Blog

  • உனக்கே உனக்காக – 2

    இசைக்கவி ரமணன்

    04_air

    எப்படி?

    எப்படி வந்தாய் உள்ளே?
    எல்லா வாசலும் பூட்டிக் கிடக்க
    சன்னல்களெல்லாம் சாத்தியிருக்க
    நெஞ்சக் குழியில் சுவாசம் நிறுத்தி
    இதயத் துடிப்பையும் நிலைக்கவைத்து
    ஏதோ கொஞ்சம் இறுமாந்திருந்தேன்

    எப்படி வந்தாய் உள்ளே?
    ஏதோ கொஞ்சம் இறுமாந்திருந்ததே
    போதுமென்று புன்னகைக்கிறாயா?
    கன்னம் மேவும் மின்னலினாலே
    கன்னம் வைத்துக் கண்சிமிட்டுகிறாயா?

    எப்படி? ம்…எப்படி?
    சுரங்கப் பாதை குடைந்து, கவிதையின்
    சுருதி ஊற்றில் கலந்துகொண்டு, ஒரு
    சொல்லின் நிழலில் ஒளிந்து, அந்தரங்க
    முற்றத்தில் முத்தாய் உதிர்ந்தாயா?

    எப்படி? வேறெப்படி? ம்..?
    காளியிடம் உனக்குப் பழக்கமுண்டா? அவள்
    காலைப் பிடித்து சாதித்தாயா?
    மாயக் காரியை மயக்கிவிட்டாயா?
    மண்குடிசைக்குள் மாளிகை விளக்காய்..

    எப்படி? எப்படித்தான் சொல்லேன்?
    ஊஹூம்…
    நீ எதற்குச் சொல்லப் போகிறாய்?
    சாவகாசமாக அமர்ந்து
    சாகடித்த கதைகளை வரிவரியாய்
    எங்கேனும் சொல்லுமா எந்தப் புலியேனும்?
    ஓ!
    முற்றும் என்னை முடித்துவிட்டு
    முகத்தில் அதென்ன கோணல்?
    ஆ!
    வந்திருக்கிறார்களாம்!
    வரவேற்கவில்லையாமாம்!!

    அழைத்தோ அழைக்காமலோ
    வாசலில் தயங்கி நிற்போரைத்தான்
    வரவேற்பார்கள் பார்த்திருக்கிறோம்
    அத்துமீறி வந்தவர்களுக்கு
    ஆரத்தி கேட்கிறதா?
    தீர்த்துக்கட்ட வந்தவர்களுக்கு
    திவ்யப் பிரபந்தமா?!

    நீதியைக் காட்டிலும் அநீதியின் குரல்தான்
    நெஞ்சைப் பிசைகிறது…

    சரி சரி
    அந்த அறையில்
    மேசையில் இருக்கும் என்
    மூக்குக் கண்ணாடியைக் கொண்டுவா

     

    Share
  • திருமால் திருப்புகழ் (107)

     

    கிரேசி மோகன்

     

     Bhagavatham -Rukmini haranam Keshav
    Bhagavatham -Rukmini haranam Keshav

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)
    ———————————————————
    ’’கண்ணன் வெண்பாக்கள்’’
    ———————————————–

    Bhagavatha - Vamana avatara - Keshav
    Bhagavatha – Vamana avatara – Keshav

    கள்ளா குருவாயூர், பிள்ளாய் வருவாயே,
    உள்ளம் நிறைவாக என்முன்னே, – தெள்ளிய,
    மாமுனிக்கு மாதவா, காமினிக்கு காதலா,
    யாமினிக்க வாயாத வா….(150)

     
    கனிச்சுவை ராதை, கமலஇதழ் கவ்வி,
    துணிச்சலுடன் முத்தம் திணித்து, -அனிச்ச
    மலராள் அலறும்முன், மன்னிப்பு கேட்பான்,
    தளரான் எதற்கும் துணிந்து…(151).

     
    கண்ண புரத்துக், கருமணியை கற்கண்டை,
    வண்ணம் சிறுத்து வடிவாகி, -முன்னம்,
    வரமேற்று விண்ணளந்த, வாமன விக்ரம்,
    சிரமுற்றோர் இருதாள் சரண்….(152)

     
    கண்ணபிரான் காயாம்பூ, வண்ணபிரான், வெண்ணைமண்,
    தின்னபிரான், நற்கீதை சொன்னபிரான், -பின்னமுறான்,
    முன்னவனாம் தென்மதுரை, அன்னையவள் அண்ணனையே,
    எண்ணவரும் ஏகாந்தம் இங்கு….(153)

    164486_4339481400471_1764566644_n

    பாரதியாருக்கு நன்றி
    ———————
    கண்ணனென் சேவகன், கண்ணனென் காவலன்,
    கண்ணனென் மந்திரி, நண்பனென, -சொன்னவன்
    கண்ணனென் சாக்லேட், கிருஷ்ணாவாய் ஆக்கினான்,
    புண்ணிய மாச்சென் பிறப்பு….(154)

     
    கண்ணிநுண் தாம்பினால், கட்டுண்ட காரணம்,
    அன்னையின் அன்பினாலா, அல்லது, -கண்ணனே,
    ஓயாத லீலையின், மாயா வசப்பட்டு,
    ஆயாசம் ஆனதா லா….(155)

    —————————————————————————————————-

    படங்களுக்கு நன்றி:

    http://bhagavatham.blogspot.in/

    Share
  • வாழ்வாங்கு வாழ்க!

    இசைக்கவி ரமணன்

    images (3)

    அன்புக் குழந்தைகளே!

    வணக்கம்!

    நன்றியுள்ள தந்தை வணங்குவதும் நன்றுதான்! ram1
    நல்லன்பில் வாழ்த்துவதும் வணங்குவதும் ஒன்றுதான்!
    என்வாழ்வில் பூரணத்தை எய்தியநாள் இன்றுதான்!
    எல்லோர்க்கும் என்போலே பிள்ளைவாய்த்தால் நன்றுதான்!

    ஏழைவீட்டுக் கூரையிலே சுரைக்கொடிதான் அலங்காரம்
    என்றிருந்த நாட்களிலே வந்து பிறந்தீர்! என்னை
    வாழவைக்கும் வளமாக வாசலிலே வரமாக
    வகைவகையாய்க் கண்முன்னே வளர்ந்து சிறந்தீர்!
    மோழையிலே மெளனத்தே மூச்சடக்கும் யோகியினை
    மூட்டைகொஞ்சம் தூக்கவைத்து முன்பு நடந்தீர்! உங்கள்
    வாழ்வையுங்கள் வழியில்சென்று வாழ்ந்துகாட்டுகின்ற போது
    வலியெல்லாம் சர்க்கரையாய் இனிக்க வைக்கிறீர்!

    நமதுகுணம் பிள்ளைகளின் சுமையாகும் என்னும்வார்த்தை
    நல்லவேளை பொய்க்கவைத்தீர் நன்றி நன்றி!!
    உமதுகுணம் மலரின்மணம் ஊறிவரும் நிலவின்நிறம்
    உம்மைப்பார்த்து வியக்கின்றேன் இன்றும் இன்றும்!!

    என்மகவாய் எப்படித்தான் வந்து பிறந்தீர்!ram2
    எந்தக்கடன் தீர்ப்பதற்காய் என்னை அடைந்தீர்!
    பொன்னிலவு பழங்குடிசை விரிசலின் வழியே
    புன்னகைத்தல் போலாநீர் என்னிடம் வந்தீர்?

    உம்மைவாழ்த்தும் முன்பு இந்த உலகை வாழ்த்துவேன்
    உள்ளத்தின் அடியிலிருந் தொன்று சொல்லுவேன்
    எம்மைப்போலப் பிள்ளைச்செல்வம் எவர்க்கும் வாய்க்கவே!
    எங்களைப்போல் எல்லோரும் இனிது வாழ்கவே!

    கண்முன்னே கதிரவனாய் நீங்கள் விரிக
    கமலம்போல் கண்டுகண்டு நாங்கள் மலர்க
    பண்ணிசைந்த கவிதைபோல் மனைவி மக்களும்
    பக்கத்தே அன்புசெய்யப் பரந்து வாழுக!

    ஆயிரமாய்ப் பிறைகளுடன் நூறு வசந்தம்
    ஆரோக்யம் ஆன்மபலம் ஆன்ற சாதனை
    தாயினும்சி றந்ததேசம் வாழ உழைத்து
    தந்தையோரம் கண்பனிக்கத் தழைத்து வாழ்கவே!

    ரமணன்

     

    Share
  • இங்கே எப்படி நீ?

     

    உனக்கே உனக்காக – 1

    tumblr_static_catch-a-dream-spirit-alchemy

    இடிந்து கிடக்கிறது கோயில்
    இறைவன் எழுந்து இறங்கிச் சென்று எத்தனையோ நாட்களாயின

    கடைசித் தருணத்து நிலைகுத்திய கண்கள் போலே
    காரை பெயர்ந்து, ஒரு
    கைதட்டலில் உதிர்வதற்காய்க் காத்திருக்கும் செங்கல்கள்
    அவற்றின் இடுக்கிலும் எப்படியோ கண்விழித்து
    அசையாமல் நிற்கிறது ஆலஞ்செடி
    பொருத்தமற்ற இடத்தில்
    பூவும் அருவருப்பு

    இது மெளனமல்ல
    இது வானத்தின் அடிவயிற்றையும் கலக்கும்
    வாழ்வில்லாத நிசப்தம்

    அது சந்நிதியல்ல
    அது கடவுள் காலி செய்துவிட்ட,
    ஒரு
    மாறுதலையாவது தரும்
    மரணமும் ஸ்தம்பித்துவிட்ட அவலம்
    ஆம்
    சிதைவுகளில்தான் அவலத்தின் குரூர வடிவங்கள்
    சித்திரிக்கப்படுகின்றன..

    அழுகை நின்றாலும் விசும்பல் தொடர்வதுபோல்
    வெளவால்களின்
    நாற்றங்கள் மட்டும் தொங்கிக்கொண்டிருக்கின்றன
    நாராசத்தின் மாறாத பதிவுபோல்.
    சுவர்களெல்லாம் புற்றாகவும் புதர்களாகவும்
    சுருதிமாறிப் பேதலிக்கின்றன

    இங்கே..இங்கே!!
    எப்படி நீ? எதற்கு?
    சிதையில் விழுந்த மொட்டின் முகையவிழ்க்கச்
    சித்திர நிலவு சிங்காரித்துக்கொண்டு வந்ததுபோல்
    என்னத்தைத் துளிர்விக்க இங்கே போய்
    எழுந்தருளியிருக்கிறாய்?.

    சொச்சமாய் இன்னும்
    ஒரு முற்றுப்புள்ளியில் ரேகைபோல்
    தொக்கிக் கிடக்கலாம் கோயில் வாசனை..

    உறைந்தும் காய்ந்தும் கரைந்தும் போனாலும்
    உயிரே விம்மி உதிர்ந்த கண்ணீரின்
    ஒற்றைத் துளியின் உணர்வு
    கதைசொல்லக் காத்திருக்கலாம்…

    சாம்பலிலிருந்து தலைசிலுப்பிக்கொண்டு எழுவதற்காய்
    ஒரேயொரு மழைத்துளியின் முத்தத்திற்காக
    ஊசிமுனை விதையொன்று தவத்தில் இருக்கலாம்…

    என்றெல்லாமா நம்பி வந்தாய்!
    இத்தனை வெகுளித்தனம் தேவதைக்குப் பொருந்துமா?

    இல்லை, ஒருவேளை
    இன்னும் பதறாமல் இருக்கும் பலிபீடத்தில்
    அங்கும் இங்குமாய் மல்லாந்திருக்கும்
    காதல் என்னும் பேதைமையைப்
    பார்வையால் திரட்டிப் படையலிட வந்தாயா?
    யாருக்கு?!

    முடிவில்லாத ஒரு முறிவு
    முயற்சியின்றிக் கிடக்கிறது
    எதனாலோ தூண்டப்பட்டு, அல்லது
    எதையோ தூண்டுவதற்கு
    முதலொன்று வந்து
    முன்னே நிற்கிறது

    வெற்றிகாண முடியாத வெறுமையும்
    தோல்வியறியாத முழுமையும்
    எதிரெதிரே நிற்கின்றன
    என்ன நடக்கும் என்பது
    எழுந்து இறங்கிச் சென்ற இறைவன்
    ஏறிவந்தாலாவது தெரியுமா?

     

    Share
  • நீயிருக்கிறாய்

     

                                                                                                  உ

                                    ஶ்ரீராமஜெயம்

       

     தமிழ்த்தேனீ

    rama-1

    நீயிருக்கிறாய் எங்கும் நீயிருக்கிறாய்

    நீ இருக்கும் இடத்திலேயே தானிருக்கிறாய்

    நீ இருக்கிறாய்  நீக்கமற எங்கும்

    நிறைந்திருக்கிறாய்

     

    தாயிருக்கும் இடத்திலெல்லாம் நீயிருக்கிறாய்

    சேயிருக்கும் இடத்திலும் நீயிருக்கிறாய்

    தீயிருக்கும் இடத்திலேயும் நீயிருக்கிறாய்

    காயிருக்கும் இடத்திலும் நீயிருக்கிறாய்

    கனிந்திருக்கும்  பழத்திலும் நீயிருக்கிறாய்

    மரத்துக்கும்  விதையாக விதைக்குள் மரமாக

    நீயிருக்கிறாய் எங்கும் நிறைந்திருக்கிறாய்

    மலைக்குள்  குழம்பாக நீயிருக்கிறாய்

    மலைமேல் பனியாக நீயிருக்கிறாய்

    மண்ணுக்கு உரமாக  விண்ணுக்கு மழையாக

    கண்ணுக்கு இமையாக  இமைக்குள் கண்ணாக

    எண்ணுக்கும் எழுத்துக்கும் இலக்கணமாய்

    இலக்கணத்தின்  இலக்கியமாய் இலக்கியத்தில்

    இலக்கணமாய் எக்கணமும்  மறையாத

    மறைபொருளாய் கண்ணுக்குத் தெரியாமல்

    நீயிருக்கிறாய் மறைந்தே இருந்தாலும்

    பிறையாய்த் தோன்றி நிலவாய் ஒளிர்ந்து

    பிழம்பாய்த் தோன்றி கதிராய் மலர்ந்து

    கதிரவன் போலே மறையாய் ஒளிர்ந்தே

    நீயிருக்கிறாய் எங்கும் நிறைந்திருக்கிறாய்

    பாவுக்குள் கருவிருக்கும் பூவுக்குள் தேனிருக்கும்

    தாய்மையெனும் பாலிருக்கும் பாலுக்குள் நெய்யிருக்கும்

    தாய்மையனும் மெய்யிருக்கும்  தாய்  போல அன்பிருக்கும்

    மாந்தர் இதயத்திலே நீயிருக்கிறாய் என்றும் நிறைந்திருக்கிறாய்

     

     

    நீரிருக்கும் இடத்திலும் நீயிருக்கிறாய்

    நிலம் இருக்கும் இடத்திலெல்லாம் நீயிருக்கிறாய்

    வேருக்குள் நீராக நீருக்குள் வேராக

    யாருக்கும் தெரியாமல் உயிருக்கும் 

    உயிராக  நீயிருக்கிறாய்

    நிலமில்லா வானத்திலும் நீயிருக்கிறாய்

    வானிலா இல்லாத நிலத்திலும் ஒளியாக

    ஒளியிலா இருளிலும்  இருளாக ஒளியாக

    ஒளிர்கின்ற இருளாக  இருளகற்றும் ஒளியாக

    எல்லாமே நீயாக  இல்லாமல் இருக்கிறாய்

    எங்கும் நிறைந்திருக்கிறாய்

     

     

    வேற்று மொழியானாலும் வேற்று மதமானாலும்f82186c1-6ed6-48a5-b65e-16efdbece450_S_secvpf

    வேற்று இனமானாலும்  வேற்றுமை இல்லாமலே

    காற்றிருப்பதைப் போலே நீயிருக்கிறாய்

    காற்றோடு காற்றாகக் கலந்திருக்கிறாய்

    காணும் உயிர்க்கெல்லாம் நீக்கமற நிறைந்தே

    ஊணிலும் உயிரிலும் போக்குவரத்தாய்

    மூச்சுக் காற்றாக. எங்கும் நிறைந்திருக்கிறாய்

    பேச்சாக சொல்லாக செயலாக விளைவாக

    அடிப்படையின் அணுவாக அணுவைக்  கூறிட்டுப்

    பிளந்தாலும்  பேரணுவாக தீப்பிழம்பான உருவத்தில்

    நீயிருக்கிறாய் எங்கும் நிறைந்திருக்கிறாய்

     

    இல்லையென்றே சொல்வோர்க்கும் இல்லாத

    இடமில்லை என்போர்க்கும் இதயத்திலே ஆழ்ந்து

    நீயிருக்கிறாய்  எங்கும் நிறைந்திருக்கிறாய்

    பொல்லாதவர்க்கும்  நல்லவர்க்கும் நடுநிலையாளருக்கும்

    சொல்லாமல் கொள்ளாமல்  உள்ளுக்குள்ளே ஆழ்ந்து

    நீயிருக்கிறாய் எங்கும் நிறைந்திருக்கிறாய்

    கல்லுக்குள் தேரை போல் நீயிருக்கிறாய்

    தேரைக்கும் உணவாக  நீயிருக்கிறாய்

    நீயிருக்கிறாய் எங்கும் நிறைந்திருக்கிறாய்

    கல்லாக வடித்தாலும் கவனமாய்ப் படித்தாலும்

    உள்ளார்ந்த உணர்வாய் நீயிருக்கிறாய்

    எங்கும் நிறைந்திருக்கிறாய்

     

    அன்புடன்

    தமிழ்த்தேனீ

     

    Share
  • திருமால் திருப்புகழ் (106)

     

    கிரேசி மோகன்

    Govinda. Acrylic on paper. Keshav
    Govinda. Acrylic on paper. Keshav

    ————————————————————————————————————
    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)
    ——————————————————–
    ‘’கண்ணன் வெண்பாக்கள்’’
    —————————————————–
    கீதைக் கடமையைக், கண்ணன் மறந்துகாதல்,
    ராதைப் பலனை எதிர்ப்பார்த்து, -போதைப்,
    படபடப்பில் பார்க்கின்றான், பாவை வரவுக்(கு)
    அடகடவு ளேயென்ன திது….(142)

     

    Govinda. #krishnafortoday Keshav
    Govinda. #krishnafortoday
    Keshav

    ஹரிச் சுவடி
    —————-

    அந்தரி அண்ணா கோவிந்தா
    ஆவுடை அப்பா கோவிந்தா
    இந்திர லோகம் கோவிந்தா
    ஈ கொசு எனக்கு கோவிந்தா
    உந்தன் மலையில் கோவிந்தா
    ஊர்வேன் புழுவாய் கோவிந்தா
    எந்த நாளுமே கோவிந்தா
    ஏகாந்த சேவை கோவிந்தா
    ஐந்து பொறிகட்கு கோவிந்தா
    ஐயமிட்டிடு கோவிந்தா
    ஒன்றி உரைப்போம் கோவிந்தா
    ஓம் நம நாரண கோவிந்தா….(143)

    கேசவ் சாக்லேட் கிருஷ்ணா ஓவியம் பார்த்து
    —————————————————————————-

    இடைப்பிள்ளை உந்தன், இசையில் மயங்கி,
    மடிப்பால் நிலத்தில் மணக்க, -கடைக்காலை,
    கன்றென எண்ணிக், கறவை வருடிட,
    நின்றிடென் நெஞ்சில் நிலைத்து….(144)

     

    இப்போ(து) இதுவென்று, அப்போ(து) அதுவென்று,
    எப்போ துமலைந்தேன் எம்பிரானே, -தப்பேதான்,
    ஒப்பில்லா அப்பனே, ஒப்புக்கொள் கின்றேன்நான்,
    துப்பில்லாத என்னைத் துலக்கு….(145)

    இல்லா ததைத்துரத்தி, செல்லா ததைச்சேர்த்து,
    பொல்லா தவனென்ற பேர்வாங்கி, -நில்லாது,
    விட்டிலென மாயா, வெளிச்சத்தில் வீழாது,
    விட்டலிருள் வண்ணன்தாள் வீழ்….(146)blogger-image-564804638

    காமியானாய் ராதைக்கு, நேமியாவோய் ராட்சசர்க்கு,
    பூமியாவாய் போற்றும் அடியார்க்கு, -மாமியானாய்,
    சாமிநாத ஸ்வாமிக்கு(வேலர்க்கு), நாமிருவர் சந்தித்தால்,
    ஏமிரா நீயார் எனக்கு….(147)

    காதலில் ராதையைக், காண ரகசியம்,
    சீதையை மீட்க அவசரம், -கோதையைப்,
    பெண்ணெடுக்கப் போகையில், பின்னடைந்தீர், பக்தியில்
    பெண்ணுருகும் பாசுரம் கேட்டு….(148)

    கலிமுடிவில் ஓரடியை ஆலிலையில் உண்டாய்
    பலிமுடியில் வேறடியை வைத்தாய் -தெளிவடைய
    நூற்றிடுவேன் வெண்பாக்கள் நீர்வண்ணா வாழ்த்திடுவாய்
    ஈற்றடி யாக இருந்து….(149)

    ———————————————————————————————————————–

    படங்களுக்கு நன்றி :

    http://kamadenu.blogspot.in/2014_03_01_archive.html

     

    Share
  • நானும் நீயும்

    இசைக்கவி ரமணன்

    1303925-bigthumbnail
    நான் கொடுக்கவுமில்லை
    நீ எடுக்கவுமில்லை
    எந்தன் இதயத்தில்
    உந்தன் இடம்

    தானும் தானுமாய் இருந்தது
    நானும் நீயுமாய்ப் பிரிந்தது
    தேனும் பாலுமாய்க் கலந்தது
    வானும் வானுமாய் இணைந்ததோ?

    கிழக்கு ஜன்னல் வானமும்
    மேற்கு ஜன்னல் வானமும்
    மொட்டை மாடி வானத்தில்
    கைகுலுக்கி முத்தமிட்டுக்
    காணாமற்போய்த் தானானதோ?

    இல்லை. அப்படி இல்லை இன்னும்.

    இறுகத் தழுவிக்கொள்ளும் போதெல்லாம்
    இடம் மாறுகின்றன இதயங்கள்
    இதனால்தான்
    இழந்ததாகவும் நுழைந்ததாகவும் அடைந்ததாகவும்
    ஏதேதோ உணர்வுகளும் விழைவுகளும்
    எப்போதும் தோன்றிக்கொண்டே இருக்கின்றன

    ஒன்று, தன்னை
    உணரத்தான்
    ஒன்றுபோல் இரண்டாய்
    இரண்டுபோல் ஒன்றாய்த்
    தானே மயங்கும் மாயத்தில்
    தயக்கமின்றித் தலைப்பட்டது

    சத்தியத்திற்குப் பாதைகள் கிடையாது, அந்த
    சந்நிதிக்குக் கதவுகள் கிடையாது, இது
    தத்துவமில்லை தரிசனம் என்பதைக்
    காதலைப்போல் வேறெதுவும் காட்டித் தராது

    என்னுயிரின் தேனூற்றே!
    எதிரே வா!
    இருமை இலாத அருமையை
    இருமையே உணர்த்தும் பெருமையை
    இவர்களுக்குக் காட்டுவோம் வா!
    இறுகத் தழுவியபடி
    இதழ்கள் அழுந்திப் பொருந்தியபடி
    இதயமொன்று இதயமொன்றில்
    இடைவிடாமல் தன்னைக் கரைத்தபடி……

     

    Share
  • காற்று வாங்கப் போனேன் 1&2

    -கே.ரவி-

    tumblr_l7s4lk4qtC1qc5cc5o1_500

    புழுக்கம் தாங்கவில்லை, உஸ் அப்பா! தோட்டத்தில் சென்று அமர்கிறேன். அப்பாடா, ஜில்லென்று ஒரு காற்று (‘காதல்’ இல்லை) என்னைத் தீண்டியது. இல்லை, சீண்டியது. ‘என்ன ஓய், கவிதை வேணுமா?’

    ஏனோ தெரியவில்லை, கவிதையிடம் எனக்கு அப்படியோர் ஈடுபாடு! வெறி! ஆங்கிலத்தில் சொன்னால், an obsession. ஏன்? காரணம் புலப்படவில்லை. என்ன விட்ட குறை தொட்ட குறையோ!

    சிந்தித்துப் பார்த்தால் கவிதையால் பெரிய சமூகப் பயன் இருப்பதாகத் தெரியவில்லை. ஏதோ ஒரு பொழுதுபோக்குச் சாதனமாகவே கவிதை பெரும்பாலும் பயன்படுவதுபோல் தோன்றுகிறது.

    இன்னும் சற்று அணுகிப் பார்த்தால் மனத்துக்கு ஒர் ஆறுதல் அளிப்பதாக, அல்லது, மனத்தைப் பண்படுத்துவதாக, இப்படி வேறு சில பயனுள்ள பணிகளைச் செய்யும் சாதனாமாக அது தெரியலாம். இதெல்லாம் என் கவிதைப் பித்துக்குக் காரணமாக இருக்க முடியாது.

    கவிதை எனக்குப் பயன்படுகிறது என்பதை விட, அதை நான் பயன்படுத்திக் கொள்கிறேன் என்பதை விட, ஒரு கருவியாகக் கவிதை என்னைப் பயன்படுத்திக் கொள்கிறதோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. கவிதையை ஒரு சாதனமாகவோ, வாகனமாகவோ என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. என்னை ஆட்கொண்ட ப்ரபஞ்ச சக்தி அது என்றே நம்புகிறேன். “நம்புவதே வழி என்ற மறைதனை நாமின்று நம்பி விட்டோம்” என்பது பாரதி வேதம்.

    மீண்டும் அறிவு குறுக்கிடுகிறது. அது சொல்கிறது: ‘இதெல்லாம் ஒருவித மாயா வாதம். ஆங்கிலத்தில் delusion என்பார்களே அதை போன்ற ஒரு மனநோய்.’

    அறிவு ஆயிரம் சொல்லும். அதனால்தான் அதைச் சிற்றறிவு என்கிறோம். அதைக் கடந்து போனால்தான் பேறறிவாகிய அருட்கடலில் நீந்த முடியும். கவிதை அந்தப் பேரறிவோடு சம்பந்தப்பட்டது. இதுவும் என் நம்பிக்கை!

    எப்படியாவது தன் உணர்வுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற துடிப்பே கவிதை எழுதத் தூண்டுகோல் ஆகிறது. அருகிலோ, எதிரிலோ இருக்கும் நபரிடம் தன் வியப்பையோ, சோகத்தையோ, சினத்தையோ, விரக்தியையோ ஒருவன் மிக எளிதாகப் பேசும் மொழியிலேயே பகிர்ந்து கொண்டுவிட முடிகிறது. அருகில், அல்லது, எதிரில் இல்லாத நபர்களுடனும் அதைப் பகிர்ந்து கொள்ள அவன் ஆசைப்பட்டால் அதைப் பிறகு படித்துப் பார்க்கக் கூடிய வகையில் எழுதி வைக்க நேரிடுகிறது. அச்சுத் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப் படாதபோது, எழுதி வைப்பவற்றைத் தக்க முறையில் பாதுகாக்க வசதிகள் இல்லாத போது, தான் சொல்வதைக் கேட்பவர் மனப்பாடம் செய்து அப்படியே பிறருக்குச் சொல்லக் கூடியவாறு சொல்லும் வழக்கம் உண்டாயிற்று. அதற்குச் செய்யுள் நடையே உதவியது.

    பேசும் மொழிகளாகவே இருந்துவிட்ட பல மொழிகளின் நடுவே, செய்யுள் மொழியாக உருவெடுத்ததால்தான், நன்றாகச் செய்யப்பட்டது என்ற பெயர் சம்ஸ்க்ருதத்துக்கு ஏற்பட்டதோ? பேச்சே செய்யுள் நடையில் அமைந்த மொழியாக வளர்ந்ததுதான் தமிழோ?

    அந்த விசாரணையை விட்டுவிடுவோம். மேலே சொன்னது ஓரளவு செய்யுள் தோன்றிய வரலாற்றின் அடிப்படையாக இருக்கக் கூடும். ஆனால், கவிதை . . . ! அதன் கதை வேறு!

    இந்தக் கணத்தில், என் மனத்தின் அடித்தளத்தில், “மனிதன் என்பவன் தெய்வமாகலாம்”, என்ற பழைய திரைப்பாடல் மெட்டில், “செய்யுள் என்பதும் கவிதை ஆகலாம்” என்று தொடங்கும் ஒரு முழுப்பாட்டு ஒலிக்கிறது. ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

    “சொல்லும் சொல்லும் சேரும் போது கானமாகலாம்
    சொல்கடந்து செல்லும் போது மோனமாகலாம்
    சொல்மலர்ந்து சுடரெழுந்து ஞானமாகலாம்
    செய்யுள் என்பதும் கவிதை ஆகலாம்”

    “செய்யுள் என்பதும்” என்பதில் உள்ள அந்த உம்மைக்கு எத்தனை உம்மா வேண்டுமானாலும் கொடுக்கலாம். என்ன அழுத்தம்!!

    கவிதை பற்றிச் சிந்தித்து ஒரு கட்டுரை எழுதும்போது இதென்ன குறுக்கீடு? அந்தப் பாட்டையே முணுமுணுக்கும் மனத்தை அடக்க முல்கிறேன். அட, மனத்தின் ஒரு மூலையில் எங்கோ ஒரு கேலிச் சிரிப்பொலி வேறு கேட்கிறதே!

    மன்னித்துக் கொள்ளுங்கள், இந்த அறிவு ரீதியான முயற்சியின் நடுவே ஒரு பாடல் குறுக்கிட்டது போல், வேடிக்கையான காட்சி ஒன்று, மனத்திரையில்தான், இப்பொழுது குறுக்கிடுகிறது.

    1642141-bigthumbnail

    உடல் பிரிந்து வெறும் ஆவியாக, (அப்படித்தானே நாம் சொல்லாக்கம் செய்து கொண்டிருக்கிறோம்!), திரிந்து கொண்டிருக்கும் ஓருயிர் (?), வான்விளிம்பில் தோன்றும் வர்ணஜாலங்களில் தன் நெஞ்சம் பறிகொடுத்து ( ஆவிக்கு நெஞ்சம் உண்டோ?), எப்படியாவது தன் வியப்பையும் பரவசத்தையும் வெளிப்படுத்தத் துடிக்கிறது. அது ஆவியா ஏதாவது தேவதையா? கந்தர்வக் கன்னியா? (எப்படி நான் அதைப் பெண்பால் என்று தீர்மானித்தேன்? என் பெண்ணீர்ப்புச் சக்தியின் தன்முனைப்பே காரணமோ!!!). அதே கணத்தில் பூமியில் நான் வானத்தின் அழகை ரசித்தபடி அதில் மனம் பறிகொடுத்து, மெய்மறந்த நிலையில் இருக்கிறேன். என் துடிப்பும், அந்தத் தேவதையின் துடிப்பும் ஓரளவு ஒரே அதிர்வு நிலையில் ஸ்ருதி சேர்கிறது. என்ன ஆச்சர்யம்! பாடலொன்று ( அடடா, மீண்டும் பாடலா?) குபீரென்று என் உட்செவியில் ஒலிக்கிறது. அதை உருவாக்கியது அந்தத் தேவதையா, நானா, வானா? யார் இதைத் தீர்மானிப்பது? பாடல் முண்டியடித்துக் கொண்டு வருகிறது:

    “நானும் அந்த வானும் இங்கே நந்த வனத்துத் தோழிகள்
    நாளும் இரவும் ஒளியும் நிழலும் நாங்கள் உருட்டும் சோழிகள்”

    யாரோடு யாரைப் பகிர்ந்து கொள்ள யார் பாடும் பாடலிது?

    அறிவைக் கொண்டு சொற்கள் தேடி அடுக்கிச் செய்யும் செய்யுள்கள் வேறு, கவிதை வேறு. அறிவுக்கு உருவாக்கும் ஆற்றல் கிடையாது. கற்பனையின் தனிப்பட்ட சக்தி அது. அறிவு ஆக்கும் கருவி இல்லை. காக்கும் கருவி. “அறிவு அற்றம் காக்கும் கருவி” என்பதே வள்ளுவர் வாக்கு. “அறிவினால் ஆகுவதுண்டோ?” என்பதும் வள்ளுவர் கேள்வி. எனவே அறிவு ஆக்கும் கருவி இல்லை. அதனால்தான் அதைச் சிற்றறிவு என்கிறோம். பேரறிவு என்ன என்றால் . . . ., அட, காற்று நின்று விட்டதே! மரம், செடி, கொடிகள் ஆடாமல் அசையாமல் மெளனத்தை அடைகாக்கின்றன. காற்று மீண்டும் வரக்கூடும், வரும். காத்திருக்கிறேன்; வரட்டும், மேலும் எழுதுகிறேன், வந்தால்!

    கரவொலிகள் ஓய்ந்துவிடும் ராக்கா லத்தில்lean-against-the-wind-by-Radu-Voinea
    காதருகே வந்துசில கவிதை சொல்லிப்
    பறந்துவிடும் தென்றலைநீ பார்த்த துண்டா
    பாவனையாய் அதுசொன்ன மந்தி ரத்தை
    மறந்துவிட முடியாது என்றைக் கேனும்
    மனத்துக்குள் இடிமுழக்கம் செய்யும் அன்று
    கரவொலிகள் ஓய்ந்துவிடும் கண்ணீர் சூழும்
    கடலுக்கு நடுவிலொரு தீ உண்டாகும் – கண்ணீர்க்
    கடலுக்கு நடுவிலொரு தீயுண் டாகும்

    கவிதையொரு மனோதர்மம் கலைந்த கூந்தல்
    கற்பனைகள் சிறகடித்துப் பறக்கக் கண்டும்
    புவியெல்லாம் புதுமெருகு தோன்றக் கண்டும்
    புலப்படாது திடீரென்று நடுங்கும் நெஞ்சில்
    தவிக்கின்ற உணர்வுகளில் தனிமை யூற்றில்
    தாகத்தால் மனம்வரண்டு தளரும் போதில்
    சுருக்கென்று முள்குத்திச் சிரித்துக் கொள்ளும்
    சுவடுகளே தெரியாமல் விரைந்து செல்லும் – வந்த
    சுவடுகளே தெரியாமல் விரைந்து செல்லும்

    நேருக்குநேர் அதையும் பார்ப்ப தற்கு
    நிச்சயித்த விழிகளுடன் காத்தி ருந்தேன்
    கார்மேகம் நகர்கிறது கனவு காட்டிக்
    கள்ளநிலா மறைகிறது சாரல் வேறு
    யார்யாரோ வருகின்றார் ஓடு கின்றார்
    அதைமட்டும் காணவில்லை அந்த நேரம்
    இதயத்தைத் தூளாக்கும் சிரிப்புச் சத்தம்
    இருள்கிழிக்க வந்ததொரு வெட்டு மின்னல்
    உதிரத்தைச் சூடேற்றி என்னை நானே
    உறிஞ்சுகிற ஆவேசம் அதற்குப் பேர்தான்
    உன்மத்தம் உயர்கவிதை உணர்ச்சி போதை
    எங்குமே செல்லாத புதிய பாதை

    ஓசைகளின் விளிம்பினிலே ஊஞ்ச லாடும்
    உற்சாகம் உள்மனத்தின் இயக்க மெல்லாம்
    ஆசைகளாய்ப் பரிணமிக்கும் அர்த்த ஜாமம்
    அனுபவங்கள் மலர்கின்ற உதய காலம்
    புரியாத நுணுக்கங்கள் புலனா கின்ற
    புதுப்பார்வை உலகாளும் புலமை யோகம்
    தரிசனக் கடலாடி விட்டு வார்த்தைத்
    தறிகளிலே சிக்குண்டு தவிக்கும் பேதை
    உன்மத்தம் உயர்கவிதை உணர்ச்சி போதை
    எங்குமே செல்லாத புதிய பாதை

     

    காற்று வாங்கப் போனேன் – பகுதி 2

    போன பகுதியை எங்கே நிறுத்தினேன்? நான் நிறுத்தவில்லையே! காற்று நின்றது, கட்டுரையும் நின்றது. காற்றுக்கும் கவிதைக்கும் என்னய்யா சம்பந்தம்? பாடலாகவே வந்தது பதில்:

    மனமலரைத் தென்றல் வருடிவிடும் – ஒளி
    மகரந் தங்கள் சிதறிவிழும்
    தினமிது போல்சில கவித்துளிகள் – எட்டுத்
    திசைகளி லும்விழும் சுடர்ப்பொறிகள்

    (மனமலரை)

    கனவிலி ருந்தொரு துளிவிழலாம் – பல
    காட்சிக ளும்அதில் பதிந்திடலாம்
    ஒவ்வொரு துளியும் ஒருவிதை யாய்ச்சில
    உள்ளங்க ளில்சென்று விழுந்திடலாம் – பே(ர்)
    அண்டங்க ளாயவை மலர்ந்திடலாம்

    (மனமலரை)
    வண்ணமும் வாசமும் போலல்ல வோநம்
    எண்ணமும் கற்பனையும்
    வண்டுக ளாய்ப்பல வார்த்தைக ளைமன
    வாசலில் கொண்டுவரும் – தேன்
    கவிதைகள் மொண்டுதரும்

    (மனமலரை)
    அடிப்படை யில்நாம் ஓருயிரே – வெளி
    அதிர்வுக ளில்பல வடிவங்களே
    என்குரல் உந்தன் உயிர்த்துடிப்பே
    எதிரொலித் தாலதில் தோய்ந்துவிடு – உன்னை
    ஏந்திக்கொண் டாலதில் சாய்ந்துவிடு

    (மனமலரை)

     

     

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்? – 9

    – சு.கோதண்டராமன்

    எல்லாத் தேவர்களும் ஒன்றே

     

    நாமம் பல்கோடி ஓர் உண்மைக்கு உள என்று
    நான்மறை கூறிடுமே- ஆங்கோர்
    நாமத்தை நீருண்மை என்று கொள்வீரென்று அந்
    நான்மறை கண்டிலதே   
    -பாரதி

     

     

    vaedam

    ரிக் வேதத்தில் ஒவ்வொரு தேவருக்கும் தனித் தனி அடையாளங்கள், சாதனைகள் கூறப்பட்டுள்ளன. ஆனாலும் பல இடங்களில் இந்தத் தனித் தன்மை மறைந்து விடுகிறது.

    பூமியை நிலைநாட்டியது, ஆகாயத்தைத் தூக்கி நிறுத்தியது, சூரியனை உலாவ விட்டது, நதிகளுக்குப் பாதை அமைத்துக் கொடுத்தது முதலான சாதனைகளைச் செய்தவர்களாக வருணன், இந்திரன் இருவரும் போற்றப்படுகிறார்கள். பூமியை நிலை நிறுத்தின சிறப்பு ப்ருஹஸ்பதி, ரிபுக்கள் மற்றும் அக்னியின் பெயராலும் பேசப்படுகிறது.

    விருத்திரனைக் கொன்றது இந்திரன் என்று பல இடங்களில் பேசப்பட்டாலும், விஷ்ணுவுக்கும் அதில் பங்கு உண்டு என்று கூறப்பட்டுள்ளது. அக்னி விருத்திரனைக் கொன்றதாகவும் கூறப்படுகிறது.

    வலனைக் கொன்று பசுக்களை விடுவித்தார் என்ற சிறப்பு ப்ரம்மணஸ்பதிக்கும் சொல்லப்படுகிறது, இந்திரனுக்கும் சொல்லப்படுகிறது. அந்தப் பெருமை ப்ருஹஸ்பதிக்கும் கொடுக்கப்படுகிறது.

    வாயுவின் குதிரைகளின் பெயர் நியுத். ஆனால் மருத்துகளுடைய குதிரைகளும், அக்னியின் குதிரைகளும், அஸ்வின்களின் குதிரைகளும் இந்திரனுடைய குதிரைகளும் நியுத்கள் என்று சில இடங்களில் கூறப்படுகின்றன.

    வருணன் இந்திரனுக்குரிய அத்ரிவ (இடியை ஆயுதமாகக் கொண்டவர்) என்ற பெயரால் அழைக்கப்படுகிறார்.

    ஸஹஸஸ் ஸூனு (வலிமையின் மைந்தன்) என்ற பெயர் அக்னிக்கு உரியது. ஆனால் இரு இடங்களில் இந்திரனுக்கும் இது வழங்கப்படுகிறது.

    ப்ரம்மணஸ்பதியைக் குறிப்பிடும் ப்ரம்மண: ராஜா (ஸ்தோத்திரங்களின் ராஜா) என்ற சொல்லால் இந்திரன் புகழப்படுகிறார். அது போல, அத்ரிபித் (மலைகளை உடைத்தவர்), விருத்திரனை வென்றவர், நகரங்களை அழித்தவர் என்ற இந்திரனின் சிறப்புகள் ப்ருஹஸ்பதிக்கும் கொடுக்கப்படுகின்றன.

    அக்னியும் சூரியனும் தனித் தனி தேவர்களாகப் பேசப்பட்டாலும் அக்னியைப் பற்றிப் பேசும்போது சூரியன் என்ற பெயரையும், சூரியனைப் பற்றிப் பேசும்போது அக்னி என்ற பெயரையும் பயன்படுத்துகிறார்கள்.

    காலை நேரச் சூரியனின் பெயர் தான் ஸவிதா என்றாலும் இருவரும் தனித்தனியாகக் காட்டப்படுகிறார்கள். சூரியன் ஸவிதாவுக்கு சக்தி தருகிறார் என்கிறது ஒரு மந்திரம். [1]

    அக்னியைப் போற்றும்போது, நீயே இந்திரன், நீயே வருணன் என்கிறார்கள். உலகத்தைப் படைத்துக் காப்பவன் என்ற முழு முதல் கடவுள் தகுதியும் அவருக்குக் கொடுக்கப் படுகிறது.  இதே போல, இந்திரனைப் போற்றும்போது, நீயே விஷ்ணு, நீயே அக்னி என்று பேசுகின்றனர். இவ்வாறு தேவர்களுக்கிடையேயான வேறுபாடுகள் மறைகின்றன. 9.5 இல்  ஒரு சூக்தம் முழுவதும் இந்திரன், அக்னி, பாரதி, இலா, ஸரஸ்வதி முதலான பல தெய்வங்களுடன் சோமன் ஒன்றுபடுத்தப்படுகிறார்.

    ஒரு கட்டத்தில் எல்லாத் தேவர்களும் ஒன்றே என்று கூறுகின்றனர். எனவே பெயர்கள் என்பது பெயரளவுக்குத் தான். இதை தெளிவாகவே சொல்கிறது கீழ்க் கண்ட மந்திரம்.

    இந்திரன், மித்ரன், வருணன், அக்னி என்று அறிஞர்கள் பல விதமாக அழைக்கிறார்கள். உள்ளது ஒன்று தான். [2]

    தேவர்களுக்கெல்லாம் மேலான ஒரு சக்தி உள்ளது என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள் என்பதைக் கீழே வரும் மந்திரங்கள் காட்டுகின்றன.

    விண்ணையும் மண்ணையும் பரப்பியிருப்பதும், இரவு பகலை உண்டாக்குவதும், அசையும் பொருளெல்லாவற்றையும் தன்னுள் அடக்கி உறங்கச் செய்வதும், நதிகளைப் பாயச்செய்வதும், சூரியனை உதிக்கச் செய்வதுமான ஸத்யமான வார்த்தை என்னைக் காப்பாற்றட்டும். [3]

    தேவர்கள் எந்த மூலப் பொருளைக் கொண்டு இந்த மண்ணையும் விண்ணையும் படைத்தார்கள்? இவை உறுதியாகவும் முதுமை அடையாததாகவும் உள்ளன. இவை பல காலை நேரங்களைப் பார்த்துள்ளன. [4]

    அல்ல, அல்ல. இந்தத் தேவர்களுக்கெல்லாம் மேலான ஒன்று உள்ளது. அவனே மண்ணையும் விண்ணையும் தாங்குகிறான். [5]

    நமது தந்தையும் பாதுகாவலனும் அனைத்தையும் படைத்தவனும் எல்லா இடங்களையும் உயிர்களையும் அறிபவனும் தேவர்களுக்குப் பெயர் சூட்டியவனும் ஒருவனே உண்டு. எல்லா உயிர்களும் அறிந்துகொள்ள அவனிடமே செல்கின்றன. [6]      

    ரிஷிகளின் பாடல்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். சில சாதாரண நிலையில் பாடப்பட்டவை. சில அருள் நிலையில் பாடப்பட்டவை. மற்றவை பேரருள் நிலையில் பாடப்பட்டவை. ரிஷிகள் காணும் பொருளை எல்லாம் தேவனாகக் காணும்போது அருள் நிலையில் உள்ளனர். அதிலேயே தோய்ந்து பேரருள் நிலைக்குச் செல்லும் போது  அவர்கள் அந்தத் தெய்வத்தையே முழு முதல் கடவுளாகக் காண்கிறார்கள். அதனால் எந்தத் தெய்வத்தைப் பாடினாலும் ‘அவர் பிறக்கும்போதே முதல்வர். இவரே உலகின் மறு உரு’ என்று போற்றுகின்றனர்.

    அக்னியே, நான் எந்தத் தெய்வத்தை அழைத்தாலும், நீயே அனைத்துத் தேவர்களின் தன்மையையும் அடைகிறாய் என்ற ரிக் 1.69.6,  யார் என்னை எப்படி வழிபட்டாலும் நான் அவர்களுக்கு அவ்விதமே அருள் செய்கிறேன் என்ற பகவத் கீதை 4.11இன் அடிப்படையாக உள்ளது.

    பரம்பொருளின் தன்மைகள் யாவை?

    ரிக் 10.54 மற்றும் 10.55 பரம்பொருளுக்கு இந்திரன் என்ற பெயர் அளித்து அவருடைய நான்கு மாவலிமைகளைக் குறிப்பிடுகிறது.
    1 கடந்த காலம் வருங்காலம் யாவற்றிலும் வியாபித்துக் காலம் கடந்து நிற்றல்,
    2 விண் மண் எல்லாவற்றிலும் வியாபித்து இடம் கடந்து நிற்றல்,
    3 சூரியன் முதலான எல்லாப் பொருளையும் படைத்தல்,
    4 புரிந்து கொள்ளப்படாத செயல்பாடுகள் கொண்டிருத்தல்.

    இந்தக் கடைசி வலிமைக்கு எடுத்துக் காட்டாக, முதியவன் இருக்க  இளைஞன் சாகிறான், நேற்று இருந்தார் இன்று இல்லை என்று ரிஷி கூறுகிறார்.  பரம்பொருளை இந்திரன், அக்னி, வருணன் என்று எந்தப் பெயரில் வேண்டுமானாலும் அழைக்கலாம் என்பது வேதம் தரும் சுதந்திரம். இந்தக் கருத்தைப் பூதக் கண்ணாடியால் பார்த்த நம் முன்னோர்கள் அதில் விநாயகன், சிவன், வேலன், பார்வதி, திருமால் என்ற பெயர்களைக் கண்டனர். பாரதி இன்னும் பெரிய பூதக் கண்ணாடியால் பார்க்கிறார். அங்கு அவருக்கு காளி, சாத்தன், மாடன், அல்லா, யெஹோவா என்ற பெயர்களும் தெரிகின்றன.

    விநாயக தேவனாய் வேலுடைக் குமரனாய்
    பிறநாட்டிருப்போர் பெயர்பலகூறி
    அல்லா யெஹோவா எனத் தொழுது இன்புறும்
    தேவரும் தானாய் திருமகள் பாரதி
    உமை எனும் தேவியர் உகந்த வான்பொருளாய்
    உலகெலாம் காக்கும் ஒருவனைப் போற்றுதல்

    ஆதிமூலமே அனைத்தையும் காக்கும்
    தேவதேவா சிவனே கண்ணா
    வேலா சாத்தா விநாயகா மாடா
    இருளா சூரியா இந்துவே சக்தியே
    வாணீ காளீ மாமகளேயோ
    ஆணாய்ப் பெண்ணாய் அலியாய் உள்ள
    யாதுமாய் விளங்கும் இயற்கைத் தெய்வமே
    வேதச்சுடரே மெய்யாங் கடவுளே

    பாரதியின் சொல்லும் வேதம் அன்றோ!

     

     

     

    குறிப்புகள்:
    1    7.45.2.
    2    1.164.46
    3    10.37.2.
    4    10.31.7
    5    10.31.8
    6    10.82.3

     

     

     

     

     

    படம் உதவி: http://srismartha.org/aboutUs.html, http://srismartha.org/images/s1.jpg

    Share
  • சூறையாடிவிட்டார்கள்!

    -எம். ஜெயராமசர்மா – மெல்பேண்

    ஏடுகளாய் இருந்தவற்றை எப்படியோ கண்டெடெடுத்து               firing the library
    நாடெல்லாம் நன்மைபெற நல்ல உள்ளம் விரும்பியதால்
    ஓடாக உழைத்துநிதம் உருப்படியாய்ச் செய்தமையே
    வாடாது நிற்கின்ற வகைவகையாம் நூல்களெலாம்!

    எத்தனையோர் உழைப்பினிலே இங்குவந்த புத்தகங்கள்
    எத்தனையோ மேதைகளை எமக்களித்து நின்றதுவே
    நித்தமும்நாம் படிப்பதற்குப் புத்தகமாய் இருக்குமவை
    எத்தனையோ சந்ததிக்கு இருக்கின்ற பொக்கிஷமாம்!

    நூல்நிலையம் இல்லையென்றால் நுண்ணறிவு வளராது
    நூல்நிலையம் அருகிருந்தால் தேடிடலாம் அறிவையெலாம்
    பாவலரும் நாவலரும் பலபேரும் உருவாக
    நூல்நிலையம் காரணமாய் அமைந்ததனை அறிந்திடுவோம்!

