-கவிஞர் இடக்கரத்தான்

நிற்பது வீழும் நடப்பது வாழும்
நினைவில் வையுங்கள் – உயர்
கற்பனை தன்னை மெய்யாய் ஆக்கிடும்
காரியம் செய்யுங்கள்!

எண்ணம் தன்னை உயர்வாய் வைப்பின்
என்றும் ஏற்றம்தான் – பிறரை
புண்ணெனச் செய்யும் புன்மைச் செயல்கள்
புயலின் சீற்றம்தான்!

வெள்ளி நிலாபோல் குளிரைப் பொழியும்
வார்த்தை கொட்டுங்கள் – நலம்
அள்ளியும் தருமது அழியாப் புகழை
அழகாய் எட்டுங்கள்!

கீழே விழினும் அருவியைப் போன்று
குளிர்மழை பொழியுங்கள் – பிறர்
வாழும் வகையில் விரிந்த உள்ளம்
வைத்தே வாழுங்கள்!

இல்லை என்னும் வார்த்தை எம்மிடம்
ஏதெனப் பேசுங்கள் – மலரும்
முல்லை போன்று வளைந்து இருப்பினும்
மணமும் வீசுங்கள்!

உலகும் ஊரும் உயர்வாய்ப் போற்றிட
உயர்ந்து நில்லுங்கள் – மிக
இலகும் உள்ளம் கொண்டு உலகினை
எளிதாய் வெல்லுங்கள்!

தீதும் நன்றும் பிறரால் வராது
பேருண்மை – பொய்மை
சு+தும் வாதும் முற்றும் தள்ளியும்
சேர்ப்பீர் உயர்நன்மை!

அடுத்தவர் வென்று அகமகிழ்ந் தாடல்
அழகும் தானில்லை – வெற்றி
தொடுத்தேன் என்னும் தலைக்கனம் பள்ளம்
தள்ளியும் தரும்தொல்லை!

பணிவில் பெருமை கொள்ளல் என்பது
பண்புடைச் செயலாகும் – மனத்
துணிவே பெரிதென அகந்தையில் மிதத்தல்
துயரப் புயலாகும்!

பணியும் நாணல் பாயும் புயலைப்
பணியச் செய்துவிடும் – உயர்
பணிவைக் காட்டா பனையோ புயலைப்
பகைத்தே பொய்த்துவிடும்!

அறமும் அறிவும் இருகண் என்பதை
அகமும் வைத்திடனும் – நம்
புறமும் அகமும் ஒன்றெனப் போற்றின்
பேதம் பொய்த்துவிடும்

விதியால் தாழ்வுறும் நிலையில் பிறரிடம்
வீழுதல் மிகச்சிறுமை – கூர்
மதியால் விதியை வென்று எழுதல்
மானுடத்தின் அருமை!

புத்தன் ஏசு காந்தி என்றுனைப்
புவிகை தட்டட்டும் – இவன்
சுத்த மனத்தினன் எனஊர் போற்றிட
சுகமும் கொட்டட்டும்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *