Blog

  • அழகு தெய்வம் மெல்ல… மெல்ல…

    கவிஞர் காவிரிமைந்தன்.

    காதலிலே கடிதம் என்பது இன்ப ஊற்று! –  இப்படி எழுதப்பட்டால்..

    pesum deivamகாதலிக்கு மடல் தீட்டுவதென்பது – ஒரு சாதாரண மனிதனையும் கவிஞனாக்கும் படலம்! மடை திறந்த வெள்ளம் பெருகிவர வார்த்தை நதி ஓடிவருகிறதே.. அவள் உள்ளம் தொட!!  இந்தப் பகீரத முயற்சி – பலபேரை கவி எழுத வைத்திருக்கிறது எனவேதான்.. கவிஞர்கள் பிறப்பது காதலில் என்பார்கள்!

    ‘பேசும் தெய்வம்’ என்கிற திரைப்படத்திற்காக கவிஞர் வாலி வரைந்த மடலிது!  இசைவடிவம் திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள்.. தனக்கே உரித்தான பாவங்களுடன் பாடிக் கொடுத்திருக்கிறார் ஏழிசை வேந்தர் டி.எம்.செளந்திரராஜன்!!

    http://youtu.be/R12D7i5PWGQ
    காணொளி:-http://youtu.be/R12D7i5PWGQ

    பாடல்: அழகு தெய்வம் மெல்ல மெல்ல்
    திரைப்படம்: பேசும் தெய்வம்
    பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் .. பி.சுசீலா..
    இயற்றியவர்: வாலி
    இசை: கே.வி. மஹாதேவன்
    ஆண்டு: 1967

    ஆழியிலே பிறவாத அலைமகளோ? ஆஆ..ஆஅ…ஆ…
    ஏழிசையைப் பயிலாத கலைமகளோ?
    ஊழி நடம் புரியாத மலைமகளோ?
    உலகத்தாய் பெற்றெடுத்த தலைமகளோ? ஆ..ஆ..ஆ..ஆஆஆ…

    அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்ததோ?
    அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்ததோ? – நான்
    அன்புக் கவிதை சொல்லச் சொல்ல அடி எடுத்துக் கொடுத்ததோ?
    அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்ததோ? – நான்
    அன்புக் கவிதை சொல்லச் சொல்ல அடி எடுத்துக் கொடுத்ததோ?
    அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்ததோ?

    ஆ…ஆ..ஆ…ஆ..
    இளநீரை சுமந்திருக்கும் தென்னை மரம் அல்ல
    மழை மேகம் குடை பிடிக்கும் குளிர் நிலவும் அல்ல ஆஆ…ஆஅ..
    இளநீரை சுமந்திருக்கும் தென்னை மரம் அல்ல
    மழை மேகம் குடை பிடிக்கும் குளிர் நிலவும் அல்ல
    இங்கும் அங்கும் மீன் பாயும் நீரோடை அல்ல
    இங்கும் அங்கும் மீன் பாயும் நீரோடை அல்ல
    இதற்கு மேலும் இலக்கியத்தில் வார்த்தை ஏது சொல்ல
    ஆ…ஆ..ஆ…ஆ.

    அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்ததோ? – நான்
    அன்புக் கவிதை சொல்லச் சொல்ல அடி எடுத்துக் கொடுத்ததோ?
    அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்ததோ?

    ஆஅ..ஆ..ஆ.ஆஅ..
    தத்தி வரும் தளர் நடையில் பிறந்ததுதான் தாளமோ?
    தாவி வரும் கையசைவில் விளைந்ததுதான் பாவமோ?
    தெய்வ மகள் வாய் மலர்ந்து மொழிந்ததுதான் ராகமோ? ஆஆஆஆ..
    இத்தனையும் சேர்ந்ததுதான் இயல் இசை நாடகமோ?
    ஆஆஆஆ..

    அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்ததோ? – நான்
    அன்புக் கவிதை சொல்லச் சொல்ல அடி எடுத்துக் கொடுத்ததோ?
    அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்ததோ?

    எத்தனையோ கவிஞர்கள் எழுதிக் கொண்டிருப்பது இந்தக் காதல் மடல்கள்!  ஆனால் கவிஞர் வாலி வரைந்திருப்பதோ காதல் கடல்!  மிக மிக எளிமையான பதங்கள் கொண்டு கவிதை விருந்தையல்லவா வழங்கியிருக்கிறார்.  முத்துக்களின் அணிவரிசை!  முழுநிலாவின் கோலமிது!  கற்பனை அணிவகுத்து கவிதைப் பண்பாடுது! இசையும் குரலும் ஏற்றதொரு பாத்திரங்களில் நடிகர்திலகமும் நாட்டியப் பேரொளியும்..

    கேளுங்கள்.. மீண்டும் ஒருமுறை இன்பலஹரியில் இதயம் மூழ்கட்டும்!!

    Share
  • பொன்னியின் செல்வன்

     — எஸ் வி வேணுகோபாலன்.

    பொன்னியின் செல்வன்

    மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் நாவல் போலவே மீண்டும் பார்க்கத் தூண்டும் மேடையேற்றம்

     

    poniyin selvan

     

    “ஆதி அந்தமில்லாத கற்பனை ஓடத்தில் ஏறி, நம்முடன் சிறிது நேரம் பிரயாணம் செய்யுமாறு நேயர்களை அழைக்கிறோம். வினாடிக்கு ஒரு நூற்றாண்டு வீதம் எளிதில் கடந்து, இன்றைக்கு தொள்ளாயிரத்து எண்பத்திரெண்டு ஆண்டுகளுக்கு முந்திய காலத்துக்கு முன் செல்வோமாக”
    – கல்கி (பொன்னியின் செல்வன் தொடரின் தொடக்க வாசகங்கள்- 1950)

    ஒரு வரலாற்றுப் புதினத்தை எத்தனை பேர் ஆர்வத்தோடு தொடர்ந்து படிப்பார்கள் என்ற மிகப் பெரிய எதிர்பார்ப்பில்லாமல்தான் எழுதத் தொடங்கினேன் என்று தொடர் முடிவில் சொன்னாலும், எழுத்தாளர் கல்கி தனது நாவல் மிகப் பெரிய சலனத்தை வாசகர் மத்தியில் ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையோடு எழுதத் தொடங்கிய அற்புத நாவல் அது. அதனை நாடக வடிவில் பார்க்க கிடைத்த வாய்ப்பு உண்மையில் பரவசமூட்டியது. பழத்தை உண்பது ஒன்று. அதன் ரசத்தை அருந்துவது வேறு. கைகளால் விதைப்பதைக் கண்களால் அறுவடை செய்கிறோம் – அது என்ன என்ற விடுகதை, எழுத்தின் மேன்மை பற்றிப் பேசுகிறது. நாவலாக வாசிப்பதை நாடகமாகக் கண்டு களிப்பது உண்மையில் வெவ்வேறான அனுபவம்தான். நாவல் நமக்கும் பிரதிக்குமான நேரடி தொடர்பு உணர்வு. கற்பனைகளின் பிணைப்புத் தன்மை தனித்துவமானது. கூட்டாகக் காண்கிற உணர்வு முற்றிலும் வேறான புறத் தன்மை கொண்டது. அதன் உந்துதல் கூட்டான அனுபவத்தின்முன் பிரத்தியேகத் தன்மையை ஆட்படுத்துவது.

    ஒரு கதைப் புத்தகத்தைத் திறக்கும்போதே அதன் கதை மாந்தர்கள் உயிர் பெற்று எழுந்து அவரவர் பாத்திரத்தின் இயல்பில் இயங்கத் தொடங்குகின்றனர். நாடகத்தில் அது உண்மையிலேயே நிகழ்கிறது. அதுவும் வரலாற்றுப் புதினம் என்கிறபோது அந்த உலகம் எந்தக் காலத்திலும் பார்வையாளர்களைத் தம்மோடு ஈர்த்துக் கரைக்க வல்லதாகிறது. அதன் சாத்தியங்கள் கதை, நாடக ஆக்கம், நடிப்பு, உத்திகள்…இன்னபிற அம்சங்களைச் சார்ந்தது என்றாலும், நாடகம் பார்த்தல் என்பது நமது பண்பாட்டு அசைவுகளில் நெடிய வரலாற்றைக் கொண்டது என்பதால் எப்போதுமே தனி கவன ஈர்ப்பு கொண்டதாகிறது.

    சோழர் காலம் என்பது பள்ளிக்கூடப் படிப்பில் மிகச் சில பக்கங்கள் பாடமாகவும், இரண்டு மூன்று கேள்விகளுக்குள் (அதையும் கட்டாயம் எழுத வேண்டுமென்பதில்லை. வேறு கேள்வியைத் தேர்வு செய்தால் தவிர்க்கவும் முடியும்) அடங்குவதாகவும் உள்ள விஷயம். குறிப்பிட்ட வரலாற்றுக் காலத்தின் முக்கிய கட்டத்தினுள் இறங்கி வரலாற்றுத் தரவுகளை சேகரித்துக் கொண்டு கற்பனையின் விரிப்பில் அந்தக் கதையை நேர்த்தியாகப் பின்னிக் கொடுப்பது மிகுந்த சவாலான வேலை. சுவாரசியம் ஏற ஏற உண்மை சில தப்படிகள் பின்னே போய் நின்றுகொள்ளும். வெறும் தகவல்களின் கைப்பிடித்துச் சொல்லத் தொடங்கும் கதை எந்த ஈர்ப்பும் தரத் தவறி மூலையில் போய்க் கிடந்தது கதறி அழும். பொன்னியின் செல்வன், கல்கியை மிகவும் பெருமைக்குள்ளாக்கிய – அவரது மாஸ்டர் பீஸ் என்று பெயர் பெற்றுவிட்ட – வரலாற்று நாவல். அதன் நுட்பங்களை, அழகியலை, அது பேசும் அரசியலை, ஆட்சி பீடத்திற்கான போராட்டங்களை, வசீகரமான இழையோட்டம் கொள்ளும் காதலை, வஞ்சகத்தை, சூழ்ச்சியை, தியாகத்தை, அதன் இலக்கிய ரசனையை, இசை இன்பத்தை, உரையாடல் செழிப்பை உள்வாங்கி குறுகத் தறித்த குறளாக ஒரு படைப்பை வழங்குவது என்பது அசாதாரண வேலை. ஆனால் அதன் தரிசனம் உண்மையில் உற்சாகம் கொள்ள வைத்தது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.

    ஆணும் பெண்ணுமான ஓர் ஆட்டக்காரக் கதை சொல்லி ஜோடியின் துணையோடு கதையை வேகமாக நகர்த்தும் உத்தி, நூற்றாண்டுகளுக்குமுன் பயணம் செய்து போகிற பார்வையாளர்களை சில பத்தாண்டுகளை மிகவும் வேகமாகக் கடக்கவும் பழக்கி விடுகிறது. ஆடிப் பெருக்கு அன்று பூம்புனல் பெருகி ஓடும் நாளில் தஞ்சை மண்ணில் கால் பதிக்கக் காஞ்சியிலிருந்து வருகை தரும் வந்தியத்தேவன் அறிமுகத்தோடுதான் நாவல் தொடங்கும். அவ்வண்ணமே தொடங்கும் நாடகம், எத்தனை எத்தனை திருப்பங்கள் நிறைந்த கதையை அனாயாசமாக முன்னோக்கிக் கொண்டு செல்கிறது!

    ஆட்டமும், பாட்டமுமாக மக்கள்திரள் கொண்டாடித் துள்ளும் சாலையில் அடுத்த அறிமுகம் வேறு யாராக இருக்க முடியும், ஆழ்வார்க்கடியான் திருமலை நம்பியைத் தவிர! முன் குடுமியும், வைஷ்ணவத்தை நிந்திப்பவர்களை ‘திருச்சாத்து’ சாத்தி அடித்து வெளுப்பதற்கான கைத்தடியுமாக அவர் எழுந்தருளும்போது பார்வையாளர் ஆரவாரம் அமோகமாகிறது. சைவரோடும், சமணரோடும் அவர் நடத்தும் வாதங்களினூடாக வல்லரையன் வந்தியத்தேவன் உள்ளே புகுவது படு ஜோரான நையாண்டி. வைகுண்டத்திற்கே தான் நேரேபோய்ப் பார்க்கையில் சிவனும், திருமாலும் சரிசமமான ஆசனத்தில் அமர்ந்திருப்பதாகவும், கையால் முழம்போட்டுப் பார்த்தாலும் ஒரே உயரமே இருந்ததாகவும், அதற்கும் மேலே நம்பாது இருவரில் யார் உயர்ந்தவர்கள் என்று கேட்டபோது, அரியும் சிவனும் ஒண்ணு அறியாதவன் வாயிலே மண்ணு என்று இருவருமாகச் சொன்னதுமாகத் தெரிவித்து மண்ணை வெட்டி அடிப்பது கல்கியின் நகைச்சுவைப் பொறி !

    சோழ சாம்ராஜ்யத்தில் எல்லா ஆளுமையோடு திகழும் – சொந்தக் கொடியாகப் பனைமரக் கொடி வைத்துக் கொண்டிருக்கும் பழுவேட்டரையர் குலத்தின் பெரிய பழுவேட்டரையர் வந்திறங்குவது அடுத்த முக்கிய காட்சி. மூடு பல்லக்கில் அவர் செல்லும் இடமெல்லாம் செல்லும் அவரது இளம் மனைவி நந்தினி – யார் என்று அறியாத வழிப் பெண்ணாக அவளைப் பார்த்து வயதான காலத்திலும் அவர் மோகித்து ஊரறிய மணந்துகொண்ட பெண்! அவரது குழாம் அப்படியே கடம்பூர் மாளிகை செல்கிறது. அவரது ஆகப் பெரும் இலட்சியம், ஆட்சியில் இருக்கும் வயது மூத்த, உடல் நலம் நலிந்து மரணப் படுக்கையில் கிடக்கும் சுந்தரச் சோழனை தமது ஆளுமையைச் செலுத்திச் சம்மதிக்க வைத்து தமது பேச்சைக் கேட்கும் மதுராந்தகனை சக்ரவர்த்தி ஆக்குவது. அதற்கு சிற்றரசர்கள் பலரது ஆதரவை முன்னதாகத் திரட்டி வைத்துக் கொள்ள ரகசிய ஆலோசனைக்கு அவர் செல்வதிலிருந்து கதை விருவிருப்பு கொள்கிறது.

    ஆனால் நந்தினிக்கு வேறு நிகழ்ச்சி நிரல் இருக்கிறது. அவரது இலட்சியம் சோழ வம்சத்தையே அழிப்பது. அதற்கு ரவிதாசன் என்னும் மந்திரவாதியின் துணை, அவனது அடியாட்கள் பலம் அவளது தேர்வாக இருக்கிறது. அநாதை என்று கருதப்படும் நந்தினியின் பிறப்பில் உள்ள புதிர், கதையின் முக்கிய வேர்களில் ஒன்று. இதனிடையே இலங்கைப் போரை அடுத்து, அங்கே எல்லாம் இழந்த மக்களுக்கு மறுவாழ்வுக்கான கட்டமைப்பில் இருக்கிறார் சுந்தர சோழரின் இளைய மகன் அருள் மொழி வர்மன். இளவரசர் ஆதித்திய கரிகாலன் உயிருக்கு ஆபத்து பல முனைகளில்! அவரது உயிர் நண்பன்தான் வந்தியத் தேவன்.

    அசாத்திய சாகசக்காரன், சமத்காரப் பேச்சுக்குச் சொந்தக்காரன், அழகிய காதலன் என்று உருவாக்கப்பட்டிருக்கும் வந்தியத்தேவன் பாத்திரம் மேடையைக் கட்டி ஆள்கிறது. துள்ளலும் ஓட்டமுமான நடை, துணிச்சலான நறுக் பேச்சு, வேகமான கத்தி வீச்சு, பகைவனுக்கு எதிராகவும் நெஞ்சு நிமிர்த்தி நிற்கும் வீரம், மதில்களுக்கிடையே தாவுவதும், பதுங்கிக் கேட்பதும், சிறையில் தப்புவதுமாக சிறப்பான உடல் மொழியில் நாடகம் நெடுக மிளிர்கிற பாத்திரம்! எனக்கு முகஸ்துதி பிடிக்காது என்னும் நந்தினியிடம், வேண்டுமானால் முதுகு பக்கம் திருப்பிக் கொள்ளுங்கள் என்று சொல்வதும், ஆனால் நான் பெண்களிடத்தும் போர்க்களத்திலும் முதுகு காட்டப் பிடிக்காதவன், ஆகவே தாராளமாக என்னை முகஸ்துதி செய்யலாம் என்று சொல்லும் மறுமொழியும் கைத்தட்டல் பெறுகின்றன. ‘காளிதாசனும், முத்தொள்ளாயிரம் பாடிய கவியும் வருணிக்க மாட்டாத’ காதலைப் பரிமாறிக் கொள்ளும் கண்களோடு வந்தியத்தேவனும், இளவரசி குந்தவையும் சந்திக்கும் கவித்துவ மிக்க காதல் காட்சியும் அற்புதமான நிகழ்த்துதல் ஆகிறது.

    கம்பீரம் குலையாத பாத்திரங்களாக குந்தவை ஒரு புறம், நந்தினி மறுபுறம். சிலிர்க்கவைக்கும் முக்கிய பெண் பாத்திரமாக பூங்குழலி என்னும் சமுத்திர குமாரி. துடுக்குப் பேச்சும், துடுப்பின் பேச்சுமாக கைக்குப் பிடிபடாது வந்தியத் தேவனோடு வம்பு செய்யும் அறிமுகக் காட்சியில் வாலைக் குமரியடி என்ற மாதிரி என்ன ஒயில், என்ன வேகம், என்ன தாவுதல், என்ன அசாதாரண குறும்பு….சாதாரண மனிதர்களே அரசாட்சிக்கு விசுவாசமிக்க பணியாளர்களாக அமைவதும், ஆட்சிக்கு அலைவோர் எப்போதும் சூழ்ச்சிக்கு திட்டமிடுவோராக இருப்பதும் நாடகத்தில் சிறப்பிடம் பெறுகிறது.

    பழுவேட்டரையரே ஒரு கட்டத்தில் அதிர்ந்துபோகும்படி நந்தினியின் சூழ்ச்சிகள் வேறு திசையில் வளர்கையில், நந்தினி தனது தந்தை சில காலம் சேர்ந்து வாழ்ந்த ஊமைப் பெண் மந்தாகினியின் பெண் என்ற புரிதலோடு குந்தவை அவள்பால் பரிவோடு அணுக நினைப்பதும், உண்மை வேறொன்றாக இருக்க, ஆதித்திய கரிகாலனைக் கொல்ல திட்டமிடும் நந்தினி அவனை உள்ளபடி நேசித்தவளாக இருக்க அதன் முரண்பாடுகள் விரியும் இடம் நாடகத்தின் முக்கிய பகுதியாகிறது. அந்தக் காட்சியின் இறுதி, கரிகாலனின் மரணத்தில் முடிவது அந்தக் கொலையைச் செய்தது யார் என்ற புதிரை எழுப்புகிறது.

    தனது நேசத்திற்குரியவன் தனது அண்ணனைக் கொன்ற பழியொடு எதிரே நிற்க குந்தவை படும் பாடு அடுத்த கட்டம். தனது பாவமே தனது மகனைக் கொன்றது என்று புலம்புகிறது சுந்தரச் சோழனின் முதிய உள்ளம். நடந்தவற்றின் விளக்கங்கள் அடுத்தடுத்து உரையாடலின் வழி வெளிச்சத்திற்கு வர, பழுவேட்டரையர் தன்னைத் தானே மாய்த்துக் கொண்டு வந்தியத்தேவன் நிரபராதி என்று சொல்லிப் பிரிகிறார். இளைய மகன் அருள் மொழி வர்மன் (எதிர்காலத்தில் ராஜ ராஜன் என்று வழங்கப்பட இருப்பவன்) பட்டம் ஏற்பார் என்று எல்லோரும் எதிர்பார்க்க, அவனோ சேந்தன் அமுதனுக்கு முடி சூட்டி அழகு பார்க்கும் இடத்தில் நிறைவு பெறுகிறது நாடகம்.

    பெரிய பிராட்டியின் பாத்திரம் நுட்பமானது. மதுராந்தகனின் தாய் என்று அறியப்பட்டிருப்பவரின் தீர்மானமான குரல், சக்கரவர்த்தியாக ஆவதைத் தடுக்க அவனுக்கும், அவருக்குமான வாத பிரதிவாதங்கள் மேடையில் முக்கியத்துவம் பெறுகின்றன. மூடு பல்லக்கின் திரை விலகுவதுபோல விரியும் நந்தினியின் பாத்திரமும் சிறப்புக் கவனத்தோடு நாடகத்தில் உருவாக்கம் கொள்கிறது. இலங்கையில் புத்த பிக்குகள் உதவியோடு ஆட்சியைப் பிடிக்கலாம் என்று தனக்கு சொல்லப்படும் யோசனையை நிராகரிக்கும் அருள் மொழி வர்மன், மதமும், ஆட்சியையும் கலக்கக் கூடாது என்று சொல்லுமிடம் கவனத்தைப் பெறுகிறது.

    மதில் அடுக்குகள், பட்டத்து யானை, படகோட்டம், அரச கட்டில் என சிறப்பான கலை அம்சங்களை அமைத்துக் கொடுத்திருப்பவர் தோட்டா தரணி. காட்சிப் பொருள்களின் நாடக மாந்தர்களைக் கொண்டே பின்புலத்தை சற்றே மாற்றி அமைத்தபடி, அடுத்தடுத்த காட்சிக்குத் திரையைப் பயன்படுத்தாது வேகமாக நகர்கிறது நாடகம். குரவைப் பாட்டும், கும்மாள ஆட்டமும், குறைவில்லாத நகைச்சுவையும், தொய்வற்ற கதைப் போக்கும், பிரமிக்க வைக்கும் வாள்சண்டையும், யானையின் பிரவேசமும், தெறிப்பான வசனங்களுமாக எந்தத் தலைமுறையினரையும் ஈர்க்க வல்லதாக நாடகம் வெளிப்படுகிறது.

    முந்தைய மேடையேற்றத்தின்போது தாம் ஏற்ற அதே பெரிய பழுவேட்டரையர் பாத்திரத்தில் தோன்றும் பேராசிரியர் மு இராமசாமி தமது முக பாவங்களாலும், உடல் மொழியாலும் அற்புத நடிப்பை வழங்கியுள்ளார். அவரோடு நேருக்கு நேர் மோதும் ஆதித்திய கரிகாலன் வேடத்தை ஏற்றிருக்கும் நடிகர் பசுபதி சிறப்பாகச் செய்திருக்கிறார். வந்தியத்தேவன் (தயாள்), குந்தவை (பிரீதி), பூங்குழலி (காயத்ரி), அருள்மொழி வர்மன், அவன் காதலி வானதி,ஆழ்வார்க்கடியான், நந்தினி….என அனைத்துப் பாத்திரங்களைச் செய்தவர்களும் தங்களது அருமையான திறனைச் செலுத்தி நெஞ்சில் நிற்கின்றனர். சோழனாகிவிட்ட எனது அருமைத் தோழன் ரமேஷ், சுந்தரச் சோழன் வேடத்தில் மூப்பின் அவஸ்தைகளையும், ஆட்சி பாரத்தின் வேதனையையும், சூழ்நிலைக் கைதியாகித் துடிக்கும் வலியையும் சிறப்புறக் கொணர்ந்திருப்பவர். பால் ஜேக்கப் இசை, கதையின் பின்மொழியாக ஒலிக்கிறது.

    தமது தொடரை முடித்த பிறகு அதிகம் கேள்விக் கணைகளை எதிர்கொண்டதாக நாவலின் பின்னுரையில் எழுதுகிறார் கல்கி. எல்லாவற்றையும் எப்படி சொல்லிவிட முடியும் என்பதாகவும், வரலாற்று நாவலை ஒரு கட்டத்தில் முடிக்கத் தானே வேண்டும் என்றும் சொல்கிற அவரது குரல், மிகக் குறைந்த நேரத்தில் இத்தனை பெரிய நாவலை நாடகமாக நிகழ்த்துபவர்களும் ஒரு கட்டத்தில் அதை முடிக்கத் தானே வேண்டியிருக்கிறது என்ற குரலாக இப்போது கேட்கிறது. தொடர்ந்து படிக்க வைக்கும் நாவலைப் போலவே, மீண்டும் பார்க்கத் தூண்டுவதாகவே நாடகம் நிறைவடையவும் செய்கிறது. ஈடுபாட்டோடு உழைத்திருக்கும் அனைத்துக் கலைஞர்களுமே வாழ்த்துக்குரியவர்கள்.

     

    தமிழ் வாசக பரப்பில் இன்றும் உயிர்ப்போடு பேசப்படும் புதினங்களில் முக்கியமானதாக விளங்குவது கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன். மூன்றரை ஆண்டுக் காலம் கல்கி இதழில் வாராவாரம் தொடராக வந்து கொண்டிருந்தபோதே ஏராளமான வாசகர்களைக் கட்டிப் போட்டு வைத்திருந்த வரலாற்றுக் காவியம் அது. 1950ல் தொடங்கப்பட்ட இந்த தொடர், 1954ல் முடிந்ததன் அறுபதாம் ஆண்டு நிறைவு கொண்டாட்டமாக பொன்னியின் செல்வன் மீண்டும் நாடக வடிவில் தமிழ் மக்களுக்கு வழங்கப்படுகிறது. 1999ல் மேஜிக் லாண்டர்ன் குழுவினரின் படைப்பாக அரங்கேறிய இந்த நாடகம், மீண்டும் அவர்களது குழுவின் ஆதார வலுவோடு புதிய கலைஞர்களையும் உட்கொண்டு எஸ் எஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பாக சென்னை மியூசிக் அகாதமியில் ஜூன் 8ம் தேதி முதல் 14 தேதி வரை மாலைக் காட்சியாக நிகழ்த்தப் படுகிறது.

    நாவல் நிறைவு பெற்ற அதே 1954ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி எழுத்தாளர் கல்கி இயற்கை எய்தினார். இந்த ஆண்டு, அவரது மறைவின் அறுபதாண்டு நிறைவும் கூட! இந்த நாவல் வெளிவந்தபோது கல்கி இதழின் விற்பனை 75,000 பிரதிகள் கூடியதாம். அதனால், தேச அளவில் இரண்டாவது அதிக விற்பனை ஆகும் இதழாக கல்கி வளர்ந்தது. கல்கி மறைவுக்குப் பின்னரும் தொடர் மறுபிரசுரம் செய்யப்பட்டு வந்திருக்கிறது. அப்படியான ஒவ்வொரு தருணத்திலும் கல்கி இதழ் 20,000 பிரதிகள் அதிக விற்பனை ஆனதாகச் சொல்லப்படுகிறது. அந்த அளவுக்குத் தொடர்ந்து வாசகர்கள் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட நாவல், பொன்னியின் செல்வன்.

    அந்த நாவல்தான் இப்போது மீண்டும் நாடக வடிவில் பார்வையாளரை ஈர்க்க வருகிறது. மூன்றரை ஆண்டுக் காலம் தொடராக வந்த நாவல், மூன்றரை மணி நேரம் காட்சிப் படுத்தப் படுவது ஓர் அசாத்திய முயற்சி. நாடக ஆக்கத்தை குமரவேல் சாதித்திருக்கிறார். இயக்குனர் பிரவீன் சிறப்பான நெறியாள்கை செய்திருக்கிறார். பல முறை நாவலை வாசித்துத் திளைத்த நினைவுகளோடு வருபவர்களையும், நாவல் வாசிக்காத புதிய தலைமுறையினரையும் ஒரு சேர நிறைவான உள்ளத்தோடு திரும்புமாறு ஓர் அனுபவத்தை ஏற்படுத்த முயற்சி செய்திருக்கிறோம் என்கிறார் எஸ் எஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் வரவேற்கும் இளங்கோ குமணன். அது நிறைவேறும் என்றே தோன்றுகிறது.

    நன்றி: தீக்கதிர்

     

     

     

     

     

     

    படம் உதவி: http://www.yarl.com/forum3/index.php?showtopic=91180&page=4

    Share
  • வல்லமைத் தமிழே !

    எப்படி வந்தாய் உள்ளே என்
    இதயக் கருவரைக் குள்ளே
    கற்பனை யென்றெனும் உடல் கலக்காமல்
    கவிதை யெனும்பெண் கருசிதைக்காமல் – தமிழே ()

    பாரத பூமியில் பழம்பெரும் நாடினில்
    பாரதி வாணியை யாழுடன் நாவினில்
    ஏற்றி நவின்றிடும் வாக்கினில் அருளுடன்
    ஏட்டில் பள்ளியில் வல்லமைத் தமிழே()
    ஊற்றிட ஊற்றிட உவந்திடும் கள்ளாய்
    காற்றிட சுவாசப் பைக்குள் துள்ளாய்
    வேற்றிட மென்றெனை வெறுப்பார்க் கில்லாய்
    போற்றி புகழ்தரு வல்லமைத் தமிழே ()

    மாறுதல் த‌ந்திடும் காலமும் வந்திடும்
    ஆறுதல் மொழிகளும் வாழ்த்துகள் சிந்திடும்
    ஊறுதல் இன்றினி ஊர்வலம் என்றிடும் – வாகை
    தேறுதல் பெற்றிட வல்லமைத் தமிழே()

    Share
  • பாண்டுரங்கனின் சேவை

    –விசாலம்.

     

    பாண்டுரங்கனின் சேவை

    கும்பகோணம் அருகில் இருக்கும் கோவிந்தபுரத்தில் மிக அழகாக அமைந்த விட்டலனது கோயிலைப் பார்த்து பரவசமானேன் நான். எனக்கு மஹாராஷ்ட்ராவில் இருக்கும் பண்டரிபுரம் போக வாய்ப்பே வரவில்லை. ஆனால் கும்பகோணம் போகும் வாய்ப்பு கிடைத்தவுடன் அங்கு கட்டப்பட்டிருக்கும் கோவிந்தபுரத்தைப் பார்க்க ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்தது. நம் கஷ்டத்தைப்பார்த்து உடனே ஓடோடி வந்து உதவும் பாண்டுரங்கனை மிகவும் எளிதாக நாமஸ்மரணையினால் நாம் அடைந்துவிடலாம். பண்டரிபுரம் போனால் ஆகாயம் முழுவதும் ‘விட்டல விட்டல’ என்ற நாமமே எதிரொலிக்கும். அதுவும் ஆஷாட ஏகாதசியன்று கேட்கவே வேண்டாம். நாம் அந்த நாமத்திலேயே மூழ்கிவிடுவோம். கோவிந்தபுரத்தில் இருக்கும் பண்டரிநாதனைப்பார்க்கும் போது பண்டரிபுரம் போனதாகவே இருக்கிறது என்று அங்கு வந்த ஒரு பக்தர் என்னிடம் சொன்னார்.

    அந்த விட்டலனை நினைக்கும் போது எனக்கு ஜனாபாயி என்ற பக்தையின் ஞாபகம் வருகிறது. பண்டரிபுரத்தில் வசித்து வந்த அவளுக்கு உறவினர் என்று ஒருவருமில்லை, பெற்றோர்களுமில்லை. அவளுக்கு நாமதேவர் தன் வீட்டில் இடம் கொடுதிருந்தார். அவள் அங்கு வரும் பக்தர்களுக்கும் சாதுக்களுக்கும் சேவை செய்து வந்தாள். சேவை செய்யும் நேரம் போக மற்ற நேரங்களில் விட்டலனைக்குறித்து பல ‘அபங்க்’ பாடி அவனையே மனதுக்குள் நிறுத்திக்கொள்வாள். அவள் உடல், மனம் எல்லா இடத்திலும் பாண்டுரங்கனே வியாபித்திருந்தான்.

    ஒருநாள் சாதுக்களின் துணிகளைச் சந்த்ரபாகா நதிக்கரையில் தோய்க்க எடுத்துபோனாள். உடைகள் அதிகமாக இருந்தது. ஜனாபாயி உடலில் அத்தனை சக்தியுமில்லை. பார்த்தான் பாண்டுரங்கன். தன் பக்தை கஷ்டப்படுவதைப்பார்க்க இயலாமல் தானும் ஒரு பெண்போல் தோய்க்குமிடத்தில் வந்து அவளுக்குத்தோய்த்து உதவினான்.

    சாதுஜன சேவை பாண்டுரங்கனுக்கு மிகப்பிடித்த ஒன்று. ஜனாபாயி தன் வாழ்க்கை முழுவதும் சேவைக்காகவே அர்ப்பித்துக்கொண்டதால் அந்தப்பரந்தாமன் மனமகிழ்ந்து அவளுக்குச்சேவை செய்கிறான் பாருங்கள். என்ன கருணை !

    மற்றொரு சம்பவம்……. பாண்டுரங்கன் பிரசாதத்திற்காக அரிசியை மாவாக்க வேண்டியிருந்தது. அந்தக்காலத்தில் மிக்சி இல்லை. கையினால் அரைக்கும் கல் இயந்திரம் தான் இருந்தது. அதன் கைப்பிடியைப்ப்டித்துக்கொண்டுஅதைச் சுற்ற வேண்டும். ஒவ்வொரு பிடியாக அரிசியையும் உள்ளே போட்டு அரைக்க வேண்டும். பொறுப்பானா பாண்டுரங்கன்! ஓடோடி வந்தான் தானும் அந்த மர கைப்பிடியைப்பிடித்தபடி மாவு ஆட்டினான். ஜனாபாயின் இந்த்சேவையினால் மனம் மகிழ்ந்துப்போனான் அவன். தன் மார்பில் அலங்கரித்த கௌஸ்துபமணி மாலையை அவளுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தான்.

    மறுநாள் காலை கோயில் கதவு திறக்கப்பட்டது . அர்ச்சகர் உள்ளே நுழைந்து…
    ” ஐயோ இது என்ன சோதனை ? பண்டரிநாதனின் கௌஸ்துபமணி மாலை காணவில்லையே! யார் எடுத்து சென்றார்?” என்று பதட்டத்துடன் கத்தினார் .
    அங்கிருந்த பலரைச்சோதனையிட்டனர்.
    “இதோ இங்கிருக்கிறது. வாருங்கள், ஜனாபாயிடம் இந்த மாலை இருக்கிறது.” என்று ஒருவர் செய்தி சொல்ல எல்லோரும் அவள் அருகில் ஓடினர்.

    ஜனாபாயின் கழுத்தை அந்தக்கௌச்துபமாலை அலங்கரித்திருந்தது. கண்ணன் தான் கொடுத்தான் என்று சொன்னால் யார் நம்புவார்கள்?

    ‘ஜனாபாய் தான் திருடிவிட்டாள்’ என்று அவளை மன்னர் முன் அழைத்துபோனார்கள். அவள் குற்றவாளி என்று தீர்ப்பாகி அவளை கழுமரத்தில் ஏற்றும்படி கட்டளைப்பிறந்த்து.
    ஜனாவும் சந்தோஷமாக அதை ஏற்றுக்கொண்டாள். ஆனால் நடந்தது என்ன? கழுமரத்தில் ஏற்றும் சமயத்தில் கழுமரம் தீப்பற்றி எரிந்து சாம்பலாகியது.

    ஜனாபாய் நிரபராதி என நிதரிசனமாகத் தெரிய எல்லோரும் இது அந்த விட்டலனின் லீலை என்று புரிந்துக்கொண்டு எல்லோரும் ஜனாபாயை வணங்கினர்.

    ஜனாபாய் பாடிய ‘அப்ங்க்’ பஜனைகளை பாண்டுரங்கன் எழுதிவைத்துக்கொண்டது பாண்டுரங்கன் மேல் அவளின் தீவிர பக்தியை எடுத்துக்காட்டுகிறது .

    சரி. நாம் இப்போது கோவிந்தபுரம் திரும்பவும் வருவோம்.

    கோவிந்தபுரத்தில் வசந்த மண்டப விதானத்தில் பல ஓவியங்கள் மிக அற்புதமாக வரையப்பட்டு விட்டலின் மகிமைகளையும் விட்டலனின் பக்தர்களைப்பற்றியும் விவரிக்கின்றன. தூண்களே இல்லாமல் வசந்தமண்டபத்தைக் கட்டி இருப்பது மிகவும் ஆச்சரியம் தான். இங்கு சுமார் 2000 பேர் அமர முடியுமாம்.

    கோயிலின் முகப்பு மிக பிரம்மாண்டமாக அமைந்து எல்லோரையும் உள்ளே “வா வா ” என்று அழைத்து விடுவதை நான் உணர்ந்தேன். கோயிலின் கோபுரம் சுமார் 132 அடி உயரம். அதன் மேல் ஒரு பெரிய கலசம் அலங்கரிக்கிறது. அது 18 அடி உயரம் என்று தெரிய வந்தது. உள்ளே அக்கம் பக்கத்தில் பச்சை பசேலென வயல்கள். அதன் மண் வாசனை, மலர்கள் பூத்துக்குலுங்கும் பூந்தோட்டம் எல்லாம் மனதுக்கு மிகவும் ரம்யமாக இருக்கிறது. கோயிலினுள் கண்ணனின் பலவித லீலைகள் மரப்பலகையில் செதுக்கப்பட்டிருக்கின்றன. இந்தக்கோயிலில் போனால் முதலில் தியான மண்டபம் சென்று கொஞ்சம் நேரம் தியானம் செய்தப்பின் மனதை ஒருமுகமாக்கியப்பின் விட்டலன் அருகில் வந்து அவனைத்தொட்டு பூஜிக்கலாம். பாண்டுரங்கனுடன் ரகுமாயியும் சேர்ந்து இருந்து அருள் புரிகின்றனர்.
    இங்கு வந்து தங்கவும் தனி அறைகள் உண்டு. தவிர குளிக்க ஒரு குளமும் இருக்கிறது. கோயில் மராட்டியபாணியில் தான் கட்டப்பட்டிருக்கிறது. இந்தக்கோயில் கட்ட நிதி மக்களின் காணிக்கையினாலேயே சேர்ந்தது. அப்படிச்சேர முக்கியகாரணமாக இருந்தவர் ஸ்ரீ விட்டல்தாஸ் தான். அவரின் உண்மை பெயர் திரு ஜெய கிருஷண தீக்ஷதர். சேங்காலிபுரம் பிரம்ம ஸ்ரீ அனந்தராமதீக்ஷதர் வம்சத்தில் வந்தவர். அவருடைய பேரன் எனலாம் இவரது தந்தை பிரும்மஸ்ரீ ராமதீக்ஷதர். 2004ல் ஸ்ரீவிட்டல்தாஸ் தனது குருவான ஸ்ரீகிருஷ்ணப்ரேமி அவர்களுடன் இந்த இடத்தில் பூமிபூஜை செய்தார். ஸ்ரீவிட்டல்தாஸ் ஸ்ரீவிட்டல் ருக்மணி சமஸ்தானத்தை ஏற்று நடத்தி வருகிறார்.

    இங்கு இன்னொரு விசேஷம் என்னவென்றால் இங்கிருக்கும் கோசாலாவில் 400 பசுக்கள் உள்ளன. எல்லாம் ஆஸ்ட்ரேலியா பசுக்களைப்போல் நல்ல ஆரோக்கியமாக இருக்கின்றன. அங்கே போனால் எங்கே நாம் துவாரகைக்கு வந்து விட்டோமோ என்ற பிரமை ஏற்படுகிறது. கண்ணன் புல்லாங்குழலின் இசைதான் பாக்கி. மாட்டுக்கொட்டில் போல் சாணம் வாடை அங்கு வீசவில்லை. சாதாரணமாக பசு மாடு தன் மேல் அமரும் ஈக்களை தனது வாலால் விரட்டியபடி இருக்கும். ஆனால் இந்த மாட்டுக்கொட்டிலில் ஒரு ஈயைக்கூட காணமுடியாது. அத்தனை சுத்தம். மாட்டு மூத்தரத்தையும் சாணத்தையும் அப்பப்போது அப்புறப்படுத்தி அந்த இடத்தை உடனே குழாய் வழியாக தண்ணீர் பீய்ச்சி அலம்பி விடுகிறார்கள்.

    மாடுகளுக்கு ஆகாரமும் சரியான நேரத்தில் அட்டவணைபோட்டு அதன் பிரகாரம் கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு மாடுக்கும் நல்ல விஸ்தாரமாக இடம் ஒதுக்கி இருக்கின்றனர். பல வரிசைகளில் மாடுகள் கட்டப்பட்டிருக்கின்றன. அவர்களது ஆகாரமான புல்லும் இதற்கென்றே வளர்கப்படுகிறது. தவிர வயதான மாடுகளையும் கடைசிவரை வைத்து ரக்ஷிக்கிறார்கள். அடிக்கடி டாக்டரும் வந்து தேவைப்பட்டால் வைத்தியமும் செய்து தருகின்றனர். இந்த இடமே ஒரு கோயிலாக எனக்குப்பட்டது. இதில் வரும் பாலை. அன்னதானத்திற்கும் மற்றும் வெண்ணெய், நெய் போன்று தயாரிக்கவும் உபயோகிப்பார்கள் என நினைக்கிறேன். கோமாதா சேவை மிகவும் உயர்ந்த சேவை ஆயிற்றே.

    இந்த கோவிந்தபுரத்தில் தான் காஞ்சி காமகோடி 59 வது பீடாதிபதி பகவான் போதேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜீவ சமாதி உள்ளது .

    ”விட்டல விட்டல , பாண்டுரங்க விட்டல ” என்ற பஜனை என் காதில் ஒலிக்க நான் அங்கிருந்து விடைப்பெற்றேன்.

     

     

     

     

     

     

     

     

    படம் உதவிக்கு நன்றி: http://temple.dinamalar.com/ & http://www.veethi.com/ & http://www1.sulekha.com/

    Share
  • என் பார்வையில் கண்ணதாசன்

    –வில்லவன் கோதை.

     

    கவிஞர் கண்ணதாசன்! என் பார்வை வேறு . . .!
    மரணத்தை வென்ற மகன் !

     

    Kannadasanதொள்ளாயிரத்து ஐம்பத்தியேழு என்று கருதுகிறேன். அப்போது எனக்கு பத்து வயதிருக்கும். தஞ்சை மாவட்டத்தின் ஒரு மூலையிலிருந்து தற்காலிகமாக சென்னைநகர பள்ளியொன்றுக்கு இடம் மாறுகிறேன்.

    நகருக்குள் நுழையும்போதே பரந்துவிரிந்து கிடந்த மதராஸ் பட்டணம் (அப்போது அதுதான் பெயர் ) என் இமைகளை உயர்த்துகிறது. நகரின் நெருக்கமான வீதிகளில் நவீன வாழ்க்கை நான் அதுவரை பார்த்திராதது

    ஒருசமயம் மதராஸ் நகரின் கெல்லீஸ் பகுதியிலிருந்த உமா திரையரங்கு என்வழியில் குறுக்கிடுகிறது. அதன் முகப்பில் வைக்கப் பெற்றிருந்த கவிஞர் கண்ணதாசனின் மாலையிட்ட மங்கை திரைப்படத்தின் வானுயர கட்டவுட் எனக்குள் ஒருவித பிரமிப்பை ஏற்படுத்துகிறது. அது இப்போது போலல்லாமல் முழுவதும் ஓவியர்களால் எழுதப்பெற்றிருந்தது. அதுபோன்ற கட்டவுட்களை அப்போதெல்லாம் நான் பார்த்ததில்லை.

    ஏறத்தாழ முப்பத்திமூன்று வருடங்களுக்கு முன்னால் மறைந்து இன்றும் பேசப்படுகிற கவிஞர் கண்ணதாசனை முதன்முதலாக அன்றுதான் கேள்விப்படுகிறேன்.

    நான் நிரந்தரமானவன் எனக்கு மரணமில்லை !
    என்று பாடிய அந்த கவிஞனது கூற்று இன்று உண்மையாகியிருக்கிறது.

    கவிஞர் அப்போதே திரையுலகின் பல்வேறு சரிவுகளைக்கடந்து சொந்தமாக திரைப்படம் எடுக்கும் நிலையை எட்டியிருந்தார் .அடுத்த சில நாட்களில் மயிலாப்பூர் மாங்கொல்லையில் திராவிடஇயக்க திரளான கூட்டமொன்றில் கவிஞர் பேசுகிறார். அப்போது திமுகாவின் முக்கியத் தலைவர்களுள் அவர் ஒருவராயிருந்தார்

    “இன்று சொல்கிறேன். எழுதிவைத்துக்கொள்ளுங்கள். இந்த கண்ணதாசன் மாண்டுபோனால் அவனுடைய உடல் கழகத்தின் கருப்பு சிகப்பு துணிகளால் போர்த்தப்பட்டு இறுதி பயணத்தை மேற்கொள்ளும்.. அது நிச்சயம் ! ’’

    மூன்று மணி நேரத்துக்கு மேலாக நகைச்சுவை ததும்ப பேசுகிறார் கவிஞர் .நான் கேட்ட முதல் அரசியல் சொற்பொழிவும் அதுதான். அதன் பெரும்பகுதி அப்போது எனக்கு அவ்ளவாக விளங்காமற் போனாலும் அவருடைய நகைச்சுவையான பேச்சு என்னைப்பெரிதும் கவர்ந்தது. அவரது குரலும் பேச்சு நடையும் திராவிட இயக்க பேச்சாளர்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டிருந்ததை பின்னால் உணர்ந்தேன்.

    அந்த ஆவேசமான சூளுரை அடுத்த ஐந்தாண்டுகளில் அவசியமற்றுப்போயிற்று. கவிஞரும் அன்று பேசப்பட்ட கண்ணதாசனை மறந்து போனார். தமிழகமக்களுக்கும் அந்த சூளுரை அவ்ளவாக நினைவில்லாமற் போயிற்று.

    அவர் திமுகாவை விட்டு வெளியேறியிருந்தார்!!!

    இருந்தாலும் பின்நாளில் புரட்சி நடிகரின் பேரன்பால் தமிழக அரசின் உயரிய அரசவைக்கவிஞராகி மரணத்தின்போது அவரது பூதஉடல் தேசியக்கொடியால் போர்த்தப்பட்டு அரசு மரியாதை பெற்றது.

    செட்டிநாட்டு மண்ணில் தொள்ளாயிரத்து இருபத்தேழில் பிறந்த முத்தையா எட்டாம்வகுப்பு வரை மட்டுமே படித்தவர். நெற்றியிலே பட்டையோடும் கழுத்திலே கொட்டையோடும் உலா வந்த இளைஞர் முத்தையா படித்தது போதுமென்று பட்டணத்துக்கு புறப்படுகிறார். இளமையிலேயே கலைத்துறையில் ஈடுபாடு கொண்ட முத்தையா விரும்பியது போலவே பத்திரிக்கைத்துறை அவருக்கு அடைக்கலமளிக்கிறது.

    அன்நாளில் பேச்சையும் எழுத்தையுமே பேராயுதமாக கொண்டு தமிழகத்தில் எழுச்சியுற்ற திராவிட இயக்கம் இளைஞர் முத்தையாவை ஈர்க்கிறது.தொள்ளாயிரத்து நாற்பத்தொன்பதில் அண்ணா தலைமையில் திராவிடமுன்னேற்ற கழகம் உருவெடுத்தபோது இளைஞர் முத்தையா தன்னையும் இணைத்துக்கொள்கிறார்.

    மொழிமீது ஈர்ப்புகொண்டு தலைவர்களும் தொண்டர்களும் சீனிவாசன் , சுப்ரமணியன் என்ற தங்கள் பெயர்களையெல்லாம் தனித்தமிழ்படுத்திக்கொண்ட காலம். ஆன்மீகத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட இளைஞர் முத்தையாவும் கண்ணதாசனாகிறார். பகவான் கண்ணனைப்போல முத்தையாவும் அவர் குடும்பத்தில் ஒன்பதாவது பிள்ளையாக பிறந்ததாலோ என்னவோ அவர் கண்ணனுக்கு தாசனாகியிருக்கக்கூடும்.

    ஆரம்ப காலங்களில் மதராஸ் பட்டணத்தில் அவர் பட்ட துயரங்கள் இந்தத் தலைமுறைக்கு கிட்டாதவை. கடுமையான பொருளாதார நெருக்கடியிலும் சொல்லொண்ணா துயரங்களிலும் வாழ்க்கையின் வெவ்வேறு ரசனைகளை விடாது அனுபவித்தவர் கவிஞர். அவருக்கிருந்த அசாத்திய கவித்திறன் தமிழ்த்திரையுலகுக்கு அன்று விளங்காமற் போயிற்று.

    “நீ பாட்டெழுதியது போதும் . கதைவசனத்தை எழுதி பொளப்ப பாரு ! “

    தமிழ்த்திரையுலகம் அவர்க்கு இப்படித்தான் வழிகாட்டிற்று. பாடல் எழுத படிபடியாய் ஏறிய கவிஞருக்கு திரையுலகம் தந்த வாய்ப்பு வசனம் எழுதத்தான். அவர் வசனம் எழுதிய இல்லறஜோதி , மதுரைவீரன் போன்ற பல்வேறுபடங்கள் தொடர்ந்து வெற்றியை ஈட்டுகிறது. இருந்தாலும் கவிஞருக்கு பாடல்கள்தான் லட்சியமாக இருந்தது.

    அப்போதெல்லாம் வெற்றி பெற்றவன் பின்னாலேயே தமிழ்த்திரையுலகம் ஓடிக்கொண்டிருந்தது . “பா” என்ற எழுத்தில் ஒரு படம் வெற்றி பெற்றபோது அடுத்த பலமான அடிகள் வாங்கும்வரை அந்த ‘ பா ’ தான் அடுத்தடுத்த தமிழ்ப்படங்களின் முதலெழுத்து.திறமைக்கு குறைவில்லையென்றாலும் அடுத்தவன் எவனும் அத்தனை எளிதாக கோடம்பாக்கத்தில் காலடி வைக்கமுடியாது.

    இத்தனைக்கும் கவிஞர் தளர்ந்து போய்விடவில்லை . தானே ஒரு படத்தை தயாரித்து அத்தனை பாட்டையும் தானே எழுதி தன் கவித்திறனை இந்த திரையுலகுக்கு எப்படியாவது பரைசாற்ற விரும்பினார் கவிஞர்.

    தொள்ளாயிரத்து ஐம்பத்தியேழில் பாட்டுக்கொருபடம் என்ற பெயரைப்பெற்ற அந்த திரைப்படம் மாலையிட்ட மங்கை என்ற பெயரில் வெளியாயிற்று. மறக்கமுடியாத ஐந்து பாடல்களையும் கவிஞரே எழுதியிருந்தார். அப்போதுதான் கவிஞரின் கவித்திறன் இந்த தமிழ்த்திரையுலகிற்கு புரிந்தது. அன்று அவரை வியப்போடு திரும்பிப்பார்த்த கோடம்பாக்கம் கடைசிவரை அவர் காலடியில் இருந்து எழவில்லை.அடுத்த கவிஞர் அந்த படியேற வெகு காலமாயிற்று. அப்படி வேறொருவர் எழுத நேர்ந்த பாடல்களும் கண்ணதாசன் பாடல்கள் என்றே பேசப்பட்டன.

    அந்த திரைப்படத்தில் ஒலித்த டி . ஆர் . மகாலிங்கத்தின்
    திராவிடப் பொன்னாடே . . .
    என்ற பாடல் திமுகாவினரை இன்றும் உறக்கத்தில் தட்டி எழுப்பத்தக்கது.

    அச்சம் என்பது மடமையடா . . . .
    என்ற கவிஞரின் இன்னொருபாடல் இன்றும் தமிழின மேடைகளில் ஒலிப்பதைக் கேட்டிடமுடியும்.

    அன்நாளைய திமுகாவில் முன்னணியிலிருந்த தலைவர்கள் ஒவ்வொருவரும் ஒரு பத்திரிகைக்கு ஆசிரியராயிருந்தனர். கட்சியின் கருத்துகளை மக்களிடையே கொண்டு செல்ல இரவு நேரங்களில் அரசியல் மேடைகளையும் பகற்பொழுதுகளில் பத்திரிக்கைகளையுமே திமுகா நம்பியிருந்தது. கவிஞரும் தம் அரசியல் கருத்துகளை இளைஞர்களிடையே கொண்டு சேர்க்க தமது தென்றல் , சண்டமாருதம் இதழ்களை பயன்படுத்தினார். பொறிபறக்கும் அரசியல் கட்டுரைகளும் நெஞ்சில் நிற்கும் கவிதைகளும் தென்றலில் தொடர்ந்து இடம் பெற்றன.

    புலம் பெயர்ந்த தமிழர்கள்பற்றி அவர் எழுதிய
    பெற்றதாய் நாட்டைவிட்டு பிற நாட்டுக்கேன் போனாய் தமிழா
    என்ற நெடுங்கவிதை இன்றும் மறக்கத்தகுந்ததல்ல.

    தன்னுடைய இலக்கியதாகத்துக்கு கலைஞரின் முத்தாரத்தைப்போல முல்லை என்ற திங்களிதழையும் கவிஞர் வெளியிட்டார். அந்த காலகட்டத்தில்தான் கவிஞரின் …
    சிவகங்கைச்சீமை
    கவலையில்லாத மனிதன்
    திரைப்படங்கள் வெளியாகி கவிஞரின் வரலாற்றில் முத்திரை பதித்தன.

    மேலும் மேலும் உயரே பறக்கநினைக்கும் கவிஞருக்கு திமுகா அத்தனை சாத்தியப்படவில்லை. அவர் எதிர்பார்த்த முக்கியத்துவம் திமுகாவில் கிடைக்காமற்போயிற்று. அன்று திமுகாவில் சொல்லின் செல்வர் என்று பேசப்பட்ட ஈ.வெ கி சம்பத் ஏற்படுத்திய பிளவு கவிஞர் கழகத்தைவிட்டு வெளியேற உதவுகிறது.

    “பகுத்தறிவு பேசும் இயக்கத்தில் ஒரு யோக்கியனைக்கூட இதுவரை நான் பார்தத்தில்லை”
    கழகத்தில் இருந்து வெளியேறிய கவிஞரின் சலிப்பான வார்த்தைகள் இவை.

    காலப்போக்கில் பத்தாண்டுகளுக்குமேலாக கடுமையாக விமர்சித்து வந்த காங்கிரஸ் பேரியக்கத்திலேயே ஈவெகி சம்பத்தோடு சேர்ந்து கரைகிறார் கவிஞர். சாகித்யாகாதமி விருது இப்போது அவரது சேரமான் காதலி என்ற நூலுக்காக தேடிவருகிறது.தேசிய சிந்தனைகளை விதைத்த இரத்த திலகம் ,கருப்புப்பணம் திரைப்படங்களை தருகிறார் கவிஞர்.

    புரட்சி நடிகர் எம்ஜியார் ஆட்சியில் அரசவைக்கவிஞராகிறார். எண்பத்திஒன்றில் சிகாகோ நகரில் நிகழ்ந்த தமிழர் மாநாட்டில் கவிஞரின் உயிர் பிரிகிறது.

    பத்தொன்பதாம் நூற்றாண்டில் மரபுக்கவிதைகளை சாமான்னிய மக்களுக்கும் கொண்டு சேர்த்ததில் மகாகவி பாரதிக்கு முக்கிய இடமுண்டு. அவரது படைப்புகளின் பெரும்பகுதி தேசவிடுதலையை முன்னிறுத்தியே பாடப்பட்டவை. அவரைத்தொடர்ந்து எழுதிய புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் படைப்புகளில் சமூகசிந்தனையும் மொழியின் சிறப்புமே மையம் கொண்டிருந்தன. பாரதிதாசனுக்கிருந்த கவித்திறன் அவரைத் தொடர்ந்து தமிழ்க்கவியுலகில் ஒரு கவிப்பரம்பரையே உருவாகக் காரணமாயிற்று..அந்த பரம்பரையில் காலடிவைத்து பல்வேறு பரம்பரைகளுக்கு பயணித்தவர் கவிஞர் கண்ணதாசன். எந்த குறிக்கோளிலும் நிலையின்றி மனம்போன போக்கில் சிறகடித்துப் பறந்த வானம்பாடி ..

    “போற்றுவோர் போற்றட்டும் புழுதிவாறி தூற்றுவோர் தூற்றட்டும் . .” என்று தன் விரிந்த பயணத்துக்கு பின்னாளில் விளக்கம் சொன்னவர் கவிஞர்

    ஒரு மனிதன் எப்படி வாழவேண்டுமென்பதற்கு தன் தந்தையும் எப்படியெல்லாம் வாழக்கூடதென்பதற்கு தானும் ஒரு சிறந்த உதாரணமென்கிறார் கவிஞர்.

    ஏறத்தாழ பத்துவருடங்களுக்கு மேலாகபகுத்தறிவு வாதியாக வலம் வந்த கவிஞர் அவர் வளர்த்த இயக்கம் ஆட்சிக்கு வந்தபோது அவர் அங்கே இல்லாமற் போனார்.. அதன்பிறகு கவிஞரின் பிற்பகுதி வாழ்க்கை அத்தனை சுவாரசியமற்று போயிற்று. மனக்கிளர்ச்சிகளுக்கேற்ப தவறுகளும் தடுமாற்றங்களும் இயல்பாக நிறைந்த கவிஞரை இன்றளவும் தூக்கி நிறுத்துவது அவரது திரையிசைபாடல்கள்தாம்..

    ஐம்பத்தி நான்கு ஆண்டுகளே வாழ்ந்த கண்ணதாசன் எழுதிக்குவித்த கதை கவிதை கட்டுரைகள் ஏராளம். பத்தாயிரத்துக்கு அதிகமான கவிதைகளையும் இசைப் பாடல்களையும் எழுதியவர் .முன்னூறுக்கு அதிகமான நூல்கள் விற்பனையில் வலம் வருகின்றன. கண்ணதாசன் தொடாத அரசியல் வாழ்வியல் துறைகள் அரிது .அவைகளையெல்லாம் இன்றைய வாசகர் தொட்டுணராத பொக்கிஷங்கள்.கவிஞர் பேசிய ஆத்தீகமும் நாத்திகமும் ஒதுக்கமுடியாதவை. பத்தாண்டு பகுத்தறிவு வாசத்துக்குப்பிறகு அவர் படைத்த மதம் சார்ந்த நூல்கள் இன்றும் விற்பனையில் முன்நிற்கின்றன.

    வாசிப்பு திறன் மங்கிப்போன இன்நாளில் கவிஞரை நிரந்தரமாக வாழவைப்பது இசைக்கேற்ப அவர் எழுதிய திரைப்படபாடல்களே.

    மிகமிக எளிமையாக சொல்லப்பட்ட ஒரு கருத்து மக்களிடையே முக்கித்துவம் பெற்று இன்றும் பேசப்படுவது அவரது பாடல்கள் மூலமே. இந்தப்பாடல்கள் அனைத்தும் இந்த தலைமுறையிலும் உலாவர அதற்கு தரப்பட்ட இசை வடிவமும் ஒரு தலையாய காரணம்.

    பல்வேறு வாழ்வியலின் தத்துவங்களை உள்ளடக்கிய இந்த பாடல்கள் அவரது மரபுக்கவிதைகளைப்போல திட்டமிட்டு எழுதப்பட்டவை அல்ல. இசையொலிக்காக அவ்வப்போது கவிஞர் மனதில் தோன்றி கொடுக்கின்ற காசுக்கு பிறந்த பாடல்கள். கவிஞரின் திரைப்பாடல்களில் அவர் சொன்ன உவமைகள் பல பாடல்களில் ஒட்டாமற் போனதுண்டு. அவையெல்லாம் இசைக்கேற்ப எழுதப்பட்டதே தலையாய காரணம்.

    அவர் பாடல்களுக்கான பல்லவிகள் மனதிற் தோன்றுதற்கு அவரது புறச்சூழல்கள் பெரிதும் உதவியிருக்கின்றன. ஈவெகி சம்பத் கட்சியைவிட்டு வெளியேறியபோது எங்கிருந்தாலும் வாழ்க என்ற அண்ணாவின் வரிகள் நெஞ்சில் ஒரு ஆலயம் திரைப்படத்தில் எங்கிருந்தாலும் வாழ்க என்ற பல்லவியை தருகிறது.

    அதைப்போலவே மனிதன் மாறிவிட்டான் என்ற பாடலும் ஏனோ மனிதன் மாறவில்லை என்ற பாடலும் கவிஞரின் அரசியலில் அவருக்கேற்பட்ட தடுமாற்றங்கள் தந்தவை.

    பழந்தமிழ் இலக்கியங்களின் வரிகளையும் புராண இதிகாசங்களின் புகழ் மிக்க சொற்களையும் தன் பாடல்களில் சேர்த்துக்கொண்டவர் கவிஞர். இதை பெரும் குறையாக பேசியவர்கள் உண்டு

    போனால் போகட்டும் போடா. . . .என்று தொடர்ந்து போனவர் கவிஞர்..

    கவிஞரைப்போல் ஒருவரை போற்றி கொண்டாடியவர் இல்லை. அவரையே இழித்துப்பேசியவர் அவரைத்தவிற வேறொருவர் இருந்திருக்கமுடியாது. கவிஞரின் கலம்பகத்தில் காமராஜரும் கலைஞரும் முக்கியமானவர்கள். அந்த வரிசையில் பண்டித நேருவிற்கும் இடமுண்டு.
    அவர்தான் கவிஞர் கண்ணதாசன்.

    அவர் வாழ்ந்த காலத்தில் பிறந்து வளர்ந்தவன் நான்.அவரது ஆயிரம் கருத்துக்களுக்கு மாறுபட்டாலும் அவரை மறக்கமுடியாத ரசிகன். அவரது பாடல்களில் சிறந்த பத்துபாடல்களை தேர்தெடுக்க முயன்றால் எத்தனையோ பாடல்களுக்கு பதிலளிக்க வேண்டியிருக்கும்.

    கவிஞரது வாழ்க்கை ஒருசுவாரசியமான எவருக்கும் கிட்டாத அநுபவம். ஆனால் அது இன்னொருவர் வாழத்தக்கதல்ல.

    கவிஞரது எழுத்து எவருக்கும் கிடைக்காத வரம். அது காலமெல்லாம் மெய்சிலிர்க்கவைக்கும் ஒரு அதிசயம்.

     
    [பாண்டியன் ஜி ( வில்லவன் கோதை ) ]

    Share
  • என் பார்வையில் கண்ணதாசன்

    — ஸ்வேதா மீரா கோபால்.

     

    என் பார்வையில் கண்ணதாசன் …

     

    Kannadasanஅறுபடைவீடு கொண்டோன் அருளிய அருந்தமிழில்தான் அவ்வப்பொழுது அரும்பிய அவதாரப்புருஷர்கள் எத்தனை எத்தனை பேர்! ஆத்திச்சூடி ஆசி வழங்கிய ஒளவைப் பிராட்டியும், ஈரடியால் உலகளந்த வள்ளுவனையும் தொடர்ந்து, கண்ணனை குழந்தையாய், சேவகனாய், காதலனாய் மற்றும் அனைத்துமாய்க் கண்டு கவி பாடிய பாட்டுக்கொருப் புலவன் பாரதிக்குப் பின் அந்த கண்ணனுக்கு தாசனாகவேத் தன்னை அர்ப்பணித்துக் கவி புனைந்த கவியரசு நம் தமிழுலகம் கண்டெடுத்த நல் ‘முத்து ஐயா’ நல்முத்து!

     
     

    யார் இந்த கண்ணதாசன்?

    பொன்மனச்செம்மலின் ஆட்சிக்காலத்தில் அரசுக்கவியாய் கண்னதாசன் முடிசூட்டி கௌவுரவிக்கப்பட்டார் என்றால் அவரிடம் ஏதோ ஒரு தனித்துவம் இருக்க வேண்டும் அல்லவா?

    • அவர் புகைப்படங்களை சற்றே உற்றுப் பாருங்கள் – குங்குமப்பொட்டு இட்ட முகத்தில் கைவிரல்கள் பதித்த கன்னத்தோடு,எப்பொழுதும் ஆழ்ந்து யோசித்துக்கொண்டே இருக்கும் கண்களும் கொண்ட ஒருசீரிய சிந்தனையாளர் புலப்படுவார் நம் கண்களுக்கு.
    • ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி பெற்றதால் தானே இவரால் சுமார் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள், இருநூறுக்கும் மேற்பட்ட நூற்கள், புதினங்கள் என பல படைப்புகள் இயற்ற முடிந்தது?
    • சாகித்ய விருது (சேரமான் காதலி), சிறந்த பாடல்வரிகளுக்கான தேசிய விருது (குழந்தைக்காக ) உட்பட பல்வேறு விருதுகள் பெற்ற மிகத்திறமையான தமிழ்க்கலைஞர்.
    • மாபெரும் தத்துவ முத்துக்களை பாமரருக்கும் புரியும் வண்ணம் எளிய நடையில் வாழ்வியல் நெறிகளை எடுத்துரைத்த யதார்த்தவாதி.
    • சமுதாய சீர்கேடுகளைச் சாடும் சீர்திருத்தவாதி.
    • திறமைமிகு பல கலைஞர்களை கண்டெடுத்து, தட்டிக்கொடுத்து முன்னுக்கு கொண்டுவந்த நல்மனம் படைத்த படைப்பாளர்.
    • காலத்தால் அழிக்க முடியாத பல திரையிசைப் பாடல் வரிகள் வழங்கிய சிந்தனைச் சுரங்கம்.
    • கம்பனைக் கற்றபின் ஆத்திகராய் மாறிய நாத்திகர். (கவியரசின் பல பாடல்களில் கம்பனின் தாக்கத்தைக் காணலாம்) – “அர்த்தமுள்ள இந்து மதம் “, இயேசு காவியம் ” போன்ற மாபெரும் காவியங்கள் படைத்த ஆன்மீகவாதி.
    – இன்னும் சொல்லப்போனால் இவர் போன்ற ஒரு கவி இனி உதிக்கத்தான் வேண்டும். ஆதலால் தான் மக்களின் கவியரசே அன்று நீவிர் ஆட்சியாளர்களின் அரசு கவி ஆனீரோ?

     
     

    கடவுளின் செல்லப்பிள்ளையோ?

    இறைவன் என்பவர் யார், அவரை வழிபடுவது எப்படி, நாடுவதும் எப்படி என்ற உயர்ந்த தத்துவத்தை மிக எளிமையாக, ஏன் சமயத்தில் நகைச்சுவையும் சேர்த்து கூறுவதை பாருங்கள் –

    “பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு இராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன் – அவனை புரிந்து கொண்டால் அவன்தான் இறைவன் …”
    “நீயே உனக்கு என்றும் நிகரானவன் ….
    துதி பாடும் கூட்டம் உன்னை நெருங்காதய்யா
    வெறும் தூபத்தில் உன் இதயம் மயங்காதய்யா
    விதி கூட உன்வடிவை நெருங்காதய்யா ……….”
    • (மனிதனே) – “காக்கைக் குருவிப்போல் கவலையற்று நீயிருந்தால் , யாக்கை கொடுத்தவனை யார் நினைப்பார் இவ்வுலகிலே “
    என்று கடவுள் நமக்கு துன்பம் கொடுப்பதே அவரை நினைக்கத்தான் என்றும் கடவுள் பக்கம் பேசும் இவரே, வேறு சமயத்தில், துன்பம் நேர்கையில் கடவுளை ஒரு மகன் போல் உரிமையுடன் கேள்வி கேட்பதை பாருங்கள் ….

    “….கடவுளே உன்னையும் யாம் தேம்பி அழ வையோமோ …”

    என்ற வரி நம் முன்னாள் பிரதமர் நேருவின் இரங்கல் மடலில் வரைகிறார்; ஆம், நம்மை அழச்செய்யும் கடவுளை நம்மால் அழ வைக்க முடியுமோ? என் வாழ்வில் துன்பங்கள் வந்து சேரும் பொழுது மனதில் தோன்றும் முதல் வரி இதுவாகத்தான் இருக்கும்….

    மற்றும் ஒரு பாடலில் ,

    “…..மனம் பார்க்க மறுப்போர் முன் படைத்தாய் கண்ணா
    நிறம் பார்த்து வெறுப்போர் முன் கொடுத்தாய் கண்ணா
    இனம் பார்த்து என்னை சேர்க்க மறந்தாய் கண்ணா
    நல்ல இடம் பார்த்து சிலையாக அமர்ந்தாய் கண்ணா… “
    (கண்ணா கருமை நிற கண்ணா….. )

    என்று நம்மை துன்பத்தில் ஆழ்த்திவிடும் கடவுள் நல்ல இடம் பார்த்து சுகமாய் இருப்பதும், நம் துன்பத்தை இறைவன் ஒரு முறையாவது அனுபவித்தால் தான் அதன் வலி புரியும் என்று துயரில் உழலும் மனங்களுக்கு கம்பீரமான குரல் கொடுக்கும் அழகே தனி தான்!

     
     

    கற்பனையில் முளைத்த காதலோ ?

    இவ்வுலகில் காதலர்கள் அனைவரும் அவசியம் கற்க வேண்டியது கவியரசின் பாடல்களே. அவை அனைத்துமே தமிழ் அறியாதவர்கள் கூட மொழிப்பெயர்த்து அறிய வேண்டிய பொக்கிஷம் அன்றோ. கவியரசரிடம் ஒருமுறை ,” ஏன் கவிஞரே,

    “ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் அந்த உறவுக்கு பெயர் என்ன…”
    என்ற பாடலில் ஒருவன் ஒருத்தியை நினைத்துவிட்டால் என்றாலும் பாடல் மெட்டுக்கு பொருந்துமே” என்றதற்கு, கவிஞர் சளைக்காமல் சட்டென்று – ‘ஒருத்திதான் ஒருவனையே நினைப்பாள் ….ஒருவன் என்ன ஒருத்தியை மட்டுமா நினைப்பான் ?’ என்று வினவினாராம்.

    ஆஹா, கண்ணதாசனே காதல் வலையில் விழுந்து ஏமாறும் பெண்களின் நிலையை இதைவிட தெளிவாக எவர் உரைப்பர் ?…..

    காதலனும் காதலியும் எவ்வாறு பரஸ்பரம் புரிந்துக்கொண்டு,ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து ,ஓர் உயிர்,ஓர் மனமாய் ,கருத்து ஒருமித்து வாழ வேண்டும் என்பதை

    “நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்; நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் .
    நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும்; நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும் ….”
    என்ற பாடலில் கூறுகிறார்.

    “பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன்
    உன்னைத் தேன் என நான் நினைத்தேன் ….”
    என்ற வீர அபிமன்யு பட பாடலில் அடுத்த நாள் போரில் அபிமன்யு மாண்டுபோகவிருப்பதை, இறுதியில் …
    “இனித் தேன் இல்லாதப்படி கதை முடித்தேன் …”
    என்று சூட்சமமாக சொல்லும் அழகைக் காணுங்கள். இப்பாடலுடன் ,

    “அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே இத்திக்காய் காயாதே ………..”
    என்ற பாடலையும் சேர்த்து நோக்கும் பொழுது கவிஞர் புகுந்து விளையாடியிருக்கும் வார்த்தை விளையாட்டு கண்டு நம் தமிழ் போல் வேறு மொழியில் எவரேனும் இப்படி எழுத முடியுமா என்ற கேள்வி எழுகிறது .

     
     

    கற்பனைக்கு அப்பாற்பட்டவரோ?

    கவியரசரால் எழுதப்படாத சொந்தங்கள் இல்லை, அவர் சாடாத சமுதாய சீர்கேடுகள் இல்லை, அவர் தொடாத வாழ்வியல் நெறிகள் இல்லை, தன் வார்த்தைகளின் கதிர்வீச்சால் மிக கடினமான தத்துவங்களையும் எளிமையாகப் புரியச் செய்யும் தத்துவச் சுடர் அன்றோ இவர்?

    “உலகம் ஆயிரம் சொல்லட்டுமே
    உனக்கு நீதான் நீதிபதி
    கதைக்கட்ட ஒருவன் பிறந்துவிட்டால்
    கண்ணகி வாழ்விலும் களங்கமுண்டு
    காப்பாற்ற சிலபேர் இருந்துவிட்டால்
    கள்வர்கள் வாழ்விலும் ஞாயமுண்டு “

    என்று கூறும் கண்ணதாசன் என்னவோ வெறும் கற்பனையும், நல்ல தமிழும், நிறைந்த தமிழ் இலக்கிய அறிவும் மட்டும் கொண்டு கவிகள் புனைந்ததாக ஒரு சாரார் சொல்வதுண்டு; இது அவ்வாறு உரைப்பவர்களது அறியாமையையேக் குறிப்பதன்றோ? திரைப்படப் பாடல்களுக்கு மேல் இவர் படைத்த நூல்களும் கவிதைகளும் என அணைத்து படைப்புகளுமே அறிவுப்பெட்டகம் என்பது தானே நிதர்சனமான உண்மை? ஒரு முறை, மனிதனுக்கு நம்பிக்கை அவசியம் ஆனால் அகந்தை இருக்கக் கூடாது; தன்னம்பிக்கை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை இந்த அரசுக்கவி கூறும் அழகைப் பாருங்களேன் – டென்மார்க், போலாந்து போன்ற சிறிய நாடுகளைக் கைப்பற்றிய ஹிட்லர் பேரரசு ரஷ்யாவையும் துச்சமாய் எண்ணி கைப்பற்ற துணிந்து, முயன்று தோற்றது.. – என்று நம்மால் முடியும் என்ற நம்பிக்கைவேண்டும் ஆனால் அதே சமயம் நம்மால் மட்டும்தான் முடியும் என்ற அகந்தையும், ஆழம் தெரியாது கால் நனைக்கும் அளவுக்கு மீறிய நம்பிக்கையும் இருத்தல் கூடாது என்பதை விளக்குகிறார். மற்றொருமுறை, இந்தியாவுடன் போர் தொடுக்க வந்த பாகிஸ்தானையும், சீனாவையும் சீறிப் பாய்ந்து விரட்டும் பாங்கைக் காணுங்களேன்;

    “தாகூர் வடித்து வைத்த தாய் வணக்கப் பா பாடி
    லாஹூரை நோக்கி நமது படை முன்னேறும் ……”
    சிந்து,சியால்கோடு என்று அணைத்து இடங்களிலிருந்தும் திரண்ட நம் பெருஞ்சேனை,

    “…வந்து விளையாடும் வஞ்சகரை நாள்முழுதும்
    பந்து விளையாடுவது போல் பாய்ந்து விளையாடுதம்மா…”
    என்றும்,

    “திங்களும் வானும் திரிகிற வரையில்
    எங்களுக்கே உரிமை இந்நாட்டிலே
    யாரது வீட்டில் யாரது பாட்டு
    வேரதிகாரம் பாரத நாட்டில்
    வேர் பிடிக்க விடமாட்டோம் ….”

    என்று மிகவும் ஆணித்தரமாக நம் நாட்டின் உரிமை நமக்கு மட்டுமே என்றும் அதைப் பறிக்க வருபவர் மண்ணோடு நடப்படுவர் என்றும் ஊர்ஜிதப்படுத்துகிறார். இடைப்பட்ட அமைதிக்காலத்தில் பகைவனைக்கூட வாழ்த்தும் இந்த நாட்டுப்பற்று நிறைந்தஉயர்குடிமகன்,

    “எங்கள் பகைவர் எம்மை அணுகாமல்
    தங்கள் பூமியில் தழைத்துயிர் வாழ்க …”
    என்றும் தோழமையோடு வாழ்த்துகிறார்.

    இன்றுபோல் இணையம் போன்ற வசதி இல்லாக் காலத்திலேயே வரலாறு, வாழ்வியல் ,அரசியல், அறிவியல், ஆன்மீகம் என அணைத்துத் துறைகளிலும் தனது பிரத்தியேக முத்திரை பதித்த கண்ணதாசனே, நீ மட்டும் இன்று எங்களுடன் இருந்திருந்தால் எத்தனை இணையதளங்களை இணைத்து இன்னும் எத்தனை சிந்தனைக்கதவுகள் திறந்து எத்தனை அறிவிற்கான விருந்துகள் படைதிருப்பாயோ?….ம்ம் ….

     
     

    என்னதவம் செய்தேனோ ?

    தமிழ் என் தாய்மொழியாய் தமிழ்நாட்டிலே பிறந்ததற்கு நான் என்ன தவம் செய்தேனோ தெரியவில்லை. என் தாயும் எனது சிறுவயது முதலே கண்ணதாசன் போன்ற சிறந்த தமிழ்க் கலைஞர்களின் கவிதை வரிகளை பாடிக்கொண்டே வீட்டில் அனைத்துக் காரியமும் செய்து விடுவார். இதைக்கேட்டு வளர்ந்த எனக்கும் அவ்வரிகளும் அதன் அர்த்தமும் ஆழ்நெஞ்சில் பசுமரத்தாணிப்போல் என்றும் பசுமையாக பதிந்து விட்டது. இப்படித்தான் நான் போட்டிகளில் தோற்று வருந்தினால்
    இம்முறை “போனால் போகட்டும் போடா….”அடுத்தமுறை வெற்றி பெறலாம் என்றும்

    • “உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்
    உலகத்தில் போராடலாம்;
    உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
    தலை வணங்காமல் நீ வாழலாம் …”
    என்ற கவிஞரது புத்துயிர் ஊட்டும் பாடலைப் பாடி என்னைத் தேற்றுவார்.

    சில சமயங்களில்,மிக்ஸியில் அரைக்க நேரும் பொழுது மின்சாரம் துண்டிக்கப்பட்டால்,

    “யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க …”

    என்று வேடிக்கையாகக் கூறிக்கொண்டே ஆட்டுக்கல்லில் தயங்காது அரைத்து நிமிடத்தில் காரியத்தை முடித்து விடுவார்.
    இவ்வாறு சூழலுக்கேற்ப ஏதேனும் சில வரிகளை பாடிக்கொண்டே வேலை செய்வதும் இன்றும் என் காதில் ஒலிக்கிறது.
    என் தாய்க்குப் பிடித்த மற்றொரு பாடலின் வரிகள் –

    “..பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது –
    கருடா சௌக்கியமா …”
    (அதற்கு கருடன் சொன்னது – )
    “யாரும் இருக்கும் இடத்தில் இருந்துவிட்டால்
    எல்லாம் சௌக்கியமே ..”

    இன்றும் வன்முறையை எதிர்க்க மறுக்கும் நாடுகள் சிலவற்றில் தீவிரவாதிகள் பலரும் மிக சௌக்கியமாக இருப்பதுடன் இவ்வரிகளை நாம் ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது.

    இது போன்ற இன்னும் எண்ணற்ற தத்ரூபமான வரிகளில் சிறு வயதிலிருந்தே ஊறியதால்,அவை என் உயிருடன் ஒன்றெனக் கலந்து என் வாழ்வில் ஒரு ஆக்கப்பூர்வமான தாக்கத்தையும் ஏற்படுத்திவிட்டது.

     
     

    வாழையடி வாழையாய் …

    என் குழந்தையை தூங்கவைக்க நான் நாடுவதும் கவியரசிரின் ஈடு இனையற்ற தாலாட்டுப் பாடலே –

    • “ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
    மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
    அவன் வாய் நிறைய மண்ணை உண்டு
    மண்டலத்தைக் காட்டியப் பின்
    ஓய்வெடுத்து தூங்குகின்றான் தாலேலோ …………..”

    என்ற கவிஞரின் குளிர்ந்த வரிகளில், M.S.விஸ்வநாதன் அவர்களின் அமிர்த இசையில் அமைந்த தென்றலாய் தாலாட்டும் கிருஷ்ணகானப் பாடலே நான் பாடும் தாலாட்டுப் பாடலும் ஆகும். என் தாய் எனக்கு ஊட்டி வளர்த்த நற்றமிழ் வரிகளை எனது குழந்தைகளுக்கும் சமையம் வரும்பொழுது எடுத்துரைத்து அவர்கள் வாழ்வு தன்னம்பிக்கை நிறைந்த வாழ்வாய் அமைய முயற்சிப்பேன். இப்படியாக தலைமுறைகள் தாண்டியும் கவிஞரின் புகழ் நிலைத்து நிற்கச் செய்வது நம் ஒவ்வொருவரின் கடமையன்றோ?

    ஆம் ! ஏன் கவிஞரே,அன்றே நீவிர் முழங்கி விட்டீரே,
    ” நான் நிரந்தரமானவன்,அழிவதில்லை
    எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை “
    என்று; அக்கூற்று நினைவாக உமது பூதஉடல் அழிவினும் உமது வைர வரிகள் தமிழ் உள்ளமட்டும்,ஏன் இந்த வானும் மண்ணும் உள்ளமட்டும் உயிருடன் வாழ்ந்து கொண்டே இருக்க நிச்சயம் எங்களால் இயன்றதை நாங்கள் செய்வோம்….

     

    கவிஞர் வாழ்க;அவர் கவிதைகள் வாழ்க
    கண்ணதாசன் வாழ்க;கண்ணிமைக்காது
    கற்கத் தூண்டும் அவர் படைப்புகள் வாழ்க
    கண்ணே, கலைமானே நின்புகழ்
    காலத்தும் நிலைத்து நிற்கட்டும் !!!!!!

     

    Share
  • இந்த வார ராசி பலன்கள் : (9.6.15 – 15.6.14)

    ஜோதிடர் சகாதேவன்

     vaniyal-300x225

    (அஸ்வினி, பரனி கார்த்திகை முதல் பாதம் முடிய)

    மேஷம் :

    நிதானமாக செயல்பட்டால் நிம்மதியாக வாழலாம்.சின்ன சின்ன சிக்கல்களில் துவலாமல் தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள் கவனமாக, பதராமல் செயற்பட்டால் காரியங்களை சிதராமல் பகை ஏற்படாமல் செய்யலாம்.

    பெண்கள் : ஆதரவு உண்டு

    பணியாளர்கள் : சிக்கல் நீங்கி பாராட்டைப் பெறுவீர்

    விவசாயி : இலாபம் உண்டு

    தொழில் முனைவோர் : புதிய வருமானம் கிட்டும்

    கலைத் துறையினர் : புதிய வாய்ப்புகள்

    அரசியல் துறையினர் : எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது.

    ரிஷபம் :

    (கார்த்திகை 2 பாதம், ரோகிணி, மிருகசிரிஷம் 2 பாதம் முடிய)

    ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என குதுகலமான வாரம். உறவினர்களோடு சுப நிகழ்ச்சிகளைக் கொண்டாடுவீர்கள் புதிய சந்திப்புகளில் ஆதாயம் உண்டு.

    பெண்கள் ; நிம்மதி

    பணியாளர்கள் : பதவி, பணம், பாராட்டு,

    விவசாயி : கால்நடை பலன் தரும் மகசூல் கூடும்

    தொழில் முனைவோர் : முன்னேற்றம் உண்டு

    கலைத் துறையினர் : உங்களின் திறமைக்கேற்ற வாய்ப்பு கூடி வரும்.

    அரசியல் துறையினர்: சாதகமான நிகழ்வுகள் உண்டு.

     

    மிதுனம் :

    (மிருகசிரிஷம் 3 பாதம்  முதல் புணர்பூசம் 3 பாதம் முடிய) 

    தள்ளிப் போட்டுக் கொண்டே வந்த உங்களின் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளும் நேரம். பாசத்தோடும் நேசத்தோடும் உறவுகளோடு மகிழ்வீர். செலவுக்கேற்ப வருமானமும் உண்டு. ஆன்மீக நாட்டம் இருக்கும்

    பெண்கள் ; விட்டு கொடுத்தால் எப்பொதும் பிரச்சனை இல்லை

    பணியாளர்கள் : சலிப்படையாமல் பணி செய்தால் வெற்றி நிச்சயம்

    விவசாயிகள் : களைகளாய் தடைகள் வரினும் விளைச்சல் கூடும்.

    தொழில் முனைவோர் : மூலப்பொருட்கள் வாங்க உகந்த நேரம்

    கலைத் துறையினர் : வாய்ப்புகள் கிடைக்க வில்லையே என கவலையடையாதீர்கள் பொறுமை பலன் தரும்.

    அரசியல் துறையினர்: சமயோசிதமாய் மதிக்கப்படுவீர்கள்

    கடகம் :

    ( புணர்பூசம் 4 பாதம் முதல், பூசம் ஆயில்யம் முடிய)

    உள்ளமும் உடலும் ஆரோக்கியம் பெற்று உற்சாகய் பொழுதை கழிப்பீர்கள் உடன் பிறப்புகளோடு வீண்சண்டை வேண்டாம். உங்களின் எண்ணற்ற செயல்கள் நிறைவேறும்.

    பெண்கள் ; பிரச்சனை குறையும்

    பணியாளர்கள் : பதறாமல், சிதறாமல் செயற்படவும்

    விவசாயிகள் : நல்லதே நடக்கும் விற்பனை கூடும்

    தொழில் முனைவோர் : முறையாக திட்டமிட்டு செயற்படவும்

    கலைத் துறையினர் : புதிய வாய்ப்பு நன்மை தரும் நண்பர்கள் உதவுவர்.

    அரசியல் துறையினர்: ஆர்வம் அதிகரிக்கும் புதியவற்றை தள்ளி போடவும்.

    சிம்மம்:

    (மகம் பூரம் உத்திரம் முதல் பாதம் முடிய)

    வருமானம் சிறப்பாக இருப்பதால் மகிழ்ச்சிக்கு குறைவு இருக்காது. உதவும் மனப்பான்மை உண்டு. சமூகத்தில் மதிப்பு உயரும் பிரசனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.

    பெண்கள் ; நிதானமாய் செயற்படவும் வீண்வாதம் தேவையில்லை

    பணியாளர்கள் : யார் எதை கூறினாலும் பொறுமையுடன் செயற்படவும்.

    விவசாயி : இலாபம் உண்டு

    தொழில் முனைவோர் : புதிய தொழில்களில் கவனம் செலுத்தலாம்

    கலைத் துறையினர் : எதிர் பார்த்த வருமானம் உண்டு.

    அரசியல் துறையினர்: உங்களின் வேலைக்கு சன்மானம் உண்டு.

     

     

    கன்னி :

    (உத்திரம் 2 பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2 ஆம் பாதம் முடிய)

    புதிய வாய்ப்புகள் கிட்டினாலும் வருமானம் எப்போதும் போல சீராக இருக்கும் பிரச்சனைகள் ஏற்பட்டாலும் தங்களின் சாதுர்யமான செயற்களிலும் உங்களுக்கே உரிய தைரியத்தாலும் சமாளிப்பிர்கள்.

    பெண்கள் : புதிய ஆடை அணிகலன்கள் கிட்டும்

    பணியாளர்கள் : பிரச்சனைகள் குறையும்

    விவசாயிகள் : பயிர்கள் வளர்ச்சியில் கவனம் தேவை

    தொழில் முனைவோர் : சவாலை சமாளிப்பீர்கள்

    கலைத் துறையினர் : உங்களின் உழைப்பு பலன் கொடுக்கும்

    அரசியல் துறையினர்: எச்சரிக்கை தேவை

    துலாம் :

    ( சித்திரை 3 பாதம் முதல் சுவாதி, விசாகம் 3 ஆம் பாதம் முடிய)

    மற்றவர்களுக்கு உதவி செய்யும் அளவுக்கு பொருளாதாரம் உயரும். தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும். குடும்பத்தாருடன் மகிழ்ச்சியுடன் இருப்பீர்.

    பெண்கள் : குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும்

    பணியாளர்கள் : தேடிய பதவி கிடைக்கும்

    விவசாயிகள் : நல்ல விளைச்சல் நல்ல வருமானம்

    தொழில் முனைவோர் : புதுமையான எண்ணங்களுக்கு வாய்ப்பு உண்டு

    கலைத் துறையினர் : சிறு சிறு சிரமங்கள் வந்து மறையும்

    அரசியல் துறையினர்: கர்ம வீரராக இருப்பீர்.

    விருச்சிகம் :

    ( விசாகம் 4 பாதம் முதல்அனுஷம் கேட்டை முடிய)

    ஓடி ஓடி வேலை செய்வீர். அலைச்சல் சமயத்தில் எரிச்சலை ஏற்படுத்தும் ஆனாலும் நன்மை உண்டு. நல்ல செய்திகள் கிடைக்கும்

    பெண்கள் : வருமானம் உண்டு

    பணியாளர்கள் :  உழைப்புக்கேற்ற ஊதியம் உண்டு

    விவசாயிகள் : கவனம் தேவை

    தொழில் முனைவோர் : சிறப்பாய் தொழில் நடந்தாலும் பொறுப்பாய் இருப்பது நல்லது.

    கலைத் துறையினர் : திறமையில் கவனம் செலுத்தவும்

    அரசியல் துறையினர் : எச்சரிக்கை தேவை

    தனுசு :

    ( மூலம் பூராடம் உத்திராடம் முதல் பாதம் முடிய)

    வெற்றி வேண்டும் என்றால் எதிர் நீச்சல் போடத்தான் வேண்டும். தடைகள் வந்தாலும் தன்னம்பிக்கை குறையக்கூடாது. சுவர் இருந்தால் தான் சித்திரம் தீட்ட முடியும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை

    பெண்கள் : குடும்ப ஆரோக்கியத்தில் கவனம் தேவை

    பணியாளர்கள் : வேலைகள் ஓழுங்குக்கு வரும்

    விவசாயிகள் : இலாபம் உண்டு

    தொழில் முனைவோர் : திட்டமிட்ட முயற்சி தேவை

    கலைத் துறையினர் : மனம் தளராமல் செயல்பட்டால் மனம் மகிழும் வெற்றி உண்டு

    அரசியல் துறையினர்: ஒரு பக்கம் ஆதரவு கிட்டும்!

    மகரம் :

    (உத்திராடம் 2ஆம் பாதம் முதல் திருவோணம் அவிட்டம் 2 ஆம் பாதம் முடிய)

    வரவுகேற்ற செலவு உண்டு.கடன் தொல்லையில் மாட்டி கொள்ளாதீர்.காரியம் கைகூட வில்லை என கவலைபடாதீர்கள். ஓடு மீன் ஓட ஊறு மீன் வருமளவு வாடி நிற்கும் கொக்கை மனதில் கொள்ளுங்கள்.

    பெண்கள் : புதிய பொருட்கள் கிட்டும்

    பணியாளர்கள் : சுறுசுறுப்பாய் பணி செய்வீர்

    விவசாயிகள் : கொள்முதல் லாபம் உண்டு

    தொழில் முனைவோர் : புதிய முயற்சிகள் தோன்றும்

    கலைத் துறையினர் : புதிய வாய்ப்புகள் உண்டு

    அரசியல் துறையினர் : மற்றவர்களுடன் சுமுகமாய் நடந்து கொள்வீர்

    கும்பம் :

    ( கும்பம் 3ஆம் பாதம் முதல் சதயம் பூரட்டாதி 3 ஆம் பாதம் முடிய)

    நல்ல இனிமையான வாரம். அசையாத சொத்துக்கள் வாங்க வாய்ப்பு உருவாகும். அனைவரின் ஆதரவு உண்டு.பொருளாதாரம் சீராக இருக்கும். ஆரோக்கியம் பலப்படும்

    பெண்கள் : சுப நிகழ்ச்சிகளால் மகிழ்ச்சியுடன் இருப்பர்

    பணியாளர்கள் : மன ஒருமுகப்பாடு தேவை

    விவசாயிகள் : விவசாயத்திலும் குடும்பத்திலும் மகிழ்ச்சி உண்டாகும்

    தொழில் முனைவோர் : கடின உழைப்பு நிறைந்த பலன்

    கலைத் துறையினர் : மற்றவர்களின் ஆதரவு உண்டு

    அரசியல் துறையினர் : அரசாங்கத்தில் இருந்து ஆதரவு கிட்டும்

    மீனம் :

    (பூரட்டாதி 4 ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி ரேவதி முடிய)

    மகிழ்ச்சியான வாரம். விரும்பிய சுற்றுலா எதிர்பார்த்த பண வரவு சுற்றி இருப்போர் ஆதரவு கிடைக்கும். சுப காரியங்கள் நன்றாகவே நடக்கும்

    பெண்கள் : வம்பு பேச்சை தவிர்க்கவும்

    பணியாளர்கள் : எடுத்த வேலையை திறமையாய் முடிப்பீர்

    விவசாயிகள் :  வரவு செலவில் கவனம் தேவை

    தொழில் முனைவோர் : நிறைவான வாரம்

    கலைத் துறையினர் : புதிய வாய்ப்புகள் தடைப்பட்டாலும் பண வரவு உண்டு.

    அரசியல் துறையினர்: தன்னிச்சையாக செயல்படாமல் எதையும் அனுமதியுடன் செயல்படவும்.

    Share
  • மாடிவீட்டு ஏழைகள்!

    -எம்.ஜெயராமசர்மா – மெல்பேண்

    ஓலைக் குடிசைக்குள்
    ஒக்காந்து இருந்தாலும்                                                                 huts
    காலுக்குச் செருப்புமின்றி
    கல்லுமுள்ளு நடந்தாலும்
    ஆளுக்கு ஆள்நல்லாய்
    அன்புகாட்டும் பண்பெலாம்
    மாடிக்குள் வந்திடுமா
    மனதிலெழும் கேள்வியது!

    கூழையே குடிப்பார்கள்
    குதூகலமாய் இருப்பார்கள்
    நாலுகாசு கிடைத்தாலும்
    நல்லாத்தான் மகிழ்வார்கள்
    காரென்றும் வீடென்றும்
    கணக்கின்றி வைத்திருப்பர்
    மாடிவீட்டு ஏழைகளாய்
    வாழ்ந்திடுவார் என்னாளும்!

    நாகரிகம் தெரியாது
    நஞ்சுமவர் நெஞ்சிலிலை
    ஓய்வின்றி உழைப்பார்கள்
    உறக்கமோ நல்லாய்வரும்
    வேர்வையென்றால் தெரியாது
    விலைபேசி நிற்பார்கள்
    மாடிவீட்டு மக்களுக்கு
    மருந்துவேணும் உறங்குதற்கு!

    நாளெல்லாம் பசித்திடுமே
    நன்றாக உழைப்பார்கள்
    வேருக்கு நீர்போல
    விலக்கின்றி உண்டிடுவார்
    காசிருக்கும் ஆளிருக்கும்
    கச்சிதமாய் உணவிருக்கும்
    காணுகின்ற அத்தனையும்
    கண்ணால்தான் உண்டிடுவர்!

    வீடின்றி இருப்பார்கள்
    வீதியிலே படுப்பார்கள்
    நோயின்றி வாழ்வார்கள்
    நூறாண்டும் இருந்திடுவார்
    நூறுவீடு இருந்தாலும்
    நோயுடனே இருப்பார்கள்
    மாடிவீட்டு ஏழைகளின்
    வழக்கமான வாழ்வாகும்!

    ஏழைகளாய் இருந்தாலும்
    கோழைகளாய் இருக்காரே
    மாடிவீட்டில் வாழ்ந்தாலும்
    மதிப்பு ஒன்றும் வந்திடாது
    மண்குடிசை வாழ்வென்ன
    மதிப்பிலே குறைந்தாபோச்சு?
    மண்குடிசை மக்களன்றோ
    மாடிவீட்டின் அத்திவாரம்!

    Share
  • கிரேசி மொழிகள்!

    கிரேசி மோகன்

     

    தூக்கக் கலக்கத்தில் தோன்றியது….CrazY Quotes From Crazy Coat….

