thiruvalluvar

-நாங்குநேரி வாசஸ்ரீ

நெல்லைத் தமிழில் திருக்குறள் – 60

  ஊக்கம் உடைமை

குறள் 591:

உடையர் எனப்படுவ தூக்கமஃ தில்லார்
உடைய துடையரோ மற்று

ஊக்கம் உடையவங்க எல்லாம் உடையவங்க.ஊக்கம் இல்லாதவங்க எத வச்சிருந்தாலும் எதுவுமே இல்லாதவங்க தான். 

குறள் 592:

உள்ள முடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்

ஊக்கம் ங்குத ஒரு பொருளத் தவித்து வேற எதையும் நெலையான உடைமை னு  சொல்ல முடியாது. 

குறள் 593:

ஆக்கம் இழந்தேமென் றல்லாவார் ஊக்கம்
ஒருவந்தங் கைத்துடை யார்

ஊக்கத்த கைவசத்துல வச்சிருக்கவங்க செல்வம் கைவிட்டுப் போச்சுதுன்னா கூட வெசனப்பட மாட்டாங்க. 

குறள் 594:

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை

அசதி இல்லாத ஊக்கம் ஒடயவங்கிட்ட செல்வம் அவன் இருக்க எடத்துக்கு வழி கேட்டுக்கிட்டு போய்ச் சேந்துக்கிடும். 

குறள் 595:

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு

தண்ணில இருக்க பூவோட அடிக்காம்போட நீளம் தண்ணியோட அளவ பொருத்து மாறிக்கிடும். அது கணக்கா மனுசன் வாழ்க்கையில ஒசருததும் அவன் மனசுல இருக்க ஊக்கத்தப் பொருத்து தான். 

குறள் 596:

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து

நெனைப்பு பூரா ஒசந்ததாவே இருக்கணும். ஒருக்கா அது நடக்கலேனாலும் நெனைப்ப விட்டுப்போடக் கூடாது. 

குறள் 597:

சிதைவிடத் தொல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு

ஒடம்பு முழுக்க அம்பு தைச்சாலும் யானை தளராம நிக்கும். அது கணக்கா ஊக்கம் ஒடயவங்க அழிவே வந்துச்சின்னாலும் கலங்க மாட்டாக.

குறள் 598:

உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னுஞ் செருக்கு

அள்ளிக் கொடுக்குத ஊக்கம் இல்லாதவுக தங்கள வள்ளல் னு பெரும பட்டுக்கிடதுதுக்கு வழியே இல்ல. 

குறள் 599:

பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்

பருத்த ஒடம்பும் கூர்மையா கொம்பும் இருக்க யானை கூட ஊக்கம் இருக்க புலி தாக்கிச்சின்னா பயந்துக்கிடும். 

குறள் 600:

உரமொருவற் குள்ள வெறுக்கையஃ தில்லார்
மரமக்க ளாதலே வேறு

மனசுல உறுதியான ஊக்கம் இல்லாதவங்க பாக்கதுக்கு மனுசங்களா இருந்தாலும் மரங்களுக்கு சமானம் தான்.

-அடுத்தாப்லையும் வரும்- 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.