தமிழர்களின் கடல்சார் வணிகம்

0

ஆய்வாளர்

.பாஸ்கர்
முதுகலைத் தமிழ் இரண்டாமாண்டு,
மொழிகள் துறை,
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்,
பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகம்,
வல்லம், தஞ்சாவூர்.

ஆய்வு நெறியாளர்

புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள்
உதவிப் பேராசிரியர், மொழிகள் துறை,
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்,
பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகம்,
வல்லம், தஞ்சை மாவட்டம் – 613403.

முன்னுரை   

சங்ககாலம் முதற்கொண்டு வணிகத்தில் தமிழர் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றனர். “திரைகடலோடியும் திரவியம் தேடு  என்பது ஒரு முதுமொழி. இருப்பினும் வணிகச் சமூகம் பல சமயங்களில் நியாயமற்ற முறையில் சுரண்டல் மூலம் செல்வம் ஈட்டிச் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் அல்லது சமனற்ற போக்கைப் பெருகச் செய்யும் போது அதனால் பாதிக்கப்பட்டவர்கள் “வர்க்கப் போராட்டத்தில்” ஈடுபட்டு வணிகரை எதிர்த்துள்ளார்கள். எடுத்துக்காட்டாக “உழவர் சமூகத்தைச் சேர்ந்த  அப்பர்  தலைமையில் தமிழ்நாட்டில் பொதுமக்கள் செல்வம் நிறைந்த வணிகருக்குக்கெதிராகத் திரண்டெழுந்ததைக்” குறிப்பிடலாம்.

பல்வேறு துறைமுகங்கள்

அரபு நாட்டினர், யவனர், சாவக நாட்டினர் ஆகிய பிறநாட்டினர் தமிழ்நாட்டிற்கு வணிகத்திற்காக வருகை புரிந்தனர். இதனால் தமிழகக் கடற்கரையில் பல்வேறு துறைமுகங்கள் உருவாகும் சூழல் உருவானது. குமரித் துறைமுகம், கொல்லந்துறை துறைமுகம், எயிற்பட்டினத் துறைமுகம், அரிக்கமேடு துறைமுகம், காவிரிப்பூம்பட்டினத் துறைமுகம், தொண்டித் துறைமுகம், மருங்கூர்ப் பட்டினத் துறைமுகம், முசிறி துறைமுகம், இலங்கையில் பல இடங்களில் இருந்த துறைமுகங்கள் எனப் பல்வேறு இடங்களில் துறைமுகங்கள் இருந்ததை அறிய முடிகிறது. பண்டைத் தமிழ்ச் சமுதாயத்தில் காணப்படும் வணிகம் தொடர்பான செய்திகள், வளர்ச்சி பெற்ற நாகரிகம் மிக்க சமுதாயமாகத் தமிழ்ச் சமுதாயம் இருந்ததை உறுதிப்படுத்துகிறது.

பட்டினப்பாலையில் வணிகம்

இன்றைய தமிழகம் வணிகத் துறையில் ஏற்றுமதி இறக்குமதியில் இந்தியாவில் எந்த மாநிலத்தைக் காட்டிலும் முன்னிலையில் உள்ளது. தமிழகத்தின் துறைமுகங்களோ உலக அளவில் மற்ற முன்னணி நாடுகளுடன் போட்டிபோடும் விதத்தில் சிறந்து விளங்குகிறது.  இன்று மட்டுமல்ல ஏறத்தாழ சங்கக் காலம் தொட்டே தமிழகத் துறைமுகங்கள் இரவு பகல் பாராமல் இயங்கின என்று அறியமுடிகிறது. சங்கக் காலச் சோழ மாமன்னன் கரிகாற்பெருவளவனின் வணிகத் தலைநகராக விளங்கிய காவிரிப்பூம்பட்டினத்தின் துறைமுகமும் அதைச் சார்ந்த அங்காடிகளும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இரவும் பகலும் இயங்கியுள்ளது. பகலில் இயங்கிய கடைகளுக்கு ‘நாளங்காடி’ எனவும் இரவில் இயங்கிய கடைகளுக்கு ‘அல்லங்காடி’ எனவும் பெயரிடப்பட்டது. இன்றைய சுங்க நடைமுறையும் அப்போதே தொடங்கிவிட்டது போலும்.

“புலிபொறித்துப் புறம்போக்கி”1

என்னும் பட்டினப்பாலை வரி மூலம் காவிரிப்பூம்பட்டினத்தில் ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மீது சோழரின் புலிச்சின்னம் பொறிக்கப்பட்டது என்பது புலனாகிறது. மேலும் காவிரிப்பூம்பட்டினத்தில் கையாளப்பட்ட பொருட்களின் வகைகளைப் பின்வரும் செய்தியால் அறியலாம்.

மரக்கலன்களில் கொண்டுவரப்பட்ட குதிரைகளும், மிளகு மூட்டைகளும், மேருமலையில் தோன்றிய மாணிக்கமும், பொன்னும், மேற்கு மலையில் கிடைத்த சந்தனமும், அகிலும், கொற்கை முத்துக்களும், கிழக்குக் கடற்கரையில் கொணர்ந்த பவளமும், கங்கை, காவிரியில் கிடைத்த பொருட்களும், ஈழம், காடரம் (இன்றைய மலேசியா) பொருட்களும்  இரு துறைமுகமும் எத்துணை சிறப்பாக நிர்வகிக்கப்பட்டிருந்தால் இத்துணை பொருட்கள் கையாளப்பட்டிருக்கும் என்பதை ஊகிக்கலாம். பண்டைய தமிழகத்தின் கடல்சார் வணிகம் எத்துணை சிறப்பாக நடந்தது என்பதனைச் சங்கக் கால நூலான பட்டினப்பாலை கூறுகின்றது.

கடல் வாணிகம்

பழந்தமிழர் செல்வம் ஈட்டும் பொருட்டு உலகின் பலநாடுகளுக்குக் கடற்பயணம் மூலம் வாணிகம் செய்துள்ளனர். கங்கைக்கரையில் இருந்த பாடாலிபுரம், இலங்கை, பர்மா, கடாரம் (மலேசியா), சாவகநாடு (கிழக்கிந்தியத் தீவுகள்), அரபுநாடுகள், எகிப்து, யவனம் (ரோம், கிரேக்கம்) போன்ற பல நாடுகளுடன் வாணிகம் செய்ததுடன் பல துறைமுகங்கள் தமிழரின் கட்டுப்பாட்டிலே இருந்துள்ளன. “கலிங்க நாட்டில் பித்தும்டா வணிக நகரம் பலகாலமாகத் தமிழர் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது என்பதும், அதை மீட்ட கலிங்க மன்னர் அந்நகரத்தை உழுது அழித்தார்” என்பதும் அத்திக்கும்பா கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யூத அரசர் சாலமன் அரண்மனையில் தமிழகத் தேக்கு மரப்பொருள்கள் இருந்த குறிப்புகள் யூதர்களின் புனிதநூலான தோராவில் உள்ளது. யவனர்களுடனான வணிகத் தொடர்பைப் “பெரிப்ளூசின் செங்கடல் செலவு” (The periplus of the Erith-rean Sea) என்னும் நூலில் அறியலாம். இந்நூல் கொற்கை நகரில் கிடைக்கும் முத்துக்கள் வேறு பொருட்களை விட மதிப்பு வாய்ந்தவை என்று குறிப்பிடுகிறது. பிளைனி, தாலமி போன்றோரின் குறிப்புக்களும் தமிழரின் பிறநாட்டு வணிகத் தொடர்பையும் பண்டைய தமிழகத் துறைமுகங்களின் பெருமையையும் குறிப்பிடுகின்றன. கீழடியில் கிடைத்த உரோமானிய நாணயங்களும், ரௌலட் அரிட்டைன் வகை மண்பாண்டங்களும் கிடைத்துள்ளன. மண்டபம் அருகில் உள்ள அழகன்குளம், புதுச்சேரியின் அரிக்கமேடு போன்ற இடங்களில் தொல்லியல் ஆய்வுகளில் கிடைத்த எகிப்து நாட்டின் பானையோடுகளும், பெண்ணின் சித்திரம் பதித்த பானையோடுகளும், மணிகளும், நந்த அரசர்களின் நாணயங்களும் கிடைத்துள்ளன.

தமிழ்நாட்டு வணிகம்

தமிழ்நாட்டின் மூன்று பக்கங்களிலும் கடல் சூழ்ந்திருந்தபடியால் தமிழர் இயற்கையாகவே கடற்பயணம் செய்வதிலும் கடல் வாணிகம் செய்வதிலும் தொன்றுதொட்டு ஈடுபட்டிருந்தார்கள். மேலும் கடற்கரையாகிய நெய்தல் நிலங்களில் வாழ்ந்தவர்கள் நாள்தோறும் கடலில் சென்று மீன் பிடித்து வந்து வாழ்க்கையை நடத்தினார்கள். ஆகையால் கடலில் போய் வருவது தமிழர்களுக்குப் பழங்காலம் முதல் இயற்கையான தொழிலாக இருந்தது. கடலில் நெடுந்தூரம் கப்பலில் போகவும் வரவும் பழங்காலத்திலேயே பழகினார்கள். கரிகால் சோழனுடைய முன்னோனான ஒரு சோழன் கடற்காற்றின் உதவியினால் கடலில் நாவாய் ஓட்டினான்.

“நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!2

என்று புறநானூற்றுச் செய்யுள் கூறுகிறது. பழம் காலத்துப் பாண்டியன் ஒருவன் தன் அடி, அலம்பக் கடலில் நின்றான் என்றும், கடலில் தன் வேலை எறிந்து அதை அடக்கினான் என்றும் கூறப்படுகிறான். இதன் கருத்து என்னவென்றால், அவன் கடலை அடக்கிக் கடலில் நாவாய் செலுத்திக் கடற்பயணத்தை எளிதாக்கினான் என்பது. இவற்றிலிருந்து கடலில் பயணம் செய்வதைத் தமிழர் ஆதி காலத்திலிருந்து நடத்தினார்கள் என்பது தெரிகின்றது. கடலில் கப்பலோட்டுவது அக்காலத் தமிழருக்குக் கைவந்த கலையாயிற்று. அவர்கள் கடல் கடந்து போய் வாணிகம் செய்தார்கள். கடலில் சென்று வாணிகஞ் செய்தது போலவே தரை வழியாகவும் பல நாடுகளுக்குப் போய் வாணிகம் செய்தார்கள். தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல் தரை வழியாக வட இந்திய நகரங்களுக்கும் போய் வாணிகஞ் செய்தார்கள். பெரிய வாணிகம் செய்தவர்களுக்குப் பெருங்குடி வாணிகர் என்பது பெயர். அயல் நாடுகளுக்கு வாணிகஞ் செய்யச் சென்றவர் ஒன்று சேர்ந்து கூட்டமாகச் சென்றார்கள். வணிகக் கூட்டத்துக்கு ‘வணிகச்சாத்து’ என்னும் பெயர்வழக்கு நிலவியது.

கரையோர வணிகம்

கொற்கை, தொண்டி, பூம்புகார், சோபட்டினம் முதலான தமிழ்நாட்டுத் துறைமுகப் பட்டினங்களிலிருந்து நாவாய்களில் புறப்பட்டுச் சென்ற தமிழ வாணிகர் கிழக்குக் கடல் ஓரமாகவே நாவாய்களைச் செலுத்தி நெல்லூர், கலிங்கப் பட்டினம், தம்ரலிப்தி (வங்காள தேசத் துறைமுகப் பட்டினம்) முதலான பட்டினங்களுக்குச் சென்றனர். பிறகு கங்கையாறு கடலில் – கலக்கிற புகர் முகத்தின் ஊடே கரையில் இருந்த பாடலிபுரம், காசி (வாரணாசி) முதலான ஊர்களில் வாணிகஞ் செய்து திரும்பினார்கள். ‘கங்கை வங்கம் போகுவர் கொல்லோ, என்று நற்றினை (189:5) கூறுகிறது. கங்கைக் கரையில் பாடலிபுரத்தில் தமிழர் வாணிகஞ் செய்த போது, கி.மு. 4 ஆம் நூற்றாண்டில் மகதநாட்டை அரசாண்ட நந்த அரசர், தங்களுடைய தலைநகரமான பாடலிபுரத்தில் கங்கையாற்றின் கீழே பெருஞ்செல்வத்தைப் புதைத்து வைத்திருந்ததைப் பற்றி அறிந்தனர். தமிழக வாணிகரின் மூலமாக நந்த அரசரின் செல்வப் புதையலைத் தமிழ்நாட்டவர் அக்காலத்தில் அறிந்திருந்தார்கள். மாமூலனார் என்னும் சங்கப் புலவர் தம்முடைய செய்யுளில் நந்தருடைய நிதியைக் கூறுகிறார்.

“பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்
சீர்மிகு பாடலிக குழீஇக் கங்கை
நீர்முதற் கரந்த நிதியங் கொல்லோ “   3

நந்த அரசரின் செல்வப் புதையலைப் பற்றிய இந்தச் செய்தியை மேற்கண்ட செய்யுள் வரிகள் உறுதி செய்கின்றன. வடநாட்டுப் பழைய நூல்களில் இச்செய்தி கூறப்படவில்லை.

தமிழ் வாணிகர் கலிங்கம் வரை சென்று வாணிகஞ் செய்தார்கள். அந்த வாணிகச் சாத்து கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. 150 வரையில் நூற்றைம்பது ஆண்டுகள் அங்குத் தங்கி வாணிகம் செய்தது. அவர்களுடைய வாணிகம் நாளுக்கு நாள் பெருகிச் செல்வாக்கும் பலமும் அடைந்தது. அக்காலத்தில் கலிங்க தேசத்தை அரசாண்ட காரவேலன் என்னும் அரசன் தமிழக வாணிகரால் தன்னுடைய ஆட்சிக்கே ஆபத்து உண்டாகும் என்று அஞ்சி அந்த வாணிகச் சாத்தை அழித்து விட்டான். அந்தச் செய்தியை அவ்வரசன் எழுதியுள்ள ஹத்தி கும்பா குகைக் கல்வெட்டெழுத்துச் சாசனத்திலிருந்து அறிகிறோம். கலிங்க தேசத்தில் வாணிகஞ் செய்த தமிழர் கலிங்க நாட்டுப் பொருள்களைத் தமிழகத்துக்கும் தமிழகத்துப் பொருள்களைக் கலிங்க நாட்டுக்கும் கொண்டு போய் விற்றார்கள். கலிங்க நாட்டிலிருந்து தமிழ்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட முக்கியமான பொருள்: பருத்தித் துணி, பெருவாரியாகக் கலிங்கத் துணி தமிழ்நாட்டில் இறக்குமதியாயிற்று. கலிங்கத்திலிருந்து வந்தபடியால் அத்துணி கலிங்கத்துணி என்று சிறப்பாகப் பெயர் பெற்றது. பிறகு காலப்போக்கில் கலிங்கம் என்னும் பெயர் துணிகளுக்குப் பொதுப்பெயராக வழங்கப்பட்டது. சங்க நூல்களில் துணிக்குப் பெயராகக் கலிங்கம் என்னும் சொல் வழங்கப்பட்டிருக்கிறது. கலிங்க நாட்டிலிருந்து அக்காலத்தில் தமிழ்நாட்டுக்கு வந்த இன்னொரு பொருள் சந்தனக்கல், இதனை இலக்கியங்கள் ‘வடவர் தந்த வான் கேழ் வட்டம்’ என்று குறிப்பிட்டன.

நடுக்கடல் வாணிகம்

தமிழகத்துக் கப்பல் வணிகர் சாவக நாட்டுக்குக் கடல் கடந்து சென்று அங்கு உண்டான வாசப் பொருள்களையும் பவளத்தையும் சீனத்திலிருந்து அங்குக் கொண்டு வரப்பட்ட பட்டுத்துகிலையும் கொண்டு வந்து பழந்தமிழ்நாட்டில் விற்றார்கள். அக்காலத்தில் சீனர் தமிழ்நாட்டுக்கு வரவில்லை. அவர்கள் சாவகத்தோடு நின்று விட்டார்கள். அவர்கள் சாவகத்துக்குக் கொண்டுவந்த பட்டுக்கள், அங்குச் சென்ற தமிழக வாணிகர் வாங்கிக் கொண்டு வந்து இங்கு விற்றார்கள். தமிழர் பட்டுத் துணியை ‘நூலாக்கலிங்கம்’ என்று சுட்டியது சங்க இலக்கியங்களால் அறிய முடிகிறது.

சாவக நாட்டிலிருந்து கிடைத்த வாசனைப் பொருள்களைச் சிலப்பதிகாரம் கூறுகிறது. வாசனைப் பொருள்களை விற்றவர்  வாசவர் என்று பெயர் கூறப்பட்டனர். வாசனைப் பொருள்கள் ஐந்து என்றும் அவை பஞ்ச வாசம் என்றும் கூறப்பட்டன. பஞ்ச வாசம், தமிழ்நாட்டிலிருந்து சாவக நாட்டுக்குச் சென்ற கப்பல்கள் முதலில் இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த (இப்போதைய யாழ்ப்பாணம்) மணிபல்லவம் என்னும் சம்புகொல பட்டினத்துக்குச் சென்று தங்கின. இது கப்பல்கள் தங்குவதற்கு நல்ல துறைமுகமாக இருந்தது. ஆனால், இங்கு ஏற்றுமதி, இறக்குமதி நடைபெறவில்லை. மணிபல்லவம் (சம்புகொல பட்டினம்) அக்காலத்தில் மனிதர் வாழாத இடமாக இருந்தது. அங்குச் சென்று தங்கின கப்பல்கள் அங்கிருந்து கடற்பிரயாணத்துக்கு வேண்டிய குடிநீரை எடுத்துக் கொண்டு போயின. பிறகு அங்கிருந்து புறப்பட்டு நேரே நெடுந்தொலைவிலுள்ள கிழக்கிந்தியத் தீவுகளான சாவக நாட்டுக்குச் சென்றன. இடைவழியில் நாகர்மலைத் தீவுகள் இருந்தன. நாகர்மலைத் தீவுகள் பிற்காலச் சோழர் ஆட்சிக் காலத்தில் (கி.பி. 10, 11, 12 ஆம் நூற்றாண்டுகளில்) மாநக்கவரம் என்று பெயர் பெற்றிருந்தன. இக்காலத்தில் இத்தீவுகள் நக்கவாரி (நிக்கோபர்) தீவுகள் என்று கூறப்படுகின்றன. அக்காலத்தில் அத்தீவுகளில் நாகர் இனத்தைச் சேர்ந்த காட்டுமிராண்டிகள் வசித்திருந்தார்கள். அவர்கள் ஆடையில்லாமல் மிருகங்களைப் போல வாழ்ந்தபடியால் ‘நக்கசாரணர்’ என்று கூறப்பட்டனர். நாகர்மலைத் தீவுகளில் கப்பற் பிரயாணிகள் சென்றால், அவர்களை நக்கசாரணர் கொன்று விடுவர். அவர்கள் மனிதரைக் கொன்று தின்றதாகவும் கூறப்படுகின்றது. ஆகையால் அந்தப் பக்கமாகச் செல்லுகிற கப்பல்கள் அத்தீவுக்குப் போவதில்லை.

சாவகத் தீவு வாணிகம்

சாதுவன் என்னும் வாணிகன் நாகர் மலைத் தீவில் சென்று உயிரிழக்காமல் திரும்பி வந்ததை மணிமேகலை காவியம் கூறுகிறது. சாதுவன் என்னும் வாணிகன் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து சாவக நாட்டுக்குப் போய் வாணிகஞ் செய்வதற்காகக் கப்பலில் புறப்பட்டுச் சென்றான். கப்பல் நாகர் மலைத் தீவுக்கருகில் சென்றபோது புயற்காற்றடித்துக் கடலில் மூழ்கிவிட்டது. மாலுமிகள் கடலில் முழுகிப் போனார்கள், சாதுவன் மரக்கட்டையொன்றைப் பற்றிக்கொண்டு அருகிலிருந்த நாகர்மலைத் தீவுக்கு நீந்தி நல்ல காலமாகக் கரையை யடைந்தான். ஆனால், இளைப்புங் களைப்பும் அடைந்து சோர்த்திருந்த அவன் கடற்கரை மணலிலேயே உறங்கி விட்டான். அயலான் ஒருவன் உறங்குவதைக் கண்ட நக்கசாரணர் சிலர் வந்து அவனைக் கொல்லத் தொடங்கினார்கள். விழித்துக் கொண்ட சாதுவன், அவர்களுடைய மொழியை அறிந்தவனாகையால், தன்னைக் கொல்ல வேண்டாமென்றும் கப்பல் முழுகிப் போனதனால்தான் அவ்விடம் வந்ததாகவும் கூறினான். தங்களுடைய மொழியில் பேசினபடியால் அவர்கள் அவனைக் கொல்லாமல் தங்களுடைய தலைவனிடம் அழைத்துக் கொண்டு போனார்கள். சாதுவன் சில காலம் நக்கசாரணரோடு தங்கியிருந்தான். பிறகு சந்திரத்தன் என்னும் காவிரிப்பூம்பட்டினத்து வாணிகன், சாவக நாட்டுக்குப்போய் வாணிகஞ் செய்துவிட்டுத் தன்னுடைய கப்பலில் திரும்பி வருகிறவன் நாகர் மலைத் தீவின் பக்கமாக வந்தபோது, நக்கசாரணர் அவனுடைய கப்பலைத் தங்கள் தீவுக்கு அழைத்து அவனுடைய கப்பலில் சாதுவனை ஏற்றிக் காவிரிப்பூம்பட்டினத்துக்கு அனுப்பினார்கள். இந்தச் செய்தியை மணிமேகலை காவியம் (ஆதிரை பிச்சையிட்ட காதை) கூறுகிறது.

பாண்டிய நாட்டு வாணிகரும் சாவகத் தீவுக்குக் கப்பலோட்டிச் சென்று வாணிகஞ் செய்தனர். பாண்டி நாட்டிலிருத்த தமிழர் சாவக நாட்டுக்குச் சென்று வாணிகஞ் செய்து திரும்பியதையும் மணிமேகலை காவியம் கூறுகிறது.               தமிழகத்திலிருந்து சாவக நாடு நெடுந்தொலைவிலிருந்தும் தமிழக வாணிகர் அந்நாட்டுக்குக் கப்பலில் சென்று வாணிகஞ் செய்தனர், காரணம் என்னவென்றால் அக்காலத்தில் வேறெங்கும் கிடைக்காத வாணிகப் பொருள்கள் சாவக நாட்டில்தான் கிடைத்தன. கடலில் போகிற மரக்கலங்கள் காற்றின் வேகத்தினால் திசை தப்பி ஓடுவதும் உண்டு. கப்பலோட்டும் பரதவர் அப்போது அவைகளை அடக்கிச் செலுத்தினார்கள்.

மதுரைக்காஞ்சி கூறும் வணிகச் செய்தி:

கடுங்காற்றினால் தாக்குண்டு திண்மையான கயிறுகளையும் அறுத்து மரத்தை ஒடித்து நாவாயை அடித்துச் சென்று பாறைக் கல்லில் மோதி நீர்ச் சுழியில் அகப்பட்ட நாவாயைப்,

“பன்மீன் வழங்கும் வளைமேய் பரப்பின்
விலங்குபிணி நோன் கயிறு அறீஇதை புடையூக்
கூம்பு முதல் முருங்க எற்றிச் சாய்ந்துடன்
கடுங்காற்று எடுப்பக் கல் பொருது இரைஇ
நெடுஞ்சுழிப் பட்ட நாவாய்” 4

என்னும் வரிகளில் மாங்குடி மருதனார் கூறுகிறார்.

முடிவுரை              

“வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின்5 பிறர் பொருளையும் தம் பொருள் போல் போற்றிச் செய்தால், அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரி‌ய நல்ல வாணிக முறையாகும். மனிதனுடைய தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றுவது வணிகம். அது ஆதாய (இலாப) நோக்கு உள்ளதாகவும் இருக்கலாம்; இல்லதாகவும் இருக்கலாம். இவ்வகைப் பொருளாதார நடவடிக்கையே வணிகம் [TRADE, COMMERCE, BUSINESS]  எனப்படும்.

சான்றெண் விளக்கம்

  1. உருத்திரங்கண்ணனார் பட்டினப்பாலை, அடிகள் 135
  2. வெண்ணிக் குயத்தியார் புறநானூறு, பாடல் எண். 66
  3. மாமூலனார் அகநானூறு, பாடல் எண்.  265
  4. மாங்குடி மருதனார் மதுரைக்காஞ்சி, அடிகள் 4-6
  5. திருவள்ளுவர், திருக்குறள்,  குறட்பா எண் – 120


ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review)

‘தமிழர்களின் கடல்சார் வணிகம்” என்னும் தலைப்பில் அமைந்த இக்கட்டுரையைப் பலமுறை பயின்று கட்டுரையின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி ‘வல்லமை’ முன்மதிப்பீட்டு விதிகளை முழுமையாகக் கருத்திற் கொண்டு செய்யப்படும் மதிப்பீடும் பரிந்துரையும்.

  • இலக்கியங்களில் காணப்படும் வரலாற்றுப் பதிவுகளை வெளிக்கொணர வேண்டும் என்னும் துடிபபுடன் இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
  • பழந்தமிழ் இலக்கியச் செல்வங்களையும் வரலாற்றுப் பெருமைகளையும் நியாயமான அளவுகோலால் வெளிப்படுத்திக் காட்டும் ஆர்வம் பெரும்பாலும் அருகிப் போனதொரு காலக்கட்டத்தில் இத்தகைய கட்டுரைகள் வரவேற்புக்கும் வழிகாட்டுதலுக்கும் உரியன.
  • முதுகலை மாணவர்களுள் ஒருவராகப் பயிலும் கட்டுரையாளருக்கு இந்தப் பருவத்தில் இத்தகைய நோக்கு இருப்பது பாராட்டுக்குரியது.
  • கல்வெட்டுகள், பயணக் குறிப்புக்கள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள் முதலியவற்றைக் கூடுதல் சான்றாவணங்களாகச் சேர்த்திருக்கலாம். எதிர்காலத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.  

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.