Blog

  • சிறுகை அளாவிய கூழ் (19)

     

    இவள் பாரதி

     
    எல்லாவித nivi
    அழுத்தங்களிலிருந்தும்
    விடுபட
    போதுமானதாயிருக்கிறது
    உன் புன்னகை

    —————————

    உனதசைவின்
    ஒவ்வொரு கணத்தையும்
    சேகரிக்க முயன்று
    கைக்கொள்ளாமல்
    கவிதையில் பத்திரப்படுத்திவிட்டு
    மீண்டும் சேகரிக்கிறேன்

    அள்ளக்குறையாத
    அட்சயப்பாத்திரமாய்
    அசைவுகளால் நிரப்புகிறாய்
    வழிந்தோடி நிரம்பி
    மூழ்கடிக்கிறது என்னை
    மீளத்துணியாமல் மிதக்கிறேன்

    Share
  • நல்ல வாழ்வு பிறந்திடும் !

     

    எம்.ஜெயராமசர்மா — மெல்பேண் 

     

    புத்தர் வந்தார் யேசு வந்தார் bhud
    புனிதரான காந்தி வந்தார்
    எத்தனையோ சொல்லிநின்றார்
    எதையும் காது வாங்கவில்லை

    சத்தியமே பேசு என்று
    தர்மயுத்தம் செய்தாரே
    அத்தனையும் என்னவாச்சு
    அவற்றை எண்ணிப்பார்த்தோமா

    ஊழல் என்னும் பேயது
    ஊரை விழுங்கப் பார்க்குது
    உலகம் முழுக்கப் பார்த்திடின்
    ஊழல் ஓங்கி நிற்குது

    தேர்தல் என்னும் பேரிலே
    தினமும் ஊழல் நடக்குது
    நீரில் கூடக் கலப்படம்
    நிறைந்து எங்கும் இருக்குது

    நீதிகிடைக்கும் என்று எண்ணி
    நீதி மன்றம் சென்றிடின்
    ஊதிப் பெருத்த ஊழல்தான்
    உறைந்து அங்கே கிடக்குது

    சமயச் சண்டை நடக்குது
    சாதி வெறி ஓங்குது
    இமயம் உடையப் பார்க்குது
    இன்னும் சிக்கல் தேவையா

    நல்ல எல்லாம் இருக்குது
    நாங்கள் எடுக்க மறுக்கிறோம்
    சொல்லி விட்டுப் போனதை
    சுமையாய் எண்ணி நிற்கிறோம்

    தொல்லை ஒழிய வேண்டிடின்
    துயரம் தொலைய எண்ணிடின்
    நல்லவற்றை நாடுவோம்
    நாட்டில் நன்மை வந்திடும்

    ஊழல் பேயை ஓட்டுவோம்
    உலுத்தர் தம்மை விரட்டுவோம்
    நாளை நல்ல தாக்குவோம்
    நல்ல வாழ்வு பிறந்திடும்

    Share
  • என்ன தான் இருக்கிறது வேதத்தில் ? – 4

    சு. கோதண்டராமன்

     

    வேத உரைகள்

     

    சிற்சில பதங்களுக்கு சாயணாசாரியர் சொல்லும் உரை பிரத்தியக்ஷமாகப் பிழையென்று தோன்றினும், பொதுப்படையாகச் சொல்லுமிடத்தே தற்காலத்து ஹிந்து வைதிகர்களால் அங்கீகாரம் செய்யப்பட்டிருக்கும் ஸாயண பாஷ்யமே பூர்வ வியாக்கியானங்களுக்கு விரோதமில்லாமலும், தெளிவாகவும், உண்மையாகவும் அமைந்திருக்கிறது. 

              எனினும், சாயணாச்சாரியர் கூடத் தம்முடைய குருக்களைப் போலவே வேதம் கர்ம நூலென்று கருதிவிட்டார். அதனால் அது ஹிந்து மதத்துக்கு ஆதிவேர் என்பதை இந்த ஆசாரியர்களால் மறுக்க முடியாவிடினும், அதற்கு ஞானநெறியில் எவ்விதப் பிரமாணமுமில்லை யென்று அவர்கள் தவறாக எண்ணும்படி நேர்ந்து விட்டது. ஏனென்றால், வேதத்தைக் கர்மங்களைப் போற்றும் நூலாகக் கருதிய இவர்கள் கர்மங்களென்ற இடத்தே யாகங்களைக் கருதிக் கூறினர். அதாவது, யாகங்களுக்கு மாத்திரம் உபயோகப்படும் நூலாக எண்ணி, கர்மங்கள் என்றால் யாகங்களெனப் பொருள் கொண்டு இவர்கள் வேதத்தைக் கர்ம காண்டம் என்றார்கள். -பாரதி 

    சாயணாசாரியார் உரை

    வேத ரிஷிகளின் அருள் மொழிகள் யாகங்களையே கருப்பொருளாக உடையன என்னும் கருத்து பிராமணங்கள் எழுதப்பட்ட காலத்திலேயே தோன்றிவிட்டது. பிராமணங்கள் வெவ்வேறு வகையான யாகங்களைக் குறிப்பிடுகின்றன. வேதத்தில் கூறப்பட்ட சொற்களுக்கு அவை அளிக்கும் விளக்கம் யாகச் சார்புடையனவாகவே  இருக்கின்றன. இந்தப் போக்கை அப்பொழுதே சிலர் எதிர்த்திருக்கிறார்கள். அவர்களால் தான் உபநிடதங்கள் எழுதப்பட்டன. எந்த விதமான யாகமும் வேண்டாம், பிரம்மத்தைப் பற்றிச் சிந்திப்பது தான் கடைத்தேறும் வழி என்றன உபநிடதங்கள்.

                ஆனால் உபநிடதக்காரர்கள் ஸம்ஹிதைகளை வார்த்தைக்கு வார்த்தை பொருள் கண்டு பிடித்து விளக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. வேதத்தின் பொதுவான கருத்து உருவமற்ற குணமற்ற பிரமம் தான் என்று விளக்குவதில் அவர்கள் ஈடுபட்டனர்.

                சாயணர், பிராமணங்களைப் பின்பற்றி, எல்லாவற்றையும் யாகக் கண் கொண்டே பார்க்கிறார். பொருள் தெளிவாகத் தெரியும் இடத்தில் கூடத் தேவை இல்லாமல் யாகக் கருத்தைப் புகுத்துகிறார். உதாரணமாக, 8.66.4 இல் “புதைக்கப்பட்டிருக்கும் செல்வத்தை இந்திரன் தன் பக்தர்களுக்குத் தருகிறான்” என்று வருகிறது. ‘யக்ஞத்தால் போற்றப்பட்டவுடன்’ என்று சாயணர் சேர்க்கிறார்.  அதே போல, 8.63.8 இல் “நீ என் ரதத்தின் சக்கரம் செல்லும் பாதையைக் காப்பாற்று” என்று வருகிறது. ‘நான் யக்ஞத்துக்குச் செல்லும்போது’ என்ற தொடரைச் சாயணர் சேர்க்கிறார்.

                சாயணருக்கு முன் ஸ்கந்த ஸ்வாமி, நாராயணர், உத்கீதர், மாதவ பட்டர், வேங்கட மாதவர், தானுஷ்க யஜ்வா, ஆனந்த தீர்த்தர் என்ற மத்வாசார்யர், ஆத்மானந்தர் ஆகியோர் ரிக் வேதத்துக்கு உரை எழுதியுள்ளனர். ஆனால் இன்று நமக்குக் கிடைக்கும் ஒரே முழுமையான உரை சாயணருடையது தான். அவரது உரையை அடிப்படையாகக் கொண்டு தான் மேலை நாட்டவரும் தற்போதைய இந்திய வேத இயல் அறிஞர்களும் வேத ஆராய்ச்சியைத் துவக்கி புதிய பொருள் காண முயன்று வருகின்றனர். ஸாயண பாஷ்யமில்லாவிட்டால், வேதம் ஹிந்து ஜாதிக்குப் பயன்படாமலே போயிருக்கும். சரியான சமயத்தில் ஸாயணர் வேதங்களுக்கு பாஷ்யம் எழுதி வைத்தார் என்று பாரதி கூறுவது கவனிக்கத்தக்கது.

    மாக்ஸ்முல்லர்

                மேலை நாட்டு வேத ஆராய்ச்சியாளர்களில் குறிப்பிடத் தக்கவர் மாக்ஸ்முல்லர். அவர் இந்தியாவிற்கு வந்ததில்லை.220px-Max_Muller ஆனால் அவருக்கு முன் பல ஜெர்மானியர்கள் எழுதிய, பதிப்பித்த புத்தகங்கள் மற்றும் இந்தியாவில் அவரது நண்பர்கள் மூலம் சேகரித்த ஏட்டுச்சுவடிகளின் அடிப்படையில் ஆராய்ந்து ரிக் வேதத்திற்கு ஒரு முழுமையான உரை எழுதினார். சாயணர் உரை எழுதிய ஏட்டுச் சுவடிகள் அவருக்குக் கிடைத்தவை 12. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருந்தன. (சாயணர் உரையிலேயே பல இடைச் செருகல்கள் புகுந்துள்ளன என்பது தெரிகிறது.) சிறு வேறுபாடுகளை எல்லாம் பொருட்படுத்தாமல் வகைப்படுத்தியதில் அவை மூன்று பிரிவுகளில் அடங்கின. ஒன்றுக்கொன்று பெருத்த வேறுபாடு உடைய அவற்றில் எது உண்மையான பொருள் என்று கண்டுபிடிப்பது மிகுந்த சிரமமான வேலை. அதனால் அவருக்கு இந்த வேலையை முடிக்க 45 ஆண்டுகள் ஆயின.

    வாழ்க்கையின் பெரும் பகுதியை இந்த ஆராய்ச்சியிலேயே அவர் செலவழித்த பின்னரும் அவரால் வேதத்தின் மேலெழுந்தவாரியான பொருளைத் தான் அறிய முடிந்தது. எனவே அவர் வேதம் என்பது பல வகையான பழங்கால நம்பிக்கைகள் கொண்டதும் பல வேறு தெய்வங்களைப் போற்றுவதுமான நாகரிகமற்ற கூட்டத்தினரின் ஒரு நூல் என்று தான் கருதினார். மேலும், இந்தியாவில் புதிதாகக் குடியேறிய ஒரு கூட்டம் மாறுபட்ட சமய நம்பிக்கைகள் கொண்ட பழங்குடியினரின் எதிர்ப்பை எதிர் கொண்ட நிலையை அது குறிப்பிடுவதாகவே அவர் முடிவு கட்டினார். 

    அவர் அமைத்துக் கொடுத்த பாதையில் பயணம் செய்த பிற்கால ஆராய்ச்சியாளர்கள் வேதத்தினுள் ஆழமாகச் செல்ல முடிந்தது. அவர்கள் வேதத்தின் உண்மையான கருத்தை அறிய  முயன்று வருகின்றனர். மாக்ஸ்முல்லரின் இனப் போராட்டக் கருத்தைப் பலரும் மறுத்துள்ளனர். ஆனாலும் இன்று வரை பாடப் புத்தகங்களில் மாக்ஸ்முல்லரின் கருத்தே நிலைபெற்றுள்ளது.

    ஸ்வாமி தயானந்த ஸரஸ்வதி

    Dayanand_Swamiஇதற்கு எதிர் வினையாகக் கிளம்பியவர் ஆர்ய ஸமாஜ நிறுவனர் ஸ்வாமி தயானந்த ஸரஸ்வதி. இந்தியரின் பல தெய்வக் கொள்கை, உருவ வழிபாடு, ஜாதி முறை இவற்றைக் கிருத்துவர்களும் இஸ்லாமியரும் குறை கூறியது அவருக்கு உகப்பாக இல்லை. இந்து சமயம் பல வேறு காலங்களில் பல வேறு தாக்கங்களுக்கு உட்பட்டு வளர்ச்சி அடைந்திருக்கிறது என்பதை அவரால் ஒப்புக் கொள்ள முடியவில்லை.

    “வேதம் அநாதியானது, இறைவனின் வாக்கு அது. அதில் இல்லாதது இல்லை. இன்று புதிதாக வந்திருக்கும் ஆகாய விமானம், தொலைபேசி, ஆக்சிஜன், ஹைட்ரஜன் போன்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் உள்பட எல்லாமே வேதத்தில் உண்டு. அஹிம்சைக் கொள்கை புத்த மதத்திலிருந்து பெறப்பட்டது அல்ல. அது இங்கிருந்து தான் புத்த மதத்திற்குப் போயிற்று. வேதத்தில் ஒரு தெய்வக் கொள்கை தான் இருக்கிறது, உருவ வழிபாடு இல்லை, ஜாதி முறைகள் இல்லை” என்று நிரூபிக்க விரும்பின அவர் வேதத்துக்குப் புதிய பொருள் கண்டார். வேதச் சொற்களின் வேரை ஆராய்ந்து சாயணரும் மாக்ஸ்முல்லரும் சொல்லாத புதிய பொருள் உரைத்தார். சில இடங்களில் அவர் சொல்வது பொருத்தமாக இருந்தாலும் பெரும்பாலான இடங்களில் அவர் வலிந்து பொருள் கொள்வது நன்கு வெளிப்படுகிறது.

    உதாரணமாக, ரிக் 1.162 சூக்தம் முழுவதும் யாகத்தில் குதிரையைப் பலி இடுவது பற்றியது. பலியிடப்பட்ட குதிரை தேவ லோகம் செல்லும்போது, அதன் உடலின் எல்லாப் பகுதிகளும், பலியிடுவதற்கு முன் அதன் வாயில் வைக்கப்பட்ட புல் உள்பட, எல்லாம் கூடவே போகட்டும் என்று வேண்டப்படுகிறது. அதில் 9வது மந்திரத்தின் சாயணர் உரையின் தமிழ் மொழி பெயர்ப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

                குதிரையின் மாமிசத்தில் ஈக்கள் சாப்பிட்டது, வெட்டும் கத்தியிலும் தடவும் குச்சியிலும் ஒட்டிக் கொண்டிருப்பது, மாமிசத்தை எரிப்பவருடைய கைகளிலும் நகங்களிலும் ஒட்டிக் கொண்டிருப்பது இவை எல்லாம், தேவர்களிடத்தில் நீ போய்ச் சேரும்போது, உன்னுடன் இருக்கட்டும்.

    இதே மந்திரத்துக்கு தயானந்தர் அளிக்கும் விளக்கம் துளிக்கூட சம்பந்தம் இல்லாமல் இருக்கிறது. எந்த அகராதியிலும் இல்லாத புது அர்த்தத்தை எந்த நியாயமும் இன்றி அவர் ஏற்படுத்தியிருப்பதைக் கீழ்க்கண்ட மொழிபெயர்ப்பு தெளிவுபடுத்துகிறது.

                வேலைக்காரர்கள் குதிரையை துர்க்கந்தம் இல்லாததாக, ஈ இல்லாததாக வைத்திருக்க வேண்டும். தன் கையினாலும் கயிற்றினாலும் உயர்ந்த நியமத்துடன் தன் விருப்பம் போல் செலுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் குதிரை நன்றாக வேலை செய்யும். 

    க்ரவிஷ என்ற சொல்லுக்கு மாமிசம் என்பது தான் பொருள். அப்படித் தான் எல்லா இடங்களிலும் பொருள் கொள்ளப்பட்டு வந்திருக்கிறது. தயானந்தர் அதற்கு விரைவாகச் செல்லும் என்று பொருள் தருகிறார். அதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டால் க்ர என்றால் செல்வது என்று பொருள். அதிலிருந்து வருவதால் க்ரவிஷ என்பது விரைவாகச் செல்கின்ற எனப் பொருள்படும் என்று விளக்குகிறார். இத்தகைய சுற்றி வளைத்துப் பொருள் கொள்ளும் முறையைப் பயன்படுத்தத் தொடங்கினால் யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பொருள் கொள்ளலாம்.

    மேலை நாட்டவர் இந்து சமயத்தைப் பற்றிக் குறையாகக் கூறியவற்றை மறுப்பதே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டார் தயானந்தர்.  புலால் உண்ணாமைக் கொள்கையை இந்து சமயம் சமண புத்த சமயங்களிலிருந்து பெற்றது என்பதை ஒப்புக் கொள்ள அவர் விரும்பவில்லை.

    எந்த சமயமும் தான் நிறுவப்பட்ட காலத்தில் இருந்தது போலவே இல்லாமல் காலப்போக்கில் தன்னைத் தானே திருத்திக் கொள்வது தான் வளர்ச்சியாகும். அது அந்த சமயத்தை வலுவாக்கும். தன் தவறுகளை உணர்ந்து திருத்திக் கொள்ளாத சமயம் அழி்ந்து விடும். வேதத்தில் கூறப்படாத எத்தனையோ விஷயங்கள் இன்றைய இந்து சமயத்தில் உள்ளன. அவை காலப் போக்கில் தேவைக்கேற்பச் செய்து கொள்ளப்பட்ட மாற்றங்கள். அவற்றை நீக்கி விட்டு வேத காலத்தில் இருந்த நிலைமைக்கே திரும்பிப் போக வேண்டும் என்று கூறுவது பிற்போக்கானது.

    தயானந்தரால் ஏற்பட்ட ஒரு நன்மை, வேதத்திற்கு அர்த்தம் பார்க்கக் கூடாது என்ற பயம் நீங்கி அதை ஆராய வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டியது தான்.

    படங்களுக்கு நன்றி:

    Share
  • நித்தமும் நிம்மதி

     

    சீர்காழி உ செல்வராஜு

     

    வாழ்வே இல்லையெனGlacial-Lake-537x402

    வசந்தமே தொலைந்ததென

    வாழ்ந்தது போதுமென வாழாதே.

    நெஞ்சினில் நெருப்போடு

    நெருஞ்சிமுள் குணத்தோடு

    நிம்மதி நிம்மதி என தேடாதே.

    நிம்மதி எங்குமில்லை

    நிரந்தரம் ஏதுமில்லையென

    நினைந்தே உருகாதே.

    பிறந்தவர் பயனற்று
    புலம்புவதில் என்ன பயன்?

    திறந்த மனங்கொண்டு

    திருந்திட வேண்டாமோ?

    முற்போக்குச் சிந்தனையோடு

    முயன்று முயன்று முத்திரைப் பதித்து

    முன்னேற்றம் அடைந்தவர்களை அறியாயோ?

    கரடுமுரடான வாழ்க்கை கரைந்தே போக

    கற்ற அறிவினால் களையெடு.

    நித்தமும் கிட்டும் நிம்மதி!

    Share
  • வாழ்க்கை நலம் – 58

    குன்றக்குடி அடிகள்

    58. ஆன்மாவின் உணவு!

    மனிதன் பிறப்பதில்லை; மனிதன் உருவாக்கப்படுகின்றான். இதுவே அறிவியல் உண்மை. மனிதனை உருவாக்குவதில் கல்வி வகிக்கும் பாத்திரம் மிகமிகப்பெரியது. கல்வியின் இலட்சியமே மனிதனை உருவாக்குவதுதான்! அதனால் மனிதனை உருவாக்கும் கல்வியினும் விழுமியது இல்லை.

    மனிதனின் பொறி, புலன்களைப் பயனுடையனவாக்கி வாழ்க்கையை வளர்த்து விளக்கமுறச் செய்வது கல்வியே! மனிதன் அளப்பரிய ஆற்றலுடையவன். மனிதனின் ஆற்றல் கல்வியின் மூலமே இனங்காணப் பெற்றுச் செயலாக்கத்திற்குப் பயன்படு நிலைக்குக் கொணரப்படுகிறது! ஏன் கல்வியே ஆன்மாவின் சிறந்த உணவு.

    திருக்குறள் ‘கற்க’ என்று பேசுகிறது. ஆம்! கல்வி கற்பது மனிதர்களின் பழக்கமும் வழக்கமும் ஆக வேண்டும். கற்றல் பலவகை. அவற்றுள் எளிமையானது, முதன்மையானது தன்னைச் சுற்றியிருக்கும் உலகத்தைக் கூர்ந்து நோக்குவதன் மூலம் கற்பது.

    “கண்டதைப் படித்தால் பண்டிதன் ஆவான்” என்பது பழமொழி. கண்டது = கண்ணால் கண்ட இயற்கைக் காட்சிகளையே கற்பது. இங்ஙனம் கற்ற பாடங்களையே ஐசக் நியூட்டனின் ‘புவி ஈர்ப்பு ஆற்றல்’ கண்டுணரப் பெற்றது என்பதறிக.

    அடுத்து அவரவர் சொந்த வாழ்க்கையின் பட்டறிவு வழி பெறும் கல்வி அறிவு. இந்தக் கல்வி தனி முயற்சியில்லாமல் வாழ்க்கையின் வழியிலேயே கற்கப் பெறுவது வாழ்க்கையில் ஏற்படும் வெற்றிதோல்விகள் நம்பிக்கையுடனும் நல்லெண்ணத்துடனும் ஒட்டி உறவாடி வாழ வேண்டிய இடத்தில் முரண்பாடுகள் தோன்றுதல், நம்பிக்கையின்மை வளர்தல் ஆகியன வாழ்வியலுக்கு நல்லவையல்ல.

    மனிதர்களிடையில் மன முறிவுகள் தோன்றுவதும் அவ்வழி மனித உறவுகள் பாதிக்கப்படுவதும் ஏற்க இயலாத ஒன்று. அன்றாடம் வாழ்ந்த வாழ்க்கைப் பாங்கைத் திறனாய்வு செய்து, திறனாய்வு வழி வாழ்நிலைகளை அறிந்து கடைபிடித்தல் சிறந்த கல்வி.

    மூன்றாவது, நூல்களைக் கற்பதன் மூலம் பெறும் அறிவு. இந்தக் கல்வி முறை தான் இன்று பரவலாகப் பின்பற்றப்படுகிறது. மக்கள் மத்தியில் நடைமுறையில் இருப்பதும் இந்தக் கல்வியே! இந்தக் கல்வியை மக்கள் பெறுவதற்காக நாடு செலவழிக்கும் காலமும் பணமும் அளவிடற்கரியது.

    ஆயினும் போதிய பயன் இல்லை; ஏன்? கல்வி முறையே காரணம். இன்றைய கல்வியில் சிந்தனைக்கு வாய்ப்பில்லை; செயலுக்குரிய வாய்ப்பு மிக மிகக் குறைவு. கல்வி கற்றதனால் எந்த ஒரு தனித்தகுதியும் வந்தடைந்ததாக இல்லை. ஏன்? கற்கும் ஆர்வம் கூட இல்லை.

    திருக்குறள் ‘கற்க’ என்று கூறுகின்றது. ஆம்! கற்பது – இடையீடில்லாது தொடர்ந்து கற்பது மனிதனின் கடமை; ஏன் கற்க வேண்டும்? மனிதன் அளப்பரிய ஆற்றலுடையவன். அவன் எண்ணிய செயல்களைச் செய்ய முடியும். ஆயினும் அவனுடைய அகநிலைக் குற்றங்களாகிய அச்சம்,பயத்திலிருந்து விடுதலை பெற்றால் தான் கற்கும் கல்வி பயன்தரும்.

    “கசடறக் கற்பவை கற்க” என்றது திருக்குறள். “கசடு” – மனக்குற்றங்கள். மனக்குற்றங்களை நீக்கும் மருந்து கருத்துக்கள் தாம். கருத்துக்கள் பெரும்பாலும் நூல்கள் வாயிலாகவே கிடைக்கும். கற்க வேண்டிய நூல்களைத் தேடிக்கற்ற பிறகு அக்கருத்துக்கள் வழி நடந்து அக்கருத்துக்களுக்கு உரிமையுடயராதல் வேண்டும்.

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்! (29)

    29. அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்! லியானார்டோ அருங்காட்சியகம் (2), வின்ச்சி, இத்தாலி

    சுபாஷிணி ட்ரெம்மல்

    மனித பரிணாம வளர்ச்சிக்கும் விஞ்ஞான வளர்ச்சிக்கும் ஒரு பாலமாக அமைந்தவர்களில் லியோனார்டோவின் பங்கு அளப்பறியது. அவரது சிந்தனைகளில் உதித்த கருத்துகள் அனைத்தையும் தமது குறிப்பேட்டில்  தொகுத்து வைத்ததனால் அவை இன்று நாம் அறிந்து கொள்ள உதவும் ஆவணங்களாகத் திகழ்கின்றன. தனது கண்டுபிடிப்புகளில் சிலவற்றை லியோனார்டோ மாடல்களாகச் செய்தும் பார்த்திருக்கின்றார். பல கண்டுபிடிப்புகள் செயல்வடிவம் பெற்றதோடு அவை மென்மேலும் செம்மையாக்கப்பட்டு மனிதகுலத்தின் நாகரிக வளர்ச்சியின் பயன்பாட்டிலும் இடம்பெறுவதாக அமைந்திருப்பது தனிச்சிறப்பு.

    இத்தாலியின் வின்ச்சி நகரில் உள்ள இந்த லியோனார்டோ அருங்காட்சியகம் இரண்டு பகுதிகளாக அமைந்திருக்கின்றது. ஒன்று நகர மையத்தில் இருக்கும் அருங்காட்சியகம். இங்கே லியோனார்டோவின் கையெழுத்துக் குறிப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்தக் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட மாடல்கள் இந்த அருங்காட்சியகத்தை நிறைத்துள்ளன. இந்த மாடல்களை உருவாக்கியதில் பெரும் பங்கு IBM நிறுவனத்தைச் சாறும் என்ற குறிப்பும் அங்கே காணக் கிடைக்கின்றது.

    suba 1
    அருங்காட்சியகத்தின் உள்ளே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள மாடல் வடிவங்கள்

    இதைத் தவிர்த்து வின்ச்சி நகர மையத்தைக் கடந்து ஏறக்குறைய 3கிமீ தூரத்தில் லியோனார்டோவின் பிறந்த இல்லம் இருக்கின்றது. இதில் ஒரு கண்காட்சிக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கே நவீன தொழில் நுட்பம் கொண்டு ஹோலோக்ராம் வடிவில் நம் கண் முன்னே லியோனார்டோ டா வின்சி தோன்றி தம்மைப் பற்றியும் தனது சிந்தனைகளை, தன் வாழ்க்கை வரலாறு என இத்தாலி மொழியிலும் ஆங்கிலத்திலும் கூறுவதைக் கேட்கலாம். இது நம் முன்னே லியோனார்டோ நின்று பேசுவதைப் போன்றதொரு உணர்வினை வழங்குகின்றது. இந்தக் கண்காட்சியகத்தில் அவரது இல்லத்தின் கூடம், வாசல் பகுதி, சமையலறை, தூங்கும் அறை போன்ற பகுதிகளில் விளக்கக் குறிப்புகளுடன் அமைக்கப்பட்டிருக்கின்றன.

    லியோனார்டோவின் வாழ்க்கைக் குறிப்பை அறிந்து கொள்வதும் இந்த அருங்காட்சியகப் பதிவிற்கு உதவும் எனக் கருதுகின்றேன். 1452ம் ஆண்டு ஏப்ரல் 15ம் திகதி ப்ளோரன்ஸ் நகரில் இருக்கும் வின்ச்சி நகரில் பிறந்தவர் இவர். இவரைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் வசாரி (Vasari) அவர்களது குறிப்புகளிலிருந்து கிடைக்கின்றன. இது மிக விரிவானதொரு குறிப்பு. இக்குறிப்புகளில் காணப்படும் தகவலின் படி லியோனார்டோ சைவ உணவு உண்பவர் என்று அறியமுடிகின்றது. கூண்டுகளில் அடைக்கப்பட்டிருக்கும் பறவைகளை வாங்கி அவற்றை கூண்டிலிருந்து சுதந்திரமாகப் பறக்க விடுவாராம். சுதந்திர தாகம் அவர் மனதை ஆக்கிரமித்திருக்க வேண்டும் என்றும் விலங்குகள் போன்ற ஏனைய உயிரினங்களின் மீதும் அவற்றின் சுதந்திர வாழ்க்கையின் மேலும் அவருக்கு ஓர் ஈடுபாடு இருந்திருக்க வேண்டும் என்றும் இதனை அறிந்து கொள்ளும் போது எண்ணத் தோன்றுகின்றது.

    இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை; குழந்தைகளும் இல்லை. அதிகமான நண்பர்கள் இவருக்கு இருந்திருக்கின்றனர். அதில் ஆண்களும் சில குறிப்பிடத்தக்க என்ணிக்கையில் பெண்களும் அடங்குகின்றனர்.

    ஆரம்ப காலத்தில் இவரது புகழ் இவரது கலைப்படைப்புக்களுக்காகவே என அமைந்தது. ஐரோப்பிய கலாச்சரத்திற்குப் புகழ் சேர்க்கும் பல சித்திரங்கள் லியோனார்டோவின் கைவண்ணத்தில் உருவானவை. உதாரணமாக Virgin and Child with St. Anne, John the Baptist,Virgin of the Rocks, Adoration of the Magi, The Last Supper, Mona Lisa ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

    ஓவியராகவும் சிற்பியாகவும் தன்னை அடையாளம் காட்டிக் கொண்ட லியோனார்டோ உடற்கூறுகளை ஆராயும் கலையையும் கற்க எண்ணம் கொண்டு Andrea del Verrocchio என்ற சிற்பக்கலை ஆசிரியரிம் பிரத்தியேகப் பயிற்சி எடுத்துக் கொண்டார். இந்தப் பயிற்சிகள் அவருக்கு மனித உடலின் பாகங்களை ஆராய்ந்து அவற்றை தனித்தனியே விரிவாக விவரிக்கும் வகையில் படைப்புகளை உருவாக்க உதவின. உடலின் அனைத்து பாகங்களையும் மருத்துவர்களைப் போல வெட்டி ஆராய்ந்து அதன் உட் பகுதிகள், தோல், தசை, நரம்பு நாளங்கள், என உடலின் பாகங்களை ஆராய்ந்து அதன் குறிப்புகளை இவர் உருவாக்கியிருக்கின்றார்.

    suba 2

    லியோனார்டோவின் கையெழுத்துக் குறிப்புடன் கருப்பையில் வளரும் குழந்தையின் ஆரம்ப நிலைவடிவம்.. ஏறக்குறைய 1510 வாக்கில் எழுதப்பட்ட குறிப்பு (இது இங்கிலாந்தில் உள்ள Royal Library, Windsor Castle லில் உள்ளது)

    இவர் ஒரு சிறந்த ஓவியர் என்ற காரணத்தினால் மருத்துவமனைகளில் இறந்தவர்களின் உடல்களை வெட்டி அதன் உட்பகுதிகளை வரைந்து குறிப்பெடுக்கும் அனுமதி இவருக்கு அரசினால் வழங்கப்பட்டது. அந்த வகையில் ஃப்ளோரன்ஸ் நகரில் இருந்த Hospital of Santa Maria Nuova, மருத்துவமனையிலும் பின்னர் அடுத்தடுத்த ஆண்டுகளில் மிலான், ரோம் நகர மருத்துவமணைகளிலும் இவ்வகை வாய்ப்புக்கள் அவருக்கு அமைந்தன. மருத்துவர்களுடன் இணைந்து 1510-1511ம் ஆண்டு வாக்கில் ஏறக்குறைய உடல் கூறுகளை விளக்கும் 240 ஓவியப்படைப்புக்களை இவர் உருவாக்கியிருக்கின்றார். இக்கால நிலை போல கேமராவில் புகைப்படம் எடுப்பதோ, வீடியோ பதிவு செய்வதோ அமையாத காலகட்டம் அது. சித்திரங்களின் வழியே தான் இவ்வகை மருத்துவ குறிப்புக்கள் உருவாக்கம் பெற்றன. இந்த மருத்துவ ஆவணப் படைப்புகளை உருவாக்கியோர் வரிசையில் லியோனார்டோவின் பங்களிப்பு சிறப்பிடம் பெறுகின்றது என்பதில் மறுப்பேதுமில்லை.

    ​இதைத் தவிர்த்து லியோனார்டோவின் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் சார்ந்த சிந்தனைகள் நம்மை வியக்க வைப்பன. ​ பாலம் அமைக்கும் என்ஜீனியரிங் அடிப்படைகள், போர்க்கருவிகளின் இயந்திரப் பகுதி, இசைக்கருவிகள், விமானம் போன்ற பறக்கும் கருவி, வீட்டு பயன்பாட்டு கருவிகள் என எண்ணிக்கையில் உயரும் வகையில் இவரது கண்டுபிடிப்புகள் அமைந்தன.

    suba 3

    பறவைகளின் பறக்கும் முறைகளை விவரிக்கும் குறிப்புக்கள். இதன் வழி பறக்கும் கருவி உருவாக்கம் பற்றி லியோனார்டோவின் குறிப்புக்கள் அடங்கிய பக்கம்

    ​லியோனார்டோவின் அசாதாரண திறமை அவரது புகழ் உயரக் காரணமாக அமைந்தது. ​இத்தாலி மட்டுமன்றி ஐரோப்பாவில் இவர் புகழ் பரவியது. இத்தாலியின் பல நகரங்களில் இவருக்குச் சிற்பங்கள் உருவாக்கும் பணிகள் அமைந்து பள்ளிகளையும் அமைத்து நடத்தி வந்தார். குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் ஐரோப்பாவின் பல இடங்களிலிருந்து இவரிடம் சித்திர சிற்பக்கலையைக் கற்றுக் கொள்ள மாணவர்கள் அமைந்திருந்தனர். ப்ரான்ஸ் மன்னர் முதலாம் ஃப்ரான்ஸிஸ் லியோனார்டோவின் புகழை அறிந்து தனது அரண்மனைக்குச் சிறப்பு விருந்தினராக இவரை அழைத்திருந்து சிறப்புச் செய்தார். நாளடைவில் இவர்களது நட்பு மிக நெருக்கமாக வளர அரசரின் பிரத்தியேகச் சிறப்பு சிற்பக் கலைஞர் என்ற பட்டமும் வழங்கி கௌரவித்ததோடு தம்முடனேயே லியோனார்டோ இருக்கும் படி ஏற்பாடுகளையும் செய்தார் மன்னர். லியோனார்டோ தம் முதுமையில் இறந்த போதும் மன்னர் முதலாம் ஃப்ரான்ஸிஸின் அரவணைப்பில் இறந்ததாக குறிப்பும் ஒரு சித்திரப் படைப்பும் இருக்கின்றது.

    suba 4

    1818 -ல் ஓவியக் கலைஞர் இங்க்ரெஸ் உருவாக்கிய படைப்பு. மன்னர் முதலாம் ஃப்ரான்ஸிஸின் கைகளில் லியோனார்டோவின் இறுதி மூச்சு செல்வதை உருவகப்படுத்தும் ஓவியம்

    இத்தாலியில் சித்திரக் கலைஞர்களின் வாழ்க்கை குறிப்பை தேடி பதிந்து வைத்த பெருமை ஜியோர்ஜியோ வசாரியையே சாரும். டான் ப்ரவ்னின் இன்ஃபெர்னோ நூலில் இந்த வசாரி பற்றிய குறிப்புக்கள் ஆங்காங்கே வருவதை இந்த நாவலை வாசித்தவர்கள் அறிந்திருக்கலாம். வசாரி தனது Lives of the Artists நூலில் லியோனார்டோவை அறிமுகப்படுத்தும் பகுதியில் கீழ்க்காணும் வாசகத்தைக் குறிப்பிடுகின்றார்.

    In the normal course of events many men and women are born with remarkable talents; but occasionally, in a way that transcends nature, a single person is marvelously endowed by Heaven with beauty, grace and talent in such abundance that he leaves other men far behind, all his actions seem inspired and indeed everything he does clearly comes from God rather than from human skill. Everyone acknowledged that this was true of Leonardo da Vinci, an artist of outstanding physical beauty, who displayed infinite grace in everything that he did and who cultivated his genius so brilliantly that all problems he studied he solved with ease.

    —Giorgio Vasari

    ​எத்தனையோ மனிதர்கள் பிறக்கின்றோம்.. பின்னர் இறக்கின்றோம். நித்தம் வாழும் நிலையை உருவாக்கிக் கொள்ளும் மனிதர்கள் காலம் கடந்தும் மனித குலத்தினால் நினைத்துப் பார்க்கும் நிலையை அடைவர். லியோனார்டோ டா வின்சி இந்த வகையில் இடம்பெறுபவர்!

    இன்று மே மாதம், 2ம் தேதி 1519ம் நாள் லியோனார்டோ இவ்வுலகை விட்டு மறைந்தார். லியோனார்டோ என்னும் இப்புதுமைச் சிற்பிக்கு என் அஞ்சலிகள்!

    Share
  • முக்கோணக் கிளிகள் படக்கதை – 2

     

     

    image

    முக்கோணக் கிளிகள்
    (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​)

    படக்கதை – 2​

    மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா
    வசனம், வடிவமைப்பு : வையவன்
    ஓவியர் : தமிழ்

    ​இணைக்கப்பட்டுள்ளன.

    ​+++++++++++++++​

    jay1

    jay2

    jay3

    jay4

    Share
  • பிறவி வேண்டும்

     

     
    பிச்சினிக்காடு இளங்கோ
    இன்னொரு பிறவிவேண்டும்
    இழந்ததை ஈட்டவேண்டும்

    தூங்கித் தூங்கிக்
    கழித்த பொழுதைத்
    துடிப்பாய் விழித்துச்
    செயல்படவேண்டும்

    ஏங்கி ஏங்கிக்
    கரைந்த காதல்
    மீண்டும் பூக்க
    நீர்விட வேண்டும்

    குடித்துக் குடித்துக்
    களித்த பொழுதைப்
    படித்துப் படித்துப்
    பயனுற வேண்டும்

    எல்லாம் செய்யும்
    பொருளைச் செய்து
    ஏக்கம் இன்றி
    எல்லாம் செய்ய

    இன்னொரு பிறவிவேண்டும்
    இழந்ததை மீட்கவேண்டும்

    விழித்துத் தூங்கும்
    இடைவெளி எல்லாம்
    விழிப்பாய் இருந்து
    செயல்பட வேண்டும்( 07.12.2011)

    மானுடம் வாழ
    மனிதம் செழிக்க
    உடல்பொருள் ஆவி
    உருகிட வேண்டும்

    அன்பால் கலந்து
    அன்பில் கரைந்து
    மலராய்ச் சிரித்து
    மகிழ்ந்திட வேண்டும்

    உயிர்கள் அனைத்தும்
    ஒன்றென எண்ணி
    உள்ளம் கரைந்து
    வாழ்ந்திட வேண்டும்

    இன்னொரு பிறவிவேண்டும்
    இழந்ததை மீடகவேண்டும்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . . (106)

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்களுடன் கூடிய மடலுடன் உங்கள் முன்னே மற்றொரு வாரத்தில் சந்திப்பதில் பெரு மகிழ்வடைகிறேன். நான் இந்த மடலை எழுதிக் கொண்டிருக்கும் இன்று மே மாதம் முதலாம் திகதி. உழைப்பவர்களின் மகத்துவத்தைப் போற்றும் உன்னதமான தினம். வாழ்க்கை முழுவதும் உழைத்து உருக்குலைவோருக்காய் உலகம் முழுவதும் அவர்களை உயர்த்திப் பிடிக்கும் ஒரு தினம்.

    உழைப்பு என்பது எத்தனை மகத்தானதோ உழைப்பதற்காய் எமக்குக் கிடைக்கும் சந்தர்ப்பங்களும் அத்தனை மகத்தானவையே. தொழிலாளி எனும் திரைப்படத்தில் கவிஞர் ஆலங்குடி சோமு அவர்களின் வரிகளில் டி.எம்,எஸ் இன் கணீர் குரலில் மக்கள் திலகம் நடித்திருந்த பாடல்,

    ஆண்டவன் உலகத்தின் முதலாளி
    அவனுக்கு நான் ஒரு தொழிலாளி
    அன்னை உலகின் மடியின் மேலே
    அனைவரும் எனது கூட்டாளி

    எனும் பாடல் மிகவும் அர்த்தம் வாய்ந்த பாடலாகும். உழைப்பு எனும் பதம் என் வாழ்வில் எடுத்த பங்குகளை நான் ஒரு கணம் திரும்பிப் பார்க்கிறேன். எனது 18வது வயது வரை நான்கு பிள்ளைகள் உள்ள ஒரு குடும்பத்தில் கடைசிச் செல்லப்பிள்ளையாக வளர்ந்த நான் ஈழத்திலிருந்து இங்கிலாந்து மண்ணிலே போடப்பட்ட போது எனக்கு வயதோ வெறும் 181/2 யே. மாணவனாக இங்கிலாந்துக்குள் காலடி வைத்த நான் அந்நாளைய வழக்கப்படி பகுதிநேர வேலையோடு கூடிய முழுநேர மாணவனாக வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாகினேன். உழைப்பின் மகத்துவம் அப்போதுதான் எனக்கு மெதுவாகப் புரிய ஆரம்பித்தது. வாழ்க்கையின் புதிர்களும் ஒவ்வொன்றாக அவிழத் தொடங்கியது உழைப்பு என்பது வெறும் உதியத்திற்காக செய்வது மட்டுமல்ல ஒரு மாணவனாக நான் வந்த லட்ச்சியத்தை நிறைவேற்றுவதற்காக அஏஏஇய மொழியில் கல்வி கற்பது கூட ஒருவகை உழைப்பே என்பது புரிய ஆரம்பித்தது. உழைப்பின் பலனின் ஆனந்தமும் அப்போதுதான் விளங்க ஆரம்பித்தது. வார விடுமுறைகளில் கட்டிடங்களில் காவல்காரனாகப் பணிபுரிந்து கொண்டு வார நாட்களில் முழுநேர மாண்வனாக வாழ்ந்து கொண்டிருக்கும் போதுதான் என் ஒருவனின் வாழ்ப்வாத்ரத்திற்காகவே இவ்வளவு கடினமாக உழைக்க வேண்டுமானல் நான்கு பிளளைகளை வளர்த்தெடுக்க என் பெற்றோர் செய்திருக்கக்கூடிய உழைப்பின் கடினம் புரிய ஆரம்பித்தது. எனது பெர்றோர் எனக்காக செய்தவைகள் ஏதோ அவர்களது கடமை என்ற வகையில் அதுவரைகாலமும் வாழ்ந்து முடித்த என் வாழ்க்கையின் தன்னலத்தை எண்ணியபோது என்மீது எனக்கே வெறுப்பு ஏற்பட்ட கணங்கள் எண்ணிலடங்காதவை.

    மாணவனாக இருக்கும் போதே மணமுடித்துக் கொண்ட எனது கல்வியை முடித்துக் கொள்வதற்காக என் அன்புக்குரிய என் மனைவி செய்த கடுமையான உழைப்பு , ஒரு மகனை ஈன்ற பின்னும் கூட முழுநேர பணியுடன் இரவு நேர கல்லூரிப் படிப்பின் மூலம் தனது கல்வித்தகமைகளைப் பெற்றுப் பட்டம் வாங்கிய என் மனைவியின் கடின உழைப்பு எனக்கு மேலும் பல பாடங்களைப் புகட்டியது.

    இந்த உழைப்பாளர் தினம் என்பதெல்லாம் எதற்காக என்று எண்ணும் பலர் இருக்கிறார்கள். இதை எமது வாழ்நாளில் நாம் செய்த உழைப்பினை அல்லது செய்திருக்கக்கூடிய செய்யாமல் விட்டுப்போன உழைப்பினை மீள்பரீசீலிப்பதற்கான ஒருநாளாகக் கூட எடுத்துக் கொள்ளலாம் தானே !

    இன்று என் கண்முன்னே நான் காணும் பலவகை மனிதர்கள். தமக்குக் கொடுக்கப்பட்ட நேரம் அனைத்தையும் கடும் உழைப்பில் பயன்படுத்தித் தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் வாழவைத்துக் கொண்டிருப்போர் ஒருபுறம், தாம் உழைக்காமல் இருப்பதனை நியாயப்படுத்தப் பலவிதமான காரணங்களைக் கண்டுபிடித்துச் சோம்பலில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் ஒருபுறம், உழைக்க வேண்டும் எனும் அவா இருந்து உழைக்க முடியமால் வேதனையுறும் உடல் ஊனமுற்றோர் ஒருபுறம் என எத்தனையோ வகையினர்.

    இவ்வாழ்க்கை எமக்குக் கிடைத்த மகத்தான வரப்பிரசாதம். எமக்குக் கிடைக்கும் தருணங்களைப் பயன்படுத்தி எமது உழைப்பின் மூலம் எமது நிலையை உயர்த்துவதோடு எம்மால் உதவக்கூடியவர்களுக்கு உதவும் மனப்பான்மையோடு வாழ்வதே இவ்வாழ்க்கையை எமக்குக் கொடுத்த அந்த அனைவருக்கும் பொதுவான சக்திக்கு நாம் செய்யும் கைமாறாகும்.

    எனது அன்பினிய உறவுகள் அனைத்திற்கும் எனது அன்பான உழைப்பளர் தின வாழ்த்துகள்

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • ஓர் அந்தியின் சந்திப்பில்…

    தி.சுபாஷிணி

    வழக்கத்திற்கு மாறாக, வாசற்படிகள் உயரமாய்த் தோன்றின. கால்களின் கனமும், மனத்தின் கனமும் அழுத்த ஏறுவதில் மயக்கதயக்கங்கள் ஏற்பட்டன. சில நிமிடங்கள் அவற்றைப் பார்த்ததில் கழிந்தன. “அம்மா! ஏதாவது பிரச்சினையா? நான் உதவட்டுமா?” என-, என்னை இறக்கிவிட்ட ஆட்டோக்காரர் வினவினார். “இல்லைங்க” என தலையசைத்தேன். மனமில்லாதுதான் ஆட்டோ நகன்றது. எப்படியோ படிகளில் ஏறி, வீட்டிற்குள் நுழைந்துவிட்டேன். நீண்ட குறுகிய பாதை, என்மேல் ஒரு இறுக்கத்தைப் பாய்ச்சியது. இதன் முடிவில் ஒரு உயரமான படி. அதில் தடுக்கி, தடுமாறி விழப்போனேன்!

    “அடவந்துவிட்டாயா? பார்த்து வரக்கூடாதா?” என்கின்ற குரல், என்னைச் சரியாக, விழாமல் காப்பாற்றியது. இந்தக் குரல் இங்கு எப்படி-?

    tkc“கலவரப்படாதே சுபா! நான் உடல் தேறிவிட்டேன்! அனாவசியமாக வேலை தடைபடக்கூடாது என மோகனையும், அண்ணாமலையையும் கூட்டத்திற்கு அனுப்பிவிட்டேன். இப்போது காந்தியைப் பற்றிக் கூறிக் கொண்டிருப்பார்கள்” என்றார். பக்கத்தில் பிரேமா, தலைமாட்டில் செண்பகவல்லி, பக்கவாட்டில் என் அத்தை. இன்னும் சில பேர்கள் இருந்தனர். நான் நன்றாகத் தேறிவிட்டேன். என்ன கொண்டு வந்திருக்கின்றாய் எனக்கு? கேட்டுவிட்டு ஏதோ சொல்கிறார். அங்கு சிரிப்பு அலை அடித்து மோதுகிறது. சட்டென்று, அப்பா யாரையோ அழைப்பதுபோல் கையை தூக்குகிறார். பின் இரு கைகளையும் தூக்கி, எதையோ பற்றுகிறார். ஆனால் அது முடியவில்லை. அலைபாய்கிறது. உடம்பு தூக்கிப்போடுகிறது. சூழ்நிலையின் மாற்றம் புரிந்து, மருத்துவரை அழைக்க சில நொடிகள் ஆகிறது. மருத்துவர் வருகிறார். அவர் இதயத்தைப் பிசைகிறார். நெஞ்சில் குத்துகிறார். அவ்வளவுதான், எல்லாம் சில நிமிடங்கள்தான். இயக்கம் நின்றுவிடுகிறது. “மாஸிவ் ஹார்ட் அட்டாக்” என்று கூறிவிட்டு மருத்துவர் வெளியேறுகிறார்.

    ‘அப்பா’ என அவரைப் பிடிக்க கைநீட்டுகின்றேன். காற்றுதான் என் கையில் அகப்பட்டது. கைககள் திண்ணையில் விழுந்தன. அத்திண்ணை காலியாகக் கிடக்கின்றது-. மெதுவாக ஏறி அமர்கின்றேன். முன் தெரிந்த முற்றம், என் குழப்பத்தை இன்னமும் விரிவாக்கி, இருபக்கமும் பூட்டிய கதவுகள் அமைதியின் அழுத்தத்தை மேலும் கனமாக்கின. சில நிமிடங்கள் கழிகின்றன.

    திண்ணையை விட்டு இறங்கி முற்றம் முடியும் இடத்தில் ஏறி, இடப்பக்கம் ‘21ணி’ என்னும் இலக்கம் உள்ள கதவைப் பார்க்கின்றேன். பல நாட்கள் மூடிய இறுக்கம் அதில் தெரிகின்றது. கதவையொட்டிய சன்னலைக் கவனிக்கின்றேன். கதவில் இலேசான இடைவெளி காணப்படுகின்றது. சன்னல் கம்பிகளின் இடையே கையால் கதவைத் தள்ளுகின்றேன். அதன் பழமையின் ஸ்பரிசத்தை உணர்கின்றேன். கதவு திறக்கின்றது. காட்சி விரிகின்றது.

    பல பத்திரிகைகள், இதழ்கள், மௌனித்துக் கிடக்கின்றன. அவைகள் பிரிக்கப்படாத ஏக்கக் குவியல்களுக்குள் தங்களை மறைத்துக் கொண்டிருக்கின்றன. பிரிக்கப்படாத தபால்களும், படிக்கப்படாத கார்டுகளும் எவற்றைத் தாங்கி நிற்கின்றனவோ! அதன் பதில்களைத் தாங்கிவரும் என தூதனுப்பிய நெஞ்சங்களின் காத்திருப்பு அவற்றில் தெரிகின்றன.

    புத்தகங்கள் நிறைந்த மேஜை. பக்கத்தில் காலியான அந்தக் காலத்து நாற்காலி. அதன்மேல் இருந்த துண்டு பல நாட்களாக மாற்றாததை அறிவிக்கின்றது. பக்கத்தில் சாய்வு நாற்காலி. மேலே, சுவரைப் பார்க்கின்றேன். “என் குருநாதர் வல்லிக்கண்ணன்” என என் காதில் குரல் ஒன்று ஒலிக்கின்றது. அந்த அறையின் இடதுபக்க ஒற்றைப் பெஞ்சில் கிடந்த பழைய செய்தித்தாள்கள், பத்திரிகைகள் தோழர். பால்முகம்மது வீட்டிற்கு வந்து வெகுநாட்களாகிவிட்டன என பறைசாற்றுகின்றதே என எண்ணிக் கொண்டிருந்த வேளையில், “ஏதாவது ஷூட்டிங்குக்குப் போய் இருப்பான்” என்று என் காதில் ஒரு குரல் சொல்லிப் போயிற்று.

    ஏன் கண்ணாடி மேசைமேல் விரித்து வைத்த வண்ணம் இருக்கின்றது! டெலிபோன் எண்கள் எழுதி வைக்கப்பட்ட நோட்டில் ஒரு பென்ஸிலை வைத்து திறந்து கிடக்கின்றது. தொடுகை இல்லா தொலைபேசி வாட்டமோடு அமர்ந்திருக்கின்றது. கொடியில் லாவண்டர் கலர் சட்டையும், ஒரு துண்டும் தொங்கிக் கொண்டிருக்கின்றது. அதன்கீழே கவிழ்த்து வைக்கப்பட்டிருக்கும் எவர்சில்வர் சாடி, டம்ளருடன் ஏதோ மௌனத்தில் உரையாடிக் கொண்டிருக்கின்றது போல் ஒரு உணர்வு.

    கண்கள் பரந்து பார்க்கப்பார்க்க, அந்த அறையின் இன்மையைப் பகர்கின்றது. இன்மையின் வெறுமையும், தனிமையும் என்னை மீண்டும் அந்த திண்ணையில் அமரச் செய்கின்றது.

    இவ்வீட்டை ஆட்சி செய்த ‘தி.க.சி.’ என்கின்ற ஆளுமை தமிழ்நாட்டிலுள்ள அனைத்துத் தரப்பட்ட ஆளுமைகளையும், இந்த முற்றம் தாண்டி, இடதுபக்க அறைக்கு வரச்செய்கின்றது என்றால், அந்த ஆளுமையின் பிரம்மாண்டம் பிரமிக்க வைக்கின்றதே! அந்த பிரமிப்பின் சுழற்சியின் ஆழத்திற்குள் சென்று கொண்டிருக்கையில்,

    “அம்மா! எப்ப வந்தீங்க! வந்து ரொம்ப நேரமாகிவிட்டதா. வாங்க போகலாம்! ஆட்டோ கொண்டு வந்திருக்கின்றேன்” என விளித்தது, அந்த பிரமிப்பிலிருந்து என்னை விடுவித்தான் அந்த அருமையான அன்பன் சரவணன். பாரதிக்கு கண்ணன். தி.க.சி.க்கு சரவணன். இருவரும் கொடுத்து வைத்தவர்கள்.

    ‘இதோ’ எனத் திண்ணையைவிட்டு இறங்குகின்றேன். ‘போகிறாயா! பார்த்துப் போய்விட்டு வா’ என்றது… அப்பாவின் குரல்… மீண்டும் அப்பா! இங்கு எப்படி? புதிரிலிருந்து விடுபடுமுன் சரவணன் ஆட்டோ முன் நின்றுவிட்டான். ஆட்டோவில் அமர்கின்றேன். ஆட்டோ பெருமாள்புரம் நோக்கிச் செல்கின்றது. ஆமாம்! எப்படி அப்பா இங்குவந்தார்? இன்னமும் கேள்விச் சூழலில் நான் இருக்கின்றேன்.

    19சி, பெருமாள்புரம் & “அங்கு வரவா” என வினவியதற்கு 21ணி, சுடலைமாடன் கோவில் தெருவைக் கைகாட்டியது 19சி பெருமாள்புரம்& ஒரு கார் நுழையும் அளவு பெரிய கேட். அது வசதியாகச் செல்வதற்கு ஒரு ‘சரிவை’ கொத்தனார் கட்டிக்கொண்டிருந்தார். உள்ளே நுழைந்ததும் நன்றியாய் அவ்வீட்டைப் பார்க்கின்றேன்.

    “வாருங்கள்! மாமா அந்த அறையில் இருக்கிறார்கள்” என வரவேற்றார் அவரது மருமகள். எப்போதும் தன் மருமகளைச் சொல்லும்போதெல்லாம் ‘பிரியமானவள்’ என்று சொல்லுவார்.

    நானும், சரவணனும் தயங்குகின்றோம். ‘மாமாவை எழுப்பலாம், எழுப்புங்கள்’ என்றார். வண்ணதாசனும் வந்து, ‘உள்ளே போங்கள்’ என்றார்.

    தூக்கமாகத் தெரியவில்லை. உடம்பின் நோய்மையின் ஆயாசத்தில் படுத்திருப்பது தெரிகின்றது. சரவணன் அவரைத் தொட்டு எழுப்பி, உட்கார வைத்தான்.

    ‘சுபாஷிணி வந்திருக்கின்றேன்’ என்றேன். (அதுசரி! அந்த வீட்டில் ஏன் என் அப்பா இருந்தார்?). ‘வாம்மா! வந்துவிட்டாயா? பிரயாணம் வசதியாக இருந்ததா? சாப்பிட்டாயா?’ என்றார் தி.க.சி. எப்படி இவரால் எந்த நிலையிலும் இப்படி அன்பாக இருக்க முடிகின்றது?

    அவர் உடலின் ஆயாசம் வெளிப்படையாகத் தெரிகின்றது. அதையும் மீறி, அவரது இயல்புக்கு மீறி மனச்சோர்வு தெரிகின்றது. இது என்னுள் ஒருவித அச்சத்தைக் கிளறுகிறது. அந்த அறை அவ்வளவு வெளிச்சத்தையும், நவீனத்தின் ஒழுங்கைக் கொடுத்துக் கொண்டிருந்தாலும், மீறித் தெறித்த பதட்டம் என்னைச் சூழ்ந்து கொண்டது.

    ‘மி ணீனீ sவீஸீளீவீஸீரீ’ என்று அவரிடமிருந்து விழுந்த வார்த்தைகள்… என்னெஞ்சையும் வயிற்றையும் கலக்கியது. நான் சரவணனைப் பார்க்கின்றேன். அவன் அன்பின் குழந்தை. கலவரமாய் என்னைப் பார்க்கிறான்.

    ‘சரவணா! அந்த அலமாரியிலிருந்து அந்த நாட்குறிப்புப் புத்தகம் ஒன்றை எடு. அதில் என்றென்றும் அன்புடன் என்று எழுதி என்னிடம் கொடு’ என்றார். அவன் எழுதிக்கொடுத்தவுடன் ‘தி.க.சி.’ எனக் கையொப்பமிட்டுக் கொடுத்தார். அதுதான் அவரது கடைசி கையெழுத்து என்றும், எனக்குக் கொடுக்கப்பட்ட கடைசி புத்தகம் என்றும் நான் அறியவில்லை.

    “பார்த்தாயா! சந்தியாப் பதிப்பகம் நேற்றே அனுப்பிவிட்டார்கள்” என்று சந்தோஷமாய் சிரித்தார். அவருக்கு என் நன்றியைச் சொல் என்றார்.

    ஆமாம்! சந்தியா சௌந்திரராஜனுக்கும், நடராஜனுக்கும் தி.க.சி. அன்பர்கள் கடன்பட்டவர்களே!

    அய்யா புத்தகம் கொடுப்பதையும், நான் அவரிடமிருந்து வாங்கிக் கொள்வதையும் என் அலைபேசிக் கேமிராவில் சரவணன் பதிவு செய்து கொண்டார். ஏதோ வேலையிலிருந்த வண்ணதாசன் அறைக்குள் வந்து வாங்க என அழைத்து, விசாரித்துவிட்டுப் போனார்.

    ஆமாம்! என் அப்பா எப்படி அந்த வீட்டில் இருந்தார்? மனம் கேட்டுக்கொண்டே இருக்கின்றது.

    “அம்மா! செம்மொழிக் கூட்டத்திற்குப் போனாயா? ஜனனேசனைப் பார்த்தாய் என்றாய்! எங்கு பார்த்தாய்?” எனக் கேட்டார். நானும் அதற்குப் பதிலிறுத்தேன். அப்போதுகூட நான் வித்தியாசமாய் உணரவில்லை.

     “அம்மா! இந்த பி.ஏ. கிருஷ்ணன், ஐன்ஸ்டீன் பற்றி எழுதியது படித்தாயா? சே! என்னமா எழுதியிருக்கின்றார். என்னைப் பற்றி கணையாழியில் பேரா.எஸ்.தோத்திரி குறிப்பிட்டு இருக்கிறார். அவருக்கு என் நன்றியைச் சொல்லு”. (ஆனால் அப்போதுகூட அறியவில்லை. பேரா.எஸ்.தோத்தரி கூடிய விரைவில் அய்யாவிற்கு நினைவுக் கட்டுரை தினமணியில் எழுதுவார் என்று). அவர் கூறிய நன்றியை இவரிடம் சொல்லலாம். ஆனால் பேரா.தோத்தரி எழுதிய கட்டுரை பற்றி அய்யாவிடம் எப்படி சொல்வது? யார் சொல்வது? தெரியலியே! ஆனால் என் அப்பா! ஏன் என்னுடனே வந்து கொண்டிருப்பதுபோல் இருக்கின்றது!

    “ரொம்ப களைப்பாக இருக்கின்றது, படுத்துக்கட்டுமா?” என்று கேட்டவர், மேலும் பேச்சைத் தொடங்கினார்.

    அவர் முகம் கறுத்து இருக்கின்றது. கால்கள் வீங்கி இருக்கின்றன. கைகளும் வீக்கத்தின் தொடக்கத்தில் இருக்கின்றன. இப்படி அய்யாவைப் பார்த்ததும் எனக்கு என்னவோ பண்ணியது. வலித்தது & தலையிலிருந்து கால் விரல் வரை ஒவ்வொரு அசைவும் வலித்தது. சரவணனுக்கு நம்பிக்கை இருக்கின்றது, “அம்மா! அய்யா கெதியாத்தான் இருக்கார். கவலைப்படாதீங்க!” என்கின்றான்.

    அன்று இரவு ஒரு மணிக்கு கால் தடுமாறி கீழே விழுந்த தி.க.சி. தானே எழுந்து வீட்டிற்குள் வந்து நாற்காலியில் அமர்கின்றார். பின் ஒடிந்து தொங்கிய கையைத் துண்டால், மறுகையின் உதவிகொண்டு கட்டிவிட்டு வலியைப் பொறுத்துக்கொண்டு காலை 5 மணிக்காகக் காத்திருந்தார். பின் ஓவியர் பொன். வள்ளிநாயகத்திற்குப் போன் செய்திருக்கின்றார். பக்கத்து வீட்டிலிருக்கும் சுந்தரிக்குக்கூட அவர் சொல்லவில்லை. அகால வேளையில் யாரையும் தன்பொருட்டுத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. அந்த வலி இருந்த அந்திக்காலையில்கூட டெலிபோனில், “கவலைப்படாதே! நான் கையை சரி பண்ணிக்கொண்டு வருகின்றேன்” என்று பேசிவிட்டுப்போன தி.க.சி.யா இன்று இல்லை எனத் தோன்றுகின்றது.

    “இறப்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. அது இயற்கையான நிகழ்வு. அதைப்பற்றி பரவாயில்லை. என் ஞான ஆசான் பாரதி வழிதான் நான் வாழ்ந்திருக்கின்றேன். என் குருநாதர் வல்லிக்கண்ணன், பாரதிதாசன், வள்ளலார் இப்படியான சத்குருவோடுதான் என் வாழ்க்கை. நவீன அரசியலில் அறநெறி இல்லாமல் போய்விட்டது. எல்லாவற்றிற்கும் அறம்தான் முக்கியம். அம்மா! எனக்கும் பலவீனங்கள் இருந்திருக்கலாம். சில தவறுகள் செய்திருக்கலாம். ஆனால் நான் தமிழுக்கு ஒரு சில துளிகளாவது செய்து இருக்கின்றேன். தமிழனாய்ச் சாகின்றேன். வாழ்க நிரந்தரம்! வாழ்க தமிழ்மொழி! வாழ்க பாரத மணித்திருநாடு!” என்று தமிழ்த்தாய் வாழ்த்து பாடுகிறார்.

    தமிழ் வாழும்! சுபாஷிணிகள் வாழ்வார்கள்! சரவணன்கள் வாழ்வார்கள்!

    நண்பர்களே! வாழ்வின் அந்தியில் யாராவது தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடுவார்களா? நம் அய்யா பாடுகிறார். எண்ணம் முழுவதும் தமிழ்தான். கலை, இலக்கியம் அறத்தை அளித்து, வாழ்க்கையை மேம்படுத்தும் என்றும் கூறினார்.

    (100% உண்மை என்று என் காதில் ஒரு குரல். அட அப்பாவுடையது).

    பின், தன் இருகரங்களையும் கூப்பி, கண்ணீர் மல்க, “நினைவுகள் அழிவதில்லை, நினைவுகள் அழிவதில்லை. சரி, விடைபெறுகின்றேன்” என்கின்றார்.

    “சரவணன்! என்ன அய்யா, இப்படிச் சொல்கிறார்!” என்கின்றேன்.

    அவனும் சொல்வது அறியாக் குழந்தையாய் நிற்கின்றான்.

    பின், “படுத்துக் கொள்கின்றேன்” என்கின்றார். “நாங்கள் கிளம்புகின்றோம்” என்றோம். “அவர்கள் வேலையாய் இருந்தாலும் சொல்லிக் கொண்டு போங்கள்” என்கிறார்.

    அந்தவேளையிலும், எப்படி வழிநடத்துகிறார் பாருங்கள் நண்பர்களே!

    என்னிலை, எங்கள் நிலை & இரண்டும் வார்த்தைகளில் வடித்திட இயலாது.

    நாங்கள் அருந்திய காப்பிக் கோப்பைகளை, அய்யாவின் மருமகள் வள்ளி அவர்களிடம் கொடுத்துவிட்டு, ‘போய் வருகின்றோம்’ என்று அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டோம். நாங்கள் வந்த ஆட்டோ வாசலில் காத்திருந்தது. ஏறி அமர்ந்து கொண்டோம். ஆட்டோ புறப்பட்டது. நாங்கள் பேசிக் கொள்ளவில்¬லை. மௌனம் வியாபித்தது. ஆனால், மௌனத்தின் அலைகளை விலக்கி மூன்றாவது ஒருவர் என்னுடன் பயணிப்பதை உணர்ந்தேன்.

    “கவலைப்படாதே! அவரும் உன்னுடன் இருப்பார்” என்று உட்குரலாய் ஒலித்தார்.

    மீண்டும் அய்யாவைப் பார்ப்பது சாத்தியமில்லை என உணர்த்தியது. அந்தக் கண்ணீரும் கைக்கூப்பின நெகிழ்ச்சியான விடைபெறுதலும் என்னுடன் பயணித்தது. நாங்கள் இப்போது நால்வரானோம். நண்பர்களே!

    ஆட்டோ போய்க் கொண்டிருக்கின்றது. அது சுடலைமாடன் கோவிலுக்குப் போகாவிட்டாலும், நாங்கள் எங்கிருக்கின்றோமோ அங்கே, அந்த இடத்தை “21, சுடலைமாடன் கோவில் தெரு” என்று, அய்யாவின் உகந்த இடமாக்கிடுவோம்! என்று நான் நினைத்ததற்கு, “அப்படியே செய்யுங்கள்” என்று இருகுரல்கள் ஒலித்தன.

    “ஹலோ! சுபாஷிணியா! அம்மா! நல்லா இருக்கீங்களா? இப்போது பேசலாமா? (இந்த வினயம் யாருக்கு வரும்?) இன்று தினமணியில் பேரா.ஞானசுந்தரம் நீதியரசர் மகராஜன் பற்றிக் கட்டுரை படித்தாயா? என் கடிதமும் வந்திருக்கின்றது. எனக்குத் தெரியும். நீ அதைப் படிக்கமாட்டாய் என்று! ‘ஹாஹா’ என வாய் கொள்ளாச் சிரிப்பு! பேரன், மகள்கள் எல்லோரையும் கேட்டதாகச் சொல்லு!” – தொலைபேசியின் தொடர்பு அறுகிறது. நான் திகைத்துப்போய் நிற்கின்றேன்.  0462 2333456 & என்று கைகள் என்னையறியாது எண்களை வருடுகின்றன. என்னையறியாது விரல்களின் அழுத்தத்தில் அழைப்பு போய்விடுகிறது. அந்தப் பக்கம் “ஹலோ! தி.க.சி. வீடுங்க? தி.க.சி. வீடுங்க” என்னும் குரல். வண்ணதாசன் குரலாக இருக்கலாம். இல்லை, அவர் தம்பி சேதுவின் குரலாகக்கூட இருக்கலாம்.

    என்னால் பதில் பேசமுடியவில்லை. வாய் உலர்ந்து மேல் அன்னமும், கீழ் அன்னமும் ஒட்டிக் கொண்டன. இதயம், இதுகண்டு நெகிழ்ந்து கண்ணீரை அனுப்புகின்றது.

    Share
  • குறளின் கதிர்களாய்…(26)

     

    செண்பக ஜெகதீசன்

         

    உருவுகண் டெள்ளாமை வேண்டு முருள்பெருந்தேர்க்

    கச்சாணி யன்னா ருடைத்து.

          -திருக்குறள் -667(வினைத் திட்பம்)

     

    புதுக் கவிதையில்…

    உருளும் பெரிய தேரும்

    உருண்டோடிச் சென்றிடத்

    தேவை,

    உருவில் சிறிய அச்சாணி..

     

    இதுபோல் திடமொடு

    மாந்தர்

    அகிலத்திலுண்டு..

     

    அதனாலவர்

    உருவத்தை வைத்து

    எள்ளி நகையாடுதல்

    ஏற்றதல்ல…!

     

    குறும்பாவில்…

    பெருந்தேருக்கு சிறு அச்சாணிபோல்

    புவியில் மாந்தர் உளதால்,

    உருவம் கண்டு எள்ளல் உதவாது…!

     

        மரபுக் கவிதையில்…

    தேரது பெரிதாய் இருந்தாலும்,

         திடமாய்த் தெருவில் ஓடிடவே

    வேரதாய் வேண்டும் நிச்சயமாய்

         உருவில் சிறிய அச்சாணி,

    பாரது சிறந்திட உருசிறிதாய்ப்

         பல்லோர் இங்கே உளதாலே

    நேரதாய்க் கொண்டிடு உள்ளத்திலே,

         நீக்கிடு சிறிதெனும் நினைவினையே…!

     

    லிமரைக்கூ…

    சிறிய அச்சாணியால் ஓடுது தேர்,

    குறைவாய் எண்ணாதே..

    சிறிய உருவினிலும் சிறப்புடையோர் பார்…!

     

    கிராமிய பாணியில்…

    தேரோட்டம் தேரோட்டம்

    தெருவுலத்தான் தேரோட்டம்..

     

    பாருபாரு பெரிய தேரு

    சீரா ஓட சின்ன அச்சாணி..

     

    தேரோட்டம் தேரோட்டம்

    தெருவுலத்தான் தேரோட்டம்..

     

    அதால,

    ஆளப்பாத்து உருவம்பாத்து

    எடபோடாத,

    அச்சிபோலச் சின்னவரும்

    அறிவு தெறம உள்ளவுருதான்..

     

    அந்த

    ஆளப்பாத்து உருவம்பாத்து

    கொறசொல்லாத..

     

    தேரோட்டம் தேரோட்டம்

    தெருவுலத்தான் தேரோட்டம்…!

     

    -செண்பக ஜெகதீசன்…

     

     

     

    Share
  • நினைப்பது நிறைவேறும்.. நீயிருந்தால் என்னோடு

    நினைப்பது நிறைவேறும்.. நீயிருந்தால் என்னோடு –  (கவிஞர் மணி)

    கவிஞர் காவிரி மைந்தன்

    ஒரு திரைப்படத்திற்கு என்ன பெயரிடுகிறோமோ என்பது மிக முக்கியமான விஷயம்! அப்பெயர் சூட்டப்பட்டபின் – பாடல்கள் பிறக்கும்பொழுது படத்தின் பெயர் பாடலாசிரியருக்கு நினைவுக்கு வரும்! அப்படி வந்த நினைவையே பல்லவியாக்கி இனியதொரு பாடல் இதோ வருகிறது!

    ‘நினபை்பது நிறைவேறும்’ திரைப்படத்திற்காக எம்.எல்.ஸ்ரீகாந்த் – இசையமைத்து வாணிஜெயராம் அவர்களுடன் பாடிய பாடல்! கவிஞர் மணி என்பவர் எழுதிய பாடல் என்பது புதிய செய்தி!! இனிமைதவழும் கானமாய் இளமையை ஏந்திவருகிறது! கவிதை கால் முளைத்து வரும் அழகைப்போல!!

    ஒருவரில் ஒருவர் ஒன்றிக் கலக்கும் உன்னத உறவினையும் அதில் பிரிவுவந்தால் தாங்கிட இயலாத் தன்மையையும் கவித்துவமொழியல் கலந்து தருகிறார் பாடலாசிரியர்!

    தெள்ளுத்தமிழ் உள்ளமதை கொள்ளை கொள்ள முயலும் என்பதனை சரணத்தில் ஒய்யாரமாய் சொல்லியிருக்கும் அழகில் நாம் சொக்கிப்போகிறோம்!

    காதலர்கள் நினைப்பது நிறைவேற வேண்டும் என்பதும் அவர்கள் நலம்பெற வாழ வேண்டும் என்பதும் விழைவாகிறது! எப்போது தெரியுமா?
    நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு…

    படம்: நினைப்பது நிறைவேறும்
    குரல்கள்: M.L ஸ்ரீகாந்த், வாணி ஜெயராம்
    இசை: M.L.ஸ்ரீகாந்த் பாடல்: மணி

    நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு…
    நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு…
    நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு…
    நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு..

    இருவரும் சேர்ந்திருந்தால் அன்போடு..
    இன்றுபோல் வாழ்ந்திடலாம் பண்போடு..
    நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு..
    நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு..

    ஒருவரின் இதயத்தில் ஒருவர் குடியிருந்தால்..
    ஒருவரில் இருவரையும் ஓருடலாய் கண்டிடலாம்..
    ஒருவரின் இதயத்தில் ஒருவர் குடியிருந்தால்..
    ஒருவரில் இருவரையும் ஓருடலாய் கண்டிடலாம்..

    தனிமை உனக்கேது…தாங்கும் இதயம் எனக்கேது..
    தனிமை உனக்கேது…தாங்கும் இதயம் எனக்கேது..
    உலகத்தை மறந்து வந்து உறவு சொல்லி விளையாடு..
    உலகத்தை மறந்து வந்து உறவு சொல்லி விளையாடு..

    நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு..
    நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு..
    நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு..
    நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு..

    தேன் சுவைத்தமிழ் பேசி தெம்மாங்கு இசைபாடி..
    இருவரும் பெருமையுடன் இன்பமெல்லாம் கண்டிடலாம்..
    தேன் சுவைத்தமிழ் பேசி தெம்மாங்கு இசைபாடி..
    இருவரும் பெருமையுடன் இன்பமெல்லாம் கண்டிடலாம்..

    காதல் கவிபாடு…காலமெல்லாம் உறவாடு..
    காதல் கவிபாடு…காலமெல்லாம் உறவாடு..
    மனதை பறிகொடுத்தேன் மறந்து வாழ முடியாது..
    மனதை பறிகொடுத்தேன் மறந்து வாழ முடியாது..

    நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு..
    நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு..
    இருவரும் சேர்ந்திருந்தால் அன்போடு..
    இன்றுபோல் வாழ்ந்திடலாம் பண்போடு..

    நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு..
    நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு..

    நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் – Ninaipathu Niraiverum – YouTube – Google+ – M.L. Srikanth
    Share
  • திருமால் திருப்புகழ் (72)

     

    கிரேசி மோகன்

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ———————————————————-
    ’’கண்ணனை நெஞ்சே கருது’’
    ——————————————————-

    ஓவியம்  : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

     

     

    காதுகண்வாய் மூக்குடல், பூதப் புலனைந்தும்,
    ஏது உனக்கென்று எண்ணினையோ, – சூதிலன்று
    பெண்ணவள் பாஞ்சாலி இன்னல் களைந்தவனை
    கண்ணனை நெஞ்சே கருது….

    கரம்தயிர் வெண்ணை கவர்ந்தவர் வீட்டில்,
    அறம்பொருள் இன்பம் அனைத்தும் – தரும்பரம்,
    பின்னிவைகள் எச்சமுற, முன்னிருத்தும் மோட்ஷமதை,
    கண்ணனை நெஞ்சே கருது….

    கிளரொளி இன்பம் இளமையில் தங்கும்,
    தளரளி மூப்பதில் தேயும், – மலரளித்(து),
    உன்னகத்தை பக்தி உணர்வால் உருமாற்ற,
    கண்ணனை நெஞ்சே கருது….

    தூய யமுனைத் துறைவனை, நந்தகோபன்
    ஆயர் குலம்குதித்த ஆரமுதை, -சேயாக,
    இன்னமுதாய் பேய்ச்சி இருமுலை உண்டவனை,
    கண்ணனை நெஞ்சே கருது….

     
    “நாணல், யமுனா நதிநெல் நிமிர்தலாய்,
    கூனல் அர்ஜுனரை கீதையால்,-நாணதிர,
    விண்ணென்று காண்டீப வில்லெடுக்க வைத்தவனை,
    கண்ணனை நெஞ்சே கருது”!!

    ————————————————————————————————————–

    படங்களுக்கு நன்றி

    Share
  • மே தின வாழ்த்துகள்!

    பவள சங்கரி

    தலையங்கம்

    மே தினம் என்றால் பொதுவுடமைக் கட்சி போன்ற ஒரு சில கட்சிகளின் பாற்பட்டது என்று கருதிக் கொண்டிருக்கிறோம். இதையும் தவிர்த்து சில அரசியல் கட்சிகள் மே தினத்தைக் கொண்டாடுகின்றன. வழக்கம் போல ‘ஒரு நாள் விடுமுறை மறுநாள் பணி’ என்ற நிலையே இன்றும் இருக்கிறது. இன்று நாம் தொழிலாளர்கள் நல்வாழ்வைப் பற்றி சிந்திப்பதே இல்லை. மேலே குறிப்பிட்டுள்ள கட்சிகளிலும் கூட தொழிலாளர் நலம் பற்றியும் அவர்தம் சிரமங்கள் பற்றியும் அதிகம் அக்கறை கொள்ளாத சூழ்நிலையே காணப்படுகிறது. இந்தியா போன்ற கீழ்திசை நாடுகளில் மே 1ம் தேதி மே தினமாகவும், அமெரிக்காவில் செப்டம்பர் 1 ம்தேதி தொழிலாளர் தினமாகவும் கொண்டாடப்படுகின்றன. முதலாளித்துவ நாடாகிய அமெரிக்காவில் கூட ஒபாமா தலைமையில் இயங்கக் கூடிய அமெரிக்க அரசு ஒரு மணி நேரத்திற்கு 10. 1 டாலராக ஊதியம் நிர்ணயம் செய்துள்ளது. இது முந்தைய நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தைக் காட்டிலும் 30 சதவிகிதம் அதிகமான ஊதியமாக நிர்ணயம் செய்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் நமது கீழ்திசை நாடுகளிலோ தொழிலாளர்களுடைய நல்வாழ்வு பற்றிய விழிப்புணர்வே இருப்பதாகத் தெரியவில்லை. வங்காள தேசத்தின் தலை நகரில் சமீபத்தில் நடந்த தீ விபத்தில் பல நூறு தொழிலாளர்கள் விபத்தில் சிக்கி மாண்டுள்ளனர் என்பது வேதனைக்குரிய விசயம். பாதுகாப்பற்ற சூழ்நிலையே தொழிலாளர்களின் வாழ்வில் உள்ளது. இது அங்குமட்டுமல்ல, கம்யூனிஸ்ட் நாடான சீனாவிலும், கொரியாவிலும், நம் இந்தியாவிலும்கூட இது போன்ற நிலையே காணப்படுகின்றன. அது வெறும் உதாரணம் மட்டும்தான். இன்று ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்களின் சூழ்நிலைகளின்பால் சென்றுள்ள நாம் தனி மனித வளங்களை மட்டுமே, பேணுகின்றோம். அந்த ஒரு சில மனிதர்களின் வாழ்விற்கு அடித்தளமாக இருக்கக்கூடிய தொழிலாளர்களின் நிலை இன்றும் அவலமாகவே உள்ளது. கனிம வளங்கள் நிறைந்த சுரங்கங்களில் பணிபுரிபவர்கள், தோட்டத் தொழிலாளர்கள் போன்றோரின் நிலையும் போற்றப்படுவதாக இல்லாதிருப்பது வேதனைக்குரியது. மழை பொய்த்தால் உயிர் மாய்த்தலும், சுரங்கங்களில் மாட்டிக்கொண்டால் மடிதலும் வெளி உலகிற்குத் தெரியாமலே நடைபெற்றுக் கொண்டிருக்கிற தினசரி அவலங்கள். இந்த நிலையிலிருந்து நாம் மாறி, ஆட்சிக்கும் முன்னேற்றத்திற்கும் முக்கியக் காரணமாக இருக்கக்கூடிய தொழிலாளர்களின் வாழ்வாதாரங்களைக் காப்போம், அதனைப் பெருமளவில் பெருக்குவோம். இன்று இந்தியா பொருளாதாரத்தில் ஜப்பானையும் பின்னுக்குத் தள்ளி அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்தபடியாக உலகிலேயே மூன்றாவது பெரும் பொருளாதார நாடாக மாறி தனிப்பெரும் சிறப்புப் பெற்றுள்ளது. நாம் முதல் இடத்தைப் பிடிக்க வேண்டுமென்றால் இதற்குக் காரணமான நம் தொழிலாளர் சகோதரர்களின் உழைப்பைப் போற்றும் வகையில் உழைப்பாளர் தினத்தைப் போற்றுவோம். உழைப்பவருக்கு உரிய பங்கினை மறுக்காது அளிப்போம். காகங்களைப் போல பகிர்ந்து உண்டு வாழ்வோம். ஜெய்ஹிந்த்!

    Share
  • மே தின வாழ்த்துகள்

     

    2692154989_b627746930

    உழைப்பாளர் தினம் என்று உரக்கச் சொல்லி..

    உலகம் மகிழ்கின்ற திருநாளிது!

    உழைப்பின்பின் உழல்வதால்தானே

    உயரங்களை நாம் எட்ட முடிகிறது!

    அளவிலாத் துயரங்கள் அடிமைகளாய் வாழ்க்கை

    நெடுநாளாய்த் தொடர்ந்திருந்த பெரும்கதையை மாற்றி

    உரிமைக்குக் குரல் கொடுக்கும் தோழர்களால் ..

    உயிர் பெற்று வந்ததிந்த மேதினமாம்!!

    புவியெங்கும் வாழ்கின்ற மாந்தரெல்லாம்

    ஏதோ ஒரு விதத்தில் உழைப்பவர்தாம்!

    உழைக்காத எவருமிங்கே தேவையில்லை!

    மணிநேரக் கணக்கினிலும் வரைமுறைகள்

    வாரத்தில் ஒரு சில விடுமுறைகள்..

    வகுத்தளித்த நல்லோர்க்கு நன்றி சொல்வோம்!!

    கடமைகளும் உரிமைகளும் சரிநிகர்தான் எனும்

    தத்துவத்தை என்றும் நாம் போற்றி வைப்போம்!!

    உழைப்பாளர் தினத்தின் பெருமைதனை பறைசாற்றி

    உயர்ந்துநின்று ஒருமித்தக் குரலிடுவோம்!!

    உழைப்பாளர் தின வாழ்த்துகள்!..

    அன்புடன்..

    காவிரிமைந்தன்

    படத்திற்கு நன்றி

    Share