–இன்னம்பூரான்.

Evening-Tamil-News-Paper_96997797490

சிறு துளி பெருவெள்ளம். இதுவும் அதுவுமாக சட்டம், தணிக்கை, விழுப்புணர்ச்சி, ஆலோசனை நேரம் போன்ற தகவல்களை தொகுத்தும், அவிழ்த்தும், சங்கிலித்தொடராகவும், தனிமொழியாகவும், அவ்வப்பொழுது சிறு துளிகள், உஜாலா சொட்டு நீலம் போல் இங்கே காட்சி தருகின்றன. அவற்றால் ஏற்படும் பிரகாசமோ, பெருவெள்ளமோ, உமது பாடு.

உலகமெங்கும் வினாடி தோறும் பற்பல நிகழ்வுகள்.

சில வியக்க வைக்கின்றன; மீனா ஐஏஎஸ் பாஸ் செய்து விட்டார். இத்தனைக்கும் அவர் தன் கையால் பரிக்ஷை எழுதவில்லை. ஆள் வைத்து எழுதினார். படித்தது மற்றவர்கள். அதை உள்வாங்கியது, அவர். செவிவாய் செய்திகளை அவர் ஜீரணம் செய்த விந்தை சாகசம் பற்றி கேட்கும்போது, நமது மனம் பாகாய் உருகி விடுகிறது. சர்வ வல்லமை புகழ் ஆண்டவனே! உனக்கு கண் இல்லையா? உங்களுக்கு ஹெலென் கெல்லரை பற்றியும், வேத் மேஹ்த்தா பற்றியும் தெரியுமோ?  ஆம். மீனாவும், அந்த சாதனையாளர்களைப்போல, கண்பார்வை இழந்தவர். நேர் காணலில் அவரளித்த பதில்கள் பொன் வாக்கு.  வாருங்கள். அவரை வாழ்த்துவோம்.

“பெண்புத்தி பின்புத்தி”,”ஏழை சொல் அம்பலம் ஏறாது.” “இஸ்லாமில் பெண்களுக்கு மதிப்பில்லை.” இது போன்ற குப்பைகளை அகற்றுங்கள் என்கிறார், சுல்தானா பேகம். ஷிமோகா-வாழ் பெண்ணரசியான இவர், சிசேரியன் அறுவை சிகிச்சையில் திருமகனை பெற்றவர். மயக்கம் தெளிந்தவுடனேயே, ஆசிரியர் தகுதி தேர்வு எழுத போய்விட்டார். இடது கையில் ஐ வி.திரவம், ஊசி மூலம். வலது கை பிடித்தது, பேனாவை. உறுதுணை: வாடகை வண்டி ஓட்டுனராகிய கணவர், அஹ்மத். மகவை பார்த்துக்கொண்டது அம்மாவும், மாமியாரும். வசதி செய்து கொடுத்தவர்கள், தேர்வு மைய அதிகாரிகள். என் மகன் கூட ஆஸ்பத்திரியிலிருந்து போய் தான், முதல் வருட டாக்டர் பரிக்ஷை எழுதினான். மூன்றாவது மாடியில் பரிக்ஷை. இவனுக்கு தனி அறை, கீழே. எழுதும் விரல் ஒரு விபத்தில் நசுங்கியும் ஐ.ஏ.எஸ். எழுதிய எனக்கு ஒரு உதவியும் கிட்டவில்லை. எழுத்து கோணா மாணா என்று மார்க் குறைத்திருப்பார்கள்!அது அந்த காலம்.

ஒரு மடலாடலில் படைப்பாற்றல் பேசப்பட்டது. ஒரு எட்டு வயது சிறுவனின் அபாரமான படைப்பு. ஆம். சிந்தனை ஒரு கொடுப்பினை. அதை விட பெரியது கற்பனை. கற்பனை இல்லையேல், இலக்கியம், கலை, அழகு, சுவை, மொழி எல்லாமே சூன்யம். முருகன் என்ற பெரிய கயிறை பற்றியும், வள்ளி என்ற சிறிய கயிறை பற்றியும் எழுதிய மகா கவி பாரதியார், வாயு தேவனையும், தன்னையும் முன்னிறுத்தி, ஒரு காதல் அமர காவியம் படைத்து விட்டார். கற்பனை வளத்தைப் பேணாத கல்வி, ஏட்டுச்சுரைக்காய்.

ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோயிலாண்டி. நுகர்வோர்கள் அந்த ரகம். அவர்களை துரும்பாக மதிப்பவர்கள் பெரிய மைனரும், சின்ன மைனரும். ஆனால், இந்த நுகர்வோர் நீதி மன்றங்கள் மடியில் கை வைத்து நாடி பார்க்கிறார்கள்; நாட் அல்வேஸ் என்றாலும். ‘force majeure’ என்ற லத்தீன் சொல்லுக்கு பொருள்: கடவுள் துணை? இல்லை. கடவுள் துணை இல்லை. கடவுள் செய்த தீவினை -உதாரணம்: சுனாமி.

வேளாண்மை செய்ய சென்ற ‘ரூம் பாட்ச்சா’ அறுந்து கிடந்த மின்கயிறு தாக்கி மரணம்: செப்டம்பர் 4 , 2009. அவரது மனைவியும், மகன்களும், விபத்தின் காரணம் மின்வாரியத்தின் பரிமாரிப்பு கடமை தவறுதல் என்று குற்றம் சாட்டி, ரூ.6 லக்ஷம் நஷ்டஈடு கேட்டார்கள். ‘சே! சே! அதெல்லாம் ஆண்டவன் தீவினை என்று சொல்லி, ‘போடா பொக்கை’ என்று உதறி விட்டனர், மின் வாரியம். ‘டெக்னிகல்’ என்று சொல்லப்பட்ட மண்ணாங்கட்டி வாதங்களை தீர விசாரணைக்குப் பின் நிராகரித்த சென்னை உச்ச நீதி மன்றம் சொன்னது:

‘அறுந்த மின்கயிறு அடித்த ஷாக் என்பதை மின் வாரியம் ஒத்துக்கொண்டதும், பின்னர் செய்த சீரமைப்பும் ஆவணங்களில் உள்ளன. ஒம்மாச்சியை குற்றம் சொல்லாதே. ரூ 5 லக்ஷம் நஷ்ட ஈடு.’

தர்மமிகு சென்னையில் நூற்றுக்கணக்கான இடங்களில் மின்கயிறுகள் தாறுமாறாக  தொங்கலாட்டம் போடுகின்றன. மாநிலம்/ தேசம் முச்சூடும் அதே. யாராவது சாகுவதற்கு முன், விழிப்புணர்ச்சி இயக்கம் நடத்துங்கள்.

மற்றொரு இளிச்சவாயன். திரு. எஸ். நாகராஜன்,”மேக் மை ட்ரிப்” என்ற சுற்றுலா கம்பெனியிடம் ரூ.90.000/- கட்டி, குடும்ப சுற்றுலாவுக்கு பதிவு செய்தார். சிலருக்கு வீஸா கிடைக்காததால், ரத்து செய்ய கோரினார். ஒரு மாதமே இருக்கும் காலகட்டத்தில் ரத்து செய்தால், ஒரு காசு கூடக்கிடைக்காது என்று போட்ட கண்டிஷனை காட்டி, ‘போடா பொக்கை’ என்று விட்டார்கள். அந்த கண்டிஷனே தப்பு என்று அந்த தன்னிச்சை கண்டிஷனையே நிராகரித்து, ரூ. 90,000/- + நஷ்ட ஈடு ரூ.7,000/- திரு.நாகராஜனிடம் கொடுக்கும்படி ஆணையிட்டது. You must always read the fine print.

வீராதி வீரன்! சூராதி சூரன்! யாரு? ஆர்.கே.சத்பதி, ராணுவ மைய விஞ்ஞானி (DRDO). அய்யா ஹைதராபாத் போன இடத்திலெ, ஒரு கலாட்டா.  போறாத காலம். போறப்போக்கில், ஓடிப்போன இளைஞன், இவரை கத்தியால் குத்தி விட்டான்.  ரத்த மயம். வலி பொறுக்காவிடினும், மனம் தளராமல், தானே நடந்து சென்று போலீஸ் ஸ்டேஷன் சென்று புகார் அளித்தார். கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு முன்னால், ‘மஞ்சள் பத்திரிகை’ புகழ் லக்ஷ்மீகாந்தன் மாம்பலம் சாரங்கபாணி தெருவில் ரிக்க்ஷாவில் வரும் போது, ஒருவன் வயிற்றில் குத்த, ஒரு கையால் குடலை அமுக்கிக்கொண்டு, ஒரு கையால் குத்தியவனை பிடித்துக்கொண்டு, போலீஸிடம் போனதாக, படித்த ஞாபகம். பாடபேதம் இருக்கலாம்.

சித்திரத்துக்கு நன்றி:http://www.tamilmurasu.co.in/data1/TmNewsImages/Evening-Tamil-News-Paper_96997797490.jpg

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.