Blog

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

     

    crazy

    ’’கந்தனுக்கு  வேல்கொடுக்கும்,  காளிகாம்  பாசக்தி,

     வந்தனம் வந்தனம் வாராஹி, -தந்தனத்,

    தோம்ஈசர்  வாமத்து  தேவி  உமையாளே

    காமேஸ்  வரிநீயே  காப்பு’’….கிரேசி மோகன்….

    Share
  • ஆசியாவின் முதற் சாதனையாகச் செந்நிறக் கோளைச் சுற்றிவரும் இந்திய விண்ணுளவி மங்கல்யான்

     
     

    First Mars Image

    ​[India’s First Successful Mars Orbiter Mission]
    September 24, 2014​

    1.  http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=BEFMHOS2Em0

    2.  http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=6H48xhbuGW0

    3.  http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=BEFMHOS2Em0

    4.  http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=pZqPNNOvHAA

    5.  http://www.bbc.co.uk/news/world-24826253

    [Video of Launching India’s Mars Mission]

    6.  http://www.isro.org/mars/updates.aspx 

    [Mars Orbiter Status Update] 

    7.  http://isro.gov.in/pslv-c25/c25-status.aspx 

    [Pre-Launch Updates]

    [NASA’s Future Manned Missions to Mars]

    MOM orbits Mars

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

     

    செந்நிறக் கோள் சுற்றும் ஆசியப்

    பந்தயத்தில்

    இந்தியா வுக்கு முதன்மை வெற்றி  !

    முந்திச் சென்றன ரஷ்யா, நாசா !

    பிந்திச் சென்றது ஈசா !

    இந்தியச் சுற்றுளவி செவ்வாய் ஈர்ப்பில்

    வந்திறங்கி,  அடுத்தாண்டும்

    செந்நிறக் கோள் சுற்றும்

    சைனா, ஜப்பானுக்கு முன்பாக !

    சந்திரனை முற்றுகை இட்டது முன்பு

    இந்திய மூவர்ணக் கொடி !

    யந்திரத் திறமை காட்டும் நுணுக்கப்

    பந்தயம் தான் !

    விந்தை புரிந்தது இந்தியா !

    இரண்டாம் சந்திராயன்

    நிலவில் இறக்கி வைக்கும்

    தளவுளவி  எதிர்பாராது

    தாமத மானது !

    நாசாவின்  மேவன் விண்ணுளவி

    மங்கல் யானுடன்

    நேசக் கைகோர்த்துச் சுற்றி வருகிறது  !

    செவ்வாய் ஈர்ப்பு வலையில்

    சீராய் இறங்குவது

    பேரளவு சிரம மாயினும்

    கிட்டியது வெற்றி இந்தியா வுக்கு

    எட்டும் சாதனை யாய் !

     

    +++++++++++

    Mangalyan -1

     

    செவ்வாய்க் கோளைச் சுற்றும் சாதனையைச் செய்து காட்டிய  முதல் ஆசிய தேசமாக இந்தியா மேலிடம் பெற்றுள்ளது.  இச்சாதனை ஓர் ஆரம்புக் கட்ட முயற்சியாயினும், உலகிலே சுய முயற்சியில் செவ்வாய் போன்ற தூரக்கோளை முதல் முயற்சியிலே நெருங்கிச் சுற்றிய முதல் தேசமாக இந்தியா மேதமை அடைந்துள்ளது.   யாருடனும் நாங்கள் போட்டி இடவில்லை.   நாங்களே எங்களுக்கு வைத்துக் கொள்ளும் அடுத்த கட்ட  உயர்வுப் பந்தயம் என்று நினைத்துக் கொள்கிறோம்.  இந்த விண்வெளிப் பயணத்தை மிகக் குறைந்த நிதிச் செலவில் [450 கோடி ரூ; 74 மில்லியன் டாலர்]  இந்தியா செய்து காட்டியுள்ளது.

    இஸ்ரோ அதிபர் கே. இராதாகிருஷ்ணன்.

    பௌதிக விதிகள் இந்தியாவுக்கு உடன்பாடாய் ஒத்துழைக்கும் என்று நாங்கள் உறுதியாய் நம்பினோம்.  அதி சீக்கிரத்தில் செவ்வாய்க் கோளில் தவழ்ந்து செல்லும் தேசத்தின் முதலான சுய இயக்குச் சிறு தளவூர்தி [Robotic Martian Baby] ஒன்று நகர்ந்திடும் என்று நிச்சயமாய்க் கூறுவேன்.

    மயில்சாமி அண்ணாதுரை  [தலைவர்,  இந்தியச் செவ்வாய்க் கோள் திட்டப்பணி] 

     

    Mangalyaan Orbiting Mars

    மங்கல்யான் செவ்வாய்க் கோளை உளவி வருகிறது

     

    “முன்னேறி வரும் ஒரு நாடு விண்வெளி ஆராய்ச்சியைச் செய்து வருவதின் நோக்கம் என்ன என்று பலர் வினாவை எழுப்பி வருகிறார்கள்!  இந்த முயற்சியில் நாங்கள் இரண்டு மனதில்லாமல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம்.  வெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத் தேடியோ, மனிதர் இயக்கும் விண்வெளிக் கப்பல் பயணத்திற்கோ முற்படும் செல்வந்த நாடுகளுடன் போட்டியிடும் பெருங் கனவு எங்களுக்கு அறவே இல்லை !  ஆனால் சமூக மனிதப் பிரச்சனைகளைத் தீர்க்க முற்போக்கான விஞ்ஞானப் பொறியியல் நுணுக்கங் களைப் பயன்படுத்துவதில், உலக சமூகத்தின் முன்பாக நாங்கள் இரண்டாம் தரத்தில் இருக்க மாட்டோம் !  தேசீய ரீதியாக அர்த்தமுள்ள ஒரு பணியை மேற்கொள்வதாய் எண்ணி அழுத்த மான உறுதியுடன் இருக்கிறோம் !”

    டாக்டர் விக்ரம் சாராபாய். இந்திய விண்வெளி ஆய்வுப் பிதா (1919-1971).

    ஆசிய முதன்மையாகச் செந்நிறக் கோளைச் சுற்றிவரும் இந்தியாவின் முதல் விண்ணுளவி மங்கல்யான்

    2014 செப்டம்பர் 24 ஆம் தேதி இந்தியாவின் முதல் விண்சுற்றி [India’s Mars Orbiter] மங்கல்யான் செவ்வாய்க் கோள் ஈர்ப்பு மண்டலத்தில் இறங்கிச் சுற்ற ஆரம்பித்தது என்ற வரலாற்று முக்கிய விஞ்ஞான சாதனை இந்தியரையும், ஏனைய உலக நாடுகளையும் பேரதிர்ச்சியில் தள்ளிவிட்டிருக்கிறது !   இது சுமார் 500 இந்திய பொறிநுணுக்க விஞ்ஞானிகள் இராப் பகலாய் இரண்டு வருடங்கள் உழைத்துப் பெற்ற வெற்றியாகும். சென்ற நவம்பர்  5, 2013 இல் தென்னிந்திய ஏவுகணைத் தளம் ஶ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப் பட்ட PSLV  [Polar Satellite Launch Vehicle XL] பூத ஏவுகணையில் மங்கல்யான் விண்சுற்றி இணைப்பாகிச் சென்றது.   இந்திய விண்ணுளவி மங்கல்யான் பயணம் செய்த 300 நாட்களில் சுமார் 420 மில்லியன் மைல் [670 மில்லியன் கி.மீ]  தூரத்தைக் கடந்து நல்ல உடல்நலமுடன் செவ்வாய்க் கோளை நெருங்கிச் சுற்றத் தொடங்கி முதல் படத்தை இப்போது அனுப்பியுள்ளது .   2014 ஜூன் 11 ஆம் தேதி 22 நியூட்டன் உந்திகள் [Newton Thrusters] தூண்டப் பட்டு இரண்டாவது முறை பயணப் பாதைத் திருத்தம் செய்யப் பட்டது.  அடுத்து ஒருமுறை 2014 ஆகஸ்டில் இதுபோல் சிறிய ராக்கெட் உந்திகள் இயங்கிப் பயணப் பாதைச் சீராக்கப் பட்டது.

     

    Mars Mission

     

    இந்த செவ்வாய்க் கோள் பயணத் திட்டத்துக்கு நிதியொதுக்கீடு : 450 கோடி ரூபாய்.  [2014 மார்ச்சு நாணய மதிப்பு]. இந்த விண்வெளிப் பயணம் மிகக்குறைந்த நிதிச் செலவில் [450 கோடி ரூ; 74 மில்லியன் டாலர்] செய்து காட்டப் பட்டது என்று பெருமையாக இஸ்ரோ [ISRO – Indian Space Research Organization] அதிபர் கே. இராதாகிருஷ்ணன் சொல்கிறர்.

    நாசா இதே சமயத்தில் [September 2014] செவ்வாய்க் கோளுக்கு அனுப்பிய “மேவன்” [MAVEN]  எனப்படும் விண்ணுளவிக்குச் செய்த செலவு :  671 மில்லியன் டாலர்.  செவ்வாய்க் கோள் செல்ல, முன்பு ஈசா செய்த செலவு : 386 மில்லியன் டாலர்.  ஜப்பான் செய்த செலவு : 189 மில்லியன் டாலர்.   சைனா செய்த செலவு : 117 மில்லியன் டாலர்.  இவற்றையெல்லாம் ஒப்பு நோக்கினால் இந்தியா சிக்கனச் செல்வில் ஒரு பெரும் சாதனை செய்துள்ளது என்று அறிகிறோம்.

     

    jay

    1960 ஆண்டு முதல் உலக நாடுகள் இதுவரை 51 செவ்வாய்க் கோள் பயண முயற்சிகள் செய்துள்ளன.  அவற்றில் 42% [21 பயணங்கள்] முயற்சிகளே வெற்றி அடைந்துள்ளன.  ஏறக்குறைய பாதித் தோல்விகள் என்று கூறலாம்.   பூமியின் ஈர்ப்பியல் சுற்றுப் பிடியை விட்டு விலகிச் செல்லும் விண்கப்பல்கள்  சூரியச் சுற்றுப் பாதையில் சென்று செவ்வாய்க் கோள் ஈர்ப்பு வலையில் இறங்குவது மிக மிகச் சிரமமான தொலைத் தூண்டுக் கட்டுப்பாடு !   விரைவாய்ச் செல்லும் செவ்வாய்க் கோள் ஈர்ப்பு மண்டலத்தில் விண்கப்பலின் வேகத்தைக் குறைத்து இறங்குவது மிக நுணுக்கப் பணியாகும்.  சரியான நேரத்தில், சரியான  தளத்தில், சரியான வேகத்தில் விண்கப்பல் இயக்கப் படா விட்டால், அது சூரிய சுற்றுப் பாதையில் தவறிக்  காணாமல் எங்கோ போய்விடும் !

    மங்கல்யான் ஆறு மாதங்கள் இயங்கி, செவ்வாய்க் கோளைக் குற்றாரம் 300 மைல் [500 கி.மீ. Perigee] நீளாரம் : 48,000 மைல் [80,000 கி.மீ. Apogee] சுற்றி வந்து முக்கியமாக உயிரின இருப்புக்குத் தேவையான மீதேன் வாயு உள்ளதா என்று உளவித் தகவல் அனுப்பும்.  மங்கல்யான் புரியும் விந்தை விளைவுகள், புதிய கண்டு பிடிப்புகள் இனிமேல் பதிவாகும்.

    இந்த அரிய சாதனை இந்தியாவுக்கு முதல் ஆரம்ப முயற்சி வெற்றி யாகவும்,  ஆசிய தேசங்களுக்குள் முன்னோடி முதன்மை வெற்றி நிகழ்ச்சியாகவும் வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது.   ரஷ்யா, நாசாவின் முதல் செவ்வாய்க் கோள் முயற்சிகள் பல தோல்வி அடைந்தன.  ஆசியாவில் சைனா 2011 இல் ஏவிய விண்கலம் இங்காவ் -1 [Yinguo-1] செவ்வாய்க் கோளை அடைய வில்லை.   அதற்கு முன்பு 1998 இல்  ஜப்பான் அனுப்பிய விண்கலமும் எரிசக்தி போதாமல் எங்கோ போய்விட்டது !

     

    India's Mars Mission -1

     

    PSLV -XL Launch Rocket

    Mars Orbiter path

     

    “எதிர்காலத்தில் பூமி, நிலவு, செவ்வாய் ஆகிய மூன்று கோள்களும் மனித இனத்துக்குப் பயன்தரும் ஒருமைப்பாடு அண்டங்களாய்க் கருதப்படும்.  செவ்வாய்க் கோளில் நீரிருக்கலாம்.  அங்கே ஒரு குடியிருப்பு அரங்கம் நமக்குத் தேவைப்படுகிறது.  நிலவில் பேரளவு மின்சக்தி உண்டாக்க உதவும் முக்கியமான ஹீலியம்-3 எரிவாயு பெருமளவில் கிடைக்கிறது.”

    டாக்டர் அப்துல் கலாம், ராக்கெட் விஞ்ஞான மேதை (International Conference on Aerospace Science & Technologies) [ஜனவரி 26, 2008]

    “ஏன் இந்தியா விண்வெளித் தேடல் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது  என்று, கடந்த 50 ஆண்டுகளாக ஒரு கேள்வி கேட்கப் படுகிறது.  இதற்கு நாங்கள் கூறும் பதில் இன்று, நாளை, எதிர்காலத்தில் இதுவாக இருக்கும் : ‘மனிதனின் சமூகப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டும்  என்பதே அதற்கொரு காரணம்.’  தேசத்தில் கடந்த 50 ஆண்டுகளில் மிகச் சொற்ப நிதிச் செலவில் விண்வெளித் திட்டங்களை நிறைவேற்ற ஒரு பெரும் புரட்சி எழுந்துள்ளது.   சைனாவோடு இந்தியா போட்டி இடுகிறது என்பது சரியல்ல.  வேறு யாருடனும் போட்டியிடப் போவதில்லை.  நாங்கள் எங்களுக்குள்தான்  பந்தயம் வைத்துக் கொள்கிறோம் என்பதை அழுத்தமாய்ச் சொல்கிறேன்.  நாங்கள் மேன்மைப்பட வேண்டும்;  செம்மைப்பட வேண்டும்;  புதிய வினைப்பாடுகளை உருவாக்க வேண்டும். “

    டாக்டர் கே. ராதாகிருஷ்னன்  இந்திய விண்வெளி ஆய்வக அதிபர் [Chairman ISRO]

     

    Mars Earth Comparision

     

    செந்நிறக் கோள் நோக்கிச் சென்ற இந்திய சுற்றுளவி மங்கல்யான் 

    2013 நவம்பர் 5 ஆம் தேதி செவ்வாய்க் கிழமை, செந்நிறக் கோள் செவ்வாயை நோக்கிச் சென்ற சுற்றுளவி மங்கல்யானை விண்வெளியில் ஏவி, அண்டவெளிச் சாதனையில் இந்தியா ஓர் புதிய மைல் கல்லை நாட்டியுள்ளது.  இந்த சுற்றுளவி 2013 நவம்பர் மாத இறுதி வரைப் [நவம்பர் 30 ஆம் தேதி] பன்முறைப் பூமியைச் சுற்றி, புவியீர்ப்பு சுழல் வீச்சில் [Gravitational Flyby Swing] தன் உந்து வேகத்தை விரைவாக்கி, பரிதி மையச் செவ்வாய் நோக்குச் சுழல்வீதியில் [நீள்வட்டச் சுழல்வீதி]  [Heliocentric Mars Transfer Orbit] நேராகச் செல்லும்.  இந்த 780 மில்லியன் கி. மீ.  [470 மில்லியன் மைல்] தூர நெடும் பயணத்துக்கு சுமார் 300 நாட்கள் ஆகும்.   சுற்றுளவி 2014 செப்டம்பர் 24 இல் செவ்வாய்க் கோள் ஈர்ப்பு மண்டலத்தில் இறக்கப் பட்டு செந்நிறக் கோளைச் சுற்ற ஆரம்பிக்கும்.  மங்கல்யான் பணி  6 முதல் 10 மாதங்கள் நீடிக்கத் திட்டமிடப் பட்டுள்ளது.  இந்தச் சுற்றுளவியைத் தூக்கிச் சென்ற இந்திய ராக்கெட் PSLV-XL .   அதுவும், சுற்றுளவியும் முழுக்க முழுக்க இந்தியச் சாதனங்களில் இந்தியரால் அமைக்கப் பட்டவை.  மங்கல்யான் 2014 செப்டம்பரில் செந்நிறக் கோள் ஈர்ப்பு மண்டலத்தில் இறங்கி, வெற்றி கரமாகச் சுற்ற ஆரம்பித்தால், அது ஓர் அசுர விண்வெளிச் சாதனையாகப் போற்றப் படும்.   அப்போது செவ்வாய்க் கோளைச் சுற்றிய நான்காவது தேசமாக இந்திய ஓர் உயர்ந்த இடத்தைப் பெறும்.  ஆசிய பேராற்றல் நாடுகளான ஜப்பான், சைனா ஆகிய இரண்டும் முயன்று, அவற்றின் சுற்றுளவிகள்  செந்நிறக் கோளைச் சுற்ற முடியாமல் தோல்வி அடைந்தன.   இதுவரை உலக நாடுகளில் நிகழ்ந்த 51 செவ்வாய்க் கோள் பயண முயற்சிகளில் 21 பயணங்கள்தான் வெற்றி அடைந்துள்ளன.

    மங்கல்யான் ஏவுத் திட்டத்துக்கு ஆகும் நிதிச் செலவு :  454 கோடி ரூபாய் [US $ 69 million].  சுற்றுளவியின் விலை மதிப்பு மட்டும் அத்தொகையில் :  ரூபாய் 154 கோடி [[US $. 23 million].  இந்தப் பணி வெற்றி அடைய நேரடியாக உழைத்தவர் சுமார் : 2000 பேர்கள்.  மறைமுகமாக விண்வெளிப் பணி புரிந்தவர் : 16,000 பேர்கள்.

     

    Mars Program

     

    ராக்கெட் ஏவுவதற்கு ஆளுநராக மேற்பார்வை செய்தவர்: பி. குஞ்சி கிருஷ்ணன்;  சுற்றுளவி அனுப்ப ஆளுமை செய்த மேற்பார்வையாளர் : எஸ்.கே. சிவக்குமார்;   மங்கல்யான் பயண ஆளுநர் : மயிலசாமி அண்ணாத்துரை;  திட்ட ஆளுநர் :  எஸ். அருணன்.

    மங்கல்யான் சுற்றுளவியின் இப்போதைய [நவம்பர் 8, 2013]  தகவல் :  பூமியை இரண்டாம் முறை வெற்றி கரமாகச் சுற்றி, சுற்றுளவியின் நீள்தூரம் [Apogee]  28,814 கி.மீ. லிருந்து 40, 186 கி.மீ. நீண்டுள்ளது.

    http://www.isro.org/mars/updates.aspx    [Mars Orbiter Status Update] 

    மங்கல்யான் சுற்றுளவியின் குறிக்கோள் என்ன ?

    1.  விண்வெளிப் பயணங்களுக்குத் தூக்கிச் செல்லும் ராக்கெட் திறனை உறுதிப் படுத்துவது;  விண்ணுளவி அமைப்பு, இயக்க நெறிகளைச் செயலாக்க முற்படுவது;  அண்டவெளித் தேடல் பணிகளைத் திட்டமிட்டு நிறைவேற்றுவது.  விண்வெளித் தொடர்பு முறைகளை விருத்தி செய்வது.

    2.  செவ்வாய்க் கோள் சுற்றுளவியை அமைப்பது;  அது நெடுந்தூரப் பயணத்துக்குத் தயார் செய்வது;  அது செந்நிறக் கோளில் இறங்கச் செய்வது.

    3.   செவ்வாய்க் கோளைச் சுற்றி வந்து படமெடுப்பது.   அங்கே மீதேன் வாயு இருப்பதைச் சோதிப்பது.

    4.  செந்நிறக் கோளில் ஒரு காலத்தில் இருந்த சூழ்வெளி வாயு மண்டல இழப்பை ஆராய்வது.

     

    ISRO Mars Mission Control Room

     ISRO Mars Mission Control Room in Bangalore 

    “இந்த ஆண்டு முடிவில் [2013 நவம்பர் 5] பரபரப்பூட்டும் அடுத்த விண்வெளிச் சவால் சாதனையாக, முதன் முறை இந்தியா செவ்வாய்க் கோளைச் சுற்றிவரத் துணிந்து செல்லப் போகிறது.   அதற்கு முன்பாக ஜூன் 2013 இல் இந்தியா தன் முதல் பயண வழிகாட்டி துணைக்கோள் [Navigational Satellite] ஒன்றை அனுப்பப் போகிறது.  பூமியைச் சுற்ற துணைக்கோள் ஒன்றை விண்வெளியில் பயணம் செய்ய இட்டுவர  சுமார் 2000 மேற்பட்ட நபர் கூட்டுழைக்கத் தேவைப்படுகிறார்.”

    டாக்டர் கே. ராதாகிருஷ்ணன்,  இந்திய விண்வெளி ஆய்வக அதிபர் [Chairman ISRO]

    “இந்தியா ஏழைகள் வாழும் ஒரு தேசம். அதே சமயத்தில் அது பொருளாதாரத் துறைகளில் முன்னேறி வரும் ஆசிய நாடு.  நடுத்தர ஊதியம் பெற்றுவரும் மக்கள் தேசம்.  அது G20 தேசங்களில் ஒன்று.  எங்கள் தேசம் பலர் கடுமையாய் உழைத்து வாழும் ஏழ்மைப் பூமியே.  ஆனால் பூகோளத்தில் ஆற்றல் பெற்று வரும் தேசம். நாங்கள் இரட்டைக் குறிக்கோள் உள்ள ஒற்றைத் தேசத்தவரே.  இரண்டையும் நாங்கள்  பூர்த்தி செய்ய வேண்டும்.  பூகோள அறிவைத் தேடி அளிப்பதில் நாங்களும் பங்கு கொள்ள வேண்டும்.  அதே சமயம் நாங்கள் மக்கள்  ஏழ்மையையும் நீக்க வேண்டும்.”

    நிஷா அகர்வால் [தலமை அதிகாரி, OXFAM in India]  

     

    Mars Mission 2013 Nov 5

    “நிலவின் களத்தில் விஞ்ஞானச் செல்வக் களஞ்சியம் குவிந்துள்ளது.  மேலும் சில வினாக்களுக்கு இன்னும் விடை தேட வேண்டியுள்ளது. உதாரணமாகப் பூமியிலிருந்து நேராக 41% பகுதி நிலவைக் காண முடியாது.  சந்திரயான்-1 துணைக்கோள் செய்து வரும் சோதனைகள் நிலவின் விஞ்ஞானத் தகவலை மேம்பட உதவும்.”

    எம். வொய். எஸ். பிரஸாத் (துணை ஆளுநர் ஸதிஷ் தவன் விண்வெளி மையம்)

    “சந்திரயான் -1 துணைக்கோளைத் திட்டமிட்ட வட்டவீதியில் வெற்றிகரமாய்ப் புகுத்திச் சந்திரனுக்குச் செல்லும் பயணம் இப்போது முடிந்தது.  அடுத்துத் தொடங்கப் போகும் ஆய்வுச் சோதனைகளை ஆரம்பிக்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்.”

    மயில்சாமி அண்ணாத்துரை, சந்திரயான் திட்ட இயக்குநர்  [நவம்பர் 13, 2008]

    “இந்த தனித்துவச் சோதனையை (Unique Bi-Static Experiment) நிலவைச் சுற்றும் இரண்டு விண்ணுளவிகள் (சந்திரயான்-1  & நாசாவின் LRO நிலவு விண்ணுளவுச் சுற்றி) ஒரே சமயத்தில் வட்ட வீதியில் சுற்றி வந்தாலன்றிச் செய்ய இயலாது.  விஞ்ஞானிகள் அந்த சோதனை சீராக இயங்கியதா வென்று இன்னும் சரிபார்த்து வருகிறார்.  இரண்டு விண்ணுளவிகளையும் சரியான தருணத்தில் சரியான இடத்தில் பறக்க வைத்துத் திட்டமிட்டபடிச் சோதனையைச் செய்து முடித்தார்.  இந்த இந்திய அமெரிக்கக் கூட்டு முயற்சி எதிர்காலத்தில் எழும் வாய்ப்பையும் காட்டுகிறது.  அந்தக் கூட்டுழைப்பு விண்வெளித் தேடலில் ஓர் உன்னத முன்னடி வைப்பு.”

    ஜேஸன் குரூஸன் நாசா தலைமைக் கூடம், வாஷிங்டன் D.C.

     

    Mars Mission Chief

     

    “தூரத்து உளவு செய்வதில் (Remote Sensing) இந்தச் சோதனை முடிவு (பனிப்படிவுக் கண்டுபிடிப்பு) சாதனையில் உயர்வானது.  நிலவில் கால் வைக்காமல் நிலவைத் தோண்டாமல் இவ்விதம் சோதனை புரிவது உன்னத முறை என்பதில் ஐயமில்லை.  கடினமான அந்தச் சோதனையை (Bi-Static Experiment) நாங்கள் செய்து முடித்தோம்.  பனிப்படிவு ரேடார் சமிக்கைத் தகவலை ஆராய்ந்து விளைவுகளை வெளியிடச் சில வாரங்கள் ஆகும்.”

    ஸ்டீவர்ட் நாஸெட் (Srewart Nozette NASA Mini-RF Principal Investigator, LRO)

    “சந்திராயன் -1 நுணுக்கமாகக் கட்டுப்படுத்தப் பட்டு சந்திரனைச் சுற்றுவீதியில் நிபுணர் புகுத்தியது மகத்தானதோர் நிகழ்ச்சி.  அந்த இயக்கத்தில் ஏதேனும் ஒரு சிறு பிழை ஏற்பட்டிருந்தாலும் துணைக் கோள் நிலவை விட்டு வழிதவறி விண்வெளியில் எங்கோ போயிருக்கும்.”

    எஸ், ராமகிருஷ்ணன், திட்ட இயக்குநர் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், திருவனந்தபுரம் [நவம்பர் 9, 2008]

     

    Mangalyaan mounted on the Rocket

    ராக்கெட்டின் மேற்பகுதியில் மங்கல்யான் அமைப்பு

     

    இந்தியாவின்  அடுத்த பரப்பரப்பான விண்வெளி ஆய்வுத் திட்டம் செவ்வாய்க் கோளை வட்டமிட்டு அறிவது.

    2013 ஆண்டு முடிவில் திட்டமிடப் பட்ட செவ்வாய்க் கோள் திட்டம் தாமதம் அடையாது என்று இந்திய விண்வெளி ஆய்வகத்தின் அதிபர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.  செவ்வாய்க் கோள் சுற்றுளவி [Mars Orbiter] ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீஹரிக் கோட்டாவில்  [PSLC – Polar Satellite Launch Vehicle, Satish Dhawan Space Centre] PSLC ராக்கெட்டில் ஏவப்பட்டும்.   2014 இல் விண்ணுளவும் சுற்றுளவி பயணப் பாதையில் ஒரு வால்மீன் போக்கு குறுக்கிட்டாலும், அதனால் பாதகம் ஏற்படாது என்று அவர் உறுதியாக நம்புகிறார்.  அந்த வால்மீன் 2013 A1 [Siding Spring] என்று குறிப்பிடப் படுகிறது.  வால்மீன் விண்ணுளவியோடு மோதும் வாய்ப்பு நிகழ்ச்சி 1 in 120,000 என்று கணக்கிடப் பட்டுள்ளது.  செவ்வாய்க் கோளிலிருந்து சுமார் 50,000 கி.மீ. [30,000 மைல்] தூரத்தில் வால்மீன் கடந்து செல்கிறது.   2013 நாணய மதிப்பீட்டில் 450 கோடி ரூபாய் நிதிச் செலவில் “மங்கல்யான்” [Mangalyaan] செந்நிறக் கோள் திட்டம் 2013 அக்டோபர்-நவம்பர்  மாத நடுவே துவங்கும் என்று தெரிகிறது.  சந்திரயான் திட்டம் நிலவைச் சார்ந்தது போல், மங்கல்யான் திட்டம் செவ்வாய்க் கோளைக் குறிவைப்பது.   திட்டத்தின் முக்கிய குறிக்கோள் நிலவுக்கு அப்பால் செய்யும் மனிதரற்ற துணைக்கோள் பயணப் பயிற்சி, மற்றும் செவ்வாய்த் தளத்தில் உயிரின மலர்ச்சி நேர்ந்ததா என்று அறிவதும், செவ்வாய்க் கோளில் ஏன் சூழ் மண்டலம் இல்லாது போனது என்றும் அறிவதே.  மேலும் செவ்வாய்க் கோள் எவ்விதம் நீர்வளம், கரியமில வாயுவை இழந்தது என்றும் அறிந்து கொள்வது முக்கிய ஆய்வுப் பணியாகும்.

     

    Getting into orbit

     

    மங்கல்யான் சுற்றுளவியின் எடை 30 பவுண்டு [14.5 கி.கிராம்].  அது மீதேன் உளவும் ஒரு கருவியைக் கொண்டு செல்லும்.  செவ்வாய்க் கோளில் மீதேன் உள்ளதா என்று அறியும்.  மீதேன் இருப்பு செவ்வாய்க் கோளில் ஒரு காலத்தில் உயிரின இம்மிகள் இருந்திருப்பதை உறுதிப் படுத்தும்.  2013 அக்டோபரில் ஏவப்படும் விண்ணுளவி, பூமியை விட்டு 2013 நவம்பர் 27 இல் நீங்கி 300 நாட்கள் [10 மாதம்] பயணம் செய்து செவ்வாய்க் கோளை நீள்வட்டத்தில் 300 மைல் நெருங்கிய தூரத்தில் [சிற்றாரம் : 500 கி.மீடர், நீளாரம் : 80,000 கி.மீ] சுற்ற ஆரம்பிக்கும். துணைக் கோளில் ஐந்து விதக் கருவிகள் அமைக்கப் பட்டு வேலை செய்யும். [ஒரு நிறக் காமிரா,  ஓர் உட்சிவப்பு வெப்பப் படமெடுப்பு ஏற்பாடு, [One Thermal Infrared Imaging System],  ஒரு லைமன் – ஆல்ஃபா ஒளிமானி,  [One Lyman-alpha Photometer], ஒரு வெளிக்கோள நடுத்துவக் கலவை அளவி  [One Exospheric Neutral Composition Analyser], ஒரு மீதேன் நுகர் உளவி  [One Methane Sensor].

    கடந்த சில ஆண்டுகளாக இந்தியா 35 வெளிநாட்டு துணைக் கோள்களை விண்வெளியில் ஏவி விட்டு  17.17 மில்லியன் டாலரும், 32.28 மில்லியன் ஈரோவும் [மொத்தம் : 58 மில்லியன் டாலர்] சம்பாத்தித்துள்ளது என்று பிரதம மந்திரியின் உள் நாட்டு அமைச்சர் வி. நாராயணசாமி சமீபத்தில்  அறிவித்துள்ளார்.

    Operation Director

     

    செந்நிறக் கோளுக்குச் செல்வதில் உலக நாடுகள் பந்தயப் போட்டி

    2009 செப்டம்பரில் சந்திரனை வெற்றிகரமாய்ச் சுற்றிய இந்தியா 2013 ஆண்டில்  சிரமமான செந்நிறக் கோளைச் சுற்றி வரப் பேராசைத் திட்ட மிட்டுள்ளது.   20/21 ஆம் நூற்றாண்டில் அமெரிக்கா, ரஷ்யா, ஈரோப்பிய நாடுகள், ஜப்பான், சைனா ஆகிய நாடுகள் செவ்வாய்க் கோளில் இறங்கி ஆராய்ந்தும்,இனிமேல்  ஆராய விரும்பியும் வருவது போல் இப்போது இந்தியாவும் இந்தப் பந்தயத்தில் இறங்கியுள்ளது.   அடுத்த ஆண்டு (2013) மனிதரற்ற ஓர் தனி விண்ணுளவியை 320 டன் எடை கொண்ட,  துருவத் துணைக்கோள் அனுப்பும் ராக்கெட்டில் (Indian Polar Satellite Launch Vehicle) (PSLV Rocket)  ஏவப்படும் திட்டம் தயாராகி அரசாங்கத்தின் அனுமதிக்கு இந்திய விண்வெளி ஆய்வகம் காத்திருக்கிறது.  பெயர் குறிப்பிட விரும்பாத வேறோர் அரசாங்க அதிகாரி செவ்வாய்த் திட்டத்தை நிறைவேற்ற சுமார்  90 மில்லியன் டாலர் (5 பில்லியன் ரூ) நிதித் தொகை மதிப்பீடு செய்துள்ளதாகக் கூறினார்.   சென்ற ஆண்டில் இந்தத் திட்டத்துக்கு 1.25 பில்லிய ரூ ஒதுக்கி வைத்தாகவும் தெரிகிறது.   ஏவப்படும் துணைக்கோள் பூமியை 500 கி.மீ. குற்றாரம் [300  mile Perigee], 80,000 கி.மீ. நீளாரம் [48000 mile Apogee] உள்ள நீள் வட்டத்தில் சுற்றத் துவங்கும்.   செவ்வாய்க் கோளை நெருங்கியதும் 60 மைல் உயரத்தில் முடிவாக விண்ணுளவி சுற்றி ஆய்வு செய்து வரும் என்று தெரிகிறது. இந்திய விண்வெளி ஆய்வுத்துறை டாகர் விக்ரம் சாராபாய் தலைமையில் 1962 ஆண்டு முதல் இயங்க ஆரம்பித்தது.   அந்தப் பொறி நிபுணர்கள் வெற்றிகரமாகச் செய்து புகழ் பெற்றது 2009 இல் நிலவைச் சுற்றிவர அனுப்பிய சந்திரயான் -1 விண்ணுளவி.  தற்போது ஏற்பட்ட GSLV -III (Geosynchronous Satellite Launching Vehicle III) முக்கட்ட ராக்கெட் தாமத மானது.

     

    Cost of Mission

     

    Cost Comparision

     

    சோதனைத் தோல்வியில் இந்தியாவின் சந்திரனில் இறக்கி ஆய்வு செய்யப் போகும் 2014 ஆண்டுச் சந்திரயான் -2 திட்டம் தாமதமாகி இப்போது  2014 ஆண்டுக்கு அப்பால்  தள்ளி வைக்கப் பட்டது.  2010 டிசம்பரில் இந்தியாவின் துணைக்கோள் ஏவும் ஏவுகணை ஒன்று பழுதாகி வங்காள விரிகுடாவில் வெடித்து வீழ்ந்தது.  இவை எல்லாம் அடுத்து 2013 இல் அனுப்பப் போகும் பேராசைச் செவ்வாய்க் கோள் குறிப்பணிக்கு ஆதரவு அளிப்பதாய்த் தெரியவில்லை.

    செவ்வாய்க் கோளுக்கு விண்ணுளவி அனுப்புவதில் ஏற்பட்ட தோல்விகள்

    இதுவரை பெற்ற அனுபவத்தில் பூமியிலிருந்து சமிக்கை அனுப்பி செவ்வாய்க் கோள் ஈர்ப்பு மண்டலத்தில் திசைதிருப்பி விண்ணுளவியை  இறக்குவது, சிரமான இயக்கம்.  பலமுறை இடம் தடுமாறி, தருணம் கடந்து, வேகக் கட்டுப்பாடு முறிந்து விண்ணுளவிகள் பாதை தவறி நழுவிச் செல்வது பன்முறை நேர்ந்துள்ளது.  செவ்வாய்க் கோள் பயண வெற்றி 50/50 எதிர்பார்ப்பு வாய்ப்பு வழிகளே.   இம்முயற்சியில் அமெரிக்கா, ரஷ்யா அடைந்த தோல்விகள் 1960 முதல் 2010 வரை (50 ஆண்டுகள்) மொத்தம் : 8.  இந்தியா இவற்றை எல்லாம் தெரிந்து தான் செந்நிறக்கோள் பயண முயற்சியில் துணிச்சலுடன் இறங்கி உள்ளது.

     

    Mars Mission Control Room

     

    பழுதடைந்த கிரையோஜெனிக் ராக்கெட் எஞ்சின் சாதன விபரங்கள்

    GSLV -III ராக்கெட் நிலவுக்கு 4 டன் பளுவைத் தூக்கிச் செல்லும் தகுதி உடையது.   புவிச் சுற்றிணைப்பில் நிலைமாறும் சுழல்வீதியில்  (Geosynchronous Transfer Orbit)   10 டன் பளுவைச் சுமக்க வல்லது.   ராக்கெட் எடை : 629 டன்,  உயரம் :  51 மீடர் (167 அடி), நிலைமாறும் சுழல்வீதியில் எடை : 10 டன், புவிச் சுற்றிணைப்புச் சுழல்வீதியில் எடை 5 டன்.    அதாவது அந்த ராக்கெட் புவிச் சுற்றிணைப்பு வீதியில் 10 டன் பளுவுள்ள துணைக் கோளை தூக்கி விட முடியும்.    இந்த கிரையோ ஜெனிக் எஞ்சின் விருத்தி செய்ய 500 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கில் சோதனை நடந்து வருகிறது.    எதிர்கால நிலவுப் பயணத்துக்குச் செல்லும் மூவர் விண்கப்பலை இந்த  GSLV -III ராக்கெட்  மூன்றாவது கட்ட எஞ்சின் இழுத்துச் சென்று பூமிக்கு மீளும்.    2010 ஏப்ரல் 15 ஆம் தேதி இந்தியா தயாரித்த கிரையோஜெனிக் எஞ்சின் முதலில் சோ திப்பாகி பழுதடைந்து சரிவர இயங்கவில்லை.

    2010 டிசம்பரில்  ஆந்திராவில் உள்ள சத்தீஸ் ஸாவன் விண்வெளி மையத்தில் இந்த GSLV -III ராக்கெட் எஞ்சின் சோதிக்கப் பட்டது.    எஞ்சின் சுடப்பட்டு 47 வினாடியில், ராக்கெட் வாகனக் கட்டுப்பாடை பொறித்துறை ஆணை நிபுணர் இழந்தனர்.   அடுத்த 16 வினாடியில் ராக்கெட் வெடித்து விட்டு நிபுணருக்கும், பார்வையாளருக்கும் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது.  தூக்கிச் சென்ற துணைக்கோள் வங்காள விரிகுடாவில் வீசி எறியப்பட்டது.  ராக்கெட், துணைக்கோள் ஆகிய வற்றின் விலை மதிப்பான 39 மில்லியன் டாலர் (1.75 பில்லியன் ரூபாய்) ஒருசில நிமிடங்களில் கரும்புகையாய் எரிந்து மறைந்தது.   கடந்த 10 வருடங்களில் (2010 வரை) GSLV -III ராக்கெட் எஞ்சின் பூஸ்டர்கள் (Boosters : விரைவூக்கிகள்) ஏழில் நான்கு இதுபோல் பழுதாகிச் சிதைந்தன.   அதே சமயத்தில் தொடர்ந்து 16 முறை வெற்றிகரமாக GSLV ராக்கெட் எஞ்சின்கள் எழும்பி விண்வெளியில் ஏறிச் சென்றுள்ளன என்பதும்    குறிப்பிடத் தக்கதாகும்.   இந்திய ராக்கெட்கள் குறைந்த செலவில் பல வெளிநாட்டுத் துணைக்கோள்களைத் தூக்கி பூமிச் சுழல்வீதில் பன்முறை ஏற்றி விட்டுள்ளன.   இப்போது அந்த வெளிநாட்டு வணிக வரவுகளை இந்தியா இழக்க நேரும்.  முக்கியமாக 2014 ஆண்டில் சந்திரயான் -2 தளவுளவி நிலவில் தடம் வைக்கும் பேராசைத் திட்டம் தள்ளிப் போடப்படும்.

     

    Mangalyan payloads

     

    சந்திரயான் -2  நிலவுத் தளவுளவித் திட்டத்தில் ஏற்பட்ட தாமதம்

    தற்போது ஏற்பட்ட GSLV -III (Geosynchronous Satellite Launching Vehicle III) முக்கட்ட ராக்கெட் சோதனைத் தோல்வியில் இந்தியாவின் சந்திரனில் இறக்கி ஆய்வு செய்யப் போகும் 2014 ஆண்டுச் சந்திரயான் -2 திட்டம் தாமதமாகப் போகிறது.   அந்தப் பெருஞ் செலவுத் திட்டத்தில் சந்திரயான் -2 விண்கப்பல் நிலவில் இறங்கி உருண்டோடி ஆராயும் தளவுளவி யைத் தூக்கிச் செல்ல வேண்டும்.    தளவுளவி தயாரிப்பில் இந்தியாவுக்கு ரஷ்யா உதவி செய்கிறது.   அப்போது அந்த உளவி எடுக்கும் நிலவுத் தள மண்கள் பூமிக்குக் கொண்டு வரப்படும்.    அந்த பேராசைத் திட்டம் 2014 ஆண்டில் இப்போது நிறைவேறாது என்பதே வருந்தத் தக்க செய்தி யாகும்.   பிரச்சனை எது வென்றால் கடந்த சில ஆண்டுகளாக இந்திய  அசுர சக்தி ஏவுகணைகள் சோதனை களில் பழுது /தவறு நேர்ந்து தோல்வி அடைந்து வருவதே !    2010 ஆண்டு நாணய மதிப்பில் அண்டவெளித் திட்டங்களுக்கு அரசாங்க நிதி  ஒதுக்கு 1.1 மில்லியன் டாலர் (58 பில்லியன் ரூபாய்).    அதில் GSLV -III முக்கட்ட ராக்கெட்விருத்திக்கு மட்டும் சுமார் 500 மில்லியன் டாலர்  நிதி ஒதுக்கு !   அந்த ராக்கெட் இணைப்பில் ரஷ்யாவின்  “பூஜிய பூரண உஷ்ண எஞ்சின்”  (Russian Cryogenic Engine)  சேர்க்கப் பட்டிருந்தது.     பின்னால் இந்தியா தயாரிக்கப் போகும் பூஜிய பூரண எஞ்சின் ராக்கெட் மூன்றாவது கட்டப் பகுதியோடு இணைக்கப் படும். சந்திரயான் -1 விண்ணுளவியை வெற்றிகரமாய் நிலவைச் சுற்ற அனுப்பிய இந்தியா, கடந்த பல ஆண்டுகளாய் ராக்கெட் ஏவு முயற்சிகளில் வெற்றியும் தோல்வியும் அடைந்துள்ளது.

    சந்திரயான் -1 தூக்கிச் செல்ல நடுத்தரம் உடைய  PSLV (Polar Satellite Launch Vehicle)  ராக்கெட் பயன் பட்டது.    இந்தியா PSLV (Polar Satellite Launch Vehicle)  ராக்கெட்களைப் பன்முறை இயக்கி வெற்றி அடைந்துள்ளது.   புதியதாய்த் தயாராகும் சந்திரயான் -2  மிகக் கனமானது.   ஆணைச் சிமிழ்  தளவுளவி இறக்கியையும்,  வாகனத் தையும் ஒன்றாய்ச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.   இந்தியாவுக்கு கிரியோஜெனிக் எஞ்சின் (Cryogenic Engine) இயக்க முறைகளைக் கற்றுக் கொள்ளும் தகுதி அனுபவம் இன்னும் முழுமையாய் கிடைக்க வில்லை.    அமெரிக்கா, ரஷ்யா போல் அதிகப் பளுதூக்கும் ராக்கெட் ஏவும் அனுபவமின்றி நிலவுத் தேடல் முயற்சிகளில் இந்தியாவுக்கு வெற்றிகள் கிடைக்க மாட்டா.

     

    PM gets the first image of Mars

    பிரதருக்குச் செவ்வாய்க் கோள் முதல்படம் அளிப்பு


    சந்திரனைச் சுற்றிவந்த முதல் இந்திய துணைக்கோள் !

    2008 நவம்பர் 12 ஆம் தேதி சந்தரயான் -1 துணைக்கோள் திட்டமிட்ட 100 கி.மீடர் (60 மைல் உயரம்) துருவ வட்டவீதியில் (Polar Orbit) நிலவைச் சுற்றிவரத் துவங்கியது.  பூமியைக் கடப்புச் சுற்றுவீதியில் சுற்றிவந்த சந்திரயான் நவம்பர் 8 ஆம் தேதியன்று, நிலவை நெருங்கும் போது 440 நியூட்டன் திரவ எஞ்சின் இயங்கி வேகம் குறைக்கப்பட்டு (367 metre/Sec) நிலவின் ஈர்ப்பு மண்டலத்தில் கவரப்பட்டு முதன்முதல் நிலவைச் சுற்ற ஆரம்பித்தது.  சந்திர விண்வெளி யாத்திரையில் பூமியிலிருந்து மனிதர் மின் சமிக்கைகள் அனுப்பி விண்சிமிழைத் திசை திருப்பி வேகத்தைக் குறைத்து நிலவைச் சுற்ற வைப்பது மிகச் சிரமமான பொறியியல் நுணுக்க முயற்சி.  முதன்முதலில் அவ்விதம் செய்ய முயன்ற ரஷ்யா அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளின் துணைக்கோள்கள் சந்திரனைச் சுற்றாது சூரியனைச் சுற்றி வர நழுவிச் சென்றன.  இந்தியா முதல் முயற்சியிலேயே நிலவைச் சுற்ற வைத்தது பாராட்டத் தக்க ஒரு நிபுணத்துவம்.  இதற்கு முன்பு பன்முறைத் துணைக் கோள்களைப் “புவியிணைப்புச் சுற்றுவீதியில்” (Geosynchronous Orbit) இறக்கிப் பூமியைச் சுற்ற வைத்த கைப்பயிற்சியே அதற்கு உதவி செய்திருக்கிறது !  இந்த மகத்தான சிக்கலான விண்வெளி இயக்க நுணுக்கத்தைச் செய்து காட்டி இந்தியா தன்னை ஐந்தாவது சாதனை நாடாக உயர்த்தி இருக்கிறது.  ஏற்கனவே இவ்விதம் ரஷ்யா, அமெரிக்கா, ஜப்பான், சைனா தேசங்கள் செய்து காட்டியுள்ளன.  ஈசா எனப்படும் ஐரோப்பாவின் பதினேழு கூட்டு நாடுகளின் விண்வெளி ஆய்வகமும் [European Space Agency (ESA)]) இந்த விந்தையைப் புரிந்துள்ளது.

     

    Failure and Success

    இந்திய விண்வெளித் தேடலின் எதிர்காலத் திட்டங்கள்

    இந்திய விண்வெளி ஆய்வகத்தின் (ISRO) அடுத்த இரண்டாவது சந்திராயன் (Chandrayaan -2) விண்ணுளவி ஏவிச் செல்வது தாமதமாகி வருகிறது.   அது சந்திரயான் -1 விட பல முறைகளில் வேறுபட்டது.  முதன்முதல் இந்திய விண்ணுளவி சந்திராயன்-2 அணுக்கரு எரிசக்தியைப் பயன்படுத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.  விண்சிமிழ் தன்னுடன் ஒரு தளவுளவியையும், வாகனத்தையும் (A Lander & Rover) சுமந்து சென்று பாதுகாப்பாகச் சந்திர தளத்தில் இறக்கும்.  தளவுளவி நிலவின் தளத்தை ஆராயும் போது வாகனம் நிலவின் பரப்பில் ஊர்ந்து சென்று தகவல் தயாரிக்கும்.  தளவுளவி, வாகன (Lunar Lander & Rover) அமைப்புகளுக்கு இந்தியா ரஷ்யாவின் கூட்டுறவை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.  அதற்காகும் நிதித்தொகை 4.25 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது என்று திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாத்துரை கூறுகிறார்.  16,000 பேர் பங்கெடுத்து வரும் ISRO வுக்கு 2008 ஆண்டு நாணய மதிப்புப்படி இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி செய்ய நிதி ஒதுக்கம் ஒரு பில்லியன் டாலர் என்று அறியப்படுகிறது !

     

    Fig 5 Dr Abdul Kalam

    இந்திய ராக்கெட் விஞ்ஞானி

    2015 ஆண்டுக்குள் இந்திய விண்வெளி ஆய்வுக் குழு இரண்டு அல்லது மூவர் இயக்கும் மனித விண்வெளிக் கப்பலைத் தயார் செய்யத் திட்டமிட்டுள்ளது.  அதற்காகும் நிதி மதிப்பு 242 மில்லியன் டாலர் (1240 கோடி ரூபாய்).  மூவர் இயக்கும் அந்த மனித விண்கப்பல் பூமியை 250 மைல் தணிந்த உயரத்தில் 7 நாட்கள் சுற்றி வரும்.  இந்திய அரசு மனிதப் பயணத் திட்டத்துக்கு 95 கோடி ரூபாய் நிதித் தொகையை அளித்துள்ளது.  விண்வெளிப் பயண மனிதப் பயிற்சிக்கு 1000 கோடி ரூபாய்ச் செலவில் பங்களூரில் பயிற்சிக் கூடம் ஒன்றும் அமைக்கப்படும். அடுத்து இந்தியா செவ்வாய்க் கோள் பயணத்துக்கும், மனிதர் இயக்கும் விண்ணுளவியை நிலவுக்கு ஏவும் யாத்திரைக்கும் திட்டங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது.  “எதிர்காலத்தில் பூமி, நிலவு, செவ்வாய் ஆகிய மூன்று கோள்களும் மனித இனத்துக்குப் பயன்தரும் ஒருமைப்பாடு அண்டங்களாய்க் கருதப்படும்.  செவ்வாய்க் கோளில் நீரிருக்கலாம்.  அங்கே ஒரு குடியிருப்பு அரங்கம் நமக்குத் தேவைப் படுகிறது. நிலவில் பேரளவு மின்சக்தி உண்டாக்க உதவும் முக்கியமான ஹீலியம்-3 எரிவாயு பெருமளவில் கிடைக்கிறது,” என்று ராக்கெட் விஞ்ஞான மேதை டாக்டர் அப்துல் கலாம், ஜனவரி 26, 2008 இல் நடந்த அகில நாட்டு விண்வெளி விஞ்ஞானப் பொறியியல் பொதுக் கருத்தரங்கில் (International Conference on Aerospace Science & Technologies) கூறியிருக்கிறார். “கடந்த 50 ஆண்டுகளாய் விண்வெளி ஆராய்ச்சி, படைப்பல மேன்மை, அணுசக்தி ஆய்வுப் பங்கெடுப்பில் மூழ்கிய இந்தியா முதன்முதல் ஒரு வெற்றிகரமான சந்திரயான் -1 நிலவுப் பயணத்தைச் செய்து காட்டியுள்ளது,” என்று அந்தக் கருத்தரங்கில் டாக்டர் அப்துல் கலாம் பாரத நாட்டைப் பாராட்டினார்.

    [Message clipped]  View entire message

    A special documentary film on Mars Orbiter Mission

    Preview YouTube video BBC on India’s Mars Orbiter Mission (MANGALYAAN) : 1

    BBC on India’s Mars Orbiter Mission (MANGALYAAN) : 1

    Preview YouTube video Mars Orbiter Mission- 25th Mission of PSLV-C25

    Mars Orbiter Mission- 25th Mission of PSLV-C25
    Share
  • நவராத்திரி 2014 (4) திலகமிட்டனள்…

    இசைக்கவி ரமணன்

    திலகமிட்டனள்…

    abhirami

    கங்கைக் கரையில், ஒரு
    காலைப் பொழுதில், என்
    அங்கமெங்கும் தங்கம்மின்னும் நீர்த்திவலை, நான்
    அமர்ந்திருந்தேனொரு ஆனந்த நிலை

    கண்கள் பனிக்க, நெஞ்சம்
    களியில் துள்ள, உயிர்ப்
    புண்க ளாறும் போதுவரும்
    புதிய சுகம், கொஞ்சம்
    புயல் கொஞ்சம் தென்றலெனப் புரண்டுவரும்

    தொல்லை இருளை. ஒளி
    அள்ளி விழுங்கும், பகல்
    துள்ளிவிளை யாடிவரும்
    தூய பொழுது, அது
    தொட்டுமனம் வெட்கப்பட்டுத்
    தேடும் விழுது

    அந்தக் கணத்தில், துளி
    அண்டக் கருப்பாய்
    அந்தக்கரை யோரம்வந்தாள்
    அக்கறை யின்றி,
    அலட்சியத்தில் ஆள்விழுங்கும் சின்னஞ் சிறுமி

    என்ன கருப்பு! அதில்
    என்ன திருத்தம்! அதில்
    மின்னல்துள்ளும் சின்னவிழி
    என்ன பொருத்தம்!

    என்ன மிடுக்கு! மூக்கில்
    சின்ன மினுக்கு! நெஞ்சில்
    ஏறிவிளை யாடும்பிள்ளைக்
    கென்ன செருக்கு!

    சின்னத் தட்டினில், ஒரு
    சித்திரச் சுடர், அதன்
    தெற்கு மூலைதன்னிலொரு
    குங்குமக் கடல், அதைச்
    சீண்டிவிளை யாடும் சின்னஞ்
    சிறிய விரல்!

    முன்னே நின்றவள், நெஞ்சில்
    முரசறைந்தாள், ஒரு
    முத்தத்தினில் முக்திதரும்
    காளிநானென! தேவர்
    முண்டித் தடுமாறிவிழும் சோதிநானென!

    முறுவலில்லை, சிறு
    முனைப்புமில்லை, தன்
    முன்னந்தலை சாய்த்தபடிப்
    “பொட்டு வைக்கவா?” என்று
    மோக இதழ் வழிக் கிள்ளை மொழியில் சொல்லி

    முன்பு வந்தனள், சற்றும்
    மூச்சிடாமலே, என்
    முன்னிதழில் வெப்பம்வர
    மூச்சுமிட்டனள், கங்கை
    மொத்தக்குளிர் மூண்டவிரல் நெற்றி தொட்டனள்

    தொட்ட கணத்தில், உயிர்
    தூர்ந்து கிளர்ந்தே, ஒரு
    விட்டம்வரை இடியுண்டு
    வெலவெலக்க, குளிர்
    விரல்தொட் டுயிர்குடைந்து வெடவெடக்க

    பட்டாம் பூச்சிக் கண், சற்றும்
    பதறாமலே, எனைப்
    பார்த்திருந்த பார்வையின்னும்
    பார்த்திருக்கிறேன், அந்தப்
    பார்வையின் நினைப்பில் உயிர் வேர்த்திருக்கிறேன்

    சின்னப் பதங்கள், தம்மைச்
    சேர்த்து வைக்கிறாள், நான்
    செய்வ தறியாது வீழ்ந்து தீண்டி வீழ்கிறேன்

    என்னைக் கடந்தாள், வார்த்தை
    ஏதுமின்றியே, நான்
    ஏங்கி நிற்கிறேன், வாழ்க்கை
    ஏதுமின்றியே!

    26.090.2014 / வெள்ளி / 20.25 / வள்ளியூர்-சென்னை ரயிலில்

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    “ஊதியது போதும் உடனே எழுந்துவா
    பாதியில் நிற்குதாம் பாரதப்போர் -சேதிசொன்ன
    COURIERரை மேய்க்காத காரணத்தால் உண்டுவிட்டேன்
    WARRIORகள் காத்துள்ளார் வா”….கிரேசி மோகன் ….

    crazy

    கண்ணன் குழலூதும் சுவாரஸ்யத்தில் பாரதப்போரை ,பசுக்களை மேய்ப்பதை மறந்து விட மாடும் கன்றும் நினைவு படுத்துவதாகக் கற்பனை….

    COURIER தின்ற மாடு -துவாபர யுகத்திலேயே பேப்பர் உண்ணும் பழக்கம் பசுக்களுக்கு வந்து விட்டது போலும் ….கலியுகத்தில் போஸ்டர் ….நன்றி கேசவ்ஜி….

    Share
  • நவராத்திரி 2014 (3) நீ நான்

    இசைக்கவி ரமணன்

     

    நீ நான்

    10457543_788192834556028_2618142506044421818_n

    நெஞ்சத்தில் நீ
    பஞ்சுக்குள் தீ
    இன்னும்தான் ஏதேனும் எஞ்சுமோ? கொஞ்சம்
    இதழ்திறந்து சொன்னால்தான் என்னவோ?

    கண்ணெல்லாம் நீ
    காலெல்லாம் நான்
    காரியம் வேறேதும் உண்டுமோ? அடி!
    காதல்நான் மாண்டாலும் மண்டுமோ?

    உள்ளுக்குள் நீ
    ஊருக்குள் நான்
    உலகுக்கு நானென்ன சொல்வதோ? நீ
    உன்வாயை அவலின்றி மெல்வதோ?

    உன்பிடியில் நான்
    உன்மடியில் நான்
    உன்னடியில் ஒற்றைமலர் நானல்லவா? இந்த
    ஒப்பற்ற நிலைபெறவே ஊனல்லவா?

    என்விழியில் நீ
    என்கவியில் நீ
    என்கான வெளியெங்கும் நீயல்லவோ? நீ
    எனைப்பெற்றுத் தினம்மகிழும் தாயல்லவோ!!

    26.090.2014 / வெள்ளி / 19.35 / வள்ளியூர்-சென்னை ரயிலில்

    Share
  • கற்பகவல்லியே! காமாட்சியே!

     

    பவள சங்கரி

    8

    நவ்வி போலுமே விழியுடையாள் – ஐயன்
    கவ்வி கடுந்தவம் கலைத்துமகிழ செல்வி
    நஞ்சுண்டகண்டனவன் பாதம் பணிந்தே
    பாவவினை களையும் வரமளிப்பவளே!!

    கனிவளச் சோலையில் கற்பகத்தருவாய் படர்ந்து
    கசிந்துருகும் பக்தரின் பரிதவிப்பில் சொற்பதமாய்
    விரிந்துவிரிந்து விசித்திரமாய் விந்தையானாய்
    விரைந்துவந்து உந்தன் மகவைக் காத்தருளே!

    சிந்திய முத்துக்களின் புத்தொளியில் சீவனின்
    சிந்தை மலர்களின் சிலிர்ப்பில் சித்தாந்தம்
    பேசும் சின்னக் கிளியின் கொஞ்சுமொழியில்
    சித்தம் கலங்காமல் இறுமாப்பு கொண்டாயோ?

    ஒங்காரரூபினி என்றால் ஓயாமல் ஓசைஎழுப்பி
    ரீங்காரம் செய்யும் தேனீயாய் சுற்றிவரும்
    பாங்கான பக்தருக்கு வரமருளும் நித்தமும்
    நீங்காத நாயகியே! காத்தருளும் காமாட்சியே!!

    Share
  • நவராத்திரி 2014 (2) – ஊழித் தீயிலும் தேன்

    இசைக்கவி ரமணன்

     

    ஊழித் தீயிலும் தேன்

    Balkanji-Santacruz1

     

    என்னுள் ளிருக்கும் இருளை விழுங்கி
    என்னை விட்டுவிடு! காளீ
    எதிரே நின்று சிரித்தது போதும்
    என்னைத் தொட்டுவிடு!
    உன்னுள் ளிருக்கும் உள்ளத் தினில்நான்
    ஒருநாள் எனைக்கண்டேன், இனி
    ஒருபோ தும்நீ உதறமுடி யாதெனும்
    உறுதியில் திமிர்கொண்டேன்!

    எத்தனை பிறவிகள் என்னடி வினைகள்
    என்னென்ன தண்டனைகள்! காளீ
    எப்படி உனக்கு மனம்வந் ததடி
    என்னைத் துவைத்தெடுக்க?
    பித்தனை மணந்த பிச்சி யல்லவா
    பிள்ளையும் பொருட்டில்லை! இனி
    பின்கதை எதற்கு பிழைகள் உனக்கெது
    பேசி மகிழ்வோம் வா!

    நற்றமிழ்க் கவிதை நாளும் இரவும்
    நாவில் நடமாட, காளீ
    நனவும் கனவும் நாயகி நீயே
    மனதில் நடமாட
    கொற்றவை யே! என் கூட நடந்திடும்
    ஒற்றைத் துணையே வா! யோகக்
    கூரையில் நின்று கொக்க ரித்திடும்
    கொள்ளை நெருப்பே வா!

    “மகனே!” என்னும் மணிவார்த் தையினை
    மறுபடி யும்சொல் சொல்! காளீ
    மார்பை நிமிர்த்த மனிதர் கேட்க
    மறவா தொருமுறை சொல்!
    சுகமும் துயரும் தகர்ந்த தருணம்
    சுதந்திர கீதெமெழும், உன்
    சொந்தம் சொடுக்க முக்தியும் கூடச்
    சொல்லிச் சொல்லி விழும்!

    பிள்ளைப் பிராய விடலை மனதில்
    வெள்ளம் போல்வந் தாய்! காளீ
    பித்துப் பிடிக்க வைத்தாய், பலவித
    பேதைமை கள்செய் தாய்
    முள்ளை முகத்தில் மெள்ளத் தைத்தாய்
    முட்டா ளாய்வைத் தாய், ஒரு
    மூர்க்க இரவில் முத்தமிட்டாயே
    முன்பின் நினைவுண்டா?!

    நான்யா ரென்பதை நானெதற் கறிய?
    நாடறி யும்படிச் செய்! காளீ
    நானுன் மகனெனும் வானுயர் உண்மையை
    நாவால் ஒலிக்கச் சொல்!
    ஊனுள் ளவரை உரக்கச் சொல்வேன்
    உன்மகன் உன்மகன் நான்! இந்த
    ஒற்றை நினைவே ஊழி நெருப்பிலும்
    ஊறி இனிக்கும் தேன்!

    26.090.2014 / வெள்ளி / 19.06 / வள்ளியூர்-சென்னை ரயிலில்

    Share
  • நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது

    கவிஞர்  காவிரிமைந்தன்.

     

    natchathira janal

    சந்தோஷ சாம்ராஜ்ஜியமாய் இல்லம் துலங்கும்போது
    இன்ப கீதங்களின் முழக்கம் இப்படித்தான் இருக்குமோ?

    நட்சத்திர ஜன்னலில்……….

    சூரிய வம்சம் திரைப்படத்திற்காக கவிஞர் மு.மேத்தா வரைந்த கவிதையிது! ஒரு கவிஞனின் ஒளிப்படைப்பு!  உள்ளத்தில் தோய்ந்திருக்கும் கவிதை வெள்ளத்தின் உற்சாகப் பாய்ச்சல்!

    விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே கண்ணில் படுகின்றவற்றையெல்லாம் கட்டி இழுத்து வர கவிஞர்களால்தான் முடியும் என்கிற உண்மையை இப்பாடல் வரிகள் பறைசாற்றுகின்றன!

    சந்தோஷ சாம்ராஜ்ஜியமாய் இல்லம் துலங்கும்போது இன்ப கீதங்களின் முழக்கம் இப்படித்தான் இருக்குமோ?

    சிந்தனையில் இவர் தொடும் உயரங்களைப் பாருங்கள்.  இமயத்திற்கு பொன்னாடை போட்டுவிடலாம் என்கிறார். உற்சாகம் இறக்கைக் கட்டியல்லவா பறக்கிறது!

    மென்மையான வார்த்தைப் பூக்கள் மலர்வதைப்போல் மலரச் செய்து இசையிலே துள்ளி குதிக்க வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார்.

    ஓங்கும் உந்தன் கைகளால் வாழ்க்கையைப் புரட்டிப்போடு!        புது வாழ்வாழ்வின் கீதம்பாடு!

    நம்பிக்கைக்கான நங்கூரங்களைப் பாடலெங்கும் பரவியிருக்கிற கவிஞரின் சாதுர்யம் இவர் சூர்ய வம்சத்துகாரர் என்கிற ரகசியப் பதிவைத் தந்துவிடுகிறது!

    http://youtu.be/YYYtkQV3Ym0

    காணொளி:  http://www.youtube.com/watch?v=YYYtkQV3Ym0

    நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது
    சிறகை விரித்துப் பறப்போம் நம் உறவில் உலகை அளப்போம்
    விளையாடலாம் நிலாவிலே நிழல் மூழ்குமோ தண்ணீரிலே
    வானைப் புரட்டிப்போடு புது வாழ்வின் கீதம் பாடு
    (நட்சத்திர…)

    சித்திரங்களைப் பாடச்சொல்லலாம்
    தென்றலை அஞ்சல் ஒன்று போடச்சொல்லலாம்
    புத்தகங்களில் முத்தெடுக்கலாம்
    பொன்னாடை இமயத்துக்குப் போட்டுவிடலாம்
    பூமிக்குப் பொட்டு வைத்து பார்க்கலாம் பார்க்கலாம்
    பூவுக்கும் ஆடை தைத்துப் போடலாமா
    சூரியத் தேரை மண்ணில் ஓட்டலாம் ஓட்டலாம்
    சொர்கத்தின் புகைப்படத்தைக் காட்டலாமா
    வானம்பாடி வாழ்விலே
    வருந்தி அழுவதில்லை வணங்கி விழுவதில்லை
    (நட்சத்திர…)

    சங்கீதப்புறா நெஞ்சில் பறக்கும்
    சந்தோஷ முல்லை இங்கே வீட்டில் முளைக்கும்
    சந்தமழை நம்மை நனைக்கும்
    பூந்தென்றல் பாதை சொல்ல வந்து அழைக்கும்
    சிட்டுக்குச் சிறகடிக்கச் சொல்லித்ததாரடி யாரடி
    மீனுக்கு நீச்சல் கற்றுத் தந்ததாரோ
    மேகத்தில் மீடு கட்டி வாழலாம் வாழலாம்
    மின்னலில் கூரை பின்னிப் போடலாமா
    ஓங்கும் உந்தன் கைகளால்
    வானைப் புரட்டிப்போடு புது வாழ்வின் கீதம் பாடு
    (நட்சத்திர…)
    …………………………………………………………………………………………….
    படம்: சூர்யவம்சம்
    வரிகள்: மு. மேத்தா
    இசை: SA ராஜ்குமார்
    பாடியவர்கள்: மனோ, சுனந்தா

    methaaSA RajkumarmanoSunanda-Singer

    Share
  • இதயத்துடிப்பு – உதவி வேண்டி

    ஜி.ஜே. தமிழ்ச்செல்வி

    Heart Beat Trust – கடந்த 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 அன்று உருவாகி, மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக பாடுபடுவதென தீர்மானிக்கப்பட்டு, 2009 செப்டம்பர் 24 –ந்தேதி அன்று முறையாக பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து இன்று வரை இயங்கி வருகிறது.

    12

    தொடர்ந்த பணியில் இந்நிறுவனத்தால் அடிப்படை கல்வி மற்றும் கணிணி கல்வி பெற்றவர்கள் 57 பேர்கள். இது நாள் வரை பிற கல்வி மையங்களுக்கு மாணவர்களை அனுப்பி படிக்க வைத்தது போய் இந்நிறுவன அலுவலகத்திலேயே கணிணி கல்வி மையம் மற்றம் உண்டு உறைவிட பள்ளி அமைக்க முயற்சிகள் நடைபெறுகின்றன.

    10559735_536081353188002_1550912928234268647_n

    இந்நிறுவனம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி 2014 அன்று இதயத்துடிப்பு செய்தி மடலை அறக்கட்டளையின் சார்பாக வெளியிட்டது. திரு.வையவன், (தாரிணிப்பதிப்பகம் சென்னை) அவர்கள் பெரும் உதவி செய்தார்கள். இந்த செய்தி மடல் தொடர்ந்து வெளிவரவும் உதவி வருகிறார்கள். இதயத்துடிப்பு செய்தி மடல் வேண்டுவோர் நன்கொடையாக தர விரும்புபவர்கள் வருடத்திற்கான சந்தா தொகை ரூ.250 – ஐ

    Heart Beat Trust
    Indian bank
    Kariyamangalam Branch
    IFSC CODE – IDIB000K107

    A/c 6241625367 – என்ற வங்கி கணக்கிற்கோ அல்லது கீழ்காணும் முகவரிக்கு மணியார்டர் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம்.

    Heart Beat Trust
    34 EB Street
    Thukkapet
    Chengam Tk
    Tiruvannamalai Dt
    606 709

    Heartbeat12 copy
    மாற்றுத்திறனாளிகளுக்கென அடிப்படை வசதிகளுடன் தங்குமிடம் அமைக்கவும் கணிணி மையம் அமைக்கவும் தற்போது இந்நிறுவனம் நிதித் திரட்டி வருகிறது. உதவி செய்யும் மனம் உடையோர் தங்களால் இயன்ற தொகையை மேற்கண்ட வங்கி கணக்கிற்கோ அல்லது முகவரிக்கு மணியார்டராகவோ அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    crazy

    “இம்மி அசையா(து) இமையோன் அகந்தை
    DUMMYயா கும்வரை தூக்கினான் -MUMMYயை;
    COUNT -DOWN கர்வபங்கம் காணும் வரைநின்றான்
    MOUNT -BATTLE FEILDல் மணி”….கிரேசி மோகன்….

    MUMMY -கோவர்த்தன கிரி PYRAMID….
    இமையோன் -கண்களை இமைக்காத இந்திரன்….
    The Last Word “மணி ” Represents “ஸ்யமந்தக” மணி….

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 24

    –சு.கோதண்டராமன்

    யமனும் பித்ருக்களும்

     

    Yama_deva

    ரிக் வேதத்தின் முதல் மண்டலமும் பத்தாவது மண்டலமும் காலத்தால் பிற்பட்டவை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். சாதாரணமாகப் படிப்பவர்களுக்கே தெரியும் அளவுக்கு இவ்விரு மண்டலங்களும் மற்றவற்றிலிருந்து வேறுபடுகின்றன. அந்த வேறுபாடுகளில் ஒன்று யமன் மற்றும் பித்ருக்கள் பற்றிய தகவல்கள்.

    இரண்டு முதல் ஒன்பது வரையிலான பழைய மண்டலங்களில் ரிஷிகளின் கவிதைகளில் ஒரு உற்சாகம் தெரிகிறது. அவர்கள் வாழ்க்கையின் துன்பங்களைப் பிரச்சினையாகக் கருதவில்லை. இயற்கையைக் கண்டு வியந்தனர், குதூகலித்தனர். இவற்றையெல்லாம் படைத்த அவன் ஒரு திறமையான கலைஞனாகத்தான் இருக்க வேண்டும் என இறைவனைப் போற்றினர். இவ்வுலகில் மகிழ்ச்சியாக வாழத் தேவையான பசுச் செல்வம், குதிரைகள், குழந்தைப் பேறு, நீண்ட ஆயுள் மற்றும் அமரத்துவம் பெறவேண்டும் என்று தேவர்களை வேண்டினர். ஆனால், மரணத்துக்குப் பின் என்ன என்ற சிந்தனை அவர்களுக்கு இல்லை.

    முதலாவது பத்தாவது மண்டலங்களில் அவர்கள் இந்த உலகைத் தாண்டி, இந்த வாழ்க்கையைக் கடந்து பிறகு என்ன என்று சிந்திக்கத் தொடங்கினது தெரிகிறது.

    யம என்ற சொல் பழைய மண்டலங்களிலும் காணப்படுகிறது. கட்டுப்படுத்து என்ற பொருளில் வினைச் சொல்லாக மட்டுமே அது வருகிறது. ஒரு தெய்வத்தின் பெயராக அது பயன்படுத்தப் படுவது முதலாவது பத்தாவது மண்டலங்களில் மட்டுமே.

    உயிர் எங்கே போயிற்று?
    தனது அன்பிற்குரியவர் இறக்கும் போது ரிஷி வருந்துகிறார். இவருடைய உயிர் எங்கே போயிற்று எனச் சிந்திக்கிறார். சூரியனிடம் போயிருக்குமா, காற்றில் கலந்திருக்குமா, தாவரங்களோடு ஐக்கியமாகி இருக்குமா எனப் பலவகையாக யோசிக்கிறார். அவர் பூமிக்குள் மறைந்து வாழ்கிறாரா, விண்ணில் உள்ள தெய்வங்களோடு சேர்ந்து வாழ்கிறாரா என நினைக்கிறார். உயிர் மீண்டும் அந்த உடம்பில் வந்து குடியேறும் என்று கூட எதிர்பார்க்கிறார்.

    இயங்கிக் கொண்டிருந்த உடலின் இயக்கம் நின்று போனதுக்குக் காரணம் உடலிலிருந்து ஏதோ ஒன்று வெளியேறிவிட்டதுதான் என நினைக்கிறார்கள். அந்த ஒன்று ஆத்மா என்றும் அஸு என்றும் மனஸ் எனவும் பல வகையாக அழைக்கப்பட்டது.

    10.58 இல் ரிஷி சுருதபந்து இறந்தவரின் மனஸைக் கூவி அழைக்கிறார். யமனின் இடத்துக்குப் போயிருக்கிறாயா, பூமியின் நான்கு மூலைகளுக்கும் போய் விட்டாயா, பிரகாசிக்கின்ற வெளிச்சத்தில் மறைந்து விட்டாயா, அலைகடலில் அடங்கிவிட்டாயா, நீரில் நிலைத்து விட்டாயா, தாவரங்களில் தங்கி விட்டாயா, மலைகளின் உயரத்தில் மறைந்துவிட்டாயா, தொலைவில் சூரியனுக்கு அருகில் சென்று விட்டாயா? எங்கிருந்தாலும் இங்கே வா, வாழ்வதற்காக உன்னை நாங்கள் அழைக்கிறோம் என்று பாடுகிறார். முடிவாக, உன் மனஸ் எங்கள் அறிவுக்கெட்டாத இடத்தில், அசைகின்ற எல்லாவற்றிலும், கடந்த காலத்திலும், வருங்காலத்திலும்  அடங்கிவிட்டது என்று சமாதானப்படுத்திக் கொள்கிறார்.

    யமன்:
    பலவாறாக யோசித்த பின், ஏதோ ஒரு தெய்வம் மரணத்துக்குப் பின் உயிரைப் பொறுப்பேற்றுக் கொள்கிறது என்று முடிவு கட்டுகிறார்கள். அந்தத் தெய்வம் எது என்று சிந்திக்கும் போது பூஷன், வாயு, சவிதா, ஸரஸ்வதி என்று பல பெயர்கள் அவர்கள் நினைவுக்கு வருகின்றன.

    பூஷன் உன்னை பத்திரமாக அழைத்துச் செல்லட்டும். அவர் எல்லாம் அறிந்தவர். அவர் உன்னைப் பித்ருக்களுடன் சேர்க்கட்டும் (10.17.3).

    வாயு உன்னைக் காப்பாற்றட்டும். தொலைவிலுள்ள அந்த இடத்துக்கு அழைத்துச் செல்லட்டும். ஸவிதா உன்னைப் பிதிரர்கள் இடத்துக்கு அழைத்துச் செல்லட்டும் (10.17.4).

    பித்ருக்களுடன் ஒரே ரதத்தில் செல்கின்ற ஸரஸ்வதி இன்று நம்மிடையே வந்து மகிழட்டும், உணவு தரட்டும் (10.17.8).

    இப்படிப் பல தேவர்களையும் பித்ருக்களின் பொறுப்பாளர்களாகப் பரிசீலித்த பின் இறுதியாக யமன்தான் அந்த வேலையைச் செய்பவர் என்று தீர்மானிக்கிறார்கள். நிர்ருதி, அஸுநீதி என்ற பெயர்களும் யமனுக்குச் சில இடங்களில் அளிக்கப்படுகின்றன.

    வருணனின் பரிணாம வளர்ச்சிதான் யமன் என்று கருத இடம் உள்ளது. ஒரு மந்திரத்தில் யமன் வருணன் இருவரும் ராஜா என்று அழைக்கப்படுகிறார்கள்.

    செல்லுங்கள், நமது முன்னோர்கள் எங்கே சென்றார்களோ, அங்கே செல்லுங்கள். அங்கே, யமன் வருணன் ஆகிய இரு ராஜாக்களும் மகிழ்ந்து கொண்டிருப்பதைக் காணுங்கள் (10.14.7).

    வருணனின் ஆயுதமாக இருந்த பாசம் பிற்காலத்தில் யமனுக்கு உரியதாக ஆயிற்று. வேதத்தில் வருணன் மானிடர்களின் வாழ்க்கையை நெறிப்படுத்துபவராகவும்(கடிவாளம் போல மானிடர்களை இயக்குகிறார் 6.67.1), தவறுகளுக்குத் தண்டனை தருபவராகவும் கூறப்படுகிறார். யமன் என்ற சொல்லும் நெறிப்படுத்துபவர் என்ற அதே பொருள் உடையது.

    யமன் உயிரைக் கவர்பவராக ரிக் சொல்லவில்லை, ஆனாலும் யமனுக்கும் நம் மரணத்துக்கும் ஏதோ தொடர்பு உள்ளது என்றும் உணர்கிறார்கள்.

    அவர்தான் முதன் முதலாக, இறந்தவர் செல்வதற்கான ஓரிடத்தை ஏற்படுத்தினார் என்றும் அங்கு அவர் அங்கிரஸ்கள் என்ற பழமையான பித்ருக்களுடன் மகிழ்ந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. யமன் விரும்பும் வரைதான் நாம் உயிர் வாழ முடியும். எனவே யமனுக்கு சோமமும் யக்ஞமும் அளித்து மகிழ்விக்கிறார்கள்.

    யமனின் இருப்பிடம் செல்லும் வழியில் இரண்டு நாய்கள் இருப்பதாகவும் அவை அங்கு வாழ்வோரைக் காவல் காப்பதாகவும், புதிதாக இறந்தவர்களை அந்த நாயிடம் யமன் ஒப்படைப்பதாகவும்  சொல்லப்படுகிறது. அவை பெரும் பலம் உடையன, உயிர்களை வேட்டையாடுவதில் திருப்தி அடைவன, நீண்ட மூக்கு உடையன. அவை உயிர் வாழ்வோரைத் துன்புறுத்தாமல் இருக்க வேண்டும் என்று வேண்டப்படுகிறது.

    வேதகால ரிஷிகளுக்கு புறா ஒரு கெட்ட சகுனமாகத் தெரிகிறது. அது யமனின் தூதனாகப் பார்க்கப்படுகிறது.

    பித்ருக்கள்:
    பித்ருக்கள் என்போர் யார்? பழைய மண்டலங்களைப் பொறுத்தவரை, அங்கிரஸ், ப்ருகு, அதர்வான், மனு ஆகிய மனிதர் குல முன்னோடிகள்தான் பித்ருக்கள் என்று சொல்லப்படுகிறார்கள். இவர்களில் மனுதான் மனித குலத்தின் முதல் தந்தை. அங்கிரஸ் என்பவர் மறைபொருளாக இருந்த ஞான ஒளியைக் கண்டறிந்தவர். ப்ருகு அக்னியைக் கண்டறிந்தவர். அதர்வான் தேவர்களுக்கு அக்னி மூலம் ஆகுதி அளித்து வழிபடும் வழக்கத்தை ஏற்படுத்தியவர். இவர்கள் மிகுந்த போற்றுதலுக்கு உரியவர்களாயினர்.

    வளர்ச்சியா, தேய்வா?
    மற்ற மண்டலங்களில் நன்மை செய்வோர் மட்டுமே தேவர்களாகக் கருதி வணங்கப்படுகின்றனர். தேவர்களை மக்கள் அன்போடு நேசிக்கிறார்கள், வரச் சொல்லி அழைக்கிறார்கள். தீமை செய்பவர்கள் யாதுதானர், நிர்ருதி, ராட்சசர் என்று அழைக்கப்பட்டு இகழப்படுகிறார்கள். பத்தாவது மண்டலத்தில் நமக்கு மனதுக்குப் பிடிக்காத செயலைச் செய்யும் யமன் தேவனாகக் கருதப்படுகிறார். அவரிடம் பயந்து கொண்டு மரியாதை செய்கிறார்கள். இங்கே வராதே, குழந்தைகளைத் தொடாதே என்று அவர் வேண்டப்படுகிறார்.

    முந்தின மண்டலங்களில், அமரத்துவத்தை அடைந்து தேவர்களோடு சேர்ந்து வாழ்வதுதான் மனித வாழ்வின் லட்சியம் என்பது பல வகையாலும் வற்புறுத்தப்-படுகிறது. சந்ததி விருத்தி மூலமும், சோம பானத்தை அருந்துவது மூலமும் அமரத்துவத்தை அடையலாம் என்றாலும் நிலையான அமரத்துவத்தை கடுமையான உழைப்பின் மூலம், சாதனைகள் மூலம்தான் அடைய முடியும் என்று சொல்லப்பட்டது. இதற்கு எடுத்துக்காட்டாக ரிபுக்களின் வரலாறு கூறப்பட்டது. அங்கிரஸ்கள் கூட உழைப்பாலும், நற்செயல்களாலும் பணி எனப்பட்ட பகைவர்களை வென்று இறையருளைப் பெற்றதாகவும் அமரத்துவம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

    பத்தாவது மண்டலத்தில், இறந்தவர் அனைவரும் ஒளி உடல் பெற்று  பித்ருக்களாகி விடுகிறார்கள், தேவர்களோடு சேர்ந்து வாழ்கிறார்கள் என்ற கருத்து காணப்படுகிறது. ஒருவன் இறப்பதன் மூலமே பித்ரு ஆகி விடுகிறான், தேவர்களோடு சேர்ந்து வாழத் தொடங்குகிறான், சோம பானத்துக்கும் யக்ஞ ஆகுதிகளுக்கும் உரியவன் ஆகிவிடுகிறான் என்ற இக் கருத்து முந்திய காலத்தின் உயர்ந்த லட்சியத்தை நீர்க்கச் செய்தது போல உள்ளது.

    யமன் பற்றியும் பித்ருக்கள் பற்றியுமான இக் கருத்துகள் வேத சமயத்தின்  மையக் கருத்தின் உற்சாகத்திற்கு முரணாக உள்ளன.

    அதே நேரத்தில், சமய சிந்தனை வேறு ஒரு திசையில் வளர்ந்திருப்பதையும் காண்கிறோம். உயிர் போன உடலை எரித்த பின்னும் அதில் ஏதோ ஒன்று மீதம் இருக்கிறது, அது நிலையானது என்ற கருத்து புதிதாக ஏற்படுகிறது.

    அக்னியே, அவனை எரித்த பின் அவனுடைய உடலில் மீதம் இருப்பது புதிய உடலையும் ஆயுளையும் பெற்று பித்ருக்களிடம் செல்லட்டும். (10.16.5)

    எரித்த பின் என்ன மீதம் இருக்கும்? சாம்பல் இங்கேயேதான் இருக்கிறது, பித்ரு லோகத்திற்குச் செல்வதில்லை. தீயினால் பாதிக்கப்படாத ஒன்று உடலில் உயிர் போன பிறகும் இருக்கிறது என்ற இந்தக் கருத்து பிற்காலத்தில் வளர்ந்து, நீரால் நெருப்பால் பாதிக்கப்படாத, என்றும் நிலையாக உள்ள ஆத்மா என்று அழைக்கப்பட்டது. உபநிடதங்களின் ஆத்மா பற்றிய கருத்துகளுக்கு விதை இங்குதான் இருக்கிறது. (ஸம்ஹிதையில் ஆத்மா, அஸு, மனஸ் என்ற மூன்று சொற்களும் உயிரைக் குறிப்பன. உபநிடதங்களில் ஆத்மா என்பது உயிர் அல்லாத வேறு ஒன்றைக் குறிப்பதாக உள்ளது.)

    பித்ரு லோகம்:
    பித்ரு லோகம் என்ற பெயர் ரிக் வேதத்தில் காணப்படவில்லை. உயரத்தில் உள்ள ஒரு இடம். அங்கு யமன்தான் முதன் முதலில் சென்றார். அங்கு அங்கிரஸ்களுடன் மகிழ்ந்து இருக்கிறார். மனிதர்களை அங்கு ஒன்று சேர்க்கிறார். அந்த இடத்திற்கு வழி காட்டி அழைத்துச் செல்கிறார். இறந்தவர்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுத்து பித்ருக்களுடனும் தேவர்களுடனும் சேர்ந்து வாழச் செய்கிறார். இறந்தவர் அந்த இடத்தை  அடையும் முன், ஒளிமயமான ஒரு புதிய சரீரத்தை அடைகிறார் என்ற கருத்து சொல்லப்படுகிறது.

    பித்ரு லோகத்தை அடைந்தவன் பித்ருவாகவே ஆகிவிடுகிறான். பித்ருக்கள் ஒளியில் வசிக்கிறார்கள். அவர்கள் உண்மை பேசுபவர்கள். தேவர்களுடன் பயணம் செய்பவர்கள். தேவர்களைப் போல தர்ப்பை ஆசனத்தில் அமர்ந்து சோம பானம் செய்கிறார்கள். யக்ஞங்களை ஏற்று மகிழ்கிறார்கள்.  தேவர்களுக்கு உணவு எடுத்துச் செல்வது போல, அக்னி பித்ருக்களுக்கும் உணவு எடுத்துச் செல்கிறார். பித்ருக்கள் மக்களுக்கு சந்ததியும் செல்வமும் அருள வல்லவர்கள். தவறு செய்தவர்களைத் தண்டிக்கிறார்கள்.  வேண்டினால் மன்னிப்பார்கள். தேவர்களோடு சேர்ந்து வாழ்ந்தாலும் பித்ருக்கள் தேவர்களாவதில்லை. அவர்களின் இடத்துக்குச் செல்லும் பாதை தேவர்களின் பாதையிலிருந்து வேறானது என்று சொல்லப்படுகிறது(10.18.1). இவர்களோடு யமனும் நாம் அளிக்கும் ஹவிஸ்களை ஏற்றுக் கொள்கிறார்.

    பூமியில் பிறந்த மனிதர்கள் அவரவரும் தங்கள் தங்கள் வழியில் செல்கின்றனர். எந்த வழியில் போனாலும் முடிவில் முன்னோர்கள் எங்கு சென்றார்களோ அங்குதான் அந்தப் பாதைகள் அழைத்துச் செல்கின்றன (10.14.2).

    இந்த மேய்ச்சல் நிலம் நம்மிடமிருந்து பறிக்கப்பட முடியாதது என்கிறார் ரிஷி. அதாவது எல்லோரும் இந்த இடத்திற்கு உரிமை உடையவர்கள், எல்லோரும் அங்கு சென்றுதான் ஆகவேண்டும்.

    கீழானவர்கள், மேலானவர்கள், இடைப்பட்டவர்கள் ஆகிய பித்ருக்கள் சோம பானத்துக்கு உரிமை உடைவர்கள். உயிர் நீத்தலை அடைந்த, மென்மையான, நேர்மையான அவர்கள் எங்கள் அழைப்புக்கு இணங்கி எங்களைக் காப்பாற்றட்டும் (10.15.1).

    இறந்த உடல்களுக்கு ஸம்ஸ்காரம்:
    உடல்களை எரிப்பது வழக்கத்தில் இருந்ததை அறிகிறோம். அந்த இடத்தில் மீண்டும் புல் முளைக்க வேண்டும் என்று அக்னியிடம் பிரார்த்தனை செய்யப்படுகிறது (10.16.13).

    இறந்த உடன் உடலை எரிக்காமல் ஓரிரு நாட்கள் திறந்த வெளியில் வைத்திருந்து பின்னர் எரிப்பதும் வழக்கில் இருந்திருக்கிறது. அதனால் நரி, கழுகு முதலியன வந்து உடலைச் சிதைப்பதும் நடந்திருப்பது அறியப்படுகிறது. மீண்டும் உயிர் வந்து உடலில் குடியேறும் என்று அவர்கள் எதிர்பார்த்திருக்கலாம்.

    கறுப்புப் பறவையோ, எறும்போ, பாம்போ, நரியோ உடலில் என்ன காயம் ஏற்படுத்தி இருந்தாலும், எல்லாவற்றையும் விழுங்கும் அக்னி அதைச் சரி செய்யட்டும் (10.16.6).   

    உடல் எரிக்கப்பட்டவுடன்,
    கண்ணை சூரியன் எடுத்துக் கொள்கிறது, ஆத்மா காற்றால் எடுத்துச் செல்லப்பட்டு அதனதன் தர்மப்படி பூமிக்கோ ஆகாயத்துக்கோ, நீருக்கோ, தாவரங்களுக்கோ தன் எல்லா உறுப்புகளுடன் செல்கிறது (10.16.3).

    இறந்த உடலைப் புதைப்பதும் சொல்லப்பட்டிருக்கிறது:
    அக்னியில் இடப்பட்டாலும் இடப்படாவிட்டாலும் ஆகாயத்தின் மத்தியில் அவர்கள் மகிழட்டும். அவர்களுக்கான உடம்பும், செல்லும் பாதையும், அரசே, உங்கள் விருப்பப்படி ஏற்படுத்துங்கள் (10.15.14).

    குழியில் உடலை வைத்தபின் அதன் மேல் மண்ணைத் தூவும்போது, இந்த மண் உடலைக் கனமாக அழுத்தாமல் குழந்தையை மூடும் தாயின் ஆடை போல மென்மையாக இருக்கட்டும் என்று வேண்டப்படுகிறது.

    உடலை ஸம்ஸ்காரம் செய்த இடத்தைச் சுற்றி வட்டமாகக் கல்லால் சுவர் போல் எழுப்பினார்கள். அதைத் தாண்டி யமன் வரக் கூடாது என்பது அவர்களது பிரார்த்தனை. அந்தச் சுவருக்கு வெளிப்புறம் இருப்பவர்கள் எந்தத் தீங்கும் வராமல்  நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் என்று வேண்டப்படுகிறது.

    அந்த இடத்தில் நிற்காமல் சென்று விடுங்கள் என்று மக்கள் வேண்டப்படுகிறார்கள்.

    இங்கிருந்து சென்று விடுங்கள். பல திசையிலும் பறந்து செல்லுங்கள். இது பித்ருக்கள் அவனுக்காக ஏற்படுத்திய இடம். யமன் அவனுக்காக நீரும் ஒளியும் உள்ள ஒரு இடத்தைக் கொடுத்திருக்கிறார்.

    இனிய உறவினனை இழந்த ஒருவனின் மன நிலையை அறிவிக்கும் கீழ்க்கண்ட மந்திரங்களைப் பாருங்கள்.

    அக்னியே, அவனைச் சுட்டுவிடாதே. அவனுடைய உடம்பின் பாகங்களோ, தோலோ சிதறாமல் இருக்கட்டும். பக்குவப்படுத்தியபின் அவனைப் பித்ருக்களின் இடத்துக்குச் செல்லும் வழியில் அனுப்பி வைப்பாயாக (10.16.1).        

    உன் உடலை அக்னி சுடாதிருக்கட்டும். நெய்யும் கொழுப்பும் உன் தேகத்தை மூடட்டும். உன்னைத் தாக்க வரும் அக்னியின் உக்ரம் உன்னைப் பாதிக்காது இருக்கட்டும் (10.16.7).

    அக்னியே, உன் பங்குக்கான ஆட்டை உன் சுவாலைகள் எரிக்கட்டும். இந்த மனிதனை நல்ல செயல்கள் செய்தவர்களின் உலகத்துக்கு அழைத்துச் செல்க (10.16.4). மாமிசம் உண்ணும் அக்னி யமனுடைய உலகத்துக்குச் செல்லட்டும். தேவர்களுக்கு ஆகுதி அளிக்கும் இந்த அக்னி தன் வேலையைச் செய்யட்டும் (10.16.9).

    விதவை ஆனவள் தவிர்த்த பிற பெண்கள் முதலில் வீட்டுக்குச் செல்லட்டும். அவர்கள் ஆடை ஆபரணங்களை அணிந்து துயரம் இல்லாமல் கணவனுடன் வாழட்டும் (10.18.7).

     இனி மேற்கொண்டு மரணம் ஏற்படாது, நாம் இனி சிரித்துக் கொண்டும் ஆடிக் கொண்டும் இருக்கலாம். நீண்டகாலம் வாழலாம் என்று நம்புகிறார்கள், வேண்டுகிறார்கள் (10.18.3).

    Share
  • கம்பனும், வால்மீகியும் – இராமாயண இலக்கிய ஒப்பீடு – 1

    கம்பனும், வால்மீகியும் – இராமாயண இலக்கிய ஒப்பீடு – 1

     அகலியை சாப விமோசனம், இராமன்-சீதை முதல் சந்திப்பு

    ஒரு அரிசோனன்

    இராமாயணம் என்றாலே நம் நினைவுக்கு வருவது வால்மீகியும், கம்பனும்தான். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இந்துக்களின் மனதில் படிந்து நிலைத்து நிற்கும் காவியமான வால்மீகியின்  இராமாயணத்தைப் பலரும் பலப்பல மொழிகளில் எழுதியிருந்தாலும், வால்மீகியின் மூலத்திற்கு அடுத்தபடியாக உயர்வாக கருதப்படுவது, கவிப் பேரரசன் கம்பனின் ராமகாதைதான்.  அவனது கவி நயத்தைச் சுவைப்பதற்காவது, தமிழைக் கற்க வேண்டும் என்றால் அது மிகையாகாது (not an exaggeration). இருபத்தினான்காயிரம் இருவரிக் குறட்பாக்களில் வால்மீகி எழுதிய காவியத்தை, பன்னிரண்டாயிரம் நால்வரி விருத்தப்பாக்களில் வடிவமைத்தான் கம்பன் என்றால், கம்பனின் இராமகாதையும் 48000 வரிகைளைக் கொண்டதுதானே? அதிலும் கம்பன் உத்தர காண்டத்தை எழுதவில்லை;  ஓட்டக் கூத்தரின் உத்தர காண்டமே இராமாயணத்துடன் சேர்த்து வைக்கப்படுகிறது.

    வால்மீகி முனிவர் இராமாயணத்தை நமக்கு விட்டுச் சென்று சில ஆயிரம் ஆண்டுகள் சென்றுதான் கம்பன் தனது இராமகாதையைத் தீட்டினான். தமிழ்க் கவித்திறன் மிக்க கம்பன், வடமொழியான சம்ஸ்கிருதத்தையும் நன்கு கற்று அறிந்திருக்கத்தான் வேண்டும். இல்லாவிட்டால், வால்மீகியின் கவிப்பெருக்கை சுவை மாறாமல், கருத்து மாறாமல் அளித்திருக்க இயலாது.

    ஆயினும், கம்பன் இராமாயணத்தை தமிழுலகுக்குத் தரும்பொழுது, தமிழ் மரபுகளை ஒட்டியே வடிவமைத்தான். எனது ஒப்பீட்டில் வால்மீகியின் வடமொழி மூலத்தையும் (மொழி பெயர்ப்பு அல்ல, வடமொழி மூலம் மட்டுமே), கம்ப இராமாயணத்தையும் மட்டுமே துணை கொண்டிருக்கிறேன்.  எனது வடமொழி அறிவு தமிழ் அறிவு அளவுக்கு ஈடானதல்ல. எனவே, தவறிருந்தால், பிழை பொறுக்குமாறு வடமொழி அறிஞர்களை வேண்டிக் கொள்கிறேன்.

    ஆராய்ந்து பார்த்ததில் ஐந்து நிகழ்ச்சிகள் மிகவும் முக்கியமாகக எனக்குப் பட்டன. ஆகவே, கம்பனையும், வால்மீகியையும் ஒப்பிட்டு, என் மனதில் தோன்றியதைத் தமிழ் மக்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எனது ஒப்பீடு காவியங்களின் வேறுபாடு பற்றி மட்டுமே. எதையும் உயர்த்தியோ தாழ்த்தியோ சுட்டிக் காட்டுவதற்காக எழுதப் பட்டதல்ல. என்னுடன், இராமாயணப் பாலையும் தேனையும் கலந்து பருகுமாறு தமிழன்பர்களை அழைக்கிறேன்.

    முதலாவதாக, பால காண்டத்தில் அகலியை பாவ விமோசனத்திற்கும், இராமன்-சீதையின் முதல் சந்திப்புக்கும் உங்களை அழைத்துச் செல்கிறேன்…

    வால்மீகி சொல்வதற்கும், கம்பனின் வர்ணனைக்கும் வேறுபாடு இங்கு காணப் படுகிறது…

    அரக்கி தாடகையைக் கொன்று, முனிவர்களின் வேள்வியைக் காத்தபின், அவர்களின் ஆசியுடன், இராமனையும், இலக்குவனையும், மாமுனிவர் விசுவாமித்திரர் மிதிலைக்கு அழைத்து வருகிறார்.

    வால்மீகியின் வழித்தடம் நடந்து செல்வோம்:

     

    मिथिल उपवने तत्र आश्रमम् दृश्य राघवः |

    पुराणम् निर्जनम् रंयम् पप्रच्छ मुनि पुंगवम् || १-४८-११

    மிதில உபவனே தத்ரா ஆஸ்’ரமம் திருஸ்’ய ராகவ: |

    புராணம் நிர்ஜனம் ரம்யம் பப்ரச்ச முனி புங்கவம் || 1-48-11

    इदम् आश्रम संकाशम् किम् नु इदम् मुनि वर्जितम् |

    श्रोतुम् इच्छामि भगवन् कस्य अयम् पूर्व आश्रमः || १-४८-१२

    இதம் ஆஸ்’ரமம் சங்காஸ’ம் கிம் நு இதம் முனி வர்ஜிதம் |

    ஸ்’ரோதும் இச்சாமி பகவன்னு கஸ்ய அயம் பூர்வ ஆஸ்ரம: || 1-48-12

    அங்கே மிதிலைக்கு அருகில் இருக்கும் சோலையில் பழையதாகவும், மனிதர்கள் இல்லாததும், மனத்தைக் கவரும் ஆசிரமத்தை இரகுவின் வழித்தோன்றல் (இராமன்) பார்த்தான்.  (அதைப்பற்றி) முனிவரில் சிறந்தவரை வினவினான்.

    “பூசிக்கத்தகுந்தவரே! ஆசிரமத்தை நிகர்த்தத்தும் முனிவரால் விடப்பட்டதுமான இந்த ஒரு  ஆசிரமம் உண்மையில் முன்னால் யாருடையது? செவிமடுக்க விரும்புகிறேன்”

    முனிவர் கௌதமரும் அவர் மனைவி பேரழகி அகலியையும் வசித்து வந்த ஆசிரமம் அது என்றார். அகலியையின் அழகில் மயங்கிய விண்ணவர் கோன் இந்திரன், முனிவரைப் போன்று வேடம் பூண்டு அவளுடன் கள்ள உறவு கொள்ள வந்த நிகழ்ச்சியை விவரிக்கத் துவங்கினார்.

    मुनि वेषम् सहस्राक्षम् विज्ञाय रघुनंदन |

    मतिम् चकार दुर्मेधा देव राज कुतूहलात् || १-४८-१९

    முனி வேஷம் சஹஸ்ராக்ஷம் விக்ஞாய ரகுநந்தன |

    மதிம சகார துர்மேதா ராஜ குதூஹலாது || 1-48-19

    अथ अब्रवीत् सुरश्रेष्ठम् कृतार्थेन अंतरात्मना |

    कृतार्था अस्मि सुरश्रेष्ठ गच्छ शीघ्रम् इतः प्रभो || १-४८-२०

    आत्मानम् माम् च देवेश सर्वदा रक्ष गौतमात् |

    அத அப்ரவீது ஸுரஸ்’ரேஷ்ட்டம் க்ருதார்த்தேன அந்தராத்மணா |

    க்ருதார்த்தாஸ்மி ஸுரஸ்’ரேஷ்ட்ட கச்ச ஸீ’க்ரம் இத: ப்ரபோ ||

    ஆத்மானம் மாம் ச தேவேஸ’ ஸர்வதா ரக்ஷ கௌதமாது |  1-48-20

    ரகுவின் வழிதொன்றலே (இராமா)! தபஸ்வியின் உருக்கொண்டு வந்த ஆயிரம் கண்ணனை (இந்திரனை) அறிந்துகொண்டு, தீய அறிவினால் வானவர் அரசனின் மகிழ்வுக்காக (உறவு கொள்ள) மனதில் முடிவெடுத்தாள்

    பிறகு, (அச்)செயலின் (உடலுறவின்) பயனினால் மனநிறைவு அடைந்தவளாக, தேவர்களில் சிறந்தவனிடம் (இந்திரனிடம்) சொன்னாள்.  “வானவரில் சிறந்தவரே!  (இச்)செயலின் பயனை அடைந்தேன்.  பிரபோ!  நீர் விரைவில் இங்கிடமிருந்து செல்லும்.  விண்ணவர் கடவுளே, தம்மையும், என்னையும், எப்பொழுதும் கௌதமரிடமிருந்து காப்பீராக!”

    அதைக்கேட்டு அஞ்சிக் குடிலை விட்டு வெளிவந்த இந்திரனை, முனிவர் கௌதமர் பார்த்து விட்டார். குடிலில் நடந்ததையும் ஞானக் கண்ணினால் அறிந்து கொண்டார். தாங்க இயலாத சினம் கொண்டு, ஆண்மையை இழந்து தவிக்குமாறு இந்திரனுக்குச் சாபமிட்டார்.

    तथा शप्त्वा च वै शक्रम् भार्याम् अपि च शप्तवान् |

    इह वर्ष सहस्राणि बहूनि निवषिस्यसि || १-४८-२९

    ததா ஸ’ப்த்வா ச வை ஸ’க்ரம் பார்யாமபி ச ஸ’ப்தவான் |

    இஹ வர்ஷ ஸஹஸ்ராணி பஹூனி நிவஷிஸ்யஸி ||

    वायु भक्षा निराहारा तप्यन्ती भस्म शायिनी | 1-48-29

    अदृश्या सर्व भूतानाम् आश्रमे अस्मिन् वषिस्यसि || १-४८-३०

    வாயு பக்ஷா நிராஹாரா தப்யந்தீ பஸ்ம ஸா’யினீ |

    அத்ருஸ்’யா ஸர்வ பூதானாம் ஆஸ்ரமே அஸ்மின்னு வஷிஸ்யஸி || 1-48-30

    இந்திரனைச் சபித்த பின்னரும், (சினம் தணியாமல் தன்) மனைவியையும் சபித்தார்.  “பல்லாயிரம் ஆண்டுகள் இங்கு குடியிருப்பாய். உணவின்றி, காற்றையே குடித்து, சாம்பலில் படுப்பவளாகத் துடிதுடிப்பாக. எல்லா உயிரினங்களாலும் காண இயலாதவளாக இந்த ஆசிரமத்தில் வசிப்பாயாக.

    यदा तु एतत् वनम् घोरम् रामो दशरथ आत्मजः |

    आगमिष्यति दुर्धर्षः तदा पूता भविष्यसि || १-४८-३१

    யதா து ஏதத் வனம் கோரம் ராமோ தஸ’ராத்மஜ: |

    ஆகமிஷ்யதி துர்தர்ஷ: ததா பூதா பவிஷ்யஸி || 1-48-31

    எப்போது இப்படிப்பட்ட கோரமான சோலைக்கு தசரதனின் புதல்வனும், வெல்ல முடியாதவனுமான இராமன் வருகிறானோ, அப்பொழுது தூய்மையை அடையப் பெறுவாய்..

    तस्य आतिथ्येन दुर्वृत्ते लोभ मोह विवर्जिता |

    मत् सकाशे मुदा युक्ता स्वम् वपुः धारयिष्यसि || १-४८-३२

    தஸ்ய ஆதித்யேன துர்வ்ருத்தே லோப மோஹ விவர்ஜிதா |

    மத் ஸகாசே முதா யுக்தா ஸ்வம் வபு: தாரயிஷ்யஸி || 1-48-32

    “தீய நடத்தையாளே (நடத்தை கெட்டவளே)! அவனை விருந்தோம்புவதினால் பேராசையிலிருந்தும், மயக்கத்திலிருந்தும் விடுவிக்கப் படுவாய். என் அருகாமையில் மகிழ்ச்சியைப் பெற்று, உனது வடிவத்தை அணிந்திருப்பவள் ஆகிறாய் (பெறுகிறாய்).”

    இவ்வாறு, அகலியையின் கதையைச் சொல்லி, முனிவர் கௌதமரின் குடிலில் நுழைந்து, அவளது சாபத்தை நீக்கும்படி இராமனிடம் விசுவாமித்திரர் சொன்னார். அதை ஏற்றுக்கொண்டு, முனிவரின் பின்னால், இராமனும், இலக்குவனும், குடிசைக்குள் நுழைந்தனர். உடனே, சாபம் நீங்கப் பெற்று, அகலியை இராமனின் கண்களுக்குப் புலப்பட்டாள். இருவரும், அவள் தாள் பணிந்து வணங்கினர். கௌதமரின் சொற்களை நினைவில் நிறுத்தி, இருவரின் கால்களைக் கழுவி, கைகளைக் கழுவ நீர் வழங்கி முறைப்படி உபசரித்தாள் திரும்பி வந்த கௌதமரும், அவளை ஏற்றுக்கொண்டார் என்று முடிக்கிறார், மாமுனி வால்மீகி.

    இனி, இந்நிகழ்ச்சியைக் கம்பரின் கண்களால் காண்போம்:

     

    இணைய நாட்டினில் இனிதுசென்று இஞ்சி சூழ் மிதிலை

    புனையும் நீள்கொடிப் புரிசையின் புறத்து வந்து இறுத்தார்

    மனையின் மாட்சியை அழித்து இழி மாதவன் பன்னி

    கனியும் மெட்டு உயர் கருங்கல் ஓர் வெள்ளிடை கண்டார்.  – பால காண்டம் — 1.470

    இத்தகைய நாட்டிற்கு இனிமையாகச் சென்று, நீண்ட கொடிகளை (மாலையாகப்) சூடிக்கொண்டு இருக்கும் மதில்கள் சூழும் மிதிலை நகரத்தின் புற மதிலின் அருகாமையை அடைந்தனர். இல்லற வாழ்வின் சிறப்பை (கற்பை) அழித்ததால் இழிந்து, மாபெரும் தவசியின் (கௌதமரின்) சாபத்தால் வெற்றிடத்து மேட்டில் ஒரு கருங்கல்லைக் கண்டனர்.

    கண்ட கல்மிசைக் காகுத்தன் கழல் துகள் கதுவ

    உண்ட பேதைமை மயக்கு அற வேறுபட்டு உருவம்

    கொண்டு மெய் உணர்பவன் கழல் கூடியது ஒப்ப

    பண்டை வண்ணமாய் நின்றனள் மாமுனி பணிப்பான்.  – 1.471

     (மனத்தில்) உள்வாங்கிய அறியாமை என்னும் மயக்கம் நீங்கியதும் மெய்ஞானத்தை உணர்ந்து வேறு (ஞான) உருவம் அடைந்து (இறைவனின்) திருவடிகளில் சேர்வது போல, (அவர்கள்) பார்த்த கல்லின் மீது காகுத்தர் வழிவந்தவனின் (இராமனின்) கால் தூசி பட்டவுடன் (அகலியை) முந்தைய (அழகு) வடிவத்தில் நின்றாள். பெரும் முனிவரும் (விசுவாமித்திரரும்) (அப்பெண் முனிவர் கௌதமரின் மனைவி அகலியை என்று) கூறினார்…

    …முன்னை ஊழ் வினையினாலோ நடு ஒன்று முடிந்ததுண்டோ

    அன்னையே அனையாட்கு இங்கன் அடுத்தவாறு அருளுக என்றான். – 1.473

    “முன்னாளின் (முன்பிறப்பின்) தீய செயலினாலா, (இப்பிறப்பில்) நடுவில் ஒன்று (செய்து) முடிந்ததால் உண்டாகியதா? தாய்க்கு நிகரானவளுக்கு இவ்வாறு (நிகழ்ந்ததை) அடுத்துக் கூறி அருளுங்கள்” என்று (இராமன்) கேட்டான்.

    “வானவர்களுக்கு அதிபனான இந்திரன், அகலியையின் அழகில் மயங்கி, அவளை அடைய வேண்டும் என்ற தீய எண்ணம் கொண்டான். அதற்குத் தகுந்த தருணத்தை நோக்கிக் காத்திருந்த அவன், ஒரு நாள் கௌதம முனிவரை அகலச் செய்தான்.” என்று சொன்ன விசுவாமித்திரர், மேலும் தொடர்ந்தார்…

    பொய்இலா உள்ளத்தான் தன் உருவமே கொண்டு புக்கான்.  – 1.475

    புக்கு அவளோடும் காமப் புது மண மதுவின் தேறல்

    ஒக்க உண்டு இருத்தலோடும் உணர்ந்தனள் உணர்ந்தபின்னும்

    தக்கதென்று என்ன ஒராள் தாழ்ந்தனள் இருப்ப தாழா

    முக்கணான் அனைய ஆற்றல் முனிவனும் முடுக்கி வந்தான்.  – 1.476

    மனத்தில் பொய்மையே இல்லாதவரின் (கௌதமரின்) உருவத்தை மேற்கொண்டு (குடிலில்) நுழைந்தான்.  புகுந்து, காமம் என்ற புது மதுவின் மணத்தை உடைய கள்ளை அவளுடன் உண்டு (மயங்கி) இருந்தபோது, (தன்னுடன் இருப்பவன் இந்திரன் என்று அகலியை) உணர்ந்தாள். உணர்ந்த பின்னும் (அது கற்புக்கு) தகுந்தது அல்ல என்று (அதைத்) மறுக்காமல் தாழ்ந்த (நிலைக்கு) வந்தாள்.  (அப்படி) இருக்கும் போது தாழ்ந்ததைச் செய்யாத, முக்கண்ணனுக்கு இணையான ஆற்றல் கொண்ட முனிவர் (கௌதமர்) விரைவாக வந்தார்.

    …இந்திரன் ஒரு பூனையின் வடிவில் தப்பிச் செல்ல முயன்றான். அதை அறிந்த கௌதமர் இந்திரனுக்கு சாபம் கொடுத்தார்…

    ஆயிரம் மாதர்க்குள்ள அறிகுறி உனக்குண்டாக என்று

    ஏயினான் அவைஎலாம் வந்து இயைந்தன இமைப்பின் முன்னம். —  1.478

    மெல்லியலாளை நோக்கி விலைமகள் அனைய நீயும்

    கல்இயல் ஆதிஎன்றான் கருங்கல் ஆய்மருங்கு வீழ்வாள்.  —  1.479

    பிழைத்தது பொறுத்தல் என்றும் பெரியவர் கடனே அன்பால்

    அழல் தருங் கடவுள் அன்னாய் முடிவு இதற்கருளுக என்ன

    தழைத்து வண்டு இமிரும் தண் தார்த் தசரதராமன் என்பான்

    கழல் துகள் கதுவஇந்தக்கல் உருத் தவிர்தி என்றான்.  – 1.480

    அண்ணலே உன் கை வண்ணம் அங்கு கண்டேன் கால் வண்ணம் இங்கு கண்டேன்.  – 1.481

    …பெண்களின் அடையாளம் (பெண்குறி) ஆயிரம் உன்னிடம் உண்டாகட்டும் என்று சபித்தார். கண் இமைக்கும் நேரத்திற்குள் அவை (இந்திரன் உடம்பில்) வந்து சேர்ந்தன.

    பெண்ணைப் (அகலியையை) பார்த்து, “வேசியைப் போன்று நடந்த நீயும் கல் ஆகக் கடவாய்!” என்றார்.  (அவளும்) கருங்கல் ஆகித் தடுமாறி விழப் போனாள். 

    “(மற்றவர் செய்யும்) தவறுகளைப் அன்புகொண்டு பொறுத்துக்கொள்ளுதல் சான்றோர்களின் கடமை ஆகும்.  நெருப்பைக் கக்கும் (கண்ணுள்ள) கடவுளைப் போன்றவரே, இதற்கு (இந்தச் சாபத்திற்கு) ஒரு முடிவை எனக்கு அருளுக” என்கவே (என்று அகலியை கேட்கவே), “(நன்கு தேனைப் பருகி) செழித்த வண்டுகள் (ரீங்கார) ஒலி எழுப்பக்கூடிய குளிர்ந்த மலர் மாலை அணிந்த தசரத(னின் மகன்) இராமன் என்பவன் கால் தூசு பட்டு இந்தக் கல் உருவத்தை தவிர்ப்பாய்!” என்றார் (கௌதமர்)…

    (இப்படி அகலியையின் கதையைச் சொல்லி முடித்த விசுவாமித்திரர்), “என் அன்புக்கு உரியவனே, (அரக்கி தாடகையைக் கொன்ற) உன் கைத்திறனை அங்கு (வேள்வி நடந்த இடத்தில்) கண்டேன்.  உன் காலின் (கருணைத்) திறத்தை (அகலியை சாபவிமோசனம் மூலம்) இங்கு கண்டேன்” (என்று வியந்தார்.)

    ஒப்பீடு

    அகலியையின் கதையை இருவருமே கிட்டத்தட்ட ஒரே மாதிரித்தான் சொல்லி இருக்கிறார்கள்.  இருப்பினும் சொன்ன முறையிலும், உட்பொருள்களிலும் வேறுபாடுகள் உள்ளன.  அகலியை தன் கணவன் உருவில் வந்து தன்னைச் சேர்ந்தவன் தன் கணவன் அல்ல என்று தெரிந்தும், அதற்கு உடன்படுவது தவறு, கற்புடைமை ஆகாது என்று அறிந்தும் அத்தவறைச் செய்தாள் என்றுதான் இருவருமே எழுதி இருக்கிறார்கள்.

    அவள் ஏன் அப்படிச் செய்யத் துணிந்தாள் என்பதற்கு கம்பர் விளக்கம் தரவில்லை.

    ஆனால் வால்மீகியோ दुर्मेधा என்ற ஒரு சொல்லினாலும், கள்ள உறவிற்குப் பிறகு தான் அதனால் மன நிறைவு அடைந்ததை அகலியை இந்திரனிடமே சொல்லி, அதைத் தன் கணவரிடமிருந்து மறைத்து, இருவரையும் எப்போதும் காக்குமாறு வேண்டிக்கொள்வதைக் குறிப்பிடுவதின் மூலம் அகலியையின் மன நிலையை விளக்குகிறார்.

    அகலியைக்கு தீய நினைவுகள், கெட்ட எண்ணங்கள் (दुर्मेधा – vanity) இருந்தன. அவை தன் அழகு குறித்த செருக்கால் அவளிடம் தோன்றின. தனது அழகை வானவர்கோன் இந்திரனே விரும்புகிறானே, அந்த அழகினால் கவரப்பட்டு, தன்னை அடைவதற்காகக் கடும் தவத்தின் வல்லமையால் அவனையே சுட்டெரிக்கும் சாபம் கொடுக்க வல்ல கௌதம முனிவரின் கோபத்தையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறானே என்ற மனக் களிப்பும் இருந்தது.  அதுதான் அவளுக்கு அந்தக் கள்ள உறவு உள்மனதில் நிறைவைத் தந்தது என்று இந்திரனிடம் கூறுவதாகக் குறிப்பிட்டிருக்கிறார் என்று படுகிறது.

    அதைச் சொல்ல விருப்பம் இல்லாத காரணத்தால், கம்பர் அது பற்றி மௌனம் சாதிக்கிறார் என்றும் தோன்றுகிறது. ஆயினும் கம்பர் தனது உள்ளத்தில் அகலியைபால் எழுந்த குமுறலை, கௌதம முனிவர் வாய் மூலமாக “விலைமகள் அனைய” என்று பழிக்கச் செய்து, அவளை அடித் தளத்திற்கே தள்ளி விடுகிறார்.

    கற்பிற்கு அவர் கொடுத்த தலை சிறந்த மதிப்பு அவரை அவ்வாறு எழுதத் தூண்டியது போலும்!  ஆகவே, உயிரை விடக் கற்பைச் சிறப்பாக எண்ணாத கல் நெஞ்சக்காரி அகலியை என்று எண்ணி, கல்லாகச் சமைந்து போகுமாறு சாபம் பெற்றதாகக் காட்டுகிறார்.

    வால்மீகியோ, அகலியையின் அழகு வெளியார்க்குப் புலப்பட்டதுதானே இத் தவறுக்கு மூல காரணமாயிற்று என்று, அவள் யார் கண்ணுக்கும் புலப்படாமல் போகட்டும் என்று சபிக்கப்பட்டதாகப் புனைந்திருக்கிறார்.

    இருந்த பொதிலும், அகலியையின் கதையை அறிந்த பின்னும் அகலியையைத் தாயாகவே இராமபிரான் நோக்கினார் என்று இருவருமே எழுதியிருப்பது, இராமன் பெண்களுக்குக் காட்டும் மதிப்பை உணர்த்துவதாவே அமைந்து இருக்கிறது.

    இதனாலேயே, அகலியைக்கு சாபவிமோசனம் எப்படி நிகழ்ந்தது என்பதைச் சொல்வதில் இருவரும் மாறுபடுகிறார்கள்.

    கண்ணுக்குப் புலப்படாத நிலையில் அகலியை இருப்பதால், ஆசிரமத்தின் நிலை கண்டு, இராமன் வினவ, அகலியையைப் பற்றி விசுவாமித்திரர் விளக்குவதாக வால்மீகி வரைந்திருக்கிறார்.

    கம்ப நாட்டாரோ, கருங்கல்லாக இருந்த அகலியை, இராமனின் கால் தூசி பட்டுத் தன்னுருவத்தை அடைந்ததும், அந்த விந்தையான நிகழ்வைப் பற்றி விசுவாமித்திரர் தெளிவு படுத்துவதாக எழுதி இருக்கிறார்.  இதுதான் மாற்றத்தின் காரணம் என்று எனக்குப் படுகிறது.

    இந்திரனுக்குக் கொடுக்கப்பட்ட சாபத்திலும் இருவரும் மாறு படுகிறார்கள்.

    இந்திரனின் ஆண்மையே அவனைத் தவறான வழியில் நடத்திச் சென்றது என்று கருதிய வால்மீகி அவன்  ஆண்மை அழியட்டும் என்ற சாபத்தைப் பெற்றதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

    கம்பரோ, பிறன்மனை புகுந்தவனுக்கு மிகக் கொடிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று எண்ணுகிறார். எனவே, உடல் முழுதும் பெண் குறிகள் பரவி நிலைத்திருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டான் என்று பாடியிருக்கிறார்.  மேன்மையான நிலையில் இருக்கும் ஒருவன், செய்த தவற்றின் விளைவு அனைவர் கண்ணுக்கும் தெரியும் தண்டனையைப் பெறவைக்க வேண்டும், எதற்காக அத்தண்டனை கிடைத்தது என்பதும் தெள்ளத் தெளிவாகப் புலப்பட வேண்டும், அனைவரும் அவனைத் தூற்றவேண்டும், அவன் மனம் புழுங்கித் தன் தவற்றை உணர்ந்து திருந்த வேண்டும் என்றே, அத்தண்டனை கொடுக்கப் பட்டதாக நம்மை நினைக்க வைக்கிறார் என்பது நமக்கு விளங்குகிறது.

    இதனால், பிறன் மனை நோக்குவார்பால் தமிழருக்கு இருக்கும் வெறுப்பும் புலப்படுத்தப் படுகிறது.

    வால்மீகி சொல்லிச் சென்றதையே கம்பரும் வடித்திருந்தாலும், அவர் தமிழ் மரபை எவ்வாறு இந்நிகழ்ச்சியில் இழைத்து இருக்கிறார் என்று புலனாகிறது.

    இராமன்-சீதை முதல் சந்திப்பு

    சிவனாரின் வில்லை முறித்தபின்தான் இராமனும் சீதையும் மிதிலையில் சந்தித்தார்கள் என்று வால்மீகி முனிவர் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், கவிச் சக்கரவர்த்தி கம்பரோ மிதிலையில், கன்னி மாடத்தில் நின்ற சீதையை முதல் முதலாக இராமன் பார்த்து இருவரும் ஒருவருக்கு மற்றொருவர் தத்தம் உள்ளங்களைப் பறிகொடுத்ததாகப் புனைந்துள்ளார்.

    ஆகவே, இந்த விஷயத்தில் ஒப்பீடு எதுவும் செய்ய இயலாது. இருப்பினும், வால்மீகி ஏன் அப்படி எழுதினார் என்பதற்குத் தகுந்த சான்றுகள் இருப்பதால், அதையே ஒப்பீடாகப் பிறகு எழுதுகிறேன்.

    விசுவாமித்திர முனிவர், இராமன், இலக்குவனுடன் நாமும் சீதையைச் சந்திக்கச் செல்வோம்.

    பால காண்டத்தில், பத்தாம் படலமான மிதிலைக் காட்சிப் படலத்தின் துவக்கத்தில் கம்ப நாட்டார் இருபது வெண்பாக்களில் மிதிலையின் அழகைத் தீட்டியிருக்கிறார்.

    அப்படிப்பட்ட அழகோவியம் வால்மீகி இராமயணத்தில் காணப்படவில்லை.

    இராமன் மிதிலைக்குள் நுழையும் பொது அடித்த காற்றில் சுற்றியும் படர்ந்திருந்த கொடிகள் அசைந்தாடின.  படலத்தின் முதல் வெண்பாவில் அதை கம்பர் வர்ணிக்கும் பங்குதான் என்னே!

    கம்பரசத்தைப் பருகுவோம்!

    மை அருமலரின் நீங்கியான்செய் மாதவத்தின் வந்து

    செய்யவள் இருந்தாள் என்று செழு மணிக் கொடிகள் என்னும்

    கைகளை நீட்டி அந்தக் கடி நகர் கமலச் செங்கண்

    ஐயனை ஒல்லை வாஎன்று அழைப்பதுபோன்றது அம்மா.  – 1.486

    “நான் பெரிய தவத்தினைச் செய்யவே, குற்றமற்ற (தாமரை) மலரைத் துறந்துவிட்டு, அவள் (சீதை இங்கு) வந்து இருந்தாள்!” என்று நன்கு வளர்த்திருந்த அழகிய கொடிகளால் ஆன (தனது) கைகளை நீட்டி (ஆட்டி), செந்தாமரைக்கண்ணனை விரைந்து வா என்று மிதிலை நகரமே அழைப்பது போல இருந்ததம்மா.

    இந்தச் செய்யுளின் வாயிலாக சீதையைச் செந்தாமரையில் அமர்ந்திருக்கும் இலக்குமி என்றும், இராமனைச் செந்தாமரைக்கண்ணனான திருமால் என்றும் குறிப்பிட்டிருக்கிறார் கம்பர்.

    அது மட்டுமல்லாது, மிதிலை நகரமே மாபெரும் தவத்தைச் செய்து இலக்குமியின் அவதாரமான சீதையை அடைந்தது, தனது கைகளான மலர்க்கொடிகளை நீட்டி, திருமாலின் அவதாரமான் இராமனை அழைத்தது என்று புனைந்திருக்கிறார்.

    ஒருகணம் கண்களை மூடிக்கொண்டு, கம்பரின் வர்ணிப்பை நமது மனக்கண் முன்பு நிறுத்திப் பார்த்தோமானால், அவரது ஆழ்ந்த புலமை நமக்குப் புலனாகும்.

    …அழகு மிகுந்த மிதிலை மாநகரைக் கண்ணுற்றுக்கொண்டே வந்தவர்கள், கன்னிமாடத்தில் சீதையைக் காண்கின்றார். சீதையை முதன்முதலாக கம்பர் உருவகித்து இருப்பது நமது மனதைத் தொடுகிறது…

    உமையாள் ஒக்கும் மங்கையர் உச்சிக் கரம் வைக்கும்

    கமையாள் மேனி கண்டவர் காட்சிக் கரை காணார்

    இமையா நாட்டம் பெற்றிலம் என்றாரிரு கண்ணால்

    அமையாது என்றார் அந்தர வானத்தவர் எல்லாம்.  – 1.509

    மங்கையரால் தலைக்கு மேலே கைகூப்பி வணங்கத்தக்க உமையவளைப் போன்ற நற்குணம் கொண்டவளின் உருவத்தைக் கண்டவர், அந்த அழகின் எல்லையைக் கானா இயலாது போனார்கள். (வானவர்கள் போல கண்களை) இமைக்காமல் நோக்கும் திறன் இல்லது போனோமே என்று (வருந்தினர்).  விண்ணில் (குடியிருக்கும்) தேவர்கள் அனைவரும் (சீதையின் அழகைக் காண) இரு கண்கள் போதாது என்று (பதிலிருத்தனர்).

    இங்கு கம்பன் சீதையின் அழகை வர்ணிக்க முயன்று, அதைச் செய்யும் வகை அறியாது — அரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை என்ற அழகு மிக்க வானுலகு மாதரைக் கண்ட விண்ணவரே தங்களால்கூட சீதையின் வனப்பைக் காண இரு கண்கள் போதாது என்று சொல்வதாகச் சொல்லித் தனது இயலாமையை முன்வைக்கிறார்.

    இருந்தபோதிலும் சீதையின் இயல்பு, அழகு பற்றிப் புகழ்ந்து பத்து செய்யுள்களின் தெரிவிக்கிறார்.

    ‘கண்டதும் காதல்’ (love at first sight) என்ற இலக்கணத்தை உருவாக்கியவர்களாக இராமனும் சீதையும் ஒருவரைக் கண்டு ஒருவர் விரும்பியதையும், இராமன் சென்றதும், காதல் நோய் கொண்டு சீதை தவித்ததையும், இராமன் சீதை நினைவால் என்கியதையும் 56 பாக்களில் விளக்கி உள்ளார் கவிச் சக்கரவர்த்தி கம்பர். அப்பாக்களில், இராமனும் சீதையும், ‘கண்டதும் காதல் கொண்ட’ பாக்கள் இரண்டை மட்டும் காண்போம்:

    எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்றுழி

    கண்ணொடு கண் இணை கவ்வு ஒன்றை ஒன்று

    உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட

    அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்.  – 1.519

    பருகிய நோக்கு எனும் பாசத்தால் பிணித்து

    ஒருவரை ஒருவர் தம் உள்ளம் ஈர்த்தலால்

    வரி சிலை அண்ணலும் வாட்கண் நங்கையும்

    இருவரும் மாறிப் புக்கு இதயம் எய்தினர்.  —  1.521

    எண்ணிப் பார்க்கக் கூட இயலாத நற்குணங்களைப் (பெற்ற) இத்தன்மையை உடையவள்(சீதை) (கன்னி மாடத்தில்) நின்று கொண்டிருந்த பொழுது, ஒருவர் கண்ணை மற்றவர் கண்கள் கவ்வி விழுங்கவும், (என்ன செய்வது என்று அறியாது) நிலையாக நிற்க முடியாமல், உணர்வுகள் (ஒருவரோடு ஒருவர்) பின்னிக் கொள்ள, மேன்மை மிகுந்த (இராமனும்) நோக்கினான், அவளும் (சீதையும் இராமனைத் திரும்ப) நோக்கினாள்.

    ஒருவரை ஒருவர் கண்களால் பருகியதால் ஏற்பட்ட காதலால், ஒருவரின் உள்ளத்தை மற்றொருவரின் உள்ளம் தன்னிடத்தில் இழுத்துக் கொண்டதால், சிறந்த வில்லை ஏந்திய மாந்தரில் சிறந்தவரும் (இராமனும்), வாள் போன்ற (பார்வையாலே வெல்லக்கூடிய) கண்ணுடைய நங்கையும் (சீதையும்), ஒருவர் இதயத்தில் மற்றவர் குடியேறினர்.

    எப்படிப்பட்ட வர்ணனை!  ஒருவரை ஒருவர் விழிகளால் கவ்வி விழுங்கிக் கொள்கிறார்களாம்!  அதனால் நிலை தடுமாறுகிறார்களாம், உள்ளத்தைப் பறிகொடுத்து, ஒருவர் இதயத்தில் மற்றொருவர் இடம் பிடித்துக் கொள்கிறார்களாம்.  தூய காதலுக்கு இதைவிட விளக்கம் வேண்டுமா என்ன?

    ஒப்பீடு

    முதலில் வால்மீகி முனிவர் இந்த நிகழ்ச்சியை ஏன் எழுதவில்லை என்பதற்குக் காரணம் ஆரண்ய காண்டத்தில் இருக்கும் இரண்டு சுலோகங்களில் (3.87.4, 3.87.10) கிடைக்கிறது.

    இராவணன் அந்தண வேடமிட்டு, சீதைக் கவர வருகிறான்.  அவனை ஒரு முனிவர் என்று நினைத்த சீதை, வரவேற்று, அவன் அமர தர்ப்பைப் புற்களால் நெய்யப்பட்ட இருக்கையை அளிக்கிறாள்.  தன்னைப் பற்றிச் சொல்லும் பொது,

    उषित्वा द्वादश समाः इक्ष्वाकूणाम् निवेशने |

    भुंजाना मानुषान् भोगान् सर्व काम समृद्धिनी || ३-४७-४

    உஷித்வா த்வாதஸ’ ஸமா: இக்ஷ்வாகூணாம் நிவேஸ’னே |

    புஞ்ஜானா மானுஷானு போகானு ஸர்வ காம ஸம்ருத்திநீ || 3-47-8

    இக்ஷ்வாகுகளின் இல்லத்தில் பன்னிரண்டு ஆண்டுகள் வசித்து, மனிதர்களின் அனைத்து இன்பங்களையும் நன்றாக அடையப்பட்டவள் ஆனேன். (என்னுடைய எல்லா விருப்பங்களும் நிறைவேற்றப்பட்டன.)

    (பிறகு கைகேயின் தூண்டுதலால் பதினான்கு ஆண்டுகள் கானகம் வர நேர்ந்தது என்று தெரிவித்த சீதை, புறப்படும் சமயத்தில் தங்கள் வயது என்ன என்று அறிவிக்கிறாள்.)

    मम भर्ता महातेजा वयसा पंच विंशकः || ४७१०
    अष्टा दश हि वर्षाणि मम जन्मनि गण्यते |

    மம பர்த்தா மஹாதேஜா வயஸா பஞ்ச விம்ஸ’க: |

    அஷ்டா தஸ’ ஹி வர்ஷாணி மாமா ஜன்மனி கன்யதே || 3-47-10

    பேரொளி கொண்ட என் கணவர் இருபத்தைந்து வயதானவர். என் வயது பதினெட்டு ஆண்டுகளாகவே எண்ணப்பட்டது.

    அவள் 12 ஆண்டுகள் அயோத்தியில் இருந்ததற்குப் பிறகு, தனக்கும் தன் கணவருக்கும் என்ன வயது என்று ஐயத்திற்கு இடமின்றி சீதை இராவணனிடம் உரைக்கின்றதாக வால்மீகி எழுதியிருக்கிறார்.

    மனக்கணக்குப் போட்டப் பார்த்தால், சீதை இராமனை மணந்த பொது அவளுக்கு ஆறே வயது (18-12=6) என்று விளங்கும்.  இராமனுக்கு பதிமூன்று ஆண்டுகள் நிரம்பி இருந்தன. அந்த வயதில் ஆறு வயதுச் சிறுமியான சீதைக்குக் காதல் என்ற உணர்வு தோன்ற வழி இல்லையே! அதனாலேயே, திருமணத்துக்கு முன் அவர்கள் சந்தித்ததாக வால்மீகி எழுதவில்ல என்று புலனாகிறது.

    வால்மீகியின் இராமாயணத்தை நன்கறிந்த மகாகவி கம்பர் ஏன் இப்படி மாற்றி எழுதத் துணிந்தார்?  இதற்கு தமிழ் நாட்டின் களவு, கற்பு இவற்றைப் பற்றி சுருக்கமாகக் கூறித்தான் விளக்க வேண்டும்.

    செந்நாப் போதாரான வள்ளுவப் பெருமான் உலகுக்கு ஈந்த தனது திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்று மூன்று பிரிவுகளாக(பால்களாக)ப் பிரித்திருக்கிறார்.  இன்பத்துப் பாலையும் களவியல், கற்பியல் என்று இரண்டாகப் பகுத்திருக்கிறார்.

    கற்பைப் பற்றி நாம் அனைவரும் நன்கறிவோம். களவு என்றால் என்ன? திருட்டு என்பதுதானே?  அதுவும் எப்படிப்பட்ட திருட்டு? ஒருவர் உள்ளத்தை மற்றொருவர் திருடிக் கொள்வது. நமது இதயத்தில் மற்றொருவர் குடியேற அனுமதிப்பது. நமது உள்ளம் நம்மிடத்தில் இல்லாதபோது, அது களவாடப் பட்டபின்பு, அதை எப்படி இன்னொருவருக்குக் கொடுக்க இயலும்? இன்னொருவரை நாடி மனம் எப்படிச் செல்லும்? இல்லை, நம்மிடமிருந்து திருடப்பட்ட பொருளை மீண்டும் இன்னொருவருக்கு எப்படித் திருட்டுக் கொடுக்க இயலும்? அப்படி ஒருவர் உள்ளத்தை மற்றொருவரிடம் பறிகொடுத்து, அவர் நினைவாக வாழ்வதுதான் கற்பு. ‘

    ஒருத்தனுக்கு ஒருத்தி’ என்ற பழமொழி உருவாகக் காரணமே இராமனும், சீதையும்தான். இராமன், சீதை இருவருமே கற்புக்கு இலக்கணமாகத்தான் வாழ்ந்தார்கள், வடிவமைக்கப்பட்டர்கள், அனைவருக்கும் முன்மாதிரியாக விளங்கினார்கள்.

    இதுவே தமிழ்ப் பண்பின் எடுத்துக்காட்டாகக் கம்பராமாயணத்தில் பரிணமித்தது.

    எனவே, இராமகாதையைத் தமிழில் வடித்தெடுக்கும் பொது, கற்பிற் சிறந்த சீதையும், ‘பிறன் மனை நோக்காப் பேரறிவாளனும், ஒரு மனைவி உறுதியாளனுமான இராமனும், ஒருவரிடத்தில் மற்றொருவர் உள்ளத்தைப் பறிகொடுத்தால்தான் தமிழ் மரபுப்படி வடிவமைக்க இயலும் என்று களவியலையும் கம்பர் தனது இராமகாதையில் புகுத்தினார்.

    முழுமையான களவு நடந்த பின்னர்தான், மாற்றுக் குறையாத கற்பு இருவரிடமும் நிலைக்கும் என்று கம்பர் முடிவு செய்திருக்க வேண்டும். அதுதான் இராமன்-சீதையின் முதற் சந்திப்பையும், கண்டதும் கொண்ட காதலையும் விவரித்து, இருவரின் கற்புக்கும் அடித்தளம் அமைத்திருக்க வேண்டும்.

    மேலும், கடவுளர்களின் அவதாரங்களாகக் கம்பரால் எண்ணப்பட்ட இராமனும், சீதையும், மனித உருவில்தான் காதல் என்ற நுட்பமான உணர்வைப் பெற இயலும் என்ற எண்ணமும் அவருக்கு இருந்திருக்கக் கூடும். அதுவும் இன்னொரு காரணமாக இருந்திருக்கலாம் அல்லவா!

    மூலத்தை மாற்றினாலும், கவிச்சக்கரவர்த்தி கம்பன் எந்த உயர்வான எண்ணத்துடன் அவ்வாறு செய்தார் என்று நம்மால் பகுத்து அறிந்து கொள்ள முடிகிறது.

    அடுத்த ஒப்பீட்டில் இராவணன் சீதையைக் கவர்ந்து சென்றதைப் பற்றி அணுகுவோம்.

                                                                                                                                                    ===========================================

    படங்களுக்கு நன்றி: http://www.tamilhindu.com/2014/03/kamban-valmiki-literary-comparison/

    Share
  • திலீபன் – மொழிபெயர்ப்புக் கவிதை

    ரிஷான் ஷெரிப்

     

    புன்னகைக்கும் இதயம்
    கண்ணீர்த் துளியைப் பற்றிக் கொள்ளும்
    அழத் தோன்றும் முகத் தோற்றம்
    நேசத்தை யாசிக்கும்
    யதார்த்தத்தைக் கனவோடு பிணைத்து
    இலக்குகளுக்காகத் தரித்து நின்ற திலீபன் !
    திலீபன் ! காற்றில் உதித்தவன் !

    நெஞ்சங்களில்
    அநேகமானவற்றை விட்டுச் சென்ற
    முற்றுப் புள்ளிகளுடனான நிலத்தில்
    ஒரு ‘கமா’வாக மறைந்த
    விலைமதிப்பற்ற யௌவனத்தை
    கோரிக்கைகளுக்காக ஈடு வைத்த
    நேர்மையான புன்னகையும்
    தாயன்பின் மிருதுவான குணமும் கொண்டவன்

    அன்றிலிருந்து இன்று வரை
    கண்ணீர் ருசிக்கும் அன்னையர்
    கைகளிலில்லா ஐவிரல்களையும்
    தேடியலையும் தந்தையர்
    ஒன்றின் மீதொன்றாக அடுக்கப்பட்டிருக்கும்
    புதல்வர்களின் சடலங்களின் மீது
    ஓலமிட்டழுபவர்கள்
    எல்லா இடங்களிலிலும்
    இருக்கிறார்கள் திலீபன்

    எரியும் விளக்கின் சுடரின்
    கதைகளைக் கேட்கும் இருளும்
    ‘பொறுமையை மாத்திரமே கைக்கொள்வோம்’
    என்றே முனகும்
    உருவாக்கப்பட்ட நாடகக் கோமாளிகள்
    விலகிச் செல்லும் கூடமும்
    ‘உண்ணாவிரதம் இருப்பது
    எப்படியெனக் காட்டுகிறேன்’ எனக் கூறி
    மீண்டும் திலீபனுடன் அமைதியாகும்

    நல்லூர் வானம் எனப்படுவது
    வெடிப்புற்ற பூமியென அறிந்து
    சூரிய, சந்திரர்களை விடவும்
    கருமுகில்கள் அணி திரளும்
    வாழ்க்கையில் சிறந்தவற்றை
    கோணலாகிய தினங்களிடையே ஒளித்து
    சுவாசத்தை உடைத்துடைத்துப் பகிர்ந்து
    இதயத் துடிப்பு உறைந்ததோ திலீபன் அண்ணா…

    – கசுன் மஹேந்திர ஹீனடிகல
    தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்
    கவிஞர் பற்றிய குறிப்பு
    கசுன் மஹேந்திர ஹீனடிகல

    இலங்கையில் சிங்கள மொழியில் எழுதும் கவிஞராகவும், எழுத்தாளராகவும், ஊடகவியலாளராகவும் அறியப்பட்டிருக்கும் கசுன் மஹேந்திர ஹீனடிகல, இலங்கை சட்டக் கல்லூரி மாணவராவார். ‘Kavi Acid’ எனும் இவரது முதலாவது கவிதைத் தொகுப்பு 2014 ஆம் ஆண்டு வெளிவந்து பலரது பாராட்டுக்களையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.

     

    Share
  • விடியலை நாம் தேடுகிறோம்!

    -எம். ஜெயராமசர்மா – மெல்பேண்

    ambaal

     

     

     

     

     

     

     

     

    கல்வியொடு செல்வம் வீரம்
    கருணை நிறை கொண்டவுள்ளம்
    நல்லதெலாம் செய்யும் ஆற்றல்
    நாளும் எனக் கீந்திடம்மா!

    வல்லவளே நல்லவளே
    வாழ்வளிக்க வந்தவளே
    தொல்லுலகில் என்னாளும்
    துயர்போக்கச் செய்திடுவாய்!

    உள்ளமெலாம் உன் நினைப்பே
    ஊற்றெடுக்க வேண்டு மம்மா
    கள்ளமெலாம் என்னை விட்டுக்
    கழன்றோடச் செய்திடம்மா!

    பள்ளமதில் வீழாமல்
    பத்திரமாய்க் காத்திடுவாய்
    அள்ளஅள்ளக் குறையாத
    அருளமுதின் நாயகியே!

    தெள்ளுதமிழ்க் கொண்டுன்னை
    சிறியேனும் பாடுகிறேன்
    சினமகன்று வாழ்ந்திடவே
    சீக்கிரமே வரமருள்வாய்!

    அன்றலர்ந்த மலர்கொண்டு
    அன்னையுனைப் பணிகின்றேன்
    ஆணவத்தை அறுத்துவிட்டு
    ஆசியெனக் கருளிடம்மா!

    நாட்டிலுள்ளோர் மனமெல்லாம்
    நல்ல எண்ணமுருவாக
    பாட்டாலே கேட்கின்றேன்
    பராசக்தி அருளிடுவாய்!

    வீரத்தை விரயமாக்கும்
    வீணர்தமைத் திருத்திடுவாய்
    கோரத்தைப் புரியுமவர்
    கொடுமைகளை அடக்கிடுவாய்!

    பாருக்குள் அவர்திருந்த
    பக்குவத்தைக் கொடுத்திடுவாய்
    ஈரமன முடையவளே
    எங்கள்பரா சக்தியம்மா!

    செல்வத்தைச் சேர்ப்பதிலே
    சீரழிவை நாடுகிறார்
    உள்ளமெலாம் நோகடித்து
    ஊரினையே சுருட்டுகிறார்!

    கள்ளமுடன் சேர்த்துநிற்கும்
    காசுநகை பயன்படவே
    நல்லவழி காட்டிடுவாய்
    நவராத்ரி நாயகியே!

    கல்விதனைக் காசாக்கும்
    கயவரெலாம் மனம்மாற
    கடைக்கண்ணால் பார்த்துவிடு
    கருணைநிறை நாயகியே!

    தனம்வரும் கல்விவரும்
    தளர்வறியா மனமும்வரும்
    நலம்வரும் நாளெல்லாம்
    நற்கருணை நாயகியால்!

    இனம்வரும் இன்பம்வரும்
    ஈடில்லா வாழ்வும்வரும்
    எமையாளும் நாயகியை
    ஏற்றியென்றும் வழிபடுவோம்!

    அகிலமுனைப் போற்றுதம்மா
    ஆதிபரா சக்தியென
    அரக்ககுணம் அழிவதற்கு
    அம்மாநீ அருளிடுவாய்!

    வேருக்கு நீராக
    விரைந்துநீ அருளிவிடு
    வினையகன்று நிற்கின்ற
    விடியலைநாம் தேடுகிறோம்!

    நவசக்தி நாயகியே
    நலமருள வேண்டுமம்மா
    நாட்டிலுள்ள மக்களெலாம்
    நாளுமுனைப் போற்றுகின்றார்!

    வீடெங்கும் விளக்கேற்றி
    விரதமுடன் தொழுதுநிதம்
    காதலுடன் நிற்பாரைக்
    கடைத்தேற்றி விட்டிடம்மா!

    Share
  • காற்று வாங்கப் போனேன்! (44)

    கே. ரவி

    இப்பொழுதெல்லாம் கவிஞன் என்று ஒருவன் தன்னைச் சொல்லிக் கொண்டால், மரபுக் கவிதைகள் எழுதும் கவிஞனா, இல்லை, புதுக்கவிதைகள் எழுதும் கவிஞனா என்ற கேள்வி உடனே கேட்கப்படுகிறது. பெரிய விவாதங்களைத் தவிர்த்து எளிமையாகச் சொல்வதென்றால், தமிழ் யாப்பிலக்கண நூல்களில் சொல்லப்படும் செய்யுள் வகைகளில் எழுதப்படும் கவிதைகள் மரபுக் கவிதைகள் எனவும், அப்படியின்றி எந்த யாப்பிலக்கணக் கட்டுப்பாடுகளுக்கும் அடங்காமல், கிட்டத்தட்ட உரைநடை வடிவில் எழுதப்படும் வெளிப்பாடுகள் புதுக்கவிதைகள் எனவும் பொதுவாகக் குறிக்கப் படுகின்றன.

    நான், சாந்தோம் உயர்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பில் சேர்ந்த போது சரியாகத் தமிழ் எழுதக் கூடத் தெரியாமல் இருந்த கதையையும், ஆனால் எட்டாம் வகுப்பில் நுழையும் போது தமிழில் கவிதை எழுதுபவனாக மாறிவிட்ட ரசவாதம் பற்றியும் முன்பே அளந்து கொட்டிவிட்டேன். ஏறக்குறைய மூன்று மாதங்களில் அப்படியொரு மாற்றம் ஏற்படும் வண்ணம் என் நாவில் தேன்பிலிற்றிய தேவதை யாரோ, தெரியவில்லை. எல்லாம் பராசக்திதானே!

    எட்டாம் வகுப்பில் நுழையும் போது கவிஞனாக மட்டுமன்றித் தமிழ் இலக்கணம் ஓரளவு படித்த புலவனாகவும் மாறியிருந்தேன். திரு.கிருஷ்ணராமானுஜம் பிள்ளை என்ற ஆசிரியர் எங்களுக்குத் தமிழ் இலக்கணம் பயிற்றுவித்தார். அவரிடம் பயின்ற போது, இலக்கணத்தின் அடிப்படைத் தத்துவத்தைப் புரிந்து கொண்டேன். இலக்கணம் என்பது என்றைக்குமே மாறா விதிகளின் தொகுப்பு இல்லை, காலத்துக்கு ஏற்ப, மக்கள் பேசும் மொழிக்கு ஏற்ப, எழுதும் நடைக்கு ஏற்ப, அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும் விதிகளின் தொகுப்பே என்பதைப் புரிந்து கொண்டேன். இலக்கண விதி ஒவ்வொன்றின் பின்னணியிலும் அந்த விதிக்கான காரணம், அல்லது, தேவை மறைந்திருப்பதை விளங்கிக் கொண்டேன். அந்த விதிகள், மக்கள் மொழியிலிருந்தும், படைப்பாளிகளின் எழுத்துகளில் இருந்தும் தேர்வு செய்யப் பட்டுத் தொகுக்கப் படும் உண்மையை அறிந்து கொண்டேன். இந்த அடிப்படைக் கருத்துகளை என் ஆசிரியர் கிருஷ்ணராமானுஜம் பிள்ளை என் நெஞ்சில் ஆழமாகப் பதித்ததால், கல்லூரி சென்ற பிறகு, தமிழ்க்கடல் என்றே போற்றப்படும் ஒரு மிகப் பெரிய தமிழ்ப் பேராசிரியரிடமே தமிழ் இலக்கணம் பற்றி எதிர் கருத்துச் சொல்லும் அளவுக்குத் துணிந்தேன்.

    Arv11968-69, விவேகானந்தா கல்லூரியில், புகுமுக வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுதெல்லாம் அப்படியோர் வகுப்பு இருந்ததாம், அதற்கு ஆங்கிலத்தில் பி.யூ.சி. என்று பெயராம்! அப்போது நான் எழுதிய இலக்கணக் குறிப்பு ஒன்றைத் தவறு என்று சொல்லி என் தமிழாசிரியர் அதற்கு மதிப்பெண் தரவில்லை. நான் அவரிடம் வாதம் செய்தும் பயனில்லை. வகுப்பு முடிந்ததும் அந்த விடைத்தாளை எடுத்துக் கொண்டு தமிழ்த்துறைத் தலைவர், தமிழ்க்கடல் என்று குறிப்பிட்டேனே, பேராசிரியர் ஜகன்னாதாச்சாரியாரிடம் சென்றேன். நான் விடுவதாக இல்லை. அது வெறும் வகுப்புத் தேர்வுதான், பொதுத் தேர்வு இல்லை. ஆனால், அந்தக் குறிப்புத் தவறென்றால் அது எனக்கு இழுக்கு இல்லை, எனக்குத் தமிழ் இலக்கணம் சொல்லித் தந்த கிருஷ்ணராமானுஜம் பிள்ளைக்கு இழுக்கு என்றுணர்ந்து விடாப்பிடியாக ஜகன்னாதாச்சாரியார் வரும் வரை காத்திருந்தேன். அவர் வந்ததும் விடைத்தாளை அவரிடம் தந்து விளக்கினேன். ” ஏந்தெழில் இராமன்” என்ற சொற்றொடரில் முதற்சொல்லுக்கு இலக்கணக் குறிப்பு வரைக என்ற கேள்விக்கு, முன்பின்னாகத் தொக்க இரண்டாம் வேற்றுமைத் தொகை என்று நான் எழுதியதை ஆசிரியர் தவறு என்று அடித்து விட்டு அது வினைத்தொகை என்று கூறி எனக்கு மதிப்பெண் தர மறுத்துவிட்ட விவரத்தை அவரிடம் சொன்னேன். “அட, விடுப்பா! பத்துக்கு இரண்டு மதிப்பெண் போனால் போகட்டும்” என்றார் அவர். நான் விடவில்லை. மதிப்பெண் முக்கியம் இல்லை சார், எனக்குத் தமிழ் சொல்லித் தந்த ஆசானின் மதிப்புப் பிரச்சினை இது என்று நான் சொன்னதும், பலே, இங்கே கொண்டா என்று என் விடைத்தாளை வாங்கிச் சற்று நேரம் பார்த்துவிட்டு, “நீ சொல்வதை ஒப்புக் கொள்ள முடியவில்லையே. ‘ஏந்தெழில்’ என்பது வினைத்தொகை தானே. அத்துடன் தமிழ் இலக்கணத்தில் முன்பின்னாகத் தொக்க இரண்டாம் வேற்றுமைத் தொகை கிடையாதே!” என்று அவர் சமாதானம் செய்ய முயலும் போது, கல்லூரி முதல்வரிடம் இருந்து அவசர அழைப்பு வரவே, அவர் சென்று விட்டார். நான் ஏமாற்றத்துடன் திரும்பி விட்டேன். அன்று மாலை வகுப்புகள் முடிந்ததும் ஒருவன் வந்து என்னை ஜகன்னாதாச்சாரியார் அழைப்பதாகத் தெரிவித்தான். விடைத்தாளுடன் ஓடினேன். மீண்டும் அதை வாங்கிப் பார்த்து விட்டு, நீ இப்படிக் குறிப்பு வரைந்ததற்குக் காரணம் சொல்லு என்றார். நான் சொன்னேன்: ஏந்திய எழில், ஏந்தும் எழில், ஏந்தப் போகும் எழில் என்று பொருள் கொண்டால் அது வினைத்தொகை. ஆனால் அதை அப்படிப் பொருள் கொள்ள என் மனம் இடம்தரவில்லை. எழிலை ஏந்துகின்ற இராமன் என்றுதான் பொருள் கொள்ளத் தோன்றுகிறது. எழிலை ஏந்துகின்ற என்பது முன்பின்னாகவும், இரண்டாம் வேற்றுமை உருபான ‘ஐ” மறைந்தும் இருப்பதால் ‘ஏந்தெழில்’ என்பதை முன்பின்னாகத் தொக்க இரண்டாம் வேற்றுமைத் தொகை என்று எழுதினேன், ஏந்து இராமன் என்றிருந்தால் அதை வினைத்தொகை என்று போட்டிருப்பேன் என்று நீண்ட பிரசங்கம் செய்தேன். ஒரு நிமிடம் யோசித்து விட்டு, “முன்பின்னாகத் தொக்க இரண்டாம் வேற்றுமைத் தொகை என ஒன்று இலக்கணத்தில் இல்லையே!” என்று அவர் கேட்டார். அதற்கு நான் இலக்கியத்தில் இருக்கிறதே என்றேன். சரி, இந்தத் தொடர் கம்பராமாயணத்தில் வருகிறது. இதே போல் வேறு இலக்கியத்தில் எங்காவது உண்டா என்று கேட்டார். உடனே சொன்னேன், பெரிய புராணத்தில் “ஏந்துபூம் பந்தர்” என்ற சொற்றொடர் வருகிறதே என்று. ஜகன்னாதாச்சாரியார் என் விடைத்தாளில் தம் கைப்பட என் இலக்கணக் குறிப்புக்கு முழுமதிப்பெண் போட்டுக் கொடுத்த்து விட்டு, மறுநாள் என் வகுப்புக்கு வந்து இது பற்றிச் சொல்லிப் பாராட்டி ஐந்து நிமிடங்கள் பேசிவிட்டுச் சென்ற நிகழ்ச்சியை நான் மறக்க முடியுமா?

    கிட்டத்தட்ட ஜகந்நாதாச்சாரியார் சாயலில் ‘தமிழ் ப்ரொபஸர் தாத்தாச்சாரியார்’ என்ற தலைப்பிட்டுப் பல்லாண்டுகளுக்கு முன் நண்பன் சு.ரவி வரைந்த ஒரு கோட்டோவியத்தை இங்கே பார்த்து ரசிக்கலாம்.

    arv

    இன்னொரு நிகழ்ச்சியைச் சொல்கிறேன். நாலைந்து ஆண்டுகளுக்கு முன் ஏதோ ஒரு கடிதத்தில், ‘மாக்கவிஞன் பாரதி’ என்றுநான் எழுதியிருந்ததைப் படித்து விட்டு நான் மிகவும் மதிக்கும் ஒரு நண்பர், ‘மாகவி’ என்பதுதான் சரி, மாக்கவி என்று நான் எழுதியது தவறு என்று சொன்னதாக நண்பர் சுப்பு என்னிடம் சொன்னதும் அந்த நண்பரையே தொலைபேசியில் அழைத்து, அப்படி எழுதும் துணிவைக் கவிச்சக்கரவர்த்தியே எனக்குத் தந்தான் என்று சொல்லிவிட்டு, கம்பராமாயணத்தில் வரும், “தெய்வ மாக்கவி மாட்சி தெரிக்கவே” என்ற வரியை நினைவு படுத்தினேன். அவரும் சமாதானம் அடைந்தார் என்று நினைக்கிறேன்.

    ஆண்டுதோறும், பாரதி பிறந்தநாளை ஒட்டி வானவில் பண்பாட்டு மையம் நடத்தும் விழாவை, “பாரதித் திருவிழா” என்றே எழுதி வந்தேன். பெயர்ச்சொல்லுக்குப் பிறகு ஒற்று மிகாது என்று பல புலவர்கள் எடுத்துரைத்தும் நான் மாற்றிக் கொள்ளவில்லை. இலக்கணத்தை விடவும் த்வனியில் அதிக ஈடுபாடு கொண்டதாலோ என்னவோ எனக்கு பாரதித் திருவிழா என்று சொல்லும் போது கிடைக்கும் உணர்ச்சி, ‘பாரதி திருவிழா’ என்றால் கிடைக்கவில்லை என்று தோன்றியது. மேலும், கந்தனுடைய புராணம் கந்த புராணம் என்று இருந்தாலும், கந்தனாகிய கடவுள் என்பதைக் கந்தக் கடவுள் என்றுதானே சொல்கிறோம். அது போல், இந்த விழாவை பாரதியுடைய விழா என்பதைக் காட்டிலும், பாரதியாகிய திருவிழா, அதாவது, பாரதியையே ஒரு திருவிழாவாகக் கொண்டாடும் வைபவம் என்று கொண்டால் அதை பாரதித் திருவிழா என்றுதானே சொல்ல வேண்டும்! சிவக்கொழுந்து, ராமச்சந்திரன், கிருஷ்ணப் பிரேமி, என்ற சொற்றொடர்களை என்ன சொல்வது? ஒரு வேளை ஈறுகெட்டு, அதாவது, கடைசி எழுத்து மறைந்து வருவதால், ஒற்று மிகலாம் என்பார்களோ? அப்படியானால், ‘சக்திக் கனல்’ என்பதற்கு என்ன சமாதானம்? ‘கண்ணகி காப்பியம்’ என்பது சரி. ஆனால், ‘கண்ணகித் தெய்வம்’ என்பதுதானே சரி! அப்படித் தானே ‘பாரதித் திருவிழா’? நானே என் மனத்துக்குள் வாதங்களை அடுக்கி வைத்திருந்தேன். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன், நான் பெரிதும் மதிக்கும் ஒரு கவிஞர், சிந்தனையாளர், குலோத்துங்கன் என்ற முனைவர் வா.செ.குழந்தைசாமி, தம் உடல்நிலையையும் பொருட்படுத்தாமல், இந்தப் பிரச்சினை குறித்து இரண்டு பக்கங்களுக்கு எனக்கு ஒரு கடிதம் எழுதி மாற்றச் சொன்னதும் மறுபேச்சுப் பேசாமல், “பாரதி திருவிழா” என்று மாற்றி விட்டேன். இலக்கணத்தை விட, த்வனியை விட, நட்பும், நாகரிகமும், பெரியோரை மதித்தலும் முக்கியம் இல்லையா? ‘மானுட யாத்திரை’ என்ற அரிய காப்பியம் வடித்த அந்த மாபெரும் புலவர் சொல்லை என்னால் தட்ட முடியவில்லை.

    ஒருமுறை, பகுத்தறிவுப் பாசறை நண்பர்கள் குழுமியிருந்த இடத்தில் போய், நான் கடவுள் பற்றிச் சில கருத்துகள் பேசி விட்டேன். நான் பேசிக் கொண்டிருந்த போதே ஒரு நண்பர் எழுந்து, என்னை மறுத்துக் கருத்துரைத்தார். நான் என் வாதங்களை எடுத்து வைக்க இடம்தராமல் சற்றுக் கடுமையாகப் பேசத் தொடங்கினார். உடனே நான், சரி ஐயா, கடவுள் இல்லை என்று சொன்னால்தான் உங்களுக்குப் பிடிக்கும் என்றால் அப்படியே சொல்லிவிட்டுப் போகிறேன், எனக்குக் கடவுள் இருக்கிறார் என்று சொல்வதை விட நம் நட்பு முக்கியம் என்று சொல்லிவிட்டு, நான் இல்லை என்று சொல்வதால் கடவுள் நிச்சயம் கோவித்துக் கொள்ள மாட்டார் என்றதும் அந்த நண்பரே சிரித்து விட்டார்.

    வாதமே தொழிலாக அன்றாடம் செய்து வரும் நான் வாதத்தால் நட்பை இழக்க எப்போதும் உடன்பட்டதில்லை. எனக்குக் கருத்தை விட மனிதர்கள் முக்கியம். பாரதி ஒரு கவிதையில் சொல்கிறானே:

    அஞ்சுதலைப் பாம்பென்பான் – அப்பன்

    ஆறு தலை என்று மகன் சொல்லிவிட்டால்

    நெஞ்சு பிரிந்திடுவார் – பின்பு

    நெடுநாள் இருவரும் பகைத்திருப்பார்

    நான் இவ்வளவு பீடிகை போட்டது மரபுக் கவிதை, புதுக் கவிதைப் போராட்டத்துக்குள் செல்வதற்குத்தான். மரபுவழியில் மட்டுமே எழுத வேண்டும் என்ற பிடிவாதத்தால் எப்படி ஒரு கவிதை உயிரற்றுப் போக வாய்ப்புண்டோ, அப்படியே, மரபை மீறித்தான் எழுத வேண்டும் என்ற பிடிவாதத்தாலும் நிகழக் கூடும். கவிதை எப்படி வருகிறதோ, அது எந்த வடிவத்தை ஏற்றுக் கொண்டு வருகிறதோ அதை அப்படியே வரவேற்க முடிந்தாலே போதும். பிறக்கப் போகும் ஒரு குழந்தையின் வடிவம் இப்படியெல்லாம்தான் இருக்க வேண்டும் என்று நிர்ணயம் செய்து, அப்படிக் குழந்தையைப் பெற்றுக் கொள்ளத் தாயால் முடியுமா? ஆனால், குழந்தை பிறந்த பிறகு அதற்குப் பெயர் சூட்டி, ஆடை, அணிகலன்கள் அணிவித்து, அழகு செய்து, பார்த்து ரசிக்க அன்னைக்கு உரிமையும் உண்டு, அது சாத்தியமும் கூட.

    யாப்பிலக்கணப் படியே கவிதையொன்று எழுத வேண்டும் என்ற தீர்மானத்தோடு ஒருவன் கவிதை எழுத உட்கார்ந்தால் அந்தக் கவிதையில் உயிர் இருக்குமா?

    கொஞ்சம் சந்தம், கொஞ்சம் சரித்திரம், கொஞ்சம் பாலியல் உணர்ச்சி என மூன்றும் கலந்த ஒரு கவிதை வேண்டும் என்று கேட்டதும் கணினி இரண்டு வரிகள் தந்ததாக சுஜாதா ஒரு கதையில் எழுதியிருப்பார்:

    கதவைத் திறந்து கவனித்து வந்த ராஜராஜ சோழன்

    விதவைக்கு முத்தம் பதினெட்டுத் தந்த ராஜராஜ சோழன்

    முயன்று எழுதப்பட்ட கவிதைகள் இப்படித்தான் அமையும். கவிதை எழுதும் போது, அடுத்த வரியில் என்ன சொற்கள் வருமோ என்று தெரியாமல் முதல் வரியில் தொடங்கி, அந்த வரிகள் எங்கே போய் முடியப் போகின்றன என்று புரியாமல் அந்தக் கவிதையின் போக்கில் சென்று, முடிந்த பிறகு அதைப் படித்துப் பார்த்துப் புரிந்து கொள்ள முயன்று, முயன்று, முழுதாகப் புரிந்து கொள்ள முடியாமல் தோற்றுப் போய்க் கொஞ்சம் புரிந்தது விட்டது போல் கற்பித்துக் கொண்டு, மீண்டும் மீண்டும் சொல்லிச் சொல்லி மகிழும் கவிதைகளின் சுகமே தனி. சரிதானே மனோன்மணி! புத்தி சிகாமணியை அவன் போக்கில் விட்டால் கணினி தந்த கவிதை போலத்தான் கவிதைகள் வரும்.

    பிறக்கும் குழந்தைக்கு எப்படி வடிவிலும், குணங்களிலும் பெற்றோர்களின் சாயல் இருக்குமோ, அந்த அளவுக்கு நான் எழுதும் கவிதைகளில் என் அறிவு, என் மனம் ஆகியவற்றின் சாயல் இருக்கத்தான் செய்யும். அவ்வளவே! சிகாமணி-மனோன்மணியின் கூட்டுத் தயாரிப்புத்தானே என் கவிதைகள்! அவர்களின் சாயல் என் கவிதைகளுக்கு இருக்கத்தான் செய்யும். ஆனால், என் கவிதைகள் அந்தச் சாயல்களைக் கடந்தவை. சாயல்கள் வெறும் சாயங்களே!

    யாப்புக்கு ஒத்து வர வேண்டும் என்ற முயற்சியில் தேவையற்ற சொற்களைப் பெய்வதால்தான் மரபுக் கவிதைகளுக்கு எதிர்ப்பியக்கமாகப் புதுக்கவிதை இயக்கம் மலர்ந்தது. பாரதி வசன நடையில் நல்ல கவிதைகள் எழுதித் தொடக்கி வைத்த பாதையில் பிச்சமூர்த்தியும், சி.சு.செல்லப்பாவும் அடித்தளம் போட்டுக் கட்டிடம் கட்டவும், அதில் வசிக்க குபுகுபுவென்று எத்தனைக் கவிஞர்கள் நீ, நான் என்று போட்டி போட்டுக் கொண்டு வந்து விட்டனர்! தற்போது, புதுக்கவிதை என்பது வெறும் ஒரு வடிவப் புரட்சி இல்லை, அதன் உள்ளடக்கமே தனி என்பதாக அந்தத் துறையை மேலும் வளம் செய்து கொண்டிருக்கும் பலர், கவிக்கோ அப்துல் ரஹ்மான், கவிஞர் ஈரோடு தமிழன்பன், கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியன், கல்யாண்ஜி போன்ற பல நல்ல கவிஞர்கள் இருப்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

    “புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்” என்ற அருமையான நூலைப் படைத்த அமரர் வல்லிக்கண்ணனை நினைத்துக் கொள்கிறேன். எனக்குத் தெரிந்து, ஆண் புகைப்படத்தை அட்டையில் போடுவதே இல்லை என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்த குமுதம் பத்திரிகை தன் பிடிவாதத்தைக் கொஞ்சம் விட்டுக் கொடுத்தது வல்லிக்கண்ணனின் நூல் சாகித்ய அகதெமியின் பரிசு பெற்ற போதுதான் என்று நினைக்கிறேன். அதற்காகக் குமுதம் நிருபர் பால்யூ அரும்பாடு படவேண்டியிருந்தது. கடைசியில் அவர் முயற்சி வென்றது. குமுதம் தன் பிடிவாதத்தைக் கொஞ்சம் தளர்த்திக் கொண்டது. அதுவும் கொஞ்சம்தான் தளர்த்திக் கொண்டது. ஆம், ஒரு பெண் புகைப்படத்துடன் வல்லிக்கண்ணன் புகைப்படத்தைச் சேர்த்து அட்டையில் போடக் குமுதம் இசைந்தது. பால்யூ, ஒரு வெற்றிப் புன்னகையுடன், வல்லிக்கண்ணனை எங்கள் வீட்டுக்கு அழைத்து வந்து ஷோபனாவை விட்டு அவரைப் பேட்டி காணச் செய்து, இருவர் புகைப்படத்தையும் அடுத்த வாரக் குமுதம் அட்டைப் படத்தில் போடச் செய்தது ஒரு வரலாற்று நிகழ்ச்சி இல்லையா?

    Arrv2

    அதெல்லாம் இருக்கட்டும், வைதாரையும் வாழ வைப்பவன் என்று இறைவனைச் சொல்வது வழக்கம். எனக்கென்னவோ, கவிதையில் வைதால் மேலும் அருள் செய்வான் இறைவன் என்றே தோன்றுகிறது. இறைவனை விடுங்கள். ஒரு நல்ல கவிதை ரசிகனான மனிதன் அப்படித்தான். ஒரு தமிழாசிரியர், வகுப்புக்கு வந்ததும் நோட்ஸ் கொடுத்து எழுது என்று எங்களைத் தினமும் தொந்தரவு செய்து கொண்டிருந்தார். தாங்கவில்லை சாமீ! ஒருநாள், அவர் வகுப்புகு வரும் முன்பே, கரும்பலகையில் ஒரு குறட்பா எழுதி வைத்து விட்டேன்:

    தாராதீர் நோட்ஸெமக்குத் தந்தீரேல் நீரிங்கு

    வாராதீர் வன்சொல் பட

    அந்த ஆசிரியர் வந்ததும் அதைப் படித்துவிட்டு, யார் எழுதியது என்று கேட்டார். எல்லாரும் மெளனம் சாதித்தோம். சொல்லாவிட்டால் எல்லாருக்கும் தண்டனை கிடைக்கும் என்று அவர் அச்சுறுத்தியதும், நான் எழுந்து நின்றேன். “ஓ! நான் முழுதும் சொல்லும் வரைக் காத்திருக்காமல் எழுந்து நின்று விட்டாயே. சொல்லாவிட்டால் எல்லாருக்கும் தண்டனை கிடைக்கும், சொல்லி விட்டால் எழுதிய மாணவனுக்குப் பாராட்டுக் கிடைக்கும் என்று சொல்ல நினைத்தேன்” என்றார், திரு. ராமமூர்த்தி என்ற அந்த ஆசிரியர். யார் ‘ஏந்தெழில்’ இலக்கணக் குறிப்புக்கு எனக்கு மதிப்பெண் தர மறுத்தாரோ, யாரை மீறிச் சென்று துறைத் தலைவரிடம் நான் மதிப்பெண் பெற்று வந்தேனோ, அதே ராமமூர்த்தி என்ற ஆசிரியர்தான், அவரை விமர்சித்து நான் எழுதிய குறட்பாவை ரசித்துப் பாராட்டினார்.

    கவிதை ரசிப்பதற்கே! அதில் சோகம் விளைந்தாலும், வீரம் வெளிப்பட்டாலும், சினமே பொங்கிக் கனன்றாலும், குதூகலம் நிரம்பி வழிந்தாலும், கவிதை ரசிப்பதற்கே!

    (தொடரும்)

    Share