Blog

  • படக்கவிதைப் போட்டி 211-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    கல்லில் துணியை அடித்துத் துவைக்கும் பாட்டாளியைப் படமெடுத்து வந்திருப்பவர் காயத்ரி அகல்யா. இதனை வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டி 211க்கு வழங்கியிருப்பவர் சாந்தி மாரியப்பன். பெண்மணிகள் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றி!

    இப்படத்தைப் பார்க்கையில்,

    துணிவெளுக்க மண்ணுண்டு,
    தோல்வெளுக்கச் சாம்பருண்டு
    மணிவெளுக்கச் சாணையுண்டு
    மனம்வெளுக்க வழியில்லையே
    ” என்று முத்துமாரியிடம் மாந்தர் நிலையை முறையிட்டு வருந்திய மகாகவியே என் நினைவுக்கு வருகிறார்.

    இப்படத்தைக் கண்ணுறும் நம் கவிஞர்களின் எண்ணத்தில் ஊறுவது என்ன என்று அறிந்துவருவோம் வாருங்கள்!

    *****

    ”தர்மகர்த்தா வீட்டுத் துணிகளைப் பொழுதோடு தோய்த்துக்கொடுக்கக் கருத்தாய் வேலைசெய்யும் சலவைத் தொழிலாளி இவர்!” என்கிறார் திருமிகு. காந்திமதி கண்ணன்.

    நாளைக்கு ஊர்க் கோயில் குடமுழுக்குன்னு
    தர்மகர்த்தா வீட்டுல எட்டுத் துணி குடுத்தாக…
    பொழுது சாயுறதுக்குள்ள
    கொண்டு சேக்கணும்..
    அவுக கொல்லப் பக்கம் கொஞ்சம் இருட்டாதான் இருக்கும்…!

    *****

    ”சூரியன் செய்த சலவையால் ஒளிர்ந்தது நீலவானம்! அதுபோல் சாதியென்றும் மதமென்றும் மாசுபடிந்து நேசம்வடிந்து நிற்கும் நம் மனத்தையும் சீர்திருத்தங்களால் சலவை செய்திட வேண்டும்” என்று நன்மொழி நவில்கின்றார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ்.

    சலவை செய்திட வேண்டும் – மனதை
    இருள் வந்து சூழ்ந்திட
    சூரியன் நீ வந்து சலவை செய்திட
    நீல வானம் ஒளிர்ந்ததே
    எதைக் கொண்டு சலவை செய்தாயோ?
    நுரைகளாய் வெண்பஞ்சு மேகங்கள்!

    பனி வந்து படர்ந்திட
    பூமி உடுத்திய பச்சைவண்ணச் சேலை நனைந்ததே!
    சூரியன் நீ வந்து அடித்த வெயிலில் அது உலர்ந்ததே!
    சலவைக்குச் சிக்கனமாய் நீரை நீ பயன்படுத்தினாயோ?
    பெய்யும் மழைகளும் குறைந்து பூமி வறண்டு போனதே!

    உடுத்தும் உடைகளின் அழுக்கை அகற்றிட
    உழைக்கும் இவனுக்கு
    உடுத்திக்கொள்ள நல்ல உடைகள் இல்லை!
    செய்யும் தொழிலாலே பிரிக்கப்பட்டோம் அன்று!
    ஜாதிகள் இல்லையடி பாப்பா
    குலம் தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம் என்று
    குரல் கொடுத்த பாரதியை மறந்து விட்டோம்!
    இன்றோ ஜாதிகளாலும் கட்சிகளாலும்
    எண்ணற்ற பிளவுகளால்
    எண்ணிக்கையில் நிறைந்து நின்றோம்!

    மாசு படிந்த மனதினைச் சலவை செய்து
    நேசம் நிறைந்த நெஞ்சாய் மாற்றிட
    சீர்திருத்தம் செய்ய வேண்டும்!
    நம் சிந்தனையில்
    சிறிய திருத்தம் செய்யவேண்டும்!
    புதிய சிந்தனை உருவாகி
    வரும் சந்ததியினர்
    அதை வழிமொழிந்திட வேண்டும்
    இருள் சூழ்ந்த இதயம் அன்று தெளிவு பெரும்
    அதில் புதிய பாரதம் வந்து பிறந்திடும்!

    கற்பனையும் கருத்தும் செறிந்த கவிதைகளைத் தந்திருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    இனி இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

    படிப்பினை…

    அழுக்காய்த் துணியைக் கொடுத்தாலும்
    அடித்துத் துவைத்து வெளுத்திடுவார்,
    பழுதாய்ப் பணியதை யெண்ணவேண்டாம்
    படிப்பினை யதுவே தத்துவமாய்,
    அழுக்கு மனமது தூய்மைபெற
    அடிபல பெறுகிறோம் வாழ்வினிலே,
    எழுந்திடு இன்னலில் துவண்டிடாதே
    ஏற்றம் வாழ்வில் கண்டிடவே…!

    துணியில் படித்திருக்கும் அழுக்குகளைத் துவைத்து வெளுக்கும் சலவைத் தொழிலாளிபோல் நம் மனத்திலே நிறைந்திருக்கும் இழுக்குகளாம் அழுக்குகளை இன்னல்கள் எனும் அடியால் வெளுக்கின்றது வாழ்க்கை. எனவே வாழ்வில் நாம் படும் பாடுகளைப் பாடமெனக் கொளல் வேண்டும் என்று பொருளுரை பகரும் இக்கவிதையின் ஆசிரியர் திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுத்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • (Peer reviewed) சிவானந்தப்பேறு காட்டும் சூனிய சம்பாடணை

    முனைவர் இரா. மதன்குமார்
    இணைப் பேராசிரியர், தமிழ்த்துறை
    கற்பகம் உயர்கல்வி கலைக் கழகம்,
    கோயம்புத்தூர் – 21.

    சிவானந்தப்பேறு காட்டும் சூனிய சம்பாடணை

     முன்னுரை

    திருமந்திரத்தின் எட்டாம் தந்திரத்தில் அமைந்த, ‘சூனிய சம்பாடணை’ என்னும் பாடல் தொகுதியானது, அறுபத்தேழு பாடல்களால் அமைந்தது. இத்தொகுப்பில், உள்ளுறை உவம உத்தியில் இறைவனுக்கும் உயிர்க்கும் அமைந்த பிரிவறியாத திருவருளுறவும் திருவருளுறவுக்குக் கருவியாகின்ற வகையில், இறைவனே ஞான குருவாக வந்தருளுதலும் ஞான குருவின் அறிவுறுத்தலால் உயிரானது யோகப் பேற்றுக்குத் தலைப்பட்டு, யோக சித்தியாகிய முடிவிலாத சிவானந்தப் பேறு பெறுவதுமாகிய அரும் பொருள்கள் பாடப்பட்டுள்ளன.

    திருவருளுறவில் இறையும் உயிரும்

    இறைவனைச் சார்ந்திருத்தலே, உயிர்க்கு உண்மைச் சார்பாகும். அவ்வண்ணம் நிகழாத வகையில், மூல மலமாகிய ஆணவம் உயிரறிவை மறைத்திருக்கும் வலிமை உடையது. அதை மெலிவிக்கவே, உயிர்க்குக் கன்மமும் மாயையும் கூட்டுவிக்கப்படுகின்றன. இதனால், உடம்பும் உலகியல் நுகர்ச்சியால் அமைகின்ற வாழ்க்கையும், அதன் வழியான வினையாக்கமும் உயிர்க்கு வாய்க்கின்றன. அதற்கேற்ப நல்வினை, தீவினைப் பயன்கள் விளைந்து, பிறவிச் சுழலும் உயிரைத் தொடர்கிறது. பல்பிறப்பிலும் உயிர் பிறந்திளைத்து, ‘திருவருளால், இனி பிறவாமையைப் பெற்றுய்ய வேண்டும்’ என்னும் மெய்யுணர்வுக்குத் தலைப்படுகிறது. திருவருளைக் கருவியாகக் கொண்டு, இத்தகைய மெய்யுணர்வு நிலை, உயிர்க்கு வாய்க்கும்படி இறைவன் அருள்விளையாடல் நிகழ்த்துகிறான். இதனைச் சிவஞான போதத்தின் இரண்டாம் சூத்திரம், ‘இருவினையின் போக்குவரவு புரிய ஆணையின் நீக்கமின்றி நிற்கும்’ எனக் குறித்தருள்கிறது.

    பிறவிக்கு மருந்தாகின்ற கனி

    வாய்த்த மனிதப் பிறப்பினைக் கருவியாகக் கொண்டு, ‘மலநீக்கம் பெற்று உய்ய வேண்டும்’ என்கின்ற மெய்யுணர்வானது உயிரிடத்தில் ஏற்படுவதைத் திருமூலர், வாழை மரத்தின் பூ, காய் மற்றும் கனி ஆகியவற்றைப் பயன்கொள்வோரின் செயலுக்கு ஒப்பாகப் பாடியுள்ளார்.

    ஒன்றையொன்று தொடர்ந்து ஓடுகின்ற மூன்று ஆறுகள் இருக்கின்றன. அவற்றின் நடுவிலமைந்த மூன்று வாழைகளும் முறையே, பூவையும் காயையும் கனியையும் தந்து, நோய் தீர்க்கின்ற பயன் கொண்டுள்ளன. அவற்றுள், கனியின் பெரும் பயனை உணர்ந்த ஒரு சிலரே அதை உண்டு பயனடைந்தனர்’ என்ற உள்ளுறைப் பொருளானது, மலவாதையில் கட்டுண்டு பிறவிச் சுழியில் தொடர்ந்து சிக்குண்டு துன்புறுகின்ற உயிரின் அறியாமையைச் சுட்டுவதாகும்.

              ‘முக்காத ஆற்றிலே மூன்றுள வாழைகள்

               செக்குப் பழுத்த திரிமலம் காய்த்தன

               பக்கனர் மிக்கார் படங்கினார் கன்னியர்

               நக்குமல ருண்டு நடுவுநின் றாரே’                        (சூனிய சம்பாடணை: 1)

    இப்பாடலில், ‘தொடர்ந்து ஓடுகின்ற மூன்று ஆறுகள் என்பவை, வினைவயத்தால் உயிரைத் தொடர்ந்துவரும் பிறவிச் சுழலைக் குறிக்கின்றன. பூவால் பெறப்படுகின்ற நோய்நீக்கம் என்பது, மாயையாகிய மலத்தின் வலிமை நீக்கம். காயினால் பெறப்படுகின்ற நோய்நீக்கம் என்பது, கன்ம மலத்தின் வலிமை நீக்கம். கனியினால் பெறப்படுகின்ற நோய்நீக்கம் என்பது, மூல மலமாகிய ஆணவ மலத்தின் வலிமை நீக்கம். ‘பிறந்த பிறப்பினால், பெரும் பயன் கொள்ளவேண்டும்’ என்கின்ற பக்குவமுடையவர்கள், மாயை மற்றும் கன்ம மல நீக்கத்தை மட்டுமே வேண்டாமல், ஆணவ மல நீக்கத்தையும் நோக்கமாகக் கொண்டு, மும்மல வாதைகளிலிருந்தும் முற்றிலுமாக நீங்கி உய்கின்றனர்’ என்று திருமூலர் இரங்கிக் கூறுகின்றார்.

    இறைவனின் மாயச் சூதாட்டம்

    இறைவன், உயிருடன் பிரிப்பறியாது நிற்கின்ற நிலை, ‘அத்வைதம்’ எனப்படும். உப்புநீரில், உப்பும் நீரும் பிரிப்பின்றி ஒன்றாக விளங்குதல் இதற்குக் காட்டாகும். அவ்வகையில், இறைவன் ஒன்றாதல்-வேறாதல்-உடனாதல் என்ற நிலைகளில் விளங்குகின்றான். இதனை அறியாத உயிரின் அறியாமையையும், இறைவனின் அளப்பருங் கருணைச் செயலையும் சூதாட்டத்துடன் ஒப்பிட்டு மறைபொருளாகத் திருமூலர் விளக்குகிறார்.

    உயிருக்கு இறைவன் கூட்டுவிக்கின்ற உடம்பே, சூதாடு பலகை. மெய், வாய், கண், மூக்கு, செவி முதலான ஐம்பொறிகளே, ‘பகடைக் காய்கள்’. சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி முதலான அவத்தைக்குரிய புருவநடு, கண்டம், இருதயம் ஆகியவையே இருந்தாடுகின்ற இடங்கள். இத்தகைய அமைப்புடன், இறைவன் உயிர்களுடன் சூதாடுகிறான். சூதாடுவோர், தனது எதிரிலிருந்து ஆடுபவரின் இயக்கத்தையும், அதற்குரிய தனது எதிர் இயக்கத்தையும் குறித்துத் தெளிவுற அறிகின்ற வாய்ப்புண்டு. அத்துடன், எதிராளி, தன்னிடமிருந்து கவர்கின்ற பொருளைக் குறித்தும் அறிகின்ற வாய்ப்புண்டு. ஆனால், அறியாமை மயக்கிற்கு ஆட்பட்ட உயிரோ, ‘தன் எதிரிலிருந்து ஆடுகின்ற இறைவன், பிறப்புக்கு வாயிலாகின்ற அறியாமை முழுவதையும் கவர்ந்துகொள்கின்ற பெருங்கருணையை உணர்வதில்லை’.

              ‘காயம் பலகை கவறைந்து கண்மூன்று

               ஆயம் பொருவதுஓர் ஐம்பத்தோ ரக்கரம்

               ஏய பெருமான் இருந்து பொருகின்ற

               மாயக் கவற்றின் மறைப்பறி யேனே’ (சூனிய சம்பாடணை: 1)     

    இருவினையொப்பின் வழியே இறைசார்பு

    பிறப்பிற்கு வாயிலாகின்ற உயிரின் வினைத்தொகுதியானது, சஞ்சிதம், பிராரத்தம் மற்றும் ஆகாமியம் ஆகிய மூவகைத் தொகுதிகளில் அமையும். சஞ்சிதம் என்பது, பழவினை. பழவினையே, நிகழ்பிறப்பைக் கூட்டுவிக்கிறது. ‘உழவர்களுக்கு, எதிர்வரவுள்ள விதைப்புக் காலத்துக்கு முன்பாகவே, அதற்கான விதை தயாராக இருப்பில் வைக்கப்படுவதைப் போல, உயிர்க்குப் பழவினையாகிய வித்திலிருந்து, அடுத்த பிறப்பு விளைகிறது’.

                         ‘விளைந்து கிடந்தது மேலைக்கு வித்து

                          விளைந்து கிடந்தது மேலைக்கு காதம்

                          விளைந்து விளைந்து விளைந்தகொள் வார்க்கு

                          விளைந்து கிடந்தது மேவுமுக் காதமே’                     (சூனிய சம்பாடணை: 14)

    உயிர், நிகழ்பிறப்பில் இன்ப, துன்பங்களை நுகர்கின்றபொழுது செய்கின்ற நல்வினைகளும் தீவினைகளும் புண்ணிய, பாவங்களாகி அதற்கேற்ப அடுத்தடுத்த பிறப்புகள் தோன்றக் காரணமாகின்றன. ‘நிகழ்பிறப்பில், இன்பத்தில் நாட்டமும், துன்பத்தில் வெறுப்பும் கொண்டு மேன்மேலும் புரிகின்ற புண்ணிய பாவங்கள், மேலும் பல துன்பப் பிறப்புகளில் தன்னை ஆழ்த்தித் துன்புறச் செய்யும்’ என்கின்ற மெய்யுணர்வு நிலை உயிர்க்கு வாய்க்கப்பட வேண்டும். தான், சிவப்பெரு நிறைவில் அடங்கியிருத்தலையும், தனது இயக்கமும் சிவனருளால் நிகழ்வதையும், இன்ப துன்ப நிலைகள் முந்தைய வினைப்பயனால் தனக்குக் கூட்டுவிக்கப்படுவதையும், ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்னும் மெய்யுணர்வையும் உயிர் பெறவேண்டும்.

    ‘நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே’ (குழைத்த பத்து: 7)

    என்றவழி, இறைவனிடத்தில் தன்னை முழுமையாக ஒப்புக் கொடுத்தலாகிய இருவினையொப்பு உயிர்க்கு வாய்க்கவேண்டும். இருவினையொப்பு நிலையே, திருவருள் வீழ்ச்சியாகிய சத்திநிபாதத்தை வாய்க்கச் செய்து, இறைவனையே ஞான குருவாகத் தந்தருளும்.

    ஞான குருவாக வந்தருளுதல்

    ஆன்மா, அறிவுப் பொருளாயினும், தானே எதையும் உணர்வதில்லை. இறைவன் அறிவிக்க அறிவதே அதன் இயல்பு. உயிருக்கு அருள வேண்டி, இறைவனே ஞான குருவாக எழுந்தருள்வான். சிவப்பிரகாசத்தில் அத்தகைய அருளுறு நிலையானது, ‘அதிஷ்டான பட்சம்’ என்றும், ‘சம்புபட்சம்’ என்றும், இரு நிலைகளில் சுட்டப் பெறுகிறது. அநந்தேஸ்வரர், ஸ்ரீகண்டருத்திரர் முதலானோர் ஞான குருவாக வந்தருளுவது, ‘அதிஷ்டான பட்சம்’ எனப்படும். திருஞானசம்பந்தர் முதலான சமயக் குரவரும், திருநந்திதேவர் முதலான சந்தானக் குரவரும் ஞான குருவாக வந்தருள்வது, ‘அணு பட்சம்’ எனப்படும்.

    ஞான குரு அருள்கின்ற வகை

    இறைவன், ஆணவ மல வாதை மட்டுமே உடைய விஞ்ஞானகலரின் அறிவுக்குள் அறிவாகி, ஞானப் பேரொளியாக விளங்கியருள்வான். ஆணவம் மற்றும் கன்ம மல வாதை உடைய பிரளயாகலருக்கு மானும் மளுவும், நான்கு தோளும், கறைமிடறும், முக்கண்ணும் விளங்குகின்ற திருமேனியுடன் எழுந்தருளுவான். மும்மல வாதையுடைய சகலர்களில், இருவினை ஒப்பினால் இறைச்சார்புக்கு ஆட்படுகின்ற பக்குவம் உடையவர்களுக்கு அருளவேண்டி, மானுடச் சட்டை தாங்கிய குருவாக எழுந்தருளுவான்; உடம்பின் நிலையாமையையும், தத்துவக் கூட்டங்களின் வழியே இயங்குகின்ற உடம்பினை உயிருக்குக் கூட்டுவித்த நிலையினையும், உடம்பின் வழியான அறிவு, இச்சை, செயல்கள் ஆகியவை, பதி புண்ணியங்களாக மேம்படுகின்ற வகையில், திருவருள் துணைநிற்கின்ற நிலையையும் உயிர்க்கு உணர்த்தியருள்வான்.

    குளத்தில் இரை தேடுகின்ற குருகினால், பாசிப் படலம் தனக்கான இரையை மறைத்திருப்பதை அறிய இயலாது. குளத்தின் வழியில் செல்கின்ற வீரன், நீர்வேட்கையைத் தவிர்த்துக் கொள்வதற்காக குளத்தின் பாசிப்படலத்தை அகற்றுகின்ற பொழுது, தனக்கான இரையைக் கண்டு அக்குருகு பயன்கொள்ளும். அதுபோல, சிற்றறிவால் இறைவனை உணர இயலாதவர்கள், இருவினைஒப்பின் வழியே ஞான குருவைப் பெற்று, உபதேசத்தின் வழியே, யோகப் பேற்றுக்குத் தலைப்பட்டு, ஐம்புல வாதை தவிர்த்து, சிவானுபவத்தில் நிலைப்பர்.

               ‘பாசி படர்ந்து கிடந்த குளத்திடைக்

                கூசி யிருக்கும் குருகிரை தேர்ந்துண்ணும்

                தூசி மறவன் துணைவழி எய்திடப்

                பாசி கிடந்து பதைக்கின்ற வாறே’                           (சூனிய சம்பாடணை: 59)

    ஞான குருவால், உயிரறிவு விளக்கம் பெற்று, சிவானுபவப்பேற்றுக்குத் தலைப்படுகின்ற மெய்யுணர்வு நிலையினைத் திருமூலர்,

                       ‘வழுதலை வித்திடப் பாகல் முளைத்தது

                         புழுதியைத் தோண்டினேன் பூசணி பூத்தது

                         தொழுது கொண் டோடினார் தோட்டக்குடிகள்

                         முழுதும் பழுத்தது வாழைக் கனியே’                (சூனிய சம்பாடணை: 4)

    எனத் தன்னனுபவ நிலையாகக் குறித்தருளியுள்ளார். ’எனது உள்ளமாகிய தோட்டத்தை, ஐம்புலக் கள்வர்கள் தமதாக்கிக் கொண்டனர். ஆயினும், அவர்களுடன் இருந்த நான், ஆழக் குழி ஒன்று தோண்டி, அதில் கத்தரி விதையினை நட்டுவைத்தேன். கத்தரி விதையிலிருந்து, பாகற்கொடி முளைத்தது. அக்கொடியானது, வாழைக் கனியைத் தந்தது’ என்கின்றார்.

    இப்பாடலில் சுட்டப்படுகின்ற, ஆழக் குழி தோண்டிய முயற்சியானது, ஞான குருவுக்கு ஆட்பட்டதையும், கத்தரி விதைத்தது, குருவருளால் இறைவனைச் சார்ந்த மெய்ஞ்ஞான வேட்கையினையும் குறிக்கும். உலகியல் இன்பமாகிய நிலையில்லாத பயனையே எதிர்ப்பார்த்த நிலையில், அருளியலுக்கு ஆட்படுகின்ற வகையில், ஞான  குருவின் அருளுபதேசத்தால் உலகியலின்பால் வெறுப்பு ஏற்படும். அதுவே, கசப்புத் தன்மைகொண்ட பாகற்கொடி விளைந்தது’ என்பதன் உள்ளுறையாகும். விதைத்தது ஒன்றும், விளைந்தது ஒன்றுமாக இருக்கையில், அதிலிருந்து அற்புதமாகிய வாழைக் கனி விளைந்தது.

    இறைவன், உயிர்க்கு மெய்யறிவை வழங்கி, அறியாமையை ஓட்டுகின்ற போதிலும், மலவாசனையால் உலகியலையே உயர்வென்று கருதி, மீண்டும் மீண்டும் உலகியலையே நாடுகின்ற அவலம் விளையும். ஆயினும், உயிரின் பக்குவ நிலைக்கேற்ப உபதேசத்தால், மெய்யுணர்வில் நிலைக்கச் செய்து, உயிரைத் தனக்குரிய மீளாஅடிமையாக ஆட்கொள்வான். இப்பேரருளனுபவமே, ‘வாழைக்கனி வாய்த்தல்’ என்பதாகும்.

    உபதேசத்தின் வழியே சுத்தநிலை காட்டல்

    குருவருளால், மெய்யறிவுக்குத் தலைப்பட்டு, இறைவனுடன் ஒன்றியிருத்தலாகிய யோகத்தில் நிற்றலைத் திருமூலர், நிலத்தை உழுது பயன்கொள்வதாகிய உழவுத் தொழிலாக உருவகிக்கின்றார். ‘இடகலை, பிங்கலை மற்றும் சுழுமுனை ஆகிய மூன்று ஏர்களிலும், பிராணனைப் பிணைத்து உழுவதற்கு வாய்ப்புண்டு. ஆயினும், சுழுமுனை நாடி வழியே உழுவதே உயர்ந்த பயன் தருவதாகும். முக்கோண வடிவிலான, மூலாதாரச் சக்கரத்தினை இடமாகக் கொண்டு இயங்குகின்ற மூச்சுக் காற்றை, சுழுமுனை நாடியின் வழியாக மேலேற்றுவதே யோகப் பயிற்சியாகும். அதனைக் குருமுகமாக உணர்ந்து உயர்ந்த பயன்கொள்ளாமல், பிராணனை வீணாக்குகின்றனர்’ என இடித்துரைக்கின்றார்.

                        ‘மூவணை ஏரும் உழுவது முக்காணி

                         தாம்அணை கோலின் தறியுறப் பாய்ந்திடும்

                         நாவணை கோலி நடுவிற் செறுஉழார்

                        காலணை கோலிக் களர்உழு வார்களே’                  (சூனிய சம்பாடணை: 7)

    என்றமைந்த பாடலில், ‘முக்காணி’ என்பது, முக்கோண வடிவிலான, மூலாதாரச் சக்கரத்தைக் குறிக்கும். நடுவில் உழுதல் என்பது, நடுநாடியாகிய சுழுமுனை நாடியில், பிராணனைச் செலுத்தி, ஆக்ஞையாகிய புருவநடுவை நோக்கிச் செலுத்துதலாகும்.

    யோகசித்தியாகிய திருவருள் அனுபவம்

    ஆறாதாரங்களிலும் நிற்கின்ற பிராணன், உச்சித்தானமாகிய சகஸ்ரஹார நிலையத்தை அடையுங்கால், அமுத தாரை பொழியும். யோக சித்தியாகிய திருவருளனுபவத்தினைத் திருமூலர், நயம்மிக்கதொரு விடுகதை வாயிலாக உணர்த்தியுள்ளார். ‘ஒருவன், தனது நண்பனாகிய தட்டானிடத்தில் மொட்டுஅளவு பொன்னைக் கொடுத்துக் காத்துவைத்திருக்கச் சொன்னான்; அவனும் அதனை வீட்டின் உயர்ந்த இடமாகிய மச்சின் மீது வைத்துக் காத்துவந்தான். மொட்டளவில் சிறிதாக இருந்த பொன்னும் செம்பளவில் பெருகியது. தட்டானாகிய நண்பன் அதைக்குறித்து, உரிமையுடையவனுக்கு அறிவிக்காமலேயே,  தனக்கு உரிமையுடையதாக ஆக்கிக்கொண்டான்’ எனக் குறித்தருளியுள்ளார்.

                     ‘தட்டான் அகத்தில் தலையான மச்சின்மேல்

                      மொட்டாய் எழுந்தது செம்பாய் மலர்ந்தது

                      வட்டம் படவேண்டி வாய்மை மறைத்திட்டுத்

                      தட்டான் அதனைத் தகைந்து கொண் டானே’      (சூனிய சம்பாடணை: 11)

    ஒருவன்–பிரமன்; தட்டான்-உயிர்; மச்சுவீடு-உடம்பு. பிரமன், உயிருக்கு உடம்பினைக் கூட்டுவித்து, தனு, கரண, புவன, போகங்களை நுகர்வித்து மேலும் மேலும் அவை பிறப்பிறப்புகளில் பட்டுத் துன்புறுகின்ற விதியை எதிர்நோக்கியிருக்கின்றான். ஆனால், உயிரோ, பிரமனின் எதிர்பார்ப்புக்கு மாறாக, தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொன்னை உச்சித் துவாரமாகிய சகஸ்ரஹார தளத்துக்கு உயர்த்தி, அமுததாரை பொழிகின்ற பெரும்பேறு கிடைக்கும்படியாக, பிராணனை உரிய வகையில் பயன்கொண்டது. உயிரானது, துன்பப் பிறப்பைக் கூட்டுவித்த பிரமனும் அறியாதவாறு, தனக்கமைந்த பிறப்பையே கருவியாகக் கொண்டு, யோகப் பேற்றின் வழியே, திருவருளில் அழுந்தி,  முடிவாக சிவத்துள் அழுந்துதலாகிய பேரின்ப அனுபவத்தைத் திருமூலர், ‘மேலைக் கடற்கரை வணிகம்’ என்று உருவகிக்கின்றார்.

    மேலாலவத்தை நிலை

    உயிரானது நிலைகொண்டுள்ள உடலில், விழிப்பு (சாக்கிரம்), சொப்பனம் (கனவு), உறக்கம் (சுழுத்தி), பேருறக்கம் (துரியம்), மற்றும் உயிர்ப்படங்கல் (துரியாதீதம்) ஆகிய நிலைகளை அடையும். இது, கீழாலவத்தை, மத்தியாலவத்தை மற்றும் மேலாலவத்தை எனப்படும். ‘கீழாலவத்தை’ என்பது, உயிர், அறியாமையில் அழுந்துவதாகும். அந்நிலைகள், கேவல சாக்கிரம், கேவல சொப்பனம், கேவல சுழுத்தி, கேவல துரியம் மற்றும் கேவல துரியாதீதம் எனப்படும்.

    உயிரானது, கேவல சாக்கிரத்தில், புருவநடுவில் நின்று தொழிற்பட, ஞானேந்திரியங்கள் ஐந்தும், கன்மேந்திரியங்கள் ஐந்தும், புலனுணர்வுகள் ஐந்தும், கன்மேந்திரிய விடயங்கள் ஐந்தும், பிராணன் முதலிய பத்தும் ஆகிய கருவிகள் இயங்கும். புருவநடுவை விட்டு, கழுத்தை அடைகின்றபொழுதில், ஞானேந்திரியமும் கன்மேந்திரியமும் ஒடுங்கி, ஏனைய இருபத்தைந்து கருவிகளும் தொழிற்பட்டு நிற்றல், கேவல சொப்பனமாகும். கழுத்திலிருந்து இறங்கி இதயத்தில், சித்தமும், பிராணனும் புருடனும் மட்டும் செயல்படுகின்ற உறக்கநிலை, கேவலசுழுத்தியாகும். உயிரானது, இதயத்திலிருந்து கீழிறங்கி, சித்தமும் ஒடுங்கி, பிராணனும், புருடனும் செயல்பட, உறக்கத்தில் அமைதல், கேவலதுரியமாகும்.

    மூலாதாரத்தை நோக்கிக் கீழிறங்கி வந்து, பிராணனும் ஒடுங்கி, புருடனுடன் நின்று முழுமையாக அறியாமையில் மூழ்கியிருத்தல், கேவலதுரியாதீதமாகும். மூலாதாரத்தில் ஒடுங்கிய உயிரானது, மீண்டும் மேலேறிச் சென்று, அந்தந்த இடங்களில், அவற்றுக்குரிய கருவிகளுடன் கூடி அறிவுபெறுதல்,  ‘மேலாலவத்தை’ எனப்படும். சகல நிலையில் வாழ்கின்ற பக்குவ உயிருக்கு, திருவருளுடன் ஒன்றுகின்ற சுத்தநிலை வாய்க்கும். அப்பொழுது, உயிர் அடைகின்ற சுத்தநிலையின் துரியம் என்பது, திருவருளில் அழுந்துதலும், துரியாதீதம் என்பது, யோகத்தின் முடிநிலைப்பயனாகிய சிவத்தில் அழுந்துதலுமாகும். திருவருளில் அழுந்துகின்ற உயிர், தன்னை உணர்கின்ற உணர்வைப்பெற்றுள்ள துரியத்தையும் கடந்து, துரியாதீதத்தை அடைகின்றபொழுதில், தன்னையும், தான் உணர்கின்ற அனுபவத்தையும் மறந்து, சிவமாகவே இருந்து உணர்தல், சகலத்தில் சுத்தநிலையாகும். உடலில், மேலாலவத்தையாகிய இவ்வருளனுபவம் நடைபெறுகின்ற இடத்தைத் திருமூலர், மேலைக் கடற்கரையைக் கொண்ட, கொங்கு நாடென்கின்றார். ‘சுத்த துரியாதீதநிலையில், உயிர் பெறுகின்ற பேரின்ப அனுபவத்தை, யவனருடனான வாணிபம் என்று குறித்தருள்கின்றார்.

                        ‘கொங்குபுக் காரொடு வாணிபம் செய்தஅஃது

                         அங்குபுக் காலன்றி ஆய்ந்தறி வார்இல்லை

                         திங்கள்புக் கால்இரு ளாவ தறிந்திலர்

                         தங்குபுக் கார்சிலர் தாபதர் தாமே’                      (சூனிய சம்பாடணை: 62)

    மேலாலவத்தையால், சிவத்தில் அழுந்திப் பெற்ற அருள் அனுபவத்தை மணிவாசகரும்,

                         ‘வாக்கிறந் தமுதம் மயிர்க்கால் தோறும்

                         தேக்கிடச் செய்தனன் கொடியேன் ஊன்தழை

                         குரம்பை தோறும் நாயுட லகத்தே

                         குரம்பைகொண் டின்தேன் பாய்த்தி நிரம்பிய

                        அற்புத மான அமுத தாரைகள்

                         ஏற்புத் துளைதொறும் ஏற்றினன்’                   

                                                                                        (திருவண்டப்பகுதி: 170-175) 

    எனச் சுட்டியுள்ளார்.

    யோகப் பெருவாழ்வில் நிலைத்தல்

    பேரின்பப் பேற்றுக்குத் தலைப்படுகின்ற சீவன்முத்தர்களாயினும், முந்தைய வினைவசத்தால் ஐம்புல வாதைகள் அவர்களைத் தாக்கவருதல் இயல்பாகும். அவர்கள், திருவருள் துணையுடன் அவற்றை வென்று, சிவானுபவத்தில் நிலைக்கின்ற செயல்பாட்டினைத் திருமூலர், காட்டில் வாழ்ந்த ஒருவன், புலியை எதிர்த்து விரட்டிய வீரச்செயலாக உருவகித்துப் பாடியுள்ளார்.

                       ‘பதுங்கினும் பாய்புலி பன்னிரு காதம்

                         ஒதுங்கிய தண்கடல் ஓதம் உலவ

                         அதுங்கிய ஆர்கலி ஆரமு தூறப்

                         பொதுங்கிய ஐவரைப் போய்வளைத் தானே’ (சூனிய சம்பாடணை: 46)

    காட்டில் வாழ்கின்ற ஒருவன், பன்னிரண்டு காத தூரம் பாய்கின்ற புலிக்கு அஞ்சினான். புலியின் தொடர்ந்த அச்சுறுத்தலுக்கு அஞ்சி, கடற்கரையை நாடினான். அங்கு அச்சம் நீங்கி, அலைகளின் குளிர்ச்சியை அனுபவித்து, அன்றாடம் அமுதத்தையும் பெற்று மகிழ்ந்தான்; ஐவர் அதற்குத் தடையாக வந்து, அவனைத் துன்புறுத்த முயன்றனர். ஆனால், அவன் அவர்களை விரட்டியடித்தான்.

    உடம்பே காடாகும். அதில் இயங்குகின்ற பிராணனே புலியாகும். அன்றாடம் அதற்கு அஞ்சி வாழ்கின்ற ஒருவனே, உயிராகும். ஆதாரமாகிய உடம்பில் அமைந்த உயிரானது, அங்கிருந்த புலியின் ஓயாத அச்சுறுத்தலுக்கு அஞ்சி வாழ வேண்டியிருந்தது.  அவன், குருவின் ஞானோபதேசத்தால் யோகத்தைச் சார்ந்தமை, கடற்கரையை நாடியமையாகும். அலைகளின் குளிர்ச்சியே திருவருள் அனுபவம். சஹஸ்ரஹார தளத்திலிருந்து பொலிகின்ற அமுதப்பேறே, கடல் அமுதம். சீவன்முத்தநிலையில், திருவருள் துணையுடன் ஐம்புலன்களைப் பசுகரணங்களாகவும் தனது சிந்தை, சொல், செயல் ஆகியவற்றைப் பதி புண்ணியமாகவும் மேம்படுத்திக் கொண்டமை, பகைவராக வந்த ஐவரையும் விரட்டியடித்த செயலுக்கு உருவகமாகும்.

    ‘ஐந்தெழுத்து’ என்னும் அருள்கருவி

    உடம்பில் நிகழ்கின்ற ஒவ்வொரு சுவாசத்தின்போதும், பன்னிரண்டு அங்குலக் காற்று வெளியாகி, எட்டங்குலக் காற்று உள்ளிழுக்கப்படுவது இயல்பாகும். யோகப்பயிற்சியால், அதிகளவு காற்று உள்ளிழுக்கப்பட்டு, நீண்டநேரம் உள்நிறுத்தப்பட்டு, குறைந்தளவே வெளியேற்றப்படுகின்ற பொழுது, ஆயுள் நீளும். திருவருளால், யோகப்பயிற்சியின் வழியே இந்நிலை கைவரப்பெறுவதற்கு ஐம்புலவாதை தடையாகும். அத்தகைய அவலத்தை நீக்கிக்கொள்வதற்கு, ஐந்தெழுத்தே கருவியாகும் எனத் திருமூலர் விளக்கியுள்ளார்.

    மணிவாசகர், சீவன்முத்தநிலை எய்தி, பேரமுதப் பெருங்கடலாகிய இறையின்பத்தில் திளைத்தவர். ஆயினும், மலவாசனையால் ஐம்புலன் வழிப்படுகின்ற அவலம் நேர்ந்த வேளைகளில், அதனை நீக்கிக்கொள்ள, திருவைந்தெழுத்தைக் கருவியாக்கிக் காத்தருள வேண்டும் என்ற மெய்யுணர்வில் நிலைத்திருந்தார் என்பதனை,

     ‘ஐந்தெழுத்தின் புனை பிடித்துக் கிடக்கின்றேனை’ (நீத்தல் விண்ணப்பம்: 12)

    என்ற அருளனுபவப் பெருவாக்கினால் உணரலாம்.

    ஐந்தெழுத்தை விதிப்படி ஓதினால், உயிருக்குப் பேரின்பப் பயன் விளையும். அந்தந்த உயிரின் பக்குவத்திற்கு ஏற்ப ஓதப்பெறுகின்ற திருவைந்தெழுத்தானது, தூலம்-நமசிவாய, சூக்குமம்-சிவாயநம, அதிசூக்குமம்-சிவயசிவ, காரணம்-சிவசிவ, மகாகாரணம்-சி என்றமைவதாகும்.  ‘பக்குவநிலைக்கேற்ப, ஞானாசிரியரின் உபதேசவழியில் முறைப்பட ஓதுதல், தோணி ஓடத் துணையாக அதன் அடித்தட்டினை முறையாக மிதித்து இயக்குகின்ற அறிவுடைய செயலாகும்’ என்பது, திருமூலரின் சூனிய சம்பாடணை விளங்குகின்ற நன்னெறியாகும்.

    முடிவுரை

    திருநாவுக்கரசர், ’பெரும்பொருள் கிளவியானை’ என இறைவனைப் போற்றியுள்ளார். அவ்வகையில், திருமூலரின் அருள்மொழிகள், பெருமானைக் காட்டியருள்கின்ற மறைபொருள் மந்திரங்களாகின்றன. அவற்றை நமது சிற்றறிவால் உணர்ந்து சொல்லுங்கால், உயர்வுறு மந்திரமாகப் பரிணமித்துப் பெரும்பயன் சேர்க்கவல்லன. அப்பேருண்மையின் வழியே, திருமந்திரத்தின்பால் சுவை கூட்டுகின்ற இலக்கிய நோக்கில், சூனிய சம்பாடணையாகிய பகுதி அமைந்துள்ளது.  விடுகதைப் புதிர்போல அமைந்துள்ள இதன் பாடல்கள், எளியவர்களுக்கும், இறைபொருளை உணர்த்த விழைந்த திருமூலரின் அருளுள்ளத்துக்குச் சான்றாகின்றன.

    துணைநூல்கள்:

    1. திருமூலர் அருளிய திருமந்திரம், (7,8,9-ஆம் தந்திரங்கள்): பன்னிரு திருமுறை ஆய்வுமையம், கற்பகம் உயர்கல்வி கலைக்கழக வெளியீடு, கோயம்புத்தூர்- 21, பதிப்பு ஆண்டு: அக்டோபர்- 2016.
    2. திருவாசகம் (மூலம்), சைவசித்தாந்தப் பெருமன்றம், சென்னை வெளியீடு, ஆண்டு: 1999.
    3. தேவாரத் திருப்பதிகங்கள்., ஞானசம்பந்தன்.அ.ச., கங்கை புத்தக நிலையம், சென்னை:17, ஐந்தாம் பதிப்பு: ஜனவரி 2005.
    4. சித்தாந்த அட்டகம், வைத்தியநாதன்.கு., (உரையாசிரியர்), திருவாவடுதுறை ஆதீன சைவசித்தாந்த நேர்முகப் பயிற்சிமையம், திருவிடைமருதூர். (ப.ஆ.இ).

    ========================================================== 

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer review):

    கட்டுரையாளர், திருமந்திரத்தில் விளக்கப்பட்டுள்ள சைவ சித்தாந்தக் கூறுகளை எளிய நடையில் கற்போர் உய்த்துணருமாறு விளக்கியுள்ள செயல், பாராட்டிற்கு உரியது. உயிர் இறைவனை அடைதல் என்றால் என்ன?, மனிதராகப் பிறப்பெடுத்த உயிர்கள் புரியும் வினைகளின் அடிப்படையில் மட்டும்தான் மறுமைப் பலன்கள் விளைகின்றனவா?, மனிதரல்லாத உயிர்களுக்கு வினைச் செயல்பாடுகளும் வினைப் பலன்களும் உள்ளனவா? சைவ சித்தாந்திகள் பிறவிகளை எவ்வாறு வகைப்படுத்துகின்றனர்? வீடுபேறு என்றால் என்ன?  என்பது போன்ற கேள்விகளுக்கு ஆழ்ந்து விடை காண்பதற்கு எதிர்கால ஆய்வுகளில் அவர் முயலுதல் வேண்டும்.

     ========================================================== 

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 40

    – நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்

                       40.. கல்வி

    குறள் 391:

    கற்க கசடறக் கற்பவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக.

    கத்துக்கிட வேண்டியத தப்பில்லாம கத்துக்கிடணும். பொறவு என்ன கத்துக்கிட்டோமோ அதுபடி நடக்கணும்.

    குறள் 392:

    எண்ணென்ப ஏனை யெழுத்தென்ப இவ்விரண்டுங்
    கண்ணென்ப வாழும் உயிர்க்கு

    எண்ணும் , எழுத்தும் வாழுத உசிருங்களுக்கு இருக்க ரெண்டு கண்ணுங்க .(அறிவுக் கண்கள்).

    குறள் 393:

    கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு
    புண்ணுடையர் கல்லா தவர்

    கண் இருக்கு னு சொல்லுதவங்க எல்லாம் படிப்பு படிச்சவங்கதான்.. படிக்காதவங்களுக்கு இருக்க கண்ண மொகத்துல இருக்க ரெண்டு புண் னு நெனச்சிக்கிடணும்.

    குறள் 394:

    உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
    அனைத்தே புலவர் தொழில்

    மத்தவங்க கூட மகிழ்ச்சியா சேந்து பழகி பொறவு பிரியும்போது இனி எப்பம் பாப்போம் னு ஏங்குத அளவு மனம் கலங்குதது அறிவாளிங்களோட செயல்.

    குறள் 395:

    உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
    கடையரே கல்லா தவர்

    பணக்காரங்க முன்ன ஏழ நிக்கது போல அறிவாளிங்க முன்ன எப்பம் கெடைக்கும் னு ஏங்கி நின்னு படிப்பு கத்துக்கிடுதவங்க தான் ஒசந்தவங்க அப்டி செய்ய வெக்கப்பட்டு நிக்கவங்க படிக்காதவங்க.

    குறள் 396:

    தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக்
    கற்றனைத் தூறும் அறிவு.

    தோண்டத்தோண்ட ஊத்துத் தண்ணி ஊறுதது போல படிக்கப் படிக்க அறிவு பெருகிக்கிட்டே போவும்.

    குறள் 397:

    யாதானும் டாடாமால் ஊராமால் என்னொருவன்
    சாந்துணையுங் கல்லாத வாறு

    படிச்சவனுக்கு எல்லா நாடும் எல்லா ஊரும் அவனுக்கு சொந்தம் போலதான். பொறவு சாவுத வரைக்கும் படிக்காம நேரம்போக்குதது எதனால.

    குறள் 398:

    ஒருமைக்கண் தான்னற்ற கல்வி ஒருவற்
    கெழுமையும் ஏமாப் புடைத்து

    ஒரு பொறப்புல படிச்ச படிப்பு அப்பம் மட்டுமில்லாம அவனுக்கு ஏழு தலமுறைக்கும் ஒதவுத தன்ம கொண்டது.

    குறள் 399:

    தாமின் புறுவ துலகின் புறக்கண்டு
    காமுறுவர் கற்றறிந் தார்

    தான் சந்தோசப் படுததுக்கு காரணமா இருக்க படிப்பால ஒலகமும் சந்தோசப் படும் னு தெரிஞ்சுக்கிட்டு படிச்ச அறிவாளிங்க அதவிட அதிகமா படிக்க விரும்புவாங்க.

    குறள் 400:

    கேடில் விழுச் செல்வங் கல்வி யொருவற்கு
    மாடல்ல மற்றை யவை

    ஒருத்தனுக்கு படிப்பு தான் அழியாத சொத்து. மத்ததெல்லாம் ஒசந்த சொத்து ஆவாது.

    (அடுத்தாப்லையும் வரும்….

    Share
  • சேக்கிழார் பா நயம் – 36

    -திருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி

    திருவதிகைப் புறத்தே, இறைவன் திருவடி பதித்து விளையாடல் செய்தமையால், சுந்தரருக்கு விரைந்து தில்லைக்குச் சென்று திருவடியை வழிபடும் ஆவல் மிகுந்தது! கெடிலநதியில் நீராடித் தில்லை நோக்கிய பயணத்தைத் தொடர்ந்தார். அடுத்துத் திருமாணிகுழி என்ற தலத்தை அடைந்தார். திருவதிகைக்குள் புகாமல் ஊருக்கு வெளியே ஓடும் கெடில நதியில் நீராடி, இறைவனை நேரில் கண்டு போற்றாமல் புறத்தே நின்று அடியை மட்டும்போற்றினார் என்பதைச் சேக்கிழார்,இப்பாடலில், அங்கணரைப் போற்றி எனக் கூறாமல் அடிபோற்றி என்று கூறியதன் நயம் உணரத்தக்கது. அதனால் அந்நதியின் தென்கரை வழியே சென்றார். திருக்கோயில் அந்நதியின் வடகரையில் உள்ளது! அங்குசென்று வணங்காமைக்கு அவர் அப்பர் வழிபட்ட தலத்தை மிதியாமையே காரணம். அங்கிருந்து புறப்பட்டுத் திருமாணிகுழி என்ற தலத்தை அடைந்தார். இதனைச் சேக்கிழார் ‘’மற்றந்த பொங்குநதித் தென்கரைபோய்’’ என்று பாடினார். ‘திருமாணிகுழி’ என்ற ஊரின் சிறப்பை இங்கே சேக்கிழார் கூறுகிறார்! திருமால், மகாபலிச் சக்ரவர்த்தியிடம் ஓர் அந்தணச் சிறுவனாகச் சென்றார். அவன் தன்னைப் பெற்றவரும் இகழும் குட்டை வடிவினராய்ச் சென்றார். அவனது வாமன வடிவத்தைக் கம்பர் ‘’பயந்தவர்களும் இகழ்குறளன்’’ என்பார்.

    கயம் தரு நறும் புனல் கையில் தீண்டலும்
    பயந்தவர்களும் இகழ் குறளன் பார்த்து எதிர்
    வியந்தவர் வெரு கொள விசும்பின் ஓங்கினான்
    உயர்ந்தவர்க்கு உதவிய உதவி ஒப்பவே

    என்பது கம்பர்பாட்டு! அவ்வாறு சென்ற திருமால் மாவலியின் கொடைப் பண்பைப் பயன்படுத்திக் கொண்டு மூன்றடி மண்ணை தானமாகக் கேட்டார். அவனும் சிறுவடிவினன் தானே என்றெண்ணி ‘’மூன்றடி நிலத்தைத் தந்தேன்!’’ என்று கூறியஅளவில், சிறிய வாமனன் பெரிய விஸ்வரூபம் எடுத்து மூவுலகையும் ஈரடியால் அளந்தார், மூன்றாம் அடிக்கு இடம் இல்லாமையால், மாவலியின் தலையிலேயே மூன்றாம்அடியை வைத்து மண்ணுக்குள் தள்ளினார்! இதனையே திருவள்ளுவர் தம்குறட்பாவில்,

    ‘’ மடியிலா மன்னவன் எய்தும்அடியளந்தான்
    தாஅயது எல்லாம் ஒருங்கு!’’

    என்றுபாடுகிறார். வாமனனாய் மூன்றடி மண்கேட்டபோது, குறளனாய்நின்று வஞ்சனையால் வளர்ந்து திருமால் அடைந்த மூவுலகையும், வஞ்சனையற்ற, சோம்பல் இல்லாத மன்னவன், ஒருங்கே அடைவான்’’ என்பது அதன்பொருள். இதனையே சிலப்பதிகாரத்தில் இளங்கோ,

    ‘’மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத் தாவிய சேவடி’’

    என்பார் . அதில்உள்ள வஞ்சனையை அவர் ‘’முறைநிரம்பா வகை’’ என்று கூறுவார்.மேலும் திருக்குறள்,

    ‘’உதவி வரைத்தன்று உதவி உதவி
    செயப்பட்டார் சால்பின் வரைத்து!’’

    இங்கே செய்யப்பட்டார் சால்பு என்பது தாழ்ந்தவர்களைக் குறித்தும் சிந்திக்கிறது. இதனை

    ‘’பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
    கலந்தீமை யால்திரிந் தற்று!’’

    என்றுகூறுகிறது. இக்குறளில் ‘’பெற்ற ‘’ என்ற சொல் ஈட்டிய என்பதை நுடபமாக விலக்கு கிறது! அத்தகைய வஞ்சகச் செயலால்வந்த பாவத்தைப் போக்கிக் கொள்ள, திருமால் சிறிய மாணியாய் அதாவது பிரம்மச்சாரியாய், சிவபிரானை வழிபட்ட தலம் , ‘’திருமாணி குழி’’ ஆகும். இதனைச்சேக்கிழார்,

    ‘’போர்வலித்தோள் மாவலிதன்
    மங்கலவேள் வியில்பண்டு வாமனனாய் மண்ணிரந்த
    செங்கணவன் வழிபட்ட திருமாணி குழி யணைந்தார் ‘’

    என்று பாடுகிறார். இப்பாடலில் உலகெலாம் தம் உடைமையாகக் கொண்ட திருமால், அற்பப் பொருளைக் கேட்டு வஞ்சனை செய்த தம் பிழையுணர்ந்து வழிபட்ட தலம் என்று குறிப்பாகப் பாடுவதன் நயத்தை நாம் உணர்ந்து கொள்கிறோம். இனி இப்பாடல் முழுவதையும் பயில்வோம்.

    ‘’அங்கணரை அடிபோற்றி அங்ககன்று மற்றந்த
    பொங்குநதித் தென்கரைபோய்ப் போர்வலித்தோள் மாவலிதன்
    மங்கலவேள் வியில்பண்டு வாமனனாய் மண்ணிரந்த
    செங்கணவன் வழிபட்ட திருமாணி குழியணைந்தார்.’’

    இப்பாடல், சுந்தரரும் உலக வாழ்க்கை இன்பத்தை நாடி இறைவனையே இகழ்ந்த தம்பிழையை மெல்ல மெல்ல உணர்ந்து கொள்ளும் சூழ்நிலையை விளக்குகிறது!

    Share
  • வல்லமையாளர் விருது 307 – திவான்ஷு

    -விவேக்பாரதி

    அறிவியலின் துணை கொண்டு மனிதன் எத்தனையோ இயலாமைகளைச் சாத்தியமாக்கி இருக்கிறான். மனிதனால் வேகமாக நகர முடிந்தது, இருட்டை விலக்க ஒளி உருவாக்க முடிந்தது, பறக்க முடிந்தது, தண்ணீரின் ஆழம்வரை காண முடிந்தது, விண்வெளியின் விளக்கங்களைப் பார்த்துப் பகிர முடிந்தது. மனிதன், தன்னுடைய எத்தனையோ இயலாமைகளை அறிவியலால் சாத்தியமாக்கி இருக்கிறான். ஆனாலும் இன்னும் சில இடங்களில் மனிதராகிய நாம் பின் தங்கித்தான் இருக்கிறோம். காற்றில்லா வெற்றிடத்தின் (Vacuum) மூலம் மனிதக் கழிவுகளை அகற்றும் அளவுக்கு வளர்ந்திருக்கும் நம் தொழில்நுட்பம், செப்டிக் தொட்டிகளைச் சுத்தம் செய்ய இன்னும் சில இடங்களில் மனிதக் கரங்களைத்தான் நம்பி இருக்கிறது. அதற்கும் அறிவியல் விடையைக் கண்டுகொண்டால்? இன்னும் பல நகரப்பார்வை படாத உள்முக கிராமங்களில் மனிதக் கழிவுகளை மனிதர்களே அப்புறப்படுத்துகிறார்கள். இந்த நிலையை மாற்ற ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தி இருக்கிறார்கள் ஐஐடி மாணவர்கள். அவர்களே இந்த வாரத்தின்  வல்லமையாளர்கள்.

    ஐஐடி மதராஸைச் சேர்ந்த திவான்ஷு என்ற மாணவரும் அவருடைய குழுவும் தங்கள் பேராசிரியர் பிரபு ராஜகோபால் என்பவருடன் இணைந்து இந்தச் சாதனத்தைக் கண்டுபிடித்துள்ளனர். அதாவது செப்டிக் தொட்டிகளைச் சுத்தம் செய்யும் இயந்திரம். மீன் போன்று செயல்படும் வடிவமைப்பைக் கொண்ட இந்த ரோபோ, செப்டிக் தொட்டிகளில் இருக்கும் அழுக்குகளை பிரத்யேகமான ஒரு வெட்டுக் கருவி  கொண்டு வெட்டி எடுத்து, வெற்றிடக் குழாய்களின் வழியே அழுக்கையும் வண்டலையும் சுத்தம் செய்கிறது. இது குறித்த வெங்கடாச்சலம் என்பவர் லிங்க்டு இன் தளத்தில் பதிவேற்றியது.

     

    மாணவர்களாகச் சேர்ந்து சமுதாயத்தில் ஒரு முன்னேற்றப் பாதைக்கு வித்திட்டிருப்பதை வல்லமை மின்னிதழ் மிகவும் பாராட்டுகிறது. அந்தக் குழுவுக்கு “வல்லமையாளர்” என்ற விருதை அளித்து இன்னும் பல சாதனைகள் புரிய வாழ்த்துகிறது.

    Share
  • (Peer reviewed)  சங்க இலக்கியத்தில் மண்ணறிவியல்

    (Peer reviewed) சங்க இலக்கியத்தில் மண்ணறிவியல்

    த.திருமுருகன்
    முனைவர் பட்ட ஆய்வாளர்
    தமிழ்த் துறை
    அழகப்பா பல்கலைக்கழகம்
    காரைக்குடி – 630003
    thirukutty5593@gmail.com

    சங்க இலக்கியத்தில் மண்ணறிவியல்

    சங்ககாலத் தமிழகம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று நிலப் பகுப்பைப் பெற்றிருந்ததைத் தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும் குறிப்பிடுகின்றன. இந்நில அமைப்புகளை நிறம், குணம், பயன் அடிப்படையில் ‘புலம்’ என்ற சொல்லால் குறிப்பிட்டமையைச் சங்க இலக்கியங்கள் சுட்டுகின்றன. நிலமும் புலமும் ஒன்றா அல்லது வேறுபட்டவையா என்ற ஐயம் பொதுவாகத் தோன்றும். இவ்வையப்பாட்டை நீக்கும் பொருட்டு நிலம், புலம் பற்றிய வரையறைகளைக் காண்பதும், அவற்றுக்குள்ள வேற்றுமைகளை விளக்குவதும், சங்க கால மண் வகைகளைத் தற்கால மண்வகைகளோடு ஒப்பிட்டுக் காண்பதும், இந்நில, புலத்தில் இடம்பெறும் தாவரங்கள், விலங்குகள், தொழில்கள் பற்றிக் காண்பதும் இக்கட்டுரையின் நோக்கமாகும்.

    நிலம், புலம் வரையறை

    புலம் என்பதற்கு “வயல், மேட்டு நிலம், இடம், திக்கு, நுண்மை, அறிவு, திசை, வேகம்” என்று சங்க இலக்கியப் பொருட்களஞ்சியமும் (பக்.70-79), நிலம் என்பதற்கு, “பூமி, இடம், தேசம், தரை, மண், உலகு” என்று நா.கதிரைவேற்பிள்ளை அகராதியும் (ப.93) குறிப்பிடுகின்றன. புலமும் நிலமும் ஒரே பொருளைக் குறிப்பன அல்ல. இதனைத் தொல்காப்பியம் “நிலம் பெயர்ந்து உரைத்தல்” (தொல்.பொருள்.இளம்பூரணர் உரை, நூற்.167) என்று குறிப்பிடுகிறது. அதாவது தலைவன் வேறொரு நாட்டுக்கு நிலம் பெயர்ந்து செல்லுதல் என்று நிலத்தை மட்டும் குறிப்பிட்டுள்ளார்.

    இவர் புலம் பற்றிக் குறிப்பிடவில்லை. சங்க இலக்கியத்தில்தான் முதன்முதலாகப் புலம் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. நிலம் என்பது வாழும் இடத்தைக் குறிப்பதாகத் தொல்காப்பியமும், புலம் என்பது வாழும் இடத்திற்கு வெளியேயுள்ள இடத்தைக் குறிப்பதாகச் சங்க இலக்கியங்களும் சுட்டுவதை உரைகளின் வழி அறிய முடிகிறது. நில புலங்கள் என்றொரு சொல் இன்று வரையிலும் வருவாய்த் துறைப் பதிவேட்டில் வழக்கிலுள்ளது.

    புலம் பற்றி, “புன்புல மயக்கத்து விளைந்தன தினையே” (ஐங்குறுநூறு260), “வன்புலத்துப் பகடு விட்டு” (புறநானூறு.395), “மென்புலத்து வயல் உழுவர்” (புறநானூறு.395) என்ற இப்பாடலடிகள் சுட்டுகின்றன. புன்புலமான குறிஞ்சி நிலத்தில் தினைப்பயிர் விதைக்கப்பட்ட செய்தியும், வன்புல முல்லை நிலத்தில் எருதுகள் மேய்கின்ற செய்தியும், மென்புல மருத நிலத்தில் உழவர் பயன்படுத்தும் மென்மையான நிலச் செய்தியும் பற்றிச் சங்க இலக்கியங்கள் குறிப்பிட்டுள்ளன. இச்சங்கப் பாடல்கள், மக்கள் வாழும் இடத்தின் வெளிப்புறப் பகுதியில் தினை பயிரிடும் இடத்தையும், விலங்குகள் வாழும் இடத்தையும் கால்நடை மேய்ச்சல் இடத்தையும் மக்கள் வேளாண்மைக்கு உழவு செய்யும் இடத்தையும் புலமென்று சுட்டுகின்றன. இவற்றின் வழி புலம் என்பது மக்கள் வாழும் இடத்தின் புறத்தேயுள்ள வயல் வெளிகள் என்பதனை அறிய முடிகிறது.

    மக்கள் வாழும் இடத்தைவிட்டு மற்றோர் இடத்தை வெளிப் புழக்கத்திற்காகவும், பயணத்திற்காகவும் பயன்படுத்துவதனால் இவற்றிற்குப் புலம் என்று சான்றோர்கள் சுட்டியிருக்க வேண்டும். சங்க காலத்தில் குறிப்பிட்டுள்ள புலம் என்ற பெயர் தற்காலத்தில் ஊர்ப்பெயர்களாகத் தாழிபுலம் (ஓர் ஊரில் இடுகாட்டைக் குறிப்பிடும் பகுதி), செட்டிபுலம் (செட்டியார்கள் வாழும் பகுதி), மாரியப்புலம், கோயிலுப்புலம், பள்ளம்புலம் போன்றவை அமைந்துள்ளன. இவை பெரும்பாலும் ஊரின்  புறப்பகுதியில் உள்ள குடியிருப்புகளாக அமைகின்றன. இவற்றை நோக்கும்போது புலம் என்பது ஊரின் வெளிப்பகுதியையே சுட்டுகின்றது. இதனாலேயே தற்காலத்தில் புலம் பெயர்ந்தோர் என்ற சொல் வந்திருக்க வேண்டும் என்று எண்ண இடமளிக்கிறது. இதனை, “தென்புலத்தார் தெய்வம்(இளங்குமரனார் உரை, திருக்குறள்.43) என்ற இத்திருக்குறளுக்குப் புங்கையூரன், “புலம் என்பது திசையைக் காட்டுகின்றது. எனவே வெவ்வேறு திசைகளுக்குப் போனவர்களைப் புலம்பெயர்ந்தவர்கள் என்று கூறலாம்” (புங்கையூரன், யாழ் இணையக் கட்டுரை, நவம்பர் 14, 2011) என்று தன் இணையக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

    தற்கால மண் வகைகள்

    மனிதர்கள் தாவரங்கள், உயிரினங்கள் போன்றவற்றைச் சார்ந்தே வாழ்கின்றனர். நிலத்தில் வெவ்வேறு மண் அடுக்குகள் காணப்படுகின்றன. மண்ணமைவில் பௌதிக, மற்றும் இரசாயன மாற்றங்கள் ஏற்படும் என்பது அறிஞர்களின் கருத்தாகும். இவற்றின் அடிப்படையில் மனிதன் வேளாண்மையைத் தொடங்கினான். தற்கால வேளாண்மைக்குரிய அனைத்து மண்வகைகளும் தமிழ்நாட்டில் உள்ளதென்று வேளாண் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். செம்மண், வண்டல் மண், கரிசல் மண், சரளை மண், மணற்சாரி மண், உவர்மண் மற்றும் களர்மண் போன்றவை தற்கால மண்வகைகள் ஆகும்.

    பாறைகளிலிருந்து தோன்றிய மண், பாறைகளின் தன்மைகளிலிருந்து மிகவும் வேறுபட்டதென்று தற்கால ஆய்வின் மூலம் விளக்கப்பட்டுள்ளது. தற்காலத்தில் மண்ணைப் பரிசோதனை செய்து அதன் வளத்தினைக் கண்டறிந்து வேளாண்மை செய்கின்றனர். சங்க காலத்தில் நிலத்தின் இயற்கைத் தன்மையையும், விளையும் குணத்தையும், நிறத்தையும் அறிந்து வன்புலம் (புறநானூறு.395), புன்புலம் (குறுந்தொகை.383), மென்புலம் (புறநானூறு.395), இடைப்புலம் (புறநானூறு.288), சேட்புலம் (புறநானூறு.326), செம்புலம் (குறுந்தொகை.40), மெல்லம்புலம் (ஐங்குறுநூறு.120), கானலம்புலம் (ஐங்குறுநூறு.152,154), உவர்நிலம் (அகநானூறு.309), செம்மணல் (அகநானூறு.345), செம்புலப்புறவு (அகநானூறு.221), மென்பால் (புறநானூறு.384), வன்பால் (புறநானூறு.384), சாய்அறல் (பதிற்றுப்பத்து.74) என்று பெயரிட்டு வழங்கியுள்ளனர்.

    இப்புல வகைகள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐவகை நிலங்களுக்குள் அடங்கும். இதனை மகிழேந்தி, “வன்னிலங்களாகக் குறிஞ்சி, முல்லை ஆகியனவும் மென்னிலங்களாகப் பிற மூன்றும் காணப்படுகின்றன” (மகிழேந்தி, சுற்றுச் சூழலியல் நோக்கில் சங்கத் தமிழகம், ப.160) என்பர். இதனை, “வன்புலம் தழீஇய மென்பால் தோறும்” (பதிற்றுப்பத்து.75:8) என்ற பாடலடி விளக்கும். தற்கால வேளாண் அறிஞர்களின் கண்டுபிடிப்பை அன்றே தமிழன் எவ்விதப் பரிசோதனைக் கருவியுமின்றிக் கண்டுபிடித்துள்ளான் என்பதை மேற்கண்ட சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன.

    சங்க இலக்கியப் புல வகைகளும், தற்கால மண்ணமைவும்

    மக்கள் வாழும் பகுதியைத் தமிழர்கள் ஐவகை நிலமாகக் குறிப்பிடுவதை, ”காடுறை உலகம், மைவரை உலகம், தீம்புனல் உலகம், பெருமணல் உலகம்” (தொல்காப்பியம் பொருளதிகாரம், இளம்பூரணர் உரை, நூற்.951) என்ற நூற்பாவில் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்று குறிப்பிடுகிறார். இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் பாலை நிலத்திற்கு விளக்கம் தந்துள்ளார். இதனை, “முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து … பாலை என்பதோர் படிவம் கொள்ளும்” (அடியார்க்கு நல்லார் உரை, சிலப்பதிகாரம் – காடுகாண் காதை 64-66) என்று குறிப்பிடுகிறார். இவ்வகை நிலங்கள் பெரும் நிலப்பரப்பினை உடையன. இந்நிலங்களில் உள்ள மண்ணின் இயல்புகளையும் தன்மைகளையும் அறிந்து நிலங்களின் உட்பிரிவாக மென்புலம், வன்புலம், இடைப் புலம், புன்புலம், சேட்புலம், செம்புலம், உவர்நிலம் என்று சங்க இலக்கியப் புலவர்களால் வைக்கப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.

    தற்காலத்தில், “நஞ்சை நிலம்மென்பால் (விளையும் நிலம்) என்றும், புன்செய் நிலம்வன்புலம் (விளையாத நிலம்) என்றும், கரம்பை நிலம்வன்னிலம்” என்று கிராம நிர்வாக அலுவலகப் பதிவேட்டில் (ப.55) இடம் பெற்றுள்ளது. “வன்னிலம் என்பது வன்புலத்திலுள்ள நீர் வறண்டு போவதால் அவற்றைப் பாழ்நிலம் என்றும், கரம்பை நிலமென்றும்” என்று பவானந்தன் தமிழ்ச் சொல்லகராதி (ப.414,114) குறிப்பிடுகிறது.

    செம்மண்

    சிவப்பு நிறமாக இருப்பதால் இதற்குச் செம்மண் எனச் சான்றோர் பெயரிட்டுள்ளனர். சங்க இலக்கியங்களிலும் தற்காலத்திலும் செம்மண் என்றே வழங்கப்படுகிறது. இம்மண் புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், பெரம்பலூர், அரியலூர் போன்ற மாவட்டங்களில் பரவிக் காணப்படுகிறது. செம்மண் என்ற மண் வகை, செவ்வாய்க் கோளிலும் இருப்பதாகத் தற்கால விண்வெளி ஆராய்ச்சிகள் புலப்படுத்துகின்றன.

    செம்மண் வகைகள், அமிலத்தன்மையுடைய கருங்கல் பாறைகள், பழங்காலப் பாறைகள், உருமாறிய பாறைகள் போன்றவை காலப்போக்கில் சிதறுண்டு நொறுங்கியதால் உண்டானவை ஆகும். மலைச் சரிவுகளில் இருந்து மழை நீரினாலும், புவி ஈர்ப்பு விசையினாலும் இவை கீழே கொண்டு வரப்பட்டு மலை அடிவாரங்களில் பரவிக் கிடக்கின்றன. இவற்றில் இரும்பு ஆக்ஸைடு அதிக அளவில் உள்ளதால் இம்மண் சிவப்பு நிறத்துடன் காணப்படுகின்றது. இவை பொதுவாக இளகிய இயல்புடையது ஆகும்” என்று தமிழ் விக்கிப்பீடியா (நாள்.10.02.2014) விளக்குகிறது. தற்காலத்தில் புவியியல் ஆய்வாளர்கள் குறிப்பிடும் செம்மண், சங்க இலக்கியங்களில் செம்புலம், செம்புலப்புறவு, செம்மணல், செந்நிலப்புறவு, செந்நிலம், செந்நிலன் என்று அழைக்கப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.

    செம்புலம்

    செம்புலப் பெயல்நீர் போல” (குறுந்தொகை.40) என்ற பாடலடியில், குறிஞ்சி நிலத்தில் செம்மண் இருப்பதையும், இம்மண்ணைச் செம்புலம் என்று குறிப்பிடுவதையும் அறிய முடிகிறது. செம்புல மருங்கில் (அகநானூறு.389) என்ற பாடல், பாலை நிலத்தில் சிவந்த நிறமான செம்மண் இருப்பதாகச் சுட்டுகிறது.

    செந்நிலப்புறவு

    செம்மண் முல்லை நிலத்தில் அமைவதனை, “வம்பு விரிந்தன்ன செம்புலப் புறவில்” (நற்றிணை.221), “செந்நிலப் புறவின் புன்மயிர்ப் புரவை” (நற்றிணை.321) என்ற இப்பாடலடிகளில் சரக்கொன்றைப் பூக்கள் பூப்பதையும் செம்மண் காடுகள் இருந்தமையையும், இந்நிலத்தில் ஆயர்களின் ஆடுகள் கட்டப்பட்டிருந்த செய்தியையும் அறிய முடிகிறது. முல்லை நிலச் செம்மண்ணில், வள்ளிக்கொடியும் பெய்த மழையால் வளைந்த கதிரையுடைய வரகுகள் விளைந்திருந்ததையும் (மலைபடுகடாம்.97-100) சுட்டுகிறது. செம்மண் அரக்கைப் பரப்பி வைத்தாற்போல சிவந்த நிலத்தில் இருந்ததை, “அரக்குவிரித் தன்ன செந்நில மருங்கின்” (மலைபடுகடாம்.507-508) என்ற அடி உணர்த்துகின்றது.

    முல்லை நில செம்புலக் காட்டில் செவ்வரக்கும், காயாம் பூக்களும் இந்திர கோபப் பூச்சிகளும் (அகநானூறு.14), உடும்பு (மலைபடுகடாம்.507), மான்கள் (நற்றிணை.97) இருப்பதையும், பாலை நிலச் செம்மண்ணில் பிடவ மலர்களும் (அகநானூறு.79), தேக்கு, இருப்பை மரங்களும் (அகநானூறு.225), யானைகள் (அகநானூறு.227)  இருப்பதையும் அறிய முடிகிறது.

    செம்மணல்

    பாலை நிலத்திலுள்ள செம்மண்ணில் வேங்கை மரத்தின் மலர்கள் பரவியிருந்தன எனபதனை, “செம்மணற் சிறுநெறி கம்மென வரிப்ப” (அகநானூறு.345) என்ற அடி விளக்குகிறது. செம்புலம் என்ற சிவந்த மண் முல்லை, குறிஞ்சி, பாலை போன்ற நிலங்களில் அதிகம் இருப்பதைச் சங்க இலக்கியங்கள் சுட்டுகின்றன. செம்மண் இருக்கும் இடத்தைச் செம்புலமென்றும், அந்நிலத்தில் காணப்படும் மலர்கள், விலங்குகள், பூச்சிகள், மரங்கள் மற்றும் நிறங்கள் பற்றியும் விளக்கப்பட்டுள்ளது. இம்மண் வேளாண்மைக்கு மிகவும் ஏற்றதாகவும், தழைச்சத்து, நார்ச்சத்து, கனிமங்கள் உடையதாக இருப்பதையும் தற்கால ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

    வண்டல் மண்

    இம்மண்ணில் நெல், வாழை, கரும்பு, கோதுமை போன்ற பயிர்களும், ஊடு பயிராகச் சோளம், உளுந்து, பாசிப்பயிறு, வெற்றிலை போன்ற பயிர்களும் நன்கு விளையும். பெரும்பாலும் மருத நிலம் விளைநிலமாகக் கருதப்படுகிறது. நீர்ப்பிடிப்புப் பகுதியான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, பெரம்பலூர், கடலூர், கரூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் இம்மண் பரவிக் காணப்படுகிறது.

    வண்டல் மண்ணைச் சங்க இலக்கியத்தில் மென்புலம், மென்பால், சேட்புலம், வண்டல் என்ற பெயரில் குறிப்பிட்டுள்ளனர். மருத நிலத்து உழவர் பயன்படுத்தும் நிலமாக மென்புலம் கருதப்படுவதை “மென்புலத்து வயல் உழவர்” (புறநானூறு.395) என்ற பாடலடி விளக்குகிறது. மென்பால் என்பது மென்மையான நீரினையுடைய நிலம் ஆகும். இந்நீரையுடைய வயல்களில் நாரை வாழ்வதைப் பற்றிப் புறநானூறு 384ஆம் பாடல் குறிப்பிடுகிறது.

    மருத நிலத்தில் வேளாண்மை செய்வதற்காகக் கண்மாய் நீர் வரும் மடை அருகிலுள்ள சேற்று நிலத்தைச் சேட்புலம் என்று குறிப்பிடப்படுகிறது. இச்சேற்று நீர் வற்றாமல் இருக்கும். இந்நிலத்தில் குறுந்தாள் உடும்பு இருந்ததைப் புறநானூறு 326ஆம் பாடல் குறிப்பிடுகிறது. வண்டல் மண்ணில் பாவை செய்த செய்தியையும், தலைவன் ஊரைச் சிறப்பிக்கும் நிலையிலும் வண்டல் மண் குறிப்பிடப்படுகிறது. இதனை, “வண்டற் பாவை வௌவலின்” (கலித்தொகை.29:5) என்றும், “மென்புல வைப்பின் நாடுகிழ வோனே” (ஐங்குறுநூறு.407:4) என்றும் இப்பாடலடிகள் உணர்த்துகின்றன.

    கரிசல் மண்

    கரிசல் மண், எரிமலைக் குழம்பு லாவா பூமியிலிருந்து வெளிவந்து படிதலால் ஏற்படுகிறது. இம்மண் பெரும்பாலும் தண்ணீரை உறிஞ்சும் தன்மை கொண்டது. கரிசல் மண்ணைச் சங்க இலக்கியத்தில் வன்புலம், வன்பால், கரம்பை, வன்னிலம் என்ற பெயரில் சான்றோர்கள் அழைத்துள்ளனர். வன்புலம் என்பது முல்லை நிலத்தில் அமைந்த வலிமையான புலம் என்றும், இந்நிலத்தில் இடையர்கள் ஆடு மேய்த்ததையும், உடும்பு, தவளை, ஈசல் வாழும் மண்ணையுடைய செய்தியையும் புறநானூறு 395ஆம் பாடல் விளக்குகிறது.

    முல்லை நிலக் கரிசல் மண்ணில் செம்பூழ்ப் பறவைகளும் (ஐங்குறுநூறு.469), நடுகல் நிரம்பிய காடுகளும், நெல்லி மரங்களும் (புறநானூறு.314), மருத நிலக் கரிசல் மண்ணில் குறும்பூழ்ப் பறவையும் கடம்ப மலரும் (பெரும்பாணாற்றுப்படை.77), முயல்களும் (புறநானூறு.322) காணப்படுகின்றன. மேலும் வன்புலத்தைக் கரம்பை என்று குறிப்பிடுவதையும், இப்புலத்தில் வௌ்வரகு, செந்நெல் விளைவதையும் “வௌ்வரகு உழுத கொள்ளுடைக் கரம்பைச் செந்நெல்” (பதிற்றுப்பத்து.75) என்ற பாடலடிகள் விளக்குகின்றன. வன்புலத்தை வன்னிலம் என்று குறிப்பிடுவதை, ‘‘வன்னிலங்கள் துனிபடச் சென்று’’ (அகநானூறு.79) என்ற பாடலடி குறிப்பிடுகிறது. இப்புலம், கற்கள் நிறைந்த நீண்ட காடுகளால் ஆனது.

    சரளை மண்

    இம்மண் பாறைப் பரல்களாலான பீட பூமியாகும். மலைப்பாங்கான பிரதேசத்தில் இம்மண் காணப்படும். சோளம், கம்பு, தினை வகைகள் பயிரிடப்படுகிறன. தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, நீலகிரி, திருப்பூர், கோவை மாவட்டங்களில் சரளை மண் (துருகல் மண்) பரவிக் காணப்படுகிறது. இம்மண்ணைச் சங்க இலக்கியம் புன்புலம், இடைப்புலம் என்று குறிப்பிடுகின்றது. இம்மண்ணின் பெயரைப் பண்டைய மக்கள் முறைப்படக் குறிப்பதை, “புன்புலத்து அமன்ற சிறியிலை நெருஞ்சிக்” (குறுந்தொகை.202) என்று குறுந்தொகையும், புன்செய் நிலத்தில் நெருஞ்சி மலர் பூத்திருப்பதையும், தினைப் பயிர்களை யானைகள் மேய்ந்ததையும்  (ஐங்குறுநூறு.260) உழவர்கள் காளைகளைப் பூட்டிக் கலப்பையால் உழவு செய்யும் திண்மையான நிலம் என்பதையும் (பரிபாடல்.58:15) சங்க இலக்கியங்கள் விளக்குகின்றன.

    முல்லை நிலமான புன்புலத்தில் முயல்களும் (ஐங்குறுநூறு.421), வேல மரங்கள் (பரிபாடல்.58) இருப்பதையும், இந்நிலம் பொலிவற்று இருந்ததையும் இவ்விலக்கியங்கள் சுட்டுகின்றன. இப்புலத்தில் நெல் விளையாது. வரகு, தினை போன்றவை விளைந்தன என்ற செய்தியை, “புறவு சேர்ந்திருந்த, புன்புலச் சீறூர் நெல் விளையாதே, வரகும் தினையும் உள்ளவை எல்லாம்” (புறநானூறு.328) என்ற பாடலடிகள் குறிப்பிடுகின்றன.

    உவர்(களர்)மண், மணற்சாரிமண்

    உவர்மண், பாலை மண் என்று அழைக்கப்படுகிறது. இந்நிலத்தில் உப்பு எடுத்தல், மீன் உணக்கல், மீன் வலை உலர்த்தல் போன்ற தொழில்கள் நடைபெறுகின்றன. இம்மண் வகையைச் சங்க இலக்கியம் மெல்லம்புலம், கானலம் புலம், உவர்நிலம் என்று குறிப்பிடுகிறது. உவர்மண் நெய்தல் நில மண்ணாகும். நெய்தல் நிலத்திலுள்ள இம்மண்ணை, “மெல்லம் புலம்பன் வந்த மாறே” (ஐங்குறுநூறு.120) என்ற பாடலடி விளக்கும். மெய்ப்புலம் என்பது நெய்தல் நிலத்திலுள்ள ஊரைக் குறிக்கும். இந்நிலம் உவர் நிலமென்றும், சேண்புலம் என்றும் குறிப்பிடுவதை, “உவர்விளை உப்பின் கொள்ளை சாற்றி, அதன்படு பூழிய சேண்புலம் படரும்” (அகநானூறு.309) என்ற இப்பாடலடிகள் உணர்த்துகின்றன.

    நெய்தல் நிலத்திற்கும் மருத நிலத்திற்கும் இடையே காணப்படும் கருப்பு நிறமான மணலைச் சாய் அறல்’ (பதிற்று.74) என்று குறிப்பிட்டுள்ளனர். இதன்மூலம்  நெய்தல் நிலத்திற்கும் மருத நிலத்திற்கும் இடையே கருநிற மணல் இருப்பதை அறிய முடிகிறது. சங்க இலக்கியத்தில் குறிப்பிட்ட மண்ணின் அமைப்பை, “வண்டல் மருத நிலத்து ஆற்றுப் படுகைகளிலும், செம்புறை குறிஞ்சி நிலத்திலும் மணற்பாங்கானது நெய்தல் நிலத்திலும், செம்மண் முல்லை நிலத்திலும் காணப்படுகின்றன. கரிசல் மண் மிகுதியான அளவு நன்புலத்திலும், சிறுபான்மை புன்புலத்திலும் காணப்படுகின்றது (ப.118) என்று ந.வீ.செயராமன், தமிழ் இலக்கியத்தில் வேளாண்மை அறிவியல் என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

    தொகுப்புரை

    சங்ககால மக்கள் மண்ணின் தன்மைக்கும் நிறத்திற்கும் ஏற்றவாறு பெயரிட்டுள்ளதைச் சங்க இலக்கியங்கள் தெளிவுபடுத்துகின்றன. ஐவகை நிலங்களில் ஆறு வகையான புலங்கள் காணப்படுகின்றன. செம்புலம், வன்புலம், மென்புலம், புன்புலம், மெல்லம் புலம் போன்றவை குறிஞ்சி நிலத்தில் இடம்பெற்றுள்ளன.

    குறிப்பிட்ட வேளாண் பயிர்கள், விலங்குகள் பூக்கள் வேற்று நிலத்தில் பெரும்பான்மையாக வளர்வதில்லை. இவற்றை அறிந்த முன்னோர்கள் இந்நிலத்தில் இன்னதுதான் வளரும் என்பதற்கு ஏற்றவாறு மண்ணிற்கு அக்காலத்தில் பொருள்பட பெயர் வைத்துள்ளதை மேற்கண்ட சான்றுகளின் வழி அறியமுடிகிறது.

    புலம் என்ற பெயர் வைத்து வேளாண்மை செய்யும் இடத்திற்கும், நிலத்தின் இயல்புக்கும் ஏற்றவாறு பெயர்கள் சூட்டியிருக்க வேண்டும். எந்தெந்தப் பயிர்கள். எந்தெந்த நிலங்களில் நன்றாக விளையும் என்ற அறிவைச் சங்க கால மக்கள் பெற்றிருந்தனர். இதன் மூலம் அக்கால மக்களிடம் மண்ணியல் அறிவும், நிலத்திற்கும் புலத்திற்கும் வேறுபாடு உண்டு என்பதையும் அறிய முடிகிறது.

    சங்க கால மக்கள் நிலத்தில் வாழ்ந்து புலத்தில் வேளாண்மை செய்தனர் என்பதை மேற்கூறிய கருத்துகள் வெளிப்படுத்துகின்றன. ஓரிடத்தில் பல தலைமுறைகளாக வாழ்ந்த மக்களில் சிலர், தாம் வாழ்ந்த நிலத்தை விட்டு வேறொரு நிலத்திற்குப் புலம் பெயர்ந்ததைப் ‘புலம்பெயர்ந்தோர்’ என்ற சொல் குறிப்பிடுவதையும் அறிய முடிகிறது.

     துணைநூற்பட்டியல்

    1. சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு
    2. ந.கதிரைவேற்பிள்ளை தமிழகராதி, சாரதா பதிப்பகம் சென்னை, 2003.
    3. தொல்காப்பியம், இளம்பூரணர் உரை, சாரதா பதிப்பகம் சென்னை, 2005.
    4. ஐங்குறுநூறு, பொ.வே.சோமசுந்தரனார், கழக வெளியீடு சென்னை, 2009.
    5. புறநானூறு, உ.வே.சாமிநாதையர் உரை, உ.வே.சா. நூல் நிலையம் சென்னை, 2018.
    6. திருக்குறள், இரா.இளங்குமரனார் உரை, பாவாணர் அறக்கட்டளை வெளியீடு, புதுக்கோட்டை, 2006.
    7. குறுந்தொகை, உ.வே.சாமிநாதையர் உரை, உ.வே.சா. நூல் நிலையம் சென்னை, 2017.
    8. அகநானூறு, ந.மு.வேங்கடசாமி நாட்டார், கழக வெளியீடு, சென்னை, 2007.
    9. பதிற்றுப்பத்து, உ.வே.சாமிநாதையர் உரை, உ.வே.சா.நூல் நிலையம் சென்னை, 2018.
    10. மகிழேந்தி, சுற்றுச் சூழலியல் நோக்கில் சங்கத் தமிழகம், தி பார்க்கா், இராயப்பேட்டை சென்னை, 2003.
    11. சிலப்பதிகாரம், அடியார்க்கு நல்லார் உரை, சாரதா பதிப்பகம் சென்னை, 2008.
    12. பவானந்தர் தமிழ்ச் சொல்லகராதி, நியு செஞ்சுரி புக் ஹவுஸ் சென்னை, 2010.
    13. நற்றிணை, அ.நாராயணசாமி உரை, கழக வெளியீடு சென்னை, 1947.
    14. மலைபடுகடாம், உ.வே.சாமிநாதையர் உரை, உ.வே.சா. நூல் நிலையம் சென்னை, 2017.
    15. கலித்தொகை, நச்சினார்க்கினியர் உரை, கழக வெளியீடு சென்னை, 2007.
    16. பரிபாடல், உ.வே.சாமிநாதையர் உரை, உ.வே.சா. நூல் நிலையம் சென்னை, 2017.
    17. ந.வீ.செயராமன், தமிழ் இலக்கியத்தில் வேளாண் அறிவியல், நியு செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 1978.
    18. அரசு வருவாய்த் துறை, கிராம நிர்வாக அலுவலகப் பதிவேடு, ப.55
    19. தமிழ் விக்கிப்பீடியா, நாள் -10.02.2014
    20. புங்கையூரன், யாழ் இணையக் கட்டுரை நாள் -14.11.2011.

    ======================================================================

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer review):

    ‘சங்க இலக்கியத்தில் மண்ணறிவியல்’ என்னும் கட்டுரை, நிலம், புலம் குறித்த பதிவுகள் தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியத்திலும் எவ்வாறு இடம்பெற்றுள்ளன என்பதை விளக்க முயல்கின்றது. தொல்காப்பியத்தில் நிலம் பற்றிய சான்றுகளே உள்ளன. இதை ஐந்து வகையான திணைகளும் அவற்றின் இடங்களும் புலப்படுத்துகின்றன. புலம் என்பது குறித்த பதிவு சங்க இலக்கியத்தில்தான் முதன்முதல் இடம் பெறுகின்றது. புலம் குறித்த பதிவுகள் ஐங்குறுநூறு, புறநானூறு உள்ளிட்ட இலக்கியங்களில் காணப்படுவதை முறையாகத் தொகுத்துக் கட்டுரையாளர் விளக்குகின்றார்.

    சங்க கால மண்ணமைப்பு முறைகளையும் தற்கால மண்வகைகளையும் அறிமுகப்படுத்தும் இக்கட்டுரை, சங்க காலத்தில் இருந்த புலங்களைத் தக்க சான்றுகளோடு எடுத்துரைக்கின்றது. செம்புலம், வன்புலம், மென்புலம், புன்புலம், மெல்லம்புலம் என்னும் இப்புலங்களில் பயிரிடப்படும் உணவுப் பொருட்களைப் பட்டியலிட்டுச் செல்கின்றார் கட்டுரையாளர். மேலும் நவீன வேளாண்மைக்கு முன்னோடியாகப் பண்டைத் தமிழர்களின் வேளாண்மைத் தொழில்களும் உற்பத்தி முறைகளும் இருந்தன என்பதைத் தக்க ஆதாரங்களோடு முன்வைத்திருக்கும் கட்டுரையாளருக்குப் பாராட்டுகள்.

    ======================================================================

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 39

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்

    39. இறை மாட்சி

    குறள் 381:

    படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்
    உடையான் அரசரு ளேறு

    வீரம் நெறஞ்ச படை, நாட்டு மேல உசிரா இருக்க சனங்க, கொறையாத செல்வம், நல்ல மந்திரி, அக்கம்பக்கத்து நாட்டோட சினேகம், பலமான அரண் இந்த ஆறு சிறப்பும் இருக்குதவன் தான் அரசர்கள் ல ஆண் சிங்கம் மாதிரி இருக்கவன்.

    குறள் 382:

    அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
    எஞ்சாமை வேந்தற் கியல்பு

    துணிச்சல், இல்லாதவங்களுக்கு கொடுக்கது, புத்திசாலித்தனம், ஊக்கம் இந்த நாலு கொணமும் ராசாக்கு இருக்கணும்.  . .

    குறள் 383:

    தூங்காமை கல்வி துணிவுடைமை அம்மூன்றும்
    நீங்கா நிலனாள் பவற்கு

    எதையும் பைய நேரங்கழிச்சு செய்யாம படிச்ச புத்திசாலியா துணிச்சக்காரனா இருக்கது நாட்ட ஆளுத  ராசாக்கு தேவையான கொணம்.

    குறள் 384:

    அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
    மான முடைய தரசு

    அறநெறி தவறாம குத்தம் கொற செய்யாம வீரத்தோடயும் மானத்தோடயும் ஆட்சி செய்யுதவனே சிறந்த ராசா.

    குறள் 385:

    இயற்றலும் ஈட்டலுங் காத்தலுங் காத்த
    வகுத்தலும் வல்ல தரசு

    பொருள சம்பாதிக்க வழிய உண்டாக்கி பொறவு வந்தத சேத்து வச்சி காப்பாத்தி அத செலவு செய்யதுக்கு நல்ல மொறைல திட்டம்போட்டு ஆட்சி நடத்துதவனே நல்ல ராசா.

    குறள் 386:

    காட்சி கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
    மீக்கூறும் மன்னன் நிலம்

    பாக்கதுக்கு எளிமையா மனசு நோவ கடுமையா வையாம பேசுத ராசாவத்தான் ஒலகம் புகழும்.

     குறள் 387:

    இன்சொலால் ஈத்தளிக்க வல்லாற்குத் தன்சொலால்
    தான்கண் டனைத்திவ் வுலகு

    தன்மையா பேசி தேவப்பட்டவங்களுக்கு பொருளக் கொடுத்து காக்குத ராசாவுக்கு நெனச்சதெல்லாம் குடுக்கும் இந்த ஒலகம்.

    குறள் 388:

    முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்
    கிறையென்று வைக்கப் படும்

    நியாயதர்மத்தோட ஆட்சி நடத்தி மக்கள காப்பாத்துத ராசா தான் மக்கள் தலைவன் னு மதிக்கப்படுவான்.

    குறள் 389:

    செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
    கவிகைக்கீழ்த் தங்கு முலகு

    கொறைபேசுதவங்க சொல்லுதத கேட்டு காது வலிச்சாலும் பொறுத்துப் போகுத ராசாவுக்கு தான் மக்கள் கிட்ட மதிப்பு இருக்கும்.

    குறள் 390:

    கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
    உடையானாம் வேந்தர்க் கொளி

    தேவப்படுதவங்களுக்கு கொடுத்து , கருண காட்டி, நியாயம் தவறாம ஆட்சி செஞ்சு மக்களக் காப்பாத்துத ராசா தான் ராசாக்கெல்லாம் விளக்கு கணக்கா இருக்கவன்.

    (அடுத்தாப்லையும் வரும்…..

    Share
  • அந்தந்த நேர ஞாயம்

    -சேஷாத்ரி பாஸ்கர்

    குளத்து பக்கமுள்ள
    அரச மரத்தின் கீழ் தான்
    என் காதலை சொன்னேன்!

    என்னையும் எறும்பையும்
    ஒரு சேர பார்த்து நகர்ந்தவள் தான் .
    முப்பது வருஷத்தில்
    மரம் மாறவில்லை.

    குளம் தான் வற்றி போயிருக்கிறது.
    பின்னாளில் நீர் வரலாம்
    இந்த பெருவானம் சாட்சி என்பது சமாதானம்!
    நானோ, அவளோ
    எதுவும் பொருட்டல்ல
    இருவரும் கரைந்து போவோம் ..

    மரம் வீழ்ந்து வீடு வரும்
    குளம் தேய்ந்து கோபுரம் வரும் .
    எல்லாம் காலத்திற்குள் அடக்கம்–
    நீரற்ற குளத்தில்
    பந்தாடி கொண்டிருக்கும் அவனுக்கு
    இது புரியாது .
    புரியவும் கூடாது….

    Share
  • குறளின் கதிர்களாய்…(256)

    -செண்பக ஜெகதீசன்…

    தொடங்கற்க வெவ்வினையு மெள்ளற்க முற்று
    மிடங்கண்ட பின்னல் லது.

    -திருக்குறள் -491(இடனறிதல்)

    புதுக் கவிதையில்…

    தக்க இடத்தினைத்
    தேர்ந்தெடுக்குமுன்
    பகைவரைத்
    தாக்கும் செயலைத்
    தொடங்கிடாதே..

    அவரை
    எளியரென்றெண்ணி
    எள்ளி நகையாடாதே…!

    குறும்பாவில்…

    பகைவரைத் தாக்க, தக்கயிடம்
    தேர்ந்தெடுக்குமுன் தொடங்காதே தாக்குதலை,
    எளியரென்றவரை ஏளனம்செய்யாதே…!

    மரபுக் கவிதையில்…

    பகைவர் தம்மைத் தாக்கிடத்தான்
    பொருத்த மான இடமதையே
    வகையாய்த் தெரிந்தே ஆய்ந்தறிந்து
    வழிவகை நன்றாய்த் தெரிந்தபின்னே
    பகையினை முடிக்கும் செயலினிலே
    புகுதல் வேண்டும் தெளிவுடனே,
    நகைத்திடல் வேண்டாம் எதிரியையே
    நிலையில் குறைவாம் நினைவினிலே…!

    லிமரைக்கூ..

    தேர்ந்தெடு ஆய்ந்தறிந்தே இடத்தை
    தொடங்கிடு அதன்பின் பகைவரைத்தாக்கும் செயலை,
    செய்யாதேயவரை எள்ளிடும் மடத்தை…!

    கிராமிய பாணியில்…

    எடமறியணும் எடமறியணும்
    தகுந்த எடமறியணும்,
    செயல்படணும் செயல்படணும்
    எடமறிஞ்சி செயல்படணும்..

    எதிரியத் தாக்கப் போகுமுன்னே
    அதுக்கு
    ஏத்த எடமாப் பாத்துக்கணும்,
    எடத்தப் பாத்துத் தெரிஞ்சபின்னே
    தாக்கிற வேலயத் தொடங்கவேணும்..

    எதிரிய எப்பவுமே
    எளக்காரமா நெனைக்கவேண்டாம்..

    எப்பவும்
    எடமறியணும் எடமறியணும்
    தகுந்த எடமறியணும்,
    செயல்படணும் செயல்படணும்
    எடமறிஞ்சி செயல்படணும்…!

     

    Share
  • குரல் கொடுப்போம் வாருங்கள்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா

    வெடி குண்டு வென்று
    வெறியினை ஊட்டி நிற்பார்
    பறி போகும் உயிர்பற்றி
    பார்த்து விட மறுக்கின்றார்
    நெறி முறைகள் பற்றியவர்
    நெஞ்ச மதில் கொள்ளாமல்
    பொறி புலனை எல்லாமே
    அழியும் வழி ஆக்குகிறார் !

    அறம் அவர்கள் சிந்தையிலே
    அமர்ந்து விட மறுக்கிறது
    அழி என்னும் தத்துவமே
    ஆணி வேராய் அமர்கிறது
    அரக்கர் எலாம் இருந்திருந்தார்
    என்று கதை படித்திருப்போம்
    அரக்கரை நாம் காண்பதற்கு
    அடையாளம் இவர் அன்றோ !

    மதம் என்னும் பெயராலே
    மனிதம் தன்னை அழிக்கின்றார்
    புனிதம் உடை பாதையினை
    புறந் தள்ளி நிற்கின்றார்
    சாந்தி சமாதானம் அதை
    சற்றும் அவர் பாராமல்
    சங்காரம் எனும் வழியை
    தமது வழி ஆக்கிவிட்டார் !

    வீரதீரம் என நினைக்கும்
    வெறிச் செயலை ஒழிப்பதற்கு
    நாடு எல்லாம் ஒன்றிணைந்து
    நல்ல வழி காணவேண்டும்
    கேடு கெட்ட குணமதனை
    நாடு விட்டு ஒழிப்பதற்கு
    கூடி நின்று யாவருமே
    குரல் கொடுப்போம் வாருங்கள் !

    Share
  • அன்பின் பெயரால், அடுத்தவர் சுதந்திரத்தைப் பறிக்கலாமோ!

    -நிர்மலா ராகவன்

    நலம்… நலமறிய ஆவல் (157)

    திருமணமான பின், ` நாம் இருவர் அல்லர், ஒருவரே!’ என்று பிரதிக்ஞை செய்துகொள்வதைக் காதல் நவீனங்களிலோ, திரைப்படங்களிலோ ரசிக்க முடியும். அவர்கள் நிலையில் தம்மை வைத்துக்கொண்டு சொக்குவர் இள வயதினர்.

    நிழலை நிஜமென எண்ணி, வாழ்க்கையிலும் இப்படி நடக்க ஒருவர் மற்றவரைத் தூண்டுவது கொடுமை. ஒருவரது சுதந்திரத்தைப் பறித்து, அவரைத் தன் கைப்பாவையாக ஆட்டிவைக்கும் வழி இது.

    கதை

    மயக்கும் படலம்

    தன்னால் ஏன் முன்போல் சுயமாகச் சிந்திக்க முடியவில்லை என்று பிரமிளா குழம்பினாள். கணவனை நினைத்தால் கோபமும் பயமும் ஒருங்கே எழுந்தன. இத்தனைக்கும், காதலித்து மணந்த கணவன்!

    அவன் அதிகாரத்தால் கட்டுப்படுத்தவில்லை. ஆரம்பத்தில், அவள் அழகில் மயங்கியதாக அடிக்கடி சொல்வான் கேசவன். புகழுக்கு மயங்காத பெண்களும் உண்டோ! பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொடுத்து, அவள் பார்க்க ஆசைப்பட்ட இடங்களுக்கெல்லாம் அழைத்துப்போய், இப்படி என்னென்னவோ செய்து அவளைத் தன் வசப்படுத்தி இருந்தான்.

    விளையாட்டில்லை

    சில காலம் கழித்து, அவளை மட்டம்தட்டிப் பேச ஆரம்பித்தான் கேசவன். அவள் வருந்தினாலோ, கோபித்தாலோ, `உனக்கு விளையாட்டாகப் பேசுவதுகூடப் புரியாதா?’ என்று சமாதானப்படுத்திவிடுவான். திரும்பவும், பரிசுப் பொருட்கள், உல்லாசப் பயணங்கள் தொடரும்.

    ‘இவ்வளவு அன்பாக இருப்பவரைத் தான்தான் தவறாக எண்ணிவிட்டோமோ!’ என்று ஒரு பெண்ணை யோசிக்கவைக்கும் உத்தி இது. தன்னையுமறியாமல், மேலும் கட்டுப்படுத்தப்படுவதற்கு உட்படுகிறாள். உணர்ச்சிபூர்வமான வதை இது.

    குற்றச்சாட்டுகள்

    அவன் செய்யும் ஒவ்வொரு சிறிய காரியத்தையோ, உதவியையோ பாராட்ட வேண்டும் என்று அவளுக்குத் தோன்றவில்லை. ஏனெனில் அவள் மாறுபட்டிருந்தாள். அவனைப்போல் யோசிக்கத் தெரியவில்லை. அவனோ, அவளும் தன்னை அப்படியெல்லாம் புகழவேண்டும் என்று எதிர்பார்த்தான். ஏமாற்றம் எரிச்சலாகியது.

    திருமணத்திற்கு முன், `உனக்குச் சூடிதார், குர்த்தாதான் அழகாக இருக்கிறது!’ என்று கேசவன் சிலாகித்தபோது, பெருமையாக உணர்ந்திருந்தாள் பிரமிளா. அவனுக்குப் பிடித்த வெளிர்நீல வண்ணத்திலேயே அவளுடைய பல ஆடைகள் அமைந்திருக்கும். தனக்கு என்ன உவப்பாக இருக்கும் என்பதையே மறந்து, காதலனின் பாராட்டுக்காகவே எதையும் செய்த காலம் அது.

    திருமணமாகி சில மாதங்கள் கழித்து, அவளுக்குப் பிடித்த சிவப்பு, ஆரஞ்சு வண்ணங்களில் புடவை வாங்கிக்கொண்டபோது, கேசவன் முகத்தைச் சுளித்தான்.

    “என்னோட வரும்போது, இந்தக் கண்ராவியையெல்லாம் கட்டிட்டு வராதே!’ என்று உத்தரவிட்டான். “ஒன் கருப்புக் கலருக்கு இது நல்லாவா இருக்கு?”

    பிரமிளாவின் நீண்ட பின்னலை, `இதாலேதான் என்னைக் கட்டிப் போட்டுட்டே!’என்று புகழ்ந்தது ஒரு காலம். நாகரிகத் தோற்றம் என்று கருதி, அவள் தலைமயிரைக் குட்டையாக வெட்டிக்கொண்ட அன்று பூகம்பமே வெடித்தது.

    “எனக்கு உன் நீண்ட முடி எவ்வளவு பிடிக்கும் என்று தெரிந்தும் இப்படி ஒரு காரியம் செய்துவிட்டு வந்திருக்கிறாயே! என்னை வருத்தப்பட வைக்க வேண்டுமென்றேதான் ஒவ்வொரு காரியமும் செய்கிறாய்!” என்று பொரிந்தவன், “யாரை மயக்க?” என்று தாக்கினான்.

    `உனக்கு நான் தொலைந்தால்தான் நிம்மதி!’

    இந்த பாணத்தில் எந்தப் பெண்ணும் மசிந்துவிடுவாள். குற்ற உணர்ச்சி எழ, அந்த உறவில் தங்கிவிடுவாள்.

    எதனால் கட்டுப்பாடு?

    இப்படி நடப்பவர், தீயவர் என்பதில்லை. முதலில் கூறியதுபோல், ஆண்-பெண் உறவைப் பற்றி புத்தகங்களிலிருந்தோ, திரைப்படங்களிலிருந்தோ அறிந்து, அதுதான் இனிமையாக வாழும் முறை என்று நம்பியவர். அவரது குடும்ப வழக்கமாகவும் இருக்கலாம்.

    தனிமைப்படுத்து

    ஒரு முறை, பிரமிளா வேலை பார்த்த இடத்தில் உள்ளவர்கள் ஒன்றாகப் படம் பார்க்கப் போனபோது, “நீ எதுக்கும்மா அவர்களுடன் போக வேண்டும்? நான் அழைத்துப் போகிறேன்!” என்று அன்பு சொட்டச் சொட்ட கேசவன் கூறியபோது, அவளுக்கு மறுக்கத் தோன்றவில்லை.

    அபூர்வமாக, யாராவது உறவினர் அவர்கள் வீட்டுக்கு வந்தால், என்றோ, ஏதோ செய்ததற்காக அவளுக்குத் திட்டு விழும். `இவர்களை எனக்குப் பிடிக்கவில்லை. இனி நம் வீட்டுக்கு வரக்கூடாது!’ என்று மிரட்டுவான்.

    `நான் சிநேகிதிகளுடன் தொலைபேசியில் பேசும்போது, தவறாது, கழிப்பறையில் அளவுக்கு மீறிய ஓசை எழுப்புவார் என் கணவர்!’ என்று ஒரு பெண்மணி எழுதியிருந்ததைப் படித்திருக்கிறேன். ஆதரவுக் கரம் அளிக்க யாருமின்றி, கணவன் என்ன செய்தாலும் பொறுத்துப் போகும் நிலையை உண்டாக்கச் செய்த தந்திரம் அது.

    இதேபோல், பிரமிளாவின் உறவினர் மற்றும் நண்பர் குழாம் சுருங்கியது. பக்கபலமாக யாருமின்றி, தனித்துப் போனாள்.

    எது செய்ய ஆரம்பிக்கும்போதும், `அவர் என்ன சொல்வாரோ!’ என்ற தடுமாற்றமும் பயமும் எழுந்தன பிரமிளாவுக்கு. தன்னம்பிக்கை வீழ்ச்சி கண்டது.

    பிறரிடம் தன் அவலத்தைச் சொல்லி அனுதாபம் பெற அவளுக்கு விருப்பமில்லை. யாரையும் நம்பவும் முடியவில்லை. நம்பியவனே இப்படி மாறிவிட்டிருந்தபோது, யாரைத்தான் நம்புவது!

    அத்துடன், `வீட்டில் எது நடந்தாலும், நான்கு சுவருக்குள் இருக்கவேண்டும்!’ என்று சிறு வயதிலிருந்தே போதனை வேறு கிடைத்திருந்ததே!

    எங்கேயும் எப்போதும்

    தம்பதியர்களிடையே மட்டும்தான் இப்படிப்பட்ட கட்டுப்படுத்துதல் இருக்கும் என்றில்லை. எந்த வயதிலும், ஏழையோ, பணக்காரரோ, யாரோ ஒருவர் இன்னொருவரைக் கட்டுப்படுத்தி, அதன்மூலம், `நான் பலசாலிதான்!’ என்று தன்னையே நம்பும் முயற்சியில் ஈடுபடுகிறார்.

    உடன்பிறந்தவர்களோ, நண்பர்களோகூட இப்படி நடப்பது சகஜம். ஒரு வித்தியாசம்: சிரித்த முகத்துடன் குறைகளைச் சுட்டிக் காட்டுவார்கள்.

    ஏன் சிரித்த முகம்?

    `இவர் நம்மைக் கட்டுப்படுத்த முயலவில்லை, நம்மேல் மிகுந்த அக்கறையால் அப்படிச் செய்கிறார்!’ என்று எண்ணிக்கொள்ள வேண்டுமாம்!

    வாழ்க்கைப் பின்னணி, கலாசாரம் போன்ற பலவற்றால் நாம் பிறரிடமிருந்து மாறுபடுகிறோம். இது புரியாது, `எல்லாரும் என்னைப்போல், நான் சொல்கிறபடிதான் இருக்கவேண்டும்!’ என்று வாதம் புரிந்தால் எப்படி!

    உதவி அவருக்குத்தான் தேவைப்படுகிறது. இது புரிந்தால், மற்றவர் தன் சுதந்திரத்தை இழக்காமல் தன்னையே காத்துக்கொள்ள முடியும்.

    எப்படித் தற்காத்துக்கொள்வது?

    `நீ என்ன சொன்னாலும் நான் மாறப் போவதில்லை. எதற்கு உன் சக்தியை விரயமாக்குகிறாய்?’ என்ற நேரடி தாக்குதல் எனக்குப் பலனளித்திருக்கிறது.

    ஆனால், உணர்ச்சிபூர்வமான வதையாக ஆரம்பித்தது வன்முறையாக மாறினால், அந்த உறவிலிருந்து விலகுவதைத் தவிர வேறு வழியில்லை.

    கதை

    ஒரு விருந்தில் சந்தித்தேன் அந்த இளம் தம்பதிகளை. காதலர்களாக இருந்தபோது, காதலி சொல்வதையெல்லாம் கேட்டு நடந்தவன் லீ.

    காதலியோ அழகி. அவளை வேறு யாராவது கொத்திப் போய்விட்டால்?

    `சண்டை போடத்தான் காலம் பூராவும் இருக்கிறதே! இப்போதே என்ன அவசரம்?’ என்றுகூட அவன் நினைத்திருக்கலாம்.

    திருமணமான பின், ஏதாவது பானத்தைக் குடிக்கும்போது, அவன் உறிஞ்சுவதைப் பார்த்து அழகான மனைவி முகம் சுளித்தாள்.

    `நாமென்ன ஜப்பானிலா இருக்கிறோம்! அங்குதான் மிகுந்த ஓசையுடன் உறிஞ்சினால்தான் பாராட்டு என்று நினைப்பார்கள்!’ என்று தோன்ற, `அசிங்கம்!’ என்று கணவனைக் கண்டித்தாள்.

    அடுத்தமுறை, உறிஞ்சும் ஓசை அதிகமாயிற்று.

    “நான் ஏதாவது `கூடாது’ என்று சொன்னால், லீ இன்னும் அதிகமாகச் செய்கிறார். அதனால், நான் அவரை எதுவும் சொல்வதில்லை,” என்று அவள் சொல்லக் கேட்டு, புன்னகைத்தேன். மௌனமான எதிர்ப்பு பலனளிக்கும் என்று புரிந்தவன்!

    உறவு என்பது மகிழ்ச்சிக்காக

    அச்சம் விளைவிப்பதாகவோ, அளவுக்கு அதிகமான அன்பால் திக்குமுக்காட வைப்பதாகவோ உறவு இருந்தால் மாறுதிசை மின்னோட்டத்தில் (alternating current) கையை வைத்ததுபோல்தான். மகிழ்ச்சி கிடைக்குமா?

    அட, மகிழ்ச்சியை விடுங்கள்! நிம்மதி தொலைந்து போய்விடுமே!

    Pic courtesy: http://getdrawings.com

    Share
  • பண்டு சமூகத்தில் நிலவிய விந்தை வழக்கம்

    -சேஷாத்ரி ஸ்ரீதரன்

    பண்டைக் கால மக்களிடம், குறிப்பாக சில சாதி மக்கள், சில பகுதி மக்களிடம் விந்தையான  வழக்கங்கள் கடைபிடித்து ஒழுகப்பட்டன என்பது கல்வெட்டுகளால் அறியப்படுகின்றது. இவற்றை படித்துஅறியும் போது அவர்களின் நம்பிக்கை அதனால் அவர்பெற்ற பயன் ஆகியவை பற்றிய கேள்வி நம் நெஞ்சத்தில் கட்டாயம் எழும்.

    கோவை மாவட்டம் அவினாசி வட்டம் அன்னூர் எனும் ஊரில் கோவில் கொண்ட மன்னீசர் கருவறைத் தெற்கு சுவரில் காணப்படும் 5 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்திஸ்ரீ கோக்கலிமூர்க்கந் ஸ்ரீ விக்கிரம சோழ தேவற்குத் திருவெழுத்திட்டுச் செல்லாநின்ற யாண்டு இருப்தேத்தேழாவது புரட்டாதி திங்கள் முதல்
    2. கவையன்புத்தூரிலிருந்து வாழும் புள்ளங் _ _ _ _ மன்னியூர் பரதேவரர்க்கு எனக்கு காற்காலத்தில் வண்டு கொட்டி இல்லை வைச்சு என்னடியார் பொ
    3. துவங்கோதையும் மக்களைஉம் கோசநமேயையும் மக்களையும் மன்னியூராழ்வார்க்கு நீரொட்டிக் குடுத்தேன் என்னடியாரை _ _ _ _
    4. என் ஸ்வரூவமாக ஒருபடிமமும் _ _ _ _ பெண்படிமமும் ஸந்தி விளக்கொன்றும் அவ்விளக்குக்குப் பொன் முக்கல முக்கழஞ்சுங் கொண்டு சந்த்ராத்திதவலு மெரிப்பிக்கக் கடவார்
    5. மன்னியூர் ஸபைஓம்.

    திருவெழுத்திட்டு – முடிசூடி; இல்லை வைச்சு – பச்சிலை வைத்து; என்னடியார் – வேலையாள்; படிமம்  – பாவை, பதுமை, பொம்மை; சபையோம் – கருவறை பிராமணர்.

    விளக்கம்: கொங்கு சோழன் கலிமூர்க்கன் விக்கிரம சோழனின் 27 ஆம்ஆண்டு ஆட்சியில் (கி.பி. 1032) புரட்டாசி மாதம் முதல் அன்று கவையன் புத்தூரைச் சேர்ந்த புள்ளன் என்பான் மன்னியூர் ஈசனுக்கு,  “எனக்கு  மழைக் காலத்தில் வண்டு கொட்டி பச்சிலை வைத்து குணமானதால் என் வேலையாள்கள் பொதுவன் கோதை அவன் பிள்ளைகள், கோசன் மேய் அவன் பிள்ளைகள் ஆகியோரை மன்னியூர் ஈசனுக்கு நீரட்டித் தானமாகக் கொடுத்தேன். என்னை ஒத்த வடிவில் ஒரு பாவையும் என் (மனைவி) வடிவில் ஒரு பெண் பாவையும் செய்து கொடுத்தேன், அத்தோடு ஒரு சந்தி விளக்கும் அவ்விளக்கு எரிக்க பொன், முக்கல முக்கழசு (நெல்) கொடுத்தேன்”. இதை சந்திரசூரியர் வரை எரிக்கக் கடவதாக ஒப்புக் கொண்டோம்  மன்னியூர் கருவறை பிராமணர்.

    கோவையில் இன்றும் பதுமைகளைச்  செய்து வழங்கும் வழக்கம் நிலவுவதாகச் சொல்லப்படுகிறது. வேலையாள்களை அடிமைகளாகக் கோவில்களுக்கு அன்றைய ஆண்டைகள் கொடுத்துள்ளனர் என்பது தெரிகின்றது. மூன்று இடங்களில் இக்கல்வெட்டு சிதைந்துள்ளதால் செய்தியைத் தெளிவாக அறிந்துகொள்ள முடியவில்லை.

    பார்வை நூல்: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள், தொகுதி  I, பக். 75, த.நா.அ. தொல்லியல் துறை, சென்னை – 8.

    பாகூர் திருமூலநாதர் கோவில் கருவறை தென்சுவர் 16 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ கன்னர [தேவர்க்கு யாண்]
    2. டு 202 (22) வேசாலிப்பாடி வடகரை வாகூர் நா
    3. ட்டு மன்றாடிகளே வாகூ[ர்] ஸ்ரீ மூலட்டா[ன]த்து
    4. ப் பெருமாளுக்கு நாங்கள் வைய்த்த தந்ம
    5. ங் கட்டிலேறப் போம்போது ஒரு ஆடு கு
    6. டுத்துக் கட்டிலேறுவோமாகவும் [புற]நா
    7. ட்டி நின்று வந்து இஞ்ஞாட்டிற் கட்டி
    8. லேறு மன்றாடி வசமொரு ஆடு குடுப்ப
    9. தாகவும் கூடாது திறம்பி[னோ]மைக் க
    10. ணப் பெருமக்களுந் தேவரடியாரு மிர
    11. ண்டாடு பிடித்துக்கொள்ளப் பெறு
    12. வதாகவும் ஒட்டிக் குடுத்தோ மிஞ்ஞா[ட்]
    13. [டு] மன்றாடிக(ள்)ளோம் இத் தம்மம் ஸ
    14. ந்த்ராதித்தவந் நிற்பதாக நிறுத்திக் குடு
    15. ப் போமானோ [மி]ஞ்ஞா[டு] மதகு செய்கின்
    16. ற மதகரோம் ஸ்ரீ0 0 0

    மூலட்டானத்து – மூலத்தானத்து; கட்டிலேறு – முதலிரவு கூடுகை நிகழ்த்து; மன்றாடி – இடையர், ஆயர்; திறம்பினோமைக்கு – தவறுதல், மாறுதல், பிறழ்தல்; கணப்பெருமக்கள் – சாதிப் பெருமக்கள்; ஒட்டி –  இரட்டித்து; நிற்பதாக நிறுத்தி – இருப்பதாக நடத்தி; இஞ்ஞாட்டு – இந்நாட்டு, இவ்வூர்; மதகு – நீர்பாயும் மடை, குமிழித் தூம்பு, தேவையான நீரைச் சீராக வெளியேற்றுவதற்கு ஏற்ற வகையில் திறந்து மூடக்கூடிய அமைப்பு.

    விளக்கம்: இராட்டிரகூட வேந்தன் மூன்றாம் கிருஷ்ணனான கன்னரதேவனின் 22 ஆம் ஆண்டு ஆட்சியில் (கி.பி. 961) வேசாலிப்பாடி வடகரையில் அமைந்த வாகூர் நாட்டின் இடையர்களோம், “வாகூர் மூலத்தானத்துப் பெருமானுக்கு நாங்கள் வைத்த தர்மமாவது யாதெனில்  கட்டிலேறுதலான முதலிரவுக் கூடுகை நிகழ்த்தப் போகும் போது ஒரு ஆடு கொடுத்துக் கட்டிலேறுவோமாகவும், பிற ஊரில் இருந்து வந்து இங்கு முதலிரவுக் கூடுகை நடத்தும் மன்றாடியிடம் ஒரு ஆடு கொடுப்பதாக ஒப்புக் கொண்டோம். இப்படி ஒப்புக் கொண்டபடி நடக்கத் தவறினால் இடையர் சாதி பெருமக்களும் தேவரடியாரும் இரண்டு ஆடு பிடித்துக் கொள்வார்களாக என்று ஆடுகளை இரட்டித்துக் கொடுத்தோம் இந்தஊர் மன்றாடிகளோம். இத்தர்மம் சந்திரசூரியர்  வரை இருப்பதாக நடத்திக் கொடுப்போமானோம் இவ்வூர் மதகு செய்கின்ற மதகரோம்“

    பண்டு சிறுபிள்ளையின் போதே திருமணம் நடத்திவிடுவர். மணமகள் அதன்பின் தன் தாய்வீடு சென்றுவிடுவாள். அவள் பருவம் எய்திய பின்பு நாள் பார்த்து அவளை கணவனிடத்தில் கொண்டு சேர்க்கும் போது அவ்விணையர் குடும்பம் நன்கு பெருகி வளர வேண்டும் என்ற நோக்கில் அதற்கு அடையாளமாக அவர்கள் இல்லற வாழ்வில் முதன்முதலாக ஈடுபடும் போது ஒரு ஆட்டை கோவிலுக்கு தானமாகக் கொடுப்பதை இடையர் வழக்கமாகக் கொண்டிருந்துள்ளனர். அவ்வூர் பெண்ணை மணந்து அவ்வூரிலேயே வாழவரும் மணமகனுக்கும் ஒரு ஆட்டை வளர்ச்சியின் அடையாளமாக கொடுத்துள்ளனர் போலும். இதைக் கண்காணிக்க மதகு பணிசெய்வோரை அமர்த்தி உள்ளனர். அவர்கள் இதற்கு ஏன் ஏற்படுத்தப்பட்டனர் என்று புரிந்துகொள்ள முடியவில்லை. ஒருகால் இருசாராரும் ஊருக்கு வெளியே அண்டிய பகுதியில் வீடு அமைத்து வாழ்ந்ததால் ஒருவரை ஒருவர் அறிவர் என்று  ஒரு சான்றுக்காக மதகு செய்வோர் இப்படி ஆக்கப்பட்டனரோ?

    பார்வை நூல்: புதுச்சேரி மாநிலக் கல்வெட்டுகள், பாகூர்  S Kuppusamy & G Vijaya venugopal,  Institute Francais De Pondichéry :  2006.

    Share
  • வீழும் நடப்பது வாழும்!

    -கவிஞர் இடக்கரத்தான்

    நிற்பது வீழும் நடப்பது வாழும்
    நினைவில் வையுங்கள் – உயர்
    கற்பனை தன்னை மெய்யாய் ஆக்கிடும்
    காரியம் செய்யுங்கள்!

    எண்ணம் தன்னை உயர்வாய் வைப்பின்
    என்றும் ஏற்றம்தான் – பிறரை
    புண்ணெனச் செய்யும் புன்மைச் செயல்கள்
    புயலின் சீற்றம்தான்!

    வெள்ளி நிலாபோல் குளிரைப் பொழியும்
    வார்த்தை கொட்டுங்கள் – நலம்
    அள்ளியும் தருமது அழியாப் புகழை
    அழகாய் எட்டுங்கள்!

    கீழே விழினும் அருவியைப் போன்று
    குளிர்மழை பொழியுங்கள் – பிறர்
    வாழும் வகையில் விரிந்த உள்ளம்
    வைத்தே வாழுங்கள்!

    இல்லை என்னும் வார்த்தை எம்மிடம்
    ஏதெனப் பேசுங்கள் – மலரும்
    முல்லை போன்று வளைந்து இருப்பினும்
    மணமும் வீசுங்கள்!

    உலகும் ஊரும் உயர்வாய்ப் போற்றிட
    உயர்ந்து நில்லுங்கள் – மிக
    இலகும் உள்ளம் கொண்டு உலகினை
    எளிதாய் வெல்லுங்கள்!

    தீதும் நன்றும் பிறரால் வராது
    பேருண்மை – பொய்மை
    சு+தும் வாதும் முற்றும் தள்ளியும்
    சேர்ப்பீர் உயர்நன்மை!

    அடுத்தவர் வென்று அகமகிழ்ந் தாடல்
    அழகும் தானில்லை – வெற்றி
    தொடுத்தேன் என்னும் தலைக்கனம் பள்ளம்
    தள்ளியும் தரும்தொல்லை!

    பணிவில் பெருமை கொள்ளல் என்பது
    பண்புடைச் செயலாகும் – மனத்
    துணிவே பெரிதென அகந்தையில் மிதத்தல்
    துயரப் புயலாகும்!

    பணியும் நாணல் பாயும் புயலைப்
    பணியச் செய்துவிடும் – உயர்
    பணிவைக் காட்டா பனையோ புயலைப்
    பகைத்தே பொய்த்துவிடும்!

    அறமும் அறிவும் இருகண் என்பதை
    அகமும் வைத்திடனும் – நம்
    புறமும் அகமும் ஒன்றெனப் போற்றின்
    பேதம் பொய்த்துவிடும்

    விதியால் தாழ்வுறும் நிலையில் பிறரிடம்
    வீழுதல் மிகச்சிறுமை – கூர்
    மதியால் விதியை வென்று எழுதல்
    மானுடத்தின் அருமை!

    புத்தன் ஏசு காந்தி என்றுனைப்
    புவிகை தட்டட்டும் – இவன்
    சுத்த மனத்தினன் எனஊர் போற்றிட
    சுகமும் கொட்டட்டும்!

    Share
  • (Peer reviewed) அமைப்பியல் நோக்கில் முல்லைப்பாட்டும் நெடுநல்வாடையும்

    (Peer reviewed) அமைப்பியல் நோக்கில் முல்லைப்பாட்டும் நெடுநல்வாடையும்

    முனைவர் ஆ.சந்திரன்
    உதவிப் பேராசிரியர்
    தமிழ்த் துறை
    தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி)
    திருப்பத்தூர், வேலூர்

    அமைப்பியல் நோக்கில் முல்லைப்பாட்டும் நெடுநல்வாடையும்

    “தற்காலத் திறனாய்வில் மட்டுமல்ல, பழங்காலத்திலேயே கவிதையானது பல உறுப்புகள் இணைந்த அமைப்பு என்ற சிந்தனை நிலவியிருந்தது. எனவே அரிஸ்டாட்டிலின் கவிதையியலிலும் கவிதையைப் பல தளங்களாலான அமைப்பாக நோக்கும் பாங்கு காணப்படுகிறது” என்று கூறும் இலா.குளோறியா சுந்தரமதி, “முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் செய்யுளின் உறுப்புகள் என்று 34-இனை (26-8) கூறும் செய்யுளியலின் முதல் நூற்பாவினைச் சான்று காட்டி, பழங்காலத்திலிருந்தே இத்தகைய ஓர் ஆய்வுச் சிந்தனை இருந்துள்ளது”1 எனக் குறிப்பிட்டுள்ளார். புகழ் பெற்ற இலக்கியத் திறனாய்வு மேதையான ரெனிவெல்லக் என்பவரும் “ஒரு கலைப் படைப்பு பல அளவைகளாலான ஓர் எளிய தொகுதியன்று. அது பல அடுக்குகளைத் தன்னுட்கொண்ட ஒரு தொகுதியாகும்”2 என்று குறிப்பிடுகிறார். மேற்கண்ட விளக்கங்கள், கவிதை என்பது பல வகையான உறுப்புகள் அல்லது உட்கூறுகளால் கட்டப்பெற்ற ஒன்று என்பதை உறுதி செய்கின்றன.

    பிரெஞ்சு அமைப்பியல் வல்லுநரான தோடரவ், கதை ஆய்வில் பகுப்பாய்வினை மேற்கொண்டு கதையின் இலக்கணத்தை மொழி இலக்கணத்தைப் போன்று உருவாக்கியுள்ளார். அவா் “கதைகளுக்கு ஓர் அடிப்படையான இலக்கணம் ஆழ்ந்த நிலையில் உண்டு. அதிலிருந்து தனிக் கதைகள் உருவாகின்றன”3 என்ற தன்னுடைய கண்டுபிடிப்பை முன்வைத்துள்ளார். விளாடிமா் பிராப் எனும் உருசிய நாட்டு அறிஞா், வனதேவதைக் கதைகளைப் பகுப்பாய்வு செய்தார். அதன் விளைவாக அக்கதைகள் அனைத்தும் முப்பத்தொரு ‘செயற்கூறுகளினுள் அடங்குகின்றன என்பதைக் கண்டறிந்தார். இவரது பகுப்பாய்வு அமைப்பியல் ஆய்வில் ஒரு மைல் கல்லாகவே கருதப்படுகிறது.”4 இவ்வாறு மேற்கில் உருவான அமைப்பியல் ஆய்வு முறையில் ஈடுபட்டவா்களில் உல்ப்கான் கிளமன், தோடராவ், விளாடிமா் பிராப் முதலானவா்கள் குறிப்பிடத்தக்கவராவா்.

    கதைகளையும் கவிதைகளையும் அமைப்பியல் நோக்கில் ஆராயும் இத்தகைய புதிய ஆய்வுப் போக்கானது 1980-களில் இருந்து தமிழில் நிகழ்ந்து வருகின்றது. இத்தகைய ஆய்வில் ஈடுபட்டவர்களில் தமிழவன்5, இலா.குளோறியா சுந்தரமதி6, அ.ஆலிஸ்7, த.விஷ்ணுகுமரன்8 போன்றோர் குறிப்பிடத்தக்கவராவா். இத்தகைய ஆய்வுகளின் தொடர்ச்சியாகப் பத்துப் பாட்டில் இடம்பெற்றுள்ள முல்லைப் பாட்டு மற்றும் நெடுநல்வாடையின் அமைப்பு முறை எவ்வாறு உள்ளது என்பதை இக்கட்டுரை ஆராய்கிறது.

    முல்லைத் திணையின் பின்புலத்தில் அமைந்துள்ள இந்த இரு பாடல்களையும் பொருள்தரும் சிறு சிறு கூறுகளாகப் பகுக்க, அவற்றில் மொத்தம் பத்துப் பொருட்கூறுகள் இடம்பெற்றுள்ளதை அறிய முடிகிறது. அவை  பின்வருமாறு அமைந்துள்ளன.

    வ.எண் பொருட்கூறுகள் முல்லைப்பாட்டு நெடுநல்வாடை
    1 கார்கால வருணனை 1-6 1-2
    2 கோவலா்களின் செயல்பாடுகள் 12-15 2-8
    3 மாலைக்கால வழிபாடு 6-11 36-44
    4 கார்கால மழையினால் நகரில் ஏற்பட்ட மாற்றங்கள் (நெடுநல்வாடையில் மட்டும்) 45 -71
    5 பாசறை அமைப்பு வருணனை – அரண்மனை அமைப்பு வருணனை 24-36

     

    72-100
    6 படைவீட்டின் அமைப்பு வருணனை – அந்தப்புரத்தின் அமைப்பு வருணனை 37-58 101-114

     

    7 பள்ளியறை அமைப்பு வருணனை – கட்டில் அமைப்பு வருணனை 59-66 115-135
    8 தலைவியின் துயரம் 22-23,

    81-88

    136-147,157-167
    9 தலைவியைத் தேற்றுதல் 16-21 148-155
    10 வேந்தனின் செயல்பாடுகள் (மனநிலை)

     

    67-80,

    89-103

    168-188

     

    இவற்றில் “கார்கால மழையினால் நகரில் ஏற்பட்ட மாற்றங்கள்” என்ற கூறினைத் தவிர்த்த பிற ஒன்பது பொருட்கூறுகளும் இரு பாடல்களிலும் இடம்பெற்றுள்ளன. அத்துடன் பொருட்கூறுகள் 5, 6, 7 ஆகியன இரு பாடல்களிலும் அமைப்பு நிலையில் ஒத்துள்ளன. ஆனால், கூறும் இடங்கள் மட்டும் வேறுபட்டு அமைந்துள்ளன. அதாவது, முல்லைப் பாட்டில் பாசறை அமைப்பு பற்றிய வருணனை கூறப்பட்டுள்ளது. ஆனால் நெடுநல்வாடையில் பாசறை பற்றிய வருணனையின் இடத்தில் அரண்மனையின் அமைப்பு வருணனை அமைந்துள்ளது. இதைப் பாசறை அமைப்பிற்குப் பதிலியாகக் கொள்ளலாம். இவ்வாறே முல்லைப் பாட்டின் படைவீட்டின் அமைப்பு மற்றும் பள்ளியறை அமைப்புகளுக்கு, நெடுநல்வாடையின் அந்தப்புர அமைப்பு வருணனை மற்றும் கட்டில் அமைப்பு வருணனை ஆகியவற்றைப் பதிலிகளாகக் கொள்ளலாம். இக்கூறுகள் அமைந்துள்ள முறைகளைப் பற்றி இனிச் சுருக்கமாகக் காண்போம்.

    கார்கால வருணனை

    “காரும் மாலையும் முல்லை” (தொ.பொ.அகம்.952)

    என்று முல்லைத் திணைக்குரிய பெரும் பொழுதையும் சிறுபொழுதையும் தொல்காப்பியம் கூறுகிறது. காரும் மாலையும் முல்லைக்கு  உரியனவாகக் கூறக் காரணம் “பிரிந்து மீளும் தலைவன் திறமெல்லாம் பிரிந்திருந்த கிழத்தி கூறுவது முல்லைப் பொருளாம். அம்முல்லைக்குரிய காலம் கார்காலம்” என்று விளக்கமளித்துள்ளார் நச்சினார்க்கினியா். இத்தகைய கார்காலத்தில் பெய்த பெரும் மழையைப் பற்றி இரு பாடல்களிலும் கூறப்பட்டுள்ளது. அத்துடன், இந்தப் பொருட்கூறு, இரு பாடல்களிலும் முதல் ஆறு அடிகளுக்குள் அமைந்துள்ளது.

    “அகன்ற இடத்தையுடைய உலகத்தை வளைத்து, சக்கர வடிவமும், வலம்புரி சங்கின் வடிவமும் ஆகிய குறிகளைக் கொண்ட கைகளையுடையவனும் திருமகளைத் தன் வலப்பக்க மார்பில் தங்கச் செய்தவனும் மாவலி வார்த்த நீர் தன்கையில் நிறைந்து வழிந்த உடனே விண்ணிடத்தே நிமிர்ந்து நின்ற நெடியோனும் ஆகிய திருமால் போல், பேரொலி செய்கின்றதும் குளிர்ச்சி உடையதுமாகிய கடலின் நீரைப் பருகி, வலப்பக்கமாக வானத்தே எழுந்து, மலைகளைத் தன் இருப்பிடமாகக் கொண்டு, உலகத்தை வளைத்தெழுந்த விரைந்து செல்லுதலையுடைய முகில் பெருமழை பெய்த சிறுபொழுதாகிய இழிந்த மாலைக் காலம் (1-6)” என்று முல்லைப் பாட்டில் கார்கால வருணனை உவமையுடன் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது.

    நெடுநல்வாடையில், “உலகம் குளிரும்படி பருவந்தோறும் பொய்யாது மழை பொழிகின்ற முகில்கள் திரண்டு எழுந்து அவை படிந்து கிடந்த மலையை வலப்பக்கமாகச் சூழ்ந்து மழையைப் பொழிந்தன (நெடு.1-2)” என்று கார்காலத்தில் பெய்த புது மழையைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது.

    முல்லைப் பாட்டில் கார்கால மழை மேகத்தின் செயலினைத் திருமாலின் வாமன அவதார புராண நிகழ்ச்சியுடன் உவமித்து விரிவாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் நெடுநல்வாடையில் கார்காலம் பற்றிக் ‘கார் காலத்தில் பெய்த புதுப்பெயல்’ என்று இரண்டே அடிகளில் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது.

    கோவலா்களின் செயல்பாடுகள்

    கார்காலத்தில் பெய்த பெருமழையால் கோவலர்கள் அடைந்த துன்பங்கள் பற்றி இரு பாடல்களும் கூறுகின்றன. முல்லைப் பாட்டில் “இடையா் குலமகள் குளிரால் நடுங்கிய தன் தோள்களின் மேல் கைகளைக் கட்டிக்கொண்டு நின்றிருந்தாள் (முல்.13-15)” என்று ஒரே அடியில் கோவலரின் செயல் பற்றிக் கூறப்பட்டுள்ளது. ஆனால், நெடுநல்வாடையில் “கோவலர்கள் பெருமழையின் காரணமாக அந்த நிலத்தை விட்டு மேடான நிலத்தை நோக்கித் தம்மிடம் உள்ள பசு, எருமை, ஆடு ஆகியவற்றுடன் சென்றனா். அவா்களின் உடல் குளிரால் நடுங்கிக் கொண்டிருந்தது. அக்குளிரின் கொடுமையைத் தாங்கிக்கொள்ள இயலாமல் இடையா்கள் பலரும் ஒன்றுகூடி நெருங்கியிருந்ததுடன், நெருப்பினைக் கொண்டு குளிரைப் போக்கிக்கொள்ள முயன்றனா். ஆயினும் குளிர்மிகுதியால் அவா்களுடைய பற்கள் பறை கொட்டின (முல்.2-8)” என்று கோவலா்களின் துயரங்கள் பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அத்துடன், ‘கோவலா்கள் அடைந்த துயரங்கள்’ என்ற இந்தப் பொருட்கூறு, முல்லைப் பாட்டைவிட நெடுநல்வாடையில் சற்று விவரித்துக் கூறப்பட்டுள்ளது.

    மாலைக்கால வழிபாடு

    முல்லை நில மக்கள் சிறுபொழுதாகிய மாலைக் காலத்தில் தங்கள் வீடுகளில் விளக்கேற்றுதல், நெல்லுடன் பலவித மலா்களைத் தூவி இறைவனை வழிபடுதல் ஆகியவற்றினை மேற்கொள்வா். அத்தகைய பெருமழை பொழிந்த அம்மாலை வேளையில் மகளிர் வழிபாடு செய்த முறையைப் பற்றி இரு பாடல்களும் கூறுகின்றன.

    “பெருமழை பெய்த சிறு பொழுதாகிய இழிந்த மாலைக் காலத்தில், பகைவா்கள் எளிதில் புகுவதற்கு இயலாத அரிய காவல் அமைந்த பழமையான ஊரில், யாழ் போன்ற இசையுடன் வண்டினங்கள் ஆரவாரஞ்செய்ய, நாழி என்னும் அளவுக் கருவியில் கொண்ட நெல்லுடன் நல்ல மணம் கமழும் மலா்ந்த புதிய மலா்களைச் சிதறி, தெய்வத்தைக் கையால் தொழுது வயது முதிர்ந்த பெண்டிர் நற்சொல் கேட்பா் (முல்.6-11)” என்று முல்லைப் பாட்டில் மாலைக் காலத்தில் நடக்கும் வழிபாட்டினைப் பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

    இவ்வாறே நெடுநல்வாடையிலும் மாலைக் காலத்தில் நடந்த வழிபாட்டினைப் பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு. “வெண்மை நிறம் பொருந்திய சங்கு வளையல் அழுந்திய முன்கையையும் மூங்கில் போன்ற தோளினையும் ஐம்புலன்களுக்கும் இன்பம் தரும் இனிய சாயலையும் உடையவா் ஊர் மக்கள். அவா்கள் முத்துப் போன்ற பொலிவினையுடைய மகரக் குழைகளைக் காதில் அணிந்துள்ளனா். அதற்கு ஏற்றாற்போல் உயா்ந்து தோன்றுகின்ற அழகினையுடைய குளிர்ந்த கண்களைப் பெற்றுள்ளனா். இளம்பெண்டிர் பூந்தட்டிலே இட்டுவைத்த மலரும் நிலையிலிருக்கும் பிச்சியின் அரும்புகள் பசிய நிறமுள்ள தம் காம்புகள் வரை மென்மையாக மலா்ந்து மணம் பரப்ப, மாலைப் பொழுது வந்தது எனத் திரிகளை இரும்பு விளக்கில் இட்டனா். நெய்வார்த்துக் கொளுத்தினா். நெல்லையும் மலா்களையும் தூவித் தம் இல்லத் தெய்வத்தைக் கைகுவித்து வணங்கினா் (நெடு.36-44)”.

    இவ்வாறு இரு பாடல்களிலும் மாலை நேரத்தில் மகளிர் விளக்கேற்றுதல், நாழிகை அளவுடைய கருவியில் நெல்லினையும் மணம் கமழும் பலவித மலா்களையும் தூவி இறைவனை வணங்குதல் ஆகியன ஒரே தன்மையில் கூறப்பட்டுள்ளன.

    எனினும் முல்லைப் பாட்டில் மாலைக் கால வழிபாடும் அதனைத் தொடர்ந்து கோவலர்களின் செயல்பாடுகளும், நெடுநல்வாடையில் கோவலர்களின் செயல்பாடுகளும் அதனைத் தொடர்ந்து மாலைக்கால வழிபாடும் என்ற முறையில் இந்தப் பொருட்கூறுகள் (மாலைக்கால வழிபாடு, கோவலர்களின் செயல்பாடுகள்) முன்பின் / பின்முன் என இடம் மாறி அமைந்துள்ளன. மற்றபடி இந்த இரு பொருட்கூறுகளும் ஒரே தன்மையில் அமைந்துள்ளன.

    தலைவியின் துயரம்

    போரின்கண் பிரிந்து சென்ற தலைவன், தான் வருவதாகக் கூறிச் சென்ற கார்காலம் வந்தும், அவன் வாராமையால் அவனை நினைத்து நீங்காத துயா் அடைகிறாள் தலைவி. அவ்வாறு துயருற்று வருந்தும் தலைவியின் துன்பத்தைப் பற்றி இரு பாடல்களும் கூறுகின்றன.

    “தலைவி, தோழிகள் ஆறுதல் சொல்லியும் மனம் தளா்ந்து பூப்போன்ற கண்களில் முத்துப் போன்ற துளிகள் சிந்த (முல்.22-23) துன்பமுற்று தன் நெஞ்சை அவன்பால் போக்கினாள். தன் மனக் கட்டுப்பாட்டினை இழந்து தனிமையில் வருந்தினாள். பின்னா் இங்ஙனம் வருந்துதல் தன் தலைவன் சொல்லைத் தவறியதாகும் என்றும், பிரிந்தாலன்றி அரசியல் நிகழாது போலும் என்றும் தன்னைத் தேற்றிக்கொண்டாள். கழலும் வளையல்களைத் திருத்திக் கொண்டாள். மீண்டும் மயங்கினாள். பெருமூச்சு விட்டாள். அம்பு தைத்த மயில்போல் நடுங்கினாள். மீண்டும் அணிகலன்கள் நெகிழப் பெற்றாள். பாவை விளக்கு ஏந்தி நின்ற தகளியில் பெரியதாய் விளக்குச் சுடா் நின்று எரிந்துகொண்டிருந்தது. தனக்குரிய இடம் எல்லாம் பொன்னாலும் மணியாலும் சிறப்புப் பெற்று உயா்ந்து விளங்கிய ஏழடுக்கு மாளிகையில் கூடல் வாய்களினின்று சொரியும் பெரிய வாய்த்திரண்ட மழைநீர் அருவி போல் விழ, அதன் இனிய பல இசையாகிய ஓசையைக் கூர்ந்து செவி கொடுத்துக் கேட்டுத் தன் மனக்கருத்தை வேறொன்றில் செலுத்திக் கிடந்தாள் (முல்.81-88)” என்று தலைவியின் துயரக் காட்சியை விவரிக்கிறது முல்லைப் பாட்டு.

    இவ்வாறே நெடுநல்வாடையும் தலைவனைப் பிரிந்து வாடும் தலைவியின் துயரை விவரிக்கின்றது. அது பின்வருமாறு அமைந்துள்ளது.  “முத்தால் செய்த கச்சு சுமந்த பருத்த மார்பிடத்தே ஒப்பனை செய்யாமல் நெடிய மங்கல நாண் ஒன்று மட்டுமே தொங்கிக்கொண்டிருந்தது. தன் கணவனைப் பிரிந்தமையால் அழகிய நெற்றியை உடைய அரசியார் நெய்ப்புத் தன்மை வற்றிப் போனாள். மிக்க ஒளி செய்யும் காதணியாகிய மகரக் குழையை அகற்றிவிட்டதனால் அக்குழை அழுத்தியதால் ஏற்பட்ட வடு, காதினில் நன்றாகத் தெரிந்தது. பொன்னால் செய்த தொடி கிடந்து அழுத்திய தழும்பு இருந்த அவள் முன்கையில் இப்போது வலம்புரி சங்கினை அறுத்துச் செய்யப்பட்ட வளை ஒன்று மட்டுமே இருந்தது. வாளை மீனின் திறந்த வாயை ஒப்ப முடக்கத்தை உண்டாக்கிச் சிவந்த விரலிடத்தே செந்நிறமான பூத்தொழிலை உடைய மோதிரத்தை அணிந்திருந்தாள். அவள் தோற்றம் வடிவம் மட்டும் வரைந்த புனையா ஓவியம் போல் இருந்தது (நெடு.136-147)” அவள் ஞாயிறுடன் மிகவும் மாறுபட்ட திங்களின் ஓவியத்துடன் நிலைத்துள்ள ரோகிணியின் ஓவியத்தை உற்று நோக்கி, ‘யாமும் இவள் போன்று காதலரோடு பிரிவின்றி உடனுறைய பெற்றிலமே’ என்று நினைத்து கண்களிலே நீர் பெருக்கெடுக்க வருத்தமுற்று காணப்பட்டாள் (நெடு.162-165)”.

    முல்லைப்பாட்டில் தலைவனைப் பிரிந்து தலைவியுற்ற துயரம், அம்பு தைத்த மயிலின் நடுக்கத்தை ஒத்தது என்கிறது. ஆனால், நெடுநல்வாடையிலோ தலைவியின் துயரம் புனையாத ஓவியம் போன்றது என்கிறது. அத்துடன், தலைவனின் வருகைக்காகக் காத்திருந்த தலைவியின் நிலையை இரு பாடல்களும் சிறந்த உவமைகளுடன் வருணித்துள்ளன. முல்லைப்பாட்டில் தலைவனின் குதிரைச் சத்தத்தை எதிர்நோக்கியவளுக்கு அருவியின் ஒலியே மிஞ்சியது என்கிறது. ஆனால் நெடுநல்வாடையில் தலைவனின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவளுக்குச் சந்திரன், உரோகிணி இணைந்துள்ள ஓவியமே எதிர்ப்பட்டது என்று கூறுகிறது. அதாவது, இருவரின் துன்பத்தையும் இந்த நிகழ்வுகள் மேலும் அதிகப்படுத்தின என்பதையே இவை  காட்டுகின்றன.

    தலைவியைத் தேற்றுதல்

    தலைவனின் பிரிவால் வருந்தும் தலைவியைத் தேற்றுவதான பொருட்கூறு இரு பாடல்களிலும் அமைந்துள்ளது.

    தலைவன் தான் வருவதாகக் கூறிச் சென்ற கார்காலம் வந்தும் அவனுடைய வருகையைக் காணாமல் தலைவி மிகவும் வருத்தமடைகிறாள். தலைவியின் அந்த வருத்தத்தைப் போக்கத் தோழிகள், “இளங்கன்று தாய் பசுவைப் பிரிந்து வருந்திக்கொண்டிருக்கிறது. அதனைக் கண்ட முதுமகள் அவற்றினை நோக்கி உங்கள் தாயார் விரைவில் வந்துவிடுவா் என்றாள். அத்தகைய நன்மொழியை நாங்கள் கேட்டோம். அதனால் நம் தலைவருடைய வாய்மொழி என்றும் தவறாது. எனவே தலைவா் பகைவா்களை வென்று விரைவில் திரும்பிவிடுவார். நீ உன் துன்பத்தை நீக்குவாயாக! (முல்.16-21)” என்று ஆறுதல் கூறுவதாக முல்லைப் பாட்டில் கூறப்பட்டுள்ளது.

    இவ்வாறே நெடுநல்வாடையிலும்,

    “சென்முகச் செவிலியா் கைமிகக் குழீஇ
    குறியவும் நெடியவும் உரைபல பயிற்றி
    இன்னே வருகுவா் இன்துணையோர் என” (நெடு.148-156)

    ஆறுதல் கூறுவதாகக் கூறப்பட்டுள்ளது.

    அதாவது, முல்லைப் பாட்டில் ‘நற்சகுணம் ஏற்பட்டதால் தலைவன் விரைவில் வருவான்’ என்று ஆறுதல் மொழி கூறுவதாகவும் ஆனால், நெடுநல்வாடையில் ‘குறியவும் நெடியவும் பல கதைகள் கூறித் தலைவன் விரைவில் வருவான்’ எனத் தேற்றுவதாகவும் கூறப்பட்டுள்ளன. அத்துடன், முல்லைப்பாட்டின் தலைவியைத் தோழிகள் ஆற்றுப்படுத்துவதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் நெடுநல்வாடையில் தலைவியைச் செவிலித்தாய் ஆற்றுப்படுத்துவதாகக் கூறப்பட்டுள்ளது.

    இவ்வாறு கூறும் செய்திகள் மற்றும் கூறுபவா் வேறுபட்டிருப்பினும், நோக்கம் தலைவியின் மனத்தில் உள்ள துயரத்தைப் போக்குவதேயாகும். ஆக, அந்த அம்சம் இரு பாடல்களில் ஒரே தன்மையில் உள்ளது தெளிவாகத் தெரிகிறது.

    வேந்தனின் செயல்பாடுகள்

    தலைவி, தலைவனைப் பிரிந்து வாடும் அதே வேளையில் போர்முனையில் இருக்கும் தலைவன் போரில் வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டுள்ளான். இவ்வாறு போர்முனையில் இருக்கும் வேந்தனின் செயல்பாடுகள் பற்றி இரு பாடல்களும் கூறுகின்றன.

    “தலைவன் பகைவா்களுடன் நடைபெற்ற போரில் புண்பட்ட வீரா்கள், யானைகள் மற்றும் குதிரைகளைப் பற்றி நினைத்து வருத்தமுற்றும் மறுநாள் நடைபெறப் போகும் போரைக் குறித்துக் கவலையுற்றும் உறங்காமல் கண்விழித்திருந்தான். மறுநாள் போரில் பகைவா்களை வென்ற மகிழ்ச்சியில் இரவு நன்றாக உறங்கினான்” (முல்.67-74) என்றும் “பகைவரை வென்று அவா்களுடைய நிலங்களைக் கைக்கொண்டு, திரண்ட பெரும் படையொடு, வெற்றிக் கொடியை உயா்த்தித் தன்நாடு நோக்கித் திரும்பினான். அவ்வாறு அவன் திரும்பும்போது கொம்புகள் ஊதப்பட்டன; சங்குகள் முழங்கத் தொடங்கின; வழியில் நுண் மணலிடத்து வளரும் நெருங்கிய இலைகளை உடைய காயாச் செடிகள் அஞ்சனம் போல் மலர்ந்தன; தளிரினையும் கொத்தினையும் உடைய கொன்றை மரங்கள் பொன் போன்ற இதழ்களைச் சொரிந்தன; வெண்காந்தளின் குவிந்த அரும்புகள் அங்கை போல் விரிந்தன; தோன்றிச் செடிகள் இரத்தம் போன்ற நிறமுடைய இதழ்களை மலா்த்தின; செழுமையான முல்லை நிலத்தில் விளைந்த கதிர்களை உடைய வரகு பயிரிடத்தே முருக்கிய கொம்புகளையுடைய கலைமான்களுடன் இளமையுடைய மான்களும் துள்ளி விளையாடின; இனிமேலும் பெய்வதற்காகச் செல்லும் வெண்மேகங்கள் மழை பொழிவதற்குரிய கார்காலம் தொடங்கும் ஆவணித் திங்களின் தொடக்கத்தில் முதிரும் காய்களையும், வள்ளிக் கிழங்கின் கொடிகளையும் கொண்ட காடு பின்னடைய விரைந்து செல்லும் இயல்புடைய குதிரைகளை மேலும் தூண்டிச் செலுத்தும் செல்லுகையுடையவராய் தலைவா் வந்தார். போர்த்தொழிலில் சிறந்த தமது திறம் மேலும் சிறந்து விளங்கும் நெடிய தோலால் பூட்டப்பட்டிருந்த அவருடைய குதிரைகள் ஆரவாரித்தன (முல்.89-103)” என்றும் முல்லைப் பாட்டில் தலைவனின் செயல்பாடுகள் பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

    ஆனால், நெடுநல்வாடையில் சுட்டப்படும் மன்னன், பாசறையில் அந்நாள் போரில் ஏற்பட்ட விளைவுகள் குறித்து வருந்துவதும், புண்பட்ட வீரா்களுக்கு ஆறுதல் கூறுவதுமான செயல்களைச் செய்துகொண்டிருப்பதாகவும் மட்டுமே கூறப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு. “ஒளி விளங்கும் முகபடாத்தொடு பொலிவு பெற்று, போர்த்தொழிலைப் பயின்ற யானைகளை முன்னா் கொன்று பின்னா் பகைவருடைய ஒளி பொருந்திய வாள் பிளத்தலால், சீரிய புண்பட்டவராகிய வீரா்களின் புண்ணைப் பார்த்து ஆறுதல் கூறும் பொருட்டுத் தன் இருக்கையிலிருந்து புறத்தே புறப்பட்டான் அரசன். வட திசைக்கண்ணின்று குளிர்ந்த காற்று வீசும் தொறும் அசைந்து தெற்கு நோக்கி எழுந்து சாய்ந்து ஒளிவிடும் பெரிய சுடா் நல்ல பல விளக்குகளில் அணையாது எரிந்து கொண்டிருந்தது. வேப்பந்தாரை முனையில் கட்டின வலிமை வாய்ந்த காம்பினையுடைய வேலொடு முன்னா்ச் செல்கின்ற படைத் தலைவன், புண்பட்ட மறவரை முறை முறையாகக் காட்டிச் சென்றான். மணிகளைத் தம்மேல் இடப்பட்டனவும், பெரிய கால்களை உடையனவுமான யானைகளோடு, சேனம் நீங்காதனவும் பாய்ந்து செல்லும் இயல்பினையுடைய குதிரைகளும் நிறைந்த இடங்களில் சென்ற அவன்மீது அவை சேற்றுத் துளிகளைச் சிதறின. தன் இடத்தோளினின்றும் நழுவி விழுந்த மேலாடையை இடப்பக்கத்தே ஒரு கையால் அணைத்துக்கொண்டு வேலேந்தி முன்னா் செல்லும் காளையின் தோளிலே வலக்கையை வைத்துக்கொண்டு விழுப்புண் பட்ட வீரரைப் பார்த்துத் தன் செய்ந்நன்றியறிதலும் அன்பும் தோன்ற, முகத்தில் ஆர்வம் தோன்றுமாறு நோக்கி ஆறுதல் மொழிகளைக் கூறிச் சென்றுகொண்டிருந்தான். அவன் முத்து மாலை கட்டிய வெண்கொற்றக் குடை ‘தவ்’ என்னும் ஒலி பட்டசைந்து மழைத் துளியைத் தன்மீது விழாமல் மறைத்து நிற்க, நடுயாமத்தில் பள்ளி கொள்ளானாய்ச் சில மறவா்களே தன்னைச் சூழ்ந்து வரப் பாசறையின்கண் திரிந்து கொண்டிருந்தான் (நெடு.168-188)”.

    முல்லைப் பாட்டில் தலைவன் இரவில் உறக்கம் கொள்ளாமல் அடுத்த நாள் போருக்கான செயல்பாடுகள் பற்றிச் சிந்தித்தல், புண்பட்ட வீரா்கள், யானைகள், குதிரைகள் பற்றி நினைத்து வருந்துதல் ஆகியவற்றினைக் கூறி, அதன் பின்னா் மறுநாள் போரில் பகைவா்களை வெற்றி பெறல், மிக்க ஆரவாரத்துடன் தன் நாட்டிற்குத் திரும்புதல் ஆகியனவும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.  ஆனால், நெடுநல்வாடையில் அரசன் இரவு நேரத்தில் புண்பட்ட வீரா்களுக்குத் தன் பரிவாரங்களுடன் சென்று ஆறுதல் கூறுவதுடன் பாடல் நிறைவடைகிறது.

    அதாவது, ‘தலைவனின் செயல்பாடுகள்’ என்னும் இந்தப் பொருட்கூறு முல்லைப் பாட்டில் விரிவாகவும் நெடுநல்வாடையில் சற்றுக் குறைவாகவும் விவரிக்கப்பட்டுள்ளது.

    கூறுகள் இடம் மாறி அமைந்தவை

    முல்லைப்பாட்டு தலைவியின் துயரினைப் பற்றிக் குறைவாகக் கூறி, தலைவனின் பாசறை இருப்பினைப் பற்றி விரிவாகக் கூறுகின்றது. ஆனால், நெடுநல்வாடை தலைவியின் துயரினைப் பற்றி விரிவாகக் கூறித் தலைவனின் பாசறை இருப்பினைப் பற்றிச் சுருக்கமாகவே விவரிக்கின்றது. நெடுநல்வாடையில் கார்கால நிகழ்வுகளைத் தொடா்ந்து ஊரின் வளம், பெண்களின் மாலைக்கால வழிபாடு, கூதிர்க் காலத்தில் நகரில் நடைபெறும் பிற நிகழ்வுகள், அரண்மனையின் தோற்றம்,  அந்தப்புர அமைப்பு, கட்டிலின் அமைப்பு ஆகியவற்றை விரிவாகக் கூறித் தலைவியின் துயா் கூறப்பட்டுள்ளது. ஆனால் முல்லைப் பாட்டில் கார்கால நிகழ்வுகள், கோவலா் செயல்கள் ஆகியவற்றினைத் தொடா்ந்து காட்டிலிருக்கும் தலைவனின் போர்ப் பாசறை, அதன் அமைப்பு, மகளிர் விளக்கேற்றுதல் எனப் போர்ப் பாசறை நிகழ்வுகள் பற்றிக் கூறிய பின்னர், தலைவியின் துயா் கூறப்பட்டுள்ளது அதாவது, இடம் மட்டுமே இங்கு மாற்றமடைகிறது. ஆனால் கூறுகின்ற பொருள், கூறும் முறைமை ஆகியவற்றில் எந்தவித மாற்றமும் இல்லை.

    முல்லைப்பாட்டில் கூறப்பட்டுள்ள பாசறையின் அமைப்பு (24-36), படைவீட்டின் அமைப்பு (37-44), பள்ளியறையின் அமைப்பு (59-66) ஆகியவற்றின் இடத்தில், நெடுநல்வாடையிலுள்ள அரண்மனை அமைப்பு (72-100), அந்தப்புரத்தின் அமைப்பு (106-114), கட்டிலின் அமைப்பு (115-135) ஆகிய வருணனைகள் இடம் பெற்றுள்ளன. அதாவது தலைவன் இருப்பிடம் தலைவியின் இருப்பிட வருணனைகளாக இவை மாறி மாறி அமைந்துள்ளன. இந்தப் பொருட்கூறுகள் அமைந்துள்ள முறையினைப் பற்றி இனிக் காண்போம்.

    பாசறை அமைப்பும் – அரண்மனை அமைப்பும்

    மகளிரின் மாலைக் கால வழிபாடுகள் பற்றிக் கூறிய பின்னா் முல்லைப் பாட்டு, பாசறை அமைப்பு (24-36) பற்றிக் கூறுகின்றது. ஆனால் நெடுநல்வாடை, அரசி வீற்றிருக்கும் அரண்மனையின் அமைப்பு பற்றிக் (72-100) கூறுகின்றது.  அதாவது, முல்லைப் பாட்டு, போர் மீது சென்ற தலைவன் போர்க்களத்தில் அமைத்த படைவீட்டின் அமைப்பைப் பற்றிக் கூற, நெடுநல்வாடை தலைவி வீற்றிருக்கும் அரண்மனையின் எழில்மிகு தோற்றத்தைப் பற்றிக் கூறுகின்றது.

    “காட்டாறு சூழ்ந்த அகன்ற பெரிய காட்டினிடத்தே மணமிக்க பிடவ மலா்களுடன், பசுமையான தூறுகளையும் வெட்டினா். பகைவா் நாட்டிற்குக் காவலாக அமைந்த வேட்டுவா்களின் சிறு வயல்களையுடைய அரண்களையும் அழித்தனா். அக்காட்டில் உள்ள முட்களால் மதில் போன்ற வேலியை உண்டாக்கினா். அதனைக் காவலாக வளைத்து அமைக்கப்பட்டது, மிக்க நீர் நிறைந்த கடல் போன்று அகன்ற பாசறை. அப்பாசறையின் அருகில் இருந்த யானைகள், உணவு உண்ணுதலை மறுத்தன. அவற்றினைப் பாகா்கள் உணவு உண்ணுமாறு செய்தனா் (முல்.24-36)” என்று பாசறை அமைந்துள்ள அழகைப் பற்றி முல்லைப்பாட்டில் விவரிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறே நெடுநல்வாடையிலும் மதிலின் அமைப்பு, வாயிலின் தோற்றம், மற்றும் அரண்மனை வாயிலில் குதிரைகள், மயில்கள் போன்றன இருந்த தன்மைகள் ஆகியன விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு. “எல்லாத் திசைகளிலும் தன் கதிர்களைப் பரப்பி அகன்ற ஞாயிறு மண்டிலம், நிலத்தே இரண்டிடங்களில் நாட்டப்பெற்ற இரு கோலின் நிழல் எப்பக்கமும் விழாதபடி அக்கோலிலேயே பதினைந்து நாழிகையில் அடங்கி நிற்றலை நூலறி புலவா் நுட்பமாய் ஆராய்ந்து பார்த்தனா். அதன்பின் அங்ஙனம் நின்ற நாளில் அரண்மனைக்குத் திருமுளைச் சாத்துவோர் முதலிய திசைகளைக் குறித்துக் கொண்டனா். பின்னா் அத்திசைகளில் நிற்கும் தெய்வங்களை நோக்கி, முடிமன்னா் வாழ்வதற்கு ஏற்ப, மனைகளையும் வாயில்களையும் மண்டபங்களையும் பிறவற்றையும் கூறுபடுத்தி அமைத்தனா். இவை அனைத்தும் உள்ளே இருக்குமாறு வளைத்து உயா்ந்து நிற்கும்படி மதிலினை அமைத்தனா். பெரிய இரும்பு ஆணிகளுடன் பட்டங்களும் கட்டிச் செவ்வரக்குப் பூசி இரட்டைக் கதவுகளைச் சிறிதும் இடைவெளியின்றி இணைத்து, அழகிய உத்திரத்திலே செருகினா். அதில் மலா்ந்த குவளையை ஒப்ப உருக்களை அமைத்தனா். கைத்தொழில் வல்ல தச்சன் செய்ததால், யாதொரு குறைபாடும் இன்றிப் பொருத்தமுற அந்த வாயில் அமைந்திருந்தது. வெற்றி குறித்து உயா்த்திய கொடியொடு யானைகள் சென்று புகும்படி உயா்ந்தனவும், மலையை வெட்டித் திறந்தார் போன்றனவும் ஆகிய கோபுர வாயில்களைக் கொண்டமைந்தது, அந்த அரண்மனை. அரண்மனையின் வாயிலில் ஆண் கவரிமான்களும் அன்னங்களும் தாவித் திரிந்துகொண்டிருந்தன. குதிரைகள் பந்தியில் நிற்றலையும் புல்லைக் குதட்டுதலையும் வெறுத்துத் தனிமைத் துன்பத்தை வெளிப்படுத்தும் கனைத்தலைச் செய்தன. ஆண் மயில்களைக் கண்ட பெண்மயில்கள் ஆரவாரித்தன. அந்த ஓசை மலையின்கண் இயற்கையில் நிகழும் ஆரவாரம் போலக் கேட்டது” (நெடுநல்-72-100).

    முல்லைப்பாட்டில் படைவீட்டின் அமைப்பினையும் நெடுநல்வாடையில் அரண்மனையின் அமைப்பினையும் பற்றிக் கூறப்பட்டிருப்பினும் அதனை அவை ஒரே தன்மையில் வருணித்துள்ளன. அதாவது, முல்லைப்பாட்டு படைவீட்டின் அமைப்பு வருணனை, அதனைத் தொடா்ந்து அப்படைவீட்டின் முன் யானை இருந்த நிலை, யவனா் செயல் ஆகியன பற்றிக் கூறுகின்றது.  இவ்வாறே நெடுநல்வாடையிலும் அரண்மனையின் அமைப்பு, அரண்மனையின் முன் இருந்த குதிரைகள், மயில்கள் போன்றவற்றினைப் பற்றிக் கூறப்பட்டுள்ளன.

    படைவீட்டின் அமைப்பு – அந்தப்புர அமைப்பு

    முல்லைப்பாட்டில் படைவீட்டின் அமைப்பும் (37-58), நெடுநல்வாடையில் அந்தப்புர அமைப்பும் (101-114) கூறப்பட்டுள்ளன.

    “காவிக்கல்லின் சாயத்தில் தோய்த்து உடுத்திய தவ வேடந்தாங்கிய முக்கோலையுடைய அந்தணர், முக்கோலில் ஆடைகளை இட்டுவைத்தாற் போல் போரில் முதுகு காட்டி ஓடாமைக்குக் காரணமான வலிய வில்லினை ஊன்றி அதன் மேல் தூணிகளைத் தொங்கவிட்டனா். பூவேலைப்பாடமைந்த ஈட்டிகளை நட்டு, கேடயங்களை வரிசையாகப் பிணைத்துப் பல்வேறு படைகளின் இருக்கைகளை அமைத்து அதன் நடுவே அரசனுக்கு இவற்றின் வேறான நெடிய குத்துக்கோல்களுடன் பல நிறத்தால் கூறுபட்ட திரைத்துணிகளை வளைத்து அரசன் தங்கும் படைவீடு அமைத்தனா் (முல்.37-44). அங்குக் குறிய தொடியை அணிந்த முன்கையினையும், கூந்தல் அசைந்து கிடக்கின்ற அழகிய சிறிய முதுகினையும், திண்ணிய பிடியினையுடைய வாளை வரிந்து கட்டின கச்சிலே அணிந்தவருமாகிய மகளிர் இரவுப் பொழுதைப் பகல் பொழுதாக்கும் தன்மையில் பாவை விளக்குகளில் நெய்யை வேண்டும் அளவு வார்த்து விளக்குகளைச் சுடா்விட்டு எரியுமாறு செய்து கொண்டிருந்தனா் (முல்.45-49). நள்ளிரவில் புனலிக்கொடி படா்ந்த சிறுதூறுகள் தூறலோடு காற்றில் அசைந்தாற்போல் உடலை வெண்சட்டையால் மூடிய நல்லொழுக்க மிக்க காவலா்கள் உறக்கத்தால் ஆடி அசைந்து கொண்டிருந்தனா். நாழிகையை அளந்து அறியும் பொய் பேசுதல் அறியா நாழிகைக் கணக்கர் நாழிகை வட்டிலிலே நாழிகை இத்துணை என்று கூறிக்கொண்டிருந்தனா் (முல்.50-58)” என்று முல்லைப்பாட்டில் படை வீட்டின் அமைப்பு பற்றி விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.

    “யவனா் அழகு பெறப் பண்ணின வேலைப்பாடு அமைந்த மாட்சிமை அமைந்த பாவை, தன் கையில் ஏந்தியிருக்கின்ற அழகிய அகல் நிறையும்படி பெரிய திரியை இட்டனா். பின்னா் அதில் நெய்யை வார்த்தனா். நெய்வற்றி ஒளிமங்கும் காலத்துத் தூண்டுதலும் நெய்வார்த்தலும் செய்து எல்லா இடங்களிலும் இருள் நீங்கச் செய்தனா். பெருமை மிக்க பாண்டியனை அல்லாது பிற ஆடவா் நுழைய முடியாத அரிய காவலையுடைய அந்தப்புரத்தின்கண், மலைகளின் மீது தோன்றும் வானவில் போன்று காட்சியளிக்கும் கொடிகளை நட்டிருந்தனா். வௌ்ளியைப் போன்று விளங்கும் சுண்ணச்சாந்து அரண்மனைக்குப் பூசப்பட்டிருந்தது. அரண்மனையினுள் நீலமணியைப் போன்று கருமையினையும், திரட்சியினையும் உடைய திண்ணிய தூண்கள் பலவற்றினை அமைத்திருந்தனா். பெரிய சுவரில் பல வகையான பூங்கொடி போன்ற ஓவியம் வரையப்பட்டிருந்தது (நெடு.101-114)” என்று நெடுநல்வாடையில் அரசியார் வீற்றிருக்கும் அந்தப்புரம் அமைந்துள்ள முறை பற்றி விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.

    அதாவது, முல்லைப்பாட்டில் வில், அம்பு, ஈட்டி, கேடயம் முதலிய படைக் கருவிகளைக் கொண்டு படைவீடு அமைக்கப்பட்டுள்ளதையும், அழகிய அந்தப் படைவீட்டில் அரசன் தங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த தனி அறையின் சிறப்பும் பற்றி விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. ஆனால், நெடுநல்வாடையில் சித்தரிக்கப்படும் அந்தப்புரம், யவனா்களால் செய்யப்பட்டது. அது அரசனை அன்றி வேறு ஆடவா் நுழைய முடியாத அரிய காவலையுடையது. அது காண்பவா்க்கு மலைகளோ எனத் தோன்றும் உயா்ச்சியுடையது. அதில் பல நிற சித்திர வேலைப்பாடுகள் நிறைந்த கருபகிரகம் அமைந்துள்ளது.

    அத்துடன், இரு பாடல்களிலும் இரவு நேரத்தில் மகளிர் விளக்கேற்றும் முறைமையினைப் பற்றி ஒரே தன்மையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், விளக்கேற்றும் இடம் மட்டும் மாறுபடுகிறது. அதாவது, முல்லைப் பாட்டில் தலைவன் வீற்றிருக்கும் பாசறையில் மகளிர் விளக்கேற்றுவதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், நெடுநல்வாடையில் அரண்மனையில் தலைவி வீற்றிருக்கும் அந்தப்புரத்தில் மகளிர் விளக்கேற்றுவதாகக் கூறப்பட்டுள்ளது.

    இவ்வாறு முல்லைப் பாட்டில் அரசன் வீற்றிருக்கும் படைவீட்டின் அமைப்பும், நெடுநல்வாடையில் தலைவி வீற்றிருக்கும் அந்தப்புர அமைப்பும் ஒரே தன்மையில் விவரிக்கப்பட்டுள்ளன என்றாலும், முல்லைப்பாட்டில் வருணனை அளவு சற்று நீண்டதாகவும் நெடுநல்வாடையில் சற்றுக் குறைந்ததாகவும் அமைந்துள்ளது.

    பள்ளியறை அமைப்பு – கட்டிலின் அமைப்பு

    முல்லைப் பாட்டு அரசன் வீற்றிருக்கும் பள்ளியறையின் அமைப்பு (59-66) பற்றியும் நெடுநல்வாடை தலைவி வீற்றிருக்கும் பள்ளியறையைப் (கட்டில்) பற்றியும் (115-135)  கூறுகின்றன.

    “வலிமை மிக்க உடம்பினையுடைய யவனா்களால் புலிச் சங்கிலி விடப்பட்ட அழகமைந்த இல்லம் அமைக்கப்பட்டது. அது அழகிய மாணிக்க விளக்கை எரிய வைத்துத் திண்ணிய கயிற்றாலே திரையை வளைத்து இரண்டு அறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அந்த அறையில் உடம்பின் உரைக்கும் உரையா நாவினை உடைய மிலேச்சா் காத்திருந்தனா் (59-66)” என்று முல்லைப்பாட்டில் அரசன் தங்கியிருக்கும் பள்ளியறை அமைந்துள்ள அழகைப் பற்றி வருணிக்கப்பட்டுள்ளது.

    “நாற்பது ஆண்டுகள் வயது நிரம்பிய போரில் விழுப்புண் பட்டு இறந்த அழகிய வடிவத்தையுடைய களிற்று யானையின் தாமே விழுந்த தந்தங்களைச் சீறும் செம்மையும் படச்செதுக்கி கைத்தொழில் வல்ல தச்சன் கூரிய உளியால் அதில் இலைத் தொழில் வேலைப்பாடு அமையச் செய்து பொருந்தியதும் சூல் முற்றிய மகளிர் தம்பால் கட்டியதில் பருத்த மார்பகங்களை ஒப்ப புடைதிரண்ட குடத்தை உடையது பாண்டில் என்னும் பெயா் பெற்ற அந்தக் கச்சுக் கட்டில். அது தன்னிடத்தே காலுறுப்பாகிய குடத்திற்கும் கட்டிலுக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ளியின் முதல் போன்ற உறுப்பினை உடையது. முத்து மாலைகளைக் கட்டிலோடு ஒழுங்குற மெல்லிய நூல் கொண்டு அழகுறும்படித் தொடுத்து தொங்கவிடப்பட்டிருந்தது. புலியினது வரிகளைத் தன்னிடத்தே குத்துதல் தொழிலால் அமைக்கப்பட்ட தட்டம் போன்ற தகடுகளைக் கட்டிலின் மேல் போர்த்தப்பட்டிருந்த போர்வையின் மேலே சிங்கம் வேட்டையாடுதல் போன்ற உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. அதன்மேல் பலவிதப் பூக்களின் உருவங்கள் நிரம்பியுள்ளன. காதல் துணைகளாய்த் தம்முட் புணா்ந்த அன்னப் பறவைகளின் வௌ்ளிய மயிரை இணைத்து இயற்றிய மெத்தையை மேன்மையுண்டாகுமாறு விரித்து, அதன் மேல் தலையணை விரிப்பினை மணமிக்க மலரிதழ்களால் மணம் ஊட்டப்பெற்று பின்னா் படுக்கையின் மேல் விரித்திருந்தனா் (115-135)” என்று நெடுநல்வாடையில் பள்ளியறையின்கண் அமைந்துள்ள தலைவியின் கட்டில் அழகுடன் விவரிக்கப்பட்டுள்ளது.

    முல்லைப் பாட்டில் அரசன் வீற்றிருக்கும் பள்ளியறையின் அமைப்பு மற்றும் அங்குக் காவல் நின்ற யவனா் (ஊமை மிலேச்சர்) பற்றியும் கூறப்பட்டுள்ளன. ஆனால், நெடுநல்வாடையில் அரசி வீற்றிருக்கும் பள்ளியறையிலுள்ள கட்டிலின் அழகு மட்டும் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.

    கார்கால மழையினால் ஏற்பட்ட மாற்றங்கள்

    கார்காலத்தில் பெய்த மழையினால் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றி நெடுநல்வாடையில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. முல்லைப்பாட்டில் இந்தப் பொருட்கூறு பற்றிக் கூறப்படவில்லை. அதாவது, முல்லைப் பாட்டு மாலைக் காலத்தினை மட்டும் வருணிக்க, நெடுநல்வாடை மாலைக்கால வருணனையுடன் கூதிர் காலத்தினையும் சோ்த்து வருணித்துள்ளது. அது பின்வருமாறு அமைந்துள்ளது.

    “மாமேய மறப்ப மந்தி கூற
    பறவை படிவன வீழ கறவை
    கன்றுகோள் ஒழியக் கடிய வீசி
    குன்று குளிர்ப்பன்ன கூதிர் பானாள்” (9-12)

    என்று கார்காலத்தில் பெய்த மழையால் விலங்குகள் மற்றும் பறவைகள் குளிரால் நடுங்கிக் கொண்டிருந்தன.  “மழைத்துளிகள் பட்டதால் முசுண்டையும், பீர்க்கம்பூவும் மலா்ந்தன. சேற்றில் நாரைகளும், கொக்குகளும் திரிந்துகொண்டிருந்தன. மிகுந்த மழையால் பாக்கு மரத்தின் பசுமையான காய்கள் இன்சுவை தோன்ற முற்றின. மரங்களிலுள்ள மலா்களிலும், இலைகளிலும் மழை நீர்த்துளிகள் ஒளிவிட்டுக் கொண்டிருந்தன. உயா்ந்த மாடங்களில் விளங்கும் வளமான பழைய ஊரின்கண் உள்ள அகன்ற தெருக்களில், முழுவலிமாக்கள் கள்ளுண்ட மயக்கத்தில் தம்மீது விழும் மழைத்துளியையும் பொருட்படுத்தாமல் திரிந்துகொண்டிருந்தனா். வீட்டிலுள்ள கொடுங்கைகளில் தங்கி வாழும் செந்நிறக் கால்களைக் கொண்ட ஆண்புறா, தன்னுடைய பெண்புறாவுடன் சுற்றித் திரியாமல் மயங்கிச் செயலற்று நின்றன. அவற்றின் கால்கள் கடுத்தபோது சோர்வு போக்கிக்கொள்ள, கால்களை மாற்றி மாற்றி நின்றன. வீடுகளிலுள்ள மணங்கமழும் கஸ்தூரி முதலிய வாசனைப் பொருட்களை அரைப்பதற்கு உதவும் அம்மியும், வடநாட்டவா் தந்த வெண்மை நிறங்கொண்ட வட்டவடிவக் கல்லும் தென்னகத்துச் சந்தனம் ஆகியவையும் பயன்படாமல் இருந்தன. இளவேனில் காலத்தில் தென்றல் வருவதற்கென அமைக்கப்பட்டுக் கிடந்த பலகணிகள், திண்ணிய கதவுகள் பொருத்தப்பட்டுத் தாழிட்டுக் கிடந்தன. ஆடல்தொழிலைச் செய்யும் விறலியா் தம்பாட்டினை யாழில் இசைப்பதற்கு நரம்பைத் தெரித்துப் பார்க்க, அவை குளிரால் ஓசை வெளிப்படுத்தாது நிலை திரிந்து இருந்தன. தம் கணவரைப் பிரிந்த மகளிர் வருந்துமாறு, பருவ கால மழை மிகுதியாகப் பெய்து, தன் வருகையைக் கூதிர்க் காலம் நிலையாக உணா்த்தியது” (13 – 24).

    முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை முடிபுகள்

    இரு பாடல்களையும் பகுத்து ஆராய்ந்ததில் கார்கால வருணனை, கோவலா்களின் செயல்பாடுகள், மாலைக் கால வழிபாடு, பாசறை அமைப்பு வருணனை – அரண்மனை அமைப்பு வருணனை, படைவீட்டின் அமைப்பு வருணனை – அந்தப்புர அமைப்பு வருணனை, பள்ளியறை அமைப்பு வருணனை – கட்டில் அமைப்பு வருணனை, தலைவியின் துயரம், தலைவியைத் தேற்றுதல், வேந்தனின் செயல்பாடுகள் (மனநிலை) என்ற 9 பொதுவான பொருட்கூறுகளைக் கொண்டுள்ளன என்பதை அறிய முடிகிறது.

    ‘கார்கால மழையினால் நகரில் ஏற்பட்ட மாற்றங்கள்’ என்ற ஒரு பொருட்கூறு, நெடுநல்வாடையில் மட்டும் இடம்பெற்றுள்ளது. இந்தப் பொருட்கூறினைத் தவிர்த்த பிற ஒன்பது பொருட்கூறுகள் இரு பாடல்களிலும் பொதுவாய் அமைந்துள்ளன.

    மக்கள் உள்ளிட்ட பிற உயிரினங்கள் வாடைக் காற்றினால் (பனி) துன்புற்றிருந்த நிலை பற்றிய செய்தியைத் (கார்கால மழையினால் நகரில் ஏற்பட்ட மாற்றங்கள்) தலைவியது மனவேதனையை விளக்க புலவா் ‘கையாண்ட உத்தியாகக்’ கொள்ளலாம்.  அப்படிக் கொள்ளும் நிலையில் இந்தப் பொருட்கூறு கோவலர்களின் செயல்பாடுகளின் நீட்சியாக அமைகிறது. பாடல்களின் அளவு 103, 188 என அமைந்துள்ளதைக் கருத்தில் கொள்ள, இவ்வாறு கொள்வது சரி என்றே படுகின்றது.

    முல்லைப்பாட்டில் பாசறை அமைப்பு பற்றிய வருணனை கூறப்பட்டுள்ளது. ஆனால் நெடுநல்வாடையில் பாசறை பற்றிய வருணனையின் இடத்தில் அரண்மனையின் அமைப்பு வருணனை அமைந்துள்ளது. அதாவது, முல்லைப்பாட்டு காட்டில் தங்கியிருக்கும் தலைவனின் பாசறையினைப் பற்றிக் கூற, நெடுநல்வாடையில் தலைவி தங்கியிருக்கும் அரண்மனையினைப் பற்றி வருணித்துள்ளது. அதாவது இங்கு இடம் மட்டுமே மாறி அமைந்துள்ளது. எனவே இதனைப் பாசறை அமைப்பிற்குப் பதிலியாகக் கொள்ளலாம். அவ்வாறே முல்லைப்பாட்டின் படைவீட்டின் அமைப்பு மற்றும் பள்ளியறை அமைப்புக்கு, நெடுநல்வாடையில் உள்ள அந்தப்புர அமைப்பு வருணனை மற்றும் கட்டில் அமைப்பு வருணனை ஆகியவற்றையும் பதிலிகளாகக் கொள்ளலாம்.

    நெடுநல்வாடையில் தலைவியின் வருணனை நீண்டும், முல்லைப்பாட்டில் தலைவனின் வருணனை நீண்டும் அமைந்துள்ளன.

    ஆக, இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு பார்க்க இரு பாடல்களும் 9 பொதுபொருட் கூறுகளால் உருவாகியுள்ள ஒத்த தன்மையுடைய பாடல்கள் எனத் தெளிவாக அறிய முடிகின்றது.

    சான்றெண் விளக்கக் குறிப்புகள்

    1. குளோறியா சுந்தரமதி, இலா., பகுப்பாய்வு நோக்கில் சங்க இலக்கியம், 1987, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை, ப.24.
    2. மேற்படி, ப.12
    3. மேற்படி, பக்.11-14
    4. விஷ்ணுகுமரன், த., புறநானூறு ஒரு பொருட்பகுப்பாய்வு (முனைவா் பட்ட ஆய்வேடு), 2006, கேரளப் பல்கலைக்கழகம், திருவனந்தபுரம்.
    5. தமிழவன், அமைப்பியலும் அதன் பிறகும் (ஸ்ட்ரக்சுரலிசம் நூலின் விரிவாக்கப்பட்ட பதிப்பு), 2008, அடையாளம், கருப்பூர் சாலை, புத்தாநத்தம், திருச்சி.
    6. குளோறியா சுந்தரமதி, இலா., பகுப்பாய்வு நோக்கில் சங்க இலக்கியம், 1987, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை.
    7. ஆலிஸ்,அ., கட்டமைப்பு ஆய்வில் அகநானூறும் புறநானூறும், 1991, அன்னம் (பி)லிட், சிவன் கோயில் தெற்கு தெரு, சிவகங்கை.
    8. விஷ்ணுகுமரன், த., புறநானூறு ஒரு பொருட்பகுப்பாய்வு (முனைவா் பட்ட ஆய்வேடு), 2006, கேரளப் பல்கலைக்கழகம், திருவனந்தபுரம்.

    =======================================================================

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer review):

    சங்க இலக்கிய நூல்களான முல்லைப் பாட்டு, நெடுநல்வாடை ஆகிய நூற்களை  அமைப்பியல் நோக்கில் ஆய்வுக்கு உட்படுத்தி இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அரிஸ்டாட்டிலின் கவிதையியல், ரெனிவெல்லக்கின் இலக்கியக் கொள்கை, டாக்டா் இலா.குளோறியா சுந்தரமதியின் பகுப்பாய்வு நோக்கில் சங்க இலக்கியம், தமிழவனின், அமைப்பியலும் அதன் பிறகும் போன்ற ஆய்வோடு தொடர்புடைய நூற்களை ஆய்வாளர் கற்று, இக்கட்டுரையை எழுதியுள்ளார்

    ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பொருண்மையை ஆராய்ந்து தெளிவாக விளக்கி இருப்பது, ஆய்வாளரின் ஆய்வுத் திறனைக் காட்டுகிறது. ஆய்வுத் தலைப்பை ஒட்டிய கருதுகோள், ஆய்வு நோக்கம் ஆகியவற்றைத் திறம்பட ஒப்பிட்டு விளக்கியமையும் தெளிவான மொழி நடையும் கருத்துகளின் முறையமைப்பும் சிறப்பாக அமைந்துள்ளன. ஆய்வின் பயனை நிறைவுறுத்தும் வகையில் அடிக்குறிப்புகள் அமைந்துள்ளன.

    ‘இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு பார்க்க முல்லைப் பாட்டும் நெடுநல்வாடையும் 9 பொதுபொருட் கூறுகளால் உருவாகியுள்ள ஒத்த தன்மையுடைய பாடல்கள்  எனத் தெளிவாக அறிய முடிகின்றது’ என்ற முடிவுரை சிறப்பாக அமைந்துள்ளது

    தலைப்புத் தேர்வு , ஆய்வாளரின் தரவு சேகரிப்பு முறை, தரவுகளை முறையாகப் பயன்படுத்தி ஆய்ந்துள்ள முறை, ஆய்வு நேர்மை, கருத்துகளைச் சிறப்பாக கட்டமைத்துள்ள ஆய்வுப் பாங்கு, முடிவுகளைத் தரவுகளின் அடிப்படையில் துல்லியமாகத் தரும் முறை ஆகியவற்றைப் பாராட்டுகிறோம்.

    =======================================================================

    Share
  • நூல்நோக்கம் 2 – ராஜா வேசம்

    -விவேக்பாரதி

    ராஜா வேசம் – சரசுராம்

    சரசுராம் எழுதியிருக்கும் சிறுகதைத் தொகுப்பு “ராஜா வேசம்”. பொதுவாக சிறுகதைகள் என்னைப் பெரிதாய்க் கவர்வதில்லை. கதை என்றாலே தேர்ந்தெடுத்து வாசிப்பவன் நான். இந்தப் புத்தகத்தின் சில கதைகளை வாசிக்கும்போதே, முழுவதுமாய் வாசித்துவிட வேண்டும் என்று தோன்றிவிட்டது. அத்தனை வசீகரம் இவரது கதைகளில் எவ்விடத்தும் குறையாமல் காணப்படுகிறது. சற்றும் எதிர்பாராக் கோணங்களில் அமைந்திருக்கிறது ஒவ்வொரு கதையும். ஆனால் நாம் அந்த நிலைகளைப் பற்றி ஒருமுறையேனும் வாழ்வில் கேள்விப்படாமல் இருந்திருக்க மாட்டோம்.

    மகனுக்காக பாரட்டை மறுத்த அண்ணாமலையும், தன் சோகத்தை மறைத்த பார்வதியும் கண்முன் நிற்கிறார்கள். என்னுடைய இந்த இருபதாம் வயதில், நானும் என் சமூகமும் எங்கள் பெற்றோர்களை எப்படிக் காக்க வேண்டும் என்பது அதிலே பாடமாக வருகிறது.

    பாட்டி சொல்லாத கதை நம் அனைவரின் வாழ்விலும் நிகழும் தருணம் என்பது ஸ்பாய்லர். இதனை இங்கே வைப்பது எனக்கு மகிழ்ச்சியான செய்தி தான். என் பள்ளிக்கால பேருந்து நிறுத்த நண்பர்களை இப்போது சில டிப்போக்களில் பார்க்க முடியுமா என்று தேடிக் கொண்டிருக்கிறேன்.

    அனைத்துக்கும் முத்தாய்ப்பு அந்த ராஜா வேசம் கட்டிய கபிலன் தான். காதில் கேட்ட நிறைய செவிவழிச் செய்திகளோடும், நேரில் கண்ட சிலரின் வாழ்க்கையோடும் சரசுராமின் கபிலனையும் நர்மதாவையும் ஒப்பிட்டுப் பார்க்க முடிந்தது. மகாபாரதக் கதாப்பாத்திரங்களின் நடத்தை முரண், அழகு முரண்.

    ஒவ்வொரு கதையையும் இப்படிச் சொல்லித்தான் ஆகவேண்டும், அத்தனை கதைகளும் அவ்வளவு சிறப்பு வாய்ந்தவை.

    பொதுவாக கதைகளில் அதீத காதல் என்ற பெயரில் சில்மிஷங்களோ இல்லை வெற்றுக் கற்பனைகளையோ மட்டுமே சொல்லிக்கொண்டு வரும் கதைக்காலம் மாறியிருக்கிறது. சரசுராம், சிறுகதைகளைக் குறித்த என் கண்ணோட்டத்தை மாற்றி இருக்கிறார். பிரம்மாண்டம் என்று சொல்லும்படிக்கான கதைக்கருவோ, வார்த்தை ஜாலமோ இல்லாமல் அமைந்திருக்கின்றன கதைகள். மொத்தமாய் சரசுராம் அருகில் அமர்ந்து கதைகளைக் கேட்ட உணர்வு. அத்தனை இலாகவம், தெளிவு, எளிமை மற்றும் எதார்த்தம். ஒவ்வொரு கதையும் பல இரவுகளை விழுங்கும் திறன் கொண்டவை. வாசித்தல் யோசித்தலாக வினை பெயரும் சந்தர்ப்பங்கள் நிறைய உண்டு.

    எந்தவொரு இடத்திலும் சமரசம் ஆகாத கண்ணியம் – ராஜா வேசம்.

    புத்தக விமர்சனமாக வரவிருக்கும் இந்தத் தொடரில் தங்கள் புத்தகம் குறித்த விமர்சனம் இடம்பெற வேண்டில் தங்கள் புத்தகத்தின் மென்நகலையும் (SOFT COPY) அட்டைப் படத்தையும் vallamaieditor@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    Share