Blog

  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(114)

    –சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்களுடன் அடுத்த மடலில் உங்களைச் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்…

    ஊரெல்லாம் திருவிழா, காரெல்லாம் இங்கிலாந்துக் கொடி, பேச்செல்லாம் இங்கிலாந்து உதை பந்தாட்ட அணியைப் பற்றி, என்ன எதைபற்றிய அலசல் எனும் கேள்வி எழுகிறதா ?

    உலகக் கால்பந்தாட்டப் போட்டி பிரேஸில் நாட்டில் கோலாகலமாக ஆரம்பித்தது. மிகவும் எதிர்பார்ப்புகளுடன் இங்கிலாந்து அணி பிரேஸில் நாட்டிற்கு விஜயத்தை மேற்கொண்டது.

    நான் இங்கிலாந்து நாட்டிற்குள் காலடி வைத்தது முதல் எப்போதும் நான்கு வருடத்திற்கொருமுறை நடைபெறும் இவ்வுதைப் பந்தாட்டப் போட்டியை மிகவும் ஆர்வத்துடன் இரசிப்பதுண்டு.

    என்ன அதிலே விஷேசம் என்கிறீர்களா ?

    அடிப்படை வசதியற்ற ஏழ்மை சூழ்ந்த நாடுகள் செல்வச் செழிப்பு மிக்க நாடுகளுடன் சமதளத்தில் போட்டியிடும் ஒரே நிகழ்வு எனும் காரணமே !

    இதிலே போட்டியிடும் பல நாடுகள் பொருளாதர நிலையிலே பங்கு பெறும் பல நாடுகளை அண்மிக்கக் கூட முடியாது. இருப்பினும் இப்போட்டிக்குத் தமது அணிகளைத் தயார் செய்து மிகுந்த செலவுகளுடன் கூடிய பயிற்சிகளை அளித்து வெளிநாடுகளுக்கு அனுப்பி இப்போட்டிகளில் பங்கு கொள்ள வைக்கிறார்கள்.

    ஆனால் இப்போட்டிகளில் பங்கு பெற்றும் தமது நாடுகளை தெருவோரம் நின்று தொலைக்காட்சி விற்பனை நிலையங்களின் காட்சிக் கண்ணாடிகளின் முன் நின்று பார்த்துக் கைதட்டி ரசிக்கும் அவ்வேழை மக்கள் அதே உணவுக்குக் கூட வழியில்லா நிலையில் தான்.

    என்ன உலகமடா இது என்று நினைக்கத் தோன்றுகிறது அல்லவா ?

    சரி இனி எமது நாடான இங்கிலாந்து நாட்டின் நிலைமைக்கு வருவோம். 1966ம் ஆண்டு உலக உதைபந்தாட்டப் போட்டியில் வெற்றி பெற்று உலகச் சாம்பியன்களாக வலம் வந்த பின்பு இன்றுவரை உதைபந்தாட்டப் போட்டியை நாம் தான் கண்டுபிடித்தோம் ( அதுவேறு சர்ச்சை) என்று மார்தட்டிக் கொள்ளும் இங்கிலாந்து நாட்டிற்கு மீண்டும் அந்தச் சந்தர்ப்பம் இன்றுவரை எட்டாமலே போகிறது.

    இது ஒருவகை சாபமோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது .

    உலக அளவிலேயே உதைபந்தாட்டம் முக்கியமான விளையாட்டாக எடுத்துக் கொள்ளும் நாடுகளில் நடக்கும் உள்நாட்டு கிண்ணப் போட்டிகளில் இங்கிலாந்தில் நடப்பதே மிகவும் பிரசித்து பெற்றது.

    ஏனைய உதைபந்தாட்ட நாடுகளில் உள்ள திறமையான உதைபந்தாட்ட வீரர்கள் பலர் இங்கிலாந்தின் உள்நாட்டு உதைபந்தாட்ட அணிகளில் தம்மை இணைத்துக் கொள்வதையே விரும்புகிறார்கள்.

    இதற்கு முக்கிய காரணமாக இங்கிலாந்து நாட்டின் உதைபந்தாட்டத்தின் தரத்தின் உயர்வைக் குறிப்பிடுகிறார்கள்.

    இத்தகைய உயர் அபிப்பிராயத்தினைக் கொண்ட உதைபந்தாட்டப்போட்டி நடைபெறும் நாடானது 1966ம் ஆண்டிற்குப் பின்னால் ஒரு தடவையாவது உலக உதைபந்தாட்ட வெற்றிக் கிண்ணத்தைத் தட்டிச் செல்லவில்லை என்பது ஆச்சரியத்துக்குரிய விடயமே !

    இங்கிலாந்து உதைபந்தாட்ட நிர்வாகக் குழுவினரும் இதுவரை எத்தனையோ திறமையான வெளிநாட்டு பயிற்சியாளர்களைத் தமது அணிக்கு முதன்மைப் பயிற்சியாளர்களாக நியமித்தும் அவர்களது இலக்கை இதுவரை அவர்களால் அடைய முடியவில்லை.

    FIFA 2014 England2FIFA 2014 England

    இங்கிலாந்து நாட்டின் உதைபந்தாட்ட உலகக் கோப்பை எதிர்பார்ப்புகளில் ஏமாற்றமடைந்தவர்களில் நானும் ஒருவன் .

    என்ன செய்வது இனி 2018ம் ஆண்டை நோக்கி எமது ஆவலைத் திருப்ப வேண்டியதுதான்.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

     

     

    படம் உதவி: Getty Images, www.gettyimages.com

    Share
  • கிராண்ட் கேனியன் பயணக் கட்டுரை

    செம்பூர் நீலு

    நான் என்னுடைய மனைவியுடன் 2014 மே மாதம் சான்ஃப்ரான்சிஸ்கோவிற்கு வந்து சேர்ந்தேன். இது என்னுடைய மூன்றாவது அமெரிக்க விஜயம். வழக்கம் போல் என்னுடைய மகன் நான் வந்து இறங்கிய உடன் எனக்கு அளித்த முதல் புத்திமதி “டாலரை இந்திய ரூபாய் கணக்கில் மாற்றி எண்ணக்கூடாது.” ஜெட் லாக் முடிந்த ஒரு வரத்திற்குப் பிறகு ஒரு மூன்று நாள் விடுமுறையில் அமெரிக்காவின் சூதாட்ட நகரமான லாஸ் விகாஸிற்கு விமான பயணம். விமான நிலையத்திலே சூதாட்ட கம்ப்யூட்டர்கள். அடுத்த நாள் காலையில் அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்திலிருக்கும் கொலராடோ மலை பகுதிக்கு ஒரு சிறிய (20 பயணிகள் அமரக்கூடிய) விமான பயணம். ஜன்னலருகில் இடம் பிடித்தேன் – புகைப்படம் எடுக்க வசதியாக இருக்கும் என்ற காரணத்திற்காக. அமெரிக்க பாணீ ஆங்கிலத்தில் கைடு பெண்ணரசியின் நேர்முக வர்ணனை.

    grand canyon1

    லாஸ் விகாஸிலிருந்து தென் கிழக்கில் 30 மைல் தூரத்தில் ஓடும் கொலராடோ நதியின் மேல் கட்டப்பட்டிருக்கும் அணை. 1930 ஆண்டில் கட்டப்பட்டது. 1250 அடி நீளமும் 730 அடி உயரமும் உள்ள இந்த அணை கொலராடோ நதியின் வெள்ளப் பெருக்கை கட்டுபடுத்துவதற்கும் மின்சார உற்பத்திக்கும் வேண்டி கட்டப்பட்டது.

    முதலில் இந்த அணை “பௌல்டர் அணை” என்று அழைக்கப்பட்டது. பின்னர் 1947ம் ஆண்டு, 31 வது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த “ஹெர்பர்ட் ஹூவர்” என்பவரின் ஞாபகார்த்தமாக “ஹுவர் டாம்” என்று பெயர் சூட்டப்பட்டது

    மேலிருந்தவறே கொலராடொ நதியில் கட்டப்பட்டிருக்கும் “ஹூவர் அணை” யின் தரிசனம்.

                                                                                                                        ஹூவர் அணை
    grand canyon2

    அடுத்த இருபது நிமிடங்களில் விமானம் தறையிறங்கியது. வரிசையாக எல்லோரையும் அழைத்துக்கொண்டு அருகிலிருந்த ஷாப்பிங் செண்டர் கம் ரெஸ்டாரெண்டிற்கு அழைத்து சென்றார்.

    grand canyon3

    அடுத்த 15 நிமிடஙளில் ஹெலிகாப்டர் மூலமாக 3500 அடி கீழே ஒடிக் கொண்டிருக்கும் கொலராடொ நதிக்கரைக்கு பயணம். ஐவர்  அமரக்கூடிய ஹெலிகாப்டர். ஐந்து  நிமிடங்களில் நதிக்கரையில் ஹெலிகாப்டர் தறை இறங்கியது.

    எங்களுடன் வந்த மற்ற சுற்றுலா நண்பர்களும் 3 ஹெலிகாப்டர்களில் வந்து சேர்ந்ந்தனர். அடுத்தது கொலராடொ நதியில் படகுப்பயணம். இரண்டு விசைப்படகுகளில். கரை புரண்டு வேகத்துடன் ஒடும் நதி. அதை எதிர்த்து விசைப்படகு அமைதியாக சென்றது. இரு மருங்கிலும் உயரமான மலைப்பகுதி.

    grand canyon4

    30 நிமிடங்களில் பயணம் முடிந்தது. படகோட்டி ஸ்பானிஷ் மொழியில் மகிழ்ச்சியுடன் பாடிக்கொண்டிருந்தார். அவரே புகைப்படம் எடுப்பதற்கும் உதவியாக இருந்தார். மறுபடியும் ஹெலிகாப்டரில் பயணித்து புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்ந்தோம். விமான பயணத்திற்கு முன்னால் எல்லொருக்கும் ஒரு டிஃபன் பொட்டலம் கொடுத்தார்கள் அதில் காய்கறிகளுடன் கூடிய இரு பன் ரொட்டி, இரண்டு தடிமனான பிஸ்கட், ஒரு கொககோலா கேன். அதை ஒரு பிடிபிடித்துவிட்டு எல்லொரும் ஒரு வால்வோ பஸ்ஸில் 15 மைல் தொலைவிலுள்ள “கிராண்ட் கேனியன் ஸ்கைவாக்கிற்கு” 20 நிமிட பயணம்.

    40 மில்லிய்ன டாலர் செலவில் இரும்பினாலும் கண்ணாடியாலும் உருவாக்கப்பட்ட இந்த ஸ்கை வாக்  (சுற்று சூழல் பாழாகிவிடும் என்ற பலமான எதிர்ப்புடன்) ஒரு எஞ்ஜினியரிங் அற்புதம். 2007ஆம் ஆண்டு பொதுமக்கள் பார்வைக்காகத் திறக்கப்பட்டது. பிரபல அப்போலொ விண்வெளி ராக்கெட்டில் பயணித்து சந்திர மண்டலத்தை ஆராயிச்சி செய்த விஞ்ஞானி “பஸ் ஆல்டெரின்” 2007 மார்ச் மாதம் 20 ஆம் தேதி சுற்றுலா பயணிகளுடன் இதில் நடந்து துவக்கிவைத்தார். இதன் முக்கியமான சிறப்பு அம்சங்கள்

    grand canyon5grand canyon6

    “ U ” வடிவமுள்ள கண்ணாடியாலும் இரும்பினாலும் செய்யப்பட்ட அமைப்பு மலை விளிம்பிலிருந்து 70 அடி முன்னாலும் மலை அடிவாரத்திலிருந்து 4000 அடி உயரத்தில் நிற்கிறது. அதன் எதிர்ப்பகுதி மலை மூன்று மைல் தொலைவிலிருக்கிறது.

    4 இன்ச் கடினமான கண்ணாடி படிமங்களை இதில் உபயோகபடுத்தியிருக்கிறார்கள், 70 டன் எடையை தாங்கும் சக்திகொண்ட்து. அதாவது சராசரி 175 பவுண்ட் எடையுள்ள 800 மனிதர்கள் ஒரே சமயத்தல் இதில் நடக்கலாம். இந்த அமைப்பு 8 மாக்னிட்யூட் பூகம்பத்தை தாங்கவும் 8 திசையிலிருந்து 80 முதல் 100 மைல் வேகத்தில் அடிக்கும் புயலை தாங்கும் சக்தியும் கொண்ட்து. ஆனாலும் ஸேஃப்டியை கணக்கில்கொண்டு ஒரு சமயத்தில் 120 மனிதர்களை மட்டும் இதில் நடக்க அனுமதிக்கின்றனர்..

    grand canyon0

    கண்ணாடி படிவங்களில் கீறல் மற்றும் சிராய்ப்பு வரமாலிருப்பதற்காக சுற்றுலா பயணிகள் செருப்பு / ஷூ அணிந்த கால்களில் ஸ்பெஷல் காலுறைகள் அணிந்து செல்லவேண்டும். காமிராக்கள் / மொபைல் போன்கள் அனுமதியில்லை.

    கிராண்ட் கேனியன் இலாக்காவை சேர்ந்த பழங்குடி மக்களான “ஹுஅலாபைஸ்” செவ்விந்தியர் இனத்தவரின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றுவதற்காக வேண்டி லாஸ் விகாஸை சேர்ந்த தொழிலதிபர் டேவிட் ஜின் என்பவர் லோக்ஸா எஞ்ஜினீரிங் கம்பெனியின் துணையுடன் இந்த “கிராண்ட் கேனியன் ஸ்கைவாக்கை” உருவாக்கினார்

    சுற்றுலா குழுவினருடன் செக்யூரிட்டி சோதனக்கு ப்பிறகு ஸ்கை வாக்கின் உள்ளே சென்றேன். ஆஹா!!!  என்ன ஒரு காட்சி. கண்ணாடி படிவங்கள் வழியாக 4000 அடி கீழேயுள்ள மலை பள்ளத்தாக்கை பார்கும்போது உடல் புல்லரிக்கிறது.  சுற்றி வந்து மூன்று பக்கஙளில் உள்ள மலை பள்ளத்தாக்கை காண கண் கோடி வேண்டும். என்ன ஒரு அருமையான காட்சி. மனத்தில் ஒரு பயம் தோன்றுகிற பயங்கரமான மலை பள்ளத்தாக்கு. ஒரு மணி நேரம் இருந்துவிட்டு அருகில் இருக்கும் செவ்விந்தியர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை அற்புதமாக சித்தரிக்கும் ஒரு கண்காட்சியும் பார்த்தோம். .

                                                                                           செவ்விந்தியர்கள் வாழ்ந்த குடிசைகள்
    grand canyon7
    இரண்டு மணி நேரம் எப்படி போனது என்று தெரியவில்லை. இதற்கிடையில் அமெரிக்க கைட் பெண் அவசரபடுத்தினாள். எல்லோரும் பஸ்ஸில் அமர்ந்து   ஷாப்பிங் செண்டர் கம் ரெஸ்டாரெண்டிற்கு வந்தோம். அடுத்த 15 நிமிடஙளில் காலையில் வந்த சிறிய விமானத்தில் பயணித்து லாஸ் விகாஸ் வந்து சேர்ந்தோம். இந்த கிராண்ட் கேனியன் சுற்றுலா பயணம் மறக்க முடியாத ஒன்று.

    செம்புர் நீலு ( நீலகண்டன்)
    ஃப்ரீமாண்ட் காலிஃபோர்னியா

    Share
  • திருமால் திருப்புகழ் (131)

    கிரேசி மோகன்

    Tulasi priyam - #Krishnafortoday - Keshav
    Tulasi priyam – #Krishnafortoday – Keshav

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ———————————————————-
    ’’கண்ணன் வெண்பாக்கள்’’
    ————————————————-

    Experiments with Krishna series. #Krishnafortoday
    Experiments with Krishna series. #Krishnafortoday

    ரங்கா, அலர்மேல்வாழ் மங்கா, அரவணைக்கும்,
    அங்கா, அசுரர்க்(கு) அரியுருவில், -சிங்கா,
    பிரித்தாலும் மங்கா, பரிபூர்ண பங்கா,
    உரித்தாவாய் என்னை உவந்து….(302)

    சகஸ்ரமவன் நாமம், சகலமவன் ரூபம்,
    ரகஸ்யமவன் மாயை, ரசிப்போர், -அகஸ்மாத்தாய்,
    வானம் வசப்பட, நானவன் தானென்ற,
    ஞானத்தில் நிற்பார் நிலைத்து….(303)

    தீனர்க்(கு) அருளூற்றாய், ஈனர்க்(கு) இருள்கூற்றாய்,
    மீனமாய் ஏனசிம்ம வாமன, -மூணான,
    ராம, கிருஷ்ண, கலிபுருஷ னாய்வந்த,
    நாம சகஸ்ரனை நாடு….(304)

    எங்குநாம் சென்றாலும், அங்கவன் முன்னம்போய்,
    தங்கு தடைகள் தவிர்த்திடுவான், -செங்கண்மால்,
    தாளிரெண்டைப் பற்றித், துதிப்போர்தம் தீவினை,
    தாளிரெண் டாகும் தெறித்து….(305)

    இங்கிருப்ப தெல்லாம், இறப்பும் பிறப்புமாம்,
    எங்கெங்கும் என்றும் எதிலுமுள்ள, -செங்கண்மால்,
    இல்லா இடத்திலும், இல்லா(து) இருந்திடுவான்,
    பொல்லாப் பயலவனைப் பேணு….(306)

    உண்டா கடவுளென்றால், உண்டவன் கண்ணனென்பேன்,
    கண்டதுண்டா என்றால், கருத்தவனை, -விண்டுரைத்த,
    ஆழ்வார்கள் பாட்டில், அதிலொன்றுக்(கு) ஈடாக,
    பாழ்வாய் புகல்கையில் பார்….(307)

    —————————————————————————————————————-

    படங்களுக்கு நன்றி :

    http://kamadenu.blogspot.in/2013_12_01_archive.html

     

    Share
  • திருமால் திருப்புகழ் (130)

    கிரேசி மோகன்

    Vaatsalyam series. #krishnafortoday - Keshav
    Vaatsalyam series. #krishnafortoday – Keshav

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ———————————————————-
    ”கண்ணன் வெண்பாக்கள்’’
    ————————————————–

    Krithi drawings - Shambo, Shambo, Shivashambo Swayambo... Keshav
    Krithi drawings – Shambo, Shambo, Shivashambo Swayambo… Keshav

    பூவிருக்கும் உந்தியா, காவிருக்கும் வேங்கட,
    கோவிலுக்குள் வாழ்கின்ற கோவிந்தா, -பாவிருக்கும்,
    ஆழ்வார்கள் நாவிருக்கும், ஆண்டவா வாயிருக்க,
    தாழ்வான போதுமென்னுள் தாவு….(296)

    என்னத்தைக் கண்டேன்நான், உன்பித்தம் கொண்டதால்,
    கண்ணைத் திறந்துகேள் கார்முகிலே, -உன்னொத்த,
    தெய்வமிங்(கு) இல்லையென்ற, தற்பெருமை தேவையா,
    தொய்வுறுமுன் தற்பரமே தோன்று….(297)

    குன்றெடுத்த கோவிந்தன், கன்றணைக்கும் கோபாலன்,
    என்றுனக்கு கோலங்கள் ஏராளம், -இன்றெனக்கு,
    காட்சி அளித்திடுவாய், மோட்ச அரசாங்கம்,
    ஆட்சிசெய் சாட்சிபூதம் ஆய்….(298)

    வண்டரி யென்றரி, யாமலே வந்திரு,
    புண்டரி காட்ஷத்தைப் பார்க்கின்ற, -பண்டரி,
    விட்டலா செங்கலை, விட்டுவா வெவ்வினை
    கொட்டுதே தேளாய்க் கடுத்து….(299)

    நித்திய சூரியாய், நூற்றியெட்டாம் தேசத்து,
    முத்தியை வேண்டேன் முளைக்கதிரே, -சத்தியம்,
    நன்குணர்ந்து பேத, நிலைகடந்து பூமியில்,
    நின்குணமாய் நிற்கவேண்டும் நான்….(300)

    வீசும் புயலில், விளையாடும் தென்றலில்,
    நாசிக்குள் சென்றுவரும் நம்மூச்சில், -ஓசை,
    இலாத பொழுதிலும் ஓமென்(று) ஒலிக்கும்
    கலாபக் கடவுளைக் காண்….(301)

    —————————————————————————————————————

    படத்திற்கு நன்றி:

    http://kamadenu.blogspot.in/2013_12_01_archive.html

     

     

    Share
  • கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது ? – கவிதை

    –தேமொழி.

    கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது ?

    Maya Angelou

    கவிதை  மூலம் – மாயா ஆஞ்சலூ
    மொழிபெயர்ப்பு – தேமொழி

     

     

    சுதந்திர பறவை வேகமெடுத்து
    காற்றில் பாய்ந்தது,
    காற்றோட்டத்தின் எல்லை வரை
    காற்றில் மிதந்தது,
    செங்கதிரின் வண்ணத்தில் தன்
    சிறகைத் தோய்த்து
    வானம் எனக்கே  சொந்தம்
    என எண்ணத் துணிந்தது

    கூண்டுப் பறவையோ குறுகிய
    கூண்டில் கொதிப்புடன் உலவியது,
    பொங்கி வரும் ஆத்திரம்
    அதன் கண்ணை மறைத்தது,
    சிறகொடிந்து கால்கள் கட்டுண்டதால்
    குரலெடுத்துப்  பாட முனைந்தது

    கூண்டுப்பறவை பாடுகிறது
    அச்சத்துடன் நடுங்கும் குரலில்
    அனுபவிக்காதவற்றை  எண்ணி
    மனம் விரும்பும்  ஏக்கத்தில்.
    அந்தப் பாடல் எதிரொலித்தது
    தொலை தூரத்து  மலையில்
    கூண்டுப்பறவையின்  வேட்கை
    தொனிக்கும் விடுதலைப் பாடல்

    சுதந்திர பறவை மற்றொரு
    இளந் தென்றலை நினைந்தது
    அசையும் மரங்களின் பெருமூச்சாய்
    மெல்லத் தவழ்ந்து   செல்லும்
    பருவக் காற்றை நினைந்தது
    காலைக்கதிரொளியில்
    ஒளிர்ந்திடும் புல்வெளியில்
    ஊர்ந்திடும் கொழுத்தபுழு
    உணவை மனதினில்  நினைந்தது
    இந்த வானமே எனதென மகிழ்ந்தது

    கூண்டுப்பறவையோ கனவுகளின்
    கல்லறை மேடையில் நின்றது
    பயங்கரக் கனவின் அலறலாக
    அதன் நிழல்  ஓலமிட்டது
    சிறகொடிந்து கால்கள் கட்டுண்டதால்
    குரலெடுத்துப்  பாட முனைந்தது

    கூண்டுப்பறவை பாடுகிறது
    அச்சத்துடன் நடுங்கும் குரலில்
    அனுபவிக்காதவற்றை  எண்ணி
    மனம் விரும்பும்  ஏக்கத்தில்.
    அந்தப் பாடல் எதிரொலித்தது
    தொலை தூரத்து  மலையில்
    கூண்டுப்பறவையின்  வேட்கை
    தொனிக்கும் விடுதலைப் பாடல்

     

    மாயா ஆஞ்சலூ கவிதைகளின் மொழி பெயர்ப்பு:
    நான் எழுவேன் !!! (Still I Rise – Poem by Maya Angelou)
    கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது ? (Caged Bird – Poem by Maya Angelou)
    தனிமையிலே … (Alone – Poem by Maya Angelo)

    Share
  • காற்று வாங்கப் போனேன் – பகுதி 15

    கே.ரவி

    என் வளர்ப்புத் தந்தை கவிராஜ காளமேகம் படம் தயாரிக்கத் தொடங்கிய போது எங்கள் இல்லம் மயிலை, பலாத்தோப்பில் இருந்தது. அங்கேதான் அவரை நான் முதன்முதலாகப் பார்த்தேன். கையை மடித்து விட்டிருந்த வெள்ளை ஜிப்பா, வெள்ளை வேட்டி, நெற்றியிலே குங்குமப் பொட்டு, மீசை. இந்தத் தோற்றத்துடன் அங்கே வந்தவர் கவிஞர் வாலி.

    images (1)

    மாமா படத்துக்குப் பாட்டெழுத ஏ.எல்.நாராயணன் அழைத்ததும் ‘ஹோட்டல் எல்லாம் வேண்டாம் நான் அவர் வீட்டுக்கே வந்து விடுகிறேன், அவா நம்ம ஊர்க்காரா’ என்று சொல்லி வந்து விட்டராம்.

    ஏற்கனவே இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவும், ஏ.எல்.நாராயணனும் வந்து காத்திருந்தனர். எங்கள் வீட்டுக் கூடத்தில் ஒரே வெற்றிலை மணம், ஆர்மோனியச் சத்தம்.

    ஶ்ரீரங்கம் கோவில் மடப் பள்ளியில் சமையல் செய்து கொண்டே பின்னாளில் காளமேகமாக மாற இருக்கும் கதாநாயகன் நையாண்டியாகப் பாடவேண்டிய பாடல் என்று நாராயணன் விளக்க, உடனே வாலி, நானும் அதே ஊர், ஶ்ரீரங்கம்தான் என்று சொல்லி விட்டு, 5 நிமிடங்களுக்குள் பாடலை அமர்க்களமாக எழுதிக் கொடுத்த காட்சியைக் கண்குளிரக் கண்டும், செவிகுளிரக் கேட்டும் ரசித்தேன்.

    ரெண்டு பக்கம் காவேரி எங்க ஊரு நடுவிலே
    ரெங்க நாத சாமியோ ஆதி சேஷன் மடியிலே

    சித்திரையில் தேரோட்டம் மாசியிலே படகோட்டம்
    இத்தனையும் காணவரும் எத்தனையோ ஜனக்கூட்டம்
    பக்தாளுக்குத் தெரியாதோ பெருமாளின் சங்கதி
    உள்ளூரில் ரெண்டிருக்க உறையூரில் இன்னொருத்தி

    கைவழியே நெய்வழியும் பொங்கலுண்டு காலையிலே
    சித்திரான்னம் படைப்பதுண்டு மத்தியான வேளையிலே
    ஊருக்கெல்லாம் சோறூட்டும் சாமியெங்க சாமிதான்
    நான்சமச்சுப் போடாட்டா நாள்முழுக்கப் பட்டினிதான்

    பாட்டு முடிவதற்குள் டி.எம்.செளந்தரராஜனும் வந்து சேர்கிறார். எஸ்.எம்.எஸ் மெட்டுச் சொல்லி வாசிக்க, அந்தப் பாடலை டி.எம்.எஸ் பாடிக் காட்ட, அடாடா, பெருமாளே கள்ளத்துயில் நீங்கி எழுந்து வந்து சிவதாண்டவம் செய்ய வேண்டிய சூழ்நிலை உருவானது.

    maxresdefault

    இந்தப் பாட்டை கேட்கச் சொடுக்கலாமே,

    http://youtu.be/4XSsgperblo

    என்னையும் கவிஞன் என்று ஏ.எல்.நாராயணன் வாலிக்கு அறிமுகம் செய்து வைத்ததும், “அதெல்லாம் ஒண்ணும் வேணாம்பா, ஒழுங்காப் படி” என்றார் வாலி.

    அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு கவிஞர் வாலியை நான் பல ஆண்டுகள் பார்க்கும் வாய்ப்புக் கிட்டவில்லை. ஆனாலும் அவருடைய பாடல் வரிகள் பல என்னை ஆட்கொண்ட வரிகள்.

    “மண் குடிசை வாசல் என்றால் தென்றல் வர மறுத்திடுமா
    மாலை நிலா ஏழை என்றால் வெளிச்சம் தர வெறுத்திடுமா”

    எவ்வளவு அற்புதமான வரிகள்!

    “இடையோ இல்லை இருந்தால் முல்லைக் கொடிபோல் மெல்ல வளையும் – சின்னக்
    குடைபோல் விரியும் இமையும் விழியும் பார்த்தால் ஆசை விளையும்”

    சொற்கள் எப்படி இயல்பாக ஒன்றை ஒன்று தழுவிக் கொண்டு வருகின்றன!

    வாலியை அடுத்தமுறை நான் பார்த்தது 1997-ல் அவருடைய இல்லத்தில். வானவில் பண்பாட்டு மையம் எடுத்த இந்திய சுதந்திரப் பொன்விழாக் கவியரங்கத்துக்கு அவரை அழைக்கச் சென்றிருந்தேன். அப்போது என்ன சொன்னார் தெரியுமா? “ஏன்யா, நான் தப்பித் தவறி ஒரு நல்ல பாட்டு எழுதிட்டாப் போச்சு, அதையும் கண்ணதாசன் பாட்டுன்னு சொல்லிடுவீங்களே”. எனக்கு ஒன்றும் விளங்க வில்லை. அவரே விளக்கினார். நான் எழுதி வெளியிட்டு, அவருக்கும் அனுப்பி வைத்த ‘நமக்குத் தொழில் கவிதை’ என்ற நூலில்,

    “ஒண்ணா இருக்கக் கத்துக்கணும் – இந்த
    உண்மையச் சொன்னா ஒத்துக்கணும்
    காக்கா கூட்டத்தப் பாருங்க – அதுக்குக்
    கத்துக் கொடுத்தது யாருங்க”

    என்ற பாட்டின் எளிய நடையை நான் பாராட்டி விட்டு அதைக் கண்ணதாசன் பாடல் என்று குறிப்பிட்டு விட்டேனாம். சிரித்துக் கொண்டே கோபித்துக் கொண்டார். நான் மன்னிப்புக் கேட்டேன். அவர் என் நூலை முழுமையாகப் படித்திருந்தது குறித்து மகிழ்ச்சியடைந்தேன்.

    பின்னொரு சமயம் சபரிமலைக்கு என்னுடன் யாத்திரை போய்க்கொண்டிருந்த நண்பர் குழுவின் பக்திப் பாடல்கள் அடங்கிய ‘சந்தன மணம் கமழ் ஐய்யப்பன்’ என்ற பாட்டு நூலை வாலியைக் கொண்டு சென்னை ஆஸ்திக சமாஜத்தில் வெளியிட எங்கள் குருசாமி, என் மூத்த சகோதரர் ஶ்ரீதர், ஏற்பாடு செய்திருந்தார். அதை வெளியிட்டுப் பேசிய வாலி அவர்கள் அதில் இருந்த என் பாடல் ஒன்றை முழுக்கச் சொல்லிப் பாராட்டினார். அந்தப் பாடல்:

    நெய் அபிஷேகம் ஜமாய்க்கிறே – என்னை
    எத்தன நாளா டபாய்க்கிறே
    பொய்யில் அமுக்கிப் புழுதியிலே என்னைப்
    புரள விட்டு நீ ஏய்க்கிறே – விட்டுப்
    போவானான்னு பாக்குறே

    சங்கீதம் தெரிஞ்ச சாஸ்திரக் காரங்க
    சந்தோஷமா ஒன்னப் பாடுறாங்க
    சங்கோஜங் கொண்ட பேர்வழிங்க – சத்தம்
    போடாம ஒன்னத் தேடுறாங்க
    எல்லாரும் ஒண்ணாக் கூடுறாங்க
    வில்லாளி வீரன்னு கூவுறாங்க
    வாச்சாலம் நானும் பழகலே – ஓன்
    வீராப்பும் எனக்கு வெளங்கலே

    வெளிச்சமில்லாத சாலையிலே – ஆள்
    அரவமில்லாத மூலயிலே – வெத்துக்
    காயிதமா நான் கெடக்குறேன் – ஓன்
    கைபடத்தான் படபடக்குறேன்
    பளிச்சுனு என்ன நீவிப்புட்டு – ஒரு
    பாட்டெழுதிக் கைநாட்டுவை
    பத்துத் தலமொறைக் கதுபோதும் – மக்கள்
    பாடுவாங்க நீ கேட்டுவை

    காட்டுல போயி குந்திக்குற – கண்ண
    மூடிக்கிட் டேதோ சிந்திக்குற – நான்
    பாட்டுக்குப் படுத்துத் தூங்கையிலே – ஒரு
    பாட்டாக வந்து சந்திக்கிற

    நெய் அபிஷேகம் ஜமாய்க்கிறே – என்னை
    எத்தன நாளா டபாய்க்கிறே
    மெய்யும் பொய்யும் கலந்துவச்சு – நான்
    மெரள மெரள சதாய்க்கிறே.

    மனம்திறந்து பாராட்டி விட்டுப் பேசி முடித்த பிறகு என் காதருகே வந்து ரகசியமாக மிரட்டினார்: “ராஜகோபாலா ஒங்கம்மா தோச வாத்தாளான்னு நீ சினிமாவுக்காக ஒரு ஆபாசப் பாட்டு எழுதினேன்னு மைக்குல சொல்லட்டுமா?” சிரித்துக் கொண்டேன்.

    நானும் அவரும் சந்தித்துக் கொண்ட போதெல்லாம், ஏதாவது எடக்கு முடக்காகவோ, பொய்க்கோபத்துடனோ என்னிடம் அவர் பேசியிருந்தாலும் அவருக்கு என் மீது அன்பும், பற்றும் இருந்ததை நான் உணரத் தவறவில்லை.

    பிறகு ஓரிரு நிகழ்ச்சிகளில் நாங்கள் சந்தித்துக் கொண்டிருந்தும் அதிகம் பேசவில்லை. அவருக்கு வானவில் பண்பாட்டு மையத்தின் பாரதி விழாவில் ‘பாரதி விருது’ வழங்கிய போது, சாதரணமாக விருதுகள் பெறத் தாம் சம்மதிப்பதில்லை என்ற போதிலும், பாரதி பெயரால் தரப்படும் விருது என்பதாலும், நான் அழைத்த காரணத்தாலும் தாம் விருது பெற்றுக் கொள்ள வந்ததாகப் பேசி, என் மீது அவருக்கு இருந்த அன்பை உறுதிப் படுத்தினார்.

    அவர் இறைவனடி சேர்வதற்கு மூன்று வாரங்களுக்கு முன் அவருடன் நான் தொலைபேசியில் பேச வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டது. என் சகோதரி மகள் ஸ்வர்ணமால்யா, “நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால்” என்ற தன் நாட்டிய நாடகத்தை ஒளிப்பேழையாக , அதாவது, டி.வி.டி யாகக் கொண்டுவர இருப்பதால், அதற்கு வாலி அவர்களின் முன்னுரை பெற்றுத் தர வேண்டும் என்று என்னைக் கேட்டுக் கொண்டாள். அது குறித்துத்தான், நான் வாலி அவர்களைத் தொலைபேசியில் கேட்டேன். அவர் சொன்னார்: ” ரவி, இப்போதெல்லாம் நான் போகிற வழிக்குப் புண்ணியம் தரக்கூடிய கடவுள் சம்பந்தமான விஷயங்களைத் தவிர வேறெதையும் படிப்பதில்லை. சிலப்பதிகாரமெல்லாம் இப்பொழுது படித்துப் பார்க்கும் மனநிலையில் நான் இல்லை” என்றார். நான் சொன்னேன், ” நீங்கள் இப்படிச் சொல்லலாமா? உங்களுக்குத் தெரியாததா? நானறிந்தவரை சிலப்பதிகாரம் ஒரு சிறந்த பக்தி இலக்கியம். ஆய்ச்சியர் குரவையில் எப்படியெல்லாம் திருமாலைப் போற்றியுள்ளார் இளங்கோவடிகள்!” என்று கூறிவிட்டுத் தொலபேசியிலேயே, “சேவகன்சீர் கேளாத செவியென்ன செவியே”, “நாராயணா என்னா நாவென்ன நாவே” ஆகிய வரிகளைச் சொல்லி, உங்கள் ஆழ்வார்களுக்கெல்லாம் முன்னோடி இளங்கோ சார்” என்று நான் சொன்னதும் சிறிது மெளனத்துக்குப் பிறகு அவர் சொன்னார்: ” சரி ரவி, நாளை நான் என் ஆச்சாரியன் அழகிய சிங்கர் மீது ஒரு காவியம் வெளியிடுகிறேன், ம்யூஸிக் அகடமியில், அங்கே வந்துவிடு பேசுவோம்” என்றார்.

    ஏதோ காரணம் மறுநாள் நான் அந்த விழாவுக்குப் போக முடியாமல் தடுத்து விட்டது. அதற்கு மறுநாளே அவருக்கு உடல்நிலை பாதிக்கப் பட்டதையும் இரண்டு வாரங்களில் அவர் நம்மைப் பிரிந்ததையும் இன்னும் நினைத்து வருந்துகிறேன்.

    அவருடைய கள்ளம் கபடமற்ற கவிதையுள்ளம் நான் நன்கு அறிவேன். புன்னகை என்பது இதயத்தோடு தொடர்புடையது, காதலியின் கன்னமோ காதலனின் கையோடு தொடர்புடையது என்ற நுட்பத்தை மிக எளிமையாக அவர் பாடியுள்ளதை நினைவு கூர்ந்தால், திரைப்படப் பாடல்கள் இலக்கிய சம்பந்தம் அற்றவை என்ற பேச்சுக்கே இடமில்லை. பாடுவோமே:

    “இந்தப் புன்னகை என்ன விலை – என்
    இதயம் சொன்ன விலை – இவள்
    கன்னங்கள் என்ன விலை – இந்தக்
    கைகள் தந்த விலை”.

    தொடரும்.

    Share
  • விடை

    -மன்னை சதிரா

    நாணத்தால் சிவந்த கண்கள்
    நகைதவழ்ந்து மின்னும் இதழ்கள்                       woman
    மான்கொடுத்த மருட்  பார்வையளே
    மனமிலையோ வாய் மலர்த்த!

    தங்கத்தில் வைரம் பதித்ததுபோல்
    அங்கமெலாம் அழகு மிளிர்ந்திடச்
    சிந்தையினிக்கும் செந்தமிழ்ச் சிலையே
    வந்து தானாக  மலர்வாய் திறவாயோ?

    நாளுக்கு நாளுன்னை நினைந்திரங்கி
    நான்மெலிந்து போனேன் வாடும்என்
    தோளுக்குத் தோள்கொடுக்க மனமிரங்கு!

    வாள்தோற்கும்  விழியழகுச் செல்வியே!
    வாய்  மலர என்னதடை? ஏது தடை?
    உன்னைச் சிலையென வர்ணித்ததாலா
    நான்விடுத்த சொல்லுக்கு விடையேயில்லை!

    Share
  • ஜெய் ஜெய் ஹரி போல்!

    -விசாலம்

    radhakrishnaமணிப்பூர் மக்களுக்குப் பங்குனி மாதப் பௌர்ணமி  வந்தாலே கொண்டாட்டம்தான். இந்த மாதத்தில்தான் இரண்டு விழாக்கள் மிகவும் கோலாகலமாக நடக்கும். நம் தீபாவளியின்போது  நாம், ’இருள் நீங்கி ஒளி பரவி நாடு நலமாகட்டும்! நாட்டு மக்கள் வளமாகட்டும்!’ என்று வாழ்த்துவதுபோல்  மணிப்பூர் மக்களும் இந்த விழாக்களால் இருள் நீங்கி ஒளி பரவி பல நன்மைகளும் சுபிட்சங்களும் கிடைக்கும் என நம்புகிறார்கள். அதுவும் வானத்தில் முழு நிலவு ஒளி வீசப்  பௌர்ணமி நிலவின் ஒளி எல்லா இடங்களிலும் பரவ ஆட்டமும் கொண்டாட்டமும் களைக்கட்டும். மணிப்பூர் இருக்கும் இடமும் கொள்ளை அழகு. இயற்கை அன்னை அங்கு நன்கு வியாபித்திருக்கிறாள்.

    இந்தியாவின் வடகிழக்குப்பகுதியில்  இருக்கும் மலைப்பிரதேசத்தின் பள்ளத்தாக்குப் பகுதியில் நதி ஓடும் அழகைச் சொல்வதா? மலைச்சரிவில் வெள்ளிக் கம்பிப்போல் வழியும் நீரின்  அழகைச்சொல்வதா? மலைப்பிரதேச ஊசி இலைக்காடுகளின் அழகைச்சொல்வதா? அங்கு ஆடும் மணிப்புரி நடனத்தின் அழகை ரசிப்பதா? இத்தனைக்கும் மேலாக அங்கு கொண்டாடப்படும் ‘யவொசாங்‘  என்ற திருவிழா மறக்கமுடியாத ஒன்றாக இருக்கிறது.

    மணிப்பூர் பாமன் என்ற பிராம்மண  மக்களுக்குத் தெய்வமாக விளங்குவது கீதை நாயகன்  கிருஷ்ணர்தான். இவர்கள் ராதா கிருஷ்ண பிரேமையை ‘ராஸ்லீலா’  என்ற நடனம் மூலம்  வெளிப்படுத்துவார்கள். ‘யவொசாங்’ என்றால் பக்தியுடன் கூடி ஆடிப்பாடுவது  என்று பொருள் கொள்ளலாம். இந்த விழாவுக்கென்று பெரிய கொட்டகை அமைக்கப்படும்; இது நதிக்கரை அருகில் அமைந்திருக்கப் பார்க்கவே மிகவும் அழகாக இருக்கும். நாம் பந்தல் வாயிலைத் தோரணங்கள் கட்டி அலங்கரிப்பது போல் அவர்களும் கொட்டகையைக் காய்கறிகளாலும் தோரணங்களாலும் அலங்காரிப்பர்.

    கொட்டகையில் ஒரு மேடை அமைப்பார்கள்.  பின் அருகில் இருக்கும் கோயிலுக்குச்சென்று  அங்கிருக்கும் ஶ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் சிலையை ஒரு ரதத்தில் வைத்து மேளதாளத்துடன்  ஷெனாய் ஒலி மங்களகரமாக ஒலிக்க  ஊர்வலம் வருவார்கள். பின் அதை அந்த மேடையின் மேல் வைப்பார்கள். பின்னர் மக்கள் நலமாக வாழவும் முன்னாள்  மணிப்பூர் மன்னரின் சுபிட்சத்திற்காகவும்  பிரார்த்தனை நடக்கும். பின் “தஸ்டா” என்ற இசை நாடகம் தொடங்கும். இதில் அரசரின் வீர தீரங்களின் பெருமையைச் சில கலைஞர்கள் நடித்துக்காட்டுவார்கள்.

    அதன்பின் நாம் நிகழ்த்தும் கதாகாலட்சேபம் பாணியில் அவர்களும் ‘கதாவாசகம்” எனக் ’கண்ணனின்  அவதாரம், பால லீலைகள், பூதனை வதம்’ என்று தொடங்கி  நடத்துவார்கள். இதைக்கேட்கப் பலர் கூடுவார்கள். பின் மாலை நிகழ்ச்சிகள் தொடங்கும். பல ஆண்கள் கிருஷ்ணன் வேஷத்தில் வந்து புல்லாங்குழலை இசைப்பார்கள். பெண்களும் நெற்றியில்  சூடாமணி அணிந்து தங்களை கோபியர்களாக  வேடமணிந்து வட்டமாக  நின்றபடி சுழன்று சுழன்று நடனமாடுவதைப்பார்க்க உடலில் ஒரு  ஆன்மீக அனுபவம் ஏற்படுவதை உணரமுடியும். நாமும் அங்கு ராதையாகவோ அல்லது கிருஷ்ணனாகவோ  மாறிவிடுவோம். இது வசந்தகாலத்தில் நடப்பதால் ’வசந்த ராஸ்’ என்று சொல்வார்கள்.

    பின் வருவது கோலாட்டம்.  நல்ல நீளமான கோலாட்டங்கள் கைகளில் இருக்க எந்தக் கை எங்கு போய் லாவகமாக ஒலி எழுப்பி வருகிறது என்று புரிந்துக்கொள்ள முடியாதபடி அத்தனை வேகமான நடனம். கால்களோ பஞ்சு போல் தரையில் படிகிறதா இல்லையா என்று புரிந்துக்கொள்ள முடியாதபடி துள்ளித்துள்ளி ஒரு நடனம். சலங்கை ஒலியுடன் கோலாட்ட ரிதமுடன் மான் துள்ளி ஓடுவது போல்  இந்த நடனத்தைப் பார்க்க மனதில் ஒரு கிளுகிளுப்பு உண்டாகிறது. இந்த நடனத்தை  ‘சிருங்கார ராசா ‘  என்கிறார்கள்.

    பின் ஆரம்பமாகிறது ஜெய் ஜெய் ஹரி போல்’ முழக்கம். மேடையில் அமர்ந்து அருள்பாலிக்கும் சைதன்ய மகாபிரபுவுக்கு அர்ச்சனையும் மங்கள ஆரத்தியும் ஆரம்பமாகிறது. ஆரத்தி முடிந்தப் பின்னரும் ’ஜெய் ஹரி போல்’ என்ற முழக்கம் தொடர்ந்து கேட்கிறது. பின் பிரசாதமாக இனிப்பு வழங்கப்படுகிறது.

     பின்னர் சைதன்ய சுவாமியின் சிலைப் பழையபடி கோயிலுக்குச்சென்று விடும். இதெல்லாம் முடிந்தபிறகு நடக்கும் வைபவம் மனதை எதோ செய்கிறது. இத்தனை அழகாகக்   கட்டப்பட்ட, அலங்காரம் செய்யப்பட்ட கொட்டகைக்கு அக்னி வைத்து எரிக்கப்படுவதைப் பார்த்தால் அது தேவையா எனத் தோன்றுகிறது. ஆனால் இது போல் செய்தால் தங்களின் மனக் கஷ்டங்கள், வியாதிகள் தீர்ந்து விடும் என மக்கள் நம்புகிறார்கள். ஆனால் அந்தச்சூழ்நிலை புகையினால் எத்தனைக் கெட்டுப்போகிறது என்று யோசிப்பதில்லை. நாம்  ஹோமம் முடிந்தபின் பூர்ண ஆஹூதி என்று ஒரு சிறு மூட்டையைப் புடவையுடன் ஹோமத்தில் இடுவது வழக்கம். அதேபோல் இதையும் அவர்கள் “பூர்ண மாஷி ‘என்கிறார்கள் .

    இனி இரண்டாவது விழாவைப் பார்க்கலாம். இந்த விழா பார்க்க நாம் மணிப்பூரின் தலைநகரமான இம்பாலாவுக்கு வரவேண்டும் . நேராக கிருஷ்ணன் ராதா இருக்கும் ஸ்ரீ கோவிந்தாஜி ராதேஸ்வரி என்ற கோயிலுக்கு வர வேண்டும். இங்கு இருக்கும் ராதா கிருஷ்ணனுக்கு வண்ணப் பொடிகளால் பூஜை நடக்கும்.ஹோலியின் போது வண்ணப் பொடிகளைத் தூவுவதுப்போல்  இங்கும் சிவப்பு, பச்சை, நீலம் என்று பல வண்ணக் கலவைகளைத் தூவி பூஜிக்கப் பார்க்க மிக அழகாக இருக்கும். பலர் பலவிதமான பக்தி பாடல்களைப் பாடுவார்கள்.  கோயில் வாசல் மண்டபத்தில் கிருஷ்ண பஜனையும் நடக்கும். அவர்கள் அடிக்கும் டோலும் அதை அடித்தபடியே சுழன்று சுழன்று ஆடும் நடனமும் காணக்கிடைக்காத ஒன்று. விழாக்கள் ஒவ்வொரு மாகாணத்திலும் ஒவ்வொருவிதமாக நடந்தாலும் அது ஆன்மாவைத்தொட்டு ஆன்மீக வழியைக் காட்டுவது என்பது என்னவோ உண்மைதான்!

     

    Share
  • திருத்தணி முருகா.. தென்னவர் தலைவா..

    –காவிரிமைந்தன்.

    திருத்தணி முருகா

    சந்தக் கவிதை அருணகிரியாருக்கு வந்தகவியாவும் வழங்கியவன் கந்தநாதன்!  சிந்தையில் நிறைந்தபடி கந்தனை நினைத்தாலே முத்தமிழால் உள்ளம் துள்ளும்! எத்தனைப் பாடல்கள் எழுதினாலும் இன்பத்தேன் சிந்திடும்! அத் தமிழ்க் கடவுள் அவனாலே கற்பனை வளங்கள் பெருகும்! சக்தியின் மைந்தன்.. கருணையில் வள்ளல்!  சிவகுருபாலன்!.. நமைக் காக்கும் தெய்வம்!

    மலையரசி தாயால் மகிமை பெற்ற நம் கண்ணதாசன் – உள்ளம் உருகியே இயற்றிய பலத் திரைப்பாடல்கள் பக்திக்கு பல்லக்குத் தூக்கும்!  உருகாதோர் உள்ளமிங்கே ஒன்றிரண்டும் கிடையாது என்றே சொல்லும்!  கந்தன் கருணை முதல் திருவருள் முதலாக தமிழ்த் ‘தெய்வம்’ பற்றிய அவனது படைப்புகள் என்றைக்கும் நிலைத்திருக்கும்!

    arupadaiveedu_krstiruttani_murugathiruthani

     

    ‘நீலகிரி எக்ஸ்பிரஸ்’ திரைப்படத்திற்கா கவியரசு கண்ணதாசன் இயற்றிய பைந்தமிழ்ப் பாசுரம்.. கர்நாடக இசையிலும் வில்லிசைதன்னிலும் தேர்ச்சி பெற்று திரைக்கு இசையமைக்க முன்வந்த மெல்லிசை மன்னர் டி.கே.ராமமூர்த்தி அவர்களின் தூய இசைக் கோர்வையில் முருகக்கடவுள் புகழ்பாடவே இப்பூமிக்கு வந்து அவதரித்த சூலமங்கலம் சூலமங்கலம் ராஜலட்சுமி – பி.சுசீலாவுடன் இணைந்து வழங்கிய குரல்களில் தெய்வீக மணம் கமழும் தெள்ளமுதம் இதோ..

     

    காணொளி : http://youtu.be/O3HbgyxHcW4

    பாடல்: கவியரசு கண்ணதாசன்
    படம்: நீலகிரி எக்ஸ்பிரஸ்
    இசை: மெல்லிசைமன்னர் டி.கே.ராமமூர்த்தி
    தாம் தித் தாம் – தை தித் தை
    தாம் தித் தாம் – தை தித் தை

    திருத்தணி முருகா தென்னவர் தலைவா
    சேவலும் மயிலும் காவலில் வருமா
    (திருத்தணி)

    தென் பரங்குன்றம் செந்தூர் மன்றம்
    செந்தமிழ்ச் சங்கம் திருநாள் எங்கும்
    வடிவேல் சேவை நினைந்தாள் பாவை
    காணும் – கண்ணில் எங்கும் – கண்டாள் உந்தன் தேவை
    (திருத்தணி)

    கந்த வேலை எந்த வேலும்
    வெல்லுவதில்லை!
    உந்தன் பேரை அன்றி வேறு
    சொல்லுவதில்லை!
    உன்னை எண்ணும் உள்ளம் ஏதும்
    கொள்ளுவதில்லை!
    இன்று நாளை என்றும் துன்பம்
    அண்டுவதில்லை!

    மலையும் நீயே, கடலும் நீயே
    வானும் நீயே,  நிலமும் நீயே

    பஞ்ச பூதம் – ஒன்று கூடும் மன்றம்
    வந்த பேர்க்கு – வாழ்வு நல்கும் குன்றம்
    மங்கல குங்குமம் – கிண்கிணி மங்கலம்
    ஓம் எனும் மந்திரம் – யாவையும் சங்கமம்

    ஆதியாகி அந்தமாகி நீதியாகி நெஞ்சமாகி
    அலைகள் கலகலென
    இலைகள் சலசலென
    மலைகள் மடமடென
    உலகம் இசை பொழிய

    வரு முருகா! ஒரு முருகா! திரு முருகா

    Share
  • சொட்டு மருந்து … 2

    –இன்னம்பூரான்.

    விநாசகாலே விபரீத புத்தி

     

    110401_193350கலயம் நிரம்பி வழிகிறது. அமுத கலயம். அக்ஷயபாத்திரம். வாழ்வாதாரம் அதுவே. சொட்டு மருந்து போல் பருகவேண்டும். எல்லாருக்கும் கிடைக்கவேண்டுமல்லவா! ஒரு அதமன் சொட்டு  ஆலகால விஷம் கலக்கிறார். அனைவரும் பரலோக யாத்திரை. தேர்தலில் தலைப்பாகையையும், காலணியையும் பறி கொடுத்த காங்கிரஸ் கட்சி ஒரு சுயபரிசோதனை கூட்டம் நடத்துகிறது. அதில் தன்னுடைய அருள்வாக்கு அளித்த கட்சியின் காரியதரிசியான திக்விஜய சிங்  ஆடிட்டர் ஜெனெரல் மீது, “ஆடத்தெரியாதவள் முற்றம் கோணல்” என்று சொன்னது போல ஒரு போலி குற்றச்சாட்டை சாற்றினார். ‘பா.ஜ.க. தான் ஆடிட்டர் ஜெனெரலின் எஜமானன். அடிமை CAGயை அந்த கட்சி ஆட்டுவிக்கிறது. 2ஜி வழக்கில் இது கண்கூடு’ என்பது தான் அந்த அருள்வாக்கு! எங்கே சொன்னார்? போயும் போயும் கர்நாடகாவில். அங்கு முன் ஆட்சி நடத்திய பா.ஜ.க. அரசின் தவறுகளை கடுமையாக சுட்டிக்காட்டிய ஆடிட் ரிப்போர்ட்களையும், 150 வருடங்களாக, அரசியல் ஆதாயங்களை அறவே ஒதுக்கிய தணிக்கைத்துறை மீது, ஆதாரமே இல்லாமல் அவர் அள்ளி வீசிய சேறு, காங்கிரஸ் கட்சி முகத்தில். உச்ச நீதிமன்றம் 2ஜி விவகாரத்தில் கூறியதை துச்சம் என்று கடாசிவிட்டார்.

    சமயத்தில், அவர் உண்மை விளம்பி: ராகுல் காந்தி ஆளும் திறனற்றவர் என்று சொன்ன மஹானுபாவன், அவர். தலைப்பாகையையும், காலணியையும் பறி கொடுத்த காங்கிரஸ் கட்சி ஜட்டிபனியனையும் பறி கொடுக்க வாய்ப்பு அளிக்கிறார், இந்த பெரிய மனிதர். அவர் இயக்கிய பெண்பாவம் பற்றி நான் பேசபோவதில்லை. அவர் சொல்வதை ஆமோதிக்கிறார், திரு மல்லிகார்ஜுன கார்கே. அவரை எதிர்க்கட்சி தலைவராக, அரசியல் சாஸனத்தை மீறி, அமர்த்தவேண்டும் என்று காங்கிரஸ் கட்சி ஹீனக்குரலில் கொக்கரிக்கறது. திரு. திக்குவிஜய் சிங்கை பொது கணக்கு மன்றத்தில் தலைவராக போட, இது ஒரு வழி. அப்போது, அவர் கட்சிபற்று அற்ற ஆடிட் ரிப்போர்ட்டுகளை எப்படி கையாளுவார்? சாக்கோ என்ற அவருடைய சகாவே தேவலை என்று ஆகிவிடும். விநாசகாலே விபரீத புத்தி!

    2. துர்ச்சம்பவம்.

    சென்னை மெளலிவாக்கத்தில் ஜூன் 28 அன்று கனத்த மழை பெய்தது. ஒரு 11 மாடி கட்டிடம் வீழ்ந்தது. இன்று காலை வரை 13 சடலங்கள் கிட்டின. அருகிலிருந்த வீடுகள் சுக்குநூறாயின. பாவம் கணேசன் என்ற அண்டை வீட்டுக்காரர் பலியானார். இன்னும் பலர் இடிபாடுகளுக்கு இடையே. எல்லாரும் ஏழைகள். ஒரு தொல்லைக்காட்சியில், இடி விழுந்ததே அதற்கு காரணம் என்று அடிக்கடி சொல்லி வந்தது, கல்யாணக்கூடத்தில் சீப்பை ஒளித்து வைப்பது போன்ற, எதையோ மறைக்கும் செய்தியாகத்தான் தோன்றியது. பிறகு பல தரப்புகளிலிருந்து வந்த செய்திகளை அலசிப்பார்த்தால், பல ஏமாற்று சித்து வேலைகள் தென்படுகின்றன. சில துண்டுச்செய்திகள்:

    ➢ கனத்த மழையால் சில இயந்திரங்களை இயக்க முடியவில்லை. ராப்பகலாக் மீட்பு பணி நடக்கிறது. தொடங்கியதும், அதீத துரித கதி.

    ➢ அடித்தளம் முதல் கட்டுமானத்தில் அசட்டை தென்படுகிறது. ஒருவருக்கொருவர் இணைந்து செய்யாமல் தன்னிச்சையாக நடந்து கொண்டதாகத் தோற்றம்.

    ➢ முதல் நம்பர் முதலாளி ஓய்வு பெற்ற ஒரு வங்கி ஊழியர். அவருக்குக் கோடிக்கணக்காக செல்வம் வந்தது எப்படி என்ற கேள்வி ஒரு புதிர். அவருக்கு வேண்டப்பட்ட அரசியல் வாதிகள் இருப்பதாக சொல்கிறார்கள். பினாமிப்பணமா????????

    ➢ இடி மின்னல் ஒன்றுமில்லை. அத்து மீறி கட்டியது தான் குற்றம் என்றாராம் ஒரு ஊழியர். முதல்வரும் அத்தகைய பொருள்பட கூறியதாக, ஆவணங்கள் கூறுகின்றன.

    ➢ “எரிய வீட்டில் பிடுங்கினது ஆதாயம்.”மீட்பு பணி ஊழியர்களுக்கு வந்த குடிநீர் அபேஸ்!

    ➢ தினகரன் என்ற இரும்பு பட்டறை தொழிலாளி 108க்கு ஃபோன் செய்து நிவாரணத்தை துவக்கி வைத்தார், ஒரு நிமிட தாமதம் இல்லாமல். அவருக்கு ஒரு அரசு சாதனையாளர் விருது தகும்.

    இன்னும் பல சிக்கல்களை பற்றி எழுதவேண்டும், விழிப்புணர்ச்சியை தட்டி எழுப்ப. உதாரணமாக ‘டார்ட்’ சட்டம். முழுவிவரங்கள் கிடைத்த பின் தான் அவற்றை பற்றி எழுதலாம். உடனே துரிதமான நடவடிக்கைகள் எடுத்த அரக்கோணம் அமைப்பு முதல், தீயணைப்பு படை, காவல் துறை, ஆம்புலன்ஸ், ஆஸ்பத்திரி எல்லாருக்கும் நாம் நன்றி நவிலவேண்டும். முதல்வரும் துரித நடவடிக்கைகளுக்கு ஆணையிட்டார் என்று பறை சாற்றிக்கொண்டே இருந்தாலும், அதை விட அவருடைய பொறுமையை போற்றவேண்டும். துர்ச்சம்பவம் நடந்தால், அங்கு அரசியல்வாதிகள் வீடீயோக்காரர்களுடன் படையெடுத்து, மீட்புப்படையின் உயிரை வாங்குவார்கள். நம் முதல்வர் தாமதித்து உரிய காலத்தில் மட்டும் சென்றார்.

    இன்னும் பல மருந்துகள்/மாயம்/ வேஷம்/ நஞ்சு செய்திகள் வந்த வண்ணம். பார்க்கலாம்.

    (தொடரும்)

    இன்னம்பூரான்
    http://innamburan.blogspot.co.uk
    http://innamburan.blogspot.de/view/magazine
    www.olitamizh.com

    -#-

    சித்திரத்துக்கு நன்றி: http://www.siruppiddy.net/wp-content/uploads/2011/04/banana-8.jpg

    Share
  • திருமால் திருப்புகழ் (129)

     

    கிரேசி மோகன்

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    ——————————————————————————————————-
    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    —————————————————————
    ’’கண்ணன் வெண்பாக்கள்’’
    —————————————————

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    பூந்தன மாதோடு, சாந்தமும் பூசிய,
    காந்தனே கண்துயில்ஏ காந்தனே, -நான்தினம்,
    நின்புகழ், நின்னெழில், நின்கதை, நின்னருள்,
    வெண்பாவில் பாட விரும்பு….(290)

    காண்பதுன் கோலத்தை, கேட்பதுன் ஜாலத்தை,
    பூண்பதுன் நாமத்தை போற்றுதலாய், -கூன்பதும,
    கொங்கையாள் மார்பில், குலாவும் அரங்கனே,
    சங்கையா உன்தாள் சரண்….(291)

    குறையெனக்குன் காட்சி, நிறையெனக்குன் நாமம்,
    சரியெனக்குன் மாயையின் சூழ்ச்சி, -அரியுனக்கு,
    இன்னும் தயக்கமேன், என்னைப் பிடித்திட,
    கண்ணா அவிழ்த்திடுகண் கட்டு….(292)

    கரத்தில் எழுத்தாணி, கற்பனையில் வாணி,
    புரத்தை மறந்து புணர்வோம், -தரத்தில்,
    குறையாத வெண்பாக்கள், கூடிப் பெறுவோம்,
    இறையாத வாவா இசைந்து….(293)

    தூணுண்டு வீட்டில், துரும்புமுண்டு, வாஞ்சையாய்,
    நானுண்டு வாராய் நரசிம்மா, -பூநின்ற,
    சாந்த இலக்குமியை, ஏந்திக் களிக்கின்ற,
    காந்த வடிவில் கனிந்து….(294)

    அய்யோ எனக்குரல், அன்றிட்ட பாஞ்சாலி,
    மெய்யாடை மேவ மறைத்தனை, -அய்யா,
    தவலையில் கட்டித், தயிராடை ஏற்றென்,
    கவலையை கட்டிக் கசக்கு….(295)

    —————————————————————————————————————

    Share
  • அ. ச. ஞானசம்பந்தன் மக்களின் நன்கொடை

    மறவன்புலவு க. சச்சிதானந்தன்

    பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தனுக்கும்
    இலங்கைக்கும் நெருங்கிய தொடர்பு.

    book

    ஆறுமுகநாவலர் பதிப்பித்த பெரிய புரணைம், book1
    அரசங்குடி சரவண முதலியாரின் கைந்நூல்.
    அவரது சொற்பொழிவுகளுக்கு அந்த நூலே பயன்படும்.
    தந்தையாரின் பெரியபுராண நுண் மா நுழை புலத்தின் வழிவந்த
    அசஞாவுக்கும் அதுவே கைந்நூல்.

    பச்சையப்பன் கல்லூரிப் பேராசிரியரான காலத்தில்
    சனிக்கிழமை காலை சென்னையில் புறப்பட்டு
    விமானத்தில் யாழ்ப்பாணம் வருவார்.
    கரவெட்டி தச்சன்தோப்புத் திருக்கோயிலில் மாலைச் சொற்பொழிவு.
    ஞாயிறு மாலையும் அங்கே சொற்பொழிவு.
    திங்கள் காலை யாழ்ப்பாணத்திலிருந்து விமானத்தில் புறப்பட்டுச்
    சென்னை சென்று பச்சையப்பன் கல்லூரியில் பணிக்குப் போவார்
    பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்.

    book21959 தொடக்கம் அவர் 2002இல் மறையும் வரை சென்னையில் எனக்கு ஆசானாய், வழிகாட்டியாய், இருந்தவர் பேராசிரியர் அ. ச. ஞா.

    இன்றுவரை அவருடைய மக்களும் என்னைத் தன்னுள் ஒருவராகக் கருதி வருகின்றனர்.

    அப்பாவின் நூல்களை அந்தந்தத் துறை சார்ந்தவரிடம் கொடுக்கிறோம் என 2013இல் மூத்த மகன் மெய்கண்டான் மற்றும் கடைசி மகள் மீரா என்னிடம் சொன்னபொழுது, நூல்களுக்கான யாழ்ப்பாணப் புலமையாளரின் தவிப்பும் ஏக்கமும் என் கண்ணில் தெரிந்தன.

    யாழ்ப்பாணத்தில் உள்ள நூலகத்துக்கு எடுத்துச் செல்கிறேன் என்றேன். மகிழ்ச்சி பொங்க, 440 தலைப்புகளைத் தந்தார்கள்.
    17 பெட்டிகளில் கட்டுவித்தேன். யாழ்ப்பாணம் கொணர்ந்தேன்.

    இணுவில் பொது நூலகக் காப்பாளர் அண்ணா தொழிலகம் திரு. சு. பொ. நடராசா என்னை அழைத்து நூலக வளரச்சிக்கு உதவுமாறு கேட்டது என் நினைவில் இருந்தது. 17 பெட்டிகளையும் அவர்களிடம் கையளித்தேன்.

    29.6.2014 மாலை 1630 மணிக்கு முறையாகக் கையளித்தேன். படங்கள் பார்க்க

    Share
  • காற்று வாங்கப் போனேன் – பகுதி 27

    கே.ரவி

    1981-ஆம் ஆண்டில் தான் அந்த நிகழ்ச்சி நடந்தது. அதாவது, நிஜமாக ஒரு மின்னலே கவிதையான நிகழ்ச்சி. ‘என்னய்யா, இதெல்லாம் ஒரு நிகழ்ச்சியா?’ என்ற எகத்தாளக் குரல் எனக்குள்ளேயே எதிரொலிக்கிறது. தினமும் ஆங்கில நாளேடுகளைக் கரைத்துக் குடிக்கும் ஒருவன், தமிழ் நாளேடு மட்டும் படிப்பவனைப் பார்த்துக் கிண்டலாக உனக்கு என்ன உலக நிகழ்ச்சி தெரியும்? வண்ணாரப்பேட்டை ரவுடி இன்னொருவனைச் சதக், சதக் என்று கத்தியால் குத்திக் கொன்றான் போன்ற அன்றாட விஷயங்கள் மட்டுந்தான் உனக்குச் செய்தி, நிகழ்ச்சி. காஜா தெரியுமா? சட்டைப் பொத்தானைக் கஷ்டப்பட்டு நுழைப்போமே, அந்தக் காஜா இல்லேப்பா. இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடைப்பட்ட ஒரு சிறிய பகுதி. அதன் கடைசி எழுத்து ஆங்கிலத்தின் கடைசி எழுத்து. ஆனால் அதைச் சுட்டிக்காட்டத் தமிழில் ‘ஜ’வை விட்டால் வேறு எழுத்து வடிவம் இல்லையே, என்ன பண்ணுவேன்? சரி, சரி, அந்த இடத்தில் ஆயிரக் கணக்கானவர்கள் கொன்று குவிக்கப்படும் நிகழ்ச்சி நடக்கிறதே, அந்தச் செய்தி தெரியுமா உனக்கு?

    இப்படி நக்கல் செய்யும் அந்த மேதாவியிடம், ‘ஐயா, உங்களுக்கு இந்தப் புவிக்கோளமாகிய பூமியில் நடக்கும் சமாச்சாரங்கள்தான் தெரியும்; அவைதாம் உங்களுக்குச் செய்திகள். ஆனால், பூமி மட்டுந்தானா உலகம்? பூமியைத் தாண்டிச் சூரியன் எனப்படும் நட்சத்திரத்தில் நடக்கும் அதிசயங்களை நீர் அறிவீரா? அதையும் தாண்டி அடுத்த அண்டத்தில் என்ன நடக்கிறது என்று தெரியுமா உமக்கு?’ என்றெல்லாம் நான் கேட்கப் போவதில்லை. பாரதி ஒரு கட்டுரையில் எழுதியதை மட்டும் அந்த அதிமேதாவிக்குப் படித்துக் காட்டினால் போதும். பாரதி எழுதுகிறான்:

    உலகத்தில் எங்குப் பார்த்தாலும் நிறைந்து கிடைக்கும் லாவண்யங்களைத் தமிழர்கள் கவனிப்பது கிடையாது. சனிக்கிழமை சாயங்காலந்தோறும் குளக்கரைகளிற் போய்க் கருடன் பார்ப்பதற்கென்றால் நம்மவர்கள் கூட்டம் கூட்டமாக ஓடுகிறார்கள். சூரியாஸ்தமய காலத்தில் வானத்திலே தோன்றும் அதிசயங்களைப் பார்க்க ஒருவன் கூடப் போகிறதில்லை. அப்போது வானத்திலே இந்திரஜால மஹேந்திர ஜாலங்களெல்லாம் நடக்கின்றன. இந்த க்ஷணமிருந்த தோற்றம் அடுத்த க்ஷணமிருப்பதில்லை………நமது நாட்டில் வேதகாலத்து ரிஷிகள் பிரகிருதியின் செளந்தர்யங்களைக் கண்டு மோஹித்துப் பரமாநந்த மெய்தியவர்களாய்ப் பல அதிசயமான பாடல்கள் பாடியிருக்கிறார்கள். பிரகிருதியின் அழகைக் கண்டு பரவசமெய்திக் காளிதாசன் முதலிய பெருங்கவிகள் அற்புதக் கவிதைகள் செய்திருக்கின்றனர். இக்காலத்திலேதான் இந்த துரதிஷ்ட நிலைகொண்ட நாட்டில் வானம் பார்த்தறியாத குருடர்களெல்லாரும் கவிகளென்று சொல்லி வெளிவருகிறார்கள்.

    மின்னல் கவிதை என்று சொன்னேனே, அந்தச் செய்திக்கு வருவோம்.

    3

    என் வளர்ப்புத் தந்தை பல ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, 1980-ஆம் ஆண்டு கமல்ஹாஸனை வைத்து ஒரு படம் தொடங்கப் பூஜை போட்டார். இயக்குநர் சக்திதான் அதன் இயக்குநர். சக்தியும், கமலும் மிக நெருங்கிய நண்பர்கள், இருவரும் ஓரூர்க்காரர்கள், ஆம், பரமக்குடி. சக்தியும், நானும் அமர்ந்து பலநாட்கள் விவாதம் செய்து ஒரு கதையைப் பின்னினோம். அந்தக் கதையை நாங்கள் கமலிடம் சொல்ல, அவரும் ஒப்புக் கொண்டு படத்துக்கு “வாய்ப்பூட்டு” என்று பெயர்சூட்டவும் செய்தார். ‘வாய்ப்பூட்டு’ பட பூஜை மிக விமரிசையாக நடந்தது. அதற்கு இளையராஜாவை இசையமைக்கக் கோரி அணுகினோம். அவர் மூன்று மாதங்களுக்கு தமக்கு நேரமில்லை என்று சொல்லிவிட்டதால், பாடல் பதிவு எதுவும் இல்லாமல் பூஜை மட்டும் போட்டோம். ஏதோ காரணங்களால், பூஜை போட்ட சில நாட்களிலேயே அந்தப் படம் எடுக்கும் எண்ணத்தை என் தந்தை கைவிட வேண்டியதாயிற்று. எனக்கு அதற்குள் இயக்குநர் சக்தியுடன் நெருங்கிய நட்பு ஏற்பட்டு விட்டதாலும், திரைப்பட பூஜை என்று என் நண்பர்களையெல்லாம் நான் அழைத்துக் காட்டிவிட்டு உடனே மூட்டை கட்டிவிட என் ஈகோ, அதுதான், அகங்காரம், இடம்கொடுக்காததாலும், எப்படியும் சக்தியின் இயக்கத்தில் வேறொரு படம் எடுத்தே ஆக வேண்டுமென்று என் வளர்ப்புத் தந்தை கல்யாணராமனிடம் கேட்டேன். நான் கேட்டு அவர் எதையும் மறுத்ததே இல்லை. குறைந்த பட்ஜெட்டில் எடுப்பது என்று தீர்மானம் ஆகியது. கதாநாயகனாக என் நெருங்கிய நண்பர் எஸ்.வி.சேகரையும், கதாநாயகியாக புதுமுகம் ஶ்ரீலட்சுமி என்பவரையும் வைத்து, சக்தியும் நானும் கலந்து ஒரு கதை உருவாக்கிப் படத்துக்கு பூஜை போட நாள் குறித்தோம். குறைந்த பட்ஜெட் ஆயிற்றே! இளையராஜா அளவுக்கு இசையமைப்பாளருக்குச் சம்பளம் கொடுக்க முடியாதே என்ற நிலை வர, ஏதோ ஒரு துணிச்சலில் ‘நானே இசையமைக்கிறேன்’ என்று ஒரு பேச்சுக்குச் சொன்னதும் என் தந்தையும், சக்தியும் அதை அப்படியே ஒப்புக் கொண்டு இசையமைக்குமாறு என்னைத் தூண்டினார்கள். சரியென்று கோதாவில் இறங்கினேன். பூஜை அன்றே முதற்பாடல் பதிவு செய்வது என்று முடிவானது. அப்படி முடிவாகி நாலு நாட்களுக்குள் பூஜையும், பாடல் பதிவும் நடைபெற நாள் குறித்தாகி விட்டது. நாங்கள் முடிவு செய்திருந்த கதையோ கல்லூரியில், அதுவும், ஆண்களும், பெண்களும் இணைந்து படிக்கும் ஒரு கல்லூரியிலேயே பெரும்பாலும் நடப்பதாக இருந்தது. படத்தின் பெயர் ‘ஸ்பரிசம்’ என முடிவானது.

    1

    நான் விவேகானந்தா கல்லூரியில் படிக்கும் போதே நண்பர்கள் புடைசூழ நிறைய பைலா (இன்றைய கானா) பாடல்கள் எழுதிப் பாடியிருக்கிறேன். இயல்பிலேயே எனக்கு டப்பாங்குத்துப் பாடல்கள் மிகவும் பிடிக்கும். இலக்கண சுத்தமாக இனிய ராகத்தில் ஒரு பாடல் எழுதுவதைவிட, ஜனரஞ்சகமாக, டப்பாங்குத்துப் பாடல் எழுதுவது ரொம்பக் கடினம். “என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு”, “தென்ன மரத்துல குந்தியிருப்பதச் சின்ன பாப்பா”, போன்ற பாடல்கள் எழுதுவது அவ்வளவு சுலபம் இல்லை. “ஜவ்வாது பொட்டாகத்தான் இட்டுக்கவா ஒன்னத் தாயத்துக் குள்ளே வச்சுக் கட்டிக்கவா” என்ற பல்லவியை எப்போது கேட்டாலும் ரசிப்பேன். ஆகவே, துணிந்து ஒப்புக் கொண்டேன்.

    பூஜை நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னால், என் வீட்டில் ‘சீத்தாத்தை’ என்ற அத்தை ஒருத்தி, என் வளர்ப்பு அன்னை அலங்காரத்தின் தாயார், அவள் அடிக்கடிப் பாடும் ஒரு நையாண்டிப் பாடலைப் பாடினாள். அதைக் கேட்டதும் அதுவே பல்லவியாக என் முதல் திரைப்படப் பாடல் உருவானது.

    2

    முறையாக இசை பயிலாத, எந்த வாத்தியமும் வாசிக்கத் தெரியாத, ஸ்ருதியோடு பாடுவதே இல்லை என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்த நான் இசையமைப்பாளனாக, முதன்முதலில், ஏ.வி.எம். ஸ்டூடியோவில் இருந்த ஆர்.ஆர். ஒலிப்பதிவுக் கூடத்தில், ஸவுண்ட் எஞ்சினியர்கள் மாணிக்கம், சம்பத் ஆகியோருக்கு அருகில் எப்படி சப்த நாடியும் ஒடுங்க அமர்ந்திருந்தேன் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன். அது போதாதென்று, நான் இசையமைக்கும் அழகை பார்க்கச் சாரு அண்ணா, அதாவது, சாருஹாசன் வேறு வந்து என் அருகில் உட்கார்ந்து கொண்டு விட்டார். என் நடுக்கம் இரட்டிப்பாகியது. பாடலை யார் பாடப் போகிறார்கள் என்று கூட முடிவு செய்யவில்லை. கோவையிலிருந்து நண்பர் சுந்தரேசன் என்பவரையும், அப்போது சில படங்களில் பாடியிருந்த டி.கே.எஸ். கலா அவர்களையும் மட்டும் பாடத் தயாராக வரச் சொல்லியிருந்தேன். பாடலோ பல மாணவ, மாணவியர் பாடிக்கொண்டு ஆடுவதாக அமைந்திருந்தது. என் பாடல் வரிகளை நான் முணுமுணுக்க, அதை எப்படியோ ஒரு மாதிரியாகச் சரியாகப் புரிந்து கொண்டு ராமமூர்த்தி அவர்கள் ஹார்மோனியத்தில் வாசித்துக் காட்ட, ராக்கெட் ராமனாதன், முத்துராஜா, என் மனைவியின் தம்பி ரதீஷ் உட்பட அங்கு வந்திருந்த நண்பர்கள் பலரையும் பாட வைத்துப் பதிவானது அந்தப் பாடல்.

    நான் ஏதோ ஆபாசப் பாடல் எழுதியிருக்கிறேன் என்று மேடையில் ‘சொல்லி விடட்டுமா’ என்று வாலி மிரட்டினார் என்று முன்னொரு பகுதியில் எழுதியிருந்தேனே, அந்தப் பாடல்தான் அது.

    ராஜ கோபாலா ஒங்கம்மா தோசை வாத்தாளா

    வேணு கோபாலா ஒங்கம்மா வெண்ணை தந்தாளா

    ‘ஸ்பரிசம்’ படம் முக்கால்வாசி எடுத்தாகி விட்டது. இன்னும் வியாபாரம் ஆகவில்லை. நான் வக்கீல் தொழிலில் சம்பாதித்த கொஞ்சநஞ்ச பணமும் நேராக படச் செலவுக்கே போய்க்கொண்டிருந்தது. ஷோபனா ரொம்பப் பொறுமைசாலி.

    படம் தொடங்கியதிலிருந்து, ஒவ்வொரு நாளும், அந்த நாள் படப்பிடிப்புக்கு அல்லது பாடல் பதிவுக்குத் தேவைப்படும் பணம் அந்த நாள் காலையில்தான் யார் மூலமாவது எதிர்பாராமல் கிடைக்கும். அப்படி ஒரு ராசி அந்தப் படத்துக்கு. படம் பூஜையன்று விடியற் காலையில், செலவுக்குப் போதிய பணம் இல்லாமல் நானும், என் வளர்ப்புத் தந்தையும் புறப்பட்டு விட்டோம்; ‘பார்க்கலாம், மாலைக்குள் பணம் வரும்’ என்ற துணிவோடு, டிரைவ்-இன் ஓட்டலில் போய் சிற்றுண்டி அருந்திக் கொண்டிருந்த போது அங்கு வந்த ஒரு நண்பரிடம் நான் விளையாட்டாக இதைச் சொன்னதும் அன்றைய செலவுக்குத் தேவைப்படும் பணத்தை அப்படியே தம் கைப்பெட்டியிலிருந்து எடுத்துக் கொடுத்தார். மெய்சிலிர்த்துப் போனேன். அவர்தான், நான் வக்கீல் தொழில் தொடங்கியதும் தம் அலுவலக வளாகத்திலேயே என் அலுவலகம் அமைக்க உதவிய டி.எஸ்.சத்யம். ‘சத்யம் அட்வர்டைஸிங்’ என்ற விளம்பர நிறுவனம் வைத்து நடத்திய அவர் எங்கள் குடும்ப நண்பர். சமீபத்தில் அமரராகிவிட்ட அவர் போன்ற நல்ல உள்ளம் படைத்த நண்பர்களே எனக்கு எப்பொழுதும் உதவிசெய்து வந்திருக்கிறார்கள்.

    5

    “சுருதி நாயகன் வரும் வரும் என்பதோர் துணிவால்” என்று அசோக வனத்தில் சீதை காத்திருந்ததைக் கம்பன் வர்ணித்தது போல், ஒவ்வொரு நாளும் யாராவது வந்து உதவக் காத்திருந்த என் துணிவை எண்ணிப் பார்த்து வியக்கிறேன். இப்படித்தான் வளர்ந்தது ‘ஸ்பரிசம்’ படம்.

    ‘என்னய்யா, மின்னல், கவிதை என்றெல்லாம் அளந்து விட்டு ஏதோ தோசை மாவை அரைத்துக் கொண்டிருக்கிறாய்?’ என்ற கேள்வி தொலைவிலிருந்து என் செவியை எட்டுகிறது. கதை என்று வந்தால் அப்படித்தான் சுற்றி வளைந்து போகும். பொறுமை தேவை.

    சரி, மின்னலுக்கு வருகிறேன்.

    அந்தப் படத்துக்கு இன்னொரு பாடலை அடுத்துப் பதிவு செய்து படம் பிடிக்க வேண்டும். கல்லூரியிலே கதாநாயகனுக்கும், நாயகிக்கும் எப்பொழுதும் சின்ன சின்ன சண்டைகள். இப்படியே பாதிப் படம் போகிறது. நாயகன் செய்த ஒரு விஷமம் நாயகியை மிகவும் பாதித்துவிட அவள் அவனிடம் நிரந்தரமாகக் கோபித்துக் கொண்டுவிட, நாயகன் அவள் மனத்தை மாற்றுவதற்குப் பாட வேண்டும். மறுநாள் அதுபற்றி விவாதிக்க இயக்குநர் சக்தி அழைத்திருந்தார். ஆனால் அதற்குள் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி சத்யதேவ், ஒரு வழக்கில் என்னைக் கமிஷனராக நியமித்து விட்டார். அன்றிரவே நான் தேவகோட்டைக்குச் சென்று அங்கிருந்த வயது முதிர்ந்த ஒருவரைச் சாட்சியாக விசாரித்து வரக் கட்டளையிட்டு விட்டார்.

    இரவு, புகைவண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தேன். மனமெல்லாம் ‘ஸ்பரிசம்’ படத்திலேயே இருந்தது. இரவாகியும் தூக்கம் வரவில்லை. ஜன்னல் வழியே வெளியே பார்த்துக் கொண்டே இருந்தேன். திடீரென்று ஒரு வெட்டு மின்னல் கண்ணைப் பறித்தது. ஜன்னலை சாத்திவிட்டுப் படுத்துக் கொண்டேன். மின்னல் மட்டும் என் மனத்துக்குள் ஆழமாகத் தைத்து, ஊடுருவிச் சென்று, அங்கிருந்து ஒரு பாடலை வரவழைத்து விட்டது. இல்லை, மன்னிக்கவும், அந்தப் பாடலே மின்னலாக உருமாறி என் நெஞ்சில் குடியேறிவிட்டது. அது பல்லவியோடு நின்றுவிட்ட பாடல் போல் இரண்டே வரிகளில் முடிந்து விட்டது. நானும் தூங்கி விட்டேன். தூக்கம் கலைந்த பிறகு, நாளை மேலும் சொல்கிறேனே!

    (தொடரும்)

    புகைப்படத் தகவல்கள்:

    1. வாய்ப்பூட்டு பட பூஜையின் போது கமலுக்கு நான் மாலை அணிவிக்கும் புகைப்படங்கள்

    2. நான் ஸ்பரிசம் படப்பாடல் பதிவு செய்யும் காட்சிகள்.

    3. நானும் இயக்குநர் ஆர்.சி.சக்தியும்

    4. டி.எஸ்.சத்யம் பாரதி விழாவில் டாக்டர் சீர்காழி சிவசிதம்பரத்துக்குப் பரிசு வழங்கும் காட்சி.

    Share
  • திருமால் திருப்புகழ் (128)

    கிரேசி மோகன்

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்
    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ———————————————————-

    ”கண்ணன் வெண்பாக்கள்’’
    ————————————————–

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

     

    சாந்த வதனமும், சர்ப சயனமும்,
    நீந்தும் சரோருக நாபியும், -ஏந்தும்,
    கரங்கள் நான்கும், கருத்த வடிவும்,
    வரங்க(ள்) அளித்திடும் வஸ்து….(283)

    எந்தையே எவ்வுயிர்க்கும், முந்தையே ஏகாந்த,
    சிந்தையே, சிக்காத விந்தையே, -கந்தையே,
    ஆனாலு(ம்) என்நெஞ்சைக், கட்டிக் கசக்கிடு
    தூணாளும் சிங்கா தயவு….(284)

    பூதங் களால்வந்த, ஏதங் களாயிரம்,
    மாதங் களில்நின்ற மார்கழியே, -பாதங்கள்,
    ஓங்க உலகளந்த, உத்தமரே என்குறை,
    நீங்க எனதுள்ளே நில்….(285)

    வீழும் மலையருவி, சூழ்கின்ற வேங்கட,
    ஏழு மலையானை ஏத்துமினோ, -வாழும்,
    கடன்பட்ட மாந்தர்க்கு, கோவிந்த நாமம்,
    புடமிட்டப் பத்தரைப் பொன்….(286)

    ஏங்கா மலிருக்க, ஏங்கு கிறேன்பாம்பில்,
    தூங்காமல் தூங்கும் திருமாலே, -சாங்கிய,
    யோக மதையருள்வாய், யோக்கியதை பார்க்காதே,
    மோகமுள்ளை வைத்ததுன் மாசு….(287)

    நீதான் நானென்றும், நான்தான் நீயென்றும்,
    சேதார மற்றென்றும் சேர்ந்திடுவோம், -ஏதோ,
    இலக்கணம் காட்ட, எழுதவில்லை வெண்பா,
    விலக்கணும் மாய விரிப்பு….(288)

    மூலனே மல்லாண்ட, தோளனே விண்ணளந்த,
    நீளனே, நற்கீதை நூலனே, -மாலனே,
    கோகுல பாலனே, கோதைம ணாளனே,
    ஆகுலம் தீர்த்தென்னை ஆள்….(289)

    ——————————————————————————————————————-

    படங்களுக்கு நன்றி:
    http://kamadenu.blogspot.in/2014_05_01_archive.html
    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    இந்த வார வல்லமையாளர்!

    ஜூன் 30, 2014

    சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலகட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்யப்பட்டவர்

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு  திரு. எல். கனக சுப்பிரமணி  அவர்கள்

    L.Kanaga Subramani
    இவ்வார வல்லமையாளர் விருதிற்குரியவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்  மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி செல்லும் பேருந்தில் நடத்துனராகப் பணிபுரியும் திரு. எல். கனக சுப்பிரமணி அவர்கள்.   கனக சுப்பிரமணியின் தமிழ்ப் பற்று பற்றியும், சமுதாதய அக்கறை பற்றியும் பேஸ்புக் உறுப்பினர்கள் பகிர்ந்து கொண்ட தகவலைப் படித்து வியந்து இவரை வல்லமையாளர் விருதிற்குப்  பரிந்துரைத்தவர் வல்லமையின் நிறுவனர் அண்ணாகண்ணன். அவரது பரிந்துரையை வழிமொழிந்தவர் வல்லமையின் வாசகரும் எழுத்தாளருமான திரு. சொ.வினைதீர்த்தான் அவர்கள்.   

    தினமும் காலையில் எழுந்தவுடன் ஒரு திருக்குறளுக்கு பொருள்விளக்கம் படித்த பின்னரே தனது நாளைத் துவக்குபவர் கனக சுப்பிரமணி.  மேட்டுப்பாளையம்  உதகை வழித்தடத்தில் பேருந்து நடத்துனராக பணிக்குச் செல்லும்பொழுது தன்னுடன் சில தமிழ் நூல்களையும் கொண்டு செல்கிறார்.  வழியில் கல்லாரில் காலை 7:15க்கு பேருந்து நிற்கும்பொழுது, பயணிகளின் கவனத்தை ஓர் இரு நிமிடங்களுக்கு தனக்கு அளிக்குமாறு கோரிக்கை விடுத்து போக்குவரத்து பாதுகாப்பைக் கடைபிடிக்கவும், சுற்றுப்புறச் சூழிலின் தூய்மை அவசியம் பற்றியும் எடுத்துரைக்கிறார்.  “ஓடும் பேருந்தில் ஏறாதீர்கள், மரங்களை நட முடியாவிட்டாலும் சரி, அவற்றை அழிக்காதீர்கள், குப்பை போடாதீர்கள், குருதிக் கொடை அளியுங்கள்” போன்ற அறிவுரைகளைக் கூறுகிறார்.

    அத்துடன் தினம் ஒரு திருக்குறளைத் தேர்ந்தெடுத்து அதற்கு பொருள் விளக்கமும் அளிக்கிறார்.  அன்று பயணிகளில் யாருக்காவது பிறந்தநாளாகவோ, திருமணநாளாகவோ இருந்தால் வாழ்த்துகளுடன் தன்னுடன் எடுத்துச் சென்ற திருக்குறள் நூல்களை பரிசாக அளிக்கிறார்.  யாருக்கும் அன்றைய நாள் அவ்வாறான  சிறப்பு நாள்களில் ஒன்றாக அமையாவிட்டால், அந்த நூல்களை பயணிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள், காவல்துறையினர்  யாரேனும் இருந்தால் அவர்களுக்கு அளிக்கிறார். பயணிகள் யாரேனும் பணியில் இருந்து ஓய்வு பெறும் நாளாக இருந்தால் அவர்களைப் பாராட்டி வாழ்த்தவும் செய்கிறார். பேருந்தில் எழுதியிருக்கும் குறளை சுட்டிக் காட்டிய பயணி ஒருவர், இக்குறளின் பொருள் என்னவென்று நடத்துனருக்கோ ஓட்டுனருக்கோ தெரியுமா என்று ஒருமுறை கேட்ட பொழுது தினம் ஒரு குறள் என்ற கொள்கையைத் துவக்கி இருக்கிறார் இவர்.

    தினசரி வாழ்க்கையில் பலவித மக்களை எதிர்கொண்டு சேவை செய்யும் முன்னணி பணியாளர்களுக்கு அது மிகவும் மனஅழுத்தம் தரும் பணியாகவே இருக்கும்.  நடத்துனர் பணியிலும்  அவ்வாறே பலவித உணர்வுகள்  கொண்ட மக்களை எதிர் கொள்ளும்பொழுது இன்முகத்துடன் பணியாற்றுவது என்பது  ஒரு சவாலாக அமைந்துவிடும்.  இந்தச் சூழ்நிலையிலும்  சமுதாயப்பணிக்கும், தமிழ்ப் பணிக்கும் ஓர் இரண்டு நிமிட நேரத்தை ஒதுக்கி பயணிகள் வாழ்வில் ஒரு மாற்றத்தை உருவாக்க விரும்புகிறார் கனக சுப்பிரமணி. இதனை தினமும் பத்தாண்டுகளுக்கு மேலாகவும் செய்து வருகிறார் எனபது மிகவும் வியப்பளிக்கும் செய்தி. கனக சுப்பிரமணியைப் பொறுத்தவரை பேருந்துப் பயணமாக இருந்தாலும் அதன் வழியே பயணிகள் கல்வி, தகவல் ஆகியவற்றைப் பெற்று அவர்களுக்கு அது  வசதியான பயணமாக அமைய வேண்டும். கனக சுப்பிரமணிக்கு  அவரது பயணிகள் அவரது குடும்ப உறுப்பினர்கள் போல.

    கோவை மத்தியச் சிறைச்சாலை கைதிகளுக்காக “செந்தமிழ் அறக்கட்டளை” என்ற அறக்கட்டளை ஒன்றைத் துவக்கி ஓய்வு நேரங்களில் கைதிகளின் மறுவாழ்விற்கு உதவும் வகையில் அவர்களுக்கு ஆக்கப்பூர்வமான  வழிகளில் பணியாற்றுகிறார்.  இசை வகுப்புகள், பேச்சுப் போட்டிகள் போன்றவற்றை நடத்தி பரிசு வழங்குதலை  தனது அறக்கட்டளை வழியாகச் செய்கிறார். இதுபோன்ற சமுதாயச் சேவைகள் செய்வதற்கு தனது ஆசிரியர் அற்புதராஜும், மக்கள் திலகமும் முன்னோடிகள் என இவர் கூறுகிறார்.   இளமைக்காலத்தில், சிரமமான காலங்களில் இவரது  ஆசிரியர் அற்புதராஜ்  அவர்கள் இவருக்கு  உணவும் உடையும் அளித்து  பராமரித்ததை நன்றியுடன் நினைவு கூர்கிறார்.   உற்சாகமூட்டும் உரைகள் வழங்குவதையும் ஊக்கமூட்டும் செயல்கள் செய்வதையும் தனது கடமையாகக் கருதி வரும் கனக சுப்பிரமணி எம்.ஜி.ஆர் அவர்களை தனது சிறந்த வழிகாட்டியாகக் கருதுகிறார். மக்கள் திலகத்தின் தீவிர ரசிகரான இவருக்குப் பிடித்த பாட்டு “தாயில்லாமல் நானில்லை”. இதனைக் கைதிகளுக்காக இவர் பாடுவதும் உண்டு.   எம்.ஜி.ஆர்  பாடல்களில் ஒன்றினை எப்பொழுதும் தனது உரைகளில் ஒரு பகுதியாக்கிக் கொள்கிறார்.

    தனது தமிழார்வத்தையும், சமுதாய அக்கறையையும் இணைத்து தனது தினசரி வாழ்வில் ஒரு சிலர் வாழ்விலாவது மாற்றம் கொண்டுவர விரும்பி தொடர்ந்து ஆர்வமுடன் செயலாற்றும்  கனக சுப்பிரமணி  அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.
    (இவரைப் பாராட்ட விரும்புவோர் கவனத்திற்கு,  இவரது தொலைபேசி எண்:  96009-87811)

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

     

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

     

     

     

    படம்  மற்றும்  தகவல்கள் இந்து நாளிதழில் இருந்து பெறப்பட்டது. நன்றி இந்து.
    http://www.thehindu.com/features/metroplus/from-tickets-to-the-thirukkural/article2896247.ece

    Share