Blog

  • உங்களை எழுப்ப வந்திருக்கிறேன் தோழர் தி க சி

    எஸ்.வி. வேணுகோபாலன்

    அன்பின் தி க சி அவர்களுக்கு,

    உங்களை எழுப்ப வந்திருக்கிறேன், உங்களது மீளாத் துயில் கலைத்து!

    unnamed (7)
    90 வயதை நிறைவு செய்வேனா என்று கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்து தொலைபேசி உரையாடல் ஒன்றின்போது கேட்டிருந்தீர்களே அய்யா, தொண்ணூறு என்ன, இதோ, இந்த மார்ச் 30 அன்று தொண்ணூற்று ஒன்றே நிறைவடைந்துவிட்டது எழுந்திருங்கள்…

    பேசுபவரிடம் அவரவர்க்கான வேலைத் திட்டம், எழுத்துக்கான ஊக்கம், அடுத்த புத்தகம் எப்போது என்ற கேள்வி தூண்டுகோல்…என ஒவ்வொரு பொழுதையும் பிறர் நலன் கருதியே எழுதியும், பேசியும், சிந்தித்தும் வந்த நீண்ட களைப்புதானோ ஓய்வை அறிவிக்க வேண்டி வந்தது……

    தாமிரபரணி தண்ணீரைக் குடித்து வளர்ந்தவரை பிறிதொருவர் வந்து எழுப்ப வேண்டி இராது. ஆனாலும் வேறு வழியின்றியே எழுப்ப வந்திருக்கிறேன், எங்கள் அய்யா, எழுந்து வாருங்கள்…

    செய்தித்தாள்கள் காத்திருக்கின்றன, பருவ இதழ்கள் வந்து குவிகின்றன…அது போன்றே நூல்களும். முக்கிய வாசகர் மரித்தபின்னும் அவர் வசித்த வீதியில் நூல்களும் எங்கே வந்து விழ என்று தடுமாறுகின்றன….தங்கள் பக்கங்களுக்குள் தாழ்போட்டுக் கொண்டு குமுறிக் குமுறி அழக்கூடும் புத்தகங்கள் . அதனாலேயே அவை விரைந்து மக்கியும் போகின்றன. எழுந்து வாருங்கள் எங்கள் தோழா…

    நீங்கள் கலந்து கொள்ளாமல் எழுத்தாளர் சங்க மாநாடு ஒன்று அண்மையில் உங்களைப் பேசியபடியேதான் நடந்து முடிந்தது. அலுவலகம் மூடப்பட்டாலும் என்றைக்கோ அதன் பெயரால் ஓங்கி அடித்து விழப்பெற்ற ரப்பர் ஸ்டாம்பில் அதன் நினைவுகள் நிலை பெற்றுவிடுவதுபோல், எத்தனை நெஞ்சங்களில் அறைந்து எழுதப் பட்டிருக்கிறது உங்கள் பெயர். ஆலது அழுந்தி நிறைந்திருக்கிறது உங்கள் குரல்! ஒரு மறுவாசிப்புக்காக எழுந்து வாருங்கள் எங்கள் காலத்தின் அரிய மனிதரே…

    நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்குழைத்தல்
    இமைப்பொழுதும் சோராதிருத்தல்……

    என்பதை அத்தனை தளர்ந்த வயதிலேயே உங்களிடம் வற்றாது குவிந்திருப்பதைப் பார்த்திருக்கிறேன்…உங்களது இளமைக்காலத்து அர்ப்பணிப்பின் பிரதிபலிப்பை மானசீகமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்….நேராக உங்களது வாய்மொழி மூலம் கேட்க வாருங்களேன் எழுந்திருந்து…

    நம்பிக்கை அளிக்கும் படைப்பாளிகள் அடுத்தடுத்து எழுதவேண்டும், நூலாக்கம் செய்யவேண்டும் என்று ஓயாது அன்பின் வற்புறுத்தல் தூண்டிக் கொண்டே இருக்கிறது, உங்கள் மறைவுக்குப்பின்னும் உங்களது ஆளுமையின் நிழல் பரந்து விரிந்திருக்கும் எங்கள் உள்ளத்தோப்பு. அதில் இன்னுமொரு நடை நடந்து பார்க்க எதிர்பார்த்திருக்கிறோம் உங்களை ஆர்வத்தோடு, வாருங்கள் தோழா….

    வயதின் கணக்கு எதற்கு, வாழ்க்கை வயதை வைத்தல்ல….
    சுடலை மாடன் தெரு ஏங்கிக கிடக்கிறது, எங்கள் அன்புத் தோழா….உங்களது காலடியின் ஓசை அதன் மரபணுவிற்குள் பாய்ந்து தங்கிவிட்டிருக்கிறது போலும்….வேறு யார் நடக்கையிலும், வேக வேகமாக ஒப்பிட்டுப் பார்த்து உதடு பிதுக்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தது….அதன் உணர்வுகளை ஊக்கப்படுத்தவேனும் உடனே வந்துதான் செல்லுங்கள் எங்கள் தோழா….

    *********

    Share
  • மனதில் நிறைந்த மக்கள் திலகம்

    –புவனா.

    எம்.ஜி.ஆர். எனும் மூன்றெழுத்து

    எம்.ஜி.ஆர். எனும் மூன்றெழுத்து…

    தமிழ் என்பது மூன்றெழுத்து.. சினிமா என்பது மூன்றெழுத்து.. அந்த தமிழ் சினிமா உலகில் தனக்கென தனி இடம் பிடித்த மூன்றெழுத்து..எம்.ஜி.ஆர். என்னும் சிகரம். அந்தச் சிகரத்திற்கு அறிமுகம் தேவையில்லை.

    இளம் சூரியன் உந்தன் வடிவானதோ..
    செவ்வானமே உந்தன் நிறமானதோ ..
    பொன் மாளிகை உந்தன் மனமானதோ ..
    என்ற பாடலுக்கேற்ப மாளிகை போன்ற மனதை உடையவர் எம்.ஜி.ஆர்.

    எம்.ஜி.ஆர். என்ற பெருமழை தந்த ஈரத்தால் இன்னும் வாடாமல் தழைத்தோங்கும் பயிர்கள் (உயிர்கள்) ஏராளம்.

    அவர் பிறந்தது இலங்கையாக இருந்தாலும் .. தஞ்சம் புகுந்தது தமிழ்நாட்டில். அதனால்தானோ என்னவோ “வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தின் பண்பு – அவரைத் தேடி வந்தவரை எல்லாம் வாழவைத்துக் கொண்டிருந்தார்.

    நடிகரில் மனிதர்: மனிதர்கள் நடிகராக வருவது இயல்பு. ஆனால், “நடிகருள் மனிதராக மக்கள் திலகம் வாழ்ந்தவர்”. இன்னும் சொல்லப் போனால் மனிதருள் கடவுளாகவே பலருக்குத் தென்பட்டவர்.

    அவரது தோற்றம் போலவே எண்ணமும் அழகு..அதனால்தான் புகழின் உச்சத்தையே அவர் அடைந்தார். திரை உலகில் அவர் தான் ஏந்தி வரும் ஒவ்வொரு வேடத்தையும் அதற்கான முயற்சிகளையும் தானே மேற்பார்வை காட்டினார்; உதாரணம் – அவர் எங்க வீட்டு பிள்ளையில் பாடி நடித்ததை பார்த்து மக்கள் அவரை தங்கள் வீட்டுப் பிள்ளையாகவே பார்த்தனர். எல்லா படங்களிலும் சண்டைக் காட்சிகள் அமைப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். ஏன்? தன்னை ஒரு பயில்வானாக காட்டிக்கொள்ளவா? இல்லை. ஸ்டன்ட் நடிகரின் பிழைப்பிற்காகவே தனது எல்லா படங்களிலும் சண்டைக் காட்சி வைத்த ஒரே நடிகர் நம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தான். மனிதாபிமானத்தின் காவலராக இறுதி வரை இருந்தார்.

    திரையில் அவர் நடித்த படங்களில் இடம்பெற்ற பாடல்களில் கருத்தாழம் நிறைந்தது. ஏதாவது ஒரு நல்ல விஷயத்தை மக்களுக்கு பாடல் மூலம் பறை சாற்றிக் கொண்டிருந்தார். அது 2 வயது குழந்தை முதல் 100 வயது வரையிலான வயோதிகர் வரை சென்று சேர்ந்தது.

    விழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும்..
    தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும்..

    என்ற வரிகளுக்கேற்ப தமிழினத்திற்காக பாடுபட்ட ‘மன்னாதி மன்னன்’ .. அவர்.

    அவரது பாடல்களைக் கேட்டாலே புத்துணர்வு பிறக்கும். அது காதல் பாடல்களாக இருந்தாலும் சரி.. நல் அறிவுரை கூறும் பாடல்களாக இருந்தாலும் சரி.. எதிர்மறை எண்ணங்களே இல்லாது பார்த்துக் கொண்டிருந்தார். பாடல்கள் மட்டுமல்லாமல் அவருடைய படத்தின் பெயரும் எதிர்மறை எண்ணத்தைத் தவிர்த்து .. உதாரணம் – தாய் சொல்லை தட்டாதே.. மன்னாதி மன்னன், நல்லவன் வாழ்வான், தர்மம் தலைகாக்கும், காவல்காரன், ஒளி விளக்கு, இன்னும் பல..

    இந்தப் பெயர்களால் ஒரு விதமான நம்பிக்கை மனதில் தோன்றுகிறதல்லவா.. தானும் உயர்ந்து தன்னை சார்ந்தவரையும் உயர்த்துபவன் தான் தலைவன். அந்த வகையில் எம்.ஜி.ஆர். ஒரு உண்மையான தலைவன்.

    எதோ நடித்தோம், பணம் சம்பாதித்தோம், மறைந்தோம் என வாழும் நடிகர்களுக்கு மத்தியில் அவரின் சிந்தனையே சொல்லானது.. சொல்லே செயலானது.. அந்த செயலும் புனிதமானது. அந்த வகையில் அவர் புத்தனாகவும் யேசுவாகவும் கண்ணில் தென்பட்டார்.

    அவர் பற்றி எழுதும் இந்தக் கட்டுரையில் எனக்கு தெரிந்த இருவரின் அனுபவங்களை இங்கே குறிப்பிடுகிறேன்.

    1. பட்டப்படிப்பு வரை படித்த இளைஞன் ஒருவர் – அரசாங்க உத்தியோகத்திற்கு முயற்சி செய்த காலத்தில், பல முறை தேர்வு எழுதியும் பலனில்லை. தேர்ச்சி பெறவில்லை. குடும்ப சூழலின் காரணமாக வேலைக்காக மிகவும் பாடுபட்ட காலமது. மனம் வெறுத்து இதுதான் கடைசிமுறை என நினைந்து தேர்வு எழுத சென்றார். அதில் ” உனக்குப் பிடித்த தலைவர் பற்றி” ஒரு கட்டுரை வரையும்படி கேள்வி இருந்தது. அவர் உடனே.. எம்.ஜி.ஆர். எனும் தலைவர் என்னும் தலைப்பில் எழுதினார். தன் மனதில் ஆழப் பதிந்திருந்த .. எண்ணி நெகிழ்ந்திருந்த விஷயங்களை எழுதினார். அந்த முறை தேர்ச்சி பெற்றார். அவரைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆர்.தான் தன்னை இன்னும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்.

    2. ஒரு முதியவர் .. ஒரு நாள் .. எம்.ஜி.ஆர் அவர்களிடம் வந்து உன்னை நம்பி என் பையனை படிக்க வைத்தேன். நீதான் வாழ வழி காட்ட வேண்டும் என்றார். உடனே எம்.ஜி.ஆர். முதலில் நீங்கள் சாப்பிடுங்கள்.. பின்னர் பேசுவோம் என்றார். அனால் முதியவர் விடவில்லை. தன் குறையை அழுது புலம்பிக் கொண்டிருந்தார். எம்.ஜி.ஆர். நீங்கள் சாப்பிடுங்கள்.. உங்கள் மகன் அடுத்த மாதம் அரசாங்க சம்பளம் உங்களுக்கு கொண்டு வருவான் என்றார். அதுபோலவே, அடுத்த மாதம் அந்தப் பெரியவர் தன் மகனின் சம்பளக் கவரோடு முதல்வரை (மக்கள் திலகத்தை) காண வந்தார்.

    எந்த முதல்வரையாவது இப்படி எளிதில் எளிய மக்கள் காண முடியுமா? ஆனால் மக்கள் திலகம் அவர்களை காண முடிந்தது. கர்ணன் மறுபிறப்பு எடுத்து இவராக இம் மண்ணில் தோன்றினாரோ என்று தோன்றுகிறது.

    இன்று பலர் அவரைப்போலவே நடித்து, ஆடிப்பாடிப் பிழைக்கிறார்கள். ஒரு சிலருக்கு அவருடைய வேடம் ஒத்துப்போகுமாயின், அதைக் காணும் பொது மக்களும், தாய் மார்களும், “வாங்கையா வாத்தியாரைய்யா’ என பெருமை கொள்வது அவரின் மீது உள்ள பற்றும் ஈடுபாடும் தான் காரணம். அவரை ஓர் அவதார புருஷனாகவே எண்ணியிருக்கிறார்கள்.

