Blog

  • இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேஷன் பள்ளி 100 % தேர்ச்சி

    எஸ்.வி. வேணுகோபாலன்

    குறிச்சி ஐ பி இ ஏ பள்ளி 100 சதவீத தேர்ச்சி !

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே குறிச்சி சிற்றூரில் இயங்கி வரும் இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேஷன் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100 சதவீத தேர்ச்சி சாதனை புரிந்துள்ளனர். மாணவி நிஷா ஸ்ரீ 461 மதிப்பெண்கள் பெற்று முதலாவதாக வந்துள்ளார். ஆயிஷா சித்திகா சமூக அறிவியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார். தேர்வு எழுதிய 22 மாணவர்களில் 12 பேர் 400 க்கு அதிகமான மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தமிழ் பாடத்தில் 13 பேரும், சமூக அறிவியலில் 16 பேரும் 90க்கு அதிகமான மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

    தமிழ் வழி மற்றும் செயல்வழி கல்வி முறையில்இயங்கும் இந்தப் பள்ளியை நடத்தி வரும் ஐ பி இ ஏ கல்வி அறக்கட்டளை தலைமை அறங்காவலரும், இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேஷன் சங்க பொதுச் செயலாளருமான கே கிருஷ்ணன், தாளாளர் சோமசுந்தரம் மற்றும் கல்விக் குழு தலைவர் லட்சுமி கோவிந்தராஜன், கல்விக்குழு உறுப்பினர்கள் தி தனபால், மாதவன், அமல்ராஜ், ஜி பாலச்சந்திரன், ரவி ஆகியோரும், தலைமை ஆசிரியை வாசுகி அவர்களும் தேர்ச்சி பெற்ற மாணவர்களை நேரில் சென்று வாழ்த்தினர்.

    சாதாரண குடும்பப் பின்னணியில் இருந்து வரும் மாணவர்களது உயர்வுக்குப் பாடுபடும் அர்ப்பணிப்பு மிக்க பள்ளி ஆசிரியர்களை கல்வி அறக்கட்டளை அறங்காவலர் குழு பாராட்டியது.

    கல்வியாளர் எஸ் எஸ் ராஜகோபாலன், தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தலைவர் பேரா. மணி, குறிச்சி பள்ளியின் வழிகாட்டிகளில் முக்கியமானவரான தோழர் ஜே கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டு செய்தி அறிந்தவர்கள் பாராட்டி மகிழ்ந்தனர்.

    வழக்கம்போலவே, ஹோமியோபதி மருத்துவ தம்பதியினர் பி வி வெங்கட்ராமன்-ஜெகதா இருவரும் இரவு பத்தரை மணிக்கு எங்கள் வீட்டுக்கு வந்து, பள்ளி மாணவர்கள்-ஆசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் சொல்லுமாறு கேட்டுக் கொண்டு, ரூ 5000 நன்கொடை வழங்கிவிட்டு விடைபெற்றனர்.

    இந்தப் பள்ளியின் வெற்றிகரமான இயக்கம் இத்தகு அன்பர்கள் பலரது தொடர் பங்களிப்பும், ஊக்க மொழியும், அக்கறையும், கரிசனமும்தான்!

    ***********

    Share
  • மறக்க முடியாத மதுரை – 1

    இசைக்கவி ரமணன்

    மறக்க முடியாத மதுரை – 1

     1284024732863_f

    மதுரைப் பேருந்து நிலையம். அப்போது மாட்டுத் தாவணிக்கு மாறவில்லை. (ஓ! விளக்கவில்லையென்றால் விபரீதமாகிவிடும். மாட்டுத் தாவணி என்பது மேலூர்ச் சாலையில் உள்ள ஓர் இடம். மற்றபடி, விசித்திரங்கள் நிறைந்த மதுரையில் கூட மாடு, தாவணி எல்லாம் போட்டுக் கொள்ளாது. எங்கேயும் எதைப் போடுமோ அதைத்தான் இங்கேயும் போடும்!) சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் என்று சொன்னால்தான் புரியும். நெரிசலின் தலைநகரம் மதுரை என்றால், அந்த பஸ் ஸ்டாண்டு அதை இயக்கும் இதயம். பாம்பு கூட நுழைய முடியாத அந்த நெருக்கடியில், பஸ்ஸெல்லாம் எப்படித்தான் வருமோ செல்லுமோ மீனாட்சிக்கே வெளிச்சம். அதை விளக்க நமக்கு மதுரை மொழியைத்தான் நாட வேண்டும், ‘ஒரே கரச்சல்!’ அதுதான் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட். வேறு விதமாக அதை விளக்கவே முடியாது.

    புகைப்படம் : ரமணன்
    புகைப்படம் : ரமணன்

    கண்ணகி எரித்த கந்தக பூமியின் தாக்கமோ, வருடத்திற்குப் பதின்மூன்று மாதங்கள் துரத்தித் துரத்திக் கொளுத்தும் வெய்யிலின் தாக்குதலோ, பாண்டி நாட்டின் பழைய போர்களின் ஞாபக மிச்சமோ தெரியாது சாமி, மதுரையில் கோபத்திற்கும், கொண்டாட்டத்திற்கும் பஞ்சமே இல்லை. எந்தக் காரணமும் இல்லாமல் கோபப்படுவார்கள். கே.பி.சுந்தராம்பாள் எடுத்த எடுப்பிலேயே எட்டுக்கட்டையை எட்டுவதுபோல், முதலிலேயே உச்சத்திற்குப் போய், அப்புறம் தேவைப்பட்டால், கொஞ்சம் இறங்குவார்கள். அப்படி இறங்குவதற்காய் வருத்தப்பட்டு, கோபத்தைப் பெருமூச்சில் விசிறிப் பாதுகாத்து வைத்துக் கொள்வார்கள்.

    ஒரு பேருந்தில் கொத்துக்கொத்தாய் மக்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். புழுக்கத்தில், வியர்வை உறைந்து ஒட்டிக்கொண்டு நகர முடியாமல் நிற்கிறார்கள். துளிகூடச் சத்தமே இல்லை. திடீரென்று, ஒருவன் கூச்சலிட்டது கேட்கிறது. அவன் யாரையோ எதற்கோ தாக்கித் திட்டுகிறான். ஒன்றும் புரியவில்லை. ஒருவன், குடும்பத்தோடு இறங்கினான். மூச்சு விட்டுக் கொண்டார்கள். அவன், குடும்பத்தாரைக் கொஞ்சம் தொலைவில் நிற்குமாறு சொல்லி அவர்கள் கூடவும் வந்தான். அந்தக் கருப்பு முகத்தில் கோபத்தின் சிவப்பை நான் காணவில்லை. அமைதியாகத்தான் தெரிந்தான். அந்தக் குடும்பத்தில் யாரோ ஒரு நபர், ‘வேணாம்ப்பு! வந்த சோலியப் பாத்துகிட்டுப் போயிருவமே,’ என்றார். பதிலுக்கு அவன் முறைத்த முறைப்பில், அவர் முகத்தைத் திருப்பிக் கொண்டார். அந்தக் குடும்பத்தில் பல பெண்கள் இருந்தார்கள். யாரும் அவனைத் தடுக்கவில்லை! அவன், சுறுசுறுப்பாக வந்து, அந்தப் பேருந்தருகே நின்று, ‘எங்கடா அவன்?’ என்றான். அவன் கையில் உள்ளே நடந்த கலாட்டாவில் அடிபட்டிருந்ததால் எண்ணெய் பூசிக்கொண்டு வந்திருந்தான். யாரும் பதில் சொல்லவில்லை. இவன் உள்ளே ஏறினான். இவன் யாரைத் தேடினானோ அவனை கீழே இருந்து நான் பார்க்க முடிந்தது. முகமெல்லாம் பீதி; உள்ளே நுழைந்து அவன் வர வர, மற்றவர்களோடு கலந்து தப்பிவிடலாம் என்ற இவன் நம்பிக்கை கரையக் கரைய, ‘நான் ஒண்ணும் வேணுமின்னு..’ என்று சொல்லி முடிக்குமுன் அவன் அப்படியே இழுக்கப்பட்டு வண்டியை விட்டு வெளியே எறியப்பட்டு, அப்புறம், கொத்துப் பரோட்டாதான்.. கதறல்கள் சினத்தீக்கு நெய்போலும்! ஏதோ ஒரு கணக்கு வைத்திருக்கிறார்கள், அது முடியும் வரை அடிக்கிறார்கள். அடிவாங்குபவன் காயத்துக்கும், இவர்கள் நிறுத்துவதற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை! மஞ்சவேட்டி அணிந்து, ஜிப்பாவில், விரல்நுனியில் அருவாளைத் தாங்கி வீதிக்கு வந்துவிட்டால், ‘சோலிய முடிக்காம திரும்பக் கூடாது!’ ஆமா!

    ramananகோபம் போலவே கொண்டாட்டமும் உச்சம்தான் மதுரையில். ஏதோ சின்னப் பண்டிகை என்றால் ஊர்கொள்ளாத கூட்டம் வந்துவிடும். உலகத் தமிழ் மாநாட்டை (1981) வேறெங்கேனும் நடத்தியிருந்தால் அத்தனைக் கூட்டம் வந்திருக்குமா என்பது சந்தேகம்தான். சித்திரைத் திருவிழா போன்ற ஒரு மக்கள் திருவிழாவைத் தமிழ்நாட்டில் வேறெங்கும் நான் கண்டதில்லை. கள்ளர்கள் தோல் பையிலிருந்து நீர் பாய்ச்சும்போது கூடக் கோபமாகத்தான் சிரிக்கிறார்கள்! எப்போதும் ஒரு வீச்சரிவா விளிம்பில்தான் இருக்கிறார்கள்! கூடவே ஒரு கத்தி போன்ற நியாய உணர்வும் இருக்கிறது. அதுவும் கூடக் கோபமாகவே வெளிப்படுகிறது.

    தோழர் கண்ணன், நரசிம்மர், இரணியனை நாராய்க் கிழித்துவிட்டு, ‘தம்பி, ஏதோ நடந்தது நடந்திருச்சு; ஒண்ணும் மனசுல வச்சுக்க வேணாம்,’ என்று சொல்வதைப்போல, ‘அதான் மன்னிச்சக்குன்னு சொன்னேன்ல?’ என்று முகமெல்லாம் கண்கொப்பளிக்க, இடி முழுங்க மன்னிப்புக் கேட்பார்.

    இன்னும் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில்தான் இருக்கிறோம்!

    ஒரு சின்னக் கடை. அதிலே ஒரு வாக்குவாதம் நடந்து கொண்டிருக்கிறது. ஒருவர் ஏதோ துவாலையோ சோப்போ வாங்க வந்திருக்கிறார். கடைக்காரர் விலையைச் சொன்னதும் கூச்சல் போட ஆரம்பித்து விட்டார். வெளியூர்க்காரர்.

    ‘நான் கேட்டது ஒரு துண்டு எவ்வளவுன்னு? நீ என்ன மூணுக்கு வெல சொல்றியா?’

    – அட, ஒண்ணுதாங்க நான் சொன்னது!

    ‘யோவ்! எல்லாம் எனக்குத் தெரியும்யா! நான் கேட்ட வெலக்குக் குடு!’

    – கட்டுப்படி ஆகாதுங்களே! நீங்க சொல்றது அஞ்சு வருசத்துக்கு முன்ன இருந்த வெல! இப்ப ஏறிப் போச்சுதுங்களே!

    ‘யோவ்! எல்லாம் எனக்குத் தெரியும்யா’ என்று வாக்கியத்தை முடிப்பதற்குள், கடைக்காரர், கடையை விட்டு வெளியே வந்தார். ஆஹா! ஒரே நாளில் இரண்டு கொத்துப்பரோட்டா தரிசனமா என்று யோசிக்கலானார்கள் சுற்றி இருந்தோர். அவரோ, ஒரு ஸ்டூலைப் போட்டு, வாங்க வந்தவரை,

    – வாங்க! இதில உக்காருங்க!’ என்றார்.

    வாங்க வந்தவரோ குழப்பமாகி, ஆனால் உட்கார்ந்து கொண்டு,

    ‘இப்போ எதுக்கு என்ன ஒக்காரச் சொன்னெ?’ என்று கேட்டார்.

    கடைக்காரர், கைகளைக் குறுக்கே கட்டிக் கொண்டு,

    – ஒண்ணுமில்லீங்க! எ..ல்..லா..ம்.. தெரிஞ்ச ஒருத்தர நாங்க இப்பத்தான் மொதமொத பாக்குறோம், அதான்!’ என்றார்.

    மதுரைச் சொல்லுக்கு நிகராகுமா வீச்சரிவாள்?!

    Share
  • திருமால் திருப்புகழ் (92)

     

     

    கிரேசி மோகன்

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ————————————————————
    ’’கண்ணன் அந்தாதி’’
    ———————————–

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    அழகவன் கோலம், அழகவன் ஜாலம்,
    அழகவன் லீலா அபங்கம், -பழக,
    அழகனவன் நட்போ, அலுக்காத கற்பு,
    பொழுதுமவன், பொற்பைப் புணர்….(66)

    புனர்வசுவே, பக்திப் புயல்அனுமர்க்(கு) ஈடாய்,
    உணர்வுக்(கு) உணவாம் உன்னைக், -கணமேனும்,
    தாரகத்தால் தேடும், தவவலிவைத் தந்தருள்வாய்,
    ஏ!ரகு ராமா எனக்கு….(67)

    எனக்கும், உனக்குமிங்(கு) ,ஏற்பட்ட பந்தம்,
    கணக்கு வழக்கில்லை கண்ணா, -பிணக்காய்,
    நடுவந்த மாயையால் ,நாமிருவர் ஆனோம்,
    முடவன்நான், கொம்புத்தேன் நீ….(68)

    நீயாக நானாகும், நாளாம் அதுவரை,
    தீயாய்த் திரியாய்த், தனித்திணைவோம், -சேயாகி,
    வாயார உண்ணவா, தாயாகி ஊட்டவா,
    மாயோனுன் இன்பம் மயர்வு….(69)

    மயர்வறு நெஞ்சம், உயர்வுறு உள்ளம்,
    அயர்விலா ஆற்றல் அளிப்பான், -துயர்வரும்,
    முன்பே வருவான் ,முகுந்தன் முடக்கிட,
    அன்பே சிவமாய் அலர்ந்து….(70)

    ——————————————————————————————————————-

    படங்களுக்கு நன்றி:

    http://kamadenu.blogspot.in/

     

    Share
  • அன்னை அந்தாதி

    கிரேசி மோகன்

    AnmeDT1305201407

    கட்டளைக் கலித்துறை
    —————————————-
    காப்பு
    ——–images (1)

    துலங்குவெண் நீறு துனிப்பிறை கோடு துணைக்கரங்கள்
    இலங்கரன் பாகம் இடப்புறம் ஏகும் இமையவளின்
    வளம்புகழ் வீரம் வணங்கியந் தாதி யினிலுரைக்க
    களம்புகுந் தானை முகத்தனைக் கொன்றோன் பதமரணே….(1)

    அரனும் அரியும் அயனும் அளிக்க இயன்றிடாத
    வரம்தரும் கற்பக வல்லியின் பாதம் வழுத்திடுவோர்
    நரனாய்ப் பிறந்து நடைபிண வாழ்வில் நலிந்திடாது
    பரணப் பரத்துப் பதவியால் வெல்வர் பிறப்பிறப்பே….(2)

    பிறவா வரம்தரும் மாறிப் பிறந்தால் எமன்கரத்தால்
    இறவா திருந்திடச் செய்யும் இதய குகைதனிலே
    மறவா தெழுந்தரு ளும்பார், மகனே எனவழைத்து
    உறவாம் அபிராமி மாதா உறவிந் துலகினிலே….(3)images (2)

    உலகவள் நெற்றி விழிவந்து காய்ந்த ஒளித்துகளே
    திலகமாய் அங்கு திகழும் பரிதியும் திங்களுமே
    உலவிடும் செவ்வாய் புதன்வ்யாழன் வெள்ளி கிரகமெலாம்
    கலகங்கள் செய்யா கதியென் றவள்பாதம் கொள்ளுமினே….(4)

    கொள்பவள் கற்பகம், வெல்பவள் காளி, கவிபுனையச்
    சொல்பவள் பாரதி, செல்வமகள் லஷ்மி, சேர்த்தணைத்து
    செல்கையில் தாயார், சினந்திட தோப்பனார், நேசமதை
    நல்கிட நண்பன் நலம்தரு தோழியின் நானிலத்தே….(5)

    அவளை நினைத்து அவலை இடித்தால் அவளசையாள்
    அவளைத் துதித்தல் அவளை ஸ்மரித்தல் அவளருளே
    அவளே நமக்குள் அவளாய்த் திளைத்தால் அதுயிகமே
    அவளில் கலந்து அவளாய் முடிந்தால் அதுபரமே….(6)….

    பரசிவ வெள்ளம் பராசக்தி உள்ளம் புரிந்துணர்தல்
    பெறுதவம் ஆகும் பிரபஞ்சம் வந்து பிறந்திறக்கும்4818364
    உறுமவம் நீங்கும் உலகிதன் மாய உருவொழிந்து
    சருவமும் சக்தி உருவெனும் உண்மை வசப்படுமே….(7)

    வசமான சித்தி விஷமாம் அதனை விரும்பிடாதே
    நிசமான கூலி யசமானி அம்மா நிழல்துணையே
    அசலான தெய்வம் அவளுண்டு வேறே அணுக்கமெலாம்
    பசையாகக் கம்பளிப் போர்வையில் ஒட்டும் பிசுபிசுப்பே….(8)
    பிசுபிசுத் தோடும் பிறவிப் பிணிகள் கொசுக்கடியாய்
    தசகத் தலைகள் துணித்தவன் தங்கை திருவடிமுன்
    திசையெட்டு தீவளி அப்புமண் எங்கும் திகழ்பவளை
    வசனித்த பட்டர் அபிராமி அந்தாதி வாழ்த்துமினே….(9)

    வாழ்த்த வயதுண்டு வல்லாள் அவளென்றும் வாலையடா
    பாழ்தவம் பூணும் விரதங்கள், பக்தியே போதுமடா
    நாழ்பட நாழ்பட நம்பிக்கை சேர்த்திடும் நாயகிமுன்
    தாழ்வு உயர்வெலாம் தாயவள் கண்முன் தளசமமே….(10)

    சமமவள் நோக்கு சரியோ தவறோ சரணடைய
    இமையெனக் காத்து இருகரம் நீட்டி இகபரத்தைabiramii
    அமைவுறச் செய்வாள் அபிராமி அன்னை அவளிருக்க
    சமயமாய் வீணே சடங்குகள் செய்தல் சிரிசிரிப்பே….(11)

    சிரித்திட மாதுளை, சம்புமுன் கொவ்வை, சினமடைந்து
    முறைத்திட பாகல், முறுவலில் முல்லை, முனிகணங்கள்
    சிரத்தினில் காய்ந்து சிவப்பழம் ஆகிடும் செவ்விதழை
    தரித்திடும் தாய்முன் தலைவணங் கித்தாள் தொழல்தவமே…(12)

    தவமறியேன் தான தர்ம மறியேன் திருமுறைகள்
    விவரமாய் கூறும் வழிய றியேன்தாள் வணங்கிடுவோர்
    சிவமறியேன் சக்தி வழிபா டறியேன் சலித்திடும்
    அவமறிந்தேன் அம்மா அதனால் வந்தேன் அருள்பெறவே….(13)

    பெறவந்தேன் பேரின்பம் பிச்சி யுனைப்போற்றி பாசுரங்கள்
    அரவிந்த தாதுவை அள்ளும் அளிபோலே அம்பிகையே
    குறவன்தன் பெண்வள்ளி கொண்டவன் கையில்வேல் கொள்ளவன்று
    தரவந்த துள்ளலில் தந்தருள இங்கு வாவுமையே….(14)

    images (3)
    வாயுண்ட தாம்பூலம் சிந்த வரதன் வரகவியாம்
    வாயென்றும் பேசாத மூகனோ வாக்கிற்(கு) அதிபதியாம்
    வாயென்ற பட்டர்க்கு வானத்தில் வந்த வளர்பிறையே
    தாயென்ற போர்வையில் தந்தைக்(கு) இணையான தத்துவமே….(15)

    தத்துவக் கோலுக்குத் தேறா தருகற் பகமவளாம்
    சத்தியம் தர்மங்கள் சார்ந்தோர் சிந்தையிலும் சிக்கவொணா
    பத்தினி பக்தர்தம் பித்துக்(கு) அடிமையாம் பிச்சியவள்
    உத்தமி ஈசர்தம் உடலி டபாகம் உற்றவளே….(16)

     

    படங்களுக்கு நன்றி 

     

    Share
  • பொன் மழையெனத் தா கவிதைகளே!

    கே. ரவி

     

    (23-05-2014 வல்லமை இதழில் “வாணியைச் சரண்புகுந்தேன்” என்ற தலைப்பில் வெளியான இசைக்கவி ரமணனின் உள்ளத்தைக் கொள்ளைகொள்ளும் கவிதையும், சிந்தனையைத் தூண்டும் கட்டுரையும் அற்புதம்.
    1993-ல் என் இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இனிய குரலில் பாடி வெளிவந்த ‘தெய்வ கானாம்ருதம்’ இசைப்பேழையில் இடம்பெற்ற என் கலைமகள் கவிதையை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.)

    பூமலர்வது போலுயிரிடை நீமலர்வதனால்goddess-saraswati-learning
    நீமலர்ந்ததும் மனமுழுவதும் தீவளர்வதனால்
    தீமலரென நானழைத்ததும் வாகலைமகளே
    தீச்சுடரிடை தேன்மழையெனத் தாகவிதைகளே
    தீச்சுடரிடை தேன்மழையெனத் தாகவிதைகளே

    நீர்நிலைகளில் மீன்புரள்வது போல்நினைவிடையே
    கார்முகில்களும் தாரகைகளும் தாமுலவிடவே
    வெண்ணிலவென வேயெழுந்திடும் புன்னகையொளியே
    புன்னகையிடை பொன்மழையெனெத் தாகவிதைகளே
    புன்னகையிடை பொன்மழையெனெத் தாகவிதைகளே

    புல்நுனிகளில் வெண்பனித்துளி வந்தமர்வதுபோல்
    என்னுணர்விலும் உன்சதங்கைகள் நின்றசைந்திடுமே
    கண்மணிகளில் விண்மணிகளின் நிழல்விரிவதுபோல்
    உன்சதங்கைக ளில்கவிதைகள் வந்துயிர்த்திடுமே
    உன்சதங்கைக ளில்கவிதைகள் வந்துயிர்த்திடுமே

    15-11-1990
    கே.ரவி

    Share
  • வாணியைச் சரண்புகுந்தேன்

    இசைக்கவி ரமணன்

     goddess_saraswati_seated_on_her_mount_or98

    கற்பூர மேனி இவள் கற்பனை வேணி
    கல்விக்குத் தோணி இவள் கவிதைக்குள் தேனீ
    ஒவ்வொரு சொல்லையும் ஆள்கின்ற ராணி
    உள்ளத்தில் பொங்கிடும் பேரின்பக் கேணி
    ஏழைக்கு ஏணி எங்கள் செந்தமிழ் வாணி!

    உள்ளக் கமலத்தை ஊடுருவி, அங்கு02
    ஊசி முனையொளி யாய்ச் சிரிப்பாள்
    மெள்ள மிக மெள்ள இதழ்கள் விரித்தே
    பேதையை மேதையாய்ச் செய்திடுவாள்
    பள்ளத்தில் வீழ்ந்து தவித்தவனை, வண்ணப்
    பல்லக்கில் ஏற்றி அமர்த்திடுவாள்
    சற்று மிகச் சற்று கர்வங்கொண்டால், அவள்
    சாவற்ற சகதியில் தள்ளிடுவாள்!

    முத்து மழைத்துளி வீழ்கையிலும், நடு
    முற்றத்தில் நிலவொளி சூழ்கையிலும்
    சின்ன ரொம்பச் சின்னச் சத்தத்திலும், அவள்
    வன்னச் சிரிப்பொலி கேட்டிருக்கும்
    கத்துங் கடலினில் காற்றுவந்து, அந்த
    ககனம் நடுங்கிட ஓங்குகையில், அவள்
    காலின் சதங்கைகள் கேட்டிருக்கும், அதில்
    கவிதையின் கர்ச்சனை போட்டியிடும்!

    வாழ்வு தருவது வாணியின் பாதம்
    வந்து பணிந்திடு வாழ்வெலாம் கீதம்
    ஆழ்மனத் துள்ளே அவளடி நாதம்
    அன்பில் விளைவது தானவள் வேதம்
    தோழமை யாய்வரும் தோள்களினை, நம்
    தொல்லைகள் தீர்க்கின்ற தாயிவளை
    பாழில் நன்செய்தரும் பாதத்தினை, நாம்
    பற்றிடுவோம் அருள் பெற்றிடுவோம்! (நவ.11,2012)

    – ரமணன்

     

    `விடையற்ற கேள்விகளின் வெளிச்சப் புள்ளி`
    –கவிஞர் ஹரிகிருஷ்ணன்

    கால மயக்கம்

     

    எது வேத காலம் என்னும் ஏகோபித்த முடிவு இன்னும் ஏற்படவில்லை. பண்டிதர்கள் ஒருவர்க்கொருவர் மாறுபடுவது ஒருபுறம் இருக்கட்டும். ஆராய்ச்சியாளர்கள், தங்கள் ஆராய்ச்சியை அரசியலும், மதங்களும் ஆளும்படி விட்டுவிட்டார்கள். அதனால் அவர்களில் ஒருவர் கூறுவதை இன்னொருவர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தொடர்ந்து நிலவும் இந்தப் பெருங்கூச்சலின் நடுவே, நமக்குச் சற்றேனும் தெளிவாகத் தெரியும் தகவல்கள் இருக்கத்தான் செய்கின்றன:

    1. ரிக்வேதம் கி.மு. 1600 ஐச் சேர்ந்தது என்றார்கள். துவாரகையில் மேல்மட்டத்தில் நடந்த ஆராய்ச்சியே அந்தக் கண்டுபிடிப்புகளை கி.மு. 1200 என்று தேதியிட்டது. மொத்தம் ஏழு மட்டங்கள் உள்ளன. அதில், இந்தக் கூற்று, மேல்மட்ட ஆராய்ச்சியால் வந்த கண்டுபிடிப்பு! அப்படியானால், ரிக் வேதத்திற்கும் துவாரகைக்கும் இடைப்பட்ட காலம் 400 ஆண்டுகள்தானா? என்ன பிதற்றல் இது?

    2. மஹாபாரதத்தின் காலம் கி.மு. 2550 லிருந்து கி.மு. 3212 வரை என்று கொள்வதற்கான ஆரய்ச்சி பூர்வமான தகவல்கள் இருக்கின்றன. அப்படியானால், ராமாயணக் காலம்? 3000 ஆண்டுகளேனும் முந்தியிருக்காதா? ராமன், இக்‌ஷுவாகு குலத்தில் 92 ஆவது அரசன் என்று ஒரு கணிப்பும் 62 ஆவது அரசன் என்று ஒரு கணிப்பும் இருக்கிறதென்று கேள்விப்படுகிறோம். அவனுக்குப் பல தலைமுறைகள் முன்பு ஹரிச்சந்திரன் ஆண்டான் என்பதையும் மனதில் கொள்ளவேண்டும். ஹரிச்சந்திரன் காலத்திலேயே, காசி, உலகத்திலேயே மிகப் பழமையான நகரமாகக் கருதப்பட்டிருக்கிறது. எனில் திலீபன் காலம் எது?

    3. ரிஷிகள் சரஸ்வதி நதியின் கரையில்தான் வாழ்ந்தார்கள் என்றும், புவியியல் மாற்றங்களால் அந்த நதி புதையுண்டு போன பிறகு, அவர்கள் சிந்து நதிக்கரைக்குப் புலம் பெயர்ந்தார்கள் என்றும், அதன்பின் கங்கைக் கரைக்கு வந்தார்கள் என்றும் கேள்விப்படுகிறோம். இதில் சிந்து சமவெளி நாகரிகத்தின் காலமெது? உயர்ந்த நாகரிகத்தைக் கடைபிடித்த அந்த மனிதர்கள் என்ன மொழி பேசினார்கள்? தெரியவில்லை. பாண்டங்களில் கிடைத்த சித்திரச் சின்னங்கள் இன்னும் புதிராகவே தொடர்கின்றன.

    4. ஒரு சமூகம், ஒரு குறிப்பிடத்தக்க நாகரிக நிலையை எய்துவதற்கு எத்தனை நூற்றாண்டுகள் பிடித்திருக்க வேண்டும்?

    இவற்றையெல்லாம் மனதில் வைத்துப் பார்க்கும்போது, வேத காலம் என்பது குறைந்தபட்சம் 10,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று நாம் கொள்ளலாம்.

    சரஸ்வதி யார் அல்லது என்ன?

    அவள் நதியா? இல்லை, அறிவின் தாயா? என்ற சர்ச்சையில் இன்னும் பண்டிதர்கள் ஈடுபட்டிருக்க, `அவள் இரண்டும்தான்` என்று என் குருநாதர் சொன்னதால் என்னைப் பொறுத்தமட்டில், அவர் வாக்கே இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி, அல்லது, ஹரி சொன்ன `வெளிச்சப் புள்ளி.`

    ரிக்வேதம் சரஸ்வதியைப் பற்றிப் பாடும் ஸுக்தங்களை மேலோட்டமாகப் பார்த்தால் அவை ஒரு நதியை வர்ணிப்பது போலவும், உள்ளாழ்ந்து பார்த்தால் அவை ஒரு தெய்வ சக்தியைக் குறித்துப் புகழ்வது போலவும் தோன்றுகிறது என்கிறார்கள் பெரியோர்.

    நதியை ஒரு பக்கத்தில் விட்டுவிட்டு, தேவியைப் பார்ப்போம்!

    சரஸ்வதி என்பது சத்தியம் என்னும் செம்பொருளிலிருந்து இறங்கிவரும் ஓர் ஊக்கத்தின் சக்தி. அது மாமுனிகளின் சித்தத்தில் தெளிவான ஞானமாக தரிசனமாகிறது. அந்தத் சித்தத்திலிருந்துதான் வேதக் கவிதைகள் வெளிப்பட்டன. சத்திய தரிசனம் கண்டவனே ரிஷி. ரிஷி என்றாலே காண்பவன் என்று பொருள். ரிஷியே கவி. சத்தியத்தின் வெளிப்பாடே கவிதை. அறியாமையே அனைத்துப் பாவங்களுக்கும் காரணம். ரிஷிகளின் கவிதையே அந்த அறியாமையைக் களையும் மருந்து. ஆம், சத்தியமே, அவித்தைக்கு முறிவு.

    சரஸ்வதி ஆனந்தமான உண்மைகளைத் தூண்டுபவள். (ஸுன்ருதானாம் சோடயித்ரி) சித்தத்தில், சத்தியத்த்தின் முறையான மனனங்களை விழிக்கச் செய்பவள். (சேதந்தி சுமதினாம்) அனைத்து எண்ணங்களையும் அல்லது புத்தியை (திய) ஒளிதிகழச் செய்கிறாள். (விராஜதே)

    ஸுக்தம் குறிப்பிடும் ஸமுத்ரம் கடல் அல்ல, அது இதயத்தில் கொழிக்கும் இறைவெள்ளம். ஆம், ஸமுத்ரத்திற்கு முன் ஹ்ருத வருகிறது. பின்பு, க்ருத அதாவது தெளிவு வருகிறது.

    குறைந்தது இரண்டு விதமாகப் பொருள்கொள்ளும்படி விளங்குகிறது வேதத்தின் பாஷை.

    வாக் தேவி:

    சத்தியத்தைக் கேட்கச் செய்யும் சக்தி சரஸ்வதி. சத்திய ரீங்காரமே ஸ்ருதி எனப்படுகிறது. வாக் என்பது பேச்சல்ல!

    தீயென்றால் காடெரியத் தேனென்றால் பூமகிழ
    வாய்நின்ற பேரருளே வாக்கு

    நாம் பேசுவது பேச்சு. ரிஷிகளின் பேச்சு வாக்கு. `மந்திரம் போல் வேண்டுமடா சொல்லின்பம்,` என்றான் பாரதி. அது வாக்கு. ஏன்? அது உச்சத்தில் இருக்கும் சத்தியம் என்னும் பிரக்ஞையிலிருந்து வருவது. மாமுனிகளின் மூலம் மந்திரங்களாக வெளிப்படுவது. மகத்தான செயல்களை நொடியில் செய்வது.

    பவபூதி சொல்வதைக் கேட்போம்:

    `எத்தனை நல்ல மனிதர்கள் என்றாலும், அவர்களுடைய பேச்சு என்பது, அவர்கள் மனதில் ஏற்கனவே இருக்கும் எண்ணங்களுக்கு ஏற்பவேதான் இருக்கும். ஆனால், ஒரு முனிவரின் வாக்கு என்பது அவருடைய மனதிலிருந்து வருவதில்லை. அது எல்லாவற்றுக்கும் மேலான சத்திய சித்தம் என்னும் தளத்திலிருந்து நேரடியாக வருவது. அப்படி அது வெளிப்படும்போது, அந்த முனிவரைச் சுற்றியுள்ள சூழல் அல்லது உலகத்தையே மாற்றவல்ல ஆக்கசக்தி வாய்ந்ததாக அது விளங்குகிறது. அது அறியாமையை அழிக்கவல்லது.“

    இதையே ஸ்ரீ அரவிந்தர் வாயிலாகக் கேட்போம்:

    `சத்தியம் என்பது நம்மை ஒளியாய், அல்லது ஒளியின் குரலாய் வந்தடைகிறது. அது நம் புத்தியில் ஒரு மாறுதலை நிகழ்த்துகிறது. நம்மிலும் நம்மைச் சுற்றிலும் ஒரு தெளிவை வலிந்து வழங்குகிறது. எண்ணத்தில் நின்ற சத்தியம், காட்சியாய் விரிகிறது. அந்த சத்திய தரிசனம் ஆன்ம சத்தியமாய் நிலைபெறுகிறது. அதுவே உணர்ச்சி, புத்தி, செயல் யாவற்றையும் சத்தியத்தின் புறப்பாடாகவே ஆக்கிவிடுகிறது. இதுவே வேதத்தின் ஜீவக் கோட்பாடு.“

    சரஸ்வதீ ஸுக்தம் (இலா, சரஸ்வதி, பாரதி:)

    சரஸ்வதி என்னும்போது, ரிக்வேதம் இலா, சரஸ்வதி, பாரதி என்னும் மூன்று தெய்வங்களைச் சேர்த்தே கொண்டாடிப் போற்றுகிறது. மஹி என்னும் பெயரும் உண்டு. மஹியும் பாரதியும் ஒன்று என்பர் பெரியோர். மனுவின் பிள்ளை இல பெண்ணாகி இலாவானான் என்று புராணக் கதை ஒன்று உண்டு. ஆனால், இந்த மூன்று தெய்வங்கள், சத்திய வேள்வியில் ஈடுபட்டிருப்பவனுக்கு பார்வை, கேட்டல், மற்றும் விரிவு மூன்றையும் வழங்குகின்றனர். பாரதி என்பவள் அகண்ட பிரகாசம். இலா, அவ்வொளியின் அகண்டத்திற்கு ஏற்பவே, அதைச் சித்தத்தில் ஒளியாக்கித் தருபவள். ஊக்கத்தைத் தரித்தவளான சரஸ்வதி, அந்த ஒளியை, அதாவது சத்தியத்தைக் கேட்கச் செய்கிறாள்! இந்த சக்திகளெல்லாம் பார்க்கக் கூடிய வடிவில் தெரிபவை!

    0001Saraswathi_maa_Godess (1)

    மங்கலமான சத்தியங்கள் மண்டிக் கிடப்பவள்
    மனதில் ஆனந்த எண்ணங்களை விழிப்புறச் செய்பவள்
    அந்த சரஸ்வதி இந்த வேள்வியை ஏற்கட்டும்!

