Blog

  • படக்கவிதைப் போட்டி (10)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    11180019_823844851003049_1229122600_n

    129393010@N07_rதிரு என்.எஸ். ஹிரிஷிகேஷ் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (02.05.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

    புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    ஏப்ரல் 27, 2015

    இவ்வார வல்லமையாளர்கள்
    “குறள் வெப்பவளிக்கூடு” திட்டப் பொறுப்பாளர்கள்

    kuralballoon-Benedict Savio and Selva Saravanah

    செம்மொழித் தமிழ் இலக்கியமாம் உலகப் பொதுமறை திருக்குறள் பற்றிப் பெருமை கொள்ளாத தமிழர் இருப்பது அரிது. சமீபத்தில் ஜனதா கட்சியின் மேலவை உறுப்பினர் மாண்புமிகு தருண் விஜய் அவர்கள் திருக்குறளின் பெருமைகளை உலகறியச் செய்வதில் தமிழர்களுடன் கைகோர்த்துள்ளார். அவரது ஆர்வத்தை மெச்சும் வகையில் தமிழ் மக்களும் மனமுவந்து அவருக்குத் “திருக்குறள் தூதர் விருது” கொடுத்து மரியாதை செய்துள்ளார்கள். இவ்வாறாகத் திருக்குறள் மக்களின் கவனத்தில்தொடர்ந்து சிறப்பிடம் பெற்று வரும் இவ்வேளையில், தமிழ் இளைஞர்கள் இருவர் “திருக்குறள் வெப்பவளிக்கூடு” (Kural Balloon) என்ற ஓர் உலக சாதனை முயற்சியை முன்னெடுத்துள்ளார்கள். திருவாளர்கள் பெனிடிக்ட் சேவியோ மற்றும் செல்வா சரவணா ஆகியோரின் புதுமையான குறள் வெப்பவளிக்கூடு திட்டத்தையும், உலகசாதனை செய்வதற்காகத் திருக்குறளைத் தேர்ந்தேடுததற்காகவும் பாராட்டி இவர்களை இவ்வார வல்லமையாளர்களாக அறிவிப்பதில் வல்லமைக் குழுவினர் பெரு மகிழ்வு கொள்கிறோம்.

    ஊடக பின்புலம் கொண்ட தமிழக இளைஞர்கள் பெனிடிக்ட் சேவியோவும், செல்வா சரவணாவும் 2003 ஆண்டு காலவாக்கில் UTV யில் நான்காண்டுகள் இணைந்து பணியாற்றிய பொழுதிலிருந்து நண்பர்கள். பின்னர் பெனிடிக்ட் வெப்பவளிக்கூடு (Hot Air Balloon) தொழிலிலும், செல்வா சிங்கப்பூர் ஊடக நிறுவனத்திலும் பணியாற்ற சென்றுவிட்டாலும் இருவரும் தொலைத்தொடர்பு வழி  உரையாடல்களில் பெனிடிக்ட்டின் “க்ளோபல் மீடியா பாக்ஸ் ” (Global Media Box) நிறுவனம் ஈடுபட்டுள்ள வெப்பவளிக்கூடு நடவடிக்கைகளைப் பற்றி உரையாடத் தவறுவதில்லை.

    angry bird Benedict Savioகடந்த எட்டு ஆண்டுகளாக உலகின் பலநாடுகளிலும் தொழில் முறையில் வெப்பவளிக்கூடுகள் பறக்கவிட்ட அனுபவம் உள்ளவர் பெனிடிக்ட். இந்த ஆண்டு ஜனவரியிலும் பொள்ளாச்சி நகரில் நடந்த முதலாவது உலகளாவிய வெப்பவளிக்கூடு விழாவில்  “ஆங்ரிபேர்ட்” வடிவில் அமைக்கப்பட்ட இவரது வெப்பவளிக்கூட்டைப் பறக்கவிட்டார். அடுத்து ஏதேனும் புதுமையான வெப்பவளிக்கூடு ஒன்றினை உருவாக்க வேண்டும் என்றும், அத்துடன் தமிழையும் இணைத்து செய்ய வேண்டும் என்ற தனது ஆர்வத்தை பெனிடிக்ட் தனது  நண்பர் செல்வாவிடம் தெரிவித்த பொழுது, குறளின் 1330 குறள்களையும் 100 அடி உயரமுள்ள வெப்பவளிக்கூட்டில் அச்சேற்றி உலகம் முழுவதும் பறக்கவிடும் ஆலோசனையைக் கூறியவர் செல்வா.

    kuralballoon Selva Saravanahஅடுத்த கட்ட நடவடிக்கையாக இதை உலாக சாதனையாக நிகழ்த்தும் எண்ணமும் இவர்களுக்குத் தோன்றியுள்ளது. சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் தோன்றிய இந்த எண்ணத்தை செயல்படுத்துவதும் சாத்தியம் என்று அறிந்தபின்னர் சென்ற ஏப்ரல் 15 சித்திரை முதல் நாளன்று இத்திட்டத்தை முறையாக இவர்கள் அறிவித்துள்ளார்கள்.

    ஓர் உலகசாதனை முயற்சியாக, உலகப்பொதுமறையான திருக்குறளை வெப்பவளிக்கூடில் தமிழிலும் ஆங்கிலத்திலும் அச்சேற்றி உலகம் முழுவதும் பறக்கச்செய்ய உள்ள இந்த இளைஞர்களின் முயற்சியின் முக்கிய நோக்கங்கள் என இவர்கள் குறிப்பிடுவது …
    1. தமிழர்கள் அல்லாதவர்களிடம் திருக்குறள் ஆர்வம் உண்டாக்குவது.
    2. எக்காலத்திற்கும் ஏற்புடையது குறள் என்று மீண்டும் ஒருமுறை பிரமாண்டமாக பறைசாற்றுவது.
    3. புதுமையான ஒரு வழியில் திருக்குறளை நமது இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பது.
    4. வெப்பவளிக்கூடில் அச்சேறிய முதல் நூல் ஒரு தமிழ் நூல் என்ற பெருமை நமக்கு கிட்டும். அந்த பெருமைக்கு உகந்த நூல் திருக்குறளை தவிர வேறு இருக்க முடியாது என்பது இவர்களது  கருத்து.

    kuralballoon planவரும் ஆண்டு 2016, ஜனவரி 12 முதல் 16 வரை தமிழகத்தின் பொள்ளாச்சி நகரில் நடக்கவிருக்கும் “இரண்டாவது உலகளாவிய வெப்பவளிக்கூடு விழா” (Tamil Nadu International Balloon Festival – TNIBF – 12-16 – Jan 2016) விழாக் காலமும் தமிழர் தைத்திருநாள், திருவள்ளுவர் தின நாட்களுடனும் பொருந்தி வருவதாக இருப்பதால் அந்நாட்களில் திருக்குறள் வெப்பவளிக் கூடைப் பறக்கவிடுவது ஒரு சிறப்பான திட்டம் என்பதில் ஐயமில்லை. பொள்ளாச்சி விழாவிற்குப் பின்னர் இதனை உலகெங்கும் தமிழர்கள் வாழும் நாடுகளுக்கு கொண்டு சென்று பறக்கவிடுவதும் இத்திட்டத்தின் நோக்கம். இதன் மூலம் திருக்குறளைப் பற்றியும் தமிழ் பற்றியும் ஒரு உலகளாவிய விழிப்புணர்வு உண்டாகும் என்பதும் இத்திட்டத்தை முன்னெடுக்கும்  இவர்களது நம்பிக்கை.

    திருக்குறள் அறிஞர் சாலமன் பாப்பையா அவர்களது வாழ்த்துடனும் நல்லாசியுடனும் துவங்கியுள்ள இந்த முயற்சிக்குப் பிறர் ஆதரவையும் ஏற்க முன்வந்துள்ளனர் இத்திட்டக் குழுவினர். இந்த சாதனை முயற்சி செய்தியைப் பரப்புவதிலும், பொருளாதார ஆதரவு என்ற வகையில் பங்கேற்க விரும்புபவர்களையும் இவர்கள் வரவேற்கிறார்கள். இவர்களது திட்டத்தில் எவ்வாறு பங்கு பெறலாம் என்ற தகவல்  வல்லமை இதழின் மற்றொரு செய்தியில்   பகிரப்பட்டுள்ளது.

    உலகளாவிய வெப்பவளிக்கூடு விழாவில் ‘குறள் வெப்பவளிக்கூடு’ பறக்கவிட்டு தமிழிலக்கிய இலக்கிய நூலொன்றை பெருமைப்படுத்தி, அதன் மூலம் உலக சாதனை ஒன்றினை நிகழ்த்த விரும்பும்  பெனிடிக்ட் சேவியோ மற்றும் செல்வா சரவணா ஆகியோரை இவ்வார வல்லமையாளராகப் வாழ்த்திப் பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

    kuralballoon FB page

     

     

    “திருக்குறள் வெப்பவளிக்கூடு” (Kural Balloon)பற்றி மேலும் தெரிந்துகொள்ள:
    அய்யா சாலமன் பாப்பையா அவர்களின் வாழ்த்துக் காணொளி: https://www.youtube.com/watch?v=zK9XydZUhY4&feature=youtu.be
    பெனிடிக்ட் சேவியோ: https://www.facebook.com/reachbenny
    செல்வா சரவணா: https://www.facebook.com/selva.saravanah

    “திருக்குறள் வெப்பவளிக்கூடு” இணையப் பக்கங்கள்:
    https://www.facebook.com/kuralballoon
    https://www.kuralballoon.com

    இரண்டாவது உலகளாவிய வெப்பவளிக்கூடு விழாவின் இணையப்பக்கங்கள்:
    https://www.facebook.com/tnballoonfestival
    http://www.tnibf.com/

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • இமாலய மலைச்சரிவு நேபாளத்தில் நேர்ந்த ஓர் அசுரப் பூகம்பத்தால் மாபெரும் சேதம், உயிரிழப்பு

     
     

    First Image

    சிஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

     

    இமயத் தொட்டிலில் ஆட்டமடா

    இயற்கை அன்னையின் காட்டமடா  !

    எண்ணிலா நேபாளியர் புதைந்த னரடா !

    ஏராள வீடுகள் மட்ட மாயினடா ! 

    எங்கெங்கு வாழினும் இன்னலடா!

    ஏழு பிறப்பிலும் தொல்லையடா!

    அடித்தட் டுதைத்தால் பூமியில் நடுக்கமடா!

    மலைத்தட் டசைந்தால் பேரதிர்ச்சி யடா!

    குடற்தட்டில் கோர  ஆட்டமடா!

    சூழ்வெளி மட்டும் பாழாக வில்லை யடா!

    ஆழ்பூமிக் குள்ளும் புற்று நோய் களடா!

    தோலுக்குள் எலும்பு முறிவு களாடா

    கால் பந்து  தையல் போல்

    கடற் தட்டு முறிவுகளில்

    பாலமிட்டு

    காலக் குமரி எல்லை போட்ட

    வண்ணப் பீடங்கள்

    ஞாலத்தில்

    கண்டப் பெயர்ச்சியைக் காட்டுமடா !

    ++++++++++++++

    Nepal Earthquake

    நேபாள் பூகம்ப விளைவுகள்

    http://www.cnn.com/videos/world/2015/04/25/smerconish-vo-nepal-earthquake-mt-everest-avalanche.cnn

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=6EdsBabSZ4g

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=1-HwPR_4mP4

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Sf3EEcov1HU

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=S_fqTB4kSLk

    +++++++++++++++++++

    ‘பூமியின் நிலப்பரப்புப் பகுதிகள் அனைத்தும் பல பில்லியன் ஆண்டு களுக்கு முன்பு ஒருங்கிணைந்த மாபெரும் ஒற்றைக் கண்டமாக இருந்தது! பல மில்லியன் ஆண்டுகள் கழித்து, எப்படியோ அப்பெருங் கண்டம் பிளவு பட்டு வெவ்வேறு பகுதிகளாகப் பிரிந்து, தற்போதுள்ள இடங்களுக்கு அவை நிலப்பெயர்ச்சி ஆகியுள்ளன! பூகோளத்தின் அடித்தட்டுகள் [Crusts] பூமியின் உட்கருக் கனல் குழம்பில் [Liquid Core] மிதந்து மெதுவாகப் பெயர்ச்சி அடைகின்றன! கண்டங்களின் நிலப் பெயர்ச்சிக்கும், அடித்தட்டுப் பிறழ்ச்சிக்கும் [Continental Drift & Plate Tectonics] பூர்வப்படிவப் பதிவுகள் [Fossil Records] சான்றுகள் காட்டி நிரூபணமும் அளிக்கின்றன ‘.

    டாக்டர் ஆல்ஃபிரெட் வெஜினர்ஜெர்மன் பூதளவாதி [Dr. Alfred Wegener (1880-1930)]

    Location of Earthquake

    Plate tectonics

    http://www.the-science-site.com/plate-movements.html

    எண்பது ஆண்டுகட்குப் பிறகு நேபாளத்தில் நேர்ந்த பயங்கரப் பூகம்பம்

    2015 ஏப்ரல் 25 ஆம் தேதி இமயமலைச் சரிவில் உள்ள நேபாளின் தலை நகரம் காட்மண்டுக்கு 50 மைல் [80 கி.மீ.] தூரத்தில் இருக்கும் பொக்காரா என்னும் இரண்டாம் பெரிய நகரில் M7.9 அளவு வீரியமுள்ள ஓர் அசுரப் பூகம்பம் நிலநடுக்கம் உண்டாக்கியது.  இதுவரை [ஏப்ரல் 25] அறிந்த தகவல்படி இறந்தோர் எண்ணிக்கை : 1500.  தோண்டிக் கண்டுபிடிப்போர் தொடர்ந்து  பணி செய்து வருவதால், எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டு வருகிறது.  பொக்கராவின் ஜனத்தொகை மட்டும் 28 மில்லியன்.  நிலநடுக்க மையம் [Epicenter] பொக்கராவாயினும், பூகம்ப எதிரொலித் தாக்கம், பூதான், சைனா, வட இந்தியா, பாகிஸ்தான், பங்களா தேச நாடுகளில் உணரப் பட்டுள்ளது.  சுமார் 300,000 அன்னிய நாட்டு சுற்றுலா நபர்கள் நேபாளில் உலவி வந்துள்ளதாக மதிப்பீடு செய்யப் படுகிறது. அவர்களில் சிலர் இமயத்தின் சிகரத்தில் ஏற வந்திருக்கும் தீரர்கள். அவர்களில் எத்தனை பேர் மாண்டார் என்னும்  எண்ணிக்கை இனிமேல் தான் தெரிய வரும்.  80 ஆண்டுகளுக்கு முன் 1934 இல் நேர்ந்த  8.1 அளவு நேபாள் பூகம்பத்தில் சுமார் 10600 பேர் இறந்தனர் என்று வரலாறு கூறுகிறது.  தற்போது நேர்ந்த பூகம்பத்தில் பல வீடுகள் தரை மட்டமான தோடு 1832 இல் கட்டப் பட்ட 100 அடிப் புராதனக் கோபுரம் சாய்ந்து மண்ணாய்ப் போனது குறிப்பிடத் தக்கது.  இந்தியப் பிரதம மந்திரி நரேந்திர மோதி 4 விமானங்களையும், மருத்துவச் சாதனங்களுடன் 40 பேர் அடங்கிய உதவிக் குழுவையும் அனுப்பி வைத்தார்.

    2nd Image

    இமயமலை அரங்கின் அடியில் இயங்கும் அடித்தட்டு நகர்ச்சிகள் [Tectonic Plate Movements] & கோர விளைவுகள்

    நேபாளத்தில் ஏன் பூகம்பம் நேர்ந்தது ?  இமயமலை அடித்தளத்தில் இருக்கும் கீழ்நழுவும் இந்திய அடித்தட்டு, மேலேறும் யுரேசிய அடித்தட்டு  [Subducting Indian Plate & Overriding Eurasia Plate] ஆகியவற்றுக்கு இடைபே ஏற்படும் நகர்ச்சி முறிவால் எழும்பிடும் அதிர்ச்சிகளே நிலநடுக்கமாய்த் தளமட்டத்தில் நேர்கின்றன. இந்திய அடித்தட்டு ஆண்டுக்கு 45 மில்லி மீடர் [45 mm] குறுகி வருகிறது.  அப்போது இமாலய சிகரம் உயர்ச்சி அடையும். காட்மண்டுக்கு 250 கி.மீ. [150 மைல்] அருகில் இதுவரை M6 அளவுக்கு மேற்பட்ட 4 பூகம்ப நிகழ்ச்சிகள்  100 ஆண்டுகளில் நேர்ந்துள்ளன.  [1988 (M6.9) .நிகழ்ச்சியில் 1500 பேர் இறந்தவனர்.]  1934 இல் மிகப் பெரிய பூகம்பம் M8.1 அளவில் நேர்ந்து 10,600 பேர் உயிரிழந்தார்.  1905 இல் காங்கரா [M7.5], 2005 இல் பயங்கரக் காஷ்மீர் பூகம்பம் [M7.6] நேர்ந்து இரண்டிலும் மொத்தம் சுமார் 100,000 பேர் மாண்டனர்.  காஷ்மீர் பூகம்பம் பின்னால் இக்கட்டுரையில் விளக்கப் பட்டுள்ளது.  1950 அஸ்ஸாமில் நேர்ந்த [M8.6] பூகம்பம் பேரளவு உயிரிப்பும், சேதாரமும் தந்துள்ளது.

    Road Damage -1

    நேபாள் பூகம்ப விளைவுகள்

    இமாலய மலைச் சரிவுகளை ஆட்டிய நி அதிர்ச்சிகள்

    விடுதலை அடைந்த பிறகு 2005 அக்டோபர் 8 ஆம் தேதி முதன்முதல் வரலாற்றில் மிகக் கோரமான ஓர் அசுரப் பூகம்பம் பாகிஸ்தான் வடகிழக்குப் பகுதியை 7.6 ரிக்டர் உச்ச அளவில் குறைந்தது 140 தடவைகள் குலுக்கி ஆட்டி பெரும் காங்கிரீட் கட்டிடங்களைக் கூட கீழே தள்ளிச் சிதைத்து விட்டது! பாகிஸ்தான் பற்றிக் கொண்ட காஷ்மீரில் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 54,000 ஆக அக்டோபர் 16 இல்ல் கணிக்கப் பட்டது, இப்போது 79,000 [அக்டோபர் 20] ஆக ஏறி யிருப்பதாக அறிவிக்கப் பட்டது. குளிர்காலம் விரட்டிக் கொண்டு வரும் இந்த தருணத்தில் குறைந்தது 2 மில்லியன் மக்களுக்குத் தங்க வீடுகள் இல்லாமல், தகர்ந்து போன தளங்களில் நின்று தவிக்கிறார்கள்! இந்தியக் காஷ்மீர்ப் பகுதியில் 2000 பேர் மரணம் அடைந்ததாகத் தெரிகிறது. 2005 செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் அடித்த சூறாவளி கேட்ரினாவின் ஆற்றலை விட 20 மடங்கு மிகையான பேராற்றல் கொண்டது, காஷ்மீர் பூகம்பம் என்று அமெரிக்காவின் நாளிதழ் வாஷிங்டன் போஸ்ட் கூறுகிறது! சென்ற 2004 ஆண்டு இறுதியில் இந்தோனேசியா கடற்தட்டில் ஆட்டம் நேர்ந்து உலகப் பெரும் சுனாமிப் பேரலைகள் தாக்கித் தென்னாசியக் கடற்கரைப் பகுதிகளில் 230,000 பேர்கள் மாண்டு போயினர்! அரை மில்லியனுக்கு மேற்பட்டவர் தமது இல்லங்களை இழந்தனர். 1991 ஆம் ஆண்டு அடித்த சூறாவளிப் பேய்மழையில் பங்களா தேசப் பகுதிகளில் மட்டும் சுமார் 140,000 மக்கள் மடிந்தனர் என்று அறியப் படுகிறது.

    Nepal Earthquake -2

    நேபாள் பூகம்ப விளைவுகள்

    காஷ்மீர் ஓர் பெரும் மயானப் புதை பூமி யானது!

    மலை அடுக்குப் பாதைகள் மற்றும் வீதிகளில் நிலநடுக்கத்தால் சரிவுகள் ஏற்பட்டு இல்லங்களை இழந்த மக்கள் எங்கும் தப்பியோட முடியாமல் முடங்கிப் போனார்கள். அத்துடன் உதவி செய்வதற்கு வாகனங்கள் எவையும் வரமுடியாமல், மருத்துவ வசதிகள் நெருங்க இயலாது மாந்தர்கள் பசியாலும், குளிராலும் தவியாய்த் தவித்துப் போனார்கள். உண்ண உணவும், அருந்த நீரும் உதவி செய்வோர் நடந்தே கொண்டுவர வேண்டிய தாயிற்று. காயமடைந்த மலைப்புற மக்களுக்கு மருத்துவ சிகிட்சை அளிக்கவும், உணவு, போர்வை, கூடாரச் சாதனம் போன்றவை சுமக்கவும் ஹெலிகாப்டர்கள் அநேகம் தேவைப் பட்டன. அவையாவும் அன்னிய நாடுகளிலிருந்து வருவதற்குத் தாமதமாகி மக்களின் பொறுமை எல்லை கடந்தது. பாகிஸ்தான் பிடித்த காஷ்மீரின் தலைநகரான முஸாஃபராபாத்தில்தான் எண்ணற்ற இல்லங்கள் தகர்ந்து, பல்லாயிரம் பேர் மாண்டதுடன், தங்கிடக் கூடாரங்கள் இல்லாது மக்கள் அவதியுற்றனர். பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்திலிருந்து 40 மைல் தூரத்தில் முஸாஃபராபாத் உள்ளது. மழை பெய்து எல்லா இடங்களும் ஈரமானதுடன், இராணுவப் படையினர் அமைத்த தற்காலியப் பாதைகளும் சகதியாகிப் போக்குவரத்துகள் தாமதப்பட்டன!

    House damages -6

    நேபாள் பூகம்ப விளைவுகள்

    குளிரில் சிரமப்படும் சிறுவர்கள், வயதானோர், காயம் பட்டோர் மற்றும் குடும்பத்தார்கள் தங்குவதற்கு ஆயிரக்கணக்கான கூடாரங்கள் தேவைப்பட்டன! குறைந்தது 200,000 கூடங்கள் உடனே வேண்டி யிருந்தன. ஆனால் ஆரம்பத்தில் திட்டமிடப் பட்டவை 500,000 கூடாரங்கள். அமெரிக்க அரசாங்கம் அனுப்பிய கூடாரங்கள்: 1500. ஆனால் அவற்றைத் தூக்கிச் செல்லும் போக்குவரத்துச் சாதனங்கள் 500 எண்ணிக்கைக்கு மேலாக முதல் நாள் கொண்டு போக முடியவில்லை. அன்னிய நாடுகள் அனுப்பிக் கைவசம் கிடைத்தவை மொத்தம்: 30,000 மட்டுமே! என்ன உதவிகள் கிடைத்தாலும் காஷ்மீர்ப் பூகம்பம் வரலாற்றில் ஒரு கொடும் பூகம்பமாக எடுத்துக் கொள்ளப்படும் என்று பாகிஸ்தான் அதிகாரி ஒருவர் கூறுகிறார். முதலிரண்டு நாட்கள் இடிந்த வீடுகளைப் அப்புறப்படுத்தி உயிர் உள்ளோரைத் தூக்குவதிலும், மாண்டோரைப் புதைப்பதிலும் காலம் சென்றது. ‘காஷ்மீர் ஓர் பெரும் மயானப் புதை பூமியானது, ‘ என்று அரசாங்க அதிகாரி சிகந்தர் ஹயத் கான் கூறினார்!

    House damages -5

    நேபாள் பூகம்ப விளைவுகள்

    நிலையற்று நடுங்கும் இமய மலைத் தொடர்ச்சிகள்

    பூகோளத்தில் உள்ள நீர்ப் பரப்பில் அட்லாண்டிக் கடலின் அகற்சி நீளமாகி வருகிறது! பசிபிக் பெருகடலின் இடைவெளிச் சிறுகச் சிறுகச் சிறுத்துக் கொண்டு வருகிறது! நிலப் பகுதிகளை எடுத்துக் கொண்டால் ஈரோப்பில் ஆல்ப்ஸ் மலைத்தொடர் வளர்ச்சியாகி உயரம் இன்னும் அதிகமாகிக் கொண்டே போகிறது! பூதக் கண்டம் ஆஃப்பிரிக்கா ஒட்டிக் கொண்டிருக்கும் செங்கடல் வடமுனையில் அறுந்து பிளக்கப் போகிறது! ஹவாயி தீவுகள் வடமேற்குத் திசையில் மெதுவாகப் பெயர்ந்து ஜப்பான் தீவுகளை நோக்கிச் செல்கின்றன! வட அமெரிக்காவும், ஐரோப்பாவும் எதிர்ப்புறம் நகர்ந்து விலகி இடைவெளியை அகற்சி யாக்கி வருகின்றன! அமெரிக்காவில் காலிஃபோர்னியா கடற்கரையில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் நகரம் நகர்ந்து, வடபுறமாகச் சரிந்து கொண்டிருக்கிறது! இமாலயச் சிகரங்களை இந்தியாவின் கனத்த உபகண்டத் தட்டு வடபுறம் அழுத்தி, அழுத்தி அவற்றின் உயரத்தை மிகையாக்கிய வண்ணமா யிருக்கின்றன! தென்புறத்தில் உள்ள இந்தியக் கடற்தட்டும், வடக்கில் இருக்கும் யுரேசியத் தட்டுடன் முட்டி மோதிக் குதிரை ஏறி, நிலநடுக்கம் உண்டாவது அடிக்கடி நேர்ந்து வரும் இயற்கையின் அபாயத் திருவிளையாடல்கள் !

    House damages -1

    நேபாள் பூகம்ப விளைவுகள்

    அந்த நகர்ச்சி நியதியில் இந்திய உபகண்டம் ஆண்டுக்கு 1.6 அங்குலம் [40 மில்லி மீடர்] வடபுறம் நோக்கித் தள்ளப்படுகிறது! இவ்விரு தட்டுகளும் முட்டி மோதும் போது, கீழிருக்கும் அடித்தட்டு [Crust] புடைத்து மேல் எழுகிறது! அப்போது மலை உச்சிகள் இன்னும் உயர மாகின்றன. இந்தியத் தட்டு வடக்குத் திசையில் நகரும் போது, அடித்தட்டு தணிந்து யுரேசியத் தட்டை மேலே உயர்த்திக் கீழே நுழைகிறது! இந்த நியதிதான் ‘தட்டுக் கீழ்நுழைவு ‘ [Plate Subduction] என்று சொல்லப்படுகிறது. இரண்டு தட்டு களுக்கு இடையே நிகழும் இந்த குவியழுத்த நகர்ச்சியால் [Compressive Motion] இடை நழுவல் [Slip] ஏற்பட்டுப் பூகம்பங்கள் உண்டாக்கும் புவித்தட்டு உந்துப் பழுதுகள் [Thrust Faults] அமைகின்றன. அவற்றில் நமக்கு நன்கு அறிமுகமான முப்பெரும் பழுதுகள்: 2004 இல் சுனாமி உண்டாக்கிய இந்தோனேசியா கடற்தட்டுப் பழுது, கலிஃபோர்னி யாவின் ஆண்டிரியா பழுது, இமயமலைத் தொடரின் இமயப் பழுது ஆகியவை முக்கியமானவை.

    House damages -3

    நேபாள் பூகம்ப விளைவுகள்

    இந்திய உபகண்டத்தின் வடகிழக்குப் பகுதியும், வடமேற்குப் பகுதியும் பல நூற்றாண்டுகளாக பூகம்பத் தாக்குதலுக்குப் பலியாகிப் படு சேதாரங்கள் விளைந்துள்ளன. கி.பி.894 இல் நேர்ந்த M:7.5 [Mercalli Scale] நிலநடுக்கத்தில் சுமார் 1,50,000 மக்கள் மாண்டதாக அறியப்படுகிறது. பிறகு 1668 இல் M:7.6 பூகம்பம். 1819 இல் M:7.5 பூகம்பத்தில் 3200 பேர் மரணம். 1935 இல் குவெட்டாவில் நேர்ந்த M:8.1 அளவு பூகம்பத்தில் 30,000 பேர் மாண்டதாக அறியப்படுகிறது. 1985 இல் M:7.5 அளவு, 1991 இல் M:6.7, 1993 இல் M:7.0 பூகம்பங்கள் ஆஃப்கானிஸ்தான் ஹிந்துகுஷ் மலைத்தொடரில் உண்டாகிப் பலர் மரணம். 1997 இல் பலுஜிஸ்தானில் M:7.3, 2001 ஆண்டு குஜராத்தில் M:7.6, மரணம்:11,500 பேர், 2002 இல் கில்ஜித்-ஆஸ்டோர் பகுதியில் M:6.3 அளவு பூகம்பம், 15,000 பேர் வீடிழந்தனர்.

    House damages -7

    நேபாள் பூகம்ப விளைவுகள்

    காஷ்மீர்ப் பூகம்பப் பிரச்சனைகள் எவ்விதம் கையாளப்பட்டன ?

    அக்டோபர் 8 ஆம் தேதிப் பூகம்பத்தில் பாகிஸ்தான் இந்தியக் காஷ்மீர்ப் பகுதிகளில் வீடுகள், சாலைகள் பள்ளிக்கூடங்கள் நொறுங்கித் தரை மட்டமாயின! பள்ளியில் படித்துக் கொண்டிருந்த சின்னஞ் சிறு பிள்ளைகள் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிருடன் புதைபட்டனர். கிரேன் அகப்பைக் கரங்களைக் கொண்டு உடைந்த கட்டிடத் துண்டு, துணுக்குகளைப் புரட்டி உயிரோடு உள்ளவர்களைக் காப்பாற்ற முடியாமல் போனது, துக்கப் பட வேண்டிய நிகழ்ச்சியே! காங்கிரீட் கட்டிடங்கள் துண்டுகளாய் உடைந்தன! கிராமத்து மண் குடில்கள் யாவும் தவிடு பொடியாயின! இந்திய, பாகிஸ்தான் அரசாங்கங்கள் உடனடிப் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்ததாகப் பறைசாற்றினாலும், மெய்யாக உதவிப் படைகள் உடனே அனுப்பப்பட வில்லை! இருபுறத்திலும் துன்புற்ற மக்களுக்குப் பணிபுரியச் செல்லும் உதவிப் படையினர் தம் வாகனங்களை சிதைந்து போன பாதைகளில் செலுத்த முடியவில்லை! இந்தியக் காஷ்மீர்ப் பகுதியில் உள்ள ஸ்கி [Skee] என்னும் ஊர் இராணுவ முகாமிற்கு அருகில் இருந்தாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐந்து நாட்கள் கழித்தும் நீர், உணவு, மருந்து எதுவும் கிடைக்க வில்லை என்று அவ்வூர் மக்கள் புகார் செய்ததாக அறியப்படுகிறது.

    Nepal Earthquake -1

    நேபாள் பூகம்ப விளைவுகள்

    காயம் அடைந்தோர் காயத்தின் தீவிரத்திற்கு ஒப்ப வரிசைப்படி நிற்க வைக்கப்பட்டு சிகிட்சை செய்ய ஹெலிகாப்டரில் ஏற்றிச் செல்லப்பட்டனர். 20,000 பேர் வசிக்கும் பாகிஸ்தானில் உள்ள பலகாட் என்னும் நகர் முற்றிலும் தகர்ந்து மண்ணாகி மழையில் புழுதியானது! 24 மைல் தூரத்தில் இருக்கும் இராணுவப் படையினர் பலகாட் நகரை வந்தடைய மூன்று நாட்கள் ஆயின! அந்த நகரில் 200 பிள்ளைகள் படித்துக் கொண்டிருந்த பள்ளிக்கூடம் நொறுங்கிப் போய் மாணவர்கள் அனைவரும் அடைபட்டுக் கிடந்தனர்! தாமதமாக வந்த இராணுவப் படையினரைக் கண்டு வெகுண்ட பெற்றோர்கள் கல்லடி கொடுத்து வெகுமதி தந்ததாக அறியப் படுகிறது! உதவிப் படையினர் அளித்த பிஸ்கட், போர்வை களுக்குச் சண்டை போட்டிருக்கிறார்கள் பாதிக்கப்பட்டோரில் பலர்! ஆனால் யாருக்கும் காத்திருக்காது சாதாரணப் பணியாட்கள் கோடாரி, கடற்பாறை ஆகியவற்றை எடுத்துக் கொண்டு கால்நடையில் மலைச் சரிவுகளில் ஏறி காயம் பட்டோருக்கு முதல் உதவியும், சிக்கிக் கொண்டவரை வெளியில் தூக்கக் கை கொடுத்தும் பலர் முன்வந்து உதவி செய்தது பாராட்டப் படவேண்டியது.

    ajay

    நேபாள் பூகம்ப விளைவுகள்

    தகவல்:

    1. Time Magazine Article, ‘Nightmare in the Mountains, ‘ By: Tim McGrik (Oct 24, 2005)
    2. The Kashmir Earthquake By Washington Post (Oct 12, 2005)
    3. Himalayan Tectonic Setting Earthquake Program.
    4. Earthquake History & Scismicity in the Northwest Region of Indian Sub-continent. [http://asc-india.org/scismic/pakistan.htm]
    5. New York Times -As Pakistan Reels, Musharraf Pleads for International Aid By: Somini Sengupta (Oct 8, 2005)
    6.  [http://earthquake.usgs.gov/earthquakes/ February 9, 2015]
    7.  http://en.wikipedia.org/wiki/Earthquake  [February 26, 2015]
    8. http://en.wikipedia.org/wiki/Plate_tectonics  [April 13, 2015]
    9. http://www.reuters.com/article/2015/04/25/us-quake-nepal-collapse-idUSKBN0NG07B20150425  [April 25, 2015]
    10. http://earthquake.usgs.gov/earthquakes/eventpage/us20002926#general_summary [April 25, 2015]
    11. http://en.wikipedia.org/wiki/2015_Nepal_earthquake  [April 25, 2015]
    12. http://blogs.wsj.com/indiarealtime/2015/04/25/nepal-quake-in-maps-tweets-and-pictures/  [April 25, 2015]
    13. http://news.sky.com/story/1471939/massive-earthquake-in-nepal-kills-over-1000 [April 25, 2015]

    +++++++++++++++++++++++++++++++

    S. Jayabarathan [jayabarathans@gmail.com] (April 25, 2015)

     

    Attachments area
    Preview YouTube video Plate Tectonics — Evidence of plate movement

    Plate Tectonics — Evidence of plate movement

    Preview YouTube video Plate Tectonics – A Documentary

    Plate Tectonics – A Documentary

    Preview YouTube video Earthquake strikes Nepal and Tremors felt in India | ABN News (25 – 04 – 2015)

    Earthquake strikes Nepal and Tremors felt in India | ABN News (25 – 04 – 2015)
    Share
  • காதலின் பொன்வீதியில் – 1

    மீனாட்சி பாலகணேஷ்.

     

    காதல், காதல், காதல் இன்றேல்
    சாதல் சாதல் சாதல் – ( குயில் பாட்டு)

    என்றான் பாரதி, இதனை ஏன் இவ்வாறு கூறினான் என நான் பலமுறை யோசித்ததுண்டு. காதல் எனில் அன்பு, பக்தி, விருப்பம், ஆவல், வேட்கை, காமம் எனவெல்லாம் பொருள் கொள்ளலாம். இங்கு நாம் பார்க்கப் போவது ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையிலான அன்பு அல்லது காதல் என்பதனைப் பற்றித் தான். ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான காதல் உணர்வை இயற்கை படைத்ததற்குக் காரணம் ஒரு இனம் அழிந்து விடாமல் தொடர்ந்து வளர ஏதுவாக இருப்பதற்கும், அதற்கான முதல் படியாக இரு பாலரிடையும் அன்பு செழித்து வளர்வதற்காகவும் தான் எனலாம். ஆகவே தான் காதல் போயின் எல்லாம் போயிற்று, சாதல் ஒன்றே எஞ்சி நிற்பது என்றானோ பாரதி!

    இத்தகைய காதல் உணர்வு நூதனமானது. சிறிது சிந்தித்துப் பார்த்தால் இத்தனை புலவர்கள், எழுத்தாளர்கள் ஆகியோர் காதலைப் பற்றியே விதம் விதமாக ஏன் எழுதிக் குவித்துள்ளனர் என ஆராயலாம்! காதல் சம்பந்தமான உணர்வுகள் மனித குலத்துக்கு மட்டுமே உரிமையானதா என அறுதியிட்டுக் கூற இயலவில்லை. இக்கட்டுரையின் நோக்கமும் அதுவல்ல. காதல் சம்பந்தப்பட்ட அழகிய மென்மையான உணர்வுகள் பற்றி கற்ப கோடி காலங்களாக இருந்து வரும் இனிய நயங்களைப் பகிர்ந்து கொள்வது தான் இதன் நோக்கம்.

    ********************************************

     

    மண்ணுள் இழிந்த விண்மேகம்

    rama

    கண்ணோடு கண்ணிணை நோக்கி இதயங்கள் ஒன்றோடு ஒன்று கலந்து விட்ட நிலை. அன்புடை நெஞ்சங்கள் காதலில் ஒன்றுபட்டு விடுகின்றன. சீதையின் கண்முன் தோன்றி, கருத்தைக் கவர்ந்து, சிந்தையில் புகுந்து எண்ணத்தில் கலந்து நின்று விட்டான் அண்ணல். அவன் யாரென்று தெரியாத நிலையில் அவள் கலக்கம் கொள்கிறாள். உள்ளத்தைப் பறிகொடுத்தாயிற்று. எண்ணத்தில் நிறைந்தவனுடன் வாழ்க்கையை இணைத்துக் கொள்ள வேண்டுமல்லவா?

    ‘யாரவர்? அவரை எங்ஙனம் அறிந்து கொள்வேன்?’ எனப் பதைக்கிறாள்.

    காரிருள் இரவு; மிதிலாநகரின் கன்னிமாடத்தில் உறக்கமின்றி விழித்திருக்கிறாள் சீதை. உள்ளத்தைக் கொள்ளை கொண்டு சென்றவனின் நினைவு சுட்டெரிக்கிறது. தாபம் மிகுகின்றது.

    கீற்று நிலா வானில் பளீரிடுகின்றது; அதன் மெல்லொளியில் தொலைவில் மலை முகடுகள் தெரிகின்றன. ரசிக்க வேண்டிய இந்த அழகு இவளுக்குப் பெரும் துன்பத்தைத் தருகிறது. அத்துன்பத்தின் நடுவிலும் இயற்கையின் அழகைத் தன் இன்னுயிரைக் கவர்ந்தவனுக்குப் பொருத்தி நோக்கி இன்பம் காண்கிறாள்.

    “அந்த மேருமலையை எடுத்து நாண் பூட்டியது போன்ற ஒரு பெருத்த வில்லுடன், அதனைப் பற்றிய கையும், தூண்கள் போன்ற தோளும் கொண்டு, அம்புகள் செருகப் பெற்ற அம்பறாத் தூணியும், ஒளி மிகுந்த இந்தக் கீற்று நிலாவைப் போன்ற பூணூல் அணிந்த மார்பும் ஆகிய இவற்றைக் கொண்டவனை மீண்டும் காண முடிந்தால் இழந்த எனது உயிரை நான் பெற்றவளாவேன் அல்லவோ,” என மறுகுகிறாள்.

    கம்பன் கவிநயம் ஈண்டு நம் கருத்தைக் கொள்ளை கொள்கிறது. காதலை மட்டும் இங்கு அவன் பாடவில்லை; சீதையின் பிரிவுத் துயரை மட்டுமே இங்கு அவன் கூறவில்லை; இதை ஒரு வாய்ப்பாகக் கொண்டு அண்ணலின் அழகு வடிவை இன்னுமொரு முறை சொற்களில் வடித்துச் சுவைக்கிறான். நாமும் சுவைக்கத் தருகின்றான்! அவன் தோளும் கையும் முப்புரி நூல் அணிந்த பரந்த திருமார்பும் சீதை மட்டுமல்ல, கம்பன் உள்ளத்தையும் கொள்ளை கொள்ளும் அழகு வாய்ந்தனவாம்!

    நாண் உலாவு மேருவோடு நாண் உலாவு பாணியும்
    தூண் உலாவு தோளும் வாளியூடு உலாவு தூணியும்
    வாள் நிலாவின் நூல் உலாவும் மாலை மார்பும் மீளவும்
    காணல் ஆகும் ஆகின் ஆவி காணல் ஆகுமே கொலாம்.

    இத்தகைய உருவ கம்பீரம் கொண்ட அண்ணல் இவள் உயிரைக் கவர்ந்து சென்று விட்டான். யார் இவன் எனத் திகைக்கிறாள்; காதலில் கசிந்து உருகுகிறாள்; புலம்புகிறாள்; புரியவில்லை; ஒன்றும் விளங்கவில்லை. காதல் நோய் மிகுகின்றது. அத்துணைத் தாபமும் தன்னை இந்தப் பாடு படுத்திச் சென்றவனின் பால் சினமாக மாறுகின்றது. “என்ன ஆண்மகன் இவன்? கொடியவனான மன்மதன் பஞ்சினை அழிக்கும் தீயைப் போல கூரிய அம்புகளைத் தன் வில்லிலிருந்து என் உயிரைப் பற்றி வதைக்குமாறு எய்கிறான். இதனால் நான் படும் பாடு சொல்லவொணாது. இத்தருணத்தில் ஆண்மை நிறைந்த ஒரு ஆண்மகனுக்கு அழகு என்ன? வருந்தும் பெண்களின் வருத்தத்தை நீக்கி அபயம் அளிப்பதே. ஆனால் இந்தப்பிரான் அவ்வண்ணம் செய்திலனே! இவனது ஆண்மை என்ன தன்மையதோ!” என வெறுப்பும் சலிப்பும் மீதூரப் புலம்புகின்றாள் சீதை.

    பஞ்சு அரங்கு தீயின் ஆவி பற்ற நீடு கொற்ற வில்
    வெஞ் சரங்கள் நெஞ்சு அரங்க வெய்ய காமன் எய்யவே
    சஞ்சலம் கலந்த போது தையலாரை உய்ய வந்து
    அஞ்சல் அஞ்சல் என்கிலாத ஆண்மை என்ன ஆண்மையே.

    கம்பன் ஒருவனே காகுத்தனைப் போற்றவும் சீதையின் சார்பில் அவன் ஆண்மையையே பழிக்கவும் உரிமை பெற்றவன். இராமன் பால் கொண்ட பேரன்பே அவனை இவ்வாறு எழுதப் பணித்தது எனலாம். சீதை அண்ணல் பால் கொண்ட அன்பின் உயர்வையும் அதனாலேயே உரிமை கொண்டு அவனைப் பழிப்பதையும் தனது இந்த ஒரு பாட்டில் கவினுற வடித்துள்ளான்.

    எப்படிப் புலம்பியும் என்ன செய்தும் சீதை தனது உள்ளத்தாபமும் உடல் வெம்மையும் தணிந்திலள். பார்த்துக் கொண்டிருக்கும் போதிலேயே கருமேகங்கள் வந்து வானில் சூழ்ந்து கொண்டு விட்டன. ஒரு பெரிய மின்னற்கொடி மேகங்களின் குறுக்காக வெட்டியபடி ஓடித் தரையில் இறங்கி இழிந்து மறைகின்றது! இவை சீதைக்குத் திரும்பவும் அந்தக் கார்மேனி அண்ணலையும் அவன் செயலையும் நினைப்பூட்டுகின்றன.

    என்ன வியப்பு! ஆச்சரியமான ஒற்றுமை! இந்த மின்னலையும் மேகத்தையும் போல சில கணங்களிலேயே அண்ணலும் அவள் கண்முன் தோன்றி மறைந்து விட்டனே! கம்பன் தன் கதையின் நாயகனுக்காக எடுத்தாளும் ஒவ்வொரு உவமையும் அவனது செயலுடன் வெகு இயல்பாகப் பொருந்துவது என்ன விந்தை? தன் கருத்தை சீதையின் கருத்தாக ஏற்றிக் கூறுகிறான்:

    “அந்த விண்ணிலே தோன்றிய கார்மேகம் மின்னலெனும் முப்புரி நூலுடன் இந்த மண்ணில் இழிந்ததைப் போல அவர் வந்து என்முன் தோன்றி சில கணப் பொழுதுகளில் சென்றும் விட்டாரே!

    “யாரவர்? சில கணங்களின் நோக்கிலேயே என் உள்ளம் அவர்பாற் சென்று விட்டதே! என் எண்ணத்தில் குடி கொண்டுள்ளார். இருப்பினும் அவரை யார் என அறிய வொண்ணாது தவிக்கின்றேனே!

    “என் கண்களுக்கு உள்ளேயே இருக்கின்றார். அவரை நான் வெளியே விடவே இல்லை! அவ்வாறு இருந்தும் என் கண்களால் அந்தத் திருவுருவைக் காண இயலாது இருக்கின்றேனே! ஏன்?” சீதை தவிக்கிறாள்; பரிதவிக்கிறாள்.

    அந்த வடிவழகை, ஆண்மையின் கம்பீரத்தை, காதலின் கருணை நோக்கினை மீண்டும் கண்டு களிக்க அவள் உள்ளம் விழைகின்றது. இயலாமையினால் கடலெனக் குமுறிக் கொந்தளிக்கின்றது.

    விண்ணுளே எழுந்த மேகம் மார்பின் நூலின் மின்னொடு இம்
    மண்ணுளே இழிந்தது என்ன வந்து போன மைந்தனார்
    எண்ணுளே இருந்த போதும் யாவரென்று தேர்கிலேன்
    கண்ணுளே இருந்த போதும் என்கொல் காண்கி லாதவே.

    இராமனின் வடிவழகை இவ்வாறு சீதை வாயிலாகப் போற்றும் கம்பனின் கவிநயத்தைக் கண்டு மகிழ்கிறோம். அவளுடைய காதல் ஏக்கத்தையும், தாபத்தையும், துயரத்தையும் இதைவிட தத்ரூபமாக யாரால் எடுத்தியம்ப இயலும்? எண்ணத்தில் இருந்தும் யாவரென்று அறிய இயலாத தவிப்பும், கண்ணுள் இருந்தும் காண இயலாத கொடுமையும் மிக மிகப் பெரிதல்லவா?

    நமது எண்ணங்களும் சீதையுடன் நின்று சுழல்கின்றன!

    ********************************************

    picture source: dollsofindia.com

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 163

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 05: அடைக்கலக் காதை

    அந்த ஏட்டினைக் கையில் ஏந்திக் கொண்டு
    கடை வீதிகளிலும்
    வணிகர் வாழும் மாட மாளிகைகள் உள்ள           paarpani
    வீதிகளிலும் சென்று
    “தானம் செய்து என் பாவத்தைப் போக்கி
    நீவிர் புண்ணியம் பெறுக” என்றே கூறிச்
    சென்று கொண்டிருப்பாள் அப்பார்ப்பனப் பெண்.
    நீயும் அவளைக் கூவியே அழைத்து
    அவள் கையேட்டைப் பற்றியும் துன்பத்தைப் பற்றியும்
    கேள்விகள் கேட்டாய்.
    அவளும் தான் உற்ற துயர் உன்னிடம் சொன்னாள்.

    “இந்தப் பொருள் வரும்படி எழுதிய
    செய்திகளையுடைய  ஏடு இதுதான்.
    இதனை வாங்கிக்கொண்டு
    உம் கைப்பொருள் தந்து
    எம் கடுந்துயர் நீக்குக” என்றாள்.

    நீயும் அவளிடம், ‘அஞ்சாதே!
    உன் கடுந்துயர் யான் போக்குவேன்.
    உன் மனதில் உள்ள துயரம் நீக்குக” என்றே கூறி,
    அக்கணமே வேதம் ஓதும்
    அந்தணர் எழுதிய அறநூல்களில் கூறியபடி
    அவள் துயரம் நீங்கும் வண்ணம்
    தானங்கள் பல செய்தாய்.

    கானகம் சென்ற அவள் கணவனையும்
    அவளிடம் சேர்த்துச்
    சுருங்காது பெருகும் செல்வமும் கொடுத்து
    அவர்களை நல்வாழ்க்கைப் படுத்தினாய்.
    அத்தன்மை வாய்ந்த
    உன்னை விட்டு விலகாத
    செல்வம் உடையவன் நீ!
    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 60 – 75
    http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/
    pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-adaikalakathai–

    படத்துக்கு நன்றி: கூகுள்

     

    Share
  • பெண்ணே…நீ!

    -பாவலர் கருமலைத்தமிழாழன்

    குளிர்நிலவே   எனப்புகழும்
    குயில்மொழிக்கு   மயங்காதே
    குளிரெரிக்கப்   புறப்பட்ட
    குங்குமத்தின்   தீக்கதிர்நீ !

    மானென்னும்   புகழ்மொழியால்
    மண்ணிலுயிர்   துறக்காதே
    தேனுண்ணும்   நரிகள்தம்
    தோலுரிக்கும்   பாய்புலிநீ !

    கயலென்னும்   புகழ்மொழியால்
    கலங்கிவலை   துடிக்காதே
    புயலாகி   வலையறுக்கப்
    புறப்பட்ட   திமிங்கிலம்நீ !

    கற்பென்னும்   பெருமைக்குக்
    கல்தன்னை   அணைக்காதே
    விற்பனையின்     பொருள்மாற்ற
    வெடிக்கின்ற   கந்தகம்நீ !

    படிதாண்டாப்   பத்தினியாய்ப்
    படிக்குள்ளே   கருகாதே
    படிசமைக்கும்   ஓநாயைப்
    பதைக்கவைக்கும்   தீச்சுடர்நீ !

    தாய்மைக்கு   வித்தென்னும்
    தவிப்பினிலே     புதையாதே
    பேய்மைக்கு   மண்பிளக்கும்
    பிரளயத்தின்   விருட்சம்நீ !

     

    Share
  • உன்னையறிந்தால் (2)

    நிர்மலா ராகவன்

    உன்னையறிந்தால்

    ஆர்வம் — ஒரு கோளாறா?

    கேள்வி: என் பள்ளி ஆசிரியை ஒருவருக்கு என்னைப் பிடிப்பதேயில்லை. நான் நிறைய கேள்விகள் கேட்கிறேனாம். `சும்மா, ஏன், எதற்கு என்று கேட்டுக் கொண்டிருக்காதே,’ என்று கண்டிக்கிறார்கள். இதில் என் தவறு என்ன? புரியவில்லையே!

    பதில்: சிறு வயதிலேயே, `எல்லாம் விதி. அல்லது கடவுள் கொடுத்தது,’ என்று எதையும் ஏற்றுக்கொள்ள உங்கள் ஆசிரியை பழக்கப்படுத்தப்பட்டு இருப்பார்கள்.

    பெரியவர்கள் சொல்வதை இம்மியளவுகூட மீறாமல், அப்படியே கடைப்பிடிக்க வேண்டும் என்பது நெடுங்காலமாக இருந்த வழக்கம். இதனால், பலருடைய கற்பனைத்திறன் நசுக்கப்பட்டுவிட்டது வருந்தத்தக்க விஷயம்.

    ஆப்பிள் எப்போதுமே மரத்திலிருந்து தரையில்தான் விழுந்து கொண்டிருந்தது. `இது எப்படி?’ என்று யோசிக்க ஒரு நியூடன் வேண்டியிருந்தது. அவரும் பிறரைப்போல், `இது இயற்கை’ என்று ஏற்றுக்கொண்டு, வாளாவிருந்தால், நமக்கு எவ்வளவு நஷ்டம்!

    `நாம் வழக்கமாக இப்படித்தான் செய்து வருகிறோம். இதை மாற்றுவானேன்?’ என்ற கேள்வி முன்னேற்றத்துக்கு வழிவகுக்காது.

    மிருகங்களை வேட்டையாடி, பச்சையாகவே உண்டுவந்த ஆதிமனிதன் உணவைப் பக்குவமாகச் சமைக்க நெருப்பைப் பயன்படுத்த ஆரம்பித்தது எப்படி தெரியுமா?

    ஒரு முறை அவர்கள் குடியிருந்த இடம் நெருப்புக்குப் பலியானபோது, உள்ளேயிருந்த இறைச்சி மட்டும் எளிதில் உண்ணத் தக்கவாறு பக்குவமாகியிருந்தது. பின்னர், மெனக்கெட்டு வீடுகளைக் கட்டி, எரித்து, உணவைப் பதப்படுத்தினார்கள்! `மிகுந்த பிரயாசையுடன் கட்டிய வீட்டை எரிக்காமல், உணவை மட்டும் சமைக்க முடியுமா?’ என்ற யோசனை ஒருவருக்கு எழ, நெருப்பில் சமைக்கும் பழக்கம் நடைமுறை ஆயிற்று.

    கடவுள், விதி, இயற்கை — ஏதோ ஒன்று எல்லாவற்றையும் நிச்சயிக்கிறது. அவைகளைத் தெரிந்துகொள்ள நாம் ஆர்வம் காட்டினால், அது துரோகம் இல்லை. நமக்கும் மூளை இருக்கிறது என்று பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

    மாணவர்களின் முன்னேற்றத்திற்காக, அவர்களைச் சுயமாகச் சிந்திக்கும்படிச் செய்ய வேண்டும் என்று கல்வித் திட்டங்கள் வகுப்பார்கள். ஆசிரியர்களும் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுவார்கள். அதை ஒட்டி, ஏதாவது பரீட்சை இருந்தால், தாம் கற்றவைகளை எழுதுவார்கள். அத்துடன் முடிந்தது.

    பயிற்சி முடிந்தவுடன், அவர்கள் தாம் வளர்க்கப்பட்ட விதத்திலேயேதான் நடப்பார்கள். இல்லாவிட்டால், அவர்களும், அவர்களது பெற்றோரும் எங்கோ தவறு இழைத்திருக்கிறார்கள் என்று ஆகிவிடுமே!

    ஓர் உண்மைச் சம்பவம்: வியாசத்திற்கான விஷயங்களை ஆசிரியை வகுப்பில் விவாதித்தபடி அலசிவிட்டு, அத்துடன் தன்னுடைய தனிப்பட்ட கருத்து ஒன்றையும் எழுதிய `துணிச்சலான’ மாணவி, தன் மதிப்பெண்கள் குறைக்கப்பட்டதற்காக வருந்தவில்லை. `இது என் தவறல்ல, ஆசிரியையிடம்தான் ஏதோ கோளாறு!’ என்று அலட்சியப்படுத்திவிட்டாள்.

    இம்மாதிரியான ஆசிரியைகளைச் சமாளிக்கும் வழி: வகுப்பில் வாயே திறக்கக்கூடாது. சொல்லப்படுவதை நாம் ஏற்கிறோமோ இல்லையோ, எல்லாவற்றிற்கும் தலையாட்டி வைக்க வேண்டும்.

    சகமாணவிகளிடமும் இப்படிச்செய்தால், நிறையபேர் நம் நட்பை நாடுவார்கள்.

    ஆனால், ஓட்டப் பந்தயத்தில் முதலாவதாக வருபவர் எப்போதும் தனியாகத்தான் இருப்பார். பின்னால் வருபவர்கள்தாம் கும்பலாக வருவார்கள்.

    திறமைசாலியாக, வெற்றி பெற்றவராக முன்னால் நிற்க வேண்டுமா, இல்லை, எல்லாருக்கும் இனியவளாக, சராசரியாகவே இருந்துவிட வேண்டுமா என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

    Share
  • வலிகளோடு வாழ்க்கை!

    -துஷ்யந்தி, இலங்கை

    விதியென்னும் நூலிலே
    விளையாடும் பொம்மையாய்ச்
    சுமக்கின்றோம் சுமைகளைச்
    சூழ்நிலைக் கைதிகளாய்…!

    பூங்காவன வாழ்க்கையதைத்
    தினம் தாக்கும் புயலாய்க்
    கற்றுக்கொண்ட பாடங்கள்
    கண்ணீரின் பல சுவடுகள்..!

    கண்விழிக்கா மழலைகளும் – உன்
    கைப்பிடியில் மாற்றமில்லை
    கண்ணீரின் பாடங்களை- நீ
    கற்பிக்கவும் மறக்கவில்லை..!

    வையகத்தில் நாம் வாங்கிய
    வரமென்று நினைப்பதா..?
    இறைவனால் வையப்பட்ட
    மனித இனமென்று நினைப்பதா..???

    இன்முகத்தோடு எல்லாமும்
    ஏற்கவே பழகிவிட்டோம்
    புதிதான உலகத்தைக்
    காணவே துடிக்கின்றோம்..!

    பணமில்லா நம் உலகதைப்
    பார்ப்போர் இங்கே யாருமில்லை
    குணம் இருக்கும் சிலரையும்
    உலகம் செய்ய விடுவதில்லை..!

    பிறருக்குத் தினம் தொந்தரவாய்
    இருக்க நாமும் விரும்பவில்லை
    உடல் மண்ணில் மறையும் வரை
    உழைக்க  நாமும் மறப்பதில்லை..!

    இவையனைத்தும் இருந்தாலும்
    இயற்கை நம்மை விடுவதில்லை
    வெயிலுக்கும் மழைக்கும்
    பயந்து நாமும் இருப்பதில்லை..!

    ’நம்பிக்கை’ஒளிவிளக்காய்
    நம்வாழ்வில் இருந்தாலும்,
    வரவேற்பு விடுக்காத
    விருந்தாளியாய் தினம் நம்மை
    வாழ்த்திவிட்டுச் செல்கிறது
    வஞ்சகமில்லா வலிகள்…!!

     

    Share
  • இளைஞனே…!

    -றியாஸ் முஹமட்

    வாழ்க்கையை வாழடா,
    வாழ்ந்து நீ பாருடா…!!

    தடைகள் ஏதடா,
    தள்ளிப் போகாதடா…!!

    தேடல்கள் சுகமடா,
    தேடித்தான் பாரடா…!

    ஓடும் நதியடா,
    ஓடிப் பாயும் வேங்கையடா…!!                      man with lion

    பாயும் வெள்ளமடா,
    பாய்மரக் கப்பலடா…!!

    இளமையோ நெருப்படா,
    இரத்தமோ துடிப்படா…!!

    காதலோ கானலடா,
    கலைபயில முடியாதடா…!

    காலமோ பொன்னடா,
    கரைந்து விடுமடா…!!

    கல்வியே காலமடா,
    கருத்தினில் வையடா…!!

    உமக்கு ஏன் வெட்கமடா,
    உள்ளத்தில் ஏன் அச்சமடா..!!

    வறுமையை விரட்டடா,
    வரம்பு மீறாதடா…!!

    கைத்தொழில் பயிலடா,
    கை வரிசை காட்டுடா..!!

    களத்தில் இறங்கடா,
    களையைப் பிடுங்கடா…!!

    உறக்கமே போதுமடா
    உலகத்தை வெல்லுடா…!!

    உறவை மதியடா,
    உயர்ந்து செல்லடா…!!

    இறைவன் ஒருவனடா,
    இறையச்சம் வேணுமடா…!!

    வணக்கமே வாசலடா,
    வழிமறக்கக் கூடாதடா…!!

    தந்தவன் இறைவனடா,
    தலைக்கனம் ஏனடா…!!

    நாளே நமதடா,
    நம்பி நடவேடா..!!

    வாழ்கையை வாழடா,
    வாழ்ந்து நீ உயரடா…!!

     

    Share
  • தாகூரின் கீதங்கள் -5 உனக்கது வேடிக்கை

     

    ajay

    மூலம் : இரவீந்தரநாத் தாகூர்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

     

     
    எப்படி சூனியம் ஆக்குவது

    அப்பொருளை ?

    இப்படித்தான் அர்த்தம் என்பார் சிலர் !

    அப்படி முழுவது மில்லை

    என்பாரும் உளர் !

    மீண்டும் மீண்டும் வினாவி என்னைச்

    சீண்டுவார் அவர் !

    வியப்பில்லை உனக்கு அது

    வேடிக்கைதான் ! நீ

    யாரெனச் சொல் எனக்கு ?

    ஒளிந் திருப்பது எங்கு ?

    வீணாகத் தேடி உன்னை

    விண்டு போனதென் இதயம் !

    பயணி தேர்ந் தெடுத்துச் செல்லும்

    எந்தப் பாதைக்கும்

    இடையூறு எப்போதும் நீ

    இழைக்க வேண்டுமோ ?

    முடிவாக அடையும்

    குடிசை நோக்கிச் செல்லும்

    ஊர்ப்புறப் பாதையை

    மேற்கொள் வார் குடிசை மக்கள் !

    பச்சைப் புல் மேயச் செல்லும்

    பசுக்கள் கூட்டம் !

    குடத்தில் நீர் கொண்டு வருவார்

    நூறு முறை

    அதே பாதை வழியாக

    குமரிப் பெண்டிர் !

    ************

    Original Source: A Tagore Testament,

    Translated From Bengali By Indu Dutt

    Jaico Publishing House (1989)

    121 Mahatma Gandhi Road,

    Mumbai : 400023

    *********************

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(69)

    -செண்பக ஜெகதீசன்

    நெய்யா லெரிநுதுப்பே மென்றற்றாற் கௌவையாற்
    காமம் நுதுப்பே மெனல். (திருக்குறள்-1148: அலரறிவுறுத்தல்)

    புதுக் கவிதையில்…

    காமத் தீயது
    காட்டுத்தீ போன்றது,
    நெய்யை ஊற்றி
    நெருப்பை அணைக்கமுடியாது…!

    ஊர்ப்பேச்சு நெய்யால்
    காதலர்தம்
    காம நெருப்பைக்
    கடுகளவும் அணைக்கமுடியாது…!

    குறும்பாவில்…

    ஊற்றும் நெய் அணைக்காது தீயை,
    ஊர்ப்பேச்சு
    அழித்திடாது காதலை…!

    மரபுக் கவிதையில்…

    எரியும் நெருப்பை அணைத்திடவே
    எடுத்து நெய்யை ஊற்றினாலும்,
    எரிவ தன்றி அணையாதே
    எழுந்து நன்றாய் எரியுமதே,
    தெரிந்தே காதலை ஊரார்கள்
    தூற்றி எங்கும் பேசிடினும்,
    பெருகு மன்றிக் குறையாதே
    பற்றிடும் தீக்கு நெய்போலே…!

    லிமரைக்கூ…

    எரியும் நெருப்பினை அணைத்திடாது நெய்,
    வந்த காதலை அழிக்காதே
    வளர்த்துவிடும் ஊராரின் பேச்செனும் பொய்…!

    கிராமிய பாணியில்…

    ஊத்தாத ஊத்தாத நெய்ஊத்தாத
    தீய அணைக்க நெய்ஊத்தாத,
    எரியிற தீய எரியவுடும்
    ரொம்ப நல்லா எரியவுடும்..

    காதல்கதயும் இதுதானே,
    ஊரார் பேச்சி ஒரமாவும்
    உண்மக் காதல அழிக்காம
    நல்லா வளர வைக்குமே,
    நெய்யால வளரும் தீபோல
    நல்லா வளரும் காதலுமே…!

     

    Share
  • அறிவெனப்படுவது…..

    கட்டாரி

     

    என்னைப் போலத்தான்

    அவனும் பிறந்திருப்பான்..

     

    எனக்குப் போலவே

    அவனுக்கும் மேல்நோக்குப்பல்

    முளைத்திருக்கலாம்….

     

    எனக்குப் போலவே

    அவனுக்கும் ஏழாம் மாத முடிவில்

    வயிற்றுப்போக்கும்

    வந்திருக்கலாம்…

     

    என்னைப் போலவே

    அவனும் இடதுபுறமாகவே

    ஒருக்களித்திருக்கலாம் ..

     

    அரிசி பரப்பி நான்

    அ… எழுதியிருந்த நன்னாளில்

    தொடுதிரையில் A

    எழுதியிருந்த அவன் “ஸ்மார்ட் கிட்”

    ஆகிவிட்டிருந்தான்………………

     

     

     

    Share
  • ஒரு பேருந்தின் கதறல்!

    -ரா. பார்த்தசாரதி

    மூலை  முடுக்கெல்லாம் ஏற்றிச் செல்கின்றேன்
    ஏழைக்கும், நடுத்தர வர்க்கத்திற்கும் சிறந்த வாகனம்   bus-blue
    ஓய்வின்றி எந்நாளும் உங்களுக்கு உதவுகிறேன்
    மாணவர்களை இலவசமாக ஏற்றிச்செல்கின்றேன்!

    நான் சுமக்கும்போது  ஜாதி மதம் பார்ப்பதில்லை
    தடவழிப் பலகையும் திருக்குறளையும் சுமக்கின்றேன்
    நடத்துனரும், ஓட்டுனரும்  என்னை  ஆளுபவர்களே
    இடை இடையே ஏறி இறங்கும் பயணிகளும் நண்பர்களே !

    என் அருமையும் சிறப்பும் பொது மக்களுக்குத் தெரிவதில்லை
    பொதுநலப்  போராட்டத்திலும் மொழிப் போராட்டத்திலும்
    உங்கள் நண்பன் என்று நான் கூறிக் கொண்டாலும்
    கோபம் கொண்டு உடைத்துத் தீயும் வைக்கிறார்கள் !

    உங்கள் சொத்தினை  நீங்களே  அழிக்கலாமா?
    நான் கதறினாலும் கண்டுகொள்ளாமல் இருக்கலாமா?
    என்னை உங்கள் நண்பனாய்க்  கருதுங்கள் !
    நான் உங்கள் நாட்டின்  சொத்தென நினையுங்கள் !

     

    Share
  • மிருக வதை

    நாகேஸ்வரி அண்ணாமலை

    பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்ததிலிருந்து தடாலடியாகப் பல சட்டங்களை இயற்றிக்கொண்டிருக்கிறது.  தான் செய்ய விரும்பும் பல காரியங்களுக்கு மத்திய அரசில் போதிய பெரும்பான்மை இல்லாததால் அரசு ஆணையாகப் பிறப்பித்துக்கொண்டிருக்கிறது.  மாநிலங்களில் இப்போது பி.ஜே.பி. ஆட்சி நடத்தும் மஹாராஷ்ட்ரா, ஹரியானா ஆகிய மாநிலங்களில் பசுக்களைக் கொல்வதை சட்டவிரோத செயலாக்கி அந்தச் சட்டத்தை மீறுபவர்களுக்கு ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை என்றும் அறிவித்திருக்கிறார்கள்.  பசுக்கள் கிருஷ்ணனின் நண்பன் என்பதாலும் இந்து மதத்தில் பசுக்கள் புனிதமாகக் கருதப்படுவதாலும் பசுக்களைக் கொல்வது இந்து மதத்திற்கு விரோதமான செயல் என்று கருதிப் பசுக்களைக் கொல்வது பாவம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.  இந்தப் பசு வதைச் சட்டத்தை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுரை கூறுகிறார்கள்.

    பசு மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள் பசு வதையைத் தடுக்கும் இந்தச் சட்டத்தை வன்மையாகக் கண்டித்து தங்கள் சுதந்திரத்தில் அரசு தலையிடுவதாகக் கூறுகிறார்கள்.  பல பொருளாதார நிபுணர்கள் பல கலாச்சாரங்கள், மதங்கள், செல்வநிலைகள் இருக்கும் இந்தியாவில் எல்லோரும் மாட்டிறைச்சி சாப்பிடக் கூடாது என்று சொல்வது சரியில்லை என்றும் இந்தியப் பொருளாதாரத்தையே இது பாதிக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.

    வேதங்களில் போற்றப்படுவதால் பசுக்களையும் இனப்பெருக்கத்திற்குத் தேவைப்படுவதால் எருதுகளையும் கொல்லக்கூடாது என்று பி.ஜே.பி. அரசு சட்டம் இயற்றியிருக்கிறதாம்.  இந்த இரண்டு பிராணிகளை மட்டும் மனிதன் வதைக்கு உள்ளாக்கக் கூடாது என்று கூறுபவர்கள் ஏன் மற்றப் பிராணிகளை விட்டுவிட்டார்கள்?  மாடுகளோடு நெருங்கிய தொடர்புடைய எருமைகளைக் கூட ஏன் மனிதன் வதைக்கக் கூடாது என்ற வர்க்கத்தில் சேர்க்கவில்லை?  அதோடு மற்ற மிருகங்கள் என்ன பாவம் செய்தன, அவற்றை மனிதன் வதைத்தால் அது தவறில்லை என்று ஏன் நினைக்கிறார்கள்?  வேதங்களில் மனிதர்கள் மாட்டிறைச்சி, குதிரை இறைச்சி ஆகியவற்றையும் சாப்பிட்டிருக்கிறார்கள் என்பது இன்னொரு விஷயம்.

    இவர்கள் கூறும் காரணங்கள் தவிர மற்ற எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன எந்த பிராணிகளையும் கொல்லக் கூடாது என்பதற்கு.  கொல்லாமையைப் பற்றித் திருவள்ளுவர் கூறியிருப்பதை இங்கு நினைவுகூருவோம்.

    பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

    தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.

    கற்றறிந்தவர்கள் சொல்லும் வாழ்க்கை நெறிகளில்  இருப்பதை மற்றவர்களோடு பகிர்ந்தும் மற்ற உயிர்களைக் கொல்லாமலும் உண்பதே சாலச் சிறந்தது.

    இதற்கு இன்னொரு வகையாகவும் அர்த்தம் கொள்ளலாம்.  பகுத்துண்டு என்று வள்ளுவர் சொல்வதை இயற்கையில் கிடைப்பதை நாம் பிராணிகளோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் அர்த்தப்படுத்தலாம் என்றும் தோன்றுகிறது.

    தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான் பிறிது

    இன்னுயிர் நீக்கும் வினை.

    உன் உயிரை இழக்க நேர்ந்தாலும் மற்ற எந்த உயிரையும் எடுக்கும் காரியத்தைச் செய்யாதே.  இதை உன் உயிரைக் காக்கப் பிற உயிரைக் கொல்லாதே என்று சொல்வதாகவும் விளங்கிக்கொள்ளலாம்.

    கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி

    எல்லா உயிரும் தொழும்.

    எந்த பிராணிகளையும் கொல்லாதவனை, பிராணி இறைச்சியை உண்ண மறுத்தவனையும் உலகத்து உயிர்கள் எல்லாம் கைகூப்பி வணங்கும் என்பது இதன் கருத்து.

    (தமிழ்ப் புலவர் திருவள்ளுவரை சுவீகரித்துக்கொண்ட பி.ஜே.பி. இந்தியா முழுவதும் அவரைப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப் போவதாகவும் அவர்தான் இந்தியாவுக்கே வழிகாட்டி என்றும் கூறியதெல்லாம் என்னவாயிற்று?  தமிழ்நாட்டில் ‘அம்மா’ புராணம் தவிர மற்ற எந்தப் புராணத்தைக் கொண்டும் தமிழ் மக்களை ஓட்டுப் போடவைக்க முடியாது என்று புரிந்துகொண்டார்கள் போலும்!)

    எல்லாக் காலத்திற்கும் எல்லா சமூகங்களுக்கும் பொருந்துகிற திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர், எல்லா உயிர்களையும் நேசிப்பவர் கூறுவதை நாம் எவ்வாறு புறக்கணிப்பது?

    என்னோடு எட்டாம் வகுப்பில் படித்த ஒரு கிறிஸ்தவப் பெண் பைபிளில் ‘அடித்துப் புசி’ என்று கூறியிருப்பதாகவும் இறைவன் படைப்பில் உள்ள எல்லா ஜீவன்களையும் மனிதன் தன் தேவைகளுக்கு உபயோகித்துக்கொள்ளலாம் என்று கூறியிருப்பதாவும் கூறியிருக்கிறாள்.  நிச்சயமாக அன்பின் வடிவான இயேசு இப்படிக் கூறியிருக்க மாட்டார்.  அவர் கூறியதாக பின்னால் வந்தவர்கள் கூறியதுதான் பைபிளில் இருக்கும் அத்தனை போதனைகளும்.

    திருவள்ளுவர் கூறியது இருக்கட்டும்.  பிராணிகளின் ஊனைச் சாப்பிடுபவர்கள் அது எப்படி தங்கள் சாப்பாட்டுத் தட்டிற்கு வந்தது என்று எப்போதாவது எண்ணிப் பார்த்ததுண்டா?  அவர்கள் உண்ணும் ஊனுக்குரிய பிராணி வதைபட்டுத் தன் உயிரை இழக்கும்போது அது அவ்வளவு வேதனைப்பட்டிருக்கும் என்பதை எப்போதாவது உணர்ந்ததுண்டா?  உங்கள் கைகளில் காய்கறி, பழங்கள் நறுக்கும் சிறிய கத்தி பட்டு காயம் ஏற்பட்டால் எவ்வளவு வலிக்கிறது?  ஒரு சின்ன காயத்திற்கே அத்தனை வலி ஏற்படுகிறதென்றால் பிராணிகளின் கழுத்தையே வெட்டினால் அவற்றிற்கு எவ்வளவு வேதனை உண்டாகும்?  ஒரு நண்பரிடம் பிராணிகளுக்கு அவற்றைக் கொல்லும்போது எவ்வளவு வலிக்கும் என்று கூறியபோது அவர் அவை உயிரோடு இருந்தால்தானே அந்த வேதனையை உணர்ந்து நினைப்பதற்கு என்று கேட்டார்.  அவை உடனேயே இறந்துவிடுகின்றன என்றே எடுத்துக்கொண்டாலும் கொல்லப்படும்போது அவை அந்த வேதனையை உணராமல் போவதற்கு சாத்தியமே இல்லை.

    தாவரங்களுக்கு உயிர் இருக்கிறதே அவற்றைப் பறிக்கும்போது அவற்றுக்கு வேதனை ஏற்படுவதில்லை என்று எப்படிக் கூறுகிறீர்கள் என்பது ஒரு சாரார் வாதம்.  தாவரங்களைப் பறிக்கும்போது அவை இரத்தம் சிந்துவதில்லை, வேதனையால் துடிப்பதில்லை.  இந்த ஒரேயொரு காரணத்திற்காகவாவது பிராணிகளை வதைக்காமல், கொல்லாமல், தின்னாமல் இருக்க வேண்டியது மனிதனின் கடமை.

    சட்டம் இருக்கிறதோ இல்லையோ மனிதன் தானாக எப்போது மிருக வதையை நிறுத்தப் போகிறான்?

    Share
  • சிரித்துவிடு !

    -பா. ராஜசேகர்

    உலக
    மொழிகளிலே
    உயிர்மொழியே
    தமிழென்பேன்!

    தமிழ்
    வார்த்தைகளில்
    உயிரோட்டம்
    பல கண்டேன் !

    சிரித்துவிடு
    இதன் அர்த்தம்
    உங்களுக்கும்
    தெரியுமன்றோ ?

    சிரி;
    த்து…
    விடு ?
    பிரித்துச் சொன்னால்
    இதன் அர்த்தம்
    வேறு அன்றோ ?

    இதை
    உணர்த்தும்
    உள்ளர்த்தம்
    உள்ளதையா!

    ஒன்று
    சேர்ந்த
    வார்த்தையிலே
    உள்ளது போல்!

    நாம்
    ஒற்றுமையில்
    வாழ்வதுதான்
    சிறந்ததையா !

    பிரித்தெடுத்த
    எழுத்து போல
    பிரிவினைகள்
    நமக்குத் தீமையல்லோ ?

     

    Share