Blog

  • உயிரின மூலக்கூறுச் செங்கலான [DNA-RNA] பூர்வ பூமியில் தாமாக உயிரியல் இரசாயனத்தில் தோன்றி இருக்கலாம்

    Origins of life 1

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

     

     

    சட்டியில் ஆப்பம் ஒன்றைச்
    சுட்டுத் தின்ன
    அண்டக்கோள் ஒன்றை முதலில்
    உண்டாக்க வேண்டும் !
    அண்டக்கோள் தோன்றப்
    பிரபஞ்சத்தில் ஒரு
    பெருவெடிப்பு நேர வேண்டும் !
    உயிரினம் உருவாக
    சக்தி விசையூட்ட வேண்டும் !
    கோடான கோடி யுகங்களில்
    உருவான பூமியும் ஓர்
    நுணுக்க அமைப்பு !
    தனித்துவப் படைப்பு !
    அகிலாண் டத்தில்
    நிகரில்லை அதன் படைப்பிற்கு !
    நாமறிந்த பிரபஞ்சத்தில்
    பூமியைப் போல்
    நீர்ப் பாறைக் கோள் ஒன்றை
    வேறெங்கும் இதுவரைக் கண்டிலோம் !
    நீர் ஆவியாய் நீங்காமல்
    வைத்திருப்பது
    வாயுக் குடை ! அஃதில்லையேல்
    மாயும் உயிரினங்கள் !
    மகத்துவமாய்
    அகிலப் பிரமாண்டத்தை
    நுணுகி நோக்க
    மனிதரினம் தோன்றிய
    புனித கோளம்,
    இனிய பூமி ஒன்றே !

    *****************************

    fig-1b-genome-of-the-species

    “உயிரினம் எதுவுமே இல்லாமல் எளியதாய்ப் பிரபஞ்சம் வெறும் பௌதிகம், இரசாயனத்தோடு, கால வெளியைத் தோற்றுவித்த அகில வெடிப்புத் தூசியோடு (Dust of Cosmic Explosion) இருந்திருக்கலாம்.  உண்மையில் அப்படி நேரவில்லை ! பிரபஞ்சம் தோன்றி 10 பில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு வெறும் சூனியத்திலிருந்து உயிரினங்கள் உதித்தன என்று நான் நியாயப்  படுத்துவது பைத்தியகாரத்தனம்.  “உயிரினப் படிப்படி மலர்ச்சி” (Evolution) என்னும் இயற்கை நியதி நேர்ந்தது மட்டுமில்லை !  அந்த மகத்தான நிகழ்ச்சியை உளவி அறிந்து கொள்ளும் மனிதரை உண்டாக்கவும் செய்திருக்கிறது.”

    ரிச்சர்டு டாக்கின்ஸ் உயிரியல் விஞ்ஞானி (Richard Dawkins)

    “உயிரினம் எப்படி ஆரம்பமானது என்பதை நாம் அறிய முடியவில்லை என்று முதலில் ஒப்புக் கொள்வோம்.  பூர்வாங்க உலகில் எளிய ஆர்கானிக் மூலக்கூறுகள் தோன்ற பல்வேறு இயக்க முறைகள் ஒருங்கிணைந்து பாதை வகுத்தன என்று பொதுவாக நம்பப் படுகிறது !  அந்த மூலக்கூறுகள் இணைந்து மீண்டும் சிக்கலான இரசாயன அமைப்புக் கலவைகள் உண்டாகி, முடிவிலே உயிர் மூலவி என்று சொல்லப்படும் ஒரு பிறவி உருவானது !  இப்படி மேற்போக்கில் பொதுவாகச் சொல்லும் ஒரு விளக்கத்தில் எவரொவரும் திருப்தி அடைய முடியாது.”

    மில்லர் & ஆர்ஜெல் (Miller & Orgel in their Book “The Origin of Life on Earth -1974)

    jay

    உயிரினத் தோற்றம் பற்றி விளக்கம் கூறிய உலக மேதைகள்: 

    பெரும்பான்மையான  உயிர்த்துவ இம்மிகள் [Living Organisms] மனிதர் கண்ணுக்குப் புலப்படா.   உயிர்த்துவ மூல நுண்ணுருக்கள் [Microbes] சேர்ந்தவையே உயிரினங்கள்.  80% நுண்ணுருக்கள் பூமிக்கு அடியிலே வசிக்கின்றன.  அவற்றின் அளவீடுகளைக் கணிப்பது சிரமமானது.   நோயை உண்டாக்கு வதும் அவையே.  நோயைக் குணப்படுத்துவதும் நுண்ணுருக்களே.  நமது பசுமைச் சூழ்வளம் [Ecosystem] ஏற்பாட்டுக்கும் நுண்ணுருக்களே  அடிப்படைக் காரணமாய்ப் பங்கேற்கும்.   யூதக்  கிறித்துவ, இஸ்லாமிய மத நூல்கள்,  கடவுளே பிண்டத்தில் உயிரை ஊதி உட்செலுத்தியது என்று கூறுகின்றன.

    Comets Gifts for Earth

    [384-322 ] B.C.  ஆண்டுகளில் வாழ்ந்த கிரேக்க மேதை அரிஸ்டாடில்ஸ்  “நியுமா” [Pneuma] என்னும் ஒரு தெய்வீக மூலமே [Divine Matter] விலங்கினத்தை உருவாக்கியது என்று கூறுகிறார்.   உயிரின மலர்ச்சி தொடர் இயக்கத்தில் மனித ஆத்மா பூரணத்துவம் அடைய,  நியுமா என்பது ஒர் இடைநிலை அரங்கம்.  மனித உடலுக்கும், ஆத்மாவுக்கும் இடையே, அல்லது  விலங்கினத்தின் உடம்புக்கும் உயிருக்கும் உரிய “இருமுகப்பு”  [Duality] பற்றி அவரது குருநாதர் சாக்ரடீஸ் பள்ளியில் கருத்தாடல்கள் நடந்துள்ளன.  அதில் ஒரு மாணவரே அரிஸ்டாடில்ஸ்.   குருநாதர் கூற்றுபடி உயிர் மூச்சு மனிதன் போன்ற உயர்ந்த விலங்கினங்களுக்கு பிறப்பாக்கத் தொடர்பு மூலம் [Procreation] வாரிசுகளுக்கு வழங்கப் பட்டது.   பிறப்பு விதை யில்லாமலே சிற்சில பூச்சிகள், சிப்பிகள், கடல்நீர் ஜந்துகள் சுயமாய் உருவாகின என்பது கிரேக்க மேதை அரிஸ்டாடில்ஸின் கருத்து. சாக்ரடீஸ் குழுவினருக்கு முன்பே “தானாய் நேரும் பிறப்பு”  [Spontaneous Generation]  கோட்பாடுக் கருத்து இருந்துள்ளது.  தானாய் நேரும் பிறப்புகளைப் பற்றி சைனா, இந்தியா, பாபிலோன், எகிப்திய ஏடுகளும் கூறியுள்ளன.

    Growth of Organisms

    லூயி பாஸ்டர் [1822-1895] செய்த ஒரு சோதனை மூலம் “தானாய் பிறக்கும் கோட்பாடுக்கு” முற்றுப் புள்ளி வைத்தார்.  அவருக்குப் பிறகுதான் “உயிரே உயிரை பிறப்பிக்கும்” கோட்பாடு நிலையானது.   ஆனால் இந்தக் கோட்பாடு முதலில் தோன்றிய உயிர் வடிவத்துக்கு ஒவ்வாது என்றும் பாஸ்டர் கூறினார்.   அதாவது “தானாய் உருவாகும்” கோட்பாடு முதல் உயிர் வடிவுக்கு மட்டும் தகுதி பெறும்.

    சார்லஸ் டார்வின் [1809-1882]  உயிர்த் தோற்ற உற்பத்தி, அம்மோனியா, ஃபாஸ்ஃபரஸ் உப்புக்களோடு, ஒளி, வெப்பம், மின்சக்தி இயங்கிய  ஒரு பூர்வக் குழம்பில்  [Primeval Soup] நேர்ந்தது என்று நம்பினார். இந்தக் கூட்டுக் குழம்பு ஒருவிதப் புரோட்டீனை உண்டாக்கி, சிக்கலான இரசாயனக் கலவைகளாகி, அவற்றிலிருந்து உயிரினம் தோன்றின என்று கருதினார்.   உயிரியல் இரசாயன இயக்க விருத்தியில் [Biochemical Reactions Evolution] உயிரின மலர்ச்சி நேர்ந்தது என்னும் புதியதோர் கருத்தை நிலை நாட்டியவர் அலெக்ஸாண்டர் இவனோவிச் ஓபரின் [Alexander Ivanovich OLparin] [1894-1980].

    the-origins-of-life

    “கிரீன்ஹௌஸ் விளைவின் வெப்பச் சீற்றத்தில் கரியமில வாயுவின் தீவிரத்தை விட, மீதேன் வாயு  ஒவ்வொரு மூலக்கூறுக்கு ஒன்றாகப் பரிதியின் சூட்டை உறிஞ்சிச் சேமிக்கிறது!  சூழ்வெளியில் மென்மேலும் கிரீன்ஹௌஸ் வாயுக்கள் திணிக்கப்படுவதால், ஆர்க்டிக் வட்டாரத்தின் வெப்பம் மிகையாகிப் “பூகோளச் சூடேற்றப் புரட்சி” [Runaway Global Warming (RGW)] தூண்டப்படும் என்று விஞ்ஞானிகள் மிகவும் கவலைப்படு கின்றனர்!  அடுத்து வரும் 100 ஆண்டுகளில் பூகோளக் காலநிலை பெருத்த அளவில் மாறிச் சமூக, நிதிவளம், உயிர்ப்பயிரின விருத்திகள் பாதிக்கப் படும்.  அதன் துவக்க விளைவுகள் ஏற்கனவே ஆரம்பாகி விட்டன!”

    ஆர்க்டிக் காலநிலைப் பாதிப்பு உளவு [Arctic Climate Impact Assessment (ACIA)]

    1990 ஆண்டில் பிரென்ச், ரஷிய விஞ்ஞானிகள் அன்டார்க்டிகாவின் தென்துருவத்தில் 1.5 மைல் நீளமான பனித்தண்டைத் தோண்டி எடுத்து 400,000 ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் தோன்றி மாறிய நான்கு பனியுகங்களின் கரியமில வாயுவை [CO2 in Four Ice-Age Cycles] ஆய்ந்தனர்.

    Miller Urey Experiment

    அந்தச் சோதனையில் உஷ்ணம் ஏற, ஏற கரியமில வாயுவின் கொள்ளளவு படிப்படியாகக் குறைந்து [மூன்றில் ஒரு பங்கு] வந்திருக்கிறது என்று அறியப்பட்டது.  காரணம் மற்ற கிரீன்ஹௌஸ் வாயுக்கள் CO2 உடன் மாறி யிருக்க முடியும் என்று எளிதாகக் கருத வழி யிருக்கிறது.  அந்த அரியக் கண்டுபிடிப்பு 1896 ஆண்டு விட்ட முன்னறிப்பை உறுதிப் படுத்தியுள்ளது.

    பூகோளச் சூடேற்ற விளக்கமும் விவாதமும் [Global Warming Definitions & Debate]

    பூமியின் பூர்வீக உயிரினங்களின் மூலத் தோற்றங்கள்

    4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய பூமியின் முதல் 700 மில்லியன் ஆண்டுகளாக வால்மீன்கள், விண்பாறைகள் போன்ற சூரிய மண்டலத்தின் அண்டத் துணுக்குகள் பூமியை மிகத் தீவிரமாய் தாக்கி வந்திருக்கின்றன.  அவற்றில் பேரடித் தாக்குதல்களால் வெளியான அதிர்வு சக்தி, கடல் வெள்ளத்தையும் ஆவியாக்கும் பேராற்றல் கொண்டிருந்தது. அப்போது தழைத்திருந்த உயிரினத் தோற்றங்களையும் பூமித் தளங்களில் அழிக்க வல்லது.  3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தடம் விட்டுச் சென்ற முதல் உயிரினத் தோற்றத்தின் புதைவடிவுப் பழஞ்சின்னச் சான்றுகள் (Fossil) இப்போது காணக் கிடைத்துள்ளன !

    fig-1a-the-earths-biosphere1

    கலியுகத்தின் சிக்கலான உயிரனங்களின் அமைப்புகள் பூகோளத்தின் பௌதிக இரசாயனச் சூழ்வெளியில் (Environmental Globe) சீரான முறையில் படிப்படியாக பல கோடி ஆண்டுகளாகப் பரவி வந்துள்ளன.  பூமியின் ஆக்ஸிஜன் சொற்பமான “சிறுத்திடும் சூழ்வெளி அழுத்தத்தில்” (Reducing Atmosphere with Traces of Oxygen) உள்வெளி அல்லது விண்வெளி ஒளிமந்தைகளின் ஆர்கானிக் மானோமெர்கள், பாலிமர்கள் (Terrestrial Organic Polymers or Extra-Terrestrial Organic Monomers) நியமித்த நிபந்தனைகளில் வளர்ச்சிச் சூழகத்தை நிலைநிறுத்தி இருந்தன.  ஆகவே ஆக்ஸிஜன் வேண்டாத உயிரினங்கள் இரசாயனப் பந்தங்களைத் (Chemical Bonds) தாக்கும்.  ஆகவே பூர்வீகப் பூமியில் (Primitive Earth) ஏற்கனவே இருந்த ஆர்கானிக் மானோமெர்கள் அவற்றை விடச் சிக்கலான ஆர்கானிக் பாலிமர் உண்டாக வசதியான எரிசக்திச் சூழ்நிலைகள் உண்டாயின.  ஆர்கானிக் மானோமெர்கள் இருவிதச் சேமிப்புகள் மூலம் உருவாகின்றன :

    1. உள்வெளி ஒளிமந்தை இணைப்பு முறைகள் (Terrestrial Synthetic Pathways).

    2. விண்வெளி ஒளிமந்தையிலிருந்து (Extra-Terrestrial) சூரிய மண்டலம் பெற்ற மூலங்கள்

    fig-1-the-beginning-of-life

    பல்லாண்டு காலங்களாக எளிய மூலக்கூறுகள் மிகச் சிக்கலான உயிரியல் மூலக்கூறு

    ​ ​

    களாக விருத்தி யாகி முடிவில் “உயிரணுக்கள்” (Cells) ஆயின !  அவை மீண்டும் பல்வேறு வடிவாக விருத்தி யாகி “ஒளிச்சேர்க்கையில்” இரசாயன முறை மலர்ச்சி (Metabolically Capable of Photosynthesis) பெறும் உயிரணுக்களாக மாறின.  அதற்குப் பிறகு அடுத்தடுத்து உயிரியல் பூதள இரசாயனச் சுழல் இயக்கங்களால் பின்னிய மீளா நிகழ்ச்சிகள் (Cascade of Irreversible Events Interconnected by Bio-Geochemical Cycles) நேர்ந்தன.  அப்போது பூகோளத்தின் சூழ்வாயு அழுத்தம் ஆக்ஸிஜன் ஊட்டும் சூழ்வெளியாகி (Oxidizing Atmosphere) “ஓஸோன்” அடுக்கு (Ozone Layer) உண்டானது.  ஓஸோன் அரங்கமானது பாதிக்கும் சூரியனின் புறவூதாக் கதிர்களை வடிகட்டும்.  ஆக்ஸிஜன் ஊட்டும் சூழ்வெளி பூர்வீக நுண்ணுயிர் அணுக்களை (Early Micro-Organisms) உயிரியல் விருத்தி செய்யும் மூல வாயுவாக இருந்து வந்தது.  இவ்விதப் படிப்படி அரங்க மாறுதல்களால் பூமியானது தற்கால உயிரியல் கோளமாய்ப் (Present Day Biosphere) பின்னால் உருவானது.

    Fig 3 Comet Falls on Earth

     

    பூதளச் சூழ்வெளியில் உயிரியல் கோளத்தின் அடுக்கான அமைப்பாடுகள்

    நாமறிந்த பிரபஞ்சத்திலே உயிரினங்கள் பல கோடி ஆண்டுகள் வசித்து விருத்தியடைந்த ஓர் அண்டக் கோள் பூமியைத் தவிர வேறொன்றை இதுவரை யாரும் அறிந்திலர்.  சூழ்நிலைக்குத் தக்கபடி மாறிக் கொள்ளும் உயிரினங்கள் பூமியில் மத்திய வேனல் தளங்கள் முதல், துருவக் கூதல் பிரதேசங்கள் வரை நீடித்து வாழ்ந்து வருகின்றன.  பூமியின் ஒவ்வொரு தளமும் நேரிடையாகவோ அன்றி மறைமுகமாகவோ உயிரின நீடிப்பு வளர்ச்சிக்கு வசதி செய்து வருகிறது.  கடல் மட்டத்துக்குக் கீழ் 10 கி.மீடர் ஆழத்திலும் (6 மைல்), கடல் மட்டத்துக்கு மேல் 20 கி.மீடர் உயரத்திலும் (12 மைல்) உயிரினங்கள் உலவி வருகின்றன. கடலிலும், வானிலும், பாலைவனத்திலும், வட தென் துருவங்களிலும் உயிரினங்கள் பிழைத்துத் தழைத்து வருகின்றன.  கனடாவின் ஆர்க்டிக் குளிர்ப் பகுதிகளில் பல்லாயிரம் ஆண்டுகளாய் பனிக்குகைகளில் எஸ்கிமோ இனத்தார் குடிவாழ்வு நடத்தி வருகிறார்.  வேனற் பகுதிகளில் பேரளவு உயிரினங்கள் வாழ்ந்து வருகிறன.

    fig-1f-amphiphilic-molecules

    சூழ்வெளியின் அடுக்கடுக்கான வாயு அழுத்தம் குன்றிய அமைப்பாடு

    1. பூதளத்திலிருந்து 8 முதல் 18 கி.மீடர் வரை: டோப்போ கோளம் (Toposphere)

    2. பூதளத்திலிருந்து 18 முதல் 50 கி.மீடர் வரை: ஸ்டிராடோ கோளம் (Stratosphere)

    3. பூதளத்திலிருந்து 50 முதல் 85 கி.மீடர் வரை: மெஸோ கோளம் (Mesosphere)

    4. பூதளத்திலிருந்து 85 முதல் 450 கி.மீடர் வரை: தெர்மோ கோளம் (Thermosphere)

    5. பூதளத்திலிருந்து 450 முதல் 10,000 கி.மீடர் வரை: எக்ஸோ கோளம் (Exosphere)

    Establishment of life on Earth

    சூழ்வெளியில் பேரளவுக் கரியமில வாயுவின் சேமிப்பு:

    கிரீன்ஹவுஸ் வாயுக்கள் காற்றில் சேமிப்பாகிப் பூகோளத்தின் உஷ்ணம் ஏறுவது போன்ற காலநிலைக் கோளாறுகள் ஆமை வேகத்தில் நிகழ்ந்து மெதுவாக மாறி வருபவை.  அவற்றில் குறிப்பிடத் தக்க வாயு, மின்சாரம், நீராவி உற்பத்தி நிலையங்களுக்குப் பயன்படும் நிலக்கரி எரு எரிந்து உண்டாகும் கரிமில வாயு [CO2].  மற்ற கிரீன்ஹவுஸ் வாயுக்களில் ஒன்று மீதேன் வாயு [Methane Gas].  அது கழிவுப் பதப்படுப்பு சாலைகளிலும் [Waste Treatment Plants] தொழிற்சாலை வினைகள், வெப்பத் தணிப்பு முறைகள் வெளிவிடும் ஹாலோகார்பனிலும் [Halo-Carbons] உண்டாகுகிறது.  அனைத்து பசுமைக் குடில் சூட்டு  வாயுக்களையும் [Greenhouse Gases] CO2 வாயுச் சமனில் [CO2 Equivalence] கூறினால், 2003 ஆண்டில் மட்டும் அனைத்துலக CO2 வாயுச்சமன் எண்ணிக்கை: 2692.  அதாவது 2002 ஆம் ஆண்டு CO2 வாயுச்சமன் எண்ணிக்கையை விட 10.6% மிகையானது என்று ஒப்பிடப் படுகிறது!

    fig-2-signs-of-extra-terrestrial-life1

    உயிரின நீடிப்புக்கு வாயுச் சூழ்வெளியின் இயக்கப்பாடுகள்

    பரிதியின் ஒளிக்கதிர்கள் எரிக்காதவாறு உயிரினங்களுக்குக் குடைபிடிக்கும் வாயு மண்டலத்தின் பயன்கள், இயக்கப்பாடுகள் என்னவென்று தெரிந்து கொள்வோமா ?  அந்த அரிய வாயுக் குடையை நீடித்துத் தன்னகத்தே இழுத்து வைத்துக் கொண்டிருப்பது பூமியின் பேராற்றல் கொண்ட ஈர்ப்பாற்றலே !  செவ்வாய்க் கோளில் இவ்வித வாயுக்குடை இல்லாமல் போனதற்கு முக்கிய காரணம் செவ்வாயின் ஈர்ப்பாற்றல் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிறுத்துப் போனதே !  வாயுக்குடை தங்காமல் போனதும் பரிதியின் கொடிய தீக்கனல் செவ்வாய்த் தளத்தின் நீர்வளத்தை ஆவியாக்கி நீர்வற்றிய பாலைவனமாக்கி விட்டது !

    பூமியின் வாயுக்குடை உயிரனத்துக்கு என்ன செய்கிறது ?

    1.  பரிதியின் கொடிய புறவூதா கதிர்கள், எக்ஸ்ரே கதிர்கள், பாதிக்கும் கதிர்வீச்சு போன்றவற்றைப் பகற் பொழுதில் தடுத்து எல்லா உயிரினங் களையும் பாதுகாப்பது.

    2.  பரிதியின் அவசியமான ஒளிச்சக்தியைக் கடல் மீதும் பூதளத்தின் மீதும் ஊடுருவிப் பாயும்படிச் செய்வது (எரிசக்தி மூலம்).

    Origins of life

    3.  இராப் பொழுது துரிதக் குளிர்ச்சியில் பூதளத்தைக் கணப்புடன் வைத்திருப்பது.  பகற் பொழுது துரித வெப்பத்தில் பூமியை மிதமாய் வைத்து மிகையாக்குவது.  வாயு அழுத்தக் குடையால் புவியின் சராசரி தள உஷ்ணம் : +15 டிகிரி C. வாயுச் சூழ்வெளி இல்லையெனில் -18 டிகிரி C

    4.  பூமத்திய ரேகைப் பகுதிகளிலிருந்து மிதப்பகுதி & உயர்ப்பகுதிகளுக்கு வெப்பக்கனல் சக்திக் கடப்பாடு (Transport of Energy from Equtorial Regions to mediuam & Higher Altitudes) நிகழ்வது.

    5.  ஆவிநீர்க் கடப்பாடு (Transport of Water Vapour) கொந்தளிக்கும் பொதுநிலைக் காற்றோட்டத் தளங்கள் மூலமாய்ப் பரவி நீராகப் படிதல்.

    6.  பூகோளத்தின் வாயு மண்டலத்தில் பேரளவு தாவரப் பயிர்களுக்குத் தேவையான நைடிரஜன் (78%) வாயு சேமிப்பு.  அத்துடன் ஆக்ஸிஜன் (21%), ஆவிநீர் (Moisture upto 4%) & கார்பன் டையாக்ஸைடு (0.036%) சேமிப்புக் களஞ்சியம்.

    7.  உயிரினங்கள், பயிரினங்கள் நீடித்து உயிர்வாழத் தேவையான வாயுக்கள் சூழ்வெளி எங்கும் இருப்பது.

    8.  இயற்கையாலும், மனிதச் செய்கையாலும் நிகழும் இரசாயன இயக்கங்களை (Oxidation, Reaction with Radicals & Photosynthesis) கடக்கச் செய்வது & பிரித்து விடுவது.

    9.  விண்வெளியிலிருந்து பூமியின் சூழ்வெளியில் வீழும் விண்கற்களைக் கடும் உராய்வு வெப்பத்தால் எரித்துச் சாம்பலாக்கி உயிரினங்கள் மீது படாது பாதுகாப்பது.

    Fossil Records of life

     

    கரியமில வாயுவைக் கணிக்க நாசா ஏவப்போகும் துணைக்கோள்

    2009 பிரவரியில் நாசா ஏவப்போகும் துணைக்கோள் “ஓகோ” என்னும் “புவி சுற்றும் கரி நோக்ககம்” [Orbiting Carbon Observatory (OCO)] சூழ்வெளியில் பூதளத்துக்கு அருகில் சேரும் கார்பன் டையாக்ஸைடையும், அந்தப் பகுதியையும் பதிவு செய்து வரும்.  அதைப் பின்பற்றி ஜப்பான் “கோஸாட்” என்னும் “கிரீன்ஹௌஸ் வாயுக்கள் நோக்கும் துணைக்கோளை” (GOSAT Greenhouse Gases Observing Satellite) அடுத்து ஏவப் போகிறது.  மூன்றாவ தாக ஐரோப்பாவில் ஈசா “ஏ-ஸ்கோப்” [Advanced Space Carbon & Climate Observation of Planet Earth (A-Scope)] என்னும் துணைக்கோளை 2016 இல் அனுப்பும்.  பூமியின் சூழ்வெளியில் தாவர இனங்களுக்குத் தேவையான கார்பன் டையாக்ஸைடின் கொள்ளளவு இயற்கை நிகழ்வாலும், மனித வினையாலும் ஏறி இறங்குகிறது.  அதே சமயத்தில் அது பேரளவு சேமிப்பானால் பூகோளம் சூடேறித் துருவப் பனிப்பாறைகள் உருகிக் கடல் மட்டம் உயர்கிறது.  அத்துடன் கடல் நீரின் உஷ்ணமும் உயர்கிறது.  அதனால் பேய் மழைகளும், பயங்கச் சூறாவளிகளும், ஹர்ரிகேன்களும் எழுந்து உயிரினத்துக்கும், பயினத்துக்கும் பேரின்னல்களை விளைவிக் கின்றன.  அவற்றை வரும் முன் தடுக்கவும், வரும் போது எச்சரிக்கை செய்யவும் இந்தத் துணைக்கோள்கள் பேருதவி செய்யும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

    Building Blocks of life

    (தொடரும்)

    ++++++++++++++++++++++++++

    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines.  Earth Science & the Environmental Book.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – Is There Life on Mars, Titan or Europa ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world [1998]
    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
    10 Hyperspace By : Michio kaku (1994)
    11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
    15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
    16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
    17 The Geographical Atlas of the World, University of London (1993).
    18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
    19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)
    20. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40805151&format=html (வால்மீனிருந்து உயிரின மூலங்கள் பூமிக்கு வந்தனவா ?
    21. The Daily Galaxy Website -The Biological Universe -A Galaxy Insight Posted By : Casey Kazan [Nov 20, 2008]
    22. Hutchinson Encyclopedia of the Earth Edited By : Peter Smith [1985]
    22 Earth Science & The Environment By : Graham Thompson, Ph.D. & Jonathan Turk, Ph.D.
    23. Astronomy Magazine : The Solar System -What Makes Earth Right for Life ? By : Jonathan Lunine [Dec 2008]
    24.  BBC News – Milky Ways’s Sweetness Throughout [Nov 25, 2008]
    25. BBC News : Sugar in Space Sweetens Chances of Life By : Dr. David Whitehouse [June 16, 2000]
    26 NASA’s Genesis Space Mission – Life from Space Dust ? [Aug 15, 2001]
    27 BBC News : Life’s Origin Among the Stars – A Salt Inclusion in a Meteorite is Evidence for Water By : Dr. David Whitehouse [March 27, 2002]
    28 The Beginning of Life & Amphiphilic Molecules By: Janet Woo [August 2004]
    29. The Biological Universe – A Galaxy Insight [Nov 20, 2008]
    30. The Daily Galaxy – Could Cold “Super Earths” Potentially Support Life ?  [Dec 16, 2008]
    31. BBE News : NASA Set to Launch CO2 Hunter Satellite By : Jonathan Amos [Dec 18, 2008]

    32.  http://www.scientificamerican.com/article/a-simpler-origin-for-life/   [February 2007]

    33.  http://www.dailygalaxy.com/my_weblog/2013/02/rna-dnas-messenger-or-the-origin-of-life-on-earth.html [February 23, 2013]

    34.  http://www.ncbi.nlm.nih.gov/books/NBK26876/

    35. http://alma.mtk.nao.ac.jp/e/aboutalma/outline/06.html

    36.  http://www.scielo.br/scielo.php?pid=S0103-40142007000100022&script=sci_arttext&tlng=en  [April 2007]

    37. http://www.independent.co.uk/news/science/found-the-origin-of-life-1684584.html  [May 14, 2009]

    37. http://en.wikipedia.org/wiki/RNA_world_hypothesis  [June 6, 2014]

    (தொடரும்)

    ******************
    S. Jayabarathan (jayabarathans@gmail.com) [June 7, 2014]

    Share
  • புதிய நிதிநிலை அறிக்கையும், மக்கள் எதிர்பார்ப்பும்!

    பவள சங்கரி

    தலையங்கம்

    மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை, உயர்திரு மோடி அவர்களின் அரசாங்கத்தின் முதல் நிதி அறிக்கை. மக்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் அறிக்கை. முந்தைய அரசு செய்த பல தவறுகளை சரி செய்தாலே நம் பொருளாதாரம் ஏற்றம் பெறலாம் என்ற நிலை இருப்பதையே வல்லுநர்களின் கருத்து தெளிவாக்குகிறது.

    1.. இன்றைய ரூயாயின் மதிப்பு குறைந்துள்ளதால் வருமான வரி பிடித்தம் என்பதற்குரிய வரம்புகளை மாற்றியமைத்தல் அவசியம். அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு கோரிக்கை, பால், காய்கறி மற்றும் விளை பொருள் விற்பனையாளர்களால் ஏற்படும் விலை ஏற்றங்கள் மக்களுக்கு சுமையாகிறது. இதுவரை அரசாங்கம் இதைக் கண்டுகொண்டதாகத் தெரியல்லை. வியாபாரிகள், இடு பொருட்களின் விலை அதிகமாக இருப்பதால், தங்களுக்குக் கட்டுப்படியாகவில்லை என்று சொல்லி விலையேற்றம் செய்கிறார்கள். இதற்குத் தீர்வாக தங்கள் இடு பொருட்களின் விலையைக் குறைக்கக் கோர வேண்டுமே தவிர அந்தச் சுமையை மக்களின் மேல் திணிப்பது சரியாகாது. பண வீக்கம் அதிகமாவதற்கு இதுவும் ஒரு காரணமாகிறது. அரசு பண வீக்கத்தைக் கட்டுப்படுத்தி, ரூபாயின் மதிப்பை அதிகப்படுத்தினால் இந்த வருமான வரி வரம்புகளை மாற்றம் செய்யத் தேவையிருக்காது. மத்திய அரசின் இந்த நிதி நிலை அறிக்கை ரூபாயின் மதிப்பை அதிகப்படுத்த ஆவண செய்ய வேண்டும்.

    2. பண வீக்கத்திற்கான மூல காரணம் பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதிதான் என்று முந்தைய அரசுகள் கூறிக்கொண்டிருந்தன. 35 ரூபாய்க்கு இருந்த பெட்ரோல் விலை இன்று ரூ. 74.45 ஆக உள்ளது. ஒரு புறம் வாகன உற்பத்தி இலட்சக்கணக்கில் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. சென்ற ஆட்சியில் வாகன உற்பத்தி மந்த நிலையை அடைந்துள்ளது என்று கூறி சில சலுகைகளை அறிவித்தனர். இதனால் பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தவிர்த்து இயற்கையாகக் கிடைக்கக் கூடிய இயற்கை எரி வாய்வு மற்றும் திரவ பெட்ரோலிய வாய்வு போன்றவற்றை எரிபொருளாகப் பயன்படுத்தக்கூடிய வாகனங்களுக்கும் வரிச் சலுகைகள் அளித்திருந்தால் அன்னிய செலாவனி கையிருப்பு அதிகரித்திருக்கும். ஆயிரம் அல்லது 1200 சி.சி. களுக்குள்ளான அனைத்து வாகனங்களுக்கும் இயற்கை எரிவாய்வு மற்றும் திரவ பெட்ரோலிய வாய்வு பயன்பாட்டையும் கட்டாயப்படுத்தினால் நலம் பயக்கும். அதேபோல் இரு சக்கர வாகனங்களிலும் எரி பொருளாக இந்த இயற்கை எரி வாய்வுகளைக் கொண்டு வந்தால் நமக்கு பல லட்சம் கோடி அன்னிய செலாவணி மீதியாகலாம். இதற்கு ஏதுவாக அனைத்து பெட்ரோலிய நிலையங்களிலும் எரி வாய்வு நிரப்புதலை கட்டாயமாக்கினால் நன்றாக இருக்கும். மிகப் பெரிய நகரங்களில் கூட திரவ எரிவாய்வு நிரப்பும் நிலையங்கள் இல்லாமல் இருப்பது வேதனைக்குரிய செய்தி. இதைத் தவிர்த்து இரு சக்கர வாகனங்களிலும் நான்கு சக்கர வாகனங்களிலும் மின்சாரத்தை எரி பொருளாகப் பயன்படுத்துவோருக்கு வரிச்சலுகைகள் மூலமாக ஊக்கப்படுத்தலாம் . அரசு இதை கவனத்தில் கொண்டால் நலம் விளையக் கூடும்.

    3. படித்த இளைஞர்கள் ஆய்வகங்களைப் பயன்படுத்துவதற்கு ஏற்றாற் போல பெரு நகரங்களில், குறைந்தபட்சம் மாவட்ட தலை நகரங்களிலாவது இந்தக் கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டியது அவசியம்.

    4. விற்பனை வரி மற்றும் VAT என்ற மதிப்புக் கூட்டுவரி முறையை மாற்றம் செய்ய வேண்டியதும் அவசியம். விற்பனை வரி, மத்திய விற்பனை வரி, மதிப்புக் கூட்டு வரி இவையனைத்தையும் ஒருங்கிணைத்து அல்லது தவிர்த்து வரி (TURN OVER TAX) என்ற வரி விதிப்பு முறையைக் கொண்டுவந்தால் எளிமையான கணக்கு வழக்குகளும், நேர்மையான கணக்கும் கிடைக்கும். இதன் மூலமாக முன்பு கிடைத்த வரி வருமானங்களை விட பல ஆயிரம் கோடி வருமானங்கள் ஒவ்வொரு மாதமும் அரசுக்குக் கிடைக்கும் வாய்ப்பாகவும் அமையும். இதனால் கருப்புப் பண புழக்கமும் கட்டுக்குள் வரும்.

    5. தங்க இறக்குமதியை கட்டுப்படுத்துவதைத் தவிர்த்து ஏற்றுமதியை ஊக்கப்படுத்தி சதவிகிதத்தை அதிகப்படுத்தினால் அன்னிய செலாவனி கையிருப்பு அதிகமாகக் கூடும்.

    6. அன்னிய செலாவனி அதிகம் அளிக்கக் கூடிய ஜவுளித் துறையில் சரியான கவனம் இதுவரை செலுத்தப்படவில்லை. இந்தியாவிலிருந்து மூலப் பொருட்களை அதாவது பருத்தியை ஏற்றுமதி செய்துவிட்டு துணியாகவோ, ஆயத்த ஆடையாகவோ இறகுமதி செய்கிறோம். இதைத் தவிர்த்து ஆயத்த ஆடைகளாவோ அல்லது துணியாகவோ ஏற்றுமதி செய்தால் மிக அதிகமான வருமானம் பெறலாம்.

    அன்னிய செலாவனி அதிகம் கையிருப்பு வைத்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் மற்றும் ரூபாயின் மதிப்பை அதிகப்படுத்துவதற்கான வாய்ப்புகள் போன்ற வாய்ப்புகளை பயன்படுத்தினால் பொருளாதார நிலை சீரடையலாம் என்பது வல்லுநர்களின் கருத்து.

    அடுக்கு மாடிக் குடியிருப்புகள் மற்றும் குடியிருப்புகளுக்கான கட்டுமானப் பதிவுகளுக்குரிய சேவை வரி விகிதங்கள் கட்டிடங்களுக்குரிய எண்ணிக்கையை வைத்து வரி விதித்திருப்பதைத் தவிர்த்து கட்டுமானங்களின் மதிப்பின் அடிப்படையில் இந்த வரி விதிப்பு இருக்குமானால் அரசு ஊழியர்களும் மத்தியதர மக்களும் பெரும் பயன் அடைவார்கள். பதினொரு வீடுகளுக்குக் குறைவாக கட்டக்கூடிய நிறுவனங்களுக்கு இந்த வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. ஆனால் ஒரு வீட்டின் மதிப்பு 1 கோடியோ, 2 கோடியோவாகா இருந்தாலும் அதற்கு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது.குறைந்த மதிப்புள்ள வீடுகளுக்கு அதாவது 25 லட்சம் மதிப்புள்ள 100 வீடுகள் கட்டும் போது எண்ணிக்கையின் அடிப்படையில் வரி விதிக்கப்படுகிறது. இந்த வரி விதிப்பால் பாதிக்கக் கூடியவர்கள் மத்திய தர பிரிவினரும், அரசு ஊழியர்கள் மட்டுமே. ஆகவே அரசு தங்களுடைய நிதி நிலை அறிக்கையில் வீட்டின் மதிப்பின் அடிப்படையில் இந்த வரிவிதிப்புகளை விதிக்க முன் வந்தால் நலம்.

    Share
  • காற்று வாங்கப் போனேன் : பகுதி 3 & 4

    கே.ரவி

    மீண்டும் காற்று வீசுகிறது. சாதாரணக் காற்று இல்லை. சண்டமாருதம் என்று சொல்லப்படும் சூறைக்காற்று. ஒரு நிமிடம் என்னோடு வாருங்கள்; காலப்பரப்பில், அல்லது, காலப் பரபரப்பில், சற்றுப் பின்னோக்கி வாருங்கள். பல நூற்றாண்டுகள் இல்லை. சில ஆண்டுகள் அவ்வளவுதான்!

    நாள்: 1990, கோடை விடுமுறை. நேரம்: பிற்பகல் சுமார் 2 மணி. இடம் ஏலகிரி (வாணியம்பாடி அருகில்). அங்கே, ‘சாந்தாமணி லாட்ஜ்’ என்றொரு விடுதியில் ஒரு பெரிய பட்டாளத்தோடு நான் தங்கியிருந்தேன். நான், ஷோபனா, என் வளர்ப்புத் தந்தை, என்னிரு பெண்மக்கள், அவர்களுடைய தோழர்கள், தோழிகள் சுமார் எட்டுப் பேர், இவர்களோடு என் நண்பனும், அவன் மனைவியும். அப்பா! இப்பொழுது நினைத்தாலும், அப்பொழுது எப்படி இப்படியொரு பெரும்படையோடு ஏலகிரி, கோடைக்கானல் என்று ஆண்டுதோறும் சென்று கொண்டிருந்தேனோ என்று பிரமிப்பாக இருக்கிறது!

    images (5)

    அன்று பிற்பகல், லாட்ஜுக்குள் மின்சாரம் இல்லை. ஒரே புழுக்கம். லாட்ஜின் பின்புறம் இருந்த பெரிய தோட்டத்துக்குப் போயமர்ந்தேன். வெளியிலும் காற்றில்லை. வானத்தில் ஒரே மேக மூட்டம். சற்று இருண்டிருந்தது. அப்பொழுது ஷோபனாவும், என் நண்பனும் அங்கே வந்து நான் ஏன் தனியாக அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறேன் என்று கேட்கவும், ‘காற்று வாங்க வந்தேன், ஆனால் காற்றே இல்லை’ என்று சொல்லிவிட்டுத் திடீரென்று பாடத் தொடங்குகிறேன். பாடல் ப்ருந்தாவனி ராகத்தில், வட இந்திய க்ராமிய வயல்வெளிப் பாடல்களின் சாயலில், மடமடவென்று வருகிறது.

    பாடணும் நான் பாடணும்
    அதக்
    கேட்டுப்புட்டுக் காத்துவந்து தந்தனத்தோம் என்றுதாளம்
    போடணும் நான் பாடணும்“.

    நான் பாடிக்கொண்டே இருக்கிறேன், திடீரென்று பாட்டுக்குப் பின்னணி இசைபோல் ஊய்ய்ய் என்றொரு சத்த்த்த்தம்! காற்று! சூறைக்காற்றில் புழுதி கிளம்பி எங்கள் கண்களை மறைக்க, மரங்கள் தலைவிரித்தாட, இலைகள் பறக்கப் பாட்டு மட்டும் நிற்காமல் தொடர… ஒரே அமளிதான்!

    “பாடணும் நான் பாடணும்austin-rosacrutions
    அதக்
    கேட்டுப்புட்டுக் காத்துவந்து தந்தனத்தோம் என்றுதாளம்
    போடணும் நான் பாடணும்

    பித்தெடுத்துக் காதலுடன் இத்தரையத் தொட்டுத்தொட்டு
    அத்தன மரங்களுமே ஆடணும்
    அத்தன மரங்களுமே ஆடணும்
    சத்தங்கள வுட்டுப்புட்டு சந்தத்துலக் கட்டுப்பட்டுச்
    சத்தங்கள வுட்டுப்புட்டு சந்தத்துலக் கட்டுப்பட்டுச்
    சிட்டுக்குரு விக்கூட்டம் கூடணும்
    நான் பாடணும்

    மேகத்துலத் தோகவிரிச் சாடுகிற வானமயில்
    ஓ ஓ ஓ ஓ
    மேகத்துலத் தோகவிரிச் சாடுகிற வானமயில்
    ராகத்துல சிக்கித்தடு மாறணும் – என்
    ராகத்துல சிக்கித்தடு மாறணும்
    மோகவலை போலவொரு தாளஅலை பின்னிப்பின்னி
    பின்னிப்பின்னிப் பின்னிப்பின்னிப் பின்னிப்பின்னிப் பின்னிப்பின்னி
    மோகவலை போலவொரு தாளஅலை பின்னிப்பின்னி
    மூச்சுத்தெண றும்படிப் பாடணும்
    நான் பாடணும்

    பாட்டுக்கொரு போதையுண்டு போதைக்கொரு பாதையுண்டு
    ஏ ஏ ஏ ஏ
    பாட்டுக்கொரு போதையுண்டு போதைக்கொரு பாதையுண்டு
    பாத்துநடந் தால்பறந் தோடலாம்
    பாத்துநடந் தால்பறந் தோடலாம்
    கூட்டுக்குள்ள நீயிருந்து வாடுறது ந்யாயமில்ல
    கூட்டுக்குள்ள நீயிருந்து வாடுறது ந்யாயமில்ல
    கூடவந்து களியாட்டம் போடலாம் – என்
    கூடவந்து களியாட்டம் போடலாம்

    பாடலாம் நாம் பாடலாம் – அதக்
    கேட்டுப்புட்டுக் காத்துவந்து தந்தனத்தோம் என்றுதாளம்
    போடலாம் நாம் பாடலாம்

    பாட்டு முடிந்து பத்து நிமிடங்கள், காற்றுச் சுழன்று சுழன்று அடித்துவிட்டுக் களைத்துப்போய் மெல்ல விசையிழக்கும் வரை, நாங்கள் எதுவும் பேசிக்கொண்டதாக நினைவில்லை. நான், ஷோபனா, அந்த நண்பன், ஒரு கனத்த மெளனம்!

    அந்த நண்பன் ஒரு நல்ல கவிஞன். நல்ல குரல்வளத்தோடு கணீரென்று பாடும் கவிஞன். கிருஷ்ண பக்தியில் தோய்ந்த கவிஞன். மராட்டிய அபங் பாடல்களை அவன் பாடிக் கேட்க வேண்டும். இந்த நிகழ்ச்சி நடந்து முடிந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழன் எக்ஸ்பிரஸ் என்ற இதழின் ஆசிரியராகப் பல ஆண்டுகள் பணிபுரிந்து, சில ஆண்டுகளுக்கு முன் காலமாம் சூறைக் காற்றால் அடித்துச் செல்லப்பட்ட அந்த நல்ல நண்பன், அமரன் சிவகுமாரை நினைத்துக் கொள்கிறேன்.

    மீண்டும், இல்லை, மீண்டும் மீண்டும் காற்று வரும், வந்து கொண்டே இருக்கும். சந்திப்போம்.

    காற்று வாங்கப் போனேன் – பகுதி 4

     

    மேலே சொன்ன சம்பவம் நடப்பதற்கு இரண்டு நாட்கள் முன்னால், அதே ஏலகிரி, அதே சாந்தாமணி லாட்ஜ். அதே நபர்கள். ஆம், ஷோபனா, சிவகுமார், நான். லாட்ஜ் அறையில் அமர்ந்திருந்தோம். அப்பொழுதுதான் ஒரு பாடல் உதயமாகியிருந்தது. வழக்கத்துக்கு மாறாக அதை உடனே எழுதியும் வைத்திருந்தேன். மற்ற இருவருக்கும் நான் பாடிக் காட்டுகிறேன்.

    என் குரல் ஸ்ருதியோடு போராடும் இழுபறியைப் பொருட்படுத்தாமல் என் நண்பர்கள் என்னைப் பாடச் சொல்லி, மன்னிக்கவும், பாடவிட்டுக் கேட்டிருந்ததெல்லாம் நட்புக் கருதியும், எனக்குள் இருந்து வரும் கவிதையூற்றின் மேல் உள்ள மதிப்பினாலும்.

    திணறித் திணறிப் பாடுகிறேன், சிவரஞ்சனி ராகத்தில் (இந்த ராகத்துக்கு ‘சங்கரந்தனப்ரியா’ என்று இன்னொரு பெயரும் உண்டாமே!):

    நினைத்துக் கொள்ள நிமிடம் போதும் – உன்னை
    நினைத்துக் கொள்ள நிமிடம் போதும் – அதை
    நிலைக்க வைக்கும் கவிதை யோகம்
    உனக்கும் எனக்கும் உள்ள பந்தம்
    ஒன்று மட்டும் என்றும் சொந்தம்
    இறைவனே இறைவனே – என்னை
    எழுதிடும் கவிதையே

    மனைவி மக்கள் என்பதெல்லாம்
    மரணம் வரையிலே
    மனையும் பொருளும் தேகத்தைநான்
    மறக்கும் வரையிலே – நீ
    . . . . .

    இந்த இடத்தில் ஏனோ என் தொண்டையடைத்துக் கொண்டுவிட்டது. மேலும் பாட வரவில்லை. நான் திணறுவதைப் பார்த்த சிவகுமார் உடனே என்னிடமிருந்து கவிதைத்தாளை எடுத்து த் தொடர்ந்து வந்த வரிகளைப் பாடியதும் மெய்மறந்து போனேன். அடுத்த சரணத்தை நானே சுதாரித்துக் கொண்டு பாடி முடித்தேன்.

    உன்னை-siva
    நினைத்துக் கொள்ள நிமிடம் போதும்
    நிலைக்க வைக்கும் கவிதை யோகம்
    உனக்கும் எனக்கும் உள்ள பந்தம்
    ஒன்று மட்டும் என்றும் சொந்தம்
    இறைவனே இறைவனே – என்னை
    எழுதிடும் கவிதையே

    மனைவி மக்கள் என்ப தெல்லாம்
    மரணம் வரையிலே
    மனையும் பொருளும் தேகத் தைநான்
    மறக்கும் வரையிலே – நீ
    ஏற்றி வைத்த தீபம் மட்டும்
    அணைவ தில்லையே – எந்தக்
    காற்று வந்து மோதி னாலும்
    கலைவ தில்லையே
    இறைவனே இறைவனே – என்னை
    எழுதிடும் கவிதையே

    உன்னைப் பாடும் எண்ணம் என்னுள்
    யார் விதைத்தது – அந்தப்
    பாட லுக்குள் பரவ சத்தை
    யார் வளர்த்தது
    பாடப் பாடத் திரைய றுந்து
    நான் விழுந்தது
    பாடல் உந்தன் பேர்ம றந்து
    தேன் பொழிந்தது

    உன்னை
    நினைத்துக் கொள்ள நிமிடம் போதும்
    நிலைக்க வைக்கும் கவிதை யோகம்
    உனக்கும் எனக்கும் உள்ள பந்தம்
    ஒன்று மட்டும் என்றும் சொந்தம்
    இறைவனே இறைவனே – என்னை
    எழுதிடும் கவிதையே

    ‘எந்தக் காற்று வந்து மோதினாலும் அணைவதில்லையே’ என்று சிவகுமார் பாடிய மெட்டு வெகு அலாதியாக என்னை ஈர்த்தது. நானே அந்த வரியைப் பாடியிருந்தால் அவ்வளவு அழகாக மெட்டு அமைந்திருக்க வாய்ப்பில்லை. என் மனத்தில் எழுந்த இசைக் காற்றைச் சற்றே திசைத்திருப்பி மலையமாருதமாய் வளையவரச் செய்த சிவகுமாரை மறக்க முடியுமா?

    இப்படியாக என் வாழ்வில் காற்றும் கவிதையும் எத்தனைமுறை உறவாடியிருக்கின்றன!

    முன்பொருநாள், இசைக்கவி ரமணனும் நானும் …..

    (தொடரும்)

    Share
  • உனக்கே உனக்காக – 2

    இசைக்கவி ரமணன்

    04_air

    எப்படி?

    எப்படி வந்தாய் உள்ளே?
    எல்லா வாசலும் பூட்டிக் கிடக்க
    சன்னல்களெல்லாம் சாத்தியிருக்க
    நெஞ்சக் குழியில் சுவாசம் நிறுத்தி
    இதயத் துடிப்பையும் நிலைக்கவைத்து
    ஏதோ கொஞ்சம் இறுமாந்திருந்தேன்

    எப்படி வந்தாய் உள்ளே?
    ஏதோ கொஞ்சம் இறுமாந்திருந்ததே
    போதுமென்று புன்னகைக்கிறாயா?
    கன்னம் மேவும் மின்னலினாலே
    கன்னம் வைத்துக் கண்சிமிட்டுகிறாயா?

    எப்படி? ம்…எப்படி?
    சுரங்கப் பாதை குடைந்து, கவிதையின்
    சுருதி ஊற்றில் கலந்துகொண்டு, ஒரு
    சொல்லின் நிழலில் ஒளிந்து, அந்தரங்க
    முற்றத்தில் முத்தாய் உதிர்ந்தாயா?

    எப்படி? வேறெப்படி? ம்..?
    காளியிடம் உனக்குப் பழக்கமுண்டா? அவள்
    காலைப் பிடித்து சாதித்தாயா?
    மாயக் காரியை மயக்கிவிட்டாயா?
    மண்குடிசைக்குள் மாளிகை விளக்காய்..

