Blog

  • நெல்லைத் தமிழில் திருக்குறள் – 61

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – 61

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் 

    61)  மடி இன்மை

    குறள் 601:

    குடியென்னுங் குன்றா விளக்கம் மடியென்னும்
    மாசூர மாய்ந்து கெடும்

    ஒருத்தன் பொறந்த குடி ங்குத மங்காத விளக்கு அவனோட மாச்சலால(சோம்பல்) ஒளி மங்கி கெட்டுப் போவும். 

    குறள் 602:

    மடியை மடியா ஒழுகல் குடியைக்
    குடியாக வேண்டு பவர்

    குடும்பத்த ஒசத்த விரும்புதவங்க மாச்சப்பட்டு இருக்காம உற்சாகமா முனஞ்சு செயல்படணும். 

    குறள் 603:

    மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
    குடிமடியுந் தன்னினு முந்து

    ஒழிச்சுக்கட்டவேண்டிய மாச்சல தங்கிட்ட வச்சிருக்கவனோட குடும்பம் அவனுக்கு முன்ன அழிஞ்சு போவும். 

    குறள் 604:

    குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
    மாண்ட உஞற்றி லவர்க்கு

    மாச்சப்பட்டு பாடுபாக்காம இருக்கவன் வாழ்க்கையில தப்புதண்டா செய்யுதது அதிகமாயி அவன் குடும்பப் பெரும அழிஞ்சு போவும். 

    குறள் 605:

    நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
    கெடுநீரார் காமக் கலன்

    கெடப்புல போட்டு காரியத்த செய்யுதது, அயத்துப் போகுத கொணம், மாச்சல், அளவுக்கு மீறி ஒறங்குதது இந்த நாலு கொணமும் கெட்டுப்போவணும் னு நெனைக்கவன் ஆசப்பட்டு ஏறுத தோணி ஆவும்.

    குறள் 606:

    படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
    மாண்பயன் எய்தல் அரிது

    நாட்ட ஆளுத தலைவனோட ஒறவு தானே வந்து சேந்துக்கிட்டாலும் மாச்சப்பட்டு சும்மா இருக்கவனுக்கு அதனால ஒரு உபயோகமில்ல. 

    குறள் 607:

    இடிபுரிந் தெள்ளுஞ்சொற் கேட்பர் மடிபுரிந்து
    மாண்ட உஞற்றி லவர்

    முனஞ்சி பாடுபாக்காம மாச்சப்பட்டு சும்மா இருக்கவன் வாழ்க்கைல மத்தவங்க இடிச்சுப்பேசி எளக்காரம் செய்யுத நெலமைக்கு வந்துருவான். 

    குறள் 608:

    மடிமை குடிமைக்கண் தங்கிற்றன் னென்னார்க்
    கடிமை புகுத்தி விடும்

    மாச்சப்படுதவன் நல்ல குடில பொறந்திருந்தாலும் அந்த கொணம் அவன பகையாளிக்கு அடிம போல ஆக்கி உட்ரும். 

    குறள் 609:

    குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
    மடியாண்மை மாற்றக் கெடும்

    ஒருத்தன் மாச்சல விட்டுப்போட்டாம்னா அவனுக்கும் அவன் குடும்பத்துக்கும் வந்த குத்தங்கொற வெலகிப் போயிடும்.

    குறள் 610:

    மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
    தாஅய தெல்லாம் ஒருங்கு

    கடவுள் அடியால அளந்த ஒலகத்தையெல்லாம் மாச்சப்படாம இருக்க ராசா சேந்தாப்ல அடைஞ்சுக்கிடுவான். 

    (அடுத்தாப்லையும் வரும்…)

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . . (301)

    -சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே! அன்பான வணக்கங்கள்.

    சரித்திர நிகழ்வுகளின் முக்கியமான திருப்பங்கள் நிகழும்போது அதற்குச் சாட்சியாக இருப்பது, ஒரு அபூர்வமான சந்தர்ப்பம். இது மறுக்கப்பட முடியாத உண்மை. இன்று நான் உங்களுடன் மனந்திறந்து கொண்டிருக்கும் இம்மடல் எனது 301 வது மடலாகும். என் வாழ்வின் பெரும்பான்மையான காலப்பகுதியை இங்கிலாந்து எனும் இந்நாட்டினிலே கழித்து விட்டேன் என்பதுவே உண்மை. மாணவனாக இங்கு வாழ்வைத் தொடங்கிய நான் இன்று ஒரு பேரக்குழந்தையைக் கண்டு விட்ட நிலையிலே முதுமை எனும் வாயிலினுள் கால்கள் பதித்து நிற்கிறேன். இங்கிலாந்திலிருந்து எனது மடல் எனும் இந்தத் தொடர் பத்தியின் நோக்கம் ஒரு நாட்டினிலே பிறந்து, மற்றொரு நாட்டின் தத்துப்பிள்ளையாக வாழும் ஒரு புலம்பெயர் மனிதனின் வாழ்வில் ஏற்படும் அனுபவங்களைப் பற்றியது. அவனது பார்வை எனும் கண்ணாடியினூடாகப் பார்ப்பது எப்படி இருக்கும் எனும் ஒரு காலப்பதிவேயாகும். எனது இந்த 44 வருட இங்கிலாந்து வாழ்க்கையில் நான் எதிர் கொண்ட பிரச்சனைகள் பல, நான் அடைந்த அனுபவங்கள் பல, என் கண்முன்னே நிகழ்ந்த உலக நிகழ்வுகள் பல. குறிப்பாக எனது தாய்மண்ணில் ஆரம்பித்த போர் இன்று முற்று முழுதாக முடக்கப்பட்டு போர்க்காலச் சூழலுக்கு அப்பாற்பட்ட ஒரு வாழ்வுக் காலத்தில் என் உடன்பிறப்புகள் வாழ்வினை எதிர்நோக்கும் ஒரு நிலையை காண்கிறேன். இப்போர்க்காலச் சூழல்கள் எனக்குக் கொடுத்த அனுபவச் செழிப்புகள், அதனால் நான் இழந்த பல தொப்புள்கொடி உறவுகள் எனப்பலவகையான நிகழ்வுச் சுழல்களுக்குள் அகப்பட்டு அதனால் கிடைத்த அனுபவச்சுழல்களுக்குள் உழன்று கொண்டிருக்கிறேன்.

    சுமார் 30 வருடகாலப் போர்க்காலச் சூழலில் எனது தாயக மண்ணின் உறவுகள் அவர்கள் எந்த இனத்தை, மொழியை, மதத்தைச் சேர்ந்தவர்களாயினும் அனுபவித்த சோகங்களும் இழப்புகளும் எண்ணிலடங்காதவை. அதன் நிழலைக் கூடத் தொட்டுப்பார்க்காத நிலையில் அவர்களின் அக்காலச்சூழலின் அரசியல் நிலைப்பாடுகள் பற்றி எந்தவிதமான கருத்துக்கூறும் உரிமையும் எனக்கில்லை என்பதுவே உண்மை. அதேசமயம் இங்கிலாந்து எனும் நாடு என்னைத் தனது பிள்ளையாகத் தத்தெடுத்து மாணவனாக நுழைந்த என்னை ஒரு தகவல், தொழில்நுட்ப பொறியியலாளனாக உயர்த்தி வைத்தது என்று கூறினால் அது மிகையாகாது. இங்கிலாந்தின் அரசியல் மாற்றங்கள் அன்று மாணவனாக இருந்தபோதும் இன்று ஒரு ஓய்வுபெற்ற பொறியியலாளனாக இருக்கும் போதும் நிச்சயமாக எனது வாழ்வின் பல நிலைகளில் தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது. அத்தாக்கங்கள் வெளிப்படையாக தெரியக்கூடிய வகையில் நிகழாது போனாலும் கூட மறைமுகமாக நிச்சயமான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. வாழ்வின் அன்றாடத் தேவைகளைத் தேடியோடும் நிலையில் இருக்கும் போது இவ்வரசியல் மாற்றங்கள் ஏற்படுத்தும் பாதிப்புகளைப் பற்றி ஆராயும் அளவுக்கு போதிய அவகாசம் இருக்கவில்லை. மேலோட்டமாக அவ்வப்போது செய்திகளின் மூலம் அறிந்து கொள்வதை விட மேலதிகமாக அதற்கப்பாற்பட்ட ஆராய்ச்சிகளில் ஈடுபடும் நிலையில் இருக்கவில்லை.

    இன்று நிலைவேறு !

    மனதில் படுவதை எழுத்தில் வடிப்பதை முழுமூச்சாக செயற்படுத்தி வரும் ஒரு வேளையிது. இப்போது இங்கிலாந்தின் மாற்றங்கள் ஒவ்வொன்றையும் கூர்மையாக அவதானிக்கும் தேவை ஏற்பட்டிருக்கிறது, அதற்கான அவகாசமும் கிடைத்திருக்கிறது. இதுவரை உங்களுடன் நான் பல நிலைகளில் இங்கிலாந்தின் அரசியல் மாற்றங்களை பல்வேறு காலகட்டங்களில் இம்மடல்கள் மூலமாகப் பகிர்ந்து வந்திருக்கிறேன். இன்று அதாவது 2019ம் ஆண்டு , செப்டெம்பர், 4ம்நாௐள் நிச்சயமாக நான் இங்கிலாந்து அரசியல் வரலாற்றின் ஒரு சரித்திர திருப்புமுனையில் இருப்பதாகவே உணர்கிறேன். இத்திருப்பம் ஒரு புலம்பெயர் தமிழன் எனும் வகையில் எனக்கு நேர்மறையான தாக்கத்தையா? அன்றி எதிர்மறையான தாக்கத்தையா? தரப்போகிறது என்பது காலத்தின் கைகளில்தான் இருக்கிறது. ஏனெனில் இன்று ஐக்கிய இராச்சியம் பெரும்பான்மையான வாக்குகளினால் எடுத்திருக்கும் முடிவானது ஐரோப்பிய ஒன்றியத்தின் சரித்திரத்தில் முதன்முறையாக நிகழ்க்கிறது. இதன் பின்விளைவு எப்படி இருக்கும் என்று சுட்டிக்காட்ட எந்த உதாரணமும் கிடையாது.

    சுமார் ஒரு மாதத்தின் முன் புதிய பிரதமராகத் தெரிவு செய்யப்பட்ட திரு.பொரிஸ் ஜான்சன் அவர்கள் சில அதிரடியான முடிவுகளை எடுத்திருக்கிறார். இம்முடிவுகள் அனைத்துப் பாராளுமன்ற அரசியலுக்குமே தாய் எனக்கருதப்படும் இங்கிலாந்து பாரளுமன்றத்தின் ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கியிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. ப்ரெக்ஸிட் எனும் நிகழ்வினை பிரதமர் பொரிஸ் ஜான்சன் கையாளும் முறையை ஐக்கிய இராச்சிய பாராளுமன்ற அங்கத்தினர்களில் பெரும்பான்மையினர் ஏற்றுக்கொள்ளவில்லை.

    எதிர்வரும் அக்டோபர் மாதம் 31ம் தேதி தம்மால் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு விலகல் உடன்படிக்கையை எட்டாத பட்சத்தில் எதுவித உடன்படிக்கையுமில்லாமல் விலகுவது உறுதி என்கிறார் எமது பிரதமர். ஒருக்காலும் இல்லை. விலகல் உடன்படிக்கை எட்டாவிடில் ஐக்கிய இராச்சியத்தின் பொருளாதாரம் எண்ண முடியாத அளவில் பாதிக்கப்படும். அதனால் உடன்படிக்கை இல்லாமல் விலக முடியாது எனும் கட்டளையைச் சட்டமூலமாக்குவதன் மூலம் பொரிஸ் ஜான்சன் அவர்களைப் கட்டிப்போட முனைகிறார்கள் பல பாராளுமன்ற உறுப்பினர்கள். பாராளுமன்றப் பெரும்பான்மையில் ஒரேயொரு அதிகப்படியான உறுப்பினர்களையே பிரதமர் பொரிஸ் ஜான்சன் அவர்களது கட்சி கொண்டிருந்தது. வட அயர்லாந்தின் அரசியல் கட்சியான டி.யூ.பி எனும் கட்சியின் 10 உறுப்பினர்களின் ஆதரவுடனேயே அரசுக் கட்டிலில் பொரிஸ் ஜான்சன் அமர்ந்திருக்கிறார். அக்டோபர் 31ம் தேதி  எங்கே தம்மைத் தமது வாக்கின்படி ஐக்கிய இராச்சியத்தை ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக முடியாமல் பாராளுமன்றப் பெரும்பான்மை கட்டிப் போட்டுவிடுமோ எனப் பிரதமர் அஞ்சினார்.

    என்ன காரணம் என்கிறீர்களா?

    அவரது கருத்துக்கு அவரது கட்சி பாரளுமன்ற உறுப்பினர்களிலேயே பலர் எதிரான நிலையைக் கொண்டிருப்பதே ! பளிச்சிட்டது அவருக்கு ஒரு யோசனை. ஒவ்வொரு வருடமும் பாரளுமன்றம் கோடை விடுமுறைக்காகக் கலைக்கப்படுவதுண்டு. மீண்டும் கூட்டப்படும் போது புதிய பாரளுமன்றத் தொடரில் அரசாங்கம் அத்தொடரில் எடுக்கப்போகும் நடவடிக்கைகளுக்கான திட்டங்களை இங்கிலாந்து மகாராணி பாராளுமன்றக் கூடத்தொடரைத் திறந்து வைத்து அறிபதுவே சம்பிரதாயம். கடந்த இரண்டரை வரிடங்களுக்கு மேலாக ரெக்ஸிட் எனும் சிக்கலைத் தீர்பது ஒன்றே அரசின் முன்னால் பிரதான செயற்பாடக் இருந்தது. இதன் காரணத்தினால் இம்மகாராணியாரின் திறப்பு வைபவம் நடைபெறாமல் இருந்தது. பிடித்துக் கொண்டாரே பொரிஸ் ஜான்சன்! விடுவாரா என்ன? கோடை விடுமுறையத் தொடர்ந்து செப்டெம்பர் 3ம் தேதி மீண்டும் பாராளுமன்றம் கூட்டப்படுவதாக இருந்தது. அதற்கு முன்னதாகவே தமக்கிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி இங்கிலாந்துப் பாராளுமன்றம் செப்டெம்பர் 9ம் தேதி தொடக்கம் அக்டோபர் 14ம் தேதிவரை இயங்காமல் முடக்கப்படும் என்று அறிவித்தார். இதற்குக் காரணமாக ஜனநாயகச் சம்பிரதாயப்படி புதிய பாரளுமன்றத்தொடரை மகாராணியார் திறந்து வைத்து , புதிய பிரதமரான தமது அமைச்சரவை இப்பாரளுமன்றக் கூட்டத் தொடரில் நாட்டின் நலன்கருதி எடுக்கப்போகும் செயற்பாடுகளை அறிப்பிப்பார் என்று கூறினார்.

    கொதித்தெழுந்தனர் எதிர்கட்சியினர். ஏன் அரசமைத்திருக்கும் கன்சர்வேடிவ் கட்சியின் பல பாராளுமன்ர அங்கத்தினர்களுமே அதிர்ச்சியும், ஆத்திரமுமடைந்தனர். பிரதமரின் இச்செய்கை ஜனநாயகப் பாராளுமன்ற பொறிமுறைக்கு எதிரானது என்றும், பிரதமர் ஒரு சர்வாதிகாரி போல் நடந்து கொள்கிறார் என்றும் குற்றம் சாட்டினர். “உடன்படிக்கையற்ற விலகலுக்கு” பாராளுமன்றம் ஒரு போதும் அனுமதிக்காது. பாராளுமன்றத்தை அக்டோபர் 14ம் தேதிவரை மூடி வைத்தால் , 31ம் தேதி விலகும் காலக் கெடுவினைத் தடைசெய்யும் அளவிற்கு அவர்களால் எதுவும் செய்ய முடியாது எனும் சாணக்கிய தந்திரத்தைப் பிரதமர் கையாளுகிறார் என்பதுவே அவர்களது குற்றச்சாட்டு. நாடு முழுவதும் பலபகுதிகளில் இதற்குக் கணிசமான எதிப்புக் கிளம்பியது. அசையவில்லை பிரதமர். நான் சொன்னது சொன்னதுதான் என்று விஜய் பாணியில் சொன்னார். உடன்படிக்கையுடனோ அன்றி உடன்படிக்கயற்றோ அக்டோபர் 31ம் தேதி விலகுவது உறுதி என்று சூளுரைத்தார்.

    சிறுபான்மை அரசாங்கம், அவர்களுக்கு இருக்கும் பெரும்பான்மையோ ஒன்றே ஒன்று. விடுவார்களா? எதிர்க்கட்சியினர். அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் பாராளுமன்றம் மறுபடியும் கூடும் நாளான 3ம் தேதிக்கு முன்னதாக ஒன்றுகூடித் திட்டம் தீட்டினார்கள். பொறிமுறை ஒன்ற வகுத்தார்கள். இங்கிலாந்து ஜனநாயகத்தின் ஒரு விழுதைப் பற்றிக் கொண்டார்கள். எதிர்கட்சி பாரளுமன்ற உறுப்பினர்களோடு அரசாங்கத்தைச் சேர்ந்த சுமார் 17 உறுப்பினர்கள் கைகோப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. செப்டெம்பர் 3ம் தேதி பாராளுமன்றம் கூடியது. 4ம் தேதி பாராளுமன்றச் செயற்பாடுகளை அரச நிர்வாகத்தினர் கையிலிருந்து பிடுங்கி பாராளுமன்ற அங்கத்தினர்கள் நடத்துவார்கள் எனும் மசோதா வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.அரசுக்கு எதிராக 328 வாக்குகளும், அரசுக்கு ஆதரவாக 307 வாக்குகளும் விழுந்தன. விளைவு இன்றைய பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் அரசாங்கத்தின் கைகளில் இருந்து எதிர்க்கட்ச்சியினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட உறுப்பினர்களின் கைகளுக்கு மாறியது. எதிர்க்கட்சியினர் “ஐரோப்பிய ஒன்றியத்துடன் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்துடன் ஏற்றுக் கொள்ளக்கூடிய உடன்படிக்கை எட்டாத பட்சத்தில் பிரதமர் அவ்வகையான உடன்படிக்கையான எட்டுவதற்கான கால அவகாசத்தினை ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து பெற வேண்டும்” எனும் பணிப்புரையை சட்டமாக்குவதற்கான பிரேரணையை முன்வைக்கிறார்கள்.

    இதற்கான பாராளுமன்ற வாக்கெடுப்பு செப்டெம்பர் 4ஆம் தேதி மாலை இடம்பெறும். இதிலும் அரசு தரப்பு தோல்வியடயும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாக்கெடுப்பில் அரசு தோல்வியடையும் பட்சத்தில் தான் பொதுத்தேர்தலை முன்னெடுக்கப்போவதாக 3ஆம் தேதி பிரதமர் அறிவித்துள்ளார். எதிர்க்கட்சியினரின் பிரேரணை வெற்றி பெற்றால் அது சட்டமூலமாக்கப்படுவதற்கு குறைந்த பட்சம் மூன்று நாட்களாவது தேவைப்படும். பிரதமர் பொதுத்தேர்தலைத் தான் நினைத்த மாத்திரத்தில் கோர முடியாது காரணம். 2010ம் ஆண்டு படவிக்கு வந்த டேவிட் கமரன் அரசினால் எந்த வொரு அரசாங்கமும் ஐந்து வருட காலத்துக்கு முன்னால் கலைக்கப்படுவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருக்க வேண்டும் எனும் சட்டத்தை அமுலாக்கியது.

    பிரதமர் பொரிஸ் ஜான்சன் பொதுத் தேர்தல் வேண்டி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்போகும் பிரேரணை வெற்றி பெறுவதற்கு எதிர்க்கட்சியினரின் ஆதரவு தேவை. ஆனால் இன்றைய பிரேரணை சட்டமூலமாக்கப்படும் வரை பொதுத்தேர்தலுக்கான ஆதரவை தாம் வழங்கப் போவதில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் ஜெர்மி கோபன் அறிவித்துள்ளார்.

    போச்சுடா !

    இதுவரை காலமும் வாய்திறக்கும் போதெல்லாம் இந்த அரசாங்கம் ஒரு வெத்து அரசாங்கம் பொதுத்தேர்தல் ஒன்றே மாற்றுவழி எனக்கோஷமிட்ட எதிர்க்கட்சித் தலைவர் இப்போ அதற்கு ஆதரவளிக்க முடியாது என்று சொல்லி விட்டாரே ! என்ன செய்யப் போகிறார் பொரிஸ் ஜான்சன்? சதுரங்கப் பலகையில் சுற்றி நிற்கும் காய்களிடமிருந்து தப்ப அவரது அடுத்த கட்ட நகர்வு எதுவாக இருக்கும்?

    அன்பிய உறவுகளே இதற்கான பதிலை உங்களோடு சேர்ந்து நானும் ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறேன். நிச்சயமாக ஐக்கிய இராச்சிய அரசியல் வரலாற்றில் இது ஒரு முக்கிய திருப்புமுனை இதன் சாட்சியாக நாம் வாழ்ந்திருக்கிறோம் என்பதும் ஒரு அற்புதமான நிகழ்வே ! உலக ஜனநாயகத்துக்கே முன்னோடி தாம் என மார்த்தட்டிக் கொள்ளும் ஐக்கிய இராச்சியம் எப்படி இந்தச் சிக்கலில் இருந்து வெளிவரப் போகிறது?

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    04.09.2019

    Share
  • கைக்கோளர் படை

    கைக்கோளர் படை

    சேஷாத்ரி ஸ்ரீதரன்

    கைக்கோளர் என்போர் இந்நாளில் செங்குந்த முதலியார் என அறியப்படுகின்றனர். அண்மைக் காலம்வரை தறி நெசவு இவர்க்குத் தொழிலாய் இருந்துள்ளது. ஆனால், பல்லவர் ஏற்படுத்திய  இந்த சாதிமார் ஒரு படைக்குடி ஆவர். கல்வெட்டில் இவர்கள் பட்டடைக்குடி எனத் தெளிவாக குறிக்கப்பட்டுள்ளது.  ‘குந்தம்’ என்பதற்கு வேல் என்ற பொருளே இதற்கு சான்று. கள்ளர் படை, மறவர் படை என்பது போல 12 ஆம் நூற்றாண்டு வரை கைக்கோளப் படை என்று தனியாகவே இருந்துள்ளது. இப்படி போர்க்குடிகளாக இருந்த இவர்கள் சைவ சமய எழுச்சியின் காரணமாக அதன்பால் மிக்க ஈடுபாடு கொண்டதனாலும், இவர்கள் நம்பி இருந்த பல்லவர்கள் வேந்தர் என்ற நிலையும் மன்னவர் என்ற நிலையும் இழந்து அரையர்களாக, கிழார்களாக சிதறுண்டு போனதன் காரணமாகவும் போர்த் தொழிலை விட்டு வணிகத்தைப் பிழைப்பாக மேற்கொண்டனர்.  இதாவது, நெய்த ஆடைகளை விற்பதைத் தொழிலாக மேற்கொண்டனர். ஆனாலும் கைக்கோளர் சிலர் மட்டும் பல்வேறு ஆட்சியாளரிடம் படைத்தலைவர்களாகவும் படைஆள்களாகவும் தொடர்ந்து வேலை செய்தனர். இப்படி தொழில் மாறி பிழைப்பு மேற்கொண்டாலும் அதிக வரி, பிற மொழித் துணி வணிகரின், சிறப்பாக சௌராட்டிரர், பத்மசாலி ஆகியோரின் தொழிற் போட்டி ஆகியன இவர்களை வறுமையின் பிடிக்குத் தள்ளியது.  இவற்றுக்கும் சான்று கல்வெட்டுகளில் உண்டு.

    கைக்கோளரைப் போலவே சேனைக்கடையார், செட்டியார், வாணியர் போன்ற போர்க்குடிகளும் போர்த் தொழிலை விட்டுவிட்டு வணிகத்தை மேற்கொண்டனர். கைக்கோளர் படைத்தொழிலை விட்டதுமுதல் பல்லவர் ஆட்சி போலவே சோழர் ஆட்சியும் விரைந்து சரிந்தது. அதன்பின் வடக்கே இருந்து இசுலாமியப் படையெடுப்பு, விசயநகர படையெடுப்பு ஆகியவற்றால் தமிழராட்சி அறவே தொலைந்து போனது.  அரையர்கள் பலரும் பல்லவர் வழிவந்தவர் என்ற வகையில் கூட்டரசை (confederacy) அமைத்திருக்க முடியும். ஆனால் படை ஆளுக்கு எங்கே போவது? பட்டடைக்குடி சாதிகள் படைத்தொழிலை விட்டதனால் அதற்கும் வழி இல்லாமல் போனது. உண்மையில், வட தமிழ்நாட்டில் தமிழர் படை சுருங்கிப் போயிருந்தது. சம்புவராயர் ஆட்சியும் குறுகிய காலத்தில் வீழ்ந்ததற்குத் தம் படையை மேலும் பெருக்க முடியாமல் போனதே முதற் காரணம் ஆகும்.

    ஒரு தொழிலைச் செய்யும் ஒரு கூட்டத்து மக்கள் அத்தொழிலை விடுத்தால் மாற்று ஏற்பாடாக வேறு ஒரு கூட்டத்தாரை அத்தொழிலில் ஈடுபடுத்திச் சமூகத்தில் தொழில் சம நிலையைப் பேண வேண்டும். ஒரே தொழிலில் அதிகம் பேர் ஈடுபட்டாலோ அல்லது ஒரு தொழிலில் தேவைப்படும் பணிஆள்களில் பற்றாக்குறை ஏற்பட்டாலோ தொழிற் சமநிலை இழப்பு ஏற்படும்.  அதனால் தான் பண்டு ஒரு தொழில் செய்தவர் மாற்று தொழில் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டதில்லை. அதனால் தொழில் அடிப்படையில் சாதிகள்  உண்டாயின என்பது உண்மைதான். வேந்தர் அனுமதித்தால் சில தனிஆள்கள் மட்டும் தொழில் மாறலாம் மற்றபடி அது பொதுவான வழக்கம் அல்ல. கைக்கோளரைத் தொழில் மாறவிட்டதன் விளைவாக தமிழக வரலாற்றில் பிற மொழியாளருக்கு அடிமைப்படும் அளவிற்கு தன்னாட்சியை மாபெரும் விலையாகத் தமிழகம் கொடுத்தது ஒருவரலாற்றுப் பிழையே. அந்த மாபெரும் பிழையால் தமிழகம் வந்து புகுந்த அயலவர் பொன்னான வாழ்வு பெற்றுவிட்டார்கள்.  இந்த வரலாற்று உண்மைகளைத் தெளிவுபடுத்தவே கீழ்க்காணும் கல்வெட்டுகளின் விளக்கம்.

    தஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில் கருவறை தென் சுவரில் பொறித்த 7 வரிக் கல்வெட்டு.

    ஸ்வஸ்தி ஸ்ரீ கோப்பர / கேசரி பந்மற்கு யா / ண்டு 2 ஆவது சிங்க ளாந்தக தெரிந்த கைய் / கோளரிற் முத்தி திருநா / [ரணன்] குடு[த்]த வாள் ஸ்ரீ க / ண்டம் கோத்த செ[ம்]முனை வாள்  1.

    தெரிந்த கைக்கோளர் – திறவாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட கைக்கோளர், chosen or selected as skillful; ஸ்ரீகந்தம் – சந்தனம்; கோத்த – பதித்த; செம்முனை –செங்குறுதி தோய்ந்த முனை.

    விளக்கம்: முதற் பராந்தகன் மகன் அரிஞ்சயனின் 2 ஆம் ஆட்சி ஆண்டினதாக கருதப்படும் இக்கல்வெட்டில் பராந்தகனின் பெயரான சிங்களாந்தகன் என்ற பெயரினைத் தாங்கிய தேர்ந்தெடுத்த கைக்கோளப்படையைச் சேர்ந்த முத்தி திருநாரணன் என்பவன் சந்தனக் கைப்பிடியில் பதித்த குறுதிக்கறை படிந்த முனை உள்ள வாள் ஒன்றினை இறைவனுக்கு கொடுத்தார்.

    சோழர்கள் முற்று முழுதாக கைக்கோளரை மட்டுமே கொண்ட திறவாளராக பார்த்துத் தேர்வு செய்யப்பட்ட கைக்கோளப் படை ஒன்றை பேணினர் என்று இதனால் தெரிகின்றது.

    பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 19, பக். 3. A.R.No 244 of 1907.

    தஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில் கருவறை தென் சுவரில் பொறித்த 6 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ கோப்பர கேசரி பந்மற்கு யாண்டு 2 ஆவது திருவிடை மருதில்
    2. ஸ்ரீமூலஸ்தாநத்தில் பெருமான்அடிகள் கோவிலில் பெரியமண்டபத்தில் முன்
    3. பில் திருப்பலகணியும் திருக்கதவும் நிலையும் படியும் கைக்கோளப் பெரும்படை
    4. யோமினால் சமைப்பித்து எங்கள் ஆச்சமார் திகைஆயிரத்தைஞ்ஞூற்றுவர் தம்
    5. பேர் சாத்தினமையில் இந்த தர்மம் திகைஆயிரத்துஅஞ்ஞூற்றுவர் ரக்ஷை.
    6. இந்த தர்மத்தினை ரக்ஷித்தார் ஸ்ரீ பாதம் எங்கள் ஸிரத்தின்.

    பெருமானடிகள் – வேந்தர், இறைவன்; பலகணி – சன்னல்; சமைப்பித்து – உருவாக்கி; ஆச்சமார் – ஆசான்கள், ஆசிரியர்கள்; சாத்தின – சூட்டிய

    விளக்கம்: முதலாம் இராசேந்திரச் சோழனின் 2 ஆம் ஆட்சி ஆண்டில் (பொ.ஊ. 1014) திருவிடைமருதூர் மூலவர் அமைந்த கருவறைப் பெரியமண்டபத்தின் முன்புறத்தில் சன்னலும், கதவும், வாயில் நிலையும், படியும் கைக்கோளப் படையினர் ஏற்படுத்தி அதற்கு தமது சண்டைப் பயிற்சி ஆசான்களான திசைஆயிரத்துஐநூற்றுவர் பெயரை வைத்து கொடுத்தனர். இதனால் இத்தருமத்தை திசை ஆயிரத்து ஐநூற்றுவர் தான் காத்திடவேண்டும். இத்தருமத்தை காத்தவர் பாதம் எங்கள் தலைமேல் படுவதாக என்று கல்வெட்டி உள்ளனர் கைக்கோளர்.

    திசைஆயிரத்து ஐநூற்றுவ வணிகர் தம் பாதுகாப்பிற்கென்று தனிப் படை வைத்திருந்தனர் போலும். அதில் இருந்த திறம்மிக்க பயிற்சியாளர்கள் இக் கைக்கோளப் படைக்கும் பயிற்சி தந்துள்ளனர் என்று தெரிகின்றது. ஆச்சமார் பன்மைச் சொல் என்பதை நோக்கி இப்படித் தான் பொருள் கொள்ள வேண்டும்.

    பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 19, பக். 3. A.R.No 253 of 1907.

    வடஆர்க்காடு மாவட்டம், வேலூர் வட்டம், அகரம் கிராமம் பெருமாள் கோவில் 14 வரிக் கல்வெட்டு.

    1. சுபமஸ்த்து சுவஸ்த்தி ஸ்ரீ மனு மகாமண்டலேசுவரனு ஹரிராய விபாடன் பாசைக்குத் தப்புவராயர் கண்டன் மூவராய கண்டன் கண்டநாடு கொண்டு கொண்டநாடு குடாதன் பூர்வ்வ தட்சிண பச்சிம உத்திர ஸமுத்திராபதி கஜவேட்டை கண்டருளிய மல்லிகார்சுன மஹாராயர் பிரித்திவிராச்சயம் பண்ணி அருளா நின்ற சகாப்தம் 1391 –ல் மேல் செல்லா நின்ற விரோதி வருஷம் மகரநாயற்று பூர்வ்வபச்சத்து பஞ்சமியும் சனிவாரமும் பெற்ற திருவோனத்து நாள்
    2. ஜெயங்கொண்ட சோழமண்டலத்து பளுவூர்கோட்டத்து கரைவழி ஐம்புழுநாட்டு ஆழ்மை ஊரிலும் வந்து பாலிநாட்டு அகரத்திலிருக்கும் கைக்கோளரில் சோழகோன் தீத்தமுடையான் மகன் பெரியராகுத்தனும் இவன் தம்பி சங்கேதி இராகுத்தனும் நல்லானும் நாங்கள் மூவரும் எங்கள் தங்கை கங்கையும் இவள் மகள் திருமலைச்சியும் வீரனும், திம்மனும் பெரிய இராகுத்தன் மகள் பெரிய வெங்காத்தாளையும் சிறிய வெங்காத்தாளையும் முதலியையும் இலக்குமனையும் சாந்தியும் பெண்கள் அஞ்சுபேரையும் இவன் மகன்
    3. கொழுந்தனையும் ஆக எங்கள் பதின்மூன்று பேரையும்  கொத்து அடிமை ஆக எம்பெருமான் திருக்கோயிலுக்குக் கொள்வாருளரோ என்று முற்கூறி. இம்மொழி கேட்டு எதிர்மொழி கொடுத்தான் அகரம் பெருமாள் ஆனைகாத்த அப்பன் சீகாரியம் பாற்கும் வன்னிய திம்மயநாயக்கர் நாயக்கன் முற்கூடியபடி உங்கள் மூவரையும் உங்கள் பெண்கள் ஏழுபேரையும் பிள்ளைகள் மூவரையும் ஆக பதின்மூன்று பேரையும் விலைக்குத்தரில் ஆனைக்காத்த அப்பன் அருளிச் செயல்படிக்கு விலைதந்து கொள்வான்
    4. என்று பிற்கூறி முற்கூறிய இராகுத்தன் உள்ளிட்டாரும் பிற்கூறிய சமைய குமாரர் வன்னிய திம்மய நாயக்கரும் இந்த பதின்மூன்று பேற்கும் எம்மில் இசைந்த விலைப் பொருள் வாசிப்படா நற்பணம் 2380. இப்பணம் இரண்டாயிரத்து முன்னூற்று எண்பதுமே எங்கள் பதின்மூன்று பேற்கும் விலை ஆவது ஆகவும் நாங்கள் மூவரும் எங்கள் பெண்கள் ஏழுபேரும் பிள்ளைகள் மூவரும் ஆக  பதின்மூன்று பேற்கும் விலைப்படி பணம் இரண்டாயிரத்து முன்னூற்று எண்பதும் சமயகுமாரர் வன்னியத் திம்முநாயக்கர் பண்டாரத்திலே பற்றிகொண்டு
    5. எங்களை நாங்களே ஆனைகாத்த அப்பன் திருக்கோயிலுக்கு கொத்து அடிமை ஆக விலைபிரமாணம் பண்ணிக்குடுத்தமைக்கு   
    6. நாங்கள் மூவரும் பிள்ளைகள் மூவரும் சிரிபாதம் தாங்கவும் திருமேனிக் காவலுக்கும் திருக்கைக்கோளருக்கும் உண்டான அடிமைத்
    7. தொழிலுக்கும் எங்கள் பெண்கள் ஏழுபேரும் ஆடிபாட எம்பெருமான் அடியாற்கு உண்டான அடிமைத் தொழில்களுக்கும்
    8. உரித்தாகக் கடவோம் ஆகவும் கொத்தடிமை ஆக ஆனைக்காத்த அப்பன் திருக்கோயிலுக்கு பிரமாணம் பண்ணிக்குடுத்தமைக்கு
    9. எங்கள் வழிவழி பரிபாலனம் உள்ளது. ஆண்பிள்ளை உள்ளது சிரிபாதம் தாங்கவும் திருமேனிகாவலுக்கு உரித்தாகவும். பெண் உள்ளது எம்பெருமான் அடிமைக்கும் உரித்தாகக் கடவராகவும்
    10. இப்படி சம்மதித்து பிரமாணம் பண்ணிக் குடுத்தோம் ஆனைகாத்த அப்பன் திருக்கோயில் சிரிகாரியம் பாற்கும் சமையகுமாரர் வன்னியத் திம்முநாயக்கற்கு சோழகோன் தீத்தமுடையார் மகன் ராகுத்தனும்
    11.  சிறு இராகுத்தனும் நல்லானும் கங்கையும் உள்ளிட்ட பதின்மூன்று பேரும் பெரிய இராகுத்தன் சிறு ராகுத்தன் கெங்கை உள்ளிட்டார் எழுத்து. இந்த சாதனமும் தொண்டைமண்டலம் பிரமராயர்
    12. ஆனைகாத்த பெருமாள் அருளியச் செயல்படிக்கு பட்டர் வாரியன் அப்பிளை. இந்த எழுத்து எல்லாம் எழுதினான் இந்தக் கல்வெட்டு விரற்கு மிண்ட ஆசாரி நம்பாண்டை வெட்டினான்
    13. இந்த சாதனங்களுக்கு அறிவுக்கு எழுத்திட்ட பேர் வன்னிய நாட்டுநாயகஞ் செய்வார் சந்திரநாயனார் மேற்படி மாரிக்கூத்தர் தொரபள்ளி கொண்ட பெருமாள் கோயில் தானத்தார். இப்படி அறிவேன் பட்டாசாரியர் ஆனைக்காத்த _ _ _ _. இப்படி அறிவேன் கேசவபட்டர். இப்படி அறிவேன் தேஸப்பட்டர். இப்படி அறிவேன் வாதுள பட்டர்
    14. கீழைவீதி தொண்டைமானார் சேதிராயர் காவனூர் தென்னவராயர் இரிஞ்சிபுரம் சமயமுதலியார் பெரியநாட்டு நம்பிமார் மாதவராமன்.

    இராகுத்தன் – குதிரை வீரன்; கொத்து அடிமை – வழிவழி பரம்பரை அடிமை; முற்கூறி – முன்னறிவிப்பு, முதலில் சொல்லிய, pre announcement, formerly quoted; எதிர்மொழி – மறுமொழி, reply, revert; ஸ்ரீ காரியம் பார்க்கும் – இறைப்பணி செய்யும்; பிற்கூறிய – பின்னர் சொல்லிய, later quoted; சாதனம் – சாஸனம், ஆவணம்; அறிவுக்கு – acknowledge

    விளக்கம்: விசயநகர வேந்தர் மல்லிகார்சுனர் ஆட்சியில் விரோதி ஆண்டு 1469-ல் மகர ராசி ஞாயிற்றுக் கிழமையும் வளர்பிறை ஐந்தில் சனிக் கிழமையில் நிகழும் திருவோன நட்சத்திரத்திரத்து நாளில் இக் கல்வெட்டு வெட்டப்ப்பட்டது.

    இக்கால வேலூரின் அக்கால பளுவூர் கோட்டத்தின் பாலிநாட்டு அகரத்தில் வாழும் கைக்கோளர்களில் சோழகோன் தீத்தமுடையான் மகன்கள் பெரியஇராகுத்தன், சங்கேதி இராகுத்தன், நல்லான் ஆகிய மூன்று உடன்பிறந்தார், தங்கை கங்கை இவள் மகள் திருமலைச்சி, மகன்கள் வீரன், திம்மன் இவர்களோடு பெரிய இராகுத்தன் மகள்கள் ஐவரான பெரியவெங்காத்தாள், சிறிய வெங்காத்தாள், முதலி, இலக்குமனை, சாந்தி ஆகியோரும் இவன் மகன் கொழுந்தன் என மூன்று பெரிய ஆடவர், 7 பெண்கள், மூன்று ஆண்பிள்ளைகள் என 13 பேரையும் விலைகொடுத்து கொத்தடிமையாக ஆனைக்காத்த (கஜேந்திர) பெருமாள் கோவிலுக்கு ஆக்கிட முன்னறிவிப்பு செய்யப்பட்டது. இந்த அறிவிப்பை கேட்டு அகரம் கிராமத்தின் ஆனைக்காத்த அப்பன் பெருமாள் கோவிலின் இறைப்பணியாளர் வன்னிய திம்மய்யநாயக்கர் முன்னே சொன்னபடி   13 பேரையும் விலைக்கு வாங்கினார். இதற்கு விலையாக 2380 பணம் திம்முநாயக்கர் கொடுத்தார். இதைப் பெற்றுக் கொண்ட ஆடவக் பெரியோர் மூவரும் பிள்ளைகள் மூவரும் இறைவனை எழுந்தருளச் செய்த வாகனங்களை தூக்கவும் திருமேனிகளுக்கு காவல் புரியவும் திருக்கைக்கோளருக்கு அடிமை செய்யவும் ஒப்புக்கொண்டனர். அதே நேரம் ஏழு பெண்களும் கோவிலில் பெருமாளுக்கு ஆடிப்பாடவும் பக்தர்களுக்கு அடிமைத் தொழில் செய்யவும் ஒப்புக் கொண்டு உறுதிமொழி ஆவணம் செய்துகொடுத்தனர் இந்த 13 பேர். இந்த ஆவணத்திற்கு  தொண்டை மண்டல பிரமராயர் சார்பில் கோவில் பட்டர்களின்  வாரியத்தை சேர்ந்த அப்பிள்ளை கையெழுத்திட்டான். அரையர்கள் சிலரும் கையெழுத்திட்டனர்.

    குதிரைவீரர்களான இராகுத்தர்கள் வேலை இழந்ததாலோ அல்லது கடன் தொல்லையாலோ தம்மை இப்படி கோவிலுக்கு கொத்தடிமையாக விற்க நேர்ந்துவிட்டது போலும். என்றாலும் கோவில் பணி என்பதால் இவர்களுக்கும் மற்றவரைப்போல வீடு, நிலம், சோறு கிட்டுவதால் அதை இவர்கள் விரும்பி தேர்ந்தெடுத்துள்ளது விளங்குகின்றது.

    பார்வை நூல்: தமிழ் கல்வெட்டுகள் வெளிச்சமிடுகிற அரிய உண்மைகள், பக். 306 – 307, ஆசிரியர் முனைவர் வஞ்சியூர் க. பன்னீர்செல்வம்

    புதுச்சேரி மாநிலம், திருப்புவனை திருவாண்டார் கோவில் 3 வரிக் கல்வெட்டு.

    1. சுவஸ்தி ஸ்ரீ மன் மகாமண்டலேசுவரன் மேதினிமீஸ்வர கண்டகட்டாரி சாளுவ நரசிங்க தேவ மகாராயர் பிரிதிவிராச்சியம் பண்ணி அருளா நின்ற  சகாப்தம் 1425 – ல் மேல் செல்லா நின்ற உரோத்திரதாரி வருஷம் அற்பசி மாதம் 15-தேதி நரசநாயக்கர் காரியத்துக்குக் கடவ அம்பிகாமக் கிழவர்
    2. அறம்வளர்த்த நாயனார் திருபுவனை மாதேவிப்பற்று நடுவுக்கரைப்பற்று நென்மலியப்ப னாயக்கர் கைகோளற்கு பெண்ணைக்கரை யிராச்சியத்தில் உண்டான கைக்கோளர்க்கு நன்மைத் தீமைக்கு  தண்டு சங்குந் பந்தப்பட்ட ஆலே தங்களுக்கும் தண்டும் சங்கும் தந்தோம் கைக்கோளர்களுக்கு நன்மை தீமைக்கு சந்திராதித்தர்
    3. வரையும் தண்டும் சங்கும் நடத்த கடவதாகவும். இதுக்கு சபையாரும் மழவராயர் நீலகங்கரையரும் இருந்து பண்ணி நின்ரயந்து யாதொருத்தர் அயிதஞ் சொன்னால் செழியங்கநல்லூரில் கல்வெட்டியபடி ஆகக்கடவதாகவும். இவை அறம்வளர்த்த நயினார் எழுத்து. இவை திருபுவனை மாதேவி சபையார் சொற்படிக்கு சேரமாண்டார் எழுத்து.  மழவராயர் எழுத்து. நீலகங்கரையர் எழுத்து.

    காரியத்துக்கு கடவ- செயல் பொறுப்பாளர்; தண்டு – ; சபையார் – கருவறை பிராமணர்.

    விளக்கம்: விசயநகர வேந்தர் சாளுவ நரசிங்கர் ஆட்சியில் உரோத்திரதாரி ஆண்டு (பொ.ஊ.1503) ல் ஐப்பசி மாதம் 15-ம்தேதி நரசநாயக்கருக்கு செயல் பொறுப்பாளரான அம்பிகாமக் கிழவர் அறம்வளர்ந்த நாயனார் திருப்புவனை மாதேவிப்பற்று, நடுவுக்கரைப்பற்று ஆகிய இடங்களில் வாழும் நென்மலியப்ப நாயக்கரின் கைக்கோளற்கும், பெண்ணைக்கரை இராச்சியத்தில் வாழும் கைக்கோளர்க்கும் வீட்டின் நன்மை, தீமை நிகழ்வுகளுக்கு தண்டும் சங்கும் முழங்க உரிமை தந்தார்.  இந்த உரிமை நிலவும் ஞாயிறும் நிலைக்கும் காலம் வரை செல்லவதற்கு கோவில் கருவறை பிராமணரும், மழவராயர் நீலகங்கரையர் ஆகிய அரயரும் இதற்கு துணையாக இருந்து யாரொருவரும் தடங்கல் செய்யாமல் செழியங்கநல்லூர் கல்வெட்டில் உள்ளபடி நடந்தேற வேண்டும் என்று ஆணை இடப்பட்டுள்ளது.

    மிச்சம் மீதி இருக்கின்ற கைக்கோளர் படைத்தொழிலை விட்டு அகலாமல் இருக்கவே இந்த மரியாதை மதிப்புகள் கைக்கோளருக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளன.  விசயநகர ஆட்சி வரையில் மழவராயர், நீலகங்கரையர் ஆகிய அரையர்கள் ஆட்சியில் அரையர்களாக தொடர்ந்தனர் என்பது இக்கல்வெட்டால் தெரிகின்றது.

    பார்வை நூல்: தமிழ் கல்வெட்டுகள் வெளிச்சமிடுகிற அரிய உண்மைகள், பக். 307, ஆசிரியர் முனைவர் வஞ்சியூர் க. பன்னீர்செல்வம்

    Share
  • சந்திரயான் -2 விக்ரம் தளவுளவி நிலவில் தகவல் அனுப்பத் தவறி நிலவில் சாய்ந்து கிடக்கிறது

    சந்திரயான் -2 விக்ரம் தளவுளவி நிலவில் தகவல் அனுப்பத் தவறி நிலவில் சாய்ந்து கிடக்கிறது

     

    1. https://economictimes.indiatimes.com/news/science/nasa-joins-isro-to-track-vikram-calling-home/articleshow/71097087.cms
    2. https://www.moneycontrol.com/news/india/chandrayaan-2-nasa-helps-isro-to-establish-communication-with-vikram-lander-4432871.html?fbclid=IwAR3zEJRhzpwcwWipD2mgPMutgpMNpCfHXFSbq2-APrec5utl-ucVeEW5VJY
    3. https://www.businesstoday.in/latest/trends/chandrayaan-2-not-only-isro-nasa-also-sends-messages-lander-vikram-moon/story/378594.html?fbclid=IwAR3aeAO2h152zc0uRLO90Ym7FpPyrmXXHIMpqtJ3jXX1qA145d_NBuz_Pgs
    4. https://www.businesstoday.in/latest/trends/chandrayaan-2-landing-failed-isro-loses-contact-with-lander-vikram/story/377813.html?utm_source=recengine&utm_medium=WEB&referral_sourceid=378149&referral_cat=Trends
    5. https://www.indiatoday.in/science/story/chandrayaan-2-vikram-landing-somersault-isro-exlusive-1598882-2019-09-13
    6. https://www.indiatoday.in/science/story/2-giant-asteroids-as-big-as-burj-khalifa-to-zip-past-earth-today-nasa-1599001-2019-09-14

    ++++++++++++++++++++++++++++++

     

    சந்திரயான் -2 விக்ரம் தளவுளவி நிலவில் தகவல் அனுப்பத் தவறி நிலவில் சாய்ந்து கிடக்கிறது.

    இப்போது இந்திய விண்வெளித் தேடல் விஞ்ஞானிகளுக்கும், பொறியியல் நுணுக்க நிபுணருக்கும் மிக மிகச் சவாலான தருணம் நேர்ந்துள்ளது.  சந்திரயான் -2 திட்டம் 95% வெற்றிகர மாக நிகழ்ந்து, நிலவின் தென் துருவத்தில், விகரம் தளவுளவி இறங்கி வரலாற்று முதன்மை பெற்றுள்ளது.  இறுதி நேரத்தில் தளவூர்தி தகவல் அனுப்பத் தவறி, சில மின்யந்திரக் கோளாறுகளால், செங்குத்து நிலை தடுமாறி நிலவில் சாய்ந்து கிடப்பதை, நிலவைச் சுற்றிக் கொண்டிருக்கும் சந்தியான் -2 விண்சிமிழ் கண்டுபிடித்துப் படம் எடுத்துள்ளது.  இப்போது விக்ரம் தளவூர்தி நேராக நிமிர்த்தப் படவேண்டும்.  மீண்டும் தகவல் இணைப்பு நிஅழ வேண்டும்.

    இப்பணிகள்தான் இப்போது முயற்சியில் உள்ளன.  இந்திய விஞ்ஞானிகளுக்கு விக்ரம் தளவுளவியை உயிர்ப்பிக்க அமெரிக்க நாசாவின் வல்லுநர் முன்வந்துள்ளனர்.  காரணம் நாசாவின் சில கருவிகள் விகரம் தளவுளவியில் இணைக்கப் பட்டுள்ளன.  இன்னும் ஒரு வாரத்திற்குள் இந்த அவசரப் பணிகள் முடிந்து, சந்திரயான் -2 இன் திட்டம் முழுமையாய் வெற்றி அடைய வாய்ப்புக்கள் உள்ளன.

    https://www.indiatoday.in/science/story/2-giant-asteroids-as-big-as-burj-khalifa-to-zip-past-earth-today-nasa-1599001-2019-09-14

    WHAT NOW?

    It’s been nearly a week since the Indian Space Research Organisation lost contact with the Chandrayaan-2 lander. Since then, Isro, which continues to remain tight-lipped over the matter, has been making constant efforts to re-establish communication with the spacecraft.

    A day after losing contact with Vikram, Isro said it had been able to locate the Chandrayaan-2 lander on the Moon. However, communication with the lander remains elusive.

    Next week, a lunar orbiter operated by the United States’ National Aeronautics and Space Administration (Nasa) is set to fly over the area where Vikram is located. The orbiter is expected to take pictures and offer clues to Vikram’s fate.

    Meanwhile, the Chandrayaan-2 orbiter remains safe in its orbit around the Moon. In fact, it was the Chandrayaan-2 orbiter that, on Sunday, managed to locate Vikram on the lunar surface.

    The orbiter’s mission life has been extended from one year to seven years, due fuel savings made during the trip to the Moon. Over the course of its mission life, the Chandrayaan-2 orbiter will perform several experiments, including one to estimate the quantity of iced water on the Moon.

    Image result for cHANDRAYAAN -2 lost contact

    சந்திரயான் -2 திட்டம்  95% நிறைவு பெற்று, இறுதியில் 

    தகவல் அனுப்பத் தவறியது. 

    [ விண்வெளித் தேடல் வாரியத் தலைவர் டாக்டர் சிவன்.]

    ++++++++++++++++

    1. https://youtu.be/q7Omv4EX8RM
    2. https://economictimes.indiatimes.com/news/science/chandrayaan-2-setback-india-loses-contact-with-vikram-lander-during-descent/articleshow/71018277.cms?utm_source=newsletter&utm_medium=email&utm_campaign=mlpdaily&ncode=4b749efe6f3285bfc668b352f29b8270
    3. https://youtu.be/phN5S9cHeWM
    4. https://frontline.thehindu.com/static/html/fl2619/stories/20090925261913200.htm
    5. http://www.cnn.com/2009/WORLD/asiapcf/08/30/india.moon.mission/index.html
    6. https://youtu.be/sd6grEvZn1A
    7. https://youtu.be/ANyg9VGSqbY

    +++++++++++++++++++++

    Image result for cHANDRAYAAN -2 lost contact

    நிலவை நெருங்கும் தளவுளவி தகவல் அனுப்பத் தவறியது

     

    இறுதியில் மின்னலைத் தகவல் அனுப்பத் தவறிய சந்திரயான் -2 தளவுளவி

    சந்திரயான் -2  மகத்தான நிலவுத் திட்டம், விண்சிமிழ் ஏவிய நாள் முதல் அடுத்தடுத்து வெற்றிகரமாக நிறைவேறி, இறுதியில் தளவுளவி நிலவைச் சுமார் ஒரு மைல் உயரத்தில் நெருங்கிய போது, மின்னலைத் தகவல் அனுப்பத் தவறி இந்திய மக்கள் கண்ணீர் விட்டு ஏமாற்றம் அடைந்தார்.  ஆயினும் இன்னும் இரண்டு ஆண்டுகட்கு விண்சிமிழ் நிலவைச் சுற்றித் தகவல் அனுப்பி வரும்.  தளவுளவி நிலவில் விழுந்து நொறுங்கிப் போகாமல் அமர்ந்துள்ளதை, மற்ற கனல் காட்சி [ தெர்மல் இமேஜிங் ] ஏற்பாடு மூலம் தெரிய வருகிறது.

    நிலவை நெருங்கும் போது சுமார் ஒரு மைல் உயரத்தில் 

    தளவுளவி மின்னலைத் தொடர்பு இழந்தது.

    +++++++++++++++

    தகவல் தொடர்பு அறுந்தாலும்,  தளவுளவி நிலவில் மெதுவாக இறங்கி அமர்ந்திருக்கலாம் என்று யூகிக்க இடம் உள்ளது.  மின்னலைத் தொடர்பு கிடைக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.  அந்த முயற்சிகள் வெற்றிகரமாகி, தகவல் பெற்று தளவூர்தியும் அடுத்து நகர்ந்து வரப் போகிறது.  14 நாட்கள் தளவூர்தியும் திட்டமிட்டபடி தகவல் சேர்த்து அனுப்புவதை இந்தியரும், உலக மாந்தரும் காணப் போகிறார் என்று உறுதியாக நம்பலாம்.

    ++++++++++++++++++++

    Image result for chandrayaan-2 sending lunar pictures

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
    +++++++++++++++++++++

    நிலவைச் சுற்றிய முதல் சந்திரயான்
    உளவிச் சென்று நாசா
    துணைக்கோளுடன் தென் துருவத்தில்
    ஒளிமறைவுக் குழியில்
    பனிப் படிவைக் கண்டது !
    நீரா அல்லது வாயுவா என்று
    பாரதமும் நாசாவும் ஆராயும்  !
    சந்திரனில் சின்னத்தை வைத்தது
    இந்திய மூவர்ணக் கொடி !
    யந்திரத் திறமை காட்டும் இப்பயணம்
    பந்தய மில்லை !
    விந்தை புரிந்தது இந்தியா !
    இரண்டாம் சந்திரயான்
    2019  செப்டம்பரில் விண்சிமிழ்
    முதன்முதல்  இறக்கும்  தளவுளவி , தளவூர்தி.
    பாரத விண்வெளித் தீரர் மூவர் இயக்கும்
    சீரான விண்கப்பல் 2022 இல்
    தாரணி சுற்றி வரும் !
    செவ்வாய்க் கோள் செல்ல
    சந்திரனில் சாவடி அமைக்கும்
    திட்ட முள்ளது !
    அடுத்து இரண்டாம் சந்தரயான்
    நிலவைச் சுற்றி வந்து
    தளவுளவி நிலவில் அமர
    தளவூர்தி
    தவழ்ந்து சென்று நிலாத் தளம் 
    ஆராயப் போகுது
    ஈரேழ் நாட்கள். 

    +++++++++++

    சந்திரயான் -2 அனுப்பிய முதல் நிலாப்படம்
    [2019 ஆகஸ்டு 21]
    ++++++++++++++++
    +++++++++++++++++++++

    Image result for chandrayaan-2 sending lunar pictures

    இந்திய விண்சிமிழ் சந்திரயான் -2 முதல் நிலாப்படம் அனுப்பியது

    2019 ஆகஸ்டு 21 ஆம் தேதி இந்தியாவின் சந்திரயான் -2 நிலவின் சுற்றுப் பாதையில் புகுந்ததும், முதலில் அனுப்பிய மகத்தான நிலாப்படம் மேலே காட்சி தருகிறது.   இந்தப்படம்  விண்சிமிழ் நிலவுக்கு மேல் 1650 மைல் [2650 கி.மீ.] உயரத்தில் சுற்றிய போது எடுத்து அனுப்பப் பட்டது.  2019 செப்டம்பர் 2 இல் விண்சிமிழிடம் விக்ரம் தளவுளவி பிரிந்து, செப்டம்பர் 7 இல் மெதுவாக இறங்கி, நிலவில் அமரும்.   பின் அதலிருந்து தளவூர்தி “பிரங்கியான்” ஊர்ந்து நழுவி நிலவில் பதினான்கு பூமி நாட்கள் நகர்ந்து, தகவல் அனுப்பும்.   விண்வெளி வரலாறாகப் பதிவு செய்யப் போகும் இந்த அரிய இந்திய சந்திரயான் -2 இயக்கம், அமெரிக்கா, ரஷ்யா, சைனா நாடுகளுக்குப் பிறகு நான்காவது தீரச் செயலாகக் கருதப்படும்.

    Image result for chandrayaan-2 sending lunar pictures

    Related image

    Image result for chandrayaan-2 sending lunar pictures

    Image result for chandrayaan-2 sending lunar pictures

    Image result for chandrayaan-2 sending lunar pictures

    Infographics: Challenges Chandrayaan 2 will face during Moon landing #Gallery
    சந்திரயான் -2  விண்சிமிழ்
    ++++++++++++++++++++
    Related image
    Chandrayaan -2 Launching July 22, 2019
    ++++++++
    ++++++++++++++++++++++++

     

    Related image

    “எதிர்காலத்தில் பூமி, நிலவு, செவ்வாய் ஆகிய மூன்று கோள்களும் மனித இனத்துக்குப் பயன்தரும் ஒருமைப்பாடு அண்டங்களாய்க் கருதப்படும்.  செவ்வாய்க் கோளில் நீரிருக்கலாம்.  அங்கே ஒரு குடியிருப்பு அரங்கம் நமக்குத் தேவைப்படுகிறது.  நிலவில் பேரளவு மின்சக்தி உண்டாக்க உதவும் முக்கியமான ஹீலியம்-3 எரிவாயு பெருமளவில் கிடைக்கிறது.”

    டாக்டர் அப்துல் கலாம், ராக்கெட் விஞ்ஞான மேதை (International Conference on Aerospace Science & Technologies) [ஜனவரி 26, 2008]

    Related image

    சந்திரயான் -2  தளவுளவி,  தளவூர்தி

    ++++++++++++++++++++++++

    1. https://youtu.be/eRIOHJ9gJS0
    2. https://youtu.be/NJOWi4tEVy8
    3. https://youtu.be/kFVjb1RpPK0
    4. https://www.britannica.com/science/Apollo-space-program
    5. https://www.news18.com/news/tech/gearing-for-july-launch-chandrayaan-2-will-carry-nasa-payload-too-says-isro-2142881.html
    6. https://youtu.be/xMDdaNLc8DU
    7. https://youtu.be/xTki6w1Ohnw

    +++++++++++++++

    சந்திரயான் -2  தளவுளவி,  தளவூர்தி

    ++++++++++++++++++++++++

    இந்திய விண்வெளித் தேடல் ஆணையகம் புரியும் சவாலான சந்திரயான் -2 நிலவு ஆராய்வுத் திட்டம்

    2019 ஜூலை 22 ஆம் தேதி இந்தியா நிலவு நோக்கி ஏவிய புதிய இரண்டாம் சந்திரயான் திட்ட விண்சிமிழ் இப்போது முதலிரண்டு புவியரங்கு நீள்வட்டப் பாதைச் சுற்றுக்களை [Earth Bound Elliptical Orbits] வெற்றிகர மாய் இயக்கி, அடுத்து சில சுற்றுகளை செய்து முடிக்க முற்படுகிறது.  இந்த வேகத்தில் சந்தியான் -2 விண்சிமிழ் ஆகஸ்டு 20 ஆம் தேதி நிலவை நெருங்கி, நிலவு அரங்கத்தை நீள் வட்டப் பாதையில் சுற்ற [Moon Bound Orbits] ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.  அவ்விதம் நிலவைச் சிலமுறைச் சுற்றி, செப்டம்பர் 7 ஆம் தேதி தளவுளவி இறங்கும் என்றும், பிறகு அதிலிருந்து தளவூர்தி நகர்ந்து 14 நாட்கள் ஆய்வுகள் நடத்தும் என்றும் திட்டமிடப் பட்டுள்ளது.

    https://www.indiatoday.in/science/story/2-giant-asteroids-as-big-as-burj-khalifa-to-zip-past-earth-today-nasa-1599001-2019-09-14

     

    Share
  • சொர்க்கத்துக்குப் போய் வந்தேன் – 3

    சொர்க்கத்துக்குப் போய் வந்தேன் – 3

    -நிர்மலா ராகவன் 

    UBUD

    பாலியில் UBUD என்று ஒரு மலைப்பாங்கான இடம். கலைகளுக்கும், சத்துடன் சுவையும் நிறைந்த உணவு வகைகளுக்கும் பெயர்போனது. குறுகிய தெருக்களின் இருபுறமும் அடர்ந்த மரங்கள். வளைந்து செல்லும் மலைப்பாதைக்கு மேல் தனித்த குடில்கள். அமைதியை நாடுபவர்கள் ஆண்டுதோறும் இங்கு வந்த தங்குகிறார்கள். ஓர் இரவு தங்க சுமார் 2,000 ரூபாய்.

    ஒவ்வொரு சிறு வீட்டைச் சுற்றிலும் அடர்ந்த செடிகொடிகள். ஒரு பக்கத்தில் குளம் வேறு! ஆனால், நிறைய கொசுக்கள் கிடையாது –பூச்சிகளை விரட்டியடிக்கும் மரங்கள் இருப்பதால்.

    பெரிய நீச்சல் குளம் இருக்கிறது. வெள்ளைக்காரர்கள் மிகக் குறைந்த ஆடையணிந்து, அதனருகே போடப்பட்டிருந்த நீண்ட நாற்காலியில் மடித்த காலைப் பரத்திப் படுத்தபடி புத்தகம் படிக்கிறார்கள்.

    நாம் fair and lovely-யை நாட, அவர்கள் நமது பழுப்பு நிறத்தை அடைய படாதபாடு படுகிறார்கள்! நம் தன்னம்பிக்கை வளர இவர்களைப் பார்த்தால் போதும். 

    நிசப்தமான, குறுகலான தெருக்கள்

    உள்நாட்டவர்களின் ஸ்கூட்டர் மற்றும் வாடகைக்கார்கள் விரையும் குறுகிய தெருக்களில் ஒருவர்கூட ஹார்னை ஒலித்து அமைதியைக் கெடுப்பதில்லை என்பது என்னை மிக ஆச்சரியப்படுத்திய சமாசாரம்.

    எந்த நிலையிலும், பொறுமையைக் கைவிடாது நடந்துகொள்ள இவர்களால் எப்படி முடிகிறது?

    “எல்லாரும் இவ்வளவு சாத்வீகமாக இருக்கிறீர்களே! கணவன் மனைவிக்குள் சண்டையே வராதா?” என்று தேவாவைக் கேட்டேவிட்டேன்.

    அவர் சிரித்தார். “வராமல் என்ன!”

    “விவாகரத்து வரை போகுமா?”

    “அவ்வளவாகக் கிடையாது! அப்படிச் செய்தால், அவர்களுடைய இரு குடும்பத்தினருக்கும் தீராத அவமானம்”.

    விவாகரத்து செய்துகொண்டால், குழந்தைகள் தந்தையிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்பதும் காரணமாக இருக்கலாம்.

     

    வியாபார நோக்கு கிடையாது

    UBUD-இல் பெரிய கட்டடங்கள் கட்ட அனுமதி கிடையாது. அது கிராமம் அல்ல. இயற்கை எழிலுக்கும் கலை, கலாசாரத்திற்கும் பெயர்போனது. அதைப்போய் நாகரீகமாக மாற்றிக் கெடுப்பானேன்!

    பயணிகளின் வருகை அதிகமாகிவிட்டபோதும், அங்கு வாழ்பவர்கள் போலி மரியாதை காட்டாது, பண்புடன் நடந்துகொள்கிறார்கள்.

    முதல்நாள், செங்குத்தான படிகளில் ஏற முடியாது நான் திணற, என் கையைப் பிடித்து மேலே அழைத்துப் போனாள் ஒரு பெண். அதன்பின், என்னால் குனிய முடியுமோ, முடியாதோ என்று `செருப்பைக் கழற்றுகிறேன்,’ என்று குனிய, `வேண்டாம், வேண்டாம்!’ என்று பதறிப் போனேன்.

    பாலிவாழ் மக்களுக்கு உணவுத் தட்டுப்பாடு கிடையாது. மேலும், எல்லா வேலைகளும் கௌரவமானவையே என்று எண்ணி நடப்பதால், புன்சிரிப்புடன் நம்மை நடத்துகிறார்கள். அவர்களது சிரிப்பு நம்மையும் தொற்றிக்கொள்கிறது.

    `மனிதன்’ என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இவர்கள் வாழ்ந்து காட்டுகிறார்கள்.

    “சொர்க்கம்” என்று பாலியைக் குறிப்பிடுவது சரிதான்.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் – 60

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – 60

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – 60

      ஊக்கம் உடைமை

    குறள் 591:

    உடையர் எனப்படுவ தூக்கமஃ தில்லார்
    உடைய துடையரோ மற்று

    ஊக்கம் உடையவங்க எல்லாம் உடையவங்க.ஊக்கம் இல்லாதவங்க எத வச்சிருந்தாலும் எதுவுமே இல்லாதவங்க தான். 

    குறள் 592:

    உள்ள முடைமை உடைமை பொருளுடைமை
    நில்லாது நீங்கி விடும்

    ஊக்கம் ங்குத ஒரு பொருளத் தவித்து வேற எதையும் நெலையான உடைமை னு  சொல்ல முடியாது. 

    குறள் 593:

    ஆக்கம் இழந்தேமென் றல்லாவார் ஊக்கம்
    ஒருவந்தங் கைத்துடை யார்

    ஊக்கத்த கைவசத்துல வச்சிருக்கவங்க செல்வம் கைவிட்டுப் போச்சுதுன்னா கூட வெசனப்பட மாட்டாங்க. 

    குறள் 594:

    ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
    ஊக்க முடையா னுழை

    அசதி இல்லாத ஊக்கம் ஒடயவங்கிட்ட செல்வம் அவன் இருக்க எடத்துக்கு வழி கேட்டுக்கிட்டு போய்ச் சேந்துக்கிடும். 

    குறள் 595:

    வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனைய துயர்வு

    தண்ணில இருக்க பூவோட அடிக்காம்போட நீளம் தண்ணியோட அளவ பொருத்து மாறிக்கிடும். அது கணக்கா மனுசன் வாழ்க்கையில ஒசருததும் அவன் மனசுல இருக்க ஊக்கத்தப் பொருத்து தான். 

    குறள் 596:

    உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
    தள்ளினுந் தள்ளாமை நீர்த்து

    நெனைப்பு பூரா ஒசந்ததாவே இருக்கணும். ஒருக்கா அது நடக்கலேனாலும் நெனைப்ப விட்டுப்போடக் கூடாது. 

    குறள் 597:

    சிதைவிடத் தொல்கார் உரவோர் புதையம்பிற்
    பட்டுப்பா டூன்றுங் களிறு

    ஒடம்பு முழுக்க அம்பு தைச்சாலும் யானை தளராம நிக்கும். அது கணக்கா ஊக்கம் ஒடயவங்க அழிவே வந்துச்சின்னாலும் கலங்க மாட்டாக.

    குறள் 598:

    உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
    வள்ளியம் என்னுஞ் செருக்கு

    அள்ளிக் கொடுக்குத ஊக்கம் இல்லாதவுக தங்கள வள்ளல் னு பெரும பட்டுக்கிடதுதுக்கு வழியே இல்ல. 

    குறள் 599:

    பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை
    வெரூஉம் புலிதாக் குறின்

    பருத்த ஒடம்பும் கூர்மையா கொம்பும் இருக்க யானை கூட ஊக்கம் இருக்க புலி தாக்கிச்சின்னா பயந்துக்கிடும். 

    குறள் 600:

    உரமொருவற் குள்ள வெறுக்கையஃ தில்லார்
    மரமக்க ளாதலே வேறு

    மனசுல உறுதியான ஊக்கம் இல்லாதவங்க பாக்கதுக்கு மனுசங்களா இருந்தாலும் மரங்களுக்கு சமானம் தான்.

    -அடுத்தாப்லையும் வரும்- 

    Share
  • குறளின் கதிர்களாய்…(266)

    குறளின் கதிர்களாய்…(266)

    -செண்பக ஜெகதீசன் 

    கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
    வல்லதூஉ மையந் தரும்.
    -திருக்குறள் -845(புல்லறிவாண்மை)

    புதுக் கவிதையில்…

    கற்றிராத நூற்களையும்
    கற்றனவாய்க் காட்டி,
    அதன்படி
    புல்லறிவாளர் வாழ்வது,
    அவர்
    குற்றமறக் கற்ற நூலிருப்பின்
    அதிலும்
    மற்றவர்க்கு
    சந்தேகம்தான் எழும்…!

    குறும்பாவில்…

    கல்லா நூற்களைக் கற்றதாய்க் காரணங்காட்டிப்
    புல்லறிவாளர் அவ்வாறு ஒழுகுதல், பிறர்க்கு
    அவர் கற்றநூலிலும் சந்தேகமே…!

    மரபுக் கவிதையில்…

    நல்ல நூற்களைக் கற்றறிந்ததாய்
    நடித்து நூற்கள் அவற்றினிலே
    சொல்லிய வழியில் ஒழுகுவதாய்ச்
    சொல்லி யொருவன் நடந்தாலே,
    எல்லோ ருக்கும் ஐயம்எழும்
    எடுத்துப் படித்த நூல்களிலே
    புல்லறி வாளன் குறைவறவே
    படித்த நூலும் பயனிலையே…!

    லிமரைக்கூ..

    நந்நூற்கள் கற்றதாய் நடிப்பு,
    அதன்படி ஒழுகும் புல்லறிவாளனை ஐயுறுவர்
    உண்மையிலவன் நூல் படிப்பு…!

    கிராமிய பாணியில்…

    செயல்படு செயல்படு
    நல்ல அறிவோட செயல்படு,
    வேண்டவே வேண்டாம்
    கேடுகெட்ட அறிவே..

    படிக்காத நூலெல்லாம்
    படிச்சதாக் காட்டி,
    அதுபடியே நடக்கிறதா
    நடிக்கும்
    கொற புத்திக்காரன்
    உண்மயிலயே
    கொறயில்லாமப் படிச்ச
    நூலுலயும் எல்லாருக்கும்
    சந்தேகம் வந்துடுமே..

    அதால
    செயல்படு செயல்படு
    நல்ல அறிவோட செயல்படு,
    வேண்டவே வேண்டாம்
    கேடுகெட்ட அறிவே…!

     

    Share
  • படக்கவிதைப் போட்டி – 224

    படக்கவிதைப் போட்டி – 224

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    ஷாமினி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் வெள்ளிக்கிழமை (20.09.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 223-இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 223-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    செம்மறியை அன்போடு தழுவியிருக்கும் அம்மணியின் சிற்பத்தைத் தன் புகைப்படக் கருவிக்குள் பாசத்தோடு பதுக்கிவந்திருப்பவர் கீதா மதிவாணன். படக்கவிதைப் போட்டிக்கு உகந்த படமிது என்று இதனை வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்வு செய்து தந்திருப்பவர் சாந்தி மாரியப்பன். இவ்விருவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை நவில்கின்றேன்.

    மனிதர்கள் மெல்ல மெல்ல இழந்துவருகின்ற அருங்குணம் இந்த அருட்குணம். அந்த அருளை இந்தப் பெண்ணரசியின் பேதமற்ற கண்கள் ஆட்டின் மாட்டும் காட்டுவதைக் காண்கிறேன்.

    நெஞ்சுதொடும் இச்சிற்பத்துக்குக் கொஞ்சுதமிழில் கவியெழுதித் தந்திருக்கின்றார் கவிஞர் ஒருவர்.

    ****

    உயிரோவியம்…

    கலைஞனின் காலம் முடிந்தாலும்
    கால மெல்லாம் நிலைத்திருக்கும்
    கலைஞனின் தரமிகு படைப்பெல்லாம்
    காட்சிப் பொருளாய்த் திறமைக்கே,
    விலையிலா உயிரைச் சிலைக்களித்தே
    வியக்க வைத்தான் உலகோரை,
    சிலையில் தெரியும் அழகெல்லாம்
    சிறந்த சிற்பியின் இன்னுயிரே…!

    ”கலைஞனின் காலம் முடிந்தாலும் மலைக்கவைக்கும் அவனது கலைப்படைப்பில் என்றும் அவன் உயிர் வாழ்கின்றான் நிலையாக!” என்று அருமையாய்ச் செப்பியிருக்கும் திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவிப்பதில் மகிழ்கின்றேன். படக்கவிதைப் போட்டிக்கு விடாது பங்களிப்பு செய்துவரும் அவருக்கு என் தனிப்பட்ட பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

     

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 59

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 59

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 59

    ஒற்றாடல்

    குறள் 581:

    ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
    தெற்றென்க மன்னவன் கண்

    நேர்மையான தெறமையான உளவாளியும் (ஒற்றரும்) நீதியச் சொல்லுத அற நூல்களும் ராசாவுக்கு ரெண்டு கண்ணு கணக்கா.

    குறள் 582:

    எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
    வல்லறிதல் வேந்தன் தொழில்

    எல்லா இடத்திலயும், நடக்குதத எல்லாத்தையும் எப்பமும் உளவு பாக்க உளவாளி வச்சி வெரசலா தெரிஞ்சிக்கிடவேண்டியது ராசாவோட வேலை.

    குறள் 583:

    ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
    கொற்றங் கொளக்கிடந்த தில்

    நாட்டு நடப்ப உளவாளிய வச்சி தெரிஞ்சுக்கிட்டு நடத்தாத ஆட்சி நெலச்சி நிக்குததுக்கு வேற வழியே இல்ல.

    குறள் 584:

    வினைசெய்வார் தஞ்சுற்றம் வேண்டாதா ரென்றாங்
    கனைவரையும் ஆராய்வ தொற்று

    உளவு பாக்குத உளவாளி தனக்கு வேண்டப்பட்டவங்க, வேண்டாதவங்க, சொந்தக்காரங்க னு பாக்காம வேலை செஞ்சாத்தான் அவங்கள நேர்மையான உளவாளிகள் னு சொல்ல முடியும்.

    குறள் 585:

    கடாஅ உருவொடு கண்ணஞ்சா தியாண்டும்
    உகாஅமை வல்லதே ஒற்று

    மத்தவங்களுக்கு சந்தேகம் வராத வேசத்தோட போயி, ஒருக்க சந்தேகப் பட்டு பாத்தாலும் பயப்படாம இருந்து, எந்த நேரத்திலயும் மனசுல இருக்கத வெளிய சொல்லாம இருக்க நெஞ்சுறுதி உள்ளவந்தான் உளவாளியா இருக்கதுக்கு லாயக்கு..

    குறள் 586:

    துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்
    தென்செயினுஞ் சோர்வில தொற்று

    துறவி வேசத்துல போக முடியாத இடத்துக்கெல்லாம் போயி வேண்டியத தெரிஞ்சிக்கிட்ட பொறவு பிடிபட்டா என்ன சங்கடம் வந்தாலும் ரகசியத்த சொல்லாம மறைக்கவன் தான் உளவாளி..

    குறள் 587:

    மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை
    ஐயப்பா டில்லதே ஒற்று

    ரகசியமா செய்யுத செயல்களையும் போட்டுவாங்கி தெறிஞ்சுக்கிடுத தெறம உள்ளவனாவும் கேட்ட பொறவு அது எம்புட்டு உண்ம னு தெளிவா புரிஞ்சுக்கிடுதவனும் தான் உண்மையான உளவாளி.

    குறள் 588:

    ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
    ஒற்றினால் ஒற்றிக் கொளல்

    ஒரு உளவாளி தன் தெறமையால தெரிஞ்சுக்கிட்டு வந்த விசயத்தப் பத்தி , இன்னொரு உளவாளியையும் தெரிஞ்சுக்கிட்டு வரச் சொல்லி சரி பாத்துக்கிடணும்.

    குறள் 589:

    ஒற்றொற் றுணராமை யாள்க உடன்மூவர்
    சொற்றொக்க தேறப் படும்

    ஒருத்தருகொருத்தர் அறிஞ்சுக்கிடாம மூணு உளவாளிங்கள அனுப்பி உளவு பாத்து மூணுபேரு சொல்லும் ஒண்ணுபோல இருந்தா அத உண்மனு ஒத்துக்கிடலாம்.

    குறள் 590:

    சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யிற்
    புறப்படுத்தான் ஆகும் மறை

    ஒரு உளவாளிக்கு திறமசாலினு பரிசு கொடுக்க நெனச்சா ஊரறிய குடுக்கக்கூடாது அப்டி செஞ்சா ஒளிவுமறைவா இருக்க வேண்டியத தானே வெளியவிடுதது போல ஆவும்.

    (அடுத்தாப்லையும் வரும்)

    Share
  • ஐயப்பன் காவியம் – 6

    ஐயப்பன் காவியம் – 6

    -இலந்தை சு. இராமசாமி

    மகன் வேண்டு படலம்

    விளம் விளம் விளம் விளம் விளம் மா மா – எழுசீர் விருத்தம்

    அரண்மனை எதிரிலே அமைந்தபூங் காவனம் அதனிலே அமர்ந்த வண்ணம்
    விரல்நுனி கடித்தெதோ துயரினில் இருந்தபோல் வீற்றிருந் தாளி ராணி
    அருகினில் மன்னவன் ஆதர வாகவே அவள்கரம் கையெ டுத்தான்
    கருநிற விழிகளில் வழிந்திடும் நீரினைக் கைகளி னால்து டைத்தான்.    53

    அங்கொரு மரத்தினில் காகமொன் றாசையாய் அதன்குஞ்சுக் குணவை ஊட்டும்
    பொங்கெழில் காட்சியைப் பார்த்ததும் வேதனை பொங்கிட அழுது தீர்த்தாள்
    ”இங்கெனக் கிப்பிறப் பில்மக வில்லையோ ஈசனே,”என்று நொந்தாள்.
    சங்கடம் அதனையே பார்த்தவன் விழிகளும் தாமாகக் கசிந்த வன்றே!    54

    “இன்னொரு திருமணம் என்னவ, விரைவிலே ஏற்புடன் செய்து கொள்க
    அன்னவள் வழியினில் மகவினைப் பெறுவதும் ஆகலாம் செய்க” வென்றே
    மன்னவ னிடத்திலே அரசியும் சொல்லிட மன்னவன் மறுத்து விட்டான்
    இன்னமும் வாய்ப்புள திறைவனை வேண்டுவோம் ஏதுமோர் வழிபி றக்கும்    55

    என்றனன் மன்னவன் , இருவரும் எழுந்திட எத்தனிக் கின்ற நேரம்
    மன்னனின் குலகுரு குறுமுனி அவ்விடம் வந்தனர் ,வணங்கி னார்கள்
    ”என்னவோ மாதிரி இருக்கிறீர்  என் குறை?”  என்றவர் வினாயெ ழுப்ப
    “என்றனின் குலம்விளங் கிடமக வில்லையே எனுங்குறை “ என்று சொன்னான்  56

    சொக்கனைக் கேட்கலாம் சொல்லுவான், ஓர்வழி , துயரினை விடுக வென்றே
    அக்கறை யாகவே சொல்லிய அகத்தியர் “அரசனே, நாளைக் காலை
    தக்கதோர் வகையிலே தொழுகைகள் செய்துபொற் றாமரை  வரவ ழைத்தே
    இக்குறை தீரவென் செய்வதென் றொருமடல் எழுதியே கேட்ப மென்றார்       57

    அடுத்தநாள் காலையில் முறைப்படி பூசைகள் அரனுக்குச் செய்த பின்னே
    தொடுத்திடும் விழைவுடன் பொற்றா மரைக்குளம் தூயராய்ச் சென்று நின்றார்
    எடுத்தவோர் ஓலையில் மன்னவன் கோரிக்கை எழுதினார் முனிவர் கோமான்
    விடுத்தனர் வேண்டுகோள் அரியபொற் றாமரை மேலெழ வேண்டு மென்றே!    58

    ”அறந்தலை நிறுத்திடும் அரியபொற் றாமரை ஆக்கமே போற்றி போற்றி
    சிறந்தநூல் ஏதெனத் தேர்ந்தளிக் கின்றதோர் தெய்வமே போற்றி போற்றி
    மறைந்துநீ இருக்கிற இடத்தினை  விடுத்திவண் வருகவே மேலெ ழுந்து
    புறந்தலைப் பட்டுநீ ஓலையை ஏற்றருள் புனிதமே போற்றி போற்றி             59

    என்றலும் நடுவிலோர் சுழலெழுந் தார்த்திட எங்கணும் மீன்கள் துள்ள
    ஒன்றடுத் தொன்றெனப் பரவின சுழல்களும் ஒளிர்ந்தது பொய்கை வெள்ளம்
    பொன்னிற மாகவோர் பொகுட்டெழுந் துயர்ந்தது  பூத்த து கண்ப றிக்க
    தன்னிரு கரங்களைத் தலைக்குமேல் தூக்கியே தவமுனி வணங்கி நின்றார்.       60

    மன்னனும் அவனது மனைவியும் வணங்கிட வந்தது  கரையின் ஓரம்
    மின்னொளிர் தாமரை நடுவிலே ஓலையை விடுத்தனர் முனிவர் நன்றே
    தன்னிடம் தந்தவவ் வோலையைப் பெற்றபொற் றாமரை அங்கி ருந்து
    சென்றது நடுவிலே நின்றது பின்னது சென்றது நீரி னுள்ளே.                     61

    “அரனிடம் சென்றது விடையினை பெற்றிவண் அடைவதற் காகும் நேரம்
    பரவுக ,  அரனையே பாடுக , அவன்புகழ் பாங்குடன் போற்றி செய்க
    உருகியே சொல்கிற உளமுணர் வேண்டுதல் உண்மையில் நலம்கொடுக்கும்
    அரசனும் அரசியும் தொடங்குக” எனமுனி  சொல்லவும் தொடங்கி னார்கள்.     62

    “ஆதியே, அநாதியே அருமறை மூலமே ஆண்டவா போற்றி போற்றி
    சோதியே , தூயனே, சொற்பொருள் வேதியா, சொக்கனே போற்றி போற்றி
    நீதியே, நிர்மலா, நிர்குணா, நாயகா, நேசனே போற்றி போற்றி
    போதமே புண்ணியா, பூரண மானவா, புனிதனே போற்றி போற்றி               63

    பைந்தமிழ்ப் புலவனே, பரமனே, புராரியே, பாண்டியா போற்றி போற்றி
    நந்தியின் தலைவனே, நாதனே, ஞானியே, நம்பனே போற்றி போற்றி
    சுந்தரா அங்கயற் கண்ணியின் துணைவனே, சூக்குமா, போற்றி போற்றி
    சொந்தமே ஆனவா, சூத்திர தாரியே, சுடரொளி போற்றி, போற்றி               64

    கயிலையின் நாதனே, காசியில் விஸ்வனே, காரணா போற்றி போற்றி
    மயிலையின் ஈசனே மலைமகள் கேள்வனே, வானவா, போற்றி போற்றி
    சுயம்புவே, தாணுவே, தொன்மையில் தொன்மையே தோன்றலே போற்றி போற்றி65
    தயவுளோய், சங்கரா, சாமிக்குச் சாமியே, தத்துவா போற்றி போற்றி

    விடையனே, சூலனே, விநாயகன் தந்தையே, வீரனே போற்றி போற்றி
    சடையனே, சடையினில் கங்கையைக் கொண்டவா, சத்தியா போற்றி போற்றி
    படமெடுத் தாடிடும் பாம்பினைப் பூண்டவா, பரிவுளோய் போற்றி போற்றி
    சுடலையில் நடமிடும் நீலமணி கண்டனே, தொடக்கமே போற்றி போற்றி”        66

    மா மா விளம்- அறுசீர் விருத்தம்

    பாடு கின்ற போற்றிகள்
    பண்ணில் தோய்ந்த நேர்த்திகள்
    கூடு கின்ற போதிலே
    குளத்தி ருந்து தாமரை
    ஏடு தூக்கி வந்ததே
    என்ன வென்றே ஆர்வமாய்
    வாடி நின்ற மன்னவன்87
    வாங்கிக் கண்ணால் நோக்கினான்                               67

    “மன்ன னுக்குப் புதல்வர்கள்
    வாய்ப்பர் இரண்டு குழந்தைகள்
    ஒன்று மன்னன் வழியிலே
    ஒன்று மன்னன் வழியிலே

    என்றி ருந்த வாசகம்
    இன்பம் தந்த போதிலும்
    மன்ன வன்றன் மனத்திலே
    வந்த தங்கோர் ஐயமே!                                         68

    வாங்கிப் பார்த்த மாமுனி
    மன்ன வன்பால் கூறினார்
    ”ஏங்கி நின்றாய் மன்னவா
    இரண்டு புதல்வர் வாய்ப்பரே
    ஆங்கோர் செல்வன் வழியிலே
    அரசே உனக்குக் கிட்டுவான்
    பாங்காய் உன்றன் வழியிலே
    பையன் ஒருவன் பிறப்பனே!”                                 69

    என்று சொல்லி அகத்தியர்
    எழுந்த ஐயம் தீர்த்தனர்
    மன்ன னுக்கு மகிழ்ச்சியில்
    வார்த்தை ஏதும் வரவிலை
    தன்னுள் பொங்கும் மகிழ்ச்சியில்
    தத்த ளித்தார் இராணியார்.
    மன்னன் னோடி ராணியும்
    வணங்கி னர் மா முனிவரை..                                   70

    இதற்கு முன்னர் தேவர் உலகில் என்ன நடந்த தென்பதனை
    முதற்ப டிக்கு  நானிங் குரைப்பன்  முனிவர் அறிவார் வரலாறு
    விதிர்வி திர்த்துத் தேவ ரெல்லாம் விசனம் கொள்ளும் படியாக
    அதிர்வு தந்த மகிஷி பற்றி அடுத்த தாகக் கூறுவமே!                   71

    -தொடரும்.

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (300)

    இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (300)

    -சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்கள்.

    காலவோட்டம் தமக்குள் எத்தனையோ நிகழ்வுகளைப் புதைத்துக் கொண்டு செல்கின்றன. அவற்றை வெறும் நிகழ்வுகளாகப் பார்த்துக் கொண்டிருக்கும் பார்வையாளர்களாக மட்டும் நாமிருந்து விட முடிகிறதா? இல்லையே! புதையும் நிகழ்வுகளுக்குள் எமது வாழ்வினைக் கட்டுப்படுத்தும் வல்லமையும் அடங்குகிறதே ! சராசரி மனிதர்களின் அன்றாட வாழ்க்கையின் நிலையை நிர்ணயிக்கும் பல முடிவுகள் அவர்களின் கட்டுப்பாட்டுக்கு அப்பால் அவர்களின் பெயரால் எடுக்கப்படுகிறது. இதனால் பல சமயங்களில் விரும்பாமலே பார்வையாளர்களாக ஆக்கப்பட்டு விடுகிறோம். இதற்கு நியாயமாக ஜனநாயகம் எனும் முத்திரையும் குத்தப்படுகிறது. இது ஒரு நாட்டில் மட்டுமல்ல பல நாடுகளில் நிகழ்ந்து வரும் ஒரு நடைமுறை நிகழ்வு என்பதுவே கசப்பான உண்மை.

    இங்கிலாந்தின் புதிய பிரதமராக திரு.பொரிஸ் ஜான்சன் அவர்கள் பதவியேற்று சுமார் ஒரு மாத காலமாகிறது. இவ்வொரு மாத காலத்தில் அவரால் தனது அரசு நடைமுறைப்படுத்தப் போகும் திட்டங்கள் எனப் பல அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. அவற்றில் பல சராசரி மனிதர்கள் மனதில் குடி கொண்டிருந்த எண்ணங்களின் பிரதிபலிப்புகள் போலவும் தென்படுகின்றன. இவை மக்களின் செவிகளில் ஒரு இனிமையான செய்தியாக விழுவதற்காக மட்டும் கூறப்பட்டவையா? இல்லை அது நடைமுறைபடுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா? என்பது இன்னமும் சர்ச்சைக்குரிய வாதமாகவே இருக்கிறது. ஆனால் அனைத்துக்கும் ஆணிவேராக, அடிப்படைப் பிரச்சனையாக இன்றைய ஐக்கிய இராச்சிய மக்கள் முன்னல் இருப்பது “ப்ரெக்ஸிட்” எனும் பிரச்சனைக்கான தீர்வே ! மக்களின் அபிலாஷைகளை அறியும் பொருட்டு நடத்தப்பட்ட சர்வஜன வாக்கெடிப்பின் படி 4% வீதமான அதிகப்படியான வாக்குகளினால் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியத்தின் வெளியேற்றமே தெரிவு செய்யப்பட்டது என்பது மறுக்கப்பட முடியாத உண்மை.

    இது ஒரு பக்கமிருந்தாலும், வாக்களித்த மக்கள் எவ்வகையான ஒரு தீர்வை எதிர்பார்த்து வாக்களித்தார்கள் என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. அதே சமயம் “ப்ரெக்ஸிட்”க்கு ஆதரவானவர்கள் என்ன கூறுக்கிறார்கள்? எந்தவிதமான உடன்படிக்கையும் எட்டப்படாத பட்சத்தில் உடன்படிக்கையற்ற ஒரு வெளியேற்றம் என்பது வெளிப்படையாகத் தெரிந்த உண்மைதானே! எனவே வாக்களித்த மக்கள் உடன்படிக்கையற்ற வெளியேற்றத்திற்கு வாக்களிக்கவில்லை எனும் வாதம் நியாயமற்றது எனபதுவே அவர்களது வாதம். இங்கிலாந்துப் பாராளுமன்றம் பல அபிப்பிராயங்களின் அடிப்படையில் சிதறி நிற்கிறது. எந்த விதமான ஒரு தீர்வுக்கும் ஏகோபித்த ஆதரவு இல்லை. அதேசமயம் எதுவித உடன்படிக்கையுமற்ற வெளியேற்றத்துக்கு எதிராகப் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கிறது. இதுதான் இன்றைய நிலை. இந்த நிலையில் நாம் நாட்டின் நலனைக் கருதியே நாம் உடன்படிக்கையற்ற ஒரு வெளியேற்றத்தை எதிர்க்கிறோம் என்றும் கூறும் பாராளுமன்ற உறுப்பினர்களை நோக்கி ஒரு கேள்விக்கணையைத் தொடுக்க வேண்டித்தான் உள்ளது.

    2017ம் ஆண்டுத் தேர்தலை அடுத்து 2016 சர்வஜன வாக்கெடுப்பின் முடிவுகளின்படி மக்கள் தீர்ப்பே ! மகேசன் தீர்ப்பு ! என்று ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறப் போகிறோம் எனும் அறிவிப்பை அப்போதைய பிரதமர் தெரேசா மே ஐரோப்பிய ஒன்றியத்துக்கு விடுத்தார். அதற்கான பாராளுமன்ற வாக்கெடுப்பில் பெரும்பான்மை ஆதரவை வழங்கும் போது ஏனிந்த நாட்டின் நலன் எனும் நிலைப்பாடு அவர்களுக்கு முக்கியமாகத் தோன்றவில்லை? அப்படித் தோன்றியிருந்தால் உடன்படிக்கையற்ற வெளியேற்றத்துக்கு ஆதரவு அளிக்க மாட்டோம் என்று அப்போதே முடிவெடுத்திருந்தால் அவ்வறித்தலை அவசரம், அவசரமாக விட்டிருக்காமல் செய்திருக்கலாம் அல்லவா? அதுமட்டுமின்றி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் நடவடிக்கையை சட்ட மூலமாக்கும் போதும் இதை அவர்கள் எண்ணவில்லையா? ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. இதற்கான காரணம் என்று இப்போது ஊகிக்க முடியுமானால் ஒரேயொரு விடயம் மட்டுமே புலப்படுகிறது. அன்றைய சூழலில் “ப்ரெக்ஸிட்” எனும் வாதம் மக்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றிருந்தது.

    அன்றைய நிலையில் அனைத்துக் கட்சிகளும் மக்களின் ஆதரவைப் பெற ஒரே வழி நாட்டின் நலன் கருதிய உண்மைகளை விட அன்றைய பெரும்பான்மை மக்களின் ஆதரவினைப் பெற்ற “ப்ரெக்ஸி”டை அதரிப்பதை ஒரேவழியாக அதனைத் தேர்ந்தெடுத்ததுவே அக்காரணம் என்றே புலப்படுகிறது. இந்த “ப்ரெக்ஸிட்” எனும் பூதம் கண்ணாடிக் குவளையில் இருந்து திறந்து விடப்படதன் முக்கிய காரணம் இன்றைய அரசுக் கட்டிலில் அமர்ந்திருக்கும் கன்சர்வேடிவ் கட்சி தனது கட்சியின் பிளவைத் தடுப்பதற்காகவே என்பதுவே உண்மை. ஜரோப்பிய ஒன்றியத்தில் பல புனரமைக்கப்பட வேண்டிய விடயங்கள் இருக்கின்றன என்பதை யாரும் மறுத்து விட முடியாது. நடைமுறை நிர்வாகச் சிக்கல்களும், பல அதிருப்தியான நிகழ்வுகளும் நடப்புகளும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் இருப்பது மறுக்கப்பட முடியாத உண்மை. குறிப்பாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பிரஜைகள் மற்றைய ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகளுக்குள் தங்கு தடையின்றிப் பிரவேசிக்கலாம், பணிகளில் அமரலாம் எனும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டம் ஐக்கிய இராச்சியத்தில் பல பிரச்சனைகளைத் தோற்றுவித்தது.

    இதற்குக் காரணமாக பல்வேறு நோக்கங்கள் கொண்ட கட்சிகளின் பிரச்சாரமும், சில இனத்துவேஷ அமைப்புகளின் தொடர் கருத்துக்களும் இருந்தன என்பதும் உண்மையே. இது மக்களின் அபிப்பிராயத்தை ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எதிராக திசை திருப்பியது. அதன் விளைவே 2016ம் ஆண்டின் சர்வஜன வாக்கெடுப்பின் முடிவு. சரி இனி இன்றைய சூழலைப் பார்ப்போம். கன்டர்வேடிவ் கட்சியை அழுங்குப் பிடியாகப் பிடித்திருப்பவர்கள் “ஐரோப்பிய ஆய்வுக் குழு” அதாவது ஆங்கிலத்தில் இ.ஆர்.ஜி எனப்படும் அவர்களது உட்கட்சியின் ஒரு பிரிவு. இவர்களின் கொள்கை ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஐக்கிய இராச்சியத்தின் தொடர்பை முழுமையாகத் துண்டிப்பது. இதற்கு ஏதுவாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து எதுவித உடன்படிக்கையுமற்ற ஒரு வெளியேற்றத்தையே இவர்கள் விரும்புகிறார்கள். பதவி விலகிய தெரேசா மே இவர்களது கொள்கையை ஆதரிக்காமையே அவரது வீழ்ச்சிக்குக் காரணமானது. இன்றைய பிரதமரும், அவரது அமைச்சரவையும் இந்த அமைப்பினரின் ஆதரவைப் பெற்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன் பிரதிபலிப்பாகத்தான் இன்றைய பிரதமரும், அவரது அமைச்சரவையும் கீறு விழுந்த இசைத்தட்டினைப் போல காலக்கெடுவான அக்டோபர் 31ம் தேதி  உடன்படிக்கையோ இல்லையோ வெளியேறுவது உறுதி என்று கூறி வருகிறார்கள். உடன்படிக்கையற்ற வெளியேற்றம் ஐக்கிய இராச்சியத்தின் பொருளாதாரத்தையும், சராசரி மனிதர்களின் வாழ்வாதாரத்தையும் பெரிய அளவில் பாதிக்கும் என்று பல தொழில் அமைப்புக்களும் பொருளாதார நிபுணர்களும் கூறி வருகிறார்கள். இவையெல்லாம் வெறும் பயமுறுத்தல்களே , இவற்றில் ஒன்றுகூட உண்மையல்ல என்று ப்ரெக்ஸிட் ஆதரவாளர்கள் பலர் கூறி வருகிறார்கள். தெரேசா மே கைச்சாத்திட்ட உடன்படிக்கை அற்றுப் போய்விட்டது புதியதோர் உடன்படிக்கை ஏற்படுத்த வேண்டும் இல்லையானால் அக்டோபர் 31ம் தேதி உடன்படிக்கையில்லாமல் வெளியேற நாம் தயார் என்று திரும்பத் திரும்பக் கூறுக்கிறார் பிரதமர் பொரிஸ் ஜான்சன்.

    இது ஜரோப்பிய ஒன்றியம் வேறு வழியில்லாமல் ஒரு புதிய உடன்படிக்கைக்கு உடன்படும் எனும் நம்பிக்கையில் சொல்கிறாரா? இல்லை உடன்படிக்கையில்லாமல் வெளியேறுவதே அவரது நோக்கமா? என்பதைப் புரிந்து கொள்வது கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கிறது. இச்செய்தியைச் சுமந்து கொண்டு பிரான்சு, ஜேர்மனி ஆகிய நாடுகளின் அதிபர்களைச் சந்திக்கச் செல்கிறார் பிரதமர் பொரிஸ் ஜான்சன். ஜரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய நாடுகளே இவை. இச்சந்திப்பின் பலாபலன்களை நாம் சிறிது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டியிருக்கிறது. எது எப்படி இருப்பினும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சரித்திரத்தில் ஒரு நாடு உத்தியோகபூர்வமாக வெளியேறுவது என்பது இதுவே முதற்தடவை. வெளியேற்றத்தின் பிரதிபலிப்புகள் வெளியேறும் நாட்டிலும், ஐரோப்பிய ஒன்றியத்திலும் எப்படி இருக்கும் என்பதும் இதுவே முதற்தடவை. ஆக மொத்தம் ஆழம் தெரியாமல் காலை விடுகிறோம் கடந்து சென்று விடுவோமா? இல்லை மூழ்கி விடுவோமா? என்பதை அனுபவித்தேதான் தெரிந்து கொள்ள வேண்டும்.

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    Share
  • காட் ப்ளஸ் யூ

    காட் ப்ளஸ் யூ

    -சேஷாத்ரி பாஸ்கர்.

    சார். மன்னிக்கணும் ஒரு முப்பது ரூபாய் கொடுக்க முடியுமா ?

    யார் நீங்க , உங்களை எனக்கு தெரியாதே?

    எனக்கும் உங்களை தெரியாது , நான் தாம்பரம் போகணும் .எனக்கு ஒர்த்தர் மூவாயிரம் ருபாய் தரனும் பஸ்ல போக காசில்லை .இந்த பக்கம் நீங்க திரும்ப வரும்போது நான் பார்த்து கொடுத்துடறேன் .

    சார் உங்க வயசுக்கு நான் வச்சிண்டு இல்லன்னு சொல்றது தப்பு . இந்த அம்பது ரூபாயை வச்சுக்குங்க

    எதுக்கு சார் .நான் பாபா கோவில்ல சாப்டாச்சு . முப்பது போதும்

    இல்லை சார் .உங்களுக்குத் தர வேண்டியவர் இல்லேன்னா உங்களுக்கு பஸ்ல வர காசு .வேண்டாமா ?

    ஏன் சார் இப்படி அபசகுனமாய் சொல்றீங்க என் பணம் . என் உழைப்பு .எனக்கு உங்க பணம் வேணாம் –

    அய்யா , நான் நல்ல எண்ணத்துல சொன்னதை நீங்க தப்பா புரிஞ்சுகிட்டீங்க இந்தாங்க .

    கொஞ்சம் வேகமாக வாங்கி கொண்டு காட் ப்ளஸ் யு என்றார்

    சிரித்தேன் .

    என்ன சார் .

    இல்லை சொல்லுங்க .

    உங்களை அந்த காட் ப்ளஸ் பண்ணலையே என்றேன்

    கொஞ்சம் முறைத்து விட்டு என் பஸ் வருகிறது என்று புறப்பட்டார்.

    உள்ளே அமர்ந்து என்னை பார்த்து விட்டு அம்பது ரூபாய் நோட்டோடு கையாட்டினார் .

    நான் கை கூப்பினேன்

    மாலை என் மகன் என்னிடம் வந்து ஒரு குட் நியூஸ் என்றான்

    என்ன என கேட்டேன் .

    இல்லை . நீ எப்ப பார்த்தாலும் தானம் பண்ணு , தர்மம் பண்ணுன்னு சொல்வ இல்ல

    ஆமாம் . அதுக்கென்ன இப்ப ?

    இல்லை . இன்னிக்கு ஒருத்தர் குளத்து கிட்ட என்கிட்டே பத்து ரூபாய் கேட்டார் . பாவமா இருந்தது பா .

    என்ன சொன்ன .

    என்கிட்டே இருபது ரூபாய் இருந்தது .அப்பிடியே கொடுத்துட்டேன் .

    குட் .

    என்னப்பா என்னை பாராட்டுவேன்னு நினச்சேன் .

    அவர் உன்கிட்ட பணம் வாங்கிண்டு காட் ப்ளஸ் யூன்னு சொன்னாரா ?

    காட் . கரெக்ட் . எப்படிப்பா உனக்கு தெரியும் .

    கொஞ்சம் கெஸ் பண்ணேன் .

    அவருக்கு தரக்கூடாதாபா .

    இல்லை.அடுத்த வாட்டி பார்த்தா அவர் கேட்காவிட்டாலும் கொடு என்றேன் .

    Share
  • வரி என்னும் கொள்ளைக்கு எதிர்ப்பு

    வரி என்னும் கொள்ளைக்கு எதிர்ப்பு

    -சேஷாத்ரி ஸ்ரீதரன் 

    வரி என்பது பெரிய அரச படையைப் பேணி மக்கள் உயிர்க்கும் உடைமைக்கும் பாதுகாப்பு நல்கவும், அரச நிருவாகம் நடத்தவும் வேந்தர், மன்னர் என்ற முதலாம், இரண்டாம் அதிகார அடுக்கு ஆட்சியாளர்களால் வரி என்ற மக்களின் பங்களிப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்த வரியை மக்களிடம் சமமாகத் தண்டவும் எவரும் வரி கட்டுதலில் இருந்து விட்டுப்போகாமல் இருக்கும்படியும் ஆட்சிப் பரப்பின் எல்லா பகுதியிலும் வரியை நடைமுறைப்படுத்தவும் துணைப் படைகளை திரட்டி போருக்கு அனுப்பவும் மூன்றாம், நாலாம் அதிகார அடுக்குகளான அரையர் என்னும் அரசர், கிழார்கோன் ஆகிய கீழ்நிலை அதிகார அடுக்குகள் வேந்தர், மன்னவரால் உண்டாக்கப்பட்டன.

    பழங் காலத்தில் வரிகள் மிகப் பலவாகும். இந்த வரித் தண்டல் பண்டமாற்று நிலவிய காலத்தில் பெரும்பாலும் மக்கள் உருவாக்கிய பொருளாகவே பெறப்பட்டன. ஏனென்றால் மக்களிடம் காசு புழக்கம் அரிதாகவே இருந்தது. வணிகரிடம் காசாக வரி பெறப்பட்டது. எப்படியானாலும் பண்டு வரி அதிகமாகவே இருந்தது. மக்கள் வரிச் சுமை தாங்காமல் திக்குமுக்காடிப் போயினர். சில வேளைகளில் ஊரை விட்டே அகலும் அளவிற்கு வரிக் கொடுமை தாங்கமுடியாததாக இருந்தது. மக்கள் சிலபோது ஆட்சியாளரிடம் முறையிட்டு வரிக் குறைப்பு பெற்றனர். இந்த வரிச்சுமை சோழர் ஆட்சியில் இருந்ததை விட விசய நகர ஆட்சியில் இன்னும் கூடுதலாக இருந்தது. கையும் காலுமே உடைய உழைப்பை நம்பி  கூலிக்கு செல்வோர் கூட வரி கட்டவேண்டி இருந்தது. இடங்கை, வலங்கைப் பிரிவு என்று குறிப்பிட்டு சில வரித் தொடர்பான கல்வெட்டுகள் காணக் கிடைக்கின்றன.

    மக்கள் தாமே சட்டத்தை கையில் எடுத்து வரித் தண்டுவோரை கொல்லும் அளவிற்கு உடன்பாடு காணும்படியாக ஊராக ஒன்றுகூடி அதிக வரிக்கு எதிராக ஆவண ஒப்பந்தம் செய்த கல்வெட்டுகள் சில உள. இது போன்ற நிகழ்வுகள் குறிப்பாக தேவதான ஊர்களில் இதாவது, இறையிலியாக அறிவிக்கப்பட்ட இடங்களில் அரங்கேறி உள்ளன. ஏனென்றால் இவ்வூர்களில் ஆட்சியாளர் என்று இல்லாமல் கோவில் நிர்வாகப் பொறுப்பில் இருந்தமையால் மக்களால் அதற்கு எதிராக எளிதில் ஒன்று திரள முடிந்தது. அரையர்களைப் போல கோவிலார் ஆயுதம் ஏந்தி மக்களை அடக்கப் போவதில்லை என்பதே இதற்கு காரணம்.

    ஏதோ ஒருகாலத்தில் வேந்தர், மன்னர், அரையர் ஆகியோரால் கோவிலின் வளர்ச்சி, கோவிலைச் சூழ்ந்த ஊரின் வளர்ச்சி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அவ்வூர்களில் தண்டப்படும் வரிகளை அரசருக்கு (இறை) செலுத்த வேண்டாம் (இலி) என்று ஆட்சியாளரால் ஓலையில் உரிமை எழுதிக் கொடுக்கப்பட்டவையே இந்த இறையிலி ஊர்கள். இது ஆட்சியாளருக்கும் கோவிலாருக்கும் இடையேயான உடன்பாடு தானே தவிர இதில் பொது மக்கள் குறுக்கிட ஒன்றும் இல்லை. இறையிலி ஆனாலும் மக்களைப் பொறுத்தமட்டில் வரி கட்டித்தான் ஆக வேண்டும். இந்நாளில் பலரும் இறையிலி என்றால் வரியே இல்லை என்று தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். வரியே இல்லாமையை சர்வ மானியம் என்று கல்வெட்டுகள் குறிக்கின்றன. வரியே இல்லாவிட்டால் பின் எப்படி கோவில் வளர்ச்சியும் கோவிலூரின் வளர்ச்சியும் நடைமுறைப்படுத்த முடியும்.  வரியே இல்லை என்ற விளக்கத்தால் இறையிலியின் நோக்கமே அடிபட்டு போகும் போது அதை ஏன் ஆட்சியாளர் இறையிலி என்று அறிவிக்க வேண்டும்? என்று சிந்திக்க வேண்டும்.  இந்த இறையிலி ஊர்களில் கோவில் பொறுப்பாளர்களே தமக்கு இசைந்தவாறு வரியிட்டு தண்டிவந்தனர்.  அதை எதிர்த்து மக்கள் எதிர்வினையாற்றிய செய்திகளை கீழ் உள்ள கல்வெட்டுகள் விளக்குகின்றன.

    புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், திருவரங்குளம் ஊர், ஹரதீர்தீசுவரர் கோவில் கருவறைக்கு முன் உள்ள மண்டபத்தின் கிழக்கு சுவரில் உள்ள 15 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் மதுரையு மீழமுங் கருவூரு பாண்டியன் முடித்தலை[யு]
    2. ங் கொண்டு மதுரையில் வீரர் அவிஜேகம் விசையர் அவிஷேகமும் பண்ணியரு[ளிய_ _]
    3. புவன வீரதேவற்கு யாண்டு 40 நாற்பதாவது இராஜராஜ வளநாட்டு வல்ல நாட்டு [வ _ _ _
    4.  கூரப்பாத்தாழ்வு ] தேவி மங்கலத்து நாடா இசைந்த நாட்டோமெங்களி லிசைந்து உடையார் தி
    5. ருவரன்குளமுடைய நாயனார் திருப்பதி தேவுந் திருமுடையான் திருமண்டபத்து நாடாய்
    6. குறைவறக்கூடி இருந்து கற்கடக நாயற்று மூன்றாந் தியதி நாள் இசைவு தீட்டுமிட்டு கல்வெட்டி
    7. குடுத்த பரிசாவது இந்நாயனார் திருப்பதியில் நாலுவரத்துக் குள்ளு இருந்த குடிமக்களை நோ
    8. க்குவோமாகவு புறத்தேவதானங்களையுங் குடிமக்களையு நோக்குவோமாகவும் நோக்குமிடத்து பறித்தல் கன்று
    9. காலி பிடித்தல் மற்றுஞ் சில சிதம்புகள் செய்தாருண்டாகில் நீர் நிலத்திலே இரண்டு இரண்டு மாச்செய்யுந் திருசூலக்கல் நா
    10. ட்டி குடுத்து பறிச்சின பிடிசின விடுவோமாகவும் இத்திருப்பதியில் சிவபிராமணர், செட்டிகள், வெள்
    11. ளார், கைக்கோளர், தேவரடியார், கண்மாளர், இடையர் மற்றுந் இத்திருப்பதியி இருந்து_ _ _
    12. வர் சிலர் எங்கள் பக்கல் விலை கொண்டுடைய நீர்நிலங்களும் புன்சைகளு குடி நீங்கா தேவ
    13. தானமாக எங்கள் நாயனாற்கு இறை இறுப்பராகவும் இ[று]க்குமிடத்து நீர் நில[த்]துக்கு மாத்தால் ப
    14. தில் கலநே தூணிப்பதக்காக வந்த நெல்லும் புன்சைக்கு மாத்தால் பதினைஞ்சே_ _ _
    15.  திகாசும் கொள்ளக்கடவதாகவு இப்படியால் வந்த நெல்லுங் காசும் சந்திராத்தயவல்_ _ _

    இசைந்த – இணங்கிய; இசைவுத் தீட்டு – ஒப்பந்த ஆவணம்; திருப்பதி – கோவில் திருத்தலம்; நாலுவரத்து- நாற்புறத்தில் இருந்து உள்ளே வருகை; பறித்தல் – பறிமுதல்; கன்றுகாலி – கால்நடை; சிதம்பு – தன்மை அழிப்பு, debasement in quality; பக்கல் – எங்கள் இடம் இருந்து, from us; மாத்தால் – ஒரு மா நிலம்.

    விளக்கம்: திரிபுவனவீரதேவர் என்று மூன்றாம் குலோத்துங்கனை குறிப்பிட்டு, அவனது 40 ஆம் ஆட்சிஆண்டில் (பொ.ஊ. 1218) கற்கடக ஞாயிற்று 3 ம் நாளில் இராசராச வளநாட்டு தேவி மங்கலத்து நாட்டார் இணங்கி நாங்கள் எங்களுகுள்ளே ஒன்றுபட்டு திருவரங்குளமுடைய ஈசன் திருக்கோவில் தலத்தில் ஒப்பந்த ஆவணம்  எழுதிக் கொடுத்த ஏற்பாடு என்னவென்றால் நாற் திசையில் இருந்து உள்ளே வரும் குடிமக்களையும் கருத்தில் கொள்வோம் அதே நேரம் பிற தேவதானங்களையும் அவற்றின் குடிமக்களையும் கருத்தில் கொள்வோம் என்றும், அப்படி கருத்தில் கொள்ளுமிடத்தில் பொருள் பறிமுதல், கால்நடைகளை பிடித்து கொள்ளுதல், தரம் அழித்தல் போன்றவற்றை செய்பவர்  இருப்பாரானால்அதற்கு இழப்பீடாக இரு மா அளவு வயலை திரிசூலக்கல் நாட்டி கொடுப்பதோடு பறிமுதல் செய்த பொருளையும் பிடித்து வைத்த கால்நடையையும் விடுவிப்போம். இத்திருத்தலத்தை சேர்ந்த சிவபிராமணர், செட்டியார், வெள்ளாளர், செங்குந்தர், தேவரடியார், கம்மாளர், இடையர் மற்றும் இத்தலத்தவர் சிலர் எங்களிடம் இருந்து விலைக்கு வாங்கிய நீர்நிலங்கள், புன்செய் நிலங்களுக்கு இடம்பெயரா குடிகளாக வரி இறுக்கலாம். அவ்வாறு இறுக்கும் போது நீர்நிலத்திற்கு ஒரு மாவிற்கு பத்து கலன் தூணிப்பதக்காக நெல்லும், புஞ்செய் நிலத்திற்கு ஒரு மாவிற்கு பதினைந்து _ _ _ காசும் வரியாகக் பெறுவோம். இப்படி வந்த நெல்லும் காசும் ஞாயிறும் நிலவும் நிலைக்கும் பொழுது வரை (கோவிலுக்கு பயன்படுத்தப்படும்) என்று கோவில் பொறுப்பாளர்கள் உடன்பட்டனர்.

    அளவிற்கு விஞ்சி வரித் தண்டியதால் மக்கள் வெகுண்டெழுந்து முறைப்பாடு செய்ததாலோ என்னவோ ஊரார் ஒன்றுகூடி வரன்முறை வகுத்து வரி தண்டுவது குறித்து வரையறை செய்து இவ்வூரில் வாழும் குடிகளிடம் மட்டும் வரியும் காசும் குறிப்பிட்டபடி தண்டுவது என்று ஒப்பந்த ஆவணம் எழுதிக் கொடுத்தனர். இதற்கு கோவில் பொறுப்பாளர்கள் ஒப்புக் கொண்டதாகத் தெரிகின்றது. பண்டைக் காலத்தே எளிய மக்களிடம் காசு புழக்கம் குறைவு என்பதால் நெல்லாகவே வரியைக் கட்டினர் என்று தெரிகின்றது.

    பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 34, பக். 263.

    திருச்சிராப்பள்ளி மாவட்டம், குளித்தலை வட்டம். இரத்தினகிரி ஊர், இரத்தினாசலேசுவரர் கோவில் கருவறை வடக்கு சுவரில் பொறிக்கப்பட்ட 25 வரிக் கல்வெட்டு.

    1. _ _ _ _ மக் கொருவர்க்கு உடற்பட்டு எய்முகங் குடுத்து கோட் குறளை கே _ _ _
    2. குடிகேடு கெடுத்தாருண்டாகிலும் அன்னியாயங்களுக்கு உடற் பட்டாருண்_ _ _
    3. பிராமணராகில் கண்ணும் பறித்து மூக்கும் அறுக்க கடவதாகவும் இ _ _ _ _
    4. _ க்[கூ]னி பட்டாநாகில் செய்தவனுக்கு தோஷ மின்றிக்கேயிருக்க [எ]_ _ _
    5. ம் யே _ _ _ மாரியாகில் பன்றியிலொன்றாக குத்துண்ணக் கடவனாகவும் _ _ _
    6. ராமங்கள் நகரங்களில் கடமை குடிமைக்கன்றியிலே அன்னியாயக் கடமை _ _ _
    7. ளிருவரைப் பிணைத்தும் குற்றம் குற்றமன்றியிலே தெற்ற குற்றத்துக்கு தண்டமி _ _
    8. ல்லாதாகவும் நாடுபெற்று வந்த முதல் கவளமுதல் காணும்மிடத்து கிராமமும் நாடும் நகர _ _ _ _
    9. ணக்கடவோமாகவும் உற்கணக்கர் அன்னியாயக் கடமைக்கு தரவெழுதக் கடவதல்லவாகவும்
    10. வீரக்கொடியார் கைய்யாலே குலை உண்ணக்கடவகளாகவும். இப்படி தவிர  ஒருவரிருவர் _ _ _
    11. கில் நாடாக குடிவாங்கி போகக் கடவோமாகவும் குடிவாங்க இருக்கச் செய்தே நம் _ _ _ _
    12. [ழுதிக் குழமு]ட்டாகல் மேழிபட்டத்தாரெல்லாரையும் பன்றியிலொன்றாக வீரக்கொடியாரே _ _ _
    13. இவகள் செத்தால் இவகள் பிணமும் பன்றியிலொன்றும் நாய்ப்பிணமுமாக _ _ _     
    14. மாளர், கொல்லர், தச்சர் உள்ளிட்ட பணிசமக்கள் நாடு குடிவாங்கி இருக்கச் செய் _ _ _
    15. டாகில் வீரகொடியார் பணியேசாதனமாக கொல்லக் கடவகளாகவும் உடையார் _ _ _
    16. டய நாயநார்க்கு ஏழாவது கார் முதல் பெரிய நாட்டான் திருமாளிகைக்கு ப்ரஹ்ம _ _ – [தலையாக] _ _ _ _
    17. ன் கடையாக [கு]டிமை குறுணிக்கு அரைநாள் கட்ட[த்தும்] த _ _ _ _  
    18. னம் குறுணி நெல்லும் குடக்க கடவோமாகவும் இப்படி சம்மதித்து அமைவுக்க _ _ _ _ _ _
    19. டோமும் கிராமங்களோமும் நகரங்களோமும் இவ்வனைவோம் நாடுகளும் நகர _ _ _
    20. பணியால் அமைவு கச்சமெழுதினேன் ப்ரமத்சங் குழித் தண்டலை மத்தியதன் கு _ _ _ _ _
    21. டையான் திருவரங்க நாராயணன் திருத்தாந் தோன்றியான எழுநூற்றுவ _ _ _ _
    22. டு பணியால் மருதூர் உடையான் பெரிய நாட்டு வேளான் எழுத்து. ஆதனூர் நாடும் கிராம _ _ _ _ _
    23. கரங்களும் பணியால் சோழகுல மாணிக்கச் சருப்பேதி மங்கலத்து பிரம பிரியன்  எழுத்து குறுநன் _ _ _ _
    24. கரம் பணியாலும் ஐஞ்ஞூற்றுவ வேளான் எழுத்து. இப்படிக்கு இவை திருவி _ _ _ _ _
    25. வீரமாகாளம் ஜெயம் குழித்தெண்டலை மத்தயத்தன் நாராயணன் ஆதி _ _ _ _

    உடற்பட்டு – உடன்பட்டு; எய்முகம் கொடுத்து –  பணிந்து போய்; கோட் குறள் – புறங்கூறல்,  back biting; குத்துண்ண – குத்துபட்டு; தரவெழுது – கூலிக்கு ஆவணம் எழுது; வீரக்கொடியார் – போர்க்குடியுள் ஒரு முதலியார் பிரிவினர்; மேழிபட்டத்தார் – வெள்ளாளர்; அமைவுக் கச்சம் – முடிவான தீர்மானம்;

    விளக்கம்: மேலுள்ள வரிகள் சிதைந்துள்ளதால் அவற்றின் பொருளை அடுத்து வரும் வரிகளோடு பொருத்தி பொருள் கொள்ள முடியவில்லை. முதல் சில வரிகள் சிதைந்துள்ளன. ஒருவருக்கு உடன்பட்டு பணிந்து அவரது கோள்சொல்லைக் கேட்டு ஒரு குடியைக் கெடுத்தார் இருப்பாரானால், அநியாயங்களுக்கு உடன்பட்டவர் இருப்பாரானால், அவர் பிராமணர் என்றால் கண்ணைப் பிடுங்கியும் மூக்கை அறுத்தும் போடுவோம்.

    கிராமங்கள் நகரங்களில் நியாயமான கடமை வரி, குடிமை வரி அன்றி அநியாயக் கடமை வரி திரட்டினவரை பிணைத்து குற்றம் உசாவும் குற்றமன்றத்தில் தெளிவாக மெய்ப்பிக்கப்பட்ட அக்குற்றத்துக்கு தண்டமிடுவோம் (fine). ஊர் கணக்கர் அநியாயமாக வரித் தண்டினால் இனிமேல் அவர் ஆவணம் எழுத அனுமதி கிடையாது. மேலும் அவர்கள் வீரக்கொடி என்ற போர்குடியாரால் கொலை யுண்டாவர். மேழிபிடிக்கும் வெள்ளாளராகின் பன்றிக் கூட்டத்தில் ஒன்றாகக் கருதி வீரக்கொடியாரே அவரைக் கொல்வார். அப்படி செத்த போது இவர்கள் பிணங்களை பன்றிப் பிணத்தில் ஒன்றாக நாயின் பிணத்தில் ஒன்றாகக் கருதி எறிவோம். கம்மாளர், கொல்லர், தச்சர் உள்ளிட்ட பணிசெய் மக்களை ஊரை விட்டு போகச் செய்தார் இருப்பாரானால் அவர்களை வீரக் கொடியார் தம் பணியாக கொன்று போடுவார்களாக என்று ஒப்புக் கொண்டு முடிவான தீர்மானத்தை கிராமத்தாரும் நகரத்தாரும் எழுதினோம் என்று பிராமணரும் வேளாளரும் கையெழுத்திட்டுள்ளனர். இறைவர்க்கு கல்வெட்டின ஆண்டில் இருந்து ஏழாவது ஆண்டு கார் காலம் முதல் பெரியநாட்டான் திருமாளிகை என்னும் கோவில் சுவரைப் பேண குடிமைக்குறுணியும் குடிமை நெல்லும் தர கிராமத்தார் ஒப்புக் கொண்டனர். கல்வெட்டு அதிகம் சிதைந்துள்ளதால் இந்த அளவே பொருள் கொள்ள முடிந்தது.

    பல கல்வெட்டுகளில் பிராமணனை கொன்ற பாவத்தை அடைவான் என்ற கருத்தை கூறுவதால் அதை மனதில் ஏந்தி பிராமணக் கொலை கூடாது என்று பிராமணருக்கு மட்டும் கொலை மிரட்டல் விடக்காமல் கண்ணைப்பிடுங்கி முக்கை அறுத்துப் போடுவோம் என்று மிரட்டி உள்ளனர். மற்ற சாதியாரை பன்றியும் நாயுமாக கருதி கொல்லுவோம் என்கின்றனர்.

    பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 34, பக். 155-156.

    செங்கற்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், பூலிப்பரக்கோவில் எனும் ஊரில் வியாக்ரபுரீஸ்வரர் கருவறை வடபுற ஜகதியில் பொற்க்கப்பட்ட 8 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ மந் மஹாமண்டலீசரன் வீரவிஜயபூபதிராய உடையா[ர்]ற்க்குச் செல்லா நின்ற ஏவிளம்பி வுருஷம் தை மாஸம் 5 ந்தியதி உடையார் திருப்புலி[ப]
    2. கவ நாயினார் திருமடை விளாகம். புலிப்ப[க]வர் கோயில் தானத்தார் இவ்வூர் கைக்கோளர்க்குக் கல்வெட்டிக் குடுத்தபடி.  நாட்டில் கோயில் பற்ற அற்ற மரி
    3. ஆதி வாசல்ப்பணம் கழிக்கவேணும் என்று புறநாட்டிலே  சந்திரகிரிச் சாவடிஇலே போயிருக்கைஇல் பூர்வத்தில் கடமை பணம் 9-1/2 க்கு தறி கண்டவாசலுக்
    4. கு வாசல்பணம் மூன்றும் கழித்து [கொண்ட]தறிக்கு தறி ஒன்றுக்குக் கொள்ளூம் பணம் 6-  சேனைக் கடைக்கும் வாசல் பணம் 3 ம் கழித்துக் கொள்ளும்
    5. பணம் 6-1/2  கச்சவடவாணியர் பேர் ஒன்[று]க்குக் கொள்ளும் பணம் 3 சிவன்படவர் பேர் ஒன்றுக்கு கொள்ளும் பணம் 2-1/2 முன்னாள் தானத்தார்க்கு நடந்து
    6. வரும் புடவை முதலு பணம் 4 ம் கார்த்திகை காணிக்கைக்கு பணம் 4 ம் இறுக்க கடவார்கள் ஆகவும் உபாதி விநியோகம் நாட்டில் கோயில்ப்பற்று
    7. அற்ற மரிஆதி இறுக்கக் கடவர்கள் ஆகவும் இம்மரிஆதி சந்த்ராதித்யவரையும் நடக்கும் படிக்குக் கல்வெட்டிக் குடுத்தோம். இவ்வூர் ஊரவற்கு
    8. உடையா[ர்]த் திருப்புலிபகவ நாயினார்கோயில் தானத்தாரோம் ஸ்ரீ மாஹேஸ்வரரோ ரக்ஷை. ஆலாலசுந்தரன்.

    திருமடைவிளாகம் – கோவிலைச் சூழ்ந்த பகுதி; நாட்டில் – ஊரில்; கோயில்பற்று – கோயிலுக்கு என்று ஒதுக்கிய; மரியாதி – வழக்கம், மரபு; வாசல்பணம் – வீட்டை கணக்கிட்டு பெறும் வரி; கழிக்க – குறைக்க, reduce; புறநாட்டிலே – outpost; தறிகண்ட வாசல் – தறி உள்ள வீட்டிற்கு; நடந்து வரும் – நடப்பில் உள்ள, current practice; உபாதி – வரிவகை; விநியோகம் – பொதுச் செலவை ஈட்டுகட்ட வாங்கும் வரி;

    விளக்கம்: வீர விஜ பூபதி என்பது வீர விஜபுக்க ராயரை (1422-1424) குறிக்குமானால் ஏவிளம்பி 1417-1418 இல் நிகழ்கின்றது. இந்த இரண்டில் ஏதோ ஒன்று தவறாக குறிக்கப்பட்டு உள்ளது. தை மாதம் 5 ம் நாள் திருப்புலிப்பகவ இறைவர் கோவிலைச் சூழ்ந்த திருமடை விளாகத்தில் வாழும் கோவில் பொறுப்பாளர்கள் இவ்வூர் செங்குந்தருக்கு வரிக் குறைப்பு குறித்த கல்வெட்டு ஒன்றைத் தந்தனர். அக் கல்வெட்டு ஊரில் கோயிலுக்கு ஒதுக்கப்படாத மரபாக வாசல்பணம் என்னும் வரியை குறைக்க வேண்டும் என்று சந்திரகிரிக்கு ஊர்ப்புறத்தே உள்ள சாவடிக்கு போய் இருந்தபோது அங்கே மன்னரை சந்தித்து வரிக்கழிவு பெற்று வந்ததற்கு இணங்க முன்பு கடமை வரிக்கு பெற்ற பணம் 9-1/2 க்கு தறி உள்ள வீட்டிற்கு வாசல் பணம் 3 கழித்து கண்டதறி ஒன்றுக்கு இனி வாங்கும் வரிப் பணம் 6-1/2, வெற்றிலை விற்கும் சேனைக்கடையார்க்கு வாசல் பணம் 3 கழித்து இனி வாங்கும் பணம் 6-1/2. கயிறு விற்கும் கச்சவடவாணியர் ஆள் ஒருவருக்கு இனி கொள்ளும் பணம் 3, மீனவரான சிவன்படவர் ஆள் ஒருவருக்கு இனி கொள்ளும் பணம் 2-1/2 ஆகும். முன்னாளிலே கோவில் பொறுப்பாளருக்கு புடவை முதலாக கட்டிய பணம் 40 -ம், கார்த்திகை காணிக்கைக்கு கட்டிய பணம் 4 –ம் அப்படியே தொடரும் அதை அப்படியே கட்ட வேண்டும். பிற வரி வகைகள், பொதுச் செலவு வரி, ஊரில் கோவிலுக்கு ஒதுக்கப்படாத மரபு வரிகளையும் அப்படியே கட்ட வேண்டும். இந்த மரபு ஞாயிறும் நிலவும் நின்று நிலைக்கும் காலம் வரை தொடரட்டும் என்று இவ்வூரார்க்கு திருப்புலிப்பகவ இறைவர் கோவில் பொறுப்பாளர்கள் கல்வெட்டி உறுதிமொழி கொடுத்தோம். இந்த வரி வரையறையை சிவனடியார் காத்து நிற்க வேண்டும். ஆலால சுந்தரன் இதை எழுதிக் கையெழுத்திட்டான்.

     இதில் இடம்பெறும் கைக்கோளர், சேனைக் கடையார், வாணியர் என்போர் முன்பு போர் தொழில் செய்யும் பட்டடைக் குடிகள் ஆவர். இராசராசன் ஆட்சியின் போது தேவார மீட்சி, குலோத்துங்கன் ஆட்சியில் பெரிய புராண தொகுப்பு ஆகியவற்றால் நிகழ்ந்த சைவ சமய எழுச்சியால் இந்தப் போர்க்குடிகள் கொலைத் தொழிலென்று போர்த்தொழிலை நீங்கி வணிகத்தில் ஈடுபட்டனர். அதன் விளைவு போர்ப்புரியும் குடிகள் குறைந்ததால் எதிர்த்து போரிட்டு துரத்த முடியாதபடி தமிழகம் வலுவிழந்ததால் கடந்த 600 ஆண்டுகளாக அயல் மொழியார் ஆட்சிப் பிடியுள் கட்டுண்டு கிடக்கின்றது. ஆயுதங்கள் மட்டுமே ஏந்தி வந்தவரிடம் இதாவது, இன்று மக்கள் தொகையில் 1% மட்டுமே உள்ள அயல் மொழியாரிடம் தமிழகத்தின் 50% மேலான விளைநிலங்கள் உரிமையாகி உள்ளன.

    பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 36, பக். 260.

    Share
  • குறளின் கதிர்களாய்…(265)

    குறளின் கதிர்களாய்…(265)

    -செண்பக ஜெகதீசன்

    அன்பொரீஇத் தற்செற் றறநோக்கா தீட்டிய
    வொண்பொருள் கொள்வார் பிறர்.

    -திருக்குறள் -1009 (நன்றியில் செல்வம்)

    புதுக் கவிதையில்…

    அடுத்தவரிடம்
    அன்புகாட்டுதலை விடுத்து,
    தன்னை வருத்தி
    அறம் பாராது
    ஒருவன் ஈட்டிய
    அரும்பொருளைத்
    தான் அனுபவிக்காமல் போய்,
    பிறர் அபகரித்துக்கொள்ளும்
    நிலைதான் வரும்…!

    குறும்பாவில்…

    பிறரிடம் அன்புகாட்டாமல் தனைவருத்தி
    அறம்பாராது சேர்த்த செல்வமெல்லாம்
    அவன் அனுபவிக்காதே பிறரைச்சேரும்…!

    மரபுக் கவிதையில்…

    அன்பது பிறரிடம் காட்டாமல்
    அறத்தைச் சிறிதும் பாராமல்
    தன்னுடல் நோகத் தனைவருத்தித்
    தவறாய்ச் சேர்த்த செல்வமெல்லாம்,
    தன்னால் அவற்றை அனுபவிக்கத்
    தக்க வாய்ப்பே கிடைப்பதில்லை,
    பின்னால் யாரோ அனுபவிக்கப்
    பிறரைச் சேரும் அறிவாயே…!

    லிமரைக்கூ..

    அன்பறம் ஏதுமின்றிச் சேர்ப்பார்
    பாடுபட்டுச் சேர்த்த பெருஞ்செல்வம் அவருக்கின்றிப்
    பிறர்தான் அனுபவிக்கப் பார்ப்பார்…!

    கிராமிய பாணியில்…

    சேருசேரு செல்வம் சேரு
    நல்ல வழியில செல்வம் சேரு..

    அடுத்தவங்கிட்ட அன்புகாட்டாம
    அறவழியில போகாம,
    தன்ன வருத்திச்
    சேத்த செல்வமெல்லாம்
    தனக்கு ஒதவாமப்போகும்
    அனுபவிக்க..

    அது அவனுக்கில்லாம
    வேற யாரோ அடுத்தவன்தான்
    அனுபவிக்கப் போயிடுமே..

    அதால
    சேருசேரு செல்வம் சேரு
    நல்ல வழியில செல்வம் சேரு…!

    Share