Blog

  • “நான்” ஒரு விளையாட்டுப்பிள்ளையா?

    இன்னம்பூரான்.

    psychologyஇந்த மனசு ஆகப்பட்டது லோகசஞ்சாரம் செய்தபடியே இருக்கிறது, நாரத முனி போல. பிரபஞ்சம் முழுதும் இந்த சஞ்சாரம். நாரதரின் பூமாலைகளைப் போல சிந்தனை சூழல் அதற்கு அலங்காரம். சிந்தனையை ‘நல்லதொரு வீணையில்’ எஸ். பாலசந்தர் போல் ரீங்காரித்தால், அந்த ஒலியும் இசையும்  தத்துவம் பேசும் என்பதால், நாரத வீணை பொருத்தமான உவமை. தனம்மாள், ஏமனி, சிட்டிபாபு, காயத்ரி ஆகியோரை விட்டு விட்டு எஸ். பாலசந்தரை உவமை செய்வானேன் என்பர், சிலர். அவர் ‘நான் ஒரு விளையாட்டுப்பிள்ளையாக…’ தனக்குத்தானே குருவாக இருந்து, வீணை கற்றுக்கொண்டவர் என்பதால், அவரொரு உவமையானார். நாரதரின் இசைக்கருவியை ‘ஏக்தாரா’ எனப்படும் தம்புரு என்பர், சிலர். அதனால் காரியம் கெட்டுப்போகவில்லை. அதனுடைய கருமமே தப்புத்தாளத்தைத் தவிர்ப்பதே. மனது விகாரம் (தப்புத்தாளம்) அடைவதை நாம் அன்றாடம் காண்கிறோம். அது நீக்கப்படவேண்டும். உவமை இங்கும் பொருத்தமாக அமைகிறது.

    இந்தத் தொடரை வல்லமை இதழில் எழுதத் தூண்டியது ஒரு நூல்: Dainton,B (2014) Self: London: Penguin.

    அது பிரசுரம் ஆனதே ஏப்ரல் 24, 2014. ‘Self’ என்ற சொல்லை, இப்போதைக்கு ‘விளையாட்டுப்பிள்ளையாகிய நான்’ என்று மொழியாக்கம் செய்கிறேன். பிறகு நீயோ, நானோ அதை மாற்றிக்கொள்ளலாம். லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் தத்துவப் பேராசிரியராக இருக்கும் டைய்ண்டன் உம்முடைய ‘நான்’ என்பது என்ன, அதனுடைய போக்குவரத்தை கண்காணிப்பது எப்படி என்பதை விளக்கிவிட்டு, அது உமது உடலுக்கு வெளியே இயங்கக்கூடும் என்று குண்டு போட்டதல்லாமல், அப்பவும் அதை கண்காணிக்கமுடியும் என்கிறார். (புத்தகம் இன்னும் கைக்கு வரவில்லை. அதற்குள் என்னுடைய ‘நான்’ அவசரப்படுகிறது!). உள்ளுறை மனதை (“core self”) பற்றி அவர் அலசுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னாலேயே ‘உவமப் பொருளின் உற்றது உணரும் தெளிமருங்கு உளவே திறத்து இயலான’ (தொல்காப்பியம் 1241) என்று உள்ளுறை உவமத்தை குறிப்பிட்டு, அதை உய்த்துணரவேண்டும் என்று தொல்காப்பியர் கூறியது நோக்கற்பாலது. உய்த்துணர மனம் வேண்டுமே. இங்கு இரு பொருள்: 1. விருப்பமிருந்தால் தான் உய்த்துணர முயல்வோம். 2. உய்த்துணரும் ஆற்றல் அந்த உள்ளுறை மனதுக்குத்தான் (“core self”) உண்டு. இந்த ‘இருபொருள்’ வியாக்யானமே ஒரு சிக்கல். ஆற்றலிருந்தால், விருப்பம் தானே கைகட்டி வரும்; ஆற்றல் இல்லையேல் விருப்பம் கை கூடி வராது. அதற்கு பிறகு வருவோம். அலசும் நூல்களுக்கு பஞ்சமில்லை.

    தீடீரென்று  உழலும் இந்த மனதை நாடியதற்கு வேறு ஒரு காரணமும் உண்டு. நம்மில் எவருக்கும் எல்லா காலகட்டங்களிலும் மனது ‘ஸ்திதபிரதிஞ்னனாக’ மாறாமல் இருந்தது இல்லை. போதாக்குறைக்கு, எல்லாரும் இன்னாட்டு மன்னர் என்ற வகையில் எல்லோரும் மனோநல நிபுணர்கள்! (‘உளவியல்’ என்ற சொல்லை நான் பயன்படுத்துவதில்லை.) தொலைக்காட்சியில் காணக்கிடைக்கும் மனோநல தலையீடுகளை (அதுவும் பெண்களை ‘ங’ போல் வளைய சொல்பவை) கண்டு அஞ்சுகிறேன். மனோநலம் என்ற துறை சாமான்யமானது இல்லை. மற்ற துறைகளைப்போல அதிலும் வெவ்வேறு அணுகுமுறைகள் உள்ளன. அது மட்டுமல்ல. குறைந்தது மூன்று வகை நிபுணர்கள் – மனோநல ஆலோசகர் [Psychologist], மனோநல வைத்தியர் [Psychiatrist], மனோநல உள்ளுறை ஆலோசகர் [Therapist]. இந்த நுட்பங்களை அறியாமல் உளவியல் களவியல் நடைபெறுவது மனத்தை வருத்தும் பாதகமான நிகழ்வுகள்.

    தத்துவம் போல் ‘நான்’ எனப்படுவோர்க்கு உதவுவது எதுவும் இல்லை, அது பித்து போல் மாயத்தோற்றம் அளித்தாலும்.

    ‘நான்’ என்பது முழுபரிமாணத்தில் இயங்குவதை ‘அவனே’ அறிவான். அஃறிணையான மரத்தில் பட்டைச்சத்து மட்டும் உள்ளது. விலங்கினத்துக்கு பிரஞ்ஞை என்ற நினவாற்றல் உண்டு. ‘நான்’ என்பது மனிதனுக்கு மேலும் விளங்கும்; ஏனெனில் அவனுக்கு புத்திக்கூர்மை உண்டு. அவன் நாளையைப் பற்றி அறிவான். உலகை அறிவான்; எது உலகில்லை என்றும் புரிந்து கொள்வான். நிலையாமையிலிருந்து அவன் இறவா வரம் தேடுவான்.. விலங்கினத்துக்கு பசியும் தாகமும் மட்டுமே தெரியும். ஆனால் மனிதனோ ஆழ்கடல். உலகுக்கு அவனே எஜமானன். அவன் தான் எதை அடைந்தாலும் அத்துடன் நிற்காமல், அதன் எல்லையைக் கடக்க விரும்புவான்.

    சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்டதை ஆங்கிலமாக்கி, அதை எளிய தமிழாக்கம் செய்யும் போது, நுட்பங்கள் மறைந்து போய்விடலாம். இப்போதைக்கு, நூலில் உள்ள ஆங்கில மொழியாக்கம் இங்கே: எல்லாரும் சேர்ந்து நுட்பங்களைத் தேடுவோமே.

    He who knows more and more clearly the self obtains fuller being. In plants and trees sap only is seen, in animals conciousness. The self is more and more clear in man for he is most endowed with intelligence. He knows tomorrow, he knows the world and what is not the world.  By the mortal, he desires the immortal, being thus endowed.  As for animals , hunger and thirst comprise their knowledge. But  this man is the sea, he is above all the world. Whatever he reaches, he desires to go beyond it. ‘Aitareya Aranyaka II.1.3
    Radhakrishnan.S. (1953) The Principal Upanishads: London: George  Allen & Unwin P.91

    இன்னம்பூரான்
    27 06 2014

    http://innamburan.blogspot.co.uk
    http://innamburan.blogspot.de/view/magazine
    www.olitamizh.com

    சித்திரத்துக்கு நன்றி: http://thumb10.shutterstock.com/display_pic_with_logo/536893/125305433/stock-photo-concept-psychology-color-doodle-icons-and-symbols-125305433.jpg

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 125

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 11: காடுகாண் காதை

    தெய்வம் மந்திர வலிமைக்கு ஆற்றாது, உண்மை உரைத்து நீங்குதல்

    பாய்ந்து செல்லும் கலைமானை
    ஊர்தியாக உடைய கொற்றவை மந்திரத்தைத்           kotravai
    தன் வாயால் ஓதினான் கோவலன்.

    அதைக் கண்டு அஞ்சிய அம்மாயத்தெய்வம்,
    “நான் இவ்வனத்தில் திரியும் வனதேவதை;
    உம்மீது மோகமுற்று உமை மயக்க எண்ணினேன்.
    என் பிழை பொறுத்திடுக.
    கானமயில் போன்ற மென்மையான உன் மனைவியிடத்தும்
    புண்ணியம் செய்திட்ட தவத்திரு கவந்தியடிகளிடத்தும்
    நான் செய்த இப்பிழை பற்றிக் கூறாது பொறுத்தருள்க!”
    என்று வேண்டிக் கொண்டு மறைந்து விட்டது.

    கோவலன் தாமரை இலையில் தண்ணீர் கொணர்ந்து, கண்ணகியின் தாகத்தைத் தீர்த்தல்

    தன் தாகம் தணித்த கோவலன்,
    பசிய தாமரை இலையில்
    தண்ணீர் கொண்டு வந்து
    களைப்புற்றிருந்த கவுந்தியடிகளுக்கும்
    கண்ணகிக்கும் தந்து
    அவர்தம் துயர் நீக்கினான்.

    வெயிலின் வெம்மை மிகுதலால் கானத்தில் செல்லுதல் அரிது என்று அண்மையிலுள்ள ஐயை கோட்டத்தை மூவரும் அடைதல்

    வானின் மீது செல்லும் ஞாயிறு
    தன் வெம்மையினைப் பரவச் செய்ததால்
    தீமைகள் மிக நிரம்பிய
    இக்காட்டு வழியில் செல்லுதல் கடினம் என்று கருதி,
    கோவலன் கவுந்தியடிகளுடனும்,
    வளைந்த காதணிகளை அணிந்த கண்ணகியுடனும்,
    மயக்கத்தைத் தரக்கூடிய
    கொடிய வழிகளையுடைய
    அப்பாலை நிலத்தின்கண்
    குரா வெண்கடம்பு கோங்கை வேம்பு மரங்களைக்
    கொண்ட பூஞ்சோலை ஒன்றினுள் புகுந்தனன்.

    மழைதரும் வளத்தைப் பெற்றிடாத
    அவ்விடத்தில் வாழ்ந்திருந்த மறவர்
    வழிப்போக்கரை வில்லைக் கொண்டு
    அச்சுறுத்திக் கவர்ந்த
    பொருட்களின் வளமே வாய்க்கப் பெற்றிருந்தனர்.

    கூற்றுவனை ஒத்த வலிமையுடைய அம்மறவர்கள்
    தம் கையில் வளைந்த வில்லேந்தி,
    பகைவர்களை வென்றிட விரும்பி
    அங்கே எழுந்தருளியுள்ள கொற்றவையை
    வணங்கிச் செல்வர்.
    வென்றதும், அதற்கு விலையாகத்
    தங்களது தலைகளையே அறுத்து
    அத்தெய்வத்துக்குப் பலியிட்டு
    நேர்த்திக் கடன் செலுத்துவர்.

    அப்பலியை எதிர்நோக்கிக் காத்திருக்கும்
    கொற்றவை, நெற்றியில் கண்ணுடைய குமரி;
    தேவர்களே போற்றிடும் பாவை;
    குற்றமற்ற சிறப்புடைய விண்ணுலகை ஆள்பவள்.
    அத்தகைய கொற்றவையின் கோயிலை
    மூவரும் அடைந்தனர்.

    (காடு காண் காதை முற்றியது; அடுத்து வருவது வேட்டுவ வரி)

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:  196 –  216
    *http://www.chennailibrary.com/**iymperumkappiangal/**silapathikaram6.html*
    <http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram6.html>

    Share
  • காற்று வாங்கப் போனேன் – பகுதி 14

    கே.ரவி

    கவிஞருடன் மூன்றாவது சந்திப்பு நிகழ்ந்தது 1972 இறுதியிலோ, 1973 தொடக்கத்திலோ என்று நினைக்கிறேன்.

    நான் பிறந்ததிலிருந்தே என்னையும், என் மூத்த சகோதரி நந்தினியையும் என் அத்தையின் கணவர் ஆர்.கல்யாணராமனும், அவருடைய இரு மனைவியரும் வளர்த்து வந்தனர். கல்யாணராமன் திரைபடத் தயாரிப்பாளர். சகோதரி பத்மா சுப்ரமணியம் அவர்களின் தந்தையார் கே.சுப்ரமணிய அய்யருடைய குருகுல வாசத்தில் பயின்ற திரைப்படத் தயாரிப்பாளர் அவர்.

    1940-களில் திரைப்படத் துறையின் முன்னணி விநியோகஸ்தராகத் திருச்சியில் கல்யாணராமன் தம்மை நிறுவிக் கொண்டார். பிறகு, 1953-ல் நான் பிறந்த பிறகு தம் குடும்பத்தோடு சென்னைக்குக் குடிபெயர்ந்து வந்து மொழிமாற்றுத் துறையில், அதாவது வேறு மொழிப்படங்களைத் தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டு வெற்றி கண்டார். முதன்முதலாக, பம்பாய் (அதன் பூர்வாஸ்ரமப் பெயர்) ஹோமி வாடியாவின் ஹிந்திப் படமான, மாயா ஜாலங்கள் நிறைந்த ஹாதிம்தாய் என்ற படத்தைத் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டு நல்ல பணம் சம்பாதித்தார். அதற்கு முன் தமிழில் ஏதாவது மொழிமாற்றுப் படங்கள் வந்திருந்தனவா என்று ராண்டார்கையிடம் தான் கேட்க வேண்டும். அடுத்து ஒரு கன்னடப் படம். சரோஜாதேவி அம்மையார், ஹொன்னப்ப பாகவதர் நடித்த ‘மஹாகவி காளிதாஸ்’. அதைத் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டார். தெலுங்கில் என்.டி.ராமராவ், அஞ்சலிதேவி நடித்த வெற்றிப் படமான ரேசுகாவை மொழிமாற்றம் செய்து, “நாட்டியதாரா” என்ற பெயரில் எம்.ஜி.ஆர்., சிவாஜி நடித்த பெரிய படங்கள் வெளியான அதே நாளில் திரையிட்டார். அதன் வசனம் முழுப்பொறுப்பையும் திரு.ஆரூர்தாஸ் தான் எங்கள் அலுவலகத்திலேயே தங்கியிருந்து செய்து கொடுத்தார். பலத்த போட்டிகளுக்கு நடுவே அந்தப் படம் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது.

    ravi1

    k.rஇந்தச் சமயத்தில் கல்யாணராமன், அவரை மாமா என்றுதான் நான் அழைப்பேன், மாமா அன்றைய பிரபல திரைப்படப் பாடலாசிரியர் தஞ்சை ராமையா தாஸ் அவர்களோடு நெருங்கிப் பழகி வந்தார். மாமாவுக்குத் தமிழில் தேர்ச்சி இல்லாவிட்டாலும் எப்படியோ கவிஞர்களிடம் மிகுந்த ஈடுபாடு இருந்தது. அதனால்தான் நான் சென்னை கோஷா ஆஸ்பத்திரியில் 13-01-1953-ல் பிறந்த செய்தி திருச்சியிலிருந்த அவருக்கு மறுநாள் கிடைத்ததும், அன்று சூரிய வழிபாட்டு நாள் என்பதால் எனக்கு ‘ரவி’ என்று அவர்தான் பெயர் சூட்டினார். (மஹாகவி காளிதாஸ் டப்பிங் படம் வெளியிட்ட போது பிறந்த என் தம்பிக்குக் காளிதாஸ் என்று பெயர் சூட்டியவரும் அவரே). எனக்கு ரவி என்று அவர் பெயர் சூட்டிவிட்டுச் சொன்னாராம்: “பையன் ரவீந்திரநாத் தாகூரைப் போல் பெரிய கவியாக வருவான்”. இந்தக் கதையை எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே என் அத்தைகள் ஸ்வர்ணாம்பாளும், அலங்காரவல்லி என்ற சரஸ்வதியும் சொல்லிச் சொல்லி என்னை வளர்த்த காரணத்தினாலோ என்னவோ நான் கவிதைப் பைத்தியமாக வளர்ந்தேன். மேலும், 2000-ஆம் ஆண்டில் என் முதல் கவிதை நூல், “உன்னோடு நான்” முழுக்கப் படித்துவிட்டு, இன்று நம்மிடையே வாழும் ரசிகமணியாக இருக்கும் பாரதி சுராஜ் அவர்கள் அந்தக் கவிதை நூலை “இன்னொரு கீதாஞ்சலி” என்று எழுதிப் பாராட்டிய பேறு பெற்றேன். யார் கண்டார்கள், கவிதைக்கான நொபெல் பரிசு காத்திருக்கிறதோ என்னவோ! வரட்டுமே!

    கவிஞரை மூன்றாவது முறை சந்தித்த கதைக்கு வாப்பா என்று நீங்கள் எல்லாரும் ஒருமனதாக என் மனத்துக்குள் முணுமுணுக்கும் பேரிரைச்சல் கேட்கிறது. கொஞ்சம் பொறுத்திருங்கள்.

    திருச்சியில் என் சகோதரி பெயரில் ‘நந்தினி பிக்சர்ஸ்’, நான் பிறந்த பிறகு ‘ரவி பிலிம்ஸ்’ ஆகிய திரைப்பட விநியோக நிறுவனங்களை நிறுவிப் பெரும் வெற்றியடைந்த மாமா, நான் பிறந்த மூன்றாண்டுகளில் சென்னைக்குக் குடியேறி டப்பிங் படங்கள் எடுத்து வெற்றி கண்ட செய்தியைச் சொல்லி விட்டேன். சொந்தமாகப் படம் தயாரிக்க நினைத்தார் மாமா. தம் நண்பர் தஞ்சை என்.ராமையாதாஸ் பெயரின் முதலெழுத்துகளைக் கொண்டே ‘டி.என்.ஆர் புரொடக்ஷன்ஸ்’ என்ற நிறுவனம் தொடங்கி, முதல் படமாக ‘லலிதாங்கி’ என்ற திரைப்படத்தை எடுக்கத் திட்டமிட்டார். அவருடைய நெருங்கிய நண்பர் எம்.ஜி.ஆர் அவர்களுடன் ராஜசுலோசனா அம்மையார் நடிக்கப் படம் வேகமாக வளரத் தொடங்கியது. பாதிப் படம் தயாரித்து முடிந்து விட்டிருந்த கட்டத்தில், அரசனான கதாநாயகன், துறவறம் பூண்டு மெய்ஞான மார்க்கத்தில் ஈடுபடுவதாகக் கதை அமைந்திருந்ததால், நடராஜர் சிலைக்கு முன் கதாநாயகன் எம்.ஜி.ஆர் பாட வேண்டும் என்ற நிலை உருவானது. அப்போது கடவுள் மறுப்பு இயக்கத்தில் தீவிரமாக, அரசியல் ரீதியாக எம்.ஜி.ஆர் ஈடுபட்டிருந்தார். அவருக்காகவே ராமையாதாஸ் அருமையான பல்லவி எழுதியிருந்தார்.

    “ஆண்டவனே இல்லையே!”

    இந்தப் பல்லவிக்குத் தம்பிகள் எப்படி விசில் அடிப்பார்கள்! ஆனால், விசில் அடிக்கப் போகும் தம்பிகளுக்குத் தலையில் அடிப்பது போல் அடுத்த அடி எழுதியிருந்தார்.

    ஆண்டவனே இல்லையே – தில்லைத்
    தாண்டவனே உன்போல் தாரணி மீதினிலே
    ஆண்டவனே இல்லையே”

    எம்.ஜி.ஆர் நடிக்கத் தயங்கினார். தம் அரசியல் வாழ்க்கைக்கு இந்தக் காட்சி குறுக்கீடாக அமையும் என்று அவர் கருதினார். பெரும் பொருட்செலவில் செட் போடப்பட்டு சில நாட்கள் ஆகியும் எம்.ஜி.ஆர் ஒப்புக் கொள்ளவில்லை. ‘தில்லைத் தாண்டவனே’ என்பதற்கு பதில் ‘உதய சூரியனே’ என்று பாடலாமே என்று சமரசம் பேசினாராம் எம்.ஜி.ஆர். மாமா தீவிர பக்தர். சமரசத்தை நிராகரித்தார். கவியின் வார்த்தைகளை மாற்ற நமக்கு உரிமையில்லை என்று எம்.ஜி.ஆரிடம் சொல்லி விட்டு அடுத்த நாளே நடிகர் திலகம் சிவாஜி கணேசனை வைத்து அந்தப் பாடல் காட்சியைப் படமாக்கி முதலில் இருந்து எம்.ஜி.ஆர் நடித்த காட்சிகளை நீக்கி விட்டு மீண்டும் சிவாஜியை வைத்து ‘ராணி லலிதாங்கி’ என்று மாற்றிப் படாமாக்கி வெளியிட்டார். அவர் துணிச்சலைப் பின்னாளில் எம்.ஜி.ஆரே பாராட்டினார் என்பது வேறு கதை.

    கொள்கைக்காக மாமா பலத்த நஷ்டத்தை ஏற்றுக் கொண்டார். அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆர்-பானுமதி என்றே படங்கள் வந்து கொண்டிருந்த நிலையிலும், துணிந்து சிவாஜியுடன் நடித்துக் கொடுத்ததால், பானுமதி அம்மையாருக்கு நாடோடி மன்னன் படத்தில் இருந்து பாதியில் வெளியேற வேண்டியதாயிற்று. மாமாவால் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு, மாமாவின் ஆதரவிலேயே வசித்து வந்து, அவர் மூலம் கே.சுப்பிரமணியம் தயாரித்து வந்த ‘கச்ச தேவயானை’ படத்தில் நடித்து வந்த சரோஜாதேவி அம்மையாருக்கு நாடோடி மன்னனில் நுழைய வாய்ப்புக் கிட்டியது.

    6b71a6a4-fc34-4b3d-9fe6-50ced8973dd9_S_secvpf (1)

    ராணி லலிதாங்கி நஷ்டத்தால் பாதிக்கப்பட்ட மாமா, ரஞ்சனையும், இன்னொரு பிரபல நடிகையையும் வைத்து ‘மின்னல் வீரன்’ என்ற படம் எடுத்தார். தலைப்புச் செய்தி, நான் அதில் குட்டி ரஞ்சனாக நடித்தேன். அதுவும் வியாபார ரீதியில் நஷ்டம் ஏற்படுத்தியது. இந்த நஷ்டங்களுக்கெல்லாம் பிறகு, 1970-ஆம் ஆண்டு, மாமா மீண்டும் படத்தயாரிப்பில் ஈடுபட்டார். டி.எம்.செளந்திரராஜன், வெண்ணிற ஆடை நிர்மலா நடிக்க அவர் ‘கவிராஜ காளமேகம்’ படம் எடுத்த போதுதான் கவிஞரோடு என் மூன்றாவது சந்திப்பு நேர்ந்தது.

    மந்தைவெளி, மேற்கு சர்குலர் சாலையில் இருந்த அலுவலகத்தில் ஒருநாள், கவிராஜ காளமேகம் படத்துக்கான அடுத்த பாடல் காட்சி பற்றி விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. திருவரங்கம் பெருமாள் கோவிலில் வைணவ பட்டராக உக்ராண அறையில் பணிசெய்து கொண்டிருந்தவனுக்கு அம்பிகை அருள் செய்ய, உடனே இம்மென்றால் எழுநூறும் அம்மென்றால் ஆயிரமும் பாடல் பொழியும் ஆசுகவி காளமேகமாக மாறிய புலவனிடம், திருவானைக்கா தாசி மோகனாங்கி காதல் வயப்பட்டது பற்றி ஊரெல்லாம் வம்பு தும்பு பேசக் கேட்டு, ( “ஊரார் அலர் உரைக்கக் கேட்டு”, புரிகிறதா?), அதனால் அவளை வீட்டுக் காவலிலேயே வைத்து விடுகிறாள் அவள் அன்னை. அந்தச் சூழ்நிலையில், திருவானைக்கா கோவிலில் மோகனாங்கி நடனம் ஆட வேண்டிய நாள் வருகிறது. அந்த நடனத்துக்கான பாடலைக் கவிஞரிடமிருந்து எதிர்பார்த்தபடி நாங்கள் அலுவலகத்தில் காத்திருக்கிறோம். நாங்கள் என்றால், தயாரிப்பாளரான என் வளர்ப்புத் தந்தை, பட இயக்குநர் ஜி.ஆர்.நாதன், சிங்கப் பிடறி போல் நீண்ட, ஆனால், தும்பைப்பூப் போல் வெளுத்த தலைமுடியோடு அமர்ந்திருக்கும் வசனகர்த்தா ஏ.எல்.நாராயணன் ஆகியோர். வசனகர்த்தாவின் உதவியாளர் கவிஞரிடமிருந்து பாடல் பெற்று அலுவலகம் வந்து கொண்டிருந்ததாகச் செய்தி வந்திருக்கிறது. எல்லாரும் ஆவலோடு காத்திருக்கிறோம்.

    பாடலுடன் உதவியாளர் வருகிறார். பாடலை வாங்கி, ஏ.எல்.நாராயணன் உரக்கப் படிக்கிறார்.

    கேளுங்கள் பெரியோர்களே – மனது
    கீழ்க்குல மாயில்லை மேற்குல மாஎன்று
    கேளுங்கள் பெரியோர்களே.”

    ravi2அதற்கு மேல் அவர் படிப்பது என் செவியில் ஏறவில்லை. அவரும், இயக்குநரும் பாடலைப் புகழ்ந்துவிட்டு மேற்கொண்டு விவாதத்தைத் தொடர, நான் மெளனமாக அமர்ந்திருக்கிறேன். திடீரென்று, விவாதமும் நிற்கிறது. ஏ.எல்.நாராயணன் என்னைப் பார்த்துக் கேட்கிறார், “என்ன ரவி, ஒண்ணும் சொல்லலே. பாட்டு நல்லா இல்லியா?” கவிஞர் பாட்டு நன்றாக இல்லை என்று சொல்ல நான் யார்? மெதுவாகச் சொல்கிறேன், “நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், ‘கேளுங்கள் பெரியோர்களே’ என்ற பல்லவி ஏதோ ஓட்டுக் கேட்பது போல் இருக்கிறது.” இப்படி நான் சொல்லி முடிக்கும் முன் எம்.ஜி.எம். சிங்கம் போல் கர்ஜனை ஒலியோடு, பிடறி சிலிர்த்துக் கொண்டு எழுகிறார் நாராயணன். என் கையைப் பிடித்துத் தரதரவென்று இழுத்துச் சென்று காரில் ஏறச் சொல்கிறார். ‘கவிதா ஹோட்டலுக்கு விடு’ என்று ஓட்டுநரை விரட்டுகிறார்.

    கவிதா ஹோட்டல், அந்த அறையில் நுழைகிறோம். கட்டிலின் மேல் மதுசூதனனாக, மப்பும் மந்தாரமுமாய்க் கவிஞர் அமர்ந்திருக்கிறார். “என்ன ஆலநா?” என்று கவிஞர் கேட்கிறார். ஏ.எல்.நாராயணனைக் கவிஞர் அப்படித்தான் அழைப்பாராம். “வெட்கம் கவிஞரே. உங்க பாட்டை இந்தச் சின்னப் பையன் ஓட்டுக் கேக்கற மாதிரி இருக்குன்னு சொல்லிட்டானே!” என்று சொல்லி விட்டுப் பாட்டுத் தாளைக் கவிஞரிடம் நீட்டுகிறார். வாங்கிப் படித்துவிட்டுக் கவிஞர், “இப்ப என்ன வேணும்? ஆலநா, நீயே ஒரு பல்லவி சொல்லு” என்றதும், அந்தச் சிங்கப் பிடறி சிலிர்த்துக் கொள்கிறது. சிங்கம் சொல்கிறது: “யாராக இருந்தால் என்ன?” உடனே கவிஞர் பதிலுக்குச் சொல்ல உதவியாளர் எழுதுகிறார்: ” இதில் அரசனெனெ இல்லை ஆண்டியென்ன யாராக இருந்தால் என்ன”. மடமடவென்று அடுத்த வரிகளை ஆலநாவும், கவிஞரும் மாற்றி மாற்றிச் சொல்லப் பாடல் வளர்கிறது:

    “யாராக இருந்தால் என்ன
    இதில் அரசனெனெ இல்லை ஆண்டியென்ன
    யாராக இருந்தால் என்ன

    சிவனுக்கு உமையென்ன அத்தை மகளா – அவன்
    மகனுக்குத் தெய்வானை மாமன் மகளா
    இறைவனின் வீட்டினிலும் ஜாதியில்லையே – இதை
    எம்மிடம் கேட்க ஒரு நீதியில்லையே”.

    நான் ஸ்தம்பித்துப்போய் அமர்ந்திருக்கிறேன். அந்தப் பாடல் பெற்ற ஸ்தலம், அதாவது கவிதா ஹோட்டல் அறை, இன்னும் என் மனத்திரையில் காட்சியாகப் பதிந்திருக்கிறது. ஆலநாவையும், கவிஞரையும் கவிதை சொல்ல வைத்த மூல நாவான கலைமகளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.

    அந்தப் பாடலை அத்திரைப்படத்தின் இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவின் இனிய இசையில், கல்யாணி ராகத்தில் பி.சுசீலா அம்மாவின் தேன் குரலில் கேட்கவும், அதற்கு வெண்ணிற ஆடை நிர்மலாவின் நடனக் காட்சியைப் பார்க்கவும் யூ ட்யூபில் அந்தப் பாடல் பதிவு மட்டும் கிடைக்கவில்லை. படத்தின் மற்ற பாடல்கள் உள்ளன.

    சிறுகூடற்பட்டி முத்தையாவுடன் (அதாங்க, கவிஞர்) மூன்று சந்திப்புகள் என்ற கதை முற்றுப் பெறுகிறது. வாலிபக் கவிஞர் வாலியை விட்டுவிட முடியுமா? அவரோடு என் சந்திப்புகளை அப்புறம் சொல்கிறேனே!

    (தொடரும்)

    Share
  • அழகி

    -வி.த.தமிழினி

    azhakiமுகமறியா ஊரில்…சேர்ந்த புதிய வேலையில் ஏற்படும் தனிமையில் தான் அவள் எனக்குப் பழக்கமானாள். பார்த்தவுடன் கொள்ளை கொள்ளும் அழகு கிடையாது அவளுக்கு. ஆனால் அப்பழுக்கற்றவள்…அவளுக்கும் எனக்குமான உறவு பலரின் சுயநலத்துக்குள்ளாகி விரோதத்தில்தான் ஆரம்பித்திருக்க வேண்டும். எத்தனை எத்தனை முகங்களை நாங்கள் கடந்திருக்க வேண்டும்.  அவளுக்கு நான் போட்டியாய்…எனக்கு அவளைப் போட்டியாய் மாற்ற வைக்க எத்தனை முகங்களை மாற்றியிருப்பார்கள் அந்த நிறுவனத்தில்… அத்தனைக்கும் காரணமாய் அந்த டார்கெட் மட்டுமே இருந்திருக்க வேண்டும். அத்தனை முகங்களைத் தாண்டியும் என்னைச் சகோதரியாய் ஏற்றுக் கொள்ள எப்படி முடிந்தது அவளால்? ஆம்.  பெண்களின் மனதை மனிதத்தை நிறுவனங்கள் எப்படிப் பயன்படுத்தும் என்பதில் அனுபவம் இல்லாதவள் நான்.

    ஏதோ ஓர் நாள் பிறந்த நாளென அவள்  நீட்டிய மிட்டாயை வாங்கிக் கொண்டு ஒப்புக்குச் சப்பாய்  நானும் வாழ்த்தியது இன்னும் நினைவிலிருக்கத்தான் செய்கிறது. மாத இறுதி சமயமானதால் அவளுக்கு விடுப்புக் கிடைக்கவில்லை. அவளும் ஏனோ கேட்கவில்லை. கிளம்பும் சமயம் “அக்கா…உங்க போன் நம்பர் கிடைக்குமா…?” எனக் கண்களில் கண்ணீரோடு அவள் கேட்டபோது சற்றே மிரண்டுதான் போயிருந்தேன். என்னால் அவளுக்கு எந்தச் சிக்கலும் எழுந்திருக்க வாய்ப்பில்லைதான். இருப்பினும் ஏதோ இனம்புரியாத பதட்டத்தோடு என் எண்ணைக் கொடுத்து பார்த்துப்போ என அனுப்பியபோதும் ஏதோ குழப்பம்தான் நீண்டிருந்தது. அடுத்த ஐந்து நிமிடத்திலேயே அவள் அழைப்பாளென நான் எதிர்பார்க்கவில்லைதான்.

    அழைப்பை எடுத்தவுடனேயே அக்கா…என்றாள். நான் அக்காவா…? திருமாணவனவள் என்பதால் அவளே முடிவெடுத்துவிட்டாள் போல…  சொல்லும்மா…என்ற என் பதிலுக்குப்பின் அவள் அழுகையைக் கட்டுப்படுத்த எனக்கு 2, 3 நிமிடங்கள்  ஆகிப்போனது. “போன வருஷம்  என் பர்த்டேக்கு எங்க அப்பா என்கூட இருந்தாரு…நாங்க ஒன்னா செலிபரேட் பண்ணோம்…  இப்ப அவர் இல்ல…வீட்ல இருக்கப் பிடிக்கல…அதான் லீவ் போடல…இப்போ வீட்டுக்குப் போகப்பிடிக்கல…” அழுதுகொண்டே இருந்தாள். எத்தனை அன்பானவள் இவள்? அத்தனை முகமூடிகளையும் தாண்டி என்னை அவள் ஏற்றுக்கொள்ளக் காரணம் என்ன? அத்தனை பேரைத் தாண்டி என்னை அவள் சகோதரியாய்  ஏற்றுக்கொண்டு என்னிடம் மட்டும் பகிர வேண்டிய காரணம் என்ன? என் மனக்கேள்விகள் அத்தனையும் உடைத்தெறிந்து நான் இருக்கேன்மா… கவலைப்படாத… என்ற பதிலிலிருந்துதான் புரிந்தது நானும் அவளை என் தோழியாக ஏற்றுக் கொண்டிருக்கிறேன்.

    வீட்டுச் சூழ்நிலைகளை எவ்வளவு அழகாய்த் தன் உழைப்பால் அவள் நிறைவேற்றுகிறாள். அவள் அம்மாவை எவ்வளவு தோழமையுடன் அணுகுகிறாள் அவள். என் பிறந்த தினத்தில் நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு என் வீட்டிலிருந்து வாழ்த்துச் சொல்ல எவ்வளவு தைரியம் அவளுக்கு…?  முதலில் சொன்னது உண்மை இல்லை…அவள் மிக அழகானவள்!

    காதல் தோல்வியால் அவள் மறுத்துக் கொண்டே வந்த திருமணத்தை சம்மதிக்க வைத்து எவ்வளவு பெரிய தவறை நாங்கள் செய்தோம் என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை. அவன் தவறானவனாம்… திருமணத்திற்குப் பின் காவல்துறை மூலம்தான் தெரிந்தது அனைவருக்கும். அத்தனைக்குப் பின்னும் அவனை வெளிவிடுங்கள்…என்று கதறியல்லவா  இருக்க வேண்டும் அவள்? அதுதானே பெண்மைக்கான நியதி… எல்லாவற்றையும் உடைத்தெறிந்து அவன் சிறையிலேயே இருக்கட்டும், என் வாழ்வை நான் பார்த்துக் கொள்கிறேனென அவள் நின்றபோது அத்தனை பேருக்கும் அவள் பிரமிப்பாய்த்தான் தெரிந்தாள். என்ன எப்படியோ அவள் அன்பால், உழைப்பால், மனத்திடத்தால் மெருகேறிக் கொண்டேதான் இருக்கிறாள் தினம்!

     

    Share
  • அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்……

    –காவிரிமைந்தன்.

    அழகன்

     

     

     

    om saravanaதிருமுருகன் அழகினில் மயங்காதவர் யார்? அழகுக்கு மறுபெயரே முருகன்தானே!  அன்னவர்தம் சரண்புகுந்தார் எனும்போது அவன்மீது ஆசைவைத்து நாயகி பாடுகின்றாள் ஒரு பாடல்!  ‘பஞ்சவர்ணக்கிளி’ திரைப்படத்தில் இடம்பெற்ற பாட்டு!  கவிஞர் வாலி அவர்கள் வரைந்திருக்கும் ஓவியமாய், சுகமான சொற்களிலே சொக்க வைக்கிறார்!  பி.சுசீலா குரலிலே தேன்மழை பொழிகிறார்!  மெல்லிசை மன்னர்கள்  இசையமைத்திட இனிதாய் ஒரு பாடல் அரங்கேறுகிறது!  நம் மனதில் இன்றும் அக் காட்சி நினைவோடு நிற்கிறது!

     
    http://youtu.be/7qpeuaM39RM
    காணொளி: -http://youtu.be/7qpeuaM39RM

     

    திரைப் படம்: பஞ்சவர்ணக் கிளி
    பாடியவர்: பி.சுசீலா
    இசை: எம்.எஸ்.வி – டி.கே.ஆர்

    சத்தியம் சிவம் சுந்தரம் ஆ….
    சரவணன் திருப்புகழ் மந்திரம்
    அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் ஆ…

    அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
    அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்
    அண்ணல் உறவுக்கென்றே உடலெடுத்தேன்
    அவன் அருளைப் பெறுவதற்கே உயிர் வளர்த்தேன்
    அண்ணல் உறவுக்கென்றே உடலெடுத்தேன்
    அவன், அருளைப்பெறுவதற்கே உயிர் வளர்த்தேன் ஆ…
    அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
    அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்

    பனி பெய்யும் மாலையிலே பழமுதிர்ச் சோலையிலே ஆ..
    பனி பெய்யும் மாலையிலே பழமுதிர்ச் சோலையிலே
    கனி கொய்யும் வேளையிலே கன்னி மனம் கொய்து விட்டான்
    பன்னிரண்டு கண்ணழகை பார்த்திருந்த பெண்ணழகை
    வள்ளல்தான் ஆள வந்தான் பெண்மையை வாழ வைத்தான்
    பெண்மையை வாழ வைத்தான் ஆ…
    அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
    அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்

    மலை மேல் இருப்பவனோ மயில் மேல் வருபவனோ
    மெய்யுருகிப் பாட வந்தால் தன்னைத் தான் தருபவனோ
    அலை மேல் துரும்பானேன் அனல் மேல் மெழுகானேன்
    அலை மேல் துரும்பானேன் அனல் மேல் மெழுகானேன்
    ஐயன் கை தொட்டவுடன் அழகுக்கு அழகானேன்
    அழகுக்கு அழகானேன் ஆ…
    அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
    அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்
    அண்ணல் உறவுக்கென்றே உடலெடுத்தேன்
    அவன், அருளைப்பெறுவதற்கே உயிர் வளர்த்தேன்
    அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
    அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்

     

    வார்த்தைகள் வரம்கேட்டு வந்து விழுந்தனவோ?  கவிஞர் வாலி  கரம்பட்டு கண்கள் மயங்கினவோ?  சுகமான பாடல்கள் பல.. பி.சுசீலா பாடியிருந்தாலும் அவற்றுள் முன்னணியில் ‘அழகன் முருகனிடம் ஆசைவைத்தேன்’ பாடல்!  கேட்பது சுகம்!  கேட்டு ரசிப்பது சுகம்!!  என்று சுகத்தின் பன்முகங்கள் இதோ ஒரு பாடலிலே.. அழகியலின் பதிவு எனில் அழையுங்கள் கவிஞர் வாலி அவர்களை!  இறைவனையும் கலந்தபடி இனிதாய் எழுதித்தந்திடுவார்.. அழகனைப் பற்றி அவள் பாடும் பாடலிது!  இது முருகனை அழைக்கும் முத்திரைப் பாடல்!!

    Share
  • லப் ரொப் – லப் டப்

    கே.எஸ்.சுதாகர்

    asusசனிக்கிழமை மதியம். சாப்பாடு வாங்குவதற்காக ‘கே.எஸ் ஸ்ரோர்’ போயிருந்தேன். அந்தப் பல்பொருள் அங்காடியில் உணவு வகைகளும் செய்து விற்கின்றார்கள். காரை நிற்பாட்டுவதற்கு ஒரு தரிப்பிடம் தேடிப் போதும் என்றாகிவிட்டது. பொதுவாக சனிக்கிழமை என்றால் எங்கும் சனக்கூட்டம். காரைவிட்டு இறங்கியதும், என் பின்னாலே இரண்டு ஆப்பிரிக்கர்கள் வந்து நின்றார்கள்.

    “லப் ரொப் வேண்டுமா சேர்?” இரண்டு பேருமே ‘ரை’ கட்டிக் கச்சிதமான ஆடைகளுடன் தோற்றமளித்தார்கள். இந்த இடத்தில் இப்படிப்பட்ட வியாபாரம் நடப்பது சகஜம்தான். இரண்டு வாரங்களுக்கு முன்னர் எனது நண்பன் ஒருவன் இதே இடத்தில் ஒரு ’ஐ போன்’ வாங்கியிருந்தான். இன்னமும் அதைப் பற்றியே சொல்லிப் புளுகிக் கொண்டிருப்பான்.

    “எவ்வளவு காசு?”

    “150 டொலர்கள்!”

    பர்ஸ்-ல் 45 லொடர்கள் மாத்திரம் இருந்தன.

    “பாவித்ததா…புதிசா?”

    “பிறாண்ட் நியூ சேர்” சொல்லிக் கொண்டே கையில் வைத்திருந்த பார்சலின் ஒரு நுனியைப் பிரித்து பெட்டியைக் காட்டினான் ஒருவன். பெட்டியில் பளிச்சென ’அசுஸ்’ என்ற எழுத்துகள் தெரிந்தன.

    பார்த்த மாத்திரத்தில் அதை வாங்கிவிட வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. இன்றைய நிலவரப்படி 600 டொலர்கள் தேறும்.

    “இதிலேயே நின்று கொள்ளுங்கள். காசு கொஞ்சம் குறைகின்றது. கடையில் என் நண்பர்கள் வேலை செய்கின்றார்கள். அவர்களிடம் வாங்கி வருகின்றேன்.”

    “நாங்கள் நிற்கமாட்டோம். இது பொலிஸ் நடமாட்டம் உள்ள இடம். நீங்கள் காசுடன் வந்து காருக்குக் கிட்ட நில்லுங்கள். அதன் பின்னர் நாங்கள் வருகின்றோம்” சொல்லிவிட்டு ஓடி ஒளிந்து கொண்டார்கள்.

    கடைக்குச் சென்று சாப்பாட்டிற்கு ஓடர் கொடுத்தேன். சாப்பாட்டிற்கு கிறடிற் கார்ட்டைப் பாவிக்கலாம். 100 டொலரை இரண்டு நண்பர்களிடம் ஐம்பது ஐம்பதாகக் கறந்து கொண்டேன். நண்பர்களுக்கு விஷயத்தைச் சொல்லவில்லை.  கார் நிற்குமிடம் வந்து சுற்றுமுற்றும் உற்று நோக்கினேன். சொன்ன வாக்கைக் காப்பாற்றுபவர்கள் போல இருவரும் வந்து சேர்ந்தார்கள்.

    “ஐந்து டொலர்கள் குறைகின்றன!”

    “அதனாலென்ன பரவாயில்லை. குட் லக்.”

    காசும் பொருளும் இடம் மாறின. எப்பவும் கேட்ட விலையில் இருந்து சிறிதளவாவது குறைத்துக் குடுத்தால்தான் மனதுக்குத் திருப்தி. அந்தத் திருப்தியுடன் காருக்குள் ஏறிக் கதவுகளை லொக் செய்துவிட்டு பார்சலைப் பிரித்தேன். காரின் ஜன்னலைத் தட்டினார்கள். அவர்கள் இந்நேரம் போய்ச் சேர்ந்திருப்பார்கள் என நான் நினைத்திருந்தேன்.

    கண்ணாடியை நீக்கினேன்.

    “இங்கே வைத்துப் பாராதீர்கள். பொலிஸ் உங்களை அப்பிவிடும்” சொல்லிவிட்டு விரைந்து சென்றார்கள். அவர்கள் சொல்வதும் சரிதான்.

    லப் ரொப்பை காரின் பின்னே வைத்துவிட்டு, ஓடர் கொடுத்த சாப்பாட்டைப் போய் எடுத்து வந்தேன். காரை எடுத்துக் கொண்டு வேகமாக வீடு சென்றேன். 600 டொலர் பெறுமதியான லப் ரொப்பை 145இற்கு வாங்கிய மகிழ்ச்சி காரின் வேகத்தில். எவ்வளவு காசிற்கு வாங்கியதாக மனைவி பிள்ளைகளுக்குச் சொல்லலாம்? அவர்களிடம் முதலில் அதன் விலையை உய்த்துணரச் சொல்லவேண்டும். பின்னர் 300 டொலருக்கு வாங்கியதாகச் சொல்லுவோம். அப்பவும் லாபம் தானே! லப் ரொப்பை பார்ப்பதற்கு மனம் துடித்தது. இதயம் ‘லப் டப்’ என அடித்தது.

    பிரதான வீதியில் காரை எங்குமே நிறுத்த முடியாது. பார்க் ஒன்றிற்கு அண்மையாக மரமொன்றின் பக்கமாக நிறுத்திக் கொண்டேன்.

    அவசர அவசரமாக பெட்டியைச் சுற்றியிருந்த பேப்பரைக் கிழித்து எறிந்தேன். அழகான புத்தம் புதிய ‘அசுஸ்’ பெட்டி. பெட்டியைத் திறக்க உள்ளேயிருந்து விழுந்தன இரண்டு ‘செங்கட்டிகள்’.

    இதயம் ஒரு அளவுக் கணக்கின்றி ‘லப் டப்…லப் டப்…’ என அடிக்கத் தொடங்கியது.

    Share
  • கதைசொல்லியும் கதாநாயகனும்..

    மாதவன் இளங்கோ

    என் மகனுக்குக் கதை சொல்வது என்பது அத்தனை எளிதல்ல.

    கதைக்குள் நிச்சயம் ஒரு சிங்கம் இருந்தாக வேண்டும். மரங்கள், அருவிகள், மலைகள் இருந்தாக வேண்டும். காட்டுக்குள் மழை பெய்தாக வேண்டும். யானையோ, புலியோ, முயலோ, மானோ, கரடியோ – இதில் ஏதொன்றுக்காவது பிறந்தநாள் கொண்டாடவேண்டும். கதையில் சண்டை இருக்கக்கூடாது. சிங்கமும் மானும் நண்பர்களாக இருக்கவேண்டும். அவனது நண்பர்கள் சிலரின் பெயரைச் சொல்லவேண்டும். அரவம் கூடாது. பறவைகள் பற்றி பேசலாம்.

    கண்டங்களும், நாடுகளும், கடல்களும் பற்றிய விவரிப்பு இருந்தாக வேண்டும். அவ்வப்போது இந்தியாவையும், சென்னையையும், ஏலகிரி மலையையும் தொட வேண்டும். வானவில்லும் அதை நோக்கிச் செல்லும் விமானமும் வந்தாக வேண்டும். கதை சொல்லிக்கொண்டிருக்கும் போதே, ஆங்காங்கே இடைமறித்து அதை அவன் திருத்துவதற்கு முழுவதுமாக அனுமதிக்க வேண்டும். மிக முக்கியமாக, அவனுடைய கதாப்பாத்திரம் அதில் நிச்சயம் இருந்தாகவேண்டும். வெறும் கதாப்பாத்திரமாக அல்ல, கதாநாயகனாக! அந்த கதாநாயகனின் வீரத்தைப் பற்றிய விவரிப்பும் நிச்சயம் இருந்தாக வேண்டும். 

    விண்வெளி பற்றி பேசவேண்டும். அவன் விஞ்ஞானி என்று கூறவேண்டும். இறுதியில் அவனுக்குப் பிடித்தமான அத்தனை மிருகங்களையும், பறவைகளையும், நண்பர்களையும், உறவுகளையும், எங்களையும் விண்கலத்தில் கூட்டிக்கொண்டு அவன் விண்வெளிப் பயணம் போவது பற்றி ரசனையுடன் விவரிக்க வேண்டும். பூமியில் தொடங்கி, வியாழனைக் கடந்து, (கோள்களின் வரிசை மாறக்கூடாது!) புளூட்டோவைத் தொட்டு, பால்வெளியை விட்டு வெளியேறி, வேறு ஏதேதோ மண்டலங்களுக்கெல்லாம் சென்று விட்டு மீண்டும் பூமிக்கு வந்து சென்னையில் இறங்கி, அனைவரும் தாத்தா பாட்டி வீட்டுக்குச் சென்றுவிட வேண்டும்.

    பெரியது குழந்தைகளின் உலகமும், மனமும்.

     

    Kadhaisolli Kadhanayagan

     

    Share
  • தடை தகர்த்து…

    -செண்பக ஜெகதீசன்

    சீறிப் பாயும் கடலலைதான் – மிகச்                                    Sea_storm
         சிறந்த மாலுமி உருவாக்கும்,
    மாறிடும் வானிலை  காட்டிடுமே – திறமை          
         மிகுந்ததோர் ஓட்டியை வானூர்தியில்,
    கீறிடும் கல்நிறை சாலையேதான்- சுட்டிக்
         காட்டிடும் சிறந்த ஓட்டுநரை,
    ஏறிடும் இடர்களை எதிர்கொள்வோர் – வாழ்வில்
         ஏற்றம் என்றும் பெறுவாரே…!

    Share
  • முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை)

    முக்கோணக் கிளிகள்

    (பெரிதாக்கப்பட்ட  நெடுங்கதை)

    படக்கதை – 10

    மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா

    வசனம், வடிவமைப்பு : வையவன்

    ஓவியர் : தமிழ்

     ++++++++++++++++++++++++++++++++++++

    Mukkonakkilikal - 37-3Mukkonakkilikal - 38Mukkonakkilikal - 39Mukkonakkilikal - 40

    தொடரும்…

    Share
  • சிறுவா புரி சதகம்

    கிரேசி மோகன்

     

    கவியோகியார் கந்தரலங்காரம் என்றவுடன் என் நினைவுக்கு கந்தரனுபூதி வந்தது….கபாலி கோயில் ‘’முத்துக்குமாரச்ச்சாமி’’ சன்னிதி சுவற்றில் பொறிக்கப் பட்டிருக்கும் ‘’கமலா குகசூ சுககுங் குமதே’’ சந்தத்தில் அருணகிரியார் எழுதிய ‘’கூகா யெனயென் கிளை கூடியழ….பெம்மான் முருகன் பிறவான் இறவான்….குருவாய் வருவாய் குகனே அருள்வாய்’’ வரிகள்….எனது டாக்டர் திருமணத்திற்காக காளஹஸ்தி போகையில், டிரைவர் பாதி வழியில் ‘’சார்….வலது கை பக்கம் போனா ‘’சிறுவாபுரி முருகர்’’ கோயில் வரும் என்றார்….நேரம் இல்லாததால் போக முடியவில்லை….ஆனால்….பூசலா நாயனார் போல காளஹஸ்தி போய் வருவதற்குள்,மனசுக்குள் ‘’கந்தரனுபூதி’’ மெட்டில் 25 பாடல்கள் எழுதி எனக்கு எழுத்தறிவித்த பூனா நண்பன் சு.இரவியிடம் படித்துக் காட்டினேன்….அவன் ‘’சிறுவாபுரி சதகம்’’ எழுதுமாறு பணித்தான்….எழுதியதை பகிர்ந்து கொள்கிறேன்….அடியேன் குறையொன்றும் இல்லா கிரேசி….நிறை இருப்பதாக நம்பும் மோகன்…..இத்துடன் அடியேன் வரைந்த முருகர் ஓவியத்தையும் இணைத்துள்ளேன்

    ————————-
    காப்புச் செய்யுள்
    ———————-
    “உரைபா ரதத்தை ஒருகொம் பொசித்து
    தரைசே ரவடித் தருள்வே ழவரே
    சிறுவா புரியார் சதகம் எழுதத்
    தருவாய் எனக்குத் தமிழும் திறனும்”….

    சிறுவாபுரி சதகம்….கந்தரனுபூதி பாதிப்பில்….

     

    ஓவியம் : கிரேசி மோகன்
    ஓவியம் : கிரேசி மோகன்

    “தனியா னைசகோ தரனார் துணையால்
    வனமா துடல்மே விடவே டுவனாய்
    தனியாய் வருவேல் தணிகா சலனே
    வினைதீர்த் திடவா சிறுவா புரியே”….(1)

    “அடடா எனவூர் அனுதா பமுற
    சுடுகா டுடலே கிடுநாள் துணையாய்
    உடனே வருவாய் உமைபா லகனே
    இடுவாய் பிறவா இடமே விடநான்”….(2)

    “புதனோ டொளிசேர் பொலிவாய் உமையாள்
    சுதனே சிவனார் சிறுவா புரிவாழ்
    மதலாய் பெருமாள் மருகா வருவாய்
    அதுவாய் இதுவாய் எதுவா கிலுமாய்”…(3)

    “உனைநா னறிவேன் உமையாள் சுதனா
    திணைமா துடன்சேர் தணிகா சலனே
    எனைநா னறியேன் எழுவாய் பயனாய்
    சினைநான் உயிர்நீ சிறுவா புரியே”….(4)

    “பணநா கவணை பெருமாள் மருகா
    வானமா துடன்வா னவரா னையுடன்
    மனவே கமுடன் மயிலே றிடவே
    ஷணமே வருவாய் சிறுவா புரியே”….(5)

    “ஆசா பாச மதனால் உலகில்
    காசும் புகழும் குறியாய் உழலும்
    நீசன் எனையுன் நிலைசேர்த் திடவே
    வாஷண் முகனே வழிகாட் டிடவே”….(6)

    “நமச்சி வாயன் நுதல்வாய் புதல்வ
    உமைச்சி வேலை உடையோய் படையாய்
    சுமக்கத் தாயார் ,சிறுவா புரியே
    நமர்க்கை சேரா நிலைநாட் டிடுவாய்”….(7)

    “தீயாய் வளியாய் திசைமண் ஜலமாய்
    காயாய் மலராய் கனியாய் மரமாய்
    வாயாய் ருசியாய் வயிறாய் பசியாய்
    நீயாய் மறைவாய் நிருவா கனனே”…(8)

    “அய்யோ யெனயென் கிளைகூ டியழும்
    அய்யோ மணவா ளரவர் வரவால்
    அய்யா அதனால் அனுபூ தியுறச்
    செய்யாய் முருகா சிறுவா புரியே”….(9)

    “அண்ணா மலையும் அவன்பா திபடர்
    உண்ணா முலையும் சிறுவா புரியில்
    முன்னால் இருக்க முகநா ணமுறும்
    பெண்ணா லோலப் பிடிமால் மருகா”….(10)

    “மரணா கதியில் மனிதா செலுமுன்
    சரணா கதிசெய் சிவனார் செவியில்
    மறையோ தியவன் திருவே ரகனை
    சுரர்நா யகனை சிறுவா புரியை….(11)

    “அத்திக் கிறைவா அமரா வதியின்
    வெற்றிக் குதவும் விசுவேஸ் வரரின்
    நெற்றிக் கனலே நெடுமால் மருகா
    சுற்றத் துடன்வாழ் சிறுவா புரியே”….(12)

    “எதிரா ஜனரின் எஜமா னவனை
    பதிநூ றுடன்எண் படர்மால் புகழை
    துதிசெய் அருணை கிரிபோல் எழுத
    உதவத் தமிழே உடனே வருவாய்”….(13)

    “அயனார் அரியார் அறியா நுதல்வாய்
    நயனார் புதல்வா நரையும் திரையும்
    மயமாய் இவனா குமுனே வருவாய்
    பயனாய் சிறுவா புரிவாழ் பொருளே”….(14)

    “ஓரா றுமுகம் ஒளிரும் இருதாள்
    ஈரா றுபுயம் இறைவா மறவேன்
    சேறாம் உலகில் செந்தா மரையாய்
    போரா டஅருள் பஞ்சா மிருதா”….(15)

    “பாதிக் கொருபெண் பரமேஸ் வரியின்
    ஆதிக் கமுறும் அரனார் நுதற்க்கண்
    ஜோதிக் கருவே சிறுவா புரியில்
    சாதித் தருள்வோய் சரணா கதியை”….(17)

    “கிரௌஞ்ச மலையைக்  கூழா கிடவேல்
    எறிஞ்ச முருகா என்றும் இளையோய்
    குறிஞ்சி மலைவாழ் கிழவா தமிழைத்
    தருஞ்சி வைமுலை திகழ்வோய் சரணம் ….(18)

    “கூறும் அருணை கிரியின் புகழில்
    ஏறும் மயிலோ டெழில்சே வலுடன்
    சூரன் பதுமன் சிரம்வாங் கியவா
    சேரும் தமிழே சிறுவா புரியே”….(19)

    “கல்லா லமர்வோன் காதில் ப்ரணவச்
    சொல்லாழ் பொருளை ஸ்லாகித் தவனே
    எல்லாம் அறிந்தும் எனைநான் அறியேன்
    வல்லான் ரமணர் வழிசேர்த் திடுவாய்”….(20)

    “தள்ளா டிவுடல் தடுமா றிடவாய்ப்
    பல்லா டிடமண் புதையப் படரும்
    புல்லா டிடநான் போகா வகையென்
    உள்ளா டிடவா உமையாள் சுதனே”….(21)

    “வடமா லையுடன் வனமா லையணி
    திடமா ருதிதோ ழனவன் மருகா
    கடலா டிடுவாய் குடிபோ கியவா
    உடனே வருவாய் உயிர்மெய்ப் பொருளாய்”….(22

    “வேதா கமநூல் வழிபோ னதிலை
    ஏதா கிலும்செய் துனைஏத் தவிலை
    சாதா ரணநென் சகமா யையற
    நீதான் வரணும்  நிகமான் தகனாய்”….(23)

    “இம்மா மடையன் இறைவாழ் வதனில்
    எம்மா திரியும் இசையான் எனவே
    சிம்மா சனமுன் சீர்பா தமுற
    சும்மா இருயென் றொருசொல் அருளேன்”….(24)

    “சொப்பன வாழ்வில் சுகமாய் உறங்கி
    இப்புற உலகே இயல்பென் றிருந்தேன்
    அப்பர ஞானம் அடியேன் பெறவே
    செப்பிட வாராய் சிறுவை முருகா”….(25)

    “எஞ்சா மியெனக் கருளே ரகனே
    பஞ்சா ம்ருதமே பழனிக் குமரா
    அஞ்சாய் எனவுன் அடியார்க் கருளும்
    செஞ்சாந் துநிறச் சிறுவை முருகா”….(26)

    “சிந்தை மகிழச் சிவனார் செவியில்
    முந்தைப் பொருளின் முழுமை உரைத்த
    கந்தச் சுவையே செந்தூர் வளரும்
    சந்தக் கவியார் சிறுவை முருகா”….(27)

    “இருவாட் சிமலர் இருட்கூன் தலணி
    குரவாட் சியர்கோன் குலவா ரிசினை
    கரிசாட் சியமாய் கரம்கொள் சிறுவா
    புரியாட் சியமர் பொலிவே முருகா”….(28)

    “அறுகார்த் திகையர் ஒருமூர்த் தியென
    உருவாக் கியவா உமைபா லகனே
    முறைமா மன்மகள் குறமா தணைய
    சிறுவா புரிவாழ் சிவதே சிகனே”….(29)

    “மலைவாழ் முகிலே ,அலைவாய் அமுதே
    சிலைஜா னகிரா கவனார் மருகா
    குலவே டமகள் குறமா தணைய
    சிலையா கியருள் சிறுவா புரியே”….(30)

    “கண்மாய் தனில்கார்த் திகைமங் கையரால்
    ஒண்ணா னவனே ஓமா றுமுகா
    என்னா வியுடல் பொருள்யா வையும்நீ
    நன்நாள் இதுவே நலம்சேர்த் திடவா….(OR )
    அண்ணா சிறுவை அழகா வருக”….(31)

    “மயில்வா கனனே அயில்வே லவனே
    கயிலா யசிவன் குருவா னவனே
    பயிலா தழின்தேன் பரஞா னமதை
    மயல்தீர்த் தருள்வாய் முருகா சரணம்”….(32)

    “பிடிவா தமுடன் பிழைசெய் திடுமென்
    கடிவா ளமிலாக் குதிரைப் புலனை
    அடிபோ ட்டதைஆண் டருளச் சிறுவை
    வடிவே லவரே வருவீர் குருவாய்”….(33)

    “வனபாக் கியமாய் வள்ளி இருக்க
    தனபாக் கியமாய் தாரிணி சுரக்க
    சினம்போக் கியவா செந்திற்க் கடலில்
    மனபாக் கியமாய் வழிகாட் டிடவா”….(34)

    “கிழவே டமுடன் குறமா தணையும்
    மழுமான் சிவனார் விழிபா லகனே
    அழவேண் டிவரும் அடியார் வினையை
    விழத்தீண் டிடுவேல் விடுநா யகனே”….(35)

    “வானாய் நிலநீர்  வளியாய்க் கனலாய்
    ஆணாய் அலியாய் அவளாய் அருவாய்
    ஆனாய் ஜடமாய் அறிவாய், ரமணர் (OR )அகந்தை
    நானாய்ன் துனைநா டிடவா முருகா”….(36)

    “எப்படி வருவான் எமனென் றறியேன்
    அப்படி வருமுன் அனுபூ தியினை
    இப்படித் தானென் றிரவுக் கனவில்
    செப்பிட வாராய் சிறுவை முருகா”….(37)

    “முற்றம் வரையில் மனையாள் வருவாள்
    சுற்றமும் பெற்றதும் சுடுகா டுவரை
    கற்றதும் கொண்டதும் கால்தூ சிபெறா
    நற்றமி ழேவா நமனார் வருமுன்”….(38)

    “மாவாய் பிளந்த மதுசூ தனர்க்கு
    ஆவாய் மருமான் அவன்சோ தரியால்
    வாவா எனகா டழைக்கும் தருணம்
    போபோ எனவீ டுபுகுத் திடவா”….(39)

    “தந்தைக் கொருமந் திரம்தந் தவரின்
    சிந்தைக் கபிமா னசிரோன் மணியே
    கந்தக் கனலே குருவாய் அருள்வாய்
    மந்தப் பயலென் மதம்மாற் றிடவே”….(40)

    “வாயிட் டயென்பின் வடித லென்றே
    நாயிட் டமொடு நறுக்கும் நாவை
    ஆயிற் றதுபோல் அடியேன் வாழ்வு
    பாயுற் றுடும்முன் பிணியோட் டிடவா….(41)

    “தப்பா னவாழ்க்கை தவறா னசேர்க்கை
    இப்பா வியுற்றான் இதனா லெமன்கை
    ஒப்பா ரிவைத்தூர் அழுமுன் செவியில்
    செப்பாய் முருகா சிவஞா னபோதம்”….(42)

    “திருவோ டணையும் திருமால் மருகா
    திருவோ  டணையும் திருவா திரையான்
    பிறைவான் நுதற்கண் புதல்வா ,கருணை
    சிறுவா புரிவாழ் சிறுவா புரிவாய்”…(43)

    “வாசத் துழாய்மால் வயிற்றுப் புதல்வி
    நேசக் குறத்தி நினைவோய், திருத்தைப்
    பூசத்  திறைவா ப்ரணவப் பொருளை
    ஈசர்க் குபதே சிகனே இறைவா….(44)

    “வருந்தாய் மனமே வருவான் முருகன்
    பிருந்தா வனமாய் பொழிவான் அருளை
    கருந்தா மரைக்கண் குறத்தி மணாளன்
    திருந்தா தவர்க்கும் மருந்தா கிடுவான்”….(45)

    “எலிவா கனரின் இளையோய், சபரிப்
    புலிவா கனர்முன் பிறந்து வளர்ந்த,
    கிலிநா கமுறக் கிளம்பும் அகவல்
    ஒலிவா கனரே உடனே வருக”….(46)

    “கீரன் துதிசெய் ஆற்றுப் படையை
    பேரன் புடனே ஏற்றக்  குகையுள்
    சேரும் புலவர் சிறைமீட் டிடவே
    கூர்வேல் எரிந்து கிரிசாய் குகனே”….(47)

    “சிறுபா லனென மதியா துசெலும்
    மறைநான் முகனார் மிகுகர் வமற
    சிறைசே றயிடும் சிவதே சிகனே
    கரைசேர்த் திடுவாய் கடலா டுகுகா”….(48)

    “கன்றா டிடவேய்ங் குழலோன் மருகா
    மன்றா டிடுவோன் மகனே புவியில்
    குன்றா டிடுவோய் குருவாய் வருவாய்
    மன்றா டுகிறேன் மனம்வைத் தருள்வாய்”….(49)

    “ஆகா இவனே அதிமே தையென
    பாகாய் உருகும் பொருளுள் ளவரை
    மோகா சனத்தில் முனியாய் இருக்க
    ஏகாக் ரமதை எளிதாக் கிடுவாய்”….(50)

    “மாலா டிடும்யவ் வனம்சொப் பனமே
    கோலா டிடும்மூப் பதுநிச் சயமே
    வாலா டிடும்வாழ்க் கையைவிட் டுவடி
    வேலா யுதன்தாள் தலைவைத் திடுவாய்….(OR )
    வேலா யுதன்தாள் வனசம் தொழுவாய்”….(51)

    “நூறோ டிடவே தேரோ டியமால்
    சீரா டிடுமூர் சிறுவை மருகன்
    ஈறா றுபுயன் பேரா றுமுகன்
    நீறா டநுதல் நினைவாய் மனமே”….(52)

    “கள்ளப் புலனைந்த் துறவா லகந்தை
    மெல்லப் புகுந்து மமதை மனமாய்
    உள்ளத் தறையில் உனைபூட் டிடுவான்
    வள்ளிக் கணவன் வாஞ்சைக் கிலைதாள்”….(53)

    “புதிராம் புவியில் பொழுதோட் டிடவே
    சதிரா டியபின் சலியும் மனமே
    எதிரா ளியெமன் எதிரே கிடுமுன்
    கதிர்வே லவனே கதியென் றிடுவாய்”….(54)

    “மமகா ரமதை மனிதா விடுவாய்
    எமனே கிடுமோர் எழிற்கா லையிலே(one fine morning )
    சுமையா கிடுவாய் சுடுகா டுவரை;
    சமபா வமுற சிறுவா புரிசேர்”….(55)

    “பரங்குன் றலைவாய் பழம்வீழ் பொழில்,கோல்
    கரங்கொள் பழனி ,குமிழ்வாய் சிவனார்
    கரங்கொள் கிரியே ரகமும் தணிகை
    வரங்கொள் அடியார் வரவீ டுடையோய்”….(56)

    “முத்தாய் அருணை முனிநா எழுதிக்
    கொத்தாய் அடைந்தாய் கவிசந் தமதை
    அத்தா அதுபோல் அடியேன் அளிப்பு
    கத்தா ழையெனின் கமல மெனக்கொள்”….(57)

    “கிரியார் கந்த ரனுபூ தியின்மேல்….(OR )
    அருணை கிரியார் அனுபூ தியின்மேல்
    வெறியால் விளைந்த வடிகா லிதுவே
    சரியா தவறா சதகம் அறியேன்
    விரிஆர் வமிதை வளர்பக் தியென”….(58)

    “பாக்கள் வருதல் பனிமா மலையோன்
    தீக்கண் மகனுன் தயவென் றெண்ணி
    ஊக்க மடைந்தேன், ஓங்கும் தமிழின்
    தாக்க மெனநீ திரைபோ டாதே”….(59)

    “அம்பாள் மகனே அரிமால் மருகா
    உன்பால் உருகி உனைநான் அடைய
    வெண்பா சதகம் வடித்தேன் ,புகழின்
    சம்பாத் தியமாய் சொல்லி விடாதே”….(60)

    “எமாதி கணமே கிடுநாள் ரமண
    சமாதி நிலையில் ஸ்திரமாய் இருக்க
    ரமாதி மாலர் ரமிக்கும் மருகா
    உமாதி ஈசர்க் குகந்தோய் அருள்வாய்”….(61)

    “உள்ளக் கனகல் லையுடைத் தெறிய
    மெல்லத் தலைநீட் டிடு(ம்)ஆன்  மவொளி
    புல்லைப் புலியாக் கிடுமிக் கலையை
    தெள்ளத் தெளிவாக் கிடுதே சிகனே”….(62)

    “அலையும் மயிலை, அயில்வேல் அணிசே
    வலையும், வனவான் வளையார் தமையும்,
    மலையும், மலையே றிவளர்  உனையும்,
    முளையும் சதகம் மதிலா டிடவை”….(63)

    “தாரா சுரன்தன் தவவாழ் வதனால்
    பேரா சையுறப், பலிவாங் கிடவே
    வீரா சனத்தோன் விழிவாய் பிறந்த
    ஆரா அமுதே அமரர் துணையே”….(65)

    “கெட்டாள் திருந்தி குருவாய் அழைக்க
    சிட்டாய்  வருவான் சும்மா இருக்கத்
    தொட்டோ திடுவான் திருவா சகத்தை
    முட்டாள் மனமே முனியச் சிறுவன்”….(66)

    “பந்தத் தைவிடு பாசத் தைவிடு
    சொந்தத் தைவிடு சோகத் தைவிடு
    சிந்தித் துவிடு சிறுவா புரிவாழ்
    கந்தத் தனைநீ கயிலா யமுற”….(67)

    “சம்பந் தாண்டான் ஸ்தம்பித் திடவே
    நம்பும் கிரியார் நவிலச் சந்தம்
    கம்பம் தனிலா டியெழும் இளையோய்
    உம்பர் துணைக்கு உருவா கியவா”….(68)

    “கனிகை கிடைக்க ககனம் சுற்ற
    புனிதர் கணேச பிள்ளைக் களிக்க
    தணியா சினத்தில் தண்டா யுதனாய்
    முனியாய் பழனி மலையே றியவா”….(69)

    “அமரா வதியின் அணிகா வலனாய்
    சமரால் கொடுசூ ரனுடல் கெடவே
    உமையாள் கொடுவேல் உதிர்த்து அலைவாய்
    குமரா சுரர்பெண் கரங்கொள் முருகா”….(70)

    “எதிர்பார்த் திருந்த எமனே ளுகையில்
    சதுர்வே தனைவெஞ்ச் சிறைவைத் திடுவோய்
    கதிர்கா மமதில் கனிந்து பழமாய்
    உதிர்சோ லைமலை உறவே வருக”….(71)

    “பழுதூ றியவாழ் வினில்போக் கிரியாய்
    பொழுதோட் டினைஐம் புலனார்  வமதால்
    தொழுதேத் திடுவாய் கழுகா சலனை
    முழுதாட் கொளவான் மயிலே றிடுவான்”….(73)

    “அயலார் சிரிக்க அருகார் வெறுக்க
    மயலா டிமகா மடுவீழ் கையிலே
    செயலா கிடுசிந்தை தையில்சீர் மிகவே
    வயலூர் வளர்வாழ் வதன்தாள் விழுங்கோள்”….(74)

    “பதினா றுபெரும் பெருவாழ் வுபெற
    அதிகா ரவிடை அமர்வோன் நுதல்நீ
    றதுகா யவுதித் தனலாய்ப் பிறந்த
    பதியா றுடையோன் பதம்மே விடுவாய்”….(75)

    “சேதா ரமிலா செய்கூ லியிலா
    ஆதா ரமருள் அயில்வே லவனின்
    பாதாம் புயமே பரமார்த் திகமாம்,
    பேதாய் மனமே பணிந்தேத் திடுவாய்”….(76)

    “மனமா ஸனமாய் மயில்வா கனமாய்
    குணம்கோ ழியெழுப் பதிகா லையுமாய்
    முனைவேல் மதியாய் மனையுன் மலையாய்
    தினமாண் டிடவா திணைமா தணைவோய்”….(77)

    “திகழா பரணம் திடமார்  பசைய
    நகைபூட் டிடநா டகமே டைதனில்
    நகைப்பூட் டிடவா நடுநா யகமாய்
    நகைபூத் திடுவாய் நதிபா லகனே”….(78)

    “அதிகா ரமவா அழுக்கா றவச்சொல்
    குதிகோ பமிலா குணம்வாய்த் திடவே
    சுதிவள் ளுவனார் சொலும்வார்த் தையினை
    மதியேற் றிடவை மருதா சலனே”….(79)

    “மிகவாட் டமுறும் மனிதா ,ரமண
    அகநாட் டமுற அங்குஷ் டமென
    குகநாட் டியம்காண் குகையாழ் மனதில்
    சுகசாட் சியமாய் சும்மா இருநீ”….(80)

    “குசனார் லவணார்  அசுவ மதைத்தம்
    வசமா கயிரா கவன்வா ளியெதிர்
    அசலம் சிறுவா புரிவாழ் அழகா
    வசன முரைக்க வருவாய் குருவாய்”….(81)

    “சோணை ரமணே சரைப்போல் சதமாய்
    ஞானம் பெறநா டிடுசெந் தமிழின்
    மோனை எதுகை யெனவள் ளியும்தே
    வானை தழுவும் வடிவே லவனை”….(82)

    “கங்கா தரனின் கபாலி புரியில்
    சிங்கா ரமயில் சுமையாய் அமர்ந்து
    மங்காப் புகழை மயிலைக் களித்தோய்
    எங்கா துரைக்க சங்கோ சமதேன்”….(83)

    “முருகா சரணம் மல்லாண் டிடுவோன்
    மருகா சரணம் மனைவீ டுதர
    அருகா மையிலூர் சிறுவா புரிவாழ்
    குருகா வலதோள் கொடுதோ ழமையே”….(84)

    “பிடிவா தகுணப் புலனால் அடைந்த
    பிடிவா தகபம் பித்த மஜீர்ண
    நொடிநோய் களெமை நெருங்கா தபடி
    கொடிகோ ழியைஏந் துகலா பகுகா”….(85)

    “காவித் துணியில் கரைவேட் டியினில்
    தாவித் திரிந்தேன் திசையே றுமயில்
    ராவுத் தனனுன் ரசபா தமதை
    சேவித் துணர்ந்தேன் சகமே பரமாய்”….(86)

    “பணக் காரனுமே பலசா லியுமே
    கணக் காளியுமே கரிநாள் தனிலே
    மனக்லே சமுடன் மடிசாய்ந் திடுவான்
    மனக்காய் எதற்கு மலைவாழ் பழமே “….(87)

    “சூதா டிடுவாய் சுகமேந் திடவே
    மாதா டிடுவாய் மனமே ,சுமப்பாய்,
    வேதாந் தியென வெறும்கோ வணமாய்
    தீதாண் டிடும்தென் பழனிச் சுவையை”….(88)

    “பாகத் துமையாள் நெஞ்சார் வமுறும்
    போகர் சமைத்த பஞ்சா ம்ருதமே
    ஏகப் பொருளே எஞ்சா மியெனக்
    காகத் திறவாய் கோயிற் கதவை”….(89)

    “தெண்டா யுதமோர் திருக்கை பிடிக்க
    கொண்டாய் இடுப்பில் கரமொன் றினைநீ
    பண்டா யநிலை பரமார்த் திகத்தை
    விண்டோ திடுஆ விநன்வாழ் முருகா”….(90)

    “மந்தா கினியேந் திடமா துமைபால்
    வந்தாய் பெறவே வடிவேல் தனையே
    பந்தா டிடுதே புலனைந் துமெனை
    தந்தா யுதன்பின் தவழ்வோய் அருள்வாய்”….(91)

    “இக்கா சினியில் இழவே புரிந்து
    அக்கா சியில்அந் திமம்கொண் டிடுவாய்
    முக்கால் சிவனம் முருகன் அருள்வான்
    உக்கார் சிவனே உறும்கா சியதே”….(92

    “சுப்ர மணிய புஜங்க மதிலே
    சர்ப்பம் எனஆ டினைசங் கரனால்
    தர்பை வழித்த தமியேன் திருநா
    அற்பம் இதிலா டிடுமண் புழுவாய்”….(93)

    “காட்சி கொடுத்து கற்கண் டளித்து
    தீட்ச தரின்வாய்  மொழிகீர்த் தனையாய்
    ஆட்சி புரிந்தோய், அவர்தம் குருவாய்
    தீட்ஷை கொடுத்த தணிகை குகனே”….(94)

    “ஒலிபா ஷைவரா துருகித் தவிக்க
    கலிவெண் பாவை குமர குருவுக்
    அளிசீ ரலைவாய் அகக்கா ரிகளோ(டு)
    ஒளியாய் விளங்கும் உயர்வான் பதியே”….(95)

    “பழம்காய் இலைஆல் மரம்வேர் விதையாய்
    விழபுள் விழுங்கி அதைவே றிடமாய்
    புழங்கப் புதைக்கப் புதிதா வதுபோல்
    விழுவாய் கனலாய் எழுவாய் புனலில்
    தொழும்தாய் வளர்சேய் பழனிக் குமரா”….(96)

    “சதிசெய் திடுசங் கரன்கைக் கனியால்
    பதியாய் திருவா வினன்வாழ் பரமே
    இதிகா சபுரா ணமறை புகழும்
    துதிகே சவனார் மருகா துணைவா”….(97)

    “சிறுவா புரியில் சதகம் தொடங்கி
    திருவா வினன்சீர் தலத்தில் முடிய
    நிறைவேற் றியவா நதிவே கமுடன்
    மறவேன் உனைமால் மருகா சரணம்”….(98)

    “பாலும் பழமும் பஞ்சா ம்ருதமும்
    கோலும் இடுப்பில் கரமும் கொடுப்பேன்
    நாளும் இவன்நா டகமே டையில்செங்
    கோலும் குடையாய் கொடியேந் திடச்செய்”….(99)

    “தணிகை ,பரங்குன், ரலைவாய் , திருவா
    வினன்கை கனிகொள் பொழிலே ரகமாய்
    கனிகை இருக்க இவர்க்காய் அவர்க்காய்
    இனிகை ஏந்தாய் ,இறைசேய் பதம்சேர்”….(100)

    சுபம்
    முடிவு
    மங்களம்

     

    Share
  • திருமால் திருப்புகழ் (127)

     

    கிரேசி மோகன்

     

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    ———————————————————————————————-
    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ——————————————————–
    ”கண்ணன் வெண்பாக்கள்’’
    ——————————————-blogger-image--21653421
    பக்தகோ லாகலன், முக்திமூ லாதரன்,
    சக்தி உமையாளின் சோதரன், -சித்தி,
    வரம்நூறு தந்துந்தன், வாழ்வில் மலர்வான்,
    பரணூர் பிரேமிக்காய்ப் பூத்து….(277)

    மூப்பிழைய, மூச்சடைக்க, சாப்பாடே நஞ்சாக,
    கூப்பிடாத காலன் கரம்குலுக்க, -ஆப்பழியும்,
    அந்திம நாளேனும், அய்யோ மறவாது,
    நந்த குமாரனை நம்பு….(278)

    ஆழியை பூமியை, நாழிகை நேரத்தில்,
    ஊழியில் உண்டுமிழ்ந்த உத்தமனை, -தாழியுள்,
    வெண்ணையை தான்வளர்ந்த, மண்ணையும் உண்ணவரும்,
    கண்ணனை நெஞ்சே கருது….(279)

    போகமவன் ஐம்புலனில், யோகமவன் மெய்ப்பொருளில்,
    தாகமவன் துய்ப்போர் தரத்தினில், -வேகமவன்,
    வேண்டும் அடியார்பணிக்கு, பாண்டுமவன் தோழனவன்,
    யாண்டுமவன் ஆயர்தம் யாப்பு….(280)

    படநச் சரவில், படுத்துறங்கும் அச்சுதன்,
    வடபத்ர சாயியாய் வந்தவன், -வெடவெடத்த,
    மாரியில் வெற்பெடுத்தாய்ச், சேரியைக் காத்தவன்,
    காரிருள் வண்ணன்தாள் காப்பு….(281)

    காயில் பழமாகி, நோயில் கிழமாகி,
    பாயில் உழல்கின்ற காயத்தை, -ஆயுள்,
    முழுதும் சுமந்தேன், முழுமுதலே ஈதுன்,
    பழுதன்றோ பாம்பணையோய் பார்….(282)

    ——————————————————————————————————————

     

     

    Share
  • கூடங்குள ரஷ்ய அணுமின் உலை 1000 மெகாவாட் உச்சத் திறனில் இயங்குகிறது

    jay

     [June 7, 2014]

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    2014 ஜூன் 7 ஆம் தேதி கூடங்குளம் ரஷ்ய அணுமின்சக்தி நிலையம் முதன்முதல் 1000 MW உச்ச நிலை ஆற்றலில் வெற்றிகரமாக இயங்கி மின்சாரம் தமிழ்நாட்டுக்கு மின்வடங்களில் அனுப்பி வருகிறது.   இந்த முதல் அணுமின் உலை ஆரம்பநிலை இயக்கப் பாதுகாப்புத் தேர்வுகள் முடிந்து, பூரணத்துவம் அடைந்த தேதி : 2013 ஜூலை 14.  மின்னாற்றல் திறன் ஏற்றமாகி 400 மெகாவாட் மேல்நிலை எட்டிய போது முதன்முதல் மின்வடங்களில் இணைப்பாகி, அனுப்பியது.   முதல் யூனிட் அடித்தளம் 2001 இல் போடப்பட்டு, கட்டி முடிந்த பிறகு, கூடங்குள ஊர்ப்புற எதிர்ப்பாளர் போராட்ட நிறுத்தத்தால்  அணு உலை இயக்கம் இரண்டு வருடங்கள் தாமதமானது.   அடுத்த இரண்டாம் யூனிட் இன்னும் ஓரிரு ஆண்டுக்குள்  இயக்கப் பாதுகாப்புத் தேர்வுகள் முடிந்து, மேலும் 1000 MW மின்சக்தி உற்பத்தியாகும் என்று எதிர்பார்க்கலாம்..

    பின்புலம் :  அணு உலையா ? வாழ்வுக்கு உலையா ?  இப்படி மேலோடி இடித்துரைப்பது ஓர் அசுரப் போக்கு.  அணு உலை அருகே வாழ்பவருக்கு எல்லாம் ஆறாம் விரல் முளைக்குது, புற்று நோய் தாக்குது என்றெல்லாம் நையாண்டி செய்வது அறிஞர்களின் கோமாளித்தனம்.  புற்று நோயுடன் மற்ற நோயும் தொற்றுது என்னும் பாட்டி கதைகளைக் கட்டிக் எறிந்து விட்டு சற்று புள்ளி விபரத்தோடு டாக்டர் புகழேந்தி ஆய்ந்து காட்டினால் நாமெல்லாம் நம்பலாம்.  கல்பாக்கத்தில் அணு உலை கட்டும் முன்பு அத்தகைய நோய்களால் துன்புற்றோர் அல்லது செத்தவர் எத்தனை பேர் ?  அப்போது அங்கு வாழும் நபருக்கு எத்தனை விரல்கள் இருந்தன என்று எண்ணிப் பார்த்தவர் யார் ?  அணு உலைகள் கட்டிய பின் இயங்கும் போது எத்தனை பேர் புற்று நோயில் செத்தனர், மற்ற நோயில் மடிந்தனர் என்ற எண்ணிக்கைகள் தேவை.  அப்படி அதிகமானால் அந்த தொகை கூறப்பட வேண்டும். அந்தப் புற்று நோய்கள், உடல் ஊனங்கள் அணு உலைக் கதிரடியால் உண்டாயின என்பது ஆதாரமோடு நிரூபிக்கப் பட வேண்டும். அப்போதுதான் அணு உலையால் மனிதருக்கு ஆறாவது விரல் முளைத்த விந்தைகளைப் பற்றி மக்களிடம் புகாரிடலாம்.

    உலகத்திலே இப்போது இயங்கி வரும் (435+284+220) 939 அணு உலைகளுக்கு அருகில் வாழ்வோர் யாராவது புற்று நோயுற்றுத் செததால் அங்குள்ள பராக்கிரம யூனியன் நிலைய அதிகாரிகளைச் சும்மா விட்டுவிடுமா ? அவர்களைச் சிறையிலிட்டு பெருத்த நட்ட ஈடைப் பிடுங்கி விடும்.  நான் இந்தியாவிலும் கனடாவிலும் 45 ஆண்டுகளுக்கு மேல் யுரேனிய எரிசக்தி ஊட்டும் யந்திரக் கதிரியக்க வேலைகளில் நேரிடையாகத் தொடர்ந்து பணியாற்றி யிருக்கிறேன்.  இப்போது பொறியியல் படித்த என் புதல்வி கனடாவில் பிக்கரிங் அணுமின் நிலையத்தில் பணி புரிகிறாள்.  அவளது கணவரும் டார்லிங்டன் என்று அழைக்கப்படும் வேறோர் அணுமின் நிலையத்தில் எஞ்சினியராகப் பணி செய்கிறார்.  எனக்கோ, அவர்களுக்கோ அவரது இரண்டு பிள்ளைகளுக்கோ எவருக்கும் ஆறாவது விரல் முளைக்க வில்லை.  ஆகவே உதயகுமார் போன்ற அணுவியல் பொறிநுணுக்கவாதிகள், ஞாநி போன்ற எழுத்தாளர்கள், டாக்டர் புகழேந்தி போன்ற மருத்துவர்கள் ஆதாரமற்ற மூன்றாவது நபர் கருத்துக்களைப் பாமர மக்களுக்கு ஊட்டிப் பயமுறுத்தும் வழக்கத்தைக் கைவிடுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

     Schematic Pressurized Reactor

    பேரறிஞர் ஞாநி கல்பாக்க அணு உலைகள் தூங்கும் எரிமலை மேல் நடனம் ஆடுகின்றன என்று அபாயச் சங்கு ஊதுகிறார்.  கூடங்குளம் இரட்டை அணு உலைகள் எரிமலைப் பாறைமேல் பள்ளி கொண்டுள்ள தாக பெரிய புராணம் எழுதியுள்ளார் அடுத்தொருவர் ரா ரமேஷ்.. கல்பாக்கத்துக்கும், கூடங்குளத்துக்கும் இப்போது பிரச்சனை அணுமின் உலைகள் அல்ல !  அவற்றின் கீழாகத் தூங்கும் எரிமலைகள் ! எரிமலைக்கும் அணு உலைக்கும் வரும் சடுகுடுப் போட்டியில் அஞ்ச வேண்டியது எரிமலைக்கு, அணு உலை பாதுகாப்பாக புதைபடும். எரிமலைப் பூதங்கள் தூங்கும் சென்னைக் கடற்கரை மக்களும், குமரிக் கடற்கரை மக்களும் கோடிக் கணக்கில் எங்கே, எப்படிப் புலம் பெயரப் போகிறார்கள் ?

    2012 மார்ச்சில் ஞாநி கல்பாக்கம் அணுமின் உலைகள் தூங்கும் எரிமலை மேல் படுத்துள்ளது என்றும், அது 1757 ஜனவரி 20 இல் வெடித்ததை பரிணாம வளர்ச்சி மேதை டாக்டர் சார்லஸ் டார்வின் நேராகப் பார்த்ததாக ரா. ரமேஷ் தன் நூலில் எழுதி இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார்.  டார்வின் பிறந்து, இறந்த ஆண்டுகள். (1809-1882). இந்து மாக் கடலில் 1831-1835 ஆண்டுகளில் பயணம் செய்த டார்வின் கப்பல் கல்பாக்கம் அருகில் சென்றதாக அவரது கடல் வரைபடத்தில் இல்லை.  அது ஈழத் தீவுக்குத் தெற்கே ஆயிரம் மைல்களுக்கு அப்பால் சென்றது.  1757 இல் எரிமலை மூச்சு விட்ட புகைத்தடம் கூட அந்த தூரத்தில் தெரிந்திருக்க முடியாது.

    அணு உலை எதிர்ப்பாளி உதயகுமாரின் சில வினாக்களுக்கு என் பதில்



    ////கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக் கோருவதற்கான காரணங்கள் (கீற்றில் வந்தது)  உதயகுமார் திங்கள், 12 செப்டம்பர் 2011 ///
     
    http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=16513

    /////கூடங்குளம் அணுமின் நிலையங்கள் 1, 2 உள்ளூர் மக்களை கலந்தாலோசிக்காது, ஜனநாயக, மனித உரிமை மரபுகளை மீறி கட்டப்படுகின்றன. 1, 2 உலைகளுக்கான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை மக்களோடு பகிர்ந்து கொள்ளப்படவில்லை. கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்படவில்லை. 1, 2 உலைகள் அமைக்கப்பட்டிருக்கும் தலங்கள் பற்றிய ரசிய விஞ்ஞானிகளின் ஆதங்கங்கள் மூடி மறைக்கப்பட்டதோடு, தல ஆய்வறிக்கை (site Evaluation Study) மக்களுக்கு தரப்படவில்லை. பாதுகாப்பு ஆய்வறிக்கையும் (Safety Analysis Report) பொதுமக்களுக்கு, மக்கள் பிரதிநிதிகளுக்கு, பத்திரிக்கையாளர்களுக்கு அளிக்கப்படவில்லை. இப்படி மக்களுக்கு எந்தத் தகவலும் தராமல், உண்மைகளைச் சொல்லாமல், ஜனநாயக மரபுகளை மீறி நிறைவேற்றப்படுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது.

    kudankulam_323தமிழ்நாடு அரசின் அரசாணை எண். 828 (29.4.1991 – பொதுப்பணித்துறை) அணுமின் நிலையத்திலிருந்து 2 கி.மீ தூரத்திற்குள் அணுமின் கட்டிடங்களைத் தவிர வேறு எதுவும் இருக்கக்கூடாது என்றும், 2 முதல் 5 கி.மீ சுற்றளவிலான பகுதி நுண்ம ஒழிப்பு செய்யப்பட்ட பகுதியாக (Sterilization Zone) இருக்க வேண்டும் என்றும் சொல்கிறது. வீடுகளோ, மனிதர்களோ இருக்கக்கூடாது என்பதை நேரடியாகக் குறிப்பிடாமல், திசை திருப்பும் வார்த்தைகள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. அரசின் உண்மைநிலை என்ன என்பதை தெளிவாக தெரிவிக்கவில்லை.

    i) AERB எனும் அணுசக்தி ஒழுங்காற்று வாரியத்தின் விதிமுறைகள் படி 5 கி.மீ. சுற்றளவுக்குள் 20,000 பேருக்கு மேல் வசிக்கக்கூடாது. அணுமின் நிலையத்திலிருந்து 10 கி.மீ தூரத்திற்குள்ளேயே கூடங்குளம் கிராமத்தில் 20,000 மக்களும், இடிந்தகரை கிராமத்தில் 12,000 மக்களும், காசா நகரில் 450 குடும்பங்களும் வசிக்கிறார்கள்.

    ii) 10 கி.மீ சுற்றளவுக்குள் மாநிலத்தின் சராசரி மக்கள் அடர்த்தியின் மூன்றில் இரண்டு பங்குக்கு குறைவாகவே மக்கள் இருக்க வேண்டும். ஆனால் மாநில சராசரியை விட மிக அதிகமான மக்கள் இந்த பகுதியில் நெருக்கமாக வாழ்கிறார்கள்.

    iii) 30 கி.மீ சுற்றளவுக்குள் 1,00,000-க்கும் அதிகமான மக்கள் வாழும் நகரங்கள் இருக்கக்கூடாது. ஆனால் 2,00,000 மக்கள் வாழும் நாகர்கோவில் நகரம் 28 கி.மீ தூரத்திற்குள் இருக்கிறது.

    iv) 20 கி.மீ சுற்றளவுக்குள் சுற்றுலாத் தலங்களோ, சரித்திர பிரசித்தி பெற்ற இடங்களோ இருக்கக்கூடாது என்று AERB சொன்னாலும் உலக பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி 15 கி.மீ சுற்றளவுக்குள் இருக்கிறது.

    இப்படி கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து 30 கி.மீ சுற்றளவுக்குள் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வரும் நிலையில் எங்களை வெளியேற்றுவதோ, பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துவதோ, எங்களுக்கு தேவையான இருப்பிட வசதிகளை செய்வதோ, மருத்துவ வசதிகள் செய்து தருவதோ, பள்ளிகள் அமைத்து தருவதோ, மாற்று வேலைகள் ஏற்படுத்திக் கொடுப்பதோ கற்பனையில் கூட நடக்காத காரியம். 2004 டிசம்பர் சுனாமியில் மத்திய மாநில அரசினர் கொண்டிருந்த பேரிடர் மேலாண்மையை நாடே அறியும்.////

    VVER cutout



    என் பதில் :  அணுமின் உலைகளுக்கு அருகில் வாழும் மக்கள் எண்ணிக்கை கூடிக் குறைந்து மாறுவது.  2001 இல் கூடங்குள அணுமின்னுலை கட்ட ஆரம்பித்துடன் இருந்த ஜனத்தொகை பத்தாண்டுக்குப் பிறகு அதிகமா யிருக்கும்.  கனடாவில் கடந்த 40 ஆண்டுகளாய்ப் பாதுகாப்பாய் இயங்கி வரும் 12 பெரிய கனநீர் அணுமின் நிலையங்கள் (இந்திய கனநீர் அணுமின் உலைகளை ஒத்தவை). ஜனத்தொகை மிக்க டொரோண்டோ நகருக்கு (மில்லியன் 2011) அருகில் மின்சாரம் அனுப்பி வருகின்றன.  மனித நெருக்கம் புலப் பெயர்ச்சிக்கு  இடையூறாய் இருக்கும்.  கட்டி முடித்த அணுமின் உலைகள் பாதுகாப்பாக இயங்க முடியும். அவை யாவும் மனித நெருக்கத்தால் மூடப் பட வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

    ///அணுஉலைக் கட்டிடங்களின், குழாய்களின் மோசமான தரம், கட்டிடம் கட்டியதை உடைத்து மீண்டும் கட்டுவதான திருவிளையாடல்கள், உள்ளூர் காண்டிராக்டர்களின் கைங்கரியங்கள், ரசியாவில் இருந்து தாறுமாறாகவும் தலைகீழாகவும் வந்த உதிரிபாகங்கள், நிர்வாக குழப்பங்கள், குளறுபடிகள் என அடிவயிற்றை புரட்டிப் போடும் தகவல்கள், அனுதினமும்  வந்து கொண்டே இருக்கின்றன. 26.9.2006 அன்று அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு வருகை தந்தார். அணுசக்தித் துறை உயர் அதிகாரிகளோடு அவர் நின்று கொண்டிருந்த போது கூரையில் இருந்து ஊழியர் ஒருவர் ஓரிரு அடி தூரத்தில் பொத்தென்று விழுந்து அனைவரையும் கதி கலங்கச் செய்தார். குடியரசுத் தலைவர் வந்தபோதே இந்த நிலை என்றால், குடிமக்களுக்கு என்ன நிலை? /////

    என் பதில் :   யந்திர யுகத்தில் தொழிற்சாலை விபத்துக்கள் ஏதாவது நேர்வது உண்மை.  ஆனால் கடந்த 40 ஆண்டில் அடுத்தடுத்து இயங்கும் 20 இந்திய அணு உலைகளில் ஒருவர் கூட இதுவரை மரிக்க வில்லை என்பதும் உண்மை.  கதிரடி பட்டு இதுவரை ஒருவர் கூட நோய்வாய்ப்பட வில்லை என்பதும் உண்மை.

    /////உலைகளை குளிர்விக்கும் சூடான கதிர்வீச்சு கலந்த தண்ணீரையும், உப்பு அகற்றி ஆலைகளில் இருந்து வெளிவரும் உப்பு, சேறு, ரசாயனங்களையும் கடலில் கொட்டி, ஊட்டச்சத்து மிகுந்த கடல் உணவையும் நச்சாக்கப் போகிறோம். உணவு பாதுகாப்பு கேள்விக்குறியாகும். மீனவர்களின் விவசாயிகளின் வாழ்வுரி மையும், வாழ்வாதார உரிமைகளும் முற்றிலுமாக அழிக்கப்படும். விபத்துக்களோ, விபரீதங்களோ நடக்கவில்லை என்றாலும் அணு உலைகளில் இருந்து அனுதினமும் வெளியாகும் கதிர்வீச்சு நச்சுப் பொருள்களை உண்டு, பருகி, சுவாசித்து, தொட்டு அணு அணுவாய் சிதைந்து போவோம்.///

    என் பதில் :    உலகத்தில் கடந்த 40 ஆண்டுகளால் அடுத்தடுத்து இயங்கி வரும் 430 மேற்பட்ட அணுமின் உலைகளில் பெரும்பான்மையானவை நதிக் கரையிலோ, கடற்கரையிலோ, ஏரிக்கரை மீதோதான் அமைக்கப் பட்டுள்ளன.  ஆகவே மேற்கூறிய கருத்து முற்றிலும் மெய்யாகாது.  அணு உலைகளில் இருந்து அனுதினமும் கதிர்வீச்சு நச்சுப் பொருள்கள் வெளியாவதில்லை.  விபத்துக்கள் அனுதினம் நேர்வதில்லை.  என்ன ஆதாரம் வைத்து இப்படி வெறுமையாகப் புகார் செய்ய முடியும் ?  அனுதினம் வெளியாகும் திரவ, திடக் கழிவுகள், வாயுப் புகை யாவும் சோதிக்கப் படாமல் வெளியே விடப் படுவதில்லை.

    ////பேரிடர்கள் வராது, நடக்காது, என்று தரப்படும் வெற்று வாக்குறுதிகளை ஏற்க முடியாது. 2003 பிப்ரவரி 9ம் தேதி இரவு 9.45 மணி அளவில் திருநெல்வேலி மாவட்டம், பாளையங் கோட்டையில் ஒரு மெலிதான நிலநடுக்கம் ஏற்பட்டது. 2006 மார்ச் 19ம் தேதி மாலை 6.50 மணிக்கு கூடங்குளத்தை சுற்றியுள்ள கன்னன்குளம், அஞ்சுகிராமம், அழகப்புரம், மயிலாடி, சுவாமிதோப்பு போன்ற கிராமங்களில் நில அதிர்வு உண்டானது. வீடுகளின் சுவர்களிலும், கூரைகளிலும் கீறல்களும், விரிசல்களும் தோன்றின. இரண்டு நாட்கள் கழித்து மார்ச் 21ம் தேதி கரூர் மாவட்டத்தில் அதிகாலை 1.30 மணிக்கும், 5.00 மணிக்கும் நில அதிர்வுகள் உண்டாகின. 2011 ஆகத்து முதல் வாரத்தில் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் நிலநடுக்கம் நடந்திருக்கிறது. மார்ச் 11, 2011 அன்று நடந்த புகுசிமா விபத்தினால் அமெரிக்க அணு உலைகள் ஜப்பானின் மேலாண்மை இருந்த பிறகும் வெடித்து கதிர்வீச்சை உமிழ்ந்திருக் கின்றன. கூடங்குளம் அணுமின் நிலையம் 2004 டிசம்பர் சுனாமிக்கு முன்பே கட்டப்பட்ட நிலையில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக அணுசக்தித் துறை சொல்லும் வாதங்கள் உண்மைக்கு புறம்பானவை. /////

    என் பதில் :   9 ரிக்டர் அளவு பயங்கர நிலநடுக்கத்தில் கூட ஜப்பான் புகுஷிமா அணுமின் நிலையங்கள் எதுவும் பாதிக்கப் படவில்லை.  அத்தனை அணுமின் உலைகளும் நிலம் நடுங்கியதும் பாதுகாப்பாய் நிறுத்தமாயின.  நிறுத்தமான அணு உலையில் அபாய வெப்பத் தணிப்பு ஏற்பாடுகள் சுனாமியில் மூழ்கிப் போனதாலும், இரட்டை அல்லது முப்படி வெப்ப தணிப்பு ஏற்பாடுகள், (Shutdown Cooling Systems) ஓய்வுத் தணிப்பு அமைப்பு (Passive / Gravity Cooling Systems) இல்லாததாலும் எருக்கோல்கள் சில உருகிக் கதிரியக்கம் கசிந்தது.  கூடங்குளத்தில் அவ்விதப் பிரச்சனைகள் எழமாட்டா.

    1979 இல் நேர்ந்த திரிமைல் தீவு அணுமின் நிலைய விபத்தில் ஹைடிரஜன் வாயுக் கோளம் உருண்டு விபத்து ஏற்படப் பயமுறுத்தினாலும் வெடிப்பு ஏற்பட வில்லை..  அந்த கதிரிக்க விபத்துக்குப் பிறகு உலக நாடுகள் தமது அணுமின் உலைகளில் ஹைடிரஜன் வாயு இணைப்பிகளை (Hydrogen Recombiners) உடனே அமைத்துக் கொண்டன.  தனியார் துறை இயக்கும் புகுஷிமா ஜப்பான் அணுமின் உலைகளில் அவ்விதம் ஏன் இல்லாமல் போயின என்பது 2011 ஆம் ஆண்டில் வியப்பாக இருக்கிறது.  கூடங்குளத்தில் ஹைடிரஜன் வாயு இணைப்பிகள் இருப்பதால் அந்தப் பிரச்சனை எழாது.

    ////அணுமின் நிலையங்கள் மீதான தீவிரவாத அச்சுறுத்தல் பற்றி பாரத பிரதமரே அவ்வப்போது எச்சரித்து வருகிறார். ஆகத்து 18, 2011 தேதியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் உள்துறை துணை அமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் அணுமின் நிலையங்கள் பயங்கரவாத குழுக்களின் முக்கிய இலக்குகளாக இருக்கின்றன என்கிறார்.////

    என் பதில் :   அமெரிக்காவில் 9/11 மூர்க்கரின் வரலாற்று முக்கிய தாக்குதலில் ஓரிரு நாட்களில் 5000 பேர் ஜெட் விமான மோதலில் மாண்டனர்.  அதன் பிறகு உலகின் 430 மேற்பட்ட அனைத்து அணுமின் உலைகளும் இராணுவப் பாதுகாப்பில் இயங்கத் துவங்கின.  மூர்க்கர் அணு உலைகள் அருகில் வராமல் பாதுகாக்க வேண்டுமே தவிர பயந்து போய் அவற்றை மூடிவிடக் கூடாது.

    ////2007 பிப்ரவரி மாதம் அப்போதைய தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றி வசிப்பவர்களுக்கு இலவச குழுக் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். சுமார் 1 வருடத்திற்கு முன்னால் இந்திய அணுமின் கழகமும், இந்தியாவுக்கு அணு உலைகள் வழங்கும் ஆட்டம் ஸ்டராய் எக்ஸ்போர்ட் என்னும் ரசிய நிறுவனமும் இழப்பீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ரசியா வழங்கும் உலைகளில் ஏதேனும் விபத்துக்கள் நிகழ்ந்தால், இழப்பீடு வழங்க வேண்டும் என இந்தியா கேட்க, அந்த மாதிரியான உடன்படிக்கைக்கு ஒப்புக்கொள்ள முடியாது, உலைகளை இயக்கு கின்ற இந்திய அணுமின் கழகமே முழுப் பொறுப்பு ஏற்க வேணுடும் என ரசியா கையை விரித்தது. 2 008ம் ஆண்டு ரகசியமாக கையெழுத்திடப்பட்ட இரு நாட்டு உடன்படிக்கை ஒன்றின் 13-வது சரத்து இதைத் தெளிவாக எடுத்துரைக்கிறது என்று சொல்கிறது ரசியா. போபால் நச்சுவாயுக் கசிவில் பாதிக்கப்பட்ட மக்கள் 25 ஆண்டுகள் கழித்தும் இன்னும் இழப்பீடுகள் பெறாமல், எந்தவிதமான உதவிகளும் கிடைக்காமல் வதைப்பட்டுக் கொண்டிருப்பது மொத்த இந்தியாவுக்கே, உலகத்திற்கே தெரியும்.////

    என் பதில் :    போபால் விஷவாயு விபத்துக் கசிவில் பல்லாயிரம் இந்தியர் மரித்தனர்.  பல்லாயிரம் இந்தியர் கண்ணிழந்தார்.  அங்கயீனப் பிறப்புகள் உண்டாயின.  அவருக்கு முறையான காப்பீடு இழப்பு நிதி சரியான தருணத்தில் அளிக்கப் படவில்லை என்பது உண்மை.  இரசாயனத் தொழிற்துறை நிறுவகங்களில் இந்திய அணுசக்திச் சட்டம் போல் (Atomic Energy Act) தெளிவாகக் காப்பீடு முறைகள்/பொறுப்புகள் விளக்கமாக எழுதப் படவில்லை.  ரஷ்ய அணு உலைச் சாதனங்கள் ஆரம்பத்தில் பழுதானல் அவற்றைச் செம்மைப் படுத்தும் பொறுப்பு & செலவு ரஷ்யாவைச் சேர்ந்தது.  அணு உலை இயங்க ஆரம்பித்து மனிதத் தவறாலோ, யந்திரப் பிசகாலோ விபத்து உண்டானால் அந்த நிதி இழப்பை நியூகிளியர் பவர் கம்பெனி (NPCIL) ஏற்றுக் கொள்ளும். செலவு குறிப்பிட்ட வரம்பு மாறினால், இந்திய அரசாங்கம் ஈடு செய்யும்.

    ////அணுஉலை கழிவு ஒரு பெரிய பிரச்சனை. கூடங்குளம் அணுமின் நிலைய கழிவு ரசியாவுக்கு எடுத்துச் செல்லப்படும் என்றுதான் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. பின்னர் அது இந்தியாவிலேயே மறு சுழற்சி செய்யப்படும் என்றும், கூடங்குளத்திலேயே அதற்கான உலை நிறுவப்படலாம் எனவும் தெரிவித்தனர். கூடங்குளம் அணு உலைகள் ஆண்டுக்கு சுமார் 30 டன் யுரேனியத்தை பயன்படுத்தும். ஏறத்தாழ 30 ஆண்டுகள் இயங்கும் போது 900 டன் கழிவு வெளியாகும். பயங்கரமான கதிர்வீச்சை வெளியிடும் இந்த கொடிய நச்சை 24,000 ஆண்டுகள் நாம், நமது குழந்தைகள், நமது பேரக்குழந்தைகள் அவரது வழித் தோன்றல்கள் போற்றிப் பாதுகாக்க வேண்டும். அபாயகரமான இந்தக் கழிவுகளை தேக்கி வைத்திருப்ப தாலும், மறு சுழற்சி செய்வதாலும் நிலத்தடி நீரும், காற்றும் பாதிக்கப்படும். நமது விளை நிலங்களும், பயிர்களும், கால்நடைகளும் பாதிக்கப்படும்.///

    என் பதில்  :   கூடங்குள அணு உலைத் தீய்ந்த எருக்கோல்களை மீண்டும் ரஷ்யாவுக்கு அனுப்பலாம்.  அல்லது சுத்தீகரித்து எஞ்சிய எருக்கருவை மீட்கலாம்.  இவற்றில் முதல் பொறுப்பு இந்தியாவுக்கு நிதி விழுங்குவது. கப்பலில் கனத்த கவசமோடு நீண்ட தூரம் அனுப்பவதில் சிரமங்கள் அதிகம். தீய்ந்த எருக்கருச் சுத்தீகரிப்பு முறைகள் இந்திய அணுவியல் நிபுணருக்குப் பழக்கமானவை.  மேலும் சேமிப்புச் சுரங்கங்களில் கதிரியக்கக் கசிவுகள் நேர்வதில்லை.  இரண்டாம் வழியைப் பின்பற்றுவதில் பாதுகாப்பு உள்ளது.

    ///அவற்றில் இருந்து பெறப்படுகின்ற பால், காய்கறிகள், பழங்கள் நச்சு உணவுகளாக மாறும். அணு உலைகளை குளிர்விக்கும் கதிர்வீச்சு கலந்த நீர் கடலுக்குள் விடப்படுவதால் கடல் நீரின் வெப்ப நிலை அதிகரித்து கதிர்வீச்சால் நச்சாக்கப்பட்டு மீன் வளம் பாதிக்கப்படும். மீனவ மக்கள் ஏழ்மைக்குள்ளும், வறுமைக்குள்ளும் தள்ளப்படுவார்கள். மீனவ மக்களின் மற்றும் உள்ளூர் மக்களின் கடல் உணவு நச்சாகும் போது நமது உணவு பாதுகாப்பு அழிக்கப்படும். அணு உலையின் புகை போக்கிகளில் இருந்து வருகின்ற நீராவி, புகை மூலமும், கடல் தண்ணீர் மூலமும் அயோடின் 131, 132, 133, சீசியம் 134, 136, 137 அய்சோடோப்புகள், ஸட்ராண்டியம், டீரிசியம், டெலூரியம், போன்ற கதிர்வீச்சு பொருட்கள் நமது உணவில், குடிதண்ணீரில், சுவாசத்தில், வியர்வையில் கலந்து அணு அணுவாக வதைப்படுவோம். நமது குழந்தைகள், பேரக்குழந்தைகள் இந்த நச்சை கொஞ்சம், கொஞ்சமாக நீண்ட நாட்கள் உட்கொண்டு புற்றுநோய், தைராய்டு நோய் போன்ற கொடிய நோய்களுக்கு ஆளாகி உடல் ஊனமுற்ற, மணவளர்ச்சியற்ற குழந்தைகளைப் பெற்று பரிதவிப்பார்கள்.////

    என் பதில் :  அணு உலை எருக்கோல்கள் வெப்பத் தணிப்பின்றிச் சிதைவடையும் வாய்ப்புக்கள் கூடங்குளத்தில் மிக மிக அபூர்வம்.  சிதைவடையா அணு உலையில் ஐயோடின் 131, 132, 133, சீசியம் 134, 136, 137 ஐசோடோப்புகள், ஸட்ராண்டியம், டீரிசியம், டெலூரியம், போன்ற கதிர்வீச்சு பொருட்கள் வெளியேறு வதில்லை.

    ////1988ம் ஆண்டு கூடங்குளம் அணுமின் திட்டத்திற்கு (முதல் இரண்டு உலைகளுக்கு) 6,000 கோடி ரூபாய் செலவாகும் என்றார்கள். ஆனால் 1997 ஏப்ரல் மாதம் இந்த திட்ட்த்தின் துவக்க மதிப்பீடே 17,000 கோடி ரூபாயாகும் என்று சொன்னார்கள். 1998 நவம்பர் மாதம் கூடங்குளம் அணுமின் நிலையங்கள் 2006ம் ஆண்டு இயங்கும் என்றும், 15,500 கோடி ரூபாய் செலவாகும் என்றும் விளக்கமளித்தார்கள். 2001ம் ஆண்டு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர் குழு இந்தத் திட்ட்த்தின் மொத்தச் செலவு 13,171 கோடி எனவும், இந்திய அரசு 6,755 கோடி முதலீடு செய்ய, ரசியா மீதமிருக்கும் தொகையை 4% வட்டியில் வழங்கும் என்று சொன்னார்கள். முதன் முறையாக எரிபொருள் வாங்குவதற்கும், அடுத்தடுத்த 5 முறை எரிபொருள் வாங்குவதற்கும் 2,129 கோடி ரூபாயில் ஒதுக்கப்பட்டது. இந்த தொகை கிட்டத்தட்ட ரசிய அரசின் கடனுதவியாகவே இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. 10 ஆண்டுகள் கழித்து இன்றைக்கு எவ்வளவு செலவாகும் என்பதை நாம் ஊகித்துக் கொள்ள முடியும். நமது குழந்தைகளை கடனாளிகளாக ஆக்கும் திட்டம் நமக்கு வேண்டாம்.///

    என் பதில் :   கட்டி முடிக்கப் பட்ட 15,000 கோடி கூடங்குள இரட்டை அணுமின் உலை முடக்கத்தால் இந்திய அரசுக்கும், இந்தியர் வரி நிதிக்கும் குறைந்த அளவு வருவாய் இழப்பு தினமொன்றுக்கு சுமார் 100,000 டாலர் (50 லட்சம் ரூ).  ஆதலால் முதல் இழப்பு, வட்டி இழப்பு, கடன் அடைப்புப் பிரச்சனைகள் அணு உலை முடக்கத்தால் குறையப் போவதில்லை.  கடல் அருகே இருக்கும் அணு உலைச் சாதனங்கள் துருப்பிடித்துப் பயனற்றுப் போகவும் வாய்ப்புள்ளது.

    //நமது நாட்டை விட எத்தனையோ மடங்கு வளர்ச்சி அடைந்த, தொழில் வளமிக்க ஜெர்மனி 2022ம் ஆண்டுக்குள் அனைத்து அணு உலைகளையும் மூடிவிட முடிவெடுத்திருக்கிறது. நோய்வாய்ப்பட்டு அமெரிக்காவில் உள்ள ஸ்லோன் கெட்டரிங் புற்று நோய் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவதாக சொல்லப்படும் திருமதி.சோனியா காந்தி அவர்களின் பிறந்த நாடான இத்தாலியில் அண்மையில் நட்த்தப்பட்ட வாக்கெடுப்பில் 90% மக்கள் அணு உலைகள் வேண்டவே வேண்டாம் என முடிவெடுத்திருக்கிறார்கள். சுவிச்சர்லாந்து, மெக்சிகோ போன்ற நாடுகள் அணு உலைகளை மூடிவிட முடிவெடுத்தி ருக்கின்றன. புகுசிமா விபத்து நடந்த சப்பான் நாட்டிலே கட்டப்பட்டு கொண்டிருக்கும் 10 அணு உலைகளை நிறுத்தி விட்டனர். 28 பழைய உலைகளையும் மூடிவிட்டனர்////.

    என் பதில் :   புகுஷிமா அணுமின் உலைகள் விபத்தால் ஜப்பானில் உள்ள சுமார் 50 அணுமின் நிலையங்கள் தற்காலிய மாக நிறுத்தம் அடைந்துள்ளன.  சில அணுமின் நிலையங்கள் செம்மைப் படுத்தப் படுகின்றன.  அவை மீண்டும் ஒரு சில மாதங்கள் இயங்க ஆரம்பிக்கும். மற்ற ஆசிய நாடுகளில் (சைனா, இந்தியா, தென் கொரியா) அணுமின் உலைகள் நிறுத்தப் பட வில்லை.  ஐரோப்பா, கனடா, அமெரிக்க நாடுகளில் எந்த ஓர் அணுமின் உலையும் நிறுத்தம் அடைய வில்லை. ஹிரோஷிமா, நாகசாக்கியைச் சுத்தம் செய்து புதுபித்த ஜப்பான் மீண்டும் அணுமின் நிலையங்களைச் செம்மைப் படுத்தி இயக்கும்.  அனைத்தும் மூடப்படும் என்று எதிர்பார்க்க வேண்டாம்.

    ///நமது நாட்டிலேயே மேற்கு வங்காள மாநிலத்தின் முதல்வர் மதிப்பிற்குரிய மம்தா பானர்சி அவர்களின் அரசு கரிப்பூர் என்னும் இடத்தில் ரசிய உதவியுடன் கட்டப்படவிருந்த அணு உலைத் திட்டத்தை நிராகரித்து விட்டு, மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் அணு உலைகள் அமைக்க மாட்டோம் என்று அறிவித்திருக்கிறது. நமது அண்டை மாநிலமான கேரளாவில் அணு உலைகள் வேண்டவே வேண்டாம் என்று அனைத்து கட்சிகளும் ஒருங்கே நின்று எதிர்க்கின்றன.////
    என் பதில் :  கூடங்குளத்தை வர்வேற்றது கருணாநிதி திமுக. இப்போது எதிர்ப்பது ஜெயலலிதா திமுக.  மாநில அரசியல் கட்சிகள் மாறுவதால் இம்மாதிரி ஏற்படும் ஆதரவு / எதிர்ப்பு முடிவுகள் நிரந்தரம் அல்ல.

    ///ரசியா, அமெரிக்கா, பிரஞ்சு நாட்டு நிறுவனங்களின் லாபம் முதன்மையானதா அல்லது இந்திய மக்களின் உயிர்களும், எதிர்காலமுமா ?////

    என் பதில் :   21 ஆம் நூற்றாண்டில்  ஒரிஜினல் 1000 மெகா வாட் அணு உலை டிசைன்கள் செய்து விற்பனை செய்பவை அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா, கனடா ஆகிய அந்நிய நாடுகளே.  ஆசிய நாடுகள் சைனா, தென் கொரியா, இந்தியா, ஜப்பான் உட்பட அனைத்தும் இந்த நான்கு நாடுகளிடம்தான் பேரளவு மெகா வாட் உற்பத்தி செய்யும் அணு உலைகளைக் கடனுக்கோ, காசுக்கோ வாங்கி கடந்த 50 ஆண்டுகளாய்க் கட்டி நிறுவகம் செய்கின்றன.

    ++++++++++++++

    Full Power News 2014 June 7

    ++++++++++++++

    தகவல்:
    1.  http://www.npcil.nic.in/index.asp  [Nuclear Power Corporation of India Ltd Website for Nuclear Power Updates]

    2. http://pib.nic.in/release/release.asp?relid=20878  [President Dr. Abdul Kalam Speech on Kudungulam (Sep 22, 2006)]

    3. http://www.stratmag.com/issue2Nov-15/page03.htm
    [Russia Breaches Nuclear Blockade against India By: C. Raja Mohan (Nov 16, 2001)]

    4.  World Nuclear Association – WNA
    Radiological Protection Working Group – RPWG (Official List – July 20, 2006)

    http://www.world-nuclear.org/sym/2006/st_pierre.htm

    5. World Nuclear Association – WNA
    Waste Management and Decommissioning Working Group – WM&DWG (Official List – July 25, 2006)    http://www.world-nuclear.org/sym/2006/st_pierre.htm

    6. http://www.candu.org/npcil.html  [Indian Heavywater Nuclear Power Plants]

    7. Safety of Nuclear Power Reactors, [www.uic.com.au/nip14.htm] (July 2007)

    8. Nuclear Power Plants & Earthquakes [www.uic.com.au/nip20.htm] (Aug 2007)

    9. http://www.thinnai.com/?module=displaystory&story_id=80708091&format=html  Letter By R. Bala (August 9, 2007)

    10. http://www.wano.org.uk/WANO_Documents/What_is_Wano.asp  [World Association of Nuclear Operation Website]

    11 IAEA Incident Reporting System Using Operational Experience to Improve Safety (IAEA Instruction)

    12. http://www.world-nuclear.org/info/inf53.html  (World Nuclear Association Report on Indian Nuclear Power)  (February 2012)

    13. http://jayabarathan.wordpress.com/kudankulam-vver-reactor/

    14. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40303233&format=html

    [கூடங்குளம் அணுமின் உலைப் பாதுகாப்பு ஆய்வுகள்]

    15. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40607071&format=html

    [செர்நோபிள் விபத்துபோல் கூடங்குளத்து அணுமின் உலையில் நிகழுமா ? ]

    ******************

    S. Jayabarathan [jayabarathans@gmail.com] June 28, 2014

    Share
  • சுஜாதா சார்….கிரேசி மோகன்….

    கிரேசி மோகன்

    crazyஎன்னமோ தெரியவில்லை எனக்கு இன்று ஏக மசக்கை, இந்தச் ஷணமே அமரர் ‘’சுஜாதாவின்’’ ‘’கற்றதும் பெற்றதும்’’ படித்தே ஆகவேண்டுமென்று….சுஜாதாவின் தோழரும் எனது நண்பருமான திரு.ரகுநாதன் அவர்களை தொடர்பு கொண்டேன்….உடனடியாக க.பெ வின் பாகம்-3 அனுப்பியதோடல்லாமல், மற்ற பாகங்களையும் வாங்கி அனுப்புவதாக கூறியிருந்தார்….ஏற்கனவே பல சுஜாதா புத்தக தானம் எனக்காக நிறைய செய்திருக்கிறார்….அவரிடம் சொன்னேன் ‘’இம்முறை ‘’கற்றதும் பெற்றதும்’’ தாங்கள் விற்றதும் அடியேன் வாங்கியதுமாக இருக்கட்டுமே என்று….மனுஷன் மறுத்து விட்டார்….பழையபடி க.பெ தும்மும் இலவச இணைப்பாகி விட்டது….ஓஸியில் படித்தால்தான் கிரேசிக்கு ஒட்டும் போலிருக்கிறது….மேலும் விற்க சுஜாதா என்ன வெறும்பொருளா….எழுத்தச்சன் அவர் பரம்பொருள் அல்லவா….எதற்கு இத்தனை முகாந்திரம் என்றால்….பாகம்-3 ல் சுஜாதா சார் என்னுடைய கவிதையை போட்டுள்ளார்….
    ரீ-டெலிகாஸ்ட் செய்ததில் , அவருக்கு நான் காண்பித்த ‘’பெருமாளே சரிதானா’’ என்ற கவிதைகள் நினைவுக்கு வந்தது….அதில் ஒன்றுதான் க.பெ தும்மில் வெளியாகியிருந்தது….நன்றி ரகு சார்….

    ரகுநாதன் சாரின் அன்புக் கட்டளைக்கேற்ப , சுஜாதாவின் ‘’ஸ்ரீரங்கத்து தேவதைகள்’’….இரா.முருகன் சாரின் ‘’ரெட்டைத் தெரு’’ பாதிப்பில் ‘’மை லவ்வாப்பூர் டைம்ஸ்’’ என்ற எனது மயிலை மந்தைவெளி அனுபவங்களுக்கு சுஜாதா சுழி போட்டு விட்டேன்….பார்ப்போம்….முருகனுக்கும், சுஜாதாவுக்கும் இருந்த மூளையும், திறனும் அடியேனுக்கு இருக்கிறதா என்று….

    சுஜாதா சார் பரமபதம் எய்திய போது, அவரது ஸ்கெட்ச்சையும், ஒரு இரங்கல் வெண்பாவும் என்னால் இயன்ற அஞ்சலியாக செய்தேன்….அவைகளையும் இணைத்துள்ளேன்….

    எழுத்தாளர் சுஜாதா மறைவால் வருந்திsujatha
    ————————————————-
    கதையா ? கவிதையா ? கட்டுரையா ? கேட்போர்க்(கு)
    எதையும் வழங்கும் எழுத்துப் -புதையலே
    ஸ்ரீரங்க தேவதையே ஏரங்க ராஜனே
    பாரிங்கு நீரின்றி பாழ்….

    சுஜாதா சாரிடம் அடியேன் படித்துக் காட்டிய ‘’பெருமாளே சரிதானே’’….

     
    ” பெருமாளே சரிதானே ”
    —————————–

    பால் குடத்தை நோக்கிப் படையெடுக்கும் எறும்புகளாய்
    தோல் குடத்தைத் தொத்த வரும் தீவீர வியாதியெலாம்
    மால் படுத்த அரங்கன் மணிவண்ணன் பேர் சொல்ல
    வால் சுருட்டிக் கொள்ளுமாமே ,பெருமாளே சரிதானே….(1)

    நாய் வால் நிமிர்த்தலுக்கு இணையான நாற்பதிலே
    நோய்வாய் கிடந்து வளைந்த நேரத்தில்
    தாய்போல் தேற்றி தூக்கி நிறுத்த வல்ல
    மாயா ஜால மருந்தாமே பெருமாளே சரிதானே….(2)

    கானல்நீர் இளமைக் காலம் கண்சிமிட்டும் நேரம்
    கூனல் முதுகில் முதுமை மூப்பு மூட்டை பாரம்
    நாணல் யமுனா நதி நாதன் திருநாமம்
    பூணல் பொலிவாமே பெருமாளே சரிதானே….(3)

    முயலாமை கதையாக முடிகின்ற வாழ்க்கையின்
    இயலாமை தன்னை இளமையிலே உணர்ந்து
    செயலாவையும் ஸ்ரீரங்கனுக் களித்தால்
    பயமில்லையாமே பெருமாளே சரிதானே….(4)

    கள் ஒழுகு மலர் தேடி கருவண்டு மொய்ப்பது போல்
    உள் ஒழுகும் உணர்வுக்கு ஓடிவரும் ஒப்பில்லா
    கள்ளழகன் கார்வண்ணன் காகுத்தன் கண்ணனென்று
    தெள்ளமுதப் பிரபந்தம் சொல் பெருமாளே சரிதானே….(5)

    சிலந்திதன் வலையில் சிக்கிடும் பூச்சியாய்
    புலன்கள் ஐம்பொறி புகுந்து புலம்பாமல்
    நலம்தரும் நாராயணன் நாமம் சொன்னால்
    பலன் பரம் பதமாமே பெருமாளே சரிதானே….(6)

    பத்தியம் இல்லாத பகாசுர வாழ்க்கையை
    சத்தியம் என்றெண்ணி சஞ்சலம் அடைவோர்
    நித்திய கல்யாண வைபவன் அருளால்
    முத்தி அடைவாராமே பெருமாளே சரிதானே….(7)

    இல்லாததை இருப்பதென்று எண்ணிக் குவித்து
    செல்லாத இவ்வாழ்வை செலவழிக்க முயலாமல்
    மல்லாண்ட மணிவண்ணன் மலர்பதம் பற்றினால்
    எல்லாமும் தெளிவாமே பெருமாளே சரிதானே….(8)….கிரேசி மோகன்….

    Share
  • திருமால் திருப்புகழ் (126)

    கிரேசி மோகன்

    Bhagavatha: Akrura Darshanam - Keshav
    Bhagavatha: Akrura Darshanam – Keshav

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ————————————————————
    ”கண்ணன் வெண்பாக்கள்’’
    —————————————————

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    பயமாசை கோபம், பொறாமைப் பழுக்கு,
    மயமான மக்கு மனமே, -சயனம்,
    அராவணை கொள்ளும், அரங்கன் பதத்தில்,
    சரேலெனச் சேர சமத்து….(271)

    கற்றது கையளவு, பெற்றது பையளவு,
    உற்றதோர் சாம்பலே உன்னளவு, -சற்றிதை,
    சிந்தி மடமனமே, சீர்மல்கும் ஆய்ப்பாடி,
    நந்த குமாரனை நண்ணு….(272)

    காலை எழுந்தவுடன், காலைப் பரத்திநின்று,
    வேலைக்(கு) அலைவது வீண்மனமே, -நாளை,
    நிகழ்த்தி நடத்தி, நிறைவேற்றும் கண்ணன்,
    முகத்தில் சோம்பல் முறி….(273)

    வாதாடி வம்படித்து, வாழ்ந்ததெலாம் வையமெனும்,
    தீதாடி பிம்பத் திருக்கன்றோ, -சூதாடி,
    தன்னனைத்தும் தோற்ற, தருமர்க்(கு) உதவிய,
    கண்ணனை நெஞ்சே கருது….(274)

    பார்த்தசாரதி பெருமாள் கருட வாகனம்….
    ————————————————————————-
    கொள்ளும்புண் ணாக்கும், குதிரைக்(கு) அளித்தன்று,
    வில்விஜயன் தேரை விரட்டியவன், -புள்ளமர்ந்து,
    வல்லிக் குளத்தை, வலம்வருதல் காணாது,
    பள்ளிக் கிடந்தொழிந்தேன் பாழ்….(275)

    தவழ்ந்தான் தரையில், தயிர்மோர் திருட,
    உவந்தான் எறிந்தான் உறிக்கு, -கவண்தான்,
    சிவந்தான் இராதை, சினேகத் தொடர்பால்
    அவன்தான் அனந்தன் அசைப்பு….(276)

     படத்திற்கு நன்றி:

    http://bhagavatham.blogspot.in/

     

    Share
  • திருமால் திருப்புகழ் (125)

    கிரேசி மோகன்

    Bhagavatha - Vamana Avatar. - Keshav
    Bhagavatha – Vamana Avatar. – Keshav

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ———————————————————-
    ’’கண்ணன் வெண்பாக்கள்’’
    —————————————————–

    Bhagavatha - Shakatasura - Keshav
    Bhagavatha – Shakatasura – Keshav

    நீர்வண்ணா, வெண்ணெய்நெய் மோருண்ணும் பால்வண்ணா,
    கார்வண்ணம் ஆனதன் காரணம், -போர்முன்னம்,
    தன்னில் அதர்மம், தொழிலாகச் செய்ததனால்,
    உன்னில் கருப்பு உதிப்பு….(265)

    உன்னிலே உள்ளது, என்னிலும் உண்டது,
    பின்னிப் பிணைந்தபின் பேதமேன், -கண்ணனே,
    எண்ணிலா ஜீவனுள், ஏகமாய் நிற்கிறான்
    கண்ணிலே கோளாறு காண்….(266)

    ”உப்பில்லை ஆனாலும், தப்பில்லை ஏற்றிடுவேன்,
    சொப்பில் விளையாடும் சீதனத்தை” -செப்பினோய்!,
    உப்பிலி அப்பனே, உன்தாள் சரணடைந்தேன்,
    இப்பயலை ஏற்பாய் இசைந்து….(267)

    ஆத்துமாவில் ஓர்காலும், சோத்துமாவில் ஓர்காலும்,
    மாத்திமாத்தி வைக்கும் மடமனமே, -நூத்தியெட்டில்,
    நின்றமர்ந்து பாம்பில், நயனம் வளர்ப்பவர்முன்,
    சென்றடங்கி சும்மா சுகி….(268)

    அறம்பொருள் இன்பம், அளித்திட வந்தான்,
    பரம்பொருள் அன்று பலிக்கு, -வரம்பெரும்,
    மோகத்தில் அம்மூன்று, மூன்றடியாய் மாறிட,
    லோகப் பாதாளம் லபிப்பு….(269)

    காலை எழுந்தவுடன், கண்ணன் பெயர்சொல்லி,
    மூளை அடுப்பை மூட்டிடு, -மாலை,
    மலைவனம் சென்றாயர் மாடுகள் மேய்க்க,
    அலைபவன் பேரால் அணை(SWITCH OFF)….(270)

    ———————————————————————————————————-

     படங்களுக்கு நன்றி:

    http://bhagavatham.blogspot.in/

    Share