    (சோதயித்ரி ஸுந்ருதானாம் சேதந்தி ஸுமதீநாம்
    யக்ஞம் ததே ஸரஸ்வதீ! 1:3:11)

    சித்தத்தில் தரிசனத்தைச் சிந்திக்கும் வண்ணம் நிகழவைத்து
    சத்தியமாம் பெருவெள்ளத்தை விழிப்புறச் செய்பவள் சரஸ்வதி
    அத்தனை எண்ணங்களையும் ஒளியுறச் செய்கிறாள்1

    (மஹோஅர்ண: ஸரஸ்வதீ ப்ரசேத்யதி கேதுனா
    தியோ விஸ்வா விராஜதி 1:3:12)

    தூய்மை நல்குபவள் சரஸ்வதி. நிறைவால் நிறைந்திருப்பவள். சித்தத்தில் ஞானமாய்ச் செழித்திருப்பவள். நம் வேள்வியை ஏற்பளாக!

    (பாவகா ந: ஸரஸ்வதீ வாஜேபிர் வாஜினீவதீ
    யக்ஞம் வஷ்டு தியாவசு: 1;3:10)

    நிறைவால் நிறைந்திருப்பவள். செழுமையின் ஆற்றல் மிகுந்தவள், சித்தத்தில் ஞானத்தைப் பாதுகாப்பவள், எங்களைக் காப்பாற்றட்டும்!

    (ப்ரணோ தேவீ ஸரஸ்வதீ வாஜேபிர் வாஜினீவதீ
    தீனாம் அவித்ரி அவது 6:61:4)
    வாக் ஸுக்தம் : ரிக்வேதம் 10:125

    இந்த ஸுக்தம், வாக் என்னும் பெண் ரிஷியின் மூலம் வெளிப்பட்டது. வேதத்தில் குறைந்தது 25 பெண் ரிஷிகளைக் காணலாம். அவர்களுள், வாக் என்னும் ரிஷி சிறப்புக்குரியவர். ஸ்ரீ ஸுக்தம் அவர்மூலம்தான் வெளிப்பட்டிருக்கிறது. அதில் அவரே பராசக்தியாக வெளிப்பட்ட அபூர்வ இடம் உண்டு. `ஷுத்பிபாசா மலாம்ஜ்யேஷ்டாம் அலக்‌ஷ்மி நாசயாமி அஹம். `பசி தாகம் போன்ற முன்னர் தோன்றிய அசுத்தங்களை, துர்பாக்கியங்களை நான் விரட்டியடிக்கிறேன்` என்று அம்பிகையே மொழிகிறாள்! அதே ரிக்கின் அடுத்த வரி அம்பிகையை இறைஞ்சுவதாக அமைந்திருக்கிறது!

    அந்த வாக் ரிஷியின் மூலம்தான் இந்த வாக் ஸுக்தமும் வெளிப்பட்டது.

    வாக் என்பது பேச்சல்ல என்று ஏற்கனவே பார்த்தோம். அது சத்தியத்தின் இதயத்திலிருந்து வருகின்ற ஊக்கம். அண்டம் முழுதும் படைப்பில் நீக்கமற நிறைந்திருக்கும் ஆர்வம். அறிவின் ஆக்கத்தின் ஊற்று.

    எனவே. ஸுக்தம், `நான் ருத்திரர்கள், வசுக்கள், ஆதித்யர்கள், மித்ரன், வருணன், இந்திரன், அக்னி, அஸ்வினி தேவர்கள் இவர்களுடன் நடக்கிறேன், தாங்குகிறேன்,` என்னும் போது வாக் என்பதன் பொருள், பெரும் பிரமிப்பில் நம்மை ஆழ்த்துகிறது.

    `உயிர்கள் உண்பதும், காண்பதும், கேட்பதும், ஏன், சுவாசிப்பதும் என்னுடைய சக்தியால். சித்தத்தை என்பால் வைக்காதவர்கள் சிதைவுறுகிறார்கள். யாரை விரும்புகிறேனோ, அவனை வலிவுடையோன் ஆக்குகிறேன். அவனை ரிஷியாய் ஆக்கி, ஞானத்தைத் தந்து, பிரம்மத்தில் நிலைபெறச் செய்கிறேன்.

    ஒரு பெண்மூலம், இந்த மகாசக்தி பேச்சாகவும் வெளிப்பட்டிருக்கிறது என்பது நம்மை வாய்புதைக்க வைக்கிறது.

    மேதா ஸுக்தம்

    `நீ வருவதற்கு முன்னர், வருத்தம் தரும் பேச்சுக்களில் நாங்கள் ஈடுபட்டிருந்தோம். எங்களை மகிழ்ச்சியுடன் அணுகும் அறிவின் தேவியே வருக! மங்கலமானவளே, மென்மனம் கொண்டவளே, எங்கும் நிறைந்திருப்பவளே வருக! நின் வருகையால், நாங்கள் ஒளி பெற்று, பரம சத்தியத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்தும் வல்லமை பெறுவோமாக!` என்றே துவங்கும் இந்த ஸுக்தம் எதைப்பற்றிப் பேசுகிறது என்பதை விளங்கிக் கொள்வது சிரமமாக இல்லை. அறிவார்ந்த உணர்வே மேதா. Conscious awareness! Conscious intelligence!

    `தேவியே! நின்னருள் பெற்றோர் ரிஷியாகலாம். செல்வங்கள் யாவும் பெறலாம். பிரம்ம ஞானம் எய்தலாம். பலவிதமாய்ப் பல்கும் ஐஸ்வரியங்களைப் பெறலாம். எம்மீது மகிழ்ச்சி கொண்டு, அறிவோடு கூடிய செல்வங்களையே அளிப்பாயாக! சரஸ்வதி தேவியின் அறிவு, என்னுள் அருளப்படட்டும்!`

    இவள்தான் வாணி!

    இவள் அறிவுத் தெய்வமல்ல, அறிவின் தெய்வம்! இவளுடைய நாதத்திலிருந்தே படைப்பு. சொல்லப்போனால், இவளுடைய வாக்கே இந்த சிருஷ்டி. எனவே, இவள் தேவதையல்ல, இவளுக்கு மேல் இன்னொரு சக்தி இல்லையென்னும்படி இருக்கின்ற பராசக்தியே இவள்.

    இந்த வாணியைத்தான் பாரதி சரண்புகுந்தான். அதனாலேயே அவனில் பாரதி பூரணமாய்க் குடிகொண்டாள். வேதங்களை நேரடியாகப் பயின்றவன் பாரதி. எனவே, அவன், ஒரு தெய்வத்தைப் பற்றிப் பாடினால் அதில் வேதத்தின் சொற்கள், வேதத்தின் பொருள், வேதத்தின் கொள்கை இவை காணப்படுவதில் வியப்பில்லை. சரஸ்வதியைப் பற்றிய, மேற்குறிப்பிட்ட விளக்கங்களை மனதில் வைத்துக்கொண்டு, பாரதியின்,

    ஆதிப் பரம்பொருளின் ஊக்கம் – அதை
    அன்னை எனப்பணிதல் ஆக்கம்!

    என்னும் வரிகளை நோக்கும்போது நமக்கு மெய் சிலிர்க்கிறது!

    ..நாதமோ டெப்பொழுதும் –என்றன்
    நாவினிலே பொழிந்திட வேண்டும்…

    கண்மணி போன்றவரே
    அண்மையில் இருந்திடுவீர் – இனி
    அடியனைப் பிரிந்திடல் ஆற்றுவனோ!

    என்று அவன் பாடிய பாடல் ஸரஸ்வதி ஸ்தோத்திரம் எனப்படுகிறது. ஆனால் இது வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, பாரதி, ஸரஸ்வதி, மஹி, வாக் எல்லோரையும் ஒருங்கே சேர்த்துத் துதிப்பது போலவே இருக்கிறது.

    உள்ளதாம் பொருள் தேடியுணர்ந்தே
    ஓதும் வேதத்தின் உள்நின்று ஒளிர்வாள்
    கள்ளமற்ற முனிவர்கள் கூறும்
    கருணை வாசகத் துட்பொருளாவாள்

    என்னும் வரிகள் ரிக் வேத விளக்கமாகவே தெரிகின்றன.

    வஞ்சமற்ற தொழில்புரிந்துண்டு
    வாழும் மாந்தர் குலதெய்வமாவாள்
    வெஞ்சமர்க் குயிராகிய கொல்லர்
    வித்தை யோர்ந்திரு சிற்பியர் தச்சர்
    மிஞ்சநற்பொருள் வாணிகஞ் செய்வோர்
    வீர மன்னர், பின் வேதியர் யாரும்
    தஞ்சமென்று வணங்கிடுந் தெய்வம்
    தரணி மீதறி வாகிய தெய்வம்..

    இதுவும் வேதக் கொள்கையே! ஸரஸ்வதியைத் தொழில்களோடு இணைத்துப் பார்க்கும் தரிசனம் ஸ்ரீ அரவிந்தருடையது. அவர்தான் பாரதியின் நண்பராயிற்றே! அவர்கள் இதைப் பற்றி விவாதித்திருக்கலாம்.

    வாணி யார்? இதோ பதில்:

    வாணி கலைத் தெய்வம் மணிவாக் குதவிடுவாள்
    ஆணிமுத்தைப் போலே அறிவுமுத்து மாலையினாள்
    காணுகின்ற காட்சியதாய்க் காண்பதெல்லாங் காட்டுவதாய்
    மாணுயர்ந்து நிற்பாள் மலரடியே தொழுவோமே!

    அறிவுமுத்து மாலையினாள் என்னும் சொற்றொடர் சிந்திக்கத் தக்கது. சனாதன தர்மத்தில் அறிவைப் பேணும் வழக்கம் உண்டே தவிர, அறிவைத் தொழும் வழக்கம் இல்லை. அப்படிச் செய்தல் அறியாமை என்று நம் முன்னோர்களின் முடிவு. ஓர் உபநிடதம் சற்றுக் கடுமையாகவே சொல்கிறது, `அறிவை மதியாதவன் முட்டாள். அறிவை வணங்குபவன் அடிமுட்டாள்,` என்று. ஏன்? அறிவு, ஒரு கருவியாக மட்டுமே இருக்க வேண்டும். அதை நாம் ஆள வேண்டும். கருவியை எஜமானனாக்கித்தான் வேதத் திருவிழியாளுக்கு, மிக்க பல்லுரையெனும் கருமை யிட்டார்கள் பண்டிதர்கள். அது நம்மை ஆண்டால், நாம் ஆணவத்தின் வசம் இருக்கிறோம் என்றே பொருள். எனில், நம் அறிவு கனியாது, தெளிவடையாது. வேதத்தின் உட்பொருள் காணாது. பேச்சோடு நின்றுவிடும். வாக்கு வராது. இதைத்தான், என்னென்னவெல்லாம் அறிவுகளோ அதை முத்துமாலைகளாக்கி அணிந்திருக்கிறாள் வாணி என்கிறான் பாரதி. பாரதியின் இந்தப் பார்வை அவன் எவ்வளவு உயரமானவன் என்று நமக்குக் காட்டுகிறது.

    அந்த தேவியைச் சிறுவயதில் நேரிலும் கண்டவனாதலின் அவன் அவள் மேல் காதலே கொண்டு `பகற் பேச்சும் இரவிற் கனவும் அவளிடை வைத்த நினைவையல்லால் பிற வாஞ்சையுண்டோ?` என்று கலைமகளிடம் காதல் வயப்பட்டதை வர்ணிக்கிறான்.

    மஹா காளியின் புகழ் பாடப் புகுந்தவன்,

    வேதமாய் அதன்முன்னுள்ள நாதமாய் விளங்குமிந்த
    வீரசக்தி வெள்ளம் விழும் பள்ளம் – ஆக
    வேண்டுநித்தம் என்றன் ஏழை உள்ளம்

    என்று வாணியைத்தானே பார்த்துப் பாடுகிறான்!

    ஒரு கணம்கூட, தான் பேசக் கூடாது. தனது எண்ணம் என்ற ஒன்றிருந்து அது எத்தனை சிறப்பானதாக இருந்தாலும் அது சொல்லாக வெளிப்படுவதில் பாரதிக்கு சம்மதமில்லை. அவளுடைய வாக்கே இவனது நாவினின்று வெளிப்பட வேண்டும் என்பதே அவன் தவம்:

    வெள்ளை மலர்மிசை வேதக் கருப்பொரு ளாக விளங்கிடுவாள்
    தெள்ளுகலைத்தமிழ் வாணி நினக்கொருவிண்ணப்பஞ் செய்திடுவேன்
    எள்ளத்தனைப் பொழுதும் பயனின்றி இராதென்றன் நாவினிலே
    வெள்ளமெனப் பொழிவாய் சக்தி வேல் சக்திவேல் சக்திவேல்!

    அவள் வெளிப்பட்டால்தான், வேதக்கருப்பொருள் தன்னைப் புறந்தள்ளி வெளிப்பட்டால்தான் அது கவிதை, மந்திரச் சொல், வாழ்ந்த பயன். அல்லவெனில், `நல்லதோர் வீணை செய்தே, அதை நலங்கெடப் புழுதியில்` எறிந்த கதைதான்.

    ஓர் அரிய அக அனுபவத்தை வைக்கிறான், பராசக்தி என்ற கவிதையில். எல்லாமாகி இருப்பவள் பராசக்தி. அவளே கதையும் கவிதையும் சித்திரமும் சிற்பமும் நாடகமுமாய்ப் பல்கும்போது வாணியாகிறாள். காவியம் பாடென்கிறாள் வாணி. தன் கால்களைத் தவிர வேறெதையும் நினைக்காதே என்கிறாள் பராசக்தி. அல்லாடுகிறது மன்றாடும் கவிஞனின் மனம். (கவிதை..)

    இந்த அற்புதக் கவிதையில்,

    சொல்லினுக் கெளிதாக நின்றிடாள்
    சொல்லை வேறிடம் சொல்ல வழிவிடாள்

    என்னும் வரிகள் பராசக்தி, வாணி இருவருக்குமே கச்சிதமாகப் பொருந்தும்! அவர் இருவரல்லவே!

    சரி, வாணியைப் பற்றி இவ்வளவு சேதிகளைத் தெரிந்துகொண்டோம். பாரதிக்கும் பாரதிக்கும் உள்ள பரவசமான பந்தத்தைக் கண்டோம். நமக்கும் வாணியருள் வேண்டுமென்று தோன்றுகிறது. அவளிடம் எதை எப்படிக் கேட்க? கவலையே வேண்டாம், பாரதியின் இந்தப் பாடலைச் சொன்னால் போதும்:

    தெளிவுறவே அறிந்திடுதல் தெளிவுதர மொழிந்திடுதல்
    சிந்திப்பார்க்கே
    களிவளர உள்ளத்தில் ஆனந்தக் கனவுபல காட்டல்
    கண்ணீர்த்
    துளிவர உள்ளுருக்குதல், இங்கிவையெல்லாம் நீயருளும்
    தொழில்களன்றோ!
    ஒளிவளரும் தமிழ்வாணி அடியனேற் கிவையனைத்தும்
    உதவுவாயே!

    இந்தப் பாட்டை, பாஞ்சாலி சபதத்தில் சூதாட்டச் சருக்கத்திற்குக் கடவுள் வாழ்த்தாக வைத்தான்! அறியாமையின் சூதிலிருந்து நம் ஆன்மா தப்பி, அகண்டப் பிரகாசமாகத் திகழவேண்டுமானால், அவளே கதி!

    இறுதியாக, தன்னுடைய ஸரஸ்வதி வணக்கம் என்னும் பாட்டில், வாணிக்கு அழகான வடிவம் தந்து அவளைச் சரணெய்துகிறான்:

    வெள்ளைக் கமலத்திலே – அவள்saraswati-goddess-of-music-CJ28_l
    வீற்றிருப்பாள் புகழ் ஏற்றிருப்பாள்
    கொள்ளைக் கனியிசைதான் – நன்கு
    கொட்டுநல் யாழிசை கொண்டிருப்பாள்
    கள்ளைக் கடலமுதை – நிகர்
    கண்டதொர் பூந்தமிழ்க் கவிசொலவே
    பிள்ளைப் பருவத்திலே – எனைப்
    பேணவந்தாள் அருள் பூணவந்தாள்!

    அவள் வீற்ற இடம், உள்ளமாகிய வெள்ளைக் கமலம். வெள்ளை என்னும் சொல்லுக்குத் தூய்மை என்பது மட்டும் பொருளல்ல. அறிவின்மை என்றும் பொருளுண்டு! வெள்ளந்தி என்று சொல்வதில்லையா, அதுதான்! மேலு, எந்த நிறத்தின் சாயலையும் ஏற்காத தன்மை என்றும் பொருளுண்டு. அறிவை வைத்துக்கொண்டு அவளை அணுக முடியாது! நான் ஒன்றுமே இல்லை, எனக்கு ஒன்றுமே தெரியாது என்பது பணிவு. தெரியும், தெரியாது என்னும் சிந்தனைகளே இல்லாமல், ஒரு சின்னக் குழந்தையின் வெகுளித் தன்மையோடு வளையவருவதுதான் கள்ளமற்ற உள்ளமாகிய வெள்ளைக் கமலம்! தஞ்சம் விழைகிறேன், சரணம் எய்தவேண்டும் என்னும் நினைப்பும் இல்லாமல் தாயென்னும் கடலைச் சேரத் தாவிவரும் நதியைப்போல் இருப்பதுதான் அவன் சொல்லும் பிள்ளைப் பருவம்!

    அப்படிப்பட்ட உள்ளத்தில்தான் அவள், அவளாகவே வந்து வீற்றிருப்பாள். அதுதான் அவளுக்கு உகந்த இடம். அதுதான் அவளுக்குத் தக்க ஆசனம். எனவே, தனது தகுதிக்கேற்ற இடத்தில் தான் அமர்ந்திருக்கும்போது இசைக்கப்படும் புகழை அவள் ஏற்றிருப்பாள்!

    கனி என்பது, கொள்ளையடிக்கத் தூண்டுவது. அவளுடைய கனியிசையோ நம் இதயங்களைக் கொள்ளையடிப்பது!

    அவளுக்கு இந்தப் பிள்ளையின் வெள்ளை உள்ளத்தில் என்ன வேலை? இப்படிப்பட்ட பிள்ளையைத்தான் அவள் தேடிக்கொண்டிருந்தாள்.

    எதற்கு? கவிதை என்னும் வரத்தை அருளுவதற்கு!

    ஏன்? எனக்கு இது தெரியும், அதுதான் தெரியாது என்னும் நினைப்புக்கள், பேதங்கள் இல்லாத பிள்ளை உள்ளம்தான் தான் வழங்கும் கவிதைக்கு ஏற்ற உள்ளம்.

    எப்படிப்பட்ட கவிதையாம்? கள்ளை நிகர்த்தது – மயக்கமே வடிவாய் இருப்பது, மையலைத் தருவது, பழகப் பழகப் பெருமை கூடுவது! கடல் அமுதை நிகர்த்தது – சாகரத்தின் சாறு! உயிரின் இதயம்! அடர்த்தி, திரட்சி!

    கவிதை அமரவிதை. அதைப் பயில்வதற்குத் தேவை அசுர சாதகம்! எனவே, ஏற்ற இடத்தில் வீற்றிருந்து, புகழை ஏற்றபடி இசைத்துக்கொண்டிருக்கிறாள் வாணி.

    வேதத் திருவிழியாள் – அதில்goddess-saraswati-ma-big
    மிக்கபல்லுரை யெனும் கருமையிட்டாள்
    சீதக் கதிர்மதியே – நுதல்
    சிந்தனையே குழலென்றுடையாள்
    வாதத் தருக்கமெனும் – செவி
    வாய்ந்த நற்றுணிவெனும் தோடணிந்தாள்
    போதமென் நாசியினள் – நலம்
    பொங்குபல் சாத்திர வாயுடையாள்

    வியாக்கியானங்களால் தொலைந்து போனது வீதியில் வளையவந்த சத்தியம். ஆயிரம் ஆண்டுகளாக எத்தனை புத்தகங்கள், கட்சிகள், பிரிவுகள், சண்டைகள்! ’இதோ சத்தியம்!’ என்ற பரவச அனுபவத்தின் வெளிப்பாடு வேதம். அனுபவம் இல்லாதது வியாக்கியானம். “Experience has no language and language has no experience,” என்பார் என் குருநாதர். விளக்கம் என்பது விகாரப்படுத்தும் அபாயம் உள்ளது; மேலும் தோதாய் இருப்பதற்குப் பதிலாக ஊறு விளைவிக்கும் தன்மையுடையது என்று பாரதியே குறிப்பு எழுதுகிறான்.

    எனவே வேதங்களே விழிகள். அதுவும் கருவிழிகள். விழிகள் கருமை. வேதம் என்னும் அறிவு தரும் வெளிச்சம் வெண்மை!

    நெற்றி எப்போதும் குளிர்ச்சியாக இருக்குமாம் வாணிக்கு. கவலைச் சூடு ஞானத்தின் தாய்க்கு ஏது?! எந்த இரவானாலும் தனது தண்மை மாறாத சந்திரனே நெற்றி – சீதக் கதிர்மதி – என்கிறான். அதென்ன கதிர் மதி? நிலவின் அமுதக் கிரணங்கள் என்று பொருள் கொள்ளலாம். அதைவிடவும் சிறப்பாக இன்னொன்று சொல்லலாம். கதிரவனின் கொடைதானே மதியின் ஒளி? எப்போதும் வெப்பமாக இருக்கும் கதிரவனின் கொடை, எப்போதும் குளுமையாகவே இருக்கும் சந்திரன்! ஆஹா! சிந்தனைமயமானது அறிவு. தெளிவுமயமானது ஞானம்! கேள்விகள் ஓய்வைத் தராது என்றாலும் கேள்விகள் இல்லாமல் உள்ளேயே வீற்றிருக்கும் ஒய்யாரமான ஓய்வை நாடுகின்ற நாட்டம் எப்படி வரும்?

    ஞானம் ஞானமாய், வளர்ச்சியும், மாறுதலும், தேய்தலும் இல்லாமல் தானாய்த் தானிருக்க, மானுடர்க்கும், மற்றைய உயிரினங்களுக்கும் அவரவர் நிலைக்கு ஏற்பப் புரியும்படி அதை இறக்கி வழங்க வேண்டுமே! அதுதான் சிந்தனைக் கூந்தல்! நேர்த்தியான கூந்தல் எப்படி இருக்கும்? கரிய அருவியாய், கற்றை கற்றையாய் இருக்கிறது அவள் கூந்தல். ஒவ்வோர் இழையும் தனித்தனியாய், ஒட்டுமொத்தமான சேர்க்கையாய், உறுதியாய், நெகிழ்வாய், இன்பமே இயல்பாய், சுவாரசியமான சுருள்கள் கொண்டதாய்! சிந்தனையும் அப்படி இருக்கவேண்டும்.

    அனுபவத்தை நோக்கிய பிரயத்தனம் நமது சிந்தனை. அனுபூதியாக இறங்கி வருவது அவளுடைய சிந்தனை!

    வாதம், தருக்கம் என்னும் இரண்டு செவிகள். அதில் நல்ல துணிவென்னும் தோடு! வாதம் என்பது உரையாடல், discussion. தருக்கம் என்பது நியாயமாகப் படிப்படியாகப் பேசுதல், logic. ஒன்றில்லாமல் ஒன்றில்லை. இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா? என்பார் கண்ணதாசன். இரண்டு செவிகள் இரண்டு விதமாய்க் கேட்கக் கூடாது! உரையாடல், அதாவது வாதம் என்பது உண்மையை அறியவே! எனவே அது நியாயமாக இருக்கவேண்டும். பாரபட்சமின்றி இருப்பதே நியாயம்! வாதம் உண்மையை அறிவதற்காக! தருக்கம், தாவி ஒரு முடிவுக்குப் பிடிவாதமாக வராமல், அந்த உண்மையைப் படிப்படியாக அறிவதற்காக!

    சரி, வாதமும் தருக்கமும் வாயால் நிகழும் செயல்கள். அவற்றை ஏன் வாணியின் செவிகளாக்கினான்? வாதிப்பதிலும் தருக்கிப்பதிலும் இருக்கும் ஆர்வத்தைக் காட்டிலும், உண்மையைக் கேட்பதில்தான் கூடுதல் ஆர்வம் இருக்கவேண்டும்! அவளுடைய செவிகளே அழகான செவிகள். கச்சிதமான இணை பொருந்திய செவிகள். ஏனென்றால், அவளே வாதம், தருக்கம் இவற்றின் இலக்கான உண்மை. அதுவே அவளுடைய ஞானமாகிய வீணையின் இசை. அதை அவளே கேட்டுக்கொண்டிருக்கிறாள்! எப்படி, படைப்பின் கதையை, கணபதியின் பரந்த காதுகள் கேட்டுக்கொண்டிருக்குமோ அப்படி!

    அறிவாய் விரிந்த விழிகள் வேதம்; தெளிவாய்க் குளிர்ந்த மதியே நெற்றி; மற்றவர் தழைத்து ஓங்க, தான் தழைத்து இறங்கும் சிந்தனையே கூந்தல்; ஞானமென்னும் கொள்ளைக் கனியிசை; வீற்றிருக்க வெள்ளை உள்ளம்; அந்த இசையைக் கேட்டுக்கொண்டிருக்க சீரான இரு செவிகள்!

    துணிவென்னும் தோடு? சிந்திக்கவும், பேசவும் துணிவு வேண்டும்! அந்தத் துணிவைப் படிப்போ, பணமோ, பதவியோ, அழகோ, திறமைகளோ தராது! உண்மைதான் தரும்! உண்மையை அறிவது முடிவு. உண்மையை அறிந்தே தீருவேன் என்னும் ஆர்வமே துணிவு! இது ஆயுதத் துணிவு அல்ல! அழகான அணிகலத் துணிவு!

    வாணிக்கு, நமது கல்வியைக் காட்டிலும், உண்மையை அறியவேண்டும் என்னும் ஆர்வமே இன்பம் தரும். எனவே, உண்மையைத் துணியத் துணிவோமாக!

    வாயால் வெளிப்படுவதல்லவா போதம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம்! இவன், நாசி என்கிறானே! போதம் என்பது வார்த்தையில் வருவதில்லை. அதற்கு அப்பாற்பட்டது. மெளனத்தின் முரசு அது. உயிருக்கு உயிரானது அது. எனவெ அது சுவாசத்தின் வழியே வருவது! ஞானம் என்பது சுவாசமாக வேண்டும்! அப்படிச் செய்வதுதான் போதம்! அது பேச்சில் வராது. சர்ச்சைக்குரிய, பாரதி ”சங்கையில்லாதன சங்கையாம்” என்று குறிப்பிடும் சாத்திரங்களே வாய் மூலம் வெளிப்படுவன என்பதனால் சாத்திர வாயுடையாள்!

    கற்பனைத் தேனிதழாள் – சுவைக்aras1
    காவிய மெனுமணிக் கொங்கையினாள்
    சிற்பமுதற் கலைகள் – பல
    தேமலர்க் கரமெனத் திகழ்ந்திருப்பாள்
    சொற்படு நயமறிவார் – இசை
    தோய்ந்திடத் தொகுப்பதின் சுவையறிவார்
    விற்பனத் தமிழ்ப்புலவோர் – அந்த
    மேலவர் நாவெனும் மலர்ப்பதத்தாள்!

    இதழில் தேன் என்பது பருகுவோரின் கற்பனைதானே! ”பாலொடு தேன்கலந்தற்றே பணிமொழி வாலெயிறு ஊறிய நீர்” என்பாரே திருவள்ளுவர்! காதலில் கற்பனை அனுபவம்; அனுபவம் கற்பனை அன்று! இதழில் தேன் என்னும் கற்பனை, பருகப் பருகப் பெருகும் அனுபவம்!

    இங்கே வாணியே அனுபவங்களுக்கெல்லாம் அனுபவம். அறியாமையில் உழலும் நமக்கோ அது வெறும் கற்பனைதான். ஆனால், அந்தக் கற்பனையும் அவளுடைய கொடைதான் அல்லவா? அவள்தான் தன்னைப் பற்றிய கற்பனையை நமக்குத் தருகிறாள்! தேனொழுக்காக!

    ”ஏந்திள முலை” என்பார் இளங்கோ. மணிக்கொங்கை என்கிறான் பாரதி. முத்திரை போன்ற மகுடம் தரித்த கொங்கை. வனப்பு, திரட்சி, உறுதி, மிருதுத்தன்மை எல்லாம் சேர்ந்தது! காவியம் என்றால் அப்படி இருக்க வேண்டும்!

    கலைகளே அவளது கரங்கள்! கலைகள் என்னும் கரங்கள் மூலம் அவள் நம்மை அள்ளிக்கொள்கிறாள்; ஆதரிக்கிறாள்! கடுந்தவம் புரிந்து அடைவதைக் காட்டிலும் கலைகள் மூலம் இறையை அடைதல் எளிதென்பதைக் காட்டுகிறாள். அவள், கலை வாணியன்றோ!

    வெள்ளையான உள்ளக் கமலம் அவளுடைய உறைவிடம்; வேதமே விழிகள்; தண்மை மதியமே நெற்றி; வாதமும் தருக்கமுமே செவிகள்; துணிவே தோடு; போத நாசி; சாத்திர வாய்; கற்பனைத் தேனின் ஊற்றே இதழ்; காவியக் கொங்கை; கலைகள் கரங்கள்.

    சரி, பாதம்? அது எதுவாம்? எங்காம்?

    சொல்லின் நயமறிந்தவர்கள்; அது இசையோடு தோய்வதால் வரும் சுவையறிந்தவர்கள்; கற்பனைக்கு அப்பாலிருக்கும் ஓர் உந்துசக்தியின் விவரங்கள் அறிந்த விற்பன்னர்கள்; சுருங்கச் சொன்னால் தமிழ்க் கவிஞர்கள். அவர்களுடைய நாவிலே இவள் பாதமாம்! இல்லை இல்லை, அவர்களுடைய நாவே இவள் பாதமாம்!

    வாணியைச் சரண்புகுந்தேன் – அருள்
    வாக்களிப் பாளெனத் திடம்மிகுந்தேன்
    பேணிய பெருந்தவத்தாள் – நிலம்
    பெயரளவும் பெயர் பெயராதாள்!

    அப்படிப்பட்ட வாணியை நான் சரணடைகிறேன்! தீயென்றால் காடெரிய, தேனென்றால் பூமகிழ, வாய்நின்ற பேரருளே வாக்கு என்பேன் யான். அந்த வார்த்தைக்கு அப்பாலிருக்கும் மந்திரச் சொல்லின் மூலமான அருள் வாக்கை அவள் எனக்குக் கட்டாயம் அளித்தே தீருவாள் என்று நம்புகிறேன்.

    10177944_10152066284717919_2650350124425779658_nநம்புகிறவனுக்கு ஐயங்கள் இருக்கக் கூடாது. சரணம் எய்திய பிறகு கவலை இருக்கவே கூடாது. நான் கேட்பேன் அவள் தருவாள். இது நம்பிக்கை. எனக்குத் தரவே அவள் என்னைப் பணியவைத்தாள். இது சரணாகதி. “In faith there is distance; in surrenderthere is none. In faith, there is you and Him; in surrender, you jump into Him,” என்பார் குருநாதர்.

    உலகம் இருக்கும் வரைக்கும் அவளுடைய பெயர் இருக்கும். அவளுடைய பெயரே அவளுடைய உருவம். அது கல்லாலோ, பொன்னாலோ செய்ததல்ல. ஞானம் விழைவாரின் மோனத் தவத்தால் எழுந்தது! மோனக் கவிஞர்களின் கானப் பெருக்கால் விளைந்தது!

    தவத்தால், கவிதையால் பேணி வளரும் பெரும் தெய்வம் வாணி. அவள், அந்தத் தவத்தின், அந்தக் கவிதையின் முடிவாம் ஞானத்தால் நம்மைப் பேணுவாள்.

    திருஞான சம்பந்தரோடு அடியார்கள் ஜோதியில் கலந்ததுபோல்
    பாரதியோடு நாமும் வாணியைச் சரண்புகுவோம்!

    Share
  • மனோன்மணீயம் காட்டும் சிவகாமி சரிதை – பகுதி 1

    -முனைவர் இராம. இராமமூர்த்தி

     

    sundaranarபேராசிரியர் பெ. சுந்தரம்பிள்ளை
    (1855- 1897)

    நம் செந்தமிழ் மொழியை முத்தமிழ் என முன்னோர் வழங்குவர். இயல், இசை, ’கூத்து’ என்னும் நாடகம் ஆகிய மூன்று பகுதிகளாகத் தமிழ் தொன்றுதொட்டு இலங்கி வருகின்றது. தொல்காப்பியர், நாடகத் தமிழுக்குரிய மெய்ப்பாடுகளைப் பொருளதிகார மெய்ப்பாட்டியலில் மிக விரிவாக விளக்கியுள்ளார். நாடகம் எழுதுவதற்கான இலக்கண நூல்களும் அந்நாளில் இருந்தனவென்பதைச் சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்குநல்லார் எடுத்துக்காட்டியுள்ளார்.

    அகத்தியம், குணநூல், சயந்தம், செயிற்றியம், மதிவாணர் நாடகத் தமிழ் போன்ற தமிழ் நாடக இலக்கண நூல்கள் பண்டை நாளில் வழக்கிலிருந்தன. அல்லிக்கூத்து, கொடுகொட்டி, குடை, குடம், பாண்டரங்கம் போன்ற கூத்துக்களைப் பண்டைத் தமிழர் போற்றியுள்ளனர். எனினும் தமிழில் நாடக இலக்கிய நூல்கள் கிடைக்காமல் போனது நம் தவக்குறைவே. மேலும், கலைகளைப் பற்றிக் குறிப்பாக நாடகக் கலை பற்றி, நாகரிகக் கலப்பால் தமிழர்களிடையே மாறுபட்ட எண்ணமும் நிலவுவதாயிற்று.

    தமிழ்நாட்டில் பல நாடகங்கள் நடிப்பதற்காகத் தோன்றினாலும், இலக்கிய நாடகங்களாக அவை மிளிரவில்லை. இந்நிலையில் ஆங்கிலேயர் ஆட்சி தமிழ்நாட்டில் இடம்பெற்றபின் ஆங்கில மொழியும், இலக்கியமும் செல்வாக்குப் பெற்றன. சேக்ஸ்பியரின் நாடகங்கள் ஆங்கிலம் கற்ற தமிழர்களிடம் பாராட்டுப் பெற்றன.

    இச்சமயத்தில், 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், திருநெல்வேலிச் சீமையைச் சார்ந்த பேராசிரியர் பெ. சுந்தரம்பிள்ளையவர்கள், ‘மனோன்மணீயம்’ என்றவோர் அரிய நாடக நூலைத் தமிழ்மக்கள் படித்தின்புறவும், நடித்து மகிழவும் படைத்துத் தந்தார். இந்நாடக நூலே இன்றளவும் தமிழ் நாடக இலக்கியத் துறையில் தன்னேரில்லா நாடக இலக்கியமாக விளங்கிவருகின்றது என்றால் மிகையன்று.

    இந்நூல், கடந்த ஒரு நூற்றாண்டுக் காலமாகச் சென்னைப் பல்கலைக்கழக இடைநிலை (Intermediate), இளங்கலைப் பட்ட வகுப்புக்களில் நாடக இலக்கியமாகத் திகழ்ந்த பெருமை பெற்றது. ஆங்கில நாடக இலக்கியத்தைப் போலவே ஐந்து அங்கங்களையும் (Acts) பல உட்களங்களையும் (Scenes) கொண்டது இந்நூல். நாடக நூலின் ஐந்து அங்கங்களை, நாடக இலக்கணிகள், முகம், பிரதிமுகம், கருப்பம், விளைவு, துய்த்தல் என்று குறிப்பிடுவர். மனோன்மணீயமும் இவ்வைந்து உறுப்புக்களைப் பெற்றுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

    பேராசிரியர் சுந்தரம்பிள்ளை, லிட்டன் பிரபு ஆங்கிலத்தில் எழுதிய ‘The Secret Way’ – இரகசியவழி என்ற நூலைத் தழுவியே மனோன்மணீயத்தைப் படைத்துள்ளார். எனினும், இந்நூல் ஒரு மொழிபெயர்ப்பு நூலன்று; மூலக்கதை ஆங்கில மொழியில் அமைந்ததாயினும் மனோன்மணீயம் தமிழ்நாட்டுச் சூழலில் தமிழ் மண்ணில் தோன்றிய முதல் நூலே போன்று விளங்குகின்றதென்பதனை இந்நூலைக் கற்பார் நன்குணர்வர்.

    நாடகம் நடைபெறும் இடங்கள், தண்டமிழ் மதுரையும், தீந்தமிழ்த் திருநெல்வேலியும் சேரவேந்தனின் திருவனந்தபுரமும் ஆகும். இவையெல்லாம் தமிழ் மணக்கும் நன்னிலங்கள் அன்றோ! அம்மட்டோ! நாடகத்தில் இடம்பெறும் நாடக மாந்தர்களை நினைப்பின் அவர்கள் எல்லாரும் தமிழ்ப் பண்பாட்டினை வெளிப்படுத்துகின்ற நன்மக்கள்; நனிநாகரிகர். சீவகவழுதி பாண்டிய மன்னன்; சுந்தர முனிவர் குலகுரு; குடிலன் கேடுசூழ் அமைச்சன்; மனோன்மணி மன்னனின் ஒரே மகள்; நற்பண்புகளின் உறைவிடம். வாணி மனோன்மணியின் தோழி; நடராசனின் காதலி; அறிவில் சிறந்த நங்கை. நடராசன் சுந்தர முனிவரின் சீடன். புருடோத்தமன் சேரவேந்தன்; மனோன்மணியின் காதலன்; நற்பண்பினன். நாராயணன் மன்னனின் நலம்நாடும் நற்குடிமகன். பலதேவன் குடிலனின் மகன். சகடன் வாணியின் தந்தை; பொருளாசை மிக்கோன்.

    நாடக மாந்தர் மட்டுமல்லர், நாடகக் கதையும் தமிழ் நாகரிகத்தின் இரு கண்களாக விளங்கும் அகமும் புறமும் – காதலும் வீரமும் செறிந்து விளங்குவது. இதனைப் பின்புலமாகக்கொண்டு நடைபோடுவதே இம்மனோன்மணீய நாடகம். இந்நாடகத் தொடக்கம்கூட இந்நாட்டு நாகரிகத்தையும், பண்பாட்டினையும் பறைசாற்றுவதாகும்; அதனைக் காண்போம்.

    பாண்டிய மன்னன் சீவகவழுதியின் அரசவைக்கு மன்னனின் குலகுரு சுந்தர முனிவர் எழுந்தருளுகின்றார். மன்னன், தம் குருவை வணங்கி இனிய நன்மொழி கூறி வரவேற்கின்றார். அவ்வரவேற்புரை மன்னனின் மாண்பினைச் சுட்டுவது.

    “வருக! வருக! குருகிரு பாநிதே!
    திருவடி தீண்டப் பெற்றவிச் சிறுகுடில்
    அருமறைச் சிகரமோ ஆலநன் னீழலோ
    குருகுல விசயன் கொடித்தேர்ப் பீடமோ
    யாதென ஓதுவன்?”

    இம்மொழிகள் நம் பண்பாட்டினை உலகிற்கெடுத்துரைப்பதல்லவா? கருணை முனிவ! அருள் வள்ளலே! வருக! தங்களின் பொன்னார் திருவடிகள் தீண்டப்பெற்ற இச்சிறுகுடில் வேதங்களின் முடிவுப் பொருளோ? தென்முகக் கடவுள் வீற்றிருக்கும் ஆலமரத்தின் நல்ல நிழலோ? கண்ணபிரான் கீதை அருளிய அருச்சுனனின் தேர்ப் பீடமோ? அப்புகழுரைகள் தன் குருவிடம் மன்னன் காட்டிய நல்லெண்ணத்தின் வெளிப்பாடேயன்றோ?

    மேலும், இந்நாடகக் காப்பியத்தில் தமிழ்நாட்டின் இயற்கைஎழில் கவினுற எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. நடராசனின் தனிமொழியில் இடம்பெற்றுள்ள புல், வாய்க்கால், நாங்கூழ்ப்புழு பற்றிய செய்திகள் இயற்கை வருணனைகளோடு குறிப்புப் பொருளைச் சுட்டுவனவாகவும் அமைந்துள்ளன. இதனினும் மேலாக நாஞ்சில்நாடு எனப்பெறும் நன்செய்நாட்டு வளங்கூறும் பகுதி – இயற்கையெழிலைக் கற்பார் உள்ளம் களிகூர எடுத்துக்கூறும் பகுதியாகும். மனோன்மணீயம் கூறும் நன்செய்நாட்டு வளம் பத்துப்பாட்டின் பல நூற்பகுதிகளின் பிழிவெனக் கூறலாம். மருதமும் நெய்தலும் மயங்கிய திணைமயக்கப் பகுதிச் செய்திகள் தமிழ் மாணாக்கர் அனைவரும் படித்தின்புறவேண்டிய பகுதியாகும்.

    மேலும் இந்நூல் சுட்டும் நுண்பொருளாக அறிஞர்கள் சுட்டுவதையும் காணலாம். சீவகன் ஜீவாத்மாவாகவும், அவனை ஆட்டுவிக்கும் குடிலன் மாயா சக்தியாகவும், மனோன்மணி சுத்த தத்துவமாகவும், அவள் தோழி வாணி புத்தி தத்துவமாகவும், நடராசன் உபாசனா மூர்த்தியாகவும், புருடோத்தம வேந்தனை அனுக்கிரக சக்தியாகவும், சுந்தர முனிவரைக் கருணாமூர்த்தியாகிய ஞானாசிரியராகவும், மதுரையை மூலத்தானமாகவும் சுட்டுவர். இதனால் இந்நூல் தத்துவக் கருத்துக்களை உட்பொருளாகக் கொண்டு விளங்கும் நன்னூல் என்பதும் அறியத்தக்கதாகும். மற்றும் கருணாகரரும், நிட்டாபரரும் சிலந்திப் பூச்சியை எடுத்துக்காட்டித் தம் சித்தாந்த, வேதாந்தக் கருத்துக்களை விளக்கும் பகுதி இந்நூலின் மேலாந்தன்மையை அங்கையின் நெல்லியாய்த் தெளிவுபடுத்தும்.

     இனி, இந்நூலில் இடம்பெற்றுள்ள சுவைமிக்க ’சிவகாமி சரிதை’யை அடுத்த பகுதியில் காண்போம்.

    (வளரும்)

     

    Share
  • மன நல ஆலோசனைகள்

    அன்பு நண்பர்களே,

    vimalaஇன்று முதல் (23-05-2014) நம் வல்லமையில் மன நலம் என்ற புதிய பகுதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. திருமிகு. எம். விமலதாரணி, ஹோமியோபதி மருத்துவம் மற்றும் மன நல ஆலோசகர் உளவியல் சார்ந்த பல கருத்தரங்குகளை நடத்தி வருபவர், மற்றும் திரு. ஆ.கார்த்திகேயன் , வழக்கறிஞர், மன நல ஆலோசகர் ஆகிய இருவரும் நம் வல்லமை வாசகர்களுக்கான மன நலம் சார்ந்த ஆலோசனைகளை வழங்க இசைந்துள்ளனர். இவர்கள் சென்னை அண்ணா நகரில் (மேற்கு) காவியா ஹெல்த் ஹோம் எனும் மனநல ஆலோசனை மையம் நடத்தி வருகின்றனர். இம்மையத்தில் மாணவர்களுக்க்கான சிறப்பு மன நல ஆலோசனை, கல்வி மற்றும் தொழில் சார்ந்த வழிநடத்தல், குடும்ப நல ஆலோசனை வழங்கப்படுகிறது. இவர்கள் உளவியல் மற்றும் சட்டம் சார்ந்த பல கருத்தரங்குகளை நடத்தி வருகின்றனர். திரு ஆ. கார்த்திகேயன் மற்றும் திருமிகு எம். விமலதாரணி ஆகியோரிடம் தங்கள் பதிலைப் பெறுவதற்கு, vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு தங்கள் வினாக்களை அனுப்பலாம். பெயர் குறிப்பிட விரும்பாவிட்டால் அதையும் தெரிவிக்கலாம். இவர்களிடம் அண்மைக் காலத்தில் கேட்கப்பட்ட சில கேள்விகளும் அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் இங்கே:

    கேள்வி:1

    எனக்கு வயது 21. என் அக்காவிற்குத் திருமணமாகி விட்டது. என் அப்பா பத்து ஆண்டுகளுக்கு முன் விபத்தில் இறந்துKarthi விட்டார். 43 வயதான என் தாய் சமீப காலமாக வேறு நபருடன் நட்பாக பழகி வருகிறார். எங்கள் உறவினர்களில் சிலர் இதை தவறாகப் பேசுகின்றனர். இதைப் பற்றி அம்மாவிடம் கேட்கவும் பயமாக இருக்கிறது. சகித்துக் கொள்ளவும் முடியவில்லை. என்ன செய்வது?

    பதில்: நமது சமூகத்தில் ஆண் பெண் நட்புறவை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் இன்னமும் இருக்கிறார்கள். அதுவும் விதவைப் பெண் ஒரு ஆணுடன் நட்பாக பழகினாலும், தவறான ஒரு ஆணுடன் நட்பாகப் பழகினாலும் தவறான நோக்கிலான பார்வைகளே அதிகம். உங்களுக்கு உங்கள் தாயை பற்றித் தெரியாதா? மற்றவர்கள் தவறாக பேசுகின்றனர் என்பதற்காக நீங்கள் வருத்தப்பட வேண்டியதில்லை. நீங்களும், உங்கள் தமக்கையும் உங்கள் தாயாரிடம் பேசலாம். அந்த நபர் நல்லவராகவும் உங்களின் குடும்பத்தில் உள்ளவர்கள் மீது அக்கறை உடையவராகவும் அவரின் குடும்பத்தைச் சார்ந்தவர்களும் இந்த நட்பை சரியாகப் புரிந்து கொள்கின்றனர் என்றால் இதைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.

    கேள்வி: 2

    எனக்குத் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகின்றன. நானும் என் மனைவியும் எதோ இயந்திரம் போல ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறோம். பெற்றோர்களின் கட்டாயத்தின் பேரில் எங்கள் திருமணம் நடந்தது. இந்த இரண்டு ஆண்டுகளில் எங்களுக்குள் எந்த ஈடுபாடும் வளரவில்லை. நாங்கள் இருவருமே மனப்பூர்வமாகப் பிரிந்து விட நினைத்தாலும் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களின் கட்டாயப்படுத்தலும் மிரட்டலும் எங்களுக்கு சமீப காலமாய் விரக்தியை ஏற்படுத்துகிறது.

    பதில்: உங்களிடம் எந்த ஈடுபாடும் இல்லை என்கின்றீர்களேத் தவிர உங்களுக்குள் வெறுப்பு உள்ளது எனச் சொல்லவில்லை. நீங்கள் ஈடுபாடு எனச் சொல்வது தாம்பத்திய வாழ்விலா?அல்லது பொதுவான அனைத்து விஷயங்களிலுமா என்பது பற்றி உங்கள் கேள்வியில் தெளிவில்லை. சரி விவாகரத்து பெற்று விடுகிறீர்கள் என வைத்து கொள்வோம். பின்னர் என்ன செய்வதாக உத்தேசம்? மறுமணமா?அல்லது தனியாகவே இருந்து விடப் போகிறீர்களா?

    உங்களுக்கு கட்டாய மணம் செய்துவிட்டனர் என்ற கோபம் கூட தற்போதைய ஈடுபாடில்லா வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கலாம் அல்லவா? நீங்களும், உங்கள் மனைவியும் மனம் விட்டு இதுபற்றிப் பேசி இருக்கிறிர்களா? உங்கள் இருவரின் வாழ்விலும் வேறு நபர் குறிக்கீடு ஏதும் இல்லை என்றால், பிரச்சனை என்னும் மாய வலையிலிருந்து உங்களால் மிக எளிதாக வெளியே வந்து விட முடியும். மனநல ஆலோசகரை அணுகுங்கள்.

    கேள்வி : 3

    என் கணவருக்கு நான் இரண்டாம் தாரம். மூத்த மனைவி இறந்து விட்டார். அவருக்கு 7 வயதில் ஒரு மகன் இருக்கிறான். நான் அவனை கண்டிப்பதால் மற்றவர்கள் என்னைத் தவறாக நினைப்பார்களா?

    பதில்: அந்தப் பையனை நீங்கள் உங்கள் சொந்த மகனாகத்தான் கருத வேண்டும். அப்படி நினைத்தால் இந்த பயமே உங்களுக்கு தோன்றாது. குழந்தைகள் தவறு செய்யும் போது கடமை உணர்வோடு அவர்களைத் திருத்த வேண்டும். அதே போல் அந்தப் பையனையும் தவறு செய்தால் திருத்துங்கள் அரவணைக்கும் போது பாசமும் காட்டுங்கள். குழந்தைகளைக் கண்டித்தும், அரவணைத்தும் வளர்த்தால் அவர்கள் பாதுக்காப்பாக உணர்வார்கள். அதே நேரத்தில் கண்டிப்பு என்பது குழந்தையின் மனநிலைக்குத் தக்கப்படி அளவோடு பக்குவமாக இருக்க வேண்டும்.

    கேள்வி : 4

    எனக்குத் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகின்றன. நான் என் மனைவியிடம் பாசமாக இருக்கிறேன். எதேச்சையாக அவள் பெட்டியில் அவள் மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்ற சீட்டை கண்டுபிடித்தேன். ஆனால் அவளோ, அவள் பெற்றோரோ இதைப் பற்றி எதுவும் கூறாததால் அவர்கள் என்னை ஏமாற்றி விட்டதாக நினைக்கிறேன். மேலும் என் மனைவி மன நோயாளியாக இருப்பதால் அவளிடம் நான் எப்படி நடந்து கொள்வது?.

    பதில்: உங்கள் மனைவிக்கு எத்தகைய பாதிப்பு இருக்கிறது என்பது தெரியவில்லை. ஆனால் இது அச்சத்துக்கோ, ஆபத்துக்கோ உரியது இல்லை. மன நோயும் உடல் நோயைப் போலவே குணப்படுத்தக் கூடியது தான். உங்களிடம் உங்கள் மனைவி இதை மறைத்ததற்கு காரணம் அவளுடைய நோய் குணமாகி இருக்கலாம். அல்லது நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டு அவரை வெறுத்து விடலாம் என்பதற்காகக் கூட இருக்கலாம் அல்லவா? எப்படி ஆனாலும் உங்கள் மனைவிக்கு இப்போது எந்தப் பிரச்சனையும் இல்லை என்பதால் நீங்கள் இதைப் பெரிதுப்படுத்த வேண்டாம். தேவையெனில் அவரிடம் பேசி அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொண்டு அவசியம் ஏற்பட்டால் நீங்களே ஒரு நல்ல மனநல மருத்துவரைப் பார்க்கலாம்.

    Share
  • பொதிகை தொலைக்காட்சியில் குடந்தை ப. சுந்தரேசனார் குரலும் வாழ்வும் ஒளிபரப்பு, மு.இளங்கோவன்

    முனைவர் மு. இளங்கோவன்

    தமிழிசை மீட்புப் போராளியாக இருந்து தமிழகம் முழுவதும் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பயணம் செய்து தமிழிசை பரப்பிய இசைமேதை பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் அவர்களின் தமிழிசைப் பணி தமிழுலகம் கொண்டாடப்பட வேண்டிய ஒரு பணியாகும். இந்த இசையறிஞரின் வாழ்க்கையையும், பாடலையும் பொதிகை தொலைக்காட்சி ஒளிபரப்ப உள்ளது.

    அன்புகூர்ந்து தாங்கள் பார்ப்பதுடன் தமிழர்கள் அனைவரும் பார்ப்பதற்கான முயற்சியில் ஈடுபடவும் வேண்டுகின்றேன். அயலகத்தில் வாழ்பவர்கள் இணையம் வழியாக நேரலையாகப் பார்க்கமுடியும்.

    http://tamiltv.tv/dd-podhigai-live/

    இந்த இணைப்பில் நேரலையாகப் பார்க்கமுடியும்

    பொதிகை தொலைக்காட்சியில் குடந்தை ப. சுந்தரேசனார் தமிழிசைப் பணி அறிமுகம் ஆகும் நாளும் நேரமும்

    நாள்: 24.05. 2014 சனிக்கிழமை இந்திய நேரம் : முற்பகல் 11 மணி முதல் 12 மணி வரை

    நம் பண்படு மீட்க போராடியவரை நாம் இதயத்தில் வைத்துப் போற்றுவோம்

    அன்புள்ள மு.இளங்கோவன் புதுச்சேரி

    குறிப்பு: ப. சுந்தரேசனார் குறித்த ஆவணப்படம் தயாராகிக்கொண்டுள்ளது. முழுமை பெற்றதும் தமிழர்களின் அரிய செல்வப்புதையல் பெற்ற மனநிறைவு அனைவருக்கும் உண்டாகும்.

    மேலும் விவரங்கள் அறிய

    http://muelangovan.blogspot.in/

    முனைவர் மு.இளங்கோவன் Dr.Mu.Elangovan Assistant Professor of Tamil K. M. Centre for Postgraduate Studies, Government of Puducherry, Puducherry-605 008, India

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்? – 7

     – சு.கோதண்டராமன்

    தேவர்கள் யார்?

     

    தேவ என்ற சொல் ஒளி விடுதல் என்ற பொருளுடைய திவ் என்ற வேரிலிருந்து வந்தது. அதிலிருந்து தோன்றிய சொற்கள் பல உண்டு. தேவ என்ற சொல்லும், ஆகாயம் எனப் பொருள்படும் த்யௌ, தெய்வீகமான என்று பொருள் படும் திவ்ய முதலான அதன் பிற வடிவங்களும் ரிக் வேதத்தில் சுமார் 3000 தடவைகள் வருகின்றன. வேறு எந்தச் சொல்லும் இவ்வளவு அதிகமாகப் பயன்படுத்தப் படவில்லை. எனவே தேவர்கள் தாம் ரிக் வேதத்தின் முக்கியப் பொருள் என்று கொள்ளலாம்.

    ரிக் வேதம் முழுவதும் தேவர்களைப் போற்றும் துதிப் பாடல்கள் தாம். இந்திரன், அக்னி, வாயு, ஸவிதா, வருணன், மித்ரன், அர்யமான், மருத்துகள், அசுவினி தேவர் எனப்படும் இரட்டையர், பூமி, ஆகாயம், பிரஹஸ்பதி, பிரம்மணஸ்பதி, ருத்ரன் எனத் தேவர்கள் பலராவர்.

    தேவர்கள்

     

    தேவர்கள் என்றால் இமையாத கண்களும், கீழே நிலத்தில் படாத கால்களும் உடையவர்கள் என்று புராணங்களில் படித்திருக்கிறோம். அதை எல்லாம் சற்று நேரம் மறந்து விட்டு ரிக் வேதத்தின் படி தேவர்கள் என்போர் யார், அவர்களின் இயல்பு என்ன என்பதைக் கவனிப்போம்.

    ரிக் வேதத்தின்படி தேவர்கள் என்போர் ஒளி வடிவான உடல் உடையவர்கள். சூரியன், அக்னி முதலானோர் மட்டுமல்ல, வாயு, மருத் போன்ற நம் கண்களுக்குப் புலப்படாத தேவர்களும், நதி, நீர் போன்ற பொருட்களும் கூட ஒளி வடிவமான உடலைப் பெற்றிருப்பதாக வேதம் கூறுகிறது.

    தங்கம்
    தேவர்கள் ஒவ்வொருவருக்கும் தங்கத்துடனான ஏதாவது தொடர்பு கூறப்படுகிறது. மருத்துகள் ருக்மவக்ஷஸ் (தங்க ஆபரணம் அணிந்தவர்), தங்கரதத்தில் பயணிப்பவர் என்று கூறப்படுகிறது. சவிதா ஹிரண்யபாணி (தங்கக் கையர்) எனப்படுகிறார். சந்தியா வந்தனத்தில் வரும் ஹிரண்யயேன சவிதா ரதேன ஆ தேவோ யாதி என்ற ரிக் மந்திரம், சவிதாவும் தங்க ரதத்தில் பயணிப்பவர் என்று காட்டுகிறது. பூஷன், இந்திரன் இருவரும் தங்க ஆயுதம் கொண்டவர்கள். இந்திரனின் வஜ்ராயுதம் தங்கத்தால் ஆனது. வருணனின் கவசம் தங்கத்தால் ஆனது (ஹிரண்யத்ராபி). இந்திரனே தங்க மயமானவர் என வர்ணிக்கப்படுகிறார். அவர் தன் பக்தர்களுக்கு தங்க ரதம் பரிசளிக்கிறார். ருத்ரன் தங்கம் போலப் பிரகாசிப்பவர் எனப்படுகிறார். அக்னியின் கேசமும், கொம்புகளும் தங்கமயமானவை (ஹிரண்யகேசி, ஹிரண்யச்ருங்க). மித்ரனும் வருணனும், பூமியும் ஆகாயமும் பொன் மேனி கொண்டவர்கள். மின்னல் தங்க ரதத்திற்கு ஒப்பிடப்பட்டுள்ளது.

    இவை எதையும் நேர்ப் பொருளில் எடுத்துக் கொள்ளக்கூடாது. தேவர்கள் ஒளி வடிவமானவர்கள் என்பதைத் தான் இது குறிப்பிடுகிறது.

    தேவர்களுக்குள்ளே சவிதா எனப்படும் சூரியன் சிறப்பிடம் பெறுகிறார். சவிதா என்ற பெயர் வரும்பொழுதெல்லாம் தேவ என்ற அடைமொழி பெரும்பாலான இடங்களில், அதாவது 60 சதவீதம் இடங்களில், வருகிறது. இதற்கு மாறாக, இந்திரனுக்கு இந்த அடைமொழி 12 சதவீத இடங்களிலும், உஷஸுக்கு 23 சதவீத இடங்களிலும், அக்னிக்கு 30 சதவீத இடங்களிலுமே கொடுக்கப்படுகிறது.

    உதாரணத்திற்குக் காயத்ரி மந்திரத்தையும் அதற்கு அடுத்த இரண்டு மந்திரங்களையும் பாருங்கள்.

    தத் ஸவிது: வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோ ந: ப்ரசோதயாத். 3.62.10
    தேவஸ்ய ஸவிது: வயம் வாஜயந்த: புரந்த்யா பாகஸ்ய ராதிம் ஈமஹே 3.62.11
    தேவம் நர: ஸவிதாரம் விப்ரா: யக்ஞை: ஸுவ்ருக்திபி: நமஸ்யந்தி தியா இஷிதா 3.62.12

    யஜுர்வேதத்தின் முதல் மந்திரத்திலும் சவிதா தேவ என்ற அடைமொழியுடன் கூடவே வருகிறது.

    தேவ: வ: ஸவிதா ப்ரார்பயது ச்ரேஷ்டதமாய கர்மணே

    சூரியனின் ஒளியைக் கருதியே இந்த அடைமொழி கொடுக்கப்பட்டுள்ளது. இயற்கையான ஒளி கொண்ட சூரியன் தான் முதல் தேவன் என்பது ரிக் வேதத்தின் கருத்து எனலாம். சூரியனுக்கு அடுத்தபடியாக ஒளியுள்ள பொருளாகிய அக்னியும் தேவ என்ற சொல்லின் நேர்ப் பொருளுக்கு உரியதாக உள்ளது.

    தேவிகள்
    தேவர்களில் பெண்பாலரும் உண்டு. அவர்கள் தேவி எனப்படுகின்றனர். உஷஸ், அதிதி, பூமி, நதி, நீர் ஆகியவை பெண் தெய்வங்களாகும். த்யௌஸ் எனப்படும் ஆகாயம் பொதுவாக ஆண்பாலாகக் கருதப்பட்டாலும், ஆகாயம் பூமி இரண்டையும் சேர்த்துக் குறிக்கும் சொல்லான ரோதஸீ என்பது இரு பெண்கள் என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது.

    தேவபத்னி என்ற சொல் பல இடங்களில் வருகிறது. ஆனால் தேவர்களின் இந்த மனைவிமார்களைப் பற்றிக் குறிப்பிடும்படியான தகவல் எதுவும் இல்லை.

    உறவு முறைகள்
    தேவர்களிடையே தாய், தந்தை, சகோதரன், சகோதரி ஆகிய உறவு முறைகள் இல்லை. ருத்ரனின் மகன்கள் மருத்துகள் என்றும், சூரியனின் மகள் உஷஸ் என்றும் நீரின் மகன் அக்னி என்றும் கூறப்பட்டாலும், இவற்றை நாம் நேர்ப் பொருளில் எடுத்துக் கொள்ளக் கூடாது.

    இரண்டு உதாரணங்களைப் பார்ப்பதன் மூலம் அதற்கான காரணம் தெரியும். அக்னியை இரண்டு தாய்மார்களின் மகன் என்று கூறப்பட்டிருக்கிறது. ஒரு குழந்தைக்கு இரண்டு தாய் என்பதை நேரடியாகப் பொருள் கொள்ள முடியாது. இரண்டு அரணிக் குச்சிகளைச் சேர்த்துக் கடைந்தால் அக்னி தோன்றுகிறது என்பதைத் தான் இப்படிக் கூறுகிறது வேதம்.

    உஷா சூரியனின் மகளாகவும் கூறப்பட்டிருக்கிறாள். அவளை சூரியனின் மனைவியாகவும் வேதம் குறிப்பிடுகிறது. உண்மை என்னவென்றால், சூரியனைப் போலவே பிரகாசமாக, ஆனால் உருவத்தில் சிறியதாக இருப்பதால் உஷா சூரியனின் மகளாகக் கூறப்படுகிறாள். தினம் தோறும் சூரியனுக்கு முன் எழுந்து விடுவதால், சூரியனிடமிருந்து இணை பிரியாமல் இருப்பதால் மனைவியாகக் கூறப்படுகிறாள்.

    கருத்தை விளக்குவதற்காக அவ்வப்போது பயன்படுத்தப்படும் இந்த உறவு முறைச் சொற்களை நேர்ப் பொருளில் எடுத்துக் கொள்ளக் கூடாது. எனவே தேவர்களிடையே உறவு முறைகள் இல்லை.

    வசிக்குமிடம்
    தேவர்களில் பெரும்பாலானவர்கள் ஆகாயத்தில் வசிப்பவர்கள். அதனால் அவர்களுக்கு திவக்ஷஸ், த்யுக்ஷஸ் என்ற பெயர் உண்டு. நதிகள் முதலான பூமியிலேயே வாழும் சில தேவர்களும் உண்டு. ஆகாயம், நீர், நிலம் என மூன்று இடங்களில் வாழ்பவர் அக்னி.

    உணவு
    தேவர்களுக்கு அளிக்கப்படும் உணவின் பெயர் ஹவிஸ். அதை அவர்கள் நேரடியாக நம் கையிலிருந்து பெற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு அக்னியை நாக்காக உடையவர்கள் (அக்னி ஜிஹ்வா) என்று பெயர் உண்டு. ஹவிஸ்ஸை அக்னியிடம் சேர்ப்பித்துவிட்டால் அக்னி அதை எடுத்துக் கொண்டு போய் அவர்களுக்குத் தருவார். அதை உண்டபின் அவர்கள் யக்ஞ பூமிக்கு வருவார்கள். நாம் போட்டு வைத்திருக்கிற பர்ஹிஸ் எனப்படும் தர்ப்பை ஆசனத்தில் அமர்ந்து சோமபானத்தைக் குடிப்பார்கள்.

    சோமபானம்
    எல்லாத் தேவர்களும் சோமபானத்தில் விருப்பமுள்ளவர்கள் என்றாலும் இது இந்திரனுக்கு மிக விருப்பமானதாகக் கூறப்பட்டிருக்கிறது. சோமத்தினால் உற்சாகம் அடைந்த இந்திரன் பல வலிமையான செயல்களைச் சாதிக்கிறான் என்கிறது வேதம். சோம பானத்தால் மகிழ்ச்சி அடைந்த தேவர்கள் பல நலன்களைக் கொடுப்பார்கள் எனவும் கூறுகிறது.

    தேவர்கள் நாம் அளிக்கும் உணவை உண்டாலும் அவர்களுக்கு உணவு அவசியம் இல்லை. நாம் உணவு அளிக்காவிட்டாலும் அவர்களுக்கு ஒரு குறையும் இல்லை. நம்முடைய பணிவின் அடையாளமாகத் தான் அவர்கள் அதைக் கருதி ஏற்றுக் கொள்கிறார்கள். அதே போல சோமத்தைக் குடித்து மகிழ்ச்சி அடைந்தாலும் அதையும் அவர்கள் நம்முடைய பக்தியின் வெளிப்பாடாக எடுத்துக் கொள்கிறார்களே அன்றி சோமம் இல்லாமலும் அவர்கள் மகிழ்ச்சியாக உயிர் வாழ முடியும்.

    அமரர்கள்
    தேவர்கள் அமர்த்யர்கள் எனப்படுகிறார்கள். அதாவது சாகா நிலை பெற்றவர்கள். மனிதனைப் போலவோ மற்ற பிராணிகளைப் போலவோ அவர்கள் இறந்து போவதில்லை. எனவே அவர்கள் நம்முடைய பல தலைமுறை முன்னோர்களைப் பார்த்திருக்கிறார்கள். இனி வரவிருக்கும் பல தலைமுறைகளைப் பார்க்கப் போகிறார்கள்.

    ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யு: (பிறந்தவர் இறப்பது உறுதி) என்ற கீதை உரை தேவர்களுக்குப் பொருந்தாது. ஏனெனில் அவர்கள் பிறந்தவர்கள். ஒரு முறை அல்ல, இருமுறை பிறந்தவர்கள் என்று ரிக் 6.50.2 கூறுகிறது. ஆனால் அவர்களுக்கு இறப்பு இல்லை.

    பரஸ்பர சார்பு
    தேவர்கள் எல்லோருமே வலிமை, அறிவு, செல்வம் மிக்கவர்களாகக் கூறப்படுகிறார்கள். தேவர்களில் உடல் குறையோ, குணக் குறையோ, அறிவுக் குறையோ கொண்டவர்கள் எவரும் இல்லை. எல்லோருமே மனிதர் பால் அன்பு உடையவர்கள். அவர்கள் மனிதர்க்கு வலிமையின் ஊற்றாக விளங்குகிறார்கள். கூப்பிட்டால் உடனே வந்து காப்பாற்றுகிறார்கள். பிரார்த்தனை செய்து சோம பானம் கொடுத்துவிட்டால் அவர்கள் மகிழ்ந்து பசு, குதிரை, குழந்தைப் பேறு, நீண்ட ஆயுள், தங்கம், ரயி எனப்படும் செல்வம், ஆரோக்யம், வேலைக்காரர்கள் என எதை வேண்டுமானாலும் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள். எல்லாத் தேவர்களும் கொடையாளிகள், ஸுதானு, தானுனஸ்பதி என்று சிறப்பிக்கப் பெறுகிறார்கள். அவர்கள் நாம் செய்யும் பிரார்த்தனையால் வலிமை பெறுகிறார்கள். இவ்வாறு தேவர்களும் மனிதரும் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்கிறார்கள்.

    பேச்சு
    தேவர்கள் செயல் வீரர்கள். பொதுவாக அவர்கள் பேசுவதில்லை. இந்திரன் பேசுவதாக சில சூக்தங்கள் இருந்தாலும் அவை இயற்றிய ரிஷிகளின் கருத்தே, நாடக பாணியில் சொல்லப்பட்டனவாக அறிகிறோம். தேவர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்வதாக எங்கும் குறிப்பிடப்படவில்லை.

    ஒற்றுமை
    தேவர்கள் தங்களுக்குள் ஒற்றுமையாக இருக்கிறார்கள். வருணன், மித்ரன், அர்யமான் மூவரும் சேர்த்தே போற்றப்படுகிறார்கள். இந்திரனுக்கு மருத்துகள் உதவி புரிகிறார்கள். சில சமயங்களில் இரண்டிரண்டு தேவர்கள் சேர்த்தே வணங்கப்படுகிறார்கள். – அக்னி விஷ்ணு, அக்னி சோமன், அக்னி மருத்துகள், இந்திரன் அக்னி, இந்திரன் பிரஹஸ்பதி, இந்திரன் பூஷன்.

    பகை
    மனிதர்கள் தங்கள் பகைவர்களாகிய தஸ்யுக்களையும் ராட்சசர்களையும் வெல்வதற்கு தேவர்களின் உதவியை நாடுகிறார்கள். அவர்களுடன் மனிதர் சார்பாகத் தேவர்கள் போரிடுகிறார்கள். எல்லாத் தேவர்களுக்கும் ஆயுதங்களும் ரதங்களும் உண்டு. தேவர்கள் விண்ணிலும், மண்ணிலும் இடைவெளியிலும் பயணிக்கிறார்கள். கடல்களோ மலைகளோ அவர்களது ரதங்களைத் தடுப்பதில்லை.
    இவ்வாறு தேவர்கள் ஆரோக்யம், சாகாமை, செல்வம், வலிமை, அறிவு எல்லாம் ஒருங்கே பெற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு எந்தத் துன்பமும் இல்லை. எப்பொழுதேனும் ராட்சசர்களுடன் நடக்கும் போரில் தேவர்களே வெற்றி பெறுகிறார்கள்.

    படம் உதவி: விக்கிபீடியா, http://ta.wikipedia.org/s/33z9

    Share
  • பாஞ்சாலியின் சபதம்!

    -கவிநயா

    வெகு நாட்களுக்குப் பின் ஒரு படைப்பு…தொலைக்காட்சியில் மகாபாரதம் பார்க்க நேர்ந்ததன் பாதிப்பு…

    பாராளும் சக்கரவர்த்தியின் மனைவியான திரௌபதியின் நிலையைப் பார்க்கையில் எழுந்த தவிப்பு!

    துரியோதனாதியரின் அட்டூழியத்தை இப்போது பார்க்கும்போதுகூட, நாமே எழுந்து சென்று நாலு போடு போடலாமா என்று நமக்கே அத்தனை ஆத்திரம் வருகையில், பீஷ்மரும் விதுரரும் துரோணரும் எப்படி இந்த அதருமத்தை இத்தனைதூரம் வளர விட்டார்கள் என்ற ஆச்சர்யமும் ஆதங்கமும் ஏற்படுகிறது. அதருமத்தை வளர விடுவதுதான் தருமமா?!

    பாரதி ஏற்கனவே எழுதிவிட்டான்…அதனால் என்ன, நானும் எழுதலாம்தானே? சில நிமிடங்கள் அவன் எழுதியதை மனதிலிருந்து தள்ளிவைத்துவிட்டு, இதனை வாசிக்க வேண்டுகிறேன்!

    DRAUPADI

    பாஞ்சாலியின் சபதம்

    1.

    அண்டம் நடுநடுங்க
    அலைகடலும் இடம்மாற
    தென்றல் காற்றதுவும்
    சீற்றங்கொண்டு தடம்மாற
    செய்யும் செயல்யாவும்
    கைநழுவிப் புலம்மாற
    வையம் முழுவதுமே
    காரிருளில் தடுமாறப்
    பெய்யும் மாமழையும்
    பொய்த்துவிட்டுப் போயிருக்க
    உய்யும் வகையின்றி
    உயிர்களெல்லாம் பரிதவிக்கத்
    தருமம் தலைகுனியத்
    தவமுனிவர் தவித்துநிற்க
    சாத்திரம் சொன்னதெல்லாம்
    நீர்த்துவிட்ட பேச்சாக…!

    2.

