Blog

  • பார்வை என்ன மணல் வெளியோ?

    ஷைலஜா

     

    காதலா என்றிது தெரியவில்லை மனம்
    ஆதலால் என் வசமில்லை-உடல்
    விறகாய் எரிவதைப்பார்த்தாயா-நறு
    மணத்தை அதனில் சேர்ப்பாயா?
    பாடாப்பாடல் அறிந்துகொண்டேன்  – அது
    உன் பேர்தான் எனவும் உண்ர்ந்துகொண்டேன்
    இரவுப்பூவை மலர வைத்தாய்-பின்
    உறக்கத்தில் சுகத்தை வரவழைத்தாய்-உன்
    பார்வை என்ன மணல் வெளியோ-நினைவுப்
    புதைந்து அழுந்தி மீள்கிறதே
    உன் வழிப்பாதையில் என் இதயம் -அது
    மீட்டும் ராகம் இன்று உதயம்!
    நெஞ்சிற்குள் ஏன் இந்நெருப்பு-அட
    நீதானடா இதற்குப்பொறுப்பு!

    Share
  • காதலர் தினம்

    தமிழ்த்தேனீ

    இந்தக் காதலர் தினக் கொண்டாட்டமே   வாலன்டைன் என்னும் ஒருவரது  மரணத்தில்தான் கொண்டாடப்படுகிறது.

    விவரங்கள்  வேண்டுவோர்   ; http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D

    என்னும் விக்கிபீடியா தளத்தில்  படிக்கலாம்

    To-morrow is Saint Valentine’s day,
    All in the morning betime,
    And I a maid at your window,
    To be your Valentine.
    Then up he rose, and donn’d his clothes,
    And dupp’d the chamber-door;
    Let in the maid, that out a maid
    Never departed more.

    —William Shakespeare, Hamlet, Act IV, Scene 5

    என்று வில்லியம்  ஷேக்ஸ்பியர் கூறியதை மேற்கோளாகத்  தருகிறேன்

    நாம் காதலிக்கும் ஒருவருக்கு  ஒரு தினையளவு துன்பம் வந்தாலும்  மனம் தாங்காமல் அவர் துன்பத்தைப்  போக்கும் முயற்சியில் ஈடுபடுவதுதான்  உண்மைக் காதல்

    காதலுக்காக காதலியையே  ,அல்லது காதலனையே விட்டுக் கொடுக்கலாம், ஆமாம் அவர்  மகிழ்ச்சியாக வாழ்ந்தால் போதும் என்று எந்த மனம் நினைக்கிறதோ  அந்த மனம் கொள்வதுதான் உண்மைக் காதல்

    காதலர் தினம்  என்று கொண்டாடும் நாம்  என்னென்ன செய்கிறோம் என்று  எண்ணிப் பார்த்தால்

    எதிர் பாலினத்தில் இருப்பவர்  நம்மைக் காதலிக்கிறாரா  என்றே தெரியாமல் தன்  விருப்பத்தை மட்டும் தெரிவிக்கும் நாளாக நினைக்கிறோம்.

    அப்படி அவர் நம் காதலுக்கு  ஒப்புக்கொள்ளவில்லை என்றால்  அவரை அழிக்கத் திட்டமிடுகிறோம்.   இதல்ல காதல்

    “இன்னுமா இருக்கிறது காதல்”   திருமணம் செய்து கொண்ட மனைவியை காதலித்து அவளை அன்பாக ,மரியாதையாக, நடத்தத் தெரியாத இந்த நாளில் இன்னுமா இருக்கிறது காதல்? என்றே கேட்கத் தோன்றுகிறது

    பருவ ஈர்ப்பை காதல்  என்று எண்ணி  அதற்கு உடன்படாத பெண்ணை  திராவகம் ஊற்றி  துடிக்க வைக்கும்  எண்ணம் கொண்ட இளைஞர்கள் இருக்கும் இக்காலத்தில்  இன்னுமா இருக்கிறது காதல் ? என்றே கேட்கத் தோன்றுகிறது

    “ஒருவரை ஒருவர்  உண்மையாகப் புரிந்து கொளுவது “ காதல் “ அது இது வரையில் ஏற்படவே இல்லை “

    -தமிழ்த்தேனீ

    ஒருவரைக் காதலித்தால்  அது காதல், முதல் காதல் ,இரண்டாம் காதல் என்று ஆரம்பித்தாலே ,அங்கு காதல் புனிதம் இழந்துவிடுகிறது .

    “காதல் ஒரு மலர்” ,அது ஒரு முறைதான் பூக்க வேண்டும்.  மீண்டும் பூக்க முடியாது , காதல் தவறு என்று நான் சொல்வேயில்லை . காதலைத்தவிர இன்னும் கற்றுக் கொள்ளவேண்டியது  நிறைய இருக்கிறது

    காதல் என்பது நம் வாழ்க்கையின் ஒரு அங்கம் ,ஆனால் காதலைக் காமம் என்று  புரிந்துகொண்டு அதைத்தவிர வேறு ஒன்றுமே பெரிதல்ல என்று எண்ணும் இக்கால இளைஞர்களின் மனப் போக்கு தவறு என்றுதான்  சொல்லுகிறேன் .  அதற்கேற்றார்ப் போல் பத்திரிகைகள்,,தொலைக் காட்சிகள்,திரைப் படங்கள் எல்லாமே காதலையே மையமாக வைத்து  இளைஞ்ஞர்கள் மனதைக் கெடுத்து விட்டார்கள் .

    “ உலகத்திலே நீர்விழுச்சியிலிருந்து விழும் தண்ணீர் சுத்தமானது என்று கூறுவர், அந்தத் தண்ணீரும் கீழ்நோக்கிதான் விழும். அது மிக எளிது ஆனால் தண்ணீரை மேலேற்றவேண்டுமானால் ஒரு விசை தேவைப் படுகிறது

    அது போல பரிசுத்தமான மனதும் கீழ்த்தரமான எண்ணங்களை  நோக்கி வெகு எளிதாக ஓடும்  ,அதைக் கட்டுப் படுத்தி ஒழுக்கம் என்னும் விசை கொண்டு மனதை நல் வழிப் படுத்தவேண்டும் .

    அது போல காதலின் சக்தி  கொண்டு ஒரு ஆணும் ஒரு  பெண்ணும் தன் காதலனை அல்லது தன் காதலியை  ஒரு நல்ல உன்னதமான வாழ்க்கைக்கு அழைத்துச்  செல்லும் நோக்கோடு  காதலித்தால்  அந்தக் காதலை நானும் வரவேற்கிறேன்.

    நான் ஒன்றும் முனிவனல்ல  ,எனக்கும் காதல்,அதாவது உண்மையான காதல்,பரஸ்பரம்  இருவரும் மனம் விட்டுப் பேசி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும்  காதல்,சுயநலமில்லாத காதல் ,அனைத்தும் பிடிக்கும் .காதல் வாழ வைக்க வேண்டுமே தவிற பெற்றோர்களுக்கும்,அவர்களுக்கும் துன்பம்  தரக்கூடியதென்றால்  அதை காதல் என்று என் மனம் இடம் தரவில்லை ..  காதலியுங்கள் ,கண்ணியமாக ,வாழ்க்கையை நன்றாக அமைத்துக் கொள்ள காதலியுங்கள் .” காதல்தான் இளைஞனையும் சரி யுவதியையும்   பக்குவப்படுத்துகிறது என்பது  என் எண்ணம்…அது தோல்வியோ அல்லது வெற்றியோ என்பதல்ல முக்கியம்…இதன் மூலம்

    அவர்கள் அடையும் அனுபவம் அது அவர்களை ” செம்மைப் படுத்தினால் பரவாயில்லை,   இப்போது பல காதல்கள் அனைவரையும்  சீரழிக்கிறது என்பதே உண்மை . காதல் என்பதே  பருவமடைந்த  பெண்ணிற்கும் , வயது வந்த ஆணுக்கும் இயல்பாய் மலர்வது.

    ஆனால் இப்போது அடுத்தவன்  மனைவி மேல் காதல் வருகிறது. அடுத்த பெண்ணின் கணவன் மேல் காதல் வருகிறது  ? அப்படியானால் அடுத்தவன் மனைவியை கடத்திக் கொண்டு போகலாம் தவறில்லை,மேலும் அவள் அனுமதித்தால் ,உலக ஒழுக்கம் மறந்து அவளை  அடையவும் அடையலாம் ,அதுவும் தவறில்லை, அப்படித்தானே….?    இப்படிப் போகிறது இந்தக் காலத்து நியாயம் … இவையெல்லாம் காதலா? இன்னமும் காதல் இருக்கிறதா?  இல்லை இல்லை இல்லவே இல்லை என்பதே உண்மை.

    அச்சம் ,மடம் நாணம் அப்பிடி…இப்பிடீன்னு சொல்வதெல்லாம் பெண்ணுக்கு மட்டுமல்ல ஆணுக்கும்தான் ,அதில் தவறியவர்கள்  தான் கெட்டுப் போவது மட்டுமல்லாமல் தன் வாரிசுகளுக்கும் எயிட்ஸ் போன்ற நோயைப் பரப்புகிறார்கள்  நண்பரே ,நன்றாக சிந்தித்துப் பாருங்கள் .கற்பு என்பது மடமையல்ல ஒழுக்கம்.

    வாலிப வயதில் பெண்களை  வெறிக்க வெறிக்கப் பார்க்கும் ஒவ்வொரு ஆணும்  தனக்கு திருமணம் ஆனவுடனே தன் மனைவியைப் பார்த்து சொல்லும் முதல் வார்த்தையே  “நல்லா போர்த்திகிட்டு வா கண்டவன் கண்டபடி பாக்குறான்”     என்பதே  .   தனக்கென்றால் ஒரு நியாயம் , அடுத்தவருக்கென்றால் ஒரு நியாயமா?   தனக்கு வரும் மனைவி மட்டும் தன்னைத் தவிர வேறு யாரையும்  நினைத்துகூட பார்க்கக் கூடாது ,என்று நினைக்கும் ஒவ்வொரு ஆண்மகனும்  ஏன் தானும் ஒழுக்கமாக இருந்து ஒரு மனைவிக்கும்  உண்மையானவனாக இருக்கக் கூடாது .?

    பெண்கள் வீரமா இருக்கலாம் ,வீரமா இருப்பது வேறு,விவேகமா இருப்பது வேறு . பொதுவாக இருக்கட்டும். காதலிக்கும் பெண் ஜீன்ஸ் போட்டுகிட்டு வந்தால் பிடிக்கும் ஆனால் அவளே திருமணம் ஆன பின் அவளே புடவைக் கட்டிக்கிட்டு வரணும். அச்சம் என்பது எல்லாவற்றிர்க்கும் அஞ்சுவது என்று பொருளல்ல,

    அஞ்சுவது அஞ்சாமை  கூடாது என்று பெரியவர்கள் சொல்வதன் பொருளே எதற்கு அஞ்சவேண்டுமோ அதற்கு அஞ்சித்தான் ஆகவேண்டும் ,எதற்கு அஞ்சக் கூடாதோ அதற்கு அஞ்சக் கூடாது என்பதுதான்

    நாணம் எதற்கு எங்கு வரவேண்டுமோ அங்கு வராமலிருந்தால் அது துன்பம் பயக்கும்.  இந்தக் காலத்துப் பெண்கள்     “ நிமிர்ந்த நன்நடை நேர் கொண்ட பார்வை “  என்று பாரதி சொன்னதை தவறாக புரிந்து கொள்கிறார்கள்

    தன் கற்பைக் காப்பாற்றிக் கொள்ள ஒரு பெண் உண்மையாக விரும்பினால் அவளின் அழகிய  நகங்களும் ஆயுதமாக மாறும்  என்று மஹாத்மா காந்தி சொன்னது …உண்மை .  எத்தனை பேரால் அது போல தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடிகிறது

    முடியாமல் போவதால்  தானே பல பெண்களின் வாழ்க்கையை  சில மிருகங்கள் சீரழிக்கின்றன . பெண்கள் அச்சம் ,நாணம் போன்றவற்றைக் குறைத்ததனால்தான் வேலைக்குப் போக முடிகிறது என்று சொல்கிறார்கள்

    அதல்ல காரணம் .பெண்கள் வேலைக்கு போக முடிகிறது  என்றால் (midnight network support )  அது மட்டுமல்ல ” இன்னும் மொத்த ஆண்களுமே மிருகமாய் மாறாமலிருப்பதும் கூடத்தான். இன்னும் மனிதம் கொஞ்சம் மிச்சமிருப்பதால்தான் பெண்கள் வேலைக்கோ , கடைகளுக்கோ செல்ல முடிகிறது (midnight network support ).. செல்ல முடிகிறது

    தயவு செய்து பெரியவர்கள்அக்கறையோடு,அன்போடு, சொல்வதை சரியாகப் புரிந்து கொள்ளுங்கள் . இப்பொழுதும் பெண்கள் வேலைக்குச் சென்றுவிட்டு  வீடு திரும்பும் வரை பத்திரமாக வரவேண்டுமே என்று கவலைப் பட்டுக் கொண்டிருக்கும் பெற்றோர்களைப் புரிந்து கொள்ளுங்கள்.

    ஏனென்றால் இப்போதைய  பெண்களும் ஒரு காலத்தில் திருமணமாகி தாயாகப் போகிறவர் தான் .வருங்காலத்தில் திருமணமாகி குழந்தைகள் பிறக்கலாம் .ஆண் குழந்தையும் பிறக்கலாம்,பெண்குழந்தையும் பிறக்கலாம் நீங்களும் உங்கள் குழந்தைகளைப் பற்றி கவலைப் பட்டுக் கொண்டு காத்திருக்க வேண்டி வரலாம்

    நாம் எதாக நினைக்கிறோமோ அதாக ஆகிறோம்,   நல்லதே நினையுங்கள் நல்லது நடக்கும்.  every action is having a equvalant re action . எப்படி காலடி எடுத்து வைக்கிறீர்களோ அதற்கேற்றார்ப் போலதான்  பலனும் கிடைக்கும் .

    பல தற்கொலைகளும் ,கள்ளக் காதலுக்காக கணவனைக் கொலைசெய்வதும் , மனைவியைக் கொலை செய்வதும் இப்போதெல்லாம் அதிகமாகிவருகிறது.  மிகக் கேவலமாக இருக்கிறது திருமணமான பின்னரும் ஏற்படும் கள்ளக் காதலுக்காக தாம் பெற்ற பிள்ளைகளையே கொலை செய்யும் அளவுக்கு போகும் ஆணையும் ,பெண்ணையும் நினைத்தால் நாம் மீண்டும் கற்காலத்துக்குப் போய்க் கொண்டிருக்கிறோமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

    அது மட்டுமல்ல காதலை காமம்  என்று தவறாக புரிந்து கொண்டதனால் ஏறப்டும் கேவலமான  வாழ்க்கைத் தரம், இந்த நிலையை மாற்றியே ஆகவேண்டும்.

    காதலிப்பதே ஒரு தற்கொலைக்கு  சமமானதுதான்,  அதற்குப் பிறகு மீண்டும் ஒரு தற்கொலையா…?    வாழ்வதற்கு தைரியம் வேண்டுமா..?  அல்லது சாவதற்கு தைரியம் வேண்டுமா..?   யோசித்துப் பார்த்தால் சாவதற்கு அசட்டுத் தைரியம் போதும் .  ஆனால் வாழ்வதற்கு புத்திசாலித்தனமான தைரியம் வேண்டும்.  வாழ்வதுதான் கடினம், சாவது சுலபம்  .

    “கண்ணில் காதலியர் கடைக்கண் காட்டி விட்டால்

    மண்ணில் குமரருக்கு மாமலையும்  சிறு கடுகாம்”

    என்னும் யுகக் கவிஞன் பாரதியின்  வார்த்தைகள்   நினைவுக்கு வருகின்றன

    “ துணிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே

    காதல் பொல்லாதே”  என்று கொஞ்சம் மாற்றிப் பாடத் தோன்றுகிறது

    வாழ்க்கையின் நிதர்சனத்தை  எதிர்கொள்ளத் தைரியமில்லாதவர்கள் காதலிக்கத்  தகுதி இல்லாதவர்கள்   என்பது என் கருத்து,

    “வாழ்ந்து பார்ப்போம் வா நைனா

    வாழ்க்கை இது சுலபம் சுலபம்

    வாழத்தெரிந்தால்   வா நைனா தடைகளெல்லாம் விலகும் விலகும்”

    என்று பழைய பாட்டை மாற்றிப் பாடலாம்

    காதலிக்கும் முன்னர் கொஞ்சம் யோசித்து திடமாக  திட்டமிட்டு காதலித்தால் காதலில் இவ்வளவு அவஸ்தைகள் இல்லை.பருவ ஈர்ப்பை காதல் என்று நம்பி  காதலிக்க ஆரம்பித்தால் இதுதான் கதி

    அதுவும் தவிர ஒவ்வொன்றிற்கு ஒவ்வொரு தகுதி நிர்ணயம் இருப்பதைப் போல காதலிக்கவும் சில தகுதிகள் வேண்டும். என்று ஒரு நியதி நாமாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அந்தத் தகுதிகள் இருக்கிறதா என்று ஆராயந்து அதற்குப் பின் காதலிக்கத் தொடங்கவேண்டும்.

    அப்படி தகுதியில்லாத காதல்  என்றால்,மறு பரிசீலனை செய்து ஏற்படப் போகும் பின் விளைவுகள் அத்தனையையும் தாங்களே சமாளிக்க வேண்டும் யாரையும் உதவிக்கு அழைக்கக் கூடாது  அப்படி அழைத்தாலும் யாரும் உதவிக்கு போகக் கூடாது.  என்று ஒரு கட்டுப்படு விதிக்கவேண்டும்.அப்போது முன்கூட்டியே யோசிப்பார்கள்

    இன்னும் சற்று மேலே போய் சிந்தித்தால்  வயதுக்கு வராத இளம் தளிர்களைக் கற்பழிப்பதும்   கொல்வதும் நாமெல்லாரும் மனிதர்களா அல்லது மிருகமா என்று ஆத்திரம் வருகிறது

    இப்போது புதியதாக ஒரு அசிங்கமான  கலாச்சாரம் பத்திரிகையில் வெளியிட்டுள்ளார்கள், ஆண் விபசாரிகள் என்று தலைப்பிட்டு .   ஒரு ஆண் விபசாரி சொல்லுகிறார் ஒரு நாளைக்கு   25 ஆயிரம் சம்பாதிப்பாராம், மாதத்துக்கு 10 நாட்கள் மட்டுமே மற்ற நாட்களில் சம்பாதித்த வருமானத்தை வைத்து  சந்தோஷமாக இருப்பாராம், இதை பத்திரிகைகள் வெளியிடுகின்றன , கேவலமாக இல்லையா நாட்டின் நிலைமை.

    இதைப் போன்ற இழி செயல்களைக் கட்டுப்படுத்தாமல் இருந்தால் அது அரசுக்கே கேவலமில்லையா……..? உண்மைக் காதல் வாழ்க

    தற்கால இளைஞர்கள் தங்களுடைய  உண்மையான மனோசக்தியை நாட்டுக்காகவோ, தங்களின் உண்மையான நல்ல நோக்கத்துக்காகவோ பயன் படுத்துவதை விட்டு  எப்பொழுது பார்த்தாலும் காதல்,காதல்,காதல்   என்று அலைவதைப் பார்க்கும் போது என் மனம்  குமுறுகிறது ,அதனால்தான் பெரியவர்களாகிய நாம் , சிறியவர்கள் நம்மை திட்டினாலும் பரவாயில்லை

    என்று கூடியமட்டும் நல்லதைச் சொல்லுவோம் , வருங்காலம் வளமாக வேண்டுமானால் இளைஞர்கள் விழிப்புணர்வு பெற்று ,நம் நாட்டை உயர்த்த கீழ்த்தரமான உணர்வுகளை  களைந்து விட்டு உன்னதமான லட்ஷியத்துடன் வாழ ஆரம்பிக்க வேண்டும் என்கிற எண்ணத்தோடுதான்  எழுதுகிறேன் .   நம் நாடு முன்பு ஆங்கிலேயர்களிடம் அடிமைப் பட்டிருந்தது

    இப்போது நம்மவர்களிடமே  அடிமைப் பட்டிருக்கிறது  இதை உணர்ந்து நாம் மீண்டும் ஒரு சுதந்திரத்தை அடைந்து  வருங்கால வாரிசுகளுக்கு ஒரு நல்ல ஆரோக்கியமான  வளமான நாட்டைஉருவாக்க இளைஞர்கள் முன் வரவேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம் .

    காதலுக்கு நேரம் ஒதுக்குங்கள்,இது வாலிப வயது .உலகத்தில் உள்ள மொத்த தவறையும் நாமே செய்து ,அதன் மூலமாகவரும்  விளைவுகளை பட்டுத் தெரிந்து கொள்ள நம்மால் மட்டும் முடியாது,ஏனென்றால்  அதற்கு நமக்கு நாம் வாழும் காலம் போதாது .அதனால் மற்றவர்கள் அனுபவத்தையும் கண்டு கேட்டு  அதில் உள்ள குறைகளை நீக்கிவிட்டு காதலியுங்கள் .அப்போது இனிமையான காதல் வாழ்க்கை அமையும் .

    உண்மையாக சொல்லுகிறேன்   ஆண்களும் பெண்களும் எப்போதுமே தவறு செய்யும் நோக்கத்தோடு இருப்பதில்லை , அவர்களின் பாலின உணர்வுகள் தூண்டப்படும்போதுதான் அவர்கள் தன் வயமிழக்கிறார்கள்  .ஆனால் தூண்டப் படுதலின் காரணமாகவே அப்   “பாவிகள் ” ஆகின்றனர் .ஆகவே பெண்களும் ஆண்களும்  “தூண்டாமலும் ,ஒழுக்கம் தாண்டாமலும் இருந்தால்   ஆணும் பெண்ணும் சமமான ஒரு நல்ல  சமூதாயம் மலரும்

    “ஆண்களிலும் ,பெண்களிலும் இதற்கு முன்னுதாரணமும் ,  விதி விலக்குகளும் உண்டு ”  நான் ஒட்டு மொத்த ஆண்களையும் ,ஒட்டு மொத்த பெண்களையும் குறை சொல்லவில்லை . ஆனால் சிலர் செய்யும் தவறுகளுகளால்  நாம் அனைவருமே  பாதிக்கப் படுகிறோம் .தார்மீகப் பொறுப்பு ஏற்றுக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப் படுகிறோம் .

    ஆகவே  காதல் இன்னும்  இருக்கிறதா  என்று இக்கால இளைஞர்கள்தான் சிந்திக்க வேண்டும்.

    அது மட்டுமல்ல  உண்மையாய்க் காதலிப்பவர்  திருமணத்துக்கு முன்னர்  யாரைக் காதலித்தார்களோ  அவரையே திருமணத்துக்குப் பின்னும்  உண்மையாகக் காதலிப்பார்கள். ஆகவே உண்மையாய்க் காதலியுங்கள்.காதலிப்பவரையே திருமணம் செய்து கொள்ளுங்கள். அப்போது ப்ரச்சனைகள் வராது.

    அல்லது நாம் காதலிப்பவர்  வேறு ஒருவரைக் காதலிக்கிறார்  அவருடன் வாழ்ந்தால் இன்பமாக  இருப்பார்  என்று தெரிந்தால்  அவரை அவர் இஷ்டத்துக்கு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் உரிமைகளை அளித்து  அவருடைய  அடிப்படை உரிமைகளை மறுக்காமல் வாழக் கற்றுக் கொள்வோம்

    இப்படி ஒரு நடைமுறைக்கு  நாமெல்லோரும் மாறி விட்டு அதன் பின்னர்  காதலர் தினம்  கொண்டாடுவோம்.

    அன்புடன்

    தமிழ்த்தேனீ

    படத்திற்கு நன்றி :

    http://www.sonofthesouth.net/leefoundation/civil-war/1864/february/valentines-day.htm

    Share
  • பழங்கணக்கு

    தேமொழி

    மாமா வந்திருந்தார்.  சாப்பாட்டு அறை மேஜைக்கருகில் அமர்ந்து அம்மா கொடுத்த காஃபியைக் குடித்துக் கொண்டே மேஜையை நோட்டம் விட்டார். அவரது வீட்டிற்கு எங்கள் வீட்டு சாப்பாட்டு அறையின் மேஜை போலவே ஒன்று செய்ய விரும்பினார்.

    “அம்மாடி, ஒரு அளவு நாடா எடுத்துட்டு வாம்மா.”

    “இதோ மாமா, இந்தாங்க, என்ன செய்யப்போறீங்க?”

    “ஒரு தாளும் பேனாவும் எடு, நான் இந்த மேஜை அளவை அளந்து சொல்றேன், குறிச்சுக்கோ.”

    “சரிங்க மாமா, சொல்லுங்க.”

    “அகலம்  ….ம்ம்ம்.. (என்று ஹம் செய்துவிட்டு) மூணு அடி மூணு அங்குலம்னு, எழுதிக்கோ.”

    மெட்ரிக் அளவு படித்த என் கணித அறிவை மாமாவிடம் காட்ட எண்ணினேன், “ஒரு மீட்டர்னு எழுதவா மாமா?”

    “வேணாம் எனக்கு அது ஒத்து வராது, இது ஒரு 99 சென்டிமீட்டர் சொச்சம்தான் இருக்கு, எனக்கு பழைய கணக்குதான் வசதி, பேசாம நான் சொல்றத எழுது.”

    சே …சே… இந்த பழைய பஞ்சாங்கங்கள் மாறவே மாறாது என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு எதிர்வாதம் செய்யாமல் சொன்னதை எழுதினேன்.

    கல்லூரியில் வேறு பாடம் எடுத்துப் படித்திருந்தாலும் மாமா கணக்கில் புலி என்று பள்ளியில் படிக்கும் காலத்தில் பெயர் வாங்கியவர்.  இருபதாம் வாய்ப்பாட்டை இருபது வரைப் படித்தவர்.  நம்மைப் போல பன்னிரண்டாம் வாய்பாட்டை பன்னிரண்டுடன் நிறுத்தியவர் இல்லை. பள்ளிநாட்களில் தங்கப் பதக்கம் கொடுக்கும் வழக்கம் இருந்திருந்தால், ஒவ்வொரு ஆண்டும் என் அண்ணன் தங்கப் பதக்கம் வாங்கியிருக்குமாக்கும் என்று அம்மா தனது அண்ணனைப் பற்றி பெருமையாகச் சொல்லிக் கொள்வார்கள்.

    மாமா மேஜைக்கு அடுத்த பக்கம் சுற்றி வந்தார்.  ஒரு கை தேர்ந்த சிற்பி தான் வடித்த சிற்பத்தைப் பல கோணங்களில் இருந்து பார்ப்பது போல யாரோ முன்பின் தெரியாத ஒரு தச்சர் செய்த மேஜையைப் பல கோணங்களில் நின்று பார்த்தார்.

    “நீளம் இந்த மேஜைய விட கொஞ்சம் ஒரு அடி அதிகமா வச்சு செஞ்சுக்கலாமா?” என்று சித்திரகுப்தன் போல வெறும் கணக்கைக் குறித்துக் கொண்டிருந்த என்னிடம் யோசனை கேட்டார்.

    நானும் என் மேதா விலாசத்தை காட்ட கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விட மனமில்லாமல், “மாமா, உங்க வீட்டு சாப்பாட்டு அறை நீளத்திற்கு இன்னமும் கொஞ்சம் 30 சென்டிமீட்டர் அதிக நீளமாக செய்யலாமே” என்றேன்.

    “அப்படியா சொல்ற?” மாமா நாற்காலியில் அமர்ந்தார், “என் வீட்டு  சாப்பாட்டு அறையை இந்த அறையோட ஒப்பிட்டா அது கொஞ்சம் பெரிசுதான், இல்லியா?”

    சொல்லிவிட்டு மாமா அறையைச் சுற்றும் முற்றும் பார்த்தார்.  நானும் எதிர் நாற்காலியில் அமர்ந்து சுற்றும் முற்றும் பார்த்து விட்டு அவரைப் பார்த்தேன்.  மாமா அவர் வீட்டின் அறையை மனக்கண்ணில் கொண்டு வருவதற்காக விட்டத்தைப் பார்த்து யோசித்தார்.  நானும் அவருடன் சேர்ந்து விட்டத்தைப் பார்த்தேன்.  விட்டத்தில் எந்தக் காட்சியும் எனக்குத் தெரியவில்லை. மாமா எழுந்து யோசனையுடன், “சரி நாம ஒரு அடி கூட அளவு வச்சுக்கலாம், சரியா?”

    “சரி மாமா, ஒரு 30 சென்டிமீட்டர் அதிகமா வச்சுக்கலாம்.”

    எனக்கென்ன போயிற்று, அவர் வீடு, அவர் மேஜை.  மேலும் ஒரு 45 சென்டிமீட்டர் என்றாலும் அதனால் எனக்கென்ன பாதிப்பு?

    “சரி நாடவப் புடி அம்மாடி,”  நான் தாளையும் பேனாவையும் மேஜையில் போட்டு விட்டு நாடாவின் ஒரு பக்க முனையைப் பிடித்தேன்.

    “நீளம்..ம்ம்ம்….(மீண்டும் ஹம்மிங்) இந்த மேஜை அஞ்சு அடி, கூட ஒரு முக்காலே அரைக்கால் இருக்கு. நாம கூட ஒரு அடி வச்சுக்கலாம், ஆறு அடி முக்காலே அரைக்கால் அப்படின்னு எழுதும்மா”

    என்னது முக்காலே அரைக்காலா? இத எப்புடி மெட்ரிக் அளவாக மாற்றி எனது புத்திக் கூர்மையைக் காட்டுவது?  குழம்பினேன். நமக்கெல்லாம் அட்ரா.. அட்ரா.. நாக்க முக்க, நாக்க முக்கதானே தெரியும்.

    “என்னம்மா யோசனை? எழுதும்மா.”

    “நீளம் ஆறு அடி முக்காலே அரைக்கால்” என்று சத்தாமாகச் சொல்லிக் குறித்துக் கொண்டேன்.

    அடுத்து மாமா தொடர்ந்து மேஜையின் கால் ஒன்றினை அளந்து “காலே அரைக்கால்” என்று ஏதோ தனக்குள் முணுமுணுத்துக் கொண்டார்.

    “இல்லீங்க மாமா, மேஜையோட கால் முழுக்காலாத்தானே இருக்குது,” என்று குழம்பினேன்.

    “அம்மாடி, அறுக்காதம்மா.”

    “அறுத்தாதானே மாமா அரைக்காலா மாத்த முடியும்”

    “என்னால தாங்க முடியல, பேசாம நான் சொல்றத எழுது,” என்று சொல்லிவிட்டு மேஜையின் கால் அளவு, மேற்பலகையின் தடிமன் என அளந்து மாமா சொன்னதை எல்லாம் மறு பேச்சில்லாமல் குறித்துக் கொண்டேன்.

    இருவரும்  மீண்டும் நாற்காலியில் உட்கார்ந்தோம்.  “அந்த தாளக் கொடு, அளவைப் பார்ப்போம்,” என்றார் மாமா.

    மாமா பார்த்துவிட்டு சிரித்தார்.  ஹி..ஹீ.ஹீ.ஹீ….

    எனக்குக் கோபம் வந்தது.  “ஏன் மாமா சிரிக்கிறீங்க?”

    மாமாவுக்குச் சிரிப்புத் தாங்கவில்லை.   ஹி..ஹீ.ஹீ.ஹீ….என்று சிரித்துவிட்டு மீண்டும் தாளைப் பார்த்தார்.  மீண்டும் ஹி..ஹீ.ஹீ.ஹீ…..

    அவரால் படிக்க முடியாத அளவுக்கு அப்படி ஒரு  நகைச்சுவையையும் நான் எழுதவில்லையே.  என் கையழுத்து அவ்வளவு கேவலமாகவா இருக்கிறது? கோபத்துடன் அவர் கையிலிருந்த தாளைப் பிடுங்கிப்  பார்த்தேன்.

    முக்காலே அரைக்கால் என்பதில் எழுத்துப் பிழை, ‘மூக்காலே அரைக்கால்’ என எழுதியிருந்தேன்.  எனக்கும் சிரிப்பு வந்தது. ஆனால் ஒரு சின்னத் தவறுக்கு இப்படி ஒரு சிரிப்பா? என்று எரிச்சலும் வந்தது.  உர்ர் என்று முகத்தை வைத்துக் கொண்டு பிழையைத் திருத்தி அவரிடம் நீட்டினேன்.  கையில் வாங்கிப் பார்த்த மாமா மீண்டும் சிரித்தார். ஹி..ஹீ.ஹீ.ஹீ….

    “போதும் மாமா, அதான் திருத்திட்டேனே, இன்னமும் என்ன சிரிப்பு?” என்று கடுப்படித்தேன்.  மாமாவிற்கு சிரித்துச் சிரித்துக் கண்ணீரே வந்து விட்டது.

    “காலே அரைக்கால், முக்காலே அரைக்கால், இந்த அளவெல்லாம் உனக்கு எழுதத் தெரியாதாம்மா?”

    “அதான் எழுதி இருக்கேனே மாமா!!”

    “இல்லம்மாடி, எழுத்தால இல்லம்மா, எண்ணால் எழுதணும். கால், அரை, முக்கால் இதெல்லாம் எப்படி எழுதுவியோ…. ஒன்னுங் கீழ நாலு, ஒன்னுங் கீழ ரெண்டு, மூனுங் கீழ நாலு அப்படின்னு, அதுபோல எண்ணால எழுதணும்மா.”

    காலே அரைக்கால் = 3/8, முக்காலே அரைக்கால் = 7/8 என்று மாமா எழுதிக் காண்பித்து, “இப்படி எண்ணால எழுதணும்மா” என்றார்.

    “இல்ல மாமா, என்னால எழுத முடியாது, எனக்குத் தெரியாது” என்று சொல்லி மாமா சிரித்த காரணம் புரிந்து அசடு வழிந்தேன்.

     

     

    படங்கள் உதவி:
    http://jawoodworking.com/google-sketchup/
    http://www.madurai247.com/2011/08/tamil-actress-anjali-photos-stills.html

    Share
  • பாதுகாப்பு!

    பாகம்பிரியாள்
    காதலில் வீழ்ந்தாலும், வெளியே தெரியாது
    கட்டிக் காக்க, ஒளிய வேண்டும் என்ற உந்துதலில்
    ஓர் அறை ஒன்றைத் தேடுகையில்
    குயுக்தியாய் தோன்றியது ஓர் எண்ணம்,
    சர்க்கரைப் பாகில் செய்ததை தேர்வு செய்யலாமென்று!
    பளிச்சென்று இருந்ததால் உள்ளேயிருந்து
    வெளியே பார்த்துக் கொண்டிருந்தேன்
    பாதுகாப்பாய் இருக்கிறது என்றே
    ஆனால் ஒவ்வொரு தடவையும் அருகில் வந்து
    அழகாய்  குவியும் உன் உதடுகள்  பட்டு
    உருகப்போவது  கண்ணாடி மட்டுமல்ல நான்
    என்ற என் இறுமாப்பும் என்றே தெரியாமல்!

    படத்துக்கு நன்றி

    http://www.colourbox.com/image/close-up-shot-of-a-woman-s-lips-kissing-image-1729702

    Share
  • போந்தை

                                  உ
                             நமசிவாய

                            ‘போந்தை’

                     பதினோராம்  திருமுறை வைப்புத்தலம்

                        நூ த முத்து முதலி
                             மயிலை

    தமிழகத்து சித்தாந்த சைவ நெறியின் பெருமறைகளாம் பன்னிரு திருமுறைகளிலுள்ள 18000+
    பாடல்களில் பதிகம் ஏதும் கிட்டாது குறிக்கப்படும் பேறு மட்டும் பெற்ற மிக்க பழமைவாய்ந்த திருத்
    தலங்கள் ‘வைப்புத்தலங்கள்’ என வகைப்படுத்திய மரபில் காணும் ஓர் தொண்டைநாட்டுத் தலம்

     ‘திருப்போந்தை’

    தமிழகத்து வடஎல்லையில் அமைந்த திருவள்ளூர் மாவட்டத்தில் கவரப்பேட்டை மேற்காக ஊத்துக்
    கோட்டைக்கு வடக்காக ஆந்திர சத்தியவேடுக்கு அருகமைந்த சிற்றூராகும் இத்திருப்போந்தை.
    பராமரிப்பிலிருந்து இந்நாள் தனித்து விடப்பட்ட நிலையில் காணும் நூற்றுக்கணக்கான தமிழகத்துப்
    பழங்கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.

    பதினோராம் திருமுறையில் தொகுக்கப்பெற்ற பட்டினத்தாரின் 5 நூல்களுள் நான்காவதான திரு
    ஏகம்பமுடையார் திருவந்தாதியில் (65)

     “ஆலையங்கார் கருகாவை கச்சூர் திருக்காரிக்கரை
         வேலையங்கேறு திருவான்மியூர் திருஊறல் மிக்க
         சோலையங்கார் திருப்’போந்தை’ முக்கோணம் தொடர் கடுக்கை
         மாலையன் வாழ் திருஆலங்காடு ஏகம்பம் வாழ்த்துமினே” 11.990

    எனவரும் பாடலில்,
    கச்சூர், திருவான்மியூர், ஊறல், ஆலங்காடு காரிக்கரை எனும் தொண்டைநாட்டுத் தலங்களுடனேயே
    இப் போந்தையையும் பட்டினத்தார் பாடியுள்ளார்.

     

    போந்தை எனும் சொல் அடிமரத்தில் குடம்போல் பருத்துக்காணும் உள்ளினமாகிய பனைவகையைக்
    குறிக்கும் (புறம் 85) நன்கு வளர்ந்து விளங்கும் தொடர்பால் ஆகுபெயர்வழி ஓர் இடப்பொயரும் ஆனது

       “நாளிகேரம் செருந்தி நறுமலர் நரந்தம் எங்கும்
                 கோளி சாலந்தம் ஆலம் குளிர்மலர்க் குரவம் எங்கும்
                 தாளிரும் போந்து சந்து தண்மலர் நாகம் எங்கும்
                 நீளிலை வஞ்சி காஞ்சி நிறைமலர்க் கோங்கம் எங்கும்”
                        78 திருத்தொண்டர் புராணம்

    என சேக்கிழார் பல்வகை பயிரினங்களைக் காட்டுமிடத்து நம் ‘போந்தை’யையும் குறித்துள்ளார். சங்க
    நூல்களிலும் போந்தை பெரிதும் பயின்றுள்ளமை இக்கருத்துரைக் கடைக்கண் இணைப்பில்  காண்க.

    நம் ‘போந்தை’த் தலத்தின் (‘போந்தை’வாக்கம்) அமைவிடம் (இணைத்துள்ள வரை படங்கள் காண்க)
    ஆந்திர எல்லை மிகமிக அருகு சென்னை மாநகருக்கு ஏறக்குறைய 55 கிமீ வடமேற்காகவும், டில்லி
    கல்கத்தா என வடக்காகச் செல்லும் பெருவழிக்கு (கவரப்பேட்டை) 15 கிமீ மேற்காகவும் காணலாம்.

    தன்னார்வத் தொண்டர்கள் வைத்துள்ள சிதலம் அடைந்த பிசாலீசுவரர் கோவிலின் தோற்றம் காண்க.

    தாய்நாட்டுப் பண்பாட்டை போற்றுவதில் தமிழ் மக்களை அவ்வப்போது விழித்தெழச்செய்யும் தூண்டுகோல்
    ஏந்துவோர் மக்கட்தொகைக்கு ஏற்ப வளர்தலும் வேண்டும்.

    திருச்சிற்றம்பலம்

    – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – –

    புள்இரியும் புகர்ப்போந்தை            பட்டினப்பாலை 74

    இரும்பனம் போந்தைத் தோடும்        பொருநர் ஆற்றுப்படை 141

    போந்தை முழுமுதல் நிலைஇய காந்தள்        16 அகம் 238

    முழாஅரைப் போந்தை பொருந்தி நின்று        7 புறம் 85

    வட்கர் போகிய வளரிளம் போந்தை        3 புறம் 100

    போந்தையம் தோட்டின் புனைந்தநர் தொடுத்து3 புறம் 265

    மடல்வன் போந்தையின் நிற்கு மோர்க்கே    10 புறம் 297

    நெடுவேள் ஆதன் போந்தை அன்ன
    பெருஞ்சீர் அருங்கொண் டியளே  கருஞ்சினை
    வேம்பும் ஆரும் போந்தையும் மூன்றும்        6 புறம் 338
    (ஈங்கு போந்தை பனைதான் என்பது தெளிவு
    மேலும்    இப்புப்பாடலின் தலைப்புக் கொளுவில்
    “நெடுவேள் ஆதனுக்கு உரிய போந்தைப் பட்டினம்
    பற்றிய குறிப்பு” என உள்ளமை வரியின் பொருளுக்கு
    இயைய போந்தை இடப்பெயருக்கு இரட்டைச்சான்று)

    முழா அரைப் போந்தை அரவாய் மாமடல்        4 புறம் 375

    கொம்மைப் போந்தைக் குடுமி வெண்தோட்டு    2 குறுந். 281

    தூஇரும் போந்தைப் பொழில்அணி பொலிதந்து10 பதிற்று. 51

    மறம்கெழு போந்தை வெண்தோடு புனைந்து    31 பதிற்று. 51

    வண்டிசை கடாவாத் தண்பனம் போந்தை        6 பதிற்று. 70

    புரைதீர் வஞ்சி போந்தையின் தொடுப்போன்    46 சிலம்பு 26 கால்கோள்

    வாகை தும்பை மணித்தோட்டுப் போந்தை        70 சிலம்பு 26 கால்கோள்

    போந்தையொடு தொடுத்த பருவத் தும்பை        219 சிலம்பு 26 கால்கோள்

    தோடார் போந்தை தும்பையொடு முடித்து        45 சிலம்பு 27 நீர்ப்படை

    தோடார் போந்தை தும்பையொடு முடித்த        112 சிலம்பு 27 நீர்ப்படை

    போந்தைக் கண்ணிப் பொறைய கேட்டருள்    126 சிலம்பு 27 நீர்ப்படை

    தோடார் போந்தை வேலோன் தன்னிறை         175 சிலம்பு 27 நீர்ப்படை

    அரியிற் போந்தை அருந்தமி ழாற்றல்        189 சிலம்பு 27 நீர்ப்படை

    தோள்நலம் உணீஇய தும்பை போந்தையொடு    248 சிலம்பு 27 நீர்ப்படை

    போந்தைக் கண்ணிப் பொலம்பூந் தெரியல்    9 சிலம்பு 28 நடுகல்

    போந்தைக் கண்ணிநின் ஊங்கண்ஓர் மருங்    134 சிலம்பு 28 நடுகல்

    ஆரும் அணிஇளம் போந்தையும் வேம்பும்        262 பாண்டிக்கோவை

    தொடுத்த வேம்பின்மிசை துதைந்த போந்தை     நச்சி. உரை மேற்கோள்

    போர்எதிரில் போந்தையாம் பூ            பு வெ.மா.240

    போந்தை வேம்பே ஆர்என வரூஉம்        5 தொல்.புறத்திணையியல்

    Share
  • கண்டதும் கொண்டதும்

    -வருணன்


    மாளிகையின் மையத்தில்
    ஆடத் துவங்குகிறாள் தாசி
    வளைந்து நெளியுமவள் வளைகரங்களில்
    பொங்கிப் பெருக்கெடுக்கிறது கடலலை
    சிலும்புமவள் கேசத்தினின்று
    சப்தித்து வீழ்கிறதோர் கருப்பு அருவி
    தளைத்த இளமையுடன் திளைத்தாடுபவளின்
    அங்கம் தின்னும் விழிகளோடு
    மதுக்கோப்பை ஏந்திய கரங்கள்
    ஆயிரமாயிரம் பூட்டுகளைத் திறந்திடும்
    விழிச் சாவிகளிரண்டும்
    அவள் வசம் பத்திரம்
    தொலைத்தது அவளிதயப் பூட்டினை
    மாத்திரம்.
    படத்துக்கு நன்றி: http://www.miradha.com/historia-del-bharatanatyam/?lang=en

     

    Share
  • பாரதியின் வேத முகம் – 1

     

    -சு. கோதண்டராமன்-

    பாரதி ஒரு பன்முகக் கவிஞர். நாட்டுப் பற்று, மொழி்ப் பற்று, சமயப் பற்று இவற்றிற்கு விரோதமி்ல்லாத வகையில் அனைத்து உலக மக்களையும் அனைத்து மொழிகளையும், அனைத்துச் சமயங்களையும் நேசிக்கும் பண்பு, சொல் புதிது பொருள் புதிதாய் கவிதை இசைத்த புலமை, பெண் விடுதலை, சமூக நீதிக்குப் போராட்டம் இப்படிப் பல முகங்கள் உண்டு அவருக்கு.

          நாடகத்தில் ராவணனாகவோ முருகனாகவோ வேடம் போடுபவர் பல அட்டைத் தலைகளைத் தாங்கி வருவதைப் பார்க்கிறோம். எல்லா முகங்களும் ஒன்று போல இருந்தாலும் உண்மை முகம் ஒன்று தான், அதன் வடிவத்தை ஒட்டியே மற்ற முகங்கள் அமைக்கப் பட்டுள்ளன, அந்தத் தலை தான் மற்ற தலைகளையும் தாங்குகிறது என்பதையும் நாம் அறிவோம்.

          பல முகம் கொண்ட பாரதியின் உண்மை முகம் எது? எந்த முகத்தின் அடிப்படையில் மற்ற முகங்கள் அமைந்துள்ளன?

          வேதங்களின் மீது அவர் கொண்டிருந்த மரியாதை தான் அவரது உண்மை முகமாகத் தோன்றுகிறது. தான் பிறந்த குலத்துக்கு உரிய ஆசாரங்களைக் கைவிட்டதோடு அல்லாமல், தன் சாதியினரையும் எள்ளி நகையாடியவர் பாரதி. அப்படிப்பட்ட புரட்சிக்காரர், பழைமையான தனது குல வித்தையாகிய வேதத்தினிடம் மிகுந்த மரியாதை வைத்திருந்தார் என்பது வியப்புக்குரிய உண்மை.

          தனது பாடல்களிலும், கட்டுரைகளிலும், கதைகளிலும் இருநூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் அவர் வேதத்தைப் புகழ்ந்து பேசியுள்ளார். அவரது இந்த வேதப் பற்று தெய்வ பக்திப் பாடல்களில் மட்டுமல்லாது சமூக விடுதலைப் பாடல்களிலும், தேச பக்திப் பாடல்களிலும் கூட வெளிப்படுவதைக் காணலாம்.

          வேதம் பாரத நாட்டின் கலாசாரத்தின் ஆணி வேராக இருந்து வந்துள்ளது. ஆனால் இடைக்காலத்தில் சில தவறான கருத்துகளும் தவறான விளக்கங்களும் வேத இலக்கியத்தில் புகுந்துவிட்டன. இவற்றையும் அக்கால வேதியர்கள் வேதம் என்ற பெயரிட்டே அழைத்தனர். இந்தப் போலி வேதங்களை நீக்கி விட்டு வேதத்தை அதன் தொன்மையான தூய நிலையில் கொண்டு வைக்க வேண்டும் என்பது அவரது பேரவா. இந்தக் கருத்து அவரது ஒவ்வொரு பாடலின், கதையின், கட்டுரையின் அடிநாதமாக ஒலிப்பதைக் கேட்க முடிகிறது. அவற்றில் சிலவற்றை அடுத்து வரும் வாரங்களில் காண்போம்.

    ஒன்று: பரம் பொருள்

                    பாரதி இந்து மதத்தின் மீதும் வேதங்களிடத்தும் பெரு மதிப்புக் கொண்டிருந்த போதிலும் பிற மதங்களைச் சமமாகவே போற்றினார். அவரது இந்தச் சமயப் பொதுமைக்கு அடிப்படை ரிக் வேதமும் பகவத்கீதையும் தாம். ரிக் வேதத்தில் வரும் ஒரு புகழ் பெற்ற வசனம், “ஏகம் ஸத் விப்ரா பஹுதா வதந்தி” என்பது. “ஒன்றே மெய்ப் பொருள், அதனை ரிஷிகள் பலவிதமாய்ச் சொல்லினர்,” என்று பாரதி அதை மொழி பெயர்க்கிறார். கீதையில் கண்ணன் கூறுகிறான், “யார் யார் என்னை எந்தெந்த வடிவில் வழிபடுகிறார்களோ அவரவரை அந்தந்த நம்பிக்கையில் நான் நிலைக்கச் செய்கிறேன்.” இவற்றை நன்கு உள்வாங்கிக் கொண்ட பாரதி தன் எழுத்துகளில் வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் இக் கருத்தை வலியுறுத்தத் தவறவில்லை.

                எல்லாச் சமயங்களும் கடவுள் ஒன்றே என்று தான் கூறுகின்றன. ஆயினும் ஏன் தகராறு? தன் சமயத்தையே நன்கு அறியாத அரை குறை மனிதர்கள், “நான் வணங்குவது மட்டுமே கடவுள், மற்ற சமயத்தவர் வணங்குவது பேய்களை, பேய் வழிபாடு செய்வோரைத் திருத்துவது அல்லது அழிப்பது என் கடவுளுக்கு உகப்பானது,” என்ற வகையில் பேசுகிறார்கள். அத்தகையோருக்குப் பாரதி அறிவுறுத்துகிறார் –

    வேடம்பல் கோடியோ ருண்மைக்குள வென்று

                வேதம் புகன்றிடுமே ஆங்கோர்

                வேடத்தை நீருண்மையென்று கொள்வீரென்றவ்

                வேதமறியாதே

                நாமம் பல்கோடி ஓர் உண்மைக்கு உள என்று

                நான்மறை கூறிடுமே ஆங்கோர்

                நாமத்தை நீருண்மை என்று கொள்வீரென்று அந்

                நான்மறை கண்டிலதே.

    வெவ்வேறு பெயர்களில் வழிபடப்படுபவை வெவ்வேறு தெய்வங்கள் அல்ல. அவை அனைத்தும் ஒரு தெய்வத்தின் வெவ்வேறு வேடங்களே. இந்த வேடங்களைத் தெய்வத்தின் மீது மனிதர் தாம் சுமத்துகின்றனர். அதன் உண்மையான சொரூபம் சுத்த அறிவு ஆகும். வள்ளுவர் இறைவனை வாலறிவன் என்று போற்றுகிறார். இறைவன் எல்லாம் அறிந்தவன் என்று தான் எல்லாச் சமயங்களும் கூறுகின்றன. இதை உணர்த்தும் வேத வசனம், “ப்ரக்ஞானம் ப்ரம்ம” (அறிவே கடவுள்) என்பதைப் பாரதி மிக எளிமையாக வெளிப்படுத்துகிறார்.

    ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி

                அலையும் அறிவிலிகாள் பல்

                லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்

          டாமெனல் கேளீரோ என்று பாரதி கேட்கிறார்.

                நாம் என்ன செய்கிறோம்? மெள்ளப் பல தெய்வம் கூட்டி வளர்த்து வெறுங் கதைகள் சேர்த்துப் பல கள்ள மதங்கள் பரப்பிக் கொண்டிருக்கிறோம். இது முறையா? அச்சமும் அறியாமையுமே வன்முறையின் அடிப்படை. எனது சமயம் அழிந்து விடுமோ என்ற அச்சமும், எல்லா மதங்களுக்கும் உட்புகுந்த கருத்து ஒன்றே என்பதை அறியாமையுமே மாற்றுச் சமயத்தாரை அழித்தால் நம் சமயம் வாழும் என்ற மூட நம்பிக்கையைத் தோற்றுவிக்கிறது. வீரமில்லாமல் இந்த அச்சங்களுக்கு இடமளிப்பவர் எந்தச் சமயத்தவரானாலும் இறைவனை அடைய முடியாது என்கிறார் பாரதி.

    வீரமிலா நெஞ்சுடையார் சிவனைக் காணார்

                எப்போதும் வீரமிக்க வினைகள் செய்வாய்

                பேருயர்ந்த ஏஹோவா அல்லா நாமம்

                பேணுமவர் பதமலரும் பூணல் வேண்டும்

      “ஒவ்வொரு மனிதனும் தனித் தனி இயல்பினன். அவனவன் மதம் அவனது தனித் தன்மையைப் பொறுத்தது. எனவே இன்னும் இரண்டு கோடி மதங்கள் பெருகட்டும். எத்தனை பேர் எத்தனை விதமாக வழிபட்டாலும் உண்மை ஒன்றே” என்கிறார் விவேகானந்தர். பாரதி அதனை வழிமொழிகிறார்-

    பூமியிலே கண்டமைந்து மதங்கள் கோடி

                புத்தமதம் சமணமதம் பார்ஸி மார்க்கம்

                சாமிஎன ஏசுபதம் போற்றும் மார்க்கம்

                ஸநாதனமாம் இந்துமதம் இஸ்லாம் யூதம்

                நாமமுயர் சீனத்துத் தாவு மார்க்கம்

                நல்ல கண்பூசி மத முதலாப் பார்மேல்

                யாமறிந்த மதங்கள்பல உளவாமன்றே

                யாவினுக்கும் உட்புகுந்த கருத்திங்கொன்றே      

     

                தெய்வம் பல பல சொல்லிப் பகைத்

                தீயை வளர்ப்பவர் மூடர்

                உய்வதனைத்திலும் ஒன்றாய் எங்கும்

                ஓர் பொருளானது தெய்வம்

    என்கிறார் பாரதி. அல்லாவைப் போற்றி அவர் பாடுவதைக் கேட்போம்-

    பல்லாயிரம் பல்லாயிரம் கோடி கோடி அண்டங்கள்

                எல்லாத் திசையிலுமோர் எல்லையில்லா வெளிவானில்

                நில்லாது சுழன்றோட நியமம் செய்தருள் நாயகன்

                சொல்லாலும் மனத்தாலும் தொடரொணாத பெருஞ்சோதி

                அல்லா அல்லா அல்லா

    இதே கருத்தைக் காளி மீது ஏற்றிப் பாடுகிறார்.

    விண்டுரைக்க அறிய அரியதாய்

                விரிந்த வான வெளியென நின்றனை

                அண்டம் கோடி வானில் அமைத்தனை

                அவற்றில் எண்ணற்ற வேகம் சமைத்தனை

      பாரதி விநாயகருக்குச் செய்யும் அர்ச்சனையைக் கவனியுங்கள். தொல் பழம் தெய்வங்கள் உள்பட, வெவ்வேறு பெயர்களில் வணங்கப்படும் இந்துக் கடவுள்கள் மட்டுமல்லாது இஸ்லாமிய கிருத்துவப் பெயர்களும் ஒரே பரம்பொருளைக் குறிப்பதை விளக்குகிறது அது.

    விநாயக தேவனாய் வேலுடைக் குமரனாய்

    பிறநாட்டிருப்போர் பெயர்பலகூறி

    அல்லா யெஹோவா எனத் தொழுது இன்புறும்

    தேவரும் தானாய் திருமகள் பாரதி

    உமை எனும் தேவியர் உகந்த வான்பொருளாய்

    உலகெலாம் காக்கும் ஒருவனைப் போற்றுதல்

     

          இறைவி இறைவன் இரண்டும் ஒன்றாகித்

          தாயாய்த் தந்தையாய்ச் சக்தியும் சிவனுமாய்

          உள்ளொளியாகி உலகெலாம் திகழும்

          பரம்பொருளேயோ, பரம்பொருளேயோ

          ஆதிமூலமே அனைத்தையும் காக்கும்

          தேவதேவா சிவனே கண்ணா

          வேலா சாத்தா விநாயகா மாடா

          இருளா சூரியா இந்துவே சக்தியே

          வாணீ காளீ மாமகளேயோ

          ஆணாய்ப் பெண்ணாய் அலியாய் உள்ள

          யாதுமாய் விளங்கும் இயற்கைத் தெய்வமே

          வேதச்சுடரே மெய்யாங் கடவுளே

        சமயங்கள், சாத்திரங்கள், சடங்குகள் எல்லாம் உண்மையை அடைவதற்கான படிகளே அன்றி அவையே இறுதி நிலை அல்ல. மனதைச் செம்மைப்படுத்திப் பரம்பொருளை உள்ளத்தால் தொட முடிந்தால் இவை தேவையற்றதாகி விடும்.

    காவித் துணி வேண்டா கற்றைச் சடை வேண்டா

                பாவித்தல் போதும் பரமநிலை எய்துதற்கே

                சாத்திரங்கள் வேண்டா சதுர்மறைகள் ஏதுமில்லை

                தோத்திரங்கள் இல்லை உளம் தொட்டு நின்றால் போதுமடா

                தவமொன்றும் இல்லை ஒரு சாதனையுமில்லையடா

                சிவமொன்றே உள்ளதெனச் சிந்தை செய்தாற் போதுமடா

     

                அறிவு விளக்கம் பெறாத குழந்தை நிலையில் உள்ளோர் தாம் விரும்பிய வெவ்வேறு வடிவங்களில் பரம்பொருளை வழிபடட்டும். ஆனால் அதே நிலையில் நின்று விடாமல் படிப்படியாக மேலே உயர்ந்து வடிவங்கள், வழிபாட்டு முறைகள்,  வேதங்கள், தவங்கள் இவற்றைக் கடந்து பரம்பொருளை உள்ளத்தால் உணரும் நிலைக்கு வரட்டும். இவை எல்லாமே உண்மை தான். இதை உலகுக்கு உணர்த்தவல்ல ஒரே நாடு நமது நாடு தான் என்பதில் பெருமை கொள்கிறார் பாரதி.

    ஒன்று பரம்பொருள் நாமதன் மக்கள்

                உலகின்பக் கேணிஎன்றே

                நன்று பல்வேதம் வரைந்தகை பாரத

                நாயகிதன் திருக்கை

    Share
  • நினைவுகள்

    விசாகை மனோகரன்

     

    கடந்து போன பாதையின்,
    வழி நடந்த வாழ்க்கையின்
    விபரீத விளையாட்டுகளை
    நினைத்துப் பார்க்கிறேன்.

    இளமைப் பிராயத்தின் இளரத்த வேகத்தில்
    செய்யக் கூடாது என் தெரிந்தும் செய்த தவறுகள்
    நிகழக்கூடாது என தெரிந்தும் நிகழ்ந்த நிகழ்வுகள்
    மாட்டோம் என நினைத்தும் புகைத்த பெட்டிகள்
    தொடவே கூடாது  என் நினைத்தும் திறந்த புட்டிகள்

    நண்பர்களை சந்தேகித்து, பகைவர்களை சம்பாதித்த
    விபரீதங்கள்
    கேளிக்கையை பிரதானமாக்கி செலவான நிமிடங்கள்
    நாணயங்கள்

    கேளிக்கையான வாழ்க்கையின் நடுவில் திடீர் மாற்றம்
    அனைத்தும் மாறிவிட்டன எனக்கென வந்த ஒருத்தியால்
    அன்று தாய் சொன்னதை கேட்க மனதில்லை
    இன்று இவள் சொல்வதை மறுக்க முடியவில்லை
    தாயால் முடியாதது தாரத்தால் முடியும்
    என இதைத் தான் சொன்னார்களோ?

    புகையை விட்டேன், மதுவையும் விட்டேன்
    நண்பர்கள் வந்தனர், நல்ல நட்பும் வந்தது,
    காரணம், அன்றே சொன்னானே  அந்த தெய்வக் கவிஞன்
    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று
    நினைவலைகள் நீங்க மனதிற்குள் ஒரு பாட்டு கேட்டது
    நல்ல மனைவி, நல்ல பிள்ளை, நல்ல குடும்பம் தெய்வீகம்!!!

     

    படத்திற்க்கு நன்றி: கூகுள்

    Share
  • ​வால்ட் விட்மன் வசன கவிதை -11

    என்னைப் பற்றிய பாடல் – 4

    (Song of Myself)

    (1819-1892)

    (
    புல்லின் இலைகள் -1)

    மூலம் : வால்ட் விட்மன்

    தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா

    +++++++++++++++++++++++++++++

    வலிமை படைத்த இசை அறிவுடன்

    உலவி வருகிறேன் நான்

    எனது மேள தாள மோடு

    இன்னிசைக் கருவிக ளோடு.

    வெற்றி வீரருக்கு மட்டும் அல்ல,

    நான் வாசிப்பது,

    தோற்றோ ருக்கும், மாண்டோ ருக்கும்

    வாசிப்பது நான் !

    தெரியுமா அது அன்றைய தினத்தின்

    ஆதாயம் என்று !

    தோற்பது கேவல மில்லை !

    போர்களில் தோற்பதும், வெல்வதும்

    ஒரே ஆன்மக் கிளிர்ச்சி யில்தான் !

    இறந்தோர்க்குப் பரிந்து

    முரசடிக்கிறேன், மனம் துடிக்கிறேன் !

    ஊது குழலில் நளினமாய்

    ஓங்கிய குரலில் பாடுகிறேன்

    தோற்றோரும் நீடு வாழட்டும் !

    கடலில் மூழ்கிப் போன

    படகுப் போர் வீர்ர்கள் நீடு வாழ்க !

    கடலில் தனியாய் மூழ்கிப் போன

    காளையர் நீடு வாழ்க !

    வேலை இழந்த போர்த் தளபதியும்

    இழப்பை மீறி முற்படும்

    வலிய வீரரும் வாழ்க !

    பேரளவில் தெரியாமல் போன

    வீர்ர்களும் நீடு வாழ்க

    பேரளவில் அறிந்தவரைப் போல் !

    எதிர்ப்பேன் எனது பன்முகப்பாடு மீறி

    மதிப்பெய்தி உள்ளன வற்றை !

    சுவாசிப்பேன் காற்றை,

    மிகுதிப் பங்கைப் பிறர்க்கு விட்டு வைத்து,

    முடங்கிக் கிடப்பதில்லை நான்

    ஏற்றவோர்

    இடத்தில் இருக்கிறேன்.

    பூச்சியும், மீன் முட்டைகளும்

    ஏற்ற இடத்தில் உள்ளன.

    ஒளிமிக்கப் பரிதிகளும், தெரியாத

    ஒளியற்ற பரிதிகளும்

    தமக்குரிய இடத்தில் தான் உள்ளன.

    உணர்வுள்ள வையும், இல்லாத வையும்

    உள்ளன தம்மிடத்தில் !

    +++++++++++++

    தகவல்:

    1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]

    2. Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm Cowley [First 1855 Edition] [ 1986]

    3. Britannica Concise Encyclopedia [2003]

    4. Encyclopedia Britannica [1978]

    5. http://en.wikipedia.org/wiki/Walt_Whitman [November 19, 2012]

    6. http://jayabarathan.wordpress.com/abraham-lincoln/

    [ஆப்ரஹாம் லிங்கன் நாடகம்]

    ********************

    jayabarat@tnt21.com [S. Jayabarathan] (February 12, 2013)

    http://jayabarathan.wordpress.com/

    Share
  • தேவன் நூறு (தேவன் ஒரு சகாப்தம்) – (2)

    .
    திவாகர்

    தேவன் ஒரு சகாப்தம் – பகுதி 1

    சென்னை மேற்கு மாம்பலம் அயோத்யா மண்டபம் அருகில் உள்ள முருகன் லெண்டிங் லைப்ரரியை எத்தனை பேருக்குத் தெரியும் என்பது தெரியாது. ஆனால் எனக்கு ஆதியில் மிகச் சிறந்த தோழர்களை (புத்தகங்களைத்தான் சொல்கிறேன்)  அறிமுகப்படுத்திய இடம் அதுதான். இர்விங் வாலஸ் இலிருந்து இதிகாசப் புத்தகங்கள் வரை வெறியாகப் படித்த நாட்கள் அவை. பள்ளி நாட்களிலிருந்து கிடைத்த அந்தக் கடைக்காரரின் நெருங்கிய சிநேகம் கைகொடுத்தது. அங்கேதான் நான் தேவன் கதைகள் மீது காதல் கொண்டேன். என் காதலுக்கு உரம் போட்டு வளர்ப்பது போல் தேவனின் பரம ரசிகரான அந்தக் கடைக்கார நண்பரும் அதிக நேரம் என்னோடு அவர் புதினங்கள் பற்றியும் கட்டுரைகள் பற்றியும் பேசுவதிலேயே செலவிடுவார். இதனால் மேலும் இரண்டு சௌகரியங்கள் எனக்கு ஏற்பட்டன. அப்போதெல்லாம் ‘பைண்ட்’ செய்யப்பட்ட ஒரிஜினல் தேவன் தொடர்கதைப் புத்தகங்கள் எல்லாமே என் பார்வையில் தினம் பட்டுக்கொண்டே இருக்கும். வீட்டுக்கும் ‘இலவசமாகவே’ எத்தனை நாளைக்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்ல அனுமதியும் உண்டு. (மற்றவர்களுக்கு எக்ஸ்ட்ரா லெண்டிங் ஸ்ட்ரிக்ட் ’நோ’ அத்துடன் ஃபைன் வேறு கட்டவேண்டும், அத்தோடு டி.வி.க்கள் இல்லாத காலம் என்பதையும் புத்தகங்கள் அதிகம் படிக்கமுடிந்த காலம் என்பதையும் கணக்கில் கொள்க)).

    தேவன் கதைகளில் மிகப் பெரிய விசேஷம் என்பதே எந்த விஷயத்தையும் மிக எளிதாக விளங்கும்படியாகவும் நகைச்சுவையாகவும் வாசகர் முன் எடுத்து வைப்பதுதான். எளிய நகைச்சுவை என்பது அவர் எழுத்தின் மூலாதாரமோ என்று வியக்க வைக்கும். அட்டகாசமாக ஆஹா ஓஹோ என்று சிரித்து விட்டு அடுத்தகணமே மறக்கடிக்கவைக்கும் நகைச்சுவைகள் அவர் எழுத்தில் கிடையாது. அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் சாதாரண விஷயங்களே நகைச்சுவையாக எடுத்தாளப்படும்போது அதன் முக்கியத்துவம் தெரியும் வகையில் எழுதுவார். எதையும், எவரையும் ஆழ்ந்து நோக்கும் பார்வை அவருடையதாக இருந்திருக்கவேண்டும் என்றுதான் நினைக்கிறேன். அந்தப் பார்வையில் பட்டவை எல்லாம் சர்வ சாதாரணமாக எழுத்தில் பிரதிபலிக்கும். சாதாரண மனிதர்கள் பார்வையில்தான் சாதாரண மனிதர்களின் கவனம்தான் அவருக்கு முக்கியம். அதிலும் அந்தக் காலத்து மத்தியதரவர்க்கத்தாரின் நாடியைப் பிடித்துப் பார்த்து எழுதும் கலையைக் கற்றவர்.  அவர் எழுதும் தமிழ் சாதாரணமாக பேசும் தமிழ் போல இருந்தாலும் நல்ல தமிழைத்தான் பயன்படுத்துவார். பின்னாட்களில் அளவுக்கு அதிகமாக தமிழ்ச் சொற்களில் ஆங்கில எழுத்துகளைக் கலந்து கொடுத்தவர் சுஜாதா அவர்கள் என்ற பெயர் உண்டு என்றாலும் அதன் மூலகர்த்தா தேவன் அவர்கள்தான். ஆங்கிலம் மட்டுமல்ல வடமொழியும் சர்வ சாதாரணமாக எழுத்தில் காணப்படும். ஆனாலும் யாருக்குமே, ஏன், ஒரு தனித்தமிழ் ஆர்வலருக்குமே கூட இந்த விஷயத்தில் கருத்து வேறுபாடு வராத அளவில் அந்தக் கலவை இருக்கும். அதே போல கம்பன் கவிதைகளில் உவமைகள் ஏராளமாக இருக்கும். தேவன் எழுத்துக்களில் கூட உவமைகள் ஏராளமாக உண்டு. இவர் போல கதை கட்டுரைகளில் உவமைகள் இப்படி அள்ளித்தெளித்தவர் யாரேனும் உண்டா என்று தேட வேண்டும் கூட.

    உவமைகள் எதற்காக எழுதப்படுகின்றது என்றால் சொல்லப்படும் கருத்தின் வீரியத்தை மிக அதிக அளவில் வலுப்படுத்தும் என்பதற்காகவே உவமைகள் உருவாயின. பெண்ணின் முகத்தை பூரண நிலவொளிக்கு உவமையாக்குகிறோம். அவள் கண்களை ஒளிரும் நட்சத்திரங்களுக்கு ஒப்பு நோக்கிப் பேசுகிறோம். அவள் நாசியை கூர்மையான வெள்ளைப்பறவைக்கு ஈடு காட்டுகிறோம். பட்டு’ போன்ற கன்னங்கள் எனும் போதே அதன் மென்மையைக் காட்டி விடுகிறோம். அவள் சிரிக்கும்போது தெரியும் பற்களைக் கூட விடுவதில்லை. முத்து வரிசை, முல்லைச் சரங்கள், வெள்ளி மணி என்கிறோம். இப்படி உவமைகள் சொல்லப்படும்போதெல்லாம் இந்தக் கருத்துகள் பலம் பெறுகின்றன. பலம் பெறும்போது எளிதில் வாசகர்கள் மூளையில் போய் தங்கிவிடுகின்றது. ஆனால் பொருத்தமான உவமைகள் தேட எல்லா எழுத்தாளர்களுமே கஷ்டப்படுவர். தேவன் அப்படிக் கஷ்டப்பட்டதாகத் தெரியவில்லை. சர்வ சாதாரணமாக அவர் எழுத்தில் ஒவ்வொரு முறையும் வந்து விழும் உவமைகளை மட்டும் எழுதத் தொடங்கினால் ஒரு பெரிய ‘பைண்ட்’ புத்தகமே கூட போட்டுவிடலாம்.

    இப்படி உவமைகள் நிறைந்த கதை என்று சொல்லத் தொடங்கினால் தேவனின் ‘மிஸ் ஜானகி’ ஒன்றே போதும். எத்தனை எத்தனை உவமைகள் என்ற சான்றுக்குப் போகுமுன், மிஸ் ஜானகி கதையைப் பற்றிய ஒரு சுருக்கம் ஒன்றினைத் தெரிவித்து விடுகிறேன்.. ஏனெனில் இந்த உவமைகள் பற்றி எழுதும்போது அதன் சுவை கூடுமல்லவா.

