சுவாமி விவேகானந்தரின் பார்வையில் வேதாந்தம்
கோ.ஆலாசியம்
சுவாமி விவேகானந்தர் – எனக்கு மானசீக குருவாக இருந்து வேதாந்தத்தை விளக்கிய ஞானச்சுடர்! இந்த உலகின் உய்விற்கு வித்திட வந்துதித்த பேரொளி சுவாமி விவேகானந்தர்! அந்த மகானின் வேதாந்த விளக்கத்தைப் படித்து எனது சிற்றறிவில் பூத்த சிறு பூக்களின் மணத்தை இங்கே பரப்பிட விழைகிறேன்.
பொதுவாக அந்த ஞானியைப் பற்றிய பல, அறிய, அறியப்பட வேண்டிய செய்திகளை நாம் அனைவரும் வாழ்வில் பலமுறை படித்து பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அது வரவேற்கத் தகுந்தது. இருந்தும், சுவாமிஜி அவர்கள் கூறிய ஆன்ம லட்சியத்தைப் பற்றிய அறிவும், ஆய்வும், நம்மை வழிநடத்த அந்த ஞானி நமக்கெல்லாம் சொல்லிய உயரிய லட்சியமான பேரொளியில் கலக்க அயராது முயன்று அதனை அடைவதே! சுவாமிஜி நமக்கு போதித்ததும் அவரின் தீர்க்கமான விருப்பமும் அதுவே ஆகும்.
அவ்வகையிலே சிந்தித்து அவரின் தெய்வீகமான உரையில் உறைந்து கிடக்கும் உண்மையின் சாரத்தை நாமும் உணர்ந்து தெளிவோமாக.
சுவாமிஜி அவர்கள் கூறியக் கருத்துக்களின் சாரத்தைக் கூறுகையிலே, சுவாமிஜியின் ஆசியுடன், எனது புரிதலையும் அங்கே சில உதாரணங்களுடன் கூற முயன்றிருக்கிறேன். சுவாமி விவேகானந்தரைப் பற்றி அறிய விரும்பித் தேடியபோது இந்த அமுதம் கிடைத்தது.
இவற்றை பள்ளிப் பாடத்தில் இவ்வளவு காலம் வைத்து கற்றுத் தந்திருந்தால், எத்தனையோ மெய்ஞானிகள் அல்ல, நல்ல மனிதர்களையாவது நாடு பெற்றிருக்கும் என்பது எனது ஆதங்கம்.
***
உலக மதங்களுக்கெல்லாம் கருவும், கருவறையும் நமது வேதங்கள் என்றால் அது மிகையாகாது. மேலைநாடுகளையும் அம்மக்களையும் இறைவன் விஞ்ஞானத்திற்கான கூரோடு படைத்திருக்கிறான் என்றால், கீழைநாடுகளையும் அம்மக்களையும் குறிப்பாக இந்தியாவையும் இந்தியர்களையும் மெஞ்ஞானத்திற்காகப் படைத்திருக்கிறான் என்று கூறலாம்.
.
வேதாந்தத் தத்துவம்:
(ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில், 25 மார்ச் 1896 -ல் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய உரையின் சுருக்கம்)
வேதாந்தத் தத்துவம் என்று இன்று பொதுவாகக் கூறப்படுவது, உண்மையில், தற்போது இந்தியாவிலுள்ள எல்லாப் பிரிவுகளையும் (மதங்களையும்) தன்னுள் அடக்கியதாகும். (ஏன்? உலக மதங்களும் இதில் அடக்கம் என்று பிற்பகுதியில் சுவாமிஜியே குறிப்பிடுகிறார்).
எனவே அதற்குப் பல்வேறு விளக்கங்கள் இருந்திருக்கின்றன. இவை துவைதத்தில் துவங்கி, அத்வைதம் வரைப் படிப்படியாக முன்னேறி இருக்கவேண்டும் என்று நான் நினைக்கின்றேன். துவைதிகள் புராணங்களைப் பெரிதாகப் போற்றுகின்றனர், அத்வைதிகள் வேதாந்த நெறிகளையே முதன்மையாகக் கொள்கின்றனர்.
வேதம்- அதற்கு எழுதப்பட்ட உரை வேதாந்தம். வேதாந்தம் என்ற சொல்லின் பொருள் வேதங்களின் முடிவு என்பதாகும். வேதங்கள் இந்துக்களின் சாஸ்திரங்கள். வேதங்கள் என்பவை துதிப் பாடல்களும், சடங்குகளும் மட்டுமே என்று பலராலும் சில வேளைகளில் கொள்ளப்படுகிறது. ஆனால் இந்தப் பகுதிகள் தற்போது ஏறக்குறைய உபயோகத்தில் இல்லை.
பொதுவாக வேதம் என்றால் வேதாந்தம் என்று தான் தற்போது இந்தியாவில் பொருள் கொள்ளப்படுகிறது. ‘வேதாந்தம்’ என்பது ‘சுருதி’ என்றத் தனிப் பெயராலும் அழைக்கப் படுகிறது.
நடைமுறையில் இந்துக்களின் சாஸ்திரங்களாக இருப்பது வேதாந்தமே. வைதீகத் தத்துவங்கள் எல்லாம் வேதாந்தத்தையே அடிப்படையாகக் கொள்ள வேண்டும். தங்களுக்கு ஒத்துவருகிற வேதாந்தக் கொள்கைகளை மேற்கோளாகக் காட்ட, பெளத்தர்களும் சமணர்களும் கூடத் தயங்குவதில்லை.
இந்தியத் தத்துவப் பிரிவுகள் எல்லாம், வேதங்களே தங்களுக்கு அடிப்படை உரிமை என்றுக் கொண்டாடினாலும், அவை தங்களின் நெறிகளுக்கு வெவ்வேறு பெயர்கள் வைத்துக் கொண்டன. இந்த நெறிகளுள் கடைசியானது வியாசருடையது. வியாசருக்கு முந்தியவை சில இருந்தும்; வியாசரின் நெறி தான் சிறப்பாக வேதாந்தத் தத்துவம் என்று அழைக்கப்படுகிறது.
பொதுவாக இந்தியாவில் மூன்று விளக்க உரைகள்; அதன் பொருட்டு மூன்று தத்துவப் பிரிவுகளும், அதனால் மூன்று நெறிகளும் தோன்றி இருக்கின்றன.
(வேதங்களின் விளக்க உரைகள் பாஷ்யம், டீகா, டிப்பணி, சூர்ணி என்று பலவகை. இதில் பாஷ்யமே மூலப்பாடத்தை ஆதாரமாகக் கொண்டு ஒரு கோட்பாட்டு முறையை நிலைநாட்ட முயற்சித்தது).
மூன்று நெறிகள்:
முதலில் துவைதம்: இரண்டு என்பது அதன் பொருள். அதாவது பரமாத்மா, ஜீவாத்மா என இரண்டு ஆத்மாக்கள் இருப்பதை நிலைநிறுத்தும் தத்துவம்,
இரண்டாவது விசிஷ்டாத்வைதம்.
மூன்றாவது அத்வைதம்: அத்வைதம் என்றால் இரண்டல்ல ஒன்றே; அதாவது பரமாத்மாவும், ஜீவாத்மாவும் ஒன்றே; எல்லா ஜீவன்களிலும் பரமாத்மாவே இருக்கிறதாக கொள்வது ஆகும். இதில் இந்தியாவில் அத்வைதிகள் குறைவு.
எல்லா வேதாந்திகளும் / வேதாந்த நெறிகள் பொதுவாக சில கருத்துக்களில் மட்டும் வேறுபடுகின்றன. ஆனால் மூன்று விஷயங்களில் ஒத்துப் போகின்றன.
அவை: 1. கடவுள், 2. வேதங்கள், 3. மூன்றாவதாக படைப்புச் சுழற்சி
வேதங்கள் என்பது வேதாந்திகள் மூலம் அந்தப் பரம்பொருளிடம் இருந்து வெளிப்பட்ட அருள் வெளிப்பாடு, அதாவது ஞானிகள் மெஞ்ஞானத்தினால் உணர்ந்தவை. நமக்குப் புரியும்படி கூறினால், அது ஒரு திரைப்படமாக அவர்களுக்கு தெரிந்தது எனக் கொள்வோம். அப்படியானால், அவை எத்தனை நாட்கள் நிற்காமல் ஓடி இருக்க வேண்டும் எனத் தோன்றலாம்.
இதை விளக்க யோகி ஓசோ அற்புதமான விளக்கத்தைக் கூறுவார். பகவத் கீதையில் போர்க்களத்திலே அவ்வளவு பேர் கூடிய அந்த வேளையிலே எப்படி பரமாத்மாவும், அர்ஜுனனும் அவ்வளவு பேசிக்கொண்டார்கள். அது நம்பும்படியான கால அவகாசம் இல்லையே என்பதற்கு அருமையான விளக்கம்: அது நாம் பிறந்து வளர்ந்து, கல்யாணம் முடித்து என்று தொடரும் வாழ்க்கையை எப்படி அரைமணிக் கனவில் கண்டு விடுவோமோ அதைப் போன்ற ஒரு நிலையில் நடந்த விவாதம் எனக் கொள்ள வேண்டும் என்பார்.
எவ்வளவு அற்புதமான விளக்கம்!
இந்த மூன்றையும் அவர்கள் நம்புகிறார்கள்.
படைப்புச் சுழற்சி பற்றிய நம்பிக்கை பின்வருமாறு:
ஆகாசம் என்ற மூல ஜடப்பொருள் (உயிரற்ற பொருள்) ஒன்றிலிருந்து தோன்றியது தான் பிரபஞ்சம் முழுவதும் காணப்படும் ஜடப்பொருள்கள் அனைத்தும். புவியீர்ப்பு சக்தி, இணைக்கும் சக்தி, விளக்கும் சக்தி போன்ற எல்லா சக்திகளும், உயிர் சக்தியும் பிராணன் என்ற ஓர் ஆதி சக்தியிலிருந்து தோன்றியவை.
பிராணன் ஆகாசத்தின் மீது செயல்படுவதால் பிரபஞ்சம் படைக்கப்படுகிறது; அல்லது வெளிப்படுகிறது. படைப்பின் தொடக்கத்தில் ஆகாசம் அசைவின்றி, மாறுதல் இன்றி இருந்தது. அதன்மீது பிராணன் அதிக அளவில் செயல்பட்டு, அதிலிருந்து செடிகள், பிராணிகள், மனிதர்கள், விண்மீன்கள், போன்ற தூலப் பொருட்களைப் படைத்தது.
அடுத்தது பிரபஞ்ச மறைவு பற்றியதையும் இங்கேயே அவர் கூறியதை நினைவு கூர்வோம்.
கணக்கிட முடியாத காலத்திற்குப் பின்னர் இந்த விரிவு அல்லது தோற்றம் ஒடுங்கத் தொடங்குகிறது. ஒவ்வொன்றும் தூல நிலையில் இருந்து படிப்படியாக சூட்சும நிலைக்கு மாறி, கடைசியில் முதற்பொருளான ஆகாசமும் பிராணனுமாக மாறி ஒடுங்கிவிடுகிறது.
பிறகு, மீண்டும் ஒரு புது சுழற்சி தொடங்குகிறது. இந்த ஆகாசத்திற்கும் பிராணனுக்கும் அப்பால் ஏதோ ஒன்று இருக்கிறது. இந்த இரண்டையும் மூன்றாவது பொருளாகிய ‘மகத்’ என்பதற்குள் சுருக்கலாம். இந்த மகத் என்பது தான் பிரபஞ்ச மனம் (Cosmic mind). இந்த பிரபஞ்ச மனம், ஆகாசத்தையும், பிராணனையும் படைப்பதில்லை: தானே அவையாக மாறுகிறது.
(தயவு செய்து மெதுவாக கூர்ந்து இடைவெளி விட்டுப் படிக்கவும். புரியாதது போல இருந்தாலும் மேலும் படிக்கவும் கொஞ்ச நேரம் விட்டுப் படிக்கவும்.
புரிந்தவற்றை மட்டும் ஞாபகத்தில் கொண்டு, மேலும் படித்துக் கொண்டே போகவும்).
வேத விளக்கங்களை நாம் அறியப் பெறுவது என்பது நமக்கு கிடைத்த வாய்ப்பு. அதை கொஞ்சம் சிரமப் பட்டாவது தெரிந்து கொண்டால் இன்னும் சிறப்பு. மற்ற மதத்தார் பெரும்பாலும் அவரவர் மதம் கூறும் நெறிகளை வெளிப்படையாகப் பேசுகிறார்கள்.
ஆனால் உலகில் உள்ள அனைத்து மதங்களின் மூலமும் நம்முடைய வேதங்களில் இருந்து தான் பிறந்து இருக்கின்றன என்பதை நாம் எப்படி மற்றவர்களுக்கு சொல்வது? அல்லது மற்றவர்களுக்காக இல்லை என்றாலும், நம்முடைய மன திருப்திக்காகவேனும் தெரிந்து கொள்ளலாம் அல்லவா?
எல்லாவற்றிற்கும் ஒரு நேரம் வர வேண்டும் என்பார்கள். ஏன் அப்படிக் கூறுகிறேன் என்று நினைக்கலாம். இந்த விஷயங்கள் அடங்கிய விவேகானந்தரின் ‘ஞான தீபம் – சுடர் 4′ ஐ வாங்கி சுமார் பத்து வருடம் கழித்துத் தான் நான் படிக்கிறேன் என்பதால்.
சாங்கிய மனஇயலின்படி, ஒரு பொருளை அறிவது என்பதை எடுத்துக் கொள்வோம்.
உதாரணமாக, பார்ப்பது- இதில் முதலில் பார்க்கும் கருவிகளாக கண்கள் உள்ளன. இந்தப் பொறிகளுக்குப் பின்னால் பார்வைப் புலன்கள் (பார்வை நரம்புகளும், மையமும்) இருக்கின்றன. இவை புறக்கருவிகள் அல்ல, இருந்தும் இவை இல்லாமல் நாம் பொருள்களைக் காண இயலாது.
இந்தப் பொறியும் புலனும் போதாது. இதற்கு மேலாக இந்த உணர்ச்சி (பார்வை), மனத்தின் நிர்ணயிக்கும் பகுதியான புத்திக்குப் போக வேண்டும். மனத்தின் தீர்மானிக்கின்ற நிலையே, எதிர்ச்செயல் (எதிராக அல்ல! ஆனால், புத்திகெட்டால் எதிராக செயல் புரியும்) புரிகின்ற நிலையே புத்தி.
புத்தியில் எதிர்ச்செயல் நிகழ்ந்தவுடன் பிரபஞ்சமும், அகங்காரமும் வெளிப்படுகின்றன, அதன்பிறகு சங்கல்பம்.
(பிரபஞ்சமும், அகங்காரமும் என்பதை பொருளின் வடிவமும் அதனால் நம் மனதில் ஏற்படும் உணர்வும் என்று நான் கொள்கிறேன் / அதாவது ஒரு பொருளை நாம் கண்ணால் பார்க்கும் போது நமக்கு ஏற்படும் உணர்வு. ஆயினும் பார்க்கும் செயல் முற்றுப் பெறவில்லை.
ஒரு பொருளின் பிம்பம் என்பது ஒளியின் படிப்படியான இயக்கத்தால் உருவாவது. இந்த இயங்கும் பிம்பம், இயங்காத ஒரு பொருளின் மீது வைக்கும் போது தான் அப்பொருளைக் காண முடிகிறது. அதைப் போலவே, மனத்தில் ஏற்படும் கருத்துக்களும் தொகுக்கப்பட்டு, நிலையான ஒன்றின் மீது வைக்கப்படும் போது
புறப்பொருளில் வைத்து அதன் உண்மையைக் காண்பவன் விஞ்ஞானி. அகப் பொருளில் வைத்து உண்மையை உணர்பவன் மெஞ்ஞானி என நான் புரிந்து கொள்கிறேன். ஆக விஞ்ஞானி காண்கிறான், நமக்கும் காட்டுகிறான். மெஞ்ஞானி உணர்கிறான், ஆக நாமும் உணரத் தான் முடியும். ஒப்பிட அதைப் போல வேறு ஒன்று இந்தப் பிரபஞ்சத்தில் இல்லை. அப்படி முயன்றால், அது பிறவிக் குருடனுக்கு, வெள்ளை நிறத்தை புரிய வைக்க முயல்வது போல் என நான் உணர்கிறேன்).
ஆக, இயங்கும் உடம்பையும், மனத்தையும் நிலையாக இருக்கும் ஒன்றின் மீது குவிக்க வேண்டும்.
நிலையாக இருக்கும் அந்த ஒன்று தான் புருஷன் அல்லது ஆன்மா.
(இங்கே சாங்கியர்களுக்கும், துவைதிகளிக்கும், அத்வைதிகளுக்கும் உள்ள சிறு வேறு கருத்தை சுவாமியின் வழி நின்று சுருங்க கூறுகிறேன்)
.
சாங்கியர்கள்:
பிரபஞ்ச மனத்திற்கு (‘மகத்’ / Cosmic Mind ) அப்பால், அவ்யக்த நிலையில் / தோன்றாநிலை ஒன்று இருப்பதாகவும், அங்கே மனம் கூடத்தோன்றா நிலையிலேயே இருப்பதாகவும், ஆனால் தோன்றுவதற்கான காரணங்கள் இருப்பதாக சாங்கியத் தத்துவம் கூறுகிறது. அதாவது இந்த நிலையை ‘பிரகிருதி’ என்கிறது.
அதற்கும் அப்பால், மேல் கூறியதுடன் எந்த தொடர்பும் இல்லாமல், குணமற்றதான, எங்கும் நிறைந்த புருஷன் / சாங்கியர்கள் கூறுகின்ற ஆன்மா இருக்கிறது. புருஷன் எதையும் செய்பவன் அல்ல. சாட்சி மட்டுமே.
அது அதன் முன்பு வைக்கும் பொருளின் நிறத்தை பிரதிபலிக்கும் படிகம் போல என்கிறார்கள்.
.
துவைதிகள்:
ஆன்மா அல்லது இறைவன். இந்தப் பிரபஞ்சத்திற்கு நிமித்தக் காரனும், அவனே உபாதானக் காரனாகவும் இருக்கிறான் என்பர்.
(அதாவது பானை செய்யும் குயவன், மண்பாண்டங்கள் செய்வதற்கு நிமித்தக்காரன். மண்ணும், சக்கரமும் உபாதானக் காரணம் என்பதாகும். ஆக, பானையும் அதைச்செய்ய பயன்படும் கருவிகளும் இவனில் இருந்து வேறு என்பதாகும். அதாவது எளிதாகப் புரிந்து கொள்ளும் படி சொன்னால். பானை செய்யும் குயவன் வேறு. பானை வேறு, பானை செய்யப் பயன்படும் கருவிகள் வேறு என்பதாம்).
ஆக, இவர்கள் (துவைதிகள்) கூறுவது, இயற்கையும் (திடப்பொருள்), ஆன்மாவும், இறைவனின் உடல் போன்றது என்கிறார்கள். இந்தக் கூற்றுப் படி இறைவனும், பிரபஞ்சமும் ஒன்று எனக் கூறலாம்.
ஆக இந்த இயற்கையும், அதில் பல்வேறு ஆன்மாக்களும், என்றும் ஒன்றுக்கொன்று வேறுபட்டன. ஒரு படைப்பின் (கல்பத்தில்) ஆரம்பத்தில் வெளிப்பட்டு, பிறகு படைப்பின் முடிவில் (பிரபஞ்சம் அழியும் நிலையில்) நுட்பமாகி, நுட்ப நிலையிலே இருந்து விடுகின்றன என்கிறார்கள்.
அத்வைதம்:
அத்வைதம், இந்தக் கருத்துகளில் இன்னும் சற்று உள்நோக்கிச் சென்று மாறுபட்டு (இல்லை மேம்பட்டு என்று நான் கருதுகிறேன்) கூறுகின்றது.
ஏறக்குறைய எல்லா உபநிடதங்களும் இவர்களுக்கு (அத்வைதிகளுக்கு) சாதகமாக இருப்பதாலும், அவற்றையே தங்களின் தத்துவத்திற்கு முற்றிலும் அடிப்படையாகக் கொள்கிறார்கள்.
அதாவது பிரபஞ்சம் முழுவதும் ஒன்றே, ஒரே பரம்பொருள் தான் இப்படிப் பல உருவங்களாக வெளிப்படுகிறார் என்பது அவர்களின் கருத்து.
‘ஸத்’என்ற இந்தப் பரம்பொருள் தான் எல்லாமாக, பிரபஞ்சம், மனிதன், ஆன்மா, பிற பொருள்கள் அனைத்துமாக மாறுகிறார்.
மனம், மகத் (காஸ்மிக் மைன்ட் / தியானத்தில் அடையும் அறிவுநிலை)
இரண்டுமே அந்த ‘ஸத்’ என்ற ஒன்றின் வெளிப்பாடு. ஆக இந்த பிரபஞ்சம் இறைவனின் பரிணாமம், என்றும் மாறாத அந்தப் பொருள், மாறுவதாக நமக்குத் தெரிவதெல்லாம், தேசம், காலம், நிமித்தம் இன்னும் சொல்லப் போனால் நாமரூபங்களே.
(பெயரும், உருவமும் தான் வேறு வேறு. இதில் மனிதனின் நாடு, நிறம், மொழி, இன்னும் பல பிரிவுகள், மனித நாகரிகத்தின் வளர்ச்சியில் அங்கமாகி, அவையே கயமையின் பிடியில் பங்கமாகி, கடைசியில் துயரத்தில் சங்கமமாகி விட்டது. கடைசியில் தங்கம், தகரமாகி விட்டது. இவை அனைத்து உயிர்களுக்கும் எனலாம். பிறப்பில் உயர்வு தாழ்வு இல்லை. குதிரை என்பதால் கர்வமோ, கழுதை என்பதால் தாழ்வோ கொள்ள வேண்டாம்.
பெரிய ஓங்கி உயர்ந்த மரத்தைப் படைத்தவன் சிறிய காயை அதிலே காய்க்க வைத்தான். நிற்க முடியாதக் கொடிகளில் அவ்வளவு பெரிய பரங்கிப் பழத்தை வைத்தான். இறைவா! இவ்வளவு பெரிய மரத்தை படைத்து அதிலே இவ்வளவு சிறியக் காயைப் வைத்தாய் என்றால்.
இறைவனோ, ‘மகனே நீயோ, மரத்தையும், அதன் காயின் அளவையும் பார்க்கிறாய். நானோ, வெயிலின் கொடுமையில் சற்று இளைப்பாற அம் மரத்தின் அடியில் வந்து அமரும் மற்ற ஜீவன்களைப் பார்க்கிறேன்’ என்கிறார்.
பெரிய மரத்தில் பூசணி போன்றக் காய் காய்த்தால், அதன் அடியில் ஓய்வெடுக்கும் உயிர்களின் நிலை என்ன? சிந்திக்கத் தான் வேண்டும். ஒவ்வொன்றுக்கும் தனிச் சிறப்பு, காரணம், அவசியம் உண்டு. அது அனைத்திலும் தெய்வீகம் இயங்குகிறது என்றும் கூறுவேன்).
பரம்பொருள், உண்மைத் தோற்றம் என்ற இரண்டல்ல, ஒன்றே. அது மாறாதது என்பதே வேதாந்திகள் கூறுவதும் ஆகும். மாறும் தோற்றம் என்பது மாயை.
அறியாமையில் இருக்கும் போது, (இங்கு அறியாமை என்பது, நமது சாதாரண புத்தியாகிய மனமும் அல்ல அல்லது அதனுக்கு உதவும் இந்த உடலும் அல்ல) பிரபஞ்சத் தோற்றத்தை மட்டுமே ஒருவன் காண்கிறான்; இறைவனைக் காண்பதில்லை.
இறைவனைக் காணும் (உணரும்) அந்தக் கணமே அவனைப் பொருத்த வரையில் பிரபஞ்சம் மறைந்து விடுகிறது. மாயை என்று சொல்லப்படும் அறியாமையே இத் தோற்றங்களுக்கெல்லாம் காரணம்.
பரம்பொருள், ஒன்றானது மாறாதது. அப்படிப்பட்ட ஒரேத் தன்மையாக உள்ள ஒன்றை, பிரபஞ்சமாகத் தோன்றச் செய்வது இந்த மாயை மட்டுமே.
மாயை என்பது சுத்த சூன்யமோ, அல்லது இல்லாத ஒன்றோ அல்ல. சரி பிறகு, இருப்பது என்றோ அல்லது இல்லாதது என்றோ கூறமுடியாது.
இவ்வகையில் இருப்பது அல்ல; ஏனெனில், பூரணமான, மாறுதலில்லாத இறைவனைப் பற்றி மட்டுமே இப்படிச் சொல்ல முடியும் இருப்பதாக.
சரி, இல்லாதது என்றால்? இல்லாத ஒன்றால் எப்படி தோற்றத்தை உண்டுபண்ண முடியும்? ஆக மாயை என்பது, இருப்பதுவும், இல்லாததுமான, இந்த இரண்டும் அல்லாத ஒன்று.
அதை வேதாந்தத் தத்துவத்தில் ‘அநீர்வசனியம்’ அல்லது விளக்கமுடியாது (உணர வேண்டியதை இப்படிக் கூறலாம்) என்கிறார்கள். இந்த மாயையே பிரபஞ்சத்திற்கு உண்மையானக் காரணம்.
இறைவன் பிரபஞ்சத்திற்கு அடிப்படைப் பொருளைத் தருகிறார், மாயை அதற்கு நாம ரூபங்களைத் தருகிறது.
அத்வைத வேதாந்தத்தில் தனி ஆன்மாவுக்கு இடமில்லை. தனி ஆன்மாவைப் படைத்தது (இருப்பதாக உண்டாக்கியது) இந்த மாயை என்பது அவர்களின் வாதம்.
உண்மையில் தனி ஆன்மாவெல்லாம் இருக்கமுடியாது, இருப்பது உண்மையில் ஒன்றே என்றால், நான் வேறு, நீங்கள் வேறு என்றெல்லாம் எப்படி இருக்கமுடியும்? நாம் அனைவரும் ஒன்றே.
பன்மையைக் காண்பது தான் தீமைக்கானக் காரணம்.
(இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் கூற முனைகிறேன், ஆதி சங்கரருக்கு, ஈசனே ஒரு புலையனாக வடிவம் கொண்டு வந்து, அவர் எழுதிய வேத விளக்கத்திற்கு ‘எதையோ தின்று வளர்ந்த இந்த உடலைக் கண்டு பேதம் காணாதே. அனைவருள்ளும் நானே இருக்கிறேன்’ என்று நர்மதை நதிக்கரையில் பாடம் புகுத்தி விட்டுச் சென்றார் என்ற வரலாற்றை ஞாபகத்தில் கொள்வோம்)
நான் வேறு, பிரபஞ்சம் வேறு என்று உணர ஆரம்பித்த உடனேயே முதலில் பயம் தோன்றுகிறது. அதைத் தொடர்ந்து துன்பம் உண்டாகிறது.
எங்கே தன்னை அல்லாமல் மற்றவனைப் பார்கிறானோ (வேறுபடுத்தி), அவன் வார்த்தையே அது என்றும் வேறுபடுத்திக் கேட்கிறானோ, அது சிறியது. எங்கே பிறரைக் காண்பதில்லையோ, கேட்பதில்லையோ. அது பெரியது.
அங்கே பேரானந்தம் இருக்கிறது. சிறியதில் இந்த இன்பம் இல்லை. அத்வைத தத்துவத்தின் படி, பிரபஞ்சத்தில் காணும் இந்த வேறுபாடு, இந்தத் தோற்றம் சில காலம் மனிதனின் உண்மை இயல்பை மறைத்து நிற்கிறது. ஆனால், இந்த இயல்பு என்னவோ மாறுவதே இல்லை.
மிகத் தாழ்ந்த புழுவிலும், மிக உயர்ந்த மனிதனிலும் ஒரே தெய்வீக இயல்பு இருக்கிறது.
இந்த தெய்வீக இயல்பு மனிதனைவிட புழுவிடம் (விலங்குகளிடம்) அதிகம் இருக்கிறது.
(இந்த இடத்தில் நான் கூற விரும்புவது சுனாமியில்; மனித அறிவுக்கு எட்டும் முன். இவன் தான் கண்ணால் காண்பதை மட்டுமே நம்புகிறவனாயிற்றே! தனது அற்புத சக்தியால் விலங்குகள் அதை (சுனாமி என்னும் பேராபத்தை) அறிந்து அந்த பேராபத்தில் தங்களைக் காப்பாத்திக் கொண்டதை நாம் அனைவரும் அறிவோம்.
உதாரணமாக, தாய்லாந்தின் கடற்கரையில் கட்டிவைத்திருந்த குதிரை ஒன்று திடீர் என்று கனைப்பதையும், விசும்புவதையும், சிறிது நேரத்தில் சுனாமி என்னும் ஆழிப் பேரலை வந்ததையும் எதேச்சையாகப் பதிவு செய்யப்பட்ட காமிராவில் பதிவானக் காட்சியை பிறகு காண நேரிட்டது என்பதை நினைவு கூறுகிறேன்).
இப்படி வொவ்வொன்றுக்கும் பின்னணியாக அந்த தெய்வம் அல்ல (தெய்வம் என்றால் அது நமக்குள் இல்லாத மூன்றாவதான ஒன்றைக் கூறுவதாகிவிடும்) தெய்வீக இயல்பு இருக்கிறது.
எனவே நன்னெறி அடிப்படையில், ‘ ஒருவருக்கும் தீங்கு செய்யாதே! அது உனக்கு நீயே செய்வதாகும். பிறரை நேசிக்கும் போது நம்மையே நாமும் நேசிப்பதாகும்’.
(இதை நமது வேதம் சொன்னது என்றால், இதைக் கூறாத வேறு மதம் இந்த உலகில் உண்டா? அப்படி கூறும் அத்தனை மதங்களும் இந்த வேதத்திற்குள் அடக்கம் அல்ல. அவற்றுக்கெல்லாம், இதுவே சாரம் என்றும் சொல்ல துணியலாம். இடம், காலம், சூழல் ஆகியவற்றின் நிலைக்கு ஏற்ப பரம்பொருளால் உண்டாக்கப் பட்டதே உலகில் உண்டான அத்தனை, தத்துவங்களும். அதனைத் தழுவும் மதங்களும். இதில் உயர்வு தாழ்வு ஏது? என்பதே எனது பார்வை )
இதிலிருந்து அத்வைதநெறியே உண்டாகிறது. இதை தன்னல மறுப்பு எனச் சொல்லலாம்.
இந்தச் சிறிய ‘நான்’ என்பதே நமது எல்லாத் துன்பங்களுக்கும் காரணம் என்று அத்வைதி சொல்கிறான்.
இந்த ‘நான்’ என்பதன் காரணமாகத் தான் வெறுப்பும், பொறாமையும், துன்பமும், போராட்டமும், பிற தீமைகளும் தோன்றுகின்றன.
இந்த ‘நான்’ எப்போது ஒழிகிறதோ அப்போது துன்பமும் நம்மை விட்டு ஒழியும்.
(இங்கே சமூக பார்வை வேண்டாம். நம்மைப் பற்றி மட்டும் யோசிப்போம். ஒவ்வொருவரும் மாறினால் சமூகம் மாறும். உடனே அவன், இவன், அரசாங்கம் என்று யோசித்து பாதை மாற வேண்டாம். நாம் எதற்கெடுத்தாலும் பிறரை காண்பித்து நம்மை மறைத்து வாழ்ந்து பழகுகிறோம்)
நான் எப்போது அழிந்தது?
எப்போது ஒரு சிறு பிராணிக்காகக் கூட தன் உயிரையே எவனொருவன் தரத் துணிகிறானோ, அப்போது அந்தக் கணமே அவன் அத்வைதிகளின் லட்சியமான பூரண நிலையை அடைகிறான்.
அறியாமைத் திரை விலகுகிறது. அவனும் பிரபஞ்சமும் ஒன்றே என்ற நிலை வந்துவிடுவதொடு, அந்தத் தோற்றம் மறைந்து விடுகிறது. தான் யார் என்ற உண்மையை அறிந்த பின்!
(எனக்குத் தோன்றிய வரை, ‘தான்’, தான் அந்தப் பரம்பொருள் என்பது தானே அந்த உண்மையாக இருக்க முடியும்?)
பிறகு என்ன? அழைப்பு வரும் வரை இந்த உடலிலேயே இருக்க வேண்டியது தான்.
இது தான் ஜீவன் முக்தி என்பதாகும். இப்படி ஜீவன் முக்தி அடைந்தவர் முன்பு, மீண்டும் இந்த மாயைத் தோன்றினால் அவர்கள் அதில் மயங்க மாட்டார்கள்.
(படம் பார்ப்பவனுக்கு மாத்திரமே இந்த நுனி இருக்கை அமர்வெல்லாம். மாறாக, படத்தை இயக்கும் இயக்குனருக்கும், அந்தப் படத்தை முன்பே பார்த்துவிட்டு இது தான் முடிவு என்று தெரிந்தவர்களுக்கும், ஏது இந்த நுனி இருக்கை அமர்வு. கண்ணீரும் கவலையும் என்று கூட எளிமையாக நான் கூறுவேன்).
அவர்கள் அது கானல் நீரென்பதை அறிந்தவர்கள், கண்களும், புலன்களும் வேலை செய்யும் வரை, அவன் அந்த கானல் நீரைப் பார்ப்பான். பிரபஞ்சம் மறைந்து விட்ட நிலையில் அவனை, இந்த மாயையான துன்பம் ஒன்றும் செய்யாது.
என்றும் அவன் ‘சத் – சித்- ஆனந்தமாக, தனியிருப்பாக, தனியறிவாக, தனி ஆனந்தமாக மாறிவிட்டான். இந்த நிலையை அடைவது தான் அத்வைத வேதாந்தத்தின் லட்சியம் என்கிறார் சுவாமிஜி.
.
சுவாமிஜியின் லட்சியம்:
சுவாமியின் கண்டங்கள் கடந்த பயணம், இந்து மதத்தையும், இந்தியாவையும், இந்தியனையும் இந்த உலகிற்கு பறை சாற்ற மட்டுமாக அமைந்தது இல்லை. அப்படி நாம் அதைப் பார்த்துப் பெருமைப் பட்டுக் கொண்டாலும் அது மாத்திரம் அல்ல!
அவரின் பயணம், இந்த புவியையும், புவியில் வாழும் மனிதர்கள் யாவரையும் புனிதர்களாக்க, பேரொளியில் மூழ்கித் திளைக்க செய்யவே! அது தான் ஒவ்வொரு உயிரின் லட்சியமும் கூட, அதனை மனிதனாகப் பிறந்த நம்மால் தான் செய்ய முடியும்.
அந்தப் பிறவிப் பயனை அடைய யாவரும் முயலுங்கள், அதை உத்வேகமாக, உண்மையாக மாற்றம் கொள்ளாத மனத்தோடு இப்போதே செய்ய ஆரம்பியுங்கள். அது நிச்சயம் கைகூடும்.
அப்படி கைகூடியதால் இந்திய மண்ணிலே எத்தனைப் பெரிய ஞானிகள் பிறந்து, இன்றைய அறிவியல் வெளிக்கொணரும் இந்த பிரபஞ்ச கூறுகள் யாவற்றையும் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கீழ்த்திசையிலே இருந்த அவர்கள் தனது பெரும் ஞானத்தால் முன் மொழிந்து சென்று இருக்கிறார்கள்; அதை நீங்கள் யாவரும் அறிந்து கொள்ளுங்கள்.
அப்படியானால் அவர்கள் கூறிய வழியிலே யாவரும் பயணித்தால், யாவருக்குமந்த ஞானம், பேரறிவு, பேரானந்தம் கிட்டும், இதை உறுதியாக நம்புங்கள். உறங்கியது போதும் ‘விழித்தெழுங்கள்’ என்று அரை கூவல் விடவே அங்கு சென்றார் என்பது இன்னும் ஆழச் சிந்தித்தால் அனைவருக்கும் தெளிவாகப் புரியும்.
அவரின் அவதார நோக்கமே, அனைவருக்கும், இன்னும் சொன்னால் உலகில் உள்ள யாவருக்கும், இன்னும் துல்லியமாகச் சொன்னால் உலகில் இருக்கும் ஒவ்வொரு பாமரனுக்கும் இந்தச் செய்தியைக் கொண்டு செல்லவே. அப்படியே செய்தார்.
வாழ்க மானுட லட்சியம்!
வளர்ந்து எங்கும் பரவட்டும் வேதாந்த தத்துவம்!!
உலகமே பேரொளியில் திளைத்து பேரானந்தம் அடையட்டும்!
.
படங்களுக்கு நன்றி.
http://artistmaruthi.blogspot.sg