Blog

  • தொலைத்ததும்.. கிடைத்ததும்..! – 4

    ஜெயஸ்ரீ ஷங்கர்

    இந்தா…வளியை விடு என்று அவனைப் பார்த்து ஏளனமாகச் சொன்ன மலர்விழி, சார்….பாக்கிங் ஆபீசுக்கு அளைச்சிட்டுப் போறதாச் சொன்னீங்களே….அதான் ரூம்பைக் காலி பண்ணீட்டு வந்தேன். இப்பவே அங்கன போயிரலாமா..என்று தனது பையை டேபிளின் மீது தொப்பென்று வைத்தாள் .

    அதுங்கையிலே….சொல்லிட்டியா…? கர கரத்தது மேனஜரின் குரல்.

    ..ம்ம்ம்……! சரின்னிச்சு.

    அப்பச் சரி. கெளம்பு….என்றவர், எட்டிப் பார்த்து, ஏல பாண்டி….நில்லு..! நீயும் கூட வா. நானே அளச்சிட்டுப் போறேன்,

    அது எதுக்கு சார் அந்த எடத்துக்கு ? ஒண்ணுமே தெரியாதவள் போலக் கேட்டாள் மலர்.

    .ம்ம்ம்ம்ம்…..உங்களோட சேர்ந்து கும்மியடிக்க…! எரிச்சலுடன் சொன்னவர், நொய்யி…நொய்யின்னு எல்லாத்துக்கும் கேள்வி கேட்கப் படாது. வாயை மூடிட்டு வா….என்றவர் கதவைப் போட்டுவிட்டு பூட்டை இழுத்து இழுத்துப் பார்த்துவிட்டுத் திரும்பினார்.

    இதைப் பார்த்த மலர், சிரித்து விட்டாள் .

    ஏம்புள்ள ….என்னாத்துக்கு இந்தச் சிரிப்பு…?

    ஏன்…சார்…..பூட்டுல போயி நீங்க இந்தத் தொங்கு தொங்கிப் பார்க்கறீங்களே …..உங்க கனம் தாங்காமே…..அது அப்படியே களண்டு விழுந்துச்சின்னா….! அத்த நினைச்சித் தான் சிரிச்சேன்.

    பல்லக் களட்டீருவேன் …..சாக்கிரத..!

    அம்மாடியோ…பொய் கோபத்துடன் கூடவே நடந்தாள் .

    தூரத்தில் பாண்டி, புகை பிடித்தபடியே  புகைவளையம் விட்டபடியே இவளைப் பார்த்தபடியே எதையோ யோசித்துக் கொண்டு நின்றிருந்தான். ‘இந்தப் புள்ள நல்ல அளகி தான்….அந்த ஷீலாவைக் காட்டியும்….அத்தத் தள்ளி விட்டுட்டு இத்தக் கட்டிக்கிட்டாப் போச்சு…..டேய் பாண்டி நீ சூபெர்டா….என்று தனக்குத் தானே தட்டிக் கொள்கிறான்.

    அவனைப் பார்த்தவள் ,லச்சாதிபதி கனவு காணறியா? பின்னால லத்தில வாங்கும் போது புரியும்…! மனத்துக்குள் நினைத்துக் கொண்டாள் மலர்விழி.

    மூவரும், மூன்று விதமாக நினைத்தபடி டெம்போ வண்டி ஏறி பாக்கிங் ஆபீஸ் வந்து சேர்ந்தார்கள். வந்திறங்கிய இடத்தைப் பார்த்து சற்றே பயந்து போனாள் மலர்விழி.

    பெரிய பெரிய கிரானைட் கற்களை  சிமெண்டில் புதைத்து ஆறடி உயரத்தில் எழுந்து நின்றது நீளமான காம்பௌண்ட் சுவர். அதன் உயரத்தையும் மீறி கூர்மையான கண்ணாடித் துண்டுகள் புதைக்கப்பட்டு அதுவும் போதாதென்று இரும்பு முள் வேலி வேறு அவளை பயமுறுத்தியது.

    இரும்புக் கதவுகள் க்ர் க்ர் க்ர் க்ர் க்ர் க்ர் க்ர் க்றீச்……கனமான இரும்புக் கதவைத் திறந்த அறுவாள் மீசை இவளை ஒரு மாதிரி பார்த்து மிடறு விழுங்கியது. மேனேஜருக்கு விறைப்பாக நின்று சலாம் போட்டது.

    தரையில் நேராகப் பாதை முழுதும் கரடு முரடாக கூழாங்கற்கள் பதிக்கப்பட்டு கம்பீரமாக இருந்தது. அதன் இரண்டு பக்கமும்
    அடர்த்தியாக பஞ்சுப் பொதிகளாக பச்சைப் புல்வெளி….அழகாக மிரட்டியது .

    பால் வெள்ளை நிறத்தில் பல அடுக்கு மாடி வீடுகள், ஜன்னல்கள், பால்கனிகள், பூந்தொட்டிகள் என்று ரம்மியமாக இருந்த அந்தக்
    குடியிருப்பை அதிசயமாகப் பார்த்தபடியே மெல்ல நடந்து வந்தவள்..கருப்பு கிரானைட்டில் ‘ஆஞ்சநேயுலு ப்ளாசா” என்று  தங்க எழுத்துக்களாக மின்னிக் கொண்டிருந்தது. அதைப் படித்தவளுக்கு ‘அமீர்பெட் ஆஞ்சநேயுலு ‘ கண் முன்னே வந்து போனார்.

    எத்தனை அபலைப் பெண்களின் கண்ணீரும், வயிற்றெரிச்சலும், போட்ட  சாபங்களும் இப்படி இவன் மனது போல செங்கல்லும்,கூழாங்கல்லும்.கிரானைட் கல்லுமாக மாறி கட்டிடமாய் எழும்பி நிக்கிதோ…? படு பாவி…..உன்னைப் பார்த்தால் ஏதோ ஆஞ்சநேயர் கோயில் பூசாரி மாதிரி இருந்துக்கிட்டு, இப்படி அட்டூழியம் பண்றியே ….அந்த ஆஞ்சநேயருக்கே பொறுக்கலை….! அதான் என் மூலமா வந்திருக்காரு.  இத்தோட உன் ஆட்டம் க்ளோஸ்..! அமீர்பெட் ஆஞ்சநேயுலு…… உன் முகத்திரை கிழியப் போகுதுலு ….! எண்ணிக்கொண்டே நடந்தாள்….நடந்தாள் …!

    பல வண்ண நிறத்தில் கார்கள் வரிசையாக நின்று வரவேற்றது போலிருந்தது இவளுக்கு.

    அதையும் கடந்தார்கள்.

    பாண்டி தான் சொன்னான்….! பார்டி பல்லானதா…இருக்கும் போல்ருக்கு …! சும்மா சினிமா சூட்டிங்கு நடக்குற எடத்துக்கு போறாப்புலல்ல இருக்கு. இங்க லட்சம் எல்லாம் ஜுஜூபி…! கண்ணா…..கோடி எண்ண ஆசையா…? என்று தன்னையே கேட்டுக் கொண்டான்.

    வாங்குவ….வாங்குவ…!அதுக்கும் மேலே கொடுப்பாங்க…..அத்தனையையும் எண்ணிட்டு கம்பியையும் எண்ணு …! இவளும் சொல்லிக் கொண்டாள் .

    அங்கங்கு தென்படுபவர்கள் ஒவ்வொருவரும் செக்யூரிட்டியாகவே இருந்தார்கள். ‘இது நெசமாலுமே ஊறுகாய் பாக்கிங் கம்பெனி தானா…இம்புட்டு பெரிசா இருக்கு…? சந்தேகமாக மேனஜரைப் பார்த்து கேட்டு வைத்தாள் .

    நீ…உன் வாயை வெச்சுக்கிட்டு சும்மாலுமே வரமாட்டியா..? இங்கன வா….ஒரு பட்டனைத் தட்டுகிறார்.

    புள்ளிப் புள்ளியாக சிகப்பு விளக்குகள் கீழ் குறியிட்டு மின்னியது. சிறிது நேரத்தில் லிஃப்ட் வந்து நின்றது.

    உள்ளார வா….மாடிக்கு இட்டுண்டு போகும்….சொல்லியப்படியே உள்ளே நுழைந்து கொள்ள…கதவு மூடப் போகிறது…அதைத் தடுத்த பாண்டி….ஏய்….ஏறு என்று அதட்டுகிறான்.

    இதென்னது..? மேலேர்ந்து ரூம்பு வருது….? பயந்து போனவள் நான் இதில வரலை….மாடிக்கி நான் மச்சு வளியா வரேன்….அடம் பிடிக்கிறாள்.

    சீ …..உள்ளார வா..என்று அவளது கைகளைப் பிடித்து இழுக்கப் போக, வேறு வழியில்லாமல் உள்ளே அவளே நுழைந்து கொள்கிறாள்.

    லிஃப்ட் மேலே ஏறும் போது , திகிலுடன் சுற்றுமுற்றும் பார்த்துக் கொள்கிறாள். அங்கிருந்த பெரிய கண்ணாடியில் ஆச்சரியமாக தன்னை பல கோணங்களில் பார்த்துக் கொள்கிறாள். கூடவே அந்த இரண்டு பேரும் தன்னை கவனிக்கிறார்களா..? என்றும் பார்த்துக் கொள்கிறாள்…மலர்.

    ஆறாவது மாடியில் சென்று இவர்களை இறக்கி விட்டுவிட்டு மீண்டும் கீழிறங்கும் லிஃப்டை  கண் கொட்டாமல் பார்த்தவள், திடீரெனத் திரும்ப அங்கு யாரையும் காணாமல் திடுக்கிட்டு….சுற்றும் முற்றும் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டு அந்த பெரிய கண்ணாடி போல பள பளக்கும் நீண்ட கரும் பச்சை மார்பிள்  தரையில் காலை வைத்ததும், சொய்ங் …என்று வழுக்கத் தடுமாறியவள் சுதாரித்துக் கொண்டு மெல்ல மெல்ல கைகளால் அப்படியும் இப்படியும் பாலன்ஸ் செய்து கொண்டே நடக்கிறாள்…
    தனிமை, ஆள் நடமாட்டமே இல்லாத பகுதி, மூடிய கதவுகளும் ஜன்னல்களும்,நிசப்தமான சூழல் இவையாவும் அவளைத் திகிலடையச் செய்தது.

    பா…..பா….பா….ண்டி …..பாண்டீஈஈஈஈ….என்று தட தட வென்று ஓடி சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ரென்று வழுக்கி விழுந்ததும்……யம்மாஆஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ…….என்று கண்களை இறுக்க மூடிக் கொள்கிறாள்.

    இவள் விழுந்து கிடப்பதைக் கண்டு கல கல வென்று சிரித்தபடியே அவளுக்கு உதவ பாண்டி ஓடி வருகிறான்.

    (தொடரும்)

    Share
  • From coco cola plastic bottles

    Chezhian
    20130909_193526 3
    400 units of triangle with 3200 foldings
    400 units of triangle with 3200 foldings

    20130909_193453

    20130909_193750
    Share
  • சைவ சமயம் அறிவியல் மையம் பகுதி 3

    பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ, பிரான்சு

    சைவம் :

    காலத்தால் முந்தியது சைவ சமயமே எனக் கண்டோம். மாந்தனியல் என்னும் அறிவியல் வழியாகவும் வரலாற்றுப் படியும் உண்மை இதுவென நிறுவப்பட்டுள்ளது.

    பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் அரப்பா-மோகந்தஜாரோவில் இருந்த திராவிட இனத்தில் சிவ-சக்தி வழிபாடு இருந்தற்கான சான்றுகள் கிடைத்திருக்கின்றன. நம் தமிழ் இலக்கியங்களைப் பொருத்த வரை, தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு போன்ற சங்கத் தமிழ் இலக்கிய நூல்களிலும், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காவிய நூல்களிலும் சிவன் அல்லது சைவம் என்ற சொற்கள் நேரடியாகப் பயன் படுத்தப்படாவிட்டாலும், சிவன் தொடர்பான செய்திகள் ஆங்காங்கே உள்ளன. திருக்குறளிலும் கூட சைவ சித்தாந்தக் கருத்துக்களை ஒத்த கருத்துகள் காணப்படுகின்றன.

    ‘பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
    நீலமணி மிடற்று ஒருவன்” எனச் சிவபெருமானைப் பற்றி ஒளவையார் கூறியுள்ளார்.

    சங்க இலக்கியத்தில் பயின்று வரக்கூடிய ‘தாழ்சடைப் பொலிந்த அருந்தவத்தோற்கே’ (புறம்) ‘ஈர்ஞ்சடை அந்தணன்,ஆலமர் செல்வன்’ (கலித்தொகை), ‘முக்கண்ணன் ‘(கலித்தொகை), ‘கறைமிடற்று அண்ணல்’, ‘முதுமுதல்வன்’, ‘ஆலமர் கடவுள்’ (புறம்), ‘மணிமிடற்று அண்ணல்’ (பரிபாடல்), ‘நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன்’ (ஐங்குறு நூறு)… போன்ற சொல்லாட்சிகள் சிவனைக் குறிப்பதால்,சிவ வழிபாடு சங்க காலம் தொட்டு இருந்துள்ளது என்பதை அறியலாம்.

    தமிழ் இலக்கியங்களில் சிறந்த காப்பியமான சிலப்பதிகாரத்தில் “பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்….’ எனச் சிவபெருமானைப் பிறவா யாக்கைப் பெரியோனாக இளங்கோவடிகள் கூறியுள்ளார்.

    “சைவ சமயத்தின் தோற்றம் கற்பனைக்கு எட்டாததாய் அமைந்துள்ளது; வரலாற்றுக் காலத்துக்கு உட்பட்ட சைவம் ஆரியர், ஆரியர்க்கு முற்பட்டவர் என்னும் இருவேறு நெறிகளின் இணைப்பேயாகும்” என்று வரலாற்று ஆசிரியர் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியார் குறிப்பிடுகின்றார். “மொஹெஞ்சதரோ, ஹரப்பா ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகள், ஆரியருக்கு முற்பட்டதொரு நாகரிகம், திராவிட நாகரிகம் என்பதை ஐயமறத் தெரிவிக்கின்றன. இவ்வகழ்வாய்வுகளில் சைவ சமயம் பற்றிய – குறிப்பாகச் சிவனுக்கு அல்லது அதற்கு முற்பட்ட வடிவ வழிபாடு பற்றிய குறிப்புகள் கிடைத்துள்ளன. உலகின் மிகப் பழைய உயிரோட்டமுள்ள சமயம் சைவ சமயமேயாகும்” என்று சர். ஜான் மார்ஷல் என்னும் அகழ்வாராய்ச்சி அறிஞர் கூறியுள்ளார். மேலும் “மொஹெஞ்சதரோ – ஹரப்பா வெளிக்காட்டும் செய்திகள் பலவற்றால் சைவம் மிகப் பழைய கற்காலத்தும் அதற்கும் முற்பட்ட காலத்துக்குமான சமயம் என்றும் இந்த வகையில் உலகின் மிகப்பழைய சமயமாகச் சைவம் விளங்குகிறது” என்றும் ஜான் மார்ஷல் குறிப்பிடுகின்றார்.

    சைவம், தென்னிந்தியாவின் மிகப்பழைய, வரலாற்றுக்கு முற்பட்ட சமயம் ஆகும்; அது ஆரியருக்கு முற்பட்ட காலத்திலிருந்தே வழக்கில் இருந்து வருகிறது என்று G.U.போப், திருவாசக ஆங்கில மொழி பெயர்ப்பு முன்னுரையில் குறிப்பிடுகின்றார். “காளியும் சிவனும் திருமாலும் வேத காலத்துக் கடவுளர்கள் அல்லர்; எனவே அவர்கள் ஆரியர்களைச் சேர்ந்தவர்களும் அல்லர். அவர்கள் திராவிடர்களைச் சேர்ந்தவர்கள் என்பதைத் தவிர வேறு முடிவுக்கு வருவதற்கு இல்லை” என்று ‘இந்தியப் பண்பாட்டில் திராவிடக் கூறுகள்’ என்னும் நூலில் G. சிலேட்டர் என்னும் அறிஞர் குறிப்பிடுகின்றார்.

    மேற்குறிப்பிட்ட அறிஞர்களின் கருத்துகளிலிருந்து, சைவம் மிகத் தொன்மையான சமயம் என்பதும், பழந்தமிழர்கள் சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு தொன்று தொட்டு வழிபட்டு வருகின்றனர் என்பதும் புலப்படுகின்றன. (http://www.srmuniv.ac.in/tamilperayam/tamil_courses/Lessons/MA_Tamil/I_Year/m

    இவ்வாறு சிவ வணக்கத்துக்குரிய சான்றுகள் ஆரியருக்கு முற்பட்ட காலங்களிலிருந்தே கிடைத்து வந்தாலும், சைவ சித்தாந்தம் ஒரு தத்துவப் பிரிவாக உருவானது கி.பி. ஐந்தாம் நூற்றாண்டளவிலேயே என்று கருதப்படுகின்றது. இக்காலப் பகுதியில் வாழ்ந்த திருமூலரால் எழுதப்பட்டதும், சைவ சித்தாந்தத்தின் சாரம் என்றும் கருதப்படும் திருமந்திரம் என்னும் நூலிலேயே சைவ சித்தாந்தம் என்ற சொற்பயன்பாடு முதல் முதலில் காணப்படுகின்றது. சைவ சித்தாந்தத்தை விளக்க, 12 -ஆம் நூற்றாண்டு தொடக்கம் 14 -ஆம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியில் பதின்நான்கு நூல்கள் தோன்றின.

    1. சிவஞான போதம்

    2. சிவஞான சித்தியார்

    3. இருபா இருபது

    4. திருவுந்தியார்

    5. திருக்களிற்றுப்படியார்

    6. உண்மை விளக்கம்

    7. சிவப்பிரகாசம்

    8. வினா வெண்பா

    9. திருவருட் பயன்

    10. போற்றிப் பஃறொடை

    11. நெஞ்சுவிடுதூது

    12. கொடிக்கவி

    13. உண்மை நெறி விளக்கம்

    14. சங்கற்ப நிராகரணம்.

    இவை மெய்கண்ட சாத்திரங்கள் என அழைக்கப்படுகின்றன.

    திருஞான சம்பந்தர் முதலிய 27 ஆசிரியர்கள் அருளிய பன்னிரு திருமுறை எனும் தொகுப்பைத் தோத்திரங்கள் என அழைப்பர். இந்தச் சாத்திரங்களும் தோத்திரங்களும் சைவ சமயத்தின் இரு விழிகள்.

    முதல் ஏழு திருமுறைகள் பாடியவர்கள் : திருஞானசம்பந்தர் , திருநாவுக்கரசர் , சுந்தரர் ; இவை தேவாரம் என அழைக்கப்படுகின்றன.

    எட்டாம் திருமுறை திருவாசகம், திருக்கோவையார் – மாணிக்கவாசகர் பாடியவை. ஒன்பதாம் திருமுறையில் ஒன்பதின்மர் பாடிய திருவிசைப்பா அடங்கும் ; இங்கும் ஒரு திருப்பல்லாண்டு உண்டு ; அதனைப் பாடியவர் , சேந்தனார். பத்தாம் திருமுறை இருபது நூல்களை உள்ளடக்கியது. இதில் மிகப் புகழ் பெற்ற திருமூலர் எழுதிய திருமந்திரம், நக்கீரரின் திருமுருகாற்றுப்படை (பத்துப்பாட்டில் உள்ள அதே நூல்தான்) போன்றவை உள்ளன. பதினோராம் திருமுறையில் மொத்தம் பத்தொன்பது நூல்கள் உண்டு. சேக்கிழார் அருளிய பெரியபுராணம் பன்னிரண்டாம் திருமுறை ஆகும்.

    சைவ சமயப் பெருமைகள் :

    சைவத்துக்கெனப் பல பெருமைகள் உண்டு. சமயங்களில் மூத்தது என்பது முதல் பெருமை. “திறமான புலமை எனில் வெளி நாட்டார் அதை வணக்கம் செய்திடல் வேண்டும்” என்ற பாரதியின் கருத்துக்கு ஏற்ப, வெளி நாட்டு அறிஞர்கள் கூற்றுகள் சிலவற்றைக் காண்போம்

    – ஜி .யு .போப் , ” இந்தியாவில் உள்ள சமயங்கள் அனைத்திலும் சைவ சித்தாந்தமே மிக மேம்பட்டது என்பதில் ஐயம் இல்லை ” என்கிறார்.

    – முனைவர் கபில சுவபில் : “மனித சிந்தனைகளில் மிக முழுமையான, அறிவார்ந்த சிந்தனை சைவ சித்தாந்தமே!

    – H.R Hoyzington,the founder of church of South India ( CSI) : “சைவ சித்தாந்தத்தில் காணப்படும் மெய்யியல் உண்மைகள் கிரேக்க மெய்யியலிலோ இலத்தீன் மெய்யியலிலோ காண முடியாதவை.”

    நம் நாட்டு ஞானிகளும் சைவத்தைப் பெருமையாகப் பேசுகின்றனர் :

    தாயுமானவர் :
    “சைவ சமய மேசமயஞ் சமயா தீதப் பழம் பொருளைக்
    கைவந்திடவே மன்றுள்வெளி காட்டுமிந்தக் கருத்தை விட்டுப்
    பொய்வந் துழலுஞ் சமயநெறி புகுதவேண்டாம் முத்திதருந்
    தெய்வ சபையைக் காண்பதற்குச் சேரவாருஞ் சகத்தீரே”

    ”சைவம் சிவனுடன் சம்பந்தமாவது” (திருமந்திரம், 1486) என்று திருமூலர் கூறுகிறார்.

    “ சைவத்தின் மேற்சம யம்வே
    றிலையதிற் சார்சிவமாந்
    தெய்வத்தின் மேற்றெய்வ மில்லெனும்
    நான்மறைச் செம்பொருள்வாய்
    மைவைத்த சீர்த்திருத் தேவார
    முந்திரு வாசகமும்
    உய்வைத் தரச்செய்த நால்வர்பொற்
    றாளெம்மு யிர்த்துணையே !”

    – சைவ எல்லப்ப நாவலர். திருவருணைக் கலம்பகம்.

    2) சைவசமயம் எல்லாச் சமயங்களையும் தனக்கு அங்கமாகக் கொண்டு தாயகமாய் விளங்குவது. எந்தச் சமயத்தையும் புறக்கணிக்காது தழுவி நிற்கும் சமரசமுடையது.

    “யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமேயாகி ஆங்கே
    மாதொரு பாகனார் தாம் வருவர் “ — சிவஞான சித்தியார்

    “தென்னானுடைய சிவனே போற்றி
    என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!” – என்பது மாணிக்கவாசகர் தம் மணிவாசகம்.

    “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் “ என்று உலகிற்கு உணர்த்திய சமயம் சைவம் ஒன்றே .

    ஓரிறைக் கோட்பாட்டையும் உருவ அருவ வணக்கத்தையும் உரைப்பதுவும் சைவமே :

    “ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமிலார்க்கு ஆயிரம்
    திருநாமம் பாடித் தெள்ளேணம் கொட்டோமோ !” – திருவாசகம் உரைக்கும் உண்மை!

    “விரிவிலா அறிவினர்கள் வேறொரு சமயஞ் செய்து
    எரிவினாற் சொன்னா ரேனும் எம்பிராற் கேற்ற தாகும்” என்பது அப்பர் திருவாக்கு.

    “இறவாத இன்ப அன்பு
    வேண்டிப்பின் வேண்டு கின்றார்
    பிறவாமை வேண்டும் மீண்டும்
    பிறப்புண்டேல் உன்னை என்றும்
    மறவாமை வேண்டும் இன்னும்
    வேண்டும்நான் மகிழ்ந்து பாடி
    அறவாநீ ஆடும் போதுன்
    அடியின்கீழ் இருக்க” என்றார் காரைக்கால் அம்மையார்.

    (‘திருவிளையாடல்’ படத்தில் இக்கருத்தமைந்த பாடலை ஔவையார் பாடுவதாக ஏ.பி நாகராசன் அமைத்துவிட்ட காரணத்தால் இதனைப் பாடியவர் ஔவையாரே என்று இன்றளவும் தவறாகவே எண்ணிக்கொண்டிருக்கின்னர். இது போலவே, ‘ஒன்றே குலம் ; ஒருவனே தேவன்” எனச் சொன்னவர் அறிஞர் அண்ணாதுரை என்று ‘தம்பிகள்’ நம்பிக்கொண்டு உள்ளனர்.)

    சைவ சித்தாந்தம் :

    மனிதப் பிறவி எடுக்கும் உயிர்கள், (பசு எனச் சைவ சித்தாந்தத்தில் அழைப்பர்)
    பதியாகிய இறைவனோடு இணைய முடியாமல் பாசம் என்ற தளை தடுக்கிறது. இந்தப் பசு, பதி, பாசம் என்ற முக்கோணச் சிக்கலை அடிப்படையாகக் கொண்டதே சைவ சித்தாந்தம்.

    இதனை விளக்குவனவே 12 -ஆம் நூற்றாண்டுத் தொடக்கம் 14 -ஆம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியில் தோன்றிய பதின்நான்கு நூல்கள். இவற்றை மெய்கண்ட சாத்திரங்கள என்பர்.

    சைவச் சமயக் குரவர்கள் திருஞானசம்பந்த சுவாமிகள், திருநாவுக்கரசு சுவாமிகள், சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள், மாணிக்க வாசகர் அருளிய திருவாசகம், திருக்கோவையார், திருமூலர் அருளிய திருமந்திரம்., திருஆலவாய் உடையார், காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர்கோன், சேரமான் பெருமாள், நக்கீரர், கல்லாடர், கபிலர், பரணர், இளம்பெருமாள் அடிகள், அதிராவடிகள், பட்டினத்துப் பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி ஆகிய பன்னிரு அருளாளர்கள் அருளிய திருவருட் பாடல்கள், சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம். முதலியவற்றைப் பன்னிரு திருமுறை என்பார்கள். இவற்றைத் தோத்திரப் பாடல்கள் என்றும் கூறுவது உண்டு. இவற்றின் அடிப்படையில் அமைந்ததுதான் சைவ சமயம்.

    3 ஓரிறைக் கோட்பாட்டையும் உருவ அருவ வணக்கத்தையும் உரைப்பதுவும் சைவமே.
    ஓரிறைக் கோட்பாட்டை உரைக்கும் முக்கிய சமயங்கள் : யூத மதம், கிறித்துவச் சமயம், இசுலாமிய மதம். அருவ வணக்கத்தை ஆதரிப்பவை யூத, இசுலாமிய மதங்கள்
    உருவ வணக்கத்தைப் பெரும்பாலான சமயங்கள் விலக்குவதில்லை : வைணவம், கிறித்துவம், புத்தம், சமண மதங்கள். ஆனால் இவை யாவற்றையும் ஏற்பது சைவ சமயத்தின் சிறப்பாகும் ( சிவலிங்கம் உருவ அருவ வணக்கத்துக்கு நல்ல எடுத்துக்காட்டு.)

    இனி இச்சைவ சமயம் எப்படி அறிவியல் மையமாக விளங்குகிறது எனக் காண்போம்.

    Share
  • சிலம்பு காட்டும் தமிழகத்தில் வேதமதம் – ஒரு சிறு அலசல்

    புவனேஷ்வர்

    திருமதி. மேகலா அவர்களின் உரையில் (http://www.vallamai.com/?p=38420&cpage=1#comment-8775) அவர் சொன்ன வரி அடியேன் கவனத்தை ஈர்த்தது.

    //ஒரு சாதாரணப் புலவர் அரசனையே கண்டிக்கின்றார் என்றால்….//

    சொல்லாமல் இருக்க முடியவில்லை. சிலம்பில் இதற்கு ஒரு மிக அழகிய உவமையை இளங்கோ சொல்வார்.

    ஆட்சிக்கு வந்து ஐம்பது ஆண்டுகள் ஆகிய பின்னும் செங்குட்டுவன் மறக்கள வேள்விகள் (போர்) செய்வதை விட்டு விட்டு அறக்கள வேள்விகளைச் செய்ய வேண்டும் என மாடல மறையோன் அறிவுரை சொல்கிறான்.

    அதனை 
    “மறையோன் மறைநா உழுது வான்பொருள்
    இறையோன் செவிசெறு வாக வித்தலின்
    வித்திய பெரும்பதம் விளைந்துபத மிகுத்துத்
    துய்த்தல் வேட்கையிற் சூழ்கழல் வேந்தன்
    நான்மறை மரபின் நயம்தெரி நாவின்
    கேள்வி முடித்த வேள்வி மாக்களை
    மாடல மறையோன் சொல்லிய முறைமையின்
    வேள்விச் சாந்தியின் விழாக்கொள ஏவி”

    என்கிறார். அதாவது: “மாடல மறையோன் விதைத்த விதையாகிய பெரும்பொருள் விளைவாகிய உணவினை மிகுதியாகத் தந்தது. அதன் பயனை நுகர விரும்பினான் வீரக் கழல் அணிந்த சேர வேந்தன். நான்கு வேதங்களையும் குறைவற ஓதி, பொருள் உணர்ந்த,  உச்சரிப்புப் பிழை அறவே நீங்கிய நாவினை உடைய அந்தணர்களை, மாடல மறையோன் கூறிய வண்ணம் வேள்வியினைச் செய்ய ஏவினான்” என்று பொருள்.
    ilango 1
    இதில் இருந்து சில விஷயங்கள் தெரிகின்றன.

    1. புலவர்கள், அந்தணர்கள், சான்றோர் வாக்குக்கு மரியாதை தந்தார்கள் அரசர்கள்.
    2. இன்றைக்கு தென் மாவட்டங்களில் ஒரே குடும்பத்தில் கிறிஸ்தவரும் ஹிந்துக்களும் இருப்பது போல, அந்நாளிலும் ஒரே குடும்பத்தில் சமணரும் வேத மதத்தைப் பின்பற்றுபவரும் இருந்தனர். (சேரனின் உடன்பிறந்தவர் இளங்கோ, அவர் சமணர், துறவி).
    3. அந்த காலத்தில் தமிழகத்தில் ஐயத்திற்கு இடமின்றி வேத பாராயணம் இருந்தது. நான்கு மறைகளை ஓதிய அந்தணர் என்கிறார். நயம் தெரி நா – வேதத்துக்கு முக்கியம் உச்சரிப்பு. அந்த நயம் அறிந்து பிழை அற்ற உச்சரிப்பை உடைய நா முக்கியம்.

    சமணரான இளங்கோவே இப்படிச் சொல்ல வேண்டிய அவசியம் என்ன? சமணர்கள் சத்திய வாக்குடைய விரதம் பூண்டவர்கள். சொன்ன சொல் காப்பவர்கள். அந்த வாய்மையை தலையாயதாகக் கொண்டே, தனது மதத்துக்கு நேர் விரோதமான வேத மதத்தையும், அதன் வரவளையும் வழக்குகளையும் மூடி மறைக்காமல் உள்ளது உள்ள படி, இருந்த விதத்தை சொல்கிறார் இளங்கோ.

    இங்கே மட்டுமல்ல, பல கட்டங்களில் இது வரும். மதுரைக் காண்டத்தில் “அந்தீம் புகையும் ஆகுதிப் புகையும்” மற்றும் “நான்மறை அந்தணர் நவின்ற ஓதையும், மாதவர் ஓதி மலிந்த ஓதையும்” எனும் வரிகள், காலையில் மதுரை மக்களை வேத கோஷம் எழுப்பியது என்று காட்டுகிறது. ஆகுதி என்றால் வேள்வியில் சொரியும் ஹவிஸ் – நெய். இது வேத வழக்கம்.

    அது மட்டுமல்ல.

    மகுரைக் காண்டத்தில், கட்டுரைக் காதையில் சோழதேசத்தில் வாழ்ந்த பராசரன் என்னும் வேதப் பிராம்மணன் கதையும் வருகிறது.

    “பூம்புனற் பழனப் புகார்நகர் வேந்தன்
    தாங்கா விளையுள் நன்னா டதனுள்
    வலவைப் பார்ப்பான் பராசர னென்போன்
    குலவுவேற் சேரன் கொடைத்திறங் கேட்டு
    வண்டமிழ் மறையோற்கு வானுறை கொடுத்த
    திண்டிறல் நெடுவேற் சேரலற் காண்கெனக்
    காடும் நாடும் ஊரும் போகி
    நீடுநிலை மலயம் பிற்படச் சென்றாங்கு
    ஒன்றுபுரி கொள்கை இருபிறப் பாளர்
    முத்தீச் செல்வத்து நான்மறை முற்றி
    ஐம்பெரு வேள்வியுஞ் செய்தொழில் ஓம்பும்
    அறுதொழி லந்தணர் பெறுமுறை வகுக்க
    நாவலங் கொண்டு நண்ணா ரோட்டிப்
    பார்ப்பன வாகை சூடி ஏற்புற
    நன்கலங் கொண்டு தன்பதிப் பெயர்வோன்
    செங்கோல் தென்னன் திருந்துதொழில் மறையவர்
    தங்கா லென்ப தூரே அவ்வூர்ப்
    பாசிலை பொதுளிய போதி மன்றத்துத்
    தண்டே குண்டிகை வெண்குடை காட்டம்
    பண்டச் சிறுபொதி பாதக் காப்பொடு
    களைந்தனன் இருப்போன் காவல் வெண்குடை
    விளைந்துமுதிர் கொற்றத்து விறலோன் வாழி
    கடற்கடம் பெறிந்த காவலன் வாழி
    விடர்ச்சிலை பொறித்த வேந்தன் வாழி
    பூந்தண் பொருநைப் பொறையன் வாழி
    மாந்தரஞ் சேரல் மன்னவன் வாழ்கெனக்
    குழலும் குடுமியும் மழலைச் செவ்வாய்த்
    தளர்நடை யாயத்துத் தமர்முதல் நீங்கி
    விளையாடு சிறாஅ ரெல்லாஞ் சூழ்தரக்
    குண்டப் பார்ப்பீ ரென்னோ டோதியென்
    பண்டச் சிறுபொதி கொண்டுபோ மின்னெனச்
    சீர்த்தகு சிறப்பின் வார்த்திகன் புதல்வன்
    ஆலமர் செல்வன் பெயர்கொண்டு வளர்ந்தோன்

    பால்நாறு செவ்வாய்ப் படியோர் முன்னர்த்
    தளர்நா வாயினும் மறைவிளி வழாஅது
    உளமலி உவகையோ டொப்ப வோதத்
    தக்கிணன் தன்னை மிக்கோன் வியந்து
    முத்தப் பூணூல் அத்தகு புனைகலம்
    கடகம் தோட்டொடு கையுறை ஈத்துத்
    தன்பதிப் பெயர்ந்தனன்”

    Puhar-ILango

    அறநெறியிலே செல்லும் செங்கோலையும் வீர நெறியிலே செல்லும் வாளையும் உடையவனாக, அடைக்கலம் என வந்த புறாவின் பொருட்டு துலாக் கோலிலே புகுந்தவனான சிபியும், ஒரு பசுவுக்காகத் தனது அருந்தவப் புதல்வனையே தெரிந்து வலிய காலிலிட்டுக் கொன்ற மனுநீதிச் சோழனும் ஆண்ட, நீர்வளம் மிக்க வயல்கள் சூழ்ந்த புகார் நகரத்தை உடைய சோழ நாட்டில், அறிவில் வல்ல பராசரன் என்னும் ஒரு அந்தணன் இருந்தான்.

    அவன், பாரதப் போரில் இருதிறத்துப் படைகளுக்கும் ஒருசேர மிகுதியாகச் சோறு வழங்கிய உதியன் சேரலாதனின் வள்ளன்மையை கேள்வியுற்று அவன் சபையில் நடந்த சதஸிலே கலந்து கொண்டான்.

    அங்கு,
    “ஒன்றுபுரி கொள்கை யிருபிறப் பாளர்
    முத்தீச் செல்வத்து நான்மறை முற்றி
    ஐம்பெரு வேள்வியுஞ் செய்தொழி லோம்பும்
    அறுதொழி லந்தணர்”

    என அந்தணர்களுக்கு வகுக்கப்பட்டபடி, வாதத்தில், அத்வைதத்தில் ஊறிய கொள்கையை உடைய பிற அந்தணர்களை வென்று பார்ப்பன வாகை சூடி, அரசனளித்த பரிசுகளாகிய நன்கலங் கொண்டு தனது ஊருக்குத் திரும்பினான். கஹோளர் மகன் அஷ்டாவக்கிரன் vs வந்தி (வருணகுமாரன்) சரித்திரம் மகாபாரதத்தில் காண்க.

    செங்கோற் தென்னன் ஆட்சிக்குட்பட்ட  திருந்து தொழில்மறையவர் வாழும் திருத்தங்கலூர்என்னும் ஊரில், ஊர்ப்பொதுவில் இருந்த அரசமரத்து மேடையில் களைப்பாறி யிருந்தான். தன்னுடைய,

    “தண்டே குண்டிகை வெண்குடை காட்டம்,
    பண்டச் சிறுபொதி பாதக் காப்பொடு
    களைந்து”

    மூவேந்தர்களையும் வாழ்த்தி இருந்தனன். அந்தணர்களுக்கு எந்த நாடும் அவர் நாடே. இது பாரத தர்மம். அப்பொழுது அங்கு விளையாடிக் கொண்டிருந்த அந்தணச் சிறார்கள் அவனைச் சூழ்ந்து கொள்கின்றனர். அக்குழந்தைகளைக் கண்டு மகிழ்ந்த பராசரன், என்னோடு சேர்ந்து உச்சரிப்பு மாறாது வேதம் ஓதினால், இப்பரிசுப் பொருள்கள் அனைத்தையும் பெரிவீர்கள்” எனஅன்புடன் அழைத்தான்.

    அப்பொழுது, வார்த்திகன் எனும் அந்தணனின் புதல்வன், ‘ஆலமர் செல்வன் பெயர்கொண்டு வளர்ந்தோன்’ (ஆலமர்செல்வன் பெயர் – தக்ஷிணாமூர்த்தி) மழலை மாறாத குழந்தையாயினும் பராசரன் சொன்ன மறைகளைச் சந்தம் பிழையாது கூறினான் மறைவிளி வழாஅ) அதனால் மகிழ்ந்த பராசரன் அவனை  மிகவும் பாராட்டித் தன்னிடம் இருந்த பரிசுப்பொருள்களை ஈந்து தன் வழி சென்றான்.

    பராசரன் என்னும் பெயர் இன்றும் தமிழ்ப் பார்ப்பனர்களிடையே வழங்கி வருகின்றது. அந்தணர்களின் கோத்திரப் பெயர்களில் ஒன்றாகவும் வழங்கி வருகின்றது. மறையவர்கள் அத்வைதம் என்னும் கொள்கையராகையால், ‘ஒன்றுபுரி கொள்கை இருபிறப்பாளர்’ என்றார். ஆஹவனீயம், கார்ஹபத்யம், தக்ஷிணாக்னி எனும் முத்தீயோம்பும்அந்தணரை முத்தீ அந்தணர் எனபது வழக்கு. ஐந்து வேள்விகளை செய்பவர் ஐந்தி ஒம்புபவர்.

    அரசனிடம் தானம் வாங்கியதும் பிராமணன் சத்பாத்ரங்களுக்கு அதை தானமாக கொடுக்க வேண்டும். அப்படிச் செய்தால் தான் பரிக்ரஹ தோஷம் (ஆசைப்பட்டு தானம் வாங்கிய தோஷம்) நீங்கும். அதை பராசரன் செய்தான்.

    இது வேத வழக்கம்.

    அறுதொழிலோர்: வேதம் ஓதுதல், ஓதுவித்தல், வேள்வி செய்தல், செய்வித்தல், தானம் வாங்குதல், தானம் கொடுத்தல் ஆகிய ஆறு தொழில்களைச் செய்தது வேத அந்தணர்கள்.

    ஒரு சமணத் துறவியே, வேத வழக்கம் தமிழகத்தில் வேரூன்றி இருந்ததை நடுவு நிலையோடு சொல்கிறார். அவர் பிராம்மணன் ஆனால் கூட ஏதோ இட்டுக் கட்டி சொல்கிறான் பார்ப்பான் என்று வையலாம். தனக்கு ஆகாத மதமான வேத மதத்தை இவர் ஏன் இருந்ததாகச் சொல்ல வேண்டும்?  தமிழ் நாகரிகத்தில் வேதத்துக்கு இடமில்லாததாக சொல்லும் மக்கள் இதை எல்லாம் கவனிப்பார்களா?

    படங்களுக்கு நன்றி:

    http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Puhar-ILango.jpg

    http://susenthilkumaran.blogspot.com/2010/11/blog-post.html

    Share
  • சுவாமி விவேகானந்தரின் பார்வையில் வேதாந்தம்

    கோ.ஆலாசியம்

    vivek1

    சுவாமி விவேகானந்தர்  –  எனக்கு மானசீக குருவாக இருந்து வேதாந்தத்தை விளக்கிய ஞானச்சுடர்! இந்த உலகின் உய்விற்கு வித்திட வந்துதித்த பேரொளி சுவாமி விவேகானந்தர்! அந்த மகானின் வேதாந்த விளக்கத்தைப் படித்து எனது சிற்றறிவில் பூத்த சிறு பூக்களின் மணத்தை இங்கே பரப்பிட விழைகிறேன்.

    பொதுவாக அந்த ஞானியைப் பற்றிய பல, அறிய,  அறியப்பட வேண்டிய செய்திகளை நாம் அனைவரும் வாழ்வில் பலமுறை படித்து பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அது வரவேற்கத் தகுந்தது. இருந்தும், சுவாமிஜி அவர்கள் கூறிய ஆன்ம லட்சியத்தைப் பற்றிய அறிவும், ஆய்வும், நம்மை வழிநடத்த அந்த ஞானி நமக்கெல்லாம் சொல்லிய உயரிய லட்சியமான பேரொளியில் கலக்க அயராது முயன்று அதனை அடைவதே! சுவாமிஜி நமக்கு போதித்ததும் அவரின் தீர்க்கமான விருப்பமும் அதுவே ஆகும்.

    அவ்வகையிலே சிந்தித்து அவரின் தெய்வீகமான உரையில் உறைந்து  கிடக்கும் உண்மையின் சாரத்தை நாமும் உணர்ந்து தெளிவோமாக.

    சுவாமிஜி அவர்கள் கூறியக் கருத்துக்களின் சாரத்தைக் கூறுகையிலே, சுவாமிஜியின் ஆசியுடன், எனது புரிதலையும் அங்கே சில உதாரணங்களுடன் கூற முயன்றிருக்கிறேன். சுவாமி விவேகானந்தரைப் பற்றி அறிய விரும்பித் தேடியபோது இந்த அமுதம் கிடைத்தது.

    இவற்றை பள்ளிப் பாடத்தில் இவ்வளவு காலம் வைத்து கற்றுத் தந்திருந்தால், எத்தனையோ மெய்ஞானிகள் அல்ல, நல்ல மனிதர்களையாவது நாடு பெற்றிருக்கும் என்பது எனது ஆதங்கம்.

    ***

    உலக மதங்களுக்கெல்லாம் கருவும்,  கருவறையும் நமது வேதங்கள் என்றால் அது மிகையாகாது. மேலைநாடுகளையும் அம்மக்களையும் இறைவன் விஞ்ஞானத்திற்கான கூரோடு படைத்திருக்கிறான் என்றால், கீழைநாடுகளையும் அம்மக்களையும் குறிப்பாக இந்தியாவையும் இந்தியர்களையும் மெஞ்ஞானத்திற்காகப் படைத்திருக்கிறான் என்று கூறலாம்.

    .

    வேதாந்தத் தத்துவம்:

    (ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில், 25 மார்ச் 1896 -ல் சுவாமி விவேகானந்தர்  ஆற்றிய உரையின் சுருக்கம்)

    vivek2வேதாந்தத் தத்துவம் என்று இன்று பொதுவாகக் கூறப்படுவது, உண்மையில், தற்போது இந்தியாவிலுள்ள எல்லாப் பிரிவுகளையும் (மதங்களையும்) தன்னுள் அடக்கியதாகும். (ஏன்? உலக மதங்களும் இதில் அடக்கம் என்று பிற்பகுதியில் சுவாமிஜியே குறிப்பிடுகிறார்).

    எனவே அதற்குப் பல்வேறு விளக்கங்கள் இருந்திருக்கின்றன. இவை துவைதத்தில் துவங்கி, அத்வைதம் வரைப் படிப்படியாக முன்னேறி இருக்கவேண்டும் என்று நான் நினைக்கின்றேன். துவைதிகள் புராணங்களைப் பெரிதாகப் போற்றுகின்றனர், அத்வைதிகள் வேதாந்த நெறிகளையே முதன்மையாகக் கொள்கின்றனர்.

    வேதம்- அதற்கு எழுதப்பட்ட உரை வேதாந்தம். வேதாந்தம் என்ற சொல்லின் பொருள் வேதங்களின் முடிவு என்பதாகும். வேதங்கள் இந்துக்களின் சாஸ்திரங்கள். வேதங்கள் என்பவை துதிப் பாடல்களும், சடங்குகளும் மட்டுமே என்று பலராலும் சில வேளைகளில் கொள்ளப்படுகிறது. ஆனால் இந்தப் பகுதிகள் தற்போது ஏறக்குறைய  உபயோகத்தில் இல்லை.

    பொதுவாக வேதம் என்றால் வேதாந்தம் என்று தான் தற்போது இந்தியாவில் பொருள் கொள்ளப்படுகிறது. ‘வேதாந்தம்’ என்பது ‘சுருதி’ என்றத் தனிப் பெயராலும் அழைக்கப் படுகிறது.

    நடைமுறையில் இந்துக்களின் சாஸ்திரங்களாக இருப்பது வேதாந்தமே. வைதீகத் தத்துவங்கள் எல்லாம் வேதாந்தத்தையே அடிப்படையாகக் கொள்ள வேண்டும். தங்களுக்கு ஒத்துவருகிற வேதாந்தக் கொள்கைகளை மேற்கோளாகக் காட்ட, பெளத்தர்களும் சமணர்களும் கூடத் தயங்குவதில்லை.

    இந்தியத் தத்துவப் பிரிவுகள் எல்லாம், வேதங்களே தங்களுக்கு அடிப்படை உரிமை என்றுக் கொண்டாடினாலும், அவை தங்களின் நெறிகளுக்கு வெவ்வேறு பெயர்கள் வைத்துக் கொண்டன. இந்த நெறிகளுள் கடைசியானது வியாசருடையது. வியாசருக்கு முந்தியவை சில இருந்தும்; வியாசரின் நெறி தான் சிறப்பாக வேதாந்தத் தத்துவம் என்று அழைக்கப்படுகிறது.

    பொதுவாக இந்தியாவில் மூன்று விளக்க உரைகள்; அதன் பொருட்டு மூன்று தத்துவப் பிரிவுகளும், அதனால் மூன்று நெறிகளும் தோன்றி இருக்கின்றன.

    (வேதங்களின் விளக்க உரைகள் பாஷ்யம், டீகா, டிப்பணி, சூர்ணி என்று பலவகை. இதில் பாஷ்யமே மூலப்பாடத்தை ஆதாரமாகக் கொண்டு ஒரு கோட்பாட்டு முறையை  நிலைநாட்ட முயற்சித்தது).

    மூன்று நெறிகள்:

    vivek3முதலில் துவைதம்:  இரண்டு என்பது அதன் பொருள். அதாவது பரமாத்மா, ஜீவாத்மா என இரண்டு ஆத்மாக்கள் இருப்பதை நிலைநிறுத்தும் தத்துவம்,

    இரண்டாவது விசிஷ்டாத்வைதம்.

    மூன்றாவது அத்வைதம்: அத்வைதம் என்றால் இரண்டல்ல ஒன்றே; அதாவது பரமாத்மாவும், ஜீவாத்மாவும் ஒன்றே; எல்லா ஜீவன்களிலும் பரமாத்மாவே  இருக்கிறதாக கொள்வது ஆகும். இதில் இந்தியாவில் அத்வைதிகள் குறைவு.

    எல்லா வேதாந்திகளும் / வேதாந்த நெறிகள் பொதுவாக சில கருத்துக்களில் மட்டும் வேறுபடுகின்றன. ஆனால் மூன்று விஷயங்களில் ஒத்துப்  போகின்றன.

    அவை: 1.  கடவுள்,  2.  வேதங்கள், 3.    மூன்றாவதாக படைப்புச் சுழற்சி

    வேதங்கள் என்பது வேதாந்திகள் மூலம் அந்தப் பரம்பொருளிடம் இருந்து வெளிப்பட்ட அருள் வெளிப்பாடு, அதாவது ஞானிகள் மெஞ்ஞானத்தினால் உணர்ந்தவை. நமக்குப்  புரியும்படி  கூறினால்,  அது ஒரு திரைப்படமாக அவர்களுக்கு தெரிந்தது எனக் கொள்வோம். அப்படியானால், அவை எத்தனை நாட்கள் நிற்காமல் ஓடி இருக்க வேண்டும் எனத் தோன்றலாம்.

    இதை விளக்க யோகி ஓசோ அற்புதமான விளக்கத்தைக் கூறுவார். பகவத் கீதையில் போர்க்களத்திலே அவ்வளவு பேர் கூடிய அந்த வேளையிலே எப்படி பரமாத்மாவும், அர்ஜுனனும் அவ்வளவு  பேசிக்கொண்டார்கள். அது நம்பும்படியான கால அவகாசம் இல்லையே என்பதற்கு அருமையான விளக்கம்: அது நாம் பிறந்து வளர்ந்து, கல்யாணம் முடித்து என்று தொடரும் வாழ்க்கையை எப்படி அரைமணிக் கனவில் கண்டு விடுவோமோ அதைப் போன்ற ஒரு நிலையில் நடந்த விவாதம் எனக் கொள்ள வேண்டும் என்பார்.

    எவ்வளவு அற்புதமான விளக்கம்!

    இந்த மூன்றையும் அவர்கள் நம்புகிறார்கள்.

    படைப்புச் சுழற்சி பற்றிய நம்பிக்கை பின்வருமாறு:

    ஆகாசம் என்ற மூல ஜடப்பொருள் (உயிரற்ற பொருள்) ஒன்றிலிருந்து தோன்றியது தான் பிரபஞ்சம் முழுவதும்  காணப்படும் ஜடப்பொருள்கள் அனைத்தும். புவியீர்ப்பு சக்தி, இணைக்கும் சக்தி, விளக்கும் சக்தி போன்ற எல்லா சக்திகளும், உயிர் சக்தியும் பிராணன் என்ற ஓர் ஆதி சக்தியிலிருந்து தோன்றியவை.

    vivek4பிராணன் ஆகாசத்தின் மீது செயல்படுவதால் பிரபஞ்சம் படைக்கப்படுகிறது;  அல்லது வெளிப்படுகிறது. படைப்பின் தொடக்கத்தில் ஆகாசம் அசைவின்றி,  மாறுதல் இன்றி இருந்தது. அதன்மீது பிராணன் அதிக அளவில் செயல்பட்டு,  அதிலிருந்து செடிகள், பிராணிகள்,  மனிதர்கள்,  விண்மீன்கள், போன்ற தூலப் பொருட்களைப் படைத்தது.

    அடுத்தது பிரபஞ்ச மறைவு பற்றியதையும் இங்கேயே அவர் கூறியதை நினைவு கூர்வோம்.

    கணக்கிட முடியாத காலத்திற்குப் பின்னர் இந்த விரிவு அல்லது தோற்றம் ஒடுங்கத் தொடங்குகிறது. ஒவ்வொன்றும் தூல நிலையில் இருந்து படிப்படியாக சூட்சும நிலைக்கு மாறி, கடைசியில் முதற்பொருளான ஆகாசமும் பிராணனுமாக மாறி ஒடுங்கிவிடுகிறது.

    பிறகு,  மீண்டும் ஒரு புது சுழற்சி தொடங்குகிறது. இந்த ஆகாசத்திற்கும் பிராணனுக்கும் அப்பால் ஏதோ ஒன்று இருக்கிறது. இந்த இரண்டையும் மூன்றாவது பொருளாகிய ‘மகத்’ என்பதற்குள் சுருக்கலாம். இந்த மகத் என்பது தான் பிரபஞ்ச மனம் (Cosmic mind). இந்த பிரபஞ்ச மனம், ஆகாசத்தையும்,  பிராணனையும் படைப்பதில்லை: தானே அவையாக மாறுகிறது.

    (தயவு செய்து மெதுவாக கூர்ந்து இடைவெளி விட்டுப்  படிக்கவும்.  புரியாதது போல இருந்தாலும் மேலும் படிக்கவும் கொஞ்ச  நேரம் விட்டுப் படிக்கவும்.

    புரிந்தவற்றை  மட்டும் ஞாபகத்தில் கொண்டு, மேலும் படித்துக் கொண்டே போகவும்).

    வேத விளக்கங்களை நாம் அறியப் பெறுவது என்பது நமக்கு கிடைத்த வாய்ப்பு. அதை கொஞ்சம் சிரமப் பட்டாவது தெரிந்து கொண்டால் இன்னும் சிறப்பு. மற்ற மதத்தார் பெரும்பாலும் அவரவர் மதம் கூறும் நெறிகளை வெளிப்படையாகப் பேசுகிறார்கள்.

    ஆனால் உலகில் உள்ள அனைத்து மதங்களின் மூலமும் நம்முடைய வேதங்களில் இருந்து தான் பிறந்து இருக்கின்றன என்பதை நாம் எப்படி மற்றவர்களுக்கு சொல்வது? அல்லது மற்றவர்களுக்காக இல்லை என்றாலும், நம்முடைய மன திருப்திக்காகவேனும் தெரிந்து  கொள்ளலாம் அல்லவா?

    எல்லாவற்றிற்கும் ஒரு நேரம் வர வேண்டும் என்பார்கள். ஏன் அப்படிக் கூறுகிறேன் என்று நினைக்கலாம். இந்த விஷயங்கள் அடங்கிய விவேகானந்தரின் ‘ஞான தீபம் – சுடர் 4′ ஐ வாங்கி சுமார் பத்து வருடம் கழித்துத்  தான் நான் படிக்கிறேன் என்பதால்.

    சாங்கிய  மனஇயலின்படி, ஒரு பொருளை அறிவது என்பதை எடுத்துக் கொள்வோம்.

    உதாரணமாக, பார்ப்பது- இதில் முதலில் பார்க்கும் கருவிகளாக  கண்கள்  உள்ளன. இந்தப் பொறிகளுக்குப் பின்னால் பார்வைப் புலன்கள் (பார்வை நரம்புகளும், மையமும்)  இருக்கின்றன. இவை புறக்கருவிகள் அல்ல, இருந்தும் இவை இல்லாமல் நாம் பொருள்களைக்  காண இயலாது.

    இந்தப் பொறியும் புலனும் போதாது.   இதற்கு மேலாக இந்த உணர்ச்சி (பார்வை), மனத்தின் நிர்ணயிக்கும் பகுதியான புத்திக்குப் போக வேண்டும்.  மனத்தின் தீர்மானிக்கின்ற நிலையே, எதிர்ச்செயல் (எதிராக அல்ல! ஆனால், புத்திகெட்டால்  எதிராக செயல் புரியும்) புரிகின்ற நிலையே புத்தி.

    புத்தியில் எதிர்ச்செயல் நிகழ்ந்தவுடன் பிரபஞ்சமும், அகங்காரமும் வெளிப்படுகின்றன, அதன்பிறகு சங்கல்பம்.

    (பிரபஞ்சமும், அகங்காரமும் என்பதை பொருளின் வடிவமும் அதனால் நம் மனதில் ஏற்படும் உணர்வும் என்று நான் கொள்கிறேன் / அதாவது ஒரு பொருளை நாம் கண்ணால் பார்க்கும் போது நமக்கு ஏற்படும் உணர்வு. ஆயினும் பார்க்கும் செயல் முற்றுப்  பெறவில்லை.