    ”ஆறாவது அறிவுடன் நிறுத்திக் கொள்வ்பவன் அடிமுட்டாள்
    ஏழாவது, எட்டாவது என்று தொடர்ந்து படித்து டிகிரி வாங்குபவனே புத்திசாலி’’….(1)

    ‘’இளமையில் கல்….முதுமையில் சிலை….நடுவயதில் வாழ்வின் நாராசமான உளியின் ஓசை’’….(2)

    ‘’பாவம் செய்தவன் நரகம் செல்கிறான்
    புண்ணியம் செய்தவன் சொர்கம் செல்கிறான்
    எதுவும் செய்யாதவன் பூமியில் பிறக்கிறான்’’….(3)

    ’’கெட்ட பழக்கத்தை நாம விடலாம்….பாழாய்ப்போன
    நல்ல பழக்கமோ நம்மை விட்டால்தான் உண்டு’’….(4)

    ‘’அளவுக்கு மீறிய பசியில் நஞ்சும் அமிர்தமாகும்’’….(5)

    ‘’சொறிவதற்கு தம்பி உடையான் படைக்கு அஞ்சான்’’….(6)

    ‘’ஐந்தில் வளையாத முதுகு ஐம்பதில் வளையும்’’….(7)

    ‘’நான் ஆடாவிட்டாலும் KNEE ஆடும்’’….(8)

    ‘’கற்றோர்க்கு செல்லுமிடமெல்லாம் சிறப்பு
    கல்லாதவனுக்கோ செல்ல வேண்டிய அவசியம்
    இல்லாததால் இருக்கும் இடத்திலேயே சிறப்பாக இருப்பான்’’….(9)

    ’’தானாய் வருவது வெற்றி
    முயன்று பெறுவது தோல்வி’’….(10)

    ‘’முக்கால்வாசி வெற்றி
    மயிரிழையில் தோல்வியிடமிருந்து
    தப்புவதுதான்’’….(11)

    ’’பசி தாளாமல் பொய் சொன்ன வாய்க்கு போஜனம் உண்டு’’….(12)

    ’’5 பெண்ணைப் பெத்தவன் ஆண்டியாகலாம்
    5 பிள்ளை பெத்தவன் அந்த ஆண்டிக்கு சம்பந்தி ஆனால்
    ஆண்டியாகலாம்’’….(13)

    ‘’தைரிய சாலிக்கு வீர மரணம்
    கோழைக்கோ இருமி இருமி சளி மாரடைத்து
    ஈர மரணம்’’….(14)

    ‘’சுலபமான யோகம் வினியோகம்’’….(15)

    ‘’மெளனம் சங்கடத்துக்கும் அடையாளம்’’….(16)

    ‘’அனாவசியமாக அடிக்கடி கசக்கி கட்ட முடியாத அளவுக்குக்
    கந்தையாக்காதே’’….(17)

    ‘’பாம்பு, பூரான்,பூச்சிக்கு பயப்படாதவர்கள்
    தாராளமாக இயற்கையோடு ஒன்றி வாழலாம்’’….(18)

    ‘’சுறுசுறுப்பாக இருக்க உடலில் உறுதி வேண்டும்
    சோம்பேறியாக சுகமாக வாழ மனதில் உறுதி இருந்தால் போதும்’’….(19)

    ‘’இடுக்கண் வருங்கால் நகருக’’….(20)

    ‘’அளவுக்கு அதிகமாக ஆப்பிளை சாப்பிட்டதால்
    ஆதாம் ஏவாளுக்கு வந்த அஜீர்ணமே காதல்’’….(21)

    ’’ஞானப் பசி வந்தால் பற்றும் பறந்து போம்’’….(22)

    ‘’பகைச்சுவை இல்லாத எதுவுமே நகைச்சுவைதான்’’….(23)

    ‘’பயம்தான் சாவு….செத்தால் கொள்ளி….
    பயந்தால் கொள்ளிதான் பயந்தாங்கொள்ளியாச்சோ!’’….(24)
    ————————————————————————————————————————-

    Share
  • தாயும் சேயும்!

    -ரா. பார்த்தசாரதி

    தாயே விளைநிலமாம், தந்தையே வித்தாம்,
    குலம் தழைக்கவந்த ஓர் சொத்தாம்!                                               vallamai image1

    பெண் முழுமை அடைவதும் தாய்மையாலே!
    தாயாக மாறுவதும் அந்தத் தாய்மையாலே!

    கருவறையில் உன்னை வைத்துப் பாதுகாத்தேன்!
    எனக்கென்று உண்ணாது உனக்காக உண்டேன்! 

    பிறந்த மேனியுடன் வெளியுலகில் வந்தாய்!
    தாய் தந்தையர்க்கு மட்டற்ற மகிழ்ச்சி தந்தாய்!

    உனக்காகக் கண்விழித்துத் தூக்கத்தினை மறந்தேன்!
    உனக்காகப் பாசத்தையே பாலாகப் பொழிந்தேன்!

    எனது அணைப்பே உனக்கு அடைக்கலம்!
    எனது மடியே உனக்குத் தொட்டில்!

    உன் பசி, தூக்கத்தை அழுகையால் வெளிப்படுத்துகிறாய்!
    உன் கள்ளமில்லாச் சிரிப்பால் கவலைகள் போக்குகின்றாய்!

    தோளையே தூளியாக்கி உன்னைச் சுமக்கின்றேன்
    உன்னை வயிற்றில் சுமந்ததைவிடப் பாரமா?

    அன்னைக்கு ஆயிரம் பிரச்சனை இருப்பு! 
    உன்னைக் கட்டியணைப்பதில்தான் ஆனந்தக் களிப்பு!

    எங்கள் இல்வாழ்க்கையே உன் படைப்பு!
    எங்கள் வாழ்கையில் நீ ஒரு துடுப்பு!

    உன் வளமே எங்கள் சிறப்பு!
    உன் நினைவே பாசத்தின் பிணைப்பு!

    குழந்தையின் வளர்ப்பு, தந்தையின் கடமையே!
    அன்னையின் வார்த்தைகள் அன்பின் இனிமையே!

    அன்னையைப் போல ஒரு தெய்வம் இல்லை!
    திசை நான்கும் அன்னையைப் போல் எவருமில்லை!          

    Share
  • திருமால் திருப்புகழ் (108)

    கிரேசி மோகன்

    Bhagavatha -- The 24 Gurus - the Avadutha's discourse  - Keshav
    Bhagavatha — The 24 Gurus – the Avadutha’s discourse – Keshav

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ———————————————————
    ’’கண்ணன் வெண்பாக்கள்’’
    ————————————————

    Krishnapremi series. #krishnafortoday - Keshav
    Krishnapremi series. #krishnafortoday – Keshav

    கன்னிப்பெண் ராதைகைத், தாம்பால் கட்டுண்டு,
    பின்னிப் பிணைந்த கண்ணனவன், -முன்னம்,
    உரலிழுத்த ந்யாபகம், உந்த உருள,
    மருள முழித்தனள், மாது….(156)

    வெறுத்துப் பேசுவதாய், கார்முகில் வண்ணா,
    அருத்தம் கொள்ளாதே , கேளென் -வருத்தத்தைக்,
    கண்ணனுனைக் காணாது, போனாலென் கண்கள்முக்,
    கண்ணனைக் காணப்போம் காண்….(157)

    கத்திரிக்காய் தொட்டு, கணினி வரையில்வான்,
    உத்திரத்தில் வைத்துவிலை விற்கிறார்கள், -மொத்த,
    விலைவாசி ஏற்றம், விழுந்துதா காதில்,
    அலைவாசி தூங்காய் அயர்ந்து….(158)

    கவிதை வருவது, கண்ணன் அருளா !
    செவியுண்ட செய்யுள் செயலா !,-புவியத்தா,
    காவிய வாழ்க்கையா!, கைவல்ய வேட்கையா!,
    சாவியுன் கையில், செப்பு….(159)

    கோபத்தில் ராமன், கணையெடுத்து கர்ஜிக்க,
    ஆபத்(து) உணர்ந்த அலையரசன், -சாபத்துக்(கு),
    அஞ்சி சகியோடு, அண்ணல் சரணாகதி
    கெஞ்சிடும் கோலம், கவி….(160)

    தள்ளாடி னாலும், தடியூன் றினாலும்,
    பல்லாடி பொக்கையாய்ப் போனாலும், -கில்லாடி,
    கண்ணனைப் பாடும், கவியாக உள்ளவரை,
    வண்ணமுறும் வாழ்வு, வரம்….(161)

    ———————————————————————————————————————-

    படங்களுக்கு நன்றி :

    http://kamadenu.blogspot.in/

    Share
  • வள்ளுவருக்கு வணக்கம்

    இசைக்கவி ரமணன் thiruvalluvar

    கவலைக் கடலைக் கடியும் கனலாய்க்
    கவிதை சொன்னவன் பாரதி
    காதும் காதும் வைத்தாற் போலக்
    காவியம் செய்தவன் கம்பன்
    திவலைக் குள்ளே கடலைக் காட்டிய
    தெய்வப் புலவர் வள்ளுவர்
    திரிகோணத்தின் நடுமுற்றத்தே
    தேனகலாய்த் தமிழ் வளரும்!

    ஒருவா னத்திற் கொருகதிர் போதும்Kanyakumari
    உலகில் உயிர்கள் வாழும்
    ஒருவாழ் வுக்கோ ஒரு குறள் போதும்
    உயிரே ஒளிமய மாகும்
    திருவள்ளுவர் எனும் தீப மிலாமல்
    திசையை விழியறியாது
    வருவதை சென்றதை வந்ததை அவர்போல்
    வகுத்தவரே கிடையாது!

    அறமெனும் ஒருவழிப் பாதையில் நித்தம்
    அவர்கரம் பற்றி நடப்போம்
    அதன்முடி வில்நமை அழைக்கும் சத்திய
    ஒளியில் அனைத்தும் கடப்போம்
    இறப்பும் பிறப்பும் கவரிகள் வீச
    இங்கொரு முடிவைப் படைப்போம்
    இன்பம் துன்பம் என்று மயக்கும்
    இடர்களைத் தெருவில் உடைப்போம்!

     

     

     

    Share
  • உயிரின மூலக்கூறுச் செங்கலான [DNA-RNA] பூர்வ பூமியில் தாமாக உயிரியல் இரசாயனத்தில் தோன்றி இருக்கலாம்

    Origins of life 1

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

     

     

    சட்டியில் ஆப்பம் ஒன்றைச்
    சுட்டுத் தின்ன
    அண்டக்கோள் ஒன்றை முதலில்
    உண்டாக்க வேண்டும் !
    அண்டக்கோள் தோன்றப்
    பிரபஞ்சத்தில் ஒரு
    பெருவெடிப்பு நேர வேண்டும் !
    உயிரினம் உருவாக
    சக்தி விசையூட்ட வேண்டும் !
    கோடான கோடி யுகங்களில்
    உருவான பூமியும் ஓர்
    நுணுக்க அமைப்பு !
    தனித்துவப் படைப்பு !
    அகிலாண் டத்தில்
    நிகரில்லை அதன் படைப்பிற்கு !
    நாமறிந்த பிரபஞ்சத்தில்
    பூமியைப் போல்
    நீர்ப் பாறைக் கோள் ஒன்றை
    வேறெங்கும் இதுவரைக் கண்டிலோம் !
    நீர் ஆவியாய் நீங்காமல்
    வைத்திருப்பது
    வாயுக் குடை ! அஃதில்லையேல்
    மாயும் உயிரினங்கள் !
    மகத்துவமாய்
    அகிலப் பிரமாண்டத்தை
    நுணுகி நோக்க
    மனிதரினம் தோன்றிய
    புனித கோளம்,
    இனிய பூமி ஒன்றே !

    *****************************

    fig-1b-genome-of-the-species

    “உயிரினம் எதுவுமே இல்லாமல் எளியதாய்ப் பிரபஞ்சம் வெறும் பௌதிகம், இரசாயனத்தோடு, கால வெளியைத் தோற்றுவித்த அகில வெடிப்புத் தூசியோடு (Dust of Cosmic Explosion) இருந்திருக்கலாம்.  உண்மையில் அப்படி நேரவில்லை ! பிரபஞ்சம் தோன்றி 10 பில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு வெறும் சூனியத்திலிருந்து உயிரினங்கள் உதித்தன என்று நான் நியாயப்  படுத்துவது பைத்தியகாரத்தனம்.  “உயிரினப் படிப்படி மலர்ச்சி” (Evolution) என்னும் இயற்கை நியதி நேர்ந்தது மட்டுமில்லை !  அந்த மகத்தான நிகழ்ச்சியை உளவி அறிந்து கொள்ளும் மனிதரை உண்டாக்கவும் செய்திருக்கிறது.”

    ரிச்சர்டு டாக்கின்ஸ் உயிரியல் விஞ்ஞானி (Richard Dawkins)

    “உயிரினம் எப்படி ஆரம்பமானது என்பதை நாம் அறிய முடியவில்லை என்று முதலில் ஒப்புக் கொள்வோம்.  பூர்வாங்க உலகில் எளிய ஆர்கானிக் மூலக்கூறுகள் தோன்ற பல்வேறு இயக்க முறைகள் ஒருங்கிணைந்து பாதை வகுத்தன என்று பொதுவாக நம்பப் படுகிறது !  அந்த மூலக்கூறுகள் இணைந்து மீண்டும் சிக்கலான இரசாயன அமைப்புக் கலவைகள் உண்டாகி, முடிவிலே உயிர் மூலவி என்று சொல்லப்படும் ஒரு பிறவி உருவானது !  இப்படி மேற்போக்கில் பொதுவாகச் சொல்லும் ஒரு விளக்கத்தில் எவரொவரும் திருப்தி அடைய முடியாது.”

    மில்லர் & ஆர்ஜெல் (Miller & Orgel in their Book “The Origin of Life on Earth -1974)

    jay

    உயிரினத் தோற்றம் பற்றி விளக்கம் கூறிய உலக மேதைகள்: 

    பெரும்பான்மையான  உயிர்த்துவ இம்மிகள் [Living Organisms] மனிதர் கண்ணுக்குப் புலப்படா.   உயிர்த்துவ மூல நுண்ணுருக்கள் [Microbes] சேர்ந்தவையே உயிரினங்கள்.  80% நுண்ணுருக்கள் பூமிக்கு அடியிலே வசிக்கின்றன.  அவற்றின் அளவீடுகளைக் கணிப்பது சிரமமானது.   நோயை உண்டாக்கு வதும் அவையே.  நோயைக் குணப்படுத்துவதும் நுண்ணுருக்களே.  நமது பசுமைச் சூழ்வளம் [Ecosystem] ஏற்பாட்டுக்கும் நுண்ணுருக்களே  அடிப்படைக் காரணமாய்ப் பங்கேற்கும்.   யூதக்  கிறித்துவ, இஸ்லாமிய மத நூல்கள்,  கடவுளே பிண்டத்தில் உயிரை ஊதி உட்செலுத்தியது என்று கூறுகின்றன.

    Comets Gifts for Earth

    [384-322 ] B.C.  ஆண்டுகளில் வாழ்ந்த கிரேக்க மேதை அரிஸ்டாடில்ஸ்  “நியுமா” [Pneuma] என்னும் ஒரு தெய்வீக மூலமே [Divine Matter] விலங்கினத்தை உருவாக்கியது என்று கூறுகிறார்.   உயிரின மலர்ச்சி தொடர் இயக்கத்தில் மனித ஆத்மா பூரணத்துவம் அடைய,  நியுமா என்பது ஒர் இடைநிலை அரங்கம்.  மனித உடலுக்கும், ஆத்மாவுக்கும் இடையே, அல்லது  விலங்கினத்தின் உடம்புக்கும் உயிருக்கும் உரிய “இருமுகப்பு”  [Duality] பற்றி அவரது குருநாதர் சாக்ரடீஸ் பள்ளியில் கருத்தாடல்கள் நடந்துள்ளன.  அதில் ஒரு மாணவரே அரிஸ்டாடில்ஸ்.   குருநாதர் கூற்றுபடி உயிர் மூச்சு மனிதன் போன்ற உயர்ந்த விலங்கினங்களுக்கு பிறப்பாக்கத் தொடர்பு மூலம் [Procreation] வாரிசுகளுக்கு வழங்கப் பட்டது.   பிறப்பு விதை யில்லாமலே சிற்சில பூச்சிகள், சிப்பிகள், கடல்நீர் ஜந்துகள் சுயமாய் உருவாகின என்பது கிரேக்க மேதை அரிஸ்டாடில்ஸின் கருத்து. சாக்ரடீஸ் குழுவினருக்கு முன்பே “தானாய் நேரும் பிறப்பு”  [Spontaneous Generation]  கோட்பாடுக் கருத்து இருந்துள்ளது.  தானாய் நேரும் பிறப்புகளைப் பற்றி சைனா, இந்தியா, பாபிலோன், எகிப்திய ஏடுகளும் கூறியுள்ளன.

    Growth of Organisms

    லூயி பாஸ்டர் [1822-1895] செய்த ஒரு சோதனை மூலம் “தானாய் பிறக்கும் கோட்பாடுக்கு” முற்றுப் புள்ளி வைத்தார்.  அவருக்குப் பிறகுதான் “உயிரே உயிரை பிறப்பிக்கும்” கோட்பாடு நிலையானது.   ஆனால் இந்தக் கோட்பாடு முதலில் தோன்றிய உயிர் வடிவத்துக்கு ஒவ்வாது என்றும் பாஸ்டர் கூறினார்.   அதாவது “தானாய் உருவாகும்” கோட்பாடு முதல் உயிர் வடிவுக்கு மட்டும் தகுதி பெறும்.

    சார்லஸ் டார்வின் [1809-1882]  உயிர்த் தோற்ற உற்பத்தி, அம்மோனியா, ஃபாஸ்ஃபரஸ் உப்புக்களோடு, ஒளி, வெப்பம், மின்சக்தி இயங்கிய  ஒரு பூர்வக் குழம்பில்  [Primeval Soup] நேர்ந்தது என்று நம்பினார். இந்தக் கூட்டுக் குழம்பு ஒருவிதப் புரோட்டீனை உண்டாக்கி, சிக்கலான இரசாயனக் கலவைகளாகி, அவற்றிலிருந்து உயிரினம் தோன்றின என்று கருதினார்.   உயிரியல் இரசாயன இயக்க விருத்தியில் [Biochemical Reactions Evolution] உயிரின மலர்ச்சி நேர்ந்தது என்னும் புதியதோர் கருத்தை நிலை நாட்டியவர் அலெக்ஸாண்டர் இவனோவிச் ஓபரின் [Alexander Ivanovich OLparin] [1894-1980].

    the-origins-of-life

    “கிரீன்ஹௌஸ் விளைவின் வெப்பச் சீற்றத்தில் கரியமில வாயுவின் தீவிரத்தை விட, மீதேன் வாயு  ஒவ்வொரு மூலக்கூறுக்கு ஒன்றாகப் பரிதியின் சூட்டை உறிஞ்சிச் சேமிக்கிறது!  சூழ்வெளியில் மென்மேலும் கிரீன்ஹௌஸ் வாயுக்கள் திணிக்கப்படுவதால், ஆர்க்டிக் வட்டாரத்தின் வெப்பம் மிகையாகிப் “பூகோளச் சூடேற்றப் புரட்சி” [Runaway Global Warming (RGW)] தூண்டப்படும் என்று விஞ்ஞானிகள் மிகவும் கவலைப்படு கின்றனர்!  அடுத்து வரும் 100 ஆண்டுகளில் பூகோளக் காலநிலை பெருத்த அளவில் மாறிச் சமூக, நிதிவளம், உயிர்ப்பயிரின விருத்திகள் பாதிக்கப் படும்.  அதன் துவக்க விளைவுகள் ஏற்கனவே ஆரம்பாகி விட்டன!”

    ஆர்க்டிக் காலநிலைப் பாதிப்பு உளவு [Arctic Climate Impact Assessment (ACIA)]

    1990 ஆண்டில் பிரென்ச், ரஷிய விஞ்ஞானிகள் அன்டார்க்டிகாவின் தென்துருவத்தில் 1.5 மைல் நீளமான பனித்தண்டைத் தோண்டி எடுத்து 400,000 ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் தோன்றி மாறிய நான்கு பனியுகங்களின் கரியமில வாயுவை [CO2 in Four Ice-Age Cycles] ஆய்ந்தனர்.

    Miller Urey Experiment

    அந்தச் சோதனையில் உஷ்ணம் ஏற, ஏற கரியமில வாயுவின் கொள்ளளவு படிப்படியாகக் குறைந்து [மூன்றில் ஒரு பங்கு] வந்திருக்கிறது என்று அறியப்பட்டது.  காரணம் மற்ற கிரீன்ஹௌஸ் வாயுக்கள் CO2 உடன் மாறி யிருக்க முடியும் என்று எளிதாகக் கருத வழி யிருக்கிறது.  அந்த அரியக் கண்டுபிடிப்பு 1896 ஆண்டு விட்ட முன்னறிப்பை உறுதிப் படுத்தியுள்ளது.

    பூகோளச் சூடேற்ற விளக்கமும் விவாதமும் [Global Warming Definitions & Debate]

    பூமியின் பூர்வீக உயிரினங்களின் மூலத் தோற்றங்கள்

    4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய பூமியின் முதல் 700 மில்லியன் ஆண்டுகளாக வால்மீன்கள், விண்பாறைகள் போன்ற சூரிய மண்டலத்தின் அண்டத் துணுக்குகள் பூமியை மிகத் தீவிரமாய் தாக்கி வந்திருக்கின்றன.  அவற்றில் பேரடித் தாக்குதல்களால் வெளியான அதிர்வு சக்தி, கடல் வெள்ளத்தையும் ஆவியாக்கும் பேராற்றல் கொண்டிருந்தது. அப்போது தழைத்திருந்த உயிரினத் தோற்றங்களையும் பூமித் தளங்களில் அழிக்க வல்லது.  3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தடம் விட்டுச் சென்ற முதல் உயிரினத் தோற்றத்தின் புதைவடிவுப் பழஞ்சின்னச் சான்றுகள் (Fossil) இப்போது காணக் கிடைத்துள்ளன !

    fig-1a-the-earths-biosphere1

    கலியுகத்தின் சிக்கலான உயிரனங்களின் அமைப்புகள் பூகோளத்தின் பௌதிக இரசாயனச் சூழ்வெளியில் (Environmental Globe) சீரான முறையில் படிப்படியாக பல கோடி ஆண்டுகளாகப் பரவி வந்துள்ளன.  பூமியின் ஆக்ஸிஜன் சொற்பமான “சிறுத்திடும் சூழ்வெளி அழுத்தத்தில்” (Reducing Atmosphere with Traces of Oxygen) உள்வெளி அல்லது விண்வெளி ஒளிமந்தைகளின் ஆர்கானிக் மானோமெர்கள், பாலிமர்கள் (Terrestrial Organic Polymers or Extra-Terrestrial Organic Monomers) நியமித்த நிபந்தனைகளில் வளர்ச்சிச் சூழகத்தை நிலைநிறுத்தி இருந்தன.  ஆகவே ஆக்ஸிஜன் வேண்டாத உயிரினங்கள் இரசாயனப் பந்தங்களைத் (Chemical Bonds) தாக்கும்.  ஆகவே பூர்வீகப் பூமியில் (Primitive Earth) ஏற்கனவே இருந்த ஆர்கானிக் மானோமெர்கள் அவற்றை விடச் சிக்கலான ஆர்கானிக் பாலிமர் உண்டாக வசதியான எரிசக்திச் சூழ்நிலைகள் உண்டாயின.  ஆர்கானிக் மானோமெர்கள் இருவிதச் சேமிப்புகள் மூலம் உருவாகின்றன :

    1. உள்வெளி ஒளிமந்தை இணைப்பு முறைகள் (Terrestrial Synthetic Pathways).

    2. விண்வெளி ஒளிமந்தையிலிருந்து (Extra-Terrestrial) சூரிய மண்டலம் பெற்ற மூலங்கள்

    fig-1-the-beginning-of-life

    பல்லாண்டு காலங்களாக எளிய மூலக்கூறுகள் மிகச் சிக்கலான உயிரியல் மூலக்கூறு

    ​ ​

    களாக விருத்தி யாகி முடிவில் “உயிரணுக்கள்” (Cells) ஆயின !  அவை மீண்டும் பல்வேறு வடிவாக விருத்தி யாகி “ஒளிச்சேர்க்கையில்” இரசாயன முறை மலர்ச்சி (Metabolically Capable of Photosynthesis) பெறும் உயிரணுக்களாக மாறின.  அதற்குப் பிறகு அடுத்தடுத்து உயிரியல் பூதள இரசாயனச் சுழல் இயக்கங்களால் பின்னிய மீளா நிகழ்ச்சிகள் (Cascade of Irreversible Events Interconnected by Bio-Geochemical Cycles) நேர்ந்தன.  அப்போது பூகோளத்தின் சூழ்வாயு அழுத்தம் ஆக்ஸிஜன் ஊட்டும் சூழ்வெளியாகி (Oxidizing Atmosphere) “ஓஸோன்” அடுக்கு (Ozone Layer) உண்டானது.  ஓஸோன் அரங்கமானது பாதிக்கும் சூரியனின் புறவூதாக் கதிர்களை வடிகட்டும்.  ஆக்ஸிஜன் ஊட்டும் சூழ்வெளி பூர்வீக நுண்ணுயிர் அணுக்களை (Early Micro-Organisms) உயிரியல் விருத்தி செய்யும் மூல வாயுவாக இருந்து வந்தது.  இவ்விதப் படிப்படி அரங்க மாறுதல்களால் பூமியானது தற்கால உயிரியல் கோளமாய்ப் (Present Day Biosphere) பின்னால் உருவானது.

    Fig 3 Comet Falls on Earth

     

    பூதளச் சூழ்வெளியில் உயிரியல் கோளத்தின் அடுக்கான அமைப்பாடுகள்

    நாமறிந்த பிரபஞ்சத்திலே உயிரினங்கள் பல கோடி ஆண்டுகள் வசித்து விருத்தியடைந்த ஓர் அண்டக் கோள் பூமியைத் தவிர வேறொன்றை இதுவரை யாரும் அறிந்திலர்.  சூழ்நிலைக்குத் தக்கபடி மாறிக் கொள்ளும் உயிரினங்கள் பூமியில் மத்திய வேனல் தளங்கள் முதல், துருவக் கூதல் பிரதேசங்கள் வரை நீடித்து வாழ்ந்து வருகின்றன.  பூமியின் ஒவ்வொரு தளமும் நேரிடையாகவோ அன்றி மறைமுகமாகவோ உயிரின நீடிப்பு வளர்ச்சிக்கு வசதி செய்து வருகிறது.  கடல் மட்டத்துக்குக் கீழ் 10 கி.மீடர் ஆழத்திலும் (6 மைல்), கடல் மட்டத்துக்கு மேல் 20 கி.மீடர் உயரத்திலும் (12 மைல்) உயிரினங்கள் உலவி வருகின்றன. கடலிலும், வானிலும், பாலைவனத்திலும், வட தென் துருவங்களிலும் உயிரினங்கள் பிழைத்துத் தழைத்து வருகின்றன.  கனடாவின் ஆர்க்டிக் குளிர்ப் பகுதிகளில் பல்லாயிரம் ஆண்டுகளாய் பனிக்குகைகளில் எஸ்கிமோ இனத்தார் குடிவாழ்வு நடத்தி வருகிறார்.  வேனற் பகுதிகளில் பேரளவு உயிரினங்கள் வாழ்ந்து வருகிறன.

    fig-1f-amphiphilic-molecules

    சூழ்வெளியின் அடுக்கடுக்கான வாயு அழுத்தம் குன்றிய அமைப்பாடு

    1. பூதளத்திலிருந்து 8 முதல் 18 கி.மீடர் வரை: டோப்போ கோளம் (Toposphere)

    2. பூதளத்திலிருந்து 18 முதல் 50 கி.மீடர் வரை: ஸ்டிராடோ கோளம் (Stratosphere)

    3. பூதளத்திலிருந்து 50 முதல் 85 கி.மீடர் வரை: மெஸோ கோளம் (Mesosphere)

    4. பூதளத்திலிருந்து 85 முதல் 450 கி.மீடர் வரை: தெர்மோ கோளம் (Thermosphere)

    5. பூதளத்திலிருந்து 450 முதல் 10,000 கி.மீடர் வரை: எக்ஸோ கோளம் (Exosphere)

    Establishment of life on Earth

    சூழ்வெளியில் பேரளவுக் கரியமில வாயுவின் சேமிப்பு:

    கிரீன்ஹவுஸ் வாயுக்கள் காற்றில் சேமிப்பாகிப் பூகோளத்தின் உஷ்ணம் ஏறுவது போன்ற காலநிலைக் கோளாறுகள் ஆமை வேகத்தில் நிகழ்ந்து மெதுவாக மாறி வருபவை.  அவற்றில் குறிப்பிடத் தக்க வாயு, மின்சாரம், நீராவி உற்பத்தி நிலையங்களுக்குப் பயன்படும் நிலக்கரி எரு எரிந்து உண்டாகும் கரிமில வாயு [CO2].  மற்ற கிரீன்ஹவுஸ் வாயுக்களில் ஒன்று மீதேன் வாயு [Methane Gas].  அது கழிவுப் பதப்படுப்பு சாலைகளிலும் [Waste Treatment Plants] தொழிற்சாலை வினைகள், வெப்பத் தணிப்பு முறைகள் வெளிவிடும் ஹாலோகார்பனிலும் [Halo-Carbons] உண்டாகுகிறது.  அனைத்து பசுமைக் குடில் சூட்டு  வாயுக்களையும் [Greenhouse Gases] CO2 வாயுச் சமனில் [CO2 Equivalence] கூறினால், 2003 ஆண்டில் மட்டும் அனைத்துலக CO2 வாயுச்சமன் எண்ணிக்கை: 2692.  அதாவது 2002 ஆம் ஆண்டு CO2 வாயுச்சமன் எண்ணிக்கையை விட 10.6% மிகையானது என்று ஒப்பிடப் படுகிறது!

    fig-2-signs-of-extra-terrestrial-life1

    உயிரின நீடிப்புக்கு வாயுச் சூழ்வெளியின் இயக்கப்பாடுகள்

    பரிதியின் ஒளிக்கதிர்கள் எரிக்காதவாறு உயிரினங்களுக்குக் குடைபிடிக்கும் வாயு மண்டலத்தின் பயன்கள், இயக்கப்பாடுகள் என்னவென்று தெரிந்து கொள்வோமா ?  அந்த அரிய வாயுக் குடையை நீடித்துத் தன்னகத்தே இழுத்து வைத்துக் கொண்டிருப்பது பூமியின் பேராற்றல் கொண்ட ஈர்ப்பாற்றலே !  செவ்வாய்க் கோளில் இவ்வித வாயுக்குடை இல்லாமல் போனதற்கு முக்கிய காரணம் செவ்வாயின் ஈர்ப்பாற்றல் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிறுத்துப் போனதே !  வாயுக்குடை தங்காமல் போனதும் பரிதியின் கொடிய தீக்கனல் செவ்வாய்த் தளத்தின் நீர்வளத்தை ஆவியாக்கி நீர்வற்றிய பாலைவனமாக்கி விட்டது !

    பூமியின் வாயுக்குடை உயிரனத்துக்கு என்ன செய்கிறது ?

    1.  பரிதியின் கொடிய புறவூதா கதிர்கள், எக்ஸ்ரே கதிர்கள், பாதிக்கும் கதிர்வீச்சு போன்றவற்றைப் பகற் பொழுதில் தடுத்து எல்லா உயிரினங் களையும் பாதுகாப்பது.

    2.  பரிதியின் அவசியமான ஒளிச்சக்தியைக் கடல் மீதும் பூதளத்தின் மீதும் ஊடுருவிப் பாயும்படிச் செய்வது (எரிசக்தி மூலம்).

    Origins of life

    3.  இராப் பொழுது துரிதக் குளிர்ச்சியில் பூதளத்தைக் கணப்புடன் வைத்திருப்பது.  பகற் பொழுது துரித வெப்பத்தில் பூமியை மிதமாய் வைத்து மிகையாக்குவது.  வாயு அழுத்தக் குடையால் புவியின் சராசரி தள உஷ்ணம் : +15 டிகிரி C. வாயுச் சூழ்வெளி இல்லையெனில் -18 டிகிரி C

    4.  பூமத்திய ரேகைப் பகுதிகளிலிருந்து மிதப்பகுதி & உயர்ப்பகுதிகளுக்கு வெப்பக்கனல் சக்திக் கடப்பாடு (Transport of Energy from Equtorial Regions to mediuam & Higher Altitudes) நிகழ்வது.

    5.  ஆவிநீர்க் கடப்பாடு (Transport of Water Vapour) கொந்தளிக்கும் பொதுநிலைக் காற்றோட்டத் தளங்கள் மூலமாய்ப் பரவி நீராகப் படிதல்.

    6.  பூகோளத்தின் வாயு மண்டலத்தில் பேரளவு தாவரப் பயிர்களுக்குத் தேவையான நைடிரஜன் (78%) வாயு சேமிப்பு.  அத்துடன் ஆக்ஸிஜன் (21%), ஆவிநீர் (Moisture upto 4%) & கார்பன் டையாக்ஸைடு (0.036%) சேமிப்புக் களஞ்சியம்.

    7.  உயிரினங்கள், பயிரினங்கள் நீடித்து உயிர்வாழத் தேவையான வாயுக்கள் சூழ்வெளி எங்கும் இருப்பது.

    8.  இயற்கையாலும், மனிதச் செய்கையாலும் நிகழும் இரசாயன இயக்கங்களை (Oxidation, Reaction with Radicals & Photosynthesis) கடக்கச் செய்வது & பிரித்து விடுவது.

    9.  விண்வெளியிலிருந்து பூமியின் சூழ்வெளியில் வீழும் விண்கற்களைக் கடும் உராய்வு வெப்பத்தால் எரித்துச் சாம்பலாக்கி உயிரினங்கள் மீது படாது பாதுகாப்பது.

    Fossil Records of life

     

    கரியமில வாயுவைக் கணிக்க நாசா ஏவப்போகும் துணைக்கோள்

    2009 பிரவரியில் நாசா ஏவப்போகும் துணைக்கோள் “ஓகோ” என்னும் “புவி சுற்றும் கரி நோக்ககம்” [Orbiting Carbon Observatory (OCO)] சூழ்வெளியில் பூதளத்துக்கு அருகில் சேரும் கார்பன் டையாக்ஸைடையும், அந்தப் பகுதியையும் பதிவு செய்து வரும்.  அதைப் பின்பற்றி ஜப்பான் “கோஸாட்” என்னும் “கிரீன்ஹௌஸ் வாயுக்கள் நோக்கும் துணைக்கோளை” (GOSAT Greenhouse Gases Observing Satellite) அடுத்து ஏவப் போகிறது.  மூன்றாவ தாக ஐரோப்பாவில் ஈசா “ஏ-ஸ்கோப்” [Advanced Space Carbon & Climate Observation of Planet Earth (A-Scope)] என்னும் துணைக்கோளை 2016 இல் அனுப்பும்.  பூமியின் சூழ்வெளியில் தாவர இனங்களுக்குத் தேவையான கார்பன் டையாக்ஸைடின் கொள்ளளவு இயற்கை நிகழ்வாலும், மனித வினையாலும் ஏறி இறங்குகிறது.  அதே சமயத்தில் அது பேரளவு சேமிப்பானால் பூகோளம் சூடேறித் துருவப் பனிப்பாறைகள் உருகிக் கடல் மட்டம் உயர்கிறது.  அத்துடன் கடல் நீரின் உஷ்ணமும் உயர்கிறது.  அதனால் பேய் மழைகளும், பயங்கச் சூறாவளிகளும், ஹர்ரிகேன்களும் எழுந்து உயிரினத்துக்கும், பயினத்துக்கும் பேரின்னல்களை விளைவிக் கின்றன.  அவற்றை வரும் முன் தடுக்கவும், வரும் போது எச்சரிக்கை செய்யவும் இந்தத் துணைக்கோள்கள் பேருதவி செய்யும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

    Building Blocks of life

    (தொடரும்)

    ++++++++++++++++++++++++++

    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines.  Earth Science & the Environmental Book.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – Is There Life on Mars, Titan or Europa ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world [1998]
    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
    10 Hyperspace By : Michio kaku (1994)
    11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
    15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
    16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
    17 The Geographical Atlas of the World, University of London (1993).
    18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
    19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)
    20. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40805151&format=html (வால்மீனிருந்து உயிரின மூலங்கள் பூமிக்கு வந்தனவா ?
    21. The Daily Galaxy Website -The Biological Universe -A Galaxy Insight Posted By : Casey Kazan [Nov 20, 2008]
    22. Hutchinson Encyclopedia of the Earth Edited By : Peter Smith [1985]
    22 Earth Science & The Environment By : Graham Thompson, Ph.D. & Jonathan Turk, Ph.D.
    23. Astronomy Magazine : The Solar System -What Makes Earth Right for Life ? By : Jonathan Lunine [Dec 2008]
    24.  BBC News – Milky Ways’s Sweetness Throughout [Nov 25, 2008]
    25. BBC News : Sugar in Space Sweetens Chances of Life By : Dr. David Whitehouse [June 16, 2000]
    26 NASA’s Genesis Space Mission – Life from Space Dust ? [Aug 15, 2001]
    27 BBC News : Life’s Origin Among the Stars – A Salt Inclusion in a Meteorite is Evidence for Water By : Dr. David Whitehouse [March 27, 2002]
    28 The Beginning of Life & Amphiphilic Molecules By: Janet Woo [August 2004]
    29. The Biological Universe – A Galaxy Insight [Nov 20, 2008]
    30. The Daily Galaxy – Could Cold “Super Earths” Potentially Support Life ?  [Dec 16, 2008]
    31. BBE News : NASA Set to Launch CO2 Hunter Satellite By : Jonathan Amos [Dec 18, 2008]

    32.  http://www.scientificamerican.com/article/a-simpler-origin-for-life/   [February 2007]

    33.  http://www.dailygalaxy.com/my_weblog/2013/02/rna-dnas-messenger-or-the-origin-of-life-on-earth.html [February 23, 2013]

    34.  http://www.ncbi.nlm.nih.gov/books/NBK26876/

    35. http://alma.mtk.nao.ac.jp/e/aboutalma/outline/06.html

    36.  http://www.scielo.br/scielo.php?pid=S0103-40142007000100022&script=sci_arttext&tlng=en  [April 2007]

    37. http://www.independent.co.uk/news/science/found-the-origin-of-life-1684584.html  [May 14, 2009]

    37. http://en.wikipedia.org/wiki/RNA_world_hypothesis  [June 6, 2014]

    (தொடரும்)

    ******************
    S. Jayabarathan (jayabarathans@gmail.com) [June 7, 2014]

    Share
  • புதிய நிதிநிலை அறிக்கையும், மக்கள் எதிர்பார்ப்பும்!

    பவள சங்கரி

    தலையங்கம்

    மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை, உயர்திரு மோடி அவர்களின் அரசாங்கத்தின் முதல் நிதி அறிக்கை. மக்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் அறிக்கை. முந்தைய அரசு செய்த பல தவறுகளை சரி செய்தாலே நம் பொருளாதாரம் ஏற்றம் பெறலாம் என்ற நிலை இருப்பதையே வல்லுநர்களின் கருத்து தெளிவாக்குகிறது.

    1.. இன்றைய ரூயாயின் மதிப்பு குறைந்துள்ளதால் வருமான வரி பிடித்தம் என்பதற்குரிய வரம்புகளை மாற்றியமைத்தல் அவசியம். அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு கோரிக்கை, பால், காய்கறி மற்றும் விளை பொருள் விற்பனையாளர்களால் ஏற்படும் விலை ஏற்றங்கள் மக்களுக்கு சுமையாகிறது. இதுவரை அரசாங்கம் இதைக் கண்டுகொண்டதாகத் தெரியல்லை. வியாபாரிகள், இடு பொருட்களின் விலை அதிகமாக இருப்பதால், தங்களுக்குக் கட்டுப்படியாகவில்லை என்று சொல்லி விலையேற்றம் செய்கிறார்கள். இதற்குத் தீர்வாக தங்கள் இடு பொருட்களின் விலையைக் குறைக்கக் கோர வேண்டுமே தவிர அந்தச் சுமையை மக்களின் மேல் திணிப்பது சரியாகாது. பண வீக்கம் அதிகமாவதற்கு இதுவும் ஒரு காரணமாகிறது. அரசு பண வீக்கத்தைக் கட்டுப்படுத்தி, ரூபாயின் மதிப்பை அதிகப்படுத்தினால் இந்த வருமான வரி வரம்புகளை மாற்றம் செய்யத் தேவையிருக்காது. மத்திய அரசின் இந்த நிதி நிலை அறிக்கை ரூபாயின் மதிப்பை அதிகப்படுத்த ஆவண செய்ய வேண்டும்.

    2. பண வீக்கத்திற்கான மூல காரணம் பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதிதான் என்று முந்தைய அரசுகள் கூறிக்கொண்டிருந்தன. 35 ரூபாய்க்கு இருந்த பெட்ரோல் விலை இன்று ரூ. 74.45 ஆக உள்ளது. ஒரு புறம் வாகன உற்பத்தி இலட்சக்கணக்கில் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. சென்ற ஆட்சியில் வாகன உற்பத்தி மந்த நிலையை அடைந்துள்ளது என்று கூறி சில சலுகைகளை அறிவித்தனர். இதனால் பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தவிர்த்து இயற்கையாகக் கிடைக்கக் கூடிய இயற்கை எரி வாய்வு மற்றும் திரவ பெட்ரோலிய வாய்வு போன்றவற்றை எரிபொருளாகப் பயன்படுத்தக்கூடிய வாகனங்களுக்கும் வரிச் சலுகைகள் அளித்திருந்தால் அன்னிய செலாவனி கையிருப்பு அதிகரித்திருக்கும். ஆயிரம் அல்லது 1200 சி.சி. களுக்குள்ளான அனைத்து வாகனங்களுக்கும் இயற்கை எரிவாய்வு மற்றும் திரவ பெட்ரோலிய வாய்வு பயன்பாட்டையும் கட்டாயப்படுத்தினால் நலம் பயக்கும். அதேபோல் இரு சக்கர வாகனங்களிலும் எரி பொருளாக இந்த இயற்கை எரி வாய்வுகளைக் கொண்டு வந்தால் நமக்கு பல லட்சம் கோடி அன்னிய செலாவணி மீதியாகலாம். இதற்கு ஏதுவாக அனைத்து பெட்ரோலிய நிலையங்களிலும் எரி வாய்வு நிரப்புதலை கட்டாயமாக்கினால் நன்றாக இருக்கும். மிகப் பெரிய நகரங்களில் கூட திரவ எரிவாய்வு நிரப்பும் நிலையங்கள் இல்லாமல் இருப்பது வேதனைக்குரிய செய்தி. இதைத் தவிர்த்து இரு சக்கர வாகனங்களிலும் நான்கு சக்கர வாகனங்களிலும் மின்சாரத்தை எரி பொருளாகப் பயன்படுத்துவோருக்கு வரிச்சலுகைகள் மூலமாக ஊக்கப்படுத்தலாம் . அரசு இதை கவனத்தில் கொண்டால் நலம் விளையக் கூடும்.

    3. படித்த இளைஞர்கள் ஆய்வகங்களைப் பயன்படுத்துவதற்கு ஏற்றாற் போல பெரு நகரங்களில், குறைந்தபட்சம் மாவட்ட தலை நகரங்களிலாவது இந்தக் கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டியது அவசியம்.

    4. விற்பனை வரி மற்றும் VAT என்ற மதிப்புக் கூட்டுவரி முறையை மாற்றம் செய்ய வேண்டியதும் அவசியம். விற்பனை வரி, மத்திய விற்பனை வரி, மதிப்புக் கூட்டு வரி இவையனைத்தையும் ஒருங்கிணைத்து அல்லது தவிர்த்து வரி (TURN OVER TAX) என்ற வரி விதிப்பு முறையைக் கொண்டுவந்தால் எளிமையான கணக்கு வழக்குகளும், நேர்மையான கணக்கும் கிடைக்கும். இதன் மூலமாக முன்பு கிடைத்த வரி வருமானங்களை விட பல ஆயிரம் கோடி வருமானங்கள் ஒவ்வொரு மாதமும் அரசுக்குக் கிடைக்கும் வாய்ப்பாகவும் அமையும். இதனால் கருப்புப் பண புழக்கமும் கட்டுக்குள் வரும்.

    5. தங்க இறக்குமதியை கட்டுப்படுத்துவதைத் தவிர்த்து ஏற்றுமதியை ஊக்கப்படுத்தி சதவிகிதத்தை அதிகப்படுத்தினால் அன்னிய செலாவனி கையிருப்பு அதிகமாகக் கூடும்.

    6. அன்னிய செலாவனி அதிகம் அளிக்கக் கூடிய ஜவுளித் துறையில் சரியான கவனம் இதுவரை செலுத்தப்படவில்லை. இந்தியாவிலிருந்து மூலப் பொருட்களை அதாவது பருத்தியை ஏற்றுமதி செய்துவிட்டு துணியாகவோ, ஆயத்த ஆடையாகவோ இறகுமதி செய்கிறோம். இதைத் தவிர்த்து ஆயத்த ஆடைகளாவோ அல்லது துணியாகவோ ஏற்றுமதி செய்தால் மிக அதிகமான வருமானம் பெறலாம்.

    அன்னிய செலாவனி அதிகம் கையிருப்பு வைத்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் மற்றும் ரூபாயின் மதிப்பை அதிகப்படுத்துவதற்கான வாய்ப்புகள் போன்ற வாய்ப்புகளை பயன்படுத்தினால் பொருளாதார நிலை சீரடையலாம் என்பது வல்லுநர்களின் கருத்து.

    அடுக்கு மாடிக் குடியிருப்புகள் மற்றும் குடியிருப்புகளுக்கான கட்டுமானப் பதிவுகளுக்குரிய சேவை வரி விகிதங்கள் கட்டிடங்களுக்குரிய எண்ணிக்கையை வைத்து வரி விதித்திருப்பதைத் தவிர்த்து கட்டுமானங்களின் மதிப்பின் அடிப்படையில் இந்த வரி விதிப்பு இருக்குமானால் அரசு ஊழியர்களும் மத்தியதர மக்களும் பெரும் பயன் அடைவார்கள். பதினொரு வீடுகளுக்குக் குறைவாக கட்டக்கூடிய நிறுவனங்களுக்கு இந்த வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. ஆனால் ஒரு வீட்டின் மதிப்பு 1 கோடியோ, 2 கோடியோவாகா இருந்தாலும் அதற்கு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது.குறைந்த மதிப்புள்ள வீடுகளுக்கு அதாவது 25 லட்சம் மதிப்புள்ள 100 வீடுகள் கட்டும் போது எண்ணிக்கையின் அடிப்படையில் வரி விதிக்கப்படுகிறது. இந்த வரி விதிப்பால் பாதிக்கக் கூடியவர்கள் மத்திய தர பிரிவினரும், அரசு ஊழியர்கள் மட்டுமே. ஆகவே அரசு தங்களுடைய நிதி நிலை அறிக்கையில் வீட்டின் மதிப்பின் அடிப்படையில் இந்த வரிவிதிப்புகளை விதிக்க முன் வந்தால் நலம்.

    Share
  • காற்று வாங்கப் போனேன் : பகுதி 3 & 4

    கே.ரவி

    மீண்டும் காற்று வீசுகிறது. சாதாரணக் காற்று இல்லை. சண்டமாருதம் என்று சொல்லப்படும் சூறைக்காற்று. ஒரு நிமிடம் என்னோடு வாருங்கள்; காலப்பரப்பில், அல்லது, காலப் பரபரப்பில், சற்றுப் பின்னோக்கி வாருங்கள். பல நூற்றாண்டுகள் இல்லை. சில ஆண்டுகள் அவ்வளவுதான்!

    நாள்: 1990, கோடை விடுமுறை. நேரம்: பிற்பகல் சுமார் 2 மணி. இடம் ஏலகிரி (வாணியம்பாடி அருகில்). அங்கே, ‘சாந்தாமணி லாட்ஜ்’ என்றொரு விடுதியில் ஒரு பெரிய பட்டாளத்தோடு நான் தங்கியிருந்தேன். நான், ஷோபனா, என் வளர்ப்புத் தந்தை, என்னிரு பெண்மக்கள், அவர்களுடைய தோழர்கள், தோழிகள் சுமார் எட்டுப் பேர், இவர்களோடு என் நண்பனும், அவன் மனைவியும். அப்பா! இப்பொழுது நினைத்தாலும், அப்பொழுது எப்படி இப்படியொரு பெரும்படையோடு ஏலகிரி, கோடைக்கானல் என்று ஆண்டுதோறும் சென்று கொண்டிருந்தேனோ என்று பிரமிப்பாக இருக்கிறது!

    images (5)

    அன்று பிற்பகல், லாட்ஜுக்குள் மின்சாரம் இல்லை. ஒரே புழுக்கம். லாட்ஜின் பின்புறம் இருந்த பெரிய தோட்டத்துக்குப் போயமர்ந்தேன். வெளியிலும் காற்றில்லை. வானத்தில் ஒரே மேக மூட்டம். சற்று இருண்டிருந்தது. அப்பொழுது ஷோபனாவும், என் நண்பனும் அங்கே வந்து நான் ஏன் தனியாக அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறேன் என்று கேட்கவும், ‘காற்று வாங்க வந்தேன், ஆனால் காற்றே இல்லை’ என்று சொல்லிவிட்டுத் திடீரென்று பாடத் தொடங்குகிறேன். பாடல் ப்ருந்தாவனி ராகத்தில், வட இந்திய க்ராமிய வயல்வெளிப் பாடல்களின் சாயலில், மடமடவென்று வருகிறது.

    பாடணும் நான் பாடணும்
    அதக்
    கேட்டுப்புட்டுக் காத்துவந்து தந்தனத்தோம் என்றுதாளம்
    போடணும் நான் பாடணும்“.

    நான் பாடிக்கொண்டே இருக்கிறேன், திடீரென்று பாட்டுக்குப் பின்னணி இசைபோல் ஊய்ய்ய் என்றொரு சத்த்த்த்தம்! காற்று! சூறைக்காற்றில் புழுதி கிளம்பி எங்கள் கண்களை மறைக்க, மரங்கள் தலைவிரித்தாட, இலைகள் பறக்கப் பாட்டு மட்டும் நிற்காமல் தொடர… ஒரே அமளிதான்!

    “பாடணும் நான் பாடணும்austin-rosacrutions
    அதக்
    கேட்டுப்புட்டுக் காத்துவந்து தந்தனத்தோம் என்றுதாளம்
    போடணும் நான் பாடணும்

    பித்தெடுத்துக் காதலுடன் இத்தரையத் தொட்டுத்தொட்டு
    அத்தன மரங்களுமே ஆடணும்
    அத்தன மரங்களுமே ஆடணும்
    சத்தங்கள வுட்டுப்புட்டு சந்தத்துலக் கட்டுப்பட்டுச்
    சத்தங்கள வுட்டுப்புட்டு சந்தத்துலக் கட்டுப்பட்டுச்
    சிட்டுக்குரு விக்கூட்டம் கூடணும்
    நான் பாடணும்

    மேகத்துலத் தோகவிரிச் சாடுகிற வானமயில்
    ஓ ஓ ஓ ஓ
    மேகத்துலத் தோகவிரிச் சாடுகிற வானமயில்
    ராகத்துல சிக்கித்தடு மாறணும் – என்
    ராகத்துல சிக்கித்தடு மாறணும்
    மோகவலை போலவொரு தாளஅலை பின்னிப்பின்னி
    பின்னிப்பின்னிப் பின்னிப்பின்னிப் பின்னிப்பின்னிப் பின்னிப்பின்னி
    மோகவலை போலவொரு தாளஅலை பின்னிப்பின்னி
    மூச்சுத்தெண றும்படிப் பாடணும்
    நான் பாடணும்

    பாட்டுக்கொரு போதையுண்டு போதைக்கொரு பாதையுண்டு
    ஏ ஏ ஏ ஏ
    பாட்டுக்கொரு போதையுண்டு போதைக்கொரு பாதையுண்டு
    பாத்துநடந் தால்பறந் தோடலாம்
    பாத்துநடந் தால்பறந் தோடலாம்
    கூட்டுக்குள்ள நீயிருந்து வாடுறது ந்யாயமில்ல
    கூட்டுக்குள்ள நீயிருந்து வாடுறது ந்யாயமில்ல
    கூடவந்து களியாட்டம் போடலாம் – என்
    கூடவந்து களியாட்டம் போடலாம்

    பாடலாம் நாம் பாடலாம் – அதக்
    கேட்டுப்புட்டுக் காத்துவந்து தந்தனத்தோம் என்றுதாளம்
    போடலாம் நாம் பாடலாம்

    பாட்டு முடிந்து பத்து நிமிடங்கள், காற்றுச் சுழன்று சுழன்று அடித்துவிட்டுக் களைத்துப்போய் மெல்ல விசையிழக்கும் வரை, நாங்கள் எதுவும் பேசிக்கொண்டதாக நினைவில்லை. நான், ஷோபனா, அந்த நண்பன், ஒரு கனத்த மெளனம்!

    அந்த நண்பன் ஒரு நல்ல கவிஞன். நல்ல குரல்வளத்தோடு கணீரென்று பாடும் கவிஞன். கிருஷ்ண பக்தியில் தோய்ந்த கவிஞன். மராட்டிய அபங் பாடல்களை அவன் பாடிக் கேட்க வேண்டும். இந்த நிகழ்ச்சி நடந்து முடிந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழன் எக்ஸ்பிரஸ் என்ற இதழின் ஆசிரியராகப் பல ஆண்டுகள் பணிபுரிந்து, சில ஆண்டுகளுக்கு முன் காலமாம் சூறைக் காற்றால் அடித்துச் செல்லப்பட்ட அந்த நல்ல நண்பன், அமரன் சிவகுமாரை நினைத்துக் கொள்கிறேன்.

    மீண்டும், இல்லை, மீண்டும் மீண்டும் காற்று வரும், வந்து கொண்டே இருக்கும். சந்திப்போம்.

    காற்று வாங்கப் போனேன் – பகுதி 4

     

    மேலே சொன்ன சம்பவம் நடப்பதற்கு இரண்டு நாட்கள் முன்னால், அதே ஏலகிரி, அதே சாந்தாமணி லாட்ஜ். அதே நபர்கள். ஆம், ஷோபனா, சிவகுமார், நான். லாட்ஜ் அறையில் அமர்ந்திருந்தோம். அப்பொழுதுதான் ஒரு பாடல் உதயமாகியிருந்தது. வழக்கத்துக்கு மாறாக அதை உடனே எழுதியும் வைத்திருந்தேன். மற்ற இருவருக்கும் நான் பாடிக் காட்டுகிறேன்.

    என் குரல் ஸ்ருதியோடு போராடும் இழுபறியைப் பொருட்படுத்தாமல் என் நண்பர்கள் என்னைப் பாடச் சொல்லி, மன்னிக்கவும், பாடவிட்டுக் கேட்டிருந்ததெல்லாம் நட்புக் கருதியும், எனக்குள் இருந்து வரும் கவிதையூற்றின் மேல் உள்ள மதிப்பினாலும்.

    திணறித் திணறிப் பாடுகிறேன், சிவரஞ்சனி ராகத்தில் (இந்த ராகத்துக்கு ‘சங்கரந்தனப்ரியா’ என்று இன்னொரு பெயரும் உண்டாமே!):

    நினைத்துக் கொள்ள நிமிடம் போதும் – உன்னை
    நினைத்துக் கொள்ள நிமிடம் போதும் – அதை
    நிலைக்க வைக்கும் கவிதை யோகம்
    உனக்கும் எனக்கும் உள்ள பந்தம்
    ஒன்று மட்டும் என்றும் சொந்தம்
    இறைவனே இறைவனே – என்னை
    எழுதிடும் கவிதையே

    மனைவி மக்கள் என்பதெல்லாம்
    மரணம் வரையிலே
    மனையும் பொருளும் தேகத்தைநான்
    மறக்கும் வரையிலே – நீ
    . . . . .

    இந்த இடத்தில் ஏனோ என் தொண்டையடைத்துக் கொண்டுவிட்டது. மேலும் பாட வரவில்லை. நான் திணறுவதைப் பார்த்த சிவகுமார் உடனே என்னிடமிருந்து கவிதைத்தாளை எடுத்து த் தொடர்ந்து வந்த வரிகளைப் பாடியதும் மெய்மறந்து போனேன். அடுத்த சரணத்தை நானே சுதாரித்துக் கொண்டு பாடி முடித்தேன்.

    உன்னை-siva
    நினைத்துக் கொள்ள நிமிடம் போதும்
    நிலைக்க வைக்கும் கவிதை யோகம்
    உனக்கும் எனக்கும் உள்ள பந்தம்
    ஒன்று மட்டும் என்றும் சொந்தம்
    இறைவனே இறைவனே – என்னை
    எழுதிடும் கவிதையே

    மனைவி மக்கள் என்ப தெல்லாம்
    மரணம் வரையிலே
    மனையும் பொருளும் தேகத் தைநான்
    மறக்கும் வரையிலே – நீ
    ஏற்றி வைத்த தீபம் மட்டும்
    அணைவ தில்லையே – எந்தக்
    காற்று வந்து மோதி னாலும்
    கலைவ தில்லையே
    இறைவனே இறைவனே – என்னை
    எழுதிடும் கவிதையே

    உன்னைப் பாடும் எண்ணம் என்னுள்
    யார் விதைத்தது – அந்தப்
    பாட லுக்குள் பரவ சத்தை
    யார் வளர்த்தது
    பாடப் பாடத் திரைய றுந்து
    நான் விழுந்தது
    பாடல் உந்தன் பேர்ம றந்து
    தேன் பொழிந்தது

    உன்னை
    நினைத்துக் கொள்ள நிமிடம் போதும்
    நிலைக்க வைக்கும் கவிதை யோகம்
    உனக்கும் எனக்கும் உள்ள பந்தம்
    ஒன்று மட்டும் என்றும் சொந்தம்
    இறைவனே இறைவனே – என்னை
    எழுதிடும் கவிதையே

    ‘எந்தக் காற்று வந்து மோதினாலும் அணைவதில்லையே’ என்று சிவகுமார் பாடிய மெட்டு வெகு அலாதியாக என்னை ஈர்த்தது. நானே அந்த வரியைப் பாடியிருந்தால் அவ்வளவு அழகாக மெட்டு அமைந்திருக்க வாய்ப்பில்லை. என் மனத்தில் எழுந்த இசைக் காற்றைச் சற்றே திசைத்திருப்பி மலையமாருதமாய் வளையவரச் செய்த சிவகுமாரை மறக்க முடியுமா?

    இப்படியாக என் வாழ்வில் காற்றும் கவிதையும் எத்தனைமுறை உறவாடியிருக்கின்றன!

    முன்பொருநாள், இசைக்கவி ரமணனும் நானும் …..

    (தொடரும்)

    Share