    தமிழ் நாட்டையும் தாண்டி மேல் நாடுகளில் அவரைப் பற்றித் தெரியும். இது ஒரு நடிகனாக இருந்ததால் மட்டுமலா.. அவர் செய்த ஒவ்வொரு நல்ல செயலும் அங்கும் எதிரொலித்தது. நடிப்பதைத் தொழிலாகவும், கொடுப்பதைக் கொள்கையாகவும் கொண்டவர் எம்.ஜி.ஆர். எல்லோருக்கும் எலும்பிலும் தசையிலும் உடல் இருக்கும். ஆனால். இவருக்கோ தங்கத்தால் வார்த்த உடம்பு….அதனால்தான் எமனையும் ஒரு முறை வென்றார்.

    புரட்சித் தலைவர் பள்ளியில் படிக்காவிட்டாலும் பல்கலைக் கழகமாக தன்னை மாற்றிக் கொண்டவர். அதனால்தான் அவர் தியாகரஜ சட்டக் கல்லூரியில் சேர்மேனாக அமர முடிந்தது.

    மனிதன் உயிர் வாழத் தேவையானது உணவு. மனிதனாக வாழ வைப்பது கல்வி. இந்த இரண்டையும் தான் பிறருக்காக அள்ளி வழங்கிய வள்ளல். அவரது சத்துணவு திட்டம், அவர் காலத்தில் திறக்கப்பட்ட அரசு பள்ளிகளும் சாட்சி.

    முடியாது.. இல்லை.. என்ற இரண்டு வார்த்தைகளையும் தமிழில் உள்ள அனாவசிய வார்த்தைகள் என அப்புறப்படுத்தியவர் பொன் மனச் செம்மல்.

    எம்.ஜி.ஆர்.

    அரிதாரம் இட்டு அடையாளமாகி ..
    அகம் நுழைந்து ஜகம் ஆண்டவன்..
    மக்கள் மனதில் குடியிருந்த கோவில்
    என்றென்றும் ஊருக்கு உழைப்பவன்
    அள்ளிக் கொடுப்பதில் அவர் மன்னாதி மன்னன்
    மொத்தத்தில் என்றென்றும் அவர் எங்க வீட்டுப் பிள்ளை..

    காலத்தை வென்றவர் அவர்..
    காவியமானவர் அவர்..

    — புவனா, மும்பை

    Share
  • மனதில் நிறைந்த மக்கள் திலகம்

    — மணிமுத்து.

     

     

    நான் அறிந்த எம்.ஜி.ஆர்!

    குடும்ப உறவுகளுக்கிடையே பிரியம் காட்ட முடியாத உலகத்தில், ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் பிரியம் செலுத்திய மனிதர்(மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன்) ம.கோ.ராமசந்திரன். நடிப்பில் மட்டுமல்லாமல் அதே போல் வாழ்ந்து நடப்பிலும் மக்களின் மனதில் இடம் பிடித்தவர்.

    வாழ்ந்தவர் கோடி,
    மறைந்தவர் கோடி,
    மக்களின் மனதில் நிற்பவர் யார்!
    என்ற பாடல் வரிகள் கூட அவருக்கே பொருந்துவதாய்!

    வாழ்க்கையில் பல மனிதர்கள் சரித்தில் தான் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் வாழ்ந்த நாட்களை விடவும், இறந்த பின்னே அவர்களுக்கு உலகம் புகழாரம் சூட்டவும், பாராட்டவும் செய்தது. வாழ்ந்த நாட்களில் சரித்திரம் படைத்தவர்கள் ஒரு சிலரே அவர்களில் ஒருவர் தான் ம.கோ.ராமசந்திரன். ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் தொழில் எனும் பொழுது ஒரு மாதிரியாகவும், அதுவே நிஜ வாழ்க்கை எனும் பொழுது வேறாக இருக்கும். ஆனால் ம.கோ.ராமசந்திரன் அவர்களோ தொழில், வாழ்க்கை என்றெல்லாம் வேறு படுத்திப்பார்க்கத்  தெரியாதவர்.

    எல்லோரிடமும் திறமைகள் உண்டு, ஆனால் அந்த திறமைகள் தன்னிடம் இருப்பதை அறிந்து செயல் படுத்துபவர் ஒரு சிலரே, அப்படி தன்னிடம் இருந்த எல்லா திறமைகளையும் தெரிந்துக் கொண்டு இயக்குனர், தயரிப்பாளர் மற்றும் நடிகர் என அனைத்து பணிகளையும் செவ்வனே செய்து திரை உலகில் மிகப்பெரிதாக சாதித்துக் காட்டியவர். ஒரு மனிதன் அவனுடைய வாழ்நாளில் சேமிக்க வேண்டிய ஒரே பெரிய சொத்து நண்பர்களும், உறவினர்களும் தான், அப்படி ஒரு மாநிலத்திலிருக்கும் அனைவரையும் உறவினராய் சம்பாதித்தவர்.

    அப்படி அனைவரின் அன்பை சம்பாதிக்க என்ன செய்யலாம். நல்லவனாக நடிக்கலாம், அதற்கு சிறந்த நடிகர் என பெயரும் வாங்கலாம்.ஆனால் சிறந்த நடிகர் என்று பெயர் வாங்குவதால் ஒருவரை ஒரு மாநில மக்களே விரும்புவர்களா என்ன? விரும்பினார்கள் அதற்குக் காரணம் அவர் நிஜ வாழ்க்கையில் நடிக்கத்  தெரியாதவர். நன்றாக சாப்பிட்ட ஒருவனிடம் “பசிக்கிறதா என்பதை விட, பசிக்கிற ஒரு மனிதனுக்கு அன்னமிடுவதே” சாலச் சிறந்தது.

    அதைத்தான் அவர் “பசிக்கிற ஒருவனுக்கு மட்டுமல்லாமல் பசி என்கிற ஒவ்வொருவனுக்கும் உணவினை வாரி வழங்கினார்” அட்சய பாத்திரம் போல. அரசு கொடுக்கும் பொருட்களை சுரண்டல் இல்லாமல் அதை மக்களிடம் சேர்த்தார். அவர் அறிமுக படுத்திய திட்டங்கள் தான் எத்தனை? சத்துணவுத் திட்டம், விதவை ஆதரவற்ற பெண்களுக்குத் திருமண உதவி, தாலிக்கு தங்கம் வழங்குதல், மகளிருக்கு சேவை நிலையங்கள் இன்னும் எத்தனையோ அடுக்கிக் கொண்டே போகலாம்.

    அவர் கொடுத்த இலவச ஓட்டைக் கொண்டு வீட்டை அமைத்து, அதில் வாழ்கிற எத்தனையோ பெயரில் நானும் ஒருத்தியாய். சிலருடைய பெருமைகள் சொல்லி மாளாது எனினும் இவருடைய பெருமைகள் சொல்ல சொல்ல மாளாதவைகளாய்! நாம் தியாகிகள் என்று சொல்லிக்கொண்டிருக்கும் எத்தனையோ பேர் உலகிற்கு மட்டுமே தியாகிகளாய், ஆனால் எப்போது தன் மனைவி குழந்தை பிறக்க இயலாமல், பிரசவத்தில் இறந்தாளோ  அப்போதே தன்னால் இரண்டு உயிர் போனதே என்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர். இப்படி ஒரு தியாக உள்ளத்தை மீண்டும் எங்கே காண்பது?

    சிறு எறும்புக்கும் தீங்கு இழைக்காதவர், செல்ல பிராணிகளிடம் கூட உயிரையே வைத்திருந்தார். அவர் வளர்த்து வந்த செல்ல பிராணிகளான இரண்டு சிங்கங்களில், ஒன்று இறந்து விட அதனுடைய தனிமை துயரை காண சகியாதவராய் கொண்டு சென்று வண்டலூர் உயிரியல் பூங்காவில் விட்டுவிட்டார். எம்.ஜி.ஆருடைய பல படத்தின் பாடல் வரிகளுமே அவரையும், அவருடைய செய்கையையும் பிரதிபலிப்பனவாக, அதற்கோர் உதாரண பாடல் இங்கே.

    நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள்,
    நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார்
    சிலர் அல்லும், பகலும்
    வெறும் கல்லாய் இருந்து விட்டு
    அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக் கொண்டார்

    தொண்டையில் துப்பாக்கி சூடுப்பட்டு, குரல் உடைந்த பிறகும் கூட நடித்து வெளிவந்த படமான காவல்காரன், பெரிய வெற்றியை தேடித்தந்தது. இதைத்தான் சாதிப்பதற்கு வயதோ, உடல் குறையோ தடை கிடையாது என்பதோ. இந்த காலத்தில் வீடுவீடாக சென்று லஞ்சம் கொடுத்தாலும் கூட வாங்க முடியாத வாக்குகளை, உடல்நிலை முடியாமல், பிரசாரத்திற்கே வரமால் பெற்று முதல்வர் ஆன மாமனிதர்.

    அந்த மாமனிதருக்கு
    கிடைத்தது தான்
    என்ன
    எல்லோரையும் போல
    சிறுவயதில் வறுமைதான்.
    கல்வியும் கூட காசு இருப்பவனுக்கே!
    வறுமையில் வாழ்க்கையை
    எப்படி வாழ வேண்டும்
    என்று மட்டுமல்ல,
    எப்படி மாற்ற வேண்டும்
    என்றும் கற்றுக் கொண்டாயா!
    அதனால் தான் வறுமையில்
    வாழ்ந்தவர்களுக்காக
    வாழ்நாள் முழுவதும் போரடினாயா!
    அத்தனை இலவச திட்டங்களையும் அறிமுகப்படுத்தினாயா!
    உனக்கு பாரத ரத்னா விருது கூட சிறிதே!

    அன்பை சம்பாதிப்பவனே ஆண்டவனை சம்பாதித்தவன், அனைத்தையும் சம்பாதித்தவன். அனைத்தையும் சம்பாதித்த அந்த மாமனிதனுக்காகவே இன்றுவரை அவர் வளர்த்த கட்சிக்கு வாக்களிக்கும் மக்கள் தான் எத்தனை!

    மாமனிதரே இன்னொரு முறை தமிழ்நாட்டில் பிறப்பீராக… நாட்டின் தலையெழுத்தை மாற்ற!
    மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், அது 
    முடிந்த பின்னாலும் என் பேச்சிருக்கும்!
    என்று உலகிற்கு வாழும் போதே சொல்லிவிட்டு போய்விட்டார்.
    வாழ்க்கையில் வறுமை மனிதனுக்கு இருபாதையைக் காட்டி விடுகிறது.
    ஒன்று நல்வழி, மற்றொன்று தவறான பாதை!

    நாமும் வறுமையை ஒழிப்போம் நல்வழியில் நடந்து எம்.ஜி.ஆர் போல.

    Share
  • சிவபிரதோஷம்

     

    மீ.விசுவநாதன்

    8-1
    ஒருபூ எடுத்துநான் போடாமல் ஓடிய நாளாய் இருந்தேனே !
    தெருவில் திரிகிற தீவட்டி , தேவடி ஈசன் மறந்தேனே !
    பருவச் சிறுமையில் பாராமல் பாடிட வார்த்தை இழந்தேனே !
    அருமை அருட்பெரும் ஆனந்தன் ஆடிட நெஞ்சம் மறுத்தேனே !

    கல்வி அறிவினைக் கைவிட்டு கயவனின் கையில் கிடந்தேனே !
    பல்கிப் பெருகிய பொய்யினிலே பாடியே நாளைக் கழித்தேனே !
    வில்வ இலையைக் கொள்ளாமல் வீணடிக் கலையைக் கொண்டேனே !
    நல்ல சிவனிடம் கேட்கின்றேன் நாடிய நானாய்த் தெளிவாயே !

    (அறுசீர் விருத்தம் வாய்பாடு: மா, விளம், காய் , விளம் ,மா, காய் ,)
    (01.04.2015)

    Share
  • எனக்காக பொறந்தாயே எனதழகி…

    கவிஞர் காவிரிமைந்தன்.

    மென்மையான பாடலுக்கு மக்கள் மத்தியில் என்றைக்குமே வரவேற்பு இருக்கும் என்பதற்கு தற்காலப்பாடல்களில் ஒரு சாட்சி! தாத்தாவிற்கும் பேரனுக்கும் பாட்டெழுத பிரம்மன் அனுப்பி வைத்த காவியக் கவிஞர் வாலி அவர்கள் கைவண்ணத்தில் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையில் எஸ்.பி.சரண், அனு ஆனந்த் குரல்களில் இழைந்தோடும் இந்தத் தென்றல் இதயத்தைத் தொடுகிறது!

    பண்ணையாரும் பத்மினியும் என்கிற வித்தியாசமான கதையமைப்பில் உருவாகி வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்பிரகாஷ், துளசி ஆகியோர் நடிப்பில் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் இனிமைதவழும் கானம் இதோ கேளுங்கள்! பருவக் காதலை ஒருபுறம் சொல்லிவிடுகிற இயக்குனர் நடுத்தர வயதுக் காதலையும் நயமாக சொல்லியிருப்பதும்… குறிப்பாக இந்தப் பாடலில் இடம்பெறும் சிறு சிறு காட்சிப் படலங்கள் சத்தமில்லாமல் சங்கதி சொல்கின்றன சங்கீதத்துடன்!!

    கவிஞர் வாலியின் வரிகளில் ஒரு சிறந்த பாடலாசிரியருக்கான முதிர்ச்சியும்… அதே நேரத்தில் கதாபாத்திரம் எந்த வார்த்தைகளைத் தாங்கும் என்கிற அளவைக் கண்டறிந்து எளிமையும் எதார்த்தமும் கலந்து பரிமாறியிருக்கிறார் என்றால் அது மிகையில்லை! கணவன் மனைவி இருவருக்கிடையில் இருக்க வேண்டிய அந்நியோன்யம் கரைபுரண்ட பாசமாய் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தால் இல்லறம் என்பது இன்பதேசமாய் இருப்பதில் என்ன குறை? கேட்டபின் மறந்துவிடும் பாடலாய் இல்லாமல் மனம் முணுமுணுக்கச் சொல்கிற பாடலாய்… பழைய பாடலின் சாயலோடு … இதோ…

     

    PANNAIYARUM PADMINIYUMPANNAIYARUM PADMINIYUM3PANNAIYARUM PADMINIYUM2
    __________________________________

    பாடல்: எனக்காக பொறந்தாயே எனதழகி
    படம் :பண்ணையாரும் பாத்மினியும்
    பாடலாசிரியர் : வாலி
    இசை :ஜஸ்டின் பிரபாகரன்
    பாடியவர்கள் : எஸ்.பி.சரண்,அனு ஆனந்த்
    __________________________________

    https://youtu.be/KRBBzanmGsU

     

    காணொளி: https://youtu.be/KRBBzanmGsU

    உனக்காக பொறந்தேனே எனதழகா
    பிரியாம இருப்பேனே பகல் இரவா
    உனக்காக பொறந்தேனே எனதழகா
    பிரியாம இருப்பேனே பகல் இரவா
    உனக்கு வாக்கப்பட்டு
    வருஷங்கள் போனால் என்ன ?
    போகாது உன்னோட பாசம் !
    என் உச்சி முதல் பாதம் வரை
    என் புருஷன் ஆட்சி..
    ஊர்தெற்காலதான் நிக்கும் அந்த
    முத்தாலம்மன் சாட்சி ……..

    எனக்காக பொறந்தாயே எனதழகி
    இருப்பேனே மனசெல்லாம் உனை எழுதி ……..

    அ… அ.. ஆ………
    லைய் லாய் லாய் லல்லே
    லல்லாய் லலலல்லாய்
    லைய் லாய் லாய் லல்லே
    லல்லாய் லலலல்லாய் ……..

    ஒருவாட்டு எனை உரசாட்டி உனை
    உறுத்தும் பஞ்சனைமெத்தையும்
    ராத்திரி பூத்திரி ஏத்தற வேளையிலே

    கருவாட்டி பானை கிடைச்சாக்க பூனை
    விடுமா சொல்லடி சுந்தரி..
    நெத்திலி வத்தலு வீசுற வாடையில..

    பூவாட்டம் உன் காத்து மாவட்டும் நேரம்தான்
    உன் கையை மீட்டாதா முந்தானை ஓரம்தான்

    பூவாடை தூக்காதா? பூபானம் தாக்காதா?
    நீ முத்தி போன கத்திரியா புத்தம் புது பிஞ்சு

    நா முந்தா நாளு ஆளானதா எண்ணுதோ உன் நெஞ்சு
    உனக்காக பொறந்தேனே எனதழகா..
    பிரியாம இருப்பேனே பகலிரவா..
    உனக்கு வாக்கைப்பட்டு வருஷங்கள் போனா என்ன
    போகாது உன்னோட பாசம்..
    என் உச்சி முதல் பாதம் வரை
    என் புருஷன் ஆட்சி..
    ஊர்தெற்காலதான் நிக்கும் அந்த
    முத்தாலம்மன் சாட்சி

    ************************************************************************************

    https://youtu.be/VVNGuRrh2sY

    காணொளி: https://youtu.be/VVNGuRrh2sY

    எனக்காக பொறந்தாயே எனதழகி
    இருப்பேனே மனசெல்லாம் உனை எழுதி
    அ… அ.. ஆ..
    எனக்காக பொறந்தாயே எனதழகி
    இருப்பேனே மனசெல்லாம் உனை எழுதி

    உனக்கு மாலையிட்டு
    வருஷங்கள் போனா என்ன ?
    போகாது உன்னோட பாசம் !
    எனக்கு என்மேலெல்லாம் ஆச இல்ல
    உன் மேல தான் வச்சேன் !
    என்ன ஊசியின்றி நூலுமின்றி
    உன்னோடதான் தச்சேன் !

    உனக்காக பொறந்தேனே எனதழகா
    பிரியாம இருப்பேனே பகல் இரவா
    உனக்கு வாக்கப்பட்டு
    வருஷங்கள் போனால் என்ன ?
    போகாது உன்னோட பாசம் !
    எனக்கு என்மேலெல்லாம் ஆச இல்ல
    உன் மேல தான் வச்சேன்
    என்ன ஊசியின்றி நூலுமின்றி
    உன்னோடதான் தச்சேன்

    லைய் லாய் லாய் லல்லே
    லல்லாய் லலலல்லாய்
    லைய் லாய் லாய் லல்லே
    லல்லாய் லலலல்லாய்

    ஒதுங்காதே தொட்டு
    உசுப்பேத்தி விட்டு
    உனக்கா ஒவ்வொரு மாதிரி
    நாக்குல நெஞ்சில
    பச்சைய குத்தி வச்சேன்

    இதுதாண்டி ரதம்
    இதலதான் நிதம்
    உன்னத்தான் உட்காரவச்சி
    நா ராசாதிராசனா
    ஊர்வலம் வந்திடுவேன்

    உன்னோடு நான் சேர
    மென்மேல வந்து ஒரு
    நேந்து தான் சாமிக்கு
    வப்பேனே வெள்ளாடு !

    ஆத்தோரம் காத்தாடும்
    காத்தோடு நாத்தாடும்
    நான் பாத்தாட்டமா நாத்தாட்டமா
    உன்னால அழும் நாளும்

    நீ மாலையிடும் வேளையில
    கேட்குதா என் தோடு !

    உனக்காக புறந்தேனே எனதழகா
    பிரியாம இருப்பேனே பகல் இரவா
    உனக்கு மாலையிட்டு
    வருஷங்கள் போனால் என்ன ?
    போகாது உன்னோட பாசம்
    தன்னனனான தன்னனான
    நன்னானானனான…

    Share
  • படக்கவிதைப் போட்டி (6)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    11096973_812600832127451_1724852484_n

    71663438@N08_rஆர்.லக்ஷ்மி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (04.04.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர்  திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

    mekala2-300x168

    புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • மனதில் நிறைந்த மக்கள் திலகம்

    — கொ.வை. அரங்கநாதன்.

     

    வையத்துள் வாழ்வாங்கு வாழ்வார் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்ற குறளின் பொருளாக வாழ்ந்து மறைந்தவர் மக்கள் திலகம். இன்னலுற்ற இளமையில் அன்னையின் அரவணைப்பே அவரது ஒரே ஆறுதல். காட்டாற்று வெள்ளத்தில் எதிர் நீச்சல் இடும் வாழ்க்கை. அத்தனையயும் கடந்து நாடக மேடை, திரைப் படம், அரசியல் என்ற அவரது விஸ்வரூபம் கடுமையான உழைப்பின் கருவில் மலர்ந்தது. ஏளனப் பேச்சு, எதிர்ப்பு, அத்தனையையும் உரமாக்கி சிகரத்தைத் தொட்ட செம்மல்… எம் ஜி ஆர் என்ற அந்த மூன்றெழுத்து இன்று வரை தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் ஒலித்து கொண்டிருப்பது காலத்தை கடந்த அந்த காவிய மகனின் புகழுக்குக் கட்டியம் கூறுகிறது.

    இந்த மனிதரின் வாழ்வு பள்ளிகளில் பாடமாகப் பயிற்றுவிக்கத் தகுந்தது. பாரியையும் ஓரியயையும் பாடங்களில் படித்தவர்களுக்கு எட்டாவது வள்ளலாக எம் ஜி ஆரை அறிமுகப்படுத்தலாம். மனித நேயத்தின் மாண்பினை அவர் சரிதம் மூலம் அடுத்தத் தலை முறைக்கு எடுத்துச் சொல்லலாம். மாலை நேரத் திரையரங்குகளை நீதி போதிக்கும் மன்றங்களாக மாற்றிய மாமனிதர். பள்ளிகளில் பயிற்றுவிக்கப்படாததை தன் பாடல்களால் பயிற்றுவித்தப் பண்பாளர்.

    “நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே” … “நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி” என்று இன்னும் எத்தனையோப் பாடல்களில் வளரும் குழந்தைகளை வழி நடத்தியவர்.

    “நல்லப் பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள் நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார்” … “நாடென்ன செய்தது நமக்கு என கேள்விகள் கேட்பது எதற்கு? நீ என்ன செய்தாய் அதற்கு என நினைத்தால் நன்மை உனக்கு” போன்ற எத்தனையோ பாடல்கள் மூலம் இளைஞர்களைத் தட்டி எழுப்பியவர்.

    “என் தமிழே நீ பகை வென்று முடிசூடி வா” எனத் தமிழுக்குத் தாலட்டுப் பாடியவர் … “அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா” என இனப் பெருமையை உரக்க சொன்னவர்.

    “என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்” என விவசாயிகளுக்கு உரம் மூட்டியவர் …”உழைக்கும் மக்களே ஒன்று கூடுங்கள் உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்” என உழைக்கும் மக்களின் உரிமைக் குரலாய் ஒலித்தவர்.

    “ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை” என தனது எதிரிகளுக்கு எச்சரிக்கை செய்தவர்.

    இன்னும் எத்தனை எத்தனைப் பாடல்கள்… அத்தனையும் விடியற்காலச் சேவலின் உறக்கம் கலைக்கும் ஒலியல்லவா? இந்தப் பாடல் வரிகளுக்கெல்லாம் அந்தக் கவிஞர்கள்தானே சொந்தக்காரர்கள்? இதில் மக்கள் திலகத்தின் பெருமை என்ன இருக்கிறது என்று என்னிடம் கேட்டவர்கள் உண்டு. கவிஞர்கள் யாராக இருப்பினும் மக்கள் திலகத்தின் பாடல் என்றால் அவர்கள் அறியாமலேயே எழுச்சியுட்டும் சொற்கள் எங்கிருந்தோ வந்தமைந்தது..

    பாடியது தாம் தானா அல்லது மக்கள் திலகமா என்ற ஐயம் அந்தக் கவிஞர்களுக்கே வந்ததுண்டு. இதனை கவியரசு கண்ணதாசன் கூட ஒரு காதற் பாடலில் “பாடுவது கவியா இல்லை பாரி வள்ளல் மகனா, சேரனுக்கு உறவா செந்தமிழன் நிலவா” என அழகாகக் குறிப்பிடுகிறார்.

    பாடுவது கவியா – பாடியது நான்தானா அல்லது பாரி வள்ளல் மகன் போன்ற மக்கள் திலகமா?
    சேரனுக்கு உறவா- மக்கள் திலகம் மலையாளப் பூர்வீகம் கொண்டவர் என்பதைத் தான் இவ்வளவு அழகாகக் குறிப்பிடுகிறார்.
    செந்தமிழன் நிலவா- தமிழகத்து மக்களுக்கு நிலவு போன்றவரா- ராமச்(சந்திரன்) எவ்வளவு அழகான வர்ணனை பாருங்கள்!

    மக்கள் திலகத்தின் பாடல் வரிகள் அவரது வாழ்க்கை நிகழ்வின் முன்னறிவிப்பாய் பல சமயங்களில் அமைந்தது வியப்பிற்குறியது.

    “நானே போடப் போகிறேன் சட்டம் பொதுவில் நன்மை பயக்கும் திட்டம்” என 50 களிலவர் பாடியதும் … “நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்” என அவர் 60 களில் பாடியதும் … 70 களில் நடை முறையானது.

    “தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்” என்பது அவர் சுடப்பட்டும் உயிர் பிழைத்ததன் முன்னறிவிப்பு அல்லவா?

    “இறைவா உன்னிடன் கையேந்தினேன்” என்றப் பாடல் அவரது ஓர் உயிருக்காகத் தமிழர்கள் நடத்திய தவத்தின் முன்னறிவிப்பு அல்லவா?

    “மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்தப் பின்னாலும் என் பேச்சிருக்கும்” என்று அவர் மறைந்து 26 ஆண்டுகளுக்குப் பின்பும் அவரது பெயர் ஒலிக்காத நாளே இல்லை என்ற அளவில் அவரது புகழ் வியாபிதிருப்பதின் முன்னறிவிப்பு அல்லவா?

    “சொல்வது எல்லோருக்கும் சுலபமாகும் சொன்னபடி நடப்பவர்கள் மிகவும் சொற்பம்” என்றார் நாமக்கல் கவிஞர். மக்கள் திலகம் ஒரு மாற்றுக் குறையாத மன்னன் அல்லவா? திரையில் சொன்னவற்றை வாழ்விலும் அப்படியே கடை பிடித்தவர்… மதுவின் தீமையை திரையில் அவரைப் போல் அழுத்தமாகச் சொன்னவர்கள் எவருமில்லை. திரையில் மட்டுமில்லை தனது வாழ்விலும் மதுவை மட்டுமல்ல தேனீரைக் கூட அருந்தியதில்லை.

