Blog

  • முதுமை !

    -பா. ராஜசேகர்

    நடை தளரும்
    நரை மலரும்
    முகச்சுருக்கம்
    அழகாகும் !

    கண்பார்வை
    நினைவூட்டும்
    கனிவு நெஞ்சம்
    மெருகூட்டும் !

    முகம் காணும்
    வரிச்சுருக்கம்
    அனுபவத்தின்
    அழகுரைக்கும் !

    தளர்ந்தநடை
    கடந்துவந்த
    பாதையதைத்
    தெளிவாக்கும் !

    ஒளியிழந்த
    கண்கள் அல்ல
    உலகை ரசித்த
    பொக்கிசமே !

    வெளித்தெரியும்
    நாடி நரம்பு
    ஓடி உழைத்த
    அழகுரைக்கும்!

    எட்டிப்பார்க்கும்
    தோள் எலும்பு
    சுமைசுமந்த
    சுமைதாங்கி !

    கடினப் பற்கள்
    போனதெனக்
    கவலையில்லை…
    கனிவுச் சொற்கள்
    வெளித்தள்ளும்
    குணம் பாரு !

    மனிதரிலே
    மாணிக்கம்
    முதுமையடா!

    முதுமை கண்டால்
    முகம் சுளிக்கும்
    மனிதா!

    உன் இளமை
    நிலையில்லை
    எண்ணிப்பாரு !

     

    Share
  • வணங்கி வாழலாம்!

    -பா வானதி வேதா. இலங்காதிலகம்

    பூவினை ஒன்றொன்றாய் மாலையில் தொடுத்துப்
    பாவினைப் பண்ணாகப் பாடித் தொழுது
    என்வினை தீர இறையை வணங்கி
    வாழ்வினையொரு சுப வினையாக்குதல் நோக்கு!

    அன்பினைப் பெற அருகினில் நெருங்கி
    அறிவினை வளர்க்க ஆய்வினை நகர்த்தி
    உயர்வினைத் தாருமெனப் பாவினை ஆக்கத்
    தேய்வினை எண்ணாது அறிவினைத் தீட்டலாம்!

    தீங்கினைப் பாங்காக விலக்கி நம்முள்
    தேங்கிட நல்லவை நிறைத்துத் திருப்தியாய்
    ஓங்காரனை, காங்கேயனை ஓயாது துதித்துப்
    பூங்காவென வாழ்வைப் பயமின்றித் தேடலாம்!

    குயவனைக் குவலயம் அமைத்த குருபரனின்
    தயவினைத் வேண்டித் தலைவணங்கி
    அருளினைத் தாருமென அன்பினைக் கொட்டி
    ஊழ்வினை, பாவவினை உதறிட வணங்கலாம்!

     

    Share
  • வாழுகின்ற தமிழுக்கு ஒப்பாக வாழுபவன்!

    -சுரேஜமீ

    வாழ்த்துக்கள் வருவதற்கு வரம்வேண்டி நிற்போர்முன்
    வானவரே வலியவந்து வாழ்த்துவது கண்டவன்தான்
    வையத்திலொரு கவியாம் கவிக்கெல்லாம் அரசனவன்
    வாழுகின்ற தமிழுக்கு ஒப்பாக வாழுபவன்!                                     kannadasan

    கூடுகின்ற கூட்டமெலாம் கூவிநிற்கும் குயில்களாகப்
    பாடுகின்ற பாட்டெல்லாம் படைத்தவனே பகன்றதன்றோ!
    தேடுகின்ற நெஞ்சமெலாம் தேடிவைத்த சொத்துமவன்
    வீடுதோறும் நிறைந்திருக்கும் வீதியெல்லாம் புகழ்மணக்கும்!

    அன்னைத் தமிழ்கண்ட அருமைத் தவப்புதல்வனவன்
    அவன்புகழைப் பாடுதற்கு அவனியில் யார்தகுதியென்று
    அவனிருந்து எடுத்ததுதான் ஆலமரமான தென்றால்
    அவனுக்கும் துணைவேண்டி அடுத்தவனும் வருகின்றான்!

    பாட்டெழுதி நோட்டடிக்கும் பரிதாப நிலையில்லை
    பாட்டேவந்து நிற்கும் தனைஎழுது தமிழாலென்று
    பாட்டவனும் புனைந்திடவே பாரெல்லாம் மகிழ்ந்திடவே
    பாட்டாளி வர்க்கமெலாம் பைந்தமிழால் நனைந்ததன்றோ!

    கூட்டிவரும் கூட்டமெலாம் கூண்டோடு கலைந்துவிடும்
    கூடுகின்ற கூட்டமெலாம் பார்போற்ற நிலைத்துவிடும்
    கலைக்கூடம் சொல்லுமிதை இவன்பெற்றார் எவரென்றே
    கண்ணதாசன் வழிவந்த வாழியவன் வணங்கிடென்றே!

     

    Share
  • கஞ்சாவும் கல்லூரி வாசலும்!

    -துஷ்யந்தி, இலங்கை

    தீயென்று தெரிந்தும்
    தொட்டுப் பார்க்கும் வயது
    கல்லூரி வாழ்வில்
    எல்லோர்க்குமான துடிப்பு!

    வீணான எண்ணங்களை                          kanja
    வாசல் வரை வந்து
    தேனாகக் காட்டுவதில்
    தீயோர்க்கு இன்பம்!

    சரியென்றும் பிழையென்றும்
    தேடிப் பார்க்காது
    பிழைகளில் நுழைவது
    பலரது பழக்கம்!

    நோயாகப் போதையை
    நுழைவித்து வாசலில்
    நோக்கத்தை ஈடேற்றும்
    சதிகாரர் எண்ணம்!

    சிலந்தி வலையிலே
    மாட்டிக்கொண்ட வண்டாய்
    வெளிவர வழியில்லா
    மாணவர் எத்தனை?

    விழிப்பொன்றை ஏற்படுத்தி
    விளக்கத்தைச் சொன்னால்
    கல்லூரி வாசலும்
    பூங்காவனமாய் மாறிடுமே!

    பெற்றோரின் பொறுப்பும்
    ஆசிரியரின் போதனையும்
    மாணவப்பூக்களை வழிதவற
    நிச்சயம் விடுவதில்லை!

    அறிவைத் தேடும்
    சிறியோர் மனதில்
    அபாயத்தை விதைக்கத்
    தடையென்று மொழிவோம்!

    சட்டங்கள் இயற்றுவோம்
    சதிகாரரை வெல்லுவோம்
    சமுதாயச் சீர்கேடுகளை
    வளர விடாது தடுப்போம்!!

     

    Share
  • தாயும், தாய்மையும் !

    -ரா.பார்த்தசாரதி

    ஆணிற்குக் கிடைக்காத  ஓர்  பரிசு
    பெண்ணிற்கு மட்டும் கிடைக்கும் பரிசு
    தன் வயிற்றில் ஓர் உயிரை வளர்கின்றாள் Picture 1551
    கவள உணவையும் குழந்தைக்காக  உண்கின்றாள் !

    என்னதான்  விஞ்ஞானம், வசதிகள் வளர்ந்தாலும்
    ஆண்  தன்னைப் பற்றியே  நினைத்திருந்தாலும்
    பத்து நிமிடங்கள் நின்றாலும் கால் கனத்து வலிக்கும்
    பத்து மாதம் சுமந்தாலும் கருவறைச்சுமை வலிப்பதில்லை!

    வலி என்றாலே உயிர் போகிறது என்பார்கள்
    இந்த வலியால் மற்றொரு உயிர் வருவதைக் காண்பார்கள்
    குழந்தை, சிறுமி, குமரி,மனைவி என்கிற பல உறவானதே
    தாய்மையில்தான்  ஒரு பெண் தன்னிறைவு பெறுகின்றதே!

    குழந்தையைக் கொஞ்சுவது ஆணுக்கும் பெண்ணுக்கும் பேரின்பம்
    குழந்தையைக்  கட்டி அணைப்பதில்தான் தாய்க்குத் தனி இன்பம்
    தாய்மையின் மகத்துவம் என்பது பெண்ணின்  பெருமை
    தத்ரூபமாகவும் தத்துவமாகவும் இருப்பதே உண்மை!

     

    Share
  • நான் படித்த புத்தகம்- “ யாதுமாகி நின்றாய் “

    உமாஸ்ரீ

    சமீபத்தில் எழுத்தாளர் பவள சங்கரி எழுதிய “யாதுமாகி நின்றாய் ” என்ற புத்தகத்தைப் படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. நான் படித்து சுவைத்ததை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

    யாதுமாகி

    ”யாதுமாகி நின்றாய்”  பதினெட்டு அழகான சிறுகதைகள் அடங்கிய திரட்டு. எழுத்தாளர் சிவசங்கரி வாழ்த்துரை வழங்கியிருக்கிறார்.

    முதல் கதை “மோட்டூர்க்காரி “ கடைசி கதை “காக்காய் பொன்”. புத்தகத்தில் உள்ள சித்திரங்கள் கண்ணைக் கவருகின்றன. சிறுகதை திரட்டில் சித்திரங்களை இப்போதுதான் நான் முதல் முதலாகப் பார்க்கிறேன். ஆசிரியரின் சொல்லோவியங்களுக்கு அழகு சித்திரங்கள் மெருகூட்டுகின்றன. “யாதுமாகி நின்றாய்” கதையின் இறுதியில் பாரதியாரின் பாடல் அமைவது  கதைக்கு இசையூட்டுவது போலிருக்கிறது.

    கதையின் எல்லா தலைப்புகளும் பொருத்தமாக அமைந்திருக்கிறது. ஒரு கதைக்குத் தலைப்பு தேர்ந்தெடுப்பது அவ்வளவு சுலபமில்லை. கதையின் தலைப்பு நன்றாகயிருந்தாலே கதையைப் படிக்கத் தோன்றும். “பசுமையின் நிறம் சிவப்பு” பார்த்தவுடனே படிக்க மனத்தில் ஆர்வம் உண்டாகிறது. “மெய் கண்டார்” என்பதைப் படித்ததும்  எனக்கு “தோள் கண்டார் தோளே கணடார்” என்ற பாடல் ஞாபகம் வந்தது. எல்லா தலைப்புகளும் அருமை.

    ஆசிரியரின் நடை யதார்த்த நடை. நல்ல நடை . மறைந்த பிரபல எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் கதைகள் வித்தியாசமான நடையிலிருக்கும். ஒரு கதை மீனவர்கள் மற்றும் கடல் சம்பந்தப்பட்டதாகயிருக்கும். இன்னொரு கதை குடியானவர்களைப் பற்றி இருக்கும். ஒரு கதை விவசாயிகளைப் பற்றி இருக்கும். அது போல் ஆசிரியரின் கதைகள்  ஒவ்வொன்றும் வித்தியாசமான  மொழியுடன்  படிப்பவரை வியப்பில் ஆழ்த்துகின்றன.

    கதைக்கரு எல்லா கதைகளிலும் சிறப்பாக இருந்தது. “ கனிகரம்”  என்ற கதையில் தாய் தன் மகன் என்ன தீங்கு செய்தாலும் அவள் அவனுக்கு நல்லதையே நினைப்பாள்  என்ற உயர்ந்த கருத்தை சொல்கிறது..

    சிறுகதை இலக்கணத்தில் கட்டுக்கோப்பு மிகவும் முக்கியம். பதினெட்டு கதைகளும் கட்டுக்கோப்புடன் இருந்தது. அளவுக்கு அதிகமான வர்ணனை எந்த கதையிலுமில்லை.

    முடிவைப் பொருத்தவரை எப்படி வேண்டுமானலும் இருக்கலாம். சில கதைகளில் முடிவு எதிர்பாராத விதமாக இருந்தது. ”பாசச் சுமைகள்” என்ற கதையில் கதாநாயகன் தியாகராசன் இறந்து விடுவான். அதுபோல் மெய் கண்டார், காக்கை பொன் என்ற கதைகளும் எதிர்பாராத முடிவை உடையன. “சுமைதாங்கி சாய்ந்தால் ?” என்ற கதை,  கடிதங்கள் பரிமாற்றம் என்ற உத்தியை உபயோகப்படுத்தி எழுதப்பட்டிருக்கிறது. மனைவி  ரகசியத்தை சொல்லிவிட்டு கணவனை உலுக்குவாள். அதற்கு முன்பேயே கணவனின் தலை சாய்ந்து விட்டிருக்கும்.

    எல்லா கதைகளையும் படித்து முடித்த பிறகு  மன நிறைவு ஏற்படுகிறது. மொத்தத்தில் சிறப்பாக இருக்கிறது,  குறை ஒன்றுமில்லை என்று சொன்னால்   மட்டும் போதாது . ஒரு நல்ல சமையலை சாப்பிடும்போது திருப்தியுடன் “யார் இவ்வளவு நன்றாக சமையல் செய்தது, அவங்க கைக்கு ஒரு மோதிரம் போடணும் என்று சொல்வதைப் போல் இவ்வளவு நல்லா கதை எழுதிய ஆசிரியரின்  விரலுக்கு தங்க  மோதிரம்  போடணும்  என்றும் சொல்ல தோன்றுகிறது.

                                 **************

    Share
  • சர்க்கரை நோய்

    -சுரேஜமீ

    கணையம்
    கடவுள் கொடுத்த
    வரம்!

    ஐம்புலன்களை
    அடக்கவில்லை எனில்                             liver
    ஆறறிவின்
    பயனேது?

    உண்ணும் உணவே
    சர்க்கரையாய்  மாறி,
    இரத்தத்தில் கலந்து,
    சத்தாக மாறும்,
    என அறிவியல்
    சொல்லியும்
    அறியாமல் நாம்,
    துரித உணவும்,
    நினக்கும்போதெல்லாம்
    உண்பதும்,
    கணையத்திற்கு ஒவ்வா!

    வண்டு தேனை
    மலரிலிருந்து
    உறிஞ்சுவது போல,
    கணையம்
    சர்க்கரையைப்
    பிரித்தெடுக்கும்!

    செரிமானத்திற்க்குத்
    தேவையான
    கணைய நீர்
    சுரக்கா சர்க்கரைச்
    சிறுநீராய் வெளியேற,
    முறையான சர்க்கரை
    இரத்தத்தில் கலக்கிறது!

    தேவைக்கு மிகுதியானால்
    சேமிப்பும் நடக்கும்!
    என்ன விந்தை
    இறைவன்
    படைப்பில்!

    சேமிப்புக் கரைந்தாலோ,
    கணையம் ஏற்காத
    சர்க்கரை உடலில்
    இருந்தாலோ,
    நோய் என்று சொல்கிறது
    மருத்துவம்!

    மனிதா
    சற்றே யோசி!
    காரணம்
    கடவுளின்
    படைப்பா?
    உனது
    பரபரப்பா?

    நிதானமாக
    உண்!
    நினைவோடும்
    கால அளவோடும்,
    உண்!
    நோயற்று,
    உன்னதமாக
    வாழ்!

     

    Share
  • கூத்துக்காரன்

    மாதவன்

    கூத்து முடிந்து திரைமெல்லக் கீழிறங்கியதும் சண்முகம் தன் அரிதாரத்தை கலைக்கத்தொடங்கினான். முகம் கழுவுகையில் தனது மீசையில்லாத முகம்பார்த்து அப்பாவை நினைத்துக்கொண்டான். சண்முகம் நாயகத்தன்மைகள் ஏதுமற்ற ஒரு சாமான்யன். பஸ் டிரைவர். அவன் அப்பாபோல மெயின் வேஷமெல்லாம் இல்லை. சைடு வேஷம்தான். சண்முகத்தின் அப்பா சின்னையன் பெரிய ஆள். ஸ்தீரிபார்ட் சின்னையன் என்றால்தான் தெரியும் எல்லோருக்கும். திரவுபதி வேஷமிட்டால் அசல் திரவுபதியே வந்துவிட்டதுபோல இருக்கும் எல்லோருக்கும்.

    அந்தக்காலத்திலேயே சிங்கப்பூர் எல்லாம் சென்றுவந்திருக்கிறார். ஸ்தீரிபார்ட் வேஷம் கட்ட அவர்போல வேறு ஆளில்லை அப்போதெல்லாம். ஆனால் சண்முகத்தின் வகுப்புத்தோழர்கள் எல்லோரும் அவரைப்பற்றி பேசுகையில் மீசையற்ற அவர் முகம்பற்றிக் கேலிசெய்வார்கள்.

    ” ப்பா..”

    “என்ன தம்பு”?

    “நா ஒன்னிய ஒன்னு கேக்கவா”?

    “கேளுய்யா”

    “நீ இனிமேட்டு பொம்பள வேசங்கட்டாதப்பா”

    “ஏன்யா”?

    “பள்ளியூடத்துல எல்லாப்பசங்களும் என்னிய கிண்டல்பண்றாங்கப்பா”

    “என்னன்னு”?

    “நீயொரு பொண்டுகஞ்சட்டியாம். அதனாலதான் அம்மாகூட உன்னியவிட்டு ஓடிப்போயிருச்சாம்”

    அப்பா அவனை இழுத்து அணைத்துக்கொண்டார். அப்படி அணைத்துக்கொண்டால் அவர் குடித்திருக்கிறார் என்று அர்த்தம். அவன்மீது பிரியம் வந்துவிட்டதென்று அர்த்தம். ஆனால் என்ன செய்தாலும் அம்மாவைப்பற்றி எதுவும் கூறமாட்டார்.

    மேனேஜர் கொடுத்த ஐநூறு ரூபாயை வாங்கி தன் அன்ட்ராயரில் வைத்துக்கொண்டான் சண்முகம். மரியாதை என்று சொல்வார்கள் அதை முன்பெல்லாம். ஒரு பெரிய தாம்பாளம் நிறைய வெற்றிலை பாக்கு பழங்கள் வேஷ்டிதுண்டு எல்லாம் வைத்துத்தான் கூத்திற்கு அழைப்பார்கள். கூத்து முடிந்தபின்பும் அதேபோல சன்மானம் வைத்து வண்டிகட்டி வழியனுப்பிவைப்பார்கள். அப்படித்தான் ஒரு ஊரில் இரண்டுரூபாய் நோட்டுக்கட்டை திண்ணையில் தூக்கிப்போட, துண்டை உதறியபடி அதை தொடாமல் திரும்பிவந்தாராம் அப்பா.

    பஸ்டான்ட் கூட்டமாக இருந்தது. அவன் தனக்கான பஸ்ஸை தேடி ஏறியமர்ந்துகொண்டான்.

    அப்பாவுடன் கூத்திற்குச் செல்லும்போதெல்லாம் எல்லோரும் கேட்பார்கள்.

    “ஏஞ்சின்னா, ஒம்மவனுக்கு பிரகலாதன் வேசங்கட்டினா நல்லாயிருக்காது”?

    “ச்சீ சவத்த ஒன் வாயக்கழுவு மொதல்ல. அவனுக்கு எதுக்கு இந்த நாறப்பொழப்பு ? அவன் பள்ளியூடத்துல படிக்கிறான். நல்ல வேலைக்கிப்போவான். சாயம்பூசுற பொழப்பெல்லாம் என்னோட போவட்டும்”

    நகரும் பேருந்தின் ஜன்னல்வழி அவசரமாக நகர்ந்தன மரங்கள். முன்னாலிருந்து ஒரு குழந்தை கைநீட்டியது. சண்முகம் ஒற்றைவிரலால் அதன் கைபற்றினான். அது சிரித்தது.

    அப்பா கடைசிவரை கூத்துக்கட்டியவர். அரவான் வேஷங்கட்டிய அன்று தான் பலியாவதற்கு முன்பான உக்கிரமான காட்சியின்போதுதான் அவருக்கு பக்கவாதம் வந்து கைகால் இழுத்துக்கொண்டது. அதன்பிறகு அதிககாலம் சிரமப்படவில்லை. கொஞ்சநாட்களிலேயே இறந்துபோனார். அதற்குப்பிறகுதான் சண்முகம் கல்யாணமே செய்துகொண்டான்.

    சண்முகத்தின் பள்ளி ஆண்டுவிழாவில் மாறுவேடப்போட்டிக்கு அவன் வேஷங்கட்ட முயன்றபோதுதான் முதல்முறை அவனை அடித்தார்.

    “அது ஒரு சாபம் தம்பு. பெரிய போத. ஒருவாட்டி வேசங்கட்டி கைதட்டு வாங்கிட்டீன்னா, பொறவு சாவறவரை அந்த சத்தம் கேட்டுக்குட்டேயிருக்கத்தோனும். அது ஒரு வல சம்முவம். விழுந்தா ஆள அப்புடியே முழுங்கிப்புடும்.

    “நீங்க மட்டு ஏன் வேசங்கட்டுறீங்க”?

    “எங்கய்யா. ஒந்தாத்தன் பெரிய பாகவதர் தம்பு. சின்னப்புள்ளையில இருந்து என்னிய கூத்துக்கு பழக்கிவச்சாரு. என்னால அத விடவே முடியல. என் சாயம் ஒனக்கு ஒட்டிரக்கூடாதுன்னுதான் ஒன்ன படிக்கவைக்கிறேன்.
    அப்பா இவனோடு நிறைய பேசுவார்.

    “ஒருநாளு எங்கய்யாவோட கீரணூருக்கு போனேன். அடுத்தமாசம் கூத்துக்கு பேச்சுநடத்த போறமின்னு சொல்லித்தான் என்னிய கூட்டிப்போனாரு. அங்க போனபொறவுதான் தெரிஞ்சுது போனது பொண்ணுபாக்கயின்னு. ஒங்கம்மா அத்தன அழகு. நம்மூரு மாரியாத்தா செல இருக்குபாரு அதுமாதிரி ஒரு அழகு.

    ஆயிரம்ரூவா பணம். அஞ்சாறுபவுனு நகயோட அவளக்கட்டிக்கிட்டேன். ஆனா அவளுக்கு என்னிய சுத்தமா புடிக்கலன்னு அப்பறமாத்தான் தெரிஞ்சது. எப்பப்பாரு எரிஞ்சு விழுந்தா. எங்கயாச்சும் வெளிய தெருவுக்கு கூப்புட்டா வரமாட்டா.

    நீயொரு பொண்டுகஞ்சட்டி மாதிரி நடக்குற ஒம்மோட எவ வருவா அப்டீன்னா. அதோட நா கூத்து கட்டுறது அவளுக்கு புடிக்கல. சாடைமாடையா சொல்லியும் நா கேக்கல. அப்பறம் ஒருநாள் வெளிச்சமா வெளக்குனா.

    வேசங்கட்டி நீ கொண்டாற காசவச்சு எம்பொறத்தக் கழுவறதா ? கூத்துக்கருமத்தையெல்லாம் உட்ரு. எங்கப்பாருகிட்ட சொல்லி கொஞ்சம் நெலம் வாங்கியாறேன். பாடுபட்டு கெடக்கலாம்னா.

    அன்னிக்கித்தான் அவள மொதவாச்சி அடிச்சேன். அன்னிலயிருந்துதாம் இந்தக்கருமத்தைக் குடிக்க ஆரம்பிச்சேன். அதும்பொறவு நெதம் சண்ட சச்சரவு”

    பஸ் பைப்பாஸில் எங்கோ ஓரிடத்தில் நிற்க சண்முகம் இறங்கி மூத்திரம்பெய்துவிட்டு டீ குடித்தான். மறுபடி பஸ் ஏறியபோது அப்பா வந்து மனதில் உட்கார்ந்துகொண்டார்.

    ஒருமுறை சினிமாவில் வாய்ப்புவந்தது அவருக்கு. அப்பாவுடன் சண்முகமும் சென்றிருந்தான். வியர்த்துப்பூத்த முகத்துடன் ஒரே வசனத்தை திரும்பத்திரும்ப சொல்லவைத்துக்கொண்டிருந்தார்கள். ‘இந்தாளு தேறமாட்டான்’ என்று யாரோ யாரிடமோ அப்பாவைக்காட்டி சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

    ஒருநாள் திடீரென்று சண்முகத்தை அழைத்து பேசத்தொடங்கினார்.

    “நீ பொறந்தப்ப ஆஸ்வத்திரிக்கி பார்க்க வந்தேன். அவ எங்கூட பேசவேயில்ல. அவ ஆத்தாக்காரி என்னமோ சொல்லிப்பார்த்தா. அவ ஒரே முடிவா சொல்லிப்புட்டா.  ஒங்கூத்துப்பொழப்ப உட்டுட்டு வந்தா வா இல்லாட்டி ஒஞ்சோலியப்பாருன்னு. பச்ச ஒடம்புன்னு பாக்காம உட்டம்பாரு கட்டுலோட ஒரு ஒத. அவ அப்பங்காரன் வந்து என்னிய சட்டயக்கோர்த்து வெளிய தள்ளலைன்னா அன்னிக்கே ஒங்கம்மா செத்துருப்பா.

    கொஞ்சநாள் பொறவு ஒருநாள் அவ அப்பனாத்தாளும் கொஞ்சம் ஒறவுக்காரங்களும் வந்து பஞ்சாயத்து பேசுனாங்க. நான் உறுதியா சொல்லிப்புட்டேன். இது எங்கொலத்தொழிலு. இத்தோட இருக்குறதுன்னா வந்து இருக்கட்டும்னு. அவளும் வந்து கொஞ்சநாள் நல்லாத்தான் இருந்தா. அப்பறம் பழயபடிக்கு ஆரம்பிச்சா.

    அப்டித்தான் ஒருநாளு கூத்து முடிஞ்சு ஊட்டுக்கு வரேன் ஆளக்காணோம். பக்கத்தூட்ல இருந்து ஒன்னிய தூக்கிக்கிட்டு ஊரெல்லாம் தேடுறேன் இல்ல. அவ ஊருக்குபோயி பார்த்தா அங்கயும் தாக்கலில்ல. அப்டியே ஒரு மாசம்போச்சு. நம்மூரு மணியக்காரருதான் ஒருநா வந்து சொன்னாரு. பக்கத்தூரு மைனரு வூட்ல வெப்பாட்டியா கெடந்தாளாம் ஒங்கம்மா.

    மணியக்காரரும் என்னென்னவோ எடுத்துச் சொல்லிருக்காப்ள. அவ அசரவே இல்லியாம். வரவே மாட்டமின்னு சொல்லிட்டாளாம். நானும் போவல”

    சண்முகத்திற்கு படிப்பு நன்றாக வந்தது. முடித்தபிறகு அப்பாதான் எங்கெங்கோ அலைந்து சிபாரிசு பிடித்து சர்க்கார் வேலைவாங்கிக்கொடுத்தார். உடல்நிலை நன்றாக இருந்தவரை கூத்துக்குச் சென்றார்.

    “ஒனக்கு எம்மேல எதுவும் கோவமிருக்கா சம்முவம்”?

    “எதுக்குங்கப்பா”?

    “ஒன் கண்ணுலியே வேசங்கட்ற ஆசையப்பார்க்கமுடியுது தம்பு. ஆனா இது ஒரு சாபப்பொழப்புய்யா. ஒருத்தன் சும்மாவாச்சும் இதய செஞ்சிரமுடியாது. உசுரா நெனச்சு எறங்கினாத்தான் இதுல சரிப்படும். என்னமோ ஒனக்கு இது வேனாமுன்னு எம்மனசுல விளுந்துருச்சி. அதான் ஒன்னிய கடசிவரை உள்ள இழுக்கல்லே”

    “இல்லங்கப்பா. எனக்கும் ஆசயிருந்துச்சி. ஆனா ஒம்பவிசு எனக்கு வராதுன்னு தெரிஞ்சபொறவுதான் தெளிஞ்சிகிட்டேன். எங்கப்பாரு எனக்கு நல்லதுதாம் செய்துருக்கீங்க”

    “இல்ல சம்முவம். நா செஞ்சதுலாம் தப்புத்தான். நாலுபேரு பாராட்டுற கெறக்கம் இருக்குபாரு. அது என்னவேனா செய்யும் நம்மள. என்னிய அப்புடித்தான் கவுத்துவிட்டுருச்சி. நாலு பாட்டிலு குடிச்சமாதிரி ஒரு மெதப்பு. ‘ஸ்தீரிபார்ட் சின்னையனா பிரமாதமான கூத்தாடியாச்சே’ அப்டீன்னு நாலுபேரு சொல்லுறப்ப வர வெறி இருக்குபாரு. அது பொம்பள சொகத்தவிட பெருசா இருக்கும்”

    “நா ஒங்கள ஒன்னு கேக்கவாப்பா”?

    “கேளுய்யா”…

    “அம்மாமேல ஒங்களுக்கு கோவமே வர்லியா”?

    அருகிலிருந்த புல்லைப் பிடுங்கி கொஞ்சநேரம் கடித்துக்கொண்டு யோசித்தார்.

    “அவ செஞ்சதுல தப்பு எதுவுமில்ல தம்பு. ஒரு புருசனா எங்கிட்டதாம் தப்பு. அவள சந்தோசமா வச்சுக்கல. எப்பமும் கூத்து வேசமுன்னே சுத்திக்கிட்டிருந்தேன். சோறு செய்யாதப்போதான் அவ நெனப்பும் அவமேல கோவமும் வரும். ஒன்னக்கூட வுட்டுட்டுபோவும்படி அவள வாட்டிருக்குறேன் பாரு. எந்தப்புதான் எல்லாம்”

    “இல்லங்கப்பா. நீங்க என்ன சொன்னாலும் அம்மா செஞ்சது ஏத்துக்க முடியாது. நா அவள என்ன செஞ்சேன்”?

    அப்பா சிரித்தார். கண்னில் நீர்வரச்சிரித்தார்.

    “நீ எங்கூடவே நெழலு மாதிரி இருந்துட்ட சம்முவம். அதுங்கூட நாஞ்செஞ்ச தப்புத்தான்”

    ஒருநாள் அளவிற்கதிகமாக குடித்துவிட்டு வந்தார். சண்முகம் அவர் குடிப்பதைப்பற்றி எதுவுமே சொன்னதில்லை. ஆனால அன்று மிதமிஞ்சிய போதை. இடுப்புத்துணிகூட நிற்காதபடி. என்னென்னவோ புலம்பினார். சிரித்தார். அழுதார். சுவற்றில் தலையை முட்டிக்கொண்டார்.

    மறுநாள் காலை சாதாரணமாக சங்கதி சொன்னார். அம்மா இறந்துபோய்விட்டாளாம். எத்தனை மோசமான உயிரென்றாலும் இறந்தபிறகு வெறுக்கமுடியாதுபோல. சண்முகம் மறுத்துவிட அவர்மட்டும் சென்று காடுவரை வழியனுப்பிவிட்டு வந்தார். அன்றுதாம் அரவான் கூத்தாடி பக்கவாதத்தில் விழுந்தது. அம்மா இறந்தது அவரை ஏதோ ஒரு வகையில் பாதித்துவிட்டது.

    வாழ்வின் போக்குகளைபற்றி எத்தனை யோசித்தும் குழப்பம்தான் மிஞ்சியது சண்முகத்திற்கு. அப்பா கூத்துக்கட்டுவதை விட்டிருந்தால் அம்மா கூட இருந்திருக்கலாம். அம்மாவிற்கும் கூத்திலோ அப்பாமேலோ விருப்பமிருந்திருந்தால் அம்மா கூட இருந்திருக்கலாம். கடைசிகாலத்தில் அப்பா குழறலாக சொன்னதெல்லாம் ஒன்றுதான்.

    ஒலகத்துல எல்லாத்தையும்விட மனுஷங்கதான் முக்கியம் சம்முவம். அதுங்களை கூட வச்சுக்கத்தான் வாழ்க்கை. அதுங்களுக்கு புடிசமாதிரி இருந்து சந்தோசமா வச்சுக்கத்தான் போராட்டம். கூட இருக்குறவன் அழுதா என்ன செத்தா என்னன்னு இருக்குறதுல மனுசனாப்பொறந்து பலனில்ல.

    வீட்டிற்குள் நுழைந்தபோது பிள்ளை தூங்கிக்கொண்டிருந்தான். நைட்டியில் சோம்பல் முறித்த மனைவியிடம் பணத்தை கொடுத்துவிட்டு வந்து படுத்துக்கொண்டேன். காலை எழுந்ததுமே மகன் கழுத்தைக் கட்டிக்கொண்டு ஆட்டம்போட்டான். அவன் ஸ்கூலுக்குச்சென்றபின்பு மனைவி அந்த போட்டோவைக் கொண்டுவந்து காட்டினாள்.

    மகனின் ஸ்கூல் மாறுவேடப்போட்டியில் எடுக்கப்பட்ட போட்டோ. தெர்மாக்கோல் கதாயுதத்துடன் கர்ணன் வேஷத்தில் மகன் சிரித்தபடி நின்றிருந்தான்.

    Share
  • வெற்றி மீது காதல்!

    -பா. ராஜசேகர்

    நித்தம்
    உன்னை
    நினைக்கையில்
    போராட்டம் !

    கத்திமேல
    நடந்திடும்
    கனவுபோல்
    தீ மூட்டும் !

    இரண்டு படி
    ஏறினா
    நாலு படி
    வழுக்கிடும் !

    வித்தகனைப்
    பார்க்கையில்
    கற்ற வித்தை
    மறந்திடும் !

    தோல்வி வந்து
    தழுவிடும்
    சுற்றம் நம்மை
    இகழ்ந்திடும் !

    உன்னை முத்தம்
    கொடுக்கணும்
    வாரி நெஞ்சில்
    அணைக்கணும் !

    கட்டித்தங்கம்
    உன் நினைப்பே
    கண்ணுக்குள்ள
    உன் தவிப்பே !

    வாழ்க்கையின்னா
    ஜெயிக்கணும்
    ஒவ்வொரு நொடியும்
    உழைக்கணும்!

    முயற்சிக்கு
    ஆமை கதை
    கவிதைன்னா
    உவமைக் கதை !

    வெற்றி வந்து
    தோளைத்தட்டும்
    புகழ் வந்து
    விண்ணை முட்டும் !

    முயற்சியை
    மனதில் கொள்ளு
    வாழ்க்கையில்
    வெற்றி கொள்ளு !

     

    Share
  • ”என் இதின் உறுதி அப்பால் ”

    திருச்சி புலவர் .இரா.இராமமூர்த்தி

    இந்தியத் திருநாட்டின் இமாலயப் புகழுக்குக் காரணம்
    நம் தேசத்தின் பேரிலக்கியங்களாகிய பாரதமும்
    இராமாயணமும் என்று கற்றறிந்தோர் கூறுவர்.
    இந்தியத் தன்மை என்ற நல்லொழுக்கமுறையை
    உலகறிய வைத்தவை அவ்விரண்டு பேரிலக்கியங்களே!

    ஒரு நாட்டின் அரசன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
    குடிமக்களின் கடமைகள் யாவை? குடும்பத்தலைவனின்
    கடமைகள் யாவை? தாயின் கடமைகள் மக்களின் கடமைகள்
    பணியாளர்களின் கடமைகள் எனப் பல்வேறு வகையினரின்
    கடமைகளையும் உரிமைகளையும் இவ்விலக்கியங்கள்
    கற்பிக்கின்றன.

    இவற்றை ஆரிய சம்பத்து என்று பாரதி போற்றுவார்!
    இலக்கியம் நாட்டின் நிலையை உணர்த்தி எதிர்கால வாழ்க்கை
    எப்படி அமைய வேண்டும், என்பதைநோக்கி இயங்குவதாகும்
    இலக்கு என்றால் குறிக்கோள்!இயங்குவது இயம் ஆகவே
    ‘இலக்கியம் வாழ்க்கையின் இயல்பை எடுத்துக் கூறுகிறது’
    என்பர்.அவ்வகையில் திருக்குறள் வாழ்க்கையின் இலக்கண
    மாகவும் இலக்கியமாகவும் விளங்குகிறது. திருவள்ளுவரை ‘
    தெய்வ மாக்கவி’என்று கம்பர் போற்றுகிறார்.

    ‘வையம்என்னை இகழவும் மாசெனக்கு
    எய்தவும் இ.:.தியம்புவ தென்னெனின்
    பொய்யில் கேள்விப் புலமையினோர் புகழ்
    ‘தெய்வ மாக்கவி’ மாட்சி தெரிக்கவே!

    என்பது அவர் பாட்டு. மேலும்,

    ‘தேவ பாடையின் இக்கதை செய்தவர்
    மூவரானவர் தம்முளும் முந்தைய
    நாவினார் உரையின்படி நான்தமிழ்ப்
    பாவினால் இ.:.துரைத்திட்ட பண்பரோ!’

    என்ற பாட்டிலும் அதையே உறுதி செய்கிறார்.

    ‘அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
    ஆரிருள் உய்த்து விடும்.’

    என்பது தெய்வமாக்கவி திருவள்ளுவரின் வாக்கு.

    இந்த வாழ்வியல் நெறியை இராமபிரான் எவ்வாறு
    பின்பற்றிவெற்றி பெறுகிறார் என்பதை விளக்குவதே
    இக்கட்டுரை!

    புலனடக்கம் பணிவு ஆகியவற்றைத் திருவள்ளுவர்
    ‘அடக்கம்’ என்ற சொல்லால் குறிக்கிறார்.அத்தகைய அடக்கம்
    இராமபிரானிடம் நிரம்பி யுள்ளதை இராமாயணம்
    புலப்படுத்துகிறது.

    ”இராமா நீ பதினான்கு ஆண்டுகள் வனவாசம் புரிய
    வேண்டும்;இவ்வாறு அரசர் கட்டளயிட்டார்!” என்று கைகேயி
    கூறிய வாசகத்தை கேட்டு இராமன் ‘ அவ்வாறே செய்கிறேன்
    தாயே!’என்று மிகுந்த பணிவுடன் கூறிய விடை இராமபிரானின்
    அடக்கத்தை உணர்த்துகிறது.

    கைகேயியின் சூழ்ச்சி நாடறிந்த ஓன்று! அதனால் இராமனிடம்
    மிகவும் சாதுரியமாக,

    ஆழிசூழ் உலகம் எல்லாம்
    பரதனே ஆள நீபோய்த்
    தாழிரும் சடைகள் தாங்கித்
    தாங்கரும் தவமேற் கொண்டு
    பூழிவெங் கானம் நண்ணிப்
    புண்ணியத் துறைக ளாடி
    எழிரண் டாண்டில் வாவென்
    றியம்பினன் அரசன் என்றாள்!

    அதைக் கேட்ட இராமபிரான், ‘இப்பணி தலை மேற்
    கொண்டேன்;போகின்றேன்; விடையும் கொண்டேன்!’ என்று
    பணிவுடனும் ,அடக்கத்துடனும் விடை கூறுகின்றார்.
    அதனைக் கம்பர்,

    ”மன்னவன் பணியன் றாகில்,
    நும்பணி மறுப்பெ னோ?என்
    பின்னவன் பெற்ற செல்வம்
    அடியனேன் பெற்ற தன்றோ?
    என்னிதின் உறுதி அப்பால்?
    இப்பணி தலைமேற் கொண்டேன்,
    மின்னொளிர் கானம் இன்றே
    போகின்றேன்; விடையும் கொண்டேன்!”
    என்று பாடுகிறார்.

    கைகேயி கூறிய பாடலும் அதற்கு இராமன் கூறிய
    விடையும் , சூழ்ச்சியையும், சோகத்தையும் விளைவிக்கிறன!
    அவற்றின் பொருளைச் சற்றே விரிவாகப் பார்த்தோமானால்,
    இணையற்ற புதிய புதிய பொருள் நயங்களுடன் அப்பாடல்கள்
    விளங்கும் அழகை உணரலாம்!

    கைகேயி பெற்ற வரங்கள் இரண்டு! அவற்றில் ஓன்று,
    பரதன் நாடாள வேண்டும் என்பது; மற்றொன்று இராமன்
    காடேக வேண்டும் என்பது; ஆனால் கைகேயி தான் பெற்ற
    வரத்தை இராமனிடம் கூறும் போது ஒரு வரத்தை விரி
    வாக்கி,
    1), நீ போய், தாழிரும் சடைகள் தாங்க வேண்டும்;
    2) தாங்கரும் தவம் மேற்கொள்ள வேண்டும்;
    3) புழுதி நிறைந்த கொடிய கானகம் செல்ல வேண்டும்;
    4) புண்ணியத் தலங்களில் புனித நீர் ஆட வேண்டும்;
    5) இவ்வாறு எழிரண்டாண்டுகள் கழித்து நீ மீண்டும்
    இந்நாட்டிற்கு வர வேண்டும்: என்று அரசன் இயம்பினான்”
    என்றாள்.

    இராமன் காட்டிற்குப் போய் என்னென்ன செய்ய
    வேண்டும் என்று பட்டியல் இட்டுக் கைகேயி கூறினாள்!
    இப்பட்டியலில் திருக்குறள் கருத்துக்கள் செழிப்புடன்
    விளங்கி நம் உள்ளத்தில் புத்துணர்ச்சி உண்டாக்குகின்றன!
    கைகேயி இப்படி இராமனிடம் கூறுவதற்கு ஓர்
    உயர்ந்த காரணம் உள்ளது! தசரதன் மூன்று மனைவியரின்
    கணவன்; முதல் மனைவி கோசலை; இரண்டாம் மனைவி
    கைகேயி: மூன்றாமவள் சுமித்திரை!

    இவ்வாறு வரிசைப் படுத்தும் முறை கம்பர் தாமே
    கருதிச் செய்தது!வான்மீகத்தில் கைகேயி மூன்றாம் மனைவி!
    இவ்வாறு கம்பன் மாற்றியதற்குக் காரணம் உண்டு!
    வான்மீகத்தில் கைகேயி தசரதனை மணந்து கொண்டபோது
    ஓர் உறுதிமொழி பெற்றாள்; அது மணம்புரிந்து கொள்வதற்காக
    ஏற்றுக் கொண்ட நிபந்தனை! அதனைக் ‘கன்யா சுல்கம்’ என்பர்!
    அதன்படி தசரதன்- கைகேயிக்குப் பிறக்கும் குழந்தையே ஆட்சி
    புரியும் உரிமை பெறும்! ஒருவேளை மூத்த மனைவிக்கு மகன்
    பிறந்து விட்டாலும் அவன் ஆட்சிபுரிய உரிமை கோரக் கூடாது!
    இது வான்மீகத்தில் உள்ளது! ஆனால் கம்பன் இந்தக் கன்யா
    சுல்கம் என்ற நிபந்தனை பற்றித் தம் காவியத்தில் எங்கும் ஏதும்
    கூறவில்லை!

    இந்த நிபந்தனையைக் கைகேயி தசரதனிடம் கூறுவதானால்
    பரதனுக்கே ஆட்சி என்ற ஓர் உறுதி மொழியைத்தான் கேட்டல்
    இயலும்! இராமன் காட்டிற்குச் செல்லவேண்டும் என்ற
    வகையில் எந்த உறுதி மொழியோ , வரமோ இதில் வர
    வேண்டிய அவசியம் இல்லை! கன்யாசுல்கம் என்ற
    நிபந்தனையில் அடுத்த மனைவியின் மகன் என்பதே ஒரு
    கற்பனைதானே? ஏனென்றால், வான்மீகத்தின் படி முதல்
    இரண்டு மனைவியருக்கும் குழந்தைப்பேறு இல்லாத
    சூழ்நிலையில் தானே, மூன்றாம் மனைவியை(அதாவது
    கைகேயியை) தசரதன் மணந்து கொண்டான்!

    இந்தக் கன்யா சுல்கம் இராமவதார நோக்கம் ஆகிய
    இராவண வதத்துக்கு உதவாது என்பதால், கம்பர் தம்
    இராமாயணத்தில் கைகேயி பெற்ற ஓர் உறுதி மொழியை
    , மறைத்து விட்டு, இரண்டு வரங்கள் என்ற புதிய யுக்தியைத்
    தாம் இயற்றிய இராமாயணத்தில் அமைத்துக் கொண்டார்!
    அதன்படி, பரதன் ஆட்சி பெறுதல், இராமன் காட்டிற்குச்
    செல்லுதல் ஆகிய இரண்டையும் கதைக்குள் கொண்டு
    வரலாமே!

    இராமன் காடேக வேண்டும் என்று கைகேயி காட்டிய
    பிடிவாதமே, இராமனின் பெரும் புகழாகிய அமுதத்தை
    உலகம் பருகக் காரணம் ஆயிற்று என்று கம்பர் பாடுகிறார்!

    அரக்கர் பாவமும் அல்லவர் இயற்றிய அறமும்
    துரக்க, நல்லருள் துறந்தனள் தூமொழி மடமான்
    இரக்கம் இன்மை யன்றோ இவ்வுலகங்கள் இராமன்
    பரக்கும் தொல்புகழ் அமுதினைப் பருகுகின்றதுவே!
    என்பது அவர் பாட்டு!

    கைகேயி கருணை இல்லாமல் தசரதனிடம் நடந்து
    கொண்டாள்; அதுவே இராமன் புகழுக்குக் காரணம்
    என்கிறார் கம்பர்! கைகேயி இரண்டாம் மனைவி!ஆனால்
    தசரதன் நாள்தோறும் ஆட்சி அலுவல்கள் முடிந்தபின்,
    மற்ற மனைவியரிடம் செல்லாமல் கைகேயி வாழும்
    அரண்மனைக்கே சென்றான் என்பதைக் கம்பர் குறிப்பாகப்
    புலப்படுத்தி உள்ளார்! அதனால் தசரதனின் முழு வாழ்க்கை
    யையும் கைகேயி அறிந்து கொண்டிருப்பாள் என்பது நமக்குப்
    புலனாகும்!

    காட்டில் தசரதன் தவறாக யானை மேல் அம்பு
    எய்வதாகக் கருதி, சிரவணன் என்ற சலபோசன முனிவர்
    மகன் மேல் அம்பெய்து, சாபம் பெற்ற வரலாற்றையும்
    அறிந்திருந்தாள் என்பதை நாம் உய்த்து உணரலாம்.

    மேலும் இதனைக் கோசலையிடம் தசரதன் மயங்கி
    வீழ்ந்த நிலையில் முதன்முதலாகக் கூறுவதாகக் கம்ப
    ராமாயணம் குறிப்பிடுகிறது.கோசலைக்கு இது புதிய
    செய்தி! ஆனால் கைகேயி இதனை முன்னதாக அறிந்
    திருந்தாள் என்பதைக் கைகேயி இராமனிடம் பேசிய
    சொல்லே புலப்படுத்துகிறது! ஆம்! இராமன் காடேக
    வேண்டும் என்ற வரம் இராமனை ஆட்சியை விட்டுத்
    துரத்த அல்ல; அவனை ஆபத்திலிருந்து காப்பாற்றவே!
    என்பதை நமக்கு நன்றாகவே கம்பர் புரிய வைக்கிறார்!

    கம்பர் கைகேயியைப் பற்றிக் கூறிய தொடர்களைப்
    பாருங்கள்!- ‘தூமொழி மடமான்!- ‘சிறந்த தீயாள்’ இவை
    வசவு பாடுவதாக இல்லாமல் பாராட்டுப் போலே
    தோன்றுகின்றன! இங்குதான் கம்பசூத்திரம் ஒளிவீசுகிறது!

    தசரதன் முன்பு காட்டில் பெற்ற சாபம் அவனுக்கு
    மகன் பிறப்பான் என்ற மகிழ்ச்சியைத் தந்தபோதே, அதே
    சாபத்தால் அருமை மகனுக்கு, உயிர் ஆபத்து வருமோ?
    என்ற வருத்தமும் உண்டாயிற்று என்பார் கம்பர். இதனை
    விஸ்வாமித்திரன் ”இராமனைக் கொடுப்பாயாக”, என்று
    கேட்டபொழுது, – கண்ணிலான் (சலபோசனமுனிவன்)
    பெற்று (சிரவணனை மகனாகப் பெற்று) இழந்தான் என
    (புத்திரனை இழந்து அவ்வாறே மரணம் அடைக, என்ற
    சாபத்தை அளித்த முனிவனைப் போல்) உழந்தான்
    கடுந்துயரம் காலவேலான் (சிரவணனுக்குக் காலனாகி
    வேலேந்திய தசரதன்)என்ற தொடர்களால் குறிப்பாகப்
    புலப் படுத்துகிறார்.

    சலபோசன முனிவன் தந்த சாபம் ,” நாங்கள் எங்கள்
    புதல்வனை இழந்து மரணம் அடைவதைப் போலவே நீயும்
    உன் மகனைப் பிரிந்து மரணமடைக” என்பதாகும்.
    அப்படியானால் இராமனைப் பிரிந்து தசரதன் மரணம்
    அடைவது நிச்சயம்! அந்தப் பிரிவை நாமே உருவாக்கி,
    அதையும் தற்காலிகப் பிரிவு ஆக்கினால் இராமபிரானுக்கு
    வரும் மரண ஆபத்தை நீக்கி, அவனைக் காக்கலாம், என்ற
    எண்ணத்தினால் தான், கைகேயி நாடக மயிலாகி ஒரு
    சிறந்த தீமையைச் செய்கிறாள். மேலும் முனிவனின் சாபம்
    அப்படியே பலிப்பதானால் காட்டுக்குச் செல்லும் இராமனுக்கு
    எங்கிருந்தாவது ஆபத்து உறுதி என்று எண்ணி எண்ணி
    அதை நீக்கும் வழியைத் தேடுகிறாள். தன் மனங்கவர்ந்த
    மகனைக் காப்பதற்காக காட்டில் அவன் செய்ய வேண்டிய
    கடமைகளைப் பட்டியல் இட்டு அவ்வாறே நடந்து கொள்ள
    அறிவுறுத்துகிறாள். அதற்காக தாழிருஞ்சடைகள் தாங்கித்
    தாங்கரும் தவம் புரியச் சொல்கிறாள்! இதுவும் திருக்குறள்
    கருத்தின் படி உயிர் காக்கும் நடவடிக்கை ஆகும்.தவத்தின்
    வலிமை ஒருவனைக் கூற்றுவனின் வாயிலிருந்து பிழைக்க
    வைக்கும் என்பது குறட்பாவின் கருத்து!

    ”கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
    ஆற்றல் தலைப்பட்ட வர்க்கு!”

    என்ற குறள் நெறிப்படி காட்டில் இராமனைக் கூற்றுவன்
    அணுக மாட்டான். பூழிவெங்கானம் ஒருவனை உண்ணா
    நிலையில் வைக்கும்; அந்த உண்ணாநோன்பு ஆயுளை
    நீட்டிக்கும்! புண்ணியத் துறைகளில் நீராடி, இறைவழிபாடு
    செய்தால் எமபயம் சிறிதும் இல்லை!
    மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாகப் பணிந்தால்,
    ”தீர்காயுஷ்மான் பவ:” என்ற குருவின் ஆசி கிட்டும்!

    இதனைப்
    ”புண்ணியத் துறைகள் ஆடி” என்ற தொடர் புலப்படுத்துகிறது!
    இவ்வாறு பல வழிகளிலும் முயன்றால் மரண ஆபத்து
    விலகி விடும்; அதனால் ,இராமன் எப்படியாவது பிழைப்பான்
    என்ற எல்லையற்ற பாசத்தினால் கைகேயி தசரதனிடம் வரம்
    கேட்டுக் கொடியவள் போல் நடித்தாள்! இதனைப் ”பிரதிமா
    நாடகம்” என்ற பாசகவியின் வடமொழி நூல் சுட்டுகிறது!

    இவ்வாறு இராமனைச் சிறிது காலம் பிரிய வைத்த
    சூழ்ச்சி , நல்ல விளைவை, அதாவது இராமாவதார
    நோக்கத்தை நிறைவேற்றியது.அதுமட்டுமல்ல;
    இராமன் போலவே பரதன், இலக்குவன், சத்ருக்னன்
    ஆகியோரும் தசரதன் மைந்தர்கள் தாமே? அவர்களுக்கும்
    ஆபத்து வராத படி இராமன் செய்யும் தவத்தையே பரதன்
    செய்யவும், சத்ருக்னன் பாகவத கைங்கரியம் செய்யவும்,
    இலக்குவன் தூங்காமலும், உண்ணாமலும் இராமனுடனேயே
    கானகம் சென்று தவ வாழ்வு வாழவும் கைகேயி செய்த
    சூழ்ச்சி வழிகாட்டியது.

    இவற்றையெல்லாம் நன்றாக உணர்ந்த இராமபிரான் தம்
    தாயாகிய கைகேயி கூறியவற்றை அப்போதே செய்வதாக
    இசைவு தெரிவித்தார். அந்தப் பாடலில்,”மன்னவன் பணி
    அன்று! ஆகில் நின் பணி!”(இது நீயே நினைந்து செய்த பணி!)
    இதனை மறுப்பெனோ? என்று கூறிக் கானகம் செல்கின்றார்!
    மேலும் ”என் பின்னவனாகிய பரதன் நின் வரத்தால் பெற்ற
    செல்வம் , அடியேன் பெற்ற தவச்செல்வம் தான்!”
    என்கின்றார்.அதாவது நீ எனக்குக் கொடுத்த மரவுரி என்
    பின்னவனும் பெறத் தக்கதன்றோ? ”என் பின்னவன் பெற்ற
    செல்வம் அடியனேன் பெற்றதன்றோ?”

    பின்னால் பரதன் நந்தியம்பதியில் தவம் செய்து,
    இராமனின் பாதுகைகளை ஆட்சி பீடம் ஏற்றிப் போற்றி
    ஆள்கிறான்!இராமனாகிய இறைவன் திருவடியைப்
    போற்றும் பரதன் ,

    ”மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
    நிலமிசை நீடுவாழ் வார்”

    என்ற திருக்குறள் காட்டும் வழியில் , நீண்டநாள்
    வாழ்வான். சத்ருக்னனும் அண்ணன் பரதன் போலவே
    தவவாழ்வு வாழ்வதால் அவனுக்கும் ஆபத்தில்லை!
    இலக்குவனோ, பகவத் கைங்கரியம் செய்வதால்
    கைங்கர்யஸ்ரீ யைப் பெற்று நெடிது வாழ்கிறான்.

    இவ்வாறு நால்வரையும் காப்பாற்றிய கைகேயி என்ற
    உத்தமத் தாயை ”தீயள் என்று நீ துறந்த தெய்வம்!” என்று
    இராமபிரான் தசரதனிடம் கூறுகிறான்.
    இராமன் கைகேயியிடம் கூறும் விடைக்குள்
    மற்றொரு பொருளும் இருக்கிறது.

    ”என் இதின் உறுதி அப்பால்?”என்ற தொடர் என் உயிருக்கு
    உறுதி பயக்கும் கடமை வேறு ஏது?என்ற பொருள் தருகிறது.
    மற்றும் ”மின் ஒளிர் கானம் இன்றே போகின்றேன்” என்ற
    தொடர் ,” நீ கூறிய பூழி வெம் கானம் எனக்கு மின் ஒளிர் கானம்
    ஆகும் : அதாவது மேகம் சூழ்ந்த வானத்தில் மின்னல்
    ஒளிரும் குளிர்ந்த காடாகும்!”என்று இராமன் கூறியது,

    ”ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
    வானம் நணிய துடைத்து ”

    என்ற குறள் கூறும் வானம் கைவசமாகும் தவநிலையைக்
    குறிக்கிறது!

    அது மட்டுமல்ல! மின் என்ற சொல் இங்கு சீதையைக்
    குறிக்கும். மின்னல் போன்று சீதையின் புகழ் இனிக்
    கானகத்தில் ஒளிவீசி விளங்கும்’ என்ற புதிய பொருளைத்
    தருகிறது.

    ஆம்! ”இராமகாதை சிறையிருந்தாள் ஏற்றம்
    கூறுகிறது”. என்ற ஸ்ரீ வசன பூஷணத்தின் வாக்கியம் காட்டும்
    வழியில், காட்டில் சீதையின் ஒளி மின்னல் போல்
    விளங்கப் போகிறது, என்றும் , அதற்கு அவள் அசோக
    வனத்தில் செய்யப் போகும் தவம் காரணமாகி அவள்
    உயிரையும் காக்கப் போகிறது” என்றும் பொருள்
    படுகிறது.

    இப்போது பாடலை மீண்டும் படிப்போம்.

    ”மன்னவன் பணிஅன்று ஆகில்
    நும்பணி மறுப்பெ னோ?என்
    பின்னவன் பெற்ற செல்வம்
    அடியனேன் பெற்றது அன்றோ?
    என்னிதின் உறுதி அப்பால்?
    இப்பணி தலைமேல் பூண்டேன்!
    மின்ஒளிர் கானம் இன்றே
    போகின்றேன்! விடையும்கொண்டேன்!”

    இப்பாடல் மூலம் நாமும் நம் ஐயங்களைத்
    தீர்க்கும் சரியானவிடையையும் கொண்டோம்!
    இராமன் புகழ் பரவுக உலகமெல்லாம்!

    -திருச்சி புலவர் இராமமூர்த்தி.

    Share
  • காலம் (4)

    மீ. விசுவநாதன்

    vallamai111-300x150

    கோழி பிடித்துக் குழம்பினை வைத்தபின்
    கோழிக் குரலினைச் சோற்றிலே தேடுறான் !
    நாழிகை போனால் நமக்கது கிட்டாது ;
    ஆழிகை முத்தாய் அறி . (31) 30. 1.2015

    பசித்தபின் உண்பதும் , பார்த்துள் முகமாய்
    ரசித்து நிறைவதும் , ராகம் ருசித்தே
    இசைப்பதும் , யாவர்க்கும் ஈந்து வளர்ந்தே
    இசைபட வாழ்தலும் ஏற்பு. (32) 31. 1.2015

    பூனைபோல் தூங்கிப் புலியைப்போல் பாய்கின்ற
    சேனையில் கூடியே சேராமல் , “நானை”
    அடக்கும் அகப்பயிற்சி ஆசானின் தாளில்
    கிடக்க விலகும் கிலி. (33) 01. 2.2015

    இட்டிலி, சட்டினி இப்படி சாப்பாட்டில்
    முட்டியும் மோதியும் மொத்தமாய் வெட்டியாய்
    கட்டிநல் வெண்ணையாம் காலத்தைக் குப்பையில்
    கொட்டும் கொடுமையைக் குட்டு. (34) 02.02.2015

    மனதின் அமைதி, “மதிக்கிற பண்பும் ,
    இனவெறி இல்லா இறையின் இனமாய்
    கனவில் நனவில் களிக்கும் சுகந்தான்! “
    அனலில் புனலும் அறி. (35) 03.02.2015

    தாவித் தவித்துத் தளர்ந்து நடக்கையில்
    ஆவியைச் சேர்த்து அணைக்கிற தேவியே
    அம்மா ! அவளொரு அற்புதத் தூய்மையின்
    தும்மலில் வந்த துளி. (36) 04.02.2015

    கூட்டத்தில் கூடி குணம்சேர வில்லையெனில்
    ஆட்டத்தை விட்டகல் ! அன்பரைத் திட்டாதே !
    ஆனை ஒருநாளும் ஆளடித்துத் தின்னாது !
    ஞானம் வரும்வரை நாடு. (37) 05.02.2015

    ஒருகோட்டில் நீயிருப்பாய் ஓங்காரக் கண்ணா
    உருவம் தெரியாமல் ஊதும் குழலுள்
    ஒளிந்திருக்கும் காற்றாக ! ஓதிய கீதைத்
    தளிரே உயர்மதி தா. (38) 06.02.2015
    (ஓவியர் “கேசவ்” வரைந்த ஓவியம் பார்த்து எழுதிய வெண்பா)

    சேவலையும் வேலையும் சேயோன் மயிலுடன்
    சேவகனாய் நானவன் சேவடிக் காவடி
    தாங்கிட வேண்டுமே ! சண்முகா உன்முகம்
    வாங்கிய என்மனம் வா. (39) 07.02.2015
    (ஓவியர் “கேசவ்” வரைந்த ஓவியம் பார்த்து எழுதிய வெண்பா)

    இரவும் விடிவும் இருபுற வாழ்க்கை !
    வரவும் செலவும் வரமாம் உறவு !
    உரசியும் ஒட்டியும் ஊர்வலம் போகும்
    அரசியே பாச அகம். (40) 08.02.2015

    Share
  • அவன் அது ஆத்மா! (11)

    மீ.விசுவநாதன்

    அத்யாயம்: பதினொன்று

    S. N. N. சங்கரலிங்கம் ஐயர்

    avs1
    அவனிருக்கும் வீட்டிற்குப் பின்புறத்தில்தான் இராமச்சந்திரபுரம் தெரு இருக்கிறது. அது ஒரு அழகான அக்கிரஹாரம். இருபுறமும் வரிசையாக அழகான வீடுகள் உண்டு. தெருவின் கடேசியில் ஸ்ரீ ராமர் கோவில். ஸ்ரீராமர், லக்ஷ்மணர், சீதாதேவி, ஆஞ்சநேய சமேதராக இருக்கும் மூலஸ்தானம். இடதுபுறத்தில் லக்ஷணமான பெரிய வலம்புரி விநாயகர் சந்நிதி. அதற்கு முன்பாக சிறு ஹோமகுண்டம். தங்கக் குங்குமச் சிமிழ் போல இருக்கும் இந்தக் கோவில். அதன் பின்புறம் தெளிந்து பாயும் கன்னடியன் கால்வாய். தென்புறத்தில் ஏழு வீடுகள் கொண்ட எழாபுரம் அக்கிரஹாரம். கன்னடியன் கால்வாய்க்கு மேற்குப் பகுதியில் பழமையான, உயிர்ப்புடன் கூடிய ஒரு “கல் மண்டபம்” படித்துரையுடன் இருக்கும். இப்பொழுது கால்வாயை விரிவு படுத்துகிறோம் என்று பொதுப்பணிதுறையினர் அந்த மண்டபத்தை இடித்து விட்டனர். கால்வாயில் தண்ணீர் நிறைந்து ஓடும். அது அவனுக்கும் அவனது நண்பர்களுக்கும் கொண்டாட்டந்தரும். அவர்கள் அந்த மண்டபத்தின் மேலே இருந்து தண்ணீரில் குதித்து நீந்தியபடியே சிதம்பரேஸ்வரர் கோவில் படித்துறையில் வந்து கரை ஏறுவார்கள். அந்த மண்டபத்திற்கு மேற்கே கண்ணுக்கெட்டும் தூரம்வரை பசுமையான வயல்காடுகள்தான். “ஒரு காலத்தில் இந்தத் தெருவில் “மாத்வ பிராமணர்கள்”, அதாவது ராயர் குடும்பத்தினர் அதிகமாக வாழ்ந்திருக்கின்றனர். அவர்களின் வழிபாட்டுத் தெய்வமான ஸ்ரீ ராமனுக்குக் கோவில்கட்டி வழிபட்டு வந்திருக்க வேண்டும். அதற்க்குச் சான்றாக இன்றும் சில மாத்வகுடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். ஸ்ரீ ஆதிவராகப் பெருமாள் கோவில் சித்திரைத் திருநாளின் மூன்றாம் திருநாள் “ஆஞ்சநேயர் வாகனக்” கட்டளைக் காரர்கள் ராயர்குடும்பத்தினர்தான். அந்தத் திருநாள் செலவுக்கென்றே “வயலை” எழுதி வைத்திருந்தனர். அதில் விளையும் நெல்லை விற்றுவரும் பணத்தில் சுவாமி கட்டளையைச் செய்யவேண்டும் என்று இந்த ஏற்பாடு. சிலவருடங்களுக்கு முன்புதான் இந்தக் கட்டளைக்காரர்கள் மாறினார்கள்” என்று பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து ஒய்வு பெற்று, அதே தெருவில் வசித்து வந்த, இலக்கியத்திலும், வரலாற்றிலும் ஈடுபாடுள்ள “பேங்க் கிருஷ்ணமூர்த்தி மாமா” அவனிடம் ஒருமுறை கூறி இருக்கிறார். ஸ்ரீ ராமர் கோவிலுக்கு அந்த கிராம மக்களே கைங்கர்யம் செய்து வருகின்றனர். முக்கியமாக சங்கரலிங்கமையர் குடும்பத்தினரின் பங்கு அதிகமாக இருக்கும்.

    avs3S. N. N. சங்கரலிங்கம் ஐயர்தான் இந்தியா சிமிண்ட்ஸ் நிறுவனத்தின் ஆணிவேர். அவர் மாட்டு வண்டியில் திருநெல்வேலிப் பகுதியில் உள்ள கிராமங்களுக்குச் சென்று இந்தியா சிமிண்ட்ஸ் துவங்குவதற்குத் தேவையான இடத்தையும், “ஜிப்சம்” போன்ற மூலப்பொருட்கள் கிடைக்கும் இடங்களையும் தேடிக் கண்டு தாழையூத்தில் சிமென்ட் தொழிற்சாலையை நிறுவினார் என்றும் அவனது கிராமத்துப் பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறான். அவர் ஒரு சிறந்த நிர்வாகி. தினமும் காலையில் எட்டு மணிக்கெல்லாம் அவரது கருப்பு நிறக் காரில் அவரும், அவரது மனைவி திருமதி. பிச்சு சங்கரலிங்கம் அம்மாள் (பிச்சுக்குட்டி மாமி) அவர்களும் கல்லிடைகுறிச்சியில் இருந்து தாழையூத்திற்குச் சென்று இரவு எட்டு மணிக்குத் திரும்புவதை அவன் பலமுறை பார்த்திருக்கிறான். கிராமத்தில் படித்த இளைஞர்களுக்கு தனது தொழிற்சாலையில் வேலை கொடுத்திருக்கிறார். அப்படி வேலைக்குச் சேர்ந்து பணியில் இருந்து ஓய்வு பெற்ற மனிதர்கள் சங்கரலிங்கம் ஐயர் அவர்களின் நல்ல குணங்களையும், செய்த உதவிகளையும் அவனிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

    அவனுக்கு இன்றும் நினைவில் இருப்பது சங்கரலிங்கம் ஐயர், R. S. A. சங்கர ஐயர், ராயல் என்பீல்ட் K. R. சுந்தரம் ஐயர், ஈசன் குழுமத்தின் ஈஸ்வர ஐயர் போன்ற பெரியோர்கள் சேர்ந்து ப்ரும்மஸ்ரீ சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதரின் மகாபாரத உபன்யாசத்தை 1966ம் வருடம் ஆடிமாதம், நாற்பத்தெட்டு நாட்கள் ஏற்பாடு செய்திருந்ததுதான். இராமச்சந்திரபுரம் தெருவில் ஸ்ரீ ராமர் கோவிலுக்கு முன்பாக பெரிய பந்தல் போட்டிருந்தார்கள். தெரு முழுவதும் மக்கள் வெள்ளம் போல அமர்ந்து கேட்பார்கள். ஒலிபெருக்கி வடக்கு ரதவீதி (குத்துக்கல் தெருவின் கடேசி வரை) கடேசி வரை வைத்திருப்பார்கள். ஒரு பெரிய கல்யாண உற்சவம் போலத்தான் அது நடந்தது. தினமும் மாலை ஆறு மணிக்கெல்லாம் அவனுக்கு அம்மா அவன் நெற்றியில் விபூதி இட்டு அவனை அந்த மகாபாரத உபன்யாசம் கேட்கச் சொல்லி அனுப்புவாள். அவனுடன் அவனது நண்பன் நீலகண்டனும் வருவான். அவனுக்கு விளையாட்டில் தான் முதலில் கவனம் இருந்தது. இந்த உபன்யாசம் கேட்பதில் விருப்பம் இருக்கவில்லை. அம்மாவின் வற்புறுத்தலால் முதல்நாள் சென்றான். சரியாக ஏழு மணிக்கு,”தாபிஞ்ஜஸ் தப கர்த்விஷே தனுபிருதாம் தாரித்ர முத்ராத்விஷே” என்று அனதராம தீட்சிதரும், அவரது சீடர்களும் தியானஸ்லோகம் கம்பீரமாக ஒரே குரலில் சொன்னதைக் கேட்டு அதிலேயே அவன் சொக்கித்தான் போனான். தீட்சிதரின் கதை சொல்லும் பாணி அவனுக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. அவன் அந்தக் கதைக்குள்ளேயே சென்று விடுவான். மகாபாரதம் அவனைக் கட்டிப் போட்டது. அதில் உள்ள சூஷ்ம தர்மங்களை தீட்சிதர் சொல்லச் சொல்ல அவன் கவனமாகக் கேட்டு வந்தான்.

    சூதாட்ட சர்க்கத்தில் தர்மன் ஒவ்வொன்றாகப் பணயம் வைக்க, சகுனி பகடை உருட்ட “நான் ஜெயித்தேன்..அடுத்தது என்ன …” என்று சகுனி கேட்க, மீண்டும் தர்மன் தன் தம்பியரைப் பணயம் வைக்க, சகுனி கள்ளத்தனமாக எல்லோரையும் வென்ற பின்பு, தர்மா இன்னும் பாஞ்சாலி இருக்காளே…அவளைப் பணயம் வைத்தாடு என்று மகா பாபி சகுனி அந்தப் பதிவ்ரதையைக் கேட்டான்.. தர்மன் சரி பணயம்ன்னு சொல்லரத்துக்குள்ளே அவள ஜெயுச்சுட்டேன்னு…சபைல குதிச்சான்…தர்மர் சொக்கட்டானையே பாத்துண்டிருந்தார்….சூதாடரவாளுக்கு நாம அடுத்தாப்புல ஜெயுச்சுடலாம்னுதான் தோணுமாம்…. பட்டத்திரி குருவாயூரப்பனப் பார்த்து,

    “ஏய் குருவாயுரப்பா…நீ கண்கண்ட தெய்வமாச்சே….அந்த பாபி சகுனி சூதாட்டத்துல தர்மபுத்திரர்ட்டேந்து எல்லாத்தயும் ஏமாத்தி ஜெயிச்சுட்டானாமே..உனக்குத் தெயரியுமான்னு கேட்டாளாம்..அதுக்கு சுவாமி குருவாயூரப்பன் “ஆமாந்நாளாம்” என்று கதையின் உச்சத்தை கேட்பவரின் மனதில் பதிய வைத்தார்.

    அவர் சொன்ன “யஷப்ப்ரச்னம்” அவனுக்கு மிகவும் பிடித்த ஒன்று. தாகத்திற்க்காகத் தண்ணீர் எடுக்கத் தன் தம்பியர்avs ஒவ்வொருவராக அந்தக் குளத்தை நோக்கி அனுப்புவதையும், அந்தக் குளக்கரையில் உள்ள மிகப் பெரிய மரத்தில் இருக்கும் “யக்ஷன்” என்ற தர்ம தேவதையையும் தீட்சிதர் சொல்லச் சொல்ல, அந்த இயற்கைக் காட்சிகளும், பஞ்ச பாண்டவர்களும், அந்தச் சூழ்நிலையின் அடர்ந்த காட்டு மரங்களின் வாசனையும் ஒரு பிம்பமாக அவனுக்குள்ளே பதிந்து விட்டது. அவன் ஆற்றங்கரையில் சுடுகாட்டில் இருக்கும் அந்தப் பெரிய இலுப்பைமரத்தை நினைத்துக் கொள்வான். இப்பொழுதும் அந்த மரத்தைப் பார்க்கும் பொழுது “யக்ஷன்” நினைவுதான் அவனுக்கு வரும். அது தீட்சிதர் உரையின் உருவங்கள். இன்றும் அதே உருவங்கள்தான் அவனோடு உயிராக இருக்கிறார்கள். யக்ஷன் தர்மராஜனிடம் நூற்றிஎட்டு கேள்விகள் கேட்கிறான். அனைத்திற்கும் தர்மர் விடை கூறுவதை தீட்சிதர் தெளிவாகக் கூறினார். அந்த வயதில் அவனுக்குச் சில எளிய தர்மங்கள்தான் மனதில் பதிந்தது. குளத்தில் நீர்குடிக்கச் சென்ற தம்பியர்கள், குளத்தின் உரிமையாளர் சொல்லைக் கேட்காமல் தண்ணீர் குடித்தனர். மயங்கி விழுந்தனர். தர்மபுத்திரர் யக்ஷன் சொல்லை மதித்தார். தனக்குத் தெரிந்த பதிலைத் தந்தார். தர்மதேவதை அவரது தம்பியர்களை மீட்டுக் கொடுத்தார். அதனால் பிறர் பொருளை, அவரது உரிமை இல்லாமல் தொடாதே என்ற பாடத்தை அறிய முடிந்தது.

    “உலகில் ஆச்சரியமானது எது” என்ற கேள்விக்கு ,”தினமும் மனிதர்கள் இறக்கிறார்கள் என்று தெரிந்தும் நான் என்றும் இருப்பேன் என்று நினைக்கிற அறியாமைதான் ஆச்சர்யமானது” என்ற தர்மபுத்திரரின் பதில் அவனுக்குப் பிடித்திருந்தது. அதற்குப் பிறகு அவன் அந்த கிராமத்திலோ, அவனது குடும்பத்திலோ யாரேனும் இறந்தால் இந்த தர்மபுத்திரரின் விடைதான் அவனது மனதில் ஒலிக்கும். அதுவும் தீட்சிதரின் குரலிலேயே.

    avs2அவர் கர்ணனின் கதையைச் சொன்னார். அவன் அன்று அழுதே விட்டான். ஆற்றில் மிதந்துவரும் தொட்டிலைத் தேரோட்டி எடுத்து வருவான். குழந்தை இல்லாத தன் மனைவியிடம் தருவான். ஒரு தாய் குழந்தையைத் தொட்டிலில் வைத்து ஆற்றிலே விட்டாள். இன்னொருத்தி அதையே அன்பாக அணைத்துக்கொண்டு தாயானாள். தீட்சிதர் அப்படிச் சொன்னபொழுது அன்று அவனுக்கு அந்த கிராமத்தில் யாருக்கெல்லாம் குழந்தைகள் இல்லையோ அவர்களுக்கெல்லாம் அவன் குழந்தையாக இருக்க வேண்டும் என்று விரும்பினான். இதுவும் மகாபாரதம் சொல்லும் சூஷ்ம தர்மம்தானே. போர்க்களத்தில் கர்ணன் தேர்ச் சக்கரத்தைத் தூக்கும் பொழுது, கிருஷ்ணர் சொல்லி அர்ச்சுனன் அம்பு விட அது கர்ணனின் மார்பில் தைக்கிறது. கீழே சரிகிறான் கர்ணன். மீண்டும் அர்ஜுனன் விடும் அம்பெல்லாம் கர்ணனுக்கு மாலையாக விழும்படிச் செய்கிறாள் தர்மதேவதை. கண்ணன் போய் கர்ணனிடம் அவனுடைய புண்ணியத்தை தானமாகக் கேட்கிறான். தன் ரத்தத்தால் அதைக் கண்ணனுக்குத் தாரை வார்க்கிறான். கண்ணன் கர்ணனுக்குத் தன் விஸ்வரூபம் காட்டுகிறான். இந்த நிகழ்ச்சியைக் கதறக்கதறச் சொல்லி, “ஏய்..குருவாயூரப்பா..கர்ணனுக்கு நீ விஸ்வரூம் காட்டினயாமே…உண்மைதானான்னு பட்டத்ரி கேட்டார். அதுக்கு குருவாயூரப்பன் “ஆமாந்நாளாம்” என்று தீட்சிதர் கதை சொல்லும் அழகே அழகு. பின்னொருநாள் அவன் அவனுக்குப் பெரியம்மாவுடன் அம்பாசமுத்திரம் கிருஷ்ணா தியேட்டரில் கர்ணன் திரைப்படம் பார்க்கப் போனான். கர்ணன் இறக்கும் பொழுது அவனும் அழுது, படம் முடியும் முன்பே தியேட்டரை விட்டு வெளியில் வந்ததை அவனுக்குப் பெரியம்மா அவனிடம் அடிக்கடி நினைவு கூறுவாள். அவன் கர்ணன் திரைப்படத்தை எத்தனையோ முறை பார்த்து விட்டான். அதைப் பார்க்கும் பொழுதெல்லாம் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் குரலிலும் தீக்ஷிதரின் குரலையே அவன் அடிநாதமாகக் கேட்கிறான். அதே போல அபிமன்யு, பீஷ்மர், துரோணர் , நளசரித்ரம் எல்லாமே அவனுக்குள் அவர் அன்று நட்ட விதைகள்தான். பின்னாளில் அவன் மகாபாரதக் கதைகளுக்குள் தன்னைத் தொலைத்ததற்கு சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதரே காரணம் என்றால் அந்த உபன்யாசத்தை ஏற்பாடு செய்த சங்கரலிங்கம் ஐயர் போன்ற பெரியோர்களின் தர்ம சிந்தனையும் முக்கிய காரணம்.

    சங்கரலிங்கம் ஐயர் மறைந்த பிறகு, அவரது பிறந்த தினமான ஜனவரி 31ம் தேதி துவங்கி பதினைந்து தினங்கள் ப்ரும்மஸ்ரீ தூப்புல் லக்ஷ்மிநரசிம்ஹன் அவர்களது உபன்யாசத்தை அவரது குடும்பத்தினர், குறிப்பாக K.S. ராமன் முன்னின்று நடத்தி வந்தார். தூப்புல் லக்ஷ்மிநரசிம்ஹன் செய்த “பிரகலாத சரித்திரம்” சொற்ப்பொழிவை அதே தெருவில் பலவருடங்களுக்குப் பிறகு கேட்கும் வாய்ப்பு அவனுக்குக் கிடைத்தது. தூணில் இருந்து அந்த நரசிம்மன் வெளியில் வரும் காட்சியை அவர் அழகு தமிழில் நெருப்புப் பொறி பறக்கச் சொன்ன பொழுதும், ஹிரண்ய வதம் முடிந்து, சினம் தணிந்து ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ஹனாகப் பிரகலாதனுக்குக் காட்சி அளித்ததைக் கூறும் பொழுதும் அவன் கண்கள் பனித்தன. அன்று அங்கு அந்தக் கதையைக் கேட்க வந்திருந்த L. M. சுந்தரம் ஐயர் (அவனுக்கு நண்பன் சுப்பாமணியின் அப்பா ) “கேட்டாயா விஸ்வநாதா…இப்படி உடம்பே புல்லரிக்கும்படியா எத்தனைபேர் கதை சொல்லறா” என்று வியந்தார். இப்படி எல்லாம் கிராமத்தில் தர்மத்தை வளர்த்தனர். அவனைப் போன்ற எத்தனையோ இளைஞர்களின் மனம் உயரக் காரணமே கிராமத்துப் பெரியோர்கள் செய்த நல்ல தர்ம காரியங்கள் என்பதை அவன் நம்புகிறான்.

    (07.05.2015) இனியவன் அடுத்த வாரம் வருவான் ……….

    Share
  • குடும்ப வண்டி..

    நாகினி

     

    செல்வம் சேர்ந்தே
    மழலைச் செல்வம் சேர்ந்தே
    வருடந்தவறாமல் இல்லறத்தின் நல்லறமாக
    செல்வம் சேர்ந்தே
    மழலைச் செல்வம் சேர்ந்தே
    செழிக்கும் மகிழ்ச்சி குடும்ப வண்டி

    அண்ணன் தம்பி கைகலந்து
    செல்லச் சண்டைகள் பூத்திடும்
    அரட்டை நிறைந்த வாழ்க்கை வண்டி
    செயலிழப்பு சோர்வு தொடும்நேரம்
    அன்பு கதைகளும் சளசள பேச்சாகி
    செவிக்கு இம்சை ஆனாலும்
    அரவணைக்கும் தாய்மை மனமோ-மழலைச்
    செல்வங்களுடன் பொழுதைச் சுகமாய் கழித்திடும்
    அழகு ஆனந்தம் விளையாடும் குடும்ப வண்டி

    எத்தனை கோடி பொருட்செல்வம் கொட்டியும்
    அழுது தொழுதாலும் கிடைக்காத பெருஞ்செல்வம்
    என்றென்றும் இனிமை சேர்க்கும்
    அமுதக்கலசம் மழலை துள்ளும் வாழ்க்கைவண்டி
    எக்காலத்தும் உறவுக் கிளைபரப்பி
    அலைந்து ஆர்ப்பரிக்கும் மனதை நேர்வழிப்படுத்தி
    அகிலம் காத்திடும் மழலை நிறைந்த குடும்ப வண்டி

    வீட்டுக்கொரு பிள்ளை போதுமென்று
    நீட்டி முழக்கலாமோ ஆணவத்தில்
    வீழும் உறவுகளை இழுத்துப் பிடித்து
    நீங்கா இல்லற பந்தத்தை
    நீட்சி உறவென மலரச்செய்யும் – மழலை தவழும்
    வீடு செல்வம் நிறைந்த வாழ்க்கைவண்டி
    நீட்டும் கைகளில் அன்பு
    வீற்றிருக்கும் இல்லற நலமதில் பூத்திருக்கும் மழலை
    நீயென மடியில் தாங்கி வளர்க்க சிரமமென
    வீணே இல்லம் தேடிவரும் பெருஞ்செல்வத்தை அழித்து
    நீங்கா பழிதேடும் வீணர்களின்
    வீண்வாதத்திற்குள் அடங்காத மழலை வரம்பெற்ற குடும்ப வண்டி

    செல்வம் சேர்ந்தே
    மழலைச் செல்வம் சேர்ந்தே
    வருடந்தவறாமல் இல்லறத்தின் நல்லறமாக
    செல்வம் சேர்ந்தே
    மழலைச் செல்வம் சேர்ந்தே
    செழிக்கும் மகிழ்ச்சி குடும்ப வண்டி!

    … நாகினி

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

    காய்ச்சிய பாலுரை குத்தத் தயிராகும்,
    ஆய்ச்சியர் பாடி அவனுறையூர், -மேய்ச்சல்
    மனன்யன் முகுந்தன் மடியேந்தி தாளால்,
    அனன்யபக்தி ஆவுக்(கு) அளிப்பு ….கிரேசி மோகன்….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    crazy

    துருவ சரித்திரம்

     

    ——————–
    உத்தான பாதனுக்குப் பத்தி னிகளிரெண்டுcrazy1
    சுத்தாத்மா மூத்தாள் சுநீதியும் -பித்தாக்கி
    சக்கிர வர்த்தியை சேலைச் சிறைவைத்தாள்
    சக்களத்தி மாதுசுரு ஸி….(1)

    சித்திமகன் உத்தமன் அத்தன் மடியமர
    தத்துமகன் போல்வாழ்ந்த அத்துருவ -புத்திரனும்
    தாவி மடியேற தாங்காது சிற்றன்னைப்
    பாவி பிடித்திழுத்தாள் பாய்ந்து….(2)

    கருவ சுருஸி கடுஞ்சொற்கள் கேட்ட
    துருவன் மனக்குறையை தாய்முன் -உருக
    அநீதி முடிக்கு(ம்)அரி அப்பன் மடியில்
    சுநீதி அமரென்றாள் சேய்க்கு….(3)

    மாதாசொல் மிக்கதோர் மந்திரம் வேறிங்கு
    ஏதேனும் உண்டோவென்(று) எண்ணியசேய் -பீதாம்
    பரனை தரிசிக்கப் போகத்தம் பூரா
    கரனை தரிசித்தான் கண்டு….(4)

    வாசுதேவ மந்திரத்தை தேசிகர் நாரதர்crazy3
    தேசுமிகு சேய்க்குப தேசித்து -கேசவர்க்கு
    தாசனாய் வாசனாதி தோஷமின்றி வாழ்த்தென்றார்
    ஆசன தர்ப்பை அமர்ந்து….(5)

    கனியில் துவங்கியவன் காய்ந்த சருகை,
    பனிநீரை, காற்றைப் புசித்து -முனியாய்
    குடைசாய மூன்று குவலயங்கள் காலை
    திடமாக ஊன்றி தவம்….(6)

    ஈரைந்து மாதமேந்தி ஈன்றவள் சொற்கேட்டு
    பேரைந்து மூன்றெழுத்தைப் பார்த்திட -ஓரைந்து
    மாதங்கள் செய்த மகாதவத் தால்வியந்து
    வேதங்கள் மூக்கில் விரல்….(7)

    கும்பகத்தால் காற்று குறைந்திட மூச்சடைத்து
    உம்பர்கள் ஓடி உலகெடுத்த -கொம்பனை
    வேண்ட கருடாழ்வான் வாகனம் மீதமர்ந்து
    ஆண்டவன் காட்சி அளிப்பு….(8)

    உருவம் மறைந்திட உள்ளே, திகைத்து
    துருவன் விழிகள் திறக்க -அருவம்
    கருடனை விட்டிறங்கி கைச்சங்கால் கன்னம்
    வருடியபின் வாஞ்சையாய் வாக்கு….(9)

    மாண்டபின் செல்கின்ற மோட்சம் கொடுக்காது
    ஆண்டுகள் முப்பத்தா றாயிரம் -ஆண்டபின்
    வானில் துருவ விளங்குவாய் விண்மீனாய்
    ஆணில் சிறந்தோன் அளிப்பு….(10)

    பெற்றவளும் கூடவர புஷ்பகவி மானத்தில்
    உற்றான் துருவன் உயர்பதவி -கற்றவர்க்கும்
    கிட்டாத அந்தஸ்து கண்மூடி பக்திக்கு
    கிட்டுமெனக் கூறும் கதை….(11)….கிரேசி மோகன்….

    Share