Blog

  • பச்சோந்திகள்!

    -பா.ராஜசேகர் ​

    சிறு உருவம்
    சுழலும் விழி
    பலம் பெரிது !

    காரிருளில்
    கண்
    மிளிரும்!

    சத்தமின்றிக்
    கால்
    நகரும் !

    பசை
    அதிகம்
    நா நீளும் !

    கயமை
    நெஞ்சு
    நிறம் மாறும்!

    பட்சிகள்
    எல்லாம்
    உணவாகும்!

    இது
    காலதேவன்
    சுழற்சியிலே;

    கழுகுக்கும்
    பாம்புக்கும்
    உணவாகும் !

    மனிதரிலும்
    இதுபோல ;

    உடன் வருவான்
    மெல்ல நகர்ந்து
    மனம் பிடிப்பான் !

    குணமறிந்து
    நிறம் கொடுத்து
    அவன் மறைவான் !

    மாயப் புகழ்
    நாப் பசைதடவி
    நம்மை
    விழுங்கும் வரை !

     

    Share
  • வள்ளுவ மாலை

    -சுரேஜமீ

    மாண்புடைப் பண்பும் நெறியும் உள்ளேகி
    மண்ணில் பயனுற வாழ்தற்கு – நாளும்
    மனதினில் வள்ளுவம் ஏகிட – ஞாலமும்      valluvar
    மாந்தரின் சொர்க்கம் இனி!

    வானுறை வாழ்விற்கு வையகம் தந்தது
    மாண்புகள் கொண்டு மறைநிக ரானது
    மானுடம் ஓங்கிடத் தம்மை விளக்கும்
    வள்ளுவம் படித்திடக் காண்!

    நாளும் மனதில் வள்ளுவம் ஏகிட
    நாமும் பெறலாம் நற்குணம் வாழ்வில்
    நிகரிணை என்றும் நமக்கிலை – சத்தியம்
    நீயறிவாய் செப்பிடக் குறளை!

    அறிவுசெல் உள்ளம் தொடங்கிய நாளாய்ச்
    செறிவாய் நன்கு படித்திருந்தால் – வள்ளுவம்
    வாழ்வில் நெறிவகைப் பண்பும் திறமும்
    விளக்கிடும் ஞாலம் சிறந்து!​    

    பிறப்பும் வாழ்வும் பிரிவும் நட்பும்
    பகையும் வெற்றியும் வீரமும் காலமும்
    பண்பும் நெறியும் காமமும் – கற்றுணர்
    வள்ளுவம் சொல்லும் வழி!

     

    Share
  • புரட்சி கண்டும் புரட்சி

    நாகினி

     

    பசுமை புரட்சி கண்டும்
    பகடை ஆகி பகடி ஆடி
    பசுமை இயற்கை சுவாசம்
    பகல் கனவாய் எதிர் சந்ததி கையேந்த
    பசுமை மகவைக் காவு கொடுக்கின்றோம்…

    நிற்கும் இயற்கை காலை
    வெட்டி எடுத்து செயற்கை
    அடுக்கு மனை பந்தல் கட்டி
    சுதந்திரமாய் ஓடி ஆடி விளையாட
    ஒரு சிறு இடமும் இன்றி
    பிஞ்சு மக்களை இயந்திர மலர்களாய்
    ஒரு சிறு கூட்டுக்குள் கணினியே கதியென
    நிறுத்திடத் தானோ இயற்கையைச் சிதைக்கின்றோம்…

    இயற்கை சிதைவைத் தடுத்து
    நம்மோடு எதிர் சந்ததிக்கும்
    இயற்கை சுவாசம் பசுமையாய் நிறைய
    ஒற்றுமை எழுச்சிக் கரங்கள் உயர்த்தி
    இயற்கை அமைதிப்புரட்சி கண் நோக்குவோம்!

     

    Share
  • சிவபிரதோஷம்

    -மீ.விசுவநாதன்

    சந்திரனைக் கொண்டாய் ! நீண்ட
       சடையில் கங்கை வைத்தாய் !
    செந்தீயைக் கையில் கொண்டாய் !                 Nataraja-custom
       நீலக் கழுத்தில் நாக
    சந்தனத்தைப் பூசி நின்றாய் !
       சத்த உடுக்கை கூட
    தந்திரமாய்க் கையில் கூட்டித்
       தாளங் கொட்டு கின்றாய் !            

    புயலெனவே சுற்றி நித்தம்
       புதிதாய் ஆடு கின்றாய் !
    முயலகனைக் கூடக் காலில்
       முட்டிப் பிடித்தி ருப்பாய் !
    நயமுடனே பணிந்து நானும்
       நடரா ஜநுனைக் கேட்பேன்
    பயலிவனின் பாப மூட்டைப்
       பந்தை எங்கு வைத்தாய்!          

    (அறுசீர் விருத்தம் வாய்பாடு: காய், மா, மா, மா, மா, மா )

    Share
  • தொலைக்காட்சி தொடர், தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் சிந்தனைக்கு …

    -நாகை வை. ராமஸ்வாமி.

    media

    பல வெற்றிப்படங்களையும், தொலைக்காட்சித் தொடர்களையும் தயாரித்து தமிழ்நாட்டிற்கும் இந்திய தேசத்திற்கும் பெருமையும் புகழும் சேர்க்கும் உங்கள் அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துக்களும் முதற்கண்.

    நீங்கள் அனைவரும் அறியாத, செல்லாத, அயல்நாடுகள் மிகக் குறைவே என்றே சொல்லலாம். பல படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் மிக அருமையான, அழகான, சுத்தமான வெளிநாட்டுக் காட்சிகளை அமைக்கிறீர்கள். நம் நாட்டில் அப்படிப்பட்ட இடங்கள் இல்லையா? அப்படி அமைந்தால் எவ்வளவு பெருமையாக இருக்கும்? எவரும் மெச்சும் வகையில், நம் ஊரில், நம் நாட்டில் அழகும், சுத்தமும், சுகாதாரமும், வசதிகளும் மிக்க அயல் நாட்டிற்கு நிகரான இடங்கள் அமைவதற்கு ஏன் ஆவன செய்யக் கூடாது? சம்பந்தப்பட்ட அதிகாரிகளை, அரசாங்கத்தை அணுகுங்கள், செயல்படுத்த முயலுங்கள். சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து நம் நாட்டிற்கு வருமானமும் வளமும் பெருகும் அல்லவா? உங்களுக்கும் அயல்நாட்டில் படப் பிடிப்புக்காக ஆகும் செலவு எவ்வளவு மிச்சமாகும்?

    “பல படங்களில், ஏன், தொலைக்காட்சித் தொடர்களிலும் கூட ஏராளமான காட்சிகள், மக்கள் நல்வாழ்வுக்கு ஏற்றவகையிலில்லாமல் அமைக்கப்படுகின்றன, இளைஞர்கள் கெடுவதற்கான பல கெட்ட பாடங்களே கற்பிக்கப் படுகின்றன’” என்பன போன்ற வாதங்களும் குற்றச்சாட்டுகளும் பட்டி மன்றங்களிலும், விவாதங்களிலும் எதிரொலித்து அதிக பட்ச மக்கள் ஒப்புக்கொள்ளும் அவல நிலை சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானது என்பதை நீங்கள் புரிந்துகொள்ளத்தான் வேண்டும். புரிந்திருந்தால் ஏன் அதை செயல் படுத்த முயலவில்லை?

    பல படங்களில் வில்லன்கள் பாராட்டப்பட்டு, அவர்கள் செயல்களுக்கு நியாயமும் கற்பிக்கப்படுகிறது. சில கதாநாயகர்கள் செய்யும் ஒரு சில கோமாளித்தனங்களும், ஆபத்தான செயல்களும், சண்டைக் காட்சிகளில் வில்லன்கள் செய்யும் ‘அதி வீர தீர சாமர்த்தியமான’ செயல்களையும் உண்மையென நம்பி மோசம் போகும் இளைஞர்கள் ஏராளம். நாளுக்கு நாள் சண்டைக் காட்சிகள் கோரமான முறையில் காட்டப்பட்டு கொலை, கொள்ளை இன்னும் பல தவிர்க்கப்படவேண்டிய சமூக விரோதச் செயல்கள், இவற்றை எப்படியெல்லாம் செய்யலாம், என்னென்ன யுக்திகள் கையாளலாம் என்று சொல்லிக் கொடுக்கப்படுகிறவாறு அமைகின்றன.

    பல ஆண்டுகளுக்கு முன்பு வந்த ‘நூறாவது நாள்’ படத்தின் அடிப்படையில் பல கொலைகள் செய்ததாக ஒப்புக்கொண்ட ஒரு நபர் தண்டிக்கப்பட்டது அந்நாள் நடுவயதுக்காரர்கள் அறிவார்கள்.

    காமெடி காட்சிகளில் அருவறுக்கும் வசனங்கள். காமெடி, பகுத்தறிவு என்ற பெயர்களில் குறிப்பிட்ட ஒரு ஆதரவில்லா சாதியினரை மட்டுமே இலக்காக்கி, அவர்களை ஏளனப்படுத்தும் அவலம் தமிழ் நாட்டு சினிமாவில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது என்று சொல்லலாம். வேறு எந்த சாதியினரையும் இவ்வளவு ஈனமாகச் சாடினால் விளைவு என்ன ஆகும் என்று எவருக்கும் தெரியும். இவைகளில்லாமல் படங்கள் எடுக்க வழியா இல்லை?

    காதல் என்ற ஒரு சப்ஜெக்ட்டை வைத்துக்கொண்டு, என்னமோ காதல் செய்யத் தெரியாதவர்கள் எல்லாம் மடையர்கள், அல்லது ஏமாளிகள் அல்லது பயந்தாங்கொள்ளி அல்லது வாழ்க்கைக்கே லாயக்கில்லாதவர்கள் என்பது போலவும், வாழ்க்கைக்குக் காதல் ஒன்று மட்டும் இருந்தால் போதும் என்பது போன்ற கதைகளும் பெருகிவிட்டன. இவற்றைப் பார்த்து கெட்டுப் போய் சீரழியும் மக்கள், குறிப்பாக கல்லூரி மாணவர்கள், உற்றார் உறவினரைப் பகைத்துக்கொண்டு, பெரும்பாலும் தகுதி இல்லாதவர்களிடம் ஏமாந்து வாழ்க்கையையே தொலைத்துவிட்டு கஷ்டப்பட்டு சீரழிபவர்கள் ஏராளம்.

    இந்த வகையில் நூதனமான தற்கொலைகளும் கொலைகளும் காட்டப்படுகின்றன . கொலைகளிலும் தேவையில்லாத பலவிதமான உத்திகள், ஆக்ரோஷமான பயங்கர வன்முறைகள். ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால், உடனே ‘போட்டுத் தள்ளவேண்டியது’, அதற்கு கூலிப் படையை நாடுவது, போன்ற காட்சிகள். இவற்றிற்கெல்லாம் பெருமளவு சினிமா, தொலைக்காட்சி பாதிப்பு காரணம் என்று தாராளமாகச் சொல்லலாம், பலரும் ஒப்புதல் அளிப்பர்.

    ஒரு காரியம் நமக்கு சாதகமாக அமைத்துக்கொள்ள வேண்டுமென்றால், எப்படி யாரை ஏமாற்றவேண்டும், லஞ்சம் எப்படிக் கொடுப்பது என்பனவற்றைத் தெரிந்துகொள்வதற்கு ஏன் வேறு எங்கும் போகவேண்டும், சினிமாவும் தொலைக்காட்சியும் இருக்கும்போது?

    ஒரு அன்பான குடும்பத்தையே எப்படி எல்லாம் பிரிக்கலாம், எப்படி சண்டை போட்டுப் பிரிந்து போகலாம் அல்லது, பிரிய வைக்கலாம், பெற்றோர், குழந்தைகள் உறவிலேயே எப்படி சந்தேகம் கொள்வது, பெரியோரை எப்படி மரியாதைக் குறைவாக நடத்துவது அல்லது ஏசுவது, ‘ஏய், பெரிசு’ போன்ற அடைமொழிகள், குடும்பத்தினர் காதைப் பொத்திக்கொள்ளும் அளவுக்கு வசைமொழிகள், எதற்கெடுத்தாலும், எல்லா இடத்திலும் ‘தூ தூ’ என்று அநாகரிமாக, அசிங்கமாகத் துப்பும் காட்சிகள், எதிராளியின் முகத்தில் காரி உமிழும் காட்சிகள், இன்னபிற அருவறுக்கும் காட்சிகள், அனைத்திற்கும் சினிமாவும் தொலைக்காட்சியும் ஒரு பல்கலைக்கழகமாக ஆகிக்கொண்டிருக்கிறதே என்ற பெருங்கவலை இருக்கிறது அனைத்துத்தர மக்களுக்கும்.

    சென்சார் போர்டு என்ற ஒரு அமைப்பு இருக்கிறதா, இருந்தால் சரிவர செயல்படுகிறதா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. தொலைக்காட்சித் தயாரிப்பாளர்களுக்கு – விளம்பரம் ஒரு வருமான சாதனம் தான். ஆனால், 30 நிமிட நிகழ்ச்சியில், விளம்பரங்கள் 20 நிமிடங்களும் நிகழ்ச்சிகள் 10 நிமிடங்கள் மட்டுமே உள்ளன. விளம்பரத் தொடரில் அவ்வப்போது சிறிது கதையும் சொல்லப்படுவது போல் இருக்கிறது.

    விளம்பரங்களின் ஒலி அளவோ நிகழ்ச்சிகளின் ஒலி அளவைவிட மிக மிக அதிகம். ஏன் ஒரே அளவில் அமைக்கத் தவறுகிறீர்கள்? ஒவ்வொரு விளம்பர இடைவேளையும் போதும் ‘ரிமோட்டை’ வைத்துக்கொண்டு சப்த அளவைக் குறைப்பதோ அல்லது ‘ம்யூட்’டில் வைப்பதோ தான் வேலையாகிவிடுகிறது. இது தவிர, தேவையற்ற இசை, வசனங்களே காதில் விழாதவாறு பின்னணி இசையின் கர்ண கடூரம், இவற்றையெல்லாம் சீர்படுத்துங்கள்.

    இனியாவது, புகை பிடிப்பது, மது அருந்துவது, கற்பழிப்பது, வன்முறைச் செயல்கள் போன்றவைகளுக்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டாம். நடிகர்களே, கிழித்த காகிதம், குப்பை இவற்றை குப்பைத் தொட்டியில் அல்லாமல் எங்கு வேண்டுமானாலும் தூக்கி எறிவது, எங்கு வேண்டுமானாலும் எச்சில் துப்புவது அல்லது சிறுநீர், மலம் கழிப்பது போன்ற காட்சிகள் அவசியம் தவிர்க்கப்பட வேண்டும்

    எரிபொருள் சிக்கனப்படுத்தப்படவேண்டும் என்று எல்லோரும் அறிவர். பின் ஏன், சிதை எரிப்புக்காட்சிகள், வீடு கொளுத்தும் காட்சிகள் காட்டவேண்டும்? அடையாளமாக, எந்த நபர் இறந்ததாகச் சித்தரிக்கப் படுகிறாரோ, அவரது புகைப்படத்தை ஒரு மாலையுடன் காட்டினால் போதாதா?

    சண்டைக் காட்சிகள்? அடேயப்பா? எத்தனை, வாகனங்கள், பொருட்கள், பெட்ரோல் முதலிய எரிபொருட்கள் நாசமாக்கப்படுகின்றன? எரியூட்டப்படுகின்றன, தண்ணீர், பால், பழங்கள், காய்கறிகள் சேதமாக்கப்படுகின்றன? எல்லாவற்றையும் தவிர்க்கமுடியாது என்றாலும், அவசியமில்லாததை, நீங்கள் நினைத்தால் நிச்சயம் தவிர்க்கலாம். சிம்பாலிக் ஆக காட்டும் உத்திகள் உங்களுக்குத் தெரியாதவையா? அனிமேஷன் முறையில் இவற்றை காட்டினால் போதாதா? எவ்வளவு எரிபொருளும், சுற்றுச் சூழலும் பாதுகாக்கப்படும்?

    படம் எடுப்பது பெரும்பாலும் வியாபார நோக்கமே என்றாலும், சமூக நலன் இன்னும் சற்று அதிகமாக உங்கள் பார்வையில் இருக்கவேண்டும். “சினிமாவும் தொலைக்காட்சியும் ஒரு பொழுதுபோக்கு சாதனமே, அவற்றில் காணப்படுபவை எல்லாம் சமூகத்தில் நடைபெறும் நிகழ்வுகளே” என்று நீங்கள் வாதிடுவதும் ‘சினிமாவிலிருந்தும் தொலைக்காட்சிகளிலிருந்தும் தெரிந்து கொண்டுதான் நாங்கள் இந்த செயல்களைச் செய்கிறோம்’ என்று குற்றவாளிகளும் மாறி மாறி சொல்லிக் கொண்டேயிருந்தால், இதற்கு எல்லையே இல்லை, வடிகாலும் இல்லை. பாதிக்கப்படுபவர்கள் இளைய சமுதாயம் தான்.

    ஆகவே, காட்சிகளுக்கான ஒரு வரையறை வகுத்து, சமூகக்கேடு குறைவதற்கு உதவிட சமூக ஆர்வலர்களும் அரசாங்கமும் முன்வரவேண்டும். நீங்களும் பொறுப்பான பெற்றோர்கள் தான். இதற்கு பொறுப்பான பங்கு உங்களையும் சாரும். உங்கள் தொண்டு ஆக்கபூர்வமாக வளரச்செய்யுங்கள். நாடும், மக்களும், சுற்றுப்புரச் சுத்தமும் உலகத்தரமான மேம்பாடு அடைந்து, தமிழ்நாடும் இந்தியாவும் அனைத்துலகும் போற்றத்தகு பெருமையான இடம் வகிக்க தயவு செய்து பெரும்பங்கு ஆற்றிடுங்கள்.

    நடிகர் விவேக் போன்றவர்கள் பல புத்திமதிகள் சொல்லிவருகிறார்கள். அவரே தனியாகவோ, அவர் மூலமாகவோ மது அருந்துதல் புகை பிடித்தல், வன்முறைச் செயல்கள் இவற்றின் தீமைகளையும், வீட்டையும், தெருவையும், ஊரையும், நாட்டையும் சுத்தம் சுகாதாரத்துடன் வைத்திருத்தல், அவற்றின் நன்மைகள் இவற்றை அறிவுறுத்தலாம்

    சமூகப் பொறுப்புணர்வோடு நீங்கள் செயல்பட்டு, பல சாதனைகள் செய்து மக்களையும் நாட்டையும் ஏற்றமுறச் செய்யுங்கள். இன்னும் அதிக அக்கறையுடன் செயல்பட்டால், சமூக முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும், உங்களை நாடும் மக்களும் இன்னும் பாராட்டுவார்கள் என்றே தோன்றுகிறது.

    நன்றி, வணக்கம்.

    நாகை வை. ராமஸ்வாமி
    மே 1, 2015

    Share
  • பாவேந்தர் போல் நாமெழுவோம்!

    -பாவலர் கருமலைத்தமிழாழன்

    வான்கதிர்தான்   சிதறித்தூள்   பூமி   யாக
        வந்தபோதே   பிறந்தமொழி   தமிழ்தான்   என்றும்
    தேன்என்றும்   பால்என்றும்   தெவிட்டி   டாத
        தெள்ளமுதாம்   எனத்தாசன்   புகழ்ந்து   ரைத்தும்    baaradhidasan
    ஊன்உணர்வில்   கலந்தென்னை     இயக்கு   கின்ற
        உயிரென்றும்   தமழ்மொழியை   உயர்த்திச்   சொல்லக்
    கூன்மொழியாய்   ஆக்கியின்று   குனியச்   செய்தே
        கூறுகின்றோம்   செம்மொழிக்குச்     சொந்த   மென்றே !

    தமிழாய்ந்த   தமிழன்தான்   தமிழ நாட்டின்
        தலைஅமைச்சாய்   வரவேண்டும்   என்று   ரைத்த
    அமிழ்தான   கவிஞனிவன்   கருத்தை ஏற்றே
        அரியணையில்   தமிழனைநாம்   அமர்த்தி   னோமா?
    நிமிர்ந்திங்கே   தமிழர்காள்   எண்ணிப்   பார்ப்பீர்!
        நிலைகுலைந்து   தமிழ்நாடு   போவ   தெல்லாம்
    தமிழ்நாட்டில்   தமிழன்தன்   ஆட்சி   யின்றித்
        தமிழல்லார்   அமர்ந்திருக்கும்   அவலத்   தாலே !

    இருட்டறையில்   உள்ளதடா   உலகம்   சாதி
        இருக்கின்ற   தென்பானும்   இருக்கின் றானே
    உருபடுமா   இந்நாடு   என்று   ரைத்தும்
        ஊர்ஊராய்ப்   பெரியார்தாம்   சுற்றி   வந்து
    கருத்தாலே  சமத்துவத்தை   ஊட்டி   விட்டும்|
        காணுகின்றோம்   இன்னுமிங்கே   சாதிக்   கொடுமை
    அரும்புலவன்   பாவேந்தன்     சொல்லை   ஏற்றே
        அகற்றிடுவோம்     சாதிகளைப்     பொதுமை   காண்போம் !

    வேடமிட்டே   ஆரியர்கள்   சூழ்ச்சி   செய்து
        வேதத்தில்   புராணத்தில்   உலவ   விட்ட
    மூடத்தின்   மூக்கறுக்கக்   கவிதை   தன்னில்
        மூட்டிவிட்டார்   விழிப்புணர்வை   பாவேந்   தர்தாம்
    ஏடகமாம்   குயிலேட்டில்   பஞ்சாங்   கத்தை
        ஏற்றிடாமல்   பகுத்தறிவை   ஏற்றி   டென்றார்
    வீடகத்தில்   இன்னும்நாம்   முட்டா   ளாக
        விதிப்படித்தான்   நடக்குமென்றே   வீழு   கின்றோம் !

    வீட்டினிலே     தமிழில்லை   தெருக்கள்   தம்மில்
        விளம்பரப்   பலகைகளில்   தமிழே   இல்லை
    காட்சிதரும்   தொலைக்காட்சி   திரைப்ப   டங்கள்
        காண்கின்ற   செய்தித்தாள்   கல்வி   தன்னில்
    தீட்டென்றே   தமிழ்மொழியைத்   துரத்தி விட்டார்
        தீந்தமிழ்தான்   அழிந்துவிட்டால்   இனமும்   மாயும்
    மீட்டெடுக்க   எழவில்லை   என்றால்   ஞாலம்
        மீதினிலே   பெயரின்றிப்   போவோம்   நாளை !

    வீட்டிற்குள்   முடக்கிவைத்த   பெண்க   ளுக்கு
        விழிப்புணர்வைத்   தருவதுவே   கல்வி   என்று
    பாட்டினிலே   பாவேந்தர்   எழுச்சி   ஊட்டிப்
        படிப்பறிவு   பெறுவதற்கே   வழிவ   குத்தார்
    நாட்டினிலே   பெண்களின்று   அமைச்ச   ராக
        நாடுவிட்டுப்   பணியாற்றும்   அறிஞ   ராக
    காட்சிதராக்   கோள்களுக்கும்   செல்வோ   ராகக்
        காண்கின்ற   பெருமையெல்லாம்   அவர்பாட் டாலே !

    பாரதிபோல்   யாப்பினையே   சீர்தி   ருத்திப்
        பாமரர்க்கும்   புரியுமாறு   கவிதை   நெய்தோன்
    ஊரதிரக்   கருத்தினிலே   புரட்சி   ஏற்றி
        உயர்குடும்பம்   உருவாகப்   பாப்பு னைந்தோன்
    சீரழிந்த   தமிழகத்தைத்   தமிழு   ணர்வை
        சீர்செய்யக்   கனல்தெறிக்கும்   பாபொ   ழிந்தோன்
    வேரழிக்க   வந்தபிற   மொழிய   ழிக்க
        வெகுண்டெழுந்த   பாவேந்தர்   போல்நா மெழுவோம் !

     

    Share
  • அவன், அது , ஆத்மா (10)

    ஒரு எளிய மனிதனின் சுயசரிதை

    மீ.விசுவநாதன்

    அத்யாயம்: பத்து

    அவனுக்குக் கதை கேட்கும் அனுபவத்தைத் தந்தது, வடக்கு மாடத் தெருவில் இருக்கும் பஜனை மடம்தான். இன்னும் ஓரிரு வருடங்களில் அதற்கு நூறு ஆண்டுகள் ஆகப் போகிறது. எத்தனையோ கச்சேரிகளும், திவ்யநாம பஜனைகளும், கதை நிகழ்ச்சிகளும், ருக்மிணி, சீதா கல்யாண வைபவங்களும் அங்கு நடந்திருக்கிறது. இன்றும் நடந்து கொண்டிருக்கிறது. கோகுலாஷ்டமி , கிருஷ்ணனின் பிறந்த தினத்தில் இருந்து (ஆவணி மாதம் அஷ்டமி முதல்) பத்து தினங்கள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப் படும். இறுதி நாளில் ஸ்ரீ ஆஞ்சநேயர் உற்சவம் நடைபெறும். அன்று இரவு ஸ்ரீ ஆஞ்சநேயரைப் போல வேடம் அணிந்து ரதவீதி சுற்றி வருவார்கள். அனேகமாக லக்ஷ்மண வாத்தியார் வீட்டு “விஸ்வம்”தான் ஆஞ்சநேயராக வேடம் போட்டுக் கொள்வார். இரவு நேரம் ஆனதால் வீதியில் தங்கள் வீட்டு வாசலில் சிலர் கட்டிலில் படுத்துத் தூங்கிக் கொண்டிருப்பார்கள். அவர்களைத் திடீரென எழுப்பி அவர்கள் முன்பாக ஆஞ்சநேயர் வேடம் தாங்கிய விஸ்வம் “ஹோய்” என்று கத்துவார். தூக்கத்தில் விழித்த அவர்கள் பயந்தாலும், அந்த “அனுமனின்” முகத்தைப் பார்த்துக் கும்பிட்டுக் கொள்வார்கள்.

    avis
    அவனது பள்ளி நாட்களில், கோகுலாஷ்டமி உற்சவத்திற்கு வடக்கு மாடத் தெருவில் பாதித்தெருவுக்கு மேல் நன்றாக அடைத்துப் பந்தலிட்டு, பந்தலின் ஒவ்வொரு தூணிலும் மின்விளக்குக் கட்டியும், தோரணங்களால் அழகு செய்தும் இருப்பார்கள். பந்தலின் முகப்பில் கட்டி இருக்கும் பெரிய வாழைமரங்கள் அவனையும், அவனது நண்பர்களையும் “வா வா …வந்து இங்கே விளையாடுங்கள்” என்று அழைக்கும். அவர்கள் ஒவ்வொரு பந்தல் தூண்களையும் ஓடி ஓடிப் பிடித்து விளையாடுவார்கள். “எலேய்…பாத்துடா…கீழ விழுந்துடாதேங்கோடா” என்று வெங்கட்ராமையர் மென்மையாக அவர்களை கடிந்து கொண்டே பஜனை மடத்துக்குள் செல்வார். அவர்தான் இந்த பஜனை மடத்திற்கு முக்கியமான பெரிய மனிதர். நிறைய நல்ல தர்மங்களை பஜனை மடத்திற்கும், ஸ்ரீ ஆதிவராகர் கோவிலுக்கும் அவர் செய்திருக்கிறார்.

    பஜனை மடத்தில் ஸ்ரீராமர், சீதை, லக்ஷ்மணர், ஆஞ்சநேயர்தான் முக்கிய ஆராதனை தெய்வங்கள். கிருஷ்ணரும் உண்டு. ஸ்ரீராமநவமி ஒரு நாளும், ஸ்ரீராம அகண்ட நாமம் ஒருநாளும், தீபப் பிரதக்ஷிணம், சனிக்கிழமை பஜனை என்று கோலாகலமாகத்தான் இருக்கும். கண்ணனின் கோகுலாஷ்டமியையும் மிகச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். கோவிலின் பூஜைகளை நீண்டகாலம் ஸ்ரீ ஐயாத்துரை வாத்தியார்தான் செய்து வந்தார். நல்ல ஆசார சீலர். வேதம் அறிந்தவர். மிகுந்த சிரத்தையுடன் தனது இறுதி காலம் வரை பூஜைகள் செய்து வந்தார்.

    கோகுலாஷ்டமி, கண்ணனின் பிறந்த தினம். பஜனை மடத்தில் அன்று மாலை ஏழு மணிக்கு “ஸ்ரீ கிருஷ்ண ஜனனம்” கதையை ப்ரும்மஸ்ரீ வேங்கடசுப்ரமணிய சாஸ்திரிகள்தான் சொல்லுவார். அவரை “கீனா சார்” என்று எல்லோரும் அன்பாக அழைப்பார்கள். அவனும், நண்பர்களும் அவருக்கு முன்பாக அமர்ந்து கொண்டு “ஸ்ரீ கிருஷ்ண ஜனனம்” கதையை நிறையக் கேட்டிருக்கிறார்கள். கூட்டத்தில் யாரேனும் பேசிக் கொண்டிருந்தாலும் அவர் அதையெல்லாம் கவனிக்காமல் கதையை ரசித்துச் சொல்லிக் கொண்டிருப்பார். அவனும் அதைக் கூர்ந்து கவனித்து கண்ணனின் கதைகளை ரசித்துக் கேட்பான். அவனுக்கு விளையாட்டுப் புத்தி இருந்தாலும் கதை கேட்பதில் ஒரு தனி ருசி இருந்தது.

    keena“கீனா சார்”தான் பின்னாளில் (1987ல்) சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் குருநாதர் ஸ்ரீ பாரதீ தீர்த்தரின் தியான ஸ்லோகமான “அக்யானாம் ஜான்ஹவி தீர்த்தம் வித்யாதீர்த்தம் விவேகினாம் ஸர்வேஷாம் சுகதம் தீர்த்தம் ஸ்ரீ பாரதீ தீர்த்தம் ஆஸ்ரயே” என்ற மந்திரத்தைக் கூறி, அவனை மூன்று முறை சொல்லச் சொல்லி , “கங்கை எப்படி நம் புற அழுக்குகளை நீக்குகிறதோ அதுபோலத் தூய அறிவு நமது அக்ஞானத்தை நீக்கும். அப்படிப பட்ட உயர்ந்த ஞானத்தை, நல்லறிவை அருளக் கூடிய குருநாதர் ஸ்ரீ பாரதீ தீர்த்தரை நான் ஆராதிக்கிறேன்.” என்று அர்த்தமும் கூறி அவனுக்கு ஆசிரியருமானார். “ஸ்ரீ சாரதா மாதா” என்று அவன் எழுதிய சிறிய கவிதைப் புத்தகத்தில் வரும்,

    கிண்ணத்தில் அமுது வைத்துக்
    கிட்டத்தில் இருந்து கொண்டு
    எண்ணத்தில் தூய்மை யோடு
    இந்தா “சாரதை” என்றால்
    பண்ஒத்த பண்பு கொண்டாள்
    பருகுவாள் பசியும் தீர்ப்பாள்”

    ammanவரிகளை அவனிடம் சொல்லி ,” நீ நானா எழுதிருக்காய்..இத நான் பூஜையின் போது சொல்லி அம்பாள நமஸ்காரம் பண்ணறேன் தெரியுமோ..” என்று அவன் தலையில் தன் வலது கைவைத்து ஆசீர்வதித்தார். அவன் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் பொழுது அவர்தான் “இந்தி” ஆசிரியர். அப்பொழுது எழுந்த இந்தி எதிர்ப்பலையில், அவனுக்குத் தமிழின் மீது உள்ள காதலால் இந்திப் பக்கமே திரும்பவில்லை. அப்படி ஒரு மொழியைக் கற்காமல் விட்டது அவனுக்கு இழப்புதான் என்று இப்போது நன்கு உணர்கிறான். கற்காமல் விட்டதில் உள்ள ஒரே நன்மை, அவனை இந்தியில் யார் திட்டினாலும் அவன் பதிலுக்குப் புன்னகைக்கத் தெரிந்து கொண்டிருப்பதுதான்.

    பஜனை மடத்தில் கிருஷ்ண பாகவதரின் கதை கட்டாயம் இருக்கும். அவர் அம்பாசமுத்திரத்திலிருந்து புறப்பட்டு மாட்டு வண்டியில் மாலை ஐந்தரை மணிக்கு வெங்கட் ராமையர் வீட்டில் வந்து இறங்குவார். அங்கு சிறிது நேரம் இருந்து விட்டு ஆறரை மணிக்கு பஜனைமடத்திற்கு வருவார். சுவாமி தரிசனம் செய்தபின் ஏழு மணிக்குக் கதையை “பலபீமா..பலபீமா” என்ற பாட்டுடன் துவங்குவார். பந்தல் நிறைத்து கூட்டம் இருக்கும். அவருக்கு பக்க வாத்தியமாக மிருதங்கத்துக்கு “நானாச்சி” மாமாவும், ஹார்மோனியத்துக்குச் “சங்கரனும்” இருப்பார்கள். நானாச்சி மாமா பஜனைக்கும், கச்சேரிகளுக்கும் மிருதங்கம் வாசிப்பார். வெளியூர்களில் இருந்து வரும் பெரிய பாகவதர்களுக்கெல்லாம் அவர் மிருதங்கம் வாசித்திருக்கிறார். கச்சேரி நாட்களில் வெள்ளை வேஷ்டியும், காதுகளில் கடுக்கனும், நெற்றியில் விபூதிக் குங்குமமுமாக அழகாய் இருப்பார். பஜனை மடத்துக்கு சுவாமி நெய்வேத்தியமும் அவர்தான் செய்வார். மேலமாடத் தெருவில் ஒரு வாடகை வீட்டில் அவர் குடி இருந்தார். அப்பொழுதெல்லாம் அவன் மதியம் பள்ளியில் இருந்து வீடு திரும்பும் பொழுது, நானாச்சி மாமா அவர் வீட்டு வாயிற் திண்ணையில் அமர்ந்து கொண்டு மிருதங்கம் பயிற்சி செய்து கொண்டிருப்பார். அவன் சிறிது நேரம் ஒரு தூணில் சாய்ந்த படி அதைக் கேட்டுக் கொண்டிருப்பான். அவனுக்கு மிருதங்க நாதம் மிகவும் பிடிக்கும். அவனுக்கு நண்பன் ரகு, நானாச்சி மாமாவிடம் சிறிது காலம் மிருதங்கம் கற்றுக்கொண்டான். போதுமான வருமானம் இல்லாத காரணத்தால் நானாச்சி மாமா சமையல் வேலை, பிராம்மணார்த்தம் என்று தனது கடேசி காலத்தைக் கழித்து விட்டார். கிருஷ்ண பாகவதர் “பக்த ராமதாஸ்” கதையை மிகவும் சுவாரஸ்யமாகச் சொல்லுவார். இடையில் “தானிஷா” என்று ஒரு சத்தம் கொடுப்பார். அதற்கு நானாச்சி மாமா மிருதங்கத்தில் பதில் கூறும் நாதம் இப்பொழுதும் அவன் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அவரை நாயகனாக்கி “மிருதங்கம்” என்ற சிறுகதையை அவன் எழுதி இருந்தான். அதை மஞ்சரி ஆசிரியாராக இருந்த “லெமன்” என்று அழைக்கப் படும் லக்ஷ்மணன் (சாருகேசியின் சகோதரர்) அவர்கள் விரும்பி மஞ்சரியில் வெளியிட்டார்கள். அந்தக் கதை இருபதாம் நூற்றாண்டின் சிறந்த சிறுகதைகள் என்ற தலைப்பில் கலைஞன் பதிப்பகம் வெளியிட்ட தொகுப்பில் இடம்பெற்றது.

    கிருஷ்ணபாகவதரின் பாட்டுக்கு ரொம்ப அழகாக “சங்கரன்” தனது ஹார்மோனியத்தில் வாசிப்பதைக் கேட்பது ஒரு தனி ஆனந்தம். விரல்கள் ஹார்மோனியத்தில் புகுந்து விளையாடும். சிரமமே இல்லாமல் வாசிப்பார். கதைக்கு நடுவில் பாகவதர் ஒரு ராகம் பாடி விட்டு சங்கரனைப் பார்ப்பார். சங்கரன் தனது ஹார்மோனியத்தில் அந்த ராகத்தை விரல்களால் வீடு கட்டி கிரஹப்பிரவேசமே செய்து விடுவார். சிறந்த வித்வானின் கைகளில் கலைமகள் தானே வந்து சேவை செய்வதைப் பார்த்துப் பார்த்து அவன் வியந்திருக்கிறான்.

    கிருஷ்ண பாகவதர், கிருஷ்ணனின் லீலைகளைச் சொல்லும் பொழுது பெண்களைப் போலவே நளினமாக ஜாடை செய்து ,”ஏண்டி …எசோதே ஒன்னோட புள்ள செய்த காரியாத்தப் பாருடி..” என்று நடித்துக் காட்டுவார். அந்த பாணி அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் அவர் சொன்ன கதைகளெல்லாம் அவனது மனதில் பசுமரத்தாணிபோல நன்றாகப் பதிந்திருக்கிறது. முன்பெல்லாம் ஹரிகதை சொல்பவர்களுக்கு இந்தக் காலத்தைப் போல அப்படி ஒன்றும் அள்ளிக் கொடுத்து விட மாட்டார்கள். கதை சொல்பவர்களும் பணத்துக்காகச் சொன்னவர்களும் இல்லை. ஆத்மார்த்தமாக இருந்தார்கள். பக்தியுடன் இருந்தார்கள். அதனால்தான் அவனைப்போல எத்தனையோ சிறுவர்கள் கதையில் இறைவனைக் கண்டு வணங்கினார்கள். கேட்கும் கதைகளால் பாடம் கற்றார்கள். இன்று அவனுக்குக் கதை, கவிதை சொல்வதற்கும், எழுதுவதற்கும், வேத வாழ்வில் ஆழ்ந்த நம்பிக்கை ஏற்படுவதற்கும் காரணமே அந்த எளியோர்களின், போலித்தனம் இல்லாத வெளிப்படையான நடத்தையும், வெள்ளையான வாக்கும்தான். கிராமமல்லவோ அவனுக்கு ஆசிரியனாக இருந்து இவைகளையெல்லாம் கற்றுக் கொடுத்தது. கிராமத்தானாகவே இருப்பது எத்தனை சுகமானது. அதனால் அவன் கிராமத்தானேதான்….

    இனியவன் அடுத்த வாரம் வருவான் ……….

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(147)

    சக்தி சக்திதாசன்.

     

    அன்பினியவர்களே !

    பணிவான வணக்கங்களுடன் அடுத்தொரு மடலுடன் உங்கள் முன்னே மீண்டும் ஒரு வாரம் மனந்திறப்பதில் மகிழ்கிறேன்.

    “அரசியலை வெறுக்கிறேன் ” , “அரசியல்வாதிகளை கண்களில் காட்டவே கூடாது ” இப்படியான பல வாதங்களை நாம் பல இடங்களிலே கேட்டிருப்போம்.

    அரசியல் என்பது எமக்கு அப்பாற்பட்டதா ? நாம் அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கிறோம் எனும் எண்ணங்களோடு வாழ்ந்தாலும் அரசியல் எம்மை விட்டு ஒதுங்கி விடுமா?

    இல்லை அதுதான் சாத்தியமா ?

    நாம் அனைவரும் துறவிகளல்ல, நாம் வாழ்வின் அத்தனை ஆசாபாசங்களையும் ஒதுக்கி வைத்து விட்டு வாழ்பவர்களல்ல. சாதாரண மனிதர்களின் ஆசாபாசங்களின் அடிப்படையிலேயே உலகின் பொருளாதாராம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

    நாம் விரும்பியோ விரும்பாமலோ நாமனைவரும் ஏதோ ஒருவகையில் அரசியலில் சம்பந்தப்பட்டிருக்கிறோம். அதாவது ஜனநாயகத் தேர்தல் நடைமுறையிலிருக்கும் எந்தவொரு நாட்டிலும் ஒவ்வொரு மனிதனும் தனது வாக்குரிமையால் அந்நாட்டின் அரசியலை மாற்றியமைக்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளான் என்பதுவே உண்மை.

    ஆனால் நாட்டின் நடப்புகளையும் அரசியல்வாதிகளின் செய்கைகளையும் கண்டு மனதில் தோன்றும் விரக்தியினால் நாம் வாக்களிக்கக் கூடாது எனும் முடிவுக்கோ அன்றி எமது ஒரு வாக்கினால் நாட்டில் அப்படி என்ன பெரிய மாறுதல் வந்துவிடப்போகிறது ? எனும் எண்ணத்தில் எம்மில் பலர் வாக்களிக்காமல் இருந்துவிடும் நிலைகளும் உண்டு.

    நாம் வாக்களித்தால் அப்படி என்ன நடந்து விடப் போகிறது ? என்று எண்ணுவது போல நாம் வாக்களிக்காமல் இருந்து விட்டால் மட்டும் ஏதோ பெரிய மாறுதல் வந்து விடப்போகிறதா ? என்றும் எண்ணலாம் அல்லவா ?

    ஒவ்வொரு மனிதனுக்கும் ஜாதி, மத, இன வேறுபாடுகளின்றி அந்நாட்டின் அரசியலமைப்பை மாற்றி அமைக்கக்கூடிய அதிகாரம் கொண்ட வாக்குரிமை வேண்டும் என்பதற்காக போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்தோர் அனேகம் பேர்.

    அவ்வதிகாரம் கையிலிருந்து அதை உபயோகிக்காமல் வீணடிப்போரும் பலர் உண்டு.

    election15.1எதற்காக இந்த அலசல் என்று நீங்கள் கேட்கலாம். இது இங்கிலாந்தில் தேர்தல் காலம். இன்னும் ஒரு வாரத்தில் அடுத்த ஐந்து வருடங்களுக்கு இந்நாடு போகப்போகும் திசையைத் தீர்மானிக்கும் தேர்தல் இடம்பெறப் போகிறது.

    யார் அதிகார நாற்காலியில் உட்காரப் போகிறார்கள் என்பதில் பெரிதாக எவ்விதமான மாற்றமும் வந்து விடப் போவதில்லை.

    வழமை போல கன்சர்வ்வேடிவ் கட்சியின் தலைவரும் தற்போதைய பிரதமருமான டேவிட் காமரனோ அன்றி எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் தலைவரான எட் மில்லிபாண்ட் அவர்களோ தான் பிரதமர் எனும் அந்தஸ்தைப் பெறப் போகிறார்கள்.

    election15.3கடந்த தேர்தலில் அரிதிப் பெரும்பான்மை பெற முடியாததினால் லிபரல் கட்சியுடன் சேர்ந்து கூட்டரசாங்கம் அமைத்தார் டேவிட் காமரன்.

    இம்முறையும் தேர்தல் மிகவும் சுவாரஸ்யமாயிருக்கிறது. ஏனெனில் பொதுக் கருத்துக்கணிப்புகளின் படியும் , பிரபலமான அரசியல் அவதானிகளின் படியும் இந்த இரு பெரிய கட்சிகளில் இரண்டும் அரிதிப் பெரும்பான்மை பெறுவது கடினம் எனும் கருத்து முன் வைக்கப்படுகிறது.

    அப்படியாயின் அவ்விரு கட்சிகளும் கூட்டரசாங்கம் அமைக்கும் முயற்சிகளில் எவை அதிக ஆசனங்களைப் பெறும் முயற்சியில் வெற்றி பெறுகிறதோ அதுதான் அரசமைக்க முடியும்.

    இப்போது அரசிலிருக்கும் கன்சர்வ்வேடிவ் கட்சி யூகிப் , யூடிஎப் , லிபரல், டெமாகிரட்ஸ் எனும் கட்சிகளைத் தான் நாட முடியும்.

    election15.4அதே போல லேபர் கட்சி எஸ்என்பி , கிரீன் , லிபரல் டெமாகிரட்ஸ் எனும் கட்சிகளைத்தான் நாட முடியும்.

    லேபர் கட்சிக்கு இப்போது ஒரு புதுப் பிரச்சனை முளைத்துள்ளது. ஒவ்வொருமுறையும் தேர்தலில் ஸ்காட்லாந்தில் ஏறத்தாழ முப்பதிற்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறு லேபர் கட்சி இம்முறை அங்கு ஒரு இடத்தில் வெற்றி பெறுவது கூடச் சந்தேகம் என்கிறார்கள்.

    காரணம் என்ன ?

    கடந்த வருடம் மிகவும் அமோகமாகப் பேசப்பட்ட ஸ்காட்லாந்து நாடு பிரிவதற்கான பொதுஜன வாக்கெடுப்பு நடந்தது அனைவரும் அறிந்ததே. இவ்வாக்கெடுப்பில் ஸ்காட்லாந்தில் மாநில அரசில் அதிகாரத்திலிருக்கும் எஸ்என்பிபி (SNP) எனும் கட்சி பிரிவினைவாதத்தில் மிகவும் குறைந்த வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டது.

    விளைவு !

    election15.2அவர்களுக்கு ஸ்காட்லாந்து பகுதியில் இருந்த செல்வாக்கு பன்மடங்கு பெருகியது அதன் விளைவாக இதுவரை ஸ்காட்லாந்து நாட்டில் செல்வாக்குப் பெற்றிருந்த லேபர் கட்சி தனது செல்வாக்கை பலமாக இழந்துள்ளது.

    இந்நிலையில் கூட்டரசாங்கம் அமைப்பதுதான் லேபர் கட்சியின் முன்னால் உள்ள ஒரே ஒரு தீர்வு. ஆனால் அவர்கள் எஸ்என்பி எனும் கட்சியுடன் கூட்டு வைத்தால் அவர்கள் ஐக்கிய இராச்சியத்தின் பிரிவிற்கு அடிக்கல் நாட்டுகிறார்கள் என்று வாதிடுகிறார்கள் மற்றக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள்.

    தாங்கள் ஒருபோதும் அக்கட்சியுடன் கூட்டுச் சேர மாட்டோம் என்கிறார் லேபர் கட்சியின் தலைவர் எட் மில்லிபாண்ட் . . . . .

    நம்பாதீர்கள் . . . . என்று ஒலிக்கிறது பல குரல்கள்.

    இந்நிலையில் எம் கைகளில் இருக்கும் வாக்குகளை நாம் வீணடிப்பது நாம் வாழும் நாட்டிற்கு நாம் செய்யும் துரோகமாகாதா ?

    நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் ஒரே வாக்காக நமது வாக்கு இல்லா விட்டாலும் பல வாக்குகளில் ஒன்றாக இருந்தோம் எனும் நிம்மதி கிடைக்குமல்லவா ?

    அடுத்த மடலில் சந்திக்கும் வரை
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

     

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • திரு. கோபுலுவின் ஏகலைவி

    மீனாட்சி பாலகணேஷ்.

     

    gopuluஅழகழகான சித்திரங்களை வரைந்து என்னைப் போன்ற பல்லாயிரம் ரசிகர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட ஓவியர் திரு. கோபுலு காலமாகி விட்டதை அறிந்து மிகவும் வருந்துகிறேன். 7 அல்லது 8 ஆண்டுகளுக்கு முன்பு அவருடைய உறவினரான எங்கள் குடும்ப நண்பர் ஒருவருடன் சென்று அன்னாரைச் சந்தித்து உரையாடியதை இங்கு பகிர்ந்து கொண்டு எனது அஞ்சலியைச் செலுத்துகிறேன்.

    மிகச் சிறு வயதிலிருந்தே திரு. கோபுலுவின் ஓவியங்கள் மீது எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. ஆனந்த விகடன் தீபாவளி மலர் அட்டைகள், விகடனில் வெளிவந்த சரித்திர, சமூக நாவல்கள், அனைத்தையும், அவருடைய படங்களுக்காகவே சேகரித்து வந்தேன். தில்லானா மோகனாம்பாள், ஆலவாய் அழகன், திருச்சிற்றம்பலம், துப்பறியும் சாம்பு- ஆஹா! அது ஒரு பொற்காலம். நினைத்தாலே இனிக்கிறது,

    சௌந்தர்யலஹரி ஸ்லோகம் (66) ஒன்றிற்கு அவர் வரைந்த அழகிய படம் சட்டமிடப்பட்டு எங்கள் பூஜை அறையை அலங்கரித்தது. அந்த ஸ்லோகத்தை தினமும் ஒருமுறையாவது நான் சொல்லாமல் இருந்ததில்லை. படிப்பு, பாடும் திறன், வாக்கு வன்மை எல்லாம் தரும் ஸ்லோகம் அது.

    விபஞ்ச்யா காயந்தீ விவிதமபதானம் பசுபதேஸ்-
    த்வயாரப்தே வக்தும் சலித சிரஸா ஸாது வசனே
    ததீயைர் மாதுர்யை ரபலபித தந்த்ரீ கலரவாம்
    நிஜாம் வீணாம் வாணீம் நிசுளயதி சோளேன நிப்ருதம் (66)

    எத்தனையோ ஆண்டுகளின் பின்பு, எங்கள் சொந்த வீட்டில் குடியேறியதும், கூடத்தின் பெரிய சுவரில் இந்தச் சித்திரத்தைப் பெரிதாக வரைய ஆசைப்பட்டுப் பின்பு, அதனைப் பெரிய சைஸில் ஒரு பலகையில் வரைந்தேன். இதற்கு முன்னும் பின்னும் எனக்குத் துளிக்கூட ஓவியப் பயிற்சி கிடையாது. ஆர்வம் மட்டுமே உண்டு.

    கோபுலு அவர்களின் ஓவியங்கள், அதிலும் பெண்களின் ஓவியங்கள் அவற்றின் கண்ணழகுக்குப் பிரசித்தி பெற்றவை. ஆதலால் நான் ‘காப்பி’ செய்யும் இந்தச் சித்திரத்திற்கு முதலில் முகம், கண்கள் இவற்றை வரைந்து, அவை அழகாக வந்த பின்னரே மற்றவற்றை வரைந்து முடித்தேன். கிட்டத்தட்ட 4-5 மாதங்கள் ஆயின. என் தந்தையாரும் கணவரும், மகனும் இந்த முயற்சிக்குப் பெருத்த ஆதரவு தந்தனர் என்பதைக் குறிப்பிட வேண்டும். நிறைவு செய்த சித்திரத்தைக் கூடத்தில் மாட்டியும் ஆயிற்று. பார்த்தவர்கள் அனைவரும் வியந்தனர்.

    எங்கள் நண்பரான பேராசிரியர் மகாதேவன் (Indian Institute of Science) ஒரு நாள் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தபோது அந்தச் சித்திரத்தைக் கண்ணுற்றவர், திரு. கோபுலு தனது உறவினர் என்றும் அவரைக் காணத் தான் சென்னை சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். என்ன ஆச்சரியம்! நானும் வேறு வேலையாகச் சென்னை சென்று கொண்டிருந்தேன். ஆகவே, திரு. மகாதேவன் திரு. கோபுலுவைச் சந்திக்கச் செல்லும் சமயம் நானும் அவரைக் காணச் செல்வதாக முடிவு செய்து கொண்டோம்.

    செல்லும் போது திரு. கோபுலுவிற்குக் காண்பித்து அவருடைய ஆசியைப் பெற, நான் வரைந்த அவருடைய சித்திரத்தைப் புகைப்படம் எடுத்து, பெரிதாக இரு பிரதிகள் செய்து கொண்டேன்.

    agopu

    திரு. கோபுலுவைச் சந்தித்தது மனதிற்குப் பெரும் மகிழ்ச்சியை அளித்தது. “எனக்கு ஒரு குறையும் இல்லை அம்மா! நான் உள்ளம் நிறைவாக இருக்கிறேன்,” என்று புன்னகைத்தார். தயங்கியபடியே நான் வரைந்த சித்திரத்தின் புகைப்படத்தை அவரிடம் காட்டி அதைப்பற்றி விளக்கினேன். அவரை எனது மானசீக குருவாகக் கொண்டு நான் வரைந்த (காப்பியடித்த) ஒரே ஒரு சித்திரம் என்றேன். சிரித்தபடி மகிழ்ச்சியாக என்னை ஆசிர்வதித்தவர், எனது பிரதியில், “எனது அருமை ஏகலைவி மீனாட்சிக்கு ஆசிகள்,” என எழுதிக் கையொப்பமிட்டுக் கொடுத்தார்.

    எனது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதை இப்போதும் பொக்கிஷமாகக் காப்பாற்றி வருகிறேன். நாட்பட்டதால், அவர் எழுதியது சிறிது மங்கி விட்டது.

    இந்த சௌந்தர்யலஹரி ஸ்லோகத்தைத் தமிழிலொரு பாடலாக்கி, நவராத்திரியில் பாடியும் வருகின்றேன். அதனையும் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

    பல்லவி
    நாதன் பெருமைதனை நாத வீணையினில்
    வேதன் தலைவியவள் கீதம் இசைத்திடவே (நாதன்)

    அனுபல்லவி
    யாதும் இனிமையென யாழின் இனிமைகெட
    ஓதும் திருவாய்மொழி சாது என்றனையே (நாதன்)

    சரணம்
    இனிதென்று சிரமசைத்து இசைதன்னை நீ ரசிக்க
    இனிதன்று வீணையென இசைவாணி பரிதவிக்க
    இனியொன்றும் தோணாமல் உறையிட்டு மூடிவைக்க
    கனிவான நகைகாட்டி கருணைவெள்ளம் நீ பெருக்க (நாதன்)

    அத்தனை பெரிய உள்ளம் கொண்ட ஒரு அற்புத மனிதரைச் சந்திக்க இயன்றதை என் வாழ்வின் பாக்கியங்களில் ஒன்றாகக் கருதுகிறேன்.

    Share
  • நான் யார்! நான் யார்! நீ யார் …

    கவிஞர் காவிரிமைந்தன்.

     

    nan yar

     

     

    புலவர் புலமைப்பித்தன் … நான் கால் வைத்த இடமெல்லாம் தன் கைவைத்து என்னை உயர்த்தியவன் …

    புலவர் புலமைப்பித்தன் அவர்கள் இல்லத்திற்கு நண்பர்கள் புடைசூழ செல்வதும் அவருடன் உரையாடி மகிழ்வதும் கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம் தொடங்கிய நாட்களில் வழக்கம்!! அவ்வகையில் அவர் இல்லம் சென்ற ஒரு நாளில் அவர்தம் வரவேற்பறையில் … அமர்வதற்கு இருக்கைகள் இருந்தபோதும் அவர் ஒரு சிம்மாசனத்தில் அமர்ந்தபின் நாங்கள் எல்லாம் தரையில் அமர்ந்தோம்! ஏன்? எல்லோரும் இருக்கையிலே அமருங்கள் என்றார். இல்லை ஐயா! நீங்கள் தரும் தமிழருவி இன்பத்தைத் தரையில் இருந்து பருக விரும்புகிறோம் என்றோம்!! அப்போது புரட்சித்தலைவர் பற்றி அவர் பகிர்ந்த ஒரு விஷயம் மிக மிக சுவாரஸ்யமானது!! சுவையானது!! எம்.ஜி.ஆர் என்னும் சகாப்தத்தில் இன்னும் எத்தனை பக்கங்கள் என்கிற கேள்வியை எழ வைக்கக்கூடியது!

    pulamaipithan1ஆம்! சைதை மாந்தோப்பு பள்ளியில் தமிழ் வாத்தியாராகப் பணிபுரிந்துவந்த புலவர் புலமைப்பித்தன் அவர்களை நான் யார் … நான் யார் என்கிற பாடல் வழியே திரையுலகிற்கு அறிமுகம் செய்துவைத்த புரட்சித்தலைவர் … புலவரின் தமிழுக்குத் தலைவணங்கி … அவருக்குத் தான் நடிக்கும் திரைப்படங்களில் வாய்ப்பு தந்து வந்தது வழக்கமானது! அவற்றைத் தாண்டி … தமிழ்நாடு அரசின் சட்டமன்ற மேல்சபையின் உறுப்பினராய் பொறுப்பேற்கச் சொன்னார் எம்.ஜி.ஆர்.

    அந்தப் பதவியின் போது கன்னிப்பேச்சு வழங்கினார் புலவர் புலமைப்பித்தன். அச்சமயம் தன் வாழ்க்கையை உயர்த்தி வைத்த வள்ளலுக்கு வாயாரப் புகழுரைகள் சாற்றிட எண்ணியிருந்தார். தமிழகத்தின் முதலமைச்சராய் பொறுப்பேற்றிருந்த எம்.ஜி.ஆர். அவர்கள் புலவரின் கன்னிப்பேச்சை நேரடியாய் பங்கேற்று சிறப்பிக்க விரும்பினாலும் புலவரின் உணர்ச்சிப்பெருக்கில் வார்த்தைகள் இடம்பெயரும் என்பதை உணர்ந்த தனது அறையில் பிரத்தியேக ஏற்பாட்டின்படி புலமைப்பித்தனின் பதவியேற்பையும் அவர்தம் கன்னிப்பேச்சையும் கேட்டார். வருவார் வள்ளல் என்று காத்திருந்த புலவர் கடைசி நேரத்தில் மத்திய அரசிடம் தொலைபேசியில் தலைவர் அவசரப்பணியில் இருப்பதாகச் செய்தியறிந்து தனது முதல் உரையை சட்டமன்ற மேலவையில் வழங்கினார்.

    புலமையும் திறமையும் இணைந்திருந்த புலமைப்பித்தன் தன் நன்றியறிதலை புகழ்வாய்ந்த தமிழ்நாடு சட்டமன்றத்தில் … மேலவையில் … ஆற்றிய உரை உணர்வுப் பூர்வமானது!! உள்ள பூர்வமானது! புரட்சித்தலைவரைப் பற்றி என்ன சொல்லலாம் … தாய் என்பதா? தந்தை என்பதா? வழிகாட்டி என்பதா? நண்பர் என்பதா? உற்றதொரு துணைவர் என்பதா? உள்ளம் தழுதழுக்க … ஒருவழியாக புதிய பாணியில் அவர் சொன்ன வரி இதோ …

    நான் கால் வைத்த இடமெல்லாம் தன் கைவைத்து என்னை உயர்த்தியவன் …

    நன்றியை இதைவிடவா எடுத்துரைக்க முடியும்? நற்றமிழ் துணைபுரிய புத்தம் புதிய வார்த்தைப் பதங்களை பொருத்தமாய் பதித்த தமிழ்ப் புலவனின் கன்னியுரை மக்கள் திலகத்தின் கண்களில் ஒருசிலத் துளிகளை வரவேற்றிருக்குமே!!

    குடியிருந்த கோயிலுக்காக … திரைப்பாடல் எழுத முதன்முதலில் புலவருக்கு வாய்ப்பு வழங்கப்பட … இரட்டை வேடங்களில் எம்.ஜி.ஆர் … அதில் மனநிலை பாதித்த பாத்திரம் ஏற்றிருந்த கதாநாயகன் பாடுவதாக அமையும் பாடல்! முதல் பாடலே முற்றிலும் புதிய சூழலுக்காக … எழுதப்பட வேண்டியிருந்தது. அதையும் சவாலாக ஏற்று … தத்துவ முத்திரைகள் பதித்திட புரட்சித்தலைவருக்கு மிகவும் பிடித்துப்போனது! அரிய கருத்துக்களை அள்ளி வழங்கி … புதிய திரைப்படப் பாடலாசிரியரின் வருகையைப் பதிவு செய்த பாடலாகவும் அமைந்தது!

    நான் யார் நான் யார் நீ யார்
    நான் யார் நான் யார் நீ யார்
    நான் யார் நான் யார் நீ யார்
    நாலும் தெரிந்தவர் யார் யார்
    தாய் யார் மகன் யார் தெரியார்
    தந்தை என்பார் அவர் யார் யார்
    நான் யார் நான் யார் நீ யார்

    உறவார் பகையார் உண்மையை உணரார்
    உனக்கே நீயாரோ
    வருவார் இருப்பார் போவார்
    நிலையாய் வாழ்வார் யார் யாரோ

    உள்ளார் புசிப்பார் இல்லார் பசிப்பார்
    உதவிக்கு யார் யாரோ
    நல்லார் தீயார் உயர்ந்தார் தாழ்ந்தார்
    நமக்குள் யார் யாரோ
    அடிப்பார் வலியார் துடிப்பார் மெலியார்
    தடுப்பார் யார் யாரோ
    எடுப்பார் சிரிப்பார் இழப்பார் அழுவார்
    எதிர்ப்பார் யார் யாரோ
    எதிர்ப்பார் யார் யாரோ ஓ … .ஓ … .ஓ … .
    [நான் யார் நான் யார் நீ யார்]

    பிணியார் வருவார் மருந்தார் தருவார்
    பிழைப்பார் யார் யாரோ
    உயிரார் பறப்பார் உடலார் கிடப்பார்
    துணையார் வருவாரோ
    நரியார் நாயார் கடிப்பார் முடிப்பார்
    நாளைக்கு யார் யாரோ
    பிறந்தார் இருந்தார் நடந்தார் கிடந்தார்
    முடிந்தார் யார் யாரோ
    முடிந்தார் யார் யாரோ
    [நான் யார் நான் யார் நீ யார்]

    “””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””

    படம்: குடியிருந்த கோயில்
    பாடலாசிரியர்: புலமைப்பித்தன்
    இசை: எம். எஸ். விஸ்வநாதன்
    குரல்: டி. எம். சௌந்தரராஜன்
    காணொளி: https://youtu.be/ciE9Lrnd-X8

    https://youtu.be/ciE9Lrnd-X8

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

    ”தாய்ப்பசுவைத் தன்மடியில் தூங்கவைக்க தாலாட்டு,
    சேய்விசுவம் வேய்ங்குழலில் சங்கீதம்: -வாய்சிசு
    பாலனைக் கொன்றதும், பாரதம் செய்ததும்
    மாலனை மாற்றாதம் மே” ….கிரேசி மோகன்….

    Share
  • கோபுலு

    ருத்ரா

    26mplead2_jpg_370166g
    மனித சித்திரங்களை
    கார்ட்டூன்கள் ஆக்கினார்.
    கதைகளும் நாவல்களும்
    இவர் கோடுகளிலும் சுழிகளிலும் வந்து
    முற்றுப்பெற்றன.
    எத்தனை முகங்கள்?
    அவை காட்டும் அகங்கள்
    அத்தனையும்
    இந்த பென்சில் பிரம்மா
    படைத்தது.
    எழுத்துக்களை அவர்கள் தந்தார்கள்
    துடிப்புகளை
    இவர் தூரிகை தந்தது.
    தேவன்
    லெட்சுமி
    தி.ஜானகிராமன்
    ஜெக சிற்பியன்
    ஜெயகாந்தன்
    இவையெல்லாம்
    புகழ்பெற்ற பேனாக்கள்.
    பத்திரிகை பக்கங்களில்
    இவர் கோடுகளில்
    அவை பரிணாம‌ம் கொண்டன‌
    பிரமிக்க வைத்த படைப்புகளாய்.
    அவர் கார்ட்டூன்களில்
    நாப்பதுகள் அம்பதுகள் அறுபதுகள்
    என்று
    வருடங்களின்
    அரசியல் வர்ணங்களும்
    சரித்திர காரணங்களும்
    அங்குலம் அங்குலமாய்
    அசை போட்டுக்காட்டின.
    அவர் பென்சில் கீற்றுகளிலும்
    சமுதாய நாற்றுகள் காற்று வீசின.
    ஆனந்த விகடனின் முத்திரைகளில்
    ஜெயகாந்தன் இருந்தாலும்
    அவற்றின் முகத்திரைகளில்
    கோபுலுவே கொலுவிருந்தார்.
    இருவருக்கும்
    இப்போது விழுந்தது திரை மட்டுமே.
    எழுத்தும் கோடும்
    வெறும் உடல் அல்ல‌
    பொசுங்குவதற்கு.

    =================================================

    Share
  • “ஓவியர் கோபுலு”

    images (2)
    மீ.விசுவநாதன்

    சித்திரம் பேசும் , சிரிக்கும் , நிகழ்சிகளை
    முத்திரை யிட்டு முழுமையாய் இத்தரையே
    ஆவலுடன் கொள்ள அழைக்கும்! அழகான
    “கோபுலுகை வண்ணம்” கொலு.

    (ஓவியர் கோபுலு சித்திரமான நாள் – 29.04.2015 )

    Share
  • கோபுலு சார் ஓவியங்களும் & வெண்பாக்களும்….

    கிரேசி மோகன்
    ஓவிய மேதை கோபுலு சார் இறைவனடி சேர்ந்தார்….அமுதசுரபி தீபாவளி மலரில் அட்டைப் படமாக வந்த
    அவரது சாகா வரம் பெற்ற சில ஓவியங்களும் அதற்கு அடியேன் எழுதிய வெண்பாக்களும்….கிரேசி மோகன்….
    சக்தி வேல் அளிப்பு….
    —————————————-

    acraz1
    பாலை அளித்து, பராசக்தி பையனுக்கு,
    வேலை அளிப்பதை வண்ணமிகு,-கோலமாய்,
    தீட்டிய கோபுலுசார், திவ்யக் கரங்களில்
    நாட்டியக் கோனின் நகாசு ….

    ————————————————————————————————————————-
    விம்மல்-கே(வல்)-சம்பந்தனுக்கு விடையேறி வந்து அமுதூட்டல்….
    ———————————————————————————————————-

    acraz2
    பாலுக்கழும் சம்பந்தப் பிள்ளைக்குப் பொற்கிண்ணத்
    தாலளிப்பு தந்தை குளிப்பதற்குள் , -காலப்பன்
    ஆ!பளு நீங்க அமைதியாய் நந்தீசர்:
    கோபுலுசார் கைவண்ணம் காண் ….
    ———————————————————————————————————————–
    அழகுக்கு அழகு செய்யும் அனுஸூயா
    ———————————————————————

    acraz3
    கானகத்துப் பார்லரில் ,காகுத்தன் பத்தினி,
    ஜானகிமா னுக்(கு)அனு ஸூயாபொன் -பூணுவதை,
    தொய்வில்லா கோபுலுசார் தீட்டியதைக் காண்போர்க்கு
    கைவல்ய வெண்ணை களிப்பு ….கிரேசி மோகன்….
    ————————————————————————————————————————-

    கேசவ்,ம சே,கரத்தில் கோபுலுசார் வாழ்ந்திடுவார்,
    ஆசானுக் இல்லைகாண் அந்திமம்: -வீசுகின்ற
    கோடுகளே கோபுலுசார் கைலாசம், வைகுண்டம்,
    சீடர்களின் சித்திரம்சாட் சி ….கிரேசி மோகன்….

     

    Share
  • ஒரு எழுத்தாளர் பன்னூலாசிரியர் காலமானார்

    ஒரு எழுத்தாளரும், பன்னூலாசிரியரும், கல்விமானும், ஆய்வாளருமானஅல் -ஹாஜ் எஸ்.எச். முஹம்மது ஜெமீல்காலமானார்

    இவர் சாகுல் ஹமீத், முக்குலத் உம்மா தம்பதியினரின் புதல்வர்

    அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது எனும் ஊரில் 1940ம் ஆண்டு ஒக்டோபர் 18ந்திகதி பிறந்தார்.

    புகழ் பெற்ற குடும்பத்தில் சித்தி ஆரிபாவை திருமணம் செய்து கொண்டார்
    இத்தம்பதியினருக்கு ஒரே ஒரு மகன் முஹம்மது நசீல்.
    தனது ஆரம்பக் கல்வியைஆங்கில மொழி மூலம் காரைதீவு இராமகிருஷ்ண மிஷன் வித்தியாலயம்,
    கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரி,
    கொழும்பு சாஹிரா கல்லூரி ஆகியவற்றில் கற்றார்

    பின்பு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொருளியல் பாடத்தில் சிறப்புப் பட்டமும்,

    யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்கல்வித் துறை முதுமாணிப் பட்டமும்

    அத்துடன் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வித்துறை டிப்ளோமா பட்டமும்,

    ஐக்கிய இராச்சியத்தின் சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் கல்வித்துறை சார் பயிற்சியையும், பல்கலைக்கழக நிர்வாகம் தொடர்பான கல்வியையும் பெற்றுக் கொண்டார்.

    பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் போதனாசிரியராகவும்,

    ‘அருணாசலம் ஹோல்’ உதவி விடுதிக் காப்பாளராகவும் பணியாற்றியா இவர்

    கல்லூரி ஆசிரியராக,
    அதிபராக,
    ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி அதிபராக,
    வட்டாரக் கல்வி அதிகாரியாக,
    பிரதம கல்வி அதிகாரியாக,
    பரீட்சைத் திணைக்கள உதவி ஆணையாளராக,
    மட்டக்களப்புகிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதலாவது பதிவாளராக,
    முஸ்லிம் சமய, கலாசார அமைச்சின் செயலாளராக,
    கல்வி, கலாசார விவகாரங்கள் அமைச்சின் மேலதிக செயலாளராக,
    கலாசார, சமய விவகார அமைச்சின் ஆலோசகராக…
    . இப்படிப் பல்வேறு உயர் பதவிகளை வகித்துத்து ஓய்வுபெற்றார்

    ‘எனது ஊர்’ எனும் தலைப்பில் ‘தினகரன் ஞாயிறு பாலர் கழகப் பகுதியில்’ 1949 இல் தனது முதலாவது ஆக்கம் மூலம் கலை உலகில் பாதம் பதித்தார் .

    இலக்கியம்,

    வரலாறு,

    கல்வி,

    நாட்டுப்புறப் பண்பாட்டியல் எனும் துறைகளிலான ஆய்வு முயற்சிகள் வலுப்பெற்று இறுதி வரை 25 நூல்களை எழுதியுள்ளார்.

    சுமார் 110 ஆய்வுக் கட்டுரைகள் பிரசுரமாகியுள்ளன.

    50 நூல்களுக்கான பதிப்புரை, மதிப்புரை, சிறப்புரை வழங்கி உள்ளார்

    வானொலியில் (பிறநாடுகளுட்பட) 130 பேச்சுக்கள்,

    கலந்துரையாடல்கள், நிகழ்ச்சிகள் என்பவற்றிலும்,

    தொலைக்காட்சியில் 10 நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.

    தினகரன், வீரகேசரி, தினபதி, சிந்தாமணி, நவமணி, தினக்குரல், மணிக்குரல், அல்இஸ்லாம், ஸாஹிரா, மித்திரன், அல் அரப், வளர்மதி, டெயிலிநியூஸ், ஒப்சேவர், எக்கோனோமிக்ஸ் டைம்ஸ் ஆகிய பத்திரிகை, சஞ்சிகைகளிலும் அவ்வப்போது வெளியிடப்படும் விசேட மலர்களிலும் இவரது கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

    கல்முனை ஸாஹிரா கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய காலத்தில் அக்கல்லூரி பல புதிய இலக்கிய முயற்சிகளை மேற்கொண்டார்

    மாணவர்களின் எழுத்தாற்றலை வளர்ப்பதற்காக 1976 இல் ஆரம்பிக்கப்பட்ட ‘ஸாஹிரா’ மாதாந்தப் பத்திரிகை பல ஆண்டுகள் வெளிவந்து,

    இன்றுவரை இடைக்கிடையே வந்து கொண்டிருக்கிறது.

    1983இல் இவரது ஆலோசனையில் ஆரம்பிக்கப்பட்ட ‘இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகத்தால்’ 1986இல் வெளியிடப்பட்ட ‘எழுவான் கதிர்கள்’முக்கியதொரு தொகுப்பாகும்.

    இதில் அன்று எழுதிய கவிஞர்கள் இன்று பெரும் புகழும் பெற்று வாழ்கின்றார்கள்

    அதில் என் கவிதையும் இடம் பெற்று உள்ளது

    1990களில் கிழக்கிலேற்பட்ட வன்முறைச் சூழலானது பணியகத்தின் சேவைகளை முடக்கிவிட்டது.

    இருந்தபோதிலும் 2000ம் ஆண்டுவரை 21நூல்களை அது வெளியிட்டுள்ளமை கவனத்திற் கொள்ளத்தக்கதாகும்.

    முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளராகவும் ,ஆலோசகராகவும் கடமையாற்றிய 11 வருட காலத்தில் இவ்வமைச்சு பெருந்தொகையான நூல்களையும், மலர்களையும் வெளியிட்டதிலும் பலரது நூல்களைப் பதிப்பித்ததிலும் எழுத்தாளர் மற்றும் கலைஞர் ஊக்குவிப்பிலும் பெரும் பங்கு வகித்தார்.

    இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றினை ஆய்வுசெய்து, ஆவணப்படுத்தி, மாவட்டரீதியான நூல்களை வெளியிட்டார்

    இவ்வாறு களுத்துறை, அனுராதபுரம், கண்டி, மாத்தளை,மாத்தறை, அம்பாறை, கம்பஹா, புத்தளம் ஆகிய மாவட்ட வரலாற்று நூல்கள், 1992-2000 ஆண்டு காலப் பகுதியில் வெளிவந்தது .இதற்காகப் பல அறிஞர்களின் உதவிகளை பெற்றுக் கொண்டார்

    எ.எம்.எ.அஸீஸ் அவர்களின் கல்விச் சிந்தனைகளும், பங்களிப்பும் (1980)
    சேர். ராஸிக் பரீத் அவர்களின் கல்விப்பணி (1984)
    சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் வரலாறு (1989)
    கல்விச் சிந்தனைகள் (1990)
    நினைவில் நால்வர் (1993)
    கலாநிதி ஜாயாவின் கல்விப் பணிகள் (1994)
    சுவடி ஆற்றுப்படை – முதலாம் பாகம் (1994)
    சுவடி ஆற்றுப்படை – இரண்டாம் பாகம் (1995)
    கிராமத்து இதயம் – நாட்டார் பாடல்கள் (1995)
    இஸ்லாமியக் கல்வி (1996)
    கல்விச் சிந்தனைகள் – இரண்டாம் பதிப்பு (1996)
    சுவடி ஆற்றுப்படை – மூன்றாம் பாகம் (1997)
    கலாநிதி பதியுத்தீன் மஹ்மூதின் கல்விப் பணிகள் (1997)
    காலச் சுவடுகள் (1998)
    நமது முதுசம் (2000)
    சுவடி ஆற்றுப்படை – நான்காம் பாகம் (2001)
    ஆகியவை மர்ஹும் எஸ்.எச்.எம்.ஜெமீல்அவர்களது நூல்களாகும்

    பொது நிதியியல் (1966)
    துவான் புர்ஹானுத்தீன் ஜாயா (1990)
    அனுராதபுர மாவட்ட முஸ்லிம்கள் (1992)
    அல்லாமா எம்.எம். உவைஸ் (1994)
    அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் (1997)
    கம்பஹா மாவட்ட முஸ்லிம்கள் (1998)
    Islam in Independent Sri Lanka (1998)
    Sri Lanka Udana (1998)
    புத்தளம் மாவட்ட முஸ்லிம்கள் (1999)
    ஆகியவை அவரால் தொகுப்பட்ட பதிப்புக்களாகும்

    இவர் தடவிப் பார்த்த விருதுகள் பல அவற்றில் சில இவை
    இலக்கிய ஆய்வுக்கான சாகித்திய மண்டல விருது (1995)
    வடக்கு-கிழக்கு மாகாணசபை – இலக்கியப் பரிசு (1995)
    ஈராக்கில், பக்தாத் நகரில் அரபு நாடுகளின் ஆசிரியர் சம்மேளனம் கேடயம் வழங்கிக் கௌரவித்தமை (1980)
    இந்தியாவில் நடைபெற்ற 6-வது அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழக மாநாட்டில் ‘தமிழ்மாமணி’ பட்டம் வழங்கிக் கௌரவித்தமை (1998)
    திருச்சி (இந்தியா) M.I.E.T. கல்லூரியில் பொன்னாடை போர்த்தியும், ஞாபகச் சின்னம் வழங்கியும் கௌரவித்தமை (1995)
    மலேசியா, கோலாலம்பூரில் இயங்கும் கவிதாமாலை இயக்கம் ‘தமிழ் அருவி| பட்டம் வழங்கிக் கௌரவித்தமை (1999)
    அட்டாளைச்சேனை தேசியமீலாத் விழாவின் போது ‘நஜ்முல் உலூம்’ பட்டம் வழங்கிக் கௌரவித்தமை (1997)
    ‘சாமஸ்ரீ’ விருது (1999)
    சிந்தனைவட்டம், மலையக கலை கலாசார ஒன்றியம் இணைந்து கண்டியில் ‘இரத்தினதீப’ விருது வழங்கிக் கௌரவித்தமை (2000)
    கொழும்பு தமிழ்ச்சங்கத்தினால் கேடயம் வழங்கி, பொன்னாடை போர்த்திக் கௌரவித்தமை (1999)
    அம்பாறை மாவட்டக் கரையோர ஊடகவியலாளர் சங்கத்தினால் பொன்னாடை போர்த்தி, கேடயம் வழங்கிக் கௌரவித்தமை (2000)
    ப்ரிய நிலா கலை, இலக்கிய சங்கத்தினால் பொன்னாடை போர்த்தி, கேடயம் வழங்கிக் கௌரவித்தமை (2001)
    அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின் கௌரவம் (1998)
    கொழும்பில் நடைபெற்ற உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டுக் கௌரவம் (2002)

    20 ஆம் நூற்றாண்டின் பின் அரைக்காலப்பகுதியில்மேற்கிளம்பிய இஸ்லாமியத் தமிழ் கல்விமன்களுள் முக்கிய இடம் பெற்ற எஸ். எச். எம் ஜெமீல் அவர்களின்
    ஆளுமைகளின் மரணங்கள் சமூகத்தில் பாரிய இடைவெளிகளை உண்டாக்கி உள்ளது
    சவுதிஅரேபியாவிலுள்ள இலங்கை சர்வதேசப் பாடசாலையின் அதிபராகவும்,

    பல்வேறு நாடுகளில் நடைபெற்ற ஆய்வு மாநாடுகளிலும் பங்குபற்றியிருந்ததுடன்,

    பல்வேறு அமைப்புக்களின் ஆலோசகராகவும்,

    முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி, மார்கா ஆய்வு நிறுவனம் போன்றவற்றின் ஆலோசகராகவும் பணியாற்றினார்.

    கல்வித்துறையில் மிக ஆழமான அறிவினைப் பெற்றிருந்த கல்விமான் மர்ஹும் எஸ்.எச்.எம். ஜெமீல் தமிழ் இலக்கியத்திலும், ஆங்கிலத்திலும் மிகவும் புலமைத்துவமிக்கவராகவும் திகழ்ந்தார்.

    வாழ்நாளில்; தன்னால் எழுதப்பட்ட, தேடப்பட்ட சுமார் 2000க்கும் மேற்பட்ட கட்டுரைகள், தொகுப்புக்கள் அடங்கிய நூல்களை அண்மையில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு அன்பளிப்பாக வழங்கியிருந்தார்.

    இவரது சகாக்களான ஏ.பீர் முகம்மது, எஸ்.எல். சியாத் அகமட் மற்றும், மருதூர் ஏ.மஜீட், டாக்டர் தாஸிம் அகமது ஆகியோர் தொகுத்து எழுதிய ஒரு “கிராமத்துச் சிறுவனின் பயணம்” எஸ்.எச்.எம்.ஜெமீலின் வாழ்வியல் தொடர்பான மிகப்பெரிய நூல் ஒன்றினை கடந்தாண்டு வெளியிட்டு அவரைக் கௌரவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

    இவ்வாறு நாட்டுக்கும், தன்சமூகத்திற்கும், கல்வியுலகிற்கும் மாபெரும் தொண்டாற்றிய கல்விமான் மறைந்தது தமிழ்பேசும் நல்லுலகிற்கு மிகப் பெரும் இழப்பாகும்

    .

    கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதலாவது பதிவாளரும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சின் முன்னாள் செயலாளரும், கல்முனை ஸாஹிறாவின் முன்னாள் அதிபரும் பிரபல கல்வியயளாலருமான காலாநிதி அல்ஹாஜ் S.H.M.ஜெமீல் அவர்கள் இன்று (27.04.2015) காலமானார்கள்.

    இலக்கியம், கலை, கல்வி, கலாசாரம் முதலிய பல துறைகளில் புத்தகங்களையும், ஆக்கங்களையும் வெளியிட்ட அன்னார், அண்மையில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரதான நூலகத்திற்கு தனது சேகரிப்புக்களை கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

    தேசிய ஷூரா சபையின் நிபுணத்துவ ஆலோசனை சபையில் உறுப்பினராகவும் அண்மைக்காலமாக சமூக மற்றும் தேசிய உணர்வுடன் பங்களிப்புச் செய்தமை குறிப்பிடத்தக்கது.

    சாய்ந்தமருது மண்ணின் தொப்புள்கொடிதந்த குடும்ப உறவு இவர்

    தனது 75ம் வயதில் (27.04.2015)காலை தெஹிவளையில் இறைவனடி போய்விட்டார் .

    இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜுஊன்.

    ஒரு காவியம் முற்றுப்புள்ளி பெற்றுவிட்டது;

    எங்கள் குடும்பத்தின் சுடர் அணைந்து விட்டது

    அன்பான அங்களுக்கு அல்லாஹ் சுவர்க்கத்தை வரமாக்கி கொடுப்பானாக

    நரகத்தை ஹராமாக்கி வைப்பானாக !ஆமின்

    கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

    Share