உனக்கே உனக்காக – 2
இசைக்கவி ரமணன்
எப்படி?
எப்படி வந்தாய் உள்ளே?
எல்லா வாசலும் பூட்டிக் கிடக்க
சன்னல்களெல்லாம் சாத்தியிருக்க
நெஞ்சக் குழியில் சுவாசம் நிறுத்தி
இதயத் துடிப்பையும் நிலைக்கவைத்து
ஏதோ கொஞ்சம் இறுமாந்திருந்தேன்
எப்படி வந்தாய் உள்ளே?
ஏதோ கொஞ்சம் இறுமாந்திருந்ததே
போதுமென்று புன்னகைக்கிறாயா?
கன்னம் மேவும் மின்னலினாலே
கன்னம் வைத்துக் கண்சிமிட்டுகிறாயா?
எப்படி? ம்…எப்படி?
சுரங்கப் பாதை குடைந்து, கவிதையின்
சுருதி ஊற்றில் கலந்துகொண்டு, ஒரு
சொல்லின் நிழலில் ஒளிந்து, அந்தரங்க
முற்றத்தில் முத்தாய் உதிர்ந்தாயா?
எப்படி? வேறெப்படி? ம்..?
காளியிடம் உனக்குப் பழக்கமுண்டா? அவள்
காலைப் பிடித்து சாதித்தாயா?
மாயக் காரியை மயக்கிவிட்டாயா?
மண்குடிசைக்குள் மாளிகை விளக்காய்..
எப்படி? எப்படித்தான் சொல்லேன்?
ஊஹூம்…
நீ எதற்குச் சொல்லப் போகிறாய்?
சாவகாசமாக அமர்ந்து
சாகடித்த கதைகளை வரிவரியாய்
எங்கேனும் சொல்லுமா எந்தப் புலியேனும்?
ஓ!
முற்றும் என்னை முடித்துவிட்டு
முகத்தில் அதென்ன கோணல்?
ஆ!
வந்திருக்கிறார்களாம்!
வரவேற்கவில்லையாமாம்!!
அழைத்தோ அழைக்காமலோ
வாசலில் தயங்கி நிற்போரைத்தான்
வரவேற்பார்கள் பார்த்திருக்கிறோம்
அத்துமீறி வந்தவர்களுக்கு
ஆரத்தி கேட்கிறதா?
தீர்த்துக்கட்ட வந்தவர்களுக்கு
திவ்யப் பிரபந்தமா?!
நீதியைக் காட்டிலும் அநீதியின் குரல்தான்
நெஞ்சைப் பிசைகிறது…
சரி சரி
அந்த அறையில்
மேசையில் இருக்கும் என்
மூக்குக் கண்ணாடியைக் கொண்டுவா
அருமையான கவிதை, அற்புதமான நிறைவு வரிகள். கவிதைக்குக் கவிதை இதோ:
“வந்திருப்ப தாரென்று தெரியாம லேயென்னை
வரவேற்ற கவிச்சிங்கமே
தந்துவிட்டேன் கண்ணாடி அணிந்துகொள் தயாராகு
காளியன்னை நான்தானடா
எந்தவடி வென்றாலும் அந்தவடி வையாளும்
ஏகசக்தி என்யோகமே
வந்துநுழைந் தேனில்லேன் என்றுமுள் ளேனுனக்குள்
வாசல்நீ வாசமெனதே”
கே.ரவி