-துஷ்யந்தி, இலங்கை
விதியென்னும் நூலிலே
விளையாடும் பொம்மையாய்ச்
சுமக்கின்றோம் சுமைகளைச்
சூழ்நிலைக் கைதிகளாய்…!
பூங்காவன வாழ்க்கையதைத்
தினம் தாக்கும் புயலாய்க்
கற்றுக்கொண்ட பாடங்கள்
கண்ணீரின் பல சுவடுகள்..!
கண்விழிக்கா மழலைகளும் – உன்
கைப்பிடியில் மாற்றமில்லை
கண்ணீரின் பாடங்களை- நீ
கற்பிக்கவும் மறக்கவில்லை..!
வையகத்தில் நாம் வாங்கிய
வரமென்று நினைப்பதா..?
இறைவனால் வையப்பட்ட
மனித இனமென்று நினைப்பதா..???
இன்முகத்தோடு எல்லாமும்
ஏற்கவே பழகிவிட்டோம்
புதிதான உலகத்தைக்
காணவே துடிக்கின்றோம்..!
பணமில்லா நம் உலகதைப்
பார்ப்போர் இங்கே யாருமில்லை
குணம் இருக்கும் சிலரையும்
உலகம் செய்ய விடுவதில்லை..!
பிறருக்குத் தினம் தொந்தரவாய்
இருக்க நாமும் விரும்பவில்லை
உடல் மண்ணில் மறையும் வரை
உழைக்க நாமும் மறப்பதில்லை..!
இவையனைத்தும் இருந்தாலும்
இயற்கை நம்மை விடுவதில்லை
வெயிலுக்கும் மழைக்கும்
பயந்து நாமும் இருப்பதில்லை..!
’நம்பிக்கை’ஒளிவிளக்காய்
நம்வாழ்வில் இருந்தாலும்,
வரவேற்பு விடுக்காத
விருந்தாளியாய் தினம் நம்மை
வாழ்த்திவிட்டுச் செல்கிறது
வஞ்சகமில்லா வலிகள்…!!

Leave a Reply