Blog

  • உதவி நிற்போம் !

            –எம். ஜெயராமசர்மா – மெல்பேண்

              மாண்டவர் கணக்கை எண்ணில்
              மனமெலாம் கலங்கு திப்போ
              மீண்டவர் வாழ்வு கூட
              வீதியில் நிற்றல் ஆச்சே!

              ஆண்டவன் கணக்கில் யாவும்
              அப்போதே இருக்கு என்று
              தோன்றிடும் வண்ணம் பேசும்
              துடுக்கினைக் கேட் கின்றோமே!

              இயற்கையின் சீற்றம் வந்து
              இரக்கத்தை எடுத்து விட்டுத்
              துயரெனும் பரிசைத் தந்து
              துவம்சமே செய்த தங்கே!

              நேபாள மக்கள் வாழ்வில்
              நீண்டதோர் துயர ஆறு
              ஓடிய செயலைக் கண்டு
              உலகமே பதறிப் போச்சு!

              துன்பத்தில் ஆழ்ந்து நிற்பார்
              துயரெலாம் துடைக்க வேண்டும்
              அன்புடன் ஒன்று சேர்ந்து
              அனைவரும் உதவி நிற்போம் !

    Share
  • முதிர்கன்னி

    -துஷ்யந்தி, இலங்கை

    பெண்ணென்று பிறத்தல்
    பெரும் பாக்கியமாம் பூமியிலே
    நானும் பிறந்தேன் பெண்ணாக…

    ஆசைகளோடு மலர்ந்தேன்
    அரும்புகளாக எண்ணங்களை
    என்னுள்ளே வளர்த்தேன்…
    புரிந்துகொள்ள இப்பூமி
    ஏன் தவறிப்போனதோ…?

    பெண்பார்க்கும் படலங்கள்
    எத்தனை என் வாழ்விலே…!
    வந்தவரெல்லாம் என்
    வதனத்தைப் பார்த்தார்களா?
    சீர்வரிசைக்கான பண
    அடுக்குகளையே பார்த்தார்கள்
    பணத்திற்காய் விற்கப்படும்
    பொருளாகினாளா பெண்..?
    இல்லை சீர்வரிசை கொண்டுவரும்
    லொத்தர் சீட்டாகவே பெண்..!

    காலங்கள் என்னைக்
    கனியவைத்ததால் முதிர்கன்னியாய்
    முழுமையடையாப் பெண்ணாய்!

    பணத்தைப் பார்க்கும் ஆண்களோ
    அழகிய மனத்தைப் பார்க்கவில்லையே!
    குணம் இருக்கும் பெண்களும்
    இன்று மணம் இல்லாப் பூக்களாய்..!

    தேனாய்ப் பேசி தேநீர் சுவைத்து
    வேண்டாம் என்று வார்த்தை சொல்லி
    ஊரார் மத்தியில் தாழ்த்தும்
    முறைமாறா ஆடவர் உலகிலே
    நடமாடும் வரையில் பெண்கள்
    வலியை ஏற்பது விதி
    காலம் செய்த சதி
    அதுவே மரண வலி..!!

     

    Share
  • அம்மாவை வணங்காது உயர்வில்லையே…!

    -ஜெயஸ்ரீ ஷங்கர்

    பெற்றவள் நீ எனக்கென்றும்
    நேரில் கிடைத்திட்ட தெய்வ தரிசனம்
    நினைவு தெரிந்த நாளாய்
    என்னுள் உறைந்து உணர்த்தும் பரப்பிரம்மம்!

    கோபுரத்துக் கலசம் போலுயர்ந்த
    உந்தன் நிலை எனக்கெட்டாத அதிசயம் 
    ஆயிரம் ஜென்மங்கள் தொடர்ந்து 
    செய்திட்ட மாதவமே உன்னோடு எந்தன் சம்பந்தம்!

    பெற்ற குழந்தைகள் அத்தனைக்கும்
    சூரியகிரணமாய்ப் பகிர்ந்தளிக்கும் உந்தன் பக்குவம்
    அன்பையும் கண்டிப்பையும் ஒருங்கெனவே
    காட்டி அம்மையப்பனாக மாறும் சாத்தியம்!

    பசியையும் துன்பத்தையும் காணவிடாது
    உனக்குள் அழுத்திக் கொண்ட தியாகச்சின்னம்
    கஷ்டத்திலும் சிரித்த முகம் மாறாமல்
    நல்லதையே போதித்த இன்னொரு போதிமரம்!

    நாங்கள்  வண்ண ஆடையில் வலம்வர
    உந்தன் எண்ணம்  எங்களோடு  உலாவரும்
    ஆனந்தமோ ஆர்ப்பரிப்போ ஏதுமின்றிக்
    கிடைத்ததை ஏற்று வாழும் நீயே வெற்றியின் வடிவம்!

    பருவகாலங்கள் கடந்து செல்ல எங்களின்
    நிகழ்கால மாற்றங்களைத் தாங்கும் நீ அன்புமேகம்
    பார்த்திருந்தபோதே தலையுயர்ந்து நின்றபோதிலும்
    குழந்தையாய் எண்ணி நேசிப்பது நீ மாத்திரம்!

    கூட்டைவிட்டு  நாங்கள் ஆனந்தமாய்ப் பறந்திடத்
    தனிமையில் அழுமே ஏக்கத்தில் உன்னிதயம்
    அன்போடு சோறூட்டியே  பழக்கப்பட்ட நீ 
    ஊட்டிவிட எவருமின்றிச் சோர்வாய் பாவம்! 

    இன்றாவது  இவள்  வருவாள்  என்று வழிமேல்
    வைத்த விழியாய்க் காலம் நோக்கும் கர்மயோகம்
    கைபேசி என்றொரு மந்திரப்பாவை
    இல்லையேல் நான்  வெறும்  நடமாடும் எந்திரம்!

    வாழைபோல் உந்தன்  இயல்பு இனி
    யார் பெறுவார் இதுபோல் அருமருந்து?
    தாயெனும் சொல்லுக்குள் இத்தரணியே
    அடங்கிடும் அதிசய ஆகர்ஷண மந்திரம்!

    வளர்ந்த பின்னே பிரிந்திட்டாலும்
    எண்ணத்தில் எந்நாளும் வாழவாழ்த்தும் இருதயம்
    என்பெயர் அழைத்தே மறந்து போனதுன்  
    பெயரை நீயறியாது அழைக்கும்  எனதுள் மண்டபம்!

    மூப்பும் திரையும் உன்னை மென்று விழுங்கினாலும்
    உந்தன் குரல் சொல்வதெல்லாம் அனுபவ வேதாந்தம்
    கற்க வேண்டும் நான் கூடுவிட்டுக் கூடுபாய,
    ககன மார்க்கத் தந்திரங்கள் உனக்காக மாத்திரம்!

    அம்மா அம்மா எனவே காகமெனக் கரையும்
    மனமிங்கு தேடுது வாழ்வின் ஜீவாதாரம்
    இமைக்கும் விழிக்குமான தூரம் நமது
    இருந்தும் காணத் தடுக்குது இகபரம்!

    காலத்தால் நானும் ஓர் தாய் ஆயினும்
    உள்ளத்தில் உன் காலடியில் உருகும் மனம்
    உருளும் பூமியில் மாறிவரும் பிறவிகளில்
    மறுபடி உனக்குள்ளே எடுப்பேன் தேகம்!
    தோன்றியதை எழுதியதில் ஆணித்தரம்
    சரியென்றால் நீ தருவாய் தலையசைப்பில் சம்மதம்!
     

    Share
  • படக்கவிதைப் போட்டி 11-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    இந்த அழகிய புகைப்படத்தை எடுத்துத்தந்துள்ள திரு. கோகுல்நாத், இதனைப் போட்டிக்கான படமாகத் தெரிவுசெய்துதந்த வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமிகு. சாந்தி மாரியப்பன் இருவருக்கும் வல்லமை மின்னிதழின் நன்றி.

    11212317_828493147204886_734930307_n

    அலையாடும் கடற்கரையில் அலைபேசியோடு உரையாடிக்கொண்டிருக்கும் இந்த ஆடவனுக்காக அருகிருக்கும் ஆரணங்கு ஆசையாய்க் கட்டியிருக்கும் இந்த மணற்கோட்டையைப் பார்க்கும்போது இவள் மனக்கோட்டையின் சாமி இவன் தான்போலும் என்ற எண்ணம் நம்முள்ளும் எழுகின்றது.

    நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
    நீரினும்
    ஆரள வின்றே சாரற்
    கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
    பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.
    (குறுந்: 3)

    என்று தலைவனோடு தான்கொண்ட நட்பின் அகலத்தை, ஆழத்தை, உயரத்தை உரைத்தாள் அன்றைய குறுந்தொகைக் காதலி. இன்றைய குறுஞ்செய்தி(கால)க் காதலியோ தன் எண்ணங்களைக் கடலோரத்தில் அழகுற மணற்கவிதையாய்ப் படைத்திருக்கின்றாள்.

    எந்தப் படத்தைத் தந்தாலும் துள்ளிக்கொண்டு கவிதை எழுதும் வல்லமை பெற்ற நம் கவிஞர்குழாம் ஓர் அருமையான காதற்களத்தை விட்டுவிடுவரா என்ன? புகுந்துவிளையாடியிருக்கிறார்கள் இம்முறையும்!

    என்னைக் கவர்ந்த கவிதைவரிகள் முதலில்…

    இருவேறு சிற்பங்களாய் மாறிய பெற்றோரின் கதையுரைக்கும் திரு. கவிஜியின் வரிகள்…

    …குழந்தையின் 
    கனவில் வந்து கொண்டிருப்பது
    நேற்று மாலை -அது 
    தெரியாமல் 
    அழித்து விட்ட 
    மண் சிற்பத்தின் அழுகையாகக் கூட 
    இருக்கலாம்…
    எதுவும் பிடிபடாத 
    யோசனையில் 
    நாங்கள் சிற்பமாகவும்
    முடியாமல்… 
    சிணுங்கிடவும் முடியாமல் 
    இரண்டு பக்கமும்
    அமர்ந்து கிடக்கிறோம்
    ஒரே  மாதிரியான 
    இரு வேறு
    சிற்பமாக…

    *****

    கண்மணியின் கவலை போக்க இணையத்தில் வழிதேடும் காதலனைக் கவினுறக்காட்டும் திருமிகு. கீதா மதிவாணனின் வரிகள்…

    அலையாடிய அழகுப்பாதங்கள்
    அலுத்தோய்ந்து கிடக்க…
    மணலளைந்த மலர்க்கரங்கள்
    கன்றிச் சிவந்திருக்க… 
    கனவு இல்லமொன்றை கடற்கரையில் 
    கட்டுகிறாள் என் காதல் கண்மணி!
    […]
    கவலை வேண்டாமடி கண்மணி!
    உன் கனவை நனவாக்கும் வழிகளைத்தான்
    இணையத்தில் தேடிக்கொண்டிருக்கிறேன் இப்போது!

    *****

    ”கலைமகளிவள் கட்டிய மணற்கோட்டை இவள் மனக்கோட்டைதானோ? என்ற காதலனின் வினாவைக் கவிதையாக்கியிருக்கும் திரு. ரா. பார்த்தசாரதியின் வரிகள்…

    கல்லிலே கலைவண்ணம் கண்டவனின் மகள்
    மணலிலே கோட்டை கட்டி பெருமிதம் அடைந்தாள் 
    அவள் காதலனோ வாழ்வில் கோட்டை கட்ட நினைக்கின்றான் 
    […]
    முனைப்போடு நீ கட்டிய மணற்கோட்டை 
    என்னை நினைத்து கட்டிய மனகோட்டையா ! மணற்கோட்டையா !

     *****

    கதிரொளி தெளிக்க, மெல்லிய தென்றல் தீண்டக் காதலியிவள் தன்னன்புக் காதலனுக்காய்க் கட்டிய மண்மாளிகையை நமக்கும் காட்டுகின்ற திருமிகு. ரேவதிஸ்ரேயாவின் வரிகள்…

    ஒரு பெண் தன் காதலனுக்காக கட்டிய ஓவியம் !
    கார்மேகம் சூழ !சூரியஒளி தெளிக்க !மெல்லிய தென்றல் தீண்ட !அலை கடல் ஓசை இசைக்க !உனக்கென ஆசையோடு இந்த மண்மாளிகை உனக்கு பரிசாக தர கட்டியுள்ளேன் கொஞ்சம் திரும்பிப் பாரடா !

    *****

    சின்னச் சின்னக் கோட்டைகட்டிச் சிங்காரமாய் வாழ வழிசொல்லும் பெண்ணைக் கண்முன் நிறுத்தும் திருமிகு. லட்சுமியின் வரிகள்…

    சின்னச் சின்ன கோட்டை கட்டி
    சிங்காரமாய் வாழ்ந்திடுவோம்!
    சிறிய செல்லிடப்பேசியிலே
    சின்னதாகப் படம் பிடிப்பாய்!
    சின்னப் பெட்டி அல்ல உன் உறவு!
    […]
    வண்ண வண்ண வானவில்லாய்
    வானம் எட்டும் ஆசைகளால்
    இல்லறம் கசந்திட வழிவகுக்கும்
    ஈந்து மகிழ்ந்து சிறப்புடனே
    இருப்பதைக் கொண்டு வாழ்ந்திட்டால்
    ஈசனும் நமக்குத் துணையாவான்

    *****

    ”கணினித் தொழில்நுட்பத்தில் தன்னைத் தொலைத்த காதலன், காதல் தொழில்நுட்பத்தை முற்றும் மறந்தானோ…?” என்று குமுறும் கோதையின் வேதனையை வெளிப்படுத்தும் திருமிகு. ஜெயஸ்ரீஷங்கரின் வரிகள்…

    …இன்றோ பௌர்ணமி…இருந்தும் ஏனோ
    அமாவாசையாய் நீ முகம் கவிழ்த்து
    ‘அன்ராயிட்’டுக்குள் உன்னை அடமானம்
    வைத்துக் கொண்டாய்…!
    உன்னோடு வாய் ஓயாமல் பேசுபவள்
    உனது ‘ஸ்மார்ட்’ கைபேசி..!
    உன்னையே நேசித்து தோற்றுப் போனேனா
    இந்த வாய்பேசி..?
    உனதழகு ‘வொய்ஃபை’ ஓரந்தள்ளி
    அழ வைப்பவள் அந்த ‘ஆப்பிள்’ அழகி…
    அவளே எனக்கு ‘வைஃபை’ அரக்கி..!
    நீ ‘வாட்ஸ் அப்’பில் உறைந்து கிடக்கும்
    வேளையில் நானும் ‘வாட்ஸ் நெக்ஸ்ட்’
    என்று கேட்காமல் உறங்கிக் கிடப்பேன்…!

    *****

    நிஜவுலகின் நிலைதன்னை யதார்த்தமாய் எடுத்தியம்பும் திரு. ஜெயபாரதனின் வரிகள்…

    ஒருபுறம்
    ஆக்கவினை புரிந்து
    கலைத்துவ
    ஆலயம் கட்டுவாள்
    கன்னி ஒருத்தி !
    எதிர்ப்புறம் 
    எதற்கு அதுவென வெறுத்து
    எதிர்ப்பான்
    காளை ஒருவன் !
    இருவர்
    போராட்டத்திற்கும்
    இடையே
    அழிக்கப் பயமுறுத்தும்
    அடுத்தடுத்து
    ஆழிப்
    பேரலைகள் ! 

    *****

    குறும்பாக்களில், மனிதர்களின் உள்ளக் குறிப்புகளைக் குறும்பாக உலகுக்குணர்த்தும் திரு. ருத்ரா. இ. பரமசிவனின் வரிகள்…

    கனவுகளை பிசைந்தனர்.
    கையில் வந்ததோ
    கடலின் சதை.

    அகங்களில் அணைத்திருக்க‌
    முகங்களில் பட்டிமன்றம்.
    மண முறிவா? மண மகிழ்வா?

    பிரம்மன் தோற்றான்.
    மனிதன் வென்றான்.
    உளி இங்கே உள்ளம் அல்லவா.

    *****

    ”தன்னுடைய பிறந்தநாள், ஊடலின் பிறந்தநாளாய் மாறிப்போனதில் மங்கைக்கு வருத்தம்தான்! காதலன் ஊடல்தீர்க்கக் கோட்டை கட்டுகிறாள் மணலில்!” என அழகிய கதைசொல்லும் திரு. பழனிச்சாமியின் வரிகள்…

    அலைகடலின் ஓரத்தில்
    அந்திசாயும் நேரத்தில் 
    சந்திக்க வந்தவனோ
    சற்றேதான் தூரத்தில்
    மற்றொரு நாளென்றால்

    மன்னிப்புத் தந்திடுவாள்
    இன்றைக்குப் பிறந்தநாள்
    இயற்கையின் பேரழகில்
    மயங்கியே  ரசித்திடஓர்

    மந்திரம் சொன்னவளை
    சந்தித்த வேளையிலா
    சச்சரவு எழவேண்டும் 
    […]
    தவிக்கின்ற பெண்ணைவிட்டு
    தனியேதான் இருக்கின்றான்
    இனிமையான பொழுதுதான்
    இம்சையைத் தருகிறது

    *****

    ”மழைவருமுன்னே இம்மண்சிற்பத்தைப் படமெடுத்துவிடு மன்னவா! அசலழிந்தாலும் நகலிருக்கும் அலைபேசியில் என்றும்!” எனும் காதலியின் கோரிக்கையைக் கூறும் திருமிகு. சியாமளா ராஜசேகரின் வரிகள்…

    அடிவானம் கருத்திருச்சு
    அடைமழைக்கும் வாய்ப்பிருக்கு 
    அலைகளெல்லாம் ஆர்ப்பரித்து 
    அருகினிலே வருகிறது
    அச்சமென்னுள்  தோன்றிடுது 
    அழிந்திடுமோ சிற்பமென ….!
    அதற்குள்நீ சீக்கிரமாய்  

    அலைபேசிக் காமராவில் 
    அடுக்கடுக்காய்ப் படம்பிடிப்பாய்  
    அசலழிந்து போனாலும் 
    அற்புதமாய்ப்  பதிந்தநகல் 
    அழியாது ஆயுளுக்கும் …!!

    *****

    காதல் தலைவனின் புறக்கணிப்பைத் தாளமாட்டாத தலைவியின் மனப்போராட்டத்தை விளக்கியிருக்கும் திரு. செல்வக்குமார் சங்கரநாராயணனின் வரிகள்…

    விளையாட்டாய் நினைத்து நீ 
    வேடிக்கை பார்ப்பதற்குமோ 
    தகுதியை இழந்திருக்கிறது 
    உனக்கான என் கனவு மாளிகை
    அலையது கூட இதைக் காக்க

    முன்னேற்றவில்லை அன்பே! 
    […]
    எவ்வளவு விசித்திரம் அன்பே இந்தக் காதல் 
    எனக்கான நீ உனக்கான யாரையோ 
    தேடுவதை 
    என் கண் முன்னே காட்டிக் கரைய வைக்கிறதே!

    *****

    அற்ப ஆசைகளை விடுத்து அன்பினில் ஒன்றாய் இணைய ஆசைக்காதலனை அழைக்கும் ஆயிழையை அறியத்தரும் திரு. செண்பக ஜெகதீசனின் வரிகள்…

    சிற்பம் அழகாய் மணலினிலே
         செய்தவள் உள்ளம் பாராமல்,
    கற்பனை உலகில் சஞ்சரிக்கும்
         கணவன் மனமும் மாறாதோ…
    அற்பமாம் ஆசைகள் புறந்தள்ளி
         அன்பிலே ஒன்றாய் இணைந்தாலே,
    கற்பனை மிஞ்சிய நல்வாழ்வு
         கனிந்திடும் இனிய இல்லறத்திலே…!

    *****

    அலைபேசியில் மூழ்கி, ஆசையாய் மனைவி வடித்த கலைவண்ணத்தைக் காணமறந்த கணவனின் நிலைக்காகக் கவலும் திருமிகு. தமிழ்முகிலின் வரிகள்…

    நீண்ட நெடிய தொலைபேசி உரையாடல் முடிந்து
    மெல்ல தலை திருப்பி பார்க்கும் கணவனுக்கு
    மனைவியின் கைவண்ணத்தில் மண் கோட்டை
    காதல் கோட்டையாய் காட்சி தருமா ? – அல்லது
    கவனக் குறைவாய் கைபட்டு – எழிலாய் எழுந்திருக்கும்
    ஆசைக் கோட்டையும் சரிந்து விட – அதை
    அறியக்கூட முடியாத அளவுக்கு
    பணிகளும் சுமைகளும் அவனையே
    ஆக்கிரமித்து விடுமா ?

     *****

    ”கணவனின் துணையோடு தான் வாழவிருக்கும் இல்லத்திற்கான மாதிரி வடிவமே இது!” எனும் முன்னுரையோடு மங்கையொருத்தி தன் ஆசைகளைப் பட்டியலிடுவதைப் பகரும் திரு. அமீரின் வரிகள்…

    மணல்கொண்டு
    மனக்கோட்டை கட்டவில்லை சுந்தரா
    உன் துணைகொண்டுவாழ
    மாதிரி கோட்டை கட்டுகிறேன் நமக்காக!
    […]
    வடக்கு பார்த்த வாசல்
    மேற்கில்  பரந்த தோட்டம்!
    வடக்கு பக்கம் நீர்நிலை
    தெற்கு பக்கம் பெட்டக அறை!
    […]
    ஐந்தடியில் தலைவாசல்
    பூவேலை கதவினில்!
    பொன்வண்ண வெளிப்பூச்சு
    இளவண்ண உட்பூச்சு!
    திரைசீலை தொங்கவிட்டு
    அழகாய் அதை மடித்துகட்டி!
    என்னிரண்டு அறைகளோடு
    மிளிரவேண்டும் நவீனகலை!

    *****

    ”வாரநாட்கள் முழுவதும் அலுவலகத்திலேயே உழலும் இவர்களுக்கான ஒரே பொழுதுபோக்கு இந்தக்கடற்கரையும், மணல் விளையாட்டும்தான்! இவர்களைத் தொந்தரவு செய்யாதீர்கள்!” என்று அன்புக் கட்டளையிடும் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரனின் வரிகள்…

    சின்ன வயசு சந்தோஷத்தை
    சிறைபடுத்தி மண்ணிலே
    கலையுணர்வு  காண
    […]
    தங்களை தாங்களே
    புதுப்பித்துக்கொண்டிருந்தார்கள்
    அடுத்த  நாள்  விடியலுக்காக
    பாவம் அவர்கள்
    வேலைப்பளுவில்
    இந்த சின்ன சந்தோஷத்திற்காக
    கடற்கரை  மணலில்  ஹாயாக!
    யாரும் டிஸ்டர்ப் செய்யாதீர்கள்

    *****

    ”புவியிலே நான் மணல்மாளிகை கட்டுகிறேன், நீ அப்புறம் திரும்பி (அலைபேசியில்) ஓர் கவிமாளிகை கட்டேன்!” என்று காதலனுக்கு யோசனை சொல்லும் காதலியைக் காண்பிக்கும் திருமிகு. வேதா. இலங்காதிலகத்தின் வரிகள்…

    வார்த்து முடியும் வரை
    பார்க்காது இந்தப் புறம்
    சேர்த்திடு காதல் வரிகள்.
    காதல் பித்தம் ஏறியும்
    கலைப் பித்து முற்றிட
    காவற்காரனாய் நீ மாற
    ஆவல் தீர்க்கிறேன் நான்.

    *****

    தன் காதல் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போய்விடுமோ? என்று அஞ்சிக் கண்ணீர்சிந்தும் காரிகையின் அவலத்தை, எண்ணத் தூரிகைகொண்டு தீட்டியிருக்கும் திரு. கொ. வை. அரங்கநாதனின் வரிகள்…

    அன்று
    கடலோரம் நீ
    காதலால் கட்டிய கோட்டை
    மணல் கோட்டையாகுமென
    மனதாலும் நினைக்கவில்லை
    உச்சி சிலை

    உயிர் காக்கும்
    சாமி என்றாய்
    மீசை இரண்டும்

    நம் ஆசை காக்க
    ஆண்டவன் இட்ட
    வேலி என்றாய்
    […]
    உன் சிரித்த முகத்தையும்
    சிந்திய சொற்களையும்
    கைபேசியில் அடைத்து வைத்து
    கண்ணீரில் வார்த்தெடுத்து
    தினமும்
    கனவுகளில் கரைகிறேன்

    *****

    ”கடற்கரைக் காதற்படகிற்கு எவரோ துடுப்பு?” என்று வினாத்தொடுக்கும் திரு. மெய்யன் நடராஜின் வரிகள்…

    வெளிச்சத்தில் நின்று இருளுக்குள் செல்ல 
    உளியற்ற எண்ணம் செதுக்கும் –களிப்பற்ற 
    பாதை கடக்கும்  பயணமன்றோ காதலெனும்  
    போதை சரிக்கும் புயல்.

    அணிந்த சிவப்பு அறிவிப்பை ஏற்றுத் 
    துணிந்து துடியாய் துடிக்க – கணித்த 
    கடவுளின் நீதி கடற்கரை காதல் 
    படகிற் கெவரோ  துடுப்பு?

    *****

    வாழ்வின் சூட்சுமத்தை, வாழ்வியல் நெறிதன்னை வகையாய் உரைத்திடும் திரு. சுரேஜமீயின் வரிகள்…

    வாழ்வில் இருபக்கம்
    வசந்தம் ஒருபக்கம்
    வாடும் மறுபக்கம்
    வளைத்துப் பழகிக்கொள்!
    வாழ்வே சுகமாகும்

    வளர்தமிழ் தினம்படித்து
    வள்ளுவம் ஏகிடுவாய்
    வாழ்வின் நெறிவிளங்கும்!
    […]

    மணலினின் தேடாதே
    மானுடம் தேடிஎடு
    காற்றினில் கலந்துவந்து
    கடவுளாய் வாழ்த்திடுவேன்!!

    வீடுகட்ட வேண்டும் எனும் தன் ஆசைக்கனவின் வெளிப்பாடாய் மணல்வீடுகட்டி மகிழ்ந்திருக்கும் மங்கையின் மனநிலையை விவரிக்கும் திருமிகு. ராதா மரியரத்தினத்தின் வரிகள்…

    நேற்றுக் கடற்கரைக்குச் 
    சென்று மண் அளைகையிலே
    வீட்டுக் கனவு வந்து 
    கையது தன்னாலே
    கட்டியது மணல் வீடு
    கனவினில் கண்டது
    நிஜத்தினில் வந்து நிற்க​
    பனித்தது எந்தன் கண்கள்
    என் கனவு வீட்டைப் பாரீர்

    *****

    மேட்டு நிலத்தினிலே மணற்கோட்டை கட்டும் குமரியின் குதூகலத்தைக் காட்டும் திரு. சிவராமனின் வரிகள்…

    ஆட்டமும் பாட்டமும் அன்போ டியைந்திட்டு
    வாட்டமாய் நாம்வாழ வாசல் பலவைத்து
    மேட்டு நிலத்தினில் மாளிகை போன்றதோர்
    கோட்டையைக் கட்டு கிறேன்

    *****

    அழகிய சொற்களால் கவிதைக்கோட்டைகள் எழுப்பிய உங்களனைவருக்கும் பாராட்டுக்கள் கவிஞர்களே!

    அடுத்த கேள்வி…இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் யார் என்பதே!

    ஆடவனின் முரட்டுப் பிடிவாதத்தையும் அவனிடம் யாசிப்பதே பெண்மையின் இலக்கணம் என்றாகிப் போகும் உள்ளம் சுடும் நிதர்சனத்தையும்  உருக்கமாய் வடித்திருக்கும் ”மணல் வீடு…’எனும் கவிதை என் மனவீட்டைக் கொள்ளைகொண்டது.

    அக்கவிதை…

    ஒவ்வொரு முறையும் 
    காத்துக் கிடக்கின்றேன்
    முகம் காட்ட மறுக்கும் 
    முரட்டுப் பிடிவாதத்துக்குப்
    பின்னான முரண்படுதல்களில் எல்லாம் 
    யாசிப்பவளாக மட்டுமே…

    பூங்கொத்துக்கள் பரிசளிக்கவே
    விரும்புகின்றவள் 
    என்றான போதும்…கீறிடும்
    முட்களைப் பற்றிய 
    முன்னெச்சரிக்கையில்
    மெல்லக் கூம்பி இதழ் 
    உதிர்க்கிறது என் தனிமை…

    கடந்து போன ஒன்றுக்குள் இருந்து
    என்னைத் தொலைப்பவனும்
    தொலைந்து போகும் ஒன்றுக்குள் இருந்து
    என்னை மீட்டெடுத்துக் காப்பவனும்
    என்றாகிப் போன உனக்கு….
    இம்முறையும் பரிசளிக்கிறேன்
    மணலால் செய்த மாளிகை ஒன்றை
    உனக்கான காயங்கள் ஏதுமின்றி 
    வழமை போல கலைத்து விட்டுப் போ….
    எனக்கான நேசத்தில் 
    குறைவற்றுப் போகும் வரை
    உனக்கான முகத் திருப்பலுக்காய்
    முயற்சிக்க வைத்தலில்
    குறை ஒன்றும் இல்லை…

    இக்கவிதையின் ஆசிரியர் திரு. சாயாசுந்தரத்தை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்ந்தெடுக்கின்றேன்.

    அடுத்து, கண்ணீரோடு மங்கையெழுப்பும் மணற்கோட்டையில் கொட்டிக்கிடக்கும் அவளன்பை அழகான சொற்களால் கவிதையாய்த் தொடுத்திருக்கும் திருமிகு. புனிதா கணேசனின் வரிகளும் மனத்தை நிறைத்தன. அவரைப் பாராட்டுக்குரியவராய்க் குறிப்பிட விரும்புகின்றேன்.

    அக்கவிதை…

    கண்ணீர் துகள்களின் சேர்க்கையாய்
    மணல்துகள்கள் அவள் கைகளுள்!
    கைகள் பிசைந்ததில் பிரசவித்துக்
    கொண்டிருந்தன மணல் கோட்டைகள்
    மனக் கோட்டைகளின் பிரதிபலிப்பாய் !
    கண்ணீரின் உப்பும் மணல் துகளில்
    கடல் நீரின் உப்புடன் சேர்ந்தே இருந்தது !
    தொலைத்து விட்ட பிள்ளைப் பிராயத்தைத்
    தேடிக் கொண்டிருந்தன அவள் கைகள்
    சிலையாகும் ஒரு மணல் மாளிகையில்!
    கரை தழுவும் கடல் அலைகள் -அதைக்
    கரைத்தும் செல்லும் யதார்த்தங்கள்
    அவள் ஆழ் மனதின் ஏக்கங்கள் போல
    அழிந்து பொசுங்கித் துகள்கள் ஆக்கலாம்…
    சில பொழுதாவது சிதைந்து போகாத
    அழகியல் நிலையை ரசித்துக் கொண்டே
    நிர்மாணித்துக் கொண்டிருந்தாள் – தன்
    உள்ளக் கிடக்கையைப் பகிரங்கமாக!
    மணல் மாளிகை நிறைத்த அறைகள் யாவும்
    தன் அன்பை நிறைத்திருந்தாள்…அவனோ
    புறமுதுகிட்டே புறக்கணிப்பு நிகழ்த்துகிறான்…!

    கவிஞர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!

    Share
  • எப்போது மலரும்?

    -த.ரூபன், ஈச்சிலம்பற்றைமூதூர், இலங்கை

    வாழ்வில் சுமைகளைச் சுமந்தோம்
    எங்கள் வாழ்க்கையே போராட்டமாக மாறியது
    அவலங்களைத் தாங்கியும்
    குருவிகள் போலக் கூட்டமாகக் கூடுகட்டிச்
    சுகமாக வாழ்ந்து வந்தோம்
    உயிர்களைக் கையில் பிடித்தவண்ணம்
    ஊரூராய் ஓலமிட்டோம்!

    ஒரு நாடு கூட எட்டிப்பார்க்கவில்லை
    சொந்தங்களை இழந்தோம்
    உறவுகளை இழந்தோம்
    இன்று அனாதையாக வீதியில் நிற்கின்றோம்!

    யாரும் செய்யாத துன்பத்தை
    நாம் செய்தோம் இல்லை
    தமிழன் என்ற அடைமொழியால்
    யாவரும் வஞ்சிக்கப்பட்டோம்!
    துஞ்சியவன் புதைகுழியில் படுத்துறங்க
    விஞ்சியவன் எங்களை எள்ளிநகையாடினான்!

    அழுதோம் புரண்டோம் மாண்டோம்
    எங்கள் அவலக்குரல் யாருக்கும்
    கேட்கவில்லை…என்னதான் செய்தோம்?
    கோயிலுக்குப் போனால் கோபுரங்கள்
    சாய்ந்து விழும் வீதிக்கு போனால்
    நடந்த தடம்கூட இல்லை!

    எங்கள் விதியினை யார்இடமும் சொல்லி
    யாரும் கரிசனை காட்டியதில்லை
    கல்லாய் இருக்கும்தெய்வம்கூடக்
    கண்ணை மூடிக்கொண்டு வாழ்கிறார்
    தெய்வமே இப்படி என்றால்
    எங்கள் கதிதான் என்ன நிலை…?

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(71)

    -செண்பக ஜெகதீசன்

    சீரிடங் காணி னெறிதற்குப் பட்டடை
    நேரா நிரந்தவர் நட்பு. (திருக்குறள் – 821: கூடா நட்பு)

    புதுக் கவிதையில்…

    நட்பு என்பது
    நல்லிதயங்களால் வருவது…
    உள்ளத்தால் அன்றிக்
    கள்ளத்தால் புறத்தே
    கொள்ளும் நட்பு,
    அழிக்க உதவும்
    ஆயுதங்களை
    அடித்து உருவாக்கிடும்
    பட்டடை போன்றதே…!

    குறும்பாவில்…

    உள்ளத்தாலன்றிப்
    புறத்தே உருவாகும் நட்பும்,
    ஆயுதங்களை அடித்தெடுக்கும்
    பட்டடையும் ஒன்றே…!

    மரபுக் கவிதையில்…

    ஆக்கம் எதுவும் செய்யாமல்
    அழிவைத் தந்திடும் ஆயுதத்தைத்
    தாக்கி அடித்தே உருவாக்கத்
    தரையில் கிடக்கும் பட்டடைதான்,
    நோக்கம் நல்லதாய் இல்லாமல்
    நெஞ்சில் நஞ்சை வைத்தேதான்
    தாக்கம் உளத்தே தோன்றாத
    தீய வெளிப்புற நட்பதுவே…!

    லிமரைக்கூ...

    பட்டடையது ஆயுதங்களைப் போட்டு அடிக்க,
    அதுபோன்றாகும், இதயம் சேராமல்
    நட்பில் புறத்தேமட்டும் மெய்போல் நடிக்க…!

    கிராமிய பாணியில்…

    நடிக்காத நடிக்காத
    நட்புபோல நடிக்காத,
    மனசுக்குள்ள கள்ளம்வச்சி
    மனம்போல நடிக்காத…

    மனசுமனசு ஒட்டாத
    வெளிப்பொறத்து நட்பெல்லாம்,
    அடிச்சித் தொவச்சி
    ஆயுதஞ்செய்யும் பட்டடதான்
    இரும்புப் பட்டடதான்..

    அதால,
    நடிக்காத நடிக்காத
    நட்புபோல நடிக்காத…!

     

    Share
  • உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே …

    கவிஞர் காவிரிமைந்தன்.

    thanipiravi2

     

    உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே … உழைக்கும் மக்களின் உரிமைக்குரலாக முழங்கும் பாடல்… மே தினத்தில் இப்பாடல் கேட்காத மூலை முடுக்கில்லை தமிழகத்தில்… உழைப்பின் மேன்மை… உயர்வு… அதனால் உருவாக்கப்பட்டவை இவை என்று பட்டியலிட்டுக் காட்டுகின்றார்.

    உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே
    உலகை புது முறையில் உண்டாக்கும் கைகளே
    உண்டாக்கும் கைகளே …

    உழைப்பதினால் கைகள் செக்கர் வானம் போல சிவந்திருந்தது என்று குறிப்பிடும் வகையில் … புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் உள்ளத்தில் பொங்கியிருந்த தமிழ்… கண்ணதாசனிடமும் குடிகொண்டிருந்ததைப் பாரீர்!

    ஆற்று நீரை தேக்கி வைத்து அணைகள் கட்டும் கைகளே
    ஆண்கள் பெண்கள் மானம் காக்க ஆடை தந்த கைகளே
    சேற்றில் ஓடி நாற்று நட்டு களை எடுக்கும் கைகளே
    செக்க வானம் போல என்றும்
    சிவந்து நிற்கும் கைகள் எங்கள் கைகளே

    உலகை உருவாக்குவதில் உழைக்கும் கைகளுக்கு உள்ள பங்கை ஒவ்வொரு வரியிலும் தக்க உதாரணங்களுடன் வகைப்படுத்த… வேர்வைக்கு இன்னொரு
    பெயராக பச்சை ரத்தம் என்று பதித்துள்ள முத்திரை சத்தியமானது.

    பலன் மிகுந்த எந்திரங்கள் படைத்தது விட்ட கைகளே
    பாதை போட்டு உலகை ஒன்றாய் இணைத்து வைத்த கைகளே
    பாரில் உள்ள பெருமை யாவும் படைத்ததெங்கள் கைகளே
    பச்சை ரத்தம் வேர்வையாக
    படிந்து நிற்கும் கைகள் எங்கள் கைகளே

    உலகை புது முறையில் உண்டாக்கும் கைகளையும் … உழைக்கும் மக்களின் ஒற்றுமை பற்றியும்… அவர்கள் ஜாதி மத பேதமின்றி ஆடிப் பாடுவதையும் தேவைப்பட்டால் நாட்டிற்காக கருவி ஏந்தி போர் முனைக்கு ஓடுவோம் என்று சொல்லி… வீரத்தை நெஞ்சில் விதைக்கிறார்.

    உலகம் எங்கும் தொழில் வளர்க்கும் மக்கள் ஒன்றாய் கூடுவோம்
    ஒன்று எங்கள் ஜாதி என்று ஓங்கி நின்று பாடுவோம்
    சமயம் வந்தால் கருவி ஏந்தி போர் முனைக்கு ஓடுவோம்
    தர்ம நீதி மக்கள் ஆட்சி வாழ்கவென்றே ஆடுவோம்…
    நாம் வாழ்கவென்றே ஆடுவோம்…

    தனிப்பிறவி திரைப்படத்திற்காக கவியரசு கண்ணதாசன் எழுதி, திரையில் மக்கள் திலகம் தோன்ற திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன் இசையமைத்த பாடல்… டி எம். சௌந்தரராஜன் குரலில்…

    உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே
    உலகை புது முறையில் உண்டாக்கும் கைகளே
    உண்டாக்கும் கைகளே …

    ஆற்று நீரை தேக்கி வைத்து அணைகள் கட்டும் கைகளே
    ஆண்கள் பெண்கள் மானம் காக்க ஆடை தந்த கைகளே
    சேற்றில் ஓடி நாற்று நட்டு களை எடுக்கும் கைகளே
    செக்க வானம் போல என்றும்
    சிவந்து நிற்கும் கைகள் எங்கள் கைகளே
    (உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே)

    பலன் மிகுந்த எந்திரங்கள் படைத்தது விட்ட கைகளே
    பாதை போட்டு உலகை ஒன்றாய் இணைத்து வைத்த கைகளே
    பாரில் உள்ள பெருமை யாவும் படைத்ததெங்கள் கைகளே
    பச்சை ரத்தம் வேர்வையாக
    படிந்து நிற்கும் கைகள் எங்கள் கைகளே
    (உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே)

    உலகம் எங்கும் தொழில் வளர்க்கும் மக்கள் ஒன்றாய் கூடுவோம்
    ஒன்று எங்கள் ஜாதி என்று ஓங்கி நின்று பாடுவோம்
    சமயம் வந்தால் கருவி ஏந்தி போர் முனைக்கு ஓடுவோம்
    தர்ம நீதி மக்கள் ஆட்சி வாழ்கவென்றே ஆடுவோம்…
    நாம் வாழ்கவென்றே ஆடுவோம்…

    “”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
    காணொளி: https://www.youtube.com/watch?v=n0p3Dm5abX0

    https://www.youtube.com/watch?v=n0p3Dm5abX0

    Share
  • அம்மா எனும் அதிசய காந்தம்!

    -ஜெயஸ்ரீ ஷங்கர்

    நான் பிறந்ததும்
    எனக்குத் தெரியாது
    என் ஊரும்
    பெயரும் தெரியாது!

    ஏதோவொரு கதகதப்பு
    அதன்  பாதுகாப்பு
    அன்பின் உணர்வு
    அது தான் அன்று நீயெனக்கு!

    நானோ உனதாகி
    உன்னோடு  ஒட்டிக்கொண்டேன்
    நீயோ எனக்குத் தாயாய்
    எனைக் காத்தாய்!

    ஆடும் கோழியும்
    பசுவும் காகமும்
    நீ சொல்லித்தான்
    நான் தெரிந்து கொண்டேன்!

    மேகமும் நிலவும் அதோ
    பாரெனச் சுட்டிக் காட்டிப்
    பசிக்கும் முன்னே
    வயிறு நிறைத்தாய்!

    தத்தித்தத்தி என்னோடு
    நடையில் நீயும் பிள்ளையாய்
    நடந்தபோதும் நினைவில்லை
    எனக்கு நீ  அம்மா என்று!

    உறவு சொல்லிக்
    கிளிப்பிள்ளையாய்ப்
    பழக்கி முத்தமிட்டு
    உச்சி முகர்ந்தாய்!

    சீராட்டி அலங்கரித்து
    நீ மகிழ்ந்த போதும்
    புரியவில்லை நீயே
    தெய்வத்தின் கருணை என்று!

    உன்னோடு பின்னிப்
    பிணைந்தது நம் பந்தம்
    எனக்கு  உலகைக்
    காட்டிய நிர்ப்பந்தம்!

    நீயே  உலகமாய்
    நான் நினைக்க…
    என்னையே உலகமாய்
    நீ நினைத்தாய்!

    தியாகமும் கருணையும்
    உனக்கே சொந்தம் அதுபோல்
    என்னுள் தாய்மையை
    விதைத்த தாய் நீ!

    உன் அனுபவச் சொல்லை
    அவ்வபோது மீறினால்
    தொல்லை எனநான்
    ஏசியும் நீ எனை நேசித்தாய்!

    நீ சொல்லித்தந்த
    எதையும் நான்
    ஏற்கவில்லை மாறாகச்
    செய்தாலும் நீ ஆதரித்தாய்!

    நீ நடந்த பாதை வேறு
    நான் நடக்கும் பாதை
    வேறானாலும் நீயென்
    ஆணிவேர் நான் மறுக்கவில்லை!

    வாழ்க்கை சொல்லித்
    தராத  பாடங்களை
    வார்த்தையால் கற்றுக்
    கொடுத்த அனுபவப்பள்ளி நீ!

    நான் புகுந்தவீடு
    வந்தபின்பும் பிறந்த
    வீட்டின் நினைவுகள்
    உயிரெனச் சுமப்பவள்!

    தென்றலும் புயலுமாய்க்
    கடந்து வந்த பின்பும்
    வாழ்வென்று உண்டாயின்
    அங்கும் நீ தான்!

    மரம் கொடுத்த விழுதோ நான்
    விழுதுகள் தாங்கும்
    விருட்சமாய்  நீ
    ஏங்கும் தாய்மை
    எங்கும் நிழலாய்த் தொடருமோ?

    சுழலும் வாழ்க்கைச் சக்கரத்தில்
    தாய்மையே  வெல்லும் தரணியில்
    தாய்மையே  இதயங்கள் ஈர்க்கும்
    அதிசய காந்தம்…என் அம்மா
    நீ நீடூழி வாழ்கவே!

     

    Share
  • முயலாமை!

    சுரேஜமீ.

    NSK and TAM

    அம்மா மதுரம் அவர்கள் திருவரங்கத்தைச்(Srirangam) சேர்ந்தவர்கள் என்பது தாங்கள் அறிந்ததே! கவிஞர் வாலி அவர்களும் அதே ஊரைச் சார்ந்தவர்தான்! வாலியின் இளமைக் காலங்களில், அய்யா என்.எஸ்.கே வைச் சந்திக்க விரும்பியிருக்கிறார். அப்போது, மதுரம் அம்மாவின் தம்பி மணி அவர்களும், வாலி அவர்களும் நண்பர்கள் என்பதால், அவர்கள் மூலம், உங்கள் அத்தான் (என்.எஸ்.கே) வரும்போது, சந்திக்க ஏற்பாடு செய் எனக் கேட்க, அந்த சந்திப்பும் நடந்தேறி இருக்கிறது.

    என்.எஸ்.கேயிடம் தன்னை ஒரு தமிழ் ஆர்வலர் என்றும், பாட்டில் நாட்டம் உண்டு எனவும் அறிமுகம் செய்து கொண்டுள்ளார் வாலி. எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட என்.எஸ்.கே அவர்கள்,

    தம்பி நீ சொல்றதெல்லாம் சரி. நான் உன்னை ஒரு கேள்வி கேக்குறேன். அதுக்கு சரியான பதிலை சொல்லு அப்படின்னு சொல்லி,

    ‘முயலும் ஆமையும் கதை கேட்டிருக்கேளே …அது சொல்ற நீதி என்னனு சொல்லு! என்று கூறியிருக்கிறார்!

    ஏதேதோ சொல்லியும், கடைசி வரை கலைவாணர் எதிர்பார்த்த ஒற்றை வரி நீதி சொல்ல இயலவில்லை வாலி அவர்களால்!

    தலையைச் சொறிந்து கொண்டே….அண்ணே நீங்களே சொல்லுங்களேன்! அப்படின்னு வாலி கேட்க,

    கலைவாணார் சொன்ன பதில் என்ன தெரியுமா?

    ‘முயலாமை’!

    இதுதான் கலைவாணாரின் சிறப்பு!

    (நன்றி: அருமைச் சகோதரர் NSK நல்லதம்பி)

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

     

    வித்யா வினயமென்றான் வில்லுக்கு, அதன்பின்னே
    யுக்தியாய் கர்மஞான யோகமென்றான், -பக்தி,
    அனன்யம் பழகிட ஆபோல், அடுத்த
    கணம்நான் அளித்திடுவேன் காப்பு ….கிரேசி மோகன்….

    Share
  • அன்னையர் தினச் சிந்தனைகள்

    -மேகலா இராமமூர்த்தி

    இன்று அன்னையர் தினம். அன்னையரைக் போற்றிக் கொண்டாடவேண்டிய நன்னாள். கடந்த சில ஆண்டுகளாக உலகிலுள்ள பல நாடுகளும் போட்டிபோட்டுக்கொண்டு அன்னையர் தினத்தை வெகு உற்சாகத்தோடு கொண்டாடி வருவது நாமறிந்ததே!

    அன்னையர் தினத்தை அன்னா ஜார்விஸ் எனும் பெண்மணி 1908-ஆம் ஆண்டு மே மாதம் 10-ஆம் தேதி அமெரிக்காவில் பிள்ளையார்சுழிப் போட்டு ஆரம்பித்து வைத்தாலும் அதன் நதிமூலம் என்னவோ நம்மை இங்கிலாந்தை நோக்கி இழுத்துச் செல்கின்றது.

    இடைக்காலத்தில், இங்கிலாந்தின் (Medieval England) பணக்கார வீடுகளில் வேலை செய்துகொண்டிருந்த சிறுவர், சிறுமியர் தம்முடைய எஜமானர்களின் வீடுகளிலேயே தங்கியிருந்து வேலை செய்வதே வழக்கமாயிருந்தது. தங்கள் சொந்த ஊர்களிலிருந்து வெளியூர்களுக்குச் சென்று இவ்வாறு பணிபுரிந்துவந்த இந்த ஏழைச்சிறுவர்கள் தம் சொந்த ஊர்களுக்குச் சென்று தம்முடைய வழிபடு தெய்வமாகிய அன்னை மேரியைத் தொழுவதற்கு எஜமானர்களால் ஒருநாள் விடுப்பு அளிக்கப்பட்டு வந்திருக்கின்றது. அவ் விடுமுறைதினம் மே மாதத்தின் நான்காவது ஞாயிற்றுக்கிழமையாக இருந்தது எனவும், அந்நாள் ’Mothering Sunday’ என்ற சிறப்புப்பெயரோடு அழைக்கப்பட்டது எனவும் தெரியவருகின்றது.

    கிறித்துவ அன்னை மேரியை வழிபடச்செல்லும் அச்சிறுவர்கள் அவ்வழிபாட்டின்பின் தமையீன்ற அன்னையரையும் காண மலர்களோடும், மகிழ்வோடும் தம் இல்லங்களுக்குச் சென்றனர். அந்நன்னாளில் பழங்களினால் ஆன சிம்னல் (Simnel Cake) கேக்கையும் செய்து மகிழ்ந்திருக்கின்றனர் இங்கிலாந்து மக்கள். இன்றும் அந்தநாளை நினைவுகூறும் வகையில் ’சிம்னல் கேக்’ செய்யும் வழக்கம் இங்கிலாந்தில் இருக்கின்றதாம்.

    இவ்வாறு இங்கிலாந்தில் முளைவிட்டு, அமெரிக்காவில் எழுச்சிபெற்ற அன்னையர் தினத்தை பின்பு உலகின் பெரும்பாலான நாடுகள் தத்து எடுத்துக்கொண்டுவிட்டன.

    இனி, அன்னையர் தினத்தின் நாயகியரான அன்னையரைப் பற்றியும் சற்று சிந்திப்போம்.

    அனைத்து உறவுகளினும் புனிதமானது அன்னையெனும் உறவே. அது உன்னதமானது; தன்னலமற்றது. பூமித்தாயினும் விஞ்சிய பொறுமையோடு நம் தாய்மார்கள் குடும்பங்களைத் தம் தியாகத்தால் தாங்கிப்பிடிப்பதால்தான் குடும்பம் எனும் கட்டமைப்பு இன்னும் நம் புண்ணிய பாரதத்தில் சிதறிப்போகாமல் உறுதியாய் நிற்கின்றது. குடும்பத்தின் விளக்காகத் திகழ்ந்து அதனைச் சுடர்விட்டு ஒளிரச் செய்பவள் தாய்.

    முந்தித் தவமிருந்து முந்நூறு நாள் சுமந்து பிள்ளைகளைப் பெற்று வளர்ப்பவள் அன்னை. தன் பிள்ளைகளின் நல்வாழ்விற்காக உழைப்பதே தன் தலையாயக் கடமை எனும் எண்ணம் கொண்டவள் அவள். வறுமையின் கோரப்பிடியில் சிக்கி உண்ணச் சோறில்லாமல் தான் பட்டினி கிடக்கும் நிலைவந்தாலும், தன் பிள்ளைகளின் வயிறு வாடக்கூடாது என்று எண்ணி, இருப்பதைக் குழந்தைகளுக்குக் கொடுத்துக் காக்கும் வள்ளல் அவள்!

    ’ஈன்ற புறந்தருதல் என் தலைக்கடனே; சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே’ என்றாள் சங்ககாலத் தாயொருத்தி. ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது. பல குடும்பங்களில் தம் பிள்ளைகளைச் சான்றோராக்குவதும் அன்னையரே! கல்வியறிவு நிரம்பப்பெற்ற இன்றைய தாய்மார்கள் உண்டிகொடுத்துக் குடும்பத்தார்க்கு உயிர்கொடுப்பதோடு தம் கடமை முடிந்தது என்று நின்றுவிடாமல் கல்வியெனும் அழிவற்ற செல்வத்தையும் பிள்ளைகளுக்கு அளித்து இரண்டாவது ஆசிரியராகவும் செயலாற்றுகின்றனர்.

    கற்றாரும் மற்றாரும் போற்றும் சான்றோனாகத் தன் மகனைப் பார்ப்பதில்தான் ஓர் தாய்க்கு எத்துணை மகிழ்ச்சி! அப்போது அவள் அடையும் உவகை அக்குழந்தையை ஈன்றபோது அவளடைந்த உவகையைவிட மிகப்பெரிது என்பார் தெய்வப்புலவர்.

    ”ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
    சான்றோன் எனக்கேட்ட தாய்”
    என்பது அவர் திருவாக்கு.

    தாய்ப்பாலோடு வீரத்தையும் ஊட்டி வளர்த்தனர் அன்றைய தாயர் என்பதைச் சங்க நூல்கள் வாயிலாய் அறிந்து மகிழ்கின்றோம். தன் மகன் புறப்புண்பட்டு இறந்திருந்தால் அவனுக்குப் பாலூட்டிய மார்பை அறுத்தெறிவேன் என்று வீரத்தோடு முழங்கிய தாயையும், போரில் தன் தந்தையையும், கணவனையும் இழந்தபின்னும் தைரியம் இழக்காது குடும்பத்தின் கொழுந்தாக இருந்த ஒரே மகனையும் போருக்கு அனுப்புகின்ற மறத் தாயையும் கண்டு மெய்சிலிர்த்துப் போகிறோம் நாம்!

    இன்னொருபுறம் அன்புமகள் தான் விரும்பிய காதலனோடு தன்னிடம் சொல்லாமல் சென்றுவிட, அவளை ஆசையோடு வளர்த்த அன்னை, அவள் வளர்த்த பிராணிகளையும், அவள் வைத்து விளையாடிய பொம்மைகளையும் கண்டுக் கண்ணீர்சொரிந்து ஏங்கியழுவதை நம் பண்டைய இலக்கியங்கள் உருக்கத்தோடு காட்டுவதைப் பார்த்து மனம் பதைக்கின்றோம்.

    இதுவென் பாவை பாவை யிதுவென்
    அலமரு
    நோக்கின் நலம்வரு சுடர்நுதற்
    பைங்கிளி
    யெடுத்த பைங்கிளி யென்றிவை
    காண்டொறுங்
    காண்டொறுங் கலங்க
    நீங்கின
    ளோவென் பூங்க ணோளே. (ஐங்: 375)

    காலங்கள் மாறலாம்; மனிதர்கொண்ட கோலங்கள் மாறலாம். ஆனால் என்றும் மாறாதது தன்னேரிலாத தாயன்பு. பிள்ளைகள் வல்லவராய் இருப்பதைவிட நல்லவராய் இருக்கவேண்டும் என்பதே ஒவ்வொரு தாயின் ஏக்கமும் எதிர்பார்ப்பும் ஆகும். தங்கள் எதிர்பார்ப்பு நன்முறையில் நிறைவேற வேண்டும் என்று எண்ணியே பல தாய்மார்கள் நம்முடைய புராணங்களிலிருந்தும், இதிகாசங்களிலிருந்தும் சிறந்த கதாபாத்திரங்களைப் பற்றியும் அவர்தம் குணநலன்கள் பற்றியும் தம் பிள்ளைகளுக்குச் சொல்லி வளர்ப்பர்.

    நம் தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளுக்குச் சத்தியத்தின் நித்தியத்தை உணர்த்தியது, அவருடைய அன்னை புத்லிபாய் சிறுவயதில் அவருக்குச் சொல்லிய அரிச்சந்திரன் எனும் வாய்மை வழுவாத மன்னனின் வரலாறே என்று அறிகின்றோம். அதுபோல் மராட்டிய சிவாஜியை வீரசிவாஜியாக மாற்றியது அவருடைய அன்னை சொல்லிய வீரக்கதைகளே என்றும் கேள்விப்படுகின்றோம்.

    மொழியைத் தாய்மொழியென்றும், நாட்டைத் தாய்நாடென்றும் போற்றிக் கொண்டாடும் நம் மரபே தாய்க்கு நாம்தரும் உயர்வைத் தெற்றெனப் புலப்படுத்துகின்றது. படமாக ஆடிக்கொண்டிருக்கும் தெய்வங்களைவிடவும் நம்மெதிரில் நடமாடிக்கொண்டிருக்கும் தாய்மார்களே நாம் வணங்கி வழிபடவேண்டிய இல்லுறை தெய்வங்கள்.

    தனக்கென்று தனியான ஆசைகள் எதையும் வைத்துக்கொள்ளாமல் தம் பிள்ளைகளுக்காவே வாழும் அன்னையருக்குப் பிள்ளைகள் கைம்மாறாகச் செய்யவேண்டியது என்ன? இல்லங்களை எழிலாக்கும் மனை விளக்குகளாம் அன்னையரின் ஆசைகளை, அவர்தம் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவதும், வயதான காலத்தில் அவர்களைப் புறக்கணிக்காது அன்போடு பேணிக்காப்பதுமே அவை.

    அன்னையர் தினத்தன்று மட்டும் அன்னையரைக் கொண்டாடுவது அயல்நாட்டு மரபு; அன்பின் திருவுருவாய், ஆற்றலின் உறைவிடமாய்த் திகழும் அன்னையரைத் தினமும் கொண்டுவதே நம் இந்திய மரபு. எனவே அன்னையரை நிதமும் போற்றுவோம்; அன்னையர் தினத்தன்று இன்னும் சற்றுச் சிறப்பாகவே!

    Share
  • ஒருவரியில் எப்படி ’அம்மா’?!

    -பா.ராஜசேகர்

    ஒருவரியில்
    எப்படிச் சொல்ல…?
    நீயே உலகமம்மா!

    என்மேல
    மனசு வைத்தாய்
    இதயம் உண்டாச்சு !

    வேதனையில்
    கண்விழித்தாய் உயிரே
    உண்டாச்சு !

    சோதனைகள்
    நீ கடந்தாய் உன்உதிரம்
    என்னுயிர் மூச்சாச்சு !

    சுமைகள் நீசுமந்து
    தொப்புள் கொடி
    இரண்டாச்சு!

    தூங்காம
    தாலாட்டி
    நீ தூங்க நாளாச்சு !

    பசிக்குப் பாலூட்ட
    உன் ரத்தம்
    சோறாச்சு !

    நான்தவழ நடைபழக
    உன்கண்ணீரே
    கவிதையாச்சு!

    நீயே உலகமம்மா
    ஒருவரியில்
    எப்படிச் சொல்வேன் ’அம்மா’?!

     

    Share
  • அன்னையே தெய்வம்!

    –ரா.பார்த்தசாரதி

    தாயே விளைநிலமாம் தந்தையே  வித்தாம்
    குலம் தழைக்க வந்ததோர் சொத்தாம்!
    பெண்முழுமை அடைவதும்  தாய்மையாலே
    தாயாக  மாறுவதும்  அந்தத்  தாய்மையாலே!

    கருவறையில் உன்னை  வைத்துக்   காக்கின்றாள்
    தனக்கென்று உண்ணாது  உனக்காக உண்கிறாள்
    பெண்ணிற்குப் பிரசவம்  என்பதே மறுபிறப்பு
    இதனை  அறியாத  மானிடப்  பிறப்பு !

    பிறந்த மேனியுடன்  வெளிஉலகிற்கு  வந்தாய்
    தாய், தந்தைக்கு  மட்டற்ற மகிழ்ச்சி தந்தாய்!
    உனக்காகக்  கண்விழித்துத் தூக்கத்தை மறந்தேன்
    உனக்காக  என் குருதியைப்  பாலாக பொழிந்தேன் !

    தோளையே  தூளியாக்கி உன்னைச் சுமந்து செல்கின்றேன்
    நீ பிறக்கும்போது  நான் சுமந்த  வலியை  விடவா?
    நீ    பசி தூக்கத்தை  அழுது வெளிப்படுத்துகின்றாய்
    உன் கள்ளமில்லச் சிரிப்பாலே கவலைகள்  போக்குகின்றாய் !

    உன் அன்னைக்கு ஆயிரம் பிரச்சனை  இருப்பு
    உன்னைக் கட்டியணைப்பதில்தான் ஆனந்தக் களிப்பு !
    உன் வளமே  எங்கள்  சிறப்பு
    உன் நினைவே பாசத்தின் பிணைப்பு !

    குழந்தையின்  வளர்ப்பு தாய் தந்தையின் கடமையே
    அன்னையின்  வார்த்தைகள் குழந்தைக்கு இனிமையே
    அன்னையைப்  போல்  ஒரு தெய்வம் இல்லை
    திசை நான்கும்  அவள் போல்  எவருமில்லை !

     

    Share
  • கைகூப்பிக் கேட்கின்றேன் !

    -எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

    அன்னையின் அரவணைப்பில் ஆனந்தம் நாம்கண்டோம்
    அவள்மடியில் படுத்துறங்கி அனைத்தையுமே நாம்பெற்றோம்
    இல்லையெனும் வார்த்தையவள் இதயத்தில் வந்ததில்லை
    இவ்வுலகில் அன்னையைப்போல் எவருமே இருந்ததில்லை

    அழுகுரலை அவள்கேட்டாள் ஆடியே போய்விடுவாள்
    பழுதெமை நாடாமல் பார்த்திடுவாள் அன்னையவள்
    கொழுகொம்பு போலவள் கோலாமாய்க் கொண்டிடுவாள்
    முழுவுலகில் அன்னையைப்போல் முன்னிற்பார் யாருமிலர்

    அன்னையவள் அடிதொழுதால் அனைவருக்கும் ஆனந்தம்
    அன்னையினை ஆலயமாய் அனைவருமே எண்ணிடுவோம்
    ஆருமற்று நிற்கின்ற அவலம்தனைக் காணாமல்
    அன்னையினைப் போற்றுதலே அவர்க்காற்றும் அருந்தொண்டே

    காப்பாற்றி நின்றவளைக் காப்பகத்தில் விட்டுவிட்டுக்
    கண்துடைக்கக் கொண்டாட்டம் கனவானே செய்யாதீர்
    கண்ணுக்குள் மணியாகக் காத்துக்காத்து வளர்த்தவளைக்
    கண்கலங்கச் செய்யாதீர் கைகூப்பிக் கேட்கின்றேன் !

     

    Share
  • அன்னையர் தினம்?

    -சுரேஜமீ

    அன்னையர் தினம் என்று அன்னியன் வைக்கின்றான்;
    அதற்கும் நாமெலாம் அடிபணிந்து நிற்கின்றோம்!
    அன்னைக்கு ஏதொரு தினம்?
    அனுதினமும் அவள்தினம்தான்!

    அன்னை தந்தை வளர்த்தெடுத்தார்
    அவனியில் நாம் மகிழ்கின்றோம்!
    அவர்தம்மை பிரிந்திருத்தல்
    நாம் செய்த பாவமன்றோ!

    அவர்தம்மைப் பார்த்திருத்தல்
    அன்னவரின் பெருமையன்றோ!
    அது கிடைக்கா எதுகிடைத்தும்
    அருளில்லை இவ்வுலகில்!

    பெற்றவரைப் போற்றிடுவர்
    பேரெல்லாம் பெற்றிடுவர்
    பெருமைபட வாழ்ந்திடுவர்
    பெருகிவரும் செல்வமெலாம்!

    வாழ்த்துதற்கு நாமென்ன வானவரா?
    வணங்கிடுங்கள் தெய்வமதை
    வளர்நாளும் வரலாறாய்
    வாழ்ந்திடுங்கள் வாழ்த்துக்களால்!!

     

    Share