Blog

  • படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 28

    படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 28

    முனைவர். ச. சுப்பிரமணியன்

    அழகு மழலைக்கு ஆயிரம் கவிதைகள்

    முன்னுரை

    ஏதாவது ஒரு கவிதையையோ கட்டுரையையோ நாம் படிக்கிறபோது அவற்றை முன்பு எஙகோ படித்த நினைவு நமக்கு வருவது இயல்பு. யாரோ சொல்லியிருந்த நினைவு! இத்தகைய நினைவு எல்லாப் படைப்புக்களுக்கும் வருவதில்லையென்றாலும் ஒரு சில படைப்புக்களைப் படிக்கிறபோது வருவதை நாம அனைவரும உணர்ந்திருக்கிறோம். பதிணென் கீழ்க்கணக்கு நூல்களைப் படிக்கிற எவருக்கும் திருக்குறள் நினைவுக்கு வராமல் போகாது. சான்றோர்கள் ஒரே மாதிரியாகத்தான் சிந்திக்கிறார்கள் என்பதற்கு இலக்கிய அளவில் எண்ணற்ற எடுத்துக்காட்டுக்கள் உண்டு. முகநூல் கவிதைகளைப் படிக்கிற சில பொழுதுகளில் அத்தகைய அனுபவத்தை நான பெற்றிருக்கிறேன்.! தம்பி தாரமங்கலம் முத்துசாமியின் கவிதையொன்றினைப் படிக்கிறபோது எழுந்த அனுபவத்தை வாசகர்களோடு பகிர்ந்து கொள்வதையே இந்தக் கட்டுரை தனது தலையாய நோக்கமாகக் கொண்டு அமைகிறது.

    விவேக சிந்தாமணியும் திருக்குறளும்

    விவேக சிநதாமணியில் ஒரு பாட்டு. ஒரு பெண்ணின் வால் எயிறு ஊறிய நீர் அதாவது எச்சில் எத்தகையது என்பதை விளக்குகிற பாட்டு அது. அந்தப் பாட்டு இப்படி அமைந்திருக்கிறது

    வண்டுமொய்த் தனைய கூந்தல்
    மதனபண் டார வல்லி
    கெண்டையோடு ஒத்த கண்ணாள்
    கிளிமொழி வாயின் ஊறல்
    கண்டுசர்க் கரையோ தேனோ?
    கனியொடு கலந்த பாலோ?
    அண்டமா முனிவர்க் கெல்லாம்
    அமுதம்என் றளிக்க லாமே!

    யாருடைய எச்சில் ஊறியதோ அவளைப் பற்றிய தோற்ற வண்ணனையைப் பாட்டின் முதல் இரண்டடிகளில் மிக அழகாகச் சித்திரித்திருக்கிறார் புலவர். அவள் கூந்தல் வண்டுகள் கூடுகட்டினால் எப்படியிருக்குமோ அப்படிருக்குமாம்.

    “வண்டுமொய்த்தனைய கூந்தல்”

    மதன் மன்மதன்! பணடாரம் பொக்கிஷம். அதாவது கருவூலம்.  வல்லி கொடி! காமக்கருவூலமாய்க் கொடி போன்றவள்

    மதன பண்டார வல்லி!

    அவள் கண் கெண்டை மீனை ஒத்திருந்ததாம். பெண்களின் கண்களுக்குக் கெண்டை மீனை உவமிப்பது ஓர் இலக்கிய மரபு. இது பற்றிய இன்னொரு பாடலை இங்குச் சுட்டுவது பொருத்தமாக இருக்கலாம்!.

    “தண்டுலாவிய தாமரைப் பொய்கையில்
    மொண்டு நீரை முகத்தருகேந்தினள்!
    கெண்டைகெண்டை எனக் கரை ஏறினள்
    கெண்டை காணாமல் நின்று தயங்கினள்!”

    பெண்ணொருத்தி நீரிலே குனிந்து பார்த்திருக்கிறாள். இவள் கண்ணிழல் நீரிலே படிந்திருக்கிறது. அவற்றைக் கெண்டை மீன் என மயங்கிய  அந்தப் பெண் தன் உள்ளங்கையால் ஒரு கை நீரை மொண்டு அந்தக் கெண்டைமீனைப் பார்க்க முனைந்திருக்கிறாள். குளத்தில் தோன்றிய கண்ணிழல் உள்ளங்கையில் தோன்றுமா என்ன? உடனே கெண்டையைக் காணோம் என்று அரற்றி மயங்கினாளாம்!, புலவர் என்ன சொல்ல வருகிறார்? அவள் கண் கெண்டை மீனைப் போல இருந்தது என்ற செய்தியைத்தான்! இப்படிச் சொல்வதும் ஒரு இலக்கியச் சுவைக்காகவே!

    “கெண்டையை ஒத்த கண்ணள்”

    காதல் மயக்கத்தில் பெண்கள் சொன்னதையே திருப்பிச் சொல்வார்கள்! பறவைகளில் பேசுகிற பறவை கிளி!. கிளி பேசுமா என்றால் பேசாது! அது வளர்ப்பவர் சொல்வதையே திருப்பிச் சொல்லும்! இந்தப் பெண் காதல் மயக்கத்தில் சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொல்லுவாள் ஆதலின் கிளியைப் போல் பேசுகிறளாம்!

    கிளிமொழி!

    இப்போது அந்தப் பெண்ணின் உருவத்தை வண்ணனைச் செய்யும் சொற்களை இணைத்துப் பார்த்தால் அவளின் புற அழகு புலப்படும்.

    வண்டுமொய்த் தனைய கூந்தல்
    மதனபண் டார வல்லி
    கெண்டையோடு ஒத்த கண்ணாள்
    கிளிமொழி!

    இத்தகைய பேரழகையுடைய அவள் வாய் எச்சில் எத்தகைய இனிமை பயக்குமாம் என்று ஒரு பட்டியல் போடுகிறார் புலவர்! “கற்கண்டாக இருக்குமோ? சர்க்கரையாக இருக்கலாமா? மலைத்தேனாக இருக்கலாமா?  முக்கனிச் சாற்றோடும் கலந்த பாலாக இருக்கலாமா?  என்றெல்லாம் ஐயப்படுகிறார்!. எச்சிலுக்கு இது மாதிரியான வேதியல் பண்புகள் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். காதல் மயக்கமல்லவா?  எனவேதான் தலைவள் உளறுகிறான்.

    கண்டுசர்க் கரையோ தேனோ?
    கனியொடு கலந்த பாலோ?

    அமுதத்தை உண்பதற்காகப் பாற்கடலைக் கடைந்தார்களாம் தேவர்களும் முனிவர்களும். அவ்வளவு சிரமம் ஏன்? தேவையில்லை. இவள் வாயில்  ஊறும் இந்த எச்சில் அமுதமாகாதா? அதனைக் கொடுத்தால் போதாதா? என்று வினவுகிறார் புலவர்!

    அண்டமா முனிவர்க் கெல்லாம்
    அமுதம்என் றளிக்க லாமே!

    தேவர்கள் அமுதம் உண்டார்கள் என்பது கற்பனை! யாரும் அனுபவிக்க முடியாதது. தலைவியின் எச்சிலாகிய அமுதத்தை உண்பது யாருக்கும் கைகூடுவது. உண்மை!. அதன் சுவைதான் காதலர்களுக்கேற்ப மாறுபடுமே தவிர உண்டலாகிய வினை உண்மை! இந்தப் பாடலைப் படிக்கின்ற போது எனக்குத் திருவள்ளுவர் பாட்டு நினைவுக்கு வந்தது. திருக்குறள் காமத்துப்பால் நாடகப் பாங்கில் அமைக்கப்பட்ட இலக்கியம். அந்தப் பாலின் இருபத்தைந்து அதிகார்களும் தலைவன், தலைவி தோழி கூற்றாகவே அமையும். திருவள்ளுவர் ஒதுங்கிக் கொள்வார்.

    பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
    வாலெயிறு ஊறிய நீர் (1121)

    என்று தலைவியின் எச்சிலை உண்ட தலைவன் கூறுவதாகத் திருக்குறள் கூறுகிறது!  எயிறு ஊறாது. எயிறு என்னும் இடத்தில்  எச்சில்தான் ஊறும். குளம் நிறைந்தது என்றால் குளம் நிறையாது. நீர்தான் நிறையும். குளம் இடம். நீர் அவ்விடத்து ஊறுகின்ற நீர்.  பாலோடு தேன்கலந்தற்றே என்னும் இருசொற்களின் விரிவுரையை விவேக சிந்தாமணி விரித்துக் காட்டியிருக்கிறது.  திருக்குறளில் தலைவியின் எச்சிலை உண்ட தலைவனின் இந்த அனுபவத்தைப் படித்த ஒருவன் விவேகசிந்தாமணியைப் படித்தான் என்றால் திருக்குறள் நினைவுக்கு வராமல் போகுமா என்ன? இன்னொரு அனுபவததையும் நான் பகிர விரும்புகிறேன்.

    ‘மரகதம்’ என்று ஒரு திரைப்படம் வந்தது. அந்தப் படத்தில் ‘கண்ணுக்குள்ளே உன்னைப் பாரு! அது காவியம் ஆயிரம் கூறும்” எனத் தொடங்கும் பாடல் ஒன்று உண்டு. அந்தப் பாடலின் சரணத்தில்

    ‘இன்பத்தின் எல்லையில் கூடுகட்டி இன்னிசை பாடும் பறவைகள் நாம்’

    என்று ஒரு வரி சரணத்தில் வரும். இந்த வரியைக் கேட்போர் அதிர்ச்சிக்கு ஆளாக நேரிடும். ஆங்கிலத்தில் புகழ் பெற்ற ஒரு வரி அப்படியே அசை பிசகாமல் தமிழ்த் திரைப்படப்பாடலில விழுந்திருக்கிறது என்பதுதான் அந்த அதிர்சசிக்குக் காரணம்.  “WE ARE THE NEST OF THE SINGING BIRDS” என்பதுதான் அந்த ஆங்கில வரி. பாடல் எழுதிய பாலு என்பவர் ஆங்கில இலக்கியம் படித்தவரா என்பது நமக்குத் தெரியாது. படம் வந்து அறுபது ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆசிரியர் குறிப்பு கிட்டவில்லை. என்ன ஒரு வியப்பு? இங்கிலாந்தில் இருந்த ஒரு கவிஞனின் சிந்தனை எப்படி இங்கே இருக்கிற ஒருவனுக்கு வந்திருக்கிறது? சத்தியக் கவிஞர்கள் ஒரே மாதிரிதான சிந்திக்கிறார்கள். இது சவலைக் கவிஞர்களுக்குப் புரியாது!.

    சத்தியக் கவிஞர் முத்துசாமி

    மகாகவி பாரதிபோல், கண்ணதாசனைப் போல் கள்ளங் கபடில்லாத உள்ளந்தான் கவிஞர்களுக்கு அடிப்படைத் தகுதியாகும் என்பது என் கருத்து. இது இயற்கையிலேயே அமைய வேண்டும். காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லன் என்னும் இனிய பண்புகளின் தொகுப்பாக இருப்பவனே கவிஞன். தம்பி முத்துசாமி அத்தகைய இயல்புடைவராகவே இருக்க வேண்டும். இது அவருடைய படைப்புக்களிருந்து அறிந்து கொள்ள முடிகிற உண்மையாகும்.

    பாவலர் முத்துசாமியும்  பாவேந்தரும்

    முததுசாமி எழுதி முகநூல் பதிவில் நான் கண்ட ஒரு கவிதைதான் இந்தக் கட்டுரைக்கு மூலம். முன்பே சொன்ன படி சத்தியக் கவிஞர்கள் ஒரே மாதிரியாகத்தான் சிந்திக்கிறார்கள். மானுடம் தாண்டிய நேச மனப்பான்மையை வளர்த்துக் கொள்கிறார்கள். “காக்கை குருவி எங்கள் சாதி” என்று பாரதி பாடியதற்கும் “ஓடையும் தாமரைப்பூக்களும்” பாவேந்தரிடம் பாசம் காட்டியதற்கும் மனித நேயத்தைத்தாண்டிய இந்த அருட் பண்பே காரணம். அததகைய பண்பாளராக இந்தக் கவிதையில் முத்துசாமி எனக்கு விளங்குகிறார்.

    சூரியனைச் சொந்தம் கொணடாடும் முத்துசாமி

    இயற்கையை ரசிப்பதும் அதனோடு உறவாடுவதும் அதனை உற்று நோக்குவதும் உண்மைகளை அறிவதுமே கவிஞர்களைப் பிற மக்களிடமிருந்து பிரித்துக் காட்டும் கோடுகளாகும். இயற்கையை ரசிக்கத் தெரியாதவன் கவிஞன் என்றால் விழியே இல்லாதவன் நிலவைப் பாடினான் என்பது போலாகும்.

    “காலைக் கதிரவன் கவினுற நின்று
    கவிதை பாடுக என்றான் – மலர்ச்
    சோலை வண்டு சொந்தம் கொண்டு
    சொல்லுக கவிதை என்றது !”

    நிலவுக்குச் செல்வதற்கு இஸ்ரோ முயன்று கொண்டிருக்கும்போது முத்துசாமியின் இருப்பிடம் தேடிக் கதிரவன் வந்ததாம். அருமை! வெப்பக் கோளமான கதிரவன் கவிஞரைத் தன்னைப் பாடுக என்று வேண்டுகோள் விடுத்ததாம். வெப்பத்தோடு கதிரவன் பேசிக் கொண்டிருக்கும் போதே கவிஞருக்குக் குளிர்ச்சியைத தர எண்ணிய வண்டுகள் ரீங்காரம் செய்து கொண்டே அவரிடம் வந்ததாம். இந்த வண்டைப் பாட வந்த கவிஞர் மலர்ச்சோலை வண்டு என்று அடைகொடுத்து எழுதுகிறார். வண்டு என்று எழுதாமல் சோலை வண்டு என்று எழுதுகிறார். சோலை என வாளா கூறாமல் மலர்ச்சோலை என்றும் எழுதுகிறார். இது மரச்சோலை அல்லவாம். மலர்ச்சோலையாம். மலர் குளிர்சசி! சோலை குளிர்ச்சி! வண்டு குளிர்ச்சி! அதனால் அதன் குரலும் குளிர்சசி. ஒரு சிறிய கண்ணியல் பொருள் முரணால் கவிதை மிடைந்திருக்கிறார் முத்துசாமி.

    குரலெடுத்துக் கேட்ட குயிலும் மயிலும்

    கவிஞர் எழுதத் தொடஙகுகிறார். முதலில் கதிரவன் வந்தது. வண்டு இடைமறித்தது. இப்போது வானத்து முறை. வானத்து நிலவு பூமிக்கு வருவதைக் கவிஞர்கள் கற்பனை செய்திருக்கிறார்கள். ஆனால் தம்பி முத்துசாமி வானமே பூமிக்கு வந்து தன்னைப் பாடுக என்றதாம். அடடா! என்னவொரு கற்பனை? எல்லாரும் நிலவையும் கதிரவனையும் மண்ணுக்கு வரச்சொல்லியிருக்கிறார்கள். நான வானத்தையே வரச்சொல்லுகிறேன் என்று சொல்லிவிட்டு எழுதப்பட்டதல்ல இந்தக் கவிதை. இயல்பாக அமைந்த கவிதை. இந்தக் கற்பனை வந்த கற்பனையேயன்றி வரவழைக்கப்படட கற்பனை அன்று.

    “நீல வானம் நிலத்தில் வந்து
    நீண்ட கவிதை கேட்டது – புதுக்
    கோல மயிலும் கொஞ்சும் குரலில்
    கூறிடு கவிதை என்றது !”

    என்னும் இந்தக் கண்ணிகளில் மயிலும் வந்து தன்னைப் பாடுக என்றதாம். அது சாதாரணம்தான். ஆனால் கொஞ்சும் குரலில் கெஞ்சியதாம் என்பதுதான் அழகிய கற்பனை. மயிலுக்குச் சாயல் பேசப்படுகிற அளவுக்கு அதன அகவல் ஒலி பேசப்படுவதில்லை. கவிஞரின் கவிதையில் தானும் இடம்பிடித்துவிட வேண்டும் என்னும் ஆவல் அதற்கும் வந்ததாம்.

    விண்மீன் கூட்டமும் விரிந்த மலைத்தொடரும்

    வானம் நிலத்துக்கு வந்து கவிதை கேட்டது பகலில். இப்போது அந்தி வந்துவிட்டது. “வானம் கேட்டு எழுதுகிற கவிஞர் நமக்குத் தானம் அளிக்க மாட்டாரா? என்று தவித்துப் போனதாம் விண்மீன் கூட்டம்.

    “விண்மீன் கூட்டம் விருந்து வைத்து
    வேண்டும் கவிமழை என்றது – உயர்
    பொன்னிற மலையும் பொங்கி வழிந்து
    பூந்தமிழ்க் கவிமலர் கேட்டது !”

    இல்லாத  வானத்தில் இருக்கின்ற உடுக்களும் கவிஞரை நோக்கிப் பயணப்பட்டபோது மலை அமைதியாக இருக்குமா என்ன? அதுவும் இருந்த இடத்தில் இருந்தே ஒரு விண்ணப்பத்தைப் போடுகிறதாம். ‘பொங்கி வழிந்து’ என்று ஒரு தொடர் வருகிறது. மலை எப்படிப் பொங்கும்? அது என்ன எரிமலையா? இல்லையே!. பொங்கி வழிந்து என்னும் தொடர் மலையின் அருவியைக் குறித்தது. அருவியொலி மலை பேசுவதாகக் கற்பனை செய்கிறார். அருவிமொழியால் மலையும் கவிஞரின் கவிதைப்பொருளாக வேண்டும் என்று விரும்பியதாம்.

    அன்னமும் மின்னலும்

    தொடர்ந்து கற்பனை செய்கிறார் கவிஞர். பறவைகளில் மயில் கேட்டதை அறிந்த அன்னப்பறவை அருகில் வந்ததாம். வானமும் விண்மீனும் தன்னைவிடடுச சென்றுவிட்டதை அறிந்த மின்னலும் கவிஞரிடம் போனதாம். இரண்டும் ஒரு கூட்டு விண்ணப்பத்தைக் கொடுத்ததாம்

    “அன்னப் பறவை அசைந்து வந்து
    அழகினைப் பாடுக என்றது – விண்
    மின்னற் கீற்று மிரட்டியே என்னை
    முழங்கிடு கவிதை என்றது !”

    மின்னல் இடிக்கு வாழ்க்கைப்பட்டது. மின்னல் முன்னால் வரும் இடி பின்னால் வரும் ஒளியின் வேகம் முன்னால் ஒலியின் வேகம் பின்னால். அதற்கு இடியோசைதான் இன்னோசை. மின்னலுக்கு இடியோசைதான் பின்னணி இசை. அதனாலே அது கவிஞரிடம் அமைதியாகப் பேசாமல் இடிபோல் பேசியதாம்.  அப்படிப் பேசுவது தன்னை மிரட்டியது போல இருந்ததாகக் கவிஞர் கற்பனை செய்கிறார்.

    கவிஞரைக் கெஞ்சும் மாலையும் சாலையும்

    இந்த நிகழ்ச்சிகளையெல்லாம் கூர்ந்து கவனித்து வந்த அந்தி வானம் தன்னையும் பாட வேண்டுமென்று கேட்டதாம்.  ‘தங்கம் உருக்கித் தழல் குறைத்துத் தேனாக்கி எங்கும் பரப்பியதோர் இங்கிதமோ?  என்று பாரதி பாடியும் அதற்கு அடங்கவி`ல்லையாம்.

    தேன்செய்யும் மலரும் தீயும்!
    செந்தீயும் நீறாய்ப் போகும்!
    கான், செய், ஊர், மலை, கா, ஆறு
    கடலெலாம் எரிவ தோடு
    தான்செய்த தணலில் தானும்
    எரிகின்றான் பகலோன்! அங்கு
    வான்செய்த வெப்பத் தால்இவ்
    வையத்தின் அடியும் வேகும்!
    உச்சியில் இருந்த வெய்யோன்,
    ஓரடி மேற்கில் வைத்தான்,
    நொச்சியின் நிழல்கி ழக்கில்
    சாய்ந்தது! நுரையும், நீரும்,
    பச்சையும், பழுப்பு மான
    பலவண்ண முகில்கள் கூடிப்
    பொய்ச்சான்று போல, யானை
    புகழும் பின் மலையைக் காட்டும்!.

    என்று பாவேந்தர் பாடியும் போதவில்லையாம். “ மேற்றிசையில் அனற்காட்டில் செம்பரிதி வீழ்ந்து வெற்று நீறாகாமல் இருப்பதொரு வியப்பே” என்று அவர் பாடியது பசிக்குப் போதவிலலையாம்! “வானமகள் நாணுகிறாள் வேறு உடை பூணுகிறாள்” என்று வைரமுத்து பாடியும் அதற்கு மகிழ்ச்சி இல்லையாம்;

    “பைங்கிளி ஒன்று பறந்து வந்து
    பழந்தமிழ்க் கவிதைக் கேட்டது – குளிர்
    தங்கிடும் நிலத்தில் தவழ்ந்து நடந்து
    தந்திடு கவிதை என்றது !”

    “மாலைப் பொழுதும் மயக்கும் மொழியில்
    மணித்தமிழ் கவிதைக் கேட்டது – நீள்
    சாலை மரங்கள் சரமாய்க் கவிதை”
    சமைத்துத் தருக என்றன !

    முத்துசாமி பாடலை மாலை கேட்டதாம். அதனால் சாலையும் கேட்டதாம்.  ஆனால் அவர் மயங்கவில்லையாம்!.

    மானும் முயலும்

    மானைப் பாடாத புலவரில்லை என்பது மானுக்குத் தெரியாதா என்ன? ஆனால் முத்துசாமி இதுவரை தன்னைப் பாடவில்லை என்னும் மனக்குறை அதற்கு இருந்ததாம். அதனால் அவரை வந்து தன்னைப் பாடும்படி வேண்டியதாம்.  “தூமயிர் குறுந்தாள் நெடுஞ்செவி குறுமுயல்” என்று சங்கப்புலவ்ன் பாடியிருக்கிறான் என்பது முயலுக்குத் தெரியும். வீரத்திற்கு அழகில்லை என்பதற்குத் திருவள்ளுவர் தன்னை உவமமாகப் பயன்படுத்திக் கொணடார் என்பதும் முயல் அறிந்ததே!. வேகமாக ஓடி ஓய்வெடுத்துத் தோல்வி கண்ட கதையில் தான் தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது முயலுக்கும் தெரியும். அதனைவிட ஆமைக்குத் தோற்ற அவமானத்தை அது இன்னும் மறக்கவே இல்லை.

    “மான்க ளிரண்டு மகிழ்ச்சியில் திளைத்து
    மாத்தமிழ்க் கவிதைக் கேட்டன – அடர்
    கானக முயல்கள் காதினை நீட்டி
    கவிதை என்றெனைக் கேட்டன !

    ‘மான்கள் இரண்டும் மகிழ்ச்சியில் திளைத்தபின்” என்பதால் ஆண்மானும் பெண்மானும் என்பதைக் குறிப்பாகக் காடடுகிறார் கவிஞர். மான் இணையாக வந்தது போலவே முயல்களும் கூட்டமாகவே வந்தனவாம்.

    குழந்தையின் புன்னகை கோடி பெறும்

    சூழ்நிலை கவிஞனை உருவாக்குகிறது. கவிதை பிறக்கிறது. தன் பிள்ளையின மழலையில் மனம் பறிகொடுத்தவர் முத்துசாமி. கவிதை எழுத வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் அமர்ந்திருந்த அவரை வானம் கேட்டது!  இடி இறைஞ்சியது. மின்னல் வேண்டியது! அன்னம் அழுதது! மானும் மண்டியிட்டது! முயலும் முயன்று பாரத்தது! கிளி பேசியும் பார்த்தது! மாலையும் கேட்டது! சாலையும் கேட்டது! அப்பொழுதெல்லாம் இளகாத கவிஞர் மனம் தன் மழலைக்கு இளகியதாம்! இரங்கியதாம். எவ்வளவு மென்மையான கற்பனை! “குழலையும் யாழையும் புறந்தள்ளும் மழலை” என்பார திருவள்ளுவர். “கொஞ்சும் மழலை கேட்கையிலே குழலும் யாழும் பொய்யன்றோ?” என்பார் மருதகாசி!. பொருள் புரியாத மழலைக்கு மயங்கினாராம் முத்துசாமி கவிஞர்.

    “அத்துணைப் பேரும் அனுதினம் கேட்டும்
    அகத்தின் கதவு திறக்கல – என்
    புத்தெழில் மழலைப் புன்னகை சிந்திட
    புலர்ந்தது ஆயிரம் கவிதை !”

    மேலே சொலலப்பட்ட பொருள்கள் எல்லாம் ஒரு நாள் அல்ல இரு நாள் அல்ல பல நாள் வந்து கேட்டும் பயனில்லை என்பதை இறுதி வரியிலே சொல்கிறார் கவிஞர். பலநாளும் விடடு விட்டு இலலையாம். “அனுதினம்” கேட்டும் என்கிறார். இடையீடு இல்லாமல் கவிஞரின் கவிதையில் பாடுபோருளாகிவிட வேண்டும் என்னுந் துடிப்பால் வந்து அலைந்தனவாம்! அஃறிணை உயிர்களோடு கவிஞரின் உறவு நிலையைப் புரிந்து கொள்ள இந்த வரிகள் உதவுகின்றன. கவிஞனின் மனம் இயல்பாகவே இப்படித்தான் இருக்க வேண்டும். கவிதை பிறக்க வேண்டும். பலபேர் புனைந்து கொண்டிருக்கிறார்கள்.

    மருதகாசியும் முத்துசாமியும்

    திரைக்கதையில் அறக்கருத்துக்களையும் சமுதாய நீதிகளையும் கலை நயம்பட எடுத்துக் கூறுவதில் மருதகாசி தனித்து விளங்குபவர். “மனமுள்ள மறுதாரம்” என்று ஒரு திரைப்படம் ஐம்பதுகளில் வெளிவந்தது. அந்தப் படத்தில் மருதகாசி எழுதிய பாடல் ஒன்றின் சரணம் இப்படி அமைந்திருக்ககிறது.

    “மாடி மனை கோடி பணம் வாகனம் வீண் ஜம்பம்!
    வாழ்வினிலே ஒருவனுக்குத் தருவதல்ல இன்பம்!
    மழலைமொழி வாயமுதம் வழங்கும் பிள்ளை செல்வம்
    மார்மீது உதைப்பதிலே கிடைபபதுதான் இன்பம்”

    மழலைகளைப் பாரத்தவுடன் முத்துசாமிக்கு ஆயிரம் கவிதைகள் மலர்ந்ததாம். மருதகாசியின் உள்ளம் இடமாறியிருக்குமோ?

    தமிழினக் கனவும் பாவேந்தரும்

    இனத்துக்காகவும் மொழிக்காகவும் பாடியவர் பாவேந்தர். பாரதி ஒளியில் பாவேந்தர் பாடிய உலகப் பார்வை ஒளியிழக்கச் செய்யப்பட்டது.

    எனையீன்ற தந்தைக்கும் தாயக்கும் மக்கள்
    இனமீனும் தமிழ்நாடு தனக்கும் என்னால்
    தினையளவு நலமேனும் பயக்கு மென்றால்
    செத்தொழியும் நாள் எனக்குத் திருநாளாகும்”

    என்று பாடியவர் அவர். ஒரு நாள் கவிதை எழுத உட்கார்ந்தாராம். தாளை எடுத்ததுதான் தெரியுமாம்.  ஒரு எழுத்துக் கூட வரவிலலையாம்! எழுத இயலவில்லையாம்!

    ஏடெடுத்தேன் கவி ஒன்று வரைந்திட”

    என்ன ஆனது? எதுபற்றி எழுத ஏட்டினை எடுத்தார்? ஏன் எழுத இயலவில்லை?  என்பதையெலலாம் பாட்டின் இறுதி வரியில் பதிவு செய்கிறார். வந்த தடைகளை வரிசைப்படுத்துகிறார்.

    1. வானம் தன்னை எழுதென்று சொன்னதாம்.
    2. ஓடையும் தாமரைப் பூக்களும் தங்களைப் பற்றி எழுதுக என்றனவாம்.
    3. அடர்ந்த காடும் பசிய வயலும் கருத்த மேகமும் தங்களை எழுதக் கூடாதா என்று கெஞ்சினவாம்.
    4. சாயலில் மயிலையொத்த மங்கையர் அருகில் வந்து தங்களைப் பாடுக என்றனராம்.
    5. சோலை தந்த குளிர்ச்சியோடு தென்றல் வந்ததாம்.
    6. தோகையுடைய மயிலும் மருண்ட மானும் வந்தனவாம்
    7. மாலைக் கதிரவன் தன் மாணிக்க ஒளியினைக் காட்டியதாம்.
    8. களங்கண்ட தமிழ் வீரன்; மலையினை யொத்த தன்தோளை வரைக என்றானாம்.
    9. இத்தனை அழகும் தங்கள் பாடுக என எத்தனித்தனவாம்! வற்புறுத்தினவாம்!

    ஆனால், ஆண்ட தமிழினம் அடிமைப்படட்டுக் கிடக்கின்ற காட்சியினைக் கண்டவருக்குக் கவிதை வரவில்லையாம். கவலை வந்ததாம். அந்தக் கவலைக்கு மூல காரணம் தாய்மொழிவழிக் கல்வி இல்லாததுதானாம். உண்மைதானே! உலகிலேயே தாய்மொழி வழி கலலாத ஒரு கீழினமாக இருப்பது தமிழினமே. “மொழி வளர்ந்தால் இனம் வளரும். இனம் வளர்ந்தால் நாடு வளரும். இது ஒரு பரிணாமம். எனவே தாய்மொழிவழிக் கல்வி பெற்றுவிட்டால் துன்பங்கள நீங்கும் சுகம் வரும் நெஞ்சில் தூய்மை உண்டாகிடும். விரம் வரும்”. இனத்தைப் பற்றித்தான எழுத நினைத்தாராம்! இனந்தான் எழுந்திருக்க முடியாமல் இப்படி இடுப்பொடிந்து கிடக்கிறதாம்! அதற்குக் காரணம் தாய்மொழிப் பற்றின்மைதான் காரணமாம். பாவேந்தர் எழுதுகிறார்.

    ஏடெடுத்தேன் கவி ஒன்று வரைந்திட — என்னை
    எழுதென்று சொன்னது வான்
    ஓடையும் தாமரைப் பூக்களும் — தங்களை
    ஓவியம தீட்டுக என்றுரைக்கும்
    காடுகழனியும் முன்னே வந்து
    கண்ணைக் கவர்ந்திட எத்தனிக்கும்
    ஆடும் மயில் நிகர் பெண்களெல்லாம்
    தங்கள் அன்பினைச் சித்திரம் செய்கவென்றார்

    சோலைக் குளிர் தரு தென்றல் வரும் — பசுந்
    தோகை மயில் வரும்! அன்னம் வரும்.!
    மாலைப பொழுதினில் மேற்றிசையில் — வரும்
    மாணிக்கப் பரிதி காட்சி தரும்!
    வேலைச் சுமந்திடும் வீரரின் தோள் – “உயர்
    வெறபென்று” சொல்லி வரைக என்னும்
    கோலங்கள் யாவும் மலைமலையாய்
    கூவின என்னை! இவற்றிடையே

    இன்னலிலே தமிழ்நாட்டிலே — யுள்ள
    என்தமிழ் மக்கள் துயின்றிருந்தார்!
    அன்னதோர் காட்சி இரக்கமுணடாக்கி — என்
    ஆவியில் வந்து கலந்ததுவே!
    இன்பத் தமிழ்க்கல்வி யாவரும் கற்றவர்
    என்றுரைக்கும் நிலை எய்திவிட்டால்
    துன்பங்கள் நீங்கும் சுகம் வரும் நெஞ்சினில்
    தூய்மை உண்டாகிடும் வீரம் வரும்

    இவ்வளவு சிக்கல்களில் தன் இனம் சிக்கிக் கொண்டிருக்கும்போது ஏடுதான் என்ன செய்யும்? எழுதுகோல்தான் என்ன செய்யும் என்பது பாவேந்தர் சிந்தனை. உலகத்து இன்பங்களையெல்லாம் தன் கள்ளங் கபடமற்ற சிரிப்பால் கொள்ளை கொள்ளும் மழலையின் சிரிப்புக்கு முன்னே உலகத்து உயிர்களைக்கவனிக்கவே நேரமில்லை முத்துசாமிக்கு! தாய்மொழிவழிக்கல்வி பாவேந்தர் சிந்தனையை ஆக்கிரமித்துக் கொண்டதைப்போல மழலையின் சிரிப்பு முத்துசாமியின் இதயத்தை ஆட்கொண்டது. கவிஞர்கள் ஒரே மாதிரிதான் சிந்திக்கிறார்கள்.

    நிறைவுரை

    நகல் எடுப்பது என்பது வேறு. தாக்கம் என்பது வேறு. முன்னது போலித்தனம். பின்னது மரபுவழிப் பயணம். முன்னது அறிந்து செய்வது. பின்னது தானே படிவது!. சமுதாய நிகழ்வுகளிலும் இயற்கை அசைவுகளிலும் மனம் பறி கொடுக்காத எவரும் கவிதையாக்கத்தில் வெற்றி பெற இயலாது. பாவேந்தரும் முத்துசாமியும் இயற்கையில் மனம் பறிகொடுத்தவர்கள்.  அவருள் ஒருவருக்கு இனப்பற்று மிகுந்திருந்த காரணத்தால் இயற்கையின் வேண்டுகோளை நிறைவேற்ற இயலவில்லை. மற்றவருடைய மனம் மழலையில் இலயித்துப் போனதால் இயற்கையைக் கவனிக்க நேரமில்லை. இரண்டு கவிஞர்களும் இயற்கையை முன்னிறுத்தித் தாம் சொல்ல வந்த கருத்துக்களைக் கவிதையாக்கியருப்பதுதான் சிந்திக்க வேண்டியது. இயற்கை சங்க இலக்கியங்களைப் பாதித்தது. பின்னாலே பாவேந்தரைப் பாதித்தது. அதற்கும் பின்னாலே முத்துசாமியைப் பாதித்திருக்கிறது!. இந்தப் பாதிப்புக்களைப் பாவேந்தர் சமுதாயச் சிக்கலோடும் முத்துசாமி மழலையோடும சார்த்திப் பாடியிருக்கிறார்கள். முத்துசாமியின் முகநூல் பதிவு  என்னைப் பாவேந்தர் பக்கம் அழைத்துச் சென்றது. இயற்கை அவர்களை அழைத்தும் அவர்கள் கவனிக்கவில்லை. இயற்கையைப் போற்றிப் பாடினாலும் இனிக்கிறது! அதனை மறுதலித்துப் பாடினாலும் இனிக்கிறது!  கனத்த இதயத்திற்குக் கருணை காட்ட இவற்றைவிட வேறு என்ன வேண்டும்!

    (தொடரும்)

    Share
  • குறளின் கதிர்களாய்…(478)

    குறளின் கதிர்களாய்…(478)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(478)

    துறந்தார்குந் துவ்வா தவர்க்கு மிறந்தார்க்கு
    மில்வாழ்வா னென்பான் துணை.

           – திருக்குறள் –42 (இல்வாழ்க்கை)

    புதுக் கவிதையில்…

    துறவு வாழ்க்கை மேற்கொண்டோர்க்குத்
    துணையாய் இருந்தே
    வேண்டுவன செய்வதாலும்,
    வறுமையில் வாடுவோர்க்கு
    உணவு போன்றவை வழங்கி
    உதவுவதாலும்,
    இறந்தோர்க்கு
    இவ்வுலகில் நீர்க்கடன்
    போன்றவை செய்வதாலும்,
    இவர்களுக்கு
    இல்லறத்தில் வாழ்பவன்
    என்பவன்
    ஏற்ற துணையாவான்…!

    குறும்பாவில்…

    துறவு வாழ்வில் உள்ளோர்க்கும்
    வறுமையில் வாழ்வோர்க்கும், இறந்து பேர்னோர்க்கும்
    இல்லறத்தான் என்பவனே துணை…!

    மரபுக் கவிதையில்…

    துறவில் வாழ்வைக் கழிப்போர்க்குத்
         துணையாய் இருந்தே உதவலாலும்,
    உறவு போல வறியவர்க்கே
         உற்ற உதவி செய்வதாலும்,
    இறந்து போன மாந்தர்க்கே
         எள்நீர்க் கடன்கள் ஆற்றலாலும்,
    அறமாம் இல்வாழ் வதிலுள்ளோன்
         ஆவான் இவர்க்குத் துணையெனவே…!

    லிமரைக்கூ…

    வாழும் பெரியோர் துறவில்,              
    வறுமையில் நலிந்தோர், இறந்தோர் இவர்களுக்கு
    இல்லறத்தான் துணையாமே உறவில்…!

    கிராமிய பாணியில்…

    பெரும மிக்கது
    இல்லறம்தான்,
    பெறருக்கு ஒதவுற
    பெரும மிக்கது
    புருசன் பொஞ்சாதியா
    சேந்து வாழுற இல்லறம்தான்..

    ஓலகத்தில
    தொறவு வாழ்க்க வாழுறவுங்களுக்குத்
    தொணயாயிருந்து ஒதவுறதாலயும்,
    இல்லாதவனுக்கு வறும தீரக்
    குடுத்துக் காப்பாத்துறதாலயும்,
    எறந்து போனவனுக்கு
    நீர்க்கடமயெல்லாம் செய்யிறதாலயும்,
    இவுங்களுக்கெல்லாம்
    சரியான தொண
    இல்லறத்தில இருக்கவன்தான்..

    அதால
    பெரும மிக்கது
    இல்லறம்தான்,
    பெறருக்கு ஒதவுற
    பெரும மிக்கது
    புருசன் பொஞ்சாதியா
    சேந்து வாழுற இல்லறம்தான்…!

    Share
  • கற்பகதரு என்னும் அற்புதம் (அங்கம் – 6)

    கற்பகதரு என்னும் அற்புதம் (அங்கம் – 6)

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா 

    இரண்டு தாத்தாக்களை நாங்கள் மறந்துவிட முடியாது. ஒருவர் எங்கள் ஈழத்தவரான தங்கத் தாத்தா சோமசுந்தரப்புலவர். மற்றவர் தமிழ் நாட்டினைச் சேர்ந்த உ.வே.சா என்று அழைக்கப்படும் உத்தமதா னபுரம்  வேங்கட  சுப்பையர் சாமிநாத ஐயர் அவர்கள். ஈழத்துத் தாத்தா கற்பகதருவாம் பனைக் கென்றேதாலவிலாசம்“  பாடிப் பனையினை வியந்து நின்றார். பனையின் ஓலையினை எங்கள் தங்கத் தாத்தா………

         ஐந்து வயதினிற் கையி லெடுக்கின்ற
                    வரிவரி யேடு முதலாக
         முந்து பலகலை யாகம மோலையில்
                 முன்ன மெழுதினார் ஞானப்பெண்ணே

    என்று பனை ஓலையின் பிறப்பாகிய எங்களின் ஓலைச் சுவடிகளை மனமிருத்தும் வகையில் பாடிப் பதித் ருக்கிறார். இந்தியத் தாத்தாவோ பனையின் கொடையான பனை ஓலையால் அமைந்த ஏடுகளை ஊரூராய்ச் தேடிச் சென்று எமக்களித்து உயர்ந்து நிற்கிறார்.

    எங்கள் முன்னோர்கள் மெஞ்ஞானத்திலும் உயர்ந்து நின்றார்கள். விஞ்ஞானத்திலும் உயர்ந்தே இருந்தி ருக்கிறார்கள். அவர்களின் அருமையான ஒரு தெரிவுதான் கற்பகதருவாய் பனையினை எடுத்தது எனலாம். பனையின் சாதாரண ஓலையினை உற்று நோக்கி அதனை சிந்தனைகளைப் பதிவிடும் ஒன்றாக மாற்றிட நினைந்தமையை வியக்காமல் இருந்திட முடியுமா! அவர்களிடம் தோன்றிய அந்தச் சிந்தனை அறிவியலின் விளைவு என்றுதானே கொள்ள முடிகிறது. குறைந்த செலவில் நிறைந்த பயனையுடைய அவர்களின் தேடலும் , அதற்காக அவர்களின் நாடலுமாகிய நிலையினை எண்ணி எண்ணி வியந்து நிற்கிறோம் அல்லவா!எத்தனையோ வகை இருக்கஎத்தனையோ மரமும் இலைகளும் இருக்க பனையின் இலையை அதாவது அதன் ஓலையினை எப்படித்தான் தேர்ந்தெடுத்தார்களோ தெரியவில்லை. அந்தத் தெரிவினால் எங்களுக்கு சிந்தனைச் செல்வங்களும் கிடைத்தன. கற்பகதருவாம் பனையும் எங்கள் வாழ்வியலுடன் இணைந்து போயும் விட்டது என்பதைக் கருத்திருத்துதல் கட்டாயமாகும்.

    பனை மரங்களில் நிறைய வகைகள் உண்டு.  எல்லாப் பனைகளது ஓலைகளும் ஏட்டுக்குப் பொருத்தமாய் அமைந்திருப்பதில்லை. தாளப்பனை  கூந்தல்பனைலாந்தர்பனை  போன்ற பனை மரங்களினது ஓலை களே  ஓலைச்  சுவடிகள் செய்ய ஏற்றனவாக அமைந்தன என்று அறிய முடிகிறது. பழுப்பு நிறம் கொண்ட ஓலைகளையே ஓலைச்சுவடிகள் தயாரிக்கத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். பொருத்தமான பனை ஓலைகளைத் தேர்ந்தெடுத்த பின்னர் – சுவடிகள் தயாரிப்பதற்கு – முதலில் பனை ஓலைகளைத் தேவையான அளவில் கத்தரித்துக் கொள்வர். இவ்வாறு கத்தரிக்கப்பட்ட ஓலைகள் மிக நன்றாக உலர்த்தப்படும். ஈரமின்றி நன்றாகக் காய்ந்த பிறகு இவ்வோலைகள் தண்ணீரில் இட்டு வேகவைக்கப்படும். இவ்வாறு இவை கொதிக்க வைக்கப்படுவதால் ஓலைகளில் ஒரு இலகுத்தன்மை ஏற்படுகிறதாம். பிறகு ஓலைகள் மறுபடியும் நன்கு காயவைக்கப்படும்காய்ந்த பிறகு கனமான சங்கு அல்லது மழுமழுப்பான கல்கொண்டு ஓலைகளை நன்றாகத் தேய்ப்பார்கள். இப்படிச் செய்வதால் எழுதுவதற்குத் தயாரான ஓலைகள் அதாவது ஏட்டுக்கு ஒரு பளபளப்பு ஏற்படும். மேலும் நேராகத் தகடுபோலவும் ஆகிவிடும். இவ்வாறு பதப்படுத்தப் படுவதனால்  ஏடு எழுதுவதற்கு ஏற்ற நிலையை அடைந்து விடுமாம். வேறு ஒரு முறையும் இதில் இருக்கிறது என்றும் அறிய முடிகிறது. அதாவது  ஓலையின்மீது  நல்லெண்ணெய் பூசி ஊற வைப்பார்களாம். இவ்வாறு செய்வதை ஓலை வாருதல்” என்று அழைத்தார்கள். குறிப்பிட்ட பனை ஓலைகளைப்  அதாவது பதப்படுத்திய ஓலைச் சுவடிகளை ஒரே அளவில் வெட்டிய பிறகு அவற்றை ஓன்று சேர்த்து இடது பக்கம் கயிறு கட்டுவதற்காக ஓட்டை போடுவார்கள். அதில் மஞ்சள் தடவிய கயிறாய் கோர்த்து ஏடுகள் விழாமல் கட்டுவார்கள். கயிற்றின்  மேல்முனையில் துளையிட்ட   செப்புக்காசினை  வைத்து விடுவார்கள். ஓலைச் சுவடியின் நீளம் அதிகமாக இருந்தால், வலது பக்கமும் ஒரு துளையிட்டு அந்த  துளையில் இரும்பினால் ஆகிய கம்பியால் சேர்த்துக் கட்டுவார்கள். இதனை ‘நாராசம்’ என் று பெயர் சொல்லி அழைத்தார்கள். 

    பனை ஓலைகளால் ஆகிய சுவடிகளை ஒன்றாக இணைக்கும் பொழுது அவற்றின் ஆரம்பத்திலும் முடிவிலும் அதாவது ஓலைச்சுவடிகளின் இருபக்கமும் தேக்கு மரத்தால் ஆன பலகையை சேர்த்து கட்டுவார்கள். ஓலைகள் பாதுகாப்பாய் இருப்பதற்கும் குலைந்து போகாமல் ஒழுங்காய் இருப்பதற்கும் இவ்வாறு எமது முன்னோர்கள் செய் திருக்கிறார்கள். நூல்களை அச்சடிக்கும் இக்காலத்தில் முன்னட்டை பின்னட்டை நூலுக்குப் பாதுகாப்பாய் இருப்பது போல் பலகையினைக் கட்டுவது இருந்திருக்கிறது. அக்காலத்தில் ஏட்டின் முன்னும் பின்னும் பலைகையினைக் கட்டியதுதான் இக்காலத்தில் நூல்களின் பின்னும் முன்னும் அட்டைகளை கட்டுவதற்கு வழி சமைத்திருக்கலாம் என்றும் எண்ண முடிகிறதல்லவா! முன்னோர்களின் சிந்தனை அறிவியல் மயமாய் இருந்தே இருந்திருக்கிறது என்பதை ஒவ்வொரு செயல்களாலும் நாம் கண்டு பெருமைப்படவைக்கிறது ! 

    பனை ஓலையினால் ஆகிய ஓலைச்சுவடிகளில் எழுதுவது என்பது இலகுவான காரியம் அல்ல. ஓலையில் எழுதுவதற்கு ஏற்றது எது என்று எண்ணி அதற்கான ஒரு கருவியையும் கண்ட எங்கள் முன்னோரை வியக்காமல் இருக்கவே இயலாது.   ஓலையில் எழுதுவதற்கென்று வடிவமைக்கப்பட்ட கருவியே எழுத்தாணி ஆகும். இதனைக் கொண்டே பனை ஓலைகளினால் தயாரிக்கப்பட்ட சுவடிகளில் எழுதினார்கள். எழுதிக் குவித்தார்கள் எனலாம். பொதுவாக இது இரும்பினால் செய்யப்பட்டதாக இருக்கும்.  ஆனால்  அரசர்களும் வசதி படைத்தவர்களும் தங் கம்வெள்ளிதந்தம்  போன்றவற்றில் செய்த எழுத்தாணிகளை வைத்திருந்தார்கள் என்றும் அறிய முடிகிறது. தந்தம் என்றவுடன் எங்களுக்கு விநாயகப் பெருமானே வந்து நிற்பார். பனை ஓலை ஏட்டுக்கும் விநாயகப் பெருமானுக்கும் ஒரு இணைப்பு இருக்கிறது. கிறித்துவுக்கு முன் எழுந்ததுதான் வியாசரது மகாபாரதம். அந்தப் பாரததத்தை வியாசர் சொல்லச் சொல்ல விநாயகப் பெருமானே எழுத்தாணி கொண்டு எழுதினார் என்பது வழங்கிவரும்  ஒரு செய்தியாகவே இருக்கிறது. வியாசர் வேகமாக கதையினைச் சொல்லி வரும்போது – எழுதிய எழுத்தாணி முறிந்து விட – விநாயகப் பெருமான் கதை இடையில் நின்று விடக்கூடாது என்று எண்ணி – தன்னுடைய ஒரு கொம்பினை அதாவது தந்தத்தை ஒடித்து பாரதக் கதையினை எழுதினார் என்பது மரபாய் நீண்ட காலம் இருந்து வருகிறது. இங்கு முக்கியமாய் மனமிருத்த வேண்டியது தந்தினாலும் எழுத்தாணி கொண்டு பனை ஓலைச் சுவடிகள் எழுதப்பட்டிருக்கின்றன என்பதே ஆகும். அத்துடன் மிகவும் தொன்மையான அதாவது பாரதக் கதையினை எழுதுவதற்கும் எங்கள் கற்பகதருவாம் பனையின் ஓலைகள் துணையாக இருந்திருக்கின்றன என்னும் செய்தியும் எனலாம். எழுத்தாணி மூலம் எழுதப்பட்ட ஓலைகளில்,  மஞ்சள்,  விளக்குக்கரிகோவை  இலைச்சாறு, ஊமத்தை இலைச் சாறு –போன்ற வற்றில் ஏதாவது ஒன்றை பூசியிருக்கிறார்கள்.ஏனென்றால்  சுவடியில் உள்ள எழுத்துக்கள் தெளிவாக தெரியவருவதற்காகவாம்.எங்களின் முன்னோர்களின் அறிவியல் முறைமையினை இங்கு கண்டு தெளிகிறோம் அல்லவா !

    தற்காலத்தில் காகிதத்தில் அச்சடிக்கும் முறை வந்துவிட்டது. ஆயிரக்கணக்கில் பல நூல்கள் குறிப்பிட்ட மணி நேரத்தில் அல்லது நாளில் எங்களின் கைகளுக்கு வந்துவிடும். அதே வேளை அந்த நூல்களுக்கான நகல்களையும் இலகுவாகப் பெற்றிடவுமான வாய்ப்பும் இன்று எமக்குக் கிடைத்துள்ளது. ஓலைகளில் எழுத் தாணி கொண்டு எழுதப்பட்ட பல நூல்களையும் அக்காலத்தில் பிரதிபண்னும் நிலையும் காணப்பட்டது என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது. சுந்தரமூர்த்தி நாயனாரைத் திருமணம் செய்யவிடாமல் எம்பெருமான் கிழப்பிராமண வடிவத்தில் வந்து வாதங்கள் செய்துதடுத்தாட் கொண்டார் என்பதைப்  புராணத்தால் அறிகிறோம். சுந்தரரும் அவர் வழி வந்தவர்களும் தனக்கு அடிமை என்று சபையில் கூறி அதற்கான ஆதாரமாக தன் மடியில் இருந்த ஓலையினைக் காட்டுகிறார். கிழப்பிராமணர். அந்த ஓலையினை எட்டிப்பறித்து சுந்தரர் கிழித்து விடுகிறார். அப்பொழுது அந்தக் கிழப்பிராமணர் “நீ எப்படியும் இந்த மூல ஓலையைக் கிழிப்பாய் என்று தெரிந்தே நான் இதன் நகல் ஓலையினையும் கொண்டு வந்திருக்கிறேன்” என்று சபையில் நகலினைக் காட்டி சுந்தரரை ஆட் கொண்டார் என்று புராணத்தால் அறிகிறோம். இங்கு முக்கியமான செய்தி என்ன வென்றால் மூல ஓலைக்குப் படி ஓலை எடுக்கும் வழக்கமும் இருந்திருக்கிறது என்பதேயேயாகும். நூல்களைப் பல பிரதிகள் அச்சடிப்பது போல அன்று மூல ஓலைச் சுவடிகளில் இருந்து அதை பிரதி எடுத்து எழுதும் முறையும் இருந்திருக்கிறது. அவ்வாறு எழுதுவதற் கென்றே தனியாக  எழுத்தாளர்களும் இருந்திருக்கிறார்கள். 

    அப்படியான –  அவர்கள் வாழ்ந்த தெருவுக்கு எழுத்துக்காரத் தெரு என்று பெயரும் வைக்கப்பட்டிருக்கிறது. இப்படி நகல் எடுப்பவர்கள் அந்தச் சுவடிகளின் கடைசி வரியின் கீழ் கையெழுத்திட்டு தமது பெயரையும்ஊரையும் எழுதி இருந்தார்கள் என்பதையும் அறிகின்றோம். நகல் எடுப்பவர்கள் பலர் இருந்த படியால்த்தான் முன்னோர்களின் பல ஏட்டுச் சுவடிகளை அச்சடித்த நூலாக்கி நாங்கள் எங்களின் அறிவினை அகலமும் ஆளமும் ஆக்கிட முடிகிறது என்பதையும் கருத்திருத்தல் அவசியமேயாகும். இன்னு மொரு செய்தியையும் இங்கு நாம் பார்த்திட வேண்டும். அதாவது-ஓலை எழுதுவதையே தொழிலாகக் கொண்டோர் தமிழ் மண்ணில் வாழ்ந்திருக்கின்றார்கள். அவர்களுக்கு முறையாக ஊதியமும் வழங்கப் பட்டும் இருக்கிறது. இவர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியத்தைக் குறிக்க ஓலைக்காசுஓலை எழுத்துப் போறு, போன்ற சொல்லாடல் பயன்படுத்தப்பட்டிருப்பதாக பிற்காலச் சோழர் காலத்திய கல்வெட்டுகள் வாயிலாக அறியக்கிடக்கிறது. பழம் பெரும் சொத்துக்களாய் அமைந்திருக்கும் பனை ஓலையினால் ஆன ஏடுகளைப் பக்குவமாய் பேணிக் காத்திட எங்கள் முன்னோர்கள் கோவில்களையும்,   அரண்மனை களையும்,   மடங்களையும்அருங்காட்சி அகங்களையுமே தேர்ந்தெடுத்தார்கள் என்பதும் மனங்கொள்ளத் தக்கதாகும்.

    தமிழர்களின் எழுத்து மரபுக்குத் தனித்துவமான குணமுண்டு. அது பனை தந்த விழுதுகளால் வேர்விடத் தொடங்கியது. பனை ஓலைகள் தமிழர்  வரலாற்றைத்  தாங்கி நின்ற அரண்களாகி இருக்கின்றன அல்லவா ! ஆதித் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஏடுகள் பனை மர ஓலைகளே என்பதும் கற்பதருவுக் கான பெருமை அல்லவா !  மன்ன ராட்சி கால நிகழ்வுகளை விளிக்குமிடத்து மன்னர்களுக்கும் அமைச்சர்களுக்குமிடையே நடைபெறும் உரையாடல்களின் போது ஓலை என்கின்ற சொல்லாட்சி இடம் பெற்றி ருப்பதையும் அறிய முடிகிறது. சங்க இலக்கியங்களான அகத்திணை,  கலித்தொகைஅகநானூறு,  நவ நீதிப்பாட்டியல் போன்றவைகளில் “ஓலையைக் குறிக்கும் சிறப்புப் பெயர்கள் இடம் பெற்றிருப்பதும் நோக்கத்தக்கதாகும்.

    சங்க கால மக்களின் மரபார்ந்த அறிவுச் செழுமையைச் சமகாலத் திற்கு கைமாற்றிய ஊடகமாக கற்பக தருவாம் பனை விளங்குகின்றது என்பதும் கருத்திருத்த வேண்டியதே!. பனை ஓலைகள் இல்லாதிருந்தால் தொடக்க காலத்தில் புழக்கத்தில் இருந்த தமிழ் இலக்கணஇலக்கியங்கள் யாவும் புலவர்களின் நாவிலே தவழ்ந்து காற்றோடு கலந்தே போயிருக்கும்.

    பனை மரத்திலிருந்து பெயர்த்து எடுக்கப்பட்ட ஓலைக் கீற்றில் எடுத்த எடுப்பிலேயே எழுத்தாணி கொண்டு எழுத்தை எழுதிவிட முடியாது. எழுதுவதற்கு ஏற்ப ஓலைகளைப் பதப்படுத்தும் தொழில் நுட்பத்  தினைத் தமிழர்கள் அறிந்திருக்கிறார்கள். அருங்காட்சியகத்தில் ஓலைச் சுவடிகள் இன்றும் காட்சிப் படுத்தப்படுவதற்கு பதப்படுத்தல் சார்ந்த நுட்பமும் காரணமாகும். ஓலைகளை எழுத்தாணி கொண்டு எழுதுவதற்கு ஏற்றாற்போன்று தயார்ப்படுத்துவதற்கு “ஏடு பதப்படுத்துதல்‘ என்கின்ற தொழில் நுட்பத்தினைக் கையாண்டிருக்கின்றார்கள் எங்களது முன் னோர்கள் என்பது வியப்பாய் இருக்கிறதல்லவா ! அரேபிய நாட்டைச் சேர்ந்த பயணி அல்புருணி என்பவர் 1030இல் தென் இந்தியாவுக்கு வருகை தந்தபோது எழுதிய பயணக்குறிப்பில் பனைமரம் குறித்தும் பனை ஓலையில் எழுதும் முறை குறித்தும் வியந்து எழுதியுள்ளார். கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில் இந்தியாவில் தரங்கம்பாடி என்னும் இடத்துக்கு கி.பி 1706 இல் வந்தவர்தான் சீகன்பால்கு என்னும் மத போதகராவர். இவர் தமிழை நன்கு கற்றார். ஜேர்மனியிலுந்து அச்சு யந்திரங்களை வரவழைத்து  ஏட்டில் இருந்த பல தமிழ் நூல்களை அச்சில் கொண்டுவந்து சேர்த்தார். அச்சிலே ஏற்றுவதற்கு இவர் பல தமிழ் ஏட்டுச்சுவடிகளைத் தனது கைகளால் தொட்டுப் பெருமிதம் அடைந் திருக்கிறார். தமிழர்கள் பனை ஓலையினைத் தேர்ந்தெடுத்து அதனை ஏடுகள் என்னும் முறையில் ஒழுங் கமைத்து அதில் எழுதியதையும்பராமரித் ததையும் கண்டு வியந்து மிகவும் பெருமைப்படக் கூறினார் என்றும் அறியமுடிகிறது. இப்பொழுது செய்திகளை அனுப்பிடப் பலவழிகளும்பல நிறுவனங்களும் இருப்பதுபோன்று – அக்காலத்திலும் இருந்திருக்கின்றன. அதாவது செய்தியினைத் தூதாக அறிவிப்பதில் பனையின் ஓலைகள் எந்தளவு முக்கியத்துவம் உடையனவாக விளங்கி இருந்திருக்கின்றன என்பதற்கு அக்கால நாட்டார் பாடல்கள் சான்றாகி இருக்கின்றன. இந்த வகையில் கி.பி நான்காம் நூற்றாண்டினைச் சேர்ந்த கல் வெட்டு ஒன்றினால் ஓலைதூது” முறை இருந்ததாய் அறிய முடிகிறது.  

    (வளரும்) 

    Share
  • வணிகர் வீரம் உரைக்கும் கல்வெட்டுகள்

    வணிகர் வீரம் உரைக்கும் கல்வெட்டுகள்

    சேசாத்திரி ஸ்ரீதரன்

    பண்டைய காலத்தில் எல்லாப் பொருளும் ஒரே இடத்தில் கிடைப்பதில்லை என்பதால் செல்வர்களும் அரசர்களும் பொருள் கிடைக்கும் இடத்திற்கு ஆளை அனுப்பி பொருளை தருவித்துக் கொண்டனர். பொருள் கொண்டு வந்து கொடுக்கும் ஆளை  “அர்ஈதன்” இதாவது, பொருள் கொண்டு போய் கொடுப்பவன் (delivery man) என்றனர். இந்த அர்ஈதன்கள் (அர் – பொருள்; ஈதன் – கொடுப்பவன்) கால ஓட்டத்தில் தாமே பொருள்களை கிடைக்கும் இடத்தில் வாங்கி தேவைப்படுவோருக்கு இன்னொரு பொருளுக்கு மாற்றாக விற்று வந்தனர். இவ்வாறான வினையில் ஈடுபட்டோர் இதனால் வணிகர் எனப்பட்டனர். தமிழ் பிராமி கல்வெட்டுகள் “அரிதன்” என்று குறிப்பது பொருள் கொண்டு போய் கொடுப்பவர்களையே ஆகும். இந்த வணிகரால் செல்வர், அரசர் மட்டும் இன்றி இனி எளிய மக்களும் தொலைவில் கிடைக்கும் பொருள்களை எளிதில் வாங்கி நுகர முடிந்தது. இப்படி ஒரு இடை மனிதராக (middle man) உருவானவரே வணிகர். அர்ஈதனாக இருந்த போது கொண்டு கொடுப்பதற்கு கூலி மட்டுமே பெற முடிந்தது ஆனால் வணிகர் ஆன போது செல்வச் செழிப்பில் மிதந்தனர். வாழ்க்கைத் தரம் உயர்ந்தது. ஆனால் அவர் தொழிலுக்கு கேடாக ஆறலைக் (ஆறு – வழி, அலை – திரியும்) கள்வர் என்னும் வடிவில் நாட்டுக் கிழார்கள் (knight), வேள் (duke) என்னும் அரசர்கள் வணிகரைக் கொன்று அவர் பொருளைக் கவர்ந்து கொண்டனர். இதனால் தம் உயிரையும் பொருளையும் காக்க வணிகர் குழுவாக செயற்பட்டு தமக்கென ஒரு தனி படையையே (private army) கட்டிப் பேணினர். இதற்கு ஆகும் செலவை வணிகர் குழுக்கள் பகிர்ந்து கொண்டன. இதற்கு சான்றாக வணிகர் பலர் போர் வீரராக உயிர் நீத்த வரலாறு கல்வெட்டுகளில் பதிவாகி உள்ளன. இத்தகைய வணிகர் படையை வேந்தர்களும் அவ்வப்போது கூலிப்படையாக துணை கொண்டுள்ளனர். இப்படி வணிக வீரர் ஈட்டித் தந்த வெற்றிக்கு கைமாறாக எட்டி, காவிதி ஆகிய பட்டங்களை வேந்தர் வணிகருக்கு வழங்கினர். எட்டி என்ற உயர்ந்தோன் என்ற சொல் பின்பு சகர முன்மிகை பெற்று “செட்டி” ஆனது. இனி வணிகர் குறித்த கல்வெட்டுகளுக்கு விளக்கம்.

    திருப்பூர் மாவட்டம் ஆலங்காயம் வட்டம் ஏழுமலை என்னும் ஏலகிரி குண்ட்ரெட்டியூர் மலைச்சரிவில் உள்ள தென்னந்தோப்பில் காணப்படும் 6 வரி & 16 வரி நடுகல் கல்வெட்டுகள்

    1. சகரை யாண்டு தொள்ளாயிர தொ
    2. ன்றாவதில் மிலாட்டு பாகனூருடைய ப 
    3. கழன் சாத்த பிரானாகி காவூர் செட்டி 
    4. எருமைத் தொறுக்  கொள பூ 
    5.  _ _ _  கைக்க
    6. ளன் பட்டார் 

    சாத்த பிரான் – வணிகர் தலைவன்; தொறு – மந்தை;

    விளக்கம்: 10 ஆம் நூற்றாண்டு 979 இல் வெட்டப்பட்ட கல்வெட்டு. மேலை கங்கர் – சோழரிடையே போரின் காரணமாக இப்பகுதி அவ்வப்போது ஆட்சி மாறி இருக்க வேண்டும் போல தோன்றுகிறது. இதனால் வேந்தர் பெயர் குறிக்காமல் சக ஆண்டு 901 என்று குறிக்கப்பட்டது. மிலாடு நாட்டின் பாகனூருடைய புகழன் வணிகர் தலைவனாகிட (சாத்த பிரான்) அவனது ஆள் காவூரில் வாழும் செட்டி எருமை மந்தையை கொள்ளையிட அப்போது நடந்த பூசலில் கைக்களன் வீர சாவடைந்தான்.  அவனுக்கு இந்நடுகல் நடப்பட்டது. தொடக்கத்தில் தமக்கென படை பேணிய செட்டிகள் பின்பு இடையில் அரசர் நிதி உதவியின்மையால் பிறர் செல்வங்களைக் கவர ஆறலை கள்வர்கள் போல செயற்பட்டது இதில்  தெரிகிறது.    

    ஸ்ரீ சகர யா / ண்டு தொள் / ளாயிர / த்து ஒன்றா / வது எயிலு / டைய மாணிக் / க சட்டன் துக்/ கையனாகி   பி / ருதி ராமசெட் / டி தம்பி  குண / ராமனாகிய  எரி / யும் வீரசெட்டி ஐ / யம் புழுகூர் நாட் / டு எருமை தொறுக் / கொள்ள _ __ / ம் மெதிச்சுமாந்  

    விளக்கம்: 10 ஆம் நூற்றாண்டு 979 இல் வெட்டப்பட்ட கல்வெட்டு. மேலை கங்கர் – சோழரிடையே போரின் காரணமாக இப்பகுதி அவ்வப்போது ஆட்சி மாறி இருக்க வேண்டும் போல தோன்றுகிறது. இதனால் வேந்தர் பெயர் குறிக்காமல் சக ஆண்டு 901 என்று குறிக்கப்பட்டது. எயில் நாட்டு மாணிக்கச் சட்டன் துக்கையனாகிய போது பிருதி ராம செட்டியின் தம்பி குணராமனாகிய சினம் கொண்ட (எரியும்) வீர செட்டி ஐம்புழுகூர் நாட்டின் (வாணியன்பாடி) எருமை மந்தையைக்  கொள்ளையிட மெதிச்சுமான் என்பவன் வீர சாவடைந்துள்ளான். 

    பார்வை நூல்: நடுகல் கல்வெட்டுகளும் சிற்பங்களும், தொகுதி I  பக்கம் 286 & 287. ஆசிரியர்: ச. கிருஷ்ணமூர்த்தி. வெளியீடு: மெய்யப்பன் பதிப்பகம்

    கிருஷ்ணகிரி மாவட்டம் சென்ன சமுத்திரம் மலையடிவாரத்தில் உள்ள மலையதிம்மன் கோயில் 9 வரிக் கல்வெட்டு

    1. சுவஸ்திஸிரி மனை_ _ _ த்த _ _ _ [கை]  
    2. சுரப்பாலமரசர் மகந் துக்கமரசர்கள் 
    3. உலோக்கமாணிக்க செட்டி கூ _ _ _ 
    4. முக்கித் தட்ட மினயர்த் தம்பி உலோ 
    5. க்கமாணிக்க செட்டி தன் அள பூசல் 
    6. போகி அளவை காத்து அமை
    7. கிலந் திரிகிலந்  முனைகிலந்
    8. அணிகிலந் இ[வீர]ங் கவா 
    9. லை 

    கூ(டு கு)முக்கி – மூங்கில் கூட்டை உடைத்து; தட்ட – கவர; அள – உப்பு; அமைகில் – அமராமல்; திரிகில் – நடமாடாமல்; முனைகில் – முயலாமல்; அணிகில் – மாற்று உடை பூணாமல்; கவா – இரண்டு குன்றுகள் கூடும் கவடு; ஆலை – கோவில் 

    விளக்கம்: 14 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு. அரசர் பற்றிய குறிப்பு ஏதும் இல்லை. கைசுரப்பாலமரசர் மகன், துக்கமரசர்கள் ஆகியோர் உலோக மாணிக்க செட்டியின் உப்பு சேமித்த மூங்கில் கூடையை உடைத்து உப்பைக் கவர்ந்து கொண்டு போக  மீனவர்த் தம்பி  உலோகமாணிக்க செட்டி தன் உப்பை மீட்க சண்டையில் போய் உப்பை மீட்டுக் காத்து தனக்கு மருத்துவம் கூட மேற்கொள்ளாமல் உட்காராமல், எங்கும் நகராமல், முனைப்பு ஏதும் காட்டாமல், மாற்று உடை அணியாமல் அப்படியே இருந்தபடி இருந்து இறந்து போனான். இந்த வீரனுக்கு மலை கூடும் இடத்தில் ஆலயம் அமைக்கப்பட்டது.

    “மீனவர் தம்பி” என்பது  மினயைர்த் தம்பி என்று பிழையாக தட்டச்சு செய்யப்பட்டுள்ளது. அச்சாகும் முன் இன்னொருவரை கொண்டு பிழை சரிபார்த்த பின் அச்சுக்கு அனுப்ப வேண்டும். உப்பு வணிகம் மீனவரே மேற்கொள்வது என்பதை வைத்து பிழையை ஊகிக்க முடிந்தது. உலோக மாணிக்கம் மீனவச் செட்டியார் ஆவான். உப்பு வணிகர் கடற்கரையில் இருந்து நெடுந்தொலைவு சென்று கிருஷ்ணகிரியில் உப்பு விற்றதற்கு இக்கல்வெட்டு சான்றாகிறது.

    பார்வை நூல்: த நா தொ து வெளியீடு, கிருஷ்ணகிரி மாவட்ட கல்வெட்டுகள், பக்கம்  48

    தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் கணப்பனூர் 7 வரி நடுகல் கல்வெட்டு

    1. ஸ்ரீ சிவமார பருமற்கு யாண்டு நாற்பத்தே 
    2. ழாவது கந்த வாணதி அரைசரு புறமலை நாடா
    3. ள அவர் மகனார் தெளிய நி[ஒ]ஆர் சேவகர் வாணிக
    4. ச்  சடைனார் வெட்டக்கியார் கூடல் [வந்துவிட] அவர் 
    5. மே ஆனயா
    6. டி நின்று செ
    7. ன்று பட்டார்   

    சேவகர் – படைத் தலைவர்;  ஆடி – போரிட்டு; நின்று – நிறுத்திவிட்டு

    விளக்கம்: மேலை கங்க வேந்தன் முதலாம் சிவமாரனின் 47 ஆம் ஆட்சி ஆண்டு கி.பி. 726 இல் அவருக்கு அடங்கி புறமலை நாட்டை கந்த வாண அரசர் ஆண்டு கொண்டிருந்த போது அவரது மகன் தெளிய நி[ஒ]ஆரின் படைத் தலைவர் வாணிகச் சடையனார் அரசன் வெட்டக்கியார் கூடல் ஊர் மீது படையெடுத்து வந்துவிட அவர் மேல் யானை மீது போர் புரிந்து நிறுத்திவிட்டு இளைப்பாறி பின் மீண்டும் போருக்கு சென்று வீரச்சாவடைந்தான் வாணிகச் சடையன். படைத் தலைவரான வணிகர்  சடையனார் வாணர் சார்பில் யானை மீது ஏறி போரிட்டுள்ளார் என்பது அவர் யானை ஏற்றப் போரில் நல்ல பயிற்சி பெற்றவர் என்பதை உணர்த்துகிறது.

    பார்வை நூல்: த நா தொ து வெளியீடு, தருமபுரி கல்வெட்டுகள் தொகுதி I, பக்கம் 7. எண் 1973 /  47

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் எல்காம் வலசு என்னும் ஊரில் கிட்டிய 13 வரிக் கல்வெட்டு இப்போது கோவை அகழ்வைப்பகத்தில் உள்ளது.

    1. ஸ்வஸ்திஸ்ரீ  தெந் க
    2. ரை நாட்டு நீலம்
    3.  பேரூர் னானாதேசி 
    4. திசை மடி எறி
    5.  யூர் எறிவீரபட்ட
    6. ணக் கல். அஞ்சு 
    7. கரை நாடும் 
    8. அடிக்கீழ் தளமு
    9. ம்  பதினெண்  வி
    10. ஷயமும் எம்மி
    11. லிசைந்தபடி மீதளத்தில்  நாலுவாசலி 
    12. ல் பட்டயார் வசம் நாலு காலும் சிங்காத
    13. னமும் உடையாராக 

    எறிவீர பட்டணம் – காவல் வீரருக்கு சிறப்பு உரிமை தந்து தங்குவதற்கான மனை கொண்ட வணிகர் ஊர்; மீதளம் – மேல் தளம், கண்காணிக்கும் கோபுரம்; நான்கு கால் – நான்கு சாவடி; பட்டாயர் – படை நோட்டகர்;  

    விளக்கம்: 14 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு என கருதப்படுகிறது. அரசர் ஆட்சி ஆண்டு குறிப்பு ஏதும் இல்லாத வணிகர் உடன்படிக்கைக் கல்வெட்டு. தென்கரை நாட்டு (தாராபுரம்) நீலம் பேரூரில் உள்ள நானா தேசிக வணிகரும் திசை ஆயிரத்து  ஐந்நூற்றுவரும் மடிஎறியூரில் நிறுத்திய காவல் வீரருக்கான தங்கும் மனையின் உடன்படிக்கைக்  கல்வெட்டு. ஐந்துக்கரை நாட்டு வணிகரும் அடிக்கீழ்த்தள வணிகரும் பதினெண் விஷயக் குழு வணிகரும் ஏற்படுத்திக் கொண்ட உடன்பாட்டின்படி கண்காணிப்பு கோபுரத்தில் நான்கு வாசலில் நிற்கும் படை நோட்டகர் வசம் நான்கு சாவடியும் சிம்மாசனத்தையும் கண்காணிக்கும் பொறுப்பை ஒப்படைப்பதாக உடன்பட்டனர். பல வணிகர் குழுக்கள் நிதி பங்களிப்பதால் இந்த உடன்பாடு தேவைப்பட்டது போலும்.

    பார்வை நூல்: த நா தொ து வெளியீடு, திருப்பூர் மாவட்ட கல்வெட்டுகள், பக்: 142 – 143

    கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் கடத்தூர் ஊரில் அமைந்த மருதீசர் கோவில் கோபுர வாசல் இடது நிலைக் காலில் உள்ள 11 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ  வீர 
    2. ராஜேந்திர தேவற்கு 
    3. யாண்டு பத்தாவ
    4. து கடற்றூர் வெ
    5. ள்ளாந் கள்ளந் ப
    6. றையந் நரவீரகே
    7. ரழச் சிலை செட்டி 
    8. இட்ட திருநிலை வாய் 
    9. முகவணை உ
    10. த்தரமும் திருக்க
    11. தவும் இட்டேந்   

    திருநிலை – கதவு நிலை; முகவணை – முகப்பு; உத்தரம் – விட்டம்  

    விளக்கம்: கொங்குச் சோழன் வீரராசேந்திரனின் 10 ஆம் ஆட்சி  ஆண்டு கி.பி. 1217 இல் கடத்தூர் மருதீசர் கோவில் நுழைவாயிலுக்கு கதவுத்  திருநிலைகள், வாயில் முகப்பு, விட்டம், கதவு ஆகியனவற்றை வெள்ளாளன், கள்ளன், பறையன், நர வீரகேரள சிலை செட்டி ஆகிய நால்வரும் செய்வதற்கு வேண்டிய பெரும் பொருள் உதவியும் பண உதவியும் நல்கினர். நான் அவற்றை செதுக்கிப் பொருத்தினேன் என்கிறார் சிற்பி. வெள்ளாளன், பறையன், கள்ளன், செட்டி ஆகிய நால்வரும் வணிகருடைய தனிப் படையில் (private army) இருந்ததால் நால்வரும் சேர்ந்து இந்த திருவாசலை கட்டியுள்ளனர். கட்டி முடிந்த பின் கோவில் உள்ளே சென்று சாமி கும்பிட்டுள்ளனர். இதனால் பறையர் தீண்டாமை அப்போது இருந்திருக்க வாய்ப்பில்லை என்பதை உணர முடிகிறது. மனுஸ்மிரிதிப்படி போர்த் தொழில் சத்திரியருக்கு மட்டுமே உரியது. ஆனால் அதை மீறி வணிகர் போரில் ஈடுபட்டதோடு அல்லாமல் அவர்ணரான பறையரையும் போரில் ஈடுபடுத்தி மனுஸ்மிருதியை அவமதித்துள்ளனர். அதே போல தமக்கு தராத உரிமையை மீறிப் போர்த்  தொழிலில் ஈடுபட்டு பறையரும் மனுஸ்மிருதியை அவமதிதுள்ளனர். அட என்ன இது இங்கே மனுஸ்மிருதியையே  வர்ணாசிரமத்தையே காணோமே? எங்கே ஓயாமல் மனுஸ்மிருதியை வசைபாடும் இந்த தலித்தியர், திராவிடர், கம்யூனிஸ்டுகள் இந்த விதிமீறலுக்கு விடைசொல்ல வருவாரா?

    பார்வை நூல்: த நா தொ து வெளியீடு, கோயம்புத்தூர் மாவட்ட கல்வெட்டுகள் தொகுதி -I, பக்கம் 190

    தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் சுல்தானிப்பாடி (நரிப்பள்ளி) ஊரில் தனியார் கொள்ளையில் உள்ள 13 வரி நடுகல்

     _ _ _ / னார் மீய் / கொன்றை நாட்டு / மைற்றம்பள்ளி / மாம்கோடு பெரு / மக்கள் பறைகட் / டியாரு  பாப்பம் / பாடி எறிந் / து தொறு கொண்ட ஞான்று  / வாண இரவஞ்சி / பட்டான் / கொற்றன் காடன் / (நடுவித்த) கல்  

    விளக்கம்:  பல்லவன் சிம்மவிஷ்ணுவின் மூன்றாம் ஆட்சி ஆண்டு கி.பி. 557 இல் (தருமபுரி கல்வெட்டுகள் தொகுதி  I எண் 1974/63 பக். 19 இதே செய்தியை கூறுவதில் இருந்து அறிந்தது). மேல் கொன்றை நாட்டின் மைற்றம்பள்ளி மாங்கோடு ஊரில் உள்ள பறை கட்டியார் பாப்பம்பாடியை அழித்து கால்நடை மந்தையை கவர்ந்து சென்ற போது அப்போரில் வாண இரவஞ்சி என்பவன் வீர சாவடைந்தான். அவனுக்கு கொற்றன் காடன் நடுகல் நட்டுவித்தான். கட்டி என்பது கங்கருடைய பட்டப்பெயர். அதை ஊர் தலைவனான பறையன் ஒருவன் இங்கே தாங்கி உள்ளான். மேற்கண்ட கல்வெட்டிற்கு சான்றாக பறையர் தொறு பூசலில், போரில் பங்கு கொண்டது.

    பார்வை நூல்: பண்டைய தமிழ்ச் செவ்விலக்கியங்களும் நடுகற்களும், ர. பூங்குன்றன், பக்கம் 180 செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன வெளியீடு.  

    தருமபுரி மாவட்டம் பால்வாடி ஊரின் கிழக்கேயுள்ள வேடியப்பன் கோயில் 2 வரிக் கல்வெட்டு

    ஸ்ரீ தகடூர் படையு ளெறிந்து /  பட்டார் பரைகளியனார் கல்  

    விளக்கம்:  இது வேந்தன் பெயர் குறிப்பில்லாத 8 ஆம் நூற்றாண்டு நடுகல் கல்வெட்டு. இது கால்நடைகளை கொள்ளையிட்ட சண்டை அல்ல, மாறாக தகடூர் படையுள் சீறிப்பாய்ந்து பகைவரை வெட்டி வீரசாவடைந்த பறையன் களியனின் நினைவில் நட்டுவித்த கல். பறையர் போரில் பங்குகொண்ட பதிவுடைய அரியதான கல்வெட்டுகளில் இதுவும் ஒன்று. 

    பார்வை நூல்: த நா தொ து வெளியீடு, தருமபுரி  மாவட்ட கல்வெட்டுகள், எண் 1973/127

    மன்னராட்சி என்றாலே பாகுபாடு (discrimination) தான். ஒரே படைத் துறையில் பணியாற்றிய பறையருக்கு பள்ளரைக் காட்டிலும் கூடுதல் சலுகைகள், சமூக உரிமைகள். இதனால் சில நூற்றாண்டுகள் கழித்து பறையருக்கும் பள்ளருக்கும் இடையே பிணக்கு, சச்சரவு மேலெழுந்தது. அதை காஞ்சிபுரத்திற்கு போய் கல்வெட்டு பார்த்து தெளிவுபடுத்திக் கொண்டனர். அதே போல பட்டடை (படைக்) குடிகளான கைக்கோளர், வாணியர் இடையே இந்த சலுகைகள், சமூக உரிமை குறித்து சர்ச்சை எழுந்தது. வாணியர் உடைத்த சலுகைக் கல்வெட்டை கைக்கோளர் மீண்டும் கல்வெட்டாக வெட்டிக் கொண்டனர். இது ஏனென்றால் அவரவர் இயலுமைக்கு தக்கபடி வாழலாம் என்று மன்னர்கள் உரிமை தரவில்லை என்பதால் தான். மன்னர்கள் இப்படி ஏற்படுத்திய படைத்துறைப் பாகுபாடு மன்னராட்சி ஒழிந்த பின்னும் சமூகத்தில் ஏற்றத் தாழ்வை நிலைப்படுத்தி விட்டது. நிலவுடைமை சாதிகளுக்கும் ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கும் இடையே நிலவும் இன்றைய சாதி ஏற்றத் தாழ்வுகளுக்கு மன்னராட்சியில் இருந்த பாகுபடுத்திய சலுகைகளே, சமூக உரிமைகளே காரணமாக உள்ளன. ஆனால் மன்னர்கள் ஏற்படுத்திய இந்த ஏற்றத் தாழ்வை இந்து மதம் தான் ஏற்படுத்தியது, சனாதன தர்மம் தான் ஏற்படுத்தியது, வர்ணாசிரம  மனுஸ்மிருதி தான் ஏற்படுத்தியது, பிராமணர் தான் ஏற்படுத்தினர் என்று அரசியலார் பொய் புகட்டி வெறுப்பை வளர்த்துவிட்டுள்ளனர் குறிப்பாக திராவிடர், தலித்தியர், கம்யூனிஸ்ட்டுகள் போன்றோர். இவர்கள் ஏன் ஆண்ட பரம்பரை என்போரை இதற்கு பொறுப்பாக்கவில்லை? கொங்குநாட்டில் இந்த தனி சலுகைகள், உரிமைகள் குறித்த கல்வெட்டுகள் ஆங்காங்கே அறியப்பட்டுள்ளன. கீழே அத்தகையதோர் கல்வெட்டு.
    https://www.vallamai.com/?p=90405

    https://www.vallamai.com/?p=109402

    கோயம்புத்தூர் மாவட்டம் அவிநாசி வட்டம் அவிநாசியில் கருணாம்பிகை  கோயில் அர்த்த மண்டப வடக்கு சுவரில் உள்ள  19 வரிக் கல்வெட்டு 

    1. ஸ்வஸ்திஸ்ரீ  திரிபுவந சக்கரவர்த்தி கோநேரிந்மை  கொண்
    2. டாந்  வட பரிசார நாட்டிற் பாப்பார் சாந்றாற்கு நம்மோலை குடு
    3. த்தபடியாவது இவர்கள்  நம் சரக்குக்குப் பொருள் வைத்தமை
    4. யில் இவர்களுக்கு நாம் குடுத்த வரிசையாவது மேலே
    5. ற்றமுந் துலாகமுங் கிழேற்றங் குதிரையிந் தழையுஞ் 
    6. சீனக்குடையுஞ் சேகண்டியும் பெற்று வருவார்களாக 
    7. வும்  மைச்சுக்கு சாந்திடப் பெறுவார்களாகவும் இரட்டை
    8. த்தலைக் கடைக்குக் கோற்  கட்டிக் கொள்ளப் பெறுவார்
    9. களாகவும்  படைக் கணிக்கு ஆரம் பூணப் பெறுவார்களாகவு
    10. ம் பச்சைப்பிடாம் போர்க்கப் பெறுவார்களாகவும் தங்
    11. கள்  மக்களுக்குப் பொந்நிந்  காறைக் கட்டப் பெறுவார்களா
    12. கவும் கல்லியாணத்துக்கு கட்டணங் கட்டி ஏறி ஊர்  
    13. சூழப்  பெறுவார்களாகவும். இவ்வரிசைகள்  இவர்கள் மக்கள் 
    14. மக்களுக்கு சந்திராதித்தவரை  செல்வதாகவும் இப்படி 
    15. செம்பிலுஞ் சிலையிலும் வெட்டிக் கொள்ளப் பெறுவார்களா
    16. கவும் நம்மோலை குடுத்தோம். இவை எல்லாம் வல்ல சோ
    17. ழ  மூவேந்த வேளாந் எழுத்து. யாண்டு பதிநஞ்சாவது  
    18. நாள் முந்நூற்றிருபத்திரண்டில். இப்படிக்கு வாண
    19. ராய தேவந் எழுத்து.          

    சான்றார் – அறவோர்; சரக்கு – கருவூலம்; வரிசை – சலுகை, உரிமை; மேலேற்றம் – மேலே சாயும்;  துலாகம் – ஏற்ற ஏணி, picotah; கிழ்ஏற்ற குதிரை – சேணத்தில் ஏறாத குதிரை; தழை – மயில்தோகை விசிறி; மைச்சு – சுவர்; கடைக்கோல் – இணைக்கும் கோல்; படைக்கணி – படுக்கும் கட்டிலின் கால், தலை தடுப்பு பலகைக்கு அழகிய பித்தளை,மரச் செதுக்கலை அணிவிக்கலாம்; பச்சைப்பிடாம் – போர்வை ; பொன் காறை – பொன் கழுத்தணி; கட்டணம் – சுமந்திடும் தோளி (doolie)

    விளக்கம்: கொங்குச் சோழன் வீர ராசேந்திரனின் 15 ஆம் ஆட்சி ஆண்டு கி.பி. 1222 இல் 322 ஆம் நாளில் இக்கல்வெட்டு வெட்டப்பட்டது. வடபரிசார நாட்டுப் (அவிநாசி) பார்ப்பனரான சான்றோர்க்கு சலுகைகள், உரிமைகள் அளிப்பதை இது சுட்டுகிறது. “இந்த பார்ப்பனர் என் கருவூலத்திற்கு பொருளாக வரி கட்டியதால் இவர்கள் பாசனத்திற்கு மேலாக சாயும் ஏற்ற ஏணியையும் (picotah), சேணத்தில் உட்காராத ஆனால் வண்டி இழுக்கும் குதிரையையும், பீலிவிசிறியும் சீனப்பட்டுக் குடையும், நன்மை தீமைகளுக்கு சேகண்டி இசையும் பயன்படுத்தலாம். சுவற்றுக்கு சுண்ணம் பூசிக்  கொள்ளலாம். இரட்டைக் கதவு வைத்து அதற்கு அடைக்கும் கோல் இடலாம். படுக்கும் கட்டிலில் தலைப்புறம் கால் புறம் உள்ள தடுப்பில் ஒப்பணையான பித்தளை, மர வடிப்புகளை பொருத்திக் கொள்ளலாம். பச்சைப்  போர்வை போர்த்திக் கொள்ளலாம். தம் பிள்ளைகளுக்கு பொன் கழுத்தணி அணிவிக்கலாம். திருமணத்தின் போது தோளி (doolie) கட்டி ஏறி ஊர்வலம் வரலாம். இந்த சலுகைகள், உரிமைகள் யாவும் இவர்தம் பிள்ளை, பேரப் பிள்ளை என்று தலைமுறை தலைமுறையாக சந்திர சூரியன் நிலைக்கும் காலம் வரை அனுபவிக்கலாம் என்பதை கல்வெட்டிலும் செப்பேட்டிலும் ஆவணமாக எழுதிக் கொள்ளலாம்” என்று ஆணை ஓலை கொடுத்தேன். இவை அனைத்தும் வல்ல சோழ மூவேந்த வேளாண் ஒப்புதல் எழுத்து. இப்படிக்கு வாணதேவ ராயன் ஒப்புதல் எழுத்து.

    இதன் மூலம் இந்த உரிமைகள் இதற்கு முன் பிராமணர்களுக்கு  வழங்கப்பட்டிருக்கவில்லை என்று அறிய முடிகிறது. இந்த உரிமைகள் படைத்தலைவர்கள், அரசர்கள் குடும்பத்தாருக்கு மட்டுமே இருந்து மெல்ல மெல்ல பிற சாதிகளுக்கு வழங்கப்பட்டு பொது மக்களுக்கு பரவலாக்கப்பட்டதை உணர முடிகிறது.  இப்படி வரி கட்டுவோருக்கு மட்டுமே சலுகை, உரிமை அப்படி காட்டாதவருக்கு ஏதும் இல்லை என்பது ஒரே சாதியில் ஏற்றத் தாழ்வை ஏற்படுத்தும் அல்லவா? வரி கட்டாதவரால் இந்த ஏற்பாட்டில் இயன்ற சிறு சலுகையை கூட அனுபவிக்க முடியாது. இதனால் Military rank order இல் உள்ள ஏற்ற தாழ்வை அப்படியே சமூகத்திலும் பரவவிட்டு விட்டது இந்த சலுகை என்ற முடிவிற்கே வரமுடிகிறது. கொங்கு நாட்டில் தான் இந்த நிலை என்று இல்லை சேர, சோழ, பாண்டிய நாடுகளிலும் இதே சமூக ஏற்ற தாழ்வு தான் நிலவி இருந்திருக்க வேண்டும். கொங்கு நாட்டை பல்லவர், மேலை கங்கர் ஆகியோர் கொங்கு சோழருக்கு முன் ஆண்டுள்ளனர். அவர் நாட்டில் இந்த உரிமைகள் முன்னமே இருந்திருந்தால் கொங்கு நாட்டிலும் இந்த உரிமையை அவர் ஆட்சியிலேயே வழங்கி இருப்பர். எனவே தொண்டை நாட்டிலும் கன்னட நாட்டிலும் கூட இந்த சலுகைகள் உரிமைகள் மக்களுக்கு இருந்திருக்கவில்லை.

    பார்வை நூல்: த நா தொ து வெளியீடு, கோயம்பத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி-I, பக்: 5 – 6.

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் வேப்பூர் வாகீசுவரர் கோவில் தென் சுவர் 6 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ ஸகல லோகச்சக்ரவத்தி இராசநாராயணன் வேப்பூர் உடையார்  வாகீஸ்வரம்  உடைய நாயனார் கோவில்த் தானத்தார்க்கு இன்னாயநார்க்கு ஆறாவது  
    2. ஆடி மாதம் முதல் திருமடை விளாகமாக சக்கிலி வாய்க்காலுக்கு வடக்கு மேற்பாற்கெல்லை  இவ்வாய்க்காலுக்கு கிழக்கும் வடபாற்கெல்லை  ஐய்யனுக்கு வாய்த்த விழுப்பரையன் வீடும் இத்தெரு
    3. வும் விட்ட கீழ்பாற்கு எல்லை பிடாரி கோயிலுக்கு மேற்கு இந்த நான்கு எல்லைக்கு  வுட்பட்ட நிலத்தில் ஏறும் பல காசாயக்குடி ஆன செட்டிகள், கைக்கோளர், வாணிகர், சேனையங்காடிகள், கோயிலங்காடிகள் செக்குக்குடி மக்கள் [மக்]கள்  மற்றும் ஏறும் பல 
    4. குடிகளுக்கும் செட்டிகள், கைக்கோளர்,  வாணிகர், சேனையங்காடிகள், கோயிலங்காடி, செக்குக்குடி மக்கள் இவர்கள் பேரால் பேர்க்கடமை, செக்குக்கடமை, தறிக்கடமை, நூலாயம், பட்டடை ஆயம், கற்றவட ஆயம் திருவிளக்கு மன்றாடிகள் பேர்க்கடமை,  பள்ளிகள் பேரால் விலைப்பண
    5. ம்  மற்றும் இப்பற்றில் கொள்ளும் ஆயமும் பல வரிகளும் சூல வரியும் பல உபாதியும் உட்பட ஸர்வ மாந்ய இறைஇலி ஆக சந்த்ராதித்தவரையும்  செல்ல பூசைக்கும் திருப்பணிக்கும் குடிஏற்றிக்  கொண்டு இன்னான்கு எல்லைக்கும் திரிச்சூல ஸ்தாபநம் பண்ணி கல்லிலும் செம்பிலும் 
    6. வெட்டிக் கொள்ளச் சொன்னோம். இன்னாள் முதல் இப்படி செய்து  ஸ்ரீ மாஹேஸ்வர ரக்ஷை  

    விளக்கம்: 14 ஆம் நூற்றாண்டு வண வேந்தர் இராசநாராயண சம்புவராயர் ஆட்சியில் வேப்பூர் வாகீசுவரர் கோவில் பொறுப்பாளர்களுக்கு நேரடியாக வேந்தனால் வழங்கப்பட இறையிலி அறிவிக்கை. வேப்பூர் வாகீசுவரருக்கு ஆடி மதம் ஆறாம் நாள் முதல் கோவிலை சூழ்ந்து குடியிருப்பு இடமாக ஆக்கிட சக்கிலி வாய்க்காலுக்கு வடமேற்கு பக்க எல்லையில் இந்த வாய்க்காலுக்கு கிழக்கும் வட பக்க எல்லையில் இறைவனுக்கு வாய்த்த விழுப்பரையனுக்கு வீட்டையும் அந்த தெருவைக்க கடந்து கிழக்கு பக்க எல்லையில் உள்ள பிடாரி கோவிலுக்கு மேற்கு வரையான இந்த நான்கு எல்லைக்கு உட்பட்ட நிலத்தில் குடியேறும் பல்வகை காசாக வரி செலுத்தும் குடிகளான செட்டிகள், கைக்கோளர், வாணிகர், சேனையங்காடிகள், கோயிலங்காடி, செக்குக்குடி மக்கள் குடியேறும் பல பிற மக்களில் செட்டிகள், கைக்கோளர், வாணிகர், சேனையங்காடிகள், கோயிலங்காடி, செக்குக்குடி மக்கள்  தரும் குடும்ப வரி, செக்கு வரி, தறிவரி, நூல் வரி, படை வரி, தென்னங்கயிறு வரி, கோயிலுக்கு நெய் தரும் இடையர் குடும்ப வரி, உழவர் குடும்ப விலைப்பணம், மேலும் இந்த ஊரில் வரும் பல வரிகள், சூலவரி, உபாதியும் சேர்த்து முழு மானிய இறையிலி ஆக சந்திர சூரியன் நிலைக்கும் வரை தொடர கோவில் பூசைக்கும்  விழாக்களுக்குக்கும் வேண்டி குடியேற்றிக்கொண்டு இந்த நான்கு  எல்லைக்கும் திரிசூலக்கல் நாட்டி இந்த ஆணையை கல்லிலும் செம்பிலும் வெட்டிக்கொள்ளலாம். இந்த நாள் முதல் இதை செய்து காப்பது மாகேசுவரர் கடமை ஆகும். இக்கல்வெட்டால் வேப்பூரில் செட்டியார்களின் குடியேற்ற ஊர் அமைந்ததை அறிந்து கொள்ள முடிகிறது.

    பார்வை நூல்: த நா தொ து வெளியீடு, தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் XXI வேலூர் மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி III பக். 54 – 55

    நாமக்கல்  மாவட்டம் ராசிபுரம் பெருமாள் கோவில் முன்னுள்ள 22 வரிக் கல்வெட்டு

    ஸ்வஸ்தி ஸ்ரீ சகலகு / லம் வை / த்த கோ / இராஜ இரா / ச தேவற் / கு 14 வது / ஐப்பசி மாதம் 13 திய / தி  பல மண்டலத்து வீ / ர பெரு நிரவியாரோம் / இராசிபுரத்து ஊர் மன் / றத்து இவ்வூர் நகரத்தா / கு சமஸ்த சகல / சந்திராத்தித்தியம் உரித்தா / வதாக  வீரப்பட்டின / க்கல்ந் நாட்டிக்கு / டுத்தோம் பல / மண்டலத்து வீ / ர பெருநிரவியோ / ரோம் இது பல ம / ண்டலத்து நிர / வியார் /ரக்ஷை  

    விளக்கம்: எல்லாக் குலமும் வாழ வைத்த மூன்றாம் இராசராச சோழனின் 14 ஆவது ஆட்சி ஆண்டு 1230 இல் வெட்டிய கல்வெட்டு இது. ஐப்பசி  13 ஆம் தியதி பல மண்டலத்து வீர வணிகர் பெருங் குழுவினர் (நிரவி – merchant guild) இராசிபுரத்தில் ஒன்று கூடி இந்த ஊர் நகரத்தார்க்கு எல்லாமும் யாதும் ஆன முத்துக்குடை (சந்திராதித்யம்) உரித்தாகட்டும் என்று வேண்டி வீரப்பட்டினத்திற்கு கல் நாட்டிக் கொடுத்தோம் பல மண்டலத்தைச் சேர்ந்த வீர பெரும் வணிகர் குழுவினரோம். இதை பல மண்டலத்து வணிகர் குழுவின் பாதுகாப்பில் விடுகிறோம்.

    இராசிபுரத்தில் புதிதாக வணிக வீரருக்கான தங்கும் மனைகள்  கொண்ட ஊரை (வீரப்பட்டினம்) நிறுவி கல் நாட்டுவித்த செய்தியை குறிக்கிறது. முத்துக்குடை (சந்திராதித்யம்) என்பது சமணரின் முக்குடைகளில் ஒன்று என்பது இந்த வணிகக் குழுவில் சமணர் பலர் இருந்துள்ளனர் என்பதை உணர்த்துகின்றது.

    பார்வை நூல்: கல் சொல்லும் கதைகள், பக். 41- 42, ஆசிரியர்: சந்தியூர் கோவிந்தன்.

    ஈரோடு மாவட்டம் பவானி வட்டம்  வேம்பத்தி வேட்டுவன் தோட்டத்துள் இருந்த இப்போது ஈரோடு கலைமகள் பள்ளி அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படும் 47 வரிக் கல்வெட்டு.

    ஸ்வஸ்தி ஶ்ரீ கோவி ராசகேசரிபன் /மராகிய ஶ்ரீ ராஜேந்திர சோழ தேவர் க்குத் திரு / வெழுத்திட்டுச் செல்லா நின்ற யாண்டு நா / லாவது சையமுரி நாடாழ்வார் நாட்டு வ / டகரை விக்ரம பல்லவபுரத்து நகரத்து / வளஞ்சிகர்க்கு வீரபட்டணம் செய்து குடு / த்தோம் நாடாழ்வாரை வெட்டின மதிரை/ இருக்கும் பிராந்தக தேவனான கொங்கு ம / ண்டலம் உய்யக்கொண்டானும் முசிறியான  / மும்முடிச்சோழபுரத்தில் சுந்தர சோழ முத்தர / யனை வெட்டின எறியும் விடங்க செட் / டியும் பாண்டிய நாட்டில் கல்லக நாட்டில்/ காக்கையான துளகோதை சோலையான் படை / நாயனை வெட்டின வீரகள் மதலையும் / பருதிப்பள்ளி நிரந்த ராஜேந்திர சோழப்பெருநிரவி / வீரமாணிக்கச் செட்டியும் சேந்தன் அதிருக்குரவாழ் நானாதேசியக் கவரை 6 வுவிடங்க  / ஞ்சாத்தன் பாலையான  திசையாயி / ரத்தைஞ்ஞூற்றுவப்பிள்ளை கண்டழியும் அரையம் மாயிலட்/ டியான வீரகள் மதலையும் சிங்க / முரனான அஞ்ஞூற்றுவ வேளானு / ம் அஞ்சுகரை  நாட்டுக் கவரை விடங் / கனும்  கவரைகள்மார் வத்துமாலையு / ம் வீரபுத்திரனும் முனிவர் சிங்கமு / ம் வலங்கைமார் வத்துமாலையு / ங் கவரைகள் உய்யக்கொண்டானும் / பிள்ளை சித்திரவாளியும் பிள்ளைப் / பத்திரவானும்  எறியும் விடங்கர் செட் / டியும் இவ்வூர் பகுதியும் இவ்வூர் மாதேவ/ ர்க்குக் குடுத்த தர்மமும் இவ்வூர் வீர / சாசனம் செய்தோம் இவ்வனைவோ / மும் உள்ளிட்ட வீரப் பெரு நிரவியாரோ / ம். இத்தன்ம மிறக்கினான் கெங் / கையிடை குமரியிடை எழுநூற்றுக்   /  காவத்துள்ளார் செயித பாவ / ம் கொள்வார் நோக் கொண்டாநேல்_ _வீர / புரமாவதாகவும். இப்பரிசே வீர / பட்டணம் செய்தோம் இவ்வனைவோமுள்ளி / ட்ட வீரப் பெருனிரவியோம். அறம் மறவற்க அறமல்லது துணையில்லை.

    மதலை – வலுவான இளையோர் படை; வத்த மாலை – வெட்பாலை அல்லது மல்லி மாலை

    விளக்கம்: முதற் குலோத்துங்கனின் நாலாவது ஆட்சி ஆண்டு 1074 இல் வெட்டப்பட்ட வணிகர் கல்வெட்டு என்கிறார் செ. இராசு. சையமுரி நாடாழ் வாரை வெட்டிய மதுரை பிராந்தக தேவன்,  கொங்கு மண்டல உய்யக்கொண்டான், முசிறி  சோழபுரத்தில்  சுந்தர சோழ முத்தரையனை  வெட்டிய எறி படை விடங்கச்செட்டி, பாண்டிய நாட்டின் கல்லக நாட்டு காக்கையான் துளகோதை சோலையான் படைக்குத் தலைவனை வெட்டிய வீரகளின் வலுவான இளையோர் அணி, பருத்திபள்ளி நிரந்த ராஜேந்திர சோழர் பெரு  வணிகர் குழுவின்  வீர மாணிக்க செட்டி, சேந்தன் அதிருககுரவாழ் நானாதேசியத்தின் கவரை விடங்கன் சாத்தன், பாலையான திசை ஆயிரத்து ஐநூற்றுவ பிள்ளை, கண்டழியும் அரையத்தின் மாயிலெட்டியான வீரகளின் வலுவான இளையோர் அணி, சிங்கமுரனான ஐந்நூற்றுவ வேளாண், அஞ்சுகரை நாட்டு கவரை விடங்கன் ஆகியோர் சையமுரி நாடாழ்வான் நாட்டு வடகரை விக்கிரம பல்லவ புரத்து நகரத்து வளஞ்சிய வணிகருக்கு வீரர் ஓய்வெடுக்கத் தங்கு மனைகள் உள்ள ஊரை, வீர பட்டணத்தை ஏற்படுத்திக் கொடுத்தோம் என்கின்றனர். கவரைமார் வத்துமாலை, வீரபுத்திரன் சிலை, முனிவர் சிங்காசனமும் கொடுத்தனர். அதே போல வலங்கைமார் வத்துமாலையும் கவரைகள் உய்யக்கொண்டான் பிள்ளை, பிள்ளை சித்திரவாளி, பிள்ளை பத்திரவான், எறிபடை விடங்கர் செட்டி ஆகியோர் இவ்வூருக்கு கொடுத்த நிலத்தையும் இவ்வூர் ஈசனுக்கு கொடுத்த கொடையையும் இவ்வூருக்கே ஆவணம் செய்து கொடுத்தோம் இந்த அனைவரையும் உள்ளடக்கிய வீரபெரு வணிகக் குழுவினரோம். இந்த கொடையை அழிப்பவர் 700 காவதம் வரையான கங்கை இடை குமரி இடை வாழ்வோர் செய்கின்ற பாவத்தை அடைவர். துன்புறுத்தி கவர்ந்தால் சாவதாக. இந்த திட்டப்படி வீர பட்டணம் அமைத்தோம் இந்த அனைத்து வீரபெரு வணிகக் குழுவினரும். செய்த அறத்தை மறக்க லாகாது அறத்தை விட வேறு துணை இல்லை.

    இவ்வாறாக பல வணிகக் குழுக்கள் ஒத்துழைப்பில் தான் வணிக வீரர் படைகள் இயங்கின. வணிகர் படை பேணுவதில் அதிக கவனம் செலுததினர் என்பதை வீர பட்டணக் கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. இது தான் மன்னராட்சியின் அவலம்.

    பார்வை நூல்: கலைமகள் கலைக்கூடம் , பக். 79 – 80, ஆசிரியர்: செ. இராசு.  

    Share
  • மார்கழி என்பது மனநிறை மாதம் !

    மார்கழி என்பது மனநிறை மாதம் !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    மார்கழி என்பது மனநிறை மாதம்
    மாதவன் மலரடி போற்றிடும் மாதம்
    கோதையும் தமிழைக் கொட்டிய மாதம்
    குவலயம் குளிர்மையாய் ஆகிடும் மாதம்

    வாசகர் ஈசனைப் பாடிய மாதம்
    மகேசனை மங்கையர் போற்றிடும் மாதம்
    பூவெலாம் பனித்துகள் அமர்ந்திடு மாதம்
    புவியினைத் தேவரும் விரும்பிடு மாதம்

    வைகறை யாவரும் விழித்திடும் காலம்
    மனமெலாம் இறையினை இருத்திடு காலம்
    பொய்யெனும் மாயைப் போக்கிட இறையினை
    மெய்யடியார்கள் வேண்டிய காலம்

    உணர்வுடன் இறையினை உளமதில் இருத்தியே
    துயிலினைக் களைந்திடத் தொடக்குவார் மங்கைகள்
    பரமனைப் பாடியே தெருவெலாம் வருவதால்
    பக்தியின் பேரொளி பரவிடும் காலமே

    ஆலயம் எங்கணும் தீபங்கள் ஒளிர்விடும்
    அடியவர் அனைவரும் ஆலயம் ஏகுவார்
    காலையில் கதிரவன் எழுந்திடு முன்னரே
    கனிவுடன் இசைத்தமிழ் காற்றிலே கலந்திடும்

    மாதவன் கோவிலில் பாசுரம் ஒலிக்கும்
    மகேசன் கோவிலில் வாசகம் ஒலிக்கும்
    சைவம் வைணவம் சங்கமம் ஆகும்
    சன்மார்க்க வழியை  மார்கழி வழங்கும்

    பீடை என்பது பொருத்தமே அல்ல
    பீடுடை என்பதே பெரிதும் பொருத்தம்
    மார்கழி தேவர்க்கு உகந்த நல்மாதம்
    மனமதில் இருத்தியே பரவுவோம் இறையினை

    Share
  • கற்பகதரு என்னும் அற்புதம் – இலக்கியத்தில் இணைந்த பனை (அங்கம் – 5)

    கற்பகதரு என்னும் அற்புதம் – இலக்கியத்தில் இணைந்த பனை (அங்கம் – 5)

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா 

    உருக்கு வாளேந்திப் பகைசெற் றுலகினை
    ஓம்பும் மணிமுடி மன்னவன் போல்
    கருக்கு வாளேந்திக் கலியை அழித்திந்தக்
    காசினியைக் காக்கும் ஞானப் பெண்ணே

    “பெண்பிளையும் தண்பனையும் பேணி வளர்த்தால்
    வருடம் பண்ணிலொரு பத்தில்  பயன் கொடுக்கும்”

    “நட்டாயிரம் வருடம் நாநிலத்தில் காய்த்து நிற்கும்
    பட்டாயிரம் வருடம் பாழ்போகா”

    “திங்கட் குடையுடைச் சேரனும் சோழனும்
    தென்னவனும் ஓளவை சொற்படியே
    மங்கல மாயுண்ட தெய்வப் பனம்பழம்”

    “முப்பாசந் தீர்த்த முனிவர்மொழி வாய்மைபோல்
    எப்போதும் நின்று பயனீயும்”

    கறுத்து, நிமிர்ந்து, உரமேறி, உயர்ந்து வான்பார்த்து, நிமிர்ந்து நிற்கின்ற கற்பக தருவாம் பனை பற்றித்தான் இப்பாடல்கள் வியந்து நிற்கின்றன. கூரையாய்,  வேலியாய், படலையாய், மனித உணவாய், கால்நடைத் தீனியாய், பாயாய்,  படுக்கையாய், அலங்காரப் பொருட்களாய்,  ஏடாய், காவலாய்,  மருந்தாய்,  விருந்தாய், பண்பாட்டின் அடையாளமாய், என்று பல நிலைகளில் தன்னைப் பயனாக்கி; முடியாத கட்டத்தில் விறகாக நின்று பெருங்கொடையினை நல்கிடும் “நவீன கர்ணனாய்” எங்களின் கற்பகதருவான பனை விளங்குகிறது என்பதைக் கருத்திருத்தல் அவசியமாகும்.

    கற்பகதருவாம் பனையின் வரலாறு மிகவும் தொன்மையானது எனலாம். திவாகர நிகண்டில் பனை பற்றிய பெயர்கள் தொகுத்துக் காட்டப்பட்டிருக்கிறது. தமிழின் முதுபெரும் சொத்தான தொல்காப்பியத்தில் – மடல், ஓலை, ஏடு, பாளை, ஈர்க்கு, குலை, போன்ற சொல்லாடல்களைக் காணமுடிகிறது. தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுகள் கிறித்துவுக்கு முற்பட்ட தாகும். அக்கல்வெட்டிலும் பனை என்னும் சொல் இடம் பெற்றிருக்கிறது என்றும் அறிய முடிகிறது.

    தமிழ் மன்னர்கள் பனையினைப் பேணி வந்திருக்கிறார்கள் என்றும் வரலாற்றால் அறிய முடிகிறது. பொருளாதார மேம்பாட்டுக்குப் பனை பேருதவியாக அமைந்திருக்கிறது. சோழ மன்னர்கள் பனையினை எல்லைப் புறங்களில் வளர்க்கவும் “பலாவும் கமுகும் பனையுங் கொடியும் உள்ளிட்ட பல்லுருவில் பயன் மரம் இடவும் நடவும்” என்று சோழர் காலத்துச் செப்பேட்டில் காணப்படுகிறது. “பயன் மரம்” என்னும் நிலையில் பனை இடம் பெற்றிருப்பது கருத்திருத்த வேண்டிய விடயம் அல்லவா!

    பனையின் கொடையாக அமைவது நுங்கு. அதன் சுவையினை அருந்தியவர்கள் உணருவார்கள். அறியாதார் சுவைத்தால் அதன் அருமை அகம் அமரும். நுங்கினைச் சுவைத்த பின்னர் வெட்டப்பட்ட இரண்டு நுங்கின் பாதிகளை ஒரு குச்சியால் இணைத்து அதன் நடுவில் கவரான நீளமான குச்சியைப் பயன்படுத்தி வண்டிலாய் ஓட்டிச் சிறுவர்கள் மகிழ்ந்தார்கள், தெருத்தெருவாய் இதனை உருட்டி மகிழ்வது ஒரு விளையாட்டாக இருந்திருக்கிறது. இதனை இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்திருக்க மாட்டார்கள். பெரியவர்களில் எத்தனை பேருக்கு இந்த விளையாட்டு நினைவில் இருக்கிறதோ தெரியாது! ஆனால் இந்த விளையாட்டு பழைய காலத்தில்  விளையாடப் பட்டிருக்கிறது என்பதனை –

    ” பெருமடல் பெண்ணைப் பிணர்ந்தோட்டு குடவாய்க்
    கோடிப் பின்னல் வாங்கித் தளரும் பைங்குரும்பை”

    என்று கலித்தொகை காட்டுவதும் நோக்கத்ததாகும்.

    வேரிலிருந்து பனையின் பயன்கள் பல்கிப் பெருகியே இருக்கின்றன. இதனால்த்தான் கற்பகதரு என்னும் அடைமொழியே ஏற்பட்டது எனலாம். பழைய காலத்தில் ஊர்கள்தோறும் பல குளங்களை வெட்டினார்கள். குளங்களை வெட்டினால் மட்டும் நீர் மட்டம் உயர்ந்து விடாது. நீர் மட்டம் உயர்வதற்குச் சில மரங்கள் உதவியாய் அமைந்தன. அப்படி யான மரங்களுள் ஒன்றுதான் எங்கள் கற்பகதருவாம் பனை ஆகும். குளங்களைச் சுற்றி ஆயிரக் கணக்கில் அக்காலத்தில் பனை மரங்களை வளர்த்தார்கள். பொதுவாக எல்லா மரங்களுமே வேர்களைப் பக்கவாட்டில் மட்டுமே பரப்பக் கூடியன. ஆனால் பனைமரம் மட்டுமே வேரினை செங்குத்தாக நிலத்தின் உள்ளே செலுத்தி வளரும். பனையின் வேர் செங்குத்தாக நிலத்தடியில் காணப்படும் நீரினை நோக்கியே செல்லும். நீரை நோக்கி நேராகச் செல்லும் குழாய் போல பனையின் வேர்கள் அமைந்திருப்பதால் – நிலத்தடியில் உள்ள நீரை தரைப் பகுதிக்கு கொண்டு வரும் நீர்ப்பாசனப் பொறியாளராக பனையின் வேர் விளங்கி நின்றது. பனையின் வேரின் இந்தப் பெருஞ் செயலினால் நீரானது குளங்களில் நிரம்பவும், நிலத்தில் வழிந்தோடவும், ஆறுகளில் நீர் நிறையவும் வழிவகுத்து நிற்கிறது எனலாம். பனையால் ஏற்படும் நீர் முகாமைத்துவத்தை அறிவது அவசியம் அல்லவா! புயலினின்றும் பாதுகா ப்பினை அளிக்கவும் பனைகள் உதவியாய் இருக்கின்றன. வெள்ளப் பெருக்கைத் தடுக்கும் நிலையிலும் பனைகள் கைகொடுத்திருக்கின்றன. நாட்டின் பாதுகாப்பு அரணாய் அக்காலத்தில் பனை மரங்களை எல் லைகளில் நட்டு வைத்தார்கள் என்பதையும் அறிய முடிகிறது.

    பத்துப்பாட்டு என்கிறோம். எட்டுத்தொகை என்கிறோம். மேற்கணக்கு கீழ்க் கணக்கு என்றெல்லாம் சொல்லுகிறோம். காவியங்கள் என்கிறோம். இதிகாச புராணங்கள் என்கிறோம். ஐம்பெரும் காப்பியங்கள் என்று பெருமையுடன் அழைகின்றோம். இவை அத்தனையும் எங்களுக்கு இன்று கிடைத்திருக்கிறது என்றால் அதற்குக் காரணமாய் அமைந்தது கற்பகதருவாம் பனை என்பதை மட்டும் மறந்துவிடக் கூடாது. ஆழ்வார் பாடல்களோ, நாயன்மார் பாடல்களே,  சோதிடம், வைத்தியம் தொடர்பான விஷயங்களோ எங்களுக்குக் கிடைத்திருக்கிறது என்றால் அதற்கு அருந்துணையாய் அமைந்தது பனைதான் என்பதை எவருமே மறுத்துரைத்து விட முடியாது. பனைக்கும் இலக்கியத்துக்கும் என்ன தான் இருக்கிறது என்று எண்ணுகிறீர்களா? பனை இல்லாவிட்டால் நாங்கள் பெருமைப்படுத்திக் காட்டிக் கொண்டிருக்கும் அத்தனையும் எப்பவோ மறைந்திருக்கும். ஆனால் அவற்றை எல்லாம் எங்கள் பரம்பரைக்கே அளித்த பெருமை பனையின் கொடையான “பனை ஓலைக்கே” உரித்தாகும். ஏட்டில் எழுதப்படா விட்டால் நாங்கள் எல்லாவற்றையும் இழந்திருப்போம். பனை என்பது மரம் அல்ல ! அது வரமாகும் ! பனை ஓலையினை நாம் சாதாரணமாக எடை போட்டு விடக் கூடாது. செய்திகளைப் பறிமாறப் பயன்பட்டது பனை ஓலைதான். இதலனால்த்தான் ஓலை எழுதுதல், திருமணப் பட்டோலை எழுதுதுதல், என்னும் வழக்கும் வந்தது எனலாம். இன்று பல இடங்களில் “பட்டோலை” எழுதுதல் என்பது நடைமுறையில் இருப்பதும் நோக்கத்தது.

    ஏட்டில் எழுதப்பட்ட வேளையில் – அவ்வோலைகளுக்குக் கென்று தனித்த விசேடமான பெயர்களும் இருந்திருக்கின்றன. திருமணத்துக்கு அனுப்பப்படும் ஓலை, இறப்பினைத் தெரிவிப்பதற்கான ஓலைக்கு “நீட்டோலை” என்னும் பெயரும் – படி அதாவது நகல் எடுத்து நிற்கும் ஓலைக்கு “மூல ஓலை” என்றும், ஆவணங்கள் இடம் பெற்ற ஓலைக்கு “சுருள் ஓலை” என்றும், எந்தவித பழுதுமில்லா ஓலைக்கு “குற்றமற்ற ஓலை” என்றும், செய்திகளைக் குறிக்கும் ஓலைகளுக்கு “நாளோலை” என்றும், அரச ஆணையினைத் தாங்கிவரும் ஓலைகளுக்கு “திருமந் திர ஓலை” என்றும், அக்காலத்தில் அழைக்கப்பட்டது. திருமணம்,   இறப்புக்கு “நீட்டோலை” என்னும் பெயர் பயன்படுத்துப்பட்டாலும் அவற்றுக்குக் கென்று தனி ஓலைகளும் இருந்திருக்கின்றன. “மணவினை ஓலை” திருமணத்தையும் – “சாவோலை” இறப்பையும் காட்டிடஅமைந்திருந்தது என்பதை அறிகிறோம்.

    “நீட்டோலை வாசியான் நின்றான் குறிப்பறியான்
    மாட்டாதவன் மரம்”

    “ஆவீன மழை பொழிய இல்லம் வீழ …… என்னும் பாட்டில் ….. “சாவோலை கொண்டொருவன் முன்னேவர” என்று வருவது – ஓலை பற்றிய நிலைக்கு எடுத்துக்காட்டுகளாய் இருக்கிறது அல்லவா.

    எங்களின் முன்னோர் தங்களின் மனத்தெழுந்த பல அறிவுக் கருவூலங்களை எல்லாம் – தமக்குப் பின்னால் வருகின்ற பரம்பரையும் அறிய வேண்டும் என்பதற்காக – எடுத்துக்கொண்ட அளப்பரும் பணிதான் ஏட்டில் யாவற்றையும் எழுதி வைத்தமை எனலாம். அவர்கள் அகத்தில் மட்டும் இவ்வரிய சிந்தனை ஏற்பட்டிருக்கா விட்டால் நாம் பலவற்றை இழக்கும் நிலைக்கு ஆளாகியிருப்போம் என்பதை மனமிருத்தல் அவசியமாகும். களி மண்ணில் எழுதினால் காலத்துக்கும் நிற்காது. கற்களில் எழுதுவது பெருங்கடினமாகும். மரப்பட்டைகளும் நின்று நிலைக்காது. விலங்குகளின் தோல்களில் எழுதுவது அறத்துக்கு ஒவ்வாததது, எனவே இலகுவாய் கிடைப்பதும், பெருஞ் சிரமம் இல்லாததுமான பனை ஓலையினைத் தேர்ந்தெடுத்தார்கள். அவர்களின் அந்த அறிவு பூர்வமான செயலினை எவ்வளவு பாராட்டினாலும் தகும் எனலாம். காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட நூல்கள் வந்தாலும் இன்றும் பழைய ஏட்டுச் சுவடிகள் காலத்தையும் கடந்து நிற்கின்றன என்றால் எங்களின் முன்னோர்களைக் கட்டாயம் கருத்திருத்த வேண்டியது அவசியம் அல்லவா !

    ஓலைச் சுவடிகளைத் தயாரிப்பது சற்றுக் கடினமானதுதான். மிகவும் கவனமாய் அதனைக் கையாழுதல் வேண்டும். எல்லாப் பனையின் ஓலைகளையும் ஏட்டுக்குப் பயன்படுத்திட முடியாது. “கூந்தல் பனை” என்னும் பனையின் ஓலையே ஏட்டுக்கு ஏற்றதாக அமைந்திருந்தது. இதனை “தாழிப்பனை” என்றும் அழைத்தனர். இந்தவகையான பனை மரங்கள் சற்று வித்தியாசமானவை. ஏனைய பனை மரங்கள் போல் இவைகள் இருக்க மாட்டா. இந்த வகையான பனைகள் வாழ்நாளில் ஒரே ஒரு முறைதான் பூக்கும் தன்மை வாய்ந்தனவாம். இந்தப் பனைகள் அறுபத்து ஐந்து அல்லது எழுபது ஆண்டுகள் சென்ற பின் தான் பூக்கும். ஒரு முறை பூத்த பின்னர் இவ்வகைப் பனைகள் காய்ந்து விடுமாம். ஏடுகள் எவ்வாறு தயாரிக்கப்பட்டன! ஏடுகளில் எவ்வாறு எழுதினார்கள்! ஏடுகளை எவ்வாறு பேணினார்கள் என்பதையெல்லாம் அறியும் ஆவல் எழுகிறதா? விரைவில் ஏடுகளைத் தேடுவோம்!

    Share
  • குறளின் கதிர்களாய்…(477)

    குறளின் கதிர்களாய்…(477)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(477)

    அன்றறிவா மென்னா தறஞ்செய்க மற்றது
    பொன்றுங்கால் பொன்றாத் துணை.

    -திருக்குறள் – 36 (அறன் வலியுறுத்தல்)

    புதுக் கவிதையில்…

    பிறகு முதுமையில்
    பார்த்துக்கொள்ளலாம்
    என்று எண்ணாமல்
    இன்றே இளமையில்
    அறம் செய்ய வேண்டும்,
    அதுவே நமது
    உடல் அழியும் போதும்
    அழியாமல் நமக்கு
    உற்ற துணையாகும்…!

    குறும்பாவில்…

    முதுமையில் செய்யலாமென எண்ணாமல்
    இளமையிலேயே அறம்செய்க, அதுவே உடலழிகையில்
    அழியாமல் தகுந்த துணையாகும்…!

    மரபுக் கவிதையில்…

    தளரும் முதுமைக் காலத்தில்
    தனியே செய்ய எண்ணாமல்
    வளரும் இளமை வயதினிலே
    வாழ்வில் அறத்தைச் செய்திடுவாய்,
    தளர்ந்தே உடலும் அழிகின்ற
    தள்ளா வயதுக் காலத்திலும்
    உளதாய் அறமே அழியாமல்
    உனக்கே உற்ற துணைவருமே…!

    லிமரைக்கூ…

    இலையேயதும் அறத்துக் கிணையே,
    இதைச்செய் இளமையிலே, உடல்போலது அழியாமல்
    உனக்காகும் உற்ற துணையே…!

    கிராமிய பாணியில்…

    பாக்காத பாக்காத
    காலநேரம் பாக்காத,
    வாழ்க்கயில அறஞ்செய்ய
    காலநேரம் பாக்காத..

    வயசான காலத்தில
    பாத்துக்கலாமுண்ணு நெனச்சி
    வாழ்க்கைக்கு நல்லதான
    அறஞ்செய்ய மறக்காத,
    அது நம்ம
    ஒடம்பு அழியும்போதும் அழியாம
    நமக்கு
    நல்ல தொணயா இருக்குமே..

    அதால
    பாக்காத பாக்காத
    காலநேரம் பாக்காத,
    வாழ்க்கயில அறஞ்செய்ய
    காலநேரம் பாக்காத…!

    Share
  • அயோத்திக்கு இலவயமாக அழைத்துச் செல்லுங்கள் – இந்திய அரசுக்கு சிவ சேனை வேண்டுகோள்

    அயோத்திக்கு இலவயமாக அழைத்துச் செல்லுங்கள் – இந்திய அரசுக்கு சிவ சேனை வேண்டுகோள்

    மறவன்புலவு க. சச்சிதானந்தன்
    சிவ சேனை

    கார்த்திகை 27 புதன்கிழமை (13 12 2023)

    அயோத்திக்கு இலவயமாக அழைத்துச் செல்லுங்கள். இந்திய அரசுக்கு சிவ சேனையின் வேண்டுகோள்.

    இந்தியாவில் இந்துக்களை இலவயமாக அயோத்திக்கு அழைத்துச் செல்கிறார்கள்.

    அயோத்தியில் இராமர் கோயில் திருக்குட நன்னீராட்டு விழாவுக்கு அழைத்துச் செல்கிறார்கள்.

    சென்னையில் இருந்து 22.1.2024 முதலாக அறுபது நாள்களுக்கு எவரும் அயோத்திக்கு வழிபட இலவயமாகச் சென்று மீளலாம்.

    இலங்கையின் 25 மாவட்டங்களில் வாழ்கின்ற இந்துக்களுக்கும் அதே இலவய சேவையை வழங்குங்கள்.

    காங்கேயன்துறையில் இருந்து கப்பல். நாகப்பட்டினத்தில் இருந்து தொடர்வண்டி.

    நேரே அயோத்தி. பாபர் மசூதியை இடித்துக் கட்டிய இராமர் திருக்கோயிலில் வழிபாடு.

    அங்கிருந்து தொடர்வண்டியில் கங்கை யமுனை சரசுவதி ஆறுகள் சங்கமிக்கும் பிரயாகை.

    அங்கிருந்து தொடர்வண்டியில் காசி.

    காசியிலிருந்து தொடர்வண்டியில் நாகப்பட்டினம்.

    கப்பலில் காங்கேயன்துறை.

    பயணத்திற்கு 6 நாள்கள் வழிபாட்டிற்கு 6 நாள்கள் எனப் 12 நாள்கள் பயணம்.

    இந்திய அரசு இந்திய இந்துக்களுக்கு வழங்குவது போல் இலங்கை இந்துக்களுக்கும் வழங்குமாறு சிவ சேனை கேட்டுக்கொள்ளும் இந்தியப் பிரதமருக்கான கடிதம் இணைப்பில்.

    කාර්තිගා 27 බදාදා (13 12 2023)

    මාධ්‍ය වෙනුවෙන්

    මරවන්පුලවු කේ.සචිතානන්දන්
    ශිව සේනා

    හින්දු අයව අයෝධ්‍යාවට නොමිලේ රැගෙන යන්න. ශිවසේනා ඉන්දීය රජයට කරන ආයාචනය.

    ඉන්දියාවේ හින්දු අය නිදහසේ අයෝධ්‍යාවට ගෙනියනවා.

    හින්දු ජාතික උත්සවයක් ලෙස අයෝධ්‍යාවේ රාම් කෝවිල කැප කිරීම සිදුවේ.

    2024.1.22 සිට ඕනෑම කෙනෙකුට චෙන්නායි සිට දින හැටක් අයෝධ්‍යාවට නිදහසේ සංචාරය කළ හැකිය.

    ශ්‍රී ලංකාවේ දිස්ත්‍රික්ක 25ක වෙසෙන හින්දු භක්තිකයින්ට එම සේවාවම නොමිලේ ලබා දෙන්න.

    කන්කේයන්තුරේ සිට නැව. නාගපට්ටිනම් සිට දුම්රිය.

    හරියටම අයෝධ්‍යාවේදී. බාබ්රි මස්ජිදය කඩා බිඳ දැමීමෙන් පසු ඉදිකරන ලද රාම් කෝවිලේ නමස්කාරය.

    එතැන් සිට ගංගා යමුනා සරස්වතී ගංගාව එක්වන ප්‍රයාගයි වෙත දුම්රියෙන් යන්න.

    එතනින් කෝච්චියෙන් කාසි යන්න.

    කාෂි සිට නාගපට්ටිනම් දුම්රියෙන්.

    නැවෙන් කන්කේයන්තුරේට.

    සංචාරය සඳහා දින 6 ක් නමස්කාරය සඳහා දින 6 ක් දින 12ක ගමනක්.

    ඉන්දීය රජය ඉන්දීය හින්දු ජනතාවට ලබාදෙන පරිදි ශ්‍රී ලාංකීය හින්දු භක්තිකයන්ටද නොමිලේ වන්දනා ගමන් ලබාදෙන ලෙස ශිව සේනායි විසින් ඉන්දීය අග්‍රාමාත්‍යවරයා වෙත යොමුකළ ලිපියක් අමුණා ඇත.

    Kartiga 27 Wednesday (13 12 2023)

    For the media

    Maravanpulau K. Sachithanandan
    Siva Senai

    Take Hindus on pilgrimage to Ayodhya for free. Shiv Sena’s appeal to the Government of India.

    In India, Hindus are taken freely to Ayodhya.

    In Ayodhya, consecration of the Ram temple is taking place as a Hindu national festival.

    From 22.1.2024 onwards anyone can freely visit Ayodhya for sixty days from Chennai.

    Provide the same free service to Hindus living in 25 districts of Sri Lanka.

    Ship from Kankeyanthurai. Train from Nagapattinam.

    Arrive in Ayodhya. Worship at Ram temple built after Babri Masjid was demolished.

    From there take a train to Prayagai where the Ganga Yamuna Saraswati rivers confluence.

    From there take the train to Kasi.

    Nagapattinam by train from Kashi.

    To Kankeyanthurai by ship.

    6 days for travel 6 days for worship
    A journey of 12 days.

    Attached is a letter from Siva senai to the Prime Minister of India asking to provide to the Sri Lankan Hindus free pilgrimage as the Government of India is providing to the Indian Hindus.

    Share
  • குறளின் கதிர்களாய்…(476)

    குறளின் கதிர்களாய்…(476)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(476)

    துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்
    திறந்தாரை யெண்ணிக்கொண் டற்று.

    – திருக்குறள் – 22 (நீத்தார் பெருமை)

    புதுக் கவிதையில்…

    ஆசைகளைத் துறந்து
    அகிலத்தில்
    பற்றற்று வாழும்
    பெரியோர்தம்
    பெருமையை எண்ணிக்கையால்
    அளந்து கூறுதல் என்பது>
    உலகில் பிறந்து
    இறந்து போனவர்களின்
    எண்ணிக்கையை எல்லாம்
    எண்ணுவது போலாகும்…!

    குறும்பாவில்…

    முற்றுந் துறந்தோரின் பெருமையை
    அளந்து கூறுதல் உலகில் இறந்தோரின்
    எண்ணிக்கையை எண்ணுதல் போலாகும்…!

    மரபுக் கவிதையில்…

    பாரினில் உள்ளவை மீதான
    பற்றுகள் அனைத்தையும் துறந்தோரை
    நேரிலே பார்த்தவர் பெருமையதன்
    நிறைவினை அளந்துடன் சொலலரிதே>
    பாரிதை இச்செயல் இதற்கொப்பாம்
    பார்தனில் இதுவரைப் பிறந்தோர்தம்
    காரியம் முடிந்ததால் இறந்தோரின்
    கணக்கினை எண்ணிடல் போலாமே…!

    லிமரைக்கூ…

    பெருமையால் அளவிடுதல் துறந்தோரை>
    இதனைப் போன்றதே, எண்ணிக் கணக்கிடல்
    உலகில் பிறந்ததில் இறந்தோரை…!

    கிராமிய பாணியில்…

    பெருசு பெருசு
    பெரும பெருசு
    ஆசயத்தொறந்து பத்தில்லாத
    பெரியவுங்க பெரும
    ரெம்பப் பெருசு..

    ஒலக ஆசயத்தொறந்து
    எதுலயுமே பத்தில்லாத
    பெரியவுங்க பெருமய
    எண்ணி அளவு பண்ணுறது>
    இந்த ஒலகத்துல பொறந்து
    இதுவர செத்துப்போனவங்க
    கணக்க எண்ணிச் சொல்லுறது
    போலத்தான் ஆவும்..

    அதால
    பெருசு பெருசு
    பெரும பெருசு
    ஆசயத்தொறந்து பத்தில்லாத
    பெரியவுங்க பெரும
    ரெம்பப் பெருசு…!

    Share
  • கற்பகதரு என்னும் அற்புதம் – இலக்கியத்தில் இணைந்த பனை (அங்கம் – 4)

    கற்பகதரு என்னும் அற்புதம் – இலக்கியத்தில் இணைந்த பனை (அங்கம் – 4)

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண் … ஆஸ்திரேலியா    

    பனையின் மீது தமிழர் பெருங் காதல் கொண்டிருந்திருக்கிறார்கள். பனை என்பது தமிழர்களின் மரம் என்றே எண்ணி வந்திருக்கிறார்கள். அந்த நினைப்பு அவர்களின் உள்ளத்தில் ஆழப்பதிந்த காரணத்தால் தாங்கள் வசிக்கும் ஊர்களுக்கும் தங்களின் விருப்பத்துக்குரிய பனையினை இணைத்து பெயர் வைத்து மகிழ்ந்திருக்கிறார்கள். அந்தவகையில்த்தான் இங்கு சில ஊர்களின் பெயர்களைப்பார்க்கின்றோம். பனையின்குளம், பனகுடி, பனஞ் சாவடி, பனங்குளம், பனையூர், பனையப்பட்டி,  வடக்குப்பனைவடலி, தீய்ந்தபனைப்பட்டி, கலந்தபனை, பனங்காட்டூர், திருப்ப னையூர், பனங்காடு, பொற்பனைக் கோட்டை.

    இலக்கியங்களில் காட்டினாலும் தாங்கள் வாழுகின்ற இடங்களிலும் பனையினை விட்டுவிடத் தமிழர்கள் விரும்பவில்லை என்பதையே இந்நிலை காட்டுகிறதல்லவா!

    வெய்யில் என்று பாராமல், மழை என்று பாராமல்; ஒற்றைக் காலில் நின்று தவம் செய்து மக்களுக்கு – அவர்களின் வாழ்வில் பல நிலைகளிலும் பனையானது பயனை நல்கியே வந்திருக்கிறது என்பதும் கருத்திருத்த வேண்டியதே.

    கிறீத்தவ வேதமான பைபிளும் பனையினை வியந்து நிற்கிறது. “நீதிமான் பனையைப் போல் செழித்து வளருவான்” என்பதும் நோக்கத்தக்கது.

    பதநீரைப் பற்றியும், சுவையான நுங்கு பற்றியும். பனம்பழம் பற்றியும், கள் பற்றியும் இலக்கியங்கள் காட்டி நிற்பதையும் காணமுடிகிறது. பனை மாறன் என்று பெயரைக் கொண்ட மன்னர்கள் ஈழத்தை ஆண்டார்கள் என்பதையும் அறிய முடிகிறது. நுங்கின் நீரும்,  கரும்பின் சாறும், இளநீரும் அருந்தி ஆனந்தம் அடைந்தார்கள் பெண்கள் என்று ஆலத்தூர் கிழார் என்னும் புலவர் பாடுகிறார். நலங்கிள்ளை என்னும் அரசனின் படை மிகவும் பாரியது. அப்படையின் முன்னணியினர் பனையின் நுங்கினைச் சுவைத்து மகிழ்கிறார்கள். நடுவில் செல்லும் படையணியினர் பனம் பழத்தை உண்டு மகிழ்கிறார்கள். படையணியின் கடைசிப் பகுதியினர் பனங் கிழங்கினை உண்டு பசியாறுகிறார்களாம். அந்த அளவுக்கு படையின் பெருக்கமும், கடந்து செல்லும் காலத்தின் நீட்டமும் காணப்பட்டது என்றும்  பனையின் பருவத்தினையும் அதனால் வருகின்ற பயனையும் புறப்பாடல் வாயிலாக ஆலத்தூர்கிழார் காட்டி நிற்பது கருத்திருத்த வேண்டியதே!

    வீட்டுக்கு வருகின்ற விருந்தினருக்கு நாம் இப்போது தேனீர் கொடுப்போம். கோப்பி கொடுப்போம். இன்னும் எத்தனையோ வகையான பானங்களைக் கொடுப்போம். அவை அனைத்தும் உடல் நலத்துக்கு உகந்தனவா என்பதை கொடுக்கின்ற நாங்களும் உணர்வதில்லை. பருகுகின்ற விருந்தினரும் உணருவதில்லை. ஆனால் வீட்டுக்கு வருகின்றவர்களுக்கு நுங்கினைக் கொடுத்து அக்காலத்தில் எம்மக்கள் மகிழ்ந்தார்கள் என்பதை சிறு பாணாற்றுப் படை மூலம் அறிகின்றோம்.

    பனையினைப் பலவிதங்களில் பயன்படுத்திய செய்தியினையும் இலக்கியங்கள் புலப்படுத்தி நிற்பதும் நோக்கத்தக்கது. பனையின் ஓலையினால் ஆகிய உண் கலங்கள் பயன்பட்ட விதத்தினை நற்றிணை காட்டுகிறது. தட்டுவம் என்பது பனை ஓலையால் ஆன உண் கலமாகும். பனை ஓலையால் ஆன தட்டுவம் தூய்மையான கலமாகும். இன்று எத்தனை பேருக்கு நினைவில் இருக்கிறதோ தெரியாது! கள்ளினை அருந்துவதற்கு பனை ஓலையிலான கலம் பயன்பட்டிருக்கிறது. இன்றும் அது நடைமுறையில் கிராமங்களில் இருப்பதையும் காணலாம். பனையின் பன்னாடை கள்ளை வடிப்பதற்கும், பத நீரை வடிப்பதற்கும் துணையாக இருந்தது என்பதை புறப்பாடல் காட்டி நிற்கிறது.

    தென்னம் பிள்ளை என்று செல்லமாய் அழைக்கும் தென்னை யானது வீடுகள் தோறும் இருக்கும். தென்னையைப் பிள்ளையாக்கி செல்லமாய் வளர்ப்போம். நித்தமும் நீர் ஊற்றுவோம்.கிட்டத்தட்ட பிள்ளையைப் பேணுவது போலவே தான்  தென்னையைப் பேணுவோம். ஆனால் பனையினை அப்படிப் பேணுவதும் இல்லை. அதனை வளர்த்திட நினைப்பதும் இல்லை. வளர்ந்த பனைகளைப் பார்த்துப் பாராமலும் நிற்போம். யாராவது நல்ல உயரமாய், நல்ல கறுப்பாய், நல்ல முறுக் கேறிய உடல் தோற்றத்துடன் காணப்பட்டால் – அவர்களை விபரிப்பதற்கு பனையினை எடுத்துக்காட்டி  நிற்போம். பனையோ இதனை எதையுமே கண்டு கொள்ளாமல் தனது ஒத்துழைப்பினை வழங்கியபடி தலை கவிழாமல் தலை நிமிர்ந்தபடியே தளராது நிற்கும். அடியிருந்து நுனிவரை அனைத்தையுமே எங்களுக்கு அளித்து கற்பகதருவாய், கர்ணனாய் களிப்புற்று நிற்கும். தென்னையும் இவ்வாறு தந்தாலும் பனையின் பக்குவம் வேறு ! பனையின் பயன்பாடும் வேறாகும்! பனையின் வாழும் காலமும் வேறாகும்!

    பிள்ளையென நாமழைக்கும் தென்னையில் ஆண், பெண் என்று வகை இல்லை. ஆனால் பனையில் ஆண், பெண் என்று காணப்படுகிறது. ஆண் பனையினை ‘அழகுப் பனை’ என்றும் , பெண் பனையினை ‘பருவப்பனை’  என்றும் அழைக்கின்றனர். பாளையினை மட்டும் நீட்டிக் கொள்ளுவதுடன் ஆண்பனை நின்றுவிடும். நுங்கினை வழங்கிடும் நிலை ஆண்பனைக்கு இல்லை. ஆனால் காய்ய்ப்பதும் கனிதருவதும் பெண்பனைதான். பதநீர் கூட ஆண்பனையைவிடப் பெண்பனையே தந்து நிற்கும்.

    பயிரிடப் படாமல் தானாகவே வளர்ந்து பயனளிக்கும் பனையினை மனமிருத்துவது அவசியமாகும். இளம் பனையினை ‘வடலி’ என்று அழைக்கின்றோம். பனையானது வளர்வதற்கு பதினைந்து ஆண்டுகள் எடுக்கும் என்று அறியமுடிகிறது. பனையின் வயதானது மனிதனின் சராசரி வயதிலும் கூடியது என்பது மனங்கொள்ளத்தக்கதாகும். வளைவுகள் இன்று நேராக வளர்வது பனையின் சிறப்பு எனலாம்.

    கற்பகதருவான பனையினைக் கருத்திற்கொண்டு நாட்டுப்புற மக்களின் நாயகனான ஒருவர் தன்னுள்ளத்து உதித்தவற்றை தனது மொழியிலே கவிதையாக்கி வழங்கி இருக்கிறார். பனையின் வரலாற்றையே எப்படிக் காட்டுகிறார் பாருங்கள்.

    பனைமரமே! பனைமரமே! ஏன் வளர்ந்தாய் பனைமரமே?
    நான் வளர்ந்த காரியத்தை நாட்டாரே! சொல்கிறேன் கேட்பீர்.
    அறியாவிட்டால் சொல்லுகிறேன் அச்சோடி பெண்களா சோபனமே!
    தெரியாவிட்டால் சொல்லுகிறேன் தேசமெங்கும் சோபனமே!
    பராமரியா யிருக்காமல்  பட்சமுடன் கேட்டிருங்கள்.
    படுக்கப்பாய் நானாவேன், பாய்முடையத் தோப்பாவேன்,
    வெட்டநல்ல விறகாவேன், வீடுகட்ட வாரையாவேன்,
    பட்டுப்போற பயிர்களுக்குப் பலத்தநல்ல ஏற்றமாவேன்,
    அட்டடுக்குப் பெண்களுக்கு அடுப்பெரிய மட்டையாவேன்,
    கட்டநல்ல கயிறாவேன், கன்றுகட்டத் தும்பாவேன்,
    மட்டமுள்ள உறியாவேன், மாடுகட்டத் தும்பாவேன்,
    பசுவணைக்குங் கயிறாவேன்,  பால்தயிருக்கு உறியாவேன்,
    வாரமட்டை நானாவேன், வலிச்சல்களுந் தானாவேன்,
    தொட்டிலுக்குக் கயிறாவேன், துள்ளியாட ஊஞ்சலாவேன்,
    கிணத்துசலம்  மொண்டுவரக் கைத்தாம்புக் கயிறாவேன்,
    பலத்தசுமை பாண்டங்கட்குப் புரிமணையுந் தானாவேன்,
    ஏழைநல்ல மங்கலிக்கு ஏற்றகா தோலையாவேன்,
    மங்கலியப் பெண்களுக்கு மஞ்சள்பெட்டி நானாவேன்,
    பாக்கியமுள்ள பெண்களுக்குப் பாக்குப்பெட்டி நானாவேன்,
    விர்த்தாப்பியப் பெண்களுக்கு வெற்றிலைப்பெட்டி  நானாவேன்,
    குணமுள்ள பெண்களுக்குக் குங்குமப்பெட்டி நானாவேன்,
    பெரியோர்கள் தோள்மேலே திருப்பக்குடை நானாவேன்,
    திருப்புக்கூடைக் குள்ளிருக்குந் திருமண்பெட்டி நானாவேன்,
    திருப்பாவை சேவிப்போர்க்குத் திருத்துழாய்ப் பெட்டியாவேன்,
    எழுதுகின்ற பிள்ளைகட்கு வண்ணநல்ல தடுக்காவேன்,
    ஓதுகின்ற பிள்ளைகட்கு ஓலைத்  தடுக்காவேன்,
    நனைந்து வருவார்க்கு டம்பக்குடை நானாவேன்,
    பசித்து வருவார்க்குப் பனம்பழமும்  நானாவேன்,
    பாலர் பெரியோர்க்குப் பனம்பதநீர் நானாவேன்,
    சித்திரைக் கோடையிலே சிறந்தநல்ல நுங்காவேன்,
    காளையர்க்கும் கன்னியர்க்கும் களைதீர்க்கும் விசிறியாவேன்,
    கைப்பிள்ளைத் தாய்மார்க்குக் கருப்புக்கட்டி நான்தருவேன்,
    வேலிகட்டக் கயிறாவேன் விறகுகட்ட நாராவேன்,
    வருடத்துக் கோர்தினத்தில் சரசுவதி பூசைசெய்து
    ஆமெழுகிக் கோலமிட்டு  அச்சோடி பெண்களா சோபனமே!
    மணையலம்பிக் கோலமிட்டு மணைநிறைய புராணம்வைத்து
    பூவும் புதுமலரும் பொன்னாகும் அட்சதையும்
    அட்சதையு மலரெடுத்து அர்ச்சிப்பார் உலகமெல்லாம்,
    வித்தாரமாய் இரண்டாநாள் விசயதசமி என்றுசொல்லி,
    நாட்டிலுள்ள பிள்ளைகட்கு நாள்பார்த்து முகூர்த்தமிட்டு,
    எண்ணெய் தேய்த்து நீராட்டி இயல்புடனே அலங்கரித்து,
    மாலைபோட்டு சந்தனம்பூசி மடிநிறைய புத்தகம் வைத்துப்
    பசங்கள் படித்துவர மங்களங்கள் பாடிவரக்
    காம்பு நறுக்கியவர் கணுக்காம்பு வேரறுத்துப்
    பக்கமிரு புறம்வாரிப் பல்வரிசைக் காம்பரிந்து
    என்னைத் திருத்தியவர் எழுத்தாணி கைபிடித்து,
    வெள்ளிநெட் டெழுத்தாணி வேடிக்கை யாய்ப்பிடித்து,
    ஆரியரும் வேதியரும் அரிநமோ வென்றெழுதி,
    அரிஅரி என்றெழுதி அர்ச்சிப்பார் என்னையவர்,
    அரிச்சுவடி என்னாலே, அடுக்காய்ப் பாடம் என்னாலே,
    எண்சுவடி என்னாலே, குழிமாற்றும் என்னாலே,
    தர்க்கங்கள் என்னாலே, சாத்திரங்கள் என்னாலே,
    இராமாயணம் என்னாலே, பாரதமும் என்னாலே,
    பாகவதம் என்னாலே, பல்சாத்திரங்கள் என்னாலே,
    திருவாய்மொழி என்னாலே, திவ்வியப்பிரபந்தம் என்னாலே,
    நாலுவேதம் என்னாலே, ஆறுசாத்திரம் என்னாலே,
    கங்கைக்கும் இலங்கைக்கும் கீர்த்திமிகப் பெற்றிருப்பேன்,
    மங்கையர்க்கும் மன்னவர்க்கும் மனமறிவதும் என்னாலே,
    வர்த்தகரும் செட்டிகளும் வழியறிவதும் என்னாலே,
    கணக்கர்களும் முதலிகளும் கணக்கறிவதும் என்னாலே,
    பலசரக்கு மண்டிகளில் பத்திரமாய் நானிருப்பேன்,
    காசுக்கடை சவுளிக்கடையில் கருத்துடனே நானிருப்பேன்,
    கொடுக்கல் வாங்கல் உள்ளவர்க்குக் குறிப்புச் சொல்லி வாங்கி வைப்பேன்,
    கார்த்திகை மாதத்திலே கருத்தறிந்த பிள்ளைகட்குத்
    திருத்தமுள்ள மாபலியாய்த் தெருவெங்குஞ் சுற்றிடுவேன்,
    பட்சமுள்ள வாசலுக்குப் பட்டோலை நானாவேன்,
    காதத்துப் பெண்களுக்குக் காதோலை நானாவேன்,
    தூரத்துப் பெண்களுக்குத் தூதோலை நானாவேன்,
    கலியாண வாசலுக்குக் கட்டோலை நானாவேன்,
    சீமந்த வாசலுக்குச் சீருடனே நான்போவேன்,
    பிள்ளை பிறந்ததென்றால் பெருமையுடன் நான்போவேன்,
    மைந்தன் பிறந்ததென்றால் மகிழ்ச்சியுடன் நான்போவேன்,
    அரண்மனையில் நானிருப்பேன், ஆஸ்தானத்தில் நானிருப்பேன்,
    மச்சுள்ளே  நானிருப்பேன்,  மாளிகையில் நானிருப்பேன்,
    குச்சுள்ளே நானிருப்பேன், குடிசைக்குள் நானிருப்பேன்,
    எருமுட்டை குதிரையெல்லாம் ஏந்திக்கொண்டு நானிருப்பேன்,
    ஏரிக்கரை மேலேநான் எந்நாளும் வீற்றிருப்பேன்,
    எமலோகம் போனாலும் எல்லவர்க்குந் தெரியவைப்பேன்,
    சிவலோகம் போனவர்க்குச் சீட்டோலை யாயிருப்பேன்,
    சகலமான காரியத்துக்கும் சாக்கிரதை யாயிருப்பேன்,
    இத்தனைக்கும் உதவியென்று என்னைஅயன் சிருட்டித்தான்,
    கற்பக விருட்சமெனக்கு எல்லையுந்தான் மறந்தேன்,
    திருப்பாளை ஊர்தன்னிற் சிவன்புனைந்தான் என்நாமம்,
    நான்வளர்ந்த சேதிதனை நலமுடனே கேட்டவரும்,
    பாடிப் படித்தவரும் பட்சமுடன் கேட்டவரும்,
    சொல்லிப் படித்தவரும் சுகிர்தமுடன் கேட்டவரும்,
    எல்லை உலகளந்த எம்பெருமான் கோத்திரம்போல்,
    ஆல்போலே தழைத்து ஆதிசிவன் போல்வாழ்வார்,
    ஊழியூழி காலமட்டும் உலகுதனி லேயிருந்து,
    வாழிவாழி என்றுசொல்லி வரமளித்தார் ஈஸ்வரனும்.

    Share
  • நல்லைநகர் நாவலர் பெருமான்!

    நல்லைநகர் நாவலர் பெருமான்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா         

    நல்லைநகர் என்றாலே எல்லையில்லா இன்பம் வரும்.வல் வினைகள் போக்குகின்ற வடிவேலன் உறையும் இடம். அந்தவிடம் அமைந்த விதம் அனைத்துக்கும் பெருமைதான். சொல்ல வல்ல ஒருவர் பிறக்கின்றார். அவர் பெயருடன் நல்லைநகரும் இணைந்து விடுகிறது. நல்லை நகர் சேர்ந்ததனால் அவர் புகழ் பெற்றாரா அல்லது அந்தக் கந்தப் பெருமான் அருள் கிடைத்ததால் அவர் புகழ் பெற்றாரா என்று எண்ணி நிற்கும் அளவுக்கு அவர் சிறந்தோங்கி விளங்கினார். அப்படி விளங்கியவர்தான் நல்லைநகர் ஆறுமுக நாவலர் பெருமான்.

    கந்தப்  பெருமானைத் தன் சிந்தையில் இருத்தி – தன் வாழ்க்கைப் பாதையினை அவர் அமைத்து அதன் வழியில் நடந்தார் எனலாம். கந்தப் பெருமானை மனம்முழுக்க எண்ணிய இருந்த காரணத்தால் கந்த புராணத்தை உயிராக நாவலர் பெருமான் கருதினார். “கந்த புராண கலாசாரம்” என்னும் வகையில் ஒரு புதுமையான கலாசாரம் தோன்றி இன்றளவும் ஈழத்தில் யாழ்மண்ணில்  இருப்பதற்கு மூலகாரணமாய் நாவலர் பெருமானே அமைந்தார் என்பதை அனைவரும் அகத்தில் இருத்துவது அவசியமாகும்.

    நாவலர் பெருமானை ஐந்தாங் குரவர் என்று ஏற்றிப் போற்றும் ஒரு நிலையும் காணப்படுகிறது. சமய குரவர் என்னும் பொழுது சம்பந்தர், அப்பர், சுந்தரர் , மணிவாசகர் வந்து அமைகிறார்கள். யாவருக்கும் இது தெரிந்த விடயந்தான். ஆனால் ஐந்தாம் நிலையில் ஒருவரை இவர்களுடன் எப்படி இணைப்பது? எவ்வாறு இப்படி ஒரு சிந்தனை எழுந்தது? என்றெல்லாம் எண்ண வைக்கிறதல்லவா! இங்குதான் நாவலர் தேர்ந்தெடுத்து நடந்த பாதையினைப் பார்க்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. சமய குரவர்கள் என்ன செய்தார்கள்? அவர்களைக் கோவிலில்களில் வைத்து அவர்களுக்குக் குருபூசை செய்வதற்குக் காரணந்தான் என்ன? பூசிக்கப்படுகிறார்கள், கொண்டாடப்படுகிறார்கள், உயர்நிலையில் வைக்கப்படுகிறார்கள் – என்றால் அவர்கள் நிச்சயம் சமூதாயத்துக்கு மிகவும் உவப்பான, அவசியமான, செயல்களைச் செய்திருப்பவர்களாகத்தான் இருப்பார்கள் என்பது புலனாகி நிற்கிறதல்லவா!

    சமயகுரவர்களில் முன்னிற்பவர் சம்பந்தப்பெருமான். அவரின் சம காலத்தவர் அப்பர் பெருமான். இவர்கள் இருவரும் எங்கள் இன் தமிழை இதயத்தில் வைத்து ஏந்தினார்கள். அது போல் சைவவத்தையும் இதயத்தில் இருத்தி வைத்தார்கள். சைவம் ஒரு கண்ணாயும் தமிழ் மற்றக் கண்ணாயும் இவர்கள் கொண்டார்கள் என்றால் அது மிகையாகாது. மாற்று மதமும், வேற்றுக் கலாசாரமும், தமிழையும், தமிழ்ப் பண்பாட்டையும், சைவத்தையும், அடக்கி ஒடுக்கி அழிக்கின்ற வகையிலே வந்த பொழுது – அவற்றை அகற்றிட “நாமார்க்கும் குடியல்லோம்” என்னும் துணிவுடன் வந்தவர்கள்தான் சம்பந்தரும் அப்பரும். சம்பந்தர் இளையவர். அப்பர் முதிர்ந்தவர். இளமையும் அனுபவமும் இணைந்து ஒரு பெரிய போராட்டமே தமிழகத்தில் நடந்தது. அந்தப் போராட்டாத்தின் முதல் படைத் தளபதிகளாய் ஆண்டவனைத் துணையாக்கி நின்றவர்கள்தான் சம்பந்தரும் அப்பரும் ஆவர்.

    எதனை ஏற்பது? எதனை விடுவது? எது பயனானது? என்று மயக்குற்று நின்ற மக்களுக்குத் தலைமை தாங்கி அவர்களை நல்வழியில் நடத்திச் சென்றவர்கள் சம்பந்தரும் அப்பருமே என்பதை மறுத்துரைத்து விடல் இயலாது. சம்பந்தரும் அப்பரும் அக்காலத்தில் பிறந்திருக்கா விட்டால் எங்கள் சைவமும், தமிழுமே காணாமலே போயிருக்கும். செய்யெனச் சொல்லாமல் தாமே முன்னின்று செயலாக்கி நின்றார்கள். கோவில்கள் எழுந்தன. சைவம் தளைத்தது, பிழைத்தது. அவர்களின் பின்னால் சுந்தரர் வருகிறார். மணிவாசகர் வருகிறார். இவர்களும் தங்காலத்துக்கு எது ஏற்றதோ அதனைச் செவ்வனவே செய்து சைவத்தையும், தமிழையும் நிலைபெற வைக்கிறார்கள்.

    சமய குரவர்கள் நால்வரின்பின் ஐந்தாம் குரவராக நாவலரைக் கொள்வதற்கு உரிய காரணங்களை அறிவது மிகவும் அவசியமாகும். அதற்கு நாவலர் பெருமானைப் பற்றித் தெரிந்து கொள்ளுவது முக்கியமாகும்.

    சைவத்தைத் தலைமேற் கொண்ட குடும்பம் நாவலர் பெருமான் குடும்பம். ஆசார அனுட்டானங்களைக் கடைப்பிடித்த குடும்பம்  எம்பெருமானை  நீளநினைந்த குடும்பம். சைவம், தமிழ் இரண்டையும் கண்ணாய்க் கருதிய குடும்பம் அவர் குடும்பம். அந்தக் குடும்பத்தில் பிறந்ததே திருவருள் என்றுதான் எண்ண வேண்டி இருக்கிறது. பிறப்பும், குடும்பச் சூழலும் வளரும் பருவத்திலேயே நாவலரை நல்ல வழியில் பயணப்படுவதற்கு உரிய கருவை இதயத்தில் பதித்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். திண்ணைப் பள்ளிக்கூடத்தில் தமிழ் இலக்கியங்களை, இலக்கணத்தை, சைவத்தை  எல்லாம் கற்றிட நாவலரின் தந்தையார் உறுதுணையாக விளங்கினானர். இளமையில் கல்வி சிலையில் எழுத்து என்பது போல – நாவலரின் இளமையில் போடப்பட்ட நல்ல உரமானது அவரின் வருங்கால வாழ்வினுக்கு, செயற்பாடுகளுக்கு நற்பாதையாய் அமைந்திருந்தது என்பது உண்மையாகும்.

    நாவலர் அவர்கள் வாழ்ந்த காலம் அன்னியர் ஆட்சியின் காலமாகும். அவர்களின் மதம், கலாசாராம், மொழி செல்வாக்கினைச் செலுத்துவதற்கு முன்வந்த காலமாகும். அன்னியரை அடிபணிந்தால் அனைத்துமே கிடைக்கும் என்னும் நிலை காணப்பட்ட காலமுமாகும். அன்னிய அரசுக்கு யார் விசுவாசமாகச் செய ற்படுகிறார்களோ அவர்களே நல்ல வசதிகளை, வாய்ப்புகளைப் பெற்று வாழும் வாழ்க்கை நிலவியது என்பதும் மனங்கொள்ளத்தக்கது. இந்தச் சூழலில் நாவலர் பெருமான் ஆங்கிலப் பாடாசாலையில் கல்வி கற்கவேண்டி ஏற்படுகிறது. தற்பொழுது யாழ் மத்திய கல்லூரியாய் விளங்கும் கல்லூரியில்த்தான் நாவலரின் ஆங்கிலக் கல்வி தொடங்கியது. நாவலர் எதையுமே நினையாமல் கற்பதைக் கருத்தாய் எண்ணிக் கற்று யாவரும் மதிக்கும் மாணவனாய் நிமிர்ந்து நின்றார். அன்னிய மொழியான ஆங்கிலத்தில் நல்ல புலமையினையும் பெற்றுக் கொண்டார். கற்ற பாடசாலையிலேயே கற்பிக்கும் ஆசானாக ஆகும் வாய்ப்பும் அவருக்கு வாய்த்தது. ஆங்கிலம், தமிழ், சமஸ்கிருதம் என்று கற்று தன்னுடைய மொழி ஆற்றலை நாவலர் பெருமான் வளர்த்துக் கொண்டார். கிறீத்தவ பாடசாலை. கிறீத்தவ பாதிரிமார் ஆசிரியர். கிறீத்தவமே அங்கு முழுவதுமாய் இருந்தது. ஆனால் அவை எவையுமே தன்னைத் தொடாதவாறு நாவலர் தம்மைக் காத்து சிறந்த சைவமகனாய் ஆகியே நின்றார். இப்படி அமைந்ததற்கு அடிப்படை காரணம் நாவலர் மனதில் உதித்த நற்பாதை என்றுதான் எண்ண வேண்டி இருக்கிறது.

    சமய குரவர்கள் வரவில்லையேல் எங்கள் சைவம் இல்லாமலே போயிருக்கும். சமயகுரவர்களின் வருகை அக்காலத்துக்கு அவசிய மானதாகவே அமைந்தது. ஐந்தாம் குரவராய் போற்றப்படும் நாவலர் வந்திருக்காவிட்டால் எங்கள் சைவமும் இல்லாமல் போயிருக்கும். அன்னியர் ஆளுகையினால் அவர்களின் மதமான கிறீத்தவம் மேலோங்கும் நிலை காணப்பட்டது. அந்த மேலோங்கலால் எங்கள் சைவம் தன்னிலை இழந்து போகாமல் – நிலைபெறச் செய்தவர் நாவலர் பெருமானே ஆவர். இதனால் ஐந்தாம் குரவராய் சைவத்தைக் காத்திட நாவலர் அன்னியர் ஆட்சிக் காலத்தில் வந்து அமைகிறார் என்பதுதான் உண்மையாகும்.

    சைவமும் தமிழும் இணைபிரியாதன. சமயகுரவர்கள் தமிழையே மூச்சாக்கி அதன் வாயிலாகவே சைவத்தின் மேன்மைகளை உணர்ந்திடச் செய்தார்கள். அத்தனையும் திருமுறைகளாக மலர்ந்தன. பண்ணமைந்ததமிழ்ப் பாடல்களாய் மக்கள் மனங்களில் பதிந்து மாற்றத்தை ஏற்படுத்தின. இவையனைத்தும் நாவலர் பெருமான் உள்ளத்தில் நிறைந்தே இருந்தது. சமயகுரவர் காலத்தில் பாடல்கள் மூலமாகவே கருத்துக்களை வெளிப்படுத்துவது வழமையாய் இருந்தது. ஆனால் நாவலர் காலம் அதற்கு உவப்பானதாக இருக்கவில்லை. அதனை நன்கு மனதிற் கொண்ட காரணத்தால் புதுப்பாதை வகுத்து அதன் வழியில் நாவலர் பெருமான் நடக்கத் தொடங்கினார். அந்தப் பாதைதான் வசன நடையாகும். சைவத்தின் மேன்மைகளை மக்கள் மனத்தில் பதியவைக்க நாவலரின் சிறப்பான வசனநடை கைகொடுத்தது மட்டுமல்லாமல் வெற்றியினையும் அளித்தது எனலாம். அவர் தமிழில் வசனத்தைக் கையாண்ட விதத்தைக் கண்ட பரிதிமாற் கலைஞரான தமிழறிஞர் அவரை “வசனநடை கைவந்த வல்லாளர்” என்று வியந்து போற்றினர்.

    கோவில்கள் தோறும்  அடியார்கள் பின் தொடர சமயகுரவர்கள் திருமுறைகளைப் பாடினார்கள். அது அக்காலத் தேவையாய் ஆகியது. ஆனால் நாவலர் தன்காலத்துக்கு எது ஏற்றதோ அதனைக் கையிலெடுத்து – கோவில்களில் தொடர் விரிவுரைகளை அறிமுகமாக்கி நின்றார். நாவலரைத்தான் முதல் மேடைப் பேச்சாளர் என்றும் கொள்ளலாம். தற்போதைய மேடைப் பேச்சுக்கு வித்திட்டவராகவும் நாவலர் பெருமான் வந்தமைகிறார் என்பது கருத்திருத்த வேண்டியதேயாகும். சைவசமயக் கருத்துக்களைப் புலப்படுத்த புராணங்களைக் கையிலெடுக்கிறார் நாவலர் பெருமான். புராணங்களை விரிவுரையாக மக்களுக்கு எடுத்து விளக்குகிறார். அவரின் சொல்லாற்றலும், பேச்சாற்றலும் மக்களை அவர் வசமாக்கி நிற்கிறது. அவர் எடுத்த முயற்சி வெற்றியாய் அமைகிறது. பேச்சுடன் நின்றுவிடாமல் மிகவும் எளிமையான் வசன நடையில் புராணங்களுக்கு விளக்கங்கள் எழுதி அவற்றை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கிறார். அச்சுக்கூடத்தை நிறுவி அதில் சைவ, தமிழ் நூல்களைப் பதிப்பித்து ஒரு புரட்சியினையே செய்து விடுகிறார். இது அவர் தேர்ந்தெடுத்த நல்ல பாதையாய் அமைகிறது எனலாம்.

    இலவசமாய் கல்வியினை அளிக்கும் புதுப்பாதையினை நாவலர் பெருமான் தொடங்கி வைக்கிறார். படிக்கும் மாணவர்களுக்கான பாட நூல்களைத் தாமே எழுதி அவற்றை அச்சடித்தும் கொடுக்கின்றார். மாணவர்களின் கல்வி உளவியலை மனதிற் கொண்டு நாவலர் பெருமானின் பாடநூல்கள் அமைந்திருந்தன என்பதுதான் மிகவும் முக்கியமாகும். தமிழகத்தில் தமிழ்ப்பாட நூல்கள் அக்காலத்தில் வந்தாலும் – அவையெல்லாவற்றையும் விட நாவலர் பெருமானின் பாடநூல்களே சிறந்தது என்று தமிழ் நாட்டவராலேயே ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறது என்பது மனங்கொள்ளத்தக்கதாகும். இலக்கியத்தை, இலக்கணத்தை, இலகுவாக்கிடும் வகையில் நாவலரின் செயற்பாடுகள் அமைந்திருந்தன என்பதை மறுத்துரைத்துவிடல் முடியாது. செய்யுளாய் அமைந்திருந்த இலக்கணத்தை யாவரும் விளங்கும் வகையில் அவர் காலத்தில் வசனநடையில் கொண்டுவந்து கொடுத்தமை நாவலரின் புதுப்பாதைதானே!

    ஐந்தாம் குரவராக விளங்கும் நாவலர் அஞ்ஞா நெஞ்சனாகவும் விளங்கியிருக்கிறார். தம்மை எதிர்கொள்ள வந்த அரசின் ஆணையினையே துச்சமாக எண்ணி “நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்” என்று வீரமாய் எதிர்து நின்றவர் சமயகுரவரான அப்பர் பெருமான். அப்பர் வழியிலே நமது ஐந்தாம் குரவரும் நடை பயில்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். தன் கருத்துக்கு ஒவ்வாதவற்றை, நீதிக்குப் பாதிப்பான வற்றை, சமூகத்துக்குப் பொருந்தாவற்றை, சைவத்தைத் தூஷிப்பவற்றை: அஞ்ஞாமல் எதிர்க்கின்ற போராளியாக அதாவது கண்டனக் கதாநாயகனாக நாவலர் பெருமான் விளங்கினார் என்பது உண்மையாகும். சைவத்தைத் தாழ்த்தியவர்களை எதிர்த்தார். வால்பிடிப்பாரை எதிர்த்தார். உண்மையினை உணராமல் ஊதுகுழலாய் ஆகி நிற்பாரை எதிர்த்தார். போலிச் சைவர்களை, போலிக் கிறீத்தவர்களை, எதிர்த்தார். அதுமட்டுமல்ல சமயம் அறியாத குருமாரையும் சாடினார். கண்டனங்களை சிறு துண்டுப் பிரசுரமாக வெளியிட்டார். அத்தனையும் அவரின் தர்ம ஆவேசத்தையே வெளிச்சமாக்கி நின்றது. கண்டனக் கணைகளை வீறுடன் விடுபவராய் ஐந்தாம் குரவரான நாவலர் பெருமான் இருந்தார் என்பதை யாவருமே ஒத்துக் கொள்ளுவார்கள்.

    குருவினைப் பேணுவதில் பெரும் அக்கறை மிக்கவர் நாவலர் பெருமான். குரு சொல்லினைத் தட்டாமல் விவிலியத்தை மொழி பெயர்த்துக் கொடுத்து – மிகச்சிறந்த மொழி பெயர்ப்பு என்னும் அங்கீகாரத் தையும் வாங்கிக் கொடுத்தார். அத்துடன் அவர் நின்றுவிடுகிறார். விவிலியத்தை மொழிபெயர்க்கும் வகையில் அவர் அந்தக் கிறீத்தவ வேத நூலினை மனத்தில் நன்கு பதித்தவராகவே ஆகியிருக்கிறார். அதனால் சைவத்தை எதிர்க்கும் கிறீத்தவ பிரசாரகருக்கு ஏற்ற மறுமொழியினை அளித்திடும் அறிவாற்றல் நாவலர் பெருமானிடம் நிரம்பியே இருக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. தனது சமயத்தையும், மற்றைச் சமயத்தையும் நன்றாய் அறிந்து உணர்ந்த காரணத்தால் நாவலர் பெருமான் தன் காலத்தில் கதாநாயகனாகவே ஆகி நின்றார் என்பதை மறுத்துரைத்துவிடல் முடியாது அல்லவா!

    ஆறுமுகம் என்னும் பெயருடன் தமிழகம் சென்றவர் யாழ்ப்பாணம் திரும்பிடும் வேளை “நாவலர்” என்னும் பட்டத்தினைத் தனதாக்கி  ஆறுமுக நாவலர் என்னும் புதுப் பெயருடன் வருகிறார். நாவன்மையினை மெச்சி திருவாவடுதுறை ஆதீனம் இப்பட்டத்தை ஈழத்துத் தமிழ்ப் பெரியாரான ஆறுமுகத்துக்கு வழங்கியிருக்கிறது. பட்டம் என்னவோ அவருடன் இணைந்து கொண்டுவிட்டது. அது அவருக்கு மிகவும் பொருத்தமான பட்டமாகவும் அமைந்தது என்பதும் உண்மையாகும். ஆனால் நாவலர் பெருமான் அதனால் தன்னிலையில் மாற்றமுறவில்லை. தன்பாதை எதுவோ அதன்வழியிலேதான் பயணப்பட்டார். அவர் விரும்பி இருந்தால் ஏதாவது ஒரு ஆதீனத்துக்குக் தலைவராய் ஆகி இருக்கலாம். ஆளணியுடன் வாழ்ந்திருக்கலாம். அப்படியான எண்ணம் நாவலர் பெருமானிடம் தோன்றவே இல்லை என்பதைக் கருத்திருத்தல் வேண்டும். யாழ்ப்பாணத்தில் கூட தனியனாகவே நின்று செயற்பட்டார். தன் பெயரிலே சபையோ, ஆதீனமோ நிறுவிடவும் அவர் நாட்டங் கொள்ளவில்லை. “என்கடன் பணி செய்து கிடப்பதே” என்பதே அவர் வகுத்து நட ந்த பாதையாகி அமைந்தது எனலாம்.

    தேடிச் சோறுநிதந் தின்று – பல
    சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
    வாடித் துன்பமிக உழன்று – பிறர்
    வாடப் பலசெயல்கள் செய்து – நரை
    கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
    கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
    வேடிக்கை மனிதரைப் போலே – நான்
    வீழ்வே னென்று நினைத் தாயோ

    என்று பாரதி முழங்கியதற்கு ஒப்பாய் நாவலர் பெருமானின் செயற்பாடுகள் அனைத்துமே அமைந்திருந்தன என்பதை நாமனைவருமே மனத்தில் பதித்திடல் அவசியாமாகும். தனக்குச் சரியெனப் பட்டதை யாருக்குமே அஞ்சாமல் செய்து நின்றவர்தான் எங்கள் வரலாற்று நாயகனாகிய ஐந்தாம் குரவர் நாவலர் பெருமான். பழமைக்குள் மூழ்கிடாமல் தன்காலத்துக்கு எது உகந்ததோ அதனை மனமிருத்தி செயற்பட்டவர் தான் நாவலர் பெருமான். அதேவேளை மரபினையும் மறந்தாரில்லை என்பதும் நோக்கத்தக்கதாகும். நாவலர் காலத்து நிலைமைக்கு ஏற்ப அவரின் சமயச் சிந்தனை, தமிழ் பற்றிய சிந்தனை, கல்வி பற்றிய சிந்தனை, ஒழுக்கம் பற்றிய சிந்தனை யாவுமே  அமைந்திருந்தது.

    இலக்கணம், சமயம், காப்பியங்கள் என்னும் வகையில் நாற்பத்து நான்கு நூற்களைப் பதிப்பித்திருக்கிறார். இலக்கணம் தொடர்பாகவும் சைவசமயம் தொடர்பாகவும் இருபத்து நான்கு நூல்களை ஆக்கி இருக்கிறார். அத்துடன் அமையாது பதினாறு நூல்களுக்கு உரையும் எழுதியிருக்கின்றார். வியப்பாக இருக்கிறதல்லவா? இவ்வளவும் யாருக்காகச் செய்தார்? யாவுமே மண்ணும் மக்களும் பயனுற வேண்டும் என்னும் உயரிய சிந்தனையால் செய்தார் என்பதுதுதான் உண்மையாகும். இல்லறத்தினுள் புகுந்து விடாமல் பிரம்சாரியத்தைக் கடைப்பிடித்து நல்லறமாய் நாவலர் பெருமான் செய்திருக்கிறார் என்பதால் அவர் ஒரு யுகபுரு ஷராகவே விளங்குகிறார் எனலாம்.

    தமிழ் உரைநடையின் தந்தையாய், தமிழ் மறுமலர்ச்சியின் முன்னோடியாய், சுவடிகளை பதிப்பிப்பதிலும் முன்னோடியாய், மிகவும் சிறந்த தமிழ் வசனநடை வல்லாளராய், சைவசமயத்தின் பெருங்காவலராய், நல்லைநகர் ஒளிவிளக்காய் நவலர் பெருமான் திகழ்ந்திருக்கிறார். சைவத்தையும், தமிழையும், காத்த தோடு சைவத்துக்கு எவையெவை இன்றியமைதானவோ அவற்றையும் காத்திட வைக்கும் வகையில் நல்லை நகர் நாவலர் பெருமான் தன்னுடைய பாதையினை வகுத்து அதன் வழியில் பயணப்பட்டிருக்கிறார் என்பதை மறுத்துரைத்து விடல் இயலாது. ஐந்தாம் குரவராய் அவரை ஏற்றுவதும், போற்றுவதும், குரு பூசை நடத்தி அவரை உயர்வாகப் பார்ப்பதும் மிகவும் உகந்த செயலேயாகும். அவர் தேர்ந்தெடுத்து நடந்த பாதை காரணமாக அவரை இன்று இலங்கையின் தேசியவீரனாக, தேசியப் பெருமகனாக, அரசாங்கமே அங்கீகரித்து நிற்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. முத்திரையில் நாவலர் பெருமான் திருமுகத்தை யாவரும் பார்த்திட வைத்திடும் கைங்கரியமும் இலங்கை அரசினால் ஆகியிருக்கிறது. அனைத்துக்கும் அடிப்படை நாவலர் பெருமான் “நல்வழியைத் தேர்ந்தெடுத்து அதன் வழியில் நடந்ததுதான்”  என்பதே உண்மையாகும்.

    நல்லைநகர் ஆறுமுக நாவலர் பிறந்திலரேல்
    சொல்லு தமிழெங்கே சுருதியெங்கே – எல்லவரும்
    ஏத்து புராண ஆகமங்கள் எங்கே ப்ரசங்கம் எங்கே
    ஆத்தன் அறிவு எங்கே அறை.

    Share
  • கற்பதரு எனும் அற்புதம் – (அங்கம் – 3)

    கற்பதரு எனும் அற்புதம் – (அங்கம் – 3)

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    பனையென்பது செல்வமாகும் என்று கருதியே வந்திருக்கிறார்கள்.  பனையினைப் புலவர்கள் பல நிலைகளில் பார்த்திருக்கிறார்கள். பனையின் பயனைப் பாடி இருக்கிறார்கள். பனையினை காதலிலும் கண்டு பாடியும் இருக்கிறார்கள். காதலில் சிக்கித்தவிக்கும் நிலையில் பிரிவுத் துயரினை வெளிப்படுத்தும் பாங்கில் பனையினைக் காட்டுவதும் நோக்கத்தக்கது.

    திங்களும் திகழ் வான் ஏர்தரும்; இமிழ் நீர்ப்
    பொங்கு திரைப் புணரியும் பாடு ஓவாதே;
    ஒலி சிறந்து ஓதமும் பெயரும்; மலி புனற்
    பல் பூங் கானல் முள் இலைத் தாழை
    சோறு சொரி குடையின் கூம்பு முகை அவிழ
    வளி பரந்து ஊட்டும் விரிவு இல் நாற்றமொடு
    மை இரும் பனைமிசைப் பைதல உயவும்
    அன்றிலும் என்புறு நாலும்; அன்றி,
    விரல் கவர்ந்து உழந்த கவர்வின் நல் யாழ்
    யாமம் உய்யாமை நின்றன்று;
    காமம் பெரிதே; களைஞரே இலரே!

    என்ன….. பாடலைப் பார்த்ததும் தலை சுற்றுகிறதா? பயப்படாதீர்கள் இதுதான் எங்களின் சங்கத்தமிழ். சங்கத் தமிழனும் பனையினைக் கொன்டாடுகிறான். தலைவனைப் பிரிந்த தலைவியானவள் கலங்குவதாய் இப்பாடல் அமைகிறது. “ஆற்றில் அலை மோதிக் கொண்டிருக்கிறது. ஆற்று நீர் பாயும் கானலில் முள்ளிருக்கும். தாழம்பூ குழியிலைக் கூடையில் போட்ட சோறு போல் மொட்டு விருந்து பூத்திருக்கும் காட்சி தென்படுகிறது. காற்று அடிக்கிறது. தாழம்பூவின் மணம்  அடிக்கும் காற்றையும் அடக்கி மணம் வீசி நிற்கிறது.

    அங்கு இருக்கும் பனைமரத்தில் அன்றில் பறவை ஒன்று தன்னுடைய துணையைத் தேடு அழைக்கிறது. அந்த அன்றில் பறவையின் குரல் எனது எலும்பையே உருக்கும்படி செய்து நிற்கிறது. என் காம உணர்வு பெருகிக் கொண்டே  போகிறது. மனமாற்றத் துக்காக யாழை மீட்டி என் விரல்கள் ஓய்ந்தனவே அன்றி நள்ளிரவுப் பொழுது போகவில்லை ” என்று விரக தாபத்தைத் தலைவி வெளிப்படுத்துவதாய் இப்பாடல் அமைகிறது. இங்கே அவளின் விரக தாபத்துக்குக் காரணமான அன்றில் பறவையின் இருப்பிடம் “எங்கள் பனை” என்பதுதான் முக்கிய கருத்தாகும்.

    பரதவர்கள் வீடுகளைப் பனையோலையால் வேய்ந்தார்கள். அவர்களின் வேலியையும் பனை ஓலை கொண்டு அமைத் தார்கள் என்று நற்றிணை தெரிவிக்கிறது

    கழி சூழ் படப்பைக் காண்டவாயில்
    ஒலி காவோலை முள்மிடை வேலி

    பனை ஓலையுடன் முட்களையும் சேர்த்து வேலி அமைத்த செய்தியை நற்றிணையின் இப்பாடல் காட்டி நிற்கிறது. இவ்வாறு அமைக்கப்பட்ட  வேலியை அடுத்து பனைமரங்கள் உயர்ந்து வளர்ந்து இருந்தன. மணல் மேடும் அங்கு இருந்தது என்று நற்றிணை காட்டி நிற்கிறது.

    தலைவியின் வருத்தத்தைக் காட்டுவதற்கு குறுந்தொகை வருகிறது. இங்கும்  பனையினத் தொட்டே பாடல் அமைகிறது.

    பனைத்தலைக்
    கருக்குடை நெடுமடல் குருத்தொடு
    கடுவளி தொகுத்த நெடுவெண் குப்பைக்
    கணங்கொள் சிமைய வணங்குங் கானல்
    ஆழிதலை வீசிய வயிர்ச்சேற் றருவிக்
    கூழைபெய் எக்கர் குழீஇய  பதுக்கை
    புலர்பதங் கொள்ளா வளவை
    அலரெழுந் தன்றிவ் வழுங்க லூரே

    பனையின் உச்சியிலுள்ள கருக்கினையுடைய நீண்ட மட்டையானது குருத்தோடு மறையும்படி, கடுமையான காற்றினால் குவிக்கப்பட்ட, உயர்ந்த வெண்மையான மணற்குவியல்கள், சிகரங்களாக நிறைந்திருக்கின்றன. கடற்கரையில் இத்தகைய சூழலில் தனித்து இருக்கின்ற தலைவியின் விரகதாபம் இங்கே காட்டப்படுகிறது. விரகதாபத்தை அறிவது முக்கியமல்ல. அந்த நிலையில் எங்கள் பனை காட்டப்படுவதுதான் கருத்திருத்த வேண்டியதாகும்.

    பாரியின்  பிள்ளைகளான அங்கவை, சங்கவை, திருமணத்துக்கு மூவேந்தர்களும் வந்திருந்தார்கள். வந்திருந்த மூவேந்தர்களும் தங்களுக்குப் பனம் பழம் வேண்டும் என்று கேட்டார்கள். அங்கு ஒளவையார் இருந்தார். பாரியின் பிள்ளைகளின் திருமணத்துக்கு அவரே காரணமாய் இருந்ததால் வந்த விருந்தினர் விருப்பத்தை எப்படியும் நிறைவேற்ற எண்ணங்கொண்டார். அப்பொழுது பனம் பழக் காலம் இல்லாமல் இருந்தது. ஒளவையார் பந்தலை விட்டு வெளியே  வந்தார். வெட்டப்பட்ட பனையின் துண்டங்களைக் கண்டார்.

    “திங்கட் குடையுடைச் சேரனும் சோழனும் பாண்டியனும்
    மங்கைக் கறுகிட வந்து நின்றார் மணப்பந்தலிலே
    சங்கொக்க வெண்குருத்து ஈன்று பச்சோலை சல சலத்து
    நுங்குக்கண் முற்றி அடிக்கண் கறுத்து நுனி சிவந்து
    பங்குக்கு மூன்று பழம் தரவேண்டும் பனந்துண்டமே”

    கண்டதும் இவாறு பாடினார். பாடியவுடன், பனந்துண்டம் வளர்ந்து பனையாகிப் பனம்பழத்தைத் தந்ததாம் என்று இப்பாடல் எமக்குச் சொல்லி நிற்கிறது. ஒளவையும் எங்கள் பனையினைப் பாடலால் காட்டுகிறார் என்பதும் நோக்கத்தக்கதேயாகும்.

    “கற்றறிந்த நாவினார் சொல்லார்தம் சோர்வஞ்சி
    மற்றையராவார் பகர்வர் பனையின் மேல்
    வற்றிய ஓலை கலகலக்கும் எஞ்ஞான்றும்
    பச்சோலைக்கு இல்லை ஒலி”

    பனையினை மையமாக வைத்து அறிவுரை பகர்வதையும் புலவர்கள் விட்டு விடாரில்லை என்பதற்கு இப்பாடல் சான்றாகி நிற்கிறது.

    பனையினைப் பாடிப் பல புலவர்கள் புளக்காங்கிதம் அடைந்தார்கள் என்று தான் எண்ணலாம் அல்லவா! பாடப்படும் அளவுக்கு எங்கள் கற்பகதருவும் இருந்திருக்கிறது என்பதுதான் முக்கிய செய்தியாகும்.

    தாலவிலாசம் என்னும் நூல் மிகவும் பழமையானது. பனைமரம் பரம் பற்றிய நூல் என்னும் நிலையில் 18 ஆம் நூற்றாண்டில் வந்த இந்த நூல்தான் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. இந்த நூலினை அடியொற்றியே எங்கள் தங்கத்தாத்தா சோமசுந்தரப் புலவர் பின்னர் “தாலவிலாசத்தை” படைத்தார். பனைபற்றி நாட்டார் பாடல்கள் பலவும் இருக்கின்றன. வடலி என்று சொல்லுவது யாழ்மண்ணுக்கு உரியதேயாகும். அந்தச் சொல் வரும் வகையில் பனை பற்றிய ஒரு நாட்டுப்பாடலைப் பார்ப்போம் வாருங்கள்.

    வழிக்கரையே நிற்கு மந்த
    வடலி மரப் பெண் பனையே
    வாறவர்க்கும் போறவர்க்கும்
    என் செய்வாய் பெண்பனையே
    இருக்கத் தடுக்காவேன்
    இட்டிருக்கப் பாயாவேன்
    கொழிக்க நல்ல தங்கையர்க்கு
    கொழி சுளகு நானாவேன்
    புடைக்க நல் தங்கையர்க்கு
    புடை சுளகு நானாவேன்
    படிக்க நல் தம்பியர்க்கு
    பட்டோலை நானாவேன்
    எழுத நல் தம்பியர்க்கு
    எழுத்தோலை நானாவேன்
    தூரத்து வன்னிமைக்கு
    தூதோலை நானாவேன்
    வாசலிலே வன்னிமைக்கு
    வழக்கோலை நானாவேன்

    என்று அந்த நாட்டுப்பாடல் எங்கள் கற்பகதருவை கண்டுகளிக்கிறது.  கற்பகதருவாம் பனையினைப் பாடல்களில் பார்த்தோம். பழமொழிகளும் பனையினை விட்டு வைக்கவில்லை. அவற்றையும் பார்ப்பதும் நல்ல தல்லவா!

    “பனை நிழலும் நிழலோ பகைவர் உறவும் உறவோ”

    “பனைமரத்துக்குக் கீழே நின்று பாலைக் குடித்தாலும் கள் என்பார்”

    “பட்டணத்து நரியை பனங்காட்டு நரி ஏய்த்துவிடும்”

    “பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்ததாம்”

    “காவோலை விழக் குருத்தோலை சிரித்ததாம்”

    (வளரும்)

    Share
  • கற்பகதரு என்னும் அற்புதம் (அங்கம் – 2)

    கற்பகதரு என்னும் அற்புதம் (அங்கம் – 2)

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    “படையை வெல்லும் பனை” என்று எங்கள் இலக்கியங்கள் வியந்து நிற்கின்றன. என்ன! …. படையை வெல்லும் பனையா அப்படி  இந்த பனையில் என்னதான் இருக்கிறது என்று எண்ணத் தோன்றுகிறது அல்லவா?  பனையை புசித்தோர் படையை வெல்லும் ஆற்றல் பெற்றவராவார் என்று சங்கப்பாடல் காட்டி நிற்கிறது. பழம்பெரும் காவியங்கள் பனைதான் கற்பகதரு என்கிறது. அதாவது அமிர்தம். அமிர்தத்தை உண்டவர்களுக்கு இறப்பே இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். இவ்பூவுலகில் இறப்பே இல்லை என்பதன் பொருள் மரணத்தை காலம் தாழ்த்தி தருவிப்பதையே குறிக்கும். பனையின் அணைப்பில் வாழ்ந்த காரணத்தால் மரணம் கூட சற்று தள்ளியே நிற்கும். இதனால் படையினையே வெல்லும் நிலை வரும் என்பதைக் குறியீடாக உணர்த்தவே “படையை வெல்லும் பனை” என்னும் மொழி உருவாகியது எனலாம்.  பனைக்கு அணை (அணைமரம்) என்ற பெயரும் உண்டு. பல கன எடையுள்ள தண்ணீரை அணை தடுத்து நிறுத்தும் ஆற்றல் பெற்றது. அதே போல் பனையை தன் வாழ்வில் துணையாக கொண்டு வாழும் மனிதனும் உறுதியானவனாக திகழ்வான் என்பதுதான் பனையால் படை வெல்லும் என்பதற்கு சான்றாய் தெரிகிறது எனலாம்.

    பனைக்கு பெண்ணை, கூந்தல், காமம், உபதாகம், ஐந்தார், ஐந்தாலம்,  கரும்புரம் ,கரும்புல், பகற்பலி,  புற்றாலி  புற்பதி, போந்து, திருணராசன், துராரோகம், திருவிராசன், குவீரம், தாளம், தருவிராசன், புல்லூதிகம்,  புற்பதி, என பல பெயர்கள் இருக்கின்றன. பனைக்கு இவ்வாறு பல பெயர்கள் இருப்பதுபோல் – பனையில்;   ஆண்பனை, பெண்பனை, கூந்தப்பனை, தாளிப்பனை, குமுதிப்பனை, சாற்றுப்பனை, ஈச்சம்பனை, ஈழப்பனை   சீமைப்பனை, ஆதம்பனை திப்பிலிப்பனை, உடலற்பனை, கிச்சிலிப்பனை குடைப்பனை, இளம்பனை, கூறைப்பனை, இடுக்குப்பனை, தாதம்பனை, காந்தம்பனை, பாக்குப்பனை, ஈரம்பனை, சீனப்பனை, குண்டுப்பனை, அலாம் பனை, கொண்டைப்பனை, ஏரிலைப்பனை, ஏசறுப்பனை, காட்டுப்பனை, கதலிப்பனை,  வலியப்பனை வாதப்பனை, அலகுப்பனை, நிலப்பனை,  சனம்பனை – எனப் பல வகைகள் இருக்கின்றன என்பதையும் கருத்திருத்தல் அவசியமாகும்.

    பூமியிலே கற்பகதரு என்று வியந்து நிற்கும் பனைபற்றி எண்ணுகின்ற வேளை பனையுடன் எங்களின் இலக்கியங்கள், புராணங்கள், திருமுறைகள், தொடர்புபட்டிருப்பதும் அவைகளினால் குறிப்பிடப்படுவதும் கருத்திருத்த வேண்டியதே. பஞ்சத்தைத் தாங்கக் கூடியதான மரமாகவே பனையினைச் சிவன் படைத்தார் என்று தலபுராணங்கள் வியந்து நிற்பதும் நோக்கத்தக்கதே. ஞானிகளாலும் அறிஞர்களாலும் போற்றப்படும் வகையில் எங்களின் கற்பகதருவான பனை விளங்கியிருக்கிறது என்பது மகிழ்வான செய்தியாக இருக்கிறது அல்லவா!

    சூரபதுமன் பனைக்கொடியினைத் தாங்கி வந்தான் என்று கந்தபு ராணம் காட்டுகிறது. கம்பனது இராமாயணமும் பனையினைப் பற்றி பாலகாண்டப் பகுதியில் காட்டுகிறது. பலராமர், வீஷ்மர் ஆகியோர் பனைக் கொடியினை வைத்திருந்தார்கள் என்றும் அறியமுடிகிறது. திருமுருகாற்றுப்படையும் பனையினைக் காட்டுகிறது. நற்றிணையில் பனையினைப் பரதவர் தெய்வமாக வழிபட்டார்கள் என்று காட்டுவதும் கருத்திருத்த வேண்டியதே! “தேம்படு பனையின் திரள் பழத் தொரு விதை” என்று ஒளவையாரும் பனையினைக் காட்டி நிற்கிறார். திருஞானசம்பந்தப் பெருமான் ஆண் பனைகளைப் பெண்பனை ஆக்கினார் என்பதை திருமுறைகள் வாயிலாக அறிகின்றோம். சம்பந்தப் பெருமானது காலத்தில் பனந்தோப்புகள் தனித் தோட்டங்களாக இருந்திருக்கின்றன. சிவன் அடியார்கள் பனைவளம் பெருக்குவதிலும் பெருதும் ஈடுபட்டிருந்தார்கள் என்றும் அறியமுடிகிறது.  தத்துவத்தையும் உலகியலையும் ஞானத்தால் பார்த்தவர் திருமூலர் என்னும் ஞானி. அவரும் பனையினைக் குறிப்பிட்டு தத்துவம் உரைப்பதும் கருத்திருத்த வேண்டியதே !

    “ஆறு தெருவில் அகப்பட்ட சந்தியிற்
    சாறு படுவன நான்கு பனையுள
    ஏறற் கரியதோர் ஏணியிட்  டப்பனை
    ஏறலுற் றேன்கடல் ஏழுங்கண் டேனே”

    இப்பாடலில் பனையின் பெயர் இடம் பெறுகிறது. ஆனால் அதனைத் தத்துவம் உரைப்பதற்கு திருமூலர் என்னும் ஞானி கையாழுவதுதான் குறிப்பிடத்தக்க தாகும். பாடலின் கருத்தை அறிய ஆவலுடன் இருப்பீர்கள்! கருத்தையும் காண்போம் பனையையும் காண்போம்! ‘ ஆறு ஆதாரங்களாகிய தெருவின் கீழுள்ள மூலாதாரமாகிய சந்தியில், பக்குவமடையாதபோது இருள் முகமாகத் தொழிற்படுவன ஆகிய நான்கு இதழ்களாகிய பனைகள் உள்ளன. ஏறுவதற்கு அருமையான சுழு முனையாகிய ஏணியை வைத்து அப்பனை மரத்தின் மேலேறி  சகஸ்ரதளஞ் சென்றேன். ஆதாரமாகிய ஏழுகடலும் ஒன்றாகி ஒளிமயமாகக் பொங்குவதைக் கண்டேன். (பனை – பனைமரம் போன்ற முதுகத் தண்டு) காஞ்சிபுரத்திலிருந்து தென்மேற்கே இருபத்தெட்டு கிலோ மீற்றர் தொலைவில் வந்தவாசி செல்லுகின்ற வழியில் திருவோத்தூர் என்னும் தலம் இருக்கிறது. இத்தலத்தின் தலவிருட்சமாய் இருப்பது கற்பகதரு வான பனையாகும். சம்பந்தப் பெருமானால் பாடப்பட்ட தலமாகும். இத்தலத்தைவிட – திருப்பனந்தாள்,  திருப்பனையூர், திருவன்பார்த்தான் பனங்காட்டூர் (திருப்பனங்காடு),  புறவர் பனங்காட்டூர் ஆகியவையும் பனையினைத் தலவிருட் சமாய் கொண்டிருக்கின்றன என்று அறியக்கிடக்கிறது.

    திருவோத்தூர் தலத்தை வலம் வருகின்ற வேளை வடக்குப் பகுதியில் தலமாரமாகிய பனை ஓங்கி வளர்ந்திருப்பதைக் காணலாம். இந்தத் திருவோத்தூரில் இருந்த சிவன் அடியார் ஒருவர் – சிவனுக்காகவே பனைகளை வளர்த்து வந்தார். அப்பனைகளோ ஆண்பனைகளாகி காய்க்காது இருந்தன. இந்த அன்பர் காலம் சமணம் சைவத்தை எதிர்த்து நின்ற காலப் பகுதியாகும். சைவரான சிவனடியாரைச்  “உமது ஆண் பனை யினை உங்கள் சிவன் பெண் பனை ஆக்குவாரா” என்று சமணர்கள் கேலி செய்தபடியே இருந்தனர். அடியாரும் கவலையில் மூழ்கியே இருந்தார். சம்பந்தப் பெருமான் இத்தலத்துக்கு வருகைதந்த வேளை அடியார் தமது மனக்கவலையினை வெளியிடுகிறார். சம்பந்தப் பெருமான் இறைவனைப் பிரார்த்தித்து

    “பூத்தேர்ந்து ஆயன கொண்டு நின் பொன்னடி” என்று தொடங்கும் பதிகத்தைப் பாடி – நிறைவில்

    “குரும்பை ஆண்பனை ஈன்குலை ஓத்தூர்
    அரும்பு கொன்றை அடிகளை
    பெரும்பு கலியுள் ஞானசம்பந் தன்சொல்
    விரும்பு வார்வினை வீடே”

    என்று பாடியவுடன் “நெருங்கும் ஏற்றப் பனையெல்லாம் நிறைந்த குலைகளாய்க் குரும்பை அரும்பு பெண்ணை ஆகின” என்று சேக்கிழார் வாக்கால் அறியக் கிடக்கின்றது. “அரும்பு பெண்ணை ஆகி இடக் கண்டோர் எல்லாம் அதிசயித்தார்” என்னும் சேக்கிழார் வார்த்தை மனமிருத்த வேண்டியதே!

    மணிவாசகப் பெருமானும் பனையின் அழகினை “கண்ணார்ந்த பெண்ணை” என்று திருக்கோவையாரில் தொட்டுக் காட்டுகிறார்.

    “தினையளவு போதாச் சிறுபுன்னீர் நீண்ட
    பனையளவு காட்டும் படித்தால் – மனையழகு
    வள்ளைக் குறங்கும் வளநாட  வள்ளுவனார்
    வெள்ளைக் குறட்பா”

    என்னும் பாடலில் திருக்குறள் பனைபற்றிக் கூறும் செய்தி காட்டப்படுகிறது.

    “பெண்ணை தாலம் புல் தாளி போந்தை என்று எண்ணிய நாமம் பனையென இசைப்பர்” என்று திவா கரம் காட்டுவதும் நோக்கத்தக்கது.

    சைவநாயன்மார் பனைபற்றிப் பாடியதுபோல் வைணவ அடியார்களான ஆழ்வார்களும் பாடியிருக்கும் செய்தியையும் காணக்கூடியதாய் இருக்கிறது.

    திருமழிசைப் பிரான் திருச்சந்த விருத்தமாய்

    “கரண்டம் ஆடு பொய்கையுள் கரும் பனைப் பெரும் பழம்
    புரண்டு வீழ வாளை பாய் குறுங்குடி நெடுந்தகாய்
    திரண்ட தோள் இரணியன் சினங்கொளாகம் ஒன்றையும் இரண்டு கூறு
    செய்து உகந்த சிங்கம் என்பது உன்னையே”

    இப்பாடல் அமைகிறது. இப்பாடலில் பனைபற்றிய செய்தியும் இடம் பெறுவது நோக்கத்தக்கதே. ‘நீர்க் காக்கைகள் உலாவும் பொய்கையில் கரிய பனம் பழங்கள் விழவும், வாளைமீன்கள் அவற்றை நீர்க்காக்கையாகக் கருதி விழுங்கப் பாயும் – திருக்குறுங்கடியில் எழுந்த பெரியோனே! ஆளரியாய்த் தோன்றி இர ணியனை இரு கூறாக்கியதும் நீ தானே! என்று இப்பாடல் கருத்து அமைகிறது. இங்கு பனையின் பழம் காட்டப்படுவது பனையினை உட்புகுத்தி நிற்கிறது அல்லவா!

    நம்மாழ்வார்  திருமொழியில்  பனைமரம் பற்றி “பனைத்தாள் மதகளிறு அட்டவன் பாதம் பணிமினோ”  என்கின்றார். திருமங்கை ஆழ்வார் – “ஏடு ஒத்து ஏந்தும் நீள் இலைவேல் எங்கள் இராவணனார் ஓடிப் போனார்” என்று குறிப்பிடுகிறார்.

    பனைபற்றி பல செய்திகளை இலக்கிய வழியில் பயணப்பட்டால் காணக் கூடியதாக இருக்கிறது. தோடு என்றால் அது பெண்கள் காதில் அணிவதுதான். சிவனின் ஒரு காதில் தோடு இருக்கிறது. இதனைச் சம்பந்தர் “தோடு டைய செவியன்” என்று காட்டுகிறார். சிவனின் இடது செவியில் தோடு இருக்கிறது. வெண்தோடானது பனம்பூவின் புறவிதழ் போலிருக்கிறதாம் –

    “பெருமடற் பெண்ணைப் பிணர்ந்தோட்டுப் பைங்குரும்பை” என்று கலித் தொகையும், “இனமடற் பெண்ணை ஈர்ந்தோடு திருத்தி” என்று பெருங்கதையும், “இரும்பனை வெண்தோடு மலைந்தோன்” என்று புறநாநாறும்,

    “தோடே  மடலே ஓலை என்றா
    ஏடே  இதழே பாளை என்றா
    ஈர்க்கே குலை என நேர்தான பிறவும்” என்று தொல்காப்பியம் தொட்டுக் காட்டுவதும் கற்பகதருவாம் பனை பற்றியதே என்பதை கருத்துவது அவசியம் அல்லவா!

    தங்கத்தாத்தா என்று வியந்து போற்றப்படும் எங்கள் நவாலியூர் தந்த புலவர் பெருமான் கற்பகதருவாம் பனைபற்றி “தாலவிலாசம்” என்று காவியமே பாடிப் பெருமகிழ்வு அடைகின்றார். அவரின் உள்ளத்திலிருந்து எழுந்த எண்ணங்களை அவரின் தாலவிலாசத்தின் வாயிலாக கண்டு களிப்படையலாம். கற்பகதருவாம் பனையினை எங்கள் தங்கத்தாத்த அணுவணுவாய் இரசிக்கிறார்! அணுவணுவாய் ஆராய்கிறார்! பனைபற்றி சிறந்த நூலொன்றினை அவரின் அகத்தினின்று எழுந்த அரிய வார்த்தைகளால் கவிதை வடிவில் தந்திருக்கிறார்! அவரின் அந்த வண்ணத்தமிழ் கவிதைகளைப் படிப்பவர்கள் கற்பக தருவாம் பனையினை நிச்சயம் கருத்திருத்தாமல் விடவே மாட்டார்கள். அந்த அளவுக்கு எங்கள் தங்கத்தாத்தாவின் மந்திரச் சொற்கள் கற்பகதருவை காட்டி நிற்கிறது எனலாம்.

    “மன்னுயிர் ஞாலத்து வான்பனையின் மேன்மையெலாம்
    பன்னுகலி வெண்பாவாற் பாடவே – முன்னவர்வரு
    போதனே விக்கினங்கள் போக்குகின்ற பூதகண
    நாதனே முன்னே நட”

    என்று தாலவிலாசத்துக்குக் காப்புச் சொல்லி – பின்னர் நூல் நிலை பற்றி சொல்லி ……

    “ஓங்கார மூலத் தொருவனிரு தாடொழுது
    பாங்கார் தமிழ்க்கலிவெண்பா பாட்டினால் – வீங்குபுகத்
    தால விலாசந் தனையுரைப்பேன் தெண்டிரைசூழ்
    ஞால முணர்க நயந்து”

    நிறைவாக கற்பகதருவை வியந்து வாழ்த்தி மகிழுகின்றார்.

    “பொன்னின் மழைவாழி பூமி நலம்வாழி
    மன்னுயிர்கள் வாழி யறம்வாழி – எந்நாளும்
    கற்பகம்போ லீயுங் கடவுட் பனைவாழி
    நற்றமிழும் வாழி நயந்து”

    தங்கத்தாத்தா நினைவுக்கு வருகிறார். கூடவே சின்னத்தம்பிப் புலவரும் வந்து நிற்கிறார். அவரும் கற்பகதருவை விட்டுவிடவில்லை…….

    “கோள்நிலைகள் மாறி மாரிமழை வாரி வறண்டாலும்
    கொடிய மிடி வந்து மிகவே வருந்தினாலும்
    தான் நிழலளிதுயர் கலாநிலையமே போல்
    தந்து பல வேறு பொருள் தாங்கு பனையே”

    என்று சின்னத்தம்பிப் புலவரும் கற்பகதருவை வியந்து நிற்கிறார் என்பதற்கு இக்கவியே சான்று.

    பனை நூறு என்னும் நூலும் கற்பகதருவினை எப்படிச் சொல்லுகிறது பாருங்கள்…….

    “நீண்ட வுடலும் நேரிய கோடும் கார்நிறமும்
    பூண்டா யன்ன பூவுலகத்தில் நின்னைப்போல்
    யாண்டு மிலாதால் வைரமுடைநற் றாருவெனில்
    தூண்டும் மன்பே தூயதலாது தோற்றம்மே”

    “நீற்றைப்பூசும் வானம் பரவும் நிறையும்நூல்
    ஏற்றுக் கொள்ளும் யாண்டு முவக்கு மெவர்க்கும்
    சாற்றும் ஞானந் தந்திடு மன்பிற் றலைநிற்கும்
    போற்றந் தணர்கள் போலப் பனையும் பொலியுமே”

    “வேண்டிய யாவு மீயும் வியன்றரு மியல்புகண்டே
    ஆண்டுபல் லாயி ரம்முன் நறிவுடை யெமது முன்னோர்
    காண்டரு தாலந் தன்னைக் கற்பகத்தாரு வென்றார்
    நீண்டநா ளோம்பி இஃதை நீவிரின் புற்று வாழ்வீர்”

    பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைப் பேராசிரியராய் இருந்தவர் கணபதிப்பிள்ளை அவர்கள். சுவாமி விபுலானந்தரின் நேரடி மாணவராக விளங்கியவர். மொழி ஆராய்ச்சி வல்லுனர். அதே வேளை நாட்டர் வழக்கியலிலும் ஆற்றல் மிக்கவர். இவரின் கவிகள் படிக்கப் படிக்கச் சுவையினை நல்கும். அவரின் எண்ணத்தில் கற்பகதரு வருகிறது பார்ப்போமா ……..

    “அழகுறு வன்னம் அமைவுறப் போட்டுத்
    தொழிலமை வனிதையர் திறமையாலிழைத்த
    பெட்டியாய் குட்டான் பெயர் பெறு கதிர் பாய்
    அடுக்குப் பெட்டியும் சுடும்
    பிட்டவி நீத்துப் பெட்டியும் சுண்டும்
    பனையின் குருத்தை பதனமாய் வார்த்து
    பன்னிறம் தீட்டிய பன்னோலை கொண்டு
    கைவல் இளையர் கருதி இளைத்த
    ஆனைப் பெட்டியும் அழகிய தேரும்
    கொட்டைப் பெட்டியும் கிலுக்குப் பெட்டியும்
    எனவாங்கு,
    இன்னணம் நெருங்கிடு பன்னங் கடைகளும்”

    என்று சொல்லியதோடு அமையாமல், கற்பகதருவில் மனத்தை இருத்தி

    “நரைதோல் இயனம் அரையில் கட்டி
    அதன் கீழ் முட்டி அசைதர விட்டு
    மார்போடணையத் தோளது தூக்கி
    உரனுரு தளை நார் காலினை மாட்டிக்
    கால் மடித்து உன்னிக் கரு நெடும் பனைமிசை
    பாளை தட்டி பார்த்துச் சீவி
    ஏர் தரும் ஊசலோடு இயனத்தசையும்
    இன் கள் முட்டியொடு இறங்கும் போதில்
    அடி மரத்திருந்து நுனி வரை நோக்கி
    நாநீர் ஊற உதடு வருடி
    பெரு மகிழ்வோடு பிளாவை ஏந்தி
    அருவிலை கொடுத்து நறவினை மாந்திக்
    களிப்புறு மாக்கள் விளிப்புறு கும்பலும்”

    என்று பேராசிரியர் மனமெழுந்த காட்சி இப்படிக் கவியாய் விரிகிறது.

    நாட்டார் பாடல்களிலும் பனைபற்றி வருவருகிறது. அப்பாடல்தான் என்ன சொல்லுகிறது எப்படிப் பனையைக் காட்டுகிறது என்று பார்ப்போமா….

    “பட்டாங் கத்தி பள பளென
    பாலையன் கோட்டை நறறென
    பனையும் கருத்திருக்கும்
    பனை வட்டும் சிவந்திருக்கும் – அதிலே
    இறக்கிய பதநீரைப் பருகினால்
    தலை கிறு கிறுக்கும்”

    “தேடுதற்கும் வகையறியேன் – உன்
    திருக்கோயில் தவறணையைத் தோடிக்கொண்டு
    ஓடுவரும் பக்தர்க்கு குறைவே இல்லை
    உன்னுடைய கிருபையினைச் சொல்லி சொல்லிப்
    பாடுதற்கு வகையறியேன் – பாளை வேந்தா
    பாவிகளை மகிழ்விக்கும் பான தேவா
    நீடுலகில் என் போன்ற ஏழைகட்கு
    நீயின்றி யாருதவி சொல்லுமையா”

    “சண்டையிலே பிறப்பாய் போற்றி
    சல்லியைப் பறிப்பாய் போற்றி
    மண்டையை உடைப்பாய் போற்றி
    மகளிரை அடிப்பாய் போற்றி
    பாளையில் பிறப்பாய் போற்றி
    பனைதரும் கொடையே போற்றி”

    என்று நாட்டுப்பாடலிலும் பனைபற்றி வருவதும் – பனையின் நிலையினை பாமரர் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை காட்டி நிற்கிறதல்லவா!

    “நாராய் நாராய் செங்கால் நாராய்
    பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
    பவளக் கூர்வாய் செங்கால் நாராய்”

    இந்தப்பாடல் யாரால் எழுதப்பட்டது என்பது தெரியாத நிலையில் கவிதையில் வருகின்ற (முழுக்கவிதையைப் பார்க்க) சத்திமுத்த வாவி என்பதை எண்ணி அப்புலவரை சத்திமுத்துப் புலவர் என்று அடையாளப்படுத்தி விட்டார்கள். அப்பெயரே நிலையாகியும்விட்டது, “பழம்படு பனையின் கிழங்கு பிழந்தன்ன பவளக் கூர்வாய்” என்னும் வரிகள் புலவரின் அழகான படிமமாய் இங்கே அமைகிறது. எங்களின் கற்பகதருவாம் பனையினை – பெயர் தெரியா ஒரு புலவரும் தன்னுடைய மனத்தில் இருத்தி நல்லதொரு கவிதையாய் வடித்திருக்கிறார். சிறிய வயதில் படித்துப் பாடமாக்கிய இக்கவிதையும் கற்பகதருவாம் பனையினைக் காட்டியே நிற்கிறது என்பதும் கருத்திருத்த வேண்டியது அல்லா!

    (வளரும்)

    Share
  • குறளின் கதிர்களாய்…(475)

    குறளின் கதிர்களாய்…(475)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(475)

    நெடுங்கடலுந் தன்னீர்மை குன்றுந் தடிந்தெழிலி
    தானல்கா தாகி விடின்.

           –திருக்குறள் –17(வான் சிறப்பு)

    புதுக் கவிதையில்…

    மேகம்
    கடலிலிருந்து
    நீரைப் பெற்று
    மழையாகப் பெய்யும்
    தனது இயல்பிலிருந்து
    மாறி
    மழை பெய்யாது போனால்,
    நீண்ட கடல் கூட
    நீரின்றி வற்றிப்போகும்…!

    குறும்பாவில்…

    கடலில் நீரெடுத்து மேகம்
    மழையாய்ப் பெய்யும் இயல்பிலிருந்து மாறிப்
    பெய்யாவிடில் நெடுங்கடலும் வற்றிடுமே…!

    மரபுக் கவிதையில்…

    கடலி லிருந்து நீரெடுத்துக்
         கனத்த மழையாய்த் தருமேகம்
    நடப்பு நிலையில் மாறுபட்டு
         நல்ல மழையே பெய்யாமல்
    இடறும் வேளை வந்திட்டால்,
         இயல்பில் நீண்ட பெருங்கடலும்
    தடய மேது மில்லாமல்
         தண்ணீ ரின்றி வற்றிடுமே…!

    லிமரைக்கூ…

    கடலில் நீரை எடுத்து
    மழைதரும் மேகம் பொழியாவிடில் நெடுங்கடலும்
    நீரின்றி வற்றிவிடும் அடுத்து…!

    கிராமிய பாணியில்…

    வேணும் வேணும்
    மழ வேணும்,
    ஒலகம் நெலைக்க
    நல்ல மழவேணும்..

    கடலுல இருந்து
    தண்ணிய உறுஞ்சி அத
    மழயாப் பெய்யிற
    மேகமும்
    கொணம் மாறி
    மழ பெய்யாமப் போச்சிண்ணா,
    நீளமான பெரிய கடலும்
    தண்ணிக்கு எந்த
    வழியுமில்லாம
    வத்திப் போவுமே..

    அதால
    வேணும் வேணும்
    மழ வேணும்,
    ஒலகம் நெலைக்க
    நல்ல மழவேணும்…!

    Share
  • பூப்பெய்தும் பருவம் | விழிப்புணர்வு ஊட்டுவது எப்படி?

    பூப்பெய்தும் பருவம் | விழிப்புணர்வு ஊட்டுவது எப்படி?

    பூப்பெய்துவது குறித்த விழிப்புணர்வைச் சிறுமிகளுக்கு வழங்க வேண்டிய தேவை உள்ளது. இது குறித்த விவரங்களை அவர்களுக்கு யார் வழங்குவது சிறந்தது? அம்மாவா? ஆசிரியரா? எப்படி வழங்குவது? என்பது சற்றே சிக்கலான ஒன்று. இந்தக் கல்வியை எவ்வாறு எளிமையாக வழங்கலாம்? மலேசியாவில் வசிக்கும் எழுத்தாளர் நிர்மலா ராகவன் வழங்கும் ஆலோசனைகள் இதோ.

     

    Share