-நாங்குநேரி வாசஸ்ரீ

நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 38

38.ஊழ்

குறள் 371:

ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்று மடி

பணம் சேக்கணும் னு விதி இருந்தா அத சேக்கதுக்கு  நாம முனஞ்சி செய்யுவோம். இருக்கதும் கைவிட்டு போவணும் னு விதி இருந்திச்சின்னா சடவு தான் உண்டாவும்.

குறள் 372:

பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூ ழுற்றக் கடை

தாழ்ந்து போவணும்னு விதி இருந்தா மனுசனுக்கு புத்தி கெட்டுப் போவும். வாழ்க்கைல ஒசரணும்னு விதி இருந்தா புத்திசாலித்தனம் வளரும்.

குறள் 373:

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்

ஒருத்தன் எம்புட்டு ஒசந்த புத்தகங்கள வாசிச்சாலும் தலையெழுத்து சரியில்லன்னா அது அவன் மண்டக்குள்ள ஏராம சொந்த புத்தி தான் நெலைக்கும்.

குறள் 374:

இருவே றுலகத் தியற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு

ஒலகத்தோட இயற்கை நிலைங்கது விதியால ரெண்டா இருக்கு. . ஒருத்தர பணக்காரரா ஆக்குததும் இன்னொருத்தர அறிவாளியா ஆக்குததும் தான் அந்த வேத்துமை.

குறள் 375:

நல்லவை யெல்லாஅந் தீயவாந் தீயவும்
நல்லவாஞ் செல்வஞ் செயற்கு

விதியால நல்லது செய்ய முனையுத சமயம் அது தீமயா முடியுததும்,  தீம செய்ய முனையுதப்போ நல்லதா மாறிக்கிடதும் நடக்கும். . .

குறள் 376:

பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம

தனக்கு ஒடமையில்லாத பொருள எங்ஙன பொதிஞ்சு வச்சி காத்தாலும் தங்காது. ஒடமையுள்ள பொருள எங்க தொலைச்சாலும் அது விட்டு போவாது.

குறள் 377:

வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி
தொகுத்தார்க்குந் துய்த்த லரிது

முனஞ்சு கோடிச் சொத்து சேத்தாலும் கடவுள் விதிச்ச விதிப்படி தான் அத அனுவிக்க முடியும்.

குறள் 378:

துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியு மெனின்

துன்பத்த அனுவிக்கணும் ங்குத விதி ஏழைய தடுக்கலன்னா   ஒண்ணுமில்லாத அவன் துறவி ஆயிருப்பான்.

குறள் 379:

நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்

நல்லது நடக்குதப்போ நல்லது னு நெனைக்கவங்க தீயது நடக்குதப்போ துக்கப்படுதது ஏன்?

குறள் 380:

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்

விதிய விட வலிம னு வேற இல்ல. விதிலேந்து தப்பிச்சிக்கிடலாம்னு நெனச்சி வேற வழில போனாலும் அங்கயும் அது வந்து நிக்கும்.

 

(அடுத்தாப்லயும் வரும்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *