திருமால் திருப்புகழ் (106)
கிரேசி மோகன்
————————————————————————————————————
கண்ணன் திருப்புகழ்(வெண்பா)
——————————————————–
‘’கண்ணன் வெண்பாக்கள்’’
—————————————————–
கீதைக் கடமையைக், கண்ணன் மறந்துகாதல்,
ராதைப் பலனை எதிர்ப்பார்த்து, -போதைப்,
படபடப்பில் பார்க்கின்றான், பாவை வரவுக்(கு)
அடகடவு ளேயென்ன திது….(142)
ஹரிச் சுவடி
—————-
அந்தரி அண்ணா கோவிந்தா
ஆவுடை அப்பா கோவிந்தா
இந்திர லோகம் கோவிந்தா
ஈ கொசு எனக்கு கோவிந்தா
உந்தன் மலையில் கோவிந்தா
ஊர்வேன் புழுவாய் கோவிந்தா
எந்த நாளுமே கோவிந்தா
ஏகாந்த சேவை கோவிந்தா
ஐந்து பொறிகட்கு கோவிந்தா
ஐயமிட்டிடு கோவிந்தா
ஒன்றி உரைப்போம் கோவிந்தா
ஓம் நம நாரண கோவிந்தா….(143)
கேசவ் சாக்லேட் கிருஷ்ணா ஓவியம் பார்த்து
—————————————————————————-
இடைப்பிள்ளை உந்தன், இசையில் மயங்கி,
மடிப்பால் நிலத்தில் மணக்க, -கடைக்காலை,
கன்றென எண்ணிக், கறவை வருடிட,
நின்றிடென் நெஞ்சில் நிலைத்து….(144)
இப்போ(து) இதுவென்று, அப்போ(து) அதுவென்று,
எப்போ துமலைந்தேன் எம்பிரானே, -தப்பேதான்,
ஒப்பில்லா அப்பனே, ஒப்புக்கொள் கின்றேன்நான்,
துப்பில்லாத என்னைத் துலக்கு….(145)
இல்லா ததைத்துரத்தி, செல்லா ததைச்சேர்த்து,
பொல்லா தவனென்ற பேர்வாங்கி, -நில்லாது,
விட்டிலென மாயா, வெளிச்சத்தில் வீழாது,
விட்டலிருள் வண்ணன்தாள் வீழ்….(146)
காமியானாய் ராதைக்கு, நேமியாவோய் ராட்சசர்க்கு,
பூமியாவாய் போற்றும் அடியார்க்கு, -மாமியானாய்,
சாமிநாத ஸ்வாமிக்கு(வேலர்க்கு), நாமிருவர் சந்தித்தால்,
ஏமிரா நீயார் எனக்கு….(147)
காதலில் ராதையைக், காண ரகசியம்,
சீதையை மீட்க அவசரம், -கோதையைப்,
பெண்ணெடுக்கப் போகையில், பின்னடைந்தீர், பக்தியில்
பெண்ணுருகும் பாசுரம் கேட்டு….(148)
கலிமுடிவில் ஓரடியை ஆலிலையில் உண்டாய்
பலிமுடியில் வேறடியை வைத்தாய் -தெளிவடைய
நூற்றிடுவேன் வெண்பாக்கள் நீர்வண்ணா வாழ்த்திடுவாய்
ஈற்றடி யாக இருந்து….(149)
———————————————————————————————————————–
படங்களுக்கு நன்றி :
http://kamadenu.blogspot.in/2014_03_01_archive.html