Blog

  • குறளின் கதிர்களாய்…(497)

    குறளின் கதிர்களாய்…(497)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(497)

    எண்ணென்ப வேனை யெழுத்தென்ப விவ்விரண்டுங்
    கண்ணென்ப வாழு முயிர்க்கு.

    -திருக்குறள் -392(கல்வி)

    புதுக் கவிதையில்…

    பாமரர்
    எண்ணென்று சொல்பவை
    எழுத்தென்று சொல்பவை ஆகிய
    இரண்டையும்,
    அறிந்தவர்கள்
    அகிலத்து மக்களுக்கு
    அறிவைக் காட்டும்
    கண்கள் என்பர்…!

    குறும்பாவில்…

    எண்ணென்றும் எழுத்தென்றும் அறியார்
    கூறுமிரண்டையும் அறிந்தோர் உலக மக்களுக்கு
    அறிவுகாட்டும் கண்களவை என்பார்கள்…!

    மரபுக் கவிதையில்…

    எண்ணென எழுத்தென அறியாதார்
    எடுத்துச் சொல்லும் இவ்விரண்டை,
    மண்ணதில் வாழ்ந்திடும் மக்களுக்கே
    மதிப்பில் உயர்ந்த அறிவுகாட்டும்
    கண்ணெனும் உறுப்பென உயர்ந்ததுவாய்க்
    கருத்தில் கொள்ளச் சொல்வாரே
    திண்ணமாய் அதனையே நன்கறிந்த
    திறைமை யதுதான் மிக்கோரே…!

    லிமரைக்கூ…

    எண்ணும் எழுத்தும் என்றாய்
    அறியார் கூறுமிரண்டை, உலகோர்க்கு அறிவுகாட்டும்
    கண்களென்பர் அறிந்தோர் நன்றாய்…!

    கிராமிய பாணியில்…

    வேணும் வேணும்
    கல்வி வேணும்,
    ஒலக மக்களுக்கு
    அறிவைத் தருற
    கல்வி வேணும்..

    எண்ணு எழுத்துண்ணு
    அறியாதவங்க சொல்லுற
    ரெண்டையும்,
    நல்லா அறிஞ்சவுங்க
    ஒலக மக்களுக்கு
    அறிவக் காட்டுற
    கண்ணுண்ணு சொல்லுவாங்க..

    அதால
    வேணும் வேணும்
    கல்வி வேணும்,
    ஒலக மக்களுக்கு
    அறிவைத் தருற
    கல்வி வேணும்…!

    Share
  • வரலாறு சிரிக்கும் மன்னர் மாண்பு

    வரலாறு சிரிக்கும் மன்னர் மாண்பு

    சேசாத்திரி ஸ்ரீதரன்

    பண்டைக் காலப் படை என்றதுமே நமக்கு நினைவில் வருவது தேர்ப்படை, யானைப்படை,  குதிரைப்படை, கால் ஆட்படை இவையே. இதற்கு மேல் படை குறித்து நமக்கு ஒன்றும் தெரியாது. நாற்படைகள் இருந்தாலும் படை வீரர் அத்தனை பேரும் ஒரே சமமான அந்தஸ்தில் இருந்தனரா என்றால் இல்லை என்பதே விடை. தேர்ப்படை, யானைப் படைகள் பெரும்பாலும் வேந்தர், மன்னர், அரையர், படைத் தளபதிகள் போன்றோரால் செலுத்தப்பட்டன. அடுத்ததாக குதிரைப்படை. இதில் தகுந்த பயிற்சி உடைய போர் வீரர்கள் மட்டுமே குதிரை ஏறிப் போர் புரிந்தனர். எல்லா வீரரும் குதிரை ஏற முடியாது. இந்தியாவில் குதிரைகள் அரேபியாவில் இருந்து அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்யப்பட்டன. இங்கே குதிரை இனப்பெருக்கச் சூழல் இல்லை என்பதே இதற்கு காரணம். இந்த குதிரைப் படை வீரர்களை விட மிக எளியோர் காலாட் படைவீரர்கள். இவர்கள் ஈட்டி, வேல், வாள், கோடாலி ஏந்திப் போரிட்டனர். இவர்கள் தான் போர்க்களத்தில் தேர், யானை, குதிரை வீரர்களுக்கு சூழ்காவலாய் இருந்தவர்கள் என்ற போதும் அந்தஸ்தில் அவர்களைவிட தாழ்ந்தவர்கள். இன்றும் கூட படையில் மேல் பதவிகள் கீழ்ப் பதவிகள் என்று இருப்பதை அறியலாம். இந்த அந்தஸ்து படையின் செயற்பாட்டிற்கும் மதிப்பிற்கும் தக்கவாறு அமைந்தது. இந்த அந்தஸ்து பிறப்பின் அடிப்படையில் அல்லாமல் தொழிலுக்கு தரப்பட்ட முக்கியத்துவ அடிப்படையில் அமைந்தது. படையில் இருந்த இந்த அந்தஸ்து நிலை தான் பின்னாளில் இந்தியச் சமூக நிலையிலும் மெல்ல பிரதிபலிக்கத் தொடங்கியது.

    இப்படி படையில் சேர்ந்து போர்க்களத்தில் நேரடியாகப் போரில் பங்குபெறுவோர் என்று இல்லாமல் படைக்கு தேவையான சில துணைத் தொழில்களும் இருந்தன. காட்டாக, ஆயுதம் செய்யும் கம்மியத் தொழிலான உலைக்களப் பணி, குதிரைச் சேணம், அம்பாரி செய்யும் பணி, தேர் செதுக்கும் பணி என்று சில துணைத் தொழில்களும் இருந்தன. இது போக படை மக்களுக்குத் சமையல் செய்வோர், நீர் மொண்டு வருவோர், பாதையில் குறுக்கிடும் புல், பூண்டு, செடி, கொடிகளை அகற்றுவோர், குதிரை இலத்தி யானை இலண்டம் அள்ளுவோர், குதிரை யானைகளுக்கு புல், தழை இடுவோர், போரில் காயமுற்றோர் இறந்தோரை களத்தில் இருந்து அகற்றுவோர், வீரர்கள், குதிரைகள், யானைகளின் போர்க் காயம் ஆற்ற மருத்துவர்கள், மூலிகை பறிப்போர் எனப் பல பணியாளர்கள் இருந்தனர். இவர்கள் போரிடாவிட்டாலும் படைக்கு மிக இன்றியமையாதவர்கள். இவர் இல்லாவிடின் படையை நடத்துவதோ பேணுவதோ மிகக் கடினம். ஆனாலும் போரில் உயிர் துறக்கும், வெற்றி தேடித் தரும் வீரர்களை விட குறைவாகவே இவர்கள் மதிக்கப்பட்டனர். மன்னர்களும், படைத் தளபதிகளும் இவர்கள் பணியைக் குறைவாகவே மதிப்பிட்டனர். ஒரு படை வீரனும் காவல் காப்போனும் தகுதியால், மதிப்பால் ஒன்றல்ல என்பதையே கல்வெட்டுகள் காட்டுகின்றன. காவல் காப்போரிலும் வாயில் காப்போர், சிறைக் காப்போர், அரண்மனை உட் காவலர் ஆகியோரில் தகுதியும் மதிப்பும் வேறுபட்டிருந்தன. அரண்மனைக் காவலர் உயர்குடியினராக நம்பிக்கைக்கு உரிய தம் சாதி மக்களாகவே தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனால் வாயில் காப்போருக்கு குறைவான மதிப்பே இருந்தது.

    இந்நாளில் ஒரு தொழிலகத்தில் பணிபுரியும் மேலாளர், பணியாளர் பதவியால் பொறுப்பால் வேறுபட்டாலும் பணி முடிந்த பின் இருவரும் ஒரே நாட்டின் சம அந்தஸ்துள்ள குடிமக்கள் என்று கருதி நடத்தப்படுகின்றனர். ஆனால் அந்நாளில் இப்படியான நிலை இருக்கவில்லை. பணி முடிந்த பின்னும் ஒரு கீழ்நிலைப் பணியாளர் மேல்நிலை அதிகாரிக்கு எந்நேரமும் கட்டுப்பட்டவர். இதற்கு வேலைநேர வரம்பு இன்மையே முகமைக் காரணம் ஆகும். பணியாளர் மட்டுமல்ல அவன் குடும்பத்தாரும் அதிகாரிக்கு கட்டுப்பட்டவர் என்ற நிலை தான் இருந்தது.

    ஒரு அரசன் தன் குடிமகன் என்ற அளவிலாவது தன் படை, காவல் கீழ்நிலைப் பணியாளரை நல்ல முறையில் நடத்த வேண்டும், நல்ல கருத்து கொண்டிருக்க வேண்டும். அப்படித்தான் பல்லவர் காலத்திலும், பேரரசுச் சோழர் காலத்திலும் பார்க்கப்பட்டது. ஆனால் 13 ஆம் நூற்றாண்டளவில் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் நடுநாடு எனப்படும் வாணகோப்பாடியை ஆண்ட வாணகோவரையரும் கிளியூரில் இருந்து ஆண்ட மலையமான்களும் தம் படையினரில் கீழ்நிலைப்பணியாளரை தரக்குறைவாக எண்ணியதும் நடத்தியதும் அவர்களுடைய புனிதமான கோவில்களில் கல்வெட்டாக பதிவாகி உள்ளன என்பது அவர்களது அதிகாரத் திமிரையும் ஆணவத்தையும் வெளிச்சமிட்டு காட்டுகின்றன. படைப் பணியாளருக்கே இப்படியானால் இன்னும் உள்ள படைச்சாரா பணியாளரை அவர்கள் எப்படி நடத்தியிருப்பர்? இத்தகு தரக்குறைவான கல்வெட்டுகள் நடுநாடு தவிர்த்து தொண்டை நாட்டிலோ கொங்கு நாட்டிலோ சோழ நாட்டிலோ அல்லது பாண்டிய நாட்டிலோ காண்பதற்கு அரிதாகவே உள்ளன. மன்னர்கள், அரையர்களின் இத்தகு நடக்கை உடனே அடுத்த நிலை அதிகாரத்தவர், படைத் தளபதிகளுக்கும் பரவி உள்ளது. பின்பு அது மெல்ல சமூகத்தில் புலையர், வெட்டியான், பறையருக்கு இழிவான அந்தஸ்தை ஏற்படுத்தியது. படைத்துறையில் கீழ்நிலைப்பணி அதனால் தான் இந்த இழிவு என்றால் சமூகத்திற்கு அதனால் என்ன பாதிப்பு வந்தது? ஏன் அந்த இழி கருத்தை சமூகமும் சுமக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. இந்த இழி கருத்து அடுத்தடுத்த நூற்றாண்டில் மேலும் வலுப்பெற்று தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பரவி ஆளும் அதிகாரத்தாரால் அடக்குமுறை, ஒடுக்குமுறை என்று வளர்ந்த போது இந்த சமூகத்தால் அதை எதிர்க்க முடியாமல் போனது. இறுதியில் அது தீண்டாமையாக 16 – 17 ஆம் நூற்றாண்டில் அயல் மொழியார் ஆட்சியில் வடிவம் கொண்டது. அதற்கு முன் இவர்களுக்கு தீண்டாமைக் கொடுமை இல்லை. எந்த மன்னராட்சியிலும் சமத்துவம் இருந்ததில்லை. வேட்டைச் சமூகத்தோடு சமத்துவம் ஒழிந்துவிட்டது. ஆனால் தமிழ்நாட்டில் புரட்டி உருட்டுவது என்னவோ மதமும் மதசுயநலவாதிகளும் தான் வேற்றுமையை விதைத்தனர் என்பர் நிலவுடமை சாதியார்.

    அண்மைக் காலத்தில் வாழ்ந்து மறைந்த முக்காலமும் அறிந்த சப்தரிஷிகளான பிரபாது ரஞ்சன் சர்க்கார், ஈசுவர பட்டர் ஆகியோர் இன்றைய எல்லா சமூக ஏற்றத் தாழ்விற்கும் நாடாண்ட மன்னவர்களே காரணம் என்றனர். கீழ் உள்ள கல்வெட்டுகளையும் விளக்கத்தையும் தெளிவாகப் புரிந்து கொள்ள ஒரு முகவுரையாகவே மேற்கண்ட தெளிவுரை வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தமிழர் தமிழ்க் கல்வெட்டுகளைப் படித்து விளங்கிக் கொள்ள முடியாவிட்டால அதை விட அவமானம் வேறு இல்லை. அயல் மொழியாரின் பொய்களுக்கு காலம் எல்லாம் கட்டுண்டு கிடக்க வேண்டியது தான். இனி கல்வெட்டுகள்

    வட ஆர்க்காடு மாவட்டம் திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில் முதல் திருச்சுற்றில் வடக்கு சுவரில் உள்ள 11 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் மதிரையும் ஈழமும் கருவூரும் பாண்டியன் முடித்தலையும் கொண்டருளியன ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு 27 வது பாண்டியநாடு கொண்டானான சம்புவராயநும்
    2. செங்கேணி அத்திமல்லந் வீராண்டானாந எதிரிலி சோழச் சம்புவராயநும் அத்திமல்லந் பல்லவாண்டானான குலோத்துங்க சோழச் சம்புவராயனும் கிளியூர் மலையமான் பெரியுடையானான  இராசராசச் சேதிராயநும் கிளி
    3. யூர் மலையமான் ஆகாரசூரந்நான இராசகம்பீரச் சேதிராயனும் குந்தந் நம்பூரலான இராசராச நீலகங்கரையனும் அம்மைஅப்பந் மருந்தந்நான  இராசராச மூவேந்தரையனும் பாவந்தீத்தாநான இராஜேந்திர சோழச் சம்புவராயன் மலையன் நரசிங்க பந்மனான கரிகாலசோழ ஆடையூர் நாடாழ்வானும்
    4. சோமன் திருவெண்ணாமலை உடையானான குலோத்துங்க சோழ பிருதிகங்கநும் சோமந் வரந்தருவானான சோளேந்திரசிங்கப் பிருதிகங்கனும் இவ்வனைவோம் எங்களில் இசைந்து கல்வெட்டினபடியாவது நாங்கள் ஒருகாலமும் இராஜகாரியத்துக்குத்  தப்பாமே நின்று சேதிராய தேவர் அருளிச் செய்தபடியே பணி
    5. செய்யக்கடவோமாகவும் இப்படி செய்யும் இடத்து மகதை நாடாழ்வானான வாணகோவரையனும் குலோத்துங்க சோழ வாணகோவரையனும் பக்கல் ஆளாதல் ஓலையாதல் போகக் காட்டுத்தல் உறவுபண்ணுதல் அறுதிசெய்தல் செய்யக்கடவோ மல்லாதோமாகவும் இவர்கள் அநுதாரத்துள்ளார் ப
    6. க்கல் ஆளாதல் ஓலையாதல் போகக்காட்டி சில காரியம் பார்த்தல் உறவு அறுதி செய்தல் செய்யக் கடவோமல்லாதோமாகவும் இவர்களும் யிவர்கள் ளநுதாரத்துள்ளார் பக்கலி நின்றும் ஆளாதல் ஓலையாதல் வந்த துண்டாகில் தேவர் சீபாதத்திலே போகக் காட்டக் கடவோமாகவும் இராசராச சேதிராயர் பக்கல் இரா
    7. சகாரியத்துக்கும் சேதிராயதேவர் கருமங் எங்களில் ஒருவர் காரியத்துக்கு விரோதமாயிருப்பன சொல்லி ஆளாதல் ஓலையாதல் போகவிடக்கடவோ மல்லாதோமாகவும் இவரும் அனுதாரத்துள்ளார் பாடு நின்றும் இப்படி சொல்லி வந்ததுண்டாகில் இப்படிக்கு இசையாதே சேதிராயதேவர் _ _ _ ட்டக்கடவோ
    8. மாகவும் நாங்கள் அனைவரும் எங்களில் ஒருகாலமும் ஒருவர் வேறுபடாதே இராஜகாரியத்துக்கு தப்பாதே நின்று சேதிராயதேவர் அருளிச்செய்தபடி பணி செய்யக்கடவோமாகவும் எங்களில் ஒருவர் வேறுபட நின்று இராஜகாரியத்துக்கும் சேதிராயதேவர் காரியத்துக்கும் எங்கள் காரியத்துக்கும் விரோதமாகச்  சில காரியம் பார்த்தாருண்டாகில் _ _ _
    9. ய்து தேவரும் நாங்களும் இவனை அறச்செய்யக்கடவோமாகவும் எங்களிலே ஒருவரை வாணகோவரையனாதல் குலோதுங்க சோழ வாணகோவரையனாதல் இராசராச காடவராயனாதல் வினை செய்தாருண்டாகில் படையுங் குதிரையும் முதலுக்கு நேராகக்கொண்டு _ _ _ _
    10. தக்கடவோமாகவும் இப்படிக்கு ஒருகாலமும் தப்பாதே நின்று செய்யக்கடவோமாகவும் இப்படி செய்திலோமாகில் வாணகோவரையனுக்கு கடை கா _ _ _ பறையற்க்கு செருப்பு எடுக்கிறோம். இப்படி சம்மதித்து
    11.  உடையார் திருவண்ணாமலை உடைய னாயனார் கோயிலிலே கல்வெட்டிக் குடுத்தோம் இவ்வனைவோம்.

    தப்பாமே – பிசகாமல்; அருளிச்செய் – சொல்லி ஏற்படுத்திய; பக்கல் – பக்கம் சாய்தல்; அனுதாரம் – பின்பற்றிகள், followers; அற – இல்லாமல் போ; வினை – போர்; கடைகாக்கும் – வாயில் காக்கும்

    விளக்கம்: மதுரையும் ஈழமும் கருவூரும் ஆள்பவரை வென்று பாண்டியன் மணிமுடியும் கைப்பற்றி மன்னித்து அருளின மூன்றாம் குலோத்துங்கனின் 27 ஆம் ஆட்சி ஆண்டு1205 இல் பாண்டியநாடு கொண்டனான சம்புவராயனும் செங்கேணி அத்திமல்ல எதிரிலிச் சோழச் சம்புவராயனும் அத்திமல்லன் பல்லவாண்டனான குலோத்துங்க சோழ சம்புவராயனும் கிளியூர் மலையமான் பெரியுடையானான இராசராச சேதிராயனும் கிளியூர் மலையமான் ஆகாரச்சூரண் இராஜகம்பீரச் சேதிராயனும் குந்தன் நம்பூராலான இராசராச நீலகங்கரையனும் அம்மையப்ப மருந்தனான இராசராச மூவேந்தரையனும் பாவம் தீர்த்தானான இராசேந்திர சோழ சம்புவராயனும் மலையன் நரசிங்கபன்மனான கரிகால சோழ ஆடையூர் நாடாழ்வானும் சோமன் திருவாண்ணாமலை உடையானான குலோத்துங்க சோழ பிரிதிகங்கனும் சோமன் வரம்தருவானான சோழேந்திரசிங்க பிரிதிகங்கனும் ஆக 11 அரச குலத்தோர் ஒன்றுகூடி இந்த அனைவரும் கருத்தொற்றுமையுடன் கல்வெட்டிக்கொண்டது யாதெனில், “நாங்கள் ஒருகாலமும் மன்னனது அரசியல் செயற்பாட்டிற்கு பிசகாமல் உறுதியாகத் துணை இருந்து சேதிராயர் ஏற்படுத்தியபடி வேலையாற்றுவோம் இப்படி பணியாற்றும் போது மகதை ஆளும் வாணகோவரையன் குலோத்துங்க சோழ வாணகோவரையன் பக்கம் சேராமல், ஓலை அனுப்பாமல், போய்வருதல், நன்மை தீமைகளுக்கு உறவு காட்டுதல், திருமணம் உறுதி செய்தல் ஆகியன செய்யமாட்டோம். வாணகோவரையரை பின்பற்றுவோர், நன்மதிப்பை விரும்புவோர் பக்கமும் சேராமல், ஓலை அனுப்பாமல், போய்வருதல், சில வேலைகள் செய்து கொடுத்தல், திருமணம் உறுதி செய்தல் ஆகியன செய்யமாட்டோம். இவர்களுக்கு மட்டுமல்லாது இந்த பின்பற்றிகளின் பின்பற்றிகளாவோர், நன்மதிப்பு கொண்டோர் பக்கத்தில் இருந்து நம் பக்கம் சேருவதற்கோ, ஓலை பெறவோ சமயம் உண்டானால் சேதிராயர் திருக் கால்களில் போகும்படி காட்டுவோம். இராசராச சேதிராயரிடம் இருந்து அரசு காரியம் செய்வது சேதிராயர் வேலை, எங்களில் ஒருவரது வேலைக்கு பகையாய் இருப்பதைச் சொல்லி பக்கம் சேரல், ஓலை அனுப்பல் செய்யவிட மாட்டோம். இவர்களும் தம் பின்பற்றிகள் பக்கம் நின்று அதற்கு ஆதரவாக சொல்லிவருவது உண்டானால் அவ்வண்ணம் செய்யாதே சேதிராயரிடம் போகும்படி காட்டுவோம். நாங்கள் ஒருபோதும் கருத்து வேறுபடமால் இருந்து அரச காரியத்தில் பிசகாமல் இருந்து சேதிராயர் காரியத்திற்கு எங்கள் காரியத்திற்கும் எதிராக சிலர் வேலை செய்தால் சேதிராயரும் நாங்களும் இவரை இல்லாமல் அழிப்போம். எங்களில் ஒருவரை மகதை வாணகோவரையனோ அல்லது குலோத்துங்க சோழ வாணகோவரையனோ அல்லது இராசராச காடவராயனோ போருக்கு அழைத்தால் படை, குதிரையைக் கொண்டு நேராக போர் தொடுப்போம். இதை ஒருகாலமும் பிசகாமல் செய்வோம். இப்படி செய்யாமல் போனோமானால் மகதை வாணகோவரையனின் அரண்மனை வாயிலைக் காக்கும் பறைய காவலருக்கு காலில் அணிந்து கொள்ள செருப்பு தூக்குவோம். இதற்கு ஒப்புக்கொண்டு திருவண்ணாமலை இறைவன் கோவிலில் கல்வெட்டுவித்தோம் இந்த அனைவரும் என்று சூளுரைத்தனர்.

    இதில் எந்த சேதிராயன் சார்பாக இவர்கள் இருக்கின்றனர் என்பதை பெயர் சொல்லித் தெளிவாகக் கல்வெட்டில் குறிப்பிடவில்லை. இவர்கள் வாயிற்காவல் பறையருக்கு செருப்பு தாங்குகிறேன் என்றதன் மூலம் பறையரை இழிக்கின்றனர் இன்பத்தை உணர முடிகிறது. சேதிராயனுக்கும் வாணகோவரையனுக்கும் ஏதோ பகை உள்ளதை இந்த கல்வெட்டின் மூலம் அறிய முடிகிறது. அதனால் இவர்கள் இன்றைய NATO படை அமைப்பு போல போர்ப் படை ஒப்பந்தம் போட்டுவிட்டனர்.

    அரண்மனை என்பது பல நாட்டவர், பண்டிதர், தூதுவர், அரச பிரதிநிதிகள் என பலரும் வந்து போகும் ராஜ வீதியில் அமைந்திருக்கும். அது காட்டிலோ அல்லது ஒதுக்குபுரத்திலோ அமைந்திருப்பதல்ல நகரத்தின் நடுவே அமைந்திருக்கும். எனில் அந்த அரண்மனையின்  வாயில் காக்கும் பறையர் தாமும் அதே ராஜவீதி வழியாகவே வந்தாக வேண்டும். இது 13 ஆம் நூற்றாண்டில் பறையர் தீண்டாமை இருந்ததில்லை என்பதற்கு வலுவான சான்றாகிறது. ஆனாலும் சாதிமுறையாக அல்லாமல் தொழில்முறையாக பறையர் இழிவு அரசர்களால் 13 ஆம் நூற்றாண்டில் ஏற்படுத்தப்பட்டுவிட்டது என்பதை இக்கல்வெட்டு குறிக்கின்றது.

    பார்வை நூல்: தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 8, எண் 106 (Ariep 516 of 1902)

    சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகளூர் திருக்காமீசுவரர் கோவில் கருவறையின் முன்புற மண்டபத்தின் கிழக்குபுறச் சுவரில் உள்ள 11 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ திருபுவனச் சக்கரவத்திகள் குலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு 35 வது ஐய்யர்
    2. பொன்பரப்பின வாணகோவரையர்க்கும் ஐய்யர் குலோத்துங்க சோழ வாணகோவரையர்க்கும்
    3. மைச்சுனனார் காடவராயர்க்கும் செங்கேணி அம்மைஅப்பன் அழகிய சோழனான எதிரிலி சோழச் ச
    4. ம்புவராயநேன் ஆறகளூரில் திருக்காமீசுரமுடையார் கோயிலிலே தப்பாமைக்கு அடர்முறைமை சொல்
    5. லிக் கல்லு வெட்டிக்குடித்த பரிசாவது என்னக்கும் என் த_ _ _ றைக்கும் இவர்கள் விரோதமாய்த் தப்பின் ஒழி
    6. ய்தல் செய்வித்தல் செய்யாதேய் என்னை நோக்கக் கடவர்களாகவும், இவர்களுக்கு நான் உள்ளதனையு
    7. ம் ஒருநாளும் தப்பாதே இருக்க கடவேனாகவும் தப்பினேநாகில் எங்களுக்கு இன்னாதாராய் வ
    8. ருகிற மும்மலராயர்களுக்கும் மற்றும் என் சத்துருக்களாயிருப்பார்க்கும் செருப்பும் தம்பலமு
    9. ம் எடுத்தேநாகிறேன். பல்லவரையன் சத்தியமேய் இப்படி தப்பினேநாகில்  அப்பாண் 
    10. டார்க்கு பிறந்திலேநாகிறேன். இப்படிக்கு கல்லு வெட்டிக்குடுத்தேன் எதிரிலி சோழச் சம்
    11. புவராயனேன்.

    தப்பாமை – பிசகாமை; அடர்முறைமை –  மாறாமை, பிடிப்பு; பரிசு – ஏற்பாடு; இன்னாதார் – பகைவர்;

    விளக்கம்: மூன்றாம் குலோத்துங்க சோழனின் 35 ஆம் ஆட்சி ஆண்டு 1213 இல் பொன்பரப்பின வாணகோவரையனுக்கும் குலோத்துங்க சோழ வாணகோவரையனுக்கும் இவர் மைத்துனர் காடவராயருக்கும் செங்கேணி அம்மையப்பன் அழகிய சோழனான எதிரிலி சோழ சம்புவராயன் அறகளூரில் உள்ள திருக்காமீஸ்வரர் கோவிலில் செய்து கொடுத்த சூளுரை இது. கொண்டநிலை பிசகாமல் மாறாதிருக்கும் முறையை அறிவித்து இக் கல்வெட்டுவித்த ஏற்பாடு யாதெனில் எனக்கும் என் தலைமுறைக்கும் இவர்கள் எதிராக திறம்பி அழிக்காமல் என்னை நட்புடன் பார்க்க வேண்டும். இவர்களுக்கு நான் உயிருடன் உள்ள வரை ஒருநாளும் பிசகாமல் உண்மையாய் இருப்பேன். அப்படி பிசகினேனாயின் எமக்கு பகைவராய் உள்ள மும்மல ராயர்களுக்கும் என் பகைவர்களுக்கும் காலில் அணிய செருப்பும் வாயில் மெல்ல வெற்றிலையும் எடுத்துக் கொடுத்தவன் ஆவேன். இது பல்லவராயன் சத்தியம் நடக்கும். இப்படி செய்யாமல் போனால் நான் என் தந்தைக்கு பிறவாமல் வேறு ஒருவனுக்கு பிறந்தவன் ஆவேன் என்று கல்வெட்டிக் கொடுத்தேன் எதிரிலி சோழ சம்புவராயன். முதல் கல்வெட்டில் சம்புவராயர்கள் சேதிராயனுக்கு ஆதரவாக வாணகோவரையனுக்கு எதிராக இருந்ததைக் கண்டோம். ஆனால் அந்த குடும்பத்தைச் சேர்ந்த சம்புவராயன் இன்னொருவன் வாணகோவரையனை ஆதரிப்பதை இந்த கல்வெட்டில் காண்கிறோம். அணி மாறுவது தான் மன்னராட்சி அரசியல்.

    பார்வை நூல்: பொன்பரப்பின வாணகோவரையன், ஆசிரியர் வில்லியனூர் ந. வெங்கடேசன், பக்.66 & AR No  453 of 1913; சேலம் நாமக்கல் மாவட்டக் கல்வெட்டுகள் பக்.34

    வட ஆர்க்காடு மாவட்டம் திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில் முதல் திருச்சுற்றில் வடக்கு சுவரில் உள்ள 7 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ திருபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ இராஜராஜ தேவற்கு யாண்டு 17 வது ஆறகளூருடைய தெம்பையாழ்வான் இராஜராஜ தேவன் வாணகோவரையனேன்
    2. உடையார் திருவண்ணாமலை உடைய நாயனாற்க்குத் திருமடைப்பள்ளிப்புறமாக நாயநார் பொன்பரப்பின பெருமாளுக்கு நன்றாக பொன்பரப்பின பெருமாள் ச
    3. ந்திக்கும் எடுத்ததுவல்ல பெருமாள் திருநாளைக்கும் முடலாக விட்ட ராஜராஜ வளனாட்டு வாணகோப்பாடி பெண்ணை தென்கரை மேல் குந்றாநாட்டு கூவனூர் நா
    4. ற்பா லெல்லைக்குள்ளும் ஏந்தல் தாங்கல் உட்பட்ட நன்சை நிலமும் மேனோக்கின மரமுங் கீழ்நோக்கின கிணறுந் தரியிறை தட்டார்பாட்டம் ஆள்அமஞ்சி  யெற்சோறு
    5. குற்றத்தெண்டம் பட்டிதெண்டமும் மற்றும் எப்பேற்பட்ட பல்லாயங்களும் உட்பட உடைய நாயநாற்கு தேவதானமாக சன்திராதித்தவரை செல்வதாக விட்டேன்
    6. வாணகோவரையனேன். மாறுவான் சிவத்துரோகியுமாய் மோவாய் புக்கு முலை யெழுன்தானுமா யொருவனுக்கும் யொருத்திக்கும் பிறன்தானு மல்லாதானாய் கோமாங்கிசத்தை 
    7. பூஜிப் பானுமாய் கெங்கையிடை குமரியிடை குரால்பசு கொன்றான் பாவம் கொழ்வான் . இது பன்மாஹேஸ்வர ரக்ஷை.

    பெருமாள் – மன்னன், வேந்தன்; உடலாக – மூலதனமாக; விட்ட – கொடுத்த; ஏந்தல் – ஆழமில்லா ஏரி, முலை எழுந்தான் –  அலி;  கோமாங்கிசம்  – ஆவின் புலால்;

    விளக்கம்: மூன்றாம் இராசராச சோழனின் 17 ஆம் ஆட்சி ஆண்டு 1233 இல் ஆறகளூருடைய தெம்பையாழ்வான் இராசராச தேவ வாணகோவரையன் இறைவன் திருவண்ணாமலை உடைய அப்பனுக்கு திருமடைப்பள்ளி அன்றாட்டுக்கு தலைவர் பொன்பரப்பின மன்னனுக்கு உடல்நலம் நன்றாகும் பொருட்டு பொன்பரப்பின மன்னர் பெயரில் அமைந்த சந்தி பூசைக்கும் எடுத்ததுவல்ல மன்னன் பெயரில் அமைந்த திருநாளுக்கும் மூலதனமாகக் கொடுத்த ராஜராஜ வளநாட்டு வாணகோப்பாடி வடபெண்ணையாற்று தென்கரையில் உள்ள மேற்கு குன்றானாட்டு கூவனூரின் நான்கு பக்க எல்லைக்குள்ளே ஆழமில்லா ஏரி, தேக்கம் உட்பட நஞ்செய் நிலமும் அதில் மேல் நோக்கிய மரம் கீழ்நோக்கிய கிணறு தறியால் வந்த வரி, தட்டார் தந்த வரி, நீர்நிலை பேணும் கட்டாய ஊழியம் (ஆளமஞ்சி), பொது ஊழியருக்கு பகலில் கொடுக்கும் சோறு (எச்சோறு), குற்றத்தால் வரும் தண்டத் தொகை, பசுக் கொட்டில் வரி, இன்னும் எப்பேர்பட்ட பல வரிகளும் உட்பட இறைவருக்கு தேவதானமாகச் சந்திர சூரியர் உள்ள காலம் வரை இருக்கக் கொடுத்தேன் வாணராயன். இதை இல்லாமல் செய்பவன் சிவத்துரோகி ஆவான். வாயுள் புகும் முலை எழும்பிய அலி ஆவான். முறையாக ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் பிறவாத பரத்தை மகன் ஆவான். ஆவின் புலாலைப் பூசனை செய்பவன் ஆவான்.  கங்கைக்கும் குமரிக்கும் இடையே குரால் பசுவைக் கொன்ற பாவம் கொள்வான். இதை சிவனடியார் காக்க வேண்டும்.

    இந்த மன்னன் அலியை இகழ்கிறான். அலிக்கு பாலுணர்வு ஏற்படும் போது முலை எழும் என்று குறிப்பதை வைத்து இவனது அரண்மனையில் அலிகள் இருந்துள்ளனர் என்று தெளிவாவதோடு அரசர் அலிகளுடன் பாலுறவு கொள்பவர் என்றும் தெரிகிறது. அரசர் என்போர் இப்படித்தான் நடத்தை கெட்டவராய், ஒழுக்கம் கெட்டவராய் (debauch) இருந்தனர். ஒருவரது சிந்தையும் செயலுமே ஒருவரது பேச்சில் வெளிப்படும் என்பது இந்த மன்னனது ஏச்சில் இருந்து வெளிப்பட்டுள்ளது.

    பார்வை நூல்: தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 8, எண் 80, AR No  490 of 1902

    திரு சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகளூர் திருக்காமீசுவரர் கோவில் இரண்டாம் பிரகாரம் நடுவிடம் 8 வரிக் கல்வெட்டு

    1. 13 வது ஆறகளூருடைய இராசராச தேவன் பொன்பரப்பினான குலோத்துங்க சோழ வாணகோவரையணயற்குத் திருக்கோவலூருடைய கிளியூர் மலையமான் எ
    2. ங்களில் நாடு நிற்குமிடத்து ஆழ்வினையாற்றுக்குத் தெற்கு இவற்கு நிற்கவும் இவ்வாற்றுக்கு வடக்கு எனக்கு நிற்கக் கடவதாகவும் கிழக்கு நாடு நிற்குமிடத்துக் கல்லியா
    3. டவதாகவும் எங்களிலிருவோமும் நாங்களுள்ளதனையும் பிழையாதே நின்று இராசகாரியஞ் செய்யினும் வன்னியஞ் செய்யினுங் கூடவே செய்யக் க
    4. டவோமாகவும். இவற்கு வினையுண்டாகுல் என் முதலிகளும் படையுங் குதிரையும் புகவிட்டு என் வினையாக ஏறட்டுக் கொண்டு நோக்கக் கடவேனாகவும் இ_
    5. வனாகவும் எனக்கு வினையுண்டா _ _ கில் இவருந் தம் முதலிகளும்  ப_ _ குதவிட்டுத்  தம் வினையாக ஏறட்டுக் கொண்டு நோக்கக் கடவராகவும். இத்தாலும்  நோ _ _
    6. ழ மலையகுலராயன் வினையிடைப்பாட்டம் என்னுடனே கூட நோக்கித்தகடவராகவும் என் _ _ மென்று  சொன்னாரை முதல்மையாக்கி  பரிசரிக்கக் _ _  
    7. காமையானுக்கு என் பெண்டுகளைக் குடுத்தேனாவேன். இப்படிக்கு ஆறகளூரில் உடையார் திருக்காமீசுரமுடைய கோயிலிலே கல்வெட்டுக் கு _ _ _
    8. குலராயன் எழுத்து

    நிற்க – எல்லையாகக் கொண்டு ஆள; பிழையாதே – பிழறாது; வினை – போர்; முதலிகள் – படைத்தலைவர்கள்; ஏறட்டு – பொறுப்பு ஏற்று, முன்வந்து; முதல்மையாக்கி – முன்னிலைப்படுத்தி; பரி – குதிரை; சருக்க / sarga  – குதிரை இலத்தி (சாணம்), ஸர்க என்பது  சமசுகிருத சொல்.

    விளக்கம்: மூன்றாம் குலோத்துங்க சோழனுக்கு 13 ஆம் ஆட்சி ஆண்டு 1191 இல் ஆறகளூருடைய இராசராச தேவன் பொன்பரப்பின குலோத்துங்க சோழ வாணகோவரையருக்கும் திருக்கோவலூருடைய கிளியூர் மலையமானுக்கும் இடையே ஏற்பட்ட உடன்படிக்கை அறிக்கை இது. எங்களுடைய ஆளுகையானது அழ்வினை யாற்றுக்கு (தென்பெண்ணை) தெற்கே மலையமானுக்கு செல்லவும் இந்த ஆற்றுக்கு வடக்கே எனக்கு செல்வதாகவும் இருக்கட்டும். கிழக்கு நாடு எல்லையாகும் இடத்தே கல் பாவிய பாதை அமைப்பதாகவும் ஒப்புக்கொண்டோம். எங்களில் ஒவ்வொருவரும் நாங்கள் உயிருடன் உள்ள வரை பிழறாது எங்கள் பகுதியிலேயே இருந்து அரச வேலை செய்யும் போதும், ஆட்சி செய்யும் போதும் ஒன்று சேர்ந்தே செய்வோமாக உறுதி பூண்டோம். இவர் ஆளுகையில் போர் உண்டானால் என் படைத் தலைவர்களும் படையையும் குதிரையையும் போர்க்களத்தில் புகவிட்டு அதை எனது போர் போலவே ஏற்றுக்கொண்டு பார்ப்பேன். அதே நேரம் என் மீது போர் உண்டானால் மலையமானும் இவருடைய படைத்தலைவர்களும் படையையும் குதிரையையும் போர்க் களத்தில் புகவிட்டு அதை தம் போராகவே ஏற்றுக் கொண்டு பார்க்க வேண்டும். இத்தோடு மலையமான் போர்ச்செய்யக் கொள்ளும் வரியையும் என்னோடு உடன் இருந்து கவனிக்கவேண்டும். என் சொல்லை நான் தவறினால் என்னை இகழ்பவரை முன்னிறுத்தி என் மனைவிமாரை குதிரை இலத்தி அள்ளும் காமையானுக்கு கொடுத்தவன் ஆவேன் என்கிறான் வாணகோவரையன். இப்படியாக ஆறகளூருடைய காமீசுவரர் கோவிலில் கல்வெட்டிக் கொடுத்தேன். இது (வாண) குலராயன் எழுத்து. இது NATO உடன்பாடு போல ஒரு போர் ஒற்றுமை ஒப்பந்தம் ஆகும். பாகூர் புலவர் செ  குப்புசாமியின் “வரலாற்று வடிவங்கள்” என்ற நூலில் பக். 147 இல் எலவானாசூர் சிவன் கோவில் கல்வெட்டு எண் 46 இல் குலோத்துங்க சோழனின் 13 ஆம் ஆட்சி ஆண்டில் ஏற்பட்ட இதே படை உடன்படிக்கையை காண முடிகிறது. அதில் மலையமான் சூரிய தேவர் நீரேற்றானும் பொன்பரப்பின குலோத்துங்க சோழ வாணகோவரையனும் தமது நாடு எல்லை இது என்று வரையறுக்கின்றனர். ஆனால் தந்தையர் காலத்தில் ஏற்பட்ட இந்த உடன்படிக்கை மலையமான் மகன்கள் ஆட்சியில் தகர்ந்து போனதை முதலில் விளக்கப்பட்டுள்ள கல்வெட்டில் அறிந்து கொள்ள முடியும்.

    இங்கே குதிரை சாணம் அள்ளும் காமையான் எந்த சாதி என்பதை அறிய முடியாமல் கல்வெட்டு சிதைந்துள்ளது. அதை பிற கல்வெட்டுகளைப் பார்த்து ஊகிக்கலாம்.

    பார்வை நூல்: பொன்பரப்பின வாணகோவரையன், பக். 67, வில்லியனூர்  ந. வெங்கடேசன் AR No 440 of 1913 & சேலம் நாமக்கல் மாவட்டக் கல்வெட்டுகள், பக். 49, எண் 38, அ. கிருட்டினன்

    தென்னார்க்காடு மாவட்டம் திருக்கோவிலூர் வட்டம் கீழுர் வீரட்டானேசுவரர் கோவில் வடக்கு சுவர் 13 வரிக்கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ த்ரிபுவநச் சக்கரவத்திகள் சீ குலோத்துங்
    2. க சோழ தேவற்கு யாண்டு 33 வது ஆற்றூர் கூ
    3. ற்றத்து ஆறகளூருடைய மகதேசந் இராசராச தேவந்
    4. பொந்பரப்பிநாந் வாணகோவரையந்நேந் உடையார்
    5. திருவீரட்டாநமுடைய  நாயநாற்கு திருமேற்ப்பூச்சுக்கும் திருப்ப
    6. ரி சட்டத்துக்கும் திருக்கோயிலுக்கும் திருமடை விளாகத்திலும் உள்ள குற்ற
    7. தெண்டமும் தறியிறை காசும் கடையிறையும் கந்நாரிறையும் ஆசு
    8. வி காசும் படித்தெண்டமும் திருநாளில் சீ பாதம் தாங்க வாரா
    9. த ஆட் தெண்டமும்  விளக்காள் தெண்டமும் உடையாற்கு விட்
    10. டு கல்வெட்டிநேன் வாணகோவரையநேன் இது இறங்குவா
    11. ந் குரால் பசுத் திந்றார் பாவமும் கொண்டு நாந் ஏறுகிற குதிரைக்கு பு
    12. ல் போடுகிற பறையநுக்கு தந் மணாட்டியை குடுப்பாந் இக்
    13. _ _ _ _ ஸ்வர ரக்ஷை.

    பரிசட்டம் – இறைவனுக்கு உடுத்தும் ஆடை; இறக்குவான் – அழிப்பான்; மணாட்டி – மனைவி

    விளக்கம்: மூன்றாம் குலோத்துங்க சோழனின் 33 ஆம் ஆட்சி ஆண்டு 2011 இல் ஆற்றூர் கூற்றத்தில் உள்ள ஆறகளூரில் இருந்து ஆளும் மகதேசன் இராசராச தேவன் பொன்பரப்பினான் வாணகோவரையன் இறைவன் திருவீரட்டானமுடைய அப்பனுக்கு திருமேனியில் பூசவும், ஆடை சாற்றவும், திருக்கோவிலுக்கும் திருமடைவிளாகத்தில் வாழ்வோரிடம் திரட்டப்படும் குற்ற தண்டனைக் காசு, தறி வரியும், கடை வரியும், கல்நார் வரியும், ஊர்காவல் ஆசுவிகள் கொள்ளும் காசும், படிக்கடப்போர் செலுத்தும் தண்டம், ஊரில் விளக்கு ஏற்றி அணையாமல் காப்போர் கட்டணம் ஆகியவற்றைத் தானமாகக் கொடுத்துக் கல்வெட்டுவித்தேன் வாணகோவரையனேன். இதை அழிப்பவர் குரால் பசு தின்றவன் கொள்ளும் பாவத்தைக் கொள்வதோடு நான் ஏறுகிற குதிரைக்குப்  புல் போடுகிற பறையனுக்குத் தன்னுடைய மனைவியை கலவிக்கு கொடுப்பான் ஆவான். இது சிவனடியார் காப்பு.

    மன்னன் கூறும் இந்த பறையர் இழிவு பிறந்த சாதியால் வந்த இழிவல்ல மாறாக அவர் செய்யும் கடைநிலைத் தொழிலால் வந்த இழிவு ஆகும். பிற்காலத்தில் இதுவே மேட்டுக்குடிப் படைசாதிகளால் சாதிப்பிறப்பு இழிவாக ஆக்கப்பட்டது. ஆனால் வாளோ வேலோ ஏந்தாத பிராமணர் படை நடத்தி வந்து தமிழகத்து புத்த மக்களை இந்துக்களாக மாற்றியதாகவும் ஆனால் இந்துவாக மாறாமல் புத்த மதத்தவராகவே இருந்த பறையரை தீண்டாமைக்கு உட்படுத்தி சேரியில் தள்ளிவிட்டனர் என்றும் அசோக மௌரியர் ஆட்சி தமிழகத்தில் பரவாததால் இங்கு பரவாத புத்த மதம் பரவி இருந்ததாக கற்பனையாக எழுதி பிராமணர் வெறுப்பை வளர்த்தும் தம் இனத்தார் கிருத்துவ மதத்தை தழுவவும் தவறாக வழிநடத்திச் சமூகக் கேடு (social disservice) செய்தவர் கற்பனை எழுத்தாளர் அயோத்திதாசர். இவரது கற்பனைக்கு கல்வெட்டு, செப்பேடு சான்று ஏதும் இல்லை என்பதே உண்மை. இப்படி தம் இனத்தாரை தவறாக வழிநடத்தியதால் பட்டியலின மக்கள் நடத்திய போராட்டங்கள் அனைத்தும் வீண் விரையம் ஆயின, பொன்னான காலம் பாழாய்ப் போனது. உண்மையாக பறையர் தாழ்விற்கு படைச்சாதி ஆண்ட பரம்பரை நிலவுடமை சாதியே காரணம் என்று சொல்லி இருந்தால் போராட்டம் அவர்களை எதிர்த்து நடந்திருக்கும். இதனால் இன்னும் பல கீழ்வெண்மணி நிகழ்வுகள் நடந்திருத்தாலும் வெற்றி உறுதி என்ற இலக்கை நோக்கி நகர்ந்திருக்க முடியும். இதை நடக்க விடாமல் செய்தார் அவர். தமிழ்நாட்டு கம்யூனிஸ்டுகளுக்கு சொந்த சிந்தனை ஏதும் கிடையாது. திராவிடவிய, தலித்திய கருத்தியல் கற்பனைக் கதைகளைக் கடன் பெற்றுத் தான் அரசியல் பேசியும் எழுதியும் வருகின்றனர். இந்த கல்வெட்டுகளைப் படித்தாவது கற்பனையை விட்டு உண்மையின் பக்கம் வருகின்றாரா என்று பார்க்கலாம். பழி ஒரு பக்கம் குற்றம் ஒரு பக்கம் என்பதை இவர்கள் உணரட்டும்.

    click https://www.facebook.com/reel/1505189110410648

    பார்வை நூல்: தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 7, எண் 912, AR 288 of 1902

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் அயன்பேரையூர் முக்குடீஸ்வரர் கோவில் தென்புறச்சுவர் 23 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ
    2. இராஜராஜ தேவற்கு யாண்டு 25 வது 100 நூ
    3. று அபர பக்ஷத்துப் புதன் கிழமையும் பெற்ற திருவோ
    4. ணத்து நாள் ஸ்வஸ்திஸ்ரீமநு மஹாப்ரதானி
    5. குமரதேவண்ண தண்ட நாயக்கநேன் வ
    6. ன்னாட்டு பேரவூருடையார் திருமுக்கூடலு
    7. டைய நாயனார் தேவதாநம் நன்செய் புன்
    8. சை செம்பை இராஜராஜ தேவனான வாண
    9. கோவரையன் விட்டப
    10. டியே 25 ஆவது ஆனி மாதம் முதல் சந்
    11. திராதித்தவரையும் செல்லக் கடவதாக
    12. இறையிலியாக விட்டோம். இந்தச் சிவகா
    13. ரியத்துக்கு விக்நம் நிநைத்தாருண்டாகி
    14. ல் சிவத்துரோகியும் நாட்டுத்துரோகியு
    15. மாய் என் குதிரைக்குப் புல்லிடும் பறைய
    16. னுக்குத் தன் மினாட்டியை குடுப்பான்
    17. இப்படிக்கு _ _ _ _
    18. தேவதானம் கல்வெட்டிக் குடுத்தே
    19. ன் குமார தேவண்ண தெண்டநாயக்
    20. கநேன். இது ஸ்ரீ மாஹேஸ்வர ரக்ஷை.
    21. சிவமஸ்து. அறஞ்செய்தான் செய்தா
    22. ன் அறங்காத்தான் பாதடி திறம்பாம
    23. ல் சென்னிமேல் வைத்து. ஸிவமஸ்து.

    அபரபக்ஷம் – தேய்பிறை; விக்கினம் – தடை

    விளக்கம்: மூன்றாம் இராசராச சோழனின் 25 ஆம் ஆட்சி ஆண்டு 1241 இல் நாள் நூறு தேய்பிறை புதன்கிழமை அன்று திருவோண நாளில் படைத்தலைவர் குமார தேவண்ண தண்ட நாயக்கன் வன்னாட்டு பேரவூருடைய இறைவன் வெள்ளாறு, கல்லாறு, உப்பாறு கூடும் திருமுக்கூடலூருடைய அப்பனுக்கு தேவதானமாக நஞ்செய், புஞ்சை நிலங்களை செம்பை இராசராச தேவனான வாணகோவரையன் கொடுத்தபடியே இராசராச சோழனின் 25 ஆம் ஆண்டு ஆனி மாதம் சந்திராதித்த வரை தொடரட்டும் என்று இறையிலியாக கொடுத்தோம். இந்த சிவகாரியத்திற்கு எவரேனும் தடை ஏற்படுத்த நினைத்தால் அவர் சிவத்துரோகியும் ஊர்த்துரோகியும் ஆவார். என் குதிரைக்கு புல் போடும் பறையனுக்குத் தன் மனைவியை புணர்வதற்கு அனுப்புவான் ஆவார். இப்படியாக தேவதானத்தை கல்வெட்டிக் கொடுத்தேன் குமார தேவண்ண தண்ட நாயக்கனேன். இது சிவனடியார் பாதுகாப்பு. சிவமாகுக. இந்த அறம் செய்தானே தக்கது செய்தவன். இந்த அறங்காத்தன் பாதஅடியை பிழறாமல் என் தலைமேல் வைத்துக் கொள்வேன். சிவமாகுக.

    கன்னடப் படைத் தளபதியும் பறையரை இழிவு செய்கிறார்.

    பார்வை நூல்: பெரம்பலுர் மாவட்டக் கல்வெட்டுக்கள், செப்பேடுகள், இல. தியாகராஜன், பக். 44

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வாலிகண்டபுரம் சிவன் கோயில் மகாமண்டப வடக்குச் சுவர் 9 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவநச் சக்கரவத்திகள் ஸ்ரீ இராசராச தேவற்கு யாண்டு இருப
    2. த்தேழாவது வாணகோவரையன் செம்பை இராஜராஜ தேவனேன் கல்
    3. வெட்டிக் குடுத்த பரிசாவது வாலிகண்டபுரத்து உடையார் திருவா
    4. லீஸ்வரமுடைய நாயனாற்கு திருநாமத்துக் காணி இறையிலியாக
    5. ப்ரஹ்மதேசம் நன்செய் புன்செய் நான்கெல்லையும் சந்திராதி
    6. த்தவரையும் செல்வதாக கல்வெட்டிக் குடுத்தேன் செம்பை இராஜராஜ தே
    7. வனேன் இது மாறுவான் ஏழாநரகத்துக் கீழா நரகம் புகுவான் எ
    8. ன் குதிரைக்குப் புல்லிடுகிற பன்மையானுக்கு தன் மிணாட்டியைக்
    9. குடுப்பான். இது வல்லவரையன் சத்தியம். இப்படி மாஹேஸ்வர ரக்ஷை.

    பரிசு – ஏற்பாடு, வகை, விதம்; திருநாமத்து காணி – நேரடியாக இறைவன் பெயரில் நிலம்; பன்மையான் – பருத்தவன், தடியன்

    விளக்கம்: மூன்றாம் இராசராச  சோழனின் 27 ஆம் ஆட்சி ஆண்டு 1243 இல் செம்பை (ஜம்பை) இராசராச தேவ வாணகோவரையன் கல்வெட்டிக் செய்து கொடுத்த ஏற்பாடாவது வாலிகண்டபுரத்து இறைவர் திருவாலீசுவரமுடைய அப்பனுக்கு அவர் பெயரில் நிலத்தை இறையிலியாக பிரம்மதேசம் என்னும் ஊரில் நஞ்செய், புஞ்சை நிலங்கள் நான்கு எல்லையும் சுட்டினேன். இது சந்திர சூரியர் உள்ள காலம் வரை போவதாகக் கல்வெட்டிக் கொடுத்தேன் செம்பை இராசராச தேவன். இதை மாற்றுபவன் ஏழாம் நரகத்திற்கும் கீழான நரகத்திற்கு போவான். மேலும் என் குதிரைக்கு புல் போடுகிற தடியனுக்கு தன்னுடைய மனைவியை கூட்டிக் கொடுப்பான் ஆவான். இது வல்லவரையன் சத்தியமாக நடக்கும். இதை சிவனடியார் கூட்டம் காக்க வேண்டும். தடியன் எந்த சாதி என்ற குறிப்பு கல்வெட்டில்  இல்லை.

    பார்வை நூல்: பெரம்பலுர் மாவட்டக் கல்வெட்டுக்கள், செப்பேடுகள், இல. தியாகராஜன், பக். 234

    பெரம்பலூர் மாவட்டம் திருவாலந்துறையார் கோயில் கருவறை வடக்கு மேற்கு குமுத பீடம், அர்த்த மண்டப வடக்கு சுவர் குமுத பீடம் 5 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ திருபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு ஏழாவது மேஷநாயற்று பூர்வ பக்ஷத்து பஞ்சமியும் திங்கள் கிழமையும் பெற்ற சோதி நாள் வடகரை கரிகால கன்ன வளநாட்டு மேல்கரை நாட்டு உடையார் திருஆலந்துறையுறை உடைய நாயனார்ச் சித்திரைத் திருநாள் எழுந்தருளுகையில் இரா(ஜ)ரா(ஜ) தேவன் வாணகோவரையனேன் கும்பிட்டு திருவோலக்க மண்றபத்தே வினோ
    2. தேவாசிரியன் திருவுறைக்கூட வாசலாலே ஒரு சற்பம் திருவோலக்க மண்டபத்தே புகுந்து இதுக்குப் பட்டர்களை அழைத்து ப்ராயச்சித்தங் கேட்க உடையாற்க்கு சில தேவதானமும் மஹாயேசுரற்க்குச் சில பூமிதானமும் பண்ணவேணுமென்று விதிக்கையில் உள்ளூர்த் தேவதான இறையிலியாகையாலே மேல்கரை நாட்டவரை அழைத்து உங்கள் நாட்டு நாயனார் திருஆலந்துறை உடைய னாயனாருக்கு உங்களூர்கள்
    3. கற்பூண்டி, கிளிஞலூர், மாம்பூண்டி, தென்கரை மாம்பூண்டி, விசாலூர், சிற்றூர்_ _ _  புன்செயிலும் நன்செ குழி இருநூறும் இறைஇலியாக கு
    4. டுத்தோம் இராராதேவரான வாணகோவரையனேன். இவ்வூர் (தந்மத்துக்கு யாதாமொருவன் அகிதம் செய்தால் என்) குதிரைக்கு புல்லிடும் வெட்டியானுக்குத் தன் பெண்டாட்டியைக் குடுத்தவனாவான். இது பன்மாஹேச்வர ரக்ஷை.
    5. இவை வாணகோவரையன் எழுத்து. ஸ்வஸ்திஸ்ரீ

    மேழ நாயாற்று  – சித்திரை மாதம்; பூர்வபக்ஷம் – வளர்பிறை;  சோதி நாள் – சுவாதி நட்சித்திரம்; பட்டர் – குருக்கள்;

    விளக்கம்: மூன்றாம் குலோத்துங்கனின் 7 ஆம் ஆட்சி ஆண்டு 1185 இல் சித்திரை மாதம் வளர்பிறை ஐந்தாம் நாள் திங்கட்கிழமை சுவாதி நட்சத்திரத்து அன்று வடகரை கன்னவளநாட்டில் மேல்கரை நாட்டின் இறைவர் திருவாலந்துறையில் இருக்கும் அப்பன் சித்திரைத் திருநாளில் எழுந்தருளிய போது இராசராச தேவன் குலோத்துங்க சோழ வாணகோவரையன் இறைவனை கும்பிட்டு வந்த போது திருவோலக்க மண்டபத்தே வினோ தேவாசிரியன் திருவுறைக் கூட வாயிலில் ஒரு பாம்பு திருவோலக்க மண்டபத்தே புகுந்து போனது. இதற்கு குருக்களிடம் கழுவாய் என்ன என்று கேட்ட போது இறைவனுக்கு சில ஊர் தானமும் மகேசுவரர்களுக்கு பூமி தானமும் கொடுக்க வேண்டும் என்று சொல்லினர். இது உள்ளூரில் கொடுக்க வேண்டிய தேவதான இறையிலி ஆவதால் மேல்கரை நாட்டவரை வரவழைத்து உங்கள் நாட்டின் இறைவன் திருவாலந்துறை ஈசனுக்கு உமது ஊர்கள் கற்பூண்டி, கிளிஞலூர், மாம்பூண்டி, தென்கரை மாம்பூண்டி, விசாலூர், சிற்றூர் ஆகிய ஊர்களில் புஞ்சை நஞ்சை நிலங்களில் 200 குழி வாங்கி இறையிலி தானமாக கொடுத்தேன் இராசராச தேவ வாணகோவரையன். இந்த கொடைக்கு யாரேனும் ஒருவன் கேடு செய்தால் என் குதிரைக்கு புல் போடும் வெட்டியானுக்கு தன் மனைவியை புணரக் கொடுத்தான் ஆவான். இதை சிவனடியார் காக்கவேண்டும். இது வாணகோவரையன் நேரடி எழுத்து. நன்மங்கலம் உண்டாகட்டும்.

    இந்த கல்வெட்டில் வெட்டியான் அகப்பட்டுக் கொண்டான். எத்தனையோ பல சாதிகள் இருக்க புலையர், பறையர், வெட்டியான் போன்றோர் மட்டும் இவ்வாறு இழிவு படக் காரணம் என்ன? ஆரியக் குதிரைக்கு புல் போட்டதே காரணம். இவர்கள் இதில் இருந்து தப்பி இருந்தால் வேறு ஏதோ ஒரு சாதிமார் குதிரைக்கு புல் போட்டு இவ்வாறு அகப்பட்டிருப்பர். நாடாண்ட மன்னனை ஞாயத்திற்கு உட்படுத்தாமல் அவன் வீரத்தையும் கொடையையும் புகழ்ந்துவிட்டு மதத்தையும் பார்ப்பானையுமா கேள்வி கேட்பது? இது தமிழர்க்கு  அறிவுடைமையா?

    பார்வை நூல்: ஆவணம் இதழ் 4, பக். 12 & பெரம்பலூர் மாவட்டக் கல்வெட்டுகள் செப்பேடுகள்,பக். 128/129 இல. தியாகராஜன்

    நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம் ஆலந்தூர் நகர் வௌவால்கரட்டின் மேல் பாறையில் உள்ள 16 வரிக்கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ நன் மங்கல
    2. ம் சிறக்க திரிபுவனச் சக்கரவர்திகள்
    3. திரு வீரராஜேந்திர சோழ தேவற்கு
    4. யாண்டு ஆறாவது சேல நாட்டு
    5. பொன்பரப்பியில் நக்க சோழங்க தேவர்
    6. முதலிகளில் நங்கள்மரான சோழகோனே
    7. ன் ஆலந்தூரில் ஈசான தேவர் நாயனாற்கு
    8.  என்னேரியில் கழனியிலே பத்துக் கழனி
    9. நாயனாற்கு விட்டேன் சோழங்க தேவர்
    10. திருமேனிக்கு நன்றாக விட்டேன். இத்தன்ம
    11. ம் இறங்காமே கொண்டு பெருகுமவன்
    12. அவன் சீ பாத மிரண்டும் என் தலைமேல்
    13. யித்தன்ம மிறங்கப் படுத்துவனுக்கு
    14. என் குதிரைக்கு புல் சுமக்கும் 
    15. பறையனுக்கு தன் மிணாட்டியைக்
    16. குடுப்பான்  

    முதலி – படைத்தலைவன்; பெருகு – வாழ், வளர்;

    விளக்கம்: கொங்கு சோழன் வீரராஜேந்திரன் கோநேரின்மை கொண்டான் என்ற பட்டம் உடையவன் ஆதலால் இந்த வீரராசேந்திரன் மூன்றாம் குலோத்துங்கனையே குறிக்கிறது எனக் கொள்ளப்படுகிறது. அவனது ஆறாம் ஆட்சி ஆண்டு 1184 இல் சேலம் நாட்டில் பொன்பரப்பியில் நக்கசோழங்க தேவர் என்ற அரையனுக்கு படைத்தலைவர்களாக உள்ளவர்களில் நங்கள்மரான சோழகோன் என்பவர் ஆலத்தூரில் ஈசானதேவ இறைவனுக்கு அவரது ஏரியில் அமைந்த கழனியில் பத்து கழனி நிலம் இறைவனுக்கு தானமாகக் கொடுத்தார். இதை தன் அரையன் சோழங்க தேவன் உடல்நலம் தேறும் பொருட்டு கொடுத்தார். இந்த கொடையை அழிக்காமல் வாழ்பவன் திருப்பாதம் இரண்டும் என் தலைமேல் வைப்பேன். இதை அழிப்பவன் என் குதிரைக்கு புல் சுமந்து வரும் பறையனுக்கு தன் மனைவியை புணரக் கொடுக்கட்டும் என்று சபிக்கிறான்.

    இக்கல்வெட்டில் ஒரு படைத்தலைவன் தன் குதிரையை பேணுபவன் மீது கொண்ட இழிவுக் கருத்து வெளிப்பட்டுள்ளதானது பொதுவாகவே படை மேல்மட்டத்தாரிடம் தொழில் ஏற்றத்தாழ்வு எண்ணம் இருந்துள்ளதை அறிய முடிகிறது. இந்த படையினர் பிள்ளைகள் குதிரை பேணுபவர் பிள்ளைகளை இதே முறையில் தானே ஏளனம் செய்வர்? இந்த தொழில்முறை இழிவு தான் பிறப்புவழி இழிவாக காலப்போக்கில் 13 ஆம் நூற்றாண்டிற்கு பின் மாறியது. ஆனால் சனாதனம், மனுதர்மம் தான் பிறப்பு இழிவை  ஏற்படுத்தியதாக ஆதாரம் இன்றி பொய் உரைக்கின்றனர். இந்த பொய் எழுந்த தமிழ்நாட்டிலேயே இந்த பொய்க்கு கல்வெட்டுகள் சம்மட்டி அடி கொடுக்கின்றன என்பது பிரகிருதியின் விளையாட்டு தானே.

    பார்வை நூல்: சேலம் நாமக்கல் மாவட்டக் கல்வெட்டுகள், பக். 30, எண் 17, அ. கிருட்டினன்

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வாலிகண்டபுரத்து திருவாலீசுவரர் கோவில் மகாமண்டபத் தென்பகுதி மேற்கு சுவரில் (1008 லிங்கம் உள்ள அறை) பொறிக்கப்பட்ட 9 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ  போசள வீரசோமீஸ்வர தேவரைசர் ஓலை வன்னாட்டு வா
    2. லிகண்டபுரத்து உடையார் திருவாலீஸ்வரமுடைய நாயனார் கோயில் தா
    3. னத்தார் கண்டு திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ இராசராச தேவற்கு 27
    4. வதில் தாதி பதுமவ்வை நமக்கு நன்றாக ஒரு சந்தி அமுது செய இன் நா
    5. ச்சியார் ஸ்ரீ கத்தத்து நீர்வாத்து இந்நாட்டு சிறுகூடல் ஏரிகீழ் நஞ்செய் நில
    6. த்து தேவதான இறையிலியாக இட்ட நிலம் அரை. இந்நிலம் அரை
    7. க்கும் திருச்சூல தாபனம்பண்ணித் திருக்கற்றளியிலே நம் சாதனப்
    8. ட்டி கல்வெட்டி கொள்வதே. இதுமாறுவான் தந் மிணாட்டியை பு
    9. லையற்கு குடுப்பாந். இது ஸ்ரீ மாஹேஸ்வர ரக்ஷை.

    கண்டு – பார்வைக்கு; தானத்தார் – கோவில் பொறுப்பாளர்; தாதி – வைப்பாட்டி; ஸ்ரீ கத்த – கெண்டி; சாதனப்படி – ஆவணப்படி; மாகேஸ்வரர் – சிவனடியார்

    விளக்கம்: போசள வேந்தன் வீர சோமேஸ்வரனின் நேரடி ஓலை ஆணை இது. வன்னாட்டில் அமைந்த வாலிகண்டபுரத்து ஈசர் திருவாலீஸ்வரமுடைய நாயனார் கோவில் பொறுப்பாளர் பார்வைக்கு வைப்பது யாதெனில் மூன்றாம் இராசராச தேவரின் 27 ஆம் ஆட்சி ஆண்டு 1243 இல் சொல்லியது. என் வைப்பாட்டி பதுமவ்வை என் உடல் நன்றாக ஒரு சந்திக்கு அமுது படைக்க வேண்டி இவளது கெண்டியால் நீர்வார்த்து இந்நாட்டில் சிறுகூடல் ஏரியின் கிழக்கே நஞ்செய் நிலத்தை தேவதான இறையிலியாக கொடுத்த நிலம் அரை மாவா? என்று தெளிவாகக் குறிப்பிடவில்லை. இந்த அரை நிலத்துக்கும் திருசூலக் கல்நாட்டி கோவிலிலே என் ஆவண ஓலைப்படி கல்வெட்டிக் கொள்க. இந்த ஏற்பாட்டில் இருந்து திறம்புபவன் தன் மனைவியை புலையர்களுடன் கலவி கொள்ள அனுப்புபவன் ஆவான். இது சிவனடியார் பாதுகாப்பு.

    நலிந்து போன சோழப் பேரரசு போசள வேந்தனால் முட்டுக் கொடுத்து நிறுத்தப்பட்ட இரட்டை ஆட்சிக் காலம் இது. இங்கே கன்னட போசள வேந்தன் புலையரை இழித்து பேசுகிறான். இதே நூலில் பக்கம் 233 – 234 இல் இடம் பெறும் கல்வெட்டு எண்: 293 இல் “அழித்தாருண்டாகில் எங்கள் குதிரைக்கு புல்லிடும் புலையர்க்கு தங்கள் மினாட்டிகளை குடுப்பார்களாகவும்” என்று உள்ளது. இது புலையர் படைக் குதிரையைப் பேணியதைச் சுட்டுகிறது.

    பார்வை நூல்: பெரம்பலூர் மாவட்டக் கல்வெட்டுக்கள், செப்பேடுகள்; இல. தியாகராஜன், பக். 235

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வரகுபாடி காசி விசுவநாதர் கோயில் முன் கிடக்கும் கல் பலகையில் உள்ள 15 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ ராஜராஜ தேவற்கு யாண்டு 2 வது திருப்பழனத்து உடையார்
    2. தொண்டைமானார் பூசற் செய்ய விட்டு கிடு இருந்து இடத்து இராவினையாக பாண்
    3. டியராயன் வந்து வளைந்தவிடத்து ஒளியன் பெற்றாந் ஆரியனை வெட்டிப்
    4. பிடித்து கிடு வந்து தொண்டைமானாரோடுங் கூட குலோத்துங்க வாணக வ
    5. ரையர்  சீ பாதத்தேய்  கண்டா இடத்து இவனுக்கு தண்டேறு வரிசையுங் குடுக்கப் புக்
    6. க இடத்து இவ் ஒளியின் பெற்றான் தெண்டனிட்டு அடியேனுக்கு இவை
    7. வேண்டாம் தண்டலையிற் பொய்கை ஈசுவரமுடைய நாயனார் கோ
    8. யில் திருக்கற்றளிச் சாத்த அன் நாயநாற் திருநாமத்துக் காணியில் பண்
    9. டாரத்துக் கிறுக்கிற சீகாரியப் பேறும் தூதவரி அடியேனுக்குத் தந்தருள
    10. வேண்டுமென்று விண்ணப்பஞ் செய்ய அப்போதேய் புரவரி முதலிகள் நால்வரு
    11. ம் எழிதிய எழுத்திட்டு திருவெழுத்துஞ் சாத்தி திருமுகப் பிரசாதம் பெற்று விடை கொ
    12. ண்டு போந்தேன் ஒளியன் பெற்றாநேன் இந்த திருநாமத்துக் காணிக்கு ந
    13. ன்செய் புன்செய் நத்தம் இதுக்கு விலங்கல் சொல்லுவான் தங்களம்மைக்கு
    14. த் தாநே மிணாளன் தன் உடன் பிறந்தாள் முந்தானை பிடிச்சாநாவான் இதுக்கு வி
    15. லங்கல் சொல்லாதவன் சீபாத மென் தலைமேலய்

    பூசல் – போர்; உடையார் – மன்னர்; கிடு – படைக்கலப் பாசறை; இராவினை – இரவுப்போர்; வளைந்த – சூழ்ந்த; தண்டு ஏறு – படை கடத்தல், படைக்குள் புகல்; திருச்சுற்றளி – பிரகாரம்; திருநாமத்துக் காணி – இறைவன் பெயரில் வழங்கிய நிலம்; விலங்கல் – இடர், இன்மை

    விளக்கம்: மூன்றாம் இராசராச சோழனின் இரண்டாம் ஆட்சி ஆண்டு 1218 இல் திருப்பழனத்து மன்னன் தொண்டைமான் என்வன் பாண்டியப் படையெடுப்பை எதிர்த்துப் போர் புரிகிறான். அவன் தன் படையினரை போர் செய்யவிட்டு படைக்கலப் பாசறையில் ஓய்வு கொண்ட போது இரவுப்போரில் பாண்டியன் அப்பாசறையை வளைத்து சூழ அப்போது ஒளியின் பெற்றான் என்ற படைத்தலைவன் பாண்டியப் படை ஆரியனை வெட்டிச் சிறைபிடித்து படைக்கலப் பாசறைக்கு பிடித்துவந்து தொண்டைமானோடு கூட குலோத்துங்க வாணராயரையும் பாதம் தொழுது நின்ற நேரத்தில் இவனுக்கு படையை கடந்ததற்கு பரிசு கொடுக்கப் போகும் நேரத்தில் இந்த ஒளியன் பெற்றான் தலைதாழ்த்தி அடியேனுக்கு இவை வேண்டாம் மாறாக தண்டலையில் (வரகுபாடி) உள்ள பொய்கை ஈசுவரமுடைய இறைவன் கோவிலில் பிரகாரம் கட்ட அந்த இறைவனுடைய திருநாமத்துக் காணியில் இருந்து கருவூலத்திற்கு செலுத்துகிற திருக்காரிய கட்டணமும், தூதவரியும் எனக்கு ஒதுக்கித்தர வேண்டும் என்று வேண்டீடு செய்த போது அப்போதே அரசாங்க வரித்துறை அதிகாரிகள் நால்வர் எழுதிக் கையெழுத்திட்ட ஓலையில் மன்னர் கையெழுத்தும் இட்டு மன்னனின் வாழ்த்தும் பெற்றுக் கொண்டு விடை பெற்று வந்தேன் என்கிறான் ஒளியன் பெற்றான். இந்த திருநாமத்துக் காணியில் அடங்கும் நஞ்செய் புஞ்செய் நத்த நிலங்களுக்கு இடர் ஏற்படுத்துபவன் தன் தாயைத் தானே புணர்ந்தவன் ஆவான். தன் அக்காள் தங்கையின் முத்தானையை உருவியவன் ஆவான். இந்த அறத்திற்கு தடை சொல்லாதவன் திருப்பாதம் என் தலைமேல் வைக்கப்படும். ஒரு படைத்தலைவன் இவ்வாறு நாக்கூசும்படி சொல்வது படை உயரடுக்கில் ஏற்பட்டிருந்த எண்ணக் கேட்டையே வெளிப்படுத்துகிறது.

    பார்வை நூல்: பெரம்பலூர் மாவட்டக் கல்வெட்டுகள் செப்பேடுகள், பக். 183/184, இல. தியாகராஜன்

    வட ஆர்க்காடு மாவட்டம் திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோவில் கோபுர இடது நுழை வாயிலில் உள்ள 3 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்க்கு யாண்டு 20 உடையார் திருவண்ணாமலை உடைய நாயனாற்கு
    2. ஆறகளூர் சதிரன் வாணராயனேன் தேவதானமாக விட்ட பெண்ணை வடகரைச் செங்குன்ற நாட்டு கங்க நல்லூர் நாற்பாற்க்கெல்லைக் குள்ளும் நஞ்
    3. சை புஞ்சை யகப்பட விட்டேன் சதிரன் வாணராயனேன். இது மாறுவான் மிணாட்டியை பறையனுக்குக் குடுப்பான். இது பந்மாஹேஸ்வர ரக்ஷை.

    அகப்பட – உட்பட, include; மாறுவான் – திறம்புபவன்

    விளக்கம்: மூன்றாம் குலோத்துங்க சோழனின் 20 ஆம் ஆட்சி ஆண்டு 1198 இல் இறைவன் திருவண்ணாமலை நாயகனுக்கு ஆறகளூர் சதிரன் வாணராயன் தேவதானமாக பெண்ணை ஆற்றின் வடகரையில் அமைந்த செங்குன்ற நாட்டின் கங்க நல்லூரில் நாற்பால் எல்லைக் உள்ளே நஞ்செய், புஞ்செய் நிலங்களை கொடுத்தேன் இந்த சதிரன் வாணராயன் என்கிறான். இதை திறம்புபவன் தன் மனைவியை பறையன் கலவி கொள்ளக் கொடுப்பவன் ஆவான். இதை சிவனடியார் காக்கவேண்டும் என்கிறான். இந்த வாணன் பறையர் குறித்து இழிவான கருத்து கொண்டிருந்தால் மட்டுமே இப்படி கூற முடியும். இது இவனது நேரடிக் கல்வெட்டு.

    பார்வை நூல்: தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 8, எண் 139, AR No 548 of 1902

    எலவானாசூர்ச் சிவன் கோவில் வெளிப்பிரகாரத்து மேற்கு சுவர் 6 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ இராஜராஜ மலையகுலராயநான நீரேற்ற பெருமாளான எதிரிகள் நாயநுக்கு
    2. இவ்வேளக்காறியான தேவப்பெருமாளேன், எதிரிகள் நாயனுக்குப் பின்பு இருந்தேநாகில் என் மாடு ஓட்டிமாற்கு  மண்டைய்யுமிட்டு இ
    3. வர்களுக்கு நீருங்குடுத்து இவர்கள் கலச் சோற்றையும் உண்கிறேன். என் மிணாளன் ஒடு என்னைச் சாவவேண்டாமென்பார் என் மி
    4. ணாளன் ஏறுகிற குதிரைக்குப் புல்லு இடும் காமிகந் எதிரிகன் நாயக முதுமையானுக்கு தன் மிணாட்டியையுங் குடுப்பான். நா
    5. ந் செயாதிருந்தேநாகில் என்னை நெருப்பில் கட்டி புகடுதல் கொல்லுதல் செய்தவன் தன் னோட்டயாற்கு தந் மிணாட்டியையுங்  குடுத்து என் 
    6. மிணாளன் ஏறுகிற குதிரைக்கு புல்லு இடுகிற காமிகநான எதிரிகள் நாயக முதுமையானுக்கு தன் மிணாட்டியை குடுப்பான் என்னைக் கண்டால் கொல்லாதான்.

    வேளக்காரி – காவற் பெண்டு; மண்டையிட்டு – தலையால் பாதம் தொட்டு; ஓட்டையார் – மாடு அல்லது குதிரை ஓட்டி, driver; புகடுதல் – புகுத்துதல்;

    விளக்கம்: மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் கிளியூர் மலையமான் சூரியன் நீரேற்றானான எதிரிகள் நாயனான இராஜராஜ மலையகுலராயனின் காவல் பணிக்கு சேர்ந்த தேவப்பெருமாள் என்ற பெண் உறுதி ஏற்கும் போது எதிரிகள் நாயன் இறந்த  பின்னும் நான் உயிர் வாழ்வேனாயின் எனது வேலைக்காரர்களான என் மாடு ஓட்டிமார்க்கு மண்டியிட்டு வணங்கி அவர்கள் கைகால் கழுவ நீர் மொண்டு கொடுப்பேன். அவர்கள் எச்சில்பட உண்ட கலத்தில் மிகுந்து எஞ்சிய சோற்றை உண்பேன். இதே காவல் பணியில் சேர்ந்த அவள் கணவனோடு தானும் சாவேன் என்று உறுதிமொழி தருமிடத்து என்னை அவ்வாறு சாகவிடாமல் தடுப்பவர் தம் மனைவியை என் கணவன் ஏறும் குதிரைக்கு புல் போடுகிற காமிகன் எதிரிகள் நாயன் முதுமையானுடன் கலவி கொள்ள தன் மனைவியை அனுப்பினவன் ஆவான். நான் அவ்வாறு சாகாது இருந்தேன் என்றால் என்னைக் கட்டி நெருப்பில் புகவிட்டுக் கொல்பவன் தன் மனைவியை தன் வண்டி ஓட்டிமார் கலவி கொள்ள அனுப்பினவன் ஆவான். என்னை உயிருடன் கண்டால் கொல்லாமல் விட்டுச் செல்லுகிறவன் தன் மனைவியை என் கணவன் ஏறுகிற குதிரைக்கு புல் போடும் காமிகன் எதிரிகள் நாயன் முதுமையானுக்கு கலவி துய்க்க அனுப்பினவன் ஆவான்.

    இந்த காவற்பெண்டு நெருப்பில் இட்டு கொன்றாலும் திட்டுகிறாள் கொல்லாமல் விட்டாலும் திட்டுகிறாள். இங்கு தான் குழப்பம் உண்டாகிறது. அப்படியானால் தன்னைக் குத்தியோ வெட்டியோ சட்டென்று கொன்றுவிட வேண்டும் நெருப்பில் மட்டும் இட்டால் அது பெருந் துன்பம் என்ற யாரோ ஒருவரது உடன்கட்டை ஏறிய துன்பத்தைப் பார்த்த அனுபவத்தில் இப்படி சொல்லி இருக்கலாம். தூங்குதலை கல்வெட்டுகளில் தன் தலைவன் இறந்தால் வீரன் தானும் சூளுரைத்தபடியே தலையை அரிந்து சாகிறான். அதே போல இந்த வேளக்காரப் பணிக்கும் தம்  மன்னன் இறந்தால் இந்த அந்தரங்க காவல் பணிமக்களும் இறக்க வேண்டும் அதுவே நம்பிக்கைக்கு உரிய செயல் என்பதால் இப்படி உறுதி ஏற்கின்றனர் என்று தெரிகின்றது. ஒரு காவல் பெண்டு தன் பணியைவிட மாட்டு வண்டி ஓட்டும் பணியும் குதிரைக்கு புல்லிடும் பணியும் மிகத் தாழ்வானது என்பதை இங்கே உணர்த்துகிறாள். தானே ஒரு பெண்ணாக இருந்து கொண்டு ஒரு குற்றமும் புரியாத இன்னொருத்தன் மனைவியை அடுத்தவனுடன் கலவி கொள்வாள் என்று இவள் உரைப்பது இவளுக்கு ஞாய உணர்வு இல்லை என்பதையே உணர்த்துகிறது. ஒரு காவல் பெண்டே இப்படி என்றால் இதற்கும் மேல் பணியில் உள்ளோர், மன்னர், அரையரும் இப்படி தான் தாழ்வாக எண்ணி இருப்பார்கள் என்றே உணர்த்துகிறது இக்கல்வெட்டு. இது சாதிவழி வந்த இழிவு அல்ல மாறாக கீழ்மைத் தொழில் வழி வந்த இழிவு. இதை தான் மேட்டிமை மனநிலை என்பது. இந்த மேட்டிமையை மதமும் பிராமணருமா வளர்த்தனர்? இல்லையே. இது படை – காவல் (rank and file)  ஏற்றத் தாழ்வு மேட்டிமை மனநிலை அன்றோ?

    பார்வை நூல்: வரலாற்று வடிவங்கள், கல்வெட்டு 54  பக். 153, ஆசிரியர் புலவர் சு. குப்புசுவாமி & A.R. 156 of  1906

    எலவானாசூர்ச் சிவன் கோவில் வெளிப்பிரகாரத்து மேற்கு சுவர் 4 வரிக் கல்வெட்டு

    1. எதிரிகள் நாயன் வேளக்காறன் திரிகை உடையான் எதிரிகள் நாயனுக்கு பி
    2. ன்பிருப்பான் தங்களமைக்குத் தாநே மிணாளன் எதிரிகள் ணாயனை தவிர
    3. என்னை சேவகங் கொள்வாந் தம் மிணாட்டிக்கு என்னை மிணாளநாக கொ
    4. ள்வான்

    வேளக்காரன் – காவல் மகன்; மிணாளன் – கணவனைக் குறித்தாலும் இங்கு தவறான உறவு உள்ளவர் என்ற பொருள்; திரிகை – சக்கரம்

    விளக்கம்: மலையமான் எதிரிகள் நாயனுடைய வேளக்காரன் திரிகை உடையான் எடுத்த உறுதி மொழி, “மலையமான் எதிரிகள் நாயன் சாவுக்குப் பின் சாகாமல் உயிருடன் இருப்பவன் தன் தாயுடன் கலவி கொண்டவனாவான். எதிரிகள் நாயனைத் தவிர்த்து என்னை வேறு ஒருவருன் பணியாளாகக் கொள்வானாயின் அவன் தன் மனைவியை என்னிடம் கலவிக்கு அனுப்பியவன் ஆவான்”.

    ஒரு அகராதி வேளக்காரப்படை என்பது சோழரின் ஒரு படைப் பிரிவு என்கிறது. செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகர முதலி அரசர்கள் போரில் அடிமை கொண்டு சிறைப்படுத்திய பகை நாட்டு அரசகுல பெண்டிரை காவல் காப்பவர் என்கிறது. இந்த கல்வெட்டிற்கு அரசனது அரண்மனை அல்லது அந்தரங்க இடத்து காவல் பெண், காவல் மகன் என்று கொள்வதே பொருத்தமானது.

    பார்வை நூல்: வரலாற்று வடிவங்கள், கல்வெட்டு 50,  பக். 151, ஆசிரியர் புலவர் சு. குப்புசுவாமி & A.R. 156 of 1906

    எலவானாசூர்ச் சிவன் கோவில் வெளிப்பிரகாரத்து மேற்கு சுவர் 4 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ எதிரிகள் நாயனுக்கு மொட்டயராய் வேளை புக்கு சாவாதே
    2. போவார். மிணாட்டி மிணாளந் தேவப்பிள்ளை எதிரிகள்
    3. நாயனுக்கு பிந்பு  இருந்தேன்நாகில் எங்கள் அம்மைக்கு னானே
    4.  மணாளன் 

    மொட்டையர் – மணமாகாதார் அல்லது ஆண்மை நீக்கியவர். மொட்டை என்றால் பொட்டை. ஆண் குறியும் விதையும்  மழுக்கப் பட்ட அலி.

    விளக்கம்: “மலையமான் எதிரிகள் நாயனுக்கு ஆண்மை நீக்கியவராக காவல் பணிக்கு போகிற அலிகள் அவன் இறந்த பின்னும் சாகாமல் உயிர் வாழ்வார். ஆனால் மனைவி கொண்ட கணவனாக தேவப்பிள்ளை நானோ எதிரிகள் நாயனுக்கு பின்னர் சாகாமல் உயிர் வாழ்ந்தால் என் தாயிடம் நானே கலவி செய்தவன் ஆவேன்” என்று உறுதி ஏற்கிறான்.

    இப்படியான உறுதிமொழி அக்காலத்தே கட்டாயம் போலும். அதற்காக இப்படி நாக்கூசும் சொல்லாட்சி தேவையற்றது. மேலே உறுதி ஏற்கும் பெண்ணின் கணவன் இவன் என்று தெரிகிறது. அதோடு மன்னவர் அந்தப்புரத்தில் அலிகள் காவலுக்கு இருந்தனர் என்பதை இக்கல்வெட்டால் தெரிந்து கொள்ள முடிகிறது. இங்கே தேவப்பிள்ளை என்பவன் நான் அலிகளைப் போல் அல்லாமல் தற்கொலை செய்து கொண்டு சாவேன் என்று அலிகளை மட்டம் தட்டுகிறான். அரண்மனைகளில் அலிகள் காவல்புரிவது முதன்முதலாக மேலை ஆசிய சுமேரியாவில் இருந்ததாகப் பதிவுள்ளது. காவலில் அலிகளை இந்தியாவிலும் தமிழகத்திலும் அறிமுகப்படுத்தியோர் மேலை ஆசிய வந்தேறி ஆட்சியாளர்களே என்பதில் ஐயம் இல்லை. கண்ணன் வழிகாட்டலில் அகத்தியருடன் தென்னகம் வந்த வேளிரில் மலையமான்களும் உண்டோ?

    மீசை இல்லாதவரை பறையர்தாம் பெரும்பாலும் பொட்டை என்று திட்டுவர். ஒரு மீசையா வீரத்தையும் ஆண்மையையும் தீர்மானிக்கிறது, அதிலும் பிள்ளை பெற்றவனை பொட்டை எனத் திட்டுவது என்றால் இல்லை உயரமும் எடையும் தான் தீர்மானிக்கிறதே அன்றி மீசை அல்ல வீரத்தைத் தீர்மானிப்பது என்று சொல்லிவிட முடியும். என்றால் இப்படி மீசை இன்மையை இழித்துப் பழித்துப் பொட்டை என்று வாயாடுதல் அறிவுக்குறை அன்றோ? ஆம்! அது அறிவுமந்தம் தான். ஆயினும் ஒரு மூலம் இல்லாமல் இத்தனை ஆண்டுகளாக பொட்டை என இழிக்கும் வழக்கம் பறையர்களிடம் தலைமுறை தலைமுறையாக வந்திருக்காது அல்லவா? மூலத்தை ஆராயுங்கால் இந்த வேளக்கார அலிகள் பறையரைத் தொழிலால் தாழ்த்தி இழுவுபடுத்தியதன் காரணமாகவே அந்த அலி வேளக்காரர்களை பதிலுக்கு பறையர் பொட்டை என்று இழிவுபடுத்துவாராயினர் எனக் கொள்ளமுடிகிறது. இப்படித் தான் பொட்டை என்று திட்டும் வழக்கம் அவர்களிடம் வழிவழியாக வேரூன்றி உள்ளது. இன்று அந்த அரண்மனைகள் இல்லை அதே நேரம் அலிகள் வேளக்காரராய் அல்லாமல் பிச்சைக்காரராய் உள்ளனர். எனவே பறையரின் இந்த அறிவுக் குறையை போக்க எவரேனும் அறிவுரை கூற முன் வரவேண்டும். அவர்களை இதில் தெளிவுபடுத்த வேண்டும்.

    மீசை இல்லா அலெக்சாண்டர் படை மூன்று கண்டங்களில் தடுப்பார் இன்றி வெற்றிக் கொடி நாட்டியது. அதேபோல மீசையில்லா மங்கோலிய இன சப்பானியர் வீரத்தை யாரும் கேள்விக்கு உட்படுத்த முடியாது. தமிழ்நாட்டில் மட்டும் தான் முட்டாள்தனமாக “மீசை உள்ளவன் ஆம்பள, மீசை இல்லாதவன் பொட்டை” என்று வம்பு பேசி திரிகின்றனர். மீசை ஒன்றும் கிழிக்காது. நரம்பு வலுவும் தசை வலுவமே வீரனுக்கு காப்பு.

    பார்வை நூல்: வரலாற்று வடிவங்கள், கல்வெட்டு எண் 51, பக். 151, ஆசிரியர் புலவர் சு. குப்புசுவாமி & A.R. 156 of 1906

    எலவானாசூர் சிவன் கோவில் வெளிப்பிரகாரத்து மேற்கு சுவர் 4 வரிக் கல்வெட்டு

    1. எதிரிக னாயனுக்கு வேளைபுக்கு எதிரிக னாயனுக்கு பிந்பு  இ
    2. ருக்கும் வேளைக்காற மிணாட்டி மிணாளந் ஆள்ளுடையாந்நேன்
    3. நானும் எதிரிக நாயகநுக்கு பிந்பு இருந்தேநாகில் எந்நுடப் பிறந்
    4. தாளுக்கு நாநே மிணாளந்மொட்டையாய் கல்லு வெட்டி _ _ _ திருக்  _ _ _ (கல்வெட்டு சிதைந்து விட்டது)

    விளக்கம்: மலையமான் எதிரிக நாயனுக்கு காவல் பணியாகப் போய் எதிரிக நாயன் சாவிற்கு பின்பும் உயிரோடு இருக்கும் காவல் பணி மனைவி, கணவன்மார்களே ஆளுடையான் நான் சொல்வதைக் கேளுங்கள், நானும் உறுதி மொழி ஏற்கிறேன் “எதிரிக நாயன் மாண்ட பின்பு உயிரோடு இருந்தேனாகில் நான் என் உடன் பிறந்தாளோடு கலவி செய்தவனாவேன். நான் விதைகளும் தண்டும் மழித்து அலி ஆகிடுவேன் என்று கல்வெட்டி (கொடுத்தேன்) என்பதோடு கல்வெட்டு சிதைந்து விட்டதால் மேலும் செய்தியை அறிய முடியவில்லை. இந்த உறுதிமொழியை இறவாத காவல் பணி இணையர் முன்பு ஆளுடையபிள்ளை மேற்கொண்டதாகத் தெரிகிறது.  இவனும் அலியை இகழ்கிறான். பெண்மை இல்லாதவனை நங்கை என்ற பெண்ணைக் குறிக்கும் சொல்லால் திருநங்கை என்று குறிப்பது தவறு. திருநங்கை என்ற சொல்லாக்கம் தவறு. அலியே போதும்.

    பார்வை நூல்: வரலாற்று வடிவங்கள், கல்வெட்டு எண் 52,  பக். 152, ஆசிரியர் புலவர் சு. குப்புசுவாமி & A.R. 156 of 1906

    எலவானாசூர்ச் சிவன் கோவில் வெளிப்பிரகாரத்து மேற்கு சுவர் 4 வரிக் கல்வெட்டு

    1. எதிரிகள் நாயநுக்கு  வேளைபுக்கு எதிரி நாயநுக்கு பிந்பு இருக்கும்
    2. வேளைக்காறர் மிணாளந் சூரியநேன் நானும் எதிரிக நா
    3. யகனுக்கு பிந்பு இருந்தேனாகில் எந்
    4. உடன் பிறந்தாளுக்கு நாநே மிணாளன்  

    புக்கு – போகும், சேரும்

    விளக்கம்: மலையமான் எதிரிக நாயனுக்கு காவல் பணிக்கு போகும் எதிரிக நாயன் சாவுக்கு பின்னும் வாழப்போகும் வேளக்காரர்காள் நான் சொல்வது கேளுங்கள், “ஒரு பெண்ணுக்கு கணவனான சூரியன் எனும் பெயருடைய நான் எதிரிக நாயன் இறந்த பின் நான் உயிர் வாழ்வேனாகில் என் உடன் பிறந்தாளுடன் நான் கலவி கொண்டவனாவேன்” என்று உறுதிமொழி ஏற்கிறான்.

    பார்வை நூல்: வரலாற்று வடிவங்கள், எண் 53, பக்.153, புலவர் சு. குப்புசாமி

    திருகோவிலூர் வட்டத்தில் வசந்தகிருஷ்ணபுரம் மேட்டுக்கொல்லைப் பாறை 5 வரிக் கல்வெட்டு

    1. உய்யக்கொண்டி வேளைக்காற தொண்ட
    2. மாற் படைச்சந் இவனுக்கு பின் இருப்பேனாகில்
    3. தம்மைக்குத்  தாநேய்  மிணாளன்
    4. கொண்டி வேளக்காறந் வாளி தொண்டமாந்
    5. இவநுக்கு பின்பு இருப்பார் தங்களம்மைக்கு மிணாளர்

    கொண்டி – சிறப்பான, அடங்காத; படைச்சன் – படையாள்

    விளக்கம்: மன்னர் பெயரும் ஆண்டுக் குறிப்பும் இல்லாத 13 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு இது. உய்யக்கொண்டி என்னும் அடங்காத, சிறப்புடைய காவல் பணிக் குழுவை நடத்தும் தொண்டமானின் படையாள் இந்த தொண்டமான் இறப்பிற்கு பின் தான் உயிர் வாழ்ந்தேனாயின் என் தாயை நானே புணர்ந்தவன் ஆவேன் என்று சூளுரைக்கிறான். அடங்காத சிறப்புடைய காவல் பணிக்குழுவை நடத்தும் வாளி தொண்டைமான் இறந்தபின் உயிருடன் இருப்பவர் அவர் தம் அம்மைக்கு தாமே கலவியாளர் ஆவார். இங்கே தொண்டைமான் என்பவர் அரசன் அல்லன் ஆனால் ஏதோ ஒரு மன்னனின் காவல்பணிக் குழுவிற்கு தலைவன் ஆவான். அவன் மீது புதிதாய் சேரும் காவலர் சத்தியம் செய்கின்றனர். இரண்டு செய்திகளும் வெவ்வேறு காலத்தில் பொறித்தன போல உள்ளன.

    பார்வை நூல்: ஆவணம் இதழ் 4, பக். 21

    வட ஆர்க்காடு மாவட்டம் திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில் தென் பக்கத்தில் உள்ள முதல் பிரகாரத்தில் தரையில் பதித்த பலகைக் கல்லில் உள்ள 7 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ கோவிராசகேசரி பந்மற்கி யாண்டு 13
    2. ஆவது வாணகோவரையர் குணமந்தன் குறும்ப கோ
    3. லாலன் வயிரமேகனார் கொடுக்கன் சிற்றண்புலியூர்
    4. நாடன் திருவண்ணா நாட்டு தேவதாநப் பிரமதேயம் புலி
    5. யூர் நாடி ஸதுர்வ்வேதி மங்கலத்து ஏரிக்கு அறமாக குடு
    6. த்த பொன் முதல் இருபதின் கழஞ்சு துளைபொன் காற் ப
    7. லிசையால் ஆட்டு ஐங்கழஞ்சு பொன் பங்கினி பட்ட தலையா _ _

    குணமந்தன் – குணக்குன்று; கொடுக்கன் – மகன்;

    விளக்கம்: சோழன் முதலாம் ஆதித்தனின் பதின்மூன்றாம் ஆட்சி ஆண்டு 884 இல் வாணகோவரையர் குணம் நிறைந்தவன் குறும்பர் தம் தலைமைக் செங்கோலைக் கொண்டவன் வாணகோப்பாடி மன்னன் வயிரமேக வாணரைசன் மகன் சிற்றண்புலியூர் நாடன் திருவண்ணா நாட்டின் தேவதானப் பிரம்மதேச ஊர் நாடி சதுர்வேதி மங்கலத்தில் உள்ள ஏரியைப் பேண தர்மமாகக் கொடுத்த பொன் மூலதனம் 20 கழஞ்சு துளைப் பொன்னாகும். அதற்கு ஆண்டுக்கு கால் பொன் வட்டியாக ஐந்து கழஞ்சு பொன் பங்கு  என்பதுடன் கல்வெட்டு சிதைந்துவிட்டது. அதனால் முழு விவரம் தெரியவில்லை.

    இக்கல்வெட்டு முகமையாக தெரிவிக்கும் செய்தி வாணர் ஆடு மேய்க்கும் குறும்பர் இனத்தவர் என்பதே. வாணர் கோலாரைத் தலைமை இடமாகக் கொண்டு ஆண்ட கன்னடர் ஆவர். தமிழகத்தில் பல்லவர், முத்தரையர் கன்னியாகுமரி வரை பரவி ஆண்டது போல பரவி ஆண்டவர் வாணர்.

    பார்வை நூல்: தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 8, எண் 65, பக். 32

    இன்னும் சில கல்வெட்டுகளை காண click  https://groups.google.com/g/vallamai/c/I8OUSI1Ipa8/m/3-GYDO4tAQAJ

    Share
  • வாயாடி (சிறுகதை)

    ஜெ. ஜெயகுமார்
    சென்னை

    லதாவின் பதிலைக்கேட்ட அவள் அம்மா மாலதி அதிர்ச்சியில் உறைந்தாள்.

    “என்னடி சொல்றே? பைத்தியமா உனக்கு?” என்று இரைந்தாள்

    “ஆமாம்மா! நான் ராகுலை கல்யாணம் பணணிக்க மாட்டேன்!” என்றாள் லதா ஆழ்ந்த அமைதியுடனும் அழுத்தமான தீர்மானத்துடனும்.

    “மானம் போய்டும்டி!” என்று ஆவேசமாக லதாவை அறைய கையை ஓங்கினாள் அம்மா.

    ஆனால் லதாவிடமிருந்த தீர்க்கமான முடிவும் அவள் கடின உடல்மொழியும் அவளை தடுத்து நிறுத்தியது.

    மாலதிக்கு தலை சுற்றியது. அப்பா இல்லாத பெண்ணை செல்லம் கொடுத்து வளர்த்து விட்டோமே என்று தன்னைத்தானே நொந்து கொண்டாள்.

    லதாவும் ராகுலும் ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராய்  விரும்பி காதலித்து இரு வீட்டாரின் ஆரம்ப நிலை தயக்கத்தை உடைத்து இருவரும் இரு வீட்டாரையும் கெஞ்சியும் கொஞ்சியும் சம்மதிக்க வைத்து தாஜ் ஹோட்டலில் “பெட்ரோதல்” எனப்படும் நிச்சயதார்தத்தை ஆடம்பரமாக  நடத்தி இருவரின் அலுவலக ஐ . டி. இஞ்சீனியர்களையும் வியப்பில் ஆழ்த்திய ஒரே வருடத்தில் “ராகுல் வேண்டாம்” என்றால் யாருக்குத்தான் திகைப்பு ஆவேசம், கோபம் வராது?

    சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு அதிர்ச்சி செய்தியை மெல்ல ஜீரணித்துக்கொண்டு ஒரு கிளாஸ் தண்ணீர் அருந்திக்கொண்டு மாலதி, மகளிடம் “ஏன்? என்ன ஆச்சு? என்று பதட்டம் தணிந்த குரலில் வினவினாள் மாலதி.

    பொதுவாக நிச்சயதார்த்தம் முடிந்த ஒரு சில மாதங்களிலேயே திருமணம் நடத்திவிடும் இந்த காலகட்டத்தில் மேல் படிப்பு, ட்ரான்ஸ்பர் என்பதை காரணம் காட்டி முகூர்த்ததை  ஒத்திப்போடுவது விபரீதத்தில் முடியலாம் என்பதற்கு ராகுல்-லதா கேஸ் ஒரு சாம்பிள்.

    லதாவிடமிருந்து மௌனமே பதிலாக வந்ததால் மாலதி மேலும் தொடர்ந்தாள்.

    “ஏண்டி! இதுக்குதான் சொன்னேன், தொட்டதெற்கெல்லாம் பார்ட்டி, பிக்னிக் என்று சுத்தாதே! அவா ஆத்துக்கெல்லாம் அடிக்கடி முணுக்கென்றால் போயிண்டு இருக்காதேன்னு  வார்ன் பண்ணினேன்!“ நீ கேக்கலே;”

    “மூணு முடிச்சு போடற வரைக்கும் எட்டி இருந்தால்தான் வாசனை’ன்னு உனக்கு எத்தனை தரம் திருப்பி திருப்பி சொல்றது! போடி!” என்று அம்மா பெரும் மூச்சிறைந்தாள்.

    “இல்லேம்மா! அவரை  ரொம்ப குளோஸ்சா  அப்சர்வ் பண்ணப்பதான் எனக்கு அவரோட ரொட்டீன், வீக்னஸ்லாம் தெரிஞ்சுது! அவரு ரொம்ப சோம்பேறிமா! எழுந்திருக்கருத்துக்கே  எட்டு மணி! எக்சர்சைஸ் வாக்கிங் ஒண்ணும் கிடையாது! சில சமயம் குளிக்காமலேயே ஆபீஸ் வந்துரராரு, ஷேவிங் பண்ணிக்கிறதில்லே; அன்டர்-ஆர்ம்ஸ் ஷேவ் பண்ணிக்கிறதில்லே; ஒரே “ஸ்வெட் ஸ்மெல்”; “இன் தி லாங் ரன்“ அவர் எனக்கு சூட் ஆக மாட்டார்மா;!

    “பின்னே என்ன தைரியத்திலே அவனை லவ் பண்ணினே?”

    ஆரம்பத்திலே நன்னாதான் பேசினார், பழகினார்மா; இம்ப்ரஸிவ்வா இருந்தார்”

    “அப்புறம் என்ன ஆச்சு?”

    எப்பவாவது சிகரெட் ஸ்மோக் பண்ணுவார்; பீர் சாப்பிடுவார், கே.எஃப்.ஸி  போவாரு!

    “கண்டராவி! அதெல்லாம் ரொம்ப ரொமான்டிக்கா இருந்துதோ?”

    லதா குற்ற உணர்வால் சற்றே தலை குனிந்தாள்.

    திடீர்ன்னு “நீங்க இதப்பண்ணப்படாது  அதப்பண்ணப்படாதுன்னு சொன்னியா?”

    ஆமாம்மா ! மொதல்ல ஒண்ணு ரெண்டு சிகரெட், இப்ப ஒரு பாக்கெட்;

    ஆரம்பத்தில்  ஒரு பாட்டில் பீர், இப்ப ஸ்காட்ச்சும் பீரும் கலந்து காக்டெயில்லா அடிக்கிறார்மா!

    “நீ ஏதாவது சாப்பிட்டாயா?”

    ………………………………………….

    ………………………………………….

    சொல்லுடி! வாயை திறந்து?!”

    ஆமாம்மா! ஒரு பீர் மாத்திரம்  கம்பெனி கொடுத்தேன்!”

    “கர்மம்! கர்மம்! கம்பெனியாம்! இப்படி ஏதாவது  செய்யறது; அப்புறம் ஆம்பளை எல்லை மீறினா “அய்யோ! அய்யோன்னு புலம்பறது!

    ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தி இருக்கலாம்மோல்யோ!

    சொன்னா கேள்டி, அதையெல்லாம் சரி பண்ணிருல்லாம், வீக்னஸ் இல்லாத ஆம்பிளையா இல்லை பொம்மனாட்டியா?

    அம்மா! எனக்கு ராகுல் வேண்டாம்”என்றாள்  லதா தீர்மானமாக.

    மாலதியின் கோபமும் ஆவேசமும் உச்சத்திற்கு சென்றன.

    “போடி! பைத்தியக்காரி! நூறு பேர் முன்னாடி பந்தாவா தாஜ் ஹோட்டல்ல நிச்சயம் பண்றது, குதிக்கறது, குடிக்கறது, கும்மாளம் போடறது, அப்புறம் மாப்பிள்ளை வேண்டாம்கிறது! புதுசா வேற ஒருத்தன் பேரை போட்டு நான் அந்த நூறு பேர் கிட்ட “என் பொண்ணுக்கு கல்யாணம்”னு பத்திரிக்கை கொடுத்தால் அவா என்னை செருப்பால அடிக்க மாட்டா? என்ன நெனைச்சுண்டு இருக்கே உன் மனசிலே? எல்லாம் உங்கப்பா கொடுத்த செல்லம்டி! அவர் ஆக்சிடென்ட்ல பொசுக்குன்னு போய்ட்டார்! இப்ப நான் கிடந்து இந்த கர்மத்தை எல்லாம் அனுபவிக்க வேண்டியிருக்கு! போ!”

    நாட்கள் சென்றன. மாலதியின் தங்கை ரம்யா டில்லியில் இருந்து சென்னை வந்தாள். இந்த நேரம் பார்த்து  சித்தி வர்றாளே என்று லதா கவலைப்பட்டாள். ஏனென்றால் சித்தி வாயாடி. நோண்டி நோண்டி விஷயத்தை எப்படியாவது கறந்துவிடுவாள்.

    பிரயாண களைப்பு  தீர்ந்த சில மணி நேரத்திலேயே ரம்யாவின் பேச்சு களை கட்டியது.

    “இந்த “வந்தே பாரத்” வந்தாலும் வந்தது , மத்த இரயில் ஸ்டாண்டர்ட்  எல்லாம் குறைஞ்சு போய்டுத்து; இத்தனைக்கும் “தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்”ஸில் ஏ. ஸி. 3 டயர்ரில் தான் வந்தேன். எவன் எவனோ டிக்கெட் இல்லாமலேயே ஏறறான்; பெர்த் பாசஞ்சர் கேட்டால் முறைக்கிறான்; டி. டி. ஈ., ஐபேட்ஐ பார்த்துக்கொண்டே அடுத்த கம்பார்ட்மெண்ட்க்கு போய்டிரார்! ஒவ்வொரு கம்பார்ட்மெண்ட்க்கும் ஒரு செக்யூரிட்டி கார்ட் போட்டால் நிறைய பேருக்கு வேலை கிடைக்கும்; நமக்கு நிம்மதி கிடைக்கும்; ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் கூட பத்து ரூபாய் பதினைந்து ரூபாய் எக்ஸ்ட்ராவாக வாங்கினால் செக்யூரிட்டிக்கு சம்பளம் கொடுக்கலாம்; நமக்கும் நல்ல  தூக்கம்  கிடைக்கும் என்று ரயில்வேக்கு விலையில்லா இலவச யோசனை வழங்கினாள். பொதுவாகவே ரம்யா வாயாடி. இப்ப டில்லியில் வேற இருக்காளா, ஹிந்தியும் வெளுத்து வாங்கறா!

    ஒரு காப்பிக்கு பின், “ஏண்டி லதா! எப்ப கல்யாண சாப்பாடு போடப் போறே? என்று கச்சேரியை  ஆரம்பித்தாள். “ராகுல் பிள்ளையாண்டான் எப்படி இருக்கான்? கல்யாண மாப்பிள்ளை அல்லவா? அதான் விசாரிச்சேன்”

    லதாவுக்கு சித்தியின் “ஆல் இன் ஆல்” அரட்டை என்றாலே கொஞ்சம் அலர்ஜி!

    சித்தியின் அபார ஆளுமையால் கலங்கி நின்ற லதா “சட்டென்று அவசரப்பட்டு, விதரணை தெரியாமல்,  “ராகுல்ஐ கல்யாணம் பண்ணிக்க போறதில்லை” என்று உளறிவிட்டாள்.

    அவ்வளவுதான்! சித்தியின் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் வேகம் எடுத்துவிட்டது!

    ஏற்கனவே மாலதி மறைமுகமாக லதாவின் அபத்த முடிவை சொல்லியிருந்ததால், சித்தி ஆரம்பித்து விட்டாள் ஆவேச அட்வைஸ்ஐ!

    ஏண்டி! உங்கப்பா எங்க அக்காவை கல்யாணம் பண்ணாமல் வேறொரு பெண் வாக்கப்பட்டு இருந்தால் நீ பிறந்தே இருக்க மாட்டே தெரியுமோ! என்று பொட்டில் அறைந்தார்போல் ஆரம்பித்தாள்.

    உங்கம்மா மேலே வேறொரு ஜாதிக்கார ஆபிசர் உயிரையே வச்சிருந்தான்! ஜாதி பிரச்னையிலே, ஆத்தில் நடந்த யுத்தத்திலே அந்த கல்யாணம் நடக்கலே! அப்படி நடந்து இருந்தா நீ பொறந்திருப்பியா? வேறொரு பொண்ணோ ஆணோ இந்த ஆத்திலே நடமாடிண்டு இருந்திருப்பா இப்ப!

    உங்கப்பா மட்டும் என்ன பெரிசா கிழிச்சார்? தாம்பத்திய உறவிலேயே இண்டரெஸ்ட் இல்லாம கோவில் கோவிலா சுத்தி திரிஞ்சவரை, செக்ஸ்சாலஜிஸ்ட்  சைக்கியாடிறிஸ்ட், என்றெல்லாம் காண்பித்து, தாது லேகியம், என்று ஏதேதோ உங்கப்பாவை சாப்பிட வைத்து நீ பொறந்தே! கொஞ்ச நாளிலேயே அவர் போய்ட்டார்! உங்கம்மாதான் ஒத்த ஜீவனா பாங்க் வேலைக்கும் போய்யிண்டு உன்னை வளர்த்து ஆளாக்கியிருக்கா;

    சித்தி சற்று லதாவிடம் நெருங்கி வந்து கிசு கிசு குரலில்” ராகுல்லோட சினிமாவுக்கெல்லாம் போய் இருக்கியே? தியேட்டர்ல பக்கத்துல பக்கத்துல உட்கார்ந்து இருக்கரச்ச ரொமான்டிக் மூட்ல, அவன் மடியிலே வாட்டர் பாட்டில்லையோ, பாப்கார்ன் பாக்கெட்டையோ ஒண்ணுமே தெரியாத மாறி வச்சு அதை எடுக்கரச்ச படாத இடத்தில விரல் பட, அவன் “கும்” என்று ஆம்பிளையா இருந்ததை கண்டு பிடிச்சு இருப்பியே?

    சித்தியின் “ஏவுகணை” பேச்சைக்கேட்டு அதிர்ந்த லதா  ரெகவர் ஆவதற்குள், சித்தி “அப்புறம் என்னடி, அதாண்டி முக்கியம், மத்த எல்லாத்தையும் கல்யாணத்துக்கு அப்புறம் மாத்திடலாம்டி! “

    சித்தி இப்பொழுது ஏ.கே.47 துப்பாக்கியை எடுத்தாள். “சரி! இன்னொருத்தனோட போறே; அவன் ராகுலை விட மோசமா இருந்தா அவனையும் விட்டுட்டு இன்னொருத்ததனோட சுத்துவியா?

    யாருக்குத்தான் ஆசையில்லே? ம்ஹூம்! ஒவ்வொரு ஜோடியையும் பாக்கறச்சே நமக்கும் அதுமாதிரி அமையலேயேன்னு  சில சமயம் தோணும்; உள்ளே போய் பார்த்தால்தான் பவிசு தெரியும்!” என்னையே எடுத்துக்கோ! அவர் பஹ்ரைன்ல இருக்கார். வருஷத்துக்கு ஒரு மாசம் வந்துட்டு போறார்;” பணம் ஏதோ இருக்கு; மத்த சுகம்?

    லாஸ்ட் ஓவர் என்பதால் தோனி போல சித்தி சிக்ஸ் அடிக்க ஆரம்பித்துவிட்டாள்.

    “அவன் யோக்கியனா, நல்ல குடும்பமா, நன்னா சம்பாதிக்கிறானா, ஓரளவுக்கு நாம் சொல்றதை கேட்பானா, இதெல்லாம் இருந்தால் போதும்டி, அவனை நம் கையிலே போட்டுண்டுரலாம்!

    கடைக்கு போய் புடவை எடுக்கிறோம், கடைக்காரன்  எடுத்து போடறதை எல்லாம் பார்க்கிறோம். பெரும்பாலும், நாம் முதன் முதல்ல பார்த்து புடிச்ச புடவையை தாண்டி எத்தனை புடவையை பார்த்தாலும் முதல்ல நமக்கு  எது புடிச்சு  இருந்துதோ, அந்த  புடவையைதான்  நாம் செலக்ட் பண்ணுவோம்.” விலை முன்ன பின்ன இருந்தாலும்;

    “First impression is the best impression”டி!

    “உன் உள்மனசு சொல்லி சொல்லி ஒரு வருஷமா ராகுலை நெஞ்சுக்குள்ளே வச்சு பூஜை பண்ணியிருக்கே,!

    அவனை எவளாவது அள்ளிண்டு போறதுக்குள்ளே நீ அவனை விட்டுறாதேடி! உள்ளதும் போய்த் தொலைக்கப்போறது!” என்று முடித்தாள் சித்தி.

    ஒரு கணம் லதாவின் மனதில் அவள் ஆபீஸ் தோழி ரேகா பெர்ஃப்யூம் மணத்துடன்  ராகுலுடன் அடிக்கடி நெருங்கி நெருங்கி பேசுவது நினைவுக்கு வந்தது.

    சித்தியின் “உள்ளதும் போய்த் தொலைக்கப்போறது “ என்ற வார்த்தை மீண்டும் மீண்டும் ஊஞ்சலாடியது.

    அவள் திருமண விமானம் பாதுகாப்பாக தரை இறங்கியது.

    Share
  • தமிழர்களின் கடல்சார் வணிகம்

    தமிழர்களின் கடல்சார் வணிகம்

    ஆய்வாளர்

    .பாஸ்கர்
    முதுகலைத் தமிழ் இரண்டாமாண்டு,
    மொழிகள் துறை,
    பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்,
    பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகம்,
    வல்லம், தஞ்சாவூர்.

    ஆய்வு நெறியாளர்

    புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள்
    உதவிப் பேராசிரியர், மொழிகள் துறை,
    பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்,
    பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகம்,
    வல்லம், தஞ்சை மாவட்டம் – 613403.

    முன்னுரை   

    சங்ககாலம் முதற்கொண்டு வணிகத்தில் தமிழர் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றனர். “திரைகடலோடியும் திரவியம் தேடு  என்பது ஒரு முதுமொழி. இருப்பினும் வணிகச் சமூகம் பல சமயங்களில் நியாயமற்ற முறையில் சுரண்டல் மூலம் செல்வம் ஈட்டிச் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் அல்லது சமனற்ற போக்கைப் பெருகச் செய்யும் போது அதனால் பாதிக்கப்பட்டவர்கள் “வர்க்கப் போராட்டத்தில்” ஈடுபட்டு வணிகரை எதிர்த்துள்ளார்கள். எடுத்துக்காட்டாக “உழவர் சமூகத்தைச் சேர்ந்த  அப்பர்  தலைமையில் தமிழ்நாட்டில் பொதுமக்கள் செல்வம் நிறைந்த வணிகருக்குக்கெதிராகத் திரண்டெழுந்ததைக்” குறிப்பிடலாம்.

    பல்வேறு துறைமுகங்கள்

    அரபு நாட்டினர், யவனர், சாவக நாட்டினர் ஆகிய பிறநாட்டினர் தமிழ்நாட்டிற்கு வணிகத்திற்காக வருகை புரிந்தனர். இதனால் தமிழகக் கடற்கரையில் பல்வேறு துறைமுகங்கள் உருவாகும் சூழல் உருவானது. குமரித் துறைமுகம், கொல்லந்துறை துறைமுகம், எயிற்பட்டினத் துறைமுகம், அரிக்கமேடு துறைமுகம், காவிரிப்பூம்பட்டினத் துறைமுகம், தொண்டித் துறைமுகம், மருங்கூர்ப் பட்டினத் துறைமுகம், முசிறி துறைமுகம், இலங்கையில் பல இடங்களில் இருந்த துறைமுகங்கள் எனப் பல்வேறு இடங்களில் துறைமுகங்கள் இருந்ததை அறிய முடிகிறது. பண்டைத் தமிழ்ச் சமுதாயத்தில் காணப்படும் வணிகம் தொடர்பான செய்திகள், வளர்ச்சி பெற்ற நாகரிகம் மிக்க சமுதாயமாகத் தமிழ்ச் சமுதாயம் இருந்ததை உறுதிப்படுத்துகிறது.

    பட்டினப்பாலையில் வணிகம்

    இன்றைய தமிழகம் வணிகத் துறையில் ஏற்றுமதி இறக்குமதியில் இந்தியாவில் எந்த மாநிலத்தைக் காட்டிலும் முன்னிலையில் உள்ளது. தமிழகத்தின் துறைமுகங்களோ உலக அளவில் மற்ற முன்னணி நாடுகளுடன் போட்டிபோடும் விதத்தில் சிறந்து விளங்குகிறது.  இன்று மட்டுமல்ல ஏறத்தாழ சங்கக் காலம் தொட்டே தமிழகத் துறைமுகங்கள் இரவு பகல் பாராமல் இயங்கின என்று அறியமுடிகிறது. சங்கக் காலச் சோழ மாமன்னன் கரிகாற்பெருவளவனின் வணிகத் தலைநகராக விளங்கிய காவிரிப்பூம்பட்டினத்தின் துறைமுகமும் அதைச் சார்ந்த அங்காடிகளும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இரவும் பகலும் இயங்கியுள்ளது. பகலில் இயங்கிய கடைகளுக்கு ‘நாளங்காடி’ எனவும் இரவில் இயங்கிய கடைகளுக்கு ‘அல்லங்காடி’ எனவும் பெயரிடப்பட்டது. இன்றைய சுங்க நடைமுறையும் அப்போதே தொடங்கிவிட்டது போலும்.

    “புலிபொறித்துப் புறம்போக்கி”1

    என்னும் பட்டினப்பாலை வரி மூலம் காவிரிப்பூம்பட்டினத்தில் ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மீது சோழரின் புலிச்சின்னம் பொறிக்கப்பட்டது என்பது புலனாகிறது. மேலும் காவிரிப்பூம்பட்டினத்தில் கையாளப்பட்ட பொருட்களின் வகைகளைப் பின்வரும் செய்தியால் அறியலாம்.

    மரக்கலன்களில் கொண்டுவரப்பட்ட குதிரைகளும், மிளகு மூட்டைகளும், மேருமலையில் தோன்றிய மாணிக்கமும், பொன்னும், மேற்கு மலையில் கிடைத்த சந்தனமும், அகிலும், கொற்கை முத்துக்களும், கிழக்குக் கடற்கரையில் கொணர்ந்த பவளமும், கங்கை, காவிரியில் கிடைத்த பொருட்களும், ஈழம், காடரம் (இன்றைய மலேசியா) பொருட்களும்  இரு துறைமுகமும் எத்துணை சிறப்பாக நிர்வகிக்கப்பட்டிருந்தால் இத்துணை பொருட்கள் கையாளப்பட்டிருக்கும் என்பதை ஊகிக்கலாம். பண்டைய தமிழகத்தின் கடல்சார் வணிகம் எத்துணை சிறப்பாக நடந்தது என்பதனைச் சங்கக் கால நூலான பட்டினப்பாலை கூறுகின்றது.

    கடல் வாணிகம்

    பழந்தமிழர் செல்வம் ஈட்டும் பொருட்டு உலகின் பலநாடுகளுக்குக் கடற்பயணம் மூலம் வாணிகம் செய்துள்ளனர். கங்கைக்கரையில் இருந்த பாடாலிபுரம், இலங்கை, பர்மா, கடாரம் (மலேசியா), சாவகநாடு (கிழக்கிந்தியத் தீவுகள்), அரபுநாடுகள், எகிப்து, யவனம் (ரோம், கிரேக்கம்) போன்ற பல நாடுகளுடன் வாணிகம் செய்ததுடன் பல துறைமுகங்கள் தமிழரின் கட்டுப்பாட்டிலே இருந்துள்ளன. “கலிங்க நாட்டில் பித்தும்டா வணிக நகரம் பலகாலமாகத் தமிழர் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது என்பதும், அதை மீட்ட கலிங்க மன்னர் அந்நகரத்தை உழுது அழித்தார்” என்பதும் அத்திக்கும்பா கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    யூத அரசர் சாலமன் அரண்மனையில் தமிழகத் தேக்கு மரப்பொருள்கள் இருந்த குறிப்புகள் யூதர்களின் புனிதநூலான தோராவில் உள்ளது. யவனர்களுடனான வணிகத் தொடர்பைப் “பெரிப்ளூசின் செங்கடல் செலவு” (The periplus of the Erith-rean Sea) என்னும் நூலில் அறியலாம். இந்நூல் கொற்கை நகரில் கிடைக்கும் முத்துக்கள் வேறு பொருட்களை விட மதிப்பு வாய்ந்தவை என்று குறிப்பிடுகிறது. பிளைனி, தாலமி போன்றோரின் குறிப்புக்களும் தமிழரின் பிறநாட்டு வணிகத் தொடர்பையும் பண்டைய தமிழகத் துறைமுகங்களின் பெருமையையும் குறிப்பிடுகின்றன. கீழடியில் கிடைத்த உரோமானிய நாணயங்களும், ரௌலட் அரிட்டைன் வகை மண்பாண்டங்களும் கிடைத்துள்ளன. மண்டபம் அருகில் உள்ள அழகன்குளம், புதுச்சேரியின் அரிக்கமேடு போன்ற இடங்களில் தொல்லியல் ஆய்வுகளில் கிடைத்த எகிப்து நாட்டின் பானையோடுகளும், பெண்ணின் சித்திரம் பதித்த பானையோடுகளும், மணிகளும், நந்த அரசர்களின் நாணயங்களும் கிடைத்துள்ளன.

    தமிழ்நாட்டு வணிகம்

    தமிழ்நாட்டின் மூன்று பக்கங்களிலும் கடல் சூழ்ந்திருந்தபடியால் தமிழர் இயற்கையாகவே கடற்பயணம் செய்வதிலும் கடல் வாணிகம் செய்வதிலும் தொன்றுதொட்டு ஈடுபட்டிருந்தார்கள். மேலும் கடற்கரையாகிய நெய்தல் நிலங்களில் வாழ்ந்தவர்கள் நாள்தோறும் கடலில் சென்று மீன் பிடித்து வந்து வாழ்க்கையை நடத்தினார்கள். ஆகையால் கடலில் போய் வருவது தமிழர்களுக்குப் பழங்காலம் முதல் இயற்கையான தொழிலாக இருந்தது. கடலில் நெடுந்தூரம் கப்பலில் போகவும் வரவும் பழங்காலத்திலேயே பழகினார்கள். கரிகால் சோழனுடைய முன்னோனான ஒரு சோழன் கடற்காற்றின் உதவியினால் கடலில் நாவாய் ஓட்டினான்.

    “நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
    வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!2

    என்று புறநானூற்றுச் செய்யுள் கூறுகிறது. பழம் காலத்துப் பாண்டியன் ஒருவன் தன் அடி, அலம்பக் கடலில் நின்றான் என்றும், கடலில் தன் வேலை எறிந்து அதை அடக்கினான் என்றும் கூறப்படுகிறான். இதன் கருத்து என்னவென்றால், அவன் கடலை அடக்கிக் கடலில் நாவாய் செலுத்திக் கடற்பயணத்தை எளிதாக்கினான் என்பது. இவற்றிலிருந்து கடலில் பயணம் செய்வதைத் தமிழர் ஆதி காலத்திலிருந்து நடத்தினார்கள் என்பது தெரிகின்றது. கடலில் கப்பலோட்டுவது அக்காலத் தமிழருக்குக் கைவந்த கலையாயிற்று. அவர்கள் கடல் கடந்து போய் வாணிகம் செய்தார்கள். கடலில் சென்று வாணிகஞ் செய்தது போலவே தரை வழியாகவும் பல நாடுகளுக்குப் போய் வாணிகம் செய்தார்கள். தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல் தரை வழியாக வட இந்திய நகரங்களுக்கும் போய் வாணிகஞ் செய்தார்கள். பெரிய வாணிகம் செய்தவர்களுக்குப் பெருங்குடி வாணிகர் என்பது பெயர். அயல் நாடுகளுக்கு வாணிகஞ் செய்யச் சென்றவர் ஒன்று சேர்ந்து கூட்டமாகச் சென்றார்கள். வணிகக் கூட்டத்துக்கு ‘வணிகச்சாத்து’ என்னும் பெயர்வழக்கு நிலவியது.

    கரையோர வணிகம்

    கொற்கை, தொண்டி, பூம்புகார், சோபட்டினம் முதலான தமிழ்நாட்டுத் துறைமுகப் பட்டினங்களிலிருந்து நாவாய்களில் புறப்பட்டுச் சென்ற தமிழ வாணிகர் கிழக்குக் கடல் ஓரமாகவே நாவாய்களைச் செலுத்தி நெல்லூர், கலிங்கப் பட்டினம், தம்ரலிப்தி (வங்காள தேசத் துறைமுகப் பட்டினம்) முதலான பட்டினங்களுக்குச் சென்றனர். பிறகு கங்கையாறு கடலில் – கலக்கிற புகர் முகத்தின் ஊடே கரையில் இருந்த பாடலிபுரம், காசி (வாரணாசி) முதலான ஊர்களில் வாணிகஞ் செய்து திரும்பினார்கள். ‘கங்கை வங்கம் போகுவர் கொல்லோ, என்று நற்றினை (189:5) கூறுகிறது. கங்கைக் கரையில் பாடலிபுரத்தில் தமிழர் வாணிகஞ் செய்த போது, கி.மு. 4 ஆம் நூற்றாண்டில் மகதநாட்டை அரசாண்ட நந்த அரசர், தங்களுடைய தலைநகரமான பாடலிபுரத்தில் கங்கையாற்றின் கீழே பெருஞ்செல்வத்தைப் புதைத்து வைத்திருந்ததைப் பற்றி அறிந்தனர். தமிழக வாணிகரின் மூலமாக நந்த அரசரின் செல்வப் புதையலைத் தமிழ்நாட்டவர் அக்காலத்தில் அறிந்திருந்தார்கள். மாமூலனார் என்னும் சங்கப் புலவர் தம்முடைய செய்யுளில் நந்தருடைய நிதியைக் கூறுகிறார்.

    “பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்
    சீர்மிகு பாடலிக குழீஇக் கங்கை
    நீர்முதற் கரந்த நிதியங் கொல்லோ “   3

    நந்த அரசரின் செல்வப் புதையலைப் பற்றிய இந்தச் செய்தியை மேற்கண்ட செய்யுள் வரிகள் உறுதி செய்கின்றன. வடநாட்டுப் பழைய நூல்களில் இச்செய்தி கூறப்படவில்லை.

    தமிழ் வாணிகர் கலிங்கம் வரை சென்று வாணிகஞ் செய்தார்கள். அந்த வாணிகச் சாத்து கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. 150 வரையில் நூற்றைம்பது ஆண்டுகள் அங்குத் தங்கி வாணிகம் செய்தது. அவர்களுடைய வாணிகம் நாளுக்கு நாள் பெருகிச் செல்வாக்கும் பலமும் அடைந்தது. அக்காலத்தில் கலிங்க தேசத்தை அரசாண்ட காரவேலன் என்னும் அரசன் தமிழக வாணிகரால் தன்னுடைய ஆட்சிக்கே ஆபத்து உண்டாகும் என்று அஞ்சி அந்த வாணிகச் சாத்தை அழித்து விட்டான். அந்தச் செய்தியை அவ்வரசன் எழுதியுள்ள ஹத்தி கும்பா குகைக் கல்வெட்டெழுத்துச் சாசனத்திலிருந்து அறிகிறோம். கலிங்க தேசத்தில் வாணிகஞ் செய்த தமிழர் கலிங்க நாட்டுப் பொருள்களைத் தமிழகத்துக்கும் தமிழகத்துப் பொருள்களைக் கலிங்க நாட்டுக்கும் கொண்டு போய் விற்றார்கள். கலிங்க நாட்டிலிருந்து தமிழ்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட முக்கியமான பொருள்: பருத்தித் துணி, பெருவாரியாகக் கலிங்கத் துணி தமிழ்நாட்டில் இறக்குமதியாயிற்று. கலிங்கத்திலிருந்து வந்தபடியால் அத்துணி கலிங்கத்துணி என்று சிறப்பாகப் பெயர் பெற்றது. பிறகு காலப்போக்கில் கலிங்கம் என்னும் பெயர் துணிகளுக்குப் பொதுப்பெயராக வழங்கப்பட்டது. சங்க நூல்களில் துணிக்குப் பெயராகக் கலிங்கம் என்னும் சொல் வழங்கப்பட்டிருக்கிறது. கலிங்க நாட்டிலிருந்து அக்காலத்தில் தமிழ்நாட்டுக்கு வந்த இன்னொரு பொருள் சந்தனக்கல், இதனை இலக்கியங்கள் ‘வடவர் தந்த வான் கேழ் வட்டம்’ என்று குறிப்பிட்டன.

    நடுக்கடல் வாணிகம்

    தமிழகத்துக் கப்பல் வணிகர் சாவக நாட்டுக்குக் கடல் கடந்து சென்று அங்கு உண்டான வாசப் பொருள்களையும் பவளத்தையும் சீனத்திலிருந்து அங்குக் கொண்டு வரப்பட்ட பட்டுத்துகிலையும் கொண்டு வந்து பழந்தமிழ்நாட்டில் விற்றார்கள். அக்காலத்தில் சீனர் தமிழ்நாட்டுக்கு வரவில்லை. அவர்கள் சாவகத்தோடு நின்று விட்டார்கள். அவர்கள் சாவகத்துக்குக் கொண்டுவந்த பட்டுக்கள், அங்குச் சென்ற தமிழக வாணிகர் வாங்கிக் கொண்டு வந்து இங்கு விற்றார்கள். தமிழர் பட்டுத் துணியை ‘நூலாக்கலிங்கம்’ என்று சுட்டியது சங்க இலக்கியங்களால் அறிய முடிகிறது.

    சாவக நாட்டிலிருந்து கிடைத்த வாசனைப் பொருள்களைச் சிலப்பதிகாரம் கூறுகிறது. வாசனைப் பொருள்களை விற்றவர்  வாசவர் என்று பெயர் கூறப்பட்டனர். வாசனைப் பொருள்கள் ஐந்து என்றும் அவை பஞ்ச வாசம் என்றும் கூறப்பட்டன. பஞ்ச வாசம், தமிழ்நாட்டிலிருந்து சாவக நாட்டுக்குச் சென்ற கப்பல்கள் முதலில் இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த (இப்போதைய யாழ்ப்பாணம்) மணிபல்லவம் என்னும் சம்புகொல பட்டினத்துக்குச் சென்று தங்கின. இது கப்பல்கள் தங்குவதற்கு நல்ல துறைமுகமாக இருந்தது. ஆனால், இங்கு ஏற்றுமதி, இறக்குமதி நடைபெறவில்லை. மணிபல்லவம் (சம்புகொல பட்டினம்) அக்காலத்தில் மனிதர் வாழாத இடமாக இருந்தது. அங்குச் சென்று தங்கின கப்பல்கள் அங்கிருந்து கடற்பிரயாணத்துக்கு வேண்டிய குடிநீரை எடுத்துக் கொண்டு போயின. பிறகு அங்கிருந்து புறப்பட்டு நேரே நெடுந்தொலைவிலுள்ள கிழக்கிந்தியத் தீவுகளான சாவக நாட்டுக்குச் சென்றன. இடைவழியில் நாகர்மலைத் தீவுகள் இருந்தன. நாகர்மலைத் தீவுகள் பிற்காலச் சோழர் ஆட்சிக் காலத்தில் (கி.பி. 10, 11, 12 ஆம் நூற்றாண்டுகளில்) மாநக்கவரம் என்று பெயர் பெற்றிருந்தன. இக்காலத்தில் இத்தீவுகள் நக்கவாரி (நிக்கோபர்) தீவுகள் என்று கூறப்படுகின்றன. அக்காலத்தில் அத்தீவுகளில் நாகர் இனத்தைச் சேர்ந்த காட்டுமிராண்டிகள் வசித்திருந்தார்கள். அவர்கள் ஆடையில்லாமல் மிருகங்களைப் போல வாழ்ந்தபடியால் ‘நக்கசாரணர்’ என்று கூறப்பட்டனர். நாகர்மலைத் தீவுகளில் கப்பற் பிரயாணிகள் சென்றால், அவர்களை நக்கசாரணர் கொன்று விடுவர். அவர்கள் மனிதரைக் கொன்று தின்றதாகவும் கூறப்படுகின்றது. ஆகையால் அந்தப் பக்கமாகச் செல்லுகிற கப்பல்கள் அத்தீவுக்குப் போவதில்லை.

    சாவகத் தீவு வாணிகம்

    சாதுவன் என்னும் வாணிகன் நாகர் மலைத் தீவில் சென்று உயிரிழக்காமல் திரும்பி வந்ததை மணிமேகலை காவியம் கூறுகிறது. சாதுவன் என்னும் வாணிகன் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து சாவக நாட்டுக்குப் போய் வாணிகஞ் செய்வதற்காகக் கப்பலில் புறப்பட்டுச் சென்றான். கப்பல் நாகர் மலைத் தீவுக்கருகில் சென்றபோது புயற்காற்றடித்துக் கடலில் மூழ்கிவிட்டது. மாலுமிகள் கடலில் முழுகிப் போனார்கள், சாதுவன் மரக்கட்டையொன்றைப் பற்றிக்கொண்டு அருகிலிருந்த நாகர்மலைத் தீவுக்கு நீந்தி நல்ல காலமாகக் கரையை யடைந்தான். ஆனால், இளைப்புங் களைப்பும் அடைந்து சோர்த்திருந்த அவன் கடற்கரை மணலிலேயே உறங்கி விட்டான். அயலான் ஒருவன் உறங்குவதைக் கண்ட நக்கசாரணர் சிலர் வந்து அவனைக் கொல்லத் தொடங்கினார்கள். விழித்துக் கொண்ட சாதுவன், அவர்களுடைய மொழியை அறிந்தவனாகையால், தன்னைக் கொல்ல வேண்டாமென்றும் கப்பல் முழுகிப் போனதனால்தான் அவ்விடம் வந்ததாகவும் கூறினான். தங்களுடைய மொழியில் பேசினபடியால் அவர்கள் அவனைக் கொல்லாமல் தங்களுடைய தலைவனிடம் அழைத்துக் கொண்டு போனார்கள். சாதுவன் சில காலம் நக்கசாரணரோடு தங்கியிருந்தான். பிறகு சந்திரத்தன் என்னும் காவிரிப்பூம்பட்டினத்து வாணிகன், சாவக நாட்டுக்குப்போய் வாணிகஞ் செய்துவிட்டுத் தன்னுடைய கப்பலில் திரும்பி வருகிறவன் நாகர் மலைத் தீவின் பக்கமாக வந்தபோது, நக்கசாரணர் அவனுடைய கப்பலைத் தங்கள் தீவுக்கு அழைத்து அவனுடைய கப்பலில் சாதுவனை ஏற்றிக் காவிரிப்பூம்பட்டினத்துக்கு அனுப்பினார்கள். இந்தச் செய்தியை மணிமேகலை காவியம் (ஆதிரை பிச்சையிட்ட காதை) கூறுகிறது.

    பாண்டிய நாட்டு வாணிகரும் சாவகத் தீவுக்குக் கப்பலோட்டிச் சென்று வாணிகஞ் செய்தனர். பாண்டி நாட்டிலிருத்த தமிழர் சாவக நாட்டுக்குச் சென்று வாணிகஞ் செய்து திரும்பியதையும் மணிமேகலை காவியம் கூறுகிறது.               தமிழகத்திலிருந்து சாவக நாடு நெடுந்தொலைவிலிருந்தும் தமிழக வாணிகர் அந்நாட்டுக்குக் கப்பலில் சென்று வாணிகஞ் செய்தனர், காரணம் என்னவென்றால் அக்காலத்தில் வேறெங்கும் கிடைக்காத வாணிகப் பொருள்கள் சாவக நாட்டில்தான் கிடைத்தன. கடலில் போகிற மரக்கலங்கள் காற்றின் வேகத்தினால் திசை தப்பி ஓடுவதும் உண்டு. கப்பலோட்டும் பரதவர் அப்போது அவைகளை அடக்கிச் செலுத்தினார்கள்.

    மதுரைக்காஞ்சி கூறும் வணிகச் செய்தி:

    கடுங்காற்றினால் தாக்குண்டு திண்மையான கயிறுகளையும் அறுத்து மரத்தை ஒடித்து நாவாயை அடித்துச் சென்று பாறைக் கல்லில் மோதி நீர்ச் சுழியில் அகப்பட்ட நாவாயைப்,

    “பன்மீன் வழங்கும் வளைமேய் பரப்பின்
    விலங்குபிணி நோன் கயிறு அறீஇதை புடையூக்
    கூம்பு முதல் முருங்க எற்றிச் சாய்ந்துடன்
    கடுங்காற்று எடுப்பக் கல் பொருது இரைஇ
    நெடுஞ்சுழிப் பட்ட நாவாய்” 4

    என்னும் வரிகளில் மாங்குடி மருதனார் கூறுகிறார்.

    முடிவுரை              

    “வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின்5 பிறர் பொருளையும் தம் பொருள் போல் போற்றிச் செய்தால், அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரி‌ய நல்ல வாணிக முறையாகும். மனிதனுடைய தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றுவது வணிகம். அது ஆதாய (இலாப) நோக்கு உள்ளதாகவும் இருக்கலாம்; இல்லதாகவும் இருக்கலாம். இவ்வகைப் பொருளாதார நடவடிக்கையே வணிகம் [TRADE, COMMERCE, BUSINESS]  எனப்படும்.

    சான்றெண் விளக்கம்

    1. உருத்திரங்கண்ணனார் பட்டினப்பாலை, அடிகள் 135
    2. வெண்ணிக் குயத்தியார் புறநானூறு, பாடல் எண். 66
    3. மாமூலனார் அகநானூறு, பாடல் எண்.  265
    4. மாங்குடி மருதனார் மதுரைக்காஞ்சி, அடிகள் 4-6
    5. திருவள்ளுவர், திருக்குறள்,  குறட்பா எண் – 120


    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review)

    ‘தமிழர்களின் கடல்சார் வணிகம்” என்னும் தலைப்பில் அமைந்த இக்கட்டுரையைப் பலமுறை பயின்று கட்டுரையின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி ‘வல்லமை’ முன்மதிப்பீட்டு விதிகளை முழுமையாகக் கருத்திற் கொண்டு செய்யப்படும் மதிப்பீடும் பரிந்துரையும்.

    • இலக்கியங்களில் காணப்படும் வரலாற்றுப் பதிவுகளை வெளிக்கொணர வேண்டும் என்னும் துடிபபுடன் இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
    • பழந்தமிழ் இலக்கியச் செல்வங்களையும் வரலாற்றுப் பெருமைகளையும் நியாயமான அளவுகோலால் வெளிப்படுத்திக் காட்டும் ஆர்வம் பெரும்பாலும் அருகிப் போனதொரு காலக்கட்டத்தில் இத்தகைய கட்டுரைகள் வரவேற்புக்கும் வழிகாட்டுதலுக்கும் உரியன.
    • முதுகலை மாணவர்களுள் ஒருவராகப் பயிலும் கட்டுரையாளருக்கு இந்தப் பருவத்தில் இத்தகைய நோக்கு இருப்பது பாராட்டுக்குரியது.
    • கல்வெட்டுகள், பயணக் குறிப்புக்கள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள் முதலியவற்றைக் கூடுதல் சான்றாவணங்களாகச் சேர்த்திருக்கலாம். எதிர்காலத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.  

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(496)

    குறளின் கதிர்களாய்…(496)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(496)

    காட்சிக் கெளியன் கடுஞ்சொல்ல னல்லனேல்
    மீக்கூறும் மன்ன னிலம்.

    – திருக்குறள் – 386 (இறைமாட்சி)

    புதுக் கவிதையில்…

    எல்லோரும்
    எளிதில் காணத்தக்க
    எளிமையுள்ளவனாய்
    குடிமக்கள் எவரிடமும் கடுஞ்சொல்
    கூறாதவனாயும்
    மன்னன் இருந்தால்,
    அவன்
    ஆட்சிக்குட்பட்ட நாட்டை
    அவனி புகழும்…!

    குறும்பாவில்…

    குடிமக்கள் எளிதில் காணத்தக்கவனாய்
    கடுஞ்சொல் சொல்லாதவனாய் அரசன் இருந்தால்
    அந்நாட்டை அகிலமே புகழும்…!

    மரபுக் கவிதையில்…

    மக்கள் எளிதில் எப்போதும்
    மன்னன் தன்னைக் கண்டிடவே
    தக்க எளிமை யுள்ளவனாய்,
    தன்னை வந்து பார்த்திடவே
    பக்க மணுகும் குடிகளிடம்
    பணிவோ டின்சொல் உரைப்பவனாம்
    மிக்க நற்கோன் நாடதையே
    மிகவும் போற்றும் வையகமே…!

    லிமரைக்கூ…

    காண எளிதாய் நேரில்
    கடுஞ்சொல் கூறாதிருத்தல் உலகப் புகழ்சேரும்
    நாட்டு மன்னன் பேரில்…!

    கிராமிய பாணியில்…

    நடக்கணும் நடக்கணும்
    நல்லாட்சி நடக்கணும்,
    நாட்டுல மக்களெல்லாம் விரும்புற
    நல்லாட்சி நடக்கணும்..

    நாட்ட ஆளுற ராசா
    எல்லாரும் எப்பவும்
    பாக்கிறாப்புல
    எளிமயா இருந்தாலும்,
    குடிமக்களுக்கிட்ட
    கடுஞ்சொல்லு
    சொல்லாம இருந்தாலும்
    அந்த நாட்டப்பத்தி
    ஒலகமெல்லாம் பொகழுமே..

    அதால,
    நடக்கணும் நடக்கணும்
    நல்லாட்சி நடக்கணும்,
    நாட்டுல மக்களெல்லாம் விரும்புற
    நல்லாட்சி நடக்கணும்…!

    Share
  • Dr. Iswarya’s Nature Cure Centre Comes to Mandaveli

    Dr. Iswarya’s Nature Cure Centre Comes to Mandaveli

    Baskar Seshadri

    Naturopathy is an art and science of living and healing. It’s a system of drugless Intervention to cure the cause of diseases instead of treating the symptoms. Naturopathy treatment detoxifies and remove the toxins from the body.

    Naturopathy has various types of treatment. Clay Therapy, Plantain leaf bath, Hydrotherapy, Chromo Therapy and few more are there in this branch of Treatment. Acupuncture, Massage and Yoga is also part of this naturopathy.

    Dr Iswarya’s Nature Cure Centre was opened on 1st May. This centre treats for the ailments like Allergy, Asthma, Sinus, Hair fall, PCOD and many more. This centre opens at Nine am and closes at nine pm with a short lunch break in the Noon.

    The address is 44/1 Venkatakrishna Road, Mandaveli and at the Southern tip of Devanathan Street.

    Digital payments are accepted for the Medical Service and this centre has lift facility too.

    Dr Iswarya can be reached at 96000 70597. Iswarya is the First-Generation Doctor who did her BNYS in Chennai.

    This Centre is well equipped in all aspects and this is her second Venture here. She opened a similar centre Three Years ago In Mogappair west. Treatments are being done only on appointments and to fix the same with the centre Please reach 044 -3139 1774.

    Dr Iswaryas Nature Cure Center is certainly a Promising Naturopathy Institution and Her Confidence and dedication to this branch of naturopathy is to go places.

    Share
  • குறளின் கதிர்களாய்…(495)

    குறளின் கதிர்களாய்…(495)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(495)

    தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறி
    தின்னுயிர் நீக்கும் வினை.

    – திருக்குறள் -327 (கொல்லாமை)

    புதுக்கவிதையில்…

    தனது உயிரது போகும்
    நிலை வந்தாலும்,
    தன்னைக் காத்திட
    இன்னொருவரின்
    இனிய உயிரைப் போக்கும்
    இழிசெயல்
    எப்போதும் வேண்டாம்…!

    குறும்பாவில்…

    தன்னுயிர் போய்விடும் நிலைவரினும்
    இன்னொரு இனிய உயிரைப் போக்கிடும்
    தீய செயலைச் செய்யாதே…!

    மரபுக் கவிதையில்…

    தன்னுயிர் உடலதை நீங்கிடவே
    தக்கதோர் நிலையது வந்தாலும்,
    தன்னையே காத்திடும் வழியதுவாய்
    தடையதாய் வந்திடும் மற்றொருவர்
    இன்னுயிர் தன்னையே போக்கிவிடும்
    ஈரம தற்றதாம் இழிசெயலைத்
    தன்னலம் கருதியே செய்வதனை
    தவிர்த்திட வேண்டிய தறிவாயே…!

    லிமரைக்கூ…

    போய்விடும் நிலைவரினும் தன்னுயிர்,
    தன்னைக் காத்திடத் தரமிலாச் செயலாய்ப்
    போக்காதே பிறரின் இன்னுயிர்…!

    கிராமிய பாணியில்…

    கொல்லாத கொல்லாத
    எந்த உயிரயும் கொல்லாத,
    எதுக்காகவும் கொல்லாத..

    தனக்க உயிரே போற
    நெலம வந்தாலும்
    தன்னக் காப்பாத்த
    வேற ஒருத்தரோட நல்ல
    உயிரப் போக்குற
    செயல மட்டும்
    செய்யவே வேண்டாம்..

    அதால,
    கொல்லாத கொல்லாத
    எந்த உயிரயும் கொல்லாத,
    எதுக்காகவும் கொல்லாத…!

    Share
  • ஊடகத்தாருக்கு – மறவன்புலவு க. சச்சிதானந்தன்

    மறவன்புலவு க. சச்சிதானந்தன்
    சிவ சேனை

    தென்மார்க்கு நாட்டில் தென் கயிலை ஆதீனம் (திருகோணமலை) இளைய பட்டம் மீது தாக்குதல்.

    காலம்: இன்று வைகாசி 8 புதன்கிழமை (22. 5. 2024) காலை 11.30 மணி
    இடம்: புது தில்லி சாணக்கியபுரி இராதாகிருஷ்ணன் சாலை தென்மார்க்கு தூதரகம்.
    பங்கேற்றோர்: இந்து மக்கள் கட்சித் தலைவர் அருச்சுனர் சம்பத்தர், இமக பொறுப்பாளர் வாலாசா கண்ணன், ஆன்மிகர் சோமசுக்கந்தர் குருக்கள், கல்வியாளர் சரவணன்.

    தென்மார்க்கில் சமூக ஈனர்களால் கொடும் தாக்குதலுக்கு உள்ளானவர் திருகோணமலை தென் கயிலை ஆதீனம் இளைய பட்டம் தவத்திரு திரு திருமுருகன் தம்பிரான் சுவாமிகள்.

    தென்மார்க்கில் அருள்மிகு வேல்முருகன் திருக்கோயில் பூசகராகப் பணியாற்றி வந்தார்.

    நான்கு பேர் முகமூடியுடன் வந்தனர். நள்ளிரவில் வந்தனர். சுத்தியல்களால் அவரைத் தாக்கினர். கொல்ல முயன்றனர்.

    செய்தி அறிந்த திருக்கோயிலார் குருதி கொட்டக் கொட்டப் பூசகரை மருத்துவமனையில் சேர்த்தனர். இளை கட்டிப் புண்கள் மாறி வருகின்ற நிலையில் உள்ளார்.

    கோயில் அருச்சகருக்காக நீதி கேட்டும் உரிய விசாரணை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கோரியும் வருங்காலத்தில் இத்தகையன நடைபெறாமல் தடுக்க வேண்டியும் தமிழ்த்திரு அர்ச்சுனர் சம்பத்தர் இந்து மக்கள் கட்சி சார்பில் எழுத்து மூலமாக கோரிக்கையை புது தில்லியில் உள்ள தென்மார்க்குத் தூதரகத்தில் இன்று கையளித்தார். அவரோடு திரு கண்ணன், தவத்திரு சோமாசுக்கந்தக் குருக்கள் மற்றும் திரு. சரவணன் தூதரகத்துக்குச் சென்றனர்.படங்கள் பார்க்க.

    Share
  • கவியரசரும் ஆன்மீகப் அறிவியலும் . . . (10)

    கவியரசரும் ஆன்மீகப் அறிவியலும் . . . (10)

    சக்தி சக்திதாசன்
    லண்டன்

    சிறிய இடைவேளையின் பின்னர் மீண்டும் கவியரசரின் பாடல்களில் புதைந்துள்ள ஆன்மீக அறிவியலின் அலசலுடன் உங்களைச் சந்திப்பதில் பெரு மகிழ்வடைகிறேன்.

    சமூகப்படப் பாடலுக்குள் ஆன்மீகத்தைப் புகுத்தலாமா ? முடியும் என்று எமது கவியரசர் சொல்லாமல் விட்டு விடுவாரா ?

    அவள் ஒரு தொடர்கதை எனும் படம். அண்ணன் தங்கையைத் திட்டுவதாௐௐக ஒரு பாடல் அமைக்கும்படி கே.பி கவியரசரிடம் கேட்கிறார். ஆனால் தங்கையைச் சாடும் பாடல் ஒரு சித்தர் பாடும் வரிகளைப் போன்று இருக்க வேண்டும் என்கிறார் கே.பி.

    வழமை போல எம்.எஸ்.வி சந்தம் கொடுக்க கவியரசர் சித்தர் வரிகளைச் சிந்திக்க எம்.எஸ்.வி தாமதமாவதால் வீடு நோக்கிச் செல்கிறார்.

    வெளியே மழை பொழிகிறது இடையே தாயாரிப்பாளருடன் நடந்த ஒரு சம்பாஷணையின் விளைவாக கவியரசர் ” எனக்கென்ன எனக்கு தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு ” என்று சொல்லிவிட்டு தனக்கேயுரிய பாணியில் இதுதான் பல்லவி என்றாராம். அவரைப் பொறுத்தவரையில் அது அவருக்கு தெய்வம் தந்த வரிகள் என்று எண்ணினார் போலும்.

    அதைத்தொடர்ந்து எம்.எஸ்,வி வந்ததும் சந்தங்களை எடுத்து அள்ளி வீசியுள்ளார். அவற்றில் எதை எடுப்பது எதை விடுவது என்று பாலச்சந்தர் ஐயாவே திக்குமுக்காடினாராம்.

    இப்போ நான் எந்தப் பாடலை எடுக்கப் போகிறேன் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

    நான் மேலே கூறிய சம்பவம் நான் படித்து அறிந்தவற்றில் இருந்து எடுத்து இயம்பியவை.

    ஒரு சமூகத் திரைப்படத்தில் சாதாரண உறவுகளுக்கிடையில் ஏற்படும் மனமுறிவுகளுக்குள் அன்றா௶ட வாழ்க்கை நிகழ்வுகளை ஆன்மீகத்தோடு அழகுற விளக்கும் வரிகளை யாப்பதில் கவியரசருக்கு நிகர் அவரே தான்.

    சரி இனி பாடல் வரிகளுக்குள் போவோமா ?

    தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு
    இந்த ஊரென்ன ? சொந்த வீடென்ன ? ஞானப்பெண்ணே
    வாழ்வின் பொருளென்ன? நீ வந்த கதையென்ன ?

    அண்ணன் பொறுப்பில்லாமல் குடித்து விட்டு அலைகிறான். தங்கை குடும்பப் பொறுப்புகளைச் சுமக்கிறாள் . வலி தாங்காமல் அண்ணனை வீட்டை விட்டு வெளியேறச் சொல்கிறாள்.

    தங்கையின் செய்கையால் மனம் வருந்திய அண்ணன் போதையில் அவளைப் பார்த்துப் பாடுவதான காட்சி.

    ஒரு குடிகாரன் தன்னை நியாயப்படுத்துவதற்காக பாடுவது போலல்லாமல் எத்தனை அருமையாக ஒரு முற்றும் துறந்த முனிவர் பாடுவது போல வரிகளை யாத்திருக்கிறார் கவியரசர். இதைவிட வாழ்வின் நிலையற்ற ஆன்மீகத்தை எவரால் அழகாக விளக்கிட முடியும் ?

    நான் கேட்டுத் தாய் தந்தை படைத்தாரா ?
    இல்லை எனைக்கேட்டு என் பிள்ளை பிறந்தானா ?
    தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி
    கொன்றால் பாவம் தின்றால் போச்சு
    இதுதான் என் கட்சி
    ஆதி வீடு அந்தம் காடு
    இதிலே நான் என்ன ? அடியே நீ என்ன ? ஞானப்பெண்ணே
    வாழ்வின் பொருளென்ன? நீ வந்த கதையென்ன ?

    ஆமாம் இந்த உலகின் பிறப்பும், இறப்பும் எமது கைகளில் இல்லை எனும் உண்மையை , ஆன்மீகம் அறியாத சாதாரண மானிடர் அறிந்தது எனும் உண்மையை ஒரு சித்தர் கூறுவது போல் கூறி அதிலே அந்தக் காட்சியை நிலைநிறுத்துவதற்காக தங்கச்சி எனும் உறவு முறையை புகுத்திய விதமே அலாதிதான்.

    ஒரு உயிரைக் கொன்று தின்பது பாவம் என்பது ஜீவகாருண்ய தத்துவம். ஆன்மீக மகான்களின் போதனைகள் அதுவேதான் அதையும் கூறி தான் ஒரு சாதாரண மனிதன் ஆன்மீகத் தத்துவங்களை உள்வாங்கிக் கொள்வதில்லை என்பதனை அந்த அண்ணன் கூறுவது போல அழகாய் வரிகளுக்குள் வளைத்துப் போட்டிருக்கிறார் கவியரசர்.

    அனைவரின் ஆரம்பமும், முடிவும் ஒன்றுதானே , அனைவரும் ஆன்மாக்களே எனும் உண்மையைக் கூறுகிறாரோ ? என்று கூட எண்ணத் தோன்றுகிறது.

    இத்தகைய நிலையற்ற வாழ்வினிலே இருவருக்குள்ளும் என்ன வித்தியாசம் என்று கேட்கிறார்.

    வெறும் கோவில் இதிலென்ன அபிஷேகம்
    உன் மனம் எங்கும் தெருக்கூத்து பகல் வேஷம்
    கள்ளிக்கென்ன முள்ளில் வேலி போடி தங்கச்சி
    காட்டுக்கேது தோட்டக்காரன் இதுதான் என் கட்சி
    கொண்டதென்ன ? கொடுப்பதென்ன ?
    இதில் தாய் என்ன ? மணந்த தாரமென்ன ? ஞானப்பெண்ணே
    வாழ்வின் பொருளென்ன ? நீ வந்த கதையென்ன ?

    கோவிலுக்குள் இறைவனே இல்லை பின்பு அங்கு அபிஷேகம் என்னும் ஒர் நிகழ்வு எதற்காக ? சமூகத்தில் , சமுதாயத்தில் உள்ளோன்று வைத்து புறமொன்று பேசுவோர்கள் பலர். இதையே அழகாக மனதில் தெருக்கூத்தோடு பகல்வேஷம் போடுகிறார்கள் என்று அற்புதமாக வாழ்வின் யதார்த்தத்தை விளக்குகிறார்.

    இந்த உலகத்திலே நாம் கையிலே கொண்டு வருவது எதுவுமில்லையே ? அப்படியே அடுத்தவருக்குக் கொடுப்பது என்பது கூட நாம் செய்வதில்லையே எமக்கூடாக பிரபஞ்சம் செய்விக்கிறது எனும் உண்மையை சித்தர்கள் கூட இத்தனை எளிமையாக விளக்கியிருப்பார்களா ? என்பது சந்தேகமே .

    தாயென்றும், தாரமென்றும் பற்றுக்களில் மூழ்கிச் சிக்கித் தவித்துக் கொண்டு இருக்கும் மானிடரின் இக்கட்டுகளை அழகாக விளக்குகிறார்.

    தாயானாலும், தாரமானாலும் இப்பூவுலகில் நிலைத்திருப்பது சொற்ப காலமே , காலம் முடியும் போது அது தாயென்றோ அன்றித் தாரமென்றோ பார்ப்பது இல்லை என்பதை தத்ரூபமாகச் சொல்கிறார் எம் கவிச்சித்தர் கண்ணதாசன்.

    தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம் அது
    தெரியாமல் போனாலே வேதாந்தம்
    மண்ணைத் தோண்டித் தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி
    என்னைத் தோண்டி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி
    இதிலே தேன் என்ன ? கடிக்கும் தேள் என்ன ? ஞானப்பெண்ணே
    வாழ்வின் பொருளென்ன ? நீ வந்த கதையென்ன ?

    சித்தாந்தம், வேதாந்தம் என்பனவற்றின் விளக்கத்தை இரு வரிகளுக்குள் புதைக்கும் ஆற்றல் கவியரசரின் தனித்தன்மையைக் காட்டுகிறது,

    இருவரிகளுக்குள் பெரும் கருத்தைப் புதைக்கும் வள்ளுவரின் பின் இத்தனை அழகாக கவியரசர் படைத்திருக்கிறார்.

    வேதம் என்பது லெளகீக வாழ்க்கையை விட்டகன்று துறவு பூண்டவர்களினாலேயே புரிந்து கொள்ளக்கூடியது. ஆனால் ஆகமங்கள் சாதரண பக்கதர்களினாலும் புரிந்து கொள்ளக்கூடியது என்பதை அற்புதமாக விளக்குகிறார்.

    நம்மை நாமே அறிந்து கொளக்கூடிய தியானம் போன்ற இலகுவான வழிகள் பல இருக்க வெளியே எதைத் தேடுகிறோம் ? என்பதற்கு உதாரணமாக மண்ணைத் தோண்டி ஏன் தண்ணீர் தேட வேண்டும் எனும் வரிகளின் மூலம் புரியவைக்க முயற்சித்திருக்கிறார் எம் கவியரசர் என்பது எனது கோணப்பார்வை.

    உலகின் கணக்கிலே ஒரு நீர்க்குமிழி போன்றதே எமது வாழ்க்கை. இத்தகிய வாழ்விலே நாம் சுவைப்பது தேன் என்றாலும் எம்மைக் கொட்டுவது தேளாக இருப்பினும் இரண்டும் ஒன்றெனக் கொள்ள வேண்டும் என்கிறாரோ ?

    இன்பத்தையும், துன்பத்தையும் ஒரே மாதிரி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை சித்தர்களை விட எளிமையாகக் கூறி விட்டாரே

    கவியரசர் ஆன்மீக அறிவியலை எத்தனை லாவகமாக தமது பாடல் வரிகளுக்குள் புகுத்துகிறார் என்பதை எண்ணிப் பார்க்கும் போது அவருக்கிருந்த சரஸ்வதி கடாட்சம் துல்லியமாகத் தெரிகிறது.

    மற்றொரு முத்துடன் சந்திக்கிறேன்.

    Share
  • கற்பகதரு என்னும் அற்புதம் – அங்கம் 7 ஏடுதந்திட்ட எங்கள் பனை

    கற்பகதரு என்னும் அற்புதம் – அங்கம் 7 ஏடுதந்திட்ட எங்கள் பனை

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    பனை செழித்தால் பாரம்பரியம் செழிக்கும்
    பனை அழிந்தால் பாரம்பரியமே அழியும் “

    வருடம் முழுதும் வற்றாத வளம்
    வாங்கி வந்த வரமே பனை “

    வானோங்கி நிற்பதுதான் எங்கள் கற்பகதருவாம் பனை மரம். வாழ்வில் தோள் கொடுத்துத் தோழமையுடன் நிற்பதுதான் எங்கள் பனை மரம்.இருந் தாலும் பயன் கொடுக்கும். இருப்பை விட்டு மறைந்தாலும் பயன் கொடு க்கும். பனை என்பது  மரம் அல்ல . அது நல் வரம் என்பதை மனமிருத்தல் வேண்டும்.பனையின் நிலை யினை  நாங்கள் ஒவ்வொருவருமே மனத்தில் இருத்திட வேண்டியது அவசியமாகும்.இருக்கும் வரை எவ்வளவு கொடுக்க முடியுமோ அவ்வளவு கொடுக்கிறது என்பதே எங்களுக்கெல்லாம் நல்ல தொரு பாடமாய் இருக்கிற தல்லவா ! மற்ற மரங்களைப் போல பனை யினை நாங்கள் பார்த்துவிடக் கூடாது. தலை நிமிர்ந்து தளர்வி ன்றி.   கொடை வழங்கும் கர்ணனாய் கற்பகதருவாம் பனை காட்சி தருகிறது என் பதும் கருத்திருத்த வேண்டி யதேயாகும்.

    பனையின் ஓலைகளை சாதாரணமாகப் பார்த்தே பழகிவிட்டோம். ஆனா ல் அந்த ஓலைக்குள் எவ்வளவு பொக்கிஷங்கள் பொதிந்திருக்கின்றன என் பதை ஏட்டுச் சுவடிகள் வரலாற்றுக்குள் பார்த்தோம்.அந்த வரலாற் றுக்குள் சற்று உள்ளே போய் இன்னும் என்ன இருக்கிறது என்பதையும் பார்ப்பது அவசியம் அல்லவா !

    இலக்கியம் வளர்த்த பனை என்று கூறுவதில் எள்ளளவும் ஐயம் இல்லை என்றே எண்ணத் தோன்றுகிறது,

    எமது முன்னோர்களின் சிந்தனைச் செல் வங்களை இன்று நாம் பயனாக்கி நிற்கிறோம் என்றால் அதற்குதக்க துணையாக அமைந்தது பனை தானே ! பனைமரத்தின் ஓலைச் சுவடிகள் இல்லை என்றால் பழந்தமிழ்ச் செல்வங்கள் எங்களுக்குக் கிடைத்திருக்க வாய்ப்பே இல்லாமல் போயிருக்கும். பனை இல்லையேல் நமக்கு  மொழியில்லை. வரலாறு இல்லை . ஏன் பாரம்பரியமே இல்லை என்பதை உணரும் பொழுது மெய்சிலிர்க் கிறதல்லவா !  ” பயன்மரம் ” என்று வள்ளுவமே போற்றும் தகைமையினைப் பெற்ற ஒரே மரமாய் கற்பகதருவாம் பனையே விளங்குகிறது என்பது மனமிருத்த வேண்டிய கருத்தல்லவா.

    ” ஆறங்க வேதநூ லாகமநூல் வேறுமுள மெய்க்கலைகள்
    போதமிகுந்த புராணநூல் – ஓதுகின்ற
    மந்திரநூல் சிற்பநூல் வாகடநூல் வாய்மைமிகு
    செந்தமிழ்நூல் பற்பலவும் தீட்டலாம் – சுந்தரஞ்சேர்
    மங்கல நாளோலை மஙகையர்க்குக் காதோலை
    துங்கமிகு நண்பருக்குத் தூதோலை – தங்குபல
    பற்று வரவு பதியுங் கணக்கோலை
    மற்று முறுதி வரையோலை – கற்றவர்கள்
    எந்திரங்கள் கீறி எழுத்தடைத்துக் கட்டுகின்ற
    மந்திர வோலைகட்கு வாய்ப்பாகும் “

    என்று ” தாலவிலாசம் ” நாடகநூலும்

    “படிக்க நல்ல தம்பியர்க்கு
    பட்டோலை நானாவேண்
    எழுத நல்ல தம்பியர்க்கு
     எழுத்தோலை நானாவேன்
    தூரத்து வன்னைமைக்கு
    தூதோலை நானாவேன்
    வாசலில் வன்னிமைக்கு
    வழக்கோலை நானாவேன் “

    என்று நாட்டுப் புறப்பாடலும் பனை ஓலையின் பயன் பாட்டினை வியந்து நிற்பதைக் காண்கிறோம்.பனை ஓலையென்று நாங்கள் சாதாரணமாய் எண் ணி விடும் அந்த ஓலைக்குள் இத்தனையும் இருக்கிறதா என்று எண்ணு கையில் பனையென்பது நல்வரம் என்றுதானே சொல்ல வேண்டும்.

     ஏடுதந்த பனையின் ஓலை பற்றிய எண்ணப் பதிவினை ” பனை மர சோபனம் ” என்னும் நூல் எப்படிப் பார்க்கிறது என்பதையும் பார்ப்போம்.

       ” வருடத்திற் கோர்தினத்தில் சரஸ்வதியம்மன் பூசைசெய்து
        மஞ்சள் படிந்துவர மங்கலங்கள் பாடிவர
        அட்சதையும் மலரெடுத்து அர்ச்சிப்பார் உலகமெலாம்
        என்னைத் திருத்தியவர் எழுத்தாணி கைப்பிடித்து
        ஆசிரியரும் வேதியரும் ஹரிநமோ என்றெழுதி
        ஹரிஹரி என்றெழுதி அர்ச்சிப்பார் என்னையவர்
        அரிச்சுவடி என்னாலே வரிக்காய்ப் பாடம்என்னாலே
        தர்க்கங்கள் என்னாலே சாஸ்திரங்கள் என்னாலே
        இராமாயணம் என்னாலே பாரதமும் என்னாலே
        பாகவதம் என்னாலே பலசாத்திரங்கள் என்னாலே
        திருவாய்மொழி என்னாலே திருமுறைகள் என்னாலே
        நாலுவேதம் என்னாலே ஆறங்கம் என்னாலே
        மங்கையர்க்கும் மன்னவர்க்கும் மணவறிவ தென்னாலே
        வர்த்தகருஞ் செட்டிகளும் கணக்கறிவ தென்னாலே
        பட்சமுள்ள வாசலுக்குப் பட்டோலை நானாவேன்
        காதத்துப் பெண்களுக்குக் காதோலை நானாவேன்
        தூரத்துப் பெண்களுக்குத் தூதோலை நானாவேன்
        கலியாண வாசலுக்குக் கட்டோலை நானாவேன்
        சீமந்து வாசலுக்குச் சீருடனே நான்போவேன்
        பிள்ளை பிறந்ததென்றால் பெருமையுடன் நான்போவேன்
        மைந்தன் பிறந்ததென்றால் மகிழ்ச்சியுடன் நான்போவேன்
        அரண்மனையில் நானிருப்பேன் ஆஸ்தானத்தில் நானிருப்பேன்
        மச்சுக்குள் நானிருப்பேன் மாளிகையில் நானிருப்பேன்
        எமலோகம் போனாலௌம் எல்லோர்க்கும் தெரியவைப்பேன்
        சிவலோகம் போனவர்க்குச் சீட்டோலை யாயிருப்பேன் “

    என்று பனை ஓலையின் ஒவ்வொரு நிலையினையும் இப்பாடல் காட்டு வதைக் கருத்திருத்துவது முக்கியம் அல்லவா !

    பனையின் ஓலை பலவிதங்களில் எங்கள் வாழ்வியலில் எப்படியெ ல்லாம் இணைந்திருந்தது என்பதை இங்கு பல பாடல்களால் கண் டோம். பனையின் ஒலையினால்  ஆகிய ஏடுகள் பற்றிய பல விஷயங் களையும் பார்க்கப் பாரர்க்க பெருமையாகவும் வியப்பாகவுமே இருக் கும்.எழுதும் நிலை ஏற்பட்டவுடன் எழுதுவதற்கு உரியதாய் பனையின் ஓலைதான் பொருத்தமாய் அமைந்திருக்கிறது.இலகுவாய் கிடைத்தது. அதுவும் வாழும் அயலிலேயே கிடைத்தது. பனையின் ஓலையில் எழு துவதைக் கண்டறிந்த தன்மையினைச் சாதாரணமாகப் பார்த்துவிட முடியாது. மிகச் சிறந்த தெரிவு என்றுதான் எண்ண வேண்டும். கல் லில் , மரத்தில்களிமண் தகட்டில்தோலில்செப்புத்தகட்டில் எழுதுவது என்பது இலகுவான செயலன்று. அதுமட்டுமல்ல அவற்றில் விரைவாக வும் எழுதிட முடியாது. எனவேதான் பனையின் ஓலையினை எழுதுவ தற்குத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். பனை ஓலையில் எழுதினால் அவ ற்றை போகும் இடமெல்லாம் எடுத்துச் செல்வது இலகுவாக இருக்கும் என்னும் காரணத்தாலும் – பனை ஓலை ஏடாய் மலர்ந்தது என்றும் எடு த்துக் கொள்ளலாம் அல்லவா !

    ஓலையில் எழுதுவது என்பது இலகுவான காரியம் அல்ல. ஓலையில் எழுதுவது என்பது ஒருவித கலை எனலாம். எழுத்தாணியைக் கொண் டு மிருதுவான ஓலையில் எழுதும் பொழுது மிகவும் கவனமாகவே எழுத வேண்டும். ஓலையில் எழுதும் எழுத்துக்கள் – நாங்கள் தற் பொழுது காகிதத்திலோ அல்லது கணிப்பொறியிலோ அல்லது தட்ட ச்சிலோ எழுதுவதுபோல் இலகுவாக எழுதிவிடல் முடியாது. பிழை யினை திருத்தவோ அழிக்கவோ முடியாது. எழுதினால் எழுதியதுதான். எழுதும் ஓலையில் பிழை வந்தால் அந்த ஓலையினைத் தவிர்த்து   விட்டு புது ஓலையில்த்தான் எழுதல் வேண்டும். மெய் எழுத்துக்களை எழுத முடியாது. குற்றுப் போட்டால் ஓலை கிழிந்து விடும்.ஓலையில் எழுதும் எழுத்துக்களை எழுதுவது என்பதற்கு நல்ல பழக்கம் வேண் டியதாய் இருந்தது. தற்காலத்தில் விரித்து எழுதுவதுபோல் எழுதிவிட வும் இயலாதுசுருக்கமாய் அதே வேளை செறிவாய் எழுதும் நிலையே காணப்பட்டது எனலாம். இதனாலேயே எழுதப்பட்ட எல்லாமே பாட்டின் வடிவத்தைக் கொண்டு அமையும் கட்டாயம் இருந்தது என்பது கருத்திரு த்த வேண்டியதே.

    ஓலையில் பாட்டெழுதும் முறையிலும் வரையறைகள்  காணப்பட்டன என்பதற்கு ஆதாரங்களும் இருந்திருக்கின்றன.

    அந்தணர்க்கு நாலா றரசர்க் கிருபதாம்
    இந்த விரல் வணிகர்க் கெண்ணிரண்டாம் – முந்துவிரல்
    வேளாரக்க் கீராறாய் வெள்ளோலை வேயவனை
    தோளாய் அறிந் தொகுத்து 

    என்று கல்லாடனார் வெண்பா காட்டுகிறது. இதன் படி நான்மறை யா ளர்கள் இருபத்து நான்கு விரற்கடை அளவும்அரசர்கள் இருபது விரற் கடை அளவும் வணிகர்கள் பதினெட்டு விரற்கடை அளவும்வேளார் கள் பனிரெண்டு விரற் கடை அளவு எடுத்தே ஓலையில் எழுத வேண் டும் என்னும் நிலை காணப்பட்டது என்பதை இப்பாடல் தெரிவிக்கிறது. இதனை மேலும் உறுதிப் படுத்தும் வகையில் பொய்கையார் பாடலும் வந்து அமைகிறது.

    ஓலைய திலைக்கணம் உரைக்குங் காலை
    நாலாறு விரலாம் நான்மறை யோர்க்கே
    பாருடை யோர்க்கும் பதிற்றிரண் டாகும்
    வணிகர்க் கீரெண் விரலாகும்மே
    காணென மொழிய சூத்திரக் களவே “

    புத்தகம் சரியா பொத்தகம் சரியா என்று குழம்புகின்றோம். பொத்தகம் என்னும் சொல் பல ஏடுகளை இணைத்த இணைப்பினைக் குறித்தது என்பதற்கும் பழையபாடல்கள் சான்றாய் வந்து அமைகிறது.வெற்றி லைகளை அடிக்கி வைத்திருக்கும் அடுக்கினைக் குறிக்க ” கவளி ” என்னும் சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தச் சொல்லை பலரும் மறந்து விட்டாலும் இன்னும் இந்தச் சொல் பழக்கத்தில் இருக்கிறது. வெற்றிலை அடுக்கினைக் குறிக்க வழங்கப்பட்ட இச்சொல் ஏடுகளின் அடுக்கினுக்கும் வழங்கப் பட்டிருக்கிறது.

    பொத்தகம் படிகமாலை குண்டிகை பொருள் சேர் ஞான
    வித்தகம் தரித்த செங்கை விமலையை அமலை தன்னை
    மொய்த்த கொந்து அளக பாரா முகில் முலைத் தவள மேனி
    மைத்தகு கருங்கண் செவ்வாய் அணங்கினை வணங்கல் செய்வோம்

    கம்பராமாயணத்தில் சரஸ்வதியை வணங்கும் வகையில் அமைந்த இப் பாடலில் – சரஸ்வதி ” பொத்தகம் ” கையில் வைத்திருப்பதாய் காட்டுவது நோக்கத்தது.

    மெய்யெலாம் நீறு பூசி வேணிகள் முடித்துக் கட்டி
    கையினில் படை கரந்த புத்தகக் கவளி ஏந்தி
    மை பொதி விளக்கே என்ன மனத்தினுள் கறுப்பு வைத்து
    பொய் தவ வேடம் கொண்டு புகுந்தனன் முத்த நாதன் “ 

    முத்திநாதன் என்பவன் உடம்பெலாம் திருநீறு பூசிக்கொண்டு சடை முடிந்த கோலத்தில் கையில் ” பொத்தகச் சுவடி ” வைத்துக் கொண்டு வந்தான் என்று பெரிய புராணத்தில் வரும் இப்பாடல் குறிப்பிடுகிறது. இங்கே ” பொத்தகச் சுவடி ” என்பதுதான் முக்கியம். அக்காலத்தில் ஏட் டுச் சுவடிகளை அடுக்காய் கொண்டுவரும் நிலையும் இருந்திருக்கிறது என்பதும் அதற்காக வழங்கப்பட்ட பெயர்களையும் கருத்திருத்துவது நலமல்லவா !

     ஏடுதந்த பனையின் ஓலைகளை எடுத்த எடுப்பில் ஓலை என்று அழை த்திடவும் முடியாது. ஓலை என்பது பொதுவான பெயராக இருந்தாலும் அது பனையின் மேல் முளைத்து எழுந்து வரும் பொழுது அதனை “குரு த்தோலை ” என்கிறோம். பசுமையாய் வந்தபின்பு ” சாரோலை ” என்கி றோம்.காய்ந்த பின்னர் ” காவோலை ” என்கிறோம்.குருத்தோலை என் னும் பெயர் கிறீத்தவர்களுக்கு நன்கு பரிச்சயமான பெயராகும். குருத் தோலை பற்றி விவிலியத்திலும் வருகிறது. குருத்தோலை ஞாயிறு என்று ஒரு திருநாள் வருவதும் நோக்கத்தக்கது.

    குருத்தோலை என்று கூறியவுடன் அதனுள் நல்லதொரு தத்துவம் பொதிந்து இருக்கிறது என்பதை நம்மில் எத்தனைபேர் அறிந்திருப்போம் குருத்தோலைக்கு ஒரு மென்மைத் தனமையும் நெகிழும் தனமையும் உண்டு.மற்ற ஓலைகளைப் போல் குருத்தோலையானது கைகளை விரித்தபடி இருப்பதில்லை. பணிவு கொண்டு இருப்பவர்கள் போல – அக்குருத்தோலைகள் கூப்பியபடியே இருக்கின்றன. அதுமட்டுமல்ல அதன் நுனிகள் வானத்தை நோக்கியபடியே நிமிர்ந்தே நிற்கின்றன. இப்படிக் குருத்தோலைகள் இருப்பது – வாழ்வில் நம்பிக்கையினை யும்பணிவையும் எமக்குப் புகட்டுவதாக இருக்கிறது என்பதும் மனங் கொள்ளத்தக்கதாகும்

    (வளரும்)

    Share
  • சங்கம் வைத்து நாடாண்ட மன்னவர்

    சங்கம் வைத்து நாடாண்ட மன்னவர்

    சேசாத்திரி ஸ்ரீதரன்

    ஒரு அரசன் தனது ஆட்சி தன்னை விட்டுப் போகாமல் இருக்கத் தன் சுற்றம், நட்பு ஆகியோரைக் கொண்டு ஒரு பாதுகாப்பு வளையம் / அரண்   அமைத்திருப்பான். இந்த வட்டத்துள் வருவோர் மட்டுமே படைத் தலைவர்களாக அமைச்சர்களாக தூதுவர்களாக கருவூலக் காப்பாளர்களாக இன்னும் பிற பதவிகளில் அமர்த்தப்படுவர். அப்போது தான் மன்னவனின் படையும், செல்வமும் (கூழ்), குடிகளும் (நாடும்) அவனுடையதாக இருக்கும். அல்லாவிடில் அவன் உடனே அரசாட்சியை இழந்து விடுவான்.

    படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்

    உடையான் அரசருள் ஏறு  (குறள் 381; இறைமாட்சி)

    ஒரு மன்னன் ஆளும் நாட்டின் பரப்பு எத்தகு விரிந்ததாக இருந்தாலும் மன்னன் விடுக்கும் செய்தி அவனது கீழ்நிலைச் சேவகர், பணியாளருக்கு உடனடியாகச் சென்றடைய வேண்டும். அதே போல நாட்டின் மூலை முடுக்குகளில் நடந்தேறும் நிகழ்வுகள் குறித்த செய்தி மன்னனின் காதுகளுக்கும், கவனத்திற்கும் விரைந்து எட்ட வேண்டும். இந்த பின்னல்வலை (network) சீராக நடைபெற்றால் தான் அவன் ஆட்சிக்கு கேடு ஏதும் வராது. இதில் எங்கேனும் சுணக்கம், தொய்வு ஏற்படுமானால் அது சீரற்ற ஆட்சியாகவே கருதப்படும். இப்படி மேலிருந்து கீழாகவும் கீழிருந்து மேலாகவும் செய்தியைப் பரிமாற நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் ஆங்காங்கே இவர்கள் கூடிப் பேசுவதற்கு என்று இடங்கள் ஏற்படுத்தப்பட்டதற்கு சான்றாக சில ஊர் பெயர்கள் உள்ளன. இதற்கு “கூடல்” என்று பெயர். மதுரைக்கு கூடல் என்று ஒரு பெயர் உண்டு. கூடல் என்றால் சங்கம், சங்கமம் ஆகும். கல்வெட்டுகளில் கூடல் என்று குறிக்கப்பட்ட இவ்விடங்கள் இன்று கூடலூர் எனப்படுகின்றன. கருநாடகம் அசன் மாவட்டத்தில் காவேரி ஆற்றுக்கு வடக்கே ஆறகலகூடு 7000 என்ற ஊரை வெற்றிப் பரிசாக முதலாம்இராசராசன் பஞ்சவன் மாராயன் என்ற படைத்தலைவனுக்கு ஈந்தான். இங்கும் கூடு என்பது ஆறு அகன்ற இடத்தில் 7000 பேர் கூடுவதைக் குறிக்கிறது. தகடூர் > தகு + அடு + ஊர். தகு என்றால் பொருந்து, கூடு என்று பொருள். அடு என்றால் செய்கை. இதாவது கூடிச் செயற்படும் இடம் (assembling point). கல்வெட்டில் இடம்பெறும் மிலட்டூர், மிலட்டுநிலை, மிழலைநாடு ஆகிய பெயர்கள் சேரும் இடம், தங்கும் இடம், திரளும் நாடு எனும் பொருள் கொண்டவை.

    மில் என்றால் பொருந்துதல், சந்தித்தல், நெருங்குதல் என்ற கருத்துடையது. தமிழில் கணவனைக் குறிக்க மிணாளன் என்ற சொல்லும் மனைவியைக் குறிக்க மிணாட்டி என்ற சொல்லு கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. இது மில் > மிள் > மிண் என்று சொல்லாய்வில் விரியும். இன்றும் இந்தி மொழியில் மிலானா என்ற சொல் பொருந்துதல், கூடுதல் என்ற பொருளில் பயன்பாட்டில் உள்ளது. இடத்தைப் போலவே மக்கள் கூடிச் செயற்படுவதற்கும் மில் என்ற வேரைக் கொண்டு மில் + ஆடு = மிலாடு என்ற சொல் மலையமான்களால் கூட்டப்படும் சங்கத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. மில் > மல் > மண்டு என்றால் நிறைதல் ஆகும். இந்த மிலாடு > மலாடு என்றும் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. மலாடு என்பதும் பொருந்துதல், கூடுதல் கருத்து கொண்டதே. ஒரு அரசனின் செய்தியை கீழ்நிலைக்கு கொண்டு சேர்க்கவும் கீழ்நிலை நடப்புகளை மேலே கொண்டு சேர்க்கவும் நம்பிக்கைக்குரிய ஆள்கள் தேவை. இதற்கு ஏதோ ஒரு இன உணர்வு அடிப்படையாக அமைகிறது. இந்த மிலாடர்கள் மலையமான்களின் கோத்திரத்தவராக இருந்துள்ளனர். இந்த ஆள்கள் அவ்வப்போது கூடி ஆலோசித்து செயற்பட்ட செய்தி இரண்டாம் இராசராசனின் 11 ஆம் ஆட்சி ஆண்டு கி.பி. 1161 இல் கள்ளக்குறிச்சி வட்டம் வலஞ்சுரம் பசுபதீஸ்வரர் கோயிலில் வெட்டப்பட்ட கல்வெட்டு ஒன்றில் 79 நாட்டு மிலாடு (சங்கம்) என்று குறிப்பிடுகிறது. இந்த மிலாட்டில் தருமபுரி, வேலூர், ஈரோடு, தஞ்சை பகுதி நாட்டு மிலாடர்களும் கலந்து கொண்டுள்ளனர் (பார்க்க ஆவணம் 11, பக்.32). இந்த பகுதிகள் அனைத்துமே மலையமான் நாடு அல்ல என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். பின் எப்படி மிலாடு என்பது மலைநாட்டைக் குறிக்கும்? ஆனால் மலைநாடு என்பதையே மிலாடு, மலாடு என்று திரித்து கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளதாக Ephigraphia Indica வில் தவறாக குறித்துவிட்டனர். இதே தவறான கருத்தை அகராதிகளிலும் ஏற்றியுள்ளனர். இதனால பெரும் சர்ச்சை உண்டாகிறது. எனவே கல்வெட்டுச் சான்றுகளுடன் மிலாடு, மலாடு என்பது மலைநாடு அல்ல அது சங்கத்தை, சங்கமத்தை தான் குறிக்கிறது என்று காட்டுவதே இந்த கல்வெட்டு விளக்கத்தின் நோக்கம்.

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் வீரணம் என்ற ஊரில் உள்ள 23 வரி நடுகல் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ கோவிசைய கம்ப போத்தரையர்க்கு யாண்டு பதினாலாவது
    2. வாண கோவரையர் வயிர மேகனார் வாண கோப்பாடி, மலா
    3. டு, மிலாடைப் பாடியுஞ் சோழ நாட்டு காவேரியின்
    4. வடகரை எல்லாமாளா நின்ற காலத்து வேணாட்டு முன்னூ
    5. று மெயின நாடை
    6. ந்நூறும் ஆண்
    7. ட நந்தி பெருமா
    8. னார் மகன் அக்கழி
    9. மல்லனார் மேற்
    10. கோவலூர் நாட்டு
    11. வென்னாமுஞ் சா
    12. த்தனூரும் ஆளா
    13. நிற்கப் பங்கள
    14. நாட்டுடைய மாதே
    15. வர் படை சாத்த
    16. னூர் எறிய வே
    17. ன்னாட்டு நி
    18. ன்று சென்று பி
    19. ன்பு சென்று
    20. பிணங்கி வே
    21. னாட்டல்லை
    22. க் காராச்சங்க
    23. ன்ப் பட்டான் கல்

     எறிய – அழிக்க; பட்டான் – வீர சாவடைந்தான்; கல் – நினைவுக் கல்

    விளக்கம்: பல்லவன் கம்ப வர்மனின் 14 ஆவது ஆட்சி ஆண்டில் 877 இல் வாணகோவரையர் வயிரமேக வாண அரசன் தென் பெண்ணையின்  வடக்கே திருமுனைப்பாடி, செங்கம் முதலான வாணகோப்பாடி நாட்டையும், திருக்கோவிலூர் – உளுந்தூர் பேட்டையை உள்ளடக்கிய மலாடு நாட்டையும், பெரம்பலூர் – சேலம் ஆத்தூர், வாழைப்பாடி ஆகியவற்றை உள்ளடக்கிய மிலாடு நாட்டுப் பாடியையும், சோழநாட்டின் காவேரி வடகரையான அரியலூரையும் ஒன்று சேர ஆண்டு வந்த காலத்தில் வேணாடு முந்நூற்றையும் (செங்கம்), எயில் நாடு ஐந்நூற்றையும் (கிருஷ்ணகிரி) ஆண்ட நந்திப் பெருமகன் போரில் இறந்துவிட அவரது ஆட்சிப் பகுதி சுருங்கி அவரது மகன் அக்கழிமல்லன் மேற்கு கோவலூர் நாட்டின் வெண்ணத்தையும் சாத்தனூரையும் ஆளும் நிலைக்கு தள்ளப்பட்டார். அப்போது வேலூர் பக்கம் உள்ள பங்கள நாட்டை ஆளுகின்ற மாதேவரின் படை சாத்தனூரைத் தாக்கி அழிக்க வெண்ணத்தையில் இருந்து சென்று பகைவரைத் துரத்தி பின்பு சென்று சண்டையிட்டு வெண்ணத்தை எல்லையில் வீரச்சாவடைந்தான் காரச் சங்கன் என்ற வீரன். அவன் நினைவில் நிறுத்திய கல் இது.

    வயிர மேக வாணரைசர் நான்கு நாட்டுப் பகுதிகளையும் ஒருங்கே ஆண்ட குறிப்பை வைத்துப் பார்க்கும் போது அவர் வேந்தர் என்று கருதப்படுவதற்கு ஈடாக ஒரு பெரு நிலப் பகுதியையே ஆண்டுள்ளார் என்று தெரிகின்றது. இந்நாடுகளை அவரது முன்னோர்கள் போரில் வென்று அந்த ஆட்சியாளர்களை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து இருக்கலாம் என்று ஊகிக்க முடிகிறது. இவரது மகள் தான் செம்பியன் மாதேவியான கண்டராதித்த சோழன் மனைவி. இக்கல்வெட்டில் மிலாடு என்று தனியாகவும் மலாடு என்று தனியாகவும் குறிக்கப்பட்டுள்ளது காண்க. அவை இருவேறு நாடுகள் என்று தெளிவாகிறது. எனவே வடக்கே இருந்த கன்னட வாணர் மலையமான்களை வென்று தம் நாட்டின் ஆட்சிப் பரப்பை தெற்கே விரித்துள்ளனர் என்று ஊகிக்க முடிகிறது. இந்த இரண்டு சொல்லாட்சியால் மிலாடு > மலாடு என்பன மலைநாடு என்பதன் திரிப்படைந்த சொல்  என்ற வாதம் தகர்ந்து போகின்றது. மல் > மண்டுதல் என்றால் திரளுதல், நெருக்குதல், நிரம்புதல் என்ற சேர்க்கைக் கருத்து கொண்டது. மில் > மிணாளன், மிணாட்டி என்பவை கூடுகைக் கருத்தில் கணவன் மனைவியை குறிப்பவை என்பதை நோக்கினால் மிலாடு என்ற சொல்லும் சங்கம், கூடிச் செயற்படுவது ஆகிய பொருள்களை உடையது என்று விளங்கும்.

    பார்வை நூல்: நடுகல் கல்வெட்டுகளும் சிற்பங்களும், ச. கிருஷ்ணமூர்த்தி, பக். 212; செங்கம் நடுகற்கள் 46 -1971

    சேலம் வாழப்பாடி வட்டம் பேளூர் கிராமம் தான்தோன்றீஸ்வரர் வெளிப்புற கல்லில் வெட்டிய 21 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ
    2. வீரபாண்டிய
    3. ன் றலை கொண்
    4. ட கோப் பரகேசரி
    5. பன்மற்கு யாண்டு 3
    6. ஆவது பார்க்கவ கோ
    7. த்ரத்து மிலாடுடையா
    8. ன் அகலங்கன் ம
    9. லையராதித்தனான செ
    10. ம்பியன் மிலாடுடை
    11. யானேன் துறிவி நா
    12. ட்டுராளிகளை ஊராளித்திறை
    13. நாற்கழஞ்சே காலே கொ
    14. ள்வதாக பூவிலை செய்
    15. து குடுத்தேன் செம்பி
    16. யன் மிலாடுடையா
    17. னேன்.
    18. இது மா
    19. ற்றுவான்
    20. ஏழா நரக
    21. ம் புகுவான்.

    கோத்திரத்து – கோத்திரத்தாரின்; மிலாடு – சங்கம், சங்கமம், assembly, association, federation; மலையர் ஆதித்தன்– மலையர்குலத் தலைவன்; ஊராளிகள் – ஊர், கிராம  நாட்டாமை செய்வோர்; பூ விலை – நில வரி; திறை – கப்பம், tribute

    விளக்கம்: ஆதித்த கரிகாலனின் மூன்றாம் ஆட்சி ஆண்டு 969 இல் வெட்டப்பட்ட கல்வெட்டு இது. பார்க்கவ கோத்திரத்தாரது சங்கத்தின் தலைமை உடையவனான அகலங்கன் மலையராதித்தனான செம்பியன் மிலாடுடையன் சொல்வது யாதெனில் “துறவி நாட்டின் கிராம  ஊராட்சி செய்வோர் ஊராளிகள் செலுத்த வேண்டிய வரியாக நான்கு கழஞ்சே கால் கொடுத்தல் போதும் என்று நில வரி நிர்ணயம் செய்தேன் செம்பியன் மிலாடுடையானேன்” என்று ஆணையிடுகிறான். இதை மாற்றிக் கெடுப்பவன் ஏழாம் நரகத்திற்கு போவான். ஒரு நாட்டுப் பிரிவில் 10 – 15 கிராமங்கள் மேல் இருக்கும். அங்குள்ள வரித் திரட்டுவோரைத்தான் இவன் ஊராளிகள் என்கிறான்.

    ஆதித்த கரிகாலனின் இரண்டாம் ஆட்சி ஆண்டில் 968 இல் இந்த செம்பியன் மிலாடுடையான் திருக்கோவலூர் கீழுர் வீரட்டானமுடைய ஈசன் கோவிலுக்கு இரண்டு நொந்தா விளக்கு எரிக்க 192 ஆடுகள் கொடுத்த செய்தி தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 7 எண்: 900 இல் இடம் பெற்றுள்ளது. அதிலும் மிலாடுடையார் அகளங்கன் மலையராதித்தனாகிய செம்பியன் மிலாடுடையார் என்று குறிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் மிலாடுடையார் என்பது சங்கத் தலைவன் என்பதையும் பெயருக்கு பின்னுள்ள மிலாடுடையார் சோழன், சேரன், பாண்டியன் போல பட்டப் பெயராகவும் ஆளப்பட்டுள்ளது. இக்கல்வெட்டுகள் “மிலாடு” என்பது மலைநாடு அல்ல அது சாதி சங்கம் தான் என்பதற்கு போதுமான ஆதாரமாக உள்ளன. இல்லாவிடில் பார்க்கவ கோத்திரத்தை மிலாடிற்கு முன் ஏன் குறிப்பிட வேண்டும்? பார்க்கவ கோத்திரத்தில் உட்பட்ட மலையமான்கள் மிலாட குலத்தவர் எனப்பட்டனர்.

    பார்வை நூல்: சேலம் நாமக்கல் மாவட்டக் கல்வெட்டுகள், எண்: 289, பக். 228, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு.

    திருக்கோவிலூர் திரிவிக்கிரம பெருமாள் கோவில் 9 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ நரஸிம்ஹ வன்ம நிர்பதி ஸ்ரீ கோவலூரே பஜன் வாஸம் விஸ்வ ஜகன்நிவாஸ வபுஷ ஸ்ரீ வாமனஸ்ய கரோத் ஸைலம் ஸும்பித ஸாதகும்ப விலஸத் கும்பம் ம
    2. ஹா மண்டபம் பிரகாரம் பரமாலிகா விலஸிதம் முக்தாமயீஞ் ச ப்ரபாம் கோயில் ஸ்ரீ வைஷ்ணவர் ரக்ஷை. ஸ்வஸ்திஸ்ரீ திருமகள் மருவிய செங்கோல் வளரத் தன் திருத்தமையனொடும் போ
    3. ய் இரட்டப்பாடி ஏழரையிலக்கமுங் கொண்டு கொல்லாபுரத்து ஜயஸ்தம்ப நாட்டி மீண்டு போந்து பேராற்றங்கரைக் கொப்பத்து ஆஹவமல்லனை யஞ்சுவித்து ஆங்கவன் ஆனையும் குதிரையும் பெ
    4. ண்டிர் பண்டாரமுங் கைக்கொண்டு விஜயாபிஷேகஞ்  செய்து வீரசிம்ஹாசனத்து வீற்றிருந்தருளிய கோப்பரகேசரி பன்மரான உடையார் ஸ்ரீ இராஜேந்திர  தேவர்க்கு யாண்டு ஆறாவது மிலாடான ஜனநாத வளநாட்டுக் குறு
    5. க்கைக் கூற்றத்துப் பிரமதேயம் திருக்கோவலூரான ஸ்ரீ மதுராந்தக சதுர்வேதி மங்கலத்துத் திருவிடைக்கழி ஆழ்வார் ஸ்ரீ விமானம் முன்பு இட்டிகைப் படையாய்ப் பலகைப் பிளந்தமை கண்டு பார்க்கவ வம்ஸத்து மிலாடு உடை
    6. யார் இரணகேசரி இராமரான நரசிங்கவன்மர் கோயிலை இழிச்சிக் கருங்கல்லை கொண்டு ஸ்ரீ விமானமும் மண்டபமும் எடுப்பித்துப் பூரண பொற்குடம் அஞ்சு வைப்பித்துத் திருச்சுற்று மாளிகையும் முன்பில் மண்டப
    7. மும் எடுப்பித்து முத்துப் பந்தலுங் கொடுத்து முன்பு கல்வெட்டுப்படியுள்ள நிமந்தங்கள் எல்லாம் இந்த ஸ்ரீ விமானத்தே கல்லும் வெட்டுவித்தார் நரசிங்க வன்மர் என்று அபிஷேகம் பண்
    8. ணி முடிகவித்து மிலாடு இரண்டாயிரம் பூமியும் ஆண்ட மிலாடுடையார் நரசிங்க வன்மர். நரசிங்கவன்மர் சந்திராதித்தவல் எரிக்க வைத்த திருநுந்தா விளக்கு இரண்டு. இவ
    9. ற்றுக்கு விளக்கு எரிக்க குடுத்த சாவாமூவாப் பெரும் பசு அறுபத்து நாலு. இவற்றால் நிசதம் விளக்கு இரண்டினிற்கு நெய் உறி. இப்பரிசுக் கைக்கொண்டு _ _

    நிர்பதி > நரபதி – மக்கள் தலைவன்; பஜன் – வணங்கத்தக்க; படை – கல் அடுக்கு; இரணகேசரி – போர்க்களச் சிங்கம்; இழிச்சி – இடித்து வீழ்த்தி; நிவந்தம் – பூசைத் திட்டம்; அபிஷேகம் – மஞ்ச நீராட்டு; நிசதம் – ஏற்பாட்டு அளவு;

    விளக்கம்: தொடக்க வரி சமசுகிருத சுலோகத்தில் உள்ளது. மனிதர் தலைவன் நரசிம்ம வர்மரான மன்னவர்க்கு நன்மங்கலம் சிறக்கட்டும். திருக்கோவலூரில் வணங்கத்தக்க வீடு இது. பேராளாவிய அண்டத்தோன் வாழும் அழகுடையது. வாமனரால் உருவாக்கம உடையது. விரும்பி செய்த கலசம் ஒளிரும் கலசம் மகா மண்டபம் திருச்சுற்று பிரமிப்பான அற்புதமான முத்தால் ஆன ஒளிரும் கோயில். இதை வைணவர் பாதுகாக்க வேண்டும்.

    இரண்டாம் இராசேந்திர சோழனின் மெய்க்கீர்த்தியை குறிப்பிட்டு அவனது 6 ஆம் ஆட்சி ஆண்டில் 1056 இல் குறுக்கைக் கூற்றத்து பிரம்மதேயம் திருக்கோவலூர் என்னும் மதுராந்தக சதுர்வேதி மங்கலத்து உலகளந்த பெருமாளின் கோவில் விமானம் முன்பு செங்கல் அடுக்கிய கட்டடமாக இருந்தது. அதன் மேல்தட்டு பிளந்து இருந்ததைப் பார்த்த பார்க்கவ வமிசத்தாரின் சங்கத்தை (மிலாடு) உடைய, இதாவது தன் தலைமையில் கட்டுப்படுத்துகின்ற இரணகேசரி இராமன் என்னும் நரசிங்க வர்மன் அந்த செங்கல் கோவிலை இடித்து வீழ்த்தி கருங்கல்லைக் கொண்டு திருவிமானமும் மண்டபமும் எழுப்பி பூரண பொற்குடம் ஐந்தும் வைத்து திருச்சுற்றுப் பிரகாரமும் முன்னே மண்டபமும் கட்டி அதற்கு முத்துப் பந்தலும் செய்து கொடுத்து கோவில் இடிப்பிற்கு முன் இருந்த கல்வெட்டுகளின்படி பூசைத் திட்டம் அத்தனையும் செய்வித்து. இந்த விமானத்தின் கீழ் கல்வெட்டுவித்தார் நரசிங்க வர்மர். அங்கே அவருக்கு மஞ்ச நீராட்டி மணிமுடி கவித்து மிலாடு என்னும் சங்க உறுப்பினர் 2,000 பேருடைய கவனிப்பில் உள்ள நிலத்தை ஆண்டவர் மிலாடுடையார் நரசிங்க வர்மர். இதோடு நரசிங்க வர்மர் சந்திர சூரியர் உள்ள கால அளவும் எரிப்பதற்காக இரண்டு நுந்தா விளக்குகளை கொடுத்தார். இவற்றை எரிக்க அவர் கொடுத்த சாவாமூவாப் பெரும் பசுக்கள் 64 ஆகும். இதற்கு ஏற்படுத்திய இரண்டு விளக்குகளின் நெய்க்கு அளவு உறி அளவு ஆகும். இந்த திட்டத்தை கையில் ஏற்று என்பதோடு கல்வெட்டு செய்தி நின்றுவிட்டது. 2000 பூமியும் ஆண்ட என்ற சொற்றொடர் நரசிம்ம வர்மன் இறந்த பின் அவன் வெட்டிய முதற் கல்வெட்டை அகற்றி இரண்டாம் முறையாக விரிவாக இக்கல்வெட்டை கோபுரத்தின் கீழ் வெட்டி இருக்க வேண்டும் என்று தெரிகிறது.

    சி.வை. சதாசிவ பண்டாரத்தார் கூறுவது போல இங்கு மிலாடு 2,000 என்பதை நிலத்தின் அளவாகக் கொள்வது தவறு. ஏனெனில் மிலாடு என்னும் சங்கத்தில் வேலூர் வரையான 79 நாடுகளைச் சேர்ந்தவர் அடங்குவர். 79 நாடு என்பது தொண்டை மண்டலத்தின் 79 நாடுகளை குறிப்பதாக அவரே கூறுகிறார். தொண்டைநாடு முழுவதும் மலைநாடு அல்ல அதன் மேற்கில் தான் கிழக்கு தொடர்ச்சி மலைகள் உள்ளன கிழக்கில் அல்ல என்பதை ஈண்டு கவனத்தில் கொள்க. எனவே மிலாடுடையான் என்பது மலைநாடுடையான் என்று பொருள்படாது மாறாக சங்கத் தலைவன் என்றே பொருள்படும் என்று உணர்க. இதனால் பல்லவர் ஆட்சி வீழ்ச்சிக்குப் பின் தொண்டை மண்டல ஆட்சிப் பொறுப்பை சோழர் மலையமான்களிடம் வழங்கி இருக்கலாம் என்று ஊகிக்க முடிகிறது.

    பார்வை நூல்: கல்வெட்டுகள் கூறும் உண்மைகள், பக். 12, தி. வை. சதாசிவம் பண்டாரத்தார் & Epigraphia Indica Vol 7, pg 145, K; Areip 123 of 1900

    கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் பெரிய நசலூர் கிராமம் மங்கைமுத்தாயி அம்மன் கோயில் கொற்றவை சிலையின் எருமைத்தலையின் வலப்புறம் உள்ள 6 வரிக் கல்வெட்டு

    1. ஸ்ரீ மு
    2. க்கு
    3. ல மல
    4. யமான்
    5. சாதன் ஸ்ரீ
    6.  _ _

    முக்குலம் – மூன்று பட்டமுடைய சாதி

    விளக்கம்:  இக்கல்வெட்டு பல்லவர் ஆட்சி குலைந்த 9 ஆம் நூற்றாண்டு காலத்தது என்று கணிக்கப்பட்டுள்ளது. “முக்குல மலயமான்” என்பது பார்க்கவ கோத்திரத்தாரான மலையர் என்னும் நயினார், சுருதிமான் என்னும் மூப்பனார், நந்தமர் என்னும் உடையார் ஆகிய 3 சாதிமாருக்கு தலைவனான சா(த்)தன் என்று பொருள்படும். இவன் இந்த கொற்றவையை வணங்கியுள்ளான் அல்லது சிலையை நிறுவினான் என்று கொள்ளலாம். பெரிய நசலூரில் கிடைத்த 3 கல்வெட்டுகளில் இதுவும் ஒன்று என்று நாளேட்டு செய்தி கூறினாலும் மற்ற இரண்டு கல்வெட்டுகளை அச்சேற்றிய ஆவணம் இதழ் வெளியீட்டார் இதை அச்சிடாமல் விட்டுவிட்டனர். மிலாடு என்ற மேட்டுக்குடி பார்க்கவ சாதி சங்கமத்திற்கு இது ஒரு அருமையான சான்றாகும்.

    பார்வை நூல்: 12 ஏப்ரல் 2019 நாளேடுகளில் வெளியான செய்தி

    தென்னார்க்காடு மாவட்டம் திருக்கோவிலூர் புற ஊரான கீழுர் வீரட்டானேஸ்வரர் கோவில் தென் சுவரில் உள்ள 6 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ காந்தளூர்சாலை கலமறுத்த கோவிராஜராஜகேசரி(ய்) பந்மக்கி யாண்டு 11 ஆவது மலா
    2. ட்டு குறுக்கைக் கூற்றத்து திருக்கோவலூர் திருவீரட்டான(ம்)முடையாற்கு மிலாடு உடையான் இராமன் நாட்டடிகள் வைத்த நொந்தா வி
    3. ளக்கு ஒன்றுக்கும் திருவுண்ணாழிகை ஸபையார் வஸம் சந்த்ராதித்தவல் விளக்கெரிப்பதற்க்கு குடு
    4. த்த பொன் பன்னிரு கழஞ்சு. பன்மாஹேஸ்வர ரக்ஷை. இறைவ நரும்பாக்கமெல்லைக் கற்குட்டம்
    5. முறைசேர் கோவல் முழைசுனை பிறைநுதலாய் வெண்மாறங்கெல்லை மேல்பால் கறடி வடா
    6. வாறு கீழ்பால் கண்ணத்தம்பாடியாங் காண்.

    நாட்டடிகள் – நாட்டரசன்; திருவுண்ணாழிகை சபையோர் – கருவறை பிராமணர்; கற்குட்டம் – கருங்கல் குளம்; முறைசேர் – வகையாய் அமைந்த,

    விளக்கம்: இராசராச சோழனின் 11 ஆம் ஆட்சி ஆண்டு 996 இல் மலாட்டில் அடங்கிய குறிக்கைக் கூற்றத்து திருக்கோவலூர் வீரட்டானமுடைய ஈஸ்வரருக்கு மிலாடு என்னும் சங்கம் உடையான் இராமன் என்னும் நாட்டரசன் வைத்த ஒரு நுந்தா விளக்கிற்கு கருவறை பணி செய்யும் பிராமணரிடம் சந்திர சூரியர் நிலைக்கும் காலத்தளவும் விளக்கு எரிப்பதற்காக கொடுத்த பொன்னின் அளவு 12 கழஞ்சு. இதற்கு  சிவனடியார் கூட்டத்தினர் பாதுகாப்பு தரவேண்டும். அடுத்து பாடல் வரியில் இறைவனுக்கு அரும்பாக்கம் எல்லையில் கருங்கல் குளமும் வகையாய் அமைந்த கோவலூரில் குகை நீரூற்றும் பிறை நெற்றிபோல ஓடும் வெள்ளை நீரை எல்லையாகவும் மேற்கே கரடி வட ஆறும்  கிழக்கே கண்ணத்தம்பாடி இருப்பதையும் காண்க என்று கோவிலின் எல்லை கூறுகிறது. கல்வெட்டு செய்திக்கும் இதற்கும் என்ன தொடர்பு என்று புரியவில்லை. திருக்கோவலூர் பகுதியை மிலாடு என்று குறிக்காமல் மலாடு என்று குறிப்பதை நோக்குக. ஆனால் சங்கம் என்று வரும்போது மிலாடு என்று குறிப்பதை நோக்குக.

    கல்வெட்டு எழுதறிஞர் ச. கிருஷ்ணமூர்த்தி கல்வெட்டு எழுதும் சிற்பிகள் மிலாடு என்பதை மலாடு என்று தவறாக கொட்டி இருக்கலாம் என்று கருதுகிறார். ஆனால் ஏதோ ஒரு கல்வெட்டில் அத்தகு பிழை நேரலாம் பல கல்வெட்டுகளில் சில நூற்றாண்டுகளாக மலாடு என்று குறிக்கப்படுவதை பிழை என்று கொள்ள முடியாது. மிலாடு என்னும் சங்க உறுப்பினர் கண்காணித்து வாழும் நாடு என்ற அடிப்படையில் நாட்டிற்கும் மிலாடு என்றே குறித்துள்ளனர். ஏதோ வேறுபாடு காட்ட வேண்டும் என்று கருதியே மலாடு என்று குறிக்கத் தலைப்பட்டுள்ளனர் என்று தோன்றுகிறது. மலையமான் நாடு என்பதே மலாடு என்று சிதைத்து குறிக்கப்படுவதாக கூறுவதை சொல்லாய்வின்படி ஏற்பதற்கு இல்லை. கம்ப வர்மன் காலத்திற்கும் முந்தையதாக நடுகற்களில் இனிமேல் மிலாடு, மலாடு குறிப்பு புதிதாக கண்டுபிடிக்கப்பட்டால் இதில் புதிய திசை கிட்டும்.

    பார்வை நூல்: தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 7 எண்:  857 (AR N0  230 – 1902) பக். 431

    விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வட்டம் சித்தலிங்கமடம் வியாக்ரபாதீஸ்வரர் கோயில் முன்மண்டப வடக்கு சுவர் 4 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ கோவிராஜகேசரி ப
    2. ந்மற்க்கு யாண்டு மூன்றாவது திருப்புலிப் பகவர்க்கு மிலாடுடையார் நாட்டா
    3. ன் சித்தவடவநேன் ஆட்டால் வைத்த திரு நந்தாவிளக்கு ஒன்று. ஒன்றும்
    4. பந்மாஹேஸ்வர ரக்ஷை.

    நாட்டான் – அரசன்;

    விளக்கம்: இது 10 நூற்றாண்டுக் கல்வெட்டு. கோவிராஜகேசரி பன்மரின் மூன்றாம் ஆட்சி ஆண்டில் சித்தலிங்க மடத்தில் வீற்றிருக்கும் வியாக்கிரபாதர் என்னும் திருப்புலிப் பகவர்க்கு மிலாடு என்னும் சங்க முடையாரின் நாட்டரசன் சித்தவடவன் ஆடு கொடுத்து வைத்த திருநுந்தா விளக்கு ஒன்று. அந்த ஒரு விளக்கும் சிவனடியார் கூட்டத்தினர் காக்க வேண்டும். எத்தனை ஆடு கொடுக்கப்பட்டது என்ற குறிப்பு இல்லை.

    பார்வை நூல்: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் தொகுதி 14 இல் விழுப்புரம் மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி 1, பக். 109, த நா தொ து வெளியீடு

    விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வட்டம் சித்தலிங்கமடம் வியாக்ரபாதீஸ்வரர் கோயில் முன்மண்டப கிழக்குச் சுவர் 1 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ மதுரைகொண்ட கோப்பரகேசரி பந்மர்க்கு திரு நந்தா விளக்கு இரண்டுக்கு இவ்வூர் சிவ ப்ராஹ்மணர் பக்கல் குடுத்த பொன் பதிந்_ _ க்கு சந்திவிளக்கு இரண்டிநால் நிறை நூற்றுப்பலம். நூற்றுப்பலமும் இவை மலாடுடையான் நாட்டான் சித்த வடவநேன். இரண்டும் ஊனமுந் தேய்வும் நீக்க குடுத்த பொன் கழஞ்சுங் குடுத்தேன். இது பந்மாகேஸ்வர ரக்ஷை.

    ஊனமும் தேய்வும் – வளைவு ஓட்டை ஆகிய குறையும் தேய்வும்

    விளக்கம்: முதற் பராந்தகனின் 7 ஆம் ஆட்சி ஆண்டு 913-14 கல்வெட்டு என்று குறிக்கிறது இந்நூல். ஏதோ தட்டச்சு பிழையால் கல்வெட்டு பாடத்தில் ஆண்டு விடுபட்டு போய் உள்ளது. திருநுந்தா விளக்கு இரண்டு எரிக்க இந்த கோவில் சிவபிராமணரிடம் கொடுத்த பொன் பதின் _ _ . சந்திவிளக்கு இரண்டிற்கு நிறை நூறு பலம் கொடுத்தார் மலாடுடையான் நாட்டரசன் சித்த வடவன். இந்த நுந்தா விளக்கு, சந்தி விளக்கு ஆகியவற்றில் எதிர்காலத்தில் ஏற்படும் குறையும் தேய்வும் நீக்க கழஞ்சு பொன் கொடுத்தேன் என்கிறான் இந்த மலையமான். இதை சிவனடியார் திருக்கூட்டம் காக்க வேண்டும் என்கிறான்.

    மேலுள்ள கல்வெட்டுகளில் நாட்டான், நாட்டடிகள் ஆகிய சொல்லாட்சிகள் ஆய்விற்கு உரியன. இவற்றின் பொருள் நாடு ஆள்பவன் என்பதே. மிலாடுடையான் / மலாடுடையான்  என்பதற்கு மலைநாடுடையான் என்பதே பொருள் என்றால் பின்பு  நாட்டான் என்று தனியாகக் குறிப்பது எதைக் குறிக்கிறது? நாட்டான் என்பதும் நாட்டரசன் என்பதைத் தானே குறிக்கிறது? இலக்கணப் பொருட்பாட்டின்படி மிலாடு, நாடு இரண்டும் அடுத்தடுத்து வந்தால் ஒரே பொருள் தர முடியாது. அப்படி தருவது பிழை ஆகும். ஆதலால் இங்கு தெள்ளத் தெளிவாக மிலாடு / மலாடு என்பதற்கு சாதிச் சங்கம் என்று பொருள் கொண்டால் தான் நாட்டான் என்பதன் பொருள் இந்த சாதி சங்கத்தவர் வாழும் நாட்டிற்கு அரசன் என்று தெளிவாகப் பொருள் கொள்ள முடியும் அன்றோ?

    ஆக கடந்த 150 ஆண்டுகளாகத் தமிழகத்தில் தலித்தியம், திராவிடவியம், கம்யூனிசம் என்ற பெயரால் அரசியல் மேடையிலும் எழுத்திலும் புராண இந்து மதம் தான் சாதியை உருவாக்கியது. மத சுயநலவாதிகள், பிராமணர்கள் தான் சாதியை உருவாக்கி சமூகத்தை பலவாகக் கூறுபோட்டு ஆட்சி செய்து சுரண்டிக் கொழுத்தனர் என்ற பொய்யுரை இடிந்து தரைமட்டம் ஆகிவிட்டது அன்றோ? உண்மையில் தம் அரசாட்சி நலன் கருதி சாதி சங்கத்தை உருவாக்கி நாடாண்டவர் மன்னர்களே, மலையமான்களே என்று இக்கல்வெட்டுகளால் புரிகின்றது அன்றோ?  தட்டிக்கேட்பார் இல்லாவிடின் யாரும் எதையும் உரைக்கலாம் மக்கள் முட்டாள்கள் என்பது தானே இவர்கள் மனநிலை.

    பார்வை நூல்: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் தொகுதி 14 இல் விழுப்புரம் மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி 1, பக். 160, த நா தொ து வெளியீடு

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் திருநாமநல்லூர் பக்தஜனேஸ்வர சிவன் கோவில் 4 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ. ஸ்ரீ கன்னரதேவற்க்கு யாண்டு பதினேழாவது முனைப்பாடித் திருநாவலூர்த் திருதொண்டீஸ்வரத்து மஹாதேவர்க்கு ஸ்வஸ்தி சுக்ரான்வய உதயாசல ஆதித்ய சக்திநாத சிம்ஹத்வஜ சிகி மகரலாஞ்சன மலையகுலோ
    2. த்பவ மலையகுல சூளாமணி ஸ்ரீமத் நரசிம்ஹ வர்ம; மிலாடுடைய நாட்டான் சித்தவடவனாகிய நரசிம்ம வன்மன் வைத்த நொந்தா விளக்கொன்றினுக்கு வைத்த பொன் பதின் கழஞ்சு. இப்பொன் பதின் பழஞ்சுங் கொண்டு வெண்
    3. ணைநல்லூர் நாட்டுச் செவலை சபையோமும் ஊரோமும் ஆட்டு நூற்று நாழி நெய் கொண்டு வந்து மாதேவியாலை சந்த்ராதித்யவல் அட்டுவோம் ஆனோம் செவலை சபை ஊரோம். ஈழ விளக்கு ஒன்று. இது பன்மாகேஸ்வர
    4. ரக்ஷை

    சபை – கோவில் அலுவலர்

    விளக்கம்: இராட்டிரகூட வேந்தன் மூன்றாம் கிருஷ்ணனின் 17 ஆம் ஆட்சி ஆண்டு 956 இல் திருமுனைப்பாடித் திருநாவலூர் திருத்தொண்டீஸ்வரர் கோவில் ஈசுவரனுக்கு. நன்மங்கலம் உண்டாகுக! பிருகுவின் மகனான சுக்கிராச்சாரியாரின் வழிவந்தவனும் கிழக்குமலைச் சூரியனும் ஆற்றலுடைய சிவனும் சிங்கக் கொடியோனும் முடியில் மயிலும் மகரமும் குறியீடாகக் கொண்டவனும் மலையர்குலத்தில் தோன்றிய மலையர்குல முடிமணியானவனும் புகழ்மிக்கவனுமான நரசிம்ம வர்மன் என்று சமசுகிருதத்தில் கீர்த்தி பாடுகிறது.

    சங்கமுடைய (மிலாடு) நாட்டரசன் சித்தவடவனாகிய நரசிம்ம வர்மன் வைத்த நுந்தா விளக்கு ஒன்றுக்கு கொடுத்த பொன் 10 கழஞ்சை வெண்ணைநல்லூர் நாட்டின் செவலை ஊரவர் வாங்கிக் கொண்டனர். ஆண்டுக்கு ஆட்டின் நெய் நூறு நாழி அளவு கொண்டு வந்து மாதேவி ஆலயத்தில் கொடுப்போம் செவலை ஊரவரோம் என்று உறுதி கூறினர். இவர்கள் இடையர் என்று தெரிகிறது. மன்னன் ஈழ விளக்கு ஒன்றும் கொடுத்தான். இந்த இரு விளக்கு எரிப்பும் சிவனடியார் கூட்டத்தாரின் பாதுகாப்பு என்று முடிகிறது. இங்கு மிலாடுடைய நாட்டான் என்று பிரித்து காட்டி இருப்பது மிலாட்டை மலைநாட்டான் என்ற பொருளில் குறிப்பதல்ல அல்ல என்பது தெளிவு. அது சங்கமுடைய நாட்டரசன் என்று பொருள்படும்.

    முதற் பராந்தகன் காலத்து சித்தவடவனும் இந்த நரசிம்ம வர்ம சித்தவடவனும் ஒரே ஆள் அல்ல. பிருகு ரிஷி என்ற பார்கவருடைய மகன் சுக்கிராச்சாரி தான் அசுரர்களின் ஆசான் (குரு) ஆவான். அசுரர்கள் என்போர் ஈரானின் அசீரிய நாட்டு மக்கள் ஆவர். எனவே அசுரர் இருந்த நாட்டில் சுக்கிரன் இருந்து வழிகாட்டியதால் அவன் ஈரான் நாட்டினன் என்று கருதுவதில் தவறு ஒன்றும் இல்லை. அப்படியானால் மலையமான்கள் ஈரானில் இருந்து வந்தோர் என்று கொள்ளலாமா? இதற்கு விடை கூற கைபர், போலன் இந்தியாவிற்கு திறந்த வாசல் என்பவரைத் தான் கூப்பிட வேண்டும்.

    பார்வை நூல்: Epigraphia Indica Vol 7, pg 135, C; Areip 362 of 1902

    கள்ளக்குறிச்சி வட்டம் சித்தலூர் மணிமுத்தாற்றில் உள்ள சிறிய பாறையில் பொறிக்கப்பட்டுள்ள 7 வரிக் கல்வெட்டு

    1. (கோ)விராசகேசரி பன்மற்கு யாண்டு 3 ஆவது மிலாடு
    2. _ _ வேடபுரத்து பொன்னாலமந்தாளுக்கு உத்தம சோழ மிலாடுடையார்
    3. க்கு கலனை செய்கின்ற கலனை யேர் பொன்னாலமந்தாளுக்கு நொந்தா
    4. விளக்கு ஒன்றுக்கு வைத்த ஆடு தொண்ணூற்றாறாடும் சாவாமூவாப் பேராடு
    5. ம் நிசதி உழக்கு நெய்யால் நிசதி ஒரு நொந்தா விளக்கு எரிக்கக் கடவேன் இ
    6. ப்பிடாரி கோயிலுடை கால்வனெழுவானாகிய _ _ _ ச கான
    7. _ _ _ பேருவச்சனேன். இது பன்மாஹேஸ்வர ரக்ஷை

    கலனை – சேணம், saddle; நிசதி – ஏற்பாட்டின்படி; பிடாரி – துர்க்கை; உவச்சன் – பூசகன்; பொன்னால – மேனியை சுற்றிலும் மஞ்சள் பூசிய; மந்தாள் – கருத்தவள்; மிலாடுடையர் – சங்கத் தலைவர்;

    விளக்கம்: முதலாம் இராசராச சோழனுக்கு 3 ஆம் ஆட்சி ஆண்டில் 988 இல் மிலாடில் அடங்கிய வேடபுரத்து மஞ்சள் பூசிய கருத்த அம்மனுக்கு உத்தம சோழ மிலாடுடையாருக்கு குதிரைச் சேணம் செய்கின்றவன் குதிரைச் சேணத்தில் ஏற்றுகின்றவன் (பெயர் குறிப்பு இல்லை) மஞ்சள் பூசிய இந்த கருத்த அம்மனுக்கு ஒரு நுந்தா விளக்கு எரிக்க கொடுத்த ஆடு 96 ஆடும் சாவாத முதியாத இளம் ஆடுகளாகும். இதற்கு ஏற்பாட்டின்படி உழக்கு நெய் கொண்டு ஏற்பாட்டின்படி நுந்தாவிளக்கு எரிப்பேன் இந்த பிடாரி கோவிலின் கால்வனெழுவானாகிய  _ _  கான _ _ _ பேர் உவச்சன் என்று உறுதி கூறுகிறான் பூசகன். இதை சிவனடியார் கூட்டத்தவர் பாதுகாக்க வேண்டும் என்று முடிகிறது.

    உத்தம சோழ மிலாடன் தன் குதிரைச் சேவகனை அனுப்பி இந்த நுந்தா விளக்கு தந்துள்ளான் என்று புரிந்து கொள்ள முடிகிறது. இங்கே கல்வெட்டில் மிலாடு என்பது வேடபுரத்தின் முன் வருவதால் இங்கு மிலாடு என்பது நாட்டின் பெயராகவும் குறிக்கப்படுகிறது. இப்படி சில கல்வெட்டுகளில் இச்சொல் ஆளப்படுகிறது. இது 79 நாட்டு மிலாடு இதாவது, சங்கத்தின் உறுப்பு நாடு என்று கொள்ளலாம்.

    இந்த உத்தம சோழன் பற்றிய கல்வெட்டு குறிப்பு எலவானாசூர் சிவன் கோவில் பற்றிய “வரலாற்று வடிவங்கள்” என்ற தமது நூலில் புலவர் சு. குப்புசாமி கொடுத்துள்ள 80 கல்வெட்டுகளில் முதல் கல்வெட்டாக கோபுர வாயிலில் உள்ள கற்பலகையில் வெட்டப்பட்டுள்ளது, பக்கம் 85 இல் இடம்பெறுகிறது. இது இராசராச சோழனுக்கு 7 ஆம் ஆட்சி ஆண்டில் 992 இல் உத்தம சோழனுடைய 15 ஆம் ஆட்சி ஆண்டில் 977இல் இறையானூர் கோவில் அலுவலருக்கு இராம தேவன் சித்தவடவன் என்னும் விக்கிரம சோழ மிலாடுடையார் செம்பியன் மாதேவி சதுப்பேதி மங்கலத்தை உருவாக்கினான் என்கிறது. அதே நேரம் சித்தவடவன் அகம்படனான உத்தம சோழ மிலாடுடையான் உருவாக்கிய அரண் கலக்கி சதுர்வேதி மங்கலம் என்ற இரண்டு சதுர்வேதி மங்கலமும் உடையார் செம்பியன் மாதேவியார்க்கும் அவள் மகன் வேந்தன் உத்தம சோழ தேவனுக்கும் என்பதோடு கல்வெட்டு உடைந்து  விட்டது. மேலும் செய்தியை அறிய முடியவில்லை. இந்த இரு சித்தவடவனும் மன்னன் உத்தம சோழனுடைய பிள்ளைகளாக இருத்தல் வேண்டும். இதே நூலில் 3 ஆம் கல்வெட்டாக பக். 88-90 இல் இடம்பெறும் 24 வரிக் கல்வெட்டு இதே கோவிலின் முதல் பிரகாரத்தின் வடக்கு சுவரில் வெட்டப்பட்டுள்ளது. அது சோழ கேரளன் என்று குறிப்பிட்டு முதல்  இராசேந்திரனின் 3 ஆம் ஆட்சி ஆண்டு கி.பி.1015 இல் இக்கல்வெட்டில் மலாடுடையார் பார்க்கவ கோத்திரத்து பராந்தகந் இயாதவ வீமநாந உத்தம சோழ மலாடுடையார் என்ற பெயரில் நிவந்தம் செய்த செய்தி உள்ளது. இங்கே மலாடுடையார் என்று முதலில் குறிப்பிட்டுவிட்டு மீண்டும் உத்தம சோழ மிலாடுடையார் என்று ஏன் வரவேண்டும்? இரண்டு இடத்திலும் இதன் மாறுபட்ட பொருள் என்ன? இந்த யாதவ வீமன் பிடாரிக்கு விளக்கு எரித்த கல்வெட்டில் வரும் உத்தம சோழ மிலாடுடையானாக இருக்க வேண்டும். ஏனெனில் அவன் பெயரில் கண்டராதித்தன், உத்தமன் ஆகிய சமகால சோழ வேந்தர் பெயர்கள் இடம் பெறுகின்றன. அப்படியாகின் இவன் 977 – 1015 வரை 38 ஆண்டுகள் ஆண்டுகள் ஆட்சி புரிந்து உள்ளான் எனத் தெரிகிறது.

    பார்வை நூல்: ஆவணம் இதழ் 2, 1992 பக். 19

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வெள்ளுவாடி கிராமம் வெள்ளாற்றங்கரை ஓரம் உள்ள முனியப்ப கோயில் அருகே உள்ள கொல்லையில் உள்ள கற்பலகையில் உள்ள 12 வரிக் கல்வெட்டு

    1. ஸ்ரீமத் பூமி தேவி புத்தி(ர) சித்
    2. திர மேழி சாசனம்ப
    3. டிக்கு வச்ச நியாய பரிபா(லன)
    4. ப் பிள்ளையார்க்கு நியாய(த்)
    5. தோம் நாம் வைச்சுக் குடுத்த
    6. தன்மத்துக்கு அழிவு செய்
    7. தாருண்டாகில் எழுபத்தொ
    8. ன்பது நாட்டுக்கும் பதிநெட்
    9. டிராச்சியத்தில் வளைஞய(ரோ)
    10. மும் குதிரை னாயக குத்
    11. துல் ஆளை வெட்டுதல்
    12. தானா நில

    நியாயத்தோம் – தீர்ப்பு கூறுவோர்;

    விளக்கம்: 12-13 நூற்றாண்டினதாக இக்கல்வெட்டு இருக்கலாம். வேந்தன் பெயர், ஆட்சி ஆண்டுக் குறிப்பு ஏதும்  இல்லை. இதில் சித்திரமேழி, பெரிய நாட்டார், 18 விஷய வணிகக் குழுவினரின் குறியீடுகள் செதுக்கப்பட்டுள்ளன. ஆதலின் இது அவர்கள் தொடர்பானது.

    பூதேவி மக்களான சித்திரமேழி சாதியர் சாசனத்தின்படி நியாயம் வழங்கும் பிள்ளையாருக்கு தீர்ப்பு கூறும் நியாயதோர் வைத்து கொடுத்த நில தான அறத்திற்கு எவரேனும் அழிவு செய்ய முற்பட்டால் 79 நாட்டுக்கு சாதி சங்கத்தாருக்கும் 18 இராச்சியத்தை சேர்ந்த வளைஞர் என்னும் ஆயிரத்து ஐந்நூற்றுவ வணிகருக்கும் செய்த கேடாகக் கருதி அத்தகையோரை குதிரைப்படைத் தளபதி குத்தியும் வாளால் வெட்டியும் பிள்ளையாருக்கு கொடுத்த இந்த தான நிலத்தை நிலைநிறுத்த வேண்டும் என்கிறது கல்வெட்டு. சித்திரமேழியாரும் திசை ஆயிரத்து ஐந்நூற்றுவரும் ஒரே இன மக்கள் என்பதற்கு இது சான்று.

    வாலிகண்டபுரம் இரண்டாம் இராசராசன் 11 ஆம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டு 1161 இல் இன்றைய உடையார்களான நந்தமர்களை சித்திரமேழிப் பெரிய நாடான யாதவர் குலத் தலைவரான நத்தமக்கள் என்கிறது. எனவே 79 நாட்டார், சித்திரமேழி பெரியார் நாட்டார் ஆகியோர் ஒரே மக்களே ஆவர். இந்த சித்திரமேழியர் பற்றிய கல்வெட்டுகள் விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய இடங்களில் அதிகமாக கிடைக்கின்றன. இவை மலையமான்களின் மிலாட்டுப் பகுதி என்பதை நினைவில்  கொள்ள வேண்டும். உலகின் எந்த நாடானாலும் நியாயம், நியதி (rule), ஏற்பாடு, அறம் எதுவாயினும் ஆயுத வலுவால் தான் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றன, நிலைநிறுத்தப் படுகின்றன. இன்று வரை இதுவே பொது நடைமுறையாக உள்ளது. அதை தான் மேலுள்ள கல்வெட்டும் வெளிப்படுத்துகிறது. அதில் தவறு ஏதும் இல்லை. தவறு எது என்றால் பழைய நூல்கள் சமசுகிருதத்தில் தான் உள்ளன அந்த சமசுகிருதத்தை பிராமணர் அறிந்தவர் என்ற ஒரே காரணத்தை முன் வைத்து சாதியும், வர்ணாசிரமும் பிராமணரால் தான் உருவாக்கி நடைமுறைப் படுத்தப்பட்டன என்ற கருத்து சிந்திக்கக் கூடிய மக்களை முட்டாள் ஆக்கும் பொய்யே ஆகும். ஆயுதம் ஏந்தாத பிராமணர் தம் பாதுகாப்பிற்கே அடுத்தவரை சார்ந்திருக்க வேண்டிய நிலையில் அரசர்தம் ஆயுதத்தால் நிலைநிறுத்தப்பட்ட சாதி, வருணாசிரம நியதியை அவர்கள் தான் செய்தனர்; சாதிக்கு ஒரு நீதி வருணத்திற்கு ஒரு நீதி என்று ஏற்படுத்தினர் என்பது அறிவிற்கு ஏற்புடையதன்று. தமிழனின் 150 ஆண்டு கால முட்டாள் தனத்தை நீக்கி அறிவொளி ஊட்டுவது இது போன்ற கல்வெட்டுகளே.

    பார்வை நூல்: பெரம்பலூர் மாவட்டக் கல்வெட்டுக்கள், செப்பேடுகள், இல. தியாகராஜன், பக். 263 – 265

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வாலிகண்டபுரம் சிவன் கோவில் மகாமண்டப கிழக்கு சுவரில் உள்ள 11 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச்  சக்கரவத்திகள் இராசராச தேவற்கு
    2. யாண்டு 11 வது வடகரை வன்நாட்டு
    3. வாலீஸ்வரமுடைய நாயனார் திருக்கோயிலில் இடங்கை தொண்ணூற்றெ
    4. ட்டுக் கலனையும் நிறைவற நிறைந்து குறைவறக் கூடிக் கல்வெட்டினபடி
    5. யாவது பல மண்டலங்களில் பிராமணரும் ஆரியரும் சித்திரமேழிப் பெரிய
    6. னாடான யாதவகுலத் தலைவரான நத்தமக்களும் சதிரமுடித் தலைவரான மலை
    7. யமான்களும் காயாங்குடிக் கண்ணுடை அந்தணரும் சம்புவர் குலபதிப் பன்னா
    8. ட்டாரும் பதினெண் விஷயத்து வாணிய நகரங்களும் பொற் கோயிற் கைக்கோ
    9. ளரும் யிடங்கை தொண்ணூற்றெட்டுக் கலனைகளுக்கும் ஒருவற்கு வந்த நன்மைத் தீமை
    10. அனைவற்கும் ஆவதாகவும். யிப்படி விலங்கினோமாகில் மாறு சாதிக்குங் கீழ் சாதிக்
    11. கும் தாழ்வு செய்தோ மிதனை யிப்படி ஒரு காலாவதும் யிருகாலாவதும் முக்காலாவதும் (முற்றுப் பெறவில்லை)

    கலனை – கூட்டு உறுப்பு சாதி; கண் – பாதுகாவலர், caretaker

    விளக்கம்: இரண்டாம் இராசராச சோழனின் 11 ஆம் ஆட்சி ஆண்டு 1161 இல் வெட்டிய கல்வெட்டு இது. வடகரை வன்நாட்டின் வாலீஸ்வரமுடைய இறைவன் திருக்கோவிலில் இடங்கைப் பிரிவைச் சேர்ந்த 98 கூட்டு உறுப்பு சாதியாரும் நிறைந்து கூடி கல்வெட்டிய காரணமாவது பல மண்டலங்களில் வாழும் பிராமணரும், ஆரியர் என்னும் வெள்ளாளரும், சித்திரமேழிப் பெரிய நாடான இயாதவக் குலத் தலைவரான நந்தமர்களும், சதிரமுடித் தலைவரான மலையமான்களும், காசாங்குடியினர் குடும்பத்தை பாதுகாக்கிற அந்தணரும் (துறவி),  சம்புவர் குலபதியான பன்னாட்டார் என்னும் வன்னியரும், பதினெண் விஷயத்து வாணிய நகரங்களும், பொற்கோயிற் கூரையை காக்கும் கைக்கோளரும் உள்ளிட்ட இடங்கை 98 கூட்டு உறுப்பு சாதிகளும் மேற்கொண்ட உறுதிமொழியாவது யாதெனில் இதன் எந்த ஒரு சாதிக்கும் வரும் நன்மை தீமை அனைத்து சாதிகளுக்கும் பொதுவாக வந்ததாகக்  கொள்வோம். இந்த ஒற்றுமை உணர்வில் இருந்து விலகினோமாயின் வேற்று சாதிக்கும் கீழ் சாதிக்கும் தாழ்வு செய்தோம் என்று ஆகும். இதை இப்படியாக ஒரு தடவையோ, இரு தடவையோ, மூன்று தடவையோ (முற்றுப்பெறவில்லை)

    இதில் இடம்பெறும் யாதவ குல நந்த மக்கள் என்னும் உடையார், மலையமான்கள் (நயினார்) மிலாட்டை விட மிகப் பெரிய ஒரு சாதி சங்க வட்டத்தை உருவாக்குகின்றனர் என்று தெரிகின்றது. இதே போல இரண்டாம் இராசராசனின் 11 ஆம் ஆட்சி ஆண்டு 1161 இல் 79 நாட்டு பார்க்கவ கோத்திரத்து மலையமான்களும், நந்தமர்களும் இடங்கைப் பிரிவில் சேர்ந்த இன்னொரு கல்வெட்டு கள்ளக்குறிச்சி வட்டம் திருவலஞ்சுரம் பசுபதீஸ்வர் கோவிலில் உள்ளது. (பார்க்க ஆவணம் 11, பக். 32)

    பார்வை நூல்: பெரம்பலூர் மாவட்டக் கல்வெட்டுக்கள், செப்பேடுகள், இல. தியாகராஜன், பக். 231- 232

    தென்னார்க்காடு மாவட்டம், திட்டைக்குடி வட்டம் சுகாசின பெருமாள் கோவில் மேற்கு சுவரில் உள்ள 9 வரிக் கல்வெட்டு

    1.  ஸ்வஸ்திஸ்ரீ த்ரிபுவனச் சக்ரவத்திகள் ஸ்ரீ ராஜாதிராஜ தேவற்கு யாண்டு 4 வது ஸிம்ஹ நாயற்று பூர்வ்வ பக்ஷத்து த்ரயோதஸியும் திங்கள் கிழமையும் பெற்ற சதயத்து நாள் ஸ்ரீமற் பூமிபுத்ரஸ்ய சதுர்வ்வண்ணஸ்ய
    2. குலோற்பவம் ஸர்வ்வ லோகஹிதார்த்தாய சித்ர மேளஸ்ய ஸாஸனம். எழுபத்தொன்பது நாட்டு உத்தமநீதி உயர்பெரும்கீத்தி முத்தமிழ்மாலை மும்மையும் நிறைந்த சித்திரமேழிப் பெரிய நாட்டோமும் நான்கு தி
    3. சை பதினெண்பூமி தேசி திசை விளங்கு திசை ஆயிரத்தை ஞூற்றுவரோமும் வடகரை விருதராஜ பயங்கர வளநாட்டு மேற்காநாட்டு ப்ரஹ்மதேயம் திட்டை குடியான திருச்சிற்றம்பல சதுரவ்வேதி மங்கலத்து
    4. திருமேலைக் கோயிலான எழுபத்தொன்பது நாட்டு விண்ணகர் எம்பெருமான் திருமுற்றத்து நாநூற்றுவன் திருமண்டபத்திலே நிறைவற நிறைன்து குறைவறக் கூடி இருன்து இத்திருமுற்றத்திலே ஸ்ரீ பூமிப் பிராட்டியை
    5. எழுன்தருளிவித்து மேழித் தோரணமும் சாத்தி நாட்டுக்கும் நகரத்துக்கும் தர்ம்மமான இவ் வெம்பெருமாநுக்கு அமுதுபடி சாத்துப்படிகளுக்கும் திருப்பணிகளுக்கும் திருநாள்
    6. தேவைகளுக்கும் உடலாக வைத்துக் குடுத்தபடி ஆட்டைக்கு ஏரால் பதக்கு நெல்லும் ஆளால் குறுணி நெல்லும் மாலை கட்டி பரிமாறுவார் ஆளுக்கு ஐஞ்சு காசும் இடக் கடவர்களாகவும்
    7. நங்கீழ் பணிமக்கள் ஆட்டைக்கு இரண்டு காசு இடக் கடவர்களாகவும் நம் ஊர் கோபாலர் குடியால் ஆட்டைக்கு நாநாழி நெய்யளக்கக் கடவர்களாகவும் இப்படி வைத்துக் குடுத்தமையி
    8. ல் இது தண்டுவாருக்கு புக்க ஊரில் வெள்ளை அரிசி தூணிப் பதக்கும் பூரிஅரிசி கலமும் ஐம்பது பாக்கும் வெற்றிலைபற்று இரண்டும் உப்பு நாநாழியும் மிளகு உரியும் எள்ளெண்ணெய் நாழியும் குடு
    9. க்கவும். இப்படி இவை தண்டுமிடத்து வெண்கலம் பறித்தும் மட்கலம் தகத்தும் கொள்ளக் கடவர்களாகவும். இத்திருமுற்றத்து திருவிடையாட்டங்கள் அழி பிழை அந்நியாயம் செய்தார் நாட் (எஞ்சியவை  சுவற்றில்  மறைந்துள்ளன)

    சிம்ம நாயற்று – ஆவணி மாதம்; ஸ்ரீமத் – புகழ்மிக்க; சாத்துபடி – பூ, மாலை முதலிய சாற்றுவது; உடலாக – மூலதனமாக; தண்டு – வாங்கு, collect; திருமுற்றம் – கோவில் வளாகம்;

    விளக்கம்: இரண்டாம் இராதிராஜனின் 4 ஆம் ஆட்சி ஆண்டு 1170 இல் ஆவணி மாதம் முதல் பாதி வளர்பிறை 13 ஆம் நாளில் திங்கட் கிழமை அன்று சதய நட்சத்திரம் கூடிய நன்நாளில் “புகழ்மிக்க பூமி மக்களின் நால்வருணத்து குலத்தில் பிறந்து உலக நன்மைக்கும் பொருட் தேவைக்கும் இயங்குகின்ற சித்திரமேழியர் கல்வெட்டு ஆவணம் இது” என்று மெய்கீர்த்தி பாடுகிறது. பார்க்கவ கோத்திரத்து 79 நாட்டவரின் உயர்ந்த நீதியும், உயர் பெருங் கீர்த்தியும், முத்தமிழ் மாலை என்ற மூன்று சிறப்பும் நிறைந்த சித்திர மேழிப் பெரிய நாட்டவரும் நான்கு திசைகளிலும் பயணித்து 18 பூமி தேசி திசை அறிந்த திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் வணிகக் குழுவினரும் வடகரை விருதராஜ பயங்கர வளநாட்டு மேற்காநாட்டின் பிரம்மதேயமான திட்டைகுடி திருச்சிற்றம்பல சதுர்வேதி மங்கலத்தின் திருமேலைக் கோயிலான 79 நாட்டவரின் திருமால் கோவிலில் எம்பெருமான் திருமுற்றத்தில் நாநூற்றுவன் திருமண்டபத்தில் நிறைந்து கூடி இந்த திருமுற்றத்தில் பூமா தேவியின் சிலையை எழுந்தருளிவித்து அங்கே கலப்பைத் தோரணமும் கட்டி நாட்டிற்கும் நகரத்திற்கும் அறமான இந்த எம்பெருமானுக்கு அன்றாட அமுதுபடிக்கும் பூ, மாலை அலங்காரத்திற்கும் தெய்வத் திருப்பணிகளுக்கும் உற்சவ தேவைகளுக்கும் மூலதனமாக இருப்பதற்கு என்று செய்து கொடுத்த ஏற்பாட்டின்படி ஒவ்வொரு ஆண்டும் ஒரு ஏருக்கு பதக்கு நெல், ஆளுக்கு குறுணி நெல் என்ற மேனியில் கொடுப்போம். மாலை கட்டித் தருபவர் ஆள் ஒருவருக்கு 5 காசும் கொடுக்க வேண்டும். நம் கீழே பணி மக்களாக வேலை செய்பவரும் ஆண்டு ஒன்றுக்கு 2 காசும் கொடுக்க வேண்டும். நமது ஊர் இடையர் குடும்பம் ஒவ்வொன்றும் ஆண்டுக்கு நான்கு நாழி அளவு நெய் கொடுக்க வேண்டும். இப்படி ஏற்பாடு செய்து கொடுத்தமையில் இதை வசூலிப்பவருக்கு புக்க ஊரில் வெள்ளை அரிசி தூணிப் பதக்கு அளவும், பூரி அரிசி கலம் அளவும், 50 பாக்கும், வெற்றிலைப் பற்று இரண்டும், உப்பு 4 நாழி அளவும், மிளகு உரி அளவும், எண்ணெய் நாழி அளவும் கொடுக்க வேண்டும். இவ்வாறு வசூலிக்கின்ற போது வெண்கலத்தைப் பிடித்தும் பானையை தகர்த்தும் வாங்கிட வேண்டும். இது என்ன மூட நம்பிக்கையோ தெரியவில்லை!! வெண்கலம் செல்வத்தின் குறியீடு மட்கலம் ஏழ்மையின் குறியீடு. இந்த திருமுற்றத்தில் அழிபிழைகள் அநியாயங்கள் செய்தவர் நாட்டில் என்ற அளவில் கல்வெட்டு சுவற்றில் மறைந்த உள்ளதால் மேலும் ஏதும் அறிந்து கொள்ள முடியவில்லை.

    சித்திர மேழியர், வணிகர் திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர், இடையர் ஆகியோர் உபயமாகப் பொருள் கொடுக்க வேண்டும் என்ற இந்த உடன்பாட்டை கூர்ந்து கவனித்தால் இம்மூவரும் பார்க்கவ கோத்திரத்தார் என்று புரிகிறது. இதை 79 நாட்டவர் விண்ணகர் என்னும் சொல்லாட்சி உறுதிப்படுத்துகிறது. தொடக்கத்தில் ஆடு, மாடு மேய்த்தும் பின்பு நாகரீக வளர்ச்சியில் உழவுத் தொழிலை மேற்கொண்டும் அதன்பின்பு தம் விளைபொருளை விற்க வணிகத் தொழிலையும் ஏற்றுள்ளனர். இன உணர்வு இல்லாவிடில் யாரும் இவ்வாறான உடன்படிக்கைக்கு உடன்படமாட்டார் என்பது தெளிவு. இன உணர்வால் அன்றி மதத்தால், பிராமணரால் சாதியை உருவாக்க முடியாது என்பதை திராவிட அரசியல் மறைக்கின்றது. உண்மையை விடுத்து பொய் உரைக்கின்றது. மதத்தை, பிராமணரை அழித்துவிட்டால் எல்லாம் சரி ஆகிவிடும் என்று வெறுப்பை பரப்புகின்றது. அறிவு மயக்கமுற்ற தமிழர் தான் இதில் தெளிவடைய வேண்டும். மதமோ பிராமணரோ கால்நடை மேய்த்த நத்தமக்களை உழவில் ஈடுபடச் சொல்லவில்லை. அப்படி உழவிற்கு மாறியவரை மதமோ பிராமணரோ வணிகத்தில் ஈடுபட அறிவுறுத்தவில்லை. இந்த தொழில் மாற்றம் நாகரிக வளர்ச்சியால் உண்டானது. அற்றை நாளில் சாதியே உந்து விசையாக (driving force) இருந்தது என்பதை இக் கல்வெட்டு தெளிவாக்குகிறது. மேலும் இது ஒரு சாதி ஆணைக் கல்வெட்டு. ஊர்ச் சாதிமார் அத்தனை பேரும் இதற்கு கட்டுப்பட்டவர்.

    பார்வை நூல்: தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 8, எண் 291 (A.R. No 21 of 1903)

    விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வட்டம் பழங்கூர் ஏரி பழைய மதகின் தூண் ஒன்றில் உள்ள 11 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ இ
    2. த் தூம்பு திட்
    3. டிட்டு வெ
    4. ன்றான். இது
    5. இடுவித்தா
    6. ன் மலையந்
    7. மலையநாந
    8. குலோத்து
    9. ங்க சோழக்
    10. கோவலராஜ
    11. ன்

    தூம்பு – மதகு; திட்டு – மேடு; வெல் – மேம்படுத்து, இடுவி  – செய்வி, கோவலராஜன் – திருக்கோவிலூர் அரசன்.

    விளக்கம்: இது 12 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு. இங்கு மலையமான் குலோத்துங்க சோழன் என்று பெயர் கொண்டுள்ளான். முதல், இரண்டாம், மூன்றாம் குலோத்துங்க சோழர் மூவரும் 12 ஆம் நூற்றாண்டினர் எனவே இவன் 12 ஆம் நூற்றாண்டினன் என்று கொள்ளலாம். இந்த மதகும் கரைமேடும் மேம்பட செய்வித்தான் மலையர்குடி மலையமானான குலோத்துங்க சோழ திருக்கோவிலூர் அரசன். இங்கு மிலாடு – மலாடு ஆகிய சொற்கள் தவிர்க்கப்பட்டு மலையன் என்று குறித்திருப்பது இவருக்கு மிலாடு என்னும் சங்கத்தை கூட்டும் பொறுப்பு இல்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது. மலையமான்கள் வெவ்வேறு பிரிவாக ஆண்டதும் இதற்கு காரணம் ஆகலாம். கோவல என்றால் இடையன் என்று பொருள். கோவலூர் பின்னீடு கோவிலூர் என்று தவறாக வழங்குகிறது. எனவே கோவலராசன் என்றால் இடையர்க்கு அரசன் என்பதே நேர் பொருள். இயாதவ வீமன் உத்தம சோழன் என்ற பெயரில் இருந்து இது தெளிவாகிறது. தொடக்கத்தில் மலையமான்கள் இடையராக இருந்து பின்பு மருத நில மக்களாகி அதன் பின் அந்த மருதநில மக்களே சித்திரமேழிப் பெருநாட்டு வணிகராகவும் உருவெடுத்துள்ளனர் என்று தெரிகின்றது. மேலும் கிளியூர் மலையமான்கள் காலம் முதல் மிலாடுடையான் என்ற சொல் கல்வெட்டில் அவர் பெயருடன் இடம்பெறுவதில்லை என்பதை நோக்க மிலாடு கூட்டும் உரிமையை சோழ வேந்தனால் மலையமான்கள் இழந்திருப்பரோ என்று எண்ணம் எழுகிறது. எனவே இந்த கல்வெட்டும் மிலாடு > மலாடு என்பது மலைநாடு என்பதன் திரிபு என்பதை நொறுக்குகிறது.

    பார்வை நூல்: ஆவணம் இதழ் 1, பக். 26,

    தென்னார்க்காடு மாவட்டம் திட்டக்குடி வட்டத்தில் உள்ள ம. புடவூர் திருவனந்தீசுவரர் கோயில் மகாமண்டப வடசுவர் மேற்குப் பக்க முப்பட்டைக் குமுதப் பகுதியில் உள்ள 3 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ திருபுவன சக்கரவத்திகள் ஸ்ரீ இராசாதிராச தேவற்க்கு யாண்டு 8 ஆவது இருங்கோளப்பாடி நாட்டு வேட்ப்பூருடையான் பெரியான் திருவனான இராசராச  மிலாட
    2. குலராயனேன் மிலாடாகிய செனனாத வளநாட்டுக் கீழ்நரையூர் கூற்றத்துப் புடவூரில் நான் எழுந்தருளிவித்த உடையார் திருவனந்தீச்வரமுடைய நாயநார் திருநாமத்துக்
    3. காணி ஆக நான் காணியாக நீர்வார்த்துக் குடுத்தேன் வேட்ப்பூருடையான் பெரியாந் திருவனான இராசராச மிலாடகுலராயனேன்

    திருநாமத்துக் காணி – கடவுள் பெயரில் நில உரிமை

    விளக்கம்: இரண்டாம் இராசாதிராச சோழனின் 8 ஆம் ஆட்சி ஆண்டில் 1174 இல் இருங்கோளப்பாடி நாட்டின் வேட்ப்பூரில் வாழும் பெரியான் திருவனான இராசராச மிலாடகுலராயன் மலையமான்களின் ஆட்சிப்பகுதி மிலாடாகிய செனனாத வளநாட்டின் கீழ்நரையூர் கூற்றத்தில் அடங்கிய புடவூரில் நான் எழுந்தருளுவித்த இறைவன் திருவநந்தீஸ்வர நாயனாருக்கு அவர் பெயரில் நீர்வார்த்து காணி கொடை கொடுத்தேன் வேட்பூர் வாழ் பெரியான் திருவனான இராசராச மிலாடகுலராயன் என்கிறான். இங்கு மிலாடகுலம் என்பது பார்க்கவகுலம், மலையர்குலம் என்று பொருள்படும். இவன் மலையர் நாட்டில் வாழாதவன் ஆயினும் மலையர்நாட்டில் ஒரு கோவில் கட்டுவித்து அதில் லிங்கத்தை நிறுத்து உள்ளான். இவன் அரசன் அல்லன் ஆயினும் மலையர் குடியில் பிறந்தவன் என்று தெரிகின்றது. இப்படி மிலாடு என்ற சொல் பலவாறாக பயன்படுத்தப் பட்டுள்ளது. மேலும் மலையமான்கள் மன்னர் என்ற நிலைக்கும் கீழே அரையர், கிழார் நிலையிலும் ஆண்டுள்ளனர். காட்டாக,  வாலிகண்டபுரம் வன்நாடு என்னும் சிறு நாட்டுப் பகுதியில் அடங்கியது. முதற் பராந்தகன் காலத்தில் அவனது 4 ஆம் ஆட்சி ஆண்டில் 911 இல் வீரசோழ மிலாடுடையான் என்று ஒருவன் ஆண்டுள்ளான். இவன் மனைவியானவள் வன்னாடுடையார் அக்கோப்புகழறையார் மகளார் நாட்டடிகளார் வைத்த விளக்கிற்கு பொன் 7 கழஞ்சு கொடுத்துள்ளாள் என்கிறது வாலிகண்டபுரம் கல்வெட்டு. இவள் தந்தை அக்கோப்புகழறையார் ஒரு கிழார் நிலை ஆட்சியாளர். எனில் வீரசோழ மிலாடுடையான் கிழான் அல்லது அரையன் என்று புரியும். இதே காலகட்டத்தில் மன்னனாக சித்தவடவன் என்பவன் பராந்தகனின் 7 ஆம் ஆட்சி ஆண்டில் 914 இல் ஆண்டுள்ளான்.

    பார்வை நூல்: ஆவணம் 3, 1993, பக். 2

    Share
  • குறளின் கதிர்களாய்…(494)

    குறளின் கதிர்களாய்…(494)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(494)

    சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா
    செய்யாமை மாசற்றார் கோள்.

    – திருக்குறள் – 311 (இன்னா செய்யாமை)

    புதுக்கவிதையில்…

    சிறப்பைத் தந்திடும்
    செல்வம் பெருமளவில்
    பெறுவதாக இருந்தாலும்,
    பிறர்க்குத் தீமை செய்யாதிருக்கும்
    பெருந்தன்மையே
    மனதினில்
    மாசற்றவர்களின் கொள்கையாகும்…!

    குறும்பாவில்…

    சிறப்புடைச் செல்வம் பெறுவதானாலும்
    பிறர்க்குத் தீங்கு செய்யாமல் இருப்பதுவே
    மனதில் மாசற்றோர் கொள்கையாம்…!

    மரபுக் கவிதையில்…

    பிறர்க்குத் தீமை செய்வதாலே
    பெரிதாய் வந்து சேர்கின்ற
    சிறப்பு மிக்கச் செல்வத்தைச்
    சிறிதும் விரும்பி ஏற்காமல்
    பிறர்க்குத் தீங்கு செய்யாமை
    பேணிக் காக்கும் பெருந்தன்மை
    உறவாய்க் கொள்வர் கொள்கையாக
    உளத்தில் மாசே யிலாதவரே…!

    லிமரைக்கூ…

    பெறுவதாயினும் செல்வமெலாம் சேர்த்து,
    பிறர்க்குத் தீங்கேதும் செய்யார் மனமாசற்றோர்
    அதைத்தம் கொள்கையாய்ப் பார்த்து…!

    கிராமிய பாணியில்…

    செய்யாத செய்யாத
    கெடுதல் செய்யாத,
    அடுத்தவர் நோகக்
    கெடுதல் செய்யாத..

    காசுபணம் கணக்கில்லாமக்
    கெடைக்கிறதா இருந்தாலும்
    அத விரும்பாம
    அடுத்தவங்களுக்குக்
    கெடுதல் செய்யாம இருக்கிறதே
    மனசு சுத்தமா
    உள்ளவங்களோட
    கொள்கயா இருக்கும்..

    அதால
    செய்யாத செய்யாத
    கெடுதல் செய்யாத,
    அடுத்தவர் நோகக்
    கெடுதல் செய்யாத…!

    Share
  • குறளின் கதிர்களாய்…(493)

    குறளின் கதிர்களாய்…(493)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(493)

    பொய்யாமை யன்ன புகழில்லை யெய்யாமை
    யெல்லா வறமும் தரும்.

    – திருக்குறள் – 296 (வாய்மை)

    புதுக் கவிதையில்…

    பொய்சொல்லாமல் இருப்பதுபோல்
    ஒருவனுக்குப்
    புகழ்தருவது வேறில்லை,
    அது
    அவன் அறியாமலே
    அறங்கள் அனைத்தையும்
    அள்ளிக் கொடுக்கும்…!

    குறும்பாவில்…

    பொய்பேசாமல் இருப்பது போல
    புகழ்தருவது வேறிலை மனிதனுக்கு, அவனறியாமலே
    அறமெலாம் அவனுக்கது கொடுக்குமே…!

    மரபுக் கவிதையில்…

    பொல்லாப் பொய்யைப் பேசாமல்
    புவியில் வாழ்தல் போலவொரு
    நல்ல புகழைத் தரத்தக்க
    நற்பண் பதுதான் வேறில்லை,
    எல்லா அறமும் அவன்பெறவே
    என்றும் அவனே அறியாதே
    வல்ல வாய்மை யதுவேதான்
    வந்து வழியைத் தந்திடுமே…!

    லிமரைக்கூ…

    பொய்பேசா திருப்பது போலும்
    புகழ்தருவது வேறிலை ஒருவனுக்கு, அவனறியாதே
    அறமெலாம் அளித்திடும் மேலும்…!

    கிராமிய பாணியில்…

    சொல்லாத சொல்லாத
    பொய்யே சொல்லாத..

    எப்பவும்
    பொய்யே பேசாம இருக்கதுபோல
    ஒருத்தனுக்குப் புகழத்தாறது
    வேற எதுவுமில்ல,
    அதுவே அவனுக்கு
    அவனறியாமலே நல்ல
    அறத்தயெல்லாம் குடுத்திடுமே..

    அதால,
    சொல்லாத சொல்லாத
    பொய்யே சொல்லாத…!

    Share
  • அடியார்க்கு எளியனாய் மிளிர்ந்தார் அப்பர்!

    அடியார்க்கு எளியனாய் மிளிர்ந்தார் அப்பர்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    சைவத்தை, சிவனைப் போற்றிடும் குடும்பம்
    சன்மார்க்க வழியிலே நடந்திடும் குடும்பம்
    பெண்ணும் ஆணும் பிள்ளையாய் வாய்த்தனர்
    பெற்றோர் சிவனைப் பரவியே வாழ்ந்தனர்

    சிவனை, சைவத்தைச் சிந்தையில் இருத்திட
    பெற்றோர் நாளும் எண்ணியே வளர்த்தனர்
    பெற்றோர் வழியில் பிள்ளைகள் நடந்தனர்
    நற்றவச் செல்வமாய்  நன்றாய் வளர்ந்தனர்

    இல்லற வாழ்வில் இணைத்தனர் பெண்ணை
    நல்லதோர் துணையும் வந்தே அமைந்திட
    பெற்றவர் மகிழ்ந்தார் உற்றவர் மகிழ்ந்தார்
    காலனோ மகிழா கண்ணீரைக் கொடுத்தான்

    காலம் ஓடின பெற்றோர் பிரிந்தார்
    கணவனை இழந்தாள் தம்பியை அணைத்தாள்
    தம்பிக்குத் தாயாய் ஆகியே நின்று
    தம்பியைக் காத்திட சாமியை வேண்டினாள்

    தம்பி பெயரோ மருள் நீக்கியார்
    மருளது அகன்றிட வழிவகை செய்தாள்
    படித்தான் படித்தான் பலதும் படித்தான்
    சஞ்சலப் பட்டதால் சமணத்தில் கலந்தான்

    தம்பியின் போக்கால் தமக்கை நொந்தாள்
    எம்பிரான் திருவடி பற்றியே நின்றாள்
    சமணத் தலைமை ஏற்றிட்ட தம்பி
    தன்னுள் மாற்றம் வருவதை உணர்ந்தான்

    சகோதரி வேண்டுதல் சங்கரன் ஏற்றான்
    தம்பியை மாற்றிடச் சங்கரன் விரும்பினான்
    சூலை வந்தது சூழ்நிலை கலைந்தது
    மீளவும் தம்பி சைவம் பற்றினான்

    பற்றிய தம்பி பாடினான் பாடினான்
    நற்றமிழ் நாவில் ஊற்றென வந்தது
    நெற்றிக் கண்ணனும் பற்றினான் பாடலை
    நாவுக் கரசனாய் வாழ்ந்திட அருளினான்

    தரும சேனராய் சமணத் தலைவராய்
    இருந்தவர் மாற்றம் எரிச்சலைத் தந்திட
    சமணர் எதிர்த்தார் தண்டனை கொடுத்திட
    ஆண்ட அரசனை அணுகினார் அனைவரும்

    அரசனும் சமணன் ஆட்சியும் சமணமே
    அதிகாரம் அனைத்தும் சமணத்தின் வசமே
    கைது செய்திடக் கட்டளை பிறந்தது
    காவலர் விரைந்தனர் கைதினை மேற்கொள

    அரசன் ஆணையை அறைந்தனர் காவலர்
    அரனின் அடியார் ஆத்திரம் கொண்டார்
    நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்
    துணிவுடன் சொல்லிப் பணியவே மறுத்தார்

    வெகுண்டான் அரசன் வில்லங்கம் விளைந்தது
    சமணக் கூட்டம் சந்தோஷம் கொண்டது
    நீற்றறை பூட்டினார் நஞ்சினை ஊட்டினார்
    யானையை ஏவியே கொன்றிட முயன்றார்

    கல்லுடன் கட்டிக் கடலினுள் வீசினார்
    நற்றுணை நாமமாய் நமச் சிவாயவே
    உற்றிடு துணையாய் ஆகியே நின்றது
    கற்றுணை அங்கே தெப்பமாய் மிதந்தது

    நாதனின் அருளால் அனைத்தும் அகன்றன
    நாட்டினை ஆண்டவன் பணிந்துமே நின்றான்
    சைவம் தழைக்க வழியும் பிறந்தது
    சங்கரன் நாமம் தமிழெலாம் நிறைந்தது

    நாவுக் கரசரை நற்றமிழ் பெற்றது
    நம்சைவம் நல்லதோர் அடியாரைக் கண்டது
    திருமுறை புதியதோர் கருவினைப் பெற்றது
    தத்துவம் வித்துவம் தமிழினை நிறைத்தது

    புதுமையைப் புகுத்தினார் புரட்சியைக் காட்டினார்
    சமுதாயம் தழைக்கச் சைவத்தை வளர்த்தார்
    திருவருள் நம்பினார் செப்பினார் திருமுறை
    குருவென இறையின் திருவடி பற்றினார்

    அரனைத் தொழுவார் அனைவரும் சமமென
    அரிய தத்துவம் அப்பர் மொழிந்தார்
    ஈசன் நாமத்தை இதயம் இருத்துவார்
    இன்னல் அகன்று இருப்பார் என்றார்

    நிலைபெற இருக்க எண்ணிடும் யாவரும்
    நித்தம் கோவில் செல்லுக என்றார்
    படி முறையாகப் பலபல செய்திடப்
    பலரும் உணர்ந்திடப்  பாடமும் நடத்தினார்

    வணங்கத் தலையும் வாழ்த்த வாயும்
    கும்பிடக் கையும் பூக்கொய்திட விரல்களும்
    நற்பணி செய்ய நடந்திடக் கால்களும்
    தந்தவன் இறைவன் என்றுமே மொழிந்தார்

    தொண்டினை முதலாய்க் கொண்டவர் அப்பர்
    என்றுமே உழவாரம் ஏந்தியே நின்றார்
    உழைத்திடல் உயர்வெனக் கண்டவர் அப்பர்
    உழைப்பவர்க்கு இறைவனும் உதவுவான் என்றார்

    பக்தி உலகினில் முத்தாய் ஒளிர்கிறார்
    பக்குவம் பெற்றிட்ட பரமனின் அடியார்
    ஓடும் செம்பொனும் ஒன்றென நோக்குவார்
    ஓரிறை சிவனென உலகிடை வாழ்ந்தவர்

    எண்பத் தொன்றில் இறைவன் அழைத்தான்
    இன்தமிழ், இசைத்தமிழ் கேட்டிட  அழைத்தான்
    துன்பப் பட்டார் துயரிடை உழன்றார்
    என்பும் தோலுமாய் இறையடி  அடைந்தார்

    ஆளுடைப் பிள்ளையார் அப்பரே என்றார்
    ஆண்டவன் நாவுக்கு அரசரே என்றார்
    அன்னையும் தந்தையும் மருணீக்கியார் என்றார்
    ஆளுமைச் சேக்கிழார் வாகீசர் ஆக்கினார்

    தாண்டக வேந்தராய் தமிழன்னை கண்டாள்
    தமிழிசை மறவாப் பாடல்கள் தந்தார்
    ஆண்டவன் விரும்பிட அருந்தமிழ் கொடுத்தார்
    அடியார்க்கு எளியனாய் அப்பர் மிளிர்ந்தார்

    Share
  • Sports Den – A new venture is now in Mandaveli

    Sports Den – A new venture is now in Mandaveli

    Baskar Seshadri

    Meet Young Sooraj Viswanathan of Mandaveli. He is a lawyer by profession but he had a fire in the belly to make it big and ventured into sports area. He himself is a sports enthusiast and thought of making a new Venture his life time ambition. He did not roam in the market for such a space since he decided his own old house to be the apparel shop. He modified his house with the best of Interiors and today it’s called Sports Den – A new sports outlet in Mandaveli almost first of its kind in this periphery.

    This den has all the apparels of all major sports viz Tennis, Badminton, Table Tennis and Pickle Ball. Pickle Ball is a new sport to India but a very famous one in United states. This apart he has a wide range of Running Shoes of all sizes and this is almost a sports utility point.  From a lovely tennis racket to all kinds of Sports accessories this shop can be counted on. Since he had ventured into his interesting area, he had shelved his law activity and had decided to concentrate on this new project.

    More Interesting about this Den is the lovely Pickle ball court. This huge court had been designed by Suraj and this is specially Built for Pickle ball. Those who are interested to play can come to use the Court for a nominal sum. This is on Hourly Basis.

    What’s More interesting is it’s a 24×7 Court. If you feel like cherishing after a late-night work, you can just drop in and have a play with your friends. What if you are hungry and thirsty? No worries. He has a coffee shop and beverage counter too with some snacks to offer. This was inaugurated this Evening by the Ace Tennis Player Tennis Krishnan.

    Sports Den is A not to miss sports Joint. Take your loved ones in this summer vacation to this Den. They will love you more.

    Sports Den is at 32/68 Fourth Trust Cross Street, Mandaveli, Chennai 28. Adjacent to Chaitanya School Sooraj can be Reached on 95000 13932.

    Share