    ஒரு பொருளின் பிம்பம் என்பது ஒளியின் படிப்படியான இயக்கத்தால் உருவாவது.  இந்த இயங்கும் பிம்பம், இயங்காத ஒரு பொருளின் மீது வைக்கும் போது தான் அப்பொருளைக் காண முடிகிறது. அதைப் போலவே, மனத்தில் ஏற்படும் கருத்துக்களும் தொகுக்கப்பட்டு, நிலையான ஒன்றின் மீது வைக்கப்படும் போது

    புறப்பொருளில் வைத்து அதன் உண்மையைக் காண்பவன் விஞ்ஞானி. அகப் பொருளில் வைத்து உண்மையை உணர்பவன் மெஞ்ஞானி என நான் புரிந்து கொள்கிறேன்.  ஆக விஞ்ஞானி காண்கிறான், நமக்கும் காட்டுகிறான். மெஞ்ஞானி உணர்கிறான், ஆக நாமும் உணரத் தான் முடியும். ஒப்பிட அதைப் போல வேறு ஒன்று இந்தப் பிரபஞ்சத்தில் இல்லை. அப்படி முயன்றால், அது பிறவிக் குருடனுக்கு, வெள்ளை நிறத்தை புரிய வைக்க முயல்வது போல் என நான் உணர்கிறேன்).

    ஆக, இயங்கும் உடம்பையும், மனத்தையும் நிலையாக இருக்கும் ஒன்றின் மீது குவிக்க வேண்டும்.

    நிலையாக இருக்கும் அந்த ஒன்று தான் புருஷன் அல்லது ஆன்மா.

    (இங்கே சாங்கியர்களுக்கும், துவைதிகளிக்கும், அத்வைதிகளுக்கும் உள்ள சிறு வேறு கருத்தை சுவாமியின் வழி நின்று சுருங்க கூறுகிறேன்)

    .

    சாங்கியர்கள்:

    பிரபஞ்ச மனத்திற்கு (‘மகத்’ / Cosmic Mind ) அப்பால்,  அவ்யக்த  நிலையில் / தோன்றாநிலை ஒன்று இருப்பதாகவும், அங்கே மனம்  கூடத்தோன்றா நிலையிலேயே இருப்பதாகவும்,  ஆனால்  தோன்றுவதற்கான   காரணங்கள் இருப்பதாக சாங்கியத் தத்துவம்  கூறுகிறது.  அதாவது இந்த நிலையை ‘பிரகிருதி’ என்கிறது.

    அதற்கும் அப்பால், மேல் கூறியதுடன் எந்த தொடர்பும் இல்லாமல், குணமற்றதான, எங்கும் நிறைந்த  புருஷன் / சாங்கியர்கள் கூறுகின்ற ஆன்மா இருக்கிறது. புருஷன் எதையும் செய்பவன் அல்ல. சாட்சி மட்டுமே.

    அது  அதன் முன்பு வைக்கும் பொருளின் நிறத்தை பிரதிபலிக்கும்  படிகம் போல என்கிறார்கள்.

    .

    துவைதிகள்:

    ஆன்மா அல்லது இறைவன். இந்தப் பிரபஞ்சத்திற்கு நிமித்தக் காரனும், அவனே உபாதானக் காரனாகவும் இருக்கிறான் என்பர்.

    (அதாவது பானை செய்யும் குயவன், மண்பாண்டங்கள் செய்வதற்கு நிமித்தக்காரன். மண்ணும், சக்கரமும் உபாதானக் காரணம் என்பதாகும். ஆக, பானையும் அதைச்செய்ய பயன்படும் கருவிகளும் இவனில் இருந்து வேறு என்பதாகும். அதாவது எளிதாகப் புரிந்து கொள்ளும் படி சொன்னால். பானை செய்யும் குயவன் வேறு. பானை வேறு, பானை செய்யப் பயன்படும் கருவிகள் வேறு என்பதாம்).

    ஆக, இவர்கள் (துவைதிகள்)  கூறுவது, இயற்கையும் (திடப்பொருள்), ஆன்மாவும், இறைவனின் உடல் போன்றது என்கிறார்கள். இந்தக் கூற்றுப் படி இறைவனும், பிரபஞ்சமும் ஒன்று எனக் கூறலாம்.

    ஆக இந்த இயற்கையும், அதில் பல்வேறு ஆன்மாக்களும், என்றும்  ஒன்றுக்கொன்று வேறுபட்டன. ஒரு படைப்பின் (கல்பத்தில்) ஆரம்பத்தில் வெளிப்பட்டு, பிறகு படைப்பின் முடிவில் (பிரபஞ்சம்  அழியும்  நிலையில்)  நுட்பமாகி, நுட்ப நிலையிலே இருந்து விடுகின்றன என்கிறார்கள்.

    அத்வைதம்:

    vivek5அத்வைதம், இந்தக் கருத்துகளில் இன்னும் சற்று உள்நோக்கிச் சென்று  மாறுபட்டு (இல்லை மேம்பட்டு என்று நான் கருதுகிறேன்) கூறுகின்றது.

    ஏறக்குறைய எல்லா உபநிடதங்களும் இவர்களுக்கு  (அத்வைதிகளுக்கு)   சாதகமாக இருப்பதாலும், அவற்றையே  தங்களின் தத்துவத்திற்கு முற்றிலும் அடிப்படையாகக் கொள்கிறார்கள்.

    அதாவது பிரபஞ்சம் முழுவதும் ஒன்றே, ஒரே பரம்பொருள் தான்  இப்படிப் பல உருவங்களாக  வெளிப்படுகிறார் என்பது அவர்களின்  கருத்து.

    ‘ஸத்’என்ற இந்தப் பரம்பொருள் தான் எல்லாமாக, பிரபஞ்சம், மனிதன், ஆன்மா, பிற பொருள்கள்  அனைத்துமாக  மாறுகிறார்.

    மனம், மகத் (காஸ்மிக் மைன்ட் / தியானத்தில் அடையும் அறிவுநிலை)

    இரண்டுமே அந்த ‘ஸத்’ என்ற ஒன்றின் வெளிப்பாடு.  ஆக இந்த பிரபஞ்சம் இறைவனின் பரிணாமம்,   என்றும் மாறாத அந்தப் பொருள், மாறுவதாக நமக்குத் தெரிவதெல்லாம்,  தேசம், காலம், நிமித்தம் இன்னும் சொல்லப் போனால் நாமரூபங்களே.

     (பெயரும், உருவமும் தான் வேறு வேறு. இதில் மனிதனின் நாடு, நிறம், மொழி, இன்னும் பல பிரிவுகள், மனித நாகரிகத்தின் வளர்ச்சியில் அங்கமாகி,   அவையே  கயமையின் பிடியில் பங்கமாகி,  கடைசியில் துயரத்தில் சங்கமமாகி விட்டது. கடைசியில் தங்கம், தகரமாகி விட்டது. இவை அனைத்து உயிர்களுக்கும் எனலாம். பிறப்பில் உயர்வு தாழ்வு இல்லை. குதிரை என்பதால் கர்வமோ, கழுதை என்பதால் தாழ்வோ கொள்ள வேண்டாம்.

     பெரிய ஓங்கி உயர்ந்த மரத்தைப் படைத்தவன் சிறிய காயை அதிலே  காய்க்க வைத்தான். நிற்க முடியாதக் கொடிகளில் அவ்வளவு  பெரிய பரங்கிப்  பழத்தை வைத்தான். இறைவா! இவ்வளவு பெரிய மரத்தை படைத்து அதிலே இவ்வளவு சிறியக் காயைப் வைத்தாய் என்றால்.

     இறைவனோ, ‘மகனே நீயோ, மரத்தையும், அதன் காயின் அளவையும் பார்க்கிறாய். நானோ, வெயிலின் கொடுமையில் சற்று இளைப்பாற அம் மரத்தின் அடியில் வந்து அமரும் மற்ற ஜீவன்களைப் பார்க்கிறேன்’ என்கிறார்.

    பெரிய மரத்தில் பூசணி போன்றக் காய் காய்த்தால், அதன் அடியில் ஓய்வெடுக்கும் உயிர்களின் நிலை என்ன? சிந்திக்கத் தான் வேண்டும்.  ஒவ்வொன்றுக்கும் தனிச்  சிறப்பு, காரணம், அவசியம் உண்டு. அது அனைத்திலும் தெய்வீகம் இயங்குகிறது என்றும் கூறுவேன்).

    பரம்பொருள், உண்மைத்  தோற்றம் என்ற இரண்டல்ல, ஒன்றே. அது மாறாதது என்பதே வேதாந்திகள் கூறுவதும் ஆகும். மாறும் தோற்றம் என்பது மாயை.

    அறியாமையில் இருக்கும் போது,  (இங்கு அறியாமை என்பது, நமது சாதாரண புத்தியாகிய மனமும் அல்ல அல்லது அதனுக்கு உதவும் இந்த உடலும் அல்ல) பிரபஞ்சத் தோற்றத்தை மட்டுமே ஒருவன் காண்கிறான்;  இறைவனைக் காண்பதில்லை.

    இறைவனைக் காணும் (உணரும்) அந்தக் கணமே அவனைப் பொருத்த வரையில் பிரபஞ்சம் மறைந்து விடுகிறது.   மாயை என்று சொல்லப்படும்  அறியாமையே இத் தோற்றங்களுக்கெல்லாம் காரணம்.

    பரம்பொருள், ஒன்றானது மாறாதது. அப்படிப்பட்ட ஒரேத் தன்மையாக உள்ள ஒன்றை, பிரபஞ்சமாகத் தோன்றச் செய்வது இந்த மாயை மட்டுமே.

    மாயை என்பது சுத்த சூன்யமோ, அல்லது இல்லாத ஒன்றோ அல்ல.  சரி பிறகு,  இருப்பது என்றோ அல்லது இல்லாதது என்றோ கூறமுடியாது.

    இவ்வகையில் இருப்பது அல்ல; ஏனெனில், பூரணமான, மாறுதலில்லாத  இறைவனைப் பற்றி மட்டுமே இப்படிச் சொல்ல முடியும் இருப்பதாக.

    சரி, இல்லாதது என்றால்? இல்லாத ஒன்றால் எப்படி தோற்றத்தை உண்டுபண்ண முடியும்?  ஆக மாயை என்பது, இருப்பதுவும், இல்லாததுமான, இந்த இரண்டும் அல்லாத ஒன்று.

    அதை வேதாந்தத் தத்துவத்தில் ‘அநீர்வசனியம்’ அல்லது விளக்கமுடியாது (உணர வேண்டியதை இப்படிக் கூறலாம்) என்கிறார்கள்.  இந்த மாயையே பிரபஞ்சத்திற்கு உண்மையானக் காரணம்.

    இறைவன் பிரபஞ்சத்திற்கு அடிப்படைப் பொருளைத் தருகிறார், மாயை அதற்கு நாம ரூபங்களைத் தருகிறது.

    அத்வைத வேதாந்தத்தில் தனி ஆன்மாவுக்கு இடமில்லை.   தனி ஆன்மாவைப் படைத்தது (இருப்பதாக உண்டாக்கியது) இந்த மாயை என்பது அவர்களின் வாதம்.

    உண்மையில் தனி ஆன்மாவெல்லாம் இருக்கமுடியாது, இருப்பது உண்மையில் ஒன்றே என்றால், நான் வேறு, நீங்கள் வேறு என்றெல்லாம் எப்படி இருக்கமுடியும்? நாம் அனைவரும் ஒன்றே.

    பன்மையைக் காண்பது தான் தீமைக்கானக் காரணம்.

     (இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் கூற முனைகிறேன், ஆதி சங்கரருக்கு, ஈசனே ஒரு புலையனாக வடிவம்  கொண்டு  வந்து,   அவர் எழுதிய வேத விளக்கத்திற்கு ‘எதையோ தின்று  வளர்ந்த  இந்த உடலைக் கண்டு பேதம் காணாதே. அனைவருள்ளும் நானே  இருக்கிறேன்’  என்று நர்மதை  நதிக்கரையில் பாடம் புகுத்தி விட்டுச்  சென்றார் என்ற வரலாற்றை ஞாபகத்தில் கொள்வோம்)

     நான் வேறு, பிரபஞ்சம் வேறு என்று உணர ஆரம்பித்த உடனேயே முதலில் பயம் தோன்றுகிறது. அதைத் தொடர்ந்து துன்பம் உண்டாகிறது.

    எங்கே தன்னை அல்லாமல் மற்றவனைப் பார்கிறானோ (வேறுபடுத்தி), அவன் வார்த்தையே அது என்றும் வேறுபடுத்திக் கேட்கிறானோ, அது சிறியது.  எங்கே பிறரைக் காண்பதில்லையோ, கேட்பதில்லையோ. அது பெரியது.

    அங்கே பேரானந்தம் இருக்கிறது. சிறியதில் இந்த இன்பம் இல்லை.  அத்வைத தத்துவத்தின் படி, பிரபஞ்சத்தில் காணும் இந்த வேறுபாடு, இந்தத் தோற்றம் சில காலம் மனிதனின் உண்மை இயல்பை மறைத்து  நிற்கிறது.  ஆனால், இந்த இயல்பு என்னவோ மாறுவதே இல்லை.

    மிகத்  தாழ்ந்த புழுவிலும், மிக உயர்ந்த மனிதனிலும் ஒரே தெய்வீக இயல்பு இருக்கிறது.

    இந்த தெய்வீக இயல்பு மனிதனைவிட புழுவிடம் (விலங்குகளிடம்) அதிகம் இருக்கிறது.

    (இந்த இடத்தில் நான் கூற விரும்புவது சுனாமியில்; மனித அறிவுக்கு எட்டும் முன். இவன் தான் கண்ணால் காண்பதை மட்டுமே நம்புகிறவனாயிற்றே! தனது அற்புத சக்தியால் விலங்குகள் அதை (சுனாமி என்னும் பேராபத்தை) அறிந்து அந்த பேராபத்தில் தங்களைக் காப்பாத்திக் கொண்டதை நாம் அனைவரும் அறிவோம்.

     உதாரணமாக, தாய்லாந்தின் கடற்கரையில் கட்டிவைத்திருந்த குதிரை ஒன்று திடீர் என்று கனைப்பதையும், விசும்புவதையும், சிறிது நேரத்தில் சுனாமி என்னும் ஆழிப் பேரலை வந்ததையும் எதேச்சையாகப் பதிவு செய்யப்பட்ட காமிராவில் பதிவானக் காட்சியை பிறகு காண நேரிட்டது என்பதை நினைவு கூறுகிறேன்).

     இப்படி வொவ்வொன்றுக்கும் பின்னணியாக அந்த தெய்வம் அல்ல (தெய்வம் என்றால் அது நமக்குள் இல்லாத மூன்றாவதான ஒன்றைக் கூறுவதாகிவிடும்) தெய்வீக இயல்பு இருக்கிறது.

    எனவே நன்னெறி அடிப்படையில், ‘ ஒருவருக்கும் தீங்கு செய்யாதே!  அது உனக்கு நீயே செய்வதாகும். பிறரை  நேசிக்கும் போது நம்மையே நாமும் நேசிப்பதாகும்’.

     (இதை நமது வேதம் சொன்னது என்றால், இதைக் கூறாத வேறு மதம் இந்த உலகில் உண்டா? அப்படி கூறும் அத்தனை மதங்களும் இந்த வேதத்திற்குள் அடக்கம் அல்ல. அவற்றுக்கெல்லாம், இதுவே சாரம் என்றும் சொல்ல துணியலாம். இடம், காலம், சூழல்  ஆகியவற்றின்  நிலைக்கு ஏற்ப  பரம்பொருளால் உண்டாக்கப் பட்டதே  உலகில்  உண்டான  அத்தனை, தத்துவங்களும். அதனைத் தழுவும் மதங்களும். இதில் உயர்வு தாழ்வு ஏது? என்பதே எனது பார்வை )

     இதிலிருந்து அத்வைதநெறியே உண்டாகிறது.  இதை தன்னல மறுப்பு எனச் சொல்லலாம்.

    இந்தச் சிறிய ‘நான்’ என்பதே நமது எல்லாத் துன்பங்களுக்கும் காரணம் என்று அத்வைதி சொல்கிறான்.

    இந்த ‘நான்’ என்பதன் காரணமாகத் தான் வெறுப்பும், பொறாமையும்,   துன்பமும், போராட்டமும்,  பிற தீமைகளும் தோன்றுகின்றன.

    இந்த ‘நான்’ எப்போது ஒழிகிறதோ அப்போது துன்பமும் நம்மை விட்டு  ஒழியும்.

    (இங்​கே சமூக பார்​வை​ வேண்டாம். நம்​மைப் பற்றி மட்டும் ​​யோசிப்​போம். ஒவ்​வொருவரும் மாறினால் சமூகம் மாறும். உட​னே அவன், இவன், அரசாங்கம் என்று ​யோசித்து பா​தை மாற ​வேண்டாம். நாம் எதற்கெடுத்தாலும் பிற​ரை காண்பித்து நம்​மை ம​றைத்து வாழ்ந்து பழகுகி​றோம்)

    நான் எப்போது அழிந்தது?

    எப்போது ஒரு சிறு பிராணிக்காகக் கூட தன் உயிரையே எவனொருவன்  தரத் துணிகிறானோ,  அப்போது அந்தக் கணமே அவன் அத்வைதிகளின் லட்சியமான பூரண நிலையை அடைகிறான்.

    அறியாமைத் திரை விலகுகிறது. அவனும் பிரபஞ்சமும் ஒன்றே என்ற நிலை வந்துவிடுவதொடு, அந்தத் தோற்றம் மறைந்து விடுகிறது. தான் யார் என்ற உண்மையை அறிந்த பின்!

     (எனக்குத் தோன்றிய வரை, ‘தான்’, தான் அந்தப் பரம்பொருள் என்பது தானே அந்த உண்மையாக இருக்க முடியும்?)

    பிறகு என்ன? அழைப்பு வரும் வரை இந்த உடலிலேயே இருக்க வேண்டியது தான்.

    இது தான் ஜீவன் முக்தி என்பதாகும். இப்படி ஜீவன் முக்தி அடைந்தவர் முன்பு, மீண்டும் இந்த மாயைத் தோன்றினால்  அவர்கள் அதில் மயங்க மாட்டார்கள்.

    (படம் பார்ப்பவனுக்கு மாத்திரமே இந்த நுனி இருக்கை  அமர்வெல்லாம். மாறாக, படத்தை இயக்கும்  இயக்குனருக்கும், அந்தப் படத்தை முன்பே பார்த்துவிட்டு இது தான் முடிவு என்று தெரிந்தவர்களுக்கும்,  ஏது இந்த நுனி இருக்கை அமர்வு. கண்ணீரும் கவலையும் என்று கூட எளிமையாக நான் கூறுவேன்).

    அவர்கள் அது கானல் நீரென்பதை அறிந்தவர்கள், கண்களும், புலன்களும் வேலை செய்யும் வரை, அவன் அந்த கானல் நீரைப் பார்ப்பான். பிரபஞ்சம் மறைந்து விட்ட நிலையில் அவனை, இந்த மாயையான துன்பம் ஒன்றும் செய்யாது.

    என்றும் அவன் ‘சத் – சித்- ஆனந்தமாக, தனியிருப்பாக, தனியறிவாக,  தனி ஆனந்தமாக மாறிவிட்டான்.   இந்த நிலையை அடைவது தான்  அத்வைத வேதாந்தத்தின் லட்சியம் என்கிறார் சுவாமிஜி.

    .

    சுவாமிஜியின் லட்சியம்:

    vivek6சுவாமியின் கண்டங்கள் கடந்த  பயணம், இந்து மதத்தையும், இந்தியாவையும், இந்தியனையும் இந்த உலகிற்கு பறை சாற்ற மட்டுமாக அமைந்தது இல்லை. அப்படி நாம் அதைப் பார்த்துப் பெருமைப் பட்டுக் கொண்டாலும் அது மாத்திரம் அல்ல!

    அவரின் பயணம், இந்த புவியையும், புவியில் வாழும் மனிதர்கள் யாவரையும் புனிதர்களாக்க, பேரொளியில் மூழ்கித் திளைக்க செய்யவே! அது தான் ஒவ்வொரு உயிரின் லட்சியமும் கூட, அதனை மனிதனாகப் பிறந்த நம்மால் தான் செய்ய முடியும்.

    அந்தப் பிறவிப் பயனை அடைய யாவரும் முயலுங்கள், அதை உத்வேகமாக, உண்மையாக மாற்றம் கொள்ளாத மனத்தோடு இப்போதே செய்ய ஆரம்பியுங்கள். அது நிச்சயம் கைகூடும்.

    அப்படி கைகூடியதால் இந்திய மண்ணிலே எத்தனைப் பெரிய ஞானிகள் பிறந்து, இன்றைய அறிவியல் வெளிக்கொணரும் இந்த பிரபஞ்ச கூறுகள் யாவற்றையும் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கீழ்த்திசையிலே இருந்த அவர்கள் தனது பெரும் ஞானத்தால் முன் மொழிந்து சென்று இருக்கிறார்கள்; அதை நீங்கள் யாவரும் அறிந்து கொள்ளுங்கள்.

    அப்படியானால் அவர்கள் கூறிய வழியிலே யாவரும் பயணித்தால், யாவருக்குமந்த ஞானம், பேரறிவு, பேரானந்தம் கிட்டும், இதை உறுதியாக நம்புங்கள். உறங்கியது போதும் ‘விழித்தெழுங்கள்’ என்று அரை கூவல் விடவே அங்கு சென்றார் என்பது இன்னும் ஆழச் சிந்தித்தால் அனைவருக்கும் தெளிவாகப் புரியும்.

    அவரின் அவதார நோக்கமே, அனைவருக்கும், இன்னும் சொன்னால் உலகில் உள்ள யாவருக்கும், இன்னும் துல்லியமாகச் சொன்னால் உலகில் இருக்கும் ஒவ்வொரு பாமரனுக்கும் இந்தச் செய்தியைக் கொண்டு செல்லவே. அப்படியே செய்தார்.

    வாழ்க மானுட லட்சியம்!

    வளர்ந்து எங்கும் பரவட்டும் வேதாந்த தத்துவம்!!

    உலகமே பேரொளியில் திளைத்து பேரானந்தம் அடையட்டும்!
    .

    படங்களுக்கு நன்றி.

    http://www.narendramodi.in

    http://artistmaruthi.blogspot.sg

    www.google.com.sg

    Share
  • புறநானூற்று வழிப் புலனாகும் அரசியல் சிந்தனைகள் – பகுதி 2

    -மேகலா இராமமூர்த்தி

     

    (அமெரிக்காவில் நடைபெற்ற பன்னாட்டுப் புறநானூற்று மாநாட்டில் நான் ஆற்றிய உரையின் தொடர்ச்சி)

    ’சோழ வளநாடு சோறுடைத்து’ என்னும் பெருமை பெற்ற சோழ நாட்டிலுள்ள அழகிய சிறிய கிராமம் வெள்ளைக்குடி. ஊரின் பெயர்போலவே அங்கு வாழ்ந்துவந்த மக்களின் உள்ளமும் பால்போல் வெள்ளையானது. மருதநிலப் பகுதியான அவ்வூரில் விவசாயமே மக்களின் முதற் தொழிலாகவும், முக்கியத் தொழிலாகவும் விளங்கியது. பொன் விளையும் அப் பூமியிலே சில ஆண்டுகளாக நெல்கூட விளையவில்லை; காரணம்….இரண்டு மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து பருவமழை பொய்த்துப்போனதே. விதை விதைத்துவிட்டு வானையே நம்பியிருந்த அம்மக்களை மழை ஏமாற்றிவிட, வேறு ஏதும் தொழிலறியா அம்மக்கள் செய்வதறியாது திகைத்தனர். ஒருபுறம் உணவுப் பஞ்சம்; மறுபுறம் அரசனுக்குச் செலுத்தவேண்டிய நிலவரி பாக்கி.. என்று துயரம் அவர்களை வாட்டியது. தொடர்ந்து மூன்று ஆண்டுகளாய் நிலவரி கட்டாத காரணத்தால் அரசனிடமிருந்து கடுமையான நெருக்கடிக்கு ஆளாயினர் அம்மக்கள்.

    இப்பிரச்சனையை எப்படிச் சமாளிப்பது என்பது குறித்து ஊர்ப் பெரியவர்கள் கூடிப்பேசி ஓர் முடிவெடுத்தனர். நிலவரியைக் கட்டமுடியாத தங்கள் இக்கட்டான சூழ்நிலையை மன்னனிடம் சாதுரியமாக எடுத்துக்கூறி எப்படியாவது அவ்வரியை மன்னன்  தள்ளுபடி செய்யுமாறு செய்துவிடல்வேண்டும் என்று விரும்பினர். ஆனால் அதனை மன்னனிடம் யார்மூலமாய்ச் சொல்லி அனுப்புவது என்று அவர்கள் சிந்தித்திருந்த வேளையில் அவர்கள் எதிரில் தென்பட்டார் வீரமும், விவேகமும், நுண்மாண் நுழைபுலமும் நிரம்பிய தமிழ்ப் புலவரான ‘நாகனார்’.

    அவரைக் கண்டதும் ‘கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்ததுபோல்’ மகிழ்ந்த ஊர்ப் பெரியவர்கள் அவரே அரசனிடம் பேசுவதற்குச் சரியான ஆள் என முடிவுசெய்துத் தங்கள் விருப்பத்தை அவரிடம் தெரிவித்தனர். அதற்கு மகிழ்ச்சியோடு சம்மதித்த நாகனார் மன்னனிடம் இப்பிரச்சனை குறித்துத் தாமே பேசுவதாகக் கூறி வீறுநடைபோட்டுப் புறப்பட்டார்.

    அவையிலே கம்பீரமாகக் கொலுவீற்றிருந்த சோழ மன்னன் ‘கிள்ளி வளவன்’ புலவரின் வரவு குறித்து அறிந்து அவரைச் சந்திக்க இசைவு தெரிவிக்க, அவனைப்போய்க் கண்டார் வெள்ளைக்குடி நாகனார். சற்றே இறுமாப்புடன் புலவரை நோக்கிய வளவன் ‘தன்னைச் சந்திக்கவந்த காரணம் யாது?’ என அவரை வினவினான்.

    குடிமக்களின் துயர்தன்னை எடுத்துக்கூற இதுவே தக்க தருணம் என உணர்ந்த நாகனார் ’அரசே! நீர் நிறைந்த பெரிய கடலை எல்லையாக உடைய இவ்வுலகத்திலே குளிர்ச்சி பொருந்திய தமிழ்நாட்டின்கண் உள்ள மூவேந்தருள்ளும் சிறந்த அரசு உன்னுடையதேயாகும். நாடென்று   சொல்லப்படுவது  உன்னுடைய  நாடேயாகும். அப்படிப்பட்ட சிறந்த ஆட்சியாளனாகிய உனக்கு, நீ செய்யவேண்டிய செயல்கள் சிலவற்றைப் பற்றிக் கூறவந்திருக்கின்றேன் கேட்பாயாக!’ என்றார்.

    அதுகேட்ட வளவன் சற்றே நிமிர்ந்து உட்கார்ந்து அவரை ஆவலோடு நோக்கினான்.

    தன் உரையைத் தொடர்ந்த நாகனார், ’அரசே! செங்கோல் பிழையாமல் அறத்தோடு நீ நல்லாட்சி செய்யும் வேளையில், மக்களுக்கு எளிதில் அணுகக் கூடியவனாகவும், இனியவனாகவும் இருத்தல் மிக அவசியம். அதுமட்டுமல்ல, உன்னிடம் உள்ள வெண்கொற்றக் குடையானது வெயிலுக்குப் பிடித்துக்கொள்வதற்கான சாதாரணக் குடை அன்று! அது மக்களின் துயரத்தைத் துடைத்து அவர்களுக்குப் பாதுகாப்பையும், நிழலையும் தருவதற்கேயானது அல்லவா?’ (ஆகா…அரசனிடம் இவ்வாறு பேச இந்தப் புலவருக்குத்தான் எத்துணை துணிச்சல் பாருங்கள் !!)

    ’மன்னர் மன்னா! நாட்டிலே மழை பெய்யாமல் போனாலோ, இயற்கை வளங்கள் குன்றினாலோ அல்லது இயற்கைக்கு மாறானவை (இயற்கைச் சீற்றங்கள் முதலியவை) நாட்டில் ஏற்பட்டாலோ குடிமக்கள் தம் மன்னனையே பழிதூற்றுவர்; அரசன் சரியில்லை; அதனால்தான் இத்தகைய தீங்குகளெல்லாம் நாட்டிற்கு ஏற்படுகின்றன என்று கூறிவிடுவர். இவையெல்லாம் நீயே நன்றாக அறிந்த உண்மைகள்தானே மன்னா! நான்வேறு உனக்கு இன்னொருமுறை சொல்லவேண்டுமா என்ன? ஆகவே, மக்கள் நலனில் அக்கறையில்லாத சிலர் கூறும் மொழிகளைக் கேட்டு நடவாதே! காளை மாடுகளை வைத்துக் கொண்டு பாடுபடும் விவசாயப் பெருங்குடி மக்களையும், ஏனையோரையும் நீ நன்கு பாதுகாத்தல் வேண்டும்; அவர்தம் துயரங்களைக் களைதல் வேண்டும்; அப்படிச் செய்வாய் என்றால் நின்னுடைய பகைவேந்தரும் நின்னைப் போற்றிப் பணிவர்; இதனை மனத்தில் கொள்வாயாக!’ என்கிறார்.

    இப்புலவரின் ’செவியறிவுறூஉ’ என்ற துறையைச் சேர்ந்த கருத்துச் செறிவுள்ள புறப்பாடல் நம் பார்வைக்கு:

    ”…………………………………………………………………………………….
    கண்பொர   விளங்கும்நின்   விண்பொரு   வியன்குடை
    வெயில்மறைக்   கொண்டன்றோ?   அன்றே;   வருந்திய
    குடிமறைப் பதுவே;   கூர்வேல்   வளவ!
    ………………………………………………………………………………………………
    மாரி   பொய்ப்பினும்,   வாரி   குன்றினும்,
    இயற்கை   யல்லன   செயற்கையில்   தோன்றினும்,
    காவலர்ப்   பழிக்குமிக்   கண்ணகன்   ஞாலம்;
    அதுநற்கு   அறிந்தனை   யாயின்,   நீயும்
    நொதும   லாளர்   பொதுமொழி   கொள்ளாது,
    பகடுபுறந்   தருநர்   பாரம்  ஓம்பிக்,
    குடிபுறந்   தருகுவை   யாயின்,   நின்
    அடிபுறந்   தருகுவர்,   அடங்கா   தோரே.” (புறம்: 35)

    இதைத்தான் வான்புகழ் வள்ளுவரும்,
    ”குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்
    வடுவன்று வேந்தன் தொழில்.”  (குறள்: 549) என்கிறார்.

    வெள்ளைக்குடி நாகனாரின் பாடலில் கூறப்படும் செய்திகளுக்குப் பெரிதும் ஒத்துப்போகும் கருத்தமைந்த ஓர் பாடலை நாம் ‘சிலப்பதிகாரத்திலும்’ காண முடிகின்றது. மதுரையைச் சேர்ந்த புலவரான சீத்தலைச் சாத்தனார், (மணிமேகலைக் காப்பியத்தின் ஆசிரியரான அதே சாத்தனாரே!) மதுரையில் பாண்டிய மன்னன் நீதி தவறியது; கண்ணகி அதனைச் சுட்டிக்காட்ட, அவன் செங்கோல் தவறியதற்குப் பெரிதும் வருந்தி உயிர் துறந்தது; அரசமாதேவியான கோப்பெருந்தேவியும் அவனோடு உயிர்நீத்தது; பின்னர்க் கண்ணகி மதுரையை எரியூட்டியது போன்ற வியத்தகு செய்திகளைச் சேர மன்னன் செங்குட்டுவனைக் காண வந்துபோது அவனிடம் விளக்கிக் கூறுகின்றார். அதுகேட்ட சேரன் பெருமூச்செறிந்தவாறே, “எம்மைப் போன்ற வேந்தர்களுக்கு, மழை பொய்த்துப்போனால் மக்கள் அரசனைக் குறை சொல்வார்களே என்ற அச்சம்; குடிமக்களுக்கு ஏதேனும் துயர் நேர்ந்தால் அரசனின் ஆட்சிமுறை சரியில்லை என்று தூற்றுவார்களே என்ற அச்சம். குடிமக்களை நல்ல முறையில் பேணிப் பாதுகாத்து, அவர்களிடம் கொடுங்கோலன் என்ற அவப்பெயர் வாங்கக்கூடாதே என்று அஞ்சி, இப்படி எண்ணற்ற பொறுப்புக்களைத் தலையில் சுமக்கும் மன்னர் குடியில் பிறப்பது ஒன்றும் தொழத்தக்கதோ, போற்றத்தக்கதோ இல்லை; அஃது மிகுந்த துன்பம் நிறைந்ததாகும்” என்று வருந்திக் கூறுகின்றான்.

    அப்பாடல்….
    ”……………………………………………………………….
    எம்மோரன்ன   வேந்தற்கு…………………..
    மழைவளங்   கரப்பின்   வான்பே   ரச்சம்
    பிழையுயி   ரெய்திற்   பெரும்பே   ரச்சம்
    குடிபுர   வுண்டுங்   கொடுங்கோ   லஞ்சி
    மன்பதை   காக்கும்   நன்குடிப்   பிறத்தல்
    துன்ப   மல்லது   தொழுதக   வில்…………” (சிலம்பு: காட்சிக் காதை: வரிகள்: 95 -104)

    ஆகவே செங்கோல் வழுவாது நாட்டைக் காத்து, மக்களின் துயர் களைவது என்பது மன்னர்களுக்குச் சவால் நிறைந்த பணியாகவே திகழ்ந்துவந்துள்ளது என்பது மேற்கண்ட பாடல்கள் மூலம் தெரியவருகின்றது.
    மன்னன் நல்லாட்சி செய்யவேண்டிய முறையினைச் சற்றுக் கடுமையான மொழிகளாலேயே  ’நாகனார்’ விளக்கியுள்ளார் என்பதற்கு அவருடைய பாடலே சான்றாகத் திகழ்கின்றது. மன்னனாகிய தன்னையே இடித்துரைக்கும் அந்த வீரப்புலவரிடம் ’வளவன்’ வெகுளாமல், அவர்தரப்பு நியாயத்தைக் கனிவோடு ஏற்றுக்கொண்டு விவசாயக் குடிகளின் நிலவரியைத் தள்ளுபடி செய்தான் என்ற செய்தியையும் புறநானூறு நமக்குத் தெரிவிக்கின்றது. போற்றத்தக்கதுதானே இப்புலவர் பெருமானின் நுண்மாண் நுழைபுலம்!

    அன்று நிகழ்ந்தது போலவே இன்றும் நாட்டில் வறட்சியோ அல்லது வெள்ளமோ ஏற்படுகின்ற வேளையில் விவசாயச் சகோதரர்களின் நிலவரி அரசால் தள்ளுபடி செய்யப்படுவதைக் காண்கிறோம்; இதைத்தான் நாம் இப்போது “remission of tax” என்று ஆங்கிலத்தில் கூறுகிறோம். அதுமட்டுமல்லாமல் விளைபயிர்களின் சேதத்திற்குத் தகுந்த நட்ட ஈட்டையும்கூட விவசாயிகளுக்கு அரசாங்கம் வழங்கிவருகின்றது அல்லவா? இதற்கெல்லாம் அடித்தளம் அமைத்துத் தந்தவர் ’வெள்ளைக்குடி நாகனாரே’ என்றவகையில் நாம் அவரைப் போற்றுவதில் தவறில்லைதானே?

    அடுத்து, நமக்கு மிகவும் பரிச்சயமான புலவரான பிசிராந்தையார் (ஆம்….கோப்பெருஞ்சோழனின் உயிர்நண்பர்தான்!) பாண்டிய மன்னன் அறிவுடைநம்பிக்கு யானைக் கதை ஒன்று சொல்கிறார். அதன் விபரம் அடுத்த பகுதியில்…

    (தொடரும்)

    Share
  • பிரசவம் எனும் மறுபிறவி!

    பவள சங்கரி

    பிரசவம் என்பது ஒரு பெண்ணிற்கு மறு பிறவி . ஒரு குழந்தை கருவாகி, உயிராகி, இந்த பூமியில் பிறப்பதற்குள் ஒரு தாய் படும் துயர் சொல்லி மாளாது. ஆனாலும் முகம் தெரியாத அந்த உயிரின் நினைவே அத்தாயின் அத்துனைத் துன்பங்களையும்  மறையச்செய்துவிடும். ஒரு காலத்தில் பெண்களுக்கு இளம் வயதிலேயே திருமணம் செய்து வைத்து, அடுத்த ஓரிரண்டு ஆண்டுகளுக்குள்ளேயே குழந்தைப் பேறுக்குத் தயாராகிவிடுவார்கள். ஆனால் இன்றைய நிலையே வேறு. பெரும்பாலும் இன்று இளம் வயது திருமணங்கள் குறைந்துள்ளது எனலாம். நன்கு படித்து ஓரளவிற்கு நல்ல நிலைக்கு வந்த பின்பே பெண்கள் திருமணம் செய்துகொள்வது என்று உறுதியாக இருப்பதோடு, குழந்தை பெற்றுக்கொள்வதற்கும் ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் எடுத்துக்கொள்கிறார்கள். மருத்துவ விஞ்ஞானம்  இன்று பெருமளவில் பரந்து விரிந்துள்ள சூழ்நிலையில் பல நவீன சிகிச்சை முறைகள்  வாழ்க்கையை ஓரளவிற்கு எளிமையாக்கியுள்ளதோடு குழந்தை பேறு போன்ற சுகமான சுமைகளை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கும் வாய்ப்பையும் வழங்கியுள்ளது. அந்த வகையில் பிரசவ முறைகளிலும் பல மாற்றங்களும், நவீன சிகிச்சை முறைகளும் வந்துள்ளது வரவேற்கத்தக்கது.

    மருத்துவம் எவ்வளவோ முன்னேறி இருந்தாலும், பிரசவ வேதனை என்பது தவிர்க்க முடியாத வலியாக இருந்துவந்தது. அந்த நிலைமை மெல்ல மாறிவருகிறது. வலியே இல்லாமல் குழந்தை பெற்றுக் கொள்ளும் வசதி அமெரிக்கா போன்ற மேலைநாடுகளைத் தொடர்ந்து இன்று நம் நாட்டிலும் சாத்யமாகி உள்ளது. எப்போது பரவலாகும் என்பதுதான் கேள்விக்குறி.

    பிரசவ நேரத்தில், கர்ப்பப்பை சுருங்கும் போது, அந்த மாற்றம் பற்றிய தகவல் தண்டு வடத்தில் உள்ள நரம்புகள் வழியாக பயணம் செய்து, மூளையை எட்டும்போது நாம் அந்த வலியை உணர்கிறோம். இந்த வேதனை எல்லாப் பெண்களுக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை.

    • 1. குழந்தையின் எடை.
    • 2. கருவறையில் குழந்தையின் நிலை.
    • 3. இடுப்பு எலும்பின் தன்மைகள்.
    • 4. சுருங்கும் தன்மையின் வலிமை.
    • 5. முன் அனுபவம் மற்றும் எதிர்பார்ப்பு –

    DSC00034என்ற ஐந்து காரணங்களின் அடிப்படையில் வலியின் அளவு மாறுபடும். எவ்வளவு வலி இருக்கும் என்பதை முன்பே அறிந்து கூறமுடியாது. சிலர் பொறுத்துக் கொள்ளக்கூடிய அளவில் வலியை உணர்கிறார்கள். சிலர் தியானம், மூச்சுப் பயிற்சி, வென்னீர் குளியல், மசாஜ், நர்ஸ் கவனிப்பு, நிற்பது, நடப்பது, அமர்வது போன்ற நிலைமாற்றம்.. என்று மருத்துவ முறை அல்லாத பழக்கங்கள் மூலம் வலியை குறைக்க முயல்கின்றனர். பலர், எந்த முறையையும் பின்பற்ற முடியாத அளவுக்கு வலியால் திணறுகிறார்கள்.

    இப்படி சொல்லி விளங்க வைக்க முடியாத வலியை, மாயமாக மறைய வைத்து, குழந்தை பிறப்பதை அனுபவித்து மகிழ வைக்கும் ஒரு உபாயம்தான் ‘எபிடியூரல் டெலிவரி’ என்பது! இதில் அமெரிக்காவில் பிரபலமான டாக்டர் பேக்ரே ரிடம் பேசியபோது இந்த முறை பற்றி விளக்கினார்..

    ‘எபிடியூரல் டெலிவரி’ என்பது, தண்டுவடத்தில் ஊசி மூலம் ஒரு மருந்தை உட்செலுத்தி பிரசவ வலியை முற்றிலுமாக அகற்றி, குழந்தை பிறப்பை சுகமான அனுபவமாக மாற்றக்கூடிய ஒரு மருத்துவ முறையாகும்.

    நன்கு பயிற்சி பெற்ற மயக்க மருந்து நிபுணரால் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு அதைப் பற்றி தெளிவாக விளக்கப்படும். ஒப்புதல் அளித்தால் மட்டுமே எபிடியூரல் கொடுக்கப்படுகிறது. 4 செ.மீ. இடைவெளியில் ஒழுங்கான பிரசவத்துக்குரிய அறிகுறிகள் தென்பட்டாலன்றி இது கொடுக்கப்படுவது இல்லை. வலியும் தொடங்கியிருக்க வேண்டும்.

    எபிடியூரல் கொடுக்கும்போது, பக்க விளைவாக ரத்த அழுத்தம் குறையும் வாய்ப்பு உள்ளதால், ரத்தக்குழாய் வழியாக திரவங்கள் செலுத்தப்படும். 5 நிமிடத்துக்கு ஒருமுறை டாக்டரின் நேரடி கண்காணிப்பு அவசியமாகிறது. குழந்தையின் இதயத் துடிப் பும் மானிட்டரில் கண்காணிக்கப்படும்.

    14-epidural2ஒருக்களித்து படுத்தவாக்கில் அல்லது படுக்கை நுனியில் குனிந்து உட்கார்ந்த வாக்கில் தண்டுவடத்தின் மத்தியில் எபிடியூரல் பொருத்தப்படும். முதுகை ஆன்ட்டிசெப்டிக் திரவத்தால் சுத்தம் செய்து குறிப்பிட்ட இடத்தில் ஊசியை குத்துவார் கள். ஊசி வழியே எபிடியூரல் கதீட்டர் என்கிற சன்னமான, மிருதுவான பிளாஸ்டிக் குழாய் நுழைக்கப்படும். ஊசியை எடுத்து விட்டு, அந்த குழாயை முதுகின் மேல் டேப் போட்டு ஒட்டி விடுவார்கள். இதன் பிறகு சோதனைக்காக மிகக்குறைந்த அளவு மருந்து கொடுக்கப்பட்டு, பக்க விளைவு ஏற்படுகிறதா என பார்க்கப்படும். பிறகு, தேவையான மருந்து கொடுத்து ஆசுவாசப்படுத்துவார்கள்.

    எபிடியூரல் பொருத்தியபின், எழுந்து நடமாட முடியாது. கால்கள் கனம் தெரியாத அளவுக்கு மரத்துப் போகும். திரும்பி படுக்கலாம். செயற்கை முறையில் சிறுநீர் வெளியேற்ற வழி செய்யப்படும். எளிதான பிரசவத்துக்கு இது மேலும் துணை புரிகிறது. எபிடியூரல் வேலை செய்ய ஆரம்பித்தவுடன் ஒவ்வொரு முறை கருவறை சுருங்கி, விரிந்து, குழந்தை இறங்கி வருவதை உணரும்போது வலியே தெரியாது!

    குழந்தை பிறந்தவுடன் எபிடியூரல் மருந்து கொடுப்பது நிறுத்தப்படும். மயக்க மருந்து நிபுணரால் கதீட்டர் அகற்றப்படும். ஓரிரு மணி நேரத்தில் மருந்தின் வீரியம் குறைந்து உடல் சகஜ நிலைக்கு திரும்பி விடுகிறது.

    ஏதாவது அவசர நிலையால் சிசேரியன் செய்ய நேர்ந்தால், இதே முறையில் மயங்கவைக்கும்போது குழந்தையை எடுப்பதை எந்த வலியும் இல்லாமல், ஆனால் சுயநினைவுடன் உணர முடியும். இதற்கான மனப் பக்குவத்தை டாக்டர் அவருக்கு முன்பே ஏற்படுத்தி விடுகிறார்.

    இருந்தாலும், எபிடியூரல் பற்றி மாறுபட்ட கருத்து கொண்ட அமெரிக்கப் பெண் களும் இருக்கிறார்கள். அவர்களின் சந்தேகங்கள் குறித்து மயக்க மருந்து நிபுணர் கேட்டDSC00100ர் பாலுடன் பேசினோம். இவர் இந்தியாவில் பிறந்து, மருத்துவம் பயின்று, 20 வருடமாக அமெரிக்காவில் பம்பரமாக சுழன்று பணிபுரிந்து வருகிறார்.

    ”இங்கே பெரும்பாலான பெண்கள் எபிடியூரல் டெலிவரியை வரவேற்கிறார்கள். முதல் பிரசவத்தில் எபிடியூரல் பற்றி உணர்ந்தவர்கள் இரண்டாவது பிரசவத்துக்கு இயற்கை முறை பற்றி யோசிப்பதுகூட இல்லை!‘‘ என்றார் டாக்டர் பால். பக்க விளைவுகள் பற்றி கேட்டோம்.

    ”எந்த சிகிச்சை முறையிலும் பக்க விளைவுகள் தவிர்க்க முடியாதது. இதில் 2% வரை யிலேயே தலைவலி, முதுகுவலி போன்ற விளைவுகள் உண்டாகிறது. இந்தியாவில் பின் விளைவுகளை மட்டும் கணக்கிலிட்டு சிகிச்சையையே ஒதுக்கி விடும் போக்கு அதிகம். எபிடியூரல் டெலிவரியை பொருத்த வரை நன்கு பயிற்சி பெற்ற டாக்டர், மயக்க மருந்து நிபுணர் ஆகியோரைக் கொண்டு செயல் படுத்தினால் கண்டிப்பாக முழு பயனையும் அடையலாம்.‘‘

    தண்டுவடத்தில் ஊசி குத்துவதால் வலி அதிகமாக இருக்குமே? இதற்கான (மயக்க) மருந்துகள் சுலபமாக கிடைக்கிறதா?

    1

    ”பிரசவ வலியை ஒப்பிடும்போது, முதுகில் ஊசி குத்தும் வலி பெரிதல்ல. இதற்கு பயன்படுத்தக்கூடிய மார்பின், டெமரால் போன்ற மருந்துகள் எளிதாக கிடைக்கக் கூடியவை.‘‘

    எபிடியூரல் அனெஸ்தீஸியா’ மூலம், வலி இல்லாமல் குழந்தை பெற்றுக் கொண்ட மிசஸ் டோனி சொன்னார்…

    ”பிரசவத்தின்போது கணவர் கண்டிப்பாக உடன் இருக்க வேண்டும் என்பதால், அதுவே தைரியமும் நம்பிக்கையும் அளிக்கிறது. எபிடியூரல் பற்றி தெளிவாக, பொறுமையாக எடுத்துக் கூறி, சிலருக்கு ஏற்படக்கூடிய பக்க விளைவுகளை சொல்லி முழு ஒப்புதல் பெற்ற பின்பே செய்கிறார்கள். விடியோ கேசட் மூலம் விளக்குவதால் நன்கு விளங்குகிறது. வலியே இல்லாமல் குழந்தை பெற்றுக் கொண்டது இனிய அனுபவம்தான்!”

    இந்தியாவிலும் மருத்துவ சாதனைகள் படைத்துக் கொண்டிருக்கும் வேளையில் ‘எபிடியூரல் அனெஸ்தீஸியா’ மட்டும் ஏன் பரவலாகவில்லை என்று ஈரோடு மகப்பேறு மருத்துவர் ஸ்ரீமதி முருகேசன், மயக்க மருந்து நிபுணர் சித்ரா சௌந்தர் ராஜன் ஆகியோரிடம் கேட்டபோது…

    டாக்டர் ஸ்ரீமதி: எபிடியூரல் அனெஸ்தீஸியா மூலம் வலி இல்லாத பிரசவம் என்பது, நம் நாட்டில் சமீபத்தில்தான் கண்டு கொள்ளப்பட்டுள்ளது. பரவலாக நடைமுறைப்படுத்த இயலாமைக்கு காரணம், பயிற்சி பெற்ற மயக்க மருந்து நிபுணர்கள் போதிய அளவு இல்லாத குறைதான். பிரசவ நேரம் முழுவதும் அவர்கள் உடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது. ஸ்டிரைல் செய்யப்பட்ட, படுசுத்தமான பிரசவ அறை, மானிட்டர், ஆபரேஷன் தியேட்டர் என்று அனைத்தும் முழுமையாக உள்ள ஒரு மருத்துவமனையில்தான் இதுபோன்ற முறைகள் சாத்யமாகும். இங்கே வலி எடுத்த பின்பு தான் எங்களிடம் வருகிறார்கள். அந்த நேரத்தில் இது தேவைப்படுவதில்லை.

    டாக்டர் சித்ரா: கர்ப்பிணிகள் கடைசி நேரத்திலோ அல்லது காலங்கடந்த நிலையிலோ வரும்போது அவசரமாக தாயையும், குழந்தையையும் காப்பாற்ற வேண்டிய முயற்சி மட்டுமே செய்ய முடிகிறது. தினம் 50 பிரசவ கேஸ் வருகிறது. முழுநேரப் பணியில் தகுதியான மயக்க மருந்து நிபுணர்கள், டாக்டர்கள், செவிலியர்கள் இருந்தால்தான் இந்த முறை இங்கே பரவலாக முடியும். அந்த அளவுக்கு வசதிகள் எல்லா ஆஸ்பத்திரிகளிலும் உடனே வந்துவிடாது.

    நன்றி:  குமுதம் (2012)

    படங்களுக்கு நன்றி:

    http://www.google.co.in/imgres?imgurl=http://www.webmm.ahrq.gov/media/cases/images/case90_fig1.jpg&imgrefurl=http://www.webmm.ahrq.gov/case.aspx?caseID%3D90&h=400&w=557&sz=88&tbnid=9U59IjtYRrf0gM:&tbnh=87&tbnw=121&zoom=1&usg=__K1enK9FbJxyL5uD5zGCaFPTs2XM=&docid=1FVptO7ATYAfoM&sa=X&ei=0-83UrDFBoTXrQfj34DYDQ&ved=0CEYQ9QEwAw&dur=215

    http://www.google.co.in/imgres?imgurl=http://www1.cgmh.org.tw/heal/journal/english/images/14-epidural2.jpg&imgrefurl=http://www1.cgmh.org.tw/heal/journal/english/contents/14-1.htm&h=300&w=460&sz=29&tbnid=7yHn0PdP4qwcEM:&tbnh=78&tbnw=120&zoom=1&usg=__6tzgd-g1MNusSlzCBpTm1kwlukM=&docid=Lm46vGnFK4dXkM&sa=X&ei=0-83UrDFBoTXrQfj34DYDQ&ved=0CEwQ9QEwBQ&dur=8584

    Share
  • மகாபாரத முத்துக்கள் பகுதி 6 – பாண்டியனின் வீரம் II

    புவனேஷ்வர்

    அன்பர்களே, சென்ற வாரம், பாண்டியனை அஸ்வத்தாமன் அறைகூவி அழைத்ததை பார்த்தோம். இனி என்ன நிகழ்ந்தது என்று பார்க்கலாம்.

    கௌரவப் படையைக் காப்பாற்ற பாண்டியனைத் தானே இனி தாக்க வேண்டியது அவசியம் எனக் கருதி, அஸ்வத்தாமன் இனிய வார்த்தைகளால் பாண்டியனோடு பேசலுற்றான்.

    “நற்குலப் பிறப்பும், ஒப்பற்ற கல்வியும் வீரமும், தாமரை போன்ற கண்களையும் உடைய பாண்டிய அரசே! வாரத்திலும் புகழிலும் உனக்கு இந்திரனே நிகராவான். வலிய நினது கைகளால் வில்லைப் பற்றி நானை இழுத்து அம்புகளை நீ உன் பகைவர்கள் மீது பொழியும் காட்சி, ஊழிக்காலத்தில் காண்போர் அஞ்சும் கருமேகங்கள் மழையை போஹிவது போல உள்ளது! உனக்கு நிகராக நின்று போரிடக் கூடிய வீரனை எங்கள் படையில் என்னைத் தவிர வேறு யாரையும் நான் காணவில்லை. தன்னந்தனியாக ஒரு சிங்கம் காட்டில் மான்களை துரத்தி வேட்டையாடி அழிப்பது போல நீ தனி ஒருவனாக நின்று தேர்களையும் யானைகளையும் குதிரைகளையும் காலாட்படைகளையும் உனது வில்வன்மையால் அழிக்கிறாயே! வயல்களை அழித்து விடும் இடியுடன் கூடிய மழை மேகம் போல, உன் சிம்ம நாதங்களுடன் நீ போர் புரிந்து ஜொலிக்கிறாய். சட்டை உரித்த விஷ நாகங்களை ஒத்த உனது அம்புகளை உன் அம்புறாத்தூணியில் இருந்து எடுத்து விடுத்து, அந்தகாசுரன் முக்கண்ணனுடன் பொருதது போல நீ என் ஒருவனுடன் மட்டும் போர் இயற்ற வல்லாயோ?” என்று அறைகூவல் விடுத்தான்.

    “அப்படியே ஆகட்டும்” என்றான் பாண்டியன்.

    “தாக்கு” என்று சொல்லி விட்டு, அடுத்தக்ஷணம் பாண்டியன் மேல் சரமாரி பொழிந்தான் அஸ்வத்தாமன். கூரிய ஒரு அம்பினால் அஸ்வத்தாமனை தாக்கினான் பாண்டியன். பாண்டியனின் மர்மஸ்தானங்களைக் குறிவைத்து, நெருப்பை ஒத்த அம்புகளை விடுத்தான் அஸ்வத்தாமன். அது போதாதென்று பத்து நாராசங்களையும் எய்தான். பயமற்ற பாண்டியன் அவற்றை தனது ஒன்பது அம்புகளால் துண்டித்தான். பாண்டியனின் பெயர் பொறித்த நான்கு கணைகள் அஸ்வத்தாமனின் நான்கு குதிரைகளை முடித்தன. அஸ்வத்தாமன் அவ்வேளையில் எய்த மற்ற அம்புகளை தனது அம்புகளால் சுலபமாக தடுத்து விட்டு அச்வத்தாமனுடைய வில்லின் நாணை அறுத்தான் பாண்டியன். அதற்குள் தனது பணியாளர்களால் தனது தேருக்கு புதிய புரவிகள் பூட்டப்பெற்றதை அறிந்தவனாக அஸ்வத்தாமன் தைரியம் கொண்டு மீண்டும் நானேற்றி ஆயிரம் ஆயிரம் அம்புகளை மிக விரைவில் பாண்டியன் மீது எய்தான். இந்த வியத்தகு வில்வன்மையால் வானம் பறவைக் கூட்டத்தால் மூடப்பட்டது போல மூடப்பட்டது. கீழே அம்புகளின் நிழல் வீழ்ந்து வெயிலை மறைத்தது. அஸ்வத்தாமனின் அம்புகள் தீரா என்று நன்கு அறிந்திருந்தும், வீரச் செருக்கு கொண்ட மறத்தமிழன் பாண்டியன் அந்த அம்புகளை தனது அம்புக் கூட்டத்தால் தடுத்துத் தள்ளினான். மிகக் கவனமாக வில்லேந்தி ஒவ்வொரு அம்பையும் தடுத்து வெட்டிய பாண்டியன், இடைப்பட்ட சந்தர்ப்பங்களில் சில கூரிய வாளிகளைத் தொடுத்து அஸ்வத்தாமனின் இரு சக்ர-ரக்ஷகர்களை [1] யமாலயம் அனுப்பினான்.

    இதுவரை பாண்டியனை புகழ்ந்து கொண்டும், அவன் வில்வன்மையை ரசித்துக் கொண்டும் அவனோடு விளையாட்டாக போரிட்ட அஸ்வத்தாமன் பாண்டியனின் லாகவத்தைக் கண்ட அஸ்வத்தாமன் இப்போது எச்சரிக்கையோடு முன்னிலும் உக்கிரமாக போரில் முனைந்தான்.

    அஸ்வத்தாமன் ருத்ராம்சமாகப் பிறந்தவன். அந்தணனுக்குப் பொருந்தாத கோபக் குணம் இயல்பாகவே உடையவன். இப்போது பாண்டியனோடு புரியும் போரில் நிஜமாகவே அவனுக்கு சற்று ஆத்திரம் வந்தது.

    துரோணர் தனது மகனுக்கு அளித்த விற்போர்ப் பயிற்சி, வேலையைக் காட்டத் துவங்கியது. அஸ்வத்தாமனது வில் எப்போதும் வட்டமாக வளைந்தது போலவே காட்சிதரத் துவங்கியது. ஆலமரத்தில் தங்கும் பறவைகள் மாலை வேளையில் மரத்தை நோக்கி விரைந்து வருவது போல அஸ்வத்தாமனின் அம்புகள் பாண்டியனின் தேரை நோக்கி வர ஆரம்பித்தன. அடுத்தடுத்த அம்புகள் ஒன்றை ஒன்று தொட்டுக் கொண்டு வருவன போல பாண்டியன் தேரை நோக்கி விரைந்தன. பாண்டியனும் அதற்குச் சளைக்கவில்லை. தனது அம்புமழையால் அஸ்வத்தாமன் விடுத்த அம்புகளை தடுத்துக் கொண்டு போரிட்டான். ஆயினும் அவனால் அச்வத்தமனைக் காயப் படுத்த முடியவில்லை. அச்வத்தாமனாலும் பாண்டியனைத் துளைக்க முடியவில்லை. இப்படியே வெற்றி தோல்வி இல்லாமல் நேரம் போவது தெரியாமல் இருவரும் வெறி கொண்டவர்கள் போல போரிட்டார்கள்.

    கொஞ்சம் நேரமல்ல. சில நிமிஷங்கள் அல்ல, மூன்று மணி நேரம் இந்த போர் வெற்றி தோல்வி இன்றி மும்முரமாக நிகழ்ந்தது. இருவருக்குமே, எதிராளி எய்த அம்புமழையை தன் மேல் விழாமல் தற்காத்துக் கொள்வது பெரும்பாடாக இருந்ததால், தற்காப்புப் போரே முக்கிய வேலையாயிற்று. அதில் எங்கிருந்து எதிராளியைத் தாக்குவது? ஒரு க்ஷணம் எதிராளி கவனம் சிதற மாட்டானா, அதைப் பயன்படுத்தி அவனை முடித்து விடலாம் என்று இருவருமே புலி பதுங்குவது போல காத்துக் கொண்டு போரிட்டார்கள்.

    மூன்று மணி நேரத்தில் அஸ்வத்தாமன் எவ்வளவு அம்புகளை எய்தான் தெரியுமா? வண்டிக்கு எட்டு காளைகள் பூட்டிய எட்டு மாட்டு வண்டிகள் மீது வைத்து இருந்த அத்தனை அம்புகளையும் மூன்றே மணி நேரத்தில் பாண்டியன் மீது எய்து அவனைக் கொல்லப் பார்த்தான் அஸ்வத்தாமன். அத்தனையையும் தடுப்பதிலேயே பாண்டியனின் கவனம் இருந்தது. யமனைப் போல, அல்ல அல்ல, யமனுக்கே யமனைப் போல (சிவனைப் போல) அஸ்வத்தாமன் படைகளுக்குக் காட்சி அளித்தான். மாரிக்கால மேகம் மழை பொழிவது போல சரவர்ஷம் பொழிந்த துரோணரின் புதல்வனை பாண்டியன் தனி ஒருவனாக, பொங்கும் பருவகாலக்கடலை கரை தடுத்துத் தாங்குவது போலத் தாங்கினான்.

    நேரம் ஆனது. ஒரு கட்டத்துக்கு மேல் பாண்டியனுக்கு பொறுமை போய் விட்டது. மூன்று மணி நேரமாக இவன் அம்புகளைத் தடுப்பதிலேயே இருக்கிறோமே என்று சலித்து விட்டது பாண்டியனுக்கு. சலிப்பு ரௌத்ராகாரமான கோபமாக வெளிப்பட்டது.

    இது வரை மனுஷ்ய ஆயுதங்களை மட்டுமே பயன்படுத்தினார்கள் இருவரும். பாண்டியனுக்கு சலிப்புத் தட்டியது. ஆயிரம் ஆயிரமாக வந்த அம்புகளை ஆயிரம் ஆயிரமாக அம்பு விட்டுத் தடுப்பது வீண் வேலை. இந்தப் பிராம்மணனுக்கு களைப்பு என்பதே கிடையாது, ஆகவே இவன் விடுக்கும் படைகளை ஒரே அம்பில் அழிப்போம் என்று எண்ணினான் தென்னாட்டு வீரன். வாயவ்யாஸ்திரத்தை எடுத்து மந்திரித்து விடுத்தான். கிளம்பிய புயற்காற்றில் அஸ்வத்தாமன் விடுத்த எல்லா அம்புகளும் வந்த வழியே கௌரவர் படைகளை நோக்கியே சிதறி தாறுமாறாகப் பறந்தன. கௌரவர் படை சிதறியது. புகழையும் மானத்தையும் காலத்திலேயே விட்டுவிட்டு ஓடினார்கள். இந்த உலகத்தையும் மேலுலகத்தையும் துறந்து கௌரவர் படை சிதறியது. (தோல்வியால் இவ்வுலக சுகமில்லாமல் போனது. புறம் காட்டி ஒடியதால் மேலுலகமும் – வீரஸ்வர்க்கமும் இல்லாது போனது).

    இதைக் கண்ட பாண்டியன் சிம்மநாதம் செய்து தோள்தட்டி ஆர்ப்பரித்தான். அஸ்வத்தாம மேகம் பொழிந்த மழையை பாண்டியப் புயல் சிதறடித்து கர்ஜித்தது.

    இதைப் பொறுக்காத அஸ்வத்தாமன் பாண்டியனின் சந்தனம் பூசிய தேர்க்கொடியை அறுத்துத் தள்ளினான். நொடிப் பொழுதில் அவன் குதிரைகளைக் கொன்றான். ஒரே அம்பில் பாண்டியனின் சாரதியை கொன்று, ஒரு அர்த்த சந்திர பாணத்தால் பாண்டியனின் வில்லையறுத்தான் அஸ்வத்தாமன். அதன் பின்னர் ஆத்திரத்தால் பாண்டியனின் தேரினையும் சிறு துண்டுகளாகப் பிளந்தான். பாண்டியன் தேரில் இருந்த எல்லா ஆயுதங்களையும் தனது அம்புகளால் அழித்தான். பாண்டியனைக் கொல்ல அவனுக்கு வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் பாண்டியன் நிராயுதபாணியானதாலும், பாண்டியனோடு இன்னும் கொஞ்சநேரம் போர்புரியும் ஆசையாலும் பாண்டியனை அந்த அந்தணன் கொல்லவில்லை. அந்தநேரம் பார்த்துக் சூதபுத்திரன் கர்ணன் யதேச்சையாக அங்கே வந்தான். பாண்டவர் படைகளை தனது அம்புகளால் சிதறடித்தான். அஸ்வத்தாமன், பாண்டியனைக் கொள்ளாமல் சற்று காத்திருந்தான்.

    பாண்டியன் ஆயுதமும் தேரும் எல்லாவற்றையும் இழந்தாலும் வீரம் மட்டும் இழக்கவில்லை. வலிய தனது இரு கரங்களைத் தவிர வேறு ஆயுதங்கள் ஏதும் இல்லாமல் நின்ற நிலையிலும், புகழும் மானமுமே பெரிதென்று வாழும் தொல்தமிழர் குடிப் பிறந்த அம்மன்னன் புறங்காட்டவில்லை. பயம் என்பதே அறியாத அம்மன்னன், அஸ்வத்தாமன் மீது மிக்க சினம் கொண்டு அம்மன்னன் சுற்று முற்றும் பார்த்தான்.

    ஆங்கிலத்தில், Fortune favours the brave என்றொரு முதுமொழி உண்டு. ஆங்கில இலக்கிய உலகத்தில் அழியாப் புகழ் பெற்ற Macbethஇல் Bellona’s bridegroom (வெற்றித்தேவதையின் காதலன்) என்று அந்த வீரனை (Macbethஐ) ஷேக்ஸ்பியர் வர்ணிப்பார். அது போல பாண்டியன் நின்றான் என்றால் மிகையன்று.

    அந்நேரம் பார்த்து அங்கே பாண்டவர் படையைச் சேர்ந்த ஒரு பெரிய யானை வந்தது. அந்த யானை மேல் எல்லா விதமான ஆயுதங்களும் இருந்தன. மதம் பிடித்த அந்த யானை, அடக்குவார் யாருமின்றி பாகனில்லாமல் அந்தப் பக்கம் தன்னிச்சையாக ஓடி வந்தது. பாண்டியன் பார்த்தான். வெண்ணை இருக்க நெய்க்கு அழுவானேன் என்று எண்ணிய பாண்டியன் அடுத்து செய்ய வேண்டியதை மனதில் நிச்சயித்துக் கொண்டான்.

    என்ன செய்தான் பாண்டியன்?

    அது அடுத்தவாரம், அன்பர்களே!

    பிரியங்களுடன்,

    புவனேஷ்

    உபரித்தகவல்கள்:

    [1] சக்ர ரக்ஷகர்கள்:

    ஒவ்வொரு மகாரதனுக்கும், அதிரதனுக்கும் அவனது வலப்புறமும் இடப்புறமும் இரண்டு புகழ் பெற்ற மாவீரர்கள் துணையாகச் செல்வார்கள். இவனுக்கு அவர்கள் சளைத்தவர்கள் அல்ல. யார் நடுவில் போவது, யார் பாதுகாப்பது என்பதை அவர்கள் பேசித் தீர்மானித்துக் கொண்டு போவார்கள். பல சமயங்கள் நெருங்கிய நண்பர்களோ, உறவினர்களோ இப்படி கூட்டாகப் போவது வழக்கம். அவனைத் தாக்கும் படையைத் தாங்களும் தாக்கி வழி உண்டாக்குவார்கள், பாதுகாப்பார்கள். இவன் தேர் உடைந்தால் அவர்கள் தேரில் ஏற்றுக் கொள்வார்கள். இவர்களும் அவன் தேரில் தேவைப் பட்டால் ஏறுவார்கள். அவன் மீது எய்யப்பட்ட ஆயுதங்களை இவர்கள் தடுப்பார்கள். இவர்களை அவன் பாதுகாப்பான். இன்றைக்கு விமானப்படையில் WING MAN என்று கூடப் போகிறார்களே, அதே தான். நினைவிருக்கட்டும், இவர்கள் சம வீரர்கள். பணியாட்கள் இல்லை. team work ஆக செயல்படுவது.

    அர்ஜுனனுக்கு என்றுமே துருபதன் மக்களாகிய உத்தமொஜசும் யுதாமன்யுவும் கூடப் போவார்கள். அவர்கள் இவனுக்கு மைத்துனர்கள், அவர்களும் மகாரதர்கள். தருமனுக்கு நகுலனும் சகாதேவனும் எப்போதும் கூடப் போவார்கள்.

    சில சமயம், தன்னிலும் உயர்ந்த வீரர்களை இப்படி துணையாக அழைத்துப் போவதுண்டு. மிகவும் பணிவாக வேண்டிக் கொள்வார்கள்! முதல் போருக்கு செல்லும் மகனாகவோ, அனுபவம் அற்ற சிஷ்யனாகவோ, மிகவும் பிரியமானவனாகவோ இருப்பின் பெரியோரே வலிய துணை செல்வதும் உண்டு.

    பீஷ்மரைக் கொல்ல சிகண்டிக்கு அருச்சுனனும் பீமனும் இப்படி துணையாக போனார்கள்,

    காலாள் வீரர்களுக்கு துணையாக போகிறவர்கள் “பாத ரக்ஷகர்கள்”. புகழ் பெற்ற சாரதி ஆனால் (அதாவது அவன் கொல்லப்பட்டால் அவனைப் போல இன்னொருத்தன் இல்லை என்ற நிலை இருப்பின்) அவனுக்கு பாதுகாப்பானவர்கள் பார்ஷ்ணி ரக்ஷகர்கள்.

    Share
  • கே.ஜெ வால் நட்சத்திரமும் ஒரு சீகல் பறவையும் – 2

     

    கோ.ஆலாசியம்

     

    val4

    சிலிர்த்த மணித்துளிகள்

    அதைக்

    களித்த பொழுதில்

    வலைவீசிப் பிடித்தேன்

    வண்ணப் படம் ஒன்றை.

     

    அழகாய் கவர்ந்த சிப்பியை

    அலகால் தாங்கியே

    அதனுள் இருக்கும் பூச்சியை

    அமுதமாக்க….

     

    val5

    அந்தோ!…

    அருகில் இருந்த பாறையில்

    அப்படியே வீழ்த்திய

    அறிவினை எண்ணி

    அதிசயித்துப் போனேன்

     

    அதை அருகிலே நின்று

    அண்ணாந்து பார்க்கும்

    அருமை நண்பனும்

    லொள்! லொள்! லொள்ளென்று

    குரைத்து…

     

    ஆமாம், நானும் தான்

    என்று

    நயமாக கூறினான்…

     

    ரம்மியமானக் காட்சியதை

    ரசிக்கும் போதே

    ரகசியமாக

    எனது கருவிக்குள்

    அனுப்பிடவும்

    மறக்கவில்லை நான்.

     

    தாமதிக்க வில்லை

    தாமாக நடந்த

    எனது கால்களின் போக்கை…

     

    தாமாகப் புரிந்து கொண்டு

    ஆமோதிப்பவனாய்

    அருகிலேய

    அவனும் வந்தான்…

     

    வேறு யாரு

    நம்மப் பைரவன் தான்….

     

    தகரம் அங்கே

    தாமிரமானது..

    ததும்பி பெருகிய

    மலைத்தேனைப் போன்று

     

    நினைவா…

    கனவா…

    கண்ணைக் கவரும்

    வண்ணங்கள்

    வகை வகையாக

    வானில் வந்துக்

    கொட்டிக் கிடக்கின்றனவே…

    val6

    என்ற எண்ணமேவ

    என்னெதிரில் பறந்த

    பறவைகளையும் படமெடுத்தேன்…

     

    ஆகா, இன்னொன்றை

    இங்கே கூற மறந்தேன்

    வெள்ளியை படமெடுக்க

    விரைந்து வந்த பொழுது

     

    இன்னும் எத்தனை

    நேரமாகுமோ

    இந்தச் சூரியன் மறைய

    என்றிருந்த அப்பொழுதில்….

     

    நான் நிற்கும்

    இப்பாலத்தை

    நல்லதொரு படமு மெடுத்தென்.

     

    (தொடரும்)

    Share
  • நம்பிக்கை .. அதானே எல்லாம்!

    சங்கர் ராமன்

    அலாரத்தை எழுப்புங்கள்

    “சிலருக்கு இந்துமதம் பிடிக்கும்

    சிலருக்குப் பிடித்தமதம் கிறித்துவம்

    எப்போதுமே எனக்குப் பிடித்த மதம்

    தாமதமே!”

    இது கவியரசு கண்ணதாசன் அவர்கள் சொன்ன வார்த்தைகள். ஒரு திரைப்படப் பாடல் வெளியீட்டு விழாவிற்கு எதிர்பாராத விதமாக தாமதமாக வந்துவிட்டார். அந்த கூட்டத்தைக் கலகலப்பாக்க அவர் சொன்ன வார்த்தைகள் இவை. கவியரசரே சொல்லிவிட்டார் என்று சொல்லி நம்மில் பலரும் இன்று அந்த தாமதத்தையே கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறோம்.

    குறித்த நேரத்தில் எந்த இரு மனிதர்களும் சந்தித்ததாக வரலாறு இல்லை. அதைவிட மிகப்பெரிய உண்மை ஒன்று நாம் எல்லோரும் அறிந்ததே… இந்த உலகில் அதிகாலையில் அலாரம் வைத்து எழ வேண்டும் என்று படுத்தவர்கள் யாரும் அலாரம் அடித்தவுடன் எழுந்ததாகவும் வரலாறு இல்லை. மூன்று வேலைகளை நாம் சரியாகச் செய்து விடுவோம்.

    அலறும் அலாரம்

    அலாரம் அடிப்பதற்கு முன்னதாகவே எழுந்து அதனை அணைத்து விட்டுப் படுப்பது.

    அலாரம் அடித்தவுடன் எழுந்து அதனை இன்னும் சற்று நேரம் கழித்து அடிப்பதற்காக மாற்றி வைப்பது.

    இது இன்னும் கொஞ்சம் மோசமானது. அடித்த அலாரத்தை திருப்பி அடிப்பது.

    இந்த மூன்று வேலைகளை நம்மில் பலர் தவறாமல் செய்து கொண்டிருப்போம்… வெற்றிக்கு எத்தனையோ விஷயங்கள் தேவை. உழைப்பு ஆர்வம், புத்திசாலித்தனம், விடா முயற்சி, வித்தியாசமாகச் செய்வது, நேர்மை என அந்தப்பட்டியல் நீண்டு கொண்டே போகும். ஆனால் அவை எல்லாவற்றிலும் மேலானது காலம். ஆம். நம் வயதினையொத்த நபர்கள், நமக்குத் தெரிந்தவர்கள், நம்மோடு பள்ளி, கல்லூரிகளில் படித்தவர்கள் எல்லாம் இன்று எந்த நிலைமையில் இருக்கிறார்கள்? நம்மோடு வேலைக்குச் சேர்ந்தவர்கள், நம்மோடு வியாபாரம் தொடங்கியவர்கள் இப்போது எப்படியிருக்கிறார்கள். நாம் எப்படி இருக்கிறோம்? வசதிகளில், வாய்ப்புகளில் வாழ்க்கை நிலைகளில் வேறுபாடுகள் உள்ளனவா?

    இருக்கும் நிச்சயம் இருக்கும். சிலர் உயர்ந்தும், வேறு சிலர் சுமாராகவும் இருக்கலாம். காரணம். அவர்களுடைய திறமை, உழைப்பு, பின்புலம் எனப் பலவாக இருக்கலாம். இந்தத் திறமை, உழைப்பு, பின்புலம் ஆகிய அனைத்தும் இருந்தும் கூட ஒரு சிலர் முன்னேறாதவர்கள் இருக்கலாம். இந்த மூன்றில் ஏதேனும் குறைவாக இருந்தும்கூட முன்னேறியவர்கள் இருக்கலாம். காரணம் அவர்கள் வாழ்க்கையை எப்படி அணுகினர் என்பதுதான். அதைவிட முக்கியம் அவன் காலத்தை எவ்வாறு செலவிட்டான் என்பதுமே ஆகும்.

    அறுபது வயது வரை சராசரியாக வாழும் மனிதன் செலவழிக்கும் நேரத்தைப் பட்டியலிட்டால் நமக்கு அதிர்ச்சியும், ஆச்சரியமும் மிஞ்சுகிறது. தினம் தினம் தூக்கத்திற்கு 8 மணி நேரம், சாப்பிட, குளிக்க என்ற அன்றாட வேலைகளைச் செய்ய 4 மணிநேரம் சம்பாதிக்க நாம் செய்யும் பணி அல்லது தொழிலுக்குச் சராசரியாக 8 மணிநேரம் இவைபோக மீதமுள்ள 4 மணிநேரம் மட்டுமே தான் சொந்த வளர்ச்சிக்குச் செலவிடுகிறான் என்றால் 60 ஆண்டுகள் உயிர் வாழும் மனிதன் மொத்தத்தில் உறங்குவதற்கு 20 ஆண்டுகளும் மற்ற தினசரி வேலைகளுக்கு 10 ஆண்டுகளும் உழைப்பதற்கு 20 ஆண்டுகளும், தன் வளர்ச்சிக்கு 10 ஆண்டுகளும் செலவழிக்கிறான். அதாவது மொத்தத்தில் நமக்கான நேரம் 10 ஆண்டுகள்தான்.

    இந்த 10 ஆண்டுகளில் நாம் செய்யும் சாதனைச் செயல்களோ நம்மை வரலாற்றில் ஒருவனாக இடம்பெறச் செய்யும் தகுதியடையச் செய்கின்றன. காலத்தை எப்படிப் பயன்படுத்துவது? நாம் தினசரி செய்யும் செயல்களை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.

    புதுயுகம் படைப்போம்;

    சில காரியங்கள் நமக்கு முக்கியமானவை . அதே சமயம் அவை அவசர அவசரமாக செய்து முடிக்க வேண்டியவை.
    (எ.கா) : ஒருவருக்கு மூளையில் கட்டி இருப்பதாகத் தெரிகிறது, அதனை அகற்ற அறுவைச் சிகிச்சை செய்தாக வேண்டும். இது தவிர்க்க இயலாத செயல். இதற்கு நேரம் செலவழிக்க வேண்டியது முக்கியமானவை. அதைவிட அவசரமானதும் கூட.

    வேறு சில வேலைகள் அதே அளவு அவசரமான வேலைதான். ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குள் செய்து முடித்தாக வேண்டும். ஆனால் அறுவை சிகிச்சை போல முக்கியமானதாக இல்லை.
    (எ.கா) : இந்த மாதம் கரண்ட் பில் கட்டுவது, நிச்சயம் கட்டியாக வேண்டும். ஆனால் இது வாழ்க்கையின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கப் போவது இல்லை. எனவே இது அவசரம் ஆனால் முக்கியமில்லை.

    மூன்றாவது வகை செயல்கள் முக்கியமும் இல்லை. அவசரமும் இல்லை.
    (எ.கா) : பழைய பேப்பர்கள் போடுவது. அரட்டை அடிப்பது, வேடிக்கை பார்ப்பது போன்ற பல வேலைகளைச் சொல்லலாம்.

    நான்காவது வகை சற்று வித்தியாசமானது. அந்த செயல்கள் அவ்வளவு அவசரமில்லை. ஆனால் அவை முக்கியமானது.
    (எ.கா) : எதிர்காலத்திற்கு திட்டமிடுதல் புதிய விஷயங்களைச் சிந்திப்பது, உறவுகளைப் பேணுவது, ஆரோக்ய விஷயங்கள் கற்றுக்கொள்வது போன்றவைகள்.

    இவற்றில் தினசரி எதில், எதுபோன்ற செயல்களில் எவ்வளவு நேரம் செலவழிக்கிறோம்? இதனைச் சரியாக யோசித்து, கவனமாகச் செய்ய கூடுதல் பலன்கிடைக்கும். ஒவ்வொரு நாளும், அன்றைக்குச் செய்ய வேண்டிய செயல்களைப் பட்டியலிடுங்கள்… அதில் முடிக்க முடிந்ததை மட்டும் உடனடியாக செய்துவிடுங்கள். காலத்தின் அருமை நமக்குத் தெரிவதில்லை. ஒவ்வொரு விநாடியும் வெற்றி நமக்காக காத்திருக்கிறது. நாம் சரியானபடி செயல்பட வேண்டும்.

    “திட்டமிடாத எவரும்

    வெற்றிபெறமுடியாது”

    என்பது முதுமொழி.

    ஒலிம்பிக்போட்டிகளில் தோற்றவருக்கும் ஜெயித்தவருக்கும் அதிகவித்தியாசம் இருப்பதில்லை. மைக்ரோ விநாடிகளில்தான் வெற்றி காத்திருக்கிறது. விநாடிகளில் பல்வேறு நிகழ்வுகள் நம்மை ஆட்டிப்படைத்துள்ளன.

    1945-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆறாம் நாளை நாம் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. உலக சரித்திரத்தில் ஒரு கருப்பு நாள் அது. ஹரோஷிமா, நாகசாகி நகரங்கள் மீது இரு கதிரியக்க குண்டுகள் வீசப்பட்டன. 30 விநாடிகளில் 2 லட்சம் பேர்கள் கொல்லப்பட்ட பரிதாபம் விநாடிகளின் விபரீதத்தை நமக்கு உணர்த்தி விட்டது. இலக்கை நோக்கி செல்லும் ஏவுகணைகளுக்கு இரண்டு நாளுக்கு முன்பிருந்த கவுண்ட் டவுண்-ஐ ஆரம்பித்து விடுகிறோம். நம்முடைய நிலை என்ன? பொதுவாகத் தேர்வு முடிவுகள் வெளியான நாளில் நம் மாணவர்கள் ஒரு சபதத்தை ஆக்ரோஷமாகச் செய்வார்கள்… “நாளையில் இருந்து அன்னன்னக்கு பாடத்த அன்னக்கே படிச்சிரனும்…” ஆனால் மறுநாள். ஏற்கனவே பலமுறை பார்த்த திரைப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால் அதையே வெறித்துப்பார்க்கும் பழக்கம் நம்மிடையே, நம் மாணவர்களிடம் காணப்படுகிறது. ஒரு அழகான கவிதை எனக்கு ஞாபகம் வருகிறது. யார் எழுதியது என்பது எனக்குத் தெரியாது. நல்லதை யார் சொன்னாலும் கேட்டுக்கொள்ள வேண்டியதுதானே.

    ஓடாத கடிகாரம்கூட

    ஒரு நாளில்

    இருமுறை

    சரியான நேரத்தைக்

    காட்டுகிறது

    என்றன அழகான கவிதை!. இக்கவிதை பல உண்மைகளை நமக்குக் கற்றுக்கொடுத்து விடுகிறது.

    எம்.ஜி.ஆர். சமாதி

    இனி நீங்கள் அலாரத்தை எழுப்புபவராக இருங்கள். மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் சமாதியில் அவரோடு புதைக்கப்பட்ட அவரது கைக்கடிகாரம் இன்று வரை ஓடிக்கொண்டிருப்பதாக இன்னும் சிலர் நம்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள்… அவரின் சமாதிக்குச் செல்லும் பலரும் கடிகாரம் ஓடுகிறதா என்பதனை அறிய காதுவைத்து கேட்கிறார்கள்… இது பரவாயில்லை. இன்னும் சிலபேர் ஓடாத கடிகாரத்திற்கு சாவி கொடுப்பதற்கு அந்தச் சமாதியினை உடைக்க முயற்சி செய்ததையும் நாம் அனைவரும் அறிவோம்…

    சமாதியில் இருக்கும் கடிகாரம் கூட ஓடவேண்டும் என்ற அக்கறை கொண்ட நாம் நம்முடைய காலக்கடிகாரத்தை சுழல விடவேண்டாமா?.

    திரு லேனா. தமிழ்வாணன் அவர்கள் ஒரு கூட்டத்தில் சொன்ன அருமையான செய்தியைச் சொல்கிறேன். ஒரு மாதத்தின் அருமை தெரிய வேண்டும் என்றால் குறைப்பிரசவத்தில் பிள்ளை பெற்ற குணவதியிடம் கேட்டறியலாம். அவள் படும்பாடு எத்தகையது. எத்தகைய கடினமானது என்பது புரியும். ஒரு வாரத்தின் அருமை யாருக்குத் தெரியும்? வாரப்பத்திரிக்கை ஆசிரியருக்குத் தெரியும். ஒரு நாளின் அருமை யாருக்குத் தெரியும்? ஒரு நாள் முன்னதாகப் பதவியில் சேர்ந்து பதவி உயர்வு பெற்றவனைப் பார்த்த பதவி உயர்வு பெறாதவனுக்குத் தெரியும்.

    ஒரு மணி நேரத்தின் அருமையை நுழைவுத்தேர்வு எழுதும் மாணவனிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். ஒரு விநாடியின் அருமை யாருக்குத் தெரியும்? விபத்தில் அசந்து போனவனுக்கு விவரமாய்த் தெரியும்… ஒரு மைக்ரோ செகண்டின் அருமை ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கத்தை தவறவிட்ட வீரனுக்குத் தெரியும். என்ன அருமையான செய்தி. நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் ஒரு செய்தியைச் சொல்கிறது. தமிழ் இலக்கியத்திலும் ஒரு அழகான செய்தி நேரத்தைப் பற்றி உள்ளது.

    “ஒன்றே செய்

    ஒன்றும் நன்றே செய்

    நன்றும் இன்றே செய்

    இன்றிலும் இப்போதே செய்துவிடு”

    என்பார் திருமூலர். நாம் செய்ய வேண்டிய நல்ல செயல்களை உடனடியாகச் செய்துவிட வேண்டும். ஏனெனில் நம்முடைய மனது மாறிக்கொண்டே இருக்கும். ஒவ்வொரு புத்தாண்டின் போதும் ஏதாவது ஒரு புது சபதம் ஏற்போம். இந்த ஆண்டில் இதைச் செய்ய வேண்டும். அந்த வருட இறுதியில் நாம் செய்த சபதத்தை நிறைவேற்றி இருக்கிறோமா?… நிறைவேற்றி இருந்தால் நாம் வெற்றிக்கு மிக அருகிலே இருப்பதாக அர்த்தம்.

    சாதனை நாயகர்கள்

    உலகிலேயே மிக அதிகமாக சம்பாதிக்கும் சச்சின் டெண்டுல்கருக்கும், கேப்டன் தோனிக்கும் அவர்களின் சிறப்பான செயல்பாடுகளை மதித்து அவர்களுக்கு இறைவன் 48 மணிநேரம் கொடுத்திருக்கானா? இல்லையே. பிறகு எப்படி ஜெயித்தார்கள்? அவர்கள் காலத்தைச் சரியாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள்… நேரம் எவ்வளவு பெரிய பொக்கிஷம். அதனை நாம் உணர்ந்து கொண்டாட வேண்டாமா?.

    ஓரு சின்ன உதாரணம். ஓரு சிறிய இரும்புத்துண்டு. அதை அப்படியே விற்றோம் என்றால் 10 ரூபாய் கிடைக்கும். அதையே சற்று வடிவம் மாற்றி ஒரு குதிரையின் லாடமாக மாற்றினால் 20 ரூபாய் கிடைக்கும். அதையே குண்டூசிகள் ஆக்கினால்… தொடர்ந்து பாருங்கள்.

    ஒரு பொருளின் மதிப்பு அதன் நுட்பத்திலேதான் அமைந்திருக்கிறது. அது போலத்தான் காலமும், ஒரு மணி நேரத்தில் பத்து ரூபாய் சம்பாதிப்பதும் லட்ச ரூபாய் சம்பாதிப்பதும் அவரவர் காலத்தைப் பயன்படுத்தும் முறையிலே அமைகிறது. நிறைவாக இன்றைய வேலையை இன்றே செய்யுங்கள். ஒத்திப்போடாதீர்கள்.

    ஒத்திப்போட்டவர்களை உலகம் புறக்கணித்து விடும். நம்முன் இருக்கும் வேலைகளை அவசரமானவை, முக்கியமானவை என்று பிரித்துக்கொண்டு முன்னர் சொன்னபடியே செய்யுங்கள். இரண்டும் இல்லாத வேலைகளை செய்யாதீர்கள். ஒன்றுமே வேலை இல்லையா? நாளை என்ன வேலை செய்யலாம் என்று பட்டியல் போடும் வேலையைச் செய்யலாமே. அதுவும் இல்லை என்றால் சின்ன தூக்கம் போடலாம். தப்பில்லை. உடல் நலம் பெறும். தூக்கம் வேண்டாம் என்றால் தியானத்தில் இருங்கள். தியானத்தில் நிறைய நன்மை உண்டு.

    இந்த அத்தியாயத்தில் கதை ஒன்றும் சொல்லவில்லையே என்ற குறை உள்ளது. நேரம் கருதி ஒரு கதை சொல்கிறேன். ஒரு ஊரில் ஒரு தொழிலதிபர் இருந்தார். ஒருநாள் காலையில் அவரது வங்கி மேலாளரிடமிருந்து ஒரு போன் வந்தது. “சார் உங்க கணக்கில யாரோ ஒருவர் 86,400 ரூபாய் டெபாஸிட் போட்டிருக்கிறார். என்ன பண்ணலாம் என்றார். அவர் யார் என்று தெரியுமா?’என்று கேட்டால் தெரியாது’ என்றார் வங்கி மேலாளர். ஏகப்பட்ட மகிழ்ச்சி. ஒரு ரூபாயா? இரண்டு ரூபாயா? 86,400 ரூபாய். சும்மாவா? தலைகால் புரியவில்லை மனிதருக்கு.

    இரவு மறுபடியும் தொலைபேசி அலறுகிறது. “சார் அந்த 86,400 ரூபாயை யாரோ எடுத்துட்டாங்க () சார்” என்றார் வங்கி மேலாளர். “அதெப்படி முடியும்” என்று இவர் அலற பெரிய ஆர்ப்பாட்டமே நடந்துவிட்டது. 86,400 டெபாஸிட் செய்தபோது யார் செய்தது என கவலைப்படாதவர் பணம் போனதும் கவலையோடு அலறுகிறார். நாள்தோறும் பெயர் தெரியாத ஒருவர் நம் கணக்கில் 86,400 டெபாஸிட் செய்து இரவே அதை எடுக்கவும் செய்தால் வருத்தம் வராதா?

    என்ன அந்த 86,400 ரூபாய்…? ஒரு நாளைக்கு இருபத்து நாலு மணிநேரம். ஒரு மணிக்கு அறுபது நிமிடம். ஒரு நிமிடத்திற்கு அறுபது விநாடிகள். அப்படியானால் 86,400ரூபாய். அதாவது ஒவ்வொரு நாளும் நாம் பயன்படுத்திக் கொள்ள 86,400 விநாடிகளைக் கடவுள் நமக்காக டெபாஸிட் செய்கிறார். அன்று இரவே அதை எடுத்தும் விடுகிறார். அந்தப் பணத்தை, அதாவது காலத்தை நாம் வீணாக விடலாமா? பயன்படுத்த வேண்டாமா?

    ஒவ்வொரு ரூபாயையும் எண்ணி, எண்ணி செலவழிக்கிற மாதிரி அல்லது யோசித்து முதலீடு செய்து சம்பாதிக்கிற மாதிரி ஒவ்வொரு விநாடியையும் பத்திரமாக செலவழிக்க வேண்டும். காலக்கெடு வைத்தே எந்த வேலையையும் செய்யுங்கள். காலம் முடிவதற்குள் வேலையைச் செய்துவிடுங்கள்.

    காலத்தைக் கொண்டாடுங்கள்

    காலம் உங்களைக் கொண்டாடும்.

    Share
  • மலேசிய இந்து சங்கம் 2013 ஆண்டுக்கான சங்கரத்தினா மறவன்புலவு க. சச்சிதானந்தன்

    மலேசியாவில் இந்துத் தொண்டுக்கான உயர்விருது. மலேசிய இந்து சங்கம் வழங்கிய விருது – சங்கரத்தினா விருது

    mhs08130913

    15.09.2013 மதியம், கோலாம்பூர் பெற்றாலிங்கு செயா குடிமக்கள் மண்டபம் மலேசிய இந்து சங்கத் தலைவர் டத்தோ மோகன் சண் வழங்குகிறார். உடனிருப்பவர் மலேசிய இந்து சங்கத் துணைத் தலைவர் கந்தசாமி. நிகழச்சி முதலாவது உலகத் திருமுறை மாநாடு 36ஆவது திருமுறை விழா

    ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்று தம் வாழ்நாள் முழுவதையுமே இறைப்பணிக்காகவும், மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற நல்ல எண்ணத்தோடு துயருற்றோருக்கு உதவிக்கரம் நீட்டி உன்னத வாழ்க்கை வாழ்பவர் ஐயா திரு மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்கள். இவ்வரிய விருதினை ஐயாவிற்கு வழங்கும் விதமாக இவ்விருது பெருமை கொள்கிறது. வல்லமையின் மனம் நிறைந்த வாழ்த்துகள். ஐயாவின் பிறப்பு, வளர்ப்பு, கல்வி, அவர் பெற்ற விருதுகள் பற்றி அறிய:

    1941 திசம்பர் 5இல் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். தந்தையார் நல்லாசிரியர், சைவசிகாமணி முருகேசு கணபதிப்பிள்ளை, சைவ சமய நூல்களை 30 ஆண்டுகளாகப் பதிப்பித்து வந்தவர். தாயார் தங்கம்மா. மனைவி இராசேசுவரி, மக்கள் கயல்விழி, சிவகாமி, முருகவேள், பிஞ்ஞகன்.

    கல்வி

    1945 மறவன்புலவு சகலகலா வித்தியாசாலை,

    1949 யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி,

    1959 சென்னை பச்சையப்பன் கல்லூரி,

    1969 யப்பான் தோக்காய் சுவிசங்கு கேங்கிசோ ஆய்வகம்,

    1973 சிங்கப்பூர் நன்யாங்கு பல்கலைக்கழகம்,

    1976 இங்கிலாந்து சதாம்பரன் பல்கலைக்கழகம்

    1988 சென்னைப் பல்கலைக்கழகம்.

    விருதுகள்

    1963 இலங்கை அறிவியல் வளர்ச்சிச் சங்கப் புலமைப் பரிசில் விருது.

    1964 இந்திய அரசின் புலமைப் பரிசில் விருது.

    1969 யப்பானிய அரசின் புலமைப் பரிசில் விருது.

    1973 யூனெஸ்கோவின் புலமைப் பரிசில் விருது.

    1976 பிரித்தானிய கழகத்தின் சதாம்பரன் பல்கலைக்கழகப் புலமைப்பரிசில் விருது.

    1976 ஆத்திரேலிய அறிவியல் கழகத்தின் வங்காள தேச வளர்ச்சிப் பயணத்துக்கானன புலமைப் பரிசில் விருது.

    1986 சீசெல்சு இந்துக் கோவில் சங்கப் பாராட்டு விருது.

    1987 சென்னை தலைநகர்த் தமிழ்ச் சங்கம், பாவேந்தர் பாரதிதாசன் விருது.

    1995 சென்னைக் கம்பன் கழகம் சிறந்த பதிப்பாளர் விருது.

    2000 திருவாவடுதுறை ஆதீனம் சிவநெறித்தொண்டர் விருது.

    2008 அறவாணன் அறக்கட்டளை சாதனையாளர் விருது.

    2010 சிங்கப்பூர்த் திருமுறை மாநாட்டு விழாவில் பாராட்டு.

    2012 கோயம்புத்தூர் கற்பகம் பல்கலைக்கழகத்தின் மதிப்புறு முதுமுனைவர் பட்டம்.

    2013 காரைக்குடிக் கம்பன் கழகத்தார், தமிழ்த் தாய்க் கோயிலில் பரிவட்டப் பாராட்டும் முடிசூடல் விருதும்.

    தொழில்

    1963 கொழும்பு இறக்குதிக் கட்டுப்பாட்டுத் திணைக்கள உதவியாளர்,

    1966 யாழ்ப்பாணக் கல்லூரி விரிவுரையாளர்,

    1966 கொழும்பு உள்ளூராட்சி அமைச்சரின் தனிச் செயலர்,

    1967 கொழும்பு கடற்றொழில் ஆராய்ச்சி நிலைய அறிவியல் ஆய்வாளர்,

    1977 யாழ்ப்பாணம் காந்தளகம் பதிப்பாளர்,

    1977 யாழ்ப்பாணப் பல்கைலக்கழகப் பேராசிரியர்,

    1979 ஐக்கிய நாடுகள் அமைப்பின் சார்பாக 23 அரசுகளுக்கு ஆலோசகர்,

    1986 சென்னை காந்தளகம் பதிப்பாளர்,

    1999 மின்னம்பலத்தில் கலைமாமணி பா. சசிரேகா மேற்பார்வையில் உலகெங்கும் 62 நாடுகளில் தமிழ்நூல் www.tamilnool.com விற்பனையாளர்,

    2000 சத்தியமங்கலம், தாம்பரம், இராமநாதபுரம், நாகர்கோயில், சிதம்பரம், சேலம் காந்தளம் புத்தக விற்பனை நிலையங்களின் அமைப்பாளர்,

    2013 யாழ்ப்பாணம் காந்தளகம் மீளமைத்துப் பதிப்பாளர்.

    சைவ சமயப் பணி

    1950 ஆறுமுக நாவலர் விழா, திருமுறைப் போட்டியிலும், பேச்சுப் போட்டியிலும் பங்கேற்றவர்.

    1954, 1955, 1956 தவத்திரு யோகர் சுவாமியின் நேரடி வழிகாட்டலில் யாழ்ப்பாணம் சிவதொண்டன் நிலையத்தில் புராண படனர்.

    1959 சென்னையில் சைவப் பேரறிஞர், பேரா. அ. ச. ஞானசம்பந்தன் வழிகாட்டலில், பாதுகாப்பில் வாழத் தொடங்கியவர்.

    1962 சென்னை சைவசித்தாந்தப் பெருமன்ற இளஞ் சைவப் புலவர் மாணவர்.

    1963 யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் திருக்கோயில் – திருக்குள மீளமைப்பாளர்.

    1965 தருமபுரம் ஆதீனம் 25ஆவது குருமகாசந்நிதானத்திடம் திருமுறைத் தொடக்கப் பதிப்புகள் பெற்றவர், பயின்றவர்.

    1966 யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் திருக்கோயில் – திருத்தேர் மீளமைப்பாளர்.

    1968 கொழும்பு இந்து வாலிபர் சங்கத் துணைச் செயலாளர்.

    1969 மார்கழியில் சுங்கைப் பட்டாணியில் டத்தோ வைத்தியலிங்கம் தலைமையில் நடைபெற்ற மலேசிய இந்து இளைஞர் பேரவை மாநாட்டில் பங்கேற்றவர்.

    1971 சிங்கப்பூரில் திரு. ஈ. வி. சிங்கனுடன் இணைந்து ஞாயிறு திருக்குறள் வகுப்புகளில் ஆசிரியர்.

    1971 பிஜித்தீவில் தென் இந்திய ஐக்கிய சன்மார்க்க சங்கம் மற்றும் இலவுற்றோக்கா, விவேகானந்தர் பாடசாலையில் திருமுறை ஆசிரியர்.

    1971 சாவகத்துக்கு அருகே, பாலித்தீவுச் சிவன் கோயில்களில் வழிபாடு, சாவகத்தில் சொக்சகார்த்தாவில் பெரும்பாணண் சிவன்கோயிலில் வழிபாடு.

    1971 இலங்கை இந்து இளைஞர் பேரவை அமைப்பாளர், 60 அமைப்புகளின் கூட்டமைப்பின் தொடக்கத் தலைமைச் செயலாளர் 1977 வரை. ஆண்டு தோறும் கொழும்பு, நீர்கொழும்பு, வவுனியா, இலுப்பைக்கடவை, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் இந்து இளைஞர் மாநாடுகள் நடத்தியவர்.

    1973 இலங்கை இந்து இளைஞர் பேரவை தலைமைச் செயலாளராகத் தீவு முழுவதும் இந்து இளைஞர் கொடிநாள் 1975இல் நடத்தத் தொடங்கி 1977 வரை நடத்தி வந்தவர்.

    1973 மதுரையில் நடைபெற்ற சைவ மாநாட்டிற்கு இலங்கை இந்து இளைஞர் பேரவை சார்பில் இலுப்பைக்கடவை, திரு. கணேசமூர்த்தி பேராளராகச் செல்ல வழிவகுத்தவர்.

    1974 யாழ்ப்பாணத்தில் நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்திய அமைப்புக் குழுத் துணைச் செயலாளர்.

    1975 இப்பைக்கடவை இந்து இளைஞர் மன்ற உறுப்பினர் இளைஞர் பணிப் பயிற்சிக்காகக் கனடாவுக்கும் கொழும்பு இந்து வாலிபர் சங்க உறுப்பினர் யப்பானுக்கும் செல்ல ஏற்பாடு செய்தவர்.

    1976 மலேசிய, மொரிசியசு, பிஜி நாடுகளின் பேராளர்கள் கலந்துகொண்ட உலக இந்து இளைஞர் மாநாட்டைக் கொழும்பில் நடத்தியவர். டத்தோ வைத்தியலிங்கம் மலேசியவில் இருந்து வந்திருந்த பேராளர்.

    1977 விசுவ இந்து பரிசத்தின் காசி மாநாட்டுக்கு இலங்கை இந்து இளைஞர் பேரவைப் பேராளர்களை அனுப்பியவர்.

    1979 யாழ்ப்பாணம், கைதடி, பிள்ளையார் கோயில் தேர்த்திருவிழாவில் அனைவரும் வடம் பிடிக்க முடியாத நிலையில், அவர் தலைமையில் அறவழிப் போராட்டம், தேர்த்திருவிழா நிறுத்தம், பின் அனைவரும் கோயிலில் அனைத்து நிலைகளிலும் வழிபடும் உரிமை.

    1980 மொரிசியசு தமிழ்க்கோயில் கூட்டமைப்புக்கு ஆலோசகர், கருத்துரை வழங்கி வந்தவர்.

    1984 சீசெல்சு இந்துக் கோயில் சங்க நிறுவனர். 200 ஆண்டுகாலமாகச் சீசெல்சில் வாழும் தமிழருக்கான முதலாவது கோயில் அமைக்கக் கால்கோளிட்டதால் பிள்ளையார் நகர் நடுவே அருள் இன்றும் பாலிக்கிறார்.

    1985 சீசெல்சு இந்துக்களுக்குத் தைப் பொங்கல், தீபாவளி நாள்கள் பகுதி விடுப்புகளாகச் சீசெல்சு இந்துக் கோயில் சங்கம் வழியாக அரசிடம் ஆணை பெற்றவர்.

    1988 முருகன் பாடல்கள் நூல், 12 பகுதிகள் 4,800 பக்கங்கள் கொண்ட தொகுதியைக் கொழும்பு தெட்சணத்தார் வேளாளர் மகமைக்காகத் தயாரித்தவர்.

    1989 சிதம்பரம் ஆருமுகநாவலர் அற்க்கட்டளைக் குழுவில் யாழ்பாணம் சைவபரிபாலன சபையின் சார்பில் இரு ஆண்டுகள் உருப்புரிமை.

    1994 மலேசிய சைவநெறித் திருக்கூட்டத்தினருக்காகச் சிவருமோத்திரம் நூலைப் பதிப்பித்தவர்.

    1994 மலேசிய சைவ நெறித் திருக்கூட்டம், மலேசியச் சைவப் பெரியார்கள் தான்சிறீ சோமசுந்தரம், ஆறுமுகம், குலவீரசிங்கம் ஆகியோர் ஆதரவுடன் பெரியபுராணம் மூலமும் ஆறுமுகநாவலர் மற்றும் ஏழாலை மு. கந்தையா எழுதிய சூசனங்களைப் பதிப்பித்தவர். கோலாலம்பூர் செட்டியார் மண்டபத்தில் நடைபெற்ற வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டவர்.

    1996 தருமபுரம் ஆதீனம் 26ஆவது குருமகாசந்நிதானத்தின் ஆசியுடன் மலேசியச் சைவப் பெரியார்கள் ஆறுமுகம், குலவீரசிங்கம் வழிகாட்டலில், தருமபுரம் ஆதீனம் பன்னிரு திருமுறைப் பதிப்பு மீண்டும் வெளிவரப் பணிபுரிந்தவர். 12 திருமுறைகள் 16 பகுதிகளாக வெளிவரும் திட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக உழைத்தவர். செம்பதிப்பாக, 18,600 பக்கங்கள் கொண்ட அப்பதிப்புப் பணியில் முழுமையாக ஈடுபட்டு வருபவர்.

    1997 இலங்கையில் இந்துக் கோயில்கள் அழிக்கப்படுவதைத் தடுக்கும் முயற்சியாகத் தமிழகத்தில் அரசியலாருடன் தொடர்புகொண்ட முயற்சிகளால் சென்னைச் சிறையில் ஒருமாதம் இருந்தவர்.

    2003 திருக்கயிலாயப் புனிதப் பயணம் மேற்கொண்டவர். ஆவணி நான்காம்பிறை நாளில் திருக்கயிலாயக் காட்சி பெற்றவர்.

    2005 மின்னம்பலத்தில் தருமபுரம் ஆதீனம் பன்னிரு திருமுறை முழுவதையும் www.thevaaram.org தளத்தில் ஏற்றி உலகெங்கும் 72 நாடுகளில் 720 நகரங்களில் நாள்தொறும் சராசரியாக 20,000 தட்டித் திறப்பாளர் பார்த்துப் பயனுறச் செய்தவர்.

    2007 திருமலை திருப்பதி தேவத்தானத்தின் பன்னிரு திருமுறைத் தெலுங்கு மொழிபெயர்ப்புக்கான ரூ. 13 இலட்சம் நிதி ஒதுக்கீட்டுத் திட்ட ஒருங்கிணைப்பாளர்.

    2009 பன்னிரு திருமுறையின் 18,268 பாடல்களில் 10,585 பாடல்களைத் தருமபுரம் ப. சுவாமிநாதன் குரலிசையாகப் பாடி முடித்திருக்க, குரலிசையாகப் பாடி முடிக்காத எஞ்சிய பாடல்களைப் பதிவுசெய்யச் சிங்கப்பூர்த் திருமுறை அன்பர்களின் நிதி உதவியுடன் பொற்றாளம் துரை. ஆறுமுகம் மேற்பார்வையில் ஓதுவார் பா.சற்குருநாதன் பாடி முடிக்கும் திட்டத்தை ஒருங்கிணைப்பவர்.

    2010 பன்னிரு திருமுறையின் மியன்மார், சிங்களம், மலையாளம், கன்னடம், வடமொழி, இந்தி மொழிபெயர்ப்புகள் வெளிவருவதற்காக 25 மொழிபெய ர்ப்பாளரின் பணிகளை ஒருங்கிணைப்பவர். மலாய் மொழிபெயர்ப்பு வெளிவர ஆக்கபூர்வமான முயற்சிகளில் ஈடுபடுபவர்.

    2011 பன்னிரு திருமுறையில் உள்ள தமிழ் ஒலிகளை ஞால மொழியொலி நெடுங்கணக்குடன் இயைந்து ஒப்பு நோக்கிய மொழியியலாளர் பேரா. புனல் க. முருகையன் முயற்சியை நூலாக்கி, கணிணி மொழியியலாளர் பேரா. வினோதராசன் வழியாகப் பன்னிரு திருமுறையின் 18,268 பாடல்களையும் 20 மொழியாளர் ஒலிபெயர்ப்பாகப் பயிலுமாறு ஒருங்கிணைப்பவர்.

    2011 தாய்லாந்து அரச குருவான தவத்திரு வாமதேவ முனிவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, தாய்லாந்து அரசரின் திருக்கோயிலில் மார்கழி 30 நாள்களும் திருவெம்பாவைப் பாடல்களைச் செம்மையாக ஓத உதவியாக, கிரந்தம், சீயம் ஆகிய வரிவடிவங்களில் நூலாக்கிக் கொடுத்தவர்.

    2011 மியன்மாரில் மாநிலங்கள் தோறும் தேவாரம் மின்னம்பலத் தளப் பரப்புரையாளர். மியம்மா மொழிக்குத் திருமுறை மொழிபெயர்ப்புக்குத் தளம் அமைத்தவர். மியம்மா மொழிபெயர்பாகத் திருவெம்பாவை நூல் வெளியீட்டை ஒருங்கிணைத்தவர்.

    2011 கம்போடியாவில் காரைக்காலம்மையார் சிலைகள் தாங்கிய கோயில்கள் சென்று காணொலிகளாக்கியவர், கம்போடியாவின் 1008 சிவலிங்கத் திருமேனிகளின் கோயில்கள் சென்று காணொலிகளாக்கியவர்.

    2011 சிங்கப்பூர் செண்பகப் பிள்ளையார் கோயிலாரின் திருமுறை வகுப்பு மாணவர்களுக்காக நூல்கள், சிங்கப்பூர்த் திருமுறை மாநாட்டு அமைப்பாளரின் மாநாடுகளுக்காக நூல்கள் தயாரித்தவர்.

    2012 ஆத்திரேலியாவின் மாநிலத் தலைநகர் தோறும் சென்று தேவாரம் மின்னம்பல தளம் பரப்புரைத்தவர்.

    2012 ஆறுமுகநாவலர் தயாரித்த 71 நூல்களையும் மின்னம்பலம் வழி எவரும் படிக்குமாறான செயற்றிட்ட ஒருங்கிணைப்பாளர். இத்திட்ட முன்னோடி ஆத்திரேலியா மெல்போர்ண் வாழ் பொறியியலாளர் திரு. சிறீஸ்கந்தராசா.

    2012 சிலாங்கூர், பெராக், பினாங்கு, கெடா, மலாக்கா, சரவாக்கு, சபா மாநிலங்களிலும் கோலாம்பூர் மற்றும் இலபுவான் நகரங்களிலும் மலேசிய இந்து சங்கத்தின் கிளைகள் தோறும் சென்று தங்கி, திருமுறை வளர்ச்சிப் பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டவர்.

    mhs11130913mhs10130913

    2013 ஓராயிரம் ஆண்டுகளாக மறவன்புலவில் தம் முன்னோர் அறங்காத்துத் தொண்டாற்றி வரும் திருக்கோயில் இலங்கையின் 30 ஆண்டுகாலப் போரினால் சிதைந்து போக, புதுப்பித்து மீளமைக்கும் திருப்பணியாளர்.

    Share
  • உன்னதமான ஒரு சமூகத்திற்கான கரைதல்…..

    எஸ் வி வேணுகோபாலன்

    ஒரு திரைப்படத்தின் தொடக்கத்திலிருந்து முடிவு வரை இப்படி நேரடியாக அதனோடு தொடர்பு படுத்திக்கொண்டு விலக முடியாமல் தவித்த அனுபவம் மிக அண்மைக் காலத்தில் ஏற்படவில்லை.

    thanga_meengal_tamil_movie_first_look_posters_wallpapers_75ac354

    திரைக் கதையோடும் அதன் ஓட்டத்தோடும் பின்னிக் கொள்ள நேர்ந்ததற்கு பளீர் என்று தெற்றுப் பல் தெரியச் சிரிக்கும், சட்சட் என்று முக பாவங்களை மாற்றத் தெரியும், அகலக் கண்கள் விரித்து இயற்கையின் ரகசியங்களை விழுங்கக் காத்திருக்கும் செல்லம்மா பாத்திரம் ஒரு காரணம். வாழ்த்துக்கள், சாதனா! பாத்திரப் படைப்போடு சங்கமம் ஆகிவிட்ட கல்யாணியாக நடித்த ராம் அடுத்தது. அருமை, ராம்!

    தங்க மீன்கள் ஒரு சமூக, பொருளாதார விஷயத்தை, ஆளுமை பிரச்சனை, உளவியல் அம்சங்களின் பின்புலத்தில் பேசுகிறது. அதன் வெற்றி, தோல்வியைக் காட்டிலும் இன்றைய தமிழக பண்பாட்டுச் சூழலில் இத்தகைய ஒரு திரைக் கதையின் தேவை என்ன, அதன் தாக்கம் என்ன என்பதை விவாதிப்பது முக்கியமாகிறது.

    மிகச் சிறு வட்டத்திற்குள், மிகக் குறைவான பாத்திரங்களின் தேர்வுக்குள், அதிக நிலப்பரப்பை நோக்கி கவனத்தைச் சிதறடிக்காமலும், காட்சி-வசனம் என்ற சாதனங்களை நேர்த்தியான கலவையிலும் வழங்க இயக்குனர் ராம் எடுத்துக் கொண்டிருக்கும் பாடுகள் உள்ளபடியே வணக்கத்திற்குரியவை. வேறு மாதிரி அலைந்து திரிந்து களைத்துப் போயே பழக்கப்பட்டுவிட்ட இன்றைய சராசரி திரை ரசிகருக்கு இதில் ஒவ்வாமை ஏற்பட்டிருக்குமாயின் அதற்கு சரியான மருந்து என்ன என்பதைச் சொல்லாமலே புரிந்து கொள்ள முடியும்.

    தேடலில் இருக்கும் நடுத்தர வயது மகன், அவனது காதலுக்கு ஆட்பட்டு வாழ்க்கைத் துணையாக (இணையாக அல்ல என்பது படத்தின் போக்கில் புரிகிறது) வந்துவிடும் மனைவி, நல்லாசிரியர் விருது பெற்று ஓய்வும் பெற்றுவிட்ட அரசுப் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் அப்பா, அவரை அனுசரித்து, அவரது கசப்பைப் பகிர்ந்து கொள்ளும் அம்மா, பள்ளியால் மந்தம் என்று புறக்கணிக்கப்படும் சூட்டிகைக் குழந்தை என்று கை அடக்கமான வீடு. (இல்லம் என்ற சொல்லைப் பயன்படுத்த இயலாது).

    குழந்தைக்கான பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாத தனது தந்தையினது பாசத்தின் ஊற்றில் தனியே ஒரு பள்ளிக்கூடத்தை மானசீகமாக உருவாக்கிக் கொண்டு அந்தக் கல்வியில் தேர்ச்சி பெற்று முன்னேறிக் கொண்டிருக்கிறது குழந்தை. வீட்டில் உள்ளோரும் சரி, பள்ளியைச் சார்ந்தோரும் சரி குழந்தையை அறிய முயற்சி மேற்கொள்வதில்லை என்பது ஒரு முக்கியமான உளவியல் கூறாக படத்தில் வெவ்வேறு நிகழ்வுகள், காட்சிகள், வசனங்களின் மூலம் எடுத்து வைக்கப் படுகிறது.

    தனது குழந்தைக்கு மேலான கல்வி தர வேண்டும் என்று தனியார் நிறுவனத்திற்கு சைக்கிளில் அவளை வைத்துக் கொண்டு விரையும் கல்யாணி, கடைசி காட்சியில் அவளை அரசுப் பள்ளியில் பெருமிதம் பொங்க சேர்த்துவிட்டு அவள் குவிக்கும் வெற்றியை ரசிப்பதோடு நிறைவு பெறுகிறது படம்.

    இதனிடையே பேசப்படும் செய்தி, நிலையான வருமானம் அற்ற ஒரு மனிதனின் அலைக்கழிப்பு. சம்பாதிக்க முடியாதவனுக்கு சுய மரியாதையோ, மதிப்போ இருக்கக் கூடாது என்கிறது சமூகம். டிகிரி கூட (!) படிக்காத பெற்றோரின் குழந்தையை இங்கே சேர்த்தது எங்கள் தப்பு என்கிறது தனியார் ஆங்கில வழிக் கல்வி நிறுவனம்.

    தன்னை பள்ளிக்கூடம் எதற்கு இப்படி ஒதுக்கி வைக்கிறது, சக மாணவர்கள் ஏன் தன்னை பரிகசித்து சிரிக்கின்றனர், தனக்குச் சரியாகப்படும் விடைகள் ஏன் எப்போதும் ஆசிரியர்களுக்குத் தவறாகவே படுகின்றன என்று நிலைகுலையும் ஒரு சிறுமிக்கு வீட்டில் நிபந்தனை மேலிட்ட அன்பும், சலிப்பில் ஊறிய கவனிப்பும், பெருமூச்சோடு உதிரும் ஆசியும் கிடைக்கின்றன. தனக்கான அங்கீகாரத்தை அவள் தன்னைப் போலவே நிராகரிக்கப் பட்ட தந்தையிடம் மட்டும் தான் கோராமலே பெறமுடிகிறது. மிக நுட்பமான இடம் இது இந்தக் கதையில்.

    தந்தை – மகள் உறவு ஆரோக்கியமான விதத்தில் பேசப்படுகிறது. அதில் மற்றவர்கள் செய்யும் குறுக்கீடுகள் நம்மை மேலும் ஊன்றிக் கவனிக்க வைக்கின்றன. “நீ எதுக்குடா பள்ளிக்கூடத்துக்குப் போய் நிக்கிற…அவளுக்கு எதற்கு ரெண்டு அம்மா…?” என்று குழந்தையின் தாத்தா தனது பையனிடம் கேட்கும் கேள்வி, பொதுவாக நடுத்தர குடும்பங்களில் வேலைப் பிரிவினை குறித்த ஆழமான பரிமாணங்களை எடுத்து வைக்கிறது. பொதுவாக குழந்தை பராமரிப்பு, பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களைச் சென்று பார்ப்பது, பாட்டு கிளாஸ், பண்டிகை பலகாரம், துணிமணி, வீட்டைச் சுத்தமாக வைத்திருத்தல்…. இன்னபிற பொறுப்புகள் ஒரு தாயினுடையவை. அந்த இடத்தை ஓர் அப்பா எடுத்துக் கொள்வது தேவையற்றது என்ற கருத்தாக்கம் தொக்கி நிற்கும் கேள்விகள் அவை.

    கற்றலின் இனிமை மறுக்கப்பட்ட வகுப்பறை, ஒரே ஒரு காட்சியிலேயே சாட்டையடி மாதிரி எடுத்து வைக்கப் படுகிறது. ஆங்கில எழுத்து W எப்படி என்பதில் குழப்பம் இருக்கிறது செல்லம்மாவுக்கு. அதையும் M என்ற எழுத்தையும் குழப்பிக் கொண்டிருக்கிற அவள் சிக்கிக் கொண்டு விடுகிறாள். இந்த எழுத்துக்களை கரும்பலகையில் எழுதச் சொல்லி ஏவும் ஆசிரியையின் தீப்பொறி உமிழும் கண்கள், நடுங்க வைக்கும் தடித்த சொற்கள், நொடிக்கு நொடி உத்தரவுகளாக பிறப்பிக்கப்படும் அச்சுறுத்தல்கள், அதிர வைக்கும் உடல் மொழி…….இவை எதுவுமே வகுப்பறைக்குரிய இலக்கணங்களுக்குள் வராது. இந்த வன்முறையின் உச்சகட்டம், அவளுக்கு எழுத வராத எழுத்தின் பெயரை வைத்தே அவளைக் கூப்பிடுமாறு மற்ற மாணவர்களுக்கு ஆசிரியை பிறப்பிக்கும் உத்தரவு. மலை வாழை அல்லவோ கல்வி, அதை வாயார உண்ணுவாய் போ என் புதல்வி என்று பாவேந்தர் சொன்ன கல்வி இதுவா?

    இளம் வயதிலேயே அந்தக் குழந்தைக்கு தங்க மீன்கள் பற்றிய கனவை ஊட்டிவிட்டிருக்கிறார் தந்தை. அது பின்னர் கல்விக்கான குறியீடாக இறுதிக் காட்சியில் குழந்தையின் கட்டுரை வாசகங்கள் மூலம் அடையாள படுத்தப் படுகிறது. எங்கே நீச்சல் தெரியாத குழந்தை, தகப்பனும் அருகில் இராத அந்த சோக நாட்களில் தனது எதிர்பார்ப்புகள் எல்லாம் நொறுங்கிய தருணமொன்றில் தங்க மீன்களைத் தேடி ஆழமான குளத்திற்குள் சென்றடைந்து விடுவாளோ என்ற பதைபதைப்பை முதல் காட்சியிலேயே பார்வையாளரின் புத்தியில் விதைத்துவிடுகிறார் இயக்குநர்.

    ஒவ்வோர் ஆண்டும் எத்தனை பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் இப்படியாகத் தத்தமது தங்க மீன்களைத் தேடப் போய் தாங்களே தங்க மீனாக அந்தந்த குடும்பங்களின் வீட்டுச் சுவர்களில் படமாகி விட்டார்கள் என்ற புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியானவை. தமிழ் வழிக் கல்வி பயின்று கல்லூரியில் ஆங்கிலம் மூலம் கற்க வேண்டிய நெருக்கடியை எதிர்கொள்ள இயலாது தூக்கில் தொங்கினார் ஒரு மாணவி. தேர்வில் தோல்வி பயம் காரணமாக முடிவுகள் வருவதற்கு ஒரு நாள் முன்பு விஷம் குடித்தவர்களில் சிலர் அடுத்த நாள் தேர்ச்சி பெற்ற செய்தி வந்திருந்தது. வேலைக்கான கேம்பஸ் தேர்வில் முதல் பட்டியலில் பெயரில்லை என்பதற்காக மிக அண்மையில் ஒரு மாணவர் ரயிலின் குறுக்கே விழுந்து தம்மை மாய்த்துக் கொண்டார்.

    சமச்சீர் கல்வியை வரவிடாது மெட்ரிகுலேஷன் கல்வி வள்ளல்கள் எத்தனை முயற்சிகளை மேற்கொண்டனர் என்பதை தமிழக கல்விச் சூழல் பார்த்தது. தாய்மொழியில் படிப்பது அவமானம், ஆங்கிலமே அறிவின் வெளிச்சம் என்று பெற்றோரை மூளைச் சலவை செய்திருக்கும் மிகப் பெரிய வர்த்தகம் இன்றைய கல்விமுறை. ஈவிரக்கமற்ற தண்டனை கொட்டடிகளாக (ஹிட்லரின் கான்சென்ட்ரேஷன் கேம்ப்) உருவாக்கி வளர்த்தெடுக்கப்படும் போர்டிங் பள்ளிகள் இன்று சக்கை போடு போட்டுக் கொண்டிருப்பதன் காரணம் என்ன, உலகமயத்தின் சந்தைமயம், போட்டி உலகம், இருளாக சித்தரிக்கப் படும் எதிர்காலத்தின் மீதான அச்சம் ! உரையாடல்கள் அற்ற வெளியாக நமது வீடுகள் இருப்பதை கல்யாணியின் வீடும் காட்டுகிறது.

    வோடஃபோன் நிறுவன விளம்பரத்தில் வரும் நாய்க்குட்டி தனக்கு வேண்டும் என்று கேட்கும் செல்லம்மாவுக்கு அதன் விலை தெரியாது. வாக்கு கொடுத்துவிடும் தந்தை கல்யாணிக்கும் தெரியாது. அசாத்திய கற்பனையாகத் தோன்றும் ஒரு முயற்சியை மேற்கொண்டு அந்த நாய்க்குட்டியை வாங்கவும் செய்துவிடுகிறான் கல்யாணி. எனக்கென்னவோ, வெவ்வேறு முறையில் தங்களைப் பணயம் வைத்தும், வருத்திக் கொண்டும், வெளியே சொல்ல இயலாத இன்னல்களை உட்கொண்டும் தங்களது குழந்தைகளின் கல்விக்காக அலைவுறும் பெற்றோர் குறித்த குறியீடாக அது பிறகு யோசிக்கையில் பட்டது.

    நடுங்க வைக்கும் ஸ்டெல்லா மிஸ் சித்தரிப்புக்கு நேரெதிராக, அரவணைக்கும் ஆசிரியையாக வரும் எவிட்டா நேரடியாக இடம் பெறும் காட்சிகள் மிக மிகக் குறைவு என்றாலும் பார்வையாளருக்கு எளிதில் விளங்கிவிடும் பாத்திரமாகி விடுகிறார். தனியார் நிறுவனத்தில் தத்தளிக்கும் அந்தத் தங்க மீன் பிறகு அரசு பள்ளியில் உற்சாக நீச்சல் அடிப்பதோடு, செல்லம்மாவின் கை தொடுதலுக்கு அருகே காத்திருக்கவும் செய்கிறது.

    படத்தில் யாரும் நல்லவர்களும் இல்லை, கெட்டவர்களும் இல்லை என்ற தத்துவம் எதார்த்த உலகை மதிப்போடு அணுகத் தூண்டுகிறது. நல்ல தாத்தா ஆனா அவரு கெட்ட அப்பா என்று தனது பாட்டனைக் காண்கிறாள் செல்லம்மா. தொழிலாளிக்கு பாக்கி வைக்கும் சிறு தொழில் உடைமையாளர் உள்ளபடியே அவரும் நலிவுற்ற தொழிலில் நசிந்து கொண்டிருப்பவராக இருக்கிறார். வெளிநாட்டில் வசதியான வாழ்க்கையில் இருக்கும் தனது மகள் கோபித்துக் கொண்டுவிடக் கூடாதென ஏழை மகன் வயிற்று பேத்தியிடம் கெட்டவளாக நடந்து கொள்ளும் பாட்டி, தன தவறுக்கு வெட்கமுறும் நல்லவளாகவும் இருக்கவே செய்கிறாள். தன்னை மிக கேவலமாக நடத்தும் மாமியாரே ஆனாலும், தன்னை மதிக்கும் கணவனின் கடுமையான வற்புறுத்தலுக்குச் செவி மடுக்காது இருந்துவிடும் மனைவி, அவன் வீட்டைவிட்டு வெளியேறிப் போன பிறகும் குழந்தைக்காக எல்லாம் பொறுத்துப் போகிறவளாக இருக்க வேண்டியிருக்கிறது.

    ஸ்டெல்லா மிஸ் போன்றவர்கள் ஏன் குழந்தைகளிடம் அப்படி நடந்து கொள்கின்றனர் என்பதை, பின்னர் எவிட்டா, “நிறைய மாணவர்கள், அதிகமான வேலை பளு, குறைவான சம்பளம்…. அவங்களும் பாவம் என்ன செய்வாங்க” என்று சொல்லும்போது நிஜ வில்லன்கள் யார் என்று சிந்திக்கச் செய்துவிடுகிறது. தனது மகன் நல்லவன், அவனை திரும்ப வீட்டுக்கு வரச் சொல்லுங்களேன் என்று வேண்டும் தனது மனைவியிடம், கல்யாணியின் அப்பா, அவன் ரொம்பவும் நல்லவன், கொஞ்சம் கெட்டவனாத் தான் திரும்பட்டுமே என்று சொல்லும் இடம் நிறைய கேள்விகளுக்கு விடையாகிறது. புதிய கேள்விகளை முன்வைக்கிறது.

    சம கால சமூக சூழல் மனிதர்களை எப்படி புரட்டிப் போடுகிறது, உணர்வுகளை எப்படி கொச்சை செய்கிறது, உறவுகளை எவ்விதம் சின்னாபின்னமாக்கிச் சீரழிக்கிறது என்பதை ராம் பல விதமாக நுட்பமாக காட்சிப் படுத்துகிறார்.

    தனது குழந்தை பள்ளியில் திருடி இருக்கிறாள் என்று சொல்லும் மனைவியிடம், கல்யாணி, “அந்த ஸ்கூலே திருட்டு ஸ்கூல் தான் ” என்று சொல்லும் இடம். காசு இல்லாதவங்க பாக்காதீங்க என்று விளம்பரம் போடும் போது சொல்றாங்களா என்று குமுறும் இடம். ஒரு கேள்விக்கு இரண்டு, மூன்று, பத்து பதில் வைத்திருக்கும் ஒரு சிறுமியை எப்படி முட்டாள் என்று சொல்ல முடியும் என்று செல்லம்மா கேட்கும் இடம் என்று பளீர் வசனப் பொறிகள் படத்தில் பொருத்தமாக ஒலிப்பது கவனிக்க வேண்டியது.

    பொண்ணுக்கு மட்டும் தான் கால் பிடிச்சு விடுவீங்களா என்று கொஞ்சலோடு கேட்கும் போதும், இரவு நேரத்தில் வீட்டுக்கு வெளியே காத்திருந்து என்னை எங்காவது அழைத்துச் சென்று கொஞ்சம் பேச மாட்டீர்களா என்று ஏங்கும் போதும் சமதையாக சித்தரிக்கப் படும் கல்யாணியின் மனைவி பாத்திரம், முடிவெடுக்கும் எந்த விஷயத்திலும் தலையிட முடியாதவளாக காட்டப்படுவதும், கல்யாணி மனைவியையும், பெண் குழந்தையையும் ‘டி’ போட்டே பேசுவதும் நெருடலாக எனக்குப் பட்டவை. அது கல்யாணியின் பாத்திர வார்ப்பு அப்படி என்றாலும். பெண் குழந்தைக்கான கல்விக்காக எதையும் செய்யப் புறப்படும் ஒரு தந்தை குடும்ப விஷயத்தில் தனது அடுத்த தலைமுறைக்கு இது விஷயத்தில் சொல்ல ஏதும் வைத்திருக்கக் கூடாதா என்ன?

    படிப்பில் மந்தமாக இருப்பதாகப் பேசப்படும் தனது பெண் குழந்தை காலச் சுழற்சியில் பெரிய மனுஷியாக வேறு ஆகிவிடுவாளோ என்று பதறும் தாயின் சித்திரம் போன்ற பல நுண்மையான காட்சிப்படுத்தல் உள்ள படத்தில் இந்த எதிர்பார்ப்பு கூடுவதைத் தவிர்க்க முடிவதில்லை…

    ஆனந்த விகடனில் கடந்த பல வாரங்களாக மறக்கவே நினைக்கிறேன் தொடரில் வெவ்வேறு நிகழ்வுகளை எழுதிக் கொண்டுவரும் மாரி செல்வராஜ் பெயரை இந்தப் படத்தில் உதவி இயக்கம் என டைட்டிலில் ஆர்வத்தோடு பார்த்து மகிழ்ந்தேன். “பூ” ராமு, ரோகிணி என மிகையற்ற நடிப்பை கலைஞர்கள் நல்கி இருப்பது படத்தின் வலு. செல்லம்மாவின் தோழியான ‘பூரி’ ரசிகை அசத்தல் நடிப்பு. மெட்ரிகுலேஷன் பள்ளியின் பலவிதமான கொடுமைகள், அபத்தங்களை பரிகசிக்கும் நையாண்டிப் பாடல் இடம் பெற்றிருக்கிறது. இயற்கையோடு ஒன்றி நகரும் சிறப்பான ஒளிப்பதிவும், ரயில் சத்தத்தையும், படகுத் துறை சங்கு ஒலியையும் காட்சிப்படுத்தலுக்கு ஏற்ப அமைந்திருக்கும் பின்னணி இசையும் பேசப்பட வேண்டியவை.

    படத்தின் தொடக்கத்தில் வண்ணதாசன், கே வி ஷைலஜா, பவா செல்லதுரை ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டிருக்கிறது. படத்தின் நிறைவில், தன்னலமற்று தன்னார்வத்தோடு கற்பிக்கும் ஆசிரியர்கள் யாவருக்கும் அர்ப்பணிக்கப் பட்டிருக்கிறது.

    தங்க மீன்கள், உணர்ச்சிகளை மறைத்துக் கொண்டு பார்க்க இயலாத கனமிக்க அனுபவமாகத் தான் எனக்கு இருந்தது. அதிலிருந்து தப்பி ஓட இயலாதபடிக்கு. ‘ஆனந்த யாழிசை மீட்டுகிறாள்..’ என்ற அருமையான நா முத்துக்குமார் பாடலின் இதமான இசையோட்டத்தினை அப்பா-மகள் அன்பு பரிமாற்றத்தின் கட்டுமானத்திற்குச் சிறப்பாகப் பயன்படுத்தி இருக்கிறார் ராம். வானில் இருந்து நிலவுப் பந்தை எடுத்து விளையாடும் தந்தையும், மகளும் மறுபடி வெண்ணிலவை உரிய இடத்தில் திருப்பி வைத்துவிட்டு அடுத்த ஆட்டத்திற்குச் செல்கின்றனர். அதன் ஒளியில் ஒளிரும் அவர்களது மகிழ்ச்சியான முகங்கள் எப்போதும் அப்படி இருக்கும் ஒரு காலத்திற்கான கரைதலே இந்தப் படம் என்று தான் தோன்றுகிறது.

    *******

    படத்திற்கு நன்றி:

    http://idiotirosh.blogspot.in/2013/05/blog-post.html

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    kamaladevi_aravindan_silk_sபொதுவாக பூக்கள் கொடுத்து வரவேற்பது என்பது தமிழரின் பண்பாடு. பூக்களின் விதம்விதமான பலன்களை நன்றாக அறிந்தவர்கள் சங்ககால தமிழர்கள். காதலியை வர்ணிப்பதில் என்றில்லாமல், வாசனைக்காகவும், பெண்களின் கூந்தலின் அலங்கரிப்பதும், இறைவனுக்கு அர்ப்பணிக்கப்படுவதற்காகவும் மட்டுமல்லாமல் ஆண்களின் கழுத்துக்கும் மரியாதைக்குரியதாய் அலங்கரிக்க பூக்கள் பயன்பட்டது. ( கூந்தல் மணத்துக்குக் காரணம் ஒரு வாசனைப்பூவாக இருக்குமா என்பதாக இறைவனுக்கும் மனிதனுக்கும் மிகப்பெரிய வாக்குவாதமே நடந்தது தமிழகத்தில் மட்டும்தான்) இப்படித்தான் என்னுடைய வம்சதாரா கதையில் சபையில் ஒரு பூச்செண்டு ஒன்று ஒரு நாட்டின் மன்னரின் முடிசூட்டுவிழாவின் போது கொடுத்ததாக எழுதியதை மிகவும் சிலாகித்து எழுதினார் டாக்டர் முனைவர் பிரேமா நந்தகுமார். பூவோடு இறைவனை அர்ச்சிக்கப்படுவது பூஜை என்பது தமிழிலிருந்துதான் ‘பூ-செய்’ என்பதாக வடமொழிக்கே சென்றிருக்கவேண்டும் என்று ஆங்கிலேயர் ஜி.ஸ்வெல், குறிப்பிட்டிருப்பதை ஆந்திர பல்கலைக்கழக தெலுங்கரான பேராசிரியர் சுந்தரம் அவர்கள் தனது ‘சிம்மாசலம்’ புத்தகத்தில் எழுதியுள்ளதை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். இப்படியாகப் புகழ்பெற்ற இந்த வண்ண வண்ணப் பூக்கள் நிரப்பப்பட்ட பூங்கொத்தை அவ்வப்போது ’விசுவலாக’ இணையத்தில் கொடுத்து ஊக்குவித்துவந்த திருமதி கமலாதேவி அரவிந்தன் அவர்களைப் பற்றிதான் இந்தப் பதிவு.

    வல்லமையில் வாரம் ஒரு வல்லமையாளர் தேர்ந்தெடுக்கவேண்டும் என்று சொல்லப்பட்டபோது இதற்கு முன்னோடியாக கமலம் எழுதிய கட்டுரைகள்தான் நினைவுக்கு வந்தன என்பதையும் இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன். கமலம் இரண்டு திராவிட பாஷைகளில் சிறந்து விளங்கும் மிகச் சிறந்த இலக்கியவாதி என்பது இங்கே நினைவில் கொள்ளவேண்டும். இரண்டு பாஷைகளில் இலக்கிய திறமை என்பது இரண்டு விதமாக நோக்கவேண்டும். சான்றோர் பலர் வடமொழி-தமிழ் என்பதிலும், ஆங்கிலம்-தமிழ் என்பதிலும் இலக்கியத் திறமை உள்ளவர்களாக இருந்தார்கள். இவர்கள் எண்ணிக்கையில் மிக அதிகம் என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் இரண்டு திராவிட பாஷை இலக்கியங்களில் சமமாக திறமை பெற்று விளங்குவோர் வெகு சிலரே.. அந்த வெகு சிலரில் ஒருவர் கமலம் என்பது அவரது இலக்கிய திறமைக்கு முக்கியமான சான்றுதான். ஏனெனில் கமலம் இந்த இரு மொழிகள் (தமிழ், மலையாளம்) தோன்றிய இடத்திலிருந்து பிறந்து வளர்ந்தவர் இல்லை. மலேஷிய நாட்டில் வளர்ந்து கல்வி பயின்று சிங்கையில் குடியேறியவர் என்று பார்க்கும்போது இவர் திறமையின் ஒளி இன்னும் அதிகமாகப் பளிச்சிடுவதைக் காணலாம்

    எண்பதுகளில் விஸ்கி பாட்டிலைப் பேயாகப் பாவித்து சுவாரஸியமான ஆங்கிலத் திரைப்படம் ஒன்றை எடுத்திருந்தார்கள். பல நாள் இதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தவன் நான். அதே போல கமலம் சமீபத்தில் எழுதிய கதை ஒன்று இன்னமும் என் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது. ஒரு கண்ணாடி (டிரெஸ்ஸிங் டேபிள்) பேய் ஒன்றைப் பற்றிய வித்தியாசமான கற்பனைக் கதை. . இந்த வித்தியாசமான கற்பனைகள்தான் ஒவ்வொரு எழுத்தாளரையும் காலம் கடந்து வாழச் செய்கிறது.

    இன்று (15 செப்டெம்பர்) கமலம் அவர்கள் சிங்கையில் தமிழ் இலக்கியச் சேவைக்காக பாரதியார்-பாரதிதாசன் விருது பெறுகிறார்கள். இதே முகூர்த்தத்தில் நம் ‘இந்த வார வல்லமையாளராக’வும் அவருக்கு கௌரவம் செய்து பெருமை கொள்கிறோம். சிங்கை சென்றபோது ஒரு மதிய விருந்தில் மிக எளிமையான, கள்ளங்கபடமற்ற, படபடப்பான கமலத்தைக் கண்டு மகிழ்ந்தவன்.. பூச்செண்டு கொடுக்கும் மனது பூவைப் போன்று மென்மையானதாகத்தான் இருக்கும் என்றும் நினைத்தவன். இப்படிப்பட்ட சாகித்ய வல்லுநர்கள் உலகெங்கிலும் கவனிக்கப்படவேண்டும் என்ற எண்ணத்தையும் தெரிவித்தவன். இவரைப் பற்றியும் இவரது சாகித்யத்தைப் பற்றியும் நிறைய எழுதலாம், காலம் மறுபடி வரும்போது எழுதுவோம். கமலத்துக்கு அன்பான வாழ்த்துகள்..

    கடைசி பாரா: திரு ஆர்.எஸ். மணி அவர்களின் பாடலிலிருந்து

    சுற்றம் என்ன, சூழல் என்ன,

    நிலையானதாகுமோ?

    சொந்தம் என்ன, பந்தம் என்ன

    செல்லாமலே நில்லுமோ?

    ஒருநாள் இன்பம், ஒருநாள் துன்பம்,

    மாறாதே இக்கோலம்

     www.vamsadhara.blogspot.com
    www.aduththaveedu.blogspot.com

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் : பெர்காமோன் கோயில் – பெர்காமோன் அருங்காட்சியகம், பெர்லின், ஜெர்மனி (6)

    சுபாஷிணி ட்ரெம்மல்

    இஸ்லாமிய கலைப்பொருட்கள் கண்காட்சி கூடத்திலிருந்து மீண்டும் உங்களை பெர்காமான் கோயில் பிரகாரப் பகுதிக்கு அழைத்து வருகின்றேன். இந்த அருங்காட்சியகத்திலேயே மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வரலாற்றுச் சேகரிப்பாகவும் உலகப் பிரசித்தி பெற்ற அகழ்வாராய்ச்சிக் கண்டுபிடிப்புக்களின் வரிசையில் இடம்பிடிப்பதுமாகிய பெர்காமோன் கோயிலைப் பற்றிச் சொல்லாமல் அடுத்த அருங்காட்சியகத்திற்குச் செல்வதற்கு எனக்கு மனம் இடம் கொடுக்கவில்லை.  ஆக இந்த அருங்காட்சியகத்திற்குப் பெயராகவும் அமைந்துள்ள இந்தக் கோயிலைப் பற்றிய தகவல்களை இந்தப் பதிவில் காண்போமே.

     

    பெர்காமோன் கோயில் இடப்பக்க பிரகாரமும் அதில் உள்ள சிற்பங்களும் (ஆகஸ்ட் 2013)
    பெர்காமோன் கோயில் இடப்பக்க பிரகாரமும் அதில் உள்ள சிற்பங்களும் (ஆகஸ்ட் 2013)

    1878ம் ஆண்டு தொல்லியல் ஆய்வாளர் கார்ல் ஹூமன் பெர்காமோன் பகுதியில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டார்.  இந்த ஆய்வு 1888 வரை தொடர்ந்தது.  அது போது கண்டெடுக்கப்பட்ட கோயில் சுவர்கள்,  தூண்களோடு அமைந்த வாயில்புறச் சுவரில் அலங்கரித்திருந்த சிற்பங்கள் என அனைத்தும் சேகரிக்கப்பட்டன.  அப்போதைய ஓட்டோமான் அரசிடம் (துருக்கி) கலந்து பேசி இப்பொருட்களை ஜெர்மனிக்குச் சொந்தமாக்கி பெர்லினுக்கு அவை கொண்டு வரப்பட்டன.  முதலில் போட அருங்காட்சியகத்தில் பாதுகாக்கபப்ட்டு பின்னர் பெர்காமோன் அருங்காட்சியகம் 1932ம் ஆண்டில் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்ட போது இங்கு கொண்டுவரப்பட்டு அன்றிலிருந்து இந்த அருங்காட்சியகத்திலேயே முதல் அறையில் இக்கோயில் பகுதி வீற்றிருக்கின்றது.