    இரக்கமும், மனிதாபிமானமும் அவருக்கு இயல்பாகவே அமைந்திருந்தது. கை ரிக்க்ஷாத் தொழிலாளி ஒருவர் மழையில் நனைவது பொறுக்காமல் சென்னையில் இருந்த அத்தனை கை ரிக்க்ஷாத் தொழிலாளருக்கும் மழை ஆடை (ரெயின் கோட்) வழங்கிய மாண்பினை என்னவென்று உரைப்பது? அப்பொழுது அவருக்கு அரசியல் ஆசைகள் எதுவும் இல்லை என்பதையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

    வறுமையில் வாடிய என். எஸ்.கிருஷ்ணன் குடும்பத்தாருக்கு அவர் செய்த உதவிகளை அவரது குடும்பத்தாரே சொல்லும்போது இப்படிப்பட்ட மகத்தான மனிதர் மறுபடியும் பிறப்பாரா என ஏங்க வைக்கிறது. நகைச்சுவை நடிப்பில் கொடி கட்டிப் பிறந்த நாகேஷ் வாழ்வில் தடுமாறியபோது கைகொடுத்த தெய்வம் அல்லவா எம்ஜிஆர்? பிரபல இயக்குனர் பி ஆர் பந்துலு கடனுற்று காலமான போது அவரது படத்தை தானே இயக்கி அக்குடும்பத்தை கரையேற்றிய கர்ணன் அல்லவா மக்கள் திலகம்? பிரபல எழுத்தாளரும் பத்திரிக்கையாளரும் எம்ஜியாரை கடுமையாக விமர்சித்து வந்தவருமான சோ ராமசாமி ஒரு முறை குறிப்பிட்டார் “அடுப்பில் உலையை வைத்து விட்டு அரிசிக்காக எம்ஜியாரிடம் செல்லலாம். உலை கொதிப்பதற்குமுன் உதவி கிடைத்துவிடும்”

    சுடப்பட்டு மருத்துவமனையில் இருந்த போதும் கூட தன் தலையணை அடியில் பணக் கட்டுகளை வைத்து கொண்டு தன்னிடம் உதவி நாடி வந்தவர்களுக்கு அடுத்தவர் அறியாமல் உதவி வந்த உத்தமர். காரில் சென்று கொண்டிருக்கும் போது காலணி இல்லாமல் சென்று கொண்டிருந்த ஒரு மூதாட்டிக்காக தனது துணைவியார் ஜானகி அம்மையார் காலில் இருந்த காலணிகளைக் கழற்றி கொடுக்கச் சொன்னக் கருணையாளர். சீன படையெடுப்பின் போது தங்க வாளினை பிரதமரிடம் நாட்டை காப்பதற்குத் தன் பங்காக அளித்தவர்.

    எத்தனையோ ஏழை மாணவர்களுக்கு கல்வித் தொகையாக மாதந்தோறும் அவரது அலுவலகத்திலிருந்து பணம் அனுப்பப்பட்டு வந்தது எத்தனை பேருக்குத் தெரியும்? கொள்கை மாறுபட்டிருந்த போதும் வாரியார் சுவாமிகள் கோரினார் என்பதற்காக பெருந்தொகையை கோவில் கும்பாபிஷேகத்திற்கு அளித்து அவரால் பொன் மனச்செம்மல் என வாழ்த்தப்பட்டவர். இது போன்று எண்ணற்ற உதவிகள்… இவை அத்தனையுமே எவ்வித எதிர்பார்ப்பின்றி செய்யப்பட்டதே எம் ஜி ஆர் என்ற மாமனிதனின் இரக்க வரலாறு!

    இதே மனிதம்தான் அவரது ஆட்சி காலத்திலும் அவரை உயரத்தில் ஏற்றி அவர் உயிர் துறக்கும் வரை அங்கேயே வைத்திருந்தது. முதியோருக்கு சேலை வேஷ்டிகள், பள்ளி சிறுவர்களுக்கு சத்துணவு, பாடப் புத்தகங்கள் , காலணிகள், சீருடை , இயற்கை இடர்பாடுகளினால் பாதிக்கப்படும் அத்தனை பேருக்கும் கட்சி பாகுபாடின்றி நிவாரணம் …இன்னும் எத்தனை எத்தனையோ சமூக நலத் திட்டங்கள். அத்தனையும் மனித நேயத்தின் வெளிப்பாடுகள்… அவருடைய பதினொரு ஆண்டு கால ஆட்சியில் அரிசி விலை ஒரு ரூபாய் கூட ஏற்றப் படாதது அவர் ஏழை மக்கள் மீது கொண்டிருந்த அதீத அன்பின் வெளிப்பாடு. இன்னும் சொல்லி கொண்டே போகலாம் .. ஏடும் நேரமும் இடம் கொடா.

    பாய்ஸ் கம்பெனி நடிகராய் தொடங்கி, நாடக நடிகராய் மலர்ந்து, திரைப்படக் கதாநாயகனாய் உயர்ந்து, அரசியல் தொண்டராய் மாறி முதலமைச்சராய் முடிசூடி மக்களின் மனங்களில் இன்று வரை அகற்ற முடியாத பிம்பமாய் ஒளிரும் எம் ஜி ஆர் என்ற மாமனிதன் மக்கள் திலகமாய், புரட்சி நடிகராய், புரட்சித் தலைவராய், முதலமைச்சராய் என் மனதிலும் என்றும் நிலைத்திருப்பார்.

    Share
  • மனதில் நிறைந்த மக்கள்திலகம்

    –சௌ. செல்வகுமார்.

     

    படிக்காத பாமரர்களுக்கு எம். ஜி. ஆர். ஓர் பல்கலைக்கழகம்

     

    புராணக்கதைகளில், ஆண்டவனைப் பற்றி கூறக் கேட்டிருக்கிறோம். ஆனால், நாம் ஆண்டவனை நேரில் பார்த்ததில்லை. கருணையின் வடிவமாக, நம் தமிழகத்தை ஆண்டவர். கலியுக கடவுளாக புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர். அவர்களைத்தான் நான் பார்த்து பரவசமடைந்துள்ளேன்.

    பாசமிகு நேசத்தலைவராம், பொன்மனச்செம்மல் அவர்கள். “குடியிருந்த கோயில்” காவியத்தில் அன்னையின் அன்பிற்குக் கட்டுப்பட்டு, மனம் திருந்திய மைந்தனாக, பாசத்தை வெளிப்படுத்தும் சகோதரனாக, அவர் வெகு இயல்பாக நடித்த காட்சிகளும், கதையமைப்பும், இனிய பாடல்களும், என்னுடைய அந்த 12 வயதில் அவருடைய தீவிர ரசிகனாக மாற்றியது. பலரது எதிர்காலம் இந்த 12 வயது விடலைப்பருவத்தில் தான் நிர்ணயிக்கப்படுகிறது. மனம் ஒரு நிலையில் இல்லாமல் அலை பாயும் பருவம் அது. எதிர்மறையான அணுகுமுறைகளால் வாழ்க்கையே திசை மாறும்.

    இப்படிப்பட்ட சூழ்நிலையில், தொடர்ந்து, மக்கள் திலகத்தின் பழைய, புதிய காவியங்களைப் பார்த்து, ஒரு குறிக்கோளாக, இப்படித்தான் வாழவேண்டும் என்ற இலட்சிய வேட்கை கொண்டு வாழ்ந்து வருகிறேன்.

    எழில் வேந்தன் எம். ஜி. ஆர். நடித்த காவியங்களில், மூடநம்பிக்கை காட்சிகள் கிடையாது. அதே சமயம், மூட நம்பிக்கைகளை ஒழிக்கிறேன் என்று கூறி மற்றவர்களின் நம்பிக்கையை அவர் கொச்சைப்படுத்தவில்லை. அவரது எல்லா காவியங்களிலும், எவருடைய மனதையும், புண்படுத்தாமல் , காயப்படுத்தாமல், காட்சிகள் அமைந்திருக்கும்.

    குணக்குன்று எம். ஜி. ஆர். சில காவியங்களில், காட்சியமைப்பின் படி, எதிர்மறையான கதா பாத்திரத்தில் நடித்திருந்தாலும் அதிலும் ஒரு அறிவுரை வழங்கும் நற் செய்தியினை வெளிப்படுத்தி இருப்பார். உதாரணமாக, “எங்க வீட்டு பிள்ளை” காவியத்தில், கதைப்படி நாயகன் சிற்றுண்டி விடுதிக்குச் சென்று அங்கு சிற்றுண்டி சுவைத்து விட்டு, அதற்குரிய பணத்தைச் செலுத்தாமல் நழுவி விடுவார். காட்சியமைப்பை அத்துடன் விட்டிருக்கலாம். ஆனால், தனது படத்தைப் பார்க்கும் ரசிகன் இந்த தவறைச் செய்து விடக்கூடாது என்ற எண்ணத்தில், சிற்றுண்டி விடுதியை விட்டு வெளியேறிய பிறகு, ” ச்சே, எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டேன், சிற்றுண்டிக்கான பணத்தை கொடுக்காமல் வந்து விட்டோமே” என்று வருத்தப்படும் வசனத்தை பேசுவார். அதே போன்று, “ஒளி விளக்கு” காவியத்தில், நாயகன் கதைப்படி, மதுப் பழக்கம் கொண்டவனாக இருந்தாலும், தனது ரசிகன் “குடிப்பழக்கத்துக்கு ஆளாகி விடக்கூடாது” என்ற எண்ணத்தில், நாயகனின் மனசாட்சி பாடுவதாக “தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா” என்ற பாடல் எதிரொலிக்கும். காதல் பாடலில் கூட, விவசாயத்தின் முறைகளை எடுத்துரைத்து, ஒரு தமிழக பெண் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் வலியுறத்தி “இப்படித்தான் இருக்க வேண்டும் பொம்பளே” என்ற பாடலை பாடுவார். இப்படி பல உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

    நடிகப்பேரரசர் எம்.ஜி.ஆர். அவர்களின் ஒவ்வொரு ப(பா)டமும், முழுக்க முழுக்க ஜன ரஞ்சகமான பொழுது போக்கு அம்சங்களுடன், நற்போதனைகளையும், நற்கருத்துக்களையும் அடிப்படையாகக் கொண்ட கதைக்களமாகவே இருக்கும். அதே நேரத்தில், கதையின் மெருகு குலையாமல், எக்காலத்துக்கும் ஏற்ப சமுதாய முன்னேற்றத்துக்கான புத்துணர்ச்சியுடன், பாடல்களும், வசனக்காட்சிகளும் அமைந்து இருக்கும். சோர்ந்து போய் சோகமாக இருக்கும் தருணங்களில், கலைச்சுடரின் காவியப்பாடல்களை கேட்கும் பொழுது, இனம் புரியாத ஒரு இன்பமும், எழுச்சியும் காணப்படும். இதை, பல முறை நான் அனுபவித்துள்ளேன். மருத்துவத்துக்கும் இல்லாத இந்த சக்தி அவரது படங்களை காண்பதிலும், பாடல்களை கேட்பதிலும் உள்ளது என்றால், அவர் உண்மையிலேயே ஒரு அற்புத, அபூர்வ சக்தி என்றே கூறலாம். மனிதப் புனிதராம் எங்கள் தங்கம் எம். ஜி. ஆர். ஒரு எட்டாவது அதிசயம் தான், தனிப்பிறவி என்றே தான் சொல்ல வேண்டும்.

    சமுதாய விழிப்புணர்ச்சி, தாய் நாடு மற்றும் தாய் மொழிப்பற்று கொண்டதாக விளங்கும் கலைவேந்தன் எம். ஜி. ஆரின் காவியங்கள், என் போன்ற ரசிகர்களை கவர்ந்ததில் ஆச்சர்யம் ஏதுமில்லை. ஏன், இன்றைய இளம் தலைமுறையினரும், அவரது காவியங்களைத்தான் ரசிக்கிறார்கள். சமீபத்திய எடுத்துக்காட்டு … பல முறை திரையிடப்பட்டும், தமிழகத்தின் நிரந்தர வசூல் சக்கரவர்த்தி எம். ஜி. ஆர். அவர்களின் “ஆயிரத்தில் ஒருவன்” காவியம் வெள்ளி விழா கண்டு மொத்தம் 190 நாட்கள் ஓடி, உலக சினிமா வரலாற்றில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தி சாதனை கண்டது. வரலாறு படைத்த நம் வள்ளல் எம். ஜி. ஆர். அவர்கள் கதாநாயகனாக நடித்த 115 காவியங்களில் சுமார் 85 சதவிகிதம் இன்றும், தமிழகத் திரையரங்குகளை ஆக்கிரமித்து கொண்டு தான் வருகிறது. உலகெங்கிலும், ரசிகர்களை கொண்ட ஒரு மாபெரும் தமிழ் நடிகரும் எம். ஜி. ஆர். அவர்களே ! தமிழகத்தில் இணையதளம், முகநூல் மற்றும் வாட்ஸ் ஆப் போன்றவற்றில் அதிகம் பதிவிடப்படுவதும் சொக்கத்தங்கம் எம். ஜி. ஆர். அவர்களைப்பற்றிய செய்திகளும், புகைப்படங்களும் தான். அவ்வளவு ஏன், மறைந்து கால் நூற்றாண்டுகள் கடந்தும், இன்றும் அவரை பற்றி போட்டிக்கட்டுரை வெளியிடுவதும் “வல்லமை” போன்ற பிரசித்தி பெற்ற இணைய தளங்களே ! உலகெங்கிலும், மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு இவர்களுக்கு அடுத்தபடியாக பேசப்படும் ஒரே தமிழக நபர் எழிலான முகராசி கொண்ட எங்கள் தங்கம் எம். ஜி. ஆர். என்பதில், ஒவ்வொரு தமிழனும் பெருமைப்படக்கூடியதாகும்.

    நடிகராக இருந்தபொழுதே, தான் சம்பாதித்தை, நாட்டு மக்களின் நலனுக்காக, அள்ளி அள்ளி கொடுத்து, “கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர்” என்றழைக்கப்பட்டார். கடையெழு வள்ளல்களும், அரசுகருவூலத்திலிருந்து தான் வாரி வழங்கினார்கள். ஆனால் நம் எட்டாவது வள்ளலோ, இதிலும், ஒரு புதிய சரித்திரத்தையே உருவாக்கினார். இளம் வயதில் பசியின் கொடுமையை அனுபவித்த காரணத்தால், மக்களின் உண்மைத் தலைவராகி, ஆட்சிகட்டிலில் அமர்ந்தவுடன், குழந்தைகளின் பசியினைப் போக்கிட, சத்துணவு திட்டத்தை கொணர்ந்த சமதர்ம சமுதாய காவலன் அல்லவா நம் கொள்கைத்தங்கம்.

    எத்தனை சம்பவங்கள், எத்தனை எத்தனை அனுபவங்கள்? அதில் எவ்வளவு படிப்பினைகள்? படித்தவர்களுக்கு பாடசாலை, படிக்காத பாமர மக்களுக்கு அவர் ஓர் பல்கலைக்கழகம். அதனால்தான் அவர் “வாத்தியார்” என்றும் போற்றப்படுகிறார். நாட்டு மக்களின் வாட்டம் போக்கிட நலத்திட்டங்கள் பல தீட்டி தமிழக முதல்வர்களில் ஓர் ஒளிவிளக்காகத் திகழ்ந்தார் என்றால் அது மிகையல்ல! “ஓடி ஓடி உழைக்கணும்” என்ற உழைப்பின் உயரிய தத்துவத்தை மக்கள் மனதிலே நன்கு பதிய வைத்தது மட்டுமல்லாமல், வலிய ஓடோடி சென்று உதவிகள் புரிந்தது, அந்த முப்பிறவி கண்ட மூன்றெழுத்து மந்திரத்தின் தனிப்பாணி.

    வளர்ந்து வரும் தலைமுறைக்கு ஆசைமுகமாய் காணப்படும் பண்பின் இருப்பிடம், அன்பின் பிறப்பிடம், பாசத்தின் உறைவிடம், பேரறிஞர் அண்ணா அவர்களின் இதயக்கனியாம் நம் எம். ஜி. ஆர். அவர்களின் சீரிய அறிவுரைகளும், போதனைகளும். எதிர்கால இந்தியாவை வளமான வல்லரசாக மாற்றக்கூடிய இக்கால இளைஞர்களுக்கு அவசியம் தேவை. திரைவானில் மட்டுமல்ல, அரசியில் வானிலும், கொடி கட்டிப் பறந்து கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை கொள்ளை கொண்ட நாயகன். பாரத ரத்னா டாக்டர் எம். ஜி. ஆர். அவர்கள் வாழ்ந்த காலத்தில் பிறந்தவன், வாழ்ந்தவன், அவருடன் சிற்சில சமயங்களில் பழகிய வாய்ப்பும் கிட்டியவன் என்று எண்ணும்போது, நான் பிறவிப்பயனை அடைந்து விட்டேன் என்றே கூற வேண்டும்.

    “எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான் என்பது கேள்வியில்லை !
    அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை உணர்ந்தால் வாழ்க்கையில் தோல்வியில்லை !”

    படித்து, பல பட்டங்கள் பெற்று இன்று உயர்ந்த நிலையில் இருந்தாலும், பொற்கால ஆட்சி தந்த பொன்மனச்செம்மல் எம். ஜி. ஆர். அவர்களின் பக்தன் என்று அழைக்கப்படுவதில்தான் எனக்குப் பெருமை. எனது வாழ்வில் நான் பெற்ற பாக்கியம் எம். ஜி. ஆர். ரசிகன் என்ற உயரிய பதவி !

     

    Share
  • மனதில் நிறைந்த மக்கள் திலகம்

    — ஞா.  கலையரசி.

     

    “காலத்தை வென்றவன் நீ
    காவியமானவன் நீ
    வேதனை தீர்த்தவன்
    விழிகளில் நிறைந்தவன்
    வெற்றித் திருமகன் நீ!”
    என்று எம்.ஜி.ஆருக்காகவே எழுதப்பட்ட இப்பாடல் வரிகளுக்கு உயிர் கொடுத்து காலத்தை வென்று இன்றைக்கும் மக்கள் நெஞ்சங்களில் காவிய நாயகனாக உலா வருபவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்!

    “இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
    இவர் போல் யாரென்று ஊர் சொல்ல வேண்டும்”
    என்ற பாடலுக்கேற்ப, மக்கள் மனதில் அணையா தீபமாக ஒளிவீசிக் கொண்டிருப்பவர் எம்.ஜி.ஆர்!

    “வாழ்ந்தவர் கோடி
    மறைந்தவர் கோடி
    மக்களின் மனதில் நிற்பவர் யார்?”
    என்று கேட்டால் தமிழகத்தைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆர் என்பது தான் ஒரே பதிலாக இருக்கும்! இவர் அளவுக்கு மக்கள் நெஞ்சங்களில் குடி கொண்டவர் ஒருவர் இனிமேல் தான் பிறந்து வர வேண்டும். குறிப்பாக அடித்தட்டு மக்களிடம், இவருக்கிருந்த செல்வாக்கு அளப்பரியது. “இதுவரை பூமியை வெட்டித்தான் தங்கத்தை எடுத்தோம்; ஆனால் இன்று பூமியை வெட்டி தங்கத்தை அல்லவா புதைக்கிறோம்!” என்று புலம்பினார்கள், இவருடைய இரங்கற் கூட்டத்தில்.

    இவர் இறந்து இத்தனை ஆண்டுகள் கழித்தும், ஒவ்வோராண்டும் இவர் நினைவு நாளில் பொது மக்கள், தங்கள் வீடுகளுக்கு முன்பாக எம்.ஜி.ஆர் படத்துக்குப் பூவும் பொட்டும் வைத்து விளக்கேற்றி வழிபடுகிறார்கள் என்பதிலிருந்து தலைமுறைகள் தாண்டியும் இவர் மக்கள் மனதில் மகத்தான சக்தியாகத் திகழ்கிறார் என்பது விளங்கும். மக்கள் நெஞ்சமெனும் கோவில்களில் தெய்வமாகக் குடிகொண்டிருக்கும் ‘தனிப்பிறவி,’ எம்.ஜி.ஆரை, மக்கள் அதிசய பிறவி என்றும், ‘ஆயிரத்தில் ஒருவன்,’ என்றும் இன்றளவும் போற்றுகிறார்கள்.

    தமிழ்த் திரையுலகில் தமக்கென ஒரு பாணி வகுத்துக்கொண்டு சினிமாவைக் கண்ணுங்கருத்துமாக நேசித்து, சாதாரண மக்களுக்கான படம் கொடுத்து, அதன் பின் அரசியலிலும் வெற்றிகொடி நாட்டியவர். தமக்காக மட்டும் வாழாமல் அடுத்தவருக்காகவும் வாழ்ந்ததால் தான் பொன்மனச்செம்மல், ஏழைப்பங்காளன், மக்கள் திலகம், புரட்சித் தலைவர் என்று போற்றப்படுகிறார்.

    பொதுவாழ்வில் இவரடைந்த வெற்றிகள், அதிர்ஷ்டத்தால் ஓரிரவில் பெற்றதல்ல. கடும் உழைப்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, எந்த வேலையிலும் மனமொன்றி முழுதாக ஈடுபடல் போன்ற இவரின் சிறப்புக்குணங்களால், தமிழ்த்திரைப்பட வரலாற்றிலும் சரி, அரசியலிலும் சரி, யாரும் வெல்லவியலாத வரலாற்று நாயகனாகத் திகழ்ந்தார். ஏழைக்குடும்பத்தில் பிறந்து சொந்த முயற்சியால் வாழ்வில் முன்னேறி விண்ணைத் தொட்டுச் சாதனை படைத்தவர். சிறுவயதில், குடும்பச் சூழ்நிலை காரணமாக படிப்பைத் தொடர முடியாமல் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார்.

    பின்னர் திரையுலகில் சிறு பாத்திரங்களில் நடிக்கத் துவங்கி கதாநாயகனாக உயர்ந்து, தமக்கென ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர். துவக்கத்தில் ராஜகுமாரி, மந்திரிகுமாரி படப்பிடிப்பு காலங்களில் கலைஞர் கருணாநிதியுடன் ஏற்பட்ட நட்பு காரணமாக திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்து முக்கிய உறுப்பினராக இருந்தவர், பின்னர் பொருளாளராக உயர்ந்தார். தொடர்ந்து ஏற்றமும் இறக்கமுமாக இவர் திரைவாழ்வு அமைந்திருந்த நேரத்தில், பல சோதனைகளுக்கு இடையே “நாடோடி மன்னன்” படத்தைச் சொந்தமாகத் தயாரித்து திரையிட்ட போது எம்.ஜி.ஆர் சொன்னாராம்.

    “படம் வெற்றியடைந்தால் நான் மன்னன்; தோல்வி அடைந்தால் நாடோடி” என்று.

    படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலைக் குவித்தது இவர் வாழ்வில் ஒரு திருப்பு முனை!

    இப்பட வெற்றி விழாவில், பேரரறிஞர் அண்ணா, “நடிக மணிகளிலே எம்.ஜி.ஆர். ஒரு வீரர். விவேகம் நிரம்பிய தோழர். இல்லாதோரிடம் கருணை சுரக்கும் இயல்புடையவர். இந்தக்கனி தங்கள் மடியில் விழாதா என்று பலர் எதிர்பார்த்தார்கள். அது என் மடியில் வந்து விழுந்தது. அதை என் இதயத்தில் எடுத்து வைத்துக் கொண்டேன்” என்று புகழாரம் சூட்டினார். அன்று முதல் அண்ணாவின் இதயக்கனியானார்.

    துவக்கத்தில் மக்கள் திலகம் நடித்தவை வரலாற்றுப் பின்னணி கொண்ட படங்கள் என்றாலும், இவர் ஏற்ற கதாபாத்திரங்கள் பெரும்பாலும், ஏழை எளிய மக்களின் ஜனநாயகக் குரலை ஆட்சியாளர்களிடம் பிரதிபலிப்பதாகவும், அம்மக்களின் நல்வாழ்வுக்காக அநீதியை எதிர்த்துப் போராடி எதிரிகளை வீழ்த்தி நீதி கிடைக்கச் செய்வதுமாக அமைந்திருந்தன.  நாளாக நாளாக நிஜ வாழ்விலும் தங்களுக்காகப் போராடும் நாயகன் கிடைத்து விட்டான் என மக்கள் நம்பத் தலைப்பட்டனர்.

    செருப்புத் தைக்கும் சமூகத்தால் வளர்க்கப்படும் பாத்திரத்தில் நடித்த ‘மதுரை வீரன்’ படம் இவர் திரையுலக வரலாற்றில் ஒரு மைல்கல். இது திரையிடப்பட்ட அரங்குகள் பலவற்றிலும் 100 நாட்களைத் தாண்டி ஓடி சாதனை படைத்தது. மக்களின் நாயகனாக எம்.ஜி.ஆர் முழுப் பரிமாணம் பெற்றது இதில்தான். மக்களுக்குக் கேடு விளைவிக்கும் என்பதால், மது அருந்துவது, புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் இவர் நடித்ததேயில்லை. பெண்களுக்கு ஆபத்து என்றால் எங்கிருந்தாலும் ஓடி வந்து வில்லனுக்கு நடுவே குதித்து பெண்கள் மானம் காப்பார். எப்போதுமே ஏழைப்பங்காளன்! எதிரிகள் பத்து பேர் என்றாலும் இவர் ஒருவர் மட்டும் தனியாக நின்று சுழன்று சுழன்று பந்தாடி துவம்சம் செய்வார். அநீதிக்கு அடிபணியாமல் தீரத்துடன் தீயசக்திகளை எதிர்த்து முறியடிப்பார். இப்படிப் படங்களில் ஏழைகளுக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் இவர் பேசிய வசனங்களும், வாயசைத்த பாடல்களும், இவருடைய அரசியல் செல்வாக்கிற்கு அடிப்படையாக அமைந்தன. என்பது மறுக்க முடியாத உண்மை.

    எம்.ஆர்.ராதாவால் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிர் மீண்ட பிறகு இவர் குரல் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. இவர் வசன உச்சரிப்பு தெளிவாக இல்லாதபோதும், ரசிகர்கள் அதனை ஏற்றுக்கொண்டனர். வாள் சுழற்றுதல், சிலம்பம், சுருள்கத்தி சுழற்றுதல், போன்ற பலவகை சண்டைக் காட்சிகளில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். “படகோட்டி” படம் மீனவ சமுதாயத்திடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தொழிலாளி, விவசாயி, எங்க வீட்டுப் பிள்ளை போன்ற படங்கள் மக்களிடையே உண்டாக்கிய பிம்பம், இவருடைய அரசியல் செல்வாக்கை அதிகப்படுத்தி வாக்கு வங்கியாக நிலைபெற்றது. மக்கள் இவரைத் தங்கள் வீட்டுப் பிள்ளையாக எண்ணத் தலைப்பட்டனர். திரைப்படங்களைத் தம் பிரச்சார ஊடகமாக, அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி வெற்றி கண்டவர் எம்.ஜி.ஆர் என்று சொல்வது மிகச்சரி. இவர் படப்பாடல்கள், இன்றளவும் மக்களிடம் செல்வாக்கு பெற்றிருப்பதுடன், கட்சிக்கு வாக்கு சேகரிக்கும் பிரச்சாரப் பாடல்களாகவும் திகழ்கின்றன …

    “ஒரு தவறு செய்தால்
    அதைத் தெரிந்து செய்தால்
    அவன் தேவன் என்றாலும்
    விடமாட்டேன்”
    என்றும்;

    “தனியானாலும், தலைபோனாலும்
    தீமைகள் நடப்பதைத் தடுத்து நிற்பேன்”
    என்றும் சரியான சொற்களைத் தேர்ந்தெடுத்துக் கோர்த்து அவருக்காகவே பாடல்கள் எழுதினர் கவிஞர்கள்.

    “நதியைப் போலே நாமும் நடந்து பயன் தர வேண்டும்… 
    கடலைப் போலே விரிந்த இதயம் இருந்திட வேண்டும்… 
    வானம் போல பிறருக்காக அழுதிட வேண்டும்… 
    வாழும் வாழ்க்கை உலகில் என்றும் விளங்கிடவேண்டும்…”
    என்ற வைர வரிகள் இவருக்காகவே எழுதப்பட்டவை.

    “மூன்று எழுத்தில் என் மூச்சிருக்கும்; அது முடிந்த பின்னாலும் பேச்சு இருக்கும்,” என்பதை மெய்ப்பித்து தம் பாடல்களில் தனித்துவத்துவத்தை ஏற்படுத்தியவர். இம்மூன்றெழுத்தைக் கடமை என்றும் சொல்லலாம்; எம்.ஜி.ஆர் எனவும் கொள்ளலாம்; சமுதாய விழிப்புணர்ச்சி, தாய்நாடு, தாய்மொழி பற்று ஆகியவை இவர் படப்பாடல்களில் எப்போதுமே கலந்திருக்கும். பாடல்கள் மட்டுமன்றி வசனத்திலும் இவர் அதிக கவனம் செலுத்தினார். “நான் வெற்றி ஒன்றையே பரிசாகப் பெற்று வருபவன்!” என்று சொல்லும் வில்லன் வீரப்பாவுக்கு, “நான் எதிரிகளுக்குத் தோல்வி ஒன்றையே பரிசாகக் கொடுத்துப் பழக்கப்பட்டவன்!” என்று பதிலடி கொடுத்து ரசிகர்களின் கரகோஷத்தைப் பெறுவார். நிஜ வாழ்விலும் இதை இவர் நிரூபிக்கத் தவறவில்லை!

    தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்த சூழலில் எம்.ஜி.ஆரின் பங்களிப்பு பாமர மக்களிடம் கட்சிக்கான செல்வாக்கை அதிகரிக்கச் செய்தது. 1967 ல் அவர் தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் பரங்கிமலை தொகுதியில் வென்று எம்.எல்.ஏவானார். தி.மு.கவிலிருந்து அவர் நீக்கப்பட்டு, 1972ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் நாள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியைத் துவங்கிய காலக்கட்டத்தில், வெளியான‘ரிக்‌ஷாக்காரன்’ படத்தை வெளியிட முடியாமல் ஏற்பட்ட நெருக்கடியைச் சமாளித்துப் பல ஊர்களிலும் அதனைத் திரையிடச் செய்தவர்கள் ரிக்ஷாக்காரர்களே. அது போலப் பெரும்பொருட்செலவில் வெளிநாடுகளில் உருவாக்கப்பட்ட ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் வெளியீட்டின்போது, தி.மு.க ஆட்சி கொடுத்த நெருக்கடியால் சென்னையில் சுவரொட்டி ஒட்டமுடியாத நிலை ஏற்பட்ட போது அவருடைய ரசிகர் மன்றத்தினர், அவருக்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்து படத்தை வெற்றி பெறச் செய்தனர்.

    1977ல் நடைபெற்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்று தமிழக முதல்வ ராகப் பொறுப்பேற்றார். பின்னர் 1980ஆம் ஆண்டுத் தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் இரண்டாம் முறையாக முதல்வரானார். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் எந்த நடிகருக்கும் கிடைக்காத அங்கீகாரமும், செல்வாக்கும் எம்.ஜி.ஆருக்குக் கிடைத்ததென்றால், மக்கள் மனதில் இவர் நீக்கமற நிறைந்திருந்ததும், மக்களைக் கவர்ந்திழுத்த இவரின் காந்த சக்தியும், நம் நன்மைக்காக உழைக்கக்கூடியவர் என்று இவர் மீது மக்களுக்கிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையும் தாம் காரணங்கள்.

    முதல்வராக இருந்த காலத்தில் இவர் தீட்டிய சில திட்டங்கள், மக்களிடையே இவர் செல்வாக்கை அதிகரித்தன. குறிப்பாக காமராஜரின் பள்ளிக்குழந்தைகளின் மதிய உணவுத் திட்டத்தை முட்டை முதலியன சேர்த்துச் சத்துணவுத் திட்டமாக விரிவுபடுத்தியது, உடை, புத்தகம்,காலணி வழங்கியது, உழவர் கடன் தள்ளுபடித் திட்டம்,   ஆதரவு அற்ற மகளிர்க்கான நல்வாழ்வுத் திட்டம் போன்றவற்றைச் சொல்லலாம். ஏழை எளிய மக்களின் துயர் துடைக்கும் எண்ணத்துடன் இவர் கொண்டு வந்த இத்தகைய நல்வாழ்வுத் திட்டங்கள், ‘பொன்மனச்செம்மல்,’ என்ற பட்டப்பெயரை இவருக்குப் பெற்றுத் தந்தது. ‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்,’ என்று பேரறிஞர் அண்ணா சொன்னபடி எம்.ஜி.ஆர் உண்மையிலேயே ஏழை, எளிய மக்களை நேசித்தார். அவர்களுக்காக உள்ளம் உருகினார். அவர்களது மேம்பாட்டிற்காக உழைத்தார்.

    1984ல் இவர் சிறுநீரகக் கோளாறு காரணமாக கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டதால், சிகிச்சைக்காக அமெரிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்த போதே, தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றார். பத்தாண்டுகள் தொடர்ச்சியாக முதலமைச்சர் பதவியை வகித்து பதவியிலிருந்த போதே 1987 ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் நாள் இயற்கை எய்தினார். அவரது மறைவிற்குப் பின் பாரத ரத்னா விருது கொடுத்துப் புகழாரம் சூட்டினர்.

    தாம் நினைத்ததை நடத்தி முடித்தவர் மக்கள் திலகம். நடிகனாகவும் அரசியல்வாதியாகவும் புகழ் பெற விரும்புவோர்க்கு எம்.ஜி.ஆர் வாழ்க்கை ஒரு பாடம்.

     அவர் மரணப்படுக்கையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த காலத்தில் பட்டி தொட்டியெங்கும் இப்பாடல் ஒலிபரப்பானது …

    “உள்ளமதில் உள்ளவரை
    அள்ளித்தரும் நல்லவரை
    விண்ணுலகம் வாஎன்றால்
    மண்ணுலகம் என்னாகும்?”
    என்றும் …

    “உன்னுடனே வருகின்றேன்
    என்னுயிரைத் தருகின்றேன்
    மன்னன் உயிர் போகாமல்
    இறைவா நீ ஆணையிடு!”
    என்றும் …

    மக்கள் தம் உயிரை ஈந்து எம்.ஜி.ஆரை உயிர்ப்பிக்க வைக்க வேண்டும் என்று இறைவனிடம் கண்ணீர் மல்க வேண்டுதல் நடத்தினர். இதிலிருந்து எம்.ஜி.ஆர் மீது மக்கள் கொண்டிருந்த அளவற்ற அன்பும், பாசமும் விளங்குகின்றதல்லவா?
    அதனால் தான் கவிஞர் வைரமுத்து சொன்னார்:
    “ஒரே ஒரு சந்திரன் தான் ;
    ஒரே ஒரு சூரியன் தான் ;
    ஒரே ஒரு எம்.ஜி.ஆர் தான்;”
    தொலைக்காட்சி, இணையதளம் என நவீனத் தொழில்நுட்பங்கள் வளர்ந்த இக்காலத்திலும் எம்.ஜி.ஆரின் புகழ் குன்றாமல் ஒளிவீசக் காரணம், மக்கள் தங்கள் நெஞ்சங்களில் அவர் உருவத்தை அழியாத கோலமாகத் தீட்டி வைத்திருப்பது தான். என்றென்றும் அது கலையாது; மறையவும் மறையாது!

    “நெஞ்சிலிட்ட கோலமெல்லாம் அழிவதில்லை
    என்றும் அது கலைவதில்லை
    எண்ணங்களும் மறைவதில்லை”

    Share
  • மனதில் நிறைந்த மக்கள் திலகம்

    — முனைவர் இதயகீதம் இராமனுஜம்.

    பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.

    முன்னுரை:
    வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வள்ளலார் வாடினார். ஏன் தெரியுமா? பயிர் விளைந்தால்தான் உணவு கிடைக்கும். உணவு கிடைத்தால்தான் மக்கள் வாழ்க்கை செழிக்கும். அந்த வாழ்க்கைக்கு அடிப்படையாக இருப்பது இயற்கை. இதுவே வள்ளலாரின் சிந்தனையாக இருந்தது. அதே போல மக்கள் குறிப்பாக ஏழைக் குழந்தைகள் வாடியதால் சத்துணவு திட்டத்தைக் கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர். பெருந்தலைவர் காமராசர் கொண்டுவந்த மதிய உணவு திட்டத்தை சத்தான முத்தான திட்டமாகக் கொண்டு வந்து நடைமுறைப் படுத்தியவர் பொன்மனச் செம்மல், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பேரறிஞர் அண்ணாவின் ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்பதைப் போல மக்களின் வயிற்றுப் பசியைப் போக்கி அதில் இறைவனைக் கண்டவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். இன்றும் கிராமத்து மக்கள் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் மறையவில்லை… எங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

    பிறப்பு:
    எம்.ஜி.ஆர். என்று மூன்று எழுத்தால் பாரெங்கும் புகழ் பெற்ற பொன்மனச்செம்மல் மருதூர் கோபால மேனன் இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்.) மருதூர் கோபால மேனனுக்கும் சத்திய பாமாவுக்கும் 1917ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 17ஆம் நாள் இலங்கையில் உள்ள கண்டியில் பிறந்தார்.

    இளமையின் கனவும் லட்சிய உணர்வும்:
    இளமை பலருக்கு இனிமையாக இருக்கும். சிலருக்கு இன்னலாக இருக்கும். புரட்சித்தலைவரின் இளமை வாழ்க்கை பல சோகங்களும் இன்னல்களும் கலந்து இருந்தது. இளம் தந்தையை இழந்தார் எம்.ஜி.ஆர். அதனால் அவரது தாயார் சத்யபாமா வேதனையில் அவதிப்பட்டார். உழைத்து பிள்ளைகளைக் காக்க முடிவு செய்து மருதூரிலிருந்து தமிழகம் வந்தார். கும்பகோணத்தில் குடியேறினார். தனியாக குழந்தைகளுடன் வாடகை வீட்டில் குடியிருந்த சத்யபாமா அம்மையார் வேலை செய்து குழந்தைகளை வளர்த்தார்.

    தங்கள் குழந்தைகள் மனித நேயத்துடன் இருக்க வேண்டும். உலகிலே சிறந்த பக்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதுதான். இதை நீங்கள் செய்ய வேண்டும். ஏழைகளின் துயரத்தைத் துடைத்தாலே கடவுளைத் தொழுத பலன் கிட்டும் என்று தனது தாயார் சொல்லிக்கொடுத்த பாடத்தைத்தான் தனது வாழ்நாளில் இலட்சியமாக இருந்து செயல்படுத்தினார் பொன்மனச் செம்மல்.

    மக்கள் சேவை:
    நாடும் சமூகமும் நலமாக இருக்க நல்ல பழக்க வழக்கங்கள் அவசியம். அதைத்தான் திரைப்படங்கள் மூலம் எம்.ஜி.ஆர். பரப்பினார். ராமானுஜர், ஆதிசங்கரர், காஞ்சி மகா சுவாமிகள் போல எம்.ஜி.ஆர். ஒரு அவதார புருஷர். ஏனென்றால் நாட்டு நலனுக்காக ஆன்மீக வழியில் அவர்கள் சேவை செய்தனர். ஆனால் எம்.ஜி.ஆர். தன் தொழிலான திரைப்படங்கள் மூலம் மனித நேயத்தையும் மக்கள் பண்புகளையும் மக்கள் மனதில் விதித்தார். எம்.ஜி.ஆர். தனது தாய் சத்யபாமா அம்மையாரின் அறிவுரைகள், தனது வாழ்க்கையில் சந்தித்த பல கஷ்டங்கள், நஷ்டங்கள், வேதனைகள், துயரங்கள் மூலமும் மிகவும் பக்குவமடைந்தார். அதனால் சமூகமும் நாடும் இப்படி இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என்று உணர்ந்தார். அதனால்தான் ஆட்சிக் கட்டிலில் எம்.ஜி.ஆர். அமர்ந்தபோது பல மக்கள் நலத் திட்டங்களில் தன்னை ஈடுபடுத்தி மக்கள் சேவையே மகேசன் சேவை என்னும் தாரக மந்திரத்தைச் சொல்லி நலம் பயக்கும் திட்டங்களை நிறைவேற்றினார்.

    தேடி வந்த விருதுகள்:
    1960ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டும், விருதில் ஹிந்தி வார்த்தைகள் இருந்ததால் அதை ஏற்க மறுத்தார் பொன்மனச்செம்மல்.
    1972ஆம் ஆண்டு ரிக்ஷாக்காரன் திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதினைப் பெற்றார்.
    1987ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
    புரட்சித் தலைவருக்கு டாக்டர் பட்டம் சென்னை பல்கலைப் கழகமும் அரிசோனா உலகப் பல்கலைக் கழகமும் இணைந்து வழங்கிப் பெருமைப்படுத்தியது.

    அரசியல்:
    திரைப்படங்கள் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற எம்.ஜி.ஆர். அவர்கள் தி.மு.கவில் ஏற்பட்ட கருத்து வேற்றுமையினால் தி.மு.கவில் இருந்து விலகி அ.தி.மு.க. என்னும் கட்சியைத் துவங்கினார். கட்சியைத் துவக்கிய நிலையில் திண்டுக்கல் எம்.பி. தொகுதி இடைத்தேர்தல் வந்தது. அதுதான் எம்.ஜி.ஆர்.-ன் அ.தி.மு.கசந்தித்த முதல் தேர்தல் களம். ஸ்தாபன காங்கிரஸ், இந்திரா காங்கிரஸ், தி.மு.க. போன்ற கட்சிகள் போட்டியிட்ட நிலையில் தன் கட்சி வேட்பாளரான மாயத்தேவரை வெற்றி பெறச் செய்தார் எம்.ஜி.ஆர். தன்னுடைய சினிமா மாயைக் காட்டி ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுவிட்டார். பொதுத் தேர்தல் வரட்டும்… அப்போது தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து எம்.ஜி.ஆர். வெற்றி பெறுவாரா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது எம்.ஜி.ஆரால் இவ்வளவு விரிவாகப் பிரச்சாரம் செய்ய முடியாது. சினிமா மாயை கலைந்துவிடும் என்று தன் கட்சியினருக்குத் தைரியம் சொன்னார் கலைஞர் கருணாநிதி.

    எம்.ஜி.ஆர். மீது பல வழக்குகள் போடப்பட்டன. அந்த வழக்குகளை எல்லாம் முறைப்படி அறப்போராட்டம் மூலம் சந்தித்தார். அரசைக் கண்டித்து உண்ணாவிரதம் இருந்தார். எம்.ஜி.ஆருடன் ஜானகி அம்மாளும் உண்ணா விரதத்தில் கலந்து கொண்டார். காலை எட்டு மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை உண்ணாவிரதம் இருந்து தன் எதிர்ப்பைக் காட்டுவார். அராஜகத்தில் ஈடுபடமாட்டார்.

    எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த வரையில் மக்கள் நலனே தன் நலன் என்ற வகையில், ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படாமல் ஆட்சி செய்தார். மின் கட்டணம், பால் விலை கூட்டாமல் இருந்தார். விவசாயிகளுக்கு மின் கட்டணம் கட்டும் முறையில் எளிமையும் சலுகையும் காட்டினார். விவசாய மின் கட்டணம் வெகுவாகக் குறைக்கப்பட்டது. அரசு ஊழியர்கள் மற்றும் சாதாரண மக்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை, பாமாயில், மண்ணெண்ணெய் தடையில்லாமல் கிடைக்குமாறு செய்தார். திறமையான அதிகாரிகளின் ஆலோசனையைக் கேட்டு முடிவு எடுத்தார்.

    பொருளாதாரமும் எம்.ஜி.ஆரும்:
    1977ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் மாற்றுக் கட்சித் தலைவர்கள்… “எம்.ஜி.ஆருக்குப் பொருளாதாரம் தெரியுமா?” பொருளாதாரம் தெரியாமல் ஆட்சி நடத்த முடியுமா? என்று கேட்டார்கள். இதற்குப் பதிலளித்த எம்.ஜி.ஆர். “அடுத்த வேலை பசியைப் போக்கத் தெரியும். உழைப்பும் எளிமையும் சேமிப்பும் நேர்மையும் இருந்தால் போதும், யாரும் பிரகாசமான வாழ்வு பெறலாம். இதுதான் எனக்குத் தெரிந்த பொருளாதாரம்” என்று பதிலளித்தார். பசியோடு இருந்தவன் நான். பசியை வென்றேன். திரைத்துறையில் ஈடுபட்டு திருப்தியாக வளர்ந்தேன். அதேபோல் என் ஆட்சியிலும் மக்கள் திருப்தியை அடையச் செய்வேன் என்றார்.

    திரைப்படப் பாடல்களில் திசையைக் காட்டியவர்:
    மீனவ சமுதாயத்திற்காக எழுதிய இப் பாடல் உலக அரங்கம் முழுவதும் இன்றும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

    தரைமேல் பிறக்க வைத்தான்…
    எங்களை கண்ணீரில் மிதக்க வைத்தான் …
    – என்ற பாடல் வரிகளில் அசைந்தாடுகின்றபோது, சமூகத்தின்மீது இவருக்கு உள்ள அக்கறை புலனாகிறது!

    ஒரு தாய் மக்கள் நாமென்போம்..
    ஒன்றே எங்கள் குலமென்போம்…
    – என்ற பாடல் மூலம் நாமெல்லாம் இந்தியத் தாயின் பிள்ளைகள் என்றும் நாம் அனைவரும் மனிதர்கள் என்னும் குலத்தைச் சார்ந்தவர் என்றும் விளக்கினார்.

    இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார்.. அவர்
    என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்..
    – என்ற பாடலின் மூலம் அண்ணாவின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்தார்.

    திருடாதே பாப்பா திருடாதே..
    வறுமை நினைத்து பயந்துவிடாதே
    திறமை இருக்கு மறந்துவிடாதே..
    -என்ற பாடலில் குழந்தைகளுக்கு திருடக் கூடாது என்ற தத்துவத்தை போதித்து வறுமையை நினைத்து பயந்து போகக் கூடாது. நமக்கு திறமை இருக்கு என்பதை நினைவூட்டி மக்கள் மனதில் திறமையை போதித்தவர் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர்.

    இவரது பாடல்களை பாமரர் முதல் படித்தவர் வரை கேட்டு மகிழ்கிறார்கள். சோதனையும் வேதனையும் வரும்போது அவரது தத்துவப் பாடல்கள் சோகத்தை விரட்டும் சக்தியாக விளங்குகிறது என்றால் அது மிகையில்லை.

    சமூகப் பார்வை:
    கடமையைச் செய். பலன் தானாக வரும் என்பது கீதையின் வாசகம். சமார்த்தியத்தைவிட சத்தியம் உயர்ந்தது என்பார் எம்.ஜி.ஆர். புகைக்கக் கூடாது … மது அருந்தக் கூடாது… திருடக் கூடாது… அராஜகம் செய்யக் கூடாது… பணிவு வேண்டும்… விசுவாசம் வேண்டும்… பெற்றோரைத் துதிக்க வேண்டும்… தோல்வி கண்டு துவளக் கூடாது… எத்தனை கஷ்டங்கள் இருந்தாலும் வேதனை வந்தாலும் பொறுமையும் உழைப்பும் நல்ல வாழ்வைத் தரும் என்பார்.

    பழி வாங்கக் கூடாது… அடுத்தவர் பொருளை அபகரிக்கக்கூடது… வரதட்சணை வாங்கக் கூடாது… ஊதாரித்தனம் கூடாது… அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும்… மனித நேயம் பேண வேண்டும்… குழந்தைகளை மதிக்க வேண்டும்… அவர்கள்தான் சமூகத்தில் நாட்டின் எதிர்காலத் தூண்கள் என்பார்… பெற்றோர்கள் நேரில் வந்த தெய்வங்கள் என்பார்.

    நம்மை யாரும் பார்க்கவில்லை என்கிற தைரியத்தில் தவறு செய்யாதீர்கள். எங்கும் வியாபித்து இருக்கும் தெய்வம் (சத்தியத்தின் கண்கள்) உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. சாட்சியிடம் தப்பிக்கலாம். சட்டத்தின் முன் தப்பிக்கலாம். ஆனால் சத்தியத்திடமிருந்து தப்ப முடியாது – சத்தியம் தெய்வம் அத்தனை வலிமை வாய்ந்தது. இந்தத் தத்துவத்தைத்தான் சிரித்து வாழ வேண்டும் திரைப்படத்தில் வரும் மேரே நாம் அப்துல் ரஹ்மான் என்ற பாடலின் வரிகள் வாயிலாக விளக்கியுள்ளார் எம்.ஜி.ஆர்.

    முடிவுரை:
    தமிழக சட்ட மன்ற வரலாற்றில் முதல்வர்களாக பணி புரிந்ததில் பல சாதனைகள் புரிந்திருந்தாலும், ஒன்பது ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி செய்த காமராசருக்கு அடுத்தபடியாக தொடர்ந்து பத்தரை ஆண்டுகள் முதல்வராகப் பணி செய்த சாதனை புரிந்தவர் எம்.ஜி.ஆர். அவரது ஆட்சியில் மக்கள் கஷ்டம் இல்லாமல் திருப்திகரமான மகிழ்ச்சிகரமான வாழ்க்கை வாழ்ந்தனர்.

    மனித நேயம், உழைப்பு, உண்மை, பாசம், அர்ப்பணிப்பு, நேர்மை, சேவை எண்ணம் கொண்டு மகத்தான சாதனை புரிந்தவர். காஞ்சி மகா சுவாமிகளின் ஆசியும் பெற்ற எம்.ஜி.ஆர். இந்தப் பூவுலகை விட்டு 1987ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் நாள் பொன்னுலகம் சென்றார்.

    பொன்மனசெம்மலின் வழியில் நாமும் மனித நேயத்தை வளர்த்து வாழ்க்கையில் முடிந்தவரை அனைவருக்கும் உதவி செய்து வாழ்வில் வளம் பெறுவோம்.

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

    ”நீலப்பா வாடையில் நெய்மணக்கும் கூந்தலில்,
    வாலைக் குமரி வடிவத்தில், -சோலை
    வனக்குயிலாய் வேய்ங்குழல் வாசித்து நாட்டியம்,
    பனிக்கயிலை மாப்பிள்ளை போல்’’….கிரேசி மோகன்….

     

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    மார்ச் 30, 2015

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு  முனைவர் கு.கல்யாணசுந்தரம் அவர்கள்

     

    kalyan2

    தொல்காப்பியம்நச்சினார்கினியர் உரையின், பொருளதிகாரம்: அகத்திணையியல் (பாகம் 1) யும், பொருளதிகாரம்: புறத்திணையியல் (பாகம் 2) யும் மார்ச் 27, 2015 அன்று 500 வது தமிழிலக்கிய மின்னூலாக வெளியிட்டு மிகவும் பாராட்டத்தக்க எல்லையை எட்டியுள்ளது இணையத்தின் “மதுரைத்திட்டம்” (Project Madurai). இந்த மின்னாக்கப் பணியைத் துவக்கி, வழிநடத்தி, இந்த சாதனை எல்லையைத் தொட்டவர் முனைவர் கு. கல்யாணசுந்தரம் அவர்கள். அவரை இவ்வார வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமைக்குழுவினர் பெருமை அடைகிறோம்.

    projectmadurai

    முனைவர் கு.கல்யாணசுந்தரம் அவர்கள், “மதுரைத் திட்டம்” என்னும் பெயரில் இணையத்தில் தமிழ் இலக்கியங்களையும் இலக்கண நூல்களையும் மின்னிமப்படுத்தி , அவற்றை மின்நூல்களாக மாற்றி உலகத்தமிழினம் அனைவரும் பயன்படுத்தும் வண்ணம் விலையின்றி வழங்கும் நோக்கில் மின்னாக்கப்பணியைத் துவக்கி, கடந்த 17 ஆண்டுகளாக தன்னையொத்த பலநூறு தமிழார்வலர்களையும் இப்பணியில் பங்கு பெறச் செய்து வழிநடத்தியும் வருகிறார். மதுரைத் திட்டம் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் உதவியின்றி, வணிக நோக்கமுமின்றி நடைபெறுகின்ற ஒரு தன்னார்வ முயற்சி. 1998-ம் ஆண்டு பொங்கல் அன்று தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் சற்றேறக்குறைய 400 தமிழார்வலர்கள் இந்நாட்களில் பங்கு பெறுகிறார்கள். காப்புரிமை சிக்கலில்லாத நூல்களை தட்டச்சுவது ஒரு சிலர், மெய்ப்புப் பார்ப்பவர் மற்றும் சிலர், இணையத்தில் மின்னூலாக வெளியிட உதவுபவர் வேறு சிலர் என பலர் வெவ்வேறு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தங்கள் இல்லங்களில் இருந்தபடியே, தங்கள் கணினி மூலம் இணையவழித் தொடர்பு கொண்டு, படநகல்களாக கிடைத்துள்ள தமிழிலக்கியங்களை தட்டச்சி உள்ளிட்டும், பிழைதிருத்தியும் கூட்டு முயற்சியில் 500 மின்னூல்கள் என்ற எல்லையைத் தொட்டது பாராட்டத் தக்க ஒரு பணியாகும். இத்தகையப் பணிக்காக தன்னார்வத் தொண்டு செய்த தமிழார்வலர்கள் அனைவருக்கும், திட்டத்தின் தலைவரான கல்யாணுக்கும் தமிழர்கள் யாவரும் கடமைப்பட்டுள்ளோம். வெள்ளுரை (eText) வகையில் அமைந்துள்ள நூல்களே இணையத் தேடல்களின் வழி கிடைப்பதற்கும், ஆய்விற்கும் உதவும் என்பதால் இப்பணியின் இன்றியமையாமையும் தெளிவாகும்.

    சங்க கால நூல்கள், நீதிநெறி நூல்கள், இலக்கண நூல்கள், பக்தி நூல்கள் (சைவ, வைணவ, இஸ்லாமிய, கிருத்துவ சமய நூல்கள்) காப்பியங்கள், பிரபந்த வகை நூல்கள், 20-ம் நூற்றாண்டின் தமிழ் நாட்டு ஆசிரியர் நூல்கள், ஈழத் தமிழர், மலேசியத் தமிழர் நூல்கள், மற்ற பிற நூல்கள் என சங்க கால நூல்கள் முதல் தற்காலத் தமிழ்நூல்கள் வரை அனைத்தும் மதுரைத்திட்டத்தின் வழி வெளியிடப்படுகிறது. படிமக்கோப்புகளாகவும் (PDF), ஒருங்குகுறி (Unicode)எழுத்துருக்கோப்புகளாகவும், இணையப்பக்கங்களாகவும் (web pages)தமிழிலக்கியங்கள் மதுரைத்திட்டத்தின் வழியாகக் கிடைக்கின்றன. தமிழக அரசின் பொதுவுடமையாக்கப்பட்ட இருபதாம் நூற்றாண்டு எழுத்தாளர்களின் நூல்கள் மற்றும் ஜெயகாந்தன், கவிப்பேரரசு வரைமுத்து ஆகியோர் தாங்களே காப்புரிமை நீக்கி வழங்கிய நூல்கள் என பல தற்கால நூல்களும் மதுரைத் திட்டத்தின் சேகரிப்பில் இடம் பிடித்துள்ளன.

    thiruvalluvar-thirukkural

    1990 களின் மத்தியில் தமிழ்க்கணினி வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட கல்யாண் முதல் முயற்சியாக திருக்குறளை தட்டச்சி இணையத்தில் ஏற்றி அனைவரும் பயன்படுத்தும் வழி இலவசமாக அளித்தார். இவரையொத்த ஆர்வம் கொண்டவர் பலரும் இணைந்ததில் உருவான மதுரைத் திட்டத்திற்காக இவரே தனது செலவில் பலநூல்களை தேடிப்பிடித்து வாங்கியும், நகலெடுத்தும் உள்ளார். தற்பொழுது ஒரே ஒரு பிரதி மட்டுமே உள்ள, “சிவபுரம்” என்ற தலைப்பில் 1902 ஆண்டில் பதிப்பிக்கப்பட்ட நூல் ஜி. யு. போப் அவர்களால் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக நூலகத்திற்கு வழங்கப்பட்டதை அறிந்து, அங்கு சென்று நூலை படநகல்களாக எடுத்து அவற்றை மின்னாக்கம் செய்துள்ளார்.

    kalyan3தன்னை தமிழறிஞர் என்றோ தமிழ்க்கல்விப் பணியைச் சார்ந்தவர் என்றோ இனம் காண முடியாது, தான் ஒரு தமிழ் ஆர்வலர் மட்டுமே என்று கூறும் முனைவர் கு.கல்யாணசுந்தரம் அவர்கள் சுவிச்சர்லாந்தின் லாசன்னே நகரில் உள்ள “சுவிஸ் தேசிய தொழில்நுட்ப நிலையத்தில்” (Swiss Federal Institute of Technology, Lausanne, Switzerland) வேதியியல் பேராசிரியராகவும், ஆய்வாளராகவும் 36 ஆண்டுகளாகப் பணி புரிந்து வருகிறார். சூரிய மின்கலங்களைப் பற்றிய ஆய்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் லயோலா கல்லூரி மாணவரான கல்யாண், அமெரிக்க பல்கலைக்கழகமொன்றில் வேதியலில் முனைவர் பட்டத்தையும், இங்கிலாந்து பல்கலைக்கழகமொன்றில் வேதியலில் முதுமுனைவர் பட்டத்தையும் பெற்றவர்.

    பல இயங்குதளங்களிலும் பயன்படுத்த உதவும் வகையில் “மயிலை” என்ற எழுத்துருவை 1980 களில் உருவாக்கி அனைவரும் இலவசமாகப் பயன்படுத்த உதவிய முன்னோடி எனவும், இணையத்தின் ஆரம்ப நாட்களில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட “தமிழ் மின்நூலகத்தை” (Tamil Electronic Library) உருவாக்கியவர் எனவும், “உத்தமம்” என்றழைக்கப்படும் உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் (International Forum for Information Technology in Tamil – INFITT) தலைவர் மற்றும் நிறுவனர்களில் ஒருவராகவும், ‘தமிழ் மரபு அறக்கட்டளை’(Tamil Heritage Foundation) நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவர் எனவும் பல வகைகளில் தன்னை பல தமிழ்ப்பணிகளில் இணைத்துக் கொண்டவர் கல்யாண். இவரது பணிகளைப் பாராட்டி 2008 ஆம் ஆண்டு கனடா தமிழிலக்கிய கழகத்தின் மதிப்புமிக்க “சுரா” (Canadian Tamil’s initiative TAMIL LITERARY GARDEN’s Sundara Ramasamy Award for Tamil Information Technology – Sura) விருது வழங்கப்பட்டது. கலிஃபோர்னியாவின் பெர்க்லி பல்கலைக்கழகமும் இவரது இணையத் தமிழ்ப்பணியை பாராட்டி விருது வழங்கியுள்ளது.

    சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த மதுரையின் பெயரைச் சூட்டி, மதுரைத் திட்டம் என்ற ஒன்றைத் துவக்கி, தன்னார்வத் தொண்டர்களான சில நூறு தமிழார்வலர்களை ஒருங்கிணைத்து வழிநடத்தி இந்தச் சாதனையைச் செய்துள்ள முனைவர் கு.கல்யாணசுந்தரம் அவர்கள், தனது பணியை மேலும் தொடர்ந்து நடத்தி தமிழ் நூல்கள் பலவற்றை இணையத் தேடலில் கிடைக்கும் வகையில் வெள்ளுரைகளாக மாற்றி வழங்குமாறு வேண்டுகோள் விடுத்து, வல்லமைக் குழுவினர் அவரை இவ்வார வல்லமையாளராக பாராட்டி மகிழ்கிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    மேலும் தகவலுக்காக:
    Dr. K. Kalyanasundaram
    kalyan.geo@yahoo.com
    www.projectmadurai.org
    https://groups.yahoo.com/neo/groups/pmadurai/info

    Share
  • மர(ண) வாக்குமூலம்!

    -நிரஞ்சன்  பாரதி

    இன்னும் சில
    நொடிகளில் எனக்கு
    மரணம் நிகழப் போகிறது!

    நீ தானே கொல்கிறாய்                                     OLYMPUS DIGITAL CAMERA
    பரவாயில்லை…

    நான் ’மர’த்துப் போனவன் தான்;
    ஆயினும் எனக்கு உணர்ச்சிகளுண்டு!

    கூட்டுக்குடும்ப முறையை
    நீ  நம்பாமல் இருக்கலாம்
    நான் நம்புகிறேன்!

    என்னிடம் இருக்கும்
    குடும்பங்கள் யாவும்
    ’கூட்டு’க் குடும்பங்களே!!

    ’பச்சை’யாக இருப்பதால்
    தண்டனையா எனக்கு?
    பச்சை என்றால்
    ’பசுமை’ என்றும் பொருள்!

    தமிழ் படிக்கவில்லையா நீ?
    பசியாறக் கனிகள் தருகிறேன்
    இளைப்பாற நிழல் தருகிறேன்
    சுவாசிக்கக் காற்று தருகிறேன்
    வாசிக்கக் காகிதம் தருகிறேன்

    இருப்பினும் எனக்கு
    அறுவை சிகிச்சை செய்து
    உன் வீட்டில்
    அறைகலன் ஆக்கினாய்!

    வீட்டுக்கொரு மரம்
    வளர்ப்போம் என்பதைத்
    தவறாகப் புரிந்து கொண்டாயே!!

    ’நூறு கைகள் இருந்தும் என்ன பயன்?
    பற்பல கால்கள் இருந்தும் என்ன பயன்?
    நெடிய உடல்  இருந்தும் என்ன பயன்?

    உனக்கு ஓரறிவு
    எனக்கு ஆறறிவு
    ஆறிலே ஒன்று
    கழியாதா’ என்கிறாய்!

    உண்மை தான்…
    உன்னை விட
    நான் ஐந்து அறிவுகள்
    பின்தங்கியிருக்கிறேன்!

    ஆனால்
    நீ வெட்டினாலும் நான் வீழ மாட்டேன்
    நீ வீழ்ந்தபின்
    மரணப் படுக்கையில்
    நானன்றோ உனக்குப்
    படுக்கை ஆவேன்!
    உன்னுடன் சேர்ந்து
    நானுமன்றோ எரிந்து போவேன்!

     

    Share
  • விழித்தெழு பெண்ணே!

    -ஆர். எஸ். கலா

    பெண்ணே நீ  விழித்தெழு
    இருளைக் கிழித்தெழு
    அறியாமையைத் தகர்த்தெழு
    அறிவியலை இழுத்தெழு
    அருவியாகக் கண்ணீர்
    சிந்துவதை நிறுத்தியெழு
    அடிமைத்தனத்தை உடைத்தெழு!

    அன்புக்கு அடி பணிந்து
    வம்புக்கு அடிகொடுத்து
    நிமிர்ந்து நில்!
    தலைக்கனத்தை கைவிட்டு
    நம்பிக்கையை கையில் எடுத்து
    உயர்ந்த இடத்தில் நிலைத்து நில்!

    அதட்டல் மிரட்டல் உருட்டல் எல்லாம்
    புரட்டிப் போட்டுப்  படிப்படியாக
    உயர்ந்து நில்  படிப்பில்!

    ஏற்ற தாழ்வுகளையும் முரண்பாடுகளையும்
    மடக்கிக்  கசக்கிச் சுருட்டிப் போட்டு
    மகளிராலும் முடியும் என்று
    நிரூபித்துவிடு நல்ல செயலில்!

    தன்னடக்கம் நாவடக்கம் இவைகளைத்
    துணையாக எடு நன்மைக்கு!
    மனையாள மட்டுமே மனையாள்
    என்ற தவறான கறையைக்
    கரம்பிடித்தவன் நெஞ்சில் இருந்து
    துடைத்துத் தூக்கிப்போடு!

    அன்பாலும் ஆதரவாலும் எடுத்துக் கூறி
    வளைத்துப்பிடி உன் பிடியில் கணவனை!

    புன்னகையில் பெண் ஒரு மலர்
    தென்றலாகும் போது ஒரு மங்கை
    கொண்டலாகத் தடவும்போது அவள்
    ஒரு நல்ல துணைவி!
    பொறுமை இழந்தால்
    புயலாக மாறும் கண்ணகி!
    உணரவை ஆண்ஆதிக்கம் கொண்ட
    சிலருக்கு!

    ஆணும் பெண்ணும் ஓர் உயிரே
    பிறப்பும் இறப்பும் ஒன்றே
    என்று புரியவை
    ஆனால் ஆணவத்தில்
    ஆட்டம் போடாதே பெண்ணே
    அவைதனை நிறுத்தி விடு
    பாரதி கண்ட கனவு கலையாமல்
    சிலையாகாமல் உயிர்த்தெழ வேண்டும்
    நீ பாரதிப் பெண்ணாக விழித்தெழு
    பெண்ணே!

     

    Share