Blog

  • நான் அறிந்த சிலம்பு – 159

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 04: ஊர் காண் காதை

    பொன் கடைத்தெரு

    சாதரூபம், கிளிச்சிறை, ஆடகம், சாம்பூநதம் எனும்
    புகழ்பெற்ற நான்குவகைப் பொன்னின்
    வேற்றுமைகளைப் பகுத்தறியும் பொன்வணிகர்   gold shop
    பொன்னை வாங்க வருவோர்க்கு
    ‘எது எது எங்கு எங்கு இருக்கிறது’ என்று
    குழப்பம் ஏற்படாமல் இருக்க,
    ‘இது இது இங்கு இருக்கிறது’ என்று அறிவிக்கும்படி,
    கொடிகள் நாட்டப்பெற்றிருந்த
    பொன் கடை வீதிகள் இருந்தன.

    அறுவை வீதி

    நுண்ணிய பருத்தி நூலாலும்
    எலி மயிராலும்
    பட்டு நூலாலும்
    அழகுதோன்ற நெய்யப்பட்டு
    பலப்பல நூறுகளாக அடுக்கிவைக்கப்பட்ட
    அழகிய மணம் கொண்ட புடவைகள்
    நெருக்கமாக வைக்கப்பட்டிருந்த
    கடைத்தெருவும் இருந்தது.

    கூல வீதி

    நிறுத்து அளக்கும் துலாக்கோலும்
    முகந்து அளக்கும் பறை, மரக்கால்
    ஆகியவற்றைக் கையில் கொண்டு,
    தரகு வேலை செய்பவர்கள்
    அங்கும் இங்குமாகத் திரிந்து கொண்டிருந்தனர்.
    அங்கே
    இந்தக் காலம் அந்தக் காலம் என்று
    காலம் கருதாமல்
    எக்காலத்திலும் கிடைக்கும்
    கரிய மிளகுப் பொதிகளுடன்
    பிற தானியங்களும் கலந்து
    விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த
    கூல வீதியும் இருந்தது.

    பற்பல வீதிகளையும் கண்டு, கோவலன் புறஞ்சேரிக்கு மீளுதல்

    மேற்கூறிய வீதிகளுள்
    அரசர், அந்தணர், வணிகர், வேளாளர்
    ஆகியோர் இருக்கும்
    நால்வகைத் தெருக்களிலும்
    முச்சந்தியும் நாற்சந்தியும்
    கோயில் கடைத்தெருவும் மன்றங்களும்
    பல தெருக்குகள் கூடும் முடுக்குகளும்
    குறுந்தெருக்களும் எல்லாம்
    கோவலன் உலாவித் திரிந்து,
    வானில் சூரியனின் வெம்மை மிகுந்தபோதும்
    அதன் கதிர்கள் உட்புகாவண்ணம்
    பசுமையான கொடிகள் படர்ந்த
    பந்தலின் கீழ் நிழலில் நடந்து,
    பாண்டி மன்னனின் பெரிய தலைநகரைக்
    கண்டு மகிழ்ந்தான்.
    பின் கொடிகள் இருந்த மதிலைக் கடந்து
    கவுந்தியடிகளும், கண்ணகியும் இருந்த
    இடத்தை அடைந்தான்.

    ஊர் காண் காதை முற்றியது; அடுத்து வருவது அடைக்கலக் காதை

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 201 – 218

    http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1134-oorkankathai–

    படத்துக்கு நன்றி: கூகுள்

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(65)

    -செண்பக ஜெகதீசன்

    இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
    பார்தாக்கப் பக்கு விடும். (திருக்குறள்:1068 – இரவச்சம்)

    புதுக் கவிதையில்…

    யாசித்தல் என்பது
    வீசும் காற்றில்
    விடப்பட்ட மரக்கலம்,
    அது
    கொடுக்காமல் மறைத்தல் எனும்
    பாறையில் மோதிப்
    பாழாகும் உடைந்தே…!

    குறும்பாவில்…

    இரத்தல் தோணிக்கு
    இல்லை பாதுகாப்பு,
    மோதியுடையும் மறைத்தல் பாறையில்…!

    மரபுக் கவிதையில்…

    இடுவார் பிச்சை என்றலையும்
    இரப்பு எனப்படும் மரக்கலமும்,
    அடுத்து வந்திடும் இடரதைமுன்
    அறிந்தே தடுக்க இயலாது,
    கொடுக்க ஏதும் இல்லையெனக்
    கரக்கும் பாறையில் மோதிவிட்டால்,
    தடுக்க வியலா துடைவதையும்
    தாங்கிக் கொள்ள வேண்டியதே…!

    லிமரைக்கூ…

    இரத்தல் தோணிக்கு பாதுகாப்பேதும் இல்லை,
    உடைந்தே அழிவது உறுதியாகும்
    மோதினால் மறைத்தல் பாறையின் கல்லை…!

    கிராமிய பாணியில்…

    எரக்காத எரக்காத
    எங்கேயும் எரக்காத,
    எரப்புஎப்பவும் கப்பல்போல
    கடல்லபோற கப்பல்போல…

    ஓடுறவர ஓடிப்போவும்
    ஒடஞ்சிபோவும்
    ஒரசிப்போனா பாறயில,
    இல்லங்கிற பாறயிலமோதி
    எரப்புக்கப்பல் ஒடஞ்சிபோவும்…

    எரக்காத எரக்காத
    எங்கேயும் எரக்காத…!

     

    Share
  • நிம்மதியாய் வாழும்நாள் என்று பூக்கும்?

    -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

    உழைத் துழைத்து நாமுந்தான் ஓடாய்த்தேய
    உழையாதார் ஊதித்தான் பெருக்கக் கண்டோம்!
    இழைத் தேநாம் இடுப்பொடிய ஈரமில்லா
    இதயத்தார் இருந்துறிஞ்சி “மேலே சென்றார்”!

    முதுகினிலே கூடையினைத் தாங்கி நாமும்
    முதுகொடியக் கொழுந்தெடுத்துக் கொணர்ந்து சேர்த்தோம்
    புதுவாழ்வு எதுவும் நாம் கண்டதில்லை!
    புல்லர்கள் வாழ்வுக்கே உரமாய்ப் போனோம்! 

    ஓட்டை “லயம்” தானெமது உலகும் வாழ்வும்!
    உழைப்புத்தான் உயிர் எமக்கு  ஓய்வோ தூக்கம்!
    காட்டையெல்லாம் கழனிகளாய்ச் செய்தோம் எங்கள்
    கனவுகளோ கண்ணீரில் கரையக் கண்டோம்!

    மலையகத்து இலைகளுக்குப் பசுமை சேர்க்க
    மணிமணியாய் வியர்வையினை வடித்துத் தந்தோம்!
    நிலைமாறி எம் வாழ்வில் பசுமை பூத்து
    நிம்மதியாய் வாழும் நாள் என்று பூக்கும்?

     

    Share
  • பகத் சிங்கும் குலசேகர ஆழ்வாரும் சந்தித்து விலகும் புள்ளி….

    எஸ் வி வேணுகோபாலன்

    unnamed (3)

    மாபெரும் புரட்சிக்காரன் என்ற அடையாளத்தை, பகத் சிங் தனது அரசியல் உணர்வில், போராட்ட குணத்தில், விடுதலைக்கான வேட்கையில் மட்டும் பிரதிபலிக்கவில்லை. 24 வயதுகூட நிரம்பாத பருவத்தில் அவரை வெள்ளை ஏகாதிபத்தியம் தூக்கிலிட்டமைக்கு கூடுதல் காரணிகள் இருக்கக் கூடும். நண்பர் ஒருவரது புத்தகத்தின் மீது தோழமை கெழுமிய காத்திரமான நூல் விமர்சனமும், மகாத்மா காந்தியே ஆனாலும் கேள்விகளுக்கு உட்பட்டவர்தான் அனைவரும் என்று சொல்லும் நெஞ்சுரமும், பெற்றெடுத்த தந்தை பாசத்தோடு தன்னைச் சிறையில் இருந்து மீட்கத் துடித்தபோது, தன் அர்ப்பணிப்பு உணர்வைக் கொச்சை செய்யவேண்டாம் என்று அவரிடத்துச் சொல்லும் தீர்க்கமான மன வலிமையும் கொண்டிருந்தவர் பகத் சிங். அடிப்படையில் அவர் இறை நம்பிக்கை அற்றவராக இருந்தது காலனி ஆதிக்கத்தைக் கட்டியாண்ட பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு ராஜ துரோக செயலாகவே பட்டிருக்கும் என்பது கவனிக்க வேண்டியது.

    அடிமைத் தனத்தைக் கேள்வி கேட்காமல் ஒப்புக் கொள்ள வைக்கும் மத உணர்வை வெளிப்படையாக விமர்சிக்கும் யாரும் மக்களைப் பெரிய கலகத்திற்குத் தூண்டுகின்றனர் என்பது மாட்சிமை தாங்கிய மகாராணிகளுக்குத் தெரியும். தான் நாத்திகன் ஆனதை ஆவணப் படுத்திச் சென்றிருக்கிறார் பகத் சிங் என்பது சிந்திக்க வேண்டிய முக்கிய வரலாற்றுக் குறிப்பு.

    பொதுவாக இறையுணர்வு இல்லாதிருப்போரை மண்டைக்கனம் படைத்தவராகவே சமூகம் பேசும். திமிர், அகங்காரம் என்ற சொல்லாடல்களை பகத்சிங் அற்புதமாக மறுத்து முன்வைக்கும் வாதங்கள் அடங்கிய ‘நான் ஏன் நாத்திகன்” என்ற அந்த நூல் இளைய தலைமுறை வாசிக்க வேண்டிய முக்கிய பிரதி ஆகும்.

    பள்ளிப்பருவத்தில் கூச்ச சுபாவம் நிறைந்திருந்த தனக்கு, அகங்காரம் எப்படி தோன்றி இருக்க முடியாது என்பதைச் சொல்லும் பகத் சிங், கடவுளை தனது விரோதியாகவும் தான் பார்க்கவில்லை, ஏனெனில் அப்படி கருதுவது, ஒரு கடவுளின் இருப்பை ஒப்புக்கொள்வதாகிறது, தான் கடவுள் இருப்பதையே நம்பவில்லை என்று விவாதத்தைத் தொடர்கிறார்.

    நிறுவனமயமாக்கப்பட்ட எதையும் கேள்வி கேட்பவருக்கு நேரும் பழி, அவப்பெயரே தனக்கும் நேர்கிறது என்று குறிப்பிடும் பகத் சிங், உலகில் உயிரின் தோற்றம், துயரங்கள், அழிவு என அனைத்து அம்சங்களையும் காரணம் காட்டி, இதில் கடவுளின் பங்கு பாத்திரம்தான் என்ன என்று கேட்கிறார். டார்வின் எழுதிய உயிரினங்களின் தோற்றம் எனும் ஆய்வு நூலை வாசிக்க பரிந்துரை செய்யும் பகத் சிங், ஸோஹம் சுவாமி எழுதிய பொதுபுத்தி எனும் புத்தகத்தையும் படிக்குமாறு சொல்கிறார்.

    ஒவ்வொரு மதமும் உயிர்கள் குறித்துப் பேசுவதைக் கேள்விகளுக்கு உள்ளாக்கச் சொல்லும் பகத் சிங், இந்து மதம் சொல்லும் முற்பிறப்பின் பாவங்கள் பற்றியும் கேள்விகளை எழுப்புகிறார். உயிர்களை பரிதவிக்க விட்டு, அவர்களுக்கு சோதனைகளைத் தந்து பிறகு அவர்களை உணரவைத்து ஆட்கொள்பவர் எப்படி கடவுளாக இருக்க முடியும் என்பது அவரது வலிமிகுந்த கேள்வி.

    பகத் சிங் குரலிலேயே அந்த இடத்தைக் கொஞ்சம் காது கொடுத்துக் கேட்போம்:

    அதுதான் கடவுளின் சட்டம் என்று சொல்ல மாட்டீர்கள் என்று நம்புகிறேன்; இறைவன் சட்டத்திற்குக் கட்டுப்பட்டவன் என்றால், அவன் அனைத்திற்கும் மேலானவனாக இருக்க முடியாது; அவனும் நம்மைப் போலவே ஒரு அடிமைதான். அவனுடைய மகிழ்ச்சிக்கான திருவிளையாடல் என்று தயவுசெய்து கூறாதீர்கள்; நீரோ மன்னன் ஒரு ரோம் நகரை எரித்தான். அவன் கொன்றது எண்ணிக்கையில் அடங்கக்கூடிய அளவு மக்களைத்தான். சில துயரச் சம்பவங்களை நிகழ்த்தினான். எல்லாம் அவனுடைய மகிழ்ச்சிக்காக. ஆனால் வரலாற்றில் அவனுடைய இடம் எது? வரலாற்று ஆய்வாளர்கள் அவனை என்ன பெயர் சொல்லி அழைக்கிறார்கள்? இருக்கிற வசைச் சொற்கள் அனைத்தும் அவன்மேல் பொழியப்படுகின்றன. அவன் கொடுமைக்காரன், இதயமற்றவன், வெறிபிடித்தவன் என்ற வசைச் சொற்களால் வரலாற்று நூல்களின் பக்கங்கள் எல்லாம் கறைபடிந்துள்ளன.

    ஒரு செங்கிஸ் கான் தன் மகிழ்ச்சிக்காக சில ஆயிரம் உயிர்களை பலி கொடுத்தான்; நாம் அவன் பெயரையே வெறுக்கிறோம். இப்படி இருக்கையில், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் எண்ணற்ற துன்பங்களை ஏற்படுத்தி வந்திருக்கிற, இப்போதும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிற உங்களுடைய அந்த எல்லாம் வல்லானை, நிலைபேறுடைய நீரோவை எவ்வாறு நியாயப்படுத்தப் போகிறோம்? செங்கிஸ்கான் செய்ததை விட அதிகமாக ஒவ்வொரு கணமும் செய்கிற கொடுமைகளை ஆதரிக்க வேண்டும் என்று எப்படி நீங்கள் நினைக்கிறீர்கள்? நரகம் என்ற பெயருக்கேற்ப எப்போதும் துன்பங்கள் நிலவுகிற இந்த உலகத்தை அவன் எதற்காகப் படைத்தான் என்று நான் கேட்கிறேன். இதெல்லாம் எப்படி நியாயமாகும்?

    இங்கேதான் ஒரு நுட்பமான கேள்வியை பகத் சிங் எழுப்புகிறார். இதை வாசிக்கையில் எனக்கு, பள்ளிக்கூட வாசிப்பில் தமிழ் பாட நூலில் படித்த குலசேகர ஆழ்வார் செய்யுள் ஒன்று நினைவுக்கு வந்தது. என்னை மிகவும் கவர்ந்த அந்தப் பகுதி, நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் “பெருமாள் திருமொழி” எனும் பிரிவில் அடங்குவது. அற்புதமான தமிழ் இலக்கிய வாசிப்பான நாலாயிரத்தில் வரும் அந்த பாசுரம் இப்படி இசைக்கிறது:

    வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
    மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்
    மீளாத் துயர் தரினும் வித்துவக்கோட்டு அம்மா நீ
    ஆளா உனது அருளே பார்ப்பன் அடியேனே

    எனக்கு எத்தனை சோதனைகள் அளித்தாலும், உன்னை விடமாட்டேன் என்று பற்றுதல் கொள்ளும் பக்தனின் குரல் இது. கத்தியை வைத்தும், வேறு விதத்திலும் சிகிச்சைகளை மேற்கொண்டாலும் மருத்துவனை வெறுக்காது அவன்பால் அன்பு கொண்டாடும் நோயாளியைப் போலவே, நீ எனக்கு எத்தனை துயர் தந்தாலும், உனக்கு நான் ஆட்பட்டே தீருவேன் என்கிற குதூகலக் கொண்டாட்டக் குரல் அது.

    தான் படைத்த உயிர்களுக்கே சோதனை தருவதும், பின் அதிலிருந்து அருள் பாலிப்பதும் எதற்கு என்று இந்த இடத்தில்தான் கேள்வியை வைக்கிறார் பகத் சிங். தனக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவரைப் பேசுகிறார் ஆழ்வார். அந்த மருத்துவரே நோயையும் பரிசளித்தவராக இருந்திருப்பாரானால் எப்படி அதை ஏற்க முடியும் என்று கேட்கிறார் பகத் சிங்!

    துன்பப்படும் அப்பாவிகள் அடுத்த பிறப்பில் அதற்கான பரிசு பெறுவார்கள், தவறு செய்தவர்கள் அடுத்த பிறப்பில் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறுகிறீர்களா? சரி, இந்தப் பிறப்பில் உங்கள் உடலில் காயத்தை ஏற்படுத்தியவன் அடுத்த பிறப்பில் அதன்மீது மருந்தைத் தடவுவான் என்பதை எந்த அளவுக்கு நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள்?

    கிளேடியேட்டர் காட்சிகளை நிகழ்த்திக் காட்டியவர்களும் அதன் ஆதரவாளர்களும் பசியோடு இருக்கிற சிங்கங்களின் முன்னால் மனிதர்களை வீசினார்கள்; அந்த விலங்குகளிடமிருந்து அவர்கள் தப்பி வந்தால் அவர்களை நன்றாகக் கவனித்து ஆதரவு அளிப்போம் என்றார்கள்; இதை எந்த அளவுக்கு நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள்?

    அதனால்தான் நான் கேட்கிறேன்: “அனைத்துக்கும் மேலான அந்தக் கடவுள் எதற்காக உலகையும் அதில் மனிதனையும் படைத்தான்? உல்லாசத்துக்காகவா? அப்படியானால் அவனுக்கும் நீரோவுக்கும் என்ன வித்தியாசம்?”

    எனவே தான் மேற்சொன்னபடி வாதிடுகிறார் பகத் சிங். இந்தப் பகுதிக்குத் தொடக்கத்தில் முதலிலேயே பின்வரும் கேள்வியையும் அவர் எழுப்பிவிடுகிறார்:

    ஒருவேளை நீங்கள் நம்புவதுபோல, அங்கிங்கு எனாதபடி எங்கும் நிறைந்திருக்கிற, எல்லாவற்றுக்கும் மேலான, எல்லாம் வல்ல, எல்லாம் அறிந்த இறைவன் உண்டு என்றால், இந்த பூமி அல்லது உலகத்தைப் படைத்தது யார்? அதைப் படைத்தது எதற்காக என்று தயவுசெய்து சொல்லுங்கள். துன்பங்களும் துயரங்களும், முடிவே இல்லாத எண்ணற்ற துயரச் சம்பவங்களும் நிறைந்த, உலகத்தில் உள்ள ஒரேயொரு மனிதன்கூட முழுக்கவும் திருப்தியடைய இயலாத உலகம் இது.

    இறப்பிற்குப் பிறகு தொடர்ந்து வருவது எதையும் எதிர்பார்த்தோ, மறு ஜென்மம் பற்றிய கவலையோடோ, முந்தைய பிறவி குறித்த புகார்களோடோ தாம் சுதந்திர போராட்டத்திற்குள் இறங்கவில்லை என்று தெளிவாக்கும் பகத் சிங், மனிதர்கள் நிம்மதியாக வாழும் ஓர் அற்புத உலகை இங்கேயே படைக்கவே தான் புரட்சியில் இறங்கியதை அருமையாகப் பதிவு செய்யும் முயற்சியே இந்த நூல்.

    விரக்தி உணர்வால் கடவுளை வெறுத்த மொழி அல்ல அது, இறை உணர்வின் பாற்பட்டு அடங்கிப் போய் தங்களை ஒப்புக் கொடுக்கும் கோடிக்கணக்கான மக்களை விழிப்படைய வைக்கும் தெளிவு பெற்ற மதியின் வெளிப்பாடு அது.

    ஆத்திகம் எப்படி மதிக்கத் தக்கது என்று சமூகம் செயல்படுகிறதோ, நாத்திக உணர்வுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்ற முழக்கமே பகத் சிங்கின் ஆவணம். எனவேதான் ஜீவா அதை மொழிபெயர்த்துக் கொடுக்க, பெரியார் அதைக் குடியரசு இதழில் வெளியிட்டார். அந்தக் ‘குற்றத்திற்காக’ (?), ஜீவாவும், பெரியாரின் சகோதரர்-பதிப்பாளர் ஈ வெ கிருஷ்ணசாமியும் பிரிட்டிஷ் அரசால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

    மத உணர்வை அடிப்படை உணர்வாக தக்க வைப்பதை, தேவைப்பட்டால் அதை வெறியாக ஊட்டுவதை ஆட்சியாளர்கள் காலம் காலமாகக் கடைப்பிடித்து வந்திருக்கின்றனர். அதைச் சுட்டிக் காட்டும் முற்போக்கு சிந்தனையாளர்களை நாத்திகர்கள் என்று சொல்லி மக்களிடம் இருந்து தனிமைப் படுத்துவதில் குறியாக இருக்கின்றனர்.

    இந்திய விடுதலை வேள்வியில் தன்னையே ஆகுதியாக ஆக்கிக் கொண்ட மாவீரன் பகத் சிங் நாத்திகன் என்பதை பாமர மக்கள் அதிகம் அறிய மாட்டார்கள். எனவேதான், மத அடிப்படைவாதிகள் இப்போது பகத் சிங்கையும் அபகரிக்கத் துணிந்திருப்பது. எல்லா உன்னதமிக்க ஆளுமைகளையும், தேதிகளையும், நிகழ்வுகளையும் மதவெறி சக்திகள் தன்வயப்படுத்தி மக்களைக் குழப்பி, மோதவிட்டுத் தங்களது நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்ல துடிக்கும் நேரம் இது. அதற்காகவும் ஒரு புரட்சிக்காரர் குறித்த அரிய பக்கங்களையும் முன்வைப்பது தேவையாகிறது.

    ****************
    நன்றி: வண்ணக்கதிர்: மார்ச் 29, 2015

    Share
  • மனதில் நிறைந்த மக்கள் திலகம்

    — ஜெயஸ்ரீ ஷங்கர்.

    யோகத்தின் முகவரிகள்:
    நாங்கல்லாம் எம்.ஜி.ஆர் கட்சி. நீ யார் கட்சி? எனது பள்ளி நாட்களில் இந்த ஒரு கேள்வி மிகவும் சகஜமாக எனது தோழிகளிடையில் ஒருவருக்கொருவரைப் பார்த்துக் கேட்டுக் கொள்ளும் கேள்வியாகவே இருந்தது. அதை வைத்துத் தான் எங்களுக்குள் நட்பு வட்டமும் அமையும். அது போன்றதொரு காலமது. அப்போது எனக்கு பத்து வயது இருக்கும்.. எனக்குப் பிடித்த தோழிக்காக, நானும் எம்.ஜி.ஆர் கட்சி தான் என்று சொல்லி அவளோடு சேர்ந்து கொண்டேன். எம்.ஜி.ஆர் பாடல்கள் தான் எங்கள் நட்புக்கு வித்தாகி, உரமாகி, மரங்களாகி நந்தவனமாகியது. அதையும் கடந்து, இள நெஞ்சங்களுள் அவரால் ஏற்படுத்தப்பட்ட தாக்கத்தின் ஆதிக்கம் அபாரமானது என்றே சொல்ல வேண்டும்…

    இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு யோகம் கைதூக்கி விட்டு கடைசி வரையில் கூட வரும் என்றும் சொல்வார்கள். அந்த விதத்தில் பரிபூரணமா அமைந்த ‘யோக ஜாதகம்’ அவருடையது தான். அப்பேர்பட்ட யோகக்காரருக்கு தனது உயர்ந்த பண்பால், செல்வமும், பெரும்புகழும், அழிவில்லாத மக்கள் செல்வாக்கும் வாழ்வின் எல்லை வரை அமையப் பெற்றால் அவர் மனிதருள் மாணிக்கமாவர் .

    இந்நிலையில் தான் ஒரு நாள் நம்ப ஊருக்கு எம்.ஜி.ஆர் வருகிறார் என்ற செய்தி ‘காட்டுத் தீ’ போலப் பரவியது. எந்தவித தொலைத் தொடர்பும் அதிகரித்திராத காலம். மதுரையில் அவருக்கு ரசிகர்கள் கடலளவு என்பதை உணர்த்திய அனுபவம் எனக்கு அதுதான். திரையில் பார்த்திருந்த ஒரு மனிதனை நேரில் பார்க்கும் அந்த சந்தர்ப்பம் மிகவும் பிரமாண்டமானது என்று தான் சொல்ல வேண்டும். அத்தனை பிரமிப்பு மனத்துள். நேரமாக நேரமாக மக்கள் வெள்ளம் அலைமோதத் தொடங்கியது. அந்த ரசிகர் கூட்டத்தின் மத்தியில் நானும் எனது தோழியின் வீட்டு மொட்டைமாடியில் நின்றபடி அவரைக் காணும் ஆவலுடன் நின்றிருந்தேன். அவர் நடித்த திரைப்படப் பாடல்கள் ஒலிபெருக்கியில் தொடர்ந்து ஒலித்த வண்ணம் இருந்தது.

    “நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த
    நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற
    என்றும் நல்லவங்க எல்லாரும் ஒங்க பின்னாலே நீங்க
    நெனச்சதெல்லாம் நடக்குமுங்க கண்ணு முன்னாலே”

    அத்தோடு கூடவே இன்னொரு பாடலாக …

    “வாங்கய்யா வாத்தியாரையா
    வரவேற்க வந்தோமைய்யா “

    இந்தப் பாடலும் திரும்பத் திரும்ப ஒலித்த வண்ணம் இருந்தது. மதுரையின் தெருக்கள் முழுதும் அவருக்காக அலங்கரிக்கப் பட்டு அத்தனை இதயங்களுக்குள்ளும் அவரைப் பார்த்துவிட வேண்டும் என்ற ‘ஒரே எண்ணம் ‘ நிறைந்ததாக இருந்ததைக் உணரவும் முடிந்தது. அத்தனை அன்புக்கும் சொந்தக்காரர் ‘அமாவாசை வானில் எழுந்த முழு நிலவாக’ வசீகரமான தோற்றப் பொலிவோடு வெண்பஞ்சுத் தொப்பியும், கறுப்புக் கண்ணாடியும், வெள்ளை அங்கியும் கழுத்தைச் சுற்றிய ஷாலோடு , கூப்பிய கரங்களில் ஒரு வாகனத்தில் நின்று அனைவரையும் பார்த்து கையசைத்த வண்ணம் எங்களைக் கடந்து சென்றார். வானுலக தேவனே வந்து எழுந்தருளியது போன்ற ஒரு நிம்மதி அவரைக் கண்டுவிட்ட முகங்களில் தெரிந்தது. கூட்டத்தில் பெருத்த ஆரவாரம். அந்த ஆனந்த அலை ஓயாது நீண்ட நேரம் ஒலித்தவண்ணம் இருந்தது. இன்றும் கூட நான் முதன் முதலாகக் கண்ட அந்த மாபெரும் பிரம்மாண்டமான மக்கள் திரள் கண்ணுள் நிறைந்து வழிகிறது. அன்றிலிருந்து எனது மனத்துள் அவரை ஒரு அதிசயப் பிறவியாகவே எண்ண ஆரம்பித்தது.

    பள்ளியில் மாறுவேடப் போட்டியில் அநேகமாக அத்தனை தாய்மார்களும் தங்கள் குழந்தைகளுக்கு ‘எம்.ஜி.ஆர்” வேடமிட்டு ‘என் ரத்தத்தின் ரத்தமே ‘ என்ற அவர் மேடையில் பேச ஆரம்பிக்கும் போது, பொது மக்களிடையே தனக்கு இருக்கும் பந்தத்தை உறுதி செய்யுமுகமாக உபயோகப் படுத்தும் அந்த சக்திப் பிரயோக வாக்கியத்தையே வசனமாகச் சொல்ல வைத்து அப்படியே மெய் சிலிர்த்துப் போவார்கள். அத்தனை ஈடுபாடும், அன்பும், பக்தியும் கொண்ட தாய்குலங்கள் அவரை ஒரு அவதார புருஷராகவே எண்ணியிருந்தனர் . அவர் மக்கள் இதயத்தின் தாரக மந்திரம்.

    வெள்ளித் திரை நடிகர் என்பதையும் மீறிய ஒரு பிணைப்பும், ஆளுமையும் அவர் மீது பொது மக்களிடையில் இருப்பதை காணும் போதெல்லாம் ‘இது எப்படி சாத்தியம்’ என்ற கேள்விக்கே இடமில்லாமல் அத்தனை பேர்களின் உள்ளத்தையும் ஈர்த்த வினோத காந்தமாக அவரது எளிமையும், காருண்யமும் இருந்தது தான் அந்த உயர்ந்த ஆன்மாவின் உன்னத சாட்சி. அவரைச் சந்திக்கும் எவரையும் அவரது ரசிகனாகவே மாற்றிவிடும் இரகசியம் தெரிந்தவர். அவர் பிறந்ததும், வாழ்ந்ததும், வெள்ளித் திரையில் சாதனைகள் புரிந்ததும், அரசியலில் தனக்கென ஒரு நிரந்திர இடத்தை பற்றி பொது மக்களின் நலனுக்காக சேவைகள் பல புரிந்ததும் அறியாதவர் யாருமே தமிழ் நாட்டில் இருக்க முடியாது. எம்.ஜி.ஆர் என்ற இந்தப் பெயரில் தான் எத்தனை ஆணித்தரமான நம்பிக்கை மக்களிடத்தில் இருந்திருக்க வேண்டும்.

    செல்வம்:
    இந்நிலையில் அவர் நடித்து வெளிவந்த படங்களும், கருத்துமிக்கப் பாடல்களும், பட்டிதொட்டி எங்கும் அவர் புகழ் பரப்பும் ஏணியாகி, அவரைத் தமிழக மக்களின் மத்தியில் ஓர் அரிய மேதையாக,மங்காத புகழ் தாங்கி நிற்கும் ‘மக்கள் திலகமாக’ மாற்றக் காரணமாயிருந்தது.. அவரை ‘ரத்தத்தின் ரத்தமாக’ அவர் நடித்த நடிப்பு வளர்த்ததா, அவரது சமூக சிந்தனை வளர்த்ததா, மக்கள் மீது அவர் வைத்திருந்த அன்பு வளர்த்ததா என்றெல்லாம் ஆராய இயலாத குறுகிய காலக்கட்டம், அவர் பெயரை எம்.ஜி.ஆர் என்று சொல்லும் போதே ஒரு மிகப்பெரிய கடலுக்கு முன்னால் கம்பீரமாக எழுந்து நிற்கும் கலங்கரை விளக்கம் போன்றதொரு பாதுகாப்பு அவரிடத்தில் நமக்கு ஏற்பட்டதில் எந்த வியப்பும் இல்லை எனலாம். அத்தனை இறைவனும் அவர் பக்கம் நின்று ஒன்றாக ஆசீர்வதித்திருக்க வேண்டும். ஒரு சாமானிய மனிதனால் அசாதாரண உயரத்தில் ஒவ்வொரு இதயத்திலும் கோலோட்சி செய்தவர் நமது எம்.ஜி.ஆர் அவர்கள் மட்டும் தான் என்றாலும் அது மிகையில்லை.

    ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று கூறி பரந்த மனப்பான்மையை நெஞ்சில் விதைத்தவர் திருமூலர். அந்த உயர்ந்த கருத்தை பட்டி தொட்டி எங்கும் பரப்பி மனித நேயத்தை வளர்த்தவர் நம் புரட்சித்தலைவர். அவருக்காகவே கவிஞர்கள் இதயத்தில் சுரக்கும் அமிர்த சஞ்சீவியாக கவிதை வரிகள் பொங்கி எழும். அதை எம்.ஜி.ஆர். பாடும்போது, ரசிகர்களின் நெஞ்சம் பெருமையில் பூரித்துப் போகும். சாமான்ய மக்களையும் அவரது திரையிசைப் பாடல்களால் வாழ்வியல் முறைகளை எளிமையாகக் கற்றுக் கொள்ள வைக்கும். எத்தனையோ பேர்களின் உந்து சக்தி அவரது பாடல்களாகவே இருந்திருக்கிறது. தன்னம்பிக்கையின் அஸ்திவாரத்தை அதன் மூலமாகவே மக்களிடம் எழுப்பி இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

    எந்த உயரமும் ஒரே நாளில் ஏற்பட்டு விட முடியாது என்பது நியதி. இருப்பினும், அவரது அரசியல் உயரம் ஆரம்பித்த போதே பிரம்மாண்டமாக வளர்ந்து உயர்ந்த நிலையில் தான் உருவானது என்பதற்கு பல ஆதாரங்கள் உண்டு. இருந்தாலும், ஒரு சராசரி மனிதன் தனது சொந்த வாழ்வில் படும் அத்தனை அவஸ்தைகளையும் சந்தித்தவர் தான் எதிரிகளின் சூழ்ச்சி வலையில் சிக்கித் தவித்தவர் தான். இதிலிருந்தெல்லாம் அவர் வெளிவர அவருக்குள் வெகுண்டு வெளிவந்த தைரியமும், தீர்க்கமான அறிவும், பகட்டே அறியாத தூய அன்பும் நல்ல மனமும் மட்டும் தான் துணையாக இருந்தது. அங்கிருந்து நாடே போற்ற அந்த மனிதர் மாமனிதர் ஆனார். வயது வித்தியாசமில்லாமல் சகலமானவர்களும் போற்றும் உயர்ந்த பொக்கிஷமாக கருதப்பட்டார். அவரைச் சுற்றி தமிழ்நாட்டு மக்கள் அனைவருமே பாதுகாப்பு வளையமாக வலம் வந்தார்கள். ஒரு நாட்டின் அத்தனை இதயங்களுக்கும் ஒரே ‘ஏகாந்தம்’ அவராகவே திகழ்ந்தார், அவரது புகழ் உயர்ந்தாலும், அவர் வந்த பாதையை மறக்காமல் , ஏழை எளிய மக்களுக்கு அவரது உதவும் கரங்களை நீட்டிக் கொண்டே இருந்தார். அவருக்கு வாழ்க்கை தந்த திரை உலகத்தையும், அவரால் மக்களுக்கு வாழ்க்கை தர முடிந்த அரசியல் உலகத்தையும் தனது இரண்டு கண்களாகவே போற்றியவர் தனது அரசியல் சின்னத்திற்கு ‘இரட்டை இலையை ‘ அடையாளமாக்கி அதையே என்றென்றும் அரசியல் செல்வத்தின் முத்திரையாகப் பதித்தவர்..

    பெரும்புகழ்:
    பள்ளிக் கூட கல்வி என்பது அவரது வாழ்வில் எட்டாத கனியாகி இருந்தாலும், தமிழகக் குழந்தைகள் கல்வி கற்க வேண்டிய அவசியத்தை ஒவ்வொரு குடும்பத்திற்கும் உணர்த்தி அவர்களது வளர்ச்சிக்கு உதவும் வண்ணம் பள்ளிகளில் ‘மதிய உணவு திட்டத்தை ‘ ஏற்படுத்தி அதன் மூலம் வருங்கால சந்ததியினரின் அறிவுக்கும் உணவு ஊட்டி அழகு பார்த்தார்.. இது ஒரு சமுதாயப் புரட்சியாகவே மக்களிடையில் பெருமையாகப் பேசப்பட்டது. நல்லதொரு தலைவன் நம் நாட்டைக் காக்கிறான் என்னும் நம்பிக்கையில் மக்கள் கவலைகளற்று இருந்த நேரம். மக்கள் திலகம் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களின் வார்த்தைகளும் எளிமையானவை. வாழ்க்கையும் எளிமையானவை தான். காலம் அவருக்கான செயல்களை மிகவும் சிறப்பாகவே செய்தது. அதே போல்,

    தமிழக மக்கள் அவர் மீது வைத்திருந்த நம்பிக்கையின் அளவை வேறு எதனாலும் அளவிட்டுக் குறித்து விட முடியாததாகும். அவரையே தன்னுயிராக பாவித்து வாழ்ந்தவர்கள், அவருக்கு ஒன்றென்றால் தனது உயிரையும் துச்சமாக எண்ணி உயிர் கொடுத்து உயிர் காக்கக் கடமை பட்டவர்களாகவே பெரும்பாலான அவரது ரசிகர்கள் இருந்தார்கள் என்பது கண்கூடு. அப்படித்தான் ஒருமுறை ‘எம்.ஜி.ஆர் அவர்களின் திடீர் மரணச் செய்தி ‘ கொண்ட பொய்யான தகவல் காற்றுவாக்கில் பரவத் தொடங்கியதும், மக்களின் வேதனை கரை மீறியது. அந்த மாலை வேளையில் ஊரே ஸ்தம்பித்து ஆக்ரோஷித்தது. அந்தச் செய்தியை ஜீரணிக்க இயலாத பல ரசிகர்கள் தங்களையே எமனுக்குத் தாரை வார்த்துக் கொண்டார்கள். தமிழ் நாட்டின் அந்தக் கொந்தளிப்பை அடக்க, அந்தச் செய்தி பொய்யான வதந்தி என்ற செய்தியால் மட்டுமே முடிந்தது. அவர் சம்பாதித்து சேர்த்து வைத்திருந்த ரசிகர்களின் நெஞ்சங்களின் வலிமையை அனைவரும் உணர்ந்து கொள்ள அந்த ஒரு நிகழ்வு போதுமாயிருந்தது.

    மனிதன் என்று பிறந்தானோ மரணமும் அவனோடு சேர்ந்தே பிறந்து விடும் என்னும் உண்மையைப் பொய்யாக்கி எம்.ஜி.ஆர் அவர்களை சிரஞ்சீவியாக வாழவைக்க வழி தேடியது அவரது ரசிக மனங்கள். அதன் வெளிப்பாடும் தெரியப் படுத்தும் விதமாக அந்த நாளும் வந்தது.

    அழிவில்லாத மக்கள் செல்வாக்கு:
    அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்த நேரம் தான் அது. ஒரு நாட்டையே உலுக்கி எடுத்த நாட்கள் அவை. கூட்டுப் பிரார்த்தனை இல்லை. நாட்டுப் பிரார்த்தை அது. எங்கள் எம்.ஜி.ஆர். மீண்டும் நலம் பெற வேண்டும் என்ற ஒரே பிரார்த்தனை. தொடர்ந்த பிரார்த்தனையாக அவர் நடித்த படப்பாடலே எங்கும் ஒலித்து பிரபஞ்ச சக்தியை கெஞ்சிக் கொண்டிருந்தது.

    இறைவா உன் மாளிகையில்
    எத்தனையோ மணி விளக்கு
    தலைவா உன் காலடியில்
    என் நம்பிக்கையின் ஒளிவிளக்கு…!

    இதன் அடுத்த வரி நம் அனைத்து இதயத்துள்ளும் ஒலித்துக் கொண்டே இருக்கும் பிரார்த்தனை வரிகள் தான்..நம்பிக்கையோடு பல்லாயிரக் கணக்கான இதயங்களின், ஒரே ஒரு மனிதனின் இதயத்துடிப்பின் தொடர்ச்சிக்காக இசையால் கையேந்திக் கதறிய நாட்கள் அவை. இந்த நாட்டுப் பிரார்த்தனை எந்தக் காலக்கட்டத்திலும் நடந்திராத ஒரு உலகளாவிய அதிசயம் தான். அதன் முன்பும், அதன் பின்பும் யாருக்காகவும் நடந்திருப்பதாக சரித்திர வரலாறு கூட இல்லை எனலாம்.. ஒரு உயிரின் மீது லட்சோப லட்ச மக்களின் ஆளுமையும் அன்பும் கரை புரள அதைத் தாங்கிய புரட்சித் தலைவர் எனும் அந்தப் பொன்மனச் செம்மலை மட்டுமே சேரும். பிரபஞ்சம் விடை சொன்னது. அவரை மீட்டுக் கொடுத்தது. மக்களின் மனத்துள் பால் வார்த்தது. இந்த நாடே அவர் ஒருவருக்காகவே உருவானதோ என்று எண்ணும் அளவுக்கு அவரது செல்வாக்கும் புகழும் ஓங்கி உலகளந்தது .

    ஒரு தனி மனிதனின் புகழ் என்பது காலப்போக்கில் மாறும் இயல்புடையது. அனால் அதையும் முறியடித்தது அவர் வாழ்ந்த வரலாறு காணாத ஒரு தனி மனித சகாப்தம். இல்லையில்லை, அந்தக் கீர்த்தியை சத்திய உலகின் பிரதிநிதி என்றே சொல்லவேண்டும். எம்.ஜி.ஆர் அவர்களை எத்தனையோ புகழாரங்கள் சரணடைந்திருக்கலாம். அத்தனைக்கும் தலை வணங்கிய அவரது தலை செருக்கில் நிமிராது தாழ்ந்திருந்தமையால் தான் தரணியில் அவருக்கென்ற தனியிடம் நிரந்தரமானது. கோடியில் ஒரு நட்சத்திரமாக தமிழகத்தில் ஒளிவிட்டு மங்காத சரித்திரதை உருவாக்கி என்றென்றும் ‘சிரஞ்சீவி’ யாகவே இன்றும் மனத்தில் நிறைந்து நிற்பவர் நம் மக்கள் திலகம் மட்டும் தான். எந்தக் காலத்திலும் தமிழ் மக்களின் இதயங்கள் தான் அவர் வாழும் உறைவிடம்.

    Share
  • மன்மத லீலையை வென்றார் உண்டோ?

    கவிஞர் காவிரிமைந்தன்.

    t r rajakumari

     

     

    ஒருசில தலைமுறைகளுக்கு முன்னர் தமிழ்த்திரையை ஆட்சி செய்த ஏழிசைவேந்தர் எம்.கே.தியாகராஜ பாகவதர் … தமிழ்மக்களின் ஏகோபித்த கதாநாயகன்! மூன்று தீபாவளிகளைத் தாண்டியும் வெற்றிகரமாக ஓடிய திரைப்படம் அவரது என்கிற வரலாறு முறியடிக்கப்பட முடியாத அத்தியாயமாய் இன்றும் உள்ளது!

    220px-Haridas_3yearsஇதற்கான காரணங்கள் நாம் அறிந்த ஒன்றே … அந்தக் காலத்தில் அதிக திரைப்படங்கள் தயாரிக்கப்படவில்லை … பொழுதுபோக்கு அம்சங்களும் அதிகமில்லை.. இந்தக் காரணங்கள் ஒருபக்கம் இருந்தாலும் எழுதப்பட்டிருக்கும் வரலாறு நம்மை வியக்கவே வைக்கிறது! ஆம்! ஹரிதாஸ் திரைப்படத்தின் மற்றுமொரு மதுரகீதமிது! மறக்க முடியாத பாடலாகவும்… மக்கள் இன்றைக்கும் முணுமுணுக்கும் பொற்காலப் பாடலாகவும் உருவெடுத்த பாடல்!

    பாபநாசம் சிவன், ஜி.ராமனாதன், எம்.கே.தியாகராஜ பாகவதர் கூட்டணியில் விளைந்த கானாமிர்தம்! கருப்பு வெள்ளையில் 1944ல் வரையப்பட்ட அட்டகாசமான காதல் பாடல் என்கிற பெருமையை இப்பாடல் இன்றுவரை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

    யுவன்சங்கர் ராஜா இசையில் உருவான இக்காலப் பாடல் ஒன்றின் இடையே இப்பாடலின் ஸ்ருதி சேர்க்கப்பட்டு … இசைக்கோர்வையில் ஒரு புதுமை புகுத்தப்பட்டபோது அதுவும் மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது என்பது கூடுதல் செய்தியாகும்!

    https://youtu.be/Lt3MRCvAtao

    காணொளி: https://youtu.be/Lt3MRCvAtao

    பாடல்: மன்மத லீலையை
    படம்: ஹரிதாஸ் (1944)
    பாடல்: பாபநாசம் சிவன்
    இசை: ஜி. ராமநாதன்
    குரல்: எம்.கே. தியாகராஜ பாகவதர்
    ​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ ______________________________

    மன்மத லீலையை வென்றார் உண்டோ?
    மன்மத லீலையை வென்றார் உண்டோ?
    என் மேல் உனக்கேனோ பாராமுகம்?
    மன்மத லீலையை வென்றார் உண்டோ?
    என் மேல் உனக்கேனோ பாராமுகம்?
    மன்மத லீலையை வென்றார் உண்டோ?

    நின் மதி வதனமும் …
    நின் மதி வதனமும் நீள் விழியும் கண்டு
    ரம்பா! …
    ஸ்வாமி! …
    நின் மதி வதனமும் நீள் விழியும் கண்டு
    நின் மதி வதனமும் நீள் விழியும் கண்டு
    என் மதி மயங்கினேன் நான்
    என் மதி மயங்கினேன்
    மூன்று உலகிலும்
    என் மதி மயங்கினேன்
    மூன்று உலகிலும் மன்மத லீலையை வென்றார் உண்டோ?

    என்னுடனே நீ பேசினால் வாய் முத்துதிர்ந்து விடுமோ?
    என்னுடனே நீ பேசினால் வாய் முத்துதிர்ந்து விடுமோ?
    உனை எந்நாரமும் நினைந்துருகும் என்னிடம்
    வந்தால் மெனக்கெடுமோ? – உனை
    எந்நாரமும் நினைந்துருகும் என்னிடம்
    வந்தால் மெனக்கெடுமோ?
    உன்னை நயந்து நான் வேண்டிய ஓர் முத்தம்
    தந்தால் குறைந்திடுமோ?
    உன்னை நயந்து நான் வேண்டிய ஓர் முத்தம்
    தந்தால் குறைந்திடுமோ?

    ஒரு பிழை அறியா என் மனம் மலர்க்கணை
    பாய்ந்து அல்லல் படுமோ?
    ஒரு பிழை அறியா என் மனம் மலர்க்கணை
    பாய்ந்து அல்லல் படுமோ? மனம் கவர்
    மன்மத லீலையை வென்றார் உண்டோ?
    என் மேல் உனக்கேனோ பாராமுகம்?
    மன்மத லீலையை வென்றார் உண்டோ?

    Share
  • மனதில் நிறைந்த மக்கள் திலகம்

    — சுரேஜமீ.

     

    நான் பார்த்த எம்.ஜி.ஆர்

    அப்பொழுது எனக்கு ஐந்து வயதிருக்கும் என நினைக்கிறேன். தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு, களத்த்தில் நிற்கும் ஜாம்பவான்களுக்கிடையே, புதிதாய் முளைத்த இலை வருகிறது! முதன் முதலில் எங்கள் வீட்டில், DMK & ADMK என்ற சொற்கள் உபயோகிகப் படுகின்றன. அதுதான், என் முதல் பசுமையான நினைவு மக்கள் திலகம் பற்றி! (1976-77).

    அதன் பின்னர், வெள்ளித் திரையில் நான் பார்த்த பல திரைப்படங்கள்! ஒரு காலத்தில் காலை, பகல் மற்றும் இரவுக்காட்சியென மூன்று வேளைகளிலும் பைத்தியமாக என் தந்தையுடன் பார்த்த திரைப்படங்கள் சொன்னது …
    யார் இவர் என!

    மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு
    மாலைகள் விழவேண்டும்!

    எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?

    நான் ஆணையிட்டால்; அது நடந்து விட்டால்
    இங்கு ஏழைகள் வேதனைப்பட மாட்டார்!

    மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் !

    என எத்தனையோ பாடல்களின் வரிகள் என் இரத்தத்தில் கலந்து இரத்தத்தின் இரத்தமாக்கிய தருணங்கள் பொன்னானவை என்றால் மிகையாகது!
    தமிழின் வார்த்தைகளை வாழ்க்கையாக்கிய வள்ளல்தான் புரட்சித்தலைவர்! இன்றைக்கு இருக்கக்கூடிய பல அரசியல் தலைவர்களை இனம் கண்டு படிக்க வைத்து, வாழ்க்கை கொடுத்தவரை வள்ளல் என்றுதானே தமிழ் சொல்கிறது! கர்மவீரர் காமராஜருக்குப் பின் கல்வியின் வலிமையை அறிந்து அதைக் கடைக்கோடித் தமிழனும் பெறவேண்டுமென்றும், பட்டினி பள்ளிக் கல்வியைத் தடுக்கக் கூடாதென்றும், சத்துள்ள உணவு தந்த அன்னை சத்யாவின் புதல்வர்தான் எம்.ஜி.ஆர்!

    தலைவனுக்கு எடுத்துக்காட்டு:
    அடுத்து நான் பார்த்த எம்.ஜி.ஆர் ஒரு பத்து பதினோரு வயது இருக்குமென நினைக்கிறேன்! முகவை மாவட்டம் மிகவும் பின் தங்கிய மாவட்டம்; வானம் பார்த்த பூமி. மக்கள் கல்வி, பொருளாதாரம், வாழ்வாதாரம் என அனைத்திலும் பின் தங்கியிருந்த காலம். சாதிக்கலவரம் கோலோச்சிய நேரம். (1981).

    அப்படி ஒரு கலவரத்தில், முகவையும்; சுற்று வட்டாரமும் பற்றி எரிகிறது! வீடுகளை விட்டு வீதிகளில் செல்கின்றனர் மக்கள். உடமைகள் போனால் என்ன; உயிரல்லவா முக்கியம் என எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் தஞ்சம் தேடி அலைகிறது! வீடுகள் தீக்கிரையாக்கப் படுகிறது! எங்கு பார்த்தாலும் வெட்டு; குத்து; கொலை; மனித உயிரைக் குடிக்க மனிதனே துடிக்கின்ற அவலம்! ஊரடங்கு பிறப்பிக்கப் படுகிறது. கலவரம் கட்டுக்குள் வருகிறது.

    மக்களின் தலைவர், மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற வருகிறார். என்னுடைய கிராமத்திற்கு மிக அருகில் உள்ள கிராமத்திற்கு! அவரது கண்கள் பனிக்கின்றன! வேதனை அவர் நெஞ்சை அடைக்கிறது! பார்த்த அத்துனை உள்ளங்களும் உடைந்து உருகுகின்றன! இதுதான் ஒரு தலைவனுக்கு எடுத்துக்காட்டு என என் பிஞ்சு நெஞ்சில் அன்று விதைத்த விதைதான் இன்னும் என்னை மனிதாபிமானமுள்ள மனிதனாக வைத்திருக்கிறதென்று பெருமைப்படுகின்ற தருணங்கள் அவை!

    வாழ்க்கையே பார்த்து அஞ்சிய தலைவன்:
    அடுத்து வருவதோ, எம் இனப் பிரச்சினை. நாங்கள் இருப்பதோ முகவை. கரைக்கு இந்தப் பக்கம் ராமேஸ்வரம். அந்தப் பக்கம் மன்னார். ஈழத்தின் இனவாதம் உச்சத்தில் இருக்கிறது. பிரித்தானிய கொள்கையை; பிரித்தாளும் சூழ்ச்சியை இலங்கைப் பேரினவாதம் தமிழ் குழுக்களுக்குள் வித்திட்டு, இரண்டு பக்கங்களிலும் (ஒன்று அரசாங்கம்; மற்றொன்று போராடும் தமிழ் வர்க்கம்) நம் இன மக்கள் அவதியுற்று அடைக்கலம் நாடி தாய்த்தமிழகத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்! (1981-82).

    மக்களுக்காகவே தலைவனானவனாயிற்றே. எப்படிப் பொறுப்பான்? அகதிகளுக்காகவே, அன்றைக்கு ஒரு அமைச்சகத்தை உருவாக்கி, அதற்கு அமைச்சராக அன்றைய முகவை சட்ட மன்ற உறுப்பினர், அருமை அண்ணன் மறைந்த திரு. டி. இராமசாமி அவர்கள் அமைச்சராக்கப் படுகிறார்கள்! அதுமட்டுமா? அதன்பின் மக்கள் திலகம் செய்த உதவிகள் இலங்கைத் தமிழர்கள் நலனுக்காக ஏராளம்! அது நம் நெஞ்சத்தில் என்றும் நிலழாடும்!

    வாழ்க்கையப் பார்த்து அஞ்சிய தலைவர்களுக்கிடையே, வாழ்க்கையே பார்த்து அஞ்சிய தலைவன் ‘மக்கள் திலகம்’ என்றால் மிகையாகாது! முன் வாழ்க்கையின் வறுமை தந்ததுதான் பின் வாழ்க்கை என்பதனால் தானோ, மக்களின் வறுமையை ஒழிக்க எண்ணிய வள்ளலாகத் திகழ்ந்த ஒப்பற்ற, மாற்றாரும் வணங்கும் தலைவராக எம்.ஜி.ஆர் விளங்கினார்.

    தமிழுக்கும், தமிழர்களுக்கும் செய்த தொண்டுகள்:
    பொன்மனச் செம்மல் தமிழுக்கும், தமிழர்களுக்கும் செய்த தொண்டுகள் ஏராளம்; அதில் முத்தாய்ப்பான சிலவற்றைப் பார்போமா?

    1. முதலில் வருவது நான் வணங்கும் ஆசான், என் தமிழின் தடாகம்; தமிழ்த்தாயின் இளைய மகன் முத்தையா எனும் கண்ணதாசன்; கவிக்கெல்லாம் அரசன்; கலைவாணியின் அருள்பெற்ற கவியரசரை அரசவைக் கவிஞராக அமர்த்தி அழகு பார்த்தது! (1978)

    2. தந்தை பெரியாரின் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தியது. எத்தனை பேருக்கு இது நினைவில் இருக்குமெனத் தெரியவில்லை! (உதாரணத்திற்கு: றா, னா, ணா, லை, ளை, னை, ணை என்பன)

    3. சங்கம் வளர்த்த மதுரையில், தமிழுக்கு ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு நடத்தித் தமிழ் அறிஞர்களைக் கொளரவப்படுத்தியவர்!

    4. கல்லாதோரில்லாத் தமிழகத்திற்காக ‘முதியோர் கல்வி’!

    5. தமிழுக்கென்று ஒரு பல்கலைக்கழகம்!

    6. இலவச பாடநூல் வழங்கும் திட்டம்!

    7. ஈழப் பிரச்சினைக்கு ஆற்றிய பணிகள்!

    என அடுக்கிக்கொண்டே போகலாம்; ஆனால், எழுத்தின் அளவும்; வாசிப்பின் சுவாசிப்பும் கருதி, என் கருத்தினை, நான் பார்த்த அனுபவத்தின் அடிப்படையில், என்னுள் வாழ்கின்ற தலைவனைப் பற்றி எடுத்து வைத்திருக்கிறேன். அதன் முடிவாக,

    தமிழகம் போற்றும் ஒப்பற்ற தலைவன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளான் என்ற செய்தி ஊடகங்களில் பரவக் கேட்ட மக்கள் அலை மோதுகின்றன மருத்துவ மனை நோக்கி, மக்கள் தலைவனின் நலம் வேண்டி! என் இதயக் கண் முன்னே அன்றைய நிழல் காட்சிகள் ஓடுவதை வர்ணிக்க மனம் சற்று கிலேசமடைகிறது!

    அமெரிக்கா பயணம்:
    பின்னர், மேல் சிகிச்சைக்காக, அமெரிக்கா செல்கிறார். அங்கு உலகில் தலை சிறந்த மருத்துவ நிபுணர்களின் சிகிச்சைத் தொடர்கிறது. ஆனால், தமிழகத்திலோ, தங்கத் தலைவனின் நலம் வேண்டி கோவில்கள்; தேவாலயங்கள்; மசூதிகள் என எல்லா இடங்களிலும், மக்களின் பிரார்த்தனை எம் மன்னனை வாழவிடு என்று!

    இச்சமயத்தில் ஒன்றைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். ஒளி விளக்கு என்ற ஒரு திரைப்படம். அதில் வரும் ஒரு பாடல் காட்சி; சொகார் ஜானகி அவர்கள், மனமுருகி இறைவனிடம் வேண்டுவார்….

    என்னுயிரைத் தருகின்றேன்…..மன்னனுயிர் காத்துவிடு என்று!

    இப்பாடலின் முதல் வரிகள்

    இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு;
    தலைவா உன் காலடியில் என் நம்பிக்கையின் ஒளிவிளக்கு !

    தமிழகத்தின் பட்டி, தொட்டியெல்லாம் இப்பாடல் ஒலிக்காத இடமே இல்லையெனலாம்! அவர்கள் அத்துனை பேருடைய நம்பிக்கையும், மக்கள் திலகத்தை மீட்டுக் கொண்டுவந்தது என்று சொன்னால், அது தலைவனின் மேல் தமிழனுக்கு இருந்த நம்பிக்கைக்குக் கிடைத்த பெருமை!

    கடைசி அரசு விழா:
    கடைசி அரசு விழா. அதுவும் என் நெஞ்சைத் தட்டுகிறது. ஆசிய ஜோதி நேருவுக்கு, சென்னை கத்திப்பாராவிலே சிலை திறக்கும் விழா! அன்னை இந்திரா மறைந்த செய்தி கூட என் மன்னனின் உடல் நலம் கருதி மறைக்கப்பட்டிருந்தாலும், இந்திராவின் புதல்வர், மறைந்த இளம் இந்தியப் பிரதமர் ராஜீவுடன் கலந்து கொண்ட அந்த விழாதான், அமரர் எம்.ஜி.ஆர் அவர்களின் கடைசி விழாவாகிப்போனது!

    மறைவின் செய்தி பரவிய நேரம், தமிழகமே திரண்டது தலை நகர் நோக்கி! எங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளம்! தன் வீட்டில் ஒருவன் மறைந்தது போன்ற உணர்ச்சிப் பெருக்கு!
    மன்னவனை மண்ணும் போற்ற, தன்னுள்ளே வாங்கிக் கொண்டது!
    அலைகடலும், அடைக்கலம் நானென்றது!
    வான் மகளோ தினமும் நானுன்னை வணங்குவேன் என்றது! மன்னவன் புகழ் பாட

    மக்கள் திலகம் பற்றி ஒரு சின்னக் கவிதை!
    (பொன்மனச் செம்மலின் பிறந்த தினமான ஜனவரி 17 அன்று எழுதியது)

    இவன்
    மாற்றான் தோட்டத்து
    மல்லிகையாய்
    இருந்தும்;
    மணம் வீசியதென்னவோ
    நம் தோட்டத்தில்தான்!

    தமிழுக்கே
    திலகம்
    வைத்தவன்!
    தமிழகத்திற்குத்
    திலகமாய்
    இருந்தவன்!
    அவன் தான்
    மக்கள்
    திலகம்!

    தாயைவிட
    தமிழை
    நேசித்தவன்!

    ஆம்!
    பசுத்தோல்
    போர்த்திய
    புலிகளுக்கிடையே
    புலியையே
    மடியில்
    கிடத்தி
    போலிகளை
    விரட்டிய
    புண்ணியவான்!

    இன்னும்
    என் மக்களின்
    இதயக் கோயிலில்
    வாழும்
    இரட்டை இலைத்
    தெய்வமிவன்!

    இந்த நாள்
    அன்று
    தீர்மானிக்கப் பட்டது;
    இவன் பிறந்தால்
    தமிழகம்
    தலை நிமிரும்
    என்று!

    அந்தப்
    பொன்னாள்
    இன்றும்
    வருகிறது!

    வாழ்த்தும்
    உள்ளங்கள்
    வாழட்டும்!
    பொன்மனச்
    செம்மலின்
    பொன்னான
    பிறந்தநாள்
    இன்று!!

    முடிவுரை:
    இந்தக் கட்டுரைத் தகவல்கள் தாங்கி வந்தது என் இதயத்திலிருந்த நினைவுகளை! இதைப் படிக்கும், உங்கள் உள்ளத்தில் கடுகளவாவது என் மன்னனின் பண்புகள் வேரூன்றுமானால்,

    அந்தப் பரிசுக்கு இணை நிச்சயமாக வேறேதுமில்லை எனக்கு!

    வாழ்க தமிழ்! வளர்க தமிழர் தம் இல்லங்கள்! ஓங்குக மக்கள் தலைவனின் புகழ்!!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    unnamed (4)

     

    ”முதலைவாய் சிக்கி மதகளிறு ஆதி
    முதலைவா வென்றைக்க மூன்றில் -முதலாய்,
    கருடனில் குந்தி கஜேந்திரனைக் காத்த,
    புருடனைப் போற்றல் பிழைப்பு”….

    ”பீதாம் பரமவிழ, போட்ட நகைசிதற.
    வேதப்புள் வாகனனை தோள்சுமந்து, -பாதாதி
    கேசம் குலுங்க, களிறுக்கன்(று) ஏகிய,
    நேசனக் கேசவனை நம்பு”….கிரேசி மோகன்….

    Share
  • படக் கவிதைப் போட்டி – 5இன் முடிவுகள்

    அண்ணாகண்ணன்

    தமிழக – கேரள எல்லையில், ராமக்கல்மேடு என்ற கிராமத்தில் உள்ள குறவன் – குறத்தி சிலையை அமுதா ஹரிஹரன் படம் எடுத்தார். அதை நமது படக் கவிதைப் போட்டிக்குச் சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்தார். இந்தப் பொருள் பொதிந்த படத்துக்கு வல்லமை அன்பர்கள், நயமான கவிதைகளைப் படைத்துள்ளனர்.

    Amutha Hariharan's photo of Kuravan Kurathi Statue

    சிலையாய் அமர்ந்துள்ள இணையர், எதிரே பசுமை போர்த்திய மலைத் தொடர், மேலே வெண் மேகம் தவழும் நீல வானம் என ஒரு வளமான காட்சி, திறமான படைப்புகளுக்குச் சரியான தீனி. இருவர் ஏன் சிலையாக அமர்ந்துள்ளனர் என்ற தேடல், விதவிதமான கற்பனைகளைத் தூண்டி விட்டுள்ளது. இதற்கு ஜெயபாரதனும் எஸ்.பழனிச்சாமியும் ஜெயஸ்ரீ ஷங்கரும் புனிதா கணேசனும் வடித்த பின்கதைகள் நன்று. இவை, காவியமாக விரித்துரைக்கும் வாய்ப்பினைக் கொண்டவை.

    ஊடும் பாவுமாக விரவிச் செல்லும் இந்த வண்ண வரிகளுள் சில, சட்டென்று என்னை ஈர்த்தன.

    கலை தவழும் மலை
    மலை தழுவும் முகில்
    இவற்றோடு
    காதல் தலைவி தலைவனாய்
    நீயும் நானும்!

    எனக் கிரேஸ் பிரதிபாவும்

    மெல்ல கேசம் வருடும்
    மேகக் காதலனின் காதில்
    கிசுகிசுக்கிறாளோ –
    மரகதப் பட்டுடுத்திய
    மலை மங்கை?

    எனத் தமிழ் முகிலும்

    அன்பு நிறைந்த ஏகாந்த பூமியிது
    ஆசைக் கண்கள் தாலாட்டிய பூமியிது
    காலச் சுழற்சி, காதல் மலர்ச்சி
    பிறவிகள் வேண்டும்

    என ஜெயஸ்ரீ ஷங்கரும்

    நீலவான் நிலத்தை நோக்க
    நிலம்நாணி வானை நோக்க
    காலனே நீயும் எம்மை
    கணக்கினில் கொள்ளும் முன்னம்
    ஞாலமே வியக்கும் வண்ணம்
    நாமிங்கு சிலைகள் ஆனோம்!

    என ஜெயராம சர்மாவும்

    கனிவுறு காதலில் கல்லானோம்
    இனியொரு பிறவியில் இணைவோமா?
    அந்த வானமும் இந்த பூமியும் போலே
    எந்த போழ்திலும் சேர்ந்தேயிருப்போமா?

    எனப் புனிதா கணேசனும்

    ஊனுயிராய் உலவிக் கலக்கும்
    ஊன்றுகோல்! அன்பு ஊற்று!
    உன்னதம்! காதல் இறைமை!
    இத்தேடல் பிரபஞ்ச மயக்கம்!
    இவ்வாடல் உலக இயக்கம்!

    எனப் பா.வானதி வேதா. இலங்காதிலகமும்

    நிலையா உலகில் நிலைபெறவே
    நினைவுச் சின்ன நிலையானார்,
    கலையே ஈதெனப் பார்த்தாலும்
    காதல் சிலையெனச் சேர்த்தாலும்,
    விலையெனச் சொல்ல ஏதுமில்லை
    வென்றே நிற்கும் காலத்தையே…!

    எனச் செண்பக ஜெகதீசனும்

    இவர்கள்
    எதுவும் இல்லாதிருந்தபோது
    எல்லாமும் பெற்றிருந்தனர்
    எல்லாமும் கிடைத்தபோது
    எதையோ இழந்து நிற்கின்றனர்!

    எனக் கொ.வை அரங்கநாதனும் தீட்டிய வரிகள், என் ரசனைக்கு விருந்து படைத்தன.

    எனினும் ஒரு முழுமையான கவிதை என்ற அளவில் பார்க்கிற போது, சங்கர் சுப்பிரமணியனின் இந்தக் கவிதை என்னைப் பெரிதும் கவர்ந்தது.

    இதுவரை
    அறிந்திராத மொழியும்
    தீண்டலில் கரையும்
    புரியாத உணர்வுகளும் என
    பக்கமிருப்பிலே
    தூரமாகி போகிறது
    நாம் காணும் உலகம்

    மின்னும் நட்சத்திரம்
    காற்றினில் தவழ்ந்து வந்து
    நம்மை தழுவும் இசை
    உருகும் பனி
    பச்சை புல்வெளி
    பார்த்த பரவசம் என
    மீளா கணங்களில்
    முன்னம் விரியுது
    இதுவரை நாம்
    பார்த்திராத உலகம்

    நாம் கற்சிலையான
    தருணத்திலும்
    தீராத நம் பேச்சினில்
    கிளர்ந்தெழும் உணர்வுகளால்
    கலைத்து போகிறது
    கடந்து போகும் மேகமும்
    சுற்றி வரும் சூரியனும்

    இதில் ஒற்றுப் பிழைகள், ஒருமை / பன்மைப் பிழை, தட்டுப் பிழை (கலைத்து / களைத்து), நிறுத்தற்குறியின்மை ஆகியன இருந்தும் இதன் கவித்துவம், தனித்துவமானது. கற்சிலையான பிறகும் தீராத பேச்சு எது? பேசுவது வாயா, விழியா, விரலா, மனமா, ஆன்மாவா என விரிப்பது ஒரு நிலை என்றால், அந்தப் பேச்சினால் கிளர்ந்தெழும் உணர்வுகள், சுற்றி வரும் சூரியனையும் கடந்த போகும் மேகத்தையும் களைப்படையச் செய்கின்றன எனில் அதன் விரிவும் தீவிரமும் சலியாத அன்பும் அலாதியான இன்பமும் சொல்லில் வடிக்க இயலாதவை. தகுதி மிக்க இந்தக் கவிதைக்காகச் சங்கர் சுப்பிரமணியன் அவர்களை இந்த வாரத்தின் சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கிறேன்.

    ஏற்க மறுத்தாரோ ஏங்கிட வைத்தாரோ
    தோற்க மனமின்றி தோழமையாய் – வீற்றிருப்பீர்
    கற்சிலையாய் குன்றின்மேல், காலங் கனிந்துவரும்
    வற்றிடா அன்பே மருந்து

    எனக் காதலை ஏற்கும் வரை கற்சிலையாய்க் காத்திருக்கும் இணையரைப் படைத்த சியாமளா ராஜசேகர் அவர்களை இந்த வாரத்தின் குறிப்பிடத்தக்க கவிஞராகத் தேர்ந்தெடுக்கிறேன்.

    சங்கர் சுப்பிரமணியன், சியாமளா ராஜசேகர் ஆகியோருக்கு எனது பாராட்டுகள். பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

    Share
  • லீ குவான் யூ

    மறவன்புலவு க. சச்சிதானந்தன்

    இலங்கைத் தமிழரின் இடரைப் புரிந்த உலகத் தலைவர்களுள், 30 ஆண்டுகள் சிங்கப்பூர் தலைமை அமைச்சராக இருந்த லீ குவான் யூ முதலிடம் வகிக்கிறார்.

    asg1
    சிங்கப்பூரில் பிறந்த மூன்றாவது தலைமுறைச் சீனரான அவர் சிங்கப்பூர் வாழ் இலங்கைத் தமிழர்களுடன் நல்லுறவுகளைப் பேணியவர். சிங்கப்பூரின் மக்கள் செயல் கட்சியைத் (PAP) தொடங்கிய காலத்தில் அவரது உற்ற நண்பர் மலேசியாவில் பிறந்த இரண்டாவது தலைமுறை யாழ்ப்பாணத்தவர் ச. இராசரத்தினம்.

    இலங்கைத் தமிழர், படித்தோர், கடுமையாக உழைப்போர், பெரிதும் ஏமாற்றார், வெளிப்படையாகப் பேசுவோர், அடையாளங்களைக் கைவிடாதோர் என்ற கருத்து மலேசியவிலும் சிங்கப்பூரிலும் வாழும் சீனரின் கருத்து. லீ குவான் யூ சீனர், எனவே விதிவிலக்கானவரல்லர்.

    இலங்கைத் தமிழரை எந்தக் கொம்பனாலும் அடக்கி, அழித்துவிட முடியாது என லீ குவான் யூ தன் கடைசிக்காலம் வரை சொல்லிக்கொண்டிருந்தார்.

    asg

    குடிமகன் ஒருவருக்குத் தேர்தலில் ஒரு வாக்கு என்ற முறை இலங்கையில் இனச்சிக்கலை வளர்த்தது. பெரும்பான்மையான 80 இலட்சம் சிங்களவர் சிறுபான்மையினரான 20 இலட்சம் தமிழரை எப்பொழுதும் இத்தகைய வாக்களிப்பு முறையால் ஓரங்கட்டுவர். சிங்களத்தை ஆட்சிமொழியாக்கித் ஆட்சியில் தமிழரின் பங்களிப்பைத் தடுத்த சிங்களவர், மதச்சார்பற்ற நிலையை மாற்றிப் புத்த மதத்துக்கு அரசில் முன்னுரிமை கொடுத்தனர். இந்துக்களான தமிழர் இந்த நிலையை ஏற்க மறுத்தனர். இந்தக் கொடுமைகள் தமிழர்களைத் தம் நாட்டிலேயே அந்நியர்களாக்கின. வளர்ச்சிக்குரிய நாடாகிய இலங்கை வீழ்ச்சியை நோக்கிப் போவதை நான் பார்த்துக்கொண்டே இருந்து வருகிறேன் என, நினைவலைகள் என்ற தன் நூலில் குறிப்பிட்டுள்ளார் லீ குவான் யூ. Excerpts from: “From Third World To First – The Singapore Story: 1965-2000” “Memoirs of Lee Kuan Yew” (October 2000)

    asg2

    சிங்களத் தலைவர்களோடு ஒப்பிடுகையில், சிங்கப்பூரைப் பிரித்துக் கொடுத்துத் தனிநாடாக்கிய துங்கு அப்துல் இரகுமான் அரசியலில் கில்லாடி எனப் பாராட்டியவர் லீ குவான் யூ.

    1956இல் இலங்கைக்கு முதன்முகலாக வந்த லீ குவான் யூ, சிங்கப்பூரை விட இலங்கை பன்மடங்கு வளமாக இருந்ததைக் குறிப்பிட்டுள்ளார். ஆனாலும் அரசியல் தலைமையின் சீர்கேட்டால் இலங்கை பாழடைந்ததைக் கண்டு பிற்காலத்தில் வருந்தினார்.

    செயவர்த்தானாவிடம் பலமுறை பேசினேன். தமிழருக்குச் சுயாட்சி வழங்குமாறு கேட்டேன். பிரேமதாசாவிடமும் இதைப் பலமுறை கூறியிருக்கிறேன்.

    இந்தியப் படையைத் திருப்பி அனுப்பிய தவறைச் செய்த பிரமதாசா, தமிழ்ப் பகுதிகளுக்குச் சுயாட்சி கொடுக்க மறுத்தார். இதனால் தமிழர் விடுதலைக் கூட்டணி வலுவிழந்தது. விடுதலைப் புலிகளை வளர்த்தவர் பிரேமதாசா. அவரே தற்கொலைப்படைத் தாக்குதலில் உயிரிழந்தார்.

    விடுதலைப் புலிகளை அழித்துவிட்டதால் இலங்கையில் தமிழர் சிக்கலைத் தீர்ரதுவிட்டதாக இராசபட்சா நம்புகிறார். மற்றவர்களும் அவ்வாறே நம்பவேண்டும் எனக் கருதுகிறார். இலங்கைத் தமிழரை அடக்கி ஒடுக்கமுடியும் என நான் நம்பவில்லை. அவர்களது உரிமைப் போரை அவர்கள் கைவிடவே மாட்டார்கள். இராசபட்சாவின் உரைகளைப் படித்திருக்கிறேன். அவர் சிங்களத் தீவிரவாதி. அவரது அந்த மன நிலையை என்னால் மாற்ற முடியாது என 2010இல் தொம் பிளேடர் என்ற அமெரிக்க ஊடகருக்குக் கூறினார். Conversations with Lee Kuan Yew (2010), by Tom Plate, an American columnist, published by Marshall Cavendish on Giants Of Asia.

    அவரவர் செயல்களின் விளைவுகளை அவரவரே அநுபவிப்பார். இலங்கைத் தீவு வளமான நிலப்பகுதி. ஆங்கிலேயரின் ஆட்சியில் செல்வந்த நாடாக இருந்த தீவு. சிங்களவர்களின் கொடுமை நோக்கும் தலைமையால் வளம் குன்றி, வலிவு நீங்கி, இழிவும் வறுமையும் மேலோங்கிய நாடாகியுள்ளதே எனப் பலரிடம் வீ குவான் யூ வருத்தப்பட்டிருக்கிறார்.

    1950 தொடக்கம் இந்தியாவில் அரசியலமைப்பு அட்டவணை மொழிகளுள் தமிழ் ஒன்று. இலங்கையில்
    1988க்குப் பின்னர் தமிழும் ஆட்சி மொழி. உம் விகுதியை நோக்குக. வேறெந்த நாட்டிலும் தமிழுக்கு அரச ஏற்பு நிலை இல்லை.

    ஆனால் சிங்கப்பூரில் 1965 தொடக்கம் நான்கு தேசிய மொழிகளுள் தமிழ் ஒன்று. நடைமுறை மொழி தமிழ். அரசின் செயல் மொழி ஆங்கிலமானாலும் தமிழர் தமிழில் தொடர்பு கொண்டு தமிழிலேயே அரசிடமிருந்து பதிலைப் பெறலாம். கல்வியில் வணிகத்தில் அறிவிப்புகளில், நாடாளுமன்றத்தில் ஏனையமூன்று மொழிகளுக்குச் (சீனம், மலாய், ஆங்கிலம்) சமமான இடத்தில் தமிழ்.

    திறமைக்கே முதலிடம். இனத்துக்கோ, மதத்துக்கோ, மொழிக்கோ முன்னுரிமை இல்லை. திறமையான தமிழர் பலர் சிங்கப்பூர் அமைச்சரவையில் தொடர்ந்து உறுப்பினராக உள்ளனர்.

    சின்னத்தம்பி இராசரத்தினம் (1915–2006) துணைப் பிரதமர், வெளிநாட்டமைச்சர், பண்பாட்டமைச்சர், மூத்த அமைச்சர். 1952இல் முதன் முதலாக லீ குவான் யூவைச் சந்திக்கிறார் இராசரத்தினம். இறுதிக் காலம் வரை சிங்கப்பூரைக் கட்டியெழுப்பிவதில் இருவரும் இணைந்து பணி புரிகின்றனர்.

    சுப்பையா தனபாலன் (1937– ) வணிக, தொழில்வள, தேசிய வளர்ச்சி அமைச்சர், வெளிநாட்டமைச்சர்அமைச்சர், பிரதமருக்கான தன் வாரிச என லீ குவான் யூ அறிவித்தும் ஏற்க மறுத்த தமிழர்.

    சண்முகம் செயக்குமார் (1939– ) தேசியப் பாதுகாப்பு, சட்டம், தொழிலாளர், உள்நாடு, வெளிநாடு அமைச்சர். ஐநா பிரதிநிதி.
    தர்மன் சண்முகரத்தினம், துணைப் பிரதமர், கல்வி, நிதி அமைச்சர்.

    விவியன் பாலகிருட்டிணன், சமூக வளர்ச்சி, இளைஞர், விளையாட்டு அமைச்சர்
    க. சண்முகம், சட்ட மற்றும் வெளிநாடு அமைச்சர்.

    ச. ஈசுவரன், பிரதமர் அவுவலகம் மற்றும் உள்நாடு அமைச்சர்.
    பாலாசி சதாசிவன், வெளிநாடு இணை அமைச்சர்
    பெஞ்சமின் செயரத்தினம், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்.
    நாதன், குடியரசுத் தலைவர்
    குமாரசுவாமி, நாடாளுமன்ற அவைத் தலைவர்.
    இவ்வாறாக, லீ குவான் யூ கட்டியெழுப்பிய சிங்கப்பூர், தமிழுக்குத் தேசிய நிலை கொடுத்த முதல் அரசு. திறமையுள்ள தமிழர் பிரதமராகலாம் என வாய்ப்பளித்த நாடு. ஏராளமான தமிழர்களைத் திறமைக்காககப் போற்றிய நாடு. ஈழத் தமிழரின் நிலை உணர்ந்து பேசிய லீ குவான் யூவைத் தந்த நாடு.

    Share
  • என்கவிதைகள் – அரவாணிகள்

    முனைவர் ஜ.பிரேமலதா,

    தமிழ் இணைப் பேராசிரியர்,

    அரசுகலைக் கல்லூரி,

    சேலம்-7

     

    Evening-Tamil-News-Paper_19744074345

    தெய்வத்திற்கும் மனிதர்க்கும் 
    தொடர்பு ஏற்படுத்த கடவுளால்
    போடப்பட்ட உறவுப்பாலங்கள்!

    சக்தியின் வடிவானவர்களுக்கு
     உறவுகள் அனைத்தும்
    சக்தியின் வடிவங்களே!

    பெறுவதால் பேறு பெற்ற தாயர்க்குமுன்
    இழப்பதால் வீடு பெறு பெற்ற
    தாயம்மாக்கள்!

    வாழ்வாதாரங்கள் தொடர்ந்து
    மறுக்கப்பட்டபோதும்
    இருப்பியலுக்குப் போராடும்
    ஆதிப்போராளிகள்!

    வர்த்தக நோக்கம் கொண்டோர்க்கு
    புரிந்தாலும் புரியாது
    இறைவனே விரும்பி மேற்கொண்ட
    இவர்களின் வித்தகக் கோலம்!

    ஆண்பாலாய்ப் பிறந்து
    பெண்பாலாய் உணர்ந்து
    பலர்பாலாய் மாறிய
    உயர்பிறப்புகள்!

    தாயின் கருவறையில்
    அனைத்து மனிதர்களும்
    முதல் ஆறுவாரம்
    பெண்ணினமே!

    ஒவ்வொரு
    ஆணுக்குள் பெண்மையும்
    பெண்ணுக்குள் ஆண்மையும்
    இயற்கை அளித்த பெருவரம்!

    y குரோமோசோமும்
    டெஸ்டோஸ்ட்ரோனும்
    ரிசெப்டரும் முறைதவறுவதால்
     உருவாவதே மூன்றாம் பாலினம்!.

    தாயின் கருவறை மரபணுவை
    வீரியமிழக்கச்செய்யும்
    அண்ணன்களின் மரபணுவும்
    தம்பி அரவாணியாக ஒரு காரணம்!. 
    எங்கும் உள்ளது  அரவாணியம்
     எழுத்து வகையில் ஆய்தம்!
    சொல்நிலையில் இடையினம்!
    திணையிலோ முறைமையில் திரிந்த பாலைகள்!

    இவர்கள் பாக்களிலோ மருட்பா!
    பூக்களிலோ வாடாமல்லி!
    தெய்வத்திலோ அர்த்தநாரி!
    மனிதரிலோ பால் கடந்த ஞானிகள்!

    மல்லாக்கப்படுத்து எச்சில் துப்பும்
    ஒன்பது வாயில் கொண்ட
    மனிதர்க்கு மட்டுமே இவர்கள்
    எண்களில் ஒன்பது!

    சாதி,மதம்
    பால், இனம் கடந்த
    இவர்கள் தான் உண்மையிலேயே
    மகத்தான மானுடர்கள்!

     

    —————————————————————————————————————————————————-

    நான்  யார்?
    மழலை பேசிய நாட்களில்
    எடுத்த புகைப்படங்களில்
    அதிகம் கவர்ந்தவை
    தலைசீவி மட்டை வைத்து
    பூ அலங்காரம் செய்த
    பாவடை சட்டைக் கோலம்!

    கண் நிறைய அப்பப்பட்ட
    மையையும் மீறி வெளிப்பட்டன
    பிஞசு முகத்தில்
    அம்மா திணித்த
    அலங்கார ஆசைகள்!

     

    தன் கல்யாணக் கனவுகளை
     வெளிப்படுத்த இவனுக்கும்
    பள்ளி நாட்களில்
    அழகான கைகளென்று இழுத்து
    அக்கா வைத்த மருதாணிப்பூச்சு
    சிவக்க வைத்தது இருவரையும்!

    அக்காவிற்கு கிடைத்த
    பெண்பிள்ளைகளுக்கான
    ஓசிச் சைக்கிளில்
     பழக்கிவிட்ட
    அப்பாவிற்கும் தெரியாமல்
    படர்ந்து விட்டன ஆசைக்கிளைகள்!

    அனைவரின் விருப்பத்திற்கும்
    இணங்கிப் போய்…
    பருவவயதில் தனக்காக வாழ
    மஞ்சள் தேய்த்து
    பாவாடை தாவணி உடுத்திய
    போது கிடைத்ததோ

     

    வசவும் சாட்டையடியும்!
    உடன் பயின்ற தோழர்களோ
    வேற்றுமை கண்டும்
    தோழியரோ ஒற்றுமை கண்டும்
    ஒJங்கிய நிலையில்
    அவனுள் நொறுங்கிப்போனது
    உலகமென்ற ஏதோவொன்று!

    நான் யார்….?
    திரிகால ஞானிகளும்
    கண்டுணர முடியாத தொடர்ந்த
    கேள்விகளினால்
    பாழாகிப்போனது பாழாய்ப்போன
    பள்ளிப்படிப்பு!

    நான்  உடலா…? உள்ளமா?
    சித்தர்களும் விடைதேட  காட்டிற்குள்
    ஓடிய நிலையில்
    ஓடாமலிருக்க
    ஒளித்து ஒளித்து
    வாழ்ந்த வாழ்க்கை
    சந்ததிகளினால் 
    பிழையாகிப்போனது!

    குடிகார அப்பாவுக்கும்
    முதிர்கன்னி அக்காவுக்கும்
    தாயாயிருந்தும் தாய்மையில்லாத
    அவனை வெறுக்கும் தாய்க்கும்
    இடமுண்டு அவனுக்கு
    இடமில்லாத வீட்டில்!

    ஆண் உடல் – பெண்தன்மை
    பாலறியாமல்  ஐயுற்று குழம்பி
    அறிவு பேதலித்து உடல் நலிவுற்று
    உறவினர் வரும்போது
    கழிவறைக்கு விரட்டபட்ட நிலையில்
    உணர்ந்தான் அவ்வீட்டில்
    தன்னை ஒரு மலமாய்!

    கண்டும் காணாத உறவுகளினால்
    காணாமலே போய் விட்டான்.
    உடலாலும் மனதாலும்
    வெந்து நொந்து….  மகளாய்
     பாசம் காட்ட ஆளிருந்தும்
     பெற்ற பாசம் துரத்த
    ஓடினாள் வீடு தேடி…!
    வாசலில் அவன்….. அவளாக
    அதிகாலை இருட்டில் .
     பாம்பைக் கண்டதுபோல்
    உள்ஓடி கதவடைத்த ஓசை
    அவள் பாடிய தாலாட்டையும் மீறி
    ஒப்பாரியாய் வந்து விழுந்தது 1

    அவ்வோசை அவனின்
     உயிர்நரம்புகளை மட்டுமா அறுத்தது
    கோடானுகோடி ஆண்டுகளாய்
    தாயின் மீது கட்டமைக்கபட்ட
    அத்தனை
    புனைவுகளையும்தான்!

    தவமிருந்து பெற்ற ஒற்றை ஆண்பிள்ளை
    தாயுமில்லை தந்தையில்லை
    நான் தனியன் என்று
    கடைகடையாய்
    கைதட்டி பிச்சை கேட்குமென்று
    யார்தான் நினைத்திருப்பார்?

    சாபமுமில்லை….
    ஊனமுமில்லை….
    இருத்தலியல் சிக்கல்
    பிறந்த அனைவருக்குமிருக்க
    சாதித்துவிட வேண்டுமென
    தினவெடுத்தன அவள் தோள்கள்!

    பிச்சை, பாலியல் தொழில் மறுத்து
     முப்பெரும் கடவுளின்
    முதற்தொழிலை…..
    அன்னம் படைத்தலை
    முனைப்போடு மேற்கொள்ள
    ஆரம்பமாயிற்று போராட்டம்!

    அன்புச்செழியன்
    அன்னலட்சுமியானாள்
    அரவாணியர் சுயஉதவிக்குழு
    அரவாணியர் கலைக்குழு
    அரவாணியர் குழந்தைகள் காப்பகம்
    அரவாணியர்  முதியோர் காப்பகம்
    அரவாணியர் பணிமகளிர்சங்கம்
    அரவாணியர் காப்பகப்பள்ளி….

    இருபதாண்டுகள்
    இணையற்ற விருதுகள்,உறவுகள்
    இணையில்லா பெருமைகள்
    எனினும் நெஞ்சில் ஏக்கங்கள்
    வந்தவழி நினைத்து
    பயணிக்க ஏங்கும் பாதங்கள்!

    கூத்தாண்டவரின் பாதங்களில்
    கண்ணீரால் கரைக்க முயன்றும்
    கரையாத பாறைகள்.
    கண்மூடி திறந்தாலோ இரத்தவழி உறவுகள்..
    தத்தெடுத்த பிள்ளைகள் தாங்கி நின்றாலும்
    ஒரு மகனாய் ஏங்கிய பாச நினைவுகள்!

    முப்பதாண்டு …
    முனைப்புகள் கூர்மையாகி
    வாசலிலே நின்றுவிட்டாள்
    புறத்தில் மாறாத பழைய வீடு
    பயத்தோடு கதவுதட்டி காத்திருக்க
    காப்பவளே இப்போது யாசகனாய்…!

    யார் வேணும்?இடுங்கிய கண்களோடு
    உள்ளிருந்து வந்த தேய்நத குரலுக்கு…
    “அன்னலட்சுமி…அன்புச்செழியன்….”
    வா என்ற சொல்லுமில்லை
    வாஞ்சையோ சிறிதுமில்லை
    வேதனை மென்றிட
    மரணத்தைப் பார்த்துவிட்டாள்!

    கால்களோ மறத்துவிட
    மறந்துவிட்டாள் காலெடுத்து வைப்பதற்கு.
    ஆனாலும் உள்ளிருந்து கிழிந்தசேலையும்
    இடுங்கிய கண்களும்
    தேகமென்று ஒரு  குச்சி  நடந்துவர
    இருள் ஒளியானது .

    சொல்லாமல் சொல்லின
    இவர்களின் இருப்பை….
    அவனை விரட்டிய கௌரவம்
    அவர்களையும் விரட்டி விட்டதென்று.
    இறுக்கம் உடைந்து இரங்கிய பேச்சில்
    பசி அவர்களை தத்துதெடுத்து
    ஆண்டுகள் பல ஆயிற்றென்று.

    கைநீட்ட வைத்த
    அப்பாவின் குடிப்பழக்கம்
    கம்பி எண்ண வைத்ததோடு
    வேலையையும் பறித்துவிட
    நின்றபோன அக்காவின்
    காலம் கடந்த திருமணம்,

    மகளோடு சுமந்த தாயின்
    பொருளாதார சுமை உணராது
    காசநோய் அப்பாவைப்
    படுக்கையில் தள்ளிவிட
    நடைப்பிணமாய் மாறிப்
    போனது அவர்களின்  வாழ்க்கை.

    கேட்ட கதைகள் அத்ததனைக்கும்
    தன் சோகத்தையும் மறந்து கண்ணீர் விட்டாள்.
    அவள்பட்ட வேதனையும்
    அவளைச்சோதித்த சோதனையும்
    நினைத்துப் பார்க்கத் தெரியாத
    பெரியமனசுக்காரி!

    தான் சாபம் விடாதபோதும்
    தெய்வம் தணடித்துவிட்டதென
    நினைக்கக் கூடத்தெரியாத
    அரவாணி  அன்னலட்சுமி
    பெற்றவர்களைத்
    தத்தெடுத்துக் கொண்டாள்!

     

     

     

     

    Share
  • நாசாவின் புதுத் தொடுவான் விண்கப்பல் குள்ளக் கோள் புளுடோவை நெருங்குகிறது.

     

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=LgzM-uV81YE

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=iQ_Wp4bcLFI

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=KfODJpfS0fo

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=KNJNaIoa5Hk

    http://www.youtube.com/watch?feature=player_embedded&v=WUB7dRgClSQ

    http://www.youtube.com/watch?v=iPyRAmviIuE

    http://www.space.com/22752-voyager-1-goes-interstellar-solar-system-boundary-passed-video.html


    (NASA New Horizon Spaceship to Dwarf Planet Pluto)

    சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா

    jay

     

    புதுத் தொடுவான் விண்கப்பல்
    பூதக்கோள்
    வியாழனைச் சுற்றி
    ஈர்ப்பு வீச்சில்
    வேகம் மிகையாகி
    விரைவாய் நெருங்கப் போகுது
    புளுடோ வையும்
    சாரன் என்னும்
    துணைக் கோளையும் !
    முதலிரு வாயேஜர்
    விண் கப்பல்கள் காணாத புது
    விந்தைகள் காணும் !
    புளுடோ வுக்கும் அப்பால் பறந்து
    கியூப்பர் வளையத்தின்
    கோள்களை உளவச் செல்லும் !
    சூரிய மண்டலத்து
    வால்மீன் மந்தைகளின்
    வளர்ப்பிடத்தை
    தெளிவாக
    ஆய்வுகள்  செய்யும் !
    வாயேஜர் விண்ணூர்தி போல்
    பரிதி மண்டல
    வரம்பைத் தாண்டி
    வரலாற்றிலே
    புதிய மைல் கல்லை நடும்
    நாசாவின்
    புதுத் தொடுவான் கப்பல் !

    +++++++++++

    Relative Sizes of Dwarf Planets

    நியூ ஹொரைசன் விண்ணுளவி புளுடோவின் புதிய சந்திரன்களையும், வளையங்களையும் கண்டுபிடிக்கும் என்று மெய்யான ஓர் எதிர்பார்ப்பு உள்ளது.  புளுடோவுக்கு ஏற்கனவே  அறிந்த ஐந்து சந்திரன்கள் [சாரன், நிக்ஸ், ஸ்டைக்ஸ்,  ஹைடிரா & கெர்பெரோஸ்].  கணனி எண்ணியல் உருவாக்கத்தில் [Numerical Simulations] விண் எறிகற்கள் சந்திரன்களை மோதித் தூளான துணுக்குகள் புளுடோவை வளைங் களாய்ச் சுற்றி வருவதாகத் தெரிகின்றன !  அந்த வளையங்கள் தோன்றி மறைகின்றன.  புலப்படாத புது விண்வெளி நோக்கிப் போகிறோம் !   பயணத்தில் என்ன காணப் போகிறோம் என்று அறியோம்.   அந்த எதிர்ப்பாடுகள் 2015 ஆண்டு ஜூலையில் இருக்கும் !

    அலன் ஸ்டெர்ன் [Alan Stern, Principal Investigator, New Horizon Mission to Pluto]

    ஹப்பிள் விண்ணோக்கியில் மங்கலாகத் தெரியும்  புளுடோவின் தளவியல் முற்றிலும் இதுவரைத் தேர்வு செய்யப் படாதது ! வானியல் விஞ்ஞானிகள் புளுடோவைக் குள்ளக் கோள் என்று ஒதுக்கினும், தள இயக்கங்கள் எவ்விதத்திலும் தாழ்ந்தவை அல்ல.   ஒரு கார் புளுடோவின் மத்திய ரேகையில் சுற்றி வந்தால் 5000 மைல் தாரம் என்று தொலைக் கருவி [Odometer] காட்டிவிடும்.    அது நியூயார்க் மன்ஹாட்டன் -மாஸ்கோ தூரம் ஆகும்.   அந்தப் பயணத்தில் ஒரு பயணி குளிர்ந்த நீரெழுச்சிகள், பள்ளக் குழிகள், முகில்கள் [Icy Geysers, Craters, Clouds] காண நேரிடலாம்.

    அலன் ஸ்டெர்ன்  [Alan Stern, Principal Investigator, New Horizon Mission to Pluto]

    Pluto Satellites

    புளுடோ குள்ளக் கோளின் ஐந்து துணைக்கோள்கள்

    புளுடோவில் அடிக்கடல் இருக்க வாய்ப்புள்ளதற்கு இரண்டு சார்பு அளவுகள் முக்கியம்  : முதலாவது அதன் பாறை உட்கருவில்  உள்ள கதிரியக்கப் பொட்டாசியத்தின் அளவு [Radioactive Potassium Quantity] [75 parts per billion]. இரண்டாவது  அதை மூடியுள்ள பனிக்கட்டியின் உஷ்ண அளவு [-230 டிகிரி C].  புளுடோவின் திணிவு [Density] கணிப்புப்படி 40% பாறைக் கொள்ளளவு.  தேவையான அளவு கதிரியக்கப் பொட்டாசியம் இருந்தால், தேய்வு வெப்பமே பனிக்கட்டி [Mixure of Nitrogen & Water] நீராக உருகத் தகுதி அளிக்கும்.

    கியில்லமேம் ரோபூச்சன் & ஃபிரான்சிஸ் நிம்மோ [காலிஃபோர்னியா பல்கலை கழகம்]

    “பூதக்கோள் வியாழன் ஈர்ப்பாற்றல் சுழற்சி விசையை வெற்றிகரமாகப் பயன்படுத்திக் கொண்டது எமது பயங்கரக் கனவுகளுக்கு அப்பாற் பட்டது.  அது நமது புதுத் தொடுவான் விண்கப்பல் தயாரிப்பை மெய்ப்படுத்திய தோடு 2015 ஆண்டில் புளுடோவை நெருங்கி விடும் நேரிய விரைவுப் பாதையில் திருப்பப் பட்டது.  இதுவரைப் பிற விண்கப்பல்கள் புக முடியாத வியாழ மண்டலத்தைச் சீராக ஆராயப் புது யுக நவீனக் கருவிகளைக் கொண்டு போகும் அந்த விண்கப்பல் திருப்பம் ஓர் எதிர்பாராத நிகழ்ச்சியே !  மேலும் அப்பயணம் சூரிய மண்டலத்தின் மிகப் பெருங்கோள், அதன் துணைக் கோள்கள், வளையங்கள், சூழ்வெளியை ஆழ்ந்துளவித் தகவல் அனுப்பும் தகுதியும் கொண்டது.”

    அலன் ஸ்டெர்ன், நியூ ஹொரைஸன் பிரதம ஆய்வாளர், நாசா தலைமையகம், வாஷிங்டன். டி.சி.

    நாசாவின் விண்ணுளவி புது தொடுவான் இப்போது எங்கே பயணம் செய்கிறது ?

    2006 ஜனவரியில் ஏவப்பட்ட நாசாவின் விண்கப்பல் “நியூ ஹொரைசன்” இப்போது [மார்ச்சு 15, 2015] சூரிய மண்டலத்தின் கடைசிக் கோளான நெப்டியூன்  புறக்கோளை நெருங்கப் போகிறது.  நாளொன்றுக்கு ஒரு மில்லியன் மைல் வேகத்தில் பயணம் செய்து,  சுமார் 3 பில்லியன் மைல் கடந்து, அடுத்து 2015 ஜூலையில் முதன் முதலாய்க் குள்ளக் கோள் புளுடோவை மிக நெருங்கிப் படமெடுக்கும்.  பிறகு 2015 ஜூலை 15 புளுடோவை 6000 மைல் [10,000 கி.மீ] தூரத்தில் உளவு செய்து பூமிக்குத் தகவல் அனுப்பும்.

    புளுடோவின் தள உஷ்ணம் (-230 டிகிரி C) ஆக இருப்பதால், பனித் தரைக்குக் கீழே உள்ள நிரந்தர வெப்ப எழுச்சியால் நீர் மயக் கடல் ஒன்று இருக்குமா என்ற ஐயப்பாடு இருந்து வந்தது.  புளுடோ உட்கருவில் தொடர்ந்து வெப்பம் தர பாறையில் கதிரியக்கப் பொட்டாசியம் குறைந்தது [75 ppb] [parts per billion] அளவு இருக்க வேண்டும்.

    Eris and Moon

    இதுவரை குள்ளக் கோள் புளுடோ ஆழ்ந்து ஆராயப்பட வில்லை.  முன்பு நெருங்கிச் சென்ற வாயேஜர் விண்கப்பல்கள் [Voyager 1 & 2 Spaceships] இத்துணை அருகில் புளுடோவை நோக்கிச் செல்லவில்லை.  குள்ளக் கோள் புளுடோவில் பல மர்மங்கள் / புதிர்கள் உள்ளன வென்று விஞ்ஞானிகள் கருதுகிறார்.   புளுடோவின் பனிக்கடியில் கடல் ஒன்று இருக்கலாம் என்றும் நீரெழுச்சிகள் [Geysers] பல  இருக்கலாம் என்றும் யூகிக்கப் படுகின்றன.  இப்போது ஐந்து சந்திரன்களை [Charon, Styx, Nix, Kerberos & Hydra] புளுடோ கொண்டுள்ளதாக அறியப் படுகிறது.   மேலும் புதிதாகச் சந்திரன்கள் கண்டுபிடிக்கப் படலாம் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்க்கிறார்கள்.   பல்லாண்டுகளாக, விண் எறிகற்கள் சந்திரன்களை மோதித் தெறித்த துணுக்குகள், தூசிகள் புளுடோவை வளையங்களாகச் சுற்றி வரலாம் என்றும் யூகிக்கப் படுகிறது !  2015-2016 ஆண்டுக்குப் பிறகு நாசாவின் நியூ ஹொரைசன் விண்ணுளவி வால்மீன்கள் தோன்றும் கியூப்பர் வளையத்தைப் படமெடுத்துக் கடந்து செல்லும்.   இறுதியாக 2020 ஆண்டுகளில் பரிதி மண்டலம் தாண்டி, முந்தி அனுப்பிய வாயேஜர் விண்கப்பல்கள் போல், புது சூரிய மண்டலத்தின் ஊடே பயணம் செய்யும் என்று திட்டமிடப் பட்டுள்ளது.

    New Horizon Travel Path

    இந்த சொற்பச் செலவு புறக்கோள் உளவு விண்வெளிக் குறித்திட்டம்  வெற்றிக் கதை சொல்வது.   நியூ ஹொரைஸன்  விண்கப்பல் கூட்டுறவுக் குழுவினர் புளுடோ  உளவு முயற்சியில் பெற்ற இரட்டை வெகுமதி இவை.   முதலாவது பூதக்கோள் வியாழனைச் சுற்றி ஈர்ப்பு விசை உதவியால்  புளுடோவின் உந்து வேகம் மிகைப்பாடு.   இரண்டாவது  பல மில்லியன் மைல்களுக்கு அப்பால் ஓய்வில் முடங்கிக் கிடக்கும் விண்கப்பலின் கருவிகள் சோதிப்பு இயக்க வெற்றி.   அதாவது “ஓய்வு முடக்கப் பயண விஞ்ஞான முத்திரைச் சான்றிதழ்”  (Certification of  Hibernation Cruise Science).   புளுடோவை நோக்கிப் பயணம் செய்வதில் பரிதிக் கோளப் பாதை நெடுவே என்னென்ன விந்தைகள் கண்டுபிடிக்கப் போகிறோம் என்று காத்திருக்கிறோம்.”

    அலன் ஸ்டெர்ன்  (Alan Stern, New Horizons Principal Investigator)

    “சூரிய மண்டலத்தின் தூசி உளவியான ( SDC – Student Dust Counter) கருவி விண்வெளித் தூசிகளை எண்ணித் தகவல்  அனுப்பும்.  இந்தத் தகவல் பரிதிச் சூழ்வெளித் தூசி மய அடுக்கின் பண்பாடுகளை அறிய உதவும்.   அதன் மூலம் மற்ற பரிதி மண்டலப் புதிர்களையும், மர்மங்களையும் விஞ்ஞானிகள் விடுவிக்க முடியும்.”

    ஜேம்ஸ் ஷாலே  (James Szalay, University of Colorado Graduate Student & SDC Instrument Leader )

     

    “சனிக்கோளுக்கு அப்பால் தீரச் சாதனை செய்த விண்வெளிக் கப்பல் சென்று 30 ஆண்டுகள் கடந்து, முதன்முதல் சூரிய மண்டலம் தாண்டிய வாயேஜர் 1 & 2 (Voyager 1 & 2) விண்ணுளவிகளுக்குப் பிறகு, தனித்துப்  புளுடோ கோளை உளவ நியூ ஹொரைசன் விண்ணுளவி அனுப்பப் படுகிறது.”

    “இப்போது சூரிய ஒளிப்பிழம்பு புயல்களின் (Solar Wind Plasma) மூலம் வெளிப்படும், கனல் வீச்சுகளையும் (Solar Flares), கதிர் நிறை வீச்சுகளையும் (Coronal Mass Ejections) முன்பை விடக் கருவிகளின் மூலம் தெளிவாக நோக்கப் படுகிறது.   சூரிய இயக்கங்கள் மிகை யாகும் இத்தருணத்தில் நியூ ஹொரைசன் விண்ணுளவியின் நவீன நுண்திறன் கருவிகள் பரிதி மண்டலத்தைக் கூர்ந்து நோக்குவது  அவசியப் படுகிறது.”

    மாத்யூ ஹில்  (New Horizon PEPSSI Instrument Scientist, Johns Hopkins University, Md)

    “இதற்கு முன்பு விண்வெளித் தேடல்களில் காணாமல் விட்டவற்றை அறிவதற்குக் கவனமாகக் கருவிகளைத் தயார் செய்து மேற்பட்ட விஞ்ஞான நோக்கங்களுக்கு வழி வகுத்தோம்.  வியாழ மண்டலம் தொடர்ந்து மாறி வருகிறது.  புதுத் தொடுவான் விண்கப்பல் மனத் துடிப்பு உண்டாக்கும் கண்டுபிடிப்புகளைக் காணச் சரியான காலத்தில் சரியான இடத்தில் பயணம் செய்துள்ளது.”

    ஜெஃப்ரி மூர், வியாழக் கோள் ஆய்வுக்குழுத் தலைவர், நாசா அமெஸ் ஆய்வகம், காலிஃபோர்னியா

    நியூ ஹொரைஸன் ஓய்வு முடக்கக் கருவிகள் பயணத்தின் போது தூண்டிச் சோதிக்கப் பட்டன

    2006 ஜனவரி மாதம் புளுடோவை நோக்கிப் பயணம் துவங்கிய நியூ ஹொரைஸன் விண்வெளிக் கப்பல் பல மில்லியன் மைல் கடந்து 2015 ஜூலை 14 ஆம் தேதி புளுடோவின் ஈர்ப்பு வலையில் நழுவிச் சுற்ற ஆரம்பிக்கும் என்று நாசாவின் விஞ்ஞானிகள் எதிர்பார்க்கிறார்.    தற்போது ஏறக்குறைய முக்கால் பங்கு தூரத்தைக் (22.65  AU) (1 AU =  One Earth Distance from Sun] [One AU = 150 million Kms or 90 millian miles]  கடந்து நியூ ஹொரைஸன் விண்கப்பல்  புளுடோவை நெருங்க இன்னும் 8.76 AU தூரம் உள்ளது.

    Pluto Surface

     

    விண்கப்பல் பயணத்தின் போது இடைத்தூரம் மில்லியன் கணக்கில் இருப்பதால் பல கருவிகள் தம் ஆயுளை நீடிக்க “ஓய்வு முடத்துவம்” [Hybernation ] செய்யப் படுகின்றன.   இப்போது அப்படி உறங்கும் கருவிகள் எழுப்பப் பட்டு இயங்கப் பூமியிலிருந்து தூண்டப் பட்டன.   இந்த விழிப்பு இயக்க நிலை 2013 ஜனவரி வரை நீடிக்கப் படும்.   அவை மீண்டும் இயங்கு நிலைக்கு மாறி அண்டவெளிச் சூழ்வெளியின் நிலைகளைப் பதிவு செய்யும்.

    சூரிய மண்டலம் அடக்கிக் கொண்டுள்ள பரிதிக் கோளம் [Heliosphere]  என்பது, அதி வேகச் சூரியப் புயல்  அடித்து உட்புறம் ஊதிய ஒரு வகையான பலூனே.    தூரம் மிகையானதால் நியூ ஹொரைஸன் விண்கப்பலின் மின்னியல் கருவிகள் நிறுத்த பட்டு பெரும்பாலும்  ஓய்வு முடக்க உறக்கத்தில் தணிந்த உஷ்ணத்தில் பயணம் செய்கின்றன.    அவ்விதம் நாசா செய்வதால் விண்கப்பல் கருவிகளின் ஆயுள் நீடிக்கப் படுகிறது.   அதுபோல் விண்கப்பலைத் திசை திருப்பிச் செலுத்தும் உந்துவிசை ஏவிகளும் (Thrusters) தணிந்த நிலையில் இயங்கி வருகின்றன.

    முதலில் திட்டமிடப் பட்ட நியூ ஹொரைஸன் ஒரே ஒரு கருவி [(SDC) Student Dust Counter in Heliosphere] மட்டும் இயங்கும் விண்கப்பலாய்த் தீர்மானிக்கப் பட்டது.   அந்த SDC  கருவியைத் தயாரித்தவர் கொலராடோ பல்கலைக் கழகத்தின் ஒரு மாணவரே.  முதன்முதல் அகிலவெளி ஆழத்தில் பணி புரிய அனுப்பப் பட்ட உளவுக் கருவியே அது.   ஓய்வு முடக்கத்தில் விண்கப்பல் பயணம் செய்யும் போது  SDC  கருவி சுயமாய் இயங்கிச் சூரிய மண்டலச் சூழ்வெளியில் தாக்கும் தூசிகளை  எண்ணிக் கணக்கிட்டுப் பில்லியன் மைல் தூரத்தில் இருக்கும் பூமிக்கு  அனுப்புகிறது.   பரிதி மண்டலத்தின் அந்தத் தகவல் பிற சூரிய மண்டலத்தின் மர்மங்களை விடுவிக்க உதவும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

    விண்கப்பல் கருவிகள் [SWAP -Solar Wind Around Pluto  &  PEPSSI – Pluto Energetic Particle Spectrometer Science Investigation] 1970 ஆண்டுகளில் அனுப்பப் பட்ட பயோனிர் 10 & 11,  வாயேஜர் 1 & 2 கருவிகளை விட நவீனமானவை,  சிறப்பானவை.  இந்தக் கருவிகள் பயண வழியில் மிதக்கும் சூரிய கதிரியக்க மின்னியல் துகள்களை எண்ணிக் கணக்கிடும்.    விநாடிக்கு 500 கி.மீ. வேகத்தில் (விநாடிக்கு 1 மில்லியன் மைல் வேகம்) வீசும் பரிதியின் புரோட்டான் புயலில் மாதிரி எடுக்கும்.  2012 ஜனவரி முதல் ஏப்ரல் வரை 80 நாட்கள் SDC, SWAP &  PEPSSI  ஆகிய மூன்று கருவிகளும் தகவல் பயிற்சியில் செம்மை யாகத் தகவல் அனுப்பியுள்ளன.

    New Horizon Spaceship

     

    புதுத் தொடுவான் விண்கப்பல் புளுடோக்கு அப்பால் பயணம்

    1977 ஆம் ஆண்டில் அனுப்பிய இரட்டை வாயேஜர் -1 & -2 விண்கப்பல் களைப் பின்பற்றி 2006 ஜனவரி 19 இல் ஏவப்பட்ட புதுத் தொடுவான் விண்கப்பல் (New Horizon Spaceship) முதன்முதல் புளுடோவைக் குறிவைத்து இப்போது பூதக்கோள் வியாழனையும், வளையக் கோள் சனியையும் தாண்டி முக்கால் தூரத்தைக்  கடந்து விட்டது.  2007 பிப்ரவரி 28 இல் வியாழனைச் சுற்றி அதன் ஈர்ப்பாற்றால் உந்தி விண்கப்பல் வேகம் மிகையாகி (Jupiter Flyby Swing) புளுடோவுக்குச் செல்லும் நேரிய பாதையில் திருப்பப் பட்டது.  அப்போது விண்கப்பல் வியாழக் கோளையும் அதன் துணைக் கோள் லோவையும் (Satellite Lo) புது யுக நவீனக் கருவிகள் மூலம் புது விபரங்களை உளவி அனுப்பியது.  நவீன வேக ராக்கெட் வசதிகள் அமைக்கப் பட்ட விண்கப்பல் வியாழனைக் குறுக்கிட 13 மாதங்கள் எடுத்துள்ளது.  விரைவான வேகத்தில் செல்லும் புதுத் தொடுவான் விண்கப்பல் புளுடோவை 2015 ஜூலை 14 ஆம் தேதியில் நெருங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.  அத்துடன் பயணம் நிறுத்தம் அடையாது முதன்முறை விண்கப்பல் பனி அண்டங்கள் நிரம்பிய குயூப்பர் வளையத்தை (Kuiper Belt) நெருங்கி ஆராயும்.

     

    Inline image 1

    2006 ஜனவரி 19 ஆம் தேதி புதுத் தொடுவான் விண்கப்பல் பிளாரிடா கேப் கனாவரல் முனையிலிருந்து அட்லாஸ் -5 முதற்கட்ட ராக்கெட், சென்ட்டூர் இரண்டாம் கட்ட ராக்கெட், ஸ்டார் 48B மூன்றாம் கட்ட ராக்கெட் மூலம் ஏவப்பட்டது.  இதுவரை உந்தப்படாத ஓர் வேக ராக்கெட் விண்கப்பலாகக் கருதப்படுகிறது புதுத் தொடுவான்.  சின்னக் கோள் புளுடோவைக் குறிவைத்து ஏவப்பட்டாலும் திட்டப்படி அது பரிதி மண்டலத்தின் விளிம்பில் கியூப்பர் வளையத்தையும், வால்மீன்கள் வெளிவரும் ஓர்ட் முகில் கோளத்தையும் ஆராயப் போகிறது.  விண்கப்பல் பின்பற்றும் வீதி ‘பரிதி-புவி விடுவிப்புப் பாதை’ (Earth -Solar Escape Trajectory). எனப்படுவது.  விண்கப்பல் உந்தப்பட்ட வேகம் விநாடிக்கு 10 மைல் வீதம் (மணிக்கு 36,370 மைல் வேகம்) (16.3 கி.மீ/விநாடி) (மணிக்கு 58,500 கி.மீ வேகம்) என்று அறியப் படுகிறது.  இந்த வேகத்தில் பயணம் செய்து பூதக்கோள் வியாழனின் ஈர்ப்பாற்றலில் முடுக்கப்பட்டு புளுடோவையும் அதன் துணைக்கோள் சேரனையும் (Charon) முதன்முதல் நெருங்கி ஆராயும்.  வியாழக் கோளையும் அதன் துணைக்கோள் லோவையும் (Lo) மெல்லிய வளையங்களையும் இதுவரை உளவிப் புதுத் தகவலை அனுப்பியுள்ளது.  அடுத்து சனிக்கோளின் பாதையை 2008 ஜன் 8 ஆம் தேதி குறுக்கிட்டுக் கடந்து இப்போது யுரேனஸ் நெப்டியூன் கோள்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

    புதுத் தொடுவான் பயணத்தின் குறிக்கோள் என்ன ?

    புதுத் தொடுவான் திட்டம் நிறைவேற 15 ஆண்டுகளுக்கு (2001–2016) ஒதுக்கிய நிதிச் செலவு 650 மில்லியன் டாலர்.  இச்செலவில் விண்கப்பல் கட்டமைப்பு, கருவிகள், ராக்கெட் ஏவல், திட்டக் கண்காணிப்பு, திட்ட இயக்கம், தகவல் ஆய்வுகள், விளம்பரம், பயிற்சி ஆகியவை அடங்கும்.  புதுத் தொடுவான் விண்கப்பல் குறைந்த எடையில் தயாரிப்பாகி வேகமாகச் செல்ல டிசைன் செய்யப்பட்டது.  ஏவப்படும் போது விண் கப்பலின் எடை 478 கி.கி (1054 பவுண்டு). புதுத் தொடுவான் திட்டமிட்ட போது புளுடோ பரிதி மண்டலத்தின் ஒரு கோளாகக் கருதப் பட்டிருந்தது.  சமீபத்தில் அது ஒரு குள்ளக் கோள் (Dwarf Planet) என்று அகில வானியல் ஐக்கியப் பேரவை உறுப்பினரால் (International Astronomical Union) புறக்கணிப்பானது.  இதுவரை செய்த பயணத்தில் விண்கப்பல் பூதக்கோள் வியாழனையும், அதன் துணைக் கோளையும், சனிக் கோளையும் நவீனக் கருவிகளால் ஆராய்ந்துள்ளது.

    அடுத்து 2011 மார்ச்சில் யுரேனஸ் கோள் பாதையைக் கடக்கும்.  அதற்கு அடுத்து 2014 ஆகஸ்டில் நெப்டியூன் கோள் வீதியைத் தாண்டும்.  2015 இல் புளுடோவை நெருங்கியதும், அது புளுடோவையும் அதன் துணைக்கோள் சேரனையும் உளவித் தகவல் அனுப்பும்.  2015 ஆண்டு ஜூலை 14 இல் புளுடோவைத் தாண்டிச் செல்லும் புதுத் தெடுவான் விண்கப்பல் 5 மாதங்கள் அதையும் அதன் துணைக்கோள் சேரனையும் ஆராயும்.  பிறகு சுமார் 100,000 எண்ணிக்கை யுள்ள குள்ளப் பனிக் கோள் அகிலத்தையும் (Icy Dwarf Worlds) பில்லியன் கணக்கில் இருக்கும் வான்மீன் மந்தை களையும் கொண்ட கியூப்பர் வளையத்தை (Kuiper Belt Globe) விளக்கமாக நோக்கும் !

    பூதக்கோள் வியாழனில் விண்கப்பல் கண்டது என்ன ?

    முதன்முதலில் வியாழனை நோக்கிச் சென்ற கலிலியோ விண்ணுளவி ஆறு ஆண்டுகட்கு மேல் பயணம் செய்ய வேண்டியிருந்தது.  அதற்குப் பூமியால் இருதரம் ஈர்ப்பாற்றல் உந்தும், வெள்ளிக் கோளால் ஒருதர உந்தும் பெற்றது.  அதற்குப் பிறகு சென்ற காஸ்ஸினி விண்ணுளவி வியாழனை அண்ட வெள்ளிக் கோளால் இருமுறை ஈர்ப்பாற்றல் உந்தும், ஒருமுறை பூமியால் ஈர்ப்பாற்றல் உந்தும் பெற்று 3 வருடங்கள் எடுத்தது.  சனிக்கோளை நெருங்க மேலும் மூன்றரை ஆண்டுகளும் எடுத்தது.  ஆனால் வேகமாக உந்தப்பட்ட புதுத் தொடுவான் விண்கப்பல் பூமியிலிருந்து 13 மாதங்களில் (பிப்ரவரி 28, 2007) வியாழனை நெருங்கி ஒரு புதிய வரலாற்றுச் சாதனையைப் புரிந்தது.  அடுத்து 15 மாதங்களில் (ஜூன் 8, 2008) சனிக்கோளைக் கடந்ததும் அடுத்தோர் வரலாற்றுச் சாதனையே.

    வியாழனையும் அதன் நான்கு துணைக் கோள்களையும் விண்கப்பல் நெருங்கும் போது, பூமியிலிருந்து விண்கப்பலின் நவீனக் கருவிகள் ஆராய இயக்கப் பட்டன.  கலிலியோ விண்ணுளவி 2003 இல் ஓய்ந்த பிறகு அடுத்துப் புதுத் தொடுவான் 2007 இல் உளவி புதிய தகவலை அனுப்பியது.  வியாழனில் நிறம் மாறிவரும் ‘செந்நிற வடுவில்’ (Jupiter’s Red Spot) எழும்பும் ஒலிவேகத்தை மிஞ்சும் சூறாவளியை (Supersonic Winds) அளந்து அதன் போக்கை மிக்க விளக்கமாகப் படம் எடுத்தது.  2005 ஆண்டுவரை செந்நிற வடுக்களில் ஒரு வெள்ளை நீள்வட்ட முகில் (White Oval Cloud) தெரிந்தது.  மேலும் வியாழனின் மங்கிய வளையத்தைப் படம் பிடித்தது.  அந்த வட்ட வளைய அமைப்பில் வெகு சமீபத்தில் உண்டான மூன்று தூசிக் கொத்துகளைப் (Clumps of Fine Dust Particles) படம் எடுத்தது.

    Project Details

    வியாழன் துணைக்கோளில் விண்கப்பல் கண்டவை என்ன ?

    புதுத் தொடுவான் விண்கப்பலின் கூரிய காமிரா வியாழனின் எரிமலைத் துணைக்கோள் “லோவை” (Jupiter Moon Lo) சீரிய முறையில் முதன்முதல் ஆராய்ந்து தகவல் அனுப்பியது.  விண்கப்பலின் தொலை நீட்சி உளவுக் காமிரா ‘லோர்ரி படம் பிடிப்பி’ (LORRI – Long Range Reconnaissance Imager) வாஸ்தர் எரிமலைப் புகை கொதித்தெழும் (Tvashtar Volcano) காட்சியை விளக்கமாகப் படம் பிடித்து அனுப்பியது.  அதன் கோரப் புகை முகில் 200 மைல் (320 கி.மீ) உயரத்துக்கு எழுவதைக் காட்டியது.  அத்துடன் புதிய இரண்டு எரிமலைகளின் எழுச்சிகளையும், 20 மேற்பட்ட தளவியல் மாறுபாடுகளையும் கண்டுபிடித்தது.

    புதுத் தொடுவான் விண்கப்பல் பயணத்தில் இரண்டு முக்கிய விஞ்ஞானத் திட்டக் குறிக்கோள்கள் வெற்றி அடைந்தன.  முதலாவது ஓர் அண்டக் கோளின் ஈர்ப்பாற்றலைப் பயன்படுத்தி எப்படி நெருங்கிச் சென்று வேகத்தை விரைவாக்குவது என்று பயிற்சி மூலம் செய்தறிந்தது.  அதனால் விண்கப்பலின் வேகம் அதிகரித்துப் பயணக் காலம் குறைந்தது.  இரண்டாவது வியாழனுக்கு அருகில் ஈர்ப்புச் சுழல்வீச்சைப் பயன் படுத்தியதால், பேரளவு சுற்றியக்கச் சக்தியை (Jupiter’s Orbital Energy) விண்கப்பல் களவாடிக் கொள்ள முடிகிறது என்பது அறியப் பட்டது.  அவ்விதம் செய்ததில் பூதக்கோள் வியாழனின் ஈர்ப்பாற்றல் சுழற்சியால் (Gravitational Slingshot) விண் கப்பலின் வேகம் மணிக்கு 9000 மைல் (150000 கி.மீ/மணி) மிகையானது ! பூமி யிலிருந்து சமிக்கை அனுப்பி நாசா நிபுணர் புளுடோ கோளுக்குச் சீக்கிரம் செல்லும் வேகப் பாதையில் விண்கப்பலைத் திறமையாகத் திருப்பினர் !  வியாழக்கோளின் ஈர்ப்பாற்றல் உந்துசக்தி களவாடப் படவில்லை யென்றால் விண்கப்பல் புளுடோவை அண்ட மூன்று ஆண்டுகள் இன்னும் அதிகமாய் எடுக்கும் !

    (தொடரும்)

    படங்கள்:  Astronomy Magazine, BBC News, National Geographic News, NASA

    தகவல்:

    a)  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40206171&format=html (Jupiter)

    b)  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40206102&format=html (Saturn)

    c)  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40206231&format=html  (Uranus & Neptune)

    d)  http://www.thinnai.com/?module=displaystory&story_id=41005231&format=html (Voyager 1 & 2 Travel Beyond the Solar System.

    1.  National Geographic News – Voyager 1 at Solar System Edge By : Stefan Lovgren (June 2, 2005)

    2.  National Geographic News – Voyager Probes Send Surprises from Solar System Edge By : Richard A. Lovett (September 26, 2006)

    3.  NASA’s Golden Gift to the Aliens : 30 Years Later Voyager 1 & 2 By : Kevin Friedl (May 15, 2010)

    4.  NASA’s Voyager 2 Spaceship “Hijacked By Aliens’ By : Stephanie Dearing (May 15, 2010)

    5.  From Wikipedia – Voyager 2 (May 16, 2010)

    6.  Voyager 2 Journey By NASA (Updated on May 17, 2009)

    7.  NASA Report – Pluto-Bound New Horizon Spacecraft Sees Changes in Jupiter System (September 10, 2007)

    8.  Wikipedia Report : New Horizons Spacecraft (May 26, 2010)

    9.  Astronomy Magazine :  How We Will Explore Pluto ?  NASA’s New Horizon Probe By : Richard Talcott (July 2010)

    10.  Pluto-Bound NASA Spacecraft to Collect More Data When Hibernating During Travel  (July 9, 2012)

    11.  Outer Planets :  New Horizons Doing Science in its Sleep (July 10, 2012)

    12.  http://www.decodedscience.com/new-horizons-nasas-pluto-bound-spacecraft-keeps-going-going/39941  [December 4, 2013]

    13. http://www.redorbit.com/news/space/1113047356/new-horizons-approaching-pluto-011514/  [January 13, 2014]

    14.  www.dailygalaxy.com/my_weblog/2014/01/the-unexplored-planet-nasas-fastest-spaceship-on-approach-to-pluto-1.html?  [January 18, 2014]

    14 a.  http://www.davidreneke.com/hubble-to-search-beyond-pluto-for-a-new-horizons-target/#  [June 20, 2014]

    15. http://www.planetary.org/blogs/emily-lakdawalla/2015/02041311-new-horizons-returns-first.html  [February 4, 2015]

    16.  http://blogs.scientificamerican.com/observations/2015/03/06/dawn-spacecraft-arrives-at-ceres-becomes-first-to-orbit-a-dwarf-planet/ [March 6, 2015]

    17. http://www.nasa.gov/newhorizons/homes-on-pluto/  [March 10, 2015]

    18.  http://www.nytimes.com/interactive/2015/01/13/science/space/photos-of-pluto-from-nasa-new-horizons.html?_r=0   [March 11, 2015]

    19. http://en.wikipedia.org/wiki/New_Horizons, [March 24, 2015]

    20.  http://www.dailygalaxy.com/my_weblog/2015/03/naming-the-mysterious-features-of-pluto-and-charon-an-open-invitation-to-the-world-community.html?  [March 24, 2015]

    ********************
    S. Jayabarathan (jayabarathans@gmail.com) March 27, 2015

    Attachments area
    Preview YouTube video Pluto the “Dwarf Planet” HD

    Pluto the “Dwarf Planet” HD

    Preview YouTube video Pluto on the Horizon: Anticipating our First Encounter with the Double Planet

    Pluto on the Horizon: Anticipating our First Encounter with the Double Planet

    Preview YouTube video Launch of NASA’s New Horizons Spacecraft

    Launch of NASA’s New Horizons Spacecraft

    Preview YouTube video ScienceCasts: Countdown to Pluto

    ScienceCasts: Countdown to Pluto

    Preview YouTube video Dr. Alan Stern: “New Horizons to Planet Pluto: Exploring the Frontier of Our Solar System”

    Dr. Alan Stern: “New Horizons to Planet Pluto: Exploring the Frontier of Our Solar System”
    Share
  • ஸ்ரீ ராமன் எங்கள் தோழன்

    மீ.விசுவநாதன்

    lord-sri-rama

     

    உள்ளொன்று வைக்காத உத்தமன் – இன்றும்images
    ஊர்போற்றும் மக்களின் காதலன் !
    சுள்ளென்று பேசாத சுந்தரன் – தீய
    சூழ்ச்சிகள் இல்லாத சோதரன் !
    அள்ளென்று சொல்கின்ற தர்மவான் – பகை
    அழுக்கினை நீக்குகிற புண்யவான் !
    புள்ளினைத் தந்தையாய்ப் போற்றினான் – குகப்
    புதையலை நண்பனாய்க் கூட்டினான் ! 

    தீதினை நன்மையாய்ச் செய்தவன் – வந்த
    திதியையும் தன்னாலே வென்றவன்
    மாதினைப் போற்றுகிற மானுடன் – வேறு
    மாதினைக் கொள்ளாத நெஞ்சினன்
    ஓதிய வார்த்தைக்காய் வாழ்ந்தவன் – ஊர்
    ஊதிய வார்த்தைக்கும் தாழ்ந்தவன்
    வேதியர் சொல்லினையும் கேட்டவன் – ஒரு
    வேடுவனின் பாடுபொரு ளானவன் ! 

    மானுட சாதியில் வந்தவன் – மக்கள்ram
    மண்ணிலே உற்றதுய ருற்றவன்
    மானுடன் மாயையில் ஓடினான் – பெண்
    மானுடச் சாயையில் வாடினான் !
    ஊனுடல் வற்றிடத் தேடினான் – லங்கை
    ஊரிலே வெற்றியும் கூடினான் !
    வானுயர் மாருதி நட்பினான் – நம்
    மனதிலே ராமனாய் அப்பினான் ! 

    (28.03.2015 சனிக்கிழமை ஸ்ரீராம நவமி)

     

     

     

     

     

    Share
  • பிள்ளைத்தமிழ் இலக்கியங்களில் ஆடை அணிகலன்கள்

    முனைவர் ஜ.பிரேமலதா,
    தமிழ் இணைப் பேராசிரியர்,
    அரசு கலைக் கல்லூரி(தன்னாட்சி),
    சேலம் -7

    முன்னுரை

    மனிதன் நிலைத்த ஒரு வாழ்க்கையைத் தேடிக் கொண்ட நிலையில், ஆடை அணிகலன்களையணிந்து தன்னை அலங்கரித்துக் கொள்வதில் ஆர்வம் காட்டினான். இருபாலருக்கும் தன்னை அலங்கரித்துக் கொள்வது பொதுவான இயல்பாகும்.

    வேட்டைச் சமூகத்தில் குழுவாக வாழ்ந்த காலத்தில் காலத்தில் மனிதன் இலை, தழைகளை ஆடையாக உடுத்திக் கொண்டான். பூக்களை அணிகலன்களாக அணிந்து கொண்டான். இயற்கையில் கிடைத்த பொருட்களைக் கொண்டு கழுத்திலும், தலையிலும், கைகளிலும், கால்களிலும் சூடி விதவிதமாக அலங்கரித்து மகிழ்ந்தான். பின்னர் விலங்கின் தோலையும், பஞ்சு கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் பருத்தி ஆடையும் அணிந்தான். சங்கிலான அணிகலன்களை அணிந்தான். உலோகங்களின் கண்டுபிடிப்பு அணிகலன்களிலும் மாற்றத்தைக் கொண்டு வந்தது. இரும்பு, வெள்ளி, பொன் உலோக அணிகலன்கள் பொருளாதார ஏற்றத்திற்கு ஏற்ப அணியப்பட்டன. ஆடைகளிலும் இலை, தழையாடை, பருத்தி, பட்டு ஆடை என பொருளாதார ஏற்றத்தாழ்விற்கு ஏற்ப உடுத்தப்பட்டன.

    புறநானூறு மன்னர்கள் அணிந்திருந்த ஆடை அணிகலன்கள் பற்றியும், ஏழையர் அணிந்திருந்த ஆடை அணிகலன்கள் பற்றியும் இவ்வாறு கூறுகிறது.

    வரையுறழ் மார்பின் வையகம் விளக்கும்
    விரவுமணி யொளிர் வரும் அரவு றாழாரமொடு
    புரையோன் மேனிப் பூந்துகிற் கலிங்கம் (புறம்.398)

    மலை போன்ற தோள்களில், விலை மதிப்புடைய பல மணி கோர்க்கப்பட்ட பாம்பு போன்று வளைந்திருக்கும் ஆரத்தை பூ வேலைப்பாடுடைய கலிங்கம் என்ற ஆடையை மன்னன் அணிந்திருந்ததாக இப்பாடல் கூறுகிறது.

    செல்வ மகளிர் பல வகை மணிக்கள் கோத்த பொன் வடங்கள், பொன்னால் செய்யப்பட்ட சிலம்பு, மேகலை பொன் வளையல் போன்றவற்றை அணிந்திருந்ததாக காரிக் கண்ணனார் (புறம்.253) குறிப்பிடுகிறார். செல்வ மகளிர் ‘மாணிழை மகளிர்’, ‘வாலிழை மகளிர்’ என அணிந்திருக்கும் அணிகலன்களை முன்னிறுத்திக் கூறப்பட்டுள்ளனர். பெரும்பாணாற்றுப்படையும் (327-335) பல்வகை மகளிர் அணிகலன்களைப் பற்றிக் கூறுகிறது.

    ஆனால் ஏழைப் பெண்களோ, பொன், வெள்ளி, இரும்பு அணிகலன்கள் அணியும் வாய்ப்பற்ற வறுமை நிலையில் வாடினர். எனவே வயலில் களையாகப் பறித்துப் போடப்பட்டிருந்த குவளை, ஆம்பல் ஆகியவற்றின் தண்டகளைக் கொண்டு வளையல் செய்து அணிந்து கொண்டனர். இதை, ‘கழனி ஆம்பல் வள்ளி தொடிக்கை மகளிர்’ எனப் புறநானூறு (352) கூறுகிறது. பவள வளையல் கிடைக்காத இவர்கள் களையாக தூக்கி எறியப்பட்ட தண்டுகளை அணிந்த காட்சியை
    ‘பவள வளை செறிந்தாட் கண்டு அணிந்தாள் பச்சைக் குவளை பசுந்தண்டு கொண்டு’ பரிபாடல் பரிவோடு பதிவு செய்துள்ளது. ஏழை ஆண்கள் இலை, தழைகளாலும் பூக்களாலும் மடலை, கண்ணி செய்து அணிந்து கொண்டதை

    ‘உவலைக் கண்ணி வன்சொல் இளைஞன்’
    ‘பாசிலை தொடுத்த உவைலக் கண்ணியன்’ (புறம்.54)
    ‘கோட்டவும் கொடியவும் விரை இக்காட்ட
    பல்பூமி டைந்த படலைக் கண்ணியன்’ (பெரும்.173) போன்ற சங்கப் பாடல்கள் காட்டுகின்றன.

    பிற்காலத்தில் தாம் அனுபவிக்கும் சுகவாழ்வு கடவுள் தங்களுக்குக் கொடுத்த வரம் என்ற எண்ணத்தில் கடவுளுக்கும் ஆடை அணிகலன்களை அவரவர் பொருளாதார சூழலுக்கேற்ப அணிவித்து மகிழ்ந்தனர். இதை பிற்கால பக்தி இலக்கியங்களிலும், சிற்றிலக்கியங்களிலும் காணலாம். குறிப்பாக பிள்ளைத்தமிழ் நூல்களில் கடவுளைக் குழந்தையாகப் பாவிக்கும் நிலையில் பல்வேறு ஆடை அணிகலன்கள் அணிவித்து புலவர்கள் மகிழ்ந்து கொண்டாடுவதைக் காண முடிகிறது.

    320970_469624646406535_1624382656_n
    தெய்வம், வள்ளல், அரசனைப் பாடுவதற்கான வரையறைகளில் பிள்ளைத்தமிழ் நூல்களில் பிற்காலத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இறைவன், இறைவி இறையடியவர்கள், வள்ளல்கள், தலைவர்கள், ஆசிரியர்கள் எனப் பாடுபொருள்( பாடப்படுவோர் )எண்ணிக்கை கூடிக்கொண்டே போகும் நிலையைக் காண முடிகிறது. பிள்ளைத்தமிழ் பாடும் முறையில் பருவங்களிலும், பாடல் எண்ணிக்கையிலும் கூட பல மாற்றங்கள் ஏற்பட்டன. பிள்ளைத்தமிழுக்கு மாற்றாக ‘முதுமைத் தமிழ்’ என்ற ஒரு சிற்றிலக்கியமும் உருவாகியுள்ளது.சிற்றிலக்கிய பெருக்கத்திற்கு இதுவும் ஒரு சான்று.

    பாடலமைப்பில் ஏற்பட்ட மாற்றங்கள் போல, பிள்ளைத்தமிழ் நூல்களில் ஆடை, அணிகலன்களிலும் கூட மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இங்கு இறைவன், இறைவி, இறையடியவர், தலைவர்கள் என்ற அடிப்படையில் பத்து பிள்ளைத்தமிழ் நூல்கள் ஆராயப்பட்டுள்ளன.

    1.பகழிக் கூத்தர் – திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்
    2.குமரகுருபர அடிகள் – முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ்
    3. கவி வீரராகவர் – கீழ்வேளுர்முருகன் பிள்ளைத்தமிழ்
    4. சிவசூரிய நாராயணன் – சிங்கபுரக் கண்ணன் பிள்ளைத்தமிழ்
    5. குமரகுருபர அடிகள் -மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
    6. காழி ஞானதேசிகர் – அழகிய மாமுலையம்மை பிள்ளைத்தமிழ்
    7.சிவஞான முனிவர் – அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்
    8.த. கோவேந்தன் – திருவில்லபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்
    9. இரா. தேவா – அன்னை தெரசா பிள்ளைத்தமிழ்
    10. புலவர் இராமமூர்த்தி -மணிவேலனார் பிள்ளைத்தமிழ்

    வருணனை

    சங்க கால மாந்தர் குறித்த ஆடை,அணிகலன்கள் பற்றிய வருணனை பிற்கால இலக்கியங்களிலும் தொடர்ந்து வளர்ச்சி பெற்றன. பாட்டியல் நூல்கள் கேசாதி பாதம், பாதாதி கேசம் ஆகிய இரு சிற்றிலக்கிய வகைகளைப் பற்றிக் கூறுகின்றன. இவை மனிதர்களை வருணிக்கும் முறை, கடவுளரை வருணிக்கும் முறை குறித்து இலக்கணம் கூறுகின்றன. இவ்வாறு வருணிக்கும்பொழுது, பெரிதும் ஆடை அணிகலன்கள் பற்றிய வருணனைகளே இடம் பிடிக்கின்றன. தனித்த இலக்கியங்களாக இவை மாற்றம் பெற்றாலும் இன்று வரை அனைத்து வகை இலக்கியங்களிலும் ஒரு மனிதரையோ, கடவுளையோ அறிமுகப்படுத்தும் பொழுது அவர்கள் அணிந்திருக்கிற ஆடை அணிவகைகளைப் பற்றிய வருணனை இடம் பெறுவது தவிர்க்க இயலாததாகியுள்ளது.

    ‘‘பாதாதிகேசம், கேசாதிபாதம், அங்கமாலை 
    கடிதல் இல்லாக் கலிவெண்பா பகரும் அவயவங்கள் 
    முடிவது கேசம் அக்கேசம் முதலடி ஈறும் வந்தால் 
    படி திகழ் பாதாதி கேசமும் கேசாதி பாதமும் ஆம் 
    மடிதல் இல் வெண்பா விருத்தம் பல அங்கமாலை என்னே’’

    என்று நவநீதப்பாட்டியல் இரு சிற்றிலக்கியங்களுக்கும் இலக்கணத்தை வகுக்கின்றது.

    பொதுவாக மனிதர்களை கேசாதி பாத முறையிலும், தெய்வங்களை பாதாதிகேச முறையிலும் வர்ணிக்கிற மரபு தமிழிலக்கியத்தில் உண்டு. ஆனால் பிள்ளைத்தமிழ் தெய்வங்களை, குழந்தையாகப் பாவித்துப் பாடும் மரபுடையது ஆதலால், கவிஞர்கள் கடவுளாகிய குழந்தைகளை வர்ணிக்கும் முறையில் தலையிலிருந்தே வர்ணிக்கின்றனர். குமரகுருபரரின் ஆண்பாற் பிள்ளைத்தமிழில் மட்டும் முருகன் பாதாதிகேச முறையில் வருணிக்கப்படுகிறான். அவரே மதுரை மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழில் அம்மையை கேசாதிபாதமாகவே வருணிக்கிறார்.

    ஆண்பாற் பிள்ளைத்தமிழ்

    கீழ்வேளுர்முருகன் பிள்ளைத்தமிழ் நூலில் செங்கீரைப் பருவத்தில்,
    மணிகிளர் குஞ்சி முடித்திடு முச்சியின் வச்சிர வொளியாட
    மாசறு தேசுறு முத்தியல் சுட்டிறன் மதியுடு வென வாடக்
    கணிதம் லொளிதரு குண்டல மாறிரு கதிரவன் போலாடக்
    கண்ட சரத்தொடு மண்டிய வெழில்வளர் கண்டிகை சூளுமாடப்
    பணிதரு மரதனம் விரவிய கரவளை பலபல விதமாடப்
    பயில்மர கதமிடை யுறுமரை வடமிசை பகர்கிண் கிணியாட
    அணிகிளர் பரிபுர மாட வசைந்தினி தாடுக செங்கீரை (செங்.7)

    என்ற இந்தப் பகுதி முருகனின் கேசாதி பாத அழகைப் பாடுகின்றது. திருமுடிகள், ஆறு முகங்கள், கண்களின் திருவருள், மகரக்குண்டலம், தோள், திருக்கரம், உறைவாள், சிலம்பு, பாதங்கள் என்று கேசாதி பாத வருணனையில் முருகன் அணிந்துள்ள அணிகலன்களும் சுட்டப்படுகின்றன.

    ujiladevi.blogpost.com (3)

    தலை உச்சி – நெத்திச்சுட்டி (முத்தியல் சுட்டி)
    காது – ஒளிதரு குண்டலம்
    கண்டம் – கண்ட சரம் + கண்டிகை
    கை – வளையல்
    இடை – கிண்கிணி
    கேசாதிபாத வருணனை இடம்பெற்றுள்ளது.

    இதுபோல மற்றொரு பாடலில் சப்பாணிப்பருவத்தில் குழந்தை முருகனுக்கு தாய் அலங்காரம் செய்கின்றாள்.

    காதிலிடு வச்சிரக் குண்டலமு நெற்றியிற் கவினொழுகு பொற்சுட்டியுங்
    கரியகவூ சியின்வாய்ந்த முச்சியிற் சுற்றிவிடு கதிர் முத்த மிளிர்தொங்கலுஞ்
    சோதிமய மானதிரு மார்பிற் கிசைந்திலகு தூமணிப் பொன்னரமும்
    தோளிலண் பன்மணிக் கேயூர முஞ்சிறிய தொந்திசரி யரை நாணுடன்
    சீதுமுறு நாதமுரல் கிண்கித் தொகுதியுஞ் செந்தளி ரினுஞ்சிவந்த
    சீறடித் துணையிலணி செம்பொற் சதங்கையும் செய்யநூ புரமு மசையத்
    தாதுகமழ் பதரிவன நீதசிற் பரகுமர சப்பாணி கொட்டியருளே (சப்.5)

    காது – வச்சிரக் குண்டலம்
    நெற்றி – பொற்சுட்டி
    மார்பு – தூமணிப் பொன்னாரம்
    தோள் – பன்மணிக் கேடழரம்
    இடை – அரைஞாண்
    கால் – பொன் சதங்கை

    இதுவும் கேசாதி பாத வருணனையில் அணிகலன்களாக சொல்லப்பட்டுள்ளன.
    முருகன் அணிந்திருப்பதாகச் சொல்லப்படும் அணிவகைகளில் மற்றவை. ‘கடம்பிணி புயத்தன்’ (காப்பு-10) என முருகன் அணிகலனையொட்டிப் புகழப்படுகிறான்.

    ‘மலர்த்தொடை மைக்குழலிற் சூடி’ (சப்பாணி-9, ப.21)

    என குழந்தையின் உச்சியில் இடப்பட்ட கொண்டையிற் பூக்கசாக் கட்டி சூடியுள்ள அழகு சுட்டப்படுகிறது. சிற்றில் சிதைக்கும் பருவத்தில் கால்களில் அணிந்திருக்கும் ‘புனைசெய் சதங்கை’ (சிற்றில்-7) சுட்டப்படுகிறது. கழுத்தணி மாலைகளாக ‘தொடலை’ (சிற்றில்-4), ‘சங்குமணி’ (வருகை- 7),

    ‘நறுந்தெறியல்’ (சிறுதேர் – 6), ‘கண்டசரம்’ (செங்கீரை-18) போன்றவை குறிப்பிடப்படுகின்றன.

    தலையில் சூடுபவையாக ‘கொக்கின் இறகு’ (வருகை-3)
    ‘மலர்த்தொடை மைக்குழலிற்சூடி’ (சப்பாணி-9) போன்றவை குறிப்பிடப்படுகின்றன.
    பகழிக் கூத்தரின் திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழில்

    “தேட அரிய மணியரைஞாண்
    சேர்க்க வருக விரற்காழி
    செறிக்க வருக திலகநுதல்
    தீட்ட வருக மறுகில் விளை
    யாட வருக. . . “(வாராணை-3)

    பொன் அரைஞாணும், விரலுக்கு மோதிரமும் பூட்டிக்கொள்ள வருமாறு குழந்தை முருகன் அழைக்கப்படுகிறான்.

    “குடுமி திருத்தி மலர்சொருகிக்
    கோலம் புனைந்து கொண்டாடி” (சிற்றில் – 9)
    “பூட்டுங் கலன்கள் வகை வகையே” (சிற்றில்-10)

    பாதாதிகேச வருணனையில் முருகன் அழகினை குமரகுருபர அடிகள் முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் வாராணைப் பருவத்தில் படம் பிடிக்கிறார். முருகன் அழகு நடை பயில நின்ற காலத்தை அவன் அணிந்திருக்கும் அணிகலன்கள் அசைந்து அசைந்து ஒலி எழுப்புவதை இப்பாடல் அழகுற எடுத்துரைக்கிறது.

    செம்பொற் கருங்கழல் அரிக்குரற் கிண்கிணி
    சிலம்பொடு கலின்கலினெனத்
    திருவரையில் அரைமணி கிணின்கிணின் எனப் பொலந்
    திண்தோளின் வளை கவிப்ப
    அம்பொற் பகட்டு பார் பிற்சன்ன வீரமும்
    ஆரமும் திருவில் வீச (வென்றிமாலை)
    அணி மகர குண்டலம் பரிதி மண் மரமென்ன
    அலர்கதிர்க் கற்றை சுற்றப்
    பைம்பொற் சுடர்ச்சுட்டி கட்டுசூ ழியமுடன்
    பட்டமொளி விட்டெறியப்பப் (வருகை – 1)

    இங்கு
    காலில் – சிலம்பு
    இடையில் – அரைமணி (உடைமணி)
    கைகளில் – வளையல்
    மார்பில் – சன்னவீரமும், ஆரமும்
    காதில் – மகர மீன் வடிவிற் செய்யப்பட்ட குண்டலம்

    போன்றவற்றை முருகன் அணிந்திருந்த செய்திகள் பதிவாகியுள்ளன. மேற்கூறப்பட்ட பாடல்களினால் முருகன் சிலம்பு, அரைமணி, வளையல், சின்ன வீரம், ஆரம், மகர குண்டலம், பண்மணிக் கேயூரம், பொன் சதங்கை, நெற்றிச் சுட்டி, பொன்னாகரம், கண்ட சரம் போன்ற ஆபரணங்களை அண¨ந்திருந்ததாகக் கவிஞர்கள் பாடியுள்ளனர்.

    சிங்கப்பூரில் உள்ள கண்ணபிரான் மீது பிள்ளைத்தமிழ் சிங்கபுரக் கண்ணன் பிள்ளை இயற்றியர் சிவசூரிய நாராயணன். இயற்றியுள்ளார்.

    “பொன்னுலாவும் பட்டுலாவும் பூவுலாவும் மேனியா” (முத்தம்-9) பொன்னும் பட்டும் பூவும் திருமாலின் மேனியில் உலவுகின்ற அளவிற்கு நிறைந்திருந்தைதையே கவிஞர் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

    “தண்டுலாவும் கடலுலாவும் சங்குலாவும் கரத்திலே
    தனுவுலாவும் சுழலுலாவும் பொருளுலாவும்
    மெழிலினம்” (முத்.8) என்று கண்ணன் உடலில் பொன் அணி, பூ மாலை இவற்றோடு பட்டாடை அணிந்திருப்பதாக வருணிக்கிறார்.

    சங்க கால இலக்கியங்களில் விறலியரை வருணிக்கப்படும் பாடல்கள் கேசாதிபாதமாக வருணித்தன. பின்னர் இறைவனைப் பாடும் முறையில் இறைவனை அவன் உருவத்தை வருணிப்பது என்ற நிலையில் இச்சிற்றிலக்கியம் கண்டு பாதாதிகேசமாக ஆகியது. பெண்களைப் பாடும் முறையான கேசாதிபாதம் பக்தி இலக்கிய சிற்றிலக்கியங்களில் கடவுளரைப் பாடும் நிலையில், காலிலிருந்துப் பாடும் முறையாக மாற்றம் பெற்றது.

    சிற்றிலக்கிய வளரச்சிக் காலத்தில் ஆண், பெண் தெய்வங்களைப் பாடும் இலக்கியமாக இது நிறை நிலைபெற்றது. என்றாலும் உருவ நலன் என்பது தெய்வீக அழகாக மாற்றம் பெற்ற நிலை என்பது கருதத்தக்கது.

    ஆடை வகைகள்

    கீழ்வேளுர்முருகன் பிள்ளைத்தமிழ் நூலில் முத்தப்பருவத்தில் குழந்தை முருகனை நீராட்டி அழகு படுத்தும் அலங்கார நிலை சுட்டப்படுகிறது.

    தொடுகை மனக்கு . . .பூசித்
    தூதுவரிட் டிள வெந் நீராட்டித்
    துகிலால் ஈரம் புலர்த்தி மஞ்சள்
    தோய்வேப் பிலநீர் சுற்றியபின்
    குடுமி திருத்தி நீறணிந்து
    குலவு நிலக்கப் பணிந்து முத்தங்
    கொள்ளக் கனிவாய் முத்தமரன்
    கொள்வான் குனியு மமையத்தின்(முத்தம்-4)

    இந்தப் பாடல் குழந்தையை, மணப் பொருட்களை இட்ட வாசனை வெந்நீரில் நீராட்டித் துகிலால் ஈரம் நீங்க உலர்த்தியதைக் குறிப்பிடுகிறது. பின் மஞ்சள் நீரில் வேப்பிலை இட்டு திருஷ்டி கழிக்கின்றனராம். பின் குடுமியைத் திருத்தி, நெற்றியில் திருநீறு அணிவித்து அலங்காரம் செய்ததைக் குறிப்பிடுகிறது. நிலத்திலுள்ள மண்ணை எடுத்து நெற்றியில் பூசியதை (முத்தம்-4) மற்றொரு பாடல் குறிப்பிடுகிறது.

    முத்து அனைவரையும் கவரும் ஒரு அணிகலனாகும். அந்த முத்துக்கள் பிறக்குமிடம் பற்றி ஒவ்வொரு பிள்ளைத்தமிழ் நூலும் குறிப்பிடுகின்றன.

    “உழுவை கருமா மருப்பு முத்தும்
    வனைக்கார் கமுகு கழை முத்தும்
    வன சங்கரும்பு மதிமுத்து
    மாதர் மிடற்றின் வருமுத்தும்”(முத்தம்-3)
    என பத்து வகையான முத்துக்களைப் பற்றிய செய்திகள் சொல்லப்பட்டுள்ளன.

    பெண்பாற் பிள்ளைத் தமிழ் நூல்கள்

    பெண்பாற் பிள்ளைத் தமிழ் நூல்களை எடுத்து ஆராய்ந்தபோது குமரகுரபரரின் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழின் முத்தப்பருவத்தில் தேவர்கள் அணியும் அணிகலன்களைப் பற்றிய குறிப்பு உள்ளது.

    இந்திரன், குபேரன், திருமால் முதலியோர் பெருஞ்செல்வர்கள் இவர்களில் சிந்தாமணி என்னும் அரியமணி இந்திரப் பதவிக்குரியது. அது இந்திரனிடம் உள்ளது. குபேர பதவிக்கு உரியது வான்மணி. அதை உடையவன் குபேரன். திருமால் பதவிக்கு உரியது கௌந்துப மணி. அது திருமாலுக்குரியது.

    வானத் தரசு கோயில் வலர்

    சிந்தாமணி, அலகையோர் கோன் நகரில் வளரும் வான்மணி, பதுமநாடன் மார்பில் வளர் பருதி மணி (முத்தம்-2)
    முதலான பதிவுகள் ஒவ்வொரு பதவிக்கும் உரியதாக ஒரு மணி இருந்ததைச் சுட்டுகிறது. குமரகுருபரரின் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில்அம்மையை பெற்றெடுத்த தாயாக பாண்டிமாதேவி சுட்டப்படுகிறாள்.

    அப்பாண்டிமாதேவி மயிர்ச்சாந்து பூசப்பட்டுக் குழைந்திருக்கும் கூந்தல் உடையவராகவும், (சிவபெருமான் காப்பு-3)

    நெற்றியில் திருநீறு மூன்று கோடுகளாக அமைந்திருக்க, முத்துச்சுட்டி, தலையில் உச்சிக் கொண்டை,
    தலையணி, காதில் குதம்பை அணி, பொன் கொப்பும் அணிந்தவளாக விளங்குகின்ற பாண்டிமா
    தேவியின் தோற்றம் கேசாதிபதமாக வருணிக்கப்படுகிறது.

    ‘நீராட்டி ஆட்டு பொற் சுண்ணந் திமிர்ந்தள்ளி’ (ம.மீ.அ.பி. செங்கீரை-1)

    மதுரை மீனாட்சியின் தோற்றமும் கேசாதி பாகமாகவே வருணிக்கப்படுகிறது. தலைமுடியில் அணிந்திருக்கும் உச்சிக் கொண்டை, நெற்றியில் அணிந்திருக்கும் நெற்றிச் சுட்டி, காதில் அணிந்திருக்கும் மகரக் குழைகள், திருவடிகளில் அணிந்திருக்கும் சிலம்புகள், மற்றும் கிண்கிணி இவற்றை அணிந்து செங்கீரை ஆட வருக என கவிஞர் அழைக்கிறார். (மு.மீ.அ.பி. செங்கீரை-6) பிற பாடல்களில் அம்மை, குதம்பை என்னும் காதணி (செங்-8) இடையில் மணிமேகலை என்னும் இடைஅணி (வருகை -1) கையில் வெண்மை நிறமான சங்கு வளையல்கள் (நீராடல்-2) அணிந்தவளாகக் காட்டப்படுகிறாள்.

    ஆடை-பொன் சரிகையால் செய்து உடுத்தப்பட்ட
    இடை ஆடை, மற்றும் முத்து அழுத்திச் செய்யப்பட்ட மேலாடை, ஒட்டியாணமாகிய
    இடை அணியும் அணிந்தவளாக (ஊசல்.10)

    அழகிய மாமுலையம்மை, சிந்தூரப் பொட்டை நெற்றியலிட்டு பொற்பட்டமும், திகழ்சுட்டியும் சூட்டி, அழகிய கொண்டையில் சிவாளி முத்தும், சூரியப் பிறையும், சந்திரப் பிறையும் சூடி, தங்க வளையல்களும், அமுதாரியும், சன்னவீரமும், மணிமேகலையும் அணிந்து நடந்து வர வேண்டுமென்று புலவர் (வருகை-1)

    கணித நூல் புலமை வல்லோர், கணக்கினுக்கும்
    அகப்படாததாகிய ஒப்பனை செய்பவளே

    “கணித இவர் புலமை வல்லோர்
    கணக்கினு மகப்படா ததாகியே ஒப்பனை செய்” (அம்மானை-4)

    அமுதாம்பிகை பிள்ளைத்தமிழில் ஊசல் பருவத்தில் அமுதாம்பிகை ஊசலாடும் பொழுது, ‘மகரக் குழைகளும ஊசலாட’ என மகரமீன் போன்ற குண்டலங்களும் ஆடியதாக பாடுகிறார். மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் மீனாட்சியம்மை, அம்மானை ஆடுவதற்கு மரகதக் கல்லும், நீல மணிக் கல்லும், முத்து போன்றவற்றைப் பதித்த அம்மானைக் காய்களைக் கொண்டு நேர்த்தியாக அம்மானை ஆடிய சிறப்பு பாடப்பட்டுள்ளது. (அம்மானை – 10)

    “வள்ளொளி மரகதமும் முழுநீலமும்
    ஒண்தரளத் திரளும்
    ஒருகொளி பொங்க இழைத்திடும் அம்மானை”

    த. கோவேந்தன் பாடிய ஆண்டாள் பிள்ளைத்தமிழில் பலவகை அணிவகைகள் சொல்லப்பட்டுள்ளன.

    ஆண்டாள் ‘பூட்டிய சித்திரப் புரிவளையும், (சப்பாணி-57)’, மேலாடை அணிந்தவளாகவும், (சப்பாணி-64), மகிழ மலர் மாலை அணிந்தவளாகவும் (வாராணை 71) வெண்பட்டுடை, (காமநோன்பு-116) அணிந்தவளாகவும் காணப்படுகிறாள். நெற்றியில் திருமண் இட்டுக் கொள்ள முகம்பார்க்க கண்ணாடி உடையவள் (அம்புலி-83) இந்திர நீலத்தின் அருமணியை, பசுந் தகட்டில் பதித்த ஊசல் உயைவள் (ஊசல் 100) ஒளி சொரிகின்ற முத்துமணியும் முழு மணிகளில் ஆன மாலையையும் தோளில் அந்தவள் (ஊசல்-104), என்று ஆண்டாளின் ஆடை அணிகலனை ஆண்டாள் பிள்ளைத்தமிழ் எடுத்தியம்புகிறது.

    காழி ஞானதேசிகர் இயற்றிய அழகிய மாமுலையம்மை பிள்ளைத்தமிழில், மாமுலையம்மை முத்துச்சரமணிகளும், சங்கிலியும், விரலில் கணையாழியும், காதில் மகரக் குழைகளும் இருப்பில் பட்டினகப் பட்டங்களும் அணிந்து செங்கீரை ஆடியதாகக் குறிப்பிடப்படுகிறது. (அ.மா. செங்கீரை-6)

    பிள்ளைத்தமிழில் பிற தெய்வங்கள்

    சிவன் தோற்றம்

    1. வேழாடை (கி.வே.மு. சப்பாணி.2)
    2. இடையில் புலி அதள் உடையர் (ஆ.பி. தாலம்-47)
    3. கரி உரி உடுத்தவன் (ஆ.பி. சப்பாணி-48)
    4. அரவு அணி (ஆ.பி. தால்-47)
    5. முதுகெலும்பு மாலையை கோர்த்து கழுத்தில் அணிந்தவனாக (கி.வே.மு. செங்-8)
    6. சடைமுடியும் வளரும் இளம்பிறை, கங்கை நதி,
    7.வெள்ளெருகம்பூ சூடியவன் (அ.மா.பி. காப்பு-2)

    சிவன் திசை ஆடை அணிந்தவன் (ம.மீ.அ.பி. நீராடல்-4) இவ்வாறு சிவன் அணிந்திருக்கும் ஆடை அணிகலன்கள் சுட்டப்படுகிறது. இடையில் புலித்தோலையும், தோளில் யானைத் தோலையும் போர்த்துக்கொண்டு, சிவன் கழுத்தில் பாம்பு மாலையையும், முதுகெலும்பு மாலையையும் அணிந்தபடி சடைமுடியில் பிறை நிலவும் கங்கை நதியும் அணிந்திருக்கும் சிவனது தோற்றம் இவ்வாறு பிள்ளைத்தமிழ் நூல்களில் சுட்டப்படுகிறது.

    திருமாலின் தோற்றம்

    TM-7

    திருமாலின் தோற்றம் பற்றிய வருணனையில் அவதாரத்திற்கேற்ப ஆடை அணிகலன்கள் சுட்டப்படுகின்றன. இராமர் அவதாரத் தோற்றத்தில் ‘மரவுரி’ (ஆ.பி.தால-47) அணிந்தவராகவும், கண்ணன் அவதாரத் தோற்றத்தில் இடையில் சங்கு சக்கரம், வில், வாள், தண்டு இணைந்த பொன்மணி வடத்தை (ஆ.பி.வாராணை 71)யும், குண்டலங்கள் (காமநோன்பு-112) கௌத்துவ மாலை காமநோன்பு-114) பட்டாடை (ஆ.பி. வாராணை-68) அணிந்தவராகவும் சுட்டப்படுகிறார்.

    திருமால் தோற்றத்தில் துளசி மாலையும், காதில் மகர குண்டலங்களும் (அ.மா.பி. காப்புப்-1) அணிந்து பாம்பணையில் படுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

    கடவுளர் பற்றிய பிள்ளைத் தமிழ் நூல்களில் இடம்பெறும் பிற மகளிர் அணிந்த ஆடை அணிவகைகளும் குறிப்பிடப்படுகின்றன.

    மாமுலையம்மை பிள்ளைத்தமிழில், ஆய்ச்சியர் அணிந்துள்ள அணிகலன்களாக எளிய மலர்மாலைகளே சுட்டப்படுகின்றன.

    கொன்றை நறுங் குழலையும், முல்லையின் அரும்பையும், செழித்த மலர்களையும் கூந்தலில் கட்டி முடித்தவர்களாக ஆய்ச்சியர் குறிப்பிடப்படுகின்றனர். (அ.மா.செங்கீரை-5)

    ஆண்டாள் பிள்ளைத்தமிழில் கற்களை பொன்னில் பதிக்கும் முறை பற்றி ஒரு பாடல் குறிப்பிடுகிறது. ஒருமணியானது பேராற்றினுள்ளே சேறிடத்தே அணு அளவினதாகத் தோன்றி, சிவப்பு நிறமுற்றுப் பதினாறு ஊழிக்காலம் கடந்த பின்னரே முழுமை பெறும் தன்மையுடையது. ஆந்த மணி மிகப் பருத்தது. அதனைச் சாணை தீட்டுவோர் சாணை தீட்டி, தக்க அளவு செய்து, அணிகலன்ற குழி செய்து பதித்து நகை செய்வர் (வருகை 76) என மணி மண்ணில் உருவாகும் முறை குறிப்பிடப்படுகிறது.

    அடியவர் தோற்றத்தில் ஆடை அணிகலன்கள்

    அழகிய மாமுலையம்மை பிள்ளைத்தமிழில், திருநாவுக்கரசரின் எளிய தோற்றம் காட்டப்படுகிறது. காதில் குழையும், மேனி முழுதும் திருவெண்ணீரும் அணிந்தவராகச் சுட்டப்படுகிறார் (சப்பாணி-7)

    சேக்கிழார் பெரியபுராணத்தில் திருஞான சம்பந்தர் புராணத்தில் பிள்ளைத்தமிழ் சார்ந்த காப்புப் பருவத்தில் திருஞானசம்பந்தரின் பெற்றோர் அவருக்கு திருநீற்றுக் காப்போ உண்மையான அணிகலன் என அவருக்கு திருநீற்றை மட்டும் நெற்றியில் அணிவித்ததாகப் பாடுகிறார்.

    “வேறுபல காப்பும் மிகை என்றவை விரும்பார்
    திருநீறு நெற்றியில் நிறுத்தி நிறைவித்தார்”

    பொதுவாக குழந்தைக்கு மந்திரித்த காப்பு கட்டுதல், ஏடெழுதிக் கட்டுதல், ஐம்படைத்தாலி கட்டுதல் முதலான காப்புகளை அணிவிப்பார். ஆனால் சேக்கிழார் திருநீறே சிறந்த காப்பு எனக் கருதியதை இங்கு ஞான சம்பந்தர் வாழ்க்கைமூலம் காட்டுகிறார்.

    தலைவர்கள் பற்றிய பிள்ளைத்தமிழ் நூல்கள்

    கவிஞர் இராதே எனப்படுகின்ற இரா. தேவா, அன்னை தெரசா பிள்ளைத்தமிழ், இயற்றியுள்ளார். இதில் அன்னை தெரசாவை பாட்டுடைத் தலைவியாக்கி இப்பிள்ளைத் தமிழ் இயற்றப்பட்டிருந்தாலும், குழந்தை தெரசாவிற்கு ‘வெள்ளுடை’ மட்டும் அணிவித்து ‘வெள்ளுடையம்மை’ (பாடல்-14) என்று வெள்ளையாடை அணிந்த தோற்றத்தையே தருகிறார். ஆடை அணிகலன்களை வருணிப்பதற்குப் பதில்,

    “வெள்ளுடை யம்மை குமிழ் சிரிப்பின்
    விளைவில் வறியோர் வாழ்வுயரும்
    வெற்றிச் செல்வி சிரிப்பழகி”” (பாடல்-14)

    அன்னை தெரசாவின் பொன் நகை அவளுடைய புன்னகையே என்று பாடுகின்றார். தருமபுரி மாவட்டதைச் சார்ந்த கவிஞர் மணிவேலனார். இவர் மீது பாடப்பட்ட நூலே பாவலர்மணிவேலனார் பிள்ளைத்தமிழ். மணிவேலனார் காலில் அணிந்ததாகச் சிலம்பு(வருகை-4) மட்டுமே கூறப்பட்டுள்ளது.

    முடிவுரை

    சங்க நூல்களில் பாடினி, விறலி பாத்திரங்கள் ( பதிற்றுப் பத்து, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை) கேசம் முதல் பாதம் வரை வருணனை செய்யப்பட்டுள்ளன. சங்ககால செல்வந்தர்,ஏழையர் குறித்த பதிவுகளிலும் நிலைக்கேற்ப ஆடை அணிகலன்கள் இடம் பெற்றுள்ளன. இவ்வருணனை பிற்காலத்தில் சிற்றிலக்கியங்களிலும் தொடர்ந்துள்ள திறத்தை பிள்ளைத்தமிழ் இலக்கியங்களில் காணமுடிகிறது. கடவுளர் பற்றிய வருணனையில் அதிகமாக இடம் பெறும் ஆடை அணிவகைகள், காலம் செல்லச் செல்லச் செல்ல அருகி பக்தி இலக்கியக் காலத்தில் அடியவருக்கு எளிய தோற்றமும் திருநீறுமே அணிகலன் என்று கருதப்பட்டுள்ளது. தலைவர்கள் குறித்த இலக்கியங்களில் அவையும் அருகி காலத்திற்கேற்ப நகையணிதல் தவிர்க்கபட்டுள்ளதைக் காண முடிகிறது.

    துணைநின்ற நூல்கள்

    1. இராமமூர்த்தி மா. கவிஞர், பாவலர் மணிவேலனார் பிள்ளைத்தமிழ்,கோதை பதிப்பகம்,பாப்பிரெட்டிப்பட்டி,தருமபுரி மாவட்டம்,636 905. முதற்பதிப்பு 2009
    2. கவிவீரராகவர் – கீழ்வேளுர்முருகன் பிள்ளைத்தமிழ், உ.வே.சா நூல்நிலையம் -600 090 . முதற்பதிப்பு 1985
    3.காழி ஞானதேசிகர், அழகியமாமுலையம்மை பிள்ளைத்தமிழ்,தஞ்சைபெரியகோயில் வார வழிகாட்டு மன்றம்,தஞ்சாவூர் 613 009. முதற்பதிப்பு 2013
    4.குமரகுருபரர்,முத்துக்குதாரசுவாமி பிள்ளைத்தமிழ்,கழக வெளியீடு,சென்னை -1972.
    5.குமரகுருபரர்,மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், சாரதா பதிப்பகம்,சென்னை600 014 5ம்பதிப்பு 2013.
    6. கோவேந்தன். த. – திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்,ராஸ்வரி புத்தக நிலையம், சென்னை -600 017. பதிப்பு 2000
    7. சிவஞான முனிவர் – அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் பதிப்பு, கழக வெளியீடு,சென்னை – பதிப்பு 1972.
    8. சிவசூரிய நாராயணன் – சிங்கபுரக் கண்ணன் பிள்ளைத்தமிழ், இணையதளம்
    9.பகழிக் கூத்தர் – திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்,கழக வெளியீடு,சென்னை – 2ம்பதிப்பு 1972

    படங்களுக்கு நன்றி

    https://www.facebook.com/saivaneri

    Share
  • தேகமும் யோகமும்..பகுதி-2

    கவியோகி வேதம்

    yoga

    மனித மனத்தின் உளவியல் (எண்ணங்கள்)_தத்துவத்தை முழுதும் ஆராய்ச்சி செய்த ‘ஹேன்ஸ் சைல்’ என்பார் என்ன சொல்கிறார் தெரியுமா?

    முற்கால மனிதர்களைவிடவும் இப்போதைய மனிதர்கள்தாம் சுமைகளை வீணாக மனத்தில் ஏற்றிப் போட்டுக்கொண்டு மகா அவஸ்தைப்படுகின்றோம் என்பார்.அவர் சொல்கிறார்.

    “ மனித வாழ்க்கை என்பது எல்லோர்க்கும் இறைவன் அளித்த ஒரு நன்கொடை.

    எது இயற்கையோ, எது இயல்பாக நம்முள்ளே மனத்திற்குள் இன்பமாக விதைக்கப்பட்டிருக்கிறதோ, அதை நாம் அழகாக முழுதும் ‘உணர்ந்து’ பிறர்க்குத் தொந்தரவில்லாமல் அனுபவித்தால் அதைவிட நமக்குச் சிறந்த அனுபவம் இருக்க முடியாது.ஆனால் இன்றைய விஞ்ஞான வசதி நிறைந்த உலகில் அதை நாம் அழகாக உணர்ந்து அனுபவிக்கிறோமா? என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். எது எதற்கோ வீணாக ஆசைப்பட்டு, வாழ்க்கையைச் சுமையாக ஆக்கிக்கொண்டிருக்கிறோம்..இயற்கையை உணரத்தவறுகிறோம்,’ என்பார்..

    இந்தப் புதிய கருவி அல்லது புதிய வசதி நமக்கு உண்மையான இன்பம் தருமா? அல்லது நாளடைவில் சுமையாக மாறிவிடுமா? என்று ஆராயாமலே அதை எவ்வளவு விலை கொடுத்தேனும், (பேராசை எண்ணங்களால்!)- வாங்கத் தவிக்கிறோம்.

    முதல் டென்ஷன் நமக்கு அப்போதுதான் ஆரம்பிக்கிறது.. சரி, அதை மிக சிரமப்பட்டு, உழைத்து,வாங்கியபின் கொஞ்சநாள் நமக்கு இன்பமாக இருக்கிறது.அது மகிழ்ச்சி கொடுப்பதாக உணர்கிறோம்.

    ..கருவியா மகிழ்ச்சி கொடுக்கிறது? என்பதை நாம் ஆராய்வதில்லை.. கொஞ்சநாளுக்குப்பின் அக்கருவியே, அல்லது அந்தப் புது வசதியே பல ரிப்பேர்களுக்கு உட்பட்டு நம் நிம்மதியைக் குலைக்கிறது. மீண்டும் டென்ஷன்!

    வேறு ஒரு புதிய கருவி, அல்லது வசதி உங்களுக்கு இன்னும் நிறைய இன்பம் தரும் என்று வியாபார தந்திரம் சொல்கிறது.. மனம் சபலப்படுகிறது.வாங்கத் துடிக்கிறது. மீண்டும் டென்ஷனுடன் உழைத்து, காசு சேர்த்து அதை வாங்கி அது புதிய இன்பம் தருவதாக மகிழ்ச்சியில் திளைக்கிறோம். அதுவும் ரிப்பேர் ஆகிறவரை. ஆக, இயற்கையான மகிழ்ச்சி மனத்துள்ளேதான் என்று அறியாமலே காசையும், நிம்மதியையும் தொலைத்து மனத்தில் ஒரு ‘ஒற்றைக்காளை ’
    பெரிய வண்டியைச் சுமப்பதுபோல் (நம் கிராமங்களில் பார்த்துள்ளோமே!!) பாரத்தை அனாவசியமாக ஏற்றி, “ என் வாழ்க்கையே ஒரு பெரிய சுமைதாங்கி சார்!,” என்று வீட்டுக்கு வருபவர் எல்லோரிடமும் ‘பீற்றிக்’ கொள்வதில் பெருமையடைகிறோம்..இந்த ஒரு ‘வண்டிச்சுமையை’ இயற்கையினின்றும் விலகி ஏதோ ஒரு மாயையில் சிக்குகிற மாயாமனம் அறிகிறதா, உணர்கிறதா என்றால் இல்லை..

    எனக்குத் தெரிந்த ஒரு அறிஞர், நல்ல பேச்சாள நண்பர் இதுவரை ஒரு டெலிபோன் வசதிகூடச் செய்து கொள்ளவில்லை.செல்- கூட வைத்துக்கொள்வதில்லை. ஆனாலும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை இலக்கியக்கூட்டங்களில் பேச அழைக்கப்படுகிறார்.நகைச்சுவையும், கிண்டலும், அற்புதமான புதிய புதிய கருத்துக்களும் அவர் பேச்சில் அருவிபோல வந்து கொட்டும்.. அதனால் அவருக்கு எங்கும், எந்த ஊரிலும் பலத்த வரவேற்பு.

    எப்படி சார் ஒரு டெலிபோனோ, அல்லது காரோ இல்லாமல் இத்தனைக் கூட்டங்களுக்கும் போய் அனாயாசமாகப் பேசுகிறீர்கள் என்று அவரைக்கேட்டேன்.

    இருக்கிற இத்தனூண்டு மீசையைத்திருகியபடி அவர் சொல்வார்;- வேதம் சார்! சொல்லுங்கள்! இந்த செல்.. அல்லது டெலிபோனா போய்ப் பேசுகிறது?. …

    நான்..;- ‘இல்லை ஐயா!’..

    .. அவர்..;– ‘இவற்றை நான் ஒரு சுமையாகக் கருதுகிறேன்..சார்! அதுகளை வைத்துக்கொண்டால் அனாவசியச் செலவு மாசாமாசம் எனக்கு…எவனாவது சும்மாவானாலும் தொடர்பு கொண்டு வீண் சந்தேகம் கேட்டுக்கொண்டிருப்பான்.என் நேரமும் வேஸ்ட்!.அந்த நேரத்தில் நான் ஒரு புதிய நூலைப் படிப்பேனே! ஏராளமான கருத்துள்ள நூலாக நான் தேர்ந்தெடுத்துப்படிப்பதால்தானே, சுவையுறத் தொகுத்துச் சொல்வதால்தானே சார்!என்னைக் கூப்பிடுகிறார்கள்..இல்லையா? ஆர்வமுள்ளவர்கள் அவசியம் நேரில் என்னிடம் வருவார்கள். ஒப்புதல் தருவேன்.காரில் என்னை அழைத்துப்போனால்தான் பேசுவேன் என்பேன்.பேசவோ குறைந்த கட்டணம் தான் வாங்குவேன்.

    அதனால் மற்றவர்களைவிட என்னை அழைத்துப் பேசவைத்தால் அவர்களுக்கும் லாபம். தொலைபேசித்தொல்லைகட்கு நான் பணம் கட்டாததால் எனக்கும் அவர்களுக்கும் ஒரு நேரடித் தொடர்பு கிட்டுகிறது.. நெருக்கம் அதிகமாகி எனக்கு இப்போ தமிழ்நாடு முழுதும் ஏராளமான நண்பர்கள்.

    ஆக நான் விஞ்ஞானக் கருவிகளைச் சுமையாகக் கருதுவதால் அவற்றிலிருந்து ஒதுங்கி, தேவையானது மட்டும் வைத்துக்கொண்டு(அதாவது டி.வி மட்டும் அவர் வீட்டில் உண்டு- அதுவும் மனைவிக்காக,) காசையும் மிச்சப்படுத்துகிறேன். நேரத்தையும் கூட….

    என்னை அழைக்க வருபவர்கள் இயற்கையான உண்மையான இலக்கியத் தாகத்துடன் வருவார்கள். அவர்களை நான் ஏமாற்றுவதேயில்லை.. என்ன வேண்டுமோ கொடுப்பேன். இதனால் நான் எக்காலத்திலும் டென்ஷனை மனத்தில் ஏற்றிக் கொள்வதில்லை.. என்மனைவியும் அப்படித்தான். இப்போதும் அவள் மிக்ஸி என்றால், க்ரைண்டர் என்றால் எத்தனை கிலோ கனம்? எவ்வளோ செலவு? எவ்வளோ மின் ஆபத்து?என்பாள்.

    நீங்களே பார்த்தீர்கள் அல்லவா? அவள் பக்கத்து வீட்டுக்காரிகளை விட கட்டு குண்டாய் இருக்கிறாள். ஆரோக்கியமாயும் உள்ளாள். ஒரு தலைவலி என்றுகூட அவள் படுத்ததில்லை. என்று சொல்லி கடகட எனச் சிரித்தார்… உண்மை !அவர் வீட்டில் இன்னும் கிராமத்திலிருந்து கொண்டுவந்த அயனான அம்மியும், ஆட்டுக்கல்லும்தான்.

    ….அவரது பதிலைக் கேட்டு ஆச்சர்யமும், பலத்த மகிழ்ச்சியும் அடைந்து என்னை அறியாமலே ‘சப்பாஷ்’ என்று கைதட்டினேன்… தெரிகிறதா இப்போது? அவர் உண்மையாக இயற்கையுடன் கைகோர்த்துக்கொண்டே வாழ்க்கையை மிக அழகாக, அமைதியாகக் கொண்டுபோகிற தூய தமிழ் அறிஞர் என்று..! அதனால் வீண் தொந்தரவுகளை அவர் விலை கொடுத்து வாங்குவதில்லை.. அவரை நெருங்கிய நண்பர்கள் ‘சுமை வேண்டா சுப்பன்’ என்று ரகசியமாக அழைப்பர்.
    … இவ்வளவு ஏன்? அண்மையில் மறைந்த திரு. காஞ்சிமகான் கூட ஒரு காரையோ, செல் போனோ பயன்படுத்தியதே இல்லை.. அவரிடம் பேசணும் என்றால் பக்தர்கள் நேரில்தான் போய்ப் பேசுவர்.

    எங்கு போக வேண்டும் என்றாலும் அவர் கால்நடையாகத்தான் செல்வார். அந்த அளவுக்கு அந்த மகான் இயற்கையோடு கலந்து வாழ்ந்திருந்தார்…இறுதிவரை.

    .. உங்களுக்கு இன்னொன்று தெரியுமா? நம் எல்லோரது மனப்பான்மையையும் உற்றுக்கவனித்தீர்களானால், சுமைகளை மனத்தில் ஏற்று வீணாக டென்ஷன் படுகின்றோம். அதேசமயம் இந்த டென்ஷனை அனாவசியமாகப் பிறர்மேலும் திணிக்கின்றோம்.. சொகுசுக்கு ஆசைப்பட்டு என் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் விலையுயர்ந்த ஆண்ட்ராய்டு செல்போன் வாங்கிவந்து போகிறவர் வருபவர் எல்லோரிடமும் கொஞ்சநாள் காட்டிப்பெருமைப்பட்டுக்கொண்டிருந்தார்..வாங்கிய பிறகு அதை எப்படி முறையாகப்பயன்படுத்துவது என்று தெரியவில்லை.. ஓரமாய் வைத்துவிட்டார்!அவரது மனைவியும் வீண்செலவு செய்துவிட்டீர்களே!

    சரியான புடவை இல்லாமல் பழசைக்கட்டிக்கொண்டு அவஸ்தைப்படுகிறேனே. எனக்கு இரண்டு நல்ல புடவையாவது நீங்க அநாவசியமாகச் செலவழித்த காசில் எடுத்துக்கொடுத்திருக்கலாம்.. மனசில ஒரு சந்தோஷமாவது இருந்திருக்கும் என்று அடிக்கடி குத்திக்காட்டினாள்.

    அவ்வளவுதான்! அவருக்கு டென்ஷன் ஏறிவிட்டது. பலநாட்கள் அவரால் நிம்மதியாகவே இருக்கமுடியவில்லை. எப்படியாவது அந்த வேண்டாத ஆண்ட்ராய்டு செல்லை வேறு ஒருவர்க்கு கொஞ்சம் விலைதள்ளியாவது விற்கப் படாது பட்டார்.அது அடுத்த டென்ஷன்… கடைசியில் அவரது அண்ணன் மகனே{கல்லூரியில் படிப்பவன்} ஒரு விலை சொல்லி எடுத்துக்கொண்டபின் தான் அவர் மனம் அமைதியுற்றது. ஆக தான் பட்ட அவஸ்தையை இன்னொருவரிடம் தள்ளினால்தான் மனம் நிம்மதி அடைகிறது.… அதனால்தான் ‘ஸைல்’ சொல்கிறார்.

    “உள் மனத்திலிருந்தோ, அல்லது பிறர் மனம் மூலமாகவோ வருகிற ஒரு வேண்டாத, கெட்ட தூண்டுதலே மன அமைதியை இழக்கச் செய்து டென்ஷன் என்னும் பரபரப்பு எண்ணம் உண்டாகிறது.அது தற்காலிகமாகவோ இல்லை நிரந்தரமாகவோ கூட இருக்கலாம்.ஒன்று ..ஜாக்கிரதையாக இருந்து ‘அது’ ஏற்படாமல் உங்கள் மனத்தைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.. இல்லையாயின் வந்தபின் பிராணாயாமம், தியானம் மூலம் நிச்சயம் அதிலிருந்து விடுபடுங்கள்.

    இறைவன் கொடுத்த அழகிய சுதந்திர மனம் என்னும் பாத்திரத்துள் நீங்களே வேண்டாத குப்பையைப் போட்டீர்களாயின், நீங்களே தான் இறைத்தியானம் மூலம் அதனை வெளியே எடுத்து எறியவேண்டும்’ என்கின்றார்.எவ்வளவு உண்மையான பாஸிடிவ் ஆன உபதேசம் பாருங்கள்!

    … எனவே அவர் சொல்கிற பிரகாரம் வெளித்தூண்டுதல்கள் ஆன அதிக வெய்யில், அதிகக்குளிர், அதிக மழை அல்லது பிறர் மனம் மூலம் வருகிற ‘ஸ்ட்ரெஸ்’ (மன அழுத்தம்) போன்றவற்றை மனோபலம், தியானம், எப்போதும் சாந்தமான எண்ணங்கள் முதலியவற்றால் போக்கிக்கொள்வோம்.அதே சமயம் நாமே வீணாக சஞ்சல மனத்தால் உண்டாக்கிக்கொள்கின்ற கோபம், காமம், பேராசை,அதீத பாசம், ‘தான்’ எனும் அகந்தையின் மூலம் செய்யும் வேண்டாத செய்கைகள் இவற்றை மகான்களின் உபதேசம், அவர்தம் வரலாற்றை எப்போதும் படித்தல்,நல்ல நல்ல இலக்கியநூல்களை, கவிதைகளைப் படித்து அனுபவித்தல் போன்றவற்றால் மனம் என்னும் நல்ல தெய்வீகப்பாத்திரத்துள் பிரகாசத்தை(தெய்வ ஒளியை)ஏற்றிவைப்போமாக!. இவை நாம் யோகா மற்றும் தியானம் கற்கும் முன் நெஞ்சில் கொள்ளவேண்டிய பயிற்சி முறை.. சரியா?

    ..(தொடரும்)

    Share