    ஏறக்குறைய கி.மு 2ம் நூற்றாண்டு கோயிலாகக் கருதப்படும் இதனைக் கட்டியவர் பெர்காமோம் அரசர் 2ம் ஈமுனெஸ்(Eumenes II) .  இங்கிருப்பது முழுமையான கோயிலா என்றால் இல்லை என்பதே விடையாகின்றது. கோயிலின் பகுதிகளில் பெறும்பாலானவை இன்னமும் வடமேற்கு துருக்கியில் பெர்காமோம் நகரில் இன்றும் உடைந்து சிதிலமடைந்த நிலையில் காணக்கிடைக்கின்றது.  இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பகுதி 35.64 மீ அகலமும் 33.4 மீ ஆழமும் உடையது.  முன்பக்க படிக்கட்டு மட்டுமே 20 மீ அகலம் கொண்டது.

    பெர்காமோன் கோயில் சிற்பங்கள் (ஆகஸ்ட் 2013)
    பெர்காமோன் கோயில் சிற்பங்கள் (ஆகஸ்ட் 2013)

    இக்கோயிலின் நீண்ட சுவரில் 113மீ நீளத்திற்கு சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  கோயிற் சுவரில் பதிக்கப்பட்டிருந்த சிற்பங்கள் உடைந்த நிலையில் இருந்தாலும் அவை சொல்லும் கதையை விளக்கங்களுடன் வாசிக்கும் பொழுது நன்கு புரிந்து கொள்ள முடிகின்றது. இந்தச் சிற்பங்களில் பெரும்பாலானவை அரக்கர்களும் அவர்களை எதிர்த்து போரிடும் கடவுளர்களுமாக சிற்பி வடித்திருக்கின்றார். அரக்கர் வாழும் சூழலாக பெரும் நாகங்களுடனும் பல கைகள் கொண்ட விரிந்த மரங்களின் பின்னனியிலும் இருப்பது போல இச்சித்திரங்கள் இருக்கின்றன. அரக்கர்களின் கொடூரமான பார்வையும் பாம்பின் வடிவிலமைந்த கீழுடல் பகுதியும் பார்ப்பவர்களைப் பிரமிக்க வைக்கும் தன்மையுடயவை.

     

    பெர்காமோன் கோயில் சிற்பங்கள். அரக்கனும் அவனைக் கொல்லும் கடவுள் ஹீராவும் (ஆகஸ்ட் 2013)
    பெர்காமோன் கோயில் சிற்பங்கள். அரக்கனும் அவனைக் கொல்லும் கடவுள் ஹீராவும் (ஆகஸ்ட் 2013)

    கடவுளர்கள் எனும் போது எத்தகைய கடவுளர்களின் வழிபாடு அக்காலத்தில் இப்பகுதியில் வழக்கில் இருந்தது என்பது கேள்வியாக பலருக்கு எழலாம். இக்கோயில் கட்டப்பட்ட காலம் கி.மு. 2 அல்லது அதற்கு சற்றே முந்திய காலக்கட்டம்.  அக்காலகட்டத்தில் இப்போது இப்பகுதியில் விரிவாக வழக்கில் இருக்கும் இஸ்லாம் மதமோ அல்லது கிறிஸ்துவமோ தோன்றாத காலகட்டமது.  பழமையான பேகன் வழிபாடும் கிரேக்க தெய்வங்களின் வழிபாடுமே வழக்கில் இருந்தன.  அந்த வகையில் இங்கு கடவுளர்களாக அமைந்திருப்போர் கிரேக்க கடவுளர்களாவர்.  ஒலிம்பிக் கடவுளர் (Olympian Gods)  என பொதுப்பெயரில் அழைக்கப்படும் ஸீயூஸ், அப்போலோ, ஹீரா, பொஸைடன்  போன்றவர்களை இப்படியலில் குறிப்பிடலாம்.  இந்த ஒலிம்பிக் கடவுளர்களில் ஆண் பெண் இருபாலரும் உண்டு.  இக்கடவுளர்களின் தலைவர் ஸீயூஸ்.  ஸீயூஸ் என்பது கிரேக்க மொழிச் சொல். பொதுவாக தற்சமயம் ரோமானியப் பெயர்களே பரவலாகி விட்டமையால் ரோமன் மொழியின் ஜூப்பிட்டர் என அழைக்கப்படுபவரே இந்தக் கிரேக்க ஸீயூஸ் கடவுள்.  இவர் கடவுள்களுக்கெல்லாம் கடவுள் என அறியப்படுபவர்.

    பெர்காமோன் நகர் கி.மு.1ம் நூற்றாண்டு கால கட்டத்தில் தொடர்ச்சியாக பல போர்களைச் சந்தித்தது.  பல அழிவுகள் இப்பகுதியில் தொடர்ந்து நிகழ்ந்தன. இதனால் இக்கோயில் சாத்தான் குடியிருக்கும் கோயில் என்று அக்காலத்தில் குறிப்பிடப்பட்டது.   இக்கோயில் பேகன் வழிபாட்டு மையமாகவும் அமைந்திருந்தது என்பதை மறுக்கலாகாது. இப்பகுதியில் பிற்காலத்தில் செழித்து நிலைத்த இஸ்லாமும் கிறிஸ்துவமும் பேகன் வழிபாடுகளை அவை உருவ வழிபாடுகளாக அமைந்தமையால் சாத்தானின் வழிபாடுகள் என்றும் கூறுவது வழக்கில் உருவானது. இதுவும் இக்கோயிலை பிற்காலத்தில் சாத்தான் வாழும் இடம் எனக் குறிப்பிடுவதற்குக் காரணமாகியது என நான் கருதுகின்றேன்.

    1933ல் அடோல்வ் ஹிட்லர் ஜெர்மனியில் ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்ட சமயத்தில் அவரது கட்சியின் தலைமையகத்தை உருவாக்க வேண்டும் என்ற விருப்பம் அவருக்கு இருந்தது.  1932ல் பெர்காமோன் அருங்காட்சியத்தில் இக்கோயிலைக் கண்ட பொழுதில் அவருக்கு இக்கோயிலில் ஸெப்பலின் ட்ரிபியூனின் மேல் இருந்த மோகத்தை அறிந்த ஆர்க்கிடெக்ட் ஆல்பெர்ட் ஸ்ப்பியர் (Albert Speer)  ஸெப்பலின் ட்ரிபியூனின் வடிவத்தில் தலைமையகத்தின் மையப்பகுதியை வடிவமைத்தார்.  இம்மண்டபம் 1934 முதல் 1937 வரையிலான காலகட்டத்தில் கட்டப்பட்டு நாஸி கட்சியின் தலைமையகம் இவ்விடத்திலேயே இயங்கி வர ஆரம்பித்தது.  நாஸி கட்சியின் பல குறிப்பிடத்தக்க மாநாடுகள் இங்கு நிகழ்ந்தன.

    ஸெப்பலின் ட்ரிபியூன் (1942). நன்றி. ஜெர்மனி தேசிய ஆர்க்கைவ்
    ஸெப்பலின் ட்ரிபியூன் (1942).
    நன்றி. ஜெர்மனி தேசிய ஆர்க்கைவ்

    ஜெர்மனியின் ஆட்சிபுரிந்த தலைமை பீடத்தில் இருந்தவர்களிலேயே அடோல்வ் ஹிட்லர் ஒருவரே சாத்தானின் குணம் கொண்ட ஒருவர் என்று குறிப்பிட்டால் அது மிகையாகாது.  இவரது ஆட்சியில் இவரது சித்தாந்தத்தால் ஏற்பட்ட உயிர் சேதங்கள் ஒரு புறமென்றால் இவரது ஆட்சியை அழிக்கத் தோன்றிய 2ம் உலகப்போரால் இன்னும் மில்லியன் கணக்கான உயிர் சேதங்கள் நிகழ்ந்தன.  சாத்தானை அழிக்கும் வகையில் அமைந்த இக்கோயிலை 2ம் உலகப் போருக்குப் பிறகு மீண்டும் சாத்தானின் நிலையை ஜெர்மானியின் பெர்லின் நகர மக்களுக்கு அளித்த ரஷ்யப் படைகள் இந்த பெர்காமோன் கோயில் பிரகாரப்பகுதியைத் தங்கள் சோவியத் ரஷ்யாவின் லெனிங்க்ராட்(Leningrad)  நகருக்கு 1948ம் ஆண்டு கொண்டு சென்றன.  மீண்டும் இந்தக் கோயில் 1958ம் ஆண்டில் பெர்காமோன் அருங்காட்சியகத்துக்கே திரும்பியது.

    எத்தனை பிரயாணங்களை இந்தக் கோயிற் பகுதி சந்தித்திருக்கின்றது பாருங்கள்.  இக்கோயிலைக் கட்டிய ஈமுனெஸ் கூட இக்கோயில் இப்படி ஐரோப்பிய,  ரஷியப் பயணம் செய்யும் என சற்றும் நினைத்திருக்க மாட்டார். 🙂

    பெர்காமோன் கோயிலின் வெண்மையான பளிங்குத் தூண்களும் வெண்பளிங்குச் சிற்பங்களும் வரலாற்றுப் பிரியர்களின் மனதைக் கொள்ளைக் கொள்வன.  இப்பெரிய கோயிலுக்கென பெர்காமோன் அருங்காட்சியகம் மிகப் பெரிய மண்டபப்பகுதியையே ஒதுக்கியிருக்கின்றது.  இங்கு அமர்ந்து ஓவ்வொரு சிற்பங்களையும் பார்த்து ரசித்து அதன் விளக்கங்களைச் செவிமடுத்து குறிப்பெழுதிக் கொள்ள குறைந்தபட்ஷம் ஒன்றரை மணி நேரம் தேவைப்படும்.  அவசரமாக இக்கோயிலைப் பார்த்து அருங்காட்சியகத்தைப் பார்த்துச் செல்ல விரும்புபவர்கள் கூட ஆக மொத்தம் இந்த அருங்காட்சியகத்திற்கு 2 மணி நேரங்களைக் கட்டாயமாக ஒதுக்கித் தான் ஆக வேண்டும்.

    பெர்காமோன் கோயிலைப் பற்றி இப்பதிவில் ஒரு சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள முடிந்ததில் எனக்கு மகிழ்ச்சியே.  இவ்வருங்காட்சியகத்தில் இந்தக் கோயில் இருக்கும் பகுதிக்குப் பின்புறம் கிரேக்க காவிய நாயகன் டெலிஃபஸ் கதையைக் கூறும் கோயிலும், கோயிற்சிற்பங்களும் அருமையாக காட்சிக்கு ஒரு முழு நீள அறையில் வைக்கப்பட்டிருக்கின்றன.  இக்கதையைப் பற்றி சொல்ல எனக்கு விருப்பமென்றாலும் பிரிதொரு சமயம் வேறொரு கட்டுரையில் இதனைப் பற்றி எழுதுகிறேன்.

     

    பெர்காமோன் கோயிலின் உள்ளே (ஆகஸ்ட் 2013)
    பெர்காமோன் கோயிலின் உள்ளே (ஆகஸ்ட் 2013)

    பெர்காமோன் அருங்காட்சியகத்தையும் அதன் உள்ளே பாதுகாக்கப்படும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காட்சிப்பொருட்களையும்  உங்களுக்கு ஓரளவு  அறிமுகம் செய்து விட்டேன்.  என்னைப் பொருத்த அளவில் நான் நேரில் பார்த்து என் மனதில் நிற்கும் அருங்காட்சியகங்களின் வரிசையில் முதல் 10 அருங்காட்சியகங்களில் இந்தப் பெர்காமோன் அருங்காட்சியகமும் இடம் பிடிக்கின்றது.

    சரி.  ஜெர்மனியின் பெர்லினில் ஏனைய அருங்காட்சியகங்களுக்கு நாம் பயணம் மேற்கொள்வதற்கு முன்னர் வேறொரு நாட்டில் வேறொரு ஊரில் மற்றுமொரு அருங்காட்சியகத்திற்குச் செல்வோமா?

    அடுத்த திங்கள் நாம் செல்வதற்கு முன்னர் எங்கு செல்லவிருக்கின்றோம் என்று கொஞ்சம் கற்பனை செய்து பாருங்களேன்.  🙂

    தொடரும்….

    சுபா

     

    — 
    Suba Tremmel
    http://subastravel.blogspot.com– சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
    http://subahome2.blogspot.com – ஜெர்மனி நினைவலைகள்..!
    http://subaillam.blogspot.com – மலேசிய நினைவுகள்..!
    http://ksuba.blogspot.com – Suba’s Musings
    http://subas-visitmuseum.blogspot.com – அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
    http://tamilheritagefoundation.blogspot.com – த.ம.அ செய்திகள்
    http://voiceofthf.blogspot.com – மண்ணின் குரல்
    http://video-thf.blogspot.com – விழியக் காட்சிகள்
    http://image-thf.blogspot.com – மரபுப் படங்கள்
    http://kanaiyazhi-ezine.blogspot.com – கணையாழி
    Share
  • அமைச்சர் கோவிந்த தீட்சதர்.

    தஞ்சை வெ.கோபாலன்

    Govinda Dikshidarதஞ்சை நாயக்க மன்னர்களின் காலத்தில் சேவப்ப நாயக்கரின் கடைசி நாட்கள் தொடங்கி அச்சுதப்ப நாயக்கர் காலம் முழுவதும் இருந்து பிறகு ரகுநாத நாயக்கர் காலம் வரை அவர்கள் ஆட்சியில் அமைச்சராகவும், ராஜகுருவாகவும் இருந்து வழிகாட்டி, நல்ல பல காரியங்களை மக்கள் நலனுக்காக செய்தவர் கோவிந்த தீட்சதர். சோழ நாட்டின் தஞ்சை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இவர் பெயரை இன்றும் சொல்லக்கூடிய எத்தனை இடங்கள்? ஐயன் கடைத் தெரு, ஐயன்பேட்டை, ஐயன் வாய்க்கால், ஐயன் குளம் இதுபோன்ற இடங்களில் ஐயன் என்பது இவரைக் குறிக்கும் சொல். இவர் அந்த காலத்தில் செய்த செயற்கரிய சாதனைகளின் சரித்திரச் சான்றுகள் இவை.

    ஒரு மன்னன் தன் குடிமக்களுக்கு என்னவெல்லாம் செய்து தரவேண்டும், தான் சுகபோகங்களோடு வாழ்க்கை நடத்துவதும், எதிரிகளோடு போர் புரிந்து ஆயிரக்கணக்கான உயிர்களை பலியிடுவதும், தன் மக்கள், தன் சுற்றம் இவர்களின் நல்வாழ்வை மட்டும் பேணிப் பாதுகாப்பது மட்டும் ஆட்சி அல்ல. பின் என்ன செய்ய வேண்டும்? மக்கள் பயன்பாட்டுக்கான தர்ம காரியங்களைச் செய்வது, கல்விக்காக, உடல்நலத்தைப் பேணிப் பாதுகாப்பதற்காக, ஒரு இடம் விட்டு வேறொரு இடம் பயணம் செய்ய நல்ல சாலைகளை அமைப்பதற்காக, நீர் நிலைகளை நல்ல முறையில் பேணி பாதுகாக்கவும், புதிய நீர் நிலைகளை உருவாக்கவும் நடவடிக்கைகள் எடுத்து அவற்றை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவது ஒரு அரசின் தலையாய பணி அல்லவா? அவற்றையெல்லாம் ஒன்றுவிடாமல் செய்து தந்தவர் இந்த கன்னடத்து பிராமண அமைச்சர். எழுபத்தைந்து ஆண்டுகள் இவர் அமைச்சராக மூன்று மன்னர்கள் காலத்தில் இருந்து தொண்டாற்றியவர் கோவிந்த தீட்சதர்.

    இதில் என்ன புதுமை இருக்கிறது. வரலாற்றுப் பாடங்களைப் படிக்கும்போது எல்லா மன்னர்களுமே செய்த பணிகள் எவை என்பதைக் குறிப்பிடுகையில், அவர்கள்Mahamaham tank சாலைகளைப் போட்டார், வழிநெடுக மரங்களை நட்டார், குளங்களை வெட்டினார் என்றுதானே எழுதுகிறார்கள் என்று சொல்வதும் புரிகிறது. ஆனால் இவர் சாதனை அவற்றோடு மட்டும் நின்றுவிடவில்லை. காலத்தால் அழிக்கமுடியாத அரிய பல செயல்பாடுகள் இவர் செய்திருக்கும் சாதனை. கும்பகோணம் என்றால் நமக்கு நினைவுக்கு வருவது மகாமகம். கும்பேஸ்வரன் கோயிலின் இந்த விழா 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். அந்த விழாவில் மக்கள் மூழ்கி எழும் மகாமகக் குளத்தைப் பார்த்திருப்பீர்கள் அல்லது கேள்விப்பட்டாவது இருப்பீர்கள். அந்த மாபெரும் குளத்தையும், சுற்றிலும் படிக்கட்டுகளையும், அதனைச் சுற்றி பதினாறு சிவலிங்கங்கள் அதற்குரிய மண்டபங்கள் இவை அத்தனையையும் கட்டிமுடித்தவர் இந்த கோவிந்த தீட்சதர்.

    இவரது இந்த சாதனையைப் பாராட்டி நாயக்க மன்னர் ஒருவர் இவருக்கு துலாபாரம் செய்து தராசில் ஒரு தட்டில் இவரை உட்காரவைத்து மற்றொரு தட்டில் பொன்னை அள்ளிக் கொட்டி இவருக்கு அளித்தாராம். அந்த சிலையை மகாமகக் குளக் கரையிலுள்ள ஒரு மண்டபத்தில் இப்போதும் பார்க்கலாம்.

    Patteeswaram templeகும்பகோணம் நகரத்தின் மையப் பகுதியில் அமைந்திருப்பது, குறிப்பாக பெரிய கடைத்தெருவுக்கு மிக அருகில் அமைந்துள்ளது இராமசாமி கோயில். இதனைக் கட்டியவர் கோவிந்த தீட்சதர். இந்த கோயிலின் சிறப்பு என்ன தெரியுமா? இங்கு இராமாயணக் காட்சிகள் அனைத்தையும் பிரகாரச் சுவற்றில் வண்ணத்தில் தீட்டிவைத்தது இவரது சாதனை. கும்பகோணத்தில் மங்களாம்பிகா அம்மன் கோயில், பட்டீஸ்வரம் தேனு புரீஸ்வரர் கோயில், பாபநாசம் அருகிலுள்ள திருப்பாலைத்துறை ஆலயம் இவைகள் அனைத்துமே இவரது அர்ப்பணிப்புகள்.

    புதிதாக உருவாக்கிய கோயில்கள் தவிர, மிகப் பழமையான சில கோயில்களை இவர் புதுப்பித்துக் கட்டியிருக்கிறார். அவை விருத்தாச்சலம், திருவண்ணாமலை, சிதம்பரம், ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் உள்ள புகழ்மிக்க ஆலயங்கள்.

    வரலாற்றில் புகழ்பெற்ற எந்தவொரு நகரமும் ஒரு நதிக்கரையில் அமைந்ததாக இருக்கும். தஞ்சாவூர் பழம்பெரும் நகரமாக இருந்தபோதும், காவிரிக் கரையில் அது இல்லை; வடவாறு எனும் சிறிய ஆற்றின் கரையில் இருக்கிறது. அதனால்தான் நாயக்கர் காலத்திலும், பின்னர் வந்த மராத்தியர் காலத்திலும் தஞ்சை அரசர்களின் ஆளுமைக்குள் இருந்த கலைஞர்கள், வேத விற்பன்னர்கள், இசைக் கலைஞர்கள் போன்றோர் இங்கிருந்து சிறிது தூரத்தில் காவிரிக் கரையில் அமைந்துள்ள திருவையாற்றில் குடியிருந்திருக்கின்றனர். அப்படி தஞ்சாவூரிலிருந்து திருவையாறு செல்வதானால் அவர்கள் வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி, காவிரி என ஐந்து ஆறுகளைக் கடந்து செல்ல வேண்டும். ஒவ்வொரு ஆற்றையும் கடந்து செல்ல படகுகளை நம்பியிருக்க முடியுமா? இவற்றின் மீது பாலங்களைக் கட்டியதும் இவர்கள் காலத்தில்தான். இப்பொழுதுதான் இவற்றில் சில பாலங்கள் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டிருக்கின்றன, குறிப்பாக திருவையாறு காவிரிப் பாலம், குடமுருட்டி பாலம், வெண்ணாற்று பாலம், வெட்டாறு பாலம் இவை புதிதாகக் கட்டப்பட்டு விட்டன.

    காவிரி ஒரு புனித நதி. கரையெங்கும் காவிரித்துப் புகழ் பரப்பி ஓடும் ஜீவநதி. அந்த காவிரியின் கரையெங்கும் படித்துறைகள். புனிதத் தலங்களில் புஷ்ய மண்டபங்கள்,Ramasamy koil அவை திருவையாறு, திருவிடைமருதூர், மயிலாடுதுறை என்று இன்றும் மக்கள் பயன்பாட்டுக்குக் காணக்கிடைப்பவை. மயிலாடுதுறையிலும், திருவிடைமருதூரிலும் மகாதானத் தெரு என்ற பெயரில் ஒரு தெரு இருப்பதை நீங்கள் அறிவீர்கள். மகாதானம் என்றால் என்ன? வேத விற்பன்னர்களுக்குத் தானமாக வீடுகளைக் கட்டிக் கொடுத்து புகழ்மிக்கத் தலங்களான இந்த ஊர்களில் மக்கள் நன்மைக்காக யாகங்களை செய்துவர வேண்டி ஏற்பாடு செய்யப்பட்ட வீதிகள் இவை. இசைக் கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக இவர் சில ஊர்களை முழுவதும் தானமாகக் கொடுத்திருந்தார், அவை மூவலூர், தேப்பெருமநல்லூர், சூலமங்கலம், ஊத்துக்காடு, சாலியமங்கலம் முதலியவை.

    தெருக்கள் மட்டுமா இவர் மகா தானமாகக் கொடுத்தவை, அல்ல, சில ஊர்களும் கூட இதில் அடங்கும். குறிப்பாக திருவையாறு கும்பகோணம் சாலையில் உள்ள ஈச்சங்குடி, கண்டியூர் திருக்காட்டுப்பள்ளி சாலையில் உள்ள வரகூர், கந்தமங்கலம் ஆகிய ஊர்கள் இதே காரணங்களுக்காக உருவாக்கப்பட்டு மகா தானமாக அளிக்கப்பட்டவை. இங்கு குறிப்பிடும் ஈச்சங்குடி கிராமத்தில்தான் காஞ்சி பரமாச்சாரியார் என வழங்கப்பட்ட ஸ்ரீ சந்திரசேகரேந்திர சுவாமியின் தாயார் அவதரித்தார். எங்கும் எப்போதும் மக்கள் வளத்தோடும், மனமகிழ்ச்சியோடும் வாழ வேதங்கள் ஓதப்படவேண்டும் எனும் எண்ணத்தில் எங்கும் வேத கோஷம் முழங்குவதற்காக இத்தனை ஊர்களை, தெருக்களை தானமாகக் கொடுத்து வந்திருக்கிறார் கோவிந்த தீட்சதர்.

    Ramasamy koil Uthsavar“மக்கள் நலனும் வாழ்வும் அமைதியும் சதாசர்வ காலம் வேதகோஷம் முழங்குவதில்தான் இருக்கிறது” என்கிறது மனுஸ்மிருதி. வேதங்கள் ஓதப்படுவதோடு, இளைய பிரம்மச்சாரிகளுக்கு அதனைக் கொண்டு சேர்க்கவும் வேண்டும். அதற்காக வேத பாடசாலைகளையும் அவர் உருவாக்கிவைத்தார். கும்பகோணம் ராஜா பாடசாலை என்ற அமைப்பு இன்றும் உயிர்ப்போடு இயங்கி வருவதை நாம் அறிவோம். இந்த ராஜா பாடசாலையில் ரிக், யஜுர், சாம வேதங்களோடு, ஆகம சாஸ்திரமும் பயிற்றுவிக்கப் படுகிறது. இதுபோன்றதொரு பாடசாலை இந்தியாவில் வேறெங்கும் இல்லை என்று சொல்லப்படுகிறது. ஒரு வேதத்தை அத்யாயனம் செய்து முடிக்க எட்டு ஆண்டுகள் ஆகும். இந்த பாடசாலையில் படித்துப் பின் இசைத் துறையில் பிரபலமடைந்தவருள் ஸ்ரீ முத்துசாமி தீட்சதர் முக்கியமானவர்.

    வேதம் படித்த ஸ்ரீ முத்துசாமி தீட்சதர் இசைத் துறையில் கர்நாடக சங்கீத மூவருள் ஒருவராக ஆனாரா என்று வியப்பாக இருக்கும். வியப்படைய வேண்டாம். காரணம் இவற்றுக்கெல்லாம் மூலகாரணமாக இருந்த கோவிந்த தீட்சதர் இசையிலும் வல்லவர். “அத்வைத வித்யா ஆச்சார்ய” என்ற பட்டப்பெயரோடு விளங்கிய இவர் கர்நாடக சங்கீதத்தில் “சங்கீத சுதாநிதி” எனும் அற்புதமான இசை நூலையும் இயற்றியிருக்கிறார். அதுமட்டுமல்ல “திருவையாறு புராணம்” சம்ஸ்கிருத மொழியில் இருந்ததை ஒரு புலவரைக் கொண்டு இவர் தமிழில் மொழியாக்கம் செய்யச் செய்திருக்கிறார்.

    கோவிந்த தீட்சதருடைய மூத்த மைந்தன் யக்ஞநாராயண தீட்சதர். இவர் வேத சாஸ்திரங்களில் படித்துத் தேர்ந்தவர் என்பதுகூட இவர் பல இலக்கியங்களையும் படைத்திருக்கிறார். அவை ரகுநாத நாயக்கர் மீதான “ரகுநாத பூபால விஜயம்”, “ரகுநாத விலாஸ நாடகம்”, “சாஹித்ய ரத்னாகரம்” ஆகியவை.Tirupalaithurai temple and Granary

    இவருடைய இளைய மைந்தன் வேங்கடமகி என்பார் பல இலக்கியங்களைப் படைத்திருக்கிறார். சம்ஸ்கிருத இலக்கியங்கள் தவிர இசைத் துறையில் “சதுர்தண்டி பிரகாசிகா” எனும் நூலையும் இயற்றியிருக்கிறார். இவருக்கும் பல மகா பண்டிதர்கள் சீடர்களாக இருந்திருக்கின்றனர்.

    காஞ்சி மகாபெரியவருடைய தாயார் பிறந்த ஊர் ஈச்சங்குடி என்று முன்பு குறிப்பிட்டோம் அல்லவா? அது தவிர 1814 முதல்1857 வரை காஞ்சி மடத்து ஆச்சாரியாராக இருந்த மற்றொரு சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் இந்த தீட்சதர் வம்சத்தில் பிறந்தவர். கோவிந்த தீட்சதரின் இளைய மகன் என்று குறிப்பிட்ட வேங்கடமகி என்பவரின் பேரன் இந்த ஆச்சார்யார்.

    இத்தகு பெருமைமிகு அமைச்சர் கோவிந்த தீட்சதரின் சிலை அவருடைய துணைவியார் நாகம்மாள் உருவத்துடன் கல் சிற்பமாக பட்டீஸ்வரம் ஆலயத்தில் பார்க்கலாம். ராமேஸ்வரம் கோயிலிலும் இவர்கள் சிலையை நிறுவியிருக்கிறார்கள். கும்பகோணத்தையடுத்த பட்டீஸ்வரத்தில் மிக எளிய இல்லத்தில் வாழ்ந்த இவர் யோகநித்திரையில் இருக்கும்போதே உயிர் நீத்தார்.

    இத்தகைய மதியூகியாகவும், நிர்வாகத் திறன் கொண்டவராகவும், தர்மத்தின்பால் பற்று கொண்டவராகவும் இருந்து நீண்ட நெடுங்காலம் தஞ்சை நாயக்க மன்னர்களுக்கு அமைச்சராக இருந்து பணியாற்றிய கோவிந்த தீட்சதரால் நாயக்கர் வம்சம் புகழ்பெற்றதா, நாயக்க மன்னர்கள் கொடுத்த வாய்ப்பினால் தீட்சதர் தன் திறமையை வெளிப்படுத்தினாரா என்பது பட்டிமன்றத்துக்குரிய தலைப்பாக இருக்கும்.

    Share