Blog

  • சனிப்பெயர்ச்சி பலன்கள் | 2020 – 23 | வேதா கோபாலன்

    சனிப்பெயர்ச்சி பலன்கள் | 2020 – 23 | வேதா கோபாலன்

    ஞாயிறு (27.12.2020) அதிகாலை 5.22 மணிக்குச் சனிப்பெயர்ச்சி. தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குப் பெயர்வு. வேதா கோபாலன் வழங்கும் சனிப்பெயர்ச்சி பலன்கள் இங்கே. உங்கள் ராசிக்கு என்ன பலன் என்று பாருங்கள்.

     

    12 ராசிகளுக்கும் தனித் தனிப் பலன்களுக்கு, பார்க்க ‘நல்ல யோகம்‘ – https://nallayogam.com

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • 85 வயதில் திருப்பாவை பாடும் ஜெயலட்சுமி செல்லப்பா

    85 வயதில் திருப்பாவை பாடும் ஜெயலட்சுமி செல்லப்பா

    வயது ஓர் எண்ணிக்கை மட்டுமே. எந்த வயதிலும் நம் திறமைகளை, ஆற்றல்களை உற்சாகமாக வெளிப்படுத்த முடியும். சென்னையில் வசிக்கும் திருமதி ஜெயலட்சுமி செல்லப்பா, 85 வயதிலும் அருமையாகப் பாடுகிறார். இதோ, திருப்பாவையிலிருந்து நான்கு பாடல்களை நமக்காகப் பாடுகிறார். கேட்டு மகிழுங்கள்.

     படப் பதிவு – சுதா மாதவன்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருவெம்பாவை – 11 | மொய்யார் தடம்

    திருவெம்பாவை – 11 | மொய்யார் தடம்

    திருவெம்பாவை – 11

    மாணிக்கவாசகர்

    மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர்என்னக்
    கையாற் குடைந்து குடைந்து உன் கழல்பாடி
    ஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண் ஆர் அழல் போற்
    செய்யா வெண்ணீறாடி செல்வா சிறுமருங்குல்
    மையார் தடங்கண் மடந்தை மணவாளா
    ஐயா நீ ஆட்கொண்டருளும் விளையாட்டின்
    உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உயர்ந்தொழிந்தோம்
    எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.

    நாம் குளத்தில் குதிக்கும்போது, குபீர், தொபீர், படீர், தொபுக்கடீர் என்றெல்லாம் ஒலியெழுவதைப் பார்த்திருக்கிறோம், படித்திருக்கிறோம். திருவெம்பாவையில் மாணிக்கவாசகர், வேறு ஓர் ஓசையைக் குறிப்பிடுகிறார். பாவை நோன்பு இருக்கும் பெண்கள், குளத்தில் குளிக்கச் செல்கிறார்கள். அது, வண்டுகள் மொய்க்கும் மலர்கள் கொண்ட பொய்கை. அதில் முகேர் எனச் சப்தம் எழுமாறு குதித்துக் குளிக்கிறார்களாம். இந்த மாணிக்கப் பொய்கையில் நீங்களும் பாய்ந்து குளியுங்கள். டெக்சாஸ்வாழ் ஸ்ருதி நடராஜனின் மந்திரக் குரலில் இந்த இனிய பாடலைக் கேளுங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 11 | கற்றுக் கறவை

    திருப்பாவை – 11 | கற்றுக் கறவை

    திருப்பாவை 11

    கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
    செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
    குற்றம் ஒன்றில்லாத கோவலர்தம் பொற்கொடியே
    புற்று அரவு அல்குல் புனமயிலே போதராய்
    சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்து நின்
    முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர் பாட
    சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ
    எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்

    திருப்பாவை – 11 | கற்றுக் கறவை | ஸ்வேதா குரலில்

    ஆளன் – ஆட்டி என அழைப்பது தமிழ் மரபு. ஆளன் என்பவன் ஆளுகின்றவன். ஆட்டி என்பவள் ஆளுகின்றவள். வல்லாளன், பேராளன், சீராளன் என்றெல்லாம் ஆண்களை அழைப்பார்கள், சீமாட்டி, பெருமாட்டி, திருவாட்டி எனப் பலவாறாகப் பெண்களை அழைப்பார்கள். இந்த வரிசையில்தான் பெண்டாட்டியும் தோன்றியது. ஆட்சிமை உடைய பெண், ஆளும் பெண் என்பது பொருள். இக்காலத்தில் இது, குடும்பத்தை ஆளும் பெண் என்ற பொருளில் மனைவிமார்களுக்கு வழங்குகிறது. இந்தப் பாடலில் ஆண்டாள் தன் தோழியைச் செல்வப் பெண்டாட்டி எனச் செல்லமாக அழைக்கிறார். தமிழ்க் குலத்தின் பொற்கொடி ஆண்டாளின் அமுதத் தமிழில் திருப்பாவையின் 11ஆம் பாடலைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள்.

     

    திருப்பாவை – 11 | கற்றுக் கறவை | சேகர் முத்துராமன் குரலில்

    தேவ கணங்கள், பூத கணங்கள், மிருக கணங்கள், பட்சி கணங்கள் எனப் பலவற்றை நாம் படித்தும் கேட்டும் இருப்போம். இந்தக் கணம் என்பதற்குக் கூட்டம் என்று பொருள். நொடியைக் குறிக்கும் கணம் என்பது, க்ஷணம் என்பதன் தமிழ் வடிவமாகும், திருப்பாவையின் 11ஆவது பாடலில் கற்றுக் கறவைக் கணங்கள் எனப் பசுக்கூட்டங்களை ஆண்டாள் குறிப்பிடுகிறார். இந்தக் கணத்தில் இதைச் சேகர் முத்துராமன் குரலில் கேளுங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • படக்கவிதைப் போட்டி – 290

    படக்கவிதைப் போட்டி – 290

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    புகைப்படக் கலைஞர் ஐயப்பன் கிருஷ்ணன் எடுத்த இப்படத்தை வல்லமை ஃபிளிக்கர் குழுமத்தில் இருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (27.12.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    Share
  • திருவெம்பாவை – 10 | பாதாளம் ஏழினும்

    திருவெம்பாவை – 10 | பாதாளம் ஏழினும்

    திருவெம்பாவை – 10

    மாணிக்கவாசகர்

    பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர்
    போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
    பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
    வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
    ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
    கோதில் குலத்து அரன் தன் கோயில் பிணாப்பிள்ளைகாள்
    ஏதவன் ஊர் ஏதவன் பேர் ஆர் உற்றார் ஆர் அயலார்
    ஏதவனைப் பாடும் பரிசேலார் எம்பாவாய்.

    இறைவனுக்கு உருவம் கொடுத்தாலும் அது ஓர் அடையாளமே. அதுவே முழுமையான உருவம் இல்லை. எங்கும் நிறைந்திருக்கும் அவனை எப்படி ஓர் எல்லைக்குள் சுருக்க முடியும்? அதனால்தான் மாணிக்கவாசகர், சிவபெருமானை ஓத உலவா ஒருதோழன் என்கிறார். அவன் ஊர் எது? பேர் எது? உற்றார் யார்? அயலார் யார்? இத்தகையவனை எவ்வாறு பாடுவது? எனக் கேட்கிறார். தன் திருமேனியில் பேதை ஒருபால் கொண்ட தோழனை டெக்சாஸிலிருந்து ஸ்ருதி நடராஜன் உளமாரப் பாடுகிறார். கேட்டு மகிழுங்கள்.

     

    படத்துக்கு நன்றி – விக்கிப்பீடியா
    https://en.wikipedia.org/wiki/Shiva#/media/File:Shiva_as_the_Lord_of_Dance_LACMA_edit.jpg

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • புதிய பிள்ளைப்பருவங்கள் – 2

    புதிய பிள்ளைப்பருவங்கள் – 2

    மீனாட்சி பாலகணேஷ்

    வளையல் அணிதல்

       (பெண்பால் பிள்ளைத்தமிழ்)

    பெண்குழந்தைகளின் வளர்ச்சியில் நாம் கண்டு ரசிக்கப்போகும் அடுத்த நிகழ்வு கைநிறைய விதம்விதமாக வளையல்களை அணிந்துகொண்டு மகிழும் பருவத்திலிருக்கும் ஐந்து முதல் பத்து வயதினரான சின்னஞ்சிறு பெண்குழந்தைகளைத்தான். வளையல்கள் பெண்களின் அழகு சாதனங்கள். மங்கலச்சின்னங்கள். கலகலவென ஆர்க்கும் பலநிறங்களிலான கண்ணாடிவளை முதல் இரத்தினம், முத்து, மரகதம் என நவரத்தினங்களையும் வைத்திழைத்த பொன்வளைகளும் கங்கணங்களும் கூடப் பெண்களின் விருப்பத்திற்கானவைதாம்!

    பண்டிகை நாட்களாகட்டும், ஊர்க்கோவிலில் திருவிழாவாகட்டும், பிறந்தநாள் ஆகட்டும்; புதுவளைகள் அணிவதில் பெண்களுக்குண்டான ஆசை அளவிட முடியாதது. இதற்குச் சின்னஞ்சிறுமிகளும் விலக்கில்லை.

    60-70 ஆண்டுகள் முன்புவரைகூட வளைவியாபாரி ஒருவர் முதுகில் பத்திரமாகக் கட்டித்தூக்கிய வளையல் மூட்டையுடன் கிராமத்துத் தெருவிலோ, அல்லது நகரத்துத் தெருக்களிலோ ‘வளையல் வாங்கலையோ வளையல்!’ எனக்கூவியபடி செல்வதுண்டு. அல்லது ஓர் அம்மாள் கூடையில் கண்ணாடி வளையல்களை அழகாகப் பாங்காக அடுக்கிவைத்துக்கொண்டு, “வளேல், வளேல், வளேல,” என்று கூவியவண்ணம் தெருத்தெருவாகச் சென்று விற்பாள். ஏதாவது ஒரு வீட்டுத் திண்ணையில் தனது மூட்டையை இறக்கிவைத்து, மேற்துண்டால் வியர்வையைத் துடைத்தபடி, வெற்றிலைச்சாற்றை ஒருபுறம் உமிழும் வளையல் வியாபாரி, அந்த வீட்டுக் குழந்தையிடம், “பாப்பா, குடிக்கத் தண்ணீர் கொடேன்,” என்பார். பல நேரங்களில் பாப்பா செம்பில் கொணரும் நீரைத் தொடர்ந்து அந்த வீட்டம்மாளும் இன்னொரு ஏனத்தில் கடுகும் கருவேப்பிலையும் தாளித்துப் பெருங்காயமும் உப்பும் கலந்த சுவையான மோரைக் கொண்டு வந்து கொடுப்பாள். தாகத்தோடு நடந்து வந்திருக்கும் வளையல் வியாபாரி ஆவலோடு அதைப் பருகிமுடித்தபின், “புதுப்புது நிறங்களில் பச்சைவளை, பட்டுவளை, தங்கநிறவளை கொண்டு வந்திருக்கேன், பார்க்கிறீகளா?” எனத் தாமே முதுகில் சுமந்துவந்த துப்பட்டியை விரித்து வளையல் மூட்டையை அவிழ்ப்பார்.

    இதற்குள் தெருவில் உள்ள வீடுகள் அனைத்திலிருந்தும் பெண்கள், பெரியவர்களும், இளம்பெண்களும், சிறுமிகளும், குழந்தைகளுமாகக் கூடிவிட்டிருப்பார்கள். வியாபாரியும் அகலமான பெரிய திண்ணையில்தான் தமது மூட்டையை இறக்கியிருப்பார். அத்தனை வளையல்களையும் புதுப்புது நிறங்களையும் கண்ட பெண்கள், வளையல்கள் போலவே கலகலப்பார்கள். அக்காள்மார், அன்னையர், அத்தை, பாட்டிகளின் உற்சாகம் சின்னஞ்சிறு சிறுமிகளையும் தொற்றிக் கொள்ளாதா என்ன? தமது குட்டிக்கைகளை நீட்டியவண்ணம், “தாத்தா, மாமா,” என உறவுகொண்டாடியபடி வளையல் அணிவிக்க சின்னஞ்சிறுமிகள் முந்துவார்கள். வியாபாரியும், பொறுமையாக, சாமர்த்தியமாக அனைவரையும் மகிழ்விக்கும் வண்ணம் குறும்பாக, வேடிக்கையாக, எதார்த்தமாகப் பாட்டுக்களைப் பாடியபடி, வளையல்களை எடுத்துக் காட்டிக்கொண்டே, அவரவர் கைகளில் அழகுற அணிவித்து விடுவார். ஓரிரு வளைகள் உடைந்து விடும், அவற்றை ஓரமாகப் போட்டு விடுவார்.

    சிறுமிகளுக்கு முதலில் அணிவித்து, அவர்கள் முகங்களைப் புன்னகையில் மலரச் செய்துவிட்டு, இளம் பெண்களுக்கும், அன்னையர்க்கும் கூட அணிவித்து விடுவார்.

    வளையல் வியாபாரியின் வரவை எதிர்நோக்கி வீடுகளில் தாலாட்டுகள் பாட்டிமார்களால் பாடப்பட்டன!

    வாரும் வளைச்செட்டியாரே! வந்திறங்கும் திண்ணையிலே!
    கொச்சிட்ட திண்ணையிலே! கோலமிட்ட வாசலிலே!
    (கொச்சிட்ட- அழகான)
    அகலமுள்ள திண்ணையிலே நீளமுள்ள வாசலிலே
    கம்பளியைப் போட்டு கனத்த சுமை இறக்கும்!
    துப்பட்டியைப்போட்டு தங்கவளைத் தூக்கு இறக்கும்!

    கறுப்புவளை உண்டாமோ காவலனார் கண்மணிக்கு?
    சிகப்புவளை உண்டாமோ சுந்தரனார் பெண்மணிக்கு?
    பச்சைவளை உண்டாமோ பாண்டியனார் பேத்தியர்க்கு?
    நீலவளை உண்டாமோ நிமலனார் செல்வியர்க்கு?

    பொட்டுமிட்டு மையுமிட்டு பொற்கொடிக்குப் பூச்சூட்டி
    பக்கத்தே கன்னத்தில் திருஷ்டிப்பொட்டு வையுங்கள்!1

    இவ்வாறு வளையல்கள் இன்றுவரை அனைவர் உள்ளங்களிலும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் விளைவிக்கும் ஒரு பொருளாக உள்ளது. வெளியூர் சென்றுவரும் தந்தைமார் தமது அருமைப் பெண்குழந்தைகளுக்கு அவரவர்கள் வசதிக்கேற்ப வளையல்களை வாங்கிவந்து பரிசாகக் கொடுத்தனர்.

    பிறந்து சில மாதங்களே ஆன சிறு குழந்தைக்கும் கையில் கருநிற வளைகளைப் போட்டு வைப்பார்கள்- காற்று, கறுப்பு அண்டாதிருக்க இவையே காப்பாகும்.

    அடடே! இன்று சாமிநாத மாமா வீட்டில் அவர் மகள் காமாட்சிக்கு வளைகாப்பாயிற்றே! வளையல் வியாபாரி முருகப்பனுக்குக் கொண்டாட்டம்தான்! காமாட்சிக்கு வளையடுக்கும் சாக்கில் ஊரே வளைகளணிந்து மகிழும். அதோ! கேட்கிறதா அவர் பாடிக்கொண்டே சிரித்த முகத்துடன் பச்சையும் சிகப்புமாகக் கண்ணாடி வளையல்களை காமாட்சியின் கரங்களில் அடுக்குவதை!

    ‘வளை குலுங்கினாற்போல மழலைமொழி பேசும்
    கிளை பெருகி வாழவே வளை சூட்டுகின்றோம்.’2

    இவ்வாறெல்லாம் பெருமைமிகுந்த வளையலுக்கு இலக்கியத்தில் இல்லாத இடமும் உண்டோ?

    சிவபெருமானே வளையல் வியாபாரியாகி மதுரைவீதிகளில் வளையல் விற்றதனைத் திருவிளையாடல் புராணம் பாடிப் பெருமிதமடைகின்றதே! கதையை நினைவு கூர்வோமா?

    தாருகாவனத்து முனிவர்களுக்குத் தாங்களே அனைவரிலும் உயர்ந்தவர்கள் எனும் செருக்கு மிகுந்தது. அவர்களது அகந்தையை அழிக்கத் திருவுள்ளம் கொண்ட சிவபிரான் பிட்சாடனர் கோலம் கொண்டார். பிச்சை எடுக்க வந்த பேரருளாளனின் அழகில் மயங்கிய முனிவர்களின் பத்தினியர் அவர்பின் செல்லத் தலைப்பட்டனர். கைவளைகளும் மேகலையும் கழல, ஆடை கலைய பிட்சாடனருடன் சல்லாபிக்க முயன்றனர். அவரும் அங்கிருந்து மறைந்துவிட்டார். பத்தினியர் தம் நிலையிழந்ததனை அறிந்த முனிவர்கள் அவர்களை மதுரை நகரில் அழகான வணிகமகளிராய்ப் பிறக்கவும், சாபவிமோசனமாக, சோமசுந்தரக்கடவுள் அவர்களைத் தீண்டும்போது சாபம் விலகும் எனவும் கூறினர்.

    அவ்வாறே அப்பெண்கள் மதுரையில் வணிகமகளிராகப் பிறந்து அழகுற வளர்ந்து பருவமடைந்தனர்.

    அந்த மாட மதுரைநகர்க் கரசா கியசுந் தரக்கடவுள்
    வந்து நும்மைக் கைதீண்டும் வழியிச் சாபங் கழியுமெனச்
    சிந்தை தளர்ந்த பன்னியருந் தென்னர் மதுரைத் தொன்னகரிற்
    கந்த முல்லைத் தார்வணிகர் காதன் மகளி ராய்ப்பிறந்தார்.3

    அப்போது சிவபிரான் வளையல் வியாபாரியாக அழகுக்கோலத்துடன் வளைகள் விற்றவண்ணம் தெருக்களில் சென்றார். மறைப்பொருளை உரைசெய்த மணிவாயைத் திறந்து, “வளை வாங்குவீர்,” என்று கூறியவரிடம் வணிகர்குல மகளிர் வளை வாங்கச் சென்றனர்.

    மன்னு மறையின் பொருள் உரைத்த மணிவாய் திறந்து வளை கொண்மின்
    என்னும் அளவில் பருவ முகில் இமிழ் இன்னிசை  கேட்டு எழில் மயில்போல்
    துன்னு மணி மேகலை மிழற்றத் தூய வணிகர் குல மகளிர்
    மின்னு மணி மாளிகை நின்றும் வீதி வாயில் புறப்பட்டார்4                                                

    ‘எமக்கு வளை அணிவிப்பீர்,’ எனவும், ‘இது பெரிதாக உள்ளது; சிறியவளை அணிவியும்,’ என்றும், அணிவித்த வளைகளைப் புறம்சென்று உடைத்தெறிந்துவிட்டு வந்து பின்னும் வளை அணிவிக்க வேண்டியும், ஆசையாகக் கைகளை நீட்டி அவர்தொட்டு வளை அணிவிக்க மகிழ்ந்தும், ‘நாளையும் வந்து வளை அணிவிப்பீர்,’ என வேண்டியும் பலவாறாக அவ்வணிக மகளிர் உவகைப்பெருக்கில் வளையல் வியாபாரியிடம் பேசி மகிழ்ந்தனர்.

    பின் நடப்பனவற்றைத் திருவிளையாடற் புராணத்தில் காணவும். அவ்வணிக மகளிர் அனைவரும் ஐயன் கையால் வளையணிவிக்கத் தொடப்பட்டதால் முத்தி அடைந்தனர்.

    பழங்காலத்தில் ஆடவர்கள் மகளிரின் கையைத் தொடுவது குற்றமெனச் சமுதாயம் கருதியது. ஆனால் வளைச்செட்டி பெண்ணின் கையைத் தீண்டுவது குற்றமாகாது. வளையலை வளையல் செட்டி அணிவிக்க, அணிய வேண்டுமென்ற சமுதாய விதியும் ஒருகாலத்தில் வழக்கிலிருந்தது!

    வள்ளிமீது மையல்கொண்ட முருகன் வள்ளியின் கரத்தைத் தீண்டி இன்பமுற நினைத்தான். அதற்கு வழி யாது? வளையல் செட்டி வேடம் கொண்டான்.

    செட்டி வடிவுடன் வள்ளியிடம் சென்றதைத் திருத்தணிகையுலா,

    ‘…………………………பட்டி வள்ளி
    கைவளைய லேற்றி – காலில் வளைந்தேற்றி,
    மைவளையு நெஞ்ச மய லேற்றி- வெய்ய
    இருட்டுவிடி யாமுன் இனத்தவர்கா ணாமல்
    திருட்டுவியா பாரஞ்செய் செட்டி,’5 எனப்பாடுகின்றது.

    முருகன் வள்ளியிடம் நெருங்கச் செட்டி வேடங் கொண்டதை அருணகிரியார்,

    ‘சித்திரப் பொற்குறப் பாவைபக் கம்புணர செட்டியென்
    றெத்திவந் தாடிநிர்த் தங்கள்புரி சிற்சிதம் பொற்புயஞ்
    சேரமுற் றும்புணரு மெங்கள் கோவே’6 எனப்பாடுகின்றார்.

    (சிற்சிதம் – ஞானம்; வள்ளி ஞானத்தவள்)

    மற்றொரு திருப்புகழ்,

    ‘செட்டி யென்றுசிவ காமி தன்பதியில்
    கட்டு செங்கைவளை கூறு மெந்தையிட 
    சித்த முங்குளிர நாதி வண்பொருளை நவில்வோனே’7

    (இத்திருப்புகழ் திருவிளையாடல் புராணச் செய்தியைக் கொண்டது. செட்டி வடிவெடுத்துத் தேவி சிவகாமி (சிவகாமி – தடாதகைப் பிராட்டி) அரசாட்சி செய்த மதுரையில் செவ்விய கையில் வளையல் கட்டுக்களை விலைகூறி விற்ற எந்தை சிவபிரானுடைய உள்ளம் குளிர மூலப்பொருளை உபதேசித்தவனே!)

    இக்கதைகள் வளையலின் பெருமையையும் அதுசார்ந்த அரிய திருவிளையாடல்களையும் உணர்த்தியதனால் இங்கு பகரப்பட்டன.
    ___________________________

    இனி பிள்ளைத்தமிழுக்கு வருவோமா?

    அரசிளங்குமரி சின்னஞ்சிறுமி தடாதகைக்குக் கைநிறையக் கலகலக்கும் சிவப்பு, பச்சை, மஞ்சள்நிறக் கண்ணாடிவளைகளை அணிந்துகொள்ள ஆசை! வளையல் வியாபாரி மூட்டையை அவளுக்காகவே எடுத்து வருவார். ஆறுவயதுச் சிறுமி மீனாட்சியின் கையிலும் அத்தனை தோழிமார் கையிலும், ஏன் அரண்மனையில் உள்ள பெண்டிர் அனைவரின் கையிலும் அவளுடைய ஆசைப்படி அழகழகான வளைகள் ஒலித்துக் கேட்போரை மகிழ்விக்கும். இன்றும் வளையல் வியாபாரி வருகிறார். தோழியர் அவரை அன்போடு அழைத்துப் பாயில் அமரக்கூறி, மீனாட்சிக்கு வளைகள் அணிவிக்க வேண்டுகின்றனர்.

    முக்குறுணிப் பிள்ளையவனை உச்சிமோந்து முத்தமிடும்
    மீனாளின் கையிலணி முத்து வளையல்!
    நெக்குருகிப் பாடிய குருபரர்க்கு நெகிழ்ந்துருகி
    பரிசிலளி பாண்டிய அரசிகை வளையல்!
    அக்குரோணி சேனைகொண்டு அண்ணலொடு போர்தொடுத்த
    அம்மையவள் கைகுலுங்கு மிரத்தின வளையல்!
    பக்குவமாய் வந்துநீரும் பாயதனை விரித்தமர்ந்து
    பாங்கான கைகளுக்குப் பல்வளைகள் சூட்டிடுவீர்!         (1)

                (இது தோழியர் வளையல் வியாபாரியை நோக்கிப் பாடியது!)

    வளையல் வியாபாரியும் அமர்ந்துகொண்டு பட்டுக்கயிற்றில் முடிந்து கொண்டு வந்திருக்கும் கட்டுக்கட்டான வளைகளை அவிழ்த்து மீனாட்சியின் கரத்திற்குப் பொருத்தமானவையும் தங்கநிறத்தில் வேலைப்பாடுகள் செய்யப்பெற்றுள்ளதுமான சிவப்பு, பச்சைநிற வளையல்களைப் பொருத்தமாக அவள் கரங்களில் அணிவித்தவர் அக்கரங்களின் அழகைக் கண்டு தாமும் கவிஞராகவே மாறிப் பாடுகிறார்!

    பந்தும் கழங்குமாடும் பைந்தளிர்க் கரத்தினிற்கு
    பச்சைவண்ணப் பட்டுவளையல்!
    சிந்துர வண்ணக்கைக்கு மின்னும் சிகப்புவளையல்!
    சுடர்மஞ்சள் சொர்ணவளையல்!
    அந்தமில் ஆலவாய் அழகன் பற்றுங்கைக்கு
    ஆடகப்பொன் ஐம்பொன்வளையல்!
    சுந்தரியே நிரந்தரியே எம்மையாள் தடாதகையே
    சூடிடுவாய்நீ அழகுவளையல்!                    (2)

    (தோழியரும் வளையணிவிக்கும் வியாபாரியும் சேர்ந்து பாடும் பாடல்)

    இப்பருவத்தைப் பாடல்களாக்க வேண்டும் என்ற அவாவில் எழுந்த இம்மூன்று பாடல்களையும் அவள் கரங்களையே திருவடிகளாகக் கருதி, பாடல்களை வளையல்களாக்கி அணிவிக்கிறேன்.

                சின்னஞ்சிறு சிவந்தகைகள், சொக்கனுக்கு மணமாலை
                       சூட்டிய செந்தளிர்க் கைகளுக்கு
             கன்னங்கரிய கருகுமணி வளைபொற் கங்கணமும்
                       கருத்துடன் அணிவித்துக் களித்த
             அன்னைகாஞ் சனமாலை பெற்றபேறு பெரிதன்றோ?
                       அங்கயற்கண் இன்னமுதே! ஆருயிரே!
             சொன்னவிப் புன்சொல்லால் செவ்வியவுன் புகழ்மாலை
                       சூட்டிடவே வளையல் சூட்டிடுவேன்!

    (என் புன்மொழிகளையும் வளைகளாக்கி அவள் கரங்களைப் பாதங்களாய்க் கருதிச் சூட்டியது)            

    (புதிய பிள்ளைப்பருவங்கள் தொடரும்)

    பார்வை நூல்கள்:

    1, 2. சம்பிரதாயப் பாடல்கள்.
    3, 4. பரஞ்சோதி முனிவர், திருவிளையாடல் புராணம், வளையல் விற்ற படலம்.
    5. கந்தப்பையர், திருத்தணிகை உலா.
    6, 7. அருணகிரிநாதர்- திருப்புகழ்


    திருத்தணிகையுலாவில் முருகன் வளையல்செட்டி வடிவில் சென்ற செய்தியையும் திருப்புகழில் முருகன், சிவபிரான் ஆகியோர் செட்டிவடிவங்கொண்ட செய்திகளையும்  மதிப்பிற்குரிய எனது பேராசிரியர், முனைவர் திரு. கோ. ந. முத்துக்குமாரசுவாமி அவர்கள் அளித்து இக்கட்டுரைக்கு மேலும் சுவை சேர்த்ததனை இங்கு நன்றியுடன் பதிவிட விரும்புகிறேன்.

    சித்திரம் வரைந்தவர் எனது நண்பர் திருமதி உபாஸனா கோவிந்தராஜன். இவர் அமெரிக்காவாழ் சென்னைவாசி. சிலகாலம் மென்பொருள் பொறியாளராகப் பணிபுரிந்தார். பின் சித்திரம் வரையும் கலையில் தேர்ச்சி பெற்றார். இந்தியப் புராணங்கள், கதைகள் இவற்றை விளக்கும் சித்திரங்களை வரைவதில் ஆர்வம் உள்ளவர்.

    இந்தக் கட்டுரைக்காகப் பிரத்தியேகமாக, சிறுமி மீனாட்சி ஆசையாக வளைகள் அணிந்துகொள்வதனை அன்னை காஞ்சனமாலை கண்டு களிப்பதனை வரைந்து கொடுத்துள்ளார்.


     

    Share
  • பழகத் தெரிய வேணும் – 48

    பழகத் தெரிய வேணும் – 48

    நிர்மலா ராகவன்

    நேர்மறைச் சிந்தனை

    `என்னமோ, என் வாழ்க்கையிலே மகிழ்ச்சியே இல்லே,’ என்று அலுத்துக்கொள்கிறவர்கள் அவர்களுடைய சிந்தனையை மாற்றிக்கொள்ள வேண்டும்.

    ஏனெனில், மகிழ்ச்சி பிறரால் வருவதல்ல. ஒருவரது எண்ணத்தைப் பொறுத்தது.

    கோயில் ஒன்றில் இலவச நாட்டிய வகுப்பு நடத்தப்படுவதாகக் கேள்விப்பட்டு, அதை நடத்தும் ஆசிரியையிடம் சென்றார் ஒருவர். அவருடைய மகளை அந்த வகுப்பில் சேர்ப்பதற்காக இல்லை.

    முகத்தில் வருத்தத்தைத் தேக்கிக்கொண்டு, “இருக்கிறவங்க குடுக்கலாம். எங்களைமாதிரி இல்லாதவங்க என்ன செய்யமுடியும்?” என்று பூசை நடக்கும் இடத்திலேயே புலம்ப ஆரம்பித்தவர் ஓயவில்லை — “பேசுவதாக இருந்தால், அப்பால் செல்லுங்கள்,” என்று யாரோ ஒருவர் எரிச்சலுடன் மிரட்டும்வரை.

    `பிறரைப்போன்று நாம் இல்லையே!’ என்று வருந்த ஆரம்பித்தால், இந்த உலகில் எவருக்குமே நிம்மதி கிடைக்காது.

    பண வசதி இல்லாவிட்டால், அடுத்த தலைமுறையாவது தங்களைப்போல் கடினமான வாழ்க்கையை அனுபவிக்க வேண்டாம் என்று கல்வியில் ஈடுபடுத்துவதுதான் வசதி குறைந்தவர்கள் செய்யக்கூடிய செயல்.

    தம்முடைய தீய பழக்கங்களைப் பழகிக்கொள்ள வேண்டாம் என்று தம் பிள்ளைகளுக்கு அறிவுரை கூறுபவர்களும் உண்டு.

    மாறாக, ஓயாத சிந்தனை எதிர்மறையாகவே எழுந்தால் (`எல்லாம் என் தலைவிதி!’) சக்திதான் விரயம்.

    தம் வருத்தத்தைக் கோபமாக மாற்றிக்கொள்வதால், குடும்பத்தினர் அனுபவிக்கும் துயரும் தொடர்ந்துவிடும் என்பது இவர்களுக்குப் புரிவதில்லை.

    நம்மால் செய்ய முடிந்தது ஏதாவது இருக்காதா! அதை எண்ணி திருப்தி அடையாது, முடியாததைப்பற்றிய கவலை ஏன்?

    அந்தக் கோயிலின் அருகே இருந்த ஏழை மாது ஒருத்தி தினமும் அதைப் பெருக்கி சுத்தப்படுத்துவாள். இன்னொருவர் கோயில் சுவற்றில் வெள்ளையடிப்பதுபோன்ற வேலையை தானாகச் செய்வார்.

    இருவரும் எந்த லாபத்தையும் எதிர்பாராது, உடலுழைப்பை வழங்குகிறார்கள். `வசதி இல்லையே!’ என்று ஏங்குவதில்லை. அதனால் அவர்களுக்கு `நம்மால் முடிந்ததைச் செய்கிறோம்!’ என்ற திருப்தி கிடைக்கிறது.

    (பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டவர்கள் திருப்தி அடைந்துவிடுகிறார்களா, என்ன!)

    நிறைய சம்பளம் கிடைக்கும் என்ற நப்பாசையுடன் ஆர்வமில்லாத துறையில் பட்டம் வாங்கி, உத்தியோகத்திலும் அமர்ந்தபின்னர் மகிழ்ச்சியை இழந்து வாழ்கிறவர்கள் பலர்.

    வாய்த்த உத்தியோகத்தை நல்விதமாக வகித்தால்மட்டும் மகிழ்ச்சியாக இருந்துவிட முடியாது. அதைக் கெடுக்கவும் ஒருசிலர் இருப்பார்கள்,

    கதை

    நான் ஆங்கிலத்தில் எழுதுவது என் மேலதிகாரியின் பொறாமையைக் கிளப்பிவிட்டது. அவளுக்குப் பிடிக்காத ஒருவரைப்பற்றி அவதூறாக எழுதச் சொன்னாள்.

    `நீயே எழுதேன்,’ என்று நான் மறுக்க, முடிந்தவரை எனக்குத் தொந்தரவு கொடுத்தாள்.

    அவள் அப்படி நடந்துகொண்டதில் என்மேல் தவறு இல்லை என்றவரை எனக்குப் புரிந்தது. இருந்தாலும், தினசரி வாழ்க்கையைக் கடப்பதே கடினமாக இருந்தது. பள்ளிக்கூடத்தில் முதன்முதலாகக் காலெடுத்துவைக்கும் குழந்தை முரண்டுபிடிக்குமே, அந்த மனநிலையில்தான் இருந்தேன்.

    நான் பட்ட அவதிகள் மட்டுமின்றி, பிறரது அனுபவங்களும் என் உணர்வுகளைப் பாதித்தால் அவற்றைச் சமாளிக்க நான் ஒரு வழி வைத்திருக்கிறேன். அவற்றை எழுத்துமூலம் வெளியிட்டபின், மனச்சுமை குறைந்தாற்போல் இருக்கும். அது ஒரு வடிகால். பிரசுரத்திற்காக அல்ல.

    `பிறரிடம் கூறி ஆறுதல் அடையலாமே?’ என்றால், யாரை நம்புவது? நம் மீதே தப்பு கண்டுபிடிப்பார்கள்.

    அப்படியே ஏமாற்றப்பட்டால் அனுபவம் என்று வைத்துக்கொள்ள வேண்டியதுதான்.

    இனிமையான நினைவு ஒன்று

    அதே பள்ளியில் என் சக ஆசிரியை மிஸஸ் சென் ஓய்வுபெறும் நாள் வந்தது. நான் அவளுடன் அதிகம் பேசியதுகூடக் கிடையாது.

    ஆனால், என்னைத் தனியாக அழைத்து, “உன்னிடம் அபூர்வமான திறமை (rare talent) இருக்கிறது. அதனால் பிறர் பொறாமைப்படுகிறார்கள். Take it easy!” என்றாள், கனிவுடன். சம்பந்தப்பட்டவள் பெயரையோ, அவள் என்னைப் படுத்திய பாட்டையோ குறிப்பிடவில்லை.

    நான் குழம்பிப் போயிருந்ததை அவள் கவனித்திருக்கிறாள்!

    எனக்குப் புதிய பலம் வந்தது போலிருந்தது.

    அதுவரை, `எல்லாரும்தான் பேசுகிறார்கள்; எழுதுவதும் அதுபோல்தானே! என்ன பிரமாதம்!’ என்றுதான் எண்ணிக்கொண்டிருந்தேன்.

    மிஸஸ் சென் பல்வித விளையாட்டுகளில் தேர்ந்தவள். அதனாலோ என்னவோ, நம்மை மறைமுகமாக எதிர்ப்பவர்களை எப்படிச் சமாளிப்பது என்று தெரிந்துவைத்திருந்தாள்.

    மிஸஸ் சென்போலன்றி, புலம்புகிறவர்கள்தாம் உலகில் அதிகம். அவர்களுக்கு எத்தனையோ நல்லவை நடந்திருக்கும். ஆனால், நடக்காத, இயலாத, ஒன்றைப்பற்றியே பேசி மருகுவார்கள்.

    ஏன் புலம்பல்?

    `எளிது’ என்றெண்ணி ஒரு காரியத்தைத் தேர்ந்தெடுப்பதில் சில சங்கடங்கள் நேரும். தான் தேர்ந்தெடுத்த காரியம் தான் நினைத்தபடி இல்லையென்று தெரிந்ததும் மிரட்சியாக இருக்கும். `முடியும்,’ என்று தனக்குத்தானே தைரியம் அளித்துக்கொண்டு கடக்க வேண்டியதுதான்.

    என்னுடன் படித்த பிருந்தா “எங்கள் வீட்டில் நான் படித்தது போதும் என்றார்கள். நான்தான் பட்டம் வாங்கவேண்டும் என்று பிடிவாதம் பிடித்து, கல்லூரியில் சேர்ந்தேன். இப்போது ஏனடா சேர்ந்தோம் என்றிருக்கிறது,” என்று ஓயாது அலுத்துக்கொள்வாள்.

    பிருந்தாவைப் போன்றவர்களுக்கு மாறும் எண்ணம் கிடையாது. மாறாக, தம்மைப்போல் இல்லாதவர்களுடன் இணைத்துக்கொள்வார்கள். அப்போதுதானே அவர்கள் மனதையும் கலைக்கமுடியும்?

    அம்மாதிரியானவர்களுடன் அதிகம் பழகினால், நமக்கும் அந்தக் குணம் படிந்துவிடும் அபாயம் உண்டு.

    `நல்லவேளை, நாம் இவர்களைப்போல் இல்லையே!’ என்று நமக்கு நாமே தைரியம் அளித்துக்கொள்ளவேண்டியதுதான்.

    பால்யப் பருவத்தில் துயர் அனுபவித்தவர்கள் சந்தர்ப்பம் மாறியபோதும், எப்போதோ பட்ட வேதனையிலிருந்து மீளாது இருந்தால் அவர்களுக்கு என்றுதான் நிம்மதி?

    கதை

    சிறுவயதிலேயே தாயை இழந்த ரவி தந்தைக்கும் வேண்டாதவனாகப் போனான். பாட்டி வீட்டுக்கு அனுப்பப்பட்டபோது, கேட்பாரில்லை என்று அவளும் அவனைக் கொடுமைப்படுத்தினாள்.

    மூன்று வயதுப் பிள்ளை விஷமம் செய்கிறான் என்று அவனைக் கட்டில் காலில் கட்டிப்போட்டு விட்டதைப் பெருமையாக எல்லாரிடமும் சொல்லிக்கொள்வாள்.

    எட்டு வயதில் ஒருவரின் தத்துப்பிள்ளையாகப் போனான். அங்கும் அசாத்தியக் கண்டிப்பு.

    புத்திசாலியாகவும் அழகாகவும் இருந்த ரவி பெரியவனாகி, அமெரிக்காவில் நல்ல வேலையில் அமர்ந்தான்.

    அவனுடைய குழந்தைபோன்ற நிராதரவான மனப்பான்மையால் எந்தப் பெண்ணின் தாய்மை உணர்வையும் எழுப்ப முடிந்தது. ஆனால், அறியாத வயதில், `தன்னை ஏன் யாருக்குமே பிடிக்கவில்லை?’ என்று அடைந்த குழப்பம் அவனுக்குள் நிலைத்திருந்தது.

    தன்னைக் காதலித்த ஒவ்வொரு பெண்ணையும் உடும்பாகப் பற்றிக்கொண்டான், `இவளுக்கும் நம்மைப் பிடிக்காது, விட்டுப் போய்விடுவாளோ?’ என்ற அச்சத்தால்.

    அவனுடைய கட்டுப்பாடும், எப்போதும் சார்ந்திருக்கும் மனப்பான்மையும் பொறுக்காது பெண்கள் ஒவ்வொருவராக அவனை விட்டுப்போனார்கள்.

    சிறுவயதில் அனுபவித்ததையே நினைத்துக்கொண்டிருந்ததால் அப்போது அவனிடம் அன்பு செலுத்தாதவர்கள்மேல் கொண்ட ஆத்திரமும் மாறவில்லை.

    இதற்குத்தான் சொல்லி வைத்திருக்கிறார்கள், “LIVE IN THE PRESENT” (கடந்தகால நினைவுகளிலேயே ஆழ்ந்துபோகாது, நிகழ்காலத்திலேயே இரு) என்று.

    `இப்போது நான் சுதந்திரமானவன். அவர்களால் என்னைக் கஷ்டப்படுத்த முடியாது!’ என்று, நேர்மறைச் சிந்தனையுடன் தனக்குத்தானே தைரியம் அளித்துக்கொண்டிருந்தால் காலமெல்லாம் துயர்ப்பட வேண்டாமே!

    `முடிகிற காரியமா?’ என்கிறீர்களா?

    அப்படியானால், இத்தகைய சிந்தனையை உறுதிப்படுத்தவென உளவியல் மருத்துவர்களை நாடலாமே!

    Share
  • திருப்பாவை – 10 | நோற்றுச் சுவர்க்கம்

    திருப்பாவை – 10 | நோற்றுச் சுவர்க்கம்

    திருப்பாவை – 10

    நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
    மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்?
    நாற்றத் துழாய்முடி நாரா யணன்நம்மால்
    போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
    கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும்
    தோற்றம் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?
    ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!
    தேற்றமாய் வந்து திறவேலார் எம்பாவாய்.

    திருப்பாவை – 10 | நோற்றுச் சுவர்க்கம் | சேகர் முத்துராமன் குரலில்

    பாடியவர்: சேகர் முத்துராமன்
    விளக்கம்: பிரபா ஸ்ரீதர்

    மனம் என்னென்னவோ விரும்புகிறது. வாயும் தயக்கமின்றி அதைச்சொல்லி விடுகிறது. ஆனாலும் வைராக்கியம் வர மறுக்கிறது. சொன்ன சொல் காப்பதில்லை. துயரம் வரும் போது பகவானை நாடுகிறோம். உனையன்றி வேறு யாரையும் நினையேன் என்றே சத்தியமும் செய்கிறோம். துயர் நீங்கி மகிழ்ச்சிப் பெருகும் போதோ, மகிழ்ச்சியிலே திளைத்துப் போகிறோம். உலக இன்பம் எனும் புதைகுழியில் விழுவது தெரிவதில்லை, மூழ்குவது உணர்வதில்லை. சொன்ன சொல்லையும் காப்பதில்லை.
    .
    இங்கேயும் ஒருத்தி, சொன்ன சொல் மறந்து துயில்கிறாள். நோன்பு நோற்றுப் பணி செய்திருப்பேன் என்றாள். அவனுக்காக இல்லாவிட்டாலும் தன் பொருட்டு நோன்பு நோற்று சுவர்க்கம் புகுவேன் என்றெல்லாம் அலங்காரச் சொற்கள் சொன்னாலும் உறக்கம் அவளை மீறி ஆட்கொண்டுவிட்டது.
    .
    நோன்பு நோற்பது நமக்காக. நாம் பக்தி செய்வதும் நம் நலனுக்காகவே. அவனைப் புகழ்ந்தாலும் இகழ்ந்தாலும், அதனால் அவன் பாதிக்கப்படுவதேயில்லை. முகம் பார்க்கும் கண்ணாடி போன்றவனவன். நமது பிம்பத்தையே அவன் பிரதிபலிக்கிறான். நாம் பணிந்தால், அவன் செவி சாய்ப்பான். இவள் தூங்கிக் கொண்டிருப்பதால் தோழிகள் அழைப்பிற்கு பதில் பேசவில்லை. வாயிற்கதவைத் திறக்கவில்லை.
    .
    அளவிட முடியாத பெரும் தூக்கத்தை உடையவளே! அந்த நாராயணன் ஸ்ரீராமனாக அவதரித்து, கும்பகர்ணனை ஆட்கொண்ட போது, கும்பகர்ணன் தன் தூக்கத்தை உன்னிடம் விட்டுப் போனானோ என்று கரிசனத்துடன் கிண்டலும் செய்கிறார்கள் ஆயர்க்குலப் பெண்கள். அழகிய ஆபரணத்தைப் போன்று பக்தர் குழாமுக்கு எழில் சேர்ப்பவளே, உறக்கம் தெளிந்து வந்து கதவைத் தாள்திறவாய்!
    .
    கும்பகர்ணனை விஞ்சும் நம்முடைய தூக்கத்தை அந்த ஸ்ரீராமனே வீழ்த்தட்டும்.

     

    திருப்பாவை – 10 | நோற்றுச் சுவர்க்கம் | ஸ்வேதா குரலில்

    திருப்பாவை, பல்சுவைப் பெட்டகம். ஒரு பாடலில் ஆண்டாள் சீறி எழுவார். மறு பாடலில் உருகிக் கரைவார். இன்னொரு பாடலில் செல்லமாய்க் கோபித்துக்கொள்வார். அடுத்த பாடலில் வாயாடி போல் பேசுவார். அவரது இந்தப் பத்தாவது பாடலில், நகைச்சுவை ஊற்றெடுக்கிறது. நோன்பு நோற்று சுவர்க்கம் செல்வேன் என்றெல்லாம் சொன்னாய். வாயிற்கதவைக் கூடத் திறக்கமாட்டேன் என்கிறாயே. கும்பகர்ணன் தன் தூக்கத்தை உன்னிடம்தான் விட்டுச் சென்றானோ? அம்மாடி, கதவைத் திற என் ராசாத்தி என்கிறார்.

    இந்த இனிய பாடலைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • படக்கவிதைப் போட்டி 289இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 289இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    தையல் இயந்திரத்தில் கண்ணும் கருத்துமாய்த் துணி தைக்கும் பெரியவரைப் படமெடுத்து வந்திருப்பவர் திரு. ஐயப்பன் கிருஷ்ணன். இந்தப் படத்தை வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தெரிவுசெய்து படக்கவிதைப் போட்டி 289க்கு அளித்திருப்பவர் திருமிகு. ராமலக்ஷ்மி. படப்பதிவாளர், தெரிவாளர் இருவருக்கும் என் நன்றிகளை உரித்தாக்குகின்றேன்!

    ”செய்யும் தொழிலதனைத் தெய்வமென் றெண்ணியே
    தையல் இயந்திரத்தில் மையலொடு பணிசெய்ய
    ஐயம் இன்றியே வாழ்க்கையது உயர்ந்திடும்
    வையம் போற்றுகின்ற நன்னிலையும் வாய்த்திடும்” எனும் நம்பிக்கை மொழிகளை இத்தொழிலாளர்க்கு நல்கிவிட்டுப் படக்கவிதைப் போட்டிக்கு வந்திருக்கும் கவிதைகளைப் படித்துச் சுவைக்கப் புறப்படுவோம் வாரீர்!

    *****

    ”தையல் எந்திரம் மிதித்துப் பாடுபட்டு வளர்த்த பிள்ளைகள் மதிக்காமல் சென்றதனால் வாடும் வயிற்றுக்கு உணவிட உழைக்கிறார் தனியாக!” என்றுரைத்து நம்மை நெகிழ்த்துகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    தனிமையில் தையல்…

    பாடு பட்டுப் பகலிரவாய்ப்
    பழைய எந்திரம் மிதித்தேதான்
    நாடு போற்றப் பிள்ளைகளை
    நன்றாய்ப் படிக்க வைத்தவர்தான்,
    ஓடி விட்ட பிள்ளைகளால்
    ஒருத்த ராக உழைக்கின்றார்
    வாடும் வயிற்றுக் குணவிட்டு
    வாழும் காலம் ஓட்டிடவே…!

    *****

    ”சாதி மத நல்லிணக்கத்தை அனைத்து மத ஆடை அமைப்பில் நயமுடனே காட்டிடுவர் தையல் வேலை செய்வோர்” என உண்மை உரைக்கின்றார் திருமிகு. சுதா மாதவன்.

    தையலுடையால் தையலை,
    தையல் இமையால் காதலைப்
    பரிமாற்றம் செய்து கொள்ள
    இடையிடையே தையல் போட்டு
    மிடுக்கு உடை தைப்பவரோ?

    ஆண் உடையில் கம்பீரமோ
    அழகு ஈதென மனக்கர்வமோ?
    மிடுக்கு உடையில் நீ நேர்த்தியோ?
    இல்லை மிதமான உன் நடையழகோ?

    உம் பிழைப்போ கால் சக்கரம் ஓட்டி
    உடையதனை நீ உருவாக்கிடும்
    விந்தைதான் என் சொல்வேன்
    வீதியோரத் தையல் மன்னவனே!

    சாதிமத நல்லிணக்கம்
    சாதிப்பதன் காரணத்தை
    நம் தையல் இன மக்கள்
    நயமுடனே கடைப்பிடிப்பர்
    அனைத்து மத ஆடை அமைப்பில்

    வகைவகையாய் ஆடைகளை
    வடிவமைத்துக் கொடுக்கின்ற
    விந்தைதான் என் சொல்வேன்
    வியந்து நின்று ரசிக்கின்றேன்

    ஆடை பாதி ஆள் பாதி
    எழில் தோற்றமதைக் கொண்டுவர
    விதவிதமாய் வடிவமைப்பீர்
    வியத்தகு சாதனையாய் வாழ்வையே வெல்வீர்!!

    *****

    ”துரித உணவைப் போல் கேட்டதும் கிட்டும் துரித ஆடைகளால் வசதியற்றோரின் வாழ்வாதாரம் கிழிந்துப்போனது நிறுவனப்படுத்தலால்!” என்று வேதனையோடு விளம்புகின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    பிடிகொம்பு

    வெட்டி ஒட்டிக் கச்சிதமாய் இணைத்துத்
    தட்டிச் செதுக்கும் சிற்பியைப் போல்
    கட்டி அழகு பார்க்க வைக்கும்
    ஆடைகள் தைத்துக்கொள்ள யாருமில்லை…

    பல்பொருள் அங்காடிகளால் படுத்துவிட்ட
    பக்கத்து மளிகைக்கடை…
    இணையவழி வணிகத்தால் அழிந்துவரும்
    சிறுவணிகக் கூட்டம்…
    துரித உணவைப் போல் கேட்டதும்
    துரிதமாய்க் கிட்டும் தைத்த ஆடைகள்…
    வசதியற்றோரின் வாழ்வாதாரம்
    கிழிந்துபோனது நிறுவனப்படுத்தலால்…

    சுகத்தைக் கெடுக்கும் நுண்ணுயிரி
    முகத்தை மூடும் கவசம் தைத்துப்
    பசியைத் தீர்க்க வழிசெய்த நிலைமை என
    அடித்துச் செல்லும் காலச்சுழற்சி வெள்ளத்தில்
    பிடிகொம்புகள் சில கிட்டும் அவ்வப்போது!!!

    *****

    ”சக்கரம் சுழற்றுவதில் சக்கரவர்த்தி நீ தான்! சக்தி கொண்ட கால்கள்
    சத்தியமாய் உனை வாழ்விக்கும்!” என்று நம்பிக்கை மொழி நவில்கின்றார் திரு. யாழ். பாஸ்கரன்.

    துண்டு துணிகளைத் துல்லியமாய்த் தைத்து
    தொண்டு செய்யும் தோழா – நீ உழைத்துக் கூலி
    கொண்டு சென்றால் தான் உன் வீட்டினர்
    உண்டு வாழ உலை கொதிக்கும்!

    கால் வலிக்கக் கவனமாய்
    கால் மிதியை நீ மீதித்தால் தான்
    காலாடை மேலாடை எல்லாம்
    கலை ஆடையாக உருமாறும்!

    மூக்குக் கண்ணாடி வழி
    நோக்கும் விழிப் பார்வையால் நீ
    கோக்கும் நூல் இழைகளின்
    சேர்க்கையால் பலர் மானம் காத்தாய்!

    சக்கரம் சுழற்றுவதில்
    சக்கரவர்த்தி நீ தான்
    சக்தி கொண்ட கால்கள்
    சத்தியமாய் உனை வாழ்விக்கும்!

    கத்திமேல் நடக்கும் வாழ்க்கைப் பயணத்தில்
    கத்தரிக்கோலும் காது ஊசியுமே உனை
    கத்தரி வெய்யிலாய்த் தாக்கும் வறுமையிலிருந்து
    காத்தருளும் கடவுளின் தூதுவர்கள்!

    வண்ணப் பொடிகளின் குவியல் போல்
    எண்ணம் பொங்கட்டும் – சின்னச் சின்ன உழைப்பால்
    விண்ணையும் தொடலாம் – உழைப்பே உயர்வின் வழி என
    எண்ணித் துணிக கருமம் இனி எல்லாம் இன்பமே!

    *****

    அருமையான வாழ்வியல் தத்துவங்களை இந்தத் தையற்காரரை மையமாய் வைத்துத் திறம்பட உரைத்திருக்கின்றனர் நம் கவிஞர் பெருமக்கள். அவர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்வாகியிருப்பது…

    வண்ண வண்ணத் துணிகள்
    வகை வகையான வடிவத்தில்
    வருட முழுக்கத் தைத்தாலும்
    ஒட்டுப் போட்ட சட்டைதான் இவனுக்கு!

    ஓயாமல் உருளும்
    தையல் இயந்திரம் போல
    உருளுகிறது இவனது வாழ்வும்
    இயந்திரமாய்….

    ஊரார் உடுப்பைத் தைத்தால் தான்
    உலை பொங்கும் இவன் வீட்டில்
    தைத்து முடித்த கவுனில்
    தெரியும் சின்ன மகளின் முகம்!

    தீபாவளி கிறிஸ்துமஸ் பொங்கல்
    குறைவில்லை பண்டிகைகளுக்கு
    ஊருக்கு வரும் பண்டிகை
    இவன் வீட்டுக்கு வருவது எப்போதோ?

    தைத்து விட்டான் மனதின் வாயை
    அடக்கி விட்டான் ஆசாபாசத்தை!
    இவனைப் போல எத்தனை பேரோ
    கண்ணன் வழி நிற்கும் கர்மயோகிகள்!

    ”ஊரார் உடுப்பைத் தைத்தால்தான் இந்தத் தையற் தொழிலாளி வீட்டில் உலைபொங்கும்; ஊருக்கு வரும் பண்டிகைகள் இவர் வீட்டுக்கு வருவது எப்போதோ? ஆசாபாசத்தை அடக்கிய இவரும் கண்ணன் வழிநிற்கும் கர்மயோகியே!” என்று ஏழைத் தொழிலாளியின் வாழ்க்கைநிலையை உள்ளபடி உரைத்திருக்கும் இக்கவிதையின் ஆசிரியர் திருமிகு. ராதாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • திருவெம்பாவை – 9 | முன்னைப் பழம்பொருட்கும்

    திருவெம்பாவை – 9 | முன்னைப் பழம்பொருட்கும்

    திருவெம்பாவை – 9

    முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
    பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே
    உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்
    உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
    அன்னவரே எம்கணவர் ஆவர் அவர் உகந்து
    சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்
    இன்ன வகையே எமக்கு எம்கோன் நல்குதியேல்
    என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய்.

    மரபில் வேர்விட்டு, நவீனத்தில் கிளைவிரித்தலை இன்று பல துறைகளில் பேசுகிறோம். ஆனால், இதை முதலில் காட்சிப்படுத்தியவர், மாணிக்கவாசகர். முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே, பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே என்ற அவரது அடியொற்றியே இன்றும் நாம் மரபையும் நவீனத்தையும் ஒருசேர இணைத்துக் காண்கிறோம். அப்படி இணைந்திருப்பதை விரும்புகிறோம்.

    பழமைக்குப் பழமையாய், புதுமைக்குப் புதுமையாய் விளங்கும் பரஞ்சோதியாம் சிவபெருமானைப் போற்றுவோம். திருவாசகத்தின் 9ஆவது பாடல் முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளைப் பின்னைப் புதுமைகள் பல மேவிய டெக்சாஸிலிருந்து ஸ்ருதி நடராஜன் பாடுவதைக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 9 | தூமணி மாடத்து

    திருப்பாவை – 9

    தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய,
    தூபங் கமழத் துயிலணைமேல் கண்வளரும்
    மாமான் மகளே! மணிக்கதவம் தாழ்திறவாய்;
    மாமீர்! அவளை எழுப்பீரோ? உம்மகள்தான்
    ஊமையோ? அன்றிச் செவிடோ அனந்தலோ?
    ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
    மாமாயன், மாதவன், வைகுந்தன் என்றென்று
    நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.

    திருப்பாவை – 9 | தூமணி மாடத்து | ஸ்வேதா குரலில்

    1300 ஆண்டுகளுக்கு முந்தைய காட்சியை அப்படியே நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார், ஆண்டாள். தூய மணிமாடத்தில் சுற்றும் விளக்கு எரிகிறது. நறுமணத் தூபம் கமழ்கிறது. துயிலணை (படுக்கை) மேல் தோழி கண்வளர்கிறாள்.

    தூங்குதல் என்பதைக் கண்வளர்தல் என்பது தமிழ் மரபு. குழந்தைக்குத் தாலாட்டு பாடும்போது கண்வளராய், கண்வளராய் எனப் பாடுவர். இதற்குக் காரணம், கண்மூடுதல் என்பது அமங்கலமானது. கண்வளர்தல் என்கிறபோது அதுவே மங்கலச் சொல்லாகிவிடுகிறது. இந்த மரபைப் பின்பற்றி, ஆண்டாளும் கண்வளர் என்கிறார்.

    ஆனால், மாமான் மகள் இன்னும் எழவில்லை என்றதும், சரவெடியாய் வெடிக்கிறார். மாமீ, நீங்களாவது எழுப்பக் கூடாதா? அவள் என்ன ஊமையா? செவிடா? மந்தமானவளா? பெருந்துயில் துயிலுமாறு யாரும் மந்திரித்துவிட்டார்களா? என்றெல்லாம் பொங்குகிறார். வைகுந்தனின் நாமங்களை வாயாரச் சொல்ல அழைக்கிறார்.

    இந்த இனிய பாடலைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள்.

     

    திருப்பாவை – 9 | தூமணி மாடத்து | சேகர் முத்துராமன் குரலில்

    திருப்பாவையின் 9ஆம் பாடல், சேகர் முத்துராமன் அவர்களின் குரலில் கேட்டு மகிழுங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருவெம்பாவை – 8 | கோழி சிலம்ப

    திருவெம்பாவை – 8 | கோழி சிலம்ப

    திருவெம்பாவை – 8

    கோழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்
    ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்
    கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
    கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
    வாழி ஈதென்ன உறக்கமோ வாய்திறவாய்
    ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
    ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
    ஏழைபங்காளனையே பாடேலோர் எம்பாவாய்.

    தமிழர்களிடம் ஒரு நல்ல வழக்கம் உண்டு. ஒருவரைச் சற்றே குறைசொல்லும் முன், முதலில் அவரை வாழ்த்திவிட்டு, பிறகே அதைச் சொல்வார்கள். 9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மாணிக்கவாசகர், இதை நயமாகச் சொல்கிறார்.

    கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
    கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
    வாழி ஈதென்ன உறக்கமோ வாய்திறவாய்

    ஒப்பற்ற ஒளிப்பிழம்பை, நிகரற்ற கருணையை உடைய சிவபெருமானின் இணையற்ற புகழைப் பாடினோம். உனக்குக் கேட்கவில்லையா? வாழ்க, இது என்ன உறக்கமோ? வாய்திறந்து பேசு என்கிறார். இது என்ன உறக்கமோ எனக் குட்டுவதற்கு முன், வாழ்க என வாழ்த்துகிறார்.

    உறங்குவது போலும் சாக்காடு என வள்ளுவர் சொல்கிறார். எனவே உறங்குவோரை, உறங்கச் செல்வோரை, உறங்கி விழிப்போரை நாம் எப்போதும் வாழ்த்தியே தொடங்க வேண்டும். அது நல்லதிர்வுகளைத் தோற்றுவிக்கும். இதுபோல், விடைபெற்றுச் செல்வோரை, வெளியே புறப்படுபவரை, புதிய செயல் செய்யத் தொடங்கும் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு முறையும் நாம் வாழ்த்த வேண்டும்.

    திருவெம்பாவையின் இந்த நயமான பாடலை, ஸ்ருதி நடராஜன் (டெக்சாஸ்) குரலில் கேளுங்கள்.

     

    படத்துக்கு நன்றி விக்கிப்பீடியா

    https://upload.wikimedia.org/wikipedia/commons/8/8f/Gods_AS.jpg

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 8 | கீழ்வானம் வெள்ளென்று

    திருப்பாவை – 8 | கீழ்வானம் வெள்ளென்று

    திருப்பாவை – 8

    கீழ்வானம் வெள்ளென்று, எருமை சிறுவீடு
    மேய்வான் பரந்தனகாண்; மிக்குள்ள பிள்ளைகளும்
    போவான் போகின்றாரைப் போகாமல் காத்துன்னைக்
    கூவுவான் வந்து நின்றோம், கோதுகலமுடைய
    பாவாய்! எழுந்திராய்; பாடிப் பறைகொண்டு
    மாவாய் பிளந்தானை, மல்லரை மாட்டிய
    தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்
    ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

    திருப்பாவை – 8 | கீழ்வானம் வெள்ளென்று | ஸ்வேதா குரலில்

    எழுந்திராய், எழுந்திராய் என்று உறங்கும் தோழியரை மட்டுமா ஆண்டாள் எழுப்புகிறார்? உறங்கும் தமிழ்க்குடியையும் சேர்த்தே எழுப்புகிறார். அவர்தம் உள்ளத்தையும் எழுப்புகிறார். அதுவும் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக. கீழ்வானம் வெளுக்கின்றது. தேவாதி தேவனைச் சேவிப்பவர்க்கு ஆவாவென்று அருள் சிறக்கும். இதோ, செல்வி ஸ்வேதாவின் குரலில், திருப்பாவையின் எட்டாவது பாடல், கீழ்வானம் வெள்ளென்று. கேட்டு மகிழுங்கள், இணைந்து பாடுங்கள்.

    திருப்பாவை – 8 | கீழ்வானம் வெள்ளென்று | சேகர் முத்துராமன் குரலில்

    குதூகலம் என நாம் இன்று பயன்படுத்தும் சொல்லை, 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆண்டாள், கோதுகலம் எனப் பயன்படுத்துகிறார். இவற்றுக்கு மூலம், வடமொழியில் உள்ள  –कौतूहल–கௌ1தூஹல–  என்ற சொல்லாகும். இதற்கு உள்ளக் களிப்பு என்று பொருள். கோதுகம் என்றும் இதற்கு இன்னொரு வடிவம் உண்டு. அதன் மூலம்  — कौतुक–கௌ1து11— என்ற சொல்லாகும். இதற்கும் உள்ளக் களிப்பு என்றே பொருள். திருப்பாவையின் எட்டாவது பாடலில் கோதுகலமுடைய பாவாய்! எழுந்திராய் என ஆண்டாள் துயிலெழுப்புகிறார். சேகர் முத்துராமனின் குரலில் கீழ்வானம் வெள்ளென்று என்ற பாடலைக் கோதுகலத்துடன், உள்ளக் களிப்புடன் கேட்போம், வாருங்கள்.

     

    ஓவியத்திற்கு நன்றி – ஷ்யாம்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • United We dont fall

    United We dont fall

    Baskar Seshadri

    What will happen if both DMK and ADMK vie each other to do something to a community. Read the story of Times that appeared Yesterday.

    The Puzhuthivakkam Lake was in shambles with more of waste materials all over and Plenty of Hyacinth Through out in the twenty Four acres of water bed. Its the plight for the past two decades and no clear action was done by the Civic Body. After the announcement was made that DMK was all set to do the cleaning works ADMK rushed on this and started doing the work now with the Local body to involve fearing repercussions.

    Result – In Just two days the whole of the lake was cleaned and is now in Pristine clear. See the Photos of Times of india that is copied here.

    Whether its for the vote bank or not the joint action with animosity had ended as good for the people. Feeling too happy to see the blue lagoon Though Not really its a back water.

    Photo and Info Courtesy: Times of India , Chennai

    Share