Blog

  • இந்த வார வல்லமையாளர்!

    மே 4, 2015

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் அவர்கள்

    prof deivasundaram2

    தமிழகத்தின் இக்கால இளையதலைமுறை பல்கலைக்கழக பட்டம் பெற்றிருந்தாலும் சொந்தமாக ஆங்கிலத்தில் எழுதுவதையோ அல்லது சரளமான ஆங்கிலத்தில் தங்கள் கருத்துகளை உரையாடல்வழிப்  பகிர்ந்துகொள்ள இயலாமைக்கோ காரணம் ஆங்கிலம் பயன்பாட்டு முறையில் கற்பிக்கப்படாததே என்பது மொழியியல்துறை வல்லுநர்கள் கருத்து. தங்கள் பிள்ளைகளின் முன்னேற்றம் ஆங்கிலம் அறியாததால் தடைபடக்கூடாது என்ற நோக்கத்தில் பெற்றோர்கள் அவர்களை ஆங்கிலப் பயிற்றுமொழி வகுப்புகளில் சேர்த்தாலும், அங்கு பயிலும் மாணவர்கள் 90 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றாலும், மனனம் செய்து கற்கும் கல்விமுறையில் அவர்கள் கற்பது பெற்றோர்களின் நோக்கத்தை நிறைவேற்றுவதில்லை. மொழியியல்துறை பயிற்சி இக்குறையை நீக்க இயலும். உலக நாடுகளில் மொழியியல் கல்விக்கு முக்கியத்துவம் தரப்படும் பொழுது, இத்துறை தமிழக அரசின் மெத்தனத்தினால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு மிகவிரைவாக இன்று அழிவுநிலையை நோக்கிச்  சென்றுகொண்டுள்ளது. இதனைப் பற்றிய எச்சரிக்கையைவிடுத்து சென்ற சனிக்கிழமை வெளியான தினமணி நாளிதழின்  “அழிவின் பிடியில் மொழியியல் துறை” கட்டுரைக்கு வழங்கிய தமது செவ்வி மூலம் மக்கள் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளார் மொழியியல் வல்லுநர் பேராசிரியர் முனைவர் ந.தெய்வசுந்தரம் அவர்கள். மொழியியல் துறையின் முக்கியத்தை மக்கள் கவனத்திற்குக் கொண்டுவரும், அதைப் புறக்கணிப்பதால் ஏற்படக்கூடிய இடையூறுகளை எடுத்துரைத்த பேராசிரியர் முனைவர் ந.தெய்வசுந்தரம் அவர்களை இவ்வார வல்லமையாளராகப் பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் பெருமை அடைகிறோம்.

    சென்னைப் பல்கலைக்கழக தமிழ்த் துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் அவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இயற்பியல் இளங்கலைப் பட்டமும், தமிழ், மொழியியல் புலங்களில் முதுகலைப் பட்டம் முனைவர் பட்டம் பெற்றவர். இவர் கணினிமொழியியல் (computational linguistic) வல்லுநர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் இவரால் வளர்த்தெடுக்கப்பட்ட மொழியியல் துறை, ஆராய்ச்சியாளர் பலரை அத்துறையில் உருவாக்கிய அத்துறை, அவரது பணி ஓய்விற்குப் பிறகு பல்கலைக் கழகத்தின் நிதிஒதுக்கீட்டினை இழந்து, பல்கலைக்கழகத்தின் அக்கறையின்மையால் நலிந்துவிட்டது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழித்துறையில் கணினிமொழியியலுக்காக ஒரு முதுகலைப் பட்டப்படிப்பைத் தொடங்கியாவர், தமிழரல்லாதவர்க்குத் தமிழ்மொழிக்கல்வி என்ற கணினிவழி பாடத்தைச் சென்னைப் பல்கலைக்கழகத் தொலைதூரக்கல்வி நிறுவனத்திற்காகத் தயாரித்து அளித்தவர் என்ற பல பெருமைகளை உடையவர் பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் அவர்கள்.

    prof deivasundaram3

    மொழியியல் பாடமென்பது எல்லா மொழிகளைப்பற்றியும் பொதுவாக அறிந்துகொள்ளும் துறை, ஆய்வு நோக்கம் அதன் அடிப்படை. எழுத்து வடிவம், வாக்கிய அமைப்பு ஆகியவை குறித்து ஆய்வு செய்து படிக்கும் திறமையை வளர்ப்பது மொழியியல் துறையின் பின்னணி. கல்லூரி மொழியிலக்கியப் பாடங்களில் 40 விழுக்காடு பாடத்திட்டம் மொழியியலை அடிப்படையாகக் கொண்டது. இப்பாடத்தைப்படிப்பது இலக்கிய வகுப்புகளில் படிப்பது அறிவியல் அடிப்படையில் மொழிகளை ஆராய்ந்து  அணுகும் தன்மையை உருவாக்குகிறது. இதனால் ஆங்கில, தமிழ் மொழிப்  பாடங்களை பயன்பாட்டுமுறையில் கற்பிக்கும் திறமையையும் ஆசிரியர்கள் பெறுவார்கள். இக்காரணத்தினால்  கல்வி நிறுவனங்களில் இத்துறையில் பயிற்சி பெற்றவர்களை பணிக்கு அமர்த்துவது இன்றியமையாததாகிறது.

    சில ஆண்டுகளுக்கு முன்னர் இத்துறையில் பட்டம் பெற்றவர்களை பல்கலைக்கழகங்கள் பணிக்கமர்த்தின. ஆனால், மொழியியல் துறையில் பெறப்பட்ட முனைவர் பட்டம் இலக்கிய முனைவர் பட்டங்களுக்கு ஒப்பானதல்ல என்ற அரசாணையை இரு ஆண்டுகளுக்கு முன்னர் அரசு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து மொழியியல் துறையில் தேர்ச்சி பெற்றவர்களை ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர் பணிக்குத் தகுதியில்லாதவர்களாக அறிவித்து அவர்கள் தகுதிநீக்கமும் செய்யப்பட்டனர். இதனால் மொழியியல் பட்டதாரிகளை பணிக்கமர்த்துவதையும் கல்விநிறுவனங்கள் கைவிடத் தொடங்கின. இதன்விளைவாகப் பணிவாய்ப்புகள் குறைந்து இத்துறையைத் தேர்ந்தெடுப்பவர் எண்ணிக்கையும் அருகிவிட்டது. இவ்வாறாக ஆசிரியர் பணிகளுக்கு மொழியியல் கல்வித் தகுதி புறக்கணிக்கப்படுவதால், ஆங்கிலம் தமிழ் கற்பித்தலும் பாதிக்கப்படும் என்று  கல்வியாளர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

    பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் அவர்கள் தமது பணி ஓய்விற்குப் பிறகு NDS Lingsoft Solutions Pvt Ltd மொழித்தொழில்நுட்ப நிறுவனத்தை தமிழ்மென்பொருள் உருவாக்கத்திற்காக நிறுவி, கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இவரும், இவருடன் இணைந்து பணியாற்றிய மொழியியலாளர்களும், கணினித்துறை மென்பொருள் பொறியாளர்களும் உருவாக்குவதில் ஈடுபட்டிருந்த “மென்தமிழ்” – தமிழ்ச்சொல்லாளர் (a Tamil word processor) மென்பொருள் பணியை முன்னெடுத்து வருகிறார். இவரது “தமிழ்ச்சொல் 2000” என்ற தமிழ்ச்சொல்லாளரை 2002 ஆம் ஆண்டு புதுதில்லியில் குடியரசுத்தலைவர் மாளிகையில் மேனாள் குடியரசுத் தலைவர் மேதகு கே.ஆர். நாராயணன் வெளியிட்டார்.

    prof deivasundaram4

    கணினியில் தமிழைத் தவறில்லாமல் பயன்படுத்துவதற்குரிய சொற்பிழை திருத்தி, சந்திப்பிழை திருத்தி, தமிழ்ச்சொல் சுட்டி போன்ற தமிழ்மொழியாய்வுக் கருவிகள் கொண்ட தமிழ் மென்பொருளாக ‘மென்தமிழ்’ மென்மம் விளங்குகின்றது. ஆங்கிலம், ஆங்கிலம்-தமிழ் என 41 ஆயிரம் தற்காலத் தமிழ்ச் சொற்களைக் கொண்ட அகராதி, இணைச்சொல் / எதிர்ச்சொல் அகராதி, மயங்கொலிச் சொல் அகராதி, தமிழ்நாடு அரசு ஆட்சிச்சொல் அகராதி என இதில் ஆறு வகையான அகராதிகள் உண்டு. இம்மென்பொருள் இயல்மொழி ஆய்வு மற்றும் மொழிதொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவக்கப்பட்டது. ஒருங்குறி எழுத்துக்கள், குறியீடு மாற்றி, சொற்பிழை திருத்தி, சந்திப்பிழை திருத்தி, மொழிமாற்றி போன்ற பலவகையான வசதிகளும் இதில் இடம் பெற்றுள்ளது. மேலும், அகரவரிசைப்படுத்துதல், சொல்லடைவு, எண் எழுத்து மாற்றி, கோப்பு மாற்றி, மற்றும்  மைக்ரோசாஃப்ட் 2007 வோர்ட் ப்ரோசெசசெர் போன்ற வடிவமைப்பு போன்ற முழுமையான செயல்பாடுகளைக் கொண்டுள்ளது இந்த மென்பொருள். மின்னஞ்சல் உட்பட்ட பதிப்புக்கு தேவையான அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய முழுமையான ஒரு சொற்செயலிதான் மென்தமிழ் மென்மம். இதற்கு முன்னதாக இத்தகையதொரு முழுமையான சொற்செயலி மென்பொருள் தமிழில் உருவாக்கப்படவில்லை. அந்த வகையில் கணினித் தமிழ் தேடலில் இதனை ஒரு மைல்கல் என்றே சொல்லலாம்.

    தமிழக தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கொண்டாடப்பட்டு வரும் தமிழக சித்திரைத் திருநாள் கொண்டாட்டத்தில், 2013-ஆம் ஆண்டின் “முதல்வர் கணினித் தமிழ் விருது”க்கு முனைவர் ந.தெய்வசுந்தரம் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பபட்டு சென்ற மாதம் விருது வழங்கி பாராட்டப்பட்டார். தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்களின் தமிழ்மொழி வளர்ச்சிக்கானப் பணிகளைப்   பாராட்டி வழங்கப்பவது இந்த விருது. தமிழையும் மொழியியலையும் தொழில்நுட்பத்துக்குத் தக்கவாறு  தமிழ்ப் பயன்பாட்டை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லத்  தொடர்ந்து பணியாற்றிவரும் பேராசிரியர் ந. தெய்வசுந்தரம் அவர்களின் தமிழ்ப்பணிகளை பாராட்டும் நோக்கில் தமிழக அரசால் வழங்கப்பட்டது. தொடர்ந்து கணினிவழி தமிழ் மொழிபெயர்ப்பு, மாற்றுத் திறனாளிகளும் பயன்பெறும் வகையில் தமிழை ஒலிவடிவாகக்  கணினியே படிக்க வழி செய்வது போன்ற முயற்சிகளில் இவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.

    இத்தகைய தமிழிலக்கியம், மொழியியல், கணினிமொழியியல் பின்புலம் கொண்டவர் கருத்தைப் புறந்தள்ளாது தமிழ அரசு என நம்புவோம். உலகில் எல்லாப் பல்கலைக்கழகத்திலும் எல்லாத் துறைகளிலும் மொழியியல் பாடம் உள்ளது. மொழியியல் பின்னணியில் படித்தால்தான் ஆங்கிலத்தில் சரளமாக பேசலாம், எழுதலாம் ஆனால், மொழியியலின் முக்கியத்துவத்தைத் தமிழகம் இன்னும் புரிந்துகொள்ளவில்லை. பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் அவர்களது அறிவுரையை கருத்தில் கொண்டு தமிழக அரசு தக்க நடவடிக்கையை மேற்கொள்ளும் என எதிர்பார்ப்போம். இத்தகைய தமிழ் சான்றோரைப் பாராட்டி வல்லமையாளர் வரிசையில் இணைத்துக் கொள்வதில் வல்லமை மின்னிதழ் பெருமை கொள்கிறது.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    தகவல்களும் படங்களும் தந்துதவிய கீழ்காணும் தளங்களுக்கு நன்றி:
    https://muelangovan.wordpress.com/
    http://tamil.thehindu.com/tamilnadu/article6038477.ece
    http://keetru.com/index.php?option=com_content&view=article&id=21848:2012-11-01-07-00-6&catid=1535:162012&Itemid=780

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 164

    -மலர் சபா

    பூதம் கொன்ற தீயோனின் சுற்றத்தாரைப் பாதுகாத்தமை

    கற்பில் சிறந்த பத்தினி ஒருத்தி
    பொய்ப்பழி மேற்கொள்ளும் வண்ணம்
    அவள் கணவனை  நம்பவைப்பதற்காக              sathukkaboodham
    நடந்தே இல்லாத ஒன்றைப்
    பொய்சாட்சியாகக் கூறினான் ஒருவன்
    இவ்வாறு தவநெறி மறந்து ஒழுகுபவரைக்
    கரிய கயிற்றால் கட்டித்
    தரையில் அறைந்து உண்ணும் பூதம் சதுக்கபூதம்
    இவனையும் அவ்வாறே பற்றி நிற்க,
    அவன் தாய் பெருந்துன்பமுற்றாள்

    அதனைத் தாங்காத நீ விரைந்து சென்று
    அக்கயிற்றினுள் கட்டுப்பட்டு
    ‘என் உயிர் எடுத்து இவன் உயிர் தருவாய்’
    என வேண்டினாய்
    நேர்மையுடைய அப்பூதம்
    அதற்குச் சம்மதிக்கவில்லை

    ‘கீழ்மையான இவனின் உயிருக்குப் பதிலாய்
    நல்லவன் ஒருவனின் உயிரை
    மாய்க்கும் வழக்கம்
    என்னிடத்தில் இல்லை
    உன் எண்ணத்தை விட்டுவிடு’ என்றே கூறி
    அக்கணமே அவர்கள் முன்னே
    அவனை அறைந்து கொன்று தின்றது.

    துன்பம் கொண்ட தாய்க்கும்
    அவள் சுற்றத்தாருக்கும் சேர்த்து
    பொருள் வழங்கி அவர் பசிப்பிணி போக்கி
    உன் சொந்தம் போலவே அவர்களை நடத்தினாய்
    அத்தகைய மனமுடைய
    இல்லாதோர்க்கு அள்ளி வழங்குபவன் நீ

    அறிவில் முதிர்ந்த கோவலனே!
    எனக்குத் தெரிந்தவரை இப்பிறப்பில்
    நீ செய்தவை எல்லாம்
    நல்வினைகள் தாம்;
    எனவே, இலக்குமியை ஒத்த
    மாணிக்கத் தளிர்போன்ற கண்ணகியுடன்
    மிக்க துன்பமுற்று இங்கே வந்திருப்பது
    முற்பிறப்பில் நீ செய்த தீவினையின்
    காரணமாய் இருக்குமோ” என்றே
    கோவலனிடம் கூறினான் மாடலன்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 76 – 94
    http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/
    pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-adaikalakathai–

    படத்துக்கு நன்றி: கூகுள்

     

    Share
  • உன்னையறிந்தால் …. (3)

    நிர்மலா ராகவன்

    உன்னையறிந்தால்1

    பெண்களை வம்புக்கிழுத்தல்

    கேள்வி: இளமைப் பருவத்தில் பெண்களைக் கேலி செய்து, வம்புக்கிழுத்தால்தான் ஆண்கள் வலியவர்களா?

    அது என்ன, வதையா? வேடிக்கைதானே?

    பதில்: ஆணாக இருப்பவனுக்கு உடல் வலிமையும், உத்தியோகமும்தான் பலம் அளிப்பவை என்கிறார், MICHAEL KORDA என்பவர், தனது MALE CHAUVINISM : HOW IT WORKS என்ற புத்தகத்தில். மேலும், தற்கால மனிதன், இந்த இரண்டு குணங்களும் இல்லாவிட்டாலும், வாய்ச்சவடால்தான் பெண்களை ஈர்க்கும், அடிமைப்படுத்தும் தனது ஆயுதம் என்று தப்பாக அர்த்தம் புரிந்துகொள்கிறான் என்கிறார் இவர்.

    உணர்வு ரீதியிலோ, அல்லது உடல் ரீதியிலோ வலிமை குன்றியவர்கள்தாம் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்பதை நான் சொந்த அனுபவத்தில் கண்டிருக்கிறேன். தங்களையே பலமாக உணர அவர்கள் எடுக்கும் நடவடிக்கைதான் பெண்களைக் கேலி செய்வது.

    பதின்ம வயதில், தம் வயதொத்தவரைச் சிரிக்கவைக்க எதிர்ப்படும் பெண்களையெல்லாம் வார்த்தைகளாலேயே துன்புறுத்தும் ஒருவன், அதனால் அப்பெண்கள் அடையும் பயத்தையும், அதிர்ச்சியையும் கண்டு, `நான் பெரிய வீரன்!’ என்று பெருமிதம் கொள்கிறான்.

    இவர்கள் பெரும்பாலும் கும்பலாக இயங்கும் பெண்களிடம் வாலாட்டுவதில்லை. தனியாக ஒரு பெண் மாட்டிக்கொண்டால் அவ்வளவுதான். அவள் எதிர்த்தால், தன்மீது அவள் கவனம் திரும்பிவிட்டதே என்ற மகிழ்ச்சியுடன், இன்னும் மோசமாக செயல்படுவார்கள்.

    இத்தகைய அவதிக்கு உள்ளாகும் சில பெண்கள் எதுவும் நடக்காதமாதிரி தம்போக்கில் இருந்துவிடுவார்கள். ஏனெனில், எத்தனை வயதானாலும் ஆணை நம்பித்தான் இருக்கவேண்டும் என்று நம்ப வைக்கப் பட்டிருப்பார்கள். அதனால், எதிர்க்கும் பெண்ணை இவர்களால் புரிந்துகொள்ள முடிவதில்லை. உதவவும் மாட்டார்கள்.

    வதை என்பது உடல் ரீதியில் இருக்கும். என்ன பெயர் சொல்லி அழைத்தாலும், வாய்ச்சொல்லோ, உடல்வதையோ, பெண்களுக்குத் துன்பம் விளைவிப்பதுதான். தன்னம்பிக்கை குன்றி, மேலும் மோசமான நடத்தையை ஆண்களிடமிருந்து மறுப்பின்றி ஏற்கிறார்கள் இதற்கு உள்ளான பெண்கள்.

    நான் பல பெண்களிடம் இதைப்பற்றி கலந்து பேசியிருக்கிறேன். அவர்களுடைய போக்கிற்குப் பணியாவிட்டால், இத்தகைய ஆண்கள் கெஞ்சுவார்கள், சண்டை போடுவார்கள், பிறகு வருத்தமாகக் காட்டிக்கொள்வார்கள் — ஒரு பெண்ணின் இயல்பான தாய்மைக்குணம் இளகிவிடும் என்ற நம்பிக்கையில்!

    இவர்களது போக்கை ஒப்புக்கொள்ள முடியாத ஒழுக்கமான ஆண்கள் அவமானத்துடன் சுருங்குவார்கள். அவர்களால் தட்டிக்கேட்க முடியாது. வெகு சிலர், தம் நடத்தையால் அப்பெண்ணுக்கு ஆதரவு வழங்குவார்கள்.

    கேளுங்கள் கதையை.

    நான் ஆசிரியையாக இருந்தபோது, ஒரு பயிற்சிக்காக ஒரு மாத காலம் வேற்றூரில் ஹாஸ்டலில் தங்க வேண்டிய நிலை. என்னைத் துரத்தித் துரத்தி அடித்தான் ஒருவன். (கையால் அல்ல).

    நான் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது, நாற்காலியின் இரு பக்கங்களையும் பிடித்துக் குனிந்து, `என் மகளே!’ என்று என் தோளில் கைபோட வந்தான, முதல் நாளே. எனக்கு அப்போது வயது 47!

    நான், `என்னடா.., அப்பா?’ என்று கேலியாக அழைத்தபோது, அதிர்ந்தான்.

    பிறகுதான் அறிந்தேன், பாலியல் ஈதியில் ஒரு ஆண் ஈர்க்கப்படும்போது, தனது உள்ளுணர்வை மறைக்க, தந்தையென தன்னைக் காட்டிக்கொள்வான் என்று.

    வாராந்திர விடுமுறையில் மூன்று பேருடன் இவன் வீடு திரும்பும்போது, `நான் அவளைக் காதலிக்கிறேன். அவளுக்கு என்மேல் வெறுப்பு. இருந்தாலும்..,’ என்று சொன்னதாக, உடன் பயணித்த ஆசிரியை என்னிடம் தெரிவித்தாள், என்னை எச்சரிக்கும் நோக்கத்துடன்.

    `இவனுக்கென்ன பைத்தியமா!’ என்று யோசித்தேன். திருமணம் நிச்சயமாகியிருந்த மகள் எனக்கிருந்தது எல்லாருக்கும் தெரியும். (இப்படித் தொந்தரவு அளிக்கும் விஷயத்தில், பெண்ணின் வயது ஆணுக்கு ஒரு பொருட்டே இல்லையாம்).

    அதன்பின் எப்போது எங்கள் வகுப்பு மாற்றப்பட்டாலும், அவனுடன் பயணம் செய்த ஒரு சீன ஆசிரியர், ஓடி வந்து என் பக்கத்து இருக்கையில் அமர்ந்துகொள்வார். எனக்கு அவரைச் சரியாகக்கூட தெரியாது.

    இறுதியில் அவர் போக்கு புரிந்தது. எனக்குப் பாதுகாப்பு அளித்திருக்கிறார்!

    கடைசி நாள், 450 ஆசிரியர்கள் இருந்த சபையில், `என்ன வேண்டுமானாலும் பேசலாம்,’ என்று அறிவிக்கப்பட்டபோது, அதற்கு மேலும் பொறுக்க முடியாது எழுந்தேன்.

    மேடையிலிருந்த ஒலிபெருக்கியில், `பெண்கள் அலங்கரித்துக்கொள்வது ஆண்களுக்காக மட்டுமில்லை. அவளுக்கு அது பிடித்தமான விஷயம் என்பதால். அவள் தனியாக நடப்பதும், பிறருக்கு அழைப்பில்லை. வீணாக ஏன் தொந்தரவு செய்கிறார்கள் சிலர்? Please leave her alone,’ என்று வேண்டினேன் மலாய் மொழியில். உணர்ச்சிப்பெருக்கில், வார்த்தைகள் விட்டு விட்டு வந்தன.

    அப்படியும் என் ஆத்திரம் தீரவில்லை. `சக ஆசிரியையிடமே இப்படி நடந்துகொள்பவர்கள் தம்மிடம் பயிலும் மாணவிகளை என்ன பாடுபடுத்துவர் என்று நினைக்கவே பயமாக இருக்கிறது. அதிர்ஷ்டவசமாக, ஒவ்வொரு கேடுகெட்ட ஆணுடன் ஒரு நல்ல ஆணையும் படைத்திருக்கிறார் கடவுள். இத்தருணத்தில் எனது நண்பருக்கு நன்றி சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்!’ என்று அவர் பெயரைக் குறிப்பிட்டு முடித்தேன், கண்ணீர் பெருக.

    அதன்பின், என் எதிரில் வந்தவன் முகத்தில் அப்படியொரு அவமானம், சுய பரிதாபம். முகத்தை 180 டிகிரி திருப்பிக்கொண்டான்.

    `அவனுக்கு எதற்கு பரிதாபப்படுகிறாய்? He asked for it!” என்றார்கள் எல்லாரும்.

    `இதையெல்லாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும்,’ என்று அறிவுரை வழங்கினார் ஒருவர்.

    ஒரு விரிவுரையாளர்,`ஆசிரியத் தொழிலில் இப்படியெல்லாம் நடக்க இவர்களுக்கு வாய்ப்பில்லை. அதான்!’ என்று என்னைச் சமாதானப்படுத்த முயன்றார்.

    `இந்த கஷடத்துக்குத்தான் நான் அலங்காரமே செய்துகொள்வதில்லை. குண்டாக இருந்தால், எவனும் கிட்டே வரமாட்டான்!’ — இது ஒரு சாதுவான பெண்.

    நீங்கள் எப்படி?

    Share
  • வள்ளுவ மாலை

    -சுரேஜமீ

    எதுசேர்க்கும் போம்வழி இன்பம் நிலத்தார்க்கு
    ஏற்றதொரு வாழ்வில் புலன்வழிச் செல்லா-
    வினையறிந்து வீழான் துணையொடு – வள்ளுவன்  valluvar
    வாக்கின் வழிசெல் நன்கு!

    மொழிமுன் னேகிதனைப் போக்கிநற் பண்பே
    வழியாக்கி மானுடம் உய்யவோர் – வேதமும்
    செய்திட்ட மாமுனியாம் வள்ளுவன் – நூல்தினம்
    செப்பிட வாழ்வே அறம்!

    உயிரும் மெய்யும் தனைவாட்ட –  தன்னுதிரம்
    கூட்டிட  நாளும்  தவமிருப்பாள்  தாயவள்
    வேண்டுவோர்க் கில்லையொரு துன்பம் – தினமோதும்
    வள்ளுவம்  நெறியுடை  யோர்!

    நீடுவாழ்தல் ஏதுபயன் மண்ணில் நெறியிலார்
    ஏடுசொல் ஏகிலர் என்றும் – இருள்சூழ்
    சேர்செல்வம் யாவும்  துணைவரா –  நெஞ்சில்
    செலுத்திடும் வள்ளுவம் வரும்!

    சாதிமதம் சந்ததி யறுக்கும் – தீவினைகொள்
    சாத்திரம் பேசுமொரு கூட்டம் – வழிநில்லா
    நீதிதரும் பொய்யில் மறைநூல் – வள்ளுவம்
    சொல்நெறி வாழும் உயிர்க்கு!

     

    Share
  • தமிழை வளர்த்திடுவோம்!

    -விஜயகுமார் வேல்முருகன்

    தமிழகத்தில் தமிழில் பேசத் தயக்கம் ஏனடா?
    தாய்மொழி உனக்குத் தமிழே தானடா
    தமிழில் உனக்கு இல்லாத அர்த்தங்கள் ஏதடா?
    தமிழைத் தவிர்த்து அன்னியமொழியின் ஆதிக்கம் அதிகம் ஏனடா?
    தமிழகத்திலேயே தமிழில்லையென்றால்
    தமிழ் வளர்வது ஏதடா?
    தமிழ்ச்சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த ஊரடா
    தமிழறிஞர் பலர் புகழ் வளர்த்த நாடடா
    தமிழகப் பள்ளிகளில் தமிழின் பாடது பெரும்பாடடா
    தமிழ்ப்பெயரெதுவும் பிள்ளைகளுக்கு இல்லையே அது ஏனடா?
    தமிழைப்படி என்றநிலை போனதடா
    தமிழையும்படி என்றே நிலையும் ஆனதடா
    தற்கால நிலையது மாறவேண்டுமடா
    தன்னிகரில்லாத் தமிழதை ஏற்றம்பெற வைப்போமடா!

     

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் (37)

    சுபாஷிணி

    பெரியார் அண்ணா நினைவகம், ஈரோடு, தமிழகம் – பகுதி 1

     

     

    தமிழகத்தின் கொங்கு நாட்டிற்கு இதுவரை நான்கு முறை பயணம் செய்திருக்கின்றேன். அதிலும் குறிப்பாக ஈரோட்டிற்கு 3 முறை பயணம் மேற்கொண்டு தமிழ் மரபு அறக்கட்டளைக்கான பதிவாக்கங்களைச் செய்திருக்கின்றேன். முதல் இரு முறைகளும் குறுகிய கால பயணத்தில் முடிந்த அளவு தமிழ் மொழி, வரலாறு பண்பாடு ஆகிய விசயங்கள் தொடர்பான பதிவுகளைச் செய்யமுடிந்தாலும் ஈரோட்டிலேயே நான் எப்போது வந்தாலும் என்னை வரவேற்று உபசரித்து தங்கவைத்து பார்த்துக் கொள்ளும் தோழி பவளா-திரு.திருநாவுக்கரசு தம்பதிகள் வீட்டிற்கு அருகிலேயே இருக்கும் பெரியார் நினைவகம் போகக்கூடிய வாய்ப்பும் நேரமும் கிட்டாமலேயே இருந்தது. சென்ற ஆண்டு, 2014 ஜூன் மாதம் மீண்டும் ஈரோட்டிற்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது பெரியார் நினைவகம் செல்வதை, செய்ய வேண்டிய முக்கிய விசயங்கள் பட்டியலில் இணைத்துக் கொண்டதோடு காட்டாயம் சென்றே ஆக வேண்டுமென்று என்னுடன் வந்திருந்த டாக்டர்.நா.கண்ணனையும் பவளாவையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டு விட்டேன்.

    asu

    ஈரோட்டின் மத்தியிலேயே அமைந்திருக்கும் ஒரு சாலையில் பெரியார்-அண்ணா நினைவகம் இருக்கின்றது. இந்தக் கட்டிடம் 17.9.1975ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் மாண்புமிகு கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் திருமதி ஈ.வெ.ரா.மணியம்மை தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

    asu1
    இந்த அருங்காட்சியகத்தை மிகத் தூய்மையாகப் பராமரிக்கும் பொறுப்பாளர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுதல்களை நான் நிச்சயம் குறிப்பிட்டே ஆகவேண்டும். நினைவகமே அருங்காட்சியம் என்ற வகையில் பெரியார் தொடர்பான பல முக்கியத்தகவல்களை வரலாற்றுத் தொடர்ச்சியை வரும் பார்வையாளர்கள் அறிந்து கொள்ளும் வகையில் வாய்ப்பினை வழங்குகின்றது இந்த நினைவகம். இதன் பின்பகுதி அண்ணாவின் நினைவகமாக  அமைக்கப்பட்டிருக்கின்றது.

    தந்தை பெரியார் என மதிப்பும் மரியாதையுடனும் அழைக்கப்படும் திரு.ஈ.வெ.ரா அவர்களது இளமைக் கால வரலாற்றுச் செய்திகள் புகைப்படங்களுடன் வழங்கப்பட்டிருப்பதைக் காண முடிகின்றது. உள்ளே நுழையும் போதே மாண்புமிகு ஜெயலலிதா அம்மையார் அவர்கள் பெரியாருடனும் அண்ணாவுடனும் இருக்கும் நிகழ்வுகளின் காட்சிகளின் புகைப்படங்கள் உள்ளன. அவற்றோடு தொடர்ச்சியாக பெரியாரின் பயணங்கள், குழுவாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், பெற்றோர் பற்றிய தகவல்கள் ஆகியன புகைப்படங்களுடன் செய்தியாக வழங்கப்பட்டிருக்கின்றன.

    asu2

    பெரியாரின் வாழ்க்கைப் பாதையின் 94 ஆண்டுகால பயணம் என்பது பல தரப்பட்ட திருப்பு முனைகளைச் சந்தித்த ஒன்றாக அமைந்தது என்பதை இங்குள்ள புகைப்படங்களே ஆதாரமாகக் காட்டுகின்றன. ஒரு வணிகராக வளர்ந்த திரு.ஈ.வெ.ரா அவர்கள் படிப்படியாக தமிழ் மக்களின் சமூக நலனில் அக்கறை கொண்டு தனது வாழ்க்கை நோக்கத்தை மக்கள் நலனுக்காகவும் சிந்தனை மாற்றத்திற்காகவும் என மாற்றிக் கொண்டு தனது இறுதி காலம் வரை அதற்காகவே உழைத்ததன் அடையாளமாகவும் சான்றுகளாகவும் இருக்கும் பல ஆதாரங்களை இந்த அருங்காட்சியகத்தில் வருகையாளர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

    asu4

    இங்கு வைக்கப்பட்டுள்ள ஒரு தகவல் பலகையில் உள்ள குறிப்புகள் பெரியார் பற்றி அறிமுகம் பெற விரும்புவோருக்கு பயன்தரும் வகையில் அமைந்துள்ளது. அதில் உள்ள குறிப்புகள் கீழ்வருமாறு:

    தந்தை பெரியார் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு

    1. பிறப்பு: 17.9.1879
    இறப்பு: 24.12.1973

    2. சுற்றுப் பயணம் செய்த மொத்த நாட்கள்: 8,600 நாட்கள் (26 ஆண்டுகள், 6 மாதம், 25 நாட்கள்)

    3. சுற்றுப் பயணம் செய்த மொத்த தூரம் : 13,12,000 கிலோ மீட்டர்கள் (பதின்முன்று லட்சத்து பனிரண்டாயிரம் கிலோ மீட்டர்கள்)

    4. சுற்றுப்பயணத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள்: 10,700 (பத்தாயிரத்து எழுநூறு நிகழ்ச்சிகள்)

    5. சுற்றுப்பயணத்தில் கலந்து கொண்டு சொற்பொழிவு ஆற்றிய நேரம்: 21,400 மணிகள் (இருபத்து ஒன்றாயிரத்து நானூறு மணிகள்)

    6. தந்தை பெரியார் அவர்களின் சொற்பொழிவை ஒலி நாடாவில் பதிவு செய்து ஒலி பரப்பினால் ஒலிக்கும் நாட்கள்: – இரவு பகலாக: 2 வருடம், 5 மாதம், 11 நாட்கல்.

    7.வாழ்ந்த காலங்கள்: 94 வருடம், 3 மாதம், 7 நாட்கள்


    நான் யார்?
    ஈ.வெ.ராமசாமி என்கின்ற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப்போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு அதே பணியாய் இருப்பவன் – ஈ.வெ.ரா.

    தொடரும்..


    Suba.T.

    http://subastravel.blogspot.com– சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
    http://subahome2.blogspot.com – ஜெர்மனி நினைவலைகள்..!
    http://subaillam.blogspot.com – மலேசிய நினைவுகள்..!
    http://ksuba.blogspot.com – Suba’s Musings
    http://subas-visitmuseum.blogspot.com – அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
    http://rareartcollections.blogspot.com/ – அருங்கலைப் படைப்புக்கள்
     
    http://tamilheritagefoundation.blogspot.com – த.ம.அ செய்திகள்
    http://voiceofthf.blogspot.com – மண்ணின் குரல்
    http://video-thf.blogspot.com – விழியக் காட்சிகள்
    http://image-thf.blogspot.com – மரபுப் படங்கள்
    http://thfreferencelibrary.blogspot.com – தமிழ் மரபு நூலகம்
    http://mymintamil.blogspot.com – மின்தமிழ் மேடை
    http://kanaiyazhi-ezine.blogspot.com – கணையாழி
    Share
  • அர்த்தம் கண்டேன் உன்னாலே!

    -துஷ்யந்தி, இலங்கை

    காந்தத்தின் ஈர்ப்பினிலே
    கறள் பிடித்த தகரமொன்று
    கணப்பொழுதும் தாமதிக்காது
    கண்டவுடன் கவர்வதைப் போல்
    கைப்பிடியில் உணர்வொன்று
    உன் கைப்பட்டதும் தோன்றுதடா…

    வயற்காட்டில் அந்நாளில்
    சிந்திய வியர்வையை இன்றும்
    நினைவூட்டிச் செல்லுதடா…
    இன்னும் உழைத்துவாழ
    எண்ணம் என்னில் தோன்றுதடா…

    முதுமையின் தனிமையில்
    உன் முகம் பார்த்து வருகையில்
    பல கோடி இன்பங்கள் என்
    மனதெங்கும் ஓடுதடா…
    பிறப்பின் அர்த்தமும் உன்
    செல்லப் பார்வையில்
    தெரியுதடா…

    கண் மூடும் தருணத்தில்
    உன் கைப்பிடி மண்பட
    என்னுயிர் உன்னோடு
    உண்டென்று தோன்றுதடா…
    உன் கைப்பட்ட மண்
    என்மீது படுகையில்
    என்னுயிர் நிச்சயம்
    சொர்க்கத்தைக் காணுமடா…!

    வெறுமையாய்க் கிடந்த
    வார்த்தைகள் எல்லாம்
    கவிஞனின் பேனைபட
    அழகுக் கவியாவதுபோல்
    நீ தொட்ட இன்பம்
    என் வாழ்க்கைக்கு அர்த்தம்
    சொல்லிப் போகுதடா
    அளவில்லா இன்பத்தை
    என்னிலே பாய்ச்சுதடா…!!

    Share
  • படக்கவிதைப் போட்டி 10-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    இவ்வாரப் போட்டிக்கான ஒளிப்படத்தைத் தந்திருக்கும் திரு. என். எஸ். ஹ்ரிஷிகேஷுக்கும், இதனைப் போட்டிக்கான படமாகத் தேர்வுசெய்த திருமிகு. சாந்தி மாரியப்பனுக்கும் எங்கள் நன்றி.

    dog my darling

    நாய்க்குட்டியைக் கொஞ்சும் நங்கையின் புகைப்படம் பல எண்ண அலைகளை மனக்கடலில் எழுப்புகின்றது. மனிதருக்குக் காவலாய், அவர்களுக்குக் காதலாய், நன்றி பாராட்டுதலில் தன்னை ஒப்பாரின்றித் திகழும் ஒரே உயிர் நானிலத்தில் நாயன்றி வேறில்லை. அதனாலன்றோ நன்னெறிகளை நுவலுகின்ற நாலடியார், ”யானையின் குணமுடையாரின் நட்பை விடுத்து நாயின் குணமுடையாரிடம் நட்பு கொள்க” என்று அறிவுறுத்துகின்றது.

    யானை யனையவர் நண்பொரீஇ நாயனையார்
    கேண்மை
    கெழீஇக் கொளல்வேண்டும் யானை
    அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் எறிந்தவேல்
    மெய்யதா வால்குழைக்கும் நாய்.
    (நாலடி: 213)

    இனி, இவ்வாரப் போட்டிக்கு வந்திருக்கும் கவிதைகளில் என் கவனத்தைக் கவர்ந்தவற்றைப் பட்டியலிடுகிறேன்.

    *****

    நளின மொழியில் நாயின் புகழ்பாடும் திரு. கவிஜியின் வரிகள்…

    உன் செல்ல சிணுங்கலை  
    பிடித்துக் கொண்டு போகிறது 
    முன் வாசல்கடந்து போகும் 
    மண் வாசனை…
    […]
    வீடெங்கும் சொட்டும் 
    உன் ஈரப் பாதங்களில் 
    நீர்க் கோடுகள்…
    வளைந்து நெளிந்து
    வால் ஆட்டுவதில், 
    அழகு கூட்டுகிறது 
    உன் உடல்…

    *****

    வாழ்வின் யதார்த்தம் பேசும் திருமிகு. சாரா பானுவின் வரிகள்…

    உன்னை முத்தமிட்டால் கிடைத்து விடுகிறது
    மாற்றாக வாலாட்டல், சிறு துள்ளல், செல்ல உரசல்என பாசப்பரிமாற்றம்….
    கிடைப்பதில்லை இங்கு பலசமயம் பரிவு கூட…

    *****

    நிகழ்வின் அழகைப் படம்பிடிக்கும் திரு. கட்டாரியின் வரிகள்…

    இப்படியே பிள்ளையாகிவிடு….
    என்னும்..இவளின் 
    முத்தத்தைப் போல……
    எதற்காகத் தவறவிட்டாள்
    என்னைப் பெற்றவள்… என்னும்
    இவனின்… தேடல்களைப்
    போல…
    நிழந்துகொண்டிருப்பது….
    அழகாகிறது….!!

    *****

    இயற்கையோடும், விலங்குகளோடும் பேணும் உறவு மனிதர்களோடு சாத்தியமற்றுப்போவதை விளக்கும் திருமிகு. சரஸ்வதி ராஜேந்திரனின் வரிகள்…

    உன்னோடும் 
    மலைகளோடும்
    பூக்களோடும்
    நதிகளோடும்
    மனம் கொள்கிற
    உறவை
    சக மனிதர்களோடு
    கொள்ள முடிவதில்லை
    நன்றியுள்ள நீ மேல்
    மனிதர்களைவிட!

    *****

    ”பெற்றால்தான் பிள்ளையா? நீயும் என் குழந்தையே!” என்று நாய்க்குட்டியை அரவணைக்கும் திருமிகு. சியாமளா ராஜசேகரின் வரிகள்…

    தன்னந் தனியாய்த் தவித்திட்டக் குட்டியுனை
    அன்னையாய் நானும் அரவணைப்பேன் – அன்புடன் 
    கொஞ்சி மகிழ்வேன் குழந்தையாய்க் காத்திடுவேன் 
    அஞ்சாதே என்றும் இனி.

    *****

    மனிதருக்கு மனிதரே எதிரியாகும் தருணங்களைப் பட்டியலிட்டு நாயின் அன்புதரும் கதகதப்பைக் கவினுறக் கழறும் திரு.ருத்ரா இ. பரமசிவனின் வரிகள்…

    …மனிதருக்கு மனிதர்
    முன்பின் தெரியாமல் இருக்கும்போதே
    இப்போது
    மனிதருக்கு மனிதரே எதிரி.
    […]
    உன் விழியின்
    குறு குறுப்பும்
    செவி மடல்களின்
    உடுக்கை அடிப்புகளில்
    உதிர்ந்து விழும்
    அந்த இனிய ஓசைத்துடிப்புகளும்
    மட்டுமே போதும்.
    இந்த உலகத்தை
    விரித்து மடக்கி
    நீ உட்காரத்தருகிறேன் வா!

    *****

    அன்பே நம் மதம், அதுவே நம் வேதம், அதை ஓதுவோம் நிதமென்று அன்பின் வலிமையை வளமையாய்ச் சொல்லியிருக்கும் திரு. சுரேஜமீயின் வரிகள்…

    உலகின் 
    இன்பத்தை
    உன் அணைப்பில்
    காணும் ஒவ்வொரு
    கணமும் நான்
    புத்துயிர் பெறுகிறேன்!
    […]
    உயிர்கள்

    ஒன்றுதானே
    வாழும் 
    உயிர்க்கு!
    மரணம் 
    உண்டுதானே
    வாழ்வில்
    எவர்க்கும்!
    […]
    மனிதன் மாறட்டும்;
    மனங்கள் விரியட்டும்;
    புறங்கள் தெளியட்டும்;
    கரங்கள் நீளட்டும்!

    *****

    காளமேகப் புலவராய் மாறி நாயின் குணத்தோடு மனத்தை இணைத்து இரட்டுற மொழிந்திருக்கும் திரு. எஸ். பழனிச்சாமியின் வரிகள்…

    அன்பால் வசமாகும் வீட்டில் ரகசியமாய்
    கன்னம் இடுவோரைக் கண்டதும் – மென்னி
    பிடிக்கத் துடிக்கும் விளையாடி பல்லால்
    கடிக்கும் குலைக்கும் அதட்டி..
    […]
    அன்பைப் பொழியும் அவரின் அடிமையாய்
    தன்னையே தந்து முடிந்திடும் – ஒன்றியே
    நன்றியைக் காட்டிடும் சித்தர்தம் கூற்றினால்
    என்றும் மனமது நாய்.

    *****

    நாய்க்குட்டியின் நல்லன்பில் நெகிழ்ந்திருக்கும் பெண்ணின் மனத்தைக் காட்டும் திருமிகு. தமிழ்முகிலின் வரிகள்…

    ஒரு சிறு வருடல் தான்
    நான் உனக்கு கொடுத்தது –
    வாலாட்டியபடியே என் கைகளில்
    தஞ்சமானாய் ! – உந்தன்
    அன்பை மழையாய் பொழிந்தாய் !
    […]
    தன்னலமிலா உந்தன் அன்பே
    உயர்வென்று உரக்க சொல்வேன் !

    *****

    ”வெறிச்சோடிய இல்லத்தின் வெறுமையைப் போக்கிய சுடரொளியே!” என்று நாயைக் கொஞ்சும் தாயின் அன்பை நயமுறச் செப்பும் திரு. சி. ஜெயபாரதனின் வரிகள்…

    வெறிச்சோடிச்
    சூனிய மான இல்லத்தை
    உயிர்ப்பித்து
    சூட்டிகையாய், சுடர் ஒளியாய்,
    சுறுசுறுப்பாய் நீ
    […]
    என் தனிமை போக்கி
    இனிமையுடன் , இன்முகத்துடன்
    தவழும் பிள்ளையாய்
    உன்னை நான்
    தத்தெடுத்தேன் ! 
    முத்தம் ஒன்று தருகிறேன்
    அத்தாட்சி யாக
    மடிமேல்
    தாவிய உனக்கு !

    *****

    சிந்தையில் மகிழ்ச்சியை விதைத்து வாழ்வை அர்த்தமாக்குகின்ற நாயின் நற்பண்பை வியக்கும் திருமிகு. துஷ்யந்தியின் வரிகள்…

    ஆயிரம் பட்டாம் பூச்சிகள்
    என் சிந்தையில் பறப்பதாய்
    எனக்குள்ளே ஆனந்தம்
    நீ பசியாலே துடிக்கையில்
    பதறித்தான் போகின்றேன்
    தினம் கண் விழிக்கையில்
    வழியெங்கும் தேடுகிறேன்….
    […]
    சின்னவள் உன்னிடம்
    நற்பண்பை உணர்கிறேன்
    நன்றியின் அர்த்தந்தனை
    நன்றே கற்றுக் கொள்கிறேன்…

    *****

    வாலாட்டி நிற்கும் நாய்ப்பாசத்தை வியக்கும் பெண்மையைத் தன் கவிதையின் பாடுபொருளாக்கிய திரு. ஜெயராம சர்மாவின் வரிகள்…

    வாலாட்டி வாலாட்டி வலம்வந்து நிற்பாயே
    வாசல்வந்து நின்றுவெனை வரவேற்றும் நிற்பாயே
    நோயென்று நான்படுத்தால் நூறுதரம் நக்கிடுவாய்
    வாய்பேசா விட்டிடினும் மனமெல்லாம் நீதானே ! 

    *****

    நங்கையிடம் நாய்க்குட்டியே தன்னிலை நவிலுமழகை, தன்பிறப்பை இகழும் மனிதனின் மடமையை எண்ணி அது வருந்துவதைக் காட்டும் திருமிகு. பி. ஆர். லட்சுமியின் வரிகள்…

    உன் உள்ளங்கை ஸ்பரிசம்
    தாயின் கருப்பை பாதுகாப்பு
    உனது இதழ்களின் தொடுதல்
    தாயின் தாலாட்டு!
    […]
    பிறப்பாலே நன்றி அவதாரமாக நான்!
    எங்கோ ஒருவன் என் பிறப்பு
    வேண்டாம் என்ற உச்சரிப்புடன் 
    இறைவனிடம் மண்டியிட 
    காரணம் புரியாத சோகத்தில் நான்!

    *****

    ’நாயின் துணையே நற்றுணையாம்’ என்று போற்றும் திரு. செண்பக ஜெகதீசனின் வரிகள்…

    நன்றி யுள்ளது நாயென்றுதான்
         நல்ல துணையும் அதுவென்றுதான்,
    நன்றெனக் கொண்ட நட்பென்றுதான்
         நாளும் உதவிடும் கரமென்றுதான்,
    என்றும் ஏய்த்திடா உறவென்றுதான்
         எதிரியை ஓட்டிடும் பகையென்றுதான்,
    ஒன்றிய நட்பில் உயர்வென்றுதான்
         உன்னைக் கொண்டேன் நாய்க்குட்டியே…!

    *****

    பேரன்பின் பிறப்பிடமாய்க் காட்சியளிக்கும் ஈருயிர்களைப் பாராட்டும் திரு. அமீரின் வரிகள்…

    கூறடா
    உன்னத
    அன்புக்கு பாத்தியம்
    மாறடா
    கண்டிதை
    பேரன்பு சாத்தியம்.
    பாருடா
    கருணைக்கு
    தாயான இளையவளை
    பாடுடா
    துயர் நீக்க
    தோள்கொடுக்கும் மூத்தவளை
    வாழுடா
    உயிரனைத்தும்
    நேசித்து மண்ணிலே…

    *****

    மனம் நடுங்கவைக்கும் நிலநடுக்கத்தில் சிக்கி உறவுகளை இழந்த பெண்ணுக்கு உற்றதுணையாய்க் கிடைத்த நாய்க்குட்டியை வாழ்த்தும் திரு. மெய்யன் நடராஜின் நேச வரிகள்…

    கோடி குவித்து குவலயம் ஆண்டவரும் 
    மாடி மனையிடிந்து மண்ணுக்குள் –மூடி 
    முடங்கி ஒருநொடியில் மூச்சடக்க வைத்த 
    இடத்தில் துணைநீ எனக்கு.
    எதுவுமில்லா வாழ்வில் எனக்கோர் துணையாய் 
    புதுஉறவாய் வந்து கிடைத்தாய். –இதுபோதும் 
    கைத்தடி கொண்ட குருடனினா தாரமாய் 
    மெய்ப்பொருள் காண்பேன்  இனி.

    *****

    ’உயிர்களை இணைக்கும் இன்பமொழி அன்பு’ என்று அன்பின் பெருமையை அகிலத்துக்குணர்த்தும் திருமிகு. புனிதா கணேசனின் வரிகள்…

    அகிலம் நிறைக்கும் மொழி அன்பு
    திகிலகற்றும் தீர்க்க மொழி அன்பு
    அன்பில் திளைத்ததனால் ….
    இன்பமே சூழ்ந்திருக்க …
    இவ்வுலகம் மறந்திருந்தோம் !

    *****

    அருமையான கவிதை வரிகளால் அகங்குளிர வைத்த கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள் உரித்தாகுக!

    இவ்வாரத்தின் சிறந்த கவிஞரைத் தேர்ந்தெடுக்கும் தருணமிது…

    ’அன்பின் வழியது உயிர்நிலை’ என்பார் ஐயன் திருவள்ளுவர். ஆம்! உலகவாழ்க்கைக்கு ஆதாரமே அன்புதான்! அதிலும் அன்பின் அருமையை நன்குணர்ந்தோர் ஆதரவற்றோரே! அத்தகைய ஆதரவற்றோர் இருவர், அன்பில் இணைவதை, அதில் கரைவதை அழகாய்க் காட்சிப்படுத்தியிருக்கும் ஓர் இனிய கவிதை என் மனங்கவர்ந்தது.

    அக்கவிதை…

    தெருவோரத்துக்
    குப்பைத் தொட்டியில்
    தொட்டில் குழந்தையாகி
    நடுங்கிக் கொண்டிருந்தது

    வால் உயர்த்தி…!
    வாலில் ரிப்பன் கட்டி
    நெற்றியில் பொட்டிட்டு
    மை தடவி அழகனுக்கு
    ‘சுப்பிரமணி’ பெயர் சூட்டி
    அழைத்துச் சிரிக்க
    என் முன்னே
    காமெரா கண்களில்லை…!

    வீதியோரத்து
    மரத்தடி நிழலில்
    விதியை நொந்தவள்
    அமர்ந்தேன்…!

    “அனாதை நாயே”
    என அடித்துத் துரத்திய
    முகங்கள் கண்முன்னே…!
    […]
    இறைவன் ஈந்த
    துணையாய்
    நடுங்கிய அவனைக்
    கரங்களில் அணைத்துக்
    கொண்டேன்…!

    கொடுப்பதன் இன்பம்
    பெறுவதன் சுகம்
    மௌனமாய்
    நிமிடத்தில் பரிமாற ..!
    நெஞ்சை அழுத்திய
    பாரம் முழுதும்
    இப்போது அந்தக்
    குப்பைத் தொட்டியை
    நிறைத்தது…!
    அன்பு தரும்
    பாதுகாப்பில்
    உள்ளம் நிறைந்தது..!

    நெஞ்சை நெகிழ்த்தும் இக்கவிதையைப் படைத்த கவிஞர் திருமிகு. ஜெயஸ்ரீ ஷங்கரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவிக்கின்றேன்.

    *****

    இன்னொரு கவிதையும் பாடுபொருளின் அமைப்பில் தனித்து நிற்கின்றது.

    அக்கவிதை…

    பள்ளிவிட்டு வந்தவுடன் சொல்ல
    பலப்பல கதைகள் உண்டு என்னிடம்..
    பாந்தமாய் பக்கம் அமர்ந்து
    கேட்கவொரு செவியில்லை இவ்விடம்!

    கதவின் பூட்டுக்கான சாவிமட்டுமே என்னிடம்
    இதயப்பூட்டுக்கான சாவிகளின் இருப்பு எவ்விடம்?

    முதியவர் இல்லத்தில் கூட்டாய் வாழ்கிறது 
    என் மூத்த தலைமுறை
    முந்தைய வாழ்வை தமக்குள் பகிர்ந்தபடி!
    […]
    வெதும்பிக்கழியும் என் நிகழ்காலம் குறித்த 
    பிரக்ஞையற்றவர்களுக்கு
    ஒருபோதும் புரியப்போவதில்லை என் பிரியம்!

    தெருவில் கிடப்பதோடு என்ன கொஞ்சலென்று
    விருட்டென்று என் கைப்பிடித்து 
    வீட்டுக்குள் இழுத்துப்போக
    வெகுநேரம் ஆகப்போவதில்லை.
    அதுவரையிலும்…
    கொஞ்சிக்களித்து கூடியிருப்போம்.. வா!

    இக்கவிதையை இயற்றியுள்ள திருமிகு. கீதா மதிவாணனை இவ்வாரத்தின் பாராட்டுக்குரிய கவிஞராய்த் தேர்ந்தெடுக்கின்றேன்.

    பங்குபெற்றோர், பாராட்டுப்பெற்றோர் அனைவருக்கும் என் உளங்கனிந்த வாழ்த்துக்கள்!

     

    Share
  • மீள்

    ஹரீஷ் கண்பத்

    வண்டி சிக்னலில் நிற்கும் போது தான் யதேச்சையாக அந்தக் கட்டிடத்தைப் பார்த்தேன்.சிக்னல் தாண்டியதும் இரண்டாவது பில்டிங்காக வலப்புறம் இருந்தது. ஓரிரு முறைகள் நண்பனுடன் சென்றதுண்டு. தனியாகவெல்லாம் ஒரு நாளும் சென்றதில்லை.

    இன்றைக்கு ஏன் போகக் கூடாது? சட்டென்று தோன்றியது. சிக்னல் பச்சைக்கு மாற இன்னும் பல நொடிகள் இருந்தன.எதற்குப் போக வேண்டும்? இன்னொரு பக்கம் யோசனை. அங்கு போனாலாவது இரவில் கொஞ்சம் எல்லாவற்றையும் மறந்து தூங்க முடிந்தால்? சிக்னல் விழுந்து விட்டது. யோசனைகள் எல்லாவற்றையும் துடைத்துத் தள்ளியபடி ஒரு அட்ரினலின் அவசரம் எங்கிருந்தோ குதிக்க, நொடிப் பொழுதின் உந்துதலில் சட்டென்று வலப்புறம் இண்டிகேட்டரைப் போட்டு திருப்பினேன். வண்டி அந்த வளாகத்துக்குள் என்னை இழுத்துக் கொண்டு போனது.

    —————

    காபியை வாயில் வைத்ததும் தான் தெரிந்தது. சர்க்கரை போட மறந்து விட்டிருக்கிறாள்.இந்த வாரத்தில் இது இரண்டாவது முறை. நானும் எதுவும் கேட்டுக் கொள்வதில்லை.. இப்போதைய சூழ்நிலையில் காபியில் போடும் சர்க்கரையைப் பற்றியெல்லாம் என்னால் யோசிக்க முடிகிறது என்பதே எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. சொல்லப் போனால் அசூயையாக இருந்தது.

    இருந்துமென்ன? மனதில் சிரமங்கள் நாவுக்குத் தெரிந்து அதன்படி நடந்து கொள்ள வேண்டுமென்று எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்? நாக்கு அது பாட்டுக்குத் தன் வேலையைச் செய்கிறது. எழுந்து சென்று சர்க்கரையைப் போட்டு கலக்கிக் கொண்டு வந்தேன்.

    ஆபீஸ் போக இன்னும் நேரமிருந்தது. தூக்கம் பிடிப்பதில்லை இப்போதெல்லாம். காலையிலேயே ஏதோ ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததும் என் தூக்கம் கலைந்து விடக் கூடாதென்று அப்பா அதை அவசரமாக எடுத்ததும் தெரிந்தே இருந்தது.இப்போதும் தொலைபேசி அழைப்பு. அப்பாவுடையது தான்.

    சட்டென்று ஓடி வந்து தொலைபேசியை எடுத்தவர் என்னை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டே அறைக்குள் ஒதுங்கினார். அடுத்த சில நிமிடங்களுக்கு ஒற்றைச் சொற்களில் அவர் பதிலிறுப்பது கேட்டது. “ம்… ஆமா.. என்ன பண்றது? விதி” போன்ற வார்த்தைகள். இந்த வயசில் இதையெல்லாம் தூக்கிச் சுமக்க வேண்டியிருக்கிறது  அவருக்கு.

    எனக்குத் தெரியக் கூடாது என் காதில் விழக் கூடாதென்று எவ்வளவு முன்னெச்சரிக்கைகள். ஆனால் எனக்குத் தெரிந்தே இருக்கிறதென்பது அவருக்கும் தெரிந்தே இருக்கிறது. இருந்தும் அந்தப் பாசாங்கு. பாவம் அவர்.

    உள்ளே நுழைந்ததும் ஏ சி சில்லிட்டது. வெளியே இருந்த கசகசப்புக்கு இதமாக இருந்தது. அமர்ந்தால் அமிழும் சோபாக்களை தவிர்த்து நடந்தேன். உயரமாய் இருக்கும் கூம்பு நாற்காலிகள் போடப்பட்டிருந்த மேடையின் அருகே சென்றேன். காலியாக இருந்த நாற்காலி ஒன்றில் ஏறி அமர்ந்தேன்.

    இசை அதிர்ந்தபடி இருந்தது. இடப் பக்கம் பார்த்தேன். டி வியில் ஏதோ ஒரு கிரிக்கெட் போட்டி சத்தம் மழிக்கப்பட்டு சைலண்ட் மோடில் ஓடிக் கொண்டிருந்தது.அந்தப் பையன் வந்து “ என்ன” என்பது போல் பார்த்தான். அப்படியென்றால் ஆர்டர் கொடுக்க வேண்டும் என்று அர்த்தம்.

    “வோட்கா ஒரு லார்ஜ்”.

    “மிக்ஸிங்கு சார்?”

    “ ஸ்பிரைட்டோ செவன் அப்போ “

    “ஓகே சார்”

    “தம்பி….”

    “சார்?”

    “லெமன் கார்டியலும் கொண்டு வா”

    “சரிங்க சார். சைடிஷ் எதுனா ஆர்டர் பண்றீங்கனா இப்பவே சொல்லிடுங்க சார்”

    “எதுவும் வேணா. இதை மட்டும் கொண்டு வா போதும்.”

    அவன் அகன்றதும் டி வியைப் பார்த்தேன். எவனோ ஒருவன் க்ளீன் போல்டாகிக் கொண்டிருந்தான்.

    ————

    அம்மாவின் கஷ்டம் வேறு மாதிரி. வாய் ஓயாமல் பேசிக் கொண்டே இருப்பவள் அப்படியே எதிர்மறையாய் மாறி விட்டாள்.

    அன்று நான் கண்கள் கலங்க “ இது பத்தி இனிமே பேச வேண்டாமேம்மா ப்ளீஸ்” என்று சொன்னது காரணமாக இருக்கக் கூடும். அதில் தெரிந்த கெஞ்சல் காரணமாக இருக்கக் கூடும். உள்ளுக்குள் வைத்துப் புழுங்குகிறாள்.

    மழை வரும் போலிருந்தால் வானத்தை நிமிர்ந்து பார்த்து விட்டு மாடித் துணிகளை நனையுமுன் எடுப்பது தான் சமயோசித இயல்பு. மழைக் கோப்பு கூட்டிக் கொண்டு தான் இருந்திருக்கிறது. கடைசி வரை மேலே நிமிர்ந்து பார்க்காமல் விட்டது முழுக்க முழுக்க என் தவறு தான்.

    இன்னமும் கூட எனக்கு சவிதாவின் மேல் கோபம் வர மறுக்கிறது. என் குணம் அப்படி. சவிதா சவிதா என்று நான் பிதற்றிக் கொண்டிருப்பது அம்மாவுக்கும் அப்பாவுக்கும் தெரிந்தால் என்ன ஆவார்கள்? அதற்காக இதை யோசி இதை யோசிக்காதே என்று மனசுக்குக் கட்டளை போட நாம் என்ன மகாஞானியா?

    ——–

    பொதுவாக அவ்வளவாய்க் குடிப்பதில்லை. எப்போதாவது நண்பர்களுடன் சேரும் போது மட்டுமே.அதுவும் நண்பன் வீட்டில் நடக்கும் அல்லது இது மாதிரியான ஓரளவு நாகரிகமான பார்களில் நடக்கும். டாஸ்மாக் வாடை எனக்குப் பிடிக்காது. அதனால் குடிப்பது என்று ஆனால் இது மாதிரி ஏதாவது இடங்களில் தான்.

    அதற்கும் கூடத் தனியாய் வந்து ரசித்துக் குடிக்கும் அளவுக்கான அவசியமோ மனநிலையோ ஒரு போதும் இருந்ததில்லை. இன்றென்னவோ சட்டென்று ஒரு உந்துதல்.அந்த சம்பவம் நடந்ததிலிருந்து பெரும்பான்மை இரவுகள் எதற்கோவாய்த் தூக்கம் கெடுவதும் ஒரு காரணம். இதைக் குடித்தாலாவது தூக்கம் கிடைக்காதா என்ற நப்பாசை.

    இப்படியெல்லாம் வெளியே சொல்லிக் கொண்டிருந்தாலும், தனியே சென்று ஒரு நாளாவது குடிக்க வேண்டும் என்று ஆழ் மனதின் ஏதோ ஒரு ஓரத்தில் போட்டு வைத்திருந்த ஆசை தான் இன்று என்னை உந்தியிருக்கிறதோ என்கிற யோசனையும் ஓடியது, அதற்கு என் இப்போதைய மன நிலையும் உறுதுணையாக இருந்து தொலைத்திருக்கிறது போல.

    யோசனைகளின் ஊடே ஒவ்வொரு கோப்பையாக மிக்சரும் சுண்டலுமாக என் முன் நிறைந்தது. கடைசியாக வோட்காவைக் கொண்டு வந்து வைத்தான்.மிக்ஸிங்குக்காக வைத்த குளிர்பான பாட்டிலைத் தொட்டேன். அதன் சில்லிப்பு சுரீர் என உறைத்தது.

    —–

    அன்றைக்கு நடந்ததை நினைக்கக் கூடாது என்று சொல்வது கூட அபத்தம் தான்.அவ்வளவு அமளியிலும் ஏன் ஏன் ஏன் என்று தான் கேட்டுக் கொண்டிருந்தது மனசு. எங்கேயாவது கண்களில் தட்டுப்பட்டு விட மாட்டாளா என்று அபத்தமாய்த் தேடித் திரிந்தது. தெளிவாய் எழுதி வைத்து விட்டுப் போனவளை எதிர்பார்த்தது மடத்தனம் என்று இப்போது உரைப்பது அப்போது உரைக்கவில்லை.

    கேள்விகள் கேட்பது எத்தனை சுலபமாய் இருக்கிறது மனிதர்களுக்கு? எத்தனையெத்தனை கேள்விகள்? புரட்டி எடுத்து வேரோடு பிடுங்கி வீசியெறிந்து மேலும் துவைத்துப் புண்ணாக்கும் கேள்விகள். அடர் வனத்தில் நுழைய நுழைய சூரிய வெளிச்சத்தைக் கொஞ்சங்கொஞ்சமாய்க் கிழித்து நம் மேல் படரும் பகலிருளின் கருமை போல் கொஞ்ச நஞ்சம் மனதில் இருக்கும் பிடிப்பையும் அசைத்துப் பார்க்கும் கேள்விகளின் இருள்,

    அதை விட அன்று மனதை அறுத்த விஷயம் அவ்வளவு சாப்பாடு வீண். யாரிடமாவது சொல்லி அதை ஏதேனும் சொல்லி அதை ஏதாவது செய்யச் சொல்ல்லாம் என்று துடித்தாலும் அன்றைய நிலையில் அதை விடப் பெரிய பிரச்னைகளைத் தான் நீ பார்க்க வேண்டும் என்று எல்லாரும் சொல்லாமல் சொல்லி விட்டார்கள். போனவள் போய் விட்டாள். அதற்கென்று சாப்பாட்டை வீணாக்குவானேன். எத்தனை லட்சங்கள். யாருடையதாய் இருந்தால் என்ன? ஆனால் இதை நான் அன்று சொல்லியிருந்தால் மூளை குழம்பி விட்டதென்றோ அல்பம் என்றோ சொல்லி இருப்பார்கள். அத்தனை உணவும் என்ன ஆனதென்று தெரியவில்லை. இன்று வரை மனம் ஆறவில்லை.

    ——–

    மெல்லக் குளிர்பான பாட்டிலைத் திறந்து வோட்காவில் அளவாக ஊற்றினேன். வோட்காவினுள் சிறிது சிறிதாகக் கலந்த குளிர்பானம் சிறு நுரையை உண்டு பண்ணியது. குமிழ்ந்து மேலே வந்தபடி இருந்தது அந்த அழுத்தமில்லாத வெண்ணிற நுரை.அது அடங்கும் வரை ஓரொரு வினாடிகள் ஊற்றுவதை நிறுத்தினேன்.

    “நீங்க ஸ்மோக் பண்ணுவீங்களா?”

    “சேச்சே.. இல்லம்மா”

    “தேங்க் காட். எனக்கு அந்த ஸ்மெல்லே பிடிக்காது”

    “எனக்கும் தான்”

    “அதுசரி.. நீங்க ட்ரிங்க் பண்ணுவீங்களா. பொண்ணு பாக்க வந்த அன்னிக்கு சொன்னதெல்லாம் நான் அழிச்சிடறேன். இன்னிக்கு கரெக்டா சொல்லுங்க பாப்போம்”

    “அது….”

    “ம்ம்… சொல்லுங்க. பூனைக்குட்டி வெளிய வரட்டும்”

    “எப்பயாவதுமா. பிரண்ட்ஸோட சேர்ந்தா மட்டும்”

    “அதானே பார்த்தேன். இருக்கட்டும். உங்கள கல்யாணத்துக்கப்புறம் கவனிச்சுக்கறேன்”

    மெலிதாய்ச் சிரித்துக் கொண்டேன். இதைச் சொன்னவள் தான் அந்த லெட்டரை எழுதினாளா? எப்படி? மீண்டும் ஊற்றி கிளாஸை நிறைத்தேன்.

    ——–

    அலுவலகம் கிளம்ப நேரமாகி விட்டது.  அலுவலகத்தில் எல்லாரிடமும் ஒரு செயற்கைத் தன்மை வந்து ஒட்டிக் கொண்டு விடுகிறது என்னைப் பார்த்தாலே. நன்றாகப் பேசிக் கொண்டிருப்பவர்கள் திடீரென்று நாடகத் தனமாகப் பேச ஆரம்பித்து விடுகிறார்கள் என் தலை கண்டாலே. எதைப் பேச வேண்டும் எதைப் பேசக் கூடாதென்று அளந்து அளந்து பேசுகிறார்கள். செய்யாத தப்புக்குத் தண்டனை.

    ஆனாலும் அந்த அலுவலகத்தில் தான் இரவு வரை சமாளிக்க வேண்டியிருக்கிறது. வேலை என்று பெரிதாக இல்லாத பொழுதுகளிலும் வீட்டிலிருக்கும் வெறுமையிலிருந்து ஓடி ஒளிய அலுவலகம் ஒரு கேடயம். ஏ சி ஓடிக் கொண்டிருக்கும் நாற்காலியும் கணினியும் தந்திருக்கும், வெளியே போ என்று சொல்லாத கேடயம்.

    ——

    சம்பந்தமே இல்லாமல், சம்பந்தமில்லாத இடத்தில் சவிதாவின் நினைவுகள். நினைவுகள் என்றால் அவள் கடிதமெழுதி வைத்து விட்டுப் போனது பற்றீயல்ல. அது தான் ஓயாமல் ஓடிக் கொண்டிருக்கிறதே. இப்போதைய நினைவுகள் அவளுடனான இனிமையான தருணங்கள் பற்றி. கால நேரம் அறியாமல் மொபைலில் பேசிக் களித்துக் கிடந்தது பற்றி. அப்போதெல்லாம் அவள் மனதில் அவனைப் பற்றி ஓடிக் கொண்டிருந்திருக்குமா என்ற மனசின் கேள்வியை அவசரமாக ஒரு பக்கம் ஒதுக்கி திமிறத் திமிற மூடி வைத்தேன்.

    வோட்காவை இன்னும் குடிக்கவே இல்லை. அதற்கு முன்பே இப்படி. நான் லேசாகச் சிரித்ததை அந்த பையன் பார்த்து விட்டிருக்க வேண்டும். தானாகத் தனியாகச் சிரித்தால் எப்படிப் பார்ப்பார்களோ அப்படிப் பார்த்தான். சிரிப்பைக் கட்டுப்படுத்திக் கொண்டேன்.மீண்டும் சவிதா வந்து அமர்ந்து கொண்டாள்,

    ——

    அம்மாவும் அப்பாவும் நான் கிளம்பிய பிறகு இன்னும் எத்தனை பேர் கேள்விகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்களோ? இது மாதிரி சமயங்களில் அடுத்தவர் மீது வாரி இறைப்பதற்கு மட்டும் எல்லாருக்கும் எங்கிருந்து சுரக்கின்றனவோ டன் டன்னாய் ஆறுதல் வார்த்தைகள். குப்பையைப் போல் எந்தத் தரம்பிரிப்பும் இல்லாமல் கேட்கிறவர்கள் மனநிலை என்ன என்று உணராமல் சொத சொதவென்று கொட்டப்படும் வெற்று வார்த்தைகள்.

    அவற்றையெல்லாம் சமாளிக்க தெரிந்தும் அம்மா அப்பாவை முன்னிறுத்திப் பின் மறைந்து கொண்டிருக்கிறேன். பரிதாபத்துக்குரிய மனிதன் அல்லது பொருள் அல்லது வஸ்து நான் தானென்பது எனக்கு மேலும் வசதியாகிப் போயி விட்டது. வெற்றுப் பேச்சு பேசுபவர்களை அடக்காமல் அம்மாவின் பின் ஒளிந்து கொண்டிருப்பதை நினைத்து என் மேல் எனக்கே அவமானம்.

    அக்கம் பக்கத்திலும் விசாரிக்கிறார்கள் என்று தெரியும். எத்தனை நாட்களுக்கு சலிக்காமல் ஒரே விஷயம் பற்றி விசாரித்தபடியே இருப்பார்கள் என்பது புரியவே இல்லை. இன்றோடு இரண்டு வாரங்கள் ஆகி விட்டது. ஓயாமல் இப்படி விசாரிப்பதன் மூலம் இவர்கள் என்ன தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள்? என்ன மாதிரியான பதிலை எதிர்பார்க்கிறார்கள்? நினைக்க நினைக்க பெருமூச்சு தான் மிச்சம்.

    ஆண்கள் அழக் கூடாது என்னும் கிறுக்குத் தனமான பிம்பத்தைக் கட்டமைத்து வைத்திருக்கும் ஊரில் பிறந்து தொலைத்ததால் அழுவதைக் கூட இரவின் பிடியில் பெட்ஷீட்டின் அடியில் சப்தங்களைய்க் குறைத்துக் கொண்டு செய்ய வேண்டியிருந்தது.

    ———–

    வைப்ரேஷனில் வைத்திருந்த மொபைல் அதிர்ந்தது. எடுத்துப் பார்த்தேன். அம்மா. இந்த சப்தத்தில் பேச முடியாது. மெல்ல எழுந்து வெளியே வந்தேன்.”எங்கப்பா இருக்க?” குரலில் லேசான நடுக்கம்.இப்போதெல்லாம் வழக்கத்தை விடக் கொஞ்சமே கொஞ்சம் தாமதமானாலும் பயப்படுகிறாள். அவளைச் சொல்லிக் குற்றமில்லை. நான் நடந்து கொள்வதும் அப்படித் தானே இருக்கிறது.

    “சொல்லும்மா. ஆபீஸ்ல இருந்து கிளம்பப் போறேன்.”

    “உனக்கு பிடிக்குமேன்னு சப்பாத்தியும் தால் ப்ரையும் பண்ணி வெச்சிருக்கேன். வீட்டுக்கு சாப்பிட வந்துடுவல்ல?” என்று கேட்டதில் லேசான தவிப்பு தெரிந்தது.

    சில நொடிகள் மௌனமாயிருந்தேன். இந்த சில நொடி மௌனம் நிச்சயம் அவள் துடிப்பை எகிறச் செய்திருக்கும் என்று தெரிந்தே மௌனமாயிருந்தேன்.

    பின் பெருமூச்சுடன் சொன்னேன். “ வந்துடறேன்மா. “

    “சரிப்பா வச்சிடறேன்” என்றவள் வைக்கவில்லை. சில நொடி கடந்ததும் “ சீக்கிரம் வந்துடுப்பா” என்றாள் தீனமான குரலில்.

    அதைக் கேட்காதது போல் இணைப்பைத் துண்டித்தேன்.

    ———-

    உள்ளே நுழைந்து மீண்டும் இருக்கையை அடைந்து அமர்ந்தேன். வோட்கா கிளாஸை உற்றுப் பார்த்தேன்.சலனமற்று அடியாழக் கடல் போல் அமைதியாயிருந்தது. சப்பாத்தியும் டால் ப்ரையும். மீண்டும் புன்னகைத்துக் கொண்டேன்.

    நிமிர்ந்து சுற்றும் முற்றும் பார்த்து அந்தப் பையனை அழைத்தேன். பில் கொண்டு வா” என்றேன்.

    “சுவைக்கப்படாத வோட்காவையும் என் முகத்தையும் சில நொடிகள் மாறி மாறிப் பார்த்தவன் சட்டென்று நகர்ந்தான்.சில நிமிஷங்கள் கழித்து பில்லை எடுத்து வந்து தந்தான். பில் தொகையுடன் கணிசமாய் ஒரு டிப்ஸ் தொகையும் வைத்தவனை அந்தப் பையன் மீண்டும் புதிராகப் பார்த்தான். உயர நாற்காலியில் இருந்து இறங்கி அவனை நோக்கிப் புன்னகைத்தேன். அவன் தோளைத் தட்டி விட்டு நகர்ந்தேன்.

    வெளியில் வந்து பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். சாலை அடைந்து வண்டி வேகம் எடுத்ததும் காற்றில் குளிர் கலந்திருப்பது தெரிந்தது. மழைக்கு முன்னான மண் வாசனை விரவியிருந்தது. வண்டியை ஓரமாய் நிறுத்தி விட்டு ஹெல்மெட் கண்ணாடியை விலக்கி விட்டு மேலே நிமிர்ந்து பார்த்தேன்.

    எனக்காக காத்திருந்த மழைத் துளியொன்று எங்கிருந்தோ வந்து பொட்டென்று என் நெற்றிப் பொட்டில் விழுந்தது. சிலிர்த்தது. மீண்டும் புன்னகைத்தபடி பைக்கை நகர்த்தத் துவங்கினேன்.

    Share
  • சொல்லும் செயலும்!

    -ரா.பார்த்தசாரதி

    எழுதுக்களின்  சேர்க்கையே  சொல்  எனப்படும்
    சொன்ன சொல்லைக் காப்பாற்றுபவன்  சத்தியவான்
    சொல்லும் சொற்களில் இரட்டை அர்த்தங்கள்
    துச்சமாய் அசிங்கமாய் நினைக்க வைக்கின்றதே !

    சொன்ன சொற்களை என்றும் அரசியில்வாதிகள் காப்பதில்லை
    அவர்கள் கவரிமான் என்று நினைக்கத் தேவையில்லை
    சொற்களை அலங்கரித்து மக்களை மயக்கும் அரசியல்வாதிகள்
    தன் முன்னேற்றத்தையே கருதுபவர்கள் பிறர் நலத்தைக் கருதமாட்டார்கள்!

    வாழ்விற்கு  வழிகாட்டும் சொல்லைச் சொல்பவர்கள் ஞானிகள்
    அர்த்தமற்ற  சொற்களைச் சொல்பவர்களே அஞ்ஞானிகள்
    சொன்ன சொல்லைத் திரும்பத்திரும்பச் சொல்பவன்  பித்தன்
    சொல்லின்  அர்த்தம் தெரியாமல் சிரிப்பவன்  முட்டாள் !

    சொற்களை அலங்கரித்துக்  கவிதைபாடும்  கவிஞன்
    ஒரு சொல் ஒரு செயல் செய்பவன் சராசரி மனிதன்
    சொற்களைக் கொண்டு பணம் சம்பாதிப்பவன் வியாபாரி
    சொல்லின் வல்லமை கொண்டு வாதாடும் வழக்கறிஞர்கள் !

    சொல்லிலே கலைவண்ணம் காண்பவன் கலைஞன்
    கல்லிலே கலைவண்ணம் காண்பவன்  சிற்பக் கலைஞன்
    காண்பதைத் தத்ரூபமாக வரைபவன்  ஓவியக் கலைஞன்
    காதலில்  ஈடுபடும்  காதலனும் ஒரு காதல் கலைஞன்!

     

    Share
  • தள்ளியே நின்று கவனி!

    -மீ. விசுவநாதன்

    “மலை மிக அழகு
    பச்சையாய், நீலமாய் …
    தள்ளி நின்று பார்க்கும் பொழுது…

    நீ நெருங்க நெருங்கப்
    பூக்களும், புலிகளும், கொடிய விஷப்
    பாம்புகளும், காட்டு நாய்களும், பன்றியும்,
    பச்சோந்திகளும், அருவியும், பாறையும், கல்லுமாய்
    ஆதிவாசி மனிதக் கூட்டமாய்….ஒற்றை யானையாய்……
    கவிதையை ரசிக்க விடாத இலக்கணப்புலியாய்……

    தள்ளியே இரு…ரசி
    நெருங்க நெருங்க நிம்மதி போகும்…..
    நீலக்கடல்….விரிந்து பரந்த உலகந்தான் ……
    அழகோ கொள்ளை அழகு…
    ரசி..பார்த்துப் பார்த்து ரசி..

    கரையை விட்டு நீருக்குள் கால்வைத்தால்
    அலைகள் உன்காலை அணைப்பதுபோல்
    உன்காலடி மண்ணைக் கழுவிக் கொண்டு போய்
    உன்னைக் கீழே தள்ளி வாயில் மண்ணை அப்பும்….
    ஒரு அலை அழைக்கும், ஒரு அலை அடிக்கும்
    ஒரு அலை ஒரேடியாக உன்னை அமுக்கிவிடும்.

    ரசி…கரையில் நின்றபடி ரசி…
    ஆழம் தெரிந்து அமைதியோடிரு…..
    வாழ்வும் அப்படித்தானோ….?

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(70)

    -செண்பக ஜெகதீசன்

    செல்லான் கிழவ னிருப்பின் நிலம்புலந்
    தில்லாளி னூடி விடும். (திருக்குறள்-1039: உழவு)

    புதுக் கவிதையில்…

    நிலத்துக்குரியவன்
    நித்தம் சென்று பேணினால்தான்,
    நின்று வளரும் பயிர்
    நிறைய வரும் மகசூல்…

    சோம்பலில்
    பாராது விட்டுவிட்டால்,
    நிலமும்
    கோபத்தில் மனைவிபோல
    ஊடல் கொள்ளும்,
    பலனேதும் வராது…!

    குறும்பாவில்…

    நித்தம் பேணிடு
    நிலத்தை மனைவிபோல்,
    இல்லையேல் ஊடிடும்
    இரண்டும்…!

    மரபுக் கவிதையில்…

    நிலத்தின் சொந்தக் காரனும்தான்
        நித்தம் சென்று நீர்பாய்ச்சிப்
    பலரும் மெச்சப் பண்படுத்திப்
        பாடு பட்டே வந்தால்தான்,
    நிலமதில் பயிரும் நிமிர்ந்துவரும்
        நிறைய மகசூல் கொண்டுவரும்,
    குலமகள் ஊடல் கொள்வதுபோல்
        காட்டுமே நிலமவன் சோம்பலிலே…!

    லிமரைக்கூ…

    நேரில் செல்லவேண்டும் நிலத்திற்கு தினம்,
    செல்லாமல் சோம்பியவன் நிலம்
    மாறிடுமே ஊடல்கொண்ட இல்லாள் இனம்…!

    கிராமிய பாணியில்…

    காட்டாத காட்டாத
    சோம்பலத்தான் காட்டாத,
    சொந்தமான நெலத்தத்தான்
    சோர்வுல்லாமத் தெனம்பாரு..

    சோம்பலாவே நீயிருந்தா
    கோவிச்சிக்கும் நெலங்கூட
    கெட்டுன பொண்டாட்டிபோல,
    கெட்டுப்போவும் எல்லாமுமே…
    அதால,
    காட்டாத காட்டாத
    சோம்பலத்தான் காட்டாத…!

     

    Share
  • ஜெயகாந்தனுக்கு இரங்கற்பா!

    தமிழகத்தில் முதன்மை பெற்றாய்!

    சி. ஜெயபாரதன், கனடா

     

    வாழ்க நீ நண்பா ! இந்த
    வையத்தமிழ் நாட்டி லெல்லாம்
    பாழ்பட்ட தமிழகத்தில் உயர்ந்த
    படைப்பா ளியாய்த் தனித்து நின்றாய்;        jk.
    தாழ்வுற்ற மனிதர் பற்றித்
    தரமுடன் எழுதி வைத்தாய்;
    ஆழ்ந்து சமூக நோய்கள் காட்டி
    ஆக்கத்தில் முதன்மை பெற்றாய்!

    என்னே உன் இதயத் துணிச்சல் !
    என்னே உன் எழுத்தில் அழுத்தம் !
    என்னே உன் பேச்சில் புரட்சி !
    என்னே உன் கற்பனை எளிமை !
    என்னே உன் மனிதர் படைப்பு !
    என்னே உன் கதைகள் அமைப்பு !
    என்னே உன் வாழ்வின் குறிக்கோள் !
    எழுத்திலே முதன்மை பெற்றாய்!

    புத்துயிர் பெறும் தமிழ்ப் படைப்பு
    புனைகதை பெறும் மெய்வடிவம்
    பித்தர் தெருவாழ் மாந்தர்க்குன்
    பேனா மெய்யுரு அளிக்கும்;
    இத்தரை வாழ் திரை நடிகர்
    இயல்புடன் நடிக்க வைத்தாய்;
    முத்திரைத் திரைப்படம் இயக்கி
    முயற்சியில் முதன்மை யுற்றாய்!

     

    Share
  • உலகம் பிறந்தது எனக்காக

    கவிஞர் காவிரிமைந்தன்

    காக்கை குருவி எங்கள் ஜாதி என்றான் மகாகவி பாரதி. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றான் கணியன் பூங்குன்றனார். மானுடக்கவிஞன் கண்ணதாசன் பார்வையின் விசாலத்தைப் பாருங்கள்! உலகம் பிறந்தது எனக்காக என்கிறார்.

    akaviri

    1997ல் அக்டோபர் திங்கள் 17 ஆம் நாள் சென்னை ராணி சீதை மன்றத்தில் கவியரசு கண்ணதாசன் கலை இலக்கிய மையம் (பம்மல்) சார்பில் நடைபெற்ற கண்ணதாசன் விழாவில் இனியதோர் பட்டிமன்றம் முனைவர் சரசுவதி ராமனாதன் தலைமையில். இலக்கியச்சுடர் த. ராமலிங்கம் கண்ணதாசன் பாடல்களின் நிலைத்தப் புகழுக்குப் பெரிதும் காரணம் சோக ராகங்களே என்கிற அணியின் தலைவராக பங்கேற்றார். அவர்தம் உரையில் .. பாசம் திரைப்படத்தில் கதாநாயகன் எம்.ஜி.ஆர் சிறைச்சாலையிலிருந்து விடுதலையாகி வெளியே வரும்போது பாடிடும் பாடலாக..

    உலகம் பிறந்தது எனக்காக..
    ஓடும் நதிகளும் எனக்காக..
    மலர்கள் மலர்வதும் எனக்காக.. அன்னை
    மடியை விரித்தாள் எனக்காக..
    இந்த வரிகளின் ஆழத்தைக் குறிப்பாக வழக்கறிஞரான இராமலிங்கம் அவர்கள் அழுத்தம் திருத்தமாய்க் குறிப்பிட்டபோது அரங்கமே அதிர்ந்தது.
    எல்லாம் எனக்குள் இருந்தாலும்
    என்னைத் தனக்குள் வைத்திருக்கும்
    அன்னை மனமே என் கோவில்
    அவளே என்றும் என் தெய்வம்

    akavi1
    என தாயின் தரிசனம் தருகின்றார். ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையில் சலிப்புற்று எனக்கென்று என்ன உள்ளது? நான் யாருக்காக வாழ்கிறேன் என்றெல்லாம் மனம் பேதலிப்பதுண்டு. கவிஞரின் பாடல் வரிகளை நோக்குங்கள்.. Positive Approach என்பார்களே.. முழுக்க முழுக்க.. நம்பிக்கை ஊட்டும் உற்சாக வரிகள்.. மானிட வர்க்கத்திற்கு சாசனம் வரைந்தளித்தவனே.. காலத்தை வென்ற உன் காவிய வரிகளில் களிப்படைகிறோம். கவலைகளை நாங்கள் மறக்கிறோம்..

    பாடல்: உலகம் பிறந்தது எனக்காக
    திரைப்படம்: பாசம்
    பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
    இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
    இசை: எம்.எஸ். விஸ்வநாதன, டி.கே. ராமமூர்த்தி
    ஆண்டு: 1961

    உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக
    மலர்கள் மலர்வது எனக்காக அன்னை மடியை விரித்தாள் எனக்காக
    உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக
    உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக
    மலர்கள் மலர்வது எனக்காக அன்னை மடியை விரித்தாள் எனக்காக
    உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக

    காற்றில் மிதக்கும் ஒலிகளிலே கடலில் தவழும் அலைகளிலே
    இறைவன் இருப்பதை நானறிவேன் என்னை அவனே தானறிவான்
    இறைவன் இருப்பதை நானறிவேன் என்னை அவனே தானறிவான்
    உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக
    தவழும் நிலவாம் தங்கரதம் தாரகை பதித்த மணி மகுடம்
    குயில்கள் பாடும் கொண்டது எனது அரசாங்கம்
    குயில்கள் பாடும் கொண்டது எனது அரசாங்கம்
    உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக
    எல்லாம் எனக்குள் இருந்தாலும் என்னைத் தனக்குள் வைத்திருக்கும்
    அன்னை மனமே என் கோயில் அவளே என்றும் என் தெய்வம்
    உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக
    மலர்கள் மலர்வது எனக்காக அன்னை மடியை விரித்தாள் எனக்காக

    https://www.youtube.com/watch?v=Wu_2npFoJWg

    Share
  • நூல் மதிப்புரை – அம்ருதா

    நூல் மதிப்புரை

    அம்ருதா (வரலாற்றுப் புதினம்)

    ஆசிரியர்: திரு. வெ. திவாகர்

     -மேகலா இராமமூர்த்தி

    சிறந்த எழுத்தாளர், பத்திரிகையாளர், வல்லமை மின்னிதழின் ஆசிரியர்குழு ஆலோசகர் என்ற பன்முகங்கள் கொண்டவர் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த திரு. வெ. திவாகர். அவருடைய சமீபத்திய வெளியீடாக வந்திருக்கின்றது வரலாற்றுப் புதினம் ‘அம்ருதா.’

    வம்சதாரா, திருமலைத்திருடன், எஸ்எம்எஸ் எம்டன் 22/09/1914 ஆகிய அருமையான வரலாற்றுப் புதினங்களை ஏற்கனவே எழுதி வாசகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் திரு. திவாகர். இவருடைய திருமலைத்திருடன் புதினத்தைப் படித்து அக்கதையில் உள்ளத்தைப் பறிகொடுத்த வாசகர்கள், ’அபயன்’ என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட முதற்குலோத்துங்கன், சோழ அரசனான வரலாற்றையும் ஆசிரியர் விரிவாக எழுதவேண்டும் என அன்பு வேண்டுகோள் விடுக்க, அதனைப் பூர்த்தி செய்யுமுகத்தான் இப்புதினத்தை எழுதியுள்ளார் என்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது.

    ’அம்ருதா’ புதினம் பற்றிய ஆராய்ச்சியில் இறங்குவதற்குமுன் இக்கதையின் பின்னணியைச் சுருக்கமாய்க் கூறிவிடுவது பொருத்தமாயிருக்கும் என எண்ணுகின்றேன்.

    விஜயாலயச் சோழரால் கி.பி. 850-இல் நிர்மாணிக்கப்பட்ட பிற்காலச்amrutha 1 சோழவம்சம் அதன்பின்னர் ஆல்போல் செழித்து அறுகுபோல் வேரூன்றி வளர்ந்தது. முதலாம் இராசராசனின் காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சியும், பெருமையும் பெற்ற சோழராட்சி, அடுத்துப் பட்டமேறிய அவருடைய திருமகனான முதலாம் இராசேந்திரன் காலத்தில் தென்னகம் மட்டுமல்லாது கிழக்காசிய நாடுகளிலும் பல்கிப் பரவிற்று. இவ்வாறு மீப்பெரு வளர்ச்சி கண்டுவந்த சோழர் தொல்குடி, முதலாம் இராசேந்திரனின் மூன்றாவது மைந்தனான வீரராசேந்திரன் அரியணை ஏறி ஆட்சிசெலுத்தியவரைத் தந்தைவழி மரபிலேயே நீடித்தபோதிலும், அடுத்த பட்டத்துக்குரியவனாக மாமன்னர் முதலாம் இராசேந்திரன் தேர்வு செய்திருந்தது, தன்னருமை மகளான அம்மங்காதேவியின் புதல்வன் அபயனென்னும் முதற் குலோத்துங்கனையே!

    ஆனால் விதியாலும், உள்நாட்டுச் சதியாலும் ஆட்சி வீரராசேந்திரனின் மகன் அதிராசேந்திரனுக்குச் சென்றுவிடுகின்றது. இந்நிலையில் பாட்டனாரின் அபிமானத்துக்குரியவனும், சோழநாட்டு மக்களின் அன்புக்குரியவனுமான அபயனின் நிலை என்ன? அவனால் அதிராசேந்திரனை வென்று ஆட்சியைக் கைப்பற்றமுடிந்ததா? என்பவற்றையெல்லாம் வெகுசிறப்பாக அம்ருதாவில் விவரித்துள்ளார் புதின ஆசிரியர்.

    நண்பர்களே! ஒரு கதையின் வெற்றியில் ஐம்பது விழுக்காடு கதைக்களத்தைச் சரியாய்த் தேர்வு செய்வதில்தான் இருக்கின்றது எனக் கூறலாம். அவ்வடிப்படையில் பார்த்தால், மகோன்னதமான நிலையிலிருந்த சோழசாம்ராஜ்யம் ஒரு பலத்த சரிவைச் சந்திக்கும் வேளையில், வீரமும் விவேகமும் வாய்ந்த அக்குலத்தோன்றலொருவன் அதனை எப்படிச் சீர்செய்து ஆட்சியை நேர்செய்கின்றான் எனும் வரலாறு மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது. அத்தகைய சிக்கலான காலகட்டத்தைக் கதைக்கருவாகத் தெரிவுசெய்த ஆசிரியரின் திறமையை எண்ணி வியக்கின்றேன். கதைக்களத்தைப் போலவே கதையையும் சிறப்பாகவும், வெகுநேர்த்தியாகவும் அவர் நகர்த்திச் செல்லும் பாங்கு அவரை ஓர் தேர்ந்த கதாசிரியராய் முத்திரை குத்த வைக்கின்றது.

    இனி அம்ருதாவைச் சற்று ஆராய்வோம்.

    சோழமன்னன் அதிராசேந்திரனை மணப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காம்போய நாட்டு இளவரசியும், கண்டோர் மயங்கும் கட்டழகியுமான கதாநாயகி அம்ருதா, வேங்கி நாட்டின் விஜயவாடிகைக்குக் (இன்றைய விஜயவாடா) கப்பலில் வந்திறங்குவதிலிருந்து கதை தொடங்கி வாசகர்களின் இரசனைக்கு விருந்தாய் ஒன்பான் சுவைகளையும் (நவரசம்) அள்ளி வழங்கியபடி வளர்ந்து செல்கின்றது. கதையில் இடம்பெற்றுள்ள மாந்தர்கள் அனைவருமே ஒவ்வொரு வகையில் நம் உள்ளத்தைக் கொள்ளையிடுகின்றனர்.

    கதாநாயகனும் வேங்கிநாட்டுக்கு அரசனாக முடிசூட்டப்பட்டவனுமான அபயன் தன் நேர்மை, குறும்புத்தனம், வீரம் முதலியவற்றால் நம்மைக் கவர்கிறானென்றால், அவனுடைய அத்யந்த நண்பனும், வேங்கியின் காவற்படைத் தலைவனுமான நாராயணன் தன்னுடைய அசகாயச் சூரத்தனத்தாலும், சமயோசிதத்தாலும் நம்மைக் காந்தம்போல் ஈர்க்கிறான். சோழர்குலத்தின் குருவாக வருகின்ற அகோரசிவாசாரியார் தன்னுடைய புத்திக்கூர்மை, சோழகுலத்தின் நலனில் காட்டும் அளவற்ற அக்கறை, தெய்வபக்தி முதலியவற்றால் நம்மை வசீகரிக்கின்றார்.

    நற்குணங்களால் இவர்கள் நம் நெஞ்சில் இடம்பிடிக்கின்றார்கள் என்றால், துர்க்குணங்களாலும் நம் கவனத்தைப் பெறுகின்றனர் வேறு சிலர். சாளுக்கிய அரசனான விக்கிலன் (எனும் ஆறாம் விக்கிரமாதித்தன்), வேங்கியின் அரசைக் கைப்பற்ற நினைக்கும் விஜயாதித்தன், போத்தராஜு, ஜனநாதன், மணவாளன் போன்றோர் இவ்வகையினர்.

    ஆண்களின் பாத்திரப்படைப்புக்களை விஞ்சும் வகையில் பெண்பாத்திரங்கள் கதையில் மிளிர்வது பாராட்டத்தக்கது. சான்றாக, சோழ மக்களின் பெருமதிப்புக்குரியவராக விளங்கும் அபயனின் தாய் அம்மங்காதேவி, இளகிய மனமும் இளமை நலமும் வாய்க்கப்பெற்ற சேரஇளவரசி இளவழகி, மருத்துவத்துறையில் ஆழ்ந்த அறிவும், ’மக்கள் சேவையே மகேசன் சேவை’ எனும் உயர்ந்த குறிக்கோளும் கொண்ட இனியபெண் மலையவாசினி, தில்லையம்பலவனிடம் தீராத காதல்கொண்டு அவன் திருப்பதியங்களைப் பாடுவதில் பெருமகிழ்வுகாணும் விக்கிலனின் மனைவியும், சோழநாட்டு இளவரசியுமான யாமினி, அத்தை அம்மங்கைக்குச் சேவை செய்வதிலேயே இன்பமெய்தும் அபயனின் மனைவி மதுரா(ந்தகி) எனப் பெண்களின் பங்களிப்பைக் கணிசமான அளவில் இப்புதினத்தில் காணமுடிகின்றது.

    வெறும் அலங்காரப் பதுமைகளாகப் பெண்களைக் காட்டாமல், தங்கள் உரிமைக்குக் குரல்கொடுக்கும் துணிச்சலும், சுயமரியாதையும் கொண்டோராய் அவர்களை ஆசிரியர் படைத்திருப்பது அவருடைய பெண்ணியச் சிந்தனைகளின் வெளிப்பாடாய்த் திகழ்கின்றது. இதற்கே ஆசிரியரைத் தனியாய்ப் பாராட்டலாம்!

    கதைக்குள் மற்றொரு கதையாய் நாயன்மார்களில் முதன்மையானவராய்க் கருதப்படும் ’தம்பிரான் தோழரான’ சுந்தரமூர்த்தி நாயனார், திருவொற்றியூர் திருத்தலத்தில் சங்கிலி நாச்சியாரை மணந்த வரலாறு சுவையாகப் பேசப்பட்டுள்ளது. இவ்வரலாற்றை மிகச்சரியான இடத்தில் பொருத்தியிருக்கும் ஆசிரியரின் நுண்மாண்நுழைபுலம் போற்றத்தக்கது.

    இவையேயன்றி, திடுக்கிட வைக்கும் திருப்பங்கள், திகைக்க வைக்கும் மர்மங்கள், மகிழவைக்கும் நகைச்சுவைகள், நெகிழவைக்கும் தியாகச் செயல்கள் என்று பல்வகைச் சம்பவங்களும் கதையில் இடம்பெற்றுக் கதைக்கு வலுவூட்டுகின்றன.

    இறுதியாகச் சில வரிகள்….வரலாற்றுப் புதினங்கள் படைப்போர் மிகவும் அருகிவரும் காலமிது. காரணம்…மற்ற கதைகளைப்போல் நினைத்ததையெல்லாம் வரலாற்றுப் புதினங்களில் எழுதிவிட முடியாது. யாருடைய வரலாற்றை எழுதுகின்றோமோ அவர்களைக் குறித்த வரலாற்று ஆவணங்கள், பதிவுகள் அனைத்தையும் முதலில் திரட்டவேண்டும். கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள், செப்புப் பட்டயங்கள் போன்றவையும் இதில் அடக்கம். இதற்கு அசாதாரண உழைப்பும் தளராத ஊக்கமும் தேவை.

    வரலாற்று ஆதாரங்களை மட்டும் வைத்துக்கொண்டு கதையெழுதிவிட முடியுமா? நிச்சயம் முடியாது! நிகழ்ந்த வரலாற்றை, ’வரலாற்றுப் புதினமாக்க’ நகாசு வேலைகள் நிறையச் செய்தாக வேண்டும். அதற்குக் கற்பனைப் பாத்திரங்களின் துணை மிக அவசியம். கதையின் நம்பகத்தன்மையும், ஓட்டமும் கெடாதவகையில் கற்பனைப் பாத்திரங்களையும், அவர்கள் சார்ந்த நிகழ்வுகளையும் உண்மைச் சம்பவங்களோடு அழகாகவும் அளவாகவும் இணைக்கவேண்டும். எத்துணைக் கடினமான செயலிது? இதனைத் திறம்படச் செய்வதற்கு வறட்சியற்ற கற்பனை வளமும், மதியூகமும் வேண்டும் ஓர் எழுத்தாளனுக்கு! அப்போதுதான் வரலாற்றுப் புதினத்தை வகையாகச் சமைக்க முடியும். இப்பண்புகள் அனைத்தும் இறையருளால் ஒருங்கே வாய்க்கப்பெற்றுள்ள புதின ஆசிரியர் திரு. திவாகர், தெவிட்டாத அமுதவிருந்தாய் அம்ருதாவைப் படைத்துள்ளதில் வியப்பேது! ஆசிரியரின் இவ்வரிய முயற்சியை வரவேற்பதும், இப்புதினத்தை வாங்கிப் படிப்பதுமே நாம் அவருக்குச் செய்யவேண்டிய கைம்மாறாகும்.

    வாசக அன்பர்களே! தமிழர்களின் பொற்காலமாய் மின்னிய சோழர்களின் காலத்தை, அவர்களின் வரலாற்றை நம்கண்முன்னே காவியமாய் நிறுத்தியிருக்கும் அம்ருதாவை அவசியம் வாங்கிப் படியுங்கள்! ஆனந்தம் அடையுங்கள்!

    நான்கு வரலாற்றுப் புதினங்களை வரிசையாய் எழுதி ’வரலாறு’ படைத்திருக்கும் திரு. திவாகர் மேலும் பல அருமையான நூல்களை யாத்து அன்னைத் தமிழுக்கு அணிசெய்வாராக!

    அம்ருதாவைப் பெற:
    பழனியப்பா பிரதர்ஸ்
    கோனார் மாளிகை
    25, பீட்டர்ஸ் சாலை, சென்னை – 600014
    தொலைபேசி: 04428132863/43408000
    புத்தகத்தின் விலை: ரூ. 335/

    மேலதிகத் தகவல்களுக்கு ஆசிரியர் திரு. வெ. திவாகரைத் தொடர்பு கொள்ளவும்.
    ஆசிரியரின் மின்னஞ்சல் முகவரி: vdhivakar@rediffmail.com

     

    Share