    யாழ்ப்பாண நூலகத்தை யாருமே மறக்கார்கள்
    வேண்டிய புத்தகத்தை விரைவுடனே தந்துநிற்கும்
    தென்கிழக்கு ஆசியாவின் சிறந்தவொரு நூலகமாய்ச்
    சிறந்தோங்கி நின்றதனைத் தேசமே தானறியும்!

    எத்தனையோ வகையான புத்தகங்கள் இருந்ததங்கே
    அத்தனையும் படிப்பவர்க்கு அருமருந்தாய் அமைந்தப்போ
    சொத்தாக மதித்துமே புத்தகத்தைக் காத்தார்கள்
    சுவையறியா அரக்கர்களோ சூறையாடி விட்டார்கள்!

    கற்றுணர்ந்தோர் வாழ்ந்தவிடம் கல்விக்கூடம் நிறைந்தஇடம்
    கண்ணியத்தின் உறைவிடமாய்க் கருத்திலே நின்றஇடம்
    பெற்றவர்கள் பிள்ளைகளைப் பெரிதாக்க நின்றஇடம்
    பித்தர்களின் வெறியாலே சொத்தையெல்லாம் இழந்தார்கள்!

    கோவிலுக்கு நிகராகக் கொண்டாடும் நூலகத்தைக்
    கொடுங்கோலர் பலர்சேர்ந்து கொளுத்தியே விட்டார்கள்
    தாவீது எனும்சாது தன்னளவில் தாங்காது
    ஓய்வெடுத்து நின்றதுவே உலுத்தர்களின் செயலாலே!

    நூல்நிலையம் எரித்தவர்கள் நூறுமுறைப் பணிந்தாலும்
    தலைசிறந்த படிப்பாளி தாவீது வருவாரா?
    எரித்தவர்கள் மனத்தினிலே இரக்கமே வாராதா?
    அரக்க குணம் இன்னுமே அழியாமல் இருக்கலாமா?

     

    Share
  • தொப்புள் கொடி அடம்பன் கொடியாகுமோ?

    -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

    வாழலாம் 
    சாதி, மத, பேதம் மறந்து 
    மனிதநேயம்!

    ஒவ்வொரு தொப்புள் கொடிகளும் 
    அடம்பன் கொடியாகுமோ?
    நீளும் வேரின் 
    தொடர்பை ஒட்டி!

    விண்ணுக்கும் மண்ணுக்கும் 
    இடைவெளி 
    தொட்டுப் பார்க்க முடியாத தூரமாய்த் 
    தொடர…

    வாழும் 
    மனிதர்களுக்கிடையே மட்டும்
    நீளும்
    வெறித்தனமான செயற்பாடுகள்…!

     

    Share
  • என் பார்வையில் கண்ணதாசன்

    –ராஜலக்ஷ்மி பரமசிவம்

    என் பார்வையில் கண்ணதாசன்

    Kannadasanகண்ணதாசன் பாடல்கள், கவிதைகள் பற்றிய கட்டுரைப் போட்டியில் சேர்ந்து கொள்வது என்று தீர்மானமான பின்தான் யோசிக்க ஆரம்பித்தேன். கவியரசைப் பற்றிய கட்டுரையை நான் எழுதுவதா…….. ……சற்றே தயங்கி ஓடி ஒளிந்து கொண்ட மனசாட்சியைப் பிடித்து இழுத்து வைத்து , “கவிதை என்பது மெத்தப்படித்தவர்கள் மட்டுமே படித்து ரசிப்பது என்கிற நிலைமையை மாற்றி பாமரரையும் சேரும் விதமாய் கவிதை எழுதியவர் நம் கவிஞர். அதனால் நீ ரசித்த அவருடைய கவிதைகள் பற்றி எழுத என்ன தயக்கம்?” என்று மனசாட்சியை சமாதானப்படுத்தி விட்டு எழுத அமர்ந்தேன்….

    அடுத்த பிரச்சினை தலை தூக்கியது…

    எந்த விதமான கண்ணதாசன் பாடல்களைப் பற்றிக் கட்டுரை வடிப்பது என்று அலைபாய்ந்து கொண்டிருந்தேன். காதலா, வீரமா, ஆன்மீகமா, தத்துவமா, தேசப்பற்றா, சமுதாய அக்கறையா …. ….எதைப் பற்றி எழுதுவது எதை விடுவது. கவியரசு எழுதிக் குவித்திருப்பவை எண்ணற்றவை. ஏராளமோ ஏராளம். அத்தனையும் முத்துக்களே. அதில் தனியாக ஒரு தலைப்பை எடுத்துக் கொண்டால் மற்றவை விடும்படி ஆகிவிடுமே என்று தோன்ற நாம் ஏன் என்னைப் பாதித்த , பிடித்த, நான் மயங்கிய பாடல்கள் என்று எடுத்துக் கொண்டால் என்ன என்று தோன்ற அப்படியே கட்டுரை எழுத ஆரம்பிக்கிறேன்.

    மீண்டும் ஒரு சுணக்கம். எனக்குப் பிடித்த கவிஞரின் பாடல்களோ ஏராளம். எதைச் சொல்ல…. எதை விட…..மிகசிலப் பாடல்களை பற்றி எழுத நினைத்தேன்.

    ஒரு சில பாடல்கள் என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தைத் தொகுத்துக் கட்டுரையாக எழுதுகிறேன்.

    நான் பள்ளி செல்லும் வயதில் , சினிமா பார்ப்பதும், சினிமா பாட்டு கேட்பதும் இமாலயக் குற்றம் என்கிற நிலை இருந்த நாளில் கூட என் மனதில் புகுந்த கொண்ட பாட்டு,

    அம்மா என்பது தமிழ் வார்த்தை
    அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை
    கவலையில் வருவதும் அம்மா அம்மா

    அன்றைய சிறு வயது சங்கடங்களுக்கு மட்டுமா “அம்மா அம்மா “. இன்றும் கூட நான் சவால்களை எதிர் கொள்ளும் போதும், கவலைகளில் நான் மூழ்கும் போதும் தெம்பு தருவது ” அம்மா ” என்கிற வார்த்தை தான். எத்தனை நிதரிசனமான உண்மை. அதை அழகிய பாட்டாய் வடித்து நமக்குள் ஊற்றெடுக்கும் தாய் பாசத்தை நாமே உணரும்படி செய்தது இந்தப் பாட்டு என்று சொன்னால் மிகையாகாது. அந்த சிறு வயதில் என்னைப் பாதித்த மற்றுமொரு பாட்டு என்று சொன்னால் அது இந்தப்பாட்டு .

    அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி
    ஆதி பகவன் முதலென்றே உயர வைத்தாய் தேவி 

    சரஸ்வதி சபத்தத்தில் வரும் இந்தப் பாட்டு நம் மனதை உருக வைத்தப் பாடல்களில் ஒன்று. இந்தப் பாட்டுக் காதில் விழுந்தாலே நம் கண் முன் சரஸ்வதியின் உருவம் வருவதைத் தடுக்க முடியாது. அத்தனை வலிமை வாய்ந்த வரிகள். இருபது முப்பது வருடங்களுக்கு முன் இந்தப் பாட்டு மிக மிகப் பிரபலம். பல சிறுவர் சிறுமிகளின் மனதைத் தொட்ட பாட்டு என்றே சொல்ல வேண்டும்.

    சகோதரப் பாசம் பற்றி எழுதியுள்ள பாடல்கள் உணர்ச்சி மிகுதியால் கண்கள் குளமாகும். பாசமலர் படத்தில் வரும் அண்ணன் தங்கைப் பாசத்தை கவியரசர் சொல்லும் விதமே அலாதிதான்.

    சிறகில் எனை மூடி அருமை மகள் போல
    வளர்த்த கதை சொல்லவா
    கனவில் நினையாத காலம் இடை வந்து
    பிரித்த கதை சொல்லவா…

    என்று ஒரு தங்கை தன் சகோதரன் மேல் கொண்டிருக்கும் எல்லையற்ற அன்பை விளக்கும் வரிகளில், நாம் நம்மையே தங்கையாகவோ அண்ணனாகவோ நினைக்கத் தவறுவதில்லை என்பது உண்மையே!

    பதின்ம வயதிலோ சொல்லவே வேண்டியதில்லை. காதல் ரசம் சொட்டும் பாடல்கள், திருட்டுத் தனமாய் மனதில் போய் ஒளிந்துக் கொண்டு இன்றளவும் வெளியே வர மறுக்கும் பாடல்கள் பட்டியலிட்டால் பக்கம் போதாது. “அத்திக்காய் அத்திக்காய் ” பாடல் மிகவும் மென்மையாக அதே சமயத்தில் காதலர்களிடையே இருக்கும் காதலின் மகத்துவத்தை அருமையாய் விளக்கும் பாடல்.

    “மாலைப் பொழுதின் மயக்கத்திலே ” பாடல் திருமதி சுசீலா குரலின் இனிமையுடன் ஒலிக்கும் போது மயங்காதவர்கள் யார்? இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

    சிவகங்கை சீமையில் வரும் “கனவு கண்டேன் நான் கனவு கண்டேன்” என்கிற பாடலைக் கேட்கும் போது மனம் கண்டிப்பாய் அவரவர் திருமண நிகழ்வை மீண்டும் மனதிற்குள் பார்த்து மகிழாமல் இருக்க முடியாது. நம்மை மீண்டும் இளமைக்குத் திருப்பும் சக்தி வாய்ந்தவை இந்தப் பாடல்கள்.

    பாடலுக்கும், கவிதைக்கும் இந்த சக்தி உண்டா என்கிற வியப்பு மேலிடுகிறது. கண்ணதாசனின் பேனா மை செய்யும் விந்தையல்லவா இது.

    சிறுவர்களுக்கும், வாலிப வயதினருக்கும் மட்டுமா கவியரசு பாடல்கள் புனைந்துள்ளார். எல்லா வயதினருக்கும், எல்லா வித நிலையிலும் நாம் ஆறுதல் தேடிக் கொள்ள உதவியாய் பாடல்கள் வந்து விழுந்திருக்கின்றதே! வாழ்வின் ஓர் அங்கமான சோகத்தையும் விடவில்லை கவிஞர். சோகப் பாடல்களில் சோகத்தை பிழிந்ததோடு இல்லாமல் ஆறுதலும் தரவல்லவர் கவியரசர்.

    காலம் ஒருநாள் மாறும் – நம்
    கவலைகள் யாவும் தீரும்
    வருவதை எண்ணி சிரிக்கின்றேன்
    வந்ததை எண்ணி அழுகின்றேன்
    சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான்
    அழுதுகொண்டே சிரிக்கின்றேன்

    கவலைகள் மட்டுமே வாழ்க்கை என்று நினைத்து விடலாகாது என்பதை எவ்வளவு எளிதாய் காலம் மாறினால் கவலைகளும் நீங்கும் என்பதில் அழகாய் விளக்குகிறார்.

    சோதனைமேல் சோதனை போதுமடா சாமி
    வேதனைதான் வாழ்க்கையென்றால் தாங்காது பூமி

    என்கிறப் பாட்டை கேட்கும் போது மனம் கனத்துப் போவதைத் தடுக்க முடியவில்லை. சோதனைகள் பார்க்காத மனிதர்கள் உண்டா? சவால்களும் வாழ்க்கையின் அங்கமே என்கிற ஆறுதல் உணர்வைத் தரும் பாடல். கண்டிப்பாக அவர் எதிர் நோக்கிய சவால்களே இப்பாடலின் ஆதாரம் என்றே நான் நம்புகிறேன்.

    கவிஞர் மரணத்தை விட்டு விட்டாரா என்ன? அதையும் பாட்டிற்கு கருப்பொருளாக்கும் தைரியம் நம் கவியரசுக்கு மட்டுமே உண்டு என்று நினைக்கிறேன். அந்தப்பாட்டு எவ்வளவு பெரிய ஹிட் என்று நான் சொல்ல வேண்டியதில்லை.

    வாழ்க்கை என்பது வியாபாரம்; வரும்
    ஜனனம் என்பது வரவாகும்; அதில்
    மரணம் என்பது செலவாகும்
    போனால் போகட்டும் போடா

    இரவல் தந்தவன் கேட்கின்றான் ; அதை
    இல்லை என்றால் அவன் விடுவானா?
    உறவைச் சொல்லி அழுவதனாலே
    உயிரை மீண்டும் தருவானா?

    இந்த வரிகளில் சொன்னவை அத்தனையும் உண்மை தானே! மரணத்தைக் கூட லாவகமாய் கையாளும் தந்திர வார்த்தைகளுக்கு சொந்தக்காரர் கவியரசே என்று சொல்லலாம் .

    கண்ணதாசன் பெயருக்கு ஏற்றார் போல் பக்திமான் கூட. “திருமால் பெருமைக்கு நிகரேத ” என்கிற பாடலில் பெருமாளின் பத்து அவதாரங்களின் காரணத்தையும், அவதார மகிமையும் இந்தப்பாடலில் ஒளிர்வது கண்கூடு. இது போல் இன்னும் நிறைய பாடல்கள் பக்தி மணம் கமழ எழுதிவைத்துள்ளார் கவிஞர். அத்தனையும் எழுத இங்கே எனக்கு இடமில்லை.

    கவிஞர் தேன் மழையாய் பொழிந்திருக்கும் பாடல்களில் ஒரே ஒரு துளி எடுத்து சுவைத்ததில் நான் பெற்ற இனிமையை இங்கே பகிர்ந்திருக்கிறேன்.

    Share
  • காதல் நாற்பது (8)

    என்ன கைம்மாறு செய்வேன்?

    மூலம் : எலிஸபெத் பிரௌனிங்
    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    jay

     

    கைம்மா றென்ன செய்வேன்,
    அளவின்றி அளிக்கும்
    இளவேந்தே!
    கறை படாமல், அறிவிக்கப் படாமல்
    உன் கருஞ் சிவப்பு
    பொன்னிதயத்தை
    வீட்டு மதில் கட்கு வெளியே
    வைத்திருக்கிறாய்!

    எதிர்பாராத உன் பரிசுகளை எல்லாம்
    அள்ளிக் கொள்ளலாம்,
    அல்லது தொடாமல் நீங்கலாம்!
    நன்றி கெட்டு
    ஒன்றிலும் ஒட்டா துள்ளேனா?
    உயர்ந்த பரிசு களுக்கு நான்
    உனக் கெதுவும் அளிக்க வில்லையா ?

    அப்படி யில்லை, ஆனால்
    ஒதுங்கவு மில்லை!
    அளித்தது மிக மலிவானது!
    கடவுளைக் கேள், அவர் அறிவார்!

    கண்ணீர் அடிக்கடிச் சிந்தி
    வண்ணங்கள் இழந்த என் வாழ்வு
    மரண நிலைக்கு வெளுக்கும்!

    உன் தலைக்குத்
    தலை யணை யாய் வைத்திட,
    உடம்பு வடிவாக வில்லை,

    முன்னேறிச் செல் நீ,
    உன் மிதிப்பு மெத்தை யாக
    உதவட்டும்  அது!

    ********************

    Poem -8

    Sonnets from the Portuguese

    By: Elizabeth Browning

    What can I give thee back, O liberal
    And princely giver, who hast brought the gold
    And purple of thine heart, unstained, untold,
    And laid them on the outside of the wall
    For such as I to take or leave withal,
    In unexpected largesse? am I cold,
    Ungrateful, that for these most manifold
    High gifts, I render nothing back at all?
    Not so; not cold,–but very poor instead.
    Ask God who knows. For frequent tears have run
    The colours from my life, and left so dead
    And pale a stuff, it were not fitly done
    To give the same as pillow to thy head.
    Go farther! let it serve to trample on.

    **************************

    Share
  • கடந்த காலத்தின் நுங்கு

    எஸ் வி வேணுகோபாலன் 

    இளமைக்கால நினைவுகளை,
    துள்ளாட்டத்தைக்                                                                                            Nungu     
    கூட்டமாய்ச் சேர்ந்து
    கொண்டாடிய பொழுதுகளை
    வெயிலைச் சவாலுக்கு இழுத்த
    திமிர் பிடித்த பருவத்தை…

    எப்படியோ சூல் கொண்டு
    பிறந்து கனிந்து விழுந்து
    லாரிகளில் இடம்பெயர்ந்து
    நகரத்தை எட்டிய பனங்காயைக்
    கையிலெடுக்கும் மாரிச்சாமி
    கீறி எடுத்துக் கொடுக்கிறார் 

    முப்பதாண்டுகளுக்கு முன்பான
    ஒரு கோடையில், கிராமத்தில்
    அண்ணன்காரன் தட்டிப் பறித்துப் போன
    இளசான நுங்காகப் பார்த்து!

     

    Share