    மதுரை வக்கீல் பட்டாபி ராமய்யரின் இரண்டாவது மகளான மிஸ் ஜானகி சென்னையில் கல்லூரி ஒன்றில் படிக்கும்போது தன்னுடைய மூத்த மாணவனான கதாநாயகன் நடராஜனின் சிநேகிதம் கல்லூரியின் நூலகத்தில் அகஸ்மாத்தாகக் கிடைக்க அது காதலாக மலர்கிறது. காதலென்றால் அதுவும் அந்தக் காலக் காதல் எல்லாம் திரை மறைவில்தான், யாருமறியாமல்தான் நடக்கமுடியும். இப்படி இருக்கையில் ஆண்டுமுடிவில் வரும் விடுமுறையில் திருச்செந்தூர் சுவாமி தரிசனத்துக்குச் செல்ல வேண்டுமென, மதுரையிலிருந்து இதற்காக இவள் அக்கா சென்னைக்கு வந்து மெனக்கெட்டு அழைத்துப்போக, சென்னையிலிருந்து ஜானகி ரயிலில் தன் அக்கையோடு பயணமாக, நம் கதாநாயகனும் தன் காதலியின் கண்பார்வையில் இருக்கவேண்டுமென விரும்பி அவளைத் தொடர்கிறான். அக்கையும் தங்கையும் மதுரை இறங்கி இல்லம் சென்ற பிறகு அடுத்த நாள் வண்டியில் திருச்செந்தூர் செல்வதாக ஏற்பாடு.

    இந்தக் கதையில் வில்லங்கம் செய்பவர்கள் உண்டு. செய்பவர்கள் மூவர். ஒருவர் ஜானகியின் சொந்த அக்கா மங்களம், இன்னொருவர் திருச்செந்தூரின் ரிடையர்டு தாசிலதாரும் திமிராகப் பேசிப் பழகும் நாகநாதைய்யர். மூன்றாவது நடராஜனின் கல்லூரியில் படிக்கும் சக மாணவனாகக் குப்பை கொட்டும் ’அல்ட்டல்’ சந்துரு. இவன் நாகநாதைய்யரின் உறவு என்பதோடு வக்கிரபுத்தி படைத்தவன் கூட. இவனுக்கு ஜானகியை எப்படியும் ’செட்டில்’ செய்து விட வேண்டும் என்ற முனைப்போடுதான் நாகநாதய்யரே ஜானகி குடும்பத்தாரை, அவர்கள் தெரிந்தவர்கள் என்ற முறையில், வற்புறுத்தி திருச்செந்தூர் அழைத்து வருகிறார். இந்த மங்களமோ ஊர் உலகத்தை அடக்குவதோடு, கணவனையும் அடக்கி தன் முந்தானை முடிச்சில் வைத்திருப்பவள்தான் என்றாலும் நாகநாதய்யர் எப்படியோ மங்களத்தைப் புரிந்து கொண்டு அவளைத் தன் வழியில் வரவழைக்கவும் முயற்சி செய்கிறார். வில்லங்கம் என வரும்போது நல்லவைகள் செய்பவரும் வேண்டுமே.. அப்படிப்பட்ட நல்லவர்களில் முதன்மையாக திருச்செந்தூர் கடற்கரையில் தன் காகிதங்களைக் காற்றில் பறக்கவிட்டு மண்ணில் பரபரவென தேடும் ‘தலைதடவி’ சுந்தரமும் (பாவம் சுற்றியுள்ள மனிதர்கள் எல்லாம் வேடிக்கை பார்க்க, அந்த வேடிக்கையை முடிவுக்குக் கொண்டு வருவதைப் போல நம் கதாநாயகன் மட்டுமே உதவி புரிகிறான்), கல்லூரி அறை நண்பன் குடுமி மணியும் விசேஷமாக உண்டு. கூடவே சிறு சிறு உதவிகள் ஜானகியின் பயந்த சுபாவ அத்திம்பேர் ஜகதீசன் மூலமும், திருச்செந்தூர் அண்டை வீட்டுக் காரர்களாகக் குடியேறும் முன்னாள் நடிகை ஜகமும், நாட்டியமணி பங்காருவும் செய்து கொடுத்தாலும் இவர்களால் கிடைத்த உதவிகளை விட உபத்திரவமே நடராஜனுக்கு மிஞ்சுகிறது. கூடவே உபத்திரவமும் உதவியும் கொடுக்க திடீரென அவனைத் தேடி வந்த நடராஜனின் தந்தை டெல்லி ஹரனும் அதே போல கதாநாயகி ஜானகியின் தாய் தந்தையரும் அங்கு பின்னர் (திருச்செந்தூரில்) சேர்ந்து கொள்கிறார்கள  ஜானகியின் அப்பா தினம் வாயால் ஆயிரம் முறை அஸ்வமேதம் செய்துவிடுவதாக பேசுவாரென்றால், அவள் அம்மாவோ தினத்துக்கு ஒரு வியாதியைச் சொல்லிக்கொண்டு, அந்த வியாதியின் பெயரால் அன்றைக்கு என்ன கிழமை என பிறர் கண்டுகொள்ளும் அளவுக்குப் பழகும் பெண்மணி. (இதே போல ஒரு பாத்திரத்தைப் பின்னாளில் ‘அனபே வா’ எனும் படத்தில் சரோஜாதேவியின் அம்மாவாக வரும் நடிகைக்குக் கொடுத்துக் காப்பியடித்தார்கள் என்பது வேறு விஷயம்)

    இப்படிப்பட்ட சமயத்தில்தான் நடராஜன் தன் காதலி ஜானகியுடனும், இன்னமும் காதல் விஷயம் தெரியாத அவள் அக்கா மங்களத்துடனும் எதேச்சையாக சேர்ந்து கொண்ட முன்னாள் நடிகை ஜகத்துடனும், சென்னையிலிருந்து இவர்களோடு புகைவண்டியில் பயணம் செய்யும்போது, அடுத்த நாள் காலை வேளையில் திண்டுக்கல் ஸ்டேஷனில் கிடைக்கும் சுவையான சூடான இரண்டு இட்லிக்காக கூட்டத்தில் தள்ளுமுள்ளுகளுடன் போராடி வெற்றிகரமாக தனக்கொரு பொட்டலமும், ஜானகிக்கொரு பொட்டலமும் வாங்கி வெளியே வருவதற்குள் வண்டி இந்த அப்பாவிக் காதலனுக்குக் காத்திராமல் கிளம்பி விட, நடராஜனோ வண்டியைப் பறிகொடுத்ததோடு மட்டுமல்லாமல் வண்டியில் செல்லும் தன் அழகான காதலியையும் அவள் பார்வையில் பட வைத்திருக்கும் தன் பெட்டியையும் பறிகொடுக்கவேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகிறான்.

    அந்தப் பெட்டியில் சில விசேஷங்கள் உண்டு. ஜானகி தன் கைப்பட எழுதிய காதல் கடிதங்களைப் பத்திரமாக (காதலன் என்பான் அவ்வப்போது அதைப் படிக்கவேண்டும் அல்லவா) வைத்துள்ளான். (அந்தக் கால கட்டத்தில் காதல் கடிதம் எழுதுவது எல்லாம் மிகப் பெரிய கிரிமினல் குற்றமாக்கும் என்பதையும் நினைவில் கொள்க) இருந்தாலும் ஜானகியின் பார்வையில்தான் அந்தப்பெட்டி இருக்கிறது என்ற ஆறுதலும் என்னதான் மதுரையில் ஜானகி இறங்கினாலும் அடுத்த நாள் திருச்செந்தூரில் பார்த்து ரகசியமாக பெட்டியை வாங்கிவிடலாம் என்றும் தன்னை சமாதானம் செய்து கொண்ட நடராஜன் அடுத்த ரயிலுக்காகக் காத்திருக்கிறான். ஜானகி சென்ற ரயில் மதுரையை அடைந்ததும், எப்படி இந்தப் பெட்டியை தன் பெட்டிகளுடன் சேர்ப்பது என்று கவலைப்பட்ட ஜானகிக்கு, அதே வண்டியில் திருச்செந்தூர் பயணப்பட மதுரையில் ஏற வந்த நாகநாதய்யர் வந்ததால் அவளுக்கு மிகப் பெரிய நிம்மதியைத் தந்தது. ‘மாமா.. இந்தப் பெட்டி என் சிநேகிதியின் பெட்டி, ஜாக்கிரதையாக எடுத்துச் செல்லுங்கள், நாளை திருச்செந்தூரில் வாங்கிக் கொள்கிறேன்” என ஒப்படைத்துவிட்டு ஒரு நல்ல காரியத்தைத் திருப்திகரமாக முடித்தோம் என்ற சந்தோஷத்துடன் அந்த நிம்மதி முகத்தில் தெரிய தன் இல்லத்துக்குச் செல்கிறாள்.

    பாவம் அவள். ’கண்ணிய நடத்தையுடன் நாகநாதய்யர் எடுத்துச் செல்வார்.. அந்தப் பெட்டி அடுத்த நாள் வந்து சேரும், நடராஜனை எப்படியாவது பார்த்துத் திருப்பி  விடலாம்’ என்று நம்பிய ஜானகிக்கு இந்த நாகநாதய்யர் ரயிலில் பொழுதைக் கழிக்க வசதியாக இவளின் காதல் கடிதங்கள்தான் கிடைத்தன என்பதையும் அதைப் படித்துவிட்டு அந்த மாமா வயற்றெரிச்சலுடன் வாயும் எரிய அனைவரையும் திட்டிக் கொண்டே பயணம் செய்கிறார் என்கிற அரிய விஷயத்தை நிச்சயம் அறிந்திருக்க மாட்டாள் இல்லையா? அதிலும் தனக்கு எப்படியாவது அந்த பாழாய்ப்போன ராஸ்கல் சந்துருவை மணமுடிக்க ஆவலாய் இருக்கும் ஒருவர் கையில் இந்தக் கடிதங்கள் கிடைத்து பின்னாட்களில் என்னென்ன தொந்தரவுகள் வருமோ என்றெல்லாம் அவள் அந்தச் சமயத்தில் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.

    இனி திருச்செந்தூரில் பிரத்யட்ச தரிசனம் கொடுத்துக் கொண்டிருக்கும் முருகப்பெருமானின் பெருமைகளை அவ்வப்போது சொல்லிக்கொண்டே நம் கதையும் விறு விறுப்பாக நகர்ந்து கொண்டே இருக்கிறது.

    கதை நகரட்டும்.. இனி ஓரளவுக்கு இந்தக் கதையின் தளமும், நடையும் புரிந்திருக்கும் என நினைக்கிறேன். இனி தேவன் இந்தக் கதையில் புகுத்திய இந்த உவமைப் பொருத்தங்களைப் பார்க்கலாம்.

    (தொடர்ந்து வரும்)

    Share
  • வாத்ஸல்யம்

    இன்ன்ம்பூரான்

    “நீண்டவத்தைக் கருமுகிலை எம்மான்தன்னை
    நின்றவூர் நித்திலத்தைத் தொத்தார் சோலைக்
    காண்டவத்தைக் கனலெரிவாய்ப் பெய்வித்தானைக்
    கண்டது நான் கடல்மல்லைத் தலசயனத்தே.’

    (பெரிய திருமொழி 2-5-2)

    சென்னைக்கு அருகே ஒரு பெருமாள் கோயில். பெருமாளோ பக்தவத்ஸலன். தாயாரோ ‘என்னைப்பெற்ற தாயார்’. அகஸ்மாத்தாக, என் தங்கையும், அவளுடைய குடும்பமும், நானும் ஒரு நாள் சாயரக்ஷையில் திருநின்றவூர் போயிருந்தோம். அற்புதமாக தரிசனம் கிட்டியது. எல்லாருக்கும் தான். என் மனம் இந்த தெய்வீக திருநாமங்களையும், அவற்றில் குடி கொண்டிருக்கும் கனிவுக்கும், அன்புக்கும், பிரேமைக்கும் ஊற்றுக்கண்ணாகிய வாத்ஸல்யத்தில் லயித்தது. பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தாலும், சாவகாசமாக தரிசித்து, அர்ச்சானாதி பிரசாதங்களை பெற்று அனுபவிக்க முடிந்தது. அமைதியும், மன நிறைவும், சந்துஷ்டி என்பார்களே அந்த பூரணத்துவமும் எம்மை ஆட்கொண்டபடியால், லெளகீக சமாச்சாரங்கள் ( வண்டி ஓட்டுனர் தேநீர் அருந்தினாரா?/ காலணிகள் பத்திரமா? வீட்டுச்சாவி யாரிடம்?/ஓய்வூதியம் வங்கிக்கணக்கில் வந்திருக்குமா?/ அலமாரியை பூட்டினோமா? இத்யாதி) மனதை விட்டு விலகியிருந்தன. தரிசனம் முடிந்தபின் சற்று நேரம் அங்கே அமர்ந்து விட்டு வருவது ஒரு சம்பிரதாயம். நாங்களும் அவ்வாறே செய்தோம். என்ன தோன்றியதோ, தெரியவில்லை. என் தங்கை ஒரு கேள்வி கேட்டாள். பதில். அடுத்த கேள்வி.  பேசிக்கொண்டே, அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்றால், ஒரு இனிய அனுபவம். பெருமானின் பெயர்: ஹிருதயாலீஸ்வரர்; அம்பாளோ மரகதாம்பிகை. கொஞ்சம் அசந்து தான் போய்விட்டோம். இப்படி ஒரு பொருத்தமா என்று. அந்த ஊரில் குடி புகுந்து விடலாமா என்று கூட ஒரு எண்ணம் உலா வந்தது. அங்கு சிறிது நேரம் அமர்ந்த பின், எங்கள் உரையாடல் தொடர்ந்தது.  இப்படி, நேரம் போனது தெரியாமல் ஒரு அரை மணி நேரம் கழிந்து விட்டது.  சில நிமிடங்களில் ஒரு கூட்டமே சேர்ந்து விட்டது, தாமதமாகத்தான் எங்களுக்குத் தெரிந்தது, முடிவில். அதுவும் எப்படி? முன்பின் தெரியாத மூத்த நபரொருவர், ‘நல்ல வேளை. நானும் கலந்து கொண்டேன். நீங்கள் யாரும் ஆக்ஷேபிக்கவில்லை. எல்லாம் ஆத்மார்த்தமாக நடந்து விட்டது. எல்லாம் அவனுடைய வாத்ஸல்யம்’ என்று சொல்லி மனமுருகி விடை பெற்றுக்கொண்டார். அப்போது தான் புரிந்து கொண்டோம், ஒரு கோஷ்டி பிரவசனம் நடந்து முடிந்திருக்கிறது என்று. கிட்டத்தட்ட பத்து/பதினைந்து பேர், அடக்கி வாசிக்கும் குரலில், சம்பாஷித்ததில் யார் யார் என்ன என்ன சொன்னார்கள் என்பது முக்கியம் அல்ல. கேள்வி தான் முக்கியம்; சாராம்சம் தான் முக்கியம். என் தங்கை கேட்ட கேள்வி, “ ஏன் இங்கு இன்று எதிர்பாராமல் கிடைத்த மனசமாதானத்தை நம்மால் மற்ற இடங்களில் இருக்கும்போது பெற முடியவில்லை?

    சாராம்சம்: முனைந்தால் அது நமக்குக் கிட்டும். முனிவர்களும், சாதுக்களும் பெறவில்லையா? முனைவது என்பதே ஒரு அப்பியாசம். அப்போது அப்பியாசத்தில் லயிக்கும் மனம் லெளகீகத்தில் தான் உழல்கிறது. வாசற்படி தாண்டி பக்தி மார்க்கத்தில் பயணிப்பதில்லை. அதனால் என்ன? ஆன்மீகமும் பயிற்சியினால் தானே படிப்படியாக கோபுரம் ஏறுகிறது. அதை செய்து பார்ப்போம். அம்மா! பக்திக்கு முன் ஆன்மீகம் எம்மாத்திரம்? ‘என்னைப்பெற்ற தாயாரின்’ கருணாசாகரத்திலோ, பக்தவத்ஸலனின் அன்புப்பிடியிலோ, ஹிருதயாலீஸ்வரரின் மனோபாவ கவர்ச்சியிலோ, மரகதாம்பிகையின் கனிவு பிரவாகத்திலேயோ, ஆன்மீகமா ஆட்சி புரிகிறது? லெளகீகத்திலிருந்து தற்காலிக விடுதலை பெற ஆன்மீகம் உதவலாம்.  தற்காலம் பெரிதும் பேசப்படும் ஆன்மீகம் வேறு. ஞானமார்க்கம் வேறு. நாமோ ஆன்மீகத்தையே லெளகீகத்தின் படி நிலையாக வைத்து குப்பை கொட்டுகிறோம். பக்தி மார்க்கமே உகந்தது. அதற்குதவத்தான் பெருமாளின் வாத்ஸல்யம். தாயாரோ பெற்றெடுத்த அன்னையானாள். அன்றொரு நாள் பிரம்மபுரத்தில் ‘பிள்ளையாருக்கு’ அடிசல் கொடுத்த அம்மை, இங்கே தாயார்.  நீங்கள் கொஞ்சம் தயங்கினால் கூட, உமது மனோபாவத்தைக் கொள்ளை கொள்ள மரகதாம்பிகா சமேத ஹிருதயாலீஸ்வரர் வந்து விடுவார். தெய்வ சன்னிதானம் நம் மனதில் தான். பக்குவம் வந்தால், என் அம்மா சொன்னமாதிரி, அவரே நம்மை தேடி வருவார். பக்தவத்ஸல பெருமாள் கடல்மல்லைத் தலசயனம் சென்று தானே, திருமங்கையாழ்வாரிடம் பாசுரம் பெற்று, மங்களாசாஸனம் செய்து கொண்டார்.  இப்படியாக ஒரு நல்ல நாள் கழிந்தது. நல்லெண்ணம் தொடர்ந்து ஆட்கொண்டவண்ணம் உளது.

    இப்படியாக சம்பாஷணை நடந்து கொண்டபோது, என் மருமான் கேட்டான், ஒரு உதாரணம் சொல்லு என்று. 1964ல் அக்காலத்து ஆடிட்டர் ஜெனெரல் ஏ.கே.ராய் அவர்களுடன் திருமலைக்கு செல்லும் வாய்ப்புக் கிட்டியது. வீ. வீ.ஐ.பி. ஏற்பாடு. தேவஸ்தானத்துத் தலைவர் எங்களை அழைத்துச் சென்றார். அந்த ‘ஜருகண்டி’ சன்னிதானத்தில், கருவறை தலைவாயிலில் இரண்டு மணி நேரம். ஸஹஸ்ரநாம அர்ச்சனை. எங்கள் இருவருக்கும், அவருடைய காரியதரிசி தேசிகனுக்கும் இந்த அரிய வாய்ப்பு. திருமலை வெங்கடேசனின் பக்தியில் மூழ்கிக்கிடந்தோம்.  அங்கு நுழையும் முன், திரு. ராய், ‘ராஜூ! என் கூட வா.’. (ராஜூ வண்டி ஓட்டுனர்.) தெய்வ சன்னிதானத்திலும் லெளகீகம் நடை போடுவது, அவருக்குத் தெரியாத சமாசாரமா? ராஜுவுக்கும் அந்த அரிய வாய்ப்பு. சென்னை வந்த பின் ராஜூ என்னிடம் சொன்னார், ‘நான் இரண்டு தெய்வங்களை தரிசித்தேன்.’

    சித்திரத்துக்கு நன்றி:

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 58

     

    மலர் சபா

     

    புகார்க் காண்டம் – 07. கானல் வரி

     
    திணைநிலை வரி
    புணர்ச்சி நீட, இடந்தலைப்பாட்டில் புணர்தலுறுவான் ஆற்றாமையால் கூறுதல்

     
    (17)

     
    கடலில் புகுந்து உயிர்களைக் கொன்று வாழ்பவர்
    உன் மூத்தோராகிய தமையன்மார்;
    நீயோ கண்வழியே உடலினுள் புகுந்து
    என் உயிரதனைக் கொன்று வாழ்கின்றாயே!
    கச்சையினுள் இருந்தும்
    விம்முகின்ற உன் மார்புகள்
    மிகவும் சுமையானவை;
    அதனால் வருந்தித் தளர்ந்து
    ஒடிந்திடவும் கூடும் நின் இடை;
    உன் இடைதனை நீ இழந்திடாதே.

     
    (18)

     
    வளைந்த கண்கள் கொண்ட வலையால்
    உயிர்களைப் பிடித்துக் கொல்பவன் நின் தந்தை;
    நீயோ உன் நெடுங்கண் வலையால்
    என் உயிர்தனைக் கொல்கிறாயே!
    முத்துவடம் தாங்கிநிற்கும்
    நின் மார்புகளின் சுமையால்
    மழைமேகத்தின் மின்னல் போல்
    அசைந்து தளர்கின்றது நின் இடை;
    அதை நீ இழந்திடாதே!

     
    (19)

     
    ஓடுகின்ற படகினைக் கொண்டு
    கடல்வாழ் உயிர்களைக் கொன்று வாழ்வர்
    நின் தமையன்மார்;
    நீயோ உன் வளைந்த புருவம்கொண்டு
    எனைக் கொன்று நிற்கிறாயே!
    உன் பெருமையையும் நீ அறியாய்;
    உன்னால் பிறர்படும் துன்பத்தையும் நீ அறியாய்;
    உன் மார்புகளின் பாரம் சுமந்து
    தளர்கிறதே நின் இடை;
    அதை நீ இழந்திடாதே!

     

    Share
  • இந்த வார வல்லமையாளர்

    திவாகர்

    கடலைப் பற்றிப் பேசும்போது, கப்பல், வாணிகம் என்பதுதான் மிகுதியாக நினைவுக்கு வந்தாலும் அந்தக் கடலை நம்பி வாழ்பவர்களில் பெரும்பான்மை சமூகம் மீனவர்கள்தான். ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு வரை இந்தியாவின் ஏற்றுமதியில் முன்னணி வரிசையில் மீன் ஏற்றுமதியும் (அல்லது கடல் வாழ் பிராணிகள் என்று கொள்வோமாக) இருந்து வந்தது. இந்த கடல்வாழ் பிராணிகள் ஏற்றுமதியில் மிகுதியாக ஈடுபடுபவர்கள் தமிழர்கள் அதுவும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தோர்தான் அதிகம். ஏற்றுமதிகள் அதிகம் செல்வது ஜப்பான், கொரியா மற்றும் ஐரோப்ப நாடுகள் என்பதினால் குளிர்சாதன வசதிகள் கொண்ட கண்டெய்னர்களில் சென்னை, விசாகப்பட்டினம், தூத்துக்குடி, கொச்சி துறைமுகங்கள் மூலமாக கப்பல்கள் எடுத்துச் செல்கின்றன.

    ஆனால் இந்த கடல்வாழ் பிராணிகளின் ஏற்றுமதியில் ஒரு முக்கியமான விவரத்தை கடல் வாழ் பிராணிகள் பற்றி ஆய்வு செய்து வரும் நண்பர் கலிங்கா பாலு இந்த வாரம் தன் கட்டுரையில் எழுதியுள்ளார். அதாவது   கடலில் மீன் பிடித்து வாழும் மீனவர்கள் தாங்கள் பிடித்து வந்த மீன்களை கேரளாவில் விற்பதைப் பற்றி குறிப்புத் தெரிவித்திருக்கிறார்.  கொச்சியில்தான் இந்திய அரசாங்கம் கடல்வாழ் பிராணிகளின் ஏற்றுமதி உதவி மையத்தை தலைமையகமாக அமைத்திருக்கிறது. ஏறத்தாழ பத்தாயிரம் கோடிக்கு மேல் இந்திய அரசாங்கத்துக்கு இந்த ஏற்றுமதி மூலம் ஆண்டுதோறும் வருமானம் வருகிறது என்ற உபரித் தகவலுடன் பாலு என்ன சொல்லியிருக்கிறார் என்பதையும் படியுங்கள்.

    ”இந்தியாவின் இரண்டாவது நீளமான கடற்கரையை ( 1076 கி.மீ. )கொண்ட தமிழகம் , பாக் வளைகுடாவில் நமக்கு ஏற்படும் சிக்கல்கள் இலங்கையால், ஆறுகளை மணல் எடுத்து குப்பைகள் போட்டு மிகவும் அருமையான் கடலை மாநகரக் கழிவுகள அணு உலை கழிவுகள், தொற்சாலைகள் கழிவுகள் என்று குப்பை தொட்டி போல் வைத்து இருந்தாலும் மற்றும் பல் வேறு சிக்கல்கள் இருந்தாலும் எல்லா வளமும் நிறைந்த தமிழக கடலில் ,கடற்கரையில் வாழும் மீனவர்களின் நிலைமை அவர்கள் கொண்டு வரும் மீன்கள் வெளிநாட்டு ஏற்றுமதிக்காக கேரளா கொண்டு செல்லப்பட்டு 590 கி.மீ. நீளமே கொண்ட கேரளா இன்று இந்தியாவின் மிக முக்கியமான மீன் வளத் துறையாக விளங்குகிறது காரணம் கடற்கரை காயல்கள் ,ஆறுகள் கடலை ஒட்டி உள்ள ஏரிகள் போன்றவற்றிக்கு அவர்கள கொடுக்கும் முன் உரிமையும் தமிழகத்தின் கடற்கரைகளில் வரும் மீன்களை கேரளா மீன் ஏற்றுமதியாளர்கள் வாங்கித் தந்து மதிப்பை கூட்டுவதும் கேரளா மக்களின் வணிக மேலாண்மையைக் காட்டுகிறது
     
    கடலியல் தொன்மை மேலாண்மை தொடர்பாக தேடலில் இருக்கும் எனக்கு நமது கடலில் பிடிக்கும் மீன்களை நாமே வெளிநாட்டிற்கு மதிப்பு கூட்டி விற்க வேண்டும் ,கடல் சூழலியலுக்கு எந்த பாதிப்பும் கொடுக்காமல் அதன் மதிப்பை நம் மாநிலத்திற்கு கொண்டு வந்து நம் மீனவர்களின் வாழ்வியலை உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் பல நாட்களாக உண்டு அதற்காக சில முயற்சிகள் எடுத்து வருகிறேன் கடலியல் உயிரினங்களை உலக வணிகத்திற்காக கொல்லக் கூடாது என்பது என் தனிப்பட்ட கருத்து , அந்த அந்த கடற்கரை மக்களின் உணவுத் தேவைக்காக மீன்கள் கொல்லபட்டால் கடற்கரை வளம் வற்றாது உலகமயமாக்கலின் கொடுமை புவியில் மனிதனுக்கு இருக்கக் கூடிய அத்தனை உரிமைகளைக் கொண்ட மீன்களும் மனிதனின் தேவைக்குத் தந்து உயிர்களை இழக்கின்றது”

    பாலுவின் கருத்துகள் உயர்ந்த கருத்துகள். உலகமயமாக்கலின் கொடுமை எல்லாத் துறைகளிலும் ஊடுருவி நிற்பது அவர் கவலைகளை அதிகமாக்கி இருக்கிறது தெரிகிறது. கடல் சூழ் உலகம் இது. கடலிலிருந்துதான் உலகம் வந்தது. உலகத்தில் உள்ள அனைத்தும் கடலுக்குத்தான் சொந்தம். பஞ்ச பூதங்களும் கடலுக்குத்தான் சொந்தம். அப்படிப்பட்ட கடல் வளங்களைக் காக்க வேண்டாமா என்று கேட்கும் நண்பர் திரு கலிங்கா பாலுவை இந்த வாரத்து வல்லமையாளராக வல்லமைக்குழுவினர் தேர்ந்தெடுக்கின்றனர். பாலுவின் பணிகள் வாழ்க என்று வாழ்த்துகிறேன்.

    கடைசி பாராவில் இடம் பெறுவது லாஸ் ஏஞ்செல்ஸ் ஸ்வாமிநாதன் அவர்களின் மூக்குப் பொடி ஸ்லோகம்தான்.
    ( ”மூக்குப்பொடிக்கும்  ஸ்லோகம் இருக்கு, தெரியுமா?)

