Blog

  • திருக்குட நன்னீராட்டு விழா

    பசுபதிநாதர் கோயிலில் பூமாரி பொழிந்தது

    கோத்தா கினபாலு, மலேசியா

    k1
    விண்ணில் பறந்துவந்த இரண்டு ஹெலிகாப்டர்கள் இங்குள்ள ஸ்ரீபசுபதிநாதர் ஆலயத்தின்மீது பூமாரி பொழிந்து பக்தர்களைப் பக்திப் பரவசத்தில் ஆழ்த்தின.

    பக்தர்கள் கோயில் வளாகத்தில் புடைசூழ்ந்து இந்த கண்கொள்ளாக் காட்சியைக் கண்டுகளித்தனர்.

    k3

    கடந்த ஞாயிறன்று இக்கோயிலில் மூன்றாம் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தேறியது.
    சுமார் 100 கிலோ பூக்கள் ஹெலிகாப்டரிலிருந்து தூவிவிட, அவை பூமரியாகப் பொழிய, பக்தர்கள் அப்பூக்களைப் பிடித்து மகிழ்ச்சி அலையில் மூழ்கினர்.

    விண்ணிலிருந்து தேவர்கள் பூமாரிப் பொழிவதுபோல் அக்காட்சி பிரம்மிக்கவைத்தது.
    இதற்கு முன்னர் ஸ்ரீமுத்துக்குமார சிவாச்சரியார் அந்த ஆலயத்தின் உச்சிக் கலசத்தில் திருக்குட நன்னீராட்டி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தார்.

    k4

    சுமார் எண்ணூறு பக்தர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு ஸ்ரீ பசுபதினாதரின் அபிஷேக நீரில் நனைந்து அருளைப்பெற்றனர்.

    சாபா மாநிலத்தின் சண்டாகான், தாவாவ் நகரங்களிலிருந்தும், லாபுவான் தீவு, தீபகற்ப மலேசியாவிலிருந்தும் பக்தர்கள் இந்நன்னீராட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    சுமார் எட்டு லட்சம் ரிங்கிட் செலவில் புனரமைக்கப்பட்ட இக்கோயிலுக்கு சாபா மாநில அரசு இரண்டு லட்சம் ரிங்கிட் மான்யம் வழங்கியது. இத்தொகையை முதலமைச்சர் சார்பில் சாபா சிறப்புப்பணி அமைச்சர் டத்தோ தியோ ச்சி காங் நேரில் வழங்கினார்.

    k5

    மேலும், சாபா மாநில மஇகா தலைவர் டத்தோ வி. ஜோதி ஐம்பதினாயிரம் ரிங்கிட்டை இக்கோயிலுக்கு முதலமைச்சர் நிதியிலிருந்து கூடுதலாகப் பெற்றுத் தந்தார்.

    ஸ்ரீபசுபதிநாதர் ஆலயத்தலைவர் டத்தோ டாக்டர் க. மாதவன் மாநில அரசுக்கு கோயில் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொண்டதோடு, பிறசமய இயக்கங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

    Share
  • திருமால் திருப்புகழ் (111)

    கிரேசி மோகன்

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    கண்னன் திருப்புகழ்(வெண்பா)….
    ——————————————————–
    ’’கண்ணன் வெண்பாக்கள்’’
    ———————————————blogger-image-1193904887
    தடையற்ற ராதை, இடைபற்றி வாழும்,
    இடவத்துப் பாதிமுகில் வண்ணா, -இடையினத்தா,
    அள்ளக் குறையாத, தெள்ளுதமிழ் வெண்பாக்கள்,
    வெள்ளமாய்ப் பாய்ந்தோட வா….(174)

    தயிர்வெண்ணை உண்டு ,தளதள வென்று,
    மயிற்பீலி சூடிநிற்கும் மன்னா, -வெயிற்கால,
    தாகமாய் தொண்டையில், சோகம் அடைக்குது,
    மோகமா! மோட்சமா! சொல்!….(175)

     
    திகட்டும் அளவு, திரவியம் தந்தாய்,
    புகட்டிய நஞ்சை புசித்தாய், -நகத்தால்,
    உரித்தெறிந்த உற்சாகம், இன்றெங்கு போயிற்று
    தரித்திர நாராயணா வா….(176)

     
    தீக்குள் தகிப்பாய், துளிநீரில் தாகிப்பாய்,
    காய்க்குள் கனிவாய் கொடியமனப், -பேய்க்குள்,
    முனியாய் இருப்பாய், முகுந்தா எனக்கு,
    தனியாய் தரிசனம் தா….(177)

     
    திருப்பாற்க் கடலில், திருவனந்தப் பாய்மேல்,
    விருப்பாய்க் கிடப்பாய் வெகுண்டால், -உரத்தால்,
    இரணியனைக் கொல்ல, இரும்பைப் பிளந்து,
    நரசிங்கம் ஆவோய் நம….(178)

     
    தொட்டால் சுடுவான், தொடாமல் இருந்தாலும்,
    கொட்டோகொட் டென்று குளிர்விப்பான், -விட்டலன்,
    சுட்டபழம் ஏற்பான் சுடாத பழங்களை,
    பட்டறையில் வைப்பான் புதைத்து….(179)

    —————————————————————————————————————-

     

    Share
  • என்று வருவாயென…

    http://seventhfairy.deviantart.com/art/WaitiNG-FOr-yOu-336571481

     

     

     

     

     

     

     

     

     

     

    கவிநயா

    காவல் இருக்கின்றேன்,
    காத்துக் கிடக்கின்றேன்,
    வேண்டாத விருந்துகள் வந்து விடக் கூடாதென…
    வேண்டி விரும்பும் நீ என்று வருவாயென!

    நீண்டு கிடக்கும்
    காலமெனும் பாதையில்
    விழிகள் பதித்து –
    முரண்டு பிடிக்கும்
    புத்திக்குள் வித்தாக
    உன்னை விதைத்து –
    துவண்டு கிடக்கும்
    மனக் குடிலின் வாயிலில்
    மலர்கள் விரித்து –
    வண்டு குடிக்கும்
    மதுவாக உன்
    அன்பை நினைத்து –

    மண்ணூடே ஓடி
    நீர் தேடும் வேர் போல –
    மரம் தேடி ஓடி
    கிளை சுற்றும் கொடி போல –
    மடி தேடி ஓடும்
    பாலுக் கழும் கன்றாக –
    கடல் தேடி ஓடும்
    காதல் மிகு நதியாக –

    உனைத் தேடி நானும்என்
    உயிர் களைத்துப் போன பின்னே…

    இன்று,
    என் மனக் கதவின்
    ஒரு ஓரத்தில்…

    காவல் இருக்கின்றேன்,
    காத்துக் கிடக்கின்றேன்,
    வேண்டாத விருந்துகள் வந்து விடக் கூடாதென…
    வேண்டி விரும்பும் நீ என்று வருவாயென!

     

     

    Share
  • என் பார்வையில் கண்ணதாசன்

    மேகலா இராமமூர்த்தி

    PoetKannadasan

    கண்ணதாசன் என்ற பெயரைக் கேட்டதுமே காலத்தால் அழியாத அவருடைய காவியப் பாடல்களும், அவற்றின் இலக்கிய நயமும், கலங்கரை விளக்காகத் திகழ்ந்துவரும் அவருடைய தத்துவப் பாடல்களுமே பலருடைய நினைவிற்கும், கவனத்திற்கும் வருபவை. ஆயினும் பன்முகத் திறனும், பரந்துபட்ட ஆற்றலும் கொண்ட அம்மாமேதை திரைப்படத்துறை அன்றியும் வேறுபல் தளங்களிலும், களங்களிலும் செயலாற்றி வெற்றி கண்டவர்; தனி முத்திரை பதித்தவர்.

    அவ்வகையில், இன்றைய தலைமுறையினர் அதிகம் அறிந்திராத அவருடைய பத்திரிகைத்துறை அனுபவங்கள், அரசியல் அனுபவங்கள், பத்திரிகைவழி அவராற்றிய தமிழ்த்தொண்டு ஆகியவை குறித்துப் பகிர்ந்துகொள்ள விழைந்ததன் விளைவே இக்கட்டுரை.

    ’சிறுகூடல்பட்டி’ முத்தையா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து ‘கண்ணதாசன்’ ஆனார். அவர் கழகத்தில் சேர்ந்த காலத்தில் தி.மு.க.வின் முன்னணித் தலைவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பத்திரிகையை நடத்திக் கொண்டிருந்தனர். ’விடுதலை’ என்ற இதழை நடத்திவந்த பெரியாரிடமிருந்து பிரிந்த பேரறிஞர் அண்ணா ’திராவிட நாடு’ கண்டார். அஃது அண்ணாவின் அரிய கருத்துக்களைத் தாங்கி வார இதழாக வெளிவந்தது. நாவலர் நெடுஞ்செழியன் ‘மன்றம்’ என்ற இதழை இலக்கிய இதழாக நடத்திவந்தார்; கலைஞர் கருணாநிதியோ ‘முரசொலி’க்கச் செய்தார்.

    அத்தருணத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்பாதம் பதித்த கவியரசு கண்ணதாசன், ’தென்றல்’ எனும் அழகிய பெயரில் இதழ் ஒன்றைத் தொடங்கினார். அவ்விதழ் இலக்கிய இதழாகவும், அரசியல் இதழாகவும் விளங்கியது. உள்நாட்டு, கழகச் செய்திகளோடு பிறநாட்டுச் செய்திகளும் அதில் சுருங்கிய அளவில் இடம்பெற்றிருந்தன.

    நல்ல தமிழில் அந்த (கவிதைத்) தென்றல் வீசியது. கழக இளைஞரும், தமிழார்வலர் பிறரும் தென்றலை மிக விரும்பி வாங்கினர்; படித்தனர்; சுவைத்தனர்.

    கல்லூரி மாணவர்களிடையே ’தென்றல்’ நல்ல வரவேற்பைப் பெற்றது. அறிஞர் கா. அப்பாதுரையாரின் துணையோடு கண்ணதாசன் ’வெண்பாப் போட்டி’யைத் தென்றல் பத்திரிகையில் நடத்திப் பரிசுகள் வழங்கினார். வெண்பாப் போட்டியாலும், தென்றலின் சுவைமிகுந்த பிற பகுதிகளாலும் தமிழ் இளைஞர்களிடத்துத் தமிழ்ப்பற்றும், தமிழின உணர்வும் மிக்கோங்கின. ஈழத் தமிழர் பற்றிய செய்திகளும் தென்றலில் தவறாது இடம்பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    தென்றலையொட்டி ’முல்லை’ என்ற இலக்கியத் திங்களிதழும் கண்ணதாசனால் தொடங்கப்பெற்றது. இவ்விதழ் அளவிற் சிறியதேனும் இலக்கிய வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியது என்பதை யாரும் மறுக்கவியலாது. வரலாற்றுச் சிறுகதைகளும், புனைகதைகளும் முல்லைக்கு மேலும் மணங்கூட்டின.

    தி.மு.க.வில் இணைந்திருந்த கவிஞரின் (கழக) அரசியல்வாழ்வு நீண்டநாள் நீடித்திருக்கவில்லை. சூழ்நிலை அவரைக் கழகத்தினின்றும் பிரித்தது. எனினும், அவருடைய கலை, இலக்கியப் பணிகள் தென்றலிலும், முல்லையிலும் தொடர்ந்தவண்ணம் இருந்தன. ஊழின் பெருவலியோ அல்லது காலத்தின் கோலமோ யாமறியோம்…..தென்றலையும், முல்லையையும் அவரால் தொடர்ந்து நடத்த இயலவில்லை; அதனால் தென்றல் ஓய்ந்தது; முல்லையும் காய்ந்தது.

    ஆயினும், கவிஞரின் இலக்கிய நெஞ்சமும், கவிதை ஈடுபாடும் அவரை விடாமல் துரத்தின. அதன் விளைவே சில ஆண்டுகளுக்குப் பின் மலர்ந்த ’கண்ணதாசன்’ எனும் இலக்கியத் திங்களிதழ். போற்றுதலுக்கும், திறனாய்வுக்கும் உரிய சிறுகதைகள் பல அவ்விதழில் வெளிவந்தன. தரமான பிறர் படைப்புக்களோடு கவியரசரின் கருத்தோவியங்களும் இதழுக்கு எழில்கூட்டின.

    கண்ணதாசன் இதழில் இடம்பெற்ற பல சிறுகதைகள், கருத்தரங்குகள் பலவற்றில் மீள்வாசிப்பிற்கும், திறனாய்விற்கும் எடுத்துக்கொள்ளப்பட்டன. ’வனவாசமும், மனவாசமும்’ கவிஞரின் உண்மை வாழ்வைப் புனைவின்றி வாசகர்களுக்குப் புகன்றன எனில் மிகையில்லை. ஆம்…கவியரசு கண்ணதாசன் என்றுமே உண்மைகளை எடுத்துரைக்கத் தயங்கியதில்லை. அவற்றின் வெளிப்பாடே அவரெழுதிய வனவாசமும், மனவாசமும்!

    கவியரசரின் வாழ்வில் தொடர்ந்து பல சங்கடங்கள் ஏற்பட்டன. அரசியலிலிருந்து முற்றிலும் விலகாவிட்டாலும்கூட ஒதுங்கியிருக்கலானார். உண்மைகளையும், நன்மைகளையும் மட்டுமே ஆதரிப்பவரானார். அவர் பெரிதும் நம்பியிருந்த திரையுலகிலும் அவருக்குச் சிக்கல்கள் ஏற்படத் தொடங்கின. எனினும் அவரது கவித்துவம், அனைத்து எதிர்ப்புக்களையும் வென்று அவரை வாழவைத்தது. பொருளாதாரச் சிக்கல்களினால் ’கண்ணதாசன்’ இதழும் இடையிடையே தடைப்பட்டு வெளிவந்து, இறுதியில் முற்றிலும் நின்றே போனது. அந்தோ!

    இக்காலகட்டத்தில் கவிஞரோடு நட்புப் பாராட்டிய எழுத்தாளர்களாக விளங்கிய ஜெயகாந்தனையும், தீபம் ஆசிரியர் நா. பார்த்தசாரதியையும் தமிழிலக்கிய உலகம் என்றும் மறவாது போற்றும். இவர்கள் மூவரும் அன்று எழுத்துலகில் மும்மணிகளாக – திரிரத்தினங்களாகத் திகழ்ந்தனர் எனலாம்.

    ’கண்ணதாசன்’ திங்களிதழ் நின்றபின்பும் கவியரசரின் எழுத்துப்பணி தொய்வின்றித் தொடர்ந்தது. கல்கியில் அவர் எழுதிவந்த ’சேரமான் காதலி’ என்ற வரலாற்றுப் புதினம், அவருக்குச் சாகித்ய அகாதெமியின் விருதினைப் பெற்றுத் தந்தது. பின்னர் அவர் எழுத்தின் – சிந்தனையின் திசைமாறியது. ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ என்ற பெயரில் பல தொகுதிகள் இந்து சமயத்தை எளிதாக விளக்கும் முறையில் வெளியாயின. வாசகர்களிடம் பேராதரவினை இந்நூல்கள் அவருக்குப் பெற்றுத்தந்தன. கண்ணனைப் பற்றிய பல சிறு நூல்களை எழுதி வெளியிட்டார். ஆதிசங்கரரின் ‘கனகதாரா தோத்திரம்’ ’பொன்மழை’யாகப் புத்துருப் பெற்றது.

    கவியரசரின் இலக்கியப் படைப்புக்களின் முடிமணியாக இன்றும் திகழ்ந்துவருவது கிறித்தவப் பேரிலக்கியமான ‘இயேசு காவியம்’ என்றால் அதனை இலக்கிய ஆய்வாளர் யாரே மறுப்பர்?

    ’கன்னியின் காதலி’ என்ற படத்தில் ‘கலங்காதிரு மனமே; உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே’ என்ற பாடல்மூலம் தன் திரையுலக வாழ்வைத் தொடங்கிய கண்ணதாசன், பாடல்கள் எழுதியதோடல்லாமல் சொந்தத் தயாரிப்பாகவும் திரைப்படங்கள் பல எடுத்தார். கழகக் கருத்துக்களும், தேசியக் கருத்துக்களும் அவருடைய திரைப்படங்களில் இடம்பெற்றிருந்தன. ‘சிவகங்கைச் சீமையும்’, ’இரத்தத் திலகமும்’ அவரது சிறந்த தயாரிப்புக்களாகும்.

    நிழலுலகத்தாரால் மட்டுமன்றி, நிஜவுலகத்தாராலும் போற்றுதலுக்கும், தூற்றுதலுக்கும் ஆளானவர் கவியரசர். ஆயினும்,

    ”போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரித்
    தூற்றுவார் தூற்றட்டும் தொடர்ந்து சொல்வேன்
    ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால்
    எடுத்துரைப்பேன் எவர்வரினும் நில்லேன், அஞ்சேன்!” என்ற கருத்தில் சற்றும் பின்வாங்காது வாழ்ந்தவர் அவர்.

    கண்ணதாசன், தன் தனிவாழ்வில் பெருவெற்றி பெற்றவர் அல்லர்; ஆனால் பலருடைய வெற்றிக்கு வழிகாட்டியவர்; உழைத்தவர்; உதவியவர். குறைகண்டவிடத்து ஏசிய கவிஞர்; நிறைகண்டவிடத்து யாரையும் போற்றவும் தயங்கினாரில்லை. ‘குரல் கெட்ட குயிலே கேள்!’ எனப் பாவேந்தரை ஏசிய கண்ணதாசன்,

    ”புரட்சிப் பாவல வணக்கம்………
    ”ஏடெடுத்துக் கவியெழுத நினைக்கும் போதில்
    என்னெதிரே நின்னுருவம் ஏறு போன்று
    பாடுதமிழ்என்றுரைக்கக் கேட்பேன்! அந்தப்
    பத்தியிலே பன்னூறு கவிதை யாப்பேன்
    கூடலிறை பாண்டியன்போல் நிமிர்ந்து நிற்கும்
    குலத்தலைவா
    ! யான்கற்ற கல்வி கொஞ்சம்,
    நாடெனையும் நோக்கும்வகை நான் வளர்ந்தேன்
    யாவுமுனைக் கற்றதனால் பெற்ற பேறு
    !
    ………………………………………………………….
    இருபதுடன் பதினான்கு வயது சென்றும்
    இயல்பினில்யான் குழந்தையென
    அறிவாயன்றோ!

    எனப் பாவேந்தர் புகழ்பாடுகின்றார். அவருடைய குழந்தை உள்ளத்திற்கு இதனினும் விஞ்சிய சான்றுண்டோ?

    திரைப்படப் பாடல்கள் அன்றித் தன் தனிப்பாடல்களாலும் பெரும்புகழ்பெற்றவர் கண்ணதாசன். சான்றாக ஒன்று…

    பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
    பிறந்து
    பாரென இறைவன் பணித்தான்!
    படிப்பெனச்
    சொல்வது யாதெனக் கேட்டேன்
    படித்துப்
    பாரென இறைவன் பணித்தான்!
    அறிவெனச்
    சொல்வது யாதெனக் கேட்டேன்
    அறிந்து
    பாரென இறைவன் பணித்தான்!
    அன்பெனப்
    படுவது என்னெனக் கேட்டேன்
    அளித்துப்
    பாரென இறைவன் பணித்தான்!
    …………………………………………………………
    முதுமை
    என்பது யாதெனக் கேட்டேன்
    முதிர்ந்து
    பாரென இறைவன் பணித்தான்!
    வறுமை
    என்பது என்னெனக் கேட்டேன்
    வாடிப்
    பாரென இறைவன் பணித்தான்!
    இறப்பின்
    பின்னது ஏதெனக் கேட்டேன்
    இறந்து
    பாரென இறைவன் பணித்தான்!
    அனுபவித்தேதான்
    அறிவது வாழ்க்கையெனில்
    ஆண்டவனே
    நீ ஏன் எனக் கேட்டேன்!
    ஆண்டவன்
    சற்றே அருகில் நெருங்கி
    ’அனுபவம்
    என்பதே நான்தான்என்றான்!

    இக்கவிதையில், ’ஆண்டவன் என்றொருவன் வெளியில் இல்லை; நம் அனுபவங்களில்தான் அவன் வாழ்கிறான்’ என்றுரைக்கும் கவியரசரின் தீர்க்க தரிசனம் நம்மை வியப்பிலும், பிரமிப்பிலும் ஆழ்த்துகிறது அல்லவா?

    அகவை ஐம்பதைத் தாண்டிய சில ஆண்டுகளில் மிக அவசரமாகத் தன் பூவுலக வாழ்வைக் கவிவேந்தர் நீத்தாலும்,

    ”மன்னா வுலகத்து மன்னுதல் குறித்தோர்
    தம்புகழ் நிறீஇத் தாமாய்ந் தனரே”
    என்ற புறப்பாடலுக்குச் சான்றாய்த் தன் அழியாப் புகழை நிறுவி என்றும் வாழ்கிறார் அவர்!

    காவியத் தாயின் இளைய மகன் என்று தன்னை உரிமையோடு அழைத்துக்கொண்ட கண்ணதாசன், இன்று தானே ஒரு காவியமாகித் தமிழர்கள் அனைவர் நெஞ்சிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றார். பைந்தமிழ் வளர்த்த கண்ணதாசனின் புகழ் வையமுள்ளவரை நிலைத்திடும் என்பதில் ஐயமில்லை.

     

    Share
  • நிலை மாறாக் காதல் !

    –பி.தமிழ் முகில்.

    thmizmukil

    தகதகவென  ஜொலிக்கும்

    தங்கக் கிரீடம் சுமந்து

    சூரியப் பெண்ணவள்

    வான் சோலையில் உலவ

    எதிர்பட்ட  மேகக்  காதலனை

    கண்டதும் மெல்ல

    நாணமதுவும் ஆட்கொண்டு விட

    தன்  சூரியக் காதலியை

    மேகக் காதலன்

    ஆரத்  தழுவிக்  கொள்ள – அவளோ

    வெட்கத்துடன் சிறு  கீற்றாய்

    புன்னகை ஒன்றை உதிர்த்து விட்டு

    மெல்ல  தன்  முகம் மூடிக் கொள்ள

    ஆங்கே  அரங்கேறுகிறது

    அந்திப் பொழுதிலோர்

    நிலை மாறாக்  காதல் !

    Share
  • கவிதைக் கைமாற்று!

    -கீதா மதிவாணன்

    அன்றொருநாள் அவசர நிமித்தம்
    கவிதையொன்றைக் கைமாற்றாய்க் கேட்டுக்
    கையேந்தி நின்றிருந்தாய் என் வீட்டுவாயிலில்!              pencil-notebook

    உன் கையறுநிலையைக் காணச் சகியாது
    என் கவிதைத் தாள்களின் கதறல்களை மீறிப்
    பிய்த்துக்கொடுத்தேன் என் கவிச்சிதறல்களை!

    காயமுற்ற என் கவிதைப் புத்தகம்
    நேயமற்ற என்னோடு வாழ மறுத்ததால்
    சுயமிழந்து தவிக்கிறேன் நான்!

    விரைவில் திருப்புவதாய்க் கையடித்தபோது
    என்விரல் ரேகைகளுக்கு மத்தியில் படிந்த
    தூசுபடிந்த உன் சத்தியங்கள் காலாவதியாகிக்
    கணகாலமாகிவிட்டதை உணராது
    விடுபடும் நாளை எதிர்பார்த்திருக்கின்றன
    விம்மலும் விசும்பலுமாய்!

    உன் கையொப்பத்துக்காக முண்டியடித்த
    கூட்டத்தின் நடுவில் நேற்றுன்னைக் காண நேர்ந்தது!
    பைத்தியங்குளியைப் போன்ற தோற்றத்திலும்
    என்னைநீ அடையாளங் கண்டுகொண்டாய் என்பதை
    விழிகளைத் தழைத்து வேகமாய்க் கடந்துணர்த்தினாய்!

    இன்றென் கவிதைகள் என்னிடமே திரும்பும்
    முகாந்திரமிருப்பதைச் சொல்லிச் சொல்லிக்
    கரைந்து கொண்டிருக்கின்றன காக்கைகள்!

    கையுதிர்க்கவிருக்கும் சத்தியத்தின் காத்திருப்போடு நான்!
    கவிதைப் புத்தகத்தின் வெற்றுப் பக்கங்களைப்
    படபடப்போடு புரட்டிக்கொண்டிருக்கிறது காற்று!

     

    Share
  • நான் சாட்சியாய்!

    -சங்கர் சுப்ரமணியன்

    அவள் கிடத்தப்பட்டிருந்தாள் வீட்டு முற்றத்தில்
    பதற்றமும் கண்ணீரும் கவலையும்
    சோகமும் சொல்லவொண்ணாத் துயரமுமாக
    தனித்து நின்றிருந்தேன் நான் தவித்தபடி!

    எதுவோ நடந்திருக்கிறது என்பதற்குச் சாட்சியாக
    நான் இருப்பதாகவே பொய்யான காரணங்களை
    உயிர்ப்பித்துச் சந்தேகப் பார்வையில் என்னை
    மேய்ந்தது சுற்றியிருந்த ஊர்ஜனம்!

    சமமாகப் பிரித்து கலைத்துவிட்ட விதியின்
    இந்த கோர விளையாட்டைக் கண்டு திகைத்து
    மீளாத துயரத்தில் தாங்கவே முடியாமல்
    கனத்து வலித்தது என் நெஞ்சம்!

    எல்லாக் காரணங்களையும் ஒவ்வொன்றாக
    மனத்தில் திரையிட்டு உண்மையில்லை
    என்பதாக அழித்துக்கொண்டிருக்கும் காரணங்களை
    மறுதலிக்கும் என் மனம்!

    என்ன காரணமென்று எழுந்துவந்து என்
    காதிலாவது  சொல்லிப்போயேன்
    சந்தோஷமாய் நாம் வாழ்ந்ததற்கு அதுவாவது
    ஒரு சாட்சியாய் இருந்து போகட்டுமே!

     

    Share
  • காதல் நாற்பது (9)

    உன்னைத்தான் நேசிக்கிறேன்!

    மூலம்: எலிஸபெத் பிரௌனிங்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    jay

    என்னால் கொடுக்க முடிந்ததை
    ஈவது நியாய மாகுமா?
    உப்புக் கண்ணீர்த் துளிகள்
    வீழும்போது  உன்னைக்
    கீழே உட்கார வைத்து
    நெடுங்காலம் எழும் பெருமூச்சு
    நின் செவியில் கேட்க வேண்டுமா?

    உன் பரிந்துரையைக் கேட்பினும்
    வாழத் தவறி என்
    மீளாத புன்னகைக் கிடையே
    மீண்டும் வெளிவிடும் பெருமூச்சை
    எந்தன் உதடுகள்!
    அந்தோ! அர்த்தமின்றிப் போகலாம்
    எந்தன் அச்சங்கள்!

    காதலராய்க் காட்டிக் கொள்ளச்
    சகதோழர் அல்லர்
    நாமிருவரும்!
    காதலை ஏற்று நான்
    வேதனை அடைகிறேன்!
    அத்தகைப் பரிசுகள் எனக்களிப்போர்
    கருணை இல்லாத வராகக்
    கருதப் படுவர் !

    என் தூசிகள்
    உன் அங்கியில் பட்டுக்
    கறை படுத்தச் செய்யேன்!
    உன் கண்ணாடி முன்பாக
    வெளியேறாது என்
    விஷ மூச்சு!

    நேசிப்பைக் காட்டுவ  தில்லை
    நான் உனக்கு!
    நியாய மில்லை அது,
    என் இனியவனே!
    உன்னை மட்டுமே நான் நேசிப்பது
    நிறைவே றட்டும்
    நமது நேசம்!

    **********************

    Poem -9

    Sonnets from the Portuguese

    By: Elizabeth Browning

    Can it be right to give what I can give?
    To let thee sit beneath the fall of tears
    As salt as mine, and hear the sighing years
    Re-sighing on my lips renunciative
    Through those infrequent smiles which fail to live
    For all thy adjurations? O my fears,
    That this can scarce be right! We are not peers,
    So to be lovers; and I own, and grieve,
    That givers of such gifts as mine are, must
    Be counted with the ungenerous. Out, alas!
    I will not soil thy purple with my dust,
    Nor breathe my poison on thy Venice-glass,
    Nor give thee any love–which were unjust.
    Beloved, I only love thee! let it pass.

    ******************* 

    Share
  • என் பார்வையில் கண்ணதாசன்

    –முகவை முத்து.

     

    என் பார்வையில் கண்ணதாசன்

     

     

    Kannadasanமனிதப் பிறப்பின் மகத்துவம் சிலருக்கு நிரந்தரமானவை!!

    அவ்வரிசையில் நான் கண்ட மகத்துவத்தின் “சுடர் ஒளியாய்”  திரு கவியரசு கண்ணதாசன் அவர்கள்; எண்ணற்ற எழுத்தாளர்கள் இருந்தபோதிலும் கவிதை உலகில் ஒரு “சூப்பர் ஸ்டார்” என்றே அவரைச் சொல்லலாம். புராணங்களாக இருக்கட்டும் இதிகாசங்களாக இருக்கட்டும் அத்தனை  நூட்களையும் கற்று அதற்கும் சில விளக்க உரைகளும் எழுதியவர். இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு திறமை இருக்கும் என்பார்கள். ஆனால் இவருக்கு ஒரு  திறமை இருந்ததாக தெரியவில்லை,  பல திறமைகளைத் தன்னுள் புடம் போட்டு வளர்த்தவராக இருந்தார்போலும். கம்பன் காலத்தில் கண்ணதாசன் பிறந்திருந்தால்  கம்பனுக்கு வரலாற்று சுவடுகளில் இடம் இருந்திருக்குமா என்று தெரியவில்லை.

    கவியரசரின் முந்தைய காலத்தில் நான் பிறந்திருந்தால் அவரது படைப்புகளை நான் காணாமல் போயிருப்பேன் இருப்பினும் திரு கவியரசு கண்ணதாசன் அவர்கள் படைப்புகளை அனுபவிக்க வாய்ப்பு அளித்த அந்த இறைவனுக்கு நன்றி சொல்ல  நான் கடமைப்பட்டு இருக்கிறேன்.

    படைப்பாளிகளின் குடும்பத்தில் – மூத்தமகன்
    பருவத்தில் பயிர் செய்த – நெற்களஞ்சியம்
    மனிதகுலத்தில் பிறந்த – பிரம்மன்

    வெளிப்படையான வாழ்க்கை:
    “கண்ணதாசன் என்றால் கண்ணனுக்கு தாசன் என்று அர்த்தம் இல்லை, அழகான கண்களைப்பற்றி வர்ணிப்பதும் அதைப்பற்றி படிப்பதிலும் ஆசை அதிகம் அதனால் தான் இந்த பெயரை வைத்துக்கொண்டேன்” என்றார்.  இது அவரே அளித்த விளக்கம்.

    பெற்றொர் வைத்த பெயர் முத்தையா.  சிறுவயதில் 7,000 ரூபாய்க்கு தத்துக் கொடுக்கப்பட்தவர் கண்ணதாசன் அவர்கள். அந்த வீட்டில் அவர் பெயர் நாராயணன். “கலங்காதிரு மனமே, உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே” என்னும் ‘கன்னியின் காதலி’யில் எழுதிய முதல் பாட்டு,  மூன்றாம் பிறையில் வந்த “கண்ணே கலைமனே” கண்ணதாசன் அவர்களின் கடைசிப் பாட்டு.

    ஒரு மனிதனின் தனிப்பட்ட வாழ்க்கையை வெளிப்படையாக சொல்ல தைரியம் வேண்டும். அந்த தைரியம் உள்ள துணிச்சலான மனிதன் திரு கவியரசு கண்ணதாசன் அவர்கள். தன் வாழ்க்கையின் செயல்களை திறந்தவழி புத்தகமாக சொன்னவர். அரசியலாக இருந்தாலும் சரி, சினிமாவாக இருந்தாலும் சரி, அவரது பேச்சு மக்கள் மனத்தில் இடம் பிடிக்கச் செய்தது. தனது பேச்சுக்களில் மற்றவர் மனத்தில் எளிதில் இடம் பிடித்து விடுவார். உதாரணமாக கலைஞர் கருணாநிதி  அவர்களும் மற்றும் புரட்சித் தலைவர் எம்.ஜி. ஆர் அவர்களும் கலைத் துறை மற்றும் அரசியல் நண்பர்களாவர்.

    தன் வாழ்வில் மது, மாது ஆகியவற்றில் மூழ்கித் திளைத்தவர்.  தன் படைப்புகளால் வலம்வந்து கொண்டிருந்த காலகட்டத்தில் பெரியாரின் போதனைகளால் கண்ணதாசன் ஈர்க்கப்பட்டார். பல  மேடை பேச்சுக்களில் இந்து மதத்தை இழிவாக பேசியதும், “கடவுள் உண்டோ உலகில்”  என்று கோசம் போட்டவர்களில் கண்ணதாசன் அவர்களும் ஒருவர். ஆனால் அவரின் வாழ்க்கை துவக்கமானது மிகவும் பக்தி வாய்ந்த குடும்பத்தில் பிறந்தபோதும் நாத்திகம் சிறந்த போதனையாக அப்போது அவருக்கு தெரிந்தது குறிப்பிடத்தக்கது.

    “மாற்றம் ஒன்றுதானே உலகில் மாற்றம் இல்லாதது” என்ற அடிப்படையில்  காலமாற்றத்தின் விளைவால் தன் தவறை உணர்ந்து ஆன்மீகத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இவர் எழுதிய அர்த்தமுள்ள இந்துமதம் பெரும் பெயர் பெற்றவை. என்னைப் பொறுத்தவரை அர்த்தமுள்ள இந்துமதம் ஒரு புதிய கீதை என்பேன். இந்த காலகட்டத்தில் புராண வார்த்தைகளுக்கு சரியான அர்த்தம் தேடுவது பெரும் சிரமமாக உள்ளது. உதாரணமாகச் சொன்னால் “ஆலிலை” என்ற வார்த்தையை அற்புதமாகச் சொன்னவர் திரு கவியரசு கண்ணதாசன் அவர்கள்.

    மூடநம்பிக்கையில் இருந்த பலரை பக்தியினுள் பகுத்தறிவு புகுத்தியவர்!! “மனிதப் பிறப்பின் மகத்துவம்தான் என்ன?” சிறிது காலம் வாழும் வாழ்க்கையில் எத்தனை  எத்தனை  இடர்பாடுகள்!

    “பிறந்தோம் வாழ்ந்தோம் இறந்தோம்” இதுதான் வாழ்க்கையா !
    இல்லை “இறந்தபோதும் வாழவேண்டும்” ஆம் அவ்வரிசையில் கண்ணதாசன் அவரது படைப்புகளால் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். ஒரு நாளில் அவரது பாடல்களோ அல்லது பெயரையோ எழுத்தையோ! கண்டிடாமல் அல்லது கேட்டிடாமல் படித்திடாமல் யாரேனும் உண்டோ! இதை யாரும் மறுக்க முடியுமா.. இல்லை! அல்லவா..
    ராமாயணத்தை எழுதியவர் வால்மீகி என்றால் “அர்த்தமுள்ள இந்துமதம்” எழுதியதால் கண்ணதாசனும்  இன்னொரு வால்மீகிதான்.

    “கவிதை எழுதத் துவங்கினேன்” வார்த்தைகள் வரவில்லை – ஆனால்  நான் கடைசியாக எழுதியது கண்ணதாசன் என்கின்ற பெயர் – மட்டும்தான்.

    இங்கு ஒரு விசயத்தை நான் பதிவு செய்யவிரும்புகிறேன் திரு கவியரசு கண்ணதாசன் அவர்கள் அவர் பாடலில் சொல்லுவார்..

    “ஆடை இன்றி பிறந்தோமே – ஆசை இன்றி பிறந்தோமா?
    ஆடி முடிக்கையிலே அள்ளிச் சென்றோர்  யாருமுண்டோ?”

    மனிதனுக்கு ஆசை அது ஆரமித்திததுவிட்டால் அழிவு இல்லாமல் ஆசை அடங்குவதில்லை. மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை இல்லாதவர் யாரேனும் உண்டோ? இல்லை, அவ்வாறு இருப்பினும் அவர்கள் மிகச் சிலரே.  புத்தர்கூட எல்லோரும் ஆசையை விட்டொழிக்கவேண்டும் என்று அவர் நினைத்ததே ஒரு ஆசை தானே!

    தமிழ்த் திரை உலகில் கவிஞர் கண்ணதாசன் தன் அபார படைப்புகளால் தமிழ்த்திரை உலகை தன் பக்கம் திரும்பிப் பார்க்க செய்தவர். அந்த காலகட்டத்தில் பல திறமை வாய்ந்த படைப்பாளிகள் இருந்த போதிலும் தனக்கென தனி இடத்தை தக்கவைத்தவர் திரு கவியரசு கண்ணதாசன் அவர்கள் .

    தமிழுக்கென தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர். இவர் எழுத்தாளராகவும்,  பாடல் ஆசிரியராகவும், தயாரிப்பாளராகவும், தமிழ் சினிமா துறையில் நீங்கா இடம் பதித்தார்.  1961ல் “குழந்தைக்காக” என்னும் படத்திற்காக “தேசியவிருதும்” 1980ல் சேரமான் காதலி நாவலுக்காக “சாகித்ய அகாடமி” விருதும் பெற்றது குறிப்பிடத்தக்கது .

    சுதந்திரத்திற்காக உயிர் அர்ப்பணித்த மருது சகோதரர்களின் வாழ்க்கை வரலாற்றை “சிவகங்கைச் சீமை” என்கிற பெயரில் படமாகத் தயாரித்து இந்த நாட்டு மக்களுக்காக அர்ப்பணித்தவர் திரு கவியரசு கண்ணதாசன் அவர்கள்.

    தமிழுக்காக வாழ்ந்தார்! தமிழை வளர்த்தார்! தமிழுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் திரு கவியரசு கண்ணதாசன் அவர்கள்.

    பக்தியினுள் பகுத்தறிவு போதித்த பண்பாளருக்கு எனது முதல் கட்டுரையை சமர்ப்பிக்கிறேன்.
    என்றும் திரு கவியரசு அவர்களின் நினைவுடன் …………

    Share
  • என் பார்வையில் கண்ணதாசன்

    –பவித்ரா நந்தகுமார்.

     

    என் பார்வையில் கவியரசு கண்ணதாசன்

    இந்த தாள் போதுமா?

     

     

    Kannadasanநெஞ்சில் நீங்கா இடம் படித்த கவியரசர் கண்ணதாசனை பற்றி எழுத இந்த தாள் போதுமா? இந்த ஒரு தாள் போதுமா?

    ‘ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு’ என்று அழகாக, இவ்வளவு வெளிப்படையாக விவரிக்க அவரைத் தவிர வேறு யாரால் இயலும்?

    தடுமாறும் போதையிலும் கவிபாடிய மேதை அவர்.
    தமிழ்த் திரைப்படப் பூஜைக்கு வந்த மலர் அவர்.
    ‘போனால் போகட்டும் போடா’ எனும் தத்துவ மழையை கொட்டித் தீர்த்த கார்முகில் அவர்.
    ‘செந்தமிழ் தேன்மொழியாளை’ மகிழ்ச்சி பொங்க கொண்டாடியவர் அவர்.

    ‘கண்ணன் வருவான் கதை சொல்லுவான்’ என பாடல்களிலும் பலகதைகள் சொன்னவர்.
    ‘ஆறு மனமே ஆறு’ என்று ஆண்டவன் கட்டளைகளை மனதுள் விதைத்தவர் அவர்.
    ‘ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்’ என்னும் வசிய வார்த்தைகளின் குத்தகைக்காரர் அவர்.
    ஒரு சாதாரண மனிதனின் அசாதாரண வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு சென்றவர் அவர்.

    இரை தூக்கிக்கொண்டு ஓடும் எறும்பின் சுறுசுறுப்பு நம் மனதுள் எதிரொலிக்கும், நாம் அவர் வரிகளில் ஐக்கியமாகும்போது.
    வெகுஜன ரசிகனை புன்னகைக்க வைக்கும் புத்திசாலித்தனம் இழையோடும் அவர் சாமர்த்தியத்தில் கைநனைக்கும் போது.

    கருத்து வளமும் சமூகச் சிந்தனையும்
    காதல் ரசமும் வாழ்க்கையின் சகல பரிமாணங்களின் பிரதிபலிப்பும்
    யதார்த்த நிகழ்வுகளின் அலைவரிசையும்
    தத்துவார்த்த மொழிகளின் சமிக்ஞைகளும் விரவியிருக்கும்
    பெருங்கடலில் நாம் மூழ்கி முத்தெடுப்பது சிரமம்.

    அவரின் வார்த்தை ஜாலங்களில் நம் மனம் சிக்கிச் சுழன்று மாயாஜாலப்பொலிவு பெறுவது உறுதி.
    புதிதாய் திரைப்பாடல் எழுத வருபவர்க்கெல்லாம் திசை காட்டி நம்பிக்கை ஏற்படுத்தும் ‘கலங்கரை விளக்கம்’அவர்.
    ‘இந்து மத்தின் அர்த்தங்களில்’ ஆழம் கண்டவர். பலரின் ‘நாத்திகம்’ மனம் கரைய நீர் பாய்ச்சியவர்.

    உண்மையில் ‘திராட்சை ரசம்’ அவருக்கு தந்ததோ போதை.
    ஆனால் அவர் ‘பாட்டு ரசம்’ நமக்கு தந்ததோ தெளிவு.
    என்னவொரு முரண்?

    “எவரும் கண்ணதாசனுக்கு நிகரில்லை
    எந்த நிலையிலும் அவருக்கு அழிவில்லை”

    Share
  • ஆனந்தமே கண்ணன்! கண்ணனே ஆனந்தம்!

    இசைக்கவி ரமணன்

    images (1)கண்ணான கண்ணனிவன் பொல்லாதவன்
    கணநேரம் கண்முன்பு நில்லாதவன்!

    கண்ணனை ஏன் ஆனந்த ஸ்வரூபன் என்று கொண்டாடுகிறோம்? வல்லபாச்சாரியார், தனது மதுராஷ்டகத்தில், கண்ணனின் வடிவின் அங்கங்கள் ஒவ்வொன்றுமே இனிமையானவை என்றும், கண்ணன் இனிமையின் தலைவன் என்றும் ஏன் ஆனந்தமாகப் பாடுகிறார்? ‘கண்ணனை நான் ஆட்கொள்ளக் காரணங்கள் உள்ளனவே!” என்கிறான் பாரதி. ஏனாம்?

    ஆன்மாவுக்கு குணங்கள் கிடையாது. ஆனால் அதற்கு ஒரு தன்மை உண்டு என்று வைத்துக்கொண்டால் அது சாந்தி அல்லது அமைதி என்றே கூறவேண்டும். மனம் என்பது ஆன்மாவை விட்டு அயலாய் இல்லை என்று கொண்டாலும், அது அமைதியை அறியாதது. சஞ்சலம் அல்லது சலனம் என்பது மனதின் இயல்பு. ஆன்மாவின் அமைதி, சித்தம் என்னும் திரையில் பிரதிபலிக்கும்போது, மனது அதனை ஆனந்தம் என்றே புரிந்துகொள்கிறது. ‘Peace emanating from the soul, reflecting itself on the canvas of consciousness is understood by the mind only as happiness.’ மகிழ்ச்சி அல்லது சந்தோஷம் என்பது வேறு. ஆனந்தம் வேறு. மகிழ்ச்சி என்பது வருவது, செல்வது. மேலும் பல சமயங்களில் துக்கத்தில் முடிவது. ஆனந்தம் என்பதோ தொடர்ந்து துலங்குவது. எப்படி ஆன்மாவும் சித்தமும் ஒன்றோ ஆனால் விளக்கும் வெளிச்சமும் போல இரண்டுபோல் தோன்றுமோ, அதேபோல்தான் அமைதியும் ஆனந்தமும்!

    எல்லா ஆன்மாக்களின் தலைவனாகவும் விளங்கும் கண்ணனே பரமாத்மா. இதை, கண்ணனே எல்லாimages (2) ஆன்மாக்களுமாகவும் இருக்கிறான் என்று நம்பி, தன்னிலும் தானாய் இருப்பவன் அவனே என்று உறுதியாய் இருப்பவர்களிடம் அமைதி விழிப்புறுகிறது; ஆனந்தம் வெள்ளப் பெருக்காக விரைந்து வருகிறது.

    அமைதியே நம் இயற்கை. ஆனந்தமே நம் இயல்பு. இதற்கு முரணான எதுவும் நாமில்லை, நமதில்லை. இதை நமக்கு மறுவுறுதி செய்யவே இறைவன் கண்ணனாக இறங்கிவந்தான். அர்ச்சுனனைச் சாக்காக வைத்துக்கொண்டு நமக்கு கீதை மொழிந்தான். அவன் வாய்மொழிந்த கீதையின் சாரமான கருத்து என்ன?

    ‘ஆனந்தத்தை நோக்கிய பாதையும் ஆனந்தமாகவே இருக்கட்டும்!” என்பதே!

    உடனே ஒரு கேள்வி எழக்கூடும். ‘அழுதால் உன்னைப் பெறலாமே!’ என்றதே மணிவாசகம் அது தவறா? சிவனன்றி வேறேதும் சிந்தையில் நில்லாதவரின் வாசகம் எப்படித் தவறாகும்? நம்முடைய அழுகையும் நாயன்மாரின் அழுகையும் அறவே வெவ்வேறானவை. எப்போதும் ஏதேனும் ஒன்றை வேண்டியோ, அது கிடைத்தாலும் அது நிலைக்குமோ நிலைக்காதோ என்று அஞ்சியோ, அதை இழந்தால் மீண்டும் அதற்காக ஏங்கியோ அழுவதே நமது அழுகை. ஆண்டவனைத் தவிர வேறு எண்ணம் தோன்றிடின் நாணியும், அவனுடைய கருணையை எண்ணி உருகியும், அதற்குத் தகுதியாக நம்மால் இருக்க முடியவில்லையே என்று மறுகியும் அழுவதே அடியார்களின் அழுகை. அகத்தெ உள்ள நிஜத்தைக் காணமுடியாமல் அங்கும் இங்கும் அலைந்து புலம்புவதே நமது அழுகை. அகமே புறம், புறமே அகம், இரண்டிலும் தெரிவது இறைவனின் முகம் என்று மெய்சிலிர்த்து, உயிர் புளகமெய்திப் பொங்கி எழுவதே கண்ணனின் பக்தர்களின் கண்ணீர்.

    ஆணவத்தின் வெளிப்பாடு நமது கண்ணீர். அதுகரைந்த புறப்பாடு அடியார்களின் கண்ணீர்.

    ஆனந்தத்தை வேண்டி அழுபவர்கள் நாம். ஆனந்தம் தாங்க முடியாமல் அழுபவர்கள் அடியார்கள். முன்னது துன்பத்தின் வெம்மை நீர். பின்னது, தூய கங்கையின் தண்மை நீர்.

    ‘ஒன்று பரம்பொருள் நாமதன் மக்கள், உலகு இன்பக் கேணி,’ என்றானே பாரதி. வாழ்ந்த காலம் முழுதும் வறுமை மற்றும் பலவிதமான துன்பங்களை அனுபவித்தவன் வாயிலாக இப்படி ஓர் ஆனந்த வாசகம் எப்படி வந்தது? ‘எல்லாம் புரக்கும் இறை, நமையும் காக்கும் என்ற சொல்லால் அழியும் துயர்!’ என்று எப்படி அவனால் சொல்ல முடிந்தது? பற்றற்றான் பற்றினைப் பற்றச் சொன்னாரல்லவா வள்ளுவர்? அவன் கண்ணனிடம் பற்றுவைத்தான் நட்பு நாடி, ஆலோசனை வேண்டி, பண்புகளின் உச்சத்தைக் காணவேண்டி, பார்வைக்கு எளியவனாய் ஆண்டவனை தரிசிக்கவேண்டி! அதனால்தான், ‘பற்று மிகுந்துவரப் பார்க்கின்றேன், கண்ணனால் பெற்றுவரும் நன்மையெல்லாம் பேசி முடியாது!’ என்றான்.

    இறைவன் மேல் பற்று என்பதை இதயத்தில் பதியம் போட வேண்டும். உள்ளே இருப்பது அதுவேதானே? எனவே அந்த ஆனந்தப் பதியம் விரைவில் வளரத் துவங்குகிறது. விரிகிறது! சித்தம், புத்தி, மனது இவற்றைத் தாண்டி தேகத்தையும் சிலிர்க்கவைத்துப் புலன்களை அதிர வைக்கிறது! அப்போது, ‘நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனுமாய், பண்பிலே தெய்வமாய், பார்வையிலே சேவகனாய், கண்ணன், எங்கிருந்தோ வந்தவனாக எதிரே தெரிகிறான்!

    உள்ளே இருந்த அமைதி உணரப்படும்போது ஊதப்பட்ட நெருப்பாக ஆனந்தம் ஊற்றாக எழுந்து வெள்ளமாக விரைந்து பரவுகிறது! ரகசியம் என்னவென்றால், கண்ணனை நாடியவர்களைப் பெண்ணாசை நீங்கிவிடுகிறது. பேதபுத்தி போய்விடுகிறது. நான் தேகம் என்ற உணர்வு நீங்கிவிடுகிறது. எங்கும் எதிலும் இருப்பது ஒன்றே, அது இறையே, அதன்பெயர் கண்ணனே என்ற தெளிவு வருகிறது. அப்போது, புற வாழ்க்கையின் சூழல்கள் எப்படி இருந்தாலும், ‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா!’ என்று ஆனந்தமாக ஆண்டவனைப் பாட முடிகிறது.

    images (3)கண்ணனிடம் எதையும் கேட்கலாம். எச்சரிக்கை என்னவென்றால் அவன் அதனைக் கொடுத்து விடுவான், கொடுத்த கணமே அங்கிருந்து நீங்கியும் விடுவான்! ஆனால், அவனிடம் ரவீந்திரநாத் தாகூர் போல ‘நீ வேண்டும், எனக்கு நீதான் வேண்டும்,’ என்று உறுதியாக நின்றால் அவனால் எங்கும் போகமுடியாது. ஒரு கணம் கூட நம்மை விலக முடியாது. இடம், காலம், சூழ்நிலைகள் இவை எவற்றாலும் பாதிக்கப்படாத ஓர் அதீத உறவில் நாம் லயித்திருக்கலாம். நம் வாழ்க்கையின் சூழ்நிலைகள் மாறலாம் அல்லது மாறாமற் போகலாம். ஆனால் இந்த ஆனந்தம் மட்டும் மாறவே மாறாது.

    எப்படி உண்மையே பேசும் ஒருவன் பேசுவதெல்லாம் உண்மையாகி விடுகிறதோ, அதுபோல, கண்ணனே ஆனந்தம் என்று நம்பியவர்கள் ஆனந்தக் கண்ணனை அகம்குளிர தரிசிக்கிறார்கள். நீண்ட மலைத் தொடரையும் சின்னப் புல்லின் நுனியையும் மழை எவ்விதம் பேதமின்றி நனைக்கிறதோ அதேபோல் இந்தக் கண்ணன் என்னும் ஆனந்தம் நம்முடைய புற வாழ்வின் எதையும் ஆனந்தமாகவே காணும். ஆனந்தமாகவே ஆக்கும்.

    இதுவே ஆனந்தத்தின் சுபாவம். அமைதியின் ப்ரபாவம். கண்ணனின் ஸ்வரூபம்.

    அழுதாலும் தொழுதாலும் தீராதது
    ஆனந்தமே கண்ணன் பேரானது!

    Share
  • என் பார்வையில் கண்ணதாசன்

    –புலவர். மா. சுப்பிரமணியன்

     

    என் பார்வையில் கவிஞர் கண்ணதாசன்

    Kannadasan1. முன்னுரை :-
    20-ஆம் நூற்றாண்டில் இலக்கிய வரலாற்றில் கண்ணதாசனுக்கென தனி இடம் உண்டு. வற்றாத ஊற்றென வளம் செறிந்து கவிதைகளின் கருத்துக்களைப் பாமரமக்களுக்கும் புரியும் எளிய நடையில் எழுதியவர். உள்ளதை உள்ளவாறு கூறி, உள்ளொன்று வைத்து புறமொன்று கூறாதா உத்தமனாக தன் வாழ்வைத் தகவுற அழைத்துக்கொண்ட கவிஞர் கண்ணதாசன் ஆவார். எதையும் நகைச்சுவை உணர்வோடு எடுத்து ஆள்பவர். திரைப்படப்பாடல்கள் எளிய நடையில் சொல்லும் பொருளும், பக்தியும், தத்துவ ஞானமும், உவமையின் அழகும், பெண்மையின் மேன்மையும், காதலின் சிறப்பும் கொண்டது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அவைகளைப்பற்றி இக்கட்டுரையில் விரிவாகக் காண்போம்.

    2. மக்கள் மனதில் நிற்பவர் :-
    “என்னை ஈன்ற தாய்க்கும் தந்தைக்கும் மக்கள் இனம் என்னும் தாய்த்திரு நாட்டிற்கும் என்னால் திணையளவு நன்மை உண்டாகுமெனின் மறைந்தொழியும் நாளே எனக்குத் திருநாளாகும்” என்ற கொள்கையை உடையவர் கவிஞர் கண்ணதாசன் அவர்கள். யார் மனிதன் என்றால் மறைந்தும் மக்களின் மனதில் நிற்பவனே மனிதன் என்கிறார். அவர் பாடலின் வைரவரிகள் இதோ.
    “வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
    மக்களின் மனதில் நிற்பவர் யார்?
    மாபெரும் வீரர் மானம் காப்போர்
    சரித்திரம் தனிலே நிற்கின்றார்”

    என்று கூறுகிறார்.

    3. மத ஒருமைப்பாடு :-
    எம்மதமும் சம்மதம் என்ற கொள்கைக்கொண்டவர் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் பிறர் மதத்தை அவமதிப்பவன் தன் மதத்திற்கும் ஆகமாட்டான் என்ற விவேகானந்தரின் வேதவாக்கை ஒவ்வொரு மதத்தவரும் மனதில் பதியவைக்க வேண்டுமென்று கவிஞர் நினைத்தார். அதன்படி வாழ்ந்து காட்டினார். பொதுவாக மதங்களிடையே காணும் சிறப்பு ஒற்றுமையை எல்லா மதத்தவர்க்கும் பொதுவாகச் சொன்னாலே அது மத ஒருமைக்கு ஆணிவேராய் அமையும்.
    “கண்ணண் என்பது கங்கை நதி
    அல்லா என்பது சிந்து நதி
    ஏசு என்பது பொன்னிநதி
    நதிகள் பிறக்குமிடம் பலவாகும்
    எல்லாம் கலக்குமிடம் கடலாகும்”,

    என்றபாடல் வேற்றுமையில் ஒற்றுமையை விளக்குகிறார் கவிஞர் அவர்கள்.

    4. தத்துவங்களை தந்தவர் :-
    உலகத் தத்துவங்களை எளிய நடையில் இசையோடு தந்தவர் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் மனிதன் உண்மை உணர்வு பெற்றுவிட்டால் உலகம் சண்டையற்ற சமாதான வாழ்வில் வெற்றி நடைபோடும். சினிமாத்துறையில் ஏராளமான தத்துவங்களைக்கொண்ட பாடல்களை இயற்றியவர் இவர்.
    “வீடுவரை உறவு வீதிவரை மனைவி
    காடுவரைப் பிள்ளை கடைசிவரை யாரோ!”

    என்ற பாடல் எத்தனைக்கருத்துக்களை உடையதாக உள்ளது. அவரவர் தன் சொந்தக்காலிலேயே நிற்க வேண்டும் என்ற கருத்தை தத்துவ வாரியாக

    “யாரை நம்பி நான் பிறந்தேன்
    போங்கடா போங்க
    என் காலம் வெல்லும் வென்ற பின்னே
    வாங்கடா வாங்க”

    என குறிப்பிடுகிறார்.

    5. பெண்மை :-
    அடக்கம், பொறுமை, தியாகம், பிறர்நலம், இரக்கம், அழகு, ஓப்புரவு, தொண்டு முதலியன அமைந்த ஒன்றுதான் பெண்மை என்று கவிஞர் கூறுகிறார். மேலும் கவிஞர் அவர்கள்
    “பெண்களில்லாமல் பிறப்பில்லை
    பெண்களில்லாமல் சுகமில்லை
    பெண்களில்லாமல் சுவையில்லை
    பெண்களில்லாமல் உலகில்லை”

    என்ற பாடல் மூலம் பெண்களின் பெருமையைப்பற்றி அழகாக படம்பிடித்துக் காட்டுகிறார். மேலும் தாம் எழுதிய “ஸ்வர்ண சரஸ்வதி” என்ற கதை நாவில் உண்மையில் பெண்குழந்தைப் பிறப்பதைப் போன்ற அதிருஷ்டம் வேறெதிலும் கிடையாது என்கிறார். பெண்மையை ஒர் ஆலயமாகக் கருதுகிறார்.

    “பெண் என்றால் தெய்வ மாளிகை
    திறந்து கொள்ளாதோ”

    என்று வியந்து பெண்ணின் பெருமையை உயர்த்திக்காட்டுகிறார்.

    6. காதல் :-
    கண்ணதாசன் அவர்கள் காதலைப்பற்றி திரையிசைப் பாடல்கள் மூலம் மூன்று தொகுதிகள் வெளிவந்துள்ளன. இத்தொகுதிகளில் மொத்தம் 1500 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றில் 974 பாடல்கள் காதல் பாடல்கள் ஆகும். காதலுக்கு கண்ணதாசன் என்று கூறும் நிலையில் அவர்தம் பாடல்கள் அமைந்துள்ளன.

    7. உவமை :-
    மனிதன் மனிதப்பண்போடு வாழ்வதற்கு இறையன்பே பெரிதும் உதவும் என்ற கருத்தை தெய்வத்திற்கு இணையானவை என்று உவமைப்படுத்துகிறார். பெண் குழந்தைப்பேறு ஒவ்வொரு குடும்பத்திற்கும் பெருமை அளிப்பதாகும். பெண்களை உவமைப்படுத்தும் போது அவர்கள் “வளமான கவிதைபோல்” நிலைத்து வாழவேண்டும் என்கிறார்.

    8. முடிவுரை :-
    மேற்கூறிய என்பார்வையில் கவிஞர் கண்ணதாசன் என்ற தலைப்பில் அவர் மக்கள் மனதில் எவ்வாறு நின்றார் மத ஒருமைப்பற்றி தத்துவங்களைப் பற்றி அவர் கூறிய கருத்துக்கள், பெண்மை, காதல் போன்றவற்றில் அவர் கூறிய கருத்துக்கள் பற்றி விரிவாக அறிந்து கொண்டோம்.

    Share
  • என் பார்வையில் கண்ணதாசன்

    –சு. சித்ரா தாமோதரன்.

     

    என் பார்வையில் கண்ணதாசன்

     

    Kannadasanபணம் தான் முக்கியம் என்று நினைப்பவனுக்கு மகிழ்ச்சி இருப்பதில்லை. மகிழ்ச்சி மட்டுமே போதும் என்று நினைப்பவனுக்கு போதிய பணம் இருப்பதில்லை. தூங்குபவனுக்கு பஞ்சு மெத்தை கிடைப்பதில்லை. பஞ்சு மெத்தை இருப்பவனுக்கு தூக்கம் வருவதில்லை. இப்படித்தான் – வீட்டிலிருக்கும் அரிசியை விற்று மது அருந்துபவனின் பிள்ளை பசிக்காக மதுப்பாட்டில்களை பொறுக்கி விற்பது போல வாழ்க்கை பல முரண்பாடுகளைக்கொண்டது.

    இந்த வாழ்க்கையில் தான் எத்தனை தோல்விகள்? விரக்திகள்? கஷ்டங்கள்? வாழ்க்கை தரும் இன்னல்களை துணிந்து சந்தித்து – மகிழ்ச்சியாக வாழ்தல் தான் வாழ்வின் அடிப்படை நோக்கம். நாம் வேதனையாக இருக்கும்போது நம் மனதுக்கு மிகவும் பிடித்தவரின் அருகாமை எவ்வளவு இதமாக இருக்குமோ அதே அளவுக்குத்தான் வாழ்க்கையில் கஷ்டப்படும் ஒவ்வொரு மனிதனுக்கும் கண்ணதாசனின் தத்துவப் பாடல்கள் மனதிற்கு இதமளிக்கிறது.

    பூமிக்கு அடியில் தான் புதையல் கிடைக்கும். பூமிக்கு மேலே ஒரு புதையல்- அவர்தான் கண்ணதாசன். அவர் சக மனிதனை படித்தார். ஆதலால் வாழ்க்கையோடு இணைந்த பாடல்களை படைத்தார். அவரின் ஒவ்வொரு பாடலும் வைர கிரீடத்தில் உள்ள மாணிக்கக்கல் போன்றது. அரசுப்பேருந்து செல்லாத கிராமத்துக்குக்கூட ஆங்கிலப் பள்ளி வேன்கள் எளிதில் சென்று வருவதைப் போல, மேல்தட்டு மக்கள் மட்டுமே படித்து புரிந்துகொள்ளும் தினசரி வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை தத்துவங்களையும் எளிமைப்படுத்தி சாமான்ய மக்களிடம் கொண்டு சேர்க்க முடிந்ததே அவரின் சிறந்த பலம்.

    நீண்ட நேரம் தூங்கி சோம்பேறி என்ற பெயர் வாங்காதே, அடுத்தவர் பொருளை திருடாதே, ஏமாற்றாதே, நீயும் ஏமாறாதே என்று வளரும் பிள்ளைகளுக்கு அவரை விட புத்திமதியை மிகச் சிறப்பாக சொல்பவர் யார் உண்டு?

    “தைரியமாக சொல் நீ மனிதன் தானா? மனிதன் தானா?” என்று மது அருந்தும் மனித சமுதாயத்தை பார்த்து நேருக்கு நேர் கேட்ட தைரியம் அவருக்கு மட்டுமே உரித்தாகும்.

    மனதுக்கு வாஞ்சையான வார்த்தைகளை விட அசல் வாழ்க்கையைச் சொல்லும் வார்த்தைகளுக்கு வலிமை அதிகம். சந்தோஷமாய் இருப்பவனை விட கஷ்டத்தில் இருப்பவனுக்குத்தான் அவரின் தத்துவப்பாடல்களின் அர்த்தம் மிகத் தெளிவாய் புரியும்.

    அகல் விளக்கின் திரியைத் தூண்டி விடுவது போலத்தான் அவரின் ஒவ்வொரு பாடலும் நம்பிக்கையைத் தூண்டும். வாழ்க்கையில் தற்கொலை முடிவு வரை சென்றவர்கள் அவரின்,
    “மயக்கமா? கலக்கமா?
    மனதிலே குழப்பமா?
    வாழ்க்கையில் நடுக்கமா?”
    என்ற பாடலைக்கேட்டு தங்கள் முடிவை மாற்றிக்கொண்டு மீண்டும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றால் அது மிகையல்ல.

    எந்தப் பயிற்ச்சியாளரும் இல்லாமலே, எந்த பயிற்சியும் எடுக்காமலே மிக வேகமாக ஓடும் வீராங்கனை இந்தக்காலம். காலத்தினாலும் அழிக்க முடியாத பல பாடல்களின் மூலம் அவர் மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். மானுட சமுதாயமும், அவர்களுக்குத் தத்துவப்பாடல்களின் மேல் உள்ள ஈர்ப்பும் இருக்கும்வரை அவரின் புகழ் சற்றும் குறையாது.

    கண்ணதாசனின் பெயரும், புகழும் சிலேட்டில் எழுத்தப்பட்ட எழுத்துக்கள் அல்ல அழிவதற்கு, கல்வெட்டில் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள் அழியாது.

    Share
  • என் பார்வையில் கண்ணதாசன்

    –கவிஞர்.கொழப்பலூர் ம. பாபு.

     

    என் பார்வையில் கண்ணதாசன்!!!

     

     

    Kannadasanகவிஞன் என்பவன் காலக்கண்ணாடியாக இருந்து சமுதாயத்தின் கூறுகளை தன் கவிதைகளில் பிரதிபலித்து மக்களை நல்வழிப்படுத்தக் கூடியவனாக இருக்க வேண்டும். சிறந்த ரசிகனே உயர்ந்த கவிஞனாக முடியும். அந்த வகையில் கவிஞன் கண்ணதாசன் அவர்கள் உயர்ந்த கலைஞராக, இயற்கையை நேசிக்கும் வித்தகராக, தத்துவவாதியாக, பகுத்தறிவு வாதியாக, ஆன்மீகவாதியாக, சிறந்த கவிஞராக, மக்கள் மனம் அறிந்த பாடலாசிரியராக விளங்கி தன் திரைப்படப் பாடல்கள் மூலம் அன்பு, பாசம், காதல் ஆகியவற்றையும் தனிப் பாடல்களின் மூலம் சமூக அக்கறை, உலகில் ஏற்பட வேண்டிய மாற்றங்கள் குறித்தும் எழுதினார்.

    கட்டுரைகள், புதினங்கள், கதைகள் வாயிலாக சமூக விழிப்புணர்வையும் ஊட்டினார். மேலும் குறுங்காப்பியங்கள், அர்த்தமுள்ள இந்துமதம், இயேசு காவியம் ஆகியன இவரது உயர்ந்த எழுத்தாற்றலை உலகிற்கு அடையாளம் காட்டும் பொக்கிசங்கள் எனில் இது மிகையில்லை. இவர் எழுதிய சுமார் ஐயாயிரம் திரைப்படப்பாடல்கள் மனித மன வெளிப்பாடாகவும், தமிழ்மொழி வளர்ச்சிக்கு துணையாகவும் இருந்தன என்பதே உண்மை. ஆகவே அவர் ஒரு உயர்ந்த கவிஞராகத் திகழ்ந்தார், திகழ்கிறார், திகழ்வார்.

    இவரைப்பற்றி மூத்த தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தனது இரங்கற்பாவில் இவ்வாறு குறிப்பிடுகிறார். கைநீட்டிக் கொஞ்சுவோர் பக்கமெல்லாம், கரம்நீட்டித் தாவுகின்ற குழந்தை நீ, நிலையில்லா மனம் உனக்கு! நிலைபெற்ற புகழ் உனக்கு! இந்த அதிசயத்தை விளைவிக்க – உன்பால், இனிய தமிழ் அன்னை துணை நின்றாள்! என்று சிறப்பித்துக் கூறுவதிலிருந்து இவரது எழுத்தாற்றல் விளங்கும்.

    தாய்மையைப்பற்றி கவிஞர் :-

    “பண்பு தெரியாத மிருகம் பிறந்தாலும்
    பால்தரும் கருணை அது – பிறர்,
    பசித்த முகம் பார்த்து பதறும் நிலை பார்த்து,
    பழம் தரும் சோலை அது

    இருக்கும் பிடிசோறு தனக்கென்று எண்ணாமல்,
    கொடுக்கின்ற கோயில் அது – தினம்
    துடிக்கும் உயிர்கண்டு தோளில் இடந்தந்து,
    அணைக்கின்ற தெய்வம் அது!”

    என்று பாடி தாய்மையை தெய்வத்திற்குச் சமமாக்குகின்றார்.

    பெண்கல்வி பற்றி :-

    “பூவாடை வீசபுதுமலர்போலே,
    புறப்படு பள்ளிக்கு மகளே! – உன்,
    பாவாடையோடு பழகிய தமிழில்,
    “பா”வாடை வீசட்டும் மலரே”

    என்று பெண்கல்வியின் அவசியம் கூறுகிறார்.

    மக்கள் தொகை பெருக்கம் பற்றி :-

    “இருக்கிற நிலையில் பிறக்கிற பிள்ளைக்கு,
    நிற்கவும் இடமில்லை என்றும்,
    அடுக்கடுக்காகப்பிள்ளை பெறுபவர்,
    எந்நாளும் கோமாளி”

    என்றும் கவிதை பாடி மனிதனை சிந்திக்கச் சொல்கிறார்.

    வாழ்க்கையை எதிர்கொள்ள துணிவு வேண்டும். இதையே கவிஞர் அழகாக,

    “வாழ்வை யறிந்தவன் சம்சாரி,
    வாழப் பயந்தவன் சந்நியாசி,
    கண்ணீர் வடிப்பவன் மூடனடா,
    காலத்தை வென்றவன் வீரனடா!
    நல்லின்பத்தைத் தேடி உறவாடு,
    நீ எழுந்திடு மனிதா விளையாடு!”

    என்று பாடி கோழையாக வாழ்வதையும், பிரச்சினை கண்டு கலங்குவதையும் அழகாக சாடுகிறார்.

    கவிஞரின் கடவுள் கொள்ளை :-

    “கடலுக்குள் பிரிவுமில்லை, கடவுளில் பேதமில்லை என்றும்
    கருணை பொங்கும் உள்ளம் – அது கடவுள் வாழும் இல்லம்”

    என்றும் சமுதாய அன்பை, ஒற்றுமையை வலியுறுத்திப்பாடுகிறார். மேலும்

    “இராமன் என்பது கங்கைநதி,
    அல்லா என்பது சிந்துநதி,
    ஏசு என்பது பொன்னிநதி,
    நதிகள் பிறக்குமிடம் பலவாகும்,
    எல்லா நதியும் கலக்குமிடம் கடலாகும்”

    என்றும் பாடி மத வேறுபாடுகளை கலையும் மனங்களை சுமக்க மனிதர்களை அழைக்கிறார்.

    சாதி ஒழிப்பு :-

    “இரக்கம் மிகுந்தவன் மேல்பிறவி – அது,
    இல்லாதொழிந்தவன் கீழ்பிறவி,
    பிறப்பின் ரகசியம் இதுவல்லவா –
    இதுபேசும் தெய்வத்தின் பொருளல்லவா?”

    என்று பாடி சாதியில்லை என்று பிரகடனம் செய்கிறார். தொடர்ந்து,

    “ஆணென்றும், பெண்ணென்றும்,
    ஆண்டவன் செய்துவைத்த ஜாதியும் இரண்டேயடா –
    தலைவன் நீதியும் ஒன்றேயடா என்கிறார்”.

    பொதுவுடைமைத் தத்துவம் :-

    “எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் – இங்கு
    இல்லாமை இல்லாத நிலைவேண்டும்,
    வல்லான் பொருள் குவிக்கும் தனியுடைமை நீங்கி,
    வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடைமை”

    என்று சமநீதிக் கொள்கையை அருமையாக விளக்குகிறார்.

    உண்மையான அவமானம் :-

    “வால் பிடித்தே வயிறு வளர்த்து – உயிர்,
    வாழாமல் இருப்பதுமானம்,
    கால்பிடித்தே கை கூப்பியே,
    கண்டோரைக் கொண்டாடி, பொன்தேடவே –
    தினம், காக்காய் பிடிப்பதவமானம்”

    என்று வேதனையோடு பாடுகிறார் கவியரசர்.

    கவிஞரின் கூற்றில் உண்மையான காதல் எது?

    இன்று நாளை என்று உலகம் மாறி வந்தாலும் –
    உடல் இளமை மாறி முதுமை கொண்டு முடிவு வந்தாலும்,
    வாழும் காலம் வாழும் வரைக்கும், மனது ஒன்றுபடும் –
    தினம் மயங்கி மயங்கி வளரும் காதல், உலகை வென்றுவிடும்”

    என்று உண்மையான அன்புடன் கூடிய காதல் எது என்று அடையாளம் காட்டுகிறார் கவிஞர்.

    இன்றைய இளைஞர்களுக்கு!

    “மணமாலை தனைச்சூடி உறவாடுவோர் – மனம்
    மாறாமல் பலகாலம் உறவாடுவோர்
    ஒருகாலத் தமிழ்நாடு இதுதானடா – இதை
    உன்காலத் தமிழ்நாடு அறியாதடா”

    என்று இன்றைய பொய்க்காதலில் மூழ்கிச் சீரழியும் இளைஞர்களைப் பார்த்து வேதனையுடன் பாடுகிறார் கவிஞர்.

    கவிஞரின் ஏக்கம் :-

    “விலைவாசி ஏறாத நாடொன்று கூறுவாய்,
    விரைவில் நான் செல்ல வேண்டும்!
    வீறாப்புப் பேசாத அரசியலைக்காட்டுவாய்
    வேதமாய் ஆக்க வேண்டும்!
    கொலைகாரர் இல்லாத ஊரொன்று சொல்லுவாய்
    குடியேறிப் பாhக்க வேண்டும்!
    குடியைக் கெடுக்காத அரசொன்று கூறினால்,
    கோசத்தில் வாழ்த்த வேண்டும்!
    சிரித்துக் கெடுக்காத நபரொன்று தோன்றினால்,
    தினமும் வணங்க வேண்டும்!”

    என்று நாடு விளங்க வேண்டிய முறையையும், மனிதன் வாழ வேண்டிய நிலையினையும் அழகாகப்பாடுகிறார்.

    இவ்வாறு மனித சமுதாய வெற்றிக்குத் தேவையான பண்புகளை தன் கவிதைகள் மூலமாகவும், திரை இசைப்பாடல்களில் மூலமாகவும் பாடிய ஓப்பற்ற கவிஞரே “என் பார்வையில் கண்ணதாசன்” ஆவார்!

    Share
  • கடல் அன்னை!

    -ரா.பார்த்தசாரதி 

    கடலும் சமுத்திரமும் ஒன்றே!
    உலகமும் கடலால் சூழ்ந்திருப்பதும் தெரிந்த ஒன்றே!              sea

    கடலில் என்றும் அலைகள் ஓய்வதில்லை!
    மனித வாழ்க்கையிலும் இன்ப துன்பங்கள் ஓய்வதில்லை!

    உலகிற்கே மழைதந்து தாகம் தீர்க்கிறோமே!
    உப்புத் தண்ணீரையும்  குடிநீராய் மாற்றுகிறோமே!

    என்றும் பல உயிர்கள் என்னுள் வாழ்கின்றதே!
    தேவையற்ற கழிவுகளைச் செலுத்தி உயிர்கள் இறக்கின்றதே!

    நதிகள் பிறந்தாலும் எங்களிடம்  சேருகின்றதே!
    நீ  இறந்தாலும் உன் சாம்பல் என்னுள் கரையுதே!

    நான் கோபம் அடைந்தால்  சுனாமியாய்ச் சீறுவேன்!
    கடலோர  மக்களையும்  பழி வாங்குவேன் !

    சாகத் துணிந்தவனுக்கு நான் முழங்கால்அளவு!
    என்னைப்  பற்றி உனக்கே  தெரியும் என்அளவு!

    மனிதனே!  என்னால் என்றும்  உலகிற்கு  நன்மையே!
    மனிதனே! உன்னால் என்றும்  எனக்குத் தீமையே!

    என் அழிவு  பிரளயத்தில்தான் முடியும்!
    உன் அழிவு  பொறாமை,பேராசையாலும் அமையும்!

    உப்பு நீரையும்  குடிநீராய் உனக்கு அளிக்கின்றேன்!
    காலம்  தவறாமல் மழை  பெய்விக்கின்றேன்!

    உன் வளர்ச்சிக்கும் வளமைக்கும் நான் உற்றதுணை!
    என்னிடம் கருணைகொண்டு  தாயென  அணை!

    Share