Blog

  • சொட்டு மருந்து … 1

    –இன்னம்பூரான்.

    Evening-Tamil-News-Paper_96997797490

    சிறு துளி பெருவெள்ளம். இதுவும் அதுவுமாக சட்டம், தணிக்கை, விழுப்புணர்ச்சி, ஆலோசனை நேரம் போன்ற தகவல்களை தொகுத்தும், அவிழ்த்தும், சங்கிலித்தொடராகவும், தனிமொழியாகவும், அவ்வப்பொழுது சிறு துளிகள், உஜாலா சொட்டு நீலம் போல் இங்கே காட்சி தருகின்றன. அவற்றால் ஏற்படும் பிரகாசமோ, பெருவெள்ளமோ, உமது பாடு.

    உலகமெங்கும் வினாடி தோறும் பற்பல நிகழ்வுகள்.

    சில வியக்க வைக்கின்றன; மீனா ஐஏஎஸ் பாஸ் செய்து விட்டார். இத்தனைக்கும் அவர் தன் கையால் பரிக்ஷை எழுதவில்லை. ஆள் வைத்து எழுதினார். படித்தது மற்றவர்கள். அதை உள்வாங்கியது, அவர். செவிவாய் செய்திகளை அவர் ஜீரணம் செய்த விந்தை சாகசம் பற்றி கேட்கும்போது, நமது மனம் பாகாய் உருகி விடுகிறது. சர்வ வல்லமை புகழ் ஆண்டவனே! உனக்கு கண் இல்லையா? உங்களுக்கு ஹெலென் கெல்லரை பற்றியும், வேத் மேஹ்த்தா பற்றியும் தெரியுமோ?  ஆம். மீனாவும், அந்த சாதனையாளர்களைப்போல, கண்பார்வை இழந்தவர். நேர் காணலில் அவரளித்த பதில்கள் பொன் வாக்கு.  வாருங்கள். அவரை வாழ்த்துவோம்.

    “பெண்புத்தி பின்புத்தி”,”ஏழை சொல் அம்பலம் ஏறாது.” “இஸ்லாமில் பெண்களுக்கு மதிப்பில்லை.” இது போன்ற குப்பைகளை அகற்றுங்கள் என்கிறார், சுல்தானா பேகம். ஷிமோகா-வாழ் பெண்ணரசியான இவர், சிசேரியன் அறுவை சிகிச்சையில் திருமகனை பெற்றவர். மயக்கம் தெளிந்தவுடனேயே, ஆசிரியர் தகுதி தேர்வு எழுத போய்விட்டார். இடது கையில் ஐ வி.திரவம், ஊசி மூலம். வலது கை பிடித்தது, பேனாவை. உறுதுணை: வாடகை வண்டி ஓட்டுனராகிய கணவர், அஹ்மத். மகவை பார்த்துக்கொண்டது அம்மாவும், மாமியாரும். வசதி செய்து கொடுத்தவர்கள், தேர்வு மைய அதிகாரிகள். என் மகன் கூட ஆஸ்பத்திரியிலிருந்து போய் தான், முதல் வருட டாக்டர் பரிக்ஷை எழுதினான். மூன்றாவது மாடியில் பரிக்ஷை. இவனுக்கு தனி அறை, கீழே. எழுதும் விரல் ஒரு விபத்தில் நசுங்கியும் ஐ.ஏ.எஸ். எழுதிய எனக்கு ஒரு உதவியும் கிட்டவில்லை. எழுத்து கோணா மாணா என்று மார்க் குறைத்திருப்பார்கள்!அது அந்த காலம்.

    ஒரு மடலாடலில் படைப்பாற்றல் பேசப்பட்டது. ஒரு எட்டு வயது சிறுவனின் அபாரமான படைப்பு. ஆம். சிந்தனை ஒரு கொடுப்பினை. அதை விட பெரியது கற்பனை. கற்பனை இல்லையேல், இலக்கியம், கலை, அழகு, சுவை, மொழி எல்லாமே சூன்யம். முருகன் என்ற பெரிய கயிறை பற்றியும், வள்ளி என்ற சிறிய கயிறை பற்றியும் எழுதிய மகா கவி பாரதியார், வாயு தேவனையும், தன்னையும் முன்னிறுத்தி, ஒரு காதல் அமர காவியம் படைத்து விட்டார். கற்பனை வளத்தைப் பேணாத கல்வி, ஏட்டுச்சுரைக்காய்.

    ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோயிலாண்டி. நுகர்வோர்கள் அந்த ரகம். அவர்களை துரும்பாக மதிப்பவர்கள் பெரிய மைனரும், சின்ன மைனரும். ஆனால், இந்த நுகர்வோர் நீதி மன்றங்கள் மடியில் கை வைத்து நாடி பார்க்கிறார்கள்; நாட் அல்வேஸ் என்றாலும். ‘force majeure’ என்ற லத்தீன் சொல்லுக்கு பொருள்: கடவுள் துணை? இல்லை. கடவுள் துணை இல்லை. கடவுள் செய்த தீவினை -உதாரணம்: சுனாமி.

    வேளாண்மை செய்ய சென்ற ‘ரூம் பாட்ச்சா’ அறுந்து கிடந்த மின்கயிறு தாக்கி மரணம்: செப்டம்பர் 4 , 2009. அவரது மனைவியும், மகன்களும், விபத்தின் காரணம் மின்வாரியத்தின் பரிமாரிப்பு கடமை தவறுதல் என்று குற்றம் சாட்டி, ரூ.6 லக்ஷம் நஷ்டஈடு கேட்டார்கள். ‘சே! சே! அதெல்லாம் ஆண்டவன் தீவினை என்று சொல்லி, ‘போடா பொக்கை’ என்று உதறி விட்டனர், மின் வாரியம். ‘டெக்னிகல்’ என்று சொல்லப்பட்ட மண்ணாங்கட்டி வாதங்களை தீர விசாரணைக்குப் பின் நிராகரித்த சென்னை உச்ச நீதி மன்றம் சொன்னது:

    ‘அறுந்த மின்கயிறு அடித்த ஷாக் என்பதை மின் வாரியம் ஒத்துக்கொண்டதும், பின்னர் செய்த சீரமைப்பும் ஆவணங்களில் உள்ளன. ஒம்மாச்சியை குற்றம் சொல்லாதே. ரூ 5 லக்ஷம் நஷ்ட ஈடு.’

    தர்மமிகு சென்னையில் நூற்றுக்கணக்கான இடங்களில் மின்கயிறுகள் தாறுமாறாக  தொங்கலாட்டம் போடுகின்றன. மாநிலம்/ தேசம் முச்சூடும் அதே. யாராவது சாகுவதற்கு முன், விழிப்புணர்ச்சி இயக்கம் நடத்துங்கள்.

    மற்றொரு இளிச்சவாயன். திரு. எஸ். நாகராஜன்,”மேக் மை ட்ரிப்” என்ற சுற்றுலா கம்பெனியிடம் ரூ.90.000/- கட்டி, குடும்ப சுற்றுலாவுக்கு பதிவு செய்தார். சிலருக்கு வீஸா கிடைக்காததால், ரத்து செய்ய கோரினார். ஒரு மாதமே இருக்கும் காலகட்டத்தில் ரத்து செய்தால், ஒரு காசு கூடக்கிடைக்காது என்று போட்ட கண்டிஷனை காட்டி, ‘போடா பொக்கை’ என்று விட்டார்கள். அந்த கண்டிஷனே தப்பு என்று அந்த தன்னிச்சை கண்டிஷனையே நிராகரித்து, ரூ. 90,000/- + நஷ்ட ஈடு ரூ.7,000/- திரு.நாகராஜனிடம் கொடுக்கும்படி ஆணையிட்டது. You must always read the fine print.

    வீராதி வீரன்! சூராதி சூரன்! யாரு? ஆர்.கே.சத்பதி, ராணுவ மைய விஞ்ஞானி (DRDO). அய்யா ஹைதராபாத் போன இடத்திலெ, ஒரு கலாட்டா.  போறாத காலம். போறப்போக்கில், ஓடிப்போன இளைஞன், இவரை கத்தியால் குத்தி விட்டான்.  ரத்த மயம். வலி பொறுக்காவிடினும், மனம் தளராமல், தானே நடந்து சென்று போலீஸ் ஸ்டேஷன் சென்று புகார் அளித்தார். கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு முன்னால், ‘மஞ்சள் பத்திரிகை’ புகழ் லக்ஷ்மீகாந்தன் மாம்பலம் சாரங்கபாணி தெருவில் ரிக்க்ஷாவில் வரும் போது, ஒருவன் வயிற்றில் குத்த, ஒரு கையால் குடலை அமுக்கிக்கொண்டு, ஒரு கையால் குத்தியவனை பிடித்துக்கொண்டு, போலீஸிடம் போனதாக, படித்த ஞாபகம். பாடபேதம் இருக்கலாம்.

    சித்திரத்துக்கு நன்றி:http://www.tamilmurasu.co.in/data1/TmNewsImages/Evening-Tamil-News-Paper_96997797490.jpg

    Share
  • உன் புன்னகை மறையாது…

     

    தாரமங்கலம் வளவன்

     

     

    இன்றைய நான்

    நீ சிந்திய வியர்வையினால் வந்தது..

     

    எனக்காக

    நீ இழந்ததை எல்லாம்

    என்னால் திருப்பி தர இயலாது…

     

    நீ பட்ட அவமானங்கள்

    நீ அமைதியாய் ஏற்றுக் கொண்ட வசவுகள்

    நீ தொலைத்த இளமை என்று

    நீ எனக்காக இழந்தவை எதையும்

    என்னால் திருப்பித்தர இயலாது..

     

    ஆனால் இன்று

    நீ பெற்ற இந்த புன்னகையை

    நீ இழக்காமல்

    என்னால் பார்த்துக் கொள்ள முடியும்..

     

    உன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தாமல்-

    இன்று நிமிர்ந்த உன் தலை

    இனியொரு முறை கவிழாமல்-

    நீ பெற்ற இந்த புன்னகை

    உன் கடைசி பயணத்தில் கூட

    உன் முகத்திலிருந்து மறையாமல்-

    நான் பார்த்துக் கொள்வேன்.

     

    அதைத் தவிர நான் என்ன கைம்மாறு செய்ய முடியும்..  

     

    Share
  • காற்று வாங்கப் போனேன் (12)

    கே.ரவி-

    ‘நந்திவர்மன்’ நாடகம். அதில் நந்திவர்ம பல்லவனாக நான் நடிக்கிறேன். நந்திவர்மன் சகோதரன் காடவர்கோன் என்ற புலவனாக நண்பன் சுகி சிவம் நடிக்கிறான். நாடகம் அரங்கேறும் இடம், சென்னை, புனித தோமையர் தேவாலயத்துக்கு எதிரில் உள்ள சாந்தோம் உயர்நிலைப் பள்ளி வளாகம். நாடகத்துக்குத் தலைமை, அப்போதுதான் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த அறிஞர் அண்ணா. 1968-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3ஆம் தேதி என்று நினைக்கிறேன்.

    kr

    நாடக உருவாக்கம் எங்கள் தமிழ் ஆசிரியர் தண்டமிழ்க் கொண்டல் சிதம்பரம் சுவாமிநாதன். மிகுந்த எதிர்பார்ப்போடு பெருந்திரளாகக் கூடியிருந்த மக்கள் கூட்டம். பின்னாளில், ‘ஆயிரம் நிலவே வா’ என்று எம்.ஜி,ஆரை அழைத்துத் திரைப்படத் துறையில் பிரபல பாடலாசிரியராகப் போகும் புலவர் புலமைப் பித்தன் அப்பொழுது சாந்தோம் உயர்நிலைப் பள்ளியின் தமிழ்த்துறையில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அண்ணாவின் தீவிரத் தொண்டராக அரசியலிலில் கால்பதித்திருந்த அவர் நந்திவர்மன் நாடகத்தில் தண்டமிழ்க் கொண்டல் எழுதியிருந்த அழகுதமிழ், அடுக்குமொழி வசனங்களுக்கெல்லாம் கைத்தட்டலோடு, விசிலும் அடித்துக் கொண்டிருக்கிறார். அந்த அளவுக்கு ஆர்வத் துடிப்பு மேலோங்க எல்லாரும் காத்திருக்கின்றனர், அண்ணாவின் வருகைக்கு.

    சிவமும், நானும் பொழிந்து தள்ளும் அடுக்குமொழி வசனங்களுக்கெல்லாம் பலத்த கரகோஷம் காதைப் பிளக்க, அப்போது மேடையில் அவன் வருகிறான். அவன் யார்? என் இனிய நண்பன்; அன்றைய தமிழ்நாட்டு அமைச்சர்கள் பலர் தமிழில் தேர்ச்சி பெறக் காரணமாயிருந்த அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியர் அ.சிதம்பரநாதன் செட்டியாரின் சகோதரி மைந்தன்; பின்னாளில், கவிஞர் வசந்தப்பிரியன் என்று புகழ்பெற்றுச் சமீபத்தில், அகால மரணத்தால் அமரனாகிவிட்ட அன்றைய அமிர்தலிங்கம். அவன் நந்திவர்ம பல்லவனின் அமைச்சராக அந்த நாடகத்தில் நடிக்கிறான்.

    நாடகக் கதை நிறைய பேருக்குத் தெரிந்திருக்கும். நந்திவர்மனை வீழ்த்தி விட்டுத் தான் நாடாள வேண்டும் என்று அவன் தம்பி காடவர்கோன் திட்டமிடுகிறான். நந்திவர்மனோ மாவீரன். மன்னிக்க வேண்டும், இன்றுபோல் அன்று அந்தச்சொல் ஒரு கெட்ட வார்த்தையில்லை!. மாவீரன் ஆனாலும் அவன் தமிழ்ப்பித்தன். எனவே அவனைப் போர்க்களத்தில் வீழ்த்துவதைக் காட்டிலும் மிக எளிதாகத் தன் புலமையால் வீழ்த்திவிட எண்ணிக் காடவர்கோன் தன் அண்ணா நந்திவர்மன் மீது அறச்சொற்கள் விரவிவரும் வண்ணம் பாடல்கள் புனைகிறான். அப்பாடல்களைப் பாடக் கேட்டால் நந்திவர்மன் தீப்பற்றிக் கொண்டு கருகிப் போய்விடுவான். இதுதான் அவன் திட்டம். பாடல்கள் தயார், ஆனால், கடைசி நேரத்தில் சகோதர பாசம் மேலிட்டுத் தடுக்க, அந்தப் பாடலைப் பாட அவன் மறுக்கிறான். அவன் பாடத் தான் கேட்டால் எரிந்து விடுவோம் என்று தெரிந்த பின்னும், தமிழார்வத்தால் அவன் பாடியே தீர வேண்டும் என்று நந்திவர்மன் தூண்டுகிறான். காடவன் தொடர்ந்து மறுக்க, அவன் பாடத்தான் வேண்டும் என்ற அரச கட்டளையோடு, அவன் கன்னத்தில் பளார் என்று அறைந்து “காடவா” என்று நந்திவர்மன், நான் தான், கர்ஜிக்க வேண்டும், உடனே வேறு வழியின்றித் தழுதழுத்த குரலில், “பாடவா” என்று காடவனாக நடிக்கும் சிவம் கேட்டுவிட்டு அறம் பாட வேண்டும். இப்படித்தான் காட்சியமைக்கப் பட்டிருந்தது.

    உணர்ச்சி வேகத்தில், ‘காடவா’ என்ற முழக்கத்தோடு நான் சிவத்தின் கன்னத்தில் ஓங்கி ஓர் அறை, நிஜமாகவே, பலமான அறை, பளார் என்று அடித்துவிட, நிஜமாகவே வலிபொறுக்க முடியாமல் சிவம், ‘பாடவா’ என்று குரல் தழுதழுக்கச் சொன்னதும் எல்லாரும் பலத்த கரகோஷம் எழுப்ப, அந்தச் சத்தம் ஓயவே சற்று நேரமாகியது.

    எப்படியும் தானும் கைத்தட்டல் வாங்க வேண்டும் என்ற ஆவலில், நாடக எழுத்துருவில் இல்லாத, தண்டமிழ்க் கொண்டல் எழுதாத ஒரு சுயவசனத்தைச் சொல்லிக் கைத்தட்டலும் வாங்கி விடுகிறான், அமைச்சனாக நடிக்கும் நண்பன் அமிர்தலிங்கம். எப்படி? அது என்ன வசனம்? இப்போது காட்சியைப் பார்ப்போம்.

    காடவன் அறம்பாடுகிறான்:

    வானுறு மதியை அடைந்ததுன் வதனம்
    வையகம் அடைந்ததுன் கீர்த்தி
    கானுறு புலியை அடைந்ததுன் வீரம்
    கற்பகம் அடைந்தவுன் கரங்கள்
    தேனுறு மலராள் அரியிடம் புகுந்தாள்
    செந்தழல் புகுந்ததுன் மேனி
    யானுமென் கவியும் எவ்விடம் புகுவேம்
    நந்தியே எந்தயா பரனே

    இப்படித் தான் தண்டமிழ்க் கொண்டல் நந்திக் கலம்பகப் பாடலை எங்களுக்குச் சொல்லிக் கொடுத்திருந்தார். பல பதிப்புகளில் வெவ்வேறு வடிவில் உள்ளது இப்பாடல். ஆனால் மேற்சொன்ன பாடமே மற்றவற்றைக் காட்டிலும் பொருத்தமாகவும், சிறப்பாகவும் உள்ளது என்பது என் பணிவான கருத்து.

    அறச்சொற்கள் மிகுந்த பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கும் நந்திவர்மனாகிய என்னைச் சுற்றி எரிதழல் மூண்டெழ, நான் அத்தழலில் உயிரிழக்க, அப்போது அமைசச்சர், அதுதான் நம் அமிர்தலிங்கம் தன் சுயவசனத்தைப் பேசிக் கைத்தட்டல் வாங்குகிறான். அந்த சுயவசனம் இதுதான்: “ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்ட அண்ணா மீண்டு வருவாரா” என்று நந்திவர்மனின் தம்பி காடவனிடம் அமைச்சராக நின்று அமிர்தலிங்கம் பேசுகிறான்.

    காட்சி முடிந்து திரை விழுகிறது. அமிர்தலிங்கத்தின் கன்னத்தில் பலமாக ஓர் அறை விழுகிறது. அடிப்பவர் எங்கள் ஆசான், நாடக ஆசிரியர் தண்டமிழ்க் கொண்டல். “ஏற்கனவே அறம் பாடும் நாடகத்தில் இப்படி நீவேறு சொந்தச் சரக்காக அறம்பாடி விட்டாயே! மாண்ட அண்ணா என்று சொல்லி விட்டாயே!” என்று அவர் குமுறுகிறார். திரைவிழும் முன் ஓர் அறை விழுந்தது; திரை விழுந்ததும் ஓர் அறை விழுந்தது. முதலில் சிவத்துக்கு, அடுத்தது அமிர்தலிங்கத்துக்கு. மொத்தத்தில் அன்றைய நாடகம் இரண்டு அறைகளோடு நிறைவுபெற்றது.

    அடுத்த ஆண்டே, அதே மாதம் அதே நாளில் அறிஞர் அண்ணா மாண்டார் என்ற செய்தி இடிபோல் செவிப்பறையில் பலத்த அறையாக விழும் என்று அப்பொழுது யார் நினைத்திருக்க முடியும்?

    என்ன சிகா, இப்பொழுது புரிந்து கொண்டாயா, சொல்லின் வலிமையை. கவிஞன் அழைத்தால் அமாவாசையன்றும் நிலா வரும். இசைக்கவி ரமணனின் அருட்குறளில் வருவது போல், தீயென்றால் காடெரியும், தேன் என்றால் பூ மகிழும். அதுதானப்பா வாய்நின்ற பேரருள் வாக்கு!

    சிகா முணுமுணுக்கிறான்: “மந்திரம் போல் வேண்டுமடா சொல்லின்பம்!”

    முணுமுணுக்காதே சிகாமணி! மந்திரங்கள் முணுமுணுப்பதற்கல்ல. முழங்குவதற்கு.

    நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே
    சுற்றி வந்து முணுமு ணென்று சொல்லும் மந்த்ரம் ஏதடா
    நட்ட கல்லும் பேசுமோ நாதனுள் இருக்கையில்
    சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ

    சிவவாக்கியர் சொன்ன சட்டிக்கும், சட்டுவத்துக்கும் தெரியுமோ என்னமோ, எங்கள் வீட்டுச் சட்டுவத்துக்குத் தெரியும். நேற்றுத் தேங்காய் எண்ணையில் அவியலுக்குத் தாளித்த வாசனை இன்று உருளைக்கிழங்குக் கறியிலும் தொற்றிக் கொண்டிருக்கிறதே! சட்டுவத்தை எப்படித் தேய்த்தாலும் மூன்று நாட்களுக்கு அந்த வாசனை இருக்கிறதே! பூர்வ ஜன்ம வாசனையெல்லாம் அவ்வளவு சீக்கிரம் போகாது சாமி! சட்டுவமோ, சத்துவமோ! ராஜஸமோ, பூண்டு ரஸமோ! எதுவானால் என்ன?

    அதெல்லாம் சரி, இப்பொழுது உருளைக் கிழங்குக் கறியின் வாசனை என் மூக்கைத் துளைக்கிறது. சாப்பிட்டுவிட்டு, உண்ட களைப்புத் தீர்ந்த பிறகு மீண்டும் சந்திப்போம்!

    (தொடரும்)

    Share
  • கலங்காதிரு மனமே

    –கவிஞர் காவிரிமைந்தன்.

     

    கலங்காதிரு மனமே

    கலங்காதிரு

    காரைக்குடிக்கருகே ஒரு சிறிய கிராமம்.. சிறுகூடற்பட்டி.. வாணிபக்குலத்தில்  வகையாய் செழித்தவர்கள் மத்தியில் வாழ்க்கையெனும் போராட்டத்தில் வேலைதேடிப் புறப்பட்ட முத்தையா என்னும் இளைஞர்! எட்டாம் வகுப்பு வரை மட்டுமே எட்டிப்பிடிக்க முடிந்த நிலையில் எழுதுதலும் பல்வகை நூல்களைப் படித்தலுமாய்.. இலக்கிய தாகம் கொண்டு தொடங்கிய பயணத்தில்.. பதிப்பகத் துறையில் உதவி ஆசிரியராக .. பணி புரிய விண்ணப்பித்து.. நின்றார் அந்த முதலாளியிடம். அப்போது உன் பெயர் என்ன என்று  கேட்கப்பட்ட கேள்விக்கு விடை தர முத்தையா எடுத்துக்கொண்ட நிமிடம் அரை நிமிடமே.  கற்பனையாக தனக்குத்தானே சூட்டிக்கொண்ட பெயர்தான்.. இதோ கால வரலாற்றில் நிலைத்த புகழுக்கு உரியவராய்.. அவரின் பெயராக நிலைத்துவிட்டது. கண்ணதாசன்..  அந்தக் காலக்கட்டத்தில் கம்பதாசன், வாணிதாசன், என  காளிதாசன் வரிசையில் கவிஞர்கள் புகழ் பெற்றிருக்க.. அதே பாணியில் தன் பெயரை வழிமொழிந்திருக்கிறார்.. கவிஞர்.  அதைக் கேட்ட முதலாளியும்..  ஆம்… நான் கூட கேள்விப் பட்டிருக்கிறேன்.. ஒரு சில கவிதைகள்.. கதைகள் படித்திருக்கிறேன் என்றாராம்..  இதுதான் உலகம்.. அப்படி சூட்டப்பட்ட புனைப் பெயர்தான்.. தமிழ்த் திரையுலகில் .. இலக்கிய உலகில்.. கவிஞர் என்கிற பெயர் உச்சரிக்கப்படுகிற போதெல்லாம் கண்ணதாசனாய் நினைவிற்கு வருகிற வரலாறாய் மாறியிருக்கிறது.

    kkkkஅதைத் தொடர்ந்து.. கோவை சென்ட்ரல் ஸ்டுடியோவில்.. வாழ்வின் திருப்பமாக.. இயக்குனர் ராம்நாத் அவர்களின் ஆதரவில்.. கண்ணதாசன் திரைப் படத்திற்காக முதன் முதலாய் பாடல் எழுத வாய்ப்பு அமைந்தது.  அந்தப் பாடல் இதோ..  கன்னியின் காதலி திரைப்படத்தில்..

    கலங்காதிரு மனமே
    நீ கலங்காதிரு மனமே
    உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே

    நம்பிக்கையும் ஆறுதலும் என எண்ணிலாப் பாடல்கள் எழுதிக் குவித்த கவியரசர் தனது முதல் பாடலிலேயே முத்திரைப் பதித்திருக்கும் விதம் மெய் சிலிர்க்க வைக்கிறது! மகா கவிஞனே!  உன் யுகம் கவிதைகளின் பொற்காலம்! தமிழ் மொழியை  சிம்மாசனத்தில் அமர்த்தி அழகு பார்த்த முத்தையா என்னுமெங்கள் கண்ணதாசனே..  நின் திறம் எண்ணி வியப்பது.. இப்பாடல் முதல் துவக்கமே என்பேன்!

     

    காணொளி: -http://youtu.be/okJTPVr3bUI

     

    பாடல்: கலங்காதிரு மனமே
    படம்: கன்னியின் காதலி

    கலங்காதிரு மனமே
    நீ கலங்காதிரு மனமே
    உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே

    கடினப்படாமல் ஏதும் கைக்கு வராது
    கஷ்டப்படுவார் தம்மை கை நழுவாது
    அடுத்தடுத்து முயன்றால் ஆகாததெது ஆகாததெது
    ஆண்வாடை கூடாதென்ற அல்லியும் ஒருநாள்
    அர்ஜுனன் வலைதனில் வீழ்ந்தாள் சரியாய்
    (கலங்காதிரு மனமே )

    பகட்டுக்காக உம்மை பார்க்கவே மறுத்தாலும்
    பருவக்காலம் அவளை பாடாய் படுத்திவிடும்
    அடுத்த கணம் உன்மேல் ஆசையும் வைப்பாள்
    ஆஹா என்று முத்தம் கொடுப்பாள்
    (கலங்காதிரு மனமே )

    தனது வருகையைப் பதிவு செய்த முதல் பாடலிலேயே நம்பிக்கை நங்கூரங்களை தந்திருக்கும் அதிசயத்தை என்னென்பது?  வர கவிஞரா மலையரசி அருள்பெற்ற மகா கவியா?  ..

    Share
  • உறவும், நட்பும்!

    -ரா. பார்த்தசாரதி 

    மனிதனே! உறவையும் நட்பையும் உதறிவிடாதே!
    பழகும் விதத்தில் பழகினால் பகையும்  நட்பாகும்!
    மண்எனப்  பிரித்தால் மனிதம் என்றும் சாகும்!
    இனம்எனப் பிரித்தால் இனிமை இல்லாமல் போகும்!

    சொந்தம் என வாழ்ந்தால் என்றும் சுகமாகும்!
    மனிதநேயத்துடன்  வாழ்ந்தால் என்றும் நலமாகும்!
    பாசத்தையும் நேசத்தையும் பாலமாக அமைத்திடு!
    சாதி மத பேதத்தை வேரோடு அழித்திடு!

    வயதிற்கும் படிப்பிற்கும் என்றும் மரியாதை கொடுத்திடு!
    நட்பும் உறவும் உன் உடன்பிறப்பு  என நினைத்திடு!
    மன்னிக்கத் தெரிந்த மனிதனை நல்லவன் எனக் கருதிடு!
    கோபத்தையும் ஆணவத்தையும் அடக்கி உறவினைக் காத்திடு!

    Share
  • திருமால் திருப்புகழ் (122)

    கிரேசி மோகன்

    Bhagavatha: The story of Rama Keshav
    Bhagavatha: The story of Rama
    Keshav

    கண்ணன் திருப்புகழ்….
    ——————————————-
    ”கண்ணன் வெண்பாக்கள்’’
    ———————————————–
    ராமன் வெண்பா
    ——————————-

    Sri Rama   - Keshav
    Sri Rama – Keshav

    அவனியைக் காக்க, அவதார மாக,
    நவமியில் வந்தோய் நினக்கு, -உவமையாய்,
    தந்தைதாய் போற்றியொரு, தாரத்துடன் வாழ,
    சிந்தையை ராமா செலுத்து….(246)

    தீதண்ட வந்தாலும், மோதுண்டு மாய்ந்திடும்,
    ஸ்ரீமுண் டகத்தாய் சமேதனாய், -கோதண்ட,
    ராமனையே எண்ணியி, ராப்பகல் வாழ்வோர்கள்,
    காமனையே வெல்வார் களித்து….(247)….
    ———————————————————————————————————-

    விடையேழ் அடக்க, வளைக்கரம் கொண்ட,
    இடையா எனையடக்கு ஏறே, -தடையான,
    பாழும் வினைகளும், பஞ்சப் புலன்களும்,
    வீழ வகைசெய் விரைந்து….(248)

    ஆயர்தம் சேயினை, ஆசையோ(டு) ஆய்ந்திட,
    ஆயிரம் பேருண்டு ஆயினும், -மாயிருள்
    சாயலான் கட்டுண்டு, சாதுவாய் நிற்பது
    தாயுரை தாமோ தரன்….(249)

    பேரா யிரமோதி, நாரா யணன்சீரை,
    பாரா யணம்செய்வாய் பாழ்மனமே, -ஆரா,
    அமுதனைப் பாடு, அனுதினம் நாடு,
    குமுதமாய்ப் பூத்துக் குலுங்கு….(250)

    சீரவன்காண், பாற்கடல் நீரவன்காண், பாரதப்,
    போரவன்காண், பாண்டவர், நூறவன்காண், -பாரினைப்பூண்,
    மாரவன்காண், உண்கின்ற, சோறவன்காண், உந்தியனல்,
    ஜீரணம்காண், ஜீவனவன் ஜீன்(GENE)….(251)

    ——————————————————————————————————

    படங்களுக்கு நன்றி :

    http://kamadenu.blogspot.in/2014_04_01_archive.html

     

    Share
  • காதலால் வாழ்த்துகிறேன்

     
    ( எம். ஜெயராமசர்மா – மெல்பேண் )

     
    காலத்தை வென்று நிற்கும்kana1
    கவி எலாம் தந்தவனே
    ஞாலத்தை மகிழ்விக்க
    நற் கருத்தைத் தந்தவனே
    மூலைக்கு மூலை உந்தன்
    முழுக்கவியும் ஒலிக்கிறது
    பாவாடை போர்த்தி உனை
    பாராட்டி மகிழ்கின்றேன்

    பிறந்த நாள் உனக்கின்று
    பெரியளவில் எடுக்கின்றார்
    பெரி யவரும் சிறியவரும்
    பெருமையுடன் நினைக்கின்றார்
    பெருங் கவிதை தந்தவனே
    பிறந்த நாள் சிறக்கட்டும்
    உறங்கு கின்ற மனிதரெலாம்
    உன்கவியால் விழிக்கட்டும்

    வாழ்த்துகள் கூறுதற்கு
    வரவில்லை தமிழெனக்கு
    வாழநாம் வேண்டுதற்கு
    வழிகள் பல சொன்னவனே
    காலமுள்ள வரையினிலும்
    கவியரசன் நீதானே
    காதலால் வாழ்த்துகிறேன்
    கவியரசே வாழ்த்துக்கள்

    Share
  • கண்ணதாசன் ஒரு சகாப்தம்

    சு. ரவி

     

    திரைப்பாடல்களில் ஒருவரியிலேயே திரைக்கதையைச் சுருக்கித் தரும் திறமையும், வளமான சொல்லாட்சியும், வற்றாத கற்பனை ஊற்றும்.. கண்ணதாசன் ஒரு சகாப்தமாக வாழ்ந்தார்.

    “ரஸமான தத்துவம், ரஸமானதத்துவம்
    ராட்சஸச் சிந்தனைகள்…..”
    “சுட்டெரித்தாலிந்த மேனியும் சாம்பலாய்ச்
    சுடுகாட்டு மண்ணிலுருளும்
    சுவையான பாவலன் போயினான் எனச் சொல்லி
    சொந்தமும் வீடுசெல்லும்…”

    என்ற மரபு வரிகளிலும்,

    “நாயகனைச் சிலை வடிவில் நாட்டி வைத்த சைவர்திருக்
    கோயிலுக்குள் நான் போனேன் தோழீ-நிலை
    கொள்ளவிலை வநதுவிட்டேன் தோழீ!”
    “………………………………………………- இந்தக்
    கொக்குக்குத் தேவைதன் கூரிய மூக்கினில்
    சிக்கிடும் மீன் மட்டுமே-அதன்
    தேவைகள் வாழட்டுமே”
    “தோட்டத்திலே தென்னை இரண்டு
    முற்றித் திரண்டு
    பக்கம் உருண்டு”

    போன்ற சிந்து நடையிலும்

    “மெத்தைச் சுகத்துக்கும் மேலெழுமோர் வேட்கைக்கும்
    தத்தைச் சுகத்துக்கும் தத்தளிக்கும் ஆசைக்கும்..
    எத்தைத் தான் நம்புவதோ எதனைத் தான் நாடுவதோ
    அங்கொருகால் இங்கொருகால் ஆடும் சிறுமனமே”

    போன்ற சுயதரிசனக் கவிதைகளிலும்,

    பழுத்த ஆன்மிகவாதியாகத் தன் அர்த்தமுள்ள இந்துமதம் கட்டுரைகளிலும் பலபரிமாணங்களில் மின்னிய கவியரசரை மரியாதையுடன் நினைவு கூர்கிறேன்.

    ” படகோடு கங்கை குகனாக வேண்டும்
    பணிவான ஆசை ரகுராமா”

    என்கிற அவர்தம் வைரவரிகளுக்குக் காணிக்கை யாக இந்த ஓவியத்தை சமர்ப்பிக்கிறேன்!

    5DABB29D-9765-4862-AB7B-BD87167F448E

     

    B82CEDAF-888E-4292-AA72-B97ACD0922C0

    சு.ரவி

     

     

    Share
  • பால்கி என்று சொல்லப்படும் பல்லக்குப் பயணம்

    — சு.ரவி.

    வணக்கம், வாழியநலம்

    one-A433C84C-FEF4-43C3-B40C-C66B85662B48

    இன்று பால்கி என்று சொல்லப்படும் பல்லக்குப் பயணம்.

    ஆடிப் பட்டம் விதைத்து நடவு முடித்த விவசாயப் பெருமக்கள் பண்டரிபுரம் நோக்கி 250 கி.மீ நடைபயணம் மேற்கொள்ளும் தினம்.

    மஹான்  ஞானேஸ்வர் மற்றும் மஹான் துக்காராம் ஆகியோரின் பாதுகைகளைத் தாங்கிய பல்லக்குகளை இரட்டைக் காளைகள் பூட்டிய வண்டிகள் சுமக்க, புனே நகரின் அருகில் உள்ள ஆலந்தி மற்றும் தேஹு கிராமங்களில் இருந்து புறப்பட்டுப் பந்தர்பூர் விட்டலனை ஆஷாட ஏகாதசி அன்று தரிசிக்கப் பெருந்திரளாகச் செல்லும் தினம்.

    ஒரே நேரம் சுமார் பத்துப் பதினைந்து லக்ஷம் பக்தர்கள்! ஒவ்வொரு ஆணின் கையிலும் தம்புரா அல்லது டோல்கி அல்லது ஜாலரா.ஒவ்வொரு பெண்ணின் தலையிலும்  ராதையை ஆவாஹனம் செய்த துளசிமாடம்….

    அனைவர் நாவிலும் விட்டலன் நாமம்..அனைவர் பாதங்களிலும்  ஒரு துள்ளல்..

    வீதியெங்கும், விண்வெளியெங்கும் அபங்க முழக்கம்.

    பாண்டுரங்க ஹரி! ராமக்ருஷ்ண ஹரி! என்ற கோஷம்!

    இந்த பக்திப் பரவச வெள்ளத்தைக் காணக் கண்கோடி வேண்டும்.

    புகைப் படங்களையும் என் விட்டலன் ஓவியத்தையும்

    பார்க்க, ரசிக்க.

    two-23991446-E41A-467D-8349-FA18D957A475

    three-3B10E9EE-8C28-497B-AA3B-B18F259B5702

    5795E970-F685-44B6-8FA8-5424D5367122

    Share
  • கலைமகள் வீணை கண்ணதாசன்!- கவியரசு கண்ணதாசன் 88வது பிறந்த நாள் சிறப்புப் பதிவு

    –காவிரிமைந்தன்.

    kkarsu333530

    கவியரசரது சிந்தனையில் பிறந்துவந்த கற்பனையில்
    கொடிகட்டிப் பறக்கும் இனிய பாடல்கள் எத்தனையோ?
    கவிதை நயம், கற்பனை வளம், சொல்லாட்சி, பொருள்நயம் என
    பட்டியலிட்டால் பல காத தூரம் நீளும்!!

    காதலா.. தத்துவமா.. பக்தியா.. பாசமா.. மனித
    உணர்வுகளை வார்த்தைகளால் மீட்டித்தந்த
    கலைமகள் வீணை கண்ணதாசன்!
    ஏகாந்தமாய்.. எழுத்துக்களாய்.. எண்ணமின்னலாய்
    வந்தவையும் இங்கே வரவில் உண்டு!

    எண்ணற்ற கவிஞர்பெருமக்கள் நம் தமிழை எடுத்து ஆண்டாலும்
    என்றைக்கும் நம் நெஞ்சில் கவிஞர் என்றால் ‘கண்ணதாசன்’
    பண்டிதர்மட்டுமே பயின்றிருந்த பைந்தமிழை – இங்கே
    பாமரனும் முணுமுணுக்க வைத்தவர் கண்ணதாசன்!

    உறவுக்கும் பிரிவுக்கும் உயிர்கொடுக்கும் வார்த்தைகளை – நம்
    உள்ளங்களில் பதியவைத்தவர் கண்ணதாசன்!
    அனுபவப் பிழிவுகளின் சாரங்களாம் தத்துவங்கள்!
    அணிவகுத்துப் பாடல்களில் கொடுத்தவர் கண்ணதாசன்!

    கனிந்துருகும் காதலினைக் கெளரவமாய் எழுதிவைத்து
    காலங்களைக் கடந்துநிற்கும் கவியரசர்  கண்ணதாசன்!
    பெருகிவரும் உணர்வலைகள் யாவுமிங்கே ..
    பெரும்பாலும் அவன்வரைந்த பல்லவியில் சரணமன்றோ?

    பொருள் பொதிந்த வேதங்களையும் உள்வாங்கி
    நயமான வார்த்தைகளால் பாடல்தந்து
    எளிமையுடன் எடுத்துச்சொன்னப் பாவலனை..
    எந்நாளும் மறவாமல் நாடு போற்றும்!!

    அழகான வார்த்தை வரும்
    அதற்கேற்ற ஓசை தரும்
    ஆழ்ந்தபல அர்த்தங்களும்
    ஆங்காங்கே நிறைந்திருக்கும்!

    பழகியநல் மொழியினிலே
    பல்லவிகள் கண்திறக்கும்!
    சகஜமாய் நம்முடனே
    சரணங்கள் தொடர்ந்துவரும்!!

    பரபரப்பு மிகுந்திருக்கும் வாழ்க்கையிலே
    படபடப்பு அதிகமாகி வாழுகின்றோம்!
    துடிதுடிப்பு இதயத்திற்கு வேண்டும்தான்
    துவளாமல் இருப்பதற்கு வழிகளுண்டு!!

    அமைதியாய் சிலநேரம் கடக்க வேண்டும்!
    ஆனந்தமாய் சிந்தையது நிறையவேண்டும்!
    அன்புநதி ஓடிவரும் பாதையில்தான்
    இன்பமது கிடைக்குமென்று நாம் அறிவோம்!

    துன்பநிலை என்பதுவும் வந்துபோகும்
    துயரமில்லை என்பதற்கே நெஞ்சம்வேண்டும்!
    கண்ணயர்ந்து உறங்கிவிடும் முன்பாக..
    காதில்விழும் தேனருவி கேட்கவேண்டும்!!

    கவிதையுடன் இசைநடந்து வரும்அழகை
    ரகசியமாய் தென்றல்நமைத் தொடும்விதத்தை
    வரிகளிலே முழுதும்சொல்ல வழிகளில்லை!
    ரகம்ரகமாய் ரசிப்பதற்கு பொருள்களுண்டு!

    புன்னகையும் பூங்காற்றும் நம்மைத்தழுவ
    பூத்திருக்கும் மலரிதழ்கள் போல்சிரிப்போம்!
    கண்ணசைவில் கற்பனைகள் மொட்டவிழ
    கனிந்துவரும் பாடல்களில் நமைமறப்போம்!!

    மானிட வாழ்வியலை மணி மணியாய் வகுத்து – அதில்
    மறைந்திருக்கும் உண்மைகளை தத்துவமாய் கொடுத்து
    மாபெரும் கவியரசராய் உயர்ந்தவர் கண்ணதாசன்!

    “மணி கொண்ட சரம் ஒன்று கனல் கொண்டு வெடிக்கும்” –

    – இராமாயணத்தில் சீதையின் நிலையை (சுயவரம் நடக்கின்ற போது) எடுத்து சொல்லும் விதம் – ராமன் மேல் கொண்ட காதலினால் – அவன் வில்லை வளைப்பானா என்ற கவலை கொண்டு சோகமே உருவாகி இருந்த சீதையின் நிலையை கண்ணதாசன் தனது பாடலில் – கவலை, சோகம், துயரம் கொண்ட சீதையின் கொதிக்கின்ற மூச்சினால் எழுந்த வெப்பக் காற்றினால் அவளது கழுத்தின் மணி மாலை கருகி வீழ்கின்றது – இதை “மணி கொண்ட சரம் ஒன்று கனல் கொண்டு வெடிக்கும்” போன்ற வரிகளால் நிறைத்த கர்ணன் திரைப்பாடல்கள் காலத்தை வென்று இன்றம் கண்ணதாசன் பெயர் சொல்லித் திகழ்கின்றன.

    சொல்லுக்குள்ளே சூத்திரங்கள் இத்தனை இத்தனையா
    எண்ணியெண்ணிப் பார்க்கும்போது எத்தனை வியப்பு!
    ஒற்றைவரியெழுத உனக்குள் ஓராயிரம் எண்ண அலைகள்!
    முத்துக்குளித்தன்றோ முகிழ்த்துவரும் உன் பாடல்!

    தத்துவம் எதுவென்று எவரும் கேட்டால்
    தவறாமல் உன் ஒற்றைப் பாடல் போதுமென்பேன்!

     

    Share
  • திருமால் திருப்புகழ் (121)

    கிரேசி மோகன்

     Bhagavatha - Narakasura vadham - Keshav
    Bhagavatha – Narakasura vadham – Keshav

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ——————————————————–
    ’’கண்ணன் வெண்பாக்கள்’’
    ————————————————–

    Krishna as Andal. #krishnafortoday
    Krishna as Andal. #krishnafortoday

    ஆயிரம் பேருடையான், ஆண்டாளின் தாருடையான்,
    பாயிரம் நாலா யிரமுடையான், -ஆயினன்,
    சீரடைவு கொண்டு, சுமங்கலியாய் வாழ்ந்திட,
    காரடையான் நோன்பில்கால் கட்டு….(240)

    பாம்பில் படுத்தானை, பாரேழ் கடந்தானை,
    தாம்பில் தணிந்து கிடந்தானை, -சோம்பல்,
    கடந்தானை சோகம், இடர்ந்தானை நெஞ்சம்,
    குடைந்தானைக் கண்டுகை கூப்பு….(241)

    காயாம்பூ வண்ணத்தை, கற்றோர்தம் எண்ணத்தை,
    ஆயர்தம் சின்னத்தை மண்ணையுண், -ஓயாத
    மாயத்தை ஒப்பில்லா, சீயத்தை நேயத்தில்,
    தாயொத்த தாயத்தைத் தேடு….(242)

    பட்டும் படாமலே, பாம்பின் தலைமேலே,
    கெட்டும் கெடாமலே கோகுலத்தில், -இட்டும்,
    இடாமலே போரில், இருந்த இடையன்,
    தொடாமல் தகிக்கின்ற தீ….(243)

    ஒருத்தி கருத்தரிக்க, வேறொருத்தி காத்த,
    கருத்த நிறக்கண்ணன் நின்போல், -பிறப்பில்,
    அனாதை ஆனாலும், ஆய்ச்சியர் அன்பால்,
    அனாதி அவன்கதை ஆச்சு….(244)

    ஆவின்தன் கன்றோடு, ஆடிக் கலந்திடும்,
    கோவிந்தன் நாமம் குதூகலம், -யாவும்தன்,
    உள்ளே அடக்கியன்று, உண்டுமிழ்ந்த ஓணத்தான்,
    புள்ளேறும் வாகனனைப் போற்று….(245)

    —————————————————————————————————————

    படங்களுக்கு நன்றி:

    http://kamadenu.blogspot.in/2014_01_01_archive.html

     

     

    Share
  • கோதண்ட ராமன்

    சு. ரவி

     

    “நீதிதன்னைநிலைநாட்ட-

    நைந்தவர்க்கு வழிகாட்ட

    வேதமந்த்ர சுகமார்க்கம்-மண்ணில்

    வாழ்ந்துகாட்ட வந்த மேகம்”

    என்றும்,

    “விழிகளரவிந்தம்-அதில்

    கருணை மகரந்தம்

    விதி கதி கலங்கவரும் கோதண்டம்”

    என்றும்,

    நணபன், கவிஞன் க.ரவியின் சொல்வண்ணத்திலே தீட்டப்பெற்ற

    கோதண்ட ராமனின் நெடிதுயர்ந்த திருக்க்கோலத்தை, ஶ்ரீவைகுண்டம் கோயிலில் உள்ளபடி

    அனுமன் மற்றும், சீதை சமேதனாகக் கோட்டோவியத்தில்

    முயற்சித்துள்ளேன் (இணைப்பு காண்க). Scroll down

    பார்க்க, படிக்க, ரசிக்க…..

    தனுவினை இடக்கரத்தில்

    தாங்கிடும் தடந்தோள் வீரா

    இனகுலம் விளங்க வந்த

    இணையிலாக் கருணை ஊற்றே!

    அனுமனை வலக்கரத்தால்

    அணைந்து நீ நிற்கும் கோலம்

    மனமெலாம் நிறைத்ததையா!

    மலரடி சரணம் ராமா!

    வில்லிலே வீரம் வைத்தாய்

    விழியிலே ஈரம் வைத்தாய்

    சொல்லிலே வாய்மை வைத்தாய்

    செயலிலே நேர்மை வைத்தாய்

    இல்லிலெம் ஜானகித்தாய்

    ஒருத்தியை இருத்திவைத்தாய்

    கல்லிலும் உயிர்கொடுத்தாய்

    கழலிணை சரணம் ராமா!

    விண்திரள் கார்மேகம் போல்

    விளங்கிடும் கரியமேனி

    கண்களோ பொய்கை பூத்த

    கமலமாய் விரிந்திருக்கும்

    திண்திறல் புஜங்கள் எங்கள்

    துயரெலாம் தாங்கிக் கொள்ளும்

    மண்ணிலே நடந்து சென்ற

    மலரடி சரணம் ராமா!

    கங்கையின் ஓடக்காரன்,

    குகனொரு தம்பி என்றாய்

    அங்கொரு வானரர் கோன்

    அவனையும் தம்பிஎன்றாய்

    வெங்களம் சரண்புகுந்த

    வீடணன் தம்பியானான்

    இங்கெனை ஏற்றுக் கொள்ள

    இன்னுமேன் தயக்கம் ராமா!

    வயோதிகம் நெருங்கும் போது

    வார்த்தையும் வருவதில்லை!

    வியாகுலம் சூழ்ந்த நெஞ்சில்

    விளைவகள் விளங்கவில்லை

    அயோத்தியின் அரசே, நானுன்

    அடைக்கலம், ஏற்றுக்கொள்வாய்!

    தயாபரா! தாமதம் ஏன்?

    தளிர்ப்பதம் சரணம் ராமா!

    AE2C233C-25F8-44A9-8C36-E29CBAB64993

     

    சு.ரவி

     

    Share
  • மனங்கவர்ந்த கவிஞனுடன் மறக்கமுடியாத கணங்கள்

    கண்ணதாசன்-பிறந்தநாள்-நக்கீரன்-படம்இசைக்கவி ரமணன்

    தெருவிளக் மைமுட்டும் விட்டிலாய்ச் சொல்லெலாம்
    தினமுமவன் கதவுதட் டும்
    தேனே எனைக்கொஞ்சம் தேற்றிவி டெனக்கெஞ்சிச்
    சிறுவிரல் பற்றிநிற் கும்
    கருவங்க ளில்லாத கட்டிவெண் ணெய்நெஞ்சம்
    கண்ணன் ஒசிந்த மஞ்சம்
    சரிபாதி பெண்மையில் பறிபோன நெஞ்சிலே
    சங்கீத ஜதிகள் புரளும்
    உருவாக வந்தவொரு மருமத்தைக் கொண்டாட
    ஒருவாழ்க்கை போதவிலையே
    ஒளியாக அவன்பாடல் நுழையாத நெஞ்சங்கள்
    ஒன்றுமே மீதமிலையே!

    சென்னை மீனம்பாக்கம் அ.ம. ஜெயின் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, நுண்கலைத் துறைச் செயலராக இருந்தேன். அப்போது நானும் என் நண்பன் திரு கே. பாலசுவாமிநாதனும் எங்கள் கழகத்தைத் திறந்து வைக்கக் கண்ணதாசனை அழைக்கச் சென்றோம். சென்னை ஹென்ஸ்மென் சாலையில் எளிய வீடு. வெளியே உட்கார்ந்திருந்தோம். யாரோ உள்ளே போய்ச் சொன்னார்கள்.

    தும்பைப்பூ வேட்டி, பனியன், கையில் நாளேடு, கண்களில் குடிச்சிவப்புடன் கவிஞர் வெளியே வந்தார். தடாலென்று காலில் விழுந்தேன். (வேறு வழியின்றித் தானும் விழுந்து பிற்பாடு கோபித்துக்கொண்டான் பாலா!) முழங்கையைச் சொறிந்தபடி, ‘எனக்கு ஊசியெல்லாம் போட்டுக்கணும். என்னால வரமுடியாது,’ என்றார் கவிஞர். ‘நீங்க குளிச்சிட்டு வாங்கையா, அப்புறமாப் பேசிக்கலாம்,’ என்றேன். குழந்தையாட்டம் சரியென்று ஒத்துக்கொண்டு சென்றார். பிறகு உள்ளே அழைத்தார்கள். பளிச்சென்று உட்கார்ந்திருந்தார் படுக்கையில். ரொம்ப இனிமையாகப் பேசினார். ‘தம்பி, மாலைநேரம் வேண்டாம், மத்தியானமாக வரேனே.’ என்று சொல்லிக் காலண்டரில் தேதியைக் குறித்துக் கொண்டார்.

    மகிழ்ச்சியும் பெருமையுமாக நாங்கள் கல்லூரி திரும்பினோம்! நாங்கள் கூப்பிட்டுக் கண்ணதாசன் வருகிறார் என்றால் சும்மாவா? ‘என்னடாது சினிமாக்காரளையெல்லாம் கூட்டிண்டு வராய்நீ?’ என்று மலையாளமும், தமிழுமாக அதட்டினார் கல்லூரி முதல்வர் திரு வி வி ராமன். ஒருவழியாய் அவரைச் சமாளித்துவிட்டு, எல்லா வகுப்புக்களிலும் நுழைந்து சொல்லிவிட்டு, அப்படியே கல்லூரி விடுதிக்குப் போய், நண்பர்களிடம் சொல்லிவிட்டு, விழா அரங்கத்தில் காத்திருந்தோம்.

    கண்ணதாசன் வரவில்லை! ஆளைப் பிடிக்கவும் முடியவில்லை! என் நிலைமையை எப்படிச் சொல்வது? கவிஞர் கல்லூரிக்கு வரக்கூடாது என்று நினைத்த ஆசிரியர்களுக்குத்தான் எத்தனை குரூரமான மகிழ்ச்சி!

    அப்புறம் என்னவாயிற்று?

    என் நண்பர்களின் கோபமான பார்வைகள், ஆசிரியர்களின் கிண்டலான சிரிப்புக்கள் இவற்றையெல்லாம் ஒருவாறு சகித்துக் கொண்டு, வெட்கத்தில் மேலும் வகுப்பறையைப் புறக்கணித்து, வழக்கம்போல் மரத்தடியில் தஞ்சம் புகுந்தால், பாம்பு வந்து சிதறினோம்! சமணர் கல்லூரியில், பாம்பை அடிக்கக் கூடாது! அது கடிப்பதைப் பற்றிய தடையுத்தரவு எதுவுமிருந்ததாகத் தெரியவில்லை!

    ஒருநாள் மதியம் திடீரெனக் கல்லூரிக்கு ஒரு தொலைபேசி வருகிறது. ‘தம்பி! இன்று ஓய்வாக இருக்கிறேன். இதோ மாலை 4.30 மணிக்கெல்லாம் வந்து விடுகிறேன். கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ங்க தம்பி,’ என்றது கவிஞரின் குரல். (இந்த இடத்தில் நீங்கள் என்னை வடிவேலுவாகப் பார்த்தல் அவசியம்! ஆஹா!..) கல்லூரி முதல்வரிடம் ஓடினேன்; காலில் விழாத குறைதான். பிறகு எங்கள் அரங்கத்தில் ஏற்பாடுகளைச் செய்தேன். கூடமாட ஓரிருவர் ஒத்தாசை செய்தார்கள். வகுப்பறைகளில் சென்று அறிவிக்க வேண்டும்; அங்கோ தேர்வு எழுதிக் கொண்டிருக்கிறார்கள் மாணவர்கள்! ஆசிரியர்கள் கறாராக மறுத்துவிட்டார்கள். நொந்துபோன நான் என்ன செய்தேன்? நமக்குத்தான் மரத்தடி இருக்கிறதே, அங்கே அமர்ந்து சில நிமிடங்கள் நிழல் பருகினேன்.

    பிறகு, மாணவர் விடுதி வாசலில் ஒரு கரும்பலகையில் கவிஞர் வருகிறார் என்று எழுதிவைத்துவிட்டு இனி என்ன நடக்கிறது பார்ப்போம் என்றிருந்துவிட்டேன்.

    ஐந்து மணிக்கு நிகழ்ச்சி. 4.45 க்குக் கவிஞர் வந்திறங்கினார். தும்பைப்பூ வேட்டி. சந்தன நிறத்தில் சட்டை. ‘என்ன தம்பி, எம்மேல கோபம் ஒண்ணுமில்லயே?, என்றார். அந்தக் காதற்சோலையின் கீதக்குயிலிடம் கோபிப்பதெப்படி? வகுப்பறைகளில் தேர்வு தொடர்கிறது. யாரும் வெளியே வரக்காணோம். பதறிப்போன நான், நிலைமையைச் சமாளிக்க, கவிஞரைக் கல்லூரி முதல்வரின் அறைக்கு அழைத்துச் சென்றேன். அவரை ‘வாங்கோ வாங்கோ,’ என்று அன்புடன் அழைத்த முதல்வர் அடுத்த கணமே என்னைப் பார்த்து, ‘என்னடா நீ க்ளாசுக்கே வரமாட்டேங்கறாய்?’ என்று அதட்ட, அப்போது கண்ணதாசன் என்னைப் பார்த்துச் சிரித்த சிரிப்பு இன்னும் பசுமையாக நினைவிருக்கிறது. ‘சார் அதெல்லாம் அப்புறமா வச்சுக்கலாம் சார்,’ என்றேனா, உடனே அடுத்த எல்லைக்குத் தாவிவிட்டார் முதல்வர். ‘இவன் என்னமாக் கவிதை எழுதுவான் தெரியுமோ?’ என்று கண்ணதாசனைக் கேட்டார். அவர், ‘அப்படியா?’ என்று என்னைப் பார்த்தார். நானோ, கூசிப்போய், முதல்வரைப் பார்த்து, ‘சார், சார் சும்மா இருங்களேன்,’ என்றேன். அவரா விடுவார்? ‘ரேடியோ ஸ்டேஷனுக்குப் போனோம். இவன் பத்து நிமிஷத்தில பாட்டே எழுதிட்டானாக்கும்,’ என்று பிடிவாதமாய்ச் சொன்னார்.

    கவிஞர் என்னைப் பார்த்த பார்வையில் நான் மறுபடி என்னை நிறுவ முயன்று தொலைந்து போனேன்..

    ‘நன்னாத்தான் படிச்சிண்டிருந்தான். திடீர்னு பாருங்கோ கவிதை எழுதறேன்னு கெளம்பி க்ளாசைக் கோட்டை விட்டுட்டான்,’ என்று சொல்லி, விடாப்பிடியாய் குருவாயூரப்பனைப் பற்றி மலையாளத்தில் நாலுவரி பாட்டு என்ற பெயரில் பாடாய்ப் படுத்தினார். இன்றென்ன, மாறிமாறி விபரீதங்களாய் நடக்கிறதே என்று வேறு வழியின்றிக் கூட்டமில்லாத கொட்டகைக்குக் குற்ற உணர்வுடன் அவரைக் கூட்டிச் சென்றேன்.

    முதல்வர் அறையிலிருந்து அரங்கத்தின் மேடைக்கு நேரடியாகச் செல்லக் குறுக்கு வழியொன்றுண்டு. செல்லும்போது, ‘என்ன தம்பி, மாணவர்களெல்லாம் வந்துட்டாங்களில்லெ?’ என்று கவிஞர் கேட்டதை நான் காதில் போட்டுக்கொள்ளவே இல்லை.

    மேடையில் கால்வைத்தால், ஊசிவிழ இடமில்லாமல், சன்னலிலெல்லாம் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள் நண்பர்கள்! என்னால் கண்ணீரைத் தடுக்க முடியவில்லை. தட்டிக் கொடுத்த கவிஞரோ மிக உற்சாகமா கிவிட்டார்!

    மைக்கைப் பிடித்து வாழ்த்துச் சொன்னேன்:

    கையிலொரு கிண்ணம் கண்ணெதிரில் பெண்மை
    கட்டுடல் காட்டி நிற்க

    கட்டான மெத்தையின் கடிமலர்ப் பாயிலே
    கவிமகன் காத்திருக்க

    வெய்யிலொடு நிழலும் வீணையொடு விரலும்
    விளையாடச் சேர்ந்திருக்க

    தையலரின் கொல்லிடையில் தாளங்கள் போட்டிவன்
    தட்டாத கவிபாடுவான்!

    என்று வாய்க்கு வந்ததைச் சொல்லி மகிழ்ந்தேன். மாணவர்களின் கரவொலி அரங்கைப் பிளந்தது. கவிஞர், தன்னுரையில், மிகச் சிறப்பாக என்னைப் புகழவும், என் நண்பர்களெல்லாம் போட்ட சத்தம் இன்னும் காதில் ஒலிக்கிறது.

