– நாங்குநேரி வாசஸ்ரீ

நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்

                   40.. கல்வி

குறள் 391:

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

கத்துக்கிட வேண்டியத தப்பில்லாம கத்துக்கிடணும். பொறவு என்ன கத்துக்கிட்டோமோ அதுபடி நடக்கணும்.

குறள் 392:

எண்ணென்ப ஏனை யெழுத்தென்ப இவ்விரண்டுங்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு

எண்ணும் , எழுத்தும் வாழுத உசிருங்களுக்கு இருக்க ரெண்டு கண்ணுங்க .(அறிவுக் கண்கள்).

குறள் 393:

கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்

கண் இருக்கு னு சொல்லுதவங்க எல்லாம் படிப்பு படிச்சவங்கதான்.. படிக்காதவங்களுக்கு இருக்க கண்ண மொகத்துல இருக்க ரெண்டு புண் னு நெனச்சிக்கிடணும்.

குறள் 394:

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்

மத்தவங்க கூட மகிழ்ச்சியா சேந்து பழகி பொறவு பிரியும்போது இனி எப்பம் பாப்போம் னு ஏங்குத அளவு மனம் கலங்குதது அறிவாளிங்களோட செயல்.

குறள் 395:

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்

பணக்காரங்க முன்ன ஏழ நிக்கது போல அறிவாளிங்க முன்ன எப்பம் கெடைக்கும் னு ஏங்கி நின்னு படிப்பு கத்துக்கிடுதவங்க தான் ஒசந்தவங்க அப்டி செய்ய வெக்கப்பட்டு நிக்கவங்க படிக்காதவங்க.

குறள் 396:

தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.

தோண்டத்தோண்ட ஊத்துத் தண்ணி ஊறுதது போல படிக்கப் படிக்க அறிவு பெருகிக்கிட்டே போவும்.

குறள் 397:

யாதானும் டாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு

படிச்சவனுக்கு எல்லா நாடும் எல்லா ஊரும் அவனுக்கு சொந்தம் போலதான். பொறவு சாவுத வரைக்கும் படிக்காம நேரம்போக்குதது எதனால.

குறள் 398:

ஒருமைக்கண் தான்னற்ற கல்வி ஒருவற்
கெழுமையும் ஏமாப் புடைத்து

ஒரு பொறப்புல படிச்ச படிப்பு அப்பம் மட்டுமில்லாம அவனுக்கு ஏழு தலமுறைக்கும் ஒதவுத தன்ம கொண்டது.

குறள் 399:

தாமின் புறுவ துலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்

தான் சந்தோசப் படுததுக்கு காரணமா இருக்க படிப்பால ஒலகமும் சந்தோசப் படும் னு தெரிஞ்சுக்கிட்டு படிச்ச அறிவாளிங்க அதவிட அதிகமா படிக்க விரும்புவாங்க.

குறள் 400:

கேடில் விழுச் செல்வங் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை

ஒருத்தனுக்கு படிப்பு தான் அழியாத சொத்து. மத்ததெல்லாம் ஒசந்த சொத்து ஆவாது.

(அடுத்தாப்லையும் வரும்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *