–விசாலம்.

தலைக்காவேரியில்  ஒரு வெள்ளிக்கம்பிப்போல் ஆரம்பிக்கும் காவேரி ஒரு சிறு குளம்போல் தோற்றம் கொடுத்த வண்ணம் பூமிக்கடியில் இறங்கி  பின் சிறிது தூரம் பயணித்தப்பின் பெரிய ஆறாக பெருக்கெடுத்து ஓட ஆரம்பிக்கிறது. ஆரம்பநிலையில் உள்ள காவிரி எல்லோருக்கும் காவேரி அம்மனாக விளங்குவதால் இந்த இடத்திற்கு ஆடி அமாவாசை, தை அமாவாசை, ஆடி பதினெட்டாம்பெருக்கு போன்ற நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கிறது.

காவேரிஅம்மனின் கோயில்  பூம்புகார், காவிரிப்பாக்கம், சேலம், கும்பகோணத்தில் மேலக்காவேரி, திருச்சேரை  போன்ற இடங்களில் காணமுடிகிறது. திருச்சேரையில் காவேரி அம்மனும் ஸ்ரீ மார்க்கண்டேயரும் விஷ்ணுவைப்பூஜித்தாக புராணம் சொல்கிறது.  இங்கு விஷ்ணு  சாரநாதன் என்ற பெயரிலும் தாயார்  சாரநாயகி என்ற பெயரில் அருள் புரிகின்றனர். சேலம் ஏற்காடு பகுதியில் கடல்மட்டத்திலிருந்து 342 உயரத்தில் சர்வராயன் மலையில் காவேரிஅம்மனின் கோயில் இருக்கிறது. அந்த அம்மன் பல மலைஜாதி மக்களுக்கு குலதெய்வமாக விளங்குகிறாள்.

சமீபத்தில் நான் பார்த்து மகிழ்ந்த காவேரி அம்மன் கோயில் திருச்சியில் மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலுக்கு வடக்கில் அமைந்துள்ளது. இங்கு நாங்கள் போன காரணம் என்னவென்றால் எங்கள் வீட்டில் சமீபத்தில் தோண்டிய ஆழ்குழாயில் தண்ணீர் வற்றாமல் வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்யத்தான். எங்கள் அன்பர் ஒருவர் இந்தக்கோயிலைப்பற்றி இந்த அருமையான தகவலைத்தெரிவித்தார். அதாவது வீட்டில் கிணறு, குழாய் போன்றவை என்றும் நீர் வளத்துடன் இருக்க இந்தக்காவேரி அம்மனுக்கு வேண்டிக்கொண்டு காவேரி நதி தீர்த்தத்தினால் அபிஷேகம் செய்து பின் அந்த நீரை வீட்டிற்கும் எடுத்துப்போய் கிணற்றில் ஊற்ற வேண்டும். இது போல் செய்ய தண்ணீர்ப்பஞ்சமே இருக்காது என்ற நம்பிக்கை பலருக்கு இருக்கிறது. ஆடிபதினெட்டாம் பெருக்கு திருவிழா இங்கு மிக விமரிசையாக நடக்கிறது. நீர் வளம் அதிகம் பெருக இந்த அம்மனிடம் வந்து வேண்டிக்கொண்டு கிணறு வெட்ட, கிணறு என்றும் நிரம்ப்பி இருக்குமாம். காவேரி அம்மனுக்கு எதிரில் அதிகார நந்தி இருப்பது மிக விசேஷமாக கருதப்படுகிறது. முன் காலத்தில் இந்தக்கோயில் சோலைகள் சூழ்ந்து மிகப்பசுமையாக இருந்ததாம். முன்பு மிகவும் ஆக்ரோஷத்துடன்  அங்கும் இங்குமாக பாய்ந்து
ஓடிய காவேரிக்கு சோழமன்னனான  கரிகால சோழன் வாய்க்கால் அமைத்து அதை ஒழுங்கு செய்தானாம். இதிலிருந்தே தெரிகிறது இது எத்தனை பழமையான கோயில் என்பது. ஆனால் நாகரீகம் வளர அந்தச்சோலைகள் அழிந்து தற்போது பல அடுக்கு மாடிக் கட்டடங்கள் வந்து அதன் அழகை குறைந்து விட்டனவோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

aadi perukkuஐம்பது வருடங்கள் பின்னோக்கி என் நினைவு செல்கிறது. கும்பகோணத்தில் மேலக்காவேரி அருகே சில மாதங்கள் என் பாட்டி வீட்டில் இருக்க நேர்ந்தது.

அப்போது ஆடி மாதம் பிறந்து எல்லா கோயில்களிலும் சரியான கூட்டம். என் அம்மா என்னிடம்  ” இதப் பாரு, பதினெட்டாம் பெருக்கு வரது,  அதுக்கு முறம் வேணும். அடுத்த தெருவுக்குப் போய் ஒரு முறம் வாங்கிண்டு வா.”

“முறமா ? அது எதுக்கு அம்மா?ஆத்தில் தான் ஒரு முறம் இருக்கே “

“அதில்லேடி இந்த முறம் காவேரி ஆத்தில விடணும். அதப் பத்தி அப்பறம் சொல்றேன்,  நீ கடைக்கு இப்பவே போ. ஒரு முறமாக வாங்காதே. இரண்டு முறமாகத்தான் வாங்கணும், சரியா?” என்றபடி  சில  நயா  பைசாக்கள்  கொடுத்தாள்.   அப்போதெல்லாம் ஒரு நாலணாவுக்குக்கூட  சாமான்கள்   வாங்கமுடியும். நான் அப்போது  பாலும் பழமும் என்று சொல்லும் டிசைனில் பாவாடையும்  பஃப் வைத்த சட்டையும் போட்டிருந்தேன். பாலும் பழமும் டிசைன்  என்பது  மஞ்சள், பச்சை, சிவப்பு போன்ற நிறங்களுடன் பல கட்டங்கள் நிறைந்து   இருக்கும். என்  தலையையும் படியப்படிய வாரி பின்னி  தலையில்  பூச்சரமும்  வைத்துவிடுவார் என் பாட்டி. பதினெட்டாம் பெருக்கு  திருவிழாவும் வந்தது. நாங்கள்  காவேரி ஆற்றங்கரைக்குச் சென்றோம். என் தாய் முறத்தில் வெற்றிலை,  பாக்கு, வாழைப்பழம், காதோலை, கருகமணி, மஞ்சள் சரடு வைத்து பின் தேங்காயையும் உடைத்து அதில் வைத்தாள். பின்னர் ஒரு வாழைமட்டையில் தீபங்களை ஏற்றி வைத்து அதையும் முறத்தில் வைத்து  காவேரி அம்மனின் பல ஸ்லோகங்களைச்சொல்லியபடியே ஆற்றில் விட்டாள். அது கொஞ்ச நேரம் மிதந்து பின் கவிழ்ந்து எல்லா பொருட்களும் ஆற்றில் கலந்து சிதறியபடியே போகும் அழகு இருக்கிறதே அதைப்பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்று தோன்றுகிறது.  பின் பல சுங்கலிகளுக்கு தாம்பூலம் கொடுத்ததும் நினைவுக்கு வருகிறது.  பின் குடும்பத்தில் பல அங்கத்தினர்களுடன் புளியஞ்சாதம், தேங்காய் சாதம், அவியல், தயிர் சாதம், வடாம், வற்றல் என்று காவிரி அம்மனுக்கு நைவேத்தியம் செய்துவிட்டு பின்  எல்லோரும் ஒரு வெட்டு வெட்டியதும் ஞாபகம் வருகிறது. அன்று ரசம் தள்ளுபடி. ஏன் என்று தெரியவில்லை. வடக்கில் கங்கை கரையோரத்தில் இதேபோல் மாலையில் கங்கா ஆர்த்தி நடைப்பெறும். அங்கேயும் இதேபோல் அகல் விளக்குகளை ஏற்றி மட்டைகளில் வைத்து மிதக்கவிடுகிறார்கள். எல்லா விளக்குகளும் ஒரே நேரத்தில் கங்கையில் மிதக்கும் காட்சி ஒரு கண்கொள்ளாக் காட்சிதான்.

விவசாயிகளுக்கு இன்று மிக சிறப்பான நாள். ஆடிப்பட்டம் தேடி விதை என்பதை ஒப்ப  இவர்கள் புது விதைகள் வாங்கி பிரார்த்தனை செய்து அதைத்தூவி வரப்போகும் பொங்கல் திருநாளில் அமோகமான விளைச்சல் காண வேண்டும் என்றும் வேண்டிக்கொள்கிறார்கள்.  அவர்கள் அன்று காலை எழுந்ததும் காவிரித்தாயிடம் நீர்வளம் சிறப்பாக அமைய வேண்டும் என்றும் பிரார்த்திக்கிறார்கள்.  நீர்வளம், நில வளம் இருந்தால் தான் பயிர் விளைச்சல். பயிர் விளைச்சல் இருந்தால்தான் நாடு சுபீட்சம் , இதை அவர்கள் நன்கு உணர்ந்துக்கொண்டு இந்த நன்னாளில் பிராத்தனையுடன் நிலம் உழுதலல், விதை விதைத்தல் போன்றவைகளை செய்வது மிகவும் பாராட்டப்பட வேண்டியது. “நம் எல்லோருக்கும் ஓர் இறைவன் ” நாமும் அவர்களுடன் சேர்ந்து காவேரி அம்மனை நாமும்  பிரார்த்திப்போம் …

படம் உதவிக்கு நன்றி:
http://www.kamakoti.org/kamakoti/details/aadi1.jpg
http://media.webdunia.com/_media/ta/img/article/2014-07/21/full/1405954896-2474.jpg

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on "ஆடி பதினெட்டு பெரு விழா"

  1. அருமையான நினைவுகள்! 

    “பாலும் பழமும்” வடிவமைப்பில் பாவாடை, புடைவை, சட்டை அணியாத தமிழச்சிகள் குறைவு எனலாம்! ஒவ்வொரு கட்டத்தைச் சுற்றியும் சரிகை நூல் … இப்படியெல்லாம் நெய்யச் சொல்லி … ஒரே குதூகலம்! அச்சோ அச்சோ, அந்த பஃப் வச்ச சட்டை!!  எனக்கு மூன்று வயதில் என் அம்மா தன் சிங்கர் தையல் மெஷினில் எனக்குத் தைத்துக்கொடுத்த சட்டையின் படம் இன்னும் இருக்கு!!

    நான் வளர்ந்துவந்த அந்தக் காலத்தில் தனியாக வெளியே போய்வர எனக்கு அனுமதியில்லை — வீணை ஆசிரியை சண்முகவடிவுத் தாயார் வீட்டுக்கு மட்டும் போய்வர அனுமதி உண்டு. எனவே கடைக்குப் போய் முறம் வாங்கி வந்த அனுபவம் எனக்கில்லை. அதோடு ஆடி 18-இல் வையைப் பெருக்கைப் பார்க்கப் போனதேயில்லை. (அழகர் திருநாளும் பிற திருநாட்களும் அப்படியே.) பலவகை உணவு எல்லாம் வீட்டு மொட்டை மாடியோடு சரி! அப்பாவுக்கு நிலாச்சாப்பாடு ரொம்பப் பிடிக்கும். 

    நாட்டில் தண்ணீர் வளத்துக்காக ஆற்றைக் கடவுளாக உருவகித்துக் கும்பிடும் வழக்கம் நல்லதே. இங்கே பாலைவனக் கலிஃபோர்னியாவில் எப்பவும் தண்ணீர்ப் பஞ்சம். ஒருவேளை நான் காவிரித் தாயை நினைத்துக் கும்பிட்டால் எங்களுக்கு மழைவளம் கிடைக்குமோ என்னவோ. வேண்டும், எங்களுக்கு மழைவளம் வேண்டும். 

    மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
    நாமநீர் வேலி உலகிற்கு அவன் அளி-போல்
    மேல் நின்று தான சுரத்தாலான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.