும் சொந்தப்புரமென்றும், மல்லிகை மலரணை பூத்திரி, ராத்திரி என்கிற வார்த்தைகள் சரளமாய் வந்துபோகுமென்றும், பருவம் சுமந்துவந்த கனவுகளெல்லாம் நனவாய் மாறும் இரவென்றும் பல்வேறு வடிவங்கள் தாங்கிநிற்கும் முதலிரவு காட்சிதான்!

    அன்பின் அரவணைப்பு, ஆசைகளின் மொழிபெயர்ப்பு, பெண்மையின் மௌனகீதம்… கண்களில் காந்தம்… இன்னுமென்ன வேண்டும் இதைப் பற்றி பாடல் தீட்ட…  அழகியல்.. . அகவியல் இரண்டையும் கலந்திங்கே அமுதமாய் பொழிகிறது கவிஞர் வாலியின் தேன்மழை!

    ‘பரிமாறும் நேரத்தில் பசியாறினேன்’ எந்த விருந்திலும் பரிமாறுபவர் பசியாருவதில்லை!  அதுவும் பரிமாறும் நேரத்தில்!  ஆனால் களவியலில் மட்டும்தான் இந்தக் கதை ரகசிய ஓலையில் எழுதி வைக்கப்பட்டுள்ளது.  நான்  தந்து நீ பெறவும்,  நீ தந்து நான் பெறவும் பசியாறுதல் நடக்கிறது.  இதைப்பற்றி எழுதப்பட்ட பல்லாயிரம் பாடல்களிலும் இல்லாத வார்த்தைப் பிரயோகம்…  கவிஞர் வாலியை பாராட்ட வார்த்தைகளைத் தேட வைக்கிறது!  ஒற்றை வரியில் சொன்னால் வாலியால் வரையப்பட்ட பூஜைக்கு வந்த மலரிலிருந்து சொட்டும் தேன்!   திருமதி P சுசீலா அவர்கள் P B ஸ்ரீனிவாஸுடன் பாடும் பாடல்.

    http://youtu.be/sldOFMMUQlY
    காணொளி:  http://youtu.be/sldOFMMUQlY

    ……………………………………………………………………………
    படம்: பூஜைக்கு வந்த மலர் (1965)
    பாடல்: வாலி
    இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
    குரல்: P சுசீலா,  P B ஸ்ரீனிவாஸ்
    நடிப்பு: ஜெமினி, சாவித்திரி
    இயக்கம்: முக்தா S ஸ்ரீனிவாசன்
    ……………………………………………………………………………

    மையேந்தும் விழியாட
    மலரேந்தும் குழலாட
    கையேந்தும் வளையாட
    நான் ஆடுவேன்…

    குழல் தந்த இசையாக
    இசை தந்த குயிலாக
    குயில் தந்த குரலாக
    நான் பாடுவேன்…

    (கண் மையேந்தும் விழியாட)

    உறவென்னும் விளக்காக
    உயிர் என்னும் சுடராக
    ஒளிவீசும் உனக்காக
    நான் வாழுவேன்…

    விரல் கொஞ்சும் யாழாக
    யாழ் கொஞ்சும் இசையாக
    இசை கொஞ்சும் மனமாக
    நான் மாறுவேன்…

    (கை விரல் கொஞ்சும் யாழாக)

    இளங்காதல் வயதாலே தனியாகினேன்..
    அந்த இளவேனில் நிலவாலே கனியாகினேன்….

    இமை மூடி தூங்காமல் போராடினேன்…
    உந்தன் இதழோடு இதழ் வைத்து சீராகினேன்…

    (கண் மையேந்தும் விழியாட)

    கொடிபோன்ற இடையாட களைப்பாகினேன்…
    உன் மடிமீது தலை சாய்த்து இளைப்பாறினேன்…

    அழகென்ற விருந்தொன்று பரிமாறினேன்..
    அதை பரிமாறும் நேரத்தில் பசியாறினேன்…

    (கண் மையேந்தும் விழியாட)

    vaaliv&r (1)pbs ps

    Share
  • 74 பைரவர் ஹோமத்துடன் சொர்ண பைரவருக்கு சொர்ண புஷ்பலட்சார்ச்சனை

    தன்வந்திரி பீடத்தில் இன்று 21.09.2014 ஞாயிறு கிழமை காலை10மணியளவில் சொர்ண ஆகஷ்ண பைரவருக்கு சொர்ண காசு, சொர்ண புஷ்பம், கொண்டு சொர்ண லட்சார்ச்சனை நடைப்பெற்றது.

    ad

    மேலும் சொர்ண பைரவர் ஹோமம், அஷ்டபைரவர் ஹோமம், 64 பைரவர் ஹோமத்துடன், மகா கால பைரவர் ஹோமம் நடைப்பெற்றது. இதில் 20 மேற்பட்ட புஷ்பங்களை கொண்டு, 20 மேற்பட்ட சிவாச்சார்யார்கள் கலந்து கொண்டு இந்த யாகத்தை நடத்தினர்

    ad1

    இதில் பலவகையான இனிப்பு பட்சனங்கள், கார பட்சனங்கள், பழங்கள்,செவ்வரளிப்பூ கொண்டு வழிபாடு செய்யப்பட்டது. நிறைவில் 74 கலச தீர்த்தங்களை ஆகஷ்ண பைரவருக்கு அஷ்டமங்கல கால பைரவருக்கு மகா அபிஷேக நடைப்பெற்று மேலும் வடமாலை, தயிர்சாதம் பால், தேன், உளுந்து சாதம், வெல்லம்கலந்த பாயசம் ஆகியவைகளை கொண்டு சொர்ண பைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு கூஷ்மாண்ட தீபம் ஏற்றப்பட்டு வழிபட்டனர். மேலும் இதை தொடர்ந்து பிரதோஷ நாளை முன்னிட்டு 468 சித்தர்களுக்கும் சிவனுக்கும் மரகத ஈஸ்வரிக்கும் மாலை 5 மணிக்கு சிறப்பு வழிபாடு நடைப்பெற்றது.அன்னதானுமும் பிரசாதமும் வழங்கப்பட்டது. இதற்கான உதவிகளை சென்னையை சேர்ந்த டாக்டர் ரங்கராஜன் டாக்டர் சதிஷ் டாக்டர் விஷ்வஜா ஆந்திர மாநிலம் புத்தூர் தொழில் அதிபர் திரு உமாசேகர் குடும்பத்தினர் என டாக்டர் முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார்

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    crazy

    புருஷனும் ப்ரக்ரிதியும் பின்னிப் பிணைந்த
    தரிசன தாமோ தரனுக்(கு ) -ஒருஷணத்தில்
    INஏங்கும் ராதைக்கு OUTடோடும் கீதைக்கு
    IN-YANGசை னீஸ்வரன் இன்று”….கிரேசி மோகன் ….

    சைனா +ஈஸ்வரன் =சைனீஸ்வரன்
    ying-yang tao philosophy….

    “அன்னத்(து) அயனும் ,அணியும் புலித்தோலர்
    அண்ணா மலைஅரனும் ,அன்பர்கள் -கன்னத்தில்
    முத்தமிட்டு காக்கும் முகுந்தனும்,சேர்ந்ததில்
    தத்தகுரு இந்தியாங்கில் தாவ்….
    தத்தகுரு IN -YANGகில் TAO”….கிரேசி மோகன் ….

    The dove and the tiger. The delicate balance of opposites. Yin-yang Krishna.

    Share
  • சூரிய மண்டலத்திலே முதன்முதல் வாயுக் கோள்களான பூத வியாழனும், சனியும் தோன்றி இருக்க வேண்டும் என்று கணனிப் போலி வடிவமைப்புகள் [Simulations] மூலம் அறிய முடிகிறது.

     

     

    Jupiter & Saturn formed first

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

     

    http://www.youtube.com/watch?v=BT49AiYFV98&feature=player_detailpage

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=htOtW0pD92Y

    https://www.youtube.com/watch?list=PLhyU9zpvRPLE2c_7qYBwHaWAGhFPZt7El&v=z8aBZZnv6y8&feature=player_detailpage

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Z1tIS-S-Mqw

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=P2W7HUNZ33Y&list=PLhyU9zpvRPLE2c_7qYBwHaWAGhFPZt7El

    https://www.youtube.com/watch?v=HMjSjcR4Kv4&list=PLhyU9zpvRPLE2c_7qYBwHaWAGhFPZt7El&feature=player_detailpage

    http://video.nationalgeographic.com/video/101-videos/solar-system-sci?source=relatedvideo

    https://www.youtube.com/playlist?list=PLhyU9zpvRPLE2c_7qYBwHaWAGhFPZt7El

    **************

    சூரிய குடும்பத்தில் முதன்முதல்
    வியாழனும், சனியும்
    தோன்றியதின் மர்மம் என்ன ?
    பூமிக்குக் காவற் படைகளாய்க்
    கோள்கள் சுற்றுவதின்  காரணம் என்ன ?
    நீள்வட்ட வீதியில் கோள்கள்
    மீள்வதின் நியதி என்ன ?
    அண்டக் கோள்கள் அனைத்தும்
    சீரான கோணத்தில் சாய்ந்து
    ஒரே திசை நோக்கி
    ஓடிச் சுழல்வ தென்ன ?
    ஒரே மட்டத்தில் அண்டக் கோள்கள்
    சூரிய இடுப்பைச்
    சுற்றுவதின் மர்மம் என்ன ?
    யுரேனஸ் அச்சு
    பேரளவில் சரிந்த தென்ன ?
    பரிதி மண்டலத்தில்
    வக்கிரச் சுற்றுச் சுழற்சியில்
    சுக்கிரன் மட்டும்
    திக்கு மாறுவ தென்ன ?
    நிலவால் அலை பொங்கும் !
    பருவங்கள் மாறும்
    பூமியின் சாய்வு அச்சால் !
    வாயுக் குடை பிடித்துச் சூழ்வெளியில்
    உயிரினம் தழைப்ப தென்ன ?

    +++++++++++++++

     

    jay

     

    முன்பு ஏற்படுத்திய கணனிப் போலி வடிவமைப்புகளில் செவ்வாய்க் கோள் உண்டானது அறியப்பட வில்லை.   ஐந்து முறைகள் போலி வடிவமைப்பு  திருப்பிச் செய்தால் ஒருமுறை செவ்வாய்க் கோள் இருப்பைக் காட்டுகிறது.  இவை பூமியை ஒத்த கோள்களின் இயக்கப்பாடு [Dynamics of the Terrestrial Planets] என்னும் வினைப்பாட்டில் காணப்படுவது.

    ரிபெக்கா ஃபிஷ்சர் [சிகாகோ பல்கலைக் கழக பூதளவியல் விஞ்ஞான ஆய்வுப் பட்டப் படிப்பாளி]

    யுலிஸிஸ் சூரிய விண்ணுளவியின் கருவிகள் இன்னும் சீராகப் பணியாற்றிச் சூரியப் புயல், அகிலக் கதிர்கள், சக்தி வாய்ந்த துகள்கள், சூரிய காந்த அரங்கம் பற்றிய தகவலைத் தொடர்ந்து அனுப்பி வருகின்றன. . . . ஏவிய நாளிலிருந்து (அக்டோபர் 1990) எந்தக் கருவியும் இதுவரைப் பழுதாக வில்லை !

    ரிச்சர்டு மார்ஸ்டன், யுலிஸிஸ் சூரிய விண்ணுளவித் திட்ட மேற்பார்வை விஞ்ஞானி (European Space Agency)  [ஏப்ரல் 15, 2008]

     

    Solar system simulation

     

    சூரிய மண்டலச் சுற்றுக் கோள்கள் முதலில் எப்படித் தோன்றின ?

    4.6 பில்லியன் ஆண்டுகட்கு முன்பு சூரிய குடும்ப அகக்கோள்களான புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் போன்றவை, புறக்கோள்களான வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகியவை எப்படி, எப்போது தோன்றின என்பதற்குச் குறித்தடங்கள் ஏதேனும் உள்ளனவா ?  இல்லை !  பூமியை நெருங்கிச் செல்லும் முரண்கோள்கள், [Asteroids] வால்மீன்கள், விண் தெறிப்பாறைகள் போன்றவை மூலம் ஓரளவு விளக்கங்கள் கிடைக்கின்றன.   கோள்களின் திணிவுப் பிண்டம் பாறையா அல்லது வாயுவா, அண்டக் கோள்களின் வடிவப் பரிமாணம், தனித்துவச் சுற்றுப் பாதைகள் ஆகியவை இயற்கையாக நேர்ந்த விளைவுகளின் கிளை விளைவுகளா, அல்லது இயற்கையாகப் பிரபஞ்சத்தில்  நிகழ்ந்த அபூர்வ விளைவுகளா ?   தெரியாது !   வானியல் விஞ்ஞானிகள் இத்தகைய வினாக்களுக்கு மின்கணனிப் போலி வடிவுகள் அமைத்துப் [Computer Simulations]  சரியான பதில் தேடிய வண்ணம் இருக்கிறார்.

     

    Basic Data of Jupiter & Saturn

     

    புதிய கணனிப் போலி வடிவமைப்புகள் காட்டும் அண்டக்கோள் தோற்றக் கருத்துக்கள்

    புதிய கணிப்பு வடிவமைப்புகள் செய்து பார்த்ததில் உதாரணமாக அகக்கோள் செவ்வாய் ஒருசில நிபந்தனைகளுக்கு உட்பட்டுத் தோன்றிய ஓர் அபூர்வக் கோள் என்று காட்டியுள்ளன.   குறைந்த பட்ச வடிவமைப்பு யூகிப்புகள் [Parameters]  முதலில் செம்மையாக இருத்தல் அவசியம்.  மேலும் துவக்க நிலை யூகிப்புகள் பொருந்தி அமைய வேண்டும்.   இம்முறைகள் மூலம் ஒரு காலத்தில் நீர்வளம் இருந்த செவ்வாய்க் கோள், நமது நீர்க்கோள் பூமி எவற்றிலிருந்து தோன்றி யவை என்று அறிய முடியும்.  செந்நிறக் கோள் செவ்வாயில் இப்போது நடமாடி உளவும் மூன்று தள  உளவிகள் [Mars Landing Rovers : Opportunity, Spirit & Curiosity]  அனுப்பிய தகவல்களில் நீரோட்டம் ஒரு காலத்தில் இருந்து ஹேமடைட் [Hematite] என்னும் அயர்னாக்சைடு  செவ்வாய்க் கோளத்தில்  உள்ள தென்று தெரிய வருகிறது.

     

     

    சிகாகோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பூதளவியல் விஞ்ஞான ஆய்வுப் பட்டப் படிப்பாளி, ரிபெக்கா ஃபிஷ்சர் போலி வடிவமைப்புகள் மூலம், பூமியும், பூமியைப் போன்ற மற்ற சூரிய மண்டல அண்டக் கோள்களும் எப்படித் தோன்றின என்று ஆராய்ந்து வருகிறார்.  சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகட்கு முன்பு வாயுத் தூசிகள் பிணைந்து, பல்லாண்டுகள் ஈர்ப்பு விசையால் முகில் திரண் டு பூமியும், அதன் நிலவும் உருவாயின.  அப்போது எந்த மாதிரி சூழ்வெளியும், நிபந்தனைகளும் சுற்றுப் பாதையில் நீடித்தன என்பதை அறிவது ஒரு பெரும் சவாலான செயல்.  அதே சமயத்தில் பூத வாயுக்கோள்களான வியாழனும், சனியும் தோன்றி எவ்விதம் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் போன்ற அகக்கோள்கள் பாதிக்கப் பட்டன என்று அறிவதற்கே கணனி போலி வடிவமைப்புகள் கணிக்கப் பட்டன.  ரிபெக்கா ஃபிஷ்சர் பூத வாயுக்கோள் வியாழனும், சனிக்கோளும் அகக்கோள்கள் உருவாவ தற்கு முன்பே தோன்றியதாக நம்பினார்.  காரணம் இளஞ் சூரியன் முதலில் உருவாகி எஞ்சிய பேரளவு வாயு முகிலில் ஈர்ப்பு விசையில் திரண்டு வியாழனும், சனியும் தோன்றி இருக்க வேண்டும்.  சூரியனுக்கும், வாயுக் கோள் வியாழனுக்கும் இடையில்தான் அகக்கோள்கள் உருவாக முடியும் என்று போலி வடிவமைப்புகள் மூலம் செய்து காட்ட முடிந்தது.  மேலும் பூதக்கோள் வியாழனின் சுற்றுப் பாதையும், சனிக்கோளின் சுற்றுப் பாதையும் அக்கோள்களுக்குத் தேவையான ஆவிமுகில் பிண்டங்களை [Volatiles] ஒதுக்கித் தர ஏதுவாக்கின.  பூமிக்குத் தேவையான நீர்வளம் வால்மீன்கள் மூலமாய் வரவும், நைட்டிரஜன் வாயு, கார்பன் போன்ற  மூலகங்களை வாயுக்கோள் வியாழனிடமிருந்துதான் பெற்றிருக்க முடியும் என்பது ரிபெக்காவின் கருத்து.

     

     

    சூரிய மண்டலம் எப்போது தோன்றியது ?

    வானியல் விஞ்ஞானிகளும், பூதளவாதிகளும் (Astronomers & Geologists) பூமியின் வயதைக் கணித்து அதிலிருந்து பரிதி மண்டலத்தின் தோற்ற வயதை அறியப் பல்வேறு முறைகளைக் கையாள்கிறார்.  நாமறிந்த பூமிப் பாறைகளின் கதிரியக்கத் தேய்வு வீதங்களைப் “பாறைக் கதிரளப்புக் காலக் கணிப்பு” மூலம் (Radiometric Dating of Rocks) கணக்கிட்டுச் சூரிய குடும்பம் சுமார் 4.6 பில்லியன் ஆண்டுக்கு முன்பு தோன்றியிருக்கலாம் என்று கருதுகிறார்கள்.  பூமியின் பூர்வீகப் பாறை வயது கதிரியக்கத் தேய்வு வீதக் கணிப்பில் 3.9 பில்லியன் ஆண்டுகள் என்பது தெரிய வருகிறது !  பூதளத் தட்டு நகர்ச்சிகள் (Plate Tectonics) தூண்டி பூமியில் எழும் பூகம்ப எரிமலை நிகழ்ச்சிகளால் பூர்வீகப் பாறைகள் நிலைமாறி அவற்றைக் காண முடியாமல் சிதைத்து விடுகின்றன !

    பூமியின் பூர்வீகப் பாறைகளைத் தவிர விண்வெளிக் கற்கள், எரிகற்கள், நிலவிலிருந்து அல்லது செவ்வாய்க் கோளிலிருந்து வீழும் விண்கற்கள் மிகத் துல்லியமாகப் பரிதி மண்டல வயதுக் காலத்தை நிர்ணயம் செய்ய உதவுகின்றன.  அந்த மாதிரிகளின் கதிரியக்கத் தேய்வு வீதத்தைக் கணித்ததில் அவை 4.6 பில்லியன் ஆண்டு வயதைக் கொண்டவை என்று அறியப்பட்டு, பரிதி மண்டலம் அந்த வயதை ஒட்டி உண்டாகி இருக்க வேண்டும் என்று யூகிக்கப்படுகிறது.

     

    சூரிய மண்டலம் எப்படி உண்டானது ?

    விஞ்ஞான வரலாற்றில் எத்தனையோ கருத்துக்கள் மாறிப் போனாலும், பரிதி மண்டலம் எப்படி உண்டானது என்னும் கருத்து கடந்த 250 ஆண்டு காலமாக மாறவில்லை.  1755 ஆம் ஆண்டில் ஜெர்மன் வேதாந்தி இம்மானுவெல் கென்ட் (Immanuel Kant) (1724-1804) முதன்முதலில் தனது நிபுளா கோட்பாடைக் (Nebular Hypothesis) கூறினார்:  அதன்படி பேரளவு வாயு முகில் கொண்ட ஆதிச்சூரிய நிபுளா, பரிதி மண்டலத்தின் சூரியனாகவும், மற்ற அண்டக் கோள்களாகவும் உண்டாக மூலாதாரப் பொருளானது !  1796 இல் பிரெஞ்ச வானியல் நிபுணர் பியர் சைமன் லாப்பிலாஸ் (Pierre Simon Laplace) (1749-1827) அதே மாதிரிக் கோட்பாடை எடுத்துக் கூறினார்.  ஆனால் ஆழ்ந்த விண்வெளியை நோக்கி அவரால் அதற்குச் சான்றுகளை எடுத்துக் காட்ட முடியவில்லை !

    இம்மானுவெல் கென்ட் விளக்கிய நிபுளா கோட்பாடில் இருப்பது இதுதான் : பேரளவுக் கொள்ளளவு வாயு நிறையும் தூசி துணுக்குகளும் திணிவு ஈர்ப்பு (Mass Gravity) விசையால் சேர்ந்து சுற்ற ஆரம்பித்தன.  திணிவு நிறை பெருகப் பெருக ஈர்ப்பு சக்தி மிகையாகி வாயுத் திணிவை இறுக்கிச் சுருக்கி (Gravitational Contraction) வாயுக் கோள்களாகவும், திடக்கோள்களாகவும் உருவாயின.

    இப்போது வானியல் விஞ்ஞானிகள் அவற்றை விபரமாகச் சொல்ல முடிகிறது.  அதாவது முதலில் சூரிய மண்டலத்தின் வாயு முகில் மூலக்கூறு (Molecular Gas Cloud) முறிந்த போது அதன் விரிவு 100 AU (Astronomical Unit) [1 AU = Average distance between Sun & Earth (93 மில்லியன் மைல் /150 மில்லியன் கி.மீ.)] ஆகவும், திணிவு நிறை பரிதியைப் போல் 2 அல்லது 3 மடங்கு இருந்ததாகவும் யூகிக்கிறார்கள்.  அத்தகைய வாயு முகில் ஈர்ப்பு முறிவைத் (Cloud’s Gravitational Collapse) தூண்டி விட்டிருப்பது அருகில் இருந்த சூப்பர்நோவாவின் (Supernova) மின்னல் வெடிப்பில் நேர்ந்த அழுத்த அலையாக இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.  வாயு முகில் குவிந்து விழுந்த பிறகு பல முறைகளில் திணிவு சேர்ப்பு விரைவானது.  முகில் திணிவின் உஷ்ணம் அதிகரித்து அது சுழலத் தொடங்கியது.  வாயுப் பிண்டம் தங்கி அது வட்டத் தட்டு வடிவாக மட்டமானது.  மிகையான ஈர்ப்பு சேமிப்புச் சக்தி (Gravitational Potential Energy) வெப்பமாக மாறி வாயு முகில் அடர்த்தி (Density) அதிகமானது.  அதுவே கோள்களின் உட்கரு உலோக மாகப் பின்னால் திரட்சி யானது.

     

     

    அண்டக் கோள்கள் உண்டான தெப்படி ?

    வட்டவியல் திணிவு நெம்பு நிலைப்புப்படி (Conservation of Angular Momentum) வடிவம் சிறுகச் சிறுகச் சுழலும் மட்டமான தட்டின் வேகம் மிகையானது.  மென்மேலும் விழுந்து சேரும் வாயுவும், தூசி துணுக்குகளும் சேர்ந்து கொண்டு முன்னோடிக் கோள் தட்டு (Proto-Planetary Disk) மையம் தடித்து ஓரம் மெலிவாகித் தமிழகத்தின் “ஆப்பம்” போல் (Pancake) உருவாகியது.  நடுவில் மகா ஈர்ப்புச்சக்தி வாய்ந்த உட்கரு எழுவதும் அப்பால் விளிம்பு நோக்கிச் செல்லச்செல்ல வலுகுன்றிய கோள்கள் உருவாவதும் எப்படி என்று விளக்கிச் சொல்லலாம் ?  பேரளவு வாயுப் பிண்டம் செழித்த நிபுளாவைச் சுற்றிலும் அதன் பூத ஈர்ப்பு மண்டலம் காந்த சக்தியால் சூடாக உள்ளது !  அந்த ஈர்ப்பு வாயுத் துணுக்குகளுக்கு சுழற்சியை உண்டாக்கித் தன் பூத ஈர்ப்புக் குழியில் சுற்றத் தூண்டுகிறது.  அவ்விதம் சிறுகச் சிறுக்கச் சேர்ந்துதான் சுழலும் கிருஷ்ணச் சக்கிரம் போல் அசுர வடிவாகி வட அமெரிக்க வேனிற்தள ஹர்ரிக்கேன் (Tropical Hurricanes) சூறாவளிகள் உருவாகின்றன !

    பேரளவு இயக்கம் மையத்தில் உண்டாகி முன்னோடிச் சேய் விண்மீன் (Infant Proto-Star) விரைவாக வாயுத் திணிவைத் திரட்டி சூரியனாகியது.  அதன் பிறகு 50 மில்லியன் ஆண்டுகளாக பரிதி போதுமான வாயு நிறையைச் சுருட்டிப் பூரண எரிநிலை அடைந்து பிணைவு சக்தி தூண்டப் பட்டு சுயவொளி விண்மீனாக மாறியது.  தட்டின் விளிம்புகளில் மேலும் வாயுத் துணுக்குகள் சேமிப்பாகி அங்குமிங்கும் கண்ட இடங்களில் சிறிதும் பெரிதுமாக வாயுவிலும் திடப் பிண்டத்திலும் கோள்கள் உண்டாயின.

    பரிதி வெப்ப அணுக்கரு சக்தியால் தூண்டப் பட்டதும் அது அசுரப் புயலை எழுப்பித் தூசிகளையும் துணுக்குகளையும் தட்டிலிருந்து வெளியேற்றியது.  அப்போது பூத வாயுக் கோள்கள் மென்மேலும் பெருக்க இயலாது போயின.  தட்டில் தங்கிய மீத வாயுக்கள் பேரளவு வெப்பத்தாலும், ஈர்ப்பு விசையாலும் மூலகமாற்றம் நிகழ்ந்து குளிர்ந்து திரண்டு சிலிகேட்களும், உலோகங்களும் (Silicates & Metals) உண்டாயின.  துணுக்குகளும், தூசிப் பனிகளும் மற்ற கோள்களின் முன்னோடிகளைக் கட்டி மென்மேலும் பெருக்க வைத்துப் பேரளவு அண்டங்களாக்கின.

    பரிதி மண்டலத்தின் புறக் கோள்கள் பனி அண்டங்களாய்க் கட்டுமான மாகின.  வாயுக் கோள்களின் உட்கரு அடர்த்தியாகி வாயு முகில்கள் அவற்றை இறுகிப் போர்த்திக் கொண்டன.  புறக்கோள்களைச் சுற்றிலும் பல துணைக்கோள்கள் உண்டாகிச் சுற்றத் தொடங்கின.  வாயு முகில்கள் வீசி எறியப்பட்டு வால்மீன்

    ​ ​

    களாக “ஓர்ட் முகில்” மந்தையில் (Oort Cloud of Comets) சிக்கின.  ஓர் அசுரப் பிண்டம் பூமியை மோதி நிலவு உண்டானது.  செவ்வாய்க் கோளுக்குச் சந்திரன்கள் ஏற்பட்டுச் சுற்ற ஆரம்பித்தன.  இவை அனைத்தும் இம்மானுவெல் கான்ட் 250 ஆண்டுகளுக்கு முன்பு கூறிய நிபுளாக் கோட்பாடைத்தான் முற்றிலும் மெய்ப்பிக்கின்றன.

    பரிதி மண்டலப் படைப்பில் காணும் சில புதிர்கள் !

    அண்டக் கோள்கள் ஏன் பரிதியை ஒரே தளமட்டத்தில் நீள்வட்ட வீதிகளில் சுற்றுகின்றன ?  அவற்றின் சீரொழுக்க இயக்க முறைக்கு என்ன காரணம் உள்ளது ?  அகக்கோள்களும், புறக்கோள்களும் சூரியனை ஏன் எதிர்க் கடிகார முறையில் சுற்றி வருகின்றன ? சூரியனையும் மற்ற கோள்கள் போலின்றித் தன்னச்சில் சுக்கிரன் மட்டும் ஏன் நேர்க் கடிகார வக்கிர திசையில் சுற்றி வருகிறது ? பூமியின் நிலவு தன்னச்சில் சுழாது ஏன் ஒரே முகத்தைக் காட்டிக் கொண்டு புது மாதிரிச் சுற்றி வருகிறது ? தன்னச்சில் கோள்களும் எதிர்க் கடிகாரச் சுழற்சியில் சுழல்வது ஓர் விந்தைதான்.  கோள்களின் துணைக் கோள்களும் எதிர்க் கடிகாரச் சுழற்சியில் சுற்றுவதும் ஒரு விந்தைதான்.  இந்த விந்தைகள் அனைத்தும் நிபுளாக் கோட்பாடு கூறும் “சுழற்தட்டு அமைப்பு” விதியைப் பெரும்பாலும் நிரூபிக்கின்றன.

    யுலிஸிஸ் சூரிய விண்ணுளவியின் பணி தொடர்கிறது !

    ஏப்ரல் 15, 2008 ஆம் தேதி அண்டவெளித் தேடல் விஞ்ஞானிகள் 1990 ஆண்டு முதல் பதினேழு ஆண்டுகளாய்ப் பரிதியைச் சுற்றி ஆராய்ந்து வரும் “யுலிஸிஸ் சூரிய விண்ணுளவியைப்” (Ulysses Solar Probe) பூமி ஆட்சி அரங்கிலிருந்து தளர்த்தி ஓய்வாக இருக்கவிட்டு 2013 ஆண்டில் மீண்டும் ஆய்வு செய்ய மாற்றியுள்ளார் !  அப்போதுதான் மறுபடியும் பரிதியின் அடுத்த உச்சநிலைக் கதிராட்டம் தொடங்கும் !  அதுவரை விண்ணுளவியின் ராக்கெட் உந்தல் எரிசக்தியை வீணாக்காமல் சேமித்து வைத்து சில இயக்கங்களையும் முடக்கி உளவி ஓய்வெடுத்துக் கொள்ள ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது !  பரிதியிலிருந்து 125 மில்லியன் மைல் தூரத்தில் பரிதியை மையமாகக் கொண்டு சுற்றிவரும் நீள் வட்ட வீதியில் (Helio Centric Orbit) உறங்கி வரும் கருவிகளைச் சூரிய கனல் வெப்பமே எழுப்பிவிடும் தகுதி பெற்றது.  இப்போது ஓய்வெடுக்கும் உளவி பரிதியை விட்டு அப்பால் நகன்று 250 மில்லியன் தொலைவை 2010 ஆண்டில் அடைந்து விடும்.

     

    [தொடரும்]

    தகவல்கள்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Astronomy Magazine.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – How did the Solar System form ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world [1998]
    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
    10 National Geographic Picture of Our Universe By Roy Gallant: (1986)
    11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
    15 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40206291&format=html [சூரியன்]
    16 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40804101&format=html (What will Happen to the Sun ?)
    17 Solar System Formation By Jeff Scott (October 16, 2005)
    18. Spaceflight Now -Breaking News. Controllers Working to Keep “Ulysses Sun Orbiter Alive” By :Stephen Clark (www.spaceflightnow.com/news/n0804/15ulysses) [April 18, 2008]

    19. http://www.astrobio.net/topic/solar-system/  &   http://www.astrobio.net/tag/planet-formation/  [Astrobiology Magazine]

    20.  http://www.astrobio.net/topic/deep-space/new-planets/evidence-forming-planet-discovered-335-light-years-earth/ [September 5, 2014]

    21.  http://www.astrobio.net/news-exclusive/solar-system-simulation-reveals-planetary-mystery/  [September 8, 2014]

    22.  http://techn4all.com/simulation-reveals-the-mysteries-of-the-solar-system-planets/  [September 10, 2014]

    ******************

    S. Jayabarathan (jayabarathans@gmail.com) [September 20, 2014]

     

    Attachments area
    Preview YouTube video The Solar System HD

    The Solar System HD

    Preview YouTube video National Geographic Live! – Solar System Exploration: 50 Years and Counting

    National Geographic Live! – Solar System Exploration: 50 Years and Counting

    Preview YouTube video Solar System Video

    Solar System Video

    Preview YouTube video Space Documentary – On Jupiter

    Space Documentary – On Jupiter

    Preview YouTube video Planet Saturn – Short Documentary – HD

    Planet Saturn – Short Documentary – HD

    Preview YouTube video Mysterious Planet Discovered Lurking At The Edge Of Our Solar System – Has Nemesis Been Found?

    Mysterious Planet Discovered Lurking At The Edge Of Our Solar System – Has Nemesis Been Found?
    Share
  • மலரும் நினைவுகள்

    கிரேசி மோகன்

    1984 என்று நினைக்கிறேன்….கிரேசி குழுவினருக்கு ‘பாம்பே ஷண்முகானந்தா’ சபையில் நாடகம் போடும் வாய்ப்பு கிட்டியது….அன்நாளில் பாம்பேயில் நாடகம் போடுவதென்றால் மதராஸ் குழுக்களுக்கு அமரிக்காவில் போட அழைப்பு கிடைத்த அளவுக்கு பிரசித்தம்….அவர்கள் மேஜர் சுந்தர்ராஜன் போன்ற மேஜர் குழுக்களைத்தான் கூப்பிடுவார்கள்….மைனர் குழு எங்களுக்கு கிடைத்தது தெய்வாதீனமே….அந்த சமயம் பார்த்து எங்கள் லேடி-ஆர்டிஸ்ட் திருமணம் செய்து கொண்டு விலக, புதிதாக வேறு ஒரு நாயகி….சுந்தரத் தெலுங்கி….பார்க்க சுந்தரம்(அழகு)….பேச்சு அவந்தரம்….அவளுக்கு வீடியோ பிரமாதம்….ஆடியோ அபத்தம்….

    நாடகத்திற்கு 2 நாட்கள் முன்பு அவளுக்கு தமிழ் வசனம் ரிகர்சல்….கடைசி வரை மாதுவை தாய் பாஷையில் லேது என்றுதான் கூவிக் கொண்டிருந்தாள்….3000 பேர் அமரும் ஷண்முகானந்தாவில் ஒரு சிறுவன் மட்டும் அமர்ந்து எங்கள் ரிகர்ஸலை ரசித்துக் கொண்டிருந்தான்….குறிப்பாக அவன் குஷியாகி சிரித்தது , அந்த நாயகியின் ‘மாது-லேது’ மாற்றத்திற்குத்தான்….அந்தச் சிறுவனின் தாய் பாஷை தெலுங்காம்…அதனால்தானோ ‘லேது மாது’ பன்னை(PUN) வெகுவாக ரசித்தான்….சாயங்காலம் தினமும் சூறாவளி கச்சேரி செய்து கொண்டிருந்த அந்தச் சிறுவனின் வேண்டுகோளுக்கு இணங்கி, பிரத்யேகமாக(கிருஷ்ணருக்கு கீதை சொல்ல ஒரே ஒரு அர்ச்சுனன் கிடைத்தது போல) மேடை அலங்காரம் செய்து எங்கள் ‘மேரேஜ் மேட் இன் சலூன்’’ நாடகத்தைப் போட்டு அந்தக் குழந்தையை மகிழ்ச்சியில் ஆழ்த்தினோம்….”குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே’….ஒருவேளை அந்தக் குழந்தையைக் கொண்டாடி, அதன் ஆசீர்வாதத்தைப் பெற்றதாலோ என்னவோ இன்று எங்கள் குழு தெய்வத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது (சாக்லேட் கிருஷ்ணா)….அந்த தெய்வக் குழந்தை யார் என்பதை ‘கேசவ்’ சித்திரத்தில் காட்டியுள்ளார்….பார்க்க….கிரேசி மோகன்….

    crazy

    ‘MANDOLIN கேட்க மகாவிஷ்ணு வுக்காசை
    ஆண்டவன் கட்டளை ஆதலால் -மாண்டலின்(அமரராகி)
    ஆனாரே, வாசிக்கப் போனாரே வைகுண்டம்,
    ‘ஈநாடுக்(கு) இங்கே இழப்பு’….கிரேசி மோகன்….

    ‘மலரும் மாண்டலின் நினைவுகள்’…..

    ‘வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார் மாண்டலின் ஸ்ரீனிவாசன்’….வைகுந்தத்தில் வாசித்து அவர் ஆத்மாவும் சாந்தி அடையும், அந்தப் பரமாத்மாவும் சாந்தி அடைவார்….

    பின்குறிப்பு -எங்கள் ‘ஜுராஸிக் பேபி நாடகத்தில், பிறந்த குழந்தை ‘நர்ஸரி ரைம்’ பாடும்….அப்போது குழந்தையின் தந்தை மாது- என்ன ! அச்சப்பன் குழந்தை பாடறது….!

    அச்சப்பன் -அவனுக்கு ‘மாண்டலின்’ கத்துக் கொடுங்கோ….யார் கண்டா பிற்காலத்துல ‘ஸ்ரீனிவாசன்’ மாதிரி ‘பிராடிஜியா’ பிரபலம் ஆகலாம்….(பலத்த கைத்தட்டலோடு நாடகம் நிறைவு பெறும்)…..
    —————————————————————————————————————

    ———————————————————————————————————————–

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    crazy1

    பூபாரம் போக்கவந்த கோபாலன் கொண்டையில்,
    பூ,பார கோபியர் பெண்கள்பார்: -வ்யாபார,
    ஷேமமும், யோகமும், ஷேத்ரஞ்ஞன் கண்ணனே,
    நாமமும் ரூபமும் நாம்’’….கிரேசி மோகன்….

    பூ பார கோபியர்-மலர் சூடிய கோபியர்….

    Share
  • மாண்டலின் ஶ்ரீநிவாஸ்

    கே. ரவி

     

    மாண்டலின் ஶ்ரீநினிவாஸ் மாண்டனன் என்பதா1003782_724156124316453_5089466817522433708_n

    மன்புகழ்ப் பொன்னுடல் பூண்டனன் என்பதா

     

    வேண்டலின் வேண்டாமை வித்தாகும் முக்திக்கு

    காண்டலின் கேட்டலே கருத்துக்கு விருந்தாகும்

    மாண்டலின் என்பதோர் கருவியா அருவியா

    ஆண்டவ னேவியந்து அழைத்துவரச் சொன்னானோ

     

    மாண்டலின் ஶ்ரீநினிவாஸ் மாண்டனன் என்பதா

    மன்புகழ்ப் பொன்னுடல் பூண்டனன் என்பதா

     

    நரம்புகள் மீட்டினான் ரசிகர்க ளின்நாடி

    நரம்புகள் மீட்டினான் நாதப் பிரளயத்தின்

    வரம்புகள் உடைந்தன வானமே அதிர்ந்ததாம்

    திறம்புகல் வதற்கின்னும் தேடுவோம் சொற்களே

     

    மாண்டலின் ஶ்ரீநினிவாஸ் மாண்டனன் என்பதா

    மன்புகழ்ப் பொன்னுடல் பூண்டனன் என்பதா

     

    தூண்டிலின் முனையிலே துடிக்கும் புழுவென

    கூண்டிலே அடைபட்டுக் குமுறும் கிளியென

    தோண்டியைப் போட்டுடைத் தாண்டியென் றாடவா

    மாண்டிலன் ஶ்ரீநிவாஸ் என்றுதான் பாடவா

     

    கே.ரவி

    19-09-2014

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

     

    அருச்சுன உவாச….குந்தி மகன் கேள்வி…..
    ———————————————————————————–

    சுருதி ஒலிக்குள், பரிதி ஒளிக்குள்
    இறுதிமுதல் இல்லா இறைக்குள் -கருதி
    துதிக்கும் முனிவர்தம் தேடலுக்கு எட்டா
    ஸ்திதிக்குப் புகன்றேன் சரண்….

    பசுக்களை மேய்த்தோய் வசுதேவன் மைந்தோய்
    விசுவமாய் எங்கும் விரிந்தோய் -அசையும்
    அசையா பொருள்களுக்கு ஆதார மான
    இசையே வணக்கம் உனக்கு….

    படைத்துப் பறிமாறி பாதுகாத்(து) ஆவி
    கடைத்தேற வைத்திடும் கண்ணா -துடைத்து
    உலகேழை உண்டன்(று) உமிழ்ந்தோய் உனக்கிங்(கு)
    இலையேகாண் ஓர்சக்தி ஈடு ….

    அயனுக்கு வேதம் அறிவித்(து) அவன்தன்
    வியனுலகில் மாயை விதைத்து -பயனுற
    ஞானகர்ம பக்தியென்ற நாட்டம் அளித்தெம்மை
    வானமர வைத்திடுவோய் வாழ்த்து….

    பேருண்மை, மாயப் பெரும்பொய் பிரகிருதி
    வேரொன்றும் இல்லா விருக்ஷம்நீ, -யாரென்று
    கேட்டால் விளம்பிடுவோம் கேசவன் தானந்த,
    சேட்டை புரிகின்ற சேய்….

    crazy

    ஸ்ரீபகவான் உவாச….கிருஷ்ணன் பதில்…..
    ————————————————————————————————

    ”கலக்கம் உறாதே விலக்கொணா கர்மம்
    நிலத்தில் பிறப்பும் இறப்பும் -இலக்கணம்
    பார்க்க இதுகவிதை இல்லைகாண் பார்த்தனே
    பார்த்தால் புசிக்கும் பகை”….

    ”தீண்டும் இயற்கையின் தூண்டுதலால் வந்துபொகும்
    யாண்டும் குளிர்,வெப்பம் இன்ப,துன்பம் ! -பாண்டு
    மகனே பொறுப்பாய், மனதால் பொருப்பாய்
    புகழாம் போரில் புகு”….

    ”வியப்பென பார்த்து, வியப்பென கூறி
    வியப்பென கேட்டும் விளங்கா -வியப்பாம்
    விவரிக்க ஒண்ணா விசித்திர ஆன்மா
    எவருக்கும் எட்டா எழில்”….

    ”நாணை இழுத்திட நாணாதே நண்பனே
    ஆனை படுத்தால் அசுவமட்டம் -சேனைக்
    களம்நீங்க செல்லாத காசாவாய், வேந்தருன்
    உளம்நோக வைப்பார் உவந்து”….

    ”நூறைநீ வென்றிட ஈரே(ழு) உலகாள்வாய்
    மாரில் கணைதைத்து மாளுங்கால் -வீராநீ
    சொர்கம் புகுவாய் சுதாரித்(து) எழுந்திரு
    தர்கம் புரிதல் தவிர்”….

    ”சுகதுக்கம், பேறு, இழப்பு, பெரும்வெற்றி
    புகும்தோல்வி யாவினையும் போற்றி -நிகராக
    ஏற்றிடுவாய் வேற்றுமையை, நூற்றினைக்கொல் கூற்றனென
    தோற்றிடும்பார் பாவம் தொலைந்து”….

    ”ஈங்கிதனைக் கேட்டோய் இதன்பெயர் கேண்மக்கள்
    சாங்கியம் என்போர், இனியடுத்து -தாங்கிய
    கர்மத் தளைகளின் கட்டவிழ்க்கும் யோகத்தின்
    மர்மம் உரைப்போம் உமக்கு”….

    ”வீணாகிப் போகா விடாமுயற்சி யோகமிது
    தானாக மீறாது தன்வரம்பை -வாநாளில்
    எள்ளளவு செய்வோரை எப்பயம் சூழ்ந்தாலும்
    உள்ளிருந்து காக்கும் உரை”….

    ”விண்ணென்று நானொத்து திண்ணென்ற புத்திக்கு
    கண்ணொன்று காணுமது கட்டுறுதி -என்னென்றும்
    ஏகா கிரகமாம் இவ்வுறுதி அற்றமனம்
    சாகா வரம்பெற்ற சத்ரு”….

    ”விரையற்ற பூக்கள் விரயமாதல் போலே
    உரையற்ற சொற்கள் உதிர்ப்பர் -மறையுற்ற
    வாசகத்தில் மேம்போக்காய் மீதுலாவி கற்றோரைப்
    பேசுவார் கேலி புரிந்து’….

    ———————————————————————————

    Share
  • மறைந்த இசை மாமேதை மாண்டலின் ஸ்ரீநிவாஸ் – அஞ்சலி

    சு. ரவி

    வணக்கம்,வாழிய நலம்

    ar

    இந்த பிறவிக் கலைஞனை என் நண்பன் க்ரேஸிமோஹன் வீட்டு விழாஒன்றில் சிறுபாலகனாகக் கண்டு கேட்டு பிரமித்திருக்கிறேன். ஏழெட்டு வயது இருக்கும்.. விரல்களின் வழியே வாணியின் வீணை இசையைப் பொழிந்த அச்சிறுவனுக்கு அப்போது வரைந்த காஞ்சி மஹாபெரியவரின் கோட்டோவியத்தைப் பரிசளித்துவிட்டு நெஞ்சம் நிறைய இசையோடு வீடு திரும்பினேன்.

    பிறிதொரு நாளில் என் MBA வகுப்பில் “Relevance of Western Corporate Culture to Indian Management” என்ற தலைப்பில் உரையாற்றிய போது, அவ்வுரையின் இறுதியில் சுவாமி விவேகானந்தரை மேற்கோள்காட்டி, ” உங்கள் உடலுறுதியில் மேலைநாட்டினராகவும், ஆன்ம நிலைப்பாட்டில் இந்தியராகவும் இருங்கள்” எனச் சொல்லி, India needs to adapt the western Corporate Management Style & build it around OUR Indian Value Systems என்று நிறைவு செய்தேன்.

    “இது சாத்தியமா என சந்தேகமிருப்பின், இதோ நிரூபணம் மேலைநாட்டின் மாண்டலின் இசைக்கருவியில் ஆன்மாவாக ஒலிக்கிறது நமது கர்நாடக இசை” என முத்தாய்ப்பாக மாண்டலின் ஸ்ரீநிவாஸ் அவர்களின் “வாதாபி கணபதிம்” இசை நாடாவை ஒலிக்க வைத்தேன்.

    அரங்கம் அதிர்ந்தது.

    இன்று இளம் வயதிலேயே தன் இசைப்பயணத்தை நிறைவு செய்து மறைந்த அந்த மாபெரும் இசை மேதைக்கு என் ஓவிய அஞ்சலி!

    நாதப்ரம்மத்துடன் இரண்டறக் கலந்துவிட்ட அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்!

    சு.ரவி

    Share
  • ஆழ்ந்த இரங்கல்கள்….

    பிரபல இசைக் கலைஞர் மாண்டலின் ஸ்ரீநிவாஸ் காலமானார்!

    1003782_724156124316453_5089466817522433708_n

    பிரபல இசைக் கலைஞர் மாண்டலின் ஸ்ரீநிவாஸ் அவர்கள் சென்னையில் இன்று காலமானார். ஆந்திர மாநிலம் பாலகோலில் 1969 பிப்ரவரி 28 ஆம் தேதி பிறந்த ஸ்ரீநிவாஸ், பத்மஸ்ரீ, சங்கீத ரத்னா விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றவர்.

    45 வயதான இசைக் கலைஞர் மாண்டலின் ஸ்ரீநிவாஸ் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை 9.30 மணிக்கு இயற்கை எய்தினார்.

    Share
  • கபுசேனபூர் பேருந்து நிறுத்தத்தில் ஒரு நடுக்கம்

    மாதவன் இளங்கோ 

    லூவன் நகர உள்வட்ட சாலையில் அமைந்த கபூசேனபூர் பேருந்து நிறுத்தத்தில் நான் பிடித்திருக்கவேண்டிய பேருந்து அப்போதுதான் கிளம்பியது.

    நிறுத்தத்தை ஒட்டி இருக்கும் பத்து அடுக்குமாடிக் கட்டிடத்தில் உள்ள பல பெட்டிகளில், ஒரு சிறு பெட்டி தான் என் வீடு. டச்சு மொழி தெரியாதவர்கள், இந்த இடத்தின் பெயரை கபுசிஜ்னென்வோர் என்று உச்சரித்து இந்த ஊர் மக்களின் ஏளனச் சிரிப்பைப் பரிசாகப் பெற்றுக்கொள்வார்கள். ஆரம்பகாலத்தில் நானும் நிறைய முறை இப்படிப்பட்ட பரிசுகளை வென்றிருக்கிறேன்.

    பேருந்து நிறுத்தங்களால் சூழப்பட்ட எங்கள் குடியிருப்பின் மறுபுறம் இருக்கும் ரெடிங்கனாப் நிறுத்தத்தில் என்னுடைய அலுவலகத்திற்கு செல்லும் 7, 8, 9 எண் பேருந்துகளில் ஒன்றைப் பிடிப்பது வழக்கம். ஆனால் அன்றைக்கு இரயில் நிலையத்திற்கு வெகு அருகாமையிலேயே இருக்கும் லூவன் நகராட்சி மன்றத்துக்கு செல்லவேண்டி இருந்ததால் உள்வட்ட சாலைப் பேருந்தான 601-ஐப் பிடிக்க நினைத்தேன். வீட்டை விட்டு வெளியே வந்தவுடனேயே 601-இன் பின்புறம் தெரிந்தது. ஓடிச் சென்று ஏறுவதற்குள் கிளம்பிவிட்டது. இந்த ஊர் ஓட்டுநர்கள் வேறு கடமை தவறாத கனவான்கள் ஆயிற்றே. கதவை மூடிவிட்டு கிளம்பிவிட்டால், மீண்டும் நிறுத்தமாட்டார்கள்.

    அடுத்த பேருந்து வருவதற்கு இன்னும் பதினைந்து நிமிடங்கள் காத்திருக்கவேண்டும். உலகத்திலேயே எனக்கு பிடிக்காத விஷயம் காத்திருப்பது, குறிப்பாக இந்த பேருந்து நிலையத்திலும், இரயில் நிலையத்திலும்  காத்திருப்பது. ஏழு, எட்டு, ஒன்பதுகளும் இரயில் நிலையம் செல்லும். ஆனால் அவை நகருக்குள்ளே உள்ள சந்து பொந்துகளில் ஆடி அசைந்து சென்று இரயில் நிலையத்தை அடைவதற்குள் தலை கிறுகிறுத்து விடும்.

    வீட்டிற்கு திரும்பப் போய்விட்டு வரலாமா என்று கூடத் தோன்றியது. இன்னும் சில நிமிடங்கள் இங்கு தான் நிற்கவேண்டும். கைபேசியை எடுத்து முகநூலில் மேலும் கீழாகத் தள்ளி நிலைத்தகவல்களைப் பார்ப்பதற்கு அலுப்பாக இருந்தது.

    நிறுத்தத்தில் எனக்கெதிரே உல்லாசப் பேருந்தான ஓஸ்டண்டுரேய்க் நின்றுகொண்டிருந்தது. வழக்கமாக இதுபோன்ற பேருந்துகள் வெளிவட்ட சாலைக்கு மறுபுறமுள்ள சதுக்கத்தில் தான் நிற்கும். அன்றைக்கு மட்டும் ஏன் அங்கு நிற்கிறது என்று தெரியவில்லை. அதுவும் வெகுநேரமாக. பேருந்துக்குள் ‘உலகத்தின் பாதி’ பல நிறங்களில் அமர்ந்திருந்தது.

    நிறுத்தத்திற்கு எதிரே, உள்வட்ட சாலைக்கும் வெளிவட்ட சாலைக்கும் இடையே ஒரு பெரிய பாலமும், அதன் கீழே ஒரு பதினைந்து கார்கள் மட்டுமே நிற்கக்கூடிய தரிப்பிடமும் இருக்கும். ஓஸ்டண்டுரேய்க்கிற்குள் இருந்த சில பயணிகள் மட்டும் நின்றுகொண்டு கண்ணாடி ஜன்னலினூடே அந்தத் தரிப்பிடத்தைப் சுவாரசியமாக பார்த்துக்கொண்டிருந்தார்கள். அங்கே நிறுத்தப்பட்டிருந்த கார்களுக்கு பின்னாலிருந்து யாரோ ஒரு மனிதர் உரக்கக் கத்திக்கொண்டு இருப்பது கேட்டது. ஒரு கறுத்த  மொட்டைத் தலை இங்குமங்கும் நகர்ந்து கொண்டிருப்பது மட்டுமே எனக்குத்  தெரிந்தது. சொகுசுப் பேருந்திலிருந்து பார்ப்பவர்களுக்கு ஒருவேளை அங்கு நடக்கும் விந்தையும் அந்த மனிதரும் தெளிவாகத் தெரியக்கூடும். எனக்கு சரியாகத் தெரியவில்லை.

    அங்கே இரண்டு மனிதர்கள் சண்டைப் போட்டுக்கொண்டிருக்கிறார்களோ என்று நினைத்த வேளையில், கார் மறைவிலிருந்து வெளியே வந்து என் கண்களுக்குத் தென்பட்ட அந்த மனிதர் ஆக்ரோஷமாக கைபேசியில் யாரிடமோ பேசிக்கொண்டிருந்தார். அவரது உடலின் அத்தனை அங்கங்களும் பேசிக்கொண்டிருந்தன என்று சொல்லுமளவிற்கு அவருடைய உடல்மொழி பயமுறுத்தக்கூடிய விதத்தில் இருந்தது. அருகிலிருந்த காரை காலால் எட்டி உதைத்தார். பாலத்தின் பக்கம் ஓடிச்சென்று அதன் சுவரைக் குத்தினார். வானத்தைப் பார்த்துக் கத்தினார். இது உறுமலா, ஓலமா, கதறலா அல்லது அனைத்தும் கலந்த ஒன்றா?

    திடீரென்று திரும்பியவர் சடாரென குனிந்து சாலையை குத்துசண்டையில் குத்துவது போல் அவரது இடது கை முஷ்டியால் குத்தினார். அப்படிக் குத்தும்போதும் அவர்போட்ட சத்தம் இருக்கிறதே! நான் மட்டும் அவ்வாறு கத்தியிருந்தால், ஒன்று என் தொண்டையிலிருந்து குருதி கிளம்பியிருக்கும் அல்லது நான் சற்றுமுன் தின்ற இட்லி வாந்தி வடிவம் பெற்றிருக்கும்.

    அவர் ஒவ்வொருமுறை கத்தும் போதும், குத்தும் போதும், குதிக்கும் போதும் எனக்கெதிரே இருந்த சொகுசுப் பேருந்து பயணிகளின் சிரிப்பை பார்த்திருக்கவேண்டும். ஏதோ ஒரு தெரியாத காரணத்திற்காக நின்று கொண்டிருக்கும் அந்த பேருந்துவாசிகளுக்கு கிட்டத்தட்ட அவர் ஒரு வித்தைக்காரராகவே தெரிந்திருக்க வேண்டும்.

    சில பயணிகள் இது எவற்றையுமே கண்டுகொண்டதாய் தெரியவில்லை. வேறு சிலர் சலனமின்றிப் பார்த்துக்கொண்டிருந்தார்கள், என்னைப்போலவே.  எனக்கருகே பேருந்திற்காக காத்துக்கொண்டிருந்த ஒரு கனவான் அந்த மனிதரைப் பார்த்தார். ஒரு மெல்லிய புன்னகையுடன் என்னைத் திரும்பிப் பார்த்தார், நான் அவரைப் பார்க்கும் போது, நெற்றியைத் தேய்த்துக்கொண்டார், பிறகு மேலே பார்த்தார். ஏனோ இதையே திரும்பத் திரும்ப செய்துகொண்டிருந்தார். மேலே உப்பரிகையிலிருந்து வேறு ஒரு கூட்டம் நடப்பதனைத்தையும்  சலசலப்புடன்  பார்த்துக்கொண்டிருந்தது.

    நடுத்தெருவில் எதற்காக இந்த மனிதர்  இப்படியெல்லாம் நடந்து கொள்கிறார், என்ன நடக்கிறது என்றெல்லாம் புரிந்துகொள்ள முடியாததாலோ என்னவோ எனக்கு அவர் மீது பரிதாபமே வரவில்லை. அதே சமயம் அதில் சிரிப்பதற்கும் எதுவும் இல்லை என்றும் தோன்றியது.

    யாரிடம் இப்படி அடித்தொண்டையிலிருந்து ஓலமிட்டு திட்டியபடி பேசிக்கொண்டிருக்கிறார்? பிரஞ்சு மொழி தான். ஆனால், எனக்கு என் காதருகே வந்து, சாத்வீகமாக பிரஞ்சு மொழியில் யாராவது ஏதாவது பேசினாலே அதில் பாதிகூட விளங்காது. இருபதடி தூரத்தில் நின்றுகொன்று இந்த வேகத்திலும், கோபத்திலும், கொந்தளிப்பிலும் கத்திக்கொண்டிருந்தால் எனக்கு என்ன புரியப்போகிறது, அது பிரஞ்சு மொழியில் எழுப்பப்படும் சத்தம் என்பதைத் தவிர.

    எதிர்முனையில் இருப்பது ஆணாக இருக்குமா? பெண்ணாகவும் இருக்கலாம். ஆனால், இதுபோன்று ஒரு மனிதர் கத்திக்கொண்டிருப்பதை யார் இவ்வளவு நேரம்  பொறுமையுடன் கேட்டுக்கொண்டிருக்கக்கூடும்? இவர் மீது அதீத அன்பு கொண்டவர்களுக்கு மட்டுமே இத்தனை பொறுமை சாத்தியம்.  ஒருவேளை, எதிர்முனையில் இருப்பவனும் இதே போல் கத்திக்கொண்டிருக்கிறானோ என்னவோ? அல்லது கத்திவிட்டு போகட்டும் என்று சாமர்த்தியமாக கைபேசியை  மேஜை மீது வைத்துவிட்டு வெளியே சென்று விட்டார்களா? இப்படி இருக்குமோ? இந்த மனிதர் நிச்சயம் screaming_manநடித்துக்கொண்டிருக்கிறார். இல்லை. அதற்கும் வாய்ப்பே இல்லை. அந்த மனிதரின் கத்தலில் ஒரு உண்மை தெரிகிறது.

    அந்த ஓலம் எனக்குப் பழக்கப்பட்டதுதான். அடிபட்ட தெருநாய்கள் வலியில் இப்படி ஓலமிடுவதைப் பலமுறை பார்த்திருக்கேன். மிகவும் பரிதாபமாக இருக்கும். இந்த மனிதரும் அப்படி ஏதோவொரு பொறுக்கமுடியாத வலியை நிச்சயம் அநுபவித்துக் கொண்டிருக்கவேண்டும். தலை வலிக்கும், கால் வலிக்கும்  மருந்திருக்கிறது.ஆனால் மனவலிக்கு? அதற்கும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் ஏனோ அந்த வலி இருப்பவர்கள் மருத்துவத்தை நாடவும் ஏற்கவும் மறுக்கிறார்கள். அப்படி அவர்களே ஏற்றுக்கொண்டாலும், சுற்றி இருப்பவர்கள் அவ்வளவு எளிதாக அவர்களை ஏற்றுக்கொள்வதில்லை. இப்போது எனக்கு அந்த மனிதர் மீது பரிதாபம் பிறந்திருப்பதை உணரமுடிந்தது.

    இவருக்கென்ன காதல் தோல்வியா? மணமுறிவா? பண அழுத்தம் தந்த மன அழுத்தமா? ஒருவேளை வியாபாரத் தோல்வியா? எதிர்முனையிலிருப்பவன் வியாபாரக் கூட்டாளியாக இருப்பானோ? ஏமாற்றிவிட்டானா? அப்படி இருக்க வாய்ப்பு குறைவு. இங்கெல்லாம் ஒப்பந்தம் இல்லாமல் திருமணம் கூட செய்து கொள்ளமாட்டார்களே. மேலும் இவரைப் பார்த்தால் வியாபாரியாகவும் தெரியவில்லை.

    ஏனோ எனக்கு இது நிச்சயம் தோல்வி சார்ந்த வலியாக இருக்கமுடியாது என்று தோன்றுகிறது. துரோகம் சார்ந்த வலியாக இருக்கலாம். ஆம். அதுவாகத்தான் இருக்க வேண்டும். அந்தக் கதறல், உடல்மொழி அத்தனையிலும் துரோகத்தின் வலி வெளிப்பட்டுக்கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. அது எந்த வகை துரோகம் என்பது அவசியமில்லை. துரோகத்தில் என்ன வகை வேண்டிக்கிடக்கிறது. ஒருவேளை  எதிர்முனையில் இருப்பவர் தெரியாமல் துரோகமிழைத்துவிட்டாரோ? அதனால் தான் பொறுமையோடு இவர் கத்துவதைக் கேட்டுக்கொண்டு அழுதுகொண்டு இருக்கிறாரோ என்னவோ. ஆனால், துரோகத்தைக் கூட தெரியாமல் செய்ய முடியுமா?

    நான்கூட துரோகம் செய்திருக்கிறேன். நினைவறிந்து ஒரே முறை. அதுவும் ஒரு உற்ற நண்பருக்கு. சந்தர்ப்ப வசத்தால் செய்த துரோகம். ஆனால் அதற்கு பதிலாய் அத்தனையும் அனுபவித்தாகிவிட்டது. இதே போன்று ஒருமுறை எதிர்முனையில் நின்றுகொண்டு மன்னிப்பு கேட்டிருக்கிறேன். ஆனால் அவர் இதுபோலெல்லாம் கத்தவில்லை. நிதானமான மனிதர். இல்லை, அவரை மனிதர்கள் வகையில் சேர்க்கக்கூடாது. தெய்வம். துரோகத்துக்கு பிராயச்சித்தம் செய்யவும் வழி செய்து கொடுத்தவர். ஆனால், இங்கே இந்த முனையில் இப்படிப்பட்ட மனிதர் இருப்பதால், அங்கே அந்த முனையில் அப்படிப்பட்டவர் இருப்பதாகவெல்லாம் என்னால் அநுமானிக்க முடியவில்லை.

    ஓஸ்டண்டுரேய்க் கிளம்ப ஆயத்தமானது. பயணிகளின் முகத்தில் கேளிக்கை முடியப்போகும் சோகமும், அதேசமயம் அவரைக் கடப்பதற்குள் என்ன நடக்கும் என்கிற ஆர்வமும் தெரிந்தது. அவர்கள் எதிர்பார்த்தது போலவே, அவர்களுக்கான உச்சக்கட்ட விருந்தாக அந்த மனிதர் கைபேசியை பாலத்தின் சுவர்மீது வேகமாக வீசி எறிந்தார். எறிந்த வேகத்தில் அது சுக்கு நூறாகப் போயிருக்கும். ஐபோனோ, சாம்சங்கோ என்னவென்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் அது இனிமேல் நிச்சயம் பயன்பட வாய்ப்பேயில்லை.

    ஒரு நல்ல விஷயம். இப்படி வீசி எறிந்ததில் அவருடைய ஆத்திரத்தில் ஒரு மூன்று சதவீதம் குறைந்திருக்க வாய்ப்புள்ளது.

    எஞ்சியுள்ள ஆத்திரத்தை ஏந்திக்கொண்டு அருகே இருந்த காரில் ஏறி அமர்ந்தார். அடுத்த சில நொடிகளில் அந்தக் கார் க்ரீச்சென்ற சத்தத்தோடு திரும்பி, உள்வட்ட சாலையில் சீறிப் பாய்ந்து சென்றது.

    அதுவரை சலனமற்று இருந்த என் உள்ளமும் உடலும் அப்போது நடுங்க ஆரம்பித்தது.

     

    oOo

    Share