    தீயில் உதித்து வந்த
    தேவதைக்கும் இந்நிலையோ?
    உலகை ஆளவந்த
    உத்தமிக்கும் இத்துயரோ?
    கண்ணிழந்த மன்னனவன்
    மனதாலும் குருடானான்
    பெண்ணின் துயர்த்தீயை
    வளர்த்துவிட்ட நெய்யானான்!
    சொல்லில் அடங்காத
    வேதனைக்கு வித்திட்டான்
    புல்லுக்கும் கீழான
    புத்திரரைப் பெற்றிட்டான்!
    வினையை விதைத்திட்டால்
    அறுத்திடவும் வேண்டுமென
    அறியாமல் அறிவிழந்தான்
    அத்தினாபுர அரசன்!

     3.

    ஐயோ என்றழுத
    அன்னைக்குத் துணையில்லை
    ஐவரை மாலையிட்டாள்
    ஆனாலும் பலனில்லை
    கண்ணீர் விட்டழுதாள்
    காப்பாற்று வாரில்லை
    கதறித் தானழுதாள்
    கற்பரசி திரௌபதையாள்!
    விவேக விதுரரவர்
    வேதனையால் தலைகவிழ்ந்தார்
    பிதாமகர் பீஷ்மருமே
    பேசாதிருந் தாரே!
    தருமத்தின் வாழ்வுதன்னைச்
    சூதாட்டம் கவ்வியதே
    அதருமப் பிடியினிலே
    அவையோரும் சிக்கினரே!

     4.

    துஷ்டன் துரியனுமே
    தம்பிக்கு ஆணையிட
    துச்சாதன அரக்கன்
    துகிலுரிய வந்துவிட்டான்!
    வீரர் ஐவருமே
    வீணாக நின்றிருக்க
    வில்லும் கதையம்பும்
    வேலையற்றுப் போயிருக்கக்
    கதறிப் பரிதவித்த
    கண்மணியாள் திரௌபதியும்
    கூவி அழைத்திட்டாள்
    கார்மேகக் கண்ணனைத்தான்!
    கண்ணா கோவிந்தா
    நீயேயென் கதியென்றாள்
    துவாரகையை விட்டெனக்குத்
    துணையாய்வா என்றழுதாள்!

    5.

    கூப்பிய கரமிரண்டும்
    சிரசின்மேல் வீற்றிருக்கக்
    கூறிய சொல்லிலெல்லாம்
    ஹரிநாமம் ஒலித்திருக்க
    மூடிய விழியிரண்டில்
    கண்ணீர் பெருகிவர
    நாடிக் கலந்துவிட்டாள்
    கண்ணனவன் திருவடியில்!
    கமலத் திருவடியே
    சரணமெனக் கொண்டுவிட்டாள்
    கண்ணன் தனையன்றி
    துணையில்லை என்றுவிட்டாள்
    செதுக்கிய சிற்பம்போல்
    சேயிழையாள் சமைந்துவிட்டாள்
    ஒதுக்கிவிட்டாள் அனைவரையும்
    ஒருவனையே பற்றிவிட்டாள்!

     6.

    கண்ணன் வந்துவிட்டான்
    வண்ணத் துகிலுருவில்!
    பெண்ணிற் கருளிவிட்டான்
    பிரியமுடன் மனமிரங்கி!
    துஷ்டத் தம்பியும்
    இழுத்துக்கொண் டிருக்கையிலே
    விதவிதமாய் மேலாடை
    முளைத்தபடி இருந்ததுவே!
    பட்டாய்ப் பருத்தியாய்ப்
    பகட்டாய்ப் பலநிறமாய்
    கண்டவர் மயங்கிடவே
    மலையெனவே குவிந்ததுவே!
    இழுத்துக் களைத்துவிட்டான்
    அற்பத் தம்பியுமே
    கரமிரண்டும் சோர்ந்திடவே
    நிலைகுலைந்து விழுந்துவிட்டான்!

    7.

    துரியன் தலைகவிழ்ந்தான்
    பாண்டவரோ தலைநிமிர்ந்தார்!
    போனஉயிர் வந்ததுபோல்
    அவையோரும் விழித்தமர்ந்தார்!
    பீமன் சூளுரைத்தான்
    துரியன்தொடை பிளப்பதாக!
    விஜயன் சூளுரைத்தான்
    கர்ணனைத்தான் மாய்ப்பதாக!
    துஷ்டர்தம் செந்நீரைப்
    பூசிக் குளித்தபின்னே
    குழல்முடிப்பேன் அதுவரையில்
    குழல்முடியேன் தானெனவே
    பாஞ்சாலத் திருமகளாம்
    பாரதத்தின் நாயகியாம்
    திரௌபதையும் சூளுரைத்தாள்
    திக்கெட்டும் எதிரொலிக்க!

     

    Share
  • வெடித்துப் பிறந்தவள்

     

    கே. ரவி
    எங்கும் பரவசம் எல்லாம் அதிசயம்large_276238
    தங்கும் வரையித் தரையே நிச்சயம்

    ஒவ்வோர் அடியாய்த் தாங்கிக் கொண்டு
    ஓலமெல் லாமுள் வாங்கிக் கொண்டு
    வெவ்வே றான மரஞ்செடி கொடிகள்
    விதவித மான காய்கனி வகைகள்
    வளர விரிந்து தன்மடி தந்து
    மெளன மேவடி வாக இருக்கும்
    பூமித் தாய்க்கிங் கீடிணை யுண்டோ

    காற்று வந்து புழுதி வாரித்
    தூற்றி னாலும் பொறுமை யாக
    ஏற்றுக் கொள்ளும்
    தென்றல் வந்து
    சீண்டி னாலும் சிரித்துக் கொள்ளும்
    தேசங்க ளாகப்
    பிரித்துக் கொண்டு போர்புரிந் தாலும்
    ஒரேமு னைப்பில் ஒரேஏ கதியில்
    சுழன்று கொண்டேஇருக்கும்
    சூரியத் தேவனைச் சுற்றிச் சுற்றியே

    அவளே சற்று நடுங்கும் வண்ணம்
    அமைதி இழந்து குலுங்கும் வண்ணம்
    என்ன நடந்தது யாரழு தாரோ
    எங்கோ ஒருகண் ணகியா இல்லை
    இரணியன் மீண்டும் வந்துவிட் டானா
    தேவகு மாரனைச் சிலுவையில் அறைய
    யாரோ திட்டம் இடுகின் றாரோ
    மாமுனி வர்தவம் கலைப்ப தற்கே
    மீண்டும் ஊர்வசி ஆடுகி றாளோ
    குழந்தை பசியில் கதறிய ழத்தாய்
    கையில் சல்லிக் காசும் இன்றிக்
    கலங்கி நிற்கும் காட்சியோ இந்த
    நிலநடுக் கத்துக் கென்ன காரணம்
    ஊழிக் கூத்துக் (கு) ஒத்திகையோ
    பாழில் வெடித்துப் பிறந்தவள் தானே

    எங்கும் பரவசம் எல்லாம் அதிசயம்
    தங்கும் வரையித் தரைதான் நிச்சயம்.

    21-05-2014

    Share
  • என் பார்வையில் கண்ணதாசன் – ஆயிரத்தில் ஒருவன்

    -ஜெயஸ்ரீ ஷங்கர் kannadasan - jayasri

     

    முன்னுரை

    கவியரசர் கண்ணதாசனைப் பற்றி எழுத எனக்கு என்ன தகுதி இருக்கிறது?  என்று நான் என்னையே கேட்டுக் கொள்கிறேன். ‘இல்லை’ என்ற பதிலே என்னுள்ளிருந்து வந்தாலும், அவரது எழுத்தின் பரம ரசிகை என்ற அந்த ஒரு தகுதி  போதாதா, என்று என்னையே நான் தேற்றிக் கொள்கிறேன். ஊர்க் குருவி ஒன்று உயரப் பறக்கும் பருந்தானதாக எண்ணம் கொண்டு சின்னஞ் சிறிய சிறகுகளை  விரித்து வானத்தைப் பார்க்கிறேன். சரி…எழுதலாம்.

    எனது தந்தை திரு. பேரை. சுப்ரமணியன் அவர்கள் கண்ணதாசனின் நண்பராம். ஒரு சமயம், மதராஸில்  இருந்து 1965-இல் கவிஞர் செகந்திராபாத் வந்திருந்த போது எங்கள் வீட்டுக்கும் நண்பர் எனும் முறையில்  எனது தந்தையைக் காண வந்திருந்தார். அப்போது நான் சிறுமி.  கவியரசர் எங்கள் இல்லம் வந்திருந்த அந்த நாளை இன்றும் நினைத்துப் பார்க்கிறேன்.

    ‘அவன் அருளாலே அவன் தாள் பணிந்து’ என்று மானசீகமாகக் கவியரசர் கண்ணதாசன் அவர்களையே வணங்கிக்கொண்டு எனது பார்வையில்  அவர்களின் பன்முகங்களைப் பற்றி எண்ணிப் பார்க்கிறேன்.

    வானவில் ஒன்றுதான் அதில் வண்ணங்கள் ஏழு; ஸ்வரங்கள் ஏழுதான் அதனுள் பிறப்பது எத்தனை ராகங்கள்? அது போலத்தான் கவியரசருக்குள் பல மனங்கள்.

    அவர் தனது வாழ்நாளில் பல அவதாரங்கள்  எடுத்து வாழ்ந்திருப்பது கவிஞரின் வாழ்வில் ஒரு வரப்பிரசாதம் ஆகும். என்னைப் பொறுத்தமட்டில், கண்ணதாசன் என்னும் அந்தக் கோடிப் புண்ணியம் செய்த ஆன்மா, வெறும் மானிடன் அல்லன்! அதையும் தாண்டித் தனது பிறப்பைப் பல்லாண்டு காலங்கள் உயிர்ப்புடன் இருக்க வரம் கொண்டு வந்த கர்மயோகி!

    கலியுகத்துக் கண்ணனின் மற்றுமொரு அவதார புருஷராகவும் அவரை எடுத்துக் கொள்ளலாம். கண்ணன்பால் அவர் கொண்ட அன்புக்கும், சரணாகதிக்கும் அவரின் எழுத்துகளே சாட்சி. கண்ணனைச் சாமான்ய மக்களுக்குக் காட்டிக் கொடுத்தவர் அவர்தான்.

    கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்
    ஏழைக்
    கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்…”

    என்ற பாடல் ஒலிக்காத மனங்களும் உண்டா?

    ஒரு சராசரி மனிதன்,  எண்ணங்களையே அஸ்திவாரமாகக்  கொண்டு, எண்ணங்களையே  வண்ண வானவில்லாக மாற்றி வானம்தொட்ட அவரது இலக்கையும் கடந்து நின்றது சத்தியமே. எந்த முகத் திரையும் இன்றி, தனக்குள் இருந்த நல்லவனும், தன்னை வழி நடத்தும் தீயவனும் எல்லாம் நானே என்று பகிரங்கமாகத் தன்னைத் தானே விமரிசித்துக் கொண்ட புனிதன் அவர்.

    எல்லோரும், ’ஊரே  தன்னை நல்லவன் ’என்று போற்றி மதிக்க  வேண்டும் என நினைக்கும் மனிதர்களிடையே,  “எப்படி எல்லாம் வாழக் கூடாதோ அப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறேன்; ஆகவே இப்படித்தான் வாழவேண்டும் என்று புத்தி சொல்லக் கூடிய யோக்கியதை எனக்கு உண்டு” என இத்தனை ஆணித்தரமாகத் தனது அனுபவத்தை மற்றவர்க்கு அனுபவப் பாடமாக  எடுத்துச் சொல்லும் தைரியம் எத்தனை மனங்களுக்கு கைவல்யமாகும்? சிந்தித்துப் பார்க்கிறேன்.

    ’எனது பார்வையில் கண்ணதாசன்’ என்பவர் யார்? அவர் ஒரு சிறந்த படைப்பாளி என்பதைத் தவிர,  ஒரு இலக்கியவாதி, சிந்தனையாளன் என்பதையும் மீறி, மனிதனுக்குள் இருக்கும் தேவையற்ற ‘நெஞ்சத்து நஞ்சாகிய’  தீய குணங்களை மனத்திற்கு வெளியே நிறுத்தி வைத்ததால், அவருக்குள்  இறைவனே குடி கொண்டார்!

    ஆம். அவரது எண்ணங்களே வளைந்து  வில்லானது; வில்லிலிருந்து சீறிய அம்பானது; உருவிய வாளானது; சுழலும்  பம்பரமானது; சாட்டையடியானது; பறக்கும் பட்டமானது; உயர்த்தும் ஏணியானது;  கரை சேர்க்கும் தோணியானது; பாதை உணர்த்தும் கைவிளக்கானது; கொட்டும் அருவியானது; காட்டாற்று வேகமானது; மகுடிக்கு ஆடும் பாம்பானது; துடித்த மனத்திற்கு மயிலிறகானது; எழுத்துகள் எல்லாம் அவருக்கு அடிமை பூதமானது!

    ஒரு எண்ணத்தின் அவதாரம் அத்தனை வடிவங்கள் பெறும்போது, அந்த எண்ணங்கள் கைவரப் பெற்றவர் எத்தனை பக்குவம் பெற்றவறாயிருந்திடல் வேண்டும்?  அப்பேர்ப்பட்ட அவரது எழுத்துகளைப்  படிக்கப் படிக்க ஆனந்தம் மனத்தை ஆளுகிறது!

    நான் படைப்பதனால் என் பேர் இறைவன்

    என்று சொன்னவர் தான் அவர். ஆனால், படைப்பது மட்டுமா செய்தார்? அவரது திரையிசைப் பாடல்கள் எத்தனையோ நெஞ்சங்களை வாழ வைத்துக் காத்து இரட்சித்திருக்கிறது. அவரது சிந்தனை எத்தனையோ நெஞ்சங்களில் ஊடுருவிச் சென்று அதனுள் கிடந்த நஞ்சுகளை வெளியேற்றி அழித்திருக்கிறது. இன்றும் காலத்தைக் கடந்து  அதன் செயல்பாடு நடந்து கொண்டே இருப்பதால், கண்ணதாசன் மும்மூர்த்திகளின் பிரதிநிதியாகவே தமிழ் நெஞ்சங்களில் வாழ்ந்து வருகிறார் என்று சொன்னாலும், அது மிகையாகாது.

    அவரது எண்ணப்  பொக்கிஷங்கள் நல்ல நல்ல புத்தகங்களாக மாறி , அவரே அவற்றையெல்லாம்  பாரி போல வாரி வாரி வழங்கி இருக்கிறார்.

    கோபத்தையும், பொறாமையையும், பேராசையையும் ஒருவர் தன்  இதயத்தின் வெளியில் நிறுத்தினால், அவரின் நெஞ்சம் முழுதும் அன்பு, பாசம், காருண்யம், அமைதி, ஆனந்தம், வீரம், செல்வம், நகைச்சுவை, அழகு  என்று மும்மடங்கு பலன் குடி கொள்ளுமாம். இதைச் சிறப்பாக வாழ்க்கையில் வாழ்ந்து காட்டி அனுபவ ஏட்டில் பொறித்து நமக்குத் தந்த காலத்தைக் கடந்து வாழும் சித்தர் அவர்.

    சாதாரணமாக, புதிய பாடல்கள் பிறந்ததும் பழைய பாடல்கள் மறக்கப்பட்டு   விடும். ஆனால் கவியரசரின் பாடல்கள் இன்றளவும் நிலைத்து நிற்பதற்கு அவரது கவிதை நயமும், உணர்வுப் பிரயோகமும் தான் காரணம் ஆகும்.

    கவியரசர்  தமது  வாழ்க்கையில் அனுபவித்து உணர்ந்த நிகழ்வுகளைப் பல்வேறு சூழ்நிலையில் திணித்துப் பாடலாக வடித்தார். அது எந்தவொரு  சராசரி மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்துடனும்  இணைந்துவிட்டதால், ஒவ்வொரு பாடலும் ரசிகர்களாகிய நம் மனதை விட்டு இன்றளவும் நீங்காது பதிந்து விட்டது.

    காதலையும், தத்துவத்தையும் கண்ணதாசனைப்  போல் சொல்ல அவரே மீண்டும் பிறந்து வந்தால் தான் உண்டு. அதற்கும் வழியிருக்காது…எத்தனை உயர்ந்த தர்மங்கள் செய்தவர், பிறவிப் பிணியிலிருந்து விடுதலை பெற்றிருப்பார்.  எனக்கான நிறைவு என்னவென்றால், அவர் வாழ்ந்திருந்த காலத்தில் நானும் வாழ்ந்து வந்தேன் என்பது தான்!

    காதலும், கண்ணதாசனும் கடலும் அலையும் போல ஒன்றிணைந்தவர்கள் என்பது நாமறிந்ததே. காதலையே உயிர்த் துடிப்பென கொண்டவர் கவியரசர். காதலின் அத்தனை பரிமாணத்தையும் ரசித்து, உணர்ந்து, தேன்கூடாகக் கட்டி வைத்தவர். காதலென்ற மாய உணர்வுக்கு இதயத்துக்கு இதயம் உருக்கொடுத்த பிரம்மன்! அவர் எழுதிய வரிகளில் இல்லாதவை எதுவும் காதலிலேயே இல்லை எனலாம். காதலின் கர்ப்பக்கிரகம்வரை சென்று வந்து எழுதியவர்  நமது கண்ணதாசன்!

    ’யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது…?’

    இந்த ஒரு வரியில், காதல் நுழைந்த இதயத்தின் முதல் துடிப்பை  இதைவிட அழகாக யாராலும் சொல்லிவிட முடியாது.

    உடலுக்குள் குருதிக்கு பதிலாக எண்ணங்களே ஓடத் தமது எழுதுகோலுக்குள் உணர்வுகளை நிரப்பி அத்தனை உணர்வுகளையும்  அருவியெனக்  கொட்டித் தீர்த்தவர் அவர். அவரது ஒவ்வொரு படைப்பிலும் சமூகச் சிந்தனை நிறைந்திருக்கும். சோர்ந்த இதயங்களைத்  தமது   எழுத்தைக் கொண்டே உற்சாகப்படுத்துவார்.  எவரது கற்பனைக்கும் எட்டாத வார்த்தைகள் கூட அவருக்கு கிட்டும்!

    அவரது திரையிசைப் பாடலுலகில்  பல்லாயிரக்கணக்கான பாடல்களுள் எதை எடுப்பது எதை விடுப்பது என்ற நிலை உருவாகும் போது,

    உங்களுக்காக நானே சொல்வேன், உங்களுக்காக நானே கேட்பேன்,
    தெய்வங்கள்
    கல்லாய்ப் போனால் பூசாரி இல்லையா?
    உள்ளத்தில் நல்லோர் தானே உயர்ந்தவர் இல்லையா?”

    இந்த வரிகளில் திரையிசையையும் மீறி, ஒரு தவிப்பு… மாற்றுத்திறனாளிகளுக்கு ஒவ்வொருவரும் உதவ வேண்டும் என்ற  கோரிக்கையாக வைப்பார்  கவிஞர்.

    சொல்லென்றும் மொழியென்றும் பொருளென்றும் இல்லை
    சொல்லாத
    சொல்லுக்கு விலையேதும் இல்லை

    அனைவருக்குமான பொக்கிஷம்  இந்தப் பாடல். ‘சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை’ எனும் போது, சில சமயங்களின் பேசும் மௌனங்கள்  விலை மதிப்பில்லாதது, மேலும்  பெருந்தன்மை என்ற குணத்துக்கும் மகுடம் சூட்டி வார்த்தைகளால் விளையாடி இருக்கிறார் கவியரசர்.

    கடைசியாகக் கவியரசர் எழுதிய ‘கண்ணே கலைமானே’ பாடல் அவர் தமது ஆழ் மனக் கடலிலிருந்து நமக்கு எடுத்துத் தந்த வலம்புரிமுத்து.

    அந்திப்  பகல் உன்னை நான் பார்க்கிறேன்
    ஆண்டவனை
      இதைத் தான் கேட்கிறேன்

    இந்த வரிகளில் மனம் சொக்கும் இதமான தாலாட்டு தொனிக்கிறது. இன்றும் நம் ஒவ்வொரு இதயத்திலும் இந்தப் பாடல் ஒலித்துக் கொண்டேதான் இருக்கிறது.

    கொட்டித் தீர்க்கும் அருவியாய், காட்டாற்று வேகமாய், தெளிந்த நீரோடையாய் அவரது வாழ்வில் தான் எத்தனை சுருதிகள்…நல்ல எழுத்தென்பது அறிவை உழுவதற்குச் சமம். தமது காலம் முடிவதற்குள், அவர் நமக்குத் தந்திருக்கும் பொக்கிஷங்கள் கணக்கிலடங்காதவை. தன்னையே உருக்கி ஒளி தரும் மெழுகுத்திரியாகி  இரவும் பகலுமாக எழுதியெழுதித்  ‘தானம்’ செய்த பரந்தாமன்.

    இப்போது திரைக்குப் பாடல் எழுதக்கூட இங்கே கவிஞர் தட்டுப்பாடு. ஒரு பெரிய இலக்கிய ராஜவீதியிலிருந்து மெல்ல மெல்ல நகர்த்தப்பட்டுவிட்டோம். இதன் முடிவு…நல்ல பாடல் கேட்கும் வாய்ப்பை இன்றைய இளைஞர்கள் இழந்து விட்டனர். பொருள் பொதிந்த பாடல்கள், சிந்தையைச் சீர் செய்யும் நளினங்கள் எதுவுமின்றிக் கேட்கப்படும் இசைக்குள் தொலைந்து போகிறார்கள். ஒரு சமுதாயச் சீர்கேடு மெல்ல உருவாகி வருகிறது. பாசத்தைப் பக்குவமாகச் சமைத்து விருந்து படைத்துக்கொண்டிருந்த ‘அன்னபூரணியை’ நாம் இழந்து விட்டோம். ‘அவனை எழுப்பாதீர்; அப்படியே தூங்கட்டும்!’.

    அவரோ பெரிய விழுதுகள் தாங்கிய ஆலமரம். இன்றோ, நாம் அந்த மரத்தின் மகாத்மியத்தைப் பற்றிப் பேசிச் சிலிர்க்கிறோம்.

    அர்த்தமுள்ள இந்துமதம்: ஒரு மதத்தின் தன்மையை, புனிதத்தை ஆராய்ந்து அவரவரின் கடமைகளை வகுத்துச் சொன்னது.

    குடும்ப சூத்திரம்: அந்தரங்கம் பற்றிய தொகுப்பு; குடும்பத்துக்கு வழி சொல்லியது.

    அனுபவ மொழிகள்: சிந்தையைத் தூண்டும் ஆரோக்கிய பானம்.

    பகவத் கீதை: இறைவனுக்கும் நமக்கும் இடையே இருந்த இடைவெளியை நீக்கியது.

    மனவாசம் , வனவாசம்: கவிஞரின் மனத்தை, வாழ்க்கையை அரசியல், பொது மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை நமக்குக் காட்டிய சரித்திரம்.

    கடைசிப் பக்கம்: வாழ்வியலை நடைமுறைக்கு எளிமையாய்ச் சொல்லித் தருவது.

    ஜாதி, மத பேதமின்றி குரான், இயேசு காவியம்  என்று அவர் தொட்டுச் செல்லாத இலக்கியப் படைப்புகள் இல்லையே. அவரது படைப்புகளுக்கு நிகர் அவரே.

    முடிவுரை

    அவரைப் பற்றி எழுதும் போதே இதயம் புல்லரிக்கிறது.  ’கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கி விடாது’;  எனது பார்வையில் கண்ணதாசன் ஆயிரத்தில் ஒருவனாக, கடையெழு வள்ளலைப்போல் ‘கலியுக வள்ளல்’ என்பேன்.

     

    Share
  • வீதியில் கிடைத்த ஞானம்

    இசைக்கவி ரமணன்

     

    வார்ப்பிலேயே நான் ஊர் சுற்றி. புதிது புதிதாய் மனிதர்களைத் தெரிந்து கொள்வதில் எனக்குக் கொள்ளை மகிழ்ச்சி. கொஞ்சம் பேச்சுக் கொடுத்தால், மனம்திறந்து பேசத் தயாராக இருக்கிறார்கள் பலர். வெகு சிலரோ, கை குலுக்கினால், மறைவாக விரல்களை எண்ணிப் பார்த்துக் கொள்கிறார்கள். பெரும்பாலான இந்தியர்கள் ‘ஹலோ’ சொன்னதுமே நம் வேலை, சம்பளம் எல்லாவற்றையும் தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருக்கிறார்கள்! சிலருக்கு இந்த மாதிரிக் கேள்விகள் மிகவும் எரிச்சல் மூட்டுவதால், அவர்கள் பிரேதத்தை எழுப்பினாற்போல் முகத்தை வைத்துக் கொள்கிறார்கள். அட, அதுதான் அவர்களுக்கு எத்தனை இயல்பாக வருகிறது! என்னைப் பலமுறை, பலரும் இந்தக் கேள்விகள் கேட்டதுண்டு. சொல்லத் தயங்கக் கூடிய அளவுக்குச் சம்பளம் நான் ஒரு போதும் வாங்கியதில்லை என்பதும் ஒரு காரணமாய் இருக்கலாம்! ஒருமுறை சென்னை மின்சார ரயிலில்:

    “ஓஹோ! அது பெரிய பத்திரிகையாச்சே! நல்ல சம்பளம் இருக்குமே!”

    – ம்

    “ என்ன ஒரு அம்பதாயிரம் இருக்குமா?”

    ஆஹா! இவர்களுக்குத்தான் என்ன நம்பிக்கை! அதற்கு எத்தனை பூஜ்ஜியங்களோ? ஐந்தாம் தேதி சம்பளம். ஆறு, ஏழு, எட்டு வரை தேதிகள் சரியாகவே இருக்கின்றன. அப்புறம் உடனே 28, 29, 30 என்று வந்துவிடுமே! முதல் வாரமே முப்பதாம் தேதி வருகிற கதையை இவருக்கு எப்படித் தெரிவிக்க!

    “அட, ஒரு அஞ்சு பத்து முன்ன பின்ன இருக்குமோ என்னமோ?” விடுவதாயில்லை அவர்.

    உடனே, பக்கத்தில் இருப்பவர், “அட் என்னங்க நீங்க இதெல்லாம் போயி அவருகிட்ட கேட்டுகிட்டு? அவருதான் பத்திரிகைப் பேரைச் சொல்லிப் பதவியையும் சொல்லிட்டரில்லெ? அப்புறம் நாமாத் தெரிஞ்சுக்க வேண்டியதுதானே? இதெல்லாம் கேக்கணுமாக்கும்? என்னங்க தம்பி நாஞ் ஜொல்றது? என்ன ஒரு அறுபது எழுபது இருக்கத்தானே செய்யும்!,” என்று என்னையும், அவரையும் மாறி மாறிப் பார்த்தபடிச் சொன்னார்.

    அறுபது எழுபதா?? குபீரென்று சிரித்து விட்டேன். அவர்கள் ரசிக்கவில்லை. நிலைமையைச் சமாளிக்க அவர்களிடம் சொன்னேன். “ஒண்ணுமில்லைங்க; ஒரு ஜோக் நெனவுக்கு வந்துது. ரெண்டு பேர் பேசிக்கறாங்க. ஒருத்தர் இன்னொருத்தரைக் கேக்குறாரு : ‘ஏங்க எங்க வேலை செய்யறீங்க?’ அவரு, ‘நான் …பத்திரிகையிலெ மேனேஜரா இருக்கேன்.’ கேட்டவரு உடனே, ‘பேஷ் பேஷ்! அப்ப சாப்பாட்டுக்கு என்ன செய்யறீங்க?’ ன்னாரு.

    நம் சக பயணிகளுக்கு இதெல்லாம் அவ்வளவாகப் பிடிக்கவில்லை. சம்பளம் என்னன்னு கேட்டா நேராச் சொல்ல வேண்டியதுதானே என்பது போல் முறைத்துக் கொண்டார்கள். முதலில் கேட்டவரைக் கேட்காதே என்று சொன்னவர், முணுமுணுத்தார்: ‘ஆமா, பத்திரிகைக் காரங்க சம்பளத்தத்தான் ரொம்ப நம்பி இருக்காங்களாக்கும்.’ சரி, இனிமேல் எங்கே போனாலும் சம்பளச் சீட்டைக் கொண்டு போக வேண்டியதுதான் என்று தீர்மானித்துக் கொண்டேன். அவர், தமிழ்ப் பத்திரிகையை ஒரு உதறு உதறிப் பிரித்து அதில் முகத்தை மறைத்துக் கொண்டார்.

    ரயில் ஒரு நிலையத்தில் நிற்கும் முன்னே இளைஞனொருவன் இறங்க முயன்று அசிங்கமாக விழுந்தான். நிறையச் சிராய்த்திருக்கும். கண்ணாடி போட்டிருந்த அந்தக் கறுத்த மனிதர் சொன்னார், “ பாத்தீங்களா! பெத்தவங்க எவ்வளவு பாடுபட்டுப் பணத்தச் செலவழிச்சி படிக்க வச்சி அனுப்பறாங்க. இங்கெ என்னடான்னா பொறுக்கி மாதிரி விளுந்து கெடக்குறானே!” பக்கத்தில் இருந்தவரோ, “இதுக்குத்தாங்க சொல்றேன். புருசன் பொண்டாட்டி சேரும்போது பாத்துச் சேரணும்,” என்றார்! கறுத்த முகம் ரொம்பக் கருத்துப் போயிற்று!

    ‘சூடா கட்லேஸ்’ என்று வந்தான் வேர்க்கடலைப் பையன். தூரத்திலிருந்து ஒரு குரல், ‘ஏய் கடல! இங்கிட்டு வா!’ நம்ம பயல் அதைக் கவனித்தது மாதிரித் தெரியவில்லை! உடனே மறுபடியும், ‘ஏய்! என்ன கூப்டேனில்லா? வா இங்கிட்டு!’ உடனே இவன், ‘யோவ் சொம்மா அலியாதெ! அல்லாம் வர்றாங்க இரு.’ என்றான். இந்த இருதுருவத் தமிழ் உரையாடலை ரசித்துக் கொண்டிருந்த (கேட்டபடியே எழுத சிஃபியில் சம்மதிக்க மாட்டார்கள்!!!) நான் பயலைப் பார்த்து லேசாய்ச் சிரித்தேன். அவனும், தனக்குத் தோழமை கிடைத்தது போல், அழகாய்ச் சிரித்தான். நான் வாங்குவேன் என்று தெரியும் போல! அவனே வந்து கையில் கடலையைக் கவிழ்த்தான், கொஞ்சம் கூடுதலாக! ‘துன்னு, நல்லாருக்கும்,’ என்ற பாவனையில் புருவத்தை உயர்த்தினான்.

    காரணமே இல்லாமல் என்னிடம் இனிமையாக இருக்கிறார்கள். அதேபோல் காரணமே இல்லாமல் மற்றவர்களிடம் கடுமையாக இருக்கிறார்கள். எங்கள் அலுவலக காண்டீனில் ஒருவர் காப்பி கலந்து தருவார். நாங்கள் வரிசையாக நின்று டபரா டம்ளரை எடுத்துக் கொண்டு போகவேண்டும். ஒவ்வொருவரையும், தேவையே இல்லாமல் பல்லைக் கடித்துக்கொண்டு திட்டுவார். என் முறை வரும்போது, திடீரென்று அவர் முகத்தில் புன்னகையும், அந்த உணர்ச்சி மாற்றத்தில் நெற்றியில் வியர்வையும் அரும்பும்.

    யோசித்துப் பார்க்கிறேன். நான் எங்கே போனாலும் எல்லோரும் என்னிடம் சரளமாகவும், ரொம்பவும் பேசுகிறார்கள். ஆட்டோவில் போனால் அவ்வளவுதான்! முக்கால் மணி நேரம், ஓட்டுனர் தன் கதையை ஒரு காட்சி மிச்சம் வைக்காமல் சொல்லி விடுவார்! ஒருமுறை ஓர் ஆட்டோக்காரர் பர்ஸிலிருந்து அவரது வைப்பாட்டிப் புகைப்படத்தை கனமுடையாக எனக்குக் காண்பித்து வெட்கம் வேறு பட்டுக்கொண்டார். அதெல்லாம் பரவாயில்லை. பேச்சு சுவாரசியத்தில் அவர்கள் என்பக்கமே திரும்பிக் கொண்டு பேசிக்கொண்டே ஓட்டுவார்கள்; அதுதான் வயிற்றில் புளியைக் கரைக்கும்!

    நெடுந்தொலைவு பேருந்தில் பயணம் செய்யும்போது, ஓட்டுனரும், கண்டக்டரும் நல்ல நண்பர்களாகி விடுவார்கள். அதற்கு ஒரு காரணமும் உண்டென்று வைத்துக் கொள்ளலாம். நிறுத்தும் இடத்திலெல்லாம், அவர்களது வால்போலவே இருப்பேன். விட்டுவிட்டுப் போகமாட்டார்கள் என்ற தைரியத்தில் நிதானமாகச் சாப்பிடலாம்! அப்படியும் ஒருமுறை, மைசூருக்கும், பெங்களூருக்கும் நடுவில், இயற்கை அன்னை ஒரேயடியாக அழைக்க, கண்டக்டரிடம் சொல்லிவிட்டுத்தான் இறங்கினேன். மறந்துபோய் அவர் விசில் ஊதிவிட்டார். இங்கேயோ, பாசனத்திட்டம் கட்டுக்கடங்காமல் இறங்கிக்கொண்டிருக்க, திடீரென்று பேருந்து கிளம்பிவிட, நான் திரும்பவௌம் முடியாமல், நிறுத்தவும் முடியாமல் பட்ட அவஸ்தை! அப்புறம், ஜேம்ஸ் பாண்ட் மாதிரி ஓர் ஆட்டோவில் பாய்ந்து, ஓட்டுனர் முன் பத்து ரூபாய்த் தாளை நீட்டவும், அவர் பேருந்தைத் துரத்தினார். ஒரு சிறு தெருவைத் தாண்டி மெயின் ரோட்டில் நுழையப் போகிறது பேருந்து. அதற்கப்புறம் அதைப் பிடிக்க வாய்ப்பேயில்லை. இரு வண்டிகளும், பக்கம் பக்கமாகச் சென்ற தருணம், நான் பேருந்தின் ஓட்டுனரைப் பார்த்துக் கையசைத்துக் கத்தினேன்! அவரோ, நான் இறங்க வேண்டிய இடத்தில் இறங்கி வீட்டுக்குப் போய்க்கொண்டிருக்கிறேன் என்று நினைத்து, பலமாகக் கையாட்டி கியரை மாற்றினார். ஆட்டோக்காரர் கிட்டத்தட்டத் தற்கொலை ரீதியில் குறுக்கே பாய்ந்து நிறுத்த, நான் தாவி ஏறினேன். நடந்ததைப் புரிந்துகொண்ட கண்டக்டர், தலையைச் சொறிந்தபடியே ‘த்சொச்சொச்சோ’ என்றார். கன்னட மொழியில், அதைவிடவும் பெரிதாய் மன்னிப்புக் கேட்டிருக்க முடியாது! பேருந்து ஓட்டுனர்களுக்கு என்னை ரொம்பப் பிடிக்கும். நான் தூங்க மாட்டேன். வேடிக்கை பார்ப்பேன். அதற்கு அவர்கள் விளக்கம் சொல்லத் துவங்கி தங்கள் மனதில் இருப்பதையெல்லாம் கொட்டிக் கவிழ்ப்பார்கள். நான் ஆர்வத்தோடு கேட்பேன்!

    மனிதர்கள், கேட்பதே பேசுவதற்காகத்தான்! என்ன, கேட்கிறீர்களா?!

    Share
  • முக்கோணக் கிளிகள் படக்கதை – 5

    — சி. ஜெய பாரதன்

    முக்கோணக் கிளிகள்
    (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​)

    படக்கதை – 5

     image

    மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா
    வசனம், வடிவமைப்பு : வையவன்
    ஓவியர் : தமிழ்

    Mukkonakkilikal - 17

    Mukkonakkilikal - 18

    Mukkonakkilikal - 19

    Mukkonakkilikal - 20

    Share