    ” பஸ்ம ரூபிணி பரிமள கந்தினி  மனோரஞ்சினி  ஜலதோஷ நாசினி
      நித்ய சுககாரிணி நமஸ்தே நமஸ்தே நாசிகாசூரணி “

    Share
  • வார ராசி பலன்: பிப். (2013) 11 – 17 வரை:

    காயத்ரி பாலசுப்பிரமணியன்

    மேஷம் : வியாபாரிகள் கொடுக்கல், வாங்கல், காசோலை வழங்குதல், ஆகியவற்றில் முறையாக செயல்பட்டு உங்கள் கௌரவம் நிலைக்குமாறு செய்து கொள்ளுங்கள். இந்த வாரம் மாணவர்கள் செய்ய மறந்த வேலைகளுக்காக அபராதம் கட்ட நேரிடலாம். எனவே விழிப்புடன் இருப்பது நல்லது. பெண்கள் அற்ப காரணங்களுக்காக, பிறரிடம் சண்டை, வாக்கு வாதத்தில் இறங்க வேண்டாம். சாமர்த்தியமாக இருந்தால் கலைஞர்கள் வருவதை சிக்கெனப் பிடித்துக் கொண்டு, வரவை அதிகரித்துக் கொள்ளலாம். பணியில் இருக்கும் பெண்கள் தக்க சமயத்தில், உங்களின் சிரமங்களை, எடுத்துச் சொல்லி, தீர்வுகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

    ரிஷபம் : உயர் அதிகாரிகளின் சினத்திற்கு ஆளாகாதவாறு பணிகளை உடனுக்குடன் முடித்து விடுங்கள். வியாபாரிகள் தோள் கொடுத்து பாடுபடும் பணியாளர்களின் தேவைகளை உடனுக்குடன் கவனிப்பது அவசியம். பெண்கள் தினசரி வேலைகளைத் தள்ளிப் போடாமல் செயல்பட்டால், பிள்ளைகளுடன் செலவிட நேரம் ஒதுக்கலாம். பொது வாழ்வில் உள்ளவர்கள் பொது நிகழ்ச்சி மற்றும் விழாக்களில் சர்ச்சைக்குரிய கருத்து பரிமாற்றங்களில் இருந்து ஒதுங்கி இருங்கள். மன நிம்மதி பறி போகாமல் இருக்கும். மாணவர்கள் , பேச்சைக் குறைத்து, தன்னுடைய செயலில் தீவிரம் காட்டி வந்தால், கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

    மிதுனம் : மாணவர்கள் கவனம் மற்றும் கருத்துச் சிதறலின்றி பணிகளை மேற்கொள்ளுங்கள். அதிக மதிப்பெண்களை பெற்று மகிழலாம். இந்த வாரம் கலைஞர்கள் அநாவசிய செலவுகளுக்காக கடன்படும் நிலை வராதவாறு, விழிப்புடனிருப்பது அவசியம். பெண்கள் விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கை கைக்கொண்டால், விரும்பிய வாழ்க்கை உங்கள் வசமாகும். தங்கள் திறமை மேல் நம்பிக்கை வைத்து செயலாற்றும், சுயதொழில் புரிபவர்களுக்கு புதிய வாய்ப்பும், புகழும் தேடி வரும். உங்கள் தொழிலுக்கு முன்னுரிமை தந்தாலும், குடும்பத்தை கவனிப்பதில் குறை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். குடும்ப வாழ்க்கை அமைதியாகத் திகழும்.

    கடகம் : பெண்கள் உங்களால் நிறைவேற்றக்கூடிய காரியங்களுக்கு மட்டும் வாக்குறுதி கொடுப்பது நல்லது. கைவினை கலைஞர்கள் சிரமங்களுக்கு நடுவே தங்கள் நற்பெயரைக் காப்பாற்றிக் கொள்வார்கள். பொது வாழ்வில் உள்ளவர்கள் சில எதிர்ப்புகளையும், எதிரிகளையும் சமாளிக்க பக்குவமாக நடந்து கொள்ளுதல் அவசியம். மாணவர்கள், நல்ல இதயங்களை புண்படுத்தாமல் இதமாக நடப்பது நன்மையைத் தரும். இந்த வாரம் வியாபாரிகள் கணக்கு வழக்குகளை அலசிப் பார்த்து நிறை குறைகளை உணர்ந்து செயலாற்றினால், அதிக லாபம் பெறலாம். கலைஞர்கள் பத்திரங்களில் பேரில் கடன் வாங்குவதை தள்ளிப் போடுவது நல்லது.

    சிம்மம் : வியாபாரத்தில் கடுமையான போட்டி இருந்தாலும், புத்திசாலித்தனமாக செயல்படும் வியாபாரிகளுக்கு வெற்றி உறுதி. வயதானவர்கள் உடல்நலக்குறைவிற்கு, சொந்த வைத்தியம் மேற்கொள்ளாமல், தகுந்த மருத்துவ சிகிச்சை எடுத்தல்,நல்லது. மாணவர்கள் அதிக நேரம் கண் விழித்து பணிகளை முடிக்க வேண்டியிருக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் விளைவுகளை யோசித்தபின் கடினமான செயலில் இறங்குவது அவசியம். பெண்கள் சுய பச்சாதாபத்திற்கு இடமளிக்காதீர்கள். உங்கள் திறமைகள் உங்களை வழி நடத்தும்.பணியில் இருப்பவர்கள் குறுக்கு வழிகளைக் கையாளாமலிருந்தால், உங்கள் கௌரவம் பாதிப்படையாமல் இருக்கும்.

    கன்னி : பணியிடத்தில், கருத்து வேறுபாடும், தேவையற்ற மோதல்களும் தோன்றும் வாய்ப்பிருப்பதால், இயன்றவரை அமைதியாய் இருந்தால், அல்லல்கள் அருகே வராது. பெண்கள் வேலையாட்களை நம்பாமல், அத்தியாவசியமான வேலைகளை நீங்களே செய்து விடுவது நல்லது. வியாபாரிகள் முதலீடுகளில் அகலக் கால் வைப்பதைத் தவிர்த்து விடுவதோடு புதிய பணியாளர்களை அமர்த்துவதில் விழிப்புடன் இருப்பது அவசியம். மாணவர்கள் ஆசிரியர்களின் வழிகாட்டுதல் படி நடந்தால், யாவும் சிறப்பாக நடக்கும். இந்த வாரம் கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களை பெறவும், அதனைத் தக்கவைத்துக் கொள்ளவும், தீவிரமாக உழைப்பார்கள்.

    துலாம் : கூட்டுத் தொழிலில் உள்ளவர்கள் பங்குதாரர்கள் தரும் நல்ல ஆலோசனைகளை ஏற்றுக் கொண்டால், நஷ்டங்களைக் குறைத்துக் கொள்ளலாம். சுயதொழில் புரிபவர்கள் புதிய முயற்சிகளில் தைரியத்தோடு துணிந்து நின்றால், பாதி வெற்றி கிடைத்துவிடும். மீதி வெற்றியை உங்கள் உழைப்பு நல்கும். கலைஞர்களுக்கு செலவுகள் சிலசமயம் கை மீறி செல்லும் வாய்ப்பிருப்பதால், எதிலும் கவனமாக இருப்பது அவசியம். இந்த வாரம் பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு, உதவி செய்தவர்களே சில சமயம் உபத்திரவங்களைத் தருவார்கள். மாணவர்கள் ரசாயனம் தொடர்பான செய்முறைகளில், எச்சரிக்கையாய் இருந்தால், சிறு காயங்களைத் தவிர்க்க முடியும்.

    விருச்சிகம் : தலைசுற்றல், மயக்கம் ஆகியவை வாராதவாறு முதியவர்கள் உணவில் கட் டுப் படாய் இருப்பது நல்லது. உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்லதை சிலர் தடுக்க முயல்வார்கள். எனவே மாணவர்கள் கண்ணும் கருத்துமாக செயல்பட வேண்டும். வியாபாரிகள் பணம் சம்பந்தமான விஷயங்களை உங்களின் நேரடிப் பார்வையில் வைத்துக் கொள்ளுங்கள்.பல தொல்லைகளைக் கட்டுக்குள் வைக்கலாம். இந்த வாரம் நண்பர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நம்பிக்கையின் அடிப்படையில் தான் நல்ல உறவு மலரும் என்பதைப் புரிந்து கொள்ளும் பெண்கள் ஈடுபடும் காரியங்களுக்கு உறவுகளும் துணையாய் நிற்கும்.

    தனுசு : பெண்கள் செலவுக் கடிவாளத்தை சற்று இறுக்கினால், பணமுடை ஏற்படாது. வியாபாரிகள் சரக்கு போக்குவரத்தில் உள்ள ஓட்டைகளை அடைத்தால், வீண் விரையத்தைத் தவிர்க்கலாம். புதிய இடங்களில் மாணவர்கள் காட்டும் சொல்சிக்கனம் பிரச்சனைகளை பெரிதாகாமல் தடுக்கும்.சுயதொழில் புரிபவர்கள் சுணக்கமின்றி, தீவிர முயற்சி செய்தால், நல்ல முன்னேற்றம் காணலாம். கலைஞர்கள் எல்லாம் தெரியும் என்கிற மனப்பான்மை உங்களின் முன்னேற்றத்திற்குத் தடையாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த வாரம் பணியில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் கூடுவதால் மன அழுத்தமும் சற்றே அதிகமாகும்.

    மகரம் : கலைஞர்கள் ஒப்பனைப் பொருட்களின் மூலம் ஒவ்வாமை ஏற்படாதவாறு, தரமான பொருட்களை பயன்படுத்துதல் நல்லது. பெண்கள் அக்கம்பக்கத்தாருக்கு ஆலோசனை வழங்குமுன், ஒரு முறைக்கு இரு முறை யோசிப்பது அவசியம். ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளாவர்கள் முறையான சிகிச்சையோடு எளிய பயிற்சிகளையும் சேர்த்துக் கொள்வதன் மூலம் நல்ல ஆரோக்கியம் பெறலாம். மாணவர்கள் நண்பர்களிடம் குதர்க்கமான பேச்சைத் தவிர்த்தால், மனக் கசப்பும், நட்பில் விரிசலும் ஏற்படாது.மனக் குழப்பம் உங்களின் திறமையை பாதிக்காதவாறு திடமாகச் செயல்படுங்கள். பல வெற்றிகளைப் பெறலாம்.

    கும்பம் : இந்த வாரம் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு நல்ல பலனிருக்கும். பெற்றோர்கள் குழந்தைகளை கவனமுடன் பார்த்துக் கொண்டால், அவர்களின் ஆரோக்கியம் பற்றிய கவலைப்பட வேண்டாம். புத்தி வேண்டாத விஷயங்களில் ஈடு படுவதைத் தடுக்க, மாணவர்கள் தியானம் மூச்சுப் பயிற்சி ஆகிவற்றில் ஈடுபாடு காட்டுவது அவசியம். கலைஞர்கள் போட்டிகளில் ஜெயிக்கும் வாய்ப்பு பல கிட்டும். பெண்கள் உறவினரிடம் சண்டை சச்சரவின்றி பழகி வந்தால், இல்லத்தில் அமைதி நிலவும். வேலை செய்யும் இடங்களில் எரிச்சலூட்டும் சம்பவங்கள் நடக்கலாம். எனவே வேலையில் மட்டும் உங்கள் கவனத்தை செலுத்தி வாருங்கள்.

    மீனம் : சரளமான பணவரவு பெண்கள் மனத்தில் மகிழ்ச்சியையும், உதட்டில் புன்னகையையும் பூக்கச் செய்யும். பிறர் உங்களை தூண்டிவிட்டாலும், நேர்மையான வழியிலேயே செல்லும் வியாபாரிகளுக்கு நற்பெயர் என்றும் நிலைத்திருக்கும். முதியவர்கள் ஆரோக்கிய நலிவுக்குரிய மருந்துகளை முறையாக உட்கொண்டால், மருத்துவச் செலவுகளை கட்டுக்குள் வைத்து விடலாம். மாணவர்கள் வாகனம் ஓட்டுகையில், உரிய விதிகளை கடைப்பிடிப்பது அவசியம். இந்த வாரம் கலைஞர்களுக்கு வாகனங்கள் திடீர் செலவு வைக்கும். மனை வாங்குகையில் நம்பிக்கையான நபர்களை அணுகுங்கள். நல்ல தேர்வாக அமையும்.

    Share
  • மின்தடை

    சு. கோதண்டராமன்
    இரவு மணி எட்டு

    விசிறிகள் சுழல, விளக்குகள் ஒளிர,

    வீடு தோறும் தொக்கா முழக்கம்.

    போட்டிப் பெருங்குரல் மாணவர் படிப்பு.

    உலகமே சுறுசுறு, ஓய்விலா இயக்கம்.

     

    திடீரென மின்சாரம் நின்றது.

     

    விளக்குகள் அணைந்தன,

    தொக்கா ப்ரிட்ஜுடன் க்ரைண்டரும் வாய் மூட,

    வீட்டுக்குள் கொசுக்கடி, வெளியே வந்தோம்.

    வானம் மட்டும் பளிச்செனத் தெரிந்தது.

    இத்தனை விண்மீனா! ஈதென்ன விந்தை!

    முத்துகள் வயிரங்கள் பதித்த பட்டுடையோ!

    வெள்ளி முலாம் பெற்ற தென்னையோ பேரழகு!

    கண்களைக் கூசாத கவினுறு நிலவொளி!

    இயற்கைத் தென்றலின் இதமான தழுவல்!

     

    ஐந்து நிமிடம் கழித்து-

     

    மின்சாரம் வந்தது.

    உறைந்த உலகு உயிர்பெற்று எழுந்தது.

    விட்ட சீரியல் தொடர வேண்டும்,

    விடிந்தால் தேர்வு படிக்க வேண்டும்,

    எல்லோரும் பறவை போல் தத்தம் கூட்டில்.

    மீண்டும் இயந்திரமாயினர் மக்கள்.

    படத்துக்கு நன்றி

    http://kashmirobserver.net/news/power-cut-dismays-consumers

    Share