குறளின் கதிர்களாய்…(69)
-செண்பக ஜெகதீசன்
நெய்யா லெரிநுதுப்பே மென்றற்றாற் கௌவையாற்
காமம் நுதுப்பே மெனல். (திருக்குறள்-1148: அலரறிவுறுத்தல்)
புதுக் கவிதையில்…
காமத் தீயது
காட்டுத்தீ போன்றது,
நெய்யை ஊற்றி
நெருப்பை அணைக்கமுடியாது…!
ஊர்ப்பேச்சு நெய்யால்
காதலர்தம்
காம நெருப்பைக்
கடுகளவும் அணைக்கமுடியாது…!
குறும்பாவில்…
ஊற்றும் நெய் அணைக்காது தீயை,
ஊர்ப்பேச்சு
அழித்திடாது காதலை…!
மரபுக் கவிதையில்…
எரியும் நெருப்பை அணைத்திடவே
எடுத்து நெய்யை ஊற்றினாலும்,
எரிவ தன்றி அணையாதே
எழுந்து நன்றாய் எரியுமதே,
தெரிந்தே காதலை ஊரார்கள்
தூற்றி எங்கும் பேசிடினும்,
பெருகு மன்றிக் குறையாதே
பற்றிடும் தீக்கு நெய்போலே…!
லிமரைக்கூ…
எரியும் நெருப்பினை அணைத்திடாது நெய்,
வந்த காதலை அழிக்காதே
வளர்த்துவிடும் ஊராரின் பேச்செனும் பொய்…!
கிராமிய பாணியில்…
ஊத்தாத ஊத்தாத நெய்ஊத்தாத
தீய அணைக்க நெய்ஊத்தாத,
எரியிற தீய எரியவுடும்
ரொம்ப நல்லா எரியவுடும்..
காதல்கதயும் இதுதானே,
ஊரார் பேச்சி ஒரமாவும்
உண்மக் காதல அழிக்காம
நல்லா வளர வைக்குமே,
நெய்யால வளரும் தீபோல
நல்லா வளரும் காதலுமே…!