    எந்த ஊர் என்றவரே, பார்த்தேன் சிரித்தேன் இரண்டு பாடல்களையும் இனிமையாகப் பாடினார். வருவேன் என்றவர் வரவில்லை. எதிர்பார்க்காத போது வந்து நின்றார் பிடிவாதமாக! 15 நிமிடங்கள்தான் இருப்பேன் என்றுசொல்லிவிட்டு ஒருமணி நேரம் பேசினார்.

    என் ஆருயிர்க் கவிஞனை நான் சந்தித்த இரண்டாவது இனிய தருணம் என்றும் மறப்பதற்கில்லை!

    வெள்ளைமனம் பிள்ளைமனம் வீதியினில் வெந்தமனம்
    தினம்வீழ்ந் தெழுந்த மனமே
    வேதங் களும்தமிழின் வேகங்க ளும்வந்து
    விளையாடும் விந்தைமனமே
    முள்ளைமல ராய்க்கொண்டு மொத்தம்கீ றக்கண்டு
    முடியா தழுதமனமே
    மூண்டவொரு துன்பமே முக்திதரும் பாடலாய்
    மூண்டெழுந் தாடுமனமே
    வெள்ளத்தை விரல்தொட்டுத் திரியாக்கிச் சந்நிதியில்
    சிறுதீபம் ஏற்றுமனமே
    விட்டாலும் விலகாத விந்தைமிகு கவிஞன்புகழ்
    வீதியினில் பாடுதினமே!
    எந்த ஹோட்டல் என்று நினைவில்லை. கவிஞர் சோர்வுடன் படுத்திருக்கிறார். அருகே நான் மட்டும் அமர்ந்திருக்கிறேன்.

    “என்ன தம்பி, எல்லாரும் “கவிஞரே! முதல் வரியிலேயே அப்படியே செக்சைப் பிழிஞ்சு குடுங்க பாட்டிலே,” என்கிறார்கள். நானும் 30 வருசமாப் பிழிஞ்சிட்டுதானே இருக்கேன். கோபத்திலெ, “ஆண்டவன் படச்ச ஒடம்புதானடி ஆடை எதுக்கு அவசியமா” ன்னு ஒரு பல்லவியைத் தூக்கிப் போட்டேன். உடனே, “வேணாமுங்கோ! சென்சார்லெ வெட்டிப்புடுவாங்கோ,” அப்படீங்கறான்.

    அவர் பலத்த சோர்வுடன் காணப்பட்டார். காதலால் கண்ணனைத் தொட்டு, தனது கவிதையால் நமக்கும் அவனைக் காட்ட வல்ல அந்தக் கவிஞரை எப்படிப் பாடாய்ப் படுத்துகிறார்கள் என்று எனக்கு வருத்தம். எனக்கு 17 அல்லது 18 வயதிருக்கும். அவருடைய பாடல்களும் கவிதைகளும்தான் எங்களுக்குப் பெரிய ஊக்கம். அவரைபோல் இன்னொருவன் பாட்டெழுத முடியாது என்னும் அபிப்பிராயம், இன்று தீர்மானமாகக் கனிந்திருக்கிறது.

    என் உள்ளங் கவர்ந்த கவிஞன், இப்படிச் சோர்வதா? நான் அவருடைய வரிகளையே அவருக்குச் சொல்லில் காட்டினேன்:

    பெண்களை விட்டென்ன பேரின்பம்? உயிர்காக்கும்
    கண்களை விட்டென்ன கடவுள்நெறி? ஒன்பதுவாய்ப்
    புண்களை விட்டென்ன புதுப்பார்வை? அனுபவிக்கும்
    எண்களை விட்டென்ன இசைத்தருமம்? போடா போ!

    காமுகனும் மாண்டான் கடவுள் நெறி பேசும்
    மாமுனியும் மாண்டான்! மற்றதிலே யார்பெரியர்?
    நாமுடலைப் பார்ப்போம் நமதுடலைப் பெண்பார்ப்பாள்
    சாமி நமதுசுகச் சரித்திரத்தைப் பார்க்கட்டும்!

    ஏது மறந்து விட்டீர்களா?

    எறும்புத் தோலை உரித்துப்பார்க்க யானை வந்ததடா! நான்
    இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா!

    பிறக்குமுன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா!
    இறந்த பின்னே வரும் அமைதி வந்துவிட்டதடா!

    நீங்கள்தானே எழுதினீர்கள்?

    வருடுவார் கைக்கெலாம் வளைகின்ற தெய்வம் என்
    வாழ்க்கையைக் காக்கவிலையே!
    மலர்கொண்ட கூந்தலைத் தென்றல் தாலாட்டிடும்
    மதுரை மீனாட்சி உமையே!

    மீனாட்சி உங்கள் பக்கத்தில்தானே இருக்கிறாள்?

    பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது
    அழுதால் கொஞ்சம் நிம்மதி!
    பேசமறந்து சிலையாய் இருந்தால்
    அதுதான் தெய்வத்தின் சன்னிதி!
    அதுதான் காதல் சன்னிதி!

    வேறு யாரும் இப்படி எழுத முடியுமா?

    என்று கிட்டத்தட்ட அரைமணி நேரம் நான் கவிஞரின் கவிதைகளையும், பாடல்களையும் உணர்ச்சிவசப்பட்டுச் சொல்லியும், பாடியும் காட்டினேன். சொல்லச் சொல்ல அந்தச் சந்தனமுகம் அப்படியே மலர்ந்துகொண்டே வந்தது. கவிஞர் பதிலாகச் சொன்ன வார்த்தைகளை அப்படியே தருகிறேன்:

    “தம்பி! இனி பார்! பேனாவெ நிமித்திப்
    பிடிக்கிறேன்,” என்றது அந்தக் குழந்தையுள்ளம்.

    சரி, எதற்காக அந்த ஹோட்டல் அறையில் அவரைச் சந்தித்தேன்?

    நங்கைநல்லூரில் குருவாயூரப்பனுக்காக ஆலயமெழுப்புகிறார்கள், கேரள பாணியில். என் தந்தை தற்காலிகப் பிரதான பூஜகராக இருக்கச் சம்மதிக்கிறார். சின்னக் கூரையடியில் படத்தை வைத்துப் பலநாட்கள் பக்திப் பாடல்கள் பாடினோம். நான் தபலாவுடன் வந்துவிடுவேன்

    பஜனை சம்பிரதாயமெல்லாம் வடமொழியிலேயே இருக்கிறது. அந்த மரபில் நாமே பாடலெழுதினால் என்னவென்று தோன்றியது. மணிசார் மெட்டுப் போடச் சம்மதித்தார். மளமளவென்று பாடல்களை எழுதினேன். அற்புதமாக இசையமைத்தார் அவர். எங்களோடு பல குழந்தைகள் சேர்ந்துகொண்டு பாடுவார்கள். அந்த அனுபவத்தைச் சொல்லிவிட முடியாது. அந்தக் கண்ணன் பாடல்கள் இன்றும் இனிக்கின்றன.

    கோவில் கட்டி முடிந்தவுடன் ஒரு சிறப்புச் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்யப் பேச்சுவந்தது. யாரை அழைக்கலாம் என்ற விவாதத்திற்கு ராதாகிருஷ்ண சாஸ்திரியார்தான் முற்றுப்புள்ளி வைத்தார். அப்போது அவருக்கு வயது 66. நாங்கள் நண்பர்கள்! தலைமுறை இடைவெளி எல்லாம் பொய்த்துப்போன நட்பு எங்களுடையது. அவர் பெரிய ஞானி என்பதை அன்று அறிந்தேன்; இன்று அதன் விவரத்தை அசைபோடுகிறேன்! எளியர்க்கெல்லாம் எளியவரான அரிய ஞானி.

    அவர்சொல்லி விட்டார், ‘கண்ணதாசனைக் கூப்பிடுங்கள்.’ யாரும் ஒன்றும் சொல்ல முடியவில்லை! அந்தப் பணி எனக்கு வழங்கப்பட்டது. இல்லையானால் நான் பறித்துக்கொண்டிருப்பேன்! அதற்காகத்தான் அந்த ஹோட்டல் அறையில் அவர் முன் உட்கார்ந்து கொண்டிருந்தேன்.

    ‘வர்ரேன் தம்பி! நீ கூப்பிட்டு நான் வாராம இருப்பேனா?’ என்றார்.

    அந்தத் திருநாளும் வந்தது. அவரை அழைத்துவரவேண்டும். அதற்காய்ச் சென்றேன். அவர் தயாராகிறார். டிரைவர் அவருக்குத் தலையில் எண்ணெய் தேய்த்துவிடுகிறார். அப்போது பார்த்து வந்தாரையா நெடுமாறன்! அந்தக் கணமே கவிஞரை ராஜ்பவனுக்கு அழைத்தார். கவிஞர் நங்கைநல்லூர்க் கூட்டத்தைப் பர்றிச் சொன்னால் அவரோ ‘அதெல்லாம் ஒண்ணும் வேணாம்’ என்றார். நான் நெடுமாறனை எவ்வளவு நேசித்திருப்பேன் என்பதை உங்கள் ஊகத்திற்கே விட்டுவிடுகிறேன்! நான் கவிஞரைக் கெஞ்சாத குறையாகப் பார்த்தேன்.

    ‘தம்பி! கவலைப்பட வேண்டாம். நாம ராஜ்பவனில தலயக்காட்டிவிட்டுப் போவோம்,’ என்று அவரிருந்த வண்டியிலேயே ஏற்றிக்கொண்டார். பளபளவென்று இருந்தார். பேசிக்கொண்டே வந்தார்:

    “பெண்ணென்றாலே பதமானது, இதமானது, சுகமானது, குளிர்ச்சியானது,” என்று அடுக்கிக் கொண்டே ஒரு கல்லூரி வாசலில் நின்றுகொண்டிருந்த மாணவிகளைச் சற்றே காதலுடனும், கவிதா கர்வத்துடனும் பார்த்துப் புன்னகைத்தபடியே வந்தார்.

    “நான் திமுகவில் இருந்தபோது, அண்ணாத்துரை போலக் கம்பனைத் தாக்கிப்பேசவேண்டும் என்பதற்காகக் கம்பராமாயணத்தைப் படிக்க ஆரம்பித்தேன். கம்பனைப் படிக்கப் படிக்க நான் அவனிடம் ‘சரண்டர்’ ஆகிவிட்டேன். 800 கம்பராமாயணச் செய்யுள்கள் எனக்கு மனப்பாடமாயின. தம்பி! அவைதான் இன்றுவரை எனக்குச் சோறுபோடுகின்றன,” என்றார்.

    ராஜ்பவனில் யாருக்கோ காத்திருந்தும் அவர் வராததால், ‘சரி நாம கெளம்புவோம்,’ என்றார். நெடுமாறன் இன்னும் வேறெங்கோ போகலாம் என்க, நான் குருவாயூரப்பனை வேண்ட, கவிஞர், ‘அதெல்லாம் முடியாது. அந்தத் தம்பிக்கு நான் வாக்குக் குடுத்துட்டேன், வாப்பா,’ என்றதும்தான் எனக்கு உயிர் வந்தது.

    வழிநெடுகப் பேச்சுத்தான். ‘தம்பி! வாழ்த்துக் கவிதை சொல்வீங்கள்லே?’ என்றார்!

    நேரமாகிவிட்டது. நாங்கள் கோவிலை நெருங்க நெருங்க, மக்கள் வெளியேறிக் கொண்டிருந்தார்கள். ‘ஐயோ! கிராமத்து ஜனங்கள்ளெல்லாம் பாவம், பொறுமை இழந்துபோய்ப் போறாங்களே!’ என்று வருத்தப்பட்டார். ஆனாலும் என்ன? தரிசனம் செய்துவைத்தார் என் தந்தை. மேடையேறினார் கவிஞர். கூட்டம் அலைமோதியது!
    வாழ்த்துக் கவிதை சொன்னேன். வானளாவப் புகழ்ந்தார் ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ பற்றி மேம்போக்காகப் பேசினார்.

    திடீரென்று, ‘தம்பி, வாங்க ஒங்க வீட்டுக்குப் போவோம்,’ என்றாரையா! அவரும் சில நண்பர்களுமாக வந்தார்கள். ‘சக்கரெ போடாம ஒரு டீ!’ என்று என் அம்மாவிடம் கேட்டு வாங்கிக்கொண்டார். அவரை, ரெயில்வேகேட் வரை சென்று அங்கே இறங்கிக் கொண்டேன்.

    ‘நான் மறுபடி இங்கே வந்து பேசுவேன் தம்பி,’ என்றார். எனக்கு நம்பிக்கையில்லை. எல்லாம் நாம் நம்புகிறபடி, அல்லது நம்பாதபடி நடக்கிறதா என்ன?!

    கவிஞர் வந்துசென்றபின்பு, நங்கைநல்லூரில் ஐயாவுக்குக் கொஞ்சம் மதிப்பு கூடித்தான் போயிற்று. அவர் புகழ்ந்தவிதம் அப்படி. சாலையிலே நான்நடந்தால் சாளரத்துத் திரைவிலகும்! பஸ் ஸ்டாண்டில், கல்லூரி மாணவிகள் கொத்துக்கொத்தாய்த் தென்படுவார்கள். அவர்களது பார்வைகளில் திடீரென்று கிளம்பிவிட்ட மின்னல், நெஞ்சத் தொடுவானத்திலிருந்து ஆயிரமாயிரம் பட்டாம் பூச்சிகளை ஒரே கணத்தில் உயிர்ப்பித்தன! ஆயிரம் வண்ணத்துப் பூச்சிகள் அடிவானத்தில் பறந்தன! அழகுக் கார்த்திகைத் தீபங்கள் ஆனந்த வெள்ளத்தில் மிதந்தன! நானும் நண்பர்களும்
    ஏற்படுத்திய நல்லூர் இலக்கிய வட்டக் கவியரங்கங்களுக்குக் கவிதை கேட்க ஜனங்கள் வரத்துவங்கினார்கள்!

    “நான் நல்லபாட்டு எழுதி நாளாயிற்று. ரொம்பநாள் கழித்து நான் ஒருநல்ல பாடல் எழுதிய திருப்தி எனக்கு வந்தது,” என்று தனது ‘இரண்டு மனம் வேண்டும்’ பாடலைக் குறிப்பிட்டார். அதில் ஒரு கண்ணி, படத்தில் வருகிறது; பதிவில் இல்லை.

    சிறிய காயம் பெரிய துன்பம்
    ஆறுமுன்னே அடுத்த காயம்
    உடலிலென்றால் மருந்துபோதும்
    உள்ளம் பாவம் என்ன செய்யும்?

    காயம் என்பது தேகமென்று நமக்குத் தெரியும் (காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா) கரைவது காயம். தகனமாகி அல்லது சீரழிந்து போவது தேகம். என்ன பொருத்தமாய்ப் பெயர்வைத்திருக்கிறார்கள்! பிறப்பின் தொடர்ச்சி பின்னும் துன்பத்தையே அதிகரிக்கிறது என்கிற மகத்தான தத்துவத்தை இத்தனை எளிய வார்த்தைகளில் எப்படித்தான் சொன்னாரோ? உடலாய்ப் பிறப்பெடுத்து பட்ட துன்பங்களும், நம்மைப் பற்றிக்கொண்ட துயரங்களும், உள்ளத்தில் தங்கி விடுவதால்தான் துன்பம் தொடர்கிறது!

    ‘கடவுளைத் தண்டிக்க என்னவழி?’ என்றது சினமன்று; ஆற்றாமை. அதன்பின்னும், நேசம்தான் இருக்கிறது. ‘கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்’ என்ற பாடலிலும் இதைக் காண்கிறோம். குணமற்ற பரம்பொருளுக்கு நாம் குணங்களைக் கற்பித்துவிட்ட பிறகுக் குறைசொல்லத் தாமதமோ தயக்கமோ ஏது??!!

    கவிஞர் மறுபடியும் நங்கைநல்லூர் வந்தார். இந்தமுறை ஏற்பாட்டில் நானில்லை. நான் அவரைச் சந்திப்பதே கடினம் என்ற சூழ்நிலையை ஏற்படுத்தியிருந்தார்கள் கோவில் ஊழியர்கள். பாவம் அவர்கள்! கவிஞர் என்னை வலுக்கட்டாயமாக மேடையிலேற்றி, மைக்கைக் கொடுத்து “ம்” என்றபோது என்ன செய்வார்கள்! அன்று அவர் பகவத் கீதையைப் பற்றிப் பேசவந்தார். எனவே, அமரர் திரு கி.வா.ஜ. அவர்கள் தலைமையில் நான் அரங்கேற்றிய என் ‘அர்ச்சுனன் பார்வையில் கண்ணன்’ என்ற கவிதையிலிருந்து சிலபகுதிகளைச் சொன்னேன். சூழ்நிலையில் கசப்பு தலைதூக்கியிருந்ததால், கவிதையைச் சொல்லி முடித்தவுடனேயே கிளம்பிவிட்டேன்.

    மறுநாள் நண்பர்கள் என்னைப் பரபரப்புடன் தேடினார்கள். சிலர், நான் கிளம்பிவிட்டதற்காகக் கடிந்துகொள்ளவும் செய்தார்கள். ஏனென்றால், பேசிக்கொண்டிருக்கும்போது கவிஞருக்குத் திடீரென்று நானும் என் கவிதையும் நினைவுக்கு வந்து சில நிமிடங்கள் அவர் எனக்குச் சூட்டிய புகழ்மாலையில் கூட்டத்தினர் திக்குமுக்காடிப் போனார்களாம். என் நண்பர்களெல்லாம் கண்ணீர் விடுமளவுக்குக் கவிஞர் பேசிவிட்டாராம். (விவரம் ரொம்ப ஓவராக இருந்ததால் அதைத்
    தவிர்த்துவிட்டேன்)

    நாங்கள் நங்கைநல்லூரை விட்டு பெசெண்ட் நகருக்கு மாறிவிட்டோம். என் தந்தை, “நம்மால் வீடு வாங்க முடியாது. மாறுவோமே!,” என்றும் “முட்டாள்கள் வீடு கட்டுவார்கள்; அறிவாளிகள் குடியிருப்பார்கள்,’ என்றும் சொல்லி அம்மாவைச் சமாளிப்பார். நான் மறுபடிக் கவிஞரைச் சந்திக்கவில்லை. அது என்னியல்பு. கொத்தமங்கலம் சுப்பு, ஜெயகாந்தன், கி.வா.ஜ., பத்மா சுப்ரமணியம், இளையராஜா, சிவாஜி கணேசன், ம.பொ.சி., எம்.எஸ்.சுப்பலக்ஷ்மி, ஜானகிராமன், லா.ச.ராமாமிருதம், விக்கிரமன் போன்ற பலரைச் சந்திக்கவும், பழகவும் வாய்ப்புக் கிடைத்தது.

    அதென்னமோ, பொதுவாக நான் கவிதை எழுதுகிறவன் என்பதை அவர்களிடம் சொல்வதுமில்லை.
    மறுபடிச் சந்திக்க முயற்சி செய்வதுமில்லை. இது என் நண்பர்களுக்குக் கோபத்தை வரவழைக்கும். என்னால் மாற்றிக்கொள்ள முடியாது. ஒரு சூழலை அறவே விட்டுவிட்டுத்தான் அடுத்த சூழலில் நுழைவதென்பது என்னியல்பு…

    இவ்வாறிருக்க, ரத்னகிரீச்வரர் கோவிலில் கவிஞர் கண்ணதாசன் பேசுகிறார் என்ற அறிவிப்பைப் பார்த்துவிட்டுச் சென்றேன். கவிஞர் கோவிலில் தரிசனம் செய்துகொண்டிருந்தார். கூட்டம் நெருக்குகிறது. கோவில் நிர்வாகிகள் ஏகக் கெடுபிடி செய்தார்கள். “கவிஞரே!” என்றேன் மெதுவாக. சட்டென்று திரும்பிப்பார்த்து, “தம்பி! அங்க நின்னுகிட்டு என்ன செய்றீய! வாங்க இப்படி!,” என்றார். தோளில் கைபோட்டுக்கொண்டு வலம்வரும் போதுதான் எத்தனை பெருமை! இன்பம்!

    அவருக்கு நாற்காலி போட்டு மைக் வைத்தார்கள். எல்லோரும் கீழே உட்கார்ந்துகொண்டிருந்தோம். “என்ன? வாழ்த்து ஒண்ணும் கெடையாதா?” என்றார் கண்ணைச் சிமிட்டி! பிரமுகர்கள் என்னை விடமாட்டார்கள் என்றேன். காதில் விழாததுபோலிருந்த அவர், என்னைத் தனக்கு மிகவருகே வைத்துக்கொண்டார். சம்பிரதாயமாக வரவேற்புச் சொல்ல வந்த கோவில்காரரைத் தடுத்து, மைக்கைப் பிடித்து, “தம்பி ரமணன் என்னைப் பற்றி வாழ்த்துக்கவிதை சொல்லும்,” என்றாரே பார்க்கலாம். அடுத்த சிலநிமிடங்கள் எனக்கும் அவருக்கும் உள்ள நேசத்தைத் தரிசித்தன….

    “இரக்கமுள்ள நெஞ்சிலிருந்துதான் கவிதை பிறக்கும்,” என்று துவங்கி, நெஞ்சாரப் பாராட்டினார். கிளம்பும்போது, கைபற்றி வாழ்த்துச் சொல்லி, “அமோகமா வருவீஹ” என்றார்.

    அதன்பிறகு நான் அவரைச் சந்திக்கவில்லை. அவரும் என் நெஞ்சைவிட்டு நீங்கவில்லை. இரண்டுபேர் என்னுயிரோடு கலந்தவர்கள். ஒன்று, பாரதி. என் ஆவேசத்திற்கும், அறச் சீற்றத்திற்கும் அவன் காரணம். இரண்டு, கண்ணதாசன். எனது இசைப்பாடல்களுக்கும், அவற்றின் எளிமைக்கும், அவற்றில் அடிநாதமாகத் ததும்பும் காதலுக்கும் அவனே ஆதர்சம்.

    எனக்குக் கண்ணதாசனின் கவிதைகள், பாடல்கள், அவற்றின் குறைநிறைகள் தெரியும். அதைவிட, அவரது கவியுள்ளம் எனக்குக் கண்கூடு. அதெபோல், பாரதியோடு நான் வாழ்ந்ததுபோலவும், அல்லது பாரதி என்னில் வாழ்வது போலவும் நான் உணர்வேன்.

    இந்த இரண்டு கவிஞர்களுக்குப் பிறகு எத்தனையோ சிறந்த கவிஞர்கள், பாடலாசிரியர்கள் தோன்றியிருக்கிறார்கள்.

    ஆனால், அவர்கள் இருந்த இடத்தில் யாரும் அமரவில்லை; அது முடியாது: அதுவே அவர்களது சிறப்பு.

    எந்தவீட்டில் எந்த நிகழ்ச்சி நடந்தபோதும்
    எந்தமனதில் எந்த உணர்ச்சி எழுந்தபோதும்
    அந்தக் குயிலின் அழகுப்பாடல் அங்கே கேட்கும்
    ஆறுதலாய் மாறுதலாய் அலைகள் மோதும்!
    சொந்தமான நண்பன்போல் தோளைத்தட்டும்
    சுட்டுவிரல் தொட்டுவிழி நீர்துடைக்கும்
    இந்தவுயிர்ச் சித்திரத்தின் வண்ணமாக
    இதயத்தில் கலந்துவிட்டான் கண்ணதாசன்!

    வானிலிருந் தவனிறங்கி வரவு மில்லை
    வந்தவனுக் கொன்றும்நாம் தரவுமில்லை
    தேனிலிருந் தெழுந்துவந்தான்; தெரியு மந்தத்
    தெருமுனையின் ஒளியினிலே நடந்து வந்தான்
    ஊனணிந்து வந்தவன்தான்; உயிருக்குள்ளே
    பூந்தமிழின் மென்சிறகால் புளகம் தந்தான்
    மானிடத்தின் உணர்ச்சியெல்லாம் யாழா யாக்கி
    மடியிலிட்டு வாசித்தான் கண்ண தாசன்!

    காதலுக்கு நாயகனோ? கன்னிப் பெண்கள்
    கடைவிழிக்குச் சேவகனோ? கள்ளை மிஞ்சும்
    போதைக்குப் பூஜகனோ? புனைவிலாத
    புதுமைக்குக் காவலனோ? பெண்மனத்தின்
    வாதையெல்லாம் கற்றவனோ? மனித நெஞ்சுள்
    வந்துநின்று பார்த்தவனோ? தமிழின் நீண்ட
    காதையிலே வீதியிலே வீட்டுக் குள்ளே
    காதுக்குள் கேட்கின்றான் கண்ணதாசன்!

    கங்கைநதி பொங்கிவரும் சரளம்; வட்டக்
    களரிநிலா முங்கிவரும் லலிதம்; சுட்ட
    பங்கியெழும் புகையைப்போல் லஹரி; அந்தப்
    போதையிலே பரிகசிக்கும் தெளிவு; வெள்ளைச்
    சங்கினிலே பாலெடுத்துப் பாரிஜாதப்
    பனியிதழால் தொட்டெடுத்த பாஷை; நான்காம்
    சங்கத்தின் முற்றநிலா கண்ண தாசன்
    சாவென்ப தறியாத காதல் நேசன்!

    சாலையிலே என்கவிஞன் நடக்கும் போது
    சாளரத்துத் திரைவிலகும் கண்கள் மொய்க்கும்
    வேலையிலே நான்வியர்வை சிந்தும்போது
    தென்றலென அவன்பாடல் நெஞ்சைக் கொஞ்சும்
    மூலையெல்லாம் துரத்திவந்து பாலாய்க் கொட்டி
    முட்டவரும் கண்றினையும் முந்தும் அன்னை
    ஞாலத்தில் ஒருமனிதன் மிஞ்சும் மட்டும்
    நம்மோடு குடியிருப்பான் கண்ணதாசன்!

    (நன்றி : நமது நம்பிக்கை, கோவை)

    Share
  • எங்கெல்லாம் இராம நாமம்..

    எழுதியவர் : கே.ரவி

     

    பாடியவர் : எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

    எங்கெல்லாம் ராம நாமம் அங்கெல்லாம் ஆஞ்ச நேயம்images (1)
    எங்கெல்லாம் ஆஞ்ச நேயம் அங்கெல்லாம் நாத யோகம்
    ஆஞ்ச நேயம் ஶ்ரீ ஆஞ்ச நேயம்
    நெஞ்செல்லாம் பக்தி பாவம் நித்ய ப்ரும்மச் சாரி ரூபம்
    அஞ்சனா தேவி பாலன் அன்பினால் ராம தூதன்
    ராம தூதன் ஶ்ரீ ராம தூதன்
    சஞ்சலம் என்று சொன்னால் சஞ்சீவி யாக வருவான்
    நெஞ்சுரம் கொண்ட வீரன் சிரஞ்சீவியாம் ஹனுமான்

     

     

     

     

     

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    இந்த வார வல்லமையாளர்!

    ஜூன் 23, 2014

    சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலகட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு  செய்யப்பட்டவர்

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு திரு.  வாசு ரெங்கநாதன்  அவர்கள்

    Vasu Renganathan
    இவ்வார வல்லமையாளர் விருதிற்குரியவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்  அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் தமிழ் விரிவுரையாளராகப் பணிபுரியும் திரு.  வாசு ரெங்கநாதன் (http://plc.sas.upenn.edu/people/faculty/vasurenganathan) அவர்கள்.

    இவரைப் பரிந்துரைத்தவர் வல்லமை வாசகர், முனைவர் நா. கணேசன் அவர்கள்.  திரு. வாசு ரெங்கநாதன் அவர்கள் அமெரிக்க கல்விக் கழகம் நிதி உதவியில்,  கடந்த ஏழு ஆண்டுகளாக அவர் நிர்மானித்து பராமரித்து வரும் தமிழ் பயிற்சி வலைத்தளத்தில்  (வலைதளத்தின் முகவரி: http://www.thetamillanguage.com/),  பண்டைய தமிழ் இலக்கியங்களை படிப்பவர்களுக்கு உதவக்கூடிய  முறை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார். இணையத்தில் உள்ள சங்கத்தமிழ் இலக்கியங்களை.  எளிதில் பொருள் விளங்கிக் கொள்ளும் வகையில், கணினித் திரையில் தோன்றும் ஒவ்வொரு சொற்களையும் கணினித் திரையில் சுட்டினாலே அகராதியில் இருந்து அந்த சொல்லின் பொருள் திரையில் தோன்றும் வகையில் அகராதியுடன் இணைத்துள்ளார்.

    உதாரணமாக நற்றிணைப் பாடல்களை இந்த பக்கத்தில் காணலாம் : http://www.thetamillanguage.com/sangam/url_gloss.php?url=http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0296.html

    “நின்ற சொல்லர்; நீடுதோறு இனியர்;
    என்றும் என் தோள் பிரிபு அறியலரே”
    என்று தலைவி தோழியிடம் சொல்வதில், ‘பிரிபு’ என்றால் எதைக்குறிக்கிறது என்று எண்ணி திரையில் அச்சொல்லைச் சுட்டினால், உடனே  அகராதியில் இருந்து பொருள் விளக்கம் காட்டப்படுகிறது.

    இவ்வாறாக சங்கப்பாடல்களைப் படிக்கும் ஆர்வமுள்ளவர்கள், எளிதில் பொருள் தேடி அறிய இணைய அகராதியுடன் பாடல்களின் சொற்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    இது போல மதுரைத்திட்டம் வழங்கும் இணைய இலக்கியங்கள் யாவற்றையும்  (http://www.projectmadurai.org/pmworks.html) இவ்வாறு படிக்க இயலும்.

    காட்டாக:
    http://www.thetamillanguage.com/sangam/url_gloss.php?url=
    என்ற சுட்டியின் பின்னர் ‘மதுரை திட்டம்’ வழங்கும்  கொன்றை வேந்தன் பாடல்களைப் படிக்க விரும்புபவர், அந்த இலக்கியத்திற்கான இணையதள சுட்டியான http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0002.html என்பதை http://www.thetamillanguage.com/sangam/url_gloss.php?url= க்குப்பிறகு  இணைத்து
    http://www.thetamillanguage.com/sangam/url_gloss.php?url=http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0002.html என்ற இணையதள முகவரியாக மாற்றிய பின்னர் இணையத்தேடல் பொறியில் வெட்டி ஒட்டி சொடுக்கினால் போதும்.

    http://www.thetamillanguage.com/sangam/url_gloss.php?url=http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0002.html
    பொருள் விளக்கம் அறியும் வகையில் கொன்றைவேந்தன் உங்கள் விரல்நுனிகளில் கிடைக்கும்.

    பள்ளி வகுப்புகளுடன் தமிழிலக்கியம் படிப்பது தடைபட்டு, பின்நாளில் சொந்த முயற்சியில் படிக்க விரும்புபவர்களுக்கு தமிழிலக்கிய நூல்களும், அவற்றின் பொருளை  விளக்கும் உரைநூல்களும்  கிடைப்பது இனி அரிதான ஒன்றே அல்ல.

    இந்த எளிய முறையை சென்றவாரம் தமிழுலகிற்கு உருவாக்கித் தந்த  திரு. வாசு ரெங்கநாதன்  அவர்களை வல்லமையாளர் விருதுக்கு பரிந்துரைத்த முனைவர் கணேசன்,   அவரைப்பற்றி பற்றி கீழ் வருமாறு அறிமுகப்படுத்தி எழுதியுள்ளார்.

     

    பேரா. வாசு ரெங்கநாதன் தமிழ் மொழியியலில் இருமுறை முனைவர் பட்டம் பெற்றவர். மயிலாடுதுறையைச் சேர்ந்தவர். ஆய்வியல் அறிஞர் செ. வை. சண்முகம் அவர்களிடம் அண்ணாமலைப் பல்கலையிலும், பின்னர் பென்சில்வேனியா பல்கலையில் ஹெரால்ட் ஷிப்மனிடமும் பயின்ற வாசு ரெங்கநாதன் இப்பொழுது ‘பென் மொழிகள் மையம்’ (Penn Language Center) என்னும் அமைப்பில் பணிபுரிகிறார். தமிழ்க் கல்லூரி ஆசிரியர்கள் கணினிப் பக்கமே போகாத நிலை இன்னும் தமிழ்நாட்டில் நிலவுகிறது. அந்நிலை மாற வழிவகுப்போரில் முனைவர் வாசு முக்கியமானவர். வாசு ரெங்கநாதன் கணினியின் மூலமாக தமிழைக் கற்பிக்கும் முன்னோடிகளில் ஒருவர். தமிழ் தட்டச்சு விசைப்பலகையை முதலில் கணினிக்கு ஏற்ற வகையில் வடிவமைத்ததால் இலங்கையில் ‘ரெங்கநாதன் விசைப்பலகை’ என்று அறியப்படுகிறது. அமெரிக்காவில் தமிழரல்லா பிற மொழியினருக்குத் தமிழ் கற்பிக்கும் முறைகளில் அனுபவமும் திறமையும் மிக்க இவர் இணையத்தில் தமிழ் போதிக்க வலைத்தளங்கள் அமைத்துள்ளார். அமெரிக்க தமிழ் அகாதமி என்ற புதிய அமைப்பு பொதுமக்கள் பயிலும் பள்ளிகளில் அங்கீகாரம் பெற்ற பாடமாகத் தமிழை அறிமுகப்படுத்த ஏற்பாடுகளைச் செய்துவருகிறது. அமெரிக்கன் தமிழ் அகாதமிக்கு ஆலோசகராக நல்ல பல ஊக்கங்களை அளித்துவருகிறார்.

    உத்தமம் என்ற பல்நாட்டுத் தமிழ்க் கணினித் தொழில்நுட்ப நிறுவனத்தின் மாநாடுகளை நடத்தப் பெரும்பங்கு ஆற்றும் வாசு இந்த ஆண்டு உத்தமம் அமைப்பின் தலைவர். புதுச்சேரியில் நடக்கும் 13–ஆம் ஆண்டு கருத்தரங்கம் பல அரசியல் தலைவர்களியும், உத்தமத்தினரையும், கல்லூரி ஆய்வாளர்களையும் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, அண்மையில் ஒரு வலைப்பக்கத்தைக் கொடுத்தால் அதைத் தமிழாகப் படிக்கும் தானியங்கி மென்கலனை உருவாக்கி தமிழ் கூறும் நல்லுலகிற்கு அளித்துள்ளார். இன்று தந்துள்ள சேவையின் மூலம், பழைய சங்கப் பாடல்களைப் பொருள் புரிந்துகொள்ள எளிதாகிறது. ஒரு சொல்லியின் மீது கணியெலிச் சுட்டியை வைத்தால் அச் சொல்லின் பொருளைக் காட்டுகிறது.

    இயற்கை மொழி கணியாய்வில் (Natural Language Processing) தனது கணினி திறனையும், தமிழார்வத்தையும் இணைத்து, பழந்தமிழ் இலக்கியங்களை அனைவரும் எளிதில் படித்திட வகை செய்த திரு. வாசு ரெங்கநாதன்  அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    படங்கள்  மற்றும்  தகவல்கள் இணையத்திலிருந்து.

    Share