இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேஷன் பள்ளி 100 % தேர்ச்சி
எஸ்.வி. வேணுகோபாலன்
குறிச்சி ஐ பி இ ஏ பள்ளி 100 சதவீத தேர்ச்சி !
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே குறிச்சி சிற்றூரில் இயங்கி வரும் இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேஷன் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100 சதவீத தேர்ச்சி சாதனை புரிந்துள்ளனர். மாணவி நிஷா ஸ்ரீ 461 மதிப்பெண்கள் பெற்று முதலாவதாக வந்துள்ளார். ஆயிஷா சித்திகா சமூக அறிவியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார். தேர்வு எழுதிய 22 மாணவர்களில் 12 பேர் 400 க்கு அதிகமான மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தமிழ் பாடத்தில் 13 பேரும், சமூக அறிவியலில் 16 பேரும் 90க்கு அதிகமான மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
தமிழ் வழி மற்றும் செயல்வழி கல்வி முறையில்இயங்கும் இந்தப் பள்ளியை நடத்தி வரும் ஐ பி இ ஏ கல்வி அறக்கட்டளை தலைமை அறங்காவலரும், இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேஷன் சங்க பொதுச் செயலாளருமான கே கிருஷ்ணன், தாளாளர் சோமசுந்தரம் மற்றும் கல்விக் குழு தலைவர் லட்சுமி கோவிந்தராஜன், கல்விக்குழு உறுப்பினர்கள் தி தனபால், மாதவன், அமல்ராஜ், ஜி பாலச்சந்திரன், ரவி ஆகியோரும், தலைமை ஆசிரியை வாசுகி அவர்களும் தேர்ச்சி பெற்ற மாணவர்களை நேரில் சென்று வாழ்த்தினர்.
சாதாரண குடும்பப் பின்னணியில் இருந்து வரும் மாணவர்களது உயர்வுக்குப் பாடுபடும் அர்ப்பணிப்பு மிக்க பள்ளி ஆசிரியர்களை கல்வி அறக்கட்டளை அறங்காவலர் குழு பாராட்டியது.
கல்வியாளர் எஸ் எஸ் ராஜகோபாலன், தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தலைவர் பேரா. மணி, குறிச்சி பள்ளியின் வழிகாட்டிகளில் முக்கியமானவரான தோழர் ஜே கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டு செய்தி அறிந்தவர்கள் பாராட்டி மகிழ்ந்தனர்.
வழக்கம்போலவே, ஹோமியோபதி மருத்துவ தம்பதியினர் பி வி வெங்கட்ராமன்-ஜெகதா இருவரும் இரவு பத்தரை மணிக்கு எங்கள் வீட்டுக்கு வந்து, பள்ளி மாணவர்கள்-ஆசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் சொல்லுமாறு கேட்டுக் கொண்டு, ரூ 5000 நன்கொடை வழங்கிவிட்டு விடைபெற்றனர்.
இந்தப் பள்ளியின் வெற்றிகரமான இயக்கம் இத்தகு அன்பர்கள் பலரது தொடர் பங்களிப்பும், ஊக்க மொழியும், அக்கறையும், கரிசனமும்தான்!
***********