நிர்மலா ராகவன்

உன்னையறிந்தால்1

பெண்களை வம்புக்கிழுத்தல்

கேள்வி: இளமைப் பருவத்தில் பெண்களைக் கேலி செய்து, வம்புக்கிழுத்தால்தான் ஆண்கள் வலியவர்களா?

அது என்ன, வதையா? வேடிக்கைதானே?

பதில்: ஆணாக இருப்பவனுக்கு உடல் வலிமையும், உத்தியோகமும்தான் பலம் அளிப்பவை என்கிறார், MICHAEL KORDA என்பவர், தனது MALE CHAUVINISM : HOW IT WORKS என்ற புத்தகத்தில். மேலும், தற்கால மனிதன், இந்த இரண்டு குணங்களும் இல்லாவிட்டாலும், வாய்ச்சவடால்தான் பெண்களை ஈர்க்கும், அடிமைப்படுத்தும் தனது ஆயுதம் என்று தப்பாக அர்த்தம் புரிந்துகொள்கிறான் என்கிறார் இவர்.

உணர்வு ரீதியிலோ, அல்லது உடல் ரீதியிலோ வலிமை குன்றியவர்கள்தாம் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்பதை நான் சொந்த அனுபவத்தில் கண்டிருக்கிறேன். தங்களையே பலமாக உணர அவர்கள் எடுக்கும் நடவடிக்கைதான் பெண்களைக் கேலி செய்வது.

பதின்ம வயதில், தம் வயதொத்தவரைச் சிரிக்கவைக்க எதிர்ப்படும் பெண்களையெல்லாம் வார்த்தைகளாலேயே துன்புறுத்தும் ஒருவன், அதனால் அப்பெண்கள் அடையும் பயத்தையும், அதிர்ச்சியையும் கண்டு, `நான் பெரிய வீரன்!’ என்று பெருமிதம் கொள்கிறான்.

இவர்கள் பெரும்பாலும் கும்பலாக இயங்கும் பெண்களிடம் வாலாட்டுவதில்லை. தனியாக ஒரு பெண் மாட்டிக்கொண்டால் அவ்வளவுதான். அவள் எதிர்த்தால், தன்மீது அவள் கவனம் திரும்பிவிட்டதே என்ற மகிழ்ச்சியுடன், இன்னும் மோசமாக செயல்படுவார்கள்.

இத்தகைய அவதிக்கு உள்ளாகும் சில பெண்கள் எதுவும் நடக்காதமாதிரி தம்போக்கில் இருந்துவிடுவார்கள். ஏனெனில், எத்தனை வயதானாலும் ஆணை நம்பித்தான் இருக்கவேண்டும் என்று நம்ப வைக்கப் பட்டிருப்பார்கள். அதனால், எதிர்க்கும் பெண்ணை இவர்களால் புரிந்துகொள்ள முடிவதில்லை. உதவவும் மாட்டார்கள்.

வதை என்பது உடல் ரீதியில் இருக்கும். என்ன பெயர் சொல்லி அழைத்தாலும், வாய்ச்சொல்லோ, உடல்வதையோ, பெண்களுக்குத் துன்பம் விளைவிப்பதுதான். தன்னம்பிக்கை குன்றி, மேலும் மோசமான நடத்தையை ஆண்களிடமிருந்து மறுப்பின்றி ஏற்கிறார்கள் இதற்கு உள்ளான பெண்கள்.

நான் பல பெண்களிடம் இதைப்பற்றி கலந்து பேசியிருக்கிறேன். அவர்களுடைய போக்கிற்குப் பணியாவிட்டால், இத்தகைய ஆண்கள் கெஞ்சுவார்கள், சண்டை போடுவார்கள், பிறகு வருத்தமாகக் காட்டிக்கொள்வார்கள் — ஒரு பெண்ணின் இயல்பான தாய்மைக்குணம் இளகிவிடும் என்ற நம்பிக்கையில்!

இவர்களது போக்கை ஒப்புக்கொள்ள முடியாத ஒழுக்கமான ஆண்கள் அவமானத்துடன் சுருங்குவார்கள். அவர்களால் தட்டிக்கேட்க முடியாது. வெகு சிலர், தம் நடத்தையால் அப்பெண்ணுக்கு ஆதரவு வழங்குவார்கள்.

கேளுங்கள் கதையை.

நான் ஆசிரியையாக இருந்தபோது, ஒரு பயிற்சிக்காக ஒரு மாத காலம் வேற்றூரில் ஹாஸ்டலில் தங்க வேண்டிய நிலை. என்னைத் துரத்தித் துரத்தி அடித்தான் ஒருவன். (கையால் அல்ல).

நான் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது, நாற்காலியின் இரு பக்கங்களையும் பிடித்துக் குனிந்து, `என் மகளே!’ என்று என் தோளில் கைபோட வந்தான, முதல் நாளே. எனக்கு அப்போது வயது 47!

நான், `என்னடா.., அப்பா?’ என்று கேலியாக அழைத்தபோது, அதிர்ந்தான்.

பிறகுதான் அறிந்தேன், பாலியல் ஈதியில் ஒரு ஆண் ஈர்க்கப்படும்போது, தனது உள்ளுணர்வை மறைக்க, தந்தையென தன்னைக் காட்டிக்கொள்வான் என்று.

வாராந்திர விடுமுறையில் மூன்று பேருடன் இவன் வீடு திரும்பும்போது, `நான் அவளைக் காதலிக்கிறேன். அவளுக்கு என்மேல் வெறுப்பு. இருந்தாலும்..,’ என்று சொன்னதாக, உடன் பயணித்த ஆசிரியை என்னிடம் தெரிவித்தாள், என்னை எச்சரிக்கும் நோக்கத்துடன்.

`இவனுக்கென்ன பைத்தியமா!’ என்று யோசித்தேன். திருமணம் நிச்சயமாகியிருந்த மகள் எனக்கிருந்தது எல்லாருக்கும் தெரியும். (இப்படித் தொந்தரவு அளிக்கும் விஷயத்தில், பெண்ணின் வயது ஆணுக்கு ஒரு பொருட்டே இல்லையாம்).

அதன்பின் எப்போது எங்கள் வகுப்பு மாற்றப்பட்டாலும், அவனுடன் பயணம் செய்த ஒரு சீன ஆசிரியர், ஓடி வந்து என் பக்கத்து இருக்கையில் அமர்ந்துகொள்வார். எனக்கு அவரைச் சரியாகக்கூட தெரியாது.

இறுதியில் அவர் போக்கு புரிந்தது. எனக்குப் பாதுகாப்பு அளித்திருக்கிறார்!

கடைசி நாள், 450 ஆசிரியர்கள் இருந்த சபையில், `என்ன வேண்டுமானாலும் பேசலாம்,’ என்று அறிவிக்கப்பட்டபோது, அதற்கு மேலும் பொறுக்க முடியாது எழுந்தேன்.

மேடையிலிருந்த ஒலிபெருக்கியில், `பெண்கள் அலங்கரித்துக்கொள்வது ஆண்களுக்காக மட்டுமில்லை. அவளுக்கு அது பிடித்தமான விஷயம் என்பதால். அவள் தனியாக நடப்பதும், பிறருக்கு அழைப்பில்லை. வீணாக ஏன் தொந்தரவு செய்கிறார்கள் சிலர்? Please leave her alone,’ என்று வேண்டினேன் மலாய் மொழியில். உணர்ச்சிப்பெருக்கில், வார்த்தைகள் விட்டு விட்டு வந்தன.

அப்படியும் என் ஆத்திரம் தீரவில்லை. `சக ஆசிரியையிடமே இப்படி நடந்துகொள்பவர்கள் தம்மிடம் பயிலும் மாணவிகளை என்ன பாடுபடுத்துவர் என்று நினைக்கவே பயமாக இருக்கிறது. அதிர்ஷ்டவசமாக, ஒவ்வொரு கேடுகெட்ட ஆணுடன் ஒரு நல்ல ஆணையும் படைத்திருக்கிறார் கடவுள். இத்தருணத்தில் எனது நண்பருக்கு நன்றி சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்!’ என்று அவர் பெயரைக் குறிப்பிட்டு முடித்தேன், கண்ணீர் பெருக.

அதன்பின், என் எதிரில் வந்தவன் முகத்தில் அப்படியொரு அவமானம், சுய பரிதாபம். முகத்தை 180 டிகிரி திருப்பிக்கொண்டான்.

`அவனுக்கு எதற்கு பரிதாபப்படுகிறாய்? He asked for it!” என்றார்கள் எல்லாரும்.

`இதையெல்லாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும்,’ என்று அறிவுரை வழங்கினார் ஒருவர்.

ஒரு விரிவுரையாளர்,`ஆசிரியத் தொழிலில் இப்படியெல்லாம் நடக்க இவர்களுக்கு வாய்ப்பில்லை. அதான்!’ என்று என்னைச் சமாதானப்படுத்த முயன்றார்.

`இந்த கஷடத்துக்குத்தான் நான் அலங்காரமே செய்துகொள்வதில்லை. குண்டாக இருந்தால், எவனும் கிட்டே வரமாட்டான்!’ — இது ஒரு சாதுவான பெண்.

நீங்கள் எப்படி?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.