-விவேக்பாரதி

ராஜா வேசம் – சரசுராம்

சரசுராம் எழுதியிருக்கும் சிறுகதைத் தொகுப்பு “ராஜா வேசம்”. பொதுவாக சிறுகதைகள் என்னைப் பெரிதாய்க் கவர்வதில்லை. கதை என்றாலே தேர்ந்தெடுத்து வாசிப்பவன் நான். இந்தப் புத்தகத்தின் சில கதைகளை வாசிக்கும்போதே, முழுவதுமாய் வாசித்துவிட வேண்டும் என்று தோன்றிவிட்டது. அத்தனை வசீகரம் இவரது கதைகளில் எவ்விடத்தும் குறையாமல் காணப்படுகிறது. சற்றும் எதிர்பாராக் கோணங்களில் அமைந்திருக்கிறது ஒவ்வொரு கதையும். ஆனால் நாம் அந்த நிலைகளைப் பற்றி ஒருமுறையேனும் வாழ்வில் கேள்விப்படாமல் இருந்திருக்க மாட்டோம்.

மகனுக்காக பாரட்டை மறுத்த அண்ணாமலையும், தன் சோகத்தை மறைத்த பார்வதியும் கண்முன் நிற்கிறார்கள். என்னுடைய இந்த இருபதாம் வயதில், நானும் என் சமூகமும் எங்கள் பெற்றோர்களை எப்படிக் காக்க வேண்டும் என்பது அதிலே பாடமாக வருகிறது.

பாட்டி சொல்லாத கதை நம் அனைவரின் வாழ்விலும் நிகழும் தருணம் என்பது ஸ்பாய்லர். இதனை இங்கே வைப்பது எனக்கு மகிழ்ச்சியான செய்தி தான். என் பள்ளிக்கால பேருந்து நிறுத்த நண்பர்களை இப்போது சில டிப்போக்களில் பார்க்க முடியுமா என்று தேடிக் கொண்டிருக்கிறேன்.

அனைத்துக்கும் முத்தாய்ப்பு அந்த ராஜா வேசம் கட்டிய கபிலன் தான். காதில் கேட்ட நிறைய செவிவழிச் செய்திகளோடும், நேரில் கண்ட சிலரின் வாழ்க்கையோடும் சரசுராமின் கபிலனையும் நர்மதாவையும் ஒப்பிட்டுப் பார்க்க முடிந்தது. மகாபாரதக் கதாப்பாத்திரங்களின் நடத்தை முரண், அழகு முரண்.

ஒவ்வொரு கதையையும் இப்படிச் சொல்லித்தான் ஆகவேண்டும், அத்தனை கதைகளும் அவ்வளவு சிறப்பு வாய்ந்தவை.

பொதுவாக கதைகளில் அதீத காதல் என்ற பெயரில் சில்மிஷங்களோ இல்லை வெற்றுக் கற்பனைகளையோ மட்டுமே சொல்லிக்கொண்டு வரும் கதைக்காலம் மாறியிருக்கிறது. சரசுராம், சிறுகதைகளைக் குறித்த என் கண்ணோட்டத்தை மாற்றி இருக்கிறார். பிரம்மாண்டம் என்று சொல்லும்படிக்கான கதைக்கருவோ, வார்த்தை ஜாலமோ இல்லாமல் அமைந்திருக்கின்றன கதைகள். மொத்தமாய் சரசுராம் அருகில் அமர்ந்து கதைகளைக் கேட்ட உணர்வு. அத்தனை இலாகவம், தெளிவு, எளிமை மற்றும் எதார்த்தம். ஒவ்வொரு கதையும் பல இரவுகளை விழுங்கும் திறன் கொண்டவை. வாசித்தல் யோசித்தலாக வினை பெயரும் சந்தர்ப்பங்கள் நிறைய உண்டு.

எந்தவொரு இடத்திலும் சமரசம் ஆகாத கண்ணியம் – ராஜா வேசம்.

புத்தக விமர்சனமாக வரவிருக்கும் இந்தத் தொடரில் தங்கள் புத்தகம் குறித்த விமர்சனம் இடம்பெற வேண்டில் தங்கள் புத்தகத்தின் மென்நகலையும் (SOFT COPY) அட்டைப் படத்தையும் vallamaieditor@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *