காந்தத்தின் ஈர்ப்பினிலே கறள் பிடித்த தகரமொன்று கணப்பொழுதும் தாமதிக்காது கண்டவுடன் கவர்வதைப் போல் கைப்பிடியில் உணர்வொன்று உன் கைப்பட்டதும் தோன்றுதடா…
வயற்காட்டில் அந்நாளில் சிந்திய வியர்வையை இன்றும் நினைவூட்டிச் செல்லுதடா… இன்னும் உழைத்துவாழ எண்ணம் என்னில் தோன்றுதடா…
முதுமையின் தனிமையில் உன் முகம் பார்த்து வருகையில் பல கோடி இன்பங்கள் என் மனதெங்கும் ஓடுதடா… பிறப்பின் அர்த்தமும் உன் செல்லப் பார்வையில் தெரியுதடா…
கண் மூடும் தருணத்தில் உன் கைப்பிடி மண்பட என்னுயிர் உன்னோடு உண்டென்று தோன்றுதடா… உன் கைப்பட்ட மண் என்மீது படுகையில் என்னுயிர் நிச்சயம் சொர்க்கத்தைக் காணுமடா…!
வெறுமையாய்க் கிடந்த வார்த்தைகள் எல்லாம் கவிஞனின் பேனைபட அழகுக் கவியாவதுபோல் நீ தொட்ட இன்பம் என் வாழ்க்கைக்கு அர்த்தம் சொல்லிப் போகுதடா அளவில்லா இன்பத்தை என்னிலே பாய்ச்சுதடா…!!
எனது பெயர் துஷ்யந்தி கருப்பையா இலங்கை மலையக மண்ணையும், பண்டாரவளையைப் பிறப்பிடமாகவும், வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட நான் ஓர் மருந்தாளராகப் பணி புரிகின்றேன்.
சிறுவயதிலிருந்தே கட்டுரை, கவிதை, தனி இசைப்போட்டிகள் என்பவற்றில் ஆர்வமாக இருந்தேன். தமிழ் மொழித்தின போட்டிகள் சாகித்திய விழாக்கள் என்பவற்றில் கலந்துள்ளேன். அகில இலங்கை தழிழ் மொழித்தின போட்டிகளான கட்டுரை, பாவேதல் தனி என்பவற்றில் முதலாம், இரண்டாமிடங்களைப் பெற்றுள்ளேன்.
அது மட்டுமின்றி, வீரகேசரி நாளிதழின் குறுக்கெழுத்துப் போட்டிகளிலும், கட்டுரை, கவிதை, ஆக்கங்கள் என்பவற்றிலும் பங்குபற்றியுள்ளேன். சமீப காலத்திலிருந்து முகநூல் வாயிலாக பல வானொலி அலை வரிசைகளுக்கு கவிதை, கருத்துக்கள் என்பவற்றை வழங்கியுள்ளேன்.
முக்கியமாக சூரியன் எப். எம் இன் நேற்றைய காற்றுப்பக்கம், சக்கி எப்.எம் இன் மக்கள் கருத்துக்களம் என்பவற்றில் எனது படைப்புக்களைக் காணலாம்.
எழுத்துக்கள் என்றும் வலிமையானவை. நல்ல கருத்துக்கள் மக்களிவையே பகிரப்படவேண்டும். நம் சிந்தனைகள் தெளிவு பெற வேண்டும். தமிழ் மொழி என்றும் உயிர் வாழ வேண்டுமென்ற வகையில் எனது எதிர்கால எழுத்துலக இலட்சியங்களாகக் கொண்டு விழிப்புணர்வூட்டும் படைப்புக்களை தொடர்கின்றேன்.