எம்.ஜெயராமசர்மா — மெல்பேண்
புத்தர் வந்தார் யேசு வந்தார் 
புனிதரான காந்தி வந்தார்
எத்தனையோ சொல்லிநின்றார்
எதையும் காது வாங்கவில்லை
சத்தியமே பேசு என்று
தர்மயுத்தம் செய்தாரே
அத்தனையும் என்னவாச்சு
அவற்றை எண்ணிப்பார்த்தோமா
ஊழல் என்னும் பேயது
ஊரை விழுங்கப் பார்க்குது
உலகம் முழுக்கப் பார்த்திடின்
ஊழல் ஓங்கி நிற்குது
தேர்தல் என்னும் பேரிலே
தினமும் ஊழல் நடக்குது
நீரில் கூடக் கலப்படம்
நிறைந்து எங்கும் இருக்குது
நீதிகிடைக்கும் என்று எண்ணி
நீதி மன்றம் சென்றிடின்
ஊதிப் பெருத்த ஊழல்தான்
உறைந்து அங்கே கிடக்குது
சமயச் சண்டை நடக்குது
சாதி வெறி ஓங்குது
இமயம் உடையப் பார்க்குது
இன்னும் சிக்கல் தேவையா
நல்ல எல்லாம் இருக்குது
நாங்கள் எடுக்க மறுக்கிறோம்
சொல்லி விட்டுப் போனதை
சுமையாய் எண்ணி நிற்கிறோம்
தொல்லை ஒழிய வேண்டிடின்
துயரம் தொலைய எண்ணிடின்
நல்லவற்றை நாடுவோம்
நாட்டில் நன்மை வந்திடும்
ஊழல் பேயை ஓட்டுவோம்
உலுத்தர் தம்மை விரட்டுவோம்
நாளை நல்ல தாக்குவோம்
நல்ல வாழ்வு பிறந்திடும்

Leave a Reply