குறளின் கதிர்களாய்…(476)

செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்…(476)

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்
திறந்தாரை யெண்ணிக்கொண் டற்று.

– திருக்குறள் – 22 (நீத்தார் பெருமை)

புதுக் கவிதையில்…

ஆசைகளைத் துறந்து
அகிலத்தில்
பற்றற்று வாழும்
பெரியோர்தம்
பெருமையை எண்ணிக்கையால்
அளந்து கூறுதல் என்பது>
உலகில் பிறந்து
இறந்து போனவர்களின்
எண்ணிக்கையை எல்லாம்
எண்ணுவது போலாகும்…!

குறும்பாவில்…

முற்றுந் துறந்தோரின் பெருமையை
அளந்து கூறுதல் உலகில் இறந்தோரின்
எண்ணிக்கையை எண்ணுதல் போலாகும்…!

மரபுக் கவிதையில்…

பாரினில் உள்ளவை மீதான
பற்றுகள் அனைத்தையும் துறந்தோரை
நேரிலே பார்த்தவர் பெருமையதன்
நிறைவினை அளந்துடன் சொலலரிதே>
பாரிதை இச்செயல் இதற்கொப்பாம்
பார்தனில் இதுவரைப் பிறந்தோர்தம்
காரியம் முடிந்ததால் இறந்தோரின்
கணக்கினை எண்ணிடல் போலாமே…!

லிமரைக்கூ…

பெருமையால் அளவிடுதல் துறந்தோரை>
இதனைப் போன்றதே, எண்ணிக் கணக்கிடல்
உலகில் பிறந்ததில் இறந்தோரை…!

கிராமிய பாணியில்…

பெருசு பெருசு
பெரும பெருசு
ஆசயத்தொறந்து பத்தில்லாத
பெரியவுங்க பெரும
ரெம்பப் பெருசு..

ஒலக ஆசயத்தொறந்து
எதுலயுமே பத்தில்லாத
பெரியவுங்க பெருமய
எண்ணி அளவு பண்ணுறது>
இந்த ஒலகத்துல பொறந்து
இதுவர செத்துப்போனவங்க
கணக்க எண்ணிச் சொல்லுறது
போலத்தான் ஆவும்..

அதால
பெருசு பெருசு
பெரும பெருசு
ஆசயத்தொறந்து பத்தில்லாத
பெரியவுங்க பெரும
ரெம்பப் பெருசு…!

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *