Blog

  • ஐந்து கை ராந்தல் (11)

    வையவன்

    வெற்றிவேலின் சொந்த ஊர் சிங்காரப்பேட்டை. திருப்பத்தூரிலிருந்து செங்கம் செல்லும் சாலையில் குறுக்கிடும் சிற்றூர். முப்பது கிலோ மீட்டருக்கு பஸ்ஸில் போக வேண்டும்.

    மிகவும் வசதியான குடும்பத்திலிருந்து வந்தவன் வெற்றிவேல். சுற்றுப் பக்கத்தில் நல்ல பள்ளிக்கூடம் இல்லை என்பதற்காகத் திருப்பத்தூரில் அவனுக்கென்று ஒரு வீட்டையே வாங்கினவர் வெற்றிவேலின் தந்தை பழனிச்சாமி. ஒரு சமையல்காரன் சமைத்துப் போட வெற்றிவேல் திருப்பத்தூரில் தங்கிப் படித்தான்.

    வெற்றிவேலும் சிவாவும் பள்ளித் தோழர்கள். பின்பு கல்லூரித் தோழர்கள். பலமுறை அவர்கள் வீட்டிற்குச் சிவா சென்றிருக்கிறான். வெற்றிவேலின் தந்தை பழனிச்சாமி முதலியாருக்கு சிவாவை மிகவும் பிடிக்கும். ஏழ்மை இருந்தாலும் எவரிடமிருந்தும் உதவியை ஏற்றுக் கொள்ளாத அவன் சுயமரியாதை அவரை மிகவும் கவர்ந்தது.

    ஒரு மணி நேரம் பஸ்ஸில் பயணம் செய்து சிங்காரப் பேட்டையில் இறங்கினான். அங்கிருந்து ஊத்தங்கரைக்கு ஒரு தனிச் சாலை பிரிகிறது.

    இரண்டு சாலையும் இணையும் சந்திப்பில் ஒரு சிறு ஹோட்டல் உண்டு. ஒரு ஹோட்டல்காரர் அங்கே நெடு நாட்களாக கடை நடத்தி வந்தார். அவருக்கு இவர்கள் இருவர் பற்றியும், இவர்கள் நட்பைக் குறித்தும் தெரியும்.
    இறங்கியதும் சிவா நேராக அவரிடம் போனான்.

    “வாங்க…வாங்க சிவா! பெரிய எழுத்தாளர் ஆயிட்டீங்கண்ணு கேள்விப்பட்டேன்…” என்று கல்லாவிலிருந்து எழுந்து கை கூப்பியபடியே அவர் வரவேற்றார்.

    தெரிந்த மனிதர்களிடம் கிடைக்கும் புதிய மரியாதை சிவாவுக்குச் சங்கடமாக இருந்தது.
    “வணக்கம்!” என்று கை கூப்பினான்.

    “டேய் கந்தசாமி, சிவா வந்திருக்காரு… கவனி” என்று குரல் கொடுத்தார் அவர்.

    “இருக்கட்டுங்க, அப்புறமா வர்றேன். வெற்றிவேல் ஊரில் இருக்கானா?”

    “இருக்காரு… வீட்டிலே இருக்க மாட்டாரு! புளியம்பட்டி காட்டு ரோட்லே மலையோரமா புதுசா நெலம வாங்கியிருக்காரு. ஒரு மாசமா ஆளே கண்ணுலே தெம்படறதே அபூர்வம். நெலத்தை சீர்திருத்திகிட்டிருக்காரு.”
    இது புதிய செய்தி.

    வெற்றிவேலைப் பற்றி இப்படி புதிது புதிதாய்ச் செய்திகள் கேட்டுக் கேட்டுப் பழகியிருந்தாலும் சிவாவுக்கு இது வியப்பாக இருந்தது.

    “ஏன் சார், அவரைப் பார்க்கணுமா?”
    “பாக்காமே பின்னே?”

    “சைக்கிள் எடுத்துணு தான் போவணும். நாலு கிலோ மீட்டருக்கு மேலே ஆவுமே.”
    “அப்படியா…”

    “அயர் சைக்கிள் எடுத்தாரச் சொல்லட்டுமா?”
    “சொல்லுங்களேன்.”

    வெளியே நின்ற ஒரு மூட்டை தூக்கும் தொழிலாளியை எதிர்ச்சாரியில் ஒரு வாடகை சைக்கிள் எடுத்து வரச் செய்தார் ஹோட்டல்காரர்.

    சைக்கிளில் நடுநடுவே வழி விசாரித்துக்கொண்டு கிட்டத்தட்ட மலையடிவாரத்திற்கு சிவா போனபோது நிலத்தருகில் ஒரு சிதை எரிந்து கொண்டிருந்தது.

    சுற்றிலும் மேலே ஆடையில்லாத முப்பது நாற்பது கிராமவாசிகள் நின்றனர். வெய்யிலில் அவர்களின் கறுத்த உடம்பு வியர்வையில் மின்னியது.

    சற்றுத் தொலைவில் ஒரு மரத்தடியில் பெண்கள் நாலைந்து பேர் நின்றிருந்தனர். அவர்களுள் ஒருத்தி முழங்காலில் தலை புதைந்து பெருங்குரலில் அழுது கொண்டிருந்தாள். அவள் அருகே காக்கி டிராயரும் டீ ஷர்ட்டும் அணிந்து வெற்றிவேல் நின்றான்.

    அவளைச் சமாதானப்படுத்துகிறான் என்று சிவாவுக்கு காடும் மலையும் கானாறும் சூழ்ந்த அந்தப் பிரதேசத்தில் முகமறியாத ஒருவரின் தகனக்கிரியையின் போது வெற்றிவேலைச் சந்திக்கப் போய் சேர்ந்தது வினோதமாயிருந்தது.
    கையை உயர்த்தி தன் வருகையை வெற்றிவேலுக்கு அறிவிக்க விரும்பிய சிவா தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.
    அதற்குள் வெற்றிவேல் அவனைப் பார்த்துத் தலையசைத்தான்.

    அவனை நோக்கி நடந்து செல்வதற்குள் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தவளை விட்டு விட்டு வெற்றிவேல் அவனை எதிர் கொண்டான்.

    எரியும் சிதை சுற்றி நின்றிருந்த பெண்கள் கூட்டத்துக்கு நடுவில் அவர்கள் சந்தித்தனர்.
    “எப்போ வந்தே?” என்று கேட்டான் வெற்றிவேல். அவன் கண்கள் கலங்கி யிருந்தன.

    “இப்போ தான்” என்று அவன் கலங்கிய முகத்தை உற்றுப் பார்க்காமல் தவிர்த்தபடியே சிவா பதிலளித்தான்.
    “யார் செத்துட்டது?”

    “எங்க நிலத்திலே ரொம்ப நாளா வேலை செஞ்சுக்கிட்டிருந்த கூலியாள். பீம ராஜுண்ணு பேரு. கெணத்துக்கு வெடிவச்சுட்டு வர்றதுக்குள்ளே ஒரு பெரிய கல் வெடிச்சு வந்து தலையிலே தாக்க உயிர் போயிட்டது.”
    “வயசானவனோ”

    “இல்லே… நாப்பது வயது இருக்கும். கல்யாணமே இல்லாமே முதலியார் நெலத்திலேயே மண்டையைப் போட்டுடறேண்ணு சொல்லிக்கிட்டிருந்தான். நாங்கள்ளாம் வற்புறுத்தி போன வருஷம் தான் அவனுக்குக் கல்யாணம் பண்ணி வச்சோம். அதோ அழுதுகிட்டிருக்கே அதான் அவன் மனைவி.”

    சிவா அவளை ஒருமுறை திரும்பிப் பார்த்தான்.
    “ஒரு விதத்திலே அந்த பீமராஜு எனக்கு ஒரு குரு.”
    வெற்றிவேலின் தொண்டை கம்மி விட்டது.

    சிவா அவனைப் பார்த்தான். வெற்றிவேலின் கண்களிலிருந்து இரு கண்ணீர்க்கோடுகள் வழிந்திருந்தன.
    “ஹி டாட் மீ தி இம்பார்டன்ஸ் ஆஃப் லேபர். உழைப்பு முக்கியம்னு அவன் போதிச்சான். வாய்ப் பேச்சிலே இல்லே. உண்மையா வாழ்ந்து”

    வெற்றிவேல் டிராயர் பாக்கெட்டில் கை விட்டுத் துழாவினான். தேடியது அவனிடம் இல்லை. சிவா தன் கர்ச்சீப்பை அவனிடம் நீட்டினான். முகத்தைத் துடைத்துக் கொண்டு வெற்றிவேல் மேலே பேசினான்.

    மரணம் அங்கே ஒரு விநோதமான அமைதியின் கூடாரத்தை நிறுவியிருந்தது. சடசடத்து எரியும் அந்தச் சிதை விறகின் ஒலிகள் மனிதர்கள் ஆரவாரத்திற்கும் பெருமூச்சிற்கும் வைக்கும் இறுதி முத்தாய்ப்பு போல் சப்தித்தன. வெற்றிவேல் தொடர்ந்தான்.

    “ஒரு நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பு விதியின்படி அவன் சுரண்டப்பட்டவன். அவன் பத்து வயதுப் பையனா இங்கே வந்தான். உழைப்பை அர்ப்பணம் பண்ணியே எங்க வீட்டிலே ஒரு நபர் ஆயிட்டான்.
    “போன வருஷம் கல்யாணம் ஆனப்போ அவன் பெண்டாட்டியும் இந்த வீட்டு நபர் ஆனா. அவன் உழைப்புக்கு எந்த கூலியும் இல்லே. அவன் கேட்டதுமில்லே.

    அவனை நாங்க கேக்க வச்சதுமில்லே. நீ அவனைப் பாத்திருப்பே. அடையாளம் மறந்திருக்கும். அவன் எப்பவும் நெலத்திலேயே இருப்பான்.”

    இடது பக்க பாக்கெட்டில் கையை விட்டு வெற்றிவேல் ஒரு சிகரெட் பெட்டியையும் தீப்பெட்டியையும் எடுத்தான். ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்து இழுத்தான். ஆழ்ந்த பெருமூச்சுடன் தொடர்ந்தான்.

    “ஹி டாட் மீ தி இம்பார்டன்ஸ் ஆஃப் லேபர்” அவன் மீண்டும் ஒருமுறை சொன்னான்.

    “இந்த காட்டு நிலத்தை நாங்க தான் வாங்கணும்ணு அவன் பிடிவாதம் பண்ணி வாங்க வச்சான். இதோ அங்கே புல்டேஸர் போயிருக்கு பாரு.. இந்தப் பட்டையெல்லாம் டிராக்டர் உழவு தெரியுதா? இருபத்தி மூணு ஏக்கர்.”
    கிழக்கும் மேற்குமாக வெற்றிவேல் ஆள் காட்டி விரலால் சுட்டிக் காட்டினான்.

    “இதையெல்லாம் நான் தான் ‘க்ளியர்’ பண்ணினேன். அவன் தான் குரு.”
    வெற்றிவேல் சிதையில் எரிந்தவனைச் சுட்டிக்காட்டினான்.

    மீண்டும் அவன் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது. சிவாவின் கைக் குட்டையில் அதைத் துடைத்துக் கொண்டே வெற்றிவேல் தொடர்ந்தான்.
    “முட்டாள் தனமான அட்வெஞ்சரிஸத்திலிருந்து ஒங்க அப்பா… ஐ’ம் ஸாரி… பாபா ஓம்கார்நாத் என்னைக் காப்பாற்றினார். இதோ இவன் உழைண்ணு மௌனமா எடுத்துச் சொன்னான்.”

    சிதையைச் சுற்றியிருந்த கூட்டம் மெதுவாகக் கலைந்ததையும், மரத்தடியில் நின்ற பெண்கள் அழுது புலம்பியவளைத் தேற்றி கைத்தாங்கலாக அழைத்துச் சென்றதையும் மௌனமாய்க் கவனித்தான்.
    சிதைக்குக் காவலாய் இருவர் மட்டும் நின்றனர்.

    “சிவா… இவன் அதிகமாப் பேசினதில்லே. எப்பவாவது பேசுவான். எங்கிட்டே ரொம்பப் பிரியம். மரியாதை. ரொம்பப் படிச்சிருக்கேன் பாரு, அதனாலே” என்று தன்னைத் தானே வருத்தத்தோடு கிண்டல் செய்வது போல் ஒரு கசந்த சிரிப்புடன் வெற்றிவேல் சொன்னான்.

    சிவா அவனுக்கு ஆறுதல் தருவது போன்று அவனது வலது கரத்தைப் பற்றிக் குலுக்கினான்.
    “ஒரு நாள் என்ன சொன்னான் தெரியுமா? வாங்கற மூச்சு, குடிக்கிற தண்ணி துண்ற சோத்துக்கு வஞ்சனையில்லாமே ஒழைச்சுடணும் தம்பி. மீதியெல்லாம் மண்ணுலே கலந்து மண்ணாப் போவும்னான்.”
    சிவாவுக்கு சிலிர்த்தது.

    “அவன் என்ன சொன்னாண்ணு புரியறதா? ஆடம்பரமா படிச்சவர்கள் பாஷையிலே சொன்னா பூமியிலே நீ ஆக்கிரமித்திருக்கிற ஸ்பேஸுக்கு தகுதியுள்ளவனா யிருண்ணு சொன்னான்.”
    வெற்றிவேல் சிகரெட்டை உறிஞ்சினான்.

    “அது என் கண்ணைத் தெறந்தது. அதைச் சொன்னவன் முப்பது வருஷத்துக்கு முன்னாடி, நான் பொறக்கறதுக்கு முன்னாடி எங்க குடும்பத்துக்கு வந்தவன்.

    “எந்த பிரதிபலனும் எதிர்பாராமே எந்த சபலத்துக்கும் ஆளாகாமே எந்த உரிமையும் கோராமே அவன் உழைச்சு உழைச்சு அதோ எரிஞ்சு கிட்டிருக்கான்.”
    சிவாவின் மனசுக்குள் ஒரு விம்மல் மடிந்தது.

    “என் குடும்பம் அவனுக்கு கடன்பட்டிருக்கு. நானும் கடன்பட்டிருக்கேன். சிவா… ஒண்ணு இப்ப எனக்கு வௌங்கலேடா!”

    “என்னது?”
    “இந்த வாழ்க்கைக்கு என்னடா அர்த்தம்?”
    சிவா நேற்று அம்மாவின் வாயிலிருந்து வந்த சொற்களை நினைவு கூர்ந்தான்.
    வாய் பேசவில்லை.

    “சொல் சிவா!”
    வெற்றிவேலைப் பார்த்துவிட்டு மெதுவாகச் சொன்னான்.
    “நாம கற்பிச்சுக்கறது தான்”

    “பாபா ஓம்கார்நாத் விடுதலை பெறுகண்ணு சொன்னாரே நினைவிருக்கா?”
    “இருக்கு”
    “எதிலிருந்து விடுதலை? கற்பித்துக் கொண்ட அர்த்தத்திலிருந்தா? கற்பித்துக் கொள்வதிலிருந்தா…?”
    அவன் சிகரெட்டை வீசி எறிந்தான்.

    ஒரு பொருத்தமான சொல் தேறித் திரண்டு முத்துப் போல் நெஞ்சில் உருண்டது.
    சிவா அதை வெளியிடாது வெற்றிவேல் பேசட்டும் என்று காத்து நின்றான்.
    “எல்லாக் கற்பனைகளும் சிதையில் சாம்பலாகின்றன. எல்லா அர்த்தங்களும் இங்கே முக்கியமில்லாமே போகின்றன” என்று வெற்றிவேல் முனகினான்.

    “அர்த்தங்கள் சாகிறதில்லே. மனுஷன் தான் செத்துப் போறான்.”
    சிவா சொன்ன அந்த வார்த்தைகளை அது அவன் வாயிலிருந்து வந்ததா என்று வியப்பது போல் நிமிர்ந்து பார்த்தான். பின்பு அவன் கையைப் பற்றித் தன்னுடன் பிணைத்துக் கொண்டான்.

    “அப்போ விடுதலை எதிலிருந்து?”
    “மன உளைச்சலிலிருந்து”
    சிறிது நேரம் அங்கே நின்றிருந்துவிட்டுப் பின்னர் சிவாவை அழைத்துக் கொண்டு வெற்றிவேல் அருகாமையில் ஓடிய கானாற்றுக்கு அழைத்துச் சென்றான்.

    ஆற்றில் தண்ணீர் தெளித்து ஓடிக் கொண்டிருந்தது. வெற்றிவேல்
    ஆடைகளை அவிழ்த்து வைத்ததைக் கண்டு சிவாவும் தன் உடைகளைக் கழற்றினான்.

    வெற்றிவேலுடன் முகமறியாத அந்த பீமராஜுவுக்காக மூன்று முழுக்குப் போட்டான் சிவா.
    “சூரையங் காட்டிடை கொண்டு போய்ச் சுட்டிட்டு நீரினில் மூழ்கி நினைப்பொழிந்தார்களே” என்று நெஞ்சை அடைக்கும் துக்கம் தொண்டையில் தழுதழுக்கச் சொன்னான் வெற்றிவேல்.

    அந்த சிங்காரப்பேட்டைப் பயணம் சிவாவை என்னமோ செய்தது. அன்று மாலை பஸ் ஏறி மீண்டும் திருப்பத்தூர் வந்த பின்பு எரியும் சிதை ஒன்றின் எதிரில் வெற்றி வேலோடு நின்றதும் பேசியதும் மனசில் அடிக்கடி வந்து போயின.

    அந்தப் பயணத்தில் அவர்கள் முற்றிலும் தொடர்பற்ற வேறு எதையோ பேசினார்கள். வேறு எவனோ ஒருவனின் உழைத்து மாண்ட நினைவில் கரைந்தார்கள்.

    அம்மாவிடம் விடைபெற்று மறுநாள் சிவா சென்னைக்குப் புறப்பட்டான்.

    தொடரும்

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

    பழமொழி: குழுவத்தார் மேயிருந்த என்றூடு அறுப்பினும் மன்று

     

    அறிவன்று அழகன்று அறிவதூஉம் அன்று
    சிறியர் எனப்பாடும் செய்யும் – எறிதிரை
    சென்றுலாம் சேர்ப்ப ! குழுவத்தார் மேயிருந்த
    என்றூடு அறுப்பினும் மன்று.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    அறிவு அன்று அழகு அன்று அறிவதூஉம் அன்று
    சிறியர் என பாடும் செய்யும் எறி திரை
    சென்று உலாம் சேர்ப்ப குழுவத்தார் மேயிருந்த
    என்று ஊடு அறுப்பினும் மன்று

    பொருள் விளக்கம்:
    அறிவுள்ளோர் செயலும் அல்ல, பண்புடையோருக்கு அழகுமல்ல, அறநெறி கடைபிடிப்போர் செயலும் அல்ல (என்ற வகையில்), சிறுமதி கொண்டோரின் இழிவான செயலாக அமைவது (யாதெனில்); காற்று நீரை வாரி வீசுவதால் அலைகள் கரையில் உலா வரும் இடத்தில் வாழ்பவரே, சூரியனையும் எதிர்க்கத் துணியலாம், ஆனால் அறிஞர்கள் நிரம்பிய சபையில் அவையடகமின்றி பணிவின்றி பேசுவது ஒருவருக்கு மதிப்பைத் தராது.

    பழமொழி சொல்லும் பாடம்: அறிஞர்கள் நிறைந்த அவையில் அவையடக்கத்தை கைவிடல் பெருமை தராது

    பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
    அணியல்ல மற்றுப் பிற. (குறள்: 95)

    அடக்கமான பண்பும், இனிமையாகப் பேசும் இயல்பும் தவிர, ஒருவருக்குச் சிறந்த அணிகலன் வேறு இருக்க முடியாது என்று திருக்குறள் காட்டும் பண்புகளை இங்கு ஒப்பு நோக்கலாம்.

    Share
  • தமிழ் இணைய இதழ்கள்: ஓர் இலக்கியப் பார்வை

    –கி. கண்ணன்.

     

    முன்னுரை:

    தமிழை வளர்ச்சிப் பாதையில் இணையத்திற்கு என்றுமே தனி இடம் உண்டு. இணையத்தைப் பொறுத்தமட்டில் இணையதளங்கள், இணைய இதழ்கள், வலைப்பூக்கள், திரட்டிகள், சமூகக் குழுக்கள் என்று அனைத்திற்கும் அத்தகைய பொறுப்பு உள்ளது. அவ்வகையில் இணையத்தில் மட்டுமே வெளியாகின்ற இதழ்களின் மூலம் தமிழ் வளர்ச்சியானது எவ்வகையில் மேன்மையடைந்துள்ளது என்பதை விளக்குவதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.

    இணைய இதழ்கள்:

    அச்சேற்றப்பட்டு தனி இதழ்களாக வெளிவருபவை, நாளிதழ், வாரஇதழ், மாதமிருமுறை, மாதஇதழ் என்று காலமுறையினைக் கொண்டு வகைப்படுத்தலாம். இணைய இதழ்கள் கீழ்க்கண்ட மூன்று பெரும் பிரிவின் கீழ் கொண்டு வரலாம்.
    1. அச்சில் மட்டுமே வெளிவரும் இதழ்கள் (உ.ம்). தனிச்சுற்றுக்கு உரியவை.
    2. அச்சு இதழாகவும் இணைய இதழாகவும் வெளிவருபவை. (உ.ம்) தினதந்தி, தினமலர், நக்கீரன் போன்றவை.
    3. இணையத்தில் மட்டுமே வெளி வருபவை. (உ.ம்) திண்ணை, பதிவு, முத்துக்கமலம் போன்றவை. “இணையத்தில் மட்டுமே செய்திகளைத் தருகின்ற இதழ்களே இணைய இதழ்கள் எனப்படும்.” [1] என்ற விக்கிபீடியாவின் கருத்தினைக் கொண்டு இணையத்தில் வரும் இதழ்களை மட்டுமே இதில் விளக்கிக் கூறப்பட்டுள்ளது.

    இணைய இதழ்களின் வகைகள்:

    இணைய இதழ்கள் அவற்றின் உள்ளடக்கத்திற்குத்தக்கவாறு அவை எவ்வகையான இதழ் என்று அடையாளம் காட்டப்படுகின்றது. அவ்வகையில்,

    1. அரசியல்,
    2. அறிவியல்,
    3. ஆய்வு,
    4. ஆன்மீகம்,
    5. இலக்கியம்,
    6. குழந்தைகள்,
    7. பல்சுவை,
    8. பெண்கள்,
    9. பொழுதுபோக்கு,
    10. மதம்,
    11. மருத்துவம்,
    12. வணிகம்

    என்று இன்னும் வகைப்படுத்திக்கொண்டு செல்லலாம்.

    இலக்கிய இதழ்கள்:

    இலக்கியம் தொடர்பான தகவல்களைத் தரும் இதழ்கள் இலக்கிய இதழ்கள் எனப்படும். உலகிலுள்ள எவரும் தமிழ் இலக்கியம் தொடர்பான தகவல்களைப் பெற தமிழில் இணைய இதழ்கள் பெரிதும் உதவி புரிகின்றன. இவ்வகையில் இலக்கியத்தரத்துடனும் இலக்கிய வளர்ச்சிக்கும் துணை நிற்கும் இதழ்கள் குறிப்பிடத்தக்க சிலவையே ஆகும்.

    திண்ணை இதழ் (http://puthu.thinnai.com/):

    thinnaiதமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை என்ற வாசகத்துடன் வெளிவரும் இப்பத்திரிகை. திண்ணை, புதிய திண்ணை என இரு வடிவங்களில் வருகின்றது. இதில், அரசியல், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம், இலக்கியக் கட்டுரைகள், கடிதங்கள், அறிவிப்புகள், கதைகள், கலைகள், சமையல், கவிதைகள், நகைச்சுவை, வித்தியாசமானவை போன்ற தலைப்புகளின் கீழ் செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன.
    “மழை பொழியாத காலத்தும், கோடை காலத்தும் ஓர் அரசு முன்கூட்டியே நீர் சேமிப்பைச் செய்ய வேண்டுமெனவும் அவ்வாறு செய்யாத அரசை மக்கள் செறுப்பர் என்பதும் விரித்துரைக்கப்பட்டுள்ளது. ஆறு, குளம், வாய்க்கால் போன்ற நீர் நிலைகள் பாதுகாப்பதும் புதிதுபுதிதாக ஏற்படுத்துவதும் ஓர் அரசனின் இம்மை மறுமைக்கான நிலைத்தப் புகழுக்குக் காரணமாகும். போர்பெருக்கத்தை விட நீர்ப் பெருக்கம் செய்யும் அரசையே வரலாறு பதிவு செய்து கொள்ளும் என்பதும் உணர்த்தப்பட்டுள்ளது.” [2] என்று இப்பதிவின் மூலம் சங்க இலக்கியப் பாடலுக்கான விளக்கத்தினை நடைமுறை காலத்துடன் ஒப்பிட்டு விளக்கியுள்ளார் முனைவர். ந. பாஸ்கரன்.

    முத்துக்கமலம் இதழ் (http://www.muthukamalam.com/):

    muthukkamalam2006 முதல் இணையத்தில் பதிவேற்றம் பெற்று இன்றளவும் வெளிவரும் ஒர் இலக்கிய இதழ் முத்துக்கமலம் ஆகும். இதன் ஆசிரியர் தேனி. எம். சுப்பிரமணி ஆவார். உலக அளவில், 26.05.2015 வரை 3,05,904 பார்வையாளர்களைக் கொண்டு மிகப்பெரிய இணைய இதழாக இருக்கின்றது. மாதம் இருமுறை புதிய பதிவேற்றங்கள் செய்யப்படுகிறது. மேலும், ஆன்மிகம், ஜோதிடம், பொன்மொழிகள், பகுத்தறிவு. அடையாளம், நேர்காணல், கல்வி, கதை, கட்டுரை, கவிதை, குட்டிக்கதை, குறுந்தகவல், சிரிக்க சிரிக்க, சிறுவர் பகுதி, மகளிர் மட்டும், சமையல், மருத்துவம், புத்தகப் பார்வை, சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள், மின் புத்தகங்கள், தமிழ் வலைப்பூக்கள், படைப்பாளர்கள், தினம் ஒரு தளம் போன்ற தலைப்புகளின் கீழ் இலக்கியம் தொடர்பான பல தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில், மணிமேகலையில் சமுதாயச் சிந்தனைகள் என்னும் தலைப்பில் முனைவர் போ. சத்தியமூர்த்தி அவர்களின் படைப்பில், “பூம்புகார் நகரத்தில் பலவிதமான தொழிலை நடத்துகின்ற தொழிலாளர் சமுதாயம் அமைந்திருக்கிறது. ஓவியத்தொழில் சிறந்திருந்தமையை மணிமேகலைக் காப்பியம் கீழ்வருமாறு குறிப்பிடுகிறது.

    வம்ப மாக்கல் கம்பலை மூதூர்
    கடுமண் ஓங்கிய நெடுநிலை மனைதொறும்
    மைஅறு படிவத்து வானவர் முதலா
    எவ்வகை உயிர்களும் உவமம் காட்டி
    வெண்சுதை விளக்கத்து வித்தகர் இயற்றிய
    கண்கவர் ஓவியம் கண்டு நிற்குநரும்

    என்ற இப்பாடலில் ஓவியக்கலை கற்றுத் துறை போகிய வித்தகப் புலமையோர் குறிக்கப்பெறுகின்றனர். எனவே பூம்புகார் நகரில் ஓவியம் தீட்டும் தொழிலாளர்கள் சிறந்து விளங்கியிருக்கின்றனர் என்பது பெறப்படுகிறது.” [3] என்ற விளக்கம் இலக்கிய நயத்துடன் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    வல்லமை (http://www.vallamai.com/):

    vallamaiஅண்ணாகண்ணன் அவர்களால் உருவாக்கப்பட்டு கடந்த ஐந்து ஆண்டுகளாக இணையத்தில் மட்டுமே வெளிவந்துகொண்டிருக்கும் இதழ். பயன்மிகு இணையவழிச் சேவைகள் என்னும் பொருண்மையில், இணையத்தில் தமிழை வளர்க்கும் முனைப்பில் கட்டுரைகள் வெளியிடப்படுகின்றது. இதழ்களுக்குரிய குறியீட்டு எண்ணுடன் வெளிவரும் இதழாக இது உள்ளது.

    முகப்பு, நிர்வாகக்குழு, பத்திகள், நேர்காணல்கள், கேள்வி-பதில், திரை, பொது, தலையங்கம், இலக்கியம், நுண்கலைகள் போன்ற தலைப்புகளுடனும் அதன்கீழ் பலதரப்பட்ட பகுப்புகளையும் கொண்டு இது வெளிவருகின்றது.

    ஆய்வுக்கட்டுரை என்ற பகுப்பில் தமிழிலக்கியம் தொடர்பான பல கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இதில் பலரும் கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளனர். இதில் “ஐந்திணை ஐம்பது – அகப்பொருள் மாண்பும் அமைப்பு முறையும்” [4] என்ற தலைப்பில் பேராசிரியர் முனைவர் க. துரையரசன் எழுதிய ஆய்வுக் கட்டுரை இலக்கிய நோக்குடன் எழுதப்பட்டுள்ளது என்பதை உணர முடிகிறது.

    ஊடறு (http://www.oodaru.com/):

    oodaruபெண்மையை மையப்படுத்தி இலங்கையிலிருந்து வெளிவரும் இணைய இதழ். அதிகார வெளியினை ஊடறுக்கும் பெண்குரல் என்று பெண் சுதந்திரம் பற்றிப் பேசுகிறது. உள்ளீடு, ஓவியம், புகைப்படம், கவிதைகள், குறும்படங்கள், நூல்கள் என்ற தலைப்பின் கீ்ழ் பெண்ணியம் தொடர்பான பதிவுகள் காணப்படுகின்றன. 2010 முதல் இவ்விதழ் இயங்கிவருகின்றது.

    வரலாறு (http://www.varalaaru.com/):

    varalaaru2004 ஆம் ஆண்டிலிருந்து ஆன்மிகம் தொடர்பான ஆராய்ச்சிகளில் பயணிக்கும் இவ்விதழ் மாத இதழாக வெளிவருகின்றது. ஆய்வுப் பாதையில் ஆங்காங்கே – என்ற தலைப்பின் கீழ் கோயில்களில் காணப்படும் சிலைகளுக்கும் இதர குறிப்பிற்கும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது சிறப்பிற்குரியது. சேரசோழ பாண்டியர் காலத்து கோயில்களில் காணப்படும் தொன்மங்களின் அடிப்படையில் அமைந்த நீண்ட நெடிய ஆராய்ச்சித் தொடர் இந்த இதழில் காணப்படுகிறது. இவ்விதழில், கோயில் கட்டடக்கலையில் பயன்படுத்தப்படும் சில கலைச்சொற்களை விளக்கியுள்ளார் மா. நளினி அவர்கள்,

    • அங்கணம் – தூணிடை வழி,
    • சந்திரசீலா – நிலாப்படி,
    • கண்டம் – கழுத்து,
    • அதபத்மம் – கீழ்நோக்குத் தாமரை,
    • ஊர்த்வ பத்மம் – மேனோக்கு தாமரை,
    • பிரதி – மேற்கம்பு,
    • ஸ்தம்பம் – தூண,
    • கலசம் – பானை,
    • லலாய பிம்பம் – நெற்றி வடிவம்
    • விமானம் – இறையகம் [5]
    என்று சமஸ்கிருத கட்டடக்கலை சொற்களை தமிழ்படுத்தியதன் தன்மை உணரமுடிகிறது.

    கீற்று (http://keetru.com/):

    keetruமறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு. நினைவுபடுத்தித் தூண்டிக்கொண்டே இருப்பது எம் கடமை”6 என்ற வாசகத்துடன் கீற்று இணைய இதழ் வெளிவருகின்றது. இதில், இலக்கியம் என்னும் தலைப்பில், குறுந்தொகை காட்டும் வாழ்வியல் சிந்தனைகள் என்னும் தலைப்பில்,

    “முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
    கழுவுறு கலிங்கம் கழாஅது உடீ
    குவளை உன்கண் குய்ப்புகை கமழக்
    தான் துழந்து அட்ட தீம்புளிப் பாகர்
    இனிதெனக் கணவன் உண்டலின்
    நுண்ணிதன் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே” [7]

    என்று இல்லற மாண்பில் உணவு சமைத்த முறையினை விளக்கிக் கூறுகின்றார் இப்பதிவின் ஆசிரியர் ப.மணிகண்டன். மேலும், இவ்விதழில்,
    திரைவிருந்து, சிற்றிதழ்கள், மருத்துவம், அடுக்களை, அறிவியல், வரலாறு, சிரிப்பூ, சட்டம், தகவல் களம், சுற்றுலா, திசைகாட்டிகள் என்ற தலைப்பின் கீழ் மனித வாழ்க்கைக்குத் தேவையான தகவல்கள் பதிந்துக் கிடக்கின்றன. இதில், பகுத்தறிவினைப் போற்றியும் சாதிய ரீதியான வன்கொடுமைகளுக்கு எதிர்த்தும் குரல் கொடுக்கிறது.

    சிற்றிதழ்கள் பகுப்பில், பெருமாள் முருகன் எழுத்து படைப்புரிமைப் பறிப்பும் திறனாய்வு உரிமையும் என்ற தலைப்பில் பெருமாள் முருகன் எழுதிய மாதொருபாகன், அர்த்தநாரி ஆகிய புதினங்களைப் பற்றிய திறனாய்வு பதியப்பட்டுள்ளது உற்றுநோக்கப்பட வேண்டியதாக உள்ளது.

    வெப்துனியா இணைய இதழ் (http://tamil.webdunia.com/):

    webduniaதினமும் பதிவேற்றம் செய்யப்படும் இதழ்களில் வெப்துனியாவும் ஒன்று. பல துறை தொடர்புடைய செய்திகளை தரும் இதழாக இது வெளிவருகின்றது. இதில், செய்திகள், தமிழகம், சினிமா, விளையாட்டு, ஜோதிடம், படங்கள், காணொலி, கருத்துக்களம், பல்சுவை, படத்தொகுப்பு போன்ற தலைப்புகளின் கீழ் செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன.

    பல்சுவை பகுதியில் மருத்தவம், சுதந்திரதினம், அறுசுவை, மங்கையர், காதல், இலக்கியம், குழந்தைகள் உலகம் ஆகிய பகுதிகளும் இடம் பெற்றுள்ளன. இலக்கியம் பகுதியில் கவிதைப் பிரிவில் சீன மொழிபெயரப்புக் கவிதையாக,

    “ஒருநாள் காலை குடையிடம் கேட்டேன்.
    நீ விரும்புவது மழையில் நனைவதையா?
    வெயிலில் காய்வதையா? என்று…
    குடை மெதுவாகச் சிரித்தது, பின்னர் சொன்னது
    என் கவலை இதைப் பற்றியது அல்ல… என்று
    பின் எதைப் பற்றியது என்று கேட்டேன்.
    குடை சொன்னது…
    எனது கவலையெல்லாம்
    எப்படிபட்ட அடைமழையானாலும்
    என் மக்களை நனையவிடக் கூடாது
    எப்பேர்பட்ட கொடிய வெயிலானாலும்
    என் மக்களை காயவிடக்கூடாது. [8]

    என்ற கவிதையினை நயத்துடன் பதிவு செய்துள்ளது.

    இவை போன்ற இணைய இதழ்களும் இன்னும் பல இணைய இதழ்களும் இணையத்தில் அன்றாடம் தகவல்களைத் தரும் இதழ்களாக வலம் வருகின்றன. இலங்கை, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேயா, கனடா போன்ற அயல்நாடுகளில் வாழ்கின்ற தமிழர்களாலும் இதழ்கள் உருவாக்கப்பட்டு இன்றைக்கும் இணையத்தையும் தமிழையும் அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. உதாரணமாக, அப்பால் தமிழ், தமிழம், தமிழமுதம், நெய்தல், புகலி போன்ற இதழ்கள் இன்றைக்கும் புதிய புதிய செய்திகளுடன் வெளிவருகின்றன.

    முடிவுரை:

    இணைய இதழ்கள், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு பேருதவி புரிகின்றன என்பதை மேற்கண்ட ஒருசில இதழ்களின் இலக்கியப் பகுதி விளக்கத்தின் மூலம் விளக்கப்பட்டுள்ளது. கடல் கடந்து வெளி நாடுகளில் வாழும் தமிழ் சான்றோர்களாலும் தமிழ்மொழியானது போற்றிப் பாதுகாத்து வளர்க்கப்பட்டு வருகின்றது. அன்றாடம் நிகழும் சம்பவங்களின் இணைய ஆவணம் என்று சொல்லுமளவிற்கு இத்தகைய இணைய இதழ்கள் உலகளவில் நடக்கும் நிகழ்ச்சிகளைப் பதிவு செய்வதுடன் இலக்கிய வளர்ச்சிக்கும் துணை புரிகின்றன.

    சான்றெண் விளக்கம்:

    1. ta.m.wikipedia.org., தமிழ் இணைய இதழ்கள்., நாள் 26.04.2015
    2. puthu.thinnai.com., சூழலியல் நோக்கில் புறநானூற்றில் நீர் மேலாண்மை, நாள்.26.04.2015
    3. www.muthukamalam.com/essay/literature
    4. www.vallamai.com. ஆய்வுக் கட்டுரைகள், நாள். 26.05.2015
    5. www.varalaaru.com/design/ மு. நளினி, தமிழ்மொழி வளர்ச்சியில் மா. இராமமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் பங்களிப்பு, நாள். 26.04.2015
    6. www.keetru.com
    7. www.keetru.com, இலக்கியம், குறுந்தொகை காட்டும் வாழ்வியல் சிந்தனைகள், நாள்.26.05.2015
    8. www.tamil.webdunia.com

     

     


    கி. கண்ணன்,
    முனைவர் பட்ட ஆய்வாளர், (ப/நே.)
    அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை,
    தமிழ்ப் பல்கலைக்கழகம்,
    தஞ்சாவூர்.


    Share
  • பாவேந்தரின் நகைச்சுவை!

    -மேகலா இராமமூர்த்தி

     

    bharathidasanபுதுவையில் பிறந்து புதுமைச் சிந்தனைகளில் வளர்ந்து பாரதியைத் தன் ஆசானாக ஏற்றுக் கனகசுப்புரத்தினம் எனும்தன் இயற்பெயரைப் பாரதிதாசன் என மாற்றிக்கொண்டவர் ’புரட்சிக்கவிஞர்’ என்று பெரியாராலும், ’புரட்சிக்கவி’ என்று அறிஞர் அண்ணாவாலும் அன்போடு அழைக்கப்பட்ட கவிஞர் பாரதிதாசன்.

    சமுத்துவம், பொதுவுடைமை, பெண்கல்வி, கைம்பெண் மறுமணம், கருத்தடையின் அவசியம், முதியோர் காதல் எனப் பல்வேறு புரட்சிக்கருத்துக்களை மிகத் துணிச்சலாக அன்றே தன் கவிதைகள் வாயிலாய் வலியுறுத்தியவர் அவர். அற்புதமான படைப்புக்கள் பலவற்றைத் தந்து நம் சிந்தனைக்கு விருந்து படைத்த பாவேந்தர், அத்தோடு நில்லாமல் நம்மை விழுந்து விழுந்து சிரிக்கவைக்கும் நகைச்சுவை வித்தகராகவும் விளங்கியிருக்கின்றார் என்பதற்கு அவர்தம் படைப்புக்களே சான்று பகர்கின்றன. அவருடைய ஆக்கங்களில் நகைச்சுவை வலிந்து திணிக்கப்பட்டதாயில்லாமல் மிக இயல்பாக அமைந்திருப்பதைக் காணும்போது அவருடைய நகைச்சுவை உள்ளம் நமக்குத் தெற்றெனப் புலனாகின்றது.

    அவ்வாறு நான் இரசித்த பாவேந்தரின் நகைச்சுவைகள் சிலவற்றை இக்கட்டுரையில் பகிர்ந்துகொள்ள விழைகின்றேன்.

    ஒரு குடும்பத்தை விளங்கச் செய்பவள், அதற்கு விளக்காயிருப்பவள் பெண்ணே என்பது உலகறிந்த உண்மை. அத்தகைய குடும்ப விளக்காகத் ’தங்கம்’ என்ற பெண்ணரசியை நமக்கு அறிமுகப்படுத்துகின்றார் கவிஞர் தன்னுடைய ’குடும்ப விளக்கு’ எனும் காவியத்தில். அனைவரும் படித்துமகிழவேண்டிய ஓர் அருமையான காவியமிது!

    அதிலிருந்து ஓர் நகைச்சுவைக் காட்சி…

    வெளியூருக்குச் சென்றுவிட்டுத் தன்மகன் வீட்டுக்குத் திரும்புகிறார்கள் தங்கத்தின் மாமியும், மாமனும். அவர்கள் வீட்டிற்கு வாங்கிவந்திருக்கும் பொருள்களைப் பார்த்தால் நாம் வியப்பில் வாய்பிளப்போம். (அவற்றில் பல இன்றைய தலைமுறையினருக்குப் பரிச்சயமே இல்லாதவை என்றுகூடச் சொல்லலாம்.)

    ஓர் கூண்டுவண்டி திணறும் அளவிற்குத் தங்கத்தின் வீட்டுவாயிலில் வந்திறங்கிய அந்தப் பொருள்களை நாமும்தான் தெரிந்துகொள்வோமே!

    கொஞ்ச நாள் முன்வாங்கிட்ட
       கும்ப கோணத்துக் கூசா,
    மஞ்சள், குங்குமம், கண்ணாடி,
       மைவைத்த தகரப் பெட்டி,
    செஞ்சாந்தின் சீசா, சொம்பு,
       வெற்றிலைச் சீவற் பெட்டி,
    இஞ்சியின் மூட்டை ஒன்றே,
       எலுமிச்சைச் சிறிய கோணி

    புதியஓர் தவலை நாலு,
       பொம்மைகள், இரும்புப் பெட்டி,
    மிதியடிக் கட்டை, பிள்ளை
       விளையாட மரச்சா மான்கள்,
    எதற்கும்ஒன்றுக்கி ரண்டாய்
       இருக்கட்டும் வீட்டில் என்று
    குதிரினில் இருக்கும் நெல்லைக்
       குத்திட மரக்குந்தாணி

    தலையணை, மெத்தைக் கட்டு,
       சல்லடை, புதுமு றங்கள்,
    எலிப்பொறி, தாழம் பாய்கள்,
       இப்பக்கம் அகப்ப டாத
    இலுப்பெண்ணெய், கொடுவாய்க் கத்தி,
       இட்டலித் தட்டு, குண்டான்,
    கலப்பட மிலாநல் லெண்ணெய்,
       கைத்தடி, செந்தாழம்பூ

    திருமணம் வந்தால் வேண்டும்
       செம்மரத் தினில்முக் காலி,
    ஒருகாசுக் கொன்று வீதம்
       கிடைத்த பச்சரிசி மாங்காய்,
    வரும்மாதம் பொங்கல் மாதம்
       ஆதலால் விளக்கு மாறு,
    பரிசாய்ச் சம்பந்தி தந்த
       பாதாளச் சுரடு, தேங்காய்…

    இப்படியாக இன்னும் நீளுகிறது வாங்கிவந்த பொருள்களின் பட்டியல்! அப்பப்பா! படிக்கின்ற நமக்கே மூச்சுவாங்குகிறதே…இவற்றைச் சுமந்துவந்து இறக்கியவர்களின் நிலை என்னவோ!

    மலையளவு சாமான்களை மாமனும், மாமியும் வீட்டுவாயிலில் இறக்கிக்கொண்டிருப்பதைக் கண்ட தங்கம் வீட்டினுள்ளிருந்து விரைந்து வருகின்றாள். பொருள்களின் குவியலைப் பார்த்து மலைத்தவள், “இவ்வளவு சாமான்களும் வண்டிக்குள் இருந்ததென்றால் பூச்சிகள்கூட வண்டிக்குள் நுழைய இடமிருக்காதே! நீங்களிருவரும் எங்கே அமர்ந்திருந்தீர்கள்?” என்று வினவினாள் திகைப்புடன்.

    அதற்கு அவள் மாமியார், ”அதையேன் கேட்கிறாய் தங்கம்! இவ்வளவு பொருள்களையும் வண்டிக்குள் நிரப்பிய உன் மாமன் குன்றின்மீது அமர்ந்திருக்கும் குரங்குபோல் என்னை அவற்றின்மீது உட்கார வைத்தார்; என்னாலோ தலையை நிமிர்த்தவே முடியவில்லை. அதனால், வண்டியின் உச்சியில் ஓர் பொத்தலிட்டார். அதன் வழியாகத்தான் நான் தலையை வெளியில் நீட்டினேன்” என்றார்.

    பீறிட்டுக் கிளம்பிய சிரிப்பை அடக்கிக்கொண்ட தங்கம், ”அப்படியானால் மாமா…?” என்று இழுத்தாள்.

    ”அவருக்கு வண்டியில் உட்கார ஏது இடம்? அவர் வண்டியுடன் கூடவே நடந்துவந்தார்; இந்தக் காட்சியைப் பார்த்து ஊரே சிரித்தது” என்றார் தங்கத்தின் மாமியார் சலிப்புடன்.

    ஊர் மட்டுமா சிரித்தது? நமக்கும் சிரிப்பு வரத்தானே செய்கிறது.

    இதுபோல் மற்றுமோர் மறக்கமுடியாத நகைச்சுவைக் காட்சி புரட்சிக்கவிஞரின் ’இருண்டவீடு’ காவியத்திலிருந்து…

    ’குடும்ப விளக்கு’ காவியத் தலைவிக்கு நேர்மாறான பாத்திரப் படைப்பு ’இருண்டவீட்டின்’ தலைவி. அவளுடைய சோம்பேறித்தனமும் மதியீனமும் எவ்வாறு அந்தக்குடும்பத்தைச் சின்னாபின்னமாக்குகின்றது என்பதைப் பாவேந்தர் ஒருவரால் மட்டுமே இவ்வளவு நயத்துடன் விளக்கமுடியும் என்பதை இக்காவியம் படிப்போர் நன்கு உணருவர்.

    இதோ…காலைப்பொழுது புலர்ந்து சூரியன் வானின் மேலேறி வலம்வரத் தொடங்கிவிட்டான். இருண்டவீட்டின் இல்லத்தரசியோ இப்போதுதான் மெதுவாகச் சோம்பல்முறித்தபடி படுக்கையைவிட்டு எழுகின்றாள். கவனமேயில்லாமல் தூக்கக் கலக்கத்தோடு அவள் தள்ளாடி நடந்துவரும் நிலைகண்டாலே ’அடுத்து என்ன விபரீதம் அங்கு நடக்கப்போகிறதோ?’ எனும் கலக்கம் நமக்கு ஏற்படுகின்றது. அதற்கேற்றாற்போலவே அவள் தன்வீட்டு வேலைக்காரன் கறந்துவைத்திருந்த பாலை, ’தண்ணீர்’ என்று நினைத்துக்கொண்டு அதில் சாணத்தைக் கலந்து வாசல் தெளிக்கின்றாள். அவள் தோற்றம்கண்டு பகலவனே நடுங்குகின்றானாம்!

    தலைவிக்கு முன்பாகவே அவளுடைய மூத்த பையன் எழுந்து உட்கார்ந்திருக்கின்றான் காலைச் சிற்றுண்டிக்காக. அப்போது கதவு தட்டப்படுகின்றது. பாய்ந்து கதவைத் திறக்கின்றான் பையன். அங்கே பிட்டுக்காரி நின்றுகொண்டிருக்கின்றாள். அவளுக்காகவே காத்திருந்தவன் அவளிடமிருந்து பிட்டையும் வடையையும் வேகமாகத் தட்டில் வாங்கி அங்கிருந்த பெட்டிமீது அமர்ந்துகொள்கின்றான் உண்ண வசதியாக. அந்தநேரம் பார்த்து அவனுக்கு நடுவயிறு வலிக்கத் தொடங்குகின்றது. அவசரமாகக் காலைக்கடன் கழிக்கவேண்டும் என்பதை உணர்ந்தான். ஆனால் வடையின் சுவையோ அவனை ’விடேன்’ என்றது.

    கொல்லை நோக்கிச் செல்லத்துடித்தது ஒரு மனம்; ’வடையை விட்டுச் செல்வதா?’ என்று கேள்வியெழுப்பியது இன்னொரு மனம். இயற்கையை வெல்லமுடியாததால் வில்லிலிருந்து புறப்பட்ட அம்புபோல் விரைந்து கொல்லை நோக்கிச் சென்றவன் கவனக்குறைவாய் நடுவில் கிடந்த நாயை மிதித்து, ஓரமாயிருந்த பானைகளைப் படபடவெனத் தள்ளி, கன்றுக்குட்டியைக் கட்டியிருந்த கயிற்றில் தடுக்கி அருகில் நின்றிருந்த பசுவின் நெற்றியில் பலமாக மோதிக்கொண்டதில் முன்வரிசைப் பற்கள் இரண்டைத் தொலைத்துக் கீழே உருண்டுபுரண்டு கொல்லையை அடைந்தான் ஒருவழியாக!

    இதைக் கவிஞரின் விவரிப்பில் காணுங்கள்…

    பிட்டையும் வடையையும் தட்டில் வாங்கினான்
    பெட்டி மீதில் இட்டுட்கார்ந்தான்.
    ஆவலாய் அவற்றை அருந்தத் தொடங்கினான்
    நாவில் இடுகையில் நடுவயிறு வலித்தது!
    வெளிக்குப் போக வேண்டுமென்றுணர்ந்தான்
    வடையின் சுவையோ விடேன்விடேன் என்றது!
    கொல்லை நோக்கிச் செல்லவும் துடித்தான்!
    மெல்லும் வடையை விழுங்கவும் துடித்தான்!
    வில்லம்பு போல மிகவிரைவாக
    நடுவிற் கிடந்த நாயை மிதித்துப்
    படபட வென்று பானையைத் தள்ளிக்
    கன்றின் கயிற்றால் கால்தடுக்குற்று
    நின்ற பசுவின் நெற்றியில் மோதி
    இரண்டு பற்கள் எங்கேயோ போட்டுப்
    புரண்டெழுந் தோடிப் போனான் கொல்லைக்கு!

    எப்படி இருக்கிறது? சிரித்துச் சிரித்து நமக்கும் வயிற்றுவலி வந்துவிட்டதல்லவா?

    இதுபோல் இன்னும் பல நகைச்சுவைக் காட்சிகளை நாம் கண்டு இரசிக்கலாம் இருண்டவீட்டில் தொடர்ந்து பயணித்தால்!

    இப்போது சொல்லுங்கள்! பாவேந்தர் நகைச்சுவையிலும் தனிமுத்திரை பதித்திருக்கும் வித்தகர்தானே?

    (இன்று பாவேந்தரின் 125-ஆவது பிறந்தநாளாகும்.)

     

     

    Share
  • பூகம்பம்

    -வேதா. இலங்காதிலகம்

    images

    ஆதி மௌரிய குப்த
    இராச்சியத்தின் கீழாக இருந்த
    இமாலய இராச்சியம் என்ற
    நேபாளம் இன்று கிலியுள்!

    ஏழை புத்த நாடு
    முப்பத்தெட்டு விகித வறுமை
    காட்மண்டு தலைநகர் கொண்டு
    காத்திரமான பாதிப்பு பூகம்பம்!

    பூமிக்கடி அழுத்தம் அதிகரித்துப்
    பூமிப் பாளங்கள் அசைவால் (அதிர்வால்)
    புவி நடுங்கப் பூகம்பமென்கிறோம்!

    மூவித நில நடுக்கம்
    சாதாரண முறை, மேற்தள்ளல்
    முறை, சமாந்தர அசைவென
    மானுட வாழ்வைப் பாதித்து
    பல்லுயிர் அழிவுச் சேதமாகிறது.

    சாதாரணமாகக் கூறும் பூகம்பம்
    பல்லுயிர் காவு கொண்டது
    பாரிய சேதம் சோகம்!
    பன்னாட்டு உதவிகள் விரைகின்றன
    ஓன்பது மாடித் தரஹரா
    கோபுரம் ஒன்றுமில்லாது சரிந்தது
    சோதனைகள், சோகம் விலகட்டும்
    சோதிக்கும்  இயற்கை அமைதியாகட்டும்!

     

    Share
  • ஒருவனின் கடைசிப் பக்கத்திலிருந்து…

    -ரோஷான் .ஜிப்ரி, இலங்கை

    நெஞ்சுரங் கொண்டு நிலம் பற்றி
    நிமிர்ந்து நடந்தவன் நீள் துயிலில்
    அவனின் பிறப்பிலிருந்து மொழிபிரித்த
    வாழ்வின் கடைசிப் பக்கத்தை இன்று
    வாசித்து முடித்திருந்தது காலம்

    பரிச்சயங்களை மீறிய பரபரப்பாய்ப்
    பெரும் பரப்பைத் தன் பிடிக்குள் வைத்து
    கோலோச்சியவனால்
    மரணத்தை எதிர்கொள்ள முடியவில்லை
    அது வென்றுபோனது அவனை வீழ்த்தி
    இடுவம்புகளால் வளர்ந்த நெடு வாழை
    கொழுகொம்பு இன்றி குலை முறிந்து
    ஆறடிக்குள் அடங்கும் கூடாய் இந்நொடி

    ஒரு காலத்தில் குகைகள் ஏகி
    சிங்கத்தைக் கர்ஜித்து சீண்டிப் பார்த்தவன்
    இன்று ஈயை விரட்ட இயலா ஜடம்
    உருகி உருகிக் கரைந்தன அவனை சுற்றியிருந்த
    மலைகளும்,கூழாங்கற்களும்

    ஊர்க் குருவிகள் அவனால் நேர்ந்த கதிகளின்
    இலாப நஷ்டங்கள் பற்றிச் சிலாகித்தன
    பேசாதிருந்தவனும் தன்பங்குக்கு
    உடைந்து போய் நிற்கிறான் கால்மாட்டில்

    அவனின் கடைசிப் பக்கத்திலிருந்து
    முதலாவது, இரண்டாவது எனப்
    பின் குறிப்புகள் தலை நீட்ட
    நிசப்தம் கலைய வேண்டும் என்றே
    பிரளயம் முடுக்கி விடப் படுகின்றது

    அவன் உள்ளவரை
    தேவதூதர்களைப் போலும்,
    தாசில்தார்கள் போலும் இருந்தவர்கள்
    ஆனால்; இப்போது
    மேல் சொன்ன எதிலும் இல்லாத
    “கழிசடைகளாய்” வசைகளால் வாழ்த்த
    அவர்களின் முழுப் பக்கங்களும் விரிகின்றன
    சொத்தைப் பங்கிடும் பச்சா தாபங்களில்!

    ஏலவே தெரிந்திருப்பின்
    எப்போதோ அவன்
    இவர்களை விட்டும்
    இறந்திருக்கலாம்!!

     

    Share
  • தாமரையே !

    -பா. ராஜசேகர்

    சிப்பியில்
    மழை விழுந்து
    முத்தாக !

    சேற்றிலே
    மழை விழுந்து
    தாமரையாய்!

    நீ
    பிறந்த இடம்
    சகதி கண்டேன் !

    நோய்களுக்குக்
    காரணியாய்ச்
    சாதனைகள்
    பல கண்டேன் !

    சோதனை
    நீர் சூழும்
    தலை நிமிர்ந்தாய்!

    தலைக்கனமே
    உன்னில் இல்லை
    நீர் இறங்க
    நீ இறங்கி!

    உன்னழகில்
    காதல் கொள்ளும்
    நீர் தவழும்!

    தாமரை இலை
    நீர் படர
    உலகறியும்
    உன் குணமறியும்!

    கண்ணகியும்
    உனைக்கண்டு
    கற்பு கொண்ட
    கதையறியும் !

    உன் குணப்பெருமை
    உலகறிய
    நானுரைப்பேன் !

    மனிதா
    பிறப்பாலே
    ஒன்றுமில்லை
    வாழ்ந்து நீ
    பெருமை கொள்ளு !

     

    Share
  • பிரிந்து இருப்பதில் பிரியமுமில்லை!

    -றியாஸ் முஹமட்

    பிரிந்து இருப்பதில் பிரியமுமில்லை
    காத்திருப்பதில் அர்த்தமுமில்லை
    உன்னை மறக்கத் தெரியவுமில்லை
    நீயின்றி வேற உறவுமில்லை…..

    உன்னைப் போல ஒரு துணையுமில்லை
    உனக்கு நான் தகுதியுமில்லை
    நீயின்றி மனம் நிம்மதியுமில்லை
    இதை நான் எடுத்துச் சொல்லியும்
    என் மனம் கேட்பதுமில்லை…

    Share
  • மரம்!

    -ருத்ரா பரமசிவன்

    இலவச இணைப்பு
    மரத்துக்கு மனிதனா?
    மனிதனுக்கு மரமா?
    இயற்கையின் வரிசையில்
    மரமே
    நம் பிள்ளையார் சுழி.                                             tree.
    நம் கதவுகளுக்கு
    அது செதில் செதில்களாகப்
    பிளக்கப்பட்ட போதும்
    நமக்கு ஜன்னல்கள் எனும்
    கண்கள் அப்ப
    கம்பிகளோடு குத்திக்கொண்டுக்
    கழுவேறிய போதும்…
    நம் உடலோடு
    ரத்தமாய்ச் சதையாய் உயிராய்
    சங்கமம் ஆன போதும்
    நாம் மூச்சுப்பூக்களில்
    குமிழியிடும்போதும்
    சூரியனின் பிளாஸ்மாவைத்
    தன் இலைகளோடு
    அது பதிவிறக்கம் செய்யும்போதும்
    நம் குறுக்குவெட்டுத்தோற்றமே
    அது தான்!

    சின்ன நாற்றாய்
    நம் குழந்தையும் அது.
    உயிர் ஊற்றாய்
    நம் அம்மாவும் அது.
    நம் அப்பாக்களுக்கு அப்பாக்களாய்
    அப்பால் நின்று
    நம் தலைமுடியை
    இதமாய் வருடி நிற்கும் கைகளும் அது.
    அதன் உடல் கப்பலானபோது
    அதன் உள்மூச்சின் விசைப்பயணத்தில்
    மானிட நாகரிகம்
    மணி விளக்கு ஏந்தி வலம் வந்தது.
    அது
    ஏன் மனிதனுக்கு மனிதன் இடையில்
    மனிதனின் ரத்தம் ருசிக்கும்
    சிலுவை மரம் ஆனது?
    நியாய அநியாயக்குழப்பங்களில்
    சில சமயங்களில் ஏன்
    தன்னை மறைத்துக்கொண்டு
    மராமரங்கள் ஆனது?

    என் துள்ளல்களைத்
    தாங்கிய தொட்டில்கள்
    என் துடிப்புகள் அடங்கிய போது
    “பெட்டிகளாய்” மாறி
    மண்ணில் புதைந்து கொண்டது.
    செம்மரமோ சந்தன மரமோ
    மனிதனுக்கு மட்டுமே
    அவை மொழி மாறிப்போயின.
    மனிதனிடம்
    பேராசை கொழுந்து விட்டு வளர்ந்து
    அது தீ ஆனது.
    அப்போது அதன் தளிர் பூ பிஞ்சு காய் கனி
    எல்லாம் துப்பாக்கிகளால்
    ரத்தம் சொரிந்தது.
    மனிதனே!
    உனக்குத் தொப்புள் கொடியாகிப்போன‌
    மரத்துக்குக்
    கோடரியையா
    நீ பண்டமாற்று செய்வது?!

     

    Share
  • ஓலைத்துடிப்புகள் (2)

    கவிஞர் ருத்ரா

    oolaisuvadi

    ஐங்குறு நாறு பாடல்களில் “புளிங்காய் தின்னும்” தலைவியின் காதலும் மசக்கையும் கலந்த ஒரு துயர நிலையைப் பற்றி “ஓரம்போகியார்” எனும் மா கவிஞர் அற்புதமாகப் பாடியிருக்கிறார் (பாடல் 51). நேற்று நள்ளிரவில் அவர் வரிகள் எனக்குள்ளேயே கவிதை எழுதும் தினவை அந்த புளிங்காய்ச்சுவை ஏற்றி படாத பாடு படுத்தியது. அதன் விளவே இந்த “உன் உரு தின்னும்..” கவிதை.

    என் உரு தின்னும்…

    புளிங்காய் தின்னும் மணி மண் அளைபு
    சுவைபடுத்தாங்கு வால்நீர் இமிழ்தர
    நூலின் அருவி நுடங்கப் பெருக்கி
    சாம்பர் தின்னும் இச்சுவை என் ஒக்கும்?
    அறுசுவை உண்டியும் வெறுக்கும் தனிச்சுவை.
    இலவு தொங்கும் காட்சிகள் மலியும்
    நிலவுப்பிஞ்சு அன்ன காய் தூங்குபச்சை
    கான் அடர் கடவுள் கடுஞ்சுரம் ஒரீஇ
    செலவு என்னையோ? முள் ஓச்சி விரைதி
    மீள்க.மீள்க. விழி மலர் ஈண்டு முள்மரம் ஆகி
    காட்சி கொல்லுதல் ஒல்லுமோ பெரும.
    கரு தின்ற நெருப்பின் சுவைக்கு
    எச்சுவை செத்தென அறியேன் மாதோ.
    கரு தின்னும் எனை உன் உரு தின்னும்
    நோகோ யானே!யானும் இம்மண் தின்னும்
    மலையும் கடலும் தின்னும்
    விண்ணும் மீனும் தின்னும்.
    உன் தடமும் தேரும் தின்னும்..
    விரைதி..விரைதி..காதல் கொடுநோய்
    ஊழ்த்த விடத்து என் எஞ்சும்?
    கூடு இறும்.உயிர் ஓம்புமின்.
    கூடு சேர் புள்ளென விரைதி.விரைதி.
    கதழ்பரி நன்மா கடுவிசை ஆர்ப்ப‌
    நெடிய ஆறும் நின் கைப்படூஉம் மன்னே!

    ============================================

    பொழிப்புரை

    புளிங்காய் தின்னும் மணி மண் அளைபு
    சுவைபடுத்தாங்கு வால்நீர் இமிழ்தர
    நூலின் அருவி நுடங்கப் பெருக்கி
    சாம்பர் தின்னும் இச்சுவை என் ஒக்கும்?
    அறுசுவை உண்டியும் வெறுக்கும் தனிச்சுவை.

    தலைவன் பொருள் ஈட்ட கடுவழி ஏகிய பின் தலைவி அவன் நினைவு வாட்ட துயர் உறும் நிலையே இப்பாடல்.அவள் கருவுற்ற‌ நிலையில் எதைத் தின்போம் என்ற மசக்கைத் துன்பம் அடைந்து பெரிதும் வாடுகிறாள். புளியங்காய் தின்கிறாள். மண் அளைந்து சுவைப்பதும் அதன் சுவைக்கு ஒளிபொருந்திய வாயின் நீர் ஊறி வழிந்து நூல்போல அருவியாய் அசைந்த நீர்ப்படலமாய் பெருகும் காட்சியும் அங்கே விளங்குகிறது. சாம்பல் கூட தின்று பார்த்து அச்சுவையின் அருமையைக் கண்டு வியந்து இது என்ன சுவையாய் இருக்கலாம் என்று ஒப்பு நோக்குகிறாள்.அறுசுவைகள் கூட பிடிக்காமல் போகும் தனிச்சுவை அல்லவா இது.

    இலவு தொங்கும் காட்சிகள் மலியும்
    நிலவுப்பிஞ்சு அன்ன காய் தூங்குபச்சை
    கான் அடர் கடவுள் கடுஞ்சுரம் ஒரீஇ
    செலவு என்னையோ? முள் ஓச்சி விரைதி
    மீள்க.மீள்க. விழி மலர் ஈண்டு முள்மரம் ஆகி
    காட்சி கொல்லுதல் ஒல்லுமோ பெரும.

    அவன் பொருள் தேடி சென்ற அந்த இலவங்காட்டில் இலவங்காய்கள் காய்த்துத் தொங்கும். நிலாப்பிறைகள் போல பச்சைக் காய்கள் ஊஞ்சல் ஆடி தொங்கும். அத்தகைய அடர் காட்டின் கடக்க அரியதாய் உள் நுழைய இயலாததாய் விளங்கும் கடுவழியை விலக்கி வேறு வழி செல்ல முடியாத அப்படிப்பட்ட கடும் பயணம் எல்லாம் எதற்கு?” தலைவி தவிக்கிறாள். “பொருள் தேடிய வரை போதும். தார் குச்சியை செலுத்தி தேரின் குதிரையை விரைந்து செலுத்துவாயாக. என் விழிகளை மலர்கள் என்பாயே. பார் அவை இப்போது உன்னைக்காண முடியாமல் முள் மரங்களில் சிக்கியதைப் போல் வேதனை கொள்கின்றன. இவை என்னால் தாங்க இயலுமோ?” என்கிறாள்

    கரு தின்ற நெருப்பின் சுவைக்கு
    எச்சுவை செத்தென அறியேன் மாதோ.
    கரு தின்னும் எனை உன் உரு தின்னும்
    நோகோ யானே!யானும் இம்மண் தின்னும்
    மலையும் கடலும் தின்னும்
    விண்ணும் மீனும் தின்னும்.
    உன் தடமும் தேரும் தின்னும்..
    விரைதி..விரைதி..காதல் கொடுநோய்

    தலைவின் கருவுற்ற நிலையின் துயரம் அங்கு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.”நெருப்பு மூட்டிய பின் போல் வளரும் அந்த உயிரின் கரு கேட்கும் சுவை என்னைத் தின்கிறது. அச்சுவை எதை ஒத்து இருக்கின்றதென (செத்தென அறியேன்) நான் அறிய மாட்டேன். இப்படி கருவால் தின்னப்படும் என்னை உன் காதல் பொங்கும் உருவம் வேறு தின்ன வருகிறது. இந்த பெருஞ்சுவைப் பசியில் நோதல் உற்று இம்மலை கடல் விண் மற்றும் விண்மீன்கள் ஆகிய எல்லாம் தின்னத் தொடங்கி விடுவேனோ என அஞ்சுகிறேன். நீ வரும் தேரும் வழியும் கூட ஆர்வம் மிக்க என் கண்கள் தேடும் பசியின் சுவையில் தின்னப்பட்டு விடலாம். அதனால் விரைந்து தேரை செலுத்து. இக்காதலில் கொடிய நோய் (கருவுற்ற மசக்கையோடு) பேரூழியாய் அழித்த பின் என்ன மிஞ்சும் என அறிவாயா?”

    கூடு இறும்.உயிர் ஓம்புமின்.
    கூடு சேர் புள்ளென விரைதி.விரைதி.
    கதழ்பரி நன்மா கடுவிசை ஆர்ப்ப‌
    நெடிய ஆறும் நின் கைப்படூஉம் மன்னே!

    “உடம்பு இற்று விழும்.அதற்கு முன் என் உயிரைக் காப்பாற்று.பறவைகள் எல்லாம் குஞ்சுகளுக்கு இரையூட்ட விரைந்து வருவது போல் விரைவாயாக. வேக வேகமாக குளம்புகள் பதிய‌ஓடிவரும் சிறந்த அந்த குதிரை வலிமை ஆர்ப்பரிக்க அது செல்லும் நீண்ட வழியையும் உன் கைக்குள் அடக்கி மிக மிக வேகமாய் வருக” என்கிறாள் தலைவி நெஞ்சப் படபடப்போடு.

    Share
  • விவசாயியும் ஒரு தொழிலாளி!

    -ரா.பார்த்தசாரதி

    நமது நாட்டின் முதுகெலும்பே   விவசாயம்
    அதனைத் தொழிலாகச் செய்பவன் விவசாயி
    இறைவன் கண்டெடுத்த சிறந்த உழைப்பாளி
    மக்கள் பசிதீர்க்கும் உலகின்  பாட்டாளி !

    உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்
    விவசாயியை  ஏமாற்றுபவர்களை  நிந்தனை செய்வோம்
    நிலத்தில் வியர்வை சிந்திப் பாடுபடும் விவசாயி,
    அவர்கள் நலம்கெட வழி செய்தல் நியாயமா?

    விவசாயம் செய்யமுடியாமல் வெறுத்துத் தற்கொலை
    இதனைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் அவலநிலை
    பேருக்காக உதவித் தொகை என்ற  மான்யம்,
    அரசாங்கமும் அரசியல்வாதிகளும் நடத்தும் நாடகம்!

    விவசாயம்  பாடுபட்டுப் பலன்பெறாமல் இருக்கின்றதே
    கூறுபோட்டு வீடுகட்டும் நிலைமை மாறிவிட்டதே!
    அரசாங்கமும் அரசியலும் இதற்கு ஒத்துழைக்கின்றதே
    விவசாய நிலங்கள் முழுதும் அழிக்கப்படுகின்றதே!

    சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் என்றார் வள்ளுவர்
    விவசாயையும் தொழிலாளர்களையும் முன்னேறச் செய்வோம்
    உரிமைக்கும் முன்னேற்றத்திற்கும் குரல் கொடுப்போம்
    நல்மனம்கொண்டுப் பறைசாற்றிடுவோம் உலகத் தொழிலாளர் தினத்தில்!

     

    Share
  • சிகரம் நோக்கி.. (2)

    சுரேஜமீ

    peak

    எதைக் கொண்டு வந்தோம்? வாழ்க்கையில் நாம் துய்ப்பதும்; எய்துவதும், ஏகுவதும், பெற்றதும், பெறுவதும் அனைத்தும், இடையில் வந்தவையே!

    அதற்கும் மேலாக இவையெல்லாம், நம்மை விட்டுச் செல்பவையோ அல்லது நாம் விடுத்துச் செல்பவையோதான்!

    நாம் செய்ய வேண்டுவன எல்லாம், இந்த உண்மையைச் சரியாக வளரும் தலைமுறைக்குப் புரிய வைப்பதுதான்!

    எப்படி?

    asurajதென்னாட்டு சார்லி சாப்ளின், நாஞ்சில் தந்த முத்து, நகைச்சுவையால் நல்ல தமிழில் நம்மை சிந்திக்க வைத்த மனிதர், இருந்து கொடுப்பதல்ல வள்ளல் தன்மை; இல்லாதும் கொடுப்பதே எனும் வாழ்க்கைக்குச் சொந்தக் காரர், அவர் தான் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள்!

    அவர் ஒரு முறை ஒரு விழாவில் பங்கெடுத்து, சிறுசேமிப்புத் திட்டம் பற்றிப் பேசுகிறார். அவ்விழாவில், சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சரும், பொருளாதார நிபுணருமான, ஆர்.கே. சண்முகம் செட்டியார் அவர்கள் தலைமையேற்றிருக்க, என்.எஸ். கே ஒரு கதை மூலம் நமக்கு எது தேவை என்பதை விளக்குகிறார்!

    அந்தக் கதை உங்களுக்காக…..

    ஒரு உணவு மற்றும் தங்கும் விடுதிக்கு வரும் பயனாளி, 100 ரூபாயைக் காசாளரிடம் கொடுத்து, தான் விடுதியை விட்டுச்asu செல்லும்போது திரும்பப் பெற்றுக்கொள்வதாகக் கூறுகிறார். அந்த சமயத்தில், காசாளரிடம் பாக்கி வசூலிக்க மளிகைக் கடைக்காரர் வருகிறார். உடனே, அந்தப் பணத்தை மளிகைக் கடைக்காரருக்கு கொடுக்கிறார் காசாளர். மளிகைக் கடைக்காரர், சிகிச்சைக்காக மருத்துவரிடம் செல்கிறார். ஆக, அந்தப் பணம் தற்போது மருத்துவரின் கைக்கு வந்துவிட்டது.

    அடுத்த நாள் மருத்துவர், ஒரு விருந்தோம்பலுக்காக, உணவு மற்றும் தங்கும் விடுதிக்குத் தரவேண்டிய பாக்கிக்காக,காசாளரிடம் அந்த 100 ரூபாயைக் கொடுக்கிறார்.

    அன்று மாலை, விடுதியிலிருந்து காலி செய்து புறப்படும் பயனாளி வருகிறார். தான் கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுத்துவிட்டு, தான் கொடுத்த அந்த 100 ரூபாயைப் பெற்றுக் கொள்கிறார்.

    பெற்றுக் கொண்ட பயனாளி, காசாளரிடம் என்ன கூறுகிறார் என்பதே, நாம் கற்றுக் கொடுக்க வேண்டிய பாடம் என்று சொன்னால் மிகையாகாது!

    பயனாளி கூற்று – இது ஒரு செல்லாத நோட்டு! செலவாணி ஆகிறதா என்று பார்க்கத்தான் உன்னிடம் தந்தேன் என்று!

    கூறியதோடு மட்டுமல்ல; அந்த 100 ரூபாயை, காசாளரின் கண்ணெதிரே கிழித்தும் போட்டு விட்டார்!

    கலைவாணர் அவர்கள் இந்தக் கதையைக் கூறிவிட்டு,

    இதில் யாருக்கு நட்டம்? எனும் கேள்வியையும் எழுப்பினார்!

    இதற்கு தலைவராக இருந்த சண்முகம் செட்டியார், இதுதான் செல்லாத நோட்டாயிற்றே; ஆதலால், யாருக்கும் நட்டமில்லை என்கிறார்!

    அப்படியானால், காசாளர், மளிகைக் கடைக்காரர், மருத்துவர் என பலருடைய கடன்கள் இதன் மூலம் அடைபட்டிருக்கிறதே என்கிறார் கலைவாணர்!

    அதற்குச் செட்டியார் தந்த பதில் என்ன தெரியுமா? இதற்குப் பெயர்தான் ‘நாணயம்’ என்பது! ஒரு பொருள் மீது வைக்கப்படும் மதிப்பு! ஒரு மனிதன் மீது இருக்கும் நம்பிக்கை!

    ஆக, நாம் கையாளும் காகிதத்திற்கே அவ்வளவு மதிப்பு என்றால், அதை உருவாக்கும் மனிதர்களுக்கு எவ்வளவு மதிப்பு என்பதை நாம் அறிந்தோமா?

    உயிர்கள் துச்சமாக அல்லவா மதிக்கப்படுகின்றன?

    மீண்டும் தொடங்கிய இடத்திற்கே செல்வோம்! எதைக் கொண்டு வந்தோம், நாம் இழப்பதற்கு! இருப்பதைப் பகிர்ந்து, இன்பமாய் வாழ, நாம் கற்றுக் கொடுத்தால்,

    வரும் சமுதாயம் வாழ்வில் ஒளி பெறும்!

    ஒரு பதிவாக ஆரம்பித்தது, ஒரு தொடராக ஆகிவிட்டது! தொடர்வோம் சிந்தனையை!!

    சிகரத்தை நோக்கி!

    சுரேஜமீ
    Share
  • நூறாண்டு காலம் வாழ்க …

    — கவிஞர் காவிரிமைந்தன்.

    pesumdeivam

     

    காலமெல்லாம் கவிதை மலர் தோட்டத்திலே கற்பனையால் உச்சங்களை எட்டி … எட்டி … நம்மைக் களிப்பினிலே ஆழ்த்திய தொழிலைச் செய்த கவிஞர் அன்றோ வாலி எனும் புலவர் பெருமகன்!

    ஆழிசூழ் உலகமிதில் அவதரிக்கும் இவர் போன்ற கவியரசர் ஒரு சிலரே!

    பைந்தமிழில் இவர் புனையும் பாடல்களெல்லாம் பாமரன் வரை முணுமுணுக்கும் மந்திரங்களென்பேன்…

    சொல்லமுதச் செல்வம்தனை சுமந்து வந்த தெள்ளமுதப் பாவலன்தான் கவிஞர் வாலி!

    பொன்மனச் செம்மலுக்குப் புகழேணி சமைத்துத் தந்த நல்மனச் செல்வன் இவன் என்று நாடே போற்றும்!
    கலைமகளின் அருளதனால் இவன் தினம் எழுதிய பாடல்கள் எல்லாம் திகட்டாத அமுதமன்றோ?

    குமரனவன் திருவருளே தனது உயர்விற்கெல்லாம் காரணமாம் என்ற உணர்வுடனே வணங்கிய உள்ளத்தார்!

    அவ்வண்ணமே, ‘வாலி’ எனும் மாகவிஞன் புகழதனை வெளியிட்டப் பதிப்பகமும் ‘ குமரன்’ என்பது இனிய பொருத்தமே!

    பேசும் தெய்வம் திரைப்படத்திற்காகக் கவிஞர் வாலி வரைந்த வரிகள் …

    வாழ்த்துதற்கு ஏற்றவை என்பதால் இன்று அவரை வாழ்த்துதற்கும் … போற்றுதற்கும் இவ்விடம் ஏற்றுகின்றேன்….

    வாழும் தமிழே வாலி என்றே! நூறாண்டு காலம் வாழ்க …

    நூறாண்டு காலம் வாழ்க
    நோய் நொடி இல்லாமல் வளர்க
    ஊராண்ட மன்னர் புகழ் போலே
    உலகாண்ட புலவர் தமிழ் போலே
    நூறாண்டு காலம் வாழ்க
    நோய் நொடி இல்லாமல் வளர்க
    ஊராண்ட மன்னர் புகழ் போலே
    உலகாண்ட புலவர் தமிழ் போலே
    நூறாண்டு காலம் வாழ்க
    நோய் நொடி இல்லாமல் வளர்க

    குறையாது வளரும் பிறையாக
    குவியாத குமுத மலராக
    குறையாது வளரும் பிறையாக
    குவியாத குமுத மலராக
    குன்றாத நவநிதியாக
    குன்றாத நவநிதியாக
    துள்ளி குதித்தோடும் ஜீவ நதியாக
    நீ வாழ்க… நீ வாழ்க…

    நூறாண்டு காலம் வாழ்க
    நோய் நொடி இல்லாமல் வளர்க
    ஊராண்ட மன்னர் புகழ் போலே
    உலகாண்ட புலவர் தமிழ் போலே
    நூறாண்டு காலம் வாழ்க
    நோய் நொடி இல்லாமல் வளர்க

    விளையாத மண்ணில் தளிராக
    மலராத கொடியில் கனியாக
    விளையாத மண்ணில் தளிராக
    மலராத கொடியில் கனியாக
    மலடென்ற பேரும் பொய்யாக
    மலடென்ற பேரும் பொய்யாக
    வந்த மகனே உன் வாழ்வு நிறைவாக
    நீ வாழ்க…. நீ வாழ்க…

    நூறாண்டு காலம் வாழ்க
    நோய் நொடி இல்லாமல் வளர்க
    ஊராண்ட மன்னர் புகழ் போலே
    உலகாண்ட புலவர் தமிழ் போலே
    நூறாண்டு காலம் வாழ்க
    நோய் நொடி இல்லாமல் வளர்க

    “””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””

    படம் : பேசும் தெய்வம்
    வரிகள்: கவிஞர் வாலி
    இசை : கே. வி. மகாதேவன்
    பாடியவர் : சூலமங்கலம் ராஜலக்ஷ்மி
    காணொளி: https://youtu.be/0DaHSI5JbEI

    https://youtu.be/0DaHSI5JbEI

    “””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

    நாமடைதல் சிற்றின்பம் நாமாதல் பேரின்பம்
    நாமாதல் நாமடைய நாடுவீர் -நாமா
    வளிசொல்லி வேணு விட்டலனை வாழ்த்தி
    களிகொள் கறவைகை கோர்த்து’’….கிரேசி மோகன்….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

    ‘கோடவன் கேசவன், கோகுலக் கன்றுகள்தாய்,
    மாடவன், மேய்ப்பவன், மாதவன் -வீடவன்,
    காடு, கழனி, குளிர்வெப்பக் காலமவன்
    தேடவனைக் காணத் தெளிவு’’….கிரேசி மோகன்….

    Share