    எப்படி? எப்படித்தான் சொல்லேன்?
    ஊஹூம்…
    நீ எதற்குச் சொல்லப் போகிறாய்?
    சாவகாசமாக அமர்ந்து
    சாகடித்த கதைகளை வரிவரியாய்
    எங்கேனும் சொல்லுமா எந்தப் புலியேனும்?
    ஓ!
    முற்றும் என்னை முடித்துவிட்டு
    முகத்தில் அதென்ன கோணல்?
    ஆ!
    வந்திருக்கிறார்களாம்!
    வரவேற்கவில்லையாமாம்!!

    அழைத்தோ அழைக்காமலோ
    வாசலில் தயங்கி நிற்போரைத்தான்
    வரவேற்பார்கள் பார்த்திருக்கிறோம்
    அத்துமீறி வந்தவர்களுக்கு
    ஆரத்தி கேட்கிறதா?
    தீர்த்துக்கட்ட வந்தவர்களுக்கு
    திவ்யப் பிரபந்தமா?!

    நீதியைக் காட்டிலும் அநீதியின் குரல்தான்
    நெஞ்சைப் பிசைகிறது…

    சரி சரி
    அந்த அறையில்
    மேசையில் இருக்கும் என்
    மூக்குக் கண்ணாடியைக் கொண்டுவா

     

    Share
  • திருமால் திருப்புகழ் (107)

     

    கிரேசி மோகன்

     

     Bhagavatham -Rukmini haranam Keshav
    Bhagavatham -Rukmini haranam Keshav

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)
    ———————————————————
    ’’கண்ணன் வெண்பாக்கள்’’
    ———————————————–

    Bhagavatha - Vamana avatara - Keshav
    Bhagavatha – Vamana avatara – Keshav

    கள்ளா குருவாயூர், பிள்ளாய் வருவாயே,
    உள்ளம் நிறைவாக என்முன்னே, – தெள்ளிய,
    மாமுனிக்கு மாதவா, காமினிக்கு காதலா,
    யாமினிக்க வாயாத வா….(150)

     
    கனிச்சுவை ராதை, கமலஇதழ் கவ்வி,
    துணிச்சலுடன் முத்தம் திணித்து, -அனிச்ச
    மலராள் அலறும்முன், மன்னிப்பு கேட்பான்,
    தளரான் எதற்கும் துணிந்து…(151).

     
    கண்ண புரத்துக், கருமணியை கற்கண்டை,
    வண்ணம் சிறுத்து வடிவாகி, -முன்னம்,
    வரமேற்று விண்ணளந்த, வாமன விக்ரம்,
    சிரமுற்றோர் இருதாள் சரண்….(152)

     
    கண்ணபிரான் காயாம்பூ, வண்ணபிரான், வெண்ணைமண்,
    தின்னபிரான், நற்கீதை சொன்னபிரான், -பின்னமுறான்,
    முன்னவனாம் தென்மதுரை, அன்னையவள் அண்ணனையே,
    எண்ணவரும் ஏகாந்தம் இங்கு….(153)

    164486_4339481400471_1764566644_n

    பாரதியாருக்கு நன்றி
    ———————
    கண்ணனென் சேவகன், கண்ணனென் காவலன்,
    கண்ணனென் மந்திரி, நண்பனென, -சொன்னவன்
    கண்ணனென் சாக்லேட், கிருஷ்ணாவாய் ஆக்கினான்,
    புண்ணிய மாச்சென் பிறப்பு….(154)

     
    கண்ணிநுண் தாம்பினால், கட்டுண்ட காரணம்,
    அன்னையின் அன்பினாலா, அல்லது, -கண்ணனே,
    ஓயாத லீலையின், மாயா வசப்பட்டு,
    ஆயாசம் ஆனதா லா….(155)

    —————————————————————————————————-

    படங்களுக்கு நன்றி:

    http://bhagavatham.blogspot.in/

    Share
  • வாழ்வாங்கு வாழ்க!

    இசைக்கவி ரமணன்

    images (3)

    அன்புக் குழந்தைகளே!

    வணக்கம்!

    நன்றியுள்ள தந்தை வணங்குவதும் நன்றுதான்! ram1
    நல்லன்பில் வாழ்த்துவதும் வணங்குவதும் ஒன்றுதான்!
    என்வாழ்வில் பூரணத்தை எய்தியநாள் இன்றுதான்!
    எல்லோர்க்கும் என்போலே பிள்ளைவாய்த்தால் நன்றுதான்!

    ஏழைவீட்டுக் கூரையிலே சுரைக்கொடிதான் அலங்காரம்
    என்றிருந்த நாட்களிலே வந்து பிறந்தீர்! என்னை
    வாழவைக்கும் வளமாக வாசலிலே வரமாக
    வகைவகையாய்க் கண்முன்னே வளர்ந்து சிறந்தீர்!
    மோழையிலே மெளனத்தே மூச்சடக்கும் யோகியினை
    மூட்டைகொஞ்சம் தூக்கவைத்து முன்பு நடந்தீர்! உங்கள்
    வாழ்வையுங்கள் வழியில்சென்று வாழ்ந்துகாட்டுகின்ற போது
    வலியெல்லாம் சர்க்கரையாய் இனிக்க வைக்கிறீர்!

    நமதுகுணம் பிள்ளைகளின் சுமையாகும் என்னும்வார்த்தை
    நல்லவேளை பொய்க்கவைத்தீர் நன்றி நன்றி!!
    உமதுகுணம் மலரின்மணம் ஊறிவரும் நிலவின்நிறம்
    உம்மைப்பார்த்து வியக்கின்றேன் இன்றும் இன்றும்!!

    என்மகவாய் எப்படித்தான் வந்து பிறந்தீர்!ram2
    எந்தக்கடன் தீர்ப்பதற்காய் என்னை அடைந்தீர்!
    பொன்னிலவு பழங்குடிசை விரிசலின் வழியே
    புன்னகைத்தல் போலாநீர் என்னிடம் வந்தீர்?

    உம்மைவாழ்த்தும் முன்பு இந்த உலகை வாழ்த்துவேன்
    உள்ளத்தின் அடியிலிருந் தொன்று சொல்லுவேன்
    எம்மைப்போலப் பிள்ளைச்செல்வம் எவர்க்கும் வாய்க்கவே!
    எங்களைப்போல் எல்லோரும் இனிது வாழ்கவே!

    கண்முன்னே கதிரவனாய் நீங்கள் விரிக
    கமலம்போல் கண்டுகண்டு நாங்கள் மலர்க
    பண்ணிசைந்த கவிதைபோல் மனைவி மக்களும்
    பக்கத்தே அன்புசெய்யப் பரந்து வாழுக!

    ஆயிரமாய்ப் பிறைகளுடன் நூறு வசந்தம்
    ஆரோக்யம் ஆன்மபலம் ஆன்ற சாதனை
    தாயினும்சி றந்ததேசம் வாழ உழைத்து
    தந்தையோரம் கண்பனிக்கத் தழைத்து வாழ்கவே!

    ரமணன்

     

    Share
  • இங்கே எப்படி நீ?

     

    உனக்கே உனக்காக – 1

    tumblr_static_catch-a-dream-spirit-alchemy

    இடிந்து கிடக்கிறது கோயில்
    இறைவன் எழுந்து இறங்கிச் சென்று எத்தனையோ நாட்களாயின

    கடைசித் தருணத்து நிலைகுத்திய கண்கள் போலே
    காரை பெயர்ந்து, ஒரு
    கைதட்டலில் உதிர்வதற்காய்க் காத்திருக்கும் செங்கல்கள்
    அவற்றின் இடுக்கிலும் எப்படியோ கண்விழித்து
    அசையாமல் நிற்கிறது ஆலஞ்செடி
    பொருத்தமற்ற இடத்தில்
    பூவும் அருவருப்பு

    இது மெளனமல்ல
    இது வானத்தின் அடிவயிற்றையும் கலக்கும்
    வாழ்வில்லாத நிசப்தம்

    அது சந்நிதியல்ல
    அது கடவுள் காலி செய்துவிட்ட,
    ஒரு
    மாறுதலையாவது தரும்
    மரணமும் ஸ்தம்பித்துவிட்ட அவலம்
    ஆம்
    சிதைவுகளில்தான் அவலத்தின் குரூர வடிவங்கள்
    சித்திரிக்கப்படுகின்றன..

    அழுகை நின்றாலும் விசும்பல் தொடர்வதுபோல்
    வெளவால்களின்
    நாற்றங்கள் மட்டும் தொங்கிக்கொண்டிருக்கின்றன
    நாராசத்தின் மாறாத பதிவுபோல்.
    சுவர்களெல்லாம் புற்றாகவும் புதர்களாகவும்
    சுருதிமாறிப் பேதலிக்கின்றன

    இங்கே..இங்கே!!
    எப்படி நீ? எதற்கு?
    சிதையில் விழுந்த மொட்டின் முகையவிழ்க்கச்
    சித்திர நிலவு சிங்காரித்துக்கொண்டு வந்ததுபோல்
    என்னத்தைத் துளிர்விக்க இங்கே போய்
    எழுந்தருளியிருக்கிறாய்?.

    சொச்சமாய் இன்னும்
    ஒரு முற்றுப்புள்ளியில் ரேகைபோல்
    தொக்கிக் கிடக்கலாம் கோயில் வாசனை..

    உறைந்தும் காய்ந்தும் கரைந்தும் போனாலும்
    உயிரே விம்மி உதிர்ந்த கண்ணீரின்
    ஒற்றைத் துளியின் உணர்வு
    கதைசொல்லக் காத்திருக்கலாம்…

    சாம்பலிலிருந்து தலைசிலுப்பிக்கொண்டு எழுவதற்காய்
    ஒரேயொரு மழைத்துளியின் முத்தத்திற்காக
    ஊசிமுனை விதையொன்று தவத்தில் இருக்கலாம்…

    என்றெல்லாமா நம்பி வந்தாய்!
    இத்தனை வெகுளித்தனம் தேவதைக்குப் பொருந்துமா?

    இல்லை, ஒருவேளை
    இன்னும் பதறாமல் இருக்கும் பலிபீடத்தில்
    அங்கும் இங்குமாய் மல்லாந்திருக்கும்
    காதல் என்னும் பேதைமையைப்
    பார்வையால் திரட்டிப் படையலிட வந்தாயா?
    யாருக்கு?!

    முடிவில்லாத ஒரு முறிவு
    முயற்சியின்றிக் கிடக்கிறது
    எதனாலோ தூண்டப்பட்டு, அல்லது
    எதையோ தூண்டுவதற்கு
    முதலொன்று வந்து
    முன்னே நிற்கிறது

    வெற்றிகாண முடியாத வெறுமையும்
    தோல்வியறியாத முழுமையும்
    எதிரெதிரே நிற்கின்றன
    என்ன நடக்கும் என்பது
    எழுந்து இறங்கிச் சென்ற இறைவன்
    ஏறிவந்தாலாவது தெரியுமா?

     

    Share
  • நீயிருக்கிறாய்

     

                                                                                                  உ

                                    ஶ்ரீராமஜெயம்

       

     தமிழ்த்தேனீ

    rama-1

    நீயிருக்கிறாய் எங்கும் நீயிருக்கிறாய்

    நீ இருக்கும் இடத்திலேயே தானிருக்கிறாய்

    நீ இருக்கிறாய்  நீக்கமற எங்கும்

    நிறைந்திருக்கிறாய்

     

    தாயிருக்கும் இடத்திலெல்லாம் நீயிருக்கிறாய்

    சேயிருக்கும் இடத்திலும் நீயிருக்கிறாய்

    தீயிருக்கும் இடத்திலேயும் நீயிருக்கிறாய்

    காயிருக்கும் இடத்திலும் நீயிருக்கிறாய்

    கனிந்திருக்கும்  பழத்திலும் நீயிருக்கிறாய்

    மரத்துக்கும்  விதையாக விதைக்குள் மரமாக

    நீயிருக்கிறாய் எங்கும் நிறைந்திருக்கிறாய்

    மலைக்குள்  குழம்பாக நீயிருக்கிறாய்

    மலைமேல் பனியாக நீயிருக்கிறாய்

    மண்ணுக்கு உரமாக  விண்ணுக்கு மழையாக

    கண்ணுக்கு இமையாக  இமைக்குள் கண்ணாக

    எண்ணுக்கும் எழுத்துக்கும் இலக்கணமாய்

    இலக்கணத்தின்  இலக்கியமாய் இலக்கியத்தில்

    இலக்கணமாய் எக்கணமும்  மறையாத

    மறைபொருளாய் கண்ணுக்குத் தெரியாமல்

    நீயிருக்கிறாய் மறைந்தே இருந்தாலும்

    பிறையாய்த் தோன்றி நிலவாய் ஒளிர்ந்து

    பிழம்பாய்த் தோன்றி கதிராய் மலர்ந்து

    கதிரவன் போலே மறையாய் ஒளிர்ந்தே

    நீயிருக்கிறாய் எங்கும் நிறைந்திருக்கிறாய்

    பாவுக்குள் கருவிருக்கும் பூவுக்குள் தேனிருக்கும்

    தாய்மையெனும் பாலிருக்கும் பாலுக்குள் நெய்யிருக்கும்

    தாய்மையனும் மெய்யிருக்கும்  தாய்  போல அன்பிருக்கும்

    மாந்தர் இதயத்திலே நீயிருக்கிறாய் என்றும் நிறைந்திருக்கிறாய்

     

     

    நீரிருக்கும் இடத்திலும் நீயிருக்கிறாய்

    நிலம் இருக்கும் இடத்திலெல்லாம் நீயிருக்கிறாய்

    வேருக்குள் நீராக நீருக்குள் வேராக

    யாருக்கும் தெரியாமல் உயிருக்கும் 

    உயிராக  நீயிருக்கிறாய்

    நிலமில்லா வானத்திலும் நீயிருக்கிறாய்

    வானிலா இல்லாத நிலத்திலும் ஒளியாக

    ஒளியிலா இருளிலும்  இருளாக ஒளியாக

    ஒளிர்கின்ற இருளாக  இருளகற்றும் ஒளியாக

    எல்லாமே நீயாக  இல்லாமல் இருக்கிறாய்

    எங்கும் நிறைந்திருக்கிறாய்

     

     

    வேற்று மொழியானாலும் வேற்று மதமானாலும்f82186c1-6ed6-48a5-b65e-16efdbece450_S_secvpf

    வேற்று இனமானாலும்  வேற்றுமை இல்லாமலே

    காற்றிருப்பதைப் போலே நீயிருக்கிறாய்

    காற்றோடு காற்றாகக் கலந்திருக்கிறாய்

    காணும் உயிர்க்கெல்லாம் நீக்கமற நிறைந்தே

    ஊணிலும் உயிரிலும் போக்குவரத்தாய்

    மூச்சுக் காற்றாக. எங்கும் நிறைந்திருக்கிறாய்

    பேச்சாக சொல்லாக செயலாக விளைவாக

    அடிப்படையின் அணுவாக அணுவைக்  கூறிட்டுப்

    பிளந்தாலும்  பேரணுவாக தீப்பிழம்பான உருவத்தில்

    நீயிருக்கிறாய் எங்கும் நிறைந்திருக்கிறாய்

     

    இல்லையென்றே சொல்வோர்க்கும் இல்லாத

    இடமில்லை என்போர்க்கும் இதயத்திலே ஆழ்ந்து

    நீயிருக்கிறாய்  எங்கும் நிறைந்திருக்கிறாய்

    பொல்லாதவர்க்கும்  நல்லவர்க்கும் நடுநிலையாளருக்கும்

    சொல்லாமல் கொள்ளாமல்  உள்ளுக்குள்ளே ஆழ்ந்து

    நீயிருக்கிறாய் எங்கும் நிறைந்திருக்கிறாய்

    கல்லுக்குள் தேரை போல் நீயிருக்கிறாய்

    தேரைக்கும் உணவாக  நீயிருக்கிறாய்

    நீயிருக்கிறாய் எங்கும் நிறைந்திருக்கிறாய்

    கல்லாக வடித்தாலும் கவனமாய்ப் படித்தாலும்

    உள்ளார்ந்த உணர்வாய் நீயிருக்கிறாய்

    எங்கும் நிறைந்திருக்கிறாய்

     

    அன்புடன்

    தமிழ்த்தேனீ

     

    Share
  • திருமால் திருப்புகழ் (106)

     

    கிரேசி மோகன்

    Govinda. Acrylic on paper. Keshav
    Govinda. Acrylic on paper. Keshav

    ————————————————————————————————————
    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)
    ——————————————————–
    ‘’கண்ணன் வெண்பாக்கள்’’
    —————————————————–
    கீதைக் கடமையைக், கண்ணன் மறந்துகாதல்,
    ராதைப் பலனை எதிர்ப்பார்த்து, -போதைப்,
    படபடப்பில் பார்க்கின்றான், பாவை வரவுக்(கு)
    அடகடவு ளேயென்ன திது….(142)

     

    Govinda. #krishnafortoday Keshav
    Govinda. #krishnafortoday
    Keshav

    ஹரிச் சுவடி
    —————-

    அந்தரி அண்ணா கோவிந்தா
    ஆவுடை அப்பா கோவிந்தா
    இந்திர லோகம் கோவிந்தா
    ஈ கொசு எனக்கு கோவிந்தா
    உந்தன் மலையில் கோவிந்தா
    ஊர்வேன் புழுவாய் கோவிந்தா
    எந்த நாளுமே கோவிந்தா
    ஏகாந்த சேவை கோவிந்தா
    ஐந்து பொறிகட்கு கோவிந்தா
    ஐயமிட்டிடு கோவிந்தா
    ஒன்றி உரைப்போம் கோவிந்தா
    ஓம் நம நாரண கோவிந்தா….(143)

    கேசவ் சாக்லேட் கிருஷ்ணா ஓவியம் பார்த்து
    —————————————————————————-

    இடைப்பிள்ளை உந்தன், இசையில் மயங்கி,
    மடிப்பால் நிலத்தில் மணக்க, -கடைக்காலை,
    கன்றென எண்ணிக், கறவை வருடிட,
    நின்றிடென் நெஞ்சில் நிலைத்து….(144)

     

    இப்போ(து) இதுவென்று, அப்போ(து) அதுவென்று,
    எப்போ துமலைந்தேன் எம்பிரானே, -தப்பேதான்,
    ஒப்பில்லா அப்பனே, ஒப்புக்கொள் கின்றேன்நான்,
    துப்பில்லாத என்னைத் துலக்கு….(145)

    இல்லா ததைத்துரத்தி, செல்லா ததைச்சேர்த்து,
    பொல்லா தவனென்ற பேர்வாங்கி, -நில்லாது,
    விட்டிலென மாயா, வெளிச்சத்தில் வீழாது,
    விட்டலிருள் வண்ணன்தாள் வீழ்….(146)blogger-image-564804638

    காமியானாய் ராதைக்கு, நேமியாவோய் ராட்சசர்க்கு,
    பூமியாவாய் போற்றும் அடியார்க்கு, -மாமியானாய்,
    சாமிநாத ஸ்வாமிக்கு(வேலர்க்கு), நாமிருவர் சந்தித்தால்,
    ஏமிரா நீயார் எனக்கு….(147)

    காதலில் ராதையைக், காண ரகசியம்,
    சீதையை மீட்க அவசரம், -கோதையைப்,
    பெண்ணெடுக்கப் போகையில், பின்னடைந்தீர், பக்தியில்
    பெண்ணுருகும் பாசுரம் கேட்டு….(148)

    கலிமுடிவில் ஓரடியை ஆலிலையில் உண்டாய்
    பலிமுடியில் வேறடியை வைத்தாய் -தெளிவடைய
    நூற்றிடுவேன் வெண்பாக்கள் நீர்வண்ணா வாழ்த்திடுவாய்
    ஈற்றடி யாக இருந்து….(149)

    ———————————————————————————————————————–

    படங்களுக்கு நன்றி :

    http://kamadenu.blogspot.in/2014_03_01_archive.html

     

    Share
  • நானும் நீயும்

    இசைக்கவி ரமணன்

    1303925-bigthumbnail
    நான் கொடுக்கவுமில்லை
    நீ எடுக்கவுமில்லை
    எந்தன் இதயத்தில்
    உந்தன் இடம்

    தானும் தானுமாய் இருந்தது
    நானும் நீயுமாய்ப் பிரிந்தது
    தேனும் பாலுமாய்க் கலந்தது
    வானும் வானுமாய் இணைந்ததோ?

    கிழக்கு ஜன்னல் வானமும்
    மேற்கு ஜன்னல் வானமும்
    மொட்டை மாடி வானத்தில்
    கைகுலுக்கி முத்தமிட்டுக்
    காணாமற்போய்த் தானானதோ?

    இல்லை. அப்படி இல்லை இன்னும்.

    இறுகத் தழுவிக்கொள்ளும் போதெல்லாம்
    இடம் மாறுகின்றன இதயங்கள்
    இதனால்தான்
    இழந்ததாகவும் நுழைந்ததாகவும் அடைந்ததாகவும்
    ஏதேதோ உணர்வுகளும் விழைவுகளும்
    எப்போதும் தோன்றிக்கொண்டே இருக்கின்றன

    ஒன்று, தன்னை
    உணரத்தான்
    ஒன்றுபோல் இரண்டாய்
    இரண்டுபோல் ஒன்றாய்த்
    தானே மயங்கும் மாயத்தில்
    தயக்கமின்றித் தலைப்பட்டது

    சத்தியத்திற்குப் பாதைகள் கிடையாது, அந்த
    சந்நிதிக்குக் கதவுகள் கிடையாது, இது
    தத்துவமில்லை தரிசனம் என்பதைக்
    காதலைப்போல் வேறெதுவும் காட்டித் தராது

    என்னுயிரின் தேனூற்றே!
    எதிரே வா!
    இருமை இலாத அருமையை
    இருமையே உணர்த்தும் பெருமையை
    இவர்களுக்குக் காட்டுவோம் வா!
    இறுகத் தழுவியபடி
    இதழ்கள் அழுந்திப் பொருந்தியபடி
    இதயமொன்று இதயமொன்றில்
    இடைவிடாமல் தன்னைக் கரைத்தபடி……

     

    Share
  • காற்று வாங்கப் போனேன் 1&2

    -கே.ரவி-

    tumblr_l7s4lk4qtC1qc5cc5o1_500

    புழுக்கம் தாங்கவில்லை, உஸ் அப்பா! தோட்டத்தில் சென்று அமர்கிறேன். அப்பாடா, ஜில்லென்று ஒரு காற்று (‘காதல்’ இல்லை) என்னைத் தீண்டியது. இல்லை, சீண்டியது. ‘என்ன ஓய், கவிதை வேணுமா?’

    ஏனோ தெரியவில்லை, கவிதையிடம் எனக்கு அப்படியோர் ஈடுபாடு! வெறி! ஆங்கிலத்தில் சொன்னால், an obsession. ஏன்? காரணம் புலப்படவில்லை. என்ன விட்ட குறை தொட்ட குறையோ!

    சிந்தித்துப் பார்த்தால் கவிதையால் பெரிய சமூகப் பயன் இருப்பதாகத் தெரியவில்லை. ஏதோ ஒரு பொழுதுபோக்குச் சாதனமாகவே கவிதை பெரும்பாலும் பயன்படுவதுபோல் தோன்றுகிறது.

    இன்னும் சற்று அணுகிப் பார்த்தால் மனத்துக்கு ஒர் ஆறுதல் அளிப்பதாக, அல்லது, மனத்தைப் பண்படுத்துவதாக, இப்படி வேறு சில பயனுள்ள பணிகளைச் செய்யும் சாதனாமாக அது தெரியலாம். இதெல்லாம் என் கவிதைப் பித்துக்குக் காரணமாக இருக்க முடியாது.

    கவிதை எனக்குப் பயன்படுகிறது என்பதை விட, அதை நான் பயன்படுத்திக் கொள்கிறேன் என்பதை விட, ஒரு கருவியாகக் கவிதை என்னைப் பயன்படுத்திக் கொள்கிறதோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. கவிதையை ஒரு சாதனமாகவோ, வாகனமாகவோ என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. என்னை ஆட்கொண்ட ப்ரபஞ்ச சக்தி அது என்றே நம்புகிறேன். “நம்புவதே வழி என்ற மறைதனை நாமின்று நம்பி விட்டோம்” என்பது பாரதி வேதம்.

    மீண்டும் அறிவு குறுக்கிடுகிறது. அது சொல்கிறது: ‘இதெல்லாம் ஒருவித மாயா வாதம். ஆங்கிலத்தில் delusion என்பார்களே அதை போன்ற ஒரு மனநோய்.’

    அறிவு ஆயிரம் சொல்லும். அதனால்தான் அதைச் சிற்றறிவு என்கிறோம். அதைக் கடந்து போனால்தான் பேறறிவாகிய அருட்கடலில் நீந்த முடியும். கவிதை அந்தப் பேரறிவோடு சம்பந்தப்பட்டது. இதுவும் என் நம்பிக்கை!

    எப்படியாவது தன் உணர்வுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற துடிப்பே கவிதை எழுதத் தூண்டுகோல் ஆகிறது. அருகிலோ, எதிரிலோ இருக்கும் நபரிடம் தன் வியப்பையோ, சோகத்தையோ, சினத்தையோ, விரக்தியையோ ஒருவன் மிக எளிதாகப் பேசும் மொழியிலேயே பகிர்ந்து கொண்டுவிட முடிகிறது. அருகில், அல்லது, எதிரில் இல்லாத நபர்களுடனும் அதைப் பகிர்ந்து கொள்ள அவன் ஆசைப்பட்டால் அதைப் பிறகு படித்துப் பார்க்கக் கூடிய வகையில் எழுதி வைக்க நேரிடுகிறது. அச்சுத் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப் படாதபோது, எழுதி வைப்பவற்றைத் தக்க முறையில் பாதுகாக்க வசதிகள் இல்லாத போது, தான் சொல்வதைக் கேட்பவர் மனப்பாடம் செய்து அப்படியே பிறருக்குச் சொல்லக் கூடியவாறு சொல்லும் வழக்கம் உண்டாயிற்று. அதற்குச் செய்யுள் நடையே உதவியது.

    பேசும் மொழிகளாகவே இருந்துவிட்ட பல மொழிகளின் நடுவே, செய்யுள் மொழியாக உருவெடுத்ததால்தான், நன்றாகச் செய்யப்பட்டது என்ற பெயர் சம்ஸ்க்ருதத்துக்கு ஏற்பட்டதோ? பேச்சே செய்யுள் நடையில் அமைந்த மொழியாக வளர்ந்ததுதான் தமிழோ?

    அந்த விசாரணையை விட்டுவிடுவோம். மேலே சொன்னது ஓரளவு செய்யுள் தோன்றிய வரலாற்றின் அடிப்படையாக இருக்கக் கூடும். ஆனால், கவிதை . . . ! அதன் கதை வேறு!

    இந்தக் கணத்தில், என் மனத்தின் அடித்தளத்தில், “மனிதன் என்பவன் தெய்வமாகலாம்”, என்ற பழைய திரைப்பாடல் மெட்டில், “செய்யுள் என்பதும் கவிதை ஆகலாம்” என்று தொடங்கும் ஒரு முழுப்பாட்டு ஒலிக்கிறது. ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

    “சொல்லும் சொல்லும் சேரும் போது கானமாகலாம்
    சொல்கடந்து செல்லும் போது மோனமாகலாம்
    சொல்மலர்ந்து சுடரெழுந்து ஞானமாகலாம்
    செய்யுள் என்பதும் கவிதை ஆகலாம்”

    “செய்யுள் என்பதும்” என்பதில் உள்ள அந்த உம்மைக்கு எத்தனை உம்மா வேண்டுமானாலும் கொடுக்கலாம். என்ன அழுத்தம்!!

    கவிதை பற்றிச் சிந்தித்து ஒரு கட்டுரை எழுதும்போது இதென்ன குறுக்கீடு? அந்தப் பாட்டையே முணுமுணுக்கும் மனத்தை அடக்க முல்கிறேன். அட, மனத்தின் ஒரு மூலையில் எங்கோ ஒரு கேலிச் சிரிப்பொலி வேறு கேட்கிறதே!

    மன்னித்துக் கொள்ளுங்கள், இந்த அறிவு ரீதியான முயற்சியின் நடுவே ஒரு பாடல் குறுக்கிட்டது போல், வேடிக்கையான காட்சி ஒன்று, மனத்திரையில்தான், இப்பொழுது குறுக்கிடுகிறது.

    1642141-bigthumbnail

    உடல் பிரிந்து வெறும் ஆவியாக, (அப்படித்தானே நாம் சொல்லாக்கம் செய்து கொண்டிருக்கிறோம்!), திரிந்து கொண்டிருக்கும் ஓருயிர் (?), வான்விளிம்பில் தோன்றும் வர்ணஜாலங்களில் தன் நெஞ்சம் பறிகொடுத்து ( ஆவிக்கு நெஞ்சம் உண்டோ?), எப்படியாவது தன் வியப்பையும் பரவசத்தையும் வெளிப்படுத்தத் துடிக்கிறது. அது ஆவியா ஏதாவது தேவதையா? கந்தர்வக் கன்னியா? (எப்படி நான் அதைப் பெண்பால் என்று தீர்மானித்தேன்? என் பெண்ணீர்ப்புச் சக்தியின் தன்முனைப்பே காரணமோ!!!). அதே கணத்தில் பூமியில் நான் வானத்தின் அழகை ரசித்தபடி அதில் மனம் பறிகொடுத்து, மெய்மறந்த நிலையில் இருக்கிறேன். என் துடிப்பும், அந்தத் தேவதையின் துடிப்பும் ஓரளவு ஒரே அதிர்வு நிலையில் ஸ்ருதி சேர்கிறது. என்ன ஆச்சர்யம்! பாடலொன்று ( அடடா, மீண்டும் பாடலா?) குபீரென்று என் உட்செவியில் ஒலிக்கிறது. அதை உருவாக்கியது அந்தத் தேவதையா, நானா, வானா? யார் இதைத் தீர்மானிப்பது? பாடல் முண்டியடித்துக் கொண்டு வருகிறது:

    “நானும் அந்த வானும் இங்கே நந்த வனத்துத் தோழிகள்
    நாளும் இரவும் ஒளியும் நிழலும் நாங்கள் உருட்டும் சோழிகள்”

    யாரோடு யாரைப் பகிர்ந்து கொள்ள யார் பாடும் பாடலிது?

    அறிவைக் கொண்டு சொற்கள் தேடி அடுக்கிச் செய்யும் செய்யுள்கள் வேறு, கவிதை வேறு. அறிவுக்கு உருவாக்கும் ஆற்றல் கிடையாது. கற்பனையின் தனிப்பட்ட சக்தி அது. அறிவு ஆக்கும் கருவி இல்லை. காக்கும் கருவி. “அறிவு அற்றம் காக்கும் கருவி” என்பதே வள்ளுவர் வாக்கு. “அறிவினால் ஆகுவதுண்டோ?” என்பதும் வள்ளுவர் கேள்வி. எனவே அறிவு ஆக்கும் கருவி இல்லை. அதனால்தான் அதைச் சிற்றறிவு என்கிறோம். பேரறிவு என்ன என்றால் . . . ., அட, காற்று நின்று விட்டதே! மரம், செடி, கொடிகள் ஆடாமல் அசையாமல் மெளனத்தை அடைகாக்கின்றன. காற்று மீண்டும் வரக்கூடும், வரும். காத்திருக்கிறேன்; வரட்டும், மேலும் எழுதுகிறேன், வந்தால்!

    கரவொலிகள் ஓய்ந்துவிடும் ராக்கா லத்தில்lean-against-the-wind-by-Radu-Voinea
    காதருகே வந்துசில கவிதை சொல்லிப்
    பறந்துவிடும் தென்றலைநீ பார்த்த துண்டா
    பாவனையாய் அதுசொன்ன மந்தி ரத்தை
    மறந்துவிட முடியாது என்றைக் கேனும்
    மனத்துக்குள் இடிமுழக்கம் செய்யும் அன்று
    கரவொலிகள் ஓய்ந்துவிடும் கண்ணீர் சூழும்
    கடலுக்கு நடுவிலொரு தீ உண்டாகும் – கண்ணீர்க்
    கடலுக்கு நடுவிலொரு தீயுண் டாகும்

    கவிதையொரு மனோதர்மம் கலைந்த கூந்தல்
    கற்பனைகள் சிறகடித்துப் பறக்கக் கண்டும்
    புவியெல்லாம் புதுமெருகு தோன்றக் கண்டும்
    புலப்படாது திடீரென்று நடுங்கும் நெஞ்சில்
    தவிக்கின்ற உணர்வுகளில் தனிமை யூற்றில்
    தாகத்தால் மனம்வரண்டு தளரும் போதில்
    சுருக்கென்று முள்குத்திச் சிரித்துக் கொள்ளும்
    சுவடுகளே தெரியாமல் விரைந்து செல்லும் – வந்த
    சுவடுகளே தெரியாமல் விரைந்து செல்லும்

    நேருக்குநேர் அதையும் பார்ப்ப தற்கு
    நிச்சயித்த விழிகளுடன் காத்தி ருந்தேன்
    கார்மேகம் நகர்கிறது கனவு காட்டிக்
    கள்ளநிலா மறைகிறது சாரல் வேறு
    யார்யாரோ வருகின்றார் ஓடு கின்றார்
    அதைமட்டும் காணவில்லை அந்த நேரம்
    இதயத்தைத் தூளாக்கும் சிரிப்புச் சத்தம்
    இருள்கிழிக்க வந்ததொரு வெட்டு மின்னல்
    உதிரத்தைச் சூடேற்றி என்னை நானே
    உறிஞ்சுகிற ஆவேசம் அதற்குப் பேர்தான்
    உன்மத்தம் உயர்கவிதை உணர்ச்சி போதை
    எங்குமே செல்லாத புதிய பாதை

    ஓசைகளின் விளிம்பினிலே ஊஞ்ச லாடும்
    உற்சாகம் உள்மனத்தின் இயக்க மெல்லாம்
    ஆசைகளாய்ப் பரிணமிக்கும் அர்த்த ஜாமம்
    அனுபவங்கள் மலர்கின்ற உதய காலம்
    புரியாத நுணுக்கங்கள் புலனா கின்ற
    புதுப்பார்வை உலகாளும் புலமை யோகம்
    தரிசனக் கடலாடி விட்டு வார்த்தைத்
    தறிகளிலே சிக்குண்டு தவிக்கும் பேதை
    உன்மத்தம் உயர்கவிதை உணர்ச்சி போதை
    எங்குமே செல்லாத புதிய பாதை

     

    காற்று வாங்கப் போனேன் – பகுதி 2

    போன பகுதியை எங்கே நிறுத்தினேன்? நான் நிறுத்தவில்லையே! காற்று நின்றது, கட்டுரையும் நின்றது. காற்றுக்கும் கவிதைக்கும் என்னய்யா சம்பந்தம்? பாடலாகவே வந்தது பதில்:

    மனமலரைத் தென்றல் வருடிவிடும் – ஒளி
    மகரந் தங்கள் சிதறிவிழும்
    தினமிது போல்சில கவித்துளிகள் – எட்டுத்
    திசைகளி லும்விழும் சுடர்ப்பொறிகள்

    (மனமலரை)

    கனவிலி ருந்தொரு துளிவிழலாம் – பல
    காட்சிக ளும்அதில் பதிந்திடலாம்
    ஒவ்வொரு துளியும் ஒருவிதை யாய்ச்சில
    உள்ளங்க ளில்சென்று விழுந்திடலாம் – பே(ர்)
    அண்டங்க ளாயவை மலர்ந்திடலாம்

    (மனமலரை)
    வண்ணமும் வாசமும் போலல்ல வோநம்
    எண்ணமும் கற்பனையும்
    வண்டுக ளாய்ப்பல வார்த்தைக ளைமன
    வாசலில் கொண்டுவரும் – தேன்
    கவிதைகள் மொண்டுதரும்

    (மனமலரை)
    அடிப்படை யில்நாம் ஓருயிரே – வெளி
    அதிர்வுக ளில்பல வடிவங்களே
    என்குரல் உந்தன் உயிர்த்துடிப்பே
    எதிரொலித் தாலதில் தோய்ந்துவிடு – உன்னை
    ஏந்திக்கொண் டாலதில் சாய்ந்துவிடு

    (மனமலரை)

     

     

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்? – 9

    – சு.கோதண்டராமன்

    எல்லாத் தேவர்களும் ஒன்றே

     

    நாமம் பல்கோடி ஓர் உண்மைக்கு உள என்று
    நான்மறை கூறிடுமே- ஆங்கோர்
    நாமத்தை நீருண்மை என்று கொள்வீரென்று அந்
    நான்மறை கண்டிலதே   
    -பாரதி

     

     

    vaedam

    ரிக் வேதத்தில் ஒவ்வொரு தேவருக்கும் தனித் தனி அடையாளங்கள், சாதனைகள் கூறப்பட்டுள்ளன. ஆனாலும் பல இடங்களில் இந்தத் தனித் தன்மை மறைந்து விடுகிறது.

    பூமியை நிலைநாட்டியது, ஆகாயத்தைத் தூக்கி நிறுத்தியது, சூரியனை உலாவ விட்டது, நதிகளுக்குப் பாதை அமைத்துக் கொடுத்தது முதலான சாதனைகளைச் செய்தவர்களாக வருணன், இந்திரன் இருவரும் போற்றப்படுகிறார்கள். பூமியை நிலை நிறுத்தின சிறப்பு ப்ருஹஸ்பதி, ரிபுக்கள் மற்றும் அக்னியின் பெயராலும் பேசப்படுகிறது.

    விருத்திரனைக் கொன்றது இந்திரன் என்று பல இடங்களில் பேசப்பட்டாலும், விஷ்ணுவுக்கும் அதில் பங்கு உண்டு என்று கூறப்பட்டுள்ளது. அக்னி விருத்திரனைக் கொன்றதாகவும் கூறப்படுகிறது.

    வலனைக் கொன்று பசுக்களை விடுவித்தார் என்ற சிறப்பு ப்ரம்மணஸ்பதிக்கும் சொல்லப்படுகிறது, இந்திரனுக்கும் சொல்லப்படுகிறது. அந்தப் பெருமை ப்ருஹஸ்பதிக்கும் கொடுக்கப்படுகிறது.

    வாயுவின் குதிரைகளின் பெயர் நியுத். ஆனால் மருத்துகளுடைய குதிரைகளும், அக்னியின் குதிரைகளும், அஸ்வின்களின் குதிரைகளும் இந்திரனுடைய குதிரைகளும் நியுத்கள் என்று சில இடங்களில் கூறப்படுகின்றன.

    வருணன் இந்திரனுக்குரிய அத்ரிவ (இடியை ஆயுதமாகக் கொண்டவர்) என்ற பெயரால் அழைக்கப்படுகிறார்.

    ஸஹஸஸ் ஸூனு (வலிமையின் மைந்தன்) என்ற பெயர் அக்னிக்கு உரியது. ஆனால் இரு இடங்களில் இந்திரனுக்கும் இது வழங்கப்படுகிறது.

    ப்ரம்மணஸ்பதியைக் குறிப்பிடும் ப்ரம்மண: ராஜா (ஸ்தோத்திரங்களின் ராஜா) என்ற சொல்லால் இந்திரன் புகழப்படுகிறார். அது போல, அத்ரிபித் (மலைகளை உடைத்தவர்), விருத்திரனை வென்றவர், நகரங்களை அழித்தவர் என்ற இந்திரனின் சிறப்புகள் ப்ருஹஸ்பதிக்கும் கொடுக்கப்படுகின்றன.

    அக்னியும் சூரியனும் தனித் தனி தேவர்களாகப் பேசப்பட்டாலும் அக்னியைப் பற்றிப் பேசும்போது சூரியன் என்ற பெயரையும், சூரியனைப் பற்றிப் பேசும்போது அக்னி என்ற பெயரையும் பயன்படுத்துகிறார்கள்.

    காலை நேரச் சூரியனின் பெயர் தான் ஸவிதா என்றாலும் இருவரும் தனித்தனியாகக் காட்டப்படுகிறார்கள். சூரியன் ஸவிதாவுக்கு சக்தி தருகிறார் என்கிறது ஒரு மந்திரம். [1]

    அக்னியைப் போற்றும்போது, நீயே இந்திரன், நீயே வருணன் என்கிறார்கள். உலகத்தைப் படைத்துக் காப்பவன் என்ற முழு முதல் கடவுள் தகுதியும் அவருக்குக் கொடுக்கப் படுகிறது.  இதே போல, இந்திரனைப் போற்றும்போது, நீயே விஷ்ணு, நீயே அக்னி என்று பேசுகின்றனர். இவ்வாறு தேவர்களுக்கிடையேயான வேறுபாடுகள் மறைகின்றன. 9.5 இல்  ஒரு சூக்தம் முழுவதும் இந்திரன், அக்னி, பாரதி, இலா, ஸரஸ்வதி முதலான பல தெய்வங்களுடன் சோமன் ஒன்றுபடுத்தப்படுகிறார்.

    ஒரு கட்டத்தில் எல்லாத் தேவர்களும் ஒன்றே என்று கூறுகின்றனர். எனவே பெயர்கள் என்பது பெயரளவுக்குத் தான். இதை தெளிவாகவே சொல்கிறது கீழ்க் கண்ட மந்திரம்.

    இந்திரன், மித்ரன், வருணன், அக்னி என்று அறிஞர்கள் பல விதமாக அழைக்கிறார்கள். உள்ளது ஒன்று தான். [2]

    தேவர்களுக்கெல்லாம் மேலான ஒரு சக்தி உள்ளது என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள் என்பதைக் கீழே வரும் மந்திரங்கள் காட்டுகின்றன.

    விண்ணையும் மண்ணையும் பரப்பியிருப்பதும், இரவு பகலை உண்டாக்குவதும், அசையும் பொருளெல்லாவற்றையும் தன்னுள் அடக்கி உறங்கச் செய்வதும், நதிகளைப் பாயச்செய்வதும், சூரியனை உதிக்கச் செய்வதுமான ஸத்யமான வார்த்தை என்னைக் காப்பாற்றட்டும். [3]

    தேவர்கள் எந்த மூலப் பொருளைக் கொண்டு இந்த மண்ணையும் விண்ணையும் படைத்தார்கள்? இவை உறுதியாகவும் முதுமை அடையாததாகவும் உள்ளன. இவை பல காலை நேரங்களைப் பார்த்துள்ளன. [4]

    அல்ல, அல்ல. இந்தத் தேவர்களுக்கெல்லாம் மேலான ஒன்று உள்ளது. அவனே மண்ணையும் விண்ணையும் தாங்குகிறான். [5]

    நமது தந்தையும் பாதுகாவலனும் அனைத்தையும் படைத்தவனும் எல்லா இடங்களையும் உயிர்களையும் அறிபவனும் தேவர்களுக்குப் பெயர் சூட்டியவனும் ஒருவனே உண்டு. எல்லா உயிர்களும் அறிந்துகொள்ள அவனிடமே செல்கின்றன. [6]      

    ரிஷிகளின் பாடல்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். சில சாதாரண நிலையில் பாடப்பட்டவை. சில அருள் நிலையில் பாடப்பட்டவை. மற்றவை பேரருள் நிலையில் பாடப்பட்டவை. ரிஷிகள் காணும் பொருளை எல்லாம் தேவனாகக் காணும்போது அருள் நிலையில் உள்ளனர். அதிலேயே தோய்ந்து பேரருள் நிலைக்குச் செல்லும் போது  அவர்கள் அந்தத் தெய்வத்தையே முழு முதல் கடவுளாகக் காண்கிறார்கள். அதனால் எந்தத் தெய்வத்தைப் பாடினாலும் ‘அவர் பிறக்கும்போதே முதல்வர். இவரே உலகின் மறு உரு’ என்று போற்றுகின்றனர்.

    அக்னியே, நான் எந்தத் தெய்வத்தை அழைத்தாலும், நீயே அனைத்துத் தேவர்களின் தன்மையையும் அடைகிறாய் என்ற ரிக் 1.69.6,  யார் என்னை எப்படி வழிபட்டாலும் நான் அவர்களுக்கு அவ்விதமே அருள் செய்கிறேன் என்ற பகவத் கீதை 4.11இன் அடிப்படையாக உள்ளது.

    பரம்பொருளின் தன்மைகள் யாவை?

    ரிக் 10.54 மற்றும் 10.55 பரம்பொருளுக்கு இந்திரன் என்ற பெயர் அளித்து அவருடைய நான்கு மாவலிமைகளைக் குறிப்பிடுகிறது.
    1 கடந்த காலம் வருங்காலம் யாவற்றிலும் வியாபித்துக் காலம் கடந்து நிற்றல்,
    2 விண் மண் எல்லாவற்றிலும் வியாபித்து இடம் கடந்து நிற்றல்,
    3 சூரியன் முதலான எல்லாப் பொருளையும் படைத்தல்,
    4 புரிந்து கொள்ளப்படாத செயல்பாடுகள் கொண்டிருத்தல்.

    இந்தக் கடைசி வலிமைக்கு எடுத்துக் காட்டாக, முதியவன் இருக்க  இளைஞன் சாகிறான், நேற்று இருந்தார் இன்று இல்லை என்று ரிஷி கூறுகிறார்.  பரம்பொருளை இந்திரன், அக்னி, வருணன் என்று எந்தப் பெயரில் வேண்டுமானாலும் அழைக்கலாம் என்பது வேதம் தரும் சுதந்திரம். இந்தக் கருத்தைப் பூதக் கண்ணாடியால் பார்த்த நம் முன்னோர்கள் அதில் விநாயகன், சிவன், வேலன், பார்வதி, திருமால் என்ற பெயர்களைக் கண்டனர். பாரதி இன்னும் பெரிய பூதக் கண்ணாடியால் பார்க்கிறார். அங்கு அவருக்கு காளி, சாத்தன், மாடன், அல்லா, யெஹோவா என்ற பெயர்களும் தெரிகின்றன.

    விநாயக தேவனாய் வேலுடைக் குமரனாய்
    பிறநாட்டிருப்போர் பெயர்பலகூறி
    அல்லா யெஹோவா எனத் தொழுது இன்புறும்
    தேவரும் தானாய் திருமகள் பாரதி
    உமை எனும் தேவியர் உகந்த வான்பொருளாய்
    உலகெலாம் காக்கும் ஒருவனைப் போற்றுதல்

    ஆதிமூலமே அனைத்தையும் காக்கும்
    தேவதேவா சிவனே கண்ணா
    வேலா சாத்தா விநாயகா மாடா
    இருளா சூரியா இந்துவே சக்தியே
    வாணீ காளீ மாமகளேயோ
    ஆணாய்ப் பெண்ணாய் அலியாய் உள்ள
    யாதுமாய் விளங்கும் இயற்கைத் தெய்வமே
    வேதச்சுடரே மெய்யாங் கடவுளே

    பாரதியின் சொல்லும் வேதம் அன்றோ!

     

     

     

    குறிப்புகள்:
    1    7.45.2.
    2    1.164.46
    3    10.37.2.
    4    10.31.7
    5    10.31.8
    6    10.82.3

     

     

     

     

     

    படம் உதவி: http://srismartha.org/aboutUs.html, http://srismartha.org/images/s1.jpg

    Share
  • சூறையாடிவிட்டார்கள்!

    -எம். ஜெயராமசர்மா – மெல்பேண்

    ஏடுகளாய் இருந்தவற்றை எப்படியோ கண்டெடெடுத்து               firing the library
    நாடெல்லாம் நன்மைபெற நல்ல உள்ளம் விரும்பியதால்
    ஓடாக உழைத்துநிதம் உருப்படியாய்ச் செய்தமையே
    வாடாது நிற்கின்ற வகைவகையாம் நூல்களெலாம்!

    எத்தனையோர் உழைப்பினிலே இங்குவந்த புத்தகங்கள்
    எத்தனையோ மேதைகளை எமக்களித்து நின்றதுவே
    நித்தமும்நாம் படிப்பதற்குப் புத்தகமாய் இருக்குமவை
    எத்தனையோ சந்ததிக்கு இருக்கின்ற பொக்கிஷமாம்!

    நூல்நிலையம் இல்லையென்றால் நுண்ணறிவு வளராது
    நூல்நிலையம் அருகிருந்தால் தேடிடலாம் அறிவையெலாம்
    பாவலரும் நாவலரும் பலபேரும் உருவாக
    நூல்நிலையம் காரணமாய் அமைந்ததனை அறிந்திடுவோம்!

    யாழ்ப்பாண நூலகத்தை யாருமே மறக்கார்கள்
    வேண்டிய புத்தகத்தை விரைவுடனே தந்துநிற்கும்
    தென்கிழக்கு ஆசியாவின் சிறந்தவொரு நூலகமாய்ச்
    சிறந்தோங்கி நின்றதனைத் தேசமே தானறியும்!

    எத்தனையோ வகையான புத்தகங்கள் இருந்ததங்கே
    அத்தனையும் படிப்பவர்க்கு அருமருந்தாய் அமைந்தப்போ
    சொத்தாக மதித்துமே புத்தகத்தைக் காத்தார்கள்
    சுவையறியா அரக்கர்களோ சூறையாடி விட்டார்கள்!

    கற்றுணர்ந்தோர் வாழ்ந்தவிடம் கல்விக்கூடம் நிறைந்தஇடம்
    கண்ணியத்தின் உறைவிடமாய்க் கருத்திலே நின்றஇடம்
    பெற்றவர்கள் பிள்ளைகளைப் பெரிதாக்க நின்றஇடம்
    பித்தர்களின் வெறியாலே சொத்தையெல்லாம் இழந்தார்கள்!

    கோவிலுக்கு நிகராகக் கொண்டாடும் நூலகத்தைக்
    கொடுங்கோலர் பலர்சேர்ந்து கொளுத்தியே விட்டார்கள்
    தாவீது எனும்சாது தன்னளவில் தாங்காது
    ஓய்வெடுத்து நின்றதுவே உலுத்தர்களின் செயலாலே!

    நூல்நிலையம் எரித்தவர்கள் நூறுமுறைப் பணிந்தாலும்
    தலைசிறந்த படிப்பாளி தாவீது வருவாரா?
    எரித்தவர்கள் மனத்தினிலே இரக்கமே வாராதா?
    அரக்க குணம் இன்னுமே அழியாமல் இருக்கலாமா?

     

    Share
  • தொப்புள் கொடி அடம்பன் கொடியாகுமோ?

    -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

    வாழலாம் 
    சாதி, மத, பேதம் மறந்து 
    மனிதநேயம்!

    ஒவ்வொரு தொப்புள் கொடிகளும் 
    அடம்பன் கொடியாகுமோ?
    நீளும் வேரின் 
    தொடர்பை ஒட்டி!

    விண்ணுக்கும் மண்ணுக்கும் 
    இடைவெளி 
    தொட்டுப் பார்க்க முடியாத தூரமாய்த் 
    தொடர…

    வாழும் 
    மனிதர்களுக்கிடையே மட்டும்
    நீளும்
    வெறித்தனமான செயற்பாடுகள்…!

     

    Share