Blog

  • காற்று வாங்கப் போனேன் – பகுதி 27

    கே.ரவி

    1981-ஆம் ஆண்டில் தான் அந்த நிகழ்ச்சி நடந்தது. அதாவது, நிஜமாக ஒரு மின்னலே கவிதையான நிகழ்ச்சி. ‘என்னய்யா, இதெல்லாம் ஒரு நிகழ்ச்சியா?’ என்ற எகத்தாளக் குரல் எனக்குள்ளேயே எதிரொலிக்கிறது. தினமும் ஆங்கில நாளேடுகளைக் கரைத்துக் குடிக்கும் ஒருவன், தமிழ் நாளேடு மட்டும் படிப்பவனைப் பார்த்துக் கிண்டலாக உனக்கு என்ன உலக நிகழ்ச்சி தெரியும்? வண்ணாரப்பேட்டை ரவுடி இன்னொருவனைச் சதக், சதக் என்று கத்தியால் குத்திக் கொன்றான் போன்ற அன்றாட விஷயங்கள் மட்டுந்தான் உனக்குச் செய்தி, நிகழ்ச்சி. காஜா தெரியுமா? சட்டைப் பொத்தானைக் கஷ்டப்பட்டு நுழைப்போமே, அந்தக் காஜா இல்லேப்பா. இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடைப்பட்ட ஒரு சிறிய பகுதி. அதன் கடைசி எழுத்து ஆங்கிலத்தின் கடைசி எழுத்து. ஆனால் அதைச் சுட்டிக்காட்டத் தமிழில் ‘ஜ’வை விட்டால் வேறு எழுத்து வடிவம் இல்லையே, என்ன பண்ணுவேன்? சரி, சரி, அந்த இடத்தில் ஆயிரக் கணக்கானவர்கள் கொன்று குவிக்கப்படும் நிகழ்ச்சி நடக்கிறதே, அந்தச் செய்தி தெரியுமா உனக்கு?

    இப்படி நக்கல் செய்யும் அந்த மேதாவியிடம், ‘ஐயா, உங்களுக்கு இந்தப் புவிக்கோளமாகிய பூமியில் நடக்கும் சமாச்சாரங்கள்தான் தெரியும்; அவைதாம் உங்களுக்குச் செய்திகள். ஆனால், பூமி மட்டுந்தானா உலகம்? பூமியைத் தாண்டிச் சூரியன் எனப்படும் நட்சத்திரத்தில் நடக்கும் அதிசயங்களை நீர் அறிவீரா? அதையும் தாண்டி அடுத்த அண்டத்தில் என்ன நடக்கிறது என்று தெரியுமா உமக்கு?’ என்றெல்லாம் நான் கேட்கப் போவதில்லை. பாரதி ஒரு கட்டுரையில் எழுதியதை மட்டும் அந்த அதிமேதாவிக்குப் படித்துக் காட்டினால் போதும். பாரதி எழுதுகிறான்:

    உலகத்தில் எங்குப் பார்த்தாலும் நிறைந்து கிடைக்கும் லாவண்யங்களைத் தமிழர்கள் கவனிப்பது கிடையாது. சனிக்கிழமை சாயங்காலந்தோறும் குளக்கரைகளிற் போய்க் கருடன் பார்ப்பதற்கென்றால் நம்மவர்கள் கூட்டம் கூட்டமாக ஓடுகிறார்கள். சூரியாஸ்தமய காலத்தில் வானத்திலே தோன்றும் அதிசயங்களைப் பார்க்க ஒருவன் கூடப் போகிறதில்லை. அப்போது வானத்திலே இந்திரஜால மஹேந்திர ஜாலங்களெல்லாம் நடக்கின்றன. இந்த க்ஷணமிருந்த தோற்றம் அடுத்த க்ஷணமிருப்பதில்லை…. நமது நாட்டில் வேதகாலத்து ரிஷிகள் பிரகிருதியின் செளந்தர்யங்களைக் கண்டு மோஹித்துப் பரமாநந்த மெய்தியவர்களாய்ப் பல அதிசயமான பாடல்கள் பாடியிருக்கிறார்கள். பிரகிருதியின் அழகைக் கண்டு பரவசமெய்திக் காளிதாசன் முதலிய பெருங்கவிகள் அற்புதக் கவிதைகள் செய்திருக்கின்றனர். இக்காலத்திலேதான் இந்த துரதிஷ்ட நிலைகொண்ட நாட்டில் வானம் பார்த்தறியாத குருடர்களெல்லாரும் கவிகளென்று சொல்லி வெளிவருகிறார்கள்.

    மின்னல் கவிதை என்று சொன்னேனே, அந்தச் செய்திக்கு வருவோம்.

    36

    என் வளர்ப்புத் தந்தை பல ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, 1980-ஆம் ஆண்டு கமல்ஹாஸனை வைத்து ஒரு படம் தொடங்கப் பூஜை போட்டார். இயக்குநர் சக்திதான் அதன் இயக்குநர். சக்தியும், கமலும் மிக நெருங்கிய நண்பர்கள், இருவரும் ஓரூர்க்காரர்கள், ஆம், பரமக்குடி. சக்தியும், நானும் அமர்ந்து பலநாட்கள் விவாதம் செய்து ஒரு கதையைப் பின்னினோம். அந்தக் கதையை நாங்கள் கமலிடம் சொல்ல, அவரும் ஒப்புக் கொண்டு படத்துக்கு “வாய்ப்பூட்டு” என்று பெயர்சூட்டவும் செய்தார். ‘வாய்ப்பூட்டு’ பட பூஜை மிக விமரிசையாக நடந்தது. அதற்கு இளையராஜாவை இசையமைக்கக் கோரி அணுகினோம். அவர் மூன்று மாதங்களுக்கு தமக்கு நேரமில்லை என்று சொல்லி விட்டதால், பாடல் பதிவு எதுவும் இல்லாமல் பூஜை மட்டும் போட்டோம். ஏதோ காரணங்களால், பூஜை போட்ட சில நாட்களிலேயே அந்தப் படம் எடுக்கும் எண்ணத்தை என் தந்தை கைவிட வேண்டியதாயிற்று. எனக்கு அதற்குள் இயக்குநர் சக்தியுடன் நெருங்கிய நட்பு ஏற்பட்டு விட்டதாலும், திரைப்பட பூஜை என்று என் நண்பர்களையெல்லாம் நான் அழைத்துக் காட்டிவிட்டு உடனே மூட்டை கட்டிவிட என் ஈகோ, அதுதான், அகங்காரம், இடம்கொடுக்காததாலும், எப்படியும் சக்தியின் இயக்கத்தில் வேறொரு படம் எடுத்தே ஆக வேண்டுமென்று என் வளர்ப்புத் தந்தை கல்யாணராமனிடம் கேட்டேன். நான் கேட்டு அவர் எதையும் மறுத்ததே இல்லை. குறைந்த பட்ஜெட்டில் எடுப்பது என்று தீர்மானம் ஆகியது. கதாநாயகனாக என் நெருங்கிய நண்பர் எஸ்.வி.சேகரையும், கதாநாயகியாக புதுமுகம் ஶ்ரீலட்சுமி என்பவரையும் வைத்து, சக்தியும் நானும் கலந்து ஒரு கதை உருவாக்கிப் படத்துக்கு பூஜை போட நாள் குறித்தோம். குறைந்த பட்ஜெட் ஆயிற்றே! இளையராஜா அளவுக்கு இசையமைப்பாளருக்குச் சம்பளம் கொடுக்க முடியாதே என்ற நிலை வர, ஏதோ ஒரு துணிச்சலில் ‘நானே இசையமைக்கிறேன்’ என்று ஒரு பேச்சுக்குச் சொன்னதும் என் தந்தையும், சக்தியும் அதை அப்படியே ஒப்புக் கொண்டு இசையமைக்குமாறு என்னைத் தூண்டினார்கள். சரியென்று கோதாவில் இறங்கினேன். பூஜை அன்றே முதற்பாடல் பதிவு செய்வது என்று முடிவானது. அப்படி முடிவாகி நாலு நாட்களுக்குள் பூஜையும், பாடல் பதிவும் நடைபெற நாள் குறித்தாகி விட்டது. நாங்கள் முடிவு செய்திருந்த கதையோ கல்லூரியில், அதுவும், ஆண்களும், பெண்களும் இணைந்து படிக்கும் ஒரு கல்லூரியிலேயே பெரும்பாலும் நடப்பதாக இருந்தது. படத்தின் பெயர் ‘ஸ்பரிசம்’ என முடிவானது.

    1

    நான் விவேகானந்தா கல்லூரியில் படிக்கும் போதே நண்பர்கள் புடைசூழ நிறைய பைலா (இன்றைய கானா) பாடல்கள் எழுதிப் பாடியிருக்கிறேன். இயல்பிலேயே எனக்கு டப்பாங்குத்துப் பாடல்கள் மிகவும் பிடிக்கும். இலக்கண சுத்தமாக இனிய ராகத்தில் ஒரு பாடல் எழுதுவதைவிட, ஜனரஞ்சகமாக, டப்பாங்குத்துப் பாடல் எழுதுவது ரொம்பக் கடினம். “என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு”, “தென்ன மரத்துல குந்தியிருப்பதச் சின்ன பாப்பா”, போன்ற பாடல்கள் எழுதுவது அவ்வளவு சுலபம் இல்லை. “ஜவ்வாது பொட்டாகத்தான் இட்டுக்கவா ஒன்னத் தாயத்துக் குள்ளே வச்சுக் கட்டிக்கவா” என்ற பல்லவியை எப்போது கேட்டாலும் ரசிப்பேன். ஆகவே, துணிந்து ஒப்புக் கொண்டேன்.

    பூஜை நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னால், என் வீட்டில் ‘சீத்தாத்தை’ என்ற அத்தை ஒருத்தி, என் வளர்ப்பு அன்னை அலங்காரத்தின் தாயார், அவள் அடிக்கடிப் பாடும் ஒரு நையாண்டிப் பாடலைப் பாடினாள். அதைக் கேட்டதும் அதுவே பல்லவியாக என் முதல் திரைப்படப் பாடல் உருவானது.

    2

    முறையாக இசை பயிலாத, எந்த வாத்தியமும் வாசிக்கத் தெரியாத, ஸ்ருதியோடு பாடுவதே இல்லை என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்த நான் இசையமைப்பாளனாக, முதன்முதலில், ஏ.வி.எம். ஸ்டூடியோவில் இருந்த ஆர்.ஆர். ஒலிப்பதிவுக் கூடத்தில், ஸவுண்ட் எஞ்சினியர்கள் மாணிக்கம், சம்பத் ஆகியோருக்கு அருகில் எப்படி சப்த நாடியும் ஒடுங்க அமர்ந்திருந்தேன் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன். அது போதாதென்று, நான் இசையமைக்கும் அழகை பார்க்கச் சாரு அண்ணா, அதாவது, சாருஹாசன் வேறு வந்து என் அருகில் உட்கார்ந்து கொண்டு விட்டார். என் நடுக்கம் இரட்டிப்பாகியது. பாடலை யார் பாடப் போகிறார்கள் என்று கூட முடிவு செய்யவில்லை. கோவையிலிருந்து நண்பர் சுந்தரேசன் என்பவரையும், அப்போது சில படங்களில் பாடியிருந்த டி.கே.எஸ். கலா அவர்களையும் மட்டும் பாடத் தயாராக வரச் சொல்லியிருந்தேன். பாடலோ பல மாணவ, மாணவியர் பாடிக்கொண்டு ஆடுவதாக அமைந்திருந்தது. என் பாடல் வரிகளை நான் முணுமுணுக்க, அதை எப்படியோ ஒரு மாதிரியாகச் சரியாகப் புரிந்து கொண்டு ராமமூர்த்தி அவர்கள் ஹார்மோனியத்தில் வாசித்துக் காட்ட, ராக்கெட் ராமனாதன், முத்துராஜா, என் மனைவியின் தம்பி ரதீஷ் உட்பட அங்கு வந்திருந்த நண்பர்கள் பலரையும் பாட வைத்துப் பதிவானது அந்தப் பாடல்.

    நான் ஏதோ ஆபாசப் பாடல் எழுதியிருக்கிறேன் என்று மேடையில் ‘சொல்லி விடட்டுமா’ என்று வாலி மிரட்டினார் என்று முன்னொரு பகுதியில் எழுதியிருந்தேனே, அந்தப் பாடல்தான் அது.

    ராஜ கோபாலா ஒங்கம்மா தோசை வாத்தாளா

    வேணு கோபாலா ஒங்கம்மா வெண்ணை தந்தாளா

    ‘ஸ்பரிசம்’ படம் முக்கால்வாசி எடுத்தாகி விட்டது. இன்னும் வியாபாரம் ஆகவில்லை. நான் வக்கீல் தொழிலில் சம்பாதித்த கொஞ்சநஞ்ச பணமும் நேராக படச் செலவுக்கே போய்க்கொண்டிருந்தது. ஷோபனா ரொம்பப் பொறுமைசாலி.

    படம் தொடங்கியதிலிருந்து, ஒவ்வொரு நாளும், அந்த நாள் படப்பிடிப்புக்கு அல்லது பாடல் பதிவுக்குத் தேவைப்படும் பணம் அந்த நாள் காலையில்தான் யார் மூலமாவது எதிர்பாராமல் கிடைக்கும். அப்படி ஒரு ராசி அந்தப் படத்துக்கு. படம் பூஜையன்று விடியற் காலையில், செலவுக்குப் போதிய பணம் இல்லாமல் நானும், என் வளர்ப்புத் தந்தையும் புறப்பட்டு விட்டோம்; ‘பார்க்கலாம், மாலைக்குள் பணம் வரும்’ என்ற துணிவோடு, டிரைவ்-இன் ஓட்டலில் போய் சிற்றுண்டி அருந்திக் கொண்டிருந்த போது அங்கு வந்த ஒரு நண்பரிடம் நான் விளையாட்டாக இதைச் சொன்னதும் அன்றைய செலவுக்குத் தேவைப்படும் பணத்தை அப்படியே தம் கைப்பெட்டியிலிருந்து எடுத்துக் கொடுத்தார். மெய்சிலிர்த்துப் போனேன். அவர்தான், நான் வக்கீல் தொழில் தொடங்கியதும் தம் அலுவலக வளாகத்திலேயே என் அலுவலகம் அமைக்க உதவிய டி.எஸ்.சத்யம். ‘சத்யம் அட்வர்டைஸிங்’ என்ற விளம்பர நிறுவனம் வைத்து நடத்திய அவர் எங்கள் குடும்ப நண்பர். சமீபத்தில் அமரராகிவிட்ட அவர் போன்ற நல்ல உள்ளம் படைத்த நண்பர்களே எனக்கு எப்பொழுதும் உதவிசெய்து வந்திருக்கிறார்கள்.

    5

    “சுருதி நாயகன் வரும் வரும் என்பதோர் துணிவால்” என்று அசோக வனத்தில் சீதை காத்திருந்ததைக் கம்பன் வர்ணித்தது போல், ஒவ்வொரு நாளும் யாராவது வந்து உதவக் காத்திருந்த என் துணிவை எண்ணிப் பார்த்து வியக்கிறேன். இப்படித்தான் வளர்ந்தது ‘ஸ்பரிசம்’ படம்.

    ‘என்னய்யா, மின்னல், கவிதை என்றெல்லாம் அளந்து விட்டு ஏதோ தோசை மாவை அரைத்துக் கொண்டிருக்கிறாய்?’ என்ற கேள்வி தொலைவிலிருந்து என் செவியை எட்டுகிறது. கதை என்று வந்தால் அப்படித்தான் சுற்றி வளைந்து போகும். பொறுமை தேவை.

    சரி, மின்னலுக்கு வருகிறேன்.

    அந்தப் படத்துக்கு இன்னொரு பாடலை அடுத்துப் பதிவு செய்து படம் பிடிக்க வேண்டும். கல்லூரியிலே கதாநாயகனுக்கும், நாயகிக்கும் எப்பொழுதும் சின்ன சின்ன சண்டைகள். இப்படியே பாதிப் படம் போகிறது. நாயகன் செய்த ஒரு விஷமம் நாயகியை மிகவும் பாதித்துவிட அவள் அவனிடம் நிரந்தரமாகக் கோபித்துக் கொண்டுவிட, நாயகன் அவள் மனத்தை மாற்றுவதற்குப் பாட வேண்டும். மறுநாள் அதுபற்றி விவாதிக்க இயக்குநர் சக்தி அழைத்திருந்தார். ஆனால் அதற்குள் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி சத்யதேவ், ஒரு வழக்கில் என்னைக் கமிஷனராக நியமித்து விட்டார். அன்றிரவே நான் தேவகோட்டைக்குச் சென்று அங்கிருந்த வயது முதிர்ந்த ஒருவரைச் சாட்சியாக விசாரித்து வரக் கட்டளையிட்டு விட்டார்.

    இரவு, புகைவண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தேன். மனமெல்லாம் ‘ஸ்பரிசம்’ படத்திலேயே இருந்தது. இரவாகியும் தூக்கம் வரவில்லை. ஜன்னல் வழியே வெளியே பார்த்துக் கொண்டே இருந்தேன். திடீரென்று ஒரு வெட்டு மின்னல் கண்ணைப் பறித்தது. ஜன்னலை சாத்திவிட்டுப் படுத்துக் கொண்டேன். மின்னல் மட்டும் என் மனத்துக்குள் ஆழமாகத் தைத்து, ஊடுருவிச் சென்று, அங்கிருந்து ஒரு பாடலை வரவழைத்து விட்டது. இல்லை, மன்னிக்கவும், அந்தப் பாடலே மின்னலாக உருமாறி என் நெஞ்சில் குடியேறிவிட்டது. அது பல்லவியோடு நின்றுவிட்ட பாடல் போல் இரண்டே வரிகளில் முடிந்து விட்டது. நானும் தூங்கி விட்டேன். தூக்கம் கலைந்த பிறகு, நாளை மேலும் சொல்கிறேனே!

    (தொடரும்)

    புகைப்படங்கள் குறித்த விவரம்:

    1. வாய்ப்பூட்டு பட பூஜையின் போது கமலுக்கு நான் மாலை அணிவிக்கும் புகைப்படங்கள் 2.

    2. நானும் இயக்குநர் ஆர்.சி.சக்தியும்

    3. நான் ஸ்பரிசம் படப்பாடல் பதிவு செய்யும் காட்சிகள்.

    4. டி.எஸ்.சத்யம் பாரதி விழாவில் டாக்டர் சீர்காழி சிவசிதம்பரத்துக்குப் பரிசு வழங்கும் காட்சி.

    Share
  • ஆடி பதினெட்டு பெரு விழா

    –விசாலம்.

    தலைக்காவேரியில்  ஒரு வெள்ளிக்கம்பிப்போல் ஆரம்பிக்கும் காவேரி ஒரு சிறு குளம்போல் தோற்றம் கொடுத்த வண்ணம் பூமிக்கடியில் இறங்கி  பின் சிறிது தூரம் பயணித்தப்பின் பெரிய ஆறாக பெருக்கெடுத்து ஓட ஆரம்பிக்கிறது. ஆரம்பநிலையில் உள்ள காவிரி எல்லோருக்கும் காவேரி அம்மனாக விளங்குவதால் இந்த இடத்திற்கு ஆடி அமாவாசை, தை அமாவாசை, ஆடி பதினெட்டாம்பெருக்கு போன்ற நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கிறது.

    காவேரிஅம்மனின் கோயில்  பூம்புகார், காவிரிப்பாக்கம், சேலம், கும்பகோணத்தில் மேலக்காவேரி, திருச்சேரை  போன்ற இடங்களில் காணமுடிகிறது. திருச்சேரையில் காவேரி அம்மனும் ஸ்ரீ மார்க்கண்டேயரும் விஷ்ணுவைப்பூஜித்தாக புராணம் சொல்கிறது.  இங்கு விஷ்ணு  சாரநாதன் என்ற பெயரிலும் தாயார்  சாரநாயகி என்ற பெயரில் அருள் புரிகின்றனர். சேலம் ஏற்காடு பகுதியில் கடல்மட்டத்திலிருந்து 342 உயரத்தில் சர்வராயன் மலையில் காவேரிஅம்மனின் கோயில் இருக்கிறது. அந்த அம்மன் பல மலைஜாதி மக்களுக்கு குலதெய்வமாக விளங்குகிறாள்.

    சமீபத்தில் நான் பார்த்து மகிழ்ந்த காவேரி அம்மன் கோயில் திருச்சியில் மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலுக்கு வடக்கில் அமைந்துள்ளது. இங்கு நாங்கள் போன காரணம் என்னவென்றால் எங்கள் வீட்டில் சமீபத்தில் தோண்டிய ஆழ்குழாயில் தண்ணீர் வற்றாமல் வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்யத்தான். எங்கள் அன்பர் ஒருவர் இந்தக்கோயிலைப்பற்றி இந்த அருமையான தகவலைத்தெரிவித்தார். அதாவது வீட்டில் கிணறு, குழாய் போன்றவை என்றும் நீர் வளத்துடன் இருக்க இந்தக்காவேரி அம்மனுக்கு வேண்டிக்கொண்டு காவேரி நதி தீர்த்தத்தினால் அபிஷேகம் செய்து பின் அந்த நீரை வீட்டிற்கும் எடுத்துப்போய் கிணற்றில் ஊற்ற வேண்டும். இது போல் செய்ய தண்ணீர்ப்பஞ்சமே இருக்காது என்ற நம்பிக்கை பலருக்கு இருக்கிறது. ஆடிபதினெட்டாம் பெருக்கு திருவிழா இங்கு மிக விமரிசையாக நடக்கிறது. நீர் வளம் அதிகம் பெருக இந்த அம்மனிடம் வந்து வேண்டிக்கொண்டு கிணறு வெட்ட, கிணறு என்றும் நிரம்ப்பி இருக்குமாம். காவேரி அம்மனுக்கு எதிரில் அதிகார நந்தி இருப்பது மிக விசேஷமாக கருதப்படுகிறது. முன் காலத்தில் இந்தக்கோயில் சோலைகள் சூழ்ந்து மிகப்பசுமையாக இருந்ததாம். முன்பு மிகவும் ஆக்ரோஷத்துடன்  அங்கும் இங்குமாக பாய்ந்து
    ஓடிய காவேரிக்கு சோழமன்னனான  கரிகால சோழன் வாய்க்கால் அமைத்து அதை ஒழுங்கு செய்தானாம். இதிலிருந்தே தெரிகிறது இது எத்தனை பழமையான கோயில் என்பது. ஆனால் நாகரீகம் வளர அந்தச்சோலைகள் அழிந்து தற்போது பல அடுக்கு மாடிக் கட்டடங்கள் வந்து அதன் அழகை குறைந்து விட்டனவோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

    aadi perukkuஐம்பது வருடங்கள் பின்னோக்கி என் நினைவு செல்கிறது. கும்பகோணத்தில் மேலக்காவேரி அருகே சில மாதங்கள் என் பாட்டி வீட்டில் இருக்க நேர்ந்தது.

    அப்போது ஆடி மாதம் பிறந்து எல்லா கோயில்களிலும் சரியான கூட்டம். என் அம்மா என்னிடம்  ” இதப் பாரு, பதினெட்டாம் பெருக்கு வரது,  அதுக்கு முறம் வேணும். அடுத்த தெருவுக்குப் போய் ஒரு முறம் வாங்கிண்டு வா.”

    “முறமா ? அது எதுக்கு அம்மா?ஆத்தில் தான் ஒரு முறம் இருக்கே “

    “அதில்லேடி இந்த முறம் காவேரி ஆத்தில விடணும். அதப் பத்தி அப்பறம் சொல்றேன்,  நீ கடைக்கு இப்பவே போ. ஒரு முறமாக வாங்காதே. இரண்டு முறமாகத்தான் வாங்கணும், சரியா?” என்றபடி  சில  நயா  பைசாக்கள்  கொடுத்தாள்.   அப்போதெல்லாம் ஒரு நாலணாவுக்குக்கூட  சாமான்கள்   வாங்கமுடியும். நான் அப்போது  பாலும் பழமும் என்று சொல்லும் டிசைனில் பாவாடையும்  பஃப் வைத்த சட்டையும் போட்டிருந்தேன். பாலும் பழமும் டிசைன்  என்பது  மஞ்சள், பச்சை, சிவப்பு போன்ற நிறங்களுடன் பல கட்டங்கள் நிறைந்து   இருக்கும். என்  தலையையும் படியப்படிய வாரி பின்னி  தலையில்  பூச்சரமும்  வைத்துவிடுவார் என் பாட்டி. பதினெட்டாம் பெருக்கு  திருவிழாவும் வந்தது. நாங்கள்  காவேரி ஆற்றங்கரைக்குச் சென்றோம். என் தாய் முறத்தில் வெற்றிலை,  பாக்கு, வாழைப்பழம், காதோலை, கருகமணி, மஞ்சள் சரடு வைத்து பின் தேங்காயையும் உடைத்து அதில் வைத்தாள். பின்னர் ஒரு வாழைமட்டையில் தீபங்களை ஏற்றி வைத்து அதையும் முறத்தில் வைத்து  காவேரி அம்மனின் பல ஸ்லோகங்களைச்சொல்லியபடியே ஆற்றில் விட்டாள். அது கொஞ்ச நேரம் மிதந்து பின் கவிழ்ந்து எல்லா பொருட்களும் ஆற்றில் கலந்து சிதறியபடியே போகும் அழகு இருக்கிறதே அதைப்பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்று தோன்றுகிறது.  பின் பல சுங்கலிகளுக்கு தாம்பூலம் கொடுத்ததும் நினைவுக்கு வருகிறது.  பின் குடும்பத்தில் பல அங்கத்தினர்களுடன் புளியஞ்சாதம், தேங்காய் சாதம், அவியல், தயிர் சாதம், வடாம், வற்றல் என்று காவிரி அம்மனுக்கு நைவேத்தியம் செய்துவிட்டு பின்  எல்லோரும் ஒரு வெட்டு வெட்டியதும் ஞாபகம் வருகிறது. அன்று ரசம் தள்ளுபடி. ஏன் என்று தெரியவில்லை. வடக்கில் கங்கை கரையோரத்தில் இதேபோல் மாலையில் கங்கா ஆர்த்தி நடைப்பெறும். அங்கேயும் இதேபோல் அகல் விளக்குகளை ஏற்றி மட்டைகளில் வைத்து மிதக்கவிடுகிறார்கள். எல்லா விளக்குகளும் ஒரே நேரத்தில் கங்கையில் மிதக்கும் காட்சி ஒரு கண்கொள்ளாக் காட்சிதான்.

    விவசாயிகளுக்கு இன்று மிக சிறப்பான நாள். ஆடிப்பட்டம் தேடி விதை என்பதை ஒப்ப  இவர்கள் புது விதைகள் வாங்கி பிரார்த்தனை செய்து அதைத்தூவி வரப்போகும் பொங்கல் திருநாளில் அமோகமான விளைச்சல் காண வேண்டும் என்றும் வேண்டிக்கொள்கிறார்கள்.  அவர்கள் அன்று காலை எழுந்ததும் காவிரித்தாயிடம் நீர்வளம் சிறப்பாக அமைய வேண்டும் என்றும் பிரார்த்திக்கிறார்கள்.  நீர்வளம், நில வளம் இருந்தால் தான் பயிர் விளைச்சல். பயிர் விளைச்சல் இருந்தால்தான் நாடு சுபீட்சம் , இதை அவர்கள் நன்கு உணர்ந்துக்கொண்டு இந்த நன்னாளில் பிராத்தனையுடன் நிலம் உழுதலல், விதை விதைத்தல் போன்றவைகளை செய்வது மிகவும் பாராட்டப்பட வேண்டியது. “நம் எல்லோருக்கும் ஓர் இறைவன் ” நாமும் அவர்களுடன் சேர்ந்து காவேரி அம்மனை நாமும்  பிரார்த்திப்போம் …

    படம் உதவிக்கு நன்றி:
    http://www.kamakoti.org/kamakoti/details/aadi1.jpg
    http://media.webdunia.com/_media/ta/img/article/2014-07/21/full/1405954896-2474.jpg

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 17

    –சு.கோதண்டராமன்.

     

    இந்திரன்
     

    cambodia-indra

    இந்திரன் தேவர்களில் முக்கியமானவர். முக்காலத்திலும் ஈடு இணையற்றவர். அவர் தன் செயல் திறமைகளால் தேவர்களுக்குப் பெருமை உண்டாகுமாறு செய்தார். இவர் மனிதனின் நண்பர். அவர்களைத் துன்பத்திலிருந்து விலக்கி அழைத்துச் செல்வதில் நாட்டம் உடையவர். மனித குலத்தின் எதிரிகளுக்கு எதிரி. வீரம் மிக்கவர். தன் வலிமையால் பல பகைவர்களை அழித்துத் தன் பக்தர்களுக்கு உதவிகள் செய்துள்ளார். அவருடைய சிறப்புகளை ரிக் வேதம் எப்படிக் கூறுகிறது என்று பார்ப்போம்.  

    வலிமை
    எதிரிகளின் செல்வத்தைப் பறவை போல் கவரும் திறமை உள்ளவர் இந்திரன். மிக நிலைத்தவரையும் அசைத்து விடுபவர். எல்லா வீர்யமும் அவருள் அடக்கம். அவரது ஆயுதம் வஜ்ராயுதம். அதற்குத் தப்பின பகைவர் எவரும் இல்லை.

    இந்திரனின் தேர் இரண்டு குதிரைகளால் இழுக்கப்படுவது. இவை வசோயுஜா  (சொல்லால் இயங்குவது) என்றும் ப்ரஹ்மயுஜா (மந்திரத்தால் இயங்குவது) என்றும் கூறப்பட்டுள்ளன.

    இந்திரனால் வெல்லப்பட்ட பகைவர்கள்- வ்ருத்ரன், விச்வரூபன், அர்புதன், வலன், சம்பரன், ரௌஹிணன், நார்மரன், த்ருபீகன், உரணன், ஸ்வச்னன், சுஷ்ணன், பிப்ரு, நமூசி, ருத்ரிகா, வர்ச்சின், சுமுரி, துனி, க்ரிவி, குயவன், ஸண்டிகர்கள்.

    இந்திரனால் உதவப்பட்ட நண்பர்கள்- த்ரிதா, அங்கிரஸ், தபீதி, துர்வீதி, வய்யன், ஏதஸன், குத்ஸ, ஆயு, அதிதிக்வா.

    இந்திரன் இன்றி வெற்றி இல்லை என்பதால் போரில் இரு திறத்தாரும் இவரை உதவிக்கு அழைக்கின்றனர். மேலோரும், கீழோரும் அழைக்கின்றனர். ஒரே தேரில் பயணம் செய்யும் இருவர் இவரைத் தனித்தனியே அழைக்கின்றனர். பணிவுடன் வேண்டுவோருக்கு மட்டுமே அவர் உதவுவார். தன் வலிமையில் திமிர் கொண்டோருக்கு அவர் உதவுவதில்லை. பாவிகளையும் தேவர்களை வணங்காதவர்களையும் அழிக்கிறார்.

    இந்திரனின் உணவும் பானமும்
    தன் வலிமையால் பல செயற்கரும் செயல்களைச் செய்தவர், அதற்கேற்ற உணவு உண்பவராகவும் கூறப்படுகிறார். இந்திரனுக்காக பூஷனும் விஷ்ணுவும் 100 எருமைகளைச் சமைத்தனர் என்கிறது ஒரு மந்திரம்.[1]

    சோமம் இந்திரனை மகிழ்விக்கிறது. அதனால் அவர் வளர்கிறார். சோமத்தினால் அவர் மகவான் (பெருஞ் செல்வர்) ஆனார்.[2]  அவர் பிறக்கும்போதே சோமத்தை அருந்தினார். சோமத்தை அருந்திய களிப்பில் அவர் செய்த அருஞ்செயல்கள் பல. அஹியைக் கொன்று நதிகளைப் பெருகச் செய்தது, மலைகளை உடைத்து வலனைக் கொன்றது, நதிகளுக்குப் பாதை அமைத்துக் கொடுத்தது, தபீதியை மீட்டது, ஆற்றைக் கடக்க முடியாமல் இருந்த தன் நண்பர் துர்வீதி மற்றும் வய்யனுக்காக, ஆற்றைத் தடைசெய்து அவர்கள் மறு கரைக்குச் சென்று செல்வம் அடைய உதவி செய்தது, பெண்கள் ஒளித்து வைக்கப்பட்ட இடத்தைக் கண்டுபிடித்தது, புறம் தள்ளப்பட்ட மனிதனை வெளிக் கொணர்ந்தது, குருடனைப் பார்க்க வைத்தது, காலில்லாதவனை நடக்க வைத்தது, சுமுரி, துனி ஆகிய தஸ்யுக்களை ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்த்திக் கொன்றது மற்றும் பல செயல்களை இந்திரன் சோமபானத்தின் களிப்பில் செய்தார்.

    செல்வமும் கொடையும்
    இந்திரன் செல்வத்தின் இருப்பிடம். செல்வத்தின் பாதைகளின் ஒன்று கூடும் இடம். அவருடைய ஆணையின் கீழ் குதிரைகள், தேர்கள், பசுக்கள், கிராமங்கள் உள்ளன. அவற்றை அவர் தன் பக்தர்களுக்கு வாரி வழங்குகிறார். அவர் பெரும் கொடையாளி. இந்திரனை விட வலிமையானவர், பணக்காரர் பிறந்தது இல்லை.

    யக்ஞம்
    மற்ற தேவர்களைப் போல இந்திரனும் யக்ஞங்களைப் பாதுகாக்கிறார். யக்ஞத்தால் வலுப்பெறுகிறார். ஆகுதி செய்வோர், சோமம் பிழிவோர், தோத்திரம் சொல்வோர் என வேள்வியின் பல் வேறு பிரிவு வேலைகள் செய்வோரையும் செல்வர், வறியர் என்ற வேறுபாடு இல்லாமல் அவர் ஊக்குவிக்கிறார். பக்தி நெறி அறியாதவரையும் அவர் கை விடாமல் உணவு அளிக்கிறார்.

    தலைவர்
    நல்ல பாதையிலும் கடினமான பாதையிலும் முன்னே சென்று வழிகாட்டுவதால் பதிக்ருத் எனப்படுகிறார்.

    அறிவாளி
    அக்னியைப் போலவே இவரும் சிறந்த அறிவாளி. கவிகளுக்குள்ளே மேலான கவி எனப்படுகிறார். அக்னி ஜாதவேதஸ் (பிறந்தது எல்லாம் அறிந்தவர்) என்று கூறப்படுவது போல, இந்திரனும் விச்வானி விதுஷ (எல்லாம் அறிந்தவர்)  எனப்படுகிறார்.

    மனிதனின் நண்பர்
    இந்திரனைத் திருப்திப்படுத்த யக்ஞம், சோமம், ஹோத்ரம் (புகழ்ச்சி) என மூன்று வழிகள் சொல்லப்பட்டிருக்கின்றன. இவற்றால் அவர் வலுப்பெறுகிறார்.  மகிழ்ச்சி அடைந்து தன் பக்தர்களுக்கு பெரும் செல்வம் தருகிறார். செல்வம் மட்டுமல்ல, பசுக்கள், மக்கட்பேறு, வீடு, நண்பர்கள், வலிமை, உதவி, பாதுகாப்பு ஆகியனவும் தருகிறார். அவரைக் குறித்து எத்தகைய சிறு தொண்டு ஆற்றினாலும் அவருடைய அருளைப் பெறலாம். புகழ்வோர்க்கு இவர் உதவுவதால் காருதாயர் எனப்படுகிறார்.   இவரைப் புகழ்வோர் வளர்கின்றனர்.

    இவ்வளவு சிறப்பு உடைய இந்திரனைத் தனக்கே உரிமை ஆக்கிக் கொள்ள வேண்டுமென்று ரிஷிகள் ஆசைப்படுவதைப் பார்க்கிறோம்.

    பந்துக்கள் அற்றவர்களாகிய நாங்கள், பந்துக்கள் உள்ள உன்னோடு சேர்ந்து கொள்ள விரும்புகிறோம்.[3]  நீ சகோதரன் அற்றவன். என்னைச் சகோதரன் ஆக்கிக் கொள்.[4]  “நீ எங்களுடையவன். நாங்கள் உங்கள் பக்தர்கள். மற்ற பக்தர்களின் யக்ஞங்களுக்குப் போவதற்கு முன்னால் எங்கள் யக்ஞத்திற்கு வாருங்கள்” என்று ஒரு ரிஷி அழைக்கிறார்.[5] நூறு அல்லது ஆயிரம், பத்தாயிரம் பசுக்களைக் கொடுத்தாலும் இந்திரனை விற்க மாட்டேன் என்கிறார் மற்றொருவர்.[6 ]

    மனித குலத்தின் எதிரிகளுக்கு எதிரி
    பல எதிரிகளை அழித்து மனிதர்களைக் காத்தது இந்திரனுடைய சாதனைகளில் ஒன்றாகச் சொல்லப்பட்டிருக்கிறது. மனித குலத்தின் எதிரி யார்? தாஸர் என்றும் தஸ்யு என்றும் ஒரு கூட்டம் ரிக் வேதத்தில் பேசப்படுகிறது. அவர்கள் கறுப்பு நிறத்தவர்களாகவும் மூக்கு இல்லாதவர்களாகவும் வர்ணிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தெய்வ நம்பிக்கை இல்லாதவர்கள். யக்ஞம் முதலான வழிபாடு செய்யாதவர்கள். மாயையில் வல்லவர்கள். இந்திரன் தானும் மாயையைக் கைக் கொண்டு அவர்களை அழித்தார். பலரைக் குகையில் அடைத்தார். தனக்குச் சாவு இல்லை என்று கருதிக் கொண்டிருந்த தாஸர்கள் அழிந்தனர்.

    தேவர்களும் இந்திரனும்
    அக்னி, விஷ்ணு, சோமன், வருணன், வாயு ஆகிய ஒவ்வொருவருடனும் சேர்த்துப் போற்றப்படுகிறார் இந்திரன்.  அப்பொழுது இந்திரனுக்கும் மற்ற தேவர்களுக்கும் உள்ள வேறுபாடு மறைகிறது.

    இந்திரனை மழை தரும் பழமையான ஜோதி என்றும் அவர் மேலே பிரகாசிக்கும் போது மக்கள் பார்க்கிறார்கள் என்றும் போற்றி சூரியன் இந்திரன் வேறு வேறு அல்லர் என்று குறிப்பால் உணர்த்தப்படுகிறது. [7]

    சாதனைகளால் தேவ பதவி
    இந்திரனின் சாதனைகளைப் பார்த்தோம். முன் அத்தியாயத்தில் கூறியபடி இந்திரன் மனிதனாக இருந்து தன் சாதனைகளால் தேவ பதவி அடைந்தவரா என்பதை ஆராய்வோம். மேலே குறிப்பிட்டவை அருஞ் செயல்கள் தாம் என்றாலும் ஒரு வலிமையான மனிதன் செய்யக் கூடியவை தாம். இந்த அருஞ் செயல்களைச் செய்ததால் தான் அவர் தேவ நிலையை அடைந்தார் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.

    அவர் தன் சாதனைகளால் மானிடப் பிறவியைக் கடந்து அமர்த்யன் (இறவாதவன்) என்ற பெயரால் விளங்குகிறார்.

    இந்திரனே பரம்பொருள்
    இந்திரனின் பல்வேறு சாதனைகளைப் புகழ்ந்து கொண்டிருக்கும்போதே ரிஷிகள் பரவச நிலைக்குச் சென்று விடுகின்றனர். இந்திரனைப் பரம்பொருளாகக் கருதி அவரைச் சர்வ வல்லமை உள்ளவராக வர்ணிக்கின்றனர். இவருடைய வஜ்ரத்தின் ஓசையால் மண்ணும் விண்ணும் மலைகளும் பயப்படுகின்றன, வணங்குகின்றன. விண்ணும் மண்ணும் அவரை வெல்ல முடியாது. கடலோ மலைகளோ அவருடைய ரதத்தைத் தடுக்கா. அவர் தான் மண்ணையும் விண்ணையும் படைத்தார். அவற்றைத் தாங்குகிறார். அவரே சூரியனைத் தன் பாதையில் உலவ விட்டார். அவரே நதிகளைத் தன் பாதையில் ஓடவிட்டார். அவரே பசுக்களிடம் பாலை வைத்தார் என்று புகழ்கிறார்கள்.

    இதே போல எல்லாத் தேவர்களும் பரம்பொருள் நிலைக்கு உயர்த்தப்படுகிறார்கள் என்பதை முதலில் பார்த்தோம்.

     

    குறிப்புகள்:
    1    6.17.11.
    2    6.43.4.
    3    8.21.4.
    4    8.21.13.
    5    7.69.6
    6    8.1.5.
    7    8.6.30.

    படம் உதவிக்கு நன்றி: http://i385.photobucket.com/albums/oo297/Vetty_Gurl/tracks-cambodia-indra.jpg

    Share
  • நான்தான் அடுத்த கணவன்…என்ன தலைப்பு அய்யா !

    எஸ் வி வேணுகோபாலன்

    அன்பின் அ முத்துலிங்கம் அவர்களுக்கு

    வழக்கம்போல் காலச்சுவடு வேண்டாம் என்றுதான் இந்த மாதமும் சொன்னேன். கோடம்பாக்கம் ரயில் நிலைய புத்தகக் கடை அன்பர் வெங்கடேசன், “ஆனால், இந்த மாதம் நீங்க வாங்கத்தான் செய்வீங்க” என்றார். ஏனோ தெரியவில்லை, பல மாதங்களாயிற்று காலச்சுவடு வாங்கி வாசித்து. ஏற்கெனவே வாங்கிக் கொண்டிருக்கும் இதழ்களையே முழுதாய் வாசிக்க முடிவதில்லை.

    அவரது தூண்டில், என்னை இன்று வந்த ஆகஸ்ட் மாத இதழைக் கையிலெடுத்து பிரிக்கவைத்தது….முதல் பக்கத்தில், பொருள் அடக்கத்தில், பக்கம் 45 என்று போட்டு சிறுகதை: அ. முத்துலிங்கம் – நான்தான் அடுத்த கணவன் என்று போட்டிருந்தது. வளர்ப்பானேன், புத்தகம் என் பைக்குள் வந்து உட்கார்ந்துவிட்டது.

    தீராநதி அட்டையில் ராமானுஜன் பட விமர்சனம் என்று போட்டிருக்கவே, முதலில் அதையே வாசித்தேன். அதற்கும் நான் மவுண்ட் ஸ்டேஷன் இறங்கி, ஓர் அன்பரது மாமனார் மறைவுச் செய்தி வந்திருக்கவே அங்கே சென்று அஞ்சலி தெரிவித்துவிட்டு, அதே மவுண்ட் ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் வந்து அமர்ந்ததும்தான் வாசிக்க வேண்டியிருந்தது. அற்புதமான விமர்சனத்திற்காக தீராநதி அலுவலகத்திற்கு ஃபோன் செய்து என்னை ஒரு வாசகர் என்று சொல்லி அறிமுகம் செய்துகொண்ட பிறகு வெளி ரங்கராஜன் அவர்கள் நம்பர் கிடைத்தது…பின் அவரோடு பேசக் கிடைத்த ஆனந்த அனுபவம் தனி விவரிப்புக்குட்பட வேண்டியது. இருக்கட்டும்.

    பிறகு உங்களை எடுத்துக் கொண்டேன் அ மு. அந்தத் தலைப்பே என்னை என்னவோ செய்தது. ஒரு சிறந்த கவிதை என்றால் படித்தவுடன் அடிவயிற்றை ஞம ஞம என்று ஏதோ செய்ய வேண்டும் என்பார் எழுத்தாளர் சுஜாதா. உங்களது தலைப்பே என்னை என்னவோ செய்து கொண்டிருந்தது. நான் தான் அடுத்த கணவன், ஆத்தாடி என்ன தலைப்பு. என்ன மலைப்பு!

    45ம் பக்கத்தில் உங்கள் கதை என்று போட்டபின் எனது கைவிரல்கள் ஒரே கொத்தில் அந்த 45ஐ பிடித்து எடுத்துவிட்டன. இதில் எந்த வியப்பும் இருக்க முடியாது. 44ம் பக்கத்தில் எனக்கு நோபல் பரிசுக்குப் பரிந்துரைப்பதாக செய்தி இருந்தால் கூட எனக்கு அதில் அத்தனை சுவாரசியம் இருக்க முடியாது. ஓவர் டு அ மு தான் எனது நாட்டமாக இருக்கும்.

    பத்மபிரியா என்ற பெயரே ஆளை உண்டு இல்லை என்று செய்துவிடத் தக்க காந்தப் பெயர். அந்தப் பெயரில் ஒரு கன்னிகை வசீகரமாக வேறு இருந்தால், இலங்கையிலிருந்து கனடா நோக்கிச் செல்லும் அகதிக்கு சென்னையில் இப்படியான ஒரு வாழ்க்கை திசை அமையும்போது ஏற்படும் உளவியல் சித்திரவதைகள் வேறு எப்படித் தான் இருக்கும்? ஆனால், பத்ம பிரியாவுக்கு அபி என்கிற சினிமாக்காரன் தான் முதலாவது காதலனாக இருக்கிறான். அகதி இரண்டாம் இடத்தில். கனடா, நயாகரா நீர்வீழ்ச்சி, உலகப் பயணம் எல்லாம் அவளுக்கும் பிடித்திருக்கிறது, ஆனால், அபி அவளை திரை நட்சத்திரமாக ஜொலிக்க வைப்பவனாயிற்றே… அது நடந்துவிடுகிறது. கதாநாயகி ஆகிற விஷயமல்ல, அபி அவளைக் கடத்திப் போய்த் திருமணம் செய்வது. அவளும் உடன்பட்டுத்தான்!

    அகதிக்கு இப்போது கனடா செல்வதைத் தவிர வேறு வழி இருப்பதில்லை. அட்லாண்டிக் சமுத்திரம் கடந்துபோயும், பத்மபிரியா மறப்பதில்லை என்று எழுதுகிறீர்கள் அமு! அடடா..ஆஹா..
    இலங்கை நகரத்திலே இன்பவல்லி நீ இருந்தா
    இந்து மகா சமுத்திரத்த இங்கிருந்தே தாண்டிடுவேன்

    என்ற புதையல் படத்தின் ஜே பி சந்திரபாபு பாடல் நினைவுக்கு வந்தது. கண்ணில் காதலியர் கடைப்பார்வை காட்டிவிட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம் என்கிற கவிதை வரிகளும்!

    அகதி விரும்பியபடியே அபி – பத்மபிரியா திருமணம் விவாகரத்தில் முடிகிறது.. நம்மாள் உடனே ஆசைக் கோட்டைகளோடு சென்னை வந்து இறங்குகிறார்…இந்த முறை விதி வேறுமுறையில் விளையாடுகிறது…அங்கிருந்து கதை பற்றுகிறது…கள்ள பாஸ்போர்ட், சிறை, வழக்கு, ஏமாற்றம், துரோகம்…!

    திஹார் ஜெயிலில் வாசம் செய்ய நேருகிறது அகதிக்கு! கண்ணீரோடு சென்னையிலிருந்து பத்மபிரியா தில்லி வரவும் செய்கிறாள். அங்கே நடப்பதென்ன! கொடுமை….

    அதற்குப் பிறகு காதுக்கு வரும் செய்தி, பத்மபிரியாவுக்கு கல்யாணம் ஆகிவிடுகிறது. இரண்டாம் முறை! ஜாமீன் ஆசை காட்டிப் பணத்தை ஆட்டையப் போட்ட அதே வக்கீல்தான் இப்போது அவளது புருஷன். சிறையிலிருந்து வெளிவரும் அகதிக்கு வாழ்க்கை அனுபவம் கனடா திரும்ப அறிவுறுத்துகிறது…ஆனால் பத்மபிரியாவின் முத்து முத்தான கையெழுத்தில் வந்திருக்கும் கடிதம்தான் கதையின் முதல் வரியாகக் கதையாக மலர்கிறது.

    இன்னும் என்ன காதல் நினைவு என்று கடிந்து பேசுகிறார் அவனது பாஸ்! அவரிடம் பகிரும் கதைதான் இப்படி விரிந்து செல்கிறது. இல்ல அவள் அழைக்கிறாள்…அந்த லாயரை அவள் விலக்கி வைத்துவிட்டாள்…காதலுற அழைக்கிறாள்…அவளது அடுத்த கணவன் இந்த அகதிதான் என்ற முடிவோடு!

    கதை நெடுக உங்களது தேர்ந்த சொல்லாட்சி சிறப்பாக இருக்கிறது…

    கோடம்பாக்கம் வெங்கடேசனுக்குக் கடன் பட்டிருக்கிறேன்…
    ஆமாம் 45 ரூபாய்க் கடனுக்குத் தான் தீராநதியும், காலச் சுவடும் வாங்கிவிட்டு, ரயிலேறி சென்றுவிட்டேன் – காலையில் நேரம் இல்லை என்று!

    அன்புடன்

    எஸ் வி வேணுகோபாலன்

    Share
  • கேள்வி பிறந்தது அன்று!

    -சேசாத்ரி பாஸ்கர்

     

    எங்கோ பிறந்த தென்றல் எப்படி                            flower
    விரிக்க வைத்தது இதழை?
    என்றோ புதைந்த விதை
    எப்படியாயிற்று
    இங்கு மரமாய்?
    எங்கோ முகிழ்ந்த வானம் எங்ஙனம்
    கொண்டு வரும் மணத்தை?
    எங்கேயோ நீரை விழுங்கிய நிலம்
    எப்படிக் கொணர்ந்தது குளிர்ச்சி?
    என்றோ கரைந்த நினைவுகள் எங்ஙனம்
    சுமக்கிறது மனம்?
    கேள்வியில் இருப்பது வாழக்கை
    யாருக்கு வேண்டும் பதில்?

     

    Share
  • காதல் நாற்பது (15)

    பளிங்குச் சிறையில் சிக்கிய தேனீ!

    Elizabeth-Browingமூலம் : எலிஸபெத் பிரௌனிங்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    குற்றம் சுமத்தாதே என்னை!
    கெஞ்சிக் கேட்கிறேன் உன்னை!
    நின்முன் தெரிவது சலனமற்ற
    என் சோக முகம்!
    நம்மிரு முகங்கள் வெவ்வேறு பக்கம்
    நோக்குவதால்
    சிரத்திலும் முகத்திலும்,
    ஒரே மாதிரி ஒளிர்வ தில்லை
    பரிதி வெளிச்சம்!

    தெய்வீகக் காதலில்
    சோக மென்னைப் பாதுகாப்பாய்ச்
    சிறைப் படுத்தி உள்ளது!
    சிறகை விரித்து வெளியே
    பறக்க முயன்றாலும்
    தோல்விதான் எனக்கு!

    பளிங்குப் பேழையில் சிக்கிய
    தேனீ யாக  எண்ணிக்
    கண்காணிப் பாய் நீ
    ஐயமின்றி!
    முன்னேறும் எனது காதல்
    முடிந்து போவதும்,
    நினைவின் எல்லை தாண்டி என்னை
    நீ மறந்து போவதும்,
    தெரிகிறது எனக்கு,
    வானின் மீதமர்ந்து நதிகளைக்
    கீழ் நோக்கும்
    ஒருத்தி காணும்
    உப்புக் கடல் போல!

    ********************

    Poem -15

    Sonnets from the Portuguese

    By: Elizabeth Browning

    Accuse me not, beseech thee, that I wear
    Too calm and sad a face in front of thine;
    For we two look two ways, and cannot shine
    With the same sunlight on our brow and hair.
    On me thou lookest with no doubting care,
    As on a bee shut in a crystalline;
    Since sorrow hath shut me safe in love’s divine,
    And to spread wing and fly in the outer air
    Were most impossible failure, if I strove
    To fail so. But I look on thee–on thee–
    Beholding, besides love, the end of love,
    Hearing oblivion beyond memory!
    As one who sits and gazes from above,
    Over the rivers to the bitter sea.

    **********

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(118)

    –சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள்.

    ஒரு நாட்டின் சரித்திரத்தோடு அதன் கலாச்சாரப் பாரம்பரியம் மட்டும் பின்னி இருப்பதில்லை.

    பல சமயங்களில் ஒரு நாட்டின் பிரசித்தி பெற்ற தயாரிப்புகள், கண்டுபிடிப்புகள், அந்நாட்டின் இலக்கியப் பிரசித்தி வாய்ந்த படைப்புகள், படைப்பாளிகள் எனப் பலவகையானவைகளும் சரித்திரத்தோடு பின்னிப் பிணைந்திருக்கும்.

    ஒரு பிரசித்தி வாய்ந்த பொருளின் பெயரைக் குறிப்பிட்டவுடன் அது எந்த நாட்டின் தயாரிப்பு என்று கூறிவிடுவார்கள். அந்நாட்டின் முகவரிகளுள் அதுவும் ஒன்றாகி விடுகிறது.

    அதேவகையில் நான் புலம்பெயர்ந்து இன்று எனது வாழ்புலமாகி விட்ட இங்கிலாந்தும் தனக்கேயுரிய பாணியில் பலவற்றினோடு தனது நாட்டின் பெருமையைத் தக்க வைத்துள்ளது எனலாம்.

    குறிப்பாக வில்லியம் ஷேக்ஸ்பியர் என்று குறிப்பிட்டதுமே அவரை இங்கிலாந்துடன் தொடர்பு படுத்துவது அவ்விருவருடைய தனித்துவத்தையும் குறிப்பதாகிறது.

    ஆனால் இன்றோ தாயரிப்புகளில் கண்டுபிடிப்புகளில் முன்னனி வகித்த இங்கிலாந்து தேசத்தின் “உற்பத்திப்” பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளது. அதனுடைய முழுப் பொருளாதார அடிப்படையும் நிதி அடிப்படையிலும், சேவைகளின் அடிப்படையிலுமே அமைந்துள்ளது.

    அதுசரி சக்தி இந்த மடலின் வழியே எங்கே இழுத்துச் செல்கிறான் ? என்றொரு கேள்வி உங்கள் மனங்களில் எழுவது இயற்கை..

    மிகவும் சுவையான செய்தி ஒன்றைச் சமீபத்தில் அறிந்தேன், அதைப்பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்திலேயே உங்களுடன் இந்த மடலுடனான உறவாடல்.

    “ஆஸ்டன் மார்ட்டின் (Aston Martin) “ எனும் காரைப் பற்றி அநேகமானவர்கள் அறிந்திருப்பீர்கள்.

    இன்றைய வியாபார உலகில் ஒரு பழைய ஆஸ்டன் மார்ட்டின் காரின் விலையே சுமார் 50 இலட்சத்திற்கு மேலேயே போகும்.

    Astonஅது சரி இந்தக் காரின் பூர்வீகம் தான் என்ன ?

    இங்கிலாந்தின் பக்கிங்கம்ஷ்யர் எனும் இடத்திற்கு அருகில் உள்ளதே இந்த ஆஸ்டன் ஹில் எனும் பகுதி. இப்பகுதியின் இயற்கை வனப்பை மிகவும் ரசிக்கும் லயனல் மார்ட்டின் என்பவர், தாம் விற்பனை செய்யும் சிங்கர் எனும் ஓட்டப்பந்தயக் காரை இப்பகுதியிலேயே பரீட்சார்த்த ஓட்டம் செய்து பார்ப்பார். அவரும் அவரது நண்பரும் இணைந்து ஒரு விரைவுக் காரைத் தாயாரிக்க முடிவு செய்தார்கள்

    அவர்கள் தயாரித்த காருக்கு திரு மார்ட்டின் அவர்கள் மிகவும் ரசிக்கும் ஆஸ்டன் ஹில் பகுதியின் முதற்பெயரான ஆஸ்டனையும் திரு மார்ட்டின் அவர்களது பெயரான மார்ட்டின் என்பதனையும் இணைத்து  “ஆஸ்டன் மார்ட்டின்” என்று பெயரிட்டார்கள்.

    அதுவே பின்பு மிகவும் பிரசித்தி பெற்ற மோட்டார் கார் ஆகியது. அதன் பிரபல்யத்தை அதிகமாக்கியது “ஜேம்ஸ்பாண்ட்” படங்களில் ஜேஸ்பாண்டுக்கு மிகவும் பிடித்தமான மோட்டார் காராக அக்கார் இடம்பெற்ற காரணமே !

    இது லண்டனில் 1913ம் ஆண்டே ஆரம்பிக்கப்பட்டது. முதலாவது உலகப் போரின் போது லயனல் மார்ட்டினும் அவரது பங்குதாரராரும் நண்பருமான பாம்போர்டு என்பவரும் இங்கிலாந்து இராவணுத்தில் இணைந்தார்கள்.

    முதலாவது உலகமகாயுத்தம் முடிந்ததும் இந்தக் கம்பெனி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு வித்தியாசமான மாடலில் ஆஸ்டன் மார்ட்டின் தயாரிக்கப்பட்டது.

    இன்றும் அதிகூடிய விலையுயர்ந்த கார்களின் மத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்தக்காரின் பிறப்பின் ரகசியம் இதுதான்.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    சக்தி சக்திதாசன்
    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • மேரே நாம் அப்துல் ரஹ்மான் …

    — கவிஞர் காவிரி மைந்தன்.

    SIRITHU VAZHA VENDUM

    BSAதிரைக்கடலோடியும் திரவியம் தேடு என்கிற பழமொழியை தலையில் ஏற்றி பலத் தலைமுறைகளாக ஏற்றம்பெற்று வளர்கின்ற குடியில் வந்துதித்த திருப் பெயரே.. அப்துல் ரஹ்மானாம்! நவரத்தினங்கள் முதலாக தங்க வணிகத்திலும் தழைத்தோங்கிய குடும்பத்தில் பிறந்தவர் இவர்! கீழக்கரை என்று சொன்னால்.. அதன் மேலத் தெரு நினைவில் வர.. அதில் வாழும் கனவான்கள் – பொருள் தேடி கடல்கடந்து ஈட்டிய பெரும்செல்வம் கீழக்கரை பெயரதனைக் காலமெல்லாம்  சொல்லும்!  சொல்லும்!!

    வளைகுடா நாடுகளில் வசீகரிக்கும் நாடான துபாயில் ஈ.டி.ஏ. நிறுவனமும் இவர்தம் இனியபெயரை என்றென்றும் உரக்கவே உச்சரிக்கும்!   அறுபது ஆயிரத்திற்கும் மேலான பணியாளர்களைக் கொண்டு குறிப்பாக தமிழர்களுக்கு இடம் தந்து ஆலமரமாய் விரிவு பெற்று விளங்கும் நிறுவனத்திற்கு வித்தூன்றி.. விளைய வைத்து விந்தை புரிந்த பெருமகனார்!  இவரோடு தோளோடு தோள் நின்று தன் கூறிய மதியால் வளர்ச்சிக்கு வழிவகுத்து கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுவனக் குழுமத்தை நடத்திவந்த மேலாண்மை இயக்குனர் திருமிகு. சையது எம். சலாவுதீன் ஆகிய இருவரும் வாழுகின்ற வரலாறாய் திகழ்கின்றனர்.

    pulamaipithanமக்கள் திலகத்தை மிகவும் நேசித்தவர் பி.எஸ். அப்துல் ரஹ்மான் அவர்கள்.  இருவருக்கும் நெருங்கிய நட்பும் உண்டு.  ஒரு முறை தான் நடித்து வெளியான சிரித்து வாழ வேண்டும் என்கிற திரைப்படத்தில் தான் ஏற்ற முஸ்லீம் பாத்தரத்திற்கு அப்துல் ரஹ்மான் எனப் பெயரிட்டு.. தானே அப்பாத்திரத்திலும் நடித்து, ஒரு பாடலை உருவாக்கும்போது.. தனது நண்பரின் பெயர் வர வேண்டும் என்று கேட்டுக்கொள்ள..  புலவர் புலமைப்பித்தன் அவர்களின் எழுதுகோல் வழங்கிய வரிகள் இவை.. டி எம். சௌந்தரராஜன் குரலில்  மெல்லிசை மன்னரின் இன்னிசையில் விளைந்த மற்றுமோர் இஸ்லாமிய கீதம்..  ஒன்றே சொல்வான் நன்றே செய்வான்

    எண்ணத்தில் நலம் இருந்தால் இன்பமே எல்லோர்க்கும் !
    அன்புள்ள தோழர்களே ! அஸ்ஸலாமு அலைக்கும் !
    ஒன்றே சொல்வான் நன்றே செய்வான்
    அவனே அப்துல் ரஹ்மானாம்
    ஆண்டான் இல்லை அடிமை இல்லை
    எனக்கு நானே எஜமானாம்

    ஆடும் நேரத்தில் ஆடி பாடுங்கள்
    ஆனாலும் உழைத்தே வாழுங்கள் !
    உலகம் ஒன்றாக எதிரே நின்றாலும்
    அஞ்சாமல் கருத்தை கூறுங்கள்
    வந்தான் வாழ்ந்தான் போனான்
    என்றா உலகம் நினைக்க வேண்டும் ?
    சொன்னான் செய்தான் ! என்றே நாளும்
    ஊரார் சொல்ல வேண்டும் !!!

    எம்.ஜி.ஆர். திருப்தியடைந்தது ஒரு பக்கம் என்றாலும் திரு. அப்துல் ரஹ்மான் அடைந்த ஆனந்தத்திற்கு அளவிருக்க முடியுமா?  பகுத் அச்சா என்பதைவிட!! இது இறைவனின் சித்தமே!  திரைப்பாடலில் எவ்வளவு நற்கருத்துக்களை ஊட்ட முடியும் என்பதற்கு எம்.ஜி.ஆர்.. புலமைப்பித்தன்.. எம்.எஸ்.விஸ்வநாதன் கூட்டணி கட்டியம்கூறும்.

    நண்பர் ஒருவரின் மீது தான் கொண்ட பற்றிக்கு எம்.ஜி.ஆர். பாணியில் சொல்லப்பட்ட நன்றி இது!

    http://youtu.be/3FEOtAlu7Mo

    காணொளி: http://www.youtube.com/watch?v=3FEOtAlu7Mo

    பாடல்: புலமைப்பித்தன்
    இசை: எம். எஸ். விஸ்வநாதன்
    நடிப்பு: எம். ஜி. ஆர்.
    பாடியவர்: டி. எம்.எஸ்.
    படம்: சிரித்து வாழ வேண்டும்

    எண்ணத்தில் நலம் இருந்தால் இன்பமே எல்லோர்க்கும் !
    அன்புள்ள தோழர்களே ! அஸ்ஸலாமு அலைக்கும் !

    ஒன்றே சொல்வான் நன்றே செய்வான்
    அவனே அப்துல் ரஹ்மானாம்
    ஆண்டான் இல்லை அடிமை இல்லை
    எனக்கு நானே எஜமானாம்
    ஒன்றே சொல்வான் நன்றே செய்வான்
    அவனே அப்துல் ரஹ்மானாம்
    ஆண்டான் இல்லை அடிமை இல்லை
    எனக்கு நானே எஜமானாம்
    மேரா நாம் அப்துல் ரஹ்மான்
    மேரா நாம் அப்துல் ரஹ்மான்
    மேரா நாம் அப்துல் ரஹ்மான்
    மேரா நாம் அப்துல் ரஹ்மான்

    ஆடும் நேரத்தில் ஆடி பாடுங்கள்
    ஆனாலும் உழைத்தே வாழுங்கள் !
    வாழ்வில் நாட்டம் ஓய்வில் ஆட்டம்
    இரண்டும் உலகில் தேவை
    ஆடும் போதும் நேர்மை வேண்டும்
    என்றோர் கொள்கை தேவை
    மேரா நாம் அப்துல் ரஹ்மான்
    மேரா நாம் அப்துல் ரஹ்மான்
    மேரா நாம் அப்துல் ரஹ்மான்
    மேரா நாம் அப்துல் ரஹ்மான்

    யாரும் அறியாமல் செய்யும் தவறென்று
    ஏமாற்றும் நினைவை மாற்றுங்கள்
    ஒன்றில் ஒன்றாய் எங்கும் நின்றான்
    ஒருவன் அறிவான் எல்லாம்
    காலம் பார்த்து நேரம் பார்த்து
    அவனே தீர்ப்பு சொல்வான் !
    மேரா நாம் அப்துல் ரஹ்மான்
    மேரா நாம் அப்துல் ரஹ்மான்
    மேரா நாம் அப்துல் ரஹ்மான்
    மேரா நாம் அப்துல் ரஹ்மான்

    உள்ளகம் ஒன்றாக எதிரே நின்றாலும்
    அஞ்சாமல் கருத்தை கூறுங்கள்
    வந்தான் வாழ்ந்தான் போனான்
    என்றா உலகம் நினைக்க வேண்டும் ?
    சொன்னான் செய்தான் ! என்றே நாளும்
    ஊரார் சொல்ல வேண்டும் !!!

    ஒன்றே சொல்வான் நன்றே செய்வான்
    அவனே அப்துல் ரஹ்மானாம்
    ஆண்டான் இல்லை அடிமை இல்லை
    எனக்கு நானே எஜமானாம் !
    மேரா நாம் அப்துல் ரஹ்மான்
    மேரா நாம் அப்துல் ரஹ்மான்
    மேரா நாம் அப்துல் ரஹ்மான்
    மேரா நாம் அப்துல் ரஹ்மான் !

    Share
  • மன நல ஆலோசனை: கேள்வி பதில்கள்

    –கார்த்திகேயன், விமலதாரணி.

     

     

    கேள்வி : 1
    என் பெயர் பல்லவி வயது 35. எனக்கு 2 குழந்தைகள். சமீபத்தில் என் கணவர் மும்பைக்கு மாற்றலாகி செல்ல நேர்ந்தது விட்டது. நான் பத்தாவது வகுப்பு வரைதான் படித்துள்ளேன். தற்போது வீட்டிற்குத் தேவையானதை வாங்கவும், பில் கட்டவும் என் குழந்தைகளை அழைத்து வரவும் நான்தான் செல்ல வேண்டியுள்ளது. (இதற்கு முன்  இந்த வேலைகளை என் கணவரே செய்து விடுவார்.) ஆனால் எனக்கு தனியே வெளியெ செல்லவே பயமாக இருக்கிறது. போவதற்கு முன் படபடப்பாகவும், இதயத்துடிப்பு அதிகமாகவும் உள்ளது. நான் என்ன செய்வது மருத்துவரை காண வேண்டுமா?

    பதில் :
    உங்கள் உடம்புக்கோ, இதயத்திற்கோ எந்த பிரச்சினையும் இல்லை, உங்களுடைய பிரச்சனை பதட்டம் (ஆன்சைட்டி ). பெரிய ஆபத்தில் மாட்டிக் கொள்ளும் போது மனிதர்களுக்கு இயல்பாய் ஏற்படக்கூடிய உடலியல் மாற்றங்கள் உங்களுக்கு  தனியாக வெளியே செல்ல வேண்டும் என்று நினைக்கும் போதே ஏற்படுகிறது. இதற்குக் காரணம், உங்களுடைய  எல்லா வெளி வேலைகளையும் தானே செய்து உங்களை பொத்தி பொத்தி வைத்திருந்த உங்கள் கணவர்தான் இதற்கு காரணம் என்றும் கூறலாம். தனியே வெளியே சென்றால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை முன்கூட்டியே அனுமானிப்பதும், தன்னால் அதை சமாளிக்க முடியாது என்று நம்புவதும், தான் பத்தாவது வரை மட்டுமே படித்திருப்பதால் தனக்கு தகுதி குறைவு என்ற தாழ்வு மனப்பான்மை தான் உங்களுடைய பதட்டத்திற்குக் காரணம். படிப்பிற்கும், சமயோசிதம் மற்றும் புத்திசாலித்தனத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பிரச்சனைகள் ஏற்படுமோ என்று முன்கூட்டியே யோசிக்காமல் வரும் போது பார்த்து கொள்ளலாம் என்று முதலில் நினையுங்கள். எந்த ஒன்றை செய்ய பயமாக இருக்கிறதோ அதையே திரும்ப திரும்ப செய்யும் போது பயம் நீங்கி விடும் எனவே சின்ன சின்ன விஷயங்களுக்காக,  உங்களுக்கு பிடித்த விஷயங்களுக்காக அடிக்கடி வெளியே சென்று வர பழகுங்கள். வெளியில் இருப்பர்களுக்கெல்லாம் வேறு வேலையே இல்லை உங்களை கவனிப்பது தான் அவர்களுக்கு முக்கியம் என்ற உங்கள் கற்பனையை ஒதுக்கித் தள்ளுங்கள். உங்களுடைய திறமைகளை பாசிட்டிவ் விஷயங்களை பட்டியலிட்டு அவற்றை வளர்த்துக் கொள்ளுங்கள். இவற்றை செய்தால் உங்களால் இயல்பாக வெளியே சென்று வர முடியும்.

    கேள்வி: 2
    நான் 23 வயது கல்லூரி மாணவன் நானும் என் சிறு வயது நண்பனும் சமீபத்தில் ஒரு பெண்ணை சந்தித்தோம். நாங்கள் இருவரும் அவளை காதலிக்கிறோம். இதைப்பற்றி நாங்கள் இருவரும் பேசிக் கொள்ளவில்லையென்றாலும் இந்த காதல் விவகாரத்தால் எங்களின் நட்பு கெட்டுவிடுமோ என்று பயமாக இருக்கிறது. இதற்கு எனக்கு ஒரு வழி சொல்லுங்கள்.

    பதில் :
    நீங்கள் 23 வயது நிரம்பிய கல்லூரி மாணவர் என்பதால் உணர்ச்சி வசப்படாமல் இப்பிரச்சனையை அணுகலாம். நீங்கள் முதலில் செய்ய வேண்டியது, உங்கள் நண்பருடன் பேசி அவரும் அந்த பெண்ணை காதலிக்கிறாரா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அவரும் காதலிக்கிறார் என்றால் அடுத்து அந்த பெண்ணிடம் கேட்டு அவள் உங்கள் இருவரில் யாரை காதலிக்கிறார் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள். ஒரு வேளை உங்கள் இருவரில் யாரையுமே அவள் காதலிக்காமல் நட்போடு பழகுவதாகவும் இருக்கலாம் அல்லவா? உங்கள் நண்பருடன் பேசும் போது அவள் உங்கள் இருவரில் யாரை காதலித்தாலும் மற்றவர்  விட்டுக்கொடுத்து விட வெண்டும் என்று முடிவெடுத்துக் கொள்ளுங்கள். முடிவு செய்வதுடன், முடிவை செயல்படுத்தவும் தயங்கக் கூடாது. சிறு வயது நட்பை மதிப்பவரானால் இந்த முடிவை ஏற்றுக் கொள்வதில் தயக்கம் இருக்காது.

    கேள்வி : 3
    என் வயது 40. எனக்கு கடந்த 10 வருடங்களாக முதுகு வலி இருக்கிறது. சிறிது நாட்களுக்கு முன் என் தம்பியுடன் சிறிது மனஸ்தாபம் ஏற்பட்டு அதிக கோபப்பட்டு விட்டேன். அதன் பிறகு என் முதுகு வலி அதிகமாகிறது. அதிக உணர்ச்சி வசப்படும் போதெல்லாம் முதுகு வலி அதிகமாவதாகவும் உணர்கிறேன். என் உணர்வு உண்மையானது தானா? அல்லது இது என் கற்பனையா?

    பதில் :
    உங்கள் உணர்வு உண்மையானது தான். நீடித்த முதுகு வலி என்பது எலும்புத் தேய்மானத்தினால் ஏற்படலாம். எலும்பு தேய்வதால் எலும்பின் பலம் குறையும் போது அதை சுற்றியுள்ள தசைகளின் சுருங்கி விரியும் தன்மை குறைந்து விடும். அதனால் தான் முதுகு வலி போன்ற மூட்டு வலிகளுக்கு அம்மூட்டை சுற்றியுள்ள தசைகளை உறுதியாக்கும் உடற்பயிற்சிகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பர். எனவே உங்கள் முதுகு தசை வேலை பளு அல்லது திடீர் வேலை காரணமாக சுருங்கி மீண்டும் விரிவடையாமல் போனாலோ அல்லது விரிவடைந்து சுருங்காமல் போனாலோ வலி ஏற்படும். இது உடல் ரீதியாக வலிக்கான காரணம். இதற்கு மன ரீதியான காரணமும் இருக்கிறது. நாம் மனதளவில் பயம், கோபம், பதட்டம் போன்ற உணர்வுகளை அடையும் போது நம் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டினால் உடலில் பல உடலியல் மாற்றங்கள் ஏற்படும். அவற்றில் ஒன்று தான்  தசைகள் சுருங்குவது ஆபத்தான தருணங்களில் தான் இந்த உடலியல் மாற்றம் பெரும்பாலும் ஏற்படும். ஆபத்திலிருந்து காத்துக் கொள்ள ஓடவோ, சண்டையிடவோ தசைகளை தயார்படுத்த நம் உடல் எடுக்கும் எச்சரிக்கை நடவடிக்கையே இதுவாகும். நீங்கள் கோபம், பதட்டம் போன்ற உணர்வு நிலைகளில் அதிக நேரம் இருக்கும் போது உங்கள் உடலின் சில தசைகள் இவ்வாறு சுருங்கி விடுகிறது. இதனால் வலி ஏற்படுகிறது. தசை வலியை சரி செய்ய மருந்து, ஓய்வு, சுடு நீர் அல்லது ஐஸ் கட்டி ஒத்தடம் தேவை. அதே நேரம் மனதிற்கு மனம் தளர்த்தும் பயிற்சிகளை செய்தல் வேண்டும். ஒரு நல்ல மன நல ஆலோசகரை சந்தித்து இப்பயிற்சியை கற்றுக் கொள்ளலாம்.

    கேள்வி :4
    என் வயது 42 என் கணவரின் வயது 45. என் கணவர் மிகவும் நல்லவர். எங்களுக்குள் இணக்கமான உறவே இருந்து வந்துள்ளது. ஆனால் சமீப காலமாக அவர் நடத்தையில்  மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் அலுவலத்தில் உடன் பணிபுரிபவர் மூலம் அவருடன் வேலை செய்யும் பெண்ணிற்கும், இவருக்கும் தொடர்பு இருப்பதாக தெரிய வந்தது. அந்த பெண் இரண்டு வருடங்களுக்கு முன் கணவரை இழந்தவர். இதைப் பற்றிக் என் கணவரிடம் கேட்ட போது ஆம் என்று ஒத்து கொண்டாலும் அவரால் அவளை விட முடியவில்லை. அவள் என் கணவருக்கு ஏதோ செய்வினை செய்து விட்டதாக நண்பர்கள் கூறுகின்றனர். இதை நினைத்து எனக்கு பயமாக இருக்கிறது. நான் என்ன செய்வது?

    பதில் :
    உங்கள் கணவர் நல்லவர். உங்களுடன் இணக்கமாக இருக்கிறார் என்பதால் நடந்த தவறுக்கு அந்த பெண்ணை மட்டும் குற்றம் கூறும் ஒரு மன நிலை தான் அவள் செய்வினை செய்து விட்டாள் என்று கூறுவதெல்லாம். இந்த விஷயத்தில் மற்றவர்களிடம் குறிப்பாக அவருடைய நண்பர்களிடம் இதைப் பற்றி விசாரிப்பது கூடாது. இப்பிரச்சனையை உங்கள் கணவர் மற்றும் அந்த பெண்ணுடன் பேசி தான் சரி செய்ய வேண்டும். உங்கள் கணவர் இந்த விஷயத்தை ஒத்துக் கொண்டதிலிருந்து அவர் தெரிந்தே தான் அந்த பெண்ணுடன் பழகியிருக்கிறர் என்பது தெரிகிறது. திடீரென்று அந்த பெண் கணவரை இழந்ததால் அவர் மேல் ஏற்பட்ட இரக்கம் நாளாவட்டத்தில் இம்மாதிரி உறவில் முடிந்திருக்கும். எப்படியிருந்தாலும் இந்த முறையற்ற உறவை உங்கள் கணவரும் அந்த பெண்ணும் தொடர்வது பல பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும். எனவே இப்பொழுதே அவர்கள் இருவருடனும் சண்டை போடாமல் பேசி அந்த உறவை நிறுத்தி விடச் சொல்லுங்கள். நடந்ததை மறந்து விட்டு இனி நல்ல முறையில் வாழலாம் என்று கணவருக்கு எடுத்துச் சொல்லுங்கள். முடியாவிட்டால் மூவரும் மன நல ஆலோசனை எடுத்துக் கொள்வது உகந்தது.

     

     

     

     

     

    படம் உதவிக்கு நன்றி:  www.123rf.com

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

     

    crazy

    “யாரிதுசின் னப்பொண்ணு! யாதுமாகி நின்றிடும்,
    பாரதி கண்ணம்மா போலிருக்கு ! -நேரெதிர்,
    கண்டாயோ கேசவா, கண்ணனில் காளியை !
    விண்டாயே வண்ணத்தில் வார்த்து”….

    “சீட்டிப்பா வாடை, சிமிழ்வாய் சிரிப்புடன்,
    மாட்டிடையன் போட்டியாய் மாதங்கி; -கோட்டினால்,
    கண்ணனைக் காளியைக், கேசவ் அடைத்தனன்,
    வண்ணச் சிறைக்குள் வளைத்து”….கிரேசி மோகன்….

    Share
  • நான் பாடும் முன்னே

     

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக  (9)

     

    நான் பாடும் முன்னே

    (பாடல்)

     

    images
    நான் பாடும் முன்னே நீ பறவையாகிறாய்
    நான் தேடும் போதோ தொடு வானமாகிறாய்
    நான் வாடும்போதோ கன்னம் வருடும் தென்றலாகிறாய்
    இமை மூடும்போதோ உற்றுப்பார்க்கும் கண்களாகிறாய்

    நீ பாதையா நான் பயணமா
    நான் பயணமா நீ மலர்களா
    நீ மலர்களா நான் பரிதியா
    நான் பரிதியா நீ வானமா

    உயரே உயரே என்னை ஏற்றி உயரச் செல்லும் பெண்ணே
    உயிரின் நிலைமை முழுதும் மாற்றும் உலகம் காணாத கண்ணே
    மண்ணா விண்ணா சொல்லேன் கண்ணா (பாடும் முன்னே)

    இரு கண்களில் பல கனவுகள்
    பல கனவினில் சில காலைகள்
    சில காலையில் சுப வேளைகள்
    சுப வேளையில் வரும் பாடல்கள்

    பாடல் நடுவே பல்லவி மறந்து சரணம் தேடும் போது
    பனிச்சதங்கையில் பாரிஜாதங்கள் காதில் கேட்காது
    காதில் விழுந்தது போலே உன்முன் (பாடும் முன்னே)

    Share
  • KEPLER, JOHANNES

    Su. Ravi

    This drawing of astronomer KEPLER JOHANNES by me is dedicated to Dr Sesha Srinivasan who contributed a detailed write up on the Astronomer in VALLAMAI.

    We owe a lot to the German Astronomer who brought a paradigmn shift in the history of astronomy – identifying the orbital path of the heavenly bodies as elliptical.

    For paarkka, rasikka…

    572ACFBA-E85F-4DAE-9B56-A89F85168AE2

    Su.Ravi

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    கிரேசி மோகன்

    andal

    கோதைக்குள் கீதை

    “ஆடவரில் உத்தமன், ஆழ்வாரில் உத்தமி,
    பாடவரும் மார்கழி பாசுரத்தால் ,-தேடுவரம்,
    பட்டர்முன் பெண்ணுருவில் போயந்த ரங்கனையே,
    கட்டுறேன் என்றானோ K(சவ்)….!!!!கிரேசி மோகன்….

    ஆடவரில் உத்தமன்-புருஷோத்தமன்….

    Share
  • தாலாட்டும் அன்பினிலே

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக  (8)

     

    தாலாட்டும் அன்பினிலே

    (கேட்டு மகிழ)

    woman-poster-GO37

    தாலாட்டும் அன்பினிலே, நின்று
    தள்ளாடும் பூங்கொடியே! தென்றல்
    காலாட்டும் கீற்றினிலே, நீ
    கள்ளூறும் நிலவல்லவலோ!

    சேலாடும் உன் விழியில், நின்று
    நூலாடும் என்னுயிரே! என்னைத்
    தோளோடு நீ அணைத்தால், நான்
    தொல்லைக்குத் தொடுவானே!

    நானென்ன சொல்வேனம்மா? மெளன
    நாதங்கள் பொல்லாதம்மா! நீ
    தேனென்றபின் எனதே என்றபின், இன்னும்
    நீங்காத திரையென்னவோ? மனம்
    நில்லாமல் வலை பின்னவோ?

    தேனூறும் பூவிருக்க, மணம்
    திசையெங்கும் பாய்விரிக்க, இங்கு
    நானோடு நான் துன்பம் தானோடு தான், இதில்
    நாளென்ன பொழுதென்னவோ? என்று
    நான்மட்டும் வலைபின்னவோ?

    பேசாமல் வந்துவிடு! மறு
    பேச்சின்றித் தந்துவிடு! என்னை
    நானாக வாழவிடு, இல்லை
    நீயாக மாற்றிவிடு

     

    படத்திற்கு நன்றி

     

    Share
  • வந்தனமாயிரம் பதமலர் சமர்ப்பணம் நீலாயதாக்ஷி!

    -நாகை வை. ராமஸ்வாமி

    neela

    சுந்தரி, ஷ்யாமளி, மதுர மனோஹரி, ஹ்ருதயேஸ்வரி
    கந்த மாதா, காதம்பரி, கனக தாரேஸ்வரி, காரோணேஸ்வரி
    எந்தனுள்ளம் வந்தமர் பூர்ணேஸ்வரி ஸ்ரீ சக்ரேஸ்வரி
    வந்தனமாயிரம் பதமலர் சமர்ப்பணம் நீலாயதாக்ஷி!

    தந்த முகனும் தம்பியும் தவறா ஆசி தர
    நந்தி வாகனன் காரோணன் நலமுற அருளிட
    புந்தியில் போற்றினனே புன்னகை அரசியே
    சொந்த மெனையேற்று வந்தருள் நல்குவளே!

    சிந்தனை சிதறாது நினதடி போற்றவும்
    வந்தவர் நின் சன்னிதி வளமுடன் மகிழவும்
    பந்தங்கள் சொந்தங்கள் பலவும் பெறவும்
    எந்தனையாண்டு என்றென்றும் காத்திடுவாய்!

    சர்வேஸ்வரப் ப்ரியே, சர்வலோக மாதா
    சர்வோத்தமி, சர்வநாமகான காரணி
    சர்வ பாப நாசினி, சர்வாலங்கார பூஷணி
    சர்வரக்‌ஷகி சர்வமயீ நீலாயதாக்ஷி!

    சர்வத்திலும் நினைக் காண
    சற்குணம் தந்தருள்வாய்
    சர்வ ஜனனமும் நின்னடி போற்றிட
    சர்வ காருண்ய நீலாயதாக்ஷி வரமருள்வாய்!

    Share