நெல்லைத் தமிழில் திருக்குறள் – 61

-நாங்குநேரி வாசஸ்ரீ
நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்
61) மடி இன்மை
குறள் 601:
குடியென்னுங் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும்
ஒருத்தன் பொறந்த குடி ங்குத மங்காத விளக்கு அவனோட மாச்சலால(சோம்பல்) ஒளி மங்கி கெட்டுப் போவும்.
குறள் 602:
மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்
குடும்பத்த ஒசத்த விரும்புதவங்க மாச்சப்பட்டு இருக்காம உற்சாகமா முனஞ்சு செயல்படணும்.
குறள் 603:
மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியுந் தன்னினு முந்து
ஒழிச்சுக்கட்டவேண்டிய மாச்சல தங்கிட்ட வச்சிருக்கவனோட குடும்பம் அவனுக்கு முன்ன அழிஞ்சு போவும்.
குறள் 604:
குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு
மாச்சப்பட்டு பாடுபாக்காம இருக்கவன் வாழ்க்கையில தப்புதண்டா செய்யுதது அதிகமாயி அவன் குடும்பப் பெரும அழிஞ்சு போவும்.
குறள் 605:
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்
கெடப்புல போட்டு காரியத்த செய்யுதது, அயத்துப் போகுத கொணம், மாச்சல், அளவுக்கு மீறி ஒறங்குதது இந்த நாலு கொணமும் கெட்டுப்போவணும் னு நெனைக்கவன் ஆசப்பட்டு ஏறுத தோணி ஆவும்.
குறள் 606:
படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது
நாட்ட ஆளுத தலைவனோட ஒறவு தானே வந்து சேந்துக்கிட்டாலும் மாச்சப்பட்டு சும்மா இருக்கவனுக்கு அதனால ஒரு உபயோகமில்ல.
குறள் 607:
இடிபுரிந் தெள்ளுஞ்சொற் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர்
முனஞ்சி பாடுபாக்காம மாச்சப்பட்டு சும்மா இருக்கவன் வாழ்க்கைல மத்தவங்க இடிச்சுப்பேசி எளக்காரம் செய்யுத நெலமைக்கு வந்துருவான்.
குறள் 608:
மடிமை குடிமைக்கண் தங்கிற்றன் னென்னார்க்
கடிமை புகுத்தி விடும்
மாச்சப்படுதவன் நல்ல குடில பொறந்திருந்தாலும் அந்த கொணம் அவன பகையாளிக்கு அடிம போல ஆக்கி உட்ரும்.
குறள் 609:
குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக் கெடும்
ஒருத்தன் மாச்சல விட்டுப்போட்டாம்னா அவனுக்கும் அவன் குடும்பத்துக்கும் வந்த குத்தங்கொற வெலகிப் போயிடும்.
குறள் 610:
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு
கடவுள் அடியால அளந்த ஒலகத்தையெல்லாம் மாச்சப்படாம இருக்க ராசா சேந்தாப்ல அடைஞ்சுக்கிடுவான்.
(அடுத்தாப்